Tag: க.பாலசுப்பிரமணியன்

  • “ஆறு படை அழகன்”  — (4)

    க. பாலசுப்பிரமணியன்

    Six-Abodes-of-Murugan1

    குக்குக்கூ…….குக்குக்கூவெனக்  குயில் போலக்கூவும்

    என் நெஞ்சம் மயில் போல ஆடும்!.. முருகா..  குக்குக்கூ…….குக்குக்கூவெனக் குயில் போலக்கூவும்

    என் நெஞ்சம் மயில் போல ஆடும் !!

     

    குன்றத்திலே .. பரங்குன்றத்திலே ..

    திருப்பரங்குன்றத்திலே உனைக் கண்டால்….. முருகா

    குக்குக்கூ…….குக்குக்கூ…. குயில் போலக்கூவும்,

    என் நெஞ்சம் மயில் போல ஆடும் !!

     

    செந்தூரக்கடலோரம் உனைக்கண்டோ ..முருகா

    கடலலை போலப் பாயும் .. என் நெஞ்சம்

    கந்தா, உன் காலிரண்டை நாடும்-கந்தன்

    கருணையிலே காலமெல்லாம் வாழும் !!

     

    தணிகையிலே .. திருத்தணிகையிலே

    உனைக்கண்டோ முருகா..!

    தென்றலாய் மாறும் என் நெஞ்சம் !! ..

    திருவருள் வேண்டி உன்னை நாடும்

     

    சோலையிலே .. பழமுதிர்சோலையிலே .

    உனைக்கண்டோ ..முருகா .. என் நெஞ்சம்

    ஆறும்… இளைப்பாறும் .. உன் விழிவாசலிலே.

    துயர் நீக்கிக் களைப்பாறும் !!

     

    பதியினிலே,  பழநிப்பதியினிலே

    உனைக்கண்டோ ..முருகா,,,  என் நெஞ்சம்

    பாடும், தமிழ் பாட்டொன்று பாடும் ..

    முத்தைத்தரு பத்திதிருநகையென ஓதும் !!

     

    மலையினிலே .. சுவாமிமலையினிலே…

    உனைக்கண்டோ …முருகா  ..

    நாடும் அருள் நாடும் — அப்பனைப்போல்..

    கைகட்டி வாய்பொத்தி அருள்மொழி கேட்கும் !!

     

    அறுபடை வீடினிலே உனைக்கண்டால்  முருகா

    .என் நெஞ்சம் ஆடும் ….அது பாடும்

    கொஞ்சம் தாவும்.. …உந்தன் அருள் நாடும்

    கூவும்… குக்குக்கூவெனக் குயில் போலக்கூவும்!!!

     

    குக்குக்கூவெனக் குயில் போலக்கூவும்

    என் நெஞ்சம் மயில் போல ஆடும் .. முருகா..

    குக்குக்கூவெனக் குயில் போலக்கூவும் .

    அது மயில் போல ஆடும் !!

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • “ஆறு படை அழகன்”  — (3)

     க. பாலசுப்பிரமணியன்

    am

    வரமொன்று கேட்பேன், வரமொன்று கேட்பேன்,

    இரு கரம் கூப்பி வரமொன்று கேட்பேன்

    பன்னிரு கை கொண்டு படியளக்கும் அழகா…..  !

    உன்னிரு பாதம் பிடித்து வரமொன்று கேட்பேன் !

     

    இமைப்பொழுதும் உனை மறவாத நெஞ்சொன்று வேண்டும்

    இங்கென்றும்  அங்கென்றும் அலையாத  மனமொன்று வேண்டும்

    வானென்றும் நிலமென்றும், நீரென்றும் நெருப்பென்றும்

    நானென்றும் நீயென்றும் பிரிக்காத நினைவொன்று வேண்டும் !!

     

    நலமான உறவென்றும்  வேண்டும்

    நலியாத உடலென்றும் வேண்டும்

    விதியென்று வீழ்ந்தார்தம் மதி காக்க வேண்டும்

    உனையே கதியென்று வந்தார்தம் விதி மாற்ற வேண்டும் !!

     

    குறையாத அறிவென்றும் வேண்டும்

    நிறைவான மனமென்றும் வேண்டும்.

    அறுசுவையும் ஒருசுவையாக வேண்டும்

    அதுவனைத்தும் உன் அருட்சுவையாக வேண்டும்!!

     

    பிறக்கின்ற சேயெல்லாம் உன் பரிசாக வேண்டும்,

    புவிதன்னில் அமைதிக்கு வித்தாக வேண்டும்

    குன்றாக வேண்டும் ;மனம் குணக்குன்றாக வேண்டும்

    அதில் நீ குடியேற வேண்டும் !!

     

    வரமொன்று கேட்பேன் வரமொன்று கேட்பேன்,

    இரு கரம் கூப்பி வரமொன்று கேட்பேன்

    பன்னிரு கை கொண்டு படியளக்கும் அழகா…..  !

    உன்னிரு பாதம் பிடித்து வரமொன்று கேட்பேன்  !!

    Share
  • “ஆறு படை அழகன்”  — (2)

    க. பாலசுபிரமணியன்

    amurugan-03

    சுட்ட பழம் தருவாயோ?  சுடாத பழம் தருவாயோ?

    சுட்ட பழம் தருவாயோ? சுடாத பழம் தருவாயோ? — முருகா

     

    ஆணவத்தை சுட்டெரித்துக் கொஞ்சம் அனுபவத்தைத் தந்தாய்,

    அனுபவத்தை சுட்டெரித்துக் கொஞ்சம் அறிவினையே தந்தாய்,

    அறிவினையும் சுட்டெரித்துக் கொஞ்சம் அமைதியினைத் தந்தாய்,

    அந்த அமைதியிலே நீ அருட்சுடராய் நின்றாய் !!

     

    சொந்தமெல்லாம் சுட்டதென்று உன் காலைப்பிடிதேன் –

    பந்தமெல்லாம் சுட்டதென்று உன் வேலைப்பிடிதேன்

    மோகமென்னைச் சுட்டதென்று  உந்தன் சொல்லைப்பிடிதேன்-முருகா

    வாழ்க்கை சுட்டெரிக்கச் சுட்டெரிக்க சுற்றி சுற்றிப் பிடித்தேன்!!

     

    அவ்வையவள் பாட்டினைக் கேட்டிடவே ஆடி ஆடி வந்தாய்,

    அருணகிரி புகழ் கேட்டிடவே ஓடி ஓடி வந்தாய்,

    அடியார் தம் துயர் தீர்க்க தேடித்தேடி வந்தாய்-

    அகிலமெல்லாம் ஏங்குதையா. இன்று எங்கு சென்றாய் ?

    Share
  • “ஆறு படை அழகன்” — (1)

    க.பாலசுப்பிரமணியன்

    arupadai

    வேலழகா!  உந்தன் விழியழகா ?

    கோலழகா?  உந்தன் கொடியழகா ?

    பேரழகா! உந்தன் பெயரழகா ?

    சொல்லழகா!  சொல்லின் சுவையழகா?

     

     

    பாலழகா? பன்னீர் மணமழகா?

    பஞ்சாமிர்த சுவையழகா ?

    பூவழகா!! கொன்றைப்பூவழகா !!

    பூசிய நெற்றித் திருநீரழகா !

     

     

    போரழகா? போரில் கொண்ட சினமழகா?

    சினமழிந்து நின்ற சோலையழகா ?

    அலையழகா! செந்துரக்கடலுறை அழகா !!

    மலையழகா? மலை நின்ற நிலையழகா??

     

     

    அன்னை தந்த சக்தி வேலழகா?

    அப்பனுக்கு நீ சொன்ன பொருளழகா?

    அவ்வையிடம் கேட்ட பாட்டழகா??

    அடியார்தம் கொண்ட அன்பழகா?

     

     

    முத்தமிழழகா! மூவிரண்டு முகமழகா?

    முன்வினை தீர்க்கும் அருளழகா ?

    முக்காலும் உந்தன் நினைவழகா?

    முருகாவென்று உருகும் மனமழகா?

     

     

    சொல்லழகா,  பேரழகா!!

    வேலழகா, உந்தன் விழியழகா??

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல் (2)

    க. பாலசுப்பிரமணியன்

    education

    கருவும் கற்றலும்சில உண்மைகள்

    தாயின் வயற்றில் கருவாக இருக்கும் பொழுதே கற்றல் என்ற செயல் ஆரம்பித்து விடுகிறதா என்பதை பல நாடுகளிலே ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஒரு தாய் கருவுற்ற எட்டாம் வாரத்திலிருந்தே வெளிச் சூழ்நிலைக்கு ஏற்ப அந்தக் கருவின் அசைவுகள் இருப்பதாக மனோதத்துவ விஞ்ஞானிகள் சொல்லுகின்றனர்.

    இதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய பல நாடுகளில் கருவாக இருக்கும் நிலையில் கற்றல்- புரிதல் பற்றிய ஆராய்ச்சி செய்ய தனியான மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன   (Department of pre-natal Cognitive Psychology )

    டேவிட் சம்பெர்லைன்  என்ற மனோ தத்துவ விஞ்ஞானி கூறுகின்றார். ” ஒரு சமுதாயத்தில் வன்முறைகளைப் பின்பற்றுவோர்களுடைய  செயல்களை அவர்கள் கருவில் இருக்கும் போது போதிய ஊட்டச்சக்திகள் இல்லாமை, கவனக்குறைவுகள் மற்றும் வளர்ந்த குடும்பச் சூழ்நிலைகளின் அடிப்படியில் ஊகிக்கமுடியும் ”

    “மேலும் இளம் பிராயத்தில் பெற்றோர்களோடு பாசமின்மை, பெற்றோர்களை விட்டுப் பிரிந்து இருத்தல் போன்ற காரணங்களால் பல பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்றும் நினைக்கின்றனர்.”

    தன்னுடைய தாயாரின் குரலை ஒரு கரு கிட்டத்தட்ட பதினாறு வாரங்களில் அடையாளம் கண்டு கொள்கிறது  இருபத்தி ஏழாவது வாரத்தில் குழந்தையின் பிரதிபலிப்புக்கள்  தாயின் குரலின் குணாதிசயங்களை உணர்ந்து வெளிப்படுத்துவதாக இருக்கின்றன.  அது மட்டுமல்ல, அந்தக் கரு தன் தாயின் உணர்வு   நிலைகளையும் (emotional state ) அடையாளம் கண்டு கொள்கிறது.

    ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் கருவாக இருந்த நிலையில் தாய் பார்த்த ஒரு ஹாலிவுட் படத்தின்   ஒலிகளையும் குரல்களையும் கேட்ட குழந்தை, பிறந்து சில வாரங்களில் அதே படத்தை போட்டபொழுது கருவில் காட்டிய அதே அசைவுகளைக் காட்டியதாகவும் கண்டுபிடிக்கப் பட்டது.

    சாரா பில்லே என்ற ஓர் விஞ்ஞானி தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் கருவாக இருக்கும் பொழுது மூளையில் வளர்ச்சி  பெற்றோர்களின் மனநிலை மற்றும் உணர்வு நிலைகளால் அதிகம் பாதிக்கப் படுகிறது என்று கூறுகின்றார்.  அன்பான, அமைதியான சூழ்நிலைகளில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மிகச் சிறப்பாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

    ஆகவே, கற்றல் என்ற ஒரு செயல் கருவுற்ற காலம் முதல்  துவங்குகின்றது.

    கருத்தரித்த காலத்தில் ஒரு தாய் படும் வேதனைகளும் துயரங்களும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குறைவான மூளை வளர்ச்சி, வயதுக்கு தகுந்த அளவு மூளை வளர்ச்சி இல்லாமல் இருத்தல், மூளைக் கோளாறுகள்  போன்றவைகளை கருத்தரித்த காலத்தில்  நடந்த நிகழ்சிகளோடு இணைத்து  பார்த்தால் பல உண்மைகள் வெளிப்படும் என்றும் விஞ் ஞானிகள் கூறுகின்றனர்.

    அதே போல, பெற்றோரிடமிருந்து சில திறன்களையும் குழந்தைகள் கற்றுக் கொள்ளுகின்றனர். கருவுற்ற காலத்தில் இசை போன்ற பல கலைகளில் நாட்டம்  உடையவர்களுடைய குழந்தைகளைக்கு மூளை வளரும் நேரத்திலேயே இதில் ஈடுபாடு ஏற்படுவதாகவும் ஆகவே பிறந்த பின் அவற்றில் சுலபமாக நாட்டம் ஏற்பட்டு விடுவதாகவும் சொல்லுகின்றனர்.

    ஆகவே, மகளிருக்கு கருவுறும் காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம். ஒரு சந்ததியின் தலை எழுத்தை நிர்ணயிக்கத் தயாராகும் காலம்.

    பல நுண் கருவிகள் மூலம் தாயின் வயிற்றில் ஒரு கரு காட்டும் உணர்வுகள் படம் பிடிக்கப் பட்டிருக்கின்றன. கருவாக இருக்கும் நிலையிலேயே  முகத்தில் உணர்வுகளைக் காட்டும் குழந்தைகளின் படங்களைக் கண்டால் அந்த நிலையைப் பேணிப் பராமரிக்கும் தேவையை நாம் உணர முடிகின்றது .

    ஆகவே, பெற்றோர்கள் குழந்தை உருவாகும் நிலையில் அன்பு, அமைதி மற்றும் ஆக்கபூர்வமான சூழ்நிலை உருவாக்குதல் மிக அவசியம்.

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல் (1)

    க. பாலசுப்பிரமணியன்

    கற்றல்சில பார்வைகள்

    education

    “கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு” ..-

    இது அவ்வையின் அறிவுரை. “அவங்களுக்கென்ன சொல்லிட்டுப்  போயிட்டாங்க.. இது என்ன முடியற காரியமா?” அலுத்துக்கொள்ளும் பல நெஞ்சங்கள்.

    “ உனக்கு படிக்க டியூஷன் செலவு பண்ணியே நான் போண்டியாயிட்டேன். நீ பேசாமே படிக்கிறதை விட்டுவிட்டு மாடு மேய்க்க போகலாம்” என அலுத்துகொள்ளும் தந்தை..

    “அப்போ மாடு மேய்க்கிறதுக்கு மூளை வேண்டாமா?” என இடக்காகக்   கேட்கும் மகன்.

    “என் பையன் உங்களை மாதிரித்தானே இருப்பான்.  சட்டியிலே இருப்பது தானே அகப்பையில் வரும் ” எனக்  கேலி செய்யும் தாய்..

    “உனக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதை விட இந்த மரத்திலே போய் முட்டிக்கலாம்” என செய்யப்போகாத ஒரு செயலை செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு ஆசிரியர்.

    இவர்களுக்கு நடுவே ஒரு விந்தைப் பொருளாக மாணவன். ,,

    “நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். மண்டையிலே ஏற மாட்டேங்கறது சார் …  இதையெல்லாம் எவன்தான் கண்டுபிடித்தானோ, அவனுக்கு மட்டும் இந்த மூளை எப்படி வேலை பார்த்தது?.” சோர்வுடன் கேட்கும் மாணவர்கள்.

    இந்த மூளை தான் என்ன?. இறைவன் கொடுத்த வரமா? அது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கிறதா? அதற்க்கும் சாதி மத பேத பாவங்கள் உண்டா? பணக்காரனின் மூளையும் ஏழையின் மூளையும் வித்தியாசப்பட்டதா? ஆண்களின் மூளையும் பெண்களின் மூளையும் ஒரே மாதிரித்தான் உள்ளதா? அவர்களின் சிந்தனையின் வடிவங்களில் மாற்றங்கள் இருக்கின்றதா?

    நன்றாகப் படித்து விட்டு தேர்வில் உட்காரும் மாணவனுக்கு அங்கு சென்ற உடனேயே எல்லாம் ஏன் மறந்து போகின்றது? நம்முடைய கற்றல் என்ற செயல் எப்போது ஆரம்பிக்கின்றது?

    கேள்விகள் ஆயிரம்…!!

    இவைகளுக்கெல்லாம் பதில் எங்கே இருக்கின்றது? இவைகளைப் பற்றி என்ன ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன? இந்தத் தொடரின் நோக்கம் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடி அறிந்து கொள்வதுதான்?

    கற்றல் ஒரு ஆற்றல்….. இது எப்போது தொடங்குதின்றது?

    ஒரு முறை ஒரு தாய் ஓர் ஜென் துறவியைக் காணச் செல்கின்றார். ” குருவே.. என் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும் எப்போது தொடங்கலாம்? ” என்று வினவுகின்றார்.

    அந்த குரு அவளிடம் கேட்கிறார் ” உன் குழந்தைக்கு என்ன வயதாகின்றது?” என்று.

    :” குருவே. என் குழந்தை பிறந்து ஐந்து மாதங்களே ஆகின்றன.”

    “அப்படியா? ஏற்கனவே நீ பதினான்கு மாதங்கள் கால தாமதம் செய்து விட்டாயே.”  என  பதிலளிக்கிறார்.

    அப்படியென்றால் ஒரு குழந்தை கருவில் இருக்கும் போதே கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறதா? இதைப் பற்றி விஞ்ஞான ஆராய்ச்சிகள் என்ன சொல்லுகின்றன?

    நம்முடைய புராணங்களில் அபிமன்யுவைப் பற்றியும் பிரகலாதனைப் பற்றியும் சொல்லப்பட்டது கட்டுக் கதையா? அதில் சிறிதளவேனும் உண்மை இருக்குமா,  என்றெல்லாம் கேள்விகள் எழும்புகின்றன.

    இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில் தன் இளம் பிராயத்திலே சொன்னாராம் ” நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் . ஆனால் கற்பிக்கப் படுவதை வெறுக்கிறேன்” என்று.

    நம்முடைய மாணவர்களில் எத்தனை பேர் சர்ச்சில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கின்றார்கள்? அவர்களால் சர்ச்சில் போல வாழ்க்கையில் முன்னேற முடியுமா?  அவர்கள் எப்படி கற்றிக்கொள்கின்றனர்?

    கல்வி என்பது ஒரு மாணவனை ஏதாவது ஒரு தெருவினில் வெற்றிபெறச் செய்வதா? அறிவு என்பது வெறும் புத்தக அறிவா? ஒரு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதற்க்கு நிகரான அறிவு நிச்சயம் இருக்கின்றதா? பள்ளிக்குச்செல்லாத நம் முன்னோர்கள் எவ்வாறு  அறிவிலும் திறனிலும் மேம்பட்டு இருந்தனர்?

    இப்படி பல கேள்விகள் நம் மனிதினில் அடிக்கடி தோன்றுகின்றன. இவற்றிக்கு அறிவு பூர்வமாகவும் அறிவியல் மூலமாகவும் என்ன பதில்கள் கிடைக்கின்றன ?

    தொடரின் அடுத்த பகுதியில் பார்ப்போம்.!

    Share
  • ஒரு இதயம் துடிக்கிறது..

    .பாலசுப்ரமணியன்

    சுப்ரமணிய கௌண்டர் என்றாலே கோவை வட்டாரத்தில் தெரியாதவர்களே கிடையாது. அந்த ஊரில் அவர் ஒரு பெரிய புள்ளி. அவருடைய கண்காணிப்பில்  கிட்டத்தட்ட ஏழெட்டு தொழிற்ச்சாலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. பல கோடி சொத்துக்களுக்கு அவர் முதலாளி . வீட்டில் எப்போதும் ஐந்து அல்லது ஆறு கார்கள் தயாராக இருக்கும்.  ஆனால் அந்த ஆடி காரைமட்டும் அவரைத் தவிர வேறு யாரும் உபயோகிப்பதில்லை.

    அவரிடம் ஏழெட்டு டிரைவர்கள் வேலை பார்த்தாலும் அந்த ஆடி காரை அவர் மட்டும் தான் ஓட்டுவார். டிரைவர்களிடம் அவர் கொடுப்பதில்லை. அவர் ஓட்டுவதைப் பார்க்கும் போது டிரைவர்களுக்கே கொஞ்சம் பயமாக இருக்கும். அவ்வளவு வேகமாக ஓட்டுவார்.

    நேற்று காலை அவர் கோவையிலிருந்து சேலம் சென்றபோது  சேலம் நகருக்கு முன்னால்  ஒரு சிக்னல்,  சிவப்பு வண்ணம் மாறுவதற்காக அவர் வண்டியில் காத்த்திருந்தார் .

    “சார், சார்,,, பசிக்கு ஏதாவது போடுங்க சார்..” அந்தப் பிச்சைக்காரி வண்டியின் ஜன்னல்களைத் தட்டி பிச்சை கேட்டுக்கொண்திருந்தாள் .

    “போ.. போ.. கதவைத் தட்டாதே.” கை அசைவின் மூலம் அவளுக்கு சைகை காட்டிவிட்டு வண்டியை  நகர்த்தினார்.

    “சார், சார், ஏதாவது பிச்சை போடுங்க சார்.. சாப்பிட்டு இரண்டு நாளாச்சு சார்..”

    “பொய் சொல்லறதே …..உங்களுக்கு  பொய் சொல்லறதே வழக்கமாகப் போச்சு “

    சிவப்பு வண்ணம் விலகி பச்சை வண்ணம் கண்டதும் வண்டியை முன்னே நகர்த்தினார்.

    ” தானம் தர்மம் பண்ணறத்துக்கு ஜனங்களுக்கு மனசே வர மாட்டேங்கறது.”  அந்தப் பிச்சைக்காரி மேலே நகர்ந்தாள்

    மாலையில் சேலத்தில் தன் வேலைகளை முடித்துக்கொண்ட சுப்ரமணிய கௌண்டர்  திரும்புவதற்கு முன்னால்  சூடாக ஒரு கும்பகோணம் டிகிரி காப்பியை சாப்பிட்டு விட்டு தன வண்டியைக் கிளப்பினார். தன்னுடைய வேலை வெற்றிகரமாக முடிந்த சந்தோசம் அவர் மனதில் நிரம்பியிருத்தது. அதன் பிரதிபல்லிப்பு அவர் வண்டியின் வேகத்தில் நன்றாகத் தெரிந்தது.

    சேலத்திற்கு வெளியே நேஷனல் ஹை வேயில் அவர் வண்டி நூறு கிலோ மீட்டர்களைத்  தாண்டி பறந்து கொண்டிருந்தது.

    திடீரென்று அவருக்கு ஓர் ஷாக். . அந்த மங்கிய இருட்டில் ஒரு  உருவம் அந்த ஹை வேயை வேகமாகக் கடந்தது. அவர் கால் அசுர வேகத்தில் பிரேக்கை அழுத்தியது. “கிரீச்”  என்ற சத்தத்துடன் அந்த கார் நிற்கும் முன்.. “ஓ மை காட். ” என்று அவர் அலற, காரில் அடிபட்ட அந்த உருவம் வானில் பத்தடி உயரத்தில் பறக்க…

    காரை ஓரமாக நிறுத்திய கௌண்டர் அந்த உருவம் தலையில் அடிபட்டு ரத்தம் சொட்டச் சொட்ட …….. கிழே கிடப்பதைப் பார்த்தார்.

    சுற்றும் முற்றும் பார்த்தவர்  “நல்லவேளை. கும்மிருட்டு.. இங்கே யாரும் இல்லை. நம்ம வண்டியையும் யாரும் பார்க்கவில்லை.. பார்த்தால் என்ன ஆகும்? அவரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

    பைத்தியம் பிடித்தவர் போல வண்டியை நோக்கி ஓடியவர் அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்து வேகமாக மேலே சென்றார். உடலெல்லாம்  வியர்த்தது. . அந்த வண்டி கோவை வரை எங்கேயும் நிற்கவில்லை. தான் செய்வது முற்றிலும்  அவருக்குத் தெரிந்திருந்தாலும் உள்மனத்தில் இருந்த பயம் அவரை விரட்டியது.

    வீடு திரும்பியதும் காரேஜில் காரை நிறுத்திவிட்டு அதைச் சுற்றிவந்து ஏதாவது தடயங்கள் வண்டியில் தென்படுகிறதா என தேடிப்பார்த்தார். தடயங்கள் ஒன்றும் தென்படாததால் சிறிது  அமைதியுடன் வீட்டின் உள்ளே நுழைந்தார் .

    “என்னங்க,  டென்ஷன் போல..உடம்பெல்லாம் வியர்த்து .. போன காரியம் எதாவது சரியா முடியல்லையா?” அவர் மனைவியின் கேள்விகளுக்கு அரைகுறை பதில் சொல்லிவிட்டு, ” கொஞ்சம் தலைவலி.. நான் படுத்துக்கப்போறேன்.. தொந்தரவு செய்யாதீங்க. “

    காலை நாலு மணி.  நெஞ்சில் ஏதோ ஒரு பாறையை தூக்கி வைத்தால் போல் ஓர் வலி.. உடல் .வியர்த்துக்கொட்டியது. நா வறண்டது ..  அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை நோக்கி கை சென்றது. ஆனால் அதை பிடிக்க முடியவில்லை.

    ” சாவித்திரி.. ..சாவித்திரி.” அவர் குரல் .கொடுத்தார்.

    பயந்து கொண்டே எழுந்த சாவித்திரி.. “என்னங்க.., என்ன ஆச்சு?”

    “நெஞ்சு வலிக்கிதும்மா…”

    “அய்யய்யோ, இருங்க டாக்டரைக் கூப்பிடறேன்…”

    “இல்லே, ஷியாமைக் கொஞ்சம் எழுப்பி என்னை ஆஸ்பத்தரிக்கு அழைத்துக் கொண்டு போகச்சொல்லு.”

    ஆஸ்பத்திரியில் அவர்க்கு உடனே ஐ. சீ .யு வில் அட்மிஷன் .. ஊரில் உள்ள பெரிய இதய அறுவை  சிகிச்சை நிபுணர்கள் அங்கே  கூடினர்.

    இரண்டு மணி நேரம் அவரை பரிசோதித்த பின்  டாக்டர் ஷியாமையும் கௌண்டரின் மனைவியையும் தனியாக அழைத்துப்  பேசினார்.

    “ஷியாம் உங்க அப்பாவுக்கு டோடல் ஹார்ட் பைலியர். இதயத்தின் ரெண்டு வால்வுகள் வேலை  பார்க்கவில்லை. இதயத்தின் தசைகள் சுருங்கி விரியமுடியாத நிலையில் உள்ளன.. அவர் உயிர் பிழைக்க ஒரே வழி.. இதய மாற்று சிகிச்சை.. அதற்கு உடனே ஒரு இதயம் கிடைக்கணும்.. அது மிகவும் கடினமானது. அதுவரைக்கும் ரிஸ்க்தான். “

    சாவித்ரியின் கண்களில் நீர் வழிந்தது.. “அந்த மருதமலை முருகன் தான் வழிவிடணும்.”

    “நான் முயற்சி செய்கிறேன்… எங்காவது இதயம் கிடைக்குமாவென்று. பொதுவாக இதய மாற்று சிகிச்சைகளை  இதயம் கிடைத்து ஓரிரு மணி நேரங்களுக்குள்  செய்ய வேண்டும்.”

    இரண்டு  மணிநேரத்திற்குப்  பிறகு ஷியாமை டாக்டர் அவசரமாக  அழைத்தார்.” “ஷியாம். ஒரு குட் நியூஸ். சேலத்திலே ஒரு பெண் விபத்திலே மாட்டிக்கொண்டு அவளுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதால் அவள் இதயத்தை தானமாகத் தர அவர் உறவினர்கள் ஒத்துக்கொண்டுள்ளனார். உங்களுக்கு    சம்மதம் என்றால் அதை இங்கே கோவைக்கு எடுத்து வர ஏற்பாடு பண்ணலாம். அவரைக் காப்பாற்ற அது ஒன்றுதான் இப்போதைக்கு வழி. “

    “டாக்டர்.. அது முடியுமா..?”

    இப்போதைக்கு ரிஸ்க் 90 விழுக்காடு… ஒரு வேளை இதய மாற்று சிகிச்சை பண்ணினால் சில ஆண்டுகள் வாழ வாய்ப்புண்டு..”

    தங்கள் குடும்பத்தினரைக் கூடி ஆலோசித்தபின் ஷியாம். இதய மற்று சிகிச்சைக்கு ஒத்துக் கொண்டான்.

    டாக்டர் பேஷண்டை அறுவை சிகிச்சைக்குத் தயார் பண்ணுங்க..” பெரிய டாக்டர் தன் இளையவருக்கு ஆணையிட்டார். போர் வேகத்தில் வேலைகள் நடந்தன.

    சேலத்திலிருந்து ஆம்புலன்சில் இதயம் கோவைக்கு வந்து அங்கு மாற்று சிகிச்சை நல்லபடியாக நடந்தது..

    சாவித்திரியின் வேண்டுகோளை அந்த  மருத மலையான் கேட்டுவிட்டான்.!

    ஓரிரு வாரங்களுக்குப் பிறகு டாக்டர் இதயத்தை தானமாகக் கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்ல அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்தார்.

    நாற்பது வயதுடைய ஓர் நபரும் அவருடைய  மகனும்  வந்திருந்தனர்.

    சுப்ரமணிய கௌண்டர் டாக்டரிடம் அவர்களுக்கு ஏதாவது பணம் அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.

    டாக்டர் வந்தவரிடம் ” சார். உங்களுக்கு ஏதாவது பண உதவி செய்யணும் என்கிறார்” என்றார்..

    கைகூப்பி நின்ற அந்த நபர்  “அய்யா, நாங்க பிச்சை எடுத்து .பிழைக்கிறவங்க. இந்த பொம்பிளை அங்கே சிக்னலிலே தினசரி பிச்சை எடுக்கும். பிச்சையெடுத்தாவது  இந்தப்பையனை நல்லாப் படிக்க வைக்கணும்னு சொல்லிச்சுங்க.. அன்னிக்கு ராத்திரி பக்கத்துக்  கடையிலே கொஞ்சம் அரிசி வாங்கப் .போச்சு.  ஏதோ புறம்போக்கு காரிலே போற மமதையிலே அடிச்சுப் போட்டுட்டுப் போயிட்டான்.  மூளையிலே அடிபட்டது ….உசிரு போச்சு. இந்த ஜென்மம் அடிக்கடி .சொல்லுங்க. “ஆண்டவன் நம்மை பிச்சை எடுக்க  வச்சிட்டான் .. என்னிக்காவது நம்மளும் நாலு பேருக்கு ரெண்டு காசு தர்மம் பண்ணனும்னு. . அதுதான்  முடியலே.. போற போக்கிலே அதோட உடம்பாவது நாலு பேருக்கு உபயோகமா .இருக்கட்டுங்க…  இதுக்குப்போயி போயி காசு வாங்கினா அந்த ஜென்மம் என்ன மன்னிக்காதுங்க..”

    டாக்டரின் கண்களில் நீர் வழிந்தது.

    சுப்ரமணிய கௌண்டரின் இதயம் துடித்தது.  அவர் அந்த பிச்சைக்காரன் முன் கையேந்தி நிற்பது போல் மனத்தில் ஒரு நினைப்பு..

    அந்தச் சிறுவனிடம் டாக்டர் கேட்டார்  “தம்பி.. உன் பெயர் என்னப்பா?”

    “அம்மா. ஆசையா என்னை கர்ணன்னு கூப்பிடுவனாக சார்..:”

    :என்ன படிக்கறே?”

    “ஆறாம் கிளாஸ் “

    :கையிலே என்ன புத்தகம?”

    “ திருக்குறள் சார்……”

    “திருக்குறள்  தெரியுமா?”

    “நிறைய  குறள்  தெரியும் சார்..”

    :உனக்குப் பிடித்த  குறள்  ஒண்ணு சொல்லு “

    “இன்னா செய்தாரை ஒறுத்தல்

    அவர் நாண  நன்னயம் செய்துவிடல்.”

    ஒரு பிச்சைக்காரியின் இதயம் பணக்கார உடலில் உட்கார்ந்து துடித்துக்கொண்டிருந்ததா இல்லை சிரித்துக்கொண்டிருந்ததா? .. யாருக்குத் தெரியும் – சுப்ரமணிய கௌண்டரைத்தவிர?

    Share
  • வார்த்தைகளைத் தேடும் கவிதைகள்

    க. பாலசுப்பிரமணியன்

     

    உள்ளத்தில் கொந்தளிக்கும் எரிமலைகள்

    உதடுகளின் வாசலில் உதிரத்தை சுவாசிக்கும் !:

    உயிரோடு மெய் சேர்க்காமல் உணர்வலைகள்

    சொல்லுக்குச்  சுவைதேடிச் சோர்ந்திருக்கும்  !!

     

    பெருமூச்சில் நினைவுகள் சுமையிறக்கி

    சோகத்தில் சொந்தத்தை வளர்த்திருக்கும்  ..

    கல்லில் சிலைவடிக்கத் துடிக்கும் கைகள்

    உளியின் வலிக்கு ஒத்தடம் கொடுத்திருக்கும் !!

     

    கற்பனைகள் நினைவில் கதறிக் கதறி

    கால் விலங்குகளை உடைக்கத் துடித்திருக்கும்

    காய், மா, பலாவின் கதவுகளைத் தட்டிக்

    கவிதைகள் உள்ளே வரக் காத்திருக்கும்

     

    எழுதத் துடிக்கின்ற  இதயத் தேருக்கு  இயலாமை

    முட்டுக்கட்டை போட்டு முன் நிற்கும் !

    காலத்தில் கலங்கி நிற்கும் கவிதை

    காற்றுண்ட கார்மேகமாய் கலைந்து நிற்கும் !

    Share
  • நவராத்திரி நாயகியர் (9) -கூத்தனூர் சரஸ்வதி தேவி

    க.பாலசுப்பிரமணியன்

    images (4)

    அரசலாற்றின் கரைவாழும் ஆதிசக்தி !

    அன்னத்தின்  மேலமர்ந்த ஞானசக்தி !

    ஆணவத்தை அழித்துவிடும்  ஆன்மசக்தி !

    அன்னையவள் அறிவின் பராசக்தி !

     

    வெள்ளைத்தாமரையில் வீற்றிருந்து

    வேதங்கள் நான்கையும் கையெடுத்துத்

    தாய்மொழியாய் தாய்ப்பாலை தந்தெனக்குத்

    தாயாகி அறிவூட்டும் சோழநாட்டுச் சுகமே !!

     

    கூத்தனுக்குச்  சங்கத் தமிழ் தந்தவளே !

    கூத்தோடு  இயல்  இசையானவளே !

    யாழிசையின் ஓரசைவில் மனமசைய

    நாவசைவில் நாதமெல்லாம் தந்தவளே !

     

    கல்விக்கு வித்தாவாய் காலையிலே

    மனத்திற்கு இசையாவாய் மாலையிலே

    கல்லுக்குள் சிலையாவாய் கைகளிலே

    கருணைக்குப் பொருளாவாய் கருத்தினிலே !

     

    கண்ணோக்கும் காட்சியெல்லாம் கருத்தாக்கி

    கண்ணிமைக்கும் நேரத்திலே அறிவாக்கி

    வித்தைக்கு வழிகாட்டும் வித்யாதேவி

    சிந்தைக்குள் என்றும்இருப்பாய்  ஸ்ரீதேவி !!

     

    அகரம் முதல் ஆய்தம் வரை எழுதிவைத்தேன்

    அழகுதமிழ் காவியங்கள் அடுக்கிவைத்தேன் !

    ஆயிரம் கண்கள் கொண்டவளே, அம்மா !

    அறிவுக்கண்ணிரண்டும் தந்தருள்வாய் !

     

    இருள்கண்டு அஞ்சுகின்ற என் மனதினையே

    அருள்கொண்டு அரவணைக்கும்   அன்புக்கரமே!

    செல்வத்தோடு வீரத்தையும் கல்வியில் சமைத்து

    சீரான வாழ்வுக்குப்  பொருளாய் தந்தாய்  நவராத்திரி !

     

    உலகெங்கும்  அமைதியின் ஆட்சி வேண்டும்

    உயர்தமிழ்ச் சொல்லெங்கும் கேட்க வேண்டும் !

    உண்மைகள் உறங்காமல் வாழவேண்டும் !

    உன்னருளால் உலகமெல்லாம் உய்யவேண்டும் !!

    Share
  • நவராத்திரி நாயகியர் (8) -பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன்

    க.பாலசுப்பிரமணியன்

     

    பட்டதுன்பம் போதுமென்றால்durgai4

    பட்டீஸ்வரம் செல்லுங்கள் !

    பார்த்தவுடன் அருள்தருவாள்

    பாரமெல்லாம் இறக்கிடுவாள் !

     

    முக்கண் கொண்டவளே, மூலப்பொருளே !

    முகம் பார்த்தால்  அமைதிப் புயலே  !

    பக்தருக்குப் பொழியும் அருள்மழையே  !

    பைரவியின் பாதங்கள் கருணைக்கடலே !!

     

    ஆயுதங்கள்  தாங்கியவள் அமர்ந்தாள்

    அறம் காக்க அவளென்றும்  துடிப்பாள்  !

    காலனையும் வென்றுவிடும் அவள் கோலம் !

    காமனையும் எரித்துவிடும் முக பாவம் !

     

    சிங்கத்தின் மேலமர்ந்த  சிங்காரி

    சூலமேந்தி சூது விரட்டும் போராளி  !

    மகிஷனைக் காலடியில் வீழ்த்திவிட்டு

    மனங்குளிர்ந்து அருள் செய்யும் துர்க்கா !

     

    எலுமிச்சை விளக்கேற்றி வைத்ததுமே

    எல்லையில்லா அச்சங்கள் நீங்கிடுமே !

    பூரண நிலவே! பெண்மையின் எழிலே!

    பூமழை பொழிந்திட பூத்திடும் தாயே!

     

    செவ்வரளியுடன் தாமரையும் சேர்த்து

    செந்தமிழ்  பாட்டொன்றில் தோய்த்து

    சந்நிதியில் முன்னின்று பேசுங்கள்

    சக்தியவள் செவிகொடுத்துக் கேட்பாள் !

     

    புலனின் தொல்லைகள் நீங்கிவிடும்

    புரியாத பாதைகள் புரிந்துவிடும் !

    தாயாக அவளைத்  தத்தெடுத்தால்

    மாயாவி! மனதினிலே அமைந்திடுவாள் !

     

    நாளொன்று போதாது அவளை நினைக்க  !

    நாவொன்று போதாது அவளைத் துதிக்க !

    வீரத்தோடு விளையாடும் அவள்  வேதமொழி !

    விளக்கேற்றிப்  போற்றிடுவோம் சுபராத்திரி!

     

     

     

     

    Share
  • நவராத்திரி நாயகியர் (7) சங்கரன் கோயில் – கோமதி அம்மன்

    க. பாலசுப்பிரமணியன் 

     

    ஆலகாலமுண்ட ஆதிசிவன் அன்பு நாடியேGod-1

    ஆடித்தவமிருந்து அருள் செய்யும் அம்பிகையே!

    ஊசி முனையில் ஒரு காலில் நீ நின்றாலும்

    பாசமுடன் பாரெல்லாம் வாழ வைத்தாயே !!

     

    புன்னைவனத்துப் புன்சிரிப்பே !

    புவியீர்த்த விண்வெளியே!

    அனைத்துயிர்க்கும் நீ ஆவுடையாள் !

    அறமென்னும் அமுதூட்டும் தேன்மொழியாள் !

     

    சங்கடங்கள் தீர்த்திடிடுமே சங்கரன்கோயில்

    சர்ப்பங்கள் காத்திருக்கும்  புற்றுவாயில் !

    ஊழ்வினையாய் ஓடிவந்த விடமெல்லாம்

    ஓங்காரி கண்பட்டா லே நல்லமுதாகும் !

     

    போகமுடை வாழ்வழித்துக்  காலமெல்லாம்gomathi

    நாகத்துடன் வாழ்ந்திருந்த யோகினியே!

    பற்றுடனே வேண்டியவர்  ரோகமெல்லாம்

    புற்றுமண்ணால் போக்கிவிடும் கோமதியே !

     

    சங்கரனும் நாரணனும் ஒன்றிடவே

    சமத்துவத்தைக்  கற்பித்த  சாம்பவியே!

    பதுமனுக்கும் சங்கனுக்கும் வழிகாட்டி

    பாம்பாட்டி சித்தருக்கு அருள் தந்தாயே !

      

    பாம்புடனே தேளையும் பரிசாக அளித்தாலும்

    பாங்குடனே அவர் குறைகள் தீர்த்திடுவாய் !

    மனம்கலங்கி வந்தோர் மாவிளக்கு ஏற்றிடவே

    மாதேவி! ஒளிவிளக்காய் நின்றிடுவாய் !

     

    கண்களிலே நீயிருந்தால் கவலைகள் நீங்கிவிடும்

    எண்ணத்திலே நீயிருந்தால் ஏற்றங்கள் வந்துவிடும் !

    ஒருராத்திரி போற்றிடவே  ஓலங்கள் அடங்கிவிடும்!

    நவராத்திரி போற்றிகிறேன்! நாயகியே வந்துவிடு!

    Share
  • நவராத்திரி நாயகியர் (6) சிருங்கேரி சாரதாம்பிகை  

    க. பாலசுப்பிரமணியன்

    Sri-Sharadamba-Sringeri 

     

    பாம்புகூடத் தவளைக்குக் குடை பிடிக்கும் !

    பாரினிலே அன்புக்குக் குரல் கொடுக்கும் !

    பாரதியின் ஆட்சியிலே அமைதி கிடைக்கும்

    பார்த்தவுடன் மனம் வியந்து நிற்க்கும் !!

     

    கங்கையிலே பொங்கிவரும் வெள்ளமென

    துங்கையிலே பொங்குகின்ற அருளமுதே !

    துவண்டுவிடும் மானிடருக்கென்றும்

    தோள்கொடுக்கும் தெய்வத்திருவே !

     

    அங்கமெல்லாம் தங்கமென ஒளிரும்

    அறியாமை அகமிருந்து விலகும் !

    அன்னையுன் பார்வை அருமருந்தே!

    ஆனந்தம் தந்துவிடும் அடிக்கரும்பே!!

     

    வேதத்தின் பொருளாக வந்தவளே

    பேதமின்றி அருளுகின்ற சாரதையே !

    ஆணவத்தை அழிக்கின்ற பார்வை

    ஆன்மிகத்தை அருளுமவள் பாதை !!

     

    ஆய கலைகள் அறுபத்தி நான்கும்

    அசைகின்ற விழிதன்னில் உருவாகும்  !

    அறிவும், கல்வியும் அவளாட்சி

    ஆனந்த பைரவியாய் அவள் காட்சி!

     

    யாழிசையும் இன்னிசையும் இணைசேர

    யாகத்துடன் வேதஒலி மேலோங்க

    பாரனைத்தும் இசைத்திடுவாள்  பாரதியே !

    பாதங்கள் போற்றிடவே  நாளெல்லாம் நற்கதியே  !!

     

    கதிரவனின் திசைமாற வரும் ராத்திரி

    கண்கள் சோர்வடைந்தால் பகலும் ராத்திரி !

    கண்ணோடு கண்ணோக்கி அவளைக் கண்டால்

    காலங்கள் மாறாமல் கண்களுக்கு நவராத்திரி !

    Share
  • நவராத்திரி நாயகியர்  (5) காஞ்சி காமாட்சி

    க. பாலசுப்பிரமணியன்

    kamakshi

    கண்ணுக்கு இனியவளே

    கருத்துக்குக்  கனிந்தவளே

    கலையனைத்தும் சிலையாகக்

    காஞ்சியில் அமர்ந்தவளே !

     

    காஞ்சிப் பட்டழகு ,

    கண்ணிரண்டும் உனக்கழகு !

    கையருகில் கரும்பழகு ,

    காமாட்சி உன் அருளழகு !

     

    பிறையுண்டு தலைதன்னில்

    பரிவுண்டு கண்ணிரண்டில்

    பயம் நீக்கும் அபயம் முன்னில்

    பார்த்தாலே விலகும் பாவம் மண்ணில் !

     

    வேதத்தை வித்தாக்கி

    வேட்கையை முடிவாக்கி

    முக்தியை  முதலாக்கி

    பக்தியைத் தந்தவளே! !

     

    பத்மாசனத்தில் உனைக்கண்டால்

    பாழ்வினைகள் ஓடிவிடும் !

    பார்வதியே, பகவதியே

    பாசாங்குசம் தரித்தவளே !

     

    சொத்தெல்லாம் எனக்கெதற்கு?

    சொந்தமாய் நீயிருக்க !

    சுமையில்லா  வாழ்விற்குச்

    சுவையான அருட்சுனையே !

     

    சக்திபீடம்  உனதன்றோ !

    சாந்தத்தின் உருவமே நீயன்றோ !

    நவரசத்தில் கருணையின் வடிவன்றோ !

    நவராத்திரி நாயகி நீயன்றோ !!

    Share
  • நவராத்திரி நாயகியர்   (4) -சமயபுரம் – மாரியம்மன்

     க.பாலசுப்பிரமணியன்

    images (6)

     

    திரிபுரத்தைக் காப்பவளுக்குத்

    தேரிழுக்க ஓர் புரம் சமயபுரம் !

    தீராத நோய்களையும் தீர்த்திடுமே

    தேவியவள் தெய்வவரம்!

     

    தீச்சட்டி ஏந்தி வந்தாலும்

    தீந்தமிழில் பாடி வந்தாலும்

    திருவுள்ளம் அவளுக்கு ,

    தீமைகள் போக்கிடுவாள் !

     

    மாவிளக்கு மனதில் ஏற்றி

    மாரியவள் பெயர் போற்றி

    மனமுருகி நின்றாலோ

    மனமிரங்கி வந்திடுவாள் !

     

    ஆத்தாவென அழைப்போருக்கு

    அடைக்கலமே தந்திடுவாள் !

    அங்கங்கள் சந்நிதியில்  தரைபுரள

    அருள்புரிய எங்கெங்கும் வந்திடுவாள் !

     

    கூழெடுத்துக் கொடுத்திடுங்கள்

    கூடவந்து  அவள் நிற்ப்பாள் !

    கூடிவந்த ஊழ்வினையைக்

    கூறாமல் விலக்கிடுவாள் !!

     

    கல்லாக இருந்தாலும் கருணைக்கடலே

    சொல்லுக்குள் அடங்காத சொற்சுவையே

    கண் கொடுத்த  தெய்வமன்றோ !

    காலமெல்லாம் அவளை மறப்பதுண்டோ  ?

     

    பகலென்ன, இரவென்ன,

    பார்ப்பதற்கு நேரமென்ன?

    திருமுகத்தை கண்டவர்க்கு

    தினந்தோறும் நவராத்திரி !

    Share
  • நவராத்திரி நாயகியர்   (3)

    திருவானைக்கோவில் – அகிலாண்டேஸ்வரி

     

    நீரினில் சிலையெடுத்து

    நீலகண்டன் அருள்பெற்று

    சிவஞானம் கேட்டறிந்த

    சிவகாம சுந்தரியே !

     

    தாடங்கம் காதணிந்து

    தந்தமுகனை முன்கண்டு

    தாயன்பைத் தரணிக்குத்

    தந்தருளும் தயாநிதியே !

     

    தாம்பூலம் வாயில் தந்து

    தமிழினிலே சொல் தந்து

    காளமேகம் கவி சொல்லக்

    காவியம் படைத்தவளே !

     

    திருநீறுச் சித்தனவன்

    திண்ணமுடன் மதில்கட்ட

    திருக்கோயில் கொண்டவளே

    திருவரங்கன் சகோதரியே !

     

    பாலுண்ணும் குழந்தைகூடப்

    பாட்டெடுக்கும்  உனைக்கண்டால் !

    பள்ளியறை செல்லாத உன் காதல்

    பாடிடவே நாள்முழுதும் நவராத்திரி!

     

    காவிரி நதியினில் நீராடிக்

    கரையினில் வாழ்ந்திடுமுனைப் பாடிக்

    கலங்கிடும் நெஞ்சங்கள் பல கோடி,

    காத்தருள்,  தாயே!  நீ வாழி !

    Share