Tag: சத்தியமணி கவிதைகள் தமிழ் அவ்வை

  • நாராய ணாவென்னா நாவென்ன நாவே?

    நாராய ணாவென்னா நாவென்ன நாவே?

    நாமந்தான் சொல்லா நாவென்ன நாவே? ()

    கன்றினத்தைத் தன்வசமாய் அமுதூட்டும் நாமம்
    குன்றினத்தைக் குடையாக்கி அடைகாக்கும் நாமம்
    கொண்டை மயிற்சிறகை அணியாக்கும் நாமம்
    தண்டை மணிசிணுங்க அரவடக்கும் நாமம் ()

    குழலூதி மெய்மறக்கச் செய்கின்ற நாமம்
    அழலேகா வண்ணமே அருளூற்றும் நாமம்
    உறியிருந்த மனம்திருடிச் சுவைக்கின்ற நாமம்
    அறியாமல் செய்யவைத்து அறிகின்ற நாமம்()

    தேனுக்கும் மேலாகத் தெவிட்டாத நாமம்
    வானுக்கும் மண்ணுக்கும் வளங்கூட்டும் நாமம்
    கோவிந்தா எனும்போது குழைகின்ற நாமம்
    கோபாலா என்றாலோ குடியேறும் நாமம்()

    Share
  • வசந்த நவராத்திரி நாயகி

    -சத்திய மணி

     

    ஒன்றாக இருக்கின்ற தாயானவள்

    இரண்டாக இணைகின்ற உறவானவள்

    மூன்றாக சுழல்கின்ற நிகழ்வானவள்

    நாலாக நவில்கின்ற மறையானவள்

    ஐந்தாக அருள்கின்ற வடிவானவள்

    ஆறாக சுவைக்கின்ற ருசியானவள்

    ஏழாக ரசிக்கின்ற நிறமானவள்

    எட்டாக படைக்கின்ற சித்தானவள்

    ஒன்பதாய் உண்டாக்கும் சுமையானவள்

    பத்தாகி வெற்றிக்கு பிறப்பானவள்

    இரவிலே ஒளிகாட்டும் விளக்கானவள்

    எல்லா மிடம்நிறைந்தப் பெண்தானிவள்.

     

    Share
  • ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே (பகுதி 1)

     

    சத்தியமணி

     

    தீமைகள் களைபவனே உமையின் மைந்தனே

    ஆனைமுகத்தவனே அருள்முதற் பொருளோனே

    நாமையம் அமர்ந்து நவின்றிடுவாய் சிந்து

    அன்னையைப் பாடிட அமுதிடுவாய் விரைந்து

     

    அன்னை யென்றுன்னை அழைப்பவரின் முன்னே

    விரைந்திடும் தாயுனது புகழ்நிலத்து வாழியவே

    முன்னை வினையெல்லாம் கடைவிழியின் கீற்றால்

    கரைத்திடும் தாயுனது புகழ்நிலைத்து வாழியவே

    தன்னை யுருவாக்கி தயைக்கருணை கொடையாக்கி

    அரசியாய் அலங்கரிக்கும் மாசக்தி வாழியவே

    ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே

    எல்லா நலங்களும் எமக்கருள்வாயே !    1

     

    மடலை விரிப்பதிலும் மணமதில் நிறைப்பதிலும்

    மதுவுடன் மலர்கள்தரு மகிமையே வாழியவே

    உடலை படைப்பதிலும் உயிரதில் நிலைப்பதிலும்

    மனமதி அமைதிதரு மாதரசி வாழியவே

    பயன்படும் பேரறிவும் பகுத்திடும் நுண்திறனும்

    கொடுத்திடும் பெருங்கருணை கலைவாணி வாழியவே

    ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே

    எல்லா நலங்களும் எமக்கருள்வாயே !   2

    Share
  • திருமுருகன் துதிமாலை (6)

    சத்திய மணி

     

    நோயிடம் மாட்டி நொடியெலாம் போக்கும்

    ஊழ்வினைத் தீர்க்க வேண்டும்

    பாயிரம் நான்பாட பதிலுக்கு நீயாடி

    பரவசம் காட்ட வேண்டும்

    சேயிடம் கேட்டு செய்யாமல் நீயாகத்

    தேவைகள் சேர்க்க வேண்டும்

    தாயிடம் கேட்டுதான் பெறவேண்டுமோசொல்

    தரணியில் முருகவேலே

    மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

    விளையாடும் வேலகுகனே

    துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

    முகங்காட்டும் சக்திமகனே  (6)

    Share
  • திருமுருகன் துதிமாலை (5)

    இப்பிறவி முப்பிறவி வினையெல்லாம் போக்கி

    முக்தியே சேர்க்க வேண்டும்

    தப்பியான் செய்கின்ற பிழையெலாம் நீக்கி

    பக்தியை ஏற்க வேண்டும்

    சிப்பியில் முத்தான வித்தகா ஷண்முகா

    சித்தனே செந்தில்நாதா

    அப்பிய நீறெலாம் அதிசய மருந்தாக்கி

    அமுதாக்கும் குமரதேவே

    மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

    விளையாடும் வேலகுகனே

    துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

    முகங்காட்டும் சக்திமகனே   (5)

    Share
  • திருமுருகன் துதிமாலை (4)

    நிலைக்கின்ற பொருளோடு கொடுக்கின்ற வள்ளல்

    குணம் வேண்டும் கொள்கை வேண்டும்

    அலைகின்ற   மாயத்தின் சுழல்மாட்டும் முன்னாலே

    வந்து நீ காக்க வேண்டும்

    சிலையென்று ஆகாமல் தினந்தோறுமே வந்து

    தரிசனம் காட்ட வேண்டும்

    மலைவந்து காண்கின்ற காட்சியும் தானிந்த

    நிலம்நின்று காட்ட வேண்டும்

    மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

    விளையாடும் வேலகுகனே

    துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

    முகங்காட்டும் சக்திமகனே   (4)

    Share
  • திருமுருகன் துதிமாலை (3)

     

    சத்தியமணி

     

    தெளிவில்லா சிந்தனை வெளியேற வேண்டும்

    அறிவோடு ஆக்கம் வேண்டும்

    ஒளியில்லா இருள்தனில் ஓங்காரமாய்நீ

    பளிச்சென்று தெரிய வேண்டும்

    விளியோடு துதிபாடி துதிபாடி துதிபாடி

    வேலவா மகிழ வேண்டும்

    கிளியோடு மொழிபேசும் உன்மழலையொடு

    கீர்த்தனை யோட வேண்டும்

    மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

    விளையாடும் வேலகுகனே

    துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

    முகங்காட்டும் சக்திமகனே   (3)

    Share
  • திருமுருகன் துதிமாலை (2)

     

    சத்தியமணி

    காரணம்தேடி கலங்கிடும் போதுநீ

    காரியம் ஆகவேண்டும்

    ஆரணமோதி அடைந்திடும் மகிமைநின்

    அடிகளில் காணவேண்டும்

    சீரணமாகா திண்டாடும் பிணிநீக்கி

    சேமங்கள் சேர்க்க வேண்டும்

    பாரணங்  கண்டு பலகாலந் தொண்டு

    பணியாற்றும் ஆசி வேண்டும்

    மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

    விளையாடும் வேலகுகனே

    துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

    முகங்காட்டும் சக்திமகனே   (2)

    Share
  • திருமுருகன் துதிமாலை (1)

     

    சத்தியமணி

    பங்குனி  உத்திரம்  நினைவாக (நொய்டாவில் முருகன் ஆலய குடமுழுக்கில் அறுமுகனுக்கு அர்ப்பணித்தது)

    அம்மாவின் மடியில் சிம்மாசனம் செய்து

    அரசாளும் ஆறுமுகனே

    இம்மாகலி காலத் தீவினைகள் அகற்ற

    இடம் கண்டு வந்த சிவனே

    சிம்மாளம் கண்டு சிரிப்பான வதனத்தால்

    சிறைசெய் தமிழ் கள்வனே

    பம்மலால் படைவீடு குடிகொண்ட கந்தா

    பட்டாடைச் சுற்றும் அழகா

    மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

    விளையாடும் வேலகுகனே

    துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

    முகங்காட்டும் சக்திமகனே       (1)

    Share
  • பெண்தான்! பெண்மை வாழியவே!!

     

    சத்தியமணி

    மாமியாரை அன்னையென  அணைப்பதுவும் பெண்தான்

    மாமியாரை இல்லம்விட்டு  விலக்குவதும்  பெண்தான்

    மருமகளை தன்மகளாய்      மதிப்பதுவும் பெண்தான்

    மருமகளை மாடெனவே      மாற்றுவதும் பெண்தான்

    தமக்கையின் தங்கையென  வாழ்வதுவும் பெண்தான்

    தமக்கையின்  உழைப்பினிலே தள்ளுவதும் பெண்தான்

    மகளென்ற போதும்மகன்  கடமைதரும் பெண்தான்

    மகளென்று  சொத்துரிமை நாடுவதும் பெண்தான்

    மனைவியென துணைபுரிய மின்னுவதும் பெண்தான்

    மனைவியென மற்றொருத்தி வாழ்க்கையிலும் பெண்தான்

    அழகான  அணிகளோடு   அணிவகுப்பும் பெண்தான்

    அரைகுறை ஆடைகளில் விளம்பரமும் பெண்தான்

    ஆண்களினம் பெற்றோனாய் ஆக்குவதும் பெண்தான்

    ஆண்களினக் கொடுமையிலே அழிவதுவும் பெண்தான்

    முன்வரியில் சக்தியென பெண்பெருமை பேணட்டும்
    பின்வரிசை பாவமெலாம் திருந்தநிலை மாறட்டும்
    பெண்களினம் பெண்மைதனைப் புரிந்துநடை போடட்டும் !
    பெண்களினம் பொன்மயமாய் புவியினிலே வாழ‌ட்டும் !!

    இனிய மகளிதர் தின வாழ்த்துக்கள்

    படத்திற்கு  நன்றி :

    http://www.igirlsgames.com/gphotos/indian-traditional-girl/1.html

    Share
  • பிரபஞ்ச மண்டலமே

     

    சத்தியமணி

    பிரபஞ்ச மண்டலமே ! வானவெளி அண்டமே
    உயிர்அஞ்ச செயும் உன்சினம் நியாயம் தானோ !
    இனமொன்று எனச்சொல்லி இனவிரிசல் கிளப்பிட்டோம்
    மதமில்லை எனச்சொல்லி மதங்களுக்கு மாறிட்டோம்
    சாதியில்லை எனச்சொல்லி சலுகைகள் எதிர்பார்த்தோம்
    நீதிசமம் எனச்சொல்லி நியாயங்களை வேட்டுவைத்தோம்
    பாதிபகல் பழிகூறி பலர்வாழ்வில் புகைவைத்தோம்
    பகுத்தறிவு எனப்பேசி பிறர்பேச்சின் வழிநடந்தோம்
    கருத்தறிவு தர்பாரில் அரசியலைக் கலந்துவிட்டோம்
    ஆட்சிக்கு வரவிழைந்து அத்துனையும் முயற்சித்தோம்
    காட்சிக்கு தேவைமட்டும் காட்டியதில் விளையாண்டோம்

    எதற்காக கல்லெறிந்து எங்களை தாக்குகிறாய் ?
    எங்களின் சட்டசபை போல்புவியை ஆக்குகிறாய் ?
    எச்சரிக்கைப் போலெங்கோ இப்போது செய்தவிதி
    எம்மண்ணில் வீசுவது எப்போது சொல்லிவிடேன் ?
    திருந்தவிலை நாங்கள் ! திருந்தவும் விழையவில்லை!
    ஊழற்சுவை கண்டோம்! உன்மேலும் பயமில்லை!
    இருந்தும்
    பிரபஞ்ச மண்டலமே ! வானவெளி அண்டமே
    உயிர்அஞ்ச செயும் உன்சினம் நியாயம் தானோ !

    Share
  • பயன் என்ன ? – சத்தியமணி

    பார்வை முன்னால் நடக்கும் கொடுமை
    பாராதிருப்பதில் பயன் என்ன ?
    சால்வை மூடிட வலம்வர கொடியோர்
    சாடாதிருப்பதில் பயன் என்ன?
    வேர்வை சிந்திட உழைத்தார் வறுமை
    வீழாதிருப்பதில் பயன் என்ன?
    போர்வை போர்த்திட ஒளிந்தார் கோழை
    வாழ்க்கை நடத்திட பயன் என்ன?

    படிப்பை கொடுத்தோ சொத்தை சேர்த்தோ
    அடுத்த தலைமுறை வாழ்ந்திடவே
    சிறப்பை காட்டும் பெற்றோர் முயற்சி
    எடுத்த வழிமுறை வீணாமோ
    பாதி வஞ்சம் மீதி இலஞ்சம்
    வளர்ந்திட‌ சமைத்தார் தன்காலம் ?
    நீதி நேயம் நியாயம் தர்மம்
    அழித்திட கொடுத்தார் வருங்காலம் ??

    Share
  • காதற்களம் வெல்ல

     

    சத்தியமணி

     

    காமனின் பாலுக்கு வள்ளுவத்தை யாசி
    காதலின் பாலுக்கு கம்பன்வரி யோசி
    வாமனன் போல்வளரும் வஞ்சிச் தமிழ் பேசி
    தாமதமின்றி பெரும் சிந்துகவி வாசி

    காதலுக்கு சாதியில்லை கண்ணதாசன் கூற்று
    காதலுக்கு வார்த்தையில்லை வைரமுத்து பாட்டு
    காதலுக்கு மாயமென்று வாலிசொல்ல கேட்டு
    காதலுக்கு பாடற்சொன்னோர் கோடியிங்கு கூட்டு

    கற்பனையில் வந்ததெல்லாம் காதற்கலையல்ல‌
    விற்பனைக்கு தந்த‌தெல்லாம் காதற்நெறியல்ல‌
    அற்பதனம் கவர்ச்சிகளும்! காதற்குற்றமல்ல‌
    நற்பதமே காதலறம்! காதற்களம் வெல்ல

    Share
  • அறுபடை ஆண்டோன் துதி

     

    சத்தியமணி

     

    ஒமெனும் பிரணவ மகிமையைத் தந்தைக்கு
    உணர்த்திய சுவாமிநாதா
    தாமெனும் தண்ட பாணியைகையூன்றி
    மலையாளும் பழனிபாலா
    நாமெனும் அகபத்ம சூரர்படையழித்தாய்
    அலைவாழும் வெற்றிவேலா
    பூமணம் கமழும் தேவசேனையைஏற்று
    தலைவனாய் தணிகைமேலா

    நித்திலம் துதிபாட மதுரைதிருபரங்
    குன்றேறி குளிர்ந்தகுமரா
    முத்தினக் குறவள்ளி காதற்மணங்கொண்டு
    பழஞ்சோலை வாழும்முருகா
    புத்தியில் ஆறுமுகம் சித்தியில் ஆறுபடை
    வித்தையைத் தந்தகுருவே
    சத்தியம் சரவண பவமென்று பாடினேன்
    நித்தமென் நாவிலருளே

     

    படங்களுக்கு நன்றி:

    http://www.tiruchendurmurugan.com/etemple3.html

    Share