Tag: நாங்குநேரி வாசஸ்ரீ

  • கதை வடிவில் பழமொழி நானூறு – 4

    கதை வடிவில் பழமொழி நானூறு – 4

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 9

    எந்நெறி யானும் இறைவன்தன் மக்களைச்
    செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும் அந்நெறி
    மான்சேர்ந்த நோக்கினாய்! – ஆங்க அணங்காகும்
    தான்செய்த பாவை தனக்கு‘.

    பழமொழி –  அணங்காகும் தான் செய்த பாவை தனக்கு

    என்னப்பா உன் ரிடையர்மெண்ட் வாழ்க்கை எப்படிப் போகுது. கேட்டுக் கொண்டே வருகிறான் என் நண்பன் பாலன்.

    உனக்கென்ன. வீடு வாசல் எல்லாம் வாங்கியாச்சு. துபாய்ல வேல பாத்ததால அடுத்த தலைமுறைக்கும் சேத்து சொத்து சேத்திருப்ப. எங்கள மாதிரியா. நானும் மெய்யப்பனும் அடிக்கடி உன்னயப் பத்தி பேசறதுண்டு. நானும் இந்த மாசமே ஓய்வு எடுத்துறலாம்னு இருக்கேன். பொண்ணுக்கு வரன் பாத்து நல்ல எடத்துல கல்யாணம் பண்ணிக்குடுக்கணும். அவ்வளவுதான் அப்பறம் என் கடமை முடிஞ்சிடும். உங்க ரெண்டு பேருக்கும்தான் பசங்க. அவங்க நல்லா செட்டில் ஆனா தான் கல்யாணம் பண்ணமுடியும். ஆமா. உம் பையன் எங்க. உள்ளூர்லதான் வேலயா. இல்ல அவனயும் உன்னய மாதிரி வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிச்சிட்டியா.

    அவனின் அடுக்கடுக்கான கேள்விகளை என்னால் சமாளிக்க முடியவில்லை. நல்ல வேளை என் மனைவி காபியுடன் வந்துவிட்டாள். பேச்சு கொஞ்சம் திசைமாறும்.

    அவளின் பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின் மீண்டும் தொடர்கிறான்.

    உன் மனைவிக்கு உடம்பு சரியில்லயா. ஏன் ரொம்ப சோகமா இருக்காங்க.

    இனிமேல் முடியாது. சொல்லிவிட வேண்டியதுதான்.

    கொஞ்சம் நீ அமைதியா இருந்தா நான் சொல்றேன். ஆரம்பித்தேன். நான் துபாய்ல போய் நல்லா சம்பாதிச்சது என்னவோ உண்மைதான். என் பையன் சின்னவயசில என்ன கேட்டாலும் வாங்கி அனுப்புவேன். என் மனைவியும் வேலைக்குப் போய்க்கிட்டிருந்ததால அவன் நினைச்சதெல்லாம் நடந்தது. கல்லூரிக்குப் போக ஆரம்பிச்சவொடனே நண்பர்களோட சேந்து ஊதாரித்தனமா செலவழிச்சு ஊர்சுற்ற ஆரம்பித்தான். வீட்ல நாங்க சரியா கண்காணிக்க முடியாததால எங்ககிட்ட பல பொய்களச் சொல்லிச்  சமாளிச்சான். கடைசியில போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிட்ட அவனக் கல்லூரிய விட்டு நீக்கிட்டாங்க. அப்போதான் எங்களுக்கு உறைத்தது. அதோட விளைவு இப்போ நானும் எம் மனைவியும் சம்பாதிச்சது போதும்னு முடிவுக்கு வந்து வேலைய விட்டுட்டு அவனுடைய மறுவாழ்வுக்காக போராடிட்டு இருக்கோம். உள்ளதான் படுத்துட்டு இருக்கான். போய்ப் பாரு.

    அவனைப் பார்த்துவிட்டு வந்தஎன் நண்பனின் கண்களில் கண்ணீர்.

    நேத்தைக்குத் தான் நான் மெய்யப்பன் வீட்டுக்குப் போயிருந்தேன். அவனுடைய மகனப்பாத்த பிறகு நான் சொன்ன அதே பழமொழிய இப்பவும் சொல்றேன்.

    அணங்காகும் தான் செய்த பாவை தனக்குஎன்பதுதான் அந்தப் பழமொழி. ஒரு சிற்பிக்குஅவன் தன் கையால செஞ்ச சிலையே ஒருநாள் அவனுக்கு முன்ன வணங்குற தெய்வமா நிக்குமாம். அணங்குங்கறதோட இன்னொரு பொருள் பேய் அப்டின்னும் கேள்விப்பட்டிருக்கேன்.  எதுக்குச் சொல்றேன்னா நாம நம்ம பிள்ளைகள எப்படி வளக்கறோமோ அப்படித்தான் அவங்க வளருவாங்க. ஏதோ எம் மனசுல பட்டதச் சொன்னேன். தப்பா எடுத்துக்காத.

    நேத்தைக்கு மெய்யப்பன் எம்பிள்ளை எனக்கு தெய்வம் மாதிரி. எம் மனைவிக்கு திடீர்னு நோய் வந்தப்போ கூட கவலைப்படாதீங்க அப்பா நான் இருக்கேன்னு ஆறுதலா இருந்தான். இப்போ என்னையும் மனைவியையும் ஒருகுறைவுமில்லாம உக்காத்தி வச்சு சோறு போடறான்னு பெருமையாச் சொன்னான். குறைந்த வருமானம்னாலும் மெய்யப்பன் கூடவே இருந்து கண்காணிச்சு தம் பிள்ளைய நல்லா வளத்ததினால அவன் சமூகத்திலஇருக்கற நல்லது கெட்டத எளிதா தெரிஞ்சிக்க முடிஞ்சது. பாவம் உன் பையனால அதத் தெரிஞ்சுக்க முடியாம கெட்டநண்பர்கள நம்பி ஏமாந்துட்டான். இனியாவது அவன நல்ல முறையில பாத்துக்கோ. என நண்பன் அறிவுரை கூறி எழுந்துசென்றபின் அவன் கூறியபழமொழியை அசைபோடத் தொடங்கினேன்.

    எவ்வளவு உண்மை. நல்லவேளை இந்தமட்டும் என் மகன்தப்பித்தானே. இனிமேல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிவெடுத்தேன்.

    பாடல் 10

    தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
    அமரா(து) அதனை அகற்றலே வேண்டும்
    அமையாகும் வெற்ப! அணியாரே தம்மைத்
    தமவேனும் கொள்ளாக் கலம்‘.

    பழமொழி – அணியாரே, தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்

    உங்கப்பா எங்கடா. கேட்டுக்கொண்டே உள்ளே நுழைகிறார் என் சித்தப்பா.

    வாங்க வாங்க. நானும் அவரத்தான் எதிர்பாத்துட்டு இருக்கேன். போஸ்ட் ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு இதோ வந்துடறேன்னு போனவரு. மூணு மணிநேரம் ஆச்சு இன்னும் வரக்காணல. வண்டியிலதான் போயிருக்கார். நானே மணிகிட்ட சொல்லிவிடணும்னு நெனச்சேன். அவன் வேற நாளைக்கு தமிழ் பரீட்சைனு படிச்சிட்டு இருக்கான். உங்கண்ணனுக்கு போனா போன இடம். வந்தாவந்த இடம். நேரங்காலமே கெடையாது. கொஞ்சம் ஒரு எட்டு சைக்கிள் எடுத்துட்டுப்போயி பாத்துட்டு வந்திருங்களேன்.

    அம்மா கேட்டுக்கொண்டதிற்கிணங்க சித்தப்பா எழுந்துபோய் விட்டார். நான் படிக்க ஆரம்பிச்சேன். முதல்ல பழமொழிகளப் படிச்சிருவோம். தீர்மானித்துப் படிக்க ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் அப்பாவும் சித்தப்பாவும் வந்து விட்டார்கள். இனி படிச்சாமாதிரிதான். அம்மாவோட பஞ்சாயத்து தொடங்கிடும். கொஞ்சநேரம் வாயப்பாத்துட்டுதான் படிக்கத் தொடங்கணும்.

    என்னவாம் உங்கண்ணனுக்கு. அம்மா ஆரம்பித்தாள்

    முதல்ல கொஞ்சம் தண்ணி குடுங்க. அண்ணன் பாவம் அரை கிலோமீட்டர் நடந்தே வந்துட்டாரு. அப்பறம்தான் நான் சைக்கிள்ல கூட்டிக்கிட்டு வந்தேன்.

    ஒரு சொம்பு தண்ணியக் குடித்தவுடன் அப்பா பேச ஆரம்பித்தார்.

    வேலையெல்லாம் அப்பவே முடிஞ்சிபோச்சு. திரும்பலாம்னு நெனைக்கும்போது நம்ம சந்தானத்தப் பாத்தேன். பஸ் பிரேக்டவுண் போல. குடும்பத்தோட வெயில்ல நின்னுட்டு இருந்தான். என்ன ஏதுன்னு கேக்கலாம்னு நிப்பாட்டினேன்.

    அண்ணே உங்கள மாதிரி நல்லவங்களப் பாக்கறது கஷ்டம். அப்டி இப்டினு புகழ ஆரம்பிச்சிட்டான். கேக்க பெருமயா இருந்திச்சு. அவன் மனைவியும் நின்னுக்கிட்டு இருந்ததால வற்புறுத்தி என் வண்டியக் குடுத்து எடுத்துட்டுப்போ நான் பஸ் புடிச்சு வந்துப்பேன்னு சொல்லிட்டேன். அப்புறந்தான் ஞாபகம் வந்துச்சு. போஸ்ட் ஆபீஸ் பியூன்

    ஐயா கடனா ஒரு நூறு ரூபாய் இருந்தா கொடுங்க. நான் எல்லார்கிட்டயும் கேக்க மாட்டேன். உங்களப் பாத்தவொடனே கேக்கணும்னு தோணிச்சுன்னான். சரி வண்டியிலதானே வந்திருக்கோம்னு இருந்தநூறு ரூபாயையும் அவன்கிட்ட குடுத்துட்டேன். அதான் நடந்து வந்திட்டு இருந்தேன். ரெண்டுகிலோமீட்டர் தூரங்கறதால நேரமாகிப்போச்சு.

    கேட்டுக்கொண்டே இருந்த அம்மா புலம்ப ஆரம்பித்தாள்.

    கேக்கணுமா உங்கண்ணனுக்கு. யாரும் முகத்துக்கு நேரா புகழ்ந்தாப் போதுமே. கட்டியிருக்குற வேட்டியக்கூட அவுத்துக்குடுக்கத் தயங்க மாட்டாரு. அவ்ளோ தாராளம்.

    இவருக்கு எப்டித்தான் புத்தி சொல்றதோ தெரியல.

    அம்மா அது வேற ஒண்ணுமில்லம்மா.  அணியாரே, தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்ங்கற பழமொழிமாதிரி.

    அட போடா. நீ வேற படிச்சத ஒப்பிச்சிக்கிட்டு அம்மா அங்கலாய்க்கிறாள்.

    நான் படிச்சத ஒப்பிக்கலம்மா. அந்தப் பழமொழியோட பொருள் தன்னோடதுதான்னாலும் பொருத்தமில்லாத நகைய யாராவது அணிவாங்களா.. அப்டித்தான் நாம நல்லவங்களா இருந்தாலும் அடுத்தவங்க முகத்துக்கு நேராப் புகழ்ந்தாங்கன்னா அதுக்காக சந்தோசப்படக்கூடாது. அத மனசுலேந்து நீக்கிட்டு என்னசெய்யணும்னு யோசிக்கணும். இல்லையினா பிரச்சினை தான் வரும்.

    அம்மாவும் அப்பாவும் என்னை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

    பலே பலே. நாளைக்குப் பரீட்சைக்கு நல்லா படிச்சிருக்க போல சித்தப்பா பேச்சை திசைதிருப்புகிறார்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 3

    கதை வடிவில் பழமொழி நானூறு – 3

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 7

    வன்சார்(பு) உடையர் எனினும் வலிபெய்து
    தஞ்சார்(பு) இலாதாரைத் தேசூன்றல் ஆகுமோ
    மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும்
    அஞ்சுவார்க் கில்லை அரண்

    பழமொழி-  அஞ்சுவார்க்கு இல்லை அரண்

    காலைச் செய்தி பாத்தீங்களா. இன்னிக்கு தலைநகர்ல நம்ம தலைவருக்கு சிலை வைக்கறாங்களாம். பெரிய விழா ஏற்பாடு ஆகியிருக்காம். எல்லாரும் பேசிக்கிடறாங்க.

    பஞ்சாயத்துத் திண்ணையில உக்காந்து மாசாணம் சொல்றான். தலைவர் தலைவர்னு உசிர உட்டுட்டுத் திரிஞ்சீங்க. அவருடைய ஆத்மார்த்தமான தொண்டர்னு பெயர் வேற. உங்களுக்கு அழைப்பு வரலியா. நக்கலாகக் கேட்டுக்கொண்டே வந்தாள் என் மனைவி.

    தலைவர் செஞ்ச உயிர்த் தியாகத்துக்கு அவருக்குசிலை வைத்து மரியாதை பண்ணறாங்க. அதுக்கென்ன. நல்ல விசயம்தானே. வெளியில் சொன்னாலும் மனசு அசை போடத் தொடங்கியது.

    சில நேரங்களில் வெளியில் நிசம் போலப் பேசப்படும் பல செயல்களுக்கான உண்மை வேறாக இருக்கும். ஒருவிதத்தில் இதுவும் அப்படித்தான். நான் தலைவர் கூடவே இருந்ததால அவரப் பத்தி நல்லாத் தெரியும். என்ன நடந்தது என் மனம் பின்னோக்கிச் சென்றது.

    பத்து நாளா மக்கள் காய்ச்சல் பீதியில கலங்கியிருந்தாங்க. தலைவர் கண்டுக்கவே இல்ல.. அது என்னமோ காக்கா எச்சத்தால பரவற தொற்றுநோய் போல.. வேகமா பரவிட்டு வந்தது. ஒருநாள் போலத் தலைவருக்கு அந்த வேலை இந்த வேலைனு சொல்லி சமாளிச்சுப் பாத்தோம். கட்சிக்காரங்க நாங்க மட்டும் போய்ச் சமாதானம் பேசினா ஊர் சும்மா இருக்குமா. ஓட்டு வாங்கற சமயத்துல மட்டும் ஒரு இண்டுஇடுக்கு உடாம உங்க தலைவர் அத்தன இடத்துக்கும் வருவாரே இப்போ இந்தக் காய்ச்சலுக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்னு குடைந்து தள்ளிட்டாங்க. சாலை மறியல் வேற பண்ண ஆரம்பிச்சாங்க. காய்ச்சல் வந்தவங்க உடல் வலியாலஅவதிப்பட்டாங்களே தவிர எந்தவித உயிர்ச்சேதமும் இல்ல. விவசாயிகள் நிறைஞ்ச இந்த ஊர்ல வயலுக்குப் போக முடியாம ஆனதால மக்களுக்குக் கோபம். கடைசியில ஒருவழியா தலைவர ஒத்துக்க வச்சி அரசு ஆஸ்பத்திரியில நேர்ல நோயாளிகளச் சந்திக்க வச்சோம்.

    அதுக்குமுன்ன அவர் பண்ணின ஆர்ப்பாட்டம் இருக்கே அப்பப்பா. டாக்டர வீட்டுக்கு வரச் சொல்லி முதல் முறையா அந்த தொற்றுவியாதி எப்படிப் பரவுதுனு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த கையுறை எல்லாம் வாங்கி அணிச்சிக்கிட்டுதான் மருத்துவமனைக்கே வந்தார். அங்க அவரப் பாத்த சந்தோசத்துல ஒருத்தன் ஓடி வந்து கட்டிப்பிடிச்சுக்கிட்டான். அத எதிர்பாக்காத அவர் எங்க தனக்கும் அந்தவியாதி தொற்றிக்கிடுமோன்னு பயந்து அந்த பயத்துலயே நெஞ்சடைப்பு ஏற்பட்டு உயிர உட்டுட்டார்.

    அவர் மனைவி எங்களைக் கூப்பிட்டு பயத்துல அவர் உயிர விட்டதா சொல்ல வேண்டாம்னு கேட்டுக்கிட்டதால பரவுகிற வியாதி பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவி செய்யப்போன இடத்தில் காய்ச்சல் தொற்றி தன் உயிரைத் தியாகம் செய்தார் எனப்பரப்பினோம். இவரக் கட்டிப்பிடிச்சுக்கிட்டவன் இன்னும் உயிரோடதான் இருக்கான். எல்லாருக்கும் காய்ச்சலும் குணமாகிட்டுவருது.  ஆனா இவர் மட்டும் தியாகிங்கற பெயரோட கொண்டாடப்படறாரு.

    யோசனையிலிருந்த மீண்ட நான் எல்லாம் தெரிஞ்ச என் மனைவிகிட்ட பேச ஆரம்பிச்சேன். உனக்குத்தான் தெரியுமே என்ன நடந்துச்சுன்னு. இவரப் போல கோழைகளுக்குத்தான் அஞ்சுவார்க்கு இல்லை அரண் ங்கற பழமொழியே இருக்குபோல. போருக்குப்பயந்தவனப் பாதுகாப்பா இரும்புக்கோட்டைக்குள்ள வச்சாலும் அவன் தன் பயத்துல செத்துருவாங்கறதுதான் அதோட அர்த்தம்.

    என்னமோ போங்க நீங்களாச்சு உங்க தலைவராச்சு. அவர் புண்ணியத்துல இன்னிக்குஒரு பழமொழி தெரிஞ்சுக்க முடிஞ்சுச்சு. சொல்லிவிட்டு வெளியேறினாள் என் மனைவி.

    பாடல் 8

    தாயானும் தந்தையா லானும் மிகவின்றி
    வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்
    நோயின்(று) எனினும் அடுப்பின் கடைமுடங்கும்
    நாயைப் புலியாம் எனல்‘.

    பழமொழி- அடுப்பின் கடை முடங்கும் நாயைப் புலியாம் எனல்

    என்ன குட்டியம்மா சோகமா இருக்கீங்க. புதுசா குடிவந்த அம்மாகிட்ட ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தீங்க போல. என்ன சொன்னாங்க. கேட்டுக்கொண்டே அவளருகே சென்றேன்.

    ஆமாம். சரிதான். நல்லாப் பேசறாங்க. எனக்குக் கூட நெறைய பயனுள்ள அறிவுரைகள் சொன்னாங்க. உங்க பள்ளிக்கூடத்துலதான் வேல பாக்கறாங்களாமே. பெரிய பதவி போல. பள்ளி ஆசிரியையான நான் சுதாரித்துக்கொண்டேன். அப்படியா. எங்க அவங்க என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க பாக்கலாம்.

    நான் வேண்டாம்னு சொல்லச்சொல்ல தலைமை தாங்கற தகுதி உங்களுக்குத்தான் இருக்குன்னு  சாதாரண ஆசிரியரா அந்தப் பள்ளியில சேர்ந்த என் தலையில தலைமைப் பொறுப்பக் கட்டி விட்டுட்டாங்க. என் படிப்ப மதிச்சு ஒருத்தர் கொடுக்கும்போது வேண்டாம்னா சொல்லமுடியும். ஏத்துக்கிட்டேன். இப்போ வேலைச்சுமையால அவஸ்தப் படறேன்.

    உன் தோழி சுகன்யாகூட எங்க பள்ளியிலதான் வேல பாக்கறாங்க. அவுங்க சாதாரண ஆசிரியர்தான். நல்லா மரியாதயா இருப்பாங்க. இந்த மாதிரி நெறைய சொன்னாங்க.

    அடப்பாவி இப்படியா சொன்னா. மேல சொல்லு. உற்சாகப்படுத்தினேன்.

    அவங்களக் கேக்காம கீழ உள்ளவங்க வேலயே பண்ணமாட்டாங்களாம். அவங்களோட மாணவர்களும் அவங்கள உற்சாகப்படுத்த தினமும் ஏதாவது பரிசு குடுத்துக்கிட்டே இருப்பாங்களாம்.  பல விஷயங்களுக்குமுடிவு எடுத்து அவுங்களுக்கு தினமும் தலையே சுத்துமாம். பாவம். கஷ்டமான வேலையில்ல. பரிதாபப் பட்டாள் என் தோழி குட்டியம்மா.

    இவ்வளவுநாள் நீ கேக்காததால என் வேலையப்பத்தி சொல்லல. இப்போ சொல்றேன். எங்க பள்ளி பாலர் பள்ளி. அதுல மொத்தமே நாற்பத்தைந்து குழந்தைகள்தான் படிக்கறாங்க. ஒவ்வொரு வகுப்பிலும் பதினைந்து குழந்தைகளுக்கு இரண்டு ஆசிரியர்கள். இந்த அம்மா போனவருசம்தான் சேர்ந்தாங்க. குழந்தைங்க புது ஆசிரியரக் கண்டா பழகமாட்டாங்க இல்ல. அதனால போன வருசம் முழுசும் இந்த அம்மா அந்த வகுப்புல குழந்தைகளுக்கு உதவியா தாள்கள வெட்டறது, ஒட்டறது, வகுப்புக்கு மத்தியிலகொடி கட்டி அதில குழந்தைகளோட வேலைகள அலங்காரமாத் தொங்கவிடறது இப்டி பண்ணிட்டிருந்தாங்க.

    இந்த வருசம் குழந்தைகள் அவங்ககிட்ட பழகிட்டதால வகுப்பு எடுக்க உடறாங்க. அதத்தான் அந்தம்மா தலைமைப் பதவிங்குது. கூடவேலபாக்கற இன்னொரு ஆசிரியையும் இவுங்களும் கலந்தாலோசிச்சு அன்னிக்கு பலூன் வரையச் சொல்லணுமா, இல்ல ஆப்பிள் படம்வரைஞ்சு குடுத்து கலர் பண்ணச் சொல்லணுமா போன்ற முடிவுகள எடுப்பாங்க. இதத்தான் பொறுப்பான முடிவுகள் அப்டிங்குது.. எல்லா சின்னப் பிள்ளைகளும் எத வரைஞ்சாலும் உடனே டீச்சருக்கோ,அம்மாவுக்கோ குடுப்பாங்க. ஏன் உன் குட்டி தினமும் கார்ட் பண்றேன்னு குட்டி குட்டியாபேப்பரக் கிழிச்சு கலர் பண்ணுதுனு நீ சொல்லமாட்டியா. அதத்தான் அந்தம்மா மாணவர்கள் தரும் பரிசுங்குது.

    அடப்பாவி. இதுல வேற அந்தம்மா நீங்க படிச்சுட்டு இப்டி வீட்ல சும்மா இருக்கக் கூடாது. என்னய மாதிரி வீட்டயும் பொறுப்பா பாத்துக்கிட்டு வெளியிலயும் போய்ப் பழகுங்க. இல்லையின்னா கொஞ்ச நாள்ல உங்க வீட்டுக்காரரும், பொண்ணும் மதிக்க மாட்டாங்கன்னு சொன்னதாலதான் சோகமா வந்தேன். நல்ல வேள உங்களப்பாத்து உண்மயத் தெரிஞ்சுக்கிட்டேன்.

    அடப் போங்க குட்டியம்மா. இந்தம்மா மாதிரி தற்பெரும பேசிட்டுத்திரியறவங்க நெறையபேர் இருக்காங்க. ஆனா அவுங்க பேச்ச நம்பி புகழறாங்களே அது அடுப்பங்கரையில முடங்கி கெடக்கற நாயப் பாத்து புலின்னு சொல்ற பொய்ப் புகழ்ச்சிக்குச் சமானம். அடுப்பின் கடை முடங்கும் நாயைப் புலியாம் எனல் அப்டிங்கற பழமொழிய நீங்க பள்ளிக்கூடத்துல படிச்சதில்லையா என்ன எனக் கேட்டுவிட்டு குட்டியம்மாவுக்குப் புரிய வைத்த சந்தோஷத்தில் நான் கிளம்பினேன் அங்கிருந்து..

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 2

    கதை வடிவில் பழமொழி நானூறு – 2

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 4

    உள்ளூர் அவரால் உணர்ந்தாம் முதலெனினும்
    எள்ளாமை வேண்டும் இலங்கிழாய்! – தள்ளாது
    அழுங்கல் முதுபதி அங்காடி மேயும்
    பழங்கன்று ஏறாதலும் உண்டு.

    பழமொழி:  அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு

    காலையிலேயிருந்து பக்கத்துவீட்டுல ஏதோ சலசலப்பு. அப்பா மகனோட குரல் உரத்துக் கேக்குது. ஏதோ விவாதம் போல. நான் இந்த வீட்டுக்குக் குடிவந்தப்போ பக்கத்துவீட்டு ஜெயந்துக்கு ஆறு வயசு. நாதன் என்ற என்னோட பெயரைச் சுருக்கி நாத் அங்கிள் அப்டின்னு கூப்பிட்டுக்கிட்டு எங்க வீட்லயே கெடையா கெடப்பான்.  சாக்லேட்லேந்து ஐஸ்கிரீம் வரைக்கும் எது வேணும்னாலும் சிபாரிசுக்கு என்கிட்டதான் வருவான். அப்பறம் வளந்து பெரிய பையன் ஆனவொடனே எப்பவாவது பேசறதோட சரி. இருந்தாலும் பாசம் உட்டுப்போகாதில்ல.

    இன்னிக்கு என்ன பிரச்சினையோ கத்திக்கிட்டு இருக்கான். பெரிய மனுசன் ஆயிட்டதால கண்டிப்பா என்னய சிபாரிசுக்குக் கூப்பிடமாட்டான். அதுக்காக அவனுக்கு ஒரு பிரச்சினைனா நான் போய் பாக்க வேண்டாமா. இருந்தாலும் அப்பா மகன் விவகாரம். கொஞ்சநேரம் வாசல்ல நின்னு ஒட்டு கேட்டுட்டு உள்ள போறேன். மனதுள் தீர்மானித்தேன்.

    நான் சாப்ட்வேர் என்ஜினியர் ஆயிட்டதால வெளிநாடு போய்தான் வேலபாக்கணும்னு என்னப்பா கட்டாயம். இவ்ளோ நேரம் சொல்லியும் உங்களுக்குப் புரிய மாட்டேங்குதே. அதான் உள்ளூர்லயே கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி நல்லா சம்பாதிக்கறேன்னு சொல்றேனே. எல்லாம் உங்க நல்லதுக்குத்தான். இது ஜெயந்த்.

    ஓ இவ்வளவுதானா. வேறெதுவும் குடும்பப் பிரச்சினை இல்லை. நான் உள்ளே நுழைந்தேன். அங்கிள் நீங்களே எங்கப்பாவோட நியாயத்தக் கேளுங்க ஜெயந்த் ஆரம்பித்தான். அவன் அப்பா இடைமறித்து நீங்களே சொல்லுங்க சார். மொதமொதல்ல சின்னதா கடை போட்டு வியாபாரம் பண்ணி எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறி இப்ப இவன நல்ல படிப்பு படிக்க வச்சிருக்கேன். இவனாவது வெளிநாடு போய் நாலு காசு சம்பாதிக்கட்டும்னு பாத்தா திரும்பவும் இங்கயே என்னய மாதிரி வியாபாரம்தான் பண்ணுவேங்கறான்.

    ஜெயந்த் தொடர்ந்தான். அங்கிள். எங்கப்பாவோட கடை பக்கத்துலயே கம்ப்யூட்டர் சென்டர் ஆரம்பிச்சு நடத்தறேன்னு நான் சொல்றேன். நான் படிச்சபடிப்பு கண்டிப்பா துணை நிக்கும். பக்கத்துலயே ரெண்டு காலேஜ் இருக்கு. அதனால பிராஜக்ட் பண்ண அவங்க எல்லாரும் வருவாங்க. மெதுமெதுவா முன்னேறி எங்கப்பாவோட வியாபாரத்தையும் பெரிசுபடுத்தி நானும் முன்னேற முடியுங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. நீங்க கொஞ்சம் அப்பாவுக்கு எடுத்துச் சொல்லுங்க. அப்பாவத் தனியா உட்டுட்டுப் போயி பணம் சம்பாதிக்கிறதுல எனக்கு விருப்பமில்ல. அவர் புரிஞ்சுக்க மாட்டேங்கிறாரு என்றான்.

    என்ன சார் நீங்க. உங்க பையன் எவ்வளவு பொறுப்பா பேசறான். அங்காடி மேயும் பழங்கன்று ஏறாதலும் உண்டு ன்னு கேள்விப்பட்டதில்லையா. கடைத்தெருவுல மேய்ந்த பழைய கன்றுதானேன்னு நினைக்காம ஒருநாள் பெரிய எருதா வளந்தவொடனே சிறப்பு பெரும்னு நினைக்கணும்.  வருமானம் நிறைய வராதுனு நினைக்கறீங்களா இல்ல சின்னப்பையன் வியாபார நெளிவுசுளிவு தெரியாம வளத்துட்டேன்னு குறைச்சு எடைபோடறீங்களா தெரியல. உங்க பையன நம்பி அவன் போக்குலவிடுங்க. வெளிநாட்டுக்குப் போயி கைகட்டி மாசச் சம்பளம் வாங்கற சாதாரண ஆளா இல்லாம ஒருநாள் உங்க பெயர் நிலைக்குற அளவு வியாபாரத்துல பெரிய புள்ளியா வளந்து காட்டுவான். சொல்லிவிட்டுப் பெருமையுடன் நகர்ந்தேன் நான்.

    பாடல் 5

    கருந்தொழிலர் ஆய கடையாயர் தம்மேல்
    பெரும்பழி யேறுவ பேணார் இரும்புன்னை
    புன்புலால் தீர்க்கும் துறைவ! மற்று அஞ்சாதே
    தின்பது அழுவதன் கண்.

    பழமொழி: அஞ்சாதே! தின்பது அழுவதன் கண்

    இன்னிக்கு பொழுது விடிஞ்ச நேரமே சரியில்ல போல. நம்பிக்கையோட இருந்தேன். சற்குணம் ஐயாவுக்கு நல்ல தீர்ப்பு கொடுப்பாங்கன்னு. எல்லாம் தலைகீழா முடிஞ்சு போச்சு. டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்திருந்த நண்பன் முருகனிடம் என் ஆதங்கத்தைத் தொடர்ந்தேன்.

    கண்ணு முன்ன ஐயா தலைகுனிஞ்சு நடந்து போகறதப் பாக்க சகிக்கல. மாடசாமி பொல்லாதவன்தான். ஆனா இவ்ளோ பொல்லாதவன்னு இன்னிக்கு நீதிமன்றத்துல தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

    என்ன சேதி. ஒண்ணும் பிடிபடல. சார்வாள் வருத்தமா இருக்கீங்கன்னு மட்டும் புரியுது. விஷயம் அறியும் ஆர்வத்தில் முருகன்.

    நான் தொடர்ந்தேன். அவசரத் தேவைக்காக மாடசாமிகிட்ட சற்குணம் ஐயா வட்டிக்கு ஒரு இலட்சம் ரூபாய் வாங்கியிருக்காரு. எழுதி வாங்காததனால அவன் இஷ்டத்துக்கு வட்டிய ஏத்தி எவ்வளவு பணம் அடைச்சாலும் அத வட்டிக்கணக்குலயே வரவு வச்சிருக்கான். இரண்டு லட்சம் வரை குடுத்த பிறகும் இன்னும் அசல் குடுக்கணும்னு சொன்னதால ஐயா நீதிமன்றத்துக்கு போக முடிவு எடுத்துட்டாரு. கெட்டவனுக்குத் தப்பு பண்ண கசக்கவா செய்யும். அவன் நீதிமன்றத்துல பொய்சாட்சி சொல்ல வச்சி, பொய்யான தாள்கள ஆதாரமாக் காட்டி ஜெயிச்சிட்டான். இருந்தாலும் ஐயா நேர்மை என்னைக்குமே தோற்காது. நான் மேல் முறையீடு செய்யப்போறேன்னு சொல்லிட்டு குனிஞ்சதலையோட வெளிய வந்தார். பாக்கவே பாவமா இருந்திச்சு தெரியுமா. .

    சார்வாள் காட்டுல விலங்குகள் வேட்டையாடும்போது தங்களால கொல்லப்படற மிருகங்கள் வேதனையால கத்தறதப் பாத்து மனசு மாத்திக்கிடுதா என்ன. அதப் பாத்து பயப்படாம கொன்னு சாப்பிடுது இல்ல. அது மாதிரி தான் மாடசாமி மாதிரி கெட்டவங்களும் எத்தன பழி பாவம் வந்தாலும் பயப்படாம மேல மேல கெடுதலத்தான் செய்வாங்க. முன்ன இதுக்கு அஞ்சாதே! தின்பது அழுவதன் கண் அப்டின்னு ஒரு பழமொழியே இருந்திச்சு. என் வருத்தத்துக்கு அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தான் முருகன்.

    பாடல் 6

    தோற்றம் அரிதாய மக்கட் பிறப்பினால்
    ஆற்றும் துணையும் அறஞ்செய்க! – மாற்றின்றி
    அஞ்சும் பிணிமூப்(பு) அருங்கூற்(று) உடனியைந்து
    துஞ்ச வருமே துயக்கு‘.

    பழமொழி: அஞ்சும் பிணி, மூப்பு, அருங்கூற்று உடனியைந்து துஞ்ச வருமே துயக்கு

    அந்தக் குளத்துல குளிக்கிறவளப் பாத்தியா. அவளப் பாத்தா பைத்தியம் மாதிரி தோணுதா உனக்கு.  சவீதா என்னிடம் கேட்கிறாள்.

    கோடை விடுமுறைக்கு அவளின் சொந்த ஊர் வந்திருக்கிறோம். எவ்வளவு அழகான ஊர். எங்கு பார்த்தாலும் பசுமை. பெரிய ஆலமரங்களைக் கரையெங்கும் கொண்ட கம்பீரமான குளம். சுற்றிப் பார்க்கலாம் என்று வந்தோம். பக்கதிலிருந்த அரசமரத்தடிப் பிள்ளையாரைச் சுற்றி வந்து ஈரப்புடவையுடன் ஒரு சில பெண்கள் கற்பூரம் ஏற்றி வைத்து கும்பிடுவதைப் பார்த்துக்கொண்டு நின்ற எனக்கு சவீதாவின் அந்தக் கேள்வி முதலில் புரியவில்லை.

    ஆமாம். அங்கு குளத்துப் படியில உக்காந்திருக்கற வயசான அம்மாவுக்கு என்ன ஆச்சு. கால நீட்டி உக்காந்து எதையோ மண்ணவச்சு தேச்சிக்கிட்டிருக்காங்க. கிட்ட போய்ப் பாக்கலாமா. அப்போதுதான் அவளைக் கவனித்த நான் சவீதாவிடம் கேட்டேன்.

    போச்சு போ. இவ்ளோ நேரம் அவ தன்னோட காசு மாலை, ஒட்டியாணம், வளையல், சங்கிலினு ஒண்ணோண்ணா தேச்சாளே அதப் பாக்கலியா. எல்லாத்தையும் கழுவி அங்க இருக்கு பாரு அந்த சொம்புக்குள்ள வச்சிட்டா. இப்போ அதோட மூடிய தேச்சிட்டிருக்கா. இது தினமும் நடக்கற விஷயம்.

    இந்தஅம்மா இந்த ஊரு பெரிய பண்ணையார் மனைவி. சின்ன வயசா இருக்கும்போது பண்ணையார் நிறைய தான தருமம் செய்வாராம். அது இந்த அம்மாவுக்குப் பிடிக்காது. அதனால புதுப் புது நகையா செஞ்சு மாட்டிக்குமாம். வயித்துப் பசின்னு வந்தவங்களுக்குக் கூட சோறு போட மனசில்லாம தனக்கு அளவுக்கு அதிகமா புடவைகள் வாங்கிக் குவிக்குமாம். ஏன் இப்படிச் செய்யற. உங்கிட்டதான் வேணுங்கிற அளவு நகைநட்டு இருக்கில்லனு பண்ணையார் கடிஞ்சு சொன்னா, அனுபவிக்கிற காலத்துல நல்லா அனுபவிச்சிட்டு வயசாகி மேல போறதுக்குமுன்ன இல்லாதவங்களுக்குக் குடுத்து புண்ணியத்தத் தேடிக்குவேன்னு சொல்லுமாம்.

    பண்ணையார் மேல போயி பத்து வருசம் ஆச்சு. அதிர்ச்சியில இந்த அம்மாவுக்கு புத்தி பேதலிச்சுப் போச்சு. பிள்ளகுட்டி எதுவும் இல்ல. சொத்து முழுக்க ஊர்ப் பஞ்சாயத்து எடுத்துக்கிச்சு. நகை மேல உள்ள பைத்தியத்துல இந்த அம்மா தர மாட்டேன்னு சொன்னதால உட்டு வச்சிருக்காங்க. மேல பாத்தியா ரெண்டு பேர் காவலுக்கு நிக்கறாங்க. இவுங்க காலத்துக்குப் பிறகு தன்னப்போல இந்த நகைகளெல்லாம் ஊர்ப் பஞ்சாயத்துக்குப் போயிடும்.

    சின்ன வயசுல நாம படிச்ச பழங்காலப் பழமொழி ‘அஞ்சும் பிணி, மூப்பு, அருங்கூற்று உடனியைந்து துஞ்ச வருமே துயக்கு என்பதற்கு உதாரணம் தான் இந்த அம்மா. அருமையான இந்த மனிதப் பிறவியில முடிந்த போதெல்லாம் தருமம் செய்யணும். கடைசி காலத்துல தருமம் செஞ்சிக்கலாம்னு ஒதுக்கி வச்சா அந்த வேளையில தருமம் செய்யமுடியாதபடி புத்தி மழுங்கிப்போனாலும் போகும் அப்டிங்கறத இவுங்கள மாதிரி உள்ள மனுச சன்மங்க புரிஞ்சுக்கிறதேயில்ல.

    உண்மைதான் இவங்களத் திருத்த நம்மளால என்னசெய்யமுடியும்னு யோசிக்கலாம். யோசித்துக்கொண்டே வீடுநோக்கி நடந்தோம் இருவரும்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 1

    கதை வடிவில் பழமொழி நானூறு – 1

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பழமொழி

    உண்பதற்குச் சுவையாகவும் உடல் வளத்திற்கு ஏற்றதாகவும் பழம் விளங்குவதுபோல கேட்பதற்கு இனிமையாகவும் அறிவுக்கு வளம் சேர்ப்பதாகவும் உள்ள அரிய வாக்குகளே ‘பழமொழிகள்’ என்கிறார் புலியூர்க்கேசிகன் அவர்கள். தமிழினத்தின் செம்மையான நல்வாழ்விற்கு உதவும் அறிவொளி விளக்கங்களாகப் பழமொழிகள் அமைந்து விளங்குகின்றன.

    பழமொழி நானூறு

    பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு. இந்நூலை இயற்றியவர் தென்பாண்டி நாட்டின் சீர்மிகு பழம்புலவருள் ஒருவரான முன்றுறை  அரையனார். இதில் அக்காலத்தே வழக்கிலிருந்த நானூறு பழமொழிகளை அவர்தொகுத்து வழங்கியுள்ளார். ஒவ்வொரு பழமொழியையும் சொல்லி, அதன் அடிப்படையில் ஒரு நீதியை விளக்க ஒவ்வொரு செய்யுளாக, மொத்தம் நானூறு செய்யுட்கள் அமைத்து முதலிரண்டு அடிகளில் தாம் சொல்லக் கருதுகின்ற உண்மையையும், செய்யுளின் இறுதியில் அதற்கேற்றதும் அவ்வுண்மையை வலியுறுத்துவதுமான பழமொழியை அமைத்தும், இந்நூலை அவர் இயற்றியுள்ளார்..

    கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பழமொழிக்கும் நவீனவிளக்கம் தர முயற்சித்து எழுதும் எனது ஒருபக்கப் புனைக்கதைகளை இனி தொடர்ந்து வாசியுங்கள்.

    பாடல் 1 (கடவுள் வணக்கம்)  
    பாடல் 2

    மிக்க பழிபெரிதும் செய்தக்கால், மீட்டதற்குத்
    தக்கது அறியார், தலைசிறத்தல், – எக்கர்
    அடும்பு அலரும் சேரப்ப! அகலுள்நீ ராலே
    துடும்பல் எறிந்து விடல்‘.

    பழமொழி- அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல்

    நாதன் அமெரிக்காவிலிருந்து வந்தாச்சு. எல்லாருக்கும் ஏதேதோ வாங்கிக் கொண்டுவந்தான். என்னைய அவன் கண்டுக்கக் கூட இல்ல. ஆச ஆசயா தாத்தா னு கூப்பிட்டு காலச்சுத்தி விளையாடின பையன் படிச்சு பெரிய மனுசனா அமெரிக்கா போயிட்டு வந்தவொடனே தாத்தாவ மறந்துட்டான் போல. சரி பரவாயில்ல. நான் போகவேண்டிய கட்டதானே. எதையும் எதிர்பாக்கக்கூடாது. மனதிற்குள் புலம்பிக்கொண்டே சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார் கோபி தாத்தா.

    என்ன தாத்ஸ் ரொம்ப வேல போல வந்து பாதி நாள் கழிஞ்சுபோச்சு. கண்டுக்கவே மாட்டேங்குற. கதை சொல்றத நிறுத்திட்டயா. ஆரம்பித்தான் பேரன்.

    அட போடா. எல்லாரும் பெரிய மனுசங்க ஆயிட்டீங்க. நான் சொல்லற கதையக் கேக்க யாரு இருக்கா. தாத்தா சலித்துக்கொண்டார்.

    தாத்தா இதக் கையில வச்சிக்கிட்டு கதை சொல்லுங்க. இது பேரு ரெபக்கா எனப்.பந்து போன்ற இயந்திரத்தைக் கையில் கொடுத்தான் பேரன். கதை முடிந்தவுடன் ரெபக்கா அதுக்கு ஏத்த பழமொழியச் சொல்லும் என்றவுடன் தாத்தா சந்தோஷமாகக் கதை சொல்லத் தொடங்கினார்.

    நான் சின்னவனா இருக்கும்போது இந்த ஊரில அரவிந்தன்னு ஒருத்தர் இருந்தார். அவர் மகன் என்னோட நண்பன். நானும் அவனும் தினமும் ஆத்தங்கரைக்குப் போய் விளையாடுவோம். பள்ளிக்கூடம் முடிஞ்சவொடனே வீட்டுக்கு நடந்து வர வழியில தினமும் மரத்து மேல ஏறி உக்காருவோம் ஆல மரக் கிளைகள் மேல ஏறி உக்காந்து பாத்தா ஊர் முழுக்க எங்க காலடியில இருக்குற மாதிரி தோணும். வெகுதொலைவில் தினமும் அவன் அப்பா ஒருசிலரோடு வயக்காட்டு மூலையில் ஏதோ செய்து கொண்டிருப்பது தெரியும். பாருடா எங்கப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு நாள் பூரா உழைக்கறார்னு சொல்லுவான். கொஞ்ச நாள்ல அரவிந்த் சைக்கிள் வாங்கிட்டான். அப்புறம் மெதுமெதுவா அவனோட உடைகளும் மாறிச்சு. டேய் நாங்க பணக்காரங்க ஆயிட்டோம்டா என அவன் எல்லாருக்கும் கம்மர்கட், தேன்மிட்டாய் எல்லாம் வாங்கிக்குடுக்க ஆரம்பிச்சான். அப்போதான் ஒருநாள் எங்க தமிழ் வாத்தியார் அவனக் கூப்பிட்டு

    தம்பி உங்கப்பா சாராயம் காய்ச்சி தப்பான வழியில பணம் சம்பாதிக்கிறார். நீ படிக்கிற பிள்ளதானே. மெதுவா உங்க அப்பாகிட்ட எடுத்து சொல்லுனு சொன்னார்.

    அவனும் அவன் அப்பா கிட்ட சொன்னான். அப்புறம்என்ன நடந்ததுதெரியுமா. அவன் அப்பா அவன்கிட்ட நாம நம்ம குலதெய்வம் கோயிலுக்கு ஒரு மண்டபம் கட்டிவிட்டுட்டா எல்லாக் குத்தத்தையும் சாமி மன்னிச்சிரும்னு சொல்லிட்டாரு. அவரும் கடைசி வர திருந்தல. கெட்ட வழியில சம்பாதிச்ச காசுல வியாபாரத்தத் தொடங்கின என் நண்பனும் உருப்படல. இதுதான் கதை.

    ரெபக்கா ஆரம்பித்தது. அரவிந்தனோட செய்கை குட்டி அகலுக்குள்ள குதிச்சு தண்ணி துளும்பி வெளிய வர மாதிரி குளிக்கப்போறேன்னு ஒருத்தன் சொல்லுகிற மாதிரி தான். எப்படி அது சாத்தியமில்லையோ அப்படித்தான் அவன் செய்த பெரும் பாவத்தைத் தொலைக்க கோவிலுக்கு மண்டபம் கட்டறதும். இதத்தான் முந்தைய காலத்துல அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல் னு பழமொழியா சொல்லுவாங்க. ரெபக்காவின் பழமொழியைக் கேட்ட தாத்த உற்சாகமானார்.

    பாடல் 3

    தக்கமில் செய்கைப் பொருள்பெற்றால் அப்பொருள்
    தொக்க வகையும் முதலும் அதுவானால்
    மிக்க வகையால் அறஞ்செய்க!எனவெகுடல்
    அக்காரம் பால்செருக்கும் ஆறு.

    பழமொழி – அக்காரம் பால் செருக்கும் ஆறு

    பேருந்தின் சன்னலோர இருக்கை மனதுக்கு இதமாகத்தான் இருந்தது. முகத்தில் ஓங்கி அடிக்கும் காற்று, அதில் மிதந்து வரும் விதவிதமான ஒலிகள், நறுமணங்கள் எல்லாம் சுகம். ஆனால் பயணம் முழுசும் மனசு உறுத்திக்கிட்டேதான் இருக்கு. ஒருவேள உண்மையில நான் தப்பு செஞ்சிட்டேனோ.  தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கும் நான் கடந்த இரண்டு மாதத்துல ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காம கடினமா உழைச்சு சம்பாதிச்ச காச எடுத்துக்கிட்டு ஊருக்கு போறேன். அதுல அந்தப் பக்கத்து இருக்கை பெரியவருக்கு என்ன பிரச்சினையோ.

    மனம் முழுக்க சந்தோசமா நண்பர்களோட எப்படி மூணுநாள் ஊரச்சுத்தலாம்னு யோசிச்சிக்கிட்டே வரும்போது கடுப்பக் கிளப்பி விட்டுட்டாரு. எரிச்சலக் கெளப்பிட்டு எப்டி அசந்து தூங்குறாரு பாரு. பார்க்கப் பார்க்க கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஐந்து மணி நேரப் பிரயாணத்தில் நான்கு மணி நேரம் கழிந்துவிட்டது. இன்னும் ஒருமணி நேரம் தான். ஊர் போய்ச் சேர்ந்துவிடலாம். அப்புறம் இவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். மனதைச் சமாதானப் படுத்திக்கொண்டேன்.

    வீட்டிற்கு போய்ச் சேர்ந்தவுடன் மனது பொறுக்காமல் அப்பாவிடம் அந்தப் பெரியவரைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். இதுக்கு எதுக்குப்பா இவ்வளவு வருத்தப்படற. இதத்தான் முந்தைய காலத்துல அக்காரம் பால் செருக்கும் ஆறு னு பழமொழியா சொல்லுவாங்க. நீ நேர்மையான முறையில  உழைச்சு பணம் சம்பாதிச்சிருக்க. அந்தப் பெரியவரு பிச்சைக்காரனுக்கு பத்து ரூபாய் போட முடியாதா உன்னாலானு உன்னயத் திட்டி இருக்காரு. போதாதுக்கு தானதருமம் செஞ்சா நல்லதுனு உபதேசம் பண்ணிக்கிட்டே வந்திருக்காரு. அவரு உன்னயத்திட்டியிருக்க வேண்டியதில்ல. இருந்தாலும் அவர் பேச்சக் கேட்டு நீ தானம் பண்ணியிருந்தேன்னா அது சுவையான பால் கூட வெல்லம் கலந்துதுன்னா எப்படி அதோட சுவை அதிகரிக்குமோ அதுமாதிரி உன் பெருமையக் கூட்டுமே தவித்து குறைக்காது.

    Share
  • நாலடியார் நயம் – 40

    நாலடியார் நயம் – 40

    நாங்குநேரி வாசஸ்ரீ

    40. காம நுதலியல்

    பாடல் 391

    (தலைமகற்கு வாயிலில் நேர்ந்த தோழி தலைமகள் புலவிநீங்கச் சொல்லியது)

    முயங்காக்கால் பாயும் பசலைமற்று ஊடி
    உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; – வயங்கு ஓதம்
    நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
    புல்லாப் புலப்பதோர் ஆறு..

    கடலலைகள் நில்லாமல் மோதும் நீண்ட
    கழிகளின் குளிர்கரையுடை அரசனே!
    கணவனுடன் புணராவிடின் பசலை படரும்
    காதல் சுவையற்றுப்போகும் ஊடிவருந்தாவிடின்,
    கூடிப்பின் ஊடுதலே காதல் நெறி.

    பாடல் 392

    தம்அமர் காதலர் தார்சூழ் அணியகலம்
    விம்ம முயங்கும் துணையில்லார்க்கு – இம்மெனப்
    பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம்
    நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

    தம்மால் விரும்பப்பட்ட தலைவரின் மாலை
    தரித்த அழகிய மார்பைப் பூரிக்கத் தழுவும் அத்
    தலைவரைப் பிரிந்த மகளிர்க்கு, ‘இம்’ எனும்
    தொனியுடன் மேகம் நீரைப் பொழிய
    திக்குகளெல்லாம் எழும் அவ்வோசை
    தீய சாப்பறையை ஒத்திருந்தது.

    பாடல் 393

    (தலைமகன் சொல்ல உடன்படாமையைத் தலைவற்குத் தோழி சொல்லியது.)

    கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
    மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
    கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
    இம்மாலை என்செய்வ தென்று.

    வருந்தி வேலைசெய்யும் கம்மாளரும்
    வேலையை நிறுத்திக் கருவிகளை எடுத்து
    வைக்கும் மயக்கம் தரும் மாலையில் மலர்களை
    வகையாய் ஆய்ந்தெடுத்து மாலையாய்த் தொடுத்து
    வைத்து தலைவன் இல்லா மகளிர்க்கு இம்மாலை
    வழங்கும் பயன்தான் என்ன? எனக் கலங்கி அழுதாள்.

    பாடல் 394

    (வினைமுற்றி மீண்ட தலைமகன் பாகன்கேட்பச் சொல்லியது)

    செல்சுடர் நோக்கிச் சிதர் அரிக்கண் கொண்டநீர்
    மெல்விரல் ஊழ்தெறிய விம்மித்தன் – மெல்விரலின்
    நாள்வைத்து நங்குற்றம் எண்ணும்கொல், அந்தோதன்
    தோள்வைத்து அணைமேற் கிடந்து.

    சூரியன் மறையும் மாலை நேரம் கண்டு வருந்தி
    செவ்வரி பரந்த கண்களின் நீரை மெல்விரலால்
    எடுத்தெறிந்து விம்மி அழுது தன் மெல்விரலால்
    எமைப் பிரிந்த நாட்களைக் கணக்கிட்டுப்
    படுக்கையில் தன் தோளையே தலையணையாய் வைத்துப்
    படுத்து நான் வராத குற்றத்தை எண்ணுவாளோ?

    பாடல் 395

    (தலைமகன் தானுற்றதைப் பாங்கற்குச் சொல்லியது)

    கண்கயல் என்னும் கருத்தினால் காதலி
    பின்சென்றது அம்ம சிறுசிரல்; – பின்சென்றும்
    ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண்புருவம்
    கோட்டிய வில்வாக்கு அறிந்து.

    எம் தலைவியின் கண்களைக் கயல் மீனென
    எண்ணிப் பின்தொடர்ந்த சிறிய மீன்கொத்தி
    வகையாய் ஊக்கத்துடன் முயன்றும் ஒளிரும்புருவத்தை
    வில்லின் வளைவென எண்ணியதால் கொத்தாமல்
    விட்டுச் சென்றது அவ்விடம் நீங்கி.

    பாடல் 396

    (மகளைப் போக்கிய தாய் இரங்கியது)

    அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு அன்னோ
    பரற்கானம் ஆற்றின கொல்லோ; – அரக்கார்ந்த
    பஞ்சிகொண்டு ஊட்டினும் பையெனப் பையெனவென்று
    அஞ்சிப் பின்வாங்கும் அடி.

    செவ்வாம்பல் போலும் வாயும் அழகிய இடையுமுடைச்
    சிறு மகள் செம்பஞ்சுக்குழம்பைப் பாதத்தில் பஞ்சினால்
    தடவினும் மெல்ல எனச் சொல்லி பின்னுக்கு இழுப்பாள்
    அப்பாதங்கள் பரற்கற்கள் நிறை பாலை வழியின்
    ஆறாக்கொடுமையை எவ்வாறு தாங்கும்?

    பாடல் 397

    (தலைவன் பிரிவாற்றாத தலைவி நிலைமையைத் தோழி கூறியது.)

    ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
    மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
    மாலை பரிந்திட்டு அழுதாள் வனமுலைமேல்
    கோலஞ்செய் சாந்தம் திமிர்ந்து..

    ஓலையில் எழுதும் கணக்கரின் ஓசை
    ஒழியும் மாலை நேரம் தலைவன் பிரிதலை
    நினைத்து மாலையைக் கழற்றி வீசியெறிந்து
    நல்லழகிய கொங்கைகளில் பூசிய சந்தன
    நறுங்குழம்பை உதிர்த்துத் துன்புற்று அழுதாள்.

    பாடல் 398

    (உடன்போக்குப் பொருந்தின தலைமகள் தோழிக்குச் சொல்லியது)

    கடக்கருங் காலத்துக் காளைபின் நாளை
    நடக்கவும் வல்லையோ என்றி; – சுடர்த்தொடீஇ
    பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே
    கற்றான் அஃதூரும் ஆறு.

    ஒளிவீசும் வளையல் அணிந்தவளே!
    கடந்து போவதற்கு அரிய பாலை வழியில்
    காளையொத்த நின் காதலனுடன் நாளை நடந்து
    கடக்கும் ஆற்றல் உடையாயோ? எனக்
    கேட்கின்றாயோ? ஒருவன் குதிரையைப் பெறும்
    பொழுதே அதில் ஏறிச்செல்லும் முறையையும்
    பயில்பவனாவான் எனவே காதலனைப்
    பின் தொடர்தல் அரிதன்று.

    பாடல் 399

    (இஃது மகளைப் போக்கிய தாய் கவலைப்பட்டுச் சொல்லியது)

    முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
    இலக்கணம் யாதும் அறியேன் – கலைக்கணம்
    வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
    பூம்பாவை செய்த குறி.

    முலைக்காம்பும் முத்துமாலையும் உடல்
    முழுதும் அழுந்தும்படி தழுவிக்கொண்டதன்
    காரணம் யாதையும் அப்போது யான் அறியேன்
    காதலனுடன் மான்கூட்டம் புலிக்கு அஞ்சும்
    பாலை வழியில் எனைப் பிரிந்து செல்லத்தான்
    பாசமாய்த் தழுவிக்கொண்டாளோ?

    பாடல் 400

    (தலைவி தன் பிரிவாற்றாமையைத் தோழியோடு சொல்லியது)

    கண்மூன்று உடையானும் காக்கையும் பையரவும்
    என்ஈன்ற யாயும் பிழைத்ததென் – பொன்னீன்ற
    கோங்கரும் பன்ன முலையாய்! பொருள்வயின்
    பாங்கனார் சென்ற நெறி.

    மன்மதனை முழுதும் எறிக்காது விட்ட
    முக்கண்ணனாம் சிவனும் தன்கூட்டில்
    பொரித்த குயில்குஞ்சைக் கொத்தாமல்
    பாதுகாப்பாய் வளர்த்த காகமும்
    சந்திரனை விழுங்கிப் பின் உமிழ்ந்த
    சர்ப்பமும் தன்னைப் பெற்றபோதே
    கொல்லாது விடுத்த தன்தாயும் ஒரு
    குற்றமும் செய்யவில்லை, எனக்குக்
    குற்றம் செய்தது பொருள் தேடத்
    தலைவன் பிரிந்த வழியே.

    Share
  • நாலடியார் நயம் – 39

    நாலடியார் நயம் – 39

    நாங்குநேரி வாசஸ்ரீ

    39. கற்புடை மகளிர்

    பாடல் 381

    அரும்பெற்று கற்பின் அயிராணி யன்ன
    பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும் – விரும்பிப்
    பெறுநசையால் பின்னிற்பார் இன்மையே பேணும்
    நறுநுதலாள் நன்மைத் துணை.

    பெறுதற்கரிய கற்பினையுடை இந்திராணியையொத்த
    பெரும்பெயர் பெற்ற மகளிரேயாயினும்
    தன்னைச் சேர நினையும் ஆசையால்
    தன்பின்னே ஆடவர் நில்லா முறையில்
    தம்மைக்காக்கும் நல்லொழுக்கமுடையாளே
    தம்கணவனுக்கு நல்மனைவி.

    பாடல் 382

    குடநீர்அட் டுண்ணும் இடுக்கண் பொழுதும்
    கடல்நீர் அறவுண்ணும் கேளிர் வரினும்
    கடன்நீர்மை கையாறாக் கொள்ளும் மடமொழி
    மாதர் மனைமாட்சி யாள்.

    குடத்துத் தண்ணீரைக் காய்ச்சிக்குடிக்கும்
    கொடும் வறுமை வரினும் பருகினால்
    கடல் நீரே வற்றுமளவு சுற்றத்தார் வரினும்
    கடமையாகிய குணத்தை ஒழுக்கமாகக்
    கொண்ட இன்மொழி பேசும் பெண்
    கொண்ட இல்வாழ்விற்க்கு மேலானவள்.

    பாடல் 383

    நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
    மேலாறு மேலுறை சோரினும் – மேலாய
    வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழும்மாண் கற்பின்
    இல்லாள் அமர்ந்ததே இல்.

    சுவர்கள் இடிந்தமையால் நால்பக்கமும் வழியாகி
    சிறியதாகி எப்புறமும் கூரையின் மேலிருந்து
    மழைநீர் வீழினும் இல்லற நெறியில் வல்லவளாய்
    மேன்மைமிகு கற்புடன் ஊர்புகழத் திகழும்
    மனைவியுடை இல்லமே சிறந்த இல்..

    பாடல் 384

    கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
    உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள்; – உட்கி
    இடனறிந்து ஊடி இனிதின் உணரும்
    மடமொழி மாதராள் பெண்.

    அன்புடைக் கண்ணுக்கு இனியவளாய் கணவன்
    ஆசையுறுமாறு அலங்கரித்துக்கொள்பவளாய்
    அச்சம் உடையவளாய் ஊர்ப்பழிக்கு நாணுபவளாய்
    அன்புக்கணவனுடன் சமயமறிந்து ஊடல் கொண்டு
    அவன் மகிழுமாறு ஊடல்நீங்கி இன்பந்தரும்
    அக்கபடமில்லாப் பேச்சுக்களுடையவளே நற்குலப்பெண்.

    பாடல் 385

    எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்தெழினும்
    அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால்; – எஞ்ஞான்றும்
    என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால்
    பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.

    நாளும் எம் கணவர் எம் தோளைத் தழுவி
    நீங்கினும் முதல் நாளின் நாணம் போலவேயின்றும்
    நாணம் கொள்கின்றோம் என்றிருக்க பொருளாசையால்
    நாணமின்றிப் பலரின் மார்பைப் பொதுமகளிர் எப்படி
    நாடித் தழுவுகின்றனரோ?

    பாடல் 386

    ஊள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
    வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; – தெள்ளிய
    ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
    நாணுடையாள் பெற்ற நலம்.

    நல்ல கொடையுள்ளம் கொண்டவனின் செல்வம்
    நுண்ணறிவாளன் கற்றகல்வி போல் பயன்
    நல்கும் எல்லோருக்கும்,  நாணமிகு பெண்ணின்
    நல்லழகோ தெளிந்த அறிவுடையோன் கைக்கூர்வாள்
    நெருங்குதற்கு அரியதுபோல் அரியதாம்.

    பாடல் 387

    கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்று
    ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரான்; – ஒருங்கொவ்வா
    நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
    என்னையும் தோய வரும்.

    தாழ்ந்த கருங்கொள்ளையும் உயர் செங்கொள்ளையும்
    தராதரமின்றி பணத்துக்கு ஆறுமரக்காலென வாங்கினானொரு
    சிற்றூரான் அதுபோல் எம்மோடு ஒப்பில்லா அழகிய
    சிறு நெற்றியுடைப் பொதுமகளிரைத் தழுவிய மலைமார்பன்
    குளிக்காது என்னையும் தழுவ வருகின்றான்.
    (தூணி- நான்கு மரக்கால், பதக்கு-  இரண்டு மரக்கால், தூணிப் பதக்கு- ஆறு மரக்கால்)

    பாடல் 388

    கொடியவை கூறாதி பாண! நீ கூறின்
    அடிபைய இட்டொதுங்கிச் சென்று – துடியின்
    இடக்கண் அனையம்யாம் ஊரற்கு அதனால்
    வலக்கண் அனையார்க்கு உரை.

    கொடிய சொற்களைக் கூறாதே பாணனே!
    காரணம் நாங்கள் தலைவனுக்கு உடுக்கையின்
    இடப்புறம்போல் பயனற்று உள்ளொம், அச்சொல்லை
    இங்கிருந்து விலகிச்சென்று உடுக்கையின் வலப்பக்கம்
    போலும் அவருக்குப் பயன்தரும் பொதுமகளிருக்குச் சொல்!

    பாடல் 389

    சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீது
    ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்; – தீப்பறக்கத்
    தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்
    நோக்கி இருந்தேனும் யான்.

    கோரைப்புல் பறித்த இடத்தில் நீர்சுரந்த
    குளிர்வயல்சூழ் ஊரிலுள்ள எம்தலைவன் மேல்
    ஈ பறந்தாலும் கண்டு வருந்தியவள் நான்
    இப்போது தீப்பொறி எழுமாறு பொதுமகளிரின்
    கொங்கைகள் மோதப்பெற்று சந்தனம்
    கலைந்த தலைவனின் மார்பைப் பொறுமையோடு
    கண்டு கொண்டிருப்பவளும் நானே.

    பாடல் 390

    அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
    பெரும்பொய் உரையாதி, பாண; – கரும்பின்
    கடைக்கண் அனையம்நாம் ஊரற்கு அதனால்
    இடைக்கண் அனையார்க்கு உரை.

    மலரும் அரும்புகள் நிறை
    மாலைகள் அணிந்த தலைவன்
    எமக்கு அருள்புரிவாரெனும் பொய்யை
    எப்போதும் சொல்லாதே பாணனே!
    நல்ல கரும்பின் கடைக் கணுக்களுக்கு
    நிகரானவர் யாம், ஆதலில் கரும்பின்
    இடைக்கணுக்களை ஒத்த பரத்தையிடம்
    இப்பேச்சைப் போய்ச் சொல்!

    Share
  • நாலடியார் நயம் – 38

    நாலடியார் நயம் – 38

    நாங்குநேரி வாசஸ்ரீ

    38. பொது மகளிர்

    பாடல் 371

    விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
    துளக்கற நாடின்வே றல்ல; – விளக்கொளியும்
    நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
    கையற்ற கண்ணே அறும்.

    விளக்கின் ஒளியும் பொதுமகளிரின் அன்பும்
    வகையாய் ஆராய்ந்தால் வெவ்வேறல்ல
    விளக்கின் ஒளி எண்ணெய் வற்றுங்கால் நீங்கும்
    வைத்திருக்கும் கைப்பொருள் நீங்கும் நேரம்
    விலகும் பொதுமகளிரின் அன்பு.

    பாடல் 372

    அங்கோட்டு அகல் அல்குல் ஆயிழையாள் நம்மோடு
    செங்கோடு பாய்துமே என்றாள்மன்; – செங்கோட்டின்
    மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே
    காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.

    அழகிய பக்கங்களுள்ள அகன்ற அல்குலையுடைய
    ஆய்ந்தெடுத்த அணிகளையணிந்த பொதுமகள் எம்மோடு
    உயர்ந்த செம்மலையுச்சியினின்று சேர்ந்து வீழ்வோமென
    உறுதியாய்ச் சொல்லி பணமில்லையென்றதும் சேராது
    உடன் ஒழிந்தாள் காலிலுள்ள நோயைக் காட்டி அழுது.

    பாடல் 373

    அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்
    செங்கண்மா லாயினும் ஆகமன்; – தம்கைக்
    கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளிர் அன்னார்
    விடுப்பர்தம் கையால் தொழுது.

    அழகிய இடமகன்ற  தேவருலகில்
    அவர்களால் தொழப்படும் சிவந்த
    அழகிய கண்களுடைய திருமாலேயாயினும்
    அவர்தம் கையில் கொடுக்கப் பொருளில்லையெனில்
    ஆய்ந்து எடுக்கத்தக்க இளந்தளிரையொத்த மேனியுடை
    அப்பொதுமகளிர் தம்கையால் கும்பிட்டுத் திருப்பியனுப்புவர்.

    பாடல் 374

    ஆணமில் நெஞ்சத்து அணிநீலக் கண்ணார்க்குக்
    காணமி லாதார் கடுவனையர்; – காணவே
    செக்கூர்ந்து கொண்டாரும் செய்த பொருளுடையார்
    அக்காரம் அன்னர் அவர்க்கு.

    அன்பில்லாத  நெஞ்சத்தையும் நீலநிற
    அழகிய குவளையொத்த கண்ணையுமுடைப்
    பொதுமகளிர்க்குச் செல்வமில்லாதார் விடம்போன்றோர்
    பலரும் காணச் செக்காட்டுவோர் அதிகப்பொருள்
    பெற்றிருப்பின் சர்க்கரைபோலும் இனியவராய்க் கருதுவர்.

    பாடல் 375

    பாம்பிற்கு ஒருதலை காட்டி ஒருதலை
    தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் – ஆங்கு
    மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
    விலங்கன்ன வெள்ளறிவி னார்.

    தேன்போலும் இனிமைமிகு
    தெளிந்த நீருள்ள பொய்கையில்
    தன் தலையை ஒருமுறை பாம்புக்குக்காட்டி
    திரும்பி மீனுக்குக் காட்டும் விலாங்குமீன்
    தம்மையொத்து ஆசைகாட்டி மோசம் செய்யும்
    தீய செய்கையுடைப் பொதுமகளிரின்
    தோள்களை மிருகம் போலும் அறிவற்றவர்
    தழுவுவர் எப்போதும் விரும்பி.

    பாடல் 376

    பொத்தநூற் கல்லும் புணர்பிரியா அன்றிலும் போல்
    நித்தலும் நம்மைப் பிரியலம் என்றுரைத்த
    பொற்றொடியும் போர்தகர்க்கோ டாயினாள் நன்னெஞ்சே
    நிற்றியோ போதியோ நீ.

    நூலும் அதில் கோத்த மணியும் போல்
    நாளும் இணைபிரியா அன்றிற் பறவைகளையொத்து
    நாளும் நம்மைப் பிரியோம் எனச் சொன்ன
    நற்பொன் வளையை உடையாளும் போர்
    நாடும் ஆட்டுக்கடாவின் முறுக்கேறிய கொம்புபோல்
    நற்குணம் மாறினாளாதலில் நல்ல மனமே!
    நீ ஆசைகொண்டு அவளுடன் நிற்கின்றாயா? வருகின்றாயா?

    பாடல் 377

    ஆமாபோல் நக்கி அவர்கைப் பொருள்கொண்டு
    சேமாபோல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை
    ஏமாந்து எமதென்று இருந்தார் பெறுபவே
    தாமாம் பலரால் நகை.

    காட்டுப் பசுவினைப்போல் இன்பம் உண்டாகத் தழுவி
    கைப்பொருளெயெல்லாம் கவர்ந்து பின் எருதுபோல்
    குப்புறப்படுத்துக்கொள்ளும் பொதுமகளிரின் அன்பைக்
    கண்டு தமதென ஏமாந்து மயங்கி எமதேயென்றிருப்பவர்
    கட்டாயமாய்ப் பலரால் எள்ளிநகையாடப்படுவார்.

    பாடல் 378

    ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த்
    தாமார்ந்தபோதே தகர்க் கோடாம் – மானோக்கின்
    தம்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே,
    செந்நெறிச் சேர்தும்என் பார்.

    நாடி வந்தவர் தம்மழகில் மயங்கியபோது
    நன்கு பொருளைப் பறித்து பின் அவர்
    நிலை தாழ்ந்ததும் ஆட்டுக்கிடாவின் கொம்புபோல்
    நிலைமாறும் குணத்துடன் கூடிய மான்போலும்
    பார்வையுடைப் பொதுமகளிரின் கொங்கைகளைப்
    பண்பட்ட அறநெறி வழிசெல்லும் சான்றோர் விரும்பார்.

    பாடல் 379

    ஊறுசெய் நெங்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
    தேற மொழிந்த மொழிகேட்டுத் – தேறி
    எமரென்று கொள்வாரும் கொள்பவே யார்க்கும்
    தமரல்லர் தம்உடம்பி னார்.

    ஒளிவீசும் நெற்றியுடைப் பொதுமகளிர் தம்மெண்ணங்களை
    ஒளித்துப் பேசிய ஆசை மொழிகளை நம்பி ஏமாந்து
    இவள் எமக்குரியள் என நினைக்கும் எவ்வகைப்பட்ட
    இனத்தாருக்கும் உரியரல்லரவர் தமக்கே உரிய உடம்பினரவர்.

    பாடல் 380

    உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார்
    கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம் – தெள்ளி
    அறிந்த இடத்தும் அறியாராம் பாவம்
    செறிந்த உடம்பி னவர்.

    ஒளி பொருந்திய நெற்றியுடைப் பொதுமகளிரின் மனம்
    ஒருவரிடத்தேயிருக்க  மற்றொருவரிடம் காமுற்றது போல்
    கள்ளத்தினால் செய்யும் செய்கைகளெல்லாம் தெளிவாகக்
    கண்டுணர்ந்த பின்னும் பாவம் நிறைந்த உடம்புடையோர்
    கைவிட்டு ஒழிதலை அறிய மாட்டார்.

    Share
  • நாலடியார் நயம் – 37

    நாலடியார் நயம் – 37

    நாங்குநேரி வாசஸ்ரீ

    37. பன்னெறி

    பாடல் 361

    மழைதிளைக்கும் மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
    இழைவிளக்கு நினறிமைப்பின் என்னாம்? – விழைதக்க
    மாண்ட மனையானை யில்லாதான் இல்லகம்
    காண்டற்கு அரியதோர் காடு.

    மேகம் தவழும் மாடி உள்ளதாய்
    மேன்மைமிகு காவல் உடையதான வீட்டில்
    மின்னும் அணிகளே விளக்காய் ஒளிவீசினும்
    மாட்சிமைப்பட்ட மனைவியைப் பெறாதவனின்
    மனை பார்க்கக் கூடாத சுடுகாடேயாம்.

    பாடல் 362

    வழுக்கெனைத்தும்இல்லாத வாள்வாய்க் கிடந்தும்
    இழுக்கினைத் தாம்பெறுவ ராயின் – இழுக்கெனைத்தும்
    செய்குறாப் பாணி சிறிதே; அச் சின்மொழியார்
    கையுறாப் பாணி பெரிது.

    தளர்வில்லா வாளின் காவலிருந்தும்
    தம்ஒழுக்கம் தவறி மகளிர் நடப்பாராயின்
    சில சொற்களே பேசும் அவர்தம் குற்றம்
    செய்யாக்காலம் சிறிதேயிருப்பினும் ஒழுக்கத்தைப்
    பெறாத காலம் பெரிது ஆகும்.

    பாடல் 363

    எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம்; சிறுகாலை
    அட்டில் புகாதான் அரும்பணி; – அட்டதனை
    உண்டி உதவாதான் இல்வாழ்பேய்; இம்மூவர்
    கொண்டானைக் கொல்லும் படை.

    கணவனை அடிக்கச்சொல்லி எதிர்நிற்பவள்
    கொண்டவனுக்கு எமன் போன்றவள்
    காலையில் சமையலறைக்குள் புகாதவள்
    காலத்துக்கும் போக்க முடியா நோய்
    கணவனுக்குச் சமைத்த உணவைத் தராதவள்
    கொண்டவன் வீட்டிலுள்ள பிசாசு
    கணவனைக் கொல்ல உதவும் படையொத்த
    கொலைக் கருவிகளாம் இம்மூவரும்.

    பாடல் 364

    கடியெனக் கேட்டும் கடியான், வெடிபட
    ஆர்ப்பது கேட்டும் அதுதெளியான்; – பேர்த்துமோர்
    இற்கொண்டு இனிதிரூஉம் ஏமுறுதல் என்பவே
    கற்கொண்டு எறியும் தவறு.

    இல்வாழ்வை நீக்கச் சொல்லிப் பெரியோர்
    இயம்பியும் நீக்காது தலையே வெடிக்குமளவு
    இறப்பில் பறை ஒலிக்கக் கேட்டும்
    இல்வாழ்க்கை நிலையில்லாதது என
    இருக்காது மறுபடியும் திருமணம் புரிந்து
    இன்புற்றிருக்கும் மயக்கம் ஒருவன் கல்லை
    இயல்பாய் எடுத்துத் தன்மேல் எறிந்துகொள்ளும்
    இன்னாச் செயல் போலும் குற்றமாம்.

    பாடல் 365

    தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்கு
    இடையே இனியார்கண் தங்கல் – கடையே
    புணராதென்று எண்ணிப் பொருள்நசையால் தம்மை
    உணரார்பின் சென்று நிலை.

    தவத்துக்குரிய செயலில் முயன்று வாழ்தல்
    தலையாய நிலையாம் இனிய குணமுள்ள
    தம் மனைவியுடன் வாழ்தல் இடைப்பட்ட நிலை
    தனக்குக் கிட்டாதெனினும் பொருளாசையால்
    தம் பெருமையுணராரைத் தொடர்தல் கடையாய நிலை.

    பாடல் 366

    கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
    துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
    இனி துண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
    முனிவினாற் கண்பா டிலர்.

    நல்ல நூலைக் கற்று வாழ்நாளை
    நல்ல பயனுடையதாய்க் கழிப்பர்
    நல்லறிவுடைத் தலைமையான அறிவினர்
    நல்லபொருளை அனுபவித்துத் தம் வாழ்வை
    நடத்துவர் இடைப்பட்டவர், கீழ்மக்களோ உண்ண
    நல்லுணவு கிட்டவில்லையே, செல்வத்தை மிகுதியாய்
    நாம் பெறமுடியவில்லையே என வருந்தி
    நல்லுறக்கமின்றி நாளும் கழிப்பர் தம் வாழ்வை.

    பாடல் 367

    செந்நெல்லால் ஆய செழுமுனை மற்றும் அச்
    செந்நெல்லே யாகி விளைதலால் – அந்நெல்
    வயல் நிறையக் காய்க்கும் வளைவயல் ஊர!
    மகனறிவு தந்தை அறிவு.

    நல்ல நெற்களால் உண்டான நல்விதைகள்
    நற்செம்மை நெல்லாகவே விளைவதால்
    நிறைந்த வயல்சூழ் நாட்டின் வேந்தனே!
    நல்லறிவு தந்தைக்கு வாய்க்கப்பெற்றாலந்த
    நல்லறிவு மகனுக்கும் இருக்கும்.

    பாடல் 368

    உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
    புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
    கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால் போல்
    கீழ்மேலாய் நிற்கும் உலகு.

    பெருஞ்செல்வரும் சான்றோரும் தம்நிலை தாழ்தலும்
    புறப்பெண்டிரின் மக்களும் கீழ்மக்களும் உயர்வெய்தலும்
    காலருகே இருக்கவேண்டியது தலைப்புறமாகி
    குடையின் காம்புபோல் உலகம் கீழ்மேலாய்
    கிடக்கும் நிலையற்ற தன்மை கொண்டது.

    பாடல் 369

    இனியார்தம் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
    தணியாத உள்ளம் உடையார்; – மணிவரன்றி
    வீழும் அருவி விறன்மலை நன்னாட!
    வாழ்வின் வரைபாய்தல் நன்று.

    இரத்தினங்களை வாரிக்கொண்டு விழும்
    இனிய அருவிகளுடை மலைநாட்டு மன்னனே!
    தம் நண்பர்கள் மனத் துன்பத்தைக்கூற அதைத்
    தீர்க்க நினையாக் கல்நெஞ்சம் உடையோர்
    வாழ்வதை விட மலை மேலேறிக் குதித்து
    வீழ்ந்து உயிர்விடுதல் நல்லதாம்.

    பாடல் 370

    புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
    விதுப்புற நாடின்வே றல்ல; – புதுப்புனலும்
    மாரி அறவே அறுமே, அவரன்பும்
    வாரி அறவே அறும்.

    புது வெள்ளத்தால் வந்த நீரும்
    பொதுமகளிரின் நட்புமாகிய இரண்டும்
    பொறுமையாய் ஆராய்ந்தால் வேறல்ல.
    புதுநீர் நீங்கும் மழைநின்றால்
    பொதுமகளிரின் அன்பு நீங்கும்
    பொருள் வரவு நீங்கின்.

    Share
  • நாலடியார் நயம் – 36

    நாலடியார் நயம் – 36

    நாங்குநேரி வாசஸ்ரீ

    36. கயமை

    பாடல் 351

    ஆர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும்
    காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்
    தீத்தொழிலே கன்றித் திரிதந்து எருவைபோல்
    போத்தறார் புல்லறிவி னார்.

    நிறைந்த அறிவுள்ளவர் சிறியவராயினும்
    நல்லொழுக்கத்துடன் தம் புலனடக்கி இருப்பர்
    நல்லறிவில்லாக் கயவரோ முதியவராயினும்
    நெறிகெட்ட செயலிலே உழன்று கழுகுபோல்
    நடந்து குற்றம் நீங்கப் பெறார்.

    பாடல் 352

    செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
    வழும்பறுக்க கில்லாவாம் தேரை; – வழும்பில்சீர்
    நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன்று இல்லாதார்
    தேர்கிற்கும் பற்றி அரிது.

    நீர்நிறை பெரிய குளத்தில் வாழ்ந்தாலும்
    நாளும் தவளை தம்மேலுள்ள வழவழப்பான
    அழுக்கை நீக்காததுபோல் குற்றமற்ற
    அரும்பெரும் நூல்களைக் கற்பினும் நுண்ணறிவு
    அற்றவர் அந்நூல்களின் பொருள் உணரார்.

    பாடல் 353

    கணமலை நன்னாட! கண்ணின்று ஒருவர்
    குணனேயும் கூறற்கு அரிதால் – குணன் அழுங்கக்
    குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு
    எற்றால் இயன்றதோ நா.

    கூட்டமான மலைகள்நிறை நாட்டின் அரசனே!
    கண்ணெதிரில் ஒருவர் நின்றாலும் அவரின்
    குணங்களைக் கூறுதற்கே நா எழுதல் அரிதெனும்போது
    குற்றத்தை மட்டுமே கூறி குணம்கெடும்படி செய்யும்
    கயவனின் நாக்கு எப்பொருளால் செய்யப்பட்டதோ?

    பாடல் 354

    கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை
    சேடியர் போலச் செயல்தேற்றார்; – கூடிப்
    புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
    மதித்திறப்பர் மற்றை யவர்.

    பக்கங்கள் உயர்ந்தகன்ற அல்குலையுடை நற்குலப்
    பெண்டிர் விலைமகளிர் போல் தம்
    பெண்தன்மையை ஒப்பனை செய்ய அறியார்
    பொதுமகளிரோ புதுவெள்ளம் போல் ஆடவருடன்
    பழகிக் கலந்து தம் பெண்தன்மை மேம்பட
    பாங்காய் அலங்கரித்துப் பொருளைக் கவர்ந்து செல்வர்.

    பாடல் 355

    தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா
    உளிநீராம் மாதோ கயவர்; – அளிநீரார்க்கு
    என்னானுஞ் செய்யார் எனைத்தானும் செய்பவே
    இன்னாங்கு செய்வார்ப் பெறின்.

    தளிர்மேல் நிற்பினும் ஒருவர் தட்டித்
    தள்ளாமல் போகமாட்டாத உளியின்
    தன்மையுடை கயவர் இரங்கும்
    தன்மையுடை மென்மையானவர்க்குத்
    தேவையான உதவி செய்யார் தம்மைத்
    தாக்கித் துன்புறுத்தும் கொடியவருக்கு
    தேடிச் சென்று செய்வர் எத்தகு உதவியும்.

    பாடல் 356

    மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
    விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
    செய்நன்று உள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை
    வைததை உள்ளி விடும்.

    வாழும் மலைவளத்தை நினைத்து மகிழ்வான் குறவன்
    விளையும் நிலத்தை நினைத்து உவப்பான் உழவன்
    வாழ்வில் பிறர்செய்த நன்மையை நினைப்பர் சான்றோர்
    வெறுப்புடன் பிறர் இகழ்ந்ததையே நினைத்திருப்பான் கயவன்.

    பாடல் 357

    ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
    பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; – கயவர்க்கு
    எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின்
    எழுநூறும் தீதாய் விடும்.

    தமக்கொரு நன்மை செய்தவர் பின்
    தொடர்ந்து நூறு குற்றங்கள் செய்யினும்
    தளராது பொறுப்பர் சான்றோர் கயவரோ
    தமக்கு எழுநூறு நன்மைகள்செய்து
    தவறுதலாய் ஒன்று தீமையாய் ஆகிவிடின்
    தமக்குச் செய்த எழுநூறு நன்மைகளையும்
    தள்ளி நீக்கி தீமையையே நினைத்திருப்பர்.

    பாடல் 358

    ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
    மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்; – கோட்டை
    வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி
    செயிர்வேழம் ஆகுதல் இன்று.

    வாள் போலும் கண்ணுடையவளே! பன்றிக்கொம்பில்
    வயிரம் இழைத்த பூணைப்பூட்டினும் அது
    வீரம் மிகுந்த யானை ஆகாததுபோல் நற்குடிப்பிறந்தார்
    வறுமையுற்றபோது செய்யும் உதவியையும் மூடர்
    வளமான செல்வம் மிக்க காலத்தும் செய்யார்.

    பாடல் 359

    இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
    நின்றாதும் என்று நினைத்திருந்து – ஒன்றி
    உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
    மரையிலையின் மாய்ந்தார் பலர்.

    இன்று செல்வமுடையவர் ஆவோம்
    இப்பொழுதே ஆவோம்
    இன்னும் சிலநாட்களில் ஆவோம் என
    இடைவிடாது சிந்தித்துச் சொல்வதிலேயே
    இன்புற்று பின் தம் உள்ளம்நொந்து தாமரை
    இலைபோல் தாமிருந்த இடத்திலேயே
    இன்பக் கற்பனையில் திரிந்து இறப்பவர் பலர்.

    பாடல் 360

    நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
    ஈரங் கிடையகத் தில்லாகும்; – ஓரும்
    நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
    அறைப் பெருங்கல் அன்னார் உடைத்து.

    நீரில் தோன்றி பசும்
    நிறத்துடன் இருப்பினும்
    நெட்டியின் உட்புறம் ஈரத்தால்
    நனையாதது போல் செல்வம்
    நிறைந்திருப்பினும் பெருங்கல் போலும்
    நெஞ்சமுடை மனிதரும் இவ்வுலகில்
    ஈரமற்ற நெஞ்சுடன் உள்ளனர்.

    Share
  • நாலடியார் நயம் – 35

    நாலடியார் நயம் – 35

    நாங்குநேரி வாசஸ்ரீ

    35. கயமை

    பாடல் 341

    கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்
    குப்பை கிளைபோவாக் கோழிபோல்; – மிக்க
    கனம்பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன்
    மனம்புரிந்த வாறே மிகும்.

    காலத்தே தானியத்தை வேண்டுமளவு போட்டாலும்
    குப்பைகிளறுவதை விடாது கோழி அதுபோல்
    மேன்மைமிகு நூல்களை விரிவாய் விளக்கினாலும் தன்
    மனம் விரும்பிய வழியிலே செல்வான் கீழோன்.

    பாடல் 342

    காழாய கொண்டு கசடற்றார் தஞ்சாரல்
    தாழாது போவாம் என உரைப்பின் – கீழ்தான்
    உறங்குவம் என்றெழுந்து போமாம், அஃதன்றி
    மறங்குமாம் மற்றொன் றுரைத்து.

    உறுதியான நூற்பொருளைக்  கற்பதற்கு
    உயரிய சான்றோரிடம் காலம் தாழ்த்தாது
    உடனே செல்வோம் எனச் சொன்னால்
    உறங்க வேண்டும் என்றோ வேறொரு
    உபயோகமற்ற காரணத்தையோ சொல்லி
    உடன்படாது மறுத்துச் செல்வான் கீழானவன்.

    பாடல் 343

    பெருநடை தாம்பெறினும் பெற்றி பிழையாது
    ஒருநடைய ராகுவர் சான்றோர்; – பெருநடை
    பெற்றக் கடைத்தும் பிறங்கு அருவிநன்னாட!
    வற்றாம் ஒருநடை கீழ்.

    விளங்கும் மலையருவிகளுடை நல்ல நாட்டின்
    வேந்தனே! மேலோர் பெருஞ்சிறப்பு தமக்கு
    வாய்க்கப் பெற்றினும் ஒழுக்கத்தினின்று
    வழுவாது ஒரே நிலையில் இருப்பர் மாறாக
    வளமான பெருஞ்சிறப்பு கிட்டுமாயின்
    வேறாக நடந்து கொள்வர் கீழோர்.

    பாடல் 344

    தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
    பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்; – பனையனைத்து
    என்றும் செயினும் இலங்கருவி நன்னாட!
    நன்றில நன்றறியார் மாட்டு.

    விளங்கும் அருவிகளுடை நல்ல நாட்டு
    வேந்தனே! செய்த உதவி தினை அளவே
    விளங்கினும் சான்றோர் பனையளவென
    விரும்பிப் போற்றுவர் பனையளவு உதவினும்
    நன்றியில்லாதார் அதனை உதவியெனவே
    நினைக்க மாட்டார்.

    பாடல் 345

    பொற்கலத்து ஊட்டிப் புறத்தரினும் நாய்பிறர்
    எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்; – அச்சீர்
    பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும்
    கருமங்கள் வேறு படும்.

    நல்ல உணவைப் பொற்கலத்தில் வைத்து வளர்க்கும்
    நாய்க்குக் கொடுத்தாலும் பிறர் எச்சில் சோற்றை
    கண் இமைக்காமல் பார்த்திருக்குமதுபோல்
    சிறப்புள்ளவனாய் மதித்துப் பெருமை செய்திடினும்
    செய்யும் செயல்களால் வேறுபட்டு நிற்பான் கீழ்மகன்.

    பாடல் 346

    சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்
    எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்; – எக்காலும்
    முந்திரிமேற் காணி மிகுவதேல் கீழ்தன்னை
    இந்திரனா எண்ணி விடும்..

    உலகம் முழுதும் ஆணைச் சக்கரத்தைச் செலுத்தும்
    உயர்ந்த செல்வம் பெறினும் வரம்புகடந்த சொற்களை
    உரையார் பெரியோர் எப்போதேனும் முந்திரி எனும்
    சிறுதொகையின்மேல் காணி எனும் அற்பத்தொகை
    சேர்ந்தால் தம்மைத் தேவலோக இந்திரனாய் நினைத்து
    செருக்குற்று நடப்பர் கீழோர்.

    பாடல் 347

    மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்திச்
    செய்த தெனினும் செருப்புத்தன் காற்கேயாம்;
    எய்திய செல்வந்த ராயினும் கீழ்களைச்
    செய்தொழிலாற் காணப் படும்.

    மாசற்ற நல்ல பொன்னின் மேல்
    மாட்சிமை பொருந்திய இரத்தினங்கள்
    பதித்துச் செய்தாலும் காலில் அணிதற்கே
    பயன்படும் செருப்பு என்பதுபோல் கீழ்மக்கள்
    அதிகமாய்ச் செல்வம் பெற்றிருப்பினும்
    அவர் செய்யும் செயல்களால் கீழோரெனவே
    அறியப் படுவர் எப்போதும்.

    பாடல் 348

    கடுக்கெனச் சொல்வற்றாம், கண்ணோட்டம் இன்றாம்
    இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும், – அடுத்தடுத்து
    வேகம் உடைத்தாம், விறன்மலை நன்னாட!
    ஏகுமாம் எள்ளுமாம் கீழ்.

    பெருமையான மலைகளுடை நல்லநாட்டைப்
    பெற்ற அரசனே! கீழ்மகன் கடும் சொல் சொல்லும்
    பழக்கம் உடையவன் எவரிடத்தும் இரக்கம்
    பாராட்டாதவன் மற்றவர் படும் துன்பத்திற்கு
    பெரிதும் மகிழ்பவன் அடிக்கடி சினம் கொள்பவன்
    பல இடங்களில் கண்டபடி திரிபவன் மற்றவரை
    பழித்துப் பேசும் இயல்பு கொண்டவன்.

    பாடல் 349

    பழையர் இவரென்று பன்னாட்பின் நிற்பின்
    உழையினியர் ஆகுவர் சான்றோர்; – விழையாதே
    கள்ளுயிர்க்கும் நெய்தல் கனைகடல் தண்சேர்ப்ப!
    எள்ளுவர் கீழா யவர்.

    தேன் சிந்தும் நெய்தல் பூக்கள் மிகுந்து
    தொடர்ந்து ஒலியெழுப்பும் கடலினது
    குளிர்கரையுடை நாட்டு வேந்தனே! ஒருவர்
    தம் பின் நின்றால் பல நாள் பழகியவரென
    தகுதியுடைப் பெரியோர் அவர்களிடம் இனியராய்
    தக்கவாறு பழகுவர் கீழ்மக்களோ நிற்பவரை
    தம் நண்பராய்க் கருதாது பழிப்பர்.

    பாடல் 350

    கொய்புல் கொடுத்துக் குறைத்தென்றும் தீற்றினும்
    வையம்பூண் கல்லா சிறுகுண்டை; – ஐயகேள்,
    எய்திய செல்வத்த ராயினும் கீழ்களைச்
    செய்தொழிலாற் காணப்படும்.

    அரசனே கேட்பாயாக! நாள்தோறும்
    அறுக்கத்தக்க புல்லைத் தின்பதற்கு
    அறுத்துக் கொடுத்தாலும் சிறிய எருதுகள்
    அளவிற்பெரிய வண்டியை இழுக்கமாட்டா
    அதுபோல் செல்வம் பெற்றிருப்பினும் கீழோரை
    அவர் செய்யும் செயலினால் அறிய இயலும்.

    Share
  • நாலடியார் நயம் – 34

    நாலடியார் நயம் – 34

    நாங்குநேரி வாசஸ்ரீ

    34. பேதைமை

    பாடல் 331

    கொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப ஆமை
    நிலையறியாது அந்நீர் படிந்தாடி அற்றே
    கொலைவல் பெருங்கூற்றம் கோள்பார்ப்ப ஈண்டை
    வலையகத்துச் செம்மாப்பார் மாண்பு.

    கொல்லும் தொழிலில் வல்ல எமன் உயிரைக்
    கொண்டுபோகும் நாளை எதிர்நோக்கியிருக்க
    கொஞ்சமும் உணராது இவ்வுலக வாழ்வெனும்
    கொடும் வலையில் இறுமாந்து இருப்பவரின் பெருமை
    கொலை செய்பவர் உலையில் போட்டு நெருப்பை மூட்ட
    கவலையின்றி தன்நிலை உணராது அந்நீரில் மூழ்கிக்
    களித்து ஆடும் ஆமை போலாம்.

    பாடல் 332

    பெருங்கட லாடிய சென்றார் ஒருங்குடன்
    ஓசை அவிந்தபின் ஆடுதும் என்றற்றால்
    இற்செய் குறைவினை நீக்கி அறவினை
    மற்றறிவாம் என்றிருப்பார் மாண்பு.

    குடும்பத்துக்குத் தேவையான செயலைக்
    குறைவற முடித்து அறச் செயல் செய்ய
    பின் யோசிப்போமென அலட்சியமாயிருப்போர்
    பெருமை பெருங்கடலில் மூழ்கிக் குளிக்கச்
    சென்றோர் ஓசை அடங்கியபின் குளிக்கலாமென
    சிந்தித்துக் காத்திருப்பது போலாம்.

    பாடல் 333

    குலந் தவங் கல்வி குடிமைமூப் பைந்தும்
    விலங்காமல் எய்தியக் கண்ணும் – நலஞ்சான்ற
    மையாறு தொல்சீர் உலகம் அறியாமை
    நெய்யிலாப் பாற்சோற்றின் நேர்.

    நற்குலம், தவம், கல்வி வாழும் முறை
    நல்லொழுக்க முதிர்ச்சி எனும் ஐந்தும்
    நன்கு ஒருவரிடம் பொருந்தியிருந்தும்
    நன்மைமிகு குற்றமற்ற பழஞ்சிறப்புடை
    நானிலத்திற்கு ஏற்ற நற்செயல் அறியாது
    நடத்தல் நெய்யில்லாப் பால்சோற்றுக்கு ஒப்பாம்.

    பாடல் 334

    கல்நனி நல்ல கடையாய மாக்களின்;
    சொல்நனி தாமுணரா வாயினும் – இன்னினியே
    நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதலென்று
    உற்றவர்க்குத் தாம்உதவ லான்.

    பிறருக்கு உதவாத அற்ப மனிதரைவிட
    பலவிதத்தில் கற்கள் நல்லன தம்மைப்
    பாதுகாத்து அடைந்தவர்க்கு அப்போதே
    படுப்பதும் நிற்பதும் நடப்பதும் உட்காருவதுமான
    பல செயல்களுக்கு உதவுவதால்.

    பாடல் 335

    பெறுவதொன் றின்றியும் பெற்றானே போலக்
    கறுவுகொண் டேலாதார் மாட்டும் – கறுவினால்
    கோத்தின்னா கூறி உரைக்கால் பேதைக்கு
    நாத்தின்னும் நல்ல தினத்து.

    தான்பெறத்தக்கதென எதுவுமில்லாதபோதும்
    தக்க பயனைப் பெற்றவன்போல்
    தன்கோபத்தை ஏற்காதவரிடமும் பகையுடன்
    தீயசினத்தினால் அன்பில்லாச் சொற்களைத்
    தாம் கூட்டிச் சொல்லாமற்போனால் நல்ல
    தினவானது அறிவீனனின் நாக்கைத் தின்றுவிடும்.
    (தினவு என்பது அரிப்பு எனும் பொருள்படும்)

    பாடல் 336

    தங்கண் மரபில்லார் பின்சென்று தாம்அவரை
    எங்கண் வணக்குதும் என்பர் – புன்கேண்மை
    நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப!
    கற்கிள்ளிக் கையிழந் தற்று.

    நல்ல தளிர்நிறை புன்னைமலரும்
    நற்கடற்கரையுடை வேந்தனே!
    நம்மிடம் விருப்பமில்லாதார்பின் சென்று
    நம்மை விரும்புபவராய் இவரைச் செய்வோமென
    நினைப்பவரின் அற்ப உறவு கல்லைக் கிள்ளி
    நல்ல கையைப் போக்கிக் கொள்வதுபோலாம்.

    பாடல் 337

    ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
    போகா தெறும்பு புறஞ்சுற்றும்; – யாதும்
    கொடாஅர் எனினும் உடையாரைப் பற்றி
    விடாஅர் உலகத் தவர்.

    தமக்குக் கிட்டாதெனத் தெரிந்தும் நெய்ப் பாத்திரத்தை
    தவறாது எறும்புகள் சுற்றிக்கொண்டேயிருக்கும் அதுபோல்
    தராதவராயினும் பொருள் உள்ளவரை உலகத்தார்
    தொடர்ந்து விடாது சுற்றிக்கொண்டேயிருப்பர்.

    பாடல் 338

    நல்லவை நாடொறும் எய்தார் அறஞ்செய்யார்
    இல்லாதார்க் கியாதொன்றும் ஈகலார் – எல்லாம்
    இனியார்தோள் சேரார் இடைபட வாழார்
    முனியார்கொல் தாம்வாழும் நாள்.

    நாள்தோறும் பெறத்தக்க நன்மை அடையார்
    நல்லறம் செய்யார் இல்லாதவர்க்கு ஒன்றும்
    நல்கார் எல்லா இன்பமும் அளிக்கும்
    நல்ல மனைவியின் தோளைத் தழுவார்
    நற்புகழுடன்வாழார் இப்படிப்பட்டவர் தாம்வாழும்
    நாளையெல்லாம் வெறுக்கமாட்டார்களா?

    பாடல் 339

    விழைந்தொருவர் தம்மை வியப்ப ஒருவர்
    விழைந்திலேம் என்றிருக்கும் கேண்மை – தழங்குகுரல்
    பாய்திரைசூழ் வையம் பயப்பினும் இன்னாதே
    ஆய்நலம் இல்லாதார் மாட்டு.

    தம்மை ஒருவர் புகழ்ந்து பேச
    தாம் இத்தகு புகழுரைகளை
    விரும்பமாட்டோம் எனப் புறக்கணித்து
    வெறுக்கும் மூடரின் நட்பு கடல்சூழ்
    உலகையே தருவதாக இருப்பினும்
    உயர் சான்றோர் விரும்பமாட்டார்.

    பாடல் 340

    கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
    பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
    மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
    பித்தனென் றெள்ளப் படும்.

    தான் கற்ற கல்வியையும் மேன்மையையும்
    தம் குடிப்பிறப்பையும் அயலார் புகழ்ந்துரைப்பின்
    தக்க பெருமையாம் அல்லாது அவன்
    தம்மைத்தாமே புகழ்ந்து கூறின் ஏற்காது
    தொடர்ந்து கேலிபேசுவோர் பலராகி
    தக்க மருந்தாலும் தணியாத பித்தனெனத்
    தூற்றி அனைவராலும் இகழப்படுவான்.
    (மைத்துனர்- கேலி பேசுவோர்).

    Share
  • நாலடியார் நயம் – 33

    நாலடியார் நயம் – 33

    நாங்குநேரி வாசஸ்ரீ

    33. புல்லறிவாண்மை

    பாடல் 321

    அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்
    பொருளாகக் கொள்வர் புலவர்; – பொருளல்லா
    ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை
    மூழை சுவையுணரா தாங்கு.

    அருளின் காரணத்தால் அறம் உரைக்கும்
    அன்புடையவர் வாய்ச்சொல்லை நல்லோர்
    அளவற்ற பயன்தருவதாய் மதித்து ஏற்பர்
    அப்பெரியோர் சொல்லை ஒன்றுக்கும் உதவா
    அற்ப பேதையோ துடுப்பு பால் சோற்றின்
    அருஞ்சுவை உணராதென்பதுபோல் இகழ்ந்து
    அறியாமையுடன் பேசுவான்.

    பாடல் 322

    அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்
    செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்;
    கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
    செவ்வி கொளல்தேற்றா தாங்கு.

    தோலைக் கவ்வித் தின்னும் புலையரின் நாய்
    தித்திக்கும் பால் சோற்றின் சுவை அறியாததுபோல்
    பொறாமை இல்லோர் அறநெறி கூறுங்கால்
    பண்பில்லா நற்குணமற்றோர் காதுகொடுத்தும் கேளார்.

    பாடல் 323

    இமைக்கும் அளவில்தம் இன்னுயிர்போம் மார்க்கம்
    எனைத்தானும் தாங்கண் டிருந்தும் – தினைத்துணையும்
    நன்றி புரிகல்லா நாணில் மடமாக்கள்
    பொன்றிலென் பொன்றாக்கால் என்?

    கண் இமைக்கும் நேரத்தில் இன்னுயிர் போகும் தன்மையைக்
    கண்ட பின்னும் தினை அளவேனும் அறநெறி கேட்பதும்
    அதன்வழி நடப்பதுமாகிய நற்செயல் புரியாத வெட்கமும்
    அறிவுமற்ற மக்கள்  இருந்தாலென்ன? இறந்தாலென்ன?

    பாடல் 324

    உளநாள் சிலவால் உயிர்க்கு ஏமம் இன்றால்,
    பலர்மன்னும் தூற்றும் பழியால், – பலருள்ளும்
    கண்டாரோடு எல்லாம் நகாஅது எவனொருவன்
    தண்டித் தணிப்பகை கோள்.

    வாழும் நாட்கள் சில, உயிர் உடம்பை
    விட்டு போவதைத் தடுக்கக் காவலில்லை
    பிறர் தூற்றும் பழிச்சொற்களோ மிகப் பல
    பின்னும் யாவருடனும் இன்பமாய்ச் சிரித்துப்
    பேசாது தனித்திருந்து பலரைப் பகைத்து வாழ்வதில்
    பயன் தான் என்ன?

    பாடல் 325

    எய்தியிருந்த அவைமுன்னர்ச் சென்றெள்ளி
    வைதான் ஒருவன் ஒருவனை; – வைய
    வயப்பட்டான் வாளா இருப்பானேல், வைதான்
    வியத்தக்கான் வாழும் எனின்.

    பலர் கூடியிருக்கும் அவையில் ஒருவன் தன்னைப்
    பிறர் முன் காரணமின்றி இகழ்ந்தும் பதிலுரைக்காது
    பொறுமையுடன் இருப்பானாகில் அவனை இகழ்ந்த
    புல்லறிவாளன் நிச்சயம் அழிவான் அல்லாது
    பாருலகில் வாழ்ந்துகொண்டிருப்பானாகில்
    பெரும் வியப்பிற்குரியவனே.

    பாடல் 326

    மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை
    ஊக்கி அதன்கண் முயலாதான் – தூக்கிப்
    புறத்திரு போகென்னும் இன்னாச் சொல் இல்லுள்
    தொழுத்தையால் கூறப் படும்.

    முதுமை வருமுன்னே அறநெறியை
    மேற்கொண்டு முயலாதானை வீட்டின்
    வேலைக்காரியும் வெளியிலே தள்ளி
    ‘வீட்டின் வெளியிலேயே இரு, இங்கிருந்து
    விரைந்து போய் விடு’, போலும் கடும்
    சொற்களை மனம் நோகக் கூறுவாள்.

    பாடல் 327

    தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
    ஏமஞ்சார் நன்னெறியும் சேர்கலார் – தாமயங்கி
    ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
    போக்குவார் புல்லறிவி னார்.

    தாமும் இன்பம் அடையார்
    தகுதியுடை நல்லவர்க்கும்
    தக்க நன்மை செய்யார் உயிருக்குத்
    தகுந்த காவலாயிருக்கும் அறநெறியையும்
    தேடிச்சேரார் செல்வத்தில் மயங்கி
    தாம் செய்வதறியாது வாழ்நாளைத்
    தவறாக வீணாய்க் கழிப்பர்.

    பாடல் 328

    சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி
    இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் – இறுகிறுகிப்
    பின்னறிவாம் என்றிருக்கும் பேதையார் கைகாட்டும்
    பொன்னும் புளிவிளங்கா யாம்.

    மரணத்துக்குப் பின் போகப் போகும்
    மறுமை உலகுக்குரிய அறமெனும்
    மதிப்பான சோற்றை தோள்மூட்டையாய்
    மிக அழுத்தமாகப் பிடிக்காது பணத்தை
    மிகவும் இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டு
    அறத்தைப் பின்னர் செய்வோம் என எண்ணும்
    அறிவற்றோர் இறக்கும் தருவாயில் சைகையால்
    அங்குள்ளோர்க்கு பொன் உருண்டையை எடுத்துவர
    அறிவுறுத்தினாலும் அவர் புளிப்பான விளாங்காயே
    அவர் விருப்பமெனச் சொல்லிப் பொன்னைக் கவர்ந்துசெல்வர்.

    பாடல் 329

    வெறுமை யிடத்தும் விழுப்பிணிப் போழ்தும்
    மறுமை மனைத்தாரே யாகி; – மறுமையை
    ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்துச்
    சிந்தியார் சிற்றறிவி னார்.

    வறுமையுற்றபோதும் தீராநோய் வந்தபோதும்
    வேண்டிய தருமங்கள் செய்வர் அற்பஅறிவுடையார்
    வளம் நிறைந்த காலத்திலவர் மறுமைக்கு
    வேண்டிய அறம் பற்றி கடுகளவேனும் சிந்தியார்.

    பாடல் 330

    என்னேமற் றிவ்வுடம்பு பெற்றும் அறம்நினையார்
    கொன்னே கழிப்பர்தம் வாழ்நாளை – அன்னோ
    அளவிறந்த காதல்தம் ஆருயிர் அன்னார்க்
    கொளஇழைக்கும் கூற்றமும் கண்டு.

    அளவற்ற அன்புக்குரிய தம்
    அரிய உயிரொத்தவரைக் கொண்டு
    போக முயலும் எமனைக் கண்டும்
    பெறர்கரிய மனிதப் பிறவி பெற்றும்
    அறம் செய்ய நினையாது தம் வாழ்நாளை
    அற்ப அறிவினர் வீணாய்க் கழிக்கின்றார்.

    Share
  • நாலடியார் நயம் – 32

    நாலடியார் நயம் – 32

    நாங்குநேரி வாசஸ்ரீ

    32. அவையறிதல்

    பாடல் 311

    மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டாங்கோர்
    அஞ்ஞானம் தந்திட்டு அதுவாங்கு அறத்துழாய்க்
    கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரறி வாளர்முன்
    சொன்ஞானம் சோர விடல்.

    மெய்நூலறிவினையுடையோரின் அவையில் சேர்ந்து
    முயன்று ஒன்றைத் தெரிந்துகொள்வதை விடுத்து
    அங்கு அறியாமை விளைக்கும் பேச்சைச் சொல்லி
    அதையே பரப்பி நிலைநாட்ட முயலும் சிற்றறிவாளரிடம்
    அறிவார்ந்த மொழிகளைச் சொல்லாது விடுக!

    பாடல் 312

    நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செறிக்கும்
    தீப்புலவன் சேரார் செறிவுடையார்; – தீப்புலவன்
    கோட்டியுட் குன்றக் குடிப்பழிக்கும் அல்லாக்கால்
    தோட்புடைக் கொள்ளா எழும்.

    வாய்க்கு வந்த பாடத்தைச் சொல்லி உட்கருத்தை
    வகையாய் அறிந்தவன் போல் அவையைக் கூட்டும்
    தீய புலவனை அடக்கமுடைய நற்புலவர் சேரார் காரணம்
    தனது தாழ்ச்சி கருதி அத்தீயபுலவன் அவர்தம் குலத்தைப்
    பழிப்பான் அல்லது தோளைத் தட்டி சண்டைக்கு எழுவான்.

    பாடல் 313

    சொல்தாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்,
    கற்றாற்றல் வன்மையும் தாம்தேறார்; – கற்ற
    செலவுரைக்கும் ஆறறியார் தோற்ப தறியார்
    பலவுரைக்கும் மாந்தர் பலர்.

    பேச்சாற்றலை ஆதாரமாகவைத்து விரைந்து
    பேச விரும்புபவர் மற்றவரின் அறிவுக் கூர்மையையும்
    பெரும் வல்லமையையும் அறியார், தாம் கற்றதைப்
    பிறர் மனதில் புகும்படி சொல்லுதலையும் அறியார்
    பிறரிடம் தோற்பதின் காரணமும் தெரிந்துகொள்ளாது
    பலவற்றை வீணாகப் பேசிக்கொண்டேயிருப்பவர் பலர்.

    பாடல் 314

    கற்றதூஉம் இன்றிக் கணக்காயர் பாடத்தால்
    பெற்றதாம் பேதையோர் சூத்திரம் – மற்றதனை
    நல்லார் இடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
    புல்லறிவு நாட்டி விடும்.

    ஆசிரியரை வழிபட்டுக் கல்லாத அறிவற்றவன்
    அவர் பிறருக்குச் சொல்லிக்கொடுத்த சூத்திரத்தை
    தற்செயலாய்த் தெரிந்துகொண்டு நன்கு கற்றவர்
    அவையில் நாணாது கூறி புல்லறிவை வெளிப்படுத்துவான்.

    பாடல் 315

    வென்றிப் பொருட்டால் விலங்கொத்து மெய்கொள்ளார்
    கன்றிக் கறுத்தெழுந்து காய்வாரோடு – ஒன்றி
    உரைவித் தகம்எழுவார் காண்பவே, கையுள்
    சுரைவித்துப் போலும்தம் பல்.

    வெற்றிபெற வேண்டும் எனும் குறிக்கோளால்
    விலங்கினை ஒத்து உண்மைப் பொருளை ஏற்காது
    வெகுண்டு போருக்குச் செல்வதுபோல் விளங்குபவரை
    விரும்பி அடைந்து நற்கல்வியைச் சொல்வதற்கு
    விழைபவர் சுரை விதை போன்ற தம் பற்கள்
    விழக்காண்பர் தம் கையில்.

    (எதையாவது பேசி எதிரியை வெற்றிக்கொள்ளப் பார்க்கும் அறிவற்றவருக்கு நற்கல்வியை உபதேசிக்கப் போனால் பல்லை உதிர்த்துக் கையில் கொடுப்பார்கள் (அடிப்பார்கள்).

    பாடல் 316

    பாடமே ஓதிப் பயன்தெரிதல் தேற்றாத
    மூடர் முனிதக்க சொல்லுங்கால், – கேடருஞ்சீர்ச்
    சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே, மற்றவரை
    ஈன்றாட்கு இறப்பப் பரிந்து.

    பாடலை மனப்பாடம் மட்டுமே செய்து அதன்
    பொருளை அறிவதில் தெளிவில்லா மூடன்
    பயனற்ற சினம் விளைக்கும் வார்த்தைகளைப்
    பேசும்போது கேடில்லா மேன்மையுடைப்
    பெரியோர் அம்மூடனைப் பெற்ற தாய்க்கு இரங்கிப்
    பொறுமையுடன் அமைதியாய் நிற்பர்.

    பாடல் 317

    பெறுவது கொள்பவர் தோள்மேல் நெறிப்பட்டுக்
    கற்பவர்க் கெல்லாம் எளியநூல்; – மற்றும்
    முறிபுரை மேனியர் உள்ளம்போன் றியார்க்கும்
    அறிதற் கரிய பொருள்.

    பெறத்தக்க பொருட்களைப் பெற்றுக் கொள்ளும்
    பொதுமகளிரின் தோள்களைப்போல் ஆசிரியரைப்
    போற்றி நெறிப்படி கற்போர்க்கு நூலின் பொருள்
    பாங்காய் விளங்குமெனினும் தளிரையொத்த மேனியுடை
    பொதுமகளிரின் உள்ளம் போல் நெறிப்படி கல்லாதவர்க்கு
    பொதிந்திருக்கும் உட்பொருள் அறிதற்கு அரியதாம்.

    பாடல் 318

    புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்
    உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் – மற்றவற்றைப்
    போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து
    தேற்றும் புலவரும் வேறு.

    புத்தகங்களை அதிகமாய்ச் சேர்த்தும் அதன்
    பொருள் அறியாதவராய் வீடெல்லாம் நிறைத்தாலும்
    படித்துப் பொருளுணர்ந்து பிறரைத் தெளிவிக்கும்
    புலவரும் அப்புத்தகத்தைப் பாதுகாக்கும் புலவரும் வெவ்வேறே.

    பாடல் 319

    பொழிப்பகல நுட்பநூல் எச்சம்இந் நான்கின்
    கொழித்தகலம் காட்டாதார் சொற்கள் – பழிப்பில்
    நிரை ஆமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
    உரையாமோ நூலிற்கு நன்கு?

    குற்றமில்லாக் கூட்டமாகிய காட்டுப்பசுக்களைக்
    கொண்ட உயர்ந்த மலைநாட்டு வேந்தனே! நூலின்
    பொருளைச் சுருங்கக் கூறும் பொழிப்புரையும்
    பொருள் விளங்க விரித்துக்கூறும் அகல உரையும்
    சாரத்தைக் கூறும் நுட்ப உரையும் நூலில் வெளிப்படையாய்ச்
    சொல்லாது குறிப்பாலுணர்த்தும் விசேட உரையும் எனும்
    நால்வழிகளிலும் நன்கு ஆராய்ந்து விளக்காதவரின் உரை
    நூல்களுக்கு நல்ல உரையாகுமோ?

    பாடல் 320

    இற்பிறப் பில்லார் எனைத்தநூல் கற்பினும்
    சொற்பிறரைக் காக்கும் கருவியரோ? – இற்பிறந்த
    நல்லறி வாளர் நவின்றநூல் தேற்றாதார்
    புல்லறிவு தாமறிவ தில்.

    உயர்குடிப் பிறப்பு இல்லார் எத்தகு
    உயர்ந்த நூலைக் கற்றிருப்பினும்
    கல்லாத பிறரின் சொற்குற்றங்களைக்
    காட்டி இகழாத அடக்கம் கொண்டவரோ?
    நற்குடிப் பிறந்த அறிவாளர் நூற்பொருளை
    நன்கு அறியாதவரின்  புல்லிய அறிவினை
    நன்குணர்ந்தாலும் கண்டுகொள்ளாதிருப்பர்.

    Share
  • நாலடியார் நயம் – 31

    நாலடியார் நயம் – 31

    நாங்குநேரி வாசஸ்ரீ

    31. இரவச்சம்

    பாடல் 301

    நம்மாலே யாவாந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந்
    தம்மாலாம் ஆக்கம் இலரென்று – தம்மை
    மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும்
    தெருண்ட அறிவி னவர்.

    இவ்வறியவர் நம்மாலே வாழ்கிறார்
    இவர் எப்போதும் தாமே சம்பாதித்தவர்
    இலர் எனத் தம்மை மேலானவராய் மதித்து
    இன்புற்று மயங்கும் மனமுடையாரிடத்து
    இரத்தற்குச் செல்வரோ தெளிந்த அறிவுடையார்?

    பாடல் 302

    இழித்தக்க செய்தொருவன் ஆர உணலின்
    பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ?
    விழித்திமைக்கு மாத்திரை யன்றோ ஒருவன்
    அழித்துப் பிறக்கும் பிறப்பு.

    தாழ்வதற்குக் காரணமான செய்கைகள் செய்து
    தம் வயிராற உண்பதினும் பழிதரும் அதனைத்
    தள்ளி பசியோடிருந்து இறப்பது குற்றமா? ஒருவன்
    தன்னுயிர் விடுத்தபின் பிறக்கும் பிறப்பு கண் இமைக்கும்
    தருணத்தில் நிகழுமெனவே இவ்வுடம்பு போனால்
    திரும்பவும் வேறுடம்பு கிடைப்பது அரிதென நினையாதீர்.

    பாடல் 303

    இல்லாமை கந்தா இரவு துணிந்தொருவர்
    செல்லாரும் அல்லர் சிறுநெறி – புல்லா
    அகம்புகுமின் உண்ணுமின் என்பவர்மாட் டல்லான்
    முகம்புகுதல் ஆற்றுமோ மேல்?

    தாங்கொணா வறுமையால் இரத்தெலெனும் இழிதொழிலை
    தெளிந்து செய்தாலும் அவ்வற்ப வழியிலும் மேன்மைகருதி
    தம்மைத் தழுவிக்கொண்டு எம் வீட்டிற்கு வாருங்கள் எனத்
    தக்க முறையில் உணவுகொள்ளச்செய்பவரல்லாது வேறோரிடம்
    தலைகாட்டவும் மாட்டார் மேலோர்.

    பாடல் 304

    திருத்தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
    உருத்த மனத்தோ டுயர்வுள்ளி னல்லால்
    அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின்சென்
    றெருத்திறைஞ்சி நில்லாதா மேல்.

    தம்மைச் செல்வத்தின் அன்னை இலட்சுமி கைவிட்டாலும்
    தெய்வம் கோபம் கொண்டாலும் மேலோர்
    தம் மேன்மையை நினைப்பதேயல்லாமல்
    தன் பணத்தை வீணாகச் சேர்த்துவைக்கின்ற
    தகுதியற்ற அற்பரிடம் சென்று பொருள் வேண்டி
    தலைகுனிந்து ஒருபோதும் நில்லார்.

    பாடல் 305

    கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்
    இரவாது வாழ்வதாம் வாழ்க்கை – இரவினை
    உள்ளுங்கால் உள்ளம் உருகுமால், என்கொலோ
    கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு.

    தம் பொருளை மறைக்காது கொடுக்கும்
    திடமான அன்புடைய கண்போலும் இனியவரிடத்தும்
    தாம் சென்று இரவாமல் வாழ்வதே உயர்வாழ்க்கை
    தேடிச்சென்று யாசிப்போம் என நினையும்போதே
    துன்புற்று மனம் உருகிப்போகும் நிலையிலிருக்கிறதே
    தருவதைப் பெறுவோர் மனம் எப்படியிருக்குமோ?

    பாடல் 306

    இன்னா இயைக இனிய ஒழிகென்று
    தன்னையே தானிரப்பத் தீர்வதற் – கென்னைகொல்
    காதல் கவற்றும் மனத்தினாற் கண்பாழ்பட்
    டேதி லவரை இரவு.

    துன்பம் நம்மைச் சேரட்டும் இன்பம்
    தூர விலகட்டும் என வேண்டி
    தன் மனதை நிறைவு செய்வதால்
    தீர்ந்துபோகும் வறுமையெனில் பொருளாசை
    துன்புறுத்தும் மனதுடன் அறிவழிந்து அயலாரைத்
    தேடிச் சென்று இரப்பதால் என்ன பயன்?

    பாடல் 307

    என்றும் புதியார் பிறப்பினும் இவ்வுலகத்
    தென்று மவனே பிறக்கலான் – குன்றின்
    பரப்பெலாம் பொன்னொழுகும் பாயருவி நாட
    இரப்பாரை எள்ளா மகன்.

    மலையின் பரப்பு முழுதும் பொன் பரந்து ஓடும்படியான
    மிகு அருவிகளுடை மலைநாட்டு வேந்தனே! இவ்வுலகில்
    எக்காலத்தும் புதியமனிதர் பிறந்துகொண்டேயிருப்பினும்
    என்றும் பிறவாதவன் ஒருவன் யாரெனில் இரப்பாரை
    இகழாது ஆதரிக்கும் மனிதன்.

    பாடல் 308

    புறத்துத்தன் இன்மை நலிய அகத்துத்தன்
    நன்ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
    ஈயாய் எனக்கென் றிரப்பானேல் அந்நிலையே
    மாயானோ மாற்றி விடின்.

    தம் புற உடலை வறுமை வருத்த
    தன் அகத்தேயுள்ள மெய்யறிவை விலக்கி
    அறியாமையை நிலைநிறுத்தி செல்வந்தனை
    அண்டி யாசித்தபின் அவன் கொடுக்க மறுத்தால்
    அவ்வறுமையாளன் உயிர் விடமாட்டானா?

    பாடல் 309

    ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி
    வழிபடுதல் வல்லுத லல்லால் – பாசழிந்து
    செய்யீரோ என்னானும் என்னுஞ்சொற் கின்னாதே
    பையத்தான் செல்லும் நெறி?

    வறியவர் மற்றொருவரைச் சார்ந்து சொன்னபடி செய்து
    வணங்கித் தாழ்தல் உலக முறைமையே அல்லாமல்
    ஏதேனும் உதவி செய்யீரோ என இரப்பதைக் காட்டிலும்
    ஏவல் செய்து சார்ந்து வாழும் வாழ்க்கை துன்பம் தருவதோ?

    பாடல் 310

    பழமைகந் தாகப் பசைந்த வழியே
    கிழமைதான் யாதானுஞ் செய்க கிழமை
    பொறார் அவரென்னின் பொத்தித்தம் நெஞ்சத்
    தறாஅச் சுடுவதோர் தீ.

    பழைய நட்பை ஆதாரமாகக் கொண்டு உதவி கேட்டுப்
    பெற வந்தவர்க்கு தான் யாதாகிலும் தகுந்ததைச் செய்ய
    மன நிறைவின்மையால் அதைப் பெற்றுக்கொள்ள அவர்
    மறுப்பாராயின் கொடுத்தவர் மனதில் அச்செய்கை
    நீங்காது நிலைத்து நின்று சுடும் தீ போல் வருத்தும்.

    Share
  • நாலடியார் நயம் – 30

    நாலடியார் நயம் – 30

    நாங்குநேரி வாசஸ்ரீ

    30. மானம்

    பாடல் 291

    திருமதுகை யாகத் திறனிலார் செய்யும்
    பெருமிதம் கண்டக் கடைத்தும் – எரிமண்டிக்
    கானத் தலைப்பட்ட தீப்போல் கனலுமே,
    மான முடையார் மனம்.

    செல்வச் செருக்கினால் நற்குணமற்றவர்
    செய்யும் அவமதிப்பைக் கண்டபோது
    மானமுடையார் மனத்தில் காட்டுத் தீ
    மிகுந்து பரவுவதுபோல் அனல் சொலிக்கும்.

    பாடல் 292

    என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
    தம்பாடு உரைப்பரோ தம்முடையார்; – தம்பாடு
    உரையாமை முன்  னுணரும் ஒண்மை உடையார்க்கு
    உரையாரோ தாமுற்ற நோய்.

    தம் மானத்தைக் காப்பவர் பசியால்
    தாக்குண்டு எலும்புக்கூடாய் உடல்வற்றிய
    தன்மையேற்படினும் தம் வறுமையைத்
    தகுதியில்லார் பின்சென்று கூறுவரோ?
    தான் சொல்லாதே குறிப்பாலுணரும்
    தகுதியுடை அறிவாளியிடம் சொல்லாதிருப்பாரோ?

    பாடல் 293

    யாமாயின் எம்மில்லம் காட்டுதும் தாமாயின்
    காணவே கற்பழியும் என்பார்போல் – நாணிப்
    புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால்
    மறந்திடுக செல்வர் தொடர்பு.

    வறுமையிருந்தாலும் நாமாக இருந்தால்
    வீட்டினுள் அழைத்து செல்வந்தருக்கு
    நம் இல்லாளை அறிமுகப்படுத்துவோம்
    நல்ல பொருள் படைத்த செல்வந்தரோ
    நாம் கண்டாலே மனைவியின் கற்புகெடுமென
    நினைப்பவர்போல் நாணி வாயிலின் புறத்தே
    வைத்துச் சோறிடுவர் அதனால் செல்வந்தருடன்
    வைக்கும் தொடர்பை மறந்திடுக.

    பாடல் 294

    இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது
    உம்மையும் நல்ல பயத்தால்; – செம்மையின்
    நானம் கமழும் கதுப்பினாய்! நன்றேகாண்
    மான முடையார் மதிப்பு.

    நன்றாகக் கஸ்தூரிமணம் கமழும் கூந்தலையுடையவளே!
    இப்பிறப்பில் நன்மை உண்டாக்குவதோடல்லாது
    இனிவரும் மறுமையிலும் நன்மை விளைவிக்கும்
    மானமுடையாரின் மதிப்பு அவர்தம் நல்வழிதவறா
    மாண்பினால் இதன் மேன்மையை நீ உணர்வாயாக!

    பாடல் 295

    பாவமும் ஏனைப் பழியும் படவருவ
    சாயினும் சான்றவர் செய்கலார்; – சாதல்
    ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல்
    அருநவை ஆற்றுதல் இன்று.

    பாவமும் மற்ற பழியும் தோன்றும் செயலை
    பண்பட்ட சான்றோர் தாம் இறக்கநேரிடினும்
    புரியார் ஏனெனில் சாவுத்துன்பம் ஒருநாளில்
    அதுவும் ஒருகணப்பொழுது மட்டும்
    அனுபவிக்க்கக் கூடியது அத்துன்பம்
    அப்பாவமும் பழியும்போல் உயிர் உள்ளளவும்
    ஆறாத்துயர் தந்து நிலைத்துநில்லாது.

    பாடல் 296

    மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாம்
    செல்வர் எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்;
    நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே,
    செல்வரைச் சென்றிரவா தார்.

    மிக்க வளமான இப்பெரு உலகில் வாழ்பவர்
    மற்றவரைவிட மிகுந்த செல்வம் கொண்டவராயினும்
    வறியோர்க்கு பொருள் கொடுத்து உதவாராயின் அவரும்
    வறியவரே தம் வறுமைநிலையிலும் செல்வரிடம் பொருள்
    வேண்டி இரவாதார் பெருமுத்தரையர் போலும் செல்வந்தரே.

    பாடல் 297

    கடையெல்லாம் காய்பசி அஞ்சுமற் றேனை
    இடையெலாம் இன்னாமை அஞ்சும் – புடை பரந்த
    விற்புருவ வேல்நெடுங் கண்ணாய்! தலை யெல்லாம்
    சொற்பழி அஞ்சி விடும்.

    வில் போலும் வளைந்த புருவத்தின் கீழ்
    வேல் போல் உலாவிவரும் நீள் கண்ணையுடையவளே!
    வாட்டும் பசிக்கு அஞ்சுவர் கீழ் மக்களெல்லாம்
    வருத்தும் துன்பத்துக்கு அஞ்சுவர் இடைப்பட்டோர்
    வரும் பழிக்குஅஞ்சுவர் மேன்மக்கள்.

    பாடல் 298

    நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச்
    செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் – கொல்லன்
    உலையூதும் தீயேபோல் உள்கனலும் கொல்லோ,
    தலையாய சான்றோர் மனம்.

    இவர் நல்லவர் அருளுடையவர்
    இப்போது வறுமையுற்றார் எனக்கூறி இகழ்ந்து
    செல்வர் அற்பப் பார்வை பார்க்கும்போது பெருஞ்
    சான்றோர் மனம் கொல்லன் உலைக்களத்தில்
    துருத்தியால் ஊதி உண்டாக்கும் நெருப்புபோல்
    துன்பப்பட்டு உள்ளே கொதிக்கும்.

    பாடல் 299

    நச்சியார்க்கு ஈயாமை நாணன்று நாள்நாளும்
    அச்சத்தால் நாணுதல் நாண்அன்றாம்; – எச்சத்தின்
    மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது
    சொல்லாது இருப்பது நாண்.

    விரும்பி வந்தவர்க்குக்கொடாமை நாணம் அன்று
    வேண்டாத தீயவை செய்ய அஞ்சி வெட்கப்படுதலும்
    வெட்கமன்று நம்மை எளியராய்க் கருதி புத்திகெட்டவர்
    செய்த அவமதிப்பைப் பிறருக்குச் சொல்லாதிருப்பதே
    சிறந்த நாணம் ஆகும்.

    பாடல் 300

    கடமா தொலைச்சிய கானுறை வேற்கை
    இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் – இடமுடைய
    வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்
    மானம் அழுங்க வரின்.

    காட்டிலுள்ள புலி தான் கொன்ற
    காட்டுப்பசு இடப்பக்கம் வீழுமாயின்
    கொள்ளாது பட்டினியால் இறக்கும்
    கையில் இடமகன்ற விண்ணுலகம்
    கிட்டுவதாயினும் மானம்கெட வருமாயின்
    கொள்ளார் பெரியோர்.

    Share