Tag: நெல்லைத் தமிழ்

  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 102

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 102

    நாங்குநேரி வாசஸ்ரீ

    102. நாணுடைமை

    குறள் 1011

    கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
    நல்லவர் நாணுப் பிற

    வேண்டாத கெட்ட காரியத்த செய்யுதவன் வெக்கப்படுததுக்கும், அழகான பொம்பளப்பிள்ளைங்க வெக்கப்படுததுக்கும் வித்தியாசம் உண்டு.

    குறள் 1012

    ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
    நாணுடைமை மாந்தர் சிறப்பு

    சாப்பாடும், உடுப்பும் மத்ததும் எல்லா உசிருக்கும் பொதுவான தேவ. சிறப்பானது மத்தவங்க சொல்லுத பொல்லாப்புக்கு பயந்து கெட்ட காரியத்த செய்யாம வாழுத நாணுடைமைதான்.

    குறள் 1013

    ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
    நன்மை குறித்தது சால்பு

    எல்லா உசிரும் இருக்கதுக்கு எடமா ஒடம்ப வச்சிருக்குதுக. அது கணக்கா சான்றாண்மை நாணம் ங்குத நல்ல கொணத்த எடமா கொண்டிருக்குது.

    குறள் 1014

    அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
    பிணியன்றோ பீடு நடை

    நாணம் இருக்குதது படிச்ச பெருமக்களுக்கு நகநட்டுகணக்கா.  அதுமட்டும் இல்லையினா அவுக என்னதான் பெருமிதமா நடந்தாலும் பாக்கதுக்கு அது நோய் கணக்காதான் தெரியும்.

    குறள் 1015

    பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
    குறைபதி என்னும் உலகு

    தனக்கு வருத பொல்லாப்புக்காவ மட்டுமில்லாம பொறத்தியாரோட பொல்லாப்புக்காகவும் வெசனப்படுதவங்கிட்ட நாணம் ங்குத கொணம் வாழுததா ஒலகத்தவரு சொல்லுதாங்க.

    குறள் 1016

    நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
    பேணலர் மேலா யவர்

    பெரியமனுசங்க இந்த ஒலகத்துல தன் பாதுகாப்புக்காவ நாணத்த வேலி கணக்கா வச்சிக்கிட்டு வாழுவாகளே தவித்து மத்தத இல்ல.

    குறள் 1017

    நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
    நாண்துறவார் நாணாள் பவர்

    நாணம்ங்குத கொணத்த கொண்டவுக மானத்துக்காவ உசிர உடுவாகளே தவித்து  மானங்கெட்டு உசிரு வாழ மாட்டாக.

    குறள் 1018

    பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
    அறநாணத் தக்க துடைத்து

    வெக்கப்படுத அளவுக்கு பழிபாவத்துக்கு ஆளானவுக அதுக்காவ வெக்கப்படாம இருந்தாங்கன்னா அவுகள விட்டு அறம் வெக்கப்பட்டு வெலகி போயிடுச்சின்னு நெனச்சிக்கிடணும்.

    குறள் 1019

    குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
    நாணின்மை நின்றக் கடை

    கொள்கை தப்பி நடந்தாம்னா அவன் பொறந்த குடும்பத்துக்கு கேடு வரும். மானங்கெட்டு திரிஞ்சாம்னா அவனுக்கு வருத நல்லதெல்லாம் அழிஞ்சுபோவும்.

    குறள் 1020

    நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
    நாணால் உயிர்மருட்டி அற்று

    மனசுல வெக்கங்கெட்டு திரியுதவுக நடமாட்டம் மரத்தால செஞ்சி கயறு கட்டி உசிரு இருக்கது போல ஆட்டங்காட்டுத பொம்மை கணக்காத்தான்,

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 101

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 101

    நாங்குநேரி வாசஸ்ரீ

    101. நன்றியில் செல்வம்

    குறள் 1001

    வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
    செத்தான் செயக்கிடந்த தில்

    வேணுமட்டும் வீடுமுழுக்க செல்வத்தச் சேத்த பொறவு அத வச்சி சாப்புட்டு சந்தோசமா அனுவிக்காம ஒருத்தன் செத்தாம்னா சேத்த செல்வத்தால என்ன பிரயோசனம்?

    குறள் 1002

    பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
    மருளானாம் மாணாப் பிறப்பு

    யாருக்கும் என்னமும் கொடுக்காம தங்கிட்ட இருக்க பொருளால எல்லாம் ஆவும்னு நெனைச்சி அத விடாம புடிச்சிக்கிட்டு இருக்கவனுக்கு சிறப்பில்லாத தாழ்ச்சியான பொறப்பு உண்டாவும்.

    குறள் 1003

    ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
    தோற்றம் நிலக்குப் பொறை

    மத்தவனவிட அதிகமா சொத்து சேக்கணும்னு நெனச்சி அதையே குறியா வச்சி புகழ விரும்பாம இருக்கவனோட பொறப்பு இந்த பூமிக்கு பாரம்.

    குறள் 1004

    எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
    நச்சப் படாஅ தவன்

    மத்தவுகளுக்கு ஒதவி செய்யாத காரணத்தால யாருக்கும் பிடிக்காம இருக்கவன் செத்த பொறவு மிஞ்சி நிக்கப்போவுதுனு எத நெனைச்சிக்கிடுவானோ?

    குறள் 1005

    கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
    கோடியுண் டாயினும் இல்

    மத்தவுகளுக்கு கொடுத்து ஒதவி தானும் தேவப்படும்போது அனுவிச்சிக்கிட்டு இல்லாம இருக்கவன் கிட்ட கோடி கோடியா செல்வம் குவிஞ்சிச்சின்னாலும் பிரயோசனம் இல்ல.

    குறள் 1006

    ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்
    றீத லியல்பிலா தான்

    தானும் அனுவிக்காம பொறத்தியாருக்கும் கொடுக்காம வாழுதவன் தான்கிட்ட இருக்க பெருஞ்செல்வத்துக்கு ஒரு நோய் ஆவான்.

    குறள் 1007

    அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
    பெற்றாள் தமியள்மூத் தற்று

    ஏழபாழைக்கு கொடுத்து ஒதவாத செல்வம் அழகி ஒருத்தி கலியாணம் முடிக்காம தனிச்சு நின்னு கிழவி ஆயிட்டதுக்குச் சமானம்.

    குறள் 1008

    நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள்
    நச்சு மரம்பழுத் தற்று

    எல்லாராலையும் வெறுக்கப்படுதவனுடைய சொத்து ஊருக்கு நடுவுல பழுத்துக் குலுங்குத வெசமரத்தோட பழத்துக்குச் சமானமாவும்.

    குறள் 1009

    அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
    ஒண்பொருள் கொள்வார் பிறர்

    அறவே நேசமில்லாம தன்னையும் வருத்திக்கிட்டு சத்தியத்துக்குப் பொறம்பா சேக்குத சொத்த கொள்ளயடிச்சு மத்தவுகதான் அனுபவிப்பாக.

    குறள் 1010

    சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
    வறங்கூர்ந் தனைய துடைத்து

    மத்தவுகளுக்கு கொடுத்து புகழோட இருக்க பணக்காரவுக கொஞ்ச காலம் வறுமைப்பட்டாகன்னா அது ஒலகத்தக் காக்குத மழையத் தருத மேகம் வறுமைப்பட்டதுக்கு சமானமாவும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 100

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 100

    நாங்குநேரி வாசஸ்ரீ

    100. பண்புடைமை

    குறள் 991

    எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
    பண்புடைமை என்னும் வழக்கு

    யாராயிருந்தாலும் அவுக கூட எளிமையாப் பழகுனோம்னா அதுவே பண்புடைமைங்குத நல்ல ஒழுக்குத பெறுததுக்கான சிறந்த வழியா அமையும்.

    குறள் 992

    அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
    பண்புடைமை என்னும் வழக்கு

    நேசமானவரா இருக்கது ஒசந்த குடியில பொறந்த தன்ம அமைஞ்சிருக்கது இந்த ரெண்டும் பண்புடையவரா வாழுத நல்ல வழியாவும்.

    குறள் 993

    உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
    பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு

    பாக்குத உடல் உறுப்புக்கள் ஒண்ணுபோல இருக்கதனால ஒத்துப்போகுதது ஆவாது. நல்ல பண்பால மத்தவுகளோட ஒத்துப்போவுததே ஒத்துப்போவுதது ஆவும்.

    குறள் 994

    நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
    பண்புள ராட்டும் உலகு

    நியாயத்துக்கு கேடு இல்லாம நல்ல காரியங்களச் செய்து மத்தவுகளுக்கு ஒபயோகமா வாழுத பெருமக்களோட நல்ல கொணத்த ஒலகம் பாராட்டும்.

    குறள் 995

    நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
    பண்புள பாடறிவார் மாட்டு

    விளையாட்டுக்குக்கூட ஒருத்தங்கள எளக்காரமா பேசினோம்னா கேடு உண்டாவும். புத்தியுள்ள பெருமக்க பகையாளிக்கிட்ட கூட கொணங்கெட்டு நடந்துக்கிட மாட்டாக.

    குறள் 996

    பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
    மண்புக்கு மாய்வது மன்

    கொணமுள்ளவுக இருக்கதாலதான் ஒலகம் நெலைச்சி இருக்கு. அவுக இல்லாமப் போனாகன்னா மனுச வாழ்க்க மண்ணுக்குள்ள பொதைஞ்சு அழிஞ்சு போவும்.

    குறள் 997

    அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
    மக்கட்பண் பில்லா தவர்

    அரம் கணக்கா கூர்மையான புத்தியுள்ளவுகளா இருந்தாலும் மனுசத்தன்ம இல்லாதவுக ஓரரிவு இருக்க மரத்துக்குச் சமம் தான். ‘

    குறள் 998

    நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
    பண்பாற்றார் ஆதல் கடை

    சேக்காளியா இருக்க ஏலாம தீம செய்யுத கொணம் இருக்கவங்ககிட்ட கூட நல்லவுகளா நடந்துக்கிடாம இருக்கது தாழ்ச்சிதான்.

    குறள் 999

    நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
    பகலும்பாற் பட்டன் றிருள்

    மத்தவுகளோட கலந்து பழகி சந்தோசமா இருக்க ஏலாதவுகளுக்கு வெளிச்சமான பகலும் கருக்கல் கணக்கா இருட்டாத்தான் தோணும்.

    குறள் 1000

    பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
    கலந்தீமை யால்திரிந் தற்று

    கொணங்கெட்டவங்கிட்ட இருக்க சொத்து சுத்தமில்லாத ஏனத்துல ஊத்திவச்ச பால் திரிஞ்சிபோவுதது கணக்கா அழிஞ்சு போவும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 99

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 99

    நாங்குநேரி வாசஸ்ரீ

    99. சான்றாண்மை

    குறள் 981

    கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
    சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு

    நாம செய்ய வேண்டிய கடம இதுனு உணந்துகிட்டு அத நல்ல மொறையில செய்ய மொனையுத எல்லா முயற்சியையும் நல்ல கடமனு சொல்லுதாங்க.

    குறள் 982

    குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்
    எந்நலத் துள்ளதூஉ மன்று

    நல்ல கொணம் ஒண்ணுதான் படிச்ச பெருமக்களுக்கு அழகு. மத்த எதுவும் அழகோட சேத்தியில்ல.

    குறள் 983

    அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
    டைந்துசால் பூன்றிய தூண்

    நேசமா இருக்கது, பொல்லாப்புக்கு பயப்படுதது, ஒழுக்கமா இருக்கது, இரக்கமா இருக்கது,  உண்மையே பேசுதது இந்த அஞ்சும் சான்றாண்மையத் தாங்குத தூண்கள் ஆவும்.

    குறள் 984

    கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
    சொல்லா நலத்தது சால்பு

    நோன்புங்கது மத்த உசிரக் கொல்லாம இருக்கத அடிப்படையாக் கொண்டது. பொறத்தியாரப்பத்தி எப்பமும் கொற பேசாம இருக்குத கொணத்தக் குறிக்குதது  சால்பு.

    குறள் 985

    ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
    மாற்றாரை மாற்றும் படை

    தெறமசாலியோட தெறமங்கது பணிஞ்சு நடக்குத கொணம். அதுவே பகையாளியோட பகைய மாத்துத சாதனமா பெருமக்களுக்கு அமைஞ்சுக்கிடும்.

    குறள் 986

    சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
    துலையல்லார் கண்ணும் கொளல்

    ஒருத்தரோட மேன்மைக்கு உரைகல் எதுன்னா தனக்கு சமமில்லாத சின்னவுககிட்ட கூட தோல்விய ஒத்துக்கிடதுதான்.

    குறள் 987

    இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு

    தனக்கு தீம செஞ்சவுகளுக்கும் நன்ம செய்யாம விட்டுப்போட்டோம்னா சான்றாண்மைங்குத நல்ல கொணம் இருந்தும் என்ன பிரயோசனம்?

    குறள் 988

    இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்
    திண்மையுண் டாகப் பெறின்

    சால்பு (நிறைவு)ங்குத மனவலிம ஒருத்தங்கிட்ட இருந்திச்சுன்னா பொருளில்லாமப் போகுத ஏழ்ம அவனுக்கு தாழ்ச்சி ஆவாது.

    குறள் 989

    ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
    காழி யெனப்படு வார்

    தனக்குரிய கடமையக் கண்ணியமாச் செய்யுத பெருமக்க எல்லாக் கடலும் தடம் புரண்டு போவுத ஊழிக்காலத்துல கூட தன் நெல மாறாம இருப்பாக.

    குறள் 990

    சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்
    தாங்காது மன்னோ பொறை

    பெருமக்களோட நல்ல கொணம் கொறையத் தொடங்கிச்சின்னா இந்தப் பெரிய ஒலகத்தால  பாரத்தத் தாங்க முடியாமப் போவும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 98

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 98

    நாங்குநேரி வாசஸ்ரீ

    98. பெருமை

    குறள் 971

    ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
    கஃதிறந்து வாழ்தும் எனல்

    ஒருத்தனோட வாழ்க்கைக்கு ஒளி தருதது மன உற்சாகம். அவனுக்கு தாழ்ச்சி உற்சாகம் இல்லாம வாழுவேன் னு நெனைக்கதுதான்.

    குறள் 972

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்

    எல்லா மக்களும் பொறப்பால சமம் தான். அவுக செய்யுத தொழிலில் காட்டுத தெறமியில இருக்க ஒசத்தி தாழ்ச்சியால மட்டுந்தான் வேறுபடுதாங்க.

    குறள் 973

    மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
    கீழல்லார் கீழல் லவர்

    கொணங்கெட்டவுக ஒசந்த பதவியில இருந்தாலும் நல்லவுகளா மதியப்பட மாட்டாக. ஆக்கங்கெட்ட காரியத்த செய்யாத நல்லவுக சின்ன பதவியில இருந்தாலும் ஒசந்தவுக தான்.

    குறள் 974

    ஒருமை மகளிரே போலப் பெருமையும்
    தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு

    ஒருத்தன் தன்னயத்தானே காத்துக்கிட்டு வாழ்ந்தாம்னா கற்போட வாழுத பத்தினிக்குரிய அத்தன பெருமயும் அவனுக்கும் கெடைக்கும்.

    குறள் 975

    பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
    அருமை யுடைய செயல்

    எந்த நெருக்கடியிலயும் மத்தவுகளால செய்ய ஏலாத காரியத்த அதுக்குண்டான வழிமொறையில செஞ்சு முடிக்குத தெறம இருக்கவுக பெருமயானவங்க.

    குறள் 976

    சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
    பேணிக்கொள் வேமென்னும் நோக்கு

    பெருமக்களப் போற்றி ஏத்துக்கிடணும் ங்குத நெனப்பு அவுகளோட சிறப்ப புரிஞ்சிக்கிடாத சின்னவுக மனசுக்குள்ளார இருக்காது.

    குறள் 977

    இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்
    சீரல் லவர்கண் படின்

    தாழ்ச்சியான கொணம் இருக்கவன்கிட்ட பணம், படிப்பு, பதவி ங்குத சிறப்புநிலை சேந்துச்சின்னா அவன் அகராதி புடிச்சி வரம்புகெட்டு அலையுதது நிச்சயம்.

    குறள் 978

    பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து

    கொணமுள்ள பெரிய மனுசங்க எல்லார்கிட்டயும் பணிஞ்சு நடப்பாக. கொணங்கெட்டவுக மண்டக்கனம் புடிச்சி தன் பெருமய தம்பட்டம் அடிச்சிட்டுத் திரிவாக.

    குறள் 979

    பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
    பெருமிதம் ஊர்ந்து விடல்

    பெருமைங்கது மண்டக்கனம் இல்லாம அடக்கமா வாழுத கொணம். சிறுமைங்கது மண்டக்கனம் புடிச்சி அதோட எல்லைக்கே போயி திமிரா திரியுதது.

    குறள் 980

    அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும்

    பொறத்தியாரப்பத்தி பாடு பேசாம கொறைய மறைக்கது பெரும. அவுகளப் பத்தி எப்பமும் கொற சொல்லி பொறளி பேசுதது சிறும.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 97

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 97

    நாங்குநேரி வாசஸ்ரீ

    97. மானம்

    குறள் 961

    இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
    குன்ற வருப விடல்

    கட்டாயமா செஞ்சு முடிக்க வேண்டிய வேலையின்னாலும் அதால தன் குடும்பப் பெரும கொறையும்னு நெனச்சா செய்யக் கூடாது.

    குறள் 962

    சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
    பேராண்மை வேண்டு பவர்

    புகழோட சேந்த வீர வாழ்க்க வேணும்னு நெனக்கவுக புகழச் சேக்கதுக்காவ மானங்கெட்ட காரியத்த செய்ய மாட்டாக.

    குறள் 963

    பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு

    பணக்காரனா ஒசந்த நெலயில இருக்குதப்போ அடக்கம் வேணும். ஏழையா இருக்குதப்போ அடிமயா அடங்கிப்போவாம மானத்தோட இருக்கணும்.

    குறள் 964

    தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
    நிலையின் இழிந்தக் கடை

    மக்களோட மனசுல ஒசந்த நெலயில இருந்த ஒருத்தர் மானங்கெட்டு தாழ்ந்துட்டாருன்னா தலையிலேந்து உதிந்து கெடக்க தலமயிருக்கு சமமா நெனக்கப்படுவார்.

    குறள் 965

    குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
    குன்றி அனைய செயின்

    மலை போல ஒசந்து கம்பீரமா இருக்கவுகளும் குந்துமணி அளவு தாழ்ச்சியான காரியத்த செஞ்சாகன்னா தாழ்ந்து போயிடுவாக.

    குறள் 966

    புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்
    றிகழ்வார்பின் சென்று நிலை

    மதிக்காம எளக்காரம் செய்யுதவன் பொறத்தால மானங்கெட்டு போவதால இப்பமும் புகழ் கெடைக்காது. மேலோகத்துலயும் சேர்க்காது. வேற என்னதான் தரும் அது?

    குறள் 967

    ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
    கெட்டான் எனப்படுதல் நன்று

    மதிக்காதவன் பொறத்தால போயி உசிரு வாழுதான்னு இருக்கதவிட செத்துப் போயிட்டாம்னு சொல்லப்படுதது எம்புட்டோ மேல்.

    குறள் 968

    மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
    பீடழிய வந்த இடத்து

    தன் குடும்ப மானங்கெட்டு சீரளியுதப்போ கூட சாவாம இந்த ஒடம்ப காத்து வாழுத வாழ்க்க சாவாமைக்கு மருந்து ஆவுமா?

    குறள் 969

    மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர்நீப்பர் மானம் வரின்

    ஒடம்புல இருக்க உரோமமெல்லாம் உதிந்துபோச்சுதுன்னா கவரிமான் உசிர உடுதது கணக்கா மானங்கெட்ட பொறவு உசிரு வாழ மாட்டாக மானமுள்ள பெரிய மனுசருங்க.

    குறள் 970

    இளிவரின் வாழாத மானம் உடையார்
    ஒளிதொழு தேத்தும் உலகு

    மானம் போவுத நேரம் உசிர உடுத மனுசங்களோட புகழ இந்த ஒலகம் எப்பமும் போற்றி நிக்கும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 96

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 96

    நாங்குநேரி வாசஸ்ரீ

    96. குடிமை

    குறள் 951

    இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
    செப்பமும் நாணும் ஒருங்கு

    பாரபட்சம் பாக்காத நடுவுநெலமையும், ஆர்ப்பாட்டமில்லாத அடக்க கொணமும் ஒசந்த குடியில பொறந்தவுகளத் தவித்து மத்தவுக கிட்ட இல்ல.

    குறள் 952

    ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்
    இழுக்கார் குடிப்பிறந் தார்

    ஒசந்த குடியில பொறந்தவுக ஒழுக்கம், நாணயம், மானம் இந்த மூணயும் விட்டுவெலகி நெலதடுமாறி நடக்க மாட்டாக.

    குறள் 953

    நகையீகை அன்சொல் இகழாமை நான்கும்
    வகையென்ப வாய்மைக் குடிக்கு

    ஒசந்த குடியில பொறந்தவுகளுக்கு சிரிச்ச மொகம், இனிக்கப் பேசுத கொணம், கொடுக்குத கொணம், கேலி பேசாம இருக்கது இந்த நாலு நல்ல கொணமும் இருக்கும்.

    குறள் 954

    அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
    குன்றுவ செய்தல் இலர்

    பலகோடி செல்வம் கெடைக்கதா இருந்தாலும் ஒசந்த குடியில பொறந்தவுக தங்குடிப் பெரும கெடுததுக்குத் தக்கன காரியத்த செய்ய மாட்டாக.

    குறள் 955

    வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
    பண்பின் தலைப்பிரிதல் இன்று

    ஏழையாப் போயி மத்தவுகளுக்கு கொடுத்து ஒதவுதது கொறஞ்சு போனாலும் பழைய பெரும இருக்க குடியில பொறந்தவுக கொடுக்குத கொணத்த உடமாட்டாக.

    குறள் 956

    சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
    குலம்பற்றி வாழ்துமென் பார்

    குத்தங்கொறையில்லாம வாழ நெனைக்கவுக வஞ்ச மனசோட தகாத காரியங்களச் செய்ய மாட்டாக.

    குறள் 957

    குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
    மதிக்கண் மறுப்போல் உயர்ந்து

    ஒசந்த குடியில பொறந்தவுகளோடகுத்தங்கொற வானத்து நிலாவுல இருக்க களங்கம் கணக்கா பெரிசாத் தோணும்.

    குறள் 958

    நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
    குலத்தின்கண் ஐயப் படும்

    நல்லகொணத்தோட இருக்க ஒருத்தன் நேசமில்லாம இருந்தாம்னா அவன் பொறந்த குலத்தையே இந்த ஒலகம் சந்தேகப்படும்.

    குறள் 959

    நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
    குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்

    வெளஞ்ச பயிரப்பாத்தே இது இன்ன நெலத்துல வெளஞ்சதுனு தெரிஞ்சிக்கிடலாம். அதுகணக்கா ஒருத்தங்க பேசுத பேச்ச வச்சி அவுக எந்தமாரி குடும்பத்துல பொறந்திருக்காகனு தெரிஞ்சிக்கிடலாம்.

    குறள் 960

    நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
    வேண்டுக யார்க்கும் பணிவு

    ஒருத்தன் நன்ம வேணும்னு நெனச்சா வேண்டாத காரியம் செய்ய பயந்துக்கிடணும். நல்ல குடும்பத்துல பொறந்தவன்னு பேரு வேணும்னு நெனச்சா எல்லார்க்கும் பணிஞ்சு போவணும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 95

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 95

    நாங்குநேரி வாசஸ்ரீ

    95. மருந்து

    குறள் 941

    மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
    வளிமுதலா எண்ணிய மூன்று

    மருத்துவம் படிச்சுவுக சொல்லுத வாதம், பித்தம், கபம் இந்த மூணுல ஏதும் ஒண்ணு அதிமானாலோ கொறஞ்சாலோ நோய் உண்டாவும்.

    குறள் 942

    மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
    தற்றது போற்றி உணின்

    ஒருத்தன் மொத சாப்பிட்டது செரிச்சுட்டுதான்னு தெரிஞ்ச பொறவு அடுத்தாப்ல சாப்பிட்டாம்னா அவனுக்கு மருந்துனு ஒண்ணு தேவ கெடையாது.

    குறள் 943

    அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
    பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு

    தின்னது செரிச்சிடுச்சுனு தெரிஞ்சுக்கிட்டு அடுத்தாப்ல அளவா சாப்பிட்டு இருக்கதுதான்  நெறைய ஆயுசோட இருக்கதுக்குண்டான வழி.

    குறள் 944

    அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
    துய்க்க துவரப் பசித்து

    மொத தின்னது செரிச்சத உணந்துக்கிட்டு ஒடம்பு ஒத்துக்கிடுத சாப்பாட்ட வயிறு பசிஎடுத்த பொறவு திங்கணும்.

    குறள் 945

    மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
    ஊறுபா டில்லை உயிர்க்கு

    ஒடம்புக்கு ஏத்த சாப்பாட்டக் கூட மூக்குப்பிடிக்க திங்காம அளவா தின்னாம்னா அவன் வாழ்க்கையில நோவுநொடியால சங்கடப்படமாட்டான்.

    குறள் 946

    இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேர் இரையான்கண் நோய்

    அளவா சாப்பிடுதவன விட்டு சொகம் வெலகாம இருக்கது கணக்கா மூக்குபிடிக்க திங்கவனவிட்டு நோய் வெலகாம நிக்கும்.

    குறள் 947

    தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
    நோயள வின்றிப் படும்

    வயித்துப்பசியோட அளவு தெரியாம அதிகமா திங்கவன் ஒடம்புல நோவுநொடி அளவில்லாம வளந்துபோடும்.

    குறள் 948

    நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்

    நோய் இன்னதுனு தெரிஞ்சிக்கிட்டு அது வந்த காரணத்த அறிஞ்சு அதப் போக்குத வழிமொறையத் தெரிஞ்சு தக்கமாரி தப்பில்லாம வைத்தியம் பாக்கணும்.

    குறள் 949

    உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
    கற்றான் கருதிச் செயல்

    சீக்காளியோட வயசு, சீக்கோட தன்ம, வைத்தியம் பாக்க ஆவுத நேரம் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்ட பொறவு தான் வைத்தியர் வைத்தியம் செய்யணும்.

    குறள் 950

    உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
    றப்பானாற் கூற்றே மருந்து

    சீக்காளி, மருந்து, மருந்து கொடுக்கவர்,வைத்தியர் னு வைத்திய மொற நாலு வகையா அமைஞ்சிருக்கு.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 86

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 86

    நாங்குநேரி வாசஸ்ரீ

    86. இகல்

    குறள் 851:

    இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
    பண்பின்மை பாரிக்கும் நோய்

    எல்லா உசிருங்களையும் மனசு பொருந்தாம இருக்கச்செய்யுத தீய கொணத்த வளக்குத நோய நாம மனவேறுபாடு ங்குதோம்.

    குறள் 852:

    பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
    இன்னாசெய் யாமை தலை

    நம்ம கூட இணங்க ஏலாம ஒருத்தன் நமக்கு எடஞ்சல் செஞ்சாலும் அவன பகையாளியா நெனச்சி தீம செய்யாம இருக்கது நல்லது.

    குறள் 853:

    இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
    தாவில் விளக்கம் தரும்

    ஒருத்தன் மன மாறுபாடுங்குத துன்பம் தருத நோய மனசுலேந்து நீக்கிட்டாம்னா அவனுக்கு அழியாத நெலச்ச புகழ் உண்டாவும்.

    குறள் 854:

    இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின்

    துன்பத்துல பெருந்துன்பம் மனவேறுபாடு. அது இல்லாமப் போச்சுதுன்னா சந்தோசத்துலயும் சிறந்த சந்தோசம் கெடைக்கும்.

    குறள் 855:

    இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
    மிகலூக்கும் தன்மை யவர்

    மனவேறுபாடு தோணும்போது அத ஏத்துக்கிடாம வெலக்குதவங்கள எதித்து நிக்குத வலிம யாருக்கு உண்டு.

    குறள் 856:

    இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
    தவலும் கெடலும் நணித்து

    மனவேறுபாட்ட வளக்கது நல்லதுனு நெனைக்கவனோட வாழ்க்க வெரசலா தடம்மாறிப் போய் அழிஞ்சு போவும்.

    குறள் 857:

    மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
    இன்னா அறிவி னவர்

    பகைய மனசுல வச்சிருக்க கெட்டபுத்தி உள்ளவுக வாழ்க்கையில செயிக்க ஒதவுத உண்மப் பொருள அறியமாட்டாங்க.

    குறள் 858:

    இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
    மிகலூக்கின் ஊக்குமாங் கேடு

    மனவேறுபாடு தோணும்போது அத ஏத்துக்கிடாம இருக்கது ஒருத்தனுக்கு சொத்துகணக்கா. ஏத்துக்கிட்டா கெடுதல் தான் வெளையும்.

    குறள் 859:

    இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
    மிகல்காணும் கேடு தரற்கு

    ஒருத்தன் நன்ம வரும்போது மாறுபாட்டை நெனைக்க மாட்டான். தனக்குத்தானே கெடுதல தேடிக்கிடுதவன் மாறுபாட்ட பெரிசுபடுத்தி நெனைப்பான்.

    குறள் 860:

    இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
    நன்னயம் என்னும் செருக்கு

    மனமாறுபாடு காட்டி பகையாளியா இருக்கவுகள எல்லாத் துன்பமும் அண்டும். சேக்காளியா இருக்க நெனயுதவுகளுக்கு நெறய சந்தோசம் கெடைக்கும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 85

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 85

    நாங்குநேரி வாசஸ்ரீ

    85. புல்லறிவாண்மை

    குறள் 841:

    அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
    இன்மையா வையா துலகு

    புத்தியில்லாம போவுததுதான் கொடும் பஞ்சம். மத்த பஞ்சத்தையெல்லாம் பெரிசா எடுத்திக்கிடமாட்டாக ஒலகத்து பெரிய மனுசங்க.

    குறள் 842:

    அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
    இல்லை பெறுவான் தவம்

    கூறுகெட்டவன் ஒரு பொருளக் கொடுத்தாம்னா அதுக்குக் காரணம் அத வாங்கிக்கிடுதவங்க செஞ்ச நல்லகாரியந்தான்னு நெனச்சிக்கிடணும்.

    குறள் 843:

    அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
    செறுவார்க்கும் செய்தல் அரிது

    பகையாளியால கூட செய்ய ஏலாத அளவு எடஞ்சல கூறுகெட்டவன் தனக்குத்தானே செஞ்சிக்கிடுவான்.

    குறள் 844:

    வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
    உடையம்யாம் என்னும் செருக்கு

    அறியாமைங்கது என்னன்னா ஒருத்தன் தன்னயத்தானே அறிவாளினு நெனச்சி அகராதி புடிச்சு அலயுததுதான்.

    குறள் 845:

    கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
    வல்லதூஉம் ஐயம் தரும்

    புத்தியில்லாதவன் தான் படிக்காத நூலையும் படிச்சாமாரி பேசிக்கிட்டுத் திரிஞ்சாம்னா அவன் நெசமாவே படிச்சு தெரிஞ்சுக்கிட்டது மேலயும் மத்தவங்களுக்கு  சந்தேகம் வரும்.

    குறள் 846:

    அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
    குற்றம் மறையா வழி

    தங்கிட்ட  இருக்க குத்தங்கொறைய களையாம ஒடம்ப மறைக்க உடுப்பு உடுக்க நெனயுததும் புத்திகெட்ட காரியந்தான்.

    குறள் 847:

    அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
    பெருமிறை தானே தனக்கு

    நல்ல புத்திமதிகளக் கேட்டு அதுகணக்கா நடந்துக்கிடாதவக தனக்குத்தானே பெரிய தீங்க செஞ்சுக்கிடுவாக.

    குறள் 848:

    ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
    போஒம் அளவுமோர் நோய்

    சொந்தபுத்தியும் இல்லாம சொல்புத்தியும் கேக்காம இருக்கவங்களுக்கு அதுவே அவுக ஆயுசுக்கும் நோயா வந்துமுடியும்.

    குறள் 849:

    காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
    கண்டானாம் தான்கண்ட வாறு

    கூறுகெட்டவன புத்திசாலியாக்க நெனச்சி பேசுதவன் அவன் முன்ன புத்திகெட்டவனாத்தான் நெனக்கப்படுவான். ஏம்னா கூறுகெட்டவன் தனக்குத் தெரிஞ்சத வச்சிக்கிட்டு தான் பெரிய புத்திசாலினு காட்டிக்கிடுதது தான் காரணம்.

    குறள் 850:

    உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
    தலகையா வைக்கப் படும்

    இருக்குனு ஒலகத்து பெரியமனுசங்க சொன்ன விசயத்த வேணும்னே இல்லன்னு எதித்துப் பேசுதவன பேயா நெனச்சி வெலக்கி வச்சிடுவாக ஒலகத்து மனுசங்க.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 84

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 84

    நாங்குநேரி வாசஸ்ரீ

    84. பேதைமை

    குறள் 831:

    பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
    டூதியம் போக விடல்

    பேதைமைங்கது என்னன்னு கேட்டா நமக்கு நல்லது செய்யுதத விட்டுப்போட்டு தீம தருதத ஏத்துக்கிடதுதான்.

    குறள் 832:

    பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
    கையல்ல தன்கண் செயல்

    பேதைமையிலெல்லாம் பெரிய பேதைமை னு சொல்லப்படுதது தன்னால ஏலாத தனக்கு நன்ம தராத காரியத்த ஆசப்பட்டு செய்யுதது தான்.

    குறள் 833:

    நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
    பேணாமை பேதை தொழில்

    வெக்கப்பட வேண்டிய நேரத்துல வெக்கங்கெட்டு அலையுததும், தேடிப் பெற வேண்டியதுல நாட்டமில்லாம இருக்கதும், நேசம் காட்ட வேண்டிய எடத்துல நேசமில்லாமயும் , காக்க வேண்டியத காவாம இருக்கதும் புத்திகெட்ட பேதைங்களோட கொணம்.

    குறள் 834:

    ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
    பேதையிற் பேதையார் இல்

    படிச்சுப்போட்டு தான் படிச்சத உணந்து பொறத்தியாருக்கு எடுத்துச்சொல்லி இருக்கவங்க தங்க வாழ்க்கையில அத கடைபிடிக்காம உட்டாகன்னா அவுகளப் போல கூறுகெட்ட பேதையர் இருக்க முடியாது.

    குறள் 835:

    ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
    தான்புக் கழுந்தும் அளறு

    புத்திகெட்டவன் தன்னோட ஒரு பொறப்புலயே அடுத்தடுத்து ஏழு பொறப்புலயும் பொறந்து அனுவிக்குத அளவு நரக வேதனய அனுவிப்பான்.

    குறள் 836:

    பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்
    பேதை வினைமேற் கொளின்

    நேர்மையான பாத தெரியாத கூறுகெட்டவன் தொடங்கின காரியத்த முடிக்க ஏலாம காரியத்தையும் கெடுத்து தானும் கெட்டு அழிவான்.

    குறள் 837:

    ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
    பெருஞ்செல்வம் உற்றக் கடை

    புத்திகெட்டவன்கிட்ட பணம் குவிஞ்சிச்சின்னா அத அயல் மனுசங்க சுருட்டிக்கிட்டுப் போவாகளே தவித்து அவன்கிட்ட பாசமா இருக்க சொந்தபந்தம் பசியால தான் வாடும்.

    குறள் 838:

    மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
    கையொன் றுடைமை பெறின்

    நல்லதுகெட்டது தெரியாத பேதைகிட்ட பொருள் கெடச்சிச்சின்னா அது கோட்டிக்காரன் கள் குடிச்சு மயங்குதது கணக்கா ஆவும்.

    குறள் 839:

    பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
    பீழை தருவதொன் றில்

    புத்திகெட்ட பேதைகிட்ட வச்சிருக்க சேக்க ரொம்ப இனிமை. ஏம்னு கேட்டா அவுககிட்டேந்து பிரிஞ்சு போகுத நேரம் வெசனப்பட வேண்டியதில்ல.

    குறள் 840:

    கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
    குழாஅத்துப் பேதை புகல்

    படிச்ச புத்திசாலி பெரிய மனுசங்க இருக்க சபையில கூறுகெட்ட பேதை நொழையுதது ஒருத்தன் கழுவாத கால படுக்க மேல வச்சது கணக்கா ஆவும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 83

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 83

    நாங்குநேரி வாசஸ்ரீ

    83. கூடா நட்பு

    குறள் 821:

    சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
    நேரா நிரந்தவர் நட்பு

    மனசார இல்லாம வெளிஒலகத்துக்கு சேக்காளிமாரி நடிக்கவன்,  பொருளத் தாங்குததுக்கு ஒதவுதது கணக்கா தோணினாலும் பொருள வெட்டி எறிய ஒதவுத பட்டடை கணக்கா தான்.

    குறள் 822:

    இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
    மனம்போல வேறு படும்

    பாக்குததுக்கு வேண்டியவரு கணக்கா இருந்து மனசுக்குள்ளார வேண்டாதவரா இருக்கவங்களோட சேக்க தாசியோட மனசு கணக்கா உள்ளார ஒண்ணும் வெளிய ஒண்ணுமா வித்தியாசப்படும்.

    குறள் 823:

    பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
    ஆகுதல் மாணார்க் கரிது

    பல நல்ல நூல்களப் படிச்சிருந்தாலும் பகைய மனசுல வச்சிருக்கவன் மனசு திருந்தி நல்ல சேக்காளியாவது நடக்க ஏலாத காரியம்.

    குறள் 824:

    முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
    வஞ்சரை அஞ்சப் படும்

    சிரிச்சுப் பேசி நம்மள சீரளிக்க நெனக்கவுகளோட சேக்கயக் கண்டு பயந்துக்கிடணும்.

    குறள் 825:

    மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
    சொல்லினால் தேறற்பாற் றன்று

    மனசு ஒத்துப்போவாம பழகுதவங்களோட வார்த்தய நம்பி எந்தக் காரியத்திலயும் எறங்கக் கூடாது.

    குறள் 826:

    நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
    ஒல்லை உணரப் படும்

    சேக்காளி கணக்கா இனிக்க பேசினாலும் பகையாளியோட சொல்லுல இருக்க உண்மய அப்பமே உணந்துக்கிடலாம்.

    குறள் 827:

    சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
    தீங்கு குறித்தமை யான்

    வில்லோட வளைவு தீம செய்யுததுக்குத்தான். அதுகணக்கா பகையாளி பம்மிக்கிட்டு கும்புடுதத நன்மனு நெனைக்கக் கூடாது.

    குறள் 828:

    தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
    அழுதகண் ணீரும் அனைத்து

    பகையாளி கும்பிடுதப்போ கைக்குள்ளார  கொலைசெய்யுத ஆயுதம் இருக்கும். அவன் அழுகையில வெளிவிடுத கண்ணீரும் அதுமாரிதான்.

    குறள் 829:

    மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
    நட்பினுட் சாப்புல்லற் பாற்று

    வெளிய சேக்காளி கணக்கா பெரிசா காட்டிப்போட்டு மனசுக்குள்ளார எளக்காரமா நெனைக்கவன அவன் மொறையிலயே நாமுளும் போலியா ஒப்புக்கு சேக்காளிமாரி நடிச்சு கவுக்கணும்.

    குறள் 830:

    பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
    டகநட் பொரீஇ விடல்

    பகையாளிகூட பழகுத காலம் வருதப்போ மனசார இல்லாம மேம்போக்கா சேக்காளிமாரி இருந்துட்டு பொறவு அந்த சேக்கய உட்டுப்போடணும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 82

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 82

    நாங்குநேரி வாசஸ்ரீ

    82. தீ நட்பு

    குறள் 811:

    பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
    பெருகலிற் குன்றல் இனிது

    மனசால உருக்கமா இருக்கமாரி பசப்புதவங்களோட சேக்கய வளத்துக்கிடதவிட கொறச்சிக்கிடது நல்லது.

    குறள் 812:

    உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
    பெறினும் இழப்பினும் என்

    தனக்கு தேவப்படுதப்போ சேக்காளி போல நடந்துக்கிட்டு பொறவு தேவையில்லாத நேரம் பிரிஞ்சுபோவுதவங்களோட சேக்க இருந்தா என்ன. இல்லாட்டி என்ன.

    குறள் 813:

    உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
    கொள்வாரும் கள்வரும் நேர்

    என்ன கெடைக்கும்னு எதிர்பாத்து பழகுத சேக்காளி, தாசி, களவாணி இந்த மூணு பேரும் ஒருத்தருகொருத்தர் சமம் தான்.

    குறள் 814:

    அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
    தமரின் தனிமை தலை

    போர்க்களத்துல கீழதள்ளி விட்டுப்போட்டு ஓடுத புத்தியில்லாத குதிர கணக்கா இருக்கவங்களோட சேக்க வைக்கத விட தனியா இருக்கது மேல்.

    குறள் 815:

    செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
    எய்தலின் எய்தாமை நன்று

    நாம பலவிதமா ஒதவி செஞ்சாலும் நமக்கு பாதுக்காப்பா இல்லாத அல்பங்களோட சேக்கயா இருக்கத விட இல்லாம இருக்கது நல்லது.

    குறள் 816:

    பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
    ஏதின்மை கோடி உறும்

    கூறுகெட்டவனோட நெருங்கின சேக்காளியா இருக்கத விட புத்திசாலி ஒருத்தனுக்கு பகையாளியா இருக்கது கோடிமடங்கு மேல்.

    குறள் 817:

    நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
    பத்தடுத்த கோடி உறும்

    மொகத்துல சிரிப்பாணியோட சிரிச்சுப் பேசி நடிக்குதவுகளோட சேக்கய விட பகையாளியால வருத துன்பம் பத்துகோடி மடங்கு நன்ம.

    குறள் 818:

    ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
    சொல்லாடார் சோர விடல்

    முடியும் ங்குத காரியத்தையும் முடிக்க உடாம கெடுக்கவங்க ஒறவ அவுகளுக்கு தெரியாம பையப் பைய வெலக்கிக்கிடணும்.

    குறள் 819:

    கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
    சொல்வேறு பட்டார் தொடர்பு

    சொல்லுதது ஒண்ணு, செய்யுதது ஒண்ணு னு இருக்கவனோட சேக்க கனவுல கூட துன்பத்தக் கொடுக்கும்.

    குறள் 820:

    எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
    மன்றிற் பழிப்பார் தொடர்பு

    நம்ம வீட்டுக்குள்ளார வந்து நல்லதனமா பேசிப்போட்டு பொறவு பலபேர் இருக்க சபையில பொறளி பேசுதவன் ஒறவ வெலக்கிக்கிடணும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 80

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 80

    நாங்குநேரி வாசஸ்ரீ

    80. நட்பாராய்தல்

    குறள் 791:

    நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
    வீடில்லை நட்பாள் பவர்க்கு

    ஒருத்தரப் பத்தி சரியா தெரிஞ்சிக்கிடாம சேக்காளியாப் பழகினோம்னா பொறவு விட்டுப்போட்டு போக ஏலாத அளவு சங்கடத்த உண்டாக்கிப் போடும்.

    குறள் 792:

    ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
    தான்சாம் துயரம் தரும்

    மறுபடி மறுபடி சோதிச்சுப் பாக்காம பழகுத சேக்க(நட்பு) சாவுத அளவு தொயரத்த உண்டாக்கிப் போடும்.

    குறள் 793:

    குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
    இனனும் அறிந்தியாக்க நட்பு

    ஒருத்தனோட கொணம், பொறந்த குடி, செஞ்ச தப்பு, சாதி சனத்தோட தன்ம இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட பொறவு சேக்காளியா இருக்கணும்.

    குறள் 794:

    குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
    கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு

    ஒசந்த குடியில பொறந்து பொல்லாப்புக்கு அஞ்சுதவன ஏதாச்சும் விலையாக் கொடுத்தாது சேக்காளியா ஆக்கிக்கிடணும்.

    குறள் 795:

    அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய
    வல்லார்நட் பாய்ந்து கொளல்

    தப்பு செய்ய நெனயுதப்போ மனசு நோவ அழவுட்டு செஞ்சபொறவு கண்டிச்சும் சொல்லுத ஒலக நடப்ப அறிஞ்சவுகளோட சேக்காளியா இருக்கணும்.

    குறள் 796:

    கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
    நீட்டி அளப்பதோர் கோல்

    கெடுதல் வருததுனால ஒரு நன்மயும் உண்டு. அது எவன் நல்ல சேக்காளின்னு காட்டிக் கொடுத்துப் போடுத சாதனமா அமைஞ்சுக்கிடும்.

    குறள் 797:

    ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்
    கேண்மை ஒரீஇ விடல்

    கூறுகெட்டவனோட சேக்கய விட்டுப்போடுதது ஒருத்தனுக்கு லாபத்தக் கொடுக்கும். .

    குறள் 798:

    உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
    அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு

    உற்சாகத்தக் கொறைக்குத எந்தக் காரியத்தயும் நெனச்சிப் பாக்கக் கூடாது. அது கணக்கா சங்கடம் வருதப்போ நழுவி ஓடுத சேக்காளிய கூட வச்சிக்கிடக் கூடாது.

    குறள் 799:

    கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
    உள்ளினும் உள்ளஞ் சுடும்

    சங்கடப்படுத காலத்துல கைவிட்டுட்டுப் போனவுகளோட நெனப்பு, சாவுத நேரத்துல கூட நெஞ்ச சுட்டுப் பொசுக்கும்.

    குறள் 800:

    மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும
    ஒருவுக ஒப்பிலார் நட்பு

    மனசுல மாசு இல்லாதவுகளோட சேக்க வச்சிக்கிடணும். ஒத்துப் போவாதவங்களோட சேக்கய, விலை கொடுத்தாது வெலக்கிப் போடணும்.

    (அடுத்தாப்லையும் வரும்…

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 78

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 78

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள்

    78. படைச் செருக்கு

    குறள் 771:

    என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
    முன்னின்று கல்நின் றவர்

    போர்க்களத்துல ஒரு வீரன் சொல்லுதான். எங்க தலைவர எதித்து நில்லாதீக. நின்னவனெல்லாம் செத்து இப்பம் நடுகல்லா நட்டமா நிக்கான்.

    குறள் 772:

    கான முயலெய்த அம்பினில் யானை
    பிழைத்தவேல் ஏந்தல் இனிது

    காட்டுல ஓடுத முயல் மேல குறி தப்பாம எய்து கொன்ன அம்ப கையில வைக்கதவிட, வெட்ட வெளில நிக்க யான மேல குறி தப்பி வீசின வேலக் கையில பிடிக்கது ஒசந்தது.

    குறள் 773:

    பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்
    ஊராண்மை மற்றதன் எஃகு

    பகையாளிக்கு பயப்படாம இருக்க வீரத்த ஆண்மை ங்குதோம். அந்தப் பகையாளிக்கு துன்பம் வருதப்போ ஒதவுதத ஆண்மையின் உச்சம் ங்குதோம்.

    குறள் 774:

    கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
    மெய்வேல் பறியா நகும்

    போர்க்களத்துல கையில வச்சிருந்த வேலை யானை மேல எறிஞ்சு தொரத்தி உட்டுப்போட்டு இன்னொரு வேலத் தேடிக்கிட்டு வாரவன், தன் நெஞ்சுமேல பாஞ்ச வேலப் பாத்து சந்தோசப்பட்டு அதப் புடுங்கி சண்டபோடுவான்.

    குறள் 775:

    விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
    ஓட்டன்றோ வன்க ணவர்க்கு

    எதிருல இருக்க பகையாளிய கோவமா பாத்துக்கிட்டிருக்குத கண்ணு அவன் வேல எறிஞ்ச சமயம் இமைச்சிதுனா அது தோத்துப் போகல்ல செய்யும்.

    குறள் 776:

    விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
    வைக்குந்தன் நாளை எடுத்து

    ஒரு வீரன் தான் வாழ்ந்த நாளக் கணக்குபோட்டுப் பாத்து, போரால தன் ஒடம்புல தழும்பு விழாத நாளயெல்லாம் வீணான நாள்னு வெறுத்து ஒதுக்கிப்போடுவான்.

    குறள் 777:

    சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
    கழல்யாப்புக் காரிகை நீர்த்து

    உசிரப்பத்திக் கவலப்படாம தன்னயச் சுத்தி பரவி இருக்க புகழ மட்டுமே விரும்புத வீரன் காலுல கட்டுத வீரக்கழல் தனி பெரும கொண்டது.

    குறள் 778:

    உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
    செறினுஞ்சீர் குன்றல் இலர்

    போர்க்களத்துல உசிரப்பத்தி கவலப்படாம சண்டபோடுத வீர மறவன், ராசா கோவப்பட்டு வேண்டாம்னு தடுத்தாலும் தன் வீரத்துல கொறைய மாட்டான்.

    குறள் 779:

    இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
    பிழைத்த தொறுக்கிற் பவர்

    சபதம் செஞ்சதுக்குத் தக்கன போர்ல சாவுததுக்கு துணிஞ்ச வீரன யாராச்சும் எளக்காரமா பேச முடியுமா?

    குறள் 780:

    புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா
    டிரந்துகோட் டக்க துடைத்து

    தன்னய நல்ல மொறையில பாத்துக்கிட்ட தலைவன் தனக்காக கண்ணீர் உடுததுகணக்கா சாவு வந்துச்சின்னா அந்தச் சாவுத வாய்ப்பு கேட்டுப்பெறுத அளவுக்கு சிறப்பானது.

    (அடுத்தாப்லையும் வரும்…) 

    Share