Tag: பவள சங்கரி திருநாவுக்கரசு

  • தேர்தல் நிகழ்வுகளும், அவசியமான சீர்திருத்தங்களும்

     பவள சங்கரி

    தலையங்கம்

    தேர்தல் நெருங்க, நெருங்க, நடந்து கொண்டிருக்க, அரசியல் கட்சிகளின் வேகங்களும், எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற துடிதுடிப்பும், ஒருவர் மீது மற்றொருவர் சேற்றை வாரி எரிதலும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் அதிகாரிகளால் பல நூறு கோடி ரூபாய்கள் கைப்பற்றப்படுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. காந்தியடிகள் கண்ட ராமராஜ்யம் இதுதானா.. இதுதான் ஜனநாயகத் தேர்தல் முறையா? இன்று காந்தியடிகள் உயிரோடு இருந்து அவர் தேர்தலில் நின்றால்கூட அவரால் இவ்வளவு செலவுசெய்து வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகம்தான். பல கோடி ரூபாய்களைச் செலவழித்து, தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் அவர்கள் மக்களுக்கு நல்லாட்சி தருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். பொது மக்கள் பேசுவது போல, “இவ்வளவு செலவு பண்ணிபோட்டு, சும்மா வேலை செய்ய முடியுமா.. தேன் எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருக்க முடியுமா.. போட்ட முதலுக்கு லாபம் எடுக்கத்தானே செய்வாங்க” என்று ஊழல் செய்பவரை நியாயப்படுத்தி அவர்களுக்குத் துணை போகும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

    நமக்கு ஊழலற்ற அரசாங்கம் வேண்டுமென்றால் அதற்கு ஆரம்பத்திலிருந்தே நாம் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். தேர்தல் முறைகளில் சில சீர்திருத்தங்கள் செய்வதன் மூலம் இது போன்ற தவறுகளை நியாயப்படுத்துதலை தவிர்க்க முடியும். அதில் முக்கியமாக, அனைத்துத் தேர்தல் செலவுகளையும் அரசே எற்க முன்வர வேண்டும். தனிப்பட்ட செலவுகள் எதையும் வேட்பாளர்கள் செய்யக்கூடாது. அப்படி இருந்தால் தான் நியாயமானவர்களும், சீரிய சிந்தனை உள்ளவர்களும், நாட்டிற்காக உண்மையாக உழைப்பவர்களும் தேர்தலில் போட்டியிட முடியும். மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களும், மக்களுக்காகப் பணியாற்றுவதற்காக தன்னையே முழுமையாக அர்ப்பணிப்பவர்களும் தேர்தலில் போட்டியிட முடியும்.

    இன்றைய செய்தித் தாள்களில் மிகப் பெரிய அளவில் வாக்குப் பதிவு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 58 மற்றும் 62 சதவிகிதங்களே பதிவாகியுள்ள நிலையில் மிக அதிகமான வாக்குப் பதிவு என்று சொல்ல வேண்டியதாக உள்ளது. அதாவது 31 சதவிகிதம் வாக்குப் பெற்றவர் 69 சதவிகித மக்களையும் சேர்த்தல்லவா ஆட்சி செய்வார்கள். ஜனநாயக முறைப்படியான தேர்தலாக இதை எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? ஆகவே வாக்குப் பதிவு 100 சதவிகிதம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வாக்களிப்பது மக்களுடைய உரிமை, கடமை என்று சொல்வதோடு நிற்காமல் மக்களை வாக்களிக்க கட்டாயப்படுத்துதல் வேண்டும். தகுந்த காரணம் இல்லாமல் வாக்களிக்கத் தவறுபவர்களின் குடியுரிமை அட்டை, கடவுச்சீட்டு, பொருளாதார அட்டை (பேன் கார்ட்) போன்றவைகள் முடக்கப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயலலாம். இதன் மூலம் நியாயமான, நேர்மையான வல்லமையுள்ள ஆட்சியாளர்களையும் பெற முடியும். லோக்பால் போன்ற மசோதாக்களின் அவசியம்கூட இருக்காது. நல்ல முறையில் தேர்தல் நடந்து, மக்கள் நல்ல ஆட்சியாளரைத் தேர்வு செய்வதால் இந்தியா வல்லரசாவதை நம் கண் முன்னாலேயே காண வாய்ப்பாகவும் அமையும்.

    ஜெய் ஹிந்த்!!!

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • மக்களுக்காக, மக்களின் கேள்வி (10)

    பவள சங்கரி

    தலையங்கம்

    மரியாதைக்குரிய இந்திய தேசத்தின் மக்களே,

    பல தன்னலமற்ற தலைவர்களால், குண்டடிபட்டு, தடியடிபட்டு இரத்தம் சிந்தி பல போராட்டங்களுக்குப் பிறகு நமக்குக் கிடைத்ததே இந்த சுதந்திரம். நம்மை நாமே ஆள்வதற்குக் கிடைத்த ஒரு அத்தாட்சி. மக்களாட்சி என்பது மக்களால், மக்களுக்காக, மக்கள் ஆளும் ஆட்சி. மிகப் பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள் கூட அரசியல் ஆதாயங்களுக்காகவும், அதிகாரத்தின் மேல் உள்ள ஆசையாலும், தாங்கள் இருந்த உயரிய நிலையை மறந்து இன்று தேர்தலில் நின்றுள்ளார்கள். இந்தப் பதவி தரக்கூடிய சுகத்திற்காக ஆங்கிலேயர் போல மக்களைப் பிரித்தாவது தங்கள் வாக்குகளை சேகரித்து வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முனைகின்றனர். தனி மனித ஒழுக்கம், சேவை மனப்பான்மை, உயரிய இலட்சியங்கள் போன்ற அனைத்தும் காற்றில் பறக்க விடப்படுகின்றன. ’வெற்றி வெற்றி’ என்ற ஒன்றுதான் அரசியல்வாதிகளின் தாரக மந்திரங்களாக இருக்கின்றது. அந்த வெற்றியை அறுவடை செய்வது ஒன்றையே தங்கள் இலட்சியமாக வைத்துக்கொண்டு செயல்படுபவர்களும் இருக்கிறார்கள். வாக்குகள் வாங்கப்படுகின்றன.. விற்கப்படுகின்றன. இந்தச் சந்தையில் காந்தி கண்ட ராமராஜ்ஜியம் கிடைக்குமா? சுயராஜ்ஜியம் நிர்ணயிக்கப்படுமா. சிந்தித்து செயல்படுவோம்.. நமக்கானவர்களைத் தேர்ந்தெடுக்கும் வல்லமை நம் கைகளில்தான் இருக்கிறது.

    நேர்மையானவர்களையேத் தேர்ந்தெடுப்போம்
    திறமையானவர்களை அங்கீகரிப்போம்
    நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்பவர்களுக்கு ஆதரவளிப்போம்

    வாக்களிப்பது நமது கடமை
    தவறாமல் வாக்களிப்போம்

    ஜெய்ஹிந்த்

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (9)

     பவள சங்கரி

    தலையங்கம்

    உயர்திரு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் / பிரதம வேட்பாளர் திரு மோதி அவர்களே,

    இதுநாள் வரை தங்கள் தேர்தல் அறிக்கை வரவில்லையே என்று காத்திருந்தோம். அறிக்கையுடன் சேர்ந்து குழப்பமும் வந்துள்ளது. நிறம் மாறிவிடுவீர்களோ என்ற அச்சமும் வந்துள்ளது. தெளிவற்ற பொருளாதாரச் சிந்தனையே வெளிப்படுகிறது. உங்களிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது முன்னாள் பிரதமர் மேதகு வாஜ்பாய் அவர்களின் அணுகுமுறையை ஒட்டி உங்கள் ஆட்சி முறை இருக்குமா என்பதுதான். அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தலைவர் அவர். பொருளாதாரம் மற்றும் சமூகவியல்களிலும் உங்களுடைய செயல்பாடுகள் அவரையொட்டியதாக அமையுமா? அமைதியான ஆட்சியை தங்களிடமிருந்து எதிர்பார்க்க இயலுமா?

    அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும்,

    ’காந்தியவாதியாக நடப்பேன்’ என்று கூறிக்கொண்டிருக்கிற ஒரு தலைவர் இந்த ஒரு மாதத்தில் ஐந்து முறை தாக்கப்பட்டுள்ளார். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியா? அவருடைய வளர்ச்சிக்குக் கிடைத்த பரிசா? அல்லது அவருடைய தேர்தல் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளபடி, தான் ஊழலை 100 சதவிகிதம் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியதற்கான பரிசா?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • மக்கள் கேட்கும் கேள்வி (8)

    பவள சங்கரி

    தலையங்கம்

    பெருமதிப்பிற்குரிய, திரு ராகுல் காந்தி, திரு நரேந்திர மோடி, திரு அரவிந்த் கேஜரிவால் அவர்களே,

    ஆளும் கட்சியின் உதவித் தலைவரும், கட்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பவரான தாங்கள் பல ஆண்டுகளாக அமேதி தொகுதியின் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதியாக இருந்து வருகிறீர்கள். தேர்தல் நெருங்கி வருகின்ற இந்நாள் வரை உங்கள் தொகுதிக்காகவோ அல்லது இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவோ தாங்கள் செய்துள்ள சாதனைகள் என்று ஏதாவது இதுவரை வெளியிட்டிருக்கிறீர்களா? பாராளுமன்றத்தில் அதைப்பற்றி ஏதாவது பேசியிருக்கிறீர்களா? அடுத்த ஐந்தாண்டிற்கு உங்களுடைய கட்சி ஆளும் கட்சியாகப் பொறுப்பேற்கும்போது இதையெல்லாம் நாங்கள் செய்யப் போகிறோம் என்று இதுவரை நீங்கள் எதையும் கூறவில்லையே?

    குஜராத் மாநிலத்தின் தற்போதைய முதல்வரும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளருமாகிய திரு மோடி அவர்களே, தங்களுடைய ஆட்சிக் காலத்தில் குஜராத் மாநிலம் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்துள்ளதாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் சமீபத்தில் வெளிவந்துள்ள புள்ளி விவரங்களின்படி குஜராத் மாநிலம் பதினாறாவது இடத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சமுதாய வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி இவைகளைக் கணக்கில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இது. உங்களுடைய் இத்தனைஆண்டுகால ஆட்சியில் உங்களுடைய மாநிலத்தை 16 வது இடத்தில் வைத்துள்ள தாங்கள் நம் இந்தியாவை எப்படி முதல் இடத்திற்குக் கொண்டுவரப் போகிறீர்கள்? தேர்தல் அறிக்கைகளே ஒரு சடங்காக மாறிவிட்ட இன்றைய நிலையில் நாட்டினுடைய வளர்ச்சிக்காகத் தாங்கள் அளிக்கக்கூடிய ஆக்கப்பூர்வமானத் திட்டங்கள் என்று தெளிவாகத் தங்களால் ஏதும் அறிவிக்கப்படவில்லையே? இதற்கு என்ன காரணம்?

    முன்னாள் தில்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமாகியத் தாங்கள் பல வகையில் சிறந்த செயல்பாடுகளைக் கொண்டிருந்தாலும், தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை 48 நாட்களில் உதறித் தள்ளியது சரியா? தங்களுக்கு பாரதப் பிரதமர் ஆகும் வாய்ப்பை மக்கள் அளித்தால் இதையும் தாங்கள் பாதியிலேயே விட்டுச் செல்ல மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் ? ஒரு சிறந்த நிர்வாகியாக, பிரச்சனைகளை எதிர்கொண்டு நிலைத்து நின்று ஆட்சி செய்யாமல் நீங்கள் பதவியை விட்டு விலகியது சரியா?

    பாரதப் பிரதமர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் தேர்தல் களத்தில் பணியாற்றும் தங்கள் மூவரிடமும் மக்கள் கேட்கும் ஒரே கேள்வி இதுதான்.

    தங்கள் செயல்பாடுகள் மற்றும் தங்கள் நலத் திட்டங்களை முன்வைத்து அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பாளர்கள் தொலைத் தொடர்பு ஊடகங்கள் மூலமாக நேரடி விவாதம் நடத்துவது போன்று ஏன் நம் நாட்டிலும் நடத்தக்கூடாது? இது போன்ற விவாதங்களை தாங்கள் நேரடியாக நடத்துவதன் மூலமாக மக்கள் சிறந்த நிர்வாகிகளை நம் நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பாக அது அமையக்கூடும் அல்லவா? நாங்கள் இதை எதிர்பார்க்கலாமா?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

     

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (7)

    பவள சங்கரி

    தலையங்கம்

    உயர்திரு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு,

    நம் குடியரசு இந்தியாவின் தேர்தல்களை விருப்பு வெறுப்பற்ற முறையில், எந்த ஒரு அமைப்பையும் சாராமல் நேர்மையாக நடத்தும் தங்களுடைய சமீபத்திய அறிவிப்பின்படி தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிடலாம் என்பது எந்த வகையில் சரியாகும்? இது பற்றி சட்ட ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசனை செய்த பிறகுதான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்களா? நீங்கள் எடுத்த முடிவு சரியானது என்றால் இத்தனை ஆண்டுகள் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ள கட்டுப்பாடுகள் தவறான ஒன்றா? இப்படி தேர்தலுக்கு முன்பாகவே வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் மக்களை திசை திருப்பிவிடாதா? அன்பளிப்பு அளித்து செய்திகள் வெளியிடக்கூடிய இந்த காலகட்டத்தில் நீங்கள் அறிவிப்பு வெளியிட்டு வெகு சில நாட்களுக்குள் இந்தியா முழுவதும் செய்தி சேகரித்து இவ்வளவு விரைவாக கருத்துக் கணிப்பை எப்படி வெளியிடமுடியும் என்ற ஐயம் வராதா? மிகப்பெரிய பொறுப்புகளில் இருக்கும் தங்களைப் போன்றோரின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக அல்லவா இருக்கவேண்டும்?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (6)

    பவள சங்கரி

    தலையங்கம்

    மதிப்பிற்குரிய ஐயா அன்னாஅசாரே அவர்களே,

    நீங்கள் புவனேசுவரத்தில் ஆரம்பித்துள்ள இரண்டாவது சுதந்திரப் போரட்டம் மூலமாக 2024 இல் மிக அதிகமாக விவசாயிகளையே பாராளுமன்ற உறுப்பினர்களாக அனுப்பப்போவதாகக் கூறியுள்ளீர்கள். உங்களுடைய முதல் போராட்டத்தின் தற்போதைய நிலை என்ன? முடிவுற்றதா? வெற்றி பெற்றுவிட்டீர்களா? ஊழலுக்கு எதிரான உங்களுடைய போராட்டத்தின் இன்றைய நிலை ஆளும் கட்சியும் எதிர் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஊழல்வாதிகளை தங்களுடைய வேட்பாளர்களாக அறிவித்துள்ளனரே. இந்த அரசியல்வாதிகளை நீங்கள் மன்னித்துவிட்டீர்களா? அன்றாடம் மக்கள் உங்களை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது இப்படி ஏதாவது புதிய போராட்டம் அறிவிக்கிறீர்களா?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

     

    Share
  • கடித இலக்கியப் பரிசுப் போட்டி

    பவள சங்கரி

    அன்பு நண்பர்களே,வணக்கம். ‘கடித இலக்கியப் பரிசுப் போட்டி’ க்கான இறுதி நாள் நேற்றுடன் முடிந்துவிட்ட இத்தருணத்தில் இப்போட்டியின் மாபெரும் வெற்றியாக 61 இடுகைகள், இப்போட்டிக்காக வந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. படைப்புகள் அனைத்தும் வெளியிட்டிருக்கிறோம். நாம் எதிர்பார்த்ததைக்காட்டிலும் அதிகப்படியான படைப்புகள் வந்து குவிந்துள்ளதால், முதல், இரண்டு, மூன்றாம் பரிசுகளுக்கு மேல், மூன்றுபேருக்குத் தலா ரூ.250 ஆறுதல் பரிசாக அறிவிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். திருமதி தேமொழி அதற்கான தொகையையும் மனமுவந்து வழங்கியுள்ளார்கள். படைப்புகள் அனைத்தும் நம்முடைய வல்லமை இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடுப்பையும் கீழே இணைத்திருக்கிறோம். இதில் யாருடைய படைப்பாவது பிரசுரம் ஆகாமல் விடுபட்டிருந்தால் தெரிவிக்கலாம். படைப்பு அனுப்பிய தேதி, தலைப்பு, பெயர், முகவரி முதலிய விவரங்களுடன், vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள்.

    1. மணி மொழிக்கொரு மடல் – நடராஜன் கல்பட்டு

     
     
     
     
     

    6.மணிமொழியாம் தமிழுக்கொரு மடல் – கீதா மதிவாணன்

     

    7. மணிமொழியே ஒரு மடல் – சத்தியமணி

     

    9. அன்புள்ள மணிமொழி – எஸ். பாலசுப்பிரமணியன்

     
     
    13.

    அன்புள்ள மணிமொழிக்கு –  எஸ். பழனிச்சாமி

    14. 

    அன்புள்ள மணிமொழி!… பாண்டியன். ஜி

    15.

    யாரினுமினிய மணிமொழிக்கோர் ஆசை மடல்! – மேகலா இராமமூர்த்தி

    16.

    அன்புள்ள மணிமொழி – பி. தமிழ்முகில்

    17.

    அன்புள்ள மணிமொழிக்கு – சங்கர் சுப்ரமணியன்

    18.

    அன்புள்ள மணிமொழிக்கு – சங்கர் சுப்ரமணியன்

    19.

    அன்புள்ள மணிமொழிக்கு – நேசமித்ரன்

    20.

    மணிமொழிக் கொரு மடல் – நடராஜன் கல்பட்டு

    21.

    மணிமொழிக்கு ஒரு மடல்! – சுப. திருப்பதி

    22.

    அன்புள்ள (மணிமொழி) அம்மாவுக்கு! – சச்சிதானந்தம்

    23.

    அன்பு மிக்க மணிமொழிக்கு – நந்திதா

    24.

    அன்புக்குரிய மணிமொழி – நிர்மலா ராகவன்

    25.

    அன்புள்ள தோழி மணிமொழி – சித்திரை சிங்கர்

    26.

    பிரியமான மணிமொழிக்கு – சுபாஷிணி திருமலை

    27.

    அன்புள்ள தோழி மணிமொழி – அமீர்

    28.

    பொன் மாறனின் திருமுகம்! – நந்திதா

    29.

    ரசிகை மணிமொழிக்கு ஒரு மடல்.. – மாதவன் இளங்கோ

    30.

    மணிமொழிக்கு அம்மா எழுதும் கடிதம் – விசாலம்

     

    31.

    மணிமொழியாகிற என் அன்பு அம்மாவே! – ரஞ்சனி நாராயணன்

    32.

    அன்புள்ள மணிமொழிக்கு!… மு. கோபி சரபோஜி

    33.

    அன்பு மணிமொழிக்கு!… ஞா. கலையரசி

    34.

    அன்புள்ள மணிமொழிக்கு – ஜெயராமன்

    35.

    அன்புள்ள மணிமொழிக்கு – நந்திதா

    36.

    அன்புள்ள மணிமொழிக்கு – டி. விப்ரநாராயணன்

    37.

    அன்புள்ள மணி மொழிக்கு – டி. விப்ரநாராயணன்

    38.

    அன்புள்ள மணிமொழி!.. – வி. பாலகுமார்

    39.

    ‘அன்புள்ள மணிமொழிக்கு’ … செண்பக ஜெகதீசன்

    40.

    அன்புள்ள பேத்தி மணிமொழிக்கு – டி. விப்ரநாராயணன்

    41.

    அன்புள்ள தோழி மணிமொழிக்கு – ராஜலஷ்மி பரமசிவம்

    42.

    அன்புள்ள தோழி மணிமொழிக்கு – டி. விப்ரநாராயணன்

    43.

    அன்புள்ள மணிமொழிக்கு – தினேஷ்

    44.

    அன்புள்ள மணிமொழி!… – கீதா மதிவாணன்

    45.

    கண்ணின் கருமணியாம் மணிமொழிக்கு! – சேஷா சீனிவாசன்

    46.

    அன்பு நண்பி மணிமொழிக்கு! – ஞா. கலையரசி

    47.

    அன்புள்ள மணிமொழிக்கு – கவா கம்ஸ்

    48.

    அன்புள்ள மணிமொழிக்கு, – பாரதி

    49.

    அன்பே மணிமொழி.. எந்தன் இன்னுயிரே.. – கவிஞர் காவிரி மைந்தன்

    50.

    அன்பே மணிமொழி.. எந்தன் இன்னுயிரே.. – கவிஞர் காவிரி மைந்தன்

    51.

    அன்பே மணிமொழி! – கவிஞர் காவிரி மைந்தன்

    52.

    அன்பே மணிமொழி.. ஆருயிர்க் காதலியே! – கவிஞர் காவிரி மைந்தன்

    53.

    அன்பே மணிமொழி! என் ஆனந்தக் காதலி! – கவிஞர் காவிரி மைந்தன்

    54.

    மதிப்பிற்குரிய மணிமொழிக்கு! – ச. பொன்முத்து

    55.

    அன்புள்ள மணிமொழிக்கு – சரஸ்வதி ராஜேந்திரன்

    56.

    அன்புத் தோழி மணிமொழி – வைரமணி நடராஜன்

    57.

    அன்புள்ள மணிமொழிக்கு – புதுவை பிரபா

    58.அன்பு மகள் மணிமொழிக்கு – பஃக்ருத்தீன்

    59.அன்புள்ள மணிமொழி – பாரதி

    60. அன்பு மகள் மணிமொழிக்கு – தமிழ் செல்வி​

    61. அன்புத் தோழி மணிமொழிக்கு – சுலோச்சனா

    நன்றி.
    அன்புடன்
    பவள சங்கரி
    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (5)

    பவள சங்கரி

    தலையங்கம்

    திப்பிற்குரிய பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திரு ராஜ்நாத் சிங் அவர்களுக்கு,

    தங்கள் கட்சியைச் சார்ந்த, பல பொறுப்புகளில் இருந்த திரு யசுவந்த் சின்கா அவர்கள் என்ன தவறு செய்தார்? நாங்கள் அறிந்த வகையில் எதிர் கட்சிகளும் பாராட்டும் வகையிலேயே அவருடைய பாராளுமன்ற நடவடிக்கைகள் அமைந்திருந்தன. அவர் தன்னுடைய தொகுதி மக்களுக்கோ அல்லது கட்சிக்கோ என்ன தவறு செய்தார் என்று புரியவில்லை. ஆறு ஆண்டுகளில் கட்சியை விட்டு அவரை நீக்கியிருக்கிறீர்களே? காங்கிரசு கட்சியிலிருந்து கட்சி மாறி வந்தவரை வேட்பாளராக அறிவித்திருப்பதற்கு என்ன காரணம்? இது போல கட்சி மாறி வருபவர்களை ஊக்குவிக்கும் தங்களால் ஊழலற்ற ஆட்சி எப்படி தர முடியும்? முதல் கோணல் முற்றும் கோணல் அல்லவா?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

     

    Share
  • இசைக்கவி ரமணன் – அனு ரமணன் மணிவிழா வாழ்த்து

     

    Ramanan

    Ramanan1

    Ramanan 2

     

    திருவாழும் பதிமயிலைத் திருப்பதியில்
    திருமகளும் கலைமகளின் கண்மணியும்
    பார்போற்றும் தம்பதியராய் புவிவாழ்த்தும்
    கவியும் பாரதியும் போல பரிதியும் அல்லியும்போல
    கடலும் அலையும்போல இணைந்தே இதமாய்
    நட்பும் சுற்றமும் அலையலையாய் அருகிருந்து
    பாசமும் நேசமும் பெருமழையாய் பொழியவே
    பொங்கும் அன்பும் பொற்றாமரையாய் பொலிகவே
    நலமும் வளமும் தடையறப் பெருகிடவே
    இசையும் கவியுமாய் இணைந்திருப்போரின்
    இதயமாய் இருக்கும் இல்லாளின் இதத்தோடு
    இன்னுமொரு நூற்றாண்டு நித்தியமாய்
    பொங்கும் மழையாய் நீவிர் இருவரும்
    பெரியோர் ஆசிகளுடன் வாழ்வாங்கு வாழ்வீரே
    நன்மக்களும் நல்லாசிகள் பெற்றுய்யவே
    நீவிர் நித்தியப்புன்னகையுடன் வாழிய வாழியவே!
    வாழ்த்துரைக்கட்டும் தெய்வங்களைனைத்தும்
    சித்திகளனைத்தும் வசமாகட்டும் உங்களுக்கு
    ஆலம் விழுதுகளாய்ப் பரவி நிற்கும் உங்கள்
    வேர்கள் கண்டு என்றென்றும் வாழ்த்துரைக்கட்டும் என் நா!!
    பூமரத சாந்திக்கும் சதாபிஷேகத்திற்கும் கனகாபிஷேகத்திற்கும்
    வேதமந்திரங்களுடன் நட்பும் உறவுமாய் நிறைந்த வாழ்த்து
    எட்டுத்திக்கும் சங்காய் முழங்க வாழ்வாங்கு வாழ்வீரே நீவிர்!!!

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (4)

    பவள சங்கரி

    தலையங்கம்

    மேன்மைதங்கிய பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு,

    தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசியபோது எங்களுடைய அடுத்த ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இருக்கும் என்று கூறியுள்ளீர்கள். அப்படியென்றால் இந்த ஐந்தாண்டு கால ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இல்லை என்று ஏற்றுக்கொள்கிறீர்களா?

    உயர்திரு ராகுல் காந்தி அவர்களே,

    தாங்களும் தேர்தல் அறிக்கை வெளியிட்டு பேசியபோது மிகச் சிறந்த பொருளாதார வளர்ச்சியும், தொழில் வளர்ச்சியும் ஏற்படும் என்று கூறியிருக்கிறீர்கள். ஊழலுக்காகத் தண்டனை பெற்ற லல்லு பிரசாத் யாதவ் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டும், திரு அசோக் சவானை உங்களுடைய கட்சி வேட்பாளராக அறிவித்துவிட்டும், நீங்கள் தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் எவ்வாறு ஏற்படுத்தப் போகிறீர்கள்?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

     

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (3)

    பவள சங்கரி

    தலையங்கம்

    உயர்திரு ஸ்ரீனிவாசன் அவர்களே,

    உங்கள் மருமகன் மெய்யப்பன் செய்த தவறுகளனைத்தும் தாங்கள் அறியாமலே நடந்துள்ளது. இதனால் பல கோடி பணம் கைமாறியதும் தலைவராகிய தங்களுக்கேத் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அதன் செயல்பாடுகளும் உங்களுக்குத் தெரியவில்லையென்றால் நீங்கள் எப்படி பி.சி.சி.ஐ. இன் தலைவராகவும், இந்தியா சிமெண்ட்ஸ் குழுமத்தின் தலைவராகவும் இருந்து மிகச் சிறந்த நிர்வாகத்தை உங்களால் எப்படித்தர முடியும்? ஆனால் உச்சநீதி மன்றத்திற்கு இவையனைத்தும் மிகத் தெளிவாகப் புரிந்து உங்களை உடனடியாகப் பதவி விலகும்படிக் கூறியுள்ளார்கள். நீங்கள் பதவி விலகி அந்தப் பொறுப்பிற்குரிய கௌரவத்தையும், அந்த விளையாட்டிற்குரிய பெருந்தன்மையையும் காக்கப் போகிறீர்களா?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (2)

    பவள சங்கரி

    தலையங்கம்

    உயர்திரு மோதி மற்றும் உயர்திரு ராகுல் காந்தி அவர்களே,

    எவ்வளவு உயரிய பதவிகளில் இருந்தாலும் அவர்கள் தவறு செய்யும் போது பொது மக்கள் தட்டிக் கேட்கக் கூடிய லோக்பால் மசோதாவைக் கொண்டுவந்த ஆளும் கட்சியும் , அதற்கு ஆதரவு தெரிவித்து உறுதுணையாக இருந்த எதிர்கட்சிகளும் இன்று போட்டி போட்டுக்கொண்டு ஊழல் அரசியல்வாதிகளையே தங்களுடைய கட்சி வேட்பாளர்களாக அறிவித்துள்ளீர்களே இது சரியா. உங்கள் பதில் என்ன?

    திரு மோதி அவர்களே,

    நேற்றைய உங்கள் விளம்பரம் ஆச்சரியப்படுத்தியது. “டாலர் கொடுத்தாலும் வாங்க மாட்டேன், ரூபாயாகக் கொடுத்தாலும் வாங்க மாட்டேன். நியாயமாகத்தான் நடந்து கொள்ளுவேன், ஆகவே எனக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று எடியூரப்பாவையும், ஸ்ரீராமுலு அவர்களையும் தங்களுடைய கட்சி வேட்பாளராக அறிவித்துவிட்டு எவ்வாறு நீங்கள் சொன்ன வகையில் செயல்படப்போகிறீர்கள்?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • மக்கள் கேட்கும் கேள்விகள் (1)

    பவள சங்கரி

    தலையங்கம்

    உயர்திரு அன்னா ஹசாரே அவர்களே,

    ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் பொழுது அவர்களுக்கு எதிராக அதாவது அவர்களின் ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி சமீபத்தில் தலைநகரில் நீங்கள் போராட்டம் நடத்தினீர்கள். ஊழலுக்கு எதிரான சட்ட முன் வடிவம் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதை நிறைவேற்றிய ஆளும் கட்சியினரும் இதற்குத் துணை நின்ற எதிர் கட்சியினரும் ஊழலை ஒழிப்பதில் உண்மையாக அக்கறை உடையவராக இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? தேர்தல் சமயமான இந்த நேரத்தில் அனைத்துக் கட்சியினரும் ஊழலில் திளைத்தவர்களை தங்களுடைய வேட்பாளராக அறிவித்துள்ளனரே, நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் அண்ணல் காந்தியடிகள் போல் போராடாமல் அமைதி காப்பதற்கு என்ன காரணம். நீங்கள் போராட வேண்டிய இத்தகைய நேரத்தில் அலட்சியப் போக்குக் காட்டுவதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?

    இன்னும் கேட்க வேண்டிய கேள்விகளும், பதில் சொல்ல வேண்டிய தலைவர்களும் நிறையவே இருக்கிறார்கள்?

    வாக்களிப்போம்!

    ஊழற்ற அரசை உருவாக்குவோம்!!

    விலை போகாமல் வாக்களிப்போம்!!!

    Share
  • சுவடுகள் பதித்த சுடரொளிகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    மகளிர் தின வாழ்த்துகள்!

    இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஆண்கள், பெண்கள் என பாகுபாடின்றி அனைவருக்கும், பேச்சுரிமை, தனி மனித சுதந்திரம், பாதுகாப்பான வாழ்க்கை என அனைத்தும் அனைவரும் பெறும் உரிமை உள்ளது. ஆனால் இவையனைத்திற்குமாக நாம் நிர்ணயிக்கும் அளவுகோல் மட்டுமே நம் இந்தியப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கிறது.

    பண்டைக்கால மகளிரின் ஒழுக்க நெறியினை நம் வேதங்கள் அழகாக எடுத்துரைக்கின்றன. வேத காலத்தில் ஒரு ஆண் மட்டுமே குடும்பத் தலைவனாக இருந்திருக்கிறார். ஒரு குடும்பத்தில் ஆண் மகவு பிறப்பதையே பெரிதும் மகிழ்ந்து கொண்டாடியதோடு, அதற்கான பிரார்த்தனைகளையும் மேற்கொண்டனர். வேத காலத்தில் கல்வி என்று எடுத்துக்கொண்டால் பெண்களைப் பொறுத்த வரையில் ஆணுக்கு நிகரான கல்வி வழங்கப்படவில்லை. ஆனாலும் சமூக வாழ்க்கையில் ஆண், பெண் என இரு பாலரும் சம நிலையிலேயே இருந்திருக்கின்றனர். அதாவது ஆண்களைப் போன்றே பெண்களும் அனைத்து விதமான சுதந்திரமும் பெற்றிருக்கின்றனர். மெல்ல மெல்ல அவளே தெய்வ நிலைக்கும் உயர்த்தப்பட்டிருக்கிறாள். ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று அந்தக் காலத்தில் பெண்களின் திருமண வாழ்க்கையில் கட்டுப்பாடும், ஒழுக்க நெறியும் கடைபிடிக்கப்பட்டு வந்ததோடு, விவாகரத்து என்ற ஒரு கோட்பாடே இல்லாமலிருந்திருக்கிறது.

    ஆனால் ரிக் வேத காலத்தின் இறுதியில், பெண்களின் மீது சில கட்டுப்பாடுகள் திணிக்கப்பட்டதோடு, அவர்களுடைய சுதந்திரமும் மெல்ல மெல்ல பறிக்கப்பட ஆரம்பித்தது. ஆரம்ப காலத்தில் பிரகாசமாக ஒளி வீசிய மகளிரின் வாழ்க்கையில் மெல்ல மெல்ல இருள் தோன்ற ஆரம்பித்துள்ளது. ஆனால் அந்த இருளிலும், பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இன்றளவிலும் பிரகாசமாக மின்னிக் கொண்டிருக்கும், கார்கி, மைத்ரேயி, லோபமுத்ரா, காத்யாயினி, கோஷா, சஸ்வதி, அபலா, இந்திராணி போன்றோரை நாம் மறக்க இயலாது.

    தர்ம சாத்திரங்களின் அடிப்படையில் திருமணம் அக்னி சாட்சியாக நடைபெற்றபின், கணவனும், மனைவியும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு இறுதியில் உயிர் பிரிந்தவுடன் அந்தத் தீயிற்கே உடலை ஆகுதியாக அளிப்பது புனிதமாகக் கருதப்பட்டது. இந்தத் திருமணத்தில் ஒரு பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுப்பதன் மூலம் அவள் தன் கணவனுக்கு முழுமையாக உரிமையானவளாக ஆகிவிடுகிறாள். கணவனுக்கு அடங்கியவளாகவும், குடும்பத்தில் கணவனைச் சார்ந்து இருப்பவளாக, குழந்தை பெற்று வளர்ப்பது மற்றும் குடும்பத்தின் கடமைகளை நிறைவேற்றுவது போன்றவை மட்டுமே அவளுடைய தலையாயப் பணியாக இருந்தது. பிறன்மனை நாடியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. அப்படிப்பட்டவர்களுக்கு எந்த விதமான சட்டப் பாதுகாப்பும் கொடுக்கப்படவில்லை. கலப்புத் திருமணங்கள் ஆதரிக்கப்பட்டன. கைம்பெண்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு துறவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டியிருந்தது. விஷ்ணு மற்றும் பிரஹஸ்பதி ஆகியோர் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை புனிதமானதாக அங்கீகரித்ததால், அதைப் பெண்களுக்கு அளித்த சிறப்பாக கருதப்பட்டது.

    உன்னதமான தர்மங்களைப் போதிக்கும் மகாபாரதம் ஐந்தாவது வேதம் என்று அழைக்கப்பட்டது. ராஜ தர்மம், அபதர்மம், மோக்‌ஷதர்மம் மற்றும் தான தர்மம் போன்ற அனைத்தும் மகாபாரதத்தில் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தலை சிறந்த தத்துவங்கள் மற்றும் உபனிசங்கள், கீதோபதேசம் போன்றவைகளை போதிப்பதால் மகாபாரதம் தலைசிறந்த காவியமாகக் கருதப்பட்டது. பாரத தேசத்தின் மிகச் சிறந்த காவியங்களான, இராமாயணம் மற்றும் மகாபாரதம் சீதா, கைகேயி, குந்தி, திரௌபதி, சாவித்திரி, கௌசல்யா போன்ற ஒழுக்க நெறி தவறாத உன்னதமானப் பெண்களை அடையாளம் காட்டுவதாக அமைந்துள்ளது. கணவனை இழந்த பெண்கள் மகனின் பாதுகாப்பில் வாழ்ந்தனர். உடன்கட்டை ஏறும் வழக்கமும் மெல்ல வலுவிழந்தது.

    மனுதர்மம், கணவன், மனைவி உறவின் புனிதத்தைக் காக்கும் வகையில் சில கட்டுப்பாடுகளை வரையறுத்தது. ஒரு மனைவி கணவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவளாக இருக்க வேண்டும். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று மனைவி, கணவன் மற்றும் சந்ததிகளின் நலனைப் பேணுகிறவளாக இருக்க வேண்டும். கணவன் இறந்த பிறகும் அவன் நினைவில் மட்டுமே அவள் வாழவேண்டும். அப்படி வாழ்ந்த பெண்களை மிகவும் மதிப்பாக நடத்தினார்கள்.

    அடுத்து வந்த முகலாய ஆட்சியில் பர்தா போடும் வழக்கம் கட்டாயப்படுத்தப்பட்டது. விபச்சாரம் பிரபலமானது. ராஜபுத்திர வீரர்களால் அபகரிக்கப்படுவதைக் காட்டிலும் கணவன் இறந்தவுடன், அவனுடனேயே உடன்கட்டை ஏறுவதே சிறந்தது என்ற முடிவிற்கும் தள்ளப்பட்டார்கள் பெண்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் முகலாய ஆட்சி முடிவுற்றபின் உடன்கட்டை ஏறும் வழக்கமும் சிதறுண்டது. அடுத்து வந்த ஆங்கிலேயர் ஆட்சியில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டது. 1829ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி, ஆங்கில அரசு மனிதாபிமான அடிப்படையில் ‘சதி’ என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடை செய்ததோடு அதை மீறுபவர்களுக்கு அபராதமும் சிறை தண்டனையும் வழங்கியது. ஆச்சாரமான இந்துக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தாலும் ராஜாராம் மோகன் ராய் அவர்களின் பெரும் முயற்சியால் அது நிறைவேற்றப்பட்டது.

    அடுத்ததாக ஈரோடு பெரியார் அவர்கள், மறுமணம் என்கின்ற விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கக்கூடிய மிகப் பெரிய தாக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்தினார். வெறும் உபதேசமாக மட்டும் இல்லாமல் தானே முன்னோடியாக இருந்து, தம் சிறு வயதிலேயே, தம் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண்ணிற்கு மறுமணம் செய்துவைத்து வழிகாட்டினார். திருமணத்திற்குப் பிறகும் அப்பெண்னிற்கு பெற்றோரின் அரவணைப்பு கிடைக்கும் வகையில், ஈரோடு தங்கவேலனார் போன்றோரின் முயற்சியால் கன்னிகாதான முறையும் ஒழிக்கப்பட்டது. அதன்பின் ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சியால், இந்தியாவில் ஒரு முன்னோடிப் பெண் மருத்துவர், சமூகப் போராளியான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மற்றும் நேதாஜியால் தொடங்கப்பெற்ற இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்த கேப்டன் இலட்சுமி எனப்படும், இலட்சுமி சேகல் போன்ற ஒரு சிலர் மட்டுமே இருந்த நிலை மாறி இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தங்களுடைய பங்களிப்பைக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியவைகள் என சிலவற்றை சிந்திக்க வேண்டியுள்ளது. ‘ இனி ஒரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம்’ என்கிறபடி, நம் வீட்டில் பிறக்கும் பெண் குழந்தையை இனி பொத்திப்பொத்தி வளர்ப்பதைக் காட்டிலும், அவர்களுக்குத் தாய்ப்பாலுடன் தைரியம், துணிச்சல், கல்வி, தற்காப்பு போன்ற அனைத்தையும் சேர்த்தே போதித்து வளர்ப்போம். சங்க இலக்கியத்தில் கூறியது போல முறத்தால் புலியை விரட்டிய பெண்ணின் கதையையும், இரும்புப் பெண் என்று போற்றப்பட்ட மார்கரேட் தாட்சர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறியும், ஜெர்மன் நாட்டை ஆண்ட கோல்டா மேயர் பற்றியும், வீரப்பெண் அன்னை இந்திராவின் சரித்திரத்தையும், ஸ்ரீலங்காவை ஆட்சி செய்த ஸ்ரீமாவோ பண்டாரநாயகா பற்றியும், வான்வெளியில் புரட்சி செய்த கல்பனா சாவ்லா பற்றியும் எடுத்துரைத்து , அச்சமின்றி, சவால்களை எதிர்கொண்டு, சாதனைப் படைக்கும் தலை சிறந்த ஒரு பெண் சமுதாயத்தை உருவாக்க உறுதி கொள்வோம். பெண்ணே ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்குத் தடை என்ற கருத்தை முறியடிப்போம். ஒன்றிணைந்து செயல்பட்டு சமுதாயத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்க உறுதி கொள்வோம்.

    எந்த ஒரு சக்தியும் பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க வேண்டிய தேவையில்லை என்பதில் தெளிவாக இருப்போம். நம்முடைய பணிகளை நாமே செய்ய முனைவோம். அடுத்தவரை சார்ந்திருப்பதைத் தவிர்ப்போம். தேவையற்ற எதிர்பார்ப்புகளையும், அளவிற்கு அதிகமான பாராட்டுதல்களில் நாட்டம் கொள்வதையும் முற்றிலும் தவிர்ப்போம். ஆண்களுக்குச் சமமாக நம்மாலும் சாதிக்க முடியும் என்பதை நம் உழைப்பைக்கொண்டு உறுதி செய்வோம். நம்மை உற்று நோக்கி துவண்டு விழச் செய்பவரை, திரும்பி நின்று நேர் கொண்ட பார்வையால் வீழ்த்துவோம்! நம் பெண் குழந்தைகள் முதலில் தம்மைத்தாமே மதித்துக் கொள்ளவும், சுய கௌரவத்தை எந்த நிலையிலும் இழக்காமல் இருப்பதற்கும் நாம் முதலில் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருப்போம். நம் இளைய சமுதாயத்தை, தம்முடைய உரிமைகளை எந்த நிலையிலும் இழக்காமல் இருக்க உறுதி பூண வழிநடத்துவோம். எவருடைய தலையீடும் இன்றி நம்முடைய உரிமைகளை சரியான முறையில் பயன்படுத்த உறுதி கொள்வோம்.

    Share
  • மகாசிவராத்திரி – சிவபூசாவிதி

    சுபாஷிணி டிரெம்மெல் – பவள சங்கரி 

    இவ்வருட மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

    இந்தப் பதிவு கடந்த ஆண்டு (2013) சிவராத்திரி தினத்தன்று ஈரோடு ஸ்ரீ மஹிமாலீஸ்வரர் சமேத மங்களாம்பிகைதிருக்கோயிலில் பதிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தில் கோயிலில் செய்யப்பட்ட சிறப்பு சிவலிங்க பூஜை இந்தப் பதிவில் இடம் பெறுகின்றது.

    pic12

    பூஜை ஏற்பாட்டில் இடம்பெறும் சிவலிங்கம், பூஜை பொருட்கள் ஆகியவை தயாரானதும் ஆலயத்தில் கருவறையில் இருக்கும் மூலஸ்தான தெய்வத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. அந்தச் சிறப்பு பூஜையும் இந்தப் பதிவில் பதிவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து பொது மக்கள் இணைந்து ஈரோடு திரு தங்க. விசுவநாதன் தலைமையில் சிவபுராணம் ஓதி சிவலிங்க பூஜை செய்வதைக் காணலாம்.

    இந்த விழியப் பதிவைக் காண: http://video-thf.blogspot.de/2014/02/2014_26.html

    யூடியூபில் இப்பதிவைக் காண: http://www.youtube.com/watch?v=t8I64GTDiHM

    திருமதி பவள சங்கரியின், மகா சிவராத்திரியின் சிவ பூஜா விதிகளை விளக்கும் ஒரு கட்டுரையையும் ஈரோடு திரு தங்க. விசுவநாதன் அவர்களின் நித்திய வழிபாட்டு முறை என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையையும் இன்றைய நாளில் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். கட்டுரை கீழே இணைப்பில்!

    இந்த விழியம், மற்றும் புகைப்படங்கள் பதிவினை நான் செய்திட உதவிய திருமதி பவள சங்கரிக்கும் அவர் தம் துணைவர் திரு.திருநாவுக்கரசு அவர்களுக்கும், அனுமதி வழங்கிய ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கும், திரு தங்க விசுவநாதன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

    மேலும் படங்கள்: கட்டுரைக்கு கீழே!

    அன்புடன்
    சுபாஷிணி ட்ரெம்மல்
    [தமிழ் மரபு அறக்கட்டளை]

     
    மகாசிவராத்திரி – சிவபூசாவிதி
    பவள சங்கரி

    ”இவர் ஒரு கற்பத்தில் தம்மையே தியானித்திருந்த காலத்துத் தம் தேகத் துண்டான ஆனந்த பிந்துக்களே சிவலிங்கங்களாயின – (சிவரகசியம்)

    சிவன் – நாராயணர் இவரது கழுத்தைக் கட்டிக் கொண்டதால் கறுத்த கழுத்துடையவரானார்.

    சிவராத்திரி – கால நிர்ணயம், மாசி மாதம் கிருஷ்ணபட்சம், சதுர்த்தசி இரவு, பதினான்கு நாழிகை லிங்கோற்பவ காலம். இதுவே மகா சிவராத்திரி புண்யகாலம்.

    இந்த மகாசிவராத்திரி தினத்தில் நேரிடும் திரயோதசி பரமசிவத்திற்கு தேகமாகவும், சதுர்த்தசி தேகியாகவும், அன்றிச் சக்தியாகவும் சிவமாகவும் கூறப்பட்டிருக்கிறது. சிவராத்திரி முதற் சாம முதல் நான்கு சாமங்களிலும் ஆத்மார்த்த பரார்த்த பூசைகள் நடத்த வேண்டியது. தானஞ்செய்ய வேண்டியது. இதை அனுஷ்டித்தோர் நான்கு யுகங்களிலும் முறையே விநாயகர், கந்தமூர்த்தி, பிரம்ம விஷ்ணுக்களாம். பலன் இம்மையில் சத்சனசானாதி சௌபாக்கிய சம்பத்தும் மறுமையில் சொர்க்காதி போகமுமாம். இது காமியம், நிஷ்காமிகன் இகத்தில் புத்தியும், பரத்தில் முக்தியும் அடைவர்”. – அபிதான சிந்தாமணி.

    பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோருக்காக, சிவபெருமானார் லிங்கோத்பவராக எழுந்தருளியபோது, தேவர்கள் பூசித்த காலம் எனவும், ஒரு பிரம்மகற்பத்தில் சக்தி தேவியார், நான்கு காலங்களும் சிவ பூசை செய்து ஐயனை உளம் ஒன்றி வழிபட்ட காலமே சிவராத்திரி என்பது. சிவபெருமானிடம் அன்னையார் வரம் வேண்டிப் பெற்ற நாளும் இதுவே. சக்தி தேவி, பெருமானாரிடம் விளையாடும் முகமாக ஐயனின் திரிநேத்திரங்களையும் மூடப்போக, அகில உலகமே இருளில் மூழ்கிவிட, தேவர்கள் ஐயனை வணங்கி வழிபட்ட காலமும் இதுவே. பாற்கடலில் தோன்றிய நஞ்சுண்டகண்டனான பெருமானாரை அந்த விடம் தாக்காமல் இருக்கும்பொருட்டு தேவர்கள் விடிய விடிய இடையறாது பூசித்த காலமே மகாசிவராத்திரி என்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. உருத்திரராக வந்த சிவபெருமானார், அண்டங்களின் மாயை எனும் அனைத்து இருளையும் போக்கி, ஞான ஒளியை நீக்கமற எங்கும் நிறையச் செய்த அந்த அற்புதமான காலமே மகாசிவராத்திரி எனப்படுகிறது.

    சிவலிங்கநியாசங்கள் என்பதாவன – தண்டபங்கிநியாசம், முண்டபங்கிநியாசம், ஸ்ரீகண்டநியாசம், ஆகமநியாசம், கலாநியாசம், மாத்ருகா நியாசம் போன்றவைகளாம்.
    சிவதீக்கை

    நம் புற உடலில் ஏற்படும் மாசு மற்றும் நுண்கிருமிகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வது போன்று, ஆன்மா என்ற நம் அகமாகிய உயிரின் மாசு நீங்கும் பொருட்டு அளிக்கப்படுவதே சிவ தீக்கை எனப்படும். ஆண், பெண் என்ற வேறுபாடின்றி சைவ சமயத்தில் பிறந்த அனைவரும் சிவதீக்கை பெறும் தகுதி பெற்றவர்களாகிறார்கள். ‘முள்ளிச் செடிக்கு முக்தி கொடுத்த உமாபதி சிவம்’ மூலமாக, மனிதர்களுக்கு மட்டுமன்றி, பறவை, புல், பூண்டு ஆகியவற்றிற்கும்கூட தீக்கை கொடுக்கப்படுவதை அறிய முடிகிறது. சிவதீக்கை பெறுபவர்கள் உடல், மனம், வாக்கு என்ற மூன்றையும் தூய்மையாக வைத்துக்கொள்பவராக இருக்க வேண்டும். உயர் பண்பும், ஆசாரமும், குரு பக்தியும் உடையவராக இருத்தல் அவசியம். உலக பற்றுகளை கட்டுக்குள் வைத்து தியானத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் வல்லமை பெற்றவராக இருத்தல் நலம்.

    தெய்வ வழிபாடு என்பதே பையப்பைய நம் மனதை பக்குவப்படுத்தி, இகம் மற்றும் பரம் என்ற இரு வாழ்க்கைக்கும் நம்மை அதற்கு உகந்த நிலைக்கு வழிநடத்திச் செல்வது தான். அந்த வகையில் சிவ தீக்கை என்பது அடிப்படையில் மூன்று நிலைகளாகப் பிரித்திருக்கிறார்கள். முதன் முதலில், ‘சமய தீக்கை’ என்கிற அடிப்படையான, சிவலிங்க வழிபாட்டிற்கான ஆயத்தமாக இதனைக் கொள்ளலாம். ‘நான்’ என்ற ஆணவ மலம் அகன்று நாமே சிவம் என்ற உயர் நிலையை அடையும் எண்ணம் உதிக்கத் தோன்றும். சில காலம் மனம் ஒன்றி குரு அருளிய நெறி முறைகளைக் கடைபிடித்து அனுதினமும் அதன் வழி தொடர அடுத்து விசேட தீக்கை பெறும் தகுதியைப் பெறலாம். விசேட தீக்கை பெறுவதன் மூலம் மட்டுமே, சிவலிங்க மூர்த்திக்கு அகப்பூசை மற்றும் அபிசேகம் செய்து, மலர் தூவி வழிபட்டு, அலங்காரங்கள் செய்து, பெருமானாரைத் தம் அகத்திலும், இல்லத்திலும் எழுந்தருளச் செய்யும் புறப்பூசை என்கிற யோக நெறியில் நிறைந்து செய்யும் பூசைக்கான உரிமம் பெறலாம்!

    அடுத்து மூன்றாவதாக வருவது, ‘நிர்வாண தீக்கை’ என்பது. உயிரை ஞான நிலைக்கு இட்டுச் செல்லும் இதனால் பல்வேறு சக்திகளையும் பெற முடியும் என்கிறார்கள். ‘கண்டவர் விண்டிலை, விண்டவர் கண்டிலை’ என்பதே தத்துவம்! இறைவன் தனக்குள்ளும் இருக்கிறார், மற்றனைத்து உயிர்களுக்குள்ளும் உறைந்திருக்கிறார் என்பதை உணரச் செய்யும் தீக்கை என்பதாகக் கொள்ளலாம். முப்பொருள் உண்மையையும், தீய சக்திகளை அடக்கும் கலையையும் அருளும் இந்த நிர்வாண தீக்கை, உலகப் பற்றுகள் அனைத்தும் துறந்த நிலையில் இருப்பவர்களுக்கு வீடு பேறு கிடைக்கும் வகையில் செய்வது, ‘சத்தியோ நிர்வாண தீக்கை’ மற்றும் ஆன்மா, பிரார்த்த வினைப்பயன்களை முழுவதுமாக அனுபவித்த பின்பு, வீடு பேறு (முக்தி நிலை) அடையச் செய்யக்கூடிய, ’அசத்தியோ நிர்வாண தீக்கை’ என்பதாகும். சிவபெருமானின் அருளைப் பூரணமாகப் பெற்று இம்மை, மறுமை இன்பங்களனைத்தும் பெறவே சிவதீக்கை பெறுகிறார்கள்.

    ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
    ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
    ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
    ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.

    அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
    கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
    பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
    துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.

    -சிவவாக்கியர்
    ஏழு வயது ஆன எவரும் சிவதீக்கை பெறலாம். குரு அருளிய திருவைந்தெழுத்து மந்திரத்தை உச்சரிக்கவும், திருநீறை நீரில் குழைத்து திரிபுண்டரமாக பூசிக்கொள்ளவும் சிவதீக்கை பெற வேண்டியது அவசியம். குரு மூலம் தீட்சை பெற வேண்டும் என்பதே சமயக் குரவர்கள் மூலம் நாம் அறியும் நீதி. அகத்திய மாமுனியிடம் ஸ்ரீராமபிரானும், உபமன்யு முனிவரிடம் ஸ்ரீகிருஷ்ணரும் சிவ தீக்கை பெற்று சிவபூசை செய்துள்ளார்கள் என்பதை புராணங்கள் கூறுகின்றன. சமய தீக்கை பெற்று, அன்றாட வழிபாடுகளை நியமங்களின்படி செய்வோருக்கு ஆயுள் கூடும் என்பதும் கண்கூடு. சிவதீக்கை பெற்றவரின் உயிர் முற்றும் அந்தப் பரமனுக்கே உடமையாவதாக ஐதீகம். அந்த வகையில் அந்த உயிரைப் பறிப்பதற்கு எமதர்மனுக்கும் அதிகாரம் இல்லை என்கிறது ஆகமங்கள்.
    ஞான நிலை

    என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
    என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது கொண்டபின்
    என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ ?
    என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.

    நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
    நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ ?
    அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
    எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே !
    யோக நிலை

    உருத்தரித்த நாடியில் ஒடுங்குகுன்ற வாயுவைக்
    கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
    விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
    அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.

    அறிவு நிலை

    கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணை மோர்புகா;
    உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா;
    விரிந்துபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா;
    இறந்தவர் பிறப்பதில்லை இல்லைஇல்லை இல்லையே.

    -சிவவாக்கியர்
    விசேட தீக்கை பெற்றவர்களின் உயிர் அனந்த தேவருக்கும், நிர்வாண தீக்கை பெற்றவரின் உயிர் சதாசிவ மூர்த்திக்கும் மட்டுமே எடுக்க உரிமையுள்ளதாம். இதனால் தீய சக்திகள் எதுவும் அவர்களை அணுக முடியாது. மேலும் வாரிசுகளால் பிதுர் கடன் ஆற்றாமையாலும் தீங்கு விளையாது. பெருமானாரிடம் பாவ மன்னிப்பு பெறவும் தீக்கை அருள் புரியும். இவையனைத்திற்கும் மேலாக பிரணாயாமம் செய்வதால் அறிவியல் காரணங்களால் இருதய நோயும் அண்டாது. மனம் கட்டுக்குள் அடங்கிவிடுவதால், பூரண அமைதியடைந்து உயிர் தூய்மையடைகிறது. முத்திரைகள் பிடிப்பதால், விரல்களுக்கும், நரம்புகளுக்கும் , நல்ல பயிற்சி கிடைப்பதால் நரம்பு சம்பந்தமான நோய்கள் வராமல் காக்கிறது. ஆன்மார்த்த பூசை செய்வதனால் கடந்தகால பாவங்களின் வினைகள் குறைவதோடு, நிகழ்காலத்தில் பாவங்கள் அணுகாது என்கிறார்கள்.
    தில்லைநாய கன்அவன்; திருவரங் கனும்அவன்;
    எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்
    பல்லுநாவும் உள்ளபேர் பகுத்துகூறி மகிழுவார்;
    வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே.

    எத்திசைக்கும் எவ்வுயிர்க்கும் எங்கள்அப்பன் எம்பிரான்
    சத்தியான வித்துளே முளைத்தெழும் அச்சுடர்
    சித்தமும் தெளிந்துவேத கோயிலும் திறந்தபின்
    அத்தன்ஆடல் கண்டபின் அடங்கல்ஆடல் காணுமே.

    உற்றநூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர்;
    பற்றறுத்து நின்றநீர் பராபரங்கள் எய்துவீர்;
    செற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத்து இருத்திடில்
    சுற்றமாக உம்முளே சோதிஎன்றும் வாழுமே.

    அண்டம்நீ அகண்டம்நீ, ஆதிமூல மானநீ,
    கண்டம்நீ, கருத்தும்நீ, காவியங்க ளானநீ,
    புண்டரீக மற்றுளே உணருகின்ற புண்ணியர்,
    கொண்டகோல மானநேர்மை கூர்மைஎன்ன கூர்மையே.
    நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
    நமசிவாய அஞ்சில்அஞ்சும் புராணமான மாயையும்
    நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே
    நமசிவாய உண்மையை நன்குஉரைசெய் நாதனே!

    ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
    ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
    ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
    ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!

    -சிவவாக்கியர்
    நித்திய வழிபாட்டு முறை

    ஈரோடு திரு தங்க. விசுவநாதன்

    அதிகாலையில் படுக்கையைவிட்டு எழும்போது “சிவ சிவ” என்று இறைவன் திருநாமத்தைச் சொல்லி மடியிலுள்ள திருநீற்றுப் பையிலிருந்து சிறிது திருநீற்றை எடுத்து நெற்றியில் தரித்துக்கொண்டு எழுந்திருக்கவும்.

    1. நீராடுதல்

    நாம் ஆடும் நீரினை இறைவன் வடிவாக எண்ணிக் கீழ்வரும் பதிகத்தைச் சொல்லிக் கொண்டு குளிக்க.

    திருச்சிற்றம்பலம்

    களித்துக் கலந்ததோர் காதற்கசிவொடு காவிரிவாய்க்
    குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
    தெளித்துச் சுவையமுது ஊட்டி அமரர்கள் சூழிருப்ப
    அளித்துப் பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே. (அப்பர்)

    குளித்தபின் தோய்த்து உலர்ந்த ஆடையையும் கோவண ஆடையையும் அணிந்து கொண்டு துலக்கிய சிறு பாத்திரத்தில் தூய நீரை எடுத்துக்கொண்டு தனியிடத்தில் அமர்ந்து வழிபாட்டைத் தொடங்குக. (வழிபாட்டு அறை தனியாக இருப்பின் சாலச் சிறந்தது).

    2. பிள்ளையார் வணக்கம்

    ஐந்து கரத்தனை ஆனைமு கத்தனை
    இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
    புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

    -திருமூலர்
    ஆ. திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
    பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
    ஆதலால் வானோரும் ஆனை முகத்தனைக்
    காதலால் கூப்புவர்தம் கை. [நம்பியாண்டவர் நம்பி]

    [இ] பிடியதன் உருவுமை கொள, மிகு கரியது
    வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
    கடி, கணபதி வர அருளினன் – மிகு கொடை
    வடிவினர் பயில் வலிவலம் முறை இறையே. [1: சம்பந்தர்]
    திருச்சிற்றம்பலம்
    3. சற்குரு வணக்கம்

    சைவ சமய குருமார்கள் நால்வருக்கும், தனக்குத் தீக்கை அருளிய குருவிற்கும் வணக்கம் சொல்லுதல்.

    அ] பூமியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
    ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
    வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
    ஊழிமலி திருவாதௌஊரர் திருத் தாள்போற்றி [உமாபதி சிவாச்சாரியார்]

    ஆ] தந்தையாய் ஆவானும் சார்கதி இங்காவானும்
    அந்தம் இல்லா இன்பம் நமக்கு ஆவானும்
    எந்தம்உயிர் தான்ஆ குவானும் சரண் ஆகுவானும்
    அருட்கோணாரு வானும் குரு [தத்துவராய சுவாமிகள்]

    4. வழிபடும் இடத்தை சுத்தி செய்தல்

    சிறிது தண்ணீரைக் கையில் எடுத்து, “பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி” என்று ஓதி வழிபாடு செய்யும் இடத்தில் தெளித்து அதை தூய்மை செய்யவும்.
    5. நீரைச்சுத்தி செய்தல்

    தண்ணீரைச் சிவமாக எண்ணி “நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி” என்று மலர் தூவித் தண்ணீரில் சிவலிங்கத் திருமேனியாய் எழுந்தருளியிருக்கும் திருவானைக்காப் பெருமானை எண்ணி,

    வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
    தேனைக்காவில் இன்மொழி தேவிபாகம் ஆயினான்
    ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
    ஏனைக்காவல் வேண்டுவோர்க்கு ஏதும் ஏதம் இல்லையே. [3. சம்பந்தர்]

    என்னும் பதிகம் ஓதித் துதித்து வலக்கைப் பெருவிரலை மடித்துக்கொண்டு, மற்ற விரல்களை நீட்டிக் கவிழ்த்துத் தண்ணீர் உள்ள குவளையை மூடித் திருவைந்தெழுத்தை எண்ணித் துதிக்கவும்.
    6. ஆத்ம சுத்தி [நீரை உட்கொள்ளுதல்]

    நடு மூன்று விரல்களாலும் மேற்கண்ட தண்ணீரை மூன்று முறை தலையின் மேல் தெளித்துக்கொண்டு, சிறிது நீரை உள்ளங்கையில் எடுத்து இறைவனை எண்ணிக்கொண்டு சிவ தீர்த்தமாக மனத்துள் கொண்டு மூன்று முறை உட்கொண்டு அடுத்து வரும் பாடலைச் சொல்லித் துதிக்கவும்.

    ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே;
    ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே;
    நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே; நீர்,
    வளி, தீ, ஆகாசம், ஆனார் தாமே;
    கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே;
    கோலப் பழனை உடையார் தாமே;
    சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு
    ஆலங்காடு உறையும் செல்வர் தாமே. – அப்பர்.
    7. [அ] திருநீற்றைத் தூய்மை செய்தல்

    திருநீற்றைப் பராசக்தியின் வடிவமாக எண்ணி சிந்தித்துத் திருநீற்றைச் சிறிது எடுத்துத் தலை, நெற்றி, உடல், முதலியவற்றில் பூசிக்கொள்ள வேண்டும். மேலும் சிறிது எடுத்து தொப்புழிலிருந்து கழுத்து வரையிலும் சிறிது நேர் கோடுகளாகப் பூசவும். இடது கையில் திருநீற்றை வைத்துக்கொண்டு வலக்கை மோதிர விரலால் சிறிது அதிலிருந்து எடுத்துத் தீய சக்திகளை விலக்க நிருதி மூலையில் [இடது தோளுக்கு மேல் பின்புறமாகத்] தெளித்து விடவும்.

    இடது உள்ளங்கையில் உள்ள திருநீற்றை வலக்கையால் மூடி வலது தொடைமேல் வைத்துக்கொண்டு, அடுத்து வரும் பாடலைப் பாடவும்.

    இராவணன் மேலது நீறு எண்ணத் தருவது நீறு
    பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு
    தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
    அராவணங் துந்திருமேனி ஆலவாயன் திரு நீறே. – [2.சம்பந்தர்]

    சிறிது நீர் விட்டுத் திருநீற்றைக் குழைத்து, தலை, நேற்றி, மார்பு, புயங்கள், இரண்டு முழங்கை, இரண்டு மணிக்கட்டு, தொப்பூழ், முழங்கால் இரண்டு, வலது – இடது விலாப்புறங்கள் இரண்டு, நடுமுதுகு, கழுத்து ஆகிய பதினாறு இடங்களிலும் இட்டுக் கொள்ளவும். நெற்றி, மார்பு, தோள்களில் ஆறு அங்குலமும், கழுத்து முழுவதும் கீழ்வரும் பாடல்களை சொல்லித் துதித்துக் கொண்டே திருநீறு அணிந்து கொள்ளவும். இதனால் தேகசுத்தி அடைகிறது.

    அ] சந்திரற் சடையில் வைத்த சங்கரன் சாமவேதியன்
    அந்தரத்து அமரர் பெம்மான் ஆன்நல் வெள்ளூர்தி யாந்தன்
    மந்திர நமச்சிவாயவாக நீறணியப் பெற்றால்
    வெந்தறும் வினையும் நோயும் வெவ்அழல் விறகிட்டன்றே [4. அப்பர்]
    ஆ] கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை
    மங்காமல் பூசி மகிழ்வீரே யாமாகில்
    தங்கா வினைகளும் சாரும் சிவகதி
    சிங்காரமான திருவடி சேர்வரே
    -திருமூலர்

    திருநீறு அணிந்த பிறகு கைகளை அலம்பி, அலம்பிய நீர் இடக்கை மூலம் வரும்படியாகச் செய்து இடக்கையை முஷ்டியாகப் பிடித்துக்கொண்டு பெருவிரலை மட்டும் நீட்டி அதன் வழியாகக் கையில் உள்ள நீர் வடிந்து கீழ் உள்ள பாத்திரத்தில் விழும்படியாக வலக்கை முஷ்டியைத் தாழ்த்தி மல்லாத்தி பிடித்துக்கொண்டு பெருவிரல் வழியாக வடியும் நீரைச் சிவத் தீர்த்தமாகப் பாவித்து இடக்கையின் விரல்களினால் ஏற்று, “சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே” என்று இறைவனைத் துதித்துக்கொண்டே மேலே மும்முறை தெளித்துக் கொண்டு வாயிலும் சிறிது விட்டு அருந்துதல் வேண்டும். இதனால் ஆத்மசுத்தி பெறுகிறது.
    7. [ஆ] திருநீறு அணிதல்

    திருநீறு இட வேண்டிய இடம் 16. இப்பதினாறும் இறைவனின் புறத் திருத்தொண்டாம், பதினாறிணையும் முறை தவறாது நிறைவேற்ற அன்புடன் இயற்றுதற்கே இவ்வுடல் என்பதனைக் குறிப்பதாகும்.

    அவை வருமாறு

    1. ஒழுக்கம், 2. அன்பு, 3. அருள், 4. ஆச்சாரம், 5. உபச்சாரம், 6. உறவு, 7. சீலம், 8. தவம், 9. தானம், 10. வந்தித்தல், 11. வணங்கல், 12. வாய்மை, 13. துறவு, 14. அடக்கம், 15. அறிவு, 16. அருச்சித்தல்.

    ஒழுக்கம், அன்பு, அருள், ஆச்சாரம், உபச்சாரம், உறவு, சீலம், வழுக்கிலாத் தவம், வந்தனங்கள், வந்தித்தல், வணங்கல், வாய்மை, அழுக்கிலாத் துறவு, அடக்கம், அறிவோடு அருச்சித்தல், ஆதி இழுக்கிலா அறங்கள் ஆனால் இறங்குவான் பணி அறங்கள். [சித்தியார்]
    திருச்சிற்றம்பலம்.

    8. உறுப்புகளைத் தொடுதல்

    “வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும், தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவா போற்றி”, என ஓதிக் கைகளைக் கூப்பித் தலை வணங்குக. இஃது அருளால் பெற்ற இவ்வுடலால் இறைவனின் அகத் திருத்தொண்டு இயற்றும் முறைமையைக் குறிப்பதாகும்.

    உறுப்புகளைத் தொடும் முறை

    வலக்கைப் பெருவிரல் நுனியை அணி விரல் [மோதிர விரல்] நடுவரையிற் சேர்த்து மற்றைய விரல்களை நீக்கி நமது உடலில் ஒன்பது உறுப்புகளையும் அவ்விரல் கொண்டு தொடுக.

    இவற்றுள் எட்டாவது எண்ணாகிய ஆக்கையைத் தொடுங்கால் இரு கைவிரல்களையும் தனித்தனி இணைத்துச் சிறிது குவித்துத் தலைமுதல் கால் வரை கட்டி, நெஞ்சின் நேர் வைத்துக் கும்பிடுக. 10, 11, 12, திருக்கண்ணிகளை அன்புடன் ஓதிக் கைகள் இரண்டையும் உச்சிமேற் குவித்துத் தொழுக. இம்மூன்றையும் இறை, உயிர், தளை என்னும் முப்பொருள் உண்மையைக் குறிக்கும்.

    1. உச்சி : தலைவனைத் தலையே நீ வணங்காய்.

    2. கண்கள் ; கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னைக்
    கண்களால் காண்மின் களோ.

    3 . செவிகள் : எரிபோல் மேனிப் பிரான் நிறம்
    எப்போதும் செவிகாள் கேண்மின்களோ

    4 . மூக்கு : வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீ முரலாய்.

    5. வாய் : பேய் வாழ் காட்டகத்து ஆடும்பிரான்
    தன்னை வாயே வாழ்த்து கண்டாய்,

    6. நெஞ்சு : மஞ்சாடும் மலைமங்கை மணாளனை
    நெஞ்சே நீ நினையாய்.

    7. கைகள் : பைவாய் பாம்பரை ஆர்த்த பரமனைக்
    கைகாள் கூப்பித் தொழீர்.

    8. ஆக்கை : அரனைப் போற்றி எண்ணாத இவ
    ஆக்கையாற் பயன் என்.

    9. கால்கள் : கோகரணம் சூழாக் கால்களாற் பயனென்.

    10. இறை : உற்றார் யார் உளரோ!
    உயிர் கொண்டு போம்பொழுது,
    குற்றாலத்துறை கூத்தன் அல்லால்
    நமக்கு உற்றார் யாருளரோ?

    11. உயிர் : இறுமாந்து இருப்பன் கொலோ?
    ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச்
    சிறுமான் ஏந்திதான் சேவடிக்கீழ்ச் சென்று
    அங்கு இறுமாந்து இருப்பன் கொலோ

    12. தளை : தேவனை என்னுளே தேடிக் கண்டு
    கொண்டேன் -[4. அப்பர்]

    திருச்சிற்றம்பலம்

     

    9. மந்திரசுத்தி
    பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை
    பிரிவிலா அடியார்க்கென்றும்
    வாராத செல்வம் வருவிப்பானை
    மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
    தீராநோய் தீர்த்தருளவல்லான் தன்னை
    திரிபுரங்கள் தீயெழத் திண்சிலைக் கைக்கொண்ட
    போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
    போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே
    – [5.அப்பர்]
    10. பிராணாயாமம்

    வலச்சுட்டு விரல் நடுவிரல் இரண்டையும் உள்ளே மடக்கிப் பெருவிரலால் வலப்பக்க மூக்கை மூடி “ஓம் சிவாய நம” என் ஐந்து முறை சொல்லி, இடப்பக்க மூக்கால் காற்றை உள்ளே இழுத்துக், காற்றை நிறுத்தி மோதிர விரலால் இடப்பக்க மூக்கை மூடி வலப்பக்க மூக்கால் காற்றை வெளிவிடவும். மீண்டும் இது போலவே இடப்பக்க மூக்கை மூடிக்கொண்டே ஐந்தெழுத்து மந்திரத்தை ஐந்து முறை சொல்லி வலப்பக்க மூக்கால் காற்றை உள்ளிழுத்து இடப்பக்க மூக்கால் வெளிவிடுக. இது போன்று இயன்றளவு செய்க.

    இது சமயம் தொப்புழுக்கு நான்கு விரல் இடம் கீழ் உள்ள இடமாகிய மூலாதாரம் என்னும் இடத்திலிருந்து குண்டலினி என்னும் சிவசக்தி எழுந்து மேல் நோக்கி மூலாதாரம், தொப்பூழ், மார்பு, கழுத்து, புருவமத்தி, உச்சி தலைக்குமேல் பன்னிரண்டங்குல அளவில் உள்ள இடம் ஆகிய உணர்ச்சி நிலையங்களில் எழுந்தருளி விளங்குவதாக எண்ணிப் பிறகு தலைக்கு மேல் இரு கைகளையும் கூப்பி வணங்கி மேற்கண்ட சிவசக்தியை அங்கிருந்து கூப்பிய கரத்தினூடாக, மார்புக்குக் கொணர்ந்து மார்பில் எழுந்தருளி விளங்குவதாகக்கொண்டு பஞ்சபுராணம் ஓதித் துதிக்க.

    11. பஞ்ச புராணம் துதித்தல்

    தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் ஆகிய ஐந்து நூல்களையும் பஞ்ச புராணம் என்று சொல்வது மரபு. வழிபாட்டின்போது குறைந்த அளவு மேற்கண்ட நூல்களில் ஒவ்வொன்றாக ஐந்து பாடல்களாவது பாடித் துதித்தல் வேண்டும். கூடுமானால் பத்தாம் திருமுறையாகிய திருமந்திரத்தில் ஒரு பாட்டும், ஆக பன்னிரு திருமுறைகளிலும் ஒவ்வொரு பாட்டாவது சொல்லித் தினந்தோறும் வழிபடுவது சைவருடைய கடமையாகும். மேற்குறிப்பிட்ட பன்னிரு திருமுறைகளும் தவறாமல் ஒவ்வொரு சைவர் இல்லத்திலும் இருக்க வேண்டுவன.

    தேவாரம்

    அ. தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடி
    காடு உடைய சுடலை பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
    ஏடு உடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
    பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே! – [சம்பந்தர்]

    திருவாசகம்

    ஆ. அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
    அன்பினில் விளைந்தஆ ரமுதே
    பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
    புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
    செம்மையே ஆய சிவபதம் அளித்த
    செல்வமே சிவபெரு மானே
    இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
    எங்கெழுந் தருளுவ தினியே. [8. மணிவாசகர்]

    திருவிசைப்பா

    இ. கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என்
    களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டு
    என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து)
    என்னையும் புணர்ப்பவன் கோயில்
    பண்பல தெளிதென் பாடிநின் றாடப்
    பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்
    செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
    [9. கருவூர்த்தேவர்]

    திருப்பல்லாண்டு

    ஈ. மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
    வஞ்சகர் போயகல
    பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
    புவனி யெல்லாம் விளங்க
    அன்னநடை மடவாள் உமைகோன்
    அடியோ முக்கருள் புரிந்து
    பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
    பல்லாண்டு கூறுதுமே.
    [9. சேந்தனார்]
    பெரிய புராணம்

    உ. நன்மை பெருகு அருள்நெறியே வந்தணைந்து நல்லூரின்
    மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்தெழும் பொழுதில்
    “உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்!” என்று அவர் தம்
    சென்னி மிசை பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.
    [10. சேக்கிழார்]

    வாழ்த்துப்பா

    ஊ. வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
    வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
    ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
    சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
    [3. சம்பந்தர்]
    12. ஜபம்

    மனதை புருவ மத்தியில் இறுத்திப் பத்மாசனத்தில் அமர்ந்த வண்ணம் குரு உபதேசித்த திருவைந்தெழுத்தை 108 தடவை மனத்திற்குள்ளாகவே எண்ணுக.

    13. தியானம்

    இறைவன் புருவ மத்தியில் ஒளி வடிவமாக விளங்குவதாக எண்ணி எந்த விதமான வேற்று எண்ணமும் இன்றி அமைதியாகச் சிவனைச் சிந்தித்து இருக்கவும். மேற்கண்டவாறு [அனுஷ்டானத்தை] வழிபாட்டை முடித்துக்கொண்டு புறத்தில் சிவ வழிபாடு தொடங்குதல் வேண்டும்.

    இத்துடன் நித்திய வழிபாடு முற்றுப்பெறும். சிவபூசை செய்வோர் இதற்குமேல் ஆன்மார்த்த மூர்த்தி வழிபாடு செய்தல் வேண்டும்.

    திருச்சிற்றம்பலம்.

    கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
    நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
    சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
    எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.

    – திருவேகம்ப மாலை, பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்)

    pic8
    ஆலய வரலாறு
    pic16
    ஆலயத்தின் உள்ளே
    pic9
    சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்
    pic10
    சிவலிங்கங்கள் தனி பிரகாரங்களில்
    சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்
    pic13
    சிவ பூஜை செய்ய தயார் நிலையில் இருக்கும் பக்தர்கள்
    pic17
    திரு. தங்க விசுவநாதன்
    மூலஸ்தான தெய்வத்திற்கு அபிஷேகம்

     


    THF: Shivarathiri (Erode Sri Mahimaliswarar Temple – 2013)
    Share