Tag: செண்பக ஜெகதீசன்

  • காக்கும் கடவுளாய்..

                   .

     செண்பக ஜெகதீசன்

    புதிது புதிதாய்க் கொடுப்பவன்

    போரிட வேலினை எடுப்பவன்,

    விதியை வேறாய் மாற்றுவான்

    வீட்டினில் ஒளியை ஏற்றுவான்,

    சதியை எளிதில் நைப்பவன்

    சாதனை செய்திட வைப்பவன்,

    பதியது செந்திலில் அருள்பவன்

    பணிந்திடு, காப்பான் முருகனே…!

     

    வங்கக் கடலலை வந்து தாலாட்டும்

    வாச மலர்கள் மலர்ந்து மணமூட்டும்,

    எங்குமே கூட்டம் கூடிக் கொண்டாட

    ஏழையும் உயர்வுற நின்று வாழவைப்பான்,

    திங்களைச் சூடிடும் ஈசன் திருமகன்தான்

    தீதெலாம் அகற்றிடும் திருமால் மருமகன்தான்,

    செங்கையில் வேலொடு அருளும் வேலவன்தான்

    செந்திலம் பதியெனும் இத்திருத் தலமதிலே…!

    படத்துக்கு நன்றி

    http://rajeswari-amman-wallpapers.blogspot.in/2011/01/lord-muruga-saravanna-hq-wallpapers.html


    Share
  • மனிதனாக்க…

    செண்பக ஜெகதீசன்         

     

    சுடச்சுடத் தங்கத்தை உருக்கி

    சூடிட நகைகள் செய்கிறோம்..

    அடித்துக் கல்லைச் செதுக்கி

    அழகு சிற்பம் செய்கிறோம்..

     

    அல்லல்தான் வந்து வாழ்வில்

    ஆளாக்குகிறது மனிதனை..

    அதுதெரியாமல் கிடந்து

    அழுது சாகிறாயே மனிதனே…!

    படத்துக்கு நன்றி

    http://dawn.com/2012/05/04/china-india-no-longer-bullish-for-gold/


     

    Share
  • குறளின் கதிர்களாய்…(1)

              செண்பக ஜெகதீசன்

     

    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

    உள்ளத் தனையது உயர்வு…!

                  -திருக்குறள்(ஊக்கமுடைமை)

     

    புதுக்கவிதையில் (என் பாணி)…

     

    தண்ணீருக்குத் தகுந்தபடி

    தாமரை உயரும், தாழும்..

     

    மனிதா உன்

    எண்ணம்போல தான்

    ஏற்றம் வரும் வாழ்வில்…!

     

    குறும்பாவாய்…

     

    தாமரை வளர்ச்சி தண்ணீரளவில்,

    மனிதனுக்கு அவன்

    மனம்போல்தான்…!

     

    புதுப்பாவில்…

     

    கதிரவனின் வெம்மைக்கரத்

    தீண்டுதலில் பதறித் தாழ்ந்து

    கண்விழிக்கிறது

    தண்ணீர்க்காதலனின் முயக்கத்தில் உயர்ந்து

    தன்னை மறந்திருந்த தாமரை..

     

    உயர்வு வானில் பறக்க

    ஏற்றதாய் இருக்கவேண்டும் மனிதனின்

    எண்ணச் சிறகுகள்…!

     படத்துக்கு நன்றி   

    http://centurystudios.blogspot.in/2011/08/30-lotus-blossom-chandelier.html

    Share
  • தமிழ்ப் புத்தாண்டில்…

     

    இத்தரை கணும் இன்பமெலாம்

    இரண்டாய், மேலாய்க் கிடைத்திடவே

    சித்திரை வந்தது சிறப்புடனே

    சீர்மிகு விஜய புத்தாண்டாய்,

    நித்தமும் இனிமேல் நந்நாளென

    நம்பியே உழைத்து நலம்பெறுவோம்,

    தத்துவம் இதுதான் தழைத்திடெனத்

    தமிழர் ஆண்டில் வாழ்த்துவமே…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    படத்திற்கு நன்றி:

    http://messages.365greetings.com/holiday/tamil-new-year/tamil-new-year-wishes.html

    Share
  • அருகில்தான்…

    செண்பக ஜெகதீசன்

    நாள் முதலில் உன்

    எதிர்பார்ப்பு,

    நாள் முடிவில் உன்

    அனுபவமானால்

    நல்லதுதான்- உன்

    அருகிலிருக்கிறான் ஆண்டவன்…!

    படத்துக்கு நன்றி

    http://murugan.org/research/kandiah.htm

    Share
  • அனுதினமும்…


        செண்பக ஜெகதீசன்

    வாரத்தில் ஒருநாள்

    விடுமுறை நாள்..

     

    மாதத்தில் ஒருநாள்

    சம்பள நாள்..

     

    வருடத்தில் ஒருநாள்

    பிறந்தநாள்..

     

    வாழ்க்கையில் ஒருநாள்

    இறந்திடும் நாள்..

     

    ஆனாலும்,

    அனுதினமும் மனிதர்பலர்

    அஞ்சியஞ்சி சாகிறாரே

    அது ஏன்…!

     படத்துக்கு நன்றி

    http://www.iappfind.com/app/411900526

    Share
  • அத்தனையும் இருந்தும்…

     

    செண்பக ஜெகதீசன்

     

     உடலில் வலு இருக்கிறது

    புலிக்கு-

    அடுத்தவரை அடித்துத்தின்ன..

     

    தப்பியோடத்

    தைரியம் இருக்கிறது

    மானுக்கு..

     

    குடிலவேலை செய்யும்

    குணம் இருக்கிறது

    குள்ள நரிக்கு..

     

    உடலை மறைத்து

    உள்ளே வைத்துக்கொள்ள

    ஓடு இருக்கிறது

    ஆமைக்கு..

     

    அத்தனையும் ஒன்றாய்ச் செய்ய

    ஆற்றல் இருக்கிறது

    மனிதனுக்கு..

    ஆனாலும் அடிக்கடி

    மட்டமாகிவிடுகிறானே

    மிருகங்களை விடவும்…!

     

    http://www.fanpop.com/clubs/wild-animals/images/2785495/title/big-cat-fight-wallpaper

    Share
  • மகளிர்தின வாழ்த்து…

     

     

    செண்பக ஜெகதீசன்…

     

    மாதவம் செய்து பிறந்தவரே

    மாதா வாகும் பெண்ணினமே,

    பாதகம் நிறைந்த பாரினிலே

    பண்பை வளர்க்கும் தாய்க்குலமே,

    சோதனை பலவாய் வந்தாலும்

    சொந்தம் காப்பது உன்செயலே,

    சாதனை பலவும் புரிந்திடவே

    ஜெகமே வாழ்த்திடும் இத்தினமே…!

     

    Share
  • சிரிப்பில்…

       செண்பக ஜெகதீசன்

    ஆளுக்கு ஆள் ஆயுள்,

    அளவிலுண்டு வேறுபாடு-

    கூடலாம், குறையலாம்..

     

    அதில் அவன்

    அழுதுகொண்டே பிறக்கிறான்

    அழுதுகொண்டே வாழ்கிறான்

    அழுதுகொண்டே சாகிறான்..

     

    ஆனால் இந்தப் பூக்கள்,

    சிலமணி நேரம் வாழ்ந்தாலும்

    சிரித்துக்கொண்டே இருக்கின்றன..

     

    புரிந்ததா மனிதனே,

    தெரிந்துகொள் பார்த்து-

    சிரித்து வாழ்

    சிரிக்க வாழாதே அழுது…!

     படத்துக்கு நன்றி

     http://stuffpoint.com/flower/image/104090/beautiful-iris-purple-flowers-picture/                                       

    Share
  • நம்பிக் கெடாதே…


     செண்பக ஜெகதீசன்

    ஆம்பிள்ளய அதிகமாத்தான் நம்பிக்கெடாதே

    அசிங்கப்பட்டு வாழ்க்கையிலே நொந்துவிடாதே,

    காம்பிருக்க சுளைவிழுங்கும் பிறவிகதாண்டி

    கண்மூடிப் போயிடாதே வேலியத்தாண்டி..

    (ஆம்பிள்ளய..)

     

    ஆயிரமாச் சத்தியங்கள் செய்திடுவாங்க

    அத்தனையும் சத்தியமாய் நம்பிவிடாதே,

    பாயும்புலி போலவேதான் பதுங்கிடுவாங்க- தனியே

    பக்குவமாய்ப் பேசியபின் ஒதுங்கிடுவாங்க..

     

    ஓவியமே நீயெனத்தான் கதைவிடுவாங்க

    உயிரக்கூட விடுவேண்ணு வாயடிப்பாங்க,

    தேவதையே நீதானுண்ணு ஏத்திடுவாங்க- பின்னே

    தேவையில்ல நீயெனவே மாத்திடுவாங்க..

    (ஆம்பிள்ளய..)

     

    சொத்துசொகம் வேணாமுண்ணு சொல்லிடுவாங்க

    சொத்தெல்லாம் நீதாண்ணு சுத்திடுவாங்க,

    மத்ததெல்லாம் முடிஞ்சபின்னே மாறிடுவாங்க- உன்

    மானமெல்லாம் போகக்கரை ஏறிடுவாங்க..

     

    பேப்பரிலே பாப்பதெல்லாம் பொய்யிணுவாங்க

    பேய்பிடிச்சி நீயலைய விட்டீடுவாங்க,

    ஆப்பசைச்ச கொரங்குபோல மாட்டிக்கிடாதே- அதுக்கு

    அப்புறமா அவப்பெயரச் சூட்டிக்கிடாதே..

    (ஆம்பிள்ளய..)

     

    அப்பாஅம்மா சொல்லக்கேக்கத் தவறிவிடாதே

    ஆசைப்பட்டு வாழ்க்கையிலே இடறிவிடாதே,

    எப்பவுமே நல்லதையே மறந்துவிடாதே- இதை

    ஏத்துக்கிட்டா வாழ்க்கையுந்தான்  சிறந்துவிடாதோ…

    (ஆம்பிள்ளய..)

    படத்துக்கு நன்றி

    http://cutcaster.com/photo/901762805-Happy-Indian-woman/

     


    Share
  • சித்திரம் சிறக்க…


     செண்பக ஜெகதீசன்

    அவரவர்க்கும் இருக்குது

    ஆயிரம் வேலை- அதில்

    அடுத்தவர் நிலைமீது

    ஆகுமா கவலை,

     

    சுவரின்றி அழகாய்ச்

    சித்திரம் எழுதவா- அது

    சுவடின்றி அழிவதில்

    சுவையென்ன வாழுது..

     

    கவலையை மறந்திடக்

    கைவசம் யுக்திகள்- அதைக்

    காட்டிடத் தோன்றுதே

    கண்ணிலே பக்திகள்,

     

    சவலைப் பிள்ளையாய்ச்

    சமுதாயம் ஆனதே- அதைச்

    சீரிடா நாட்டிலே

    சிதையுதே மானமே…!

     

     http://www.istockphoto.com/stock-photo-20966885-sad-worried-young-man-with-hands-on-face.php               

    Share
  • அவனை மறக்காதே…

    செண்பக ஜெகதீசன்

    ஆடுகள் அடித்துக்கொண்டால்,
    அதிலே ஆதாயம்
    அடுத்துவரும் ஓநாய்களுக்குத்தான்..

    காய்ந்த எலும்பைக் கடிக்கும்
    வேட்டைநாய் ருசித்திடும் இரத்தம்
    வேறல்ல-
    அதனுடையதுதான்..

    தனிமரங்களின் கூட்டம்தான்
    தோட்டம்-
    தாக்குதல் அதிகம்தான் தனிமரத்திற்கு..

    நாணல்கள் வளைவது
    நாணமுற்று அல்ல-
    நாளை வாழ்வை
    நலமுடன் தொடரத்தான்..

    நாணலானாலும், நெடுமரமானாலும்,
    ஆடுகளானாலும்,
    அடித்திடும் ஓநாயானாலும்,
    படைத்தவன் இறைவன்..
    அவனை மறந்திடில்,
    ஆவது ஒன்றுமில்லை…!

    படத்துக்கு நன்றி

    http://templetonpress.org/content/hand-god   

    Share
  • அந்தக் கரங்கள்…


    செண்பக ஜெகதீசன் 

    இறைவனைத் தேடி

    இடைவிடாது மந்திரம் ஓதி

    இசைக்கும் வாயைவிட,

    இன்னலுறும் மனிதனைத் தேடி

    இயன்றவரை உதவிடும் கரங்கள்

    உயர்ந்தவைதான்..

    உகந்தவைதான்-

    இறைவன் பற்றிட…!

    படத்துக்கு நன்றி

     http://alittlebitdifferent.wordpress.com/2011/09/29/just-the-hands/


    Share
  • இப்படியானால் இதயம்…கவிதை

    செண்பக ஜெகதீசன்

    இப்படியானால் இதயம்…

    இதயம் குளிர்கையில்
    இயல்பாய் வருவது நன்றி..

    இதயம் இரும்பானால்
    இருப்பதைப் புதைக்கும் கொன்று..

    இதயம் கனிவானால்
    இறைவன் அருள்வான் நின்று..

    இதயம் மலரானால்
    இருக்கலாம் உலகை வென்று…!

     

    Share
  • இந்தச் சிரிப்பு…

     

     

    செண்பக ஜெகதீசன்

     

     

    மழையைத்தானே வேண்டினோம்..

    இடையே ஏனிந்த

    இடி வந்து மின்னலுடன்

    இன்னல் தருகிறது..

     

    நல்லது நடக்கும்போது

    நாலு கெட்டது

    நடந்துதான் தீரும்..

    இப்படிச் சொல்லி

    இடியாய்ச் சிரிக்கிறான்

    இறைவன்…!

     

    படத்திற்கு நன்றி:

    http://dzineblog.com/2011/08/28-exciting-photographs-of-weather-storms-for-inspiration.html

    Share