Tag: நாங்குநேரி வாசஸ்ரீ

  • நாலடியார் நயம் – 29

    நாலடியார் நயம் – 29

    நாங்குநேரி வாசஸ்ரீ

    29. இன்மை

    பாடல் 281

    அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
    பத்தெட்டு உடைமை பலருள்ளும் பாடெய்தும்
    ஒத்த குடிப்பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
    செத்த பிணத்திற் கடை.

    காவி தோய்ந்த ஆடையை இடுப்பில்
    கட்டி வாழ்ந்தாலும் பத்தோ எட்டோ
    கொண்டவராயின் பலருக்கிடையிலும்
    கிடைக்கும் மதிப்பு, இல்லையேல் உயர்
    குடிப்பிறப்பு இருப்பினும் ஒன்றுமில்லார்
    கிடக்கும் உயிரற்ற பிணத்தைவிட
    கீழானவராகவே கருதப்படுவார்.

    பாடல் 282

    நீரினும் நுண்ணிது நெய்யென்பர், நெய்யினும்
    யாரும் அறிவர் புகைநுட்பம்; – தேரின்
    நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும்
    புகற்கரிய பூழை நுழைத்து.

    நீரைவிட நெய் நுட்பம் நெய்யைவிட புகை
    நுட்பமென அனைவரும் அறிவர் ஆராய்ந்தால்
    கையேந்துதலெனும் துன்பமுள்ள வறுமையாளன்
    கடும்புகையும் புகுதற்கரிய துவாரத்திலும் நுழைந்து
    சென்று செல்வரை நாடி யாசிப்பான்.

    பாடல் 283

    கல்லோங்கு உயர்வரைமேல் காந்தள் மலராக்கால்
    செல்லாவாம் செம்பொறி வண்டினம்; – கொல்லைக்
    கலாஅற் கிளிகடியும் கானக நாட!
    இலாஅஅர்க் கில்லை தமர்.

    கொல்லைகளில் கல்லால் கிளிகளை ஓட்டும்
    காடுகள்சூழ் நாட்டுடை வேந்தனே! பெரும்
    கற்களையுடை மலையின்மேல்
    காந்தள் மலராதபோது செம்புள்ளிகளுடை
    வண்டினங்கள் அங்கு செல்லா அதுபோல்
    வேண்டிய பொருள் இல்லாதாருக்கு
    விரும்பிய உறவினர் இல்லை.

    பாடல் 284

    உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல்
    தொண்டரா யிரவர் தொகுபவே; – வண்டாய்த்
    திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார்
    ஒருவரும் இவ்வுலகத் தில்.

    பொருளிருக்கும் காலத்தில் காக்கைக்கூட்டம்
    போல் தொண்டு செய்ய ஆயிரக்கணக்கில் கூடுவர்
    பொருளற்ற வறுமை நிலையில் வண்டுபோல்
    பலதிசையில் ஒருவேளைச்சோற்றுக்கு அலையும்
    பொழுது தீதில்லாது வாழ்கிறீரா (நலமா?) என வினவுவார்
    பாரினிலே யாருமில்லை.

    பாடல் 285

    பிறந்த குலம்மாயும் பேராண்மை மாயும்
    சிறந்ததம் கல்வியும் மாயும் – கறங்கருவி
    கன்மேற் கழூஉம் கணமலை நன்னாட!
    இன்மை தழுவப்பட் டார்க்கு.

    அருவிகள் கல்மேல் வீழ்ந்தொலித்து
    அதன்மாசுபோகக் கழுவும் மலைநாட்டுடை
    அரசனே! உலகில் வறுமை கொண்டவர்க்கு
    அவர் பிறந்த குலப்பெருமை கெடும்
    அரும்பெரும் வல்லமை கெடும்
    அளவிற் சிறந்த கல்வியும் கெடும்.

    பாடல் 286

    உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு
    உள்ளூர் இருந்தும்ஒன்று ஆற்றாதான்; – உள்ளூர்
    இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
    விருந்தினன் ஆதலே நன்று.

    வயிற்றுப் பசி மிகுந்து துன்புற்று தம்மிடம்
    விரும்பி வந்தார்க்கு உள்ளூரிலிருந்தும் ஒன்றும்
    வழங்க இயலாதவன் அங்கேயே இருந்து தன்
    வாழ்நாளை வீணாய்க் கழித்து உயிர்விடாது
    வேற்றூர்க்குத் தான் சென்று மற்றவருக்கு
    விருந்தாளியாய் இருப்பதே நல்லது.

    பாடல் 287

    நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததம்
    கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; – கூர்மையின்
    முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும்
    அல்லல் அடையப்பட் டார்.

    முல்லையரும்புகளை வருத்தும் பற்களை உடையவளே!
    மண்ணுலகில் வறுமை எனும் துன்பம் சேரப்பெற்றவர் தம்
    மேன்மைக் குணங்களையே அல்லாமல் புத்தி கூர்மையையும்
    மற்ற சிறப்புக்களனைத்தையும் ஒருசேர இழப்பர்.

    பாடல் 288

    இட்டாற்றுப் பட்டொன்று இரந்தவர்க்கு ஆற்றாது
    முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின்
    நெட்டாற்றுச் சென்று நிரைமனையில் கைந்நீட்டும்
    கெட்டாற்று வாழ்க்கையே நன்று.

    வறுமைக் குழியில் விழுந்து துயருற்று
    வருபவர்க்கு யாசிக்கும் பொருளைக் கொடுக்க
    முடியாது உள்ளூரில் வருந்தி வாழ்தலைவிட
    முயன்று நெடுந்தூரம் நடந்து வரிசையான
    வீடுகளில் கை ஏந்தி இரந்து உண்ணும் கெட்ட
    வழியில் வாழ்வதே நலம்.

    பாடல் 289

    கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
    அடகு பறித்துக்கொண் டட்டுக் – குடைகலனா
    உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
    துப்புரவு சென்றுலந்தக் கால்.

    அனுபவிக்கப்படும் பொருட்கள் நீங்கி வறுமையால்
    அல்லலுறும்போது பொற்கடகம் அணிந்த தம்
    கைகளால் கீரைகளைப் பறித்துச் சமைத்து பனங்
    காய்களில் நுங்கெடுத்தபின் துளையுள்ளது போலும்
    பாத்திரத்தில் உப்பில்லாத வெந்த அக்கீரையைப்
    புசித்து மன ஊக்கங்கெட்டு வாழ்வர்.

    பாடல் 290

    ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம்
    பூத்தொழி கொம்பின்மேல் செல்லாவாம் – நீர்த்தருவி
    தாழா உயர்சிறப்பின் தண்குன்ற நன்னாட!
    வாழாதார்க் கில்லை தமர்.

    நல்ல தன்மையுடை அருவிகள் குறையாத
    நற்சிறப்புடை குளிர் மலைநாட்டு அரசனே!
    நிறைந்த புள்ளிகளுடை வண்டினம்
    நன்கு பூத்துதிர்ந்த கொம்பினை விருப்பத்துடன்
    நாடிச் செல்லமாட்டா அதுபோல் பொருளுடன்
    நல்வாழ்வு வாழாதார்க்கு உறவினர் இல்லை.

    Share
  • நாலடியார் நயம் – 28

    நாலடியார் நயம் – 28

    நாங்குநேரி வாசஸ்ரீ

    28. ஈயாமை

    பாடல் 271

    நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால்
    அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்; – அட்டது
    அடைந்திருந்து உண்டொழுகும் ஆவதில் மாக்கட்கு
    அடைக்குமாம் ஆண்டைக் கதவு.

    தம்மிடமுள்ள பொருளால் தாம் சமைத்த உணவை
    தன் நண்பருக்கும் நண்பரல்லாதாருக்கும் பங்கிட்டுத்
    தாமும் உண்பதே சமைத்து உண்பதாம்
    தாம் சமைத்த உணவைக் கதவைத் தாழிட்டு
    தன் வீட்டுனுள் தாம் மட்டும் உண்டு வாழும்
    தக்க குணமற்றவர்களுக்கு உட்புகமுடியாவண்ணம்
    தேவ உலகத்துக் கதவுகள் அடைக்கப்படும்.

    பாடல் 272

    எத்துணை யானும் இயைந்த அளவினால்
    சிற்றறஞ் செய்தார் தலைப்படுவார்; – மற்றைப்
    பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார்
    அழிந்தார் பழிகடலத் துள்.

    எவ்வளவாயினும் தம்மால் முடிந்த சிறிய அளவில்
    எத்தகு தருமமாவது செய்தவர் மேன்மையடைவர்
    எல்லாப் பெருஞ்செல்வமும் சேர்ந்தபின்னும்
    என்றாவது ஒருநாள் தருமம் செய்யலாம்
    என எண்ணி இருப்போர் கடல் சூழ்ந்த உலகத்தாரால்
    எக்காலமும் பழிக்கப்பட்டு கெட்டழிவார்.

    பாடல் 273

    துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்று ஈகலான்
    வைத்துக் கழியும் மடவோனை – வைத்த
    பொருளும் அவனை நகுமே உலகத்து
    அருளும் அவனை நகும்.

    தாமும் சேர்த்த பொருளை அனுபவிக்காது
    துறவிகளுக்கும் ஒன்றும் ஈயாது செல்வத்தைத்
    தக்கவைத்து இறந்து போகும் அறிவிலானைத்
    தகுந்த வழியில் நன்கு பயன்படுத்தவில்லையெனத்
    தேடிவைத்த பொருள் நோக்கிச் சிரிக்கும்.

    பாடல் 274

    கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்குடை
    உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் – இல்லத்து
    உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால்
    ஏதிலான் துய்க்கப் படும்.

    அடுத்தவர்க்குக் கொடுப்பதையும் தான் அனுபவிப்பதையும்
    அறியாத லோப குணமுடையானடைந்த பெருஞ்செல்வம்
    அவர்தம் வீட்டில் பிறந்த அழகிய கன்னிப்பெண்ணை
    அவளுக்கேற்ற பருவ காலத்தில் பிறர் அனுபவித்தல் போல
    அயலானால் அனுபவிக்கப்படும்.

    (பிறரைப் பற்றிச் சிந்தியாது, இறக்கமற்று சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகுபார்ப்பதும், கஞ்சத்தனமும் லோபகுணம் எனப்படும்.)

    பாடல் 275

    எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
    அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர்
    மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
    கழிநல் குரவே தலை.

    அலைகள் மோதுகின்ற கடலிலிருந்தாலும்
    அதன்நீர் குடிக்கப் பயன்படாததால் மக்கள்
    அடிக்கடி நீர்வற்றும் சிறு கிணற்றின் ஊற்றையே
    அலைந்துகண்டு பருகுவர் அதுபோல்
    அறம் செய்து மறுமை இன்பத்தை நாடுதலை
    அறியாதோரின் செல்வத்தை விட
    அறிவுடைச் சான்றோரின் வறுமை மேல்.

    பாடல் 276

    எனதெனது என்றிருக்கும் ஏழை பொருளை
    எனதெனது என்றிருப்பன் யானும் – தன தாயின்
    தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்
    யானும் அதனை அது.

    எப்போதும் அறிவில்லாமூடன் தான் சேர்த்த பொருளை
    என்னுடையது என்னுடையது எனச் சொல்லியிருப்பான்
    எனது எனது என நானும் அப்பொருளை எண்ணியிருப்பேன்
    எப்படியெனில் அவன் அப்பொருளைத் தானும் அனுபவிக்காது
    எவருக்கும் கொடுக்காது இருப்பதுபோல் நானும் அதேபொருளை
    எடுத்து அனுபவிக்காது யாருக்கும் கொடுக்காது இருக்கிறேன்.

    பாடல் 277

    வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;
    இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் – உழந்ததனைக்
    காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
    யாப்புய்ந்தார் உய்ந்த பல.

    பிறருக்கு ஈயாச் செல்வந்தரை விட வறுமையுற்றோர்
    பல துன்பத்தினின்றும் தப்பியவராய்க் கொள்ளப்படுவர்
    பொருளிழந்தார் என உலகோர் பழிப்பதிலிருந்தும்
    பலவாறு வருந்தி அப்பொருளைக் காப்பதிலிருந்தும்
    புதைத்து மறைக்க நிலத்தைத் தோண்டுவதிலிருந்தும்
    பாதுகாப்பாய் கைவலிக்கக் கெட்டியாய்ப் பிடித்தலினின்றும்
    போன்று அவ்வறியவர் தப்பினவை பல உண்டு.

    பாடல் 278

    தனதாகத் தான்கொடான்; தாயத் தவரும்
    தமதாய போழ்தே கொடாஅர் – தனதாக
    முன்னே கொடுப்பின் அவர்கடியார் – தான்கடியான்
    பின்னை அவர்கொடுக்கும் போழ்து.

    தன்னுடையதாய்ப் பொருள் உள்ளபோது லோபி
    தானும் பிறருக்குக் கொடுக்க மாட்டான் பின்னர்
    தமதான காலத்தில் பங்காளிகளும் கொடுக்க இசையார்
    தன்னுடையதாயிருந்த போது அவன் கொடுப்பதைத்
    தடுத்திருக்க மாட்டார் அவனின் பங்காளிகள் அவர்கள்
    தருவதையோ இறந்தபின் அவனாலும் தடுக்க இயலாது பின்
    தந்து பயன்பெறாது இருவரும் இருந்ததன் காரணம் யாதோ?

    பாடல் 279

    இரவலர் கன்றாக ஈவார் ஆவாக
    விரகிற் சுரப்பதாம் வன்மை – விரகின்றி
    வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக்
    கொல்லச் சுரப்பதாங் கீழ்.

    கேட்பவர் கன்றாக இருக்க
    கொடுப்பவர் பசுவாக இருந்து
    உற்சாகத்துடன் கொடுப்பதே
    உயர்ந்த கொடையாம் அவ்வாறன்றி
    வலியவர் அடித்தபின் மனமின்றி
    வருந்திப் பால் தரும் பசுபோல்
    வல்லோர் பல சூழ்ச்சிசெய்து
    வற்புறுத்தித் துன்புறுத்தியபின்
    கொடுப்பது கீழ்மக்கள் இயல்பு.

    பாடல் 280

    ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளைக்
    காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் – காத்தல்
    குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு
    உறைபதி மற்றைப் பொருள்.

    பொருளைச் சம்பாதிப்பதும் துன்பம்
    பாதுகாத்தலும் மிகுந்த துன்பம்
    பாதுகாத்த பொருள் அழிந்தால்
    பெருந்துன்பம் ஆதலில் அப்பொருள்
    பலவித துன்பத்துக்கும் இருப்பிடமாம்.

    Share
  • நாலடியார் நயம் – 27

    நாலடியார் நயம் – 27

    நாங்குநேரி வாசஸ்ரீ

    27. நன்றியில் செல்வம்

    பாடல் 261

    அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும்
    பொரிதாள் விளவினை வாவல் குறுகா;
    பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம்
    கருதுங் கடப்பாட்ட தன்று.

    அதிகமாய்ப் பழுத்திருந்தாலும் பொரிந்த
    அடி மரத்தையுடை விளாமரத்தை
    அருகிலுள்ளதென எண்ணி
    அண்டாது வௌவால் அதுபோல்
    அருகிலிருப்பினும் பெருமையிலாரின்
    அருஞ்செல்வம் அவரினும் வறியவர்
    அதனால் பயனுறுவர் என நினைப்பதற்கு
    அற்ற தன்மை கொண்டது.

    பாடல் 262

    அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும்
    கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால்
    செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை
    நள்ளார் அறிவுடை யார்.

    அள்ளிக்கொள்ளத்தக்க சிறு
    அரும்புகள் இருப்பினும் சூடத்தக்கது
    அல்ல எனக் கள்ளிச்செடி மேல்
    ஆர்வமாய் கை வைக்க மாட்டார்
    அதுபோல் பெருஞ்செல்வம்
    அமைந்தவராயினும் அற்பரை
    அவர்தம் செல்வம் பயன்படாதென்று
    அறிவுடையோர் விரும்பிச்சேரார்.

    பாடல் 263

    மல்கு திரைய கடற்கோட்டு இருப்பினும்,
    வல்லூற்று உவரில் கிணற்றின்கண் சென்றுண்பர்;
    செல்வம் பெரிதுடைய ராயினும் சேட்சென்றும்
    நல்குவார் கட்டே நசை.

    மிகு அலைகளையுடை கடற்கரையிருப்பினும்
    மக்கள் தோண்டச் சுரக்கும் உப்புச்சுவையற்ற
    கிணற்றுநீரைத் தேடிப்பருகுவர் அதுபோல்
    மிக்க செல்வம் உடையவர் அருகேயிருப்பினும்
    மற்றவர்க்குக் கொடுக்க விரும்பாத அவரை
    விடுத்துத் தூரத்தே சென்று கொடுப்பவரிடத்தில்
    விரும்பிக்கேட்டுப் பெறுவர்.

    பாடல் 264

    புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
    உணர்வ துடையார் இருப்ப – உணர்விலா
    வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே
    பட்டும் துகிலும் உடுத்து.

    கடல்சூழ் இவ்வுலகில் செல்வத்தின் புண்ணியம்
    கற்ற அறிவுக்குரிய புண்ணியத்தினின்று வேறாம்
    கல்வி அறிவுடையார் ஒன்றுமில்லாது வறுமையுற்றிருக்க
    கல்வியறிவிலா பனவட்டையும் வழுதுணங்காயும்போலும்
    கீழான அற்பர் பட்டும் பருத்தியும் உடுத்தி வாழ்கிறார்களே!

    பாடல் 265

    நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
    கல்லார்க்கொன்று ஆகிய காரணம் – தொல்லை
    வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்!
    நினைப்ப வருவதொன் றில்.

    வேல் போலும் நீண்ட கண்ணுடையவளே!
    வையகத்தில் அறிவும் பண்புமுடை நல்லவர்
    வறியராய் இருக்கக் கல்லாமதிகெட்டோர் செல்வராய்
    வாழுதலின் காரணம் எப்படி ஆராய்ந்தாலும் பழைய
    வினைப்பயனன்றி வேறொன்றுமில்லை.

    பாடல் 266

    நாறாத் தகடேபோல் நன்மலர்மேல் பொற்பாவாய்!
    நீறாய் நிலத்து விளியரோ – வேறாய
    புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும்
    நன்மக்கள் பக்கம் துறந்து.

    நறுமணமற்ற புற இதழைப்போல
    நல்ல தாமரையில் இருக்கும்
    பொன்னின் பதுமை போலும் திருமகளே! நீ
    பொன்போலே நன்மக்களைத் துறந்து
    கீழ்மக்களைச் சேருகின்றாயதனால்
    இப்புவியில் சாம்பலாகி அழிந்துபோ!

    பாடல் 267

    நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ;
    பயவார்கண் செல்வம் பரம்பப் – பயின்கொல்
    வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே
    நயவாது நிற்கு நிலை.

    வேல் போலும் கண்ணை உடையவளே!
    வழங்கி உதவும் குணமுள்ளோரிடமுள்ள
    வறுமை வெட்கமில்லாததோ? பிறருக்கு
    வழங்காத அற்பரிடம் உள்ள செல்வம்
    விட்டு நீங்காது ஒட்டிக்கொள்ளும் பிசினோ?
    வறுமையும் செல்வமும் ஆகிய இவ்விரண்டும்
    வழங்கும் நல்லவரிடமும் அற்பரிடமும்
    விரும்பத்தகா முறையில் நிற்கும் தன்மைகண்டு
    வியப்பு கொள்வாய் நீ.

    பாடல் 268

    வலவைகள் அல்லாதார் காலாறு சென்று
    கலவைகள் உண்டு கழிப்பர் – வலவைகள்
    காலாறுஞ் செல்லார் கருனையால் துய்ப்பவே
    மேலாறு பாய இருந்து.

    பேய்த்தனமில்லா மானமுடையவர் வறுமையுற்றபோதும்
    பெருந்தொலைவு நடந்து சென்று சிறுதொழில் செய்து
    பெற்ற கலவைச் சோற்றை உண்டு காலங்கழிப்பர்
    பேய்த்தனமுள்ள இழிகுணமுள்ளோர் வியர்வை
    பெருகி வழிய வீட்டிற்குள் இருந்து உழைப்பின்றி
    பொரிக்கறியுடன் கூடிய உணவைத் தாமே உண்பர்.
    (பேய்த்தனமென்பது இழிதொழில் செய்தலும் பிறரை வருத்துதலையும் குறிக்கிறது.)

    பாடல் 269

    பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட
    மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்று குக்கும்;
    வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்
    வண்மையும் அன்ன தகைத்து.

    பொன் போலும் நிறமுடை செந்நெற் பயிர்
    பொதிந்திருக்கும் கதிர்களுடன் வாடி நிற்க
    மின்னல் விளங்கும் மேகம் அங்கே
    பொழியாது கடலுள் பெய்துவிடுமதுபோல்
    அறிவற்றார் மிக்க செல்வத்தைப் பெற்றால்
    அவர் கொடையும் அத்தன்மைத்தாம்.

    பாடல் 270

    ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
    ஓதி யனையார் உணர்வுடையார்; – தூய்தாக
    நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும்
    நல்கூர்ந்தார் ஈயா ரெனின்.

    பகுத்தறிவில்லாதார் கற்றவராயினும் கல்லாதவரே
    பகுத்தறிவுள்ளோர் கல்லாராயினும் கற்றவரே
    பிறரிடம் தம் வறுமையிலும் இரவாதவர் செல்வந்தரே
    பாவப்பட்ட வறியோர்க்கு உதவாத செல்வந்தரும் வறியவரே.

    Share
  • நாலடியார் நயம் – 26

    நாலடியார் நயம் – 26

    நாங்குநேரி வாசஸ்ரீ

    26. அறிவின்மை

    பாடல் 251

    நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை
    பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; – எண்ணுங்கால்
    பெண்ணவாய் ஆணிழந்த பேடி அணியாளோ,
    கண்ணவாத் தக்க கலம்.

    பெண்ணியல்பு மிக்கு ஆணியல்பு இழந்த
    பேடியும் கண் விரும்பிக் காணத்தக்க அணிகளை
    அணியாளோ? ஆராய்ந்தால் நுட்பமான
    அறிவின்மையே உண்மையில் வறுமையாம்
    அது உடைமையே மிகப்பெரும் செல்வமாம்.

    பாடல் 252

    பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
    அல்லல் உழப்பது அறிதிரேல் – தொல்சிறப்பின்
    நாவின் கிழத்தி உறைதலால் சேரானே
    பூவின் கிழத்தி புலந்து.

    பலவித நிறைந்த கேள்விகளின்
    பயனை உணர்ந்த நல்லறிஞர்
    தம் பெருமைகெட்டு வறுமையால்
    துன்புறும் காரணம் அறிய விரும்பினால்
    கூறுகிறேன் கேளுங்கள்! பழஞ்சிறப்புடை
    கலைமகள் வாசம் செய்தலால் பூவில் உறையும்
    திருமகள் வெறுப்புற்று அந்நல்லவரிடம் சேராள்.

    பாடல் 253

    கல்லென்று தந்தை கழற அதனையோர்
    சொல்லென்று கொள்ளாது இகழ்ந்தவன் – மெல்ல
    எழுத்தோலை பல்லார்முன் நீட்டவிளியா
    வழுக்கோலைக் கொண்டு விடும்.

    தந்தை கல்வி கற்கச் சொல்லியும் அச்சொல்லைத்
    தள்ளி மதியாது கல்லாமல் இருந்தவன்
    பலர் முன் மெதுவாய் எழுத்தோலையைப்
    படிக்கச் சொல்லி நீட்டும்நேரம் வெகுண்டு
    தாக்கத் தடிகோலைக் கையிலெடுப்பான்.

    பாடல் 254

    கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
    நல்லறி வாளர் இடைப்புக்கு – மெல்ல
    இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
    உரைப்பினும் நாய்குரைத் தற்று.

    கல்வி கற்காமலேயே வளர்ந்த ஒருவன்
    கற்ற நல்லறிவாளர் அவைபுகுந்து
    சும்மா இருந்தாலும் நாய் இருந்தது போலாம்
    சும்மாயிராது பேசினும் நாய் குரைத்தது போலாம்.

    பாடல் 255

    புல்லாப்புன் கோட்டிப் புலவர் இடைப்புக்குக்
    கல்லாத சொல்லும் கடையெல்லாம் – கற்ற
    கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல்
    படாஅ விடுபாக் கறிந்து.

    அறிவோடு பொருந்தாப் புலவர்
    அவையில் புகுந்து தாம் கல்லாததையும்
    அற்பர் எடுத்துரைப்பர் தாம் கற்றதைக்கூட
    அடுத்தவர் கேட்டால் பொருளோடு பொருந்தாது
    அமைந்துவிடுமோ என எண்ணி
    ஆராய்ந்து சிந்திக்காது சொல்லார்
    அறிவுடையார்.

    பாடல் 256

    கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
    மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
    வற்றிய ஓலை கலகலக்கும், எஞ்ஞான்றும்
    பச்சோலைக்கு இல்லை ஒலி.

    நூல்களைப் படித்து உட்பொருளை அறிந்த
    நாவினையுடைப் புலவர் பேசினால் பிழை
    நேருமோ எனப் பயந்து கண்டபடி பேசார்
    நூலறிவற்றவர் மனம்போனபடி பேசுவர்
    நன்குயர்ந்த பனைமரத்தின் உலர் ஓலைகள்
    நாளும் கலகலவென ஒலி எழுப்பும்
    நல்ல பச்சை ஓலை எப்போதும் ஒலிப்பதில்லை.

    பாடல் 257

    பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்;
    நன்றறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்;
    குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து
    சென்றிசையா வாகும் செவிக்கு.

    பன்றியின் கூழ்வார்க்கும் தொட்டியில்
    பழுத்தினிக்கும் மாங்கனிச்சாற்றை ஊற்றுவது
    போலாம் நன்மையறியா மாந்தரிடம் நல்லறவழி
    பற்றிப் பேசுதல் குன்றின் மேலடிக்கப்படும்
    முளைக்குச்சியின் நுனி சிதைந்ததனால்
    மலைக்குன்றில் இறங்காததுபோல் அறவுரையும்
    அவர்தம் காதுகளின் உள் நுழையாது சிதறிப்போகும்.

    பாடல் 258

    பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
    வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று
    கோலாற் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லா
    நோலா உடம்பிற்கு அறிவு.

    பாலால் கரியைக் கழுவிப் பல நாள்
    உலர்த்தினும் வெண்மை பெறாது அதுபோல்
    உறும் கோலால் அடித்துக் கூறினும்
    உற்ற புண்ணியம் இல்லாதோன்
    உடம்பில் அறிவு புகாது.

    பாடல் 259

    பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
    இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், – இழிந்தவை
    தாங்கலந்த நெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த்
    தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.

    தேனைப் பொழிந்து நறுமணம் வீசினும்
    தேடிச் செல்லாது ஈ அத்தேனை உண்ண
    தகுதியற்ற இழிகுணம் கொண்ட மனத்தோர்க்கு
    தக்க பெரியோரின் தேன்போல் இனிக்கும்
    தெளிவான சொற்கள் தரும் பயன்தான் என்ன?

    பாடல் 260

    கற்றார் உரைக்கும் கசடறு நுண்கேள்வி
    பற்றாது தன்னெஞ்சு உதைத்தலால்; – மற்றுமோர்
    தன்போல் ஒருவன் முகநோக்கித் தானுமோர்
    புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.

    கற்றவர் சான்றோர் அவையில் உரைக்கும்
    குற்றமற்ற நுட்பமான கருத்துக்களைக்
    கொள்ளாது தன் நெஞ்சம் உதைத்துத் தள்ளுவதால்
    கீழ்மகன் தன் போலும் ஒரு அற்பனின் முகம் நோக்கி
    அதிகம் தெரிந்தவன்போல் தானும் பேசத் தொடங்குவான்.

    Share
  • நாலடியார் நயம் – 25

    நாலடியார் நயம் – 25

    நாங்குநேரி வாசஸ்ரீ

    25. அறிவுடைமை

    பாடல் 241

    பகைவர் பணிவிடம் நோக்கித் தகஉடையார்
    தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய்
    இளம்பிறை ஆயக்கால் திங்களைச் சேராது
    அணங்கருந் துப்பின் அரா.

    வருத்தத்தை விளைவிக்கும் மிக்க
    வலிய பாம்பும் சந்திரன் இளம்பிறையாய்
    விளங்கும்நேரம் விழுங்கச்செல்லாததுபோல்
    வீரமிக்கவர் பகைவர் தளர்ந்திருக்குங்கால்
    வெல்வதற்கு வெட்கப்பட்டு போர்செய்ய
    விரும்பி அவ்விடம் செல்லார்.

    பாடல் 242

    நளிகடல் தண்சேர்ப்ப! நல்கூர்ந்த மக்கட்கு
    அணிகலம் ஆவது அடக்கம் – பணிவில்சீர்
    மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர்
    கோத்திரம் கூறப் படும்.

    அகலக் கடலின் குளிர்மிகு கரைக்கு
    அரசனே! வறுமையுற்ற மனிதனின்
    அணிகலம் அடக்கமுடைமை
    அடக்கமின்றி சிறப்புடைய
    அளவுகடந்து நடப்பானாயின்
    அவன் வாழும் ஊரில்
    அவன் குலம் இகழப்படும்.

    பாடல் 243

    எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காழ் தெங்காகாது
    எந்நாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
    தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
    கொன்னாளர் சாலப் பலர்.

    எந்நிலத்தில் விதைத்தாலும்
    எட்டிவிதை தென்னை மரமாகா
    தென் நாட்டினரும் நல்லறம் செய்து
    தூய சுவர்க்கம் புகுதலால்
    மறுமைப்பேறு கிட்டுமேயல்லாது
    பிறந்த இடத்தின் பெருமையாலன்று
    வடதிசையிலுள்ளோரிலும் முயற்சியின்றி
    வீணாய்க் காலம் கழித்து நரகம்
    புகுவார் பலர் உள்ளார்.

    (மறுமைப் பயனடைய அவரவர் செய்கையே காரணமாவதன்றித் திசையினால் ஒன்றுமில்லை.)

    பாடல் 244

    வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்
    தீஞ்சுவை யாதும் திரியாதாம்; ஆங்கே
    இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
    மனந்தீதாம் பக்கம் அரிது.

    வேம்பின் இலைகளிடையே பழுத்தாலும்
    வாழையின் இனிய சுவை மாறாததுபோல்
    தாம் சேர்ந்த கூட்டம் தீயதாயினும்
    தக்க குணமுடைப் பெரியோரின் மனதில்
    தீயவராகும் தன்மை இல்லை.

    பாடல் 245

    கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும்
    உப்புண்டு உவரி பிறத்தலால் தத்தம்
    இனத்தனையர் அல்லர் எறிகடல்தண் சேர்ப்ப!
    மனத்தனையர் மக்கள்என் பார்.

    அலைமோதும் குளிர் கடற்கரையுடை
    அரசனே! கடலருகிலும் இனிய நீர்
    உண்டாகும் மலை அருகிலும்
    உப்புநீர் சுரக்குமாதலால்
    மக்கள் சார்ந்த இனத்தையல்லாது
    தம் மன இயல்பை ஒத்தவராவர்.

    பாடல் 246

    பரா அரைப் புன்னை படுகடல் தண்சேர்ப்ப!
    ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ? நல்ல
    மரூஉச்செய்து யார்மாட்டும் தங்கு மனத்தார்
    விராஅஅய்ச் செய்யாமை நன்று.

    பருத்த அடிமரம் கொண்ட
    புன்னை சூழ் குளிர்கடற்கரையுடை
    நாட்டின் அரசனே! நிலையான மனமுடையார்
    நல்லசெய்கையுடையாரிடத்து நீங்குதலும்
    பின் சேர்தலும் செய்வாரோ? நீங்குதலைவிட
    பழகாமால் இருத்தலே நன்று.

    பாடல் 247

    உணர உணரும் உணர்வுடை யாரைப்
    புணரிற் புணருமாம் இன்பம் – புணரின்
    தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
    பிரியப் பிரியுமாம் நோய்.

    நம் மனதில் எண்ணியதைக் குறிப்பாலுணரும்
    நுண்ணறிவுடையோரை நண்பராய்க் கொண்டால்
    இன்பம்மிகும் வெளிப்படையாகக் காட்டியும் அறியும்
    இயல்பற்றோரை நண்பராய்க் கொண்டால்
    உண்டாகும் துன்பம் அவரைப் பிரியும் நேரம்
    உடனே நீங்கிச் செல்லும்.

    பாடல் 248

    நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
    நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
    மேன்மேல் உயர்ந்து நிறுப்பானும், தன்னைத்
    தலையாகச் செய்வானும் தான்.

    நல்ல நிலையில் தம்மை
    நிறுத்திக்கொள்பவனும் அந்
    நிலைகெடுத்து தம்மைத் தாழ்
    நிலைக்கு கொண்டுசெல்பவனும்
    நிலையை மென்மேல் உயர்த்துபவனும்
    நன்கு உயர்த்தி தலைமையுடையவனாய்
    நிற்கச் செய்பவனும் தானே ஆவான்.

    பாடல் 249

    கரும வரிசையால் கல்லாதார் பின்னும்
    பெருமை யுடையாரும் சேறல் – அருமரபின்
    ஓதம் அரற்றும் ஒலிகடல் தண்சேர்ப்ப!
    பேதைமை யன்றுஅது அறிவு.

    அருமையாய் ஒரே சீரான முறையில்
    அலைகள் ஆரவாரிக்கும் குளிர்
    கடற்கரையுடை நாட்டின் வேந்தனே!
    காரியத்தை நிறைவேற்றும் பொருட்டு
    பெருமையுடையாரும் அறிவில்லார்
    பின் செல்வது அறியாமையன்று
    அறிவுடைமையே!

    பாடல் 250

    கருமமும் உட்படாப் போகமும் துவ்வாத்
    தருமமும் தக்கார்க்கே செய்யா – ஒருநிலையே
    முட்டின்றி மூன்றும் முடியுமேல்அஃதென்ப
    பட்டினம் பெற்ற கலம்.

    நல்ல தொழில் முயற்சியால்
    நன்கு பொருள் சேர்த்து இன்பம்
    துய்த்து தகுதியுடையார்க்கு
    தருமம் செய்து ஒருபிறப்பிலே இம்
    மூன்றையும் தடையில்லாமல் ஆற்ற
    முடியுமெனில் அது வாணிகத்தை வெற்றியுடன்
    முடித்து துறைமுகப் பட்டினம் அடைந்த
    கப்பல் போலும் இன்பம்பயக்கும்.

    Share
  • நாலடியார் நயம் – 24

    நாலடியார் நயம் – 24

    நாங்குநேரி வாசஸ்ரீ

    24. கூடா நட்பு

    பாடல் 231

    செறிப்பில் பழங்கூரை சேறணை யாக
    இறைத்துநீர் ஏற்றும் கிடப்பர், – கறைக்குன்றம்
    பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட!
    தங்கருமம் முற்றும் துணை.

    கரிய மலைகளிலே மிகுந்த அருவிகள்
    கொண்ட மலைநாட்டு அரசனே!
    கட்டு இல்லாப் பழைய கூரை வீட்டிலே
    மேலிருந்து விழும்நீரைப் பாத்திரத்திலேந்தியும்
    மழைநீர் உட்புகாவண்ணம் சேற்றினால்
    வாகாய் அணைகட்டியும் புகுந்த நீரை
    வெளி இறைத்தும் தம் காரியம் முடியும்
    வரை நம்முடன் இருந்து பின் நீங்கும்
    வகையாரின் நட்பு இனிதன்று..

    பாடல் 232

    சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
    மாரிபோல் மாண்ட பயத்ததாம் – மாரி
    வறத்தக்கால் போலுமே வாலருவி நாட!
    சிறந்தக்கால் சீரிலார் நட்பு.

    வெண்அருவிகளுடை நாட்டின்
    வேந்தனே! உயர்ந்தவர்களின்
    நட்பு மேலான சிறப்புடையதாய்
    நல்ல மழைபோலும் பயனுள்ளதாம்.
    நற்குணமற்றோர் நட்புமிகுந்தால்
    மழையற்ற வறண்ட காலம்போல்
    மோசமான பயனற்றதாய் அமைந்துவிடும்.

    பாடல் 233

    நுண்ணுணர்வி னாரோடு கூடி நுகர்வுடைமை
    விண்ணுலகே யொக்கும் விழைவிற்றால் – நுண்ணூல்
    உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
    புணர்தல் நிரயத்துள் ஒன்று.

    நுட்ப அறிவுடையாருடன்
    நட்பு செய்து பயன் அனுபவித்தல்
    மேலோகத்து இன்பம்போல்
    மேன்மையுடையது நுட்பமான
    நூலறிவில்லாப் பயனற்றவருடன்
    சேர்தல் நரகங்களுள் ஒன்றைச்
    சார்ந்ததுபோல் துன்பம் தரத்தக்கது.

    பாடல் 234

    பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல்
    ஒருபொழுதும் சொல்லாதே நந்தும் – அருகெல்லாம்
    சந்தன நீள்சோலைச் சாரல் மலைநாட!
    பந்தமி லாளர் தொடர்பு.

    பக்கங்களிலெல்லாம் சந்தனச் சோலை
    பெருகிக்கிடக்கும் மலைநாட்டு மன்னனே!
    அன்பு இல்லாதவருடன் கொண்ட நட்பு
    அளவிற்பெருகி வளர்வது போலத்தோன்றி
    அதன்பின் கணப்பொழுதும் நில்லாது கெடும்.

    பாடல் 235

    செய்யாத செய்தும்நாம் என்றலும் செய்தவனைச்
    செய்யாது தாழ்த்துக் கொண்டு ஓட்டலும் – மெய்யாக
    இன்புறூஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே
    துன்புறூஉம் பெற்றி தரும்.

    செய்ய முடியாத செயலையெல்லாம்
    செய்வோம் எனச் சொல்லலும்
    செய்யமுடிந்ததைச் செய்யாமல்
    சந்தியில்விடுத்து காலம் கடத்தலும்
    சத்தியமாகவே இன்பத்தை வெறுத்த
    சந்நியாசிகளுக்கும் அப்பொழுதே
    சங்கடத்தை விளைவிக்கும்.

    பாடல் 236

    ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
    விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா
    பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார்
    கருமங்கள் வேறு படும்.

    ஒரே குளத்தில் தோன்றி
    ஒன்றாகவே வளர்ந்தாலும்
    மணம்வீசும் குவளைக்கு அல்லி
    மலர் ஒப்பாகா சிறந்த குணம்
    பொருந்தியவரின் நட்பைப்
    பெற்றினும் நற்குணமில்லாதார்
    செயல் வேறுபடும்.

    பாடல் 237

    முற்றல் சிறுமந்தி முற்பட்ட தந்தையை
    நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக்
    குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே
    ஒற்றுமை கொள்ளாதார் நட்பு.

    முதிராத சிறு குரங்கு எதிரே தன்
    முன் வந்த தந்தையாகிய பெரும்
    குரங்கை பயற்றம் நெற்றைக்
    கண்டாற் போலும் விரல்களால்
    கையை முறுக்கிக் குத்தி
    கனியைப் பறித்துக்கொள்ளூம்
    மலைநாட்டுடை மன்னனே!
    மனம் பொருந்தாதவரின் நட்பு
    மகிழ்ச்சியளிக்காது.

    பாடல் 238

    முட்டுற்ற போழ்தின் முடுகியென் ஆருயிரை
    நட்டான் ஒருவன்கை நீட்டேனேல் – நட்டான்
    கடிமனை கட்டழித்தான் செல்வழிச் செல்க
    நெடுமொழி வையம் நக.

    என் நண்பன் துன்புற்றபோது விரைந்து
    என் ஆருயிரை அவன் கையில்கொடுத்து
    அவன் துன்பத்தைக் களையாவிடின்
    அதிகப் புகழுடை இவ்வுலகம் சிரிக்குமாறு
    அவன் மனைவியைக் கற்பழித்த பாவி
    அடையும் நரகத்திற்கு நான் செல்வேனாக!

    பாடல் 239

    ஆன்படு நெய்பெய் கலனுள் அது களைந்து
    வேம்படு நெய்பெய் தனைத்தரோ – தேம்படு
    நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
    புல்லறிவி னாரொடு நட்பு.

    தேன்கூடுகள் சேர்ந்த மலைநாட்டு மன்னனே!
    தக்க நன்மையை அறிவாரோடுள்ள நட்பை
    நீக்கி அற்ப அறிவுடையாரோடு கொண்ட
    நட்பு பசுநெய் ஊற்றும் பாத்திரத்தில் அதை
    நீக்கி வேப்பெண்ணெயை ஊற்றினாற் போலாம்.

    பாடல் 240

    உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை யின்மை
    பருகற்கு அமைந்தபால் நீரளாய் அற்றே
    தெரிவுடையார் தீயினத்தார் ஆகுதல் நாகம்
    விரிபெடையோடு ஆடிவிட் டற்று.

    அழகுடையவனிடத்தில் உதவும் குணம் இல்லாமை
    அருந்துவதற்கு வைத்த பாலில் நீர் கலந்தது போலாம்
    அறிவுடையோர் தீயோரைச் சார்ந்து கெடுதல்
    அரும் நாகம் பெட்டைவிரியனுடன் புணர்ந்து
    ஆருயிர் நீத்தது போலாம்.

    Share
  • நாலடியார் நயம் – 23

    நாலடியார் நயம் – 23

    நாங்குநேரி வாசஸ்ரீ

    23. நட்பிற் பிழை பொறுத்தல்

    பாடல் 221

    நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
    அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
    நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
    புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

    நெல்லுக்கும் உமி உண்டு
    நீருக்கும் நுரை உண்டு
    பூவிற்கும் புற இதழ் உண்டு
    பற்றோடு நாம் நல்லவர் எனக்
    கண்டு விரும்பி நட்பு கொண்டவர்
    கெட்டவராயிருப்பினும் அதைத் தம்
    மனதுள்ளே இருத்தி வெளிக்காட்டாது
    மதித்துப் பழக வேண்டும்.

    பாடல் 222

    செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார்
    மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
    வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
    தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு.

    அடைக்குந்தோறும் கரையினை
    உடைத்துக்கொண்டேயிருப்பினும்
    நல்நீருடன் சினம் பாராட்டாது
    நன்கு அடைத்துக் கட்டுதல்போல்
    விரும்பிக் கொண்ட நண்பர்
    வெறுக்கத்தக்க செயல் செய்யினும்
    பொறுத்துப் போவர் சான்றோர்.

    பாடல் 223

    இறப்பவே தீய செயினும் தம் நட்டார்
    பொறுத்தல் தகுவதொன்று அன்றோ – நிறக்கோங்கு
    உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட!
    ஒருவர் பொறைஇருவர் நட்பு.

    பொன்னிற கோங்க மலரில்
    பாங்காய் வண்டுகள் ஆரவாரிக்கும்
    உயர்மலைகளுடை நாட்டின் அரசனே!
    ஒருவரின்பொறுமையினால்
    இருவரின் நட்புவளருமாதலால்
    தம் நண்பர் மிகுதியாய்த்
    தீங்குகள் செய்யினும் பொறுத்தல்
    தகுதியான செயல் அன்றோ?

    பாடல் 224

    மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தம்
    கடுவிசை நாவாய் கரையலைக்கும் சேர்ப்ப!
    விடுதற்கு அரியார் இயல்பிலரேல் நெஞ்சம்
    சுடுதற்கு மூட்டிய தீ.

    மடிந்துவிழும் அலைகள் குவித்த
    மின்னும் ஒளி முத்துக்களை
    மிகுந்த வேகமுள்ள கப்பல்கள்
    மீட்டுக் கரையிலே அலையச்செய்யும்
    கடற்கரையுடை அரசனே!
    கைவிடற்கரிய நண்பர்கள்
    நற்குணம் இல்லாதவராயின்
    நம் நெஞ்சைச் சுடுவதற்காக
    நம்மாலேயே மூட்டப்பட்ட
    நெருப்பு போன்றவராவர்.

    பாடல் 225

    இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்
    பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; – பொன்னொடு
    நல்லிற் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம்
    இல்லத்தில் ஆக்குத லால்.

    பொன்னோடு கூட நல்ல வீட்டைப்
    பொசுக்கும் நெருப்பையும் தேவை கருதி
    நாளும் வீட்டில் உண்டாக்குதல்போல்
    நடுநடுவே துன்பம் செய்யினும்
    கைவிடற்கரிய நண்பர்களைக்
    காத்து பொன்போல் உயர்வாய்க்
    கருதல் வேண்டும்.

    பாடல் 226

    இன்னா செயினும் விடுதற்கு அரியாரைத்
    துன்னாத் துறத்தல் தகுவதோ – துன்னருஞ்சீர்
    விண்குத்து நீள்வரை வெற்ப! களைபவோ
    கண்குத்திற்று என்றுதம் கை.

    அடைதற்கரிய வானத்தைக் குத்தும்
    அளவு நீண்ட மூங்கில்கள் கொண்ட
    மலைக்கு உரியவனே!
    மாளாத் துன்பம் செய்யினும்
    விடக்கூடாத நண்பர்களை
    விட்டுவிடல் தகுந்ததோ?
    கண்ணைக் குத்திற்று என
    கைவிரலை வெட்டுவார்களோ?

    பாடல் 227

    இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்
    கலந்து பழிகாணார் சான்றோர்; – கலந்தபின்
    தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார்
    தாமும் அவரின் கடை.

    விளங்கும் நீர்நிறை குளிர்கரையுடை
    வேந்தனே! தீமையே செய்யினும்
    நண்பரிடத்தே குற்றம் காணார் பெரியோர்
    நட்புகொண்டபின் குற்றத்தைத்
    தெளிவாக எடுத்தியம்பும்
    திடமான அறிவற்றோர்
    தீமைசெய்யும் நண்பரைவிடத்
    தாழ்ந்தவர் ஆவர்.

    பாடல் 228

    ஏதிலார் செய்தது இறப்பவே தீதெனினும்
    நோதக்கது என்னுண்டாம் நோக்குங்கால்! – காதல்
    கழுமியார் செய்த கறங்கருவி நாட!
    விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று.

    ஆர்ப்பரித்தொலிக்கும் அருவிகளுடை நாட்டின்
    அரசனே! அயலார் செய்த தீங்கு
    அளவிற் கொடியதாயினும் விதியால்
    விளைந்தது என்றெண்ணுங்கால்
    வெறுப்பதற்கு என்ன உண்டு?
    மனதில் அன்பு மிக்கவர் புரிதீமை
    மனதுள் நின்று சிறந்ததாகிவிடும்.

    பாடல் 229

    தமரென்று தாம்கொள்ளப் பட்டவர் தம்மைத்
    தமரன்மை தாமறிந்தார் ஆயின், – அவரைத்
    தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை
    தம்முள் அடக்கிக் கொளல்.

    தம் உறவினராய்த் தாம் ஏற்றுக்கொண்டவர்
    தம் உறவிற்குப் பொருந்தாமை செய்ததைத்
    தான் அறிந்துகொண்டாராயின் அவரைத்
    தம்மவரினும் மேலாகக் கொண்டு அத்
    தன்மையைத் தம் மனதில் அடக்கிக் கொள்க!

    பாடல் 230

    குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை
    நட்டபின் நாடித் திரிவேனேல் – நட்டான்
    மறைகாவா விட்டவன் செல்வழிச் செல்க
    அறைகடல்சூழ் வையம் நக.

    நண்பனாய்க் கொண்ட பின் ஒருவனின்
    நெறியற்ற செயலையும் மற்ற குணங்களையும்
    ஆராய்ந்து அலைவேனாயின் நண்பனுக்கு
    அல்லல் விளைக்கும் இரகசியத்தைக் காக்காமல்
    வெளிவிட்ட பாவி அடையும் நரகத்திற்கு ஒலிக்கும்
    கடல்சூழ் உலகத்தார் இகழ நான் போகக்கடவேன்.

    Share
  • நாலடியார் நயம் – 22

    நாலடியார் நயம் – 22

    நாங்குநேரி வாசஸ்ரீ

     22. நட்பாராய்தல்

    பாடல் 211

    கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மைஎஞ்ஞான்றும்
    குருத்திற் கரும்புதின் றற்றே; – குருத்திற்கு
    எதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும்
    மதுரம் இலாளர் தொடர்பு.

    நூற்பொருளை அறிந்து கற்றவருடன் கொண்ட
    நட்பு எக்காலத்தும் குருத்திலிருந்து
    கரும்பைத் தின்றதுபோல் இனிமையானது
    கல்வியாகிய இனிமையை உடையாதார்
    நட்பு கரும்பை எதிர்செலத் தின்றால் சுவை
    குறைதல்போல் நட்பின் சுவை
    குறைந்து வெறுக்கப்படும்.

    பாடல் 212

    இற்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர்
    நற்புடை கொண்டமை யல்லது – பொற்கேழ்
    புனலொழுகப் புள்ளரியும் பூங்குன்ற நாட!
    மனமறியப் பட்டதொன் றன்று.

    பொன்னிற அருவிகள் பெருகக்கண்டு
    பறவைகள் அஞ்சி ஓடும் அழகிய
    மலைசூழ் நாட்டுடை மன்னனே!
    மனதால் அறியப்பட்டதென்று
    ஒன்றுமில்லை நட்புகொள்வதென்பது
    ஒருவனின் உயர்குடிப்பிறப்பை நோக்கி
    இவர் இடையில் மாறமாட்டார் எனும்
    இணையறா நம்பிக்கையே.

    பாடல் 213

    யானை யானையவர் நண்பொரிஇ நாயனையார்
    கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் – யானை
    அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
    மெய்யதா வால்குழைக்கும் நாய்.

    யானை போன்றவரின் நட்பை விடுத்து
    நாய் போன்றவரின் நட்பைக் கொள்ளுதல்
    நல்லதாம் ஏனெனில் யானை பலநாள்
    பழகியிருந்தும் உண்ணக்கொடுத்துப்
    பாதுகாக்கும் பாகனையே கொல்லும்
    நாயோ சினம்கொண்டு அவன் எறிந்த வேல்
    நன்கு பொருந்தியிருக்கத் தன்னை
    வளர்த்த அவனை நோக்கி வாலை ஆட்டும்.

    பாடல் 214

    பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில்
    சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; – பலநாளும்
    நீத்தார் எனக்கை விடலுண்டோ , தம்நெஞ்சத்து
    யாத்தாரோடு யாத்த தொடர்பு.

    பல நாள் பக்கத்திலிருந்து
    பழகுபவராயினும் மனதோடு
    பொருத்தமில்லாதாரோடு என்றும்
    பொருந்தார் அறிவுடையோர் எனில்
    நெஞ்சத்திலே பொருந்தியவர் பலநாள்
    நீங்கி இருந்தார் எனும் காரணம்
    காட்டிக் கைவிடுவாரோ?

    பாடல் 215

    கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
    வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; – தோட்ட
    கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
    நயப்பாகும் நட்பாரும் இல்.

    கொம்பிலே பூக்கும் பூக்கள் மலர்ந்தபின்
    குவியாதிருக்கும் உதிரும் வரை அதுபோல்
    முதலில் விரும்பி மகிழ்ந்தது போலவே
    முடிவு வரை விரும்பியிருப்பது நட்பு
    தோண்டப்பட்ட குளத்தின் பூவைப்போல்
    தொடக்கத்தில் மலர்ச்சி காட்டி பின்
    முகம் சுருங்கும் தன்மையுடையவரை
    விரும்புபவரும் நட்பு கொள்வாரும் இல்லை.

    பாடல் 216

    கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
    இடையாயார் தெங்கின் அனையர்; – தலையாயார்
    எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,
    தொன்மை யுடையார் தொடர்பு.

    நட்பில் கீழ்த்தரமானவர் நாள்தோறும்
    நீர்பாய்ச்சினால் உதவும் கமுகு போன்றோர்
    நடுத்தரமானவர் விட்டு விட்டு
    நீர்ப்பாய்ச்சினாலும் உதவும்
    தென்னை மரம் போன்றோர்
    பழந்தொடர்பு பாராட்டும் முதற்தரமானவர்
    பழகி நட்பு விதையிட்ட நாளில் வார்த்த நீரன்றி
    பராமரிப்பற்றே வளர்ந்து பயன்தரும் பனையொத்தோர்.

    பாடல் 217

    கழுநீருள் காரட கேனும் ஒருவன்
    விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம்; – விழுமிய
    குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார்
    கைத்துண்டல் காஞ்சிரங் காய்.

    அரிசி கழுவிய நீரில் உப்பின்றி
    ஆக்கிய கீரைக்கறியும் பிரியமாகக்
    கொள்ளின் அமிழ்தமே சிறந்த தாளிப்புள்ள
    கறிகள்நிறை வெண்சோறேயாயினும்
    அன்பிலாரின் கை உணவை உண்டால்
    அது எட்டிக்காயுண்பது போல் கசக்கும்.

    பாடல் 218

    நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்
    ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
    சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
    வாய்க்கால் அனையார் தொடர்பு.

    நாயின் கால் சிறுவிரல்கள் போல்
    நெருக்கம் உள்ளவராயினும்
    ஈயின் காலளவும் உதவாதார்
    இணக்கமான நட்பால் பயனென்ன?
    வயலை விளைவிக்க உதவும்
    வாய்க்கால் தொலைவிலுள்ள நீரைக்
    கொண்டு சேர்ப்பதுபோலான நட்பைக்
    கொளல்வேண்டும் அது தூரத்திலிருப்பினும்.

    பாடல் 219

    தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்
    விளியா அருநோயின் நன்றால் – அளிய
    இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்லா
    புகழ்தலின் வைதலே நன்று.

    நல்லது அறிவில்லாதார்
    நட்பை விட அவரின் பகை
    நல்லது மரணித்தல்
    நலம் பெறாது கொடும்
    நோயால் அவதியுறுவதைவிட
    நல்லது கொல்லுதல்
    நாளும் இகழ்தலைவிட
    நல்லது பழித்தல்
    நடவாததைச் சொல்லிப் புகழ்தலைவிட.

    பாடல் 220

    மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப்
    பொரீஇப் பொருள்தக்கார்க் கோடலே வேண்டும்
    பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா
    மரீஇப் பின்னைப் பிரிவு.

    பலருடன் பலநாள் பழகிப்
    பலரின் குணங்களை ஒப்பிட்டு
    தகுதியுடை மேலோரை நண்பராய்த்
    தேர்ந்து கொள்ளல் வேண்டும்
    பல்லால் கடித்து உயிரைக் கொல்லும்
    பாம்போடும் பழகிவிட்டுப் பின்
    பிரிதல் துன்பம் தரத்தக்கதே.

    Share
  • நாலடியார் நயம் – 21

    நாலடியார் நயம் – 21

    நாங்குநேரி வாசஸ்ரீ

    21. சுற்றம் தழால்

    பாடல் 201

    வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
    கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு
    அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
    கேளிரைக் காணக் கெடும்.

    கருவுற்றதனால் அதுபற்றி வரும்
    கணக்கற்ற நோவும் மசக்கையும்
    குழந்தை பெறுங்காலத்தய நோவும்
    கண்ணால் தம்மடியில் குழந்தையைக்
    கண்ட தாய் மறப்பதுபோல் தாம்
    கொண்ட தளர்ச்சியாலுற்ற துன்பமெலாம்
    கனிவுடன்விசாரிக்கும் சுற்றத்தாரைக்
    காணின் நீங்கும்.

    பாடல் 202

    அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
    நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் – பழு மரம்போல்
    பல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே
    நல்லாண் மகற்குக் கடன்.

    வெப்பம் மிகு கோடையில்
    வந்தடைந்தோருக்கெல்லாம்
    நிழல்தரும் மரம்போல் தம்மை
    நெருங்கிய சுற்றத்தாரையெல்லாம்
    தாங்கி ஒரே தன்மையாய்க் காத்து
    தான் வருந்தி உழைத்து
    பழுத்தமரம் போல் பலரும்
    பயன்நுகர வாழ்வதே நல்ல
    ஆண்மகனின் கடமையாம்.

    பாடல் 203

    அடுக்கல் மலைநாட! தன்சேர்ந் தவரை
    எடுக்கலம் என்னார்பெரியோர்; – அடுத்தடுத்து
    வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே
    தன்காய் பொறுக்கலாக் கொம்பு.

    அடுக்கடுக்கான மலைகளுடை நாட்டின்
    அரசனே! அதிகமான காய்கள் கிட்டக்கிட்டக்
    காய்த்தாலும் தன் காய்களைத் தாங்கிக்
    கொள்ளாத மரக்கிளை இல்லையதுபோல்
    தம்மைச் சார்ந்தவரைப் பெரியோர்
    தாங்கமாட்டோம் எனச் சொல்லார்.

    பாடல் 204

    உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
    சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை; – நிலைதிரியா
    நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்
    ஒற்கமி லாளர் தொடர்பு.

    உலகோர் அறியும்வண்ணம்
    உறவு கொண்டாலும்
    அற்பரின் உறவு நீடிக்காது
    அடங்கும் சில நாட்களிலே
    தம் நிலைமாறாப் பெரியோரின்
    தகுதியான உறவோ நன்னெறி
    அடையத் தவம் செய்யும் காலத்தில்
    அந்நெறியில் ஊன்றி நிற்பது போல்
    அசையாது நிலைபெற்று நிற்கும்.

    பாடல் 205

    இன்னர் இனையர் எமர்பிறர் என்னும் சொல்
    என்னும் இலராம் இயல்பினால் – துன்னித்
    தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும்
    தலைமக்கள் ஆகற்பா லார்.

    இவர் இப்படிப்பட்ட எம் உறவினர்
    இவர் உறவினரல்லார் என வேறுபாடு
    காட்டும் சொல்லைச் சொல்லாத
    குணமுடையோராய்த் துன்பத்தால்
    வாடும் மக்களைச் சார்ந்து அவர்தம்
    வாழ்க்கைத் துன்பத்தைக் களைபவரே
    யாவருக்கும் தலைவராகும் தன்மையுடையார்.

    பாடல் 206

    பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
    அக்காரம் பாலோடு அமரார்கைத்து உண்டலின்
    உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்டு
    எக்காலத் தானும் இனிது.

    பொற்பாத்திரத்திலே இட்ட
    புலிநகம்போலும் வெண்சோற்றை
    பாலோடு சர்க்கரையும் கலந்து
    பகைவர் கையால் உண்பதைக்காட்டிலும்
    புல்லரிசிக்கூழ் உப்பில்லாதிருப்பினும்
    பாசமான உயிர்போன்ற சுற்றத்தாரிடம்
    பெற்று எந்தக் காலத்திலும் உண்பதினிது.

    பாடல் 207

    நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து
    வேளாண்மை வெங்கருணை வேம்பாகும்; – கேளாய்,
    அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும்
    தமராயார் மாட்டே இனிது.

    பகைவர் வீட்டில் வேளை தவறாது தந்த
    பொரிக்கறியுணவும் வேம்புக்கு நிகரே
    பிற்பகலில் நேரம்கடந்து கிடைத்தாலும்
    பாசமான சுற்றத்தாரின் கீரைஉணவு இனியதே!

    பாடல் 208

    முட்டிகை போல முனியாது வைகலும்
    கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்;
    சூட்டுக்கோல் போல எரியும் புகுவரே
    நட்டார் எனப்படு வார்.

    சம்மட்டி போல் வெறுக்காமலிருக்கும்படி
    சலிக்காது நாள்தோறும் வாங்கி
    உண்பவரும் காலம் வாய்த்தால்
    குறடுபோல் கைவிட்டு விலகுவர்
    அன்புமிகு உறவினரோ உலையாணிக்கோல் போல
    அவருடன் துன்பமெனும் நெருப்பிலும் மூழ்குவர்.

    பாடல் 209

    நறுமலர்த் தண் கோதாய்! நட்டார்க்கு நட்டார்
    மறுமையும் செய்வதொன் றுண்டோ ! – இறுமளவும்
    இன்புறுவ இன்புற்று எழீஇ அவரோடு
    துன்புறுவ துன்புறாக் கால்.

    வாசனைப்பூக்களைச் சூடிய கூந்தலுடன்
    விளங்குபவளே! உறவினர் தம் உறவினருடன்
    அவர் சாகும்வரை இன்புறும்போது இன்புற்று
    அவர் துன்புறும்போது சேர்ந்து தாமும்
    வருத்தப்படுவதோடதல்லாது மறுபிறப்பிலும்
    வேறு செய்யத்தக்க நற்செயல் ஒன்றுண்டோ?

    பாடல் 210

    விரம்பிலார் இல்லத்து வேறிருந்து உண்ணும்
    வெருக்குக்கண் வெங்கருணை வேம்பாம்; – விருப்புடைத்
    தன்போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
    என்போடு இயைந்த அமிழ்து.

    தம்மை விரும்பாதார் வீட்டில்
    தனித்து உண்ணும் பூனைக்கண்
    போன்ற வெண் பொரிக்கறி உணவும்
    புசித்தால் கசக்கும் வேம்பாகும்
    தம்மிடம் விருப்பம் கொண்டோரின்
    தெளிந்த நீருடன் கூடிய குளிர்
    புல்லரிசிக்கூழும் உடம்புக்குப்
    பொருந்தும் அமிழ்தமாகும்.

    Share
  • நாலடியார் நயம் – 20

    நாலடியார் நயம் – 20

    நாங்குநேரி வாசஸ்ரீ

    20. தாளாண்மை

    பாடல் 191

    கோளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல்
    கேளீவ துண்டு கிளைகளோ துஞ்சுப;
    வாளாடு கூத்தியர் கண்போல் தடுமாறும்
    தாளாளர்க்கு உண்டோ தவறு.

    கொள்ள மாட்டாத மிகுநீரையுடைக்
    குளத்தினருகே விளையும் பயிர்
    வளமுடன் இருந்துப் பின் குளம்
    வறண்ட நிலையில் கருகுவதுபோல்
    முயற்சியின்றி உறவினர் தருவதை
    மட்டுமேயுண்டு அவ்வுறவினர்
    வறுமையுறும் காலம் சாவர் சிலர்
    வாளின்மேல் கூத்தாடும் மகளிரின்
    விழிபோல் இயங்கிச் சுறுசுறுப்பாய்
    உழைக்கும் முயற்சியுடையோருக்கு
    உறுமோ இப்பிழைப்பு.

    பாடல் 192

    ஆடுகோடாகி அதரிடை நின்றதூஉம்
    காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்;
    வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான்
    தாழ்வின்றித் தன்னைச் செயின்.

    ஆடுகின்ற கொம்பாகி வழியில்
    அமைந்த செடியும் வயிரம்கொண்டு
    உறுதிமிகு மரமாய் வளர்ந்தபின்
    உலகில் யானைகட்டும் தறியாகும்
    முயன்று ஒருவன் தன்னைத்
    தாழ்ச்சியில்லாதபடி செய்தால்
    அவன் வாழ்வும் அத்தன்மைத்தாகும்.

    பாடல் 193

    உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
    சிறுதேரை பற்றியும் தின்னும்; – அறிவினால்
    கால்தொழில் என்று கருதற்க கையினால்
    மேல் தொழிலும் ஆங்கே மிகும்.

    பெரும்புலியும் மாமிசம் இல்லாக் காலம்
    பிடித்துத் தின்னும் சிறு தேரையை
    அறிவினால் எத்தொழிலையும்
    அற்பமானது என எண்ணவேண்டா
    முயற்சியினால் அத்தொழிலும்
    மேம்படும் அக்கறையுடன் செய்கின்.

    பாடல் 194

    இசையா தெனினும் இயற்றியோர் ஆற்றலால்
    அசையாது நிற்பதாம் ஆண்மை – இசையுங்கால்
    கண்டல் திரையலைக்கும் கானலம் தண்சேர்ப்ப!
    பெண்டிரும் வாழாரோ மற்று.

    தாழையை அலைகள் அசைக்கின்ற
    தரமான சோலைகள் சூழ் கடற்கரையுடை
    வேந்தனே! முடியாதசெயலையும் ஒரு
    வழியினால் செய்து தளராது நிற்பதே
    ஆண்மையாம் முடியுமெனில் பெண்களும்
    அச்செயல் புரிந்து பெருமையடையாரோ?

    பாடல் 195

    நல்ல குலமென்றும் தீய குலமென்றும்
    சொல்லளவு அல்லால் பொருளில்லை; – தொல் சிறப்பின்
    ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை
    என்றிவற்றான் ஆகும் குலம்.

    நல்ல குலம் தீய குலம் என
    நவிலுவதெல்லாம் வெறும்
    சொல்லளவே தவிர அங்ஙனம்
    சொல்லுவதில் பொருளொன்றுமில்லை
    பழம் சிறப்புமிக்க பொருளும் தவமும்
    பண்பான கல்வியும் முயற்சியும்
    போன்றவற்றால் நற்குலம் அமைவதாம்.

    பாடல் 196

    ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி
    ஊக்கம் உரையார் உணர்வுடையார் – ஊக்கம்
    உறுப்பினால்ஆராயும் ஒண்மை உடையார்
    குறிப்பின்கீழ்ப் பட்டது உலகு.

    மேற்கொண்ட செயலைச் செய்து
    முடிக்கும்வரை அறிவின் திறத்தை
    மனதுள் அடக்கித் தம் வலிமையை
    மற்றவருக்கு வெளிப்படுத்தாது பிறரின்
    மனவலிமையை அவர்தம்
    உறுப்புக்களின் குறிப்பினால்
    உணர்ந்தறிவர் அறிவுடையார்
    இத்தகையோரின் அறிவுநுட்பத்தில்
    இருக்கின்றது இவ்வுலகு.

    பாடல் 197

    சிதலை தினப்பட்ட ஆலமரத்தை
    மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக்
    குதலைமை தந்தைகண் தோன்றில்தான் பெற்ற
    புதல்வன் மறைப்பக் கெடும்.

    கறையானால் அரிக்கப்பட்ட
    கனமான ஆலமரத்தைத்
    தாங்குதூணாயதன் விழுது
    தாங்குதல்போலத் தந்தையின்
    தளர்ச்சியை முயற்சித்துத்
    தனயன் போக்க அது நீங்கும்.

    பாடல் 198

    ஈனமாய் இல்லிருந் தின்று விளியினும்
    மானம் தலைவருவ செய்யவோ? – யானை
    வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
    அரிமா மதுகை அவர்.

    புள்ளியுள்ள யானையின் முகத்தையும்
    புண்படுத்தவல்ல கூர்நகமும்
    வலிய பாதங்களுமுடைய
    வீரிய சிங்கத்தையொத்தவர்
    பொருளற்று வீட்டிலிருந்து வறுமையுற்று
    பாவப்பட்டுத் தாழ்ந்தாலும் தமக்குப்
    பழியுண்டாக்கும் செயலைச் செய்வரோ?

    பாடல் 199

    தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி
    தேங்கமழ் நாற்றம் இழந்தா அங்கு – ஓங்கும்
    உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும்
    பேராண்மை இல்லாக் கடை.

    தித்திக்கும் இனிய கரும்பு ஈன்ற
    திரண்ட காம்பினையுடைய
    குதிரையின் பிடரிமயிர் போலும்
    கற்றையான பூ நறுமணம் இழந்ததுபோல்
    கடும் முயற்சி செய்து தம்
    பெயரை நிலைநாட்டாதவன்
    பிறந்த குடி சிறந்ததாய்
    இருப்பினும் என்ன பயன்?

    பாடல் 200

    பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்
    கருனைச்சோ றார்வர் கயவர்; – கருனையைப்
    பேரும் அறியார் நனிவிரும்பு தாளாண்மை
    நீரும் அமிழ்தாய் விடும்.

    முயற்சியற்ற மூடர் பெருமுத்தரையர்
    மகிழ்ந்து தரும் பொரிக்கறி உணவை
    உண்பர் கறியின் பெயரும் அறியா
    உயர்ந்தோர் தம் அயரா முயற்சியால்
    வந்த நீருணவையும் அமிழ்தமென
    விரும்பி உண்பர்.

    Share
  • நாலடியார் நயம் – 19

    நாலடியார் நயம் – 19

    நாங்குநேரி வாசஸ்ரீ

    19. பெருமை

    பாடல் 181

    ஈதல் இசையாது இளமைசேண் நீங்குதலால்
    காத லவரும் கருத்தல்லர்; – காதலித்து
    ஆதுநாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப்
    போவதே போலும் பொரு.

    மற்றவருக்கு ஒன்றைக் கொடுக்க
    மாட்டாது இளமையும் வீணாகக்
    கழிய ஆசை வைத்திருந்த
    காதல் பெண்டிரும் நீங்கினர்
    இன்னும் நாம் வாழ்வோமெனும்
    இச்சையை விடுத்துத் துறப்பதே
    ஆகச்சிறந்த செயல்.

    பாடல் 182

    இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைத்தேம் என்றெண்ணிப்
    பொச்சாந்து ஒழுகுவார் பேதையார்; – அச்சார்வு
    நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
    என்றும் பரிவ திலர்.

    இல்வாழ்வால் இன்புற்றோம்
    இருக்கின்றோம் குறையின்றியென
    இனி வரப்போகும் துன்பமெனும்
    இடர் மறந்திருப்பர் அறிவிலார்
    இல்வாழ்க்கையின்பம் நிலையாக
    இருப்பன போல் தோன்றி
    இல்லாமல் அழிபவை எனும்
    இவ்வுண்மையை உணர்ந்தோர்
    இவ்வுலகில் எப்போதும் வருந்தார்.

    பாடல் 183

    மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
    சிறுமைப் படாதேநீர் வாழ்மின் – அறிஞராய்
    நின்றுழி நின்றே நிறம்வேறாம் காரணம்
    இன்றிப் பலவும் உள.

    இருந்த இடத்திலிருந்தே காரணமின்றி
    இளமை நிறம் பருவங்கள் போன்றவற்றில்
    மாற்றங்கள் பல உண்டாகுமெனவே
    மறுமைக்கு வித்தாகும் நல்லறங்களை
    மயக்கமின்றிச் செய்து துன்பமடையாமல்
    அறிவுடையோராய் வாழுங்கள்!

    பாடல் 184

    உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
    இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; – கொடைக்கடனும்
    சாஅயக் கண்ணும் பெரியார்போல மற்றையார்
    ஆஅயம் கண்ணும் அரிது.

    மழைபெய்யாது வறண்ட காலத்தும்
    ஊற்றுநீர்க் கிணறு பிறர் இறைத்து
    உண்ணக்கொடுத்து ஊரைக்காக்குமென்பர்
    வறுமையால் தளர்ந்தபோதும் பெரியோர்
    வாரிக்கொடுப்பர் பிறருக்கு சிறியரோ
    செல்வம்மிக்க காலத்தும் தரமாட்டார்.

    பாடல் 185

    உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
    கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; – செல்வம்
    பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
    செய்வர் செயற் பாலவை.

    வெள்ளம் வரும் காலம் மிகுநீரைக் கொடுத்து
    வையகத்தோரை உண்பித்த ஆறு
    நீரற்ற காலத்தும் ஊற்றுக்குழியில்
    நீர்சுரந்து உதவுதல்போல் பெரியோர்
    தம் செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து
    தம்மாலான உதவியாற்றுவர் வறுமையிலும்.

    பாடல்186

    பெருவரை நாட! பெரியேர்கண் தீமை
    கருநரைமேல் சூடேபோல் தோன்றும்; – கருநரையைக்
    கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
    ஒன்றானும் தோன்றாக் கெடும்.

    பெரிய மலைகளையுடை
    பரந்த நாட்டின் வேந்தனே!
    பெரியோரிடம் உண்டான குற்றம்
    பெரும் வெள்ளெருதின்மேல்
    போடப்பட்ட சூடுபோல்
    தெளிவாகத் தோன்றும்
    தூயவெள்ளெருதைக் கொன்ற
    குற்றத்தைச் சிறியோர் செய்யின்
    குற்றமாகத் தோன்றாதழிந்து விடும்.

    பாடல் 187

    இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்,
    பயைந்த துணையும் பரிவாம் – அசைந்த
    நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
    பகையேயும் பாடு பெறும்.

    அற்பத்தனம் மிக்க நற்குணம்
    அற்றவரிடம் கொண்ட நட்பு
    வருத்தும் துன்பத்தையே தரும்
    விளையாட்டிற்குக்கூட தீய
    கெடுதலை விரும்பா நல்லவரிடம்
    கொண்ட பகையும் பெருமையைத்தரும்.

    பாடல்188

    மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்து
    ஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை; – எல்லாம்
    சலவருள் சாலச் சலமே; நலவருள்
    நன்மை வரம்பாய் விடல்.

    மென்மைக் குணமுள்ள பெண்களிடம்
    மென்மைத்தன்மை உடையவராயும்
    எதிரிகளிடம் அதைவிடுத்து
    எமனும் அஞ்சத்தக்கவராகவும்
    எல்லோரிடத்தும் வஞ்சகம் பேசுபவரிடம்
    எப்போதும் வஞ்சம் பேசுபவராகவும்
    நற்குணமுள்ளவரிடத்து நன்மையாய்
    நடப்பதும் எல்லையாயிருக்கவேண்டும்.

    பாடல் 189

    கடுக்கி ஒருவன் கடுங்குறளைப் பேசி
    மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
    துளக்க மிலாதவர் தூய மனத்தர்;
    விளக்கினுள் ஒண்சுடரே போன்று.

    முகத்தைக் கடுமையாய் வைத்து
    மற்றவர் பற்றி மிகக் கடுஞ்சொல்
    பேசி அறிவை மயங்கச்செய்யினும்
    பிறர்பால் வேறுபாடின்றி தீபத்தின்
    பிரகாச ஒளிச்சுடர் போல்
    அசைவில்லாதவர் தூயமனத்தவர்.

    பாடல் 190

    முன்துற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து
    பின்துற்றுத் துற்றவர் சான்றவர்; – அத்துற்று
    முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
    துக்கத்துள் நீக்கி விடும்.

    உண்ணத்தகும் உணவினை நாள்தோறும்
    உண்ணுமுன் இரப்போர்க்குக் கொடுத்து பின்
    உண்ணுவர் சான்றோர் அது முக்குற்றமான
    வெகுளி காமம் மயக்கத்தைப் போக்குவதுடன்
    வாழ்நாள் முழுதும் துன்பத்தினின்று காக்கும்.

    Share
  • நாலடியார் நயம் – 18

    நாலடியார் நயம் – 18

    நாங்குநேரி வாசஸ்ரீ

     18. நல்லினம் சேர்தல்

    பாடல் 171

    அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி
    நெறியல்ல செய்தொழுகி யவ்வும் – நெறியறிந்த
    நற்சார்வு சாரக்கெடுமே வெயில்முறுகப்
    புற்பனிப் பற்றுவிட் டாங்கு.

    புத்தியில்லா வயதில் அடக்கமற்றவரோடு
    பழகி நெறியல்லாதன செய்து நேர்ந்த
    பாவங்களும் நல்லாரைக் கூடி ஒழுகலால்
    புல்லின்மேல் படிந்த பனிநீர் வெயிலில்
    படிந்த அதனின்று நீங்குதல் போல்விலகும்.

    பாடல் 172

    அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;
    பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
    வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
    பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.

    அறநெறி அறிவீர் அஞ்சுவீர் எமனுக்கு
    அறியார் கூறும் கடுஞ்சொல் பொறுப்பீர்
    வஞ்சனைக்குணம் வந்தடையாது காப்பீர்
    வெறுப்பீர் தீயவரின் தீச்செயலை
    வாழ்நாள் முழுதும் பெரியோரின்
    வாய்ச்சொல்லாம் அறிவுரை கேட்டு நடப்பீர்.

    பாடல் 173

    அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
    உடங்குடம்பு கொண்டார்க்கு உறலால் – தொடங்கிப்
    பிறப்பின்னாது என்றுணரும் பேரறிவி னாரை
    உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.

    சேர்ந்தவர்களைப் பிரிவதும்
    சரிசெய்ய முடியா வியாதியும்
    மரணமும் உடல் எடுத்தார்க்கு
    உடனே வந்தெய்தலால் பழையதாய்த்
    தொடர்ந்து வரும் பிறப்பினைத்
    துன்பம் தருவது என அறியும்
    உண்மை அறிவுடையாரை என் மனம்
    உறுதியாய்ப் பற்றுவதாக!

    பாடல் 174

    இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும்
    பிறப்பினை யாரும் முனியார் – பிறப்பினுள்
    பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும்
    நண்பாற்றி நட்கப் பெறின்.

    ஆராய்ந்து நோக்கின் பிறப்பு
    ஆறாத் துன்பம் தருவது எனினும்
    நற்குணங்கள்நிறை நல்லோரை
    நாடி எக்காலமும் நட்புகொண்டு
    நடக்கப்பெறின் இப்பிறப்பை
    எவரும் வெறுக்கமாட்டார்.

    பாடல் 175

    ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
    பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; – ஓரும்
    குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
    நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.

    ஊரில் உள்ள சாக்கடைநீர்
    சிறப்புபொருந்திய நீரைச்
    சேர்ந்தக்கால் வேறுபெயரும்
    உண்டாகி பரிசுத்த நீரென
    உரைக்கப்படுதல் போல
    குலப்பெருமை இல்லாதோரும்
    குணப் பெருமையுடை
    நல்லாரைச் சேர்ந்தால்
    நிற்பர் மலை போல் உயர்ந்து.

    பாடல் 176

    ஒண்கதிர் வான்மதியம் சேர்தலால் ஓங்கிய
    அங்கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம்
    குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்
    குன்றன்னார் கேண்மை கொளின்.

    அழகிய இடத்தையுடை வானத்தில்
    அழகான கதிர்களையுடை சந்திரனைச்
    சேர்ந்திருப்பதால் களங்கமாகிய முயலும்
    சந்திரனைத் தொழும்போது
    சேர்த்துத் தொழப்படுமென்பதுபோல்
    குறைந்த சிறப்புடையவர்களும்
    குன்றுபோலும் நற்குணங்களுடையவரைச்
    சேரும்நேரம் மேன்மை அடைவர்.
    (சந்திரனது களங்கத்தை முயல் எனக்கூறுதல் கவிஞர்கள் மரபு).

    பாடல் 177

    பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது
    நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்; – தேரின்
    சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல
    பெரியார் பெருமையைச் சார்ந்து.

    பாலுடன் கலந்த தண்ணீர்
    பாலாகக் கருதப்படுமேயல்லாது
    நீரின் நிறத்தை வேறுபடுத்தாது
    நன்கு ஆராய்ந்தால் நற்குணமுடைப்
    பெரியோரின் பெருங்குணத்தைச்
    சேர்தலால் சிறியோரின்
    சிறுமைக்குணமும் தோன்றாது.

    பாடல் 178

    கொல்லை இரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
    ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு;
    மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்
    செல்லாவாம் செற்றார்சினம்.

    பலவயல்கள் சேர்ந்த பெரிய நிலத்திலே
    மரக்கட்டையைப் பற்றி நிற்கும் புல்
    உழவரின் கலப்பைக்கு சிறிதும் அசையாது
    வலிமையற்றவராயினும் தம்மினும்
    வலிமை மிக்காரைச் சார்ந்தால்
    பகைவரின் சினம் எடுபடாமல் போய்விடும்.

    பாடல் 179

    நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம்
    குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; – கலநலத்தைத்
    தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
    தீயினம் சேரக் கெடும்.

    நிலவளத்தால் செழித்து வளரும்
    நெற்பயிர்போல் தாங்கள் சேரும்
    கூட்டத்தால் ஆவர் மேலானவராய்
    கடலில் செல்லும் கப்பலின் பெருமையை
    சுழற்காற்றுத் தாக்கிக் கெடுப்பதுபோல்
    தீயோர் சேர்க்கையால் கெடும்
    ஒருவரின் மேன்மை.

    பாடல் 180

    மனத்தால் மறுவில ரேனும்தாம் சேர்ந்த
    இனத்தால் இகழப் படுவர் – புனத்து
    வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
    எறிபுனந் தீப்பட்டக் கால்.

    காடு தீப்பற்றி எரியும்போது மணம்
    கமழும் சந்தனமரமும் வேங்கைமரமும்
    கருகிப்போகும் என்பதுபோல் மனதில்
    கடுகளவு குற்றமில்லா நல்லவராயினும்
    கெட்டவர் சேர்க்கையால் இகழப்படுவர்.

    Share
  • நாலடியார் நயம் – 17

    நாலடியார் நயம் – 17

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பெரியாரைப் பிழையாமை

    பாடல் 161

    பொறுப்பர்என்றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
    வெறுப்பன செய்யாமை வேண்டும்; – வெறுத்தபின்
    ஆர்க்கும் அருவி அணிமலை நாட!
    பேர்க்குதல் யார்க்கும் அரிது.

    ஒலிக்கும் அருவிகளை அணிகலனாய்
    அணிந்த மலைசூழ் நாட்டின் வேந்தனே!
    பொறுத்துக்கொள்வர் என நினைத்து
    பெரியோரிடம் அவர் வருந்துமாறு
    குற்றம் செய்யாமை நன்று
    அவர் வெகுண்டால் அதனை மாற்றுதல்
    அத்துணை எளிதன்று எவருக்கும்.

    பாடல் 162

    பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரைக்
    கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் – அன்னோ
    பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
    நயமில் அறிவி னவர்.

    பொன்னையே கொடுத்தாலும் நெருங்கமுடியாப்
    பெரியோரைச் செலவின்றி சேரத்தக்க நிலையைப்
    பெற்றினும் நற்பண்பற்ற அறிவிலார்
    பயனின்றி வீணாய்க் காலம் கழிப்பாரே.

    பாடல் 163

    அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும்
    மிகைமக்க ளான்மதிக்கற் பால – நயமுணராக்
    கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்
    வையார் வடித்தநூ லார்.

    அவமதிப்பும் மிக்க மதிப்பும்
    ஆகிய  இரண்டும் பெரியோரால்
    மதிக்கத்தக்கன நல்லொழுக்கமற்ற
    மனிதரின் பழிப்பையும் பாராட்டையும்
    ஆராய்ந்த நூலறிந்த பெரியோர்
    அற்பமாய்க் கருதி மதியார்.

    பாடல் 164

    விரிநிற நாகம் விடருள தேனும்
    உருமின் கடுஞ்சினம் சேணின்றும் உட்கும்;
    அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
    பெருமை யுடையார் செறின்.

    படம்விரிக்கும் பாம்பு மலைப்
    பிளப்பில் இருப்பினும் எழும்
    இடியோசைக்கு அஞ்சுதல்போல்
    மேன்மைமிகு பெரியோர்
    மனதில் கோபம் கொள்வாராயின்
    தவறிழைத்தோர் புக இயலா
    தரமான கோட்டையிலிருப்பினும்
    தப்பிப் பிழைக்கமாட்டார்.

    பாடல் 165

    எம்மை அறிந்தலிர் எம்போல்வார் இல்லென்று
    தம்மைத்தாம் கொள்வது கோளன்று; – தம்மை
    அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
    பெரியராக் கொள்வது கோள்.

    எம்மை அறியமாட்டீர் இவ்வுலகில்
    எமக்கு ஒத்தவர் எவருமிலர் எனத்
    தம்மைத்தாமே மதித்தல்
    தக்க குணம் ஆகா
    அறம் உணர்ந்த பெரியோர் நம்
    அருமை உணர்ந்து நம்மைப்
    பெரியோர் என மதித்தலே
    பெரும் பெருமையாம்.

    பாடல் 166

    நளிகடல் தண்சேர்ப்ப! நாணிழல் போல
    விளியும் சிறியவர் கேண்மை; – விளிவின்றி
    அல்கு நிழல்போல் அகன்றகன்று ஓடுமே
    தொல்புக ழாளர் தொடர்பு.

    பெருங்கடலின் குளிர்கரையுடையவனே!
    முற்பகலின் நிழல் போல் குறைந்து
    மறையும் சிறியோர் நட்பு
    பழம்புகழ் மிக்க பெரியோரின் நட்போ
    பிற்பகல் நிழல்போல் மிக்கு வளர்ந்து நீளூம்.

    பாடல் 167

    மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும்
    துன்னியார் துய்ப்பர் தகல்வேண்டா – துன்னிக்
    குழைகொண்டு தாழ்ந்த குளிர்மர மெல்லாம்
    உழைதங்கண் சென்றார்க்கு ஒருங்கு.

    அரசனின் செல்வத்தையும் பொதுமகளிரின்
    அழகையும் நெருங்கினவர் துய்ப்பர்
    அதற்குத் தகுதி வேண்டா எதுபோலெனில்
    அருமையாய்த் தளிர்விட்டுத் தழைத்து
    அமைந்த குளிர்மரமெல்லாம் தம்
    அருகே வந்தவர்க்கு நிழல்தருதல் போல.

    பாடல் 168

    தெரியத் தெரியும் தெரிவிலார் கண்ணும்
    பிரியப் பெரும்படர்நோய் செய்யும்; – பெரிய
    உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மட்டும்
    கலவாமை கோடி யுறும்.

    வற்றாத கழிக்கரையுடை
    வேந்தனே! நன்மை தீமை
    பிரித்துணரும் தெளிவிலாரிடம்
    பழகிப்பின் பிரிய நேர்ந்தால் அப்
    பிரிவு மிகு துன்பத்தைத் தருமெனவே
    எவரிடமும் நட்பு கொள்ளாமை
    எல்லோர்க்கும் கோடிபங்கு நன்மையாம்.

    பாடல் 169

    கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
    செல்லாது வைகிய வைகலும்; – ஒல்வ
    கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
    படாஅவாம் பண்புடையார் கண்.

    கற்கவேண்டிய நூல்களைக்
    கல்லாமல் வீணாகக்
    கழிந்த நாட்களும்
    கேள்வியின் காரணமாய்ப்
    கற்ற பெரியோரிடம் செல்லாது
    கழிந்த நாளும் தம்மால்
    கொடுக்கமுடிந்த அளவு
    கேட்பவர்க்குக் கொடாது
    கழிந்தநாளும் பண்புடையோரிடத்துக்
    காணக் கிட்டாதவை.

    பாடல் 170

    பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்கு
    உரியார் உரிமை அடக்கம் – தெரியுங்கால்
    செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்
    அல்லல் களைப எனின்.

    பெரியோருக்குப் பெருமை தருவது
    பண்பான எளிமையுணர்த்தும் செருக்கிலாப்
    பணிவுடைமையாம் கற்றோரின்
    பண்பு அடக்கமுடைமையாம்
    ஆராய்ந்து நோக்கின் தம்மை
    அண்டியவரின் வறுமைபோக்குவாராயின்
    செல்வம் உடையவரும் செல்வரே.

    Share
  • நாலடியார் நயம் – 16

    நாலடியார் நயம் – 16

    நாங்குநேரி வாசஸ்ரீ

    16. மேன் மக்கள்

    பாடல் 151

    அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்
    திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
    மறுவாற்றம்சான்றோர் அஃதாற்றார் தெருமந்து
    தேய்வர் ஒருமாசு உறின்.

    அழகிய இடத்தினை உடைய
    ஆகாயத்தில் விரிந்த நிலவினைப்
    பரப்பும் சந்திரனும் பெரியோரும்
    தம்முள் பெரும்பாலும் ஒப்பாவர்
    திங்கள் தம் களங்கத்தைப்
    பொறுப்பதுபோல் பெரியோர்
    பொறுக்காது தவறு நேருங்கால்
    தம்முள் வருந்தி மெலிவர்.

    பாடல்152

    இசையும் எனினும் இசையா தெனினும்
    வசைதீர எண்ணுவர் சான்றோர் – விசையின்
    நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ
    அரிமாப் பிழைபெய்த கோல்?

    கடும்வேகத்துடன் நரியின் மார்பைக்
    கிழித்த அம்பை விட சிங்கத்தை
    அழிக்க விடப்பட்ட குறிதவறிய
    அம்பு உயர்ந்ததாம் அதுபோல்
    முடிந்தாலும் முடியாவிட்டாலும்
    மேலோர் பழியற்ற செயலையே
    மனதிற்கொண்டு செய்வர்.

    பாடல் 153

    நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர்
    குரம்பெழுந்து குற்றம்கொண்டு ஏறார் – உரங்கவறா
    உள்ளமெனும் நாரினால் கட்டி உளவரையால்
    செய்வர் செயற்பா லவை.

    நரம்புகள் வெளித்தோன்றுமாறு
    நலிந்து வறுமையுற்றாலும்
    நல்லொழுக்கத்தின் வரம்புகடந்து
    நாவால் இரத்தலெனும் குற்றம்செய்ய
    நடந்து பிறரிடம் செல்லார்
    நல்லறிவைக் கவறாகக் கொண்டு
    நன்முயற்சியெனும் நாரினால்
    நெஞ்சத்தைக் அடக்கிக் கட்டி
    நற்செயலை உள்ள பொருள்கொண்டு
    நன்கு ஆற்றுவர் மேலோர்.

    பாடல் 154

    செல்வுழிக் கண்ணொருநாள் காணினும் சான்றவர்
    தொல்வழிக் கேண்மையில் தோன்றப் புரிந்தியாப்பர்;
    நல்வரை நாட! சில நாள் அடிப்படில்
    கல்வரையும் உண்டாம் நெறி.

    நல்ல மலைகள் உள்ள
    நாட்டுடை மன்னனே!
    போகும் வழியில் ஒருநாள்
    பார்த்தாலும் அவருடன்
    பலநாள் பழகியதுபோல்
    நட்புகொள்வர் மேன்மக்கள்
    தொடர்ந்து சிலநாள் நடந்தால்
    கல்மிகுந்த மலையும் தேய்ந்து
    காலடிபட்டு வழி உண்டாக்கும்
    பலநாள் பழகிப் பின் வரும் நட்பில்
    பெருமையில்லை மேன்மக்கள் நட்பே
    பெருமை வாய்ந்தது.

    பாடல் 155

    புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி
    கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
    நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்
    பல்லாருள் நாணல் பரிந்து.

    அரும் நூற்பொருளறியாப் பயனற்றவரின்
    அவையைச் சார்ந்த கல்லா ஒருவன்
    பொருத்தமற்று உரைப்பனவற்றை
    பலர்முன் சுட்டிக் காண்பித்தால்
    பல்லோரிடை அவனுக்கு அவமானம்
    விளையும் என எண்ணி மனம்
    வருந்தினாலும் அமைதியாய்க்
    கேட்டிருப்பர் அறிவுடையோர்.

    பாடல் 156

    கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
    இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;
    வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
    கூறார்தம் வாயிற் சிதைந்து.

    கரும்பைப் பல்லால் கடித்தாலும்
    கணுக்கள் உடையுமாறு நெரித்து
    ஆலையில் சாறுபிழிந்து
    அருந்தினாலும் இன்சுவை உள்ளதே
    அத்தகு மேன்மக்களோ
    மனம் புண்படும்படி
    மற்றோர் இகழ்ந்துரைத்தாலும்
    தம் வாயால் வசை கூறார்.

    பாடல் 157

    கள்ளார், கள் உண்ணார் கடிவ கடிந்தொரீஇ
    எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் – தள்ளியும்
    வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்
    சாயின் பரிவ திலர்.

    குற்றமற்ற அறிவுடையோர்
    களவு செய்யார் கள் அருந்தார்
    தள்ளத்தக்கவைகளைத் தள்ளி
    தூயவராய் மற்றோரை அவமதியார்
    தவறியும் தம் வாயால் பொய்யுரையார்
    தம் நிலைகெட்டுத் தளர்ந்தாலும் வறுந்தார்.

    பாடல் 158

    பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து
    ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய
    புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்
    அறங்கூற வேண்டா அவற்கு.

    அன்னியரின் இரகசியம் கேட்பதில் செவிடனாவும்
    அயலார் மனைவியைக் காண்பதில் குருடனாவும்
    அடுத்தவரில்லா நேரம் பழி பேசுவதில் ஊமையாகவும்
    அமைந்தவனுக்கு எவ்வித அறமும் கூறவேண்டா.

    பாடல் 159

    பன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
    என்னானும் வேண்டுப என்றிகழ்ப – என்னானும்
    வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
    காண்தொறும் செய்வர் சிறப்பு.

    நற்பண்பில்லாக் கீழோர் பல
    நாட்கள் வந்து கொண்டிருப்பவரையும்
    நம்மிடம் பலன் எதிர்பார்ப்பவர் என
    நம்பி அவமதித்து ஒதுக்குவர்
    நற்குணம்நிறை மேலோர்
    நாடி வருபவர் எதைக் கேட்டாலும்
    நல்லது என்று கூறி மகிழ்ந்து
    நாளும் நன்மையே செய்வர்.

    பாடல் 160

    உடையார் இவரென்று ஒருதலையாப் பற்றிக்
    கடையாயார் பின்சென்று வாழ்வர்; – உடைய
    பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
    குலந்தலைப் பட்ட இடத்து.

    செல்வம் உடையவர் இவர் எனச்
    சிந்தித்து உறுதியாய்ப் பற்றிக்கொண்டு
    அற்ப மனிதர் பின்சென்று பிழைப்பர் சிலர்
    அவர் மேன்மக்களுடன் சேர்ந்தவிடத்து
    அளவில்லாப் பொருள்நிறை சுரங்கம்
    அகப்பட்டதுபோல் இன்பம் கிட்டாதோ?

    Share
  • நாலடியார் நயம் – 15

    நாலடியார் நயம் – 15

    நாங்குநேரி வாசஸ்ரீ

     15. குடிப்பிறப்பு

    பாடல் 141

    உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்
    குடிப்பிறப் பாளர்தங் கொள்கையிற் குன்றார்
    இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா
    கொடிப்புல் கறிக்குமோ மற்று.

    ஆறாப் பசித்துயரிலும் சிங்கம்
    அருகம்புல்லைத் தின்னாது
    உடுக்கும்உடை கிழிந்து
    உடல் மெலிந்த வறுமையிலும்
    உயர்குடியில் பிறந்தோர் தம்
    உயர் ஒழுக்கத்தில் சிறிதும் குறையார்.

    பாடல் 142

    சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
    வான்தோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது – வான்தோயும்
    மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்
    எய்தியக் கண்ணும் பிறர்க்கு.

    மேகங்கள் தவழும்
    மலைகளுடை அரசனே!
    மேன்மை பெருந்தன்மை ஒழுக்கம்
    மூன்றும் உயர்குடியில் பிறந்தோரிடம்
    அல்லாது பெருஞ்செல்வம் சேர்ந்த
    அளவிலும் பிறரிடம் உண்டாகா.

    பாடல் 143

    இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனை
    விடுப்ப ஒழிதலோடு இன்ன – குடிப்பிறந்தார்
    குன்றா ஒழுக்கமாக் கொண்டார் கயவரோடு
    ஒன்றா உணரற்பாற் றன்று.

    பெரியோர் வரக் கண்டால்
    பணிவாய் எழுதலும்
    எதிர்சென்று வரவேற்றலும்
    ஏனைய உபசாரங்களும்
    விடைபெரும் நேரம்
    பின்சென்று திரும்புதலுமெனும்
    நல்லொழுக்கங்களைக் கொண்ட
    நற்குடியில் பிறந்தோரை
    நற்பண்பில்லா மூடருடன்
    ஒப்பிடுதல் ஏற்புடையதன்று.

    பாடல் 144

    நல்லவை செய்யின் இயல்பாகும் தீயவை
    பல்லவர் தூற்றும் பழியாகும் – எல்லாம்
    உணரும் குடிப்பிறப்பின் ஊதிய மென்னோ
    புணரும் ஒருவர்க் கெனின்?

    அவர் நல்லவை செய்யின்
    அது செய்யத்தகுந்த முறைமையாம்
    கெடுதல் செய்யின் பலரால்
    கெட்டவரெனப் பழிக்கப்படுவாராமெனின்
    அனைத்தும் உணர்ந்த அக்குடிப்பிறப்பால்
    உயர்குடிப்பிறப்பு அமைந்த ஒருவர்க்கு
    உண்டாகும் பயன்தான் என்ன?

    பாடல் 145

    கல்லாமை அச்சம் கயவர் தொழிலச்சம்
    சொல்லாமை யுள்ளுமோர் சோர்வச்சம்; – எல்லாம்
    இரப்பார்க்கொன் றீயாமை அச்சம்; மரத்தாரிம்
    மாணாக் குடிப்பிறந்தார்.

    கல்லாமைக்கு அஞ்சுவதும்
    கீழோரின் இழிதொழிலுக்கு அஞ்சுவதும்
    தகாத சொல் சொல்ல அஞ்சுவதும்
    தம்மிடம் கேட்பவர்க்குக் கொடுக்க
    இயலாமைக்கு அஞ்சுவதும் எனும்
    அச்சங்கள் உயர்குடிப்பிறந்தோரிடம்
    அமைந்துள்ளதால் மாண்புகளற்ற
    அச்சமில்லாத மற்றவர்
    மரத்தன்மையுடையோராம்.

    பாடல் 146

    இனநன்மை இன்சொல்ஒன்று ஈதல்மற் றேனை
    மனநன்மை என்றிவை யெல்லாம் – கனமணி
    முத்தோடு இமைக்கும் முழங்குவரித் தண்சேர்ப்ப!
    இற்பிறந்தார் கண்ணே யுள.

    மாணிக்க மணிகள் முத்துக்களுடன்
    மயங்கி ஒளிவீசும் ஒலிக்கும் கடலின்
    குளிர்மிகு கரையுடை வேந்தனே!
    சேருபவர்களின் நன்மை அவர்
    சொல்லும் இன்சொல்
    வறியவர்க்குக் கொடுத்தல்
    மனத்தூய்மை எனும்
    நற்குணங்கள் எல்லாம்
    நற்குடிப்பிறந்தவர்களிடத்தே உண்டு.

    பாடல் 147

    செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
    பொய்யா ஒருசிறை பேரில் உடைத்தாகும்;
    எவ்வம் உழந்தக் கடைத்துங் குடிப்பிறந்தார்
    செய்வர் செயற்பா லவை.

    வேலைப்பாடுகள் குலைந்து
    வீடுமுழுதும் கரையான் பிடித்தாலும்
    பெரிய வீடானது மழை
    பெய்யா ஒருபக்கத்தைப் பெற்றதுபோல்
    எத்தகு வறுமைத் துன்பம் வரினும்
    நற்குடிப்பிறந்தோர் செய்யத்தக்க
    நற்செயல்களையே செய்வர்.

    பாடல் 148

    ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
    அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் – திங்கள்போல்
    செல்லாமை செவ்வனேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
    ஒல்கார் குடிப்பிறந் தார்.

    இராகு எனும் பாம்பு ஒருபக்கத்தை
    இறுகப் பிடித்தாலும் தம் மறுபக்கத்தால்
    அழகிய பெரும் உலகிற்கு ஒளிகொடுக்கும்
    நிலவுபோல் வறுமைத் துன்பம் முன்னே
    நிற்பினும் தளராது உதவுவர் உயர்குடிப்பிறந்தோர்.

    பாடல் 149

    செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன
    செல்லிடத்தும் செய்யார் சிறியவர் – புல்வாய்
    பருமம் பொறுப்பினும் பாய்பரி மாபோல்
    பொருமுரண் ஆற்றுதல் இன்று.

    பருத்திருக்கும்போதும் மானினால்
    பாயும் குதிரைபோல்
    போரிட இயலாததுபோல
    வறுமை வாட்டும்நிலையிலும்
    உயர்குடிப்பிறந்தார் ஆற்றும்
    நற்செயலைச் செல்வம் மிக்குள்ள
    நேரத்திலும் செய்யார் கீழோர்.

    பாடல் 150

    எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
    அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்றுவார்;
    அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால்
    தெற்றெனத் தெண்ணீர் படும்.

    தண்ணீரற்ற காலத்தும் அகன்ற ஆறு
    தோண்டியவுடன் நீர்கொடுப்பதுபோல்
    பொருளற்ற காலத்தும் உயர்ந்தோர்
    தம்மை அண்டிவந்தவரின்
    துன்பம் போக்கி ஊன்றுகோலாய்த்
    தளர்ச்சி நீங்க உதவுவர்.

    Share