நாலடியார் நயம் – 21
நாங்குநேரி வாசஸ்ரீ
21. சுற்றம் தழால்
பாடல் 201
வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும்.
கருவுற்றதனால் அதுபற்றி வரும்
கணக்கற்ற நோவும் மசக்கையும்
குழந்தை பெறுங்காலத்தய நோவும்
கண்ணால் தம்மடியில் குழந்தையைக்
கண்ட தாய் மறப்பதுபோல் தாம்
கொண்ட தளர்ச்சியாலுற்ற துன்பமெலாம்
கனிவுடன்விசாரிக்கும் சுற்றத்தாரைக்
காணின் நீங்கும்.
பாடல் 202
அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் – பழு மரம்போல்
பல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்.
வெப்பம் மிகு கோடையில்
வந்தடைந்தோருக்கெல்லாம்
நிழல்தரும் மரம்போல் தம்மை
நெருங்கிய சுற்றத்தாரையெல்லாம்
தாங்கி ஒரே தன்மையாய்க் காத்து
தான் வருந்தி உழைத்து
பழுத்தமரம் போல் பலரும்
பயன்நுகர வாழ்வதே நல்ல
ஆண்மகனின் கடமையாம்.
பாடல் 203
அடுக்கல் மலைநாட! தன்சேர்ந் தவரை
எடுக்கலம் என்னார்பெரியோர்; – அடுத்தடுத்து
வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே
தன்காய் பொறுக்கலாக் கொம்பு.
அடுக்கடுக்கான மலைகளுடை நாட்டின்
அரசனே! அதிகமான காய்கள் கிட்டக்கிட்டக்
காய்த்தாலும் தன் காய்களைத் தாங்கிக்
கொள்ளாத மரக்கிளை இல்லையதுபோல்
தம்மைச் சார்ந்தவரைப் பெரியோர்
தாங்கமாட்டோம் எனச் சொல்லார்.
பாடல் 204
உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா
சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை; – நிலைதிரியா
நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால்
ஒற்கமி லாளர் தொடர்பு.
உலகோர் அறியும்வண்ணம்
உறவு கொண்டாலும்
அற்பரின் உறவு நீடிக்காது
அடங்கும் சில நாட்களிலே
தம் நிலைமாறாப் பெரியோரின்
தகுதியான உறவோ நன்னெறி
அடையத் தவம் செய்யும் காலத்தில்
அந்நெறியில் ஊன்றி நிற்பது போல்
அசையாது நிலைபெற்று நிற்கும்.
பாடல் 205
இன்னர் இனையர் எமர்பிறர் என்னும் சொல்
என்னும் இலராம் இயல்பினால் – துன்னித்
தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்கள் ஆகற்பா லார்.
இவர் இப்படிப்பட்ட எம் உறவினர்
இவர் உறவினரல்லார் என வேறுபாடு
காட்டும் சொல்லைச் சொல்லாத
குணமுடையோராய்த் துன்பத்தால்
வாடும் மக்களைச் சார்ந்து அவர்தம்
வாழ்க்கைத் துன்பத்தைக் களைபவரே
யாவருக்கும் தலைவராகும் தன்மையுடையார்.
பாடல் 206
பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல்
அக்காரம் பாலோடு அமரார்கைத்து உண்டலின்
உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்டு
எக்காலத் தானும் இனிது.
பொற்பாத்திரத்திலே இட்ட
புலிநகம்போலும் வெண்சோற்றை
பாலோடு சர்க்கரையும் கலந்து
பகைவர் கையால் உண்பதைக்காட்டிலும்
புல்லரிசிக்கூழ் உப்பில்லாதிருப்பினும்
பாசமான உயிர்போன்ற சுற்றத்தாரிடம்
பெற்று எந்தக் காலத்திலும் உண்பதினிது.
பாடல் 207
நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து
வேளாண்மை வெங்கருணை வேம்பாகும்; – கேளாய்,
அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும்
தமராயார் மாட்டே இனிது.
பகைவர் வீட்டில் வேளை தவறாது தந்த
பொரிக்கறியுணவும் வேம்புக்கு நிகரே
பிற்பகலில் நேரம்கடந்து கிடைத்தாலும்
பாசமான சுற்றத்தாரின் கீரைஉணவு இனியதே!
பாடல் 208
முட்டிகை போல முனியாது வைகலும்
கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்;
சூட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டார் எனப்படு வார்.
சம்மட்டி போல் வெறுக்காமலிருக்கும்படி
சலிக்காது நாள்தோறும் வாங்கி
உண்பவரும் காலம் வாய்த்தால்
குறடுபோல் கைவிட்டு விலகுவர்
அன்புமிகு உறவினரோ உலையாணிக்கோல் போல
அவருடன் துன்பமெனும் நெருப்பிலும் மூழ்குவர்.
பாடல் 209
நறுமலர்த் தண் கோதாய்! நட்டார்க்கு நட்டார்
மறுமையும் செய்வதொன் றுண்டோ ! – இறுமளவும்
இன்புறுவ இன்புற்று எழீஇ அவரோடு
துன்புறுவ துன்புறாக் கால்.
வாசனைப்பூக்களைச் சூடிய கூந்தலுடன்
விளங்குபவளே! உறவினர் தம் உறவினருடன்
அவர் சாகும்வரை இன்புறும்போது இன்புற்று
அவர் துன்புறும்போது சேர்ந்து தாமும்
வருத்தப்படுவதோடதல்லாது மறுபிறப்பிலும்
வேறு செய்யத்தக்க நற்செயல் ஒன்றுண்டோ?
பாடல் 210
விரம்பிலார் இல்லத்து வேறிருந்து உண்ணும்
வெருக்குக்கண் வெங்கருணை வேம்பாம்; – விருப்புடைத்
தன்போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை
என்போடு இயைந்த அமிழ்து.
தம்மை விரும்பாதார் வீட்டில்
தனித்து உண்ணும் பூனைக்கண்
போன்ற வெண் பொரிக்கறி உணவும்
புசித்தால் கசக்கும் வேம்பாகும்
தம்மிடம் விருப்பம் கொண்டோரின்
தெளிந்த நீருடன் கூடிய குளிர்
புல்லரிசிக்கூழும் உடம்புக்குப்
பொருந்தும் அமிழ்தமாகும்.