Tag: பழமொழி கூறும் பாடம்

  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: தம்மை யுடைமை தலை

     

    எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும்
    மன்ன ருடைய உடைமையும் – மன்னரால்
    இன்ன ரெனல்வேண்டா இம்மைக்கும் உம்மைக்கும்
    தம்மை யுடைமை தலை.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    எண்ணக் குறைபடாச் செல்வமும், இல் பிறப்பும்,
    மன்னர் உடைய உடைமையும், மன்னரால்
    இன்னர் எனல் வேண்டா; இம்மைக்கும் உம்மைக்கும்
    தம்மை உடைமை தலை.

    பொருள் விளக்கம்:
    எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட குறைவற்ற செல்வ வளமும், சிறந்த குடியில் பிறந்தவர் என்ற பெருமையும், மன்னருக்கு நெருக்கமானவர் என்ற செல்வாக்கு உடையவராக இருத்தலும், மன்னரால் திறமையானவர் இவர் எனப் பாராட்டிப் புகழப்படும் வாழ்க்கையை உடையவராக இருக்கும் தகுதியும் விரும்பத்தக்கவை அல்ல. இன்றும் என்றும் சான்றோர் எனப் பாராட்டும்படி தம்மைக் கட்டுப்படுத்தி வாழும் ஒழுக்கம் உடையவராய் வாழ்வதே தலைசிறந்தது.

    பழமொழி சொல்லும் பாடம்: பேரும் புகழும் பெரும் செல்வமும் பெற்று பெருமையுடன் வாழ்வதையும் விட, சான்றோர் எனப் பிறர் மதிக்கும் நிலையில் என்றும் ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கையே வாழ்வதே சிறந்தது. இக்கருத்தையே வள்ளுவரும்,

    குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
    எந்நலத்து உள்ளதூஉம் அன்று. (குறள்: 982)

    சான்றோரின் குணநலம் என்று கூறப்படுவது அவருடைய நற்பண்பு மட்டுமே, வேறு எத்தகைய தகுதியும் பெருமைதராது என்கிறார். இதை மேலும் வலியுறுத்த,

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும். (குறள்: 131)

    ஒருவருக்கு மேன்மையைத் தரும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக மதிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: அயிரை விட்டு வராஅஅல் வாங்குபவர்

     

    சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால்
    பெரிய பொருள்கருது வாரே – விரிபூ
    விராஅம் புனலூர வேண்டயிரை விட்டு
    வராஅஅல் வாங்கு பவர்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால்,
    பெரிய பொருள் கருதுவாரே;-விரி பூ
    விராஅம் புனல் ஊர! வேண்டு அயிரை இட்டு,
    வராஅஅல் வாங்குபவர்.

    பொருள் விளக்கம்:
    சிறிய பொருளைக் கொடுத்துச் செய்கின்ற செய்கைக்குப் பலனாக, பெரிய பொருள் ஒன்றைப் பயனாக அடையக் கருதுபவரின் செய்கை, விரிந்து மலர்ந்த பூக்கள் விரவி மிதக்கும் நதிநீர் பாயும் ஊரைச் சேர்ந்தவரே; தேவை கருதி சிறிய அயிரை மீனைத் தூண்டிலில் இட்டு பெரிய வரால் மீனைப் பிடிக்கும் செயலை ஒத்தது.

    பழமொழி சொல்லும் பாடம்: சிறிய மீனை தூண்டிலில் இட்டு பெரிய மீனைப் பிடிக்கும் செய்கையைப் போல, ஒரு பயனை எதிர்நோக்கிச் செய்த உதவியை ஈகை என்று கூற இயலாது. அதனால் இன்று கொடுக்கும் ஒரு கொடையின் பயனாகப் பின்னர் பலன் பெறலாம் என்ற எண்ணத்தில் செய்ய நினைக்கும் செயலை ஈகை எனக் கருத வழியில்லை. இதனையே வள்ளுவரும்,

    வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
    குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள்: 221)

    வறியவர்க்கு உதவும் நோக்கில் ஒரு பொருளைக் கொடுப்பதையே ஈகை எனக் கூறலாம், அதைத் தவிர்த்து பலன் ஒன்றைப் பெரும் நோக்கில் மற்றவர்களுக்கு வழங்குவது ஈகை ஆகாது, அது ஏதேனும் ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவது மட்டுமே என்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: சுமையொடு மேல்வைப்பா மாறு

     

    சிறந்த நுகர்ந்தொழுகும் செல்வ முடையார்
    அறஞ்செய் தருளுடைய ராதல் – பிறங்கல்
    அமையொடு வேய்கலாம் வெற்ப! அதுவே
    சுமையொடு மேல்வைப்பா மாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    சிறந்த நுகர்ந்து ஒழுகும் செல்வம் உடையார்
    அறம் செய்து அருள் உடையர் ஆதல்-பிறங்கல்
    அமையொடு வேய் கலாம் வெற்ப! அதுவே
    சுமையொடு மேல் வைப்பு ஆமாறு.

    பொருள் விளக்கம்:
    சிறப்பாக இன்பங்களைத் துய்த்து வாழும் செல்வந்தர்கள், அறங்களைச் செய்து அருள் உடையவராகவும் வாழ்வதென்பது; மலையில் மூங்கில்களும், வேய்களும் (உட்பக்கம் துளையுடைய மற்றொருவகை மூங்கில்) நெருங்கிச்செறிந்து வளர்ந்துள்ள மலை நாட்டைச் சேர்ந்தவரே, அத்தகைய வாழ்வு பொற்குவியல் சுமையின் மேல் விலைமதிப்பற்ற கற்களையும் வைத்துச் சுமந்து செல்வதைப் போன்றதாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்: இம்மையில் செல்வந்தராக இன்புற்று வாழ்பவர், அவர் செய்யும் அறச்செயல்களால் மறுமைக்கும் பயன் தரும் அருள் பெறத்தக்க வாழ்க்கையை வாழ்வது, பொற்குவியலின் மேல் மணிகளையும் சுமந்து செல்வதைப் போன்ற செய்கை என்பதால், செல்வந்தர்கள் அறச்செயல் புரிந்து வாழ்ந்திட வேண்டும். பொருள், அருள் ஆகியவை இம்மையிலும் மறுமையிலும் அடையும் பேறு என்பதைக் குறிக்க வள்ளுவர்,

    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (குறள்: 247)

    பொருள் இல்லாதவர்க்கு இப்புவியில் இன்ப வாழ்வு இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மறுமையில் இன்பம் இல்லை என்று குறிக்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி:  உமிக்குற்றுக் கைவருந்துமாறு

     

    தமக்குற்ற தேயாகத் தம்மடைந்தார்க் குற்ற
    தெமக்குற்ற தென்றுணரா விட்டக்கால் என்னாம்?
    இமைத்தருவி பொன்வரன்றும் ஈர்ங்குன்ற நாட
    உமிக்குற்றுக் கைவருந்து மாறு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    தமக்கு உற்றதே ஆகத் தம் அடைந்தார்க்கு உற்றது
    எமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால், என் ஆம்?
    இமைத்து அருவி பொன் வரன்றும் ஈர்ங் குன்ற நாட!
    உமிக் குற்றுக் கை வருந்துமாறு.

    பொருள் விளக்கம்:
    தனக்கு ஏற்பட்டதாகவே கருதி, தன்னை அடைந்த சுற்றத்தார்க்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை தனக்கு ஏற்பட்டது போல உணர்ந்து உதவாத உறவினரால் என்னதான் ஆகப் போகிறது? தொடர்ந்து அருவிநீர் பாய்வதால் பொன் கொழிக்கும் விளைச்சல் தரும் ஈரநிலத்தைக் கொண்ட மலைநாட்டைச் சேர்ந்தவரே, உமியைக் குற்றி கை சலித்துப் போவதை ஒத்த பயனற்ற செயல் (உதவாத உறவினரிடம் சென்று உதவி பெற நினைக்கும் செயல்)

    பழமொழி சொல்லும் பாடம்: உறவினரின் துயர் களைய உதவிடாத அன்பற்ற உறவினரிடம் உதவி கேட்டுச் செல்வது கைவலிக்க உமியைக் குற்றுவதை ஒத்த வீண் செயல். எனவே ஒருவருக்கு அமையும் சுற்றம் எவ்வாறாக இருத்தல் வேண்டும் என்று விளக்க முற்படும் வள்ளுவர்,

    விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
    ஆக்கம் பலவும் தரும். (குறள்: 522)

    அன்பு நீங்காத உறவினர் ஒருவருக்கு அமைந்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் பயப்பதாக அமையும் என்று கூறுகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: வித்து இன்றிச் சம்பிரதம் இல்

     

    நாணின்றி ஆகாது பெண்மை. நயமிகு
    ஊணின்றி ஆகா துயிர்வாழ்க்கை – பேணுங்கால்
    கைத்தின்றி ஆகா கருமங்கள். காரிகையாய்!
    வித்தின்றிச் சம்பிரத மில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    நாண் இன்றி ஆகாது பெண்மை; நயமிகு
    ஊண் இன்றி ஆகாது உயிர் வாழ்க்கை; பேணுங்கால்,
    கைத்து இன்றி ஆகா கருமங்கள்;-காரிகையாய்!
    வித்து இன்றிச் சம்பிரதம் இல்.

    பொருள் விளக்கம்:
    நாணம் என்ற பண்பு இல்லாமல் பெண்மை என்ற குணம் அமைவதில்லை. நலம்தரும் உணவை உண்ணாமல் உயிர் வாழ்வது இயலாது. ஆய்ந்து நோக்கும்பொழுது கைப்பொருள் இன்றி நமக்குத் தேவையான செயல்களை நடத்திக்கொள்ள முடியாது. அழகிய பெண்ணே! விதைகள் இல்லாவிட்டால் விளைச்சலைக் காண்பதும் இயலாது.

    பழமொழி சொல்லும் பாடம்: கையில் பொருளின்றிக் காரியங்களைச் செய்து முடிக்க முடியாது. இக்கருத்து உண்ண உணவின்றி உயிர் வாழ்தலும் முடியாது, விதைக்க விதைகளின்றி விளைச்சலும் காண முடியாது என்ற உண்மைகள் மூலம் புலப்படுத்தப் படுகிறது. இவ்வுலக வாழ்க்கைக்கு பொருள் தேவைப்படும் இன்றியமையாமையை விளக்க விரும்பிய வள்ளுவரும்,

    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (குறள்: 247)

    பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை சிறப்பாக அமையாதிருப்பது போல கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமைய வழியில்லை என்று எடுத்துரைக்கிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: யாப்பினுள் அட்டிய நீர்

     

    நூக்கி அவர்வெலினும் தாம்வெலினும் வெஞ்சமத்துள்
    தாக்கி எதிர்ப்படுவர் தக்கவர்; அஃதன்றிக்
    காப்பி னகத்திருந்து காய்வார் மிகவுரைத்தல்
    யாப்பினுள் அட்டிய நீர்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    நூக்கி அவர் வெலினும், தாம் வெலினும், வெஞ் சமத்துள்
    தாக்கி எதிர்ப்படுவர், தக்கவர்; அஃது அன்றி,
    காப்பின் அகத்து இருந்து, காய்வார் மிக உரைத்தல்
    யாப்பினுள் அட்டிய நீர்.

    பொருள் விளக்கம்:
    போரில் பிறர் வென்றாலும், தான் வென்றாலும் (என வெற்றி யாருடையதாக இருப்பினும்), கொடிய போர்க்களத்தில் தாக்கி எதிர்ப்பவரே வீரர் எனக் கூறத் தகுதியுடையவர். அவ்வாறின்றி, பாதுகாப்பான அரணுக்குள் இருந்துகொண்டு, சினம் கொண்டவர் போல பேசும் வாய்ச்சொல் வீரம் என்பது வயலில் பாய்ச்சிய நீர் (பயிர் வளர உதவுவது போல, பகையென்னும் பயிரை வளர்க்கவே உதவும்).

    பழமொழி சொல்லும் பாடம்: அஞ்சாமையுடன் போர்புரிந்து, பகையழித்து வெற்றியை எதிர்கொள்பவரே வீரர்கள் எனப் பாராட்டத் தக்கவர்கள். வாய்ச்சொல் வீரர்கள் உண்மையில்  வீரர்களே அல்லர். குறள் கூறும் படைவீரர் கொண்டிருக்க வேண்டிய வீரர்களது பண்பாகக் குறிக்கப்படுவது,

    கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
    ஆற்ற லதுவே படை. (குறள்: 765)

    உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலைக் கொண்டவரே படையினர் என்பதாகும்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: யார்க்கானும் அஞ்சுவார்க் கில்லை யரண்

     

    வன்சார் புடைய ரெனினும் வலிபெய்து
    தஞ்சார் பிலாதாரைத் தேசூன்ற லாகுமோ
    மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும்
    அஞ்சுவார்க் கில்லை யரண்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    வன் சார்பு உடையர் எனினும், வலி பெய்து,
    தம் சார்பு இலாதாரைத் தேசு ஊன்றல் ஆகுமோ?
    மஞ்சு சூழ் சோலை மலை நாட! யார்க்கானும்
    அஞ்சுவார்க்கு இல்லை, அரண்.

    பொருள் விளக்கம்:
    வலிமை உள்ளவர்களைச் சார்ந்து இருப்பவராக இருந்தாலும், அவருக்கு வலிமையூட்டி, தனது சொந்த வலிமை இல்லாத ஒருவரைப் புகழ் பெறச் செய்தல் இயலுமா? மேகங்கள் தவழ்ந்து செல்லும் சோலைகளுடைய மலைநாட்டைச் சேர்ந்தவரே, யாராக இருப்பினும் அஞ்சி நடுங்குபவருக்கு எந்த அரண் தரும் பாதுகாப்பினாலும் பயனில்லை.

    பழமொழி சொல்லும் பாடம்: அஞ்சி நடுங்கும் ஒருவருக்கு எந்த அரணும் பாதுகாப்பு அளிக்காது, அதுபோல தனக்கே துணிவில்லாத ஒருவருக்கு அடுத்தவர் தரும் பாதுகாப்பு என்றும் உதவாது. இந்த உண்மையை எடுத்துரைக்கும் வள்ளுவர் தரும் குறள்,

    அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
    பொச்சாப் புடையார்க்கு நன்கு. (குறள்: 534)

    பயத்தினால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் அதனால் எந்த ஒரு பயனுமில்லை. அதைப் போலவே மறதி உடையவர்க்கு நல்லதொரு நிலை வாய்த்தாலும் அதனால் அவருக்கு பயன் இருக்காது என்று விளக்குகிறது.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

     

    பழமொழி: கள்ளைக் குடித்துக் குழைவாரோ இல்

     

    கொடித்திண்டேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்
    எடுத்துமேற் கொண்டவ ரேய வினையை
    மடித்தொழிதல் என்னுண்டாம் மாணிழாய்! கள்ளைக்
    குடித்துக் குழைவாரோ இல்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    கொடித் திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார்,
    எடுத்து மேற்கொண்டு அவர் ஏய வினையை
    மடித்து ஒழிதல், என் உண்டாம்?-மாணிழாய்!-கள்ளைக்
    குடித்துக் குழைவாரோ இல்.

    பொருள் விளக்கம்:
    கொடி பறக்கும் வலிமை பொருந்திய தேரினை கொண்ட மன்னவனின் தயவில், அவனது பொருளைக் கொண்டு தங்களது வாழ்வை நடத்தும் நிலையில் உள்ளவர், மன்னர் ஒரு செயலைச் செய்ய முடிவெடுத்து அதைச் செய்துமுடிக்க இட்ட கட்டளையை, தனது சோம்பலின் காரணமாக விரைவாகச் செய்யாமல் போவதால் என்ன பயன் உண்டாகும்? மாட்சிமை பொருந்திய அணிகலன்களை அணிந்தவரே, கள்ளைக் குடித்தபின்னர் துவண்டிருப்பவர் ஒருவரும் கிடையாது (கள் தரும் போதையினால் குடித்தவர் துணிகரச் செயல்களையும் செய்தல் போல அதிகாரத்தில் உள்ளவர் இட்ட கட்டளையை செயல்படுத்துவீராக).

    பழமொழி சொல்லும் பாடம்: அதிகாரமுடையோர் இடும் கட்டளையை அவரை அண்டிப் பிழைப்போர் சோம்பலின்றி விரைவில் முடித்துக் கொடுக்க வேண்டும். இப்பழமொழியின் சுட்டும் அதிகாரம் உடையவரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையை வள்ளுவர்,

    போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
    தேற்றுதல் யார்க்கும் அரிது. (குறள்: 693)

    ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால், தம் பங்கில் குற்றங்கள் நேர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; அப்படி நேர்ந்து விட்டால், பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல என்ற குறள் வழி விளக்குகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: இழி தரு தண்புனல் நீத்தம் மலைப்பெயல் காட்டுந் துணை

     

    கல்வி யகலமும் கட்டுரை வாய்பாடும்
    கொல்சின வேந்தன் அவைகாட்டும் – மல்கித்
    தலைப்பாய் இழிதரு தண்புனல் நீத்தம்
    மலைப்பெயல் காட்டுந் துணை.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    கல்வி அகலமும், கட்டுரை வாய்பாடும்,
    கொல் சின வேந்தன் அவை காட்டும்;-மல்கி,
    தலைப்பாய் இழிதரு தண் புனல் நீத்தம்
    மலைப் பெயல் காட்டும் துணை.

    பொருள் விளக்கம்:
    பரந்துபட்ட கல்வி அறிவையும், சிறந்த நாவன்மையையும், எதிரியை அழித்துவிடும் கொடுஞ்சினத்தையும் கொண்ட மன்னவனின் திறமையானது அவனது அவையோரின் சிறப்புகளினால் அமைவது என அறிந்து கொள்ளலாம். (அது எவ்வாறென்றால்) பெருகிப் பொங்கி வீழ்கின்ற குளிர்ந்த புனலின் அளவினை மலை மீது பொழிந்த மழையின் அளவு காட்டி நிற்பது போலவாகும்.

    பழமொழி சொல்லும் பாடம்: ஒரு சிறந்த அரசனின் கல்வியையும், நாவன்மையையும், வீரத்தையும் அவனது அவையோரின் திறம் கண்டே அறிந்துவிட முடியும். இவ்வாறாக அவையோரின் திறமையினால் மன்னன் புகழடைவதை வள்ளுவர் தரும் இரு வேறு குறள்களின் வழி அறியலாம்.

    சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
    சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். (குறள்: 445)

    தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், சிறந்த அறிவுரை கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்.

    தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
    செற்றார் செயக்கிடந்த தில். (குறள்: 446)

    தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: மென்கண்ணன் ஆளான் அரசு

     

    எங்கண் இனையர் எனக்கருதின் ஏதமால்
    தங்கண்ண ரானும் தகவில கண்டக்கால்
    வன்கண்ண னாகி ஒறுக்க ஒறுக்கல்லா
    மென்கண்ணன் ஆளான் அரசு.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    எம் கண் இனையர் எனக் கருதின், ஏதமால்;
    தம் கண்ணரானும் தகவு இல கண்டக்கால்,
    வன்கண்ணன் ஆகி ஒறுக்க; ஒறுக்கல்லா
    மென்கண்ணன் ஆளான், அரசு.

    பொருள் விளக்கம்:
    (நீதி கூறுமிடத்து நடுநிலை தவறி) எனது கண் போன்றவர் இவர் என்றெல்லாம் கருதத் துணிந்தால் அது நீதிதவறும் குற்றமாகும். தமது கண்ணைப் போன்றவராகவே இருந்தாலும், தகாத குற்றச் செயலில் ஈடுபடுபவராக அவரைக் காண நேர்ந்தால், வன் கண்மையோடு சினந்து தண்டிக்கவேண்டும். தண்டிக்காது மென்மையாக மன்னித்து விடுபவர் அரசாளத் தகுதியற்றவர்.

    பழமொழி சொல்லும் பாடம்: நடுநிலை தவறாமல் நீதிவழங்குவது அரசாட்சி செய்பவரின் கடமை. இதனைக் குறிக்கும் வள்ளுவர் வாய்மொழி,

    ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்: 541)

    குற்றத்தை ஆராய்ந்து எவரிடத்தும் விருப்பு வெறுப்பின்றி, நடுநிலையோடு தக்க தண்டனையை வழங்குவதே நேர்மை தவறாத செயலாகும் என்று அறிவிக்கிறது.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: குறும்பியங்கும் கோப்புக் குழிச் செய்வதில்

     

    எவ்வந் துணையாய்ப் பொருள்முடிக்கும் தாளாண்மை
    தெய்வ முடிப்புழி என்செய்யும்? – மொய்கொண்டு
    பூப்புக்கு வண்டார்க்கும் ஊர! குறும்பியங்கும்
    கோப்புக் குழிச்செய்வ தில்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    எவ்வம் துணையாய்ப் பொருள் முடிக்கும் தாளாண்மை,
    தெய்வம் முடிப்புழி, என் செய்யும், மொய் கொண்டு?-
    பூப் புக்கு வண்டு ஆர்க்கும் ஊர!- குறும்பு, இயங்கும்
    கோப் புக்குழி, செய்வது இல்.

    பொருள் விளக்கம்:
    துன்பமே துணையாக (வரும் பொழுதில்), தான் செய்து முடிக்க விரும்புவதைச் செய்யும் முயற்சிகள், விதி வலியால் நடைபெறாது போக நேர்ந்தால் என்ன செய்யமுடியும், முயல்வதால் பலனில்லை. பூவுக்குள் வண்டு புகுந்து ஒலியெழுப்பும் ஊரைச் சேர்ந்தவரே, குறுநில அரசனால், எத்திசையும் வெற்றியை நிலைநாட்டி வரும் பேரரசன் ஒருவன் தனது நாட்டில் போரிடப் புகுந்தால் அடங்கிப் போவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது.

    பழமொழி சொல்லும் பாடம்: தனது முயற்சிக்கு எதிராக விதி சதி செய்யும் பொழுது முயற்சிகள் பயனளிப்பதில்லை. நாம் எவ்வளவுதான் முயன்றாலும், சில நேரம் நமது கட்டுப்பாட்டில் இல்லாத நிகழ்வுகள் நமது முயற்சிக்கேற்ற பலனைத் தருவதில்லை. இவ்வாறு நிகழும் கைமீறிய விளைவுகளுக்கு வள்ளுவர் ஊழினைக் காரணமாகக் காட்டுகிறார்.

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும். (குறள்: 380)

    ஊழை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வலிமையானவை வேறு எவை என்று கூறமுடியும் என்பது விதி வலியது என அறிவுறுத்தும் வள்ளுவர் வாக்கு.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: தீயன ஆவதே போன்று கெடும்

     

    அல்லது செய்வார் அரும்பொரு ளாக்கத்தை
    நல்லது செய்வார் நயப்பவோ? – ஒல்லொலிநீர்
    பாய்வதே போலும் துறைவ! கேள் தீயன
    ஆவதே போன்று கெடும்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை
    நல்லது செய்வார் நயப்பவோ?-ஒல் ஒலி நீர்
    பாய்வதே போலும் துறைவ! கேள்;-தீயன
    ஆவதே போன்று கெடும்.

    பொருள் விளக்கம்:
    அறநெறி வழியல்லாத செயல்களில் ஈடுபட்டு ஒருவர் ஈட்டிய செல்வத்தை நன்னெறியினைக் கடைப்பிடிப்பவர் விரும்புவார்களோ? (விரும்புவதில்லை, எனவே) ஒலியுடன் பாறையில் நீர் பாய்வது போன்று அமைந்த துறையைச் சேர்ந்தவரே, கேட்பாயாக. தீயவழியில் சேர்த்த செல்வம் பெருகுவது போலத் தோற்றம் தந்தாலும் விரைவில் அழிந்துவிடும்.

    பழமொழி சொல்லும் பாடம்: தீயவழியில் பொருள் சேர்க்கக்கூடாது. நல்வழி நடப்போர் தீயவழியில் வந்த பொருளை விரும்புவதில்லை, தீயவழியில் சேர்த்த செல்வமும் வளர்வது போன்று தோன்றினாலும் அழிந்து போகும். இக்கருத்தையே வள்ளுவரும்,

    களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
    ஆவது போலக் கெடும். (குறள்: 283)

    கொள்ளையடித்துப் பொருள் குவிப்பதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோற்றத்தைத் தந்தாலும், தீய வழியில் ஈட்டிய பொருளானது முன்னர் சேர்த்திருந்த செல்வத்தையும் இல்லாது அழித்துவிடும் என்று அறிவுறுத்துகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: சேணோக்கி நந்துநீர் கொண்டதேபோன்று

     

     

    தந்தம் பொருளும் தமர்கண் வளமையும்
    முந்துற நாடிப் புறந்தர லோம்புக
    அந்தண் அருவி மலைநாட! சேணோக்கி
    நந்துநீர் கொண்டதே போன்று.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    தம் தம் பொருளும், தமர்கண் வளமையும்,
    முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக
    அம் தண் அருவி மலை நாட! சேண் நோக்கி,
    நந்து, நீர் கொண்டதே போன்று!

    பொருள் விளக்கம்:
    தத்தமது பொருளின் அளவினையும், தன்னைச் சார்ந்திருப்போரது செல்வத்தின் நிலையையும் முற்றிலும் நன்கு ஆராய்ந்து, பின்னாளில் உதவும் பொருட்டு தகுந்த அளவு பொருளைச் சேமித்து வாழ வேண்டும். அழகிய குளிர்நீர் அருவிகள் பாயும் மலைநாட்டில் வாழ்பவரே, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நத்தை நீரைச் சேமித்துக் கொள்வது போல வாழ வேண்டும்.

    பழமொழி சொல்லும் பாடம்: நத்தை நீரை சேமித்துக் கொண்டுவாழ்வதுபோல, எதிர்காலத்தில் துன்பமின்றி வாழ்வதற்காகத் திட்டமிட்டுப் பொருள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, எதிர்காலத்திற்காகத் திட்டமிடலை வலியுறுத்த வள்ளுவரும்,

    எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
    அதிர வருவதோர் நோய். (குறள்: 429)

    வரப்போவதை முன்னே அறிந்து தன்னைக் காத்துக் கொள்ளும் திறன் கொண்ட அறிவுடையவர்க்கு, அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது, என்றும் அவ்வாறு திட்டமிடுதலை அறிவுடைமை என்பதனைக் குறிக்க,

    ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
    ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். (குறள்: 662)

    இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம், என்றும் குறிப்பிடுகிறார்.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: வேல்குத்தின் காணியின் குத்தே வலிது

     

    தெருளா தொழுகும் திறனிலா தாரைப்
    பொருளா லறுத்தல் பொருளே – பொருள்கொடுப்பின்
    பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேற்குத்தின்
    காணியின் குத்தே வலிது.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

     

    பதம் பிரித்து:
    தெருளாது ஒழுகும் திறன் இலாதாரைப்
    பொருளால் அறுத்தல் பொருளே; பொருள் கொடுப்பின்,
    பாணித்து நிற்கிற்பார் யார் உளரோ?-வேல் குத்தின்
    காணியின் குத்தே வலிது.

    பொருள் விளக்கம்:
    தனது தகுதியை உணராது ஆணவத்துடன் செயல்படும் திறமையற்றப் பகைவரை, பொருள் கொண்டு அழித்தலே சரியான நடவடிக்கை. (அந்த எதிரியை ஒழிக்கும் நோக்கில் கைக்கூலியாக) தேவையானப் பொருளைக் கொடுத்தால் பகையை நீக்கத் தயங்குபவர் யாராவது உள்ளார்களா? கூரிய வேலைக் கொண்டு அழிப்பதைக் காட்டிலும் பணத்தால் அடிப்பதே வலிமையானது.

    பழமொழி சொல்லும் பாடம்: எல்லோருக்கும் ஒரு விலையுண்டு, பணம் எதையும் சாதிக்க வல்லது என்பதால் செல்வதைத் தக்க முறையில் பயன்படுத்தி எதிரியின் இடையூறை நீக்க வேண்டும்.

    காணி என்பது பெருஞ்செல்வத்தில் ஒரு சிறு பகுதி, அதனைப் பயன்படுத்தி எதிரியின் இடையூறை நீக்க வேண்டும். இந்தப் பழமொழி கூறும் பொருளில் உள்ள திருக்குறள்,

    செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
    எஃகதனிற் கூரிய தில். (குறள்: 759)

    பகைவரின் செருக்கை அழிக்கத் தகுதியான கூர்மையான ஆயுதம் செல்வம் போன்று வேறொன்று இல்லை என்பதால் செல்வத்தை ஈட்டுவது தேவையாகிறது என்று அறிவுறுத்துகிறது.

    இந்தப் பழமொழியின் கருத்தை ஒத்த பல பழமொழிகள் தமிழில் உண்டு. ஈட்டி எட்டியவரைப் பாயும், பணம் பாதாளம் வரை பாயும். பணம் பத்தும் செய்யும். குரைக்கும் நாய்க்குப் போடும் எலும்புத்துண்டு நாயை அமைதிப்படுத்தும். இக்காலத்து அரசியலில் எதிரியை ஒழிக்க அல்லது விலைக்கு வாங்கிவிட உதவுவது பணம். இப்பழமொழியை ஒத்த ஆங்கிலப் பழமொழிகள் “A golden dart kills where it pleases”, “A golden hammer breaks an iron gate” ஆகியன.

    Share
  • பழமொழி கூறும் பாடம்

    தேமொழி.

     

    பழமொழி: தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே, தா அம் தர வாரா நோய்

     

    ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன்
    மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
    தோஓ முடைய தொடங்குவார்க் கில்லையே
    தாஅம் தரவாரா நோய்.

    (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

    பதம் பிரித்து:
    ஆஅம் எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன்,
    மேஎந் துணை அறியான், மிக்கு நீர் பெய்து, இழந்தான்;-
    தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே,
    தா அம் தர வாரா நோய்.

    பொருள் விளக்கம்:
    ஆம் இச்செயல் எனக்கு எளிது என்று உலகை ஆண்ட மாவலி மன்னன், தனக்குத் துணையாக நின்று ‘மூன்றடி நிலத்தை கொடையாகக் கொடுக்க வேண்டாம்’ என்று குரு சுக்கிரன் கூறிய அறிவுரையை மதிக்காது, செருக்குடன் வாமனனுக்கு நீர் ஊற்றித் தாரை வார்த்துக் கொடுத்து அனைத்தையும் இழந்தான். (அது போல) தவறான காரியங்களை செய்யத் தொடங்குபவருக்கு, தமக்குத் தாமே வரவழைத்துக் கொள்ளும் துன்பம் போன்று வேறொன்று இல்லை.

    பழமொழி சொல்லும் பாடம்: ஆராயாது தவறான காரியங்களைச் செய்யத் தொடங்குபவர் தனக்குத் தானே கேடு விளைவித்துக் கொள்வார். இக்கருத்து மாவலி மன்னனின் செயல் பற்றிய புராணக் கதை கொண்டு விளக்கப்படுகிறது. இதனை வள்ளுவர்,

    கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
    முடிந்தாலும் பீழை தரும். (குறள்: 658)

    ஆகாதவை என விலக்கப்பட்டச் செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு தொடர்ந்து செய்பவர்களுக்கு அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும் என்று கூறுகிறார்.

    “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற கணியன் பூங்குன்றனார் கூற்றை இன்றும் மறவாதவர் இல்லை. இக்காலத்தில் “சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது” என தமக்குத் தாமே துன்பத்தை வரவழைத்துக் கொள்ளும் செயல் பரவலாக அறியப்படுகிறது. இப்பழமொழியை ஒத்த ஆங்கிலப் பழமொழிகள் “Shoot oneself in the foot”, “A man may cause his own dog to bite him” ஆகியன.

    “தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே, தா அம் தர வாரா நோய்” என்பது பழமொழி என்று கூறும் உரை நூல்களும் உள்ளன. “ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன் மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்” என்ற மாவலியின் செயலை பழமொழியாக மா. இராசமாணிக்கனார் தனது உரையில் காட்டுகிறார்.

    Share