Tag: சக்தி சக்திதாசன்

  • 2021 ஒரு பார்வை

    2021 ஒரு பார்வை

    சக்தி சக்திதாசன்
    இலண்டன்

    2021 !

    கோவிட் எனும் ஒரு நுண்கிருமியின் தாக்கத்தோடு ஆரம்பித்து அதே நுண்கிருமியின் தாக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நுண்கிருமி கொடுத்த நோய்த்தாக்கத்திலிருந்து தப்பும் வழிகளில் மனதைச் செலுத்துவதிலேயே இவ்வகிலத்தின் பல நாடுகளின் முழுமுயற்சியும் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளையில் வேறு பல நிகழ்வுகள் ஆரவாரமின்றியே நடந்தேறி விட்டிருக்கிறது.

    உலக அரசியலை எடுத்துக் கொள்வோம், மிகுந்த அமர்க்களத்துடனும், ஆரவாரத்துடனும் அமெரிக்க முன்னாள் ஐனாதிபதி ட்ரம்ப் அவர்கள் தனது தேர்தல் தோல்வியை ஏற்றுப் பதவி துறக்கச் செய்யப்பட்டு, புதிய ஐனாதிபதியாக பைடன் அவர்கள் பலத்த எதிர்பார்ப்புகளோடு பதவியலமர்ந்தது 2021ம் ஆண்டின் ஆரம்பத்திலே. இவரின் மீதான எதிர்பார்ப்புகள் அமேரிக்க நாட்டு மக்களிடையே மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிலும் இருந்தது என்பதே உண்மை.

    இன்று அந்த எதிர்பார்ப்புகள் எந்நிலையிலுள்ளன என்பது ஒரு கேள்விக்குறியே!

    முன்னாள் ஐனாதிபதி ட்ரம்ப் அவர்கள் மீதிருந்த மாபெரும் குற்றச்சாட்டு, அவரின் உலகை நோக்கிய பார்வையாகும். அமேரிக்கா அமேரிக்கர்களுக்கு மட்டும் எனும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்திருந்ததே அதற்குக் காரணம் என்றார்கள் அனுபவமிகுந்த அரசியல் அவதானிகள். அத்தோடு ட்ரம்ப் அவர்களின் செயற்பாடுகள் உலக சமாதானத்துக்கு குந்தகம் விளைவிப்பவை எனும் கருத்தும் வலிமையாக நிலவி வந்தது.

    ஆனால் இன்று மாற்று எதிர்பார்ப்புகளோடு ஐனாதிபதியான பைடன் அவர்களின் செயற்பாடுகள் அக்கருத்துகளில் எத்தகைய மாற்றங்களை விளைவித்திருக்கின்றது என்பதும் கேள்விக்குறியே! விடையை 2022 நல்குமா? என்பதற்குக் காலம்தான் விடை பகர வேண்டும்.

    சரி இனி ஐக்கிய இராச்சியத்தின் நிலையைப் பார்ப்போமா?

    2020ம் ஆன்டு டிசம்பர் 31ம் திகதியோடு பிரெக்ஸிட் எனும் கத்தி கொண்டு ஐக்கிய இராச்சியத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமான 40 வருட உறவென்னும் தொடர்பை முற்றாக அறுத்தது ஐக்கிய இராச்சியம். இருப்பினும் இதன் முக்கியத்துவம் கோவிட் எனும் நுண்கிருமியின் முக்கியத்துவத்தினுள் புதைந்து போயிற்று என்பதே உண்மையாயிற்று. வழமையாக இந்நிகழ்வினை அறுத்து உருத்துப் புரட்டி எடுக்கும் ஊடகங்கள் தமது முழுக்கவனத்தையும் இதன்பால் திருப்ப முடியாமல் போனதுக்கு பிரதமர் பொரிஸ் ஜான்சன் கோவிட்டுக்கு நன்றி சொல்லியிருப்பாரோ?

    கோவிட் தாக்கத்தினால் வைத்தியசாலைகள் நிரம்பி வழிய நிலைமையைச் சமாளிக்க ஒரு முழு லாக்டவுனை அமுலாக்கி ஐக்கிய இராச்சிய மக்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த 2020 கிறிஸ்மஸ் நிகழ்வையே இரத்தாக்கிய பெருமைக்குரியராகினார் பிரதமர் பொரிஸ் ஜான்சன், பாவம் பொதுமக்கள் தங்கள் உயிரைப் பாதுகாப்பதைப் பெரிதாக என்ணுவார்களா? இல்லை பொருலாதாரச் சிக்கலை உருவாக்கப் போகும் பிரெக்ஸிட்டின் தாக்கத்தை எதிர்நோக்குவார்களா?

    பிரெக்ஸிட்டினால் உருவாகிய பொருளாதாரப் பின்னடைவுகள் அனைத்தும் கோவிட் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருலாதாரப் பின்னடைவு எனும் போர்வைக்குள் அமுங்கிப் போய் விட்டது.

    ஐரோப்பிய ஒன்றியத்தினரின் ஐக்கிய இராச்சியத்துக்குள் நுழைவதற்கு உருவாகிய புதிய கட்டுப்பாடுகள் ஐக்கிய இராச்சியத்தின் பல துறைகளில் பணியாளர்களின் தட்டுப்பாட்டைத் தோற்றுவித்தது.

    அதேநேரம் மகத்தான ஒரு பெரிய நன்மை விழைந்ததும் 2021இலேதான். ஆம் 2020 அக்டோபர்/ நவம்பர் மாதங்களில் வைத்தியத்துறையின் சாதனையால் உருவாக்கப்பட்ட கோவிட்டுக்கான தடுப்பூசி மக்களின் பரவலான பாவனைக்கு கொண்டு வரப்பட்டது 2021இலேதான். பலமுனைகளில் விமர்சிக்கப்பட்ட பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களதும், அவரது மந்திரிசபையினதும் மாபெரும் வெற்றியாக இந்தத் தடுப்பூசி நடைமுறையாக்கம் ஊடகங்களினால் விமர்சிக்கப் பட்டது.

    ஐக்கிய இராச்சியத்தின் ஜனத்தொகையில் அரைப்புங்குக்கும் அதிகமாக மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டதால் ஜீலை மாதம் 19 தேதி முதல் ஐக்கிய இராச்சியம் லாக்டவுனிலிருந்து விடுபட்டு மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பியது. எந்தவொரு எதிர்மறையான விமர்சனங்களாலும் பாதிக்கப்படமுடியாதவர் எனும் நிலையிலிருந்த பொரிஸ் ஜான்சனது செல்வாக்கு கொஞ்சம், கொஞ்சமாக ஆட்டம் காணத் தொடங்கியது. ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாதவர் , நாட்டின் நம்பிக்கைக்கு பாத்திரமற்றவர் எனும் வகையிலான கருத்துகள் அவர் மீது எழ அடுத்தடுத்து அவருக்குப் பாதகமான செய்திகள் வரத் தொடங்கியுள்ளது.

    2020ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த வேளையில் அவரது பிரதமருக்கான பணிமனையிலேயே அவருக்கு கீழியங்கும் சில துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் அந்தப் பணிமனையிலேயே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்தினார்கள் எனும் செய்திகள் புகைப்பட ஆதாரங்களுடன் வெளிவரத் தொடங்கியுள்ளது. இது பிரதமர் மீதும், அவரது மந்திரிசபை மீதும் மக்களுக்கான நம்பிக்கையைச் சிதறடித்துள்ளது எனலாம். அதைத்தவிர அவரின் இருப்பிடத்தினை சீரமைப்பதற்கான நிதி அவர் சார்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சி ஆதரவாளரின் தயவால் கிடைத்தது என்பதும் அவரது நிலையை மேசங்கடத்துள்ளாக்கியுள்ளது.

    இப்போது இக்கொரோனா நுண்கிருமியின் திரிபடைந்த தோற்றமான ஒமிக்குரோன் எனும் வகை உலகெங்கும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடற்ற முறையில் பரவத் தொடங்கியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் தினமும் 120000 க்கும் மேற்பட்டவர்கள் இப்புதிய தொற்றால் பீடிக்கப்படுகிறார்கள். ஐக்கிய இராச்சியத்தின் பகுதிகளான ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்த போதிலும் இங்கிலாந்தில் எதுவிதமான சட்டபூர்வமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. தொற்றுக்கள் அதிகரிப்பினும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் அளவிற்கு இது பாரதூரமானதல்ல எனும் கருத்தின் அடிப்படையில் செயற்படுவதாக பிரதமர் பொரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்,

    இதன் தாக்கம் இனிவரும் நாட்களிளேயே தெரியவரும். இது சரிந்து வரும் பிரதமரின் செல்வாக்கை தூக்கி நிறுத்துமா? இல்லை அவரது செல்வாக்கை அதாள பாதாளாத்தை நோக்கித் தள்ளி விடுமா என்பதனை இனிவரும் நாட்களே முடிவு செய்யப்போகிறது. இதுதவிர ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தின் மீதான பிரக்ஸிட்+ கோவிட் ஏற்படுத்திய தாக்கங்களின் விளைவுகள் கூட 2022இல் மேலும் வெளிப்படையாகத் தெரியும்.

    இனி சர்வதேச அளவிலான சில முக்கிய பாதிப்புகளை பார்ப்போமா?

    கடந்த வருடம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நாடாக ஆப்கானிஸ்தான் அமைந்தது எனலாம். சர்வதேச பயங்கரவாதத்துக்கு துணைபோகும் நாடு ஆப்கானிஸ்தான் எனும் குற்றச்சாட்டின் பிரகாரம் அன்றைய ஆப்கானிஸ்தான் ஆட்சியைக் கலைத்து தலிபான்களுடன் போரிட்டு ஆப்கானிஸ்தானைத் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர போரிட்ட சர்வதேச நாடுகளின் முன்னனியில் அமேரிக்காவும், இங்கிலாந்தும் இருந்ததை அனைவரும் அறிவோம்.

    ஆப்கானிஸ்தானில் ஐனநாயகத்தை நிலைநாட்டுகிறோம் என்று அமேரிக்காவும், இங்கிலாந்தும் முன்னெடுத்த நடவடிக்கையில் இருநாடுகளும் பலநூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களைப் பலிகொடுத்துள்ளார்கள். இதைத் தமது நாட்டு மக்களுக்கு சர்வதேசப் பயங்கரவாதத்தை ஒலிப்பதன் மூலம் தத்தமது நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுக்கலாம் எனும் வாதத்தையே இவர்கள் முன் வைத்தார்கள்.

    தலிபான் இயக்கத்தை எதிர்த்து ஆப்கானிஸ்தானில் ஒரு நிரந்தர ஐனநாயக அரசை அமைக்கும் முயற்சியில் தோல்வி அடைந்தார்கள் என்பதே உண்மை. அமேரிக்க முன்னாள் அதிபர் பதவிக்கு வரும்போது அமேரிக்கா இனி வெளிநாட்டுப் பிரச்சனைகளில் ஈடுபடாது எனும் கொள்கையை முன்வைத்தார். அவரது தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அவர் 2021 இல் ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள அமேரிக்க இராணுவத்தினர் அனைவரையும் வாபஸ் வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தலிபான்களிடம் கையளிக்க இரு பகுதியினருக்குமிடையில் பேச்சுக்கள் ஆரம்பமாகின.

    பைடன் அவர்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்நிலையில் மாற்றம் ஏற்படுமா? எனும் எதிர்பார்ப்புகள் பல பகுதிகளில் இருந்து எழுந்தன. ஆனால் அதிபர் பைடனோ, ட்ரம்ப் அவர்களின் காலக்கெடுவையே தானும் கடைப்பிடிக்கப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அமேரிக்க இராணுவத்தின் ஆதாரத்தில் தங்கியிருந்த எஞ்சிய ஐக்கிய இராச்சிய இராணுவமும் வெளியேறும் என்று ஐக்கிய இராச்சிய பிரதமரும் அறிவித்தார்.

    இவ்விரு இராணுவத்தினரும் ஆப்கானிஸ்தானை தலிபான் அவர்களின் வார்த்தைகளின் அடிப்படையில் அவர்களிடம் கையளித்தார்கள். இவ்விரு இராணுவத்தினருக்கு பல வழிகளில் உதவி புரிந்து வந்த ஆப்கானிஸ்தானியரைத் தத்தமது நாடுகளுக்கு கொண்டு செல்ல தலிபான்களிடம் அனுமதி பெற்ற இவ்விரு நாடுகளும் பலரைத் தமது நாடுகளுக்குக் கொண்டு சென்றாலும் விடுபட்டுப் போன பலரின் கதை அம்போ என ஆகி விட்டது.

    ஆப்கானிஸ்தான் ஒரு மாபெரும் பஞ்சத்தில் உழல்கிறது என்று ஐக்கிய நாடுகளின் சபையின் அறிக்கைகள் கூறுகின்றன. 20221இன் ஒரு மிகப்பெரிய இடரினை ஆப்கானிஸ்தான் மக்கள் சந்தித்துள்ளனர் என்பதுவே உண்மை.

    என் தாய்நாடான சிறீலங்கா மாபெரும் பொருளாதாரச் சிக்கலுக்குள் தன்னை சிக்க விட்டுள்ளது. அரசியல் சூதாட்டக்களத்தில் பகடைக்காயாக இன்று உருட்டப்பட்டுக் கொன்டிருக்கின்றது. தமது எதிர்காலத்தை அச்ச உணர்வுடன் அந்நாட்டு மக்கள் எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கான தீர்வை 2022வது கொண்டு வருமா? என்று போர்ச்சூழலில் இருந்து வெளிவந்தும் இன்னும் வாழ்வாதார அடிப்படை உரிமைகளுக்காக ஏங்கும் ஈழத்தமிழ் உறவுகள் எதிர்பார்த்தபடி காத்திருக்கிறார்கள்.

    பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றமடைந்து கொண்டிருந்த இந்தியாவுக்கு கோவிட்டின் வரவு சில சிக்கல்களைத் தோற்றுவித்தும் அவற்றிலிருந்து மீள்வதற்கான அறிகுறிகள் ௹தென்படுகின்றன என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது. டெல்டா எனும் கொரோனாவின் தாக்கத்தினை அதிக அளவில் எதிர்கொண்ட இந்தியா அந்த அனுபவங்களின் அடிப்படையில் ஒமிக்குரோனின் தாக்கத்தினை மட்டுப்படுத்துமா? எனும் கேள்விக்கு 2022 இன் ஆரம்ப மாதங்கள் விடையளிக்கக் கூடும் எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    கொரோனாவின் ஆரம்ப நிலைகளிலேயே தமது எல்லைகளை முற்றாக அடைத்து விட்ட அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மற்றைய நாடுகளின் அளவுக்கு பாதிக்கப் படவில்லை என்பதுவே உண்மை. ஏறத்தாழ இரண்டு வருடங்களின் பின்னால் தமது எல்லைகளை அவுஸ்திரேலியப் பிரஜைகளுக்கும், நியூசிலாந்துப் பிரஜைகளுக்கும் திறந்து விட்ட அவுஸ்திரேலியா ஒமிக்குரோனின் வரவினை எவ்வகையில் எதிர்கொள்ளப் போகிறது? என்பதற்கும் விடை 2022 இலேயே கிடைக்கும்.

    கோவிட்டின் தாக்கம் ஒருபுறமிருக்க குளோபல் வோமிங் எனும் உலக வெப்பமயப்படல் எனும் தாக்கத்தினால் காலநிலைச் சீரழிவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவுகளையும் 2021இல் கண்கூடாகப் பார்த்துள்ளோம். வெப்ப மிகுதியால் ஏற்படும் பாரிய தீ விபத்துகள், அசாத்திய மழைப் பெருக்கினால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகள்,அசாதரணமான சூறாவளிகள் எனப் பல்வேறு வகையிலான பாதிப்புகள் ஆசியா, ஐரோப்பா, அமேரிக்கா எனும் அனைத்துப் பகுதிகளையும் விட்டு வைக்கவில்லை.

    ஆக மொத்தம் 2021 இல் மனித நடவடிக்கைகளினாலும், இயற்கை அனர்த்தங்களினாலும், கொரோனா எனும் கொடிய கிருமியால் ஏற்படும் நோயின் விளைவுகள் என்பன காவு கொண்ட உயிர்களின் எண்ணிக்கை எத்தனையோ கோடி எனலாம். இத்தனை எமக்கு அப்பாற்பட்ட சக்திகளை எதிர்க்க வேண்டிய சூழலில் இருக்கும் எம் மத்தியில் இன்னமும் இனம், மதம், மொழி, நாடு எனும் பாகுபாட்டினை முதன்மைப் படுத்தி பழிஉணர்வுகளால் வீணே சக மனிதர்களை அழிக்கும் செயல்களும் நடந்தேறிக் கொண்டிருப்பது உள்ளத்தை வருத்துகிறது. மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஒற்றுமை எனும் ஆயுதத்தைக் கையிலெடுத்து உலக மக்கள் அனைவரும்

    ஒன்று எங்கள் ஜாதியே
    ஒன்று எங்கள் நீதியே
    உலக மக்கள் யாவரும்
    ஒருவர் பெற்ற மக்களே

    என்று இணைந்து செயற்பட்டால் மட்டுமே எமது எதிர்காலச் சந்ததிக்காக இவ்வுலகைக் காப்பாற்றுவர்களாவோம்.

    2022 இத்தகைய ஒரு அற்புதத்தைக் கொண்டு தருமா?

    Share
  • பிரித்தானியக் குடியரசின் கோமகன் பிலிப் – ஒரு பார்வை

    பிரித்தானியக் குடியரசின் கோமகன் பிலிப் – ஒரு பார்வை

    சக்தி சக்திதாசன்
    இலண்டன்

    கிரிக்கெட் விளையாட்டில் சதம் அடிப்பதே ஒரு சாதனை எனும்போது வாழ்க்கையில் சதம் அடிப்பவர்களின் சாதனையை என்ன சொல்வது? அப்படியான ஒரு அருமையான சாதனைச் சந்தர்ப்பத்தை ஒரு இரண்டு மாத கால இடைவெளியில் தவற விட்டு விட்டார் எமது இங்கிலாந்து மகாராணியார் இரண்டாவது எலிசபெத் அவர்களின் கணவர் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் (Duke Of Edinbrugh Prince Philip).

    ஆமாம் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது 09.04.2021 அன்று காலை 9 மணிக்கு தனது 99வது வயதில் காலமாகிய கோமகன் பிலிப் அவர்கள் இன்னும் இரண்டு மாத காலம் உயிருடன் இருந்திருப்பாரேயாகில் 100 வயதை எட்டிப்பிடித்த சாதனையாளர்களின் பட்டியலில் தனது பெயரையும் இணைத்துக் கொண்டிருப்பார்.

    இந்த 99 வருட பயணத்தினூடாக பயணித்த இந்தப் புதிரான மனிதரின் வாழ்வுப்பயணம் எத்தகையது என்பதைப் புரட்டிப் பார்க்கும் போது கொஞ்சம் வியப்பாகத்தான் உள்ளது. இவருடைய 99 வருடப் பயணத்தில் சுமார் 46 ஆண்டுகள் நான் இவர் பயணித்த இந்த இங்கிலாந்து மண்ணிலே பயணித்திருக்கிறேன் என்று எண்ணும்போது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் உள்ளது.

    இதுவரை காலமும் ஊடகங்களில் இவரைப் பற்றிய எதிர்மறையான விடயங்கள் முக்கியத்துவம் பெற்றுச் செய்தியாக வரும்போது அவரைப் பற்றி சிறிதளவு எண்ணத் தலைப்பட்டதைத் தவிர இவரின் வரலாற்றை அறியும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை, இயல்பாகவே இங்கிலாந்து இராஜ குடும்பத்தின் மீது என் மனைவி கொண்டிருந்த ஆர்வத்தினால் அவருடன் இணைந்து தொலைக்காட்சியில் இராஜ பரம்பரை சம்பந்தமான நிகழ்வுகளை பார்ப்பதில் இருந்தே இவரைப் பற்றிய ஓரளவு அறிந்திருந்தேன் என்பதே உண்மை.

    ஆனால் ஒரு தம்பதியினர் 73 வருட காலம் மணவாழ்க்கையில் இணைந்திருந்தார்கள் அதுவும் அவர்கள் சமூகத்தில் வகிக்கும் அந்தஸ்தின் நிமித்தம் அவர்கள் எதிர்கொண்ட அழுத்தங்களையும் கடந்து இணைந்திருந்தார்கள் என்பதுவே ஒரு சாதனை என்றால் மிகையாகாது.

    26 வயது இளைஞரான இளவரசர் பிலிப் அன்றைய 21 வயது இளைவரசியான இரண்டாவது எலிசபெத் அவர்களை மணமுடித்தது முதல் கடந்த வெள்ளிக்கிழமை மரணிக்கும் வரை தனது மனைவிக்கு ஒரு கருங்கல்லைப் போன்ற உறுதியான பக்கபலம் அளிப்பவராகத் திகழ்ந்தார் கோமகன் பிலிப் என்பதுவே உண்மை.

    அன்றைய இங்கிலாந்தின் மகாராஜாவாக இருந்த ஜார்ஜ் அவர்களின் மறைவையடுத்து தனது 26வது வயதில் மகாராணியாராகப் பொறுப்பேற்ற இரண்டாவது எலிசபெத் அவர்களுக்கு தனது இறுதிநாள்வரை ஒரு ஆதரவு மிக்க கணவராக, மகாரணியாரின் கடமைகளைக் குறைவின்றி நிறைவேற்ற உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும்.

    இங்கிலாந்து இராஜகுடும்ப வரலாற்றில் அதிக காலம் ஆட்சி செய்தவர் எனும் சாதனையை இங்கிலாந்து மகாராணியாரும், அப்படி ஆட்சி செய்த ஒருவரின் வாழ்க்கைத்துணையாக அதிக காலம் இருந்தவர் எனும் சாதனையை கோமகன் பிலிப்பும் படைத்துள்ளார்கள்.

    இந்தச் சாதனைகளின் மத்தியில் இவர்க:ள் எதிர்கொண்ட சோதனைகள் ஏராளம். இளவரசர் சார்ள்ஸ், இளவரசி ஆன், இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வேர்ட் எனும் நான்கு குழந்தைகளின் பெற்றோர் இவர்கள்.

    மகாரணியாரின் தங்கையான மார்கிரெட் அவர்களின் காதல் விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளான போதும், பின்னர் அவரது மணவாழ்க்கையில் முறிவு, அவரின் ஆண்களினுடனான தொடர்பு, போதைப்பழக்கம் என பல சர்ச்சைகள் ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்ட போது அவற்றையெல்லாம் எதிர்கொண்டு சமாளிப்பதில் மகாராணியாருக்கு பிலிப் கோமகன் ஆற்றிய பங்கு அளப்பரியது.

    பின்பு இளவரசர் சார்ள்ஸ், டயானா அவர்களின் மணமுறிவும், டயானாவின் மரணமும், இளவரசர் ஆண்ட்ரூ அவர்களின் மணமுறிவு, இளவரசி ஆன் அவர்களின் முதல் மணமுறிவு அதன் பின்னான மறுமணம், இளவரசர் சார்ல்ஸ் அவர்களின் மறுமணம் என தமது வாரிசுகளின் வாழ்வில் ஏற்பட்ட பலவிதமான பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதில் மகாரணியாருக்கு பக்கபலமாக இருந்த்துடன் தகுந்த நேரத்தில் தகுந்த ஆலோசனைகளையும் வழங்கியவர் கோமகன் பிலிப் ஆவார்.

    தமது பிள்ளைகளின் வாழ்க்கைப் பிரச்சனையைச் சமாளித்து முடித்து விட்டோம் என்றிருக்கையில் இப்போது சமீபத்தில் அவர்களது பேரனான இளவரசர் ஹரியும் அவரது மனைவி மெகன் மார்க்கலும் இராஜ குடும்பத்தினின்றும் பிரிந்து அமேரிக்காவில் நிலை கொண்டது மட்டுமின்றி தொலைக்காட்சி நேர்காணலில் இங்கிலாந்து இராஜ குடும்பத்தைத் தாக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட துரதிர்ஸ்ட நிகழ்வை எதிர் கொள்ள வேண்டி வந்தது. அச்சமயத்தில் தான் சுமார் ஒரு மாத காலத்தின் முன் கோமகன் பிலிப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்களில் இல்லம் திரும்பினார், அதன் தொடர்ந்தே இந்த மரணமும் நிகழ்ந்துள்ளது.

    இவ்வளவு பிரச்சனைகளையும் எதிர்நோக்கும் வகையில் இங்கிலாந்து மகாராணியாரின் கொள்கையான “விளக்கமும் இல்லை, சர்ச்சைகளில் ஈடுபடுவதும் இல்லை“ என்பதற்கமைய கோமகன் பிலிப் அவர்களும் மனைவியோடு ஒத்துழைத்தார் என்பது வெள்ளிடைமலை.

    சரி இத்தகைய சூழல்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் திடகாத்திரமாக கோமகன் பிலிப் உருவாகக் காரணமான அவரது பின்புலத்தைக் கொஞ்சம் பார்ப்போமா?

    1921 ம் ஆண்டு யூன் மாதம் 10ம் திகதி கிரெக்க நாட்டிலுள்ள கோர்பூ (Corfu) எனும் தீவில் கிரேக்கத்தினதும், டென்மார்க்கினதும் இளவரசரான ஆண்ட்ரூ (Prince Andrew) க்கும், ஜெர்மனிய பட்டன்பேர்க் (Battenburg) நகர இளவரசி அலீஸ் (Alice) என்பவருக்கும் ஜந்தாவது மகவாக நான்கு பெண்களுக்கு பின்னால் ஆண் மகவாக அவதரித்தவர் தான் கோமகன் பிலிப்(Prince Philip).

    பிறப்பின் மூலம் கிரேக்க நாட்டினதும், டென்மார்க் நாட்டினதும் பட்டத்துக்குரிய இளவரசர் எனும் உரிமையைப் பெற்றவர் இளவரசர் பிலிப். இப்படி இராஜ பரம்பரையில் இராஜ உரிமை பெற்ரவர் எப்படி இங்கிலாந்துக்கு இடம்பெயர்ந்தார்?

    இவரது தாய்வழிப் பாட்டனாராகிய பட்டன்பேர்க் இளவரசர் லூயிஸ் இங்கிலாந்துப் பிராஜாவுரிமை பெற்று லூயிஸ் மவுண்ட்பேட்டன் என்று வாழ்ந்து இங்கிலாந்தில் மடிந்தார். அப்போது இரண்டாம் உலகப்போரின் முடிவுக்கு பின்னால் இங்கிலாந்தில் ஜேர்மனிக்கு எதிரான அலை வீசிக் கொண்டிருந்தது. பாட்டனாரின் மரணவீட்டில் கலந்து கொண்ட பின்பு தனது தாயுடன் அவர் மீண்டும் கிரேக்க நாட்டிற்குத் திரும்பினார்.

    அப்போது கிரேக்க நாட்டிற்கும் துருக்கிக்கும் ஒரு யுத்தம் நிகழ்ந்தது அப்போது கிரேக்க நாட்டின் அதிபராக இளவரசர் பிலிப்பின் தந்தையான இளவரசர் ஆண்ட்ரூவின் அண்ணன் முதலாம் கொன்சடன்டைன் அரசராக இருந்தார். துருக்கியுடனான யுத்தத்தில் படுதோல்வியடைந்த்துக்கான பொறுப்பு பிலிப் அவர்களின் பெரிய தந்தை மீது விழுந்ததினால் அவர் இராஜ பதவியிலிருந்து அகற்றப்பட்டு, இளவரசர் பிலிப்பின் தந்தையும் குடும்பமும் நிரந்தரமாக நாடு கடத்தப்பட்டனர், சிறிது காலம் பிரான்ஸில் வசித்து வந்ததன் பின்னால் அவரது தாயார் அலீஸ் மனநோயாளியாக அடையாளைப்படுத்தப்பட்டு மனநோயாளர் மனையில் அனுமதிக்கப்பட்டார். தந்தை மொன்டி கார்லோ வில் வசித்தார்.

    இந்நிலையில் தான் இளவரசர் பிலிப் இங்கிலாந்தில் தனது தாய்வழிப் பாட்டியான விக்டோரியா மவுண்ட்பேட்டனுடன் வசித்தார். அவரின் பின்னால் அவரது தாய் மாமனான மவுண்ட்பேட்டன் பிரபு அவரைத் தனது மகன் போல வளர்த்தார். ஸ்கொட்லாந்து நாட்டில் கல்விபயின்று பின்னர் தனது கிரேக்க குடியுரிமையை இரத்துச் செய்து இங்கிலாந்து குடியுரிமை பெற்றுக் கொண்டார்.

    இங்கிலாந்து கடற்படையில் இணைந்து அதிவேகமாக பதவிகளில் உயர்ந்த பெருமை பெற்றவராவார். 23 வயது நிரம்பிய அழகிய வலிபரான இவர் மீது 18 வயதே நிரம்பிய அப்போதைய இளவரசி இரண்டாவது எலிசபெத் அவர்கள் காதல் கொண்ட்தாகக் கூறப்படுகிறது. அவரை விட ஐந்து வயது அதிகமான இளவரசர் பிலிப்பை இளவரசி எலிசபெத் அவர்களின் பெற்றோர் மாப்பிள்ளையாக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

    21 வயதில் தனது காதலை பகிரங்கப்படுத்திய அப்போதைய இளவரசி எலிசபெத் அவர்களின் விருப்பத்தினை அன்றைய மகாராஜா ஜார்ஜ் அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

    மிகவும் துடிப்பாற்றல் கொண்டவரும், கடற்படையில் கட்டளையிடும் தளபதித் தகமையில் இருந்தவருமான இளவரசர் பிலிப் அவர்களுக்கு இங்கிலாந்து மகாராணியாரின் பக்கவாத்தியமாக மாறுவதில் பல சிக்கல்கள் இருந்ததாகவும் அக்காலகட்டத்தில் அவர் வாலிபர்களுக்குரிய லீலைகளில் ஈடுபட்டதை எலிசபெத் மகாராணியார் கண்டும் காணாதது போல பொறுமை காத்ததுமே அவர்களது ஸ்திரமான உறவுக்கு அத்திவாரமிட்டது என்கிறார்கள் இராஜ குடும்ப வரலாற்று ஆசிரியர்கள்.

    அவரின் மிகச் சிறந்த சாதனையாக “எடின்பரோ கோமகனின் பரிசில்(Duke of Edinbrugh Award) “ எனும் இளைய தலைமுறைக்கான ஒரு தன்னம்பிக்கை வளர்க்கும் பரிசுத் திட்ட்த்தைக் குறிப்பிடுகிறார்கள். இன, மத, நிற, சமுதாய ஏற்ற தாழ்வுகள் எதுவுமின்றி அனைத்து இளம்பிராயத்தினரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்வதின் மூலம் ஒரு இலக்கையடைவதன் மூலம் அவர்கள் எதையும் சாதிக்கலாம் எனும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்கள். இந்தப் போட்டியில் கலந்துகொண்டு நிறைவு செய்பவர்கள் இதற்குரிய பரிசுப் பத்திரத்தை கோமகன் பிலிப் அவர்களிடமிருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்வதே இதன் சிறப்பம்சமாகும்.

    இதுமட்டுமின்றி காலமாற்றத்துக்கு இராஜ குடும்பம் விதிவிலக்கானதல்ல எனும் கோட்பாட்டிற்கமைய சூழலுக்கேற்ப இராஜகுடும்பத்திலும் மாற்றங்கள் நிகழ உந்துகோலாகச் செயற்பட்டவர் கோமகன் பிலிப் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.. இங்கிலாந்து மகாராணியாரும் வரிவிதிப்புக்கு கட்டுப்பட்டவர் எனும் வகையிலேற்பட்ட மாற்றம் உட்பட, இராஜமாளிகையான “பக்கிங்காம் பலஸ்” எனும் மகாராணியாரின் வாசஸ்தலத்தை கோடை விடுமுறை காலங்களில் மக்கள் பார்வையிடும் வகையிலான வசதி ஏற்படுவதற்கும் இவர் ஒரு முக்கிய காரணமாகவிருந்தார் என்பது செய்தி.

    தன் மனதில் பட்டதை எதுவித தயக்கமுமின்றி பேசிவிடுவது இவரைப் பல சமயங்களில் சர்ச்சைகளுக்குள்ளாக்கியிருக்கிறது. பண்ணைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதில் மிகவும் அக்கறை கொண்ட ஒரு மனிதராக இருந்தார்.

    மிகவும் நகைச்சுவையாக பேசும் இவரிடம் ஒரு நிருபர் உங்களைப் பற்றி எவ்வாறு விவரிப்பீர்கள் என்று கேட்டதற்கு “நானோரு அகதிக் கணவன்” (I am a refugee husband) என்று பதிலளித்தாராம்.

    மனநோயாளிகள் மனையிலிருந்து நலமடைந்து திரும்பிய இவரது தாயார் ஒரு கத்தோலிக்க சேவகியாக மாறி வாழ்ந்தார். தனது அந்திம காலங்களில் இங்கிலாந்தில் தன் மகனுடன் வாழ்ந்தார். இவரைத் தன் மகன் போல் வளர்த்த இவரது மாமனாரான மவுண்ட்பேட்டன் பிரபு அயர்லாந்து ஐ,ஆர்,ஏ தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.

    கொரோனா எனும் கொடிய கிருமினியின் கட்டுப்பாட்டினுள் மறைந்த இவருக்காக எட்டுநாட்கள் துக்கதினங்களாக அனுசரிக்கப்படுகிறது. வரும் 17.04.2021 சனிக்கிழமை 3 மணியளவில் வின்சர் மாளிகையில் இவரது இறுதி நிகழ்வுகள் நிகழவிருக்கிறது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கமைய முப்பது பேரே கலந்து கொள்ள முடியும். இராஜ குடும்பத்தைச் சேர்ந்த அவரது நெருங்கிய உறவினர்களே நேரடியாகச் சமூகளிப்பார்கள். இங்கிலாந்துப் பிரதமரே உறவினருக்கு வழிவிட்டு தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

    இங்கிலாந்து மகாராணியாருடன் 73 வருடங்கள் வாழ்ந்து மறைந்த அவரது அன்புக் கணவர் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப் அவர்களின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் அனைவரும் துயர் பகிரும் செய்திகளை பகிர்ந்துள்ளார்கள். இங்கிலாந்து முழுவதும் கொரோனா தக்கத்தோடு யாரோ ஒரு நன்கு தெரிந்த ஒருவரையிழந்த ஒருவகை துயரில் ஆழ்ந்து போயிருக்கிறது. அன்னாரின் ஆத்மசாந்திக்காய் நாமும் பிரார்த்திப்போம்.

    Share
  • பெண்களின் வித்தக விந்தைகள்

    பெண்களின் வித்தக விந்தைகள்

    சக்தி சக்திதாசன்

    என் இனிய அன்பு உள்ளங்களே !

    மார்ச் 8ம் திகதி உலக மகளிர் தினம். இத்தினத்தில் எனை இவ்வுலகில் ஈன்ற என் அன்னைக்கு, என்னை ஒரு மனிதனாய் உருமாற்றம் செய்ய அவள் செய்த அளப்பரிய தியாகங்களுக்கு, என்னை பண்புடை மனிதனாக வளர உதவிய என் சகோதரிகளுக்காக, சிதைந்து போன என் வாழ்வை தூக்கி நிறுத்தி இன்று என் அனுபவங்களை என் இனிய உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள வழி சமைத்த என் மனைவி, என் உயிர்த்தோழி, என் அன்பு மனைவிக்காக, இன்று என்னோடு உடன் பிறக்காவிட்டாலும் அண்ணா என்றும் தம்பி என்றும் என்னைத் தம் உடன்பிறப்புகளாக கெளரவிக்கும் என் தமிழன்னை தந்த சகோதரிகளுக்காகவும் இதோ இக்கவிதையைச் சமர்ப்பிக்கிறேன்

    சக்தியெனக்கு கொடுத்தவள் என் அன்னை
    சித்தியெனக்களித்தவள் என் அன்னை
    புத்தியெனக்களித்தவள் என் அன்னை
    முற்று முதலாய் அவளுக்கே என் வணக்கம்

    தன்னில் ஒரு பாகம் கொடுத்து உலகில்
    தந்தான்  ஆதிமூலம் தந்த மகத்துவம்
    எத்தனை வடிவங்கள் எடுத்துப் பெண்கள்
    வித்தக விந்தைகள் புரிவர் இவ்வுலகில்

    அன்னையாராக அன்பு மழை பொழிவர்
    சகோதரியராக பந்தம் வளர்த்திடுவர்
    காதலியராக கனவுகளை உயிர்ப்பிப்பர்
    தோழியராக எம் துயர் பகிர்ந்திடுவர்

    அன்றெம்   முப்பாட்டன் பாரதி
    ஆணித்தரமாய் அடித்துரைத்தான்
    அந்நியர் அடிமை கொள்ளல் போல்
    அன்னையரை அடிமை கொள்ளலாமோ?

    தெள்ளிய உண்மைகளைத் தமிழில்
    தெள்ளத் தெளிவாய்ச் சொன்னார்  பாரதி
    உள்ளத்தில் வாங்கினோமா உண்மைகளை?
    உங்கள் இதயத்தைச் தொட்டுச் சொல்லுங்கள்

    வேதனை பல தாங்கி உலகில் மாதர்கள்
    சோதனை பல வென்று தன்னிரகற்ற
    சாதனையான மகவுகள் தந்தனர் தோழரே!
    போதனையல்ல சத்தியமே உண்மை

    மகளிர் தினம் இதுவென்று உலகில் நாம்
    மார் தட்டிக் கொள்வதில்லை பெருமை
    மகளிரும் உயர்ந்தோரெனும் உண்மை
    விளக்கிட்டோமா என்பதே கேள்வி?

    சமுதாயக்கலாச்சாரம் எனும் போர்வையில்
    மாதர்கள் கால்களில் பூட்டிட்ட விலங்குகளை
    சமத்துவம் கொண்டு என்று நாமதை
    உடைக்கின்றோமோ அதுவே மகளிர் தினம்

    எமையீன்ற அன்னையரைப் போன்றே
    சேய்களுக்கு  வாழ்வை அர்ப்பணித்த
    தியாகச் செம்மல்கள் அனைவருக்கும்
    வணக்கங்களோடு வாழ்த்துகள்.

    Share
  • கடந்து போயினும் மறந்து போகுமோ 2020?

    கடந்து போயினும் மறந்து போகுமோ 2020?

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    2019ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி சென்னையை நோக்கிய எனது பயணத்தின் முக்கிய நோக்கம், என் மனைவியின் நீண்டநாள் கனவு, தன்னுடைய பிறந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்த பின்னால் ஒருமுறையாவது ஆண்டு தொடங்கும் போது தான் பிறந்த மண்ணில் இருக்க வேண்டும் எனும் அவாவிலே எழுந்ததாகும். 28ஆம் திகதி சென்னையைச் சென்றடைந்த நாம் 31ஆம் திகதி எனது மனைவி பிறந்த ஊரான தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் உள்ள கிருஸ்ணாபுரத்தைச் சென்றடைந்து 2020இன் புத்தாண்டுப் பிறப்பை கிருஸ்ணாபுரத்தில் கொண்டாடினோம்.

    இப்படியாக ஆரம்பித்த எமது 2020இன் ஆரம்பத்தில் 2020இன் முடிவு இத்தகையதாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை, பெப்பிரவரி மாதம் நடுப்பகுதி வரை தமிழ்நாட்டில் நாம் தங்கியிருந்த சமயம், சீனாவின் வூகான் மாநிலத்தில் ஒரு புதுவித வைரஸின் தாக்கம் பற்றிக் கேள்விப்பட்டோமே ஒழிய அதன் தாக்கத்தின் முழு விஸ்தீரணத்தையும் பற்றி அறிந்திருக்கவில்லை.

    நாம் எமது விடுமுறையை முடித்துக்கொண்டு இங்கிலாந்து வந்தடைந்த நேரம்தான், இங்கிலாந்தில் கொரோனாவின் தாக்கம் பரபரப்பாகிக் கொண்டிருந்தது, மேற்கு ஐரோப்பா முழுவதும் கொரோனா தனது கோரப் பிடியை ஆரம்பித்திருந்தது. அப்போது அது தனது முழுக் கோரத் தாண்டவத்தையும் இத்தாலி நகரத்தில் ஆடிக்கொண்டிருந்தது. உலகின் பல்வேறு நாடுகளும் லாக்டவுண் எனும் புதிய கட்டுப்பாட்டினைத் தமது நாட்டு மக்களின் மீது விதிக்க ஆரம்பித்திருந்தன. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், தனித்திருத்தல் போன்ற பதங்களுக்கான அழுத்தங்கள் மக்களின் மனங்களில் உறைய ஆரம்பித்தது.

    இங்கிலாந்தில் லாக்டவுண் கொண்டுவருவதைப் பற்றிய விவாதங்கள் பலமுனைகளில் இடம்பெற்றாலும் அதை அமுலாக்குவதற்குச் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பததாக கூறிய பிரதமர், தாம் விஞ்ஞானிகளின் விஞ்ஞான அறிக்கையின் அடிப்படையில் தான் முடிவுகள் எடுப்பதாகக் கூறினார். அதன் பின்பு நாடு முழுவதுமான முழு லாக்டவுண் ஒருமாத காலத்துக்கு அமுலாக்கப்பட்டது. இதனால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கத்தைச் சமாளிக்கும் பொறுப்பு, தமிழ்நாட்டு மாப்பிள்ளையான இங்கிலாந்தின் இளம் நிதியமைச்சர் ரிஷி சுனாக் அவர்களின் கையில் விடப்பட்டது. இதுவரை இங்கிலாந்து சரித்திரத்தில் காணாத வகையில் பலவகையிலான பொருளாதார உதவிகள் அறிவிக்கப்பட்டன. இங்கிலாந்து இளவேனில் காலத்திலிருந்து வசந்த காலத்துக்குள் நுழையும் போது கொரோனாவின் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சொற்பமாகிக் கொண்டிருந்த அதேசமயம், தினசரி கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கையும் குறைந்துகொண்டு வந்தது.

    பொருளாதாரச் சீர்கேட்டைச் சரிசெய்யும் பல திட்டங்களை அரசு மேற்கொள்ள வேண்டிய தேவையிருந்தது, லாக்டவுண் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன. லாக்டவுணினால் பாதிக்கப்பட்ட உணவு விடுதிகளை மீண்டும் பரபரப்பாக்குவதற்காக அரசு மக்களை உணவு விடுதிகளுக்குச் சென்று உணவருந்த ஊக்கப்படுத்தியது. ஒருமாத காலத்துக்கு வாரத்துக்கு மூன்று நாட்கள் உணவு விடுதியில் உணவருந்துவோரின் செலவின் பாதியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

    மறுபடி கொஞ்சம், கொஞ்சமாக சகஜ நிலைக்கு வாழ்க்கை திரும்பி விடும் என்று மக்கள் எண்ணத் தொடங்கினார்கள். கொரோனாவின் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதிகளைச் சற்றே மறக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஒருபுறமிருக்க, இங்கிலாந்தின் பொருளாதாரத்தைத் தாக்கவிருக்கும் மற்றொரு முக்கிய நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கொரோனா பின் தள்ளிவிட்டது என்பதுவே உண்மை. 2019 டிசம்பர் 31ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய ஐக்கிய இராச்சிய அரசுக்கு ஒரு வருட அவகாசம் கொடுத்திருந்தது ஐரோப்பிய ஒன்றியம். இந்த ஒரு வருட காலத்துக்குள் அதாவது 2020 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வணிக ஒப்பந்தத்தை எட்டாத பட்சத்தில் இரு பகுதிகளுக்கும் இடையிலான வணிகப் பொருட்கள் மீது வரி அறவிடப்படவிருந்தது.

    கொரோனாவின் கொடும்பிடிக்குள் சிக்கியிருந்த இரு பகுதிகளுக்கு இடையில் இந்த வணிக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையும் ஒருபுறம் நடந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் அவர்களுக்கிடையிலிருந்த இடைவெளி மலையளவாக இருந்தது, அதனைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு வரும் அவசிய தேவையிருந்தது. 2020 மே மாதம் நடைபெறவிருந்த லண்டன் மேயருக்கான தேர்தல் ஒத்திப் போடப்பட்டது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகள் எனப் பலமுனைத் தாக்குதலுக்கு உள்ளான ஐக்கிய இராச்சியப் பிரதமர் பொரிஸ் ஜான்சன் கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைக்கு உள்ளானார். ஒருவாறு வெற்றிகரமாக கொரோனாத் தாக்குதலினின்றும் மீண்டுகொண்டார்.

    இத்தனை பரபரப்புகளுக்கும் மத்தியில் பிரதமர் பொரிஸ் ஜான்சனின் காதலி, குழந்தைக்குத் தாயானார். ஆம் 2020 இங்கிலாந்துப் பிரதமரைப் பொறுத்தவரையில் ஒரு பரபரப்பு நிகழ்வுகளைத் தாங்கிய ஒரு வருடமாகவே இருந்தது.

    பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களின் சர்ச்சைக்குரிய ஆலோசகரான டொமினிக் கமின்ஸ் என்பவர், மந்திரி சபையில் பதவி வகிக்கும் பல அமைச்சர்களோடு கருத்து மோதல்கள் கொண்டிருந்தார். நாடு முழுவதும் லாக்டவுண் எனும் பிடிக்குள் சிக்கியிருந்த சமயம், கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருந்த டொமினிக் கமின்ஸ், இந்த லாக்டவுண் விதிகளை மீறியமை வெளிச்சத்துக்கு வந்தது. மக்களுக்கொரு நீதி, பிரதமரின் ஆலோசகருக்கு ஒரு நீதியா? என ஊடகங்களும் அரசியல் அவதானிகள் பலரும் கொதித்தெழுந்த போதும் பிரதமர் தனது ஆலோசகருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது பல அரசியல் முனைகளில் விசனத்தை ஏற்படுத்தியது.

    இப்படியாக லாக்டவுண், லாக்டவுண் தளர்வு, பிரெக்ஸிட் எனக் கரடுமுரடான பாதைகளுக்குள்ளால் பயணித்த இங்கிலாந்து, ஒருவாறு செப்டெம்பர் மாதத்துக்குள் நுழைந்தது. வழக்கமாகவே இங்கிலாந்துக் குளிர்காலத்தில் ப்ளூ எனப்படும் தீவிர ஜலதோஷம் போன்ற உபாதைகளினால் சராசரியாக 20,000 பேர் மரணிப்பார்கள். ஆனால் இம்முறை அதனுடன் இணைந்து கொரோனாவின் தாக்கமும் சேர்ந்தால் தேசிய சுகாதாரச் சேவை அல்லாடப் போகிறது எனும் கருத்து, விஞ்ஞான அவதானிகளினால் அடிக்கடி நினைவூட்டப்பட்டது. மக்களனைவரும் அவதானமாக தம்மைத் தாமே இக்கொரொனாத் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகை நடந்துகொள்ள வேண்டும் எனும் அறிவுறுத்தல் அளிக்கப்பட்டது.

    என்னே ஐக்கிய இராச்சியத்துக்கு வந்த சோதனை! கொரோனா தனது கட்டமைப்பை மாற்றி, அடுத்தவர்களைத் தொற்றிக்கொள்ளும் வீரியத்தை அதிகப்படுத்திக் கொண்டது. இதன் தாக்கம் இங்கிலாந்தில் இதுவரை கட்டுப்பாட்டுக்குள் இருந்த தொற்றின் வீரியம் விரைவாக அதிகரிக்கத் தொடங்கியது. அச்சமடைந்த ஐக்கிய இராச்சிய அரசாங்கம், நவம்பர் மாதம் கட்டுப்பாடுகளைச் சிறிது தீவிரமாக்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகை, இங்கிலாந்தின் மிக முக்கியப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் போதே வருட்த்துக்கொருமுறை உறவினர்கள், நண்பர்கள் பலரும் சந்தித்துக்கொள்வது வழக்கம். இப்பண்டிகைக் காலத்தில் கெடுபிடிகளை ஐந்து நாட்களுக்குத் தளர்த்த முடிவு செய்தது அரசாங்கம். விஞ்ஞானிகளும், அரசியல் அவதானிகள் பலரும் இதற்கு எதிரான கருத்தினைக் கொண்டிருந்தார்கள்.

    கொரோனாத் தொற்று கட்டுக்குள் அடங்காமல் அதிகரிக்கத் தொடங்கியது. வைத்தியசாலைகள் கொரோனா நோயாளிகளினால் நிரம்பி வழியத் தொடங்கியது. இறப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அல்லாடிய அரசாங்கம் 2021 ஜனவரி தொடக்கம் புதிய தீவிரமான லாக்டவுண் விதிகளை அறிவித்தது. இல்லங்களில் இருந்து பணிபுரியக்கூடியவர்கள் வெளியே செல்லக் கூடாது, பள்ளிகள் பெப்பிரவரி நடுப்பகுதி வரை மூடப்படும், உணவு விடுதிகளில் பார்சல்கள் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பது தடை செய்யப்பட்டது.

    இதற்கிடையில் டிசம்பர் 31 ப்ரெக்ஸிட் காலக்கெடுவுக்கு முன்னால் அவசரம், அவசரமாக ஒரு வணிக ஒப்பந்தம் எட்டப்பட்டது. இவ்வொப்பந்தப் பிரகாரம் ஐக்கிய இராச்சியத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வணிகம் எதுவித இடையூறுமின்றி தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டமைப்பு மாறிய கொரோனா வைரஸ், ஐக்கிய இராச்சியத்திலேயே உருவாகியது எனும் காரணத்தினால் உலகின் பலநாடுகளும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இங்கிலாந்துக்கும், தமக்குமிடையிலான விமான சேவைகளை இரத்துச் செய்தன. டிசம்பர் 22ஆம் தேதியளவில் பிரான்சு நாட்டுக்கும், ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் பல ட்ரக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைய முடியாமல் இங்கிலாந்துக் கரையில் சுமார் இருபது மைல் நீளத்துக்கு வரிசையில் நிற்க வேண்டிய நிலையேற்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் பலர், தமது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கழிக்க முடியாத நிலைக்கு உள்ளானார்கள். பிரான்சும், இங்கிலாந்தும் பேச்சுவார்த்தைகளின் மூலம் கொரோனா வைரஸுக்கான பரிசோதனையின் பின்னால் இந்த லாரிகள் ப்ரெஞ்சு எல்லைக்குள் அனுமதிக்கப்படும் எனும் ஒரு புரிந்துணர்வை எட்டினார்கள்.

    டிசெம்பர் மாத நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசி நடவடிக்கையை இங்கிலாந்து ஆரம்பித்தது. பெப்பிரவரி நடுப்பகுதிக்கு முன்னால் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மற்றும் வைத்திய சுகாதாரச் சேவை பணியாளர்கள், வயோதிபர் இல்ல உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுவிடும், அதைத் தொடர்ந்து ஏப்பிரல் மாத முடிவுக்குள் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுவிடும் என்றும் 2021 அக்டோபர் மாதத்துக்கு முன்னால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுவிடும் என்ற தமது திட்டத்தை அறிவித்திருக்கிறது இங்கிலாந்து அரசு.

    இன்றைய ஐக்கிய இராச்சிய நிலவரம் பின்வருமாறு.

    கட்டமைப்பு மாறிய கொரொனா வைரஸின் தொற்று அதிகரித்த வண்ணமுள்ளது, தொற்றின் காரணமாக வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,000 ஐத் தாண்டி விட்டது. 2020 மார்ச் மாதம் அதி உச்ச நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் எண்ணிக்கை சுமார் 21,000 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதுவரை இக்கொரொனாத் தொற்றுக் கொண்டோரின் இறப்பு எண்ணிக்கை 80,000 ஐத் தாண்டியுள்ளது. நிலைமை சீராவதற்கு முன்னால் எதிர்வரும் இரண்டு வாரங்களில் நிலை இன்னும் தீவிரமாகும் எனவும் இரண்டு வார காலத்துக்குள் எண்ணிக்கை உச்சமடைந்த பின்னால் தான் குறைவதற்குரிய சான்றுகள் உண்டெனவும் கூறப்படுகிறது.

    அடுத்தடுத்த ஆக்கங்களில் 2020இன் சர்வதேச தாக்கங்களைப் பற்றிப் பார்ப்போம்.

    Share
  • இங்கிலாந்தில் இலையுதிர்காலம்

    இங்கிலாந்தில் இலையுதிர்காலம்

    அண்ணாகண்ணன்

    இங்கிலாந்தில் வசிக்கும் நண்பர் சக்தி சக்திதாசன், என் வேண்டுகோளை ஏற்று, இங்கிலாந்தின் இலையுதிர்காலக் காட்சிகளை நம் அலைவரிசைக்காகப் படம் எடுத்து அனுப்பியுள்ளார். அவருடைய இனிய வர்ணனை, நாம் அதை நேரில் காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இருந்த இடத்திலிருந்தே இங்கிலாந்தின் வனப்பைக் காண்போம், வாருங்கள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கொரோனாவைத் தாண்டி

    கொரோனாவைத் தாண்டி

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    தொலைக்காட்சிப் பெட்டியைத் திருப்பினாலும் சரி, வானோலியைத் திருகினாலும் சரி கொரோனா எனும் வார்த்தையைத் தாண்டிச் செல்வது என்பது இப்போ எண்ணிப்பார்க்கவே முடியாத ஒரு சூழலில் நாமனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நான் வாழும் ஐக்கிய இராச்சியத்தில் கொரோனா வைரஸின் கட்டுப்படுத்துதலுக்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் தளர்த்தப்படுவதற்கான அறிகுறிகள் எதுவுமே இன்றுவரை தெரியவில்லை. இந்நிலையில் கொரோவைத் தாண்டி என்று எதைப்பற்றிச் சிந்திக்க முடியும் என்று நீங்கள் எண்ணினால் அது நியாயமே!

    ஆயினும் ஒரு நாளிலோ அன்றி ஒரு வருடத்திலோ நாம் இந்தக் கொரோனா எனும் நிலையைத் தாண்டிச் செல்ல வேண்டிய அதாவது இதையும் கடந்து செல்ல வேண்டிய நிலையிலிருக்கிறோம். கொரோனா எனும் இந்த வைரஸ் இன்று எம்மீது தொடுத்திருக்கும் தாக்குதல் எமது உடல்ரீதியிலான தாக்குதலே. ஆனால் இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான உலகின் பலநாடுகளிலும் எடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளினால் இக்கொரோனா வைரஸினால் அதிக அளவு பாதிப்பு பொருளாதாரப் பாதிப்பு என்பது தவிர்க்க முடியாத யதார்த்தமாகிறது.

    பொருளாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தேசங்களின் உடமையான மக்களின் உயிர்களைக் காவு கொடுக்க முடியாது என்பது அனைத்து நாடுகளைப் பொறுத்தவரையிலும் மறுக்கப்பட முடியாத உண்மையாகிறது. ஆனால் இதனால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்பின் தாக்கம் எத்தகைய வகையில் இருக்கப் போகிறது என்பதை நிர்ணயிக்கப் போவது மக்களின் மீது விதிக்கப்பட்ட இக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் எத்தனை காலம் நீடிக்கப் போகிறது என்பதுவே.

    இங்கிலாந்தைப் பொறுத்த வரையில் நாட்டின் பிரதமரே வாழ்வுக்கும் சாவுக்கும் மத்தியில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மீண்டு வந்திருக்கிறார் என்பதுவே உண்மை. வைத்தியசாலையில் இருந்து இல்லத்துக்குத் திரும்பி இருவார ஓய்வுக்குப் பின்னால் மீண்டும் பிரதமராக 27.04.2020 இலிருந்து செயற்பட ஆரம்பித்திருக்கிறார் பிரதமர் பொரிஸ் ஜான்சன். அவரது வரவை கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் வரவேற்றிருப்பது ஐனநாயகத்தின் முடிக்கு அழகு சேர்க்கும் மற்றொரு மணியாகிறது.

    மீண்டும் தமது உத்தியோக வாசஸ்தலமாகிய 10, டவிணிங் சாலைக்குத் திரும்பியதும் 27ம் திகதி காலை 9 மணிக்கு தனது வாசஸ்தலத்திற்கு முன்னால் நாட்டு மக்களுக்கு திரு. பொரிஸ் ஜான்சன் அவர்கள் உரையாற்றினார். அவ்வுரையில் தான் ஒரு சிக்கலான கட்டத்திலிருந்து மீண்டு வந்திருப்பதாகவும், நாடு எதிர்நோக்கியிருக்கும் இந்த முன்னொருபோதுமில்லாத ஒரு சிக்கல் நிறைந்த கட்டத்தில் உயிர்களைக் காப்பாற்றப் போராடும் வைத்தியத்துறை ஊழியர்களுக்கும், கெடுபிடியான விதிமுறைகளை அனுசரித்து நடக்கும் நாட்டு மக்களுக்கும் தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். கொரோனா வைரஸின் பிடியினால் தாக்கமுறும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வரும் வேளையில், இதுவரை நோய் பீடிக்கப்பட்டு வைத்தியசாலை தீவிர சிகீச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவோரில் உயிரிழப்போரின் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். அனைத்தும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் வரை இதுவரை அடைந்த முன்னேற்றத்தைப் பின்னடைவு செய்யக்கூடிய வகையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்த தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.

    ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்களுல் இரண்டாம் உ;லகப்போரின் பின்னால் எதிர்கொள்ளும் மிகச் சிக்கலான ஒரு நிலவரத்தை இன்றைய எமது பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்கள் எதிர்கொள்கிறார் என்பது நிதர்சனமான உண்மை. ஐக்கிய இராச்சியத்தின் சிறந்த அரசியல் அவதானிகளின் கருத்துக்களின் படி மக்களின் பாதுகாப்பு, நாட்டின் பொருளாதாரச் சூழல் என்பனவற்றின் இடையில் ஒரு கயிற்றில் நடப்பதைப் போல் மிக அவதனமாகச் செயற்படவேண்டிய நிலையில் பிரதமர் பொரிஸ் ஜான்சன் இருக்கிறார்.

    வைத்தியசாலையில் இத்தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை. தினசரி குறைந்து கொண்டு வருகிறது, தினசரி கொரோனா தாக்கத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்களின் தொகையும் குறைந்து கொண்டு வருகிறது, சுமார் 20,000 பேர்வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலைமாறி சுமார் 15,000 பேராக இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவையெல்லாம் கொஞ்சம் நம்பிக்கை எனும் வெளிச்சத்தைத் தருகிறது எனினும் கட்டுப்பாடு தளர்த்தப்படக்கூடிய வகையில் இன்னும் நிலையத் தோற்றுவிக்கவில்லை.

    ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்தைப் பொறுத்தவரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதைப் பற்றிச் சிந்திப்பதற்கு ஜந்து நிபந்தனைகள் விதித்திருக்கிறார்கள். இந்த ஜந்து நிபந்தனைகளும் எட்டும் பட்சத்தில் மட்டுமே கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதைப் பற்றிச் சிந்திப்பதற்கு முனைவோம் என்பதே அவர்களது நிலைப்பாடு. இந்த ஜந்து நிபந்தனைகள் பின்வருமாறு,

    1. தேசிய சுகாதார சேவை நிலைமையச் சாமாளிக்கும் நிலையில் உள்ளது

    2. தினசரி இறப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமான அளவில் குறைந்து கொண்டு வரவேண்டும்

    3. தரமான தரவுகளின்படி வைரஸ் தொற்றுவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் சமாளிக்கக் கூடிய எண்ணிக்கைக்கு குறைவாகும் நிலை வர வேண்டும்.

    4. முன்னனி சேவையாளர்களுக்கான பாதுகாப்பு அணிகள் போதுமான அளவில் கையிருப்பில் கொண்டு தொடர் விநியோகத்திற்கான பொறிமுறைகள் திருப்திகரமாக இருக்க வேண்டும்.

    5. எடுக்கும் நடவடிக்கைகள் எதுவும் இத்தொற்று நோய் பீடிக்கப்படும் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்காது எனும் ஒரு நிலை வரவேண்டும்.

    மே மாதம் 7ம் திகதி அரசு இந்த ஜந்து நிபந்தனைகளையும் கருத்தில் கொண்டு அப்போதைய நிலையில் எந்தவிதமான நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்று ஆராய்ந்து, மே 10ம் திகதி பிரதமர் இதுபற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று அறிவித்துள்ளார்கள்.

    சரி இதுவரை அரசியல் நிலைப்பாட்டைப் பார்த்தோம். இனிச் சற்று பொருளாதாரச் சிக்கல்களை பார்ப்போம். கொரோனவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மக்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விதிகளின் ஏற்பட்ட உடனடிப் பாதிப்புகளைச் சரி செய்வதற்காக இதுவரை காணாத வகையில் பல பொருளாதஅர நிதுயுதவிகளை அரசு பலதரப்பட்ட மக்களுக்கும் அறிவித்துச் செயற்படுத்தி வருகிறது.

    விமானநிலையங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவிலான விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடங்கள் போலக் காட்சியளிக்கின்றன. அரசைப் பொறுத்தளவில் இக்கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து விடுபட்டதும் மீண்டும் வியாபாரங்கள், வர்த்தக ஸ்தாபனங்கள் இயங்க ஆரம்பிக்க வேண்டும் எனும் கருத்தோடு பணியாளர்களை வேலையிலிருந்து நீக்காமலிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான ஊதியப்பணத்தின் 80 வீதத்தை தாம் அளிப்பதாக உறுதியளித்துள்ளார்கள். ஆனால் இவை சமூக விலத்தியிருத்தல் விதிகளைக் கடைப்பிடித்து இயங்க முடியாத ஸ்தாபனங்களுக்கு மட்டுமே.

    ஆனால் இப்போதிருக்கும் நிலையையிலிருந்து திரும்பும் போது தாம் வங்குரோத்து நிலையை அடைந்து விடுவோம் எனும் வகையிலான சரிவைக்காணும் நிறுவனங்கள் வேறுவழியின்றிப் பலரை வேலையிலிருந்து நீக்குகிறார்கள், பணியிழந்தவர்கள் தமது வாழ்வாதரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அரசாங்கத்தின் உதவித்தொகையையே நம்பியுள்ளார்கள். இவர்கள் அனைவருக்குமான உதவிகளை அரசாங்கம் வழங்கினாலும் இதற்கான நிதிநிலைமைகள் மக்களின் வரிப்பணத்திலேதான் பெறப்படப் போகின்றன.

    உலகமயமாக்கல் எனும் அமைப்பின் கீழ் ஐக்கிய இராச்சியம் தனது உற்பத்தி வன்மையை வெகுவாகக் குறைத்துக் கொண்டது. முதாலாளித்துவ கொள்கையின் வழி தமது இலாபங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக உற்பத்தி ஆலைகளை குறைந்தளவு ஊதியத்துடன் பணிக்கமர்த்தக்கூடிய ஊழியர்கள் கிடைக்கக்கூடிய நாடுகளில் நிறுவிக் கொண்டார்கள். இன்று கொரோனா எனும் ஒரு கண்ணுக்குத் தெரியாத கிருமியினால் அதற்கான விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மேற்கத்திய நாடுகள் இந்தக் கொரோனாவினால் கண்டு கொண்டிருக்கும் பொருளாதாரச் சரிவு 1920களில் உலகம் கண்ட மிகப்பெரிய பொருளாதாரச் சரிவினை விட அதிக அளவிலான சரிவினைக் காணவேண்டி வரும் எனும் அச்சம் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் எழுந்துள்ளது வேலையில்லாத் திண்டாட்டம் ஐக்கிய இராச்சியத்தினை ஆட்டம் காண வைக்கக்கூடும் எனும் வகையிலான கருத்துக்கள் ஆங்காங்கே நிலவுகின்றன.

    இது ஒரு யதார்த்தமான உண்மை. இந்நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு மக்களின் மனதில் ஒருவகையிலான வைராக்கியம் தேவைப்படுகிறது. அத்தகைய மனநிலையை உருவாக்கும் வகையில் செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கிறது.

    ஒருசில பணியாளர்களுடன் இயங்கும் சிறிய வியாபார, வர்த்தக அமைப்புக்கள் பல இந்த இழப்பினை ஈடு செய்து மீண்டு வருவதை எண்ணிக்கூடப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். வியாபார நிறுவனங்களுக்கு உடனடித் தேவைகளுக்காக இடைத்தர நிறுவனங்களுக்கு 50000 பவுண்ட்ஸ் வரையும், பெரிய நிறுவனங்களுக்கு 250000 பவுண்ட்ஸ் வரையிலுமான நிதி உதவியைக் கடனாக கொடுத்துதவ வங்கிகளை அரசாங்கம் பணித்துள்ளது. அக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போகும் பட்சத்தில் அவற்றிற்கு அரசாங்கமே பொறுப்பு எனும் உத்தரவாதத்தையும் அரசாங்கம் வங்கிகளுக்கு கொடுத்துள்ளது.

    லண்டன் நகர மேயரின் அதிகாரத்தின் கீழியங்கும் லண்டன் பஸ், நிலக்கீழ் ரயில்சேவை என்பனவற்றின் சேவைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையாலும், நாட்டில் நிலவும், கட்டுப்பாட்டு விதிகளுக்கமைய மக்கள் தேவையற்ற பிரயாணங்களை மேற்கொள்ளக் கூடாதென்பதாலும் இச்சேவைகள் பாரிய நஸ்டத்தைச் சந்தித்து வருகின்றன.

    ஐக்கிய இராச்சியத்தின் அடையாளமான பிரிட்டிஷ் எயர்வேய்ஸ் என்றழைக்கப்படும் விமானசேவை இக்கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய தாம் தமது நிறுவனத்தின் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டியிருப்பதனால் ஏறக்குறைய 12000 பணியாளர்களை உலக அளவில் தாம் வேலைநீக்கம் செய்ய வேண்டி வரும் என்று எச்சரித்துள்ளது. அதேபோல மிகவும் பிரபலமான மற்றொரு விமான சேவையான ரயன் எயர் எனும் விமான சேவை தாம் 3000 பேரை வேலைநீக்கம் செய்ய வேண்டி வரும் என எச்சரித்துள்ளது.இவ்வேலை நீக்கங்கள் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது முக்கிய விமான நிலையமான கட்விக் (Gatwick) எனும் விமான நிலையத்தில் இவ்விரு விமானசேவைகளின் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டு விடும் எனும் ஒரு நிலையைத் தோற்றுவித்துள்ளது. இதன் விளைவாக கட்விக் விமானநிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் எனும் அச்சம் நிலவுகிறது.

    இது மட்டுமல்ல ஒரு விமானநிலையத்தின் நடவடிக்கைகள் அதைச்சுற்றி இருக்கும் பல வர்த்தக நிறுவனங்களின் வியாபாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது, இந்நடவடிக்கைகளின் மட்டுப்படுத்தல் என்பது அவ்விமான நிலையத்தை மட்டுமல்லாமல் அதன் இயக்கத்தில் தங்கியிருக்கும் வர்த்தக நிறுவனங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    நான் மேலே குறிப்பிட்டது ஒரிரு முன்னனி நிறுவனங்களின் பாதிப்பையே இதே போன்று பல வித்தியாசமான வர்த்தக நிறுவனங்களின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதுவே உண்மை. இப்பாதிப்புகளின் முதல்பலி அங்கு பணிபுரியும் பணியாளர்களே! விளைவாக நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டமும் அதைனைச் சமாளிக்க அரசு எடுக்க வேண்டிய நெருக்கடியான பொருளாதார முடிவுகளும் ஐக்கிய இராச்சியத்தை ஒரு உலுக்கு உலுக்கத்தான் போகிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

    இந்தக் கொரோனாவாவினால் முடுக்கி விடப்பட்டுள்ள பொருளாதார முடக்கம் ஐக்கிய இராச்சியத்தை மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தையுமே ஆட்டிப்படைக்கப் போகிறது. இன்றைய உலகப் பொருளாதாரம் “உலகமயமாக்கப்படுதல் அன்றி குளோபலைசேஷன்” எனப்படும் கோட்பாட்டினால் கட்டியாளாப்படும் நிலையில் ஒரு நாட்டின் பொருளாதாரச் சிக்கல் மற்றொரு நாட்டினை தாக்குவது என்பது யதார்த்தமான உண்மை. குறிப்பாக கிடைக்கின்ற செய்திகளின் படி அமேரிக்க நாட்டின் வேலையற்றோர் தொகை 30 மில்லியனாக உயர்ந்துள்ளது எனத் தெரிகின்றது. ஏற்கனவே உள்மயமாக்கப்படுதல் எனும் கொள்கையை முன்னிறுத்திய அதிபர் ட்ரம்ப் அவர்களின் செயற்பாடுகள்ஐந்தச் சூழலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதும் மிகவும் கிலேசத்தையே வரவழைக்கிறது.

    ஐக்கிய இராச்சிய பொருளாதார நிபுணர்களின் கணிப்பின்படி ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரம் கொரோனாவின் பாதிப்பால் சுமார் 14% சுருக்கமடையும். இது சமூக, சமுதாய நடவடிக்கைகளில் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியே. சுமார் ஆறு வாரங்களுக்கு மேலான தடைக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து 10.05.2020 ஐக்கிய இராச்சிய பிரதமர் பொரிஸ் ஜான்சன் கொரோனாவைத் தாண்டி எப்படி மக்களும், சமூகமும் வெளிவரப் போகிறது என்பதற்கான ஒரு பாதையை விளக்குவார் என எதிர்பார்க்கப் படுகிற௹௹௹து. கட்டுப்பாட்டு விதிகளைச் சிறிதளவு தளர்த்துவார் என எதிர்பார்க்கப் படுகிறது. சில, சில பிரதேச வாரியான வர்த்தக நிறுவனங்கள் அங்கு சமூக விலத்தலைக் கடைப்பிடிக்கும் வகையில் தமது வியாபாரங்களை ஆரம்பிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

    ஐக்கிய இராச்சியத்தில் இதுவரை கொரோனா பதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று அதாவது 09.05.2020 வரை சுமார் 32000 பேர். ஆனால் தொடர் நிகழ்வாக புதிதாக தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை, மற்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, தினசரி இறப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவது இத்தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. ஆயினும் சமூகக் கட்டுப்பாட்டு விதிகளை முற்றாகத் தளர்த்தினால் மற்றொரு முறை கொரோனா தொற்று அதிகரிக்கலாம் எனும் விஞ்ஞானிகளின் கருத்துக்களை ஐக்கிய இராச்சிய அரசு கவனத்தில் கொண்டு அவதானமாகவே செயற்படப் போகிறது என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகூடிய மரண எண்ணிக்கையை. கொண்ட நாடாக ஐக்கிய இராச்சியம் முடிசூட்டிக் கொண்டது மிகவும் துன்பியல் நிறைந்த செய்தியே.

    ஒவ்வொரு மரணத்தின் பின்னும் ஒரு மாபெரும் சோகம் பிணைந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. கொரோனா வைரஸ் எனும் இந்தக் கிருமியின் தொற்றினை இங்கிலாந்து அரசு எவ்வகையில் கையாண்டிருக்கிறது என்றும் இக்கையாளுதல் மரணமடைவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளதா? என்றும் கேள்விகள் ஆங்காங்கே எழுகின்றன. அரசோ தம்மீது எந்தத் தவறுமில்லை என்று வரையறுப்பதற்காக தாம் அரச விஞ்ஞானிகளின் ஆலோசனையின் படியே செயற்பட்டதாகக் கூறிவருக்கிறார்கள். தற்போதைய சூழலில் எந்த ஒரு அரசியல்வாதியும் இந்தச் சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயலவில்லை என்பது ஐனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி எனலாம். ஆயினும் இந்நடவடிக்கைகள் என்றுமே ஆராயப்படாமல் இருக்குமா? என்பது சந்தேகமே !

    கொரோனாவின் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் தலைவர் தேர்தல் வந்தது தெரியாமல் நிறைவேறி முடிந்து விட்டது. ஆமாம் கடந்த பொதுத் தேர்தலில் பாரிய தோல்வியைச் சந்தித்த எதிர்க்கட்சியின் சர்ச்சைக்குரிய தலைவரான ஜெர்மி கோர்பன் பதவி விலகி அனைத்துத் தரப்பினராலும் ஒரு நடுநிலைவாதி எனக் கணிக்கப்படும் சேர் கியர் ஸ்டாமார் (Sir Keir Starmer) தெரிவு செய்யப்பட்டது மிகவும் சலனமில்லாமலே நடந்தேறிவிட்டது. பொதுவாகவே ஒரு கட்சிக்குத் தலைவராக தெரிவு செய்யப்படுபவர் ஊடகங்களினால் சல்லடை போடப்படும் வழமை இம்முறை கொரோனாவினால் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. புதிய லேபர் கட்சித் தலைவரும் கட்சியை ஒரு புது மிதவாதமான போக்கினூடு நடத்திச் செல்லப் போகிறார் போன்றே அவரது ஆரம்ப நடவடிக்கைகள் தோற்றுவிக்கின்றன.

    இக்கொரொனாவின் வரவினால் உலகிற்கு கிடைத்துள்ள ஒரேயொரு அனுகூலம் சுற்றுச்சூழலின் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டமையே. லண்டனில் சுற்றுச்சூழல் பாதிப்பு 50% குறைவடைந்திருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்கள் தமது பணிகளுக்கு திரும்பச் செல்கையில் சைக்கிள், மற்றும் நடப்பது என்பதை கடைப்பிடிக்கக்கூடிய வரையில் கடைப்பிடிக்கும்படி வேண்டப்படுகிறார்கள். இதற்காக சாலைகளில் மாற்றங்களை ஏற்படுத்த அரசு 2.5 பில்லியன் பவுண்ட்ஸ்களை ஒதுக்குவதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இம்மாற்றங்கள் கொரோனாவைத் தாண்டியும் நிலைத்திருக்குமா?

    வீட்டிலிருந்தே பணிபுரியும் முறை பல நிறுவனக்களினால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருவதும், வியாபார சந்திப்புகள் காணொளிகள் மூலம் நடத்தப்படுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நிலைமையின் அனுகூலத்தை நிரந்தரமாகுவது பற்றிய அரசின் கணிப்பு எப்படி இருக்கப் போகிறது என்பதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கொரோனாவைத் தாண்டி . . . . . .

    பல கேள்விகளுக்கான விடைகள் தங்கியிருக்கின்றன

    • பொருளாதாரப் பாதிப்பின் விளைவுகள் எத்தகையது?
    • ப்ரெக்ஸிட்டினால் பிளவு பட்ட நாடு இன்று கொரோனாவினால் கண்ட ஒருங்கிணைப்பு கொரோனாவைத் தாண்டியும் நிலைக்குமா?
    • சுற்றுச்சூழல் பாதிப்பினைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் நாட்டின் போக்குவரத்தில் ஏற்பட்ட மாற்றங்களை மக்கள் நிரந்தரமாக உள்வாங்கி காலநிலைச் சீர்கேட்டைத் தடுக்க முனைவார்களா?
    • மக்களின் சமுதாய, சமூகத்தை நோக்கிய பார்வையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படப் போகின்றன?
    • மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்காய் உழைப்போரின் மீதான மக்கள் பார்வையில் ஏற்பட்ட மாற்றம் கொரோனாவைத் தாண்டியும் நிலைக்குமா?
    • உலகம் எனும் பரந்த நோக்கம் மாறி எம் நாடு, எம் மக்கள் எனும் தனிமைப்படுத்துவோரின் செல்வாக்கு ஓங்குமா?
    • வெளிநாடுகளுக்கான மக்கள் பயணங்கௐள் சகஜமான நிலைக்குத் திரும்ப வருடங்களாகுமா?

    இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னால் உலகம் கண்டிருக்கும் ஒரு மாபெரும் சோதனையான காலம் இது என்பதே அனைத்து மக்களின் அனுமானமும் ஆகும்.

    கொரோனாவைத் தாண்டிய வாழ்க்கையின் மாற்றங்களுக்கு இனிவரும் காலமே பதிலிறுக்க வேண்டும். ஏனெனில் இன்று நாம் எதிர்கொள்வது முன்னொரு பொழுதும் கண்டிராத ஒரு நிகழ்வு.

    Share
  • கொரோனாவின் கோரப்பிடியும், இங்கிலாந்தும்

    கொரோனாவின் கோரப்பிடியும், இங்கிலாந்தும்

    சக்தி சக்திதாசன்
    லண்டன்

    அசாத்தியமான நிலை, அசாதாரணமான சூழல் நான்கு மாதங்களுக்கு முன்னால் எண்ணிப்பார்த்திருக்கக் கூட முடியாத ஒரு சூழலில் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து மக்கள். இங்கிலாந்து மட்டுமல்ல முழு உலகுமே என்று கூடச் சொல்லலாம். எதையும், எப்படியும், எப்போதும் சமாளித்து விடுவோம் என்று பொருளாதாரத்திலும், முன்னேற்றத்திலும் முன்னனி வகித்து அனைத்து வசதிகளும் நிறைந்திருக்கும் நாடுகள் எனும் உல்கக்கணிப்பில் இருந்த நாடுகள் பல. பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கி வெளியேவர அந்நியநாட்டு உதவிகளை எதிர்பார்த்து தத்தளித்துக் கொண்டிருந்த நாடுகள் பல கலந்து நிறைந்த உலகினை ஒரு கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்க்கிருமி இன்று தன்னிலை உணரப் பண்ணியிருக்கிறது என்பதுவே உண்மை.

    இயற்கைக்கு மனிதன் நாகரீக முன்னேற்றம், மனித வளர்ச்சியின் முன்னேற்றம் எனும் வகையில் விடுத்த சவாலை இயற்கை சத்தமின்றி சின்னாபின்னமாக்கியிருக்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது. இனம், மதம், மொழி எனும் எல்லைகளுக்கப்பால் நாடுகள் எனும் எல்லைகளைக் கடந்து நான் உங்களையெல்லாம் பார்ப்பது மனிதர் எனும் ஒரேயொரு இனமாகத்தான் என்று உணர்த்தியிருக்கிறது இக்கொரோனா வைரஸ்.

    நேற்று மாலை இல்லத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்காக எமக்கருகாமையிலிருக்கும் ஒரு பல்பொருள் அங்காடிக்கு செல்ல வேண்டிய தேவையிருந்தது. புறப்படும்போது மனைவி “கையுறை (Gloves), முகவுறை (Mask), சுத்தம் செய்வதற்கான நனைக்கப்பட்ட காகிதத்தாள் (Anti Bacterial Wipes) இவைகளெல்லாம் எடுத்துக் கொண்டீர்களா” என்று கேட்டபோது ஏதோ போருக்குப் புறப்படுவோனிடம் ஆயுதங்களை எடுத்துக் கொண்டீர்களா? என்று கேட்பது போலிருந்தது.

    ஆமாம் இதுவும் ஒரு சத்தமில்லா யுத்தம் தானே! கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்க்கிருமி எத்தனை பேர்களின் உயிர்களைத் தன்னால் காவு கொள்ள முடியும் எனும் வகையில் காத்திருக்க, கண்ணுக்குப் புலப்படாத இந்த எதிரியிடமிருந்து எப்படி எம்மைக் காத்துக் கொள்வது எனும் தந்திர யுத்திகளை நாம் கையாள இதுவும் ஒரு நவீன போர் என்றுதானே கூற வேண்டும்..!

    இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து எனும் நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய ஐக்கிய இராச்சியம் இன்று அடங்கிப் போயிருக்கிறது. லாக் டவுண் எனப்படும் மனித நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் சட்டவிதிகளை அமுலாக்கி இக்கொரோனா வைரஸினை வெற்றி கொள்ளும் ஒரு தீவிரமான கட்டத்தில் தன்னை அமிழ்த்தியிருக்கிறது ஐக்கிய இராச்சியம்.

    ஐக்கிய இராச்சியம் மட்டுமல்ல முழு அகிலமுமே இன்று ஏதோ ஒரு வகையிலான கட்டுப்பாட்டினை தமது மக்களின் நடமாட்டத்தின் மீது விதித்திருக்கின்றன. ஐனநாயகத்தினைக் கடைப்பிடிக்கும் எந்த ஒரு நாடுமே எந்த விதமான கட்டுப்பாட்டினைத் தமது நாட்டு மக்களின் மீது என்றுமே விதிக்க மாட்டா என்று இருந்தனவோ இன்று அந்நிலை மாறி அதே மக்களின் நன்மைக்காக அவர்மீது அக்கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் அரசாங்கங்கள் இருப்பது தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

    இக்கொரோனா வைரஸினால் தாக்கப்பட்ட இங்கிலாந்துப் பிரதமரின் காய்ச்சல் பத்து நாட்களாகியும் குறையாததினால் முன்னெச்சரிக்கையாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். நாடு முழுவதுமே ஒருவகையிலான துயர நிலைக்குத்தள்ளப்பட்டது. கடைசியாகக் கிடைத்த செய்திகளின் படி அவர் தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்து சாதாரன பிரிவுக்கு மாற்றப்பட்டது அவரது உடல்நிலை தேறிவருகிறது என்பதினை உறுதி செய்கிறது.

    எந்தவிதமான அரசியல் பாகுபாடுமின்றி அனைத்துத் தரப்பினரும், நாட்டு மக்களின் பெரும்பான்மையினரும் அவரின் நலனை முன்னிறுத்தியது மனிதத்தின் வெற்றி என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

    இங்கிலாந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விதிகளின்படி

    1. ஒருநாளைக்கு ஒரு தடவை உடற்பயிற்சிக்காக தமது இல்லங்களுக்கு அருகாமையில் மக்கள் நடைபயிற்சிக்கோ அன்று தமது வளர்ப்புப்பிராணியின் நடைக்காகவோ வெளியே செல்லலாம்
    2. அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக வெளியே செல்லலாம்
    3. மருந்துப்பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக வெளியே செல்லலாம்
    4. தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ள முடியாதவர்களுக்கு உதவுவதற்காக வெளியே செல்லலாம்
    5. வீட்டிலிருந்தபடியே பணி செய்ய முடியாதவர்கள் அவர்களின் பணிகள் அத்தியாவசியமாக இருக்கும் பட்சத்தில் பணிமனை செல்லலாம். ஆனால் பணிமனையில் தனிமனித விலத்தல் விதிகளுக்கமையவே அவர்கள் பணிபுரியலாம்.

    என்பனவே சட்டபூர்வமாக கடைப்பிடிக்கும்படி விதிக்கப்பட்டிருக்கிறது

    மேலே குறிப்பிட்ட விதிகள் சாதாரண மக்களுக்கானவை. ஆனால் பலவிதமான தீவிரமான நோய்களுக்குட்பட்ட ஏறக்குறய ஒன்றரை லட்சம் மக்களுக்கு ஐக்கிய இராச்சிய வைத்தியத்துறை கடித மூலம் அவர்கள் 12 வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடது எனவும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள், மற்றும் மருந்துகள் என்பனவற்றைப் பெற்றுக் கொடுக்க உதவிகள் இல்லாத பட்டத்தில் அதற்கான இணையத்தளத்தில் தம்மைப் பதிவு செய்தவன் மூலம் அவர்களுக்கான தேவைகளை அளிக்க கவுன்சில்கள் ஏற்பாடு செய்யும் என்றும் அரிவித்துள்ளார்கள்

    பல வியாபார நிலையங்கள், வர்த்தக ஸ்தாபனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன. தனியார், மற்றும் அரச ஊழியர்களில் வீடுகளில் இருந்து பணிபுரியக்கூடியவர்களுக்கு அத்தகைய வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மட்டும் திறப்பதற்கு அனுமதி உள்ளது.

    பார்கள், உணவுவிடுதிகள் என்பனன அடைக்கப்பட்டு விட்டன. சில உணவு விடுதிகள் மட்டும் இணையத்தளம் வழியாக தமது வியாபாரத்தினை நடத்துகின்றன, கிரடிட் அட்டைகளின் மூலமாக பணத்தினைச் செலுத்த உணவு இல்லத்துக்கு எடுத்து வரப்படுகின்றன. உதரணமாக பிட்ஸா போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

    பிரபலமான பல்பொருள் அங்காடிகள் காலை ஆறு மணி முதல் மாலை 10 மணிவரை திறக்கப்படுகின்றன. இங்கு தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ஏனையோர் கடைக்கு வெளியே 2 மீட்டர் இடைவெளியில் வரிசையில் நிற்பார்கள் உள்ளே இருப்பாரில் எத்தனை பேர் வெளியே வருகிறார்களோ அத்தனை பேர் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். ஷாப்பிங் வண்டிகளின் கைப்பிடியை சுத்தம் செய்வதற்கான வசதிகள் வாசலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கடையின் உள்ளே ஒருவழிப்பாதை முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இது தனிமனிதருக்கிடையில் இருக்கும் இடைவெளியை தக்க வைப்பதற்கு உதவுவதற்காக எனலாம் .

    ஆசிய உணவு வகைகளை விற்கும் கடைகள் இங்கிலாந்தில் பல உண்டு. இவைகளில் தமிழ்க்கடைகள் அதிகமாகவே இருக்கும். இங்கு வகை வகையிலான எமது நாட்டு காய்கறிகள் கிடைக்கும். ஆனால் இன்றோ இவைகளில் பெரும்பான்மையானவை மூடப்பட்டிருக்கின்றன. திறந்திருக்கும் ஒருசில கடைகளில் எமது நாட்டு காய்கறி கிடைப்பது அரிதாகவே உள்ளது.

    இங்கிலாந்தின் பொருளாதாரம் முடங்கிக் கிடக்கிறது. ஆனால் வர்த்தக ஸ்தாபனங்கள் மூடப்பட்டு விட்டதால் இதனைக் கடந்து மீண்டும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது கடினம் என்பதினால் இதுவரை வரலாற்றில் காணாத வகையில் பல பொருளாதார உதவிகளை இங்கிலாந்து நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். இங்கிலாந்தின் அரசாங்கத்தை அமைத்திருப்பது கன்சர்வேடிவ் கட்சி. பொதுச் செலவுகளை மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் ஒரு பெயர் பெற்ற கட்சி. அந்தக் கட்சியின் கொள்கைகளுக்கு முற்றும் முரணாக பலவகையிலான பொருளாதார உதவிகளை அள்ளி வழங்கியிருக்கிறது இங்கிலாந்து அரசு. இங்கிலாந்தின் நிதியமைச்சர் இந்தியாவின் முன்னனி நிறுவனமான “இன்போசிஸ்” நிறுவன உரிமையாளரான திரு நாராயணமூர்த்தி அவர்களின் மாப்பிள்ளையான ரிஷி சுனாக் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

    வியாபார நிறுவனங்கள இழுத்து மூடி அங்கு பணிபுரிபவர்களை வேலையிலிருந்து நீக்காதீர்கள், இந்நிலையிலிருந்து நாம் மீளும்வரை நீங்கள் வேலையில் வைத்திருக்கும் ஊழியர்களின் 80% ஊதியத்தை அரசாங்கம் தரும் என்று அறிவித்திருக்கிறார். அத்துடன் Self employed எனும் வகையிலான பணிபுரிவோருக்கும் பொருளாதார உதவிகளை அறிவித்திருக்கிறது அரசு. இவ்வகை பணிபுரிபவர்கள் தமது வரிக்கான பத்திரத்தைச் சமர்ப்பிக்கும்போது தமது வருமானம் எவ்வளவு என்று குறிப்பிடிருந்தார்களோ அதன் 80% த்தை அரசு கொடுக்கும் என்பதுவே அது. அதுதவிர தமது வாழ்வாதரத்துக்கான நிதிப்பற்றாக்குறையுள்ளவர்கள் அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி அரச உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்கள்.

    தேசிய சுகாதார சேவையில் இருக்கும் அத்தியாவசிய ஊழியர்களுக்கான பாதுகாப்புக் கவசப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல நிறுவனங்கள் தாம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குப் பதிலாக அரசுக்குத் தேவையான பாதுகாப்புக் கவசங்களை உற்பத்தி செய்யும்படி வேண்டப்பட்டு அதனை உற்பத்தி செய்கிறார்கள்.

    இங்கிலாந்தின் தேசிய சுகாதரச் சேவையின் அன்றாட பொருட்கள், நோயாளர்கள், மருந்துகள் என்பனவற்றினை உரிய இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு தமக்கு உதவி தேவை அதற்காக தன்னார்வ முறையில் சுமார் 250000 பேர்வரை எதிர்பார்க்கிறோம் என்ற அவர்களது கோரிக்கை வந்த இரண்டு நாட்களுக்குள் சுமார் 750000 பேர் உதவ அதற்கான இணையத்தளத்தில் தம்மைப் பதிவு செய்தமை மக்களின் புரிந்துணர்வினை நன்கு எடுத்துக் காட்டுகிறது.

    அரசாங்கத்தின் சட்டத்திற்கமைய மூடப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு நஷ்டஈடு உரியவகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கொரோனா வைரஸினால் தாக்கப்பட்டவர்களைப் பராமரிக்கும் முன்னனி வைத்தியர்கள், தாதிமார்கள் மற்றும் வயோதிபர்களைப் பராமரிக்கும் விடுதிகளின் சேவையாளர்களுக்கான பரிசோதனை திருப்திகரமாக இல்லை எனும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதற்காக இம்மாத இறுதிக்குள் நாளொன்றுக்கு 100000 பேரைப் பரிசோதிக்கக்கூடிய வசதிகளை நிர்ணயித்து விடுவோம் என சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார்,

    ஒவ்வொரு வியாழனும் இரவு 8 மணிக்கு அனைவரும் தமது இல்லங்களிலிருந்து வெளியே வந்து இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் தமது அன்றாடக் கடமைகளை ஆற்றும் அத்தியவசியத்துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கரகோஷம் செய்து வருகிறார்கள்.

    இதுவரை கிடைத்த தரவுகளின் படி இங்கிலாந்தில் 65,077 பேர்கள் இவ்வைரஸினால் தாக்கப்பட்டுள்ளார்கள். 7,978 பேர்கள் மரணத்தை தழுவியுள்ளார்கள். இங்கே குறிப்பிடப்பட்ட தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வைத்தியசாலைக்குச் சென்று தம்மை அடையாளப் படுத்திக் கொண்டவர்களேயாகும். அவர்களைத் தவிர மேலும் பலர் மிகவும் குறைவான நிலையில் இவ்வைஸினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைக்கு செல்லத் தேவையில்லாமல் இருப்பார்கள் என்றே தெரிவிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 250000 க்கும் அதிகமானோர் பரிசோதிக்கப்பட்டுள்ளார்கள்.

    மார்ச் 23ம் திகதியே ஐக்கிய இராச்சியத்தில் கட்டுப்பாட்டு விதிகள் அறிவிக்கப்பட்டன. இக்கட்டுப்பாட்டினை பெரும்பான்மையான ஐக்கிய இராச்சிய மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். இதன் காரணமாக புதிய வைரஸ் தொற்றுக்கள் குறைந்து வருவதோடு, வைத்தியசாலையில் அனுமதிக்கப் படுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இறப்போரின் எண்ணிக்கை இன்னும் ஓரிரு வாரங்களுக்கு அதிகரிக்க வாய்ப்புண்டு எனவும் அதன் பின்னால் இறப்போரின் எண்ணிக்கை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒவ்வொரு நாளும் மாலை 5 மணியளவில் ஐக்கிய இராச்சிய அரசின் சார்பாக பத்திரிகையாளர் மகாநாடு நடத்தப்படுகிறது. இது தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. இப்போது அநேகமாக கேட்கப்படும் கேள்வி எப்போ மக்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்பதே. அதற்கு அரசின் சார்பாக அடுத்த வார இறுதியில் இது மீள்பரிசோதிக்கப்படும் வரை எதுவும் கூற முடியாது எனும் பதிலே கிடைக்கிறது.

    இவ்வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சகட்டத்தை அடைந்து விட்டதா என்பதை இன்னமும் நிர்ணயிக்க முடியாமல் இருப்பதே இதற்குக் காரணமாகிறது. இங்கே இறப்போரின் எண்ணிக்கை என்பது ஒரு தொகையாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு மரணத்தின் பின்னாலும் ஒரு குடும்பத்தின் சோகம் காணாமல் போகிறது. இந்நோயினால் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. ஒரேயொருவர் மட்டும் மரணச்சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். ஏனையோர் அதிக பட்சம் காணொளியில் மட்டுமே கண்டு கொள்ளலாம், தமது உறவினர்களின் கடைசி யாத்திரையைக் கூட நேரடியாகக் கண்டு கொள்ள முடியாத ஒரு அவலமான நிலையில் பலர் மனமுடைகிறார்கள். அது தவிர இறப்பவர்களின் உயிர் பிரியும்போது அவர்களின் உறவினர்கள் யாரும் அருகில் இல்லாமல் உலகை விட்டு நீங்குகிறார்கள்.. ஆனால் அவர்கள் தன்னந்தனியாக உலகை விட்டு நீங்காமல் தாதிமார்கள் அருகில் இருக்கிறார்கள். ஆனால் இதனைத் தொடர்ந்து கண்ணுறும் டாக்டர் மற்றும் தாதிமார் கூட மிகவும் மனமுடைந்து போகிறார்கள்.

    இன்று ஐக்கிய இராச்சியமும், உலகும் கண்டு கொண்டிருக்கும் நிலை உலகப் போர்களுக்குப் பின்னால் வரலாற்றில் முதன்முறையாக நிகழ்கிறது. இதனை எதிர்கொள்வதும், கையாள்வதும், மக்களுக்கும், அனைத்து அரசுகளுக்கும் ஒரு புதிய அனுபவமே.

    ப்ரெக்ஸிட் எனும் ஒரு நிகழ்வு ஐக்கிய இராச்சியத்தை பிளவு படுத்தியது. ஆனால் இன்று கொரோனா எனும் வைரஸ் ஐக்கிய இராச்சியத்தை மீண்டும் ஓரணியில் திரள வைத்திருக்கிறது. இவ்வைரஸின் தாக்கத்திலிருந்து மீண்டு வரும்போது உலகம் நிச்சயமாக ஒரு பொருளாதார பின்னடைவைச் சந்திக்கப் போவது உறுதி என்பதை பல பொருளாதார நிபுணர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். உலகமயமாதல் எனும் நிலையை விட்டு முன்னனி நாடுகள் தாமும் தமது நலமும் எனும் ஒரு கோட்டுக்குள் நுழைந்து கொண்டிருக்கும் சமயத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வின் தாக்கத்தை உலகநாடுகள் ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து எதிர்கொள்ளப் போகின்றனவா? இல்லை மீண்டும் சுயநலத்தின் அடிப்படையில் இயங்கப் போகின்றனவா? என்பது கேள்விக்குறியே!

    ஆனால் நிச்சயமாக இந்நிலையிலிருந்து மீண்டு வரும்போது மனித வாழ்க்கையின் செயற்பாடுகளிலும், வாழ்க்கையை நோக்கிய அவர்களது பார்வையிலும் நிச்சயம் ஒரு மாற்றம் இருக்கத்தான் போகிறது. இருப்போரும், இல்லையென்போரும் ஒரே தளத்தில் வாழ்வினை எதிர்நோக்க வைத்ததில் கொரோனா வைரஸ் வெற்றி கண்டிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

    மனிதர்கள் அனைவரையும் எதுவித வேறுபாடுமின்றி மனிதர் என்றே பார்த்த வைரஸ் தந்த பாடம் எம்மையும் அதேபோல பார்க்க வைக்குமா? இல்லை மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி! எனும் நிலைதானா ?

    Share
  • அன்பின் உறவே

    அன்பின் உறவே

    சக்தி சக்திதாசன்

    நான் இங்கிலாந்திலே நீயோ
    தாயகத்திலே
    வசதிகள் நிறைந்தது இதுவென்றும்
    வசதிகள் வளர்ந்திடும் நாடு அதுவென்றும்
    வாயோயாது உரைத்திடும் பலருண்டு
    ஆனால் இன்றோ!
    உனக்கும் ஊரடங்கு எனக்கும் ஊரடங்கு
    வசதிகள் நிறைந்திடினும் வசதிகள்
    வளர்ந்திடினும் வேறுபாடு தெரிந்தா
    கொரோனா நுழைந்தது ?
    எனக்கொரு மதம், உனக்கொரு மதம்
    எனக்கொரு மொழி, உனக்கொரு மொழி
    நானொரு நிறம், நீயொரு நிறம்
    நீயொரு ஜாதி, நானோரு ஜாதியென
    எத்தனை, எத்தனை பேதமை பார்த்து
    வக்கிரமாக பற்பல உயிர் கொய்தோம்
    அகிலம் முழுவதும் நிறைந்திட்ட மாந்தர்
    அனவரும் ஒன்றேயென்று வேறுபாடின்றி
    அழித்திட வந்தது கொரோனா வைரஸே
    கொரோனாவை அழித்திட போராடும்
    உலக வைத்திய சுகாதார மன்றம்
    மருந்து தேடி உலகெங்கும் ஆய்ந்திடும்
    மருத்துவ உலகம் போராடிக் கொண்டே
    எல்லைகள் இல்லா உலகமிது
    எல்லைகள் வீணெ வகுத்த மனிதனை
    எள்ளி நகையாடுதோ இந்த கொரோனா?
    உலகம் என்ற உருண்ட பந்தில்
    உண்டு, இல்லை என்றே மனிதன்
    உள்ளதை வைத்தே எடைபோட்டு வாழ்ந்து
    உருவாக்கி விட்டதோர் தன்னல சமுதாயம்
    உயிரைப் பணயம் வைத்தேமைக் காத்திட
    உழைத்திடும் வைத்தியர், தாதியர்,
    சுத்தம் பண்ணிடும் ஊழியர் அனைவரும்
    ஆண்டவன் அளித்திட்ட செல்வங்கள்
    அவர்கள் காக்கப்பட்டால்தான் நமதிந்த
    அகிலம் காக்கப்படும் உணர்ந்திடு உறவே!
    சராசரி மானிடனாய் எம்மிடம் அவர்கள்
    எதிர்பார்ப்பது ஒன்றே சற்றே காலம்
    விலகியிரு என்பது ஒன்றே எந்தன் உறவே!
    இதைச் செய்திடக்கூடவா எமது
    தன்னலம் தடைபோடுது ? . . . .

    Share
  • இன்றைய உலகும் மகளிர் பலமும்

    இன்றைய உலகும் மகளிர் பலமும்

    சக்தி சக்திதாசன்லண்டன்

    2020 சர்வதேச மகளிர் தினம் இன்று. அன்றைய மகாகவி பாரதி காலத்திலிருந்து இன்றைய உலகம் எத்தனையோ மாற்றங்களைக் கண்டுவிட்டது. இம்மாற்றங்களு உள்ளாகியிருக்கும் மனித இனமும் அதனூடு பயணித்து, தம்மைப் பலவித மாற்றங்களுக்கு உள்ளாக்கியிருக்க வேண்டும் என்பதே சரியான எதிர்பார்ப்பாக இருக்கும்.

    ஆனால் மனத்தளவில் மானிட சமூகம் அத்தனை மாற்றங்களையும் சரியான வகையில் உள்வாங்கியிருக்கிறதா?

    சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டியது அவசியமா? எனும் விவாதம் பல மேடைகளில் நடைபெறுகின்றது. இவ்விவாதத்துக்குச் சார்பான வாதமும் பல வகைகளில் முன்வைக்கப்படுகின்றது.

    பெண்களுக்கென ஒரு தினத்தைக் கொண்டாடுவது அவர்களை ஆண்களின்றும் பிரித்து வைக்கும் ஒரு செயலாக அமைந்துவிடாதா? ஆணும் பெண்ணும் சமமான பலம் கொண்டவர்கள் எனும் வாதத்தை இது மறுதலிக்காதா என்றொரு வாதமும் பெண்கள்தான் அனைத்திலும் ஆண்களுக்குச் சமம் என்றல்ல அவர்களை விட முன்னேறிவிட்டார்கள் இன்னும் இத்தினம் தேவையா என்றொரு வாதமும் சில ஓரங்களில் கேட்கிறது.

    ஆண்கள் என்றோர் இனமும் பெண்கள் என்றோர் இனமும் இயற்கையால் பிரித்தே படைக்கப்பட்டிருக்கிறது. மனித இனவளர்ச்சிக்கான அடிப்படைத் தேவையிது. அன்றைய காலக்கட்டங்களில் பெண்கள் இனவிருத்திக்கும் இல்லப் பராமரிப்புக்கும் மட்டுமே உகந்தவள் எனும் அடிப்படை எண்ணம், மனித மனங்களில் நிலை கொண்டிருந்தது உண்மை. அன்றைய உலகின் வளர்ச்சி அந்த எல்லைக் கோட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது.

    ஆனால் மாறிக்கொண்டு வந்த காலக்கட்டத்தில் மனித அறிவின் வளர்ச்சியும் புரிந்துணர்வும் அதிகரிக்கத் தொடங்கிய பின்னும் கலாச்சாரம் எனும் விலங்கினைப் பூட்டி, பெண்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டதும் உண்மையே.

    இக்கலாச்சாரப் பூட்டினைத் தகர்த்து பெண்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கடமையில் படைப்பாளிகள் பாரிய பங்கினை வகித்துள்ளார்கள். இந்தக் கலாச்சார வட்டத்தினுள் அடைபட்டுப்போன மகாகவி பாரதியார், நிவேதிதா அம்மையாரின் சந்திப்புக்குப் பின்னரே பெண்களின் சமுதாயப் பங்கின் முக்கியத்துவத்தினை உணர்ந்தார் என்பது வரலாறு காட்டும் உண்மை.

    இத்தகைய விழிப்புணர்வு பலருக்கு அக்காலத்திலே தோன்றியிருந்தாலும் கூட எத்தனை பேருக்கு இவ்வட்டத்தினை உடைக்கும் அளவுக்கு, தமது கருத்தினை உரக்கக் கூறும் அளவுக்கு துணிச்சல் இருந்தது என்பது கேள்வியே!

    இங்கேதான் எமது பாரதியார் உயர்ந்து நின்றார். அனைவருக்குள்ளும் தம்மை வேறுபட்டவராகக் காட்டுவதிலும் உணர்ந்துகொண்ட உண்மைகளை உரக்கக் கூறுமளவுக்கு துணிச்சல் கொண்டிருப்பதிலும் தனித்து விளங்கினார்.

    ஒரு சமுதாயம் முன்னேறிவிட்டது என்பதையோ, நாகரிகம் அடைந்துவிட்டது என்பதனையோ எடுத்துக்காட்ட அணிந்துகொள்ளும் ஆடைகளை மாற்றிக்கொள்வதோ, அன்றி தோற்றத்தை மாற்றிக் கொள்வதோ ஆதாரமாகிவிடாது. இது ஆண்கள், பெண்கள் இரு சாராருக்கும் பொருந்தும். கலாச்சார முன்னேற்றம், நாகரிக முன்னேற்றம் என்பன பற்றிய தவறுதலான புரிதலுக்கு இன்றைய இளைய தலைமுறை ஆளாகிவிட்டதோ எனும் ஓர் அச்சம் எழாமலில்லை.

    பெண்களின் கல்வி முன்னேற்றத்தில்தான் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி தங்கியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அத்தகைய ஒரு வளர்ச்சியை இன்றைய உலகின் மாற்றங்கள் எந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கின்றது என்பது விவாதத்துக்குரிய விடயம்.

    முன்னேற்றம், நாகரிகம் என்பவற்றை மேற்குலக நாடுகளின் வளர்ச்சி எனும் எடைக்கல்லிலே நிறுத்துப் பார்க்கும் மனோபாவமே இன்றைய எமது பின்புல இளைய தலைமுறைகளிடம் பெரும்பான்மையாக குடிகொண்டிருக்கிறது போன்ற ஒரு நிலையே காணப்படுகிறது…

    இன்றைய உலகில் பெண்களின் நிலையை, பெண்களை ஒரு ஆபாசப் பொருளாகப் பார்க்காமல், சக மனித வர்க்கமாகப் பார்க்கும் மனோபாவத்தைப் பெரும்பான்மையான ஆண்கள் கொண்டிருக்கிறார்களா? என்பதும் கேள்வியே!

    நாம் கடந்து வந்த காலப் பகுதி தனக்குள் புதைத்துக்கொண்ட, தம்மைப் பலமிக்க ஆண்களாக எண்னிக்கொண்டவர்களின் செய்கைகள் பல இன்று தோண்டி எடுக்கப்பட்டிருக்கின்றன “நானும் கூட (மீ டூ)” எனும் ஒரு இயக்கத்தினூடாக இன்று சமுதாயப் பெரிய மனிதர் பலரின் செய்கைகள் சமூக ஊடகங்களில் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன…

    இதன் மூலம் இன்றைய சமூகம் எடுத்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் பலவுள்ளன. இன்றைய உலகில் பெண்களின் சம உரிமை நிலைநாட்டப்பட்டுவிட்டது என்று கூறும் அதேவேளை திறமையிருந்தும் உயர்நிலையை அடையப் பல பெண்கள் வலிமை மிக்க பெரிய மனிதர்களுக்குத் தம்மை இழக்க வேண்டிய நிலையில் இருப்பது வெளிக்கொணரப்பட்டிருக்கிறது..

    அதே சமயம் இந்தச் சூழ்நிலையை தமக்குச் சாதகமாக்கி, சில பேர்களின் கெளரவத்தைக் குலைக்கும் வகையில் சில பெண்கள் நடந்துகொள்வதும் உண்மையே! எது எப்படி இருப்பினும் பெண்களின் வளர்ச்சிக்கான காரணிகளுக்குப் போடப்படும் முட்டுக்கட்டைகளின் அளவு குறைந்திருக்கிறதே தவிர முட்டுக்கட்டைகள் குறையவில்லை,

    இன்றும் தமது திறமைகளை வெளிக்காட்டியும் பெண்கள் எனும் ஒரே காரணத்தினால் முன்னேற முடியாமல் தவிக்கும் பலரை நாம் கண்கூடாகக் காணக்கூடியதாகத்தான் உள்ளது. இன்று நான் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஐக்கிய இராச்சியத்திலே பெண்கள் வாக்குரிமை பெற நடத்திய போராட்டங்கள், சரித்திரப் பிரசித்தி பெற்றவை. அத்தனை பலமிக்க போராட்டங்களின் மூலம் வாக்குரிமைகளைப் பெற்றும் கூட இன்றுவரை பல சூழல்களில் தமது திறமைக்கேற்ற தகுதிகளைப் பெறுவதற்குப் போராடும் நிலையே இன்றும் உள்ளது.

    இதற்கு இன்றைய தமிழுலகப் படைப்பாளிகளாக எமது கடமைகள் என்ன? இத்தகைய ஒரு நிலையை இளைய தலைமுறைகளின் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டிய பாரிய கடமை அனைத்துப் படைப்பாளிகளுக்கும் உண்டு. தமிழிலக்கிய படைப்புகளொரு புதுப்பரிமாணம் எடுக்க வேண்டிய ஒரு காலக்கட்டத்திலே இருக்கும் இச்சமயத்தில், பெண்ணியக் கண்ணோட்டத்தில் ஆண் எழுத்தாளர்களின் பார்வைகள் அமைய வேண்டிய தேவையைச் சர்வதேச பெண்கள் தினம் எமக்கு நினைவூட்டுகின்றது.

    இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக, பாரதியார் முதற்கொண்டு என் மானசீகக் குரு கவியரசர் கண்ணதாசன் வரை எத்தகைய முயற்சிகளை எடுத்துள்ளார்கள் என்பது நான் சொல்லிப் புரிய வேண்டிய ஒன்றல்ல.

    சர்வதேசப் பெண்கள் தினம் ஏன் எனக் கேட்பதை விடுத்து பெண்களுக்கான உரிமைகளில் உள்ள விரிசல்களை வெளிக்காட்டும் படைப்புகளை வெளிக்கொணர முயல்வோம். இதுவே இச்சர்வதேச பெண்கள் தினத்தில் அனைத்துப் பெண்களுக்காகவும் நாம் செய்யும் கடமை.

    Share
  • வெள்ளை இராச்சியத்தில் ஒரு கறுப்புப் புயல்

    வெள்ளை இராச்சியத்தில் ஒரு கறுப்புப் புயல்

    சக்தி சக்திதாசன்

    “இங்கிலாந்து”, “லண்டன்”, “ஐக்கிய இராச்சியம்” என்றதுமே பெரும்பான்மையான உலக மக்களின் மனங்களில் முன்னிற்பது ஐக்கிய இராச்சியம் அன்றி பெரிய பிரித்தானியா என்றழைக்கப்பட்ட நாட்டின் இராஜ குடும்பமே!

    இராஜ குடும்பத்தை அதாவது நாட்டின் கெளரவத் தலைவராக ஒரு இராஜாவையோ அன்றி ஒரு ராணியையோ கொண்டிருக்கும் ஒரு சில உலக நாடுகளில், முன்னணியில் இருப்பது ஐக்கிய இராச்சியம் என்றால் அது மிகையில்லை.

    எனது 45 வருட கால ஐக்கிய இராச்சிய வாழ்க்கை அனுபவத்தில் நான் கண்ட உண்மை, கலாச்சார விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாதுகாத்து வரும் நாடுகளில் ஐக்கிய இராச்சியம் முதன்மையானது என்பதுவே.

    இந்த இராஜ குடும்பத்தினைப் பராமரிப்பதனால் நாட்டிற்கென்ன நன்மை எனும் கேள்வி எழலாம். 2017ஆம் ஆண்டு ஒரு நிதியறிக்கை சமர்ப்பிக்கும் ஸ்தாபனத்தின் கணிப்புப்படி இராஜ குடும்பத்தினால் சுமார் 330 மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ஸ் உல்லாசப் பிரயாணிகளின் வரவினாலும் மேலும் சுமார் 150 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ் இராஜ குடும்பத்தினரின் தாக்கத்தினால் கிடைக்கும் வர்த்தக உடன்படிக்கைகளினாலும் நாட்டின் நிதிக் களஞ்சியத்துக்குக் கிடைக்கிறது என்கிறது.

    அப்படிப் பார்க்கையில் இராஜ குடும்பத்தினரால் நாட்டிற்கு நன்மை இல்லாமல் இல்லை. ஆனால் அந்த இராஜ குடும்பத்தைத் தகுந்த முறையில் பராமரிப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. இது சாதாரண மக்களின் வரிப்பணத்தில் இருந்தே ஒதுக்கப்படுகிறது.

    இந்த 21ஆம் நூற்றாண்டில் உலகம் அபார வேகத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் நிலையில் இத்தகைய ஒரு வெறும் சம்பிரதாயத்துக்காக மட்டும் இத்தனை செலவு செய்து இராஜ குடும்பத்தைப் பேணுவது அவசியமா? எனும் கேள்வி முடியாட்சிக்கு எதிரானவர்களிடம் இருந்து பலமுனைகளில் எழுவதையும் நாம் பார்க்கக் கூடியதாக உள்ளது.

    இந்நிலையில் தான் தற்போது ஐக்கிய இராச்சியத்தின் இராஜ குடும்பத்தினுள் ஏற்பட்டுள்ள சலசலப்பு எங்கே இதுதான் இராஜ குடும்பத்தின் சிதைவுக்கு வழிகோலிவிடுமோ என்று பல இராஜ குடும்ப ஆதரவாளர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி விட்டுள்ளது.

    எது எப்படி இருந்தாலும் ஐக்கிய இராச்சியத்தின் சம்பிரதாயத் தலைவியாக இருக்கும் இரண்டாவது எலிசபெத் மகாராணியாரின் திடகாத்திரமான வழிநடத்துதலையும், உறுதியான நிலைப்பாட்டையும் கண்டு பிரமிக்காமல் இருக்க முடியாது.

    நான்கு குழந்தைகளுக்குத் தாயாரான எலிசபெத் மகாராணியாரின் மூத்த புதல்வரும் மகாராணிக்கு அடுத்து முடியுரிமை கொண்டவருமான இளவரசர் சார்ல்ஸ் 1981ஆம் ஆண்டு டயானா அவர்களை மணம் முடித்தார். அதேபோல மகாராணியாரின் இரண்டாவது புதல்வரான இளவரசர் ஆண்ட்ரூ 1986ஆம் ஆண்டு சாரா அவர்களை மணம் முடித்தார்.

    1992ஆம் ஆண்டு எலிசபெத் மகாராணியாரின் பிரச்சினைகள் பூதாகாரமாகின. 1992 மார்ச் மாதம் மகாராணியாரின் இரண்டாவது புதல்வரான ஆண்ட்ரூவும், அவரது மனைவியும் தாம் பிரிந்து செல்வதாக அறிவித்தனர். அவர்களுக்கு இரண்டு பெண்குழந்தைகள் இருந்தனர். அதே வருடம் டிசம்பர் மாதம் மகாராணியாரின் மூத்த புதல்வரும் முடியுரிமை கொண்டவருமான இளவரசர் சார்ல்ஸும் அவரது மனைவியும் சமரசமாகப் பிரிந்து செல்வதாக அன்றைய பிரதமர் டோனி பிளேயர் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். அவர்களுக்கு வில்லியம், ஹாரி என்று இரண்டு ஆண்குழந்தைகள் இருந்தனர்,

    1993ஆம் ஆண்டு நாட்டிற்கான புதுவருடச் செய்தி அளித்த எலிசபெத் மகாராணியார், நடந்து முடிந்த 1992ஆம் ஆண்டை “Annus Horriblis“ என்று வருணித்தார். லத்தீன் மொழியில் மிகவும் பாரதூரமான வருடம் என்று குறிப்பதாகும். அதைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு முதலில் இளவரசர் ஆண்ட்ரூவும், அடுத்து இளவரசர் சார்ல்ஸ்ம் தமது மனைவியரை விவாகரத்து செய்தார்கள்.

    இளவரசர் சார்ல்ஸின் மனைவியான லேடி டயானா விவாகரத்தின் பின்னாலும் ஊடகங்களின் பரிசோதனைக்கு உள்ளானார். அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் ஊடகங்களில் அவதானிக்கப்பட்டு, அதன் தாக்கங்களை இராஜ குடும்பத்தினர் எதிர்கொள்ள வேண்டியதாகியது.

    இவையனைத்தையும் தனக்கேயுரிய மனோதைரியத்துடன் எதிர்கொண்டார் எலிசபெத் மகாராணியார். விவாகரத்து பெற்ற டயானா, காதல் விவகாரத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட எதிர்மறையான விளைவுகளை மகாராணியார் தனது குடும்பத்தின் சார்பில் எதிர்கொள்ள வேண்டிய தேவையேற்பட்டது.

    பாரிஸ் நகரத்தில் 1997ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த டயானா அவர்களின் மீது வீசிய மக்களின் அனுதாப அலையின் தாக்கத்தினால் மகாராணியார் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். அதுவும் அவரைக் கடந்து போகும் வகையில் உறுதி குலையாமல் தனது விவகாரங்களைக் கையாண்டார்.

    இங்கே எலிசபெத் மகாராணியரைப் பற்றி முக்கியமான விடயத்தைக் குறிப்பிட வேண்டும். 93 வயதான எமது மகாராணியார் 21 வயதில் திருமணமாகி அவரது தந்தையின் திடீர் மறைவுக்குப் பின்னால் 27 வயதாகும் போது இங்கிலாந்தின் மகாராணியானார். அந்த இளம் வயதில் போதிய அனுபவமின்றிப் பாரிய பொறுப்பினை ஏற்றுக்கொண்ட அவர், தனது இங்கிலாந்தின் மகாராணி எனும் பாத்திரத்தினுள் தன்னை வளர்த்துக்கொண்டார். வெறுமனே வளர்த்துக்கொண்டது மட்டுமில்லாமல் தன்மீது எவ்விதமான பாதகமான விமர்சனம் வராமல் நடந்துகொண்டார்.

    இங்கிலாந்து மட்டுமல்ல பொதுநலவாய நாடுகள் அனைத்துக்கும் தலைமைப் பதவியேற்று, தமது தலைமையின் கீழ் அவரது முடியாட்சியிலிருந்து விடுபட்டு குடியாட்சி பெற்ற நாடுகளை அனுசரித்து அரவணைத்துக் கொண்டார்.

    இத்தகைய பின்னணியில் ஐக்கிய இராச்சியத்தின் சரித்திரத்தில் அதிக காலம் அரசிலமர்ந்தவர் எனும் சாதனை படைத்த எலிசபெத் மகாராணியார், அவரது 93ஆவது வயதில் புதுச் சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

    மகாராணிக்கு பின்னால் அரசிலமரும் உரிமை கொண்டவர், இளவரசர் சார்ல்ஸ். இவரது இரண்டாவது புதல்வர் இளவரசர் ஹாரி. இவர் மணந்துகொண்டது கலப்பின மங்கையான மெகேன். இவர் கனடா குடியுரிமை பெற்றவர். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அமெரிக்க ஹாலிவுட்டில் நடிகையாயிருந்தவர். விளம்பரங்களில் இடம்பெற்ற ஒரு மாடல் ஆவார்

    இவர்தான் ஐக்கிய இராச்சிய இராஜ குடும்பத்தில் இணைந்த முதலாவது கலப்பு இனத்தவர் ஆவார். இவரின் தந்தை, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வெள்ளை இனத்தவர், இவரின் தாயார் ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த அமெரிக்கராவார். இவர் தன்னை ஒரு கறுப்பு இனப் பெண்மணி என்று கூறிக்கொள்வதில் பெருமையடைபவர்.

    இவர்களின் திருமண வைபவமே சிறிய சலசலப்புடன்தான் நடந்தேறியது. வழக்கமான ஐக்கிய இராச்சிய அரச குடும்பத் திருமணங்கள் ஆங்கில கிறீஸ்தவ பாதிரிமாரால் நடத்தப்படும். ஆனால் இவர்களது திருமணம் கறுப்பு இனப் பாதிரியொருவரால் இவஞ்சலிக்கல் சேர்ச் எனும் முறையில் கிறீஸ்தவ பாடல்களுடன் கூடிய நிகழ்வாக இருந்தது. அத்துடன் வழக்கம் போலல்லாது அப்பாதிரியாரின் வைபவப் பேச்சு நீண்ட நேரத்திற்கு நிகழ்ந்தது, பலரின் புருவத்தையுயர்த்தியது. இத்திருமண வைபவத்தில் மணமகளான மெகன் மார்க்கல் அவர்களின் விருப்பமே முதலிடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய உலகம் பல மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. காலத்தின் கட்டாயமாக இங்கிலாந்து அரச குடும்பமும் காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டால்தான் தம்மைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது உண்மையே. அதற்கேற்ப அவர்கள் தமது நிர்வாகத்தில் மாற்றங்களைச் செய்து வருகிறார்கள் என்பதும் உண்மையே.

    ஆனால் இம்மாற்றங்கள் எனும் பெயரில் இக்காலாச்சார விழுமியத்தின் அடிப்படையையே ஆட்டிப் பார்க்க முயல்கிறார்களோ எனும் எண்ணம் ஏற்படாமல் இல்லை. மெகன் மார்க்கல் அவர்களின் வருகை, அரச குடும்பத்தினுள் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளது. முதலாவதாக இளவரசர் சார்ல்ஸ்க்கு அடுத்து முடியுரிமை கொண்டவரான இளவரசர் வில்லியம் அவர்களுக்கும் அவரது சகோதரர் இளவரசர் ஹாரிக்கும் இடையிலான உறவில் சிறு விரிசல் விழுந்துள்ளது என்கிறார்கள், அரச அவதானிகள். இரு சகோதரர்களும் இணைந்து நடத்திய தன்னார்வத் தொண்டு நிறுவனத்திலிருந்து இளவரசர் ஹாரி தாம் விலகிக் கொள்வதாகக் கூறியது இதற்குச் சான்றாகிறது.

    ஐக்கிய இராச்சியத்தின் வெள்ளை இனத்தவரிடையே தேசியவாத மனப்பான்மை கொண்ட பலர் இருக்கிறார்கள். ஐக்கிய இராச்சியம் உலகில் பல நாடுகளை வெற்றிகொண்டு உலகின் அதிமுக்கிய நாடாக வலம் வந்த நாட்களே தமது நாட்டிற்குப் பெருமை சேர்த்தவை என்றே இவர்கள் எண்ணுகிறார்கள். தேசியவாதத்திற்கும், இனவாதத்திற்கும் உள்ள எல்லைக்கோடு மிக மெல்லியதே.

    இத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் மனத்தில் தமது இராஜ குடும்பத்தின் மீது கொண்டிருக்கும் அபிமானம், ஒரு பக்தி என்றே கூறலாம். அந்த இராஜ குடும்பம், கலப்பில்லாத ஒரு வெள்ளை இனத்தவரின் வெளிப்பாடு என்பதில் இவர்களுக்குப் பெருமை இருந்தது.

    ஐக்கிய இராச்சியத்தில் பல இனத்தவர் குடியேறி இன்று அது ஒரு பல்கலாச்சார நாடாகக் கருதப்பட்டாலும் தமது இராஜ குடும்பம், தமது நாட்டின் தனித்தன்மையைப் பழமையை எடுத்துக் காட்டுகிறது என்றே அவர்களின் எண்ண ஓட்டமாக இருக்கிறது

    இந்நிலையில்தான் இளவரசராக இருந்த ஹாரி, இராஜ குடும்பத்தின் ஒரு முக்கிய உறுப்பினர், ஒரு கலப்பு இனத்துப் பெண்மணி, அதுவும் தன்னைக் கறுப்பு இனப்பெண்மணி என்று இனங்காட்டிக் கொள்ளும் ஒரு பெண்ணான மெகன் மார்க்கல் அவர்களை மணமுடித்து இராஜ குடும்பத்தில் இணைத்துள்ளார்.

    வெள்ளை இனத்தவரின் மேன்மையே தமது தேசியவாதத்தின் அடிப்படை எனக் கொண்டவர்களால் இதனை ஜீரணிக்க முடியுமா என்ன? மெகன் மார்க்கல் பற்றிய விமர்சனங்கள், அவரின் பின்னணி, குடும்ப உறுப்பினர்களின் கருத்து எனப் பலதரப்பட்ட விடயங்கள் ஊடகங்களிலே ஆராயப்பட்டன.

    இவை ஒருபுறமிருக்க, புதிதாய் இராஜ குடும்பத்தில் இணைந்துகொண்ட மெகன் மார்க்கல் அவர்களின் செயற்பாடுகள் இவ்வூடகத்துறையின் விமர்சனங்களுக்கு வலுச் சேர்ப்பவையாக இருந்தன, இந்தக் குடும்பத்தில் தான் ஒரு வித்தியாசமானவராக நடப்பதற்கு எத்தனித்தார். இராஜ குடும்பத்தின் காலந்தோறும் கடைப்பிடிக்கப்பட்ட பொது நடைமுறைகளை விமர்சித்து தான் அதனை ஏற்றுக்கொள்ளாதது போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தார்

    இளவரசர் ஹாரியும் தம் மனைவியின் விருப்புக்கு எதிராக நடக்க விரும்பாதவராக, தானும் இராஜ குடும்பத்தின் அடையாளங்களிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

    இளவரசர் ஹாரி, போரினால் அங்கவீனர்களாக்கப்பட்ட முன்னாள் போர்வீரர்களை உள்ளடக்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து, அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவ்வமைப்பின் தூதுவராகச் செயற்படுகிறார். அதேபோல மெகன் மார்க்கல் ஆப்பிரிக்க நாட்டின் வறுமை ஒழிப்புக்கான நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

    இந்நிலையில் இத்தம்பதியருக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. மெகன் மார்க்கல் அவர்களைப் பற்றி ஒரு சாராருக்கு விமர்சனங்கள் இருந்தாலும் இராஜ குடும்பத்தின் புதிய வரவினை , வம்ச விருத்தியை நாடு முழுவதும் கொண்டாடியதோடு உலக நாடுகளும் மிகவும் ஈடுபாடு கொண்டு நிகழ்வுகளை அவதானித்தன.

    வழக்கமாக கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தில் இராஜ குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரும் மகாராணியார் இல்லத்தில் ஒன்றுகூடுவார்கள். மெகன் மார்க்கல் அவர்களின் வரவு, இக்கலாச்சார நடைமுறைக்கு முட்டுக்கட்டையானது. முதன்முறையாக இளவரசர் ஹாரி, மெகன் மார்க்கல் அவர்களது குழந்தை கிறிஸ்துமஸ் சமயத்தை, மெகன் மார்க்கல் வளர்ந்த நாடான கனடாவில் 2019ஆம் ஆண்டு கழித்தார்கள்.

    இதைப் பற்றிப் பல கருத்துகள் ஊடகங்களில் விவாதங்களாகவும் விமர்சனங்களாகவும் இடம்பெற்றன..

    இதைத் தொடர்ந்து இளவரசர் ஹாரியினதும், மெகன் மார்க்கலினதும் அறிவித்தல் தான் அனைவரின் மனங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தான் இராஜ குடும்ப சம்பிரதாயங்களிலிருந்து முற்றாக விலகப் போவதாகவும், இராஜ குடும்ப உறுப்பினர்கள் அல்லாமல் சாதாரண மனிதர்களாகத் தமது எஞ்சிய வாழ்க்கையை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்தார்கள்.

    தமக்கான தமது உத்தியோக இல்லத்தை 25 மில்லியன் பவுண்ட்ஸ் கொடுத்து திருத்தியமைத்தார்களே அது பொதுப் பணமல்லவா? எப்படி அவர்கள் திடீரென இப்படி அறிவிக்கலாம் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. அப்பணத்தைத் தாம் திரும்ப அரசாங்கத்துக்கு அளிக்கப் போகிறோம். அத்தோடு இனி தமது சொந்தப் பணத்தில்தான் வாழ்க்கை நடத்தப்போகிறோம் என்று அறிவித்து தாம் கனடா தேசத்தில் வாழ்வை அமைத்துக்கொள்ளப் போவதாக அறிவித்தார்கள்..

    இவ்வறிவித்தல்களுக்கு உத்தியோகப்பூர்வமாக பதிலிறுக்க வேண்டிய நிலைக்கு மகாராணியார் தள்ளப்பட்டார். இளவரசர் ஹாரியினதும், அவரது மனைவியினதும் விருப்பத்தைப் புரிந்து கொள்கிறோம். இளவரசர் ஹாரி உத்தியோகப்பூர்வமாக தாம் இராஜ குடும்பத்தினர் எனும் அடையாளத்தை உபயோகிக்க முடியாது என்று அறிவித்தார்கள். ஹாரி அவர்கள், இராஜ குடும்பத்தின் சார்பாகப் பங்கு கொள்ளவிருக்கும் அனைத்து உத்தியோகப்பூர்வமான நிகழ்வுகளிலிருந்தும் ஒதுங்கிக்கொள்கிறார் என்றும் அறிவித்தார்.

    அனைத்தும் ஓரளவு சுமூகமாக நடந்தேறி விட்டது என்று இருக்கும்போது சிலநாட்களின் முன்னாள் இளவரசர் ஹாரியினதும் அவர் மனைவியினதும் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கை திரும்ப சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது. தம்மை இராஜ குடும்பத்தினர் அதாவது ஆங்கிலத்தில் Royals என்றழைக்க முடியாது என்று சொல்லும் உரிமை, இராஜ குடும்பத்துக்கு இல்லை என்று அந்த அறிக்கை கூறியதோடு, இராஜ குடும்பத்தின் தூரத்து உறவுகளே தம்மை இராஜ குடும்பத்தினர் என்று அழைக்கும்போது நாம் அழைப்பதில் என்ன தப்பு என்கிறார்கள்.

    இத்தனையையும் மெளனமாக எதிர்கொண்டு எந்த விதமான கருத்துகளையும் பொதுவில் கூறாமல் அனைத்தையும் சாதுரியமாக நாகரீகமாக கையாண்டு கொண்டிருக்கும் 93 வயதான எமது எலிசபெத் மகாராணியார் இராஜதந்திரத்துக்கே ஓர் எடுத்துக் காட்டாகிறார்.

    இளவரசர் ஹாரியின் நடவடிக்கைகளுக்குக் காரணமிருக்கலாம். அவரது அன்னையும், இளவரசர் சார்ல்ஸ் அவர்களின் முன்னைநாள் மனைவியும் மறைந்தவருமான லேடி டயானா அவர்களின் மீதான தொடர்ந்த ஊடகங்களின் ஆர்வமும், விமர்சனங்களுமே அவரது மறைவுக்குக் காரணம் என்று கருதப்படுகிறது. தன்னுடைய மனைவியும், குழந்தையும் அத்தகைய ஒரு ஊடகத் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடாது என்பதே அவரது நோக்கமாக இருக்கலாம். அது நியாயமானதாகக் கூட இருக்கலாம்.

    ஆனால் இங்கே பல கேள்விகள் முன்னெடுக்கப்படுகின்றன.

    ஐக்கிய இராச்சியத்தின் இராஜ குடும்பம் என்பது ஒரு சாதாரண கலாச்சார விழுமியமில்லை. நாட்டின், மக்களின், கலாச்சாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. வெளிநாட்டவரின் ஐக்கிய இராச்சியத்தின் மீதான பார்வைக்கு ஓர் அத்திவாரமாகிறது. இத்தகைய ஒரு குடும்பத்தோடு இணையும் போது அதனோடு சேர்ந்து வரும் ஊடகங்களின் உபத்திரவத்தை எதிர்பார்க்காமலா மெகன் மார்க்கல் அவர்கள், இளவரசர் ஹாரி அவர்களை மணமுடிக்க விரும்பியிருப்பார்?

    ஒருநாட்டின் பாரம்பரிய கலாச்சார விழுமியத்துடன் இணைகையில் தாமும் அந்நாட்டினுடன் தம்மை இணைத்துக்கொள்கிறோம் என்பதை அறியாமலா மெகன் மார்க்கல் இருந்திருப்பார்?

    இதையெல்லாம் அறிந்துகொண்டு ஐக்கிய இராச்சியத்தின் இளவரசரரை மணந்துகொண்ட மெகன் மார்க்கல், அக்குடும்பத்தின் நல்ல மருமகளாக அக்குடும்பப் பெருமைகளைக் காப்பாற்ற முடியாமல் தமது இச்சைக்கு ஏற்ப, தொன்மை மிக்க இராஜ குடும்பத்தினையே மாற்றியமைக்க முயல்வது போலத் தென்படுகிறது.

    இத்தகைய செயற்பாடுகள் நடுநிலையாக இருக்கும் வெள்ளை இனத்தவர் பலரைக்கூடக் கொஞ்சம் இனவேற்றுமை எனும் நிலைக்குத் தள்ளுகிறது. இதுவரை தமது விதிமுறைகளைக் கடைப்பிடித்து வந்த இராஜ குடும்பத்தினுள் நுழைந்த வேற்றுநிறப் பெண்மணி, குழப்பத்தை உண்டாக்குகிறார் எனும் வகையில் எண்ணுகிறார்கள்.

    இத்தகைய எண்ணம் பொதுவாக நாட்டில் நிலவும் நிறத் துவேஷத்தினை அதிகரிக்கச் செய்கிறது போலவும் தோன்றுகிறது. நாட்டில் கலக்கும் வேற்று இனத்தவரால் நாட்டின் பாரம்பரியத் தன்மை மாற்றப்படுகிறது எனும் இவர்களது வாதத்துக்கு வலுச் சேர்க்கிறது.

    ஐக்கிய இராச்சியத்தின் இராஜ குடும்ப அமைப்பினை முற்றாகக் கலைத்து விடவேண்டும் எனும் கருத்துக் கொண்ட பலர், அரசியல்வாதிகள் உட்பட இருக்கிறார்கள். ஹாரி தம்பதியினரின் செயற்பாடு அவர்களுக்கெல்லாம் மேலும் உந்துசக்தியாக இருக்கப் போகிறது.

    இந்தச் செயற்பாடுகளின் விளைவுகளை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு நாட்டின் கலாச்சாரமே அதன் மக்களின் செயற்பாடுகளுக்கு அடிப்படையாகிறது. அத்தகைய வழியில் சட்ட திட்டத்தை மதிக்கும் ஒரு சமூகத்தை வளர்த்தெடுக்க உதவிய கலாச்சார அடிப்படையை அழித்துவிடுவது அந்நாட்டின் அத்திவாரத்தையே அசைத்துப் பார்ப்பது போலாகாதா?

    எது எப்படியிருப்பினும் தமது அறிவித்தலை இவர்கள் தெரிவித்தது ஒரு சரியான நேரமா? எனும் கேள்வி எழத்தான் செய்கிறது.

    நாடு ப்ரெக்ஸிட் எனும் ஒரு நிகழ்வுக்கு முகம் கொடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளிவந்துள்ளது.

    நாட்டின் மக்களிடையே இந்நிகழ்வு கொடுத்த பிரிவினையின் அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை.

    ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வு ஏற்படுத்திய ஒரு இனத்துவேஷ உணர்வு இன்னும் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இம்முடிவில் மெகன் மார்க்கல் வகித்த பங்கு, எரிகின்ற இந்த இனத்துவேஷ நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போலாகாதா?

    இராஜ குடும்பக் கலாச்சாரக் கட்டுப்பாடுகளில் இருந்து ஒதுங்கிக்கொள்வது இளவரசர் ஹாரியினது தனிமனித உரிமைக்கு உட்பட்டது என்றாலும் இதனை இக்காலக்கட்டத்தில் கொஞ்சம் தவிர்த்து தமது இராஜ குடும்பத்து ஈடுபாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து மெதுவாக இதனைச் செய்திருக்கலாம்.

    இந்தத் தலைமுறை, கொஞ்சம் தடுமாறத்தான் செய்கிறதோ?

    Share
  • பாதை வகுத்தபின் பயந்தென்ன லாபம் ?

    பாதை வகுத்தபின் பயந்தென்ன லாபம் ?

    சக்தி சக்திதாசன்
    லண்டன்


    ஐக்கிய இராச்சியம், வரும் ஐந்து வருட காலத்துக்கு தனது பயணத்தின் பாதையை நிர்ணயித்து விட்டது .

    ஆமாம் வருகிறது! வருகிறது! என்று பயமுறுத்திக் கொண்டிருந்த ஒரு நிகழ்வு வந்து எம்மைக் கடந்து சென்ற பின்பு அது போன பாதையைப் பார்த்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

    ஐக்கிய இராச்சியத்தின் அரசியல்களத்தை ஆட்டிக்கொண்டிருந்த தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்தேறி பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களின் கட்சி அமோகமான வெற்றியை ஈட்டியுள்ளது. 1986ம் ஆண்டுக்குப் பின்னால் கன்சர்வேடிவ் கட்சி பெற்ற அதி பெரும்பான்மை வாக்குகள் இதுவென்று சரித்திர ஏடுகள் கூறுகின்றன.

    ஐக்கிய இராச்சிய அரசியல் சரித்திரத்தில் அழியாப் பெயர் பெற்ற “இரும்புப் பெண்மணி” எனும் பெயரெடுத்த மார்க்கிரட் தாட்சர் அவர்களின் வழியில் அடுத்தவோர் சரித்திரம் ஏற்படுத்தியவராகிறார் பிரதமர் பொரிஸ் ஜான்சன்.

    ஐக்கிய இராச்சியத்தின் எதிர்க்கட்சியான லேபர் கட்சி 1930களின் பின்னால் கண்ட மாபெரும் தோல்வி இதுவாகிறது. ஐக்கிய இராச்சிய அரசியல் வரலாற்றில் இதுவரை கனவில் கூட வெற்றிபெறுவோம் என்று எண்ணாத லேபர் கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட பல வட இங்கிலாந்துத் தொகுதிகளில் கன்சர்வேடிவ் கட்சி முதற்தடவையாக வெற்றியீட்டியுள்ளது. இத்தொகுதி மக்கள் தமது ஆதரவை எமக்கு இரவலாகவே தந்துள்ளனர். அதனை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதற்கான ஆக்கபூர்வமான செயல்களை நமது அரசு ஆற்ற வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

    லேபர் கட்சியின் இந்த படுதோல்விக்கு ப்ரெக்ஸிட் சம்பந்தமான அவர்களது தெளிவற்ற நிலை மட்டுமல்ல அவர்களது தலைவரான ஜெர்மி கோர்பனின் தீவிர சோஷலிச நிலைப்பாட்டையும், அடுக்கடுக்காக அவர்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகளின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையின்மையும் காரணம் என்று அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

    பொரிஸ் ஜான்சன் அவர்கள் அடுத்த பிரதமாராகும் வகையில் ஆட்சியமைக்கும் தகுதியை அவருக்கு அளிக்கும் வகையில் அவரது கட்சி வெற்றியடையும் என்று கருத்துக் கணிப்புகள் கூறிய போதிலும் இத்தகைய ஒரு அமோக வெற்றியை அடைவார்கள் என்பது எதிர்பார்க்கப்படாத ஒன்று.

    கன்சர்வேடிவ் கட்சிக்குக் கிடைத்த இந்த மாபெரும் வெற்றி அவர்களால் ஈட்டப்பட்டதா? இல்லை எதிர்க்கட்சியான லேபர் கட்சியினால் அவர்களுக்குக் கிடைத்த ஒரு கொடையா? என்பதன் விடை இன்னும் அரசியல் அவதானிகளால் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை ஐக்கிய இராச்சியத்தை பிளவுபடுத்திக் கொண்டிருந்த ப்ரெக்ஸிட் எனும் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி இந்தத்தேர்தலினால் கிடைக்கப்போகிறதா? என்பதும் அதனால் நாட்டில் ஏற்பட்ட பிளவு நீங்கப் போகிறதா இல்லையா? என்பதும் ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இருப்பினும் ஒன்றுமட்டும் உறுதியாகி விட்டது. ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வு நிச்சயம் நடைபெறத்தான் போகிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை தனது தேர்தல் வெற்றியை அடுத்து ப்ரெக்ஸிட் அடுத்த கட்ட நகர்வை நோக்கி ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்துடனான உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றினார் பிரதமர் பொரிஸ் ஜான்சன். இவ்வுடன்படிக்கையின்படி வரும் ஜனவரி 31ம் திகதி ஐக்கிய இராச்சியம் , ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது உறுதியாகி விட்டது. அதைத் தொடர்ந்து 2020 டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான காலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இந்த காலத்தினுள் வர்த்தக உடன்படிக்கையை எட்டாத பட்சத்தில் ஐக்கிய இராச்சியம் எதுவித வர்த்தக உடன்படிக்கையுமில்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிலையேற்படும். இது ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வேன் என்று பொரிஸ் ஜான்சன் உறுதியுடன் கூறியிருக்கிறார்.

    இதுவரை எந்த ஒரு நாடும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒருவருட கால அவகாசத்தில் வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டதாக வரலாறு இல்லை, உதாரணமாக கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்படிக்கையை எட்ட சுமார் ஏழு வருட காலம் எடுத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பிரதமர் ஒருவருட காலத்தில் ஒரு வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்த முடியாது என்று எதிர்க்கட்சியினரும் , ப்ரெக்ஸிட்டுக்கு எதிரானவர்களும் அடித்துக் கூறுகிறார்கள். 2020 வருட இறுதியில் ஐக்கிய இராச்சியம் உடன்படிக்கையின்றி வெளியேறப் போகிறது, பொருளாதாரச் சரிவைச் சந்திக்கப் போகிறது எனும் எச்சரிக்கையை இவர்கள் விடுக்கிறார்கள்.

    பிரதமர் பொரிஸ் ஜான்சனின் இந்த மாபெரும் வெற்றி அவர் தன்னிச்சையாக நடக்க ஏதுவாகப் போகிறது என்பதும் அவருக்கு எதிரானவர்களின் கருத்தாக இருக்கிறது. முதலாளித்துவம் , வலதுசாரக் கொள்கைகள் எனபவற்றின் அதிதீவிரப் போக்கினை இவரது அரசு கடைப்பிடிக்கப் போகிறது என்பதும் சிலரது கருத்தாக இருக்கிறது. இன்றைய ஐக்கிய இராச்சியத்தில் இனப்பிரிவினை தலைதூக்கியுள்ளது போன்ற ஒரு தன்மையைக் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கிறது. ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவானவர்கள் வெளிநாட்டவரின் குடியேற்றத்தை முக்கிய காரணியாக எடுத்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது இத்தகைய ஒரு நிலைக்கு வழிவகுத்துள்ளது. இனப்பிரிவினை, இனப்பாகுபாடு என்பன பற்றிய கருத்துக்களை வெளிப்படையாக விவாதிப்பது தம்மை ஒரு இனத்துவேஷியாகக் காண்பித்து விடும் எனும் காரணத்தினால் இவ்விவாதங்கள் பொதுத்தளங்களில் விவாதிக்கப்படாமலிருந்தது. பல முன்னனித் தலைவர்கள் இன்றைய ஐக்கிய இராச்சிய பிரதமர் உட்பட இப்பிரச்சனைகள், மற்றும் வெளிநாட்டவர் பற்றிய குறிப்புகளை வெளிப்படையாக தெரிவித்தது இத்தகைய விவாதங்கள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவையே எனும் ஒரு நிலையை நாட்டில் ஏற்படுத்தியது. விளைவாக வெளிநாட்டவரின் குடியேற்றத்தை விவாதிக்கிறோம் எனும் போர்வையில் இனத்துவேஷத்தை வளர்ப்பதைக் ,குறியாகக் கொண்ட இனத்துவேஷிகளுக்கு வெளிநாட்டவரைத் தாக்குவதற்கு அனுமதி அளித்தது என்பதும் ஓரளவுக்கு உண்மையே !

    ஐக்கிய இராச்சியத்தின் அரச அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டுள்ள பொரிஸ் ஜான்சன் அவர்களின் முன்னால் இருக்கும் பொறுப்பு மிகவும் முக்கியமானவைகளாகும்.

    1. ப்ரெக்ஸிட் முதல் கட்ட நகர்வையடுத்து அடுத்த கட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டிய தேவை
    2. ப்ரெக்ஸிட் நிகழ்வினால் பிளவுபட்டிருக்கும் நாட்டினை ஒன்றுபடுத்துவது
    3. என்றுமே எண்ணிப்பார்க்க முடியாத தொகுதிகளில் முதற் தடவையாக வெற்றியீட்டியதன் மூலம் தமது ஆதரவையும் நம்பிக்கையையும் நல்கிய எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் ஆதரவை நிலைப்படுத்திக் கொள்வதற்காக அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவது.

    ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய கலாச்சார நிகழ்வு டிசம்பர் 25 வரும் கிறீஸ்துமஸ் பண்டிகையும், அதைத் தொடர்ந்து வரும் புதுவருடக் கொண்டாட்டமுமே . இம்முறை மக்களுக்கு கிறீஸ்துமஸ் பரிசாகவும், புதுவருடப் பரிசாகவும் ப்ரெக்ஸிட்டை அளிக்கிறார் நம்ப பிரதமர். அவரது இந்த அமோகமான பெரும்பான்மையைக் கொண்ட பாராளுமன்றம் என்ன வழியில் நாட்டை கொண்டு செல்லப் போகிறது என்பதையும், பிரதமர் பொரிஸ் ஜான்சனின் உண்மையான அரசியல் அடையாளத்தையும் இனிவரும் காலங்களில் காணப்போகிறோம் என்பதுவே உண்மை.

    இது ஒரு பரிசா? இல்லை தண்டனையா ? என்பதை அடுத்த கிறீஸ்துமஸ் காட்டி விடுமா?

    Share
  • மாறுமோ இந்த நிலை?

    சக்தி சக்திதாசன்

    வருமாவராதா? வருமாவராதா? எனும் கேள்வி இங்கிலாந்து மக்கள் அனைவரின் மனங்களிலும் இழையோடிக்கொண்டிருந்ததுஅக்கேள்வியின் விடை பீரிட்டுக்கொண்டு வெளிவந்துவிட்டது.

    எதை நான் சொல்ல வருகிறேன் என்று எண்ணுகிறீர்களாகடந்த மூன்றரை வருடங்களாக இங்கிலாந்து அரசியல் களத்தில் நர்த்தனமாடிக் கொண்டிருந்த பிரெக்ஸிட்” எனும் பூதாகரமான பிரச்சனையின் தீர்வு ஒரு பொதுத்தேர்தலினால்தான் தீர்க்கப்பட முடியும் எனும் நிலையை எட்டிய பின்பு அந்தப் பொதுத்தேர்தல் வருமாவராதாஎனும் கேள்வியே ஊசலாடிக் கொண்டிருந்தது.

    புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட போரிஸ் ஜான்சன், இந்த பிரெக்ஸிட் எனும் பிரச்சனையை அக்டோபர் மாதம் 31ஆம் திகதி முடித்து விடுவேன் என்று சூளுரைத்தே பதவியேற்றார்ஆனால் காலம் செய்த சதியோஇல்லை அவரது போதாத காலமோ, பலவிதமான சாணக்கிய நகர்வுகளை மேற்கொண்டும் அவரால் அவரது வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை.

    பாராளுமன்றத்தில் அரசுக் கட்டிலில் அமர்ந்திருந்த அவரது கட்சி, ஒரு சிறுபான்மை அரசமைத்த நிலையில், அறுதிப் பெரும்பான்மை இழந்த ஒரு நிலையில் முடமாகி நின்றமையே அவரது இந்தத் தோல்விக்குக் காரணம்.

    ஏற்கெனவே வட அயர்லாந்துக் கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவுடன் அரசு நடத்திக்கொண்டிருந்த போரிஸ் ஜான்சன் ஆண்டவன் சோதனையோயார் கொடுத்த போதனையோ” தான் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தார்கள் அதாவது எதிர்க்கட்சியுடன் இணைந்து செயலாற்றினார்கள் எனும் குற்றச்சாட்டில், இதுவரை கண்டிராத வகையில், தமது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர்களைத் தமது கட்சியிலிருந்து விலக்கினார்.

    விளைவு!

    ஏற்கெனவே பெரும்பான்மை இழந்திருந்த அவரது கட்சியின் பலம், மேலும் குன்றியதுநொண்டி நொண்டி நடந்துகொண்டிருந்த அவரது அரசு, முடமாகி நின்றது. .

    பிரதமர் போரிஸ் ஜான்சனும் அவரது சகாக்களும் தமது நிலையை மீள்பரிசீலித்துக் கொண்டார்கள். நாட்டில், பிரெக்ஸிட்டுக்கான ஆதரவு  50%க்கும் அதிகமாகவே இருக்கிறது என்று பொதுக் கருத்துக் கணிப்புகள் கூறினஎதிர்க் கட்சியான லேபர் கட்சி வெற்றியீட்டிய தொகுதிகளில் பல, பிரெக்ஸிட்டை ஆதரிக்கும் ஒரு நிலை, இங்கிலாந்து வட மாகாணங்களில் இருப்பதை அவர்கள் இனங்கண்டு கொண்டார்கள்.

    இதற்கு ஏதுவாக, பிரெக்ஸிட் குறித்த, எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் நிலைப்பாடு தெளிவற்றே இருக்கிறதுமற்றொரு முக்கிய கட்சியான லிபரல் டெமகிரட்ஸ், பிரெக்ஸிட்டை முற்று முழுதாக எதிர்க்கிறார்கள். அனைத்துக்கும் மத்தியில் பிரெக்ஸிட்டுக்கு முழு ஆதரவான ஒரேயொரு கொள்கையை முன்வைத்து பிரெக்ஸிட் எனும் கட்சியை ஆரம்பித்து பலமான ஆதரவு பெற்று வருகிறார் நைஜல் வெராஜ் எனும், இங்கிலாந்துக்கான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற அங்கத்தினர்களுள் ஒருவர்.

    இவையனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கையில், பொதுத்தேர்தல் ஒன்றின் மூலம் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு அவருக்கிருப்பதாகப் போரிஸ் ஜான்சனும் அவரின் ஆதரவாளர்களும் நம்புகிறார்கள்இவற்றுக்கெல்லாம் முடிசூடிக் கொண்டாற்போல் அவர் திருத்தியமைத்துக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான உடன்படிக்கை, அவரது கட்சியில் கணிசமான ஆதரவினைப் பெற்றிருக்கிறதுஅதன் அடிப்படையில் இவ்வுடன்படிக்கை, பொதுமக்களிடையேயும் கணிசமான ஆதரவினைப் பெறும் எனும் நம்பிக்கையும் அவர்களுக்குத் துணை நிற்கிறது.

    பொதுத்தேர்தல் ஒன்றிற்கு இத்தனை சாதகமான காரணிகள் இருக்கும்போது, அவரால் ஏன் இதுவரை ஒரு பொதுத்தேர்தலை அறிவிக்க முடியவில்லைஇங்கேதான் அவருக்கு ஒரு சிக்கல் இருந்ததுமுன்னால் பிரதமர் டேவிட் கமரன்லிபரல் டெமகிரட்ஸ் கட்சியுடன் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்த போது அவ்வரசு விரைவில் கவிழ்ந்துவிடக்கூடாது என்பதில் இரு கட்சிகளும் குறியாக இருந்ததனால் ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஆட்சியைக் கலைப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருக்க வேண்டும் என்றொரு சட்டத்தை இயற்றினார்கள்.

    எதிர்க்கட்சிகளின் ஆதரவு இன்றிப் பாரளுமன்றத்தை அரசு தன்னிச்சையாக கலைக்க முடியாத நிலையிருந்ததுஎதிர்க்கட்சிகளின் பிரதான நோக்கமே ஆட்சியைக் கவிழ்த்து தாம் ஆட்சியமைப்பதுதானே அப்படி இருக்கையில் ஏன் அவரது இந்தத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் தமக்குச் சாதகமாக்கிக்கொள்ள முன்வரவில்லை ?

    இங்கேதான் மீண்டும் பிரெக்ஸிட், பிரச்சனையாக உருவெடுக்கிறதுசாணக்கியத் தந்திரங்களில் ஊறிப் போனவர், போரிஸ் ஜான்சன். அவரை நம்பி அரசைக் கவிழ்த்துப் பொதுத்தேர்தலுக்கு உடன்பட்டுவிட்டால், இந்தத் தேர்தல் அமளியைப் பயன்படுத்தி, அக்டோபர் 31ஆம் திகதி வெளியேற வேண்டும் எனும் காலக்கெடுவினைத் தமக்குச் சாதகமாக்கி உடன்படிக்கையற்ற ஒரு பிரெக்ஸிட்டை அமல்படுத்தி விடுவார் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.

    அதற்காக, எதிர்க்கட்சிகள் ஒரு நிபந்தனையை முன்வைத்தன.

    தாம் பொதுத்தேர்தலுக்கு உடன்படுவதானால் அக்டோபர் 31ஆம் திகதி விலகும் காலக் கெடுவினை நீட்டிப்பதற்கான ஆதரவினை ஐரோப்பிய ஒன்றியத்திடம் பெற வேண்டும் எனும் நிபந்தனையே அது.

    பத்தும் பலதும் பண்ணிப் பார்த்தும் எதுவும் பலனளிக்காத பட்சத்தில் தான் எதை உயிர் போனாலும் நிறைவேற்றமாட்டேன் என்று சூளுரைத்தாரோ அதனை நிறைவேற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார், போரிஸ் ஜான்சன். “எனதருமை நாட்டு மக்களே, உங்கள் ஆணையின்படி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தை வெளியேற்றுவதை அக்டோபர் 31ஆம் தேதி நிறைவேற்றத் தீர்மானித்த என்னைப் பாராளுமன்ற ஜனநாயகம் எனும் மந்திரக் கயிற்றால் கட்டிப்போட்டு இக்காலக்கெடுவை 2020 ஐனவரி 31 வரை நீட்டிக்க வைத்துவிட்டார்கள் எதிர்க்கட்சியினர்” என்று அறிவித்தார்ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்ஒன்று இக்கட்டான பிரெக்ஸிட் சிக்கலைக் கொஞ்சம் தள்ளி வைத்ததுஇரண்டு அதற்கான பழியை எதிர்க்கட்சியினர் மீது சுமத்தியது.

    அக்டோபர் 31ஆம் திகதி உடன்படிக்கையற்ற ஒரு பிரெக்ஸிட்டுக்கான சந்தர்ப்பம் முற்றாகத் தவிர்க்கப்பட்ட சூழலில், பொதுத் தேர்தலுக்குத் தமது ஆதரவினை எதிர்க்கட்சியினர் அளிக்க முன்வந்தனர்இந்த ஆதரவினை அளிக்க பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சி பலவந்தப்படுத்தப்பட்டது என்றே கூறவேண்டும்ஏனெனில் மற்றைய எதிர்க்கட்சிகளான ஸ்காட்லாந்து தேசிய முன்னணிலிபரல் டெமகிரட்ஸ் மற்றும் சில இதர சிறு எதிர்க்கட்சிகள் என்பன ஒன்றிணைந்து பொதுத் தேர்தலை ஆதரித்ததுவே லேபர் கட்சியின் மனமாற்றத்தைப் பலவந்தப்படுத்தியது.

    விளைவாக, பல வருடங்களின் பின்னால் முதன்முறையாக ஐக்கிய இராச்சியத்தில் டிசம்பர் மாதத்தில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. . ஆமாம் 2019 டிசம்பர் மாதம் 12ஆம் திகதி இப்பொதுத்தேர்தல் நடக்கவிருக்கிறதுஐக்கிய இராச்சியத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஓர் அதிமுக்கிய பொதுத்தேர்தல் இதுவென்றே அரசியல் அவதானிகள் பலரும் இதை நோக்குகின்றனர்.

    அடுத்து வரும் கட்டுரையில் இப்பொதுத்தேர்தலின் தன்மைகளையும் கட்சிகளின் நிலையையும் விரிவாகப் பார்க்கவுள்ளோம்.

    நடக்கப் போகும் இந்தப் பொதுத்தேர்தலினால் மாறுமோ இந்த நிலை?

    சக்தி சக்திதாசன்

    லண்டன்

    14.11.2019

    Share
  • நதியினில் வெள்ளம்! கரையினில் நெருப்பு!

    நதியினில் வெள்ளம்! கரையினில் நெருப்பு!

    சக்தி சக்திதாசன் 

    (இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 302)

    அக்டோபர் 31! இங்கிலாந்து அரசியல் காலண்டரில், இதுவும் முக்கியமான நாளாக ஐக்கிய இராச்சிய மக்கள் மத்தியில் மட்டும் அல்லஐரோப்பிய ஒன்றிய நாட்டு மக்களின் மத்தியில் மட்டும் அல்லஉலக மக்கள் அனவரினதும் மனங்களிலேயும் அழுத்தமாகப் பதிந்துவிட்ட தேதி.

    ஐக்கிய இராச்சியம்ஐரோப்பிய ஒன்றியம் எனும் ஒரு கூட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயலும் தேதி .

    சுதந்திரமாகதமது இறைமையைத் தமது கைகளிலே கொண்டுள்ள நாடாக வாழ வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் மட்டுமே முடியும் என்று வாக்களித்தோரில் பெரும்பான்மையான ஐக்கிய இராச்சிய மக்கள் எடுத்த ஏகோபித்த முடிவு.

    ஐக்கிய இராச்சியம்குறிப்பாக இங்கிலாந்து நாட்டு மக்களின் மனத்தில் கொஞ்சம்கொஞ்சமாகத் தமது நாட்டின் பாரம்பரிய கலாச்சாரம்வாழ்க்கை முறை என்பன முற்றாக தமது நாட்டில் மாறி வருகிறது எனும் எண்ணம் வளர்ந்து வந்தது.

    அதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லைசுகாதாரச் சேவையில் ஏற்பட்ட மாற்றங்கள் அதாவது சிகிச்சைகளுக்காகக் கால அவகாசத்தின் நீட்சிவைத்தியர்கள்தாதிமாரின் பற்றாக்குறை என்பன.

    பாடசாலைகளில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட இடப் பற்றாக்குறைஒரு இடத்தில் பலகாலமாக வசித்து வந்தவர்களின் குழந்தைகளுக்கே அவர்களது அருகில் உள்ள பாடசாலைகளில் இடம் கிடைக்காத நிலை.

    வெளிநாடுகளில், அதுவும் குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்ததும் அந்நாட்டுப் பிரஜைகள் இலகுவாக ஐக்கிய இராச்சியத்தினுள் நுழைந்ததால் உள்நாட்டுப் பணியாளர்களின் ஊதியத்துக்குக் குறைவாகப் பெற்று அவர்களது பணிகளை இவர்கள் பெற்றுக்கொண்டதால் எழுந்த விரக்தி.

    இப்படியான காரணங்கள் இங்கிலாந்து மக்களின் மனத்தில் எழுந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான அதிருப்திக்கு வழிவகுத்த காரணங்களில் முக்கியமானவை.

    ஐக்கிய இராச்சியப் பிரஜைகளின் இளம் சந்ததியினரில் பலர் வைத்தியத்துறைதாதித்துறைமற்றும் சரீர உழைப்பின் அடிப்படையில் அமைந்த பணிகளின் மீதான ஈர்ப்பின்மையால் ஏற்பட்ட அத்தகைய துறைகளின் பணியாளர்களின் பற்றாக்குறையை இக்கிழக்கு ஐரோப்பிய பணியாளர்கள் பூர்த்தி செய்வதும் மறுக்கப்பட முடியாத உண்மை.

    இவர்களின் சேவையின் தேவை ஐக்கிய இராச்சியத்துக்கு அத்தியாவசியமானது எனும் ஒரு நிலையே காணப்படுகிறது.

    எனது கண் சம்பந்தமான வைத்தியத்துக்காக நான் வைத்தியசாலைக்குச் செல்வது உண்டுஅப்போது அங்கே ஒரு பதாகையில் அன்று அங்கு பணிபுரிவோரின் பட்டியல் (டாக்டர்கள்தாதிமார்) எழுதப்பட்டிருக்கும்அப்பட்டியலில் பத்துப் பெயர்கள் இருந்தால் அதில் இரண்டு அல்லது மூன்று பெயர்களே ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

    இங்கிலாந்து மக்களின் இவ்விரக்தியும் அதற்குக் காரணம் என்று எளிமையாக அவர்கள் கருதும் வெளிநாட்டவரின் வருகை என்பதும் இன்றைய இங்கிலாந்து மக்களின் மனநிலைக்குக் காரணம் என்பதும் உண்மை.

    இந்த வெளிநாட்டவர் கட்டுப்பாடின்றி ஐக்கிய இராச்சியத்தினுள் நுழைவதற்குக் காரணம், ஐரோப்பிய ஒன்றியம் என்பதுவே பெரும்பான்மையினரின் கருத்தாக இருக்கிறது.

    இங்கு ஒரு விடயம் என்னவென்றால் இந்த வெளிநாட்டவர் வருகை என்பது ஐக்கிய இராச்சியத்தில் குறிப்பாக வெள்ளை இனத்தவரிடையேதான் பிரச்சனையாக இருக்கிறது என்று எண்ணுவதே இயல்பாகும்.

    என்னே ஆச்சரியம் !

    புலம்பெயர்ந்த மக்கள் பலர்  கூட இத்தகைய அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதுவே உண்மைநான் சந்தித்த ஆசிய இனத்தவர் பலர் கூட இவ்வெளிநாட்டவர் வருகையை விரும்பாததை அறிந்திருக்கிறேன்தாம்கூட ஒரு காலத்தில் இங்கு வந்த வெளிநாட்டவர் எனும் நிலை இருந்தபோதும் இப்போது ஐக்கிய இராச்சிய பிரஜை எனும் நிலைக்குத் தம்மை உயர்த்திக்கொண்டதை உணர முடிந்தது.

    அதைத் தவறு என்று சொல்ல முடியாதுஏனெனில் அவர்கள் தம்மையும் ஐக்கிய இராச்சியம் எனும் தராசில் அந்நாட்டு மக்களுடன் சரிசமமாக எடையிட்டுக் கொள்வது காலத்துக்கேற்ற மாற்றம் என்பதை மறுக்க முடியாதுஅது காலத்தின் தேவையும் கூட .

    இந்த ஒரு பின்னணியில் இன்று அதாவது அக்டோபர் முதலாம் தேதி இங்கிலாந்து அரசியல் நிலை என்ன வடிவம் கொண்டுள்ளது?

    பிரதமரோ இன்னும் 30 நாட்களில் நாம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது வெளியேறுவதுதான் எனும் நிலைப்பாட்டிலிருந்து சற்றும் அசைவதாகத் தெரியவில்லை.

    ஆனால் அத்தேதி வெளியேறுவதற்கான ஓர் ஒழுங்கான வெளியேற்றத்துக்கான உடன்படிக்கையை எட்டுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரியவில்லை.

    அதேநேரம் அத்தகைய உடன்படிக்கையற்ற வெளியேற்றம் சட்டத்துக்கு முரணானது எனும் வகையில் ஒரு சட்டத்தை அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து அமுலாக்கியுள்ளார்கள்.

    கைகட்டப்பட்ட நிலையில் போர்க்களத்தில் நிற்பதைப் போல நிற்கும் பிரதமர் தனது கைக்கட்டுக்களைத் தளர்த்திக்கொள்ளச் சிறிது அவகாசம் தாருங்கள் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும் என்பதுவே கூட்டாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த சட்டப் பிரேரணை.

    ஒரு சேற்றுக் குழியில் பிணமாக இருந்தாலும் இருப்பேனேயொழிய (சும்மா ஒரு பேச்சுக்காகஅக்டோபர் 31ஆம் தேதி வெளியேறுவதில் எந்தவிதமான அவகாசமும் கேட்கமாட்டேன் என்று சூளுரைத்திருக்கிறார் பிரதமர்.

    ஆயினும் ஓர் உடன்படிக்கையை எட்டுவேன் என்று பலதரப்பான ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுகளில் தன்னையும்தன்னைச் சார்ந்தவர்களையும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் பிரதமர்.

    உடன்படிக்கை எட்டுவதற்கான பேச்சுகளைத் தாம் இன்னமும் எதிர்கொள்ளவில்லை என்று நம்பிக்கையின்மையோடு பேசுகிறார்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினர்.

    தமது அடுத்த கட்ட நகர்வுக்கான தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

    இந்த இழுபறி நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள, இது பாராளுமன்றத்துக்கும்மக்களின் ஐனநாயக உரிமைக்கும் இடையிலான போராட்டம் எனவும் இப்போராட்டத்தில் தான் மக்கள் பக்கம் என்று மக்கள் ஆதரவில் குளிர்காய்கிறார் பிரதமர்.

    சில பொதுக் கருத்துக் கணிப்புகளின்படி பிரதமருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

    எனது நடவடிக்கைகளில் அதிருப்தி என்றால் நான் விடுத்த அழைப்பினை ஏற்று ஒரு பொதுத் தேர்தலை நடத்த ஆதரவு தாருங்கள்மக்கள் யார் பக்கம் என்று பார்த்து விடுவோம் என்று எதிர்க்கட்சிக்குச் சவால் விடுகிறார் பிரதமர்.

    தேர்தலுக்கு நாம் தயார் ஆனால் உடன்படிக்கையற்ற ஒரு விலகலை தவிர்த்துவிட்டோம் என்று உறுதிப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்திடம் கால அவகாசம் பெற்று அக்டோபர் 31ஆம் தேதி வெளியேற்றம் என்பதை அகற்றுங்கள். அதன் பின்னால் தேர்தலுக்கு நாம் தயார் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்.

    போச்சுடாஒரு கயிறிழுக்கும் போட்டியைப் பார்ப்பது போலல்லவா இருக்கிறது.

    இது இப்படியிருக்க பிரதமர் பொரிஸ் ஜான்சன் மீதான குற்றச்சாட்டுகள் ஒரு முனையிலிருந்து சராமாரியாக வீசப்படுகின்றன.

    அவரும்அரச தரப்பும் இந்த ப்ரெக்ஸிட் விவகாரத்தில் உபயோகிக்கும் பதங்கள் மக்கள் மத்தியில் துவேஷ உணர்வுகளை வளர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன என்கிறார்கள்.

    அத்தோடு ஐக்கிய இராச்சிய அரசியல் வரலாற்றில் ஒரு ஆச்சரியப்பட வைக்கும் நிகழ்வாக இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு பிரதமரின் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் செயல் சட்ட விரோதமனாது என்று தீர்ப்பளித்ததை அடுத்து பிரதமர் தனது அதிகாரத்தை இழந்து விட்டதனால் பதவி விலக வேண்டும் எனும் கூப்பாடு ஓரத்தில் எழுகிறது.

    பிரதமர் லண்டன் நகர மேயராக இருந்த சமயம் அவருக்கும் ஒரு தொழிலதிபரான இளம்பெண்ணுக்கும் இடையில் தகாத உறவு இருந்ததாகவும் அவ்வுறவின் அடிப்படையில் அப்பெண்ணின் நிறுவனத்துக்கு மக்கள் பணத்தில் இருந்து நிதி உதவி செய்தார் என்றும் குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

    அதே நேரம் 20 வருடங்களுக்கு முன்னால் ஒரு விருந்தின் போது இப்போதைய பிரதமர், தன் மீது கை வைத்தார் என்று அப்போதைய பெண் நிருபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இவையெல்லாம் பிரதமர் மீது எதிரிகள் சுமத்தும் அபத்தமான குற்றச்சாட்டுகள்இதை மக்கள் ஒருபோதும் பெரிதுபடுத்தப் போவதில்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

    தொடர்ந்திருந்து பார்ப்போம் ஒரு பக்கம் வெள்ளம் ஒரு பக்கம் நெருப்பு இரண்டில் ஒன்றுக்குள் அகப்படப் போகிறாராஇல்லை தனது புத்தி சாதுரியத்தால் அவ்வெள்ளத்தை அந்நெருப்பை நோக்கித் திசைதிருப்பி நெருப்பை அணைக்கப் போகிறாரா?

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (301)

    -சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள்.

    சரித்திர நிகழ்வுகளின் முக்கியமான திருப்பங்கள் நிகழும்போது அதற்குச் சாட்சியாக இருப்பது, ஒரு அபூர்வமான சந்தர்ப்பம். இது மறுக்கப்பட முடியாத உண்மை. இன்று நான் உங்களுடன் மனந்திறந்து கொண்டிருக்கும் இம்மடல் எனது 301 வது மடலாகும். என் வாழ்வின் பெரும்பான்மையான காலப்பகுதியை இங்கிலாந்து எனும் இந்நாட்டினிலே கழித்து விட்டேன் என்பதுவே உண்மை. மாணவனாக இங்கு வாழ்வைத் தொடங்கிய நான் இன்று ஒரு பேரக்குழந்தையைக் கண்டு விட்ட நிலையிலே முதுமை எனும் வாயிலினுள் கால்கள் பதித்து நிற்கிறேன். இங்கிலாந்திலிருந்து எனது மடல் எனும் இந்தத் தொடர் பத்தியின் நோக்கம் ஒரு நாட்டினிலே பிறந்து, மற்றொரு நாட்டின் தத்துப்பிள்ளையாக வாழும் ஒரு புலம்பெயர் மனிதனின் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களைப் பற்றியது. அவனது பார்வை எனும் கண்ணாடியினூடாகப் பார்ப்பது எப்படி இருக்கும் எனும் ஒரு காலப்பதிவேயாகும். எனது இந்த 44 வருட இங்கிலாந்து வாழ்க்கையில் நான் எதிர் கொண்ட பிரச்சனைகள் பல, நான் அடைந்த அனுபவங்கள் பல, என் கண்முன்னே நிகழ்ந்த உலக நிகழ்வுகள் பல. குறிப்பாக எனது தாய்மண்ணில் ஆரம்பித்த போர் இன்று முற்று முழுதாக முடக்கப்பட்டு போர்க்காலச் சூழலுக்கு அப்பாற்பட்ட ஒரு வாழ்வுக் காலத்தில் என் உடன்பிறப்புகள் வாழ்வினை எதிர்நோக்கும் ஒரு நிலையை காண்கிறேன். இப்போர்க்காலச் சூழல்கள் எனக்குக் கொடுத்த அனுபவச் செழிப்புகள், அதனால் நான் இழந்த பல தொப்புள்கொடி உறவுகள் எனப்பலவகையான நிகழ்வுச் சுழல்களுக்குள் அகப்பட்டு அதனால் கிடைத்த அனுபவச்சுழல்களுக்குள் உழன்று கொண்டிருக்கிறேன்.

    சுமார் 30 வருடகாலப் போர்க்காலச் சூழலில் எனது தாயக மண்ணின் உறவுகள் அவர்கள் எந்த இனத்தை, மொழியை, மதத்தைச் சேர்ந்தவர்களாயினும் அனுபவித்த சோகங்களும் இழப்புகளும் எண்ணிலடங்காதவை. அதன் நிழலைக் கூடத் தொட்டுப்பார்க்காத நிலையில் அவர்களின் அக்காலச்சூழலின் அரசியல் நிலைப்பாடுகள் பற்றி எந்தவிதமான கருத்துக்கூறும் உரிமையும் எனக்கில்லை என்பதுவே உண்மை. அதேசமயம் இங்கிலாந்து எனும் நாடு என்னைத் தனது பிள்ளையாகத் தத்தெடுத்து மாணவனாக நுழைந்த என்னை ஒரு தகவல், தொழில்நுட்ப பொறியியலாளனாக உயர்த்தி வைத்தது என்று கூறினால் அது மிகையாகாது. இங்கிலாந்தின் அரசியல் மாற்றங்கள் அன்று மாணவனாக இருந்தபோதும் இன்று ஒரு ஓய்வுபெற்ற பொறியியலாளனாக இருக்கும் போதும் நிச்சயமாக எனது வாழ்வின் பல நிலைகளில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தாக்கங்கள் வெளிப்படையாக தெரியக்கூடிய வகையில் நிகழாது போனாலும் கூட மறைமுகமாக நிச்சயமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. வாழ்வின் அன்றாடத் தேவைகளைத் தேடியோடும் நிலையில் இருக்கும் போது இவ்வரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி ஆராயும் அளவுக்கு போதிய அவகாசம் இருக்கவில்லை. மேலோட்டமாக அவ்வப்போது செய்திகளின் மூலம் அறிந்து கொள்வதை விட மேலதிகமாக அதற்கப்பாற்பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நிலையில் இருக்கவில்லை.

    இன்று நிலைவேறு !

    மனதில் படுவதை எழுத்தில் வடிப்பதை முழுமூச்சாக செயற்படுத்தி வரும் ஒரு வேளையிது. இப்போது இங்கிலாந்தின் மாற்றங்கள் ஒவ்வொன்றையும் கூர்மையாக அவதானிக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது, அதற்கான அவகாசமும் கிடைத்திருக்கிறது. இதுவரை உங்களுடன் நான் பல நிலைகளில் இங்கிலாந்தின் அரசியல் மாற்றங்களை பல்வேறு காலகட்டங்களில் இம்மடல்கள் மூலமாகப் பகிர்ந்து வந்திருக்கிறேன். இன்று அதாவது 2019ம் ஆண்டு , செப்டெம்பர், 4ம்நாௐள் நிச்சயமாக நான் இங்கிலாந்து அரசியல் வரலாற்றின் ஒரு சரித்திர திருப்புமுனையில் இருப்பதாகவே உணர்கிறேன். இத்திருப்பம் ஒரு புலம்பெயர் தமிழன் எனும் வகையில் எனக்கு நேர்மறையான தாக்கத்தையா? அன்றி எதிர்மறையான தாக்கத்தையா? தரப்போகிறது என்பது காலத்தின் கைகளில்தான் இருக்கிறது. ஏனெனில் இன்று ஐக்கிய இராச்சியம் பெரும்பான்மையான வாக்குகளினால் எடுத்திருக்கும் முடிவானது ஐரோப்பிய ஒன்றியத்தின் சரித்திரத்தில் முதன்முறையாக நிகழ்க்கிறது. இதன் பின்விளைவு எப்படி இருக்கும் என்று சுட்டிக்காட்ட எந்த உதாரணமும் கிடையாது.

    சுமார் ஒரு மாதத்தின் முன் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்ட திரு.பொரிஸ் ஜான்சன் அவர்கள் சில அதிரடியான முடிவுகளை எடுத்திருக்கிறார். இம்முடிவுகள் அனைத்துப் பாராளுமன்ற அரசியலுக்குமே தாய் எனக்கருதப்படும் இங்கிலாந்து பாரளுமன்றத்தின் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வினை பிரதமர் பொரிஸ் ஜான்சன் கையாளும் முறையை ஐக்கிய இராச்சிய பாராளுமன்ற அங்கத்தினர்களில் பெரும்பான்மையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

    எதிர்வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி தம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விலகல் உடன்படிக்கையை எட்டாத பட்சத்தில் எதுவித உடன்படிக்கையுமில்லாமல் விலகுவது உறுதி என்கிறார் எமது பிரதமர். ஒருக்காலும் இல்லை. விலகல் உடன்படிக்கை எட்டாவிடில் ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரம் எண்ண முடியாத அளவில் பாதிக்கப்படும். அதனால் உடன்படிக்கை இல்லாமல் விலக முடியாது எனும் கட்டளையைச் சட்டமூலமாக்குவதன் மூலம் பொரிஸ் ஜான்சன் அவர்களைப் கட்டிப்போட முனைகிறார்கள் பல பாராளுமன்ற உறுப்பினர்கள். பாராளுமன்றப் பெரும்பான்மையில் ஒரேயொரு அதிகப்படியான உறுப்பினர்களையே பிரதமர் பொரிஸ் ஜான்சன் அவர்களது கட்சி கொண்டிருந்தது. வட அயர்லாந்தின் அரசியல் கட்சியான டி.யூ.பி எனும் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவுடனேயே அரசுக் கட்டிலில் பொரிஸ் ஜான்சன் அமர்ந்திருக்கிறார். அக்டோபர் 31ம் தேதி  எங்கே தம்மைத் தமது வாக்கின்படி ஐக்கிய இராச்சியத்தை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக முடியாமல் பாராளுமன்றப் பெரும்பான்மை கட்டிப் போட்டுவிடுமோ எனப் பிரதமர் அஞ்சினார்.

    என்ன காரணம் என்கிறீர்களா?

    அவரது கருத்துக்கு அவரது கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களிலேயே பலர் எதிரான நிலையைக் கொண்டிருப்பதே ! பளிச்சிட்டது அவருக்கு ஒரு யோசனை. ஒவ்வொரு வருடமும் பாரளுமன்றம் கோடை விடுமுறைக்காகக் கலைக்கப்படுவதுண்டு. மீண்டும் கூட்டப்படும் போது புதிய பாரளுமன்றத் தொடரில் அரசாங்கம் அத்தொடரில் எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கான திட்டங்களை இங்கிலாந்து மகாராணி பாராளுமன்றக் கூடத்தொடரைத் திறந்து வைத்து அறிபதுவே சம்பிரதாயம். கடந்த இரண்டரை வரிடங்களுக்கு மேலாக ரெக்ஸிட் எனும் சிக்கலைத் தீர்பது ஒன்றே அரசின் முன்னால் பிரதான செயற்பாடக் இருந்தது. இதன் காரணத்தினால் இம்மகாராணியாரின் திறப்பு வைபவம் நடைபெறாமல் இருந்தது. பிடித்துக் கொண்டாரே பொரிஸ் ஜான்சன்! விடுவாரா என்ன? கோடை விடுமுறையத் தொடர்ந்து செப்டெம்பர் 3ம் தேதி மீண்டும் பாராளுமன்றம் கூட்டப்படுவதாக இருந்தது. அதற்கு முன்னதாகவே தமக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இங்கிலாந்துப் பாராளுமன்றம் செப்டெம்பர் 9ம் தேதி தொடக்கம் அக்டோபர் 14ம் தேதிவரை இயங்காமல் முடக்கப்படும் என்று அறிவித்தார். இதற்குக் காரணமாக ஜனநாயகச் சம்பிரதாயப்படி புதிய பாரளுமன்றத்தொடரை மகாராணியார் திறந்து வைத்து , புதிய பிரதமரான தமது அமைச்சரவை இப்பாரளுமன்றக் கூட்டத் தொடரில் நாட்டின் நலன்கருதி எடுக்கப்போகும் செயற்பாடுகளை அறிப்பிப்பார் என்று கூறினார்.

    கொதித்தெழுந்தனர் எதிர்கட்சியினர். ஏன் அரசமைத்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் பல பாராளுமன்ர அங்கத்தினர்களுமே அதிர்ச்சியும், ஆத்திரமுமடைந்தனர். பிரதமரின் இச்செய்கை ஜனநாயகப் பாராளுமன்ற பொறிமுறைக்கு எதிரானது என்றும், பிரதமர் ஒரு சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார் என்றும் குற்றம் சாட்டினர். “உடன்படிக்கையற்ற விலகலுக்கு” பாராளுமன்றம் ஒரு போதும் அனுமதிக்காது. பாராளுமன்றத்தை அக்டோபர் 14ம் தேதிவரை மூடி வைத்தால் , 31ம் தேதி விலகும் காலக் கெடுவினைத் தடைசெய்யும் அளவிற்கு அவர்களால் எதுவும் செய்ய முடியாது எனும் சாணக்கிய தந்திரத்தைப் பிரதமர் கையாளுகிறார் என்பதுவே அவர்களது குற்றச்சாட்டு. நாடு முழுவதும் பலபகுதிகளில் இதற்குக் கணிசமான எதிப்புக் கிளம்பியது. அசையவில்லை பிரதமர். நான் சொன்னது சொன்னதுதான் என்று விஜய் பாணியில் சொன்னார். உடன்படிக்கையுடனோ அன்றி உடன்படிக்கயற்றோ அக்டோபர் 31ம் தேதி விலகுவது உறுதி என்று சூளுரைத்தார்.

    சிறுபான்மை அரசாங்கம், அவர்களுக்கு இருக்கும் பெரும்பான்மையோ ஒன்றே ஒன்று. விடுவார்களா? எதிர்க்கட்சியினர். அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராளுமன்றம் மறுபடியும் கூடும் நாளான 3ம் தேதிக்கு முன்னதாக ஒன்றுகூடித் திட்டம் தீட்டினார்கள். பொறிமுறை ஒன்ற வகுத்தார்கள். இங்கிலாந்து ஜனநாயகத்தின் ஒரு விழுதைப் பற்றிக் கொண்டார்கள். எதிர்கட்சி பாரளுமன்ற உறுப்பினர்களோடு அரசாங்கத்தைச் சேர்ந்த சுமார் 17 உறுப்பினர்கள் கைகோப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. செப்டெம்பர் 3ம் தேதி பாராளுமன்றம் கூடியது. 4ம் தேதி பாராளுமன்றச் செயற்பாடுகளை அரச நிர்வாகத்தினர் கையிலிருந்து பிடுங்கி பாராளுமன்ற அங்கத்தினர்கள் நடத்துவார்கள் எனும் மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.அரசுக்கு எதிராக 328 வாக்குகளும், அரசுக்கு ஆதரவாக 307 வாக்குகளும் விழுந்தன. விளைவு இன்றைய பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் கைகளில் இருந்து எதிர்க்கட்ச்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட உறுப்பினர்களின் கைகளுக்கு மாறியது. எதிர்க்கட்சியினர் “ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஏற்றுக் கொள்ளக்கூடிய உடன்படிக்கை எட்டாத பட்சத்தில் பிரதமர் அவ்வகையான உடன்படிக்கையான எட்டுவதற்கான கால அவகாசத்தினை ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து பெற வேண்டும்” எனும் பணிப்புரையை சட்டமாக்குவதற்கான பிரேரணையை முன்வைக்கிறார்கள்.

    இதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பு செப்டெம்பர் 4ஆம் தேதி மாலை இடம்பெறும். இதிலும் அரசு தரப்பு தோல்வியடயும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாக்கெடுப்பில் அரசு தோல்வியடையும் பட்சத்தில் தான் பொதுத்தேர்தலை முன்னெடுக்கப்போவதாக 3ஆம் தேதி பிரதமர் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சியினரின் பிரேரணை வெற்றி பெற்றால் அது சட்டமூலமாக்கப்படுவதற்கு குறைந்த பட்சம் மூன்று நாட்களாவது தேவைப்படும். பிரதமர் பொதுத்தேர்தலைத் தான் நினைத்த மாத்திரத்தில் கோர முடியாது காரணம். 2010ம் ஆண்டு படவிக்கு வந்த டேவிட் கமரன் அரசினால் எந்த வொரு அரசாங்கமும் ஐந்து வருட காலத்துக்கு முன்னால் கலைக்கப்படுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும் எனும் சட்டத்தை அமுலாக்கியது.

    பிரதமர் பொரிஸ் ஜான்சன் பொதுத் தேர்தல் வேண்டி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்போகும் பிரேரணை வெற்றி பெறுவதற்கு எதிர்க்கட்சியினரின் ஆதரவு தேவை. ஆனால் இன்றைய பிரேரணை சட்டமூலமாக்கப்படும் வரை பொதுத்தேர்தலுக்கான ஆதரவை தாம் வழங்கப் போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கோபன் அறிவித்துள்ளார்.

    போச்சுடா !

    இதுவரை காலமும் வாய்திறக்கும் போதெல்லாம் இந்த அரசாங்கம் ஒரு வெத்து அரசாங்கம் பொதுத்தேர்தல் ஒன்றே மாற்றுவழி எனக்கோஷமிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இப்போ அதற்கு ஆதரவளிக்க முடியாது என்று சொல்லி விட்டாரே ! என்ன செய்யப் போகிறார் பொரிஸ் ஜான்சன்? சதுரங்கப் பலகையில் சுற்றி நிற்கும் காய்களிடமிருந்து தப்ப அவரது அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும்?

    அன்பிய உறவுகளே இதற்கான பதிலை உங்களோடு சேர்ந்து நானும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன். நிச்சயமாக ஐக்கிய இராச்சிய அரசியல் வரலாற்றில் இது ஒரு முக்கிய திருப்புமுனை இதன் சாட்சியாக நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பதும் ஒரு அற்புதமான நிகழ்வே ! உலக ஜனநாயகத்துக்கே முன்னோடி தாம் என மார்த்தட்டிக் கொள்ளும் ஐக்கிய இராச்சியம் எப்படி இந்தச் சிக்கலில் இருந்து வெளிவரப் போகிறது?

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    04.09.2019

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (300)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (300)

    -சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்.

    காலவோட்டம் தமக்குள் எத்தனையோ நிகழ்வுகளைப் புதைத்துக் கொண்டு செல்கின்றன. அவற்றை வெறும் நிகழ்வுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களாக மட்டும் நாமிருந்து விட முடிகிறதா? இல்லையே! புதையும் நிகழ்வுகளுக்குள் எமது வாழ்வினைக் கட்டுப்படுத்தும் வல்லமையும் அடங்குகிறதே ! சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் நிலையை நிர்ணயிக்கும் பல முடிவுகள் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் அவர்களின் பெயரால் எடுக்கப்படுகிறது. இதனால் பல சமயங்களில் விரும்பாமலே பார்வையாளர்களாக ஆக்கப்பட்டு விடுகிறோம். இதற்கு நியாயமாக ஜனநாயகம் எனும் முத்திரையும் குத்தப்படுகிறது. இது ஒரு நாட்டில் மட்டுமல்ல பல நாடுகளில் நிகழ்ந்து வரும் ஒரு நடைமுறை நிகழ்வு என்பதுவே கசப்பான உண்மை.

    இங்கிலாந்தின் புதிய பிரதமராக திரு.பொரிஸ் ஜான்சன் அவர்கள் பதவியேற்று சுமார் ஒரு மாத காலமாகிறது. இவ்வொரு மாத காலத்தில் அவரால் தனது அரசு நடைமுறைப்படுத்தப் போகும் திட்டங்கள் எனப் பல அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் பல சராசரி மனிதர்கள் மனதில் குடி கொண்டிருந்த எண்ணங்களின் பிரதிபலிப்புகள் போலவும் தென்படுகின்றன. இவை மக்களின் செவிகளில் ஒரு இனிமையான செய்தியாக விழுவதற்காக மட்டும் கூறப்பட்டவையா? இல்லை அது நடைமுறைபடுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா? என்பது இன்னமும் சர்ச்சைக்குரிய வாதமாகவே இருக்கிறது. ஆனால் அனைத்துக்கும் ஆணிவேராக, அடிப்படைப் பிரச்சனையாக இன்றைய ஐக்கிய இராச்சிய மக்கள் முன்னல் இருப்பது “ப்ரெக்ஸிட்” எனும் பிரச்சனைக்கான தீர்வே ! மக்களின் அபிலாஷைகளை அறியும் பொருட்டு நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடிப்பின் படி 4% வீதமான அதிகப்படியான வாக்குகளினால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தின் வெளியேற்றமே தெரிவு செய்யப்பட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

    இது ஒரு பக்கமிருந்தாலும், வாக்களித்த மக்கள் எவ்வகையான ஒரு தீர்வை எதிர்பார்த்து வாக்களித்தார்கள் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அதே சமயம் “ப்ரெக்ஸிட்”க்கு ஆதரவானவர்கள் என்ன கூறுக்கிறார்கள்? எந்தவிதமான உடன்படிக்கையும் எட்டப்படாத பட்சத்தில் உடன்படிக்கையற்ற ஒரு வெளியேற்றம் என்பது வெளிப்படையாகத் தெரிந்த உண்மைதானே! எனவே வாக்களித்த மக்கள் உடன்படிக்கையற்ற வெளியேற்றத்திற்கு வாக்களிக்கவில்லை எனும் வாதம் நியாயமற்றது எனபதுவே அவர்களது வாதம். இங்கிலாந்துப் பாராளுமன்றம் பல அபிப்பிராயங்களின் அடிப்படையில் சிதறி நிற்கிறது. எந்த விதமான ஒரு தீர்வுக்கும் ஏகோபித்த ஆதரவு இல்லை. அதேசமயம் எதுவித உடன்படிக்கையுமற்ற வெளியேற்றத்துக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது. இதுதான் இன்றைய நிலை. இந்த நிலையில் நாம் நாட்டின் நலனைக் கருதியே நாம் உடன்படிக்கையற்ற ஒரு வெளியேற்றத்தை எதிர்க்கிறோம் என்றும் கூறும் பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி ஒரு கேள்விக்கணையைத் தொடுக்க வேண்டித்தான் உள்ளது.

    2017ம் ஆண்டுத் தேர்தலை அடுத்து 2016 சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுகளின்படி மக்கள் தீர்ப்பே ! மகேசன் தீர்ப்பு ! என்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறப் போகிறோம் எனும் அறிவிப்பை அப்போதைய பிரதமர் தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விடுத்தார். அதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவை வழங்கும் போது ஏனிந்த நாட்டின் நலன் எனும் நிலைப்பாடு அவர்களுக்கு முக்கியமாகத் தோன்றவில்லை? அப்படித் தோன்றியிருந்தால் உடன்படிக்கையற்ற வெளியேற்றத்துக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று அப்போதே முடிவெடுத்திருந்தால் அவ்வறித்தலை அவசரம், அவசரமாக விட்டிருக்காமல் செய்திருக்கலாம் அல்லவா? அதுமட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடவடிக்கையை சட்ட மூலமாக்கும் போதும் இதை அவர்கள் எண்ணவில்லையா? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இதற்கான காரணம் என்று இப்போது ஊகிக்க முடியுமானால் ஒரேயொரு விடயம் மட்டுமே புலப்படுகிறது. அன்றைய சூழலில் “ப்ரெக்ஸிட்” எனும் வாதம் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருந்தது.

    அன்றைய நிலையில் அனைத்துக் கட்சிகளும் மக்களின் ஆதரவைப் பெற ஒரே வழி நாட்டின் நலன் கருதிய உண்மைகளை விட அன்றைய பெரும்பான்மை மக்களின் ஆதரவினைப் பெற்ற “ப்ரெக்ஸி”டை அதரிப்பதை ஒரேவழியாக அதனைத் தேர்ந்தெடுத்ததுவே அக்காரணம் என்றே புலப்படுகிறது. இந்த “ப்ரெக்ஸிட்” எனும் பூதம் கண்ணாடிக் குவளையில் இருந்து திறந்து விடப்படதன் முக்கிய காரணம் இன்றைய அரசுக் கட்டிலில் அமர்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சி தனது கட்சியின் பிளவைத் தடுப்பதற்காகவே என்பதுவே உண்மை. ஜரோப்பிய ஒன்றியத்தில் பல புனரமைக்கப்பட வேண்டிய விடயங்கள் இருக்கின்றன என்பதை யாரும் மறுத்து விட முடியாது. நடைமுறை நிர்வாகச் சிக்கல்களும், பல அதிருப்தியான நிகழ்வுகளும் நடப்புகளும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இருப்பது மறுக்கப்பட முடியாத உண்மை. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகள் மற்றைய ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்குள் தங்கு தடையின்றிப் பிரவேசிக்கலாம், பணிகளில் அமரலாம் எனும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டம் ஐக்கிய இராச்சியத்தில் பல பிரச்சனைகளைத் தோற்றுவித்தது.

    இதற்குக் காரணமாக பல்வேறு நோக்கங்கள் கொண்ட கட்சிகளின் பிரச்சாரமும், சில இனத்துவேஷ அமைப்புகளின் தொடர் கருத்துக்களும் இருந்தன என்பதும் உண்மையே. இது மக்களின் அபிப்பிராயத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக திசை திருப்பியது. அதன் விளைவே 2016ம் ஆண்டின் சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு. சரி இனி இன்றைய சூழலைப் பார்ப்போம். கன்டர்வேடிவ் கட்சியை அழுங்குப் பிடியாகப் பிடித்திருப்பவர்கள் “ஐரோப்பிய ஆய்வுக் குழு” அதாவது ஆங்கிலத்தில் இ.ஆர்.ஜி எனப்படும் அவர்களது உட்கட்சியின் ஒரு பிரிவு. இவர்களின் கொள்கை ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஐக்கிய இராச்சியத்தின் தொடர்பை முழுமையாகத் துண்டிப்பது. இதற்கு ஏதுவாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எதுவித உடன்படிக்கையுமற்ற ஒரு வெளியேற்றத்தையே இவர்கள் விரும்புகிறார்கள். பதவி விலகிய தெரேசா மே இவர்களது கொள்கையை ஆதரிக்காமையே அவரது வீழ்ச்சிக்குக் காரணமானது. இன்றைய பிரதமரும், அவரது அமைச்சரவையும் இந்த அமைப்பினரின் ஆதரவைப் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிரதிபலிப்பாகத்தான் இன்றைய பிரதமரும், அவரது அமைச்சரவையும் கீறு விழுந்த இசைத்தட்டினைப் போல காலக்கெடுவான அக்டோபர் 31ம் தேதி  உடன்படிக்கையோ இல்லையோ வெளியேறுவது உறுதி என்று கூறி வருகிறார்கள். உடன்படிக்கையற்ற வெளியேற்றம் ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தையும், சராசரி மனிதர்களின் வாழ்வாதாரத்தையும் பெரிய அளவில் பாதிக்கும் என்று பல தொழில் அமைப்புக்களும் பொருளாதார நிபுணர்களும் கூறி வருகிறார்கள். இவையெல்லாம் வெறும் பயமுறுத்தல்களே , இவற்றில் ஒன்றுகூட உண்மையல்ல என்று ப்ரெக்ஸிட் ஆதரவாளர்கள் பலர் கூறி வருகிறார்கள். தெரேசா மே கைச்சாத்திட்ட உடன்படிக்கை அற்றுப் போய்விட்டது புதியதோர் உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும் இல்லையானால் அக்டோபர் 31ம் தேதி உடன்படிக்கையில்லாமல் வெளியேற நாம் தயார் என்று திரும்பத் திரும்பக் கூறுக்கிறார் பிரதமர் பொரிஸ் ஜான்சன்.

    இது ஜரோப்பிய ஒன்றியம் வேறு வழியில்லாமல் ஒரு புதிய உடன்படிக்கைக்கு உடன்படும் எனும் நம்பிக்கையில் சொல்கிறாரா? இல்லை உடன்படிக்கையில்லாமல் வெளியேறுவதே அவரது நோக்கமா? என்பதைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. இச்செய்தியைச் சுமந்து கொண்டு பிரான்சு, ஜேர்மனி ஆகிய நாடுகளின் அதிபர்களைச் சந்திக்கச் செல்கிறார் பிரதமர் பொரிஸ் ஜான்சன். ஜரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகளே இவை. இச்சந்திப்பின் பலாபலன்களை நாம் சிறிது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது. எது எப்படி இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சரித்திரத்தில் ஒரு நாடு உத்தியோகபூர்வமாக வெளியேறுவது என்பது இதுவே முதற்தடவை. வெளியேற்றத்தின் பிரதிபலிப்புகள் வெளியேறும் நாட்டிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் எப்படி இருக்கும் என்பதும் இதுவே முதற்தடவை. ஆக மொத்தம் ஆழம் தெரியாமல் காலை விடுகிறோம் கடந்து சென்று விடுவோமா? இல்லை மூழ்கி விடுவோமா? என்பதை அனுபவித்தேதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share