Tag: இசைக்கவி ரமணன்

  • ஒரு குடைக்கீழ்

    இசைக்கவி ரமணன்

    trees cityscapes rain houses couple leonid afremov artwork parks umbrellas rivers_www.wallpaperhi.com_55

    மழையின் இழைகள் ஒன்றுக்கொன்று
    பேசிக்கொண்ட ரகசியங்களை
    மவுனமாய்க் கேட்டுக்கொண்டிருந்த மரங்கள்
    இலைகளின் நுனிவரை எழுதிவைத்துக் கொண்டன

    நனைந்த இரவின் கருத்த தெருவில்
    அளைந்த கால்களுடன்
    பிணைந்த விரல்களுடன்
    இணைந்து ஒசிந்த தேகங்களுடன்
    இடையறாத தாகங்களுடன்
    நீயும் நானும்

    ஒரு குடைக்கீழ் கலந்த
    இரண்டு இதயங்களின்
    கொஞ்சலில் கொஞ்சம்
    உறக்கம் கலைந்து துணுக்குற்றன
    ஒற்றைக் காலில் கண்களை இறுக
    மூடி நின்ற மைனாக்கள்

    இங்குமங்கும் பார்த்த மரங்கள்
    இனிமேல் தாங்க முடியாதென்று
    இவர்கள்தான் சரியென்று
    இலைகளிலிருந்து ரகசியங்களை
    மல்லிகை மொட்டுக்கள் போல்
    குடையின் மீது கவிழ்த்தன
    ஒன்றிரண்டு மஞ்சள் மலர்களும்
    ஒட்டிக்கொண்டுதான் வந்தன

    குடைக்குக் கீழே நமது ரகசியங்கள்
    குடைக்கு மேலே மழையின்
    மரம்நனைந்த இலைசுமந்த ரகசியங்கள்

    ரகசியங்களும் ரகசியங்களும்
    சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்கும்?

    நீயும் நானும் சந்தித்தது போல்தான்
    இருக்குமென்று பேசிக்கொண்டார்கள்
    பாதி நிலா பளபளக்கும்
    பாதையோரக் குளக்கரை அருகே
    பாதிக் கலவியில் நம்மைப் பார்த்துப்
    பதறி வியந்த கந்தர்வர்கள்

    இரண்டில் ஒன்றாய்
    ஒன்றே இரண்டிலுமாய்
    மாறாமல் மாறி மாறி
    மாயமாய்

    Share
  • மிதப்பதும் கனப்பதும்

    இசைக்கவி ரமணன்

    desktop-backgrounds-1920x1080-butterfly
    எல்லோரும் மிதக்கிறோம்
    எல்லைகள் விண்டுபோய் தொல்லைகள் இல்லாத
    ஏகாந்த வானத்தில் மேகத்தின் பிஞ்சுபோல்
    எல்லோரும் மிதக்கிறோம்

    இதமான வார்த்தைகள் கேட்கும்போதும்
    இதயத்தில் வீணைகள் மீட்டும்போதும், ஒரு
    மிதமான மதுவூற்றி ஏற்றும்போதும், சில
    மின்னல்கள் மழலைகள் பேசும்போதும், ஒரு
    கதைபேச வந்துகதை கேட்கும்போதும், மனம்
    காதலெனும் கோப்பையில் ததும்பும்போதும், பல
    விதமாக அவள்விரல்கள் மருவும்போதும், சிறு
    விதையொன்று நடுநெஞ்சில் விழிக்கும்போதும்

    தாள்விட்ட வார்த்தைகள் சொல்லாமலே, வந்து
    தழுவிடும் தருணத்தின் தரிசனத்தில், பல
    நாள்பட்ட கனவொன்று மறந்தபின்னே, ஒரு
    நனவுக்குள் இமைக்கின்ற கரிசனத்தில்
    தோள்தொட்ட தாரென்று திரும்பும்போது, ஒரு
    சொர்க்கமே தோழியாய்ச் சிரிக்கும்போது
    கோள்தொட்டு வந்த என் கொஞ்சல்களில், ஒன்றைக்
    கொத்துமல ராயவள் முகரும்போது

    எல்லோரும் மிதக்கிறோம்
    எல்லைகள் விண்டுபோய் தொல்லைகள் இல்லாத
    ஏகாந்த வானத்தில் மேகத்தின் பிஞ்சுபோல்
    எல்லோரும் மிதக்கிறோம்

    (2)

    எல்லோரும் கனக்கிறோம்
    யாருமே நம்மை இழக்காத போதும்
    யாரையோ மெளனமாய் நாம் இழக்கும் போதும்
    எல்லோரும் கனக்கிறோம்
    சொன்னசொல் நில்லாமல் குடையும்போதும்
    சொல்லாத சொல்லொன்று சுடும்போதிலும்
    இன்னவிதம் தொடருமென நினைத்ததெல்லாம், ஓர்
    இழைமாறி இருள்நெஞ்சில் படரும்போதும்
    நின்றதரை காலடியில் அதிரும்போதும், ஓடும்
    நிழல்நின்று பரிகாசம் செய்யும்போதும்
    சென்றகணம் மீளுமா? அதைமறந்து, மனம்
    தெருவோரப் பிச்சைபோல் கெஞ்சும் போதும்

    அலைபோலத் துன்பங்கள் வீடுவந்து, உயிரை
    அள்ளாமல் நகைசெய்து விலகும்போதும்
    சிலைகளின் சிதிலம்போல் கிடந்ததெல்லாம், ஒரு
    சீற்றத்தில் வாளேந்திப் பாயும்போதும்
    மலைதேடிப் பாய்ந்துவரும் மழைகளெல்லாம், ஏனோ
    மத்தியில் வெய்யிலில் காயும்போதும், ஒரு
    நிலையறிய மாட்டாத நிலையொன்றுதான், இங்கு
    நிஜமென்று தலையின்றி ஆடும்போதும்

    எல்லோரும் கனக்கிறோம்
    யாருமே நம்மை இழக்காத போதும்
    யாரையோ மெளனமாய் நாம் இழக்கும் போதும்
    எல்லோரும் கனக்கிறோம்

    (3)

    நாமே நமக்குச் சுமையானால்
    நரகம் அதுபோல் வேறில்லை
    நாமே நமக்குச் சுவையானால், அந்
    நலமே சொர்க்கம் வேறில்லை

    சிலநேரம் தனிமையே இனிமைதரும், அதுவே
    சிலநேரம் தவிடுபொடியாய் ஆக்கிடும்
    பலவேறு பறவைகள் வாழ்ந்தகூடு, மரம்
    தீப்பற்றும் போதுசுடு காடாகிடும்
    நிலையான நிலையொன்று வாழ்விலில்லை, இந்த
    நிஜம்கண்ட நெஞ்சுயர்ந்து தாழ்வதில்லை
    அலைகளை வேடிக்கை பார்த்தபடியே, படகில்
    அசையாமல் செல்வதே நமதுவேலை

    கண்முன்பு காண்பதோ கால்பங்குதான், இன்னும்
    கருவுள் மிதப்பதோ பெரும்பங்குதான்
    அண்டத்தைப் பிண்டத்தில் கொண்டாடுவோம், இந்த
    அல்லலும் இன்பமும் நம் எல்லைகளா?
    அண்டங்கள் யாவையும் சுமையின்றியே, நாம்
    அகமென்னும் துளையினில் ஏந்தும்போது
    திண்ணையெது பெருவானம் காலை நீட்ட?
    எங்கமிழ? எங்குபோய் நாம் மிதக்க?

    நாம்யார் எனநாம் அறிந்திடவே
    நம்முன் வாழ்க்கை விரிகிறது
    நாம்யார் என்நாம் அறிகையிலே
    வாழ்க்கை நம்மில் மிதக்கிறது!

    22.10.2014 / புதன் / 19.27

    Share
  • வனத்தினிலே …….

    இசைக்கவி ரமணன்

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B2/[/mixcloud]

    forest_dream_hd
    வனத்தினிலே முள்ளும் மலரும்
    வழியினிலே தென்றலும் புயலும்
    வாழ்வினிலே இன்பமும் துன்பமும்
    வழக்கமன்றோ கண்ணே! இதை
    மறந்துவிட்டால் மனதில் என்றும்
    மயக்கம்தான் கண்ணே!

    கலக்கங்கள் நிலைப்பதுமில்லை
    உறக்கங்கள் நிரந்தரமில்லை
    கடல்மீது அமைதியுமில்லை
    அதன்மடியில் சலனமுமில்லை
    பழக்கம்தான் குழப்பம் என்றால்
    பழக்கம்தான் ஞானமும் அன்றோ?

    நிலையில்லா வாழ்வில் இங்கே
    நிலையானது ஏதும் இல்லை
    உண்டென்றால் ஒன்றே ஒன்று
    ஊ/றிவரும் உயிரின் அன்பு!

    உன்னுயிரை அன்பில் செய்தான்
    உன்மனதைக் கருணையில் நெய்தான்
    என்னையவன் எதில்செய்தானோ? இதை
    என்றும் காணும் விழியைத் தந்தான்

    அருகினிலோ தொலைவில் நின்றோ
    அன்பே உனைப் பாடி மகிழ்வேன்
    அரைநொடி நீ உனைமறந்தாலும்
    அனுமதிக்க மாட்டேன் மாட்டேன்
    கண்ணே நீ உன்னை என்றும்
    கைவிடாமல் உன்னைக் காப்பேன்

    எதுவந்தும் எது போனாலும்
    பதறாமல் நின்றே வாழ்வாய்
    நேசம்தான் ஞானம் கண்ணே
    ஈசனுக்கும் மறுபெயர் அன்பே!

    பாடலிலே பாதை விரித்தேன்
    பனிமலராய்க் கவிதை தெளித்தேன்
    பாதங்களை ஏந்தி ஏந்திப்
    பயணமெல்லாம் துணையாய் வருவேன்…

    Share
  • நில்லாத நதிபோல – பாடல்

    -இசைக்கவி ரமணன்

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%A4/[/mixcloud]

    நில்லாத நதிபோல விரைகின்ற வாழ்க்கை
    எல்லோர்க்கும் விதம்விதமாய் ஏதேதோ வேட்கை  river for ramanan
    இன்பமோ துன்பமோ எதுவுமே நில்லாதே
    தன்போக்கில் தானறிவார் நீ போய்ச் சொல்லாதே

    சொல்லாமல் வந்த உயிர் சொல்லாமல் போகும்
    சொல்லிச் சொல்லி அந்த விதி சொக்கட்டான் ஆடும்
    நீராடி வந்த தேகம் நெருப்போடே வேகும்
    யாரோடும் உறவின்றி எங்கோ தனியே போகும்

    கண்ணை மூடிப் பிறந்து கண்ணைத் திறந்தே பறந்து
    மண்மீது நடந்து நடந்து மண்மீதே துவண்டு விழுந்து
    எண்ணமென்னும் சிறகெடுத்து எங்கெங்கோ பறந்து திரிந்து
    ஏங்கியது கிடைக்காமல் ஏனோ பட்டம் அலைந்து அறுந்து

    என்னடா வாழ்க்கையிது இன்பமிதில் எங்கே?
    எந்தக்கணம் ஆனாலும் காதில் கேட்கும் சங்கே!
    விட்டுவிட்டுத் தெருவில் வந்தால் வீதியெல்லாம் வீடு
    கட்டிக்கொண்டு காவல்செய்தால் வீடுகூடக் காடு

    நாயகன் ஒருவனிங்கே நாடகம் ஆடுகிறான்
    வாழ்வெனும் சட்டியிலே வறுத்து வறுத்துப் போடுகிறான்
    ஆசை மணல்வீடு அலைகள் வந்து விழுங்குதடா
    ஆனாலும் பிள்ளை மனம் மணலளையப் போகுதடா

    நெஞ்சில் அவனைவைத்து நேரே நடைபோடு
    பஞ்சமோ வெள்ளமோ எல்லாம் அவன் பாடு
    நெஞ்சார மற்றவர்கள் நலம்வாழப் பாடு, ஒரு
    நேரத்தில் சிறகெடுத்து நீ விடுவாய் கூடு

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் – 46

    கே. ரவி

    என்ன, வக்கீல் புத்தியைக் காட்டி விட்டேனோ? கட்சி பேசுவது, சாட்சி சொல்வது என்றெல்லாம் பழக்க தோஷத்தில் எழுதி விட்டேனோ?

    சாட்சி சொல்வது என்றதும் என் நினைவில் நிழலாடும் ஒரு நண்பர், ஒரு பிரபல நடிகர். அவர் இப்பொழுது நம்மிடையே இல்லை; ஆனால், தமிழ் மக்கள் நெஞ்சங்களில் எல்லாம் நீங்கா இடம்பெற்று விட்டவர். அவர் என் கட்சிக்காரராகவும் வந்து சேர்ந்தார், 1980-களில். அவருடைய திரையரங்கம் குறித்து ஒரு வழக்கு ஏற்பட்டு, அதில் நான் அவருக்காக வாதாடும் வழக்குரைஞனாகப் பொறுப்பேற்றுக் கொண்டேன். நாலைந்து நாட்கள் அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசர் ஆறுமுகம் முன்னிலையில் சாட்சிக் கூண்டில் நின்று சாட்சி சொன்னார். நீதிமன்றத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீதியரசரும், அந்த நடிகருடைய நகைச்சுவையான பதில்களைப் பதிவு செய்துகொண்டே, நிதானமாக ரசித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு பகுதி:

    எதிரியின் வக்கீல்: என் கட்சிக்காரர் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் காசோலை வழங்கினாரா?

    நடிகர் : வழங்கினார்.

    எதிரியின் வக்கீல்: காசோலையை என்ன செய்தீர்கள்?

    நடிகர்: வங்கியில் போட்டேன்.

    எதிரியின் வக்கீல்: காசோலை, காசாக மாறியதா?

    நடிகர்: மாறியது.

    எதிரியின் வக்கீல்: பிறகு என்ன செய்தீர்கள்?

    நடிகர்: என்ன்ன்ன செய்தேனா? காசைச் செலவழித்தேன்.

    நீதிமன்றத்தில் சிரிப்பொலி அடங்கச் சில நிமிடங்கள் ஆயிற்று. நீதியரசரும், ஏன், எதிர்க்கட்சிக்காரரின் வக்கீல், என் இனிய நண்பர், மூத்த வழக்கறிஞர் திரு.ஆர்.கிருஷ்ணசாமி உட்பட எல்லாரும் சிரித்துவிட்டனர். அதுவும், “என்ன்ன்ன செய்தேனா? காசைச் செலவழித்தேன்” என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமியின் பாணியில் நாகேஷ் அவர்கள் நீதிமன்றத்தில் பதில் சொன்னதும் யார்தான் சிரிக்காமல் இருந்திருக்க முடியும்?

    nageshநாகேஷ் போன்ற நல்ல நகைச்சுவை உணர்ச்சி மிக்க நடிகரைப் பார்ப்பது அரிது. அத்துடன் அவர் குழந்தை உள்ளம் படைத்தவர். தினமும் வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்தில், என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று கருதி, மாலை நேரத்தில் என் அலுவலக மேலாளர் திரு.ஹரிஹரன் அவர்கள் வீட்டுக்குச் சென்று, அன்றைய கோர்ட் நடவடிக்கை குறித்துத் தெரிந்துகொள்வதோடு, ஹரியின் அம்மா செய்து தரும் தோசையைச் சாப்பிட்டு விட்டு, மறுநாள் அதுபற்றி என்னிடம் வானளாவப் புகழ்வார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் தினமும் ஒரு முறையாவது என்னைப் பார்ப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    ஒருமுறை ஹைதராபாத்தில் இருந்து அவரும் நானும் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சொல்லி ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ என்ற பாடலை விமானத்திலேயே மெல்லிய குரலில் மிக இனிமையாக அவர் பாடியதை நான் மறக்கவே முடியாது. அப்பொழுது அவர் சொன்னார், “ரவி சார்! (என்னை விட வயதில் மிகவும் மூத்த அவர், நான் எவ்வளவு சொல்லியும் அப்படித்தான் என்னை அழைத்தார்). இந்தப் பாடலைக் கேட்கும் போது பாடும் மங்கையின் கனவுக்குள்ளேயே நாம் சென்று விடுகிறோம் இல்லையா”.

    அன்று நாகேஷ் சொன்னதை இன்று நினைத்துக்கொள்கிறேன். இன்னொருவரின் கனவுக்குள், அதுவும், அனுபவக் களத்துக்குள் தன் ரசிகர்களை அழைத்துச் செல்லும் சாதனையைக் கவிஞர் கண்ணதாசன் எவ்வளவு சுலபமாகச் செய்து விட்டார்! இந்தப் பாடலாகட்டும், “கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்” என்ற பாடலாகட்டும், அவற்றில் ஒரு மங்கையின் ஏக்கம் மட்டுமா வெளிப்படுகிறது. எந்தப் புருஷோத்தமனின் முன் ஆண்கள், பெண்கள் ஆகிய நாம் அனைவருமே கன்னிப் பெண்களோ, அந்தக் கண்ணனிடம் ஒன்றிவிட வேண்டும் என்ற உயிரின் ஜீவ தாகத்தையன்றோ இந்தப் பாடல்கள் எதிரொலிக்கின்றன!

    “எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்” என்ற பாடலைக் கண்ணதாசன் எழுதிய காலத்தில், தமிழகத்தில் அடுக்குமாடிக் கட்டடங்களே இல்லை. அவர் பாடிய எட்டடுக்கு மாளிகை என்பது இந்த எண்சாண் உடம்புதான் சாமி! அதில் சிறைப்பட்டிருக்கும் ஜீவனின் பிரிவுத் துயரத்தையும், பரம்பொருளோடு கூடிவிடத் துடிக்கும் ஏக்கத்தையும் அந்தப் பாடலில் அவர் பிழிந்து தரவில்லையா?

    வ.ரா. சொன்னது இப்பத்தான் ஜோராப் புரியுது! சாட்சி சொல்வது வேறு, கட்சி பேசுவது வேறு. நாகேஷ் சொன்னது சாட்சி. கண்ணதாசன் பேசியது கட்சி. கண்ணதாசனுக்கும் கட்சிக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு; ஆனால் அது மாறிக்கொண்டே இருந்த அரசியல் தொடர்பு. அது வேறு கதை.

    என் இசையில் எஸ்.பி.பி. பாடி, 1994இல் வெளியான ‘தெய்வ கானாம்ருதம்’ ஒளிப்பேழை வெளியீட்டு விழாவில் நாகேஷ் கலந்துகொண்டார். ‘என் வக்கீல் அழைத்தால் நான் வராமல் இருக்க முடியுமா?’ என்ற கேள்வியோடு பேச்சைத் தொடங்கி நகைச்சுவையோடு பேசினார். அதே விழாவில் கலந்துகொண்டு சுகி சிவம் பேசும் போது, அந்த ஒலிப்பேழையில் இருந்த “கல்மனம் உருகிக் கனிவதும் எக்காலம் அகலாதா இந்த அகலிகையின் சாபம்” என்ற பாடலைக் குறிப்பிட்டு ஒரு கருத்துச் சொன்னார்: இராமன் திருவடி பட்டுச் சாபம் நீங்கி அகலிகை மீண்டும் பெண்ணானதும், இராமன் அவளைத் தாய் என்றே குறிப்பிடுகிறான். அன்னையைப் போன்ற இந்த மங்ககைக்கு எப்படி இந்த நிலை ஏற்பட்டது என்று இராமன் விஸ்வாமித்திர முனிவரிடம் வினவுவதாகக் கம்ப சித்திரம் பேசுகிறது:

    அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக

    கெளசல்யா, பத்து மாதம்தான் அவனைக் கருவில் சுமந்தாள். ஆனால், அகல்யா எத்தனை ஆண்டுகள் அவன் வரவுக்காக அவனை நெஞ்சில் சுமந்தாளோ! எனவே, அவளை இராம பிரான் தாயென்றது பொருத்தமே. இதுதான் சிவம் சொன்ன கருத்தின் சாரம். விழாவின் பரபரப்பில் நான் சிவம் பேச்சைச் சரிவர கவனிக்கத் தவறியிருந்தேன். ஆனால், விழா முடிந்த மறுநாள் நாகேஷ் என்னிடம் தொலைபேசியில் சிவம் சொன்ன இந்தக் கருத்தைச் சொல்லி வெகுவாகப் பாராட்டினார். நாகேஷுக்குள் கவிதை ரசனை ஒளிந்திருந்ததை மீண்டும் உணர்த்திய சம்பவம் இது.

    Semmangudiஅந்த விழாவில்தான் செம்மங்குடி சீனிவாச மாமா என்னைக் ‘கவிரவி’ என்று அழைத்தார். அன்று முதல் என்னைப் பார்க்கும் போதெல்லாம் அவர் அப்படியே அழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். அமரராகும் வரை, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள், வானவில் பண்பாட்டு மையம் நடத்திய ஒவ்வொரு பாரதி விழாவையும் முன்னின்று நடத்தித் தந்த அந்தப் பெரியவரை என்னால் மறக்கவே முடியாது.

    சாட்சி சொல்லியாகி விட்டது, கட்சி பேசியாகி விட்டது. தீர்ப்பு எப்போது சாமி? நல்ல தீர்ப்பு வருமா? இன்றைய கேள்வி இதுதானே!

    சரி, நுட்ப உடலானது கனவில் கூடத் திட்ப உடலை நீங்கிப் பறக்கிறது என்று சொன்னேனே, அதில் ஒரு சிறு கவனக் குறிப்பை இணைக்க வேண்டும். கனவில் ஓரளவு ஆழம் அல்லது ஓரளவு உயரத்துக்கு மட்டுமே நுட்ப உடல் போகிறது. அதற்குமேல் தாண்டிப் போக அதனால் முடிவதில்லை. அது, முற்றிலுமாகத் திட்ப உடலை நீங்கிப் போவதில்லை. நீண்ட கயிற்றால் கட்டப்பட்ட நாய் போல் கொஞ்சம் தொலைவுதான் அதன் சுதந்திரம். இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால், என்னுடைய தனிப்பட்ட அனுபவக் களத்துக்குள்தான் கனவில் என் நுட்ப உடல் அல்லாடுகிறது. நான் அனுபவித்தே இராத எதையும் அது அங்கே எதிர்கொள்வதில்லை. என் அனுபவக் களத்தில் உள்ள, தொடர்பற்ற இரண்டு அனுபவங்களை வேண்டுமானால் தொடர்பு படுத்தி அது அனுபவிக்கலாமே தவிர, என் அனுபவக் களத்தைக் கடந்து செல்ல அதற்கு உரிமை இல்லை. அதாவது, பெரோலில் (Parole) வெளியாகும் கைதி போலத்தானே ஒழிய, பெய்லில் (Bail), அதாவது, பிணையில் வெளியாகும் கைதி போல இல்லை. மீண்டும் வக்கீல் புத்தி!

    ஆனால், கவிதை உதிக்கும் கணத்தில், ஒரு கணம், அது அந்தச் சுதந்திரம் பெறுகிறது. அந்த ஒரே கணத்தில், பல யுகக் கணக்குகளைக் கடந்தும், பல அண்டத் தொலைவுகளைக் கடந்தும் சென்று மீள்கிறது. அப்பொழுதுதான், அது வேறு யுகங்களில், வேறு பரிமாணங்களில் எதிர்ப்படும் அனுபவக் களங்களில் பிரவேசிக்க முடிகிறது.

    கொஞ்சம் இயல்பியல் பாடம் படிக்கலாம். அதுவும் ‘க்வாண்டம் ஃப்ஸிக்ஸ்’ (quantum physics) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் துளிநிலை இயல்பியல் பாடம்! அணுக்கருவுக்குள் கருவின் ஈர்ப்புச் சக்தியை மீற முடியாமல் சிறைப்பட்டுச் சுழலும் சிற்றணுத் துகள் ஒன்று, மிகச் சிறிய, அதாவது, கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவு மிகச் சிறிய கால அவகாசத்துக்குக் கடனாக அபார சக்தி பெற்று, அதன் மூலம் கருவின் ஈர்ப்புச் சக்தியில் இருந்து விடுபட்டு, வெளிச்சென்று, திரிந்து விட்டு, அந்த கால அவகாசம் முடிவதற்குள் கடன் வாங்கிய சக்தியைத் திருப்பிக் கொடுத்து விட்டு, கருவின் அமைப்பு வட்டத்துக்குள் வந்து ஒன்றுமே நடக்காதது போல் மீண்டும் சுழன்று கொண்டிருக்குமாம். நான் சொல்லவில்லை தம்பி, விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அது போல், நுட்ப உடல் மிகச் சிறிய கால அவகாசம் ஆன ஒரு கணத்துக்குள் அபார சக்தியைக் கடனாகப் பெற்றுத் தன் பிரக்ஞை வட்டத்தை விட்டு வெளியேகிப் பல யுகங்கள், பல அண்டத் தொலைவுகள் கடந்து சென்று அனுபவங்கள் அள்ளி வந்து மீண்டும் தன் நுட்ப உடலை ஆண்டு கொண்டு உழலும் என்பதை நான் சொல்லவில்லை தம்பி, சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

    “ஆளை விடப்பா!”

    புத்தி சிகாமணிக்கே தலை சுற்றுகிறது!

    “ஒரு கணத்தில் பல யுகங்களா? இது சாத்தியமா?”

    அதுதானப்பா மனோவேகம். மனோன்மணிக்குத் தெரியும்.

    ஒருமுறை, 1978ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், ரமணன் அப்போது பங்களூரில், (அப்போது அது பங்களூர் தாங்க!) ஹிண்டு பத்திரிகையில் வேலை பார்த்து வந்தான். அவன் அடிக்கடிக் கடிதங்கள் எழுதுவான், அதுவும் நீண்ட கடிதங்கள். எனக்கென்னவோ, கடிதங்கள் எழுதுவது மட்டும் அவ்வளவாகக் கைவரவில்லை. கவிதை எழுதி விடுவேன், ஆனால் கடிதங்கள் எழுதச் சோம்பல் படுவேன். நான் பதில் கடிதம் எழுதாதது பற்றி ரமணன் சற்று வருத்தப்பட்டு எழுதியிருந்தான். பதிலுக்கு நான் எழுதினேன், கடிதம் இல்லை, கவிதை! அதைக் கூடத் தொலைபேசியில்தான் அவனுக்குப் பாடிக் காட்டினேன் என்று ஞாபகம்:

    கடிதம் எழுதும் வழக்கம் இல்லை

    கவிதை எழுத முடியும் – வெறும்

    சேதி கேட்க ஜீவன் இல்லை

    தேம்பி அழத் தெரியும் – மனம்

    தேம்பி அழத் தெரியும்

    முடிவு கூடப் புலப்படாத பாதை யிந்த வாழ்க்கை – இதில்

    அன்பு நட்பு காதல் பாசம் அளவி லாத சேர்க்கை

    (கடிதம் எழுதும் வழக்கம் இல்லை)

    ஒருக ணத்தில் உருவம் எய்தி ஒரு கணத்தில் மறையும் – மனம்

    உலகம் என்றும் யுகங்கள் என்றும் உருவகங்கள் புனையும்

    (கடிதம் எழுதும் வழக்கம் இல்லை)

    வான மிங்கு மழை பொழிந்து வாழ்த்துகின்ற போதும் – இருள்

    வடிவ மொன்று மின்னலாய் ஒளி வழங்குகின்ற போதும் – இனிய

    கானம் ஒன்று கவிதையாகக் காதில் வந்து மோதும் – உன்

    ஞாபகத்தை உறுதி செய்யப் பாடல் ஒன்று போதும்

    (கடிதம் எழுதும் வழக்கம் இல்லை)

    ஒரு கணம் போதும். மனம், உருவம் எடுக்கவும், உலகம், யுகங்கள் என்று பல உருவகங்கள் புனையவும்!

    பாரதி என்ன சொல்கிறான் கேட்கலாம். கண்ணபிரான் தன் சக்கராயுதத்தை எடுப்பது ஒரு கணம்தான்; அடுத்த கணமே, அதாவது, மறுகணமே, உலகத்தில் தர்மம் நிலைநாட்டப்படுமாம்.

    “அப்படியா சங்கதி,” சிகாமணி நீட்டி முழக்குகிறான். “ஓ, அதான், அர்ஜுனன் சுபத்திரையை, அதாவது கண்ணனின் தங்கையைக் கடத்தக் கண்ணனிடமே ஐடியா கேட்டப்ப, கன்ணன் ரெண்டு நிமிடம் எடுத்துக்கிட்டாரோ?”

    சிகாமணி சிண்டு முடியப் பார்க்கிறான். பாரதி படாரென்று அவன் முதுகில் தட்டி, ” அடே, உன் நிமிடக் கணக்கைக் குப்பையில் போடு. கண்ணன் கணக்கோ கணக் கணக்கு. அதாவது கணங்களால் ஆன கணக்கு, கன ஜோரான கணக்கு. அவனுடைய ஒரு கணத்துக்கும் அடுத்த கணத்துக்கும் நடுவில் இன்னொரு கணம் கிடையாது. இரண்டு கணங்களும் ஒரே கணம்.”

    சக்கரத்தை எடுப்ப தொருகணம்

    தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்

    இக்கணத்தில் இடைக்கணம் ஒன்றுண்டோ

    சிகாமணி தலையைப் பிய்த்துக் கொள்கிறான்: இதானே வேணாங்கறேன். 2 = 1. என்னப்பா தப்புக் கணக்குச் சொல்லித் தருகிறாய்!

    “தப்புக் கணக்கில்லை தம்பி. தப்பாத கணக்கு. இன்னும் புரியவில்லை என்றால் மேலும் சொல்கிறேன்” என்று சொல்லி விட்டு பாரதி மடமடவென்று கவிதை பொழிகிறான்:

    கணம்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்

    கணம்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்

    கணம்தோறும் நவநவமாம் களிப்புத் தோன்றும்

    கருதிடவும் சொல்லிடவும் எளிதோ ஆங்கே

    கணம்தோறும் ஒருபுதிய வண்ணம் காட்டிக்

    காளிபரா சக்தியவள் களிக்கும் கோலம்

    கணம்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர்

    கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்

    அப்பா, உண்மையிலேயே தலை சுற்றுகிறதப்பா.

    இந்தக் கணங்கள் அடுக்குத் தொடராய் இருந்தாலும், சுபத்திரையைக் கடத்தக் கண்ணன் இரண்டு கணங்கள் எடுத்துக் கொண்டாலும், சரணம் என்று ஒருவன் அவனே கதி என்று வந்து அடைக்கலம் கேட்டுவிட்டால் ஒரே கணத்தில் அவனுக்கு அபயம் அளிப்பவன் கண்ணன். அதையும் பாரதி சொல்கிறான்:

    பொன்னவிர் மேனி சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவதற்கே – இனி

    என்ன வழியென்று கேட்கில் உபாயம் இருகணத்தே உரைப்பான் – அந்தக்

    கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக் காணும் வழியொன்றில்லேன் – வந்திங்கு

    உன்னை அடைந்தனன் என்னில் உபாயம் ஒருகணத்தே உரைப்பான்

    நான் சமீபத்தில், அதாவது இரண்டாண்டுகளுக்கு முன்னால் எழுதிய பாடல் ஒன்று இப்பொழுது நினைவுக்குள் அடியெடுத்து வைக்கிறது!

    தோன்றிய பிறகு, வந்து சேர இரண்டு ஆண்டுகளா, எவ்வளவு மெதுவாக வருகிறது?

    அப்படிச் சொல்லாதீர்கள். அது வந்த வேகம் அசாத்திய வேகம். தான் தோன்றிய கணத்தையும் அது முந்திக் கொண்டு வந்து விட்டதாம். நான் சொல்லவில்லை. அதுவே சொல்கிறது. பாட்டைக் கேளுங்கள்:

    இந்தக் கணம் இன்னும் வரவில்லை – அதை

    முந்தி வந்த திந்தப் பாடல்

    சந்தம் எதுகை உவமை புலமை

    எந்த நகையும் அணிந்துகொள் ளாமல்

    முந்தி வந்த திந்தப் பாடல்

    வந்த கணத்தை வழியனுப்பி – வர

    விருக்கும் கணத்தை வரவேற்கச்

    சொந்தக் கணமொன் றில்லாமல் – அதி

    சூட்சுமமாய் ஒரு சொப்பனமாய்

    முந்தி வந்த திந்தப் பாடல்

    அந்தரமோ நிரந்தரமோ – இந்த

    அனுபவத் தையென்ன சொல்லுவது

    காந்தநிலை ஏகாந்தநிலை – இது

    காலத்தை யும்வெற்றி கொள்ளுவது

    இந்தக் கணம் என்றும் தொடருவது – பேர்

    ஒளியாய் நெஞ்சில் படருவது

    சரி தம்பி. இந்தக் கணத்துக்கு இவ்வளவுதான்! அடுத்த கணத்தில் சந்திப்போம்.

    (தொடரும்)

    Share
  • வெற்றிப் பத்து

    கே.ரவி

    [ரமணனும், சு.ரவியும் நவராத்திரி ஒன்பது நாட்களும் மாறிமாறிப் பெய்யும் கவிமாரியில் நனைந்து, நெகிழ்ந்து, குளிர்ந்து வீரமாகாளி, விண்ணும் மண்ணும் ஆளும் வீரை சக்தி, அகணித தாரா கணங்களின் நடுவே ஆடும் பராசக்தி, இனியொரு யுகம் சாந்த ஸ்வ்ரூபிணியாய், அழகே உருவான வாலைக் குமரியாய், ஒயிலே வடிவான மதுரைப் பேரரசியாய்ப், பொன்மழை பொழியும் செங்கமலத் தாயாய், மேலவர் நாவெனும் மலர்ப்பதங்கள் கொண்ட கலைச்செல்வியாய் மட்டுமே இருப்பதென்று சங்கல்பம் செய்யப் கூடுமோ!]

    vetri 10

    [mixcloud]http://www.mixcloud.com/jothi-s-themozhi/yaarindha-azhagu-chelvi/[/mixcloud]

    (01-10-2014)

    யாரிந்த அழகுச் செல்வி யாழெடுத் தமர்ந்து கொண்ட

    வாறெந்தென் உள்ள மெங்கும் ஆனந்த லஹரி யாய்த்தேன்

    மாரிபெய் தந்தத் தேனில் மலர்ந்ததோர் வண்ணப் பூவாய்

    மாறியப் பூவில் மொய்க்கும் வண்டுமாய் ஆன தென்னே (1)

     

    பொன்வண்டுச் சிறகின் ஓசை பூந்தென்றல் காற்றின் ஓசை

    மின்னலே வீணை யாக மீட்டும்கை விரல்கள் ஓசை

    புன்னகை ஓசை நெஞ்சில் புரள்கின்ற அலைகள் ஓசை

    என்னென்ன ஓசை அம்மா எழில்கொஞ்ச நடக்கி றாளே (2)

     

    ஓசையைச் சொல்லப் பாடல் ஒருநூறு வேண்டும் நெஞ்சின்

    ஆசையைச் சொல்ல வோபல் லாயிரம் வேண்டும் காற்று

    வீசவும் அந்த வீச்சில் சருகுகள் சரச ரத்துப்

    பேசவும் கவிதை யொன்று பேசாமல் மலர்ந்த தாமே (3)

     

    கவிதையின் நடனத் தைக்கண் கொட்டாமல் பார்த்தி ருக்கும்

    புவியெனும் குழந்தை யாகிக் குழந்தையை மடியி ருத்தும்

    தவிசாகித் தாயும் ஆகி தாய்மையின் ஊற்றும் ஆகிச்

    செவியாகிச் சிந்தை யாகிச் சிலிர்க்கின்ற சிலையா னாளே (4)

     

    சிலையென்றா சொல்லி விட்டேன் சிலையிலே சிறக சைக்கும்

    கலையாகி உளியு மாகிக் கலையிலே பின்னி வைத்த

    வலையாகி என்ம னத்தை வானமாய் விழுங்கு கின்ற

    உலைநெருப் பில்சி ரிக்கும் ஊர்த்துவ ஜ்வாலை யன்றோ (5)

     

    சிரிப்பிலே சிந்து கன்னக் கதுப்பிலே விருத்தம் பார்வைத்

    தெறிப்பிலே வஞ்சி என்னைச் சேர்த்தணைக் கின்ற அன்பு

    நெறிப்பிலே அகவல் எந்தன் நெஞ்சிலே வெண்பா காட்சி

    விரிப்பிலே கலித்து றையென் நெற்றியில் வெற்றிப் பொட்டே (6)

     

    கலியினைப் பிளந்து சாடக் கைகளா யிரமா வேண்டும்

    கலியாணக் கோலங் காட்டிக் கண்ஜாடை செய்தால் போதும்

    நலியாத நெஞ்சுக் குள்ளே நம்பிக்கைச் சுடரை ஏற்றும்

    மெலிதான புன்ன கைப்பூ அதுபோதும் அதுவே போதும் (7)

     

    புன்னகை யாலே இந்தப் புவியெலாம் நின்று காக்கும்

    அன்னையை வணங்கு கின்றேன் அன்பிலே ஒடுங்கு கின்றேன்

    சொன்னசொல் பலிக்கச் சொர்ண பிம்பமாய் ஜொலிக்கச் சொன்ன

    வண்ணமே வெற்றி சேர்க்க வருமலர்ப் பதங்கள் போற்றி (8)

     

    வெற்றியாய் வேலெ றிந்து விண்ணவர் தம்மைக் காத்த

    பெற்றியைப் பெற்றெ டுத்த பெண்மையாய் உண்மைத் தீயாய்ச்

    சுற்றிலும் உள்ள சூழ்ச்சித் திரைகளை அகற்றி எந்தன்

    நெற்றியில் திலக மாகி வளர்கின்ற முழுநி லாவாம் (9)

     

    திலகவா ணுதலாம் திங்கள் உதிக்கின்ற உச்சி யாமிவ்

    வுலகவாழ் வினையும் தூய ஒளிதந்து துலங்கச் செய்யும்

    மலர்மகள் கலைம கள்மா மலைமகள் மூன்று மாகி

    விளங்கிடும் மாதா வாம்ஶ்ரீ வித்யாவை வணங்கு கின்றேன் (10)

    Share
  • தாமரைத் தெய்வம்

    இசைக்கவி ரமணன்

    942642_763177157075789_1200482388492604033_n

    சின்னக் குழந்தை சிரிப்பினிலும், அந்தச்
    சித்திரை வானத் தெறிப்பினிலும். நல்ல
    கன்னலி லேமுண்டும் கணுக்களிலும், நம்
    கண்ணில் படாத அணுக்களிலும், மங்கை
    கன்னத்தில் ததும்பும் மின்னலிலும், தென்றல்
    கானத்தில் அசையும் சென்னெலிலும், தோன்றி
    என்னை மயக்கிக் கவிதைசொல்வாள், இசை
    ஏழுக்கும் எட்டாத வாணியவள்!

    ஓரக் குயில்மேவும் காதலினால், மனம்
    உருகி இசைத்திடும் பாட்டினிலும், விழி
    சோரக் கருத்திடும் வேளையிலே, மழை
    சொட்டுச்சொட் டாய்விழும் ஓசையிலும்
    நேரமென் னும்பொய்யை நீக்கிவிட்டே, நம்
    நெஞ்சினி லேவளர் கானத்திலும்
    தூரத்தி லிருந்து தூண்டிவிடும், ஒலித்
    தூய்மையி லேயிவள் தோன்றிடுவாள்!

    கல்லை உடைக்கின்ற கைகளிலே, அந்தக்10574236_1490587474554176_3016036001259081854_n
    கழனி அளைகின்ற கால்களிலே, ஒற்றைச்
    சொல்லுக் குயிரைப் பணயம்வைத்து, நின்று
    துடிக்கும் கவிஞரின் உள்ளத்திலே
    மல்லுக்கு நிற்கின்ற மடமையெல்லாம். வீழ்ந்து
    மாய்ந்தபின் னெழும்கர வொலியினிலே, நெஞ்ச
    வில்லுக்கு விசையும் அம்பும்தந்து, அதை
    வீணையாய் மீட்டிடும் விந்தையிவள்!

    அறிவை வெறுப்பவன் வெறும்முட்டாள், ஆனால்
    அறிவைத் தொழுபவன் அடிமுட்டாள், என்று
    செறிவுடன் பேசிடும் வேதமொழி, இவள்
    சேல்விழி ஓரத்தில் மையெழுதும்
    அறிவை வழங்கியும் ஆதரிப்பாள், அதை
    அறிந்து துறப்பவ ரையணைப்பாள், புத்தித்
    தறியினில் சிக்காது தெய்வநெறி, எங்கள்
    தாமரைத் தெய்வத்தின் தாளைப்பணி!

    உழைப்பை மதிப்பவ ரைவணங்கி, அவர்
    உள்ளத்தில் வாழ்ந்திட வேயிணங்கி
    அழைப்பவர் அழைத்த படிநுழைந்து, அவர்
    ஆடிடப் பாடிட அகமகிழ்ந்து, தமிழ்
    தழைக்கச் செய்திடும் தாள்களினை, என்னைத்
    தாங்கி அசைத்திடும் தோள்களினை, வீழும்
    மழைக்குள் இறங்கி மண்மணக்கும், எந்தன்
    மனத் தறுவாயில் மணியொலிக்கும்

    கானத்தின் ராணியைக் காதலித்தேன், எந்தன்
    கவிதையின் சோதியைக் கைபிடித்தேன்
    மோனத் தவத்தினில் மூண்டுவரும், இந்த
    மெளனத்தின் தேவிமேல் மோகம்கொண்டேன்
    தேனந்தி மாலை நேரத்திலே, ஒரு
    தெய்வீக நதியின் தீரத்திலே, அங்கு
    நானற்றுப் போனவோர் நற்கணத்தே, எந்தன்
    நாதத்தின் தேவியை நான்கலந்தேன்!

    03.10.2014 / வியாழன் / 6.30

    Share
  • வாக்கு தரும் ராணி

    இசைக்கவி ரமணன்

    images (9)
    வாக்கினைத் தந்தனள் வாணி, என்
    வாழ்வினை வளம்செய்த வற்றாத கேணி
    போக்கெதுவும் புரியாத ராணி, இவள்
    புயலிலும் கரைசேர்க்கும் பூப்போன்ற தோணி
    நாக்கினை இல்லமாக்கி, நித்தம்
    நலமான வார்த்தைகள் நவமாகத் தருவாள்
    தேக்கங்கள் இல்லாமலே, நான்
    தெம்புமிகு நெஞ்சமுடன் திசையெங்கும் பாடவே!

    வாய்பேசி டாதிருந்தேன், பின்பு
    வாயிருந் தும்பேச்சு வாரா திருந்தேன்
    வாயிருந் தும்பேசியும், நல்ல
    வார்த்தையொன் றும்நன்கு வாரா திருந்தேன்
    தாயிவள் பொறுத்திடாமல், தேன்
    தடவினாள் தாம்பூலம் தரித்துப் பகிர்ந்தாள்
    வாயெலாம் வாசகங்கள்! வெற்று
    வாழ்வினை வெற்றிவாழ் வாக்கினாள் தேவி!

    எண்ணத்தின் பின்னிருக்கும், ஓர்
    ஏகாந்த மெளனத்தில் வீணையொலி கேட்கும்
    வண்ணமாய்ப் பண்கள் புரளும், ஒரு
    வார்த்தைவரும் பார்க்கையில் வரிவரிகள் ஓடும்
    கண்ணிமைக் கும்நேரத்தில், மிக
    கனமான யுகமொன்று மனம்தடவிச் செல்லும்
    கண்முன்பு வந்து நின்று, நல்ல
    கவிதை கொடுக்கின்ற கருணையென் வாணி!

    வாணியெனில் வார்த்தையில்லை, பிறர்
    வாழ்ந்திடப் பயன்படும் வாழ்க்கைநெறி யாகும்
    ஏணியாய் வாழவேண்டும், பிறர்
    ஏற்றமே சேவையென இன்புறுதல் வேண்டும்
    கோணிகளில் தோள்சுமக்கும், வெற்றுக்
    குப்பையில் அக்கினிக் குஞ்சொன்று நட்டு
    வாணியைச் சரண்புகுந்தால், அங்கு
    வருவதே வார்த்தை! வளர்வதே வாழ்க்கையே!

    உண்மையில் காதல்கொண்டால், நெஞ்சில்
    உருவாகும் சொல்லிலே ஒளிவந்து கூடும்
    கண்ணெலாம் தீபறக்கும், வினைக்
    காடெரியும், மற்றவர் கவலைகள் பொடிபடும்
    பெண்மையைப் போற்றவைக்கும், எந்தப்
    பேய்வரினும் அஞ்சாத பெருங்கர்வம் தோன்றும்
    உண்ணாக்கில் தேன்சொட்டுவாள், என்
    உள்ளமெனும் வெள்ளைக் கமலத்தி லுறைவாள்!

    01.10.2014 / புதன் / 15.00

     

    Share
  • வருக வருக வருகவே!

    இசைக்கவி ரமணன்

    வருக வருக வருகவே!

    Tamil-Daily-News-Paper_88965570927

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5/[/mixcloud]

    அலைமகளே! கலைமகளே! மலைமகளே!
    வாசல் திறந்து வைத்தோம், எங்கள்
    வாழ்வை மலராய் அளித்தோம்! (வருக)

    வறுமை நீங்கிட வேண்டும், மனது
    வள்ளலாய் மாண்புற வேண்டும்
    பொறுமை துணிவு உறுதி அழகு
    பூரண மாகிட வேண்டும்
    அகமும் புறமும் திருவே மலரும்
    ஆனந்தம் ஒங்கிட வேண்டும்! (அலைமகளே)

    அறிவில் ஒளியுற வேண்டும், அதனால்
    அகிலம் பயனுற வேண்டும்
    செறிவு திறமை தெளிவு கலைகள்
    செம்மையாய்த் திகழ்ந்திட வேண்டும்
    மனமெனும் மலரில் நினைவாய் அமர்ந்து
    தினமெனை மீட்ட வேண்டும்! (கலைமகளே)

    தடைகள் தகர்ந்திட வேண்டும், நீ எந்தத்
    தருணமும் காத்திட வேண்டும்
    கடமை வீரம் கருணை கவிதை
    காலமும் தொடர்ந்திட வேண்டும்
    வெளியிலும் உள்ளும் எதிரிகள் இல்லா
    வெற்றியே நீ தர வேண்டும்! (மலைமகளே)

    அண்டபகிரண்டம் பந்து விளையாடும் அன்னை சக்தி வருக! எங்கள்
    அகமும்புறமும்பல சுகமும்தினம்தந்து மகிழும் தேவி வருக!
    கண்டதுண்டமாய் கவலை வீழ்த்திடும் காளி நேரில் வருக! எங்கள்
    கலியை நீக்கிடும் கருணைத் தாயகம் ராஜேஸ்வரி வருக! ராஜ
    ராஜேஸ்வரி வருக!

    08.08.2008/காலை 8.40/நவதுர்கா சந்நிதி, ஜாகேஷ்வர்

    Share
  • நீயே நிலை

    இசைக்கவி ரமணன்

    laitha-tiripurasundari

    கண்ணுக்குக் கண்ணல்லவோ? நீ
    காலத்தின் பண்ணல்லவோ?
    பெண்ணுக்குப் பெண்ணாக பெயருக்குள் உயிராக
    பேசாத பேச்சல்லவோ? நீ
    பிழையாத மூச்சல்லவோ?

    எண்ணுக் கடங்காமலே, நீ
    எண்ணத்தில் நடமாடுவாய்
    மண்மீது வானாக மலருள்ளில் தேனாக
    உண்மைக்குள் உண்மையாக, உயிரில்
    ஊறிடும் தாயல்லவோ?

    என்வாழ்க்கை உன்றன்வசம், நீ
    ஏற்றதால் நானும் நிசம், நீ
    நின்றாடும் நெஞ்சினில் நின்காலில் கொஞ்சிடும்
    நித்திலச் சதங்கைகளே! அவை
    நீளுமென் கவிதைகளே!

    வினைகளினி ஏதுமில்லை, மனம்
    விடைதேடி மோதவில்லை
    சுனையாய்த் துளிர்த்தவொளி சுழியோடும் வெள்ளமாய்த்
    துள்ளிவிளை யாடும்போது, இனி
    துன்ப மேதின்ப மேது?

    அமிழ்தான தமிழூட்டினாய், உலகின்
    அமரிலே அமரம் செய்தாய்
    சிமிழ்விட்டுத் திசையெங்கும் தமிழ்சொட்டும் பறைகொட்டும்
    கவிபாடும் குயிலாக்கினாய்! பிறர்
    கவலையை நீ போக்கினாய்!

    இருகை இறங்காதம்மா! என்
    ஈரவிழி உலராதம்மா! உன்றன்
    அருமையைப் பாடிடும் உரிமையை மிஞ்சிடும்
    பெருமைவே றேதுமில்லை, இந்தப்
    பிள்ளைக்கு நீயே நிலை!

    27.09.2014 / சனிக்கிழமை / 07.00 / வள்ளியூர்-சென்னை ரயிலில்

     

     

    Share
  • முத்தம் கொடுப்பது போல்

    இசைக்கவி ரமணன்

     

    முத்தம் கொடுப்பது போல்

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%B2/[/mixcloud]

     

    images (2)
    முத்தம் கொடுப்பது போல், உயிர்
    மூச்சைத் தருபவளே! வினை
    மொத்தம் எரிப்பவளே! அதில்
    மூண்டு புரள்பவளே! மனச்
    சத்த மடங்கிய வாசலிலே வந்து
    சாய்ந்து கிடப்பவளே! தலை
    சாய்த்துச் சிரிப்பவளே! அந்தச்
    சத்திரத்துத் திண்ணைப் பத்திரத்தில் என்னைத்
    தாங்கி வளர்ப்பவளே! நெஞ்சில்
    தங்கி இருப்பவளே!

    காலத்துக் கோளாறும், உந்தன்
    காலருகே வருமோ? உந்தன்
    கோலத்தைக் கண்டபின்னும், எந்தக்
    கோளும் ஒரு பொருட்டோ?
    ஆலத்தி வேம்பாக் அல்லியில் காம்பாகி
    ஆத்தங் கரையாகி, மண்ணு
    அளையும் பிள்ளையாகி, அடி
    மூலச் சிறுக்கி என் மூளையைக் கொழப்பி
    முன்னுஞ் சிரிப்பவளே! என்
    பின்னும் நடப்பவளே!

    யாருக்குன்னைத் தெரியும்? எந்தப்
    பேருக்குன்னைப் புரியும்? நிதம்
    காணக்காண விரியும், எங்கள்
    கவிதையைப் போன்றவளே! இந்த
    ஊருக்குள் வீதியில் ஒடெஞ்ச கரும்பெடுத்து
    உச்சிமட்டும் கடிச்சு, சும்மா
    ஒதட்டைக் கொதப்பிக்கிட்டு, நீ
    ஓரடி ஈரடி வக்கிற ஜோரில
    ஒயிலுக்கு மையல்வரும், அந்த
    ஓங்காரமும் மயங்கும்!

    பத்துப் பதினாறு, இந்தப்
    பாரினில் கண்ட பேறு, அடி
    வித்தில் வெடிப்பவளே! ஆயினும்
    விண்டு கிடப்பவளே! கண்ணில்
    பட்டதெல்லாம் உந்தன் கொட்டமின்றி வேறு
    பார்க்கவில்லை எதுவும்! நெஞ்சில்
    பற்றவில்லை எதுவும்! அந்த
    வெட்ட வெளியெங்கும் மொட்டு மடியாக்கி
    ஒட்டக் கறப்பவளே! உயிர்
    உள்ளே பறப்பவளே!

    பாதம் சரணமம்மா! இந்த
    பாலன் உன் பிள்ளையம்மா! நாலு
    வேதம் விசிறியம்மா! கவிதை
    வெறி சிவிகையம்மா! பிஞ்சுப்
    பாதமுந்தன் நெஞ்சில் பந்து விளையாடப்
    பார்த்துச் சிரிப்பவளே! கன்னம்
    பற்றித் திளைப்பவளே! அடி
    மீதம் மிச்சமினி ஏதுமில்லாதொரு
    முத்தங் கொடுத்துவிடு, அதில்
    மூச்சை நிறுத்திவிடு!

    Share
  • நவராத்திரிப் பாடல்கள் – கவிதை நான் பாட …..

    இசைக்கவி ரமணன்

     

    (புண்ணாய்க் கிடக்கிறது தொண்டை. பண்ணாய்க் கொழிக்கிறது நெஞ்சம். பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. குரலைப் பொறுத்துக்கொள்ளவும்)

     

    கவிதை நான் பாட ……

     

    [mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F/[/mixcloud]

     

    durga1

     

    கவிதை நான்பாட கனவில் நீ ஆட
    ககனம் சுழலாமல் நின்றதோ!
    சிவிகை ஏறாத சிந்தனை ஒன்று
    சிறகுகொண் டெங்கு சென்றதோ!

    பரவும் இன்பம் நீ நெருடும் துன்பம் நீhqdefault
    மலரின் மென்மை நீ புயலின் வன்மை நீ
    மின்னும் கண்கள் நீ மீறும் காதல் நீ
    ஊறும் போதை நீ ஏறும் கவிதை நீ

    இருள் நீ ஒளி நீ அருள் நீ மருள் நீ
    என்னடி சொல்ல? எதுவும் நீ தேவி (கவிதை)

    மலைபிளக்கின்ற விரல் நகமொன்றில்

    பிறை நிலவுகள் நூறு
    மறை தவழ்கின்ற கழல் நிழல்தன்னில்
    கலை நிலையென்ன கூறு !
    எழில் விதமின்னும் நூறு உன்
    எதிர் நின்றதே பேறு
    விழுந்தாலென்ன எழுந்தாலென்ன
    விழிமுன் வினையெது விதியேது தேவி! (கவிதை)

    கரம் ஆயிரம் கலம் ஆயிரம்images (7)
    கண்ணில் தெரிவதோ எட்டு
    கடந்தா லென்ன தொடர்ந்தே வந்து
    கண்ணில் படும்வண்ணச் சிட்டு
    நடந்தேன் தினம் விழுந்தேன் உனை
    நினைந்தேன் உடன் எழுந்தேன்
    நனவும் கனவும் குலவும் தருணம்
    நதியின் கரையில் தெரியும் உருவம்
    சின்னப் பிரம்போடு மின்னல் நகையோடு
    கன்னங் கரிய சின்னஞ் சிறுமி தேவி ! (கவிதை)
    29.09.2014 / திங்கள் / இரவு 10 45
    வாழ்வு உந்தன் வழிவந்த போது

    தாழ்வு உயர்வு தானென்பதேது?
    சூழ்வன சூழ்க! சுந்தர மாக!
    துன்பமும் இன்பமும் தூசிகளாக

    அந்தரி சுந்தரி சிந்திய புன்னகைimages (5)

    மந்திரச் சொல்லாய் மலர்பூக்க
    வந்து விழுந்திடும் செந்தமிழ்க் கவிதையில்
    அந்தி மறந்தது விடையேக

    வாழ்க்கை முடிந்தது வளமாக
    வாழ்தல் தொடர்ந்தது நலமாக

    இதயம் முழுதும் இளமை உதயம்
    எதுவரை என்னும் கேள்வியும் விழவும்
    அதையும் அழகிய கவிதையில் சொல்லும்
    இதழ்கள் எனதில்லை உனதே தேவி!

     

     

     

    Share
  • நவராத்திரி 2014 (6) அவளே கதி

    இசைக்கவி ரமணன்

     

    அவளே கதி

     

    images (1)

    தீதகற்றிடும் திருவிழி, இவள்
    திட்டினாலும் அது தேன்மொழி
    கோதுசெய்யும் வளைக்கரம், கொடும்
    சூலமேந்தும் ஒளிக்கரம்
    வேதமாயிரம் இவள்நிழல், மன’
    வேதனைகளும் இவள்தழல், இவள்
    பாதமொன்றுதான் நம்கதி, அதைப்
    பற்றி நிற்பதே என்வழி!

    ஆசை ஏதாக ஆயினும், உடன்
    அவள் நினைப்பை அதில் ஏற்றுக
    மாசு யாவும் கலைந்திடும், மன
    மலினம் தானே மறைந்திடும்
    ஆசை ஏதாக ஆயினும், அதை
    அவளுக்கர்ச்சனை ஆக்குக
    ஆசை அவளன்றி வேறெதும், சற்றும்
    அணுகிடா நிலை எய்துக!

    1011679_583001185156685_3523131815273405296_n

    யாவும் நன்மையே வாழ்விலே, இதை
    யாண்டும் மறவாதீர் மனதிலே
    பாவ புண்ணியம் வேறிலை, தாய்
    பால்தனங்களில் மாறிலை
    தேவைகள் நிறைவேறவும், ஓர்நாள்
    தேவையே தீர்ந்து போகவும்
    ஆவல் யாவையும் தந்தனள், அவள்
    ஆசை முடிவாக நின்றனள்

    கருணை ஒன்றுதான் இவள்மனம், அதில்
    கலகலக்கும் பலவாய் குணம்
    உருவம் யாவுமிவள் உருவமே, மன்னும்
    உயிர்கள் யாவுமிவள் உயிரிலே
    பொறுமையில் இவள் பூரணம், இவள்
    பொங்க உண்டு பல காரணம்
    அருமை இவள்செய்கை அருமையே, இவளை
    அறிவதொன்றுதான் பெருமையே!

    கையிரண்டையும் கூப்பியே, இரு
    கண்ணில் கங்கையைத் தேக்கியே, என்
    மெய்யும் உயிரும் ஒடுங்கியே, அவை
    மீறி மீறிச் சிலிர்க்கவே, அடி
    தையலே! உன்றன் காலிலே, மனம்
    கொண்டதே பெரும் காதலே! இனி
    உய்வதென்றொன்றும் இல்லையே! இது
    உயிரில் உயிரான எல்லையே!

    26.090.2014 / வெள்ளி / 21.45 / வள்ளியூர்-சென்னை ரயிலில்

    Share
  • மயிலை உமையே!

    இசைக்கவி ரமணன்

    காப்பு

    ஈச்சனாரி விநாயகர்

    எதிர்கொண் டழைக்கும் விநாயகா! ரெட்டைப்
    புதிர்சூழ வீற்றசிங் காரா! சதிராடும்
    காபாலி நாயகியைக் கற்பகத்தை நாவார
    நான்பாடச் செய்வீர் நலம்

    images (10)

    ஜென்மஜென் மங்களாய்க் கன்மக் கந்தைகளை
    என் தோளில் நான்சுமந்தே
    என்னை நானே தாங்க இயலாத கேலியாய்
    எத்தனை யுகம் போனதோ!
    நன்மையாவும் பருகி புன்மையாவும் பழகி
    நான்கண்ட அனுபவங்கள்
    நின்றன நின்றன நின்றவற் றின்நடுவில்
    நெளிகிறேன் நதியாக நான்
    அன்றுகதை நாணமெனில் சென்றகதை பாடமெனில்
    இன்றுகதை ஒன்றுமிலையே
    என்றுமுள பேருண்மை நின்றுவிளை யாடவே
    எதிர்வந்த மயிலை உமையே! (1)

    சித்தமென் றொன்றுண்டு செதில்செதில்கள் செதில்களாய்ச்
    சித்திரம் படிவதுண்டு
    சத்தமில் லாமல்நீ சரிநடுவில் அரிவாயே
    சரியான வாளைக்கொண்டு!
    மொத்தமலி னங்களும் மூண்டுமேல் வரும்போது
    மூச்சே திகைப்பதுண்டு
    சுத்தமே அண்டா அசுத்தனே நானா?
    சொல்லியழ யாரிங்குண்டு?
    மொத்தத்தை யும்சின்ன முத்தத்தி னால்மாற்றி
    முறுவலால் கொல்லும் தாயே!
    சத்தத்தின் நடுவிலே சாந்திசுக மாய்நின்ற
    சத்யமே! மயிலை உமையே! (2)

    கண்ணும் திறக்காத காலத்தில் உன்னழகுக்
    காலடியில் நான்வளர்ந்தேன்
    எண்ணத்தில், இளம்பிள்ளை இதயத்தில் உன்கோலம்
    எப்போதும் ஏந்திநின்றேன்
    மண்ணைப் பிசைந்தாளும் மழைபோல இவ்வாழ்க்கை
    மனதைப் பிசைந்தயர்ந்தேன்
    கண்ணுன்னைக் காணுமோ காணாமல் மூடுமோ
    கண்ணீரில் உயிர்கரைந்தேன்
    உண்மையில் உனக்கெந்தன் ஒருநினைவு வந்ததால்
    ஓடிவந் தேன் மீண்டுமே!
    பெண்மையின் வண்ணமே! பேசிடும் வடிவமே!
    பெருமயிலை ஆளும் உமையே! (3)

    வெகுதொலைவில் சென்றவள் விரலருகில் நிற்கிறாய்
    வேறென்ன நான்கேட்பது?
    தகுதியில்லாத எனைச் சந்நிதியில் சேர்ப்பித்த
    கருணையோ அவள்செய்தது
    மிகவிளைய காலமும் மீண்டது, மனமுன்முன்
    மின்னலின் யாழானது
    நகைசெய்த படிநீயும் நாடாளும் தெருவிலே
    நாளெலாம் கால்சென்றது
    மிகையின்றிச் சொல்லவா? மிச்சமில் லாமலெனை
    மிஞ்சவத் தாயென் தாயே!
    அகமெங்கும் சுகமான தமிழ்கொண்டு நான்பாடத்
    தலையாட்டும் மயிலை உமையே! (4)

    images (9)

    மயிலையொரு கயிலையென மார்நெகிழ குருநாதர்
    மயிலையில் அமர்ந்து சொன்னார்
    மயிலான உன்முன்பு மனம்நிற்கும், பயிலாத
    மறைகூடும் என்று சொன்னார்
    ஒயிலாடும் உன்னருகில் உருவேற்றிக் குங்குமம்
    ஒருவிரலில் நெற்றி வைத்தார்
    கயிலையொரு மயிலையெனும் காட்சியை நெஞ்சுக்குள்
    காட்டாமல் காட்டிவைத்தார்
    பயில்வதெல் லாமழகு பருகிடும் வித்தைதான்
    பாமரனுக் கருளும் தாயே!
    கயிறெரிந் தேபோன கதையாக ஆக்கினாய்
    கயிலையின் மயிலை உமையே! (5)

    மனம்விட்டுக் கயல்துள்ளும் மயிலைக் குளம்சுற்றும்
    மாடத் தெருக்கள் சுற்றி
    தினம்புதிது புதிதாக விதம்காட்டும் பூக்களும்
    தினம்கூடும் காய்கனிகளும்
    இனமெனில் மனித இனம் இடமெனில் மயிலையென
    இதயத்தில் கர்வம்பொங்க
    உனையெண்ணி வேறேதும் ஒருதுளியும் எண்ணாமல்
    ஓர்வாழ்வு நான் வாழ்கிறேன்
    தினமுன்னைப் பார்த்தேங்கும் பிள்ளையை நீயும்தான்
    தினம்பார்க்க வேண்டும் அம்மே!
    மனம்பிரிய முடியாத மயிலையில் எனைக்கூட்டி
    மழைபொழியும் மயிலை உமையே! (6)

    கற்பகம் என்பதெது? கால்களா? கண்களா?
    கனிவாயின் கள்ள நகையா?
    விற்புருவ மா?மலர் வேய்ந்த உடையா?மறை
    வேதத் திருச்செவிகளா?
    சொற்பொருளும் எட்டாத காபாலி பாகமா?
    சொல்லித் தீரா மோகமா?
    அற்புதம் தடுமாறும் ஆனந்தமா? இல்லை
    அதைமிஞ்சும் அமைதிதானா?
    பொற்பதம் தொட்டுநான் பூரித் தெழுந்தகணம்
    போராடும் கேள்வியிலையே!
    கற்பிக்க முடியாத கருணையே உருவான
    கற்பகம் மயிலை உமையே! (7)

    Tamil-daily-news-paper_32554262877

    கூடிவரும் கார்மேகம் தேடிவரும், உன்னழகு
    கோபுரக் கலசம் முட்டும், நீ
    ஆடிவிளை யாடியவோர் அழகான முத்ததனில்
    அன்றுநில வாய்க்கொஞ்சிடும்
    பாடிவரும் குயிலோடு பவளவாய்க் கிள்ளைகள்
    பந்திபோட் டுப்பாடிடும்
    ஓடிவரும் பிள்ளைகள் உன்வாயி லில்நின்று
    ஓவென்று கத்திமகிழும்
    ஈடிணையு மில்லாமல் என்னுயிரை மொத்தமாய்
    ஏந்தியெழில் பார்க்கும் தாயே!
    நாடிவரும் எவருக்கும் நலமே வழங்கிடும்
    நன்மயிலை வாழும் உமையே! (8)

    சாம்பவீ! என்வினையைச் சாம்பலாய் ஆக்கினாய்
    சடுதியில் காடெரித்தாய்
    சாம்பலே மேனியாய்க் காபாலி சங்கரன்
    சந்நிதியின் அருகில் நின்றாய்
    சாம்பலைத் தமிழினால் கன்னியாய் உயிர்ப்பித்த
    சம்பந்தன் சாட்சியானாய்
    சாம்பலாய்ப் போன என் வாழ்விலே நீவந்து
    தளிராக முறுவலித்தாய்
    தேம்பியழும் குழந்தைக்குத் தேடிமுலைப் பால்தந்த
    தெய்வத்தை மிஞ்சும் தாயே!
    பூம்பாவ டைகட்டிப் புவனத்தை ஆள்கின்ற
    பொன்மயிலை வாழும் உமையே! (9)

    Tamil-Daily-News-Paper_32297480107

    எங்கேது வங்கியதோ அங்கேயே முடிவதுதான்
    இவ்வாழ்வின் அழகல்லவா?
    இங்கிருந் தெங்கெங்கி லோதிரிந்தே சேர்ந்த
    திறுதியில் இங்கல்லவா?
    இங்கெனைக் குடிவைத்த இதயங்களைத் தாயே
    எப்போதும் காக்கவேண்டும்
    மங்கலம் வைபவம் மணமுள்ள புகழவரின்
    மனையெங்கும் ஓங்கவேண்டும்
    இங்குன்னை நீங்காமல் இனியெங்கும் சுற்றாமல்
    இணையடியில் ஏந்து தாயே!
    தங்கத்தின் தங்கமே! கற்பகத் தருவே! நிதம்
    தழைத்தோங்கும் மயிலை உமையே! (10)

    27.09.2014 / சனிக்கிழமை / 20.33

    Share
  • நவராத்திரி 2014 (5) கதவு தொலைந்த கணம்

    இசைக்கவி ரமணன்

     

    கதவு தொலைந்த கணம்

    amma

    நிறுத்திக்கொள்வோம்!
    நீ சொன்ன வாசகங்களையும்
    நான் சொன்ன வார்த்தைகளையும்

    பொறுத்துக்கொள்வோம்!
    நீ கண்ட பிழைகளையும்
    நான் கண்ட குறைகளையும்

    மறந்து போவோம்!
    என் அத்து மீறல்களையும்
    உன் அராஜகத்தையும்

    எதற்கு நீ?
    எதற்குத்தான் நான்?

    என் தாய் நீ, உன் சேய் நான்
    என்னும் ஒரே நினைப்பில்
    என் விருப்பம், உன் விருப்பம்
    என்னும் ஒரே நம்பிக்கையில்

    காதல், கவிதையென,
    காலமெல்லாம் காளியென்னும்
    போதையில் வாழாமல்,
    புலனைந்தும் செயல்படாமல்
    சாதாரணன் போல்வாழச்
    சகத்தில் எதற்கடி நான்?

    ஆதார ஸ்ருதியாக
    அடிநாதம் நீயாக
    பேதமே இல்லாமல்
    பெற்றுவரும் அனுபவத்தைச்
    சேதாரமில்லாமல், உன்
    சேவடியில் சேர்ப்பித்தல்
    தவிர எனக்கென்றோர்
    தவமுண்டோ? நானிதிலே
    தறிகெட்டுப் போவதிலும்
    தவறுண்டோ? வந்து
    தழுவியென்னைக் காப்பதன்றிக்
    கடமைதான் உனக்குண்டோ?

    ஆடுவது தாயம், இதில்
    அளப்பானேன் தர்மநியாயம்?
    போடு! விழுகிறேன். மீண்டும்
    போடு! எழுகிறேன்! சற்றே
    ஆடுவதை நிறுத்தியென்னை
    ஆடவிடு! அப்புறம் பார்!
    பாடுவதும் வாடுவதும்
    பரபரப்பதெல்லாமும்
    கூடொன்றில் நுழைந்தால்
    குடும்பம்போல் வந்தே தீரும்
    ஏடுகள் படிப்பதாலோ
    எவனேனும் சொல்வதாலோ, எந்தப்
    பாடும் மாறாது
    பராசக்தி விருப்பம்தான்
    ஆடு நனைவதும்
    ஓநாய் அழுவதும்!

    வீழ்த்திச் சிரிக்கின்றாய்
    வெட்கமின்றி; ஒருமுறை
    வீழ்ந்துதான் பாரேன்!
    வெற்றியென்பது
    விளங்காது தோல்வியின்றி

    சரிசரி
    உனது கவிதை எனதே எனும்போது
    எனது இன்பதுன்பம் உனதே அல்லவோ?
    உனக்கும் எனக்கும்
    ஊடாடும் சொந்தத்தில்
    உரிமையே உறவன்றோ?
    உறவென்று பிறிதுண்டோ?

    வாடி வா!
    வக்கணையின் ராணியே!
    தேடியெனைப் பெற்றுவிட்டு, முகம்
    திருப்பிக்கொண்டால்? நானென்ன
    வாடி அழுவேனா? வாசலில் கெஞ்சுவேனா?

    ஜாகேச்வரத்திலந்த
    யோகத் தனிமையில் நீ
    நோகாமல் படியேறி
    வேகமாய் வந்தென்னைத்
    தொட்டுத் தட்டியெழுப்பியதைக்
    கண்ணுற்ற கணமே, உன்
    குட்டுடைந்து போனதடி!
    கொடியவினை தீர்ந்ததடி!

    இன்னுமென்ன பம்மாத்து?
    இறங்கிவா! ஏறி வா!
    மின்னல்களைத் தேர்ந்தெடுத்து
    மீட்டுவோம் வா!
    நான்பாட நீயாட நீயாட நான்பாட
    தேன்கூடும் தமிழின் தித்திப்பில் நாமொன்றாய்
    நீயே நானாகவும் நானே நீயாகவும்
    தீயே நீராகத் தெளிந்திருப்போம்! யாவர்க்கும்

    தாயாய் விளங்கும்
    தயவே! தமிழின்
    தகவே வருக!
    கதவு தொலைந்த
    கணத்தில் இந்தக்
    கவிதை நேர்ந்தது

    26.090.2014 / வெள்ளி / 21.15 / வள்ளியூர்-சென்னை ரயிலில்

    Share