Tag: வேதா. இலங்காதிலகம்

  • எழுத்து – 15

    எழுத்து – 15

    வேதா. இலங்காதிலகம்
    டென்மார்க்  

    நதியின் சில்லெனும் குளிர்மை தந்து
    நதியின் மடியில் படியும் மணலாய்
    பதிக்கும் எழுத்து வண்ணங்கள் உலகில்
    மிதிக்கும் அநீதியை நிதமும் திடமாக
    அதிமதுரமாய் உலகிற்கு அளவிலாப் பயனாய்
    இதிகாச உயர்ச்சியில் இணைந்த விதமாய்
    நதியாம் எழுத்தின் நீலக் குறிப்பு
    துதிக்கும் ஒரு பளிங்கு நிலை.

    நதியில் விழும் பிம்பமும்அல்ல
    நதியில் விழும் இறகும் அல்ல
    குதிக்கும் தமிழில்; குளித்து எழுந்து
    பதிக்கும் நுண்ணிய தமிழ் முத்தம்.
    உதிக்கும் எண்ண விதைகள் வரமேந்தி
    மதித்துப் போற்றும் நம்பிக்கை நிறைத்து
    நதியின் நீல நெளிவின் ஒக்கலையில்
    முதிர் பாறையாய் அமர்வது எழுத்து.

    உரைக்கும் எழுத்தாம் தமிழ் ஸ்பரிசம்
    கரைக்கு வரும் அலையின் ஸ்பரிசம்.
    நுரை நுரையாம் வெண்மைத் தமிழ்.
    வரை வரையாகத் தினம் முத்திக்கிறது.
    தரையில் எத்தனை எத்தனை இரசவாதம்.
    இரையாக்குகிறது மனிதரின் பயனான நேரம்.
    அரைக்கும் சந்தனமாய் மின்னும் ஒளிர்வாய்.
    அரையிருள் முழுநிலவு என்று ஆகிறது.

    Share
  • எழுத்து -12

    எழுத்து -12

    வேதா இலங்காதிலகம், டென்மார்க்

    குகையுள் தவழ்ந்து தேடுதல் போலவும்
    தொகையான கூழாங்கற்கள் பதமாக நதியால்
    சிகை தழுவுதலாகவும் அறிவு பதமாகிறது.
    பகையின்றி எழுத்து அறிவு புடமாகிறது (தூய்மை)
    கீழடி எழுத்து தமிழ் எழுத்தா!
    கேளடி என்று பல கேள்விகள்
    தாழடியாக இதற்கு வாய்ப்பு இல்லை
    மேலடி தான் இதன் முடிவாகும்.

    கிறிஸ்துவிற்கு முன் ஆறாம் நூற்றாண்டில்
    கிரமமான எழுத்தறிவு பெற்றனராம் மக்கள்.
    கீழடி ஆய்வு இதை நிரூபிக்கிறதாம்.
    கிரியாஊக்கி தானே இது தமிழனுக்கு!
    விரிந்த பிரபஞ்சத்தின் ஆதி எழுத்து
    விகசிக்கும் தமிழ் என்பது மகுடமேற்றும்
    வியந்திடும் பண்பேற்றும் நிலை தானே!
    விலாசமிகு தமிழ் விசுவரூபமாய் உயரட்டும்!

    பாலும் பலாப் பழமும் பாகும் தேனும்
    மேலும் கலந்த நீதியெழுத்துகளை ஒளவை
    உலகிற்கு, சிறுவருக்கும் அள்ளித் தெளித்த
    புலவர் பெண்ணான பிறவி அறிவாளர்.
    மெய்யுலகைக் கட்டி எழுப்பிய அறிவம்மை
    மதிப்புடைய அமைதிப் பெயர் ஒளவை
    மனப்பாடம் பண்ணிய நீதியெழுத்தின் தலைவி
    தனம் அவர் தடுமாறா எழுத்துகள்.

    Share
  • எழுத்து -11

    எழுத்து -11

    -வேதா. இலங்காதிலகம்

    சிந்திக்கும் என் சுதந்திரம் என்றும்
    நந்தவன மலர்களில் தேனருந்த அலைந்து
    சிந்து பாடும் தேனீயாக உலவும்!
    மந்திரமாய் உயர்வாய் மலைத்திட எழுத
    செந்தமிழ்ச் சதுரங்கம் ஆடும். சங்கொலி
    முந்தி வரட்டும் என்  தமிழுக்கு
    முந்திய மூன்று சங்கங்களின் இருப்பும்
    தந்தது  இந்த எழுத்து தானே!

    என் சொற்காலம் இப்படித்தான் நிலவட்டும்!
    என் கவிச்சிறகுகள் இப்படித்தான் விரவட்டும்!
    மீன்களாகக் கண்ணாடிக்குள் வண்ணமாக அல்ல
    மீளாது ஓடிடும் ஆற்றின் மீன்களாய்
    கீழாகவோடி அழியாது சரித்திரம் படைக்கட்டும்!
    என் விரல்கள் எப்போதும் பேசட்டும்!
    மென் அலங்கார வார்த்தை இரசனையிலல்ல
    இன்னமுதத் தகவலோடு இனிமையாய்ப் பரவட்டும்!

    நாலெழுத்துத் திறமையோடு சபை நடுவே
    நீட்டோலை வாசிக்காதவனே மரமென்றார் ஒளவையார்
    வல்லமையாய் எழுத்தில் மேன்மை தேடுதல்
    வில்லேந்தும் வீரமாக அகலவியலாத அறிவாகும்.
    மெல்லிய மலர் மஞ்சமாக மனதில்
    தொல்காப்பியம் விரிக்கும் அகளங்கம் இன்றி
    புல்லறிவு விரட்டி தமிழினிமை கொள்ளல்
    அல்லிக் குளத்தருகே முல்லை மல்லிகையனுபவமாகும்.

    Share
  • எழுத்து – 9

    ரங்கராட்டினமாய் மனதில் தினம் கட்டமிடும்
    சதுரங்க ஆட்டம் தான் எழுத்தும்.
    மதுரமான மூளை சார்ந்த தந்திரமும்
    மதுரச மதியூகக் கலை அறிவியல்.
    கிடையாகவும் செங்குத்தாகவும் எழுத்துக்கள் நகர்த்தி
    குதிரை, ராசா, ராணி மந்திரிகளுடன்
    காய்களை அசைத்துத் தமிழ்க் கோட்டையேறும்
    ஐம்புலன் அறிவுச் செல்வம் தமிழ்.

    சீவனில் மலர்ந்த எழுத்து வற்றாத
    சீவ நதி…மாறாத முற்றத்து மணல்
    சீர் செய்து கலைத்துக் குவித்தல் போல
    சீண்டிக் குலைத்து திரும்பக் கட்டும்
    சீரிய பணியே எழுத்து. மாந்தர்
    சீர்ப்பாட்டில் நாளானாலும் நழுவிடாது எழுத்து.
    சீலமுடை எழுத்து மகா சமுத்திரம்.
    பாலமிடுங்கள் பண்புடன் பாதுகாக்க! எம்முயிர்!

    எங்கு விழுந்தாலும் நதி தன்
    பங்கில் வழி கண்டு கடல் சேர்தல் போல
    மங்காத எழுத்துமதன் வழி காணும்.
    பொங்கும் எழுத்தால் ஏறும் வாசனைத்
    திரவியம் மழைக்காலத் தேநீரின் கதகதப்பாய்
    அரவணைத்தல் அலங்கார உற்சவ அனுபவமே!
    அரவிந்தத் தமிழை தாலியின்றி மனது
    கரவின்றிச் செய்த புனிதத் திருமணமிது

    மனமெனும் அடர்வனத்துள் ஒளி பாய்ச்சும்
    இனமறியா கதிர்வீச்சே! அறிவை மெல்லிசையாய்,
    கனமழையாய் சுரம் பாட வைப்பாய்!
    தனமாய் விரிந்த உள்ளங்கையாய் இருப்பாய்!
    கனமென்று யாராலும் ஒளித்திடவியலாத எழுத்து (அறிவு)
    தினமாய் செவிகாள் கேண்மின்களே! கற்கண்டினம்!
    மனம் இனிக்க கண்காள் காண்மின்களே!
    வனமெனும் வார்த்தை விண்மீன் தடாகமுலகம்.

    வேதா. இலங்காதிலகம்
    டென்மார்க் 12-11-2018

    Share
  • எழுத்து – 8

     

    அக்கினியும் அக்கிரமமும் தாங்கவியலாது விசிறலாம்.
    அற்புதமும் ஆனந்தமும் ஓங்கிடப் பாவெழுதலாம்.
    உக்கிரமாய் சிலர் தனித்தமிழ் தமிழென
    அக்கறையாய்க் குரலெழுப்புகிறார்! எத்தனை மொழிகளோடு
    முக்குளித்த தமிழ் எழுத்துகளைப் பிரிக்கவியலுமா!
    பரிபூரணமாய் மூச்சிலும் பேச்சிலும் பின்னிப்
    பிணைந்ததை வேறு வேறாக்கல் அசாத்தியம்.
    இணைந்த கலப்பு எழுத்தாகவே எழுதுகிறோம்.

    வடமொழித் தழுவலின்றி முதற் காப்பியமாய்
    இடம் பெற்ற பெருமை சிலப்பதிகாரத்திற்காம்.
    வடம் பிடிக்குமென் தூரிகைக்குள் கடல்
    வானம் என்று ஆச்சரியங்கள் பலவுண்டு.
    தேங்கி நிற்கும் சிந்தனை வெள்ளம்
    பாங்காகக் காகிதப் பள்ளத்தில் பாய
    ஓங்கிய தேசமெனும் நதிக்கரையில் படகோட்டி
    ஓங்கிடுமென் எழுத்து தமிழ் உல்லாசபுரியில்

    வெற்று மண்ணில் பிறந்தேன் இன்று
    வெற்றியில் பயணிக்கிறேன் தமிழ் வயலில்
    சுற்றும் குதிரைச் சவாரி இது
    பற்றறுத்து வெட்ட முடியாத தமிழ்
    அற்பமல்ல! வீரியச் சிறகுடைய பாரம்பரியம்.
    வெற்றுக் கல் அல்ல! பிரமாண்டக்
    கற்பாறை! நாளும் செதுக்குகிறேன் சிற்பம்.
    அற்புதம்! அனந்தம்! அவசியம்! அனுகூலம்!

    இயற்கையெனும் பச்சையங்களில் நீந்தி இன்ப
    மயற்கையில் எழுத்துப் பூ மலரும்
    வயற்காட்டுத் தமிழரசி யான்! கவிதை
    முயற்கொம்பல்ல! நாளும் சுவாசிக்கும் பூப்பாத்தி.
    வியத்தகு வெண்மாளிகையில் முத்துக்களாய் உருளும்
    நயமிகு ஆர்மோனிய இசையாய் தவழும்
    கயமையாய்த் திமிறியும் நழுவும் எழுத்தை
    சுயமாய் பொறுமையாய் கட்டி இழுப்பேன்.

    வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 30-8-2018

    Share
  • எழுத்து – 7

    வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 28-6-2018

    புலன்நுகர் எழுத்தெனும் விண்மீன் விதை
    பலன் கருதி விழுந்து முளைத்து
    நிலவாகி ஒளிரும்! எனதென்று மொழிந்தாலும்
    வலங்கொள்ளுதல் உலகிற்காகவே என்பதுண்மை!
    பலமுடை எழுத்துமொரு தீவிரவாதமே! துணிவுச்
    சாராயம் அருந்தியவன் அச்சம் தெரியாமல்
    ஊராண்மை செய்வான்! வாள் வீச்சாகவும்
    தாராட்டும் தென்றலாகவுமவன்; தூரிகை சாமரமாகும்

    பெருந்தெருவோ ஒற்றையடிப்பாதையோ எதுவானாலும் தானே
    உருவாக்கி எழுத்துலா அமைப்பான். மண்ணிலடித்து
    அரூபமாய்ப் பேரலை பிரமாணமிடுதல் போல
    உருவம் தருகிறது மீண்டும் மீண்டுமெழுத்து
    முருகு! மூழ்கும் பரிமாணமல்ல எழுத்து!
    வண்ணத்திப் பூச்சிச் சிதறல், பூவனம்,
    கண்ணிறையும் பெருமரத் தோப்பு, தவழுமலை
    எண்ணிறைந்தவை எழுத்துறங்கும் இரகசியப் பொறிகள்.

    சிற்பக்காடு, மூங்கில் வலயம், மைமல்,
    அற்புதம் சமைக்கும் மழை வானம்,
    பொற்புடை சோலை, மலர் பந்தல்
    உற்சாகம் உற்பத்தியாக்கும் ஆனந்தத் தென்றல்,
    அற்றைப் பொழுது மழைத்தூறலின்
    சொக்கும் மண்ணின் மணம், கடையிடும்
    பூக்கள் அனைத்தும் இதழ்கள் விரித்து
    பாக்கள் உற்பத்திக்கும் ஊற்றுப் புதையல்.

    தூக்கம் விழித்து இயற்கையில் மிதந்து
    பா கட்ட வைக்கும் மனமெனும்
    மொட்டை விரிக்கும் எழுத்தாய் விழுந்திட
    நித்திரை மரமேன் ஏற வேண்டும்!
    பத்துவித பணிகளேன் செய்ய வேண்டும்!
    எழுத்தென எழுதிக் கொண்டேயிருந்தால் என்ன!
    தமிழ் மேகங்கள் பொங்கும் மனவானம்
    வெறுமையின்றி வார்த்தைகள் வெடி கொளுத்தலாமே!

     

    Share
  • எழுத்து – 6

    வேதா. இலங்காதிலகம்

    thamizh

     

     

     

     

     

     

     

     

    எண்ணங்களின் நிழல், எண்ணப் படங்கள்
    எண்ணப் பறவைகள், எண்ணங்களின் கும்மி
    எண்ணக் கொலுசுகள் வண்ணப் பரதம்,
    திண்ணமான அகத் தீயின் கொழுந்துகள்!
    கைநழுவி உதிர்வதல்ல எழுத்துகள்
    கைகாட்டும் வழிகாட்டி, கைத்தடியின்னும் பல.
    திசையறியாது வீழும் இறகல்ல பெரும்
    நசையோடுதிரும் வாசமுடை மலர் எழுத்து.

    நீதிக் கதவின் திறவுகோல் எழுத்து.
    பீதியின்றி உலகையும் அளக்கிறது நிறுக்கிறது.
    தீதுடை உலக மௌனத்தை ஊடுருவுகிறது.
    ஆதி சைகை, குறியீடு, கல்வெட்டு
    ஓலைச்சுவடியென்று விழுந்த கற்பக விதை.
    மூலைகளில் ஒதுங்கிய துன்பம் கிழிக்கும்
    ஆழ்ந்த மௌனத்தை ஆலயமணி ஓசையாய்
    வீழ்ந்து சுவாசம் நிறைக்கும் எழுத்து.

    எழுத்துப் பால் உறிஞ்சி உறிஞ்சியே
    எழுச்சியுடன் மனிதன் பாரில் பண்டிதனாகிறான்.
    எழுவாய் சொற்பிழம்பே! தயக்கங்களின் தடியடியில்
    எழுத்துக்களின் உராய்வு ஒரு நிசப்தக் குழியில்
    விழுந்தால் இலட்சிய நுரைகள் என்னாவது!
    ஏகலைவன் கணையால் சொற்கோடுகளின் ஆலிங்கனத்தில்
    வாக்கியங்கள் இரசவாதமாய் வீறுநடை போடும்.
    பாக்கியமாகி ஏற்றும் ஊதுபத்தி வாசனையேயெழுத்து.

     

    Share
  • எழுத்து – 5

    வேதா . இலங்காதிலகம்
    dsc_0023pl

     

     

     

     

     

     

     

     

     

     

     

    முன்னுரையாய் அறிவுப் பள்ளத்தாக்கில் நுழைந்து

    மென்னீல எழுத்து நதியில் கரைகிறேன்.

    என்னவெல்லாமோ எழுத்தில் பகிர ஆசை

    பன்மையாய் உந்துகிறது மழைத் துளிகளாக

    உன்னுது எண்ணங்கள் எழுத்தாயுதிர்ந்திட ஆயினும்

    முன்னேறும் அக்னியுறங்கும் காடு எழுத்துலகம்.

    மென்னகை மென்னடை வன்மையாகவும் விழுந்து

    முன்மாதிரியாக முரண்டுடன் முன்னோடியாகிற நல்லெழுத்து.

     

    மூச்சாக, பேச்சாக, வீச்சாகும் எழுத்து

    பூச்சான உலகில் உண்மையான உயர்வு.

    நீச்சல் நீட்சியான நீன்மை (பழைமை) நீரதி(கடல்).

    தீச்சொல்லற்ற நேர் பயண நினைவு.

    அச்சமற்றுத் தகுதியாய் வாழ்வதின் முனைவு.

    உச்சமான வாழ்வு மேன்மை நிறைந்தது.

    பச்சை உண்மைகளே பதியப் படுகிறது.

    துச்சமின்றி நிலைக்க வேண்டுமென் இச்சை.

     

    நாள்தோறும் புதிய புரிதல்கள் பாடங்கள்

    ஆள்கை முயற்சியடிப்படை கோவை(கோப்பாய்) மண்ணே

    தோள் கொடுத்துத் துணை வருகிறது

    நாள் கிழமை பார்க்காத உலா.

    நீள்வது அமாவாசையிலும் மாணிக்க ஒளியன்றோ!

    வேள்வி எழுத்தால் விளையும் நூல்கள்

    தாள் திறக்கும் மனித மனக்கதவுகளை.

    கேள்விச் செல்வத்தோடன்றோ மனிதன் பிறக்கிறான்!

    Share
  • எழுத்து. 2

     

     

    கோவைப் பதியில் (கோப்பாய்) நன்கு மலர்ந்து
    டென்மார்க் வரை பறந்து பாய்கிறது
    வெல்லும் இவ்வுணர்வுக் கவிதைச் சிறகுகளின்
    வீரியப் பரம்புதலில் உயரப் பறக்கிறது.

    எழுத்துக்களின் சங்கமம் சொல் தானே!
    என்னெழுத்து வாசிப்பில் பேரின்பம் நிறைவு.
    எழுத்து வயலில் அகழ்ந்து மேய்தல்
    அழுத்தும் தத்துவங்கள் யதார்த்தச் சிறகடிப்பு.

    எழுதல், வாழ்தல், மகிழ்தல் சாதனை
    எழுத்தே மகா பெரும் உணர்வு.
    எழுத்தொரு தவம் நானதைச் செய்கிறேன்.
    என்னெழுத்து பலரை ஈர்த்து அணைக்கிறது.

    இழுத்தணைக்க இன்னும் இன்னும் எழுதுகிறேன்.
    பழுக்கிறது நவரசங்களும் வானவில் வண்ணமாக.
    பொழுதிற்கும் தொலைவான நோக்கில் தேடும்
    குழுநிலை எழுத்துக்களன்றி வேறு என்ன!

    முழவதுமான ஊஞ்சலாட்டம் தான்! ஆம்!
    எழுத்துகளோடு ஆடும் இலக்கிய ஊஞ்சல்.
    இழுத்தாடுவது பெண்மை, பொறாமை அறியாமை
    கழுத்து காதணியென்று கதம்ப ஆட்டம்.

    விழுத்தகையாய்ப் புதிய எழுத்து விளையாட்டும்
    மழுப்பலாகவும் சிலருக்கு, மலைப்பாகவும் ஆகிறது.
    எழுதுவது பெண்ணெனவும் சிலருக்கொரு இழிவு.
    முழுதாகக் கடலாழமும், வானுயரமும் காணவில்லை.

    விழுப்பமாக பூவுலக வாழ்வியலின் எழுத்தே
    விழுந்தோடும் ஊற்று நீராய் ஓடுகிறேன்.
    பழுதற்ற மழை நீராகவும் மணந்து
    அழுத்தியோடும் ஆறாகவும் மண்ணில் ஊடுருவுகிறேன்.

    (விழுத்தகை – பெருஞ்சிறப்பு, விழுப்பம் – நன்மை)

    வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 10-6-2017

    Share
  • நாலடியார்

     

    நாலடியார்

    25ம் அதிகாரம்
    அறிவுடைமை – 3

    unnamed (4)

     

    25ம் அதிகாரம்
    அறிவுடைமை – 3

     

    எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகா
    தென்னாட்டவருஞ் சுவர்க்கம் புகுதலாற்
    றன்னாற்றா னாகு மறுமை வடதிசையுங்
    கொன்னாளர் சாலப் பலர்

    எந்நிலத்து – எந்த நிலத்தில், வித்து இடினும் – விதை போட்டாலும், காஞ்சிரம் – எட்டியின், காழ் – விதை, தெங்கு ஆகா – தென்னைமரம் ஆக மாட்டா, தென்நாட்டவரும் – தென்திசையுள்ளவரும், சுவர்க்கம் புகுதலால்-(நல்வினைப்பயனால்) சுவர்க்கலோகம் சேர்வதினால், தன்-ஒருவனது, ஆற்றான் – முயற்சியினாலே, மறுமை- மறுமையில் நற்கதி, ஆகும்-பொருந்தும்: வட திசையும் – வட திசையிலும், கொன் ஆளர்-அறஞ் செய்யாது வீணே கழிப்பவர், சால பலர்- மிகவும் பலர் உளர்.
    எனது வரிகள்:-

    எட்டி மர விதைகளிட்டால்
    எத்தன்மை நிலமானாலும்
    தென்னை மரங்களாக முளைக்காது.
    தென்னாட்டு வாசிகள், அது
    இயமதிசையாதலால் சுவர்க்கம்
    சேர்தல் அருமை, அவரும்
    நல்வினைப் பயனால் சுவர்க்கம்
    அடைகிறார்கள். வடக்குத் திசையில்
    வாசிகள் அது புண்ணிய பூமி
    என்பதால் சுவர்க்கம் அடைவாரெனும்
    எண்ணத்துடன் நற் கதியடைய
    முயற்சிக்காது வீணே காலம்
    கழிப்பவர் பலர். அவரவர்
    அறிவு, நற்செயல், முயற்சியாலன்றி
    வாழும் நிலத்தால் நற்கதியடையார்.

    வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 31-5-2017

    Share
  • மூன்றாம் பால்

    aaaa

    மூன்றாம் பால். – 1

    உடல் உணர்வுப் பின்னல்
    கடலான பாலின ஈர்ப்பு.
    அடலான( போர்) தனிப்பட்ட உரிமை.
    இடம் (விரிவு) கண்டது மேற்கில் (முன்பே)

    புதுமை வழியுடைய இளையோர்
    ‘பால் புதுமையினர் ‘ அறிவு விரிவற்றோர்
    பொதுமையான மனக்குளப்பத்தில் இன்று
    சதிராடிச் சமூகத்தைக் குளப்புகிறது.

    கல்வி, மருத்துவம், சட்டத்தில்
    நல்ல விழிப்புணர்வு தேவை
    திருநங்கைகள், திருநம்பிகள் மூன்றாவது
    ஒருமித்து இருபதுக்கும் மேலானவை (பாலினங்கள்)

    பெண் ஆணற்ற இடைநிலைப்
    பாலினத் தோற்றம் கொண்டோர்
    புராணத்தில் அலி, ஒம்போது
    அரவாணி, பொன்னைக்கா பெயராகும்.

    சுரபிகளின் தவறாய் தன்
    மரபிலே மாற்றமான பாலினம்.
    ‘ இப்படிக்கு ரோஸ் ‘ விழிப்புணர்வை
    அப்படி அள்ளிக் கொடுத்தது.
    __________

    மூன்றாம் பால். – 2

    வள்ளுவனின் மூன்றாம் பால்
    துள்ளும் உணாவுகளின் தொகுப்பால்
    கள்ளெனும் காமத்துப் பால்
    உள்ளுந் தோறும் இனித்தல்.

    தொடுதல், அணைத்தல், உராய்தல்,
    படுதல், அழுத்தலெனப் பல
    விடுதலையற்ற உடல் மொழி
    விடுதலை காம வேதனைக்கு.

    காமத் தீயிவ் உடலவதிகள்
    சாமகானம் பாடி இணைவில்
    சமாதானமாவது மூன்றாம் பால்.
    காதலின் சுடர் காமம்.

    காதலதிகாரம் காமப் பாலில்
    மோதலானது பதின்மத் தொடக்கத்தில்.
    மூன்றாம் பாலின் நிறைவு
    முழுதான வாழ்வு தரும்.

    அறவழியில் இல்லறம் சமை!
    ஆட்கொல்லி நோயை விலக்கு!
    ஆளுமைப் பரத்தமையை ஒதுக்கு
    அறவாழ்வுறுத்தலே வள்ளுவனின் மூன்றாம்பால்.
    _______________

    வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 10-5-2017

    Share
  • பாரியும் கபிலரும்

    வேதா இலங்காதிலகம்

     

     

    பறம்பு நாட்டரசன்  குறுநில மன்னன்

    பாரி  கடையெழு  வள்ளல்களில்  ஒருவன்.

    பற்றிக் கொள்ள முல்லைக்குத் தேரீந்தவன்.

    படைமடமற்றவன் கொடைமடம் உள்ளவன்.

     

    பறம்புமலை  முன்னூறு  கிராமங்களடங்கிய  செழிப்புலகம்.

    கலகலவெனச் சிரிப்பொலிக்கும் வெள்ளியருவி ஓசை

    கனி குலுங்கும் மரங்கள், ஓடைகள்

    மலர்ச்சோலைகள், தேன், இசைப் பறவைகளதிகம்.

     

    அள்ளிக்  கொடுக்க  அத்தனைகள் உண்டு

    பாரி கொடைமனமறிந்து கபிலர் பொருள்கொள்ள வந்தார்.

    புலமையினிணையற்ற திறமையறிந்து கபிலரிடம் நட்பானார்.

    பாரியை மட்டும் பாடும் நல்லிசைவாய்மொழிக் கவிஞரானார்.

     

    கொடை மனத்தான்,  நாட்டுவளமனைத்தும் பாரெங்குமேக

    மடைதிறந்த பாரிபுகழால் அழுக்காறடைந்தனர் அரசர்.

    மூவேந்தர் படையெடுத்து பறம்புமலையைச் சூழ்ந்தனர்.

    திறமையாம்  தற்காப்பு  முறையாற்போர் நீண்டது.

     

    போரால் பாரியை வெல்லல்லரிதென விழிபிதுங்கினர்

    படையடிவாரத்தில் விழுந்த கபிலர் கவியோலையால்

    பாரியைத் தந்திரத்தால் வெல்லப் பெண்கேட்டுத் தூதாகி

    முதுமை வேடத்தில் பாரியை யாழிசைத்துப் புகழ்ந்தனர்.

     

    பரிசாக அவனுயிரைக் கேட்கத் தன்னுயிரிழந்தான்.

    மக்களான அங்கவை  சங்கவை தனியானார்.

    துயரத்துடன் கபிலர் பெண்களையழைத்து  வேறிடமேகினார்.

    பார்ப்பனரிடத்தில் பெண்களையிணைத்துக் கபிலருயிர் நீத்தார்.

     

    மூவேந்தர்  வஞ்சத்திற்குப் பாரி பலியானார்.

    பறம்புமலை தனியானது. நட்பிலக்கணமாகினர்    பாரி – கபிலர்.

    கபிலர் தென்பெண்ணையாறருகில்  வடக்கிருந்துயிர் துறந்தார்.

    கபிலர் குன்றென அந்தவிடம் இன்றுமுள்ளது.

    Share
  • எழுத்து

    வேதா. இலங்காதிலகம்.

     

    எழுத்துக் கூட்டக் கருத்து எத்துணை இன்பம்.

    unnamed

    கழுத்துச் சாய்த்துத் தேடினால் கோடியருத்தம்.

    எழுத்து வரிசையில் சரித்திரம் கதைகளாய்

    இழுத்தும் கோர்க்கலாம் சந்தப் பாமாலை.

    ஒலியால் வல்லின, மெல்லின, இடையினமுண்டு.

    ஓரெழுத்துக்கும் அருத்தம் உண்டு – நீ

    சுகந்த எழுத்து பூ – பூரிப்பாய்.

    மகிழ்ந்து அழைக்கும் எழுத்து வா.

     

    நான்காயிரம்   ஆண்டினிறுதி  சுமேரியர்களிடையே உருவானது .

    பின்னாக எகிப்து, சிந்துப்பள்ளத்தாக்கிலும் தொடர்ந்தது.

    மின்னும் உயிரெழுத்துகள் பன்னிரண்டு வகை.

    உன்னும் மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகும்.

    பின்னும் உயிர்மெய் எழுத்துகள் இருநூற்றுப்பதினாறு.

    ஓன்றான ஆயுதவெழுத்துமாக இருநூற்று நாற்பத்தேழு.

    ஓன்றொன்றாய் சொற்கள் பிரித்து உண்மையறிதல்

    இன்னுமுதத் தொடர்பாடல் எழுத்தால் தானே.

     

    நாத (ஒலி) வரி வடிவம் எழுத்து.

    மேதகு மொழியை நிலைநிறுத்துவது எழுத்து.

    சாதனைக்குரிய எழுத்தின்றேல் மொழி ஏது!

    மாதவ எழுத்து தலைமுறைக்கும் காவுகிறது.

    ஆதனமாம் இலக்கணம் இலக்கியம் உருவானது.

    போதகம் (நல்லுரை) ஐந்தாயிரமாண்டுக்கு முன்னானதாம் சிந்துவெளியெழுத்துகள்.

    பேதமற பழந்தமிழெழுத்தும் அன்றே இருந்தது.

    ஆயினும் எழுத்துமுறையா குறியீடாவென்பது சந்தேகமே…

    Share
  • 2017………

    வேதா இலங்காதிலகம்

     

    வலிமையாய் விரியட்டும்

    மெலியார் வலியவராகட்டும்

    மெலிகோல் (கொடுங்கோல்) அழியட்டும்.

    பொலியட்டும் சிறப்புகள்

    பலிப்புகள் (வெற்றி) குவியட்டும்

    நலிவுகள் ஒழியட்டும்

     

    வலிவுடை சான்றிதழ்கள்

    பொலிவுடை தமிழ்

    மலிவற்ற உயர்ச்சியாய்

    சலிக்காது சேர்ந்தது.

    சிலிர்க்கும் நிறைவிது.

    சொலிக்கட்டும் புத்தாண்டிலும்.

     

    அலட்சியங்கள் தாண்டி

    அவமானங்கள் நீராக்கி

    தவமெனும் வாழ்வு

    அவமின்றிச் சித்திக்கட்டும்.

    புவனம் சிறக்க

    புத்தாண்டு மலரட்டும்.

    Share
  • பொலியட்டும் சிறப்புகள்!

    வேதா.இலங்காதிலகம்

    hap

    2017………

    வலிமையாய் விரியட்டும்
    மெலியார் வலியவராகட்டும்
    மெலிகோல் (கொடுங்கோல்) அழியட்டும்.
    பொலியட்டும் சிறப்புகள்
    பலிப்புகள் (வெற்றி) குவியட்டும்
    நலிவுகள் ஒழியட்டும்

    வலிவுடை சான்றிதழ்கள்
    பொலிவுடை தமிழ்
    மலிவற்ற உயர்ச்சியாய்
    சலிக்காது சேர்ந்தது.
    சிலிர்க்கும் நிறைவிது.
    சொலிக்கட்டும் புத்தாண்டிலும்.

    அலட்சியங்கள் தாண்டி
    அவமானங்கள் நீராக்கி
    தவமெனும் வாழ்வு
    அவமின்றிச் சித்திக்கட்டும்.
    புவனம் சிறக்க
    புத்தாண்டு மலரட்டும்.

    பா ஆக்கம் பா வானதி
    வேதா.இலங்காதிலகம்
    டென்மார்க் 31-12-2016

    Share