எழுத்து -12

வேதா இலங்காதிலகம், டென்மார்க்

குகையுள் தவழ்ந்து தேடுதல் போலவும்
தொகையான கூழாங்கற்கள் பதமாக நதியால்
சிகை தழுவுதலாகவும் அறிவு பதமாகிறது.
பகையின்றி எழுத்து அறிவு புடமாகிறது (தூய்மை)
கீழடி எழுத்து தமிழ் எழுத்தா!
கேளடி என்று பல கேள்விகள்
தாழடியாக இதற்கு வாய்ப்பு இல்லை
மேலடி தான் இதன் முடிவாகும்.

கிறிஸ்துவிற்கு முன் ஆறாம் நூற்றாண்டில்
கிரமமான எழுத்தறிவு பெற்றனராம் மக்கள்.
கீழடி ஆய்வு இதை நிரூபிக்கிறதாம்.
கிரியாஊக்கி தானே இது தமிழனுக்கு!
விரிந்த பிரபஞ்சத்தின் ஆதி எழுத்து
விகசிக்கும் தமிழ் என்பது மகுடமேற்றும்
வியந்திடும் பண்பேற்றும் நிலை தானே!
விலாசமிகு தமிழ் விசுவரூபமாய் உயரட்டும்!

பாலும் பலாப் பழமும் பாகும் தேனும்
மேலும் கலந்த நீதியெழுத்துகளை ஒளவை
உலகிற்கு, சிறுவருக்கும் அள்ளித் தெளித்த
புலவர் பெண்ணான பிறவி அறிவாளர்.
மெய்யுலகைக் கட்டி எழுப்பிய அறிவம்மை
மதிப்புடைய அமைதிப் பெயர் ஒளவை
மனப்பாடம் பண்ணிய நீதியெழுத்தின் தலைவி
தனம் அவர் தடுமாறா எழுத்துகள்.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *