குகையுள் தவழ்ந்து தேடுதல் போலவும்
தொகையான கூழாங்கற்கள் பதமாக நதியால்
சிகை தழுவுதலாகவும் அறிவு பதமாகிறது.
பகையின்றி எழுத்து அறிவு புடமாகிறது (தூய்மை)
கீழடி எழுத்து தமிழ் எழுத்தா!
கேளடி என்று பல கேள்விகள்
தாழடியாக இதற்கு வாய்ப்பு இல்லை
மேலடி தான் இதன் முடிவாகும்.
கிறிஸ்துவிற்கு முன் ஆறாம் நூற்றாண்டில்
கிரமமான எழுத்தறிவு பெற்றனராம் மக்கள்.
கீழடி ஆய்வு இதை நிரூபிக்கிறதாம்.
கிரியாஊக்கி தானே இது தமிழனுக்கு!
விரிந்த பிரபஞ்சத்தின் ஆதி எழுத்து
விகசிக்கும் தமிழ் என்பது மகுடமேற்றும்
வியந்திடும் பண்பேற்றும் நிலை தானே!
விலாசமிகு தமிழ் விசுவரூபமாய் உயரட்டும்!
பாலும் பலாப் பழமும் பாகும் தேனும்
மேலும் கலந்த நீதியெழுத்துகளை ஒளவை
உலகிற்கு, சிறுவருக்கும் அள்ளித் தெளித்த
புலவர் பெண்ணான பிறவி அறிவாளர்.
மெய்யுலகைக் கட்டி எழுப்பிய அறிவம்மை
மதிப்புடைய அமைதிப் பெயர் ஒளவை
மனப்பாடம் பண்ணிய நீதியெழுத்தின் தலைவி
தனம் அவர் தடுமாறா எழுத்துகள்.
(திருமதி. வேதா. இலங்காதிலகம்- டென்மார்க் இலங்கையள் 1976 லிருந்து இலங்கை வானொலிக்கு எழுதத் தொடங்கிப் பயணம்
தொடர்கிறது. இரண்டு கவிதைப் புத்தகமும் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுமாய் 3 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன்.
ஒரு இணையத்தளம் 4 வருடமாக இயக்குகிறேன்.- வேதாவின் வலை.
எனது நூல்களாக
2002ல் வேதாவின் கவிதைகள்- கவிதைத் தொகுப்பு
2004ல் மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு – ”..குழந்தைகள் இளையோர் சிறக்க..”
2007ல் உணர்வுப் பூக்கள் – தொகுப்பு – இதில் எனது 69 கவிதைகளும் எனது கணவரின் கவிதகள் 43மாகத் தொகுக்கப் பட்டது. இவை மின்னூல்களாக நூலகம் டொற் ஓர்க் லும். பார்க்கலாம். பல விபரங்களும் ” எனது நூல்கள்” என்ற தலைப்பில் என் வலையிலும் காணலாம்.
1976லிருந்து இலங்கை வானொலி பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்குக் கவிதை எழுத ஆரம்பமானது என் எழுத்துப் பயணம்.
அதன் பின் 1987ல் டென்மார்க் வந்து டென்மார்க்கில் குழந்தைகள் ( பிள்ளைகள்) பராமரிப்புக் கல்வியை 3 வருடம் டெனிஸ் மொழியில் படித்து முடித்தேன் ”பெட்டகோ” எனும் தகுதி பெற்றேன்.
14 வருடங்கள் 3 – 12 வயதுப் பிள்ளைகளுடன் பணி புரிந்து ஒய்வு பெற்றேன். 26 வருடங்களிற்கும் மேலாக டென்மார்க்கில் வசிக்கிறேன் என் கணவருடன்.