Blog

  • வந்து விட்டது வசந்த காலம் !!!

     

    பி. தமிழ்முகில் நீலமேகம்

     

    இலையுதிர்த்த  மரங்களெல்லாம்

    மலர்களால்  அலங்கரிக்கப்பட்டிருக்க

    மகரந்தங்களைத் தேடி மலர்களை

    சில் வண்டுகள் ரீங்கரிக்க

    குறுகிய காலத்துள்  –

    மரக் கிளைகளில்

    இலைகள் துளிர்த்திருக்க

    உதிர்ந்த மலர்கள்

    நிலமெங்கும் மலர் மஞ்சம்

    அமைத்திருக்க –

    எங்கெங்கு  காணினும்

    மஞ்சள்  மகரந்தங்கள்

    மங்களம் பரப்பிட

    கூடவே ஒவ்வாமையையும்

    இலவச  இணைப்பாய்

    அள்ளி வழங்கிட

    உற்சாகமூட்டும் வண்ணங்கள்

    நம்மைச் சூழ்ந்திருக்க

    பறவைகள் பரவசமாய்

    வானில் இசைபாடி

    வலம் வர – உறக்கத்திலிருந்த

    அணில்களும் முயல்களும்

    உற்சாகமாய் துயிலெழுந்து

    துள்ளியோட – வந்து விட்டது

    வசந்த காலம் !!! – எங்கெங்கும்

    உற்சாகமும் இன்பமும்

    சூழ்ந்திருக்கவே !!!!

    Share
  • “நாகரீக பெப்பே”…….

    தமிழ்த்தேனீ

     உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே  என்று முன் காலத்தில் ஏமாற்றுபவர்கள் கொக்கரிப்பது வழக்கம் .ஆனால் அந்தக் காலத்தில் வெறும் கோமணம் அல்லது,லங்கோட்டா என்று சொல்லுவார்கள் அதை உடுத்துக் கொண்டு, பாதுகாப்பாக வாழ்ந்தவர்கள்தான் அதிகம் பேர், அதற்குப் பிறகு அரை நிஜார், அரை நிக்கர் என்று சொல்லக் கூடிய பாதி கால்சட்டை வழக்கத்துக்கு வந்தது .

    பிறகு அயல் நாட்டாரைப் பார்த்து நாமும் முழுக் கால் சட்டையை

    அணிய ஆரம்பித்தோம் .ஆனால் நம்முடைய அரைக்கால் சட்டையிலிருந்து தோன்றியதுதான் அயல்நாட்டவரின் முழுக்கால் சட்டை.

    இப்போதெல்லாம் நாம் அனேகமாக அயல் நாட்டு நாகரீகத்துக்கு

    முழுமையாக ஆட்பட்டுவிட்டோம்.

    அதன் படி வீட்டிலே வேட்டி கட்டிக் கொண்டிருந்த ஆண்களும்

    வசதி காரணமாக  நம்முடைய பழைய அரைக்கால் சட்டையின் புதுப்பிக்கப் பட்ட வடிவமான தொளதொளவென்றிருக்கும் ஷார்ட்ஸ் என்று சொல்லக்கூடிய

    உடையை அணியத் தொடங்கி விட்டோம்

    தினமலரில் மேற் கண்ட செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள்.  இந்த பெப்பே என்கிற நிறுவனம் அரைக்கால் சட்டையைத் தயாரிக்க  இந்தியாவில் 150 கோடி ரூபாய்களை முதலீடு செய்யப் போகிறதாம்….ஜாக்கிரதை  .நம்முடைய வருமானத்தில் இன்னும் அதிகமாக  நம்மிடமிருந்து அரைக்கால் சட்டைக்காக அளிக்கப் போகிறோம்.  நம்முடைய பழைய கலாச்சாரங்கள் எப்படி உருமாறி நம்மிடமே  திரும்பி வந்து நமக்கே செலவு வைக்கிறது .

    சமீப காலங்களில்  கணிணித் துறையின் அமோக வளர்ச்சியால் பல இந்திய நடுத்தரக் குடும்பங்களில் இருந்து பல இளைஞர்கள்  அமெரிக்கா போன்ற அயல் நாடுகளுக்கு  கணிணித் துறை வல்லுனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆங்கே சென்று  வாழ்க்கையைத் தொடங்கி  நம் நாட்டுக் கலாச்சரத்திலும்  அன்னிய நாட்டுக் கலாசாரத்திலும் இங்கொரு கால்  அங்கொரு கால் என்று  வைத்துக் கொண்டு நிலைதடுமாறி விட்டு கடைசியில்  இயலாமையினால்  அன்னிய நாட்டுக் கலாசாரத்தையே  முழுமையாக கடைப்பிடிப்பது  என்கிற முடிவுக்கு வந்து விட்டார்கள்,

    அப்படி அவர்கள் கலாச்சார மாறுதல்களுக்கு உட்பட்டு , ஜீன்ஸ், ஷார்ட்ஸ் என்று ஏகத்துக்கும் மாறிவிட்டதால்  பெற்றோரை அங்கே அழைத்துச் சென்று அவர்களுக்கும் அன்னிய நாட்டுக் கலாசாரத்தை கற்றுக் கொடுத்து  வாழப் பழக்கி விடுகிறார்கள்.  அப்படிப் பட்ட பெற்றோர் மறுபடியும்  இந்தியாவுக்கு திரும்பும்போது ஜீன்ஸ் , ஷார்ட்ஸ் என்று  அணிந்து கொண்டு  உலா வருகிறார்கள்.

    வேட்டி, சொக்காய் என்பதெல்லாம் மலையேறி வெகு காலம் ஆகிவிட்டது

    ஆகவே இந்தியாவிலும்  இந்த   பெப்பே நிறுவனம் தயாரிக்கும்    ஜீன்ஸ், ஷார்ட்ஸ் போன்றவை அதிக அளவிலே விற்கிறது.    ஒரு அரை நிஜார் தைக்க அந்தக் காலத்திலே   அரையணா  ஆகுமென்று வைத்துக் கொள்வோம்.   இப்போது அதே அரை  நிஜார் ,அதாவது அரைக்கால் சட்டை   உருமாறி ஷாட்ஸ் என்று ஒப்பனை செய்து  கொண்டு  இருப்பதால்

    ஒரு ஷார்ட்ஸ்  450 ரூபாய் ஆகிறது.

     அனேக வயதானவர்களும்  ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு    கையில் உயர்தர செல்போனையும் (பிள்ளைகள் வாங்கிக் கொடுத்தது)  பிடித்துக் கொண்டு  உலா வருகிறார்கள்.    இங்கே  அயல் நாடுகளுக்கு செல்ல இயலாமல்  இருக்கும் இளசுகள்,      அடேயப்பா  இந்தப் பெரிசுகள்  அலட்டும் அலட்டல் இருக்கிறதே   தாங்க முடியலைப்பா   என்று முணுமுணுப்பது  காதில் விழுகிறதா.அடிப்படைக் கலாச்சாரம்  மாறாமல்  பெரியவர்களும்  நடந்துகொண்டு பிள்ளைகளுக்கும் நம் கலாச்சாரத்தின் மேன்மையை உணர்த்த வேண்டிய தருணம் இது.   நாம் ஷார்ட்ஸில் மட்டும் மாறவில்லை,  மொத்த நாகரீகத்தின் ஆணி வேரையே   மாற்றிவிட்டோமோ  என்று தோன்றுகிறது

    ஷார்ட்ஸ் அணிய வேண்டாம் என்று சொல்லவில்லை  நம்  நாகரீகத்தையும் , நம் கலாச்சாரத்தையும்   முறையாகப் புரிந்து கொள்ளாமல்,  வேட்டி , அரை நிஜார்  ஆக மாறி , அரை  நிஜார்  ஷார்ட்ஸ்  ஆக மாறியதைப் போல

    நம் நாகரீகத்தின் பல மேன்மைகளைக் கைவிட்டு , நம் வசதிக்காக  நம் கலாச்சாரத்தை   சுருக்கி  மாற்றிவிட்டோம்.

    அதனால்தான்  இப்போது முறையற்ற திருமணங்கள், திருமணமாகி குறுகிய காலத்துக்குள்ளே  விவாகரத்துகள்,  சிறு வயதிலேயே  முறையற்ற கர்ப்பம்தரித்தல், குழந்தையைப் பெற்று குப்பைத் தொட்டியில் வீசுதல்,

    திருமணமான பிறகும்  ஆணுக்கு அன்னிய பெண்ணின் மேல் காதலும் , பெண்ணுக்கு அன்னிய ஆடவரின் மேல காதலும்  ஏற்படும் நிலை.

    தகாத காதல்களுக்காக   கொலைகள்,   என்றெல்லாம் நம் கலாச்சாரம் சீரழிக்கப்பட்டு விட்டதே.

    நாமாக  தவறான பாதையில் சென்றாலும் தடுக்கி விழுந்துஇ  அந்தப் பாதையில் பயணித்தாலும்  விபரீத விளைவுகளே   ஏற்படும்  என்பதற்கு இந்த   ஷார்ட்ஸ் என்னும் பெப்பே   ஒரு சிறிய உதாரணம்தான்  ஆனால் தற்போதைய   நாகரீகக் கலாச்சாரம்  உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே  என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறது

     திசை தெரியாமல் குழம்பி  திரு திருவென்று விழித்துக் கொண்டிருப்போரை  ஏன் இப்படி   பேபே   என்று விழிக்கிறாய் என்பார்கள் .இப்படித்தான் நாமும் விழித்துக் கொண்டிருக்கிறோம்  ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலுமாய்

    இப்படியே நாம் விழித்துக் கொண்டிருந்தால் மொத்தக்  கலாச்சாரமும்  அழிந்து போகும் என்பதில் சந்தேகமில்லைஆமாம்  இந்தியர்கள்  என்னதான் செய்து கொண்டிருக்கிறோம்.

    விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது !

     

     

     

     

    Share
  • வார ராசி பலன்!…(15-04-13 – 21-04-13)

     காயத்ரி பாலசுப்ரமணியன்

     மேஷம்:  அண்டை அயலாரின் மத்தியில் உங்கள் மதிப்பும், கௌரவமும் பெருகும். வேலை செய்யும் இடங்களில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். எந்த பணியும் சுமையாய் இராது. நல்ல நட்பு, இனிமையான அனுபவம் என்று பொழுது இன்பமாகச் செல்லும். மாணவர்கள் வாகனம் ஓட்டுகையில் அதிக வேகம் வேண்டாம்.நீங்கள் காட்டும் அக்கறைக்கேற்ப பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவுகளின் வரவால் சில தர்ம சங்கடங்களை சமாளித்து செல்ல நேரிடும். சேமிக்க வேண்டும் என்று நினைத்த பணத்திலிருந்து சற்று செலவழித்து விடுவீர்கள்.

    ரிஷபம்:  நீங்கள் மேற்கொள்ளும் வெளியூர்ப் பயணங்கள் லாபகரமாக இருக்கும். மனைவி வழி உறவுகளோடு கருத்து மோதலில் இறங்க வேண்டாம். வியாபாரிகள் முக்கியமான பொறுப்புக்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ளுதல் நல்லது. பெண்கள் மனம் விரும்பிய ஆடை,அலங்காரப் பொருட்களை வாங்கி மகிழ்வர். சில நேரங்களில் வேலை முடிவதற்கு காத்திருக்க வேண்டி வரும்.வெளி இடங்களில் குடிக்கும் நீர் மற்றும் உண்ணும் உணவு வகைகளில் மிதமாக இருக்க, அஜீரணம், வயிற்றுவலி ஆகியவை உங்கள் அருகில் வராமலிருக்கும்.

    மிதுனம்: கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். நட்பும், உறவும் உங்களை விட்டு விலகாது. துவங்கிய காரியங்கள் துரிதமாக நடப்பதால், மனதில் மகிழ்ச்சி தங்கும். பெண்கள் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் உடன் பணி புரிபவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். சிலருக்கு வெளிநாடுகளுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். வாகன பராமரிப்புக்கு சற்று அதிக பணம் ஒதுக்க வேண்டியிருக்கும். கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு கையில் கணிசமான லாபத்தோடு ஒப்பந்தங்களும் வந்து சேரும்.

    கடகம்: அலைந்து திரிந்தாவது, உங்கள் வேலைகளை முடித்துவிடுவீர்கள். வீட்டில் கலகலப்பும், சந்தோஷமும் கூடும்.முக்கியமான முடிவுகளை குடும்ப உறுப்பினரோடு கலந்து ஆலோசித்து செயல்படுவது நன்று. பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை கவனமாகக் கையாளவும். மறதியால் மாணவர்கள் சிறு மன உளைச்சலுக்கு ஆளாகலாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளை நிதானமாகக் கையாண்டால், இழப்புக்களைத் தவிர்ப்பதோடு, உறவுகளின் அனுசரணையையும் தக்க வைத்துக் கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    சிம்மம்: குடும்பத்தில் நிலவி வந்த பனிப்போர் விலகும். மனதுக்கு பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பெருமை மிகு செயல்களால் உங்கள் மதிப்பும் உயரும்.என்னதான் நெருங்கிய நட்பு என்றாலும், அடுத்தவரின் அந்தரங்க விஷயங்களில் மூக்கை நீட்டாதிருப்பதே நல்லது. கலைத்துறையினருக்கு வெளிவட்டாரப் பழக்கம் மூலம் சில சலுகைகள் வந்து சேரும். வியாபாரிகள் அரசு தொடர்பான காரியங்களில் கவனமாக செயல்படுதல் அவசியம். பண விஷயங்களில் அறிமுகம் இல்லாதவரை நம்ப வேண்டாம்.

    கன்னி: நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். மாணவர்கள் மற்றவர்கள் தூண்டுதலால் கேளிக்கை, கொண்டாட்டம் என்று இறங்க வேண்டாம். மேலதிகாரிகள் உங்கள் வேலைகளை விமர்சனம் செய்யும் சூழலுக்கு ஆளாக நேரிடும். எனவே எதனையும் நாளை என்று தள்ளிப்போடாதிருப்பது புத்திசாலித்தனம். பெண்கள் வாக்கு வன்மையால் வேண்டிய காரியங்களை சாதித்துக் கொண்டு விடுவார்கள். வயதானவர்களின் சிறு உடல் உபாதைகளை உடனுக்குடன் கவனித்து விடுவது நல்லது.

    துலாம்: உங்களின் கல்யாணக் கனவுகள் நனவாகும். வீட்டை சீரமைத்து அழகு படுத்துவதில் பெண்கள் மும்மரமாக இருப்பார்கள். உடன் பிறப்புக்கள் வழியில் சிறு மனஸ்தாபங்கள் அவ்வப்போது தலை காட்டும். பண வரவு சீராக இருந்தாலும், செலவுகளின் மீதும் உங்கள் கவனம் இருப்பது நல்லது. மாணவர்கள்திட்டமிட்டப்படி வேலைகளை முடிப்பதோடு கூடுதல் மதிப்பெண்ணும் பெறுவர். கலைத்துறையில் இருப்பவர்கள் சாக்கு போக்கு சொல்லி நழுவும் நபர்களிடம் எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். கடிதம் மூலம் நல்ல செய்தி வரும்.

    விருச்சிகம்: உயர்பதவியில் இருப்பவர்கள் ,பாரபட்சமின்றி பிறருக்கு சலுகைகளை வழங்கினால், நிறுவன வேலைகள் சுறுசுறுப்பாக செல்லும். தம்பதிகள் இடையே இருந்த மனக் கசப்பு நீங்குவதால், மீண்டும் மகிழ்ச்சி பூக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தாரோடு பழகுவதில் ஒரு எல்லை வைத்துக் கொண்டால், தொல்லை ஏதும் இராது. உங்கள் சாமர்த்தியத்தால் வர வேண்டிய வரவுகளை வசூல் செய்து விடுவீர்கள். குல தெய்வப் பிரார்த்தனையை மறவாமல் செய்து வாருங்கள். குடும்பத்திலும், உள்ளத்திலும் நிம்மதி நிலைத்திருக்கும்.

    தனுசு: துவங்கிய காரியங்கள் துரிதமாக நடைபெற, இதமான போக்கைக் கையாளும் வியாபாரிகளுக்கு அனைத்திலும் வெற்றிதான்! உறவினர் வருகையால், இல்லத்தில் பரபரபரப்பும் மகிழ்ச்சியும் கூடும். மாணவர்கள் சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு செயல்பட்டால், பாடங்கள் சுமையாய் தோன்றாது. கர்ப்பிணிப் பெண்கள் அவ்வப்போது தேவையான மருத்தவ பரிசோதனைகளை மேற்கொள்ள, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். பெண்கள் இரவலாகப் பொருள்களை தருவதையும், பெறுவதையும் தவிர்த்தல் நலம்.

    மகரம்: அரசுத் தொடர்பான காரியங்கள் நினைத்தவாறே முடியும். பெண்களுக்கு இல்லத் தேவைகளை இடுகட்டும் அளவிற்கு பணப்புழக்கம் இருக்கும். புதிதாக பணியில் அமர்ந்திருப்பவர்கள், வேண்டாத விவாகாரங்களிலிருந்து தள்ளியே இருங்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள், உடனிருப்பவர்களால் சில நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடும். வேலையில் இருப்பவர்கள் பிறரிடமிருந்து பொறுப்புக்களை பெறும் போதும், தரும் போதும் விழிப்புடன் இருப்பது அவசியம். அதிக அலைச்சல், அதிக வேலை இரண்டும் உங்கள் உற்சாகத்தைக் குறைக்கலாம்.

    கும்பம்: புதிய ஒப்பந்தங்கள் கலைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மாணவர்கள் சின்ன சின்னப் பிரச்னைகளுக்கு உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்தால், கல்வியில் அதிக கவனம் செலுத்தலாம். பெற்றோர்கள் பிள்ளைகள் விஷயத்தில் இதமான அணுகு முறையைக் கையாண்டால், பல பரச்னைகளுக்கு உடனடியான தீர்வு கிட்டும். பெண்கள் வரவுக்கு ஏற்ற செலவு என்பதில் கவனமாக இருந்தால், கடன் தொல்லையும் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். அனுசரித்து செல்லும் தம்பதியர் நடுவே அன்பும், பாசமும் பெருகும். புதியவரிடம் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

    மீனம்: புது உறவுகளின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், கலகலப்பும் கூடும். பிள்ளைகள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தால், மருத்துவச் செலவுகள் கணிசமாகக் குறையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவால், வேலைகளை ஆர்வத்துடன் செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு குடும்பத்தாரோடு புதிய இடங்களுக்கு சென்று மகிழும் வாய்ப்பு கூடி வரும்.முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள், வீண் பழிகளைத் தவிர்க்க, கூடுதல் கவனத்துடனும், திறமையுடனும் செயல்பட்டு வருவது அவசியம்.

    Share
  • ஶ்ரீவைகுண்டம் கோதண்ட ராமன்

     

    சு. ரவி

    சித்திரை, நவமி, புனர்வஸு நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் ஶ்ரீ ராம அவதாரம் நிகழ்ந்தது.

     

    “நீதிதன்னைநிலைநாட்ட-

    நைந்தவர்க்கு வழிகாட்ட

    வேதமந்த்ர சுகமார்க்கம்-மண்ணில்

    வாழ்ந்துகாட்ட வந்த மேகம்”

    என்றும்,

    “விழிகளரவிந்தம்-அதில்

    கருணை மகரந்தம்

    விதி கதி கலங்கவரும் கோதண்டம்”

    என்றும்,

    நணபன், கவிஞன் க.ரவியின் சொல்வண்ணத்திலே தீட்டப்பெற்ற

    கோதண்ட ராமனின் நெடிதுயர்ந்த திருக்க்கோலத்தை, ஶ்ரீவைகுண்டம் கோயிலில் உள்ளபடி

    அனுமன் மற்றும், சீதை சமேதனாகக் கோட்டோவியத்தில்

    முயற்சித்துள்ளேன் (இணைப்பு காண்க).

    பார்க்க, படிக்க, ரசிக்க…..

    தனுவினை இடக்கரத்தில்

    தாங்கிடும் தடந்தோள் வீரா

    இனகுலம் விளங்க வந்த

    இணையிலாக் கருணை ஊற்றே!

    அனுமனை வலக்கரத்தால்

    அணைந்து நீ நிற்கும் கோலம்

    மனமெலாம் நிறைத்ததையா!

    மலரடி சரணம் ராமா!

    வில்லிலே வீரம் வைத்தாய்

    விழியிலே ஈரம் வைத்தாய்

    சொல்லிலே வாய்மை வைத்தாய்

    செயலிலே நேர்மை வைத்தாய்

    இல்லிலெம்    ஜானகித்தாய்

    ஒருத்தியை இருத்திவைத்தாய்

    கல்லிலும் உயிர்கொடுத்தாய்

    கழலிணை சரணம் ராமா!

    விண்திரள் கார்மேகம் போல்

    விளங்கிடும் கரியமேனி

    கண்களோ பொய்கை பூத்த

    கமலமாய் விரிந்திருக்கும்

    திண்திறல் புஜங்கள் எங்கள்

    துயரெலாம் தாங்கிக் கொள்ளும்

    மண்ணிலே நடந்து சென்ற

    மலரடி சரணம் ராமா!

    கங்கையின் ஓடக்காரன்,

    குகனொரு தம்பி என்றாய்

    அங்கொரு வானரர் கோன்

    அவனையும் தம்பிஎன்றாய்

    வெங்களம் சரண்புகுந்த

    வீடணன் தம்பியானான்

    இங்கெனை ஏற்றுக் கொள்ள

    இன்னுமேன் தயக்கம் ராமா!

    வயோதிகம் நெருங்கும் போது

    வார்த்தையும் வருவதில்லை!

    வியாகுலம் சூழ்ந்த நெஞ்சில்

    விளைவகள் விளங்கவில்லை

    அயோத்தியின் அரசே, நானுன்

    அடைக்கலம், ஏற்றுக்கொள்வாய்!

    தயாபரா!   தாமதம் ஏன்?

    தளிர்ப்பதம் சரணம் ராமா!

    சு.ரவி
    Vice President – IT
    Alicon Castalloy Limited
    Gat No: 1426, Village Shikrapur, Tal. Shirur,
    Dist. Pune 412 208  Maharashtra, India

    Share
  • விஜய ஆண்டில் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    சக்தி சக்திதாசன்
    பங்குனித் தாயின் திரு உத்தரத்தில்
    பதமாய்ப் பிறந்த சித்திரைத் திருமகளே
    பைந்தமிழ் அகவையின் பூ மகளே
    பல நலம் கொண்டு நீ உதித்தாயோ ?
    முத்தமிழ் மொழியின் நல் புத்தாண்டாய்
    முப்பொருள் கொண்ட சுவைக் கற்கண்டாய்
    வித்தகர் விளைந்த இந் நானிலத்தில்
    விடியலைக் கொண்டு நீ வந்தாயோ ?
    கற்றவர் சபையில் ஒளிரும் செம்மொழியின்
    காலத்தின் பெருமைகொள் சரித்திரங்கள்
    யாதும் ஊரெனப் பரந்திருக்கும் இன்ப
    யவ்வன மொழியின் புதிய வருடமென்றேன்
    இத்தரை மாந்தர்கள் மனங்களிலெல்லாம்
    சித்திரைப் பூமகள் வலம் வந்திடுவாள்
    முத்திரை பதித்திடும் பெருங் காவியங்கள்
    பத்தரைப் பொன்னிலும் மிகும் செல்வங்களே
    விஜய ஆண்டிதன் வரவதனை நாமும்
    விரிந்திடும் மனம் கொண்டு மகிழ்ந்திடுவோம்
    வாட்டிய வேதனைக் காலங்கள் அனைத்தும்
    ஓட்டிய வருடம் இதுவென்றாகட்டும்
    கிட்டாதன அனைத்தையும் வெட்டென மறந்து
    கிட்டியவை அனைத்தாலும் சட்டென மகிழ்ந்து
    மனதின் மகிழ்ச்சியின் மந்திரம் ஒன்றே
    மகிழ்வோம் நம்மிடம் இருப்பதைக் கொண்டு
    அன்பிலும் பண்பிலும் சிறந்து விளங்கிடும்
    அன்பினும் இனிய உள்ளங்கள் அனைத்துக்கும்
    விஜய ஆண்டில் புத்தாண்டு வாழ்த்துக்கள்
    வாழிய அனைத்தும் பெற்றே உம் வாழ்வில்
    படத்துக்கு நன்றி
    Share
  • தமிழ்ப் புத்தாண்டில்…

     

    இத்தரை கணும் இன்பமெலாம்

    இரண்டாய், மேலாய்க் கிடைத்திடவே

    சித்திரை வந்தது சிறப்புடனே

    சீர்மிகு விஜய புத்தாண்டாய்,

    நித்தமும் இனிமேல் நந்நாளென

    நம்பியே உழைத்து நலம்பெறுவோம்,

    தத்துவம் இதுதான் தழைத்திடெனத்

    தமிழர் ஆண்டில் வாழ்த்துவமே…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    படத்திற்கு நன்றி:

    http://messages.365greetings.com/holiday/tamil-new-year/tamil-new-year-wishes.html

    Share
  • அழகார்ந்தநாயகி

     

    அழகார்ந்தநாயகி பஞ்சகம்

     

    சு. ரவி

     

     

    அழகினுக் கழகைத் தந்த

    அழகியே, அம்மை யே!பூம்

    பொழிலிடைப் பூந்துருத்திப்

    பொய்யிலி நாதர், கையில்

    மழுவினை, மானை ஏந்தும்

    மன்னவன் பாகம் கொண்டோய்!

    பழவினைக் காட்டைத் தீய்க்கும்

    பதமலர்    சரணம்   தாயே!    1

     

     

    தேவியே, மறைகள் நான்கும்

    தேடுமெய்ப் பொருளே! ஈசன்

    ஆவியே, அமுதம் தோய்ந்த

    அழகியே, அரனார் பாகம்

    மேவிய மேன்மையே நின்

    மென்மலர்ப் பாதம் பாக்கள்

    தூவிநான் தொழுது போற்றத்

    துணைவர வேண்டும் தாயே!    2

     

     

    பிரமனங் கிருக்க ஒட்டான்

    பிறப்பெனும் சிட்சை செய்வான்!

    இரக்கமில் எமனோ என்னை

    இவ்விடம் இருக்க ஒட்டான்!

    உரமழிந் தோய்ந்தேன்,தேய்ந்தேன்

    உதையுறு பந்தாய் ஆனேன்!

    அரனொரு பாகம் சேர்ந்த

    அழகியே, சரணம் தாயே!       3

     

     

    பொன்னிலே விருப்பம் இல்லை

    பொருளிலே நாட்டம் இல்லை

    உன்னையன் றின்றி யாரும்

    உறவெனக் கில்லை அம்மே!

    இன்னமு தழகீ! ஈசன்

    இடப்புறம் கவர்ந்த தாயே!

    மின்னலாய் முதுகுத் தண்டின்

    மிசையெழு சுடரே!போற்றி!        4

     

     

    பூரண நிலவாய்ப் பூத்த

    பூவன நாதர் வாழ்வே!

    நீறணி நிமலர் பாகம்

    நிறைவுசெய் அழகீ! அன்ன

    பூரணீ! புதுமைக் கெல்லாம்

    புதுமையே! உலகுக் காதி

    காரணீ! காளீ! காக்கும்

    கழலிணை சரணம் தாயே!         5

     

     

    Share
  • அறுமுகநூறு (9)

     

    சச்சிதானந்தம்

     

    குக் குடத்துக் கொடியோன் அடியை,

    இக் குடத்துக் கடியேன் பற்றி,

    முக் குடத்துக் கடுநோய் நீக்கிச்,

    சிக் கெடுத்துக் காக்கப் பணிந்தேன்!                                                                                   41

     

    பங்குனிக் கொண்டாட்டம் சித்திரை வரைக்கும்,

    பக்தர்கள் கொண்டாட்டம் பாருள்ள வரைக்கும்,

    சங்கரன் கொண்டாடும் சரவணன் படைத்த,

    மங்கலச் செந்தமிழ் நம்மை வழிநடத்தும்!                                                                     42

     

    தைப்பூசம் என்றால் தமிழ்மணம் வீசும்,

    கைபூசும் சந்தனம் திருமேனி எங்கும்,

    பைபூசும் கிளிகளின் செவ்வலகு போல,

    தைப்பூச நாயகன் அழகிதழ் சிவக்கும்!                                                                             43

     

    சிற்றின்ப பேரின்ப பேதங்கள் இன்றி,

    உற்றின்ப முனைக்கண்டு நின்றோமே ஐயா!

    சற்றுன்னை மனமாரக் கண்டிடும் பொழுது,

    பற்றின்றி வாழ்ந்திடப் பழகினோம் ஐயா!                                                                        44

     

    அலகினைச் சுமந்திடும் கன்னம், முருகன்

    அழகினைச் சுமந்திடும் பக்தனின் எண்ணம்,

    அமைதியில் நிறைந்திடும் அலகேற்ற உள்ளம்,

    அருளினை அடைந்திடும் அழகுற்று நெஞ்சம்!                                                               45

     

    Share
  • நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – 30 (கடைசிப் பகுதி )

    பெருவை பார்த்தசாரதி

    நமக்கு நேரம் கிடைக்கும் போது, அதை நல்வழியில் செலவழிக்க விரும்புவதையே அனைவரும் விரும்புவோம் அல்லவா!….  கேளிக்கை என்று வரும்போது சினிமா, நாடகம், கடற்கரை மணலில் காற்று வாங்குதல், அலைபேசியில் அரட்டை அடித்தல், டிவி நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தல், அனேகமாக இதுபோன்ற ஏதாவொதொன்றில் நேரம் கழிந்துவிடுவது சகஜம்.

    அனேகமாக எல்லா நாட்களும் இது போன்று கழிந்து விடுகின்ற நிலையில், ஒரு மாதத்தில், ஒரு நாளில், ஒரு 2 மணி நேரத்தை நல்ல விஷயங்களைக் கேட்க சத்சங்களுக்குச் சென்று வந்தால் என்ன என்று தோன்றும். அச்சமயத்தில், மற்றவர் பேசுவதைக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துவதே, இந்த சத்சங்கத்தின் நோக்கம். ‘கற்றலில் கேட்டலே நன்று’ என்பது போல. கண்ணால் பார்த்து களிப்படைவதும், வாயால் உண்டு மகிழ்வதும், மூக்கால் வாசனை முகர்ந்து மலர்வதும், மெய்யால் உற்றறிதலும், காதால் நன்னெறிகளைக் கேட்டலும் சரிவர நடைபெற்றால்தான் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஊக்கம் அளித்து உடலைச் சரிவர இயக்க முடியும்.

    ஏனைய மற்ற உடல் உறுப்புகளில் கண்ணுக்கும், காதுக்கும் தனிப்பட்ட சிறப்பு உண்டு. நாம் காணுகின்ற ஒரு பொருளின் ‘தோற்றம்’,  செவியின் மூலமாக வரும் ‘ஒலி’  இவையிரண்டும் மூளையில் பதிவு செய்யப்படுகிறது. செவிப்புலனுக்கு கண்புலனை விட சற்று மதிப்பு அதிகம். மனிதன் பெற்ற செல்வத்துள் செவிச்செல்வம் ஒப்பற்றது. அதனால்தான் “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்” என்ற சிறப்பை செவிப்புலன் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வாயால் கற்பித்தல் என்று வரும்போது காதால் கேட்டல் என்பதும் கூட வருகிறதல்லவா!….

    கற்பிப்பவரின் அறநெறிகள், அறிவுரைகள், போதனைகள், கேட்பவரின் செவி வழியே சென்று அறிவைப் புகட்டுகிறது. சிந்தனையைத் தூண்டுகிறது. மனதில் தோன்றும் எண்ணங்களை வடிகட்டி, தீயவைகளைக் களைந்து, நல்ல எண்ணங்களுக்கு வழி வகுப்பது சிந்தனை ஒன்றுதான். கேட்டலும், சிந்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. கேட்கும் திறன் குறைவாக இருந்தால் சிந்தனையும் குறைவாகத்தான் இருக்கும். நாம் எப்போதுமே பேசிக்கொண்டிருக்கிறோம், என்றைக்காவது யாராவது சொல்வதை நின்று நிதானித்துக் கேட்டதை காதில் வாங்கிக்கொண்டு சிந்தித்திருக்கிறோமா?.. முயற்சி செய்து பார்த்தால் கேட்டலின் திறம் சிந்தைனை மூலம் புலப்படும்.

    இந்தக் தொடரின் கடைசி பகுதியின் மூலம், எனக்குத் தோன்றிய ஒரு சிறிய கருத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சிலசமயங்களில் நாம் பேசுவதை சற்று நிறுத்திவிட்டு, அறிவார்ந்த அறிஞர் பெருமக்கள் பலர் சொல்வதைக் காது கொடுத்து பொறுமையாகக் கேட்டாலே வாழ்க்கை முறைக்குப் பயனுள்ள தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் மிக எளிதாகப் பெற்றுவிட முடியும். நேரம் கிடைக்கும் போது, குடியிருப்புக்கு அருகில் நடந்து கொண்டிருக்கும் ஏதாவதொரு சத்சங்கத்திற்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அதனால் ஏற்படும் எண்ணற்ற பலன்களையும், அனுபவங்களையும் எளிதாக உணர்ந்து கொள்ளமுடியும்.

    அனுதினமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நமக்கு, சற்று நேரம் மன நிம்மதிக்காகவும், மன மகிழ்ச்சிக்காகவும் சத்சங்கங்கள் துணைபுரிகின்றன. நமது வாழ்க்கையில் இடம்பெரும் அத்தியாவசிய அங்கங்களில் சத்சங்கங்களும் விலக்க முடியாத ஒன்றாகி விட்டது என்பதே உண்மை.

    நன்னெறிகளைக் கேட்பதின் மூலம் சில சங்கடங்கள் கூடத் தீரும் என்பதற்கு பாகவதம் ஒரு சிறந்த உதாரணம். “இன்னும் ஏழு நாட்களே உயிரோடிருப்பேன், அதற்குள் ஞானம் பெறுவது எப்போது” என்று கேட்ட பரீட்சித்து மகராஜாவிற்கு, சுக முனிவரின் உபதேசம் சாந்தி அளித்து, முக்திக்கும், ஞானத்திற்கும் வழிகாட்டும் கருவியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு சுகர் சொல்வதை பரீட்சித்து பொருமையாக கவனித்து காதில் வாங்கிக்கொள்வதை கவனத்தில் கொள்ளவேண்டும். பரீட்சித்து மகராஜாவின் தொடர்ந்து வரும் கேள்விக்கெல்லாம், பதிலாக வருகின்ற சுகரின் பகவத் தத்துவத்தை விளக்குகின்ற முறையில் சொல்லும் விதமாகவும் கேட்கும் விதமாகவும், அமைந்த “ஸ்ரீமத் பாகவதம்” 18000 சுலோகங்கள் கொண்டது. வியாச பகவான் இயற்றிய இந்த உபதேசம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்ற அரிய பொக்கிஷங்கள் அடங்கிய 18 புராணங்களில் சிறந்த ஒன்று. பாரதத்தை ஒரே தேசமாக அடையாளம் காட்டிய பெருமை மகாபாரதத்துக்கும், இராமாயணத்துக்கும், 18 புராணங்களுக்கும் உண்டு.

    ‘சத்’ என்றால் உண்மை,    ‘சங்கம்’ என்றால் ‘சங்கமித்தல்’ அல்லது ஒன்றாகச் சந்திப்பது என்பது பொருள். பலர் ஒன்றாக, ஒரு இடத்தில் குழுமியிருந்து, செவிக்கு இனிமையான, இசையோடு கூடிய  சொற்பொழிவாற்றலை கேட்பது அல்லது கேள்வி, பதில் போன்றவற்றால் உரையாடுவது என்பதே “சத்சங்கம்” என்றழைக்கப்படுகிறது. இப்போதெல்லாம், அலுவலகத்தில் அல்லது வீட்டிலிருந்தபடியே, சத்சங்களில் நடப்பதை செலவில்லாமல் தொலைக்காட்சி மூலமாகவும் பார்க்க முடிகிறது. அதிகாலை ஒவ்வொரு தொலைக்காட்சியிலும், யாராவது ஒரு மஹான் அல்லது குருஜி, மக்கள் மத்தியிலே சத்சங்கம் நிகழ்த்திக் கொண்டிருப்பதைக் காணலாம்.

    இன்றைய காலகட்டத்தில் நடத்தப்படும் சத்சங்கங்களுக்கும், பண்டைய காலத்தில் நடத்தப்பட்டவைக்கும் இருந்த வேறுபாடு என்னவென்றால், பழங்காலத்தில் எவ்வித பலனும் இன்றி நேர்மையோடும், நாணயத்தோடும் சத்சங்கம் நடத்தினார்கள், ஆனால் இன்று அப்படி இல்லை, நம் கையில் கொஞ்சம் நாணயம்(பைசா)  இருந்தால்தான் இது போன்ற மஹாசத்சங்களில் பங்கேற்க முடியும் என்பதற்கு, தலா 200 ரூபாய் கொடுத்து வாங்குகின்ற நுழைவுச் சீட்டே ஆதாரம். கலந்து கொண்ட பிறகு பணவிஷயம் மேலும் தொடரலாம் என்பது நுழைவுச் சீட்டின் பின்புறம் மிகச்சிறிய எழுத்தில் படிக்கமுடியாதபடி அச்சடிக்கப்பட்டிருக்கும்.

    கோடானு கோடி மக்களுக்கு மானசீக குருவாகத் திகழ்ந்த ஸ்ரீஆதிசங்கரர், தனது வாழ்நாள் முழுவதும் உஞ்சவிருத்தி செய்த படியே சத்சங்கம் நிகழ்த்தியதாகவும், சத்சங்கத்தின் அருமை, பெருமைகளை தனது பஜகோவிந்தத்தில் நிறைய இடத்தில் குறிப்பிட்டு இருப்பதாகவும் ஒரு நூலில் படித்திருக்கிறேன். இன்று பொருளாதார வசதியில்லாதவர்களுக்கென்றே, நகரத்தில் சில இடங்களில் நித்திய சத்சங்கள் நடத்தப்படுகிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. போதிய இடவசதி இல்லையென்றாலும், சாலையோரத்தில் ஓரமாக நின்று கொண்டு, நல்வாழ்க்கைக்கு வேண்டிய அறநெறிகளையும், தத்துவங்கள், போதனைகள் போன்றவற்றைப் பெற்றுவிடமுடியும்.

    சத்சங்களில் கலந்து கொள்வதால் என்ன பலன்?…என்று கேட்கிறவர்களுக்கு!….இறுகிய மனது இளகி, இயல்பான நிலைக்குத் திரும்ப வழி செய்கிறது என்பது மஹான்களின் ஆலோசனை.  அங்கிருக்கும் நிசப்தமான சூழ்நிலை, மெல்லிய இசை, உரை நிகழ்த்துபவரின் கூச்சல் இல்லாத பேச்சு இவையெல்லாம் எந்திரத் தன்மை பெற்ற நம் மனதை சிந்திக்க வைத்து, மனதுக்கு இதமளிக்கிறது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. இதுபோன்ற பல காரணங்களால், மனம் அமைதி பெற்று, மறுபடி செல்லவேண்டும் என்ற ஒரு வித ஈர்ப்பு சக்தியை நம்மிடம் பரவச் செய்யும்.

    ஒரு புத்திசாலிக்குக் கூட சில சமயம் முடிவு எடுக்க முடியாமல் தத்தளிக்கும் நேரம் வருவதுண்டு.  அச்சமயத்தில் அவருக்குச் சரியான பாதை தெரியாமல் விழிக்கும் போது, சாதுக்களும், ஞானிகளும் வழிகாட்டுகிறார்கள். கோடா வெங்கடேஸ்வர சாஸ்திரிகள் நடத்திய ஆன்மீகச் சொற்பொழிவில் வெளிவந்த, இக்கட்டுரைத் தொடருக்கு தொடர்புடைய தகவல் ஒன்றை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

    ஞானிகள் என்றுமே அசத் சங்கத்தை விரும்பாதவர்கள்.  அவர்களுடைய பேச்சு என்றுமே உண்மையானதாகவும், நேர்மையானதாகவும், ஆத்ம ஞானத்தைப் பற்றியே இருக்கும். தனது இயல்பு நிலையிலிருந்து, மனிதன் உயர்வு நிலைக்குச் செல்ல, வாழ்வில் சத்சங்கம் இருக்கவேண்டும், ஆனால் அசத்சங்கம் ஒரு போதும் இருக்கக் கூடாது.

    பொய் பேசும் மனிதனுக்கு மன நிம்மதி என்பது இராது.  ஒரு பொய்யைச் சொல்லி பிறகு அதை மறைக்க பல பொய்களை மேலும் சொல்லி, முடிவில் மன சஞ்சலத்தை அடைந்து அதிலிருந்து வெளிவரமுடியாமல் உழலும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். மன சஞ்சலத்திற்க்கும், மன உளைச்சலுக்கும் ஆளான மனிதன், ஞானிகளின் அறிவுரைப்படி நடந்தால், மனத்தெளிவு பெற்று நல்முடிவு எடுக்கும் நிலையை அடைந்து, மன ஆரோக்கியத்தை எளிதில் பெறமுடியும். ஒரு பலனையும் எதிர்பார்க்காமல், பிறருக்கு உதவி செய்தால், தனக்கு வேண்டிய உதவி பிறரிடமிருந்து தானாகவே வந்து சேரும் என்பதற்கு ஒரு சின்ன கதையையும் சொல்லி இருக்கிறார்.

    ஒரு ஏழை, தினமும் ஒரு ஞானிக்கு உணவளிப்பதைக் கடமையாகக் கொண்டிருக்கிறான். ஒரு நாள் தன்னுடைய மூதாதையர்களுக்குத் திதி கொடுப்பதற்கு தன்னிடம் எவ்வித பொருளும் இல்லாததால், ஞானியிடம் சென்று உதவி கேட்கிறான்.  தன்னிடம் கொடுப்பதற்க்கு எதுவும் இல்லாத ஞானி, ஒரு காய்ந்த சுரைக்காயை அவனிடம் கொடுக்கிறார். மனைவியிடம் விபரத்தைச் சொல்லி வெறுப்போடு, அச்சுரைக்காயைக் வைத்து ஏதாவது செய் என்று சொல்கிறான். வேறு ஒன்றும் கைகொடுக்காததால், இருக்கின்ற சுரைக்காயை வைத்து திதி கொடுத்து விடலாம் என்று நினைத்து, மிகவும் சிரத்தையோடு சுரைக்காயை நறுக்குகிறாள் மனைவி.  அச்சமயத்தில் ஒரு அதிசயம் நிகழ்கிறது. சுரைக்காய்க்குள் இருக்கும் விதைகள், வைரக் கற்களாகப் பளிச்சிடுகின்றன. இருட்டாக இருந்த அவனது வாழ்க்கைக்கு, ஞானியின் தவ சக்தியின் மூலமாக வெளிச்சம் கிடைத்தது. தன்னிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லாத ஞானி, இறைவனின் மூலமாக, நேர்மையோடும், நாணயத்தோடும் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உதவி செய்த ஒருவனுக்கு, உயர்ந்த நிலையை அடைய வழிகாட்டுகிறார். இது கதையாகத் தோன்றினாலும் “பிறருக்கு நீ உதவினால், மற்றவர் உனக்கு உதவுவார்” உண்மையைப் பிரதிபலிக்கிறது.

         தனி மனிதனுக்கு வரும் துன்பங்களுக்கும், அவசர யுகத்தில் அழுத்தம் நிரம்பிய அல்லல் வாழ்க்கைக்கு ஆறுதல் பெறவும், அருமருந்தாகச் செயல்படுவது ‘சத்சங்கம்’ என்ற கூடம். சமுதாயத்தைச் சார்ந்துதான் தனிமனிதன் வாழமுடியுமே தவிர, தனக்காக மட்டும் வாழ்வது என்பது இயலாத காரியம் என்பது சத்சங்கத்தின் விளக்கம். சத்சங்கங்களுக்கு சென்று உங்களுக்கு வரக்கூடிய சங்கடங்கள் சற்று விலகும் என்றும், பெரிய அளவில் வரும் ஆபத்துகள் தவிர்க்கப்படலாம் எனவும் ஸ்வாமி சின்மயானந்தர் அறிவுருத்துகிறார். சத்சங்கங்களில் மூலம் தங்களுக்குக் கிடைத்த அறிய செய்திகளை, இந்நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள இயலாதவர்களுடன் பகிர்ந்து கொண்டால்?….சத்சங்கங்களுக்கு மட்டுமல்லாமல், அதை மற்றவர்களுக்கு தெரியப் படுத்தியவர்களுக்கும் பெருமைதானே?….

    சத்சங்கங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், அதிகாலையில் டிவி சேனல்களைத் திறந்து பாருங்கள். இனிமையான காலை வேளையில்,சத்சங்கங்களில் மனதுக்கு இனிமையான வார்த்தைகளால் சொற்பொழிவாற்றி, ஆன்மிக சம்பத்தப் பட்டசந்தேகங்களுக்கும் விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் அவதாரம் செய்த இடங்களைத் தேர்ந்தெடுத்து, சத்சங்கம் நிகழ்த்துபவர் சிலர்.  இன்னொருவர், நாம சங்கீர்த்தனத்தோடு சத்சங்கத்தையும் சேர்த்து அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டேயிருக்கிறார். வெளிநாட்டவரையும், அண்டை மாநிலத்தவரையும்  ஒன்றாக்குகிறது இந்த சத்சங்கம். சத்சங்கத்தை உதாசீனப் படுத்தாமல், மதிப்பவர்கள் என்றுமே இறைவனுக்கு பிரியமானவர்கள் என்பது மேலே குறிப்பிட்ட அனைவரும் ஒரு மனதாகச் சொல்லும் அறிவுரை.      இவர்களில் சிலர் உலகில் அதிக இடங்களுக்குச் சென்று, மஹாசத்சங்கம் நிகழ்த்தியவர்களும் உண்டு. சைனாவில் சத்சங்கம் நிகழ்த்துவதற்காக, நம்நாட்டு பிரஜைக்கு அந்நாட்டு அரசாங்கம் ஒரு தனி இடத்தையே கொடுத்திருக்கிறது என்பது பத்திரிகைச் செய்தி. இவர்கள் அனைவரையும் விட, முக்கியமாக ஒருவர் சத்சங்கம் மூலம் இந்தியாவை உலகளவில் பிரபலப்படுத்திய பெருமை சுவாமி விவேகானந்தரைச் சாரும்.

    தாம் பெற்ற அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, மறைமுகமாக மற்றவருக்கு உதவி செய்கிறோம் என்று அர்த்தமாகிவிடுகிறது. சத்சங்கம் அதற்குத் உறுதுணையாக நிற்கிறது. ஒரு மனிதன் முழு அளவில் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் ‘சத்சங்கங்களின்’ மூலம் கேட்டறிந்து கொண்டால், அது என்றும் நம் நல்வாழ்விற்கு வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.

    ஒர் அறிவிப்பு::

    இத்துடன் எனது “நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்” கட்டுரைத் தொடர் முடிவடைகிறது. தொடர்ந்து முப்பது (30) கட்டுரைகளுக்கும் மதிப்பளித்து, பொறுமையாகப் படித்து, தங்கள் கருத்துக்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்த அனைத்து எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     

    ******* முற்றும் *******

    Share
  • மனதின் உயரம்….

    பார்வதி இராமச்சந்திரன்

    வாங்க, வாங்க, உள்ளுக்க‌ வந்துருங்க…யப்பா தம்பி ஒன்னத்தே சொல்றாக… பெராக்கு பாத்துக்கிட்டு அப்புறமேட்டு நிக்கலாங்… வாறவுகளுக்கு வளி வேணுல்லா… ‘ கண்டக்டர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். சில திடீர் சமயங்களில், வெறும் நாலு இட்லி சாப்பிட்டதற்கே வயிறு நிரம்பி எருக்களிப்பது போல், விசேஷ நாள், விடுமுறை நாள் இல்லாத இன்று கூட ஏகக் கூட்டம் பஸ்ஸில். பிதுங்கி வழிந்தது.

    தாமரை, மல்லிகாவின் மடியிலிருந்து கொண்டு என்னைப் பார்த்து சிரித்தாள். வாயில் எச்சில் ஒழுக, என்னைப் பார்த்து, ‘ங்கா….’ என்றாள். ‘ப்ப்…’ என்று ஏதோ சொல்ல முயற்சித்து அது ‘ப்ரு’ வாகியது.

    ஏதோ சொல்ல வாயெடுத்த மல்லிகா, என் முகம் பார்த்து ‘கப்சிப்’ ஆனாள். ரயிலில் ரிசர்வேஷன் கிடைத்த பிறகு போகலாம் என்ற என்னை வற்புறுத்தி, கிடைத்த பஸ்ஸில் கிளம்பியே ஆக வேண்டும் என்று கிளம்ப வைத்தவள் அவள். ஜன்னலோர ஸீட்டில் அவளும் தாமரையும். நடுவில் நான். எனக்கடுத்தாற்போல் ஒரு சின்ன வயசுப் பையன். கிட்டத்தட்ட நெருக்கிக் கொண்டு அமரும் நிலை. கசகசவென்றிருந்தது. கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு மூச்சு வாங்கிய போது, நெருக்கடி பஸ்ஸில் மட்டும் அல்ல, மனதிலும் என்று புரிந்தேன்.

    என்னைப் பற்றிய செய்திச் சுருக்கம் முதலில். ஒரு விபத்தில் அப்பா, அம்மா இருவரும் மரணிக்க, காலன் கைக்குத் தப்பிய கைக்குழந்தையாய் இருந்த என்னை, என் அம்மாவின் தங்கையும் அவர் கணவரும், எனக்கும் என் சொத்துக்களுக்கும்(ஒன்றும் பெரிதில்லை. கொஞ்சம் ரொக்கம், என் அம்மாவின் ஏராள நகைகள், ஒரு வீடு மட்டும்) ஊரார் நியமித்த காப்பாளர்களாக இருந்து வளர்த்தெடுத்தனர். குழந்தையில்லாதிருந்த அந்த இருவரும், என் வீட்டுக்கே தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்டனர். என் அம்மாவின் நகைகளை போட்டுக் கொண்டு, என் சித்தப்பாவின் தங்கை புகுந்த வீடு போனார். பெட்டியிலிருந்த ரொக்கம் ‘காக்கா ஓஷ்’ ஆகியதாகக் கேள்வி .

    நான் கிட்டத்தட்ட பத்து வயதாகியிருந்த போது என் சித்தி, காலம் தப்பிப் பெய்தாலும் கழனி விளைவிக்கும் மழை போல் உண்டானாள். முதலில் சுதாவும் அப்புறம் இரு வருடங்களில் ஹேமாவும்.

    இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையாக இருந்த நான் ஒரிஜினல் சர்க்கரை வந்ததும், ஹாஸ்டலுக்கு மாற்றப்பட்டேன்.

    முதலில் கிட்டத்தட்ட வாழ்க்கையே வெறுப்பு மயமாகத் தான் இருந்தது. நண்பர்கள் என்னும் நல்லுறவுகள், என் வெறுமையை இட்டு நிரப்பி, எனக்கு எல்லாமுமாகினர். படிப்பு என்னை முழுமையாக ஆக்ரமித்தது. கவனம் முழுதும் அதில் குவிய,  பாராட்டுகள் தேடி வந்தன. பள்ளி, கல்லூரி இரண்டிலும் ‘ஸ்டார்’ ஆனேன்.

    கல்லூரியில் சந்தித்தவள் தான் மல்லிகா. பரஸ்பர அறிமுகம், நட்பு என்றெல்லாம் கதை விட எண்ணமில்லை. பளீரென பளிச்சிடும் அழகும் நிறமும் தான் என்னை முதலில் ஈர்த்தன‌. ‘என்னா அழகுடா, யாருக்கு அதிர்ஷ்டமோ’ என்கிற மாதிரியான புகழுரைகள் காதில் பட்டுப்பட்டு, அவள் பார்வையில் படுவதே கதிமோட்சம் போல் ஆகி, கிட்டத்தட்ட ஆண்கள் எல்லோரும் பித்துப் பிடித்துக் கிடந்தது தெரியும். அதனாலேயே அவள் என்னைப் பார்க்க ஆரம்பித்து, பேச ஆரம்பித்த போது, இரண்டடி உயரமாய் உணர்ந்தேன். தன் காதல் சொன்னதும் கனவில் மிதந்தேன்.

    ‘ஆளும் தோரணையும் நிச்சயமா பெரிய எடத்துப் பொண்ணு மாதிரி தான் தெரியுது மாப்ள… படக்குனு புடிச்சு செட்டிலாயிரு. ஒங்கப்பா காச ஒன் விதி எடுத்துக்கிட்டாலும், எப்படி திருப்புது பாத்தியா…’ என்று  ஏகத்துக்கும் நண்பன் ஏத்திவிட, ‘பொன்மகள் வந்தாள்’ பாடலை விஜய் ரேஞ்சில் ரீமிக்ஸில் பாடித் திரிந்தேன். மல்லிகாவை ஜொள்ளு விட்டவர்களெல்லாம், கண்களால் எனை எரிக்க, கழுத்து நிமிர்த்திய வெடைக்கோழியாய் அலைந்தேன்.

    ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது, நான் மெல்ல,’ ஒங்கப்பா பிஸினஸா பண்றாரு?’ என  ஆரம்பித்த போது தான்  அவளும் என்னைப் போல அதாவது பெற்றோர் அற்றவள் எனத் தெரிந்தது. எனக்கிருந்த அளவுக்கு சொத்து மட்டுமல்ல, இனிஷியல் கூட  இல்லாதவள் எனத் தெரிந்தது. ஒரு ஆஸ்ரமம் அவளை வளர்த்தெடுத்து, அவள் நன்றாகப் படித்ததால், ஒரு பெரிய மனிதர் உதவியுடன் கல்லூரியில் சேர்த்திருந்தது.

    ‘ஆஸ்ரமத்தை நடத்திட்டுருக்குற ஐயாவும் அம்மாவும் தான் எங்களுக்கு அப்பாவும் அம்மாவும். நானு இத யாருட்டயும் சொல்லல. அப்பாம்மா ஊருல இருக்காங்களான்னு கேட்டா ஆமான்னுருவேன். ஊரு பேரக்கேட்டா, ஆசிரமம் இருக்குற ஊரு பேர சொல்லுவேன். இத சொல்லுறது, எம்மேல தேவையில்லாத பரிதாபத்த ஏற்படுத்திருமோன்னு ஒரு பயம்’ என்றாள்.

    ‘சட்டி சுட்டதடா’ என்று காதருகில் ஒரு குரல் பாடினாலும், அடி மனசில் இருந்த ஏதோ ஒன்று, அது நிச்சயம் காதல் தானா என்று சொல்வதற்கில்லை. ‘நம்மைப் போல் ஒருவள்’ என்ற உந்துதலா, ‘காசில்லைன்னதும் கழட்டி விட்டுட்டான்’ என்ற ஏச்சுக்குப் பயந்தா, பெண்பாவம் பொல்லாது என்று மனதின் ஆழத்தில் ஊறியிருந்த நம்பிக்கை காரணமா ஏதென்று தெரியவில்லை. கைவிட மனமின்றிக் காதலைத் தொடர்ந்தேன்.

    ஒரு முறை, லீவுக்கு ஊருக்குப் போயிருந்த போது, சித்தியிடம் என் காதலைச் சொன்னேன்.

    ‘யாருமில்லாதவளா அந்தப் பொண்ணு?, ஒன் சித்தப்பா ஒனக்கு என்ன மாதுரி பொண்ணு பாத்து வச்சுருக்குறாங்கன்னு தெரியுமா?’

    ‘அதனால என்ன, நானும் அது மாதுரிதான’ என்றவன் அத்தோடு நிறுத்தியிருக்கலாம். வாய்க்கொழுப்பு, கிரகக் கோளாறு எல்லாமாகச் சேர்ந்து, ‘ஏன், எங்கப்பாம்மா காசு, நக எல்லாம் போதாதா?, எனக்கு வார வரதட்சணை வேற வேணுமாக்கும்’ என்று விட்டேன்.

    சித்தி வெறித்துப் பார்த்தாள். கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்து விட்டுப் பிறகு, ‘ஒன் இஷ்டம்,  ஆனா அதுக்கப்புறம் இந்தப் பக்கம் வந்துராத’  என்றாள்.

    ‘வீட்டயும் வாயில போட்டுக்கவா’ என்று கேட்க நினைத்து, ஏனோ கேட்கவில்லை. கல்லூரிப் படிப்பின் கடைசி வருடம் அது. அதன் பின், கேம்பஸில் கிடைத்த வேலையில் சேர்ந்து, நண்பர்கள் சூழ மணம் முடித்து, தாமரை பிறந்து என மளமளவென வருடங்கள் மூன்று ஓடி விட்டன. எங்கள் இருவருக்கும் நல்ல வேலை. ‘டே கேர் சென்டரில்’ தாமரையை சீராட்டியபடி எங்கள் வாழ்க்கை,  லோனில் வாங்கிய ஃப்ளாட்,  பைக் சகிதம் ஓடிக் கொண்டிருந்தது.

    மல்லிகா, அடிப்படையில் உறவுகளுக்கு ஏங்குபவள். ‘ஒங்க சித்திக்கு என்னப் புடிக்குமா’ என்று காதல் காலத்தில் கோடி முறை திரும்பத் திரும்ப வினவியவள். ‘வெயிட் பண்ணலாம்பா’ என்று பல முறை சொல்லிப் பார்த்து, என் பிடிவாதத்துக்காக திருமணத்துக்கு ஒத்துக் கொண்டவள். அதன் பிறகு பலமுறை,  தாமரை பிறந்த பிறகும் கூட, ‘ஊருக்கு ஒருவாட்டி போயிட்டு வரலாம்பா’ என்று நச்சரித்தேயிருப்பாள்.

    அந்தச் சந்தர்ப்பம் விதி வழியே வந்து சேர்ந்தது. திடீர் ஹார்ட் அட்டாக்கில் சித்தப்பா மரணிக்க, சித்தியும் குழந்தைகளும் தனியாகியிருக்கிறார்கள். சித்தப்பாவுக்கு தனியாரில் வேலை.  சித்திக்கு சித்தப்பாவே உலகம். என்ன சம்பளம், என்ன சேமிப்பு என மனைவிக்கு எதையும் சொல்லாத ஆணாதிக்க சித்தப்பா.

    அவர்கள் நிலை கண்டு இரங்கிய என் உள்ளூர் நண்பன், என் கூடப் படித்தவனைத் தொடர்பு கொண்டு, அவனிடம் இருந்து என் முகவரியை வாங்கி, என்று  என்னைத் தேடிக் கண்டடையும் ரிலே ரேஸ் முடிந்த நேரத்தில், சித்தப்பா சிவலோகப் பதவி அடைந்து முழுசாய் ஒரு மாதம் ஆகியிருந்தது.

    ஏனோ எனக்கு எந்த வித பரிதாப உணர்வும் ஏற்படவில்லை. சித்தி என்ன செய்வாள் என்று தோன்றவில்லை. போனால், நம் தலையில் சுமையாக ஏறிவிட்டால் என்ன செய்வதென்றே தோன்றியது.

    ‘என்னருந்தாலும் ஒங்கள வளத்தாங்கல்ல. தூக்கியா போட்டாங்க?. நல்லா படிக்க வச்சாங்கல்ல?.  ஒங்க நெனப்பு தப்புங்க, போய் ஒரு எட்டு பாத்துட்டு வரலாம். முடிஞ்சா அவங்கள கூப்புட்டுட்டு வந்துரலாம். சித்திக்கு எங்கயாவது சின்னதா வேல வாங்கிக் கொடுக்கலாம். பொம்பளப் புள்ளங்கள வச்சுட்டு என்ன பண்ணுவாங்க பாவம்’   என்றவளை,  எப்படி முயன்றாலும் வாயடைக்க முடியவில்லை. கடைசி அஸ்திரமாக, ‘நமக்கும் ஒரு பொண்ணு இருக்கு பாத்துக்குங்க’  என்றதும், வாழ்வின் நிலையாமை எனக்கும் சேர்த்துத் தான் என்பது உறுத்த,  மீற முடியாமல், மனாசாகா மனசோடு இதோ கிளம்பியிருக்கிறேன். சும்மா பார்த்து விட்டு வந்து விடலாம். அப்புறம் தொடர்பு கொள்வதாகச் சொல்லி விட்டு, உடனே கிளம்பி விட வேண்டும் என்பது என் திட்டம்.

    ‘ஏம்ப்பு..  செத்தவடம் நகந்துக்கிருவீக….., கொஞ்சோணு,  நானு ஒண்டிக்கிருவேன்..’ கணீரென்ற குரல் கேட்டு, கலைந்து நிமிர்ந்தேன். 45, 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், கையில் பெரிய கூடையோடு நின்றாள். என் பக்கத்திலிருந்த பையன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தான். அவள் ஒண்டிக் கொள்ள வேண்டுமானால், இடத்தையே கொடுத்தாக வேண்டும். கையில் சுமை  வேறு. செய்வதறியாமல் எழுந்து நின்றான்.

    ”மன்னிச்சுக்க தம்பி, கூடய வச்சுக்கிட்டு நிக்க முடியல. தப்பா நெனக்காதீக, மகராசனா இருங்க..’ என்று பையனை வாழ்த்திவிட்டு, ‘ஆத்தி… நீயி செத்த இங்கிட்டு வந்துருப்பா, தம்பி அங்கிட்டு போயிக்கட்டும்…’ என மல்லிகாவிற்கு உத்தரவிட்டாள். மல்லிகா, சட்டென தாமரையை என் மடியிலிருத்தி எழுந்து விட, வேறு வழியில்லாமல், நான் ஜன்னலோரம் நகர்ந்தேன். சற்று இறுக்கம் குறைந்தவனாக உணர்ந்தேனாயினும் அந்தப் பெண்ணின் தோரணை என்னை எரிச்சல்படுத்தியது. நன்றாக உட்கார்ந்து கொண்டு, வெற்றிலை காவியேறிய பற்களால் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

    ‘பக்கத்தூருல திருளா, சோலி இருக்குன்னு சொன்னாக… வந்தேங்…. தேர்க்கூட்டம் திருநாக்கூட்டமுன்னா சும்மாவா… கெளம்புறதண்டிக்குங் கூட்டந்தே.. ஒரு பஸ்ஸூ கெடைக்கல. எங்கூருக்கு ரண்டு பஸ்ஸூ மாறணுமுண்டாக. அங்கிட்டுருந்து இங்கிட்டு வந்து இந்த பஸ்ஸ புடிச்சே… இன்னுமேட்டு தொக்கூருல ஒருவாட்டி மாறணு.. நீங்க எங்கிட்டு போறீக?….’.

    நீளமாகப் பேசி நிறுத்தியவளை பார்க்கக் கடுப்பாயிருந்தது. என்ன இது, கொஞ்சங்கூட இங்கிதமில்லாமல்’ என்று தொடர்ந்த சிந்தனையை நிறுத்தியது மல்லிகாவின் பதில். ‘நாங்களுந் தொக்கூருதான் இறங்கணும்’.

    ‘அப்புடியா, நல்லதாயிருச்சு,    நானு கொங்கணியாபுரம் போணும். தொக்கூரு பஸ் ஸ்டாண்டுல நிக்கும் கொங்கணியாபுரம் பஸ்ஸூ’.

    ‘ஆமாங்க‌….சேந்தே எறங்கிரலாம்’ என்ற மல்லிகாவை பார்வையால் எரித்தேன். கொஞ்சங் கூட முன்யோசனையில்லாமல், பார்ப்பவர்களிடமெல்லாம் சொந்தம் கொண்டாடும் அவளைப் பார்க்கப் பற்றிக் கொண்டு வந்தது.

    ‘ஒங்க புள்ளையா… என்னா பேரு’

    ‘தாமரை’

    ‘நல்ல பேருதே… எப்பா கண்டக்டரு தம்பி, இங்கிட்டு தொக்கூருக்கு ஒரு சீட்ட குடுத்துவுடுங்க…’ பணத்தை முன்னிருப்பவர் மூலம் கண்டக்டருக்குக் கடத்தினாள். சீட்டு வாங்கியதும் சொல்லி வைத்தாற்போல் பஸ் கிளம்ப, கூடையை மூடியிருந்த துணியை விலக்கி, கவர்களைப் பிரித்து, பூக்களை எடுக்க வசதியாக கவர்களின் ஓரம் சுருட்டி மடித்தாள். நூல் கண்டு எடுத்து நுனி தேடினாள். மளமளவென்று, ஒவ்வொரு கவரில் இருந்தும் ஒவ்வொரு வகைப் பூவை எடுத்து, சேர்த்துத் தொடுத்தாள். கண் முன்னே விரியும் வண்ணக் காட்சி போல் கதம்பம் உருவானது.

    பூவைப் பார்த்து முகம் மலர்ந்தாள் தாமரை. ‘ஹீஇ…’ என முன்னிருந்த இரண்டு பற்களைக் காட்டிச் சிரித்தாள். கைகளைத் தட்டினாள்.

    ‘ஏம் பாப்பா, பூ தாரே… தலெல‌  வச்சுக்கிறியா…’  முடி வளராத‌ அவள் தலையைப் பார்த்துக் கேட்க, புரிந்தது போல் மீண்டும் சிரித்தது குழந்தை.

    ‘பூ விக்கவா திருவிழாவுக்கு வந்தீங்க..?’

    ‘இல்லத்தா… பூப்பல்லாக்கு சோடிக்க கூலிக்கி வந்தே… எங்க ஊரு சின்னது. வெள்ளி செவ்வா, நாளு கெளம வந்தாத்தா கொஞ்சமாச்சு ஏவாரம் நடக்கு…… அக்கம்பக்கத்து ஊருல திருநா, சந்த, வந்தாத்தே நாலு காசு மீறு….   சாமி சோடன செய்யிறவக கூடமாட ஒத்தாசக்கி, பூக்கட்டக் கொள்ள எங்கள மானி(மாதிரி) பூக்கட்டறவுகள‌ கூப்புடுவாக. செஞ்சு குடுத்துட்டு, கூலியோட கூலியா அவுக கிட்டயே கொஞ்சப் பூவ உதிரியா கொறச்சு வெல வச்சு வாங்கிக்கிடுவோம். போற வார ஊரு நடுவுல கெட்டி வித்துப்புடுவோம். இப்ப அப்படித்தே வாங்கியாறே…, கெட்டி முடுச்சது இந்தப் பஸ்ஸூல இல்லாட்டி, தொக்கூரு பஸ் ஸ்டாண்டுல பூ விக்கிறவுக கிட்ட மொத்தமா வித்துப்புடுவே…’

    எனக்கு, ‘அத்தனை பூவையும் நானே வாங்கிக் கொள்கிறேன்’ என்று என் மனைவியாகப்பட்ட ‘வள்ளி’(வள்ளலுக்குப் பெண்பால்) சொல்லிவிட்டால் என்ன செய்ய‌ என்று பயம் வந்து விட்டது. அவர்கள் பேச்சில் நானும் கலக்கும் முகமாக,

    ‘ஒங்க புள்ளங்க வேல பாக்குறாங்களா?’ என்றேன்.

    ‘இல்லப்பு… ரண்டு பொட்டப்புள்ளெக… ஒண்ணு மூணாப்பு, இன்னொண்ணு ரண்டு படிக்குதுக….’

    ஆச்சரியமானேன். முன் உச்சியில் நரை திரண்டிருக்கும் இவளுக்கா சின்னக் குழந்தைகள்?. ஒரு வேளை சித்தி போல், வருடம் கடந்து பிறந்திருக்குமோ!!! சிந்தனை ஓடியது.

    மல்லிகா ‘புள்ளகள யாருட்ட விட்டுட்டு வ‌ந்திருக்கீங்க?’ என்றாள்.

    ‘தங்கச்சிட்ட..’

    ‘ஒங்க வீட்டுப் பக்கத்துலயே இருக்காங்களா?’

    ‘இல்லல்ல‌… ஒண்ணாத்தே இருக்குறோ…..’

    ‘அவங்களும் பூ விக்கிறாங்களா?’

    ‘இல்ல..  வூட்டுல புள்ளகளப் பாத்துக்குர்றா….’

    ‘ஓஹோ… அவங்களுக்கு எத்தன பசங்க?’

    ‘அதாஞ் சொன்னேனே… ரண்டு பொட்டப் புள்ளக…’

    திடீரென்று ஒரு இறுக்கம் கவிந்தாற்போல், பேச்சு திசையறியாமல் நடுவழியில் நின்றது. எனக்கு நிச்சயம் அவள் சொன்னதன் கோர்வை புரியவில்லை.

    என் நினைப்பு அந்தப் பூக்காரப் பெண்மணிக்குப் புரிந்திருக்கும் போல. அனிச்சைச் செயல் போல் பூக்கட்டிக் கொண்டே, எங்கோ வெறித்த பார்வையுடன் பேசலானாள்.

    ‘நாந் தங்கச்சின்னது எம் புருசெ ரண்டாவது சம்சாரத்தப்பா.  நாங் கல்யாணங் கெட்டுனது எந் தாய்மாமனத்தே. கொடுப்பின உள்ளவுகளுக்குத் தே கொலசாமி வரமா புருசங் கெடக்குன்னு சொல்லுறது அம்புட்டும் நெசந்தே. அவருக்கு ஆசன்னா ஆச அம்புட்டு உசுரு எம்மேல. வாளப்பள ஏவாரம் பாத்தாரு எங்கூட்டுக்காரரு. நானு மாடு வச்சு பாலு கறந்து விப்பே…. கூலிக்கி பூக்கெட்டிக் கொடுப்பே.., நாலு காசு சேர்த்து சின்னதா ஒரு  வூடு கூட கட்டுனோ.., வூடுன்னா என்னா.. நாலு சொவரு, ஒரு கூர, நடுவுல தடுத்து ஒரு சமயக்கட்டு, அம்புட்டுதே….. ஆனா சந்தோசமாயிருந்தோ நாங்க‌… ஒரே ஒரு கொற… ஒரு புள்ள இல்ல… கும்புடாத சாமி இல்ல, பண்ணாத வைத்தியமில்ல. ஒருவாட்டி டவுனு ஆசுபத்திரில, டாக்டரம்மா, என்னய படுக்க வச்சு, மொக்க மொக்கயா மிசினு வச்சு போட்டாப்படமெல்லா புடிச்சாக. எனக்குத் தே கொற அப்படின்னுட்டாக கடசியா..’

    அவள் முகத்தையே பார்த்தாள் மல்லிகா.

    ‘அன்னிக்கி நா அளுதேம்பாருத்தா அப்படியொரு அளுக… எங்கூட்டுக்காரரு, அதுனால என்னா இப்ப?, எனக்கு நீ கொளந்த, ஒனக்கு நா கொளந்த அப்படின்னுட்டாரு.. மேக்கொண்டு வைத்தியமெல்லா பாக்கலான்னாக, கொள்ளக் காசு கட்டச்சொன்னாக‌, எங்கூட்டுக்காரரு வேணான்னுட்டாரு.’

    ‘ஒரு வருசம் போல ஆச்சு… தெருஞ்சவுக வீட்டுல விசேசன்னுட்டு வெளியூரு போனாரு .. போயிட்டு வந்ததுலருந்து எங்கூட்டுக்காரரு ஆளு செரியில்ல. ஒருமானி இருந்தாரு. நாங்கேட்டு கேட்டுப் பாத்தே.. ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்லன்னாரு. ஒரு நாளு, ஒரு ஆளு வீட்டு வாசல்ல வந்துட்டு எங்கூட்டுக்காரரு பேரு சொல்லிக் கேட்டாரு. நானு ஏவாரம் பாக்கப் போயிருக்காருன்னேன். ‘ஏம்மா, பொண்ணக் கெட்டிட்டு கெட்டுன ஊருலய விட்டுட்டு வந்துட்டாரே ஒம்புருசே.. நாங்க அங்க ஊருல எம்புட்டு நாளு பொண்ண வச்சுருக்க?’ ன்னு கேட்டாரு பாக்கணுமே…எனக்கு மயங்கியடிச்சுருச்சு..’

    ‘வந்தவரு மக்கா(மறு) நாளு வாரேன்னுட்டு போயிட்டாரு. நா இடி விளுந்த மானி ஒக்காந்திருந்தே. ஆனாலு மனசு சொல்லிச்சு அப்படியிருக்காதுன்னு. எங்கூட்டுக்காரரு ஏவாரம் பாத்துட்டு வந்தாரு. நாங் கேட்டே……..ஆமான்னாரு..’

    நிறுத்தினாள். எச்சில் கூட்டி விழுங்கினாள். ‘நிக்கிற தரைய தடார்னு புடுங்கி நவத்திப்புட்டா என்னா மானி இருக்குஞ் சொல்லுங்க? .    அப்படித்தேயிருந்திச்சு எனக்கு. என்ன செய்யிறதுன்னே புரியல. நெனப்பு தப்பிப்போச்சு. கொஞ்ச நேரமாச்சு வெவரமெல்லா வெளங்க’.

    ‘அதுக்குள்ள அவுரு கொஞ்சங் கொஞ்சமா எல்லாஞ் சொன்னாரு. பங்காளிப் பய, எங்க கொறைய பெரிசு பண்ணி அவர அசிங்கமாப் பேசீட்டான்னு மனசு வெந்து போயி, சேக்காளிப் பய பேச்சக் கேட்டு, அசலூருல போயி, பொண்ணு கேட்டுருக்காரு. அவுக கஞ்சிக்கே அலமோதுற குடும்பம். ஒத்தங் கெட்டுனா போதுன்னு நெலம. அவுககிட்ட எல்லா வெவரத்தையுஞ் சொல்லி, ‘எம் பொண்டாட்டி ரொம்ப நல்லவ. அவ கூடத்தே இருக்கணு, அவள அனுசரிக்கணுன்னெல்லா சொல்லி, அவுக சம்மதிச்சு, அந்த‌ ஊரு கோயில்ல தாலி கெட்டியிருக்காரு. எங்கிட்ட சொல்லீட்டு வந்து கூட்டிப் போறமுன்னு அவுக கிட்ட சொல்லி, அந்தப் பொண்ண அங்கனகுள்ளாறவே விட்டுப்புட்டு வந்துட்டாரு. எங்கிட்ட சொல்ல ரோசன பண்ணிட்டு இருந்திருக்காரு, ரம்ப நாளு ஆச்சின்னது, அவக ஊரு ஆளு கேட்டு வந்துருக்காரு.’.

    ‘நாம் போயி கூட்டு வாரே…. ஒரு மாசம் பாரு, சரிப்பட்டுச்சுன்னா சேந்து இருங்க, இல்லாட்டி வேற வீடு பாத்து வச்சுர்றே.. ஒனக்கு ஒரு கொறையும் வர வுட மாட்டேன்னாரு’.

    ‘எனக்கு எஞ்சொத்தே போன நெலம. என்ன செய்யன்னு தெரியல. பொறந்த வூட்டுக்குப் போயி அசிங்கப்பட முடியாது. வேற எங்க போக முடியு?.. அங்கனக்குள்ள தான இருந்தாகணு!!… எனக்கு மனசு ஆறல. இதுவே அவருக்கிட்ட கொற இருந்தா நா வுட்டுட்டிருப்பனா? என்னன்னாலு அவரு செஞ்சது பச்சத் துரோகம். ஆனா அதுக்கு வந்தவ என்ன பண்ணுவா?. அதும் நல்ல பொண்ணு. ஆனாலு மனசு கேக்காம, புடிப்பில்லாம திரிஞ்சே… எங்கூட்டுக்காரரு மேல இருக்குற கோவத்த நானு அவ மேல காட்டக் கூடாதுன்னு புடி சாதனயா இருந்தே.. எம்பாட்டுல வேல செய்வே… தோணிச்சுன்னா  சோத்தப் போட்டுத் தின்னுவே … இப்புடி நாளு ஓடுச்சு.

    கொஞ்ச நாளுல வந்தவ உண்டானா. மொதப்புள்ள பொறந்துச்சு. எடுத்துட்டு வந்து எங்கையில தே கொடுத்தாக மொதல்ல. எந் தங்கச்சி, ‘நாம் பெத்தாலும் புள்ளக்கி அம்மா அவுக தே’ண்டு சொல்லீட்டான்னாக. எனக்கு போன உசுரு திரும்ப வந்துருச்சு. மறு வருசமே அடுத்ததும் பொறந்துருச்சு. ரண்டு புள்ளங்களும் என்ன  அவுகளோடவே இறுக்கி வச்சுருச்சுக’.

    ‘ஆனா காலக் கொடும இருக்கு பாராத்தா, ரண்டாவது பொறந்து மூணு மாத்தைக்கெல்லா(மாசத்திற்கெல்லாம்) அவுரு நெஞ்சப் புடிச்சுட்டு சாஞ்சுட்டாரு. பெரிய பெரிய ஆசுபத்திரிக்கெல்லா கொண்டு காட்டுனோ….இருதயத்துல அடப்புண்டாக. கொள்ளக் காசு கேட்டாக ஆபரேசனுக்கு. எனக்கு ஈரக்கொல நடுங்கிருச்சு. தாலி தப்புச்சா போதுண்டு,  வூடு மாடு எல்லாத்தயும் வித்தே…, காசு கேக்குறப்பல்லா கொடுக்க சொல்ல நல்லாப் பேசுன டாக்டருக,  பணங்கெடக்காம நாங்கொஞ்சம் தவக்கம் காட்டவும் கடுத்துப் பேசுனாக’.

    ‘இந்தப் பாளாப் போன ஒலகத்துல, நல்ல மருந்து, படிப்பு , மூணு வேளயு நல்ல சோறு இதையெல்லா, எங்கள மாதிரி பாவப்பட்ட சனங்க கனவுலதே பாக்க முடியு. காசிருந்தாத்தே எல்லா பவுசுங்… ஏள உசிரு சல்லி பெறாது. எம்புட்டு கவருமெண்டு வந்தாலு இத மாத்த முடியாது. மாட்டாக. இது எனக்குப் புரியும் போது எங்கூட்டுக்காரரு இந்த ஒலகத்துல இல்ல. சாவுக்கு வந்தவுக, ‘நீ பாட்டுக்கு ஒம்பாட்டப் பாரு, அதுக்குதே பெத்தவுக இருக்காகல்ல. அவுக பாப்பாக. நீ விட்டுரு. நாடு கெடக்குற கெடையில நக நட்டு போட்டு ரண்டு பொட்டப்புள்ளகள கெட்டிக் கொடுக்க ஆகுமாண்டு  யோசி’ன்னாக. எந் தம்பியு அதத்தே சொன்னா….’

    ‘எங்கூட்டுக்காரரு ஒரு புள்ளக்கி ஆசப்பட்டு எங்கிட்டக்கூட சொல்லாம ரண்டாவது கெட்டினாரு. ஆனாப் பாரு, பெத்த புள்ளங்கள வளக்க அவுரு ஆள் இல்ல. எந் தங்கச்சி வெள்ளந்திப் பொண்ணு. பெத்தவுக வயசானவுக. அவ ரண்டு பொட்டப்புள்ளங்கள வச்சி எங்க போவா பாவம்?. அவர எடுத்துட்டுப் போன ஒடனே மூத்தது ஓடி வந்து எங்காலக் கெட்டி அளுதுச்சு. அதுகள விட்டுரவா நானு?. நம்மளப் பத்தி நெனச்சு இன்னுமேட்டு என்னாகணு?, இருக்குறவரக்கு அதுகளுக்காக இருந்துருவோம்னு தெயிரியப்படுத்திட்டே’.

    ‘ எம் புள்ளக, கவருமெண்டு பள்ளியொடத்துல தே படிக்குதுக..  நல்லா படிக்குதுக. எப்பாடு பட்டாச்சு…….,எம்புள்ளகளப் பெரிய படிப்பு படிக்க வச்சுரணுமத்தா… எங்க நெலம அதுகளுக்கு வரக் கூடாது.  படுச்சு பெரிய வேலக்குப் போயி, நல்ல நெலமக்கு வரணு. எங்கள மாதுரி பாவப்பட்ட சனத்துக்கு அதுகளால முடுஞ்சத செய்யணு. அதுக்குதே எங்க சோலின்னு கூப்புட்டாலு ஓடீருவே…நா வெளியூரு போனா, ஏ வூட்டு அக்கம்பக்கத்துல இருக்குறவுக,  எந் தங்கச்சிய பாத்துக்கிருவாக. அதனால ஒரு பயமெல்லா இல்ல…காசு சம்பாரிக்கலன்னாலும் மனுசாளுக சம்பாரிச்சு வெச்சுருக்கே…. ‘.

    அவள் பேசப்பேச எனக்குள் ஏதுவோ விழுந்து நொறுங்கியது. என்னை யாரோ  முச்சந்தியில் நிற்க வைத்து, விளாசியதாக உணர்ந்தேன். ‘என்ன மனசு…, என்ன மனசு இந்தப் படிக்காத பெண்ணுக்கு?, துரோகம் செய்த கணவன் பெற்ற பிள்ளைகளை, பண பலமோ மற்ற வித ஆதரவுகளோ இல்லாத இந்தப் பெண், எவ்வித சுயநலமோ, எதிர்பார்ப்புகளோ இல்லாமல், பொது நல நோக்குடன் வளர்க்கிறாள். ஆனால் நான்?. ‘என் பணத்தை எடுத்துக்கொண்டுதானே வளர்த்தார்’ என என் சித்தப்பாவை நினைத்தேனேயன்றி, எனக்கு உணவு, உடை, படிப்பு முதலியவற்றுக்கு ஒரு குறையும் வைக்காமல் தானே வளர்த்தார் என நினைக்கவில்லை. முள்ளைப் பார்த்து விட்டு, ரோஜாவைப் பார்க்கத் தவறிவிட்டேன்.  அவர் பெற்ற, என் தங்கைகளின் பொறுப்பை ஏற்பதை சுமையாக நினைக்கிறேன். என் படிப்பு எனக்கு இதையா கற்றுத் தந்தது?

    விடுவிடுவென என் மனதிற்குள்  அந்தப் பூக்காரப் பெண் விஸ்வரூபமெடுக்க,  நான் அவள் முன் மிக அற்பமாய் உணர்ந்தேன்.

    ‘மல்லிகா, என் ஃப்ரெண்டு எழுதின லெட்டர் ஒன் ஹேண்ட் பேக்குல தான இருக்கு? அத எடு’ என்றேன். எதுவும் புரியாமல், லெட்டரை அவள் எடுத்துக் கொடுக்க, அதிலிருந்த நண்பனின் எண்ணுக்கு என் கைபேசியை எடுத்துப் போன் செய்தேன்.

    ‘ஆமாண்டா, ரெண்டு நாள் முன்னாடி தான் ஒன் லெட்டர் கெடச்சு வெவரம் தெரியும். தோ லீவு கெடச்ச‌ ஒடனே பொறப்புட்டாச்சு. மதியத்துக்குள்ள வந்துருவேன். சித்தில்லாம் அங்க தான இருக்காங்க?.  முடிஞ்சா நான் வந்துட்டிருக்கேன்னு போய்ச் சொல்லு. என்ன?. அ, ஆமாமா, எங்கூட‌ கூட்டிட்டு போகலான்னு தான் ப்ளான். அதுக்குத் தான் வரேன். வொய்ஃப், பாப்பா எல்லாருந்தான் வரோம். சரி சொல்லிர்றியா? அங்க வந்து பாக்கறேன். சரியா? வச்சுர்றேன்?’ சொல்லிவிட்டு திரும்பிய போது, மல்லிகா என்னைப் பார்த்து, புரிந்து, சந்தோஷமாகப் புன்னகைத்தாள்.

    தாமரை, என்னை நோக்கி,  திருத்தமாக, ‘ப்பாஆஆ…’ என்றது.

    கூடையிலிருந்து கமழ்ந்த பூமணம், மனதிலும் நுழைய, மன‌  நெருக்கடி குறைந்ததை உணர்ந்தேன்.

    Share
  • வாழ்க்கை நலம் – 6

    குன்றக்குடி அடிகள்

    6. அறன் வலியுறுத்தல்

    இந்த உலக இயக்கம் குறிக்கோளுடையது. குறிக்கோள் இலாது இயங்கும் எதுவும் இல்லை. மானுட வாழ்க்கையும் குறிக்கோளுடையது. மானுடத்தின் குறிக்கோள் என்ன? வாழும் உயிரினம் அனைத்திற்கும் தலைமை தாங்குவது மானிடமே! மானுட வாழ்வைச் சார்ந்துதான் மற்ற உயிர்கள் வளர்கின்றன; வாழ்கின்றன. நிலம் முதலிய ஐம்பூதங்களும்கூட மானுடத்தின் மூலமே பயன்பாடுறுகின்றன. ஆதலால் மானுட வாழ்க்கை அருமையானது. மிக மிக உயர் குறிக்கோளுடையது.

    மானுடத்தின் குறிக்கோள் அறம். அறம், செய்தலன்று; வாழ்தல். அறமே வாழ்வு; வாழ்வே அறம்! மனம், புத்தி சித்தம் ஆகிய அகநிலை உறுப்புக்களை அன்பில் தோயச் செய்து யார் மாட்டும் அன்புடையராக வாழ்தல் அறம். அறத்திற்குப் பகை, பகையேயாம். அதனாலன்றோ இறைவன் திருமேனியில் மாறுபட்டவைகள் பகை நீங்கி அணிகளாகத் திகழ்கின்றன. அறத்தில் சிறந்தது மனத்தில் மாசின்றி இருத்தல். மனதிற்கு மாசு இயற்கையன்று. மனதிற்கு மாசு கொள்முதலேயாம்.

    நமது பொறிகள் – மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன தகவலைச் சேகரிக்கும் கருவிகள் – ஆன்மாவிற்குத் தகவலைத் தரும் கருவிகள். இந்தக் கருவிகள் அறியும் தன்மையுடையன. ஆனால், அறிவுடையன அல்ல. இந்தப் பொறிகள் ஆன்மாவின் அறிவோடும் புலன்களோடும் தொடர்பு கொண்டு இயங்கின் மனத்திற்குத் தீங்கு வாரா! மாசும் வாரா!

    ஆனால் பொறிகள் தன்னிச்சைப் போக்குடையன; விரைவுத் தன்மையுடையன. எல்லா இடங்களுக்கும் வரையளவுமின்றி, நெறிமுறையின்றிச் செல்லும் தன்மையான. இந்தப் பொறிகள் வாயிலாகவே மனத்திற்கு மாசு வந்தடைகிறது. ஆதலால் பொறிகள் மீது நமக்கு மேலாண்மை தணியராசாணை செலுத்த உறுதிவேண்டும். ஆக மனத்துக்கண் மாசிலராக வாழ்தல் அற வழக்கை.

    எந்த ஒரு நன்மைக்கும் களம் தூய்மையாக வேண்டும் அதுபோல வாழ்க்கையெனும் களத்தில் ஆடச் செய்ய அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய களைகள் அகற்றப்படுதல் வேண்டும். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியன அன்பின்மையால் வருவன. மற்றவர் வாழ்தலில் நமக்கு ஆர்வமும், மன நிறைவும் மகிழ்ச்சியும் கொள்ளப் பழகினாலேயே இத்தீமைகள் அகலும். இதற்குப் பெயர்தான் அன்பு.

    அறத்தின் பெயர் இன்பம். அறத்தின் பயன் அமைதி. அறத்தின் பயன் ஒருமைப்பாடு. அறத்தின் பயன் எல்லோரும் வாழ்தல் – நன்றாக வாழ்தல், இதுவே நியதி.

    அறத்தின் பயன் செல்வம், சிவிகையூர்தல் என்று சொல்லப்படுவது உண்மைக்குப் புறம்பானவை. இக்கருத்துக்கள் வல்லாண்மையில் வாழ்வாருக்குத் தாளம் போடும் கருத்துக்கள்!

    கடவுள், மழை, நீத்தார் ஆகியன பயன்பாடுடையான என்று நிரூபணம் செய்வதே அறம்தான். அறநெறி நிற்போம். அறநெறிச் சிந்தனையில் தோய்வோம். அறநெறி சார்ந்த அறிவினைப் பெறுவோம். அறநெறிச் சான்ற மனத்தினையே பெற்றுயர்வோம்! அதனாலேயே அறன் வலியுறுத்தப்படுகிறது.

     

     

    படம் உதவி: https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQTwBRUQVPT2IXhWk8N8w7ZwcAs2i_A-47gBr0Peq9Lz_yBDjrX-w
    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

    Share
  • திருமுருகன் துதிமாலை (6)

    சத்திய மணி

     

    நோயிடம் மாட்டி நொடியெலாம் போக்கும்

    ஊழ்வினைத் தீர்க்க வேண்டும்

    பாயிரம் நான்பாட பதிலுக்கு நீயாடி

    பரவசம் காட்ட வேண்டும்

    சேயிடம் கேட்டு செய்யாமல் நீயாகத்

    தேவைகள் சேர்க்க வேண்டும்

    தாயிடம் கேட்டுதான் பெறவேண்டுமோசொல்

    தரணியில் முருகவேலே

    மயில்தோகை விரித்தாடும் எழிலோடுஏறி

    விளையாடும் வேலகுகனே

    துயில்நீங்கத் துணைவியர் துதிபாடக் காதல்

    முகங்காட்டும் சக்திமகனே  (6)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . (53)

     சக்திசக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இங்கிலாந்துப் பிரதமர்களில் அதிகளவு சர்ச்சைக்குள்ளாக்கியவரும் மிகவும் பிரபலமானவரும், சரித்திரத்தில் இடம் பெற்றவருமான திருமதி மார்கரெட் தாச்சர் (Mrs.Margeret Thatcher) தனது 87 வது வயதில் லண்டனினுள்ள ரிட்ஸ் (Ritz) எனும் ஹோட்டல் அறையிலே காலமான செய்தியைத் தாங்கி இம்மடல் உங்களை வந்தடைகிறது.

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவராக திருமதி மார்கரேட் தாட்சர் விளங்கியதற்குக் காரணங்கள் பலவுண்டு.

    இங்கிலாந்து நாட்டின் பிரதமர்களில் முதலாவது பெண் பிரதமரும், இதுவரை ஒரேயொரு பெண் பிரதமரும் ஆகிய காரணம் இவற்றில் முக்கியமான காரணங்களாகும்.

    அடுத்து இங்கிலாந்து நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகவும் துணிச்சலான பல கொள்கைகளை எடுத்த வகையில் பிரபலமடைந்திருந்தார்.

    இங்கிலாந்து நாட்டில் லிங்கன்சையர் (Lincolnshire) என்னும் இடத்தைச் சேர்ந்த ராபெர்ட்ஸ் (Roberts) எனும் ஒரு பலசரக்குக் கடை உரிமையாளரின் மகளாக 1925ம் ஆண்டு ஜனித்தார் திருமதி தாட்சர். இவரது இயர்பெயர் மார்கரேட் ஹில்டா ராபெர்ட்ஸ் ( Margret Hilda Roberts ) ஆகும்.

    ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர் இரசாயணவியல் ஆராய்ச்சியாளாரகப் பணியாற்றினார். அதன் பின்பு 1951ம் ஆண்டு வெல்வ வளம் கொழித்த வர்த்தகரான டெனிஸ் தாட்சர் (Dennis Thatcher) அவர்களை மணமுடித்தார். வழக்குரைஞர் கல்வியில் அதிபர் பட்டமான பாரீஸ்டர் பட்டம் பெறுவதற்கான பயிற்சியை மேற்கொண்டு 1955ம் ஆண்டு அதை நிறைவு செய்தார்.

    தன் தந்தைவழி கன்சர்வேடிவ் கட்சியின் அரசியலில் குதித்த இவர் 1959ம் ஆண்டு இலண்டனிலுள்ள ஃபின்ச்லி (Finchly) எனும் இடத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இதே தொகுதியில் தொடர்ந்து 1992ம் ஆண்டு வரை பாராளுமன்ற அங்கத்தினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

    இவரது முதலாவது பாராளுமன்ற அமைச்சுப்பதவி 1964ம் ஆண்டு ஹரோல்டு மக்மிலன் (Harold Macmillan) எனும் பிரதம மந்திரியின் கீழ் ஓய்வூதியத் துறையின் துணை அமைச்சர் பதவியேயாகும்.

    அதைத் தொடர்ந்து எட்வேர்டு ஹீத் (Edward Heath) கன்சர்வேடிவ் பிரதம மந்திரியாக விருந்த சமயம் கல்வித்துறை அமைச்சர் பதவி வகித்தார்.

    1972ம் ஆண்டு எட்வேர்டு ஹீத் அவர்களின் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய போது அவரின் தலைமைத்துவத்திற்கு எதிராகப் போட்டியிட்டு பலரின் ஆச்சர்யத்திற்குள்ளாக கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றார்.

    அதைத் தொடர்ந்து 1979ம் ஆண்டுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தேர்தலில் வெற்றியடைந்ததும் அதன் பிரதம மந்திரியாகப் பதவியேற்று இங்கிலாந்து நாட்டின் முதல் பெண் பிரதமர் எனும் சரித்திரம் படைத்தார்.

    அரசு நிறுவனங்களையும், தேசிய ஸ்தாபனங்களையும் தனியார் மயப்படுத்தும் கொள்கையில் மிகவும் அழுத்தமான் கொள்கைகளைக் கொண்டிருந்தார். இவரது முக்கிய அரசியல் விஞஞாபங்களாக சமூக சேவைகளுக்கான செலவுகளைக் குறைப்பதும், மக்களின் வரிப்பணத்தைக் குறைப்பதும் ஆன கொள்கைகள் முக்கிய இடங்களை வகித்தன.

    இவரது பதவிக் காலத்தில் பண்வீக்கத்தைக் குறைத்தாலும் வேலையில்லாதோர் தொகை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    1982ம் ஆண்டு அர்ஜெண்டீனா இங்கிலாந்து நாட்டின் இறைமையிலிருந்த வோக்லண்ட்ஸ் (Falklands) தீவினை ஆக்கிரமித்த போது தனது நாட்டின் படையை அனுப்பி அத்தீவினை மீட்டெடுத்தது இங்கிலாந்து மக்களிடையேயும், சர்வதேச அளவிலும் இவரது செல்வாக்கை அதிகரித்தது. அதைத் தொடர்ந்து வந்த 1082ம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டி மீண்டும் பிரதமரானார்.

    அக்காலப்பகுதியில் அமெரிக்க ஜ்னாதிபதியாக இருந்த ரொனால்ட் ரீகன் (Ronald Regan) அவர்களுடன் மிக நெருக்கமான அரசியல் உறவுகளைப் பேணி வந்தார். இருவருக்கும் கம்பூனிசத்தின் மீது இருந்த எதிர்ப்புத்தன்மையும், கட்டுப்பாடற்ற வியாபாரக் கொள்கையில் இருந்த ஈடுபாடும் இவர்களைப் பலமாக இணைத்தது.

    அந்நாளைய சோவியத் யூனியனால் இவரது அழுங்குப்பிடியான கொள்கைகளினால் “இரும்பு மனுஷி” (Iron Lady) என்று அழைக்கப்பட்டார்.

    அப்போதைய சோவியத் யூனியனின் அதிபரான் கோர்பச்சேவ் அவர்களின் கம்பூனிசத் தளர்வுக் கொள்கைக மனப்பான்மையை அறிந்து கொண்ட தாட்சர் அவர்கள் அவரை மேற்குலக ஜனநாயகப் பாணியிலான அரசியலமைப்பை நோக்கி நகர்த்தும் முயற்சிகளில் முன்னின்றார்.

    1987ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி மூன்றாவது முறையாக பிரதமராகிய முதலாவது நபர் எனும் சரித்திரம் படைத்தார். இக்காலகட்டத்தில் இவரது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள முடியாத தலைவர் எனும் பெயர் பெருமளவிற்கு பொதுமக்களால் மிகவும் எதிர்க்கப்பட்ட “போல் டக்ஸ்” (Poll Tax) எனும் கொள்கை உட்பட பல கொள்கைகளை அமுல்படுத்த முயன்றதினால் இவரது கட்சிக்குள்ளிருந்தே இவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது.

    விளைவாக ,

    1990ம் ஆண்டு நவம்பர் மாதம் தலைமைத்துவப் போட்டியில் ஜான் மேஜர் (John Major) அவர்களினால் தனது தலைமைப் பதவியை இழந்தார்.

    1992ம் ஆண்டு இவர் பாராளுமன்ற அரசியலில் இருந்து விலகினார். இவருக்கு இங்கிலாந்து நாட்டின் அரசியல் கெளரவமான ” லேடி” எனும் பட்டம் வழங்கப்பட்டது. 1995ம் ஆண்டு தாட்சர் பவுண்டேஷன் எனும அமைப்பைத் தோற்றுவித்து புதிதாக கம்யூனிச கட்டமைப்பில் இருந்து விடுபட்ட கிழக்கு ஜரோப்பிய நாடுகளுக்கு ஜனநாயகத்தைப் பற்றிய பல சொற்பொழிவுகளையும், விரிவுரைகளையும் செய்தார்.

    பல சிறிய ஸ்ட்ரோக் எனும் இதய வியாதிகளால் பாதிக்கப்பட்டதினால் 2002ம் ஆண்டிலிருந்து பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கினார்.

    இவரது கொள்கைகள் நாட்டினைப் பிளவு படுத்தியது எனும் வாதம் இவரின் மறைவிற்குப் பின்னரும் கூட இன்றும் பலமூலைகளில் விவாத வடிவில் விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

    நிலககரிச் சுரங்கத் தொழிலாளர்களின் யூயனின் பலத்தைச் சிதைத்து இங்கிலாந்தில் பல யூனியன்களின் பலத்தை தான் கொண்டு வந்த சட்டங்களின் மூலம் பலமிழக்கச் செய்தார்.

    வீடு வாங்கும் வசதியர்ரோருக்கு மாநகர சபைகளினால் வழங்கப்பட்டு வந்த அர்சாங்க வாடகை வீடுகளை அவ்வீடுகளில் குடியிருப்போருக்கு மிகவும் குறைந்த விலையில் அநேகர் வீட்டுச் சொந்தக்காரர் ஆக்கினார்.

    இது பலருக்கு வாழ்வில் தகுதியை உயர்த்த உதவியது என்ற வாதம் இவரது ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டாலும் பலர் இன்றைய சமூக வீடுகளின் தட்டுப்பாட்டுக்கு இவரே காரணம் என்று மறுபகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஜாரோப்பிய யூனியன் இக்கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மீது பல அநியாயமான கட்டுப்பாடுகளை விதித்து நாட்டின் இறைமையைப் பாதிக்கின்றன எனும் வாதத்தை மிகவும் ஆணித்தரமாக முன்னெடுத்தவர்களில் இவர் முதன்மையானவர்.

    இன்றைய ஜரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடிகள் இவரது வாதத்திற்கு வலுச் சேர்க்கிறதோ என்று எண்ணச் செய்யும் வகையில் இன்றைய நிலைமைகள் இருக்கின்றன.

    சரியான வகையிலோ அன்றித் தவறான வகையிலோ பிரித்தானிய சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக இவரது ஆட்சிக்காலம் அமைந்திருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

    இங்கிலாந்தின் முதலாவது பெண் பிரதமர் எனும் பெயரெடுத்திருந்த போதும் தனது பதவிக்காலத்தில் பெண்களை அரசியலில் முன்னனிக்கு கொண்டுவருவதற்காக இவர் எவ்வகையிலும் சேவை ஆற்றவில்லை என்று பல பெண்ணியவாதிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

    இவரது மாற்றங்களின் தாக்கம் இங்கிலாந்தைப் பொறுத்தவரை எவ்வகையில் அமைந்தது என்பதற்கான தீர்ப்பை சரித்திரம் வழங்கும்.

    “அயர்ன் லேடி” என்று அழைக்கப்பட்ட இவ்வுறுதி மனத்தைக் கொண்ட தலைவியின் ஆத்ம சாந்திக்காக இப்புலம்பெயர் தமிழனின் மனம் பிரார்த்திக்கின்றது.

    அடுத்த மடலில் சந்திக்கும்வரை
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
    10.04.2013

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (9)

    பவள சங்கரி

    புன்னகைக் கவசமிடுவோம்!

    ஒவ்வொரு முறையும் யாரையாவது பார்த்து நீங்கள் புன்னகைக்கும்போது அது அவருக்கு நீங்கள் அளிக்கும் ஒரு ஒரு அழகான அன்புப் பரிசாகிறது ..

     தொடுதலின் சக்தி, ஒரு புன்னகை, அன்பான ஒரு சொல், கேட்கும் ஓர் செவி, நேர்மையான ஒரு பாராட்டு, அல்லது அக்கறையான ஒரு சிறிய செயல், இவையனைத்தும் நம் வாழ்க்கையையே புரட்டிப்போடும் வல்லமை கொண்டது என்பதை அடிக்கடி நாம் குறைத்து மதிப்பிட்டுவிடுகிறோம்.
    அன்னை தெரெசா

    ஒரு சாதாரண புன்னகை எத்துனை மகத்தான மாற்றங்களை ஏற்படுத்தவல்லது என்பதை சிந்தித்துப் பார்ப்போம். புன்னகையை எந்த இடத்தில் நாம் தொலைக்கிறோம் என்பதை முதலில் சிந்திப்போம்.

    1. கோபம் எட்டிப்பார்த்தால் புன்னகை ஓடி ஒளிந்து கொள்கிறது.
    2. அன்பு குறைய ஆரம்பித்தால் புன்னகை மறைந்து சிடுமூஞ்சித்தனம் தலைகாட்ட ஆரம்பித்துவிடுகிறது.
    3. உடலில் ஆரோக்கியம் குன்றினால் வேதனையில் புன்னகை தொலைந்து விடுகிறது.
    4. வேதனையான சம்பவங்கள் ஏதும் நடந்துவிட்டால் புன்னகை காணாமல் போகிறது.
    5. நாம் நினைத்தது நடக்கவில்லையென்றால் திரை போட்டு மறைத்துக் கொள்கிறது புன்னகை.
    6. தேவையற்ற வெறுப்பு புன்னகையை உண்டுவிடுகிறது.

    இப்படி பல்வேறு காரணங்களால் புன்னகை நம்மைவிட்டு விலக்கப்படுகிறது. இதில் வேதனையான சம்பவங்கள் போன்ற சிலவற்றைத் தவிர மற்ற எதுவாயினும் வலுக்கட்டாய்மாகவாவது புன்னகையை வரவழைத்துப் பாருங்கள். அப்போதுதான் அதன் வலிமை நம்க்குப் புரியும். ஆம் அந்தப் புன்னகை நம்க்குள்ளும், நம்முடன் இருப்பவர்களுக்குள்ளும் நம்ம முடியாத பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் அடுத்தவர் மனநிலையையும் சற்றே உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். அவர் வேதனையான மன நிலையில் இருக்கும் போது நம் புன்னகையை வீசாமல் அன்பான பார்வையால் அவரை அமைதிப்படுத்திவிட்டு பின்பு நம் புன்னகையை வெளிப்படுத்தி அவரையும் அமைதி கொள்ளச் செய்வது உத்தமம். இந்த ஒரு சிறு புன்னகை மந்திரம் நம்மையும் அமைதிப்படுத்தி ஆக்கப்பூர்வமாகச் செயல்படச் செய்வதோடு, அடுத்தவரையும் அமைதியாக்கி நமக்கு ஆதரவாக செயல்படவும் செய்துவிடும்.

    யாரையும் மாற்ற முயற்சி செய்ய வேண்டியதில்லை!

    ஆம், யாரையும் மாற்றுவது என்பது தேவையற்ற கால விரயம் செய்யக்கூடிய ஒரு செயல். காரணம் ஒருவரை அவருடைய இயல்பான தன்மையிலிருந்து மாற்றுவது சாத்தியமில்லாத காரியம், அது என்றுமே நடக்க முடியாத ஒரு வெட்டி வேலையாகக்கூடும். ஆனால் பல நேரங்களில் நாம் நம்மை அறியாமலே இதைச் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். நாம் எந்த வழியில் சென்று மாற்ற முயன்றாலும் அது வீண் வேலை மட்டுமே.தொடர்ந்த சமாதான வார்த்தைகளாலோ, மகிழ்ச்சியற்ற அமைதியான சைகைகளாலோ, அவரிடம் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை வெளிப்படையாகச் சொல்லியோ அல்லது ஒரு வார்த்தையும் சொல்லாமல் புரிய வைக்க முயன்றாலோ என இப்படி எதுவும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதுதான் நிச்சயம். நம்முடைய நெருங்கிய உறவாகவோ, இரத்த சம்பந்தம் உள்ளவரோ அல்லது நெருங்கிய நண்பரோ இப்படி யாராக இருந்தாலும் இதே நிலைதான். உண்மையில் எவ்வளவு அதிகமாக நாம் அவர் மாற்றம் வேண்டி அழுத்தம் கொடுக்கிறோமோ அதைவிட ஒரு படி மேலாக திரும்ப அந்த அழுத்தம் நமக்கே வந்து சேரும். ஒரு புள்ளியில் அது ஒரு சச்சரவாகக்கூட மாறும் வாய்ப்பாகிவிடும். மாற்றத்தை ஏற்றுக் கொள்வது அவரவர் விருப்பம். அது அவருடைய உரிமையும் கூட. அதனால் நாம் எதையும் மாற்ற முயற்சித்து காலத்தையும் விரயம் செய்து, மன அமைதியும் கெடுத்துக்கொண்டு, எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதைக் காட்டிலும், உள்ளதை உள்ளவாறு அப்படியே ஏற்றுக் கொண்டு அதற்கேற்றார்போல் நம் பாதையையும் அமைத்துக்கொண்டால் அவருக்கும் சுதந்திரம் கிடைப்பது போல வெற்றிகரமாக நமக்கும் விடுதலை கிடைத்துவிடுகிறது.

    வாழு! பிறரையும் வாழவிடு!

    தொடர்வோம்

    Share
  • யுகாதி ఉగాది, ಯುಗಾದಿ) गुढीपाडवा

    நவீன பஞ்சாங்க படனம்

    இன்னம்பூரான்

    10/11.04 2013

    யுகாதி பண்டிகையை முன்னிட்டு உலக மாந்தர்கள் யாவருக்கும் வாழ்த்துக்கள்.

    சுபிக்ஷமாக உங்கள் வாழ்க்கை அமையும். முயற்சியையும், பயிற்சியையும் கை விடேல்’

    குடும்பமும், பரிவாரமும், சுற்றமும், சமுதாயமும் செழித்தோங்கும். மனித நேயமே துணை.

    தனி நபர்களின் முன்னேற்றம், அவர்கள் கையில். ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்.

    இறைவனை தொழு. தன் கையே தனக்கு உதவி என்பதை மறக்காதே.

    முதுமையை பழிக்காதே. குழவியை விரட்டாதே. யாரையும் இகழாதே.

    நேசம் ஒரு பிணைப்பு. அன்பு ஒரு பிடிப்பு. கனிவு ஒரு பண்பு.

    ஒரு அசரீரி சொல்ல, கை எழுத, நானும் பஞ்சாங்க படனம் கேட்டுக்கொண்டேன்.

    ஜய விஜயீ பவ!

    அன்றொரு நாள் கல்கியின் பார்த்திபன் கனவு படித்தது, ‘விஜய’ வருஷத்தின் விஜயம் போது கண்ணில் தென்பட்டது

    “…உறையூரில் அன்று அதிகாலையிலிருந்து அல்லோலகல்லோலமாயிருந்தது…வீட்டுக்கு வீடு தென்னங்குருத்துக்களினாலும் மாவிலைகளினாலும் செய்த தோரணங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. வீடுகளின் திண்ணைப் புறங்களிலெல்லாம், புதிய சுண்ணாம்பும் சிவப்புக் காவியும் மாறிமாறி அடித்திருந்தது. ஸ்திரீகள் அதிகாலையிலேயே எழுந்திருந்து, தெருவாசலைச் சுத்தம் செய்து, அழகான கோலங்கள் போட்டு, வாசலில் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்கள்…விடிய ஒரு சாமம் இருக்கும்போதே, அரண்மனையிலுள்ள பெரிய ரண பேரிகை முழங்கத் தொடங்கியது. அதனுடன் வேறு சில சத்தங்களும் கலந்து கேட்கத் தொடங்கின… இவ்வளவுடன், வழக்கத்துக்கு முன்னதாகவே துயில் நீங்கி எழுந்த பறவைகளின் கல கல சத்தமும் சேர்ந்து ஒலித்தது. சூரிய உதயத்துக்கு முன்னாலிருந்தே அரண்மனை வாசலில் போர் வீரர்கள் வந்து குவியத் தொடங் கினார்கள். படைத் தலைவர்கள் அவர்களை அணிவகுத்து நிற்கச் செய்தார்கள்…இந்த மாதிரி அணிவகுப்பு நடந்து கொண்டிருக்கையில் அடிக்கடி போர் வீரர்கள் “வீரவேல்” “வெற்றிவேல்” என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் அரண்மனை முன் வாசலில் கலகலப்பு ஏற்பட்டது. “மகாராஜா வருகிறார்!” “மகாராஜா வருகிறார்!” என்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அரண் மனைக் குள்ளேயிருந்து கட்டியக்காரர்கள் இருவர், “சோழ மண்டலாதிபதி பார்த்திப மகாராஜா வருகிறார்! பராக் பராக்!” என்று கூவிக் கொண்டு வெளியே வந்தார்கள். வீதியில் கூடியிருந்த அந்தணர்களும் முதியோர்களும் “ஜய விஜயீபவா!” என்று கோஷித்தார்கள்…”

    சுபம். “ஜய விஜயீபவா!”

    சித்திரத்துக்கு நன்றி: http://www.tamilnews.cc/admin/uploads/imagesCAZDWK5U.jpg

    Share