அறுமுகநூறு (9)
சச்சிதானந்தம்
குக் குடத்துக் கொடியோன் அடியை,
இக் குடத்துக் கடியேன் பற்றி,
முக் குடத்துக் கடுநோய் நீக்கிச்,
சிக் கெடுத்துக் காக்கப் பணிந்தேன்! 41
பங்குனிக் கொண்டாட்டம் சித்திரை வரைக்கும்,
பக்தர்கள் கொண்டாட்டம் பாருள்ள வரைக்கும்,
சங்கரன் கொண்டாடும் சரவணன் படைத்த,
மங்கலச் செந்தமிழ் நம்மை வழிநடத்தும்! 42
தைப்பூசம் என்றால் தமிழ்மணம் வீசும்,
கைபூசும் சந்தனம் திருமேனி எங்கும்,
பைபூசும் கிளிகளின் செவ்வலகு போல,
தைப்பூச நாயகன் அழகிதழ் சிவக்கும்! 43
சிற்றின்ப பேரின்ப பேதங்கள் இன்றி,
உற்றின்ப முனைக்கண்டு நின்றோமே ஐயா!
சற்றுன்னை மனமாரக் கண்டிடும் பொழுது,
பற்றின்றி வாழ்ந்திடப் பழகினோம் ஐயா! 44
அலகினைச் சுமந்திடும் கன்னம், முருகன்
அழகினைச் சுமந்திடும் பக்தனின் எண்ணம்,
அமைதியில் நிறைந்திடும் அலகேற்ற உள்ளம்,
அருளினை அடைந்திடும் அழகுற்று நெஞ்சம்! 45
///சங்கரன் படைத்த மங்கலச் செந்தமிழ் நம்மை வழிநடத்தும்.////
தெய்வத் தமிழ் மொழி துணையிருக்கக் குறையொன்றுமில்லை. சந்தமது பொங்கி வர அழகுமிகு அறுநூறு படைத்து வரும் அன்புச் சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
தொடர்ந்து வாசித்து தங்களது மேலான கருத்துக்களைக் கூறி என்னை ஊக்கப்படுத்தி வரும் சகோதரி பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்!