Blog

  • குறளின் கதிர்களாய்…(507)

    குறளின் கதிர்களாய்…(507)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(507)

    அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்.

    – திருக்குறள் – 611 (ஆள்வினையுடைமை)

    புதுக் கவிதையில்…

    முடியர்து நம்மால்
    இதனைச் செய்ய
    என்று
    மனம் தளர வேண்டாம்,
    செயலொன்றைச்
    செய்து முடிப்பதற்குரிய
    பெருமையைப்
    பெற்றுத் தந்திடும்
    பெருமுயற்சியே…!

    குறும்பாவில்…

    நம்மால் முடியாதென மனந்தளராதே,
    செயலொன்றைச் செய்து முடித்திடும் பெருமையைப்
    பெற்றுத் தந்திடும் முயற்சியே…!

    மரபுக் கவிதையில்…

    நம்மால் செய்யக் கடினமென
    நாட்ட மின்றிச் சோர்வுற்றுச்
    செம்மை யானச் செயலெதையும்
    செய்யத் தவற வேண்டாமே,
    நம்மை யந்தச் செயலைத்தான்
    நன்கு முடிக்கும் பெருமையினை
    தம்மால் பெற்றுத் தந்திடுமே
    தளரா நமது முயற்சியதே…!
    லிமரைக்கூ…

    வேண்டாம் முடியாதெனத் தளர்ச்சி,
    விடாத முயற்சி பெற்றுத் தந்திடுமே
    வெற்றிப் பெருமையுடன் வளர்ச்சி…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும்
    வாழ்க்கயில வேணும்,
    வேலயச் செய்யும்போது
    விடாத மொயற்சி வேணும்..

    நம்மால
    இதச் செய்ய முடியாதுண்ண
    மனத்தளர்ச்சி
    வேண்டவே வேண்டாம்,
    ஒரு செயலச்
    செய்து முடிக்கவுள்ள
    பெருமய
    விடாத மொயற்சி ஒண்ணே
    வாங்கித் தந்திடுமே..

    அதால
    வேணும் வேணும்
    வாழ்க்கயில வேணும்,
    வேலயச் செய்யும்போது
    விடாத மொயற்சி வேணும்…!

    Share
  • ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் – வலைத்தொடர் விமர்சனம்

    ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் – வலைத்தொடர் விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் என்ற வலைத்தொடரை, அமேசான் பிரைமில் பார்த்தேன். இது சிறுவர்களை முதன்மையாக வைத்து எடுக்கப்பட்ட வலைத்தொடர். சிறுவர்களுக்கான வலைத்தொடர் எனச் சொல்ல முடியாது.

    பள்ளிச் சிறுவர்கள், துப்பாக்கியால் சுடுவதும் பிணத்தை மறைத்து வைப்பதும் சாட்சியங்களை அழிப்பதும் பிணத்தைக் குழிதோண்டிப் புதைப்பதும் சொந்த அப்பாவையே தலையில் அடித்து அறையில் கட்டிப் போட்டு அடைத்து வைப்பதும் கார் ஓட்டுவதும் கண்டிப்புக்கும் தண்டனைக்கும் உரிய குற்றங்கள்.

    பள்ளி ஆய்வகத்திலிருந்து குளோரோபார்ம் எடுத்து வந்து, மயங்க வைப்பது ஓரளவு லாஜிக்குடன் இருக்கிறது. ஆனால், திருடனிடம் கைப்பற்றிய நகைகளைக் காவல் துறை மூலம் உரியவர்களிடம் கொண்டு சேர்க்காமல், வெள்ள நிவாரணத்துக்குச் சேர்ப்பது தவறு.

    ஒரு தவறு நடந்தால், உரிய வழியில் தீர்க்க வேண்டுமே தவிர, குறுக்கு வழிகளில் தீர்க்க முயலக் கூடாது. அப்படி முயன்றால் அதற்கு உரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றாவது காட்டியிருக்கலாம். இதில் இறுதியில் பிள்ளைகள் எந்தச் சிக்கலிலும் மாட்டாமல் அவரவர் இயல்பாகப் படிக்கிறார்கள்.

    இதைப் பார்க்கும் சிறுவர்கள் என்ன நினைப்பார்கள்? இவ்வளவு தவறுகள் செய்தாலும் இறுதியில் எதுவுமே நடவாதது போல் தப்பிவிடலாம் என நினைப்பார்களா? மாட்டார்களா?

    சிறுவர்கள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும். தொழில்நுட்பங்களைக் கற்க வேண்டும். சாகசங்கள் கூடச் செய்யலாம். ஆனால், அறத்தோடு கூடிய நெறிமுறைகளுடன் வளர வேண்டும். தவறுகளைக் காணும்போது முறையாகப் புகார் தெரிவிக்க வேண்டும். குற்றவாளிகளைச் சிக்க வைக்கலாம். அதே நேரம் தங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தாங்களே தவறு செய்யும் பட்சத்தில் அதை ஒப்புக்கொண்டு தண்டனைகளை ஏற்க வேண்டும். அந்தத் தவறு மீண்டும் நிகழாவண்ணம் திருந்த வேண்டும். இந்த அடிப்படையோடு எடுத்திருந்தால், படம் வலிமையாக இருந்திருக்கும்.

    காட்சி ஊடகங்கள் அதிகத் தாக்கம் உள்ளவை. அவ்வாறே செய்து பார்க்கும் ஆவலைத் தூண்டுபவை. அதிலும் சிறுவர்களை வைத்து எடுக்கப்படும் படங்கள், வலைத்தொடர்கள், அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சிறுவர்கள் இவ்வாறு செய்வது தவறில்லை என நினைத்தால், இதே போல் எங்காவது செய்து பார்க்க நினைத்தால், செய்தாலும் தப்பிவிடலாம் என நினைத்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும். வலைத்தொடரை உருவாக்கிய கார்த்திக் சுப்புராஜ், இவற்றை யோசிக்கவில்லையா?

    சிறுவர்கள் ஐவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் நவீன் சந்திரா, தன் இரட்டை முகத்தைக் காட்டி மிரட்டியிருக்கிறார். காவல் துறை உதவி ஆய்வாளராக வரும் நந்தா துரைராஜ், சிறுவனுக்கு அப்பாவாக நடித்திருக்கும் மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலரும் சிறப்பாகக் காட்டுகிறார். கதை நேர்த்தியாக அமைந்திருந்தால், வலைத்தொடர் இன்னும் வலிமையாக, வசீகரமாக இருந்திருக்கும்.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 32 [ஆரூர் தமிழ்நாடன் கவிதைகள் – ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை!]

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 32 [ஆரூர் தமிழ்நாடன் கவிதைகள் – ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை!]

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    முன்னுரை

    இதழாசிரியர்கள் படைப்பாளர்களாகவும் அமைவது தமிழுக்குப் புதுமையான ஒன்றல்ல. பாரதி, திருவிக. கல்கி, ரா.கி.ரங்கராஜன், தமிழ்வாணன், அண்ணா, கலைஞர். கவிஞர் கண்ணதாசன், மணியன், வல்லமை அன்னா கண்ணன் உள்ளிட்ட பெருமக்கள் பலரும் இதழாசிரியர்களாக இருந்து கொண்டே படைப்பாளர்களாகவும் பரிணமித்தவர்கள். இந்த நிரலில் தற்காலத்தில் வாழுகின்ற ஆரூர் தமிழ்நாடன் ‘இனிய உதயம்’ இதழின் ஆசிரியர். கல்லூரி காலத்திலிருந்தே திராவிடச் சிந்தனையாளராக இருப்பினும் அழகியல் மீதூரும் கவிதைகளையும் சமுதாயச் சிக்கல்களைப் பாடுபொருளாக்கும் கவிதைப் படைப்புக்களையும் படைத்து வரும் பண்பாளரான இவர் புதிய வடிவங்களைக் கையாள்வதிலும் கைதேர்ந்தவர்!  முகநூலில் இவரது கவிதைகளை நான் பல்லாண்டுகளாகப் படித்து வருகிறேன். மரபு சார்நத கவிதைகளையும் புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ வடிவங்களையும் கையாளும் இவருடைய கவிநேரத்தியை “ஆரூர் தமிழ்நாடன் கவிதைகள் – ஒரு குறுக்கு வெட்டுப் பார்வை” என்னுந் தலைப்பில்  இந்தக் கட்டுரை சில கருத்துககளை முன் வைக்க முயல்கிறது.

    பாட்டாக நானிருந்தென்ன? பொருளாக நீ வரவேண்டும்!

    புதிராகத் தொடங்கிப் புரியாமல் நடந்து புலப்படாமலே போவதுதான் காதல் என்று ஆனபிறகு, காதல் நிலையின் எல்லாத் தடுமாற்றங்களும் கவிதையாகத்தான் அமைந்து போகும். ஒரு கனியின் எல்லாப் பகுதிகளும் இனிப்பது போலவே காதலின் பன்முகப் பரிமாணங்களும் இனிக்கும். திணை ஐந்தனுள், கசக்கிற திணை என்று ஏதும் உண்டா என்ன?  எல்லாமே இனிப்புத்தான் இலக்கியங்களில்! காதலில் இனிப்பு கசப்பு இருக்கலாம். காதற் கவிதையில் இனிப்பு மட்டுமே!  கசப்பே கிடையாது. பிரிவையும் சுவைத்துச் சொன்னவன் தமிழன். அப்துல் ரகுமான் பாடுவார்

    “காதல்
    ஒரு வித்தியாசமான சிறை!
    இங்கே
    கைதியாவதற்குத்தான்
    எல்லாரும் ஆசைப்படுகிறார்கள்!”

    என்று என்ன ஒரு மென்மை? என்ன ஒரு ஆழம்?  “பூட்டிய இருப்புக் கூட்டின் சிறைக்கதவு திறக்கப்பட்டது சிறுத்தையே வெளியில் வா”  என்று ஒரு கவிஞன் பாடுகிறான். அது மொழியினப் போரில் சிறை சென்றவனுக்கு. இது மொத்தத்தையும் பறிகொடுப்பதற்கு! புறவாழ்வில் சமுதாய நலனுக்காகச் சிறைசென்று விடுதலையாவதில் மகிழ்ச்சி! அகவாழ்வில் சிறைசென்றவன் விடுதலையாகிவிடக்கூடாதே என்னும் கவலையே மகிழ்ச்சி! வாழ்க்கைச் சிக்கலில் கூட சிக்கலிலிருந்து விடுதலையாவதுதான் மகிழ்ச்சி. சிட்டுக் குருவி போலே விட்டு விடுதலையாகத்தான் பாரதி விரும்பினான். அந்தப் பாட்டில் விடுதலையை முன்னாலே சொல்லி உவமத்தைப் பின்னாலே சொல்லுவான்! விடுதலையில் உண்டாகும் மகிழ்ச்சி அப்படி;!

    “விட்டுவிடுதலையாகி நிற்பாய் இந்தச்
    சிட்டுக் குருவியைப் போலே”

    “வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா” என்றும் பாடுவான். பாரதி உள்ளிட்ட அனைவரும் காதலில் சிறைசெல்லத்தான் விரும்பியிருக்கிறார்கள். எப்படியோ இணைந்தவர்களுக்கு ஏன் இணைந்தோம் என்பது விளங்கவில்லை. காதல் ஒரு விடுகதை  என்றோம். உண்மையில் அது விடுகதை இல்லை வினா விடை!. தலைவன் வினாவானால் தலைவி விடையாகிறாள். தலைவி வினாவானால் தலைவன் விடையாகிறான். தமிழ்நாடன் பாடுகிறார்! அடங்கிய காதலை ஒடுங்கிய மொழியால் சொல்லும் அவர் திறன் காணீர்!

    “கேள்வி பதிலாய் நாம்
    நம்மில்
    கேள்வி யார் ?
    பதில் யார்?
    தெரியவில்லை
    ஆனால் ஒன்று;
    கேள்விக்காகத்தான் பதில்
    பதிலுக்காகத்தான் கேள்வி.”

    உண்டு என்பதை எவ்வளவு எளிமையான வெளிப்பாடு? ஆனால் அழகியலும்  ஆழமும் கொண்ட வரிகள். ‘உனக்காகத்தான் நான் எனக்காகத்தான் நீ” என்றால் உரைநடை! யாருக்கு யார் பதில் என்பதும் யாருக்கு யார் கேள்வி என்பதும் தெரியாத நிலை! இருந்தால் என்ன? கேள்விக்காகத்தான் பதில் பதிலுக்காகத்தான் கேள்வி என்ற உறுதிப்பாடு வந்தபிறகு, கேள்வியாக யார் இருந்தால் என்ன? பதிலாக யார் இருந்தால் என்ன? என்னதான் காதல் என்னும் கற்பனை உணர்வைப் பாடுவதாகக் கவிஞர்கள் சொன்னாலும் அவர்களின் தனிவாழ்க்கை ரகசியத்தைக் கவிதை வரிகள் அம்பலப்படுத்துகின்ற சூழல்களும் உண்டு என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன. காரணம் காதலை அதனால் பாதிக்காத யாரும் அவ்வளவு சுத்தமான கற்பனையினால் வடிக்க முடியாது, வடித்தால் அதில் காதல் வழியாது. கேட்பவர்கள் காதில் சீழ்தான் வடியும்.

    ஆரூர் தமிழ்நாடனின் மரபியல் தடம்

    மரபு என்பது சிந்தனைத் தொடர்ச்சி. அறியாத பலர் இதனை யாப்பியல் தொடர்ச்சி என்று கருதிவிடுகிறார்கள். எனவேதான் யாப்பு சுத்தமாக எழுதுகிற கவிதைகளை மரபுக்கவிதைகள் என்று வெளிப்படுத்தித் தங்களை ஏமாற்றிக் கொண்டு அடுத்தவர்களைத் துன்பப்படுத்துகிறார்கள். திருவள்ளுவர் பாடுகிறார்.

    “இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து”

    “Her painted eyes have a double effect. One glance pain and other cures.” என்று இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். இங்கே சில பேர் தங்கள் நூல் பிறமொழிகளில் பெயரத்தெழுவதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இங்கிலாந்து நாட்டுக்காரன் இந்த மொழிபெயர்ப்பைப் படித்தால் என்ன செய்வான்? என்ன கருதுவான்? திருவள்ளுவர் தமிழ்மரபியல் சிந்தனையான விழி பரப்பும் காதலை ஒரு அகநோயாகச் சித்திரித்துள்ளார். ஆனால் மொழிபெயர்ப்போ ‘MULTY SPECIALITY HOSPITAL’ ஆக மாற்றிவிடுகிறது. அதனை விட வேடிக்கை கண்ணுக்கு வண்ணம் பூசியதாக மாற்றியிருப்பது. இதனை மொழிபெயர்க்க இயலாது, இயன்றால் தமிழ்க்காதலின் சாரம் பிழியப்படாது, ‘சிறக்கணித்தாள் போன்று’ நகைசெய்ததால் நோய் வந்தது, அந்த நோய் நீங்க வேண்டுமானால் மற்றொரு கண்ணால் காணவேண்டும் என்னும் தலைவன் வேட்கை புலப்படுத்தப்பட்டது. இந்த மரபியல் சிந்தனையைத் தற்கால இளைஞன் ஒருவன் குறும்புத்தனத்தோடு இப்படிப் பாடுகிறான்

    “நீ ஒரு முறை பாரத்தாய்
    என் நெஞ்சில் முள் தைத்தது!
    முள்ளை முள்ளால்தானே
    எடுக்க வேண்டும்?
    எங்கே இன்னொரு முறை பார்!
    இதுதான் மரபுக்கவிதை! இந்த காதல் மரபை ஆரூர் தமிழ்நாடன் கவிதைகளில் பரக்கக் காணலாம்
    “உன்னிடம் சறுக்கியதை
    எண்ணும்போது
    நெஞ்சம் முழுதும்
    விரவுகிறது வெட்கம்!
    இந்த வெட்கத்தை
    விலக்க வேண்டும்
    முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்”

    காதலில் ஆண் சறுக்குவதுதான் இயல்பு. தான் சறுக்கியதற்குப் பதிலாகத் தலைவியும் சறுக்கினால் காதல் கைகூடும். இல்லையெனில் அது கனவாய்ப் போகும். அதனால் தலைவன் சொல்கிறான். நான் உன்னிடம் தோற்ற வெட்கத்தை விலக்க வேண்டுமானால் நீ என்னிடம தோற்க வேண்டும்? இயலுமா? என்று வினவுகிறானாம். நுண்ணியமான காதல் என்பது இதுதான். சுழியத்தைச் சுழியத்தால் வகுத்தால் ஈவு ஒன்று என்பது போன்றது இது. இந்தக் காதல் வெளிப்பாட்டை அவரே இன்னும் சுருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்.

    “பேரிடரும் நீ!
    நிவாரணமும் நீ!”

    தமிழக வெகுமக்கள் அறிந்த இரண்டு சொற்கள் ‘பேரிடர்’ மற்றும் ‘நிவாரணம்’. பேரிடருக்கு ஆளானவனுக்குத்தான் நிவாரணம். நிவாரணத்தின் அருமை அப்போதுதான் அவனுக்குப் புரியும். வெள்ளப் பேரிடரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பன்னிரண்டாவது தளத்தில் இருந்தவனும் நிவாரணம் பெற்றால் அவனுக்கு நிவாரணத்தின் அருமை புரியாது. இங்கே பேரிடருக்கு ஆளானவன் தலைவன். அவன் தடுக்கி விழுந்ததற்கு அவள் காரணமில்லைதான்.  காதல் உள்ளிருந்தே கொல்லும் உயிர் நோய். இவனாகவே நோய்க்கு ஆளாகிக் காரணமில்லாமலேயே தொடர்பில்லாதவளிடத்தில் நிவாரணம் தேடுகிறான். தன்னைப் பார்க்காத தலைவியைத் தலைவன் பாரத்து நோய்கொண்டான் திருக்குறள் தலைவன். தன்னைப் பாரத்ததாக எண்ணிக் கொண்ட மீராவின் காதலன் இதயத்தில் முள் தைத்ததாகக் கதைவிடுகிறான். ஆரூர் தமிழ்நாடனின் தலைவனோ  இவனாகவே தோற்றுவிட்டு அதனை ‘வெட்கம்’ என்று நாணுகிறான். இன்னொரு தலைவன் “உன்னால்தான்  எனக்குத் பெருந்துன்பம்” என்று இயற்கையைச் சாடுவதுபோலத் தலைவியைச் சாடுகிறான். நிவாரணத்திற்கான  விண்ணப்பத்தை அவளுக்கே போடுகிறான்.

    காதலுக்குக் கடன் இல்லை

    காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். நான் சொல்கிறேன் காதலுக்குக் கண்ணிருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் கடன் கிடையாது. நீண்ட காலத் தவணையிலோ குறுகிய காலத் தவணையிலோ காதல் செய்ய முடியாது. அது உயிரின் ஓரங்க நாடகம். தற்காலத்தில் வெளிவரும் காதல் கவிதைகளை ஒரு முறை படித்தாலும் காதல் உணர்வே ஒரு கசப்பான உணர்வோ என்று எண்ணத் தோன்றுகிறது. தங்கள் அந்தரங்கத்து வக்கிர புத்திகளையெல்லாம் அந்தக்காலச் சான்றோர்கள் பாடியிருக்கிறார்கள் என்று பொய்சாட்சியோடு கவிதை புனைகிறார்கள். சங்க அக இலக்கியப் புனைவுகளைத் தொடர்ந்து திருவள்ளுவர் பேசிய ஆன்மீகக் காதலைக் கண்ணதாசன் எழுதினார்.  அப்துல் ரகுமான் பேசினார். மீரா எழுதினார். சில கவிதைகளில் மேத்தாவும் எழுதினார் தற்காலத்தில்  துரை வசந்தராசனும் ஆரூர் தமிழ்நாடனும்  வெளிப்படுத்தி வருகிறார்கள்

    “யார் செய்த சிற்பம் நீ? ஏக்கக் கனவுதரும்
    வேர்வை நிலலா உன்றன் விலாசமெது? பார்வைகளில்
    வார்த்தையைப் பார்த்து வயமிழந்தேன்! மன்மதனின்
    ஊர்வாழும் நீ யார் உறவு?

    என்னும் அடிகள் ஒரு மெல்லிய இதயத்தின் காதல் முனகலை எடுத்துச் சொல்லும் கவிதை. ‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ?” என ஐயுற்ற அந்தக் காலத் தலைமகனைப்போல்  ‘யார் செய்த சிற்பம் நீ? உன்றன் விலாசமெது? என்று வினவுதல் ஒரு புதுமைப் போக்கு!

    “திருவிழா காணவந்த தேவதையே! உன்றன்
    தெருவினிலே நானும் திரிந்தேன்! – ஒரு கோடிப்
    பூச்சிறகு பூக்கப் புதுவானில் நீந்துகிறேன்!
    ஆச்சரியம் தானுன் அழகு!”

    தலைவியை நலம் புனைந்துரைக்கிறான் தலைவன்!. “உன்றன் தெருவினிலே நானும் திரிந்தேன்” என்பது அந்தக் கால இளைஞன் அறியாத ஒன்று. அவன் மடலேறுவான். இவனுக்கு அது தெரியாது. அதனால் திரிகிறான். ‘நீ தரையில்தான் நிற்கிறாய் நான்தான் பறக்கிறேன்’ என்பது தலைவனுக்குத் தெரியும்! நமக்குத் தெரியும். நமக்குத் தெரிய வேண்டுமென்றால் நாமும் காதலித்து மிதக்க வேண்டும்.

    “மனசெல்லாம் உன்றன் மழைச்சாரல்! என்றன்
    நினைவெல்லாம் காதல் நெருப்பு – கனவினிலும்
    உன்முகமே வந்து உயிரை  வதைக்குதடி!
    உன்னையே தாயேன் உவந்து”

    மிக நுண்ணியமான உணர்வலைகளை மொழியால் சொல்லுகிற இந்தக் கவிதையில் காதலின் ஆழம் புரிகிறது. மனது கருவி. நினைவு பொருள். கருவியால் பொருள். தலைவியைப் பாரத்தவுடன் மனத்தில் மழைச்சாரல்! சரி! நினைவில் எப்படி நெருப்பு வரும்? வருகிறதே! அதுதான் காதல்! காதல் என்றால் பூவுக்குள் பூகம்பம் வரும்!

    தற்காலக் கவிஞர்களுள் காதலை உணர்வு ரீதியாகப் பாடியிருப்பவர் ஆரூர் தமிழ்நாடன். இதழையும் இதழ் தரும் முத்தத்தையும் இடையையும் காதலின் எடையையும் கண்ணையும் காதையும் கவிதையாக்கிப் படிப்பவர்களை அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கின்றவர்கள் இடையில் ஒரு மரபு சார்ந்த மெல்லிய உணர்வுக்கு மொழிவடிவம் கொடுத்திருப்பதில் தமிழ்நாடன் முழுமையான வெற்றியடைந்திருக்கிறார். ‘உயிரைக் கொஞ்சம் உயிர்க்க வையடா” என்று இவரால் எழுதமுடிகிறது. ‘எனது நானே எப்படி யிருக்கிறாய்? உனது உடலும் உள்ளமும் நலமா? என்று வினவும் தலைவனைக் காட்டுகிறார். காதல் படித்து எழுதுவதன்று பட்டதை எழுதுவது தமிழ்நாடன் பட்டிருக்கலாம்!

    தமிழ்நாடன் கவிதைகளில் மரபு

    மரபியல் சிந்தனை என்பது வேருக்குள் நீர் போன்றது. வேரிலிருந்து அடிமரத்துக்குள் வந்து, கிளைகளுக்குள் பாய்ந்து, சினைகளுக்குள் சீராடி, இலைகளுக்குள் எழுச்சியடைந்து பூக்களில் பரிணமிப்பது. மரபு பற்றிய முழுமையான புரிதலும் பார்வையும் அற்றவர்கள் அதனை யாப்பு என மயங்கித் திரிகிறார்கள். தமிழ்க்கவிதைகளின் சாரமே பொதுவுடைமை. இதனை ஓர் ஆய்வுப் பொருண்மையாகவும் கொள்ள முடியும். தாமரை ஒரு மலர். அதனைப் பெரும்பாலும் இறைவனுடைய திருவடி மென்மைக்குப் பண்புவமை ஆக்கியே பழக்கப்பட்டவர்கள் நம்மவர்கள். அதற்கு முன்னாலே தலைவியின் முகத்திற்கு உவமம் சொன்னார்கள். இந்த இரண்டு வகையைத் தவிர அவர்கள மலர்களை வேறு எதற்காகவும எங்கும் பயன்படுததினார்களா என்பது அறியக் கூடவில்லை!. முதன் முதலாகப் பாவேநதர்தாம் அழகியலைச் சமுதாயச் சிந்தனைக்கு மடைமாற்றம் செய்து காட்டுகிறார்.

    “சித்திரச் சோலைகளே உமை நன்கு
    திருத்த இபபாரினிலே இங்கு
    எத்தனைத் தோழர்கள் ரத்தம் சொரிந்தரோ
    உங்கள் வேரினிலே”

    “அழகின் சிரிப்பில் சோலைகளைப பாடியவர்தான் பாவேந்தர். சோலையின் நடுவே சொக்குப்பச்சை படர்க்கொடி முல்லையின் சிரிப்பை ரசித்தவர்தான் பாவேந்தர். இந்த இடத்தில் அவரால் தொழிலாளிகளைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. பூவிற்குச் செம்மை வந்தது தொழிலாளியின் ரத்தத்தினால் என்பது அவரது தற்குறிப்பேற்றம். இந்தக் கருத்தினை உள்வாங்கிய தஞ்சை ராமையாதாஸ் ‘வணங்காமுடி’ என்னும்  திரைக்காவியத்தில் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

    “மலையே! உன் நிலையே நீ பாராய்
    கலைஞன் கை உளியாலே
    காவியச் சிலையான
    மலையே உன் நிலையே நீ பாராய்
    தொழிலாளி உழைப்பாலே தோன்றிடும் சிலையே நீ!
    உலகோரும் உனை நாடி உள்ளம் மகிழ்வாரே!”

    பாறைகள் கிடக்கின்றன. அவை பாறைகளே! எதுவரைக்கும்? சிற்பியின் உளி படாத வரைக்கும்!. அவன் விரலுக்குத் தெரிந்திருக்கிறது எந்தப் பாறையில் திருவள்ளுவர் இருப்பார்? எந்தப் பாறையில் சிவபெருமான் இருப்பார்? எந்தப் பாறையில் பெரியார் இருப்பார்? எந்தப் பாறையில் பெருமாள் இருப்பார்? எந்தப் பாறையில் தேர் இருக்கும்? எந்தப் பாறையில் யானை இருக்கும்? எந்தப் பாறையில் பாண்டவர்கள் இருப்பார்கள்? எந்தப் பாறையில்  படைகள் இருக்கும்? என்றெல்லாம் அவன் விரல்களுக்குத் தெரிந்து கண்டறிகிறான். கடவுளை வணங்குகிறவன் கல்லை மறக்கிறான். திருவள்ளுவரை வணங்குகிறவன் பாறையை மறக்கிறான். ஆனால் சமுதாயச் சிந்தனையுடைய ஒரு கவிஞன் மூலத்தை மறப்பதில்லை. சிற்பியின் உழைப்பு இல்லாவிட்டால் பாறை பாதையோரத்துக் கல்லாகியிருக்கும் என்னும் கசப்பான உண்மை பாவலனுக்குத் தெரிந்திருக்கிறது, அதனால்தான் பாடுகிறான்.

    “கலைஞன் கை உளியாலே காவியச் சிலையான மலையே!”

    பாறை தானாகச் சிலையாகாது. சிற்பியின் கையுளி அதன் மேல் படவேண்டும். பக்தர்கள பகவானைத் தரிசிப்பார்கள். கல்லைப் ;பாடாத கவிஞன் சிலையைப் பாடுகிறான். எதில்? காவியத்தில்! பாவலன் சிற்பியைச் சிந்திக்கிறான். இந்த மரபியல் சிந்தனையை அப்படியே தமீழ்நாடன் வழிமொழிகிறார்!

    “எல்லாச் சிற்பங்களிலும் தெரிகிறது!
    வேர்வை ஒழுகும்
    யாரோ ஒரு சிற்பியின்
    சிந்தனை முகம்!”

    “சிற்பம் என்பது கழித்தல் ஓவியம் என்பது கூட்டல்” என்று பாடினார் அப்துல் ரகுமான். சிதறி விழும் சில்லுகள்தான் சிற்பத்தைக் காட்டுகின்றன. கண்டெடுக்கின்றன. சில்லுகள் தங்களை இழந்துதான் சிற்பத்தைக் காட்டுகின்றன. சிற்பத்தைக் காட்டுவதற்காகத் தங்களை இழக்கின்றன. அந்தச் சிற்பத்தில் மானுட உருவங்களையும் பறவை உருவங்களையும் இறைவன் திருவுருங்களையும் மரபு வழியாகக் கண்டுவரும் கவிதை உலகில் பின்னாலே பாடிய கவிஞர்கள் வழியைப் பின்பற்றி ஒரு சிற்பியின் சாதாரண முகமல்ல “சிந்தனை முகத்தைக்” காணும் தமிழ்நாடனின் கவிதையில் உழைப்பின் உயர்வும் பெருமையும் தென்படுகிறதா இல்லையா?

    மழைவேண்டும் தமிழ்நாடன்

    பெரும்பாலும் மழைவேண்டித்தான் வழிபாடு நடக்கும். சங்க இலக்கியத்தைப் பொருத்தவரையில் மாரியைப் பாரியோடு ஒப்பிட்டுப் பாடிய புலமைத்திறன் அனைவருக்கும தெரியும். அது மழையின் வண்மை குறித்தது.  வள்ளுவப்பெருமான் திருக்குறள் பாயிரத்தில் வான் சிறபபு என்னும் இரண்டாவது அதிகாரத்தில் அதனை வைத்து அதன் முக்கியத்துவத்தை உணர்த்தினார். இருப்பினும் அவ்வதிகாரத்தில் உலகியல் இடையறாது நடப்பதற்கு அது செய்யும் உதவியையும் அறம் பொருள் இன்பங்களுக்குக் காரணமான அதன் பெருமையையும் உணர்த்தினாரேயன்றி  அந்த அதிகாரத்தின் ஏந்தப் பாடலிலும் மழையின் அழகியல் பாடப்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. அதன் அவசியமே பாடப்பெற்றது,

    “ஆழி மழை(க்) கண்ணா ஒன்று நீ கை கரவேல்
    ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
    ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து(ப்)
    பாழிய் அம் தோளுடை(ப் ) பற்பனாபன் கையில்
    ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
    தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
    வாழ உலகினில் பெய்திடாய் “

    என்னும் திருப்பாவையில் பெருமாள் அருளின் தன்மையை உவம வழி விளக்குகிறார் ஆண்டாள். மழையின் பயணம், அதன் உருவம் நிறம், மின்னலின் தனிச்சிறப்பு இடிமுழக்கம் எனத் தொகுப்பாகப் பாடியருளினார் ஆண்டாள். உவமத்தின் பரிமாணத்தை எப்படி நோக்கிக் கவிதை எழுத வேண்டும் என்பதற்கு இந்தப் பாசுரம் ஒர் ;சிறந்த எடுத்துக்காட்டு, வெகுமக்கள் ஊடகமாகிய திரைப்படத்தில் மழை, காதலர்கள் நனைவதற்காகவே பெய்தது, கவிஞர் மருதகாசிதான் அந்தப் போக்கைக் கொஞ்சம் மாற்றி சமுதாயச் சிந்தனையோடு மழைப்பொழிவைக் காதல் பாட்டாகவே பாடிக் காட்டினார்.

    “சொட்டு சொட்டுன்னு
    சொட்டுது பாரு இங்கே மழை
    கொட்டு கொட்டுன்னு
    கொட்டுது பாரு அங்கே

    கஷ்டப்படும் ஏழை சிந்தும்
    நெற்றி வேர்வை போலே -அவன்
    கஞ்சிக்காகக் கலங்கி விடும்
    கண்ணீர்த் துளியைப் போலே  “

    முட்டாப் பயலே மூளை
    இருக்கா என்று ஏழை மேலே…
    துட்டு படைச்ச சீமான் அள்ளிக்
    கொட்டுற வார்த்தை போலே

    இதற்குப் பின்னால் பலர் மழை பற்றி எழுதியிருந்தாலும் “என் மேல் விழுந்த மழைத்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?” என்னும் ஒரு மென்மையான ஏக்கக் குரல் வைரமுத்திடமிருந்து வந்தது. அதற்கு முன்போ பின்போ கவிஞர் வசந்தராசன் தனக்கேயுரிய சொற்சிலம்பங்களைக் கைக்கொண்டு மழைக்களம் கண்டார்.

    “அணையுடைந்த மேகநதி மலையு ருட்டும்!
    அருவியென ஆர்ப்பரித்து த்  தரைவி ரட்டும்!
    பனைமரத்தில் பல்துலக்கிப் பசித ணிக்கப்
    பாறைகளைக் கடித்துண்டு துப்பி வைக்கும்!
    முனைமுறியா ஊசிகளின் காதுக் குள்ளே
    முழுப்பகலும்  இரவோடு  முயங்கி நிற்கும்!
    சினைமாட்டின்   மடிபோல  நீர்பெ ருக்கும்!
    சிற்றூரைப்  பேரூரை  ஓரூ ராக்கும்!*

    “பனைமரத்தில் பல்துலக்கும் மழை” எனக் கலிங்கத்துப் பரணியின் களத்தைக்  காட்டிய வசந்தராசன், சினைமாட்டின் மடிபோல நீர் பெருக்கும்! என்னும் நேர்முக வண்ணனையைப் பதிவு செய்திருக்கிறார். இங்கே நான் காட்டிய அத்தனையும் பல தளங்களில் கண்ட கவிதைகளே!. இந்தத் தளத்தில்தான் கவிதை தோன்றும் என்பதில்லை. எந்தத் தளத்திலும் கவிதை தோன்றலாம்.  இந்தப் பின்புலத்தில்தான் தமிழ்நாடனின் மழை பற்றிய  கவிதையை நோக்க வேண்டியதிருக்கிறது. மழையின் தீவிரத்தை அவர் உணர்ந்திருக்கிறார். அதனால் உண்டாகும் நடைமுறைச் சிக்கல்களையும் நீண்ட கால இழப்புக்களையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார். பெருமழையின் பாதிப்பை உணர்ந்து பாடுகிறார். அதன் விளைவுகளை விருத்தத்தில் வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார்.

    “புன்னகையைத் தொலைத்ததுபோல்  தாவ ரங்கள்
    பொலிவிழந்து நிற்பதெலாம்  உன்னால் தானே?
    தன்கிளையின் காய், கனிகள்  உதிர்த்த தோடு
    தவமரங்கள் வீழ்ந்ததுவும்  உன்னால் தானே?*
    தென்றலுக்கே அதிர்கின்ற  சிற்று யிர்கள்
    திணறியதும் பதறியதும்  உன்னால் தானே?
    இன்புறுத்தும் பறவையெலாம்  சிறகொ டுங்கி
    எங்கெங்கோ பறந்ததெலாம்  உன்னால் தானே?

    கொட்டகையில் கட்டிவைத்த  ஆடும் மாடும்
    குலைநடுங்கித் தவித்ததுவும் உன்னால் தானே?
    கட்டளைக்குக் காத்திராமல் பஞ்சா  ரத்துக்
    கவின்கோழி தப்பியதும்  உன்னால் தானே?
    *நட்டுவைத்த வாழையெலாம் குடிகா ரர்போல்
    நலமின்றிச் சரிந்ததும் உன்னால் தானே?
    பட்டணத்து மாமனவன்  சொல்லிச் சென்ற
    பயணமது நின்றதுவும்  உன்னால் தானே?

    பாதையெல்லாம் தொலைந்ததுவும்  உன்னால் தானே?
    பயம்வந்து கவ்வியதும்  உன்னால் தானே?
    வாதையெலாம் பெருகியதும்  உன்னால் தானே?
    வாழ்வியலின் நெருக்கடியும்  உன்னால் தானே?
    கூதல்தரும் வேதனையும்  உன்னால் தானே?
    குறுகுறுக்கும் ஆசைகளும்  உன்னால் தானே?
    ஆதலினால் மழையேவுன்  ஈரம் எங்கே?
    அடுத்தமுறை அறம்பயின்று  வரவேண் டும் நீ!

    இந்த விருத்தங்களில் தொடர்ந்தாளப்பட்டிருக்கும் ‘உன்னால்தானே’ என்பது உலகியல் வழக்கு. “எல்லாம் ஒன்னால வந்த வினை” என்பதைப் பலரும் கேட்டிருக்கலாம். கவிதையைக் கவிஞன் மொழியில் செவிமடுக்க வேண்டும். அவன் சொல்வதுபோல் நாம் பாவனை செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரம் பேசினால் அந்தப் பாத்திரமாக வாசகன் மாற வேண்டும். பாத்திரம் பேசுவதையெல்லாம் நூலாசிரியன் கருத்து என மயங்கக் கூடாது. அப்போதுதான் படைப்பாளியின் அனுபவம் வாசகனுக்குக் கிட்டும். மிக நுண்ணிய அழகியல் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை இது,  பாட்டில் துன்பங்களையல்லவா பட்டியலிடுகிறார்? இதில் அழகியல் எப்படி வரும் எனச் சிலர் வினவக்கூடும்.  துன்பம் மக்களுக்கு, கவிதைக்கு அல்ல. கவிதைக்கு அது பாடுபொருள்.

    1. தாவ ரங்கள் பொலிவிழந்து நிற்பது
    2. தன்கிளையின் காய், கனிகள் உதிர்த்தது
    3. தவமரங்கள் வீழ்ந்தது
    4. சிற்று யிர்கள் திணறியது பதறியது
    5. பறவையெலாம் சிறகொ டுங்கி எங்கெங்கோ பறந்தது
    6. ஆடும் மாடும் குலைநடுங்கித் தவித்தது
    7. பஞ்சா ரத்துக்  கவின்கோழி தப்பியது
    8. *நட்டுவைத்த வாழை நலமின்றிச் சரிந்ததும்
    9. மாமன் பயணமது நின்றது
    10. பாதையெல்லாம் தொலைந்தது
    11. பயம்வந்து கவ்வியதும்
    12. வாதையெலாம் பெருகியது
    13. வாழ்வியலின் நெருக்கடி
    14. கூதல்தரும் வேதனையும்
    15. குறுகுறுக்கும் ஆசைகள்

    என்று நிரல் படுத்திப் படித்தால் பாட்டின் பொருளுணரலாம். இதற்குள்ளேதான் அடங்கிக் கிடக்கிறது கவிதை. அந்தக் கவிதையின் பொலிவினைப்

    1. புன்னகையைத் தொலைத்தது போல் தாவரங்கள்
    2. *நட்டுவைத்த வாழையெலாம் குடிகா ரர்போல் நலமின்றிச் சரிந்ததும்

    என்னும் உவமங்கள் மேலும் பொலிவாக்குகின்றன. சங்க இலக்கியத்தின் தலைசிறந்த மாண்பே அடைச்சொற்கள்தாம். அடையில்லாப் பெயர்ச்சொற்களைச் சங்க இலக்கியத்தின் எந்தப் பகுதியிலும் காண முடியாது. அந்த நீண்ட நெடிய மரபு தமிழ்நாடன் கவிதைகளில் இயற்கையிலேயே அமைந்திருக்கிறது, பெயர்ச்சொற்களுக்கு அடைச்சொற்கள் என்பது நெற்றிக்குத் திலகம் போல!

    “ஆதலினால் மழையேவுன்  ஈரம் எங்கே?
    அடுத்தமுறை அறம்பயின்று  வரவேண் டும் நீ! “

    கெடுப்பதும் மழை என்று பாடிய வள்ளுவர் எடுப்பதும் மழை என்றும் பாடி வேண்டினார். அந்த வேண்டுதலைத்தான் தமிழ்நாடன் முன்னெடுக்கிறார். “மழையே!  உனக்கு இரக்கம் இல்லையா என்றால் அவன் அரசியல் வாதி! மழையே உனக்கு ஈரம் இல்லையா என்றால் அவன் கவிஞன்.  தமிழ்நாடன் கவிஞன் என்பதற்கு இந்தச் சொலலாட்சி போதும்!

    உள்ளூர் பார்வை

    ஒரு ஐம்பதாண்டுகளுக்கு முன்பாகப் பொங்கல் மலருக்குப் பாட்டு  எழுதியவர்களெல்லாம் கவிஞர்கள் எனப்பட்டார்கள். திருமண அழைப்பிதழ் எழுதிக் கொடுத்தவர்களெலலாம் வரலாற்றாசிரியர் ஆனார்கள். தற்போதும் நிலைமை அப்படியேதான் ;இருக்கிறது. என்ன ஒரு மாற்றம்? கவிதையில் தங்களுக்குப் பிடித்தமான தலைவர்களைப் பாடித் தீர்க்கிறார்கள். அவர்கள் ஆட்சியில் இருந்தபோதும் இல்லாதபோதும் செய்த செயல்களைச் சாதனைகளாகக் காட்டி, அவற்றை அப்படியே பல்லாங்குழிக்குள் வைத்த சோழிகளைப் போல, யாப்புக்குள் திணித்து நோபல் பரிசுக்கு அனுப்பிவிடுகிறார்கள். அப்படியானால் தனிமனிதனைப் பாடுவது கவிதையாகாதா என்றால் ஆகும். அது கவிதையாக இருக்க வேண்டும். இது வரை நானறிந்த வரை மகாகவி பாரதிக்குப் பாரதிதாசன் எழுதிய பாராட்டினைப் போல் வேறு யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. அதற்கு அடுத்தபடியாக உ.வே.சாவுக்கு மகாகவியும் அறிஞர் வ.சுப மாணிக்கமும் எழுதிய பாராட்டுக்கள் அற்புதமானவை.

    “தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
    பாரதியால் தமிழ் தகுதி பெற்றதும்”

    என்னென்பேன்?” என வியந்து போற்றிய அந்த உணர்ச்சிப் பாராட்டு இன்றைக்கு இல்லை. காரணம் பொருளைப் பாடுவதற்கான காரணங்கள் உண்மையானவையாக இல்லை.  கவிஞனாகவும் இல்லை. பாடுகிற தலைவனிடமிருந்து எதனையாவது எதிர்பார்த்து எழுதினால் அது பாராட்டாக இருக்கலாமே தவிர, கவிதையாக இருக்காது. எதனையும் எதிர்பார்க்காமல் எழுதுகிறவன் கவிஞனாக இல்லாமல் வாய்பாட்டு வணிகனாக இருந்தால் தளையிலேயே சிக்கித் திணறுவான். எனவே இரண்டும் சரியாக இருக்க வேண்டும்.  தமிழ்நாடன்; இரண்டும் சம அளவில் கலந்த கலவை. அதனால்தான் அவர் யாரைப் பாடினாலும்  கலைஞரைப பாடியதுபோல அமையவில்லை. அவரும் இவரும் திருவாரூரைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாடனின் தந்தையார் கலைஞரின் அருமையுணர்ந்து அவருக்கு நெருக்கமானவர். கவிஞர் பிறர் கலைஞரைப் பாடுவதற்கும் தமிழ்நாடனை ஒத்தவர் கலைஞரைப் பாடுவதற்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. கவிதை மணங்கமழும் கவிதைகளால் கலைஞரை அவர் பாடியிருப்பன  கவிதைச் சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன .

    நீயெழுதும் போதோ நெருப்பெரியும்! உன்கையால்
    நீயெடுக்கும் பூவும் நிறம்மாறும் – நீயெழுப்பும்
    போர்முழக்கச் சொல்லில் புயல்வீசும்! செந்தமிழின்
    வேர்நீ விழுதுகளும் நீ!

    ஒரு நேரிசை வெண்பா எப்படி அமைந்தால் கற்பார் உள்ளத்தைக் கவரும் என்னும் வித்தை தெரிந்தவர் தமிழ்நாடன். அந்த வெண்பாவில் முரண் அமைப்பைக் கையாளும் கலை கற்றவர் அவர். சொல் முரண் பொருள் முரண் என்னும் வகைபாடுகளை நன்கு அறிந்தவர்.அதனால் அந்த முரண்களை மிக இலாவகமாகக் கையாண்டு சில வெண்பாக்களைக் கலைஞருக்குப் பாடியிருக்கிறார் இன்னொரு வெண்பா இப்ப்டி அமைந்திருக்கிறது

    “உன்னிதழ்கள் என்ன ஒளித்தமிழின் தாய்வீடா?
    பொன்சிறகுச் சொற்களெல்லாம் பூக்கிறதே! உன் பேச்சால்
    தேன்பூச்சினுள்ளும் திராவகம் ஊறுவதை
    நான் பார்த்தேன் அன்றொரு நாள்!”

    அரசியல் களம் தமிழிலக்கியக் களம் என்னும் முரண்பட்ட இரு களங்களீலும் மாபெரும் வெற்றிகண்ட கலைஞரை முரண் தொடையினாலேயே பாடியிருப்பது சிலாகிக்கத தகுந்தது. தேர்தலில் கட்சி முழுமையாகத் தோற்றாலும் சிரித்துக் கொண்டே இருக்கும் தலைவர் கலைஞர்! காரணம் இலக்கியம்! “நீ என்ன தேனும் பாதரசமும் கலந்த கலவையா?” என்று வைரமுத்து ஒரு முறை கலைஞரைப் பாடியிருந்தார். கலைஞரின் இந்த முரண் தமிழ்நாடனை மட்டுமன்று எந்தக் கவிஞனையும் கவரும்! இந்த முரண்களின் தொகுப்பை இப்படி அமைத்துப் பாரக்கலாம்!

    1. கருவியாக இருக்க வேண்டிய நெருப்பே எரிகிறது
    2. பூக்களுக்குப் பதிலாகச் சொற்கள் பூக்கின்றன.
    3. தமிழ்ச்சொற்கள் கலைஞர்வழி பூக்களாகக் கொட்டுகின்றன
    4. மென்மையான சொற்கள் அனல் வீசும் சொற்களாக மாறுகின்றன
    5. பூக்களில் தேனுக்குப் பதிலாகத் திராவகம் சொட்டுகிறது
    6. தமிழிலிருந்து வந்த கலைஞர் தமிழைத் தாங்குகிற விழுதாகவும் இருக்கிறார்.

    எட்டு அடிகள் கொண்ட இரு நேரிசை வெண்பாக்களில் கலைஞரின் சொற்களின் இருவகை முரண்களைக் கவிதையாக்கியிருக்கிறார் தமிழ்நாடன்! பாடாண் திணைக்குள் கையறு நிலை அடங்காது.  ஆனால் கையறு நிலையில் பாடாண் திணை அடக்கம்! அந்த வகையில் கலைஞருக்குப் பாடிய கையறு நிலைப் பாடல பாடாண் திணைப் பொருண்மைகளை உள்ளடக்கிக் கவித்துவமாகப் பாடியிருக்கும் தமிழ்நாடனின் கவியாளுமை இதனால் புலப்படக் கூடும்.

    உலகப்பார்வை

    உரைநடைக்கும் கவிதைக்கும் எத்தகைய வேறுபாடுகள் உள்ளனவோ அத்தகைய வேறுபாடுகளே சாதாரண மனிதர்களுக்கும் கவிஞர்களுக்கும் உள்ளன. சாதாரண மனிதன் நிகழ்வியலைப் பேசுகிறான். கவிஞன் கற்பனையில் மிதக்கிறான். சாதாரண மனிதன் தரையில் நடக்கிறான். .கவிஞன் வானத்தில் பறக்கிறான்.  சாதாரண மனிதன் மனிதர்களிடத்தில் மட்டும் பேசுகிறன். கவிஞனோ மரம், செடி, கொடி என அனைத்து உயிரினங்களோடும் உறவாடுகிறான். சாதாரண மனிதன் உரையாடலில் புனைவுகளே இல்லை. ஆனால் கவிஞன் புனைவுகள் இன்றி எழுதவே முடியாது, சாதாரண மனிதன் அக்கம்பக்கத்து வீட்டாரையும் பகைத்துக் கொள்கிறான். கவிஞனோ மானுடச்சமுதாயம் அத்தனையையும் தன் பார்வையால் தழுவிக் கொள்ளுகிறான். அடுத்த வீட்டுச் சுவற்றையே சாதாரண மனிதன் பார்த்துக் கொண்டிருக்கிறான். சீனப் பெருஞ்சுவரையும் தாண்டியும் கவிஞன் சிந்திக்கிறான். உள்ளூர் தகராறு கூட ஒரு சாதாரண மனிதனுக்குத் தெரிவதில்லை!. ஆனால் ஈராக் ஈரான் போரிலிருந்து இஸ்ரேல் போர் வரை கவிஞனுக்குத் தெரிந்திருக்கிறது, அவனுடைய மானுடப் பார்வை விசாலமானது. அதனால்தான் சங்கச் சான்றோர்களும் அவர்வழி வந்த புலவர் பெருமக்களும் தங்கள் இலக்கியங்களை ‘வையம்’ என்றோ ‘உலகம்’ என்றோ தொடங்கினார்கள்.

    நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
    நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
    பல தோற்ற மயக்கங்களோ

    கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
    நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ!
    உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ!

    வானகமே இளவெயிலே மரச்செறிவே
    நீங்களெல்லாம் கானலின் நீரோ!
    வெறும் காட்சிப் பிழைதானோ!

    போனதெல்லாம் கனவினைப்போல்
    புதைந்தழிந்தே போனதனால்
    நானும் ஓர் கனவோ!
    இந்த ஞாலமும் பொய்தானோ!

    காலமென்றே ஒரு நினைவும்
    காட்சியென்றே பல நினைவும்
    கோலமும் பொய்களோ!
    அங்குக் குணங்களும் பொய்களோ!

    காண்பதெல்லாம் மறையுமென்றால்
    மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
    நானும் ஓர் கனவோ
    இந்த ஞாலமும் பொய்தானோ!

    என்று மகாகவி பாடுகிறார் என்றால் தன் வாழ்க்கைத் துயரத்தை மறந்து வறுமையைத் துறந்து பாடுகிறார் என்பதை அறிதல் வேண்டும். அசையும் பொருள் அசையாப்பொருள் ஆகியவற்றைத் தனக்கு உறவாக்கிக் கொள்ளும் ஒரு தனித்திறன் மகாகவிக்கு இருந்திருக்கிறது! அவரைத் தொடர்ந்து வந்த பாரதிதாசன்,

    அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு!
    விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
    உன்னைச் சங்கமமாக்கு!
    மானிட சமுத்திரம் நான் என்று கூவு!
    பிரிவிலை எங்கும் பேத மில்லை!
    உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்!
    புகல்வேன், உடைமை மக்களுக்குப் பொது!
    புவியை நடத்து! பொதுவில் நடத்து!

    உலகு முன்னால் தனிமனிதன் பின்னால் என்னும் சமுதாய நோக்கத்தை முன்னெடுக்கிறார். பாரதிதாசனுடைய கவிதைகள்  தமிழ், தமிழர் என்று தொடங்கித், திராவிடம் பாடி, தேசியம் பாடி, உலகப் பொதுமைபாடி, மானிடத்தின் மகத்துவம் பாடி விசாலப் பார்வையால் விரிந்து  விரிந்து செல்லும் இயல்புடையன.இந்த இயல்பு அவர் ஒரு கவிஞர் என்பதால் வந்த இயற்கையமைதி! ஒரு தனிமனிதனிடத்தில் இத்தகைய பரந்துபட்ட விசாலமான மனத்தை அவ்வளவு எளிதாகக் கண்டு விட முடியாது.

    இந்த நீண்ட நெடிய மரபில் வந்தவர்தான் ஆரூர் தமிழ்நாடன். காதலைப் பற்றி எழுதுவது, கண்ணீரைப் பற்றி எழுதுவது, வாழ்வியல் சிக்கலைப் பற்றி எழுதுவது என அவர் பயணம் செய்திருக்கிற களங்கள் பலவாயினும்

    என் கனவென்பது பசியறு உலகம்!
    என் சுகம் என்பது சூதறு மனிதம்!
    என்னிசை என்பது இயற்கையின் பாடல்!
    என் தவம் என்பது வேர்வையின் வெகுமதி!
    என்னூர் என்பது உலகப் பெருவெளி!
    என்னுற வென்பது மானுடக் கூட்ட்ம்!!
    என் மகிழ்வென்பது உலகின் மகிழ்வு!
    என் துயர் என்பது பிறர் படும் துயரம்!!

    என்னுந் தன்னிலை விளக்கம் ஒரு கொள்கைப் பிரகடனமாகவே ஒலிப்பதைக் காணலாம். ‘யாதும் ஊரே யாவரும கேளிர்’ என்று தொடங்கிய இந்த மரபின் நீட்சி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இருக்க வேண்டும். மரபியல் சிந்தனைகள் என்பன இவையே. மரபுக்கவிதைகள் என்பனவும் இவையே. மனிதனே ஒரு சமுதாய விலங்கு! அவன் கவிஞன் ஆனால் மானுட நேசிப்பே அவன் பிறவி நோக்கமாகிவிடுகிறது. சமுதாயத்திற்காகத் தலைவர்கள் பாடுபடலாம். உண்மைக்கவிஞனோ சமுதாயத்திற்கே தன்னை ஒப்படைத்து விடுகிறான். அப்படி ஒப்படைத்த ஒரு சிலருள் தமிழ்நாடனும் ஒருவர்!

    கவிதையில் புதிய வடிவங்கள்

    பொருளுக்கேற்ற வடிவம் என்பதே தமிழ்க்கவிதைகளின் வடிவக் கோட்பாடு. இது பற்றிய என் ஆய்வு பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகியிருக்கிறது. சிலப்பதிகாரத்தை விருத்தத்தில் எழுதியிருந்தாலும் கம்பராமாயணத்தை ஆசிரியப்பாவில் எழுதியிருந்தாலும் இரண்டும்; படுதோல்வி அடைந்திருக்கும். இங்கே தொட்டதற்கெல்லாம் “தாக்கம்! தாக்கம்” என்னும் ;கடுமையான பதப்பிரயோகத்தைப் பயன்படுத்தி புதிய வடிவங்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது பற்றிக் கவலைப் பட ஏதுமில்லை. ஜப்பான் நாட்டுக்காரன் சிதைந்துபோன தன் நாட்டை மறுசீரமைப்பு செய்துவிட்டுப் புதுவாழ்வை நோக்கி எழுச்சி நடை போட்டுக்கொண்டிருக்கிறான். இவர்கள் ஜப்பான் மொழி தெரியாமலேயே ஹைக்கூ என்பது ஜப்பானிய தாக்கத்தால் வந்நது என்பார்கள். பாரதிபோல யாரோ ஒருவர் மிகுந்த சிரமப்பட்டுத் தன் பன்மொழிப் புலமையால் அதனையோ அது போன்றவற்றையோ அறிமுகப்படுத்தியிருக்கலாம்.  திரு அப்துல் ரகுமான் அத்தகைய பன்மொழி வித்தகர். மரபு சாராத கவிதைகளைப் பற்றிய அவருடைய கருத்துக்கள ;மிகவும் ஆழமானவை. அவருடைய முனைவர்ப் பட்ட ஆய்வேடே “புதுக்கவிதைகளில் குறியீடு” என்பதாகும். இவர்கள் சிரமப்படாமலேயே அந்த வடிவத்தைத் தம் சிந்தனைகளுக்கு வடிவமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். புதுக்கவிதை அதுபோல்தான் கலீல் ;ஜிப்ரான் என்பார்கள். பாப்லோ நெருடா என்பார்கள். எஸ்ராபவுண்டு என்பார்கள். டி.எஸ்.எலியட் என்பார்கள். இவர்களுக்கு உள்ளூரில் எந்தத் தாக்கமும் இருக்காது. வெளிநாட்டு இறக்குமதியால்தான் இவர்கள் தாக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நமக்கு இதுபோன்ற எது பற்றியும் கவலையில்லை. இந்த ஆராய்ச்சியும் தேவையில்லை. மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக், பழமொன்ரியூ என்றெல்லாம் கவிதைச் சந்தையில் பல பொருள் வணிகம் செய்யப்படுகிறது, இந்த வணிகம் ஒருவகையில் இந்த மண்ணில் நிலை கொண்டிருந்த மரபுக்கவிதையின் பேரழிவுக்குப் பெருங்காரணமாகவும் அமைந்தது. இத்தகைய வடிவங்களைப் பற்றிக் கவலைப்படாமல் நோக்கினால் சிலவற்றில் கவிதைகள் இல்லாமல் இல்லை. இந்த வடிவங்கள் தமிழுக்குப் புதியன என்பதில் எத்தகைய ஐயமோ இவை வரவேற்கப்படவேண்டியவை என்பதில் தயக்கமோ எனக்கு இருந்ததில்லை ஆனால் தள்ளுவண்டி தக்காளியைப போல வணிகத்திற்குப் பயன்படும் போதுதான் கொஞ்சம் நெளிய வேண்டியதிருக்கிறது.

    தமிழ்நாடன் ஒரு ஆற்றல் வாய்ந்த படைப்பாளர். கவிதைப் படைப்பாளர். இயல்பிலேயே கவிஞர். மரபுக்கவிதைகளைச் சரளமாக எழுதும் அவர், புதிய கவிதை வடிவங்களை உள்வாங்குவதற்கு எந்தச் சிரமத்தையும் கொள்வதில்லை. காரணம் கவிஞனுக்கு அதுபோன்ற சிரமங்கள் ஏதும் வராது. அவன் மனம் எப்போதும் கவிதையையே சிந்தித்துக் கொண்டிருப்பதால் வடிவங்கள் அவனை ஆட்கொள்ளுவதில்லை. மாறாக அவனே எல்லா வடிவங்களையும் ஆட்கொள்கிறான். உலகம் யாவையும் தாமுளவாக்கவும் நிலைபெறுத்தலும் நீக்கலும் கொண்ட பரம்பொருளைப் போல கவிதையின் எந்த வடிவத்தையும் ஆக்கவும் நிலைபெறுத்தவும் நீக்கலும் செய்வதற்கான வல்லமையைப் பெற்றவர் தமிழ்நாடன். அவருடைய புதிய கவிதை வடிவங்களிலிருந்;து சில கவிதைகள் இப்படி அமைந்திருக்கின்றன. கவிஞர் சுரதா ஒரு ஊருக்குச் சென்றிருக்கிறார். இரவு நேரம். நாய் குரைக்கிறது. அடித்துத் துரத்துவதற்குச் சரளைக் கற்களைத் தேடுகிறார். அவை பூமியோடு ஒட்டிக் கொண்டு இவர் கைக்குக் கிட்டவில்லை. உடனே சொல்கிறார். “என்ன இது இந்த ஊரில்? நாயை அவிழ்த்துவீட்டுக் கல்லைக் கட்டிப் போட்டிருக்கிறார்கள்?” பிறவியிலேயே கவிஞனாக இருந்தவனுக்குத்தான் இது மாதிரி கற்பனைகள் தோன்றும். நாயைக் கட்டிப் போடுவது எல்லாருக்கும் தெரிந்த வினைதான். ஆனால் மண்ணோடு ஒட்டிய சரளைக் கற்களைக் கட்டிப் போட்டிருப்பதாக எல்லாராலும் கற்பனை செய்துவிட முடியாது.

    “என்ன அசதியோ
    அசையாமல்
    படுத்திருக்கிறது
    இரவு;
    நான்தான்
    புரண்டபடியே இருக்கிறேன்.

    மனிதன் அசையாமல் கிடப்பான். அசைந்தபடியும் கிடப்பான். இரவுக்கு அந்த வேறுபாடு கிடையாது. கவிஞனாகையால் உழைத்துக் களைத்த உடம்பல்லவா? இவன் தூக்கம் வராமல் அசைந்து புரண்டு கிடந்து வானத்து இருளை நோக்குகிறான். அந்த இருள் அசையாமல் கிடக்கிறது. இருள் எப்போதுமே அசைவதோ புரள்வதோ இல்லை. கவிஞன் புரண்டதால் வானம் புதிதாகப் புரளாமல் படுத்திருப்பதுபோல் தோன்றுகிறதாம்.

    “ வீணை வாசிக்கிறாய் நீ!
    கண்களால் ரசிக்கிறேன் நான்!”

    கல்யாண அகதிகள் என்று ஒரு திரைப்படம் அதில் நாயகன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவன். அவன் காதலி தன் தோழிகளிடம் சொல்லுவாள் “நான் நியூஸ் பாக்கணும்! நான் நியூஸ் பாக்கணும்!” என்று தோழிகள் வியப்படைவார்கள். செய்திகள் செவிக்குரியன. ஆனால் தங்கள் தோழி ‘பாக்கணும்’ என்றல்லவா சொல்கிறாள் என்று. காதலுக்குக் கண்தான் தலைமையாசிரியர். மற்ற எந்த புலனும் குறிப்பாக மூளை பயன்படவே பயன்படாது, ‘நான் மூளைக்கு மூளையாக அவளைக் காதலித்தேன் என்று எவனும் கூற மாட்டான். நான் உயிருக்கு உயிராக அவளைக் காதலித்தேன் என்றுதான் கூறுவான். மூளை அறிவுப் புலன். இதயம் உணர்வுப் புலன்! அதனால்தான் கவிஞனாகக் காதலித்த தமிழ்நாடன் வீணையிசையைக்  கண்ணால் பார்த்து ரசித்திருக்கிறார். நான் அறிந்தவரையில் இசையைப் பாரத்து ரசித்தவர் இவராகத்தான் இருக்க முடியும்! கவிதையென்றால் இப்படித்தான் அமைய வேண்டும். ஆறே சொற்கள்! ஒரு பொருள் முரண்! அருமையான வெளிப்பாடு

    “ஒரு சூறாவளியைப்
    போலத்தான்
    என்னை நீ கடந்திருக்கிறாய்;
    சேதத்தின் மதிப்பில்
    தெரிகிறது
    உன் மதிப்பு.”

    நம்முடைய நாட்டுத் தலைவர்கள் மழை பெய்து, வெள்ளம் வந்து, நடப்பியல் வாழ்க்கை சீரழிந்து ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிய பிறகுதான் வெள்ளச் சேதத்தை விமானத்திலிருந்து மதிப்பிடுவார்கள்  காதலும் அது போல்தான்! இந்தக் குறுங்கவிதை தலைவனுக்கும் பொருந்தும் தலைவிக்கும் பொருந்தும். காதலில் “சேதாரம் ஆணுக்கு” என்பது ‘பின் நவீனத்துவம்!”  வளையல் கழண்டு விழுவதும், மேனி பசப்பதும், தோள் துவளுவதும் விழிகள் பஞ்சடைவதும் பழந்தமிழ்க் கவிதைகளில் தலைவனுக்குச் சொல்லப்பட்டதாகத் தகவல் இல்லை. பின்னாலே வந்தவர்கள் இந்த மரபை மாற்றி காதலியைப் பிரிந்த தலைமகன் தாடி வளர்த்துக் கொள்வதுவரைப் பாடித் தீர்த்தார்கள். இழந்த பிறகுதான் இருப்பின் பெருமை புரியும். நம்முள் எததனைப் பேர் பெற்றோரை, மனைவியை. கணவனை வாழுங்காலத்தில் புரிந்து கொள்கிறோம்! காதலுக்கும் இது பொருந்தும்.  தன்னிலை மறந்த காதலில் ஏதும் தெரிவதில்லை. இழந்த பிறகுதான் இழந்தது எது என்பதே தெரிகிறது! புரிகிறது.  வடிவங்கள் எதுவாயினும் கவிதைகளை அவற்றில் வார்த்தெடுக்கும் வல்லமை கொண்டவர் ஆரூர் தமிழ்நாடன் என்பதற்கு இந்தக் கவிதைகள் ஒரு குறைந்த அளவு எடுத்துக் காட்டுக்களே! தன்னைப் பாதித்த அனைத்துப் பொருண்மைகள் பற்றியும் ஆரூர் தமிழ்நாடன் முகநூலில் பாடியிருப்பவனவற்றை என்னால் இயன்ற அளவு திறனாய்வு வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கிறேன். ஒரு அறியப்பட்ட கவிஞனுக்கு அறிமுகம் தேவையில்லை!

    நிறைவுரை

    கவிதையில் வாழ்வதே வாழ்வு என்பது திறனாய்வாளனாகிய என் வாழ்நாள் கொள்கை! நல்ல கவிதைகளையும் அவற்றை எழுதிய உண்மைக் கவிஞர்களையும் அறிமுகம் செய்வதை ஒரு கடனாகக் கொண்டிருக்கிறேன். அந்தக் கடமையை நான் ‘வல்லமை’ யோடு செய்து வருகிறேன். முகநூலில் நான் கண்ட உண்மைக் கவிஞர்கள் சிலருள் ஆரூர் தமிழ்நாடனும் ஒருவர். தமிழ்மணக்கும் தஞ்சைத் தரணியைச் சேர்ந்தவர். அவருடைய கவிதைகளைப் பற்றிய இந்த என்னுடைய திறனாய்வு இன்னும் பல திறனாய்வுகளுக்கு வழித்தடமாக அமைய வேண்டும் என்பது என் ஆசை. எவ்வளவு சிறந்த கவிஞரானாலும் அவருடைய எல்லாக் கவிதைகளையும் நான் திறனாய்வு செய்வதுமில்லை. பிழைவேட்டையை நான் திறனாய்வாகக் கருதுவதுமில்லை. அரிய பிழைகள் சுட்டிக்காட்டப்படலாம். திறனாய்வில் பல வகை உண்டு. நடுநிலைத் திறனாய்வு (Standard Criticism), விருப்பு வெறுப்பின் எல்லையில் இருந்து திறனாய்வு செய்வது (accentric Criticism) வரலாற்று முறைத் திறனாய்வு (Historical Criticism). கவிஞனின் வாழ்வை ஓட்டி அமைகின்ற திறனாய்வு (Biographical Criticism) விதிகளின் அடிப்படையில் திறனாய்வு செய்வது (Dogmatic Criticsm) கவிஞனின் உணர்ச்சிவழி நின்று செய்கின்ற திறனாய்வு (impressionistic Criticism) எனப் பலவகைப்படும். அரூர் தமிழ்நாடன் பற்றிய கவிதைகளைப் பற்றிய இந்தத் திறனாய்வு ஒரு உணர்ச்சிவழித் திறனாய்வு. (impressionistic Criticism)  தமிழ்நாடன் ஒருமுறை  எழுதியது போல ‘ஆய்வென்று ஜால்ராவைத் தட்டுகின்றார்’ என்பது போன்றது அல்ல! இந்த எண்பது வயதில் நான் யாருக்கு ஜால்ரா தட்டப் போகிறேன்? ஆரூர் தமிழ்நாடனின் பன்முகப் பரிமாணங்களை உணர்ச்சிவழி நின்று கண்டறிய என்னுடைய மிகச் சிறிய முயற்சி இது.!

    (தொடரும்)

    Share
  • உணர்வுகள் (சிறுகதை)

    உணர்வுகள் (சிறுகதை)

    முனைவர் நா. தீபா சரவணன்
    உதவிப் பேராசிரியர்
    குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    ‘கமலா எனக்கு சீரு முடிச்சு இது நாலாவது வருஷம். இப்போ வரைக்கும் எனக்கு இப்படி ஆனதே இல்லடி.’

    ‘ எனக்கு ஞாபகம் இருக்குடி என்னோட சீரு முடிஞ்சு ஒரு மாசம் கழிச்சுதானே உனக்கு சீரு வச்சாங்க சுமி…. கரெக்டா?’

    ‘ஆமா. ஆனா இதுவரைக்கும் டேட் தவறனதே இல்ல. ரெண்டு நாள் மூணு நாள் முன்ன பின்ன ஆகும். இப்போ நாலு நாள் ஆச்சு இன்னும் ஒண்ணுமே ஆகல.’

    ‘ வெயிட் பண்ணு பார்ப்போம் உனக்கு எதுக்கெல்லாம் கவலைப்படணும்னு வெவஸ்தயே இல்ல.’

    ‘இல்லடி………… போன மாசமும் ஆறு நாள் கழிச்சு தான் ஆச்சு நான் அம்மாகிட்ட பொய் சொன்னே கரெக்ட்டா ஆச்சுன்னு இந்த தடவை சொல்லவும் முடியாது அம்மாவே டேட் குறிச்சி வெச்சிருக்கா.’

    ‘இன்னைக்கு நாம காலேஜ் சேர்ந்து ஃபர்ஸ்ட் செமஸ்டர் கடைசி எக்ஸாம். நாளைலிருந்து 25 நாளக்கி லீவு. லீவ் என்ஜாய் பண்ணுவியா இத உட்கார்ந்து இப்ப போய் பேசிட்டு. சுமி ரொம்ப யோசிக்காத வா அச்சாயங்கடையில போயி ஒரு பழம் பொரி சாப்பிட்டா சரியாகும் வா’

    குழப்பத்துடன் சென்றாள். இனி கமலாவ காலேஜ் திறக்கறவரப் பார்க்கவும் முடியாது. இது போன்ற விஷயங்களை ஷேர் செய்யவும் முடியாது என வருந்தினாள் சுமி. வீட்டுக்குக் கிளம்பி வந்துவிட்டாள்.

    அம்மா, துபாயிலிருந்து அப்பா வர்ற குஷியில் இருந்தா. துபாயில் பெரிய வைட் காலர் வேலை ஒன்றுமில்லை. பிளம்பிங் வேலை தான். போய் நாலு வருஷம் ஆச்சு சீருக்கு வந்தது அதுக்கப்புறம் இப்போதான் வராரு. இவங்க இருக்கிறது  ஒரு கிராமம். தப்பட்டன்கிழவன்புதூர். பஸ் வசதி மிகக் குறைவுதான், ஆனால் ஆற்றின் ரம்மியமான ஓசை, ஈரமான சாரல் காற்று, அடுக்கி வைத்த தென்னந்தோப்புகளின் மிருதுவான காற்று, காற்றில் மிதந்து வரும் வாழைக்கனிகளின் வாசம் என்று இயற்கையோடு கலந்த உணர்வுகள். பிளஸ்டூவிற்குப் பிறகு சுமி எப்படியோ கோயம்புத்தூரில் இலவசமாக ஒரு காலேஜ்ல சீட் வாங்கிட்டா.  லீவு விட்டா வந்துருவா.

    வசதிகள் குறைவா இருந்தாலும் ஒட்டு ஒறவோடு பழகுற கிராமம். லீவுக்கு வரும்போது சுமி அங்கலாய்ப்போட வந்தா. போன மாசம் 16ஆம் தேதி விலக்கானது.  இன்னைக்கு தேதி 20 ஆச்சு அம்மா போனதும் முதல்ல அதுதான் கேட்பா. போன அன்னைக்கு மறந்துட்டா அடுத்த நாள் காலைல எழுந்ததும் முதல் கேள்வியே அம்மாவோடது அதுதான்.

    “ஏம்புள்ள நீ இன்னும் விலக்கு ஆகல.  27ஆம் தேதி கல்யாணத்துக்குப் போகோணும். அதுக்குள்ள ரெடி ஆயிடுவியா?. அப்பா சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு ரெண்டு நாளு அங்க போய் இருக்கலாங்கற திட்டத்தோட வர்றாரு. நீ வேற போற நேரத்துக்கு முக்குல உட்கார்ந்துடாதே”

    “இல்லம்மா இன்னைக்கு அஞ்சு நாள் தள்ளியாச்சு இன்னும் ஆகல.”

    ‘சரி பார்ப்போம்.   தோட்டத்திற்குப் போன செண்பகம் நன்றாகப் பழுத்த பப்பாளியையும், எள்ளுருண்டை பாக்கெட்டையும் சுமித்ராவுக்குக் கொண்டு வந்து கொடுத்தாள். சீக்கிரமா விலக்கு ஆவதற்காக.

    தேதி 23 ஆனது பப்பாளியும். எள்ளுருண்டையும் வேலை செய்யவில்லை. அவளது அப்பா ஊர்ல இருந்து வந்த முசுவில் யாரும் இதைப்பற்றி யோசிக்கவே இல்ல.

    சரி முன்னப்பின்ன ஆகும். ஆகும்போது ஆகட்டும். கல்யாணத்துக்கு எதுக்கும் முன்னெச்சரிக்கையாக எல்லாம் எடுத்துட்டுப் போனாள் சுமி. சுமியின் அப்பா வெங்கடேசனின் ஒண்ணு விட்ட அத்தை பையனுக்குக் கல்யாணம். அவனுக்கு உறவினர்களைப் பார்த்த மகிழ்வு, சொல்லி அடங்காது. கொண்டாடி தீர்க்க டாஸ்மாக் மட்டும் செல்லவில்லை.

    28-ஆம் தேதி ஊருக்குத்  திரும்பின போது தான் செண்பகத்துக்கு ஞாபகம் வந்தது, சுமி இனியும் விலக்காகவில்லை என்று. தனக்குத் திருமணமாகி வந்த புதிதில் விலக்கானால் தன் மாமியார் காட்டும் சுத்தத்தை எண்ணிப் பயப்படுவாள். படுக்க, பாய் தரமாட்டார்கள், தலையணை கிடையவே கிடையாது. விடிவதற்குள் ஆத்துக்குப் போயி குளிச்சிட்டு வரணும். மாத்திக்கத்துணி எடுத்துகிட்டு போகக்கூடாது. ஈரத் துணியோட வீட்டுக்கு வந்ததுகப்பறம்தா துணி மாத்தணும், மூணாவது நாள்  பயன்படுத்தின துணிக,, போர்வை எல்லாத்தையும் நெனச்சுப் போடணும்.வீட்ட சாணிபோட்டு வளிச்சு விடணும். கோமியம் எடுத்திட்டு வந்து வீட்ட சுத்திலும் தெளிச்சு விடணும்.  அம்மாடி இப்போ நெனச்சுப் பார்த்தாலே மலைப்பா இருக்கு.

    சுமியோ மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். 13 நாட்கள் தள்ளிப்போனது கல்யாண வீட்டில் இரண்டு தடவை வாந்தி வேறு எடுத்தாள். செண்பகத்திற்கு வயிறு கலங்கியது நம்ம பொண்ணு தப்பான வழிக்கு எதுவும் போயிருக்க மாட்டா. இருந்தாலும் காலம் வேற கெட்டுக் கெடக்கு. போன மாசந்தா காலேஜிலிருந்து டூர் போறாங்கன்னு கொடைக்கானல் போயிட்டு வந்தா. போன இடத்தில ஏதாவது……….. சொல்ல பயப்படுறாளோ? அப்பா இருக்காரேனு யோசிக்கிறாளோ? அப்படி எல்லாம் செய்யாது எம்புள்ள. கடவுளே நம்ம ஜாதி சனத்துக்கு தெரிஞ்சா சும்மா இருப்பாங்களா ஊரே ஒன்னு கூடிருமே. நானா கற்பனை பண்றேனா? வயசு புள்ளைய வச்சிருக்கிற எல்லா அம்மாவும் இப்படித்தான் யோசிப்பாங்களா?

    சுமி ஒரு தடவை பேரன்ட்ஸ் மீட்டிங் வர முடியலன்னு அவங்க மேம் கிட்ட பேசச் சொல்லி ஒரு நம்பர் கொடுத்தா. அவங்கள கூப்பிட்டுக் கேட்போம். ஒரு எளவும் புரிய மாட்டேங்குது. இல்ல இனியும் ஒரு வாரம் பொறுத்துப் பாக்கலாமா? உடம்புல சத்துமானம் கொறவா இருந்தாலும் இப்படித்தான் ஆகும். வேண்டாம் நாளைக்கே மேம் கிட்ட கூப்பிட்டுக் கேட்டுப் பாக்கலாம்.

    சுமி மிகவும் சோர்வாகக் காணப்பட்டாள். உணவில் நாட்டம் குறைந்தது. வாய்க்கு எதுவும் பிடிக்காமலானது.சோர்ந்து சோர்ந்து படுத்துக்கொண்டாள். மறுநாள் காலையிலேயே

    “சுமி நானு டௌனு வர போயிட்டு வந்திடறேன்” என்று பழைய நோக்கியா ஃபோன கையில் எடுத்துக்கொண்டு சென்றாள்.

    “ஹலோ மேடம் நான் சுமியோட அம்மா பேசுறேன். இல்ல……….. சுமிக்கி விலக்கு 15 நாளா தள்ளிப்போயிருக்கு. என் பொண்ணு பத்தி நானே தப்பா பேசக்கூடாது இருந்தாலும் பெத்த வயிறு எரியுது காலேஜ்ல அவளுக்கு ஏதாவது பையனோட சகவாசம் இருக்கானு கேட்கத் தான் கூப்பிட்டேன்.”

    “என்ன கேக்குறீங்க? பெத்தவங்க. நீங்க உங்க பொண்ணு எப்படின்னு உங்களுக்குத் தெரியாதா அதெல்லாம் ஒன்னும் இல்ல அவ நல்ல பொண்ணு”

    “இல்லைங்க மேடம், கொடைக்கானல் போன எடத்தில ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிருந்துச்சுன்னா?”

    “அம்மா நீங்க தேவையில்லாம மனச போட்டுக் குழப்பிக்காதீங்க இது இப்போ இருக்கிற பிள்ளைகளுக்கு சாதாரணமா இருக்கிற ஒரு விஷயம் நீங்க ஒரு நல்ல கைனகாலஜிஸ்டாப் போய் பாருங்க”

    “யாருங்க மேடம்”

    ‘கைனகாலஜிஸ்ட்’

    “சரிங்க மேடம் நான் கூப்பிட்டுப் பேசினதா அவகிட்ட சொல்லாதீங்க…. வெச்சிர்றே”

    ‘ம்ம்ம் சரிங்க’

    22 நாட்கள் தள்ளி ஆகிவிட்டது. சுமியின் நடவடிக்கைலயும் நிறைய மாற்றம். அவ மேடம் சொன்ன டாக்டர பாக்கணும்னா டவுனுக்கு தான் போகணும். அவங்க அப்பாவுக்குத் தெரியாம தான் போகணும் ஏன் எதுக்குன்னு கேட்டு என்னைத் தொலைத்துவிடுவாரு. இது தான் புள்ளைய வளத்துற அழகானு என்ன அங்கேயே வெட்டிப் போட்டாலும் போடுவாரு. சுமிகூட படிக்கிற பொண்ணோட அக்காவுக்குக் கல்யாணம் மதுக்கரைலனு பொய் சொல்லி அம்மாவும் மகளும் கிளம்பினர்.

    சுந்தராபுரத்தில் நல்ல ஒரு ‘கைனகாலஜிஸ்ட்டிடம் சென்றனர் அந்த டாக்டர் சுமியை நன்றாகப் பரிசோதித்து பார்த்துவிட்டு “நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லம்மா. இது நார்மல் தான். விட்டமின் மாத்திரை மட்டும் எடுத்துக்கோங்க. நார்மலாவே சரி ஆயிடும்” என்றார்,

    ‘ச்சே அதுக்குள்ள நம்ம புள்ளையை என்னெல்லாமோ நினைச்சிட்டோமே. சாமி மன்னிச்சுக்கோ’

    வீடு திரும்பினர் டாக்டர் சொன்னது ஆறுதலாக இருந்தாலும் செக்கப் முடிஞ்சு ஒரு வாரம் ஆகிப்போச்சு. ஒருவேளை இவ டாக்டர் கிட்ட சொல்ல வேண்டாம் நான் அம்மாகிட்ட பேசிப் புரிய வச்சிக்கிறேன்னு சொல்லி இருப்பாளோ? மறுபடியும் வயிற்றில் புளி கரைந்தது. இனி அவ அப்பாகிட்ட சொல்ல வேண்டியதுதான். வேற வழி இல்ல. இப்போ கொஞ்சம் அவ வயிறு பெருசா இருக்கிற மாதிரி இருக்கு. வெயிட்டா இருக்குனு அவளே சொல்றா. எப்படி ஆரம்பிக்கிறது என்று தெரியவில்லை. ஒரு நாள் நள்ளிரவு தூக்கம் வராமல் உருண்டு படுத்த அவள் புருஷனை உலுக்கினாள்.

    ‘ஏங்க நாம வீட்டை மாத்திட்டு டவுன் பக்கம் போகலாமா இங்க கொடுக்கிற வாடகைய அங்க கொடுத்துட்டா போச்சு’

    பகலில் தூங்கியதால் தூக்கம் வராத அவனும் எழுந்து உட்கார்ந்தான்.

    “இல்லே எங்க ஜாதி சனமெல்லாம் சுத்துமுத்தும் இருக்கு. நல்லது கெட்டதுக்கு ஓடி வருவார்கள் சரிதா ஆனால் அதுவே நமக்கு உபத்திரவமா மாறக்கூடாது இல்ல”

    “என்ன சொல்ற எனக்கு ஒரு எளவும் புரியல. நான் இன்னும் ரெண்டு வாரத்துல திரும்பிப் போயிருவேன் அப்போ நீ தனியா இருப்பேனு தான் நம்ம சாதி சனத்துக்கு கூட உன்னை இருக்க சொல்றேன் உனக்கு என்ன பிரச்சனை இப்போ?”

    “இல்ல சொன்னா டென்ஷன் ஆகாம கேட்கணும். நம்ம சுமி அவ தப்பு பண்ணிட்டான்னு சொல்ல வரல. போன மாசம் அவளுக்கு தூரம் ஆகவே இல்லை. இப்போ அவளோட நடவடிக்கைகளைப் பார்த்தா பயமா இருக்கு . வயிறு வேற பெருசாருக்கிற மாதிரி இருக்குன்னு சொல்றா. நல்லதோ கெட்டதோ நம்ம ஜாதி சனத்துக்கு புள்ளி வெச்சா போதும். கோலம் போட்டு ரோடு போடுவாங்க.  அப்புறம் அவ வாழ்க்கை? நாம ஒரே புள்ளைய வச்சிருக்கோம். மூதேவி வாயைத் திறந்து எதையும் சொல்லவும் மாட்டேங்குது. எனக்கு அப்படியே மூளையே வெடிக்கிற மாதிரி இருக்கு.”

    தனக்கு என்ன ஆச்சுன்னு குழம்பிய மனத்தோடு படுத்தும் உறங்காமல் விழித்துக்கொண்டிருந்த சுமித்ரா, அம்மா பேசியது அவ்வளவையும் கேட்டுக் கொண்டுதானிருந்தாள். உண்மையிலேயே எனக்கு என்னமோ பிரச்சனை இருக்கு. என்னமோ இருக்கு. என்னவா இருக்கும். வயிறு வேற அப்பப்ப ரொம்ப வலிக்குது. கொடைக்கானல் போகும்போது பஸ்ல கிருஷ்ணா மட்டும்தான் எங்கிட்ட நெருக்கமாப் பழகி, எங்கிட்ட ஏதோ சொல்ல முயற்சி செஞ்சா. எல்லாருக்கும்தா அவ கூல்ட்ரிங்க்ஸ் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்தா எல்லாரும் தான் அதைச் சாப்பிட்டோம். பஸ்ல போன சலிப்பில நல்லா படுத்துத் தூங்கிட்டேன். மேம் கூடவே தான் இருந்தாங்க. எனக்கு கன்பியூசனா இருக்கு. கிருஷ்ணா என்ன விரும்புறான்னு பிரண்ட்ஸ் எல்லாம் சொல்லுவாங்க ஆனால் நான் எஸ் சொல்லவே இல்லையே ஒரு வேள…….. ச்சேச் சே வாய்ப்பில்லை.

    அப்புறம் ஏன் தல சுத்துது கொடைக்கானலில் எல்லாரும் எழுந்த பிறகு கடைசியா தான் நான் எழுந்தேன். இரவு என்ன ஆகி இருக்கும். இல்ல என் உடம்பு நார்மலா இல்லன்னு மட்டும் தெரியுது.

    முழுசா கேட்ட வெங்கடேசன் ‘அட போடிஇவளே……. .  இல்ல என் பொண்ணு தப்பு பண்ணியிருக்க மாட்டா. நாளைக்கு காலைல டவுன்ல ஏதாவது நல்ல ஹாஸ்பிடலா பார்த்துப் போயிட்டு வரலாம். ஸ்கேன் பண்ணிப் பார்த்தா தெரிஞ்சிரப் போகுது. கொடைக்கானல் ஏற்காடு சுத்திப் பார்க்கப் போறோம்னு ஊர்ல சொல்லிடுவோம். ஒரு வாரம் கழிச்சு வரலாம்.

    ‘தனக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமலே தற்கொலை கூட செய்து கொள்ளலாம் என்று சுமித்ராவிற்குத் தோன்றியது. ஆனால் இந்த நிலைமையில் நான் அப்படி செஞ்சா எங்க அம்மாவோட சந்தேகம் உறுதி ஆயிடும். ஊர் சும்மா இருக்காது அப்படி ஒரு களங்கத்தோட நான் சாக விரும்பல எனக்கும் எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியணும்.  அப்பா என் மேல இவ்வளவு அசைக்க முடியாத நம்பிக்கையோடு இருக்கும்போது அவரை ஏமாத்தக் கூடாது இருந்தாலும்…………..’

    காலை விடிந்ததும் மூவரும் கிளம்பி கோவையில் உள்ள ஐ.எப்.சி. மருத்துவமனைக்கு வந்தனர். கைனகாலஜிஸ்ட்கிட்ட அப்பாய்ன்மென்ட் வாங்கியாச்சு. பீரியட் தள்ளிப் போயிருக்கு என்று செக்கப் அறையில் படுக்க வைக்கப்பட்டாள். உள்ளே வரும்போதே சிஸ்டர் “மாசமா இருக்கியாமா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார்.

    “எனக்கு இனியும் கல்யாணமே ஆகல சிஸ்டர்.’’

    சிஸ்டர் பார்த்த  கேவலமான பார்வை அவளை உருக்கியது.

    டாக்டர் வந்தாரு நல்லா வயத்த அமர்த்தி செக்கப் செய்தாங்க. ஒரு டியூப்பில் ஜெல் தடவி பிறப்புறுப்புக்குள் விட்டு ஸ்கேன் பண்ணினாங்க. வலி உசுரு போற மாதிரி இருந்துச்சு. ஏதேதோ மெடிக்கல்  ரிப்போர்ட் ரெடி பண்ணனாங்க. செக்கப் புல்லா முடிச்சு ‘அம்மாவைக் கூப்பிடுமா’ என்றாங்க. என்னைக் கொஞ்சம் வெளியில நிக்க சொன்னாங்க. எனக்கும் என்னன்னு தெரிஞ்சுக்கணும்னு இருந்துச்சு.

    “நீங்கதான் சுமியோட அம்மாவா?  நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்களா அவங்க அப்பா இருந்தா உள்ள வரச் சொல்லுங்க. நான் சொல்றத பதற்றப்படாம கேளுங்க,”

    செண்பகத்திற்கு இதயத் துடிப்பு இ.சி.ஜியின் எல்லையைத் தொடும் அளவிற்குப் போனது, அடி வயிறு புரண்டு தொண்டை அடைத்தது, நாக்கு வறண்டது. கண்கள் பிதுங்கின,

    “நீங்க நெனைக்கிற மாதிரி உங்க பொண்ணுக்கு தப்பா எதுவும் நடக்கல. ஆனா நீங்க அவள அப்படி நினைச்சு மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கீங்க”என்று சொல்லி, கொஞ்ச நேரம் கழித்துக் கூறினார். “பெண்களுக்குக் கருமுட்டை உருவாகற இடம் தான் ஓவரி. அது ரெண்டு இருக்கும் அதுதான் குழந்தை பிறக்க ரொம்ப முக்கியம் அதுல ஒரு ஓவரி ஃபுல்லா உங்க பொண்ணுக்கு தண்ணி நெறஞ்சிருக்கு. அதனால அது ஃபுல்லா இன்பெக்க்ஷன் ஆகி இருக்கு. சோ சர்ஜரி பண்ணி அந்த ஓவரியை ரிமூவ்  செய்யதறதத் தவிர வேற வழி இல்ல. இல்லனா இனி ஒரு ஓவரியையும் அது பாதிச்சிடும். ஆயிரத்தில் ஒருத்தருக்கு இந்த மாதிரி பிரச்சனை வரும். எப்படி வருது என்ன காரணம்னல்லா சொல்ல முடியாது. எவ்வளவு சீக்கிரமாகக் கல்யாணம் பண்ணி வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சிருங்க. மாப்பிள்ளை பார்க்கும்போது இந்த விஷயத்தைச் சொல்லாமப் பாருங்க அவங்க ஏற்கனவே உடல் ரீதியா பாதிச்சுருக்காங்க. நீங்க உங்க பிரஷர அவங்கமேல காமிச்சு மனதளவில பலவீனமானவங்களா மாத்திடாதீங்க. அவங்க மனதால பாதிப்பு அடைச்சுடுவாங்க. கருமுட்டை உருவாகறது கஷ்டமாயிடும்.”

    செண்பகம் முந்தானையால் கண்களை ஒப்பினாள். சுமியிடம் வயித்தில சின்ன கட்டி. அதை சர்ஜரி செய்து அகற்ற வேண்டும் என்று மட்டும் கூறினர். தன்னுடைய கற்புத்தன்மை நிரூபிக்கப்பட்டது. கர்ப்பமா இருக்குமோ என்ற அம்மாவின் அங்கலாய்ப்பு, சிஸ்டர் பார்த்த கேவலமான பார்வை, மனத்தில் ஏற்பட்ட பயம் என அவள் அடைந்த மன உளைச்சலுக்கு இது பெரிதாகத் தெரியவில்லை அடுத்த நாளே  ஆபரேஷனுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    அரசாங்க வேலை வாங்கிட்டு அம்மா, அப்பாவப் புது வீடு கட்டி  உட்கார வெச்சிட்டுதான்  கல்யாணம் பண்ணுவேன்னு சவால் விட்ட மகளை எண்ணிக்  கண் கலகிங்கினாள் செண்பகம். செண்பகத்திற்கும்  ஆசையில்லாமல் இல்லை. புள்ளய அவசரமா கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டா  பாரம்  ஒழிஞ்சிடும்னு  நெனக்கற பெற்றோர்களுக்கிடையில் செண்பகம்  சற்று வித்தியாசமானவள்.

    சுமி ப்ளஸ்டூ படிக்கும்போதே கணவரோட வகையறால ஒருத்தரு            மாப்பிள்ளை இருக்குனு சொல்லி வந்தாரு. அதைத் தட்டிக் கழித்தாள். செண்பகம்

    ‘புள்ள இன்னும் கொஞ்சநாள் பெத்தவங்க வீட்டில இருக்கட்டும். அவசரமா கல்யாணம் பண்ணி என்ன ஆகப் போகுது. ஒரு வருசத்தில கையில புள்ளயோட வந்து நிக்கும். அப்பறம் அத வளத்து ஆளாக்கவே பொழுதுக்குக்  கஷ்டப்படணும். அஞ்சுக்கும் பத்துக்கும்   இனி ஒருத்தங்க  கைய  எதிர்பார்த்திட்டு இருக்கணும். கொஞ்சநாள்  படிச்சு முடிச்சிட்டு ஏதோ வேலைக்குப் போட்டம். நமக்கு எதுவும் தரவேண்டா.  அவ  சம்பாதிச்சு  அவ  தேவைக்கு , அவ செலவு செஞ்சுகட்டும். ஒடம்பயும் கொஞ்சம் தேத்திட்டு அதுக்கப்பறம் கல்யாணத்தப் பத்தி யோசிப்போம்” என்று கணவனிடம் சொல்லிக்கொண்டிருந்தவள்.

    ஆப்பரேஷன் தியேட்டருக்குள் போகும்போது சுமி அவள் அம்மாவைப் பார்த்த பார்வை, செண்பகத்தை உப்பு போடப்பட்ட நத்தையாகச் சுருங்கச் செய்தது. இரண்டு மணிநேர ஆபரேஷன்  முடிந்து  அறைக்குக் கொண்டு வரப்பட்டாள். சுமிக்கு  இன்னும் சுயநினைவு வரவில்லை ஆனால் கண்களின் ஓரங்களில் கண்ணீர் ஓயாமல் வந்து கொண்டிருந்தது. அறுவை சிகிச்சையின் வேதனை வருத்தி அவளைக் கண்ணீர் விட வைத்ததா? இல்லை தூய்மை நிரூபணமானதன் ஆனந்தக் கண்ணீரா? மகளின்  நிலையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தான் கணேசன். வருத்தத்திற்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது செண்பகத்தின்

    “ஏங்க கையோடு நம்ம குமரேச  புரோக்கர வரச்சொல்லி சீக்கிரமா மாப்பிள்ளை பார்க்கச் சொல்லலாம்” என்கிற வார்த்தைகள்.

    எப்படி இந்த பொம்பளைங்க மட்டும் உடனுக்குடனே சூழ்நிலைக்குத் தகுந்தமாதிரி தங்கள மாத்திக்கிறாங்க என்ற ஆச்சர்யத்தோடு, கண்ணீரை, மறைத்துக்கொண்டு திரும்பிப்  பார்த்தான் வெங்கடேசன்.

    Share
  • கலைச்சொல்லாக்கமும் மொழிவளர்ச்சியும் கலைப்புலங்களுக்கான தேவைகளும்

    கலைச்சொல்லாக்கமும் மொழிவளர்ச்சியும் கலைப்புலங்களுக்கான தேவைகளும்

    செயபாண்டியன் கோட்டாளம்

    கலைச்சொல்லாக்கத்தை வெறும் தமிழ்வளர்ச்சிக்கான செயலாக கருதுவது போதாது. பிற துறைகளுக்கு பயன்படும்வகையில் கலைச்சொற்கள் அமைந்தாலே அந்த துறைகளுடன் மொழியும் வளரும்.

    விரும்பத்தகு பண்புகள்

    சட்டம், மருத்துவம், அறிவியல் போன்ற துறைகளில் கலைச்சொற்கள் துல்லியமாக வரையறுக்கப்பட்டவை. organic chemistry, inorganic chemistry எனும் கருத்துருக்களுக்கு கரிமவேதியியல், கனிமவேதியியல் என்ற சொற்கள் முதனோக்கில் நல்ல சொற்களாக தோன்றுகின்றன. ஆனால், carbon chemistry, mineral chemistry என்ற கருத்துருக்களை எதிர்கொள்ளும்போது நாம் முதலில் தேர்ந்த சொற்கள் துல்லியமற்றவை என்பதை உணர்கிறோம்.

    ஒரு கருத்துருவுக்கு ஒரு சொல் மட்டுமே வழக்கிலிருப்பது திட்டவட்டம். ஒரு சொல்லை ஒரு கருத்துருவுக்கு ஒதுக்கியபின் அந்தச்சொல்லை வேறொரு பொருளுக்காக பயன்படுத்தாதது ஒருத்துவம். திட்டவட்டமும் ஒருத்துவமும் சேர்ந்து சொற்கணத்துக்கும் பொருட்கணத்துக்குமிடையில் ஒரு ஒன்றுக்கொன்றான தொடர்பை உள்ளுரைக்கின்றன. இவ்வாறான ஒன்றுக்கொன்றான தொடர்பு இருக்கும்படி வேதிப்பொருள்களுக்கு பெயரிடும் முறை வேதியியலிலும் உயிரினங்களுக்கு பெயரிடும் முறை உயிரியலிலும் வழக்கிலுள்ளது.

    ஒரு கருத்தைக்குறிக்கும் கலைச்சொல் பரந்த பொருளுடையதாக இல்லாமல் அந்த கருத்தை மட்டுமே குறிக்கும் சொல்லாக இருப்பது குறிப்புமை. Anaesthetic என்பதற்கு மயக்கமருந்து என்றோ மரப்பு மருந்து என்றோ சொல்வது குறிப்புமையற்றது. மயங்கிவிழுவதும் கைகால் மரத்துப்போவதும் வேறு பல சூழமைவுகளிலும் நிகழ்பவை. மாறாக, anaesthesia என்ற சொல் மருத்துவர்கள் மருத்துவமனைகளில் மிகுந்த கட்டுப்பாட்டுச்சூழ்நிலைகளில் வேண்டுமென்றே தம் நலம்பெறுநர்களில் தூண்டும் நிலையையே குறிக்கிறது. இதற்கு தமிழிலும் வேறெங்கும் பயன்படாத உணர்மறைப்பு என்ற சொல்லை பயன்படுத்துவது சிறப்பு.

    ஒரு கலைச்சொல்லை கருதும்போது அதனுடன் தொடர்புள்ள மற்ற சொற்களையும் கருதவேண்டும். இது சொற்களிடையில் ஒரு ஒவ்வுமையை நிலைநாட்டுகிறது. Electroனுக்கு எதிர்மின்னி, protoனுக்கு நேர்மின்னி என்ற சொற்களை ஆக்கும்போதே antielectroனுக்கும் antiprotoனுக்கும் என்ன சொல்லப்போகிறோம் என்பதை சிந்திக்கவேண்டும். சிந்திக்காமல், apogee – சேய்மைப்புள்ளி, perigee – அண்மைப்புள்ளி என்று வழக்கில் வரவிட்டால், aphelion, perihelion என்ற சொற்களை எதிர்கொள்ளும்போது திண்டாடுவோம்.

    ஒரு கலைச்சொற்பட்டியல் ஒரு கலைத்துறையிலாவது முழுமையாயிருந்தால் மட்டுமே அது அந்தத்துறையில் பயனளிக்கும். சில சொற்களை மட்டும் வழங்குவது பயனளிப்பதில்லை. மேலும் இவை வளர்ந்துவரும் துறைகள். இந்த வளர்ச்சிக்கு நிகராக நம் பட்டியலும் இற்றையடைந்துவரவேண்டும். இவ்வாறு, முழுமையும் இற்றையுடைமையும் கலைச்சொற்பட்டியலின் விரும்பத்தகு பண்புகள்.

    தமிழார்வலர்கள் சொல்லாய்வு என்ற பெயரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கலைச்சொற்களை முன்மொழிகின்றனர். இந்த அணுகுமுறையால் ஒரு சில கலைச்சொற்களையே உருவாக்கலாம். முழுமையை ஒருபோதும் எட்டமாட்டோம். உலகில் 1.7 இருமடியாயிரம்  உயிரினங்கள் இருப்பதாக உயிரியலாராய்ச்சிகள் காட்டுகின்றன. வேதிப்பொருள்களின் பதிவகத்தில் 200 இருமடியாயிரத்துக்கும் மேலான வேதிப்பெயர்கள் பதிவாகியுள்ளன. தமிழார்வலர்களது இன்றைய அணுகுமுறை அளவுறாதது; பேரெண்ணிக்கைகளுக்கு நீட்டவியலாதது.

    தனித்தமிழ் எதுவரை?

    கலைச்சொற்களில் பிறமொழிச்சொற்களை ஏற்கலாமா என்ற கேள்வியை கருதுவோம். தமிழின் தூய்மையை எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று பகுதிகளின் தூய்மையாக பிரிக்கலாம்.

    தமிழ் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே தன் படிமலர்ச்சியை நிறைவுசெய்து முழுமையையும் முதிர்ச்சியையும் அடைந்துவிட்ட ஒரு மொழி. ஒரு கட்டுக்கோப்பான இலக்கணம் அதற்கு அப்போதே உண்டாகிவிட்டது. ஒரு கட்டடம் அடித்தளத்திலிருந்து எழுந்து பல படிநிலைகளால் ஒரு மாளிகையாக வளர்வதைப்போலவே எழுத்துக்கணத்திலிருந்து மெய்மயக்கவிதிகளும் புணர்ச்சிவிதிகளும் எழுந்து அவற்றிலிருந்து சொற்களும் சொல்லிலக்கணமும் எழுகின்றன. இவற்றுக்கெல்லாம் அடிப்படையான எழுத்துக்கணத்தை நாம் மாற்றினாலோ அசைத்தாலோ மாளிகை முழுவதும் அசைந்து ஆட்டங்கண்டு நாளடைவில் வலுவிழந்து வீழ்ந்துவிடும். ஏற்கனவே முழுமையான ஒரு அமைப்பில் கிரந்த எழுத்துகளை உள்ளெடுத்தவர்கள் அவற்றுக்கான சொற்பிறப்பின் இலக்கணத்தையோ மெய்மயக்கவிதிகளையோ புணர்ச்சிவிதிகளையோ வகுக்கவில்லை. எனவே, ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ போன்ற கிரந்த எழுத்துகளை கலைச்சொற்களில் தவிர்க்கவேண்டும்.

    இதன் மறுபக்கமாக, கலைப்புலங்களில் செயலாற்றும் நமக்கு a2 + b2 = (a+b)2, HCl + NaOH -> NaCl + H2O  போன்ற கணிதச் சமன்பாடுகளையும் வேதிச் சமன்பாடுகளையும் எவ்வாறு எழுதுவது என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறான குறியீடுகளை கணிதக்குறிகளாக கருதவேண்டுமேயன்றி, தமிழின் எழுத்துக்கணத்தில் கலப்படம் விளைவிப்பதாக எண்ணக்கூடாது. குறியீடுகளும் அவற்றின் ஒலிகளும் தமிழ்ச்சொற்களில் இடம்பெறா. மாறாக கிரந்த எழுத்துகள் சொற்களில் இடம்பெறுவதை நோக்குக.

    எழுத்துக்கணம் ஒரு மூடிய கணம். அதன் அடிப்படையில் சொற்களும் இலக்கணமும் உண்டாகின்றன. ஆனால் ஒரு மொழியில் இத்தனை சொற்கள் இருக்கவேண்டும் என்ற வரையறை இல்லை. அது திறந்த கணம். எனவே, கிரந்த எழுத்துகளை நீக்குவது ஒப்பளவில் எளிய செயலாயினும், திசைச்சொற்களையும் வடசொற்களையும் நீக்குவது அவ்வளவு எளிதன்று. தமிழிலக்கண மரபுகளை மீறாதனவும் வெகுகாலமாக தமிழில் புழங்கி மக்கள் மனங்களில் பதிந்து விட்டனவுமான சொற்களை நாம் அறிவியலிலும் மற்ற கலைப்புலங்களிலும் ஏற்கவேண்டும்.

    பாட்டீரியம், வைரசு என்ற சொற்கள் தமிழிலக்கணவிதிகளுள் எதையும் மீறவில்லை. இவற்றை வேண்டாம் என்று சொல்வதற்கான ஒரே காரணம் ஆங்கிலத்தில் bacterim, virus என்ற சொற்கள் இருப்பதே. ஆனால் இது ஒரு போலிக்காரணம். ஆங்கியமறியாத தமிழறிந்தோருக்கு இது ஒரு பொருட்டன்று. வாழைமரம் என்ற ஒரு தமிழ்ச்சொல்லை கருதுவோம். இந்த சொல் உலகின் வேறெந்த மொழியிலாவது இருக்கிறதா என்று முற்றிலும் ஆராய்ந்துபார்த்துவிட்டா நாம் அதை தமிழ்ச்சொல்லாக ஏற்கவேண்டும்? நியூட்டனின் விதிகளை நியூட்டனின் விதிகள் என்றே சொல்லவேண்டும். போலியான தமிழ்ப்பெருமைக்காக சாத்தனின் விதிகள் எனலாமா! அவ்வாறு சொல்வது அறிவியலின் நன்னெறிக்கு புறம்பானது.

    பொருட்டூய்மையை கருதும்போது, வேற்றுநாடுகளில் கண்டுபிடித்த அறிவியற்கருத்துகளையும் அங்கு வளரான தொழினுட்பங்களையும் நாம் ஒதுக்கவேண்டியதில்லை. நம் பண்பாட்டு விழுமியங்களை மாற்றியமைக்காத கருத்துகளை ஏற்கலாம். சான்றாக, புற்றுநோயின் காரணங்களும் அதன் சிகிச்சைகளும் அமெரிக்காவில் கண்டுபிடித்தாலும் அந்த உண்மைகள் உலகின் எல்லா மக்களுக்கும் பொதுவானவை.

    சொற்பிறப்பியலால் பின்னடைவு

    சொற்பிறப்பியலின் அடிப்படையில் பெயர்ப்பது தமிழரை பல நூற்றாண்டுகளுக்கு பின்னடையவைக்கிறது. Acid என்ற பொருளுக்கு அதன் சுவையின் அடிப்படையில் பெயரிட்டது ஒரு வரலாற்று நிகழ்வு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த அறிவியலர்கள் அதை எலுமிச்சம்பழச்சாறு போன்ற புளிமமாகத்தான் எண்ணியிருப்பார்கள். ஆனால் இப்போது பல விதமான acidகளையும் அவற்றின் வேறுபட்ட பண்புகளையும் தொழிலகங்களில் அவற்றின் பயன்பாடுகளையும் அறிவோம். புளிப்புச்சுவை acidகளின் முதன்மையான பண்பன்று. ஆங்கிலத்தில் acid என்ற சொல் புளிப்பு என்ற பொருளிலிருந்து விடுபடுவதற்கு சில நூற்றாண்டுகள் ஆயின. நாம் புளிமத்தில் தொடங்கினால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த நிலையில் தொடங்குகிறோம். Acid என்பதற்கு இன்றைய பொருளை புரிந்துகொள்ளும்வகையில் அமிலம் என்ற இடுகுறிப்பெயரை பயன்படுத்துவது சிறப்பு.

    நொதித்தலின்போது enzymeஐ கண்டுபிடித்ததால் அவ்வாறு பெயரிட்டனர். இன்றைய நம் அறிவியலறிவு enzymeஐ நொதித்தலிலிருந்து வெகுதொலைவு கொண்டுவந்துவிட்டது. ஊக்கிப்புரதம் என்பது இன்றைய பொருளை உணர்த்துகிறது.

    Bacterium என்ற உயிரினங்களை நுண்ணோக்கியால் கண்ட அறிவியலர்களுக்கு அவை சிறுகுச்சிகள் போன்று தோற்றமளித்ததால் இந்த உயிரினங்களுக்கு அந்த பெயர் உண்டாயிற்று. ஆனால் இன்றைய நிலையில் bacterium என்று சொல்லும்போதோ கேட்கும்போதோ குச்சிகளை யாரும் எண்ணுவதில்லை; ஒருவித நுண்ணியிரிகளையே எண்ணுகிறோம். மேலும், இன்று bacillus – குச்சியம், coccus – மணியம், vibrio – அதிரியம், spirillum – சுருளியம் போன்ற பல வடிவங்களில் நாம் பாட்டீரியங்களை அறிவோம். தமிழிலும் பாட்டீரியம் என்ற இடுகுறிச்சொல் ஒரு குறிப்பிட்ட நுண்ணியிரிவகையையே தமிழருக்கு நினைவுறுத்துகிறது. ஆங்கிலச்சொல் கட்டியிழுக்கும் வரலாற்றுச்சுமை தமிழுக்கு தேவையில்லை.

    முடிவுரை

    மேற்சொன்ன வழியுரைகளை பின்பற்றி கலைச்சொற்களை தொகுத்தும் திருத்தியும் தேவையானபோது ஆக்கியும் ஒரு கலைச்சொற்பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். இது மின்பட்டியலாக இருப்பதால், ஆங்கிலத்தில் அகரமுதலாக்கும்போது ஒரு பொருளுக்கு பல சொற்கள் இருந்தால் திருத்தி திட்டவட்டத்தை நிலைநாட்டவும் தமிழில் அகரவரிசையாக்கும்போது ஒரே சொல் பல பொருளில் வந்தால் திருத்தி ஒருத்துவத்தை நிலைநாட்டவும் வசதியாகிறது. இந்த முறையாலே apogeeக்கும் aphelioனுக்கும் ஒரே சொல் இருப்பதைக்கண்டு மாற்றினேன்.

    கலைச்சொற்களின் செந்தரம் என்ற விளக்கநூலையும் சொற்பட்டியலையும் (http://oss.neechalkaran.com/dictionary/) அந்தந்த தொடுப்புகளில் காணலாம்; jkottalam@gmail.com என்ற மின்முகவரியிலிருந்தும் இலவசமாக பெறலாம். அறிஞர்கள் பட்டியலை பயன்படுத்தும்போது எதிர்கொள்ளும் சிக்கல்களையும் திருத்தங்களையும் தெரிவிப்பது பட்டியலின் அடுத்த வேற்றங்களை மேம்படுத்தும்.


    செ. கோட்டாளம் அறிவியலிலும் தகவற்றொழினுட்பத்திலும் ஆராய்ச்சியாளராகவும் வளராக்கருமாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 1954ஆம் ஆண்டு இந்தியாவின் தெற்குத் தமிழ்நாட்டிலுள்ள கொற்கயிைல் பிறந்தார். சென்னயிலுள்ள இந்தியத் தொழினுட்பப்பயிலகத்தில் முதுவறிவியற்பட்டத்தையும் அமெரிக்கவொன்றிய மாநிலங்களின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக் கழகத்திலிருந்து முனைனவர் பட்டத்தையும் பெற்றார்; சாண்டியாகோவிலுள்ள கலிபோனியாப் பல்கலைக் கழகம், கிரிப்பசின் ஆராய்ச்சிப்பயிலகம், ஆர்வடு பல்கலைக் கழகம், கிரேயின் ஆராய்ச்சியகம் முதலிய இடங்களில் நோபல்சூடிய பேராசிரியர் கார்ப்பிளசு உட்பட பல அறிவியலர்களுடன் பணியாற்றினார். புரதம், அணுக்கருவமிலம் போன்ற பெருமூலக்கூறுகளின் கட்டமைப்பையும் இயக்கங்களையும் மிகைக்கணினியில் பாவனையாக்குவதற்கான எண்கணிப்பப் படிமுறைகளை வளராக்குவதில் இவர் பங்களித்தார். மேலும், கணக்கீட்டுப் பாய்மயியக்கவியல், புள்ளியியயியற்பியை் ஆகிய துறைகளிலும் பங்களித்துள்ளார். இப்பபாது ஆங்கில மொழியிலுள்ள அறிவியற் செல்வங்களை திட்டமிட்ட ஒழுங்குமுறையில் தமிழுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    J. Kottalam is retired after serving in the scientific and technological research and development fields. He was born in 1954 in Kotkai of southern Tamilnadu in India. Having received MSc from Indian Institute of Technology at Madras and PhD from Michigan State University in USA, he worked at institutions such as University of California at San Diego, Scripps Research Institute, Harvard University and Cray Research with scholars including Nobel laureate Martin Karplus. He contributed to developing numerical algorithms for simulating the structures and dynamics of macromolecules such as proteins and nucleic acids in supercomputers. His further contributions are in the fields of Computational Fluid Dynamics and Statistical Physics. Now he is engaged bringing the scientific wealth available in English to Tamil in a planned systematic manner.

    jkottalam@gmail.com
    https://www.facebook.com/kottalam 


     

    Share
  • லப்பர் பந்து – திரை விமர்சனம்

    லப்பர் பந்து – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    லப்பர் பந்து, ஒரு நல்ல முயற்சி. ஆனால், இன்னும் சிறந்த முயற்சியாக வந்திருக்கலாம்.

    விளையாட்டுத் துறைகளில் ஆர்வமாக ஈடுபடுவோர் பலரும் அதில் வெற்றி பெற்று, விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு வேலை பெற வேண்டும் என்பதைத் துணை இலக்காக இல்லாமல், முதல் இலக்காகவே வைத்திருப்பர். ஆனால், வேறு பொருளாதார இலக்குகள் ஏதுமின்றி, நடுத்தர வயதினை எட்டிய பிறகும் விளையாடும் ஆர்வத்துக்காகவே விளையாடுவோர் பலர். இதற்காக, ஆளுக்குச் சிறிது பணம் போட்டு, அணி நடத்துவோரும் போட்டி நடத்துவோரும் பற்பல ஊர்களில் உண்டு. இந்த உள்ளூர்க் கிரிக்கெட்டை விறுவிறுப்பாகக் காட்டுவதில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து வெற்றி அடைந்திருக்கிறார்.

    இத்தகைய போட்டிகளில் ஒரு சிக்கல் இருக்கிறது. விளையாட்டுத் திறமையும் இருக்க வேண்டும், அதை நேசிக்கவும் வேண்டும். இதையும் தாண்டி, விளையாட்டு உணர்வு என்பது அடிப்படையாக இருக்க வேண்டும். அடுத்தவர் திறமையை மதிக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பாராட்டி, ஊக்கம் கொடுத்து, தட்டிக் கொடுத்துப் பாராட்ட வேண்டும். இந்தப் படத்தில் இது குறைவாகவே இருக்கிறது.

    விளையாட்டு மைதானம், கெத்து காட்டுகின்ற இடமில்லை. திறமையைக் காட்டுகின்ற களம். இங்கே நான் பெரியவனா, நீ பெரியவனா என ஈகோ காட்ட வேண்டிய தேவையில்லை. இதில் நான், என் அணி, என் கிரிக்கெட் கிளப் என வீரர்களின் அகந்தையே மேலோங்கி இருக்கிறது. ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி, கேலி செய்து, சீண்டி, வம்பிழுத்து, சண்டை போடுவது தேவையே இல்லாதது. அப்படியே நடந்தாலும் இயக்குநர் அதற்கு முன்னுரிமை கொடுக்கத் தேவையில்லை.

    கெத்து தினேஷ், உள்ளூர் அணிகளில் பெரிய கிரிக்கெட் வீரர். லப்பர் பந்துக் களங்களில் வாகை சூடுகிறார். ஆனால், கார்க் பந்து வைத்து விளையாடும் போது, அவரால் ஜொலிக்க முடியவில்லை. கடைசியில் இறுதிப் போட்டியில் குறிமூடி, கால்மட்டை, கையுறை போன்ற முறையான பாதுகாப்பு ஏதுமின்றி, கார்க் பந்தினை எதிர்கொண்டு விளையாடி 94 ஓட்டங்கள் எடுக்கிறார். இத்தனை ஆண்டுகளாகக் கிரிக்கெட் ஆடும் தினேஷ், இத்தகைய தொழில்முறை விளையாட்டுக் களத்துக்கு ஏன் தயாராகவில்லை? அவருக்கு அதன் மீது அச்சமா? அவரிடம் இதற்கான திறமை இல்லையா? அப்படி விளையாடி அடிபட்டால் என்னாகும் என்று அவருக்குத் தெரியாதா? இதைப் பற்றிய எந்த எச்சரிக்கையும் இல்லாமல், வெறும் கெத்துக்காக ஆடலாமா? தினேஷ் உடன் விளையாடுபவர்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லி, பயிற்சி அளித்திருக்கலாம். நவீன விளையாட்டுக்கு இளைஞர்களைத் தயார்ப்படுத்தும் அரிய வாய்ப்பினை இயக்குநர் இங்கே தவறவிட்டிருக்கிறார்.

    ஓட்டப் பந்தயங்களில் ஆப்பிரிக்க வீரர்கள் முன்னர் வெறுங்காலில் விரைவாக ஓடி எளிதாக வென்றனர். ஆனால், புதையணி அணிந்து வெற்றி பெற அவர்கள் போராட வேண்டியிருந்தது. வெறுங்காலில் களிமண் தரையில் விளையாடியவர்கள், புதையணி அணிந்து உள்ளரங்கக் களத்தில் ஆடுவதற்குக் கடும் பயிற்சி தேவைப்பட்டது. உள்ளூர் அணி வீரர்களை இப்படியாக ஆற்றுப்படுத்தி, ஊக்குவித்திருக்கலாம்.

    அடுத்து, உள்ளூர் அணிகளுக்கு ஆடும் பலரும், நாள்முழுவதும் அதே கதி எனக் கிடப்பர். வேலைக்குச் செல்வதையோ தொழில் நடத்துவதையோ செய்யாமல், குடும்பத்தைக் கவனிக்காமல், பொறுப்புகளைச் செய்யாமல் இருப்பார்கள். இதனால் குடும்பத்தினர், விளையாடப் போகக் கூடாது என எதிர்ப்பார்கள். அவர்களை ஏமாற்றி இவர்கள் விளையாடச் செல்வார்கள். இந்தப் பகுதியை இயக்குநர் நன்றாகக் காட்டியிருக்கிறார்.

    தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் சுவாசிகா, பிரமாதமாகச் செய்திருக்கிறார். சிறுவர்களிடமிருந்து தவறி வந்த லப்பர் பந்தினை அரிவாள் மணையில் இரண்டாக நறுக்கி எறிவது, அவரது கோபத்தை நன்றாகக் காட்டுகிறது. தினேஷின் மகளாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அழகாக, அருமையாக நடித்திருக்கிறார். அவரது காதலனாக வரும் ஹரிஷ் கல்யாண், கவனமாக நடித்திருக்கிறார். இவர் சற்றே அடக்கி வாசித்தது போல் இருக்கிறது. ஆண்கள் அணியில் ஒற்றைப் பெண்ணாக அகிலாவை விளையாட வைத்த இயக்குநருக்குப் பாராட்டு. அட்டகத்தி தினேஷ், இதில் கெத்து தினேஷாக ஜமாய்த்திருக்கிறார். பிரிந்து சென்ற மனைவியின் சேலையில் அவர் படுத்துத் தூங்கும் காட்சி மிக அழகு. நண்பர்களாக வரும் பால சரவணனும் காளி வெங்கட்டும் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

    படத்தின் இறுதிக்கட்டக் காட்சி, மிகுந்த ஏமாற்றம் அளித்தது. விளையாட்டை முதன்மையாக வைத்துள்ள படத்தில், ஜாதியைப் புகுத்தியது முதல் தவறு. எதிரணியில் பாலய்யா என்ற பட்டியலின வீரர் ஆடுவதற்காக, அந்த அணியே ஜெயிக்கட்டும் என விட்டுத் தருவது போல் காட்டியது மிகத் தவறு. அவர் ஜெயித்ததால், அவர் ஜாதியில் அவர் போல் இன்னும் சிலர் அணியில் இடம் பிடித்துள்ளனர் எனக் காட்டியது, ஜாதியை முன்னிலைப்படுத்துவதாக அமைந்துள்ளது. விட்டுத் தந்துதான் அவர்கள் ஜெயிக்க வேண்டும் எனக் காட்டியது, அவர்களின் திறமையை மட்டம் தட்டியதாகவும் அமைந்துவிட்டது. இயக்குநர் சறுக்கிய இடம், இதுதான்.

    வெட்டி வீறாப்பு, வாய்ச்சவடால், கெத்து – இவற்றையெல்லாம் விளையாட்டுத் துறையில் அகற்ற வேண்டும். மாறாக, விளையாட்டு நுணுக்கம், தொழில்நுட்பம், திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நம் உள்ளூர் அணிகள், சர்வதேசப் போட்டிகளுக்கு வீரர்களைத் தயார் செய்யும் களங்களாக இருக்க வேண்டும். சாதிக்கும் ஊக்கத்தைத் தருபவையாக இருக்க வேண்டும். நம் துரதிருஷ்டம், குடும்ப உணர்வுகளில், ஈகோ மோதல்களில் சிக்கி, படம் எங்கோ வழி தவறிச் சென்றுவிட்டது.

    தொலைந்து போன அந்த லப்பர் பந்தினை யாராவது தேடிக் கண்டுபிடியுங்கள். அடுத்த பந்தினை வீச்சுடன் வீசுவோம்.

    Share
  • வேட்டையன் – திரை விமர்சனம்

    வேட்டையன் – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    வேட்டையன் படத்தில் ரஜினியின் செயல் வேகம் சிறப்பாக உள்ளது. 73 வயதுள்ள அவர், 58 வயது காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரவுடிகளையும் போக்கிரிகளையும் சுட்டுத் தள்ளி, என்கவுன்டர் புலியாகப் புகழ் பெறுகிறார். அவரது உடல்வாகுக்கு ஏற்ப, சண்டைக் காட்சிகளையும் நடனக் காட்சிகளையும் அமைத்துள்ளது நன்று. முதிய வயதிலும் துடிப்பாக இயங்க முடியும் எனக் காட்டிய வகையில், ரஜினி சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தளர்ந்திருக்கும் முதியவர்கள், இவரிடமிருந்து உத்வேகம் பெற முடியும்.

    படத்தின் முதல் சிக்கல், நீட்டுக்குப் பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் வலுவாக இல்லை என்பதே. எந்தப் பயிற்சி நிறுவனமும் உன்னைத் தேர்வில் வெற்றி பெற வைக்கிறேன், மருத்துவர் ஆக்கிக் காட்டுகிறேன், வேலை வாங்கித் தருகிறேன் என்று எல்லாம் சொல்வதில்லை. தேர்வில் வெற்றி பெறப் பயிற்சி அளிப்பதும் திறன்களை வளர்க்க உதவுவதும் மட்டுமே அவர்கள் பணி. மற்றபடி படித்துத் தேர்வில் பெறுவது, மாணவர்களின் கடமை. இதை விதிமுறைகளில் தெளிவாக எழுதியிருப்பார்கள். இதற்கென்றே சட்ட நிபுணர் குழுவை வைத்திருப்பார்கள்.

    மாணவர்களிடமிருந்து அவர்கள் பெறும் கட்டணம், பயிற்சி அளிப்பதற்கே. மாணவர்களுக்கு ஆசை காட்டுவது எல்லாம் வாய்மொழியாக மட்டுமே இருக்கும். இந்த நிலையில் எத்தனைப் பேர் புகார் அளித்தாலும் சட்டரீதியாக அதை அந்த நிறுவனம் எளிதாகக் கடந்துவிடும். இந்த இடத்தில் BUDS Act (The Banning of Unregulated Deposit Schemes Act, 2019) செல்லுபடி ஆகாது. இதை வைத்து, நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்க முடியாது. அப்படிச் செய்வதானால், தங்கள் சாதனைகளை விளம்பரப்படுத்தும் எல்லாப் பயிற்சி நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மீதும் இத்தகைய வழக்குகளைத் தொடுக்க முடியும்.

    பயிற்சி நிறுவனம் கொடுத்த கைக்கணினிகள் வேலை செய்யவில்லை என்றால், அது வேறு வகையான புகார். அதை நிறுவனம், வேறு விதமாகச் சமாளிக்க வாய்ப்பு உண்டு.

    தங்கள் மீது புகார் தெரிவிக்கக் கூடாது என்பதற்காக, அரசுப் பள்ளி மாணவர்கள் ஆபாசமாகப் படம் எடுப்பதையும் கஞ்சா புகைப்பதையும் வீடியோ எடுத்து ஒரு நிறுவனம் பரப்பும் என்பது மிகையான கற்பனை. இதை வைரலாகப் பரவச் செய்தாலும் அந்த நிறுவனம் மீது புகார் கொடுப்பதை இவை எப்படித் தடுக்கும் என்பது புரியவில்லை.

    அரசுப் பள்ளி ஆசிரியையாக வரும் துஷாரா விஜயனைக் கொன்றது பயிற்சி நிறுவனத் தலைவர் ராணா டகுபதி என்பதற்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க இயலவில்லை. பிறகு எப்படி அந்தக் குற்றச்சாட்டை நிரூபித்தார்கள்? நீதிமன்றம் எந்த அடிப்படையில் சிறைத் தண்டனை அளிக்கிறது என்பதும் புரியவில்லை.

    துஷாரா விஜயன், குணா உடன் சேர்ந்து சேகரித்த ஆதாரங்களை உடனே இணையத்தில் ஏற்றி, ரஜினியின் மின்னஞ்சலுக்கு அடுத்த நிமிடமே கிடைக்கச் செய்திருக்கலாம். அந்த வன்தட்டை எதற்காகப் பார்சலாக அனுப்ப வேண்டும்? இத்தனைக்கும் குணா, கணிப்பொறி படித்தவர்.

    படத்தில் பலரைச் சுட்டுக் கொன்ற ரஜினி, ராணா டகுபதியை மட்டும் சிறையில் தள்ளுகிறார். உன்னைப் போன்ற பணக்காரர்களையும் சிறையில் தள்ள முடியும் என்று மக்களுக்குக் காட்டவே இப்படிச் செய்தேன் என்கிறார். இதற்கான காரணம், வலுவாக இல்லை.

    கடைசியில் ராணா டகுபதி தப்பித்துச் செல்லும் இடத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார் ரஜினி. எப்படி? எந்தத் துப்பினைக் கொண்டு அவர் சரியாக அங்கே வந்து இறங்கினார் என்று காட்டவில்லை. கீழே அத்தனை அடியாட்கள் துப்பாக்கியுடன் காத்திருக்கும்போது, மேலிருந்து இறங்கும் ரஜினியின் ஹெலிகாப்டரை மேலேயே சுட்டு வீழ்த்தியிருக்கலாமே. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் உள்ளன. இன்னும் கச்சிதமாகச் செய்திருக்க வேண்டும்.

    அமிதாப் பச்சன், மனித உரிமை காக்கும் நீதிபதியாக இருந்தாலும் என்கவுன்டர் நிபுணர் ரஜினியிடம் மென்மையாக நடந்துகொள்கிறார். அவருக்கு ரகசியமாக உதவுகிறார். கடைசியாக, ரஜினியை என்கவுன்டருக்கு எதிராகப் பேச வைக்கிறார்.

    யூடியூபராக வரும் மஞ்சு வாரியர், கவர்கிறார். பகத் பாசில், ரசிக்கும்படி நடித்திருக்கிறார். காவல் துறைக்கு உதவத் தொடங்கிய பிறகும் கடைகளின் கியூ ஆர் கோடினை மாற்றி, அவர்களை ஏமாற்றும் விதமாகக் காட்டியிருக்க வேண்டாம். ரித்திகா சிங்கின் நடிப்பு நன்று.

    எல்லோருக்கும் சமமான கல்வி, சமமான சட்டம் என்ற நிலையை மெக்காலே கொண்டு வந்தார் எனச் சொல்கிறார். மெக்காலேவுக்குப் பிறகு தான் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடக்கிறது. அதை நிகழ்த்திய ரெஜினால்டு டையர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. ஆயினும் ஆங்கிலேய அரசு அவரை ஆதரித்ததுடன், அவருக்கு எந்தத் தண்டனையும் விதிக்கவில்லை. எல்லோருக்கும் ஒரே சட்டம் என்பது, ரெஜினால்டு டையருக்குப் பொருந்தாதா? அவருக்கு அந்த அதிகாரத்தை அளித்தவர்களுக்குப் பொருந்தாதா? சட்டம் ஆளுக்கு ஏற்றபடி வளையும் என்பதற்குப் படத்தில் வரும் ராணா டகுபதியே சான்று இல்லையா?

    இயக்குநர் த.செ.ஞானவேல், நீட்டுக்கு எதிராகப் படம் எடுத்ததாகச் சொன்னால், அது தவறு. படம் மொத்தமும் ஒரு பயிற்சி நிறுவனத்துக்கு எதிராக மட்டுமே செயல்படுகிறது. மேலும், பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற வாதமே பலவீனமானது. இதை மீண்டும் மீண்டும் சொல்லி, மாணவர்களை நம்ப வைப்பது, மாணவர்களுக்குச் செய்யும் தீங்கு ஆகும். அரசுப் பள்ளி மாணவர்கள் பலரும் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படித்து வருகிறார்கள் என்பதே உண்மை.

    நீட் எதிர்ப்புக் குழுக்களைக் குளிர்விக்க வேண்டும், அவர்களின் அரசியலை ஆதரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வசனங்களும் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளன. பகடையை உருட்ட வேண்டிய ரஜினி, தானே ஒரு பகடைக் காயாக உருண்டுகொண்டிருக்கிறார்.

    Share
  • தமிழர் வாழ்வில் சிலம்பு

    -மேகலா இராமமூர்த்தி

    அன்று தமிழ்மக்களின் வாழ்வில் சிலம்பு சிறந்ததோர் இடத்தைப் பெற்றிருந்தது. சிலம்பின் பெயரைக்கொண்டே ஒரு காப்பியத்தைப் படைத்துத் தமிழர் உள்ளங்களைக் கொள்ளைகொண்டவர் இளங்கோவடிகள்.

    சீர்மிகு சிலம்பைப் பெண் குழந்தைகளுக்கு அணிவித்து அழகுபார்த்தவர் தமிழர். அந்நாளில் சிலம்பு பெற்ற இடத்தை இந்நாளில் கொலுசு பெற்றுள்ளது எனலாம். செல்வச் சிறுமியர் பொற்சிலம்பணிந்திருந்த செய்தியினை (முத்துஅரிப் பொன்சிலம்பு ஒலிப்ப – நற்: 110) சங்கப் பாடல்கள் நமக்கு அறியத்தருகின்றன. சிலம்பில் உள்ளிடு பரல்களாக முத்து, மாணிக்கம் போன்றவை அவரவர் விருப்பத்திற்கும் வளமைக்குமேற்பச் சேர்க்கப்பட்டன.

    சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் காற்சிலம்பில் மாணிக்கப்பரல்களும் கோப்பெருந்தேவியின் சிலம்பில் முத்துப்பரல்களும் இருந்தமையை அக்காப்பியம் வாயிலாய் அறிகின்றோம். கண்ணகியின் தந்தையான மாநாய்கன் நாவாய்களோட்டிக் கடல்வாணிகம் செய்தோரின் தலைவனாய்த் திகழ்ந்தமையால் முத்தினும் விலையுயர்ந்த உயர்தர மாணிக்கப் பரல்களாலான சிலம்பினைத் தன் செல்வமகளுக்கு அணிவித்திருந்தான் என்பதும், பாண்டிநாட்டுக் கோப்பெருந்தேவி தன்னாட்டு விளைபொருளும் முத்துக்களில் சிறப்புப்பெற்றதுமான கொற்கை முத்துக்களைப் பரல்களாகக்கொண்ட சிலம்பினை அணிந்திருந்தாள் என்பதும் நாம் ஊகித்தறியக்கூடிய உண்மைகளே.

    பெற்றோர் தம் மகளிர்க்கு இளமைப் பருவத்தில் அணிவித்த சிலம்பைக் கன்னிமைச் சிலம்பு என்பர்; திருமணத்தின்போது கொழுநன் அணிவிக்கும் சிலம்புக்குக் கற்புச் சிலம்பென்று பெயர். திருமணத்திற்கு முன்பாகக் கன்னிமைச் சிலம்பைக் கழற்றுவதை ஒரு விழாவாகவே அந்நாளில் நிகழ்த்தியுள்ளனர் தமிழ்மக்கள். அதற்குச் ’சிலம்புகழி நோன்பு’ என்று பெயர். இவ்விழா, திருமணத்திற்கு முன்பு, பெண்ணின் பிறந்தவீட்டில் நிகழ்வதே வழக்கமாயிருந்திருக்கின்றது. ஆதலால், பெண்ணைப் பெற்ற தாய் அதனைத் தன் மனையில் நிகழ்த்துவதையே பெருமையாகயும் – தன் கடமையாகவும் கருதினாள். இச்சிலம்பு கழீஇச் சிறப்பைத் தொல்காப்பியர் கரணம் என்று குறித்தார்.

    தலைவி தலைவனோடு, பிறந்தவீட்டார் அறியாமல், உடன்போக்கில் சென்று மணம்புரிந்துகொள்ளும் சூழலில் இந்தச் சிலம்புகழி நோன்பு பெண்ணின் வீட்டில் நிகழாமல் மணமகன் வீட்டில் நிகழ்வதுண்டு. அவ்வாறு நிகழும்போது, அது தலைவியைப் பெற்ற நற்றாயின் உள்ளத்தைப் பெரிதும் வருத்தும்.

    ”தலைவனை மணமுடிக்கும்போது தன் காலில் அணிந்த சிலம்பினைக் கழற்றுதற்குச் செய்யும் சிலம்புகழி விழாச்சிறப்பை நான் காணாது பிறர்கண்டு மகிழும்வண்ணம் வெயில் காயும் வெம்மைமிகு பாலைவழியில் நடந்துசெல்லும் என் புதல்வியின் மெல்லடிகள் வருந்துகின்றனவோ?” என்று நற்றாயொருத்தி உடன்போக்கில் சென்றுவிட்ட தன் மகள் குறித்துக் கலங்குவதை நற்றிணைப் பாடல் நம் கண்முன் நிறுத்தி நம்மையும் அவள் நிலையெண்ணிக் கலங்கச்செய்கின்றது.

    வெயில்காய் அமையத்து இமைக்கும் அத்தத்து
    அதருழந்து அசையின கொல்லோ ததரல்வாய்ச்
    சிலம்பு கழீஇய செல்வம்
    பிறருணக் கழிந்தஎன் ஆயிழை அடியே.
     (நற்: 279 – கயமனார்)

    சிலம்பு கழித்தலை செல்வமென்று இத்தாய் பேசுவதிலிருந்து அதனைத் தன் மனையில் நிகழ்த்துதலைச் செல்வமாக – பேறாக அவள் கருதினாள் என்பது தெற்றெனப் புலப்படுகிறதன்றோ?

    ”தோழிமாரும் தாயரும் கண்டுமகிழுமாறு உறையூரை ஒத்த வளமுடைய தன்வீட்டில் சிலம்புகழி நோன்பும், பெரியோர் நிகழ்த்திவைக்கும் திருமணமும் செய்துகொண்டு தலைவனோடு செல்லாது, தமர் அறியாவண்ணம் தலைவனோடு உடன்போக்கில் சென்று அறியாத் தேயத்தில் சிலம்பு கழித்துத் திருமணம் செய்துகொள்ளுதல் கொடிது” என்று கண்ணீர்விடுகின்ற தாயை நமக்கு வேதனையோடு சுட்டிக்காட்டுகின்றது அகநானூறு.

    கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்
    காவிரிப் படப்பை உறந்தை அன்ன
    பொன்னுடை நெடுநகர் புரையோர் அயர
    நன்மாண் விழவில் தகரம் மண்ணி
    யாம்பல புணர்ப்பச் செல்லாள்…
    […]
    முள்ளெயிற்றுத் துவர்வாய்ச்
    சிறுவன் கண்ணி சிலம்பு கழீஇ
    அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே.
    (அகம்: 385 – குடவாயில் கீரத்தனார்)

    ”கொடிது கொடிது வறுமை கொடிது” என்றார் பிற்கால ஔவையார்;
    ”கொடிது கொடிது என் மகள் அறியாத் தேயத்தில் சிலம்பு கழித்தல் கொடிது” என்கிறார் இந்த அன்னையார்.

    ஐங்குறுநூற்றுத் தாயொருத்தியின் வருத்தத்தை அடுத்துக் காண்போம்.

    தன் மகள் உடன்போக்கில் தலைவன் ஊருக்குச் சென்றுவிட்டாள்; ஆங்கே தன் மகளுக்குச் சிலம்புகழி நோன்புச் சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன என்பதனை அவ்வூரிலிருந்து வந்த தமர் (தமக்கு வேண்டியவர்கள்) வாயிலாக அறிந்த தாயொருத்தி, “மக்களே! பொய்கள் பலவற்றை மெய்போலப் பேசி என் மகளை மயக்கி அழைத்துக்கொண்டு சென்றுவிட்ட அந்தக் காளையின் தாயிடம், உங்கள் வீட்டில் சிலம்புகழி சடங்குகள் செய்தாலும் திருமணச் சடங்குகளை எங்கள் வீட்டில் (பெண் வீட்டில்) செய்யுங்கள் என்று நீங்கள் கூறியிருந்தால் அதனால் உங்களுக்கு வரக்கூடிய குற்றமென்ன?” என்று கேட்டு வருந்துவதனை ஐங்குறுநூற்றில் காண்கின்றோம்.

    நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்
    எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச்
    சொல்லின் எவனோ மற்றே வென்வேல்
    மையற விளங்கிய கழலடிப்
    பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே
    ”     (ஐங்: 399 – ஓதலாந்தையார்)

    சங்க காலத்தில் சிலம்புகழி நோன்பு ஒருநாளும் அதனைத் தொடர்ந்து வதுவை மணமாகிய திருமணம் இன்னொரு நாளுமெனத் திருமணம் இருகூறுகளைக் கொண்டதாக நிகழ்ந்திருப்பதனை இப்பாடல் வாயிலாக நாம் அறிகின்றோம்.

    உடன்போக்கில் தலைவனோடு சென்றுவிட்ட தம் மகளின் பிரிவைத் தாங்கமுடியாமலும், அவளுக்குத் தம் மனையில் சிலம்புகழி நோன்பும் திருமணமும் செய்துவைக்க இயலாததாலும் தாய்மார்கள் புலம்புவதனை மேற்கண்ட சங்கப் பாடல்கள் நமக்குத் துல்லியமாய்ப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

    பண்டைத் தமிழர் வாழ்வில் இடம்பெற்ற எத்தனையோ நிகழ்ச்சிகள், சடங்குகள் காலவோட்டத்தில் மாற்றமடைந்துவிட்டன; சில மறைந்தும்விட்டன; வடவர் வருகையாலும் அவர்தம் மணமுறைகளின் தாக்கத்தாலும் தமிழர் மணத்தில் புதிய சடங்குகள் பல இடம்பெறத் தொடங்கிவிட்டமையும் கண்கூடு.

    நம் மக்கள் பெருமிதத்தோடும், செல்வமென்று உயர்வாகவும் கருதி அக்காலத்தில் நிகழ்த்திய சிலம்புகழி நோன்பு இன்று தமிழர் திருமண நிகழ்வில் இல்லாத ஒன்றாகிவிட்டது; எனினும், நம் பண்பாட்டின் ஓர் அங்கமாய்த் திகழ்ந்த அந்நிகழ்வு குறித்து நாம் அறிந்துகொள்வதற்குச் சங்கப் பாடல்கள் இன்றும் துணைநிற்கின்றன என்பது மகிழ்ச்சியளிக்கும் ஒன்றேயல்லவா?

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. நற்றிணை மூலமும் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரையும்
    2. ஐங்குறுநூறு மூலமும் ஔவை. சு. துரைசாமிப்பிள்ளையவர்கள் உரையும்
    3. அகநானூறு மூலமும் நாவலர் திரு ந.மு. வேங்கடசாமி நாட்டார், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளை இவர்களால் எழுதப்பெற்ற பதவுரை விளக்கவுரையும்

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(506)

    குறளின் கதிர்களாய்…(506)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(506)

    ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
    பொறுத்தாற்றும் பண்பே தலை.

    – திருக்குறள் – 579 (கண்ணோட்டம்)

    புதுக் கவிதையில்…

    தம்மைத் துன்புறுத்தும்
    இயல்புடையோரிடத்தும்
    இரக்கம் கொண்டு
    அவர் குற்றத்தைப்
    பொறுத்தருளும் பண்பே
    புவியாளும் மன்னர்க்குப்
    பெருமை தரும்
    தலையாய இயல்பாகும்…!

    குறும்பாவில்…

    இன்னல் தமக்குத் தந்திடும்
    இயல்புடையோரிடத்தும் இரக்கத்துடன் பொறுத்திடல் மன்னர்க்கு
    உயர்வளிக்கும் தலையாய பண்பு…!

    மரபுக் கவிதையில்…

    இன்னல் தமக்குத் தருகின்ற
    இயல்பை யுடையோர் தம்மிடமும்
    துன்பம் மறந்தே யவர்தந்த
    தொல்லை மறந்தே பொறுமையுடன்
    அன்பாய் இரக்க மதுகாட்டி
    அணைத்துச் செல்லும் அருங்குணமே
    மன்னர் தமக்குப் பெருமைதரும்
    மதிப்ப துயர்ந்த பண்பாமே…!

    லிமரைக்கூ…

    துன்பம் தமக்குத் தந்திடும்
    தீயோரிடத்தும் இரக்கத்துடன் பொறுத்திடும் இயல்பால்
    மன்னர்க்குப் பெருமை வந்திடும்…!

    கிராமிய பாணியில்…

    வேணும் வேணும் நல்லகொணம்
    ஒலக வாழ்க்கயில
    எல்லாருக்கும் வேணும் எரக்ககொணம்..

    தனக்குத் துன்பம் தருற
    கொணமுள்ளவங்க கிட்டயும்
    எரக்கம் காட்டி
    அவுங்க குத்தத்தயெல்லாம்
    பொறுத்துப் போறது
    நாட்டு ராசாவுக்குப்
    பெரும தரக்கூடிய
    ஒசந்த பண்புதான்..

    அதால
    வேணும் வேணும் நல்லகொணம்
    ஒலக வாழ்க்கயில
    எல்லாருக்கும் வேணும் எரக்ககொணம்…!

    Share
  • தெய்வம் நிறைவேற்றிய வேண்டுதல் பற்றிய கல்வெட்டு

    தெய்வம் நிறைவேற்றிய வேண்டுதல் பற்றிய கல்வெட்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    உலகில் கடவுள் இல்லவே இல்லை என்போர் சிறு தொகையராகவே இருந்து வந்துள்ளனர். ஆன்மீக பூமியான தமிழகத்தில் தோன்றிய ஆசீவக முதன்மை ஆசான்களான மகங்கலி புத்திரர் என்ற மற்கலி கோசாலரும் நந்த வாச்சா என்ற மாங்குளக் கல்வெட்டு கணி நந்தாசிரியரும் கிசசாங்கிசா என்னும் வெண் காசிபரும் நாத்திக மதத்தை பரப்பினர். இவர்களின் சமகாலத்தவரான மகாவீரர் இன்னொரு நாத்திக மதமான சமணத்தை வடநாட்டில் வழிநடத்தினார். புத்தர் கடவுள் இருப்பை பேசவும் இல்லை மறுக்கவும் இல்லை. இப்படி இந்தியாவில் 2,500 ஆண்டுகள் முன் தோன்றிய இந்த நாத்திக மதங்கள் அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் அசோகா வேந்தனின் வெறுப்பு, உள்முரணான (intra contradiction) பிரிவுகள் ஆகியவற்றால் அழிந்து குலைந்து போயின.

    இந்த நாத்திக மதங்கள் அழிந்த காலத்தில் தான் நாதர் வழிபாட்டுநெறி (Natha cult) என்ற சித்தர் மதம் மச்சேந்திர நாதரால் வட இந்தியாவில் தோன்றி இந்தியாவெங்கும் பரவலுற்றது. இதே காலகட்டத்தில் தோன்றிய வியாசர் 18 புராணங்களை  புண்ணியம், பாவம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதினார், “அஷ்டா தஸ புராணேஷு வியாஸஸ்ய வசநத்வயம் பரோபகாராய புண்யாய பாபாய பர பீடனம்” இதாவது, பிறர்க்கு நன்மை செய்வது புண்ணியம், பாவம் என்பது பிறர்க்கு தீங்கு இழைப்பது ஆகும் என்பதே. நல்வினைக்கு புண்ணியம் என்றும் தீவினைக்கு பாவம் என்றும் இவர் பெயர் வைத்தார். இவரது நான்கு கைகள் கொண்ட  புராண நாயகர்களே தமிழகத்தில் தெய்வங்களாக ஏற்கபட்டு சிவ, விண்ணவ மதங்களாக இந்தியாவெங்கும் பரவக் காரணமானது. இதற்கு ஆழ்வார்கள், நாயன்மார்கள் இயக்கமே முதன்மைக் காரணம்  ஆகும். இது 7- 8 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. இந்த புராண மதங்களின் வளர்ச்சிக்கு பல்லவர்கள் பெரும்பங்கு ஆற்றியுள்ளனர். குறிப்பாக, தெய்வச் சிலைகளை செதுக்கிப் பதித்து கோவில் எழுப்பினர், நிவந்தங்கள் பல தந்து பிரமதேயங்களை உருவாக்கி கோவில் இயக்கத்தை போற்றி வளர்த்தனர்.

    இந்த கோவில், உருவ வழிபாட்டை ஏளனம் செய்து தான் சிவவாக்கியர் பாடல் 520 இல் ஓக சித்தர் சிவவாக்கியர் “நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்”  என்று பாடினார். இவர் உருவ வழிபாட்டை எதிர்த்த தந்திர யோகி ஆவார். வரையறை இல்லாக் கடவுள் வரையறை உள்ள கல்லிலோ செப்புச் சிலையிலோ இல்லை எனவே பூசைகள் பயன்தரா என்றார் அவர். இறைவன் உன் எண்ணமாவே உள்ளான் என்பதே அவர் கூறவரும் செய்தி. எனவே கடவுளை சிந்தையால் ஏற்க வேண்டுமே அன்றி பூசனையால் அல்ல. இது பெரிய கடவுள் (GOD) எனப்படும் நிற்குண பிரம்மத்தை ஒட்டி வந்த கருத்து. நிற்குணம் என்பது தன்னையன்றி இன்னொரு இரண்டாவது பொருளை உணராதது என்பதால் தான் தந்திர யோகிகள் கடவுள் ஒன்று தான் இரண்டல்ல என்றனர்.  ஆனால் இந்தியாவில் பண்டுதொட்டே மக்கள் இயற்கை உள்ளிட்ட பல தெய்வங்களை வணங்குபவராக உள்ளனர். அவை ஒவ்வொன்றும் குணத்தால், ஆற்றலால் ஒன்றற்கொன்று மாறுபட்டவை. நிற்குண பிரம்மம் இரண்டாவது ஒரு பொருளை உணராததால் அது எந்த வேண்டுதலுக்கும் செவிமடுப்பதில்லை என்பதே உண்மை. அதனாலேயே அதை நன்மை, தீமை எதற்கும் எதிர்வினை ஆற்றாத அனைத்திற்கும் ஒரு காணும் பொருளாக (witnessing entity) உள்ளதாக யோகிகள் கருதுகின்றனர். சரி, கல் கடவுள் ஆகாது, உருவம் கடவுள் ஆகாது என்றால் மக்கள் ஏன் பன்னெடுங்காலம் தொட்டே இன்றளவும்  கற்கடவுள்களை வணங்குகின்றனர்? மக்கள் தம் பலகுறை தீர வேண்டிக் கொண்டு அதற்காக பல நேர்த்திக் கடன்களை வேண்டுதல் நிறைவேறிய பின் செலுத்துவது இன்று மட்டுமல்ல பண்டைக்கால  கல்வெட்டிலும் காணப்படுகிறது. நோயுற்றும் போரில் காயமுற்றும் உடல் நன்றாக வேண்டி வேந்தர், மன்னர், அரையர், படைத்தலைவர் உள்ளிட்ட பலர் கோவில்களுக்கு நிவந்தங்கள் அளித்த செய்தி பல கல்வெட்டுகளில் பதிவாகி உள்ளன. ஆனால் நோய் தீர்ந்ததா என்ற குறிப்பு மட்டும் அவற்றில் இல்லை.

    நட்ட கல் பேசாது, செயலாற்றாது என்றால் மக்கள் வேண்டுதலை உண்மையில் நிறைவேற்றுவது யார் என்ற அடுத்த கேள்வி நம்முள் எழும் அல்லவா? அப்படியானால் அந்த வேண்டுதல் யாரால் நிறைவேறுகிறது என்பதை பற்றித் தெளிவோம் இனி. நிற்குணம் என்ற பெரிய கடவுள் (GOD) போல் இல்லாமல் சகுணப் பிரம்மம் என்ற பல சிறிய தெய்வங்கள் (gods) உள்ளன. GOD, god (demi god) இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. யோக தியானப்  பயிற்சியால் உயரிய சித்துகளை அடைந்தவர் சப்தரிஷி எனப்படுகின்றனர். கலாவதாரம், கண்டாவதாரம், அம்ஸாவதாரம் என  இப்படி  சப்தரிஷிகளில் 16 படிநிலைகள் உள்ளன. எல்லோரும் 16 படிநிலைகளை ஒரே பிறவியில் எய்திவிட முடியாது. இந்த சப்தரிஷி நிலையை எய்தியவர் இறந்த பின்பு மோட்சம் அடையாமல் ஆவி (luminous body) ஆகிவிடுகிறார். ஆய்+வி= ஆவி, தமிழில் ஆய் என்றால் ஒளி. எனவே, மென்மேலும் ஆன்மீக முன்னேற்றம் அடையவதற்காக வேண்டி இந்த சித்தர் ஆவிகள்தாம் மக்களுக்கு வேண்டிய தொண்டுகளைச் செய்து ஆன்மீக முன்னேற்றம் அடைய முயல்கின்றன. இதற்காக மக்கள் கூடிவழிபடும் கோவில் இடங்களை தம் வயப்படுத்தி அருவமாக மக்களுக்கு அருள்புரிவதால் தான் மக்கள் வேண்டுதல் நிறைவேறுகின்றது, இன்னல் தீருகின்றது. உருவமுள்ள தெய்வம், உருவமில்லாத கடவுள், நடுகல் சிலை என இப்படி எப்பேர்பட்ட தெய்வத்தை வேண்டி வணங்கினாலும் அதை இந்த சித்தர் ஆவிகள் தாம் நிறைவேற்றுகின்றன. இவ்வாறு செய்வதால் அந்த ஆவிகளுக்கு அடுத்தடுத்த சப்தரிஷி நிலை கிட்டுகிறது. இது மோட்சம் என்ற வீடுபேறு கிட்டும்  வரை அல்லது அடுத்த பிறவி கிட்டும் வரை நடக்கிறது. மோட்சம் என்பது நிற்குண பிரம்மத்தில் ஒன்று கலப்பது ஆகும். மறுபிறவி எடுக்க முடியாமலும் மோட்சம் எய்த முடியாமலும் உள்ள இந்த சகுண பிரம்ம நிலை தான் முக்திநிலை எனப்படுகிறது. ஆக இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் உள்ள இந்த அந்தரமான நிலை சித்தர் ஆவிகளுக்கு ஒரு துன்ப நிலை ஆகும். எனவே, இந்த ஆன்மீக முன்னேற்றத்திற்காகத் தான் புகழ்மிக்க கோவில்கள் இந்த சித்தர் ஆவிகளால் ஆட்கொள்ளப்படுகின்றன என்பதை அறிக. இந்த உண்மைகளை ஆன்மீகத்தில் உள்ள பெரியோர் வெளிப்படையாகச் சொல்லுவது கிடையாது. ஏனென்றால் அப்படி சொல்லிவிட்டால் மக்கள் தம் பிறவித் தளையை அறுக்க முயலாமல், நிற்குண பிரம்ம நிலையை எய்த முயலாமல் சிறு தெய்வங்களான சகுணப் பிரம்மத்தை சிறிய உலகியல் நோக்கங்களுக்காக வணங்கி ஆறுதல் அடைந்துவிடுவர், மோட்சம் என்ற வீடுபேற்றை மறந்துவிடுவர் என்பதால் தான். மக்களுக்கு இறைவன் பற்றிய எண்ணம் துன்பம், எதிர்பார்ப்பு ஆகியவற்றால் தான் ஏற்படுகிறது இல்லாவிடில் எல்லோரும் ஒருவகையில் நாத்திகரே. சகுண பிரம்மம் மோட்சம் அடையாததால் அவற்றால் மக்களுக்கு ஒருபோதும் மோட்சத்தை மட்டும் தரவியலாது. மாறாக, அந்த மோட்சத்திற்காகத்தான் அவை இந்த மக்கள் குறையை போக்கும் தொண்டில் ஈடுபட்டுள்ளன என்பதே உண்மை. ஆகையால் சித்துகளை அடைவது மட்டுமே ஆன்மீகம் ஆகிவிடாது மோட்சம் அடைவதே ஆன்மிகம் என்று தெளிக. இந்த சப்தரிஷிகள் தாம் இந்த பூமிப் பந்துக்கு எந்தக் கேடும் நேராமல் காப்பதாக சப்தரிஷி நிலை எய்திய பிரபாத்து ரஞ்சன் சர்க்கார் சொல்கிறார். ஜீவ சமாதி, சீரடி சாயிபாபா வழிபாடு இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும். எளியவரான ஆழ்வார்கள், நாயன்மார்கள் நிகழ்த்திய சித்துக்கள் அனைத்தும் உண்மையில் இந்த சித்தர்கள் நிகழ்த்தியவையே என்கிறார் இன்னொரு சப்தரிஷியான பழனிமலை ஈசுவர பட்டர். அதனால்தான் வியாசரால் பாவ, புண்ணியத்தை விளக்க கதையாக சொல்லப்பட்ட நான்கு கை தெய்வங்கள் சக்தி மிக்கவையாக ஆக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. ஏரணப்படி (logically) இந்த குற்றத்திற்கு முழு பொறுப்பு சித்துகள் நிகழ்த்திய இந்த சித்தர்களையே சாரும். இது போல எந்த சித்தும் நிகழ்த்தி இருக்காவிட்டால் புராணங்கள் கதைகளாகவே ஏட்டில் பதிந்து இருந்திருக்கும். இசுலாமிய படையெடுப்பின் போது இந்த சித்தர்கள் மக்கள் இறை நம்பிக்கை குலையும் வண்ணம் வாளாயிருந்தனர் சித்து ஏதும் செய்யவில்லை, விளைவு பெரும் நாசம். மக்கள் நெஞ்சங்களில் அவர்கள் கட்டி எழுப்பிய இறை நம்பிக்கையை அவர்கள் தானே காக்கவேண்டும்? காக்க வில்லையே! ஆதலால் அந்நேரத்தில் இறைவன் உண்டு என்பது பொய் ஆகிப்போனது. எனவே இதன் உண்மைக் குற்றவாளிகள் அந்நேரத்தே செயல்படாத இந்த சகுண பிரம்மங்களே, சப்த ரிஷிகளே. சகுண பிரம்மம், சப்தரிஷி என்பது ஒரு பொருட் பன்மொழி. இதை ஏற்பதற்கு மக்களுக்கும் மதவாதிகளுக்கும் மனம் ஒவ்வாது என்பது பேருண்மை.

    நாத்திகர் கேட்கின்றார் கடவுள் இருந்தால் மக்களிடம் ஏன் இவ்வளவு துயரம்? ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வு, வேறுபாடு என்று. ஆதலால் கடவுள் என்பதே இல்லை என முழங்குகின்றார். இயற்கை காற்றாக, மழையாக, வெய்யிலாக பொதுவாகத் தான் செயற்படுகின்றது. அங்கே மனிதன் – விலங்கு, ஏழை – பணக்காரன், முதியவர் – இளையோர் என்று இயற்கை பாகுபாடு பார்ப்பதில்லை. இந்த துயரமும் வேறுபாடும் மனித அறிவால், சிலர் மட்டும் ஒத்துகூடி செயற்படும் முயற்சியில் பலர் வெளியே நிறுத்தப்படுவதால் நேர்ந்தவை. ஆனால் இயற்கை எனும் தெய்வத்தின் இந்தப் பொதுவான தன்மையை மனிதன் தன்னுடைய திறமை என்று சொல்லி மூடி மறைத்தும், மறந்தும் விடுகிறான். எனவே துயரமும் ஏற்றத் தாழ்வும் கடவுளால் அல்ல மாறாக மனித அறிவால், செயற்பாட்டால் உண்டானவை என்று தெளிக. ஆதலால் மனிதன் தன்னலத்தை உதறி விட்டு கூட்டுறவாக (co-operative), கூட்டிணைவாக (co-ordinate) செயற்பட்டால் இந்த துயரத்தையும் ஏற்றத் தாழ்வையும் பேரளவு குறைக்க முடியும். இயற்கையில் மனிதன் விலங்குகளைப் போலத் தான் தாயிடம் பிறக்கிறான் ஆனால் அந்த விலங்குகளிடம் ஏமாற்றுதல் இல்லை, ஏற்றத் தாழ்வு இல்லை, வறுமை இல்லை என்பதை ஆராய்ந்தால் மனிதரிடம் உள்ள ஏற்றத் தாழ்வும் வறுமையும் அவனது அறிவால், சிலர் ஒத்து கூடி தன்னலத்தோடு செயற்படுவதால் தான் உண்டானவை என்பது புரியும். செல்வ நிலையும் ஏழ்மை நிலையும் மனிதர் உருவாக்கியவை. இங்கே கடவுளின் குற்றம் எங்குள்ளது? இன்னுமொரு கேள்வி நாகரிக மனிதரிடம் உள்ள கவலையும் துன்பமும் ஏற்றத் தாழ்வும் இதே பூமியில் வாழும் பழங்குடிகளிடம் இல்லையே அங்கு மட்டும் கடவுள் அந்த மனிதருக்கு சாதகமாக செயற்படுகிறானா? இல்லை. எனவே தன்னல மனித தவற்றுக்கு கடவுள் இல்லை என்று சொல்லி கடவுள் மீது பழிபோடுவது நாத்திகரின் குற்றம். அண்மைக் காலத்தில் வாழ்ந்து மறைந்த பெருஞ் சித்தர் சப்தரிஷி நிலை எய்திய பிரபாத்து ரஞ்சன் சர்க்கார் நாத்திகரின் இந்த குழப்பமான பேச்சுக்கு இதாவது, வறுமையும் ஏற்றத் தாழ்வும் மனித தன்னலம் ஏற்படுத்திய குற்றம் என்று விடை இறுத்துகிறார். எனவே இதை கடவுள் இல்லை என்பதற்கு கேள்வியாக வைக்கக் கூடாது. சிந்தனை இல்லா மக்கள் வேண்டுமானால் இதற்கு பலியாகிடலாம், ஆனால் உண்மையான ஆன்மீகவாதிகள் இதை கேட்டு நகுவர்.

    மேற்சொன்னவற்றால் நாத்திகவாதிகள், உருவமில்லாமல் ஒற்றை இறைவனை வணங்குவதாக மார்தட்டும் ஆத்திகர் என யாரொருவரும் உருவ வழிபாட்டை விமர்சிக்கும் தகுதி துளியும் இல்லாதவர் என்பது புலனாகும். ஒரு சிறு வேலை நிகழ ஆட்சியர் அலுவலக பணியாளரால் முடியும் போது அதை ஆட்சியரே நேரடியாக வந்து நிறைவேற்ற வேண்டும் என்பது மூடமை. ஆதலால் பன்மைத்தன்மை கொண்ட சகுணப் பிரம்மத்தால் இயன்றதை அவற்றிடம் பெற விழையாமல் அந்த ஒற்றை நிற்குணத்தையே எல்லாவற்றுக்கும் நாடுவது முறையோ? நாத்திகவாதம் ஒரு பொய் பித்தலாட்டம் என்பதை உணர  அரசன் முதல் ஆண்டி வரையான மக்கள் வேண்டுதலை நிறைவேற்றிய இறைவன் பற்றிய கல்வெட்டுகளை  இனிக் காண்போம். இப்போதும் இக்கோயில்களில் இந்த வேண்டுதலை நிறைவேற்றும் ஆற்றல் உண்டு என்று நம்பலாம்.

    கோயம்பத்தூர் மாவட்டம் உடுமலை வட்டம் கடத்தூர் மருதீசர் கோயில் மகாமண்டபத்தின் கிழக்கு சுவர் இடப்புற வாசலில் உள்ள 17 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யாண்டு 29 வது விக்கிரம சோழ திருபுவன சிங்க
    2. னேன். கடற்றூர் ஆளுடையார் திருமருதுடையார் எனக்கு ப்ரமேகம் தீர்ந்தமையால்  இந்நாயனா
    3. ர் திருவொத்த சாமத்துக்கு நாள் ஒன்றுக்கு அரிசி குறுணிக்கு நான் நீர்வார்த்து விட்ட நிலமாவது  _ _ _ _ கரை
    4.  ர வழிநாட்டுக் கண்ணாடிப் புத்தூர் வடகரையில் உதயாதிச்ச தேவந்  துரோகியாய்  வடகொங்கில்
    5. ப் போனமையில் அவந் நிலம் அறுகலமும் எனக்கும் என் தம்பி சோழசிங்க தேவற்கும் இவ்விருவ
    6. _ _ _ _ இக்காணியாக்கினேன் என்று திருமுகம் தந்தமையில் இதில் என்னோபாதி மன்றாட்டு வி
    7. _ _ _ கலமும் இந்நாயனார்குத் திருவ _ _ _ ரப்படிக்கு நீர்வாத்துக்  குடுத்த இந்நெல் முக்கலத்துக்கும்
    8. _ _ _ வது வடகரையில் பூலுவப்பற்றில் விதை அறுகலத்தில்  என்னோ பாதி விதை முக்கலத்
    9. _ _ _ ல்லையாவது இக்கிழைக்கு வடக்கும் உதையாதித்த தேவந்  நிலத்துக்கு  மேற்கும் அதியமான் _ _
    10. _ _ {சோ}ழீஸ்வரமுடையார் தேவதானத்துக்கு கிழக்கும் அழகாண்டார் செய்க்குத் தெற்கும் இந்நான்
    11. கெல்லைக்குட்பட்ட நெல்விதை இருக்கலனே வீரசோழீஸ்வரமுடையார் தேவத்தானத்துக்கு வடக்கும் மேல் _ _ _
    12. _ _ னத்துக்கு கிழக்கும் அழகாண்டார் செய்க்கு மேற்கு இந்நிலத்திற்குப் பாய்கிற கவருக்குத்  தெற்கெ
    13. ல்லைக்குட்பட்ட  நெல் விதை கலனே முக்குறுணியில் நெல் விதை கலமும் ஆக நெல்வி
    14. தை முக்கலமும் இறையிலி முற்றூட்டாக எனக்கும் என் மக்களுக்கும் விலையொற்றி _ _ _
    15. ஸ்த்ரீதனத்துக்குரிதாவுவதாக நாயனார் திருவுள்ளம் செய்தபடியே ஆளுடையார்
    16. மருதுடையாற்கு கல்வெட்டிக் குடுத்தேன் விக்கிரம சோழ திருபுவன சிங்க தேவனேன். இது தி
    17. ருபுவன சிங்க தேவனேன் எழுத்து. இவை கொத்தப்பி  சோழன் எழுத்து பன்மாஹேஸ்வர ரக்ஷை

    பிரமேகம் – நீரிழிவு, சக்கரை நோய், diabetes; திருஒத்த சாம பூசை  – பின்னிரவு ஒரு பூசை; திருமுகம் – அரசாணை; மன்றாட்டு – வேண்டிப்பெற்று, கால்நடை மேய்ச்சல் நிலம்; கவர் – ஆற்றுக்காலில் பிரிகிற கால்வாய்; விலை ஒற்றி – விலை நீக்கி, இலவசமாக;  ஸ்ரீதனம் – பெண் பிள்ளை சொத்து; திருவிள்ளம் – இசைந்து

    விளக்கம்: மூன்றாம் கொங்கு விக்கிரம சோழனின் 29 ஆம் ஆண்டு (1302)  ஆட்சியின் போது விக்கிரம சோழ திருபுவன சிங்கன் கூறியது. கடற்றூர் இறைவன் திருமருதுடையாரை வேண்டி எனக்கு பிரமேகம் என்னும் நீரிழிவு நோய் தீர்ந்தமையால் பின்னிரவு ஒரு பூசைக்கு ஒவ்வொரு நாளும் ஆகும் அரிசியை குறுணி அளவிற்கு வழங்க நான் நீர்வார்த்து தானமாக விட்ட நிலம் கரைவழி நாட்டில் உள்ள கண்ணாடிப் புத்தூரின் வடகரையில் வாழ்ந்த உதயாதித்த தேவன் நாட்டுத் துரோகியாகி, இராசதுரோகியாகி வடகொங்கில் தஞ்சம் போய்விட்டபடியால் அவனது நிலமும் அதில் வரும் ஆறு கலமும் எனக்கும் என் தம்பி சோழசிங்க தேவனுக்கும் ஆக இவ்விருவருக்கும் உரிய காணியாக்கினேன் என்று வேந்தரிடம் இருந்து வந்த ஆணையால் இதில் வந்த என்னோட பங்கு பாதியை வேண்டிப்பெற்று நெல் மூன்று கலமும் இந்த இறைவனுக்கு திருப்படிக்கு நீர்வார்த்து தானமாக விட்டேன். இந்நெல் முக்கலமும் வடகரையில் உள்ள பூலுவப்பற்றில் விதை நெல் ஆறு கலத்தில் என்னோட பாதி விதையான முக்கலத்துக்கு எல்லையாவது இந்த கிழக்கு வடக்கு உதயாதித்த தேவன் நிலத்திற்கு மேற்கும் அதியமான்  _ _ _ சோழிஈஸ்வரமுடையார் தேவதானத்துக்கு கிழக்கும் அழகாண்டார் வயலுக்கு தெற்கும் ஆக இந்நான்கு எல்லைக்கு உட்பட்ட நிலத்தில் நெல் இரு கலனும், வீரசோழீஸ்வரமுடையார்  தேவதானத்துக்கு வடக்கும் மேல் _ _ _ (நந்தவ)னத்துக்கு கிழக்கும் அழகாண்டார் வயலுக்கு மேற்கே இந்நிலத்திற்கு பாய்கிற ஆற்றுக்காலில் பிரிகிற கால்வாயின் தெற்கு எல்லைக்கு உட்பட நிலத்தில் வரும் நெல் விதை ஒரு கலன் முக்குறுணியில் நெல் விதை ஒரு கலனும் ஆக மூன்று கலன் நெல்லும் இறையிலி முற்றூட்டாக எனக்கும் என் பிள்ளைகளுக்கும் விலை நீக்கி தந்ததை நான்  பெண்பிள்ளை சொத்தாக வேந்தர் ஆணை தந்தபடியே அதை நான் இசைந்தபடி மருதீசருக்கு தானமாகக் கல்வெட்டிக் கொடுத்தேன் விக்கிரம சோழ திருபுவன சிங்க தேவன். இது திருபுவன சிங்க தேவன் ஒப்புதல் கையெழுத்து. இவை கொத்தப்பி சோழன் ஒப்புதல் கையெழுத்து. இது சிவனடியார் காப்பு.

    இக்கல்வெட்டு ஆங்காங்கே பொறிந்து போனதால் நிலம் குறித்த விவரம் தெளிவாகத் தெரியவில்லை.  நிலத்தின் அளவை குறிக்காமல் நெல் அளவுக் குறிப்பு குழப்புகிறது. அரசத் துரோகி உதயாதித்த தேவன் நிலத்தை கொங்கு சோழன் திருபுவன சிங்க தேவனுக்கும் அவன் தம்பிக்கும் இலவசமாக கொடுத்ததை பார்த்தால் இவர்கள் வேந்தனுக்கு செய்த அருந்தொண்டிற்காக வேந்தன் பரிசாக கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

    பார்வை நூல்: கல்வெட்டு இதழ் 75, பக்கம் 45 & கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக்கம் 225

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் சித்தலிங்கமடம் ஊரில் வியாக்ரபாதீஸ்வரர் கோயில் முன் மண்டபம் தெற்கு சுவர் 6 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனச் சக்ரவத்திகள் ஸ்ரீ கொலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்தொன்பதா
    2. வது மலாடாகிய ஜனநாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்து ப்ரஹ்மதேயஞ் சிற்றிங்கூர் ஆளுடையார்
    3. திருப்புலிப்பகவ தேவர்க்கு. இக்கோயிலில் சிவப்ராஹ்மணந் பாரத்வாஜி பஞ்சனதி பெரியாந் இத்தேவர்க்கு ப்ரார்
    4. தித்து ஆண்பிள்ளை பெற்று வைத்த திருநந்தா விளக்கு ஒந்றுக்கு பசு முப்பத்திரண்டுக்காக இக்கோயிலில் சிவ
    5. ப்ராஹ்மணரோம். எங்களுபையத்தால் கொண்ட அந்றாடு நற்காசு பத்து. இக்காசு பத்தும் கைக்கொண்டு இத்தேவர்
    6. க்குத் திருநந்தா விளக்கொன்றும் சந்த்ராதித்தவற் எரிக்கக் கடவோமாக சம்மதித்தோம் இக்கோயில் சிவப்ராஹ்மணரோம். இது பந்மாஹேஸ்வர ரக்ஷை.

    எங்கள் உபையம் – எமது இரு கைகள்

    விளக்கம்: முதலாம் குலோத்துங்க சோழனின் 49 ஆவது ஆட்சி ஆண்டு 1118 இல் மலாடு என்னும் ஜனநாத வளநாட்டின் குறுக்கை கூற்றத்தின் பிரம்மதேயமான சிற்றிங்கூர் இறைவன் திருபுலிப்பகவ ஈசுவரன் கோயிலில் பணிசெய்யும் சிவபிராமணன் பாரத்வாச கோத்திரத்தான் பஞ்சநதி பெரியான் என்பவன் இந்த ஈசுவரனிடத்தில் வேண்டி ஆண்பிள்ளை ஒன்று பெற்றுக் கொண்டான். அந்த நிறைவேறிய வேண்டுதலுக்காக அவன் வைத்த திருநுந்தா விளக்கு ஒன்றினுக்கு முப்பத்திரண்டு பசுக்களை வாங்க இக்கோயில் சிவபிராமணரிடம் அன்றாட்டு நற்காசு பத்து கழஞ்சு  கொடுத்தான். எமது இருகைகளால் இந்த பத்து கழஞ்சு காசை வாங்கிக்கொண்ட சிவபிராமணராகிய நாம் இந்த இறைவனுக்கு சந்திர சூரியர் நிலைக்கும் காலம் வரை அந்த ஒரு நுந்தா விளக்கு எரிப்போம் என்று இசைவளித்தோம். இது சிவனடியார் காப்பு.

    ஆண் பிள்ளை வேண்டுவது தமது உரிமைகளும் கடமைகளும் தடையின்றி அடுத்த தலைமுறைக்கு செல்ல வேண்டும் மற்றும் மத நம்பிக்கை ஆகியவற்றால் நிகழ்ந்திருக்கலாம்.

    பார்வை நூல்: விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக். 119, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளியீடு. SII Vol 26 No 392 pg 255

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டம் திருவெண்ணைநல்லூர் ஊரில் வைகுந்த பெருமாள் கோயில் அர்த்த மண்டபம் வடக்குப் பட்டி  2 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவ  லை திருவெண்ணெய் நல்லூர் ஸ்ரீவைகுந்தத் தெம்பெருமான் கோயில் தாநத்தார் கண்டு விடை தந்ததாவது  இக்கோயிலில்
    2. நமக்கு புத்ரார்த்தன கூடி அருள பண்ணின திருவைகுந்தத் தாழ்வார்க்கு திருவிடையாட்டமாக ஏமப்பேறூர்  _ _ _ சிறுபாக நல்லூரில் இவ்வூர் காணியாளர் பக்கல் நா_ _ _  (சிதைந்துவிட்டது)

    விடை – விட்டுக் கொடுத்த தானம்; புத்ரார்த்தம் – ஆண் பிள்ளைச் செல்வம்; கூடி – வாய்த்து; திருவிடையாட்டம் – திருமால் கோவிலுக்கு கொடுக்கும் தானம்; பக்கல் – இருந்து

    விளக்கம்:  இது காடவராயர் கோப்பெருஞ்சிங்கர் காலத்து கல்வெட்டு என்று தெரிகின்றது. திருபுவனச் சக்கரவர்த்திகள் ஓலை. திருவெண்ணை நல்லூர் திரு வைகுந்தப் பெருமாள் கோயில் பொறுப்பாளர் பார்வைக்கு. நாம் தந்த தானமானது இக்கோயிலில் வேண்டிக் கொண்டு நமக்கு ஆண்பிள்ளைச் செல்வம் கூடியதால் அதற்கு அருள்வித்த திருவைகுந்தப் பெருமாளுக்கு தானமாக ஏமப்பேறூர் நாட்டில் அடங்கிய சிறுபாக நல்லூரில், இந்த ஊரில் காணி உரிமை பெற்றவரிடம் இருந்து நாம் விலை கொடுத்து வாங்கிய நிலத்தை தானமாக தந்தேன். திருவாய்க்குலத்து ஆழ்வார் கண்ணனை எழுந்தருளுவித்து அபிஷேகம் செய்வித்து என்று நடுவண் தொல்லியல் துறை ஆண்டு அறிக்கை 485/1921 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மைப்படியில் கூடுதல் வரிகள் படியெடுக்கப்பட்டதாக தெரிகின்றது. இக்கல்வெட்டு இன்னும் நூலாக அத்துறையால் வெளியிடப்படவில்லை. ஆனால் தமிழ்நாடு தொல்லியல் துறை படியெடுத்தபோது 2 வரிகளுக்கு பின் இருந்த வரிகள் சிதைந்துவிட்டன போலும்.

    நாடாளும் மன்னவனும் இறுதியில் தனது வேண்டுதலுக்கு இறைவனுடைய அடியைத் தான் தொழுகிறான். வேறு வழியில்லை என்ன செய்வது. மன்னவர் பொதுவாக அதிகப் பெண் தொடர்புடையவர். ஆதலின் அவர் குருதியில் பித்தம் அதிகமாகி ஆண் குழந்தை பிறப்பிற்கு தேவைப்படும் Y குரோமோசோம் உற்பத்தியை பாதித்திருக்கும். அதனால் ஆண் பிள்ளை வாய்க்காது. பித்தம் குறைய எண்ணத்தாலும் கனவாலும் காம  நினைப்பை தவிர்க்க வேண்டும்.

    பார்வை நூல்: விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக். 237, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளியீடு.

    விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டம் சோழபுரம் அருள்மிகி விக்கிரம பாண்டீஸ்வரமுடையார் கோவில் நடராஜர் மண்டபத் முன்னுள்ள கல்தூண் மண்டபம் கல்வெட்டுகள் இரண்டு

    1

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோணா
    2. ங்கூருடையான் பட்டன் தே
    3. வனவன் தனபாலன்
    4. உடம் பிறப்பழகி
    5. யானைப் பெற ப்ர்ரார்
    6. த்தித்து நாட்டின
    7. க் கல்  ஸ்வஸ்திஸ்ரீ

    2

    1. ஸ்வஸ்திஸ்ரீ சோள நா
    2. ங்கூர் உடையா
    3. ன் ஆமன் தேவ
    4. ன் தேன்மொ
    5. ழியாகனேன்
    6. தனபாலன் உ
    7. டப் பிறப்பழகி
    8. யா யழகியானைப் ப்ர
    9. ஸாதித்து நாட்டின கல்.

    பிரசாதித்து / prajaati – பிள்ளை பெறு, procreative power; பட்டன் – படைத்தலைவன்

    விளக்கம்: ஒரே செய்தியுடன் தொடர்புடைய 13 ஆம் நூற்றாண்டு பேரரசுப் பாண்டியர்க் கால இரு தூண் கல்வெட்டுகள். கோநாங்கூரைச் சேர்ந்த படைத்தலைவன் தேவன் என்னும் தனபாலன் தனக்கு ஆண் பிள்ளை பிறக்க வேண்டிக்கொண்டு அதற்கு தூண் ஒன்றை மண்டபத்திற்கு செய்தளிப்பதாக வேண்டித் தூண் ஒன்றை செதுக்குவித்து நிறுத்தினான். அக்குழந்தை பிறப்பதற்கு முன்பே உடம் பிறப்பழகியான் என்று அதற்கு பெயரும் இட்டுவிட்டான் என்கிறது முதற் கல்வெட்டு.

    இரண்டாம் கல்வெட்டில் சோள நாங்கூரைச் சேர்ந்தவன் என்று இந்த சோழபுரத்தைத் தான் குறித்தானோ? இவன் பெயரை இன்னும் விரிவாக ஆமன்தேவன் தேன்மொழியான தனபாலன் என்று குறித்து உடம்பிறப்பழகியாள், உடம்பிறப்பழகியான் ஆகிய இரு குழந்தைகளை பெற்றெடுத்தேன் அதனால் இந்த இரண்டாவது தூணை நிறுவினேன் என்று ஒரு குழந்தைக்கு இரு குழந்தையாக தந்ததனால் பின்னர் இன்னொரு தூணையும் நாட்டி, இரு தூண்கள் நிறுவி கல்வெட்டி உள்ளான் இந்த படைத்தலைவன். வீரர்கள் போருக்கு வேண்டி ஆண் பிள்ளைகளையே நாடுவது இயல்பு.

    பார்வை நூல்: விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி II, பக் – 129 & 130, த நா தொ து வெளியீடு எழும்பூர்

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம், மலையடிப்பட்டி வாகீசுவரர் கோவிலின் குடிபோக கோவிலின் வட புறச் சுவரில் உள்ள 47 வரிக் கல்வெட்டு

    பஹு தாநிய / ஆண்டு தயி மாதம் 11 நாள் / வாகீ[ஸ்வர ஸ்வா] மி யாரு / க்கும் வடிவுள்ள மங் / கைக்கும் பூச்சிக்குடியில் யி / க்குனாம்  ஆவுடையா தேவ / ர் திருநெடுங்கோள / ம் தேவடியாள் வீ / ட்டுக்கு போயிருக்கச்சே ம / றுபடி ஒரு பிராமண / னை அழைச்சு வீட்டுலே இருந்தபடியினாலே  னா / ன் அவற்கள் ரெண்டு பே / ரையும் வெட்டிப் போட்டு / மலையடி வந்துவிட / திலே ரெண்டு கண்ணு / ம் தெரியாதே போன / படியினாலே இத்தோ / ஷம் போக / வாஹீஸ்வர / ஸ்வாமிக்கு என்னு / ட  வயல் கல்லு / ப் போட்டு குடுக்கு / றோம் என்று வேண்டி கொண் / டு எனக்கு கண் தெ / ரிஞ்சபடியினா / லே என்னுடை / ய காணியாந ஆவுடையான் குடி[க்][கா] / டு  னாங்[கெ]ல்லை உள் / பட்ட நிலமும் கல்ப் / போட்டு குடுத்தேன். இ / ந் / நிலம் ஸ்வாமி ஸந்நதி / இ ஸிலாசாதனமும் / எழுதி குடுதேன். இ / ந்த நீலதில் யா / தாமொருவன்  பெச / கு பண்ணினால் வா / ஹீஸ்வர ஸ்வாமி  ச / ன்னதி தொ / றோகீயாக போவன். கெங்கைக் / கரையில் காரா / ம்பசுவை கொண் / ண தோஷதிலே / போவன்.

    பிசகு – கலன், வில்லங்கம், விலக்கம்.

    விளக்கம்: இதன் எழுத்தமைதியால் 15 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு எனக் கொள்ளப்படுகிறது. அந்நூற்றாண்டில் கி.பி. 1418 மற்றும் கி.பி. 1478 ஆகிய ஆண்டுகளில் வந்த பகுதானிய ஆண்டு ஏதேனும் ஒன்றில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டிருக்கலாம். கிழமை குறிக்காமல் தை மாதம் 11 ஆம் நாள் என்று மட்டும் குறிக்கப்பட்டுள்ளது.

    இறைவன் வாகீஸ்வரருக்கும் இறைவி வடிவுள்ள மங்கைக்கும், பூச்சிக்குடியில் இருக்கும் ஆவுடையா தேவனான நாம் திருநெடுங்கோளத்தில் உள்ள தேவடியாள் வீட்டுக்கு போயிருந்த போது அவளை ஏற்கனவே எச்சரித்திருந்தும் மீண்டும் அவள் இன்னொரு பிராமணனை அழைத்து வந்து வீட்டில் இருந்தபடியால் ஆத்திரத்தில் நான் அவ் இருவரையும் வெட்டிக்கொன்று போட்டு மலையடிக்கு வந்துவிட்ட போது என் இரு கண்களும் பார்வை இழந்தன. எனவே இக் கொலைத் தோஷம் போக வாகீஸ்வர இறைவனுக்கு எனக்கு உரிமையான வயலை எல்லைக் கல் நாட்டி தானம் கொடுக்கிறேன் என்று வேண்டிய போது எனக்கு மீண்டும் பார்வை கிட்டியது. அதனால் என்னுடைய உரிமை நிலமான ஆவுடையான் குடிக்காடு நான்கு எல்லைகளையும் குறித்து அந்நான்கு இடத்திலும் எல்லைக் கல் நிறுத்தி தானம் கொடுத்தேன். இந்நில விவரத்தை இறைவன் திருமுன் கல்வெட்டும் எழுதி வைத்தேன். இந்நிலத்தில் ஏதேனும் ஒரு விலக்கம் நேர்ந்தால் அவன் வாகீஸ்வரனுடைய சிவத்துரோகி ஆகிடுவான். கங்கை கரையில் காராம்பசுவைக் கொன்ற தோஷத்தில் இறப்பான்.

    காசுக்கு தன் உடலை விற்பவள் தான் தேவடியாள் என்ற விலைமகள், பொது மகள். பொழுதிற்கு ஏதோ ஒரு ஆணிடம் இருப்பது தான் அவள் தொழில். இதனை மறந்த ஆவுடையாத் தேவர் அவள் என்னவோ தான் தாலி கட்டிய மனைவி போல எண்ணி அவளை மனைவி போல நடந்து  கொள்ள எதிர்பார்த்தார். அப்படி இல்லாதது கண்டு அவள் மேல் கோவம் கொண்டு அவளை மட்டுமல்லாது உடன் இருந்த பிராமணனையும் சேர்த்து கொன்று போட்டார். இது ஒரு அடாத செயல் அதன் விளைவை உடனே அனுபவித்தார். ஒரு பிராமணன் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடாமல் இருக்கச் செய்வது பிராமண சமூகத்தின் கடமை. ஒழுக்கக்கேட்டை தடுக்காவிட்டால் அது ஒட்டுமொத்தமாக அச்சமூகத்தின் மீது தான் பழியாய் விழும்.

    வீட்டிற்கு தெரியாமல் கள்ளத்தனமாக மீன் உண்ணும் ஒரு தமிழ் பிராமணனை நோக்கி “இப்படி மீன் தின்பதால் நீ பிராமணனே இல்லை என்று சொன்ன போது, ஏன் பிற சாதிமார் இவ்வாறு ஒழுக்கக்கேடு செய்தாலும் அந்தந்த சாதிக்காராகத் தானே அழைக்கப்படுகிறார்” அது போல ஒழுக்கம் கெட்டாலும் நானும் ஒரு பிராமணன் தான் என்றார். அவர் சொல்லுவது போல பிராமணர் என்பது ஒரு சாதியும் அல்ல, வர்ணமும் அல்ல. அது சாதியாகவும் வர்ணமாவும் பின்னீடு தான் ஆக்கப்பட்டது. விப்பிர என்பது தான் வர்ணம். அதன் பொருள் கற்றோன், அறிஞன் என்பது. வரலாற்றுபடி கற்றோரான வெள்ளாளரும் விப்ரர் என்பதில் தான் வருவர். ஆனால் இப்போது அது வேறாகிவிட்டது. பொய், கொலை, களவு, முறையற்ற காமம், புலால் – மது ஆகியன தவிர்த்த தந்திரயோக (தியான) வாழ்க்கை நெறியை பின்பற்றும் ஒரு தனிமதம் தான்; வேத மதம் – தந்திரயோக மதம் ஆகியவற்றின் கலப்பு மதம் தான் பிராமணிய மதம். இந்த ஐந்து ஒழுக்கங்களைக் கைக்கொண்டால் தான் யோக சித்தி எளிதில் விரைந்து கைக்கூடும் என்பதற்காகவே பிராமணர் இந்த ஐந்து ஒழுக்கத்தையும் பேணுவதற்காகவே பிறரோடு ஒன்று கலவாமல் இருந்து தனிமைப் பேணினார்கள் பண்டு. பின்பு வந்த புத்த, சமணம் ஆகிய இந்திய நாத்திக மதங்களும் இந்த ஐந்து ஒழுக்கத்தையும் தமதாக ஏற்று தம் பின்பற்றிகளை கடைபிடிக்க வலுயுறுத்துகின்றன. ஏனென்றால் அவையும் தந்திர யோகத்தை பின்பற்றுபவை என்பதால். சிலர் மயிர் மழித்தும் இன்னும் சிலர் மயிர் நீட்டி சடை வளர்த்தும் துறவு பூண்ட பின் இந்த பஞ்சமா பாதகத்தை ஒழிக்கத் தலைப்படுகின்றனர், இது தேவையற்றது. உலகோர் பழிக்கின்ற இந்த ஐந்து பாதகங்களை ஒழித்தாலே போதும் இதற்காக துறவு பூணத் தேவை இல்லை என்கிறார் வள்ளுவர் “மழிதலும் நீட்டலும் வேண்டா” என்ற குறளில். ஏனெனில் ஒழுக்கம் துறவாளருக்கு மட்டுமானது அல்ல மக்கள் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் வள்ளுவம் எனது சமயம் என்று மார்தட்டி விட்டு மேடையை விட்டு இறங்கியதும் புலால், மது என வாழ்பவரே மிகுதியாக உள்ளனர். தமிழ் நாட்டில் தான் இத்தகு வேடிக்கையாளர் நிறையபேர் இருக்கின்றார்.

    1400 ஆண்டுகள் முன் கிபி 7 ஆம் நூற்றாண்டில் புராண தெய்வங்களை வழிபாட்டு தெய்வமாக பிராமணர் ஏற்றுக்கொண்ட போது தான் பிராமணருக்கும் பிறருக்கும் ஒரு பொதுத் தன்மை ஏற்பட்டது. ஏனென்றால் பிறரும் அந்தப் புராண தெய்வங்களை ஏற்று  வழிபடத் தொடங்கினர் என்பதே. ஆக புராண மதம் தான் பல்வேறு சாதிகளையும் பிரிவுகளையும் அக்காலத்தே  ஒன்றாக இணைத்தது. இந்த இணைப்பு இசுலாமிய படையெடுப்பின் போது ஒற்றுமை உணர்வை தந்தது. இல்லாவிடில் இன்று இந்தியா ஒரு இசுலாமிய நாடு என்றாகி இருக்கும். இந்த புராண மதம் தான் வெவ்வேறு நெறிகள், கோட்பாடுகள், துணை மதங்களை இணைத்தது என்பதே வரலாற்று உண்மை. புராணங்களின் தந்தை மீனவ குலத்தில் பிறந்த வியாசர் என்பவர் ஆவார். அவருக்கு பின்பு தோன்றிய ஆதி சங்கரர் அதை மேலும் ஆறு சமயமாக வகைப்படுத்தி குறுக்கினார் என்பர். இதுவும் பல மதங்களின் கலப்பு மதம் தான். அதுவே இன்றைய இந்து மதம். இது பேரரசுப் பல்லவர் காலத்தில் நிகழ்ந்தது. ஆனால் தலித்தியர், திராவிடர் இந்த வரலாற்றை திரித்து பிராமண வெறுப்பு ஏற்படும்படியாகப் பேசுகின்றனர். இந்த ஒழுக்கக்கேடு பஞ்சமா பாதகத்தில் அடங்கியது. இந்த ஐப்பெரும் ஒழுக்கத்தைக் கைக் கொள்ளாதவர் தந்திர யோகப் (தியானம்) பயிற்சிக்கு சிறிதும் தகுதியற்றவர். தமிழகத்தில்  ஒழுக்கத்தை பிராமணரல்லாத வள்ளலார், பட்டினத்தார் போன்ற பிற சாதி துறவிகளோ, ஆன்மீகவாதிகளோ வலியுறுத்துகின்ற போது அதற்கு ஆரவாரத்தோடு ஆதரவு தரும் தமிழன் ஒழுக்கத்தை ஒரு பிராமணன் வலியுறுத்தினால் மட்டும் அங்கே ஏளனம், வசை தான் விஞ்சுகிறது. எனவே இது தமிழரிடம் உள்ள பிளவுபட்ட ஆன்மீகத்தின் வெளிப்பாடு ஆகும்.  ஒழுக்கம் என்பது அனைவர்க்கும் பொது அதை யாரும் எவருக்கும் எங்கும் முன்மொழியலாம். ஆனால் அதை முதலில் முன்மொழிபவர் பின்பற்றவேண்டும். கம்யூனித்துகளை பார்த்து செருமானிய மார்க்சிடம் இருந்து கருத்துகளை திருடிக் கொண்டனர் என்று எவரேனும்  சொல்லமுடியுமா? அவர்களும் அக் கருத்தால் மார்க்சு போல் அல்லவா ஆகிவிட்டனர். இதில் திருட்டு எங்கே வந்தது. தான் செய்தால் சரி அதையே அடுத்தவன் சொன்னாலோ செய்தாலோ அது தன்னுடைய கருத்தின் திருட்டு என்பது தவறான பரப்பல் ஆகும். தெய்வ வழிபாடு, மருத்துவம், இசை, ஜோசியம் எல்லாவற்றையும் ஆரியர் நம்மிடம் இருந்து தான் திருடிக் கொண்டனர் என்போரை கவனித்தால் இது தெளிவாகப் புரியும். இதற்கு எந்த சான்றையும் இவர்கள் முன் வைப்பதில்லை. ஆஃப்கான் முதல் இந்தோனேசியா வரை; காசுமீர் முதல் குமரி வரை பரவி வாழ்ந்த பெருந்தொகை பிராமணருக்கு தமிழ்நாட்டு சிறுபான்மை வள்ளுவ மக்கள் தான் ஆசான் என்பது போல இவர் பேசுவர். ஆதலால் இவர்கள் தான் உண்மைப் பார்ப்பனர் என்றும் பிராமணரை வேஷப் பார்ப்பனர் என்றும் வேடிக்கையாக (fun) பேசுவர். ஒரு சிறு பரப்பில் வாழும் ஒரு சிறு குழு (1.35 லட்சம் பேர்) பெரும் பரப்பில் வாழும் கூட்டத்தாருக்கு (5 கோடி பேர்) எப்படி ஆசானாக முடியும்? என்று தமிழர் யாரும் இதை இன உணர்வு காரணமாக கேள்விப்படுத்துவது இல்லை. கேட்டதும் சிரிக்க மட்டுமே செய்கின்றனர். சிறுபான்மை வள்ளுவ மக்களுக்கு உரித்தான சிறப்பையும் நற்பெயரையும் மொத்த பறையர் சமூகத்திற்கும் சொந்தமானதாகக் காட்டுவது மட்டும் வேஷம் இல்லையா? Edgar Thurston இருவருக்கும் என்ன வேறுபாடு காட்டுகின்றார் என்று பார்த்தல் இந்த கேள்வி நியாயமானதாகத் தெரியும். இதனால் தமிழர் சிந்தனைத் திறன் இவ்வளவு தானா என்ற கேள்விக்கு இடமாகிறது. முதலில் அயோத்திதாசரின் இந்த கருத்து தமிழர் அனைவரையும் வேடிக்கை (making fun of tamils) ஆக்குவது ஆகும் என்ற புரிதல் தமிழருக்கு ஏற்பட வேண்டும். Fun என்றால் இங்கே நகைப்பு, இழிவு, முட்டாள்தனம் ஆகியவற்றின் கலவை ஆகும். மேற்சொன்னபடி எத்தனையோ பிழையான, தவறான கருத்துகள் வெறுப்பைப் பரப்ப கடந்த 150 ஆண்டுகளாக தமிழகத்தில், தமிழர் நெஞ்சங்களில் திணிக்கப்பட்டுவிட்டன. அவற்றை திருத்திக் கொள்ளவே இந்த கல்வெட்டு வாசிப்பு, விளக்கம் யாவும். பிழையை திருத்திக் கொள்ளாவிடில் எங்கெங்கோ அலைந்து தேடிப்பிடித்து கொண்டுவந்து தட்டச்சு செய்து மேற்கொள்ளும் இந்த கல்வெட்டு வாசிப்பு முயற்சி அனைத்தும் ஒரு நேர வீணடிப்பு என்பதாகத் தான் இதை படிபவருக்கும் அமையும். பிழையான கருத்துகளை இன்னும் எவ்வளவு காலம் தமிழ்நாட்டில் உலாவ விடுவது? எனவே தமிழருக்கு அறிவின் விழிப்பு மிக அவசியமாகிறது. தமிழன் கொஞ்சமானா சிந்திக்க வேண்டாமா இனி!!!

    பார்வை நூல்: Inscriptions of the Pudukkottai state arranged according to dynasties, எண்: 904, பக். 595 & 596

    வட ஆர்க்காடு  மாவட்டம் திருவண்ணாமலை வட்டம் அருணாச்சலேசுவரர் கோவில் முதல் திருச்சுற்றின் வடக்கு சுவர் 5 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ இராஜஇராஜ தேவற்க்கு யாண்டு 18 வது காத்தியை மாதம் பிறந்த பதினேழான் தியதி{யா}ன நாயற்றுக்கிழமையும் ரேவதியும் தஸமியும் பெற்ற
    2. இன்று சென்ன(த்)திக் கானையான யாதவராயர் முதலிகளில் நின்றையில் குளத்துழான் திருக்காளத்தி உடையானான வில்லவராயர் மகளார் யச்சிய பாடியில் கலிச்சித்தன் திருவேகம்பமுடையா
    3. ர்க்குப் புக்க  கோமளவல்லியேன் உடையார் திருவண்ணாமலை உடைய நாயநா{ர்}க்கு வைத்த  திருநுந்தா விளக்கு ஒன்றுக்கு விட்ட சாவா மூவா வாடு னூறு இ{வ்}வாடு னூறுன் திருவிளக்கு மன்றாடி வ
    4. சம் விட்டுச் சந்திராதித்தவரை செல்வதாக விட்டேன் கோமளவல்லியேன். இது பன்மாஹேஸ்வர ரக்ஷை . பின்பு விட்ட ஆடு இருபதும் ஆக ஆடு நூற்று இருபது. இவ்வாடு கோடந்தை மருமகன் நங்கைகோன் வசம் விட்டது.

    நின்றையில் (நின்ற + அயில்) – பிடித்த வேல்; முதலி – படைத்தலைவன்; புக்க – மணமாகி கணவன் வீடு புக;

    விளக்கம்: இக்கல்வெட்டு மூன்றாம் இராசராச சோழனின் 18 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி.1234 இல் கார்த்திகை மாதம் 10 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ரேவதி நட்சத்திரம் கூடிய நாளில் வெட்டப்பட்டது. சித்தூர் பகுதியை ஆண்ட சென்னத்தி கானை யாதவராயர்க்கு படைத்தலைவராக அமைந்த குளத்துழான் திருக்காளத்தி உடையான் வில்லவராயன் என்பவருடைய மகள் கோமளவல்லி யச்சியபாடியில் வாழும் கலிச்சித்தன் திருவேகம்பமுடையான் என்பவனை மணந்து கணவன் வீடு சென்றதால் தன் திருமண வேண்டுதலை நிறைவேற்ற திரு அண்ணாமலை இறைவனுக்கு ஒரு நுந்தா விளக்கு எரிக்க 100 ஆடுகள் கொடுத்துள்ளாள். பின்னொரு போது மேலும் 20 ஆடுகள் கொடுத்துள்ளாள். இவை 120 ம் கோடந்தையின் மருமகன் நங்கைகோனிடம் அன்றாடம் நெய் வழங்க ஒப்படைக்கப்பட்டன.

    இக்கல்வெட்டில் திருமணம்  நடக்க வேண்டிக்கொண்ட வேண்டுதல் பற்றிய குறிப்பு ஏதும் இல்லை. அந்நாளில் பெண்கள் 13-14 வயதில் மணம் முடித்தனர். எனவே இது காதல் திருமணமாக இருக்காது. பெற்றோர் தம் மகளுக்கு நல்ல இடத்தில் நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டும் அப்படி அமைந்து திருமணமாகி மகள் கணவன் வீட்டிற்கு சென்றால் நுந்தா விளக்கு எரிப்பதாக வேண்டிக்கொண்டு அவ் வேண்டுதலைத் தம் மகள் பெயரில் நிறைவேற்றுவர். இதே போல “புக்க” என்ற சொல்லாட்சி பெற்ற திருமணக் கல்வெட்டு SII தொகுதி 7, எண் 831 இல் உள்ளது. அது திண்டிவனம் திண்டீசுவரர் கோவிலில் தியமங்கலமுடையான் கண்டராபரணன் குணசீலன் மகள் சோழமண்டலத் தென்கரை நாட்டு கொற்றமங்கலமுடையான் வேளாண் சந்திரசேகர இராசராச விழிஞத் தரையனை மணந்து கணவன் வீடு சென்றதற்காக உடையநங்கை என்ற பெயருடைய அவள் நுந்தா விளக்கு எரிக்க 30 பசு கொடுத்துள்ளாள் என்று உள்ளது. கும்பகோணம் திருவிடை மருதூர் கோவிலில் தஞ்சை மராட்டிய மன்னர் பிரதாப சிங்கின் (கிபி 1775) மாமன் மகள் அம்முனு அம்மணி தன் பொன்னான மனதில் அவனையே கணவனாகக் கொள்ள எண்ணி ஏற்ற விரதத்தை முடித்து இலட்ச தீபம் ஏற்றியதற்கு அடையாளமாக  தன் உருவம் ஒத்த பாவை விளக்கை செய்து நிரந்தரமாக கோவிலில்  நிறுத்தினாள். அவள் மன்னனை மணந்தாளா என்ற குறிப்பு அந்த பாவை விளக்கின் பீடத்தில் குறிக்கப்பட வில்லை (காண்க ஆவணம் இதழ் 29, 2018 பக். 189). எனவே திருமணம் ஆக இறைவனிடம் வேண்டுவது ஒரு வகை வேண்டுதல் ஆகும். இப்படி வேண்டுதல் இல்லாவிடினும் பெண்ணுக்குத் திருமணம் கட்டாயம் நடக்கும். ஆனால் படைச் சாதியார் தான் இப்படி வேண்டுவது செய்யும் கல்வெட்டு பொறிப்புகள் கிடைக்கின்றன என்பது அவர்கள் அந்தஸ்தை பேணுவதற்கே வேண்டுகின்றனர் என்று புரிகிறது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 8, எண்: 84 பக். 46, இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை வெளியீடு

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் முன்மண்டப கிழக்கு சுவர் 17 வரிக்கல்வெட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ ருத்ரோதிகாரி ஆண்டு வைகாசி மாதம் 22 தியதி பெருமாள் / ஆலால சுந்தரம் பெருமாள்  திருவாய் மொழிந்தருளினபடிக்கு திருவெண்ணைநல் / லூர்  கைக்கோளரில் திருப்புவனமுடையார் இலங்கேசுவர தேவனுக்குரிய முறி. / இவந் வரும் சித்திரை மாதம் பதி எட்டு ஐஞ்சாந்திருமுறை ஆட்கொண்டருளிய  சித்திரைத் திருநாள் திருவுலா செய்தருளுகையில் ந / __ _ _ / _ _ _ தேவ _ _ _ ய்ய நாட்டு _ _ _ _ கையில் _ _ _ _ _ / _ _ _ வீரமாயேசுவரர் இருந்த தெருவில் _ _ _ _ / யில் _ _ _ முன்பு பொ _ _ _ ம் என்றும் சொன்னபடிஆலே இந்த _ _ _ த்ருமடைவிளாக வதி _ _ _ / _ _ _ முடையாரிலே வீரமாயேசுவர _ _ _ _ / இந்த திருபுவனமுடைய _ _ _ / மாணிக்கத்தில் மனைக்குக் கீழ்பார்க்கெல்லை பொன்மேந்த சோழப் பல்லவரையர் மனை / க்கு மேற்கு மேற்படியார் பக்கல் கொண்டுடைய _ _ _ மனை ^ ம் பொன் மேய்ந்த சோழன் நாமத்தில் மனையில் கட்டளையில் _ _ _ / மத்தின் விட்ட _ _ _  ஆக தடி _ _ _ னால் பன்னீரடிக் கோலால் குடி _ _ _ / _ _ _ வெட்டி _ _ _ முதல் ஒடுக்குலே பற்றுனால் _ _ _ _ காணி கூட _ _ _

    முறி – ஓலை எழுத்து ஆவணம்

    விளக்கம்: இக் கல்வெட்டு எழுத்தமைதியால் 12-13 நூற்றாண்டினதாகக் கொள்ளப்படுகிறது. வேந்தர் ஆட்சி ஆண்டுக்கு குறிப்பு ஏதும் இல்லை. திருவெண்ணெய்நல்லூரில் வாழும் கைகோளர்களில் (செங்குந்தர்) திருபுவனமுடையார் இலங்கேசுவர தேவன் சித்திரை மாதம் 18 ஆம் நாள் சித்திரைத் திருவிழாவில் தேவாரத்தின் ஐந்தாம் திருமுறையை உலாவின்போது பாடிக்கொண்டு நேரே தன் வழியில் சென்று கொண்டிருந்த வேளையில் அவ் வழியில் ஏதோ கலவரம் நடக்க அதில் அவர் தவறுதலாக கொல்லப்படுகிறார். அவருக்கு திருமடைவிளாகத்தில் பொன்மேந்த சோழபல்லவரையன் பெயரில் அமைந்த வீட்டை அந்த சோழப்பல்லவரையனிடம் இருந்து வாங்கி அந்த வீடும் காணியும் தரப்பட்டதற்கான ஓலை ஆவணம் இது. இந்த ஆவணம் சித்திரைக்கு அடுத்த வைகாசி மாதம் 22 ஆம் தியதி இக்கோவில் இறைவன் ஆலால சுந்தர பெருமானின் கட்டளைப்படி இலங்கேஸ்வர தேவன் இறப்பிற்கு ஒரு மாதம் பின்பு தரப்பட்டது. இக்கல்வெட்டு மாநில தொல்லியல் துறை படிஎடுத்த போது அதிகம் சிதைந்து விட்டதால் மத்திய தொல்லியல் துரையின் ஆண்டறிக்கை 437/1921 இல் இருந்து குறிப்பு எடுக்கப்பட்டது.

    பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டுகள் தொகுதி 15 (விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி II), பக். 38-39, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளியீடு.

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் திருவெண்ணைநல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவில் நுழைவுவாயில் வலதுபுறச் சுவர் 21 வரிக்கல்வெட்டு

    விபவ வருஷம் தை _  15 நாள் பெருமாள் ஆலா / ல சுந்தரப்பெருமாள் திருவாய்மொழிந்தருளின / படி நம்மை ஆண்ட தடுத்தாட் கொண்டருளிய  தம் / பிரானார் திருவாய்மொழி மல(ர்)ந்து இராவுத்தநல்லூரில் இருக் / கும் கன்னட பிராமணரில் சவுண்டரசர் மகன் (சோமரா) / சற்கு (கடி)யார  க்ஷேத்திறத்து _ _ _ _ (வி)த்துக் குடுத்த இ / துக்கு குருவி மூலை முதல் தரத்தில் இவற்கு சீவிதமா  / கச்  சேத்துக் குடுத்த பிறஸாதம் இருநாழி இதுக்கு வடக்கு / போய் திருவீதிக்கு தென்சிறகு _ _ _ _ / _ _ _ த்துக்கு மேற்கு முன்னா _ _ _ (பண்டாரத்துக்கு) திருமு / னைப்பாடி நம்பி கொண்ட மனை வடக்கு _ _ _ / கிழக்கு (சோமாசி) _ _ _ விட்ட மனை ஒன்று _ _ _ /  இந்த மனை ஒன்றும் இந்த பிறஸாதமும் இத்த / (ருமம் செய்தாரும்) இவற் வர்க்கத்தில் உண்டானவர்களும் / _ _ _ _ அனுபவித்து _ _ _  வித கிறையத்துக்கு / யோக்கியமாக ஆ(சந்த்ராதித்தவரை)யாக அனுபவித்து /  (திறி)ஸத்தியம் _ _ _ யாரா _ _ _ தம் கற்பித்து / கத்திலே இருக்கவும் இப்படி ஆலால சுந்தரப் / பெருமாள் திருவாய்மொழிந்தருளியபடி(க்கு) / இவை திருமந்திர ஓலை திருமுனைப்பாடி நம்பி / _ _ _ _

    கடியார சேத்திரம் – நேரம் அறிவிக்கும் நிலம்; க்ஷேத்ரம் – வயல்வெளி; திருவாய்மொழி – கட்டளை,

    விளக்கம்: இக்கல்வெட்டு 15-16 ஆம் நூற்றாண்டினதாக கொள்ளப்படுகிறது. வேந்தர் ஆட்சி ஆண்டு குறிப்பு ஏதும் இல்லை. திருவெண்ணை நல்லூர்க் கோவில் இறைவன் ஆலால சுந்தரனின் கட்டளைப்படி இராவுத்த நல்லூரில் வாழும் கன்னட பிராமணர் சவுண்டராசரின் மகன் சோமராசனுக்கு நேரம் அறிவிக்கும் வயல்புறத்தில் பிழைப்பு நிலமாக  2 மாவும், அளவீடு பிரசாதமாக இரு நாழி நெல்லும், ஒரு வீடும் திருமந்திர ஓலை நம்பியால் இவரது வங்கிசத்தார் உள்ளவரை அனுபவித்துவர எழுதி தரப்பட்டது.  இக்கல்வெட்டு ஆங்காங்கே சிதைந்துள்ளதால் மத்திய தொல்லியல் துறையின் ஆண்டறிக்கை 460/1921 இல் இருந்து குறிப்பு எடுக்கப்பட்டது. மேல் உள்ள இரண்டு கல்வெட்டிலும் இறைவன் ஆலால சுந்தரனே நேரடியாகக் கட்டளை இட்டது என்பது சப்தரிஷி நிலை எய்திய சித்தர் ஒருவரின் சித்து வேலை தான் இது என்று அறிய முடிகிறது.

    பார்வை நூல்: தமிழ்நாட்டு கல்வெட்டுகள் தொகுதி 15 (விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி II), பக். 155-156, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளியீடு.

    தஞ்சாவூர் மாவட்டம்  48 வரி வல்லம் செப்பேடு

    ஆனந்த ஸ்ரீ கார்த்திகை மாதம் 13. வல்லத்து / க்கு தாசா ஒரு பாதையில் வான வாச / மான காட்டுப் பாதையில் தஞ்சாவூர்  ரு / யிந்து வல்லத்துக் பக்கிர சா போ / கச்சே ஒரு பிராமணதிம்மாள் வல்ல / த்தியிருந்து தஞ்சாவூர்க்கு போனாள். / அப்போ கள்ளர் வந்து பிறாமநித்தியே பரி / க்க வந்தா அப்போ ஓடி வந்து பக்கிரி சா / ய்பு காலுலே விளுந்தாள். பக்கிரி சா / ய்பு யிருந்து கொண்டு யிந்த பிறாமணத்தி / உங்கள்க்கு தெயிவமது வாரி அ / வளே தொட வேண்டா மென்று சொ / ன்னாற் சொன்னவிடத்திலே பக்கிரி சாய / பே குத்தினார்கள்.  அந்த பிறாமணத்தி  / எனக் கோசர அல்லோ பக்கிரி சாய / பே குத்தி போட்டார்கள் யென்று அவள் / நாக்கே பிடிங்கிக் கொண்டு செத்துப் போனா / ள்  கள்ளருக்கு யெல்லாம் கன்னு தெரி / யாமல் போச்சுது னாலு சாமத் / துக்கும் கன்னு தெரியாமல் போச் / சுது. அப்போ கல்லர் யிருந்து கொண்டு  / நாங்கள் அறிஞ்சி அறியாமல் செ / ய்து  போட்டோம் யெங்கள்க்கு  / கன்னு வெளிச்சம் தந்திகளே / ஆனா உங்களுக்கு கோவில் கட்டி கொ / னரும் வெட்டிவிச்சு கொளமும் வெட்டிவிக்குறோம். யிந்த சேதி / விசைய ரெகுநாத னாயக்கர் / னாலையிலே யிதுக்கு மானிய நிலம் / 1500 குளி மானியம் நஞ்சை  நி / லவிட்டு  குடுத்தகர்கள், நாயக்கர் கல்லும் / காவேரி பில்லும் பூமி வரைக்கும்  நட / ப்பிவிச்சார்கள். யிந்தப் பாதை கா / சி  றாமேசுரத்துப் பாதை மக்கா மதி / னத்துப் பாதை. துலுக்கநாகப்பட்டவன் / யிந்த மானியத்துக்கு மரிச்சால் ப / ன்னியே அருத்து தின்னான் சூத்திர / ன்னானவன்  மரிச்சால் கெங்கை / கரையில் பசுவே கழுத்தை அரு / த்தான். யிந்த தற்மம் காய்கரி ம / ரவேடை பிரவேடை  அனுபோ / விச்சு கொண்டு போகவும்  யிந்த / தற்ம  அழிவில்லாமல் அனுபோ / விச்சு கொண்டுவரவும் இந்த ப / டிக்கு விசைய ரெகு னாயக்கி னா / னையிலே நடப்பிவிச்சு நடந் / து கொள்ளுகிற தந்மம் யிது / க்கு  மரிக்க தேவையில்லை.  

    தாசா –  போகும் வழி; பக்கிரி சாயுபு – fakir sahib, பிச்சை கொண்டு வாழும் இசுலாமிய துறவி; கள்ளர் – கள்வர், வழிப்பறி கொள்ளையர்; சாமம் – 3 மணி நேரம்; 1500 குழி – நாலரை ஏக்கருக்கு கூடுதல்; மறி – தடு, தடை; வேடை – பயிர் தொழில்;  

    விளக்கம்: வல்லம் தஞ்சைக்கு இடையே 12 கி.மி. தொலைவு  இடைவெளி உள்ளது. இங்கே தஞ்சை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இச் செப்பேடு குறிக்கும் பிராமணப் பெண்ணின் நினைவுச் சின்னமும் குளமும் கிணறும் உள்ளது.  இச்செப்பேடு தஞ்சை நாயக்கர் ஆட்சியின் போது கி.பி. 1614 இல் ஆனந்த வருடம் திருக் கார்த்திகை மாதம் 13 நாள் வெளியிடப்பட்டது. வல்லத்திற்கு போகும் வழிகளில் ஒரு பாதையில் வனாந்திரமான காட்டுப் பாதை ஊடே தஞ்சாவூரில் இருந்து வல்லத்திற்கு வரும் பிச்சை எடுத்து வாழும் இசுலாமிய துறவியான பக்கிரி (fakir) சாயபு போகையில் எதிரே ஒரு பிராமணப் பெண் வல்லத்தில் இருந்து தஞ்சாவூருக்கு போய்க் கொண்டிருந்தாள். அப்போது வழிப்பறி செய்யும் கள்வர் அப் பிராமணத்தியை பின் தொடர்ந்து வந்து உடைமைகளை பறிக்க வந்தனர். அப்போது அவள் ஓடிச்சென்று பக்கிரி சாயபுவின் காலில் விழுந்து தன்னைக் காப்பாற்றும்படி தஞ்சம் வேண்டி நின்றாள். பக்கிரி சாயிபு அவளை தன் அருகே அழைத்துக் கொண்டு “இந்த பிராமணத்தி அம்மாள்  உங்களுக்கு தெய்வம் மாதிரி அவளைத் தொட வேண்டாம்” என்று எச்சரித்தார். கள்வர்கள் உடனேயே கத்தியை உருவி அந்த இடத்திலேயே பக்கிரி சாயிபுவை குத்திக் கொன்றார்கள். உடனே அந்த பிராமணத்தி அறச்சிந்தனை மேலீட்டால் என்னைக் காப்பதற்காக அன்றோ இவர் கொலையுண்டார் ஆதலால் இவர் சாவிற்கு நானே பொறுப்பாவேன் என்று பதறி அவள் தனது நாவைப் பிடுங்கிப் போட்டு அந்த இடத்திலேயே செத்துப் போனாள். அவளது துயர எண்ணம் கள்வர்களின் பார்வையை பறித்தது. அவர்களும் குருடராகிப்போயினர். இப்படி நாலு சாமம் (அரை நாள்) கண் குருடாக இருந்த கள்வர்கள் நாங்கள் அறிந்தும் அறியாது செய்த பிழையை மன்னித்து எங்களுக்கு கண் பார்வையை மீட்டுத் தந்தால் உங்களுக்கு நினைவுக் கோவில் கட்டி  கிணறும் வெட்டி குளமும் வெட்டுவிக்கிறோம் என்று வேண்டினர். இங்கே நாலு சாமத்திற்கு கண் தெரியவில்லை என்றால் அதன் பின் பார்வை தெரிந்தது என்று தானே பொருள்? ஏனென்றால் செப்பேட்டில் பார்வை வந்தது போல நேரடிக் குறிப்பு ஏதும் இல்லை.

    இந்த அதிசயச் செய்தி மன்னர் விசைய ரகுநாத நாயக்கர் காதுகளுக்கு எட்டியது. அவர் நாளையில் இருந்து இதுக்கு மானியமாக நஞ்சை நிலம் 1500 குழி தானமாக கொடுத்தேன் என்று அறிவித்தார். அதை கொடுக்கின்ற போது நாயக்கர் கல்லும் காவேரியும் புல்லும் பூமியும் உள்ள வரை இது செல்வதாகட்டும் என்று சொன்னார். இந்த தர்ம தானப் பாதை காசி இராமேசுவரம் போன்ற தர்மப் பாதை ஆகும்; மக்கா மதீனா போன்ற புனிதப் பாதையாகும். யாரேனும் ஒரு துலுக்கன் இந்த தர்ம மானியத்தை தடுத்தால் அவன் பன்றியை அறுத்துத் தின்றவன் ஆவான். யாரேனும் சூத்திரன் ஒருவன் தடுத்தால் அவன் கங்கைக் கரையில் பசுவின் கழுத்தை அறுத்தவன் ஆவான். இந்த தர்ம நிலத்தில் காய்கறி, பழ மரங்கள் நடல், பிற வேலைகள் ஆகியவற்றை செய்து அனுபவித்துக் கொண்டு போகவேண்டும் என்று இந்த இடத்தைப் பாதுகாக்கும் பணியாளருக்கு உரிமையாக தருகின்றார். இந்த தர்மம் நின்று விடாமல் தொடர்ந்து நடத்த வேண்டும். இது மன்னன் விசைய இரகுநாத நாயக்கன் ஆணையில் நடத்துவிக்கிற நடந்து கொள்கிற தர்மம் ஆகும். இதை யாரும் தடுக்க வேண்டியதில்லை என்று ஆணையிட்டார் இரகுநாத நாயக்கர். செங்குட்டுவன் பத்தினி தெய்வத்திற்கு கடும் முயற்சியில் இயமத்தின் கல் கொண்டு கண்ணகிக் கோட்டம் எடுத்தது போலல்லாமல் இது தஞ்சை மன்னரின் ஒரு மிகச் சிறு தர்மம் ஆகும்.

    வழிப்போக்கரான இசுலாமிய பக்கீரும், பிராமணப் பெண்ணும் எந்த ஊர் என்ற முகவரி அறியப்படாததால் அவர்தம் பெயர் இச் செப்பேட்டில்  குறிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே இறந்தவர் குடும்பங்களுக்கு இழப்பீடு ஏதும் தந்திருக்க வாய்ப்பில்லை. பிராமணத்தி அம்மாள் என்ற சொல்லாட்சி அவள் நடுவயதினள் என்பதைச் சுட்டுகிறது. இந்த  பிராமணப் பெண்ணின் தெய்வீக ஆற்றலுக்காகத் தான் மன்னர் விசய ரகுநாத நாயக்கர் அவராகத் தாமே முன்வந்து பிராமணப் பெண்ணின் நினைவுக் கோவிலைப் பேண 1500 குழி நிலம் தானமாகத் தந்தார். செப்பேடு பேச்சு வழக்குத் தமிழில் உள்ளது என்றாலும் பல சொற் பிழைகளுடனும் பல எழுத்துப் பிழைகளுடனும் இலக்கணப் பிழைகளுடனும்  எழுதப்பட்டுள்ளது. இது தமிழ்ப் படிப்பு செப்பேடு எழுதுவோரிடம் குறைந்து வந்ததோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. அப்படியானால் நாயக்கர் ஆட்சி தான் தமிழ், தமிழ் பண்பாட்டிற்கு வீழ்ச்சி தந்த ஆட்சி. தமிழகத்தின் இருண்ட காலம் எனலாம். இசுலாமியரிடம் இருந்து மீட்பு என்பது பொய். 

    தமிழ் வேந்தர் ஆட்சிக் கல்வெட்டுகளில் எந்த ஒரு சாதியும் சூத்திரர் என்று குறிக்கப்படவில்லை. இதே காலத்து சேதுபதி மன்னர் கல்வெட்டுகளில் கூட சூத்திரன் என்ற சொல்லாட்சி இல்லை என்பது சிந்திக்கத்தக்கது. ஆந்திரத்தை ஆண்ட காகதீய அரசர்கள் தம்மை சூத்திரர் என்று கல்வெட்டு பொறித்தார்கள். அதன் பின் இசுலாமிய ஆட்சியை ஆந்திரத்தில் ஒன்றுகூடி ஒழித்த நாயக்கர்களில் சில ரெட்டிமார் ஆட்சியாளர் இசுலாமியர் ஆக்கிரமிப்பு, ஆட்சி  ஒழிப்பு எல்லாம் சத்திரியர் இருந்து செய்யவேண்டிய வேலை. அவர்கள் இப்போது இல்லாததால் சூத்திராகிய தாம் அதை செய்ததாக தம்மைச் சூத்திரர் என்று கல்வெட்டு பொறித்தார்கள். இப்படி ஆட்சியாளரே தம்மை சூத்திரர் என கூறிக்கொள்வதன் உள்நோக்கம் என்ன என்று ஆராய்ந்தால் “நானே ஒரு  சூத்திரன் என்றால் எனக்கு கீழ்படிந்த சிற்றசர், அவரைச் சார்ந்த படைத்தலைவர், படை ஆள்கள், பணி ஆள்கள், பொது மக்கள் எல்லோருமே சூத்திரர் (அடிமை) தான்” என்று எல்லோருக்கும் சூத்திர பட்டத்தை கட்டி இடையில் சத்திரியர், வைசியர் என்போர் இல்லாதபடி உளவியல் ரீதியாக அவர்கள் மேன்மை உணர்வு கொள்ளாதபடி செய்வதே ஆகும். அந்த ஆந்திர ஆட்சியாளரின் வழிவந்தவனல்லவா இந்த தஞ்சையை ஆண்ட மன்னன் விசய ரகுநாத நாயக்கன்? ஆகையால், தான் நேரடியாக வெளியிட்ட ஆணைச் செப்பேட்டில் பிராமணரல்லாதாரை சூத்திரர் என்று குறிப்பிடுகின்றான் என்பது இந்த செப்பேட்டில் முக்கியமாக கவனிக்க வேண்டிய வரலாற்றுச் செய்தி ஆகும். தமிழரின் சூத்திரப் பட்டத்திற்கு யார் உண்மைக்கு காரணம் என்பதற்கு இச்செப்பேடு ஒரு நல்ல சான்று ஆகும். இவருக்கு முன்னோனான சேவப்ப நாயக்கருக்கு தொடர்புள்ள கி.பி.1550 கால தஞ்சாவூர் இரயில் நிலைய வடக்கில் உள்ள மசூதி கல்வெட்டிலும் இப்படி சூத்திரன் என்ற சொல்லாட்சி உள்ளது (காண்க ஆவணம் இதழ் 4, 1994, பக். 102 &103). தமிழனை சூத்திரன் ஆக்கிவிட்டால் அவன்  செல்வத்தையும் கல்வியையும் நோகாமல் பறித்துவிட முடியும். இப்படி தெலுங்கு ஆட்சியாளரால் தமிழர் மீது திணிக்கப்பட்ட இந்த சூத்திரப் பட்டத்திற்கு எதிராகத் தான் அதே தெலுங்கு சாதியில் பிறந்த ஈரோட்டுக்காரர் திராவிடத்தின் பெயரால் சுயமரியாதை இயக்கம் கட்டினார். சூத்திரன் என்றால் அடிமை என்ற உண்மைப் பொருளை மறைத்து வேறு ஒரு பொருத்தமற்ற சொல்லால் பரத்தை மகன் என்று எழுத்திலும் பேச்சிலும் அவரால் தமிழன் இழிவு செய்யப்பட்டான் என்பது வரலாற்று வேடிக்கை. இதற்கு தமிழன் இதுவரை எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை மாறாக அவ் விடத்திலேயே அடைக்கலம் ஆனான். தமிழர் மீதான இந்த சூத்திர பட்டத் திணிப்பு தஞ்சை நாயக்கர் தொடங்கி தமிழகம் முழுமைக்கும் பரவியதற்கு தெலுங்கு நிலவுடைமை ஆண்ட பரம்பரை படைச் சாதியாரே காரணம் என்பது வரலாறு. இதற்கும் இந்து மதத்திற்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்று தெளிக. இது தெலுங்கு திராவிடத்தாரின் குற்றம் என்பதால் இந்த செப்பேட்டைப் பற்றி திராவிடம் ஒருபோதும் மேடையில் பேசத் துணியாது. பார்க்கலாம் இனியாவது இந்த நிலவுடைமைச் சாதிகளைக் குற்றம் சாட்டும் துணிவுள்ளவர் வேறு யார் என்று. ஆனால் தமிழக கம்யூனிசமும் தலித்தியமும் இதை பேச முன் வரலாமே. எப்போதுமே திராவிடப் பொய்களைப் பிடித்துக்கொண்டு தான் ஊர்ந்து போக வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இவர்களுக்கு இல்லையே!! மேடையும் உமது, ஒலிவாங்கியும் உமது, முன் நிற்கும் மக்களும் உமது கருத்தியல் மக்கள் தானே பின் என்ன தயக்கம்? இதற்கு முதலில் உண்மையின் மீது நாட்டமும், குற்றம் யார் செய்யினும் குற்றமே என்ற அறத் துணிவும் (moral courage) வேண்டும். அதை வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.

    பார்வை நூல்: வரலாற்றில் வல்லம், ச. கிருஷ்ணமூர்த்தி, பக். 108 – 109 

    சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் ஊராட்சி சித்தாலங்குடி கிராமம் வல்லப சுவாமி 9 வரிக் கல்வெட்டு

    1. 1861 (1000 800 60 1) சதுர்தசி கரியான தமிள துன்மதி ஆண்டு
    2. வையாசி  மாதம். 26 நாள். மகாராஜா  ச
    3. த்திரபதி போதகுரு மகாராஜா அவற்கள்  பி
    4. ரான் மலைக்கி வேங்கைப்புலி வேட்டைக்கி ச
    5. வாரி விஜயமாகும் போது படமாதூரிலிருக்கும்
    6. யிஷ்ட குல தெய்வமாய வல்லப ஸ்வாமிக்கி செ
    7. யிது கொண்ட பிரார்த்தனைப்படிக்கி புலி
    8. யை சுட்டுக் குத்தினதுனாலேயும் யிந்
    9. த திருமதிலக் கட்டினது

    கரியான – கிருஷ்ணபக்ஷமான; சவாரி – குதிரை மீது ஊர்ந்து;

    விளக்கம்: ஆங்கிலர் ஆட்சித் தாக்கம் காரணமாக கல்வெட்டில் கிரிகேரியன் ஆண்டும் குறிக்கப்படுகிறது. தமிழ் துன்மதி ஆண்டு வைகாசி மாதம் 26 ஆம் நாள் சதுர்தசி கிருஷ்ணபக்ஷம் அன்று (07/06/1861, வெள்ளிக்கிழமை) சிவகங்கை அரச மரபில் வந்த மகாராஜா சத்திரபதி போதகுரு மகாராஜா பிரான்மலைக்கு வேங்கைப்புலி வேட்டையாடக் குதிரைமீது செல்லும்போது அதற்கு முன் படமாத்தூரில் இருக்கும் தன் குலத்து இஷ்ட தெய்வமான வல்லப சாமியை வேண்டி வணங்கி வேட்டையில் புலியைச் சுட்டுக் குத்திக் கொன்றபடியால் இந்த மதிலை தன் வேண்டுதல்படியே கட்டுவித்தார் என்கிறது கல்வெட்டு.

    புலி வேட்டையில் தனக்கும் தன் பணியாட்களுக்கும் புலியால் எந்த ஊறும் நேராமல் புலியை விரைந்து கண்டு சுட்டுக் கொன்று விட்டால் மதில் கட்டுவதாக வேண்டி இருக்கலாம். உயிர் அச்சம் யாரை விட்டது அதனால் இப்படி குல தெய்வத்தை துணைக்கு அழைப்பது ஒன்றும் புதிதல்ல. வேண்டுதலில் பாதுகாப்பு வேண்டுவதும் ஒரு வகையே.

    பார்வை நூல்:  2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாத நாளேட்டுச் செய்தி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை வட்டம் பக்தஜனேஸ்வரர் கோயில் திருநாவலூர் மண்டபத்தின் கிழக்கு சுவரில் உள்ள 7 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ உடையார் திருத் தொண்
    2. டீஸ்வரமுடைய நாயநார் ரேவ(ல்)லாலே 
    3. இவ்வூர் வியாபாரி வேளூர் கிழவந்
    4. பள்ளி பட்டணசுவாமி பெரியா
    5. ன் இத்திருமண்டபம் இரண்டும்
    6. செய்த்து கீழைத் திருவாசலுந் திற
    7. ந்து அத்திருவாசலும் செய்வித்தாந்

     திருவாசல் – கதவு, வாயில், doorway

    விளக்கம்: இதன் காலம் தெரியவில்லை மன்னர் ஆட்சிஆண்டு குறிப்பு இக்கல்வெட்டில் இல்லை. இந்த திருத்தொண்டீஸ்வரம் கோவில் இறைவன் ஏவலால் (கனவிலோ அல்லது மனக்குரலாகவோ / inner voice கேட்டு) இந்த ஊரைச் சேர்ந்த வணிகன் வேளூர் கிழவன் பள்ளியான பட்டணசுவாமி பெரியான் என்பவன் இந்த திருமண்டபம் இரண்டையும் செய்ததோடு கிழக்கில் வாசலைத் திறந்து அதற்கு கதவும் செய்து வைத்தான்.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 7, எண் 1002 ARE NO 372 of 1902 பக். 477

    தஞ்சை மாவட்டம் திருவாரூர் வட்டம் தியாகராஜர் திருக்கோவில் இரண்டாம் பிரகாரம் தெற்கு பிரகாரம் வடபுறச் சுவர் 8 வரி நெடிய கல்வெட்டு 

    1. ஸ்வஸ்திஸ்ரீ பூமாலை மிடைந்து _____ தலை
    2. த்தலை சிறப்ப _______ ஒப்பாகி தெரிவையர்
    3. திலதன் தியாகப் ______ கோப்பரகேசரி வன்மரான திருபுவன சக்ரவத்திகள் ஸ்ரீ விக்கிரம சோழ தேவர்க்கு யாண்டு அஞ்சாவது மிதுன ஞாயிற்று பூர்வ பட்சத்து சப்தமியும் ஞாயிற்றுக் கிழமையும் அத்தமமான நாள் முன்னூற்று நாற்பதினால் கேயமாணிக்க வளநாட்டு   திருவாவூர் கூற்றத்து திருவாரூருடையார் வீதி விடங்கர் சித்திரைத் திங்கள் திருநாளில் சதய _ _ _ சி தேவர் ஸ்ரீ _ _ _  திருக்காவணத்தில் சிம்மாசனத்து எழுந்தருளியிருந்து  பதியிலாளர் தியாக விநோதத் (தலைக் கோலியை ஆட்டகொண்டருளா நிற்ப ஸ்ரீகாரியம் சுப்பிர
    4. மங்கலமுடையான் மாதவன் ரவியான மானாலாய மூவேந்த வேளார் விண்ணப்பத்தினால் பதிபாத மூலப் பட்டுடை பஞ்சாட்சரிய தேவ கன்மிகளுக்கும் கோயிலங்  _ _ _ யார்க்கும் திருவாய் மொழிந்தருளினபடி நம் ஏவலால் பூலோக ராஜ்யம் செகிற  சூரியபுத்திரன்மனு தன் புத்திரன் ஏறிவருகிற தேரில் பசுவின் கன்று அகப்பட்டு  பிரமாதப்பட அதின் மாதாவான சுரபி கண்டு துக்கித்து மனுவின் வாசலில் மணியை எறிய அது  கேட்டு மனு தன் மந்திரி இங்க நாட்டுப் பாலையூருடையான் உபயகுலாமனைப் பார்த்து நீ சென்று இதனை அறிந்து _ _ _ _ வாயிற்புறத்து ஒரு பசு மணியெறியா நின்றது என்று சொல்ல அது கேட்டு மனு புறப்பட்டு பசுவையும் பட்டுக் கிடந்த _ _ _ _ படி வினவ தன புத்திரன் ஏறின தேரி
    5. லே பட்டமை அறிந்து அக்கன்றுக்கு நேராக தன புத்திரன் பிரிய விருத்தனை தேரிலே ஊர்ந்து கொடுக்க வென்று உபய குலாமனுக்குச் சொல்ல அவன்  சதோபத்தோடும் புறப்பட்டு தன செவிகளை தரையிலே குடைந்து கோடுபட்டது கண்டு துவாரபாலகன் புகுந்தது உபயகுலாமன் தன் செவிகளை குடைந்து கொண்டு _ _ _ _  தும்மிதனாய் மனுதானே புறப்பட்டு தன் புத்திரனை தானே தேரிலே ஊர்ந்து  கொடுக்க அப்போதே நாம் அவனை அனுக்கிரகித்து கன்றுக்கும் மந்திரிக்கும் மனு புத்திரனுக்கும் ஜீவன் கொடுக்க அது கண்டு மன சந்தோஷித்து கன்றினை எடுத்துக் கொண்டு பசுவிற்கு காட்டிக் குடு _ _ _ டாபிஷேகம் பண்ணி இவனுக்கு உபயகுலாமலன் மகன் சூரியனை மந்திரியாக்கி இவனுக்கு தன் புத்திரன் மாளிகை _ _ _ மங்கல _ _ _ _  மூரும் கொடுத்து மனுவும் உ
    6. பயகுலாமலனும் தவசினை தலை நின்றமையில்  பாலையூருடையான் உபயகுலாமலன் வம்சத்தானாகிய பாலையூருடையார் சந்திரசேகரன் ஆதி விடங்கனான குலோத்துங்க சோழ மகாபலி வான(திராயர்) வம்சாதி ஆக வருகிற மாளிகை மனை பழையபடி மாளிகையாக எடுத்து எடுத்து குடி வைப்பிப்பதாக நாம் சொல்ல _ _ _ _  இதிலே நித்தமும் நம் அடியார்க்கு சோறு இடப்பெற வேணுமென்று  இவன் நமக்கு சொன்னமையில் காட்டிப் பெறுவதாகவும் இம்மாளிகை வம்சாதிஆக ஸ்வயமாய் வரு _ _ _ மாளிகையிலே எழுத்துவெட்டுபித்து கொடுக்க வென்று இப்படிக்கு வெட்டிக்கொடுக்க வென்றும் திருவாய் மொழிந்தருள திரும _ _ _ தியாக விநோத பிரம்ம மகாராஜன் எழுத்தினால் புகுந்த திருமுக _ _ _ _
    7. பாலையூருடையான் சந்திரசேகரன் ஆதி விடங்கனான குலோத்துங்க சோழ மகாபலி வானாதி ராஜனுக்கும் மனுவுக்கு மந்திரியானவன் தன் வம்சத்தில் பாலையூருடைய உபயகுலாமலன் மனுவின் பக்கம் பெற்றுடைய மாளிகை மனை தனக்கும் _ _ _ _ நாம் காணியாகத் தந்தோம்.  இம்மாளிகை பழ _ _ _ப _ _ _  மனை நிலத்துக்கு கீழ்ப்பார்க்கெல்லை தாது _ _ _ _  முடுக்குக்கு மேற்கும் தென்பார்க்கெல்லை _ _ _ வடக்கும் மேல்பாற்க்கெல்லை அரு மொழீஸ்வரமுடையார் தளிச்சேரி பால் நத்தத்துக்கு கிழக்கும் வடபார்க்கெல்லை பாலையூருடையான் மாளிகைத் தெரு
    8. வுக்கு தெற்கும் இவ்விசைந்த பெரு நான்கெல்லை நடுவுபட்ட மாளிகை மனை குழி நூற்றிருபதும் பாலையூருடையான் சந்திரசேகரன் ஆதிவிடங்கனான குலோத்துங்க சோ மகாபலி வாணராஜனுக்கு வம்சாதியாக ஸவமானப்படி ஸ்ரீ மாகேஸ்வரருக்கும் பதிபாத மூலுப் பட்டுடை பஞ்சாட்சரிய தேவர் கன்மிகளுக்கும்  _ _ _ ர்க்கும் உடையார் வீதிவிடங்க தேவர் திருவாய்மொழி _ _ _ _ தச்சரில் _  _ ந்தமுடைய தச்சன் கோபூம்பன்  அ _ – _ போக் கோயில் ஆசாரியன் கல்வெட்டியது.  இது பன் மாகேஸ்வர _ _ _

    மிதுன ஞாயிறு – ஆனி; பூர்வபக்ஷம் – வளர்பிறை; திருக்காவணம் – பந்தல், மண்டபம்; பிரமாதப்பட – கொல்லப்பட; எறிய – அடித்தல், உதைத்தல்; சதோபம் – செருக்கு; குடை – அராவி; கோடு – நடுநிலை தவறி;  தும்மிதன் – வெகுண்டவன்;

    விளக்கம்: விக்கிரம சோழனின் 5 ஆம் ஆட்சி ஆண்டு கிபி. 1123 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. முதல் இரண்டு வரிகளில் விக்கிரம சோழனின் மெய்க்கீர்த்தி இடம் பெறுகிறது. அவனது 5 ஆம் ஆட்சி ஆண்டு ஆனி மாதம் வளர்பிறை 7 ஆம் நாள் ஞாயிற்று கிழமை அஸ்த நட்சத்திர கூடிய நாள் 340 ஆம் நாள் கேயமாணிக்க வளநாட்டுப் பிரிவில் அடங்கிய திருவாரூர் கூற்றத்தின் திருவாரூருடைய கோவில் வீதி விடங்கர் சித்திரைத் மாத திருநாளின் போது சதய நட்சத்திரம் கூடிய அன்று வேந்தர் திரு விக்கிரம சோழர் பந்தலின் கீழ் அரியணையிட்டு அமர்ந்திருக்க அப்போது பதியிலார் தியாகவிநோதத் தலைக்கோலி ஆடுவதை பார்த்துக் கொண்டிருந்தார். அரச அலுவலன் சுப்பிரமணிய மங்கலம்முடையான் மாதவன் ரவியான மானாலாய மூவேந்த வேளார் வேண்டிக்கொள்ள பதிபாதமூலப் பட்டுடை பஞ்சாட்சரிய தேவ கன்மிகளுக்கும் கோயிலங்காடியார்க்கும் சோழன் கட்டளையாகச் சொன்னது. (இங்கே இறைவன் சொல்லுவது போல) நம்முடைய திட்டப்படியான நிகழ்வின்படி மண்ணுலகில் அரசாள்கிற சூரிய புத்திரன் மனுவின் மகன் (இளவரசன்) ஏறிவரும் தேரின் சக்கரத்தில் பசுவின் கன்று ஒன்று அகப்பட்டு கொல்லப்பட அதன் தாய்ப் பசு அதைக் கண்டு வருந்தியது. உடனே மனுவின் அரண்மனை வாயிலில் கட்டப்பட்டிருந்த மணியை அடித்து ஒலியெழுப்பியது. அதை செவியுற்ற மனு தன் அமைச்சன் இங்கநாட்டின் பாலையூருடையானான உபயகுலாமலனை நோக்கி ‘நீ சென்று என்ன காரணம் என்று அறிந்து வா’ என்று அனுப்பினான். அங்கே வாயிற் புறத்தில் ஒரு பசு மணியை அடித்தபடி இருந்தது. அதை சொன்ன போது மனு தானே நேரில் சென்று பசுவையும் தேரில் இறந்த கன்றையும் பார்த்தான். இதற்கான காரணத்தை வினவிய போது தனது மகன் ஏறிய தேர் சக்கரத்தில் அடிபட்டு கன்று இறந்துவிட்டது என்று அறிந்து கொண்டான்.

    இதனால் அரசன் சூரியபுத்திரன் மனு, அக்கன்றுக்கு நேராகத் தன் மகன் பிரியவிருத்தனை படுக்கவைத்து தேரை ஏற்றிக் கொல்க என்று அமைச்சன் உபயகுலாமலனுக்கு ஆணையிட்டான். அவனும் அரச கட்டளையை நிறைவேற்றும் செருக்கோடு நடந்துசென்றான். அப்போது இந்த இக்கட்டான நிலையைத் தடுக்க அமைச்சன் தன் காதுகளைக் குடைந்து அறுத்து எறிந்து நடுநிலை தவறி உயிர்விட்டதை பார்த்த வாயிற்காவலன் அரசனிடம் சென்று உபயகுலாமலன் தன்  காதுகளை அறுத்தெறிந்து இறந்ததைக் கூறுகிறான். உடனே வெகுண்டெழுந்த மனு தானே சென்று தன் மகன் பிரிய விருத்தனைப் படுக்க வைத்து தேரை அவன் மேல் ஓட்டிக் கொன்றான். உடனே நாம் (இறைவன்) அவனுக்கு அருள்புரிந்து அமைச்சனுக்கும் கன்றுக்கும் இளவரசனுக்கும் உயிர் கொடுத்து எழுப்ப அது கண்டு மகிழ்ந்த அரசன் சூரியபுத்திரன் மனு கன்றைக் கையில் ஏந்தி பசுவிடம் கொண்டு விட்டான். தன் மகன் பிரிய விருத்தனுக்கு பட்டாபிஷேகமாம் மணிமுடி சூட்டி இவனுக்கு அமைச்சன் உபயகுலாமனின் மகன் சூரியனை அமைச்சனாக்கி அவனுக்கு தன் மாளிகையில் அலுவல் கொடுத்து மங்கல _ _ _  ஊரும் கொடுத்து விட்டு சூரியபுத்திரன் மனுவும் அமைச்சன் உபயகுலாமலனும் தவ வாழ்க்கை ஏற்று துறவு பூண்டமையால் பாலையூருடையான் உபயகுலாமலன் வழிவந்த பாலையூருடையான் சந்திரசேகரன் ஆதி விடங்கனான குலோத்துங்க சோழ மகாபலி வாணாதிராயர் வங்கிசத்தில் வழிவழியாய் வருகிறவர் மாளிகை மனையை பழைய படியே மாளிகையாக கட்டிக்  குடிபுகலாம் என்று நாம் (உத்தம சோழன்) உரிமை கொடுத்தோம். இந்த மாளிகையில் எப்போதும் நம்முடைய அடியார்களுக்கு சோறு இட வேண்டுமென்று அமைச்சன் வாணாதராயன் நம்மிடம் கோரிக்கை வைக்க அவ்விதமே ஆகட்டும் என்றும் இனி இம்மாளிகை இவன் வமிசத்தாருடையதாக வருவதாக மாளிகையில் எழுத்து வெட்டுவித்து கொடுக்க வேண்டி இப்படியாக வெட்டிக்கொடுக்க என்று வேந்தன் கட்டளையிட திருமந்திர ஓலை தியாக வினோத பிரம்மா மகாராஜன் எழுத்தினால் ஏற்பட்ட வேந்தன் ஆணை இது.

    பாலையூருடையான் சந்திரசேகரன் ஆதி விடங்கனான குலோத்துங்க சோழ மகாபலி வாணாதிராஜனுக்கு மனுவுக்கு அமைச்சனானவன் தன்  வம்சத்தில் பாலையூருடைய உபயகுலாமலன் என்பவன் மனுவிடம் இருந்து பெற்ற மாளிகை, மனை ஆகியவற்றை நாம் உரிமையாகத் தந்தோம். இந்த மாளிகை இருக்கும் இடம் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது ஆனால் அந்த இடம் கல்வெட்டில் சிதைந்ததால் தெளிவாகப் புரியவில்லை. இது மாகேஸ்வரருக்கும் பதிபாத மூலப்பட்டுடை பஞ்சாட்சரிய தேவ கன்மிகளுக்கும் இறைவன் வீதிவிடங்க தேவர் சொல்லால்  அறிவிக்கப்படுகிறது. இதை கோவில் ஆசாரி கல்லில் வெட்டினான். வீதி  விடங்க தேவர் பெயரில் யாரோ ஒரு சப்தரிஷி இந்த உயிர்ப்பிக்கும் சித்தை நிகழ்த்தியுள்ளார் என்று உணர முடிகிறது.

    இக்கல்வெட்டு பெரிய புராண மனுநீதிச் சோழன் கதைக்கு அடிப்படையாக அமைந்த கல்வெட்டாகும். காலத்தால் அந்நூலுக்கு சற்று முற்பட்டது. அது உத்தம சோழன் காலத்தில் எழுதப்பட்டது என்றால் இந்த நிகழ்வு முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் நடந்திருக்கும் என்று தெரிகிறது. இது தான் கல்வெட்டிலும் சுட்டிக் காட்டப்படுகிறது. சூரிய புத்திரன் மனு திருவாரூரின் அரையன் / சிற்றரசன் அரசன் என்று தெரிகின்றது. ஆனால் இவன் சோழர் குடியைச் சேர்ந்தவன் என்பதற்கு எந்த குறிப்பும் கல்வெட்டில் இல்லை. இவனது அமைச்சன் வாணர் குலத்தை சேர்ந்தவன் என்று தெரிகின்றது.

    பார்வை நூல்: திருவாரூர்க் கோயில், கல்வெட்டு எண் 27, பக் 351 – 354, குடவாயில் பாலசுப்ரமணியம் & தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 5 எண் 456

    காஞ்சிபுரம் மாவட்டம்  ஆரப்பாக்கம் திருவாலீஸ்வரர் கோவில் முதன்மைக் கோவிலின் தென் சுவரில் உள்ள 62 வரிக் கல்வெட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ /(இரண்டாம் இராசாதிராச சோழன் மெய்க்கீர்த்தி) யாண்டு ஐஞ்சாவது ஈழப்படை பாண்டிமண்ட / லத்தை கைக்கொண்டு மதுரையிலே யிருந்தராஜா குலசே / கரனை போகத் துரத்திப் பின்பு மஹாராஜா ஸ்ரீ ராஜாதிராஜ தேவ / ஸாமந்தரோடே பூசல் போரத் துடங்கி தொண்டி பாசி பிரதேச / த்திலே பூசலுண்டாய் அபாயத்திலே ஈழப்படை ஜயித்த / வாறே சோழமண்டலத்திலும் மற்றுள்ள னாட்டுக்களிலு முள் / ள ஜநங்களெல்லாம் பயப்பட்டமையைக் கேட்டு எதிரி / சோழச் சம்புவராயநேந் இநக்கு யிது எங்ங நேயாமோவென்று விசா / ரந் தோன்றி ஸ்வாமிதேவர் ஸ்ரீபாதத்தேறச் செந்று இப்படி புகுந்த / து ஈழப்படையாகிறது சாலப்பாப கர்ம்மாக்கள் அவர்கள் சோழ மண்ட / லத்தெல்லையிலே புகுதில் ஸ்ரீமஹாதேவர் கோயிலுள்ளிட்ட தேவர்க / ள் கோயிலுக்கும் ப்ராஹ்மணர்க்கும் ராஷ்ட்ரத்துக்கு மடங்க விரோதமுண்டா / யிதுக்குப் பரிஹாரமாக ஜபஹோமார்ச்சநங்களாலெல்லாப்படியாலு / ம் அபூஷ்ட்ரமதம்  பண்ணியருள வேணுமென்று விண்ணப்பஞ் செய்ய தே / வர் அருளிச் செய்தருளுகிறார் ஈழப்படையாகிற இது சாலப் பாபிஷ்டருமாய்  துர்ஜநருமாய் திருவிராமீஸ்வரத்தில் தேவர் கோயிலைத் திருக்காப்புக் கொண் / டு பூசை முட்டப்பண்ணி அங்குள்ள ஸ்ரீபண்டார மெல்லாம் கைக்கொண்டு / ஸிவத்ரோஹிக ளெந்நு மிடம் மறித்தோம் அவர்கள் பூசலிலே அறப்பட்டு / துரப்புண்டு போம்படிக்கு அத்ருஷ்ட முகத்தாலே வேண்டும் ய / த்நம் பன்ணுகிறோமென்றருளிச் செய்து  இருபத்தெட்டு நாள் அஹோர / ஸுபூஜை பண்ணியருளிநார். இதுக்குப் பிந்பு பிள்ளை பல்லவராயர் / பாடு நின்று மிநக்கு ஓலை கொண்டு தூதர் வந்தார்கள். அதில் ஜயத்ரத தண்ட நாயக் / கநும் லங்காபுரி தண்ட நாயக்கநு முள்ளிட்ட ப்ரதாநிகளும் படையுமட / ங்கப்பட்டு ஓடிப் போசது மென்று சொல்லி வந்தது. இப்பட்டாங்கை தேவர் ஸ்ரீ பாதத்திலே ஸம்ப்ரமத்துச் சொ _ _ _ _ நான் தேவர் செய்தருளிந அத்ருஷ்ட யத்நமாய் / இப்படி பலித்ததென்று விண்ணப்பஞ் செய்து “தேவர் ஸ்ரீ பாதபூஜையாக னான் தரு / வேநென்று விண்ணப்பஞ் செய்ய” நீர் நமக்கு முன்பேதேநும் குறையாகச் செய்ததுண்டோ /   அவஸ்யமேதேநும் தரவேணு மென்றிருந்ததாகில் ஆல் பாக்கமாகிற ஊரைச் செம்பிலும் / கல்லிலும் வெட்டித்தருவ தென்றருளிச் செய்ய ஜயங்கொண்ட சோழமண்டல / த்து எயிற் கோட்டத்து மாகறல் நாட்டு ஆல் பாக்கத்துப் புஞ்சை நஞ்சை அகப்பட விளை நில / ம் நூற்றறுபத்தேழு வேலியும் எரிகோளும் நத்தமும் குட்டமும் கிணறும் மேநோக்கிந மரமு மகப் / பட நாற்பாற்கெல்லை உள்பட நிலம் வெள்ளைவாரி பண்ணிக்கக் கூலி தறி யிறை தட்டார் / பாட்ட மந்தராயம்பாட்ட முட்பட ஆயமெல்லா மகப்பட்ட ஏகபோக இறையிலியாக கௌ / ட தேசத்து தக்ஷிணராடத்து கங்கோலி ஸாவர்ண்ண கோத்ர மஹா மஹேஸ்வர ஸ்ருதி ஸ்ம்ர்தி சிந்தி /த கார்ஹஸ் தந்மாஸ்ரித உமாபதி தேவராந ஞாநஸிவ தேவற்கு நீர்வார்த்து ஸூர்ய்ய சந்த்ரர் களுள்ள தி / நையும் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் குடுத்தேன் எதிரிலி சோழச்சம்புவ_ _ _ /  த்யநம் ஈழப்படை சோழமண்டலத்தில் புகுதாமைக்கும் பூசலிலே பட்டு ஓடிப்போகைக்கு மீ / ளயாவர் சிலர் சோழராஜ்யத்துக்கு ராஜாவாநார் அவர்கள் பரிபாலிப்பது. எங்கள் வம்ஸத்து / தர்ம்மம் பரிபாலித்து யாவநொருவ நிந்த தர்ம்மம் பரிபாலியாதொழி கிறாந்  அவந் கங் _ _ _ பித்ருபதமும் மாத்ருபதமும் பிராம்மணி பதமும் ஸிவத்துரோஹமும்  பண்ணினார் பட்ட  _ _ / சம்புவராயர் அருளிச் செய்ய கல்லிலே எழுத்து வெட்டிநேந் பொருளாசாரியநே _ _ _ ( எஞ்சியவை சமசுகிருதத்தில் உள்ளன)

    பாசி – மீன்பிடிப்பு பகுதி; சாமந்தர் – உயர் படைத் தலைவர்;  பூசல் – வலுச்சண்டை, skirmish; விசாரம் – கவலை; சுவாமி தேவர் – வேந்தனின் ஆசான், அரசகுரு; அறப்பட்டு – முழுவதும் வீழ்ந்து; துரப்புண்டு – துரத்தப்பட்டு; அத்ருஷ்ட முகம் – கண்கட்டி; யத்நம் – வேள்வி; அகோர – ஒரு மாத; பாடு – பால் இருந்து; போசது – போச்சுது; இனக்கு – எனக்கு; பட்டாங்கு – நடப்பு உண்மை, யதார்த்தம்; ஸம்ப்ரம – தெளிவாக சொல்லி; வெள்ளை வாரி – நீரட்டி;

    விளக்கம்: இரண்டாம் இராசாதிராஜா சோழனின் 5 ஆம் ஆட்சி ஆண்டு 1171 இல் வெட்டிய கல்வெட்டு இது. பராக்கிரம பாண்டியன் மதுரையையும் குலசேகர பாண்டியன் நெல்லையையும் ஆண்டு கொண்டிருந்தனர். குலசேகரன் மதுரையை முற்றுகையிட்ட போது இலங்கை வேந்தன் பராக்கிரம பாகுவின் துணையை நாடினான் பராக்கிரம பாண்டியன். அதற்குள் பராக்கிரம பாண்டியன் கொல்லப்பட்டு குலசேகரன் மதுரையை கைப்பற்றினான். அப்போது இலங்கை வேந்தன் பராக்கிரமபாகுவின் படை ஜயத்ரத தண்டநாயக்கன், இலங்காபுரி தண்டநாயக்கன் தலைமையில் பாண்டிய மண்டலத்தை கைப்பற்றி குலசேகரனைத் துரத்தி விட்டது. பின்பு சோழன் இராராதிராசன் போர்படைத் தளபதிகளுடன் தொண்டி மீன்பிடி பகுதியில் போர்த் தொடங்கியது. தொடக்கத்தில் சோழப்படை பின்னடைவைச் சந்தித்தது. வெற்றிகொண்ட ஈழப்படை சோழமண்டலத்திலும் புகுந்து அட்டூழியம் செய்தது. இச்செய்தி எதிரிலிச்சோழ சம்புவராயரின் செவிகளுக்கு எட்டியது. இதனால் கவலையுற்ற சம்புவராயர் இராசாதிராசனின் அரசகுருவிடம் ஈழப்படை அட்டூழியம் செய்து சிவன் கோவில், பிராமணர், நாட்டிற்கு அழிவு செய்கிறது இதற்கு ஜெப ஓம பரிகாரங்களை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க ஈழப்படை இராமேஸ்வரம் கோவிலை கைப்பற்றி பூசைகளை நிறுத்தி கருவூலத்தை கொள்ளையிட்டது என்று சொல்லியபோது அரசகுருவும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி கண்காணாத முகத்தாலே யக்ஞம் செய்து எதிரிப்படை முழுவதும் வீழ்ந்து துரத்தப்படும் வேள்வி செய்வதாக ஒப்புக்கொண்டார். 28 நாள் தொடர்ச்சியாக ஒரு மாதம் அந்த வேள்வியை செய்து முடித்த பின்னர் பிள்ளை பல்லவராயர் பால் இருந்து எனக்கு  தூதுவர்கள் ஓலை கொண்டுவந்து தந்தார்கள். அதில் ஈழப்படை அடக்கப்பட்டு ஓடிப்போனதாகச் செய்தி இருந்தது. இந்த உண்மைநடப்பை அரசகுருவிடம் தெளிவாகச் சொல்லி அவர் செய்த வேள்வியால் தான் இப்படி நிகழ்தேறியது என்று சொல்லி இதற்கு நான் உமக்கு நன்மதிப்பு தருவேன் என்று சொன்ன போது அவர், “நமக்கு முன்னர் ஏதும் குறைவாக செய்ததில்லை எனவே தேவைப்படாது”, ஆயினும் கட்டாயம் தர வேண்டும் என்று இருந்தால் ஆல்பாக்கம் என்ற ஊரை இறையிலித் தானமாக கல்லிலும் செம்பிலும் வெட்டித்தருக என்று சொன்னார். எனவே மாகறல் நாட்டில் அமைந்த ஆல்பாக்கத்தில் நஞ்செய், புஞ்செய் விளை நிலம் 167 வேலி எல்லா வரியும் நீக்கி இறையிலியாக நீரட்டிக் கொடுத்தேன் வங்காளத்து தக்ஷிண ராஷ்டிரத்து கங்கொலி சாவர்ண்ண கோத்திரத்து மகேசுவர சுருதிஸ்ம்ரிதி சிந்தித உமாபதி தேவரான ஞான சிவதேவர்க்கு என்கிறான் எதிரிலி சோழ சம்புவராயன். இது ஈழப்படையை துரத்தி மீண்டவர், சோழ வேந்தர் காக்க வேண்டும், எமது வங்கிசத்தார் ஆகியோர் பாதுகாக்க வேண்டும் என்று மேலும் சில வரிகள் சமசுகிருதத்தில் முடிகின்றன. பாண்டியர் படை இரு அணியாகளாகப் பிளந்து ஒரு அணி சிங்களப் படைப் பக்கம் சாய்ந்ததால் குலசேகரன் படையால் சிங்களப் படையை எதிர்கொள்ள முடியாது போனது போலும். எனினும் இதில் சோழர் படையின் வலுவும் குன்றிய அறிகுறி பின்னாளில் கோப்பெருஞ்சிங்கர், பாண்டியர், போசளரும் எதிர்க்கும் துணிவை தந்துவிட்டது எனலாம். இந்த ஈழப்படை யெடுப்பு தொடர்பான இன்னொரு கல்வெட்டை பக். 42 – 44  Select Inscriptions of Tamilnadu நூலில் காண்க.

    வேள்வி, வேட்டல் என்பது தந்திர யோகம் போல் அல்லாத முற்றும் ஒரு மாறுபட்ட வழிபாட்டுமுறை ஆகும். இதில் பல தெய்வங்கள் இருந்தாலும் அவற்றுக்கு உருவம் கிடையாது, உருவ வழிபாடும் கிடையாது. அந்தந்த தேவதைகளைப் பெயரிட்டுக் கூப்பிடும் போது அந்த தேவதைகள் ஓமகுண்டத்தில் வந்துவிட்டதாக எண்ணி கைகூப்பிக் கொள்ள வேண்டியது தான். இது ஒரு உருவமில்லா வழிபாடு. எனில் ரிக்கு வேதத்தில் 1,500 ஆண்டு வியாசரின் நான்கு தலைப் பிரம்மன் எப்படி இடம் பெற முடியும் என்று கேள்வி கேட்டு அதை ஒரு இடைச்செருகல் என்று முடிவு கட்டுபவர் தான் அறிவாளி. அவர் தான் பிரபாத்து ரஞ்சன் சர்க்கார். இல்லை வெள்ளைக்காரன் சொன்னதே உண்மை என்பவர் அறிவுக் கடன்வாங்கி. தமிழக அரசியலில் அறிவுக் கடன்வாங்கிகளே அதிகம் உள்ளனர். நான்கு  தலை புராண பிரம்மன் வேறு, உருவமில்லா பரப்பிரம்மம் வேறு. உருவம் இல்லா பிரம்மத்திற்கு தலை, தோள், வயிறு, தொடை என்று ஏதும் இல்லை. இல்லாத உறுப்பில் இருந்து யாரும் பிறக்க முடியாது என்ற அறிவு வேண்டும். வேள்வியில் வேதப் பாடலைச் சிலர் பாடி வேள்வியை நிறைவேற்றுவர். அவர்களை வைதிகர் என்பர். இந்த வைதிகரில் உயிர் பலி கொடுக்கும் வைதிகர் என்றும், பரப்பிரம்மக் கருத்தை ஏற்று வேள்வியில் உயிர் பலி தவிர்த்த தந்திர யோகம் பயின்ற வைதிகரான பிராமணர் என இரு பிரிவு உண்டானது. உயிர் பலியிடுவோரை ஒப்பிட வேள்வியில் உயிர் பலி தவிர்த்த பிராமணர் ஒழுக்கத்தால் பஞ்ச மாபாதகத்தை விடுத்த செழுமிய பண்பாளர் (highly refined) ஆவர். இவர்கள் மேற்கொண்ட தந்திர யோக தவ வாழ்க்கையால் மக்களிடம் பிராமணர்க்கு  மதிப்பு கூடியது. ஆயினும் மக்களுக்கு உயிர் பலி கொடுக்கும் வைதிகருக்கும் தவ பிராமணருக்கும் வேறுபாடு தெரியாமல் இருந்தது. இதனால் 1,300 ஆண்டுகள் முன் பிரயாகையில் கூடிய பிராமணர் மாநாட்டில் மீன், புலால், மது தவிர்க்காத வைதிகர் பிராமணரே அல்லர் என்று அறிவிக்கப்பட்டு தென்னகத்தில் ஐந்து பிரதேச பிராமணர் மட்டுமே திராவிட பிராமணர் என்றும் வடக்கில் ஐந்து பிரதேச பிராமணர் மட்டுமே பஞ்ச கௌட பிராமணர் என்றும் அறிவிக்கப்பட்டு மற்ற பீகார், வங்காள பிரதேசத்தில் மீன் உண்ணும் வைதிகர் பிராமண சாதியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக, பிராமணர் இவருடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது. இன்றைய சமத்துவ விரும்பிகள் எவரும் தம்மை ஒழுக்கத்தால் மேம்படுத்திக் கொள்ள விரும்பாமல், முயலாமல் பிராமணர் பழையபடி புலால் உண்ணும் வைதிகர் போல் ஆகிவிட்டால் சமத்துவம் நிறுவப்பட்டுவிடும் என்று அறிவுத்துகின்றனர். “நான் குடிப்பதை நீ கேலி செய்கிறாயா இரு உன்னையும் நான் குடிக்க வைக்கிறேன்” என்ற உத்தி தான் இது. நான் புலால் உண்டாலும் நாய்க் கறி, பன்றிக் கறி, மாட்டுக் கறி, குதிரைக் கறி மட்டும் உண்ண மாட்டேன் என்பதும் ஒருவகை கட்டுப்பாடு தானே அது போலத் தானே எல்லா வகைப் புலாலையும் ஒதுக்குவதும் என்று புரிந்தால் இப்படியான இழிந்த நாத்திகரின் சிந்தனை எழாது. இப்படி ஒரு ஒழுக்கம் ஒழிந்த சமத்துவம் தேவையே இல்லை. ஒழுக்கம் எல்லாரிடமும் மேம்பட்டு ஒரு சமத்துவம் ஏற்படுமே அந்த சமத்துவ நிலையே தேவை. உணவு ஒழுக்கத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வங்காள பிராமணரே சோழ வேந்தர்களின் அரசகுருவாக ஏற்கபட்டது வேள்வியில் உயிர் பலியை ஆதரிப்பதற்காகவா என்று தெரியவில்லை. கொங்கணி, கேரள  நம்பூதிரிகள் இந்த வங்காளி வைதிகர் வழிவந்தோர் என்பதால் பஞ்ச திராவிட பிராமணரில் இவர்கள் ஏற்கபடவில்லை. இந்த கடும் ஒழுக்க நடவடிக்கை காரணமாக பின்னாளில் அவர்கள் உயிர் பலி, புலால் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பல்லவர்கள் அசுவமேத யாகம் உள்ளிட்ட பல யாகம் செய்தவர்கள். எனவே பல்லவர் வழிவந்த இந்த சம்புவராயர் போர் வெற்றிக்காக வேள்வி இயற்றியது ஒன்றும் வியப்பில்லை.

    பார்வை நூல்:தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 6, எண்: 456, பக். 188-190 & Select Inscriptions of Tamilnadu  pg 96 -98

    Share
  • சாகசத்தின் மறுபக்கம்

    சாகசத்தின் மறுபக்கம்

    அண்ணாகண்ணன்

    உயிரைப் பணயம் வைத்து, சாகசம் நிகழ்த்தினர் மேலே – அதை
    உயிரைப் பணயம் வைத்து, கண்டு களித்தனர் கீழே

    சூர்யகிரண் விமானப் படை அணிவகுப்பு மேலே
    சூரிய கிரணங்கள் குவிந்தன எங்கள் தலைமேலே

    புகை கக்கின வானூர்திகள் உச்சியிலே
    அனல் கக்கிய நேரமும் அதே உச்சியிலே

    விர்ரென விரைந்து பறந்தன விண்ணிலே
    சுர்ரெனத் தலை வலித்தது மண்ணிலே

    வித்தைகள் பலவும் காட்டினர் விண்மீது – அந்த
    விந்தைகள் கண்டு, சுருண்டு விழுந்தனர் மண்மீது

    அண்ணாந்து பார்த்து வியந்தனர் ஆகாயத்தில் – ஓர்
    அடியெடுத்து வைக்கப் பயந்தனர் பேராபத்தில்

    பறந்து பறந்து வீரம் காட்டினர் விண்ணிலே
    நடந்து நடந்து கால்கள் தொய்ந்தன மண்ணிலே

    மனங்களை ஸ்தம்பிக்க வைக்கும் முயற்சி தான்
    மொத்தமும் ஸ்தம்பித்துப் போனதே கொடுமை தான்

    எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தோம் என்பார் ஒருபுறம்
    எல்லா இன்னல்களையும் அனுபவித்தோம் என்பார் மறுபுறம்

    எங்கள் மேல் பிழையே இல்லை என்பார் ஒருபுறம் – வெளியே வந்த
    எங்கள் மேல் தான் பிழை என உணர்ந்துவிட்டனர் மக்கள்

    கூட்டம் கூடும் இடங்களுக்கு இனிச் செல்லமாட்டேன் – ஒரு
    குடுவை நீரில்லாமல் வெளிச் செல்லமாட்டேன்

    ஓடாய்த் தேய்ந்து உறுதி எடுத்தனர் மக்கள்
    பாடாய்ப் பட்டுப் பாடம் படித்தனர் மக்கள்

    லிம்கா சாதனை எனக்கு இப்போது தேவையில்லை – ஒரு
    லிம்கா பானம் கிடைத்தால் அது நிரம்பப் பரவாயில்லை

    அங்குமிங்கும் பறப்பதைக் காண ஆனந்தமே – போக்குவரத்தில்
    ஓர் அங்குலம் நான் முன்னகர்ந்தால் அது பேரின்பமே

    தேசம் வளர்ந்திருப்பதை அறிய மகிழ்ச்சி தான் – இப்போதைக்கு
    வீடுபோய்ச் சேர்ந்தால் அதுவே எனக்கு நிம்மதி

    #airshow #chennaiairshow

    Share
  • அம்மா  இலக்குமி அணைப்பாய்  தாயே!

    அம்மா இலக்குமி அணைப்பாய் தாயே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் .. ஆஸ்திரேலியா

    நீள் செல்வம் நிலபுலங்கள் வேண்டாம்
    மாடி மனை கோடிசெல்வம் வேண்டாம்
    ஆழ் மனதில் அமைதிவர எனக்கு
    அருள் தருவாய் இலக்குமித் தாயே

    வையத்துள் வறுமை இன்றி வாழ
    மற்றவர்க்கு மனம் விரும்பி ஈய
    பொய் இல்லா வழியினிலே உழைக்க
    உய்யும் வழி காட்டிடுவாய் தாயே

    இல்லை என்று சொல்லாமல் இருந்து
    இல் அறத்தை நல்லறமாய் ஆக்க
    நல்ல பாதை காட்டிடுவாய் தாயே
    நா நிலத்தில் துணையாவாய் நீயே

    அளவற்ற ஆசை எனக் கில்லை
    அளவான பொருள் இருந்தால் போதும்
    நிலையற்ற தங்கம் வைரம் வேண்டாம்
    நினதருளே எனக் கிருந்தால் போதும்

    செல்லும் செல்வம் வேண்டாம் தாயே
    செல்லா அருளைத் தந்திடு தாயே
    அல்லும் பகலும் உந்தன் நினைப்பே
    அம்மா இலக்குமி அணைப்பாய் தாயே

    Share
  • பைனரிகளால் நிரம்பி வழியும் பார்வைக் கோணங்கள் (நூல் விமரிசனம்)

    பைனரிகளால் நிரம்பி வழியும் பார்வைக் கோணங்கள் (நூல் விமரிசனம்)

    ஞா. குருசாமி
    தொடர்புக்கு : jeyaseelanphd@yahoo.in

    மனித வாழ்வை கோட்பாடு சார்ந்து எழுதிப்பார்க்கும் போது எதார்த்தம் சார்ந்தும் எழுதிப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. கோட்பாட்டுக்கும் எதார்த்தத்துக்கும் இடையிலான முரணியக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் இவற்றில் எவையேனும் ஒன்றைச் சார்ந்து மட்டுமே மனிதனின் வாழ்வை எழுதிப் பார்ப்போமேயானால் பிறழ்வு ஏற்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது. இந்த விழிப்பு மனம் கைவரப்பெற்றுவிட்டால் நேர்த்தியான ஒரு சிந்தனையை உருவாக்கிவிட முடியும். அதற்குச் சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது ‘சிதைக்கப்படும் உடலில் வதைக்கப்படும் கடவுள்’ நூல். சேசு சபையைச் சேர்ந்த அருட்பணியாளர் சி.பேசில் சேவியர் எழுதியிருக்கிறார். இதில் இடம்பெற்றுள்ள ஏழு கட்டுரைகளிலும் பைனரி (Binary) ஓர் அணுகுமுறையாகவே அமைந்திருக்கிறது. அதை இந்நூலின் குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சமாக வைத்துக்கொள்ளலாம்.

    ‘பைனரி’யை ஓர் உத்தியாக, அடிப்படையாகக் கொண்டு தமிழில் ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டு இருக்கின்றன. சில நேரங்களில் நூலின் ஒரு பகுதியாகக் கூட பைனரியை அமைந்ததுண்டு. இதற்கு உதாரணமாக தொ.பரமசிவனின் பல கட்டுரைகளையும் நூல்களையும் குறிப்பிடலாம். ஆனால் நூல் முழுமையும் தேர்ந்துகொண்ட ஆய்வுப்பொருளை வெவ்வேறு கோணங்களில் தனித்தனி பைனரிகளைக் கொண்டு அணுகியிருப்பது தமிழில் இதுவே முதல் முறையாகும். இது தன்னிச்சையாக அமைந்திருக்குமானால் உண்மையிலேயே வியப்புக்குரியது. நூலாசிரியர் தத்துவவியல் பேராசிரியர் என்பது கூட பைனரி அணுகுமுறைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். தத்துவம் என்பதே பரிசோதிக்கப்பட்ட பைனரி தானே.

    ‘அம்மணமாய் வருகிறோம் அம்மணமாய் போகிறோம்’ என்னும் முதல் கட்டுரையில் பொருளாதார, மெய்யியல், இறையியல் நோக்கில் ‘செல்வம்’ ஆராயப்பட்டிருக்கிறது. செல்வத்தைக் குறித்து விவாதிப்பது தமிழுக்கு மிகப் பழையது என்றபோதிலும் எது செல்வம்? என்பதில் இன்னும் முழுப் பொருளை நாம் கண்டடையவில்லை. அது சாத்தியமற்றதும் கூட. ஆனால் செல்வத்தின் இயல்பாக ‘நிலையாமை’யை அனைத்து சமய இலக்கியங்களும் சொல்லியிருக்கின்றன. அந்த மரபின் தொடர்ச்சியாக சில புதிய பார்வைக் கோணங்களுடன் செல்வம் இறைவனின் கொடையா? பகிரப்படாத செல்வம் பாவமாகாதா? அளவுக்கு அதிகமான சேமிப்பு திருட்டாகாதா? தலித், பழங்குடிகளை ஒடுக்கும் சக்திகளுக்கு கடவுள் விடுக்கும் செய்தி என்ன? என்கிற கேள்விகளை எழுப்பி கடவுளுக்கு அடிபணிவதே பொருளாதார மோகத்தில் இருந்து விடுபடுவதற்கான  வழி என்கிறார் நூலாசிரியர். இதில் ‘கடவுள்  x செல்வம்’ என்னும் பைனரி நுட்பமாகக் கையாளப்பட்டு இருக்கிறது. நவீன முதலாளியம் உலகமெங்கும் வியாபித்துள்ள, நுகர்வுக் கலாச்சாரம் நவீன அறமாக வலியுறுத்தப்படுகிற இன்றைய சூழலில் செல்வத்திற்கு நிகராக கடவுளை நிறுத்தி பொருளாதார விடுதலையை முன்வைத்திருப்பது ஆன்மிக வெளியில் மட்டும் சரியானதாகும்.

    ‘உடல் கொண்டாட்டம் x உடல் சிதைப்பு’ என்னும் பைனரி கொண்ட கட்டுரை ‘சிதைக்கப்படும் உடலில் வதைக்கப்படும் கடவுள்’. இதில் விளிம்புநிலை மக்களுடனான அனுபவங்களையும் அவை தரும் சிந்தனைகளையும் கோட்பாடு, சமயம், எதார்த்தம் சார்ந்து விவாதிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ‘உடல்’ ஒருவித அமானுஷ்ய தத்துவப் பொருளாக நிறுத்தப்பட்டு தொடர் விசாரணையினூடாக உடலையும் இறைவனையும் இணைக்கிறது. மனிதன் உருவாக்கிய பிரிவினைகளின் பேரில் நிகழ்த்தப்படுகிற வன்முறைகளில் சிதைக்கப்படும் உடல்களில் கடவுள் சிதைக்கப்படுகிறார் என்கிறார் நூலாசிரியர்.

    உடல் ஓர் ஆயுதமாக இருந்து வந்திருக்கும் வரலாற்றில் உடல் தான் எல்லாவற்றையும் தீர்மானித்திருக்கிறது. இன்று கண்டுபிடித்திருக்கும் ஆயுதங்கள் அனைத்தும் உடல் என்னும் ஆயுதத்தின் துணைக் கருவிகள் தான். எப்போதும் பிரதான ஆயுதம் உடல் தான். அதனால் தான் வெற்றியில் வென்ற உடல் கொண்டாடப்படுவதும் தோற்ற உடல் சிதைக்கப்படுவதும் நிகழ்கிறது. அது சரியா? என்றால் இல்லை. இங்கு வென்ற உடலை விட தோற்ற உடல் தான் கொண்டாடப்பட வேண்டும். ஏனெனில் வெற்றி என்பது நேர்மையால் மட்டுமே கண்டடைவது இல்லை. அது ஒருவகையான அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டத்தால் உருவாக்கப்படுவது. ஆகவே தான் சிதைக்கப்பட்ட உடல்கள் மீது நூலாசிரியர் கரிசனப்படுகிறார். போராளிகளின் மரணங்கள் விதைத்த உடல்களை இயேசுவின் உடலைக் குறியீடாக நிறுத்தி விவாதிக்கிறார். வீழ்த்தப்பட்ட உடல் மதிக்கப்பட்டுக் கொண்டாடப்பட வேண்டும் என்கிறார். உடல் சிதைப்பையும் சிதைக்கப்பட்ட உடலின் வெற்றியையும் இயேசுவின் உடலை வைத்து பேசியிருப்பது அபாரம்.

    ‘அறிவுசார் நம்பிக்கை சாத்தியமா?’ என்னும் கட்டுரையில் ‘ஒழுங்கு x ஒழுங்கின்மை’  தான் பைனரி. ஒழுங்கு என்பது இயல்பாக அமைவது அல்ல. அது வன்முறையால் அமைக்கப்படுவது. வன்முறை நிகழாத இடத்தில் ஒழுங்கின்மை தான் இருக்கும். ஒழுங்கின்மையின் அடையாளமே சுதந்திர இயல்போடு வாழ்வை வாழ்ந்து கடத்தலாகும். ஒழுங்கின்மை இருக்கும் இடத்தில் அன்பு இருக்கும் என்று பேசும் நூலாசிரியர், ஒழுங்கற்று இருக்கும் நாட்டுப்புற வழிபாட்டு மரபில் அன்பு இருக்கிறது. அதிலிருந்து ஒடுக்கப்பட்ட மானுடம் தமக்கான விடுதலைக் கூறுகளை வளர்த்தெடுக்க வேண்டும். அடிமையாக்க எத்தனிப்பை இனங்கண்டு ஒதுக்க வேண்டும் என்கிறார்.

    ‘நாட்டார் சமயங்களும் கத்தோலிக்க வெகுசன பக்தி முயற்சிகளும் தமிழகத் திருஅவைக்கு விடுக்கும் சவால்கள்’ கட்டுரை தனித்த ஒரு நூலாக எழுதப்பட வேண்டிய அளவுக்கு அடர்த்தி கொண்டது. கட்டுரையாக இருப்பதால் பல இடங்களில் விஷயங்கள் சுருங்கச் சொல்லப்பட்டிருக்கின்றன.  ‘நாட்டார் வழிபாடு x கத்தோலிக்கம்’ என்கிற பைனரியில் இயங்கும் இக்கட்டுரையின் நுவல்பொருள் ஆங்காங்கே துணைப் பைனரிகளையும் நிறுவி விவாதித்திருக்கிறது. உதாரணமாக ‘இந்து தலித் – கிறித்தவ தலித்’ பைனரி. இந்து தலித்துகளிடம் இருக்கும் போராட்டக் குணம் கிறித்தவத் தலித்துகளிடம் ஏன் இருப்பதில்லை என்கிற கேள்வியைக் கேட்டு அதற்குக் காரணம் ஐரோப்பிய ஆதிக்கக் காலச்சார இறையியல் என்கிறார். ‘ஆதிக்க இறையியல்’ மானுட விடுதலைக்கான போராட்டக் குணத்தை மழுங்கடிக்கும் என்பது நூல் தரும் செய்தி.

    ஆதிக்க இறையியலை விதைக்கும் வழிபாட்டு முறையை சரிசெய்ய வேண்டுமானால் அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற விழுமியங்களைக் கொண்ட நாட்டார் சமய மரபிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ‘முன்வைப்பு’ இக்கட்டுரையில் முக்கியமான இடம்.

    ஆண்டவரிடம் செலுத்தும் அன்பு என்பது அடிபட்டோருக்குத் துணையாக இருப்பதே ஆகும் என்கிறது ஐந்தாவது கட்டுரை. பொதுவாக, இந்தியச் சமூகம் ‘நடுநிலை’யைக் கொண்டாடுவதாக இருக்கிறது. அதுதான் அறம் என்பதாகச் சொல்லப்பட்டும் நம்பப்பட்டும் வந்திருக்கிறது. உண்மையில் அது அதிகாரத்தின் பக்கம் நிற்பதற்கான மறைமுக ஏற்பாடு. இதைக் கச்சிதமாக ‘அடிப்போர் x அடிபட்டோர்’ என்னும் பைனரி வழியாக விவாதித்திருக்கிறார் நூலாசிரியர். ஏற்றத்தாழ்வுகளுக்குச் சமய அந்தஸ்து வழங்கி புனிதமாக்கப்பட்டு இருக்கும் தேசங்களில் ‘நடுநிலையோடு இருத்தல்’ என்பதை விட அடிபட்டோருக்கு ஆதரவாக இருப்பதே நியாயமானது. ஆன்மிகத் தன்மையில் சொல்வதென்றால் அது ஆண்டவருக்குச் செலுத்தும் அன்பு என்பது கட்டுரையின் மையப்பொருள்.

    ‘நாட்டார் சமயங்களும் கத்தோலிக்க வெகுசன பக்தி முயற்சிகளும் தமிழகத் திருஅவைக்கு விடுக்கும் சவால்கள்’ கட்டுரையில், மக்களை அடிமையாக வைத்திருக்கும் குணாதிசயம் கொண்டது ஆதிக்க இறையியல் என்றால் மக்களுக்கு அணுக்கமானது எது? எனத் தொக்கி நின்ற கேள்விக்கு விடையாக அமைந்திருப்பது ‘விடுதலை இறையியல் : குட்டியரஸ், அம்பேத்கர் ஓர் ஒப்பீடு’ என்னும் ஆறாம் கட்டுரை. இதில் பைனரி குட்டியரஸூம் அம்பேத்கரும்.

    குட்டியரஸ், அம்பேதகர் இருவரும் விடுதலை இறையியலுக்குப் பணியாற்றியுள்ளனர். இருவருக்குமிடையேயான வேறுபாடுகள் நிலவியல், சூழலியல் அடிப்படையில் அமைந்தவை. ஆனாலும் இருவருக்கும் மானுட விடுதலையே நோக்கமாக இருந்தது. இதில் அம்பேத்கரின் நவீன பெளத்தத்தை அவரது விடுதலை இறையியலாகக் கொண்டது சரியான அவதானிப்பு.

    ‘நீ இருப்பதாலேயே நான் இருக்கிறேன்: பிறரோடு நல்லிணக்கம் நோக்கி’ கட்டுரையில் ‘நீ x நான்’ என்பது பைனரி. இது உளவியல், மெய்யியல், இறையியல் நோக்கில் மானுட இருப்பை விவாதித்து இருக்கிறது. இதில் இருக்கும் முக்கியமான அம்சம் ‘நீ x நான்’ என்று சொல்வதிலுள்ள உளவியல் ரீதியிலான ஒதுக்குதலைப் பற்றிய விவாதமும் ‘ஒற்றுமை’ என்பதை நூலாசிரியர் புரிந்துகொண்டிருக்கும் விதமும் தான். ‘ஒற்றுமை’ நல்ல கருத்தாக்கமாகத் தெரியும். ஆனால் அது பன்மைத்துவத்துக்கு எதிரானது. நல்லிணக்கம் என்பது அனைவரும் ஒற்றுமையாக இருப்பது அல்ல. அவரவருக்குரிய வேறுபாட்டுத் தனித்தன்மையும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு வாழ்வதாகும் என்பதாக நூலாசிரியர் வைக்கும் தருக்கம் இக்கட்டுரையின் அடர்த்தியைக் கூட்டியிருக்கிறது. அதாவது, ‘நீ’ இருப்பதற்கு ‘நான்’னும், ‘நான் இருப்பதற்கு ‘நீ’யும் அவசியம். எதுவும் யாரும் தனியாக தமது இருப்பை நிலைநாட்டிக் கொள்ள முடியாது. தேவை உள்ளவர்களின் பார்வையில் இருந்தே பிரச்சினைகளைப் பார்க்க வேண்டும் என்பது இக்கட்டுரையின் பொதுத் தொனி.

    விளிம்புநிலையினர் மீதான அக்கறையுடன் அவர்களுடனான அனுபவங்களைக் கணக்கில்கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், காத்திரமான தருக்கங்களின் கலனாக இருப்பதோடு தொடர் ஆய்வுக்கும் விவாதத்திற்குமான திறப்புகளையும் கொண்டிருக்கிறது. ஆய்வுலகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    ஆசிரியர் : சி.பேசில் சேவியர் சே.ச.
    வெளியீடு : நம் வாழ்வு, 62, லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை
    விலை : ரூபாய்125/-
    நூலைப் பெற : 94980 32244

    Share
  • கழல்பணிந்தேன் துர்க்கா காத்திடுவாய் நீயே !

    கழல்பணிந்தேன் துர்க்கா காத்திடுவாய் நீயே !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஈரமொடு வீரம் எனக்கருள வேண்டும்
    இரக்கமொடு கருணை எனக்கீய வேண்டும்
    காதலொடு நாளும் கவிபாடி உந்தன்
    காலடியில் நிற்க கருணைபுரி தாயே

    மனமமரும் இருளைப் போக்கிடுவாய் தாயே
    மாயவலை சிக்கா காத்திடுவாய் தாயே
    சினமான தீயை ஒழித்திடுவாய் தாயே
    தினமுமுனைப் பாடிப் பரவுகிறேன் தாயே

    நோயணுகா வண்ணம் காத்திடுவாய் தாயே
    தாயாகி நிற்கும் தயைவுடைய துர்க்கா
    பேயாகி பித்தாகி மனமலையா வண்ணம்
    பேரொளியே துர்க்கையே காத்திடுவாய் தாயே

    மனநோயை நீக்கும் மருத்துவனும் நீயே
    மனவழுக்கைப் போக்கும் மருந்துமே நீயே
    கவலையிலா மனத்தைத் தந்திடுவாய் தாயே
    கழல்பணிந்தேன் துர்க்கா காத்திடுவாய் நீயே

    நோயற்ற வாழ்வைத் தந்திடுவாய் தாயே
    நுடங்காத உள்ளம் கொடுத்திடுவாய் தாயே
    தாயான உன்னை நானெண்ணி நிற்க
    தயைபுரிவாய் தாயே துர்க்கை அம்மாவே

    Share
  • கொட்டுக்காளி – திரை விமர்சனம்

    கொட்டுக்காளி – திரை விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    கொட்டுக்காளி – இந்த ஒன்றரை மணிநேரப் படத்தில் கடைசி 13 நிமிடங்கள் மட்டுமே கதை. இதற்கு முந்தைய 76 நிமிடங்களும் இந்த இடத்திற்கு வந்து சேருவதற்கான நீண்ட பயணத்தைச் சலிக்கச் சலிக்கக் காட்டியிருக்கிறார்கள்.

    பெண் வேற்றார் ஒருவரைக் காதலிக்கிறார் என்றால், அந்த வேற்றார் ஏதோ மருந்து மாயம் செய்து பெண்ணை வசப்படுத்தியுள்ளனர். அதனால் தான் அவள் நம் பேச்சைக் கேட்கவில்லை என அவள் குடும்பத்தினர் நினைக்கின்றனர்.

    மருந்து மாயத்தால் விளைந்த காதலைச் சாமியார் அழிக்கிறாராம். அந்த நினைவுகளே இல்லாமல் செய்துவிடுவாராம். அதன் பிறகு அவள் குடும்பத்தினர் சொல்லும் ஆணை விரும்பத் தொடங்கிவிடுவாளாம். இதற்காக வேறு ஒருவரை விரும்பும் அன்னா பென்னை இந்தச் சாமியாரிடம் அழைத்து வருகிறார்கள். அவளுக்குச் சூரியைத் திருமணம் முடிக்க வேண்டும் என்பது குடும்பத்தினர் விருப்பம்.

    இதை அந்தச் சாமியார் எப்படிச் செய்கிறார் என்று காட்டுகிறார்கள். பெண்ணின் முன்கழுத்து, பின்கழுத்து, வயிறு, அடிவயிறு, பின்னிடுப்பு என உடல் முழுவதும் அழுத்திப் பிடிக்கிறார். திருநீறு பூசித் தடவுகிறார். எலுமிச்சம் பழத்தை உச்சந்தலையில், கழுத்தில், தொப்புளில் வைக்கிறார். வாயில் குழல் வைத்து ஊதுகிறார். உச்சந்தலையில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தேய்க்கிறார். கடைசியாக, சேவலைப் பலி கொடுக்கிறார். உங்கள் பெண்ணிடத்தில் இருந்த மருந்தை அகற்றிவிட்டேன். இனி நீங்கள் அடித்து விரட்டினாலும், இவள் உங்கள் காலடியில் கிடப்பாள் என்கிறார்.

    இவர் செய்வதைப் பார்த்தாலே இவர் போலி சாமியார் என்று தெரிகிறது. இதைப் பார்க்கும் சூரி, அன்னா பென்னை இவரிடத்தில் காட்ட வேண்டுமா என யோசிக்கும் இடத்தில் படம் நிறைவடைகிறது.

    போலி சாமியார் எனத் தலைப்பு வைத்து, இந்தப் படத்தை வேறு கோணத்தில் எடுத்திருக்கலாம். இவர் மருந்தை எடுத்த பெண்கள், உண்மையிலேயே தங்கள் காதலை மறந்துவிட்டார்களா என ஆராய்ந்திருக்கலாம். போலி சாமியாரின் தந்திரங்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கலாம். காவல் துறையில் புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்கச் செய்திருக்கலாம். இப்படியெல்லாம் செய்திருந்தால், சமூகத்துக்கும் இவற்றை நம்பும் மக்களுக்கும் எத்தகைய பயன் விளைந்திருக்கும் என யோசித்துப் பார்க்கலாம்.

    இவற்றையெல்லாம் செய்யாமல், முதல் 76 நிமிடங்கள் ஷேர் ஆட்டோவிலும் இருசக்கர வாகனங்களிலும் வளைந்து வளைந்து சென்றுகொண்டே இருப்பதைக் காட்டுகிறார்கள். இது சுவாரசியமாகவும் இல்லை. சமூகத்திற்குப் பயன் உள்ளதாகவும் இல்லை. வாழ்வியலைக் காட்டுகிறோம் என்றாலும் திரும்பத் திரும்ப ஒரே விதமான காட்சிகளை நீண்ட நேரம் காட்டுவது, நேயர்களுக்குச் சலிப்பையே தரும். இதன் மூலம் பல்லாயிரம் பேரின் நேரத்தை வீணடித்துவிட்டார், இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ். தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனும் இதற்கு உடந்தையாய் இருந்திருக்கிறார்.

    கொட்டுக்காளி என்ற பெயர், நன்றாக இருக்கிறது. சேவல், இதில் ஒரு பாத்திரமாகவே உடன் வருகிறது. அன்னா பென், வெறித்த பார்வையோடு உணர்வுகளை அலட்டாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். சூரி இயல்பாக நடத்திருக்கிறார். ஆனால், காதல் பாடலை முணுமுணுத்த காரணத்துக்காக, அன்னா பென்னையும் உடன் வந்தவர்களையும் அவர் அடித்து வெளுப்பது, பலவீனமான காட்சி. அதற்கு உரிய காரண வலு, அதில் இல்லை.

    இதைக் கலைப் படம் என்பதைவிட, ஆர்வக் கோளாறு எனலாம்.

    Share