குறளின் கதிர்களாய்…(507)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(507)

அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

– திருக்குறள் – 611 (ஆள்வினையுடைமை)

புதுக் கவிதையில்…

முடியர்து நம்மால்
இதனைச் செய்ய
என்று
மனம் தளர வேண்டாம்,
செயலொன்றைச்
செய்து முடிப்பதற்குரிய
பெருமையைப்
பெற்றுத் தந்திடும்
பெருமுயற்சியே…!

குறும்பாவில்…

நம்மால் முடியாதென மனந்தளராதே,
செயலொன்றைச் செய்து முடித்திடும் பெருமையைப்
பெற்றுத் தந்திடும் முயற்சியே…!

மரபுக் கவிதையில்…

நம்மால் செய்யக் கடினமென
நாட்ட மின்றிச் சோர்வுற்றுச்
செம்மை யானச் செயலெதையும்
செய்யத் தவற வேண்டாமே,
நம்மை யந்தச் செயலைத்தான்
நன்கு முடிக்கும் பெருமையினை
தம்மால் பெற்றுத் தந்திடுமே
தளரா நமது முயற்சியதே…!
லிமரைக்கூ…

வேண்டாம் முடியாதெனத் தளர்ச்சி,
விடாத முயற்சி பெற்றுத் தந்திடுமே
வெற்றிப் பெருமையுடன் வளர்ச்சி…!

கிராமிய பாணியில்…

வேணும் வேணும்
வாழ்க்கயில வேணும்,
வேலயச் செய்யும்போது
விடாத மொயற்சி வேணும்..

நம்மால
இதச் செய்ய முடியாதுண்ண
மனத்தளர்ச்சி
வேண்டவே வேண்டாம்,
ஒரு செயலச்
செய்து முடிக்கவுள்ள
பெருமய
விடாத மொயற்சி ஒண்ணே
வாங்கித் தந்திடுமே..

அதால
வேணும் வேணும்
வாழ்க்கயில வேணும்,
வேலயச் செய்யும்போது
விடாத மொயற்சி வேணும்…!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *