பட்டாசினால் நன்மைகளும் உண்டு

அண்ணாகண்ணன்
பட்டாசினால் நன்மைகளும் உண்டு. முக்கியமாக, அது அச்சத்தைப் போக்கும் ஆயுதமாக விளங்குகிறது. மத்தாப்பினைத் தொடவே அஞ்சும் குழந்தைகள், பொட்டு வெடி, பூண்டு வெடி, சாட்டை, சங்கு சக்கரம், புஸ்வாணம் என அடுத்தடுத்து முன்னேறி, நாளடைவில் வெடி வெடிப்பதற்குத் தயாராகிறார்கள். அது வெடித்துச் சிதறுவதை, அதன் பேரொலியைப் பாதுகாப்பான தொலைவில் நின்று கவனிக்கிறார்கள். அந்த அதிர்ச்சியைச் சாதாரணமாகக் கடக்கிறார்கள். எத்தகைய பேரொலிகளையும் எதிர்கொள்ளத் தயாராகிவிடுகிறார்கள். இந்த வளர்ச்சி, மிகத் தேவையானது. இந்த அனுபவம் அவசியமானது. இதர பல அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளுக்கும் உதவக்கூடியது.
இன்னொரு கோணத்தில், நாளைய போர்களுக்கு இன்றே நம்மைத் தயார் செய்யக் கூடியதாய் இருக்கிறது. நூற்றாண்டுகளாய் முழுமையான போர் என்ற ஒன்றையே நாம் காணவில்லை. ஆனால், அது எந்தக் காலத்திலும் வராது என்று சொல்வதற்கு இல்லை. எதிர்காலத்தில் அப்படி ஏதும் நேர்ந்தால், அது நமக்கு முற்றிலும் புதிதாக இருக்கும். அமைதியான வாழ்க்கை காரணமாக, நாம் அதற்குத் திடீர் எனத் தயாராக முடியாது. ஆனால், ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் ஊரே போர்க்கோலம் பூண்டது போல் தான் இருக்கிறது. துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் இயல்பாக நம் கைகளில் புழங்குகின்றன. பேரொலிகளுக்கு ஓரிரு நாள்களாவது நாம் பழகியிருக்கிறோம். இது நம் மரபணுக்களில் இருப்பது, நமக்கும் நம் சந்ததியினருக்கும் அவசியமானதே.
பட்டாசினால் நேரும் கேடுகள் ஒரு புறம் இருந்தாலும் நன்மைகளும் உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
ஒளி எவ்வளவு சிறிதானாலும் ஏற்றுங்கள். அது எவ்வளவு பெரிய இருளையும் வெல்ல வல்லது.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.