Author: தேமொழி

  • இந்த வார வல்லமையாளர்!

    மார்ச் 2, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு முனைவர் எல்மார் நிப்ரத் அவர்கள்

     

    Elmar Kniprath

    வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர், பண்டைய தமிழ் வட்டெழுத்து எழுத்துருவை உருவாக்கி தமிழுலகிற்கு அளித்துள்ள, ஹாம்பர்க்கில் வசிக்கும் முனைவர் எல்மார் நிப்ரத் (Elmar Kniprath, Hamburg) அவர்கள். தமிழ் ஆர்வலர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வண்ணம் திரு. எல்மார் நிப்ரத் செய்துள்ள இப்பணியை வல்லமை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர் பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆய்வு மையத்தின் மொழியியல் ஆய்வாளரான முனைவர் “ழான்” (Jean-Luc Chevillard of France, French National Centre for Scientific Research/CNRS – Paris) அவர்கள்.

    தமிழ் வட்டெழுத்து பற்றியும் நிப்ரத் வடிமைத்த வட்டெழுத்து மற்றும் அதன் பயன்பாடு பற்றியும் வல்லமையின் வாசகரும் எழுத்தாளருமான, ஈழத்தின் மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் வல்லமை இதழில் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் கல்வெட்டுகளில் எழுதப்பட்ட வட்டெழுத்து தமிழையும், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் எழுத்தையும் நாம் இப்பொழுது கணினி வழியே எழுதவும், படிக்கவும் முடிவதை வியப்புடன் பாராட்டியதுடன், அந்த எழுத்துருக்களைக் கொண்டு எழுதியும் காண்பித்துள்ளார்.

    அவர் வழங்கிய மிகச் சிறப்பான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் தகவலறிய பார்க்க: பழன் தமிழ் எழுத்துகள் உங்கள் கணிணியில்http://www.vallamai.com/?p=54582

    பாண்டியர் சோழர் பயன்படுத்திய வட்டெழுத்தை இப்பொழுது உங்கள் கணிணியில் நீங்களே எழுதலாம். அடுத்துள்ள இணைப்புக்குச் செல்க, எழுத்துருவைத் தரவிறக்குக. தமிழ் ஒருங்குறியில் தட்டச்சிடுக. ஒருங்குறி எழுத்துருவாக e-Vatteluttu OT தேர்க. 35 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துருவுக்கு e-Tamil 100 தேர்க.

    வட்டெழுத்து

     

    என்னே… என்னே…. என்னே….
    செய்தி தந்த புதுவைப் பேராசிரியர் இழான் அவர்களுக்கும், அரிதின் முயன்று எழுத்துரு உருவாக்கிய ஆம்பேர்க்கு வாழ் பேராசிரியர் எல்மார் இணிப்பிராதருக்கும் தமிழ் மக்கள் என்றென்றும கடமைப்பட்டவர்கள்.

    திரு. நிப்ரத் அவர்கள் வடிவமைத்த வட்டெழுத்து எழுத்துருக்களை தரவிறக்கம் செய்ய இத்தளத்திற்கு செல்க:

    http://www.aai.uni-hamburg.de/indtib/vatteluttu.html

    திரு. நிப்ரத் அவர்கள் தமிழ் வட்டெழுத்து மட்டுமன்று, இதுவரை; தமிழ், அஸ்ஸாம், வங்கம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, ராஜஸ்தானி, சமஸ்கிரதம், தெலுங்கு எனப் பற்பல இந்திய மொழிகளிலும், சிங்கள மொழியிலும் எழுத உதவும் பொருட்டு, அந்தந்த மொழிகளுக்குமான “இந்தோலிபி” (Indolipi) எழுத்துருக்களை உருவாக்கி விலையற்று வழங்கி அனைவரும் பயன்பெறும் வகையில் உதவியுள்ளார்.

    இவர் உருவாக்கிய Elmar’s Indic எழுத்துருக்களான e-Tamil , e-Telugu , e-Kannada , e-Malayalam , e-Oriya , e-Panjabi , e-Asamiya, e-Bengali, e-Gujarati, e-Nagari, e-Devanagari, e-Grantha,  e-Sanskrit, e-Sinhala ஆகிய எழுத்துருக்கள் கிடைக்கும் இணைய தளத்தின் முகவரி: http://elmar-kniprath.software.informer.com/

    திரு. நிப்ரத் உருவாக்கிய வட்டெழுத்துக்களில் எழுதிப் பழகி, படித்துப் பழகி தேர்ச்சி பெறும் தமிழர் யாவரும் அடுத்த முறை தமிழக தொல்பொருள் காட்சியகங்களுக்கோ, கோவில்களுக்கோ செல்லும் பொழுது வட்டெழுத்தில் உருவாக்கப்பட்ட கல்வெட்டுகளையும் ஓலைச்சுவடிகளையும் படிக்க ஆர்வம் கொள்வார்கள் என்பது உறுதி. தமிழின் தொன்மையைப் பாராட்டும் வண்ணம் அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் அக்கறையுடன் ஈடுபடுவார்கள் என்பதையும் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்போம்.

    திரு. நிப்ரத் தமிழர்களுக்கு அளித்த பரிசுக்காக அவரை வாழ்த்தி, வல்லமை குழுவினர் அவரை வல்லமையாளாராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    தொடர்புக்கு: “Elmar Kniprath” மின்னஞ்சல் முகவரி: kniprath@online.de

    படங்களும் தகவல்களும்:
    முனைவர் “ழான்” அவர்களின் சமூக வலைத்தளங்களில் இருந்து திரட்டப்பட்டன.

    Share
  • இயல்புநிலை திரும்பியது …

    — தேமொழி.
    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

     

    angry birdமலர் கவலையுடன் வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்தாள். மது வழக்கமாக வீடு வரும் நேரம் கடந்து இருட்டவும் துவங்கி விட்டது.

    ஒருவழியாக வாசல் கதவைத் திறந்தவன் சோர்வுடன், “வண்டியும் பிரேக் டவுன், செல்ஃபோனிலும் சார்ஜ் இல்லை,” என்றான்.

    அவனைக் கண்டதும் நிம்மதி அடைந்திருந்தவளுக்கு உடனே கோபம் வந்தது. “அதென்ன பொறுப்பில்லாத்தனம், எங்கேயும் ஃபோனே இல்லையா, அடுத்தவங்க கவலைப் படுவாங்களேன்னு கொஞ்சமாவது கருத்து இருந்தாத்தானே?” என்று சீறினாள். இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டாள் அவள்.

     

     

     

     

     

    படம் உதவி: http://www.scooppick.com/things-most-common-in-indian-wives/

    Share
  • “இடி இறங்கியது”

    — தேமொழி.

    (50 வார்த்தைகளுக்குள் ஒரு குறுங்கதை)

    buildingகொட்டும் மழையில் கட்டிடத்தை விட்டு வெளியேறியவன் மனம் வெறுத்திருந்தான். இப்போழுதே உயிர் போனால் எவ்வளவு பிரச்சனை தீரும் என மனம் ஏங்கினான்.

    “காத்திரு, உடனே அங்கு வந்துவிடுகிறோம்” என்று தொலைபேசிய நண்பர்கள்…. இல்லை…. அவனறியாமல் கஞ்சாக் கடத்தலில் அவனை மாட்டிவிட்டிருக்கும் துரோகிகள் சொன்னதைப் பொருட்படுத்தாமல் நடந்தான். கைப்பையிலோ கோடிக்கணக்கான குற்றப்பணம் கனத்தது. தப்பிக்க என்ன வழி?

    பெரும் சப்தம் கேட்டுத் திரும்பியபொழுது இடியிறங்கி அவன் வெளியேறிய கட்டிடம் தரை மட்டமாகியிருந்தது.

     

    படம் உதவி: http://www.stuff.co.nz/the-press/news/christchurch-earthquake-2011/4867859/Death-Zone

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பிப்ரவரி 23, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு வைதேகி அவர்கள்

    வைதேகி1

    “மனதில் உறுதி வேண்டும்” என்ற பாரதியின் வரிகளை வாழ்ந்து காட்டும் வைதேகி அவர்களின் நெஞ்சுரத்தைப் பாராட்டி அவரை இவ்வார வல்லமையாளராக வல்லமை இதழ் அறிவிக்கிறது. வைதேகி சென்ற ஞாயிறு அன்று தனது வலைப்பூவில் புற்றுநோயை எதிர்த்து தான் போராடியதை “My fight against the dreadful disease – CANCER” (http://vaidehivc.blogspot.com/2015/02/my-fight-against-dreadful-disease-cancer.html) என்று எழுதியிருந்தார். கொடிய நோய் என்று மனம் தளர்ந்துவிடாமல்,போராடி வெற்றிபெற்றதுடன், நோயைப்பற்றியும், அவர் பெற்ற சிகிச்சை, அதன் பக்க விளைவுகள் பற்றிய அவரது அனுபவங்களை படங்களுடன் அவர் மிக விரிவாக பகிர்ந்து கொண்டது பாராட்டத் தக்க செயலாகும். அத்துடன் நில்லாமல் நோயைப் பற்றி மேலும் தகவல் பெற விரும்பினால், நம்பிக்கை, ஊக்கமூட்டும் வார்த்தைகளை கேட்க விரும்பினால் தான் உதவத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டதன் மூலம் தனது வாழ்க்கை பிறருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்ற நோக்கம் கொண்டவர் என்பதையும் உணர்த்துகிறார். வைதேகியை வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெருமை அடைகிறோம். அவரை பரிந்துரைத்த வல்லமை வாசகர், ஓவியர், கவிஞர் சு. ரவி அவர்களுக்கு மிக்க நன்றி. வைதேகியின் சோதனையான வாழ்க்கையையும், அதில் அவர் சாதனை நிகழ்த்தியதையும் வல்லமைக் குழுவினருடன் பகிர்ந்து கொண்ட வல்லமை எழுத்தாளர் திரு. பழமைபேசி அவர்களும் பாராட்டிற்குரியவர்.

    சென்னை நங்கநல்லூரில் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்து, மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் கல்வி பெற்றவர் வைதேகி. அவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது மற்ற எல்லா சென்னை பெண்களைப் போலத்தான் நானும் பொறியியல் படித்தேன், கணினி மென்பொருள் துறையில் வேலைக்கும் சேர்ந்தேன், 23 வது வயதில் எனது அன்புக் கணவரை மணந்தேன், மறு ஆண்டு ஆசை மகள் பிறந்தாள் என்று குறிப்பிடுகிறார். தற்பொழுது ‘ஈ ஆர் பி ஆலோசகராக’ ‘சி டி எஸ் குளோபல்’ நிறுவனத்தில் பணிபுரிகிறார் (Eenterprise Resource Planning, Consultant at Cognizant Technology Solutions).

    அலுவலகத்தில் நண்பர்களுடன் அனுதினமும் வேலையில் கருத்தாலோசனை, தோழியருடன் ஹோலி கொண்டாட்டம், தானும் பாடுவதுடன் மகள் ‘எஸ் கே’ யின் மழலைக் குரல் பாடல்களை இணையத்தில் பதிவேற்றுவது, மகளுக்கு வீட்டுப்பாடத்தில் உதவி செய்வது, சேமியா உப்புமா, வெஜிடபிள் பிரியாணி சமைத்து அவற்றைப் படங்கள் எடுத்து நண்பர்களுடன் ஃபேஸ் புக்கில் பகிர்ந்து கொள்வது, சுற்றுலா சென்ற படங்களை பகிர்ந்து கொள்வது என சராசரிப் பெண்ணாக அவர் வாழ்க்கை ஓடியது.

    நடிகர் கமல்ஹாசனைப் பிடிக்கும், எம் ஜி எம் ரிசார்ட் பிடிக்கும், கைவினைப் பொருட்கள் பிடிக்கும், ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி செய்யப் பிடிக்கும் என்று சிறுமி போன்ற ஆர்வத்துடன் தன்னைப் பற்றிய செய்திகளையும், படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டிருக்கும் இந்த மென்மையான் உள்ளம் கொண்ட, பார்ப்பதற்கு நமது அடுத்த வீட்டுப்பெண் போன்ற தோற்றம் கொண்டவரின் உள்ளம் இவ்வளவு உறுதியானதா என வியக்கவும் வைக்கிறார் நோயுடன் தான் நடத்திய போராட்டத்தை விவரிக்கும் பொழுது.

    இவருக்குத் திருமணமாகி 5 ஆண்டுகளுக்குள் வாழ்க்கையின் ஓரத்திற்குச் சென்று வந்தவர் இவர். சென்ற ஆண்டு (2014) ஆகஸ்ட் மாதம் இவரது கழுத்தின் வலதுபுறம் சிறு கட்டி ஒன்று தோன்றவும், அதைத் தொடர்ந்து காய்ச்சல், தொண்டையில் வலி, உடல் அசதி என்று தோன்றியிருக்கிறது. பணி முடித்து வந்து வீட்டு வேலைகளை செய்ய இயலாமல் சோர்ந்திருக்கிறார். இந்நிலை தொடரவும் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்றதில், பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு இவருக்கு நிணநீர் மண்டலப் புற்று நோய் இருப்பதும், அது இரண்டாம்நிலையை அடைந்துள்ள “ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா” என்ற வகையைச் சார்ந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டது.

    நோயின் தீவிரத்த்தின் அடிப்படையிலும், 28 வயதே ஆன இவரது இளவயதையும் கணக்கில் கொண்டு இரத்தக்குழாய்களின் வழியே மருந்து செலுத்தும் கீமோதெரப்பி சிகிச்சை அளிக்கப் பட்டது. சிகிச்சையின் பக்க விளைவுகளான வாய் மற்றும் வயிற்றில் புண், ஸ்டீராய்ட் எடுத்துக்கொள்வதால் அதிகம் பசித்தாலும் வாய்க்கு சுவையின்றி இருப்பதால் உணவை உண்ணமுடியாத நிலை, கழுத்திலும் மார்பிலும் கொழுப்பு படிமங்கள், நீர்கோர்த்து உடல் எடை அதிகரித்தல், முகம் ஊதிப் போதல், முடி கொட்டுதல், அடர்வு நிறைந்த மருந்துகளை செலுத்துவதால் ரத்த நாளங்களில் வலி என்று பல துன்பங்களை அடைந்திருக்கிறார். குடும்பத்துடன் சேர்ந்து பொழுதைக் கழிக்க வழியின்றி உடல்வலியும் அசதியும் இவரை ஆட்டிப்படைத்ததில் வீட்டை விட்டு வெளியில் செல்லவும் விருப்பமின்றி மனம் சோர்ந்திருக்கிறார்.

    இவர் தனது வாழ்வில் எதிர்கொண்டதை இவரது ஃபேஸ்புக் காலக்கோடு பதிவுகளும் பிரதிபலிக்கிறது. ஆகஸ்ட்டில் நோய் தோன்றி அதைக் கண்டுபிடித்து அக்டோபரில் சிகிச்சை தொடங்கும் பொழுது, “சென்ற ஆண்டு இதே நேரம் வாழ்க்கை வேறுவிதமாக இருந்தது” என்று குறிப்பிடுகிறார். ஆனால் அதைப் பற்றிய விளக்கம் இல்லை. “வாழவிருப்பமுள்ளவர்கள் போராடுவார்கள், நம்பிக்கையுடன் இருப்பார்கள், வெற்றி அடைவார்கள், புற்றுநோயைப் பற்றி அறிந்து கொள்வோம்” என்று மற்றொரு பதிவு வருகிறது. “நான் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன், யாரேனும் என்னிடம் உன்னைப் பின்பற்றியதால் நான் போராட்டத்தைக் கைவிடவில்லை என்று சொல்வதை விரும்புகிறேன்” என்கிறார். ஆனால் அவர் குறிப்பிட்டதன் பொருள் நண்பர்களுக்குப் புரிந்ததாகத் தெரியவில்லை. வழக்கம் போல “லைக்” போட்டுவிட்டுச் செல்கிறார்கள்.

                        வைதேகிவைதேகி3

                                                            வைதேகி2

    மறுவாரம் வருத்தம் நிறைந்த முகம் கொண்ட தனது படத்தை பதிவிடுகிறார், ஏன் முகம் வாடியிருக்கிறது? என்ன ஆயிற்று? என்ற மறுமொழிகள் நண்பர்களிடம் இருந்து வருகிறது.  அதற்கு மறுவாரம் “எனக்கு லிம்போமா புற்றுநோய், அதை ஒழித்துக் கட்டுவேன்” என்ற வாக்கியம் கொண்ட படம் போடுகிறார். நண்பர்கள் ஆறுதல் சொல்லி, நம்பிக்கையை கைவிடாதே என்று உற்சாக மூட்டுகிறார்கள். அடுத்தமாதம் நோயின் தாக்கம் கொடுமையாக இருக்கிறது என்றும், அதற்கடுத்த மாதம் டிசம்பரில் சிகிச்சையின் பக்க விளைவால் தலை வழுக்கையானதை வேடிக்கையாக, அழகிய வழுக்கை விழுந்த பெண், புற்றுநோயை தாக்குகிறாள் என்றும் குறிப்பிடுகிறார்.

    நகைச்சுவையை உணர்வைக் காட்ட நினைத்தாலும், சிறுவயதிலேயே நோயுடன் போராடும் நிலையும், எதிர்காலம் கேள்விக்குறியானதை எதிர்கொள்வதும் அவருக்கு சுலபமாக இருந்திருக்கவில்லை. அடுத்தவரை நம்பி தினசரி செயல்களை முடிப்பதும், சிகிச்சையினால் முடி கொட்டுவது என உருவத்தை மாற்றிய பக்க விளைவுகள் ஆகியவற்றால் மனம் மிகத் துவண்டு இருக்கிறார். தனது நம்பிக்கையை கைவிடாது இருக்கவும், தனது மனதை வேறுவழிகளில் செலுத்தி தன்னை உற்சாகப்படுத்திக் கொள்ளவும் காகித கைவினைபொருட்கள் செய்வது, கார் ஓட்டும் பயிற்சி பெற்று ஓட்டுனர் உரிமம் பெறுவது, உடற்பயிற்சிகள் செய்வது, குழந்தையுடன் விளையாடுவது போன்றவற்றில் மனதைச் செலுத்தி நோயின் கொடுமையை மறக்க முயன்றிருக்கிறார். கணவரும், மகளும், குடும்பத்தினரும், உறவினரும், நண்பர்களும் அவருக்கு உறுதுணையாகவும் இருந்திருக்கிறார்கள். இத்துயர நாட்களில் உண்மையான அன்பு செலுத்துபவர்களையும் அவர் அடையாளாம் காண நேர்ந்திருக்கிறது.

    டிசம்பர் முதல்வாரத்தில் 6 சுற்று கீமோதெரப்பி மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, புற்றுநோய் செல்கள் உடலில் காணப்படவில்லை என்று மருத்துவர்கள் அறிவித்த பின்னர், மேலும் இரண்டு சுற்று கீமோதெரப்பி சிகிச்சை அளித்து முற்றிலும் குணமடையச் செய்துவிடலாம் என்று நம்பிக்கையை அளித்துள்ளார்கள். டிசம்பர் ஆறாம் தேதி சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் முற்றிலும் நீங்கி கடந்த இரண்டரை மாதங்களாக உடல்நலம் தேறி வருகிறார்.

    வைதேகி5

    தங்களின் அன்புக்குரியவர்களை புற்றுநோய் பாதித்த அனுபவம் கொண்டவர்களை இவர் சந்தித்த பொழுது அவர்களது அனுபவங்களையும் தெரிந்து கொண்டிருக்கிறார். யாருக்குமே வாழ்வு சுலபமானதல்ல, வாழ்வில் அனைவருமே துன்பத்தை சந்தித்தவர்கள்தான் என்பதை உணர்ந்தேன் என்கிறார். பெயர், புகழ், செல்வம் ஆகியவை முக்கியமல்ல. பிறரிடம் நாம் அன்பு செலுத்துவதும், அவர்கள் அன்பைப் பெறுவதும்தான் வாழ்வில் முக்கியமானது என்றும் கூறுகிறார்.

                       வைதேகி6வைதேகி4

    நோய் தொடங்கிய பொழுதே இதனை எதிர்த்து போராடி மற்றவருக்கு முன்மாதிரியாக தான் இருக்கவேண்டும் என்று அவர் உறுதிகொண்ட வண்ணம் அதை நிறைவேற்றியும் உள்ள வைதேகியின் வல்லமை பாராட்டிற்குரியது. புற்றுநோயுடன் தளராது போராடி மீண்டு வந்த வைதேகியின் மன உறுதியையும், தனது போராட்டத்தை அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் வண்ணம் அறிவித்து பிறருக்கும் ஊக்கம் தர முன்வந்த வைதேகியை உடல்நலத்துடன் நீடூழி வாழவும், மேலும் பல சாதனைகள் புரியவும் வல்லமைக் குழுவினர் வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

     

    தொடர்புக்காக:
    மின்னஞ்சல்: vaidehi1986@gmail.com
    கூகுள் பிளஸ்: https://plus.google.com/111332645448742010863
    வலைப்பூ: http://vaidehivc.blogspot.in/
    பேஸ் புக்: https://www.facebook.com/vaidehi.vc
    லிங்ட் இன்: https://in.linkedin.com/pub/vaidehi-vc/26/321/318
    இசைக்கோர்வைகள்: https://soundcloud.com/vaidehi-vc/

    Share
  • “ஈஸி… வசந்த்”

    — தேமொழி.

    நாசமாப் போறவன், உருப்படவே மாட்டான்… என்று திட்டியபடி செல்போனை சோபாவில் வீசியெறிந்தான் வசந்த். அது அவன் எதிர்பார்த்தது போல சோபாவில் விழாமல் தரையில் மோதி விழுந்தது.

    “ஈஸி… வசந்த்” என்று சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்த பெண்ணும், அவளுடன் வந்த கணேஷும் சோபாவில் சாய்ந்தார்கள்.

    அந்த பெண் தரையில் இருந்த செல்போனை எடுத்து டீடேபிளில் வைத்தாள். தலையில் கிரீடமாகக் கறுப்புக் கண்ணாடி…காற்சட்டையில் துழாவி தனது செல்போனை எடுத்துக் குடைய ஆரம்பித்தாள்.

    கையில் நகப்பூச்சு இல்லை என்பதை வசந்த் கவனித்தான். ஏனோ அவளைப்பார்த்ததும் பற்றிக் கொண்டு வந்தது.

    முதன் முறையாக ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள்ளு விடாமல் ஏன் எரிச்சலடைகிறான் என்று அவனுக்கேப் புரியவில்லை.

    “ஹலோ” என்றான் அவளை நோக்கி, இவள் யார் எனக்கு அட்வைஸ் கொடுக்க என்ற எரிச்சல் தென்பட்டது வசந்தின் குரலில்.

    “ஹலோ” என்றால் அவளும், தனது போனில்.

    “நான் உன்னிடம்தான் பேசுகிறேன்”

    “நன்றி, ஆனால் நான் போனில் பேசிக்கொண்டிருக்கிறேன், தெரியவில்லை”

    எழுந்து போய் ஜன்னலோரம் நின்று மொணமொணவென்று மெதுவாகப் பேசினாள்.

    “பாஸ், எங்க புடிச்சீங்க இந்த ராங்கிக்கரியை, கொஞ்சம் நஞ்சம் வரும் காற்றையும் ஜன்னலை அடைத்துக் கொண்டு மறைக்கிறாள்”

    “டோன்ட் பீ சில்லி வசந்த், ஏன் கரண்ட்டுக்கு என்னாச்சு? சென்னையில் கூடவா எலெக்ட்ரிசிட்டி பிராப்ளம்?”

    “ஏதோ ட்ரான்ஸ்ஃபார்மர் புட்டுகிச்சாம், தம்புச்செட்டித் தெருவுக்கு இன்னைக்கு கரண்டு இல்லைன்னு சொல்லிட்டான் இ.பி. ஆபிஸ்ல, நீங்க இன்னமும் அதைச் சொல்லல”

    “நானும் சொல்லணுமா? சரி, தம்புசெட்டித் தெருவுக்கு இன்னைக்கு கரண்டு இல்லை”

    விளையாடாதீங்க பாஸ், நானே வெறுப்பில் இருக்கேன், கண்டவனெல்லாம் என்னைப் பார்த்து சிரிக்கிறான், கண்டவளெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்றாங்கோ, நீங்களுமா கலாய்க்கணும்? யாரிந்த அரை லூசு? எங்க புடிச்சீங்க இதை, என்னையே டபாய்க்குது”

    “நான் கராத்தேயில் கருப்பு பெல்ட் வாங்கியிருக்கேன்” என்றவாறு அந்தப் பெண் போனில் பேசி முடித்து விட்டு வந்தாள்.

    “உன்னை உதைப்பேன் என்கிறாள்”

    ganesh-vasanth“நீங்க வேற அதை எக்ஸ்ப்ளைன் பண்ணனுமா பாஸ், என்ன திமிர்?” வசந்த் அவளை முறைதான்.

    “ஹை வசந்த், என் பேர் தேனு, பேராசிரியர் கணேஷின் ஸ்டுடெண்ட், வீட்டுக்கு போற வழியில ப்ரபொசர் கார் ப்ரேக் டவுன் ஆகி திண்டாடிகிட்டு இருந்தார், நான்தான் வாங்க உங்க ஆபிசில கொண்டு போய் விடறேன்னு சொல்லி ரைட் கொடுத்தேன். வெளியில் உங்க காரைப் பார்த்ததும், வசந்த் ஆபீஸ்லதான் இருக்கான், உள்ள வா, வசந்தை இன்ட்ரோடியுஸ் பண்றேன்னு சொன்னார்”.

    கணேஷ் இந்த அகாடெமிக் இயரில், யூனிவெர்சிடி சட்ட வகுப்பில் கௌரவ ஆசிரியராக சில வகுப்புகள் எடுக்க ஒப்புக் கொண்டுள்ளான்.

    “நான் உன்ன ஹனின்னு கூப்பிடலாமா?”

    “நான் துப்பாக்கி சுடுவதில் எக்ஸ்பெர்ட், ப்ரைசெல்லாம் வாங்கியிருக்கேன்”

    “அட சட்… பாஸ், இந்த மாதிரி முன்ன பின்ன தெரியாதவங்க கார்ல எல்லாம் ஏறாதீங்க பாஸ், இன்னக்கி இரக்கப்பட்டு ரைட் தரேன்னு கொண்டு வந்து விடுவாங்க, இன்னொருநாள் பாவம் ரொம்ப டயர்டா இருக்கீங்க வாங்க காபி சாப்பிடலாம்னு அழைச்சிப் போய் சிரிக்க சிரிக்க பேசி காஃபி வாங்கித் தருவாங்க, பிறகு நீங்க இழக்கக் கூடாததெல்லாம் இழக்க வேண்டி வரலாம்”.

    “தேவுடா..தேவுடா, ரோஜுலு மாரயி …தேவுடா…” என்று பாடி உதட்டை சுழித்து அழகு காட்டிய தேனு மீண்டும் செல்போனைக் குடைந்தாள்.

    “அது சரி, நாங்க வந்த போது கோபமாய் யாரைத் திட்டிக் கொண்டிருந்தே?”

    “ஒரு மனோ வியாதி வைத்தியரிடம் ….”

    “ஓ ….அந்த அளவுக்கு முத்திப் போச்சா”

    “பாஸ், கண்டவங்களையும் குறுக்கே பேச வேணான்னு சொல்லுங்க”

    “நீ சொல்லு, உனக்கு என்ன ஆச்சு?”

    “எனக்கு ஒண்ணுமில்ல, ஒரு கேஸ்… தேனு, தேனுண்ணு ஒரு பொண்ணு”

    “அதும் பேரும் தேனு தனா?”

    “ஆமாம் பாஸ், அந்த பேரு வச்சாலே சொர்ணாக்கா போல இருப்பாங்க போல, மேல கேளுங்க , வயசாகியும் கல்யாணம் வேணாமின்னு அம்புட்டு அடமாம். அவளோட அம்மா ஒரு மனோ வியாதி டாக்டர்கிட்ட அவளக் கொண்டு போனாங்களாம். அவரு ஊசி போட்டு சரி பண்ணிடறேன்னு சொல்லி ஊசி போட்டிருக்காரு. இந்தப் பொண்ணும் நோய் தெளிந்து போன பின்னர் டாக்டரையே கட்டுவேன்னு ஒரே ஆர்ப்பாட்டம். கொஞ்ச நாளில் டாக்டரிட்ட இருந்த ஊசியையும், சிரிஞ்சு பாட்டில் மருந்துகளையும் அவருக்குத் தெரியாமல் சுருட்டிக் கொண்டு அடுத்தாத்து அண்ணாசாமியுடன் சென்னைக்கு ஓடி வந்திடுச்சாம் .”

    “பிறகு சென்னையில் அந்த செக்ஸ் ஊசியை ஏலம் விடும் முயற்சியில் அது தொலைந்துவிட, அதை விசாரிக்க தேனுவிடம் போன மருத்துவக் கவுன்சில் தலைவர் நாகபூஷணத்திற்கு தொலைந்து போனது போலி ஊசி என்று தெரிந்தது விட்டது. அந்த மனுஷன் விடுவானா? ஒரிஜினல் ஊசியையும் தேனுவையும் சுருட்டிக் கொண்டோடிவிட்டான். போதாக்குறைக்கு ஜானு அப்படின்னு இன்னொரு செட்டப் வேறே வச்சுகிட்டான். ஜானுவுக்கும் தேனுவுக்கும் நாளும் குடுமிப் புடி சண்டை. பொறுக்க முடியாமல், இதோ ஊசியையை ஒழிச்சுக் கட்டுறேன்னு பாவ்லா காட்டி, ஏமாத்தி பொய் ஊசி ஒண்ணை அழிச்சி ரெண்டு பொண்ணுகளையும் கழட்டி விட்டுட்டான். அத்தோடு விட்டானா, புதுசா வசந்தான்னு இன்னொரு பொண்ண கூட்டிக்கிட்டு வந்தான். உடனே தேனுவும் ஜானுவும் மோப்பம் புடிச்சி, இவன் நம்மை ஏமாத்தி தொரத்த நாடகம் போட்டான்னு புரிஞ்சி நேரே வந்துட்டாங்க. அப்பாலே மூணு பொண்ணுங்களுக்கும் சண்டை. தெருவில் உரண்டு புரண்டு உன்னை உயிரோடு விட்டேனா பார் என்று ஆளாளுக்கும் சவால் விட்டாங்க. தெருவே வேடிக்கப் பாத்துது. அவனவன் செல்போன்ல ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சுட்டான். “

    “இதுக்கும் நீ திட்டுனதுக்கும் என்ன தொடர்புன்னு சுருக்கமா சொல்லு, வள வளவளக்காத. கதை சகிக்கல, காது கொண்டு கேக்க முடியல்ல, காதிலேயே நாத்தமடிக்குது”.

    “இருங்க பாஸ். பிறகு இங்கதான் ஒரு ட்விஸ்ட். அந்த மூணாவது பொண்ணு நேத்து ஆளு அவுட்டு, மதியம் தூங்கும் போது முகத்தில் தலையணையை அழுத்திக் கொலை. உடனே மருத்துவக் கவுன்சில் தலைவன் நாகபூஷணத்தை சந்தேகத்தின் பேரில் போலீஸ் கைது செய்தது. அவன் என்னடான்னா தேனுவும் ஜானுவும்தான் வசந்தாவைப் போட்டுத்தள்ளியிருப்பாங்க, எனக்கு அவங்க மேலேதான் சந்தேகமுன்னு சொல்லியிருக்கான். போலீஸ் சந்தேகக் கேசுல தேனுவையும் ஜானுவையும் இப்ப உள்ள போட்டுட்டாங்க. எல்லோருமே ஜெயில்ல இப்போ கம்பி எண்ணுறாங்க. தேனுவோட அம்மா வந்து எம்பொண்ண வெளிய கொண்டுவாங்க அப்படின்னு அழுதாங்க. நானும் சாயுங்காலம் வாங்க எங்க பாஸ்கிட்ட சொல்லுங்க, அவரு கேஸ எடுத்துப்பாரான்னு தெரிஞ்சுக்கலாமுன்னு சொல்லி அனுப்பி வச்சேன். நீங்க வரதுக்குள்ள கொஞ்சம் தகவல் சேகரிக்க எண்ணி, நம்பரைத்தேடி, அந்த மனோ வியாதி டாக்டர போன்ல கூப்பிட்டு விசாரிச்சேன். அவனிடம் என்னை அறிமுகப் படுத்தி வசந்த் பேசுறேன்னு சொன்னவுடன் ரொம்பவே உற்சாகமானான்.”

    “அந்த மாதிரி உற்சாகமானவனை நீங்க திட்ட காரணம் என்ன? நான் சொல்லவா? உங்களுக்கும் ஒரு செக்ஸ் ஊசி வேணுமின்னு கேட்டுருப்பீங்க , அவன் முடியாதுன்னு சொல்லிட்டான்”

    “தேனுன்னு இருக்கிற உன் பேரை தேனீ அல்லது தேளு அப்படின்னு மாத்தி வச்சுக்கோ, சும்மா வாயால கொட்டிகிட்டே இருக்க”

    “கட் இட் அவுட், வாட் ஹி சட் வசந்த், தேனு சொன்ன மாதிரிதான் கேட்டியா?”

    “அப்படி ஒரு ஊசி இருக்கிறது உண்மையா? எவ்ளோ விலை அப்படின்னு கேட்டேன் பாஸ். அதுக்கு அந்தப் பாழாப் போறவன், “யோவ், நான் உன்ன புத்திசாலின்னு நெனச்சிருந்தேனே, ஏன்யா இந்த மாதிரி கேக்கிற, உண்மையா இருந்தா நான் எவ்வளவோ சம்பாதிச்சிருப்பேனே. மனோ வியாதி டாக்டருங்கிறதாலே மனோதத்துவ முறையில் ட்ரீட்மெண்ட் கொடுத்தேன். சிரிஞ்சில டிஸ்டில்ட் வாட்டர போட்டு இன்ஜெக்ட் செய்து, இது ஒரு அதி அற்புதமா வேலை செய்யுற மருந்துன்னு சொல்லுவேன். பேஷண்டும் நான் பேசுறதக் கேட்டு உண்மையின்னு நம்பி கொஞ்சம் கொஞ்சமா பலனடைவாங்க. ப்ளாசீபோ எஃபக்ட்டு, பிளசிபோ விளைவு, மருந்துப்போலி விளைவு, வெற்று மாத்திரை விளைவுன்னெல்லாம் நீங்க கேள்விப் பட்டதே இல்லையா? மூளைக்கு நான் அந்த மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுப்பேன். தேனுவும், அண்ணாசாமியும் அந்த மருந்தெல்லாம் சுருட்டிகிட்டு போனவுடன், தேனுவின் தொல்லை ஒழிஞ்சுது மருந்து புட்டிகளில் இருக்கிற தண்ணியெல்லாம் முடிஞ்சவுடன் ஆட்டம் போடுறத நிறுத்திடுவாங்கனு கண்டுக்காம விட்டுட்டேன். நீங்களும் இதெல்லாம் உண்மையான்னு கேக்க வந்திட்டீங்களே” அப்படின்னு கத்தி போனைக் கட் பண்ணிட்டான்.

    “நீ நெனச்சது சரிதான்”

    “தேங்க் யூ ப்ரபொசர்”

    பாஸ்…என்று கோபத்துடன் வசந்த் தொடங்கியபொழுது, கணேஷின் செல்போன் இடைமறித்து ஒலித்தது. போனில் எண்ணைப் பார்த்து “இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்…” என்று கூறிவிட்டு கணேஷ் இடையூறு இல்லாமல் பேசுவதற்காக ஜன்னலோரம் போனான்.

    “வசந்த், எனக்கு கைரேகை பார்ப்பீர்களா? நான் ப்ரபொசர் மாதிரி புகழ் பெற்ற லாயரா வருவேனா?” என்றாள் தேனு.

    அவள் குரலில் இருந்தது கிண்டலா அல்லது உண்மையான ஆர்வமா என வசந்திற்குப் புரியவில்லை.

    “நான்கூட புகழ் பெற்றவன்தான். இப்பவெல்லாம் முகத்தை பார்த்தே ஜோசியம் சொல்லப் படித்திருக்கிறேன். உன் சப்பை மூக்கைப் பார்த்தால் நீ எதிலேயும் முன்னேறவே மாட்டாய் எனத் தெரிகிறது”.

    “ஃபை..ஃபை..சொதப்பி ஃபை, நாட்டாமை உன் தீர்ப்ப கொஞ்சம் நீ மாத்தி ஃபை” என்ற தேனு எழுந்து ஆடினாள்.

    “என்ன இங்க கொண்டாட்டம்? ராஜேந்திரனைப் பார்க்கப் போகணும், என்னிடம் கார் கிடையாது”

    “வாங்க ப்ரபொசர், வீடு போற வழியில உங்கள டிராப் பண்றேன்”

    “நீ உருப்படியா வீடு போற வழியைப் பாரு, திருப்பி வர பாஸ் என்ன பண்ணுவாராம், வாங்க பாஸ் நான் இருக்கேன் உங்களுக்கு”

    “பை, பை சீரியோ…”

    தனது கார் கதவைத் திறந்து உட்க்காரப்போன தேனு போன் அடிக்கவே கதவை மீண்டும் மூடி அதில் சாய்ந்து பேசி , சிரிக்கத் தொடங்கினாள்.

    வசந்தின் காரில் கிளம்பினார்கள் கணேஷும் வசந்தும். ரியர் வியூ கண்ணாடியில் பின்னால் பார்த்த வசந்த் கடுப்புடன். “பாருங்க, நடுதெருவில என்ன சிரிப்பும் கொம்மாளமும், எப்பப் பாரு போனைக் குடைய வேண்டியது, இதெல்லாம் தேருங்கறீங்க பாஸ், நோ சான்ஸ்?”

    “ஹார்ஷ் வார்ட்ஸ் வசந்த், அந்தப் பொண்ண ஏன் வாரிக்கிட்டே இருக்க, பின்னால பாக்காத முன்னால பாரு”

    “என்ன பாஸ் திடீர்னு தத்துவம்”?

    “தத்துவமில்ல, காருக்கு எப்ப பெட்ரோல் போட்ட? எம்ப்டின்னு காட்டுது? போக வேண்டிய இடத்திற்கு போகும் வரை பெட்ரோல் இருக்குமா?”

    “இருக்கும்”…. தெருமுனைக்கு வந்த கார் நின்றுவிட்டது “ஆனால் இருக்காது பாஸ்.”

    “ஹல்லோ, எனி ஒன் நீட் சம் ரைட்?” பக்கத்தில் வந்து நின்ற காரில் இருந்து தேனு தலையை நீட்டிக் கேட்டாள்.

    “வாடா, அப்புறம் பெட்ரோல் போட்டுக்கலாம்”

    “வாங்க ப்ரபொசர், நான் இருக்கேன் உங்களுக்கு” என்றாள் தேனு.

    [தன்னிலை விளக்கம்: எழுத்தாளர் சுஜாதாவைப் போல நானும் “கணேஷ்-வசந்த்” கதையொன்றை எழுத வேண்டும் என்ற ஆர்வக்கோளாறின் அடிப்படையில் எழுந்த கற்பனைக் கதையிது, சுஜாதா மன்னிப்பாராக]

    https://groups.google.com/d/msg/vallamai/_DG_fpwcNgY/DcSH1SWhMucJ

     

     

    படம் உதவி: https://siliconshelf.wordpress.com/

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பிப்ரவரி 16, 2015

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள்

    Parthasarathy Ra

     

    வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர் எழுத்தாளர் திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள். வல்லமை வாசகர்களுக்கு இவர் தனது கவிதைகள் பலவற்றையும், சிறுகதைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார். குறிப்பாக சென்ற வாரம் “எண்ணமும், சிந்தனையும்!” என்ற எழுச்சிக் கவிதையையும், காதலர் தின சிறப்புப் பதிவாக “காதல் என்றால். . . ?!”  என்ற கவிதை என இரு கவிதைகளை வழங்கியுள்ளார். அத்துடன் “மாறிய ஜென்மங்கள்”  என்ற இன்றைய உலகில் மூத்த குடிமக்களின்  யதார்த்த வாழ்க்கையையும், பந்தபாசத்தின் மேன்மையையும் உணர்த்தும் சிறுகதையையும் வழங்கியுள்ளார்.

    தற்பொழுது சென்னையில் வசிக்கும் திரு. ரா. பார்த்தசாரதி அவர்கள், பாலா, இனியவன் என்ற புனைப்பெயர்களிலும் எழுதி வருபவர். தனியார் நிறுவனம் ஒன்றின் மேலதிகாரியாகப் பணிநிறைவு பெற்ற இவர் தமிழ் மற்றும் பொருளியியலில் முதுநிலை பட்டங்கள் பெற்றவர். பணிநிறைவிற்குப் பின்னும் கவிதைகள் சிறுகதைகள் எழுதும் தனது பொழுதுபோக்கைத் தொடர்கிறார். கவிதை உறவு, தமிழ்ப்பணி ஆகியவற்றில் இவரது கவிதைகளும், குமுதம், தினமலர் பத்திரிக்கைகளில் இவரது சிறுகதைகளும் வெளிவந்துள்ளன. தனது “கவிதைப்பூகள்”  என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறார். சிந்தனை தரும் மேன்மையை உணர்த்தும் அவரது இரு கவிதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    எண்ணமும், சிந்தனையும்!
    ______________________________________

    எண்ணமும் செயலும் ஒன்றுபட வேண்டும்
    வாழ்வினில் உயர்ந்தநிலை பெறவேண்டும்!
    நாம் சிந்திப்போம்! கடலின் வீரியத்தை
    எழும்பியடங்கும் அலைகளே உணர்த்தும்!

    மரத்தை எண்ணிச் சிந்தித்தால் அதில் துளிர்க்கும்
    இலைகளே அதன் பசுமையே நமக்கு உணர்த்தும்!
    நெருப்பினைச் சிந்தித்தால் உமிழப்படும்
    வெப்பமும் வெளிச்சமும் ஆற்றலை உணர்த்தும்!

    சித்திரங்கள் என்பது வண்ணங்கள் அன்றி வேறில்லை
    நாம் என்பது நம் எண்ணங்கள் அன்றி வேறில்லை
    நமக்குள் தோன்றி மறைந்தாலும் நம்மை நிழலாக்கி விட்டுத்
    தம்மை நிஜமாக்கி கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!

    நம் எண்ணங்களே உணர்த்துகின்றன நம்மை நமக்கும் பிறர்க்கும்
    துணிந்தபின் மனமும் எண்ணமும் துயரம் கொள்ளாது என்றும்!
    துயரமடைந்த எண்ணங்களுக்கு அதற்குமாறாக உயரத்திற்கு
    அழைத்துச் செல்லத் தெரிந்தவை நம் உத்வேக எண்ணங்கள்!

    நமக்குள் தோன்றும் எண்ணங்கள் ஆயிரம் இருந்தாலும்
    நல்லெண்ணம் தீயஎண்ணம் என மறைந்திருந்தாலும்
    தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் தந்திரம் மிக்கவை நம் எண்ணங்கள்!
    நல்லெண்ணமும், நற்செயலும் வாழ்வின் வழிகாட்டி என நினையுங்கள் !
    ***

    மனிதனே சற்றே நினைத்துப்பார்
    ______________________________________

    எல்லாவற்றிற்கும் காரணம் ஆசை என்று அறிந்தே
    நம் கைவிட்டு போகும் நாணயமில்லாத நாணயங்கள் !

    பேராசையால் கைதவறிய வாய்ப்புக்கள்
    நம்மை பார்த்து தொலைவில் இருந்தபடி நகைக்கின்றது !

    மனதை கல்லாக்கி கைக்கு எட்டியதை
    வாய்க்கு எட்டாததைக் கண்டு ஏமாந்த போது
    வறட்டுக் கவுரத்திற்காக விலக்கி வைத்தால்
    புரிந்ததும், புரியாததும் சேர்ந்து
    தொலைந்துபோன காலகட்டத்தில் !

    பெருமைக்காக நட்புகொண்டு, கைகுலுக்கி,
    அவசியங்களுடன், அத்தியாவசியங்களும்
    இழக்கம் பொழுது ,ஏற்பட்ட இழப்பின் வலிகள் !

    மூட நம்பிக்கையுடன் ஜாதி, மத விழுதுகளை நம்பி,
    பகுத்தறிவு வேர்களை புறந்தள்ளியதால்
    அவனியில் சிக்கித் தவிக்கும் மனிதம்!

    கிடைத்ததை கொண்டு திருப்தி கொள்ளாமல்
    கடந்ததை எண்ணி வருந்துவதால் எக்ககாரணம்மின்றி
    கரைந்துபோகும் மனிதம்.!

    எண்ணுபவர் – விழிப்பர்
    விழிப்பவர் – உழைப்பர்
    உழைப்பவர் – உயர்வர்
    உயர்வோர்க்கே இவ்வுலகம்!

    இவையாவும் உய்வோர்க்கு
    புரிதல் எப்போது;
    மனிதமும், மனிதநேயமும் உயர்வதெப்போது?

     

    வல்லமையாளர் திரு. ரா. பார்த்தசாரதி அவர்களைப் பாராட்டி அவர் தனது இலகியப் பயணத்தில் வெற்றிகள் பல பெற வல்லமை நண்பர்கள் வாழ்த்துகிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    தொடர்புக்கு:
    https://plus.google.com/113104518638625010842/

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பிப்ரவரி 9, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு மு​னைவர் சி.​சேதுராமன் அவர்கள்

     

    S. Sethuraman of Tamil Department of H. H. Rajahs College2

     

    வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராக, வல்லமைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பாராட்டப்படுபவர் புதுக்​கோட்​டை -மாட்சி​மை தங்கிய மன்னர்    கல்லூரியின் தமிழாய்வுத்து​றை தலைவரான மு​னைவர் சி.​சேதுராமன் அவர்கள். சென்ற வெள்ளியன்று வல்லமை இதழில் இவர் வெளியிட்ட “கோவலன் கதைப்பாடலில் சிலம்பின் செல்வாக்கு”  என்ற ஒப்பாய்வுக் கட்டுரையின் சிறப்பு கண்டு இவரை வல்லமையாளர் என்று பாராட்டி மகிழ்ச்சி அடைகிறோம்.

    இணையத்தமிழ் இதழ்களின் வாசகர்களுக்கு மு​னைவர் சி.​சேதுராமன் அவர்கள் நன்கு அறிமுகமானவர். வல்லமை, திண்ணை, தமிழ்முரசு, முத்துக்கமலம் ஆகிய இதழ்களில் தொடர்ந்து பல கதை, கவிதை, நூல்மதிப்புரை போன்றவற்றை எழுதி வருகிறார். குறிப்பாக, தமிழ் இலக்கியக் கட்டுரைகளை அதிகம் எழுதி வருபவர் மு​னைவர் சி.​சேதுராமன் (இவரது பிற படைப்புகளின் பட்டியலை இத்தளத்தில் காணலாம்).

    S. Sethuraman of Tamil Department of H. H. Rajahs College

    “கோவலன் கதைப்பாடலில் சிலம்பின் செல்வாக்கு” ஒப்பாய்வுக் கட்டுரையில், உரையாசிரியர்களால் அதிகளவில் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையதும்… தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்டதும்… பண்டைய தமிழ் மக்களின் வாழ்வியல் கூறுகள் பெருமளவில் இடம் பெற்றதால் குடிமக்கள் காப்பியம் என்ற சிறப்பு கொண்ட சிலப்பதிகாரம், காலங்கள் பல கடந்தாலும் பிற்காலத்தில் எழுந்த இலக்கியங்களிலும் ​பெரும்தாக்கத்​தை ஏற்படுத்துவதில் முதன்​மையான இடத்தை வகிப்பதை கட்டுரை ஆசிரியர் பாராட்டிச் செல்கிறார். சிலம்பின் தாக்கத்தின் விளைவாக பிற்காலத்தில், சிலம்பை ஒட்டி தோன்றிய, புகழ்​பெற்ற புலவர் புக​ழேந்தியாரின் ​’பெயரில்’ “பி.இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ்” பதிப்பகதாரால் வெளியிடப்பட்ட “பெரிய எழுத்து ​கோவலன் க​தை” என்ற நாடக நூலை சிலம்புடன் ஒப்பிட்டு ஆராய்கிறார். ஒப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெரிய எழுத்து ​கோவலன் க​தை நாட்டுப்புற உடுக்கடிக் கதைப்பாடல் அ​மைப்பி​ல் இயற்றப்பட்ட நூலாகும்.

    ஆய்வுக்கட்டுரையில் இவ்விரு நூலிலும் வேறுபட்டுள்ள கடவுளர்களின் துதி துவக்கம் பற்றி விளக்குகிறார். மங்கல வாழ்த்துப் பாடலில் ​கோவலன் கண்ணகி திருமண நிகழ்விலிருந்து சிலப்பதிகாரத்தின் க​தையானது ​​தொடங்குவதும், ஆனால் அது போலன்றி கோவலன் கதை நூலானது கண்ணகி, ​கோவலன், மாதவி, வசந்தமா​லை உள்ளி​ட்டோரின் முற்பிறப்பு வரலாற்​றைக் கூறுவதிலிருந்து ​தொடங்கும் வேறுபாடுகளை ஒப்பிடுகிறார். அத்துடன் இரு நூல்களிலும் கதை மாந்தர்க்களை அறிமுகப்படுத்தும் முறையையும் ஒப்பிடுகிறார்.

    new-kovalan

    சிலம்பி​ல் கண்ணகி தெய்வமான பின்​பே கதை நி​றைவுறும் முறையையும், ஆனால் கோவலன் கதையின் ​தொடக்கத்தில் இருந்தே கண்ணகி காளி​தேவியாகவே காட்டப்படும் வேற்றுமையை சுட்டுகிறார். பரத்​தைய​ரை நாடினால் எவ்வா​றெல்லாம் துன்புற ​நேரிடும் என்பதை மாதகி வசந்தமா​லை ஆகி​யோரின் வழி வலியுறுத்துவது புக​ழேந்தியாரின் முக்கியமான நோக்கமாக அமைந்ததையும், சிலம்பில் இடம்பெறாது கோவலன் கதையில் மட்டுமே அமைந்துள்ள பல காட்சிகளையும் அறியத் தருகிறார்.

    அரசியலில் பிழை செய்தவர்களுக்கு அறமே கூற்றுவன், பெருமை மிக்க பத்தினியைப் பெரியோர் தொழுவார், ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும் என்ற மூன்று நீதிகளை வலியுறுத்த இயற்றப்பட்ட சிலம்பின் நீதிகளை கோவலன் கதை எவ்வாறு கையாள்கிறது என்று ஆராய்கிறார் கட்டுரை ஆசிரியர். சிலம்பின் நீதிகளுள் ஒன்றான “ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்” என்பது அதன் பின்வந்த அ​னைத்து இலக்கியங்களிலும் ​பெருந்தாக்கத்​தை ஏற்படுத்தியது என்பதைச் சுட்டிக்காட்டி, “பெரிய எழுத்து ​கோவலன் க​தை”யிலும் ஊழ்வி​னை கோட்பாடு முக்கியத்துவம் வகிப்பதைக் காட்டுகிறார். பின்னால் நடக்கப் ​போவ​தை முன்ன​ரே கூறுதல், அரசியல் பி​ழைத்தவ​ரை அறம் அழிக்கும் என்பது போன்ற நிகழ்வுகளை இரு நூல்களிலும் ஒப்பிட்டு விளக்குவது இலக்கியச் சுவை மிகுந்த வகையில் அமைந்துள்ளது.

    இலக்கிய நயம் பாராட்டும் பல கட்டுரைகளை வல்லமை வாசகர்களுக்கு மேலும் இவர் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், சிறந்த கட்டுரையைத் தந்தமைக்குப் பாராட்டி, வல்லமையாளர் மு​னைவர் சி.​சேதுராமன்  அவர்களை வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தொடர்புக்கு:
    மின்னஞ்சல்: malar.sethu@gmail.com
    மு​னைவர் சி.​சேதுராமன்,
    தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி,
    புதுக்​கோட்​டை.

     

    தரவுகள் தந்துதவிய தளங்கள்:
    Dr. S. Sethuraman of Tamil Department of H. H. Rajahs College, Pudukkottai –
    http://www.hhrajahs.com/mech.html#11
    http://www.muthukamalam.com/writer/sethuramandr.html
    http://munaivaramani.blogspot.com/2014/03/300114.html

     

    குறிப்பு:
    பி.இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ் பதிப்பகதாரால் வெளியிடப்பட்ட “பெரிய எழுத்து ​கோவலன் க​தை” என்ற நாடக நூலினைப் படிக்க விரும்புபவர், தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல் சேகரத்தில் இருந்து அதனை தரவிறக்கிக் கொள்ளலாம் – http://www.tamilheritage.org/old/text/ebook/kovalan/index.html.

    Share
  • பெருமை கிடைப்பது செய்யும் தொழிலாலா?

    — தேமொழி.

    பெருமை கிடைப்பது செய்யும் தொழிலாலா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் குறள் – ஒரு மீள்பார்வை

     

    திருக்குறள்

     

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான். – குறள் 972 [அதிகாரம்: பெருமை]

    திருக்குறளின் பெருமை என்ற அதிகாரத்தில் உள்ள இக்குறளுக்குப் பொருள் விளக்கம் தர முற்படுவோர், உலகில் பிறந்தவர் யாவரும் ஒரே மாதிரியாகப் பிறந்திருந்தாலும், ஒருவர் செய்யும் தொழிலே அவருக்குப் பெருமையைத் தேடித் தருகிறது என விளக்கம் தர முற்படுகின்றனர். எக்காலத்திற்கும்… உலகில் எங்கு பிறந்த மக்களுக்கும் பொருந்துகின்ற ஒரு பொது மறையென போற்றப்படும் திருக்குறளின் வழியே வள்ளுவர் இக்கருத்தைத்தான் முன் வைத்திருப்பாரா என ஆராய்கிறது இக்கட்டுரை. செய்யும் தொழிலால்தான் பெருமை என்று கூறுகிறதா இக்குறள்?

    திருக்குறளில் “தொழில்” என்ற சொல் வருவது மொத்தம் எட்டு குறள்களில். அக்குறள்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டதுடன், அவற்றுக்கு மு. வரதராசனார் கொடுத்த விளக்க உரைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் “தொழில்” என்ற சொல் என்ன பொருளில் இக்குறள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிபிடப்பட்டுள்ளது.

    தொழில் என்ற சொல் கொண்ட குறள்கள்:
    [1]
    உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல்
    அனைத்தே புலவர் தொழில் – குறள் 394 [கல்வி]

    உரை:
    மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

    தொழில் = “செயல்” என்றப் பொருள் தருகிறது

    [2]
    அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
    அஞ்சல் அறிவார் தொழில் – குறள் 428 [அறிவுடைமை]

    உரை:
    அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

    தொழில் = “செயல்” என்றப் பொருள் தருகிறது

    [3]
    குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்
    வடு அன்று வேந்தன் தொழில் – குறள் 549 [செங்கோன்மை]

    உரை:
    குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்.

    தொழில் = “கடமை” என்றப் பொருள் தருகிறது

    [4]
    எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
    வல்லறிதல் வேந்தன் தொழில் – குறள் 582 [ஒற்றாடல்]

    உரை:
    எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

    தொழில் = “கடமை” என்றப் பொருள் தருகிறது

    [5]
    விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது
    சொல்லுதல் வல்லார் பெறின் – குறள் 648 [சொல்வன்மை]

    உரை:
    கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து இனிதாக சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.

    தொழில் = “ஏவல்” (பணி/கட்டளை) என்றப் பொருள் தருகிறது

    [6]
    நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும்
    பேணாமை பேதை தொழில் – குறள் 833 [பேதைமை]

    உரை:
    தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.

    தொழில் = “செயல்” என்றப் பொருள் தருகிறது

    [7]
    காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
    யாமத்தும் ஆளும் தொழில் – குறள் 1252 [நிறையழிதல்]

    உரை:
    காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.

    தொழில் = “வேலை” என்றப் பொருள் தருகிறது

    [8]
    பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
    செய் தொழில் வேற்றுமையான் – குறள் 972 [பெருமை]

    மு.வ உரை:
    எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
    தொழில் = “தொழில்” (வேலை) என்றப் பொருள் கூறுகிறார் மு. வ.

    சாலமன் பாப்பையா உரை:
    எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.
    தொழில் = “செயல்” என்றப் பொருள் கூறுகிறார் பாப்பையா.

    இனி “பெருமை” என்றே ஓர் அதிகாரம் எழுதிய வள்ளுவர், அதில் உள்ள பத்து குறள்கள் வழியே பெருமை பற்றி விளக்குவதைக் காண்போம். குறள்களைத் தொடர்ந்து அவற்றின் உரைகளும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

    திருக்குறள் அதிகாரம்: “பெருமை”:
    ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
    அஃதிறந்து வாழ்தும் எனல். – குறள் 971

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான். – குறள் 972

    மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
    கீழல்லார் கீழல் லவர். – குறள் 973

    ஒருமை மகளிரே போலப் பெருமையும்
    தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. – குறள் 974

    பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
    அருமை உடைய செயல். – குறள் 975

    சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
    பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு. – குறள் 976

    இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
    சீரல் லவர்கண் படின். – குறள் 977

    பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து. – குறள் 978

    பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
    பெருமிதம் ஊர்ந்து விடல். – குறள் 979

    அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும். – குறள் 980

    உரை:
    ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்லவை செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே. (குறள்: 971)
    இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

    நல்ல பண்புகள் (பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர். (குறள்:973)
    இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது பண்பு நிறைந்த செயலின் தன்மை.

    தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.(குறள்: 974)
    இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

    எத்தனை நெருக்கடி வந்தாலும் பிறர் செய்வதற்கு அரிய செயல்களை உரிய வழிகளில் செய்து முடிப்பவர் பெருமை உடையவர். (குறள்: 975)
    இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

    பெருமைக்கு உரியவர்களைப் பின்பற்றி அவர் மரபைக் காப்போம் என்னும் நல்லெண்ணம் சிறியவர் மனத்துள் இராது. (குறள்: 976)
    இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை .

    பணம், படிப்பு, பதவி ஆகிய சிறப்புகள் சிறுமைக்குணம் உடையவரிடம் சேர்ந்தால், அவர்களின் செயல்கள் அகங்காரத்தோடு வருவனவாம். (குறள்: 977)
    இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

    பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர். (குறள்: 978)
    இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

    பெருமைப்பட்டுக் கொள்ளக் காரணங்கள் இருந்தும் செருக்கு இல்லாமல் இருப்பது பெருமை; காரணம் இல்லா‌மலேயே பெருமைப்பட்டுக் கொள்வது சிறுமை. (குறள்: 979)
    இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

    பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர். (குறள்:980)
    இக்குறளின் பொருள் குறிப்பது: ஒருவருக்குப் பெருமையைத் தருவது ஒருவரது செயலின் தன்மை.

    இவற்றைத் தொகுத்து வழங்கினால், உற்சாகத்துடன் கூடிய விடாமுயற்சி கொண்ட செயலால் செயற்கரிய செய்தல், சிறந்த பண்புகளை வெளிப்படுத்தும் செயல்களைச் செய்தல், நெறி வழுவாத சிறந்த செயல்களைச் செய்தல், பிறரால் இயலாதவற்றை தக்க வழியில் செய்து முடித்தல், நன்மரபைப் பேணும் செயல், நிலை உயரும்பொழுதும் பணிவுகொண்ட செயல், செருக்கற்ற செயல், ஆணவமற்ற செயல், பிறரின் நற்பண்புகளை மட்டும் மதிக்கும் செயல் என அறிய செயல்களை நெறிமுறை வழுவாது செய்து முடித்தலும், செருக்கு தவிர்த்து ஆணவமற்று பிறரை மதிக்கும் செயகள்தாம் மீண்டும் மீண்டும் பல வழிகளிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இப்பொழுது “பெருமை” அதிகாரத்தில் வள்ளுவர் குறிப்பிடும் பிற குறள்களின் வழி அவர் ஒருவருக்கு “பெருமை” தருவது எது என அறிவுறுத்துகிறார் என ஒப்பிட்ட பிறகு மீண்டும் ஒரு முறை “பிறப்பொக்கும்” குறளை மீள்பார்வை செய்தோமானால் …

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான். – குறள் 972

    என்ற குறளுக்கு பாப்பையா கூறும் “எல்லா மக்களும் பிறப்பால் சமம‌ே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்” பொருள்தான் மிகவும் பொருந்தி வருகிறது.

    “எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை” என்ற மு.வ உரை, குறிப்பாக “செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடு” என்பது பொருந்தவில்லை. அதாவது இக்குறளில் தொழில் என்பது “வேலை” என்றப் பொருள் தரவில்லை. அதனால் தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் ஒருவர் சிறப்பு பெறுவதில்லை, ஒருவருடைய நற்செயல்களால் மட்டுமே அவர் சிறப்பு பெறுகிறார் என்பது புலனாகிறது. அந்த அதிகாரத்தில் ஏனைய குறள்கள் நற்பண்பு கொண்ட செயல்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, பிறப்பொக்கும் என்று தொடங்கும் குரல் மட்டும் ஒருவர் செய்யும் தொழிலினால் உயர்வு தாழ்வு ஏற்படுகிறது என்றுப் பேச வழியில்லை. அவ்வாறு பொருள் கொள்ள முற்படுவது வள்ளுவர் வலியுறுத்தும் பொருளுக்கு மாறானப் பொருளைக் கொள்வதாக அமையும்.

    இதனை நாம் மேலும் தெளிவு படுத்தலாம். வள்ளுவர் ஒரே கருத்து கொண்ட குறளை, அக்கருத்தை வலியுறுதும் நோக்கில் மற்றொரு பொருத்தமான இடத்திலும், பிறிதொரு அதிகாரத்திலோ அல்லது அதே அதிகாரத்திலோ வேறொரு குறளாக வடித்திருப்பார். குறிப்பாக “மருந்து” அதிகாரத்தில் ஒரே பொருள் கொண்ட குறள்களைக் காணலாம். இது வள்ளுவர் தமது கருத்தை வலியுறுத்தும் பாங்கு.

    அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
    துய்க்க துவரப் பசித்து. – குறள் 944

    தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
    நோயள வின்றிப் படும். – குறள் 947

    முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும். (குறள்: 944)

    பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும். (குறள்: 947)

    என்ற இரு குறள்களின் மையக் கருத்தும் பசித்துப் புசிக்கவே வலியுறுத்துகிறது.

    “பெருமை” என்ற அதிகாரம் எழுதிய வள்ளுவர் பெருமை பற்றி அந்த அதிகாரம் தவிர்த்து பிற இடங்களிலும் பெருமை பற்றி குறிப்பிட்டுச் செல்கிறார். திருக்குறளில் “பெருமை” என்ற சொல் மொத்தம் 16 குறள்களில் இடம் பெறுகின்றன. இவற்றில் குறள்கள் 974, 975, 978, 979 ஆகிய நான்கு குறள்களும் பெருமை அதிகாரத்திலேயே இருப்பதுவும், இவை சற்று முன்னர் பொருள் விளக்கம் நோக்கப்பட்ட குறள்களுமாகும். இவற்றைத் விலக்கி, பெருமை என்ற சொல் மற்ற குறள்களில் என்ன பொருளில் வள்ளுவரால் கையாளப்பட்டுள்ளது என்பதை காண்போம்.

    [1]
    ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு. – குறள் 21

    உரை:
    ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

    பெருமை தருவது: சிறந்த ஒழுக்கம் பெருமை தருகிறது.

    [2]
    துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
    இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. – குறள் 22

    உரை:
    பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

    பெருமை தருவது: ஆசைகளை விட்டு விலகிய ஒழுக்கம் பெருமை தருகிறது.

    [3]
    இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு. – குறள் 23

    உரை:
    பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

    பெருமை தருவது: அறவழியில் நடப்பது பெருமை தருகிறது.

    [4]
    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும். – குறள் 28

    உரை:
    பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

    பெருமை தருவது: பிறருக்கு அறவழியில் வாழ வழிகாட்டும் செயல் பெருமை தருகிறது.

    [5]
    நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்துஇவ் வுலகு. – குறள் 336

    உரை:
    நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

    பெருமை: நிலையாமை என்ற பண்பினைக் குறிக்கிறது.

    [6]
    எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
    ஆன்ற பெருமை தரும். – குறள் 416

    உரை:
    எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

    பெருமை தருவது: நன்மை தரும் சொற்களை கேட்பது உயர்வை பெருமையைத் தருகிறது.

    [7]
    சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
    சுற்றமாச் சூழ்ந்து விடும். – குறள் 451

    உரை:
    பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

    பெருமை: தீய செயல் செய்யும் மக்களை விளக்கும் பெரியோரின் இயல்பு பெருமை எனக் காட்டப்படுகிறது.

    [8]
    பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல். – குறள் 505

    உரை:
    (மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

    பெருமை தருவது: ஒருவரின் செயல்களே அவருக்கு உயர்வை பெருமையைத் தருகிறது.

    [9]
    அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும். – குறள் 611

    உரை:
    இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

    பெருமை என்ற சொல் வலிமை, ஆற்றல், சக்தி என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறது.

    [10]
    பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
    பெண்ணே பெருமை உடைத்து. – குறள் 907

    உரை:
    மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

    பெருமை தருவது: பெண்ணின் நான்னம் என்ற இயல்பான பண்பு பெருமையைத் தருகிறது.

    [11]
    அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும். – குறள் 980

    உரை:
    பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.

    பெருமை பெருந்தன்மை என்ற பண்பான செயலைக் குறிக்கிறது.

    [12]
    கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
    பெருமையின் பீடுடையது இல். – குறள் 1021

    உரை:
    குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

    பெருமை தருவது: உரிய கடமையைச் செய்யும் செயல் பெருமையைத் தருகிறது.

    இங்கு குறிப்பிட்டுள்ள பெருமை என்ற சொல் கொண்ட 12 குறள்களின் வழியாகவும் வள்ளுவர், ஒருவருக்கு பீடு தரும் உயர்வை… பெருமையைத் தருவது அவருடைய நன்னெறி வழி நடக்கும் செயல் என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

    குறிப்பாக,
    பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல். – குறள் 505
    என்ற குறள் பிறப்பொக்கும் குறளின் பொருளையேத் தருகிறது.

    எனவே, பிறப்பொக்கும் குறளுக்கு, “பிறப்பில் அனைவரும் சமமாக இருந்தாலும், ஒரே போன்று பிறந்தாலும் ஒருவரை பெருமை மிக்க இடத்திற்கு உயர்வடையச் செய்வது அவர் செய்யும் செய்கையே என்ற விளக்கமே பொருந்துகிறது. ஒருவர் செய்யும் அருஞ்செயல்கள் அவருடைய மதிப்பை உயர்த்துவதையும், தாகாத செயல்கள் அவர் புகழை சிறுமை படுத்துவதையுமே” வள்ளுவர் குறிப்பிடுகிறார் ஒருவர் செய்யும் ஊழியத்திற்கும் பெருமைக்கும் தொடர்பில்லை, மக்கள் மனதில் இக்கருத்திற்கு மாறான பிழையான எண்ணங்கள் பதிந்திருந்தாலும் உண்மையில் நற்செயல்களே அவர் எத்தொழில் செய்தாலும் ஒருவருக்குப் பெருமையைச் சேர்க்கும். ஒருவருடைய குடிபிறப்பினாலோ அல்லது செய்யும் தொழிலாலோ பெருமை வருவதில்லை. அவரது நற்செயல்களே பெருமை தரும்.

    செய்யும் தொழிலால் வேறுபாடு காண்பிப்பது வர்ணாஸ்ரமம், அதனால் செய்யும் தொழிலால் ஒருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பாகுபாடு காட்டுவது நான்கு வர்ண குண என்பது ஆரியர் மரபு. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்ல வரும் வள்ளுவன் இங்கு நான்கு வர்ண குண வேறுபாடுகளைக் குறிக்கவில்லை. அது ஒருவர் குணநலனைக் குறிக்கும். ஒருவரது செய்கையே அவருக்கு உயர்வையும் பெருமையையும் அளிக்கும் என்பது பெருமை அதிகாரத்தில் வள்ளுவர் குறிக்கும் பிற குறள்களின் பொருளுடன் ஒப்பிட்டுக் காண்கையில் தெளிவாகிறது. இக்குறள் காலப்போக்கில் நான்கு வர்ண உயர்வு தாழ்வினை நம்புபவர்கள், அதனால் வரும் பலனை விரும்புபவர்கள் மூலம் மாற்றுப் பொருள் கொடுக்கும் நிலையினை அடைந்திருக்கிறது. வள்ளுவர் சொல்ல நினைக்காத கருத்தை மக்கள் மனதில் திணிக்க மிகத் தவறாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

    நன்றி: அமீரக “தமிழ்த்தேர்” பதிப்பு

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    பிப்ரவரி 2, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள்

     

    KALAIMAHEL HIDAYA RISVI-

    வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள். தனது கவித்திறமையால் வல்லமை வாசகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வரும் கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள் சென்ற வாரம் பாரிலே பிறப்பான்….!“, “யாஅல்லாஹ்!” என்ற இரு கவிதைகளை வல்லமையில் வெளியிட்டிருந்தார். கருத்தோட்டம், சொல்லோட்டம் இரண்டுமே அருமையாக அமைந்திருந்த கவிதை என்றப் பாராட்டினை “பாரிலே பிறப்பான்…” கவிதை பெற்றது. கவிஞரது அருமையான கவிதைக்காக இவ்வார வல்லமையாளராக வல்லமை குழுவினர் கலைமகள் ஹிதாயா அவர்களைப் பாராட்டுகிறோம்.

    இலங்கை கல்முனையைச் சார்ந்த கவிஞர் கலைமகள் ஹிதாயா; கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, ஹிதாயா மஜீத், மருதூர்நிஸா என்ற பெயர்களில் தனது இலக்கியப்படைப்புகளை அளித்து வருகிறார். இளமையிலேயே இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்ட கலைமகள் ஹிதாயா அவரது பதினாறாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் துவங்கியவர். முதல் முயற்சியிலேயே இவரது “மீண்டும்” என்ற புதுக்கவிதையும், “அன்னை” என்ற மரபுக் கவிதையும் வெவ்வேறு பத்திரிக்கையில் ஒரே நாளில் பிரசுரிக்கப்பட்டது என்ற சிறப்பினைப் பெற்றவர்

    பதின்ம வயதில் தொடங்கி தொடர்ந்து மூன்று பத்தாண்டுகளாக இவர் எழுத்தின் வீச்சு மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, கட்டுரை, நெடுங்கதை, மெல்லிசைப்பாடல், விமர்சனம் என, பற்பல பரிமாணங்களில் மிளிர்கிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுக்கவிதைகளையும், மரபுக்கவிதைகளையும் எழுதியுள்ளார்.

    நாளையும் வரும், தேன் மலர்கள், இரட்டைத் தாயின் ஒற்றைக் குழந்தை என்ற புதுக்கவிதை மற்றும் மரபுக்கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். முப்பது சிறுகதைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், பற்பல நூல் மதிப்புரைக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இலங்கையின் பல பத்திரிக்கைகளிலும், இந்தியா, ஆஸ்திரேலியா பத்திரிக்கைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன. இலங்கை வானொலியில் பல நிகழ்ச்சிகளில் குரல்கொடுத்துள்ள இவர் ரூபவாகினிக் கவியரங்குகளிலும் பங்குகொண்டுள்ளார். அத்துடன் இலங்கை வானொலி மாதர் மஜ்லிஸ் பிரதித் தயாரிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

    இவரது இலக்கிய ஆர்வம் காரணமாக “தடாகம் கலை இலக்கிய வட்டம்” என்ற அமைப்பைத் துவக்கி, அதன் அமைப்பாளராகத் தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் சார்பில் பல எழுத்தாளர்களை கௌரவித்துள்ளார், நூல்களின் வெளியீட்டு விழாக்களையும் நடத்தியுள்ளார். தடாகம் கலை இலக்கியச் சிற்றிதழ் ஒன்றினையும் வெளியிட்டு வருகிறார்.

    கவிதை இலக்கிய ஆர்வத்தின் காரணமாக பல கவிதைப்போட்டிகளில் பங்கு பெற்று தனது கவித்திறனை வெளிப்படுத்தியுள்ளார். அகில இலங்கை மற்றும் மாவட்ட அளவில் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக ஜனாதிபதி விருது, ரத்ன தீப சிறப்பு விருது பெற்ற முதலாவது பெண் கவிஞர், இளம் படைப்பாளிக்கான விருது, கலை அரசி விருது, கவித்தாரகை விருது, கலைமுத்து விருது, கவிதைச் சிற்பி விருது, சாம ஸ்ரீ, தேசகீர்த்தி, கலாசூரி, சமூக ஜோதி, பாவரசு, காவியத் தங்கம், இலங்கையின் சிறந்த பெண் கவிஞர் பட்டங்களும் என இவரது பட்டங்கள் மற்றும் விருதுகளின் பட்டியல் விரிகிறது.

    KALAIMAHEL HIDAYA RISVI4

    இவரது கவிதைத்திறனை படித்து மகிழ கவிஞரின் இவ்வார வல்லமைக் கவிதையான “பாரிலே பிறப்பான்….!” கவிதையுடன் மேலும் இரு கவிதைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

     

    பாரிலே பிறப்பான்….!
    ______________________________________________________

    மகிமை மிக்கதோர் மானுடப் பிறவி
    அணுவிலும் நுண்ணிய கருவினில் இருந்து
    அன்னை வயிற்றினுள் அடக்கமாய் வளர்ந்து
    பத்துத் திங்களில் பாரிலே பிறப்பான்….!

    இருண்ட சூழலை மாற்றிய பின்னே
    ஒளி உலகத்தை உவப்புடன் பார்க்க
    விழிகள் திறப்பான் விருப்புடன் கை கால்
    ஆட்டி மகிழ்ந்து அகிலத்தை ரசிப்பான்…..!

    தத்தித் திரிந்து தளர்நடை பயின்று
    பள்ளிப் பருவ வாசல் ஏறி
    இளைஞனாகி என்றும் வனப்புடன்
    உலக அரங்கில் நடிப்பினைத் தொடர்வான்….!

    குருடனாய்,செவிடனாய் குடிக்கு அடிமையாய்
    அறிஞனாய்க் கலைஞனாய் ஆயிரம் வேஷம்
    ஏதோ ஒன்றை இட்டுக் கொள்வான்
    எல்லாம் மனம் போல் இகத்தில் செய்வான்….!

    முதுமை தோன்றுமே நரைகள் தாவுமே,
    பிள்ளையைப் பெற்றவன் பேரனைக் காண்பான்
    போகப் போக நடை தளர்ந்திடுவான்
    பூமியில் ஒரு நாள் உறுதியாய் இறப்பான்…..!

    ***

     

    கல்வி ஒழுக்கம்
    ______________________________________________________

    கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
    கற்று நல் வாழ்வினில் நடைபோடு
    செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
    சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும்
    (கல்வி ஒழுக்கம்)

    வாருங்கள் உயர்வோம் வாழ்க்கையிலே
    வலம் புல பெறுவோம் நம்பிக்கையிலே
    யாருக்கும் ஒழுக்கம் புகழ் கொடுக்கும்
    நாட்டுக்கும் அமைதி நலம் படைக்கும்
    (கல்வி ஒழுக்கம் )

    பூத்திடும் மலர்கள் சோலையிலே
    புலர்ந்திடும் விடியில் காலையிலே
    ஆரத் தொழுவோம் நலம் செர்த்திடுமே
    அன்பினை உலகெங்கும் ஊட்டிடவே
    (கல்வி ஒழுக்கம் )

    ஊடக மென்பது உலகாளும்
    உன்னத மான செயலாகும்
    நாடக உலகம் நமதாகும்
    நன்மைகள் உழைப்பில் விளைவாகும்
    (கல்வி ஒழுக்கம் )

    கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
    கற்று நல் வாழ்வினில் நடைபோடு
    செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
    சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும்

    ***

     

    கிள்ளி விளையாடாதீர்கள் ….!
    ______________________________________________________

    வாழ்க்கையை குழி தோண்டி புதைத்துக்
    கொண்டுதான் வாழுகின்றீர்கள்
    மனித ஆத்மாவுக்கு
    பகையை புகையாய் மாற்றுகின்றீர்கள்
    நம்பிக்கையான உள்ளங்களை
    துரோகிகளாக மாற்றுகின்றீர்கள்
    நாய்க்கு கொடுக்கும் மதிப்பைகூட,
    மனிதர்களுக்கு காட்டாமல் இருக்கின்றீர்கள்
    உடமைகளைக் கூட
    தீயிட்டு எரிக்கிண்றீர்கள்
    மான மரியாதைகளை காற்றில் பறக்க விடுகின்றீர்கள்
    உங்களை நினைத்து நீங்களே
    தலைக்கனம் பிடித்து புளகாங்கிதமடைகின்றீர்கள்
    ஏழை எளியோரைக் கண்டால்
    கண்டும் காணாமல் போகின்றீர்கள்
    அடுத்தவனின் முன்னேற்றத்தை தடுத்து
    தான் உயர நினைக்கின்றீர்கள்
    துரோகத்தை அன்பாய் காட்டி
    அடுத்தவன் சோற்றில்
    ஏன்
    சேற்றைப் பூசுகிண்றீர்கள் …?

    கவிஞர் கலைமகள் ஹிதாயா அவர்கள் தொடர்ந்து இலக்கியப்பணியாற்றி மேலும் பல புகழ் உச்சங்களை அடைய வல்லமைக் குழுவிரின் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    கவிஞர் கலைமகள் ஹிதாயாவின் தொடர்பிற்கு:
    மின்னஞ்சல்: s.k.risvi@gmail.com
    ஃபேஸ்புக்: https://www.facebook.com/hidaya.risvi
    கூகுள் ப்ளஸ்: https://plus.google.com/104217741513778703421/
    யூ டியூப்: https://www.youtube.com/user/kalaimahelhidaya123
    வலைப்பூ: http://www.kalaimahelhidayarisvi.blogspot.com/

     

    கவிஞர் கலைமகள் ஹிதாயாவின் பல்வேறு வலைப்பூக்கள்:
    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி – http://www.kalaimahelhidayarisvi.blogspot.com/
    கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் கவிதைகள் – http://www.kalaimahelhidayapoem.blogspot.com/
    கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் சிறுகதைகள் – http://kalaimahelhidayarisvishortstories.blogspot.com/
    கலைமகள் ஹிதாயாவின் பாடல்கள் – (http://kalaimahelhithayavinpaadalgal.blogspot.com/
    கலைமகளின் தாய்வாக்கு – http://kalaimahelinthaaivaakku.blogspot.com/
    வசந்தகாலம் – http://wwwvasanthakaalam.blogspot.com/
    விரியும் பூக்கள் (நூலாய்வு) – http://www.kalaimahelhidayapublication.blogspot.com/
    தடாகம் கலை இலக்கிய வட்டம் – http://www.thadagamkalaiilakkiyavattam.blogspot.com/
    இஸ்லாமியப் பூங்கா – http://wwwislamiyapoonga.blogspot.com/
    ஹிதயாவின் தரும் மருத்துவத் தகவல்கள் – http://hidayavummaruththuvamum.blogspot.com/

     

    தகவல் தந்துதவிய விக்கிபீடியாவிற்கு (https://ta.wikipedia.org/s/19jr) நன்றி
    படங்கள் உதவி: இணையதள வெளியீடுகள்

     

     

    Share
  • கனவு காணுங்கள் …

    தேமொழி.

    poem-dreams

     

     

    கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
    கனவுகள் இறந்து விட்டால்
    வாழ்க்கை பறக்கவியலா
    சிறகொடிந்த பறவையாகிவிடும்

    கனவுகளை இறுகப் பற்றிக்கொள்
    கனவுகளை இழந்து விட்டால்
    வாழ்க்கை பனியுறைந்த
    பாலை நிலமாகிவிடும்

     

     

    கனவுகள் என்ற லாங்க்ஸ்டன் ஹியூஸ் (Dreams – by Langston Hughes)  கவிதையை மொழியாக்கம் செய்தது தேமொழி

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜனவரி 26, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு முனைவர் மு.பழனியப்பன் அவர்கள்

    palaniappan fb

    வல்லமை இதழின் வாசகர்களுடன் கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனது இலக்கிய மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைப் பகிர்ந்து கொண்டு, சிறந்த இலக்கிய விருந்தளிக்கும் முனைவர் மு.பழனியப்பன்  அவர்களை இவ்வார வல்லமையாளராக அறிவித்து வல்லமைக் குழுவினர் பாராட்டி மகிழ்கிறோம். கடந்த திங்கட்கிழமையன்று வல்லமை இதழில் வெளிவந்த “ஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி”  என்ற கட்டுரைக்காக இவர் வல்லமையாளராக அறிவிக்கப்படுகிறார்.

    புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றிய முனைவர் மு.பழனியப்பன்அவர்கள், தற்போது திருவாடானை – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக தமிழ்த்துறையை முன்னடத்திச் செல்வதுடன் மேலும் பல தமிழ்ப்பணிகளையும் ஆற்றி வருபவர். வள்ளுவனிடமும், கம்பனிடமும் ஆழ்ந்த பற்று கொண்ட மு.பழனியப்பன் ஆண்டுதோறும் நடைபெறும் காரைக்குடி கம்பன் விழாக்கள், உலகத் திருக்குறள் பேரவையின் மாநாடுகள், அழகப்பா பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து வழங்கிய கருத்தரங்கம், சிற்பி பவளவிழா ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளராகவும் தன்னார்வத் தொண்டாற்றி வருபவர். தமிழ் இணையப் பயிலரங்கங்களை நடத்துவதிலும், “ஆய்வுச் சுற்றம்” என்ற தமிழாய்வு இணைய சஞ்சிகையையிலும் பங்காற்றி வருகிறார்.

    new

    இவர் இலக்கியப் பங்களிப்பிற்குச் சான்றாகப் பத்து நூல்களை வழங்கியதுடன், பற்பல கட்டுரைகளையும் இணைய இதழ்களான வல்லமை, திண்ணை, ஜியோதமிழ் ஆகிய இதழ்களில் எழுதி வந்துள்ளார். இவர் எழுதியிருக்கும் “விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்” என்ற நூலிற்காகப் பெருமுயற்சி செய்து 43 நாவல்களைத் தேடிப் பிடித்து, இந்தப் புத்தகத்திற்காக ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். இந்நூலில் இவர் நாவலாசிரியர்களின் படைப்புகளைப் பட்டியலிட்டு, அவர்களது பங்களிப்பையும் பதிவு செய்து, நாவல்களின் கதைச் சுருக்கங்களையும் தொகுத்தளித்திருக்கிறார். இந்நூல் சிறந்த ஆய்வு நூலாகப் பாராட்டப் பட்டதுடன், சாமானியர்களும் படித்துத் தெரிந்துகொள்ள உதவும் சுவாரசியமான தகவல் களஞ்சியம் எனவும் பாராட்டு பெற்றுள்ளது.

    கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இணைய இதழ்களிலும், இணையத்தமிழ்க் குழுமங்களிலும், பல்கலைக்கழக கருத்தரங்கங்களிலும் தனது இலக்கிய மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைப் பகிர்ந்து வந்துள்ளார். தமிழிலக்கியக் கட்டுரைகள், நூலாய்வுக் கட்டுரைகள், தமிழ்மொழி வளர்ச்சி, இணைய மற்றும் கணினித் தமிழ் வளர்ச்சி, சமூகவியல் கட்டுரைகள் போன்ற பிரிவுகளில் கட்டுரைகள் பல வழங்கியுள்ளார்.

    வல்லமையில் இம்முறை இவர் வழங்கிய நூலறிமுகம்/நூலாசிரியர் அறிமுகம் கட்டுரையான “ஆழியாற்றின் கரையினில் கவித்தவம் இருக்கும் கலைச் சிற்பி” கட்டுரையில், சொல்லில் கலை வண்ணம் கண்டுக் கவிதைச் சிற்பங்களைச் செதுக்கும் வானம்பாடிக் கவிஞர்… மரபில் தொடங்கிப் புதுக்கவிதையில் பூத்த பழமை மாறதா புதுப்பாவலர் …. பேராசிரியர், கவிஞர், காவிய ஆசிரியர், திறனாய்வாளர், ஆய்வு நெறியாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், சாகித்திய அகாடமி விருதாளர், சாகித்திய அகாடமி தமிழ்ப்பகுதிப் பொறுப்பாளர், ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனைக் கவிஞர்களை, புதுக் கவிஞர்களைப் பாரட்டும் சீரிய நெஞ்சர் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களை அறிமுகப்படுத்தியிருந்தார்.

    அறிவியல், ஆன்மீகம், தத்துவம், சராசரி வாழ்க்கை என்று தற்காலத்தின் கவிதைப் பதிவுகளாக விளங்குபவை சிற்பியின் ஆக்கங்கள்….சொல்லுக்குள் சுகம் வைத்து, கவிதைக்குள் உலகைத் தேக்கி, தன் காலப் பதிவைச் சிறப்பாகச் செய்து வருபவர் சிற்பி. அப்துல்கலாமின் ஏவுகணை வெற்றியையும் இவர் பாடுகிறார். இயந்திர மனிதனின் குழந்தை தானியங்கிக் கதவிடுக்கில் சிக்கிக் கொண்ட சோகத்தில் அறிவியலாளன் திணற, அடுத்த கட்டளையைக் கேட்டு நிற்கும் இயந்திர மனிதனின் தோல்வியையும் இவரின் கவிதை பாடுகின்றது என்று சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் கவிதைகளின் அழகியலையும் இலக்கிய நயம் பாராட்டியிருந்தார்.

    நயமிக்க கட்டுரை ஒன்றை அளித்த மு.பழனியப்பன் அவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி அவரது தமிழ்ப்பணிகளும் இலகியப்பணிகளும் தொடர வாழ்த்துகிறோம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

    தொடர்பிற்கு:
    முனைவர் மு.பழனியப்பன் (Dr. M.Palaniappan)
    தமிழ்த்துறைத் தலைவர்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை

    கைபேசி எண்: 9442913985
    மின்னஞ்சல் முகவரி: muppalam2006@gmail.com
    வலைப்பூ:
    manidal.blogspot.com
    http://kambanadippodi.blogspot.com/
    http://puduvayalpalaniappan.blogspot.com/
    ஃபேஸ்புக்: https://www.facebook.com/palaniappan.mutrhappan
    கூகுள் ப்ளஸ்: https://plus.google.com/112411414788276451667

     

     

    படங்கள் உதவி:
    http://senthamilcollegemadurai.blogspot.com/2013/02/blog-post.html

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜனவரி 19, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு முனைவர் இல. சுந்தரம் அவர்கள்

     

    இல சுந்தரம்

     

     

    வல்லமை இதழின் இந்த வார வல்லமையாளராகச் சிறப்பிக்கப்படுபவர், சென்ற செவ்வாய்க் கிழமையன்று (ஜனவரி 13, 2015) “தமிழ்நிதி விருது” பெற்ற கணினித்தமிழ் அறிஞர் இல. சுந்தரம் அவர்கள். முனைவர் இல. சுந்தரம் எஸ். ஆர். எம். பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராயத்தின் துணைப்பேராசிரியர். இவர் தமிழ், கணினி என இருதுறைகள் சார்ந்த கல்வியில் பட்டங்கள் பெற்றவர் (எம். ஏ., எம். ஃபில், எம்.சி.ஏ., எம்.பி.ஏ. முதுகலைப்பட்டங்களும் முனைவர் பட்டமும்). இத்திறமையைச் செம்மையாகப் பயன்படுத்தி கணினித்தமிழ் வளர்ச்சியிலும், தமிழ் மென்மம் உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு மாணவர் உரை நூல் எழுதும் இவரது தமிழிலக்கிய ஈடுபாட்டிற்குச் சற்றும் குறைந்ததல்ல இவரது கணினித்தமிழ் ஆர்வமும். தமிழ் மரபுக்களஞ்சியக் கணினித்திட்ட அமைப்பாளராகவும், உத்தமம் (உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் / The International Forum for Information Technology in Tamil – INFITT) உறுப்பினராகவும் கணினித் தமிழ்வளர்ச்சியில் பங்காற்றிவரும் இல. சுந்தரம் அவர்கள் ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி, அவற்றை பொதுப்பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளார்.

    இல சுந்தரம்4

    கட்டற்ற கணிநுட்ப வளர்ச்சிக்கு உதவிவரும் ‘கணியம்’ இவர் உருவாக்கிய 10 ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை இந்த ஆண்டின் புத்தாண்டு பரிசாக அறிவித்துள்ளது (http://www.kaniyam.com/ila-sundaram-unicode-tamil-fonts/). இத்தளத்திற்குச் சென்று இந்த எழுத்துருக்களைத் தரவிறக்கிப் பயன்படுத்தலாம். இவை SIL Open Font License, Version 1.1. என்ற கட்டற்ற உரிமையில் வழங்கப் படுகின்றன. எனவே இந்த பொதுப்பயன்பாட்டு விதியின்படி இந்த எழுத்துருக்களை யாவரும் பயன்படுத்தலாம். பகிரலாம். மாற்றங்கள் செய்து புது எழுத்துருக்களாகவும் வெளியிடலாம்.

    இவர் உருவாக்கிய கட்டற்ற ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களின் மாதிரிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன:

    இல சுந்தரம்5

    “கணினியில் தமிழ்மொழியின் பயன்பாடு பெருகியுள்ளது. தமிழ்மொழியின் வளர்ச்சிக்குக் கணினியின் பங்களிப்பு தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. மொழி ஆய்வுக் கருவியாகக் கணினியைப் பயன்படுத்திவருகிற நிலையில் தமிழ்மொழித் தரவுகளை அதற்கு ஓர் ஒழுங்கமைவுடன் கற்றுத்தரவேண்டியுள்ளது. அதாவது கணித அடிப்படையில் மொழியில் உள்ள மொழியியல் கூறுகளைக் கணினிக்கு ஏற்ற வகையில் மாற்றித்தரவேண்டியுள்ளது. இத்தகைய வழிமுறைகளைக் கொடுப்பதே கணினி மொழியியல் என்பதாகும். மொழி செயல்படுவதில் உள்ள ஒழுங்குமுறையின் தொகுப்புதான் இலக்கணம். இத்தகைய ஒழுங்குமுறை நவீன, தொழில்நுட்ப வளர்ச்சிகளினாலும் மொழி உலகமயமாக்கச் சூழலினாலும் சிதைந்தும் மாறுபட்டும் வருகிறது. மொழியை இத்தகைய சிதைவுகளிலிருந்து மீட்டெடுக்க மொழியியல் கூறுகளை முறையாகக் கற்று, பயன்படுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.”

    … என்று கணினித் தமிழ்வளர்சியின் இன்றியமையாமையைக் குறிப்பிடும் கணினி தமிழ் அறிஞரான இல. சுந்தரம், அத்துறையின் வளர்ச்சியில் கொண்டுள்ள அக்கறையின் காரணமாக கணினி தமிழ் எதிர்கொள்ளும் தடங்கல்கள், தமிழ் மென்மம் வளர்ச்சியின் தேவைகள் ஆகியவற்றைக் குறித்து உலகத்தமிழ் கருத்தரங்குகளில் ஆய்வறிக்கைகள் வாசித்துள்ளார்.

    இல சுந்தரம்3

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் உயராய்வு மையமும், உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றமும் இணைந்து நடத்திய 11வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில், ‘பயனர் நோக்கில் மென்தமிழ் தமிழ்ச் சொல்லாளர்’ என்ற ஆய்வறிக்கையை வாசித்துள்ளார். மேலும் இவரது, ‘கணினிவழித் தமிழ்மொழியாய்வில் பொருள் மயக்கம்’ , ‘கணினிவழிச் சொல்லடைவு மென்மம் உருவாக்கமும் தமிழ்மொழியமைப்புச் சிக்கல்களும்’ போன்ற கணினித் தமிழ்க் கட்டுரைகளும் கணினித்தமிழ்த் துறைக்கு இவராற்றிய பங்களிப்புகளாகும்.

    இல சுந்தரம்7

    கணினித் தமிழ் வளர்ச்சித் துறையில் தொடர்ந்து பங்காற்றிவரும் இல. சுந்தரம் அவர்களது ஆர்வத்தைப் பாராட்டி, இதுவரை இவராற்றிய தமிழ்ப் பணியினைக் கருத்தில் கொண்டு, அவர் இத்துறையில் மேலும் பங்களிக்க உற்சாகமூட்டும் வகையில், திரு இராம வீரப்பன் தலைவர் சென்னைக் கம்பன் கழகம் தலைமையில் இளம் தலை முறையினரை ஊக்குவிக்கும் திட்டத்தில், ‘தமிழ்நிதி ‘ விருது வழங்கப்பட்டு இல. சுந்தரம் சிறப்பிக்கப்பட்டுள்ளார். இளம் வயதில் இவர் செய்துள்ள இந்த சாதனையைப் பாராட்டி வல்லமை இதழ் குழுவினரும் இவரை இந்தவார வல்லமையாளாராக அறிவித்து பாராட்டி மகிழ்கிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    தொடர்புக்கு:

    இல. சுந்தரம் – http://ilasundaram.blogspot.com/
    கணினித்தமிழ்ப் பயிற்சி – http://tamilcomputingcourse.blogspot.com/
    மின்னஞ்சல் – ilasundaram@gmail.com

    படங்கள் உதவிக்கு நன்றி: மயிலை நூ த லோ சு, கணியம்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜனவரி  12, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு கவிஞர் ருத்ரா இ. பரமசிவன் அவர்கள் 

     

    ruthra-paramasivan

     

    கவிதைகள் எழுதுவதை தனது முதன்மை சிந்தனை வெளிப்பாடாகக் கொண்டாலும் அதிலும் பலவேறு கோணங்களில் திறமையைக் காட்ட முடியும் என்று தொடர்ந்து காண்பித்து வருகிறார் கவிஞர் (உ)ருத்ரா இ. பரமசிவன் அவர்கள். அவரது கவிதையிலக்கிய ஆளுமையையை வியந்து அவரை வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

    கல்லிடைக்குறிச்சியை தனது பூர்வீகமாகக் கொண்டு தாமிரபரணி நதிக்கரையில் வளர்ந்த கவிஞர் ருத்ரா அவர்களின் கல்விப் பின்னணி பொருளாதாரத்துறை. தற்பொழுது 71 வது அகவையை எட்டியுள்ள ருத்ரா, கல்லூரி நாட்களில் பொருளாதார‌ப் பாட‌த்தில் தரவரிசையில் முத‌ல் நிலையில் தேர்வு பெற்றதால் ‘நேரடித் தேர்விற்கு உட்படுத்தத் தேவையில்லை’ என்ற சிறப்பு விதிகளின் அடிப்படையில் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் (LIC of INDIA) பணிக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் பல்வேறு துறைக‌ளிலும் ப‌ணியாற்றியுள்ளார். பணி ஓய்விற்குப் பிறகு தனது மனைவியுடன் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்து கலிபோர்னியாவில் வசிக்கும் அவரது மகன் மற்றும் மகள் குடும்பத்துடனும், பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார்.

    கல்கி, ஜூவி, குங்குமம், செம்மலர் போன்ற பத்திரிக்கைகளிலும் கவிஞர் ருத்ராவின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. அகரமுதல, திண்ணை, வார்ப்பு போன்ற இணைய இதழ்களிலும், இணையத்தமிழ்க் குழுமங்களிலும், தனது பல்வேறுபட்ட வலைப்பூக்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். பொருளாதாரத் துறையின் பின்னணி கொண்டாலும் அறிவியலில், அதிலிலும் குறிப்பாக இயற்பியலில் ஆர்வம் மிகக் கொண்டவர் கவிஞர் ருத்ரா. குவாண்ட‌ம் மெக்கானிக்ஸ், ஆலன் கத்ஸ் இனஃப்லேஷன் தியரி(Alan Guth Inflation Theory), சவ்வுப்படல வெளிகள் (RS MODELS I AND II), அண்டம், பெருவெடிப்பு, ஹிக்ஸ் போசோன் சப்அட்டாமிக் பார்டிகில் (higgs boson subatomic particles) போன்றவற்றைப் பற்றி விளக்கிக் கட்டுரைகள் எழுதும் வல்லவர். இயற்பியல் கட்டுரைகள் மட்டுமன்றி அத்தகவல்களை கவிதையின் கருப்பொருளாகவும் கொண்டு கவிதைகளும் எழுதுவார்.

    கவிஞர் ருத்ராவின் கவிதைகளின் பாடுபொருள் பொதுவாக வழங்கிவரும் கருப்பொருட்களில் இருந்து மாறுபட்டவை, கவிதைகளின் நயமும் கவிதைநடையில் வேறுபட்டவை. பொதுவான புழக்கத்தில் இருக்கும் கவிதை பாணியிலும் இவரால் எழுத முடியும், பிற கவிஞர்கள் தொட்டிராத கோணங்களையும் கவிஞர் ருத்ராவால் காட்ட முடியும். இவர் எழுதும் கவிதைகளுக்கு சொல்லலங்காரம் ஆதாரம் அல்ல. சொல்லவரும் கருத்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எழுதுபவர். இவர் கவிதைகளின் பல்வேறு கோணங்களை அடுத்து பார்ப்போம் (கவிதைகள் முழுமையாகவோ அல்லது சிறப்பு வரிகள் மட்டுமோ இடத்திற்குத் தக்கவாறு பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது).

    அறிவியல் தாக்கக் கவிதைகள்:
    களிப்பருளும் “களிப்பே” என்ற கவிதையில் கவிஞர் ருத்ரா இயற்பியல் கருத்துக்களின் வழி ஆன்மிக விளக்கமளிக்கிறார்.

    களிப்பருளும் “களிப்பே”!
    =======================

    […]
    எது ஞானம்?
    எது அஞ்ஞானம்?
    அது மெய்ஞானம்?
    எது விஞ்ஞானம்?
    முடிவில்லாததற்கு
    முடி போட்டு குடுமி போடமுடியாது.
    முனை தெரியும் வரை
    கையில் கருத்தில் நிரடும் வரை
    பாதியாக்கு
    பாதியாக்கிக்கொண்டே இரு.
    கிரேக்க மொழியில்
    மெலிடஸ் (கிமு 610_540)
    இதை “அபெய்ரான்” என்றார்.
    இன்ஃபினிடி என்று
    இது நுண்கணிதம் ஆயிற்று.
    லிமிட்டிங் டு சீரோ என்பது
    டிஃபரன்ஷியல் கால்குலஸ்.
    லிமிட்டிங் டு இன்ஃபினிடி என்பது
    இன்டெக்ரல் கால்குலஸ்.
    தொகுத்ததை பகுத்த போதும்
    பகுத்ததை தொகுத்த போதும்
    வெறுமையே அங்கு விஸ்வரூபம்.
    விஞ்ஞானிக்கு அது ஹிக்ஸ் போஸான்.
    மெய்ஞானிக்கு அது ஹிரண்யகர்ப்பன்.
    ஆத்திகத்தையும் நாத்திகத்தையும்
    குவாண்டம் பிடித்து
    ஒரு லிங்கம் செய்தால்
    அதுவே இங்கு ஒரு
    குவாண்ட லிங்கம்.
    ஃபெர்மியானும் போஸானும்
    கொண்டு பிசைந்த லிங்கமே அது.
    […]

    ஒரு பொருள் ஒரே நேரத்தில் இரு வேறு தன்மை கொண்டு இருப்பதை இன்று அறிவியல் அறிகிறது, ஆனால் இந்தக் கருத்தை ஆன்மிகம் முன்னரே குறிப்பிட்டுள்ளது. இறைவன் ஒரே நேரத்தில் சிவனாகவும் சக்தியாகவும் இருப்பது அணுவின் தன்மையைப் போன்றது என்று மாணிக்கவாசகர் கூறிய “அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க” கருத்தை கவிஞர் ருத்ரா இக்கவிதையில் கையாண்டதை முனைவர் க. கணேசலிங்கம் பாராட்டியுள்ளார்.

    சங்கநடைக் கவிதைகள்:
    பிற கவிஞர்களிலும் இருந்து ருத்ராவை வேறுபடுத்திக் காட்டுவது அவரது சங்கஇலக்கியச் சாயல் கொண்ட கவிதைகள். கீழே ஒரு எடுத்துக்காட்டு…

    பசலை பூத்தே…
    =============

    கதழ்பரி கலிமா அலரிதூஉய்
    ஆறுபடுத்தாங்கு வேங்கை புரையும்
    முன்னிய வெஞ்சுரம் இலஞ்சி வீழ்த்தும்
    இன்னிய பலவின் முள்பசுங்காய்
    மூசும் தும்பி அதிர்வினம் யாழ்க்கும்.
    நெடுந்தேர் மணிநா நடுங்கி இமிழும்
    ஓதையுண்பினும் ஓவா உறுபசி
    உழல்படு வண்டினம் வெள்வெளி ஆர்க்கும்.
    நீள்மலைப்பாம்பின் அன்ன நெடுவேர்
    தடுக்கும் மறிக்கும் எவன் கொல் செயினே.
    பெரும்பணைத் தோளின் கடுப்ப விரையும்
    துப்புநிலை அறியும் அதிர்கலிப் பொறிமா.
    துவள்படும் நெஞ்சின் என் பொங்குதிரை ஈண்டு
    அடு கிளர் அகலத்து அவன் உள் உள் தைக்கும்
    அகவும் மஞ்ஞை என்னுள் அகவி
    உருவும் என்னுயிர் மின்னல் மயிரிய‌
    நார்ப்பூ தொடுக்கும் பசலை பூத்தே!

    ============
    பொழிப்புரை:-
    ============
    குளம்புகள் பதிய குதித்துச்செல்லும் குதிரையை அதன் அலரிப்பூக்குஞ்சம் அசைய அதனால் அப்பூக்கள் எங்கும் உதிர குதிரை (பூட்டிய தேரில்) செல்லும் காதலன் வழியெல்லாம் வேங்கை மரங்கள் அடர்ந்திருக்கும் அந்த வெங்காட்டு வழியில் செல்கிறான்.நெருக்கமான வழி அது.இடையிடையே உள்ள இலஞ்சி எனும் சுனைகள் செறிந்த ஊரில் இனிய தன்மை கொண்ட பலாமரங்கள் தரை தொடும்படி பலாக்கனிகளை (வேர்ப்பலா)வீழ்த்திக்கிடக்கும்.பலாவின் மேல் புறம் முள் அடர்ந்தது போல் உள்ள தோற்றத்தைக்கண்டு அவையும் சிறு சிறு வண்டுகள் என நினைத்து அந்த பசுங்காய்கள் மீது வண்டுகள் மொய்க்கும்.
    அவை யாழ் போல சிறகுகளை அதிரச்செய்து இசைக்கும்.காதலனின் நெடிய தேரின் மணியின் நாக்கும் நடுங்கலுற்று அதிலிருந்து மெல்லொலி கேட்கும்.
    அந்த இன்னொலியை உண்டபோதும் தன் தீராத பசியால் அலைவுற்று அவை அந்த வெட்டவெளியில் மொய்த்துப்பறக்கும்.வழியில் குறுக்கு நெடுக்காக கிடக்கும் மரத்தின் வேர்கள் நீண்ட மலைப்பாம்புகள் போல் காதலன் செல்லும் வேகத்தை தடுத்து மறிக்கும்.இதை என்ன செய்வது?என் பிரிவுத்துயரத்தை இது இன்னும் அதிகப்படுத்துகிறதே என்று காதலி துன்பம் கொள்கிறாள்.மனக்கண்ணில் காதலன் விரைந்து வரும் காட்சிகள் விரிகின்றன.
    அவன் திரண்ட தோளின் வலிமைமிக்க செயலினால் விரையும் குதிரைகள் அவன் வலிய தன்மையை அறியும்.உடம்பில் அழகிய புள்ளிகள் நிறைந்த அரிய அந்த அழகிய குதிரை அதிர்வோடு துள்ளி துள்ளி ஓடும்.இங்கு துவண்டு போன உள்ளத்தோடு வேதனை அடையும் என் நெஞ்சில் பொங்கும் அலைகள்
    அவன் அகன்ற நெஞ்சத்தில் சூடேற்றி கிளரச்செய்து அவன் நெஞ்சக்கூட்டிலும் உள்ளே உள்ளே தைத்து வருத்தும்.எங்கோ கூவும் மயில் அதன் அகவல் ஒலியை என்னுள் பாய்ச்சும்.அது என்னுயிர் ஊடுருருவி மயிரிழை போன்ற மின்னல் உணர்வை நுழைத்து அதை நார் ஆக்கி பூ தொடுக்கும்.அந்த மலர் மாலை பசலை நோயாய் (பிரிவு துன்பத்தின் வலி)என் மீது மலர்ந்து படரும்.
    இவை காதலியின் மனவெழுச்சி மிக்க காதலின் சொற்கள்.

    “கவிதை என்ற பெயரில் அயற் சொற்களைக் கலந்து உரை நடையைத் தருவோர் இடையே மரபுப் பாடல்கள் புனையும் தங்கள் ஆர்வமும் ஆற்றலும் பாராட்டிற்குரியது,” என்று முனைவர். இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் இவர் முயற்சியைப் பாராட்டி உள்ளார்கள். காப்பியாற்றுப்படை, மாவின் அளிகுரல், நெடுநல் மாயன், இன்னுரை தடவினும் என்னுயிர் மாயும், காய்நெல் அறுத்த வெண்புலம், கல்பெயர்த்து இழிதரும், வேழ விரிபூ! என்று பல தலைப்புகளில் சங்க இலக்கிய நடைக் கவிதைகளை கவிஞர் ருத்ரா வழங்கியுள்ளார். இக்கவிதையை எழுதியவரும் முன்னர் குறிப்பிட்ட அறிவியல் கவிதையை எழுதியவரும் ஒரே கவிஞரா என வியக்காமல் இருக்க இயலாது.

    குறும்பாக்கள்:

    குறும்பாக்கள் குறைந்த வரிகளில் முக்கியமானக் கருத்தை சொல்வதாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் சொல்லப்பட்ட கருத்தும் மனதில் தக்க வேண்டும். கவிஞர் ருத்ராவின் மற்றொரு சிறப்பு, குறும்பாக்களிலும் முத்திரை பதிப்பது. குறும்பாக்கள் பற்றி அவர் சொல்லும் குறும்பா….

    குறும்பாக்களைப்பற்றி குறும்பா…
    ===============================

    ஆயிரம் பக்க
    எழுத்துக்களின்
    ”போன்சாய்” மரம்

    கீழே அவருடைய இருவேறு குறும்பாத் தொகுப்புகளில் இருந்து சில பாடல்கள். எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனத்தை மூன்று நான்கு வரிகளில் மிகக் கச்சிதமாக முடித்து விடுக்கிறார். தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளர்கள் சிலரில் அவர் தன்னைப்பற்றிக் கூறுவதும் இடம் பெறுகிறது.

    சுஜாதா
    ======
    எழுத்துக‌ளுக்கு எல‌க்ட்ரானிக்ஸை
    ஊற்றிய‌வ‌ர்….ஆயிர‌ம்
    “எந்திர‌ன்”க‌ளின் அடிப்ப‌டை “சிப்”

    கல்கி
    =====
    எத்தனை தலையணைகள்.
    அத்தனையிலும்
    சரித்திரம் விழித்துக்கொண்டிருந்தது.

    ருத்ரா
    ======
    ருத்ராவா? யார் அது?
    ப‌த்திரிகை ஆஃபீஸ்க‌ளின்
    குப்பைத்தொட்டியில் தேடுங்க‌ள்.
    (ம‌ற்ற‌ ருத்ராக்க‌ள் ம‌ன்னிக்க‌)

    *****
    எழுதிச்செல்லும்
    விதியின் கை
    எழுதி எழுதி மேற்செல்லும்.
    எங்கே முடியும் விதி?

    பத்திரிகை அலுவலகத்தின் குப்பைக்கூடை
    ======

    பேனாவுக்கு
    மட்டுமே புரிந்தது.
    காகித‌ம் ம‌ட்டுமே
    ர‌சித்த‌து.

    “க‌விதை”
    ======

    எழுதி முடிக்க‌வில்லை.
    பேனாவில் எல்லாம்
    எறும்புக‌ள்.

    த‌மிழுக்கும் அமுதென்று பேர்
    ======
    இங்கு சுட்டப்பட்ட எழுத்தாளர்கள் தவிர்த்து, தமிழ் எழுத்தாளர்களில் மேலும் பலரை விமர்சித்து நான்கு தனிப் பாடல் திரட்டாகக் கொடுத்துள்ளார். அவை கீழ்காணும் சுட்டிகளின் வழி படிக்கக் கிடைக்கும்.
    எழுத்தாளர்களின் ஊர்வலம்- பாகம் 1, பாகம் 2 , பாகம் 3 , பாகம் 4 .

    விமர்சனக் கவிதைகள்:
    அறிவியல் ஆன்மிகக் கவிதைகளுக்கும், சங்க நடைக் கவிதைகளுக்கும், குறும்பாக்களுக்கும் முற்றிலும் மாறுபட்ட வகையில் முற்றிலும் வேறுபட்ட பாடுபொருளைக் கருத்தாக வைத்தும் கவிஞர் ருத்ராவால் கவிதை எழுத முடியும். யாரும் பொதுவாகக் கையாளும் கவிதைக் கருவுக்கு மாறுபட்டு விளையாட்டு விமர்சனம் என்பதைக் கூடக் கவிதையாக வடிப்பவர் ருத்ரா. சென்ற உலகக் கால்பந்து போட்டியில் நெதர்லாந்தும் மெக்ஸிகோவும் மோதியதையும் விமர்சனக் கவிதையாகவே வழங்கியிருந்தார்…அக்கவிதை கீழே.

    உலக கோப்பை கால்பந்து
    நெதர்லாந்தும் மெக்ஸிகோவும்
    =============================

    நியூயார்க் டைம்ஸ் கொப்பளிக்கிறது
    பி.பி.ஸி ஸ்போர்ட்ஸ்
    நரம்பு புடைக்கிறது.
    டிவி திரை பூராவும்
    உணர்ச்சிக்கம்பளிப்பூச்சிகளின்
    அடைசல்கள்.துள்ளு முள்ளுகள்.
    கழுத்துப்பிடியாய்
    கடையில் ஒரு அமுக்கு.
    அப்புறம்
    பெனால்டியில்
    மெக்ஸிகோ தோல்விக்குப்பெட்டிக்கு
    கடைசி ஆணி.
    தொண்ணூத்து நாலாவது நிமிடத்தில்
    “க்ளாஸ் ஜான் ஹண்டெலார்”
    அடித்த கோல்..
    வானத்தின்
    உச்சிமண்டை பிளந்து கொண்டது.
    அந்த உற்சாகக்குரல்
    உலகத்தின்
    செவிட்டுக்காதுகளின்
    பாறாங்கல்லையெல்லாம்
    கூட‌
    உருட்டித்தள்ளியிருக்கும்.
    நாக் அவுட் வந்த பிறகும்
    இனியும்
    ஒரு நாக்கை
    தொங்கப்போட்டுக்கொண்டிருக்க முடியுமா?
    சிலிக்கு
    இப்படித்தானே பிரேஸில்
    ஒரு பச்சை மிளகாயை
    கடிக்க கொடுத்தது.
    அவர்களுக்கு
    பச்சை மிளகாய் எல்லாம்
    இனிப்புக்காய்கள் என்றாலும்
    இந்த நாக் அவுட்டின்
    அந்த “ஆலப்பினோ அல்லது ஜாலப்பினோ”
    செம காரம் தான்.
    மூக்கில் காதில் கண்ணில்
    எல்லாம் காரம் தான்.
    பிஃபாவின்
    வண்ண வண்ண ரத்தப்புடைப்புகளை
    இந்த கால்பந்தில் பார்த்து
    நரம்புக்குள்
    நல்லபாம்புகளை கொத்தவிட்டு
    நுரை தள்ளி
    பார்த்து ரசிக்கும் விளையாட்டு
    எந்த சொர்க்கத்திலும்
    கிடைக்காது.
    கிரிக்கெட் கூட‌
    அகராதிப்படி
    வெறும் பூச்சி விளையாட்டு தான்.

    மாறுகோணச் சிந்தனையின் மறுஉருவமாக பலகோணங்களில் கவிதைகள் படைத்து வரும் கவிஞர் ருத்ராவை இவ்வார வல்லமையாளராக தேர்வு செய்து வல்லமைக் குழுவினர் பாராட்டி மகிழ்கிறோம். தொடர்ந்து கவிதை இலக்கியத்தில் புதுமைகள் புகுத்த அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    ***

    கவிஞர் ருத்ராவின் வலைப்பூக்கள்:

    http://ruthraavinkavithaikal.blogspot.com/
    http://ruthraasivan.blogspot.com/
    http://ruthraa.wordpress.com/
    http://nunpaa.blogspot.com/
    http://nunbaa.blogspot.com/
    http://oosiyilaikkaadukal.blogspot.com/

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    ஜனவரி 5, 2015

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  எழுத்தாளர் திரு. ஏற்காடு இளங்கோ அவர்கள் 

    Yercaud Elango Profile1

     

    நடுவணரசின் தாவர மதிப்பீட்டு ஆய்வு அலுவலகத்தில் பணி புரியும் திரு. ஏற்காடு இளங்கோ அவர்கள் கால்நூற்றாண்டிற்கும் மேலாக அறிவியல் இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் இதுவரை எழுதியுள்ள 70 க்கும் அதிகமான நூல்களில், 65 நூல்கள் அறிவியல் மற்றும் பொதுஅறிவுத் தகவல் தொடர்புடைய நூல்களாகும். இந்நூல்கள் அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, கல்வியாளர்கள், நோபல் பரிசு பெற்ற பெண்கள், சர்வதேச தினங்கள் குறித்த தகவல் போன்றவற்றை வழங்குபவை. விழிப்புணர்வு தரும் அறிவியல் நூல்கள் மக்களை சென்றடையவேண்டும் என்ற நோக்கில் தனது அறிவியல் மற்றும் பொதுஅறிவுத் தகவல்கள் நூல்களுக்கு காப்புரிமையை நீக்கி இணையம் வழி பலரும் தரவிறக்கி பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இலவச மின்நூல்களாக வெளியிட்டு வருகிறார். அறிவியல் செய்திபரப்பும் பங்களிப்பின் மூலம் இவர் மக்களுக்கு ஆற்றும் தொண்டினைப் பாராட்டி வல்லமைக் குழுவினர் இவரை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

    தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்னும் ஊரினை பூர்வீகமாக் கொண்ட, 53 வயதை எட்டியுள்ள இளங்கோ அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் முதுகலைப் படிப்பில் பட்டம் பெற்றவர். ‘துளிர்‘ என்ற மாணவர்களுக்கான அறிவியல் மாத இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினருமான ஏற்காடு இளங்கோ அவர்களின் அறிவியல் நூலாக்கப்பணிகளை பாராட்டி, சேலம் கே.ஆர்.ஜீ. நாகப்பன் – இராஜம்மாள் அறக்கட்டளயின் சார்பாக நடைபெற்ற இலக்கிய விழா 2010 இல் “அறிவியல் மாமணி” என்னும் விருது வழங்கி கௌரவிக்கபட்டுள்ளார். தற்பொழுது சேலம் அறிவியல் இயக்கத்தின் (Tamil Nadu Science Forum – TNSF, Salem) மாவட்டத் தலைவராகவும் பொறுப்பேற்று அந்த இயக்கத்தை வழிநடத்தி வருகிறார் இளங்கோ.

    இன்று அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தாலும் அறிவியல் விழிப்புணர்வு என்பது தேவையான அளவில் மக்களிடம் இல்லை என்று இளங்கோ கருதுகிறார். குறிப்பாக தொலைகாட்சியில் ஃபேர் அண்ட் லவ்லி, கோக்ககோலா போன்ற பல விளம்பரங்களைப் பார்த்து விட்டு அவற்றை பயன்படுத்தும் தன்மை அதிகமாக உள்ளது. ஆனால் அவற்றின் உண்மை தன்மைகளை பற்றியோ, அறிவியல் பின்னணியையோ யாரும் பார்ப்பதில்லை எனவும் இதுவே அறிவியல் விழிப்புணர்வு சார்ந்த புத்தகங்களை அவர் எழுத துவங்கியதன் காரணம் எனவும் இளங்கோ குறிபிட்டுள்ளார்.

    மேலும், இவர் “ஒரு திரைப்படத்தின் பெயரைச் சொல்லி, அந்தப் படத்தின் கதாநாயகன் யார் எனக் கேட்டால், பதில் சரியாகச் சொல்கிறார்கள். ஆனால் முதன் முதலில் விண்வெளிக்குச் சென்ற இந்திய வீரர் யார் எனக் கேட்டால் பலரும் பதில் தெரியாமல் தடுமாறுகின்றனர். ஒரு நடிகருக்கு இருக்கும் புகழை விட விண்வெளிக்குச் சென்று வந்த வீரரின் புகழ் குறைவாகவே உள்ளது. ஒரு நடிகரை நாட்டு மக்கள் எந்தளவிற்குத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ அந்த அளவிற்கு விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா தெரிந்தவராக இல்லை. இவர் தான் முதன் முதலில் இந்தியாவின் சார்பாக விண்வெளிக்குச் சென்று வந்தவர் எனச் சொல்ல வேண்டிய நிலை இன்று உள்ளது. சினிமாக் கதாநாயகர்களின் புகைப்படங்கள் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரின் புகைப்படம் எங்கும் கிடைப்பதில்லை,” என்று இன்றைய நிலையில் மக்கள் அறிவியலார்களுக்கு தேவையான முக்கியத்துவத்தை வழங்குவதில்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்டுகிறார். இக்குறையை நீக்கும் பொருட்டு இவர் எழுதிய நூல்களில் பல அறிவியல் வளர்ச்சியில் அரும்பங்காற்றியவர்களை இளையதலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே எழுதப்பட்டும் உள்ளன.

    YSF 2012 Salem Elango2

    ஏற்காட்டில் வாழ்ந்து வரும் இளங்கோ அவரது இறப்பிற்குப் பிறகு அவரது உடலை மருத்துவ ஆய்வுக்குப் பயன்படுத்தவேண்டும் என்று அவரது விருப்பத்தை ஆவணத்தில் பதிவு செய்துள்ளார். மார்க்சியக் கொள்கைவழி அறிவியல் முறையில் நாத்திகராகவும், மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் அறிவியல் செய்திகளைப் பரப்புவதை தனது நோக்கமாகவும் கொண்டுள்ளார். அதன் காரணமாக தனது அறிவியல் மற்றும் பொதுஅறிவுத் தகவல் கொண்ட நூல்கள் பலவற்றிற்குத் தான் கொண்டுள்ள காப்புரிமைகளை நீக்கி இலவச மின்னூலாக அவை அனைவரையும் சென்றடையும் பொருட்டு ‘ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் ‘ துணையுடன் தனது நோக்கத்தை செயல்படுத்தி வருகிறார்.

    சென்னை வாழ் கட்டற்ற மென்பொருள் ஆர்வலர் திரு. சீனிவாசன் அவர்களும் அவரது நண்பர்களான தொழில் நுட்பக் குழுவினரும் இலவச மின்னூல் வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளர்கள். ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் (freetamilebooks.com) என்ற இணைய தளத்தின் வழி இதுவரை 70 எழுத்தாளர்கள் எழுதிய, 125 மின்னூல்களை இத்தன்னார்வக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அறிவியல், ஆன்மிகம், ஆளுமைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நகைச்சுவை, நுட்பம், புதினங்கள்மற்றும் வரலாறு என்று பலவகை நூல்களும் இவற்றில் அடங்கும். பரந்த மனமுள்ள எழுத்தாளர்கள் பலரும் தங்கள் நூல்களுக்கான காப்புரிமைகளை நீக்கி தங்கள் படைப்பை மின்னூலாக்க அனுமதியளித்து, ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் நிறுவனம் தமிழுக்கு செய்யும் தொண்டில் தங்களையும் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த எழுத்தாளர்களில் தனி ஒருவராக மற்ற யாவரையும்விட அதிக எண்ணிக்கையில், 13 நூல்களுக்கு காப்புரிமைகளை நீக்கி ஃப்ரீ தமிழ் இ புக்ஸ் வழியே வெளியிட்டுள்ளார் ஏற்காடு இளங்கோ. கீழ்காணும் சுட்டிகள் வழி அவற்றைத் தரவிறக்கிப் பயனடையலாம்.

    Aerkadu Ellango

     

    [1] தமிழகத்தின் அடையாளச் சின்னங்கள்http://freetamilebooks.com/ebooks/symbols-of-tamilnadu/

    [2] இந்திய தேசியச் சின்னங்கள்http://freetamilebooks.com/ebooks/national-symbols-of-india/

    [3] இந்தியாவின் முக்கிய தினங்கள்http://freetamilebooks.com/ebooks/indiyavin-mukkiya-thinangal/

    [4] உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள்http://freetamilebooks.com/ebooks/celebrationdaysinworld/

    [5] விண்வெளிப் பயணம்http://freetamilebooks.com/ebooks/vinveli-payanam/

    [6] விண்வெளியில் ஆய்வு நிலையம்http://freetamilebooks.com/ebooks/space-research-center/

    [7] பூமியின் எல்லையைத் தொட்டவர்கள்http://freetamilebooks.com/ebooks/boomiyin-ellaiyai-thottavargal/

    [8] உலகின் முதல் பெண் விண்வெளி வீரர்http://freetamilebooks.com/ebooks/first-women-astranaut/

    [9] முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாhttp://freetamilebooks.com/ebooks/rakesh-sharma/

    [10] விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்http://freetamilebooks.com/ebooks/sunitha-williams-in-space/

    [11] விமானம் ஓட்டிய கைகள் இல்லாப் பெண்http://freetamilebooks.com/ebooks/vimanam-ottiya-kaigal-illa-pen/

    [12] தானியங்கள்http://freetamilebooks.com/ebooks/thaniyangal/

    [13] குடிசை – குறுநாவல் http://freetamilebooks.com/ebooks/kudisai-novel/

    ஏற்காடு இளங்கோ மேலும் தனது அறிவியல் செய்திபரப்பும் பணியைத் தொடர வேண்டும் என்றும், தமிழுலகம் பயன்பெறும் வகையில் இன்னமும் பல நூல்களை வழங்க வேண்டும் என்றும் வாழ்த்தி வல்லமைக் குழுவினர் இவ்வார வல்லமையாளரான இவரை பாராட்டி மகிழ்கிறோம்.

     

    இவரைத் தொடர்பு கொள்ள:
    ஏற்காடு இளங்கோ / Yercaud Elango
    (yercaudelango@gmail.com)
    Google Plus: https://plus.google.com/102807648316848870666/

    ஏற்காடு இளங்கோ பற்றிய தகவல் உதவி:
    http://ta.wikipedia.org/s/3pgz
    http://tnsfsalem2009.blogspot.com/
    http://yercaudelango.blogspot.com/
    http://www.noolulagam.com/

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    டிசம்பர் 29, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு திருவாளர் திரு.ஜாதவ் பயேங் அவர்கள் 

     

    Jadav Payeng

     

    ஜான் ஜியானோ (Jean Giono) என்ற ஃபிரென்ச் எழுத்தாளர், 1953 ஆம் ஆண்டு “தி மேன் ஹூ ப்ளாண்ட்டெட் ட்ரீஸ்” (The Man Who Planted Trees) என்ற நூலை எழுதி வெளியிட்டார். எல்சார்ட் பூஃபியர் (Elzeard Bouffier) என்ற ஒருவர் மரங்கள் நடுவதில் ஆர்வம் மிக்கவராக அந்நூலில் சித்தரிக்கப்பட்டிருந்தார். அவர் விவரித்த நிகழ்வுகள் மிகவும் உண்மைத் தன்மை நிரம்பியதாக இருந்ததால் அந்த மனிதரை அறியும் முயற்சிகள் அந்நூலின் வாசகர்களால் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், நூலின் ஆசிரியர் அக்குறிப்பிட்ட மனிதர் தனது கற்பனையில் உருவாக்கப்பட்ட நாயகன் என்றும், மக்களுக்கு மரங்களின் மீது ஆர்வம் வர வேண்டியே அவர் தனது நூலில் நிகழ்வுகளைப் புனைந்ததாகவும் கூறினார். அவர் கற்பனையில் கண்ட மனிதர் நூல் வெளிவந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் நமது இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறார். அவரது பெயர் திரு.ஜாதவ் பயேங் (Jadav Payeng). பிரம்மபுத்திரா நதியின் நடுவில் உள்ள 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவிலான மணல்திட்டில் தனியொரு மனிதராக ஒரு காட்டையே உருவாக்கியிருக்கிறார் இந்த அதிசய மனிதர் ஜாதவ். இப்பொழுது அக்காட்டில் அழிவின் நிலையில் இருந்த பல்வேறு மிருங்கங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் குறைந்தது ஐந்து புலிகளும் அடங்கும், அவற்றில் ஒன்று சமீபத்தில் இரு குட்டிகளையும் ஈன்றுள்ளது. இவரது சாதனைப் பற்றிக் கேள்விப்பட்ட வல்லமையின் எழுத்தாளரும், வாசகருமான திரு. ந. உ . துரை அவர்கள் வல்லமையாளர் விருதிற்கு ஜாதவ் பயேங்கை பரிந்துரைத்துள்ளார்.

    ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவிலான மணல்திட்டில் உள்ள இந்தக் காடு உள்ளூர் மக்களால் ஜாதவின் செல்லப்பெயர் “முலாய்” என்பதை ஒட்டி “முலாய்யின் காடு” (Molai Kathoni = Molai’s woods) என்று அழைக்கப்படுகிறது. இதனை உருவாக்கத் துவங்கியபொழுது ஜாதவிற்கு வயது பதினாறு. தற்பொழுது ஜாதவிற்கு வயது ஐம்பது ஆகிறது, 35 ஆண்டிகளில் தனியொருவராக இந்தக் காட்டை உருவாக்கியுள்ளார் ஜாதவ். இவரது முயற்சியின் தொடக்கதிற்குக் காரணம் 1979 ஆண்டு பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளம். அந்த வெள்ளத்தில் பல விலங்குகள் இறந்தன. வெள்ளம் வடிந்த பிறகு இப்பொழுது காடு இருக்கும் மணல்திட்டில் பல பாம்புகள் இறந்து கிடப்பதைப் பார்த்தார் ஜாதவ். வெள்ளத்தினால் அடித்து வரப்பட்டு, மணல்திட்டில் ஒதுங்கிய பாம்புகள் மரநிழலின்றி வெய்யிலில் காய்ந்து இறந்திருந்தன. அவற்றைக் கண்டு கலங்கிய ஜாதவ், அந்த மணல்திட்டில் மரங்கள் நடுமாறு கோரிக்கை வைத்து காட்டிலாகா அதிகாரிகளை அணுகினார். அவர்களோ எந்த மரமும் வளரும் தன்மை அந்த மண்ணிற்கில்லை, வேண்டுமானால் மூங்கிலை வளர்ப்பதை முயற்சிக்குமாறு ஆலோசனை வழங்கி தட்டிக் கழித்துவிட்டனர். ஜாதவிற்கு உதவி செய்வோர் யாருமில்லை, அந்த வேலையும் கடினமாக இருந்தது, ஆனாலும் ஜாதவ் தளரவில்லை.

    தனது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு தானே விரும்பி தனிமை வாழ்க்கையை ஏற்று அந்த மணற்திட்டிற்கே குடியேறினார் ஜாதவ். பல மூங்கில்களை நட்டு காலையும் மாலையும் நீரூற்றிப் பராமரித்தார். சில ஆண்டுகளில் மூங்கில்கள் வளர்ந்து சிறிய மூங்கில் காடு உருவாகியது. அதனையொட்டி பிறவகை மரங்களையும் சேகரித்து அங்கு நட்டு வளர்க்கத் தொடங்கினார். அவரது கிராமத்திற்குச் சென்று சிவப்பு கட்டெறும்புகளைச் சேகரித்து வந்து விலங்குகள் உயிர்வாழாத அந்த திட்டில் வளர்த்தார். சிறிது காலத்திற்குப் பிறகு அந்த மணல்திட்டின் மண்ணின் பண்பு அந்த எறும்புகளால் மாற்றப்பட்டது. அச்சமயம் “சமூகக் காடுகள் வளர்ப்பு” திட்டத்தின்படி வனத்துறையினர் மற்றும் சில தொழிலாளர்களும் இணைந்து 200 ஹெக்டேர் மணல் படுகையில் மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது. அவர்கள் சென்ற பின்னர் அந்த மரங்களின் பராமரிப்பையும் ஜாதவ் மேற்கொண்டார். மரங்கள் வளர்ந்ததைத் தொடர்ந்து எந்த உயிருமே வாழத் தகுதியற்று இருந்த அந்த மணல்திட்டில் பல உயிரினங்களும் குடியேறத் துவங்கின.

    molai woods-map

    அவ்வாறு குடியேறிய விலங்குகளில் இனஅழிவு ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களும், வங்காளப் புலியும் அடங்கும். பன்னிரு ஆண்டுகள் கழித்து வல்லூறு போன்ற பறவைகளும், வலசை போகும் பறவைகளும் பிற பறவையினங்களும், பல முயல்களும், நூற்றுகணக்கான மான்களும், மற்றும் பல சிறு விலங்குகளும் அக்காட்டை தங்கள் வாழிடமாக ஏற்றுக் கொள்ளத் துவங்கின. மான்கள், மாடுகள் போன்ற சிறு உயிரினங்களால் கவரப்பட்டு பெரிய விலங்குண்ணிகளும் அக்காட்டில் குடியேறத் துவங்கின. மரங்களே வளராது என்று கூறிய பகுதியில் தேக்கு, அகில், சந்தனம், கருங்காலி, ஆச்சா போன்ற மரங்களும் மூங்கில் காடுகளும் அடர்ந்து வளரத் துவங்கின. நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டின் ஆறு மாதங்கள் அக்காட்டில் வந்து தங்கி குட்டிகளையும் ஈனுகின்றன. மரங்களின் மீது கொண்ட அன்பால் ஜாதவ் தனது கிராமத்தைத் தவிர்த்துக் காட்டிலேயே சிறு குடில் போன்ற வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டு தனது மனைவி, இருமகன்கள் மற்றும் மகள் ஒருவருடன் வாழ்ந்து வருகிறார். குடும்பச் செலவிற்கு மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருமானம் ஈட்டுகிறார்.

    molai woods2

    அஸ்ஸாம் மாநில வனத்துறையினர், ஜாதவ் தனது முயற்சியைத் துவங்கி முப்பதாண்டுகள் கழித்தே அந்தக் காட்டைப் பற்றி அறிந்து கொண்டனர். அந்தக்காட்டின் அருகில் உள்ள கிராமங்களின் வயல்வெளிகளை உணவிற்காக நூற்றிற்கும் அதிகமான யானைகள் சேதம் செய்யத் துவங்கின. அவற்றை வனத்துறையினர் விரட்டிவர, அவை ஓடி வந்து முலாய்யின் காட்டில் அடைக்கலம் புகுந்தன. அரசின் பதிவேடுகளில் இடம் பெறாத ஒரு காட்டை அங்கு கண்ட வனத்துறை அதிகாரிகள் வியப்படைந்தனர். அன்றுதான் முலாய்யின் புதிய காடு அவர்களது கவனத்திற்கு வந்தது. யானைகளால் இழப்பு நேர்ந்தவர்கள் அந்தக் காட்டை அழிக்கக் கோரிக்கை வைத்தார்கள். ஜாதவ் அதற்குக் காட்டையும் விலங்குகளையும் அழிப்பதற்குப் பதில் என்னைக் கொன்றுவிடுங்கள் எனத் தீர்மானமாகச் சொல்லவும், வனத்துறையினர் ஜாதவிற்கு உதவ உறுதி பூண்டார்கள். மத்திய அரசின் கவனத்திற்குச் சென்றது ஜாதவின் சாதனை, முலாய்யின் காட்டை இப்பொழுது வனவிலங்குகளில் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    சுற்றலாப் பயணிகளையும், திரைப்பட வெளிப்புறக் காட்சி படம் பிடிப்போரது கவனத்தையும் கவர்ந்துள்ளது முலாய்யின் காடு. தனியொரு மனிதராக இந்த சாதனையைச் செய்த ஜாதவ் பயேங், இதனை ‘தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை’ என்றும் அரசின் வனத்துறை காட்டின் பராமரிப்பை ஏற்றுக் கொண்டால் வேறு ஓரிடம் சென்று புதிய காடோன்றை உருவாக்கவும் தயார் என்று சொல்கிறார். சுற்றுச்சூழல் கல்வி, மரம் நடுதல் பள்ளி நாட்களிலேயே தொடங்கப்பட வேண்டும், ஒவ்வொரு மாணவரும் பள்ளி முடிக்கும் முணர் இரண்டு மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் கூறுகிறார். இயற்கையில் இருக்கும் உணவுச் சங்கிலியைக் காப்பது நம் கடமை, நம் போன்ற மனிதர்களைவிட்டால் வேறு யாரால் உயிரினங்களைக் காக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகிறார் ஜாதவ். அனைவரையும் சுற்றுச்சூழலின் மீது கவனம் கொள்ளவும், மரங்களை வளர்ப்பதற்கு ஊக்குவிக்கும் முன்மாதிரியாக இருக்கும் ஜாதவ் பயேங் என்னும் காட்டுமனிதர் முலாய் அவர்களை வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

    தகவல்கள் உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ் தளத்தின் பல செய்திகளின் தொகுப்பு

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share