Author: மீ. விசுவநாதன்

  • “காயத்ரி”

     
    மீ.விசுவநாதன்

    1474968304-9786
    ஆதிசக்தி ஒன்றென்று – மனம்
    ஆழப் பதிந்த விதையொன்று – தினம்
    ஒதிபக்தி செய்வதற்கே – நன்கு
    ஓங்கி வளர்ந்து உருவாச்சு !

    நாதியாகத் தானிருந்து – மெய்
    ஞான விளக்கு எரிவதற்கு – தன்
    சோதிக்கண் தந்தவளே – என்
    சூட்சு மத்தின் திரியவளே !

    எப்போதும் உள்ளிருந்தே – அந்த
    ஏக உருவை உணர்வதற்கு -வாய்த்
    துப்பலெனும் தாம்பூலம் – ஒரு
    சொட்டு மிழ்ந்து சுகந்தருவாள் !

    கற்றதுவும் பெற்றதுவும் – அவள்
    கருணை இன்றிக் கிடையாது -என்
    உற்றதுணை “காயத்ரி” – அதை
    உச்ச ரிப்பேன் பயமேது ?

    (25.09.2017 10.44 am)

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (10)

     
    மீ.விசுவநாதன்

     

    பகுதி: பத்து
    பாலகாண்டம்

    தேவர்கள் வானர சேனைகளாக வருதல்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்

    ஜாம்பவான் சுக்ரீவன் வாலி
    தாரன், நளன்,நீலன், வாயு
    தாமெனத் தந்திட்ட பிள்ளை
    தவத்தோன் அறிவனுமன், இன்னும்
    மாபலங் கொண்டிருக்கும் வீரர்
    மண்ணில் வானரராய்த் தோன்றி
    ராவணப் போர்புரிந்து சீதா
    ராமன் சேவைசெய்ய வேண்டி (1)

    நான்முகன் தேவர்கள் பார்த்து
    நல்ல றிவுரையாகச் சொன்னார் !
    வானிலே பாய்ந்துசெல்லும் ஆற்றல்,
    மனத்தில் உறுதியோடு தீயோர்
    மேனியைச் சாய்த்தழிக்கும் எண்ணம்
    மிக்க வரத்துடனே தேவர்
    நானிலப் பிறப்புகொண்டு “ராம
    நாம” பணிக்கென்றே வந்தார் ! (2)

    வேள்வி முடித்து அயோத்தி திரும்புதல்

    யாகமும் முடிந்தவேளை மன்னன்
    அங்கே அந்தணர்கள் கொள்ள
    ஏகமாய்ப் பரிசளித்தார்! யோகி
    ரிஷ்ய சிருங்கராலே உள்ள
    தாகமே தீர்ந்ததாகக் கூறி
    தக்க மரியாதை செய்தார் !
    “யோகமே காண்பாய்நீ” என்றே
    யோகி ஆசிதந்து சென்றார் ! (3)

    “ஸ்ரீராம, பரத, லக்ஷ்மண, சத்ருக்கனன்” பிறப்பு

    பங்குனி நவமியன்று கோள்கள்
    பாங்காய் அமைந்தவேளை அன்பின்
    நங்கையாம் “கோசலைக்கு” ராமன்
    நல்ல குழந்தையாக வந்தார்!
    திங்களை ஒத்த”கை கேயி”
    தேவ குணபரதன் ஈந்தாள் !
    மங்கள “சுமித்திரை”யோ ரெண்டு
    வாய்மைத் திருமகன்கள் பெற்றாள் ! (4)

    குலகுரு வசிட்டர் பெயர் சூட்டினார்

    இலக்குவன், சத்ருக்னன் என்றும்
    இனிய குருவசிட்டர் தானே
    குலத்தினை வளர்க்கவந்த நான்கு
    குழந்தை களுக்கும்பேர் வைத்தார் !
    நிலத்திலே வந்தபிள்ளை தெய்வ
    நிகராய்க் கிடைத்ததாக தர்ம
    பலத்தவன் தானங்கள் செய்து
    பலனை இறைவனுக்கே தந்தார் ! (5)

    விதைகள் கற்ற பிள்ளைகள்

    பிள்ளைகள் வல்லோராய் நன்கு
    பெரிய வீரரென ஆனார் !
    வெள்ளையாம் நெஞ்சுக்குள் நித்தம்
    வேத நெறிசெழிக்கக் கற்றார் !
    அள்ளவே வற்றாத அன்பு,
    அறத்தால் அயோத்தியிலே மக்கள்
    உள்ளனர் என்கின்ற பண்பை
    உலக முணர்ந்திடவே வாழ்ந்தார் ! (6)

    விசுவாமித்திர முனிவர் வருகை

    பாலனாம் ராமனுக்குக் கொஞ்சம்
    பருவம் முதிர்கின்ற வேளை
    காலையில் அரண்மனைக்குள் வந்தார்
    தவசி விசுவாமித் ரர்தான் !
    ஏலமாய் மணக்கின்ற வேத
    தேகம் படைத்திட்ட ஞானி
    சீலத்தை உணர்ந்துள்ள ராஜன்
    சேர்த்த கரத்தோட ழைத்தார் ! (7)

    தயரதன் ரிஷியின் தேவை அறிதல்

    குறையிலாக் கௌசிகரைப் பார்த்து
    “கோவே ராஜரிஷி தேவே”,
    இறையென வந்துள்ள உங்கள்
    எண்ணம் எதுவென்று சொல்க
    நிறைவுடன் தந்திடுவேன்” என்றார் !
    நிமிர்ந்த பார்வையைக் காட்டிக்
    கறையிலா மன்னவரே எந்தன்
    கவலை நீங்கிற்று என்றார் ! (8)

    (தர்ம சரிதம் வளரும்)
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் பதினேழு, பதினெட்டு பகுதிகள் நிறைந்தது)

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (9)

    மீ.விசுவநாதன்
    பகுதி: ஒன்பது
    பாலகாண்டம்

    வசிட்டரிடம் மன்னன் வேண்டினான்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்

    வசந்த காலம் வந்தபோது
    வசிட்ட முனியைத் தயரதன்போய்
    உசந்த வேள்வி அச்வமேதம்
    உடனே துவங்க வேண்டுமென்று
    நயந்த பக்திப் பணிவுடனே
    ஞானி முன்னே நிற்பதுபோல்
    புயங்கள் கட்டிக் கேட்டவுடன்
    புனித குருவும் பதிலுரைத்தார் ! (1)

    “நன்றே நடக்கும் கவலைதீரும் !
    நாட்டில் உள்ள வேதியர்கள்,
    நன்றாய்ப் படித்த கல்விமான்கள்,
    நல்ல கலைஞர், கவிஞருடன்
    தொன்று தொட்ட தச்சர்கள்,
    தூய தர்ம நெறியோர்கள்
    என்று தேடி அனைவரையும்
    இதயம் திறந்தே அழையுங்கள் ! (2)

    சக்ர வர்த்தி விருப்பத்தை
    தரணி ஆளும் பிறமன்னர்
    திக்கு முழுதும் கூறுங்கள் !
    தேடி வருவோர் அனைவர்க்கும்
    தக்க மதிப்புக் காட்டுங்கள் !
    தவத்தோர் மகிழச் செய்யுங்கள் !
    துக்கச் சாதிப் பிரிவின்றி
    தொண்டு ளத்தால் அணையுங்கள் !” (3)

    இந்த வழியைச் சொல்லிப்பின்
    இனிய மனிதர் சுமந்திரரை
    “முந்திச் சென்று சனகரையும்
    முக்தி காசி அரசனையும்,
    அந்தக் கேகய மன்னருடன்
    அன்பு “ரோம பாதரையும்”
    வந்து கலந்து கொள்வதற்கு
    வகையாய் நேரில் அழையென்றார் !” (4)

    வெற்றிக் குதிரையும் வேள்வித் துவக்கமும்

    பரியும் வெற்றி முகத்துடனே
    பாரைச் சுற்றி வந்தவுடன்
    சரியாய் ஆண்டு ஒன்றாச்சு !
    தவத்தோன் ரிஷ்ய சிருங்கருடன்
    பெரிய வேதப் பண்டிதரும்
    வேள்வி செய்யத் தொடங்கினரே !
    உரிய தேவர் யாவருமே
    உவந்து நேரில் வந்தனரே ! (5)

    யாக விதியின் படியேதான்
    அறத்து வழியின் முறையேதான்
    ஆக அனைத்துத் தானமுமே
    அந்த வேள்வித் தீயினிலே
    ஏக இறைவன் ஒருவனுக்காய்
    ஈந்த சக்ர வர்த்தியினை
    ஆக மொத்த அனைவருமே
    ஆசி தந்து வாழ்த்தினரே ! (6)

    தேவர்கள் விஷ்ணுவை வேண்டுதல்

    தேவர் குலத்து யாவருமே
    பிரும்ம வரத்தின் பலத்தாலே
    நோகச் செய்கிற இராவணனால்
    நொடிக்கு நொடி அஞ்சினரே !
    மூவர் நடுவர் விஷ்ணுவிடம்
    முடிவை எடுக்க வேண்டுமென
    வாகாய்ச் சொல்லி வேண்டியதால்
    மண்ணில் பிறக்க முடிவெடுத்தார் ! (7)

    தன்னின் கூறு நான்காகத்
    தயரதன் வம்சப் பிள்ளையென
    இன்னும் சிலவாம் பொழுதினிலே
    எடுப்போம் மனிதப் பிறவியென்றார் !
    முன்னே தேவர் நீங்களெலாம்
    போவீர் வானர சேனைகளாய் !
    என்னால் அசுர இராவணனும்
    இன்னல் செய்யும் அனைவருமே (8)

    போரில் கொல்லப் படுவார்கள் !
    புண்யம் செய்த மற்றவர்கள்
    பாரில் மிஞ்சி வாழ்வார்கள் !
    பயமே இன்றி மக்களுமே
    வேரில் பழுத்த பலாவாக
    “இராம ராஜ்யம்” காண்பார்கள் !
    தாரின் மலராய் புதுமணமாய்
    பதினோ ராயிர(ம்) ஆண்டிருப்பேன் ! (9)

    கவலை விடுக என்றுரைத்த
    கடவுள் விஷ்ணு சென்றிட்டார் !
    அவலைப் பசிக்கும் வேளையிலே
    அரியே அள்ளித் தந்ததுபோல்
    அகமே குளிர்ந்து தேவர்களும்
    அரியைத் துதித்தே பூமியிலே
    சுகமாய்ப் பிறவி எடுப்பதற்கு
    சொடக்குப் பொழுதில் மறைந்தார்கள் ! (10)

    வேள்வியில் வந்த தேவதை

    வேள்வித் தீயின் நடுவினிலே
    வேத ஒளியின் உருவொன்று
    தோளை நிமிர்த்திக் கையிரண்டில்
    சுத்த பாயசம் வைத்தபடி
    வாளின் கூர்ய அறிவுநிகர்
    மன்னன் தயர தனிடத்தில்
    வேளை பார்த்துத் தந்துவிட்டு,
    “வேந்தே இந்தப் பாயசத்தை (11)

    உந்தன் மூன்று மனைவியர்க்கும்
    உடனே தந்து மகப்பேற்றை
    முந்திப் பெறுவீர்” எனக்கூறி
    முகிலைப் போல மறைந்ததுவே !
    விந்தை இந்தக் காட்சியினை
    வேத முணர்ந்தோர் கண்டனரே !
    முந்தைப் பயனைப் பெற்றிட்ட
    முகத்தால் மன்னன் பொலிவுற்றான் ! (12)

    தேவப் பிரசாதத்தைத் தருதல்

    மூத்த மனைவி கோசலைக்கு
    மொத்த அளவில் பாதிதந்து
    சேத்த மனைவி சுமித்திரைக்கு
    சிறிது பாதி தந்துவிட்டுக்
    காத்த மனிவி கைகேயி
    கையில் தந்து அதில்பாதி
    பாத்துக் குடித்த பின்னாலே
    தந்தார் மீண்டும் சுமித்திரைக்கே ! (13)

    மூன்று பேரின் முகத்தினிலே
    முன்னோர் சூர்யக் குலவழகு
    தோன்றி நிறைந்து ஒளிர்கிறது !
    தோன்றாப் பொருளைக் கருசுமந்து
    ஆன்றோர் அகமாய்க் குளிர்கிறது !
    அதனால் அறத்தின் நாயகனைப்
    போன்றோர் பிறக்கும் காரணமாய்
    புனித வேள்வி ஆக்கியது! (14)

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் பதிமூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறாவது பகுதி நிறைந்தது)

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (8)

    மீ.விசுவநாதன்

     

    பகுதி: எட்டு
    பாலகாண்டம்

    “ரிஷ்ய சிருங்கரும் சுமந்திரர் சொன்னதும்”

     

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1

    மன்னன் தயரதன் மந்திரி சுமந்திரர்
    சொன்ன செய்தி மன்னனுக்கு மகிழ்ச்சியை

    அள்ளித் தந்தது ; அதைநாம் அறிவோம்:-
    புள்ளி விவரமாய்ப் புராணம் சொல்வதை

    நெஞ்சுள் வைத்தே விபரமாய்ச் சொல்கிறேன்!
    சஞ்சல மில்லா சனத்குமாரர் முனிவர்கள்

    சபையில் கூறிய சத்திய வாக்கிது ;
    சுபயோக வேளையில் சுந்தர ரூபனை

    தயரதன் பிள்ளையாய்த் தான்பெறப் போகிறான் ;
    அயற்சியே வேண்டாம் அத்தனையும் உண்மை !

    காசியபர் பிள்ளை “விபாண்டக” யோகிக்கு
    மாசிலா “ரிஷ்ய சிருங்கர்” மகனாவார் !

    காட்டில் குடிலமைத்துக் கருத்தோடு ஒன்றி
    நாட்ட மேதுமின்றி நாளெல்லாம் தவமிருப்பார் !

    தந்தையைத் தவிர தவறியும் ஒருவரை
    சிந்தைக் குள்ளே சிறைபிடிக் காதவர் !

    அந்த மகானை “அங்க தேசத்து”
    சொந்த மன்னன் “ரோமபாதர்” தன்னுடை

    நாட்டு வறுமை நசித்திட வேண்டி
    ஆட்களை அனுப்பி அழைத்து வருவார் !

    மகளை அவர்க்கு மணம்முடித் திடுவார் !
    அகத்தில் பூரணர் ரிஷ்ய சிருங்கரால்

    மாமழை பெய்து வளமை தேசமாய்
    ஆகிடும் அந்த அங்க பூமியே !

    சத்தியம் தவறா தயரத னொருநாள்
    நித்திய வேள்விசெய் ரிஷ்ய சிருங்கரை

    தன்குல விருத்திக்குத் தகுதியாம் வேள்விசெய
    இன்முக மனத்துடன் எதிர்வணங்கி அழைப்பார் !

    முனியும் வருவார் முடிப்பார் வேள்வியை !
    கனிபோல் நான்கு கண்வளர் குழந்தைகள்

    பெற்றுத் தயரதன் பெரும்புகழ் கொள்வார் !”
    பற்று நீக்கிய சனத்குமாரர் இதனையே

    “கிருத யுகத்தில்” கீர்த்தியால் அறிந்து
    திருடமாய்ச் சொன்னதை தெய்வீக பலத்தால்

    சுமந்திரர் சொற்களில் சுகமாய்க் கேட்ட
    எமபயம் இல்லா எதிரியிலா “தயரதன்”

    தயரதன் ரிஷ்ய சிருங்கரை அழைத்தல்

    தன்குரு வசிட்டரிடம் சங்கதி கூறி
    வன்புலிக் கூட்ட மாபெருங் காடு

    நதிகளைக் கடந்து நல்லங்க நாட்டுப்
    பதியினை அடைந்து பக்தியுடன் முனிவர்

    பாதம் பணிந்தார் ! பண்புடை அயோத்தி
    தேசம் வந்து வேள்வி செய்திட

    வேண்டு மென்று விரும்பி அழைத்தார் !
    வேண்டுதலை ஏற்ற வேதநெறி முனிவரை

    சங்கு, துந்துபி, சங்கீத அலைகள்
    எங்கும் ஒலித்திட எதிர்கொண்ட ழைத்தார் !

    அழகிய அயோத்தி ஆனந்தங் கொண்டு
    குழந்தைகள் போலக் கொண்டாட்டம் போட்டது !

    மறையறி அந்தணர் மந்திர மோதினர் !
    நிறைகுண மாந்தர்கள் நெஞ்சு குளிர்ந்தனர் !

    அசுவமேத யாகம் தொடங்கியது

    வசந்த காலம் வந்த வேளையில்
    இசைந்தனர் அசுவமேத வேள்வி செய்திட !

    சரையூ நதியின் வடக்குக் கரையில்
    விரைந்து அமைத்தனர் வேள்விக் கூடம் !

    விபாண்டக யோகியின் பிள்ளையின் மூலம்
    அவாவது தீரும்! அந்தணர் கூறும்

    ஆசி பலிக்கும் ! ஐயம் இல்லை
    நேசிக்கும் பிள்ளைகள் நிச்சயம் பிறப்பார் !

    நம்பிக்கை கொண்ட நல்லசரன்
    கும்பிட்டு நின்று குருவருள் பெற்றானே !

    (தர்ம சரிதம் வளரும்)

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் ஒன்பதாவது, பத்தாவது , பதினொன்றாவது, பன்னிரெண்டாவது பகுதி நிறைந்தது)

    Share
  • சிவபிரதோஷம் ஸ்ரீ சந்திரசேகரன்

     மீ.விசுவநாதன்

     ஸ்ரீ சிவாபிஷேகம்

     

     

     

     

     

     

     

     

     

     

    அஞ்செழுத்து மந்திரத்தைச் சொல்கிறேன் – துளி

        அச்சமின்றி அன்போடு வாழ்கிறேன் !

    பிஞ்சுமுகச் சந்திரன்போல் உள்ளவன் – என்

        பிரியமுள்ள சந்திரசே கரானவன் !

    கஞ்சமின்றிக் கருணைதன்னைக் காட்டுவான் – மனக்

        கற்பூரத் தீவண்ணச் சோதியன் !

    நெஞ்சமெனும் வேள்வித்தீ மத்தியில் – தான்

        நிமிர்ந்துநடை போட்டபடித் தோன்றுவான் !

     

    தீர்த்தபதி என்றவனைப் போற்றிட – என்

        திருநாவில் தானமர்ந்து பாடுவான் !

    கூர்த்தமதி கொண்டஞான சித்தனாய் – என்

        குருவாகக் கிட்டவந்து கூடுவான் !

    வார்த்தைக்குள் சிக்காத பேரொளி – சிறு

        மனச்சிறைக்குள் சிக்குகின்ற சிவனொளி !

    சேர்த்தகைக்குள் சிவலிங்க மூர்த்தியாய் – என்

        சிந்தையிலே நின்றுதவம் செய்கிறான் !

              (இன்று  03.09.2017பிரதோஷம்) 

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (7)

    மீ.விசுவநாதன்

    பகுதி: ஏழு

    பாலகாண்டம்

    “இஷ்வாகு குலமும் அயோத்தி தேசமும்”

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1-1-1-1

    மனுவில் தொடங்கி வருகிற “இஷ்வாகு”
    இனக்குலம் ஓங்கி ஈடிலாப் புகழுடன் (2)

    கோசல நாட்டை குற்ற மிலாது
    நேச முடைய நிறைகுண மக்களின் (4)

    விருப்பு அறிந்த வேந்தர் களாக
    பொறுப்பு மிகுந்து பூமியை ஆண்டனர் ! (6)

    அவர்களின் கதையே அயோத்தி நகரில்
    நவயுக இராமன் நடத்திய வாழ்வாய் (8)

    இராமா யணமாய் ஏற்றம் கண்டது !
    இராவும் பகலும் இசையுடன் சொல்ல (10)

    இங்கே குசனும் இலவ னுமாய்
    உங்கள்முன் நிற்கிறோம்! ஒருமுக நினைவாய்க் (12)

    கதையைக் கேட்டு கவலையை நீக்குவீர் !
    இதைவிட நமக்கோர் இன்பம் வேறில்லை ! (14)

    கோசல நாடும் சரயூ நதியும்

    சூரியக் கதிர்களைச் சுண்டி இழுக்கிற
    சீரிய நற்குணம் செழித்துப் பாய்கிற (16)

    நதியே சரயூ ! நற்கோ சலத்தின்
    நிதியே அதுதான் ! நேர்மை, வீரம் (18)

    நிறைந்த மக்களை நிமிர்த்தி வைத்துத்
    துறைக ளெங்கும் தூய்மை செய்து (20)

    ஆற்றுப் படுத்திய அழகிய ஆறது
    நோற்றுப் பெற்றதே நூதன அயோத்தி ! (22)

    தசரத மன்னனின் தவத்தால் மேலும்
    உசரம் கண்டதில் உலகே வியந்தது ! (24)

    அழகிய தெருக்கள் ! அதிலே வேதம்
    பழகிய சான்றோர் பல்லாயிர முண்டு ! (26)

    வேள்விப் புகையில் வீதியில் செல்லும்
    ஆள்மீது நெய்மணம் அப்பி இருக்கும் ! (28)

    கல்விச் சாலையில் கற்கும் குரலுக்குச்
    செல்வம் இறங்கிச் சிறப்புகள் செய்யும் ! (30)

    வயல்வெளி விளைந்ததை வாரி எடுத்தே
    புயலெனச் செல்கிற பொற்குண ஊழியர் (32)

    வழிகளில் சிந்திடும் தானிய மணிகளைச்
    செழிப்புடன் உண்டே சிறகடிக்கும் புள்ளினம் ! (34)

    அறிவில் சிறந்த ஆசார்ய வசிஷ்டர்,
    செறிந்த வாமதேவர், சிரஞ்சீவி மார்கண்டர் , (36)

    காசிபர், ஜாபாலி, காத்யா யனரும்
    யோசனை சொல்லும் உயர்ந்த மந்திரியாய் (38)

    மன்னன் தசரதன் மன்றில் இருந்தனர் !
    இன்னும் சுமந்திரன் என்றொரு சாரதி (40)

    அருகே இருந்து அரசனைக் காத்தார் !
    கருவிலே நீதி கண்ணியம் பெற்றவர் (42)

    இதுபோல் நிறையவே இருந்தனர் ஆன்றோர்
    புதுமை அயோத்திக்குப் புகழினைக் கூட்டவே ! (44)

    தயரதனின் விருப்பமும் ஞானியர் ஆசியும்

    இத்தனை இருந்தும் இல்லா ஒன்றுக்காய்
    சித்தம் வருந்தி இருக்கும் வேளையில் (46)

    மதிநுட்பம் கொண்ட மந்திரி சுமந்திரர்
    எதிலும் கலங்கா இந்த மான்னனேன் (48)

    இப்படி இருக்கிறார் என்பதை அறிந்து
    அப்படியே சென்று ஆசார்ய வசிஷ்டரை, (50)

    மந்திரி மார்களை வரவழைத் திட்டார் !
    இந்திரன் வணங்கும் இந்த தயரதன், (52)

    உள்ள மிருக்கும் ஒருவிருப்பம் சொன்னான் !
    “அள்ளி எடுத்து அப்படியே முத்தமிடப் (54)

    பிள்ளை என்னும் பேறு வேண்டும் !
    வள்ளல் இறையோன் வரமளிக்க வேண்டும் ! (56)

    பெரியோர் உங்களின் பேராசி வேண்டுமென”
    கரிபல பலங்கொண்டோன் கைகட்டிக் கேட்டான் ! (58)

    “பிள்ளை வேண்டி வேள்வி செய்வாய்
    வள்ளல் உனக்கு வாய்க்கும் வம்சம் ! (60)

    பட்டத்துக் குதிரையை பார்முழுதும் அனுப்புக !
    சிட்டெனப் பாய்ந்தது செகத்தை வென்று (62)

    திரும்பி வந்ததும் செய்வோம் வேள்வியை !
    கரும்பாய் இனித்துக் கடலாய் நடக்கும் (64)

    சரையூ நதியின் வடக்குக் கரையில்
    இறையை வேண்டும் வேள்விச் சாலையை (66)

    உடனே அமைக்க உத்தர விடுக !
    அடைவீர் உங்கள் அகத்தின் ஆசையை” (68)

    என்று யோகியர் இனிது கூறினர் !
    நன்றி கூறி நம்மன்னன் நகர்ந்தான் ! (70)

    மூன்று மனைவியர் முன்னே சென்று
    தோன்றிய எண்ணத் தூய்மையைச் சொல்லி (72)

    மக்கட் பேறு வரம்பெறும் துணைவீர்,
    “துக்கம் நீங்கிடத் துலங்கிடும் வம்ச (74)

    வேள்விக் கான விரத மிருப்பீர்
    கோள்கள் எல்லாம் குணமே செய்திடும்” (76)

    என்ற அரசனின் இன்சொல் கேட்டு
    நின்ற சிலையாய் நிம்மதி முகமாய் (78)

    பட்டத்து அரசிகள் பார்த்தபடி யிருக்க
    கிட்டத்து வந்து கிள்ளிப் பார்த்தான் (80)

    சக்கர வர்த்தி தம்முடைத் துணைகளை !
    அக்கணம் மூன்று அரசியும் கணவனின் (82)

    காதல் நெஞ்சிலே கூடல் செய்தே
    சீதக் கனலைச் சீண்டி விட்டனர் ! (84)

    சரண்மனை என்ற தயரதன்
    அரண்மனை எங்குமே அமுதம் பொழிந்ததே ! (86)
    (தர்ம சரிதம் வளரும்)

     

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது பகுதி நிறைந்தது)

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (6)

     

     

     

    மீ.விசுவநாதன்
    பகுதி: ஆறு

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1-1-1-1

    காவியம் இயற்றினார் வால்மீகி

    உருவாய் தருமம் உலகில் பிறந்து
    திருவாய் நடந்த தெய்வக் கதையை

    அகத்தி லாழ்த்தி அமுதாய்ச் சொல்ல
    சுகமாய்த் தனித்துச் சூழல் மறந்து

    நாத வீணை நலந்தரும் இசையை
    வேத நரம்பெலாம் விருப்புடன் கேட்டல்போல்

    வால்மீகி உள்ளே வந்து குவிந்தது
    ஆல்போல் வம்ச அத்தனை செய்தியும்

    உண்மை ஒலியாய் உரக்கக் கேட்டது !
    மண்ணில் நடந்த மனித தருமனை

    கண்ணில் ஒற்றிக் கவிதை செய்ய
    எண்ண எண்ண இராமன் விரிந்தான் !

    உண்ணும் உணவிலும் உத்தமன் ருசியைத்
    திண்ணமாய் உணர்ந்து தீட்டினான் காவியம்!

    சீதையின் மகாவரலாறு

    பிறப்பும் வளர்ப்பும் பிரிந்த நிகழ்வும்
    துறந்த முனிகளின் தூய வழியும்

    சிறந்த நட்பும், சிறிய செய்கையால்
    இறந்த உயிரிலும் இருந்த மேன்மையும்,

    ஆசை கொண்ட அற்ப உறவும்
    ஆசை விட்ட ஆண்மைத் திறமும்

    அப்படியே ஏதும் அழுக்கின்றிச் சொல்லி
    இப்படிதான் வாழ்ந்தான் இராமன் என்று

    எடுத்துச் சொன்ன ஈடிலாச் சரித்திரம்
    தொடுத்துக் கொடுத்த தூயோன் வால்மீகி !

    “இலவ-குசன்” இசைத்த இராமாயணம்

    இராம கதையை எழுதி முடித்தவன்
    நாம மேன்மையை நாட்டு மக்கள்

    அறிந்திடச் செய்ய ஆசை கொண்டார் !
    செறிந்த ஞானம் சிறந்த பண்புடன்

    இணைந்து விளங்கும் “இலவகுச” ரெட்டையர்
    இணைந்திதைப் பாடினால் எப்போதும் உயிர்ப்புடன்

    இருக்கு(ம்) என்று நினைத்த வேளை
    உருக்கும் இசையால் உலகை மயக்கும்

    “இலவனும் குசனும்” இணையிலா முனிமுன்
    தலைவணங்கி நின்றனர் ! தாயாய்த் தந்தையாய்

    தானே இருந்து தங்களை ஆக்கிய”ஆ
    சானே” என்றவர் தாளினைப் பற்றினர் !

    சீதையின் வரலாறைச் சிறப்பாகப் பாட
    மேதைகள் கிடைத்ததாய் மிகவும் மகிழ்ந்தார் !

    படிப்பதற்கும் நன்றாகப் பாடுதற்கும் ஏற்ற
    துடிப்பான குழந்தையெனப் போற்றித் தேர்ந்தார் !

    நன்றாகக் கற்று ஞானம் பெற்றனர் !
    ஒன்றாக இருவரும் ஊரூராய்ச் சென்று

    இராமா யணத்தை இசையுடன் வழங்கினர் !
    கிராம மக்களும் கீர்த்திமிகு முனிகளும்

    பக்திப் பெருக்கிலே பதறாது கேட்டனர் !
    புத்தியில் தருமநெறி புதைத்துக் கொண்டனர் !

    பரிசுப் பொருள்களைப் பாடிய பிள்ளைக்குப்
    பெரிய வாழ்த்துடன் பிரியமாய்த் தந்தனர் !

    “பிற்காலம் இக்கதை பேர்சொல்லும்! ஊன்றிக்
    கற்றோரின் கவலைகள் களியாக மாறும் !”

    என்று முனிவர்கள் இனிதுற வாழ்த்தினர் !
    கன்றுக ளிருவரும் கர்வம் துறந்தனர் !

    அந்த அயோத்தி அரசன் இராமனும்
    இந்தக் கதையை தெருவோரங் கேட்டு

    அரச சபைக்கு அழைத்துவரச் சொன்னார் !
    முரசு முழங்க முகத்தில் சூரிய

    குலமே ஒளிர குழந்தைகள் வந்தனர் !
    நிலவே இரண்டாய் நிலத்தில் நிற்பதை

    அனைவரும் பார்த்து அதிச யித்தனர் !
    இனியவன் இராமன் இப்படிச் சொன்னார்”

    “மங்களங்கள் வாரி வழங்கிடும் கதையை
    உங்களுக்காய் இசைக்க உள்ளனர் இவர்கள் !

    நானும் கேட்டேன் நல்லவள் சீதையின்
    மானங் காத்த மகத்தான வரலாற்றை !

    மீண்டும் என்மனம் கேட்கத் துடித்தது
    ஆண்ட, ஆளும் அயோத்தி அரசரின்

    இரகுகுல சரித்திரம் ரத்தின ஒளியுடன்
    இரகுகுல “லவகுசன்” இசையிலே கேட்கலாம் !”

    குழந்தைகள் கதையைக் கூறத் தொடங்கினர்!
    குழந்தைபோல் இராமனும் முன்னே அமர்ந்து

    கதையில் கரைந்தார் ! கவனம்
    சிதையா சபையும் சேர்ந்து கொண்டதே ! (44)

    (தர்ம சரிதம் வளரும்)

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் மூன்றாவது, நான்காவது பகுதி நிறைந்தது)

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (5)

    மீ.விசுவநாதன்

    பகுதி: ஐந்து

    பாலகாண்டம்

    நாரதர் சென்றதும் வால்மீகி கண்டதும்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1-1-1

    நாரதரின் நாமொழிந்த நல்லகதை கேட்டுள்
    பூரணமாய் வாங்கிக் கொண்டார் வால்மீகி !

    அவரின்தாள் பணிந்துபின் அவரைவழி அனுப்ப
    தவயோகி நாரதரும் தான்மறைந்து போனார் !

    சீடர்பரத் வாஜரைச் சேர்த்தழைத்துக் கொண்டு
    காடதனின் காட்சியினைக் கண்டுவரப் புறப்பட்டார் !

    கங்கைக்குப் பக்கத்தில் கற்கண்டாய்ப் பாய்ந்துவரும்
    பொங்குநதி “தமஸா”வில் புகுந்துதான் நீராட

    விரும்பினார் வால்மீகி ! விரைந்தங்கு சென்றார் !
    திரும்பிய பக்கமெலாம் தெய்வீக முணர்ந்தார் !

    ஞானியரின் நெஞ்சம்போல் நல்முத்தாய் ஒளிவீசும்
    தேனினிக்கும் “தமஸா”வின் தீர்த்தக் கரையினிலே

    வானுயர்ந்த மாமரங்கள் வாசமிகு பூச்செடிகள்
    பானுவின் செங்கதிரைப் பக்குவமாய் உள்ளனுப்பும்

    பயிற்சியைப் பெற்றதனால் பறவையினங் கூடிக்
    அயற்சியைப் போக்கிடவோர் அழகான கூட மைத்து

    காதற்கண் கொண்டு காலமெலாம் களித்திருந்து
    நோதற்கே இடமின்றி நூறாண்டு கண்டிடலாம் !

    “வேடன் கொன்ற அன்றில் பறவை”

    அப்படியோர் கானகத்தில் “அன்றில்” பறவைகள்
    எப்போதும் காதலிலே இயல்பாக விளையாடும் !

    அதைப்பார்த்துக் குறிவைத்தே அடித்திட்டான் வேடன் !
    உதைபட்ட ஆண்பறவை உயிரிழந்த காட்சியைக்

    கண்டவுடன் பெண்துணை கதறியழும் குரல்கேட்டு
    உண்டான துன்பத்தின் கோபத்தி(ல்) ஒர்சாபம்

    வேடனுக்குத் தந்தார் விவேகமுள வால்மீகி !
    “வேடனே காதற்புள் ளிரண்டி லொன்றைக்

    கொன்றதனால் கொடியவனாம் உனக்கென்றும் அமைதியிலை
    சென்றிடு” என்றங்கே சீறினார் ! சினமடங்கி

    வருந்தினார்! தான்சொன்ன வார்த்தைகள் கவிதையாய்ப்
    பொருந்தியத்தில் தெய்வீகப் பொருத்தங் கண்டார் !

    “பிரும்மா வால்மீகி முன்தோன்றுதல்”

    முனிவரின் கவிவரியில் முழுமுதலோன் முகத்தொளியின்
    தனிக்கருணை பொழியுதென பரத்வாஜர் அகமகிழ்ந்தார் !

    ஆனாலும் வால்மீகி ஆழ்மனத்தில் வேடன்
    வீணாகக் கொன்றுவிட்ட ஆண்பறவைக் கோலந்தான்

    தானாக மேல்வந்து தவித்திடச் செய்கிறது!
    ஏனோவென் றறியாத இடர்பாட்டில் இருக்கையிலே

    வானிறங்கி பிரும்மன் வால்மீகி முன்வந்து,
    “மாமுனியே உன்னுள்ள மகத்துவத்தை நானறிவேன் !

    கவலைவிடு! காட்டினிலே கண்டதோர் காட்சியும்
    தவசியுந்தன் வாக்கினிலே தப்பாது வந்த

    கவிப்பொழிவும் நானுனக்குக் காட்டிய நல்வழியே !
    தவிப்புனக்கு அடங்கட்டும் ! தர்மத்தின் உருவான

    இராமகதை முழுவதும் எல்லா உயிர்களும்
    சேமமுறக் காவியமாய்ச் சிறப்பாக நீசெய்வாய் !

    ஒவ்வொரு நிகழ்ச்சியும் உண்மையாம் தரிசனமாய்
    எவ்விதக் குழப்பமின்றி எளிதாக அறிந்திடுவாய் !

    நன்மையெது தீமையெது நன்றாகக் கூறும்
    உன்கவியே உலகந்தான் உள்ளவரை வாழும் !

    உட்பொருளும் இலக்கணமும் ஒன்றான பெருஞ்செல்வம்
    இட்டமுடன் நீசெய்யும் இரகுவம்ச காவியத்தை

    எல்லோரும் கொண்டாடி இன்புற்றி ருப்பார்கள் !
    சொல்கின்றேன் நல்வாழ்த்து சுந்தரனைப் பாடுதற்கு!”

    என்று பிரும்மாவா(ன்) ஏக
    அன்று தொடங்கினார் அருள்ராம கதையே ! (43)

    (தர்ம சரிதம் வளரும்)

    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் இரண்டாவது பகுதி நிறைந்தது)

    Share
  • சிவபிரதோஷம் “ஆதிசக்தி வெள்ளம் “

         மீ.விசுவநாதன்

            lord-shiva-god-pictures-sivan-155910 (1)                                                                                                  

     பற்றறுந்து பற்றறுந்து பற்றறுந்து போக

        பாவிநானும் எத்தனைநாள் இங்கிருந்து வாழ !

    கற்றவித்தை அத்தனையும் கள்ளமென்று கண்டு

        கண்மூடி உள்தேடக் காலமின்னு மில்லை !

    உற்றதுணை அத்தனையும் ஓட்டையான கப்பல்

        ஊர்சுற்றச் சென்றுவிட்டேன் உல்லாசத் தெப்பம்!

    முற்றுணர்ந்த ஞானியில்லை முழுமூட(ன்) என்னுள்

        மூச்சுமுட்ட நிற்குதடா ஆதிசக்தி வெள்ளம் !

     

    சுள்ளென்ற வெய்யிலிலும் சொட்டுகிற வேர்வை

        சுந்தரனாம் பேரொளியை நீராட்டும் சேவை !

    உள்ளொன்றும் வெளியென்றும் ஒன்றுமெனக் கில்லை

        ஓங்காரப் பொருள்தேடும் ஓயாத வேலை !

    நள்ளிரவில் சூரியன்போல் நானுன்னைக் கண்டு

         நாளெல்லாம் பைத்தியமாய் சுற்றுகிறேன் ஈசா !

    வெள்ளிநிலாக் கொண்டவனே வெண்பனியாம் என்னுள்

         வெளிச்சமெனும் சக்தியுடன் வீற்றிருப்பாய் என்றும் !

                 (இன்று  19.08.2017 பிரதோஷம்) 

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (4)

     
    மீ.விசுவநாதன்

    பகுதி: நான்கு
    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1-1
    ஸ்ரீராமன் சந்தித்த அனுமனும், சுக்ரீவனும்

    பம்பைநதிக் கரையில்தான் பணிவுமிக்க தூய
    பக்தனான அனுமனைப் பார்த்தான்ஸ்ரீ ராமன் !
    தெம்புதுளிர் விட்டதுபோல் திருமுகத்தில் மெல்லத்
    தெரிந்ததுநல் நம்பிக்கை ! தேவிதனைத் தேட
    அன்புள்ள சுக்ரீவன் அரவணைப்பும் பெற்றான் !
    அக்னிசாட்சி யோடவனும் அன்னையைக் கண்டு
    இன்பத்தைத் தருவதாக இதயத்தால் சொல்லி
    இராமனுடன் நட்புதனை இயல்பாகப் பெற்றான் ! (31)

    வாலி வதம்

    அதன்பின்னே வாலியுடன் அவன்பகையைக் கூறி
    அருள்கூர்ந்து தவுமாறு ஆறுதலாய்க் கேட்டான் !
    இவன்கவலை போக்குதற்கு இப்போதே ஈந்தேன்
    என்வாக்கை என்றுதன்வில் மீதடித்துச் சொன்னான் !
    சிவபக்தன் ராவணனை சிறைபிடித்த வாலி
    சேர்த்துள்ள பலந்தன்னை ஸ்ரீராமன் கேட்டு
    அவன்கதை முடிப்பதற்கு ஆயத்த மானான் !
    அங்குளஆச் சாமரங்கள் அத்தனையும் சாய்த்தான்! (32)

    மலைபோன்ற துந்துபியின் வலிவுடலைக் காட்ட
    மடக்கியதன் கால்விரலால் வானுயரம் வீச
    சிலைபோல நின்றிட்ட சுக்ரீவ(ன்) அங்கே
    சிரித்தஸ்ரீ ராகவனின் செம்மையினைக் கண்டான் !
    உலையிட்ட அரிசியைப்போல் உள்வெந்த கோபம்
    உடனங்கு பொங்கிவர கிஷ்கிந்தை வாசல்
    இலைபோட்டு அழைத்ததுபோல் இடியோசை போலே
    எதிர்ப்பகையை சுக்ரீவன் எதிர்கொண்ட ழைத்தான் ! (33)

    குரல்வந்த திசைநோக்கி குகைவெளியில் வாலி
    குதிபோட்டு வரும்வேளை குணவதியாம் தாரை
    குரல்தாழ்த்தித் தடுத்தாலும் கோபத்தை வெல்லும்
    குறியறியா வாலியினைக் கொன்றானே ராமன்
    விரல்தட்டிச் விட்டிட்ட வினைமுடிக்கு(ம்) அம்பால் !
    வேதனைதான் என்றாலும் வித்திட்டான் வாக்கை !
    பரல்முத்து மணிமகுடம் சுக்ரீவன் ஏற்க
    பறந்தனர்கள் வானரர்கள் சீதையினைத் தேடி . (34)

    சுந்தரகாண்டம்

    கழுகினமாம் “சம்பாதி” கருத்ததனைக் கேட்டு
    கடல்தாண்டி அனுமனும் காற்றாகச் சென்று
    மொழுகினதோ தங்கத்தால் முழுபூமி (இ)லங்கை
    முத்தாக ஒளிர்வதிலே முகம்பார்த்துக் கொண்டான் !
    மெழுகாக உருகிவரும் சீதைமுகங் கண்டு
    மெய்முழுதும் பூமிவிழ விநயமுடன் நின்றான் !
    தொழுதான், அறிமுகமும் கொண்டவுடன் (இ)ராம
    தூதனவன் ஆதாரங் கொடுத்துப்பின் வந்தான் ! (35)

    தன்னையங்கு எதிர்த்தவரை தவிடுபொடி ஆக்கி
    தளபதி”அட் சயகுமாரன்” தலையினையும் கொய்தான் !
    அன்னையவள் வைதேகி அசோகவனம் விட்டு
    அத்தனையும் தீவைத்து ஆத்திரமும் தீர்த்தான் !
    பின்னையவன் பெருங்கடலைப் பெருமையுடன் தாண்டி
    பேரின்ப ராமனிடம், “கண்டேன்நான் சீதை”
    உன்னையே நினைத்திருக்கும் உத்தமியாம் கோதை
    உனக்கான செய்தியிது உண்மையெனச் சொன்னான் ! (36)

    இராவண வதமும், சீதையின் தவமும்

    கடல்நீரைக் குறிவைத்தே ஓரம்பை எய்த
    கணப்போதில் கடல்மன்னன் காட்சியினைத் தந்து
    “இடரொன்றும் இல்லாமல் இலங்கைக்குச் செல்ல
    இப்போதே உதவிகளைச் செய்துதரு கின்றேன்
    கடல்நீர்மேல் “நளன்”கல்லை வைத்தாலே போதும்
    கடகடென கற்பாலம் கண்முன்னே தோன்றும்
    திடமான பாலமிது வெற்றியுடன் நீங்கள்
    திரும்பிவரும் நற்காலம் தெரிகிறதே” என்றான் ! (37)

    போரினிலே இராவணனைக் கொன்றவுடன் சீதை
    புடம்போட்ட தங்கமெனப் புரியவேண்டி அந்த
    ஊரினிலே அனைவர்முன் உத்தமியைக் கோபக்
    குரலாலே இராமனுமே குத்துகின்ற போது
    மாரியிலும் தூய்மையாம் மகராசி அன்னை
    மனத்தாலே தீக்குளித்து மானத்தைக் காத்தாள் !
    வாரிவாரிப் பூச்சொரிந்து வாழ்த்தினரே அக்னி,
    வானோர்கள் எல்லோரும் ! மகிழ்ந்தான்ஸ்ரீ ராமன் ! (38)

    ஸ்ரீராமன் பரத்வாஜர் ஆஸ்ரமம் வருதல்

    இலங்கைக்கு மன்னனாக வீடணனை ஆக்கி
    இறந்துபோன வானரரை எழுப்பிவிடச் செய்து
    கலங்கிநின்ற மனத்தோர்க்கு கவலைகளை நீக்க
    கல்யாண ராமனாகக் காட்ச்சிதர வேண்டி
    நிலங்குளிரும் கார்குணத்தான் நேரயோத்தி செல்ல
    நினைத்தங்கு புட்பகச்சீர் விமானத்தில் ஏற்றிப்
    புலம்பெயர்ந்தான் ! பரத்வாஜர் புகழ்க்குடிலில் கொஞ்சம்
    பொழுததனைக் கழித்திடவே புத்திதனைக் கொண்டான் ! (39)

    ஸ்ரீராம ராஜ்யம்

    பக்திமிகு அனுமனிடம் பரதனிடம் சென்று
    பக்குவமாய் வரும்செய்தி பகன்றிடவே சொன்னான் !
    எத்திக்கும் இராமனையே எதிர்பார்க்கும் காலம்
    இறங்கி”நந்தி கிராமத்தில்” இன்பமுடனி ருந்தான் !
    தித்திக்கும் செய்தியினால் தேர்க்கூட்ட மாகத்
    தேடிவந்த மக்களுக்குத் தேனாட்சி தந்தான் !
    முக்திக்கு வழிகாட்டும் முனிவர்க(ள்) எல்லாம்
    மோனத்தில் ஞானத்தில் மூழ்கிதனை வென்றார் ! (40)

    இன்பத்தைத் தவிரவேறோர் எண்ணமின்றி மக்கள்
    ஏற்றமுடன் வாழ்ந்தார்கள் ! எல்லோர்க்கும் தர்ம
    உன்மத்த மேறிநல்ல உள்பலங்கொண் டார்கள் !
    உடன்பிறந்தோர், நண்பர்கள், உற்றோர்கள் என்று
    அன்பொழுக வென்றார்கள் ! ஐயங்கள் தீர்க்கும்
    ஆசார்ய மேலோர்கள் அற்புதம்செய் தார்கள் !
    பொன்போன்ற காலமிது ! புகழ்ராம காதை
    பொய்யில்லா தர்மத்தால் புவியாண்ட சத்யம் ! (41)

    பதினோறா யிர(ம்)ஆண்டு பற்றின்றி ஆட்சி
    பார்த்துவந்தான் இராமராஜன் ! பட்டினியும் இல்லை,
    பதிஇறப்பு மில்லை, பசுக்களுக்குப் பச்சைப்
    பசேலென்ற புற்களுக்குப் பஞ்சமென்ப தில்லை !
    நிதிக்குறையு மில்லை!ஓ(ர்) ஏழைகூட இல்லை !
    நிறைவாக எவ்வுயிரும் எப்போதும் வாழ்ந்த
    பதியன்றோ இராமனாண்ட பண்புள்ள தேசம் !
    படிப்போர்க்கும் கேட்ப்போர்க்கும் பல்லாண்டு கூடும் ! (42)

     
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில்
    முதலாவது ஸர்க்கம் (பகுதி) முடிவடைந்தது)

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (3)

     

    மீ.விசுவநாதன்

     

    பகுதி: மூன்று

    பாலகாண்டம்
    இலக்குவனும், சீதையும் உடன் வருதல்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-1

    அண்ணனுக்குத் தொண்டாற்றி ஆதிமுதல் வாழும்
    அடக்கமிகு இலக்குவனும் அடவிக்குச் சென்றான்
    மண்மகளாம் ஜானகியும் வருங்காலம் உங்கள்
    வரமென்றே தன்கணவன் மனமொப்பச் சென்றாள்!
    எண்ணத்தில் பாசத்தை ஏற்றிய மன்னன்
    ஈடிலா தயரதனும் எல்லைவரை வந்தான்
    தண்கங்கைக் கரைக்”குகனை” சந்தித்த பின்னால்
    தன்னுடைய மக்களைத் தா(ன்)அனுப்பி வைத்தான் ! (21)

    முனி பரத்வாஜர் ஆஸ்ரமம் அடைதல்

    ஒவ்வொரு வனப்பகுதி உள்ளேயும் சென்று
    ஓடிவரும் ஆறுகளை உற்சாகத் தோடு
    செவ்வானக் கோலமென சிந்தையிலே வைத்து
    சீர்முனியாம் பரத்வாஜர் சிறந்தகுடில் வந்தார் !
    அவ்வேளை அம்முனியின் ஆணையினை ஏற்று
    அழகு”சித்ரக் கூடத்தை” அப்போதே சேர்ந்தார் !
    இவ்விதமாய் மூவருமே இருக்கின்ற வேளை
    இறந்திட்டார் தசரதர் ஈடில்லா மன்னர் ! (22)

    பரதன் அரசேர்க்க மறுப்பதும் இராமனை வேண்டலும்

    வாரிசாய் பரதனை வசிட்டரும் மற்ற
    மகத்தான அந்தணரும் வருந்திட்ட போதும்
    நேரியநற் குணபரதன் நீதியைத்தான் தாங்கி
    நேராகக் காட்டிற்கு இராமவழி சென்றான் !
    நேரிலே அண்ணன்முன் நெஞ்சார வீழ்ந்து
    நீங்களே அரசரென நிசத்தோடு வேண்ட,
    “யார்வந்து சொன்னாலும் யான்கொடுத்த வாக்கை
    அப்படியே காப்பதாய் அண்ணலுமே சொன்னார்!” (23)

    பரதனுக்கு பாதுகை அளித்த இராமன்

    தன்னுடைய பாதுகையைத் தன்தம்பி கையில்
    தனிக்கருணை இராமனும் தந்தனுப்பி வைத்தார் !
    நன்றியுடன் அண்ணனது நல்மொழியைப் பெற்று
    “நந்திகிரா மத்”திலே நற்பாது கையால்
    அன்றுமுதல் பரதனும் ஆட்சியினைச் செய்தான் !
    அண்ணனை எதிர்பார்த்தே அருந்தவமும் ஏற்றான் !
    நன்றிந்த நேரமென, நாட்டோர்கள் யாரும்
    நடந்தறியாக் காட்டிற்குள் நல்ராமன் சென்றான் ! (24)

    ஸ்ரீராம பட்டாபிஷேகம் - ரவிவர்மா ஓவியம்

    அகத்தியமுனிவரை சந்தித்தல்

    “விராத”னெனும் அரக்கனை வீழ்த்திய பின்னே
    வேதமுனி “அகத்தியரின் வேள்விக்கூ டத்தில்
    இராமனும் சீதையும் இலக்குவனும் கூடி
    இணையிலா அகத்தியர் இணையடியைப் போற்ற
    வராதநற் செல்வமே வந்ததாக எண்ணி
    வாழ்த்தினர் மாமுனி வாஞ்சையாய் நன்றாய் !
    அராவணை விட்டுவந்த அழகனுக் கென்றே
    அம்பறாத்துணி இரண்டினை அகத்தியர் தந்தார். (25)

    தண்டகாரண்யத்தில் முனிவர்கள் வேண்டல்

    செந்தீயை வளர்த்துநிதம் வேள்விசெய்வோர் வந்து,
    “தீயதோர் அரக்கர்கள் தினம்தரும் தொல்லை
    இந்திரரே ஆனாலும் எதிர்த்துப்போர் செய்ய
    எப்போதும் அஞ்சுவர் ! இராமனே உங்கள்
    மந்திரவில் கொண்டுடன் மாற்றுவீர்எம் அச்சம் !
    மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகள்” என்று
    சுந்தர இராமனைத் தோத்திரம் செய்ய,
    “சூழ்வினை தீர்த்துமக்கு சுகந்தருவே” னென்றான் ! (26)

    சூர்ப்பணகையும், இராவணனும்

    அதன்பெயரே ஜனஸ்தானம் ! அங்குதான் தீய
    அரக்கியாம் சூர்ப்பணகை அட்டகாசம் செய்வாள் !
    அதனாலே அவளங்கு அங்கபங்கம் செய்து
    அவமானப் பட்டுவிட்டாள் ! ஆத்திரம் கொண்டு
    முதலாக கரதூஷண மூர்க்கரினை ஏவ
    முற்றுமவர் கொட்டத்தை முடித்திட்டான் ராமன் !
    பதிலுக்கு இராவணன் பழிதீர்க்க எண்ணி
    பற்றுள்ள மாரீசன் பக்கபலம் கேட்டான். (27)

    மாரீசன் நல்லுரை

    “ஆற்றலும், எந்நாளும் அறம்வழுவா நல்ல
    அகத்தாலும் உறுதிபெற்ற ஆண்வீரன் ராமன்
    தோற்றாலும் அவர்முன்னே தோற்றலே வெற்றி !
    தொலைத்திடு வீண்பகையை சொல்வதைக்கேள்” என்றான்.
    தூற்றினான் துப்பினான் தொடர்ந்துவா என்று
    துரத்தினான் மாரீசனை தூயராம தர்மம்
    நோற்றிடும் ஆசிரமம் நோக்கியே ! அந்த
    நூதன மாயாவி நொடியினில் சென்றான். (28)

    இராவணன் சீதையைக் கவர்தல்

    மாயாவி மாரீசன் வஞ்சகமாய் அங்கே
    வளையவந்து இராமனை மயக்கியே ஓட
    ஓயாத இலக்குவனும் ஓடிப்பின் போக
    ஒளிந்துவந்த இராவணனும் உத்தமியாம் சீதைத்
    தீயோடு போய்விட்டான் ! தேவமகள் கத்தும்
    திசைபார்த்து ஜடாயுவும் தேடிப்போர் செய்தார் !
    தீயோனோ ஜடாயுவை வெட்டியே சாய்த்தான் !
    இராமனிடம் கழுகுராஜன் எல்லாமும் சொன்னார் ! (29)

    ஜடாயுவும், சபரியும்

    கலங்கிநின்ற இராகவனோ கழுகுராஜன் ஈமக்
    கடன்முடித்தார் ! சீதையின் கண்ணீரைப் போக்கத்
    துலங்குகிற நாள்தேடிப் போகின்ற போது
    துட்டனாம் “கபந்தனை”க் கொன்றுதீ யிட்டார்!
    நிலம்விட்டுப் போகையில் “இராமாநீ நல்ல
    நெறியாளர் சபரிகுடில் செல்லுக வென்றான் !”
    அலம்பிவிட்ட நிலவொளியில் அமைதியைத் தேடி
    அலைந்தபடி “சபரி”யிடம் அமைதியைப் பெற்றார். (30)

    (தர்ம சரிதம் வளரும்)

    (ஸ்ரீமத் வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது)

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (2)

     
    மீ.விசுவநாதன்

     
    பகுதி: இரண்டு
    பாலகாண்டம்

    ஆதிகவி வால்மீகியும் நாரதரும்

    ஸ்ரீராம தர்ம சரிதம்
    (காப்பு)
    வில்லெடுத்த வீரன் விநயமிகு ராமகதை
    நல்லொழுக்கத் தீன்தமிழில் நான்சொல்லச் சொல்லெடுத்து
    நீதருவாய் சாரதையே ! நித்திலப் பேரொளியே !
    சீருடன் என்னுள்ளே சேர். (8)

    சிருங்கேரி மாமலைவாழ் தெய்வதமே ! ஞானப்
    பெருங்கோவில் கொண்டவளே ! பிள்ளை அருமைத்
    திருராமன் வாழ்ந்த திசைநோக்கிப் பாடக்
    கருவாக வந்துநீ கா. (9)

    தட்டச்சில் வார்த்தை தவறாமல் வந்திடவும்
    பட்டத்து யானையெனப் பைந்தமிழ்த்தேன் சொட்டுகிற
    உச்சத்துப் பாக்களையே உள்ளொளியால் கொட்டிடவும்
    இச்சையுட(ன்) ஈவார் குரு. (10)

    ஒருதிருடன் “மகரிஷி”யானார்
    அந்தவோர் காட்டில் அவனேதான் ராஜா !
    அடுத்தவரின் பொருட்களை அள்ளிக்கொண் டோடும்
    விந்தைமிகு கள்ளனவன் ! வேட்டையி லோர்நாள்
    வேதரிஷி நாரதரைத் தீக்காற்றாய்ச் சுற்றி,
    “சொந்தமாய் உள்ளவுன் பொருட்களைத்தா” வென்றான்!
    “சுகமாகக் கொண்டுபோயுன் சுற்றத்தார் முன்னே
    வந்தபாவச் செல்வத்தை வாரிக்கொண் டோரே
    வரும்பாப மூட்டையில் பங்குகொள் வீரோ ? (11)

    திருடிதினம் நான்தரும் தீமையிலே நீங்கள்
    தேகத்தை வளர்க்கின்றீர்! தீராத பாபம்
    ஒருபங்கு கொள்வீரோ? சொல்லெனக் கேட்டுச்
    சொன்னபதில் பெற்றுவந்து சொல்லுக” வென்று
    கருணையுடன் நாரதர் கள்ளனிடம் சொன்னார்!
    கள்ளனவன் சென்றுதன் காதல்மனை யாளை
    அருகழைத்துக் கேட்டவுடன் !”அன்னமிட லுங்கள்
    அன்றாட தர்மந்தான், அறங்கொன்ற பாபம் (12)

    உங்களுக்கே எங்களுக்கு ஒட்டாதே என்றாள்”
    உடனேயே காட்டிற்கு ஓடிவந்து,”ஞானி
    உங்களைநான் பணிகின்றேன்! ஒட்டிய தீமை
    ஒழிவதற்கோர் நல்வழியைச் சொல்லுக வென்றான்!”
    அங்கேயே “ராமநாம” அற்புதத்தை ஓத
    அலுங்காமல் ஆழ்தவத்தில் அப்படியே மூழ்கி
    மங்காத ஆதவனாய் வானோர்கள் மெச்சும்
    மகத்தான ஆதிகவி வால்மீகி யானார். (13)

    வால்மீகி
    ஓமெனும் உள்ளொலி உற்சாக வெள்ளம்
    ஓயாமற் பாய்கிற உத்தம யோகி
    நாமமே வால்மீகி ! நல்முனிவோர்க் கூட்ட
    ஞாலமே போற்றுகிற நல்வினையால் வந்தோன் !
    சேமமே எப்போதும் செந்நாவில் பொங்கிச்
    சீரிளமைக் கவிதையாய்ச் செய்துபேர் கொண்டோன்!
    காமமே இல்லாத கர்மவினை என்று
    காலத்தால் நீங்காத காவியத்தைச் செய்தோன் ! (14)

    நாரதர்

    அந்தவோர் ஆதிகவி ஆசிரமம் தேடி
    அவராக வந்தாரே நாரதராம் ஞானி !
    எந்தவோர் ஆசையும் கிஞ்சித்து மின்றி
    எப்போதும் நாரணன் நாமத்தில் மூழ்கும்
    பந்தத்தைக் கொண்டவர் ! பக்தியால் முக்தி
    பளிச்செனப் பெற்றவர் ! பாட்டிலே விஷ்ணு
    சிந்தையை ஆழமாய்ச் சேர்த்திசைத் துள்ளே
    சீதள குணமாகச் சிரித்தபடிச் செல்வோன் ! (15)

    நாரதருக்கு வால்மீகி செய்த மரியாதை

    நாரதர் வந்தவுடன் நல்வணக்கங் கூறி
    ஞானியவர் பாதமதை நன்னீரால்த் தூய்மை
    பூரணமாய்ச் செய்துவுடன் பூசித்தார் ! உண்ணப்
    புதுப்பழங்கள் தந்தவரைக் கௌரவித்தார் ! பின்னர்
    நாரதரை நோக்கியே நல்விநயங் கொண்டு
    “நல்லோரே ஞானியரில் உச்சமாய் நின்று
    வாரணம்போல் ஆன்மபலம் வாய்த்தோரே ! இந்த
    வால்மீகி கேள்விக்கு விடைவேண்டு மென்றார்”! (16)

    வால்மீகி கேட்ட கேள்விகள்

    “முனிவரே இவ்வுலகில் மோகமே இன்றி
    முன்னோர்சொல் கேட்பவரும், முனைமுறியா தர்மத்
    தனிவழியே செல்பவரும், தன்னாற்றல், தண்மைத்
    தவவாழ்வைக் கொள்பவரும், தந்தைதாய் போற்றும்
    கனிவினைத்தான் பெற்றவரும், கடுங்கோபம் நீக்கிக்
    கல்யாண குணத்தோடு கற்பூர புத்தி
    இனிதாகப் பெற்றவரும், ஈடில்லா வீர
    இதயத்தோ டிருப்பவரும் எவர்தான் என்றார் ?” (17)

    நாரதர் கூறிய பதில்
    கேள்விகளைக் கேட்டவுடன் கீர்த்திமிகு உள்ள
    கீதமிசை நாரதரும் விடையினைத் தந்தார் !
    “கோள்களே குதூகலித்துத் தந்ததோர் பிள்ளை!
    குணக்குன்று ! இஷ்வாகு குலத்தோன்றல் ராமன்
    தோள்வலிமை கொண்டவன்! தொண்டிலே தேர்ந்தோன் !
    துன்பத்தைத் துடைக்கின்ற துடிப்பினைப் பெற்றோன் !
    ஆளிவன்போல் யாருமில்லை ஆன்மபலம் மிக்கோன்
    அறிவாளன், நீதிமான், அன்பாலே வெல்வோன் ! (18)

    கார்மேகம் வெட்க்கிடும் அருட்கொடையான் ! நீண்ட
    கைகளும், அகன்றதோர் கண்களும், சங்குச்
    சீரான நீள்கழுத்தும், செதுக்கியதோர் தாடை,
    சிரசழகும் வெண்ணைபோல் சிரிப்பழகும், நன்கு
    நேரான நாசியும், நேர்மைநிறை நெஞ்சும்,
    நிமிர்ந்தநல் நடையுடை நேர்த்தியும் கொண்டோன் !
    பாராளும் ராஜனுக்குப் பரிந்துரைக்கும் தூய
    பண்புகள் அத்தனையும் பரிசாகப் பெற்றோன். (19)

    தாயான கௌசல்யா தன்பிள்ளை என்றும்
    தயாநிதி எனமகிழும் தன்மையினைப் பெற்றோன் !
    மாயாவி விஷ்ணுவின் மறுஅவ தாரம்
    மக்களைக் காத்திடவே வந்துதித்த ராமன் !
    ஓயாது அறம்செய் தோங்குபுகழ் சேர்த்த
    ஊர்மெச்சும் தசரதனின் உயிரான பிள்ளை !
    தாயான கைகேயி தன்வரக் கேட்டால்
    காடேகிப் போனவன்தான் காகுத்த னென்பேன் ! (20)

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (1)

    ஸ்ரீராம தர்ம சரிதம்

    களிப்பில் கவனம் கரையா திருக்க
    அளிப்பா(ய்) அகத்தி(ல்) அணுவின் துளியாய்
    அமுதனாம் ராம(ன்) அருளின் ஒளியை !
    குமுதமாய்க் கும்பிடுவேன் கொண்டு. (2)

    கொண்ட அறிவோ குறைவு, மனத்திலே
    கொண்ட அளவோ குணராமன் கொண்ட
    தருமத்தின் உச்ச தரத்தி னுயரம் !
    குருசித்த மென்றிதைக் கொள். (3)

    கொள்வதும் தள்வதும் கூடியோர் ஞானத்தின்
    உள்ளிருக்கும் ஆத்ம உபதேசம் – பிள்ளையிவன்
    அள்ளித் தருகின்ற அன்புக் கவிச்சுவையை
    வள்ளியின் மைத்துனனே வாழ்த்து. (4)

    வாழும் தருமமாம் மாமனித ராமனைச்
    சூழும் பகையெல்லாம் சோகத்தில் வீழும்
    வரலாற்றை இச்சிறுவன், வான்மீகி மெச்சத்
    தரவேண்டும் இந்தக் கணம். (5)
    (அறுசீர் விருத்தம்)
    வால்மீகி சொன்ன கதையை
    வழங்கிடவே என்னைப் பணித்தான்
    வேல்வாங்கி நின்ற பெயரோன்
    வெள்ளைமன “பால குமாரன்” !
    நூல்வாங்கிக் கற்ற படிப்பும்
    நூறாண்டாய்க் கேட்ட கதையும்
    ஆல்போன்ற வம்ச குருவின்
    அருளோடும் பாடத் துணிந்தேன் ! (6)

    ஊமையான நான்யார் அருளில்
    உயர்ந்தராம வாழ்வை அளக்க ?
    தீமையிலே தோய்ந்த கருவா
    திருமாலின் மேன்மை உரைக்க ?
    தாமதமே இன்றிக் கவிதைத்
    தரத்தோடு கொண்டு குவிக்க ?
    நாமமது “ராம” சுகத்தால்
    ஞானமது தானே சுரக்கும் ! (7)

    (தர்ம சரிதம் வளரும்)

    Share
  • சிவபிரதோஷம் – “சிவனுடை அன்பகம்”

     

    மீ.விசுவநாதன்

    ame
    சிவனை வணங்கிடச் சிந்தை அமைதியில் தேர்ந்திடுமோ ?
    சிவனை நினைத்திடத் தேர்ந்தநல் ஞானமும் சேர்ந்திடுமோ?
    நமனை உதைத்தவன் நானினைக் கொல்ல நடுங்குவனோ ?
    இவனைத் திருத்திட இத்தனை காலமேன் என்சிவனே !

    கருமைக் குழலுள் கருணை மழையினைக் கட்டியவா !
    இருமை விழியால் எளியோர் வினைகளை நீக்கிடவா !
    பெருமை கொடுக்கும் பெரும்பே(ர்) அடியவர் பெற்றவனே !
    அருமை அடியேன் அகமே சிவனுடை அன்பகமே !

    (இன்று 06.05.2017 பிரதோஷம்)
    (பாவினம்: கட்டளைக் கலித்துறை)

    Share
  • ஞானக் குருவி

    மீ.விசுவநாதன்

     
    கோடிகோடி பணத்தாலே – வீடு
    கோவிலாகக் கட்டி விட்டேன்
    நாடியோடி வருவதற்கு – என்
    நட்பின்கை நீட்டி வைத்தேன்

    அள்ளியள்ளித் தருவதற்கு – பெரும்
    அன்னதானக் கூடம் செய்தேன்
    வெள்ளிநிலா வெளிச்சத்தில் – கவி
    விளக்கங்கள் அறிந்து கொண்டேன்

    சித்திரங்கள் பலசெய்து – சுவர்
    சிரித்திடவே அழகு பார்த்தேன்
    மத்தளங்கள் மேளத்துடன் – இசை
    மன்மதனைப் பாட ழைத்தேன்

    சோலையென மரஞ்செடியால் – வீடு
    சுந்தரமாய் ஆக்கி வைத்து
    மாலையிள வெயிலிலே – எனை
    மறந்துதினம் கவிதை செய்தேன்

    ஓதுகின்ற வேதத்தால் – என்
    உள்ளொளியைக் கூட்டி வைக்க
    போதுமான காலத்தை – என்
    புத்தியிலே ஏற்றி வைத்தேன்

    இத்தனையும் செய்தவுடன் – ஒரு
    இறுமாப்பு உள்ளே வந்து
    மொத்தமாக ஆணவமாய் – என்
    முகத்திரையைக் கிழிக்க திர்ந்தேன்.

    (20.04.2017 09.23 am)

    Share