சிவபிரதோஷம் ஸ்ரீ சந்திரசேகரன்
மீ.விசுவநாதன்
அஞ்செழுத்து மந்திரத்தைச் சொல்கிறேன் – துளி
அச்சமின்றி அன்போடு வாழ்கிறேன் !
பிஞ்சுமுகச் சந்திரன்போல் உள்ளவன் – என்
பிரியமுள்ள சந்திரசே கரானவன் !
கஞ்சமின்றிக் கருணைதன்னைக் காட்டுவான் – மனக்
கற்பூரத் தீவண்ணச் சோதியன் !
நெஞ்சமெனும் வேள்வித்தீ மத்தியில் – தான்
நிமிர்ந்துநடை போட்டபடித் தோன்றுவான் !
தீர்த்தபதி என்றவனைப் போற்றிட – என்
திருநாவில் தானமர்ந்து பாடுவான் !
கூர்த்தமதி கொண்டஞான சித்தனாய் – என்
குருவாகக் கிட்டவந்து கூடுவான் !
வார்த்தைக்குள் சிக்காத பேரொளி – சிறு
மனச்சிறைக்குள் சிக்குகின்ற சிவனொளி !
சேர்த்தகைக்குள் சிவலிங்க மூர்த்தியாய் – என்
சிந்தையிலே நின்றுதவம் செய்கிறான் !
(இன்று 03.09.2017பிரதோஷம்)