Tag: மலர் சபா

  • நான் அறிந்த சிலம்பு – 88 (09.09.13)

    மலர் சபாkannagi and devanthi

    புகார்க்காண்டம்- 09. கனாத்திறம் உரைத்த காதை

    தேவந்தி கண்ணகியிடம் சென்று ஆசி கூறுதல்

    குறைவில்லாத நிறைந்த புகழையுடைய
    தன் தோழி கண்ணகி
    தன் கணவனைப் பிரிந்து வருந்துகிறாளே
    என்று எண்ணிய தேவந்தி
    கோயிலுக்குச் சென்று
    அறுகு, சிறுபூளை மற்றும் நெல் தூவி வழிபட்டுக்
    கண்ணகி தன் கணவனை
    மீண்டும் பெற வேண்டினாள்.

    பின் கண்ணகியிடம்
    “நீ உன் கணவனைப் பெற்று வாழ்வாயாக”
    எனக் கூறினாள்.

    கண்ணகி தான் கண்ட கனாவினைத் தேவந்திக்கு உரைத்தல்

    அது கேட்ட கண்ணகி
    தேவந்தியிடம் கூறினாள்:
    “செறிந்த வளையலை அணிந்தவளே!
    நீ இங்ஙனம் கூறக்கேட்டு
    ஆறுதல் அடைந்தாலும்
    நான் கண்ட ஒரு கனவினால்
    என் நெஞ்சம் என்ன நேருமோ
    என்று பயமடைகிறது.

    அந்தக் கனவு என்னவென்றால்…..
    என் கணவர் என்னைக்
    கைப்பிடித்து அழைத்துச்செல்ல
    நாங்கள் இருவரும்
    ஒரு பெரிய நகரம் புகுந்தோம்.
    அங்ஙனம் புகுந்த் ஊரில் உள்ளவர்கள்
    இடக்கூடாத பழியை எங்கள் மீது
    இடுதேளாய் இட்டனர்.

    அப்பழியின் காரணமாக
    என் கணவன் கோவலனுக்கு
    மிக்க தீங்கு ஒன்று ஏற்பட்டது என்று
    ஊரார் கூறக்கேட்ட நானும்
    அரசனின் அவை சென்று வழக்குரைத்தேன்.

    அதனால் அம்மன்னனுக்கும் ஊருக்கும்
    நேர்ந்த தீங்கு ஒன்றும் உண்டு.
    அது தீய கனவாதலால் அதைப்பற்றி
    உன்னிடம் ஒன்றும் கூறமாட்டேன்.
    அவ்வூருக்கு நேர்ந்த தீங்கு
    நான் செய்த
    குற்றத்தினால் உண்டானதுபோல் தெரிகின்றது;
    இவ்வாறு குற்றம் புரிந்த பின்னும்
    நானும் என் கணவரும் பெருநன்மை அடைந்தோம்.
    அதைக் கேட்டால் உனக்குச் சிரிப்பு கூட வரலாம்…

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 40 – 54
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram26.html

    படத்துக்கு நன்றி:
    http://www.panoramio.com/photo/33347498

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 87 (02.09.13)

    மலர் சபாmalathi

    தேவந்தியின் வரலாறு சாத்தன் கலை பல பயின்று,   தேவந்தியுடன் எட்டு யாண்டு இல்லறம் புரிந்து நீங்குதல்

    இங்ஙனம்
    மாலதியின் கணவன்
    மறையோன் வாரிசாகச்
    சாத்தன் வளர்ந்து வந்தனன்.
    பிரம்மச்சரிய நிலையில்
    கல்வியறிவு கேள்வியறிவில்
    சிறந்து விளங்கினன்.
    பெற்றோர்கள் இறந்த போது
    அவர்தமக்கு ஈமக்கடன்களையும்
    செய்து முடித்தனன்.

    உறவுமுறைப் பங்காளியரிடம்
    வழக்குரைத்து வென்றனன்.
    தேவந்தி என்பவளை மணந்து
    இல்லறத்தில் அமர்ந்து வாழ்ந்து வந்தனன்.
    அப்படி வாழ்ந்து வந்த
    ஒரு நாளில்,
    தேவந்தியிடம் கூறினன்:
    “பூவை ஒத்த உன் கண்கள்
    என் தெய்வ வடிவத்தின்
    பேரொளியைக் காணப் பொறுத்திருப்பனவாக.”

    பின்னர்
    மூப்பு எய்தாத தம் இளைய தோற்றத்தை
    அவளுக்குக் காண்பித்து
    “என் கோயிலுக்கு நீ தினம் வருக..”
    எனக்கூறு அவளை விட்டு நீங்கினன்.

    தேவந்தி சாத்தன் கோட்டத்தை வழிபட்டிருத்தல்

    “என் மனதைக் கவர்ந்த என் கணவன்
    திர்த்தத்துறைகளில் நீராடி வரச் சென்றிருக்கிறார்;
    அவரை மறுபடியும் இங்கு கொணர்ந்து
    என்னுடன் சேர்ப்பாயாக”
    என்று சாத்தனை
    வேண்டி வழிபடுவதற்காகவென்று
    நாள்தோறும் ஒரு பொய்க் காரணம் கற்பித்துத்
    தூய மொழியாள் தேவந்தி
    அவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தனள்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 29 – 39
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram26.html

    படத்துக்கு நன்றி:

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 86 (26.08.13)

    மலர் சபாbaby under tree

    புகார்க்காண்டம் – 09. கனாத்திறம் உரைத்த காதை

     

    அங்ஙனம் தெய்வங்களை எல்லாம் வேண்டியவள்
    பாசண்டச் சாத்தன் கோயிலை இறுதியில் அடைந்தனள் .
    குழந்தை உயிர் மீண்டும் பெற வேண்டி நின்றனள்.
    அப்போது,
    பிறருடன் ஒப்பிட முடியாத அளவுக்கு
    அழகான ஒரு பெண்ணாய்
    அவள் முன் தோன்றினள்
    சுடுகாட்டுப் பிணங்களை உண்ணும்
    இடாகினிப் பேய்.

    மாலதியிடம் இடாகினிப்பேய் பேசினள்;

    குற்றமற்றவளே!
    தவம் செய்தவர்க்கே தேவர்
    நேரில் வந்து வரம் கொடுப்பர்.
    உன் போன்றோர் முன்
    ஒருபோதும் வரமாட்டார்.
    இது பொய்யான வார்த்தை இல்லை;
    உண்மையே!
    உன் கையிலுள்ள இளங்குழந்தையைப்
    பார்த்துவிட்டுத் தருகிறேன்.
    என்றே கூறி அக்குழந்தையை வாங்கிக் கொண்டு
    கரிய இருள் சூழ்ந்த சுடுகாட்டினுள் சென்று
    அப்பிணத்தைத் தன் வாயில் போட்டுக் கொண்டனள் இடாகினிப்பேய்.

    சாத்தன் மகவாய் வருதல்

    துயருற்ற மாலதி
    இடியோசை கேட்டுப் பதறி அகவும்
    மயில் போலவே அழுதனள்.

    அழுத அவள்மேல் இரக்கம்கொண்ட
    பாசண்டச் சாத்தன்,

    அம்மையே! அழவேண்டாம்.
    நீ திரும்பிச் செல்லும் வழியில்
    ஒரு மரத்தின் நிழலில்
    இறந்த அக்குழந்தையை
    உயிருடன் காண்பாய் எனகூறித்
    தானே அக்குழந்தையாய் மாறி
    குயில் பாடும் சோலையில்
    ஒரு மரத்தடியில் கிடந்தான்.
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 15 – 28

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram25.html
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram26.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 84 (12.08.13)

    மலர் சபாpicture 84

     

    புகார்க்காண்டம் – 08. வேனில்காதை

    திருமுகத்தைக் கோவலன் மறுத்த செய்தியை வசந்தமாலை மாதவிக்கு உரைத்தல்

    அழகிய பொன் தோடு அணிந்த
    அழகுமுகத்தை உடைய மாதவி
    அழகிய தாழை மடலில்
    வரைந்து அனுப்பிய திருமுகத்தைக்
    கோவலன் வாங்க மறுத்தான்.
    இதனை உரைக்க,
    வாடிய மனதுடன்,
    இதழ்விரி மாலையணிந்த மாதவியிடம்
    விரைந்து சென்றனள் வசந்தமாலை.

    மாதவி செயலற்ற உள்ளத்துடன் மலர் அமளியில்
    கண் துயிலாது கிடத்தல்

    இதைக்கேட்ட மாதவி
    “சிறந்த அணிகலன்கள் அணிந்தவளே!
    இம்மாலைப் பொழுதில் அவர் வருவார்;
    வாராது போனாலும்
    நாளைக் காலையில் அவரைக் காணலாம்”
    எனக் கூறினாள்.
    பின் செயலற்ற மனத்தோடு
    தான் இருந்த மலர்ப்படுக்கையின் மீது
    அழகிய மலர் போன்ற கண்களையுடைய அவள்
    இமைகள் மூடாது வாடியே கிடந்தனள்.

    வெண்பா

    செந்தாமரை மலர்கள் விரிந்தன;
    மாமரங்களில் தளிர்கள் அழகுடன் துளிர்த்தன;
    அழகு பொருந்திய அசோகம் இதழ் விரித்தது;
    இளவேனில் காலம் வந்துவிட்ட இவ்வேளையில்
    அழகிய கண்களையுடைய
    மாதவியின் மனம் கோவலனைப் பிரிந்ததால்
    என்னவெல்லாம் துன்பறுமோ!

    உலகில் ஊடிப் பிரிந்து
    வாழும் உள்ளங்களே!
    நீங்கள் எல்லாம் கூடி வாழுங்கள்!
    இது மன்மதன் ஆணை!
    என்று கூவி அறிவித்தன குயில்கள்.

    மாதவி பாடிய கானல்வரி கேட்டு
    ஊடி நிற்கும் கோவலனே!
    உன்னோடு எப்போதும் கூடிக் கலந்திருந்த
    அவளின் அழகிய முகத்தை
    இந்த இளவேனில் பொழுதில்
    நினைவு கூர்ந்து காண்பாயாக!

    (வேனில் காதை முற்றிற்று.
    அடுத்து வருவது கனாத் திறம் உரைத்த காதை)

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 111 – 126
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram25.html

    படத்துக்கு நன்றி:
    https://www.facebook.com/PaintingsLover

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 83 (05.08.13)

    மலர் சபாpicture 83

    புகார்க்காண்டம் – 08. வேனில்காதை

    முன்பு ஒரு முறை
    யான் அவளைப் பிரிந்து வாழ்ந்தபோது
    பிரிவாற்றாமையால்
    மிக்க வருந்துபவள் போல் காண்பித்து
    எனது உறவினர் முன்
    தான் மிகவும் துயரப்படுபவள் போல் பாவித்து
    துயரங்களை எல்லாம்
    ஆராய்ந்து கூறுபவளாய் நடிப்பாளே..
    வசந்தமாலையே!
    இதுதான் அவள் நடித்த தேர்ச்சிவரி.

    வண்டுகள் வந்து ஊதிப் பூக்கவைக்கும்
    பூங்கோதையை உடைய அவள்
    மாலைப் பொழுதினில்
    காம நோயால் வருந்துபவள் போல் காண்பித்து
    கண்ணில் படுகின்ற சுற்றத்தாரிடம்
    தம் துன்பத்தைக் கூறி
    அவர்கள் அனுதாபத்தைப் பெற நடிப்பாளே…
    வசந்தமாலையே!
    இதுதான் அவள் நடித்த காட்சிவரி.

    பிரிவுத்துயர் தாங்காமல்
    காமநோயுற்றவள் போல
    அடுத்து அடுத்துப்
    பொய் மயக்கம் கொண்டு
    என் சுற்றாத்தாரிடம் தன் துயர்
    எடுத்து எடுத்துக் கூறி நடிப்பாளே..
    வசந்தமாலையே!
    இதுதான் அவள் நடித்த எடுத்துக்கோள்வரி

    ஆயிழையே,
    அவள் ஒரு ஆடல் மகள் ஆதலால்
    இங்ஙனம் இயல்பாய் அவள் நடித்த நடிப்புகள்
    அவள் கலைக்குப் பெருமை சேர்ப்பதேயாகும்!
    என்றெல்லாம் இகழ்ந்து கூறிய கோவலன்
    மாதவி அவள் கடிதம் பெற மறுத்துவிட்டனன்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 101 – 110
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram25.html

    படத்துக்கு நன்றி:
    http://cheapestinindia.com/price/raja-ravi-varma-painting-title-radha-waiting-for-krishna-in-kunjavan-723379

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 82 (29.07.13)

    மலர் சபாpicture 82

    யாம் கூடி ஊடி இருந்த காலத்து
    அந்திமாலை வந்தால்
    பிரிவாற்றாமையால் வருந்தி
    காமநோய் கொள்வேன்
    என்றறிந்தும் கூட
    என்னை எள்ளியாடும் பொருட்டு
    அவள் தன் கிளி மொழிகளையும்
    அன்னத்தின் மென்னடையையும்
    களிப்புடைய மயில் போன்ற சாயலையும்
    மறைத்து வைத்து

    வேல் போன்ற நெடிய கண்களையுடைய
    ஏவல் பெண் போன்ற உருவம் புனைந்து
    தனித்து வந்து என் முன் நடிப்பாளே…
    வசந்தமாலையே!
    இதுதான் அவள் நடித்த உள்வரி.

    சிலம்பு வாய் விட்டுச் சிணுங்கவும்
    மேகலை அசைந்து ஒலிக்கவும்
    அணிகலன்கள் புனையும் அளவு
    இருந்தும் இல்லாத இடையுடன்
    நடந்து வருகின்ற அவள்
    என்மீது காதல் கொண்டவள் போல்
    என்னையே பார்த்திடுவாள்.

    அவளை நான் பிரிந்து வருந்துவதை
    அறிந்திருந்தும் கூட
    என்னுடன் இணைந்திருக்காமல்
    புறத்தே நின்றிருப்பாளே……
    வசந்தமாலையே!
    இதுதான் அவள் நடித்த புறவரி.

    பூமாலை, குழல், தாதுக்கள் சேர்ந்த கூந்தல்
    ஒற்றை வட முத்து மாலை
    அழகிய மார்புகள் இவைகளின் சுமையால்
    வருந்துகின்ற மின்னல் போன்ற
    இடையாள் அவள்
    நல்ல நெற்றியை உடையாள்
    என்னருகேதான் வாராது
    வாயில் புறம் வந்து நிற்பாள்.
    என் காம வேட்கையை
    ஏவல் மகளிர் வாயிலாகக்
    குறிப்பால் செய்தியாக
    உணர்த்திய போதும்
    அச்செய்தி மொழியைப் புரிந்து கொள்ளாது
    வேறு பொருள் கொண்டவள் போல்
    அழகிய கூந்தல் கொண்ட அவள்
    தளர்ந்த மேனியள்
    போலத்தான் நடிப்பாளே..
    வசந்தமாலையே!
    இதுதான் அவள் நடித்த கிளர்வரி.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 78 – 95
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 96 – 101
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram25.html

    படத்துக்கு நன்றி:
    http://puthu.thinnai.com/?p=18576

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 81 (22.07.13)

    மலர் சபாkovalan and vasanthamalai

    புகார்க்காண்டம் – 08. வேனில்காதை

     

    வசந்தமாலை, கடைவீதியில் கோவலனைக் கண்டு மாதவி எழுதிய திருமுகத்தைச் சேர்த்தல்

    அங்ஙனம் மாதவி கொடுத்த
    மாலையைக் கையில் வாங்கிய
    வேல் போன்ற செவ்வரி மேவிய
    நீண்ட கண்களை உடைய வசந்தமாலை,
    கோவலனைத் தேடிச் சென்று
    கூலங்கள் செறிந்திருந்த வீதியில்
    அவனைக் கண்டு
    அக்கடிதத்தை அவனிடம் கொடுத்தாள்.

    கோவலன் மாதவியின் திருமுகத்தை மறுத்தல்

    வசந்தமாலை தந்த கடிதத்தை
    வாங்க மறுத்த கோவலன்
    பின்வருமாறு கூறலானான்.

    நெற்றியில் திலகமும்
    அதன் மேல் கூந்தலும்
    புருவம் எனச் சிறிய கரிய வில்லும்
    கண்கள் எனக் குவளை மலரும்
    மூக்கு எனக் குமிழ் மலரும்
    வாய் எனக் கொவ்வைக் கனியும்
    உறுப்புகளாகக் கொண்டு….

    என் மேல் காதல் கொண்டவள் போல்
    மதர்த்த எண்ணத்தோடு
    என் முன்னே அன்றொரு நாள்
    இங்ஙனம் தோன்றி நடித்தாளே மாதவி..
    வசந்த மாலையே!
    இதுதான் அவள் நடித்த கண்கூடு வரி.

    கூந்தல் என மேகத்தைச் சுமந்து
    அதன் சுமை தாங்காமல் வருந்தி
    ஒளியைப் பொழியும்
    மதி போன்ற முகம் தன்னில்
    கண்கள் எனக் கயல்மீன்கள்
    உலாவித் திரிகின்ற
    தம் அழகை வெளிப்படுத்தி
    தேன் செறிந்த தன் பவள வாயைத் திறந்து
    ஒளியைத் தருகின்ற இளமுத்து போன்ற
    புன்னகையைக் காட்டி

    நான் ‘வா’ என்றழைத்தால் வந்தும்
    ‘போ’ என்று சொன்னபோது சென்றும்
    உண்மையாய் இருப்பவள் போல் நடப்பாளே..
    அந்தக் கரிய நெடுங்கண்ணி..
    வசந்தமாலையே!
    இதுதான் அவள் நடித்த காண்வரி.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 72 – 77
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html

    படத்துக்கு நன்றி
    http://dinamani.com/weekly_supplements

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 80

    மலர் சபா

     

    thalavi thozhi

     

    புகார்க்காண்டம் – 08. வேனில்காதை

     
    மாதவி கோவலனுக்குத் திருமுகம் வரைந்து வசந்த மாலையிடம் கொடுத்து அனுப்புதல்

     

    கட்டுப்பாட்டுடன் இதுகாறும்
    தன்னுடன் இருந்த
    ‘நிறை’ எனும் குணம்
    காமத்தின் மிகுதியால்
    கட்டவிழ்ந்து போனதால்…..

    இணைந்தே இதுகாறும்
    தம்முடன் இருந்த
    அறுபத்து நான்கு கலைகளும்
    தொடர்ந்து தம்முடன் வாராமல் போனதால்…..

    கலைகள் அவற்றுள் ஒன்றான
    பண்பாடும் அவள் திறன்
    அவள்தமக்கே நட்பு மறந்து
    உட்பகையாகி நின்று
    பிறர் புறங்கூறக் காரணமாய் அமைந்திட்டதே……

    இங்ஙனம் மழலை மாறாத
    மொழிகள் பலவும்
    தமது நாவினால்
    சொல்லிக் கொண்டே
    மடல் வரைந்தனள் மாதவி.

    பசலை படர்ந்த மேனியளாய்
    கோவலன் நினைவு மிகுந்து வருந்தும்
    மாலைக் காலத்தே
    தம் தோழியாம் வசந்தமாலையை
    வா என்றழைத்து
    “தூய மலர் மாலை போன்ற
    இக்கடிதத்தில் யாம் எழுதியவற்றின்
    பொருள் அனைத்தும்
    கோவலனுக்குப் புரியுமாறு எடுத்தியம்பி
    இப்போதே இங்கு அழைத்து வருக” என்றனள்.
    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 65 – 71
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html

    படத்துக்கு நன்றி
    http://dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/05

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 79 (08.07.13)

     

    மலர் சபா
    மாதவி கோவலனுக்குத் திருமுகம் வரைந்து வசந்த மாலையிடம் கொடுத்து அனுப்புதல்

    madhavi and friend

    “உலகில் உள்ள நிலைபெற்ற
    உயிர்கள் எல்லாம்
    தம் மனதை மகிழ்விக்கும் துணையோடு
    புணர வைக்க வல்லவன் மன்மதன்.

    இனிய இளவேனில் இளவரசன் என்பதனால்
    அரசன் போல் எதையும்
    நெறிப்படச் செய்வான் அல்லன்.

    அந்த இளவலுக்குத் துணையாய்
    மாலையாம் பொழுததனில்
    யானையின் பிடரியில் ஏறி வருகின்ற
    திங்கள் செல்வனும்
    நடுநிலைமை உடையவன் அல்லன்.

    புணர்ந்து மகிழ்ந்த காதலர் ஊடல் கொண்டு
    சற்றே தம்முள் இடைவெளி கொண்டிருப்பினும்,
    தகுந்த காரணம் கொண்டு
    பிரிந்து சென்ற காதலர்
    தம் துணைதான் மறந்து வாராதிருப்பினும்,
    நறும்பூக்களால் செய்த அம்புகள் கொண்டு
    தனித்து வாழ்பவரைத் தாக்கி நிற்பது
    மன்மதனுக்கு வாடிக்கையான செயலேயன்றிப்
    புதுமையான செயல் ஆகாது.
    இதனைத் தாங்கள் அறிந்து
    எமக்கு அருள்வீரே” என்றேதான் எழுதினள் மாதவி.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 56 – 63
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html

    படத்துக்கு நன்றி

    http://tamilarivom.blogspot.in/

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 78 (01.07.13)

    மலர் சபாuntitled

     

    புகார்க்காண்டம் – 08. வேனில் காதை

    மாதவி கோவலனுக்குத் திருமுகம் வரைந்து வசந்த மாலையிடம் கொடுத்து அனுப்புதல்

    சற்று முன் அங்ஙனம்
    மயங்கி நின்ற மாதவி
    மணம் பொருந்திய மலரம்புகளினால்
    பெரு நிலம் முழுதும்
    தனிச்செங்கோல் செலுத்தி ஆளும்
    மன்மதன் அவன் ஆணையால் வருந்தி,
    ஒரு திசை மட்டுமல்லாது
    உலகமே தொழுது வணங்கி வேண்டும்
    அவனது அழைப்பின் அறைகூவலைக்
    கடிதம் ஒன்றின் வாயிலாகக்
    கோவலனுக்கு அனுப்பத் துணிந்தனள்.

    செண்பகம், குருக்கத்தி, பச்சிலை, பித்திகை
    வெண்மல்லிகை, மெல்லிதழ் செங்கழுநீர்
    இக்தனை நறுமண மலர்களுடன்
    சற்றே மாறுபட்ட மணமுடைய
    முற்றிய தாழையையும் வைத்துத் தொடுக்கப்பட்ட
    தன் கழுத்தில் அணிந்திருந்த
    மாலையதனில் இருந்து
    வெண்தாழை மடல் ஒன்றை
    ஆராய்ந்து எடுத்தனள்.

    அத் தாழை மடலைத்
    தாள் எனக் கொண்டு
    அதனருகில் இருந்த பித்திகை அரும்பொன்றை
    எழுத்தாணி எனக் கொண்டு
    அதனைக் கொழுவிய
    செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்துக்
    கடிதம் எழுதவே தொடங்கினள்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 45 – 55
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html

    படத்துக்கு நன்றி

    http://dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/05/article1575464.ece

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 77 (24.06.13)

    மலர் சபா
    புகார்க்காண்டம் – 08. வேனில் காதை
    யாழ் மீட்டிப் பாடி, புறத்து ஒரு பாணியில் மாதவி மயங்குதல்

    அங்ஙனம் அளந்து அறிந்ததோடு
    இசை நூலோர் வகுத்த மரபு தவறாமல்
    ஐந்தாம் நரம்பாம் இளியைக்
    குரலாய் நிறுத்தி
    ஏழு நரம்புகளிலும் வாசித்தாள்.

    உழை குரலாகவும்
    உழை தாரமாகவும்
    குரல் குரலாகவும்
    குரல் தாரமாகவும்
    அகநிலை மருதம் புறநிலை மருதம்
    அருகியல் மருதம் பெருகியல் மருதம் எனும்
    நால்வகை சாதிப் பண்களையும்
    அழகுடன் இசைத்து
    வலிவு மெலிவு சமம் எனும்
    மூவகை இயக்கத்தாலும்
    முறைபட இசைத்துப் பாடினாள்.

    அதன் பின்பு
    அதன் இனத்தைச் சார்ந்த
    திறப்பண்புகளுடன் பாடும் நேரத்தில்
    கோவலன் பிரிவதனை நினைவு கூர்ந்து
    வாடினாள்; சற்றே மயங்கினாள்.
    விளைவாய், எடுத்துப் பாடிய
    பாட்டுக்குப் புறம்பான இசை வந்து கலந்தது.
    பூங்கொடி போன்ற மாதவி மயங்கினாள்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 36 – 44
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram24.html

    படத்துக்கு நன்றி

    http://www.vimlapatil.com/vimlablog/raja-ravi-varma-rules-the-art-world-more-than-100-years-after-his-death-in-1906-at-the-age-of-58/

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 76 (17.06.13)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 08. வேனில் காதை
    யாழ் மீட்டிப் பாடி, புறத்து ஒரு பாணியில் மாதவி மயங்குதல்
    வலக்கையதன் பெருவிரல் வளைத்து
    மற்ற விரல்களை நிமிர்த்தி
    யாழதன் தண்டின் மீது
    அக்கையை வைத்து
    அது அசைந்திடாதபடி பிடித்தாள்.
    இடக்கையதன் நான்கு விரல்களை

    மாடகம் எனும்
    இசை வீக்கும் கருவி மீது பொருத்தி
    செம்பகை, ஆர்ப்பு, அதிர்வு, கோடம் எனும்
    பகை நரம்புகள் நான்கும்
    புகுந்துவிடாமல் நீக்கிடும்
    வழியது கடைப்பிடித்தாள்.

    முறைதவறா மரபு சார்ந்த்
    ஈரேழ் கோவையாய் அமைக்கப்பட்ட
    அந்த யாழ்தன்னில்
    முதலாக ‘உழை’ நரம்பினையும்
    இறுதியாக கைக்கிளை நரம்பினையும்
    வைத்தேதான் கட்டினாள்.

    இணை, கிளை, பகை, நட்பு எனும்
    இந்நான்கு நரம்புகளின் வழியே
    இசையது புணரும் குறிநிலையதனைப்
    பொருத்தமுறவே நோக்கினாள்.

    அது மட்டுமன்றி
    குரல் – இளி எனும்
    இரு நரம்புகளின்
    இசை ஒத்திருப்பதைத்
    தன் செவியால் அளந்தே அறிந்திட்டாள்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 27 – 35
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram23.html

    படத்துக்கு நன்றி:
    hool.discoveryeducation.com/clipart/clip/harp.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 75 (10.06.13)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 08. வேனில் காதை

    தாழை மடலவிழ்க்கும் கானற்சோலையில்
    கடல் விளையாட்டு கண்டு களித்தபோது
    ஊடி நின்ற கோவலன் பிரிந்து சென்றிட
    தான் மட்டும் தனியளாய் இல்லம் புகுந்தனள்
    கரிய மலர் போன்ற நீண்ட கண்களையுடைய மாதவி.
    பின் குயிலோன் அறிவித்த செய்தியை விரும்பியவளாய்
    வானுயர்ந்த மேல் நிலை மாடத்தின் ஒரு புறமிருந்த
    இளவேனில் காலத்துக்குரிய பள்ளியறையில்
    மன்மதனை எதிர்கொள்ளச் சென்றனள்.

    பெருமையும் சிறப்பும் பொருந்திய அணிகலன்களும்
    தென்கடல் முத்தும் பொதிகை மலைச் சந்தனமும்
    மன்மதனுக்கு எப்போதும் செலுத்தப்படும் காணிக்கைகள்.
    மன்மதன் வீற்றிருக்கும் அரண்மனையாகிய
    தனது முலை முற்றத்தில்
    அக்குங்குமக் கோலமிடப்பட்ட பரப்பினில்
    குற்றமற்ற சிறப்புடைய பொருட்களைக்
    காணிக்கையெனச் செலுத்தினள்.

    ஒன்பது வகைப்பட்ட நிலையினுள் முதன்மையான
    பத்மாசன நிலையில் அமர்ந்து
    சுரங்கள் குலைந்திடாத மரபினை உடைய
    தனது யாழது தொழுது வாங்கித்
    தன் வாயால் இனிய பண் பாடினள்.
    பண் அது மயங்கவே
    யாழினை மட்டும் மீட்டினள்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 15 – 26
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram23.html

    படத்துக்கு நன்றி:

    http://kalaalog.com/2007/04/22/raja-ravi-varma/

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 74

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 08. வேனில் காதை
    இளவேனிலின் வருகை
    திருவேங்கடப் பெருமாள் எழுந்தருளிய
    வேங்கடமலையை வடக்கேயும்
    குமரிக் கடலைத் தெற்கேயும்
    எல்லையெனக் கொண்டது தமிழ்நாடு.

    மாடமாளிகைகள் நிறைந்த ஊரானது மதுரை;
    பெருமையில் சிறந்த ஊரானது உறையூர்;
    ஆரவாரம் நிறைந்த நகரானது வஞ்சி;
    ஒலிக்கின்ற கடலும் காவிரியும் உடையது புகார்.

    இந்நான்கு நகரங்களிலும் ஆட்சி செய்தனன்
    புகழும் சிறப்புமுடைய மன்மதராசன்.
    அவனுக்குத் துணையெனவே
    வந்துவிட்டனன் இளவேனில் என்பவனும்.
    இச்செய்தியை குயிலோனுக்குத் தூது கூறினன்
    வளத்தில் சிறந்த பொதிகை மலையில்
    அகத்தியர் பெற்றெடுத்த தென்றல் என்பவன்.

    ஆதலின்,
    “மீன்கொடி மைந்தன்
    மன்மதனின் படையிலுள்ள
    மகளிர் அனைவரும்
    நல் அலங்காரங்கள் செய்திடுங்கள்”
    என்றேதான் சொல்லும் வண்ணம்
    தென்றல் தூதுவன் இட்ட கட்டளையதனை
    பூங்கொடிகள் நிறைந்த
    சோலைப் பாசறையிலிருந்து
    கொம்பு ஊதும் குயிலோன்
    அறிவித்தனன் கூவியே.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1 – 14
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram23.html

    படத்துக்கு நன்றி:
    http://www.indiamart.com/forum-art-gallery/abstract-paintings.html

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 73 (27.05.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    “வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறுதல்”

    (51)

    தீயைக் கொட்டிப் பரப்பி
    அதன் வெப்பத்தினால்
    எமை வருந்தச் செய்கிறதே
    இம்மாலைப்பொழுததுவே!

    இது இங்ஙனம் நமை வருத்தும்
    என்று சற்றும் நினைந்து பார்த்திடாது
    தலைவன் உரைத்திட்ட
    பொய்ச் சூளுரைகளை
    உண்மையென நம்பி ஏமாந்துவிட்டோமே!

    பூமணம் நிறை கானற்சோலையில் வாழுகின்ற
    சிறப்புப் பொருந்திய கடல் தெய்வமே!
    எம் தலைவர்தம் பொய்ச்சூளுரையைத்
    தண்டிக்காது பொறுத்தருள்வாயாக!
    நின் மலரடி போற்றி வணங்குகிறோம்.

    கட்டுரை

    “கோவலன் ஊழ்வினையால் மனம் மாறுபட்டு மாதவியைப் பிரிந்து போதல்”

    (52)

    இவ்வாறெல்லாம் மாதவி பாடக்கேட்ட கோவலன்
    நான் கானல்வரி பாடினேன்;
    அங்ஙனம் பாடாமல்
    வஞ்சனைப் பொய்கள் கூட்டி
    மாயம் செய்திடும் இம்மாயக்காரியோ
    வேறு யாரையோ நினைத்துப் பாடினள்
    என்று எண்ணுகையில்,
    யாழிசை மேல் வந்து நின்றது
    அவனுடைய ஊழ்வினை.

    முழுநிலவு நாளில் தோன்றுகின்ற
    நிலா போலும் முகமுடைய மாதவியுடன்
    இணைத்த தன் கையை
    அப்போதே ஞெகிழவிட்டனன்;
    பொழுது சாய்ந்துவிட்டது என்று கூறியே
    ஏவலர் மட்டும் சூழ
    மாதவியை விடுத்துப் புறப்பட்டனன்;

    மாதவி, கோவலனுடன் இன்றி, தனியளாய் ஆயத்துடன்
    தன் மனை புகுதல்”
    தாது விரிந்த பூக்கள் நிறைந்த சோலையில்
    தனித்துக் கோவலன் விட்டுச் சென்றிட
    செயலற்றுத் தவித்த மாதவி
    ஆங்கே நிலவிய ஆரவார ஒலிகள் அடங்கியதும்
    வண்டியில் சென்றமர்ந்து
    தனியே தன்மனை புகுந்தனள்
    கோவலன் உடன் இன்றியே.

    புகுந்தபின்,
    இவ்வுலகின் அரசர்கள் எல்லாம் தலைவணங்கும்
    சோழ மன்னனையும்,
    அவனது
    முகபடாம் அணிந்த யானையையும்
    ஒளி பொருந்திய வாளையும்
    “மிகப்பெரிய சக்கரவாளம்
    எனும் மலையை உள்ளடக்கி
    ஆட்சி புரிவதாகுக” என்று
    வெண்கொற்றக் குடையையும்
    வாழ்த்தி நின்றனள் மாதவி.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram23.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/diploma/a021/a0214/html/a02141l6.htm
    கானல்வரி முற்றியது; தொடர்வது வேனில் காதை

    Share