Tag: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (181)

    – சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    அன்பான வணக்கங்களுடன் சிறியதோர் இடைவெளியின் பின்னால் மீண்டும் மடல்வழி உங்களோடு இணைவதில் மனம் பெருமகிழ்வடைகிறது.

    ஏறத்தாழ நான்கு வாரங்கள்… நான்கு வாரங்கள் என்றால் என்ன ஒரு மாதம்தானே என எண்ணும்போது மனதினில் மிகவும் இலகுவாகச் சொல்லிக்கொள்ள முடிகிறது. அந்த நான்கு வாரங்கள் தன்னுள் எத்தனையோ நிகழ்வுகளின் தொகுப்பைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதன் முழு விபரத்தையும் ஆராய்ந்தால் நான்கு வாரங்கள் எனும் அந்தக் காலத்தின் தாத்பரியத்தை நன்கு உணர முடிகிறது.

    தமிழ்த்தாயின் இருப்பிடம், தமிழகத்தின் தலைநகராம் சென்னையை நோக்கிய எனது பயணமும் அந்தப் பயணத்தின் விளைவால் நெஞ்சில் தொகுக்கப்பட்ட அனுபவப் பக்கங்கள். ஆமாம் இந்த நான்கு வாரக் காலம் எனது நெஞ்சத்திரையில் தன் காலமெனும் தூரிகையினால் வரைந்த ஓவியங்கள் எத்தனையோ. எத்தனையோ திட்டங்களை மனதில் வகுத்து வைத்துக் கொண்டு ஆரம்பிக்கும் பயணத்தின் முடிவில் அதில் அரைவாசி கூட நிறைவேற்றப்படாமல் திரும்பும்போது கொடுக்கும் ஏமாற்றத்துளிகளால் நிரம்பும் நெஞ்சக் குட்டையில் நீந்தும் அனுபவமும் தனியானதுவே,

    இம்முறை பயணத்தின் போது சிலதைக் கொடுத்த அந்த இறைவன் சிலதை எடுத்துக் கொண்டும் விட்டான். ஒவ்வொரு வருடமும் எமது சென்னைப் பயணத்தின் முக்கிய அம்சமே எனது மனைவியின் தந்தை, நான் என் தந்தை ஸ்தானத்தில் நிலைநிறுத்தி வணங்கும் ஒரு உன்னத மனிதருடன் ஒரு சில வாரங்களைச் செலவிடப் போகிறோம் எனும் எண்ணமேயாகும். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் என் மாமனாரை நீ இவ்வுலகில் வாழ்ந்தது போதும் என்று தன்னோடு அழைத்துக் கொண்டுவிட்டான் அந்த அனைவர்க்கும் பொதுவான, அனைத்துக்கும் அப்பாற்பட்ட இறை எனும் சக்தி.

    இவ்வருட பயணத்தின் போது அவரில்லை. அவரில்லாத ஒரு சென்னைக்குச் செல்கிறோம் எனும் வருத்தம் என் அன்பு மனைவியின் நெஞ்சத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததை நான் நன்றாக அறிந்திருந்தேன். இருப்பினும் இப்பயணத்தின் எதிர்பார்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அந்த ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் தன்னுள் என் மனைவி அடக்கிக் கொண்டதனையும் நான் நன்கு அறிந்திருந்தேன்.

    எழுத்து எனும் இந்த அற்புதக் கடமையால் தமிழன்னை எனக்கீந்த உறவுகள் எத்தனையோ. அவற்றில் சில உடன்பிறப்புகளை விட அதிகமான நெருக்கத்தையும், பாசத்தையும் பொழிபவை என்றால் மிகையாகாது.
    அத்தகைய தமிழன்னை எனக்களித்த தம்பிகளில் சுரேஷ் மிகவும் முக்கியமான ஒருவர். அண்ணா, அண்ணி என்று எம்மீது அளவுகடந்த பாசத்தைக் கொட்டி வருபவர். அந்த அன்புக்கு அவரின் மனைவி தங்கை விஜி ஒன்றும் சளைத்தவரல்ல. அந்தத் தம்பி சுரேஷின் தாயாரை நான் சந்தித்த சந்தர்ப்பங்கள் சிலவே இருப்பினும் அவரைச் சந்திக்கும் போதெல்லாம் ஏதோ மறைந்த என் அன்னையின் ஞாபகங்கள் என் உள்ளத்தின் உணர்வுகளோடு இணைந்து ஆனந்த ராகம் மீட்டும். அவரிடம் ஆசி பெற்ற பாக்கியவான்களில் நானும் ஒருவன். அந்த அன்பு அன்னையை ஜனவரி மாதம் 16ம் திகதி இறைவன் தன்னோடு அழைத்துக் கொண்டு விட்டான். எனது லண்டன் பயணத்திற்காக விமான நிலையம் செல்ல வேண்டியதால் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாத நிலை. தம்பிக்கு தொலைப்பேசியில் ஆறுதல் சொல்லவே என்னால் முடிந்தது.

    அது தவிர என் மற்றோர் தம்பி திருப்பூர் ஸ்ரீதர் “வாருங்கள், வாருங்கள்” என்று எனது ஒவ்வொரு சென்னைப் பயணத்தின் போதும் வருந்தியழைத்தும் செல்ல முடியாதிருந்த ஒருநிலையை இப்பயணத்தின் போதே மாற்ற முடிந்தது. ஆமாம் அவருடன் சில நாட்கள் , திருப்பூரிலும், திண்டுக்கல்லிலும் செலவழித்ததோடு எனது நீண்டநாள் கனவான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சன்னதியில் தரிசனம் செய்யும் கனவும் நிறைவேறியது. அது மட்டுமின்றி புதுவருடத்திற்கு முந்திய 2015ம் ஆண்டின் கடைசிநாள் பழனிமலையில் முருகனைத் தரிசிக்கும் பாக்கியமும் பெற்றோம்.

    சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் இ-சங்கமம் இணையத்தளத்தின் ஆசிரியரான தம்பி விஜய் எனும் விஜயக்குமார் தனது நண்பருடன் எனைத்தேடி திருச்செங்கோட்டிலிருந்து சென்னை வந்து சந்தித்த அனுபவம் இன்னமும் என் நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது. அதன் பின்னால் அவரைச் சந்திக்க பலமுறை எண்ணிய போதும் சந்திக்க முடியாத நிலை. இப்போது அவர் தினமலர் ஈரோடு நிருபராகவும், ஈரோடு புதிய தலைமுறை செய்தியாளராகவும் இருக்கிறார். அந்தத்தம்பியை அவருடைய ஊர் திருச்செங்கோட்டில் சந்திக்க முயன்றபோது அலுவலகப்பணிகளால் அழுந்திப்போயிருந்த அவர் எனக்காத் தனது பணிகளை சிறிது ஒத்திப் போட்டு அர்த்தநாரீஸ்வரர் ஆலய வாசலில் வந்து சந்தித்த நிகழ்வு என் நெஞ்சத்தைத் தாலாட்டுகிறது.

    ஒரேயொரு ஏமாற்றம்! திருப்பூர் நோக்கி இரெயிலில் பயணிக்கும் போதுதான் சகோதரி பவளசங்கரி ஈரோட்டில் தான் இருக்கிறார் என்று அவர்மூலம் கேள்விப்பட்டேன். என்னைச் சந்திக்க மிகவும் ஆவலாக இருந்த சகோதரி பவளசங்கரி, அதே அவலுடன் இருந்த என்னால் நேரமின்மை எனும் ஒரே காரணத்தினால் சந்திக்க முடியாமல் போனதே ஏமாற்றமென்பேன். இருந்தாலும் சகோதரியோடு தொலைப்பேசியில் உறவாடியது ஓரளவு சந்திக்க முடியாமல் போன ஏமாற்றத்தைத் தவிர்க்க உதவியது.

    சென்னையில் எனது வழமையான அனைத்து நண்பர்களின் சந்திப்பில் குறிப்பாகக் கவியரசர் கண்ணதாசனின் மைந்தன் எனது இனிய நண்பர் காந்தி கண்ணதாசன், நண்பர், நாடக மன்னன், நடிகர் எஸ்.வி. சேகர் ஆகியோரின் சந்திப்பு இதமாக இருந்தது.

    சந்திக்க முடியாமல் போனவர்கள் பட்டியலில் இசைக்கவி ரமணன், தம்பி தேவகோட்டை இராமநாதன், அன்பு நண்பர் பாண்டியராஜன், அற்புதப் பேச்சாளர், இலக்கியத் தென்றல் பி.என் பரசுராமன் பலர் இடம்பெற்றது மிகவும் வேதனையான விடயம்.

    இருப்பினும் அடுத்த விஜயத்தின் போது அனைவரையும் சந்திக்கலாம் எனும் எண்ணம் நெஞ்சுக்குக் கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது. அனைத்தையும் முடித்துக் கொண்டு இதோ மீண்டும் இலண்டனில் காலதேவன் தாராளமாக வழங்கும் பனிக்குளிரில் கடந்த வாரங்களை அசைபோடும் நேரம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (180)

    – சக்தி சக்திதாசன்.

    புத்தாண்டு வாழ்த்துகள்-

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள்.

    2015ம் ஆண்டின் இறுதி மடலினூடாக உங்களுடன் உரையாடுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

    ஆம், கடுகதி புகையிரதம் போல எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடோடி வந்து இறுதிப் பகுதியில் நிற்கிறது 2015ம் ஆண்டு.

    ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் போதும் பல எதிர்பார்ப்புகளுடன் பிறக்கிறது. ஒவ்வொருவரும் தாம் கடந்து வந்த வருடத்தை விட இவ்வருடம் தமது வாழ்வினை ஏதாவது ஒரு வகையில் முன்னேற்றமுள்ளதாக மாற்றியமைக்கும் எனும் நம்பிக்கையுடன் அப்புதிய வருடத்தினுள் நுழைகின்றனர். எதிர்பார்ப்புகள் வெறும் எதிர்பார்ப்புகளாகவே நிறைவடைந்து விட்டனவா? இல்லை அவை நிறைவேறி வாழ்வினில் தாம் எதிர்பார்த்த மாற்றத்தை அடைந்தனரா என்பதை அவரவரே கூற வேண்டும்.

    ஒவ்வொரு வருடமும் பிறந்து நடந்து முடியும் போது அதற்குள் பல நிகழ்வுகளைத் தாங்கி நிற்கிறது, உலக சரித்திரப் புத்தகத்தில் தன்னையும் ஒரு அத்தியாயமாக இணைத்துக் கொண்டு விடுகிறது. அப்படியான ஒரு வகையில் 2015 தன்னுள் எவற்றைத் தாங்கி நிற்கிறது என்பதை எனது கோணத்தில் இருந்து பார்க்க விழைகிறேன்.

    இந்நிகழ்வுகளை மூன்று பிரிவுகளாகப் பார்க்கலாம்

    – எனது பிரத்தியேக வாழ்வின் மாற்றங்கள்
    – இங்கிலாந்து அளவிலான மாற்றங்கள்
    – சர்வதேச ரீதியிலான மாற்றங்கள்

    2015ம் ஆண்டைத் தொட்ட போது அது ஓர் மைல் கல்லாகவே எனது வாழ்வில் தென்பட்டது, 1975ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் திகதி இங்கிலாந்து மண்ணில் நான் முதன் முதலாகக் கால் பதித்த தினம். 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 30 திகதி நான் இங்கிலாந்தில் நுழைந்து நாற்பது வருடங்கள் ஓடி விட்டது. அப்பப்பா! ஒரு மனிதனின் வாழ்வில் நாற்பது வருடங்கள் என்பது வாழ்வின் அரைவாசி என்று கூடச் சொல்லலாம்.

    வெறும் பதினெட்டு வருடங்கள் மட்டுமே நான் உதித்த தாய் மண்ணில் வாழ்ந்த எனக்கு என் வாழ்வின் முக்கிய நாடாக இங்கிலாந்து இருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லைதான். நான் இங்கிலாந்தில் மாணவனாக நுழைவதற்குத் தேவையான ஸ்பான்ஸர் கொடுத்தவர் எனது பெரியதாயாரின் மூத்த மைந்தன் ஆவார். அதாவது எனது ஒன்று விட்ட அண்ணன். அந்த அன்பான அண்ணனை எனது வாழ்வின் மாற்றத்துக்கு ஒரு காரணியாகத் திகழ்ந்தவரை காலன் எம்மிடமிருந்து பறித்துச் சென்றது கூட இந்த 2015 இல் தான். என் மனைவியின் அன்புத் தந்தை, எனது தந்தையைப் போல என்மீது பாசம் கொண்டவரும் நான் என்னுள்ளத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுபவருமான எனது மாமனார் இப்பூவுலகை விட்டு மேலுலகிற்கு ஏவியதும் இந்த 2015ல் தான். ஆம் இந்த 2015 எனக்குக் கொடுத்ததும் உண்டு என்னிடமிருந்து பல இனியவர்களை எடுத்துச் சென்றதும் உண்டு.

    நான் வாழும், எனக்கு வாழ்வளித்த இந்த இங்கிலாந்து நாட்டைப் பொறுத்த வரையில் 2015 சில முக்கிய மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது என்றே கூற வேண்டும். 2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை ஈட்டியது பிரதமர் டேவிட் கமரன் அவர்களின் கன்சர்வேடிவ் கட்சியெனினும் அவர்களால் தனியாக அரசமைக்க முடியவில்லை. லிபரல் டெமகிரட்ஸ் எனும் கட்சியுடன் இணைந்து கூட்டரசாங்கம் அமைத்த கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் அடுத்த தேர்தலை 2015 மே மாதம் எதிர் நோக்கியிருந்தது. பொருளாதாரப் பின்னடைவை நோக்கியிருந்த இங்கிலாந்தை மீட்டெடுக்கப் பல நெருக்கடியான செலவுக் கட்டுப்பாட்டைக் கைப்பிடித்ததினால் மக்கள் மிகவும் அதிருப்திக்குள்ளாகியிருந்தார்கள். அதனால் எதிர்க்கட்சியாகவிருந்த லேபர் கட்சி 2015 தேர்தலில் வெற்றியீட்டுவதற்குச் சாதகமான சூழல் என்றே அரசியல் அவதானிகள் பலரது கருத்துகளும், பொதுக் கருத்துக் கணிப்பீடுகளும் சுட்டிக்காட்டின.

    ஆனால் 2015ம் ஆண்டு வேறுவிதமான எண்ணங்களைக் கொண்டிருந்தது போலும் அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கும் முரணாக கன்சர்வேடிவ் கட்சி தனித்து அரசமைக்கக்கூடிய பெரும்பான்மையால் வெற்றியீட்டியது. 2015 டேவிட் கமரன் அவர்களை மீண்டும் பிரதமராக முடிசூட்டியது. இங்கிலாந்து அரசியல் அரங்கில் வெளிநாட்டவரின் வருகையே மிக முக்கியமான பிரச்சனையாக முன்னணியில் திகழ்ந்தது, திகழ்ந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமா? 2015 லேபர் கட்சிக்கும் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டத் தவறவில்லை, தலைவராகும் சந்தர்ப்பம் யாருக்கு ஒருபோதும் கிட்டாது என்று கணிக்கப்பட்டதோ அந்நபர் லேபர் கட்சியின் தலைவரான அதிசயத்தையும் 2015 நிகழ்த்திக் காட்டியது. ஆம், எப்போதும் தனி ஒரு மனிதனாக லேபர் கட்சியினுள் இருந்து குரலெழுப்பிக் கொண்டிருந்த ஜெர்மி கோர்பன் அவர்களை கட்சிக்குத் தலைவராக்கியது கூட காலத்தின் கோலமோ ?

    இங்கிலாந்திலே பிறந்து, இங்கிலாந்துப் பிரஜைகளாகவே வளர்ந்த பல இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாதப்பாதையைத் தேர்ந்தெடுப்பது தற்போதைய இங்கிலாந்து தேசம் எதிர்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பிரச்சனையாக 2015இல் வளர்ந்து நிற்பது மட்டுமல்லாது 2016ம் ஆண்டிலும் தமது கால்களைப் பதிக்கப் போகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு இங்கிலாந்து வெளியேற வேண்டும் எனும் கோஷம் வலுத்துக் கொண்டு வருகிறது. இதற்கான பொதுஜன வாக்கெடுப்பு ஒன்றைத் தான் 2017ம் ஆண்டு முடிவதற்குள் நடத்துவேன் என்பது பிரதமருடைய ஒரு வாக்குறுதி. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் எனும் கருத்துடையவரல்ல பிரதமர். இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரித்தானியாவின் உறவின் விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தாலொழிய ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் எனும் வாதம் வலுவடையாது என்பது பிரதமரின் கருத்து. இம்மாற்றங்களுக்கான கலந்துரையாடல்களின் ஆரம்பத்தை 2015 தன்னுள் உள்ளடக்கியுள்ளது. ஆனால், அதற்கான முடிவுகளை 2016 தான் பகிர வேண்டும்.

    சரி இனி சர்வதேச அளவிலான 2015ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம். பயங்கரவாதம் தமது அகோர தாண்டவத்தை பாரீஸ் நகரில் நடத்திக் காட்டியுள்ளது. உலக மகாயுத்தத்தின் பின்னால் அதிக அளவிலான உயிரிழப்பினை ஒரே நிகழ்வில் பிரான்சு நகரம் சந்தித்தது இதுவே முதல் தடவை என்கிறார்கள். இஸ்லாம் எனும் புனித மதத்தின் பெயரால் ஏதுமறியா பொதுமக்களின் மீது அமெரிக்க நகரில் பயங்கரவாதம் அரங்கேறியுள்ளது. மனித உயிர்களின் மதிப்பை கணிக்கத் தவறி உயிர்களைக் காவுகொள்ளும் நீசத்தனம் தொடர்வது 2015க்கு ஒரு கரும்புள்ளி என்றே கூற வேண்டும்.

    சிரியா நாட்டில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக லட்சோபலட்ச மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளை நோக்கிப் படையெடுக்கும் படலம் உச்சக்கட்டத்தை அடைந்தது 2015ல் என்றே கூறவேண்டும். அகதிகள் எனும் பெயரில் சில பயங்கரவாதச் செயல் புரிவோரும் ஐரோப்பிய நாடுகளுக்குள் புகுந்துள்ளார்கள் எனும் அச்சம் உண்மையான அகதிகளின் நிலையைப் பரிதாபத்துக்குள்ளாக்கியிருக்கிறதுஎன்றே கூற வேண்டும்.

    உலகின் வெப்ப அளவு கணிக்கப்படத் தொடங்கியதிலிருந்து 2015ம் ஆண்டே அதிக வெப்ப அளவினைக் கொண்ட ஆண்டாகக் கூறப்படுகிறது. உலகம் வெப்பமயமாதலைத் தடுக்கும் முகமாகக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்காகக் கூட்டப்படும் சர்வதேச மகாநாடு 2015ம் ஆண்டின் இறுதியில் பிரான்ஸு நகரில் கூடியது. இதிலே உலகத்தின் வெப்பம் 2 டிகிரிக்கு மேல் கூடாதவாறு ஒவ்வொருநாடும் தமது செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் எனும் உடன்பாடு கணப்பட்டுள்ளது. இவ்வுடன்பாடு ஒரு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற உடன்பாடு என்று கூறப்படுகிறது. இது எவ்வளவு உண்மையானது என்பதை வருங்காலம் தான் காட்ட வேண்டும்.

    ஆண்டின் இறுதியில் மிகவும் சோக நிகழ்ச்சியாக அன்னைத் தமிழின் தாயகமான தமிழகத்தின் தகைநகரம் சிங்காரச் சென்னை வெள்ளத்தினுள் அமிழ்ந்தது. இவ்வெள்ளப் பாதிப்பினால் பலர் உயிரிழந்து, உடைமைகள் இழந்து, இல்லத்தை இழந்து பரிதவிப்பது நெஞ்சத்தை ரணமாக்கினாலும் மனிதாபிமானம் கொடிகட்டிப் பறந்தது என்பது நெஞ்சத்தைக் குளிர்விக்கிறது. எந்தவிதப் பாகுபாடுமின்றி நிர்வாகத்தினை எதிர்பார்க்காமல் … குறிப்பாக இளைஞர்கள் சமூக வலைத்தளங்களின் உதவியோடு கரங்களிணைத்து தவிக்கும் பலருக்கு உதவியது 2015ல் மனிதாபிமானத்திற்குக் கிடைத்த வெற்றி என்றே கூறவேண்டும்.

    பல தடைகளையும், சில படிகளையும் தாண்டி 2016 வாசலில் வந்து நிற்கின்றோம், நேற்றைய நிகழ்வுகளை நாளைய வெற்றிகளுக்குதவும் அனுபவப் பாடங்களாக எடுத்து புத்துணர்வுடனும், புத்தெழுச்சியுடனும் 2016இனுள் நுழைவோம் வாருங்கள். என் இனிய அனைத்து அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    இரண்டு வார இடைவெளியின் பின்னால் மீண்டும் 2016 ஜனவரி இறுதி வாரத்தில் மடலுடன் உங்களைச் சந்திக்கிறேன்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (178)

    – சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள். அடுத்தொரு வாரம் அவசரமாய் ஓடி விட்ட நிலையில் உங்களுடன் மடல் வழி இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    உள்ளம் இருக்கிறதே! அது ஒரு விசித்திரமானது. அதிலே சதிராடும் உணர்வுகளின் காரணம் தெரியாமலே எண்ணங்கள் உருவெடுக்கும். அவ்வெண்ணங்களின் நதிமூலம் தேடினால் கிடைப்பது ஏமாற்றமே!

    இவ்வாரம் எனது அன்னையின் 16 வது சிரார்த்த தின வாரமாகும். ஆம், அவர் மறைந்து பதினாறு வருடங்கள் காற்றோடு கலந்து பறந்து விட்டது. அவரின் சுவாசம் கூட அவ்வகையில் தான் பறந்தோடியதோ? அன்னையின் எடை எமது இதயத்தில் எத்தகையது என்பதை அளந்து கூறக்கூடியவர்கள் யாராவது இருந்தால் அது அதிசயமே! என் அன்னையின் எண்ணங்கள் என் நெஞ்சில் நிழலாடும் போதெல்லாம் ஏதோ ஒரு உணர்வு என் நெஞ்சினை அடைத்துக் கொள்ளும். அவரின் பாசமிகு பார்வைகள், பரிவு மிகு மென்மையான வார்த்தைகள் எத்தகைய துயரோடு அவரை அணுகினாலும் அதனை ஒரு வினாடிக்குள் எம்முள் இருந்து களைந்தெறிந்து விடும் அவரின் தாய்மை ஆற்றல்கள் என்னைப் பிரமிக்க வைத்திருக்கிறது.

    நாம் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது எமது அடையாளமாக, அதாவது ஆங்கிலத்தில் legacy என்று கூறுவார்கள் … விட்டுச் செல்லப் போகிறோம் எனும் கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. ஆனால் ஒரு உண்மையான தாய்மையின் அடையாளச் சின்னமான அன்னையருக்கு அக்கேள்வி எழ நியாயமேயில்லை எனலாம். அவர்கள் தமது அடையாளமாக தமது சின்னமாக விட்டுச் செல்வது தாம் பெற்ற குழந்தைச் செல்வங்களையே! தமது கனவுகளை தமது உள்ளத்தினுள் புதைத்து விட்டு, தமக்காக ஆண்டவன் அருளிய குழந்தைச் செல்வங்களின் நலன் ஒன்றையே முதன்மையாகக் கொண்டு வாழ்ந்து முடித்து விடும் அவர்களின் தியாகத்தின் முன்னே எதுவுமே ஒப்பாகாது. இதை உணர்த்தும் முகமாகவே எமக்கு எமது முன்னோர்கள் தாம் படைத்த இதிகாசங்களில் குந்தியை, காந்தாரியை, கோசலையை, யசோதையை உதாரணங்களாகக் காட்டிச் சென்றுள்ளார்கள்.

    வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விடும் அவசரத்திலும் தாய்மையெனும் செல்வத்தை விட மற்றைய செல்வங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதினாலும் பல சமயங்களில் நாம் எமது அன்னையருக்குக் கொடுக்க வேண்டிய நியாயமான கெளரவத்தை அளிக்க வேண்டும் எனும் உண்மையை மறந்து விடுகிறோம். காலம் கடந்த பின்பு, காலன் அவர்களை எம்மிடமிருந்து பறித்துச் சென்ற பின்பு அவர்களின் மகிமை எம்முன்னே மகத்தான ஒளியாகப் பிரகாசிக்கிறது. என் அன்னை கடந்து வந்த பாதையை இப்போது பார்க்கும் போது அவர்களின் கால்களில் பதிந்த முட்களின் ரணங்களின் வலியின் கொடூரத்தை உணர்கிறேன். அதை உணர்ந்து கொண்டேன் என்று அவருக்குச் சொல்லும் சந்தர்ப்பத்தைத்தான் naan இழந்து விட்டேன்.

    இம்மடலின் முக்கிய நோக்கம், என் இனிய வாசக நெஞ்சங்களுக்கு அவர்தம் பெற்றோரின் பெருமையைக் காலம் கடந்திடாமல் உணர்ந்து கொள்ள வேண்டும் எனும் ஒரு ஞாபகமூட்டுதலே! அன்னைக்கான திதிக்கான கடமைகளை ஆற்றும் போதெல்லாம் அவ்வன்னை எனக்காகத் தான் ஆற்றிய கடமைகளின் மகத்துவம் புரிகிறது. “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” கவிஞர் வாலியின் வரிகள் மனதின் வலிகளைக் கொஞ்சம் இதமாய்த் தடவிக் கொடுக்கின்றன. என் அன்னைக்கு நான் சமர்ப்பிக்கும் அஞ்சலிக் கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே அவருக்கு நான் செய்யும் முக்கிய கடமையாகிறது.

    அம்மா

    அம்மா !
    எனும் இந்த
    மந்திரச் சொல்லினுள்
    அர்த்தங்கள்
    ஆயிரம் எனும்
    அற்புத உண்மைதனை
    அழியாமல் என்னிதயத்தில்
    பதித்து வைத்த
    அன்பு அன்னையே
    உன் பாதம் பற்றி
    வணங்குகிறேன்

    உன் உள்ளமெனும்
    உத்தம ஆலயத்தில்
    அன்பு எனும் நெய் ஊற்றி
    உன் சுவாசக் காற்று
    உனை விட்டு அகலும் வரை
    அணையாது பாதுகாத்த
    அன்புத் தெய்வம் நீயம்மா !

    மந்திரப் புன்னகையினால்
    மனதின் மந்தகாசங்களை
    மத்தாப்புக்களாக மாற்றும்
    மாபெரும் வித்தையின் நாயகி
    விதையாகி உந்தன் கருவறையில்
    முகிழ்த்தெழுந்த நாள்முதல்
    முழுமனிதனாய் வலம் வந்ததுவரை
    முற்று முழுதான தாயன்பின்
    தத்துவம் பயிற்றுவித்த
    தமிழன்னை நீயம்மா !
    வேதனையில் என் வதனம்
    வாடிடும் வேளை கண்டால்
    சோதனையில் உன் மனம்
    வெந்திடும் விந்தையறிவேன்
    சாதனையேதும் புரியாத
    சாதாரண மகன்தான் நானெனினும்
    சாதனை புரிந்தவன் போல்
    பெருமையில் பூரித்தவள் நீயம்மா !

    காலமெல்லாம் நிறைவேறா பல
    கனவுகளை உன்னுள்ளம் தாங்கிடினும்
    கண்களின் மணிகள் போல எமை
    காத்துக் கரையேற்றிய காவியத்தலைவி நீ !
    உன்னுள்ளம் நானறிவேன் அம்மா !
    உன் ஏக்கம் நானுணர்ந்தேன்
    வீண் கழித்துக் காலங்கள் பல
    மண்ணாக்கிய பொழுதுகள் பலவுண்டு
    கண்விழித்து வாழ்வின் பொருளுணரும் போது
    காற்றோடு காற்றாக நீயும்
    விண்ணேகி மறைந்து விட்டாய்

    நீ வாழும் போது நானுனக்கு
    கவிமாலை சாத்தவில்லை அம்மா !
    உன் உயிர் பிரியும் வேளையிலே
    உனக்காக நான் யாத்தேன் முதற்கவிதை
    அதுவே என் கவியுலகின் பிரவேசத்திற்கு
    முதல் படியானதம்மா ! இன்று
    நாளெல்லாம் பல கவிதை
    நான் பாடி முடிக்கின்றேன் ஆயினும்
    குயில் பாடும் இசை கேட்க செவியில்லை
    என்பது போல, என் கவி கேட்க
    தமிழ் தந்த என் தாயில்லையே !

    என் எழுத்துக்களின் ஜீவ நாடியாய்
    அன்னையும், தந்தையும் என் தெய்வங்கள்!
    என் விரல்கள் வழி வழிந்தோடும்
    எண்ணங்களின் நதிமூலம் எனை ஈன்ற
    என் அன்புத் தெய்வங்கள் தானென்பேன்
    அம்மா ! அம்மா ! என்று நானழைத்த பொழுதுகளும்
    தம்பி, தம்பி என்று நீ அணைத்த பொழுதுகளும்
    கண்ணுக்குள் என்றும் உறங்காத காட்சிகளாய்
    காலத்தின் முன் அழியாத சாட்சிகளாய்
    அன்னையுந்தன் பெருமை உரைக்கும்
    கல்பதிந்த எழுத்துக்களாய் மிளிரும்
    அன்னை உந்தன் சிரார்த்த தினமதில்
    அழியாத தெய்வமாய் உனை நிறுத்தி
    ஆலயத்தில் நான் செய்யும் ஆராதனைகள்
    அனைத்தும் அம்மா உன் பாதங்களில் இவன்
    வடிக்கும் கண்ணீர்ப் பூக்களே !
    நான் வாழும் காலவரை என் எழுத்துக்கு
    எனையீன்ற தமிழ்த்தாய் நீ வலு கொடுப்பாய்
    உனக்கெந்தன் அஞ்சலிகள் செலுத்துகிறேன்
    அன்னலஷ்மி எனும் அன்புத் தெய்வமே !

    amma appaa

    வணக்கத்துடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (177)

    – சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள் !

    அவசரமான வாழ்க்கை. அல்லோலப்படும் பரபரப்பு. எதையோ தேடிக் கொண்டு கண்முன்னே இயற்கை தந்த இனிய வனப்புகளை அனுபவிக்கக் கூட நேரமின்றி கையிலிருப்பதைத் தொலைத்துக் கொண்டு இந்த 2015ம் ஆண்டில் மனித இனம் எதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது ?

    அன்று காடுகளில் வாழ்ந்த ஆதி மனிதனுக்கும் இன்று நவநாகரீக உடையணிந்து வசதிகளின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய மனிதனுக்கும் ஆகாயமளவிற்கு விரிந்து கிடக்கும் வித்தியாசம். ஆனால் இந்த வித்தியாசம் எமக்கு அளித்திருக்கும் அனுகூலத்தின் மூலம் நாம் எதைச் சாதித்துக் கொண்டிருக்கிறோம், அன்றி எத்தகையதோர் எதிர்காலத்தை எமது அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்கிறோம் ?

    மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய கேள்விகள்.

    தனிமனிதனாகத் தனது சுயதேவைகளுக்காக மற்றையோரின் உணர்வுகளை மிதித்து வாழ்ந்த ஆதி மனிதன் நாகரீகமடைந்தேன் என்று கூட்டமாக, சமூகமாக, சமுதாயமாக வாழ்ந்து இன்று மீண்டும் தனிமனித தேவைகளுக்காக அடுத்தவரின் உணர்வுகளை மிதித்து வாழும் நிலைக்கு வந்து விட்டானோ என்று எண்ணும் வகை எமைச் சுற்றிப் பல நிகழ்வுகள் நிகழ்கின்றன.

    அதேநேரம் இயற்கையின் அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் போது சமுதாய உணர்வுகள் மேலோங்கப் பணியாற்றும் நிலைகளையும் பார்க்கின்றோம். நெஞ்சில் சிறிதாக ஓர் ஆறுதல். மனிதாபிமானம் ஆங்காங்கே பச்சையாக இருக்கும் நிலை கண்டு ஒரு தெம்பு உருவாகிறது. பின் எதற்காக உனக்கிந்த கேள்விகளும், தடுமாற்றமும் என உங்கள் கேள்வியில் தொங்கியிருக்கும் நியாயம் எனக்குப் புரிகிறது.

    இயற்கை எம்மீது தொடுக்கும் போர்கள் ஒருபுறமிருக்கட்டும். அதற்கு யாரும் எதுவும் செய்து விட முடியாது. ஆனால் மனிதன், மனிதன் மீது தொடுக்கும் போர்களும், அப்போர்களினால் அல்லலுற்று அவதியுறும் சக மானிடரும், அப்போருக்கான காரணங்களை புரிந்து கொள்ள முடியாத ஒரு விரக்தியுமே எனது கேள்விகளுக்குக் காரணம்.

    நாம் யாருமே யாராக, யாருக்கு குழந்தையாகப் போகிறோம் என்று கேட்டுப் பிறப்பதில்லை. அதே போல தமக்கு யார் குழந்தையாக வர வேண்டும் என்று எம்மைப் பெற்றவர்களும் கேட்டுப் பெறுவதில்லை. நிலத்தைப் பெற்றோர் பதப்படுத்த எமக்கும் மேலே எமக்கும் புரியாத ஒரு சக்தி விதையைத் தூவுகிறது. துளிர்த்துச் செடியாகி மரமாகி “நான்” வளர்ந்து விட்டேன் எனும் இறுமாப்புடன் செயல்படத் துவங்குகிறோம். அங்கேதான் நாம் எமது வித்தியாசங்களுக்குள் எம்மைப் புதைத்துக் கொள்கிறோம். ஒரு குழந்தையாக மண்ணில் விழும் போது எந்த அடையாளமும் இல்லாமல் அவதரித்து விட்டு நம்மை இனம், மதம், மொழி, நிறம் எனும் வேற்றுமைகளுக்குள் சிக்க வைத்து விடுகிறோம்.

    மதம் என்பது மனிதனின் மன ஒட்டங்களைச் சீர்ப்படுத்தி ஓர் தெளிவான கண்ணோட்டத்துடன் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட வைப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. எந்த ஒரு மதமுமே தம்முடைய மதமே உலகில் சிறந்தது என்றும் மற்றைய மதங்களைச் சிறுமைப்படுத்த வேண்டும் என்றோ போதிப்பதில்லை. அனைத்து மதங்களின் அடிப்படையும் அன்புதான். மதங்களின் வழி நடக்கும் சிலர் தமது மனதின் ஆக்ரோஷங்களை மதத்தின் அடிப்படையில் நியாயப்படுத்த முயல்வதினால் அம்மதங்களைச் சேர்ந்த அனைவரையும் குற்றவாளிகளாகக் கருத முடியாது. எமது மதத்தின் அன்றி மொழியின் பெருமையை நிலைநாட்டிக் கொள்வதற்காக மற்றொரு உயிரைக் காவு கொள்வது எவ்வகையில் மதத்திற்கோ அன்றி மொழிக்கோ பெருமை சேர்க்கும் ?

    இன்றைய உலகில் பயங்கரவாதம் எனும் பெயரால் நாம் எமது மதத்திற்கோ அன்றி மொழிக்கோ பாதுகாப்பளிக்கப் போகிறோம் என்று எண்ணுவது என்றுமே எம்மை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லாது. மாறாக மனிதர்களுக்கிடையில் வேற்றுமையையும், விரோத மனப்பான்மையையும், அமைதியின்மையுமே தோற்றுவிக்கும்.

    சமீபத்தில் பிரான்ஸிலும், அமெரிக்காவிலும் நடைபெற்ற மனிதப் படுகொலைகள் அந்நாட்டு மக்களிடையே தேவையற்ற சந்தேகங்களையே தோற்றுவித்துள்ளது. தவிர நிறவெறி, மொழிவெறி, மதவெறி கொண்ட அந்நாட்டுத் தேசியவாதிகளின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையிலேயே இந்நிகழ்வுகள் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. பிரான்ஸில் வேற்றின மக்களுக்கெதிராகக் குரல் கொடுக்கும் தேசவாதக் கட்சி அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் அதிக வாக்குகளைக் கைப்பற்றியுள்ளது. இது அங்குள்ள மிதவாத அரசியல்வாதிகளை அச்சமடைய வைத்ததுடன் அந்நாட்டுப் பல்லின கலாச்சார வாழ்வுமுறையை குலைக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல அமெரிக்காவில் தீவிர வலதுசாரிக் கொள்கையைக் கொண்ட ஜனாதிபதி வேட்பாளராகிய டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தைக் காரணம் காட்டி இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த எவரையும் ஐக்கிய அமெரிக்காவிற்குள் அனுமதிப்பதைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

    இத்தகைய மதவாதக் கருத்துக்கள் உலகை எந்த இலக்கை நோக்கி இழுத்துச் செல்லப் போகிறது என்பதே கேள்வி. மனதுக்கு ஆறுதல் தரும் செய்தி இவரது இந்த அர்த்தமற்ற வாதம் அமெரிக்காவில் இவரது கட்சியைச் சேர்ந்த பலராலும் வன்மையாகக் கண்டிக்கப் பட்டுள்ளது. பல உலக முன்னணி அரசியல் தலைவர்கள் இத்தகைய அர்த்தமற்ற கருத்துக்கள் எதுவித பலனுமளிக்காது என்று மிகவும் பலமான கண்டனங்களை இந்நபருக்கெதிராக முன்வைத்துள்ளார்கள். இங்கிலாந்தில் இவர் லண்டனுக்கு வருவதை அனுமதிக்கக் கூடாது எனும் மகஜர் ஒன்றை அரசாங்கத்தின் இணையத்தளத்தினூடாக   500,000   கையெழுத்துக்களுடன் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

    மதப்பிரிவினையைத் தூண்டி மக்களுக்கிடையே நிலவி வரும் புரிந்துணர்வுக்கு பங்கம் விளைவிக்கும் இம்மனிதருக்கெதிராக பல பாகங்களில் இருந்து பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களால் எதிர்ப்புக் கிளர்ந்துள்ளது. அனைத்து மதமும் அன்பின் அடித்தளத்தில் அமைந்தது எனும் கருத்தினை மக்கள் ஆதரித்து ஒன்றிணைவது இத்தகைய ஒரு அறிவிலியின் அர்த்தமில்லாக் கருத்து என்பது ஒருவகை நன்மை எனலாம்.

    மனிதன் மனிதனாக வாழ்வது மற்றைய மனிதனையும் தன்னைப் போல எண்ணுவது ஒன்றின் மூலமே என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

    ஒன்றே குலம் ! ஒருவனே தேவன் !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Check for Updates >>> https://petition.parliament.uk/petitions/114003

    Block Donald J Trump from England

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (176)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்.

    காலதேவதை கருணையற்று தமிழகத்தின் தலைநகரைத் தனித்தீவாக்கிய இக்கட்டான வாரத்திலே உங்கள் முன்னே இம்மடலுடன்.

    வடகிழக்குப் பருவமழை எனும் காலசக்கரத்தின் இயல்பான சுழற்சியின் ஒரு கோரத்தாண்டவ முகத்தைப் பார்க்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். “காய்ச்சலும், தலையிடியும் தனக்கு வந்தால்தான் தெரியும்” என்பர் முன்னோர்கள். பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் இருந்து கொண்டு என் இனிய உடன்பிறப்புகள் படும் இன்னல்களைத் தொலைக்காட்சி வழியாகவும், சமூக வலைத்தளங்களின் வழியாகவும் மட்டுமே அறிந்து கொள்ளக்கூடிய ஒரு நிலையில் இருந்து கொண்டே இம்மடலை வரைகிறேன்.

    தண்ணீர், தண்ணீர் என்று வறட்சியால் தாகத்திற்காக தவித்த காலம் போய், சுற்றி நிறைந்து வழியும் நீரின் மத்தியிலும் தாகத்தினால் தவித்திடும் பலரின் நிலை உள்ளத்தை உறையச் செய்கிறது. ஆங்காங்கே வெள்ளத்தின் மத்தியில் சிக்கித் தவிப்போரின் உதவிக்கான கோரிக்கைகளைக் கண்டும் உதவ முடியா நிலையில் உலகின் மற்றொரு கோடியில் உடைந்த உள்ளத்தோடு தவிக்கும் என்னைப் போன்ற பலர்.

    நூறு வருடங்களுக்குப் பின்னால் வரலாறு காணாத கனமழையென்று அறிவிக்கிறார்கள். சரித்திரம் படைக்கும் பல நிகழ்வுகளும் மனதிற்குப் பெருமை சேர்ப்பதுண்டு ஆனால் அச்சரித்திரப் படைப்புகளில் சில நிகழ்வுகள் இத்தகைய பேரிடர்களையும் நிகழ்த்தி விடுவதுண்டு. தவிப்புடன் என் தமிழக நண்பர்கள் பலரையும் முடிந்தளவு தொடர்பு கொண்டு நிலையறிந்தேன் ஆயினும் தொடரும் மின்சாரத் துண்டிப்பினாலும், தொலைத்தொடர்புத் துண்டிப்பினாலும் பல சமயங்களில் தொடர்புகொள்ள முடிவதில்லை.

    இத்தகைய ஒரு நிகழ்விற்கு யாரையுமே குறையோ, அன்றிக் குற்றமோ கூறமுடியாது. இது அதற்கான சமயமுமல்ல. இயற்கையின் அனர்த்தங்கள் சொல்லிக் கொண்டு வருவதில்லை. காலமகளின் நர்த்தனங்களில் நிகழும் கோரத்தாண்டவங்களில் இதுவும் ஒன்று.

    இத்தனை இன்னல்களின் மத்தியிலும் நெஞ்சை நிறைத்திடும் செய்தியொன்று பகர்கின்றேன். சமூகவலைத்தளங்களைப் படிக்கும் போதும், என்னுடன் தொடர்பிலிருக்கும் அன்புச் சோதரர்களின் பகிர்வுகளைப் படிக்கும் போதும் தத்தளிக்கும் தம் சமுதாய அங்கத்தினரைப் பாதுகாக்கும் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட உத்தம நெஞ்சங்களின் சேவையே அது.

    இயற்கை தம்மீது வீசிய அனர்த்தங்களைச் சவாலாக எடுத்துக் கொண்டு அடுத்தவரின் கண்ணீர் துடைக்க துடித்தெழுந்து சேவையாற்றும் இவர்கள் செய்வதே உண்மையான மகேசன் சேவையாகிறது. இத்த மனப்பான்மை உடையோர்களை ஒன்றிணைத்து விஞ்ஞான மையத்தில் விளையாடும் சமூகவலைத்தளங்களை வெறும் பொழுதுபோக்கு சாதனங்களாகப் பயன்படுத்தாமல் பேரிடரால் அல்லலுறும் மண்ணின் மைந்தர்களை காக்கப் பாடுபடும் இவர்களின் தீரத்திற்கு சிரந்தாழ்த்தி வணங்குகிறேன்.

    என் இனிய சோதரர்கள் தமிழகத்து உறவுகள் தம் இன்னல் விரைவில் தீர்ந்திட அனைவர்க்கும் பொதுவான, அனைத்துக்கும் அப்பாற்பட்ட இயற்கையெனும் இறையை வணங்குகிறேன்.

    chennai flood wiki picture2chennai flood wiki picture

    பொங்கிவரும் வெள்ளத்தைப்
    பொத்திப் பிடிப்பது போல்
    கருமேகங் கொண்டு மூடி
    கண்மூடித் திறப்பதற்குள்
    கதவைத் திறந்தது போல்
    வரலாறு காணாத கனமழை
    வாட்டுகிறது என் இனிய
    உடன்பிறப்புகளைத் தமிழகத்தில்

    அன்னைத் தமிழின் தலைநகராம்
    அழகுசூழ் முத்தமிழின் பிறப்பிடம்
    மூவேந்தர் திறன் கண்ட தமிழகம்
    மூழ்கித் தத்தளிக்கிறது வெள்ளத்தில்
    அந்தோ பரிதாபம் எத்தனை மக்கள்
    அலறி அடித்து உயிர் காக்க போராட்டம்
    வேதனைத் தீ கொண்டு நெஞ்சத்தை
    வேகவைத்துப் பார்க்கின்ற காலமகள்

    நெடுஞ்சாலைத் தெருக்களெல்லாம்
    நீண்டு விரிந்திருக்கும் ஏரியென
    கண்பாயும் இடமெல்லாம் கனநீராய்க்
    காட்சி தரும் கோலமதை என்னவென்பேன்
    இல்லை, இல்லை தண்ணீர் என ஏக்கம்
    இருந்த பொழுதுகள் அவை ஓராயிரம்
    எல்லை இல்லா நீர்ப்பெருக்கால் சோதரர்
    தொல்லையுறும் பொழுதுதானோ இக்கணம்
    சுற்றிக் காண்பதெல்லாம் நீராய் இருந்தும்
    வற்றித் தாகத்தால் தவித்திடும் கோலம்

    முற்றி விட்ட கருமேகம் உடைந்து அங்கே
    கொட்டித் தீர்த்திடும் அளவுகாணா மழைநீரே
    போதும் உந்தன் விளையாட்டு இறைஞ்சுகிறோம்
    இயற்கைத் தாயே கருணை காட்டு அம்மா !
    உறக்கமிழந்து தவித்திடும் உடன்பிறப்புகள்
    உறங்கக் கொஞ்சம் அவகாசம் கொடுத்திடு
    பலகாத தூரம் கடந்து இங்கே நானும்
    பதைத்திடும் நெஞ்சோடு வேண்டுகிறேன்
    அனைவர்க்கும் பொதுவான அற்புத சக்தியே
    அளித்திடுவாய் அமைதியை தமிழன்னை மண்ணிற்கு

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடனும், ஆழமான துயருடனும்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    படங்கள் உதவி விக்கிபீடியா

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (175)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன்.

    “என்ன பெரிசு ஒரே பாடாய்ப் படுத்தறே, ஓரமா ஒதுங்கிப் படுத்துக்கோப்பா” என்றும்
    “இஞ்சை பாருங்கோ உங்களுக்கு வயசாயிப் போச்சுது, சும்மா இந்த இளசுகளோட போட்டி போடாம பேசாம சிவனேன்னு ஒரு மூலையில போய் இருங்கோவன்” என்றும்
    கேட்கும் பேச்சுகள் …

    age3இவையெல்லாம் எமது பின்புலங்களில் நாம் எங்காவது கேட்கும் வார்த்தைகள். நான் மேலே கூறிய உதாரணங்களிலிருந்து இவையெல்லாம், எமது நாடுகளுக்கேயுரிய ஒரு குறிப்பிட்ட பிரச்சனை என்று நான் கூறுவதாக யாரும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இது சகல நாடுகளிலும், சகல கலாச்சாரங்களிலும் ஊறிப்போயிருக்கும் ஒரு விடயமாகும். அதாவது வயது எனும் காரணி ஒரு மனிதனின் வாழ்வை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பதுவே இங்கே எழும் கேள்வியாகும். இந்தத் தாக்கத்தின் வடிவம் நிறவெறி, மதவெறி எந்த அளவிற்கு ஒரு சமூகத்தைப் பாதிக்கிறதோ அந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பது சமூக ஆராய்ச்சி வல்லுநர்களின் கருத்து.

    வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் எம்மால் குடும்பத்திற்கு, சமுதாயத்திற்கு உபயோகம் இருக்கிறது. அது வயது ஏற ஏற ஒவ்வொரு வடிவம் எடுக்கிறது. அந்த உபயோகத்தன்மையின் வடிவமும், அதன் முக்கியத்துவமும் சூழலுக்கேற்ப, சார்ந்திருக்கும் சமூகத்திற்கேற்ப மாறுதலடைகிறது. ஆனால், தன்னுடைய ஓய்வு நிலையை அண்மிக்கும் ஒருவனுடைய உபயோகத்தன்மை குறைகிறது என்பது பலருடைய பொதுப்படையான கருத்து என்பதே முக்கியமாக நான் இங்குக் குறிப்பிட விழைவது.

    இப்படியான ஒரு நிலமை நடைமுறையில் இருக்கிறது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் நிலைமை இருந்தாலும் அது சரியா? தவறா? என்பதுவே கேள்வியாகிறது.

    சீ.ஏ.ஏ.டி.இ எனும் வயதுப்பாகுபாட்டிற்கு எதிரான ஒரு அமைப்பின் கணக்கெடுப்பின் படி, இந்த வயதானவர்கள் எனும் பட்டியல் அதாவது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் ஜனத்தொகையில் மூன்றிலொரு பங்கு இருக்கிறார்கள் எனக் கணிக்கப் படுகிறது. அதே அமைப்பின் மற்றொரு கணிப்பின் படி வயதானவர்கள் எனக் கணிக்கப்படுவோரில் 25% வேலையில்லாத் திண்டாட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. இரண்டரை மில்லியனுக்கு மேற்பட்ட வேலை செய்யக்கூடிய நிலையிலுள்ள 45க்கும் 65க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் வேலையற்று இருக்கிறார்கள் என்பதுவும் இவ்வமைப்பின் மற்றொரு கணிப்பாகும்.

    age1சட்டரீதியாக வேலை செய்வதற்கு உட்பட்ட வயதிலுள்ளவர்கள் வயதானவர்கள் எனும் முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுவதினால், அரசாங்கத்திற்கு 5.4 பில்லியன் பவுண்ட்ஸ் வேலையற்றோருக்கான உதவிப் பணத்திலும் 31 மில்லியன் பவுண்ட்ஸ் உற்பத்தி நஷ்டத்திலும் செலவாகிறது என்பதும் ஒரு கணிப்பாகிறது. வேலைவாய்ப்பு அற்றுப்போகும் தன்மை 59 வயதுடன் அதிகரிக்கின்றதாகக் கூறப்படுகின்றது. மேலே கூறப்பட்ட ஐக்கிய இராச்சியத்திற்கான சில வருடங்களுக்கு முன்னரான புள்ளி விபரங்களாகும். இந்தப் புள்ளி விபரங்கள் உலகின் மற்றபாகங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது.

    நான் இந்தப் புள்ளி விபரங்களைக் குறிப்பிட்டதன் காரணம் வயதுப்பாகுபாடு எனும் இந்த நிகழ்வு எப்படிப் பாதிக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே! ஒரு மனிதன் 20 வயதில் உத்தியோகம் எனும் நிலையை அடைக்கிறான் என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொள்வோம். சராசரி மனிதருடைய வாழ்வில் பிள்ளைகள் வளர்ந்து தமது அன்றாடத் தேவைகளைக் கவனிக்கும் நிலையிலிருக்கும் போது தாம் புரியும் பணியின் பால் செலுத்தக்கூடிய சிரத்தையின் விகிதம் அதிகமாக இருக்கும்.

    இங்கேதான் ஒரு மனிதனின் உபயோகத்தன்மைக்கு ஓய்வுண்டா? அவனது அனுபவத்திற்கு வயதாவதுண்டா? எனும் கேள்விகள் ஓங்காரமாய் எழுகின்றன. இந்தப் பிரச்சனையை நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு அணுகுகிறோம்? இது என்றும் இருந்து வரும் ஒரு பிரச்சனை. அதுவும் இதற்கு தற்போது அதிக விளம்பரம் கொடுத்து, அரசாங்க அளவில் வயதுப்பாகுபாடு காட்டுவது சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டு அதைப்பற்றி பிரச்சாரமும் செய்யப்படுகிறது.

    சில வருடங்களின் முன்னால் ஏன் இந்தப் பிரச்சனை இப்படி பெரிதாக்கப்படவில்ல? பின் ஏன் இப்போது என்னைப் போன்றவர்களின் கண்களில் இது தீவிரமாகத் தெரிகிறது? ஒருவேளை நானும் அந்த வயதானவன் எனும் பட்டியலின் வாசற்கதவைத் தட்டி நிற்பதால் எனது விழிப்புணர்ச்சி அதிகமாகியிருக்கிறதோ? இதற்கு இன்னொமொரு காரணமும் இருக்கலாம். இப்போதெல்லாம் மருத்துவ வசதிகள் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது. மக்கள் தமது உடல்நலத்தில் அதிக கவனமெடுக்கிறார்கள். அதனால் சராசரி மனிதனின் வாழ்வுக்காலம் நீடிக்கப்படுகிறது.

    இது எதற்கு வழிவகுக்கிறது என்றால் ஒரு மனிதனுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் (பென்ஷன்) முன்னைவிட அதிகாலத்திற்கு உயிர்வாழ்வதினால் அதிககாலத்திற்கு வழங்கப்படவேண்டியுள்ளது. அரசாங்கங்கள் அதற்காக தமது பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. சரி அரசாங்கம் எங்கே இருந்து தனது பணத்தைப் பெற்றுக் கொள்கின்றது? உழைக்கும் மக்கள் செலுத்தும் வரிப்பணமே அரசாங்கத்தின் அதிகப்படியான வருமானமாக இருக்கிறது.

    இங்கேதான் புள்ளி விபரத்தை மீண்டும் உற்று நோக்க வேண்டி இருக்கிறது …

    ஐக்கிய இராச்சியத்தைப் பொறுத்தவரையில் 1901ம் ஆண்டில் ஒரு ஓய்வூதியம் பெறுபவருக்கு 10 வரி செலுத்துவர் எனும் விகிதத்தில் இருந்தது. ஒரு பத்து ஆண்டுகளின் முன் அதாவது 2005ம் ஆண்டில் ஒரு ஓய்வூதியம் பெறுபவருக்கு 4 வரிப்பணம் செலுத்துவோர் எனும் விகிதத்தில் ஓய்வூதியம் பெறுவோரின் தொகை அதிகரித்து விட்டது. இதே விகிதத்தில் கணக்கிட்டால் 2050 ஆண்டளவில் ஒரு ஓய்வூதியம் பெறுவோருக்கு 2 வரிப்பணம் செலுத்துவோர் எனும் வகை ஓய்வூதியக்காரரின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்வதற்கான பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்றாகத்தான் இந்த வயதுப்பாகுபாட்டின் மூலம் வயதானவர்கள் என்போரை வேலையிலமர்த்தத் தயங்கும் நிறுவனங்களை அரசாங்கம் சாடத் தொடங்கியுள்ளது.

    இங்கேதான் வயதானவர்கள் உபயோகமற்றவர்கள் என்று சமுதாயம் கணிக்கத் தொடங்குவதின் பிரதிபலிப்புகள்தான், இந்நிறுவனங்களின் தயக்கம் என்ற எண்ணம் பரவலாக இருந்து வருகிறது. ஒரு மனிதனுடைய உபயோகத்தன்மையை நிர்ணயிக்கும் உரிமையை யார் யாருக்குக் கொடுத்தது ?

    உபயோகத்தன்மை என்பது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகிறது என்பதே உண்மை. 20 வயதில் சோம்பேறித்தனமாகவும் எதிலும் ஆர்வமில்லாமலும் இருக்கும் ஒரு இளைஞன் 50 வயதிலும் பெரும்பான்மையாக அதே குணாம்சங்களைத்தானே பிரதிபலிப்பான்? அதே போல 20 வயதில் மிகுந்த சுறுசுறுப்பும், ஆர்வமும் கொண்ட ஒரு இளைஞன் 50 வயதிலும் அப்படி இருப்பதுதானே சகஜம்.

    இதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை.

    age2வயதானவர்களை ஒதுக்கி வைத்து அவர்களைக் காலத்தின் மாற்றத்திற்கு உட்படாதவர் என ஒதுக்கும் மனப்பான்மையையே அநேகமாகக் காணக்கூடியதாக இருக்கிறது. அப்படியானால் தான் புரிந்த பணியினாலும், மற்றைய வாழ்க்கைப் பாடங்களினாலும் அந்தப் பெரியவர் அடைந்த அனுபவத்திற்கு விலையில்லாமல் போகிறதா? வாழ்க்கையின் நடுப்பகுதி என்று கூறப்படும் 50களில் , தனது முழுக்கவனத்தையும் செலுத்தி தன்னுடைய அனுபவத்தின் அனுகூலத்தைத் தனது கம்பெனிக்குக் கொடுக்கக்கூடிய ஒருவர் தனது வயதின் நிமித்தம் அச்சந்தர்ப்பத்தை இழப்பது என்பது நியாயமாகுமா ?

    அதேவேளை அனுபவம் உடையவர் என்பதனால் தொடர்ந்து 60களிலும், 70களிலும் வேலையைத் தன்னுடன் தக்க வைத்துக் கொண்டிருப்பதனால், இளைஞர்களின் வேலைவாய்ப்புத் தன்மைகள் குறைகின்றனவா? அன்றி அந்த இளைஞனோ, யுவதியோ ஒரு அனுபவமிக்க மூத்தவரின் அருகே பணிபுரியும் வாய்ப்புப் பெறும்போது அவரின் அனுபவங்களின் அனுகூலத்தைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இருக்கின்றதா?

    பல கேள்விகள் பிறக்கும் வேளையிலே அவற்றிற்கான விடைகளைத் தேடி எமது அறிவை விசாலப்படுத்திக் கொள்வோம். அதேசமயம் வயதுப்பாகுபாடு எனும் காரணியால் ஒரு அனுபவமிக்கவரின் அனுபவத்தின் அனுகூலத்தைச் சமுதாயம் இழக்கின்ற நிலை வந்தால் அதற்கு எதிராகக் குரல் கொடுக்கும் நிலைக்கு எம்மை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் உபயோகத்தன்மைக்கு ஓய்வில்லை. அது பிரயோகிக்கப்படும் சூழல்களில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் அந்த உபயோகத்தன்மையின் உதவி நிச்சயம் சமுதாய வளர்ச்சிக்குத் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை.

    வயதானவர்கள் எனும் பெயர்சூட்டி பெரியோரைப் பீரோவில் வைத்து அழகு பார்க்கும் நிலைக்கு நாம் போய்விடக்கூடாது. சமுதாயம் செழிக்க சிந்தை விரிய வேண்டும். விவாதங்கள் ஆக்கபூர்வமான முறையில் வலுவாக நிகழ வேண்டும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (174)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே! இனிய வணக்கங்கள்!

    ஆண்டுதோறும் இல்லங்களில் இனிய ஒளியை ஏற்றி துன்பங்களை விரட்டி மகிழ்ந்திருக்கும் அந்தத் தீபத் திருநாள் 2015ம் ஆண்டிலும் வந்து ஓடி மறைந்து விட்டது.

    பின்புல நாடுகளில் நாம் விட்டு வந்த பிள்ளைப்பிராயத்து நினைவுகளில் இந்தத் தீபாவளி வகிக்கும் பங்கு மகத்தானது. தீபாவளியை எதிர் நோக்கிக் காத்திருந்த காலங்களும் எம் வாழ்வில் வந்து போயிருக்கின்றன. ஆனால், நாம் புலம்பெயர்ந்த பின்பு பல்வேறு சமூகங்கள் வாழும் ஒரு சூழலில், மாணவனாகக் கல்லூரி நேரம் போக மீதி நேரத்தில் பகுதிநேர பணிபுரிந்து வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு சூழலில் தீபாவளி வந்து போய்க்கொண்டிருக்கும். ஆனால் நமது வாழ்வு தன் பாணியில் ஓடிக் கொண்டிருக்கும்.

    அதன் பின்னால் திருமண பந்தத்தில் புகுந்து, குழந்தை என்று வந்த பின்பு தீபாவளி என்றால் முடிந்த வரைக்கும் ஆலயம் சென்று வருவதே தீபாவளிப் பண்டிகையாக இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் இங்கு வாழும் பெரும்பான்மையான ஆசிய மக்களில், வட இந்திய கலாச்சார சூழலில் இருந்து வந்தவர்கள் தீபாவளியை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள். அது மட்டுமின்றி புலம் பெயர்ந்து வாழும் தமிழர் சமுதாய மக்களும் பெருமளவில் வாழ்ந்து வருவதால் அவர்களும் ஆங்காங்கே தமது சமூகப் பின்னணிகளில் தம்மாலான வகையில் இப்பண்டிகையைக் கொண்டாடி வருகிறார்கள்.

    சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னால் எனது நண்பர் ஒருவர் ஈழத்தில் வடபகுதியில் அனாதைச் சிறுவர்களின் பராமரிப்புக்காக நிறுவி வரும் ஒரு விடுதிக்கு நிதி சேர்க்கும் முகமாக நடத்திய ஒரு நிகழ்ச்சிக்கு நானும் சிறிய பங்களிப்புச் செய்திருந்தேன். அந்நிகழ்ச்சிக்காக தமிழக சின்னத்திரைகளில் பிரபல்யமானவர்களாகிய தம்பிகள் தேவகோட்டை இராமநாதன் , ரோபோ ஷங்கர் , பாலாஜி வடிவேலு ஆகியோரின் பங்களிப்புக்கான பணிகளில் எனது பங்கு மிகவும் சிறியதே !

    அப்போது அறிமுகமான தம்பிகளில் தம்பி தேவகோட்டை இராமநாதனும் ஒருவர். குறிப்பாக இவர் எனது மானசீகக் குரு கவியரசர் பிறந்த மண்ணைச் சேர்ந்தவர் என்பதாலும், எனது நல்ல நண்பர்களாகிய அமரர் தமிழ்வாணனின் மைந்தர்கள் லேனா, ரவி தமிழ்வாணன், கவியரசரின் மைந்தன் காந்தி கண்ணதாசன் ஆகியோரின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், செட்டிநாட்டின் பால் எனக்கு உள்ள ஈர்ப்பின் காரணத்தினாலும் அவருடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து தமிழகத்தின் நகரத்தார் சமூகம் இலண்டனில் இயக்கிவரும் “இலண்டன் நகரத்தார் சங்க” நிகழ்வொன்றிற்காக இலண்டன் வந்திருந்த தேவகோட்டை இராமநாதன் அவர்கள் என்னை எனது இல்லத்தில் சந்திக்க வந்திருந்தார். அவரை அழைத்து வந்தவர்கள் தம்பிகள் அண்ணாமலை, செந்தில் ஆகிய இருவருமேயாவர். அதனைத் தொடர்ந்து அவ்விரு தம்பிகளுடனான எனது நட்பு தொடர்ந்தது.

    தமது அமைப்பில் நடைபெறும் நிகழ்வுகளை எப்போதும் அறியத் தருவார்கள். அப்படித்தான் இம்முறை நவம்பர் மாதம் 14ம் திகதி தமது அமைப்பு வைக்கும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்கள். அவ்வழைப்பின் பிரகாரம் நானும், எனது மனைவியும், நண்பர் ஒருவரும் கடந்த சனிக்கிழமை நாம் வாழும் இடத்திலிருந்து சுமார் 70 மைல்கள் தூரத்தில் இருக்கும் வெல்வின் கார்டன் சிட்டி (Welwyn Garden City) எனும் இடத்தில் உள்ள ஒரு ஹாலில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தோம்.

    செட்டி நாட்டில் நகரத்தார் சமூகத்தினரிடையே நான் கண்டு பிரமிக்கும் பண்புகள் பல. அவற்றில் மிகவும் முக்கியமானது அவர்களின் விருந்தோம்பல் பண்பு என்று கூறினால் அது மிகையாகாது. நான் கலந்து பழகும் கவியரசரின் புதல்வர் காந்தியிடமும், நண்பர்கள் லேனா, ரவி தமிழ்வாணன், வானதி திருநாவுக்கரசு ஐயா ஆகியோருடன் நான் பழகும் போது அவர்கள் என்மீது காட்டும் அதீத அன்பின் மூலம் இது மேலும் ஊர்ஜிதமாகிறது.

    அந்த ஹாலில் நான் நுழைந்ததுமே நான் அங்கு எதிர்கொண்டது அவர்கள் ஒவ்வொருவரினதும் வரவேற்புபசாரமே. அங்கு நான் அறிந்திருந்தவர்கள் மிகவும் சொற்பமே! ஆயினும் அவர்கள் அனைவரும் அறியாத ஒருவருக்குக் கொடுத்த உபசாரம் அவர்களின் கலாச்சார பின்னணியின் வலிமையையும், அவர்களின் மண்ணின் பெருமையையும் பறைசாற்றி நின்றது. ஒரு விழா கலாரசிகர்களின் மனதை நிறைப்பதற்கு முன்னால் அவர்களின் வயிறு நிறைவது முக்கியம் எனும் நிலைப்பாட்டில் விழா நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னால் அனைவருக்கும் அற்புதமான அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. செட்டிநாட்டு அருமையான ருசிகர உணவு அனைவரின் பசியையும் ஆற்றியதன் பின்னால் அனைவரும் விழா மண்டபத்தை நிறைத்தனர்.

    101

    102

    103

    இளம் சிறார்களின் கலை நிகழ்ச்சியோடு ஆரம்பமாகியது அன்றைய நிகழ்வுகள். பரதநாட்டியம், வயலின், பியானோ என இலண்டன் நகரத்தார் சங்க உறுப்பினர்களின் இளம் சிறார்கள் தமது திறமையைக் காட்டி அனைவரையும் மகிழ்வூட்டினார்கள். அவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சி அன்று அங்கே நடைபெற்ற நகைச்சுவையுணர்வோடு சிந்திக்கத் தூண்டிய பட்டிமன்றமாகும். இப்பட்டி மன்றத்திலே நடுவர்களாகப் பங்கேற்க தமிழ்சின்னத்திரைகளில் கோலோச்சும் அற்புத, அபார பேச்சாளர்களான திரு ராஜா அவர்களும் திருமதி பாரதி பாஸ்கர் அவர்களும் வந்திருந்தார்கள்.

    பட்டிமன்றத்தின் தலைப்பு “புலம்பெயர் வாழ்வினில் அதிகமான பளு ஆண்களுக்கா? அன்றி பெண்களுக்கா? “ என்பதுவே. பெண்களுக்கே அதிகமான பளு என வாதாட நான்கு இல்லத்தரசிகளும் (இவர்களில் இருவர் வேலைக்குப் போவோர்) , ஆண்களுக்கே அதிகமான பளு என வாதாட நான்கு இல்லத்தலைவர்களும் பங்கு பற்றினார்கள். பட்டிமன்ற வாதத்தில் ஊறித் திளைத்த இருவர் முன்னால் அங்கு பங்கு பெற்ற பலர் முதன்முறையாகப் பட்டிமன்ற வாதத்தில் ஈடுபடுவது எப்படி எ னும் எண்ணம் நெஞ்சில் நின்றாடியது. அனைவரின் எதிர்பார்ப்பையும், நடுவர்கள் உட்பட ஆனந்த அதிர்ச்சி ஆக்கி மகிழ்வித்தனர்.

    ஆம், பங்கு பெற்றுப் பேசிய அனைவரும் பட்டிமன்றத்தில் ஊறித்திளைத்தவர்கள் போன்று அழகாக, எளிமையாக உள்ளத்து உணர்வுகளோடு, நகைச்சுவை கலந்து பேசி நடுவர்களையே அசத்தி விட்டார்கள். இதை நடுவர்களான நண்பர் திரு. ராஜாவும், திருமதி பாரதி பாஸ்கரும் அழகாகப் பாராட்டி உறுதி செய்தமை இங்குக் குறிப்பிடத்தக்கது. திரு. ராஜாவும், திருமதி பாரதி பாஸ்கரும் எதற்காக அவர்களுக்கு இத்தனை பெயரும் புகழும் என்பதை தமது அற்புதமான நகைச்சுவை கலந்த பேச்சுக்களினால் நிரூபித்து மண்டபத்தை கரகோஷத்தினாலும், சிரிப்பொலியினாலும் அதிர வைத்தார்கள்.

    நவம்பர் 14ம் திகதி சிறுவர்கள் தினம் என்பதால் அங்கு வந்திருந்த சிறுவர்களை மகிழ்விப்பதற்காக ஒரு சிறுவரை மகிழ்விக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தமை அவர்களின் திட்டமிடும் திறமைக்குச் சான்றாகிறது. கலைநிகழ்ச்சிகள் முடிவுற்றதும் இரவு 7 மணிக்கு மாலைநேர பலகாரங்களோடு காப்பி, தேநீர், குளிர்பானம் ஆகியன பரிமாறி மீண்டும் அனைவரையும் பசியாற்றினார்கள் நகரத்தார் சங்கத்தினர். அதைத்தொடர்ந்து விழாவின் நிறைவாகத் தீபாவளிக்கே உரித்தான வாணவேடிக்கை நடத்தி அனைவரையும் மகிழ்வித்தனர்

    இந்நகரத்தார் சங்கத்தின் ஆரம்பக்கால ஸ்தாபகர்களில் ஒருவரான அண்ணன் தியாகராஜன் அவர்களுடனான கலந்துரையாடல் நெஞ்சுக்கு நிறைவையளித்தது. உலகெங்கும் வாழும் தமிழர்களில் இந்நகரத்தார் சமூகம் தாம் வாழுமிடங்களில் கோவில் நிறுவுவதோடு தமது பாரம்பரிய கலாச்சாரப் பின்னணியைப் பாதுகாத்து வருவது தமிழன்னைக்கு சிறப்பளிக்கும் செய்கையாகும்.

    தமிழையும், சைவத்தையும் தமது இரு கண்களாகப் போற்றும் இந்நகரத்தாரின் சேவை ஒற்றுமையுணர்வோடு மேன்மேலும் ஓங்கி வளர வாழ்த்தியதோடு ஒரு அற்புத நிகழ்வைக் கண்டுகளித்து நகரத்தார் சங்கத்தினரின் விருந்தோம்பலில் மூழ்கித் திளைக்க சந்தர்ப்பம் அளித்த தம்பிகள் அண்ணாமலை, செந்தில் ஆகியோரை வாழ்த்தி, நன்றி கூறி மனநிறைவோடு இல்லம் திரும்பினோம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (173)

    – சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே! இனிய வணக்கங்கள்!

    ஒரு நாட்டின் முதுகெலும்பு அதன் இளைய சமுதாயம். அந்த இளைய சமுதாயம் ஒரு எழுச்சி மிக்கச் சமுதாயமாக, புத்துணர்ச்சி கொண்ட சமுதாயமாக, நாளைய உலகில் தம் நாட்டின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும் எனும் இலட்சியதாகம் கொண்ட ஒரு இளைய சமுதாயமாக, பரிணமிக்க வேண்டுமானால் கல்வியில் மேம்பட்டு இருக்க வேண்டியது அவசியமாகிறது.

    “இளைமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்பார்கள் பெரியோர்கள். அதனால்தான் உலகநாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் கல்வியின் முக்கியத்துவம் பேணிப் பாதுகாக்கப்படுகிறது. கல்விக்கு முதன்மை கொடுக்காத பெற்றோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படக்கூடிய வகையில் இந்நாடுகளில் சட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. கல்வி இலவசமாக வழங்கப்படுவதன் காரணமும் கல்வியின் முக்கியத்துவத்திற்கு முதன்மை அளிப்பதற்காகவே !

    ஆனால், இன்றைய 21ம் நூற்றாண்டில், நாட்டின் எல்லைகள் விரிவாக்கப்பட்டுள்ளன. புலம் பெயர்ந்து வாழும் மக்கள் அனைத்து நாடுகளிலும் காணப்படுகிறார்கள். உதாரணத்திற்கு நான் வாழும் இந்த இங்கிலாந்து நாட்டை எடுத்துக் கொண்டோமானால், இந்நாட்டு மக்கள் என்று கணிக்கப்படும் பொழுது இந்நாட்டின் பழங்குடி மக்களான வெள்ளை இனத்தவர் மட்டுமல்லாது ஆப்பிரிக்கத் தேசத்தவர், ஆசிய தேசத்தவர் மற்றைய ஐரோப்பிய தேசத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் இணைந்த ஒரு சமுதாயமாகவே இந்நாடு காணப்படுகிறது.

    மாணவர்கள்ஒவ்வொரு நாட்டையும் பின்புலமாகக் கொண்டவர்கள் அதன் கலாச்சாரப் பின்னணியில் தான் தமது வாழ்க்கையைக் கொண்டு செல்கிறார்கள். ஒவ்வொரு கலாச்சாரப் பின்னணியிலும் கல்வியின் முக்கியத்துவத்தின் விகிதாசாரம் வேறுபடுகின்றது. வாழ்வின் முன்னேற்றத்திற்கான இலட்சிய வேட்கையின் தாகமும் வேறுபடுகின்றது. தாம் வாழும் சூழலிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள, தமது வாழ்வின் தரத்தை உயர்த்திக் கொள்ளக் கல்வி எத்தகைய விதத்தில் வித்திடுகிறது என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள்தான் கல்வியைச் சரியான வகையில் பயன்படுத்தித் தமது வாழ்வில் வெற்றியைத் தேடிக் கொள்கிறார்கள்

    இங்கிலாந்து போன்ற ஒரு சமுதாயத்திடலிலே ஒவ்வொருவரும் தமது திறமையை இன, மத, நிற வேறுபாடின்றிக் காட்டக்கூடிய ஒரு சூழல் நிலவுகின்றது. உண்மையான திறமையைக் கண்டெடுத்து அதனை ஊக்குவிக்கவும், அத்திறமையைச் சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வழி வகைகளும் கொட்டிக் கிடக்கின்றன.

    ஆனால், கேள்வி இவற்றைச் சரியான வகையில் இனங்கண்டு கொள்கிறோமா என்பதுவே ! எதற்காக இந்த அலசலும் , கேள்வியும் என்று எண்ணத்தோன்றுகிறது இல்லையா ?

    கணிப்பியல்‘Institute of Fiscal Studies’ எனும் அமைப்பு ஒன்று தனது சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றில் இங்கிலாந்து பழங்குடி வெள்ளை இனத்தைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களே சர்வகலாசாலைக்கு மிகவும் குறைவாகச் செல்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. அவ்வறிக்கையில் மேலும் அதே பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட புலம்பெயர் சமூகங்களைச் சேர்ந்த இந்திய (ஆசிய), சீன மாணவர்கள் அதிக அளவில் சர்வகலாசாலைப் பட்டப் படிப்பை மேற்கொள்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காரணம் என்ன என்பதற்கு அவ்வறிக்கையில் தமது ஆராய்ச்சிகளின் படி, இச்சமூகங்களைச் சேர்ந்த பெற்றோர் தமது குழந்தைகளின் கல்வியில் அதிகச் சிரத்தை எடுக்கிறார்கள் என்றும் அக்குழந்தைகளும் மிகவும் சிறப்பான எதிர்காலக் கனவுகளை வரித்துக் கொண்டு அதனை நோக்கி உழைக்கிறார்கள் என்பதும் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

    இதைப்பற்றிய ஒரு வானொலிக் கருத்தரங்கில் கருத்து வெளியிட்ட ஒரு ஆப்பிரிக்க ஆண் ஆசிரியர் ஒருவர், தான் இத்தகைய பின் தங்கிய பொருளாதார நிலையில் வாழும் மாணவர்களைப் பயிற்றுவிப்பதாகக் கூறினார். அவர் மேலும் தான் அம்மாணவர்களுக்கு ஒருமுறை அவர்களின் கருத்தில் அதியுயர்ந்த பணிகளில் அவர்களுக்குப் பிடித்தமான மூன்றை எழுதித் தரும்படி கேட்ட போது அவர்களில் பெரும்பான்மையோர்,

    — பிரபல்யமடையும் தொழில் அதாவது நடிகர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் போன்ற தொழில்
    — உதைபந்தாட்ட வீரர் (இங்கிலாந்தின் உதைபந்தாட்ட வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்)
    — தேசிய லாட்டரி சீட்டில் வெற்றி பெறுவது

    போன்ற தொழில்களைக் குறிப்பிட்டிருந்தமை அவர்களது வாழ்க்கையை நோக்கிய கண்ணோட்டத்திற்கு எடுத்துக்காட்டு என்று கூறினார்.

    ஆனால், இந்திய வம்சாவழியினர் (இந்திய வம்சாவழியினர் என்பது சிறீலங்கா போன்ற நாடுகளையும் உள்ளடக்கியதாகும்), சீன வம்சாவழியினர் மருத்துவர், வக்கீல், கணக்காளர்கள், விஞ்ஞானிகள் போன்ற தொழில்களையே தமக்குப் பிடித்தமான அதியுயர்ந்த பணிகள் என்று குறிப்பிருந்தமை அவர்களது இலட்சிய நோக்கை எடுத்துக் காட்டுகிறது.

    இதற்கு மற்றுமொரு காரணமும் இருக்கலாம். புலம்பெயர் சமூகத்தின் முதலாம் தலைமுறையினர் இங்கிலாந்தில் கால் பதித்த போது வாழ்வில் பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்தே முன்னேற வேண்டிய நிலை இருந்தது. இந்த அனுபவத்தின் அடிப்படையில் தாமடைந்த சிரமங்களைத் தமது குழந்தைகளும் எதிர்நோக்கக் கூடாது என்பதற்காகக் கல்வியின் முக்கியத்துவத்தை அவர்களுக்குச் சரியான வகையில் சிறுவயது முதலே நிலைநாட்டி வந்திருப்பது யதார்த்தமே !

    அது தவிர, பின்புலத்தில் வாழும்போது எமக்குக் கிடைத்த வாழ்வின் அடித்தள ஆரம்பம் மிக வலுவானது. புலம்பெயர் சமுதாயத்தில் அதன் அடித்தளத்தில் எழுப்பப்படும் வாழ்க்கையைச் சரியான வகையில் தக்க வைத்துக் கொள்வதற்குக் கல்வி ஒரு முக்கியக் காரணி என்பதும் கருத்திற் கொள்ளப் படவேண்டியுள்ளது.

    இத்தகைய ஆய்வறிக்கைகள் இப்பல்லினக் கலாச்சாரச் சமூகத்தில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தப் போகின்றன என்பதுவே கேள்வி. பின் தங்கியுள்ள வெள்ளை இன மாணவர்களின் கல்வி பற்றிய முக்கியத்துவத்தைச் சரியாகப் புரியவைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமே ஒழிய இந்திய,சீன வம்சாவழியின மாணவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியாக மாற இடமளிக்கக் கூடாது.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    (நன்றி – பீ.பீ.சி இணையத்தளம் படங்களுக்காக)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (172)

    — சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே! இனிய வணக்கங்கள்!

    ஒருவார இடைவேளையின் பின்னால் உங்களுடன் மடல் மூலம் பேச விழைகிறேன்.

    “என்னப்பா, உன்னைக் கொஞ்ச நாளாக இந்தப் பக்கம் பார்க்கவே முடியலையே!“ என்கிறார் ஒருவர்.

    “சும்மா போப்பா, நேரமேயில்லையே! வேலை, வீட்டில அது இது என்னு சும்மா ஒரே பிஸியப்பா” என்கிறார் மற்றவர்.

    இது சமீபத்தில் எமது இல்லத்திற்கு அருகாமையில் இருக்கும் ஒரு கோவிலில் நான் செவிமடுத்த சிறிய சம்பாஷணை.

    புலம்பெயர் மக்கள் மத்தியில் கோவில்கள், அதுவும் இந்துக் கோவில்கள் வகிக்கும் பங்கு அதீதமானது. இது எதனால்?

    அவர்கள் ஆன்மீக ஞானம் அதிகமாகக் கொண்டவர்களா? இல்லை, அன்னை நாட்டை விட்டு அதிக தூரம் விலகி இருக்கிறோம் எனும் ஆதங்கமா? இல்லை, ஆலயம் செல்வது என்பது ஒரு இந்துவின் கடமை எனும் சராசரிக் கடமையாக எண்ணுகிறார்களா?

    ஓ! நானும் இந்தப் புலம்பெயர்ந்தவர்கள் பட்டியலில் ஒருவன் தானோ?

    ஆன்மீகம் எனும் சொல்லைத் தொடர்ந்து “ஆத்திகம்” “நாத்திகம்” என்பன அதன் பின்னே வருவது வழக்கம். இறை நம்பிக்கை உள்ளவர்கள், இறை நம்பிக்கை அற்றவர்கள் எனும் பட்டியல் எங்கும் உள்ளது போல, புலம் பெயர்ந்த மக்களிடையேயும் அதே விகிதாசாரத்தில் காணப்படுகிறது என்பதுவே யதார்த்தம்.

    ஏனோ பல சமயங்களில் இறை நம்பிக்கையையும், மூட நம்பிக்கையையும் இணைத்துப் பார்ப்பது பலரிடையே சகஜமாக நிகழ்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம் தான் என்ன? இறை நம்பிக்கை வலுவாக உள்ளவர்கள் தாம் கொண்ட நம்பிக்கையை நியாயப்படுத்துவதற்காக எடுத்துக் கொள்ளும் உதாரணங்கள் மூட நம்பிக்கையின் ஆதாரம் கொண்டவையாக இருப்பதா? அன்றி எம்மிடையே நிலவி வரும் இதிகாச, புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளவற்றை விஞ்ஞானரீதியில் ஆராயத் தலைப்பட்டதால் ஏற்பட்டதொரு நிலைமையா?

    பல கேள்விகள் என் நெஞ்சைத் துருவ ஆரம்பித்தன. இவற்றிற்கு விடை காண விழையும் முன்னால் ஆத்திகம், நாத்திகம் எனும் இந்தத் தராசுத் தட்டுகளில் என் எடை எங்கேயுள்ளது எனும் கேள்வி எழுகிறது. இறை நம்பிக்கை என்பது மதங்களுக்கும் அப்பாற்பட்டது என்பது எனது நிலைப்பாடு. ஆன்மீகம் என்பது விஞ்ஞானம் போன்று அனைத்துக்கும், அனைவர்க்கும் பொதுவான ஞானமேயன்றி அதற்கு மதச்சாயம் பூச விழைவது தவறு என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

    எனது வாலிப வயதில் அந்நாளைய நாகரீகம் என்று எண்ணி வாலிப முறுக்கோடு என்னை ஒரு நாத்திகனாகக் காட்டிக் கொள்வதில் பெருமிதம் கொண்டவன் நான். 18 வயதிலேயே தாய்நாட்டின் சூழலை விட்டு வெளியேறியவன். எனக்கு ராஜாவும் நானே மந்திரியும் நானே என்பதுவே சுதந்திரம் என்று சுதந்திரத்தின் வரைவிலக்கணத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட ஒரு வேளையது.

    வாழ்வின் ஒவ்வொரு வளைவுகளும் நான் எதிர்பாராத திருப்பங்களால் என்னை எடுத்துச் சென்றபோது, என்மீது விழுந்த அடிகள் ஒவ்வொன்றும் என்னை வாழ்வில் செப்பனிடத் தொடங்கியதால் எனது உள்ளத்தில் ஏதோ எனக்கு அப்பாற்பட்டது ஒன்றின் முக்கியத்துவம் புரிந்தது. நாம் எங்கே பிறக்கிறோம் என்பதும், யாருக்கு பிள்ளையாகப் பிறக்கிறோம் என்பதும் நாம் வகுத்ததல்ல.

    மதம் என்பது மக்களைப் பிரிக்கும் ஒரு சக்தியாக தன்னலமிக்கவர்களால் உருவகிக்கப்பட்டு விட்டது என்பதே என் கருத்து. நான் ஒரு இந்துவாகப் பிறக்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை. அதே சமயம் இந்துவாகப் பிறந்தேன், இந்துவாக வளர்ந்தேன், இன்று இந்துவாக வாழ்கிறேன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எதுவித தயக்கமுமில்லை. ஏனெனில் “இந்து” என்பதை மதமாகப் பார்த்து அதனை மதவெறிக்கு அத்திவாரமாக்குவோர்களைச் சார்ந்தவனில்லை நான்.

    ஒரு நல்ல “இந்து” ஒரு நல்ல “மனிதன்” என்பதே எனது மதத்தின் வரைவிலக்கணம். நான் எனது மதத்தின் மீது கொண்டுள்ள மதிப்பைப் போலவே அடுத்தவர்களும் அவர்கள் மதத்தை மதிப்பார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வளர்வதே மத நல்லிணக்கத்திற்கு அடையாளம். இந்து மதத்தின் சாரங்களை அறிவதில் எனக்குள்ள ஆர்வம் போன்றே மற்றைய மதங்களின் நல்ல கோட்பாடுகளை அறிந்து கொள்வதிலும் அதனை உள்வாங்கிக் கொள்வதிலும் நான் மிக்க ஈடுபாடு கொண்டவன்.

    “இதிகாசம்”, “புராணம்” என்பன நிஜமானவையோ அன்றி புனையப்பட்டவையோ என்பதை ஆராய்வதை விட, அது எவ்வகையாயினும் அதில் கூறப்பட்டுள்ள நல்ல மனிதராக வாழ்வதற்குரிய கோட்பாடுகளை வகுத்தவர்களை எண்ணி வியப்பதிலேயே எனக்கு ஆர்வம். இன்றைய புலம்பெயர் சூழலில் பல்லினங்கள் சேர்ந்து வாழும் ஒரி பல்லினக் கலாச்சார சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    ஒன்றே குலம்பொதுவாகப் பலர் கூடியிருக்கும் ஒரு நிகழ்விலே மத சம்பந்தமான கருத்துக்களை முன்வைப்பதே மிகவும் சங்கடமான ஒரு நிலை. எங்கே அது ஓர் தேவையற்ற மத சம்பந்தமான கடுமையான விவாதமாக மாறி விடுமோ எனும் அச்சமே இதற்குக் காரணம். இந்நிலையில் தான் அன்று அந்த இந்துக் கோவிலிலே அவ்விருவர்களுக்கிடையில் நடந்த அந்த சம்பாஷணையை நோக்க விழைகிறேன். கோவிலுக்குச் செல்வது என்பது ஒரு கலாச்சாரக் கட்டாயமாக்கப் பட்டு விட்டதோ? கோவிலுக்குச் செல்லாத அன்றி, செல்ல முடியாத ஒருவன் தன் மனதையே கோவிலாக்கி மனசாட்சியைத் தெய்வமாக்கி வணங்குவதில் தவறேதும் இருக்கிறதா?

    நாம் படிக்கும் நூல்களில் ஆண்டவன் தனக்கு விலையுயர்ந்த காணிக்கைகள் தேவையில்லை, ஒரு மலரைக் கையிலெடுத்து தூய உள்ளத்துடன் தன்னை வணங்கினாலே போதுமானது என்று கூறுவதாக அறிகிறோம். “ஆடை அணிகலன் ஆடம்பரங்கள் ஆண்டவன் விரும்புவதில்லை” என்று கவியரசரின் பாடல் வரிகள் கூறுகின்றன.

    ஒரு ஊரைச் சென்றடைவதற்குப் பல பாதைகள் இருப்பதைப் போல எம்முள் அனைத்தையும் கடந்து உள்ளே இருக்கும் கடவுளைக் காண்பதற்கு வெவ்வேறு பாதைகளே வெவ்வேறு மதங்களாகும். இவற்றிலே ஒன்று மற்றதை விடச் சிறந்தது என்று விரோத மனப்பான்மையை வளர்ப்பவர்கள் சுயநலவாதிகள். காலச்சார அடையாளங்கள், கலாச்சார விழுமியங்களைக் காத்துக் கொள்வதற்கான வழி சுயநலமிக்க குழுநிலைவாதிகளாக மாறுவதில்லை, அனைத்தையும் ஏற்று சகிப்புத்தன்மை கொண்ட பொதுநலவாதிகளாக வாழ்வதே!

    “நான் ஒரு இந்து” என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கான சரியான கோஷம், “ஒன்றே குலம் என்று சொல்லுவோம் , ஒருவனே தேவன் என்று கூறுவோம்” என்பதுவே.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (171)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    மானிட வாழ்க்கை என்பது மனிதருக்கு வாய்ப்பது அவர்கள் அறிந்த வகையில் ஒரேயொரு முறைதான். விந்தாக அன்னையின் கருவறையில் விதைக்கப்பட்டு மானிட உருவமாக இம்மண்ணின் மடியில் விழுகிறோம். குழந்தை, வாலிபம், வயோதிகம் எனும் மனித பருவத்தின் காலங்களைக் கடக்கும் நமக்கு ஒவ்வொரு பருவத்திலும் சமூகத்தினால் எதிர்பார்க்கப்படும் கடமைகள் எம்மீது திணிக்கப்படுகிறது. விரும்பியோ, விரும்பாமலோ இக்கடமைகளை நிறைவேற்றும் கட்டாயத்திற்குள்ளாக்கப்படும் நம்மில் சிலர் இதனை முற்றாக நிராகரித்து நடக்க முற்படும்போது அவர்களின் மீது சமுதாயம் ஒரு முத்திரை குத்துகிறது. வாழ்வில் எதிர்பார்க்கப்பட்ட கடமைகளை முடிந்தளவு திருப்திகரமாக நிறைவேற்றி விட்டு வயோதிகம் எனும் பருவத்தினுள் காலடி எடுத்து வைக்கிறோம்.

    அறையின் மூலையில் இருக்கும் பழைய புத்தகங்களை அடுக்கி வைக்கும் பீரோவைப் பார்த்திருப்பீர்கள். அதனுள் இருக்கும் பல புத்தகங்கள் தமது உபயோகம் முடிந்த காரணத்தினால் கவனிப்பாரற்று தூசு படிந்து இருக்கும். ஓய்வு பெற்ற வயோதிகர் எனும் முத்திரை குத்தப்பட்ட பலரும் இன்றைய சூழலில் அப்படியாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்களோ எனும் ஒரு கேள்வி எழுகிறது. குறிப்பாக எமது புலம்பெயர்ந்தோர் சமூகத்தில் இத்தகைய ஒரு நிலை காணப்படுவது போலத் தென்படுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    வாழ்வின் அனுபவங்களைத் தம்முள் சுமந்தபடி அதனைப் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் எதுவும் கிடைக்காமல், வெறும் தூசு படிந்த அருமையான புத்தகங்களைப் போல அவர்களும் விரயமாகிப் போகிறார்களோ எனும் எண்ணம் மிகவும் சத்தமாக உள்ளத்தில் எழுகிறது. இந்நிலை குறிப்பாக ஈழத்துப் புலம்பெயர் சமூகத்தினிடையே காணப்படுவது போல் ஒரு கருத்து உள்ளத்தில் சதிராடுகிறது. இதற்கான காரணங்கள் பலவிருக்கலாம். ஈழத்தில் பலகாலமாக தமிழரிடையே இருந்து வந்த பாதுகாப்பற்ற சூழலினால் இடம்பெயர்ந்தோர் ஏராளம். இவர்களில் ஓய்வு பெற்ற வயோதிகர் பலரடங்குவார்.

    ஈழத்திலே வாழ்ந்திருந்தபோது இயல்பாக தம்முடைய பணிகளைத் தாமே பார்த்து வந்தபோது அவர்கள் தமது இருப்பை நியாயப்படுத்தி வந்தார்கள். ஆனால், திடீரென முற்றாக அந்நியமான ஒரு சமூகச்சூழலில் சிக்கிக் கொள்ளும்போது, எதை மிக இலகுவாக தாமே செய்து வந்தார்களோ அதற்காக மற்றவர்களுடன் தங்கி இருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அவர்கள் தமக்குள் தாமே தம்மைத் தாழ்வாக மதிப்பிட்டுக் கொள்ளும் ஒரு நிலை உருவாகிறது. இவர்களில் பலர் தமது உறவினர்களோடு தங்கியிருக்க வேண்டிய நிலையில் தமது வாழ்வின் அத்தியாவசிய தேவைகளுக்காய் காத்திருக்க வேண்டியுள்ளது.

    இது யாருடைய தவறும் அல்ல. வாழ்க்கை வீசும் எதிர்பாரா சவால்களினால் பாதிக்கப்பட்டு தமது இயற்கையான சூழலை விட்டு அந்நியநாடுகளுக்குப் புலம்பெயரும் தமது உறவினர்களைத் தம்மோடு வைத்துக் கொள்வோர்கள் தாம் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்காகப் பணிகள் புரியும் ஒரு கட்டாயமேற்படுகிறது. இதனால் அவர்களுடன் தங்கியிருக்கும் உறவினர்களும் தமது சிக்கல்களைத் தீர்ப்பதற்கான வழியைத் தேடி அவஸ்தைக்குள்ளாகிறார்கள்.

    சுமார் இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னே எனது அன்னை, தந்தை என்னோடு தமது எஞ்சிய காலத்தைக் கழிப்பதற்காக வந்தபோது இதை முற்றாக உணர்ந்தவன் நான். பாசத்தில் எந்தவித குறை வைக்காவிட்டாலும் நானும், எனது மனைவியும் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தினால் நாங்கள் எம்மால் விரும்புமளவிற்கு எமது பெற்றோருடன் எமது நேரத்தைச் செலவு செய்ய முடியாத இக்கட்டான சூழல். இங்கே மனவருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால் எமது சமூகத்தின் வயதானவர்களின் அனுபவங்களின் மூலம் அவர்கள் எத்தனையோ பங்களிப்புகளைச் செய்யக்கூடிய திறமையிருந்தும் அவர்களால் பங்குபெற முடியாத நிலையே!

    இதற்கான நிவர்த்தி என்ன என்பதை நாம் வாழும் இந்தப் புலம்பெயர்ந்த சமூகத்தில் சமுதாய அங்கமான மற்றைய இனத்தவர் தமது வயோதிகர்களை எவ்வாறு தம்முடன் இணைத்துக் கொள்கிறார்கள் என்பதன் மூலம் நாமும் அதற்கான மாற்றங்களைச் செய்வதிலே தான் தங்கியுள்ளது. அனைவருமே அந்த நிலையில் தான் இருக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது. எனது தந்தையின் நண்பர் ஒருவர், அவரும் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர் தன்னுடைய அனுபவத்தை, அறிவை எவ்வாறு பகிர்ந்து கொண்டார் என்பது மிகவும் சுவாரஸ்யமானது.

    senior citizensஈழத்தில் கல்வித் திணைக்களத்தில் உயர் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் அவர். நல்ல ஆங்கிலப்புலமை கொண்டவர். ஈழத்தில் இருந்து அப்போது இடம்பெயர்ந்தவர்களுக்கு வரும் உத்தியோகபூர்வமான கடிதங்களை மொழிபெயர்த்து அவர்களுக்கு விளக்கி அதற்கான பதிலையும் எழுதிக் கொடுப்பார். அது மட்டுமின்றி அத்தகையோரின் பிள்ளைகளின் பள்ளிகளில் மொழிப்பிரச்சனையால் அல்லலுறுவோருக்கு தனது வீட்டில் இலவசமாகப் பிரத்தியேக பாடங்கள் சொல்லிக் கொடுத்து உதவுவர். அது மட்டுமின்றி தாம் வாழ்ந்த கட்டிடத் தொகுதியில் இருக்கும் குடியிருப்போர் சங்கத்தில் காரியதரிசியாக செயலாற்றி அவர்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிப்பார். இத்தகைய செய்கைகளின் மூலம் தான் தனது ஓய்வு நேரத்தை மிகவும் உபயோகமான வழியில் கழித்ததோடு தனது வாழ்வியல் அனுபவங்களை முறையாக மற்றையோருக்காக உபயோகித்தார். சில வருடங்களுக்கு முன்னால் தனது தொண்ணூறாவது வயதுகளில் காலதேவன் அவரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டான்.

    எமது சமூக முதியோர்களை ஒன்றிணைத்து அவர்களின் அனுபவ அறிவை வளரும் எமது தலைமுறைகள் உள்வாங்கிக் கொள்வதற்கான எத்தகைய நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டிருக்கிறோம் என்று எம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய வேளை இது. ஆங்காங்கே வயோதிகர்களுக்கான சுற்றுலாக்களை சில இங்கிலாந்தின் சில பகுதிகளில் செயல்படுத்துகிறார்கள்.

    ஆனால் இவற்றில் எத்தனைபேர் பங்கெடுக்கிறார்கள் என்பதுவும், ஒன்றிணைந்து சுற்றுலா செல்வது மட்டுமின்றி தாம் வாழும் சமுதாயத்தில் தாம் பங்களிக்கிறோம் எனும் திருப்தி ஏற்படும் வகையிலான செயற்பாடுகளில் இவர்களை ஈடுபடுத்துவதற்கான முன்னெடுப்புகள் நடைபெறுகின்றனவா ? என்பதுவே கேள்வி.

    மூப்பு என்பது நோயல்ல அது வாழ்வின் ஒரு கட்டம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • நான் நிரந்தரமானவன் அழிவதில்லை

    — சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்களுடன் உங்களின் முன்னே !
    1981ம் ஆண்டு என் வாழ்வினிலே மறக்க முடியாத ஆண்டு. ஏனென்று கேட்கிறீர்களா? என்னோடு பாதியாக என் வாழ்வின் சுகங்களை விடத் துக்கங்களை அதிகமாகப் பகிர்ந்து கொண்ட என் அன்பு மனைவி, இனிய தோழியை நான் மணந்து கொண்ட வருடமது. ஆனால் அதே வருடம் தன்னோடு மற்றுமொரு மிகப்பெரிய நிகழ்வைத் தாங்கிக் கொண்டது. ஆம் செப்டெம்பர் மாதம் 14ம் திகதி எனது மனம் கவர்ந்தவளை என் மனைவியாக்கிய பின்பு காலதேவன் சரி உனக்கொரு இன்பத்தை அளித்தேனே ஏன் நான் ஒரு துன்பத்தையும் அளிக்கக் கூடாது என்று எண்ணியோ என்னவோ எனது மானசீகக்குரு கவியரசர் கண்ணதாசனை அதே வருடம் அக்டோபர் மாதம் 17ம் திகதி தன்னோடு விண்ணுலகிற்கு எடுத்துச் சென்று விட்டார். எனது திருமண வாழ்வின் 34 வருடங்களை கொண்டாடும் அதே வருடத்தில் என் மானசீகக்குரு கவியரசர் கண்ணதாசனின் 34 வது நினைவுதினத்தையும் கொண்டாட வேண்டும் என்பது அனைத்துக்கும் அப்பாற்பட்டவனின் நியதி போலும். வழமை போல கவியரசரின் பிறந்தநாளையும், நினைவுநாளையும் கவிதை பாடி உங்களோடு பகிர்ந்து கொள்வது போல இவ்வருடமும் மாபெரும் கவியரசனுக்கு இப்பாமரனின் சிறிய கவிதைமாலையைச் சமர்ப்பித்து வணங்குகிறேன்.
    அன்புடன்
    சக்தி

    கண்ணதாசன்

    தமிழன்னை
    மடியினிலே தவழ்ந்த
    அரும் பெரும் மைந்தர்களில்
    அளவிட முடியா
    ஆற்றலைப் பெற்றவனே !
    மலையரசித் தாயின் மைந்தா !
    எந்தன் மனதினிய வாசா !
    மாண்புமிகு கவிஞனே ! கண்ணதாசா !

    நேற்றொரு பொழுதினில்
    நெஞ்சினில் சுரந்திட்ட
    நேசமிகு கவிதையின்
    வாசமாய் கமழ்ந்தவன் நீ
    இன்றொரு கணத்தினில்
    இனித்திடும் நினைவுகளில்
    இயம்பிடும் கவிதைகளில்
    இனிப்பாய் தித்திப்பவன் நீ !

    நாளை இவ்வுலகினில்
    நான் வாழ்ந்திடும் நாள்வரை
    நீந்திடும் நினைவுகளில்
    நீக்கமற நிறைந்திடும் தமிழில்
    யாத்திடும் கவிதைகளுக்கெல்லாம்
    யாப்பிலக்கணமாய் வாழ்பவன் நீ !

    இலக்கணம் படித்தவனில்லை ஐயா !
    இலக்கியம் பயின்றவனும் இல்லை ஐயா !
    இயற்றிடும் பாக்கள் எல்லாம்
    கவியரசன் எனும் பள்ளியில்
    கண்ணதாசனின் நேசனிவன்
    கற்றுக் கொண்டதே கவியரசா !

    அன்றொருநாள் தமிழன்னை
    மனம் கனிந்து உதிர்த்திட்டாள்
    தன்கையிருந்த முத்துக்களில் ஒன்றை
    விழுந்தது அது சிறுகூடல் பட்டியெனும் ஆழியில்
    விசாலாட்சி எனும் சிப்பியின் வயிற்றில்
    முகிழ்த்த முத்தையா எனும் முத்தாய் !

    அப்படி என்ன அந்த
    அக்டோபர் 17ம் திகதிக்கு ஆசை ?
    அன்பன் உன்னைத் தான்
    அமரானாக்கிட கொண்டிட்ட ஆசை . .
    நிலவுக்குக் கூட ஒருநாள் அமாவாசை
    உனக்கு மட்டும், எப்போதும் பௌர்ணமி
    கற்பனைச் சிறகதனை விரிக்கும் போது
    வானுக்குக் கொண்டு செல்வது
    கண்ணதாசன் எனும் காற்றே !

    காதலென்னும் படகேறி
    கற்பனையில் பயணித்து
    சோகமெனும் அலை தாக்க
    தத்துவம் எனும் கரை சேர்க்கும்
    கலையுந்தன் கலையன்றோ
    ஞாலமிருக்கும் காலம் வரை
    ஞாபகம் விட்டகலா பாடல்கள்
    வடித்துத் தந்த கவியரசே !
    மறப்பதுண்டோ உனை நாமே !

    இறையடி இணைந்து நீயும்
    இற்றோடு மூன்று பத்தோடு
    நான்கு அகவைகள் கடந்ததய்யா !
    காற்றுப் புகும் இடமெலாம் உன்
    கானம் நிறைந்திடும் காலமிது
    புலம்பெயர்ந்து புவியெங்கும்
    நிலை கொண்ட எம் தமிழுறவுகள்
    காக்கின்றார் உந்தன் படைப்புகளை

    வளையும் எந்தன் விரல்களில்
    வழிந்திடும் அன்னைத் தமிழின்
    அலங்காரத்தின் அடிப்படை தந்தவனே !
    அர்த்தமுள்ள பல அனுபவங்களை
    அழகழாய் அன்னைத் தமிழில்
    ஆக்கியெமக்கு அளித்த கண்ணனின் தாசனே!

    மனசெல்லாம் நிறைந்திட்ட எந்தன்
    மானசீகக்குருவாம் கவியரசர் கண்ணதாசனே !
    வாழ்ந்திருக்கும் நாள்வரை மனதில் இருந்து
    வரம்தருவாய் கவிபாட கவிதைநேசனே !

    சக்தி சக்திதாசன்
    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (170)

    –சக்தி சக்திதாசன்.

    Cavell-1865-1915

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கத்துடன் அக்டோபர் மாத நடுப்பகுதியில் உங்களுடன் இந்த வார மடல் மூலம் உரையாடுவதில் மனம் மகிழ்கிறது.

    இவ்வகிலத்தின் வயதைச் சரியாக அறிந்தவர் எவருமிலர். கால காலங்களாய், யுக யுகங்களாய் இம்மண்ணில் தோன்றி மறைந்தவர் எத்தனையோ !

    இம்மண்ணில் விதையாக விழுந்து விட்டால் அதன் கால நியதிப்படி அதன் வாழ்வு நடந்து முடிவது உறுதி.

    ஒரு தோட்டத்தில் வித்தியாசமான பல வர்ணங்களில் மலர்கள் மலர்வது போல, மலராமல் பச்சைச் செடியாகவே இருக்கும் செடிகளைப் போல இப்புவியில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்களே ! சிலர் வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல் மறைந்து போகிறார்கள். வேறு சிலரோ ஆரவாரமாக வந்து விட்டு அடையாளம் இல்லாமல் அழிந்து போகிறார்கள். மற்றும் சிலரோ சேற்றில் முகிழ்த்த செந்தாமரை போல ஆரவாரமில்லாமல் உதித்து விட்டு தமக்கேயுரிய அடையாளத்துடன் மறைகிறார்கள்.

    ஒரு சிலர் தவறான காரணங்களுக்காக காலமெல்லாம் நிலைக்கிறார்கள். வேறு சிலர் அற்புத மகத்தான காரியங்களை ஆற்றி விட்டு அதற்காக உலகம் உள்ளவரை நினைவு கூரப்படுகிறார்கள். மக்களின் மனதில் மங்காமல் நிலைத்திருப்போரில் அதிகமானோர் மனிதாபிமானத்தின் சிகரமாய் விளங்கியதால்தான் அத்தகைய புகழாரத்தை அடைந்திருக்கிறார்கள்.

    இன்றைய உலகம் அறிவிற் சிறந்து பல தத்துவார்த்த உண்மைகளைப் புரிந்து கொண்டு இயங்கி வருகிறது. இருப்பினும் போர், அநீதி, மனித வதைகள், பேராசையினால் ஏற்படும் அழிவுகள் இவ்வறிவார்ந்த உலகிலும் தொடர்ந்து நடைபெறத்தான் செய்கிறது. இருப்பதில் மட்டும் நிறைவடையாமல், மதமோ அன்றி இறையுணர்வோ மனிதனுக்குப் போதிப்பது அடிப்படை மனித தர்மமே என்பதை அறியாமல் மதங்களின் பெயரால் மற்றவரை அழிப்பதை நியாயப்படுத்தும் பல நிகழ்வுகளை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

    ஆனால் அதே நேரம் இத்தகைய கொடூர நிகழ்வுகளிலிருந்து மக்களைக் காப்பதற்காக தமது உயிரையே பணயம் வைத்து சேவை புரியும் நல்ல உள்ளங்களும் எம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். எனது இந்த மடலின் வழியும் அவ்வழியே வாழ்ந்த ஒருவரைப் பற்றி அலசவே இவ்வழியேகிறது.

    “ஈடித் காவெல்” (Edith Cavell), இங்கிலாந்திலுள்ள “நோரிச்” (Norwich) எனும் நகரை அண்மித்திருந்த “ஸ்வாரடஸ்டன்” (Swardeston) எனும் கிராமத்தில் 45 வருடங்களாக அங்கே மதகுருவாக இருந்த “வணபிதா ஃபிரடிரிக் காவெல்” (Reverend Fredrick Cavell) என்பவருக்கும் “லூசியா சோஃபியா” (Louisa Sophia) என்பவருக்கும் மூத்த குழந்தையாக1865ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் நாள் பிறந்தார்.

    மதகுருவான தந்தையாலும், தாயாரினாலும் எப்போதும் இருப்பதை மற்றையோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் மாண்பினை முக்கியப்படுத்தியே இவர் குழந்தைப் பிராயத்தில் வளர்க்கப்பட்டார். நோரிச் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஈடித் கல்வி பயின்றார். படிப்பை முடித்து 1890ம் ஆண்டு தொடக்கம் 5 வருடங்கள் “பிரஸ்ஸில்ஸ்”( Brussells ) நகரில் ஒரு குடும்பத்தினரின் இல்லத்தில் தாதியாகப் பணிபுரிந்தார். லண்டன் வைத்தியசாலையில் நர்ஸாகப் பயிற்சி பெற்ற ஈடித் இங்கிலாந்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் நர்ஸாகப் பணிபுரிந்தார்.

    1907ம் ஆண்டு இவர் “டாக்டர் ஆண்டனி தேபேஜ்” (Dr. Antoine Depage) என்பவரால் புதிதாக பிரஸ்ஸில்ஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்ட நர்ஸிங் பள்ளியில் பயிற்சியாளராக பணியிலமர்த்தப்பட்டார். 1910ம் ஆண்டு இவர் தாதிகளுக்கான ஒரு சஞ்சிகையை ஆரம்பித்தார். முதலாவது உலக மகாயுத்தம் ஆரம்பிக்கும் போது விதவையான தன் தாயாரைப் பார்ப்பதற்காக இங்கிலாந்திலுள்ள நோரிச்சில் சிலகாலம் தங்கி இருந்தார். பிரஸில்ஸ் நகருக்கு இவர் திரும்பிய போது இவரது ஆஸ்பத்திரி செஞ்சிலுவைச் சங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்தது.

    1914ம் ஆண்டு பிரஸ்ஸில்ஸ் நகர் ஜெர்மானியரால் கைப்பற்றப்பட்டிருந்தது. இவர் காயமடைந்த கூட்டுப் படையினருக்கும், எதிராகப் போரிட்ட ஜெர்மானிய வீரருக்கும் முன்னின்று சிகிச்சையளிக்க உதவினார். கூட்டுப்படையிலிருந்த பிரித்தானியம் பிரெஞ்சுப் படைவீரர்கள், ஜெர்மானிய கைப்பற்றலில் இருந்து தப்பி இங்கிலாந்து, பிரெஞ்சு நாடுகளுக்குத் திரும்புவதற்காக அப்போது நடுநிலை நாடாகவிருந்த நெதர்லாந்துக்கு இவர்கள் தப்பிப் போக ஈடித் உதவினார்.

    போரின் நடுவே காயமடையும் வீரர்களை எப்படையினர் எனும் பேதம் காட்டாது, சேவையாற்றிக் கொண்டிருந்த ஈடித் மீது ஜெர்மானிய நிர்வாகம் சந்தேகம் கொண்டது. இச்சந்தேகத்திற்கு தன் மனதிருப்பதை அப்படியே உரைக்கும் பண்பை கொண்டிருந்த ஈடித்தும் உதவினார் என்பதுவே உண்மை. தன் சொந்த நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து, அயல்நாடொன்றில் யுத்தத்தின் நடுவே மனிதாபிமான அடிப்படையில் சேவையாற்றிக் கொண்டிருந்த ஈடித் ஜெர்மானிய இராணுவத்தினரால் 1915ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் நாள் கைது செய்யப்பட்டார். 10 வாரங்கள் சிறையிலடைக்கப்பட்ட இவர், இவருடன் சேர்ந்தியங்கிய காஸ்டன் குயின் என்பவரால் காட்டிக் கொடுக்கப்பட்டார்.

    தான் பிரித்தானிய, பிரெஞ்சு, பெல்ஜியன் இராணுவ வீரர்கள் தப்பிப் போவதற்கு ஏதுவாக அவர்களைத் தன் வீட்டில் மறைந்து வைத்திருந்ததை ஏற்றுக்கொண்டார் ஈடித். இத்தகைய குற்றத்திற்கு அப்போதைய ஜெர்மானிய நிர்வாகத்தின் தண்டனை மரணமாகும். ஜெனிவா ஒப்பந்தத்தின் படி வைத்திய சிகிச்சை சம்பந்தப்பட்டவர்கள் இத்தகைய தண்டனைக்கு அப்பாற்பட்டவர்கள் என்று குறிப்பிட்டிருந்தாலும், இதைத் தேசத்துரோகம் எனும் அடிப்படையில் அவ்வொப்பந்தத்திற்கு அப்பாற்பட்டது என்று ஜெர்மானிய நிர்வாகம் செயற்பட்டது.

    அப்போதைய பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் “ஹோரஸ் ரோலான்ட்” (Horrace Rowland) என்பவர், தாம் இந்தச்சூழலில் எதுவும் செய்யக்கூடிய அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரித்தானிய அரசின் எந்தத் தலையீடும் ஈடித்துக்கு பாதகமாகவே அமையும் என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது.

    அப்போது முதலவது மகாயுத்தத்தில் ஈடுபட்டிருக்காத அமெரிக்க நாட்டின் பிரெஸ்ஸில்ஸுக்கான தூதுவர், ஜெர்மானிய நிர்வாகத்தின் இத்தகைய செயல் இருநாடுகளுக்கான விரிசல் கண்டிருந்த உறவை மேலும் அந்நியப்படுத்தும் என்று எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது. எத்தனையோ இராணுவ வீரர்களின் வைத்திய உதவிகளுக்குக் காரணமாகவிருந்த ஈடித்தின் சேவையை ஜெர்மானிய அரசு நினைவுகூரவேண்டும் என்றும் அமெரிக்கத் தூதுவர் கோரியிருந்தார்.

    அப்போது அங்கு ஜெர்மானிய நிர்வாகத்திற்குப் பொறுப்பாகவிருந்த ஆளுநர், ஈடித்தின் மரணதண்டனையை ஜெர்மானிய நாட்டின் நிலையைக் கருத்திற் கொண்டு உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தபோது இவர் பிரெஞ்சு மொழியில் விசாரிக்கப்பட்டார். ஆனால் இவரது வாக்குமூலம் ஜெர்மானிய மொழியில் பதிவு செய்யப்பட்டது. இவர் கூறியவற்றைத் திரித்திருக்கலாம் என்று அப்போது ஒரு கருத்து நிலவியது என்று கூறப்படுகிறது.

    நாட்டுத் துரோகம் எனும் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த 27 பேரில், ஐந்துபேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஈடித் காவெலும் ஒருவர். மரண தண்டனை வழங்கப்பட்ட ஐவரில், ஈடித்தும் மற்றிருவருமே மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்கள். மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாளிரவு மதகுருவைச் சந்திக்கும் போது “நாட்டுப்பற்று மட்டும் போதாது, அனைத்து மக்களையும் சமமாக நோக்குவதோடு நான் எவர் மீதும் வன்மமோ, ஆத்திரமோ கொள்ள மாட்டேன்” என்று ஈடித் கூறியிருந்தாராம். இவ்வார்த்தைகள் இன்றும் லண்டனில் ‘ட்ராவெல்கார் ஸ்கொயர்’ எனும் இடத்திலமைந்துள்ள இவரது சிலையில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

    மானிட சேவைக்கு உதாரணமாக விளங்கிய இந்த அற்புதப் பெண்மணி ஜெர்மானிய ராணுவத்தால் 1915ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது உடலை இங்கிலாந்துக்குக் கொண்டு வந்த புகையிரதப் பெட்டி இன்றும் இங்குக் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது இந்த நினைவுடன் நூற்றாண்டு வாரமாகிய இந்த வாரம் பலரும் இந்த புகையிரதப் பெட்டியைப் பார்த்துச் செல்கின்றனர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்றுணர்ந்த இப்பெண் மறைந்தும் வாழ்வது நிச்சயம்.

    “வாழ்ந்தவர் கோடி
    மறைந்தவர் கோடி
    மக்கள் மனதில் நிற்பவர் யார் ?
    மாபெரும் வீரர்
    மானம் காப்போர்
    சரித்திரம் தனிலே நிற்கின்றார் “

    கவியரசரின் அற்புத வரிகள் காலமெலாம் நெஞ்சில் . . . . . .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    குறிப்பு: படங்கள் இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்டன.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (169)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே!
    இனிய வணக்கங்கள்!
    வருட ஆரம்பம் ஏதோ சமீபத்திலே வந்தது போலிருக்கிறது. ஆனால், அதற்கிடையில் அவசரமாக அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதிக்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம்.

    எனது இடது கண்ணில் சிறிய வலி ஏற்பட்டதால் நேற்று வைத்தியசாலையில் கண் மருத்துவ பகுதிக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. அங்கு என் கண்ணைப் பரிசோதித்த கண் டாக்டர், என் கண்ணில் சில துளிகள் மருந்தை விட்டு அரைமணிநேரம் காத்திருக்கும்படி பணித்தார். அந்த டாக்டரின் அறைக்கு வெளியே ஒரு கதிரையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது என் முன்னால் உள்ள சுவரில் தொங்கிய ஒரு சிறிய அறிவிப்புப் பலகை தென்பட்டது. அதிலே அன்று அங்குப் பணிபுரிந்து கொண்டிருக்கும் டாக்டர்களின் பட்டியல் தொங்கியது. மெதுவாக அப்பட்டியலில் என் பார்வையைப் பதிய விட்டேன். சுமார் 14 டாக்டர்களின் பெயர் போடப்பட்டிருந்தது. அப்பதினான்கு டாக்டர்களில் ஒருவரைத் தவிர மற்றும் அனைவரினது பெயர்களும் அவர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்துக்குப் புலம்பெயர்ந்தவர்கள் அல்லது அவர்களது சந்ததி அதாவது இங்கிலாந்தைச் சேர்ந்த வெள்ளையர்கள் அல்ல என்பது புரிந்தது.

    இன்றைய இங்கிலாந்தின் சமூக கட்டமைப்பு என் மனதில் அலைபாய்ந்தது. இன்று வெளிநாட்டுக்காரர் என்று இங்கிலாந்து மக்களால் வர்ணிக்கப்படுவோர் இல்லையானால் அவர்களது தேசிய சுகாதார சேவையின் நிலை என்ன? எண்ணிப் பார்க்கும் போது கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. டாக்டர்களை விட அங்குக் குறிப்பிடப்பட்டிருந்த தாதிமாரின் பெயர்கள் கூட வேற்றினப் பெயர்களாகவே இருந்தது.

    bbc2தேசிய சுகாதார சேவை மட்டுமல்ல, ஒரு பேருந்து நிலையத்தில் நின்று அங்கு வந்து போகும் பஸ்களின் சாரதிகளைப் பார்த்தால் 60 வீதமான பஸ்களின் சாரதிகள் வெள்ளையர்கள் அல்லாதவர்களாகவே காணப்படுவார்கள். அதுதவிர, இரயில்வே நிலைய ஊழியர்களில் கூட வெள்ளையர்கள் குறைவாகவே காணப்படுவார்கள்.

    ஆக மொத்தம் இங்கிலாந்தில் இவ்வெளிநாட்டுக்காரின் பங்களிப்பு இல்லையானால், பலதுறைகளில் ஆட்குறைவு எனும் நிலையைத் தவிர்க்க முடியாது எனும் நிலை காணப்படுவது போன்ற ஒரு நிலை தென்படுகிறது. ஆனால், இங்கிலாந்தின் பலபகுதிகளில் இருந்து வெளிநாட்டுக்காரர்கள் இங்கிலாந்தில் வந்து குடியேறுவதை எதிர்க்கும் பல கோஷங்கள் எழுகின்றன. இங்கிலாந்து அரசியல் கட்சிகள் அனைத்தும் “இமிக்கிரேஷன்” (Immigration) எனும் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லாமல் எந்தவிதமான பிரச்சாரத்தையும் முன்வைக்க முடியாத ஒரு நிலை காணப்படுகிறது. இந்த இரண்டு நிலைகளுக்குமிடையில் நிலவும் இந்த இடைவெளியின் காரணம்தான் என்ன ?

    இங்கிலாந்தின் தொன்மையான மக்களான வெள்ளையர்கள் தான் ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ளவர்களில் அதிக சகிப்புத்தன்மை கொண்டவர்கள் என்பது ஓரளவிற்கு உண்மையான ஒரு கணிப்பே. ஆயினும், இந்தக் காலகட்டத்தில் அவர்களது சகிப்புத்தன்மை அதன் எல்லைக்குத் தள்ளப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்படுவது போல் தென்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. பொதுவான ஒன்றை எடுத்துக் கொள்வோமானால் ஒரு வெளிநாட்டுக்காரர் உதாரணத்திற்கு ஐரோப்பிய நாடொன்றிற்குக் குடியேறி அந்நாட்டு பிரஜாவுரிமையைப் பெற்று ஐரோப்பிய பாஸ்போர்ட்டைப் பெற்றுக்கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். தற்போதைய ஐரோப்பிய யூனியன் சட்டங்களின் படி அவருக்கு ஐரோப்பிய நாட்டில் அங்கத்துவம் வகிக்கும் எந்த நாட்டிற்கும் செல்வதற்கோ அன்றி பணிபுரிவதற்கோ தடையில்லை.

    அவர் இங்கிலாந்துக்குள் நுழைந்து வசிக்கத் தொடங்கினால் அவர் இங்கிலாந்து அரசு வேலையற்றோருக்குக் கொடுக்கும் உதவிப்பணத்தொகையையும் பெற்றுக் கொள்ளும் வழிவகைகள் உண்டு. இவ்வகையான அரசாங்க உதவிகள் இங்கிலாந்து நாட்டில் இலகுவாகக் கிடைப்பதால் பலர் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழைந்துவிடுகிறார்கள். இத்தகையோரின் வரவுகள் இங்கிலாந்தின் ஊடகங்களில் பிரபலப்படுத்தப் படுவதால் இந்நாட்டின் வெள்ளை இனத்தவர் தமது பொறுமையின் எல்லைக்குத் தள்ளப்படுவது போல எண்ணுகிறார்கள். இதன் காரணமாக இந்த வெளிநாட்டு மக்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் கொள்கையை முன்வைக்காத எந்த அரசியல் கட்சியும் மக்களின் ஆதரவைப் பெறுவது கடினமாகிறது.

    இங்கு முக்கியமாக நாம் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இங்கு வந்து குடியேறி வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிநாட்டு புலம்பெயர்ந்தவர்களும் அவர்களின் அடுத்த சந்ததியினரின் பெரும்பான்மையோர் கூட தற்போது இங்கு வெளிநாட்டுக்காரரின் குடியேற்றத்தை மட்டுப்படுத்தக் கோருவதுதான்.

    இதற்குக் காரணம் என்ன? இங்கிலாந்தில் வாழும் புலம் பெயர்ந்த ஆசிய, ஆப்பிரிக்க மற்றைய நாட்டுக்காரர்கள் இந்நாட்டின் வெள்ளை இனத்தவரின் மனதில் எழும் வெளிநாட்டுக்காரரின் குடியேற்றத்திற்கு எதிரான அபிப்பிராயத்தில் அவர்களது வெறுப்பு எங்கே தம்மீது திரும்பி விடுமோ என்ற அச்சம் எழுவது தவிர்க்க முடியாதது.

    இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடி நிலைமையால் அரசாங்கம் ஏற்படுத்திய பொதுத்துறைகளின் மீதான நிதிக்கட்டுப்பாட்டினால் அல்லலுறும் மக்கள் தமது விரக்தியை யார் மீது திருப்பலாம் என்று எதிர்பார்க்கும் போது வந்து அகப்பட்டது இந்தப் பிரச்சனை எனலாம். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும், அரசாங்கம் அமைத்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியின் அரசியல் பொது மகாநாட்டில் வெளிநாட்டவரின் குடியேற்ற அனுமதிக்குப் பொறுப்பான அமைச்சர் இந்த வெளிநாட்டுப்பிரச்சனை சம்பந்தமாக பல கடுமையான கொள்கைகளைக் கடைப்பிடிக்கப் போவதாகப் பேசியுள்ளார்.

    இங்கிலாந்து எனும் இந்தக் கப்பலிலே பயணிக்கும் பயணிகளில் நானும் இடையில் வந்து ஏறியவனே! இப்போது அக்கப்பலில் பயணத்தின் ஆரம்பத்தில் இருந்து பயணிப்போர் தமக்கே இடமில்லை என்று முணுமுணுக்கிறார்கள். வருகின்ற காலங்களில் ஆட்கள் அதிகமாகி விட்டார்கள் என்றால் நாம் படகில் இருந்து தள்ளப்பட்டு விடுவோமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    picture source: IAAI poster campaign | I Am An Immigrant | www.iamanimmigrant.net

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (168)

    சக்தி சக்திதாசன்.

    cross
    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்கள்.
    நிலவு தன் நிறத்தைச் செந்நிறமாக மாற்றி செந்நிலவாக காட்சியளித்த இவ்வாரத்திலே உங்களுடன் மீண்டும் மடல் மூலம் மனம் திறப்பதில் மகிழ்கிறேன்.

    பல்லினக் கலாச்சார மக்கள் சேர்ந்து வாழும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் மத நல்லிணக்கம் இல்லையானால் மக்களின் புரிந்துணர்வு மிகவும் பாதிக்கப்படுகிறது. மதம் என்பது மனிதனுக்கு அணிகலனேயின்றி ஆடையில்லை. அம்மதத்தை இறுகப் பற்றும் காரணத்தினால் மனிதருக்கு மனிதர் புரிந்துணர்வு அற்றுப் போகும் நிலை ஏற்படுமாயின் அது மிகவும் வலியினை ஏற்படுத்துவது தவிர்க்கப் பட முடியாதது.

    நான் என்னை ஒரு இந்துவாகக் காண்கிறேன். ஆனால் இம்மதத்தை நான் கேட்டு பெறவில்லை. நான் விதையாக விழுந்த நிலம் அம்மதத்திற்குச் சொந்தமானது என்பதுவே உண்மை. குழந்தையாக இருந்து வாலிபனாக மாறி இன்று வயோதிகத்தின் வாயிலில் நிற்கும் நான் வளர்ந்து வந்த பாதையின் வழிகாட்டியாய் இந்து மதம் அமைந்தது என்பதுவே உண்மை. வாழும் வகையின் பல முறைகள் எனது பெற்றோரால் என்னுள் புகுத்தப்பட்டதன் அடிப்படைக் காரணமாக எனது மதம் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது.

    ஆனால் தமக்கென தனிப்பட்ட கருத்துக்களை சுதந்திரமாக வகுக்கக்கூடிய பருவம் வந்ததும் ஒவ்வொருவரும் தமக்கென அபிப்பிராயங்களை வளர்த்துக் கொள்கிறார்கள். அவ்வபிப்பிராயங்கள் அவர்களை ஆத்திக அல்லது நாத்திக பாதையில் அழைத்துச் செல்கிறது. அதற்காக ஒரு பாதையை விட மற்றைய பாதை எந்த விதத்திலும் சிறந்தது என்று அறுதியாகச் சொல்லக்கூடிய உரிமை ஒருவருக்கும் கிடையாது.

    அதே போல ஒரு மதத்தினை பின்பற்றுவோர் மற்ற மதத்தினை தமது மதத்திலும் கீழானதாக அன்றிப் பிழையானதாகக் கருதுவதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது. அடுத்தவரைக் காயப்படுத்தாது, அடுத்தவரின் உரிமைகளை உதறித்தள்ளாது தாம் தமது நம்பிக்கைகளின் படி வாழ்வது எவ்விதத்திலும் தவறாகாது. இந்தக் காலங்களில் கூட சிலர் தமது மதத்தின் மீதுள்ள அதீத நம்பிக்கையால் அதை ஒரு வெறியாக மாற்றி மற்றைய மதத்தினரை இழித்துப் பேசுவது மிகவும் மனவருத்தத்திற்குரிய விடயமாகிறது.

    lbcஇன்று காலையில் நான் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது லண்டனில் உள்ள ஒரு முக்கியமான வானொலி அலைவரிசையான எல்.பி.சி எனும் அலைவரிசையின் காலை நிகழ்ச்சியை செவிமடுத்துக் கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சியை நான் விரும்பிக் கேட்பதுண்டு. காரணம் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் நிக் வெராரி என்பவர். இவர் கன்சர்வேடிவ் கட்சியின் பால் ஈர்ப்புக் கொண்டவர். ஆயினும் இவர் தனது நிகழ்வினை நடத்தும் நடுநிலைமையான பாங்கு எனை மிகவும் கவரும்.

    Nick-Ferrari-001இன்றைய நிகழ்வில் அவர் விமர்சித்தது இங்கிலாந்தின் வட பகுதியில் உள்ள “லங்காசையர்” எனும் நகரில் ஏற்பட்ட ஒரு சிறு சர்ச்சையே. அங்குள்ள இறந்தோரைத் தகனம் செய்யும் இடத்தில் 50 வருட காலமாக இருந்த கிறிஸ்தவ மதத்தின் இலச்சினையான சிலுவையை அந்நகரின் நகரசபை அகற்றியதால் ஏற்பட்ட சர்ச்சையே இதுவாகும். அதை அகற்ற அந்நகரசபையினர் கொடுத்த விளக்கம், பல்லின மக்கள் வாழும் நகரில் மற்றைய மதத்தினரும் இத்தகன மையத்தை உபயோகிப்பதால் இச்சிலுவை அவர்களின் மனதைப் புண்படுத்தும் என்பதாகும்.

    அதனால் கிறிஸ்தவ மதத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட அந்நகர மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்து அந்நகர சபைக்கும் தமது பாராளுமன்ற உறுப்பினருக்கும் முறையீடு செய்தார்கள். இங்கு மிகவும் விசித்திரமான விடயம் என்னவெனில் இச்சிலுவையைப் பற்றி மற்ற எந்த மதத்தினரும் எதுவிதமான முறையீடு செய்ததாகவோ அன்றி இது தமக்கு எதுவிதமான மனக்கிலேசத்தைக் கொடுத்ததாகவோ கூறவில்லை. இருப்பினும் சில முற்போக்குவாதிகள் என்று கூறிக் கொள்ளும் நகரசபை உறுப்பினர்கள் தாமாக எடுத்துக்கொண்ட ஒரு தேவையற்ற செயலெனவே கருதப்படுகிறது.

    இந்நிகழ்வில் நிக் வெராரி அவர்கள் இச்சிலுவை அங்கிருப்பதை ஆட்சேபிக்கும் மற்றைய மதத்தினர் எவராகிலும் தனது தொலைபேசி அழைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று தமது ஆட்சேபனையைத் தெரிவிக்குமாறு கோரியும், அழைத்த மற்றைய மதத்தினர் அனைவரும் இது தமது பெயரால் நடத்தப்படும் ஒரு வீண் செயல் என்றே கருத்துத் தெரிவித்தனர்.

    காலம் காலமாய் கிறிஸ்தவ மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டிலே இறந்தோரைத் தகனம் செய்யும் இடத்தில் அவர்கள் பின்பற்றும் மதத்தின் அடையாளச் சின்னம் இருப்பதில் என்ன தவறு. அத்தகன மண்டபத்தில் வேற்று மதத்தினர் தமது உறவினரைத் தகனம் செய்கையில் இச்சிலுவை இருப்பதை விரும்பவில்லையானால் அதை அகற்றச் சித்தமாக இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    இதைத்தவிர ஜனநாயகமாக எப்படி நடக்க முடியும் ?

    இங்கிலாந்து நாடு கிறிஸ்தவ மதத்தினை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு. இங்கு வாழும் ஏனைய மதத்தினர் அனைவரும் ஏதோ ஒரு காலத்தில் இங்கு வந்து குடியேறியவர்களே! இங்கிலாந்தில் வேற்றுமதத்தினருக்குத் தரப்படும் சுதந்திரம், தனிமனித உரிமைகள் வேறு எந்த நாடுகளிலும் காணமுடியாத வகையில் விசாலமானது.

    இங்கு வாழும் இங்கிலாந்து மக்களின் புரிந்துணர்வு அளவிடமுடியாதது. இங்குக் குடியேறி இந்நாட்டைத் தமது நாடாக்கி வாழும் மற்றைய மதத்தினருக்கு அவர்களது மதங்களையும் கலாச்சாரத்தையும் பின்பற்றி வாழும் சகல உரிமைகளையும் வழங்கியதோடு, அத்தகைய வைபவங்களில் தாமும் பங்குபற்றி கௌரவிக்கும் மனப்பான்மையுடையவர்களே பெரும்பான்மையான இங்கிலாந்து மக்கள் என்பதை நான் எனது நாற்பது வருட அனுபவத்தில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

    முற்போக்குச் சிந்தனை எனும் பெயரில் சிலரது நடவடிக்கைகள் சமயங்களில் மக்களிடையே நிலவும் நல்லெண்ண புரிந்துணர்வை எதிர்மறையாக மாற்றி விடக்கூடிய வல்லமை படைத்தது. மதம் எமக்கு நற்சிந்தனையையும், பண்புகளையும் அடுத்தவரைச் சகித்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்க்கும் காரணியாகவே அடிப்படையைக் கொண்டுள்ளது.

    அனைத்து மதங்களும் மக்களுக்கு நன்மையையும், அன்பையுமே போதிக்கின்றன. மதத்தினைக் கண்மூடித்தனமான வகையில் பின்பற்றுவோர் சிலரே அம்மதங்களுக்கிடையிலான பிரிவினைகளுக்குத் தூபமிடுகிறார்கள்.

    மதத்தினை பின்பற்றுவது தவறல்ல மதத்தின் மீது “மதம்” கொள்வதே தவறு.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    படங்கள் உதவி:
    http://www.lbc.co.uk/
    http://www.theguardian.com/media/2010/jun/18/arqiva-commercial-radio-award-winners
    http://www.telegraph.co.uk/news/religion/11902123/Crematorium-cross-removed-to-avoid-offending-non-religious-visitors.html

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்….. (167)

    –சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் நலம், நலமறிய ஆவலாயுள்ளேன்.

    உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் தமக்கென எல்லைகளை வகுத்து வைத்திருப்பதோடு தமது கலாச்சாரத்தையும் தனித்தன்மையையும் சார்ந்த சில அடையாளத்துவங்களை தனியாகக் கொண்டிருக்கின்றன.

    காலம் மாற மாற நாடுகளின் கட்டமைப்புகளும் மாறிக்கொண்டே போகின்றன. இக்காலமாற்றம் கொண்டுவரும் மாற்றங்கள் அந்நாடுகளின் மீது திணிக்கப்படுகின்றன என்றே சொல்ல வேண்டும்..

    குறிப்பாக, ஓர் உதாரணத்திற்கு இங்கிலாந்தை எடுத்துக் கொள்வோமே !

    சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் இருந்த இங்கிலாந்தும் இப்போது இருக்கும் இங்கிலாந்தும் வித்தியாசமடைந்து இருப்பது அனைவரும் அறிந்ததே! ஆங்கிலம் மட்டுமே மொழியாகக் கொண்டிருந்த பெரும்பான்மையான கிறிஸ்தவ மதத்தினரையே கொண்டிருந்த ஒரு நாடு எனும் நிலைமாறி இப்போது பல்லினக் கலாச்சாரங்களை உள்ளடக்கிய பல மதத்தினரை தன்னுள் உள்வாங்கியுள்ள ஒரு நாடாக இன்றைய இங்கிலாந்து பரிணமித்துள்ளது. அன்று முக்கியமாக தமது நாட்டின் முக்கிய அடையாளமாகக் கருதப்பட்ட எத்தனையோ விடயங்களின் முக்கியத்துவம் இன்றும் அதே நிலையில் தான் இருக்கின்றனவா என்பது கேள்விக்குறியே!

    வெள்ளை இனத்தவரல்லாத அனைவரும் இந்நாட்டிற்கு வந்தேறிய குடிகள் என்று இருந்த காலம் மாறி, வெள்ளை இனத்தவரல்லாத பலர் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையாக இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர்களாக, இந்நாடே தமது தாய்நாடாகவும், ஆங்கில மொழியைத் தமது தாயக மொழியாகவும் கொண்டுள்ளார்கள்.

    இந்நாட்டின் தொன்மை மிக்க மக்களின் பெரும்பான்மை அடையாளங்களை முக்கியப்படுத்தும் வகையில் இந்நாட்டின் கலாச்சார அடையாளங்களை வகுத்து வைத்திருந்தால் இப்போதைய கால கட்டத்தில் இப்போது இந்நாடு இருக்கும் கட்டமைப்பின் அடிப்படையில் அவை பொருத்தமானதாக இருக்கின்றனவா என்பதே கேள்வியாகிறது.

    என்ன? சக்தியின் இவ்வார மடலின் ஆரம்பம் நம்மை எங்கே எடுத்துச் செல்கிறது எனும் கேள்வி உங்கள் மனங்களில் எழுவது இயற்கை. இதோ எனது மடலின் கருவிற்கு வருகிறேன்.

    ஒரு நாட்டின் அடையாளம், அந்நாட்டின் தனிச் சொத்து, அந்நாட்டையும் அந்நாட்டினில் வாழும் அனைத்து மக்களையும் ஒருமைப்படுத்தும் வகையில் பிரதிபலிக்கும் தேசியகீதம் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. கடந்த வாரம் இங்கிலாந்தில் “Battle of Britain” என்றழைக்கப்படும் பிரித்தானியாவின் யுத்தம் முடிந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் பழைய இராணுவ வீரர்களை கெளரவிக்கும் நிகழ்வொன்று நடந்தது.

    இத்தகைய நிகழ்வுகளில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கு பெறுவது நாட்டு வழக்கமாக இருந்து வருகிறது. இவ்வழக்கத்திற்கமைய அந்நிகழ்விலும் பிரதமர் டேவிட் கமரன், மற்றும் பலத்த சர்ச்சைக்கிடையில் தொழிற்கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட ஜெர்மி கோபன் எதிர்க்கட்சித் தலைவர் எனும் வகையிலும் பங்கு பற்றினார்கள்.

    அநேகமாக எந்த நாட்டிலும் ஒரு தேசிய அளவிலான நிகழ்வு நடைபெறும்போது தேசியகீதம் இசைக்கப்படுவது வழமையல்லவா? அதேபோல இங்கும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தேசியகீதத்தை அனைவரும் பாடினாலும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கோபன் பாடாமல் மௌனமாக நின்றிருந்தார். எங்கே, எப்போது என்று அவர்மீது பாயக் காத்திருந்த ஊடகவியலாளர்கள் சும்மா இருப்பார்களா என்ன?

    167.3தேசியகீதத்தைப் பாடமறுக்கும் ஒருவர் எப்படி நமது நாட்டின் பிரதமராக வர முடியும் என்று தேசபக்தியற்றவராக திரு ஜெர்மி கோபனைச் சித்தரித்து சர்ச்சையைக் கிளப்பி விட்டார்கள். இனி வரும் இத்தகைய நிகழ்வுகளில் தான் நிச்சயம் தேசியகீதத்தைப் பாடுவேன் எனும் அவர் சார்பான விளக்கம் அவரது பிரச்சாரப் பீரங்கிகளிடமிருந்து வெளிப்பட்டன.

    இந்த விவாதம் என் மனதில் ஒரு பெரிய கேள்வியை எழுப்ப நான் இங்கிலாந்து தேசியகீதத்தின் பின்னணியைச் சிறிது பார்த்தேன். பெரிய பிரித்தானியா அல்லது பிரித்தானிய ஏகாதிபத்தியம் என்றழைக்கப்பட்ட பிரித்தானியாவின் தேசியகீதத்தை இயற்றியது யார் என்பது அறியப்படாத ஒன்றாகவே இருக்கிறது. இருப்பினும் 1619 ஆம் ஆண்டளவில் வாழ்ந்த ‘ஜோன் புல்’ என்பவர் இதை இயற்றியிருக்கலாம் எனும் கருத்தும் நிலவுகிறது.

    சரி இனி இந்த தேசியகீதத்தின் உள்ளடக்கத்திற்கு வருவோம். பிரித்தானிய தேசிய கீதத்தின் ஆரம்பம் கடவுளே எமது இராணியைக் காப்பாற்று என்றாரம்பிக்கிறது.

    எமது ஆடம்பரமான இராணியை
    ஆண்டவா காப்பாற்று
    அவளை வெற்றிக்குரியவளாக்கு
    மகிழ்ச்சியாகவும், பெருமைக்குரியவளாகவும்
    எமை அநேக காலங்கள் ஆள்வதற்காக
    ஆண்டவா எமது இராணியைக் காப்பாற்று

    ஆண்டவனே எழுந்திடுவாய்
    எமது எதிரிகளைச் சிதறடிப்பாய்
    அவர்கள் அரசியலை நிர்மூலமாக்கு
    அவர்களின் வியூகந்திரங்களை
    உடைத்தெறிந்து வெறுப்படைய வைப்பாய்
    உன்மீது எமது நம்பிக்கையை வைக்கிறோம்
    ஆண்டவா இராணியைக் காப்பாற்று

    மதிப்பிலுயர்ந்த வெகுமதிகளை
    அவள் மீது பொழிந்திடுவாய்
    நீண்டகாலம் எமது அரசியாயிருந்து
    சட்டங்களை அவள் காத்திடுவாள்
    எம் இதயம் பொங்க அவள் வாழ்த்துகளை
    மகிழ்வுடன் பாடி நாம் வேண்டிடும் வகையில்
    ஆண்டவா இராணியைக் காத்திடுவாய்

    167.1மேற்கூறிய சாரத்திலேதான் இங்கிலாந்தின் தேசியகீதம் அமைந்துள்ளது. இந்த இராணி பதவிக்கு வந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகிறது இவருக்கு முன்னால் இவரது தந்தை கிங் ஜார்ஜ் அரசராகவிருந்தார். அப்போது இதே பாடலில் இராணி என்று வரும் இடங்களுக்கு ராஜா என்று மாற்றியமைத்த தேசியகீதமாகவிருந்தது. அன்றைய இங்கிலாந்துக்குப் பொருத்தமான தேசியகீதம் இன்றைய இங்கிலாந்தின் கட்டமைப்புக்குப் பொருந்துமா என்றொரு விவாதம் அறிவுஜீவிகள் மத்தியில் எழுந்துள்ளது.

    167.2பல்லினக் கலாச்சார அடிப்படையிலமைந்த இன்றைய இங்கிலாந்தின் குடிமக்கள் பல கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்டவர்கள். அவர்களும் பெருமையுடன் இந்நாட்டின் தேசியகீதத்தைப் பாட வேண்டுமானால் அது அவர்களின் மனதுக்கு உகந்த வகையிலான சிலபகுதிகளைக் கொண்டிருக்க வேண்டாமா என்பதுவே அவர்களது வாதம். காலங்கள் தோறும் வித்தியாசமான கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்டவர்கள் எமது நாட்டில் வாழ்வை அமைத்துக் கொள்வார்கள். அதற்காக எமது தேசியகீதத்தை அடிக்கடி மாற்றியமைத்துக் கொண்டிருக்க முடியுமா? என்கிறார்கள் இங்கிலாந்தின் பழமைவாதிகள்.

    இங்கிலாந்தில் இருக்கும் அரச முடியுரிமை அழிக்கப்படவேண்டும், இங்கிலாந்து குடியரசாக வேண்டும் எனும் கருத்துக் கொண்ட ஒரு பகுதியினர் இங்கிலாந்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் ஏன் எமது தேசியகீதம் இராணியை மையப்படுத்தி இருக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் இராணி ஒரு காட்சிப்பொருளாக மட்டும் தான் இருக்கிறார் என்று வாதிடுகிறார்கள்.

    இது ஒரு விடையில்லா வினாவாகத்தான் இருக்கிறது. இவ்விவாதம் இன்னும் பலகாலம் தொடரத்தான் போகிறது . அதுமட்டும் ஏற்றுக் கொள்கிறாரோ இல்லையோ ஜெர்மி கோபன் இந்த தேசியகீதத்தைப் பாடத்தான் வேண்டும் போலுள்ளது.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    நன்றி – விக்கிப்பீடியா, galleryhip.com/god-save-the-queen-wallpaper.html

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share