Tag: அண்ணாகண்ணன்

  • மலேசியத் தமிழ் எழுத்துலகம்: நூற்று முப்பது ஆண்டுகளின் வரலாறு

    ரெ.கார்த்திகேசு

    ark

    (2006இல் தமிழ் சிஃபி சார்பில் தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் ஒன்று தயாரித்தேன். அதில் நாடுகள்தோறும் தமிழ் என்ற கருப்பொருளில் கட்டுரைகள் பெற்று வெளியிட்டேன். அதற்கு மலேசியாவில் தமிழ் என்ற கருப்பொருளில் கட்டுரை வேண்டி, ரெ.கா.வை அணுகினேன். மலேசியத் தமிழ் எழுத்துலகம்: நூற்று முப்பது ஆண்டுகளின் வரலாறு என்ற தலைப்பில் அருமையான கட்டுரையினை வழங்கினார். அவரது மறைவுக்கு வல்லமை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது. அவரது நினைவைப் போற்றும் வகையில் அந்தக் கட்டுரையின் முழு வடிவத்தை இங்கே வெளியிடுகிறோம். – அண்ணாகண்ணன்)

    தொடக்கம்:

    மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு ஏறக் குறைய 130 ஆண்டுகள் வரலாறு இருப்பது நமக்கெல்லாம் பெருமை தரும் செய்தி. மலேசியாவில், பினாங்கில் 1876-இல் “தங்கை நேசன்” என்னும் பத்திரிகை அச்சிடப்பட்டு வெளிவந்துள்ள செய்தி மலேசிய இலக்கிய வரலாற்றாசிரியர்களால் குறிக்கப் பட்டுள்ளது. (மா. இராமையா: “மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்). சிங்கப்பூரில் 1887-இல் சி.ந. சதாசிவப் பண்டிதரின் “வண்ணையந்தாதி” முதலிய நூல்கள் தொடக்கமாக அமைந்தன (ஏ.ஆர்எ. சிவகுமாரன்: “சிங்கப்பூர் மரபுக் கவிதைகள்).

    இந்தத் தொடக்கங்களிலிருந்து இந்த இலக்கிய வரலாறு எழுச்சியும் தளர்ச்சியும் கண்டு தொடர்ந்து வளர்ந்திருக்கிறது. அச்சு வசதியும் ஊடக வளர்ச்சியும், அவற்றைப் பெறவும் பெருக்கவும் நிதி வசதியும் உள்ள இந்த நவீன கால கட்டத்தில் வாழும் நாம், இவையெல்லாம் மிக அரிதாக இருந்த ஒரு மங்கிய தொடக்க காலத்தில் உண்மையான தமிழ் மொழி பண்பாட்டு அர்ப்பணிப்பு உணர்வுடன், இந்த இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்ட வித்தகர்களான நம் முன்னோடிகளை மானசீகமாகப் போற்றி வணங்குதல் வேண்டும்.

    மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மறுவுயிர்ப்புக் காலமாக 1946-ஐ ஓர் எல்லைக் கோடாகக் காட்டுகிறார் மா. இராமையா. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் மத்தியில் சிக்கிச் சீரழிந்த மலேசியாவில் அன்றாட வாழ்க்கையின் அவலங்களுக்கிடையில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க இலக்கியங்கள் ஏதும் தோன்றவில்லை. 1946-க்குப் பிந்திய இலக்கிய வரலாறு சி.வீ. குப்புசாமி எழுதிய “ஜப்பானியர் லாக்கப்பில் ஏழு நாட்கள்”, “யுத்தத்தால் வந்த யுத்தம்”, (இரண்டும் 1946) என்ற நூல்களுடன் தொடங்குவதும் பொருத்தம். சி.வீ.குப்புசாமி இவற்றைத் தொடர்ந்து மலேசியத் தமிழ் இலக்கியத்தின் கிரியா ஊக்கியாகவும், எழுத்தாளர் இயக்கங்களின் நடத்துநராகவும் (மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைமைப் பதவி உட்பட) நெடுநாட்கள் இருந்து மறைந்தார்.

    கதை வகுப்பு:

    1946-க்குப் பிறகு இந்த நாட்டு தமிழ்ப் புத்திலக்கியத் துறையில் இடம்பெற்ற மிக முக்கியமான நிகழ்வு அக்காலத்து முன்னோடி எழுத்தாளர்களாகவும் விமர்சகர்களாகவும் இருந்த சுப. நாராயணனும் பைரோஜி நாராயணனும் “தமிழ் நேசன்” நாளேட்டில் 1950-இல் நடத்திய “கதை வகுப்பு” ஆகும். “இரண்டு நாராயணன்களும் கூடி நடத்திய கதை வகுப்பு கதை எழுதுவோருக்கு மட்டுமின்றி கவிதை, உரைநடை, நாடகம் ஆகியன எழுதுவோருக்கும் தக்க வழிகாட்டியாக அமைந்தது. இந்நாட்டில் எழுத்தாளர்களை உருவாக்க முடியாது என்று சொல்பவர்களுக்கு இ·தோர் சவாலாகவும் அமைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.” (மா. இராமையா: மலேசியத் தமிழ் இலக்கிய வரலாறு).

    இந்த முயற்சியின் உச்சகட்டமாக 1951-இல் கதை வகுப்பு உறுப்பினர்களுக்கு ஒரு பரிட்சையும் வைத்தார்கள். மொழி, எழுத்து, ரசனை போன்றவற்றைப் பற்றியும், கதை வகுப்பு, மனத்தத்துவம், அரசியல் போன்ற குறிப்பிட்ட தலைப்புக்களைப் பற்றியுமான கேள்வி பதிலாக இது அமைந்திருந்தது. இவற்றில் வெற்றி பெற்றவர்களை மேதை எழுத்தாளார், சிறந்த எழுத்தாளர், தேர்ந்த எழுத்தாளர், நல்ல எழுத்தாளர், ஆர்வ எழுத்தாளர் என்று தரம் பிரித்து அறிவித்தார்கள்.

    மேதை எழுத்தாளர்கள் மூவர்: பி.ஏ.கிருஷ்ணதாசன் (தைப்பிங்); அ. இராமநாதன் (சுங்கை சிப்புட்); சி.மாரியப்பன் (காஜாங்).

    23 பேர் சிறந்த எழுத்தாளர்கள் என அறிவிக்கப் பட்டனர். அவர்களுள் பின்னாளில் இலக்கிய உலகில் முக்கியமானவர்களாக வளர்ந்த பெ.மு. இளம்வழுதி (குவால சிலாங்கூர்); கா.பெருமாள் (ரிங்லட்); சி. வடிவேல் (லாபு); சி. வேலுசாமி (ரந்தாவ்); எஸ்.எஸ். சர்மா (சிங்கப்பூர்) ஆகியோர் அடங்குவர்.

    தேர்ந்த எழுத்தாளர்கள் 17 பேர்கள் பட்டியலில் மா.இராமையா (மூவார்); கு.நா. மீனாட்சி (குவால சிலாங்கூர்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். நல்ல எழுத்தாளர்கள் 14 பேர்; ஆர்வ எழுத்தாளர்கள 18 பேர்.

    எழுத்தாளர் பேரவை:

    1952-இல் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் இன்னொரு முயற்சியாக சிங்கப்பூர் “தமிழ் முரசு” எழுத்தாளர் பேரவை என்ற அமைப்பை ஏற்படுத்தியது. இதில் எழுத்தாளர்கள் உறுப்பியம் பெற்றனர். முதலாவதாகப் பேர் பதிந்து கொண்டவர் மா. செ. மாயதேவன். எழுத்தாளர் பேரவையின் விதி முறைகளில் ஒன்று உறுப்பினராகும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு படையலை உருவாக்க வேண்டும் என்பது. மற்றொன்று படைப்பிலக்கியம் எழுதும் எவரும் பேரவையின் வேறு இரண்டு உறுப்பினர்களுக்கு அதனை அனுப்பித் திருத்திய பின்னரே அதனை அச்சில் ஏற்ற வேண்டும் என்பது.

    இலக்கிய இதழ்கள்:

    46-க்குப் பிந்திய இலக்கிய இதழ்களில் முந்தியது முதலில் கா.இராமநாதனையும் பின்னர் தி.சு.சண்முகத்தையும் ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த “சோலை” திங்களிதழ் ஆகும். 1952 ஜனவரி தொடங்கி எட்டு மாதங்கள் மட்டுமே வெளிவந்திருந்தாலும் முன்னோடி எழுத்தாளர்களான சி.அன்பரசன், கா. அண்ணாமலை, கா. பிச்சைமுத்து, க.ப.சாமி, இராவணேசப் புலவர் (ஈப்போ), கிருஷ்ணதாசன், மா.செ. மாயதேவன், மா.இராமையா, அ. இராமநாதன் ஆகியோர் இதில் எழுதினர்.

    மாணவர் மணிமன்ற மலர்:

    1953-இல் “தமிழ் முரசு” நாளிதழ் “மாணவர் மணி மன்ற மலர்” என்ற வார இணைப்பு ஒன்றினைத் தொடங்கி தமிழ்ப் பள்ளி மாணவர்களும் சிறுவர்களும் இலக்கிய அறிமுகம் பெற வழியேற்படுத்திக் கொடுத்தது. பல பின்னாள் எழுத்தாளார்களுக்கு இதுவே பயிற்சிக் களமாகவும் அமைந்தது.

    மாணவர் மணிமன்ற மலரில் எழுதி பிற்காலத்தில் எழுத்துலகில் முக்கிய எழுத்தாளர்களாக வளர்ந்தவர்களில் ம. முருகையன் (முல்லை), மு. அப்துல் லத்தீப், சு. அப்துல் முத்தலிப், கு.கிருஷ்ணன், மு. சீனிவாசன், மைதி. அசன்கனி, பழ. அடைக்கலம் (தங்காக் தமிழ்ப் பாணன்), நீ.பெ.கலைச் செல்வன், ரெ.கார்த்திகேசு, செ.சின்னையா, அ.சந்திரசேகரன், சா.ஆ.அன்பானந்தன், ப.மு.அன்வர், கே.எம்.யூசுப், வே.சு.இளந்திரையன், மு.பக்ருதீன், மைதி. சுல்தான், அ.ரெசுவப்பா, வீ.தீனரட்சகி, ப.கு.சண்முகம் ஆகியோர் அடங்குவார்கள்.

    அந்தக் காலகட்டத்தில் கவிஞர்களாக இருந்த சோமசன்மா, முரசு. நெடுமாறன், கவி மதிதாசன், சி. வேலுசுவாமி, வளர்மதி முதலானோர் மணி மன்ற மலரில் நிறையக் கவிதைகள் எழுதியுள்ளனர்.

    சிறுகதைப் போட்டிகள்:

    50-களின் பிற்பகுதியில் “தமிழ் முரசு” நாளிதழ் மலேசிய எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியை நடத்தியது. அப்போது அதன் துணையாசிரியராக இருந்த வை. திருநாவுக்கரசு அவர்களே இந்தப் புதிய முயற்சியை ஊக்குவித்து நடத்தினார். இந்தப் போட்டியில் பிற்காலத்திய பல நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் தங்களை அடையாளம் காட்டினார்கள்: ரெ.கார்த்திகேசு, அ.ந.பெ.சாமி, பெ.மு.இளம்வழுதி, சி.அன்பரசன், மா.இராமையா, அ.கி.அறிவானந்தன், மு.கந்தன், கு.நா.மீனாட்சி, சி.வடிவேலு முதலானோர் இதில் பங்கு பற்றிப் பரிசுகள் பெற்றுள்ளனர்.

    ரசனை வகுப்பு:

    1953-இல் தமிழ் முரசு “ரசனை வகுப்பு” தொடங்கிற்று. “கதை வகுப்பு” நடத்தியவர்களில் ஒருவரான கந்தசாமி வாத்தியாரே ரசனை வகுப்பையும் நடத்தினார். ரசனை வகுப்பு இதழ்களை மட்டுமன்றி வானொலித் தமிழ் நிகழ்ச்சிகளையும் தீவிரமாக விமர்சனம் செய்தது. எதிலும் புரட்சி செய்ய வேண்டும் என்ற தீவிர எண்ணம் கொண்டவரான கந்தசாமி வாத்தியார் “அண்ணா அறிஞரா?” என்ற ஒரு கட்டுரையை எழுதி நீண்ட விவாதத்தையும் தொடக்கி வைத்தார்.

    தமிழ் எழுத்தாளர் மாநாடு:

    கந்தசாமி வாத்தியார் ஆரம்ப காலத்திலிருந்தே “தமிழ் எழுத்தாளர் மாநாடு” ஒன்றினைக் கூட்டும் ஆசை கொண்டிருந்தார். 29/10/55-இல் இது குவாலா லும்பூரில் தமிழ்க் கலை மன்றத்தினரால் கூட்டப் பட்டது. மாநாட்டுத் திறப்பாளராக மா. இராமையா இருந்தார். காலையில் நடைபெற்றக் கலந்துரையாடலுக்கு கோ.சாரங்கபாணி தலைமை தாங்கினார். பிற்பகலில் சி.வீ. குப்புசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆழி.அருள்தாசன் முதலியோர் அதில் பேசினார்கள். 29 பேரே அந்தக் கூட்டத்தில் பங்கு பற்றினார்கள். அவர்களில் இர.ந.வீரப்பன், எஸ்.வி.சுப்பிரமணியன், அ.மருதப்பன், சி.அன்பரசன், பெ.மு.இளம்வழுதி, சி.வடிவேல், மு.கந்தன், அ.ந.பெ. சாமி, மு.அப்துல் லத்தீப், கு.நா.மீனாட்சி, பழ. மனோகரன், செ.குணசேகர், அ.கதிர்ச் செல்வன், ஆகியோரும் இருந்தனர். கூட்டம் பற்றித் தலையங்கம் எழுதிய “திருமுகம்” இதழின் ஆசிரியர் மா.செ.மாயதேவன், அந்தக் கால கட்டத்திலேயே மலாயாவில் இருநூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கதாகும்.

    மலாயா தமிழ் எழுத்தாளர் சங்க அமைப்பு:

    1955-இல் நடந்த இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழ் எழுத்தாளர்களுக்கான சங்கம் ஒன்று அமைக்கும் எண்ணம் இவர்களிடையே ஓங்கி வந்தது. 5/7/1958-இல் சி.வேலுசாமி அவர்களின் முயற்சியில் மலாயா தமிழ் எழுத்தாளர் சங்க அமைப்புக் கூட்டம் குவால லும்பூர் பங்சார் தமிழ்ப்பள்ளியில் நடந்தது. இக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டோர்: தலைவர் சி.வீ.குப்புசாமி, துணைத்தலைவர் தி.சு.சண்முகம், செயலாளர் சி. வேலுசுவாமி, துணைச் செயலாளர் செ.குணசேகர், பொருளாளர் மு.அப்துல் லத்தீப். 2/2/1959-இல் இதற்குப் பதிவு கிடைத்தது.

    இதன் ஆண்டுக் கூட்டத்தில் தமிழ் நேசன் துணையாசிரியர் கனகசுந்தரம் புதிய தலைவராகவும் செ.குணசேகர் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இதன் பிறகு சங்கம் செயலிழந்து அதன் பதிவும் ரத்தாகிற்று.

    அதன் பின் மீண்டும் சி.வேலுசுவாமியின் முயற்சியில் ஒரு அமைப்புக் கூட்டம் 1962-இல் கூட்டப்பட்டு பதிவுக்கான மறுமுயற்சிகள் செய்யப்பட்டன. 26/3/1963-இல் சங்கம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் என்ற புதிய பெயரில் பதிவு பெற்றது. புதிய சங்கத்தின் நிர்வாகிகள் பின் வருமாறு: தலைவர் முருகு சுப்பிரமணியம்; துணைத்தலைவர் சி.வேலுசுவாமி; செயலாளர் சு.கணபதி; பொருளாளர் கு.ஏழுமலை; செயற்குழுவினர் சி.வீ.குப்புசாமி, இர.ந.வீரப்பன், க.கிருஷ்ணசாமி முதலியோர். இந்தச் சங்கத்தின் தொடர்ச்சியே இன்று பெ. ராஜேந்திரனின் தலைமையில் இயங்கி வருவதாகும்.

    தமிழர் திருநாள்:

    50-களின் மத்திக்கும் 60-களின் மத்திக்கும் இடைப்பட்ட கால கட்டத்தில்தான் கோ.சாரங்கபாணி தமிழர்களை ஒருமுகப் படுத்தும் முகமாகவும் தமிழ் மொழி பண்பாட்டு எழுச்சியை ஊட்டும் முகமாகவும் தமிழர் திருநாளைத் தொடங்கினார். பல ஆண்டுகள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள் இலக்கியப் போட்டிகளையும் விரிவாக நடத்தி இலக்கியத்தை வளர்த்தது.

    கு. அழகிரிசாமி:

    50-களின் மத்தியில் தமிழ் நாட்டு எழுத்தாளர் கு. அழகிரிசாமி “தமிழ் நேசன்” நாளிதழுக்கு ஆசிரியராக வந்தமர்ந்தார். படைப்பிலக்கியத்தை ஊக்குவிப்பதையும் அவர் ஒரு நோக்கமாகக் கொண்டார். அவரை மையமாகக் கொண்டு குவாலா லும்பூரில் இலக்கிய வட்டம் ஒன்று அமைந்தது. 55-இல் இதனை முன்னின்று அமைத்தவர் கி.மூர்த்தி. மாதம் ஒருமுறை கூடிய இந்த இலக்கிய வட்டத்தில் தலை நகர் தவிர கிள்ளான், செரம்பான், குவால செலாங்கூர் போன்ற இடங்களிலிருந்தும் அன்பர்கள் வந்து கலந்து கொண்டார்கள். முதன் முறையாக சிறுகதையின் உத்தி, நடை, கருத்து, அமைப்பு ஆகியவை பற்றி அறிவு பூர்வமான தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. கு.அ. இலக்கிய வட்டத்தில் வாசிக்கப் பட்ட கதைகளைத் தமிழ் நேசனில் வெளியிட்டும் வந்தார்.

    கு.அ.வின் கணிப்பில் சிறந்த எழுத்தாளர்களாகச் சிலர் குறிக்கப் பட்டனர். அவர்களுள் மு.அப்துல் லத்தீப், வி.ச.முத்தையா, மு.இராச இளவழகு, மா.செ.மாயதேவன், மா.இராமையா, சி.வடிவேலு, செ.குணசேகர், சி.வேலுசாமி, பொ.ச.பரிதிதாசன், சி.அன்பரசன், சி.கமலநாதன், நாகு மணாளன், அ.பேச்சிமுத்து, அ.கி.அறிவானந்தன், ந.அநந்தராஜ் ஆகியோர் இருந்தனர். கு.அ. 1957-இல் தமிழ் நாடு திரும்பு முன் இலக்கிய வட்டம் நிறுத்தப் பட்டது.

    நூல் வெளியீடு:

    1952-இல்தான் புத்திலக்கியப் படைப்பு நூலாக மா.இராமையா, மா.செ. மாயதேவன் இருவரும் இணைந்து எழுதிய சிறுகதைத் தொகுப்பான “இரத்த தானம்” வந்தது. இந்த நூல் குறித்து எழுத்தாளர் பேரவை “பேரவைக்குப் பூரிப்பு; மலாயாத் தமிழ்ப் பெருமக்களுக்கு பெருமை” என எழுதியது.

    மலாயா சுதந்திரம் பெற்ற 1957-இலிருந்து இங்கு எழுதப்படும் படைப்பிலக்கியங்கள் பெருகின. பல நூல்களும் வெளியாயின. வார, மாத இதழ்கள் பலவும் தோன்றி படைப்பாளர்களுக்கு உள்ள வாய்ப்புக்களை விரிவாக்கின. மலாயா (பின்னர் மலேசியா) தமிழ் எழுத்தாளர் இயக்கமும் படைப்பிலக்கியத்துக்கு தொடர்ந்து உயிரும் உணர்ச்சியும் ஊட்டி வந்தது.

    மணிக்கதைகள்

    மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் தனது சமுகப் பணிகளுக்கிடையே ஆற்றி வந்த இலக்கியப் பணியின் ஒரு உச்சமாக மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றினைக் கொண்டு வந்தது. 1968-இல் வெளிவந்த “மணிக்கதைகள்” என்னும் தொகுப்பு அக்கால கட்டத்தில் மலேசிய இலக்கியம் அடைந்துள்ள வளர்ச்சியை நன்கு பிரதிபலிப்பதாக அமைந்தது. “தீபம்” நா. பார்த்தசாரதியின் முன்னுரையுடனும், டாக்டர் இராம சுப்பையாவின் அணிந்துரையுடனும், இலங்கை இரசிகமணி கனக. செந்தில்நாதனின் ஆய்வுரையுடனும், மன்றத்தலைவர் க.கிருஷ்ணசாமியின் முகமனுடனும் வெளியான இந்நூலில் சா.ஆ.அன்பானந்தன், க.கிருஷ்ணசாமி, சாமி.மூர்த்தி, ரெ.கார்த்திகேசு, எம்.குமாரன், சை.பீர் முகம்மது, பரிதாமணாளன், பாதாசன், மு.க.மா. முத்தமிழ்ச் செல்வன், சோ.பரஞ்சோதி ஆகியோரின் கதைகள் இடம் பெற்றிருந்தன.

    பவுன் பரிசுகள்:

    சிறுகதைத் துறைக்கு முருகு சுப்பிரமணியனை ஆசிரியராகக் கொண்ட “தமிழ் நேசன்” 1972-இல் தொடங்கிய பவுன் பரிசுத் திட்டம் ஒரு பெரும் புத்துணர்ச்சியைத் தந்தது. இதில் நடுவர்களாக இருந்து கதைகளைத் தேர்ந்தெடுக்க நல்ல இலக்கியவாதிகளையும் முருகு தன்னுடன் துணைக்கு அழைத்துக் கொண்டார். அவர்களுள் டாக்டர் ஆர்.தண்டாயுதம், புலவர் சேதுராமன், எஸ்.ஆர்.எம்.பழனியப்பன், ரெ.கார்த்திகேசு, டாக்டர் பிரமீளா கணேசன் ஆகியோரும் அடங்குவர்.

    சி.அன்பானந்தம், அரு.சு.ஜீவானந்தன், இராம வீரசிங்கம், மு.அன்புச்செல்வன், எம்.ஏ.இளஞ்செல்வன், இராம கண்ணபிரான், ஆர்.சண்முகம், இ.தெய்வானை, சாமி மூர்த்தி, சீ.முத்துசாமி, பாவை, சி.வடிவேல், ந.மகேசுவரி, மா. இராமையா ஆகியோர் பவுன் பரிசு பெற்றோர் பட்டியலில் அடங்குவார்கள். முதல் ஆண்டில் பரிசு பெற்றவர்களைக் கூட்டித் தமிழ் நேசன் ஒரு உபசரிப்பு விருந்து நடத்தி அனைவருக்கும் பரிசு வழங்கியதுடன் முதல் பனிரெண்டு கதைகளை “பவுன் பரிசுக் கதைகள்” என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பாகவும் கொண்டு வந்தது.

    இதன் பின்னர் தொடங்கப்பட்ட கவிதைக்கான பவுன் பரிசுப் போட்டியில் வே.மகேந்திரன், கரு வேலுசாமி, ஆதம் குமார், எல்லோன், கன்னல் கவி கரீம், வீரமான், காரைக்கிழார், சோம சன்மா, கரு.திருவரசு, எஸ்.கே. வடிவேலு, சங்கு சண்முகம் முதலியோர் பரிசு பெற்றனர்.

    மாதாந்திரச் சிறுகதைக் கருத்தரங்கம்:

    தமிழ் நேசன் வழியாக எழுத்தாளர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டிவந்த முருகு, அதே நேரத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பேற்று சில ஊக்குவிப்புத் திட்டங்களைச் செயல் படுத்தி வந்தார். அவற்றுள் முக்கியமானது சிறுகதைக்கான மாதாந்திரக் கருத்தரங்கங்களைக் கூட்டி ஒவ்வொரு மாதத்திற்கும் சிறந்த ஒரு கதைக்கு 50 ரிங்கிட் பரிசு வழங்கி வந்ததாகும்.

    இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் முதல் தொகுதி 1974-இல் “பரிசு” என்னும் தலைப்பில் வெளியானது. 14 கதைகள் இதில் இடம்பெற்றன. இவற்றை எழுதிய எழுத்தாளர்கள்: மீனா நடராஜா, ரெ.கார்த்திகேசு, ஆ.சாரதா, சாமி மூர்த்தி, சுமதி தங்கராஜ், த.ப.இலட்சுமணன், சக்கரவர்த்தி சுப்பிரமணியன், ஐ.இளவழகு, சி.வடிவேல், மா.சுப்பிரமணியம், மா.இராமையா, இரா.ச. இளமுருகு, துளசி, நாடோடி.

    ஒரு சில ஆண்டுகள் விடுபட்டிருந்த மாதாந்திரத் தங்கப் பதக்க விருதளிப்பு ஆதி குமணன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்குத் தலைவராக வந்த பிறகு உயிர்ப்பிக்கப் பட்டுத் தொடர்ந்து இன்றும் நடை பெற்று வருகிறது. இதனை அடியொற்றி கவிதைக்கும் இப்போது காலவாரியாகக் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

    பேரவைக் கதைகள்:

    1970-களில் இரா.தண்டாயுதம் மலாயாப் பல்கலைக் கழக இந்திய இயல் துறையில் புத்திலக்கிய விரிவுரையாளராக வந்து சேர்ந்தார். மலேசியப் படைப்பிலக்கியத்துக்கு அவர் ஆற்றிய சேவைகள் அதிகம். அவருடைய ஆலோசனையின் கீழ் மலாயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையின் முயற்சியில் தொடங்கப்பட்ட ஆண்டுச் சிறுகதைப் போட்டி இந்த நாட்டின் சிறுகதை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக ஆகியுள்ளது. 1986 முதல் இதில் பரிசு பெற்ற கதைகள் நூல் உருவில் வந்து கொண்டுள்ளன.

    மலேசியத் தமிழ் இலக்கியம்:

    இரா. தண்டாயுதம் பதவிக் காலம் முடிந்து தமிழகம் திரும்பி அங்கே அகால மரணமடைந்த பிறகு அவருடைய நினைவாக “டாக்டர் தண்டாயுதம் நினைவிலக்கியப் பேரவை” தொடங்கப் பட்டது. அதனை முன்னின்று நடத்தியவர் அவருடைய நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான வீ.செல்வராஜ் ஆகும். பேரவை மூலம் வீ. செல்வராஜ் ஆற்றிய முக்கிய பணி ஆண்டு தோறும் “மலேசியத் தமிழ் இலக்கியம்” என்ற தலைப்பில் சிறுகதைகள், கவிதைகள், ஒரு குறுநாவல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு தொகுப்பை வெளியிட்டதாகும். இந்தத் தொகுப்புக்களை குறிப்பாக வெளிநாட்டுத் தமிழர்களிடையே மலேசிய இலக்கியத்தை அறிமுகப் படுத்தும் கருவியாக செல்வராஜ் கருதி அப்படியே செயல் படுத்தினார். 1988 – 1994 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆறு தொகுப்புகள் வெளியாகின.

    நூல் பதிப்புகள்

    1950-களிலிருந்தே இந்த நாட்டின் எழுத்தாளர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையில் புத்தகப் பதிப்புக்களை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். கட்டுரைத் தொகுப்புகள், ஆய்வு நூல்கள், கவிதைத் தொகுப்புகள், காவியங்கள், சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், புதுக்கவிதைத் தொகுப்புகள் ஆகியவை காலந்தோறும் பதிப்பிக்கப்பட்டு மலேசியத் தமிழ் இலக்கியத்திற்குச் செழுமை சேர்த்துள்ளன.

    1995-இல் இலங்கை எழுத்தாளரான மாத்தளை சோமு, மலேசியச் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து “மலேசியத் தமிழ் உலகச் சிறுகதைகள்’ என்னும் தலைப்பில் தமிழ் நாட்டில் பதிப்பித்தார். இந்தத் தொகுப்பு பின்னர் மலேசிய இடை நிலைப் பள்ளிகளில் பாடப் புத்தகமாகவும் வைக்கப் பட்டது.

    1998-இல் “மலேசிய நண்பன்” நாளிதழ் சிறந்த எழுத்தாளர்கள் பதின்மூவரை அழைத்து சிறுகதைகள் எழுதச் சொல்லி அவர்களுக்கு ஆளுக்கொரு உயர்ந்த ரகக் கடிகாரத்தையும் பரிசாக அளித்தது. “கடிகாரக் கதைகள்” என்ற தொடரில் வெளியான இக்கதைகளைப் பின்னர் “சமுதாயக் கதைகள்” (1999) என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பாக வெளியிட்டு அதற்குப் பெரும் வெளியீட்டு விழாவையும் நடத்தியது.

    2003-ஆம் ஆண்டில் தமிழ் நாட்டின் பழம்பெரும் இதழான “கலைமகள்” ஆசிரியர் கீழாம்பூர் அவர்களின் முயற்சியில் 32 மலேசியச் சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புகள் “மலேசியச் சிறுகதைகள்” என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டன.

    ஆண்டு தோறும் விருதுகள்:

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1998 முதல் காலஞ் சென்ற அமைச்சர் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்கள் நினைவாக ஆண்டின் ஒரு சிறந்த நூலுக்கு “டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு” என்ற பெயரில் சான்றிதழும் 5000 ரிங்கிட் ரொக்கமும் அளித்துக் கௌரவித்து வருகிறது. இந்தப் பரிசை இதுவரை வென்றவர்கள்: “மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்னும் நூலுக்காக முரசு நெடுமாறன் (1998); “அந்திம காலம்” நாவலுக்காக ரெ.கார்த்திகேசு (1999); “சமுதாயச் சீர்கேட்டுக்கு வித்திடும் காதல், மணவாழ்க்கை, குழந்தை வளர்ப்பு: சிக்கலும் தீர்வும்” என்னும் ஆய்வுக் கட்டுரை நூலுக்காக கே.எம்.குணா (2000); “அமாவாசை நிலவு” நாவலுக்காக மா. இராமையா (2001); “ஆர். சண்முகம் கதைகள்” சிறுகதைத் தொகுப்புக்காக ஆர். சண்முகம் (2002); “செய்கு கனான் காவியம்“ நூலுக்காக ப.மு.அன்வர் (2003), “மனமே சுகமே” கட்டுரை நூலுக்காக சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி (2004); “ஊசி இலை மரம்” சிறுகதைத் தொகுபுக்காக ரெ.கார்த்திகேசு (2005).

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 1983 தொடங்கி எழுத்தாளர்களுக்கும் எழுத்துத் துறைக்குப் பணி புரிந்தவர்களுக்கும் ஆண்டு தோறும் தங்கப் பதக்கங்கள் வழங்கிப் பெருமைப் படுத்தி வருகிறது. இவை மலேசியாவில் தமிழுக்குத் தொண்டாற்றி மறைந்த பெரியவர்கள் பெயர்களில் வழங்கப் படுகின்றன: மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகப் பணியாற்றிய தமிழறிஞர் பேராசிரியர் தனிநாயக அடிகளார், தமிழர் திருநாளின் தந்தை தமிழவேள் கோ.சாரங்கபாணி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அடிநாள் தலைவரும் பத்திரிகையாசிரியருமான திரு சி.வீ.குப்புசாமி, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் பத்திரிகையாசிரியரும் இலக்கியவாதியுமான முத்தமிழ் வித்தகர் முருகு சுப்பிரமணியன், தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் தலைவரும் கலைஞரும் எழுத்தாளருமான சமூகக் கலைமாமணி சா.ஆ.அன்பானந்தன் ஆகியோரின் நினைவாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதுவரை சுமார் 80 பேருக்கு இவ்விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.

    மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் மறைந்த பத்திரிகாசிரியரும் அரசியல்வாதியும் அமைச்சருமான டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் பெயரிலும் அவருடைய குடும்பத்தாரின் ஆதரவுடன் ஆண்டு தோறும் விருதுகளும் நிதியும் அளிக்கப்படுகிறது.
    இது தமிழ் எழுத்து, பண்பாடு, கலை என்ற பிரிவுகளில் சிறந்தவர்களுக்கு அளிக்கப் படுகிறது. இதுவரை ஏறக் குறைய 45 பேர் இந்தப் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள்.

    மலேசிய பாரதிதாசன் இலக்கிய அமைப்பும் ஆண்டு தோறும் பெரிய அளவில் “எழுத்தாளர் தினம்” ஒன்றினை நடத்தி எழுத்தாளர்களுக்கு விருதுகள் அளித்துக் கௌரவித்து வருகிறது. இவற்றுள் சிறந்ததாக சங்கிலிமுத்து – அங்கம்மாள் விருது ஒவ்வொரு ஆண்டும் 5000 ரிங்கிட் பணத்துடன் அளிக்கப்பட்டு வருகிறது.

    இவற்றோடு மலேசியப் படைப்பாளர்கள் சங்கம் வழங்கும் டத்தோ பத்மனாதன் விருதும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கங்களின் பேரவை தனது ஆண்டுக் கூட்டத்தின் போது வழங்கும் விருதுகளும் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்து முயற்சிகளுக்குப் பெரும் தூண்டுகோல்களாக விளங்கி வருகின்றன.

    முடிவுரை:

    தமிழ் நாட்டுக்கு வெளியே இலங்கையைத் தவிர்த்து மலேசியாவில்தான் தமிழ் இலக்கிய உற்பத்தி அடர்த்தியாக இருக்கிறது. மலேசியத் தமிழ் நாளிதழ்களும் காலவாரி இதழ்களும் படைப்பிலக்கியத்துக்கு மிகச் சிறந்த ஆதரவை அளித்து வருகின்றன. மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இந்நாட்டில் படைப்பிலக்கியத்தை செழுமைப் படுத்த தொடர்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மலேசியத் தமிழ் சமுதாயத்தில் தீவிரமான தமிழ்ப் பற்றும் தமிழைக் காலங் காலமாக வாழ வைக்க வேண்டும் என்னும் அர்ப்பணிப்பு உணர்வும் உள்ளன. இவை தொடர்ந்து நிலைத்திருக்கும் வரையிலும் படைப்பிலக்கியச் செழுமை தொடர்ந்து அதிகரித்தே வரும்.

    (முடிந்தது)

    நன்றி: தமிழ் சிஃபி – தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழ் 2006

    Share
  • யோகாரம்

    சிங்காரம் உண்டு சிருங்காரம் உண்டு
    சிறுகாரம் ஏதுக்கடி!
    ஓங்காரம் உண்டு ரீங்காரம் உண்டு
    ஆங்காரம் ஏதுக்கடி!
    அழகாரம் உண்டு அலங்காரம் உண்டு
    அதிகாரம் ஏதுக்கடி!
    உபகாரம் உண்டு பரிகாரம் உண்டு
    கடிகாரம் ஏதுக்கடி!

    ஓகாரம் என்ன! ஏகாரம் என்ன!
    ஆகாரம் நீதானடி!
    ஊகாரம் ஆகி, ஒளகாரம் ஆன
    அஃகாரம் நீதானடி!
    மீகாரம் வெல்லும் மோகாரம் கொண்ட
    நாகாரம் நீதானடி!
    தேகாரம் வென்று ராகாரம் கொண்ட
    யோகாரம் நீதானடி!

    Share
  • ஏழாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    சிந்தனை, செயல், முன்னேற்றம் என்ற நோக்குடன் துடிப்புடன் நடைபோடும் வல்லமை மின்னிதழ், ஆறு ஆண்டுகளை நிறைவு செய்து, 2016 மே 16 அன்று, ஏழாம் ஆண்டில் நுழைந்துள்ளது.

    Vallamai_7th_year

    வல்லமையில் கடந்த ஓராண்டில் சுமார் 2500 இடுகைகளும் (மொத்தம் 10,459) 1500 பின்னூட்டங்களும் (மொத்தம் 11,161) வெளியாகியுள்ளன. இவை அனைத்தையும் குறிப்பிடுவது இயலாது எனினும் சிலவற்றைக் குறிக்கலாம்.

    ஜெயபாரதனின் அறிவியல் கட்டுரைகள், எகிப்திய பிரமிடுகள் உள்ளிட்ட உலக அதிசயங்கள் பற்றிய கட்டுரைகள், நாகேஸ்வரி அண்ணாமலையின் சமூகவியல் கட்டுரைகள், இராம. இராமமூர்த்தியின் இலக்கியக் கட்டுரைகள், எஸ் வி வேணுகோபாலனின் உணர்ச்சிகரமான கட்டுரைகள், பல்வேறு தமிழறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள்… எனப் பலவும் கருத்துச் செறிவுடன் கவனத்தை ஈர்ப்பவை.

    வல்லமையில் வெளியாகும் தொடர்கள் பற்பலவும் முக்கியமானவை. மலர் சபாவின் நான் அறிந்த சிலம்பு, செண்பக ஜெகதீசனின் குறளின் கதிர்கள், சக்தி சக்திதாசனின் இங்கிலாந்திலிருந்து ஒரு மடல், க.பாலசுப்பிரமணியனின் கற்றல் ஒரு ஆற்றல், கிரேசி மோகனின் கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம், இன்னம்பூரானின் கனம் கோர்ட்டார் அவர்களே, நிர்மலா ராகவனின் குறுந்தொடர்கள் உள்ளிட்ட பலவும் கனம் பொருந்தியவை.

    என்னதான் இருக்கிறது வேதத்தில் என்ற அரிய தொடரையும் வளவன் கனவு என்ற வரலாற்றுப் புதினத்தையும் வளமான பல்வேறு கட்டுரைகளையும் எழுதிய சு.கோதண்டராமன் அவர்கள், இந்த ஆண்டில் மறைந்தது, நமக்கு ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அதே போன்று, மேகலாவின் தந்தையாரும் தமிழறிஞருமான முனைவர் இராம. இராமமூர்த்தியின் மறைவும் பேரிழப்பாகும். இவர்களின் ஆன்மா சாந்தி அடைவதாக.

    கவிதைகளில் மீ.விசுவநாதனின் இதுதான் வாழ்க்கை! என்ற பாடலைப் படித்தீர்களா? இது போல், மரபிலும் புதுக் கவிதையிலும் பற்பல அழகிய கவிதைகளை வெளியிட்டுள்ளோம். சில மொழிபெயர்ப்புகளும் இந்த வகையில் அணி சேர்க்கின்றன.

    கடலோடி நரசய்யாவுடனான பவளசங்கரியின் நேர்காணலும் ஔவை நடராசன் உடனான எனது அலைபேசி உரையாடலும் நேர்காணல் பிரிவில் குறிப்பிடத்தக்கவை.

    இந்த 2016 சட்டமன்றத் தேர்தல் திருவிழாவில் வழக்கறிஞர் க.இரவி அவர்கள் வித்திட்ட வாக்காளர் விழிப்புணர்வுத் திட்டத்தில் வல்லமையும் இணைந்துகொண்டது. இதன் தொடர்ச்சியாக வல்லமை ஆசிரியர் பவளசங்கரியின் ஒருங்கிணைப்பில் ஈரோட்டில் மக்கள் கேள்வி மேடை, சிறப்புற நடைபெற்றது.

    வல்லமையாளர் விருதினைத் தொடர்ச்சியாக 212 வாரங்களாக வழங்கி வருகிறோம். விசாகப்பட்டினம் திவாகர், இன்னம்பூரான், பேரா.நாகராஜன் வடிவேல் ஆகியோர் முதல் 100 வல்லமையாளர்களைத் தேர்ந்தெடுத்தனர், தேமொழி அடுத்த 100 வல்லமையாளர்களைத் தெரிவு செய்தார், பேரா.செ.இரா.செல்வக்குமார், இப்போது இந்தப் பொறுப்பினை ஏற்று, அருந்திறம் படைத்த பேராளர்களை அடையாளம் காட்டி வருகிறார்.

    கடந்த ஆண்டில் நாம் தொடங்கிய படக் கவிதைப் போட்டி, 64 வாரங்களாகத் தொடர்கிறது. வாசகர்களின் படைப்பாக்கத் திறனை வளர்க்கும் அதே நேரம், சிறந்த படக் கலைஞர்களையும் இந்தப் போட்டி ஊக்குவிக்கிறது. வல்லமையின் ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுக்கும் படங்களில் அன்றாட வாழ்வில் நாம் கவனிக்கத் தவறும் பல காட்சிகள் எட்டிப் பார்க்கின்றன. இந்தப் போட்டிக்கு வந்த படைப்புகளைச் சீர்தூக்கிப் பார்த்து, நயம் பாராட்டி எழுதும் மேகலாவின் நடையழகு, ஒரு தனியழகு.

    இந்த ஆண்டில் பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்ற கருப்பொருளில், எழுத்தாளர் வையவன் அவர்களின் ஆதரவுடன் கட்டுரைப் போட்டி ஒன்றையும் மாதந்தோறும் நடத்தினோம். ஆயினும் எதிர்பார்த்த அளவு பங்கேற்பு இல்லாததால் இதனைத் தொடர இயலவில்லை.

    தமிழில் அயற்சொற்கள் வெகுவாகப் பரவியுள்ள நிலையில், அவற்றைத் தமிழ் வழக்கில் எழுதுவது எப்படி என்ற ஐயம் பலருக்கும் உண்டு. இதற்கு ஒரு தீர்வாக, அயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவதற்கு ஒரு கூகுள் பக்கத்தை உருவாக்கியுள்ளோம். செ.இரா.செல்வக்குமார், ஸ்ரீ ஸ்ரீதரன், ஜெயபாரதன், தேமொழி உள்ளிட்ட பலரும் இதில் பங்களித்து வருகிறார்கள்.

    ஈழத் தமிழ்ச் சொற்களைப் புரிந்துகொள்ள ஏதுவாக, அவற்றுக்கு இணையான தமிழக வழக்கை ஆவணப்படுத்தவும் ஒரு கூகுள் பக்கத்தை உருவாக்கியுள்ளோம். சகோதரி சுவாதி தொடங்கிய இந்த முயற்சியில் மறவன்புலவு சச்சிதானந்தன், ஷைலஜா, செம்பூர் நீலு, தேமொழி, ஸ்ரீரங்கன் மோகனரங்கன் உள்ளிட்ட பலரும் பங்களித்து வருகிறார்கள். இந்த இரண்டு பக்கங்களும் திரள் தரவு வகையிலானவை. கூகுள் கணக்கு உள்ள எவரும் இவற்றில் பங்களிக்கலாம்.

    இந்த ஏழாம் ஆண்டில் மேலும் பல முத்திரைகளைப் பதிப்போம். இணைய இதழியல் குறித்த பயிற்சிகளை வழங்க உள்ளோம். ஆர்வமுள்ளவர்கள், மின்னஞ்சல் அனுப்பிப் பதிந்துகொள்ள அழைக்கிறோம். மேலும், வல்லமை வளர்தமிழ் மையத்தை அறக்கட்டளையாகப் பதிவோம். பள்ளி – கல்லூரிகளில் இணையப் பயிலரங்குகளையும் திறன் வளர்ப்புத் திட்டங்களையும் முன்னெடுக்க உள்ளோம். இதற்கு உறுதுணை புரிய, அன்பர்கள், தன்னார்வலர்கள், பயிற்சியாளர்கள், கலைஞர்கள், விளம்பரதாரர்கள், கொடையாளர்கள் உள்ளிட்ட பலரையும் அன்புடன் அழைக்கிறோம்.

    இந்தப் பயணத்தில் துணைநிற்கும் சகோதரி பவளசங்கரி தலைமையிலான ஆசிரியர் குழுவினர், ஆலோசகர்கள், படைப்பாளர்கள், வாசகர்கள், படக் கலைஞர்கள், ஓவியர்கள், நண்பர்கள், தொழில்நுட்ப ஆதரவு நல்குவோர் உள்ளிட்ட அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் எனது நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

    உங்கள் அனைவரின் ஆதரவுடன் நமது பயணம் இனிதே தொடர்கிறது. இன்னும் சிறப்புறப் பணியாற்ற, அன்பர்களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் வரவேற்கிறோம். வாருங்கள், நம் திறம் மிளிர, மதி குளிர, உயிர் வளர, மனம் செழிக்க, மாநிலம் பயனுறச் செய்வோம்.

    Share
  • ஔவை நடராசன் – 81

    Avvai Natarajan and Annakannan

    புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில்,  செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் இங்கே.

     

    Share
  • மொழியைப் பெயராகக் கொண்டோர், வேறு யாரும் உண்டா?

    தமிழர்களுள் பலர் தமிழ், தமிழரசு, தமிழரசன், தமிழரசி, தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி, தமிழண்ணல், தமிழமுதன், தமிழினி, தமிழினியன், தமிழவன், முத்தமிழ், மறத்தமிழ் வேந்தன், செந்தமிழ், இளந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ்ச் செல்வன்… எனப் பலவாறாகப் பெயர் சூட்டிக்கொண்டுள்ளனர். மொழியைப் பெயராகக் கொள்ளும் இத்தகைய வழக்கம், வேறு எந்த மொழியினரிடமாவது உண்டா?

    Share
  • தெலுகு (Telugu) > தெலுங்கு?

    கேள்வி: தெலுகு (Telugu) என்பதைத் தமிழில் தெலுங்கு எனப் பலுக்குவது ஏன்?

    Share
  • இரங்கல் செய்தி

    ஒரு துயரமான செய்தி.

    வல்லமை மின்னிதழின் நிறுவனரும், சிறந்த கவிஞரும், தமிழறிஞருமான அன்புச் சகோதரர் திரு அண்ணாகண்ணன் அவர்களின் தந்தையார், தமிழாசிரியர் திருமிகு சீ. குப்புசாமி அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும் அவர்தம் குடும்பத்தார் மன அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம் இறையை பிரார்த்திக்கிறோம். அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 9 மணியளவில் கும்பகோணம் நகரில் நடைபெறும்.

    Share
  • குப்பைகள் – பேரிடர்க் காலத்தின் சாதக அம்சம்

    அண்ணாகண்ணன்

    kuppai_2646380f_2647163f

    தமிழகத்தில் வெள்ளம் வடிந்த பின்னும் குப்பைகளை அகற்றுவது, ஒரு பிரமாண்டமான பணி. அதிலும் இந்தக் குப்பைகளை எங்கே கொண்டு கொட்டுவது என்பதும் கேள்விக்குறி. ஏற்கெனவே உள்ள குப்பை மலைகள், சாதாரண காலத்திலே சேரும் அன்றாடக் குப்பைகளுக்கே திணறுபவை. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வண்டி வண்டியாக வெளியேறும் குப்பைகளை இங்கேயே கொட்டினால், குப்பை மலையின் சுற்றுவட்டம் தான் விரியும். அல்லது ஆங்காங்கே புதிய புதிய குப்பை மலைகளை உருவாக்குவதும் சரியான தீர்வு இல்லை. இவையெல்லாம் மேன்மேலும் சுற்றுச்சூழல், சுகாதாரம் எனப் பல்வேறு சிக்கல்களை வளர்க்கக் கூடியவை. அடுத்தொரு கனமழை பெய்தால், இந்தக் குப்பைகள் கரைந்தோடி வருவது ஒரு புறம் இருக்க, இவற்றின் துர்நாற்றமும் கொசுப் பெருக்கமும் இதர கேடுகளும் வாழ்வை நரகமாக்குபவை.

    இந்நிலையில் இப்பணியில் ஈடுபடும் பொதுமக்களும் சுகாதாரத் துறை ஊழியர்களும் தன்னார்வலர்களும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    1.இரும்பு, மரம், பிளாஸ்டிக், கண்ணாடி, துணிகள், மின்னணுப் பொருள்கள், சமையல் கழிவுகள், காகிதங்கள்… என வகை வாரியாகக் குப்பைகளைப் பிரிக்க வேண்டும். இவற்றில் எந்தெந்தப் பொருள்களைக் கழுவி, அலசி, துவைத்துப் பயன்படுத்த முடியுமோ அவற்றை எல்லாம் தனியே பிரிக்க வேண்டும்.

    2.நம் வீட்டில் பயன்படுத்த முடியாதவற்றையும் பழைய சாமான் கடையிலோ, உதிரி பாகங்கள் சந்தையிலோ இடலாம். காசுக்காக இல்லாவிட்டாலும் மறுபயன்பாட்டை நோக்கமாக வைத்தாவது இதைச் செய்ய வேண்டும். இதற்குக் கட்டுச் செலவு, வண்டிச் செலவு, ஏற்றி இறக்கும் செலவு ஆகியவை இருப்பினும் இதற்கெனத் தனியே பணிக் குழுக்கள் இயங்க வேண்டிய தேவை உள்ளது.

    3.இந்தக் குப்பைகளிலிருந்து பேரளவு உரம் தயாரிக்கும் வாய்ப்புகளை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும். அனைத்துக் குப்பைகளையும் சென்னையிலும் கடலூரிலும் வைத்து உரமாக்கி, பிற ஊர்களுக்கு அனுப்ப முடியாது. எனவே, இதற்கென உரிய நெறிமுறைகளை உருவாக்கி, தமிழகம் முழுவதும் இந்தக் குப்பைகளைப் பிரித்து அனுப்பி, ஆங்காங்கே உரமாக்கி, அந்தந்த ஊர்களிலேயே பயன்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இது உரச் செலவைக் குறைப்பதோடு, வேலை வாய்ப்பையும் வழங்கும். குப்பைகளை முறையாகக் கையாண்டால், பேரிடர்க் காலத்தின் சாதகமான அம்சமாக இதை மாற்றிவிட இயலும். ஊரை ஒட்டுமொத்தமாகத் துப்புரவாக்கி, புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு உரிய நல்வாய்ப்பாகவும் இதைப் பயன்படுத்த இயலும். சுயநலத்துடன் நம் வீட்டுக்கு வெளியில் மட்டும் குப்பையைத் தள்ளினால், அது மீண்டும் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும். சாதகமாகவா, பாதகமாகவா? குப்பைகளை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பது நம் கரங்களில்தான் உள்ளது.

    4.மரம், இரும்பு, பிளாஸ்டிக் ஆகியவற்றை முறையாகக் கையாண்டால், மறுசுழற்சி செய்ய முடியும். துணிகளையும் சோபா, மெத்தை, தலையணைகளிலிருந்து பஞ்சு, ஸ்பாஞ்சு ஆகியவற்றையும் காயவைத்து மறுசுழற்சி செய்யலாம். வெயில் பலமாக அடிக்கும் வரை இவற்றை உலர வைக்க, தக்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். இதற்கெனப் புத்தாக்கப் போட்டிகளை நடத்துவதும் பயன் அளிக்கும்.

    5.சமையல் கழிவுகளைத் திடக் கழிவு, திரவக் கழிவு என்ற வரிசையில் பிரிக்கலாம். இவற்றைச் சாக்கடையில் தள்ளினால், மேலும் அவை அடைத்துக்கொள்ளும். எனவே, பாலிதீன் பைகள் போன்றவற்றில் இவற்றை அடைத்து, உரிய இடங்களுக்குக் கொண்டு சென்று, உரமாக்க முயல வேண்டும். இதில் நாற்றம், சுகாதாரம், உடல்நலன் உள்ளிட்ட சிக்கல்களுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.

    6.மின்னணுக் கழிவுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் அப்புறப்படுத்த வேண்டும். இவற்றுள் எவ்வெவற்றை மறுசுழற்சி செய்ய முடியும் எனக் கவனிக்க, அனுபவம் வாய்ந்த குழுவினரை ஈடுபடுத்த வேண்டும். சிடி, பிளாப்பி, கேசட், கணினி, செல்பேசி, பென்டிரைவ், ஹார்ட் டிரைவ் ஆகியவற்றிலிருந்து தரவுகளைப் பிரித்தெடுக்க இயலுமா என்றும் ஆராய வேண்டும்.

    7.நீரில் மூழ்கிய புத்தகங்களை, காகிதங்களை உலர வைத்துப் பயன்படுத்துவது பெருமளவு சாத்தியமில்லை. ஆனால், இவற்றைக் கோணிகளில் கட்டி, ஓரிடத்தில் சேர்த்து, மீண்டும் கூழாக்கி, மீண்டும் காகிதமாகவோ, அல்லது காகிதத் தட்டு, கோப்பை உள்ளிட்ட பொருள்களாகவோ உருவாக்க முடியும். எனவே இவற்றையும் பிரிக்க வேண்டும்.

    8.எண்ணெய், கிரீஸ், அமிலம், வேதியியல் பொருள்கள் கொண்ட குப்பைகளை அந்தத் துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டே கையாளப் பணிக்கலாம்.

    9. வகை வாரியான குப்பைகளை மண்டலம் வாரியாகச் சேகரித்து, தமிழகம் முழுவதும், அதற்கு வெளியிலும் அனுப்புவதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் மிகப் பெரிய வலைப்பின்னல் தேவை. தனி நபர்கள் இதில் ஆங்காங்கே பங்கெடுக்கலாம். ஆனால், ஒரு மையமான அமைப்பின் கீழ் இதை ஒருங்கிணைத்து, போர்க்கால நடவடிக்கையாகக் களத்தில் இறங்க வேண்டும். அரசு அமைப்பாகவோ, தனியார் அமைப்பாகவோ இருக்கலாம். ஆனால், மூன்று ஷிப்டில் இதில் ஆட்கள் வேலை செய்ய வேண்டும். அவர்களுக்குத் தேவையான ஊதியமும் கொடுக்கலாம். இதற்கெனத் தனியே நன்கொடைகளும் கோரலாம்.

    10.உடனடியாக உரியவர்களைத் தற்காலிகமாகவேனும் தேர்ந்தெடுத்து, பயிற்சி அளித்து, களமிறங்கச் செய்ய வேண்டும். அவர்களுக்கு அவ்வப்போது எழும் ஐயங்களுக்கு உடனுக்குடன் விடையளிக்கவும் சிக்கல்களை அங்கேயே தீர்க்கவும் இவர்களிடைய தொலைத்தொடர்புக் கருவிகள் வலுவாக இருக்க வேண்டும். இந்த முயற்சிக்குப் பெரும் எண்ணிக்கையில் வாகனங்களும் இதர கருவிகளும் தொழில்நுட்பங்களும் தேவை. இதற்கென உலக நாடுகளின் ஆலோசனைகளையும் பெறலாம்.

    இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தமிழகத்தின் நீர்வழிகள், வடிகால், பாதாளச் சாக்கடை… என அனைத்தையும் சீரமைக்க வேண்டும். சுத்தமாக ஓடும் கூவத்தில் இனியும் கழிவுகள் கலக்காமல் பேண வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, தொலைநோக்கோடு திட்டங்கள் தீட்ட வேண்டும். குப்பைகளையும் கழிவுகளையும் சிறந்த முறையில் கையாளுவதற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். இவை அனைத்தையும் பொதுநல நோக்குடன், சிரத்தையுடன் செய்வதற்கு உரிய பொறுப்பும் பொறுமையும் அனைவருக்கும் வேண்டும். இவை இப்போதைய உடனடி, அவசரத் தேவை.

    Share
  • ‘கலாம் ஆகலாம்’

    அண்ணாகண்ணன்

     

    2002இல் நான் எழுதி, கங்காராணி பதிப்பகம் வெளியிட்ட, ‘கலாம் ஆகலாம்’ சிறுவர் பாடல் நூலின் தலைப்புப் பாடல்

     

    anna

     

    anna1

     

    anna2

    Share
  • ஆறாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    வல்லமை மின்னிதழ், 6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்தத் தருணத்தில், நாம் கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்ப்போம். இன்று வரை சுமார் 8 ஆயிரம் இடுகைகள், 9.7 ஆயிரம் பின்னூட்டங்கள், 2.2 லட்சம் வாசகர்கள், 8.1 லட்சம் பக்க நோக்குகள் ஆகியவற்றுடன் வல்லமை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

    161 நாடுகளிலிருந்து வாசகர்கள்,வல்லமைக்கு வந்திருந்தாலும், 70 நாடுகளுக்கும் மேலிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வந்துள்ளார்கள். இந்தியா, அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, கனடா, அமீரகம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி நாடுகள், இதே வரிசையில் முதல் 10 இடங்களை வகிக்கின்றன.

    Vallamai_6th_year_300x1251

    கடந்த ஓராண்டில் வல்லமை, 4 போட்டிகளை நடத்தியுள்ளது. என் பார்வையில் கண்ணதாசன், மனத்தில் நிறைந்த மக்கள் திலகம் ஆகிய கட்டுரைப் போட்டிகளைக் கவிஞர் காவிரி மைந்தன் மற்றும் அவர் நண்பர்களுடன் இணைந்து நடத்தி முடித்துள்ளது. எழுத்தாளர் வையவனின் ஆலோசனைப்படி, பயன்மிகு இணையவழிச் சேவைகள் என்ற மாதாந்திரக் கட்டுரைப் போட்டியை அறிவித்துத் தொடர்ந்து நடத்தி வருகிறது. வாராந்தரப் படக்கவிதைப் போட்டியை வாசகர்களின் அமோக ஆதரவுடன் நடத்தி வருகிறது. தேமொழியின் யோசனையை ஏற்றுத் தொடங்கப்பட்ட இந்தப் போட்டிக்காக, சாந்தி மாரியப்பன் படங்களைத் தேர்ந்தெடுத்து அளிக்க, மேகலா, இதற்கான நடுவராக இருந்து, உரியவர்களை நன்முறையில் தேர்ந்தெடுத்து வருகிறார்.

    வாரந்தோறும் ஒருவரை வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து அறிவித்து வருகிறோம். அந்த வகையில் கடந்த ஆண்டு முழுவதும் சிறந்த ஆற்றலாளர்களை அடையாளம் கண்டு கவுரவித்துள்ளோம். இந்தப் பணியை அன்பர்களின் பரிந்துரைகள் அடிப்படையில், ஆசிரியர் குழுவுடன் கலந்தாலோசித்துத் தேமொழி சிறப்பாகத் தொடர்கிறார்.

    இந்த ஓராண்டில் பல்வேறு தொடர்களை வல்லமை வெளியிட்டுள்ளது. சொற்சதங்கை – கவியுள்ளம் – காற்று வாங்கப் போனேன் (கே.ரவி), திருமால் திருப்புகழ் – கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம் (கிரேசி மோகன்), இசைக்கவியின் இதயம் (இசைக்கவி ரமணன்), என்னதான் இருக்கிறது வேதத்தில் (சு.கோதண்டராமன்), அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் (சுபா), ஐந்து கை ராந்தல் (வையவன்), சுட்டும் விழிச்சுடர் (பவளசங்கரி), இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (சக்தி சக்திதாசன்), கவியரசு கண்ணதாசன் (காவிரி மைந்தன்), அவன், அது , ஆத்மா – காலம் (மீ.விசுவநாதன்), உன்னையறிந்தால் (நிர்மலா ராகவன்), நான் அறிந்த சிலம்பு (மலர்சபா), குறளின் கதிர்களாய் (செண்பக ஜெகதீசன்), தேகமும் யோகமும் (கவியோகி வேதம்), காதல் நாற்பது (ஜெயபாரதன்), ஓலைத் துடிப்புகள் (கவிஞர் ருத்ரா), சிகரம் நோக்கி (சுரேஜமீ)… எனத் தொடரும் தொடர்கள், வல்லமைக்கு வளமையும் பெருமையும் சேர்ப்பவை.

    இவையல்லாமல், நாகேஸ்வரி அண்ணாமலை உள்ளிட்ட பலரும் வெவ்வேறு நடப்புகளைக் குறித்துப் பத்திகளை எழுதி வருகிறார்கள். ஆய்வறிஞர்களும் பேராசிரியர்களும் தங்கள், ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி வருகிறார்கள். இவை வாசகர்களின் சிந்தனைக்கு விருந்து படைத்து வருகின்றன.

    கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுத்து வடிவில் மட்டுமின்றி,ஒலி வடிவிலும் வல்லமையில் கேட்க முடியும். கே.ரவி, இசைக்கவி ரமணன், ஆர்.எஸ்.மணி உள்ளிட்ட பலரின் பாடல்கள், வல்லமை நேயர்களின் நெஞ்சம் கவர்ந்தவை. எழுத்தும் ஒலியும் இணை சேர்ந்து வருவதைப் போல், எழுத்தும் ஓவியமும் சு.ரவியின் ஆக்கங்களில் இணை சேர்ந்து, வாசகர்களை வசீகரிக்கின்றன.

    வல்லமையின் இடுகைகளின் தொகுப்பினை ஒவ்வொரு நாளும் உங்கள் மின்னஞ்சல் பெட்டிக்கே கொண்டு சேர்க்கும் வசதியும் வல்லமையில் உண்டு. சிறிது காலம் செயல்படாமல் இருந்த இந்த வசதி, நம் தள நிர்வாகி ஸ்ரீநிவாசன் அவர்களின் உதவியால், இப்போது மீண்டும் செயல்படுகிறது. வாசகர்களும் படைப்பாளர்களும் வல்லமை முகப்பில் பின்னூட்டங்களுக்கு மேலே உள்ள பெட்டியில் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை இட்டு, வல்லமையின் எல்லா இடுகைகளையும் அறியலாம்.

    வல்லமையின் சீரிய வளர்ச்சியில் பலருக்கும் பங்கு உண்டு. கனிவும் அர்ப்பணிப்பும் மிகுந்த திருமதி பவளசங்கரி தலைமையிலான ஆசிரியர் குழுவினர், எங்கள் ஆலோசகர்கள், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அனைவருக்கும் எமது நன்றிகள். வல்லமைக்குச் சிறப்பான படைப்புகளை அளித்து வரும் படைப்பாளர்கள், ஓவியர்கள், இவற்றைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள், கூகுள் – ஃபேஸ்புக் – ஃபிளிக்கர் – வாட்ஸ் அப் குழுமங்களில் துடிப்பாக இயங்கி வரும் அன்பர்கள் யாவருக்கும் நன்றிகள்.

    இந்த இனிய தருணத்தில் இசைக்கவி ரமணன் அவர்களின் கனிந்த வாழ்த்து, நமக்கு உற்சாகம் ஊட்டுகிறது.

    இணையதளம் என்றாலும் இனிமையினால் நற்பண்பால்
    இதயதள மாகிவிட்ட வல்லமையே வாழ்க!
    அணைத்தபடி அனைவரையும் அரவணைத்துச் செல்லுகின்ற
    அன்னையவள் கரம்போன்ற வல்லமையே வாழ்க!

    கணப்பாகக் குளிர்நீக்கும்! கடுங்கோடைப் பொழுதினிலே
    கற்கண்டுப் பனித்துளியாய்க் கால்நனைத்து மனம்குளிரும்!
    பிணைப்பாகி, ஒரு குழுமம் பெருங்குடும்ப மாகியதே!
    பிரிவில்லா உறவொன்றில் நெஞ்சமெல்லாம் நெகிழ்கிறதே!

    ஏதேதோ மரம்கொடிகள் எத்தனையோ மலர்வகைகள்
    எல்லோர்க்கும் தனித்தனியாய் சேர்ந்திருக்க இடமுண்டு!
    காதலுண்டு கவிதையுண்டு வாதமுண்டு பேதமுண்டு
    கடுகளவும் பகையின்றிக் கைகுலுக்கும் பண்புண்டு!

    எனத் துல்லியக் கவிபாடி, நம் உள்ளங்களை அள்ளிய தெள்ளியர், அவர்.

    பல்லாண்டு வாழ்க! பலநூறு காண்க!
    பைந்தமிழின் களஞ்சியமாய்ப் பலவிதமாய் விரிக!
    வல்லோரின் சங்கமத்தில் வளரட்டும் வல்லமை
    வழிநெடுகத் துணையாக வாழ்த்தட்டும் சிவனுமை!

    என்ற அவரின் வாழ்த்து, வல்லமைக்கு மேன்மேலும் வலிமை ஊட்டுகிறது. அவரது கூற்றின்படி, பைந்தமிழின் களஞ்சியமாய் விரிவோம். பாரெங்கும் தொண்டுகள் புரிவோம்.

    Share
  • படக் கவிதைப் போட்டி – 5இன் முடிவுகள்

    அண்ணாகண்ணன்

    தமிழக – கேரள எல்லையில், ராமக்கல்மேடு என்ற கிராமத்தில் உள்ள குறவன் – குறத்தி சிலையை அமுதா ஹரிஹரன் படம் எடுத்தார். அதை நமது படக் கவிதைப் போட்டிக்குச் சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்தார். இந்தப் பொருள் பொதிந்த படத்துக்கு வல்லமை அன்பர்கள், நயமான கவிதைகளைப் படைத்துள்ளனர்.

    Amutha Hariharan's photo of Kuravan Kurathi Statue

    சிலையாய் அமர்ந்துள்ள இணையர், எதிரே பசுமை போர்த்திய மலைத் தொடர், மேலே வெண் மேகம் தவழும் நீல வானம் என ஒரு வளமான காட்சி, திறமான படைப்புகளுக்குச் சரியான தீனி. இருவர் ஏன் சிலையாக அமர்ந்துள்ளனர் என்ற தேடல், விதவிதமான கற்பனைகளைத் தூண்டி விட்டுள்ளது. இதற்கு ஜெயபாரதனும் எஸ்.பழனிச்சாமியும் ஜெயஸ்ரீ ஷங்கரும் புனிதா கணேசனும் வடித்த பின்கதைகள் நன்று. இவை, காவியமாக விரித்துரைக்கும் வாய்ப்பினைக் கொண்டவை.

    ஊடும் பாவுமாக விரவிச் செல்லும் இந்த வண்ண வரிகளுள் சில, சட்டென்று என்னை ஈர்த்தன.

    கலை தவழும் மலை
    மலை தழுவும் முகில்
    இவற்றோடு
    காதல் தலைவி தலைவனாய்
    நீயும் நானும்!

    எனக் கிரேஸ் பிரதிபாவும்

    மெல்ல கேசம் வருடும்
    மேகக் காதலனின் காதில்
    கிசுகிசுக்கிறாளோ –
    மரகதப் பட்டுடுத்திய
    மலை மங்கை?

    எனத் தமிழ் முகிலும்

    அன்பு நிறைந்த ஏகாந்த பூமியிது
    ஆசைக் கண்கள் தாலாட்டிய பூமியிது
    காலச் சுழற்சி, காதல் மலர்ச்சி
    பிறவிகள் வேண்டும்

    என ஜெயஸ்ரீ ஷங்கரும்

    நீலவான் நிலத்தை நோக்க
    நிலம்நாணி வானை நோக்க
    காலனே நீயும் எம்மை
    கணக்கினில் கொள்ளும் முன்னம்
    ஞாலமே வியக்கும் வண்ணம்
    நாமிங்கு சிலைகள் ஆனோம்!

    என ஜெயராம சர்மாவும்

    கனிவுறு காதலில் கல்லானோம்
    இனியொரு பிறவியில் இணைவோமா?
    அந்த வானமும் இந்த பூமியும் போலே
    எந்த போழ்திலும் சேர்ந்தேயிருப்போமா?

    எனப் புனிதா கணேசனும்

    ஊனுயிராய் உலவிக் கலக்கும்
    ஊன்றுகோல்! அன்பு ஊற்று!
    உன்னதம்! காதல் இறைமை!
    இத்தேடல் பிரபஞ்ச மயக்கம்!
    இவ்வாடல் உலக இயக்கம்!

    எனப் பா.வானதி வேதா. இலங்காதிலகமும்

    நிலையா உலகில் நிலைபெறவே
    நினைவுச் சின்ன நிலையானார்,
    கலையே ஈதெனப் பார்த்தாலும்
    காதல் சிலையெனச் சேர்த்தாலும்,
    விலையெனச் சொல்ல ஏதுமில்லை
    வென்றே நிற்கும் காலத்தையே…!

    எனச் செண்பக ஜெகதீசனும்

    இவர்கள்
    எதுவும் இல்லாதிருந்தபோது
    எல்லாமும் பெற்றிருந்தனர்
    எல்லாமும் கிடைத்தபோது
    எதையோ இழந்து நிற்கின்றனர்!

    எனக் கொ.வை அரங்கநாதனும் தீட்டிய வரிகள், என் ரசனைக்கு விருந்து படைத்தன.

    எனினும் ஒரு முழுமையான கவிதை என்ற அளவில் பார்க்கிற போது, சங்கர் சுப்பிரமணியனின் இந்தக் கவிதை என்னைப் பெரிதும் கவர்ந்தது.

    இதுவரை
    அறிந்திராத மொழியும்
    தீண்டலில் கரையும்
    புரியாத உணர்வுகளும் என
    பக்கமிருப்பிலே
    தூரமாகி போகிறது
    நாம் காணும் உலகம்

    மின்னும் நட்சத்திரம்
    காற்றினில் தவழ்ந்து வந்து
    நம்மை தழுவும் இசை
    உருகும் பனி
    பச்சை புல்வெளி
    பார்த்த பரவசம் என
    மீளா கணங்களில்
    முன்னம் விரியுது
    இதுவரை நாம்
    பார்த்திராத உலகம்

    நாம் கற்சிலையான
    தருணத்திலும்
    தீராத நம் பேச்சினில்
    கிளர்ந்தெழும் உணர்வுகளால்
    கலைத்து போகிறது
    கடந்து போகும் மேகமும்
    சுற்றி வரும் சூரியனும்

    இதில் ஒற்றுப் பிழைகள், ஒருமை / பன்மைப் பிழை, தட்டுப் பிழை (கலைத்து / களைத்து), நிறுத்தற்குறியின்மை ஆகியன இருந்தும் இதன் கவித்துவம், தனித்துவமானது. கற்சிலையான பிறகும் தீராத பேச்சு எது? பேசுவது வாயா, விழியா, விரலா, மனமா, ஆன்மாவா என விரிப்பது ஒரு நிலை என்றால், அந்தப் பேச்சினால் கிளர்ந்தெழும் உணர்வுகள், சுற்றி வரும் சூரியனையும் கடந்த போகும் மேகத்தையும் களைப்படையச் செய்கின்றன எனில் அதன் விரிவும் தீவிரமும் சலியாத அன்பும் அலாதியான இன்பமும் சொல்லில் வடிக்க இயலாதவை. தகுதி மிக்க இந்தக் கவிதைக்காகச் சங்கர் சுப்பிரமணியன் அவர்களை இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறேன்.

    ஏற்க மறுத்தாரோ ஏங்கிட வைத்தாரோ
    தோற்க மனமின்றி தோழமையாய் – வீற்றிருப்பீர்
    கற்சிலையாய் குன்றின்மேல், காலங் கனிந்துவரும்
    வற்றிடா அன்பே மருந்து

    எனக் காதலை ஏற்கும் வரை கற்சிலையாய்க் காத்திருக்கும் இணையரைப் படைத்த சியாமளா ராஜசேகர் அவர்களை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறேன்.

    சங்கர் சுப்பிரமணியன், சியாமளா ராஜசேகர் ஆகியோருக்கு எனது பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    Share
  • நித்திலமே நித்திலம்

    அண்ணாகண்ணன்

    Nithila Annakannan

    நித்திலமே நித்திலம்
    நின்றொளிரும் ரத்தினம்
    புத்தம்புது புத்தகம்
    புத்துணர்வுப் பெட்டகம்
    கொத்துமலர் கோகிலம்
    குதித்துவரும் சாகசம்
    தத்திவரும் பூரதம்
    சிரித்துவரும் சித்திரம்

    ஆடிவரும் அற்புதம்
    ஓடிவரும் உற்சவம்
    தேடிவரும் காவியம்
    தீட்டாத ஓவியம்
    பாடிவரும் பாசுரம்
    நாடிவரும் நாட்டியம்
    கூடிவரும் மங்கலம்
    கோடியின்பம் நித்திலம்.

    ஆருயிரின் ஆரமுதம்
    ஆசைதரும் பேரமுதம்
    ஓருலக வேரின்பம் – ஈர்
    ஏழுலகப் பேரின்பம்
    ஊருலகம் பாராட்டும்
    உச்சி தனில் சீராட்டும்
    ஆரமடி முத்தாரம் – நீ
    அகிலத்தின் ஆபரணம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி (5)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    11075315_10205201894081371_1963618067_n

     

    அமுதா ஹரிஹரன்
    அமுதா ஹரிஹரன்

    அமுதா ஹரிஹரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.03.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை முனைவர் அண்ணாகண்ணன் தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப்          பங்கு பெற அழைக்கிறோம்.

    Share
  • படக் கவிதைப் போட்டி – 4இன் முடிவுகள்

    அண்ணாகண்ணன்

    அன்புக்கு ஏது வயது எனத் தம் குடும்ப விளக்கிற்கு இனிப்பூட்டும் கணவர், களிப்புடன் அதை ஏற்கும் இல்லத்தரசி, குதூகலத்தில் திளைக்கும் செல்லப் பிள்ளைகள்… என ஒரு கொண்டாட்ட மனநிலையை அழகாகப் படம் பிடித்த நித்தி ஆனந்துக்கு முதலில் பாராட்டுகள். வண்ணங்களின் கலவையும் உணர்வுகளின் வெளிப்பாடும் இந்தக் காட்சியில் சிறப்பாகப் பதிவாகியுள்ளன.

    16483711086_5e9d5432f1_z

    இந்தப் படத்துக்கு அன்பர்கள் எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றிலும் அன்பின் நறுமணம் கமழ்கிறது. கவிதையின் கூர்மை, நேர்த்தி, செம்மை ஆகியவற்றில் சற்றே முன்பின் இருந்தாலும் காதலின் தனித்த சுடர், இந்த வரிகளை மேலும் ஒளிரச் செய்கின்றது. காட்சியில் உள்ளதை அப்படியே எழுத்தில் வடிக்கச் சிலர் முயன்றுள்ளார்கள். காட்சியை மையமாக வைத்து, அதன் வேர்களிலும் கிளைகளிலும் பலர் பயணித்துள்ளார்கள். கிரிக்கெட்டின் ஆடுகளத்தில் பந்து எங்கே பட்டு [பிட்ச் (pitch) ஆகி], எங்கே பாய்கிறது என்று பார்ப்பதைப் போல், கவிதையிலும் சொல் எங்கே ‘பிட்ச்’ ஆகிறது என்று பார்க்க முடியும்.

    மாறா உன் புன்னகையிலே
    மாறியிருந்தது என் உலகம்

    எனச் சங்கர் சுப்ரமணியனும்

    வெயிலின் வனாந்தரங்களை
    ஓய்விலா வாழ்வின் போழ்தை
    நிலாவின் குளிர்மை தந்து
    குலவி இருந்தவளே

    எனப் புனிதா கணேசனும்

    முகத்தில் விழுந்த சுருக்கங்கள்
    முடிந்து வைத்துள்ளது காலங்காலமாய்
    பகிர்ந்து கொண்ட காதலை
    பலங்கொண்ட ஆலம் விழுதுகளென!

    எனத் தமிழ்முகிலும்

    இருவர் மனமும் ஒன்றானால் எமது முதுமை இளசாகும்
    உனது சுவையில் நான்கலப்பேன் எனது இனிமை நீயாவாய்!

    என ஜெயராமசர்மாவும்

    முற்றிய வாழ்வின்
    முதன்மை வசந்த முகவரி
    சூழ்ந்த சுகவரி சுந்தரம் காட்ட

    என மெய்யன் நடராஜும்

    கணப்பொழுதும் மனதால் நீங்காத
    கானப் பறவைகளின் இல்லற பாடல்

    என நாகினியும் தீட்டிய வரிகளை ரசித்து மகிழ்ந்தேன்.

    இந்த வாய்ப்பில் எஸ்.பழனிச்சாமி ஒரு சிறுகதை எழுத, மீ.லதா, ஒரு நாவல் சுருக்கத்தையே எழுதிவிட்டார். செந்திலகம் என்ற ஜெயபாரதனின் சொல், செம் திலகம், செந்தில் அகம் என்ற இரு பொருட்சுவை தருகின்றது. நிரஞ்சன் பாரதி, அணிச்சல் (Cake) என்ற சொல்லை ஒரு படைப்பினுள் முதன் முதலாகப் பயன்படுத்தியுள்ளார்.

    சிற்சில சொற்கள், வரிகள் என்ற அளவில் பலவும் சிறப்புற இருந்தாலும், முழுமையான கவிதை என்ற அளவில் பார்க்கிறபோது, இப்னு ஹம்துன் எழுதிய இந்தக் கவிதை என்னைப் பெரிதும் கவர்ந்தது.

    நாளும் இனிமை கூட்டியதும்
    நாவில் இனிப்பை ஊட்டியதும்
    காலம் முழுதும் இனித்திருக்கும்
    கடவுள் அருளாய் மணத்திருக்கும்.

    வாழும் பெண்ணின் உள்ளத்தில்
    வசந்தம் தன்னை மணந்தவரே.
    தோழன் போல துணைநிற்க
    துயரக் காற்றைக் கண்டதில்லை.

    பேரன் பேத்தி எடுத்தாலும்
    பெயரா உறவும் நமதன்றோ.
    வேர்கள் நாமே பரஸ்பரமே
    வெற்றி கண்டோம் வாழ்வினிலே.

    அன்பைத் தந்தாய் அனுதினமும்
    அதிலே திகட்டல் ஏதுமில்லை.
    உன்னை அன்றி வேறேதும்
    உவந்த இனிப்பும் எனக்கிலையே.

    இன்பம் வெற்றி உன்னாலே
    இதயம் கண்டது தன்னாலே.
    என்றும் காப்பான் இறையவனும்
    இந்த வாழ்வின் இனிமையினை.

    நன்றி சொல்லி வாழ்ந்திருப்போம்
    நல்ல வாழ்க்கை அதற்கென்றே.
    நின்று பார்க்கும் பிள்ளைகளே
    நேசப் பாடம் படிப்பீரே!

    இதில் ‘உன்னை அன்றி வேறேதும் உவந்த இனிப்பும் எனக்கிலையே’ என்று அழகுற உணர்ந்துரைத்த விதம் நன்று. இந்தக் கவிதையின் சிறப்பைப் பாராட்டி, இப்னு ஹம்துன் அவர்களை இந்த வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறேன்.

    மங்கல நாயகி முகமெங்கும்
    ஆயிரம் நிலவின் நட்சத்திரம்

    பொட்டும் பட்டும் பாட்டிசைக்க
    பளிச்சிடும் புன்னகைப் பெண்சித்திரம்

    அனுபவ வலிகள் மறைந்த
    ஆனந்த சுமைகளின் முகவரிகள்

    கொண்டவர் அருகிருக்க கோலமகள்
    வாரிசுகள் ஆர்ப்பரித்து அகமகிழ

    தொலைந்து கடந்த பிறந்தகாலம்
    நினைவில் நழுவிய வேளையிலும்

    குழந்தைமனம் மாறாக் குதூகலம்

    என வசீகரமாக வர்ணித்த ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களை இந்த வாரத்தின் குறிப்பிடத்தக்க கவிஞராகத் தேர்ந்தெடுக்கிறேன்.

    இந்த இரு கவிதைகளில் எதற்கு முதலிடம் எனக் கடுமையான போட்டி இருந்தது. ஏனெனில் ஜெயஸ்ரீயின் தொடக்கமும் இப்னுவின் முடிப்பும் மிகச் சிறப்பாக இருந்தன. எனினும் ஜெயஸ்ரீயின் கவிதை, பெரும்பாலும் காட்சிக்கு உள்ளே மட்டும் இருக்க, இப்னுவின் கவிதை, அதையும் கடந்து பயணித்தது. தெரிந்ததிலிருந்து தெரியாதவற்றுக்கும் அறிந்ததிலிருந்து அறியாதவற்றுக்கும் அழைத்துச் செல்வது, சிறந்த முறை. எனவே, இப்னு சிறந்த கவிஞர் என்ற பாராட்டைப் பெறுகிறார்.

    இப்னு ஹம்துன், ஜெயஸ்ரீ ஷங்கர் இருவருக்கும் பாராட்டுகள். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    Share
  • இனிதினிது

    அண்ணாகண்ணன்
    Annakannan

    இனிதினிதினிதினிதினிதினிதினிது
    எமதெமதெமதெமதெமதெமதெமது
    அமுதமுதமுதமுதமுதமுதமுது
    எமதெமதெமதெமதெமதெமதெமது

    சரிசரிசரியென,சரிவரும்உலகு
    சிரிசிரிசிரியென,சிரிநலம்பழகு
    வரிகளுக்கிடையினில்படிப்பதும்அரிது
    அரிதரிதரிதரிதரிதரிதரிது

    சிறுதிரிவிரியொளிசெறிசுடரழகு
    சிறுதுளிவிரிகடல்புரிதொழிலழகு
    சிறகினில்திசைகளையளப்பதுமழகு
    சிறகெனத்திசைகளைவிரிப்பதுமழகு

    கருவுறுதிருதருவரகவிமதுரம்
    துருதுருசுறுசுறுவிழிநடம்மதுரம்
    பெருகிடும்வியர்வையில்பெருமிதம்மதுரம்
    மெருகிடும்உருகிடும்அருளதிமதுரம்

    கடகடபடபடமடமடவெனவே
    சடசடதடதடகிடுகிடுவெனவே
    உடனுடனுடனுடனுடனுடனுடனே
    முடிமுடிமுடிமுடிமுடிமுடிசெயலே.

    Share