Tag: நடராஜன் கல்பட்டு

  • ஆன்மீகமும் நானும் (8)

    எம்மதமும் சம்மதமே

    ஒரு காவி உடை தரித்த ஆன்மீகவாதி ஒரு முறை ரயிலில் பயணித்தபோது எதிர் வரிசையில் ஒரு பாதிரியார் உட்கார்ந்திருந்தாராம். பாதிரியார் தன் பக்கத்தில் இருந்தவரிடம் கதை சொல்ல ஆரம்பித்தாராம்.

    “ஒரு சமயம் ஒரு இந்து, ஒரு முசல்மான், ஒரு கிருஸ்துவர் ஆகிய மூவரும் ஒரு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர். திடீரெனெ விமானம் வெடித்துச் சிதறியது, அதனுள் இருந்த பயணிகள் அனைவரும் தூக்கி எறியப் பட்டனர்.

    இந்து, ‘பிள்ளையாரப்பா, முருகா, ராமா, கிருஷ்ணா, ஈஸ்வரா, பராசக்தி என்னெக் காப்பத்துங்கோ’ ந்னு கத்திண்டே விழுந்தானாம் ஒரு பாரையின் மீது. அவன் உயிர் பிரிந்தது.

    முசல்மான், ‘அல்லா ‘முஜே பச்சாவ்’ என்றபடி கீழே விழுந்தவன் அடர்ந்த ஒரு மரத்தின் மீது விழுந்தான். அவனும் சில்லரை காயங்களுடன் உயிர் பிழைத்தான்,

    கிருஸ்துவன், ‘யேசுவே என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறியபடி விழுந்தான். அவன் ஒரு திராக்ஷைப் பந்தலில் விழுந்தான். அந்தப் பந்தல் ஒரு கம்பிச்சுருள் மெத்தையில் விழுந்தது போல அவனை இரண்டு மூன்று முறை சிறிதளவு மேலும் கீழுமாக தூக்கிப் போட்டது. அவ்வளவே. அவன் உடம்பில் ஒரு கீறல் கூட விழவில்லை.

    இறந்த இந்துவின் ஆவி மேலுலகம் சென்றது. அங்கு அவன் கடவுளை சந்தித்துக் கேட்டான், ‘ஆண்டவா உன்னை நான் நம்பினேனே. என்னைக் காப்பாற்ற அழைத்தேனே ஏன் வரவில்ல?’ என்று.

    கடவுள் சொன்னார், அப்படியா ‘நீ பிள்ளையாரைக் கூப்பிட்ட போது அவர் காப்பாற்றுவார் என்று நினைத்தேன்.’ பின் அவன் ஆவி முருகனைக் கேட்டதாம், ‘முருகா நீ ஏன் என் உயிரைக் காக்க வரவில்லை? எத்தனை முறை கந்த சஷ்டிக் கவசம் சொல்லி இருப்பேன் நான்?’ என்று. முருகன் சொன்னாராம், ‘நீதான் ராமா, கிருஷ்ணா, பரமேஸ்வரா, பரா சக்தி’ன்னு பலபேரெக் கூப்பிட்டாயே அவர்களில் யாராவது ஒருவர் உன்னைக் காப்பாற்றச் சென்றிருப்பர்கள் என்றெண்ணி மயிலோடு விளையாடச் சென்று விட்டேன் நான்’ என்று.”

    இப்படிச் சொல்லித் தன் கதையினை முடித்தார் பாதிரியார்.

    புத்தகம் படித்துக் கொண்டிருந்த இந்து ஆன்மீகவாதி சொன்னார், “அப்படியா நான் வேறு மாதிரியல்லவோ கேட்டேன் இதே கதையை?

    ஒரு ஜெர்மானியர், பிரிட்டிஷ் காரர், ஒரு பிரஞ்சுக் காரர், ஒரு அமெரிக்கர் பயணித்த விமானம் ஒன்று நடு வானில் விபத்துக்குள்ளாக நால்வரும் வெளியே தூக்கி எறியப் பட்டனர். நால்வரும் ஒரு கல் மலை மீது விழுந்து இறந்தனர். அவர்கள் ஆவி மேலே சென்றது.

    அங்கு அவர்கள் நால்வரும் சந்தித்த யேசுவைக் கேட்டனர், ‘நாங்கள் உங்களை அழைத்தோமே எங்களைக் காப்பாற்றச் சொல்லி. ஏன் வரவில்லை நீங்கள்?’ என்று.

    யேசு சொன்னாராம், ‘நான் ஜெர்மனியனைக் காப்பாற்றி இருந்தால், பிரிட்டிஷ் காரர் சொல்லுவார் நான் ஒரு நாசியைக் கண்டு பயந்து விட்டேன் என்று, பிரிட்டிஷ் காரரைக் காப்பாற்றி இருந்தால், நான் அவர்களது கடற்படைக்கு அஞ்சி விட்டேன் என்று பிரஞ்சுக் காரர் சொல்லுவார். பிரஞ்சுக் காரரைக் காப்பாற்றி இருந்தால் அவரது நடை உடை பாவனையில் மயங்கிவிட்டேன் நான் என்று மற்ற மூவரும் சொல்லுவீர்கள்.’

    அமெரிக்கர் கேட்டாராம், ‘பின் நீங்கள் என்னைக் காப்பாற்றி இருக்கலாமே?’ என்று. யேசு சொன்னாராம், ‘நான் அதை செய்திருக்கலாம். ஆனால் மக்கள் என்ன பேசுவார்கள் தெரியுமா? அமெரிக்கா உலகத்திலேயே மிகமும் பலம் வாய்ந்த வல்லரசு. அதனால் தான் நான் உன்னைக் காப்பாற்றினேன்’ என்று. இது தேவையா எனக்கு?’ என்றாராம் யேசு.”

    இந்து ஆன்மீக வாதி தொடர்ந்தார், “இப்படிக் கதைகளை எந்த மாதிரி வேண்டுமானாலும் சொல்லி மக்களை எளிதாக ஏமாற்றி விடலாம். இந்த மதம் உயர்ந்தது. அந்த மதம் தாழ்ந்தது என்று கிடையாது. மதங்கள் காட்டும் பாதையோ, போதனைகளோ மாறு பட்டு இருக்கலாம். ஆனால் அவற்றின் குறிக்கோள் ஒன்றே. மதங்கள் எல்லாமே முயல்வது என்ன? மனிதனை இன்னும் நல்லவனாக ஆக்க வேண்டும் என்பதுதான்.”

    பாதிரியார் தன் தவறை உணர்ந்தார். மன்னிப்பும் கோரினார்.

    (தொடரும்…..)

    நடராஜன் கல்பட்டு

    Share
  • ஆன்மீகமும் நானும் (7)

    நடராஜன் கல்பட்டு

    சின்மயா மிஷனில் பங்கு பெற்ற நாட்கள்

    போலிகள் சிலரைப் பார்த்து விட்டோம். இனி சின்மயா மிஷன் மீது எனக்கு ஏற்பட்ட ஈடுபாட்டுக்குத் திரும்புவோம்.

    காலஞ்சென்ற திரு சின்மயானந்தாவை ஒரு மிகச் சிறந்த குரு என்பேன். சீடர்களைத் தயார் செய்வதில் ஆகட்டும், மக்களுக்கு சத் விஷயங்களைப் போதிப்பதில் ஆகட்டும் அவருக்கு ஈடு இணை இல்லை.

    ஆங்கிலத்தில் அவர் மிக எளிமையாக எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் பகவத் கீதை, உபநிஷத்துக்கள், வேத மந்திரங்கள், சனாதன தர்மம் இவை பற்றி ஆற்றிய உரைகளும் சரி. அவர் எழுதியிருந்த புத்தகங்களும் சரி மிகவும் போற்றத் தக்கவை.

    ஸ்வாமி சின்மயானந்தா மற்றும் அவரது பிரதான் சீடர் ஸ்வாமி தயானந்தா அவர்கள் ஆற்றிய உரைகளில் கேட்டு ரசித்த சில துளிகளை சில மடல்களில் தருகிறேன்.

    ஒரு கேள்வி: “எல்லா உயிருள்ள வற்றுள்ளும், உயிரற்ற வற்றுள்ளும் இருப்பது ஒரே இறைவன் என்கிறீர்களே இதை எப்படி நம்ப முடியும்? நிலம் வேறு, நீர் வேறு, மண் வேறு, கல் வேறு, மனிதன் வேறு, விலங்குகள் வேறு, பறவைகள் வேறு என்றுதானே நாம் பார்க்கிறோம்?”

    “உண்மைதான். பார்ப்பதற்கு அவை வேறு வேறாகத்தான் தெரிகின்றன. அவற்றில் ஒவ்வொன்றை எடுத்துக் கொண்டு சிறு துண்டுகளாக்கிக் கொண்டே செல்லுங்கள். அத்துண்டுகளுக்கு நீங்கள் எடுத்துக் கொண்ட மூல பொருளின் குணங்கள் இருப்பதைப் பார்ப்பீர்கள். அவற்றினை மிக மிகச் சிறிய துண்டுகளாகுங்கள். அப்போதும் மூலக்கூறுகள் (molecules) என்று சொல்லப் படும் அந்தத் துகள்களுக்கு மூலப் பொருளின் குணங்கள் இருக்கும். இந்த அளவிலான துண்டுகளை நம் பூத உடலின் கண்களால் காண முடியாது. சக்தி வாய்ந்த பூதக் கண்ணடியான நுண்நோக்கியால் மட்டுமே காண முடியும்.

    மூலக்கூறுகளை எலத்திரன் நுண் நோக்கியால் (electron microscope) மட்டுமே காண முடியும். அப்படிப் பார்க்கும் போது அவை அணுக்களால் (atoms) ஆனவை என்பது புரியும். அந்த அணுக்கள் ஒவ்வொன்றும் தனித் தன்மை வாய்ந்தவை. அணுக்களையும் மிகவும் சக்தி வாய்ந்த எலத்திரன் மின் நோக்கியால் பார்த்தால் அணுக்கள் நேர் மின்னி, எதிர் மின்னி (protons and electrons) என்னும் கண்ணுக்குப் புலப்படாத மிக மிகச் சிறிதானவற்றால் ஆனவை என்பது தெரியும். ஒவ்வொரு அணுவிலும் இருக்கும் மின்னிகளின் எண்ணிக்கை மாறு படும். அதைப் பொருத்துதான் ஒவ்வொரு அணுவுக்கும் தனித் தன்மை வருகிறது. ஆனால் நேர் மின்னிகள் எல்லாமே ஒரே மாதிரியானவை. அதே போல் எல்லா எதிர் மின்னிகளுமே ஒரே குணம் கொண்டவை.

    ஆக ஆரம்பத்தில் வெவேறு குணங்கள் கொண்ட பொருட்களாகக் காணப் பட்டாலும் இவை எல்லாமே ஒரே பொருட்களால், நேர் எதிர் மின்னிகளால் ஆனவைகள்தான். இதையேதான் நம் ஆன்மீகமும் சொல்கிறது. இவ்வுலகில் நாம் காணும் எல்லாமே மாயைதான். அவற்றுள் இருப்பது அந்த ஈசனும் ஈஸ்வரியும் தான் என்று.”

    அடுத்த கேள்வி: “எல்லோர் உள்ளிருந்தும் இயக்குவது ஒரே ஈசன் தான் என்றால் பின் ஏன் ஒருவன் பணக்காரனாக இருக்கிறான்? ஒருவன் ஏன் ஏழையாக இருக்கிறான்? ஒருவன் அறிவாளியாக இருப்பதேன்? மற்றொருவன் முட்டாளாக இருப்பதேன்? ஒருவன் அழகாக, மற்றொருவன குரூபியாகவோ, குருடனாகவோ, செவிடனாகவோ, முடவனாகவோ இருப்பதேன்?”

    சின்மயானந்தாவின் பதில்: “உங்கள் வீட்டிலே மின் விளக்குகள், மின் விசிறிகள், குளிர் சாதனப் பெட்டி, மிசாரத்தால் வென்னீர் போடும் அண்டா, ரேடியோ, டீவீ என்று உள்ளனவே. அவற்றில் ஒன்று வெளிச்சம் தருகிறது. மற்றொன்று உங்களுக்கு சாமரம் வீசி காற்றினை அளிக்கிறது. ஒன்று குளிரூட்டுகிறது. ஒன்று உஷ்ணம் தருகிறது. ஒன்று பேசுகிறது, பாடுகிறது. மற்றொன்று ஒலியுடன் காட்சிகளையும் அளிக்கிறது. இவை எல்லாவற்றையும் இயக்குவது அந்த ஒரே மின்சாரம் தானே.”

    மூன்றாம் கேள்வி: “கண்ணுக்குப் புலப்படாத ஒன்றினை (கடவுளை) இருப்பதாக நம்புவது எப்படி?”

    “மின்சாரம் இருக்கிறதா?”

    “இருக்கிறது.”

    “அதை நீங்கள் பார்க்க முடியுமா?”

    “முடியாது.”

    “பின் எப்படிச் சொல்லுகிறீர்கள் மின்சாரம் இருக்கிறது என்று? லண்டன் நகரம் இருக்கிறதா?”

    “இருக்கிறது.”

    “நீங்கள் அங்கு போயிருக்கீர்களா?”

    “இல்லை.”

    “அப்போது எப்படி நிச்சயமாக லண்டன் நகரம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்?”

    “படங்களில் பார்த்திருக்கிறேனே.”

    “உங்கள் வீட்டிலே இறைவன் படங்கள் இல்லையா? கோவில்களில் இறைவனின் சிலைகள் இல்லையா? சர்ச்சுகளில் சிலுவைகள் இல்லையா? முகம்மதியர் வழிபாட்டுத் தலங்களிலே ஒரு பிறைச் சந்திரனும் நட்சத்திரமும் கண்டதில்லையா? நீங்கள் இறைவனை உங்கள் ஊனக் கண்களால் பார்க்க முடியாது. எப்படி அணுவைக் காண இலத்திரன் நுண் நோக்கி தேவைப் படுகிறதோ அது போல இறைவனைக் காண ஞானக் கண் தேவைப் படுகின்றது. அதை உங்களுக்கு அளிப்பதே ஆன்மீகம்தான்.

    ஆன்மீகமும் விஞ்ஞானமும் ஒன்றுக் கொன்று எதிர் மறை ஆனவை அல்ல. இரண்டுமே ஒன்றுதான். மனிதனின் அஞ்ஞான இருள் நீக்கி மெய்ஞான ஒளி அளிக்கும் விஞ்ஞானமே ஆன்மீகம்.”

    (தொடரும்……)

    Share
  • ஆன்மீகமும் நானும் (6)

    நடராஜன் கல்பட்டு

    சாராயத்தில் பிறக்குதோ சக்தி

    எனது சக ஊழியர்களில் ஒருவர் பரஞ்சோதி. நான் விஜயவாடாவில் இருந்த போது காகிநாடாவில் பணி புரிந்து வந்தவர் அவர்.

    பரஞ்சோதியின் வாழ்க்கையில் ஒரு சோகம். அவரது மனைவிக்கு அடிக்கடி வலிப்பு வந்து விடும். அம்மாதிரி ஒரு முறை வந்தபோது எரியும் அடுப்பின் மீது விழுந்து அவளது கால்களில் பலத்த தீக் காயம் கூட ஏற்பட்டு விட்டது.

    அவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் இதோ.

    பித்தாபுரம் ஆந்திர மாநிலத்தின் கிழக்குக் கோதாவரி ஜில்லாவில் சுமார் 40 முதல் 50 ஆயிரம் ஜனத்தொகை கொண்ட ஒரு சிற்றூர். அதற்கு தக்ஷிண காசி என்றுகூட ஒரு பெயர் உண்டு. அங்கு ஒரு ‘ஞானி’ பிறர் குறைகளைத் தீர்த்து வைக்கிறார் என்று கேள்விப்பட்ட பரஞ்சோதி அந்த ‘ஞானி’ இருந்த இடத்தினைச் சென்றடைந்தார். அவர் முறை வந்த போது உள்ளே சென்று ‘ஞானி’ முன் அமர்ந்தார்.

    ‘ஞானி’ தன் கையில் இருந்த இரண்டு துண்டுக் காகிதங்களில் ஒன்றைப் பரஞ்சோதியிடம் தந்தார். மற்றொன்றைச் சுருட்டி ஒரு மூலையில் விட்டெறிந்தார். “உனக்குப் பிடித்தமான ஒரு பூவின் பெயரை எழுது. அதை இப்போது சுக்கு சுக்காகக் கிழித்துப் போடு. இப்போது மூலையில் சுருட்டியபடிக் கிடக்கும் சீட்டினைப் பிரித்துப் பார்” என்றார்.

    சொன்னதைச் செய்தார் பரஞ்சோதி. என்ன ஆச்சரியம் அவர் எழுதிய பூவின் பெயர் அந்த சீட்டில்!

    அடுத்ததாக, “உன் சட்டைப் பையில் உள்ள ஒரு நாணய்த்தை எடுத்துக் கைக்குள் நன்றாக மூடி வைத்துக் கொள்” என்றார். பரஞ்சோதியும் அவர் சொன்னதைச் செய்தார். அடுத்த நிமிஷம் ஞானி தன் கண்களையும் கைகளையும் மூடிக் கொண்டு உடலின் எல்லாத் தசைகளையும் இறுக்கிக் கொண்டு பற்களை நற நறவென்று கடித்தார். அடுத்த வினாடி கண்களைத் திறந்து பரஞ்சோதியைப் பார்த்து, “இப்போது உன் கையைத் திற” என்றார்.
    கையைத் திறந்த பரஞ்சோதிக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. காரணம் அவர் கையில் இருந்த நாணயம் கண்டபடி கசக்கிய காகிதம் போலக் காணப் பட்டது.

    “என் தக்ஷிணையைக் கொடு” என்றார் ஞானி. பரஞ்சோதி பத்து ரூபாயைக் கொடுத்தார்.

    “போதாது. உன்னிடம்தான் பணம் இருக்கிறதே. கொடு” என்றார் ஞானி.

    இன்னுமொரு பத்து ரூபாயயை அவர் கையில் வைத்து விட்டு கிளம்பத் தயாரானார் எனது நண்பர்.

    “எவ்வொளவு நாட்கள் இவ்வூரில் இருப்பாய் நீ? மீண்டும் வந்து பார் என்னை.”

    “இன்று இரவே கிளம்புகிறேன்.” உண்மையில் அவ்வூரில் அவர் செய்ய வேண்டிய வேலைகள் பாக்கி இருந்தன.

    மறு நாள் மாலை பரஞ்சோதி கடைத் தெருவில் காரில் இருந்து இறங்கி நடந்து கொண்டிருந்தபோது அவர் தோள்மீது பின்னிருந்து ஒரு கை பட்டது.

    “நேற்றே போகப் போவதாகச் சொன்னாய்?”

    திரும்பிப் பார்த்தார் பரஞ்சோதி. அங்கு ‘ஞானி’.

    “வேலை கொஞ்சம் பாக்கி இருந்தது. அதான்…..” இழுத்தார் பரஞ்சோதி.

    “சரி. ரூபாயை எடு. எனக்கு சாராயம் சாப்பிடத் தினமுன் பணம் வேணும்.”

    பத்து ரூபாயைப் பையில் இருந்து எடுத்து அவர் கையில் கொடுத்தார்.

    “போதாது இது. இன்னுமொரு பத்து ரூபாய் எடு.”

    பேசாமல் இன்னுமொரு பத்து ரூபாயை அவர் கைகளில் கொடுத்து விட்டுக் காரில் ஏறி காகிநாடா திரும்பினார் பரஞ்சோதி.

    சாராயம் கொடுக்குதோ அவருக்கு சக்தியினை?

    இப்படிப் பட்ட ‘தேவ தூதர்கள்’ பலர் இருக்கின்றார்கள் நம் நாட்டில்! அவர்களை நம்பி ஏமாறுகிறவர்களும் இருக்கிறார்கள் பல லட்சக் கணக்கில்!!!

    சித்துக்கள் சில
    செய்து காட்டி
    கும்பல் சேர்த்தே
    தண்டல் காரனாய் மாறு கின்றார்
    இன் நாளில் பலர்

    வெளுத்த தெல்லாம் பாலு மல்ல காவி
    உடுத்தவ ரெல்லாம்
    சாமியாரு மல்லர்

    சாமி யாரென அறிந்திடல் வேண்டுமா
    உன்னுள்ளே உறை கின்றார்
    என்னுள்ளே உறை கின்றார்
    எல்லா வற்றிலு முறை கின்றார்

    மந்திரம் வேண்டாம்
    தந்திரம் வேண்டாம்
    கண்டிடத் தானவரை

    அன்பும் ஆதரவும் தந்திடு நீ
    துன்பத்தி லுழல் வோர்க்கே
    கண்டிடலாம் உன்னுள் குடி
    கொண்ட ஈசனை நீ

    (தொடரும்…..)

    நடராஜன் கல்பட்டு

    Share
  • ஆன்மீகமும் நானும் (5)

    நடராஜன் கல்பட்டு

    கோவிந்தன் எனது சக ஊழியர், அவர் ஹைதராபாதில் வேலை பார்த்து வந்த போது அவருடைய பெரிய மகள் வயதுக்கு வந்தாள். அந்த சமயம் ஏதோ ஒன்று அவளது மூளையைத் தாக்கி விட்டது. விழித்திருக்கும் போதெல்லாம் கூண்டில் அடை பட்ட புலி போல அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே இருப்பாள். கோவிந்தனும் பார்க்காத வைத்தியர் இல்லை. ஆனால் அவள் நிலையில் ஒரு மாற்றமும் தெரிய வில்லை.

    ஒரு நாள் கோவிந்தன் சொன்னார், “நடராஜன் புதுக்கோட்டை வரணும். அவ்விட ஒரு ஆளு கொவில் ஒண்ணுலெ குறி, பரிகாரங்கள் சொல்லுதாம்.”

    பதிலுக்கு நான் சொன்னேன், “கோவிந்தா இவங்கெள்ளாம் ஏமாத்துக் காரங்க. ஒன் பொண்ணு குணமாகணும்னா நல்ல வைத்தியரைப் பாரு. மனசுக்கு நிம்மதியோ, இறைவன் அருளோ வேணுமா கோவிலுக்குப் போ. அல்லது வீட்டிலேயே ஆண்டவனெ நினெ, பூஜெ பண்ணு” என்று.

    கோவிந்தன் அதைக் கேட்கும் நிலையில் இல்லை. என்ன செய்ய? அவர் நிலமை அப்படி. நீரில் மூழ்குபவன் ஒரு துரும்பு கிடைத்தாலும் அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுவான் என்று சொல்வார்களே அதுதான் அவர் நிலை அப்போது. இருவரும் புதுக்கோட்டைக்குக் கிளம்பினோம்.

    ஊருக்குத் தெற்கே சுமார் 5 கிலோ மீடர் தூரத்தில் ஒரு சிறிய கிராமம். அங்கு பூட்டிய நிலையில் ஒரு பழய கோவில். ஒரு காலத்தில் அது பிரசித்தமான ஒன்றாக இருந்திருக்க வேண்டும், தேர், திருவிழா என்று. காரணம் அங்கு ஒரு தேர் முட்டி இருந்தது. ஆனால் தேர் இல்லை. அதை உடைத்து பண்டைய கலைப் பொக்கிஷங்களாக விற்றிருக்க வேண்டும்.

    தேர் முட்டி அருகே ஒரு பெரிய கீத்துக் கொட்டகை. அது கதவு வைத்த தடுப்பினால் இரண்டாகப் பிரிக்கப் பட்டு இருந்தது. முன் பகுதியில் இரு மேஜைகள் ஒரு நாற்காலி. ஒரு மேஜை மீது ஒரு தடிமனான நோட்டுப் புத்தகமும், ஒரு திறந்த பெட்டி நிறைய துண்டுக் காகிதங்களும். பக்கத்து மேஜையின் மீது ஒரு கூடை நிறைய எலுமிச்சம் பழங்கள், மற்றும் ஒரு காலி அட்டைப் பெட்டி நாற்காலியில் ஒரு ஊழியர்.

    முதல் முறை வருபவர்கள் தங்கள் பெயர், விலாசத்தினை ரூபாய் ஐந்து கொடுத்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். உங்கள் பதிவு எண் இரண்டு சீட்டுகளில் குறிக்கப் பட்டு, ஒன்று உங்கள் கையிலும் மற்றொன்று பக்கத்து மேஜை மீது வைக்கப் பட்டுள்ள காலிப் பெட்டியிலும் போடப் படும். அவை அவ்வப்போது வேறு ஒரு ஊழியர் மூலம் உள்ளே எடுத்துச் செல்லப் படும். உங்கள் கையில் இரண்டு எலுமிச்சம் பழங்கள் கொடுக்கப் படும். அவற்றை எடுத்துக் கொண்டு உள்ளேசென்று அமைதியாய் அமர வேண்டும்.

    இரண்டாவது மூன்றாவது முறை வருபவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தங்களிடம் உள்ள சீட்டினைக் காட்டி உள்ளே செல்லலாம். உங்களது எண் ஒரு சீட்டில் குறிக்கப் பட்டு உள்ளே அனுப்பப் படும். உள்ளே செல்லுமுன் இரண்டு எலுமிச்சம் பழங்களுக்கு ரூபாய் இரண்டு கொடுத்து வாங்கிச் செல்ல வேண்டும்.

    (ஊருக்குள்ளே மார்கெட்டில் அந்நாட்களில் ஒரு ரூபாய்க்கு பத்து முதல் இருபது வரை கிடைக்கும் எலுமிச்சம் பழங்கள்!)

    நாங்கள் இருவரும் எலுமிச்சம் பழ சகிதம் உள்ளே சென்று அமர்ந்தோம்.

    கொட்டகை நடுவில் ஒரு கம்பளி மீது உடலில் பட்டை பட்டையாக விபூதியும், நெற்றியில் ஒரு ரூபாய் அளவில் குங்குமமும் வைத்துள்ள ஒருவர். அவர்தான் குறி, பரிகாரம் சொல்லும் பூசாரி.. அவர் முன்பு பள பளவெனத் தேய்க்கப் பட்ட ஐந்து செப்புத் தட்டுகள் சுமார் பத்து அங்குலெ விட்டத்தில். ஒன்றிலே விபூதி. ஒன்றில் குங்குமம். மூன்றாவதில் ஒரு சிறிய வெள்ளி வேல். நான்காவதில் ஒரு மோதிரம். ஐந்தாவதில் எண்கள் எழுதப் பட்ட சீட்டுகள்.

    ஒரு சீட்டினை எடுத்து அதில் உள்ள எண்ணை உரக்கப் படிக்கிறார். அந்த எண் சீட்டை வைத்திருப்பவர் எழுந்து நிற்கிறார்.

    “முன்னாடி வா. இங்கெ வந்து ஒக்காரு. ஒனக்கு என்ன கொறென்னு சொல்லு. ஒம் பேரு, கோத்திரம், நட்சத்திர்ம் அதையும் சொல்லு.”

    எழுந்து நின்றவர் பூசாரி முன் வந்து உட்காருகிறார். “எம் பேரு முருவனுங்க. சிவ கோத்திரம். அஸ்த நட்சத்திரங்க.”

    “சரி… என்ன கஷ்டம் அஸ்த நட்சத்திரக் காரனுகுன்னு சொல்லு.”

    “என் நெலெத்துக்குத் தண்ணி பாச்ச கெணறு வெட்டினேங்க.”.

    “என்ன தண்ணி வல்லியா?”

    “ஆமாங்க. நீங்கதான் எதுனா செஞ்சு தண்ணி வர வளிக்கணுங்க.”

    “சரி பாக்கலாம் என்ன பண்ணலாம்னு.”

    தட்டில் இருக்கும் மோதிரத்தை எடுத்துக் காதருகே வைத்துக் கொள்ளுகிறார். கடவுளுடன் நேரில் தொலை பேசி வழியே பேசுகிறார். (செல் போன்கள் வந்திடாத காலம் அது!)

    “ருதுதும் சந்தத்ய. முருகன் நாமஸ்ய. சிவ கோத்ரஸ்ய. ஹஸ்த நக்ஷத்ரஸ்ய… ஹான்… ஹான்… கெணறு… ரத்த காட்டேரியா ஹான்… ஹான்.. என்ன பண்ணலாம்? அப்பிடியா? சரி அப்பிடியே சொல்றேன் முருகன் கிட்டெ.”

    “முருகா… அந்தக் கெணத்துலெ ஒரு ரத்தக் காட்டேரி இருக்கு அதுனாலெ தான் தண்ணி வரலெ. நாம அந்தக் கெணத்தெ ஆழப் படுத்த கடப்பாரெயெ வெச்சோம்னா அது ஒன்னெயுன் என்னையும் ரத்த ரத்தமா வாந்தியெடுக்க வெச்சு சாக அடிச்சிடும்.”

    “ஐயா நீங்கதான் எப்படியாவது இதுக்கு ஒரு வளி சொல்லணுங்க. தண்ணி இல்லாமெ பயிருங்க கருகிப் போயிடுதுங்க.”

    “அப்பிடியா சரி பாக்கலாம்.” மீண்டும் தொடர்கிறது இறவனுடன் தொலை பேசி சம்பாஷணை.

    “ருதுதும் சந்தத்த்ய. முருகன் நாமஸ்ய. ஹான்… ஹான்… அதே கெணறு கேசுதான். என்ன பண்ணலாம்? எப்படியாவது முருகனுக்குத் தண்ணி வரவழிச்சிச்சுக் கொடுகணுமே. ஹான்… ஹான். அப்பிடியே பண்ணச் சொல்றேன்.”

    முருகன் கையில் இருந்த இரு எலுமிச்சம் பழங்களையும் வாங்கி விபூதித் தட்டில் வைத்து, உதடு ஏதோ முணு முணுத்துக் கொண்டிருக்க, வெள்ளி வேலால் சிறிது விபூதி எடுத்து அவற்றின் மேல் தூவி, சிறிதளவு குங்குமத்தினை எடுத்து அவற்றின் மீது வைத்து முருகன் கையில் கொடுக்கிறார் பூசாரி.

    “முருகா இந்த ரெண்டு எலுமிச்சம் பழத்தையும் பத்திரமா வீட்டுக்குக் கொண்டு போ. ஒண்ணெ வீட்டுலெ மாட்டி இருக்குற சாமி படத்த்க்கு முன்னாடி வை. இன்னோண்ணெ ரெண்டா வெட்டி ஒரு துண்ட கெணெத்துக் குள்ளெ போடு. இன்னோரு துண்டெ அங்கெ இருக்குது பாரு ஒத்தடிப் பாதெ அதுலெ விட்டெறி. அப்புறமா கெணத்தெ ஆழப் படுத்து. தண்ணி பீச்சிகிட்டு வரும் பாரு.”

    முருகனுக்குப் பரம சந்தோஷம் கிணற்றில் அப்போதே தண்ணீரைப் பார்த்தது போல. கூட்டத்தில் ஒரு சல சலப்பு. “எவ்வொள் கரெக்டா சொல்றாரு நேரெ பாத்தாப்புள? சாமி படம்… ஒத்தடிப் பாதெ!!!”

    சாமி படம் இல்லாத வீடு இருக்காது அந்த நாளுலெ. ஒத்தடிப் பாதெ இல்லாத வயல் கெணறும் இருக்காது.

    இதே பாணியில் இன்னும் பல.

    கோவிந்தனுக்கும் ஏதோ ஒரு பரிகாரத்தினைச் சொன்னார் அவர்.

    என் மனம் கொதித்தது. ‘இவர்களையெல்லாம் கட்டி வைத்து உதைத்தால் என்ன?’ என்று. ஆனால் அதைச் செய்ய முயன்றாலோ என்னைத்தான் கட்டி வைத்து உதைப்பார்கள் மக்கள்!

    கடைசியில் ஒரு அறிவிப்பினை அளிக்கிறார் பூசாரி ஒரு விமானப் பயணச் சீட்டினை அனைவர் கண்கள் முன்னும் ஆட்டிய படி, “அடுத்த வாரம் சாமி சிங்கப்பூரு போறாரு. ஒங்களுக்குத் தெரிஞ்சவங்களுக்குக் குறி கேக்கணும்னாலும் உடனே கூட்டியாந்துடுங்க.”

    என்ன உலகம் இது? இவர்களெல்லாம் ‘இறைவனின் தூதர்கள்’!!!

    தொடரும்……

    நடராஜன் கல்பட்டு

    Share
  • ஆன்மீகமும் நானும் -4

    நடராஜன் கல்பட்டு    

     

    1964 68 களில் நான் பங்களூரில் வேலை பார்த்து வந்தேன்.  அப்போது எங்கள் வீட்டுக்காரர் வீட்டிற்கு ……. மடத்தில் இருந்து ஒரு ….. ஆச்சாரியார் வந்திருந்தார்.  வீட்டுக்காரரின் சிற்றன்னை எங்களை வந்து …. ஆச்சாரியாவை நமஸ்கரித்து ஆசி வாங்கிக் கொள்ள அழைத்தாள்.  எனக்கு அங்கு போவதில் ஈடுபாடு இல்லை.  ஆனால் என் மனைவி விடுவதாக இல்லை.

     

    அணிந்திருந்த சட்டை, கால் சட்டையுடன் கிளம்பினேன்.  மனைவி நான் பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம் அணிந்து வர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள்.  வேறு வழி இன்றி பெட்டியில் இருந்து என் திருமணத்தின் போது எனக்களிக்கப் பட்ட பட்டு வேஷ்டி அங்க வஸ்திரத்தினை அணிந்து கொண்டேன்.  சுமார் இரண்டு அங்குல ஜரிகை கொண்டவை அவை.

     

    அங்கு நல்ல கும்பல்.  நான் உள்ளே நுழைவதைக் கண்ட …. ஆச்சார்யா, வாங்கோ… வாங்கோ… இப்பிடி முன்னாடி வந்து உக்காருங்கோ.என்று என்னை அழைத்தார்.  என்னுள் எழுந்த முதல் சந்தேகம் மரியாதை எனக்கா அல்லது 2 அங்குல ஜரிகை வேஷ்டிக்கா?

     

    எங்கெ வேலெ பாக்கறேள்?”

     

    பர்மாஷெல் கம்பெனிலெ.

     

    கொழெந்தேள் இருக்கா?”

     

    இருக்கு.

     

    எத்தெனெ?”

     

    மூணு.

     

    எத்தெனெ ஆண் கொழெந்தெ?  எத்தெனெ பெண் கொழெந்தெ?”

     

    மூணும் பொண்ணுகள்.

     

    ஏன் ஆண் கொழெந்தே வாணாமா?  அபேக்ஷை இல்லியா?  எங்க மடத்துக்கு வாரும்.  ஆண் கொழெந்தெ கெடெய்க்கும்.

     

    அவர் மீதிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் இந்த வார்த்தை களோடு பறந்து விட்டது.  ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் வித்தியாசம் காணும் இவரெல்லாம் ஆன்மீகவாதியா?’ என்ற கேள்வியே எழுந்தது என்னுள்ளே.

     

    சில சமயம் கண் சிமிட்டிக் கொண்டே என் மனைவியைக் கேட்பேன்,  பையன் வேணுமா  …. மடத்துக்குப் போயிட்டு வரெயா?” என்று.

     

    இம்மாதிரியான ஆன்மீகவாதிகள் நம் நாட்டில் ஆயிரக் கணக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.  அவ்வப்போது எங்காவது ஒருவரின் முகத்திரை கிழிக்கப் படுகிறது.  இருந்தாலும் அவர்களுக்குச் சேரும் கும்பல் குறைவதில்லை.

    உங்களுக்கு இறைவனைத் துதிக்க வேண்டுமா?  துதியுங்கள்.  ஆனால் இடைத் தரகர்கள் வழியாக அல்ல.  நேரடியாக.  இறைவனோடு நீங்கள் பேசலாம்.  உங்கள் பேச்சு அவர் காதுகளில் விழும்.  காரணம் அவர் எங்கும் இருப்பவர்.  எல்லாம் அறிந்தவர்.  எல்லா சக்தியும் கொண்டவர்.

     

     

    (தொடரும் ….)

    Share
  • ஆன்மீகமும் நானும் (3)

    நடராஜன் கல்பட்டு

    மறு நாள் ஆறரை மணிக்கே நான் உபநிஷத் வகுப்பு நடக்கும் இடத்தை அடைந்து முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டேன். சரியாக 7-00 மணிக்கு சுமார் 25 முதல் 28 வயது நிரம்பிய, வெள்ளை வேஷ்டியும் ஜிப்பாவும் அணிந்த இளைஞர் ஒருவர் மேடையை வந்தடைந்தார். (நேரம் காத்தல் என்றால் என்ன என்பதை சின்மயா மிஷனிடம்தான் கற்க வேண்டும்.)

    எல்லோரும் எழுந்து நின்று வணக்கம் சொல்லி அமர்ந்தோம்.

    கம்பீரமான, ஆனால் அதே சமயம் சாந்தமான குரலில் அவர் பேச ஆரம்பித்தார், “உங்களில் எவ்வளவு பேர் இதற்கு முன் சின்மயா மிஷன் வகுப்புகளில் பங்கேற்றுக் கொண்டுள்ளீர்கள்? நான் அளிக்கப் போகும் முன்னுரை உங்கள் பதிலைப் பொருத்து இருக்கிறது” என்றார் அவர்.

    உடனே நான் எழுந்து, “பிரும்மச்சாரி அவர்களே இந்தக் கூட்டத்தில் நான் ஒருவன் மட்டுமே இதற்கு முன் சின்மயா மிஷன் வகுப்புகளில் பங்கேற்காதவன் என்று இருந்தாலும் கூட தயவு செய்து முழுமையான முன்னுரையை அளியுங்கள்” என்று கேட்டேன்.

    அவரும், “சரி” என்று சொல்லித் தன் பேச்சை ஆரம்பித்தார்.

    “நேற்றைய தினசரியை நீங்கள் திறக்கிறீர்கள். அதனுள்ளே ஒரு துண்டுப் பிரசுரம். ‘பிரும்மச்சாரி ஹரிதாஸ், அணு பௌதீக சாஸ்திரத்தில் தங்கப் பதக்கம் பெற்ற மேல் நிலைப் பட்டதாரி, கீதை பற்றிய உரை நிகழ்த்துகிறார் இன்று மாலை 6-00 மணியளவில் ……… அரங்கில். நாளை காலை 7-00 மணி முதல் உபநிஷத் வகுப்பு ஆரம்பம். சின்மயா மிஷன், விஜயவாடா’.

    அணு விஞானம் பற்றிப் படித்தவர் ஆன்மீகம் பற்றி என்ன பேசப் போகிறார் கட்டாயம் சென்று பார்க்க வேண்டும் நான் என்று நினைத்து வீட்டை விட்டுக் கிளம்ப ஆரம்பிக்கிறீகள் நீங்கள். அப்போது பல நாட்களாக ‘வருகிறேன் வருகிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்த உங்கள் நண்பர் தன் மனைவி குழந்தையுன் வருகிறார் உங்கள் வீட்டிற்கு. அவரை வரவேற்று உள்ளே செல்கிறீர்கள். அவர் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தா சம்பந்தமின்றி பதிலளிக்கிறிர்கள். உங்கள் உடல் அங்கிருந்த்தே யொழிய மனம் இங்கு இருந்தது. இதுதான் இன்று நம் எல்லோரிடமும் ஏற்படும் மனதுக்கும் உடலுக்குமான போராட்டம். இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவது எப்படி இதை நமக்குச் சொல்லித் தருவதுதான் சனாதன தர்மம் என்றழைக்கப்படும் நமது இந்து மதம். இந்த அறிவுரைகள் வேத உபநிஷத் மந்திரங்களாகவும், புராண இதிகாசங்களாகவும் தொன்று தொட்டு வந்து கொண்டிருக்கின்றன.”

    இந்த வார்த்தைகளை அவர் சொன்ன போது என் உடலின் ஒவ்வொரு ரோமமும் எழுந்து நின்றது என் உடலில். அன்று முதல் அடுத்த பத்து நாட்களுக்கு முதல் வரிசையில் நான்.

    முதல் நாள் பேசிய பேச்சில் எனக்கு எழும் சந்தேகங்களை ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்டு செல்லுவேன் பிரும்மச்சாரியிடம் கேட்க வேண்டும் என்று.

    என் மனத்தில் எழுந்த சந்தேகங்கள் அவருக்கு எப்படித் தெரியுமோ. நான் கேட்காமலேயே அந்த சந்தேகங்களுக்கான விளக்கங்களை முதலில் தந்து விட்டுப் பின் தன் அன்றைய பேச்சினைத் துவக்குவார்.

    எல்லா நல்ல விஷயங்களுமே ஒரு நாள் முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும் என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி. பத்து நாட்கள் சொற்பொழிவும் முடிந்தது.

    “இந்த நிகழ்ச்சி பற்றிய தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புவோர் மேடைக்கு வந்து பேசலாம்” என்று அறிவித்தார்கள்.

    அன்று வரை மேடை ஏறிப் பேசாத நான் அந்தப் பத்து நாட்களில் அனுபவித்த ஆனந்தத்தைப் பற்றியும் நிகழ்ச்சி முடிவடைந்ததால் என் மனத்துள் உண்டான வருத்தத்தைப் பற்றியும் சில வார்த்தைகள் பேசினேன்.

    பத்து நாட்களிலும் பக்தர்கள் சிலர் பழங்களைக் கொண்டு வந்து பேச்சாளர் கையில் கொடுத்து விட்டு நமஸ்காரம் செய்து விட்டுச் செல்வார்கள். முதலில் நமஸ்கரிப்பவருக்கு விபூதிப் பிரசாதம் கிடைக்கும், பின் வருபவர்களுக்கு முன்னவர் கொடுத்த பழங்கள் கிடைக்கும். எதையும் உள்ளே எடுத்துச் செல்வதில்லை. கடைசீ நாளன்று பிரும்மச்சாரி இரண்டு ஆப்பிள் பழங்களை எடுத்துத் தன் தோள் பைக்குள் போட்டுக் கொண்டார். நான் நினைத்தேன் அவர் ரயில் பயணத்தின் போது சாப்பிடுவதற்காக எடுத்து வைத்துக் கொள்கிறார் போலும் என்று.

    கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் கலைந்தது. பிரும்மச்சாரி, “நான் நடராஜனுடைய வண்டியில் வருகிறேன்” என்றார்.

    “ஐந்து நிமிஷத்தில் வருகிறேன்” என்று சொல்லி விட்டு அவசர அவசரமாக வீட்டுக்குப் போய் எனது மனைவியையும் அப்போது என் கூட வசித்து வந்த இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு அரங்கிற்குத் திரும்பினேன். அன்று வரை நான் அவர்களை அங்கு அழைத்துச் சென்றதில்லை.

    பின் ரயில் நிலையத்தில் வண்டி கிளம்பும் போது பிரும்மச்சாரி தன் ஜோல்னாப் பைக்குள் கையை விட்டு இரண்டு ஆப்பிள்களையும் எடுத்து என் மகள்களிடம் கொடுத்தார்.

    அவருக்கு எப்படித் தெரிகிறது என் மனத்துள் நடப்பவை எல்லாம்? எப்படித் தெரிகிறது அவருக்கு அவரை வழி அனுப்ப என்னுடன் வசித்து வந்த இரு பெண்களும் ரயில் நிலையம் வருவார்கள் என்று? அதிர்ச்சியில் ஆழ்ந்தேன் நான்.

    சின்மயா மிஷனோடு எனக்கு ஏற்பட்ட ஈடுபாடு பற்றியும் நான் எடுத்துக் கொண்ட பங்கினைப் பற்றியும் எழுதும் முன் நான் வாழ்க்கையில் கண்ட, கேள்விப் பட்ட சில போலி ஆன்மீகவாதிகள் பற்றி எழுத நினைக்கிறேன். அதன் பின்னர் மீண்டும் திரும்புகிறேன் சின்மயா மிஷனுக்கு.

    (தொடரும்……)

    Share
  • ஆன்மீகமும் நானும் (2)

    நடராஜன் கல்பட்டு

    எனக்கு என்றுமே ஆன்மீகவாதிகளைக் கண்டால் ஒரு காரணம் புரியாத வெறுப்பு. அவர்களிடம் எதோ ஒரு சக்தி இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை நான். அதை அவர்களில் பலரும் தங்கள் வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவே உபயோகிக்கிறார்கள் என்று தோன்றும். இந்நாட்களில் சில ஆன்மீக வாதிகள் மக்களுக்குத் தேவையான பள்ளிகள், கல்லூரிகள், வைத்திய சாலைகள், மக்களின் குடிநீர் பிரச்சினைகளைத் தீர்த்தல் என்ற நல்ல காரியங்களிலும் ஈடுபடுகிறார்கள். அது மிகவும் நல்லதொரு விஷயம்.

    ‘உங்களுக்கு இறைவனைக் காண வேண்டுமா? அவன் உங்கள் உள்ளேயே இருக்கிறான். மற்றெல்லா உயிர்களிடத்தும் உறைகிறான். அவனைக் காண எங்கும் அலைய வேண்டாம். எவர் உதவியையும் நாட வேண்டாம். உண்மையாய் இருந்து எல்லா உயிர்களிடத்தும் அன்பினைப் பொழி. அது போதும்’ என்று தோன்றும் எனக்கு.

    1973ல் விஜயவாடாவில் நான் பணிபுரிந்து வந்தேன். ஒரு நாள் அன்றைய தினசரியுடன் ஒரு துண்டுப் பிரசுரம் வந்தது. “பிரும்மச்சாரி ஹரிதாஸ், விஞ்ஞானத்தில் மேல் நிலைப் பட்டதாரி, ஸாஹா இன்ஸ்டிட்யூட்டில் அணு விஞ்ஞானத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர், பகவத் கீதை சொற்பொழிவுகள் ஆற்றுவார். இன்று மாலை 6-00 மணி அளவில் …… அரங்கில் துவங்குகிறது. நாளை காலை 7-00 மணி அளவில் உபநிஷத் வகுப்பும் தொடங்குகிறது. சின்மயா மிஷன், விஜயவாடா” என்று.

    என்னுள்ளே ஒரு ஆர்வம். “படித்தது அணு விஞ்ஞானம். பேசப்போவது பகவத் கீதையும், உபநிஷத்தும் பற்றியா? அப்படி என்ன பேசப் போகிறார் இவர்? நான் கட்டாயம் சென்று பார்க்க வேண்டும். அவர் பேசுவதைக் கேட்க வேண்டும். ஆன்மீகம் பற்றிய எனது சந்தேகங்களை அவரிடம் கேட்க வேண்டும்” என்று நினைத்தேன்.

    அன்று மாலை 5-30 மணிக்கு நான் கிளம்பத் தயார் ஆகிக் கொண்டிருந்தேன். அப்போது வாசல் கதவினைத் திறந்து கொண்டு வேறொரு எண்ணைக் கம்பெனி நண்பர் ஒருவர் தன் மனைவி குழந்தையுடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். அவர் பல நாட்களாக எங்கள் வீட்டிற்கு வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தவர். ஆனால் வரவில்லை. கடைசியாக அவரை நான் சந்தித்த போது, “இன்னும் பத்து நாட்களுள் நீங்கள் எங்கள் வீட்டிற்கு வராவிட்டால் நான் இனி என்றுமே உங்கள் வீட்டிற்கு வரமாட்டேன்” என்று சொல்லி இருந்தேன்.

    “எங்ஙேயோ கிளம்பிக் கொண்டிருக்கிறாய் போல இருக்கிறது. நாங்கள் இன்னொரு நாள் வருகிறோம்” என்றபடி திரும்ப முயன்றார். நான், “இல்லை இல்லை. வாருங்கள் உள்ளே” என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றேன். மனைவியிடம் இரவு உணவும் தயார் செய்யச் சொன்னேன். அவர்களும் உள்ளே வந்தார்கள்.

    பல விஷயங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் பல சமயம் அவர் கேட்ட கேள்விகளுக்கும் நான் அளித்த பதில்களுக்கும் சம்பந்தம் இல்லாதிருந்தது. காரணம் அன்று என் உடல் அங்கு இருந்ததே ஒழிய என் உள்ளம் கீதை சொற்பொழிவு நடந்து கொண்டிருந்த அரங்கில் இருந்தது. நண்பரும் என் தவிப்பைப் புரிந்து கொண்டு கிளம்புவதாகச் சொன்னார். அவரைத் தடுத்து நிறுத்தினேன்.

    மறு நாள் காலை………..

    தொடரும்……

    Share
  • ஆன்மீகமும் நானும் – 1

     

    நடராஜன் கல்பட்டு

     

    ஆன்மீகமும் நானும் என்னும் தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை எழுத நினைக்கிறேன்.  எனது நோக்கம் யார்மனதையும் புண்படுத்துவதோ அல்லது அவர்களை என் வழிக்குத் திருப்ப வேண்டும் என்பதோ இல்லை.  இவ்விஷயம்குறித்து என் மனதில் தோன்றிய மற்றும் தோன்றும் சில கருத்துக்களை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்என்ற அவாவில்தான் இதைத் தொடங்குகிறேன்.

     

    எனக்குப் பத்துப் பன்னிரெண்டு வயதிருக்கும் போது எனது தந்தை எனக்கும் எனது மூன்று அண்ணன்களுக்கும் கையெழுத்துப் பிரதிகள் தயார் செய்து கொடுத்தார்.  சுமார் ஏழு பக்கங்களைக் கொண்ட அதில் பிள்ளையார், முருகன், சிவன், விஷ்ணு, ராமர், பார்வதி, சரஸ்வதி, சனீஸ்வரன் இவார்கள் மீதான சமிஸ்கிருத துதிப் பாடல்கள் இருந்தன.  அவற்றை காலையிலும் மாலையிலும் எங்களை படிக்கச் செய்வார்.  இது நடந்தது எழுபத்தைந்து எண்பது வருடங்களுக்கு முன்பு.  சிறு வயதில் கற்றவை என்பதால் மனப் பாடம் ஆகிவிட்டன அந்தப் பாடல்கள்.

     

    மேலே சொன்னவற்றோடு பின் நாட்களில் ஒரு மராட்டிய ஆன்மீகவாதி சொல்லித் தந்த ஒன்று (சொற்களில் இருந்து அது கண்ணன் மீதானது என்று நினைக்கிறேன்), மங்களூரில் இருந்து பேருந்தில் உடுப்பி சென்ற போது பக்கத்து இருக்கையில் பயணித்த ஒருவர் சொல்லிக் கொடுத்த திருப்பதி வெங்கடாசலபதி மீதான பாடல் ஒன்று மற்றும் என் மனைவி தினமும் சொல்லும் துதிப் பாடல்களில் இருந்து காசி அன்னபூரணி மீதான ஒரு பாடல் இவை மூன்றும் சேர்ந்து கொண்டன.

     

    அன்றிலிருந்து இன்று வரை நான் தினமும் காலையில் எழுந்து பல் துலக்கிய உடன் செய்யும் முதல் வேலை வீட்டில் உள்ள இறைவன் படங்களுக்கு முன்னே மேற்சொன்ன துதிப் பாடல்களை ஒரு முறை மனதுக்குள் சொல்லி வணங்குவதுதான்.

     

    எனது சித்தப்பா மகன் ஒருவன்.  என்னை விட இரு வயது பெரியவன்.  மாம்பலம் ஸ்டேஷனில் இருந்து இறங்கியதும் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள முதல் வீட்டில் (அது ஒரு காலத்தில் என சித்தப்பா வீடு)புத்தகக் கடை வைத்திருந்தான். விஸ்வனாத் அண்ட் கம்பெனி என்ற பெயரில்.

     

    வியாபாரி என்றால் அவ்வப்போது பண முடையோ வேறு கஷடங்களோ வரத்தானே செய்யும்.  அவன் சொல்லுவான், நடராஜா எனக்கு ஒரு மனக் கஷ்டம்னா நான் நேரெ வட பழனி கோவிலுக்கு நடந்து போவேன்.  முருகனெச் சுத்தி வர போது என் மன்சுலெ இருக்கற கஷ்டத்தெச்  சொல்லுவேன்.  அங்கெ இருக்கறது சாமியா இருந்தா என் கஷ்டத்தெத் தீத்தூடுவார்.  இல்லெ சில பேர் சொல்றாப்புளெ அது வெறும் கல்லா இருந்தா அப்பொவும் அது எனக்கு நல்லது தான் பண்ணும்.  எப்படீங்கறெயா?  அது மனுஷன் மாதிரி என் கஷ்டத்தெ இன்னோரு ஆளு கிட்டெ போய், டேய் விஸ்வனாதன் பணக் கஷ்டத்துலெ இருக்கான்.  அவன் கிட்டெ ஜாக்கிறதையா இருந்துக்கோன்னு சொல்லி அவனையும் பணப் பைய இறுக்கி முடிச்சுப் போட வைக்காது என்பான்.

     

    விஸ்வனாதனை நான் இவனல்லவோ ஒரு உண்மையான நடைமுறை தெரிந்த ஆன்மீகவாதி,  இறைவன் மீது என்ன ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறான் என்று நினைப்பேன்.

     

    பெரும் பணச் சிலவு செய்து ஒரு கோவிலுக்குப் போகிறோம்.  பல மணி நேரம் வரிசையில் நின்று இறைவன் சன்னதி அடைகிறோம்.  இறைவன் உருவத்தினை நாம் காணுமுன் வெளியேற்றப் படுகிறோம் அங்கு இருப்பவர்களால்.

     

    தெய்வ வழிபாடென்பதே இன்நாட்களில் ஒரு பெரிய வியாபாரமாகி விட்டது.  இறைவன் பெயர் சொல்லி பணம் சேர்ப்பவர்கள் பலர்.  ஊரை ஏமாற்றுபவர்களும் பலர்.

     

    எனது தந்தை இறந்த மறு வருடம்.  ஒரு பிரபல உபன்யாசம் செய்பவருக்குப் பாத பூஜை நடந்தது நாங்கள் குடி இருந்த வீட்டின் சொந்தக் காரர் வீட்டில்.  “பக்கத்து வீடுதானே போய் வரலாம் வா” என்றழைத்தாள் என் அன்னை.  ஆன்மீகம் பற்றிய என் சிந்தனைகளே தனி.  முதலில் வர மறுத்தேன்.  பின் என் அம்மாவின் பிடி வாதத்தினால் அவளை அழைத்துக் கொண்டு சென்றேன்.

    பூஜை முடிந்தது. பெரியவர்‘ (?) எல்லோருக்கும் தீர்த்தம்கொடுத்துக் கொண்டிருந்தார்.  வரிசையில் எனக்கு முன் என் தாயார்.  அவர் பெரியவரைநெருங்கிய போது பக்கத்தில் இருந்த ஒருவர் குறுகே கையை நீட்டித் தடுத்தார், “தலை மழிக்காத விதவைக்குத் தண்ணீர் பெரியவர் கொடுக்க மாட்டார்” என்ற கடுஞ்சொற்களோடு என் அம்மாவை வரிசையை விட்டு நீங்கச் சொன்னார்.

    “இங்கு வந்து பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்து என்னை அழைத்து வந்தது என் தாய்..  அவளுக்கில்லாத பிரசாதம் எனக்கும் வேண்டாம்” என்று சொல்லி அங்கிருந்து வெளியேறினேன. அன்று வீட்டிற்கு வந்தபின் நான் பேசிய வார்த்தைகளை இங்கு எழுத முடியாது.

     

    இறைவனிடம் உங்கள் விண்ணப்பத்தினை அளிக்க வேண்டுமா?  அதற்கு இடைத் தரகர்கள் தேவை இல்லை.  நீங்களே நேராக உங்கள் கோரிக்கைகளை அவன் முன் வைக்கலாம்.

     

     

    (தொடரும்……)

     

    நடராஜன் கல்பட்டு

    Share
  • கல்லுக்குள் ஈரம்

    நடராஜன் கல்பட்டு

    “கோசூ ஒரு சாய் குடு. குரியா எனக்கு காப்பீ குடு. நனெக்கொந்து சாய் தொகுண்ட்பாப்பா.” இவையெல்லாம் எங்கள் வங்கியின் தலைமை அலுவலகத்தின் கணினிப் பிரிவில் கேட்கும் ஒலிகள்.

    “எந்த பூடீ. சாய் ஆறிப் போகுதில்லெ. வேகம் குடி.” இது என்னைப் பார்த்து செல்ல அதிகாரத்துடன் சொல்லப் படும் வார்த்தைகள்.

    அதென்ன பூடீ என்கிறிர்களா? அதுதான் ப்யூடி (beauty).

    குரியக்கோஸ் எங்கள் அலுவலகத்தில் உள்ள சிற்றுண்டி சாலையை நடத்துபவர். கேரளத்துக்காரர். வயது சுமார் 35 இருக்கும். முரடன் போன்ற தோற்றம்.

    சிற்றுண்டி சாலை நடத்துவது மட்டுந்தான் அவர் வேலை என்று இல்லை. விடு பார்த்துக் கொடுக்க வேணுமா? கோசு. வீட்டு மனை வாங்கப் போகிறீர்களா? கோசு. அவருக்கே சொந்தமாக பங்களூரில் இரண்டு மூன்று வீட்டு மனைகள் உள்ளனவாம். உழைப்பாளி அவர்.

    குரியக் கோசுக்கு தாய் தந்தை இல்லை. இல்லை என்றதும் தாய் தந்தை இல்லாமல் எப்படிப் பிறந்தார் என்று கேட்காதீர்கள். யார் அவர்கள், உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்பதெல்லாம் தெரியாது குரியனுக்கு. சின்ன வயதில் அவரை இந்த ஊரில் சாய் கடை நடத்தும் நாயர் ஒருவர் இங்கு அழைத்து வந்தாராம்.

    சனிக் கிழமைகளில் அலுவலக நேரம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை என்று பெயர். ஆனால் வேலை முடிந்து வீட்டிற்குக் கிளம்பும் போது மாலை 6 மணியாகி விடும். மற்ற நாட்களிலோ இரவு 7 அல்லது 8 மணியாகிடும் வீட்டிற்குக் கிளம்பும் போது. நல்ல வேளை வீடு ஸ்கூட்டரில் ஒரு நிமிடமும், நடையில் 3 நிமிட நேரமும் ஆகிடும் தூரத்தில் தான் உள்ளது.

    அதிக நேரம் வேலை செய்திட உடலில் தெம்பு வேண்டுமே. அதை அளிப்பது குரியக்கோஸ் தான்.

    சனிக் கிழமைகளில் நான் மதிய உணவிற்கு வீட்டிற்குச் செல்வதில்லை. குரியக்கோஸிடம் இரண்டு சப்பாத்திகள் வாங்கி உண்பேன்.

    மதியம் பசி வந்ததும், “கோஸு எனக்கு ரெண்டு சப்பாத்தி வேணும்” என்றால் வந்திடும் கோபம் அவருக்கு.

    “உரங்கிப் போயோ? சப்பாத்தி வேணுமெங்கில் முந்தே பறயணும்” என்பார் சற்று கோபமான குரலில்.

    சப்பாத்தி வந்து மேஜையில் ஆறிக் கொண்டிருக்கும். நான் பணியில் மூழ்கி இருப்பேன். என்னைத் தூக்கி வாரிப் போடும் கோஸின் குரல், “எந்த பூட்டீ இன்னும் தின்னிட்டில்லையோ? வேகம் தின்னு. கை களுவு. வேலெ பாரு.”

    மேலதிகாரிகளுக்கு மதிய உணவு அளித்த பின் அவசர அவசரமாக அன்று செய்ததில் மிச்சம் மீதி இருக்கும் உணவை எல்லாம் ஒரு பெரிய டிபன் கேரியரில் நிரப்பி வேகமாக வெளியே எடுத்துச் செல்லுவார் கோஸ்.

    எனக்கு உள்ளூர ஒரு சந்தேகம், இவருக்கு பெரிய குடும்பம் இருக்குமோ அல்லது அந்த உணவை எல்லாம் விற்று விடுகிறாரோ என்று.

    ஒரு நாள் கேட்டே விட்டேன், “கோஸ் இந்த கேரியர்லெ இருக்கறதெல்லாம் வித்தூடுவீங்களா?” என்று.

    “அறியணுமோ? என் கூட வா.” நானும் தொடர்ந்தேன் அவரை எனது வண்டியில். நேராக ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்றார். அங்குள்ள சமையல் அறையில் டிபன் கேரியரை வைத்து விட்டு வெளியே வந்து, அங்கிருந்த ஒரு கிழவியிடம் பேசினார்.

    “எந்தா குஞ்சுமோள் சுகந்தன்னே?”

    “என்ன இன்னிக்கி?”

    “ஓளன்.”

    அடுத்த கணம் அவர் கன்னத்தில் முத்தமிட்டாள் அந்தக் கிழவி.

    “குஞ்சுமோன் சுகந்தன்னே?” இது ஒரு கிழவரைப் பார்த்து. இப்படியே ஒவ்வொருவரையும் கட்டித் தழுவி விசாரித்தார் குரியக்கோஸ்.

    கோஸைக் கண்டதுந்தான் என்ன ஒரு பிரகாசம் பஞ்சடைந்த அவர்கள் கண்களில்!

    சமையல் அறையில் இருந்து ஒரு பெண் காலி டிபன் கேரியரைக் கொண்டு வந்து கொடுத்தாள். நாங்கள் திரும்பினோம் அலுவலகம்.

    உருவத்தில் முரடனாகக் காட்சி தரும் இந்த கல்லுக்குள் தான் என்ன ஒரு ஈரம்!

    (கதையல்ல. நிஜம் இது. எனது மகள் சொல்லிட நான் எழுதியது.)

    நடராஜன் கல்பட்டு 11-05-2012

    Share
  • ரசிகப்ரியா

    -நடராஜன் கல்பட்டு

     

    10349865_496511930476459_1740650219317154467_n“என்னங்க… என்னங்க…”

    “என்ன இப்போ?  காலங் காத்தாலெ என்னங்க என்னங்கன்னு என் கழுத்த அறுக்கறே?”

    “ஒண்ணும் இல்லீங்க…”

    “ஒண்ணும் இல்லேன்னா எதுக்கு என்னங்க என்னங்க?”

    “நீங்க ரொம்ப மாறீட்டீங்க.  கல்யாணம் ஆன புதுசுலெ இருந்தாப்புள இப்பொ இல்லீங்க.  அப்பொல்லாம் எப்பொவும் ’பிரேமா பிரேமா’ன்னு எம் பின்னாடியே சுத்திக்கிட்டு இருப்பீங்க.  இப்பொ என்னடான்னா வீட்டுலெ இருந்தா எப்பொவும் அந்த பாழாப் போற கணினியெக் கட்டிக்கிட்டு அழுவுறீங்க.”

    “இப்பொ என்ன செய்யணுங்கறே?  ஒட்டடெ அடிக்கணுமா இல்லே வீட்டெக் க்ளீனு பண்ணனுமா?  கண்டபடி கெடக்குற புஸ்தகங்களெ ஒழுங்கா எடுத்து வைக்கணுமா?”

    “அதெல்லாம் இல்லீங்க.  எனக்கும் ஒரு மடிக்கணினி வாங்கிக் கொடுத்தீங்கன்னா… நான் பாட்டுக்கு ஒரு பக்கம் ஒக்காந்து வாரப் பத்திரிகைங்க படிச்சுக்கிட்டு இருப்பேன் இல்லெ?”

    “சரி சரி இந்த மாசம் போனஸ் வருதாம்.  அது வந்ததும் ஒனக்கு ஒரு மடிக் கணினி வாங்கித் தரேன்.”

    கணினி வருகிறது வீட்டிற்கு.  கூடவே மேடத்துக்குச் சவுகரியமாக இருக்க வீட்டில் இருக்கும் மோடத்தின் இடத்தை ஒரு புதிய வயர்லெஸ் மோடம் எடுத்துக் கொள்கிறது.

    பத்தினிக்குப் பரம சந்தோஷம் படித்திடலாமே வாரப் பத்திரிகைகள் பலவும், வாங்கிடாமலே அவற்றைக் கடையில் இருந்து காசு கொடுத்து…

    பகலில்லை…இரவில்லை.  அம்மா நேரம் கிடைக்கும் போதெல்லாம் கணினியில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், ‘சினிமா நடிக நடிகைகள் பற்றிய கிசு கிசுச் செய்திகள்’, நகைச்சுவைத் துணுக்குகள் எனப் படித்தபடி…

    “என்ன அழகாக் கதெ எழுதுறாரு இந்த மகிழன்?  பேரும் நல்லாத்தான் வெச்சுக்கிட்டு இருக்காரு.  இது நிஜப் பேரா இருக்குமா…இல்லே புனைபெயரா இருக்குமா?  எப்படி இருந்தா என்ன?  அழகாக் கதெ எழுதறாரே அவரு.”

    ஒன்று விடாமல் படித்து மகிழ்ந்தாள் மகிழனின் கதைகளைப் பிரேமா.

    இந்தப் பத்திரிகெலெதான், “வாசகர் கடிதமும் படைப்பாளிகளின் பதிலும்”னு ஒரு பகுதி இருக்கே, அதுக்கு ஒரு கடுதாசு போட்டா என்ன?  அன்றே எழுதி அனுப்பினாள் ஒரு கடிதம் பிரேமா.

    “அன்பு மகிழன் அவர்களுக்கு,

    உங்கள் கதைகள் ஒன்று விடாமல் படித்து வருபவர்களில் நானும் ஒருத்தி.  அது எப்படி சார் ஒங்களுக்கு மட்டும் இப்பிடிக் கற்பனை வருகிறது காட்டாற்று வெள்ளம் போல?  வியக்கிறேன் உங்கள் ஆற்றலைக் கண்டு!

    இப்படிக்கு உங்கள் வாசகி,

    ரசிகப்ரியா.”

    ஆவலுடன் ஒரு வாரம் காத்திருந்த பிரேமாவுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, பிரேமாவின் கடிதமும் அதற்கு பதிலாய் மகிழனின் கடிதமும் வந்திருந்தன.

    அன்பு ரசிகப்ரியா,

    உங்கள் மடலுக்கு நன்றி.  எனது எழுத்துக்கள் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.  உங்களைப் போன்ற ரசிகர்களின் மடல்கள்தான் ஒரு எழுத்தாளனுக்குச் சஞ்சீவினி மருந்து.  அவனுக்கு ஊக்கம் அளித்து மேலும் சிறப்பாக எழுதிடத் தூண்டிடும் மூலமந்திரம் அவை.

    இப்படிக்கு,
    மகிழன்

    அடக்க முடியவில்லை ஆனந்தத்தைப் பிரேமாவுக்கு.  உடனே தன் மகிழ்ச்சியைக் கணவனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.  அடுத்த கணம் மற்றொரு எண்ணம்.  தனி மரம் தோப்பாகாது.  இன்னும் வரட்டும் பல பதில்கள்.  அதன் பின் அவருக்குச் சொல்லி அவரை ஆச்சரியத்தில் திக்கு முக்காடச் செய்வோம்.  அடக்கி வைத்தாள் தன் ஆசையை.

    மறு வாரம் வந்தது மகிழனின் ‘மல்லிகைப்பூ’ என்ற கவிதை.  உடனே எழுதினாள் பிரேமா கடிதம் ஒன்று.  “மகிழனின் கையில் மகிழம்பூவாய் வாசம் தந்தது மல்லிகைப்பூ” என்று.

    அதற்குப் பதிலாய் எழுதி இருந்தார் மகிழன், “மலர் மணத்தின் ரசிகைக்கு என் நன்றிகள்.”

    தொடர்ந்தன இப்படிப் பல கடிதங்களும் மகிழனின் பதில்களும்.  ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எழுதினாள் பிரேமா,

    “அன்பு மகிழன் அவர்களே வணக்கம்.  உங்களை ஒரு முறை நேரில் சந்தித்து வாழ்த்திட ஆவலாய் இருக்கிறேன்.  இது சாத்தியப்படுமா?  உங்களை எங்கு, எப்போது சந்திக்கலாம்?”

    கடிதத்துக்குப் பதில் வந்தபோது உடனே அதைக் கொண்டுபோய் கணவனிடம் காட்டித் தற்பெருமை அடித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.  அடுத்த கணம் அடக்கிக் கொண்டாள் அந்த ஆசையை.  மகிழனைச் சந்தித்துவிட்டு வந்தபின் சொல்லலாம் அவரிடம் என்று நினைத்து.  அன்று இரவு பூராவும் தூக்கம் வரவில்லை பிரேமாவிற்கு.  என்ன ஒரு பெரிய எழுத்தாளனை சந்திக்கப் போகிறாம் என்ற நினைப்பில்.

    இரண்டு நாட்களுக்குப் பின்…

    “என்னங்க… என்னங்க…”

    “என்ன பிரேமா?”

    “நாளெக்கி ஆடி வெள்ளிக் கெழமையா இருக்குங்க.  அதுனாலெ வெங்கட் நாராயணா ரோடுலெ இருக்குற வெங்கடாசலபதி கோவிலுக்குப் போயி அலமேலு மங்காவெ தரிசனம் பண்ணீட்டு வரலாமுன்னு நெனெச்சுக் கிட்டு இருக்கேங்க.”

    “சரி போயிட்டு வா.  நல்ல காரியந்தான்.  எனக்கும் சேத்து வேண்டிக்கிட்டு வா.  ஆமாம், எத்தினி மணிக்குப் போகலாம்னு இருக்கே?”

    “காலேலெ எட்டு மணிக்குங்க.  எதுக்குக் கேக்குறீங்க?”

    “நான் வழக்கமா காலேலெ ஏழரெ மணிக்கு வாக் போவேன் இல்லியா? திரும்ப எப்பொ வருவேன்னு தெரியாது.  அதான் கேட்டேன்.  ஒண்ணு பண்ணு.  எதுத்த ஃப்ளேட்டுலெ சாவியெக் குடுத்தூட்டு போ.  நீ முன்னெ வந்தியானா நீ வாங்கிக்கலாம்.  நான் முந்தி வந்தா நான் வாங்கிக்கலாம்.”

    “சரீங்க.”

    மறுநாள் காலை எட்டரை மணி.  நடேசன் பார்க்கில் ஒரு பெஞ்சில் வெள்ளை வேட்டி கட்டி வெள்ளை ஜிப்பா போட்ட ஒருவர், தலையில் போட்டிருந்த கதர் குல்லாயால் முகத்தை மூடியபடி உட்கார்ந்திருக்கிறார்.

    அங்கு அப்போது வந்த பிரேமா ஓரிரு முறை குட்டிபோட்ட பூனையாக இப்படி அப்படி நடக்கிறாள்.  அவள் மனதுள் ஓடுகின்றன சில கேள்விகள்.  நடேசன் பார்க்குக்குள் நுழைந்ததும் ரெண்டாவது பெஞ்ச் என்று தானே சொன்னார் மகிழன்.  இங்கு உட்கார்ந்திருப்பவராகத்தான் இருக்குமோ?  முகத்தை எதுக்கு மூடிக்கிட்டு இருக்கார்?  முகம் வெளியில் தெரிஞ்சா ஜனக் கூட்டம் கூடீடும்.  எதுக்குக் கூட்டம்னுதான் அப்படி மூடிக்கிட்டு ஒக்காந்து இருக்காரோ?  சரி எதுக்கும் ஒரு குரல் எழுப்பிப் பாப்போம் என்று நினைத்தவள், “சார்” என்றாள் அவர் அருகில் சென்று.

    குல்லாயை அவர் கழற்ற, “என்னங்க நீங்க எப்பிடி இங்கெ?” என்றாள் பிரேமா சற்றே தடுமாற்றத்துடன்.

    “அது ஒண்ணும் இல்லேம்மா.  நாலு ரவுண்டு நடந்து முடிச்சீட்டு திரும்பலாம்னு பார்க்கு வெளிலெ வந்தப்பொ ஃப்ரெண்டு ஒருத்தன் போனு பண்ணான், “எங்கெடா இருக்கே நீ?  ஒன்னெ அர்ஜென்டா பாக்கணுண்டா” ன்னு.

    “வீட்டுக்கு வாடா எப்பொ வாணான்னேன் நான்.  இல்லெடா மேட்டர் ரொம்ப அர்ஜென்டுடா.  நீ எங்கெ இருக்கே சொல்லு இப்பொ.  அங்கெயே வந்து பாக்குறேன்னான்.

    நான் நடேசன் பார்க்குலெ நடந்துகிட்டு இருக்கேண்டான்னேன்.  பார்க்குலெ நெரெயெ பேரு நடந்துகிட்டு இருப்பாங்கடா.  ஒன்னெக் கண்டுபிடிக்கிறது கஷ்டம்.  அதுனாலெ நீ ஒண்ணு பண்ணு.  பார்க்கு உள்ளெ நொழெஞ்சதும் ரெண்டாவது பெஞ்சுலெ ஒக்காந்திரு.  நான் பத்து நிமிசத்துலெ வந்தூடறேன்னான்.  இருபது நிமிஷம் ஆகுது இன்னும் காணும் அவனெ.  ஆமாம் நீ எங்கெ வந்தெ இங்கே?  நீயும் பார்க்குலெ தினோம் நடக்கலாம்னு முடிவு பண்ணீட்டையா?”

    “இல்லீங்க.  நான் கோவிலுக்கு வந்தேனா.  அப்பொ என் கூடப் படிச்சவொ ஒத்தி போனு பண்ணா.  பாரு நீ எங்கேடி இருக்கேன்னு.  நான் வெங்கடாசலபதி கோவிலுலெ இருக்கேன்னேன்.  அவ சொன்னாக் கோவிலுக்கு நான் வந்தா ஒங்கூட ஜாஸ்தி நாழி பேச முடியாதுடீ.  நான் இப்போ பனகல் பார்க்கு மார்கெட்டுலெ கறிகா வாங்கீட்டு இருக்கேன்.  இன்னும் அஞ்சு நிமிசத்துலெ நடேசன் பார்க்குக்கு வந்து உள்ளெ நொழெஞ்சதும் ரெண்டாவது பெஞ்சுலெ ஒக்காந்து இருக்கேன்.  நீ முந்தி வந்தெயானா அங்கெ வந்து ஒக்காரு.  ரெண்டு பேரும் பேசலாம்.  ரொம்ப நாளாச்சுடீ ஒன்னெப் பாத்துன்னா.”

    “அப்பிடீங்களா ரசிகப்ரியா அம்மா?”

    “என்னாங்க மகிழனா நீங்க?  முன்னாடியே இது எனக்குத் தெரிஞ்சிருந்தா ஒங்க கதெயெல்லாம் எழுதி முடிச்சதுமே சுடச் சுட நான் மொத வாசகியாப் படிச்சிருப்பேன் இல்லே?  ஏனுங்க எங்கிட்டெ கூட சொல்லாமெ ரகசியமா வெச்சிருந்தீங்க இந்த விசயத்தெ?  இனிமே நான் எப்பொவுமே ஒங்களெத் திட்ட மாட்டேங்க பாழாப் போன கணினியெக் கட்டிக்கிட்டு அழுறீங்கன்னு.”

    “சரி சரி வா வீட்டுக்குப் போகலாம்.”

     

    Share
  • பச்சாதாபம்!

    (A successful marriage requires falling in love many times, always with the same person.  -> Germaine Greer

    காதல் ஒரு முறை தோன்றுதல் அழகு.  அடுத்த முறை தோன்றினால் அது காதல் அல்ல…காமம்!

    பூக்கள் ஒரு முறைக்கு மேல் மலர்வதில்லை!   -> தமிழ்த்தேனீ)

    -நடராஜன் கல்பட்டு

    ஒரு நாள் எங்கள் குடியிருப்பில் கேட்ட சத்தம், “எவண்டா அவன் மரத்தெ வெட்டுறது? வெட்டுற கையெ ஒடிச்சு அடுப்பிலெ வெச்சூடுவேன்!”  சத்தம் போட்டது எனது பக்கத்து ஃப்ளேட்காரர்தான்.

    மற்றொரு நாள், “விஷயம் தெரியுமா ஒமக்கு?  இந்த கிச்சு ராஸ்கல் ஒரு முஸ்லீம் பொண்ணெக் கல்யாணம் பண்ணிண்டு வந்திருக்கான்.  அவனெ எம் புள்ளையே இல்லேன்னு தூக்கி எறிஞ்சுட்டேன்.”

    “அவனுக்குப் புடிச்சிருக்கு; கல்யாணம் பண்ணிண்டு இருக்கான்.  அதுக்காக அவனெ ஒங்க புள்ளையே இல்லேன்னு சொல்லறதெல்லாம் டூ மச் சார்.  சந்தோஷமா ஏத்துக்கோங்கோ வீட்டுக்கு வந்த மகராஜீன்னு அவன் கல்யாணம் பண்ணிண்டு வந்திருக்கறவள.”

    “அது ஒரு நாளும் நடக்காது.  கூடப் படிச்சாளாம்.  திடீர்னு அவளோட அப்பா செத்துப் போயிட்டாராம்.  பாவம்னு…இவன் அவளுக்கு வாழ்க்கெ கொடுத்திருக்கானாம்.  ராஸ்கல்… ராஸ்கல்!”

    “நல்ல காரியந்தானே பண்ணி இருக்கான்?  அவனெ புகழறதெ உட்டூட்டு…”.  முடிக்கவில்லை நான் சொல்ல வந்ததை.

    “நல்ல காரியமாம்.  நல்ல காரியம்.  ஊருலெ தினோம் ஒருத்தன் செத்துண்டு தான் இருப்பான்.  அவுங்க பொண்ணுங்களெ எல்லாம் இவரு போயி காப்பாத்துவாராக்கும்?  நான் வாங்கி இருக்குற ரெண்டு பெட்ரூம் ஃப்ளேட் போறாது.  மல்டி ஸ்டோரீட் ப்ளாக்கு ஒண்ணையேதான் வாங்கணும் நான்.”

    கிடு கிடுவென ஓடியது ஓராண்டு.

    “சார் அடுத்த மாசம் அஞ்சாம் தேதி ஆண்டு நெறவு நடக்கறது நம்மாத்துல்லெ என் பேரனுக்கு.  நீங்க அவசியம் வரணும்.”

    “நல்ல விஷயந்தான்.  கட்டாயம் வரேன்.”

    ஐந்து வருடங்கள் ஓடி விட்டன கிடு கிடுவென்று.

    “சார் மாமி ரொம்ப கஷ்டப்பட்டாளோ?”

    “இல்லாமெ இருக்குமா?  கேன்சர்னா சும்மாவா?  ரொம்ப அவஸ்தெப் பட்டா சார்.  ஆனா கடெசீ மட்டும் அவொ பக்கத்துலெ இருந்து ஒரு பொண்ணாட்டம் கவனிச்சிண்டா சார் நஸரீன், அதான் என் மாட்டுப் பொண்ணு.  என்ன ஜாதியானா என்ன…என்ன மதமானா என்ன சார்.  மனுஷத்தனம் வேணும் சார்.  அது அவொ கிட்டெ ரொம்பவே இருக்கு சார்.”

    ஒரு நாள் நான் கேட்டேன், “ஏன் சார் இந்த வயசான காலத்துலெ இப்பிடி நீங்க தனியா இருந்துண்டு எத்தனை நாளு கஷ்டப் படணும்?  புள்ளெயோட போயி இருக்கக்கூடாது?  அவந்தான் பெங்களூருலே பெரிய ஃப்ளேட்டு வாங்கி இருக்கான்னு சொல்லுவேளே” என்று கேட்டேன் பெரியவரை.

    “எனக்கேது புள்ளெ?  என் புள்ளெயே இல்லேன்னு ‘டிசோன்’ பண்ணீட்டேன் அவனெ.  என் புள்ளேயே இல்லேன்னு தலெ முழுகீட்டேன்.”

    “அப்பிடிச் சொல்லாதீங்க சார்.  என்ன பண்ணீட்டான் அவன் இப்போ?”

    “பின்னெ என்ன சார்.  ராஸ்கல் காதல் கல்யாணம் பண்ணிண்டான்.  புள்ளெக்கு அஞ்சு வயசாறது.  இப்போ இன்னோரு பொண்ணோட சுத்திண்டு இருக்கானாம் அவன்.  வீட்டுக்கே வரதில்லையாம்.  பொண்டாட்டியெ விவாக ரத்துக்கு ஒத்துக்கோன்னு வெரெட்டறானாம்.  விவாகரத்துக்கு ஒத்துண்டா அவளுக்கு அவொ வீட்டுலெ இன்னோரு கல்யாணம் பண்ணி வெச்சூடுவா.  என் பேரன் கதி என்ன சார் ஆகும்?  ராஸ்கல்… ராஸ்கல்.  ஏம்மா இதெ முன்னாடியே சொல்லலே?  சொல்லியிருந்தையானா அவன் காலெ முறிச்சு வீட்டோடு ஒக்காத்தி இருப்பேன் இல்லென்னு கேட்டேன் என் மாட்டுப் பொண்ணெ.”

    “அழுதுண்டே கேக்கறா அவொ, எப்பிடி அங்கிள் ஒங்க புள்ளெயெப் பத்தி ஒங்க கிட்டெயே நான் கம்ப்ளெய்ன்டு பண்ண முடியும்னு,”

    “இப்பொ எப்பிடி சொன்னேன்னு கேட்டேன்.  அதுக்கு அவொ சொல்றா அழுதுண்டே, ”அங்கிள் ஒங்க புள்ளெ பதினெஞ்சு நாளே வீட்டுக்கே வரலே.  போனு போட்டு கேட்டா ஆபீசுலெ வேலெ அதிகம்னு சொல்றாரு.  இப்பொ ஒரு வாரமா நான் போனு பண்ணா கட் பண்றாரு அங்கிள்.  அதான ஒங்களுக்கு சொல்றேங்கறா.”

    “நீங்க போயி பேசறது தானே புள்ளெ கிட்டெ?”

    “போயி பேசினேனே அந்த ராஸ்கல் கிட்டெ.”

    “என்ன சொல்றான்?”

    “பாவம்பா மஞ்சு.  என்ன பணமிருந்து என்ன?  அவொ ஹஸ்பெண்டு இந்த சின்ன வயசுலெ அவளெ உட்டூட்டு வேற ஒத்தியோட போயிட்டான்.  அதான் அவளுக்கு ஒரு நல்லது பண்ணலாமேன்னு அவ கூட நான் போயி தங்கி இருக்கேங்கறான்.  ராஸ்கல் ராஸ்கல்.

    பாவம் சார் என் பேரன்.  பச்செக் கொழெந்தெ சார் அவன். ‘தாத்தா எனக்கு சாக்கலேட் வாங்கித் தரெயான்னு கேக்கறான்.”

    கிச்சு மனதில் நிரம்பி யுள்ளது பச்சாதாபமா அன்றி இச்சாதாபமா?

    (கதையல்ல…கற்பனையல்ல…அக்மார்க் நிஜம் இது!)

     

    Share
  • மணிமொழிக் கொரு மடல்

    நடராஜன் கல்பட்டு

    சென்னை – 64

    19-03-2013

     

    எனது அன்பு மணிமொழி,

    உன்னிடம் இருந்து கடைசியாய் வந்த கடிதத்தில் நீ கேள்வி ஒன்று கேட்டிருந்தாய், “உனது கையெழுத்து ஏன் இப்படி ஆகி விட்டது?  வகுப்பிலேயே அழகான கையெழுத்து கொண்டவள் நீ தானே.  உன் கை விரல்களிலே நடுக்கம் இருக்கிறதா?  உடனே நீ வைத்தியரைப் பார்” என்று.

    உண்மைதான்.  அப்போதெல்லாம் எட்டாம் வகுப்புக்கு வரும் வரை நமக்கு காப்பீ ரைடிங் என ஒரு வேலை இருக்கும்.  பள்ளிப் புத்தகங்கள் வாங்கும்போதே அவற்றில் காப்பீ ரைடிங் என்ற ஒரு நோட்டுப் புத்தகமும் இருக்கும். அதில் எல்லாப் பக்கங்களிலும் நான்கு நான்கு வரிகளாக அச்சடிக்கப் பட்டு இருக்கும்.  ஒவ்வொரு பக்கத்திலும் முதல் வரியில் அழகாக ஆங்கிலத்திலோ தமிழிலோ வார்த்தைகளோ அல்லது ஒரு வாசகமோ அச்சடிக்கப்பட்டு இருக்கும்.  அந்த முதல் வரியில் உள்ளது போலவே நாம் கீழ் வரிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

    உனக்கு நினைவு இருக்கும்.  எனது காப்பீ நோட்டில் டீச்சர் போடும் “குட்”டைப் பார்த்து, “டீ நீ பெரிய ஆளா வருவேடீ” ன்னு சொல்லுவே.  ஆனா கையெழுத்துக்கும் தலெ எழுத்துக்கும் இருக்கற பொருத்தம் ‘அஷ்டாஷ்டக’ பொருத்தம்னு சொல்லணுமோன்னு தோணுறது எனக்கு.

    கையெழுத்து நன்னா இருக்கறவாளுக்கு தலெ எழுத்து நன்னா இருக்காதோ?

    கல்யாணம் ஆன புதுசுலெ என் மாமியார், “என்ன சீரு செஞ்சிருக்கார் ஒங்க அப்பா?  இது சரியா இல்லே.  அது சரியா இல்லே” ன்னு சொல்லி என்னையும் என்னோட அப்பாவையும் திட்டுவா..  மாமியார் போய்ச் சேந்தா புண்ணியவதி.  மழெ நின்னாலும் தூரல் உடலேன்னு சொல்லுவாளே அது போல மாமியார் செஞ்சிண்டு இருந்த வேலெயெ நாத்தனார் எடுத்துண்டா.

    வீட்டோடு நாத்தனாரான்னு கேக்கறயா?  இல்லே.  அப்பொப்ப வருவா பெரிய லிஸ்ட்டெ எடுத்துண்டு.  அண்ணாதான் இருக்காரே ஆபத் பாந்தவன், கையிலெ அக்ஷய பாத்திரத்தோட.

    நான் எதாவது வேணும்னு கேட்டா, “அதுக்கென்ன இப்பொ அவசரம்.  நமக்கு வேணுங்கெறதெ எப்பொ வாணா வாங்கிக்கலாம்” னு சொல்லி என் வாயெ அடெச்சுடுவார்.  என்னோட ஆசெயெல்லாம் அடக்கி வெச்சு அடக்கி வெச்சே அழிஞ்சு போச்சு.

    இப்போ பையனும் பொண்ணும் வளந்தூட்டா.  நான் எதாவது சொன்னா, “அம்மா நீ சும்ம இரு.  ஒனக்கு ஒண்ணும் தெரியாது” ன்னு சொல்லி என்னெ அடக்கறா.

    மணிமொழீ எனக்கு சில சமயம் தோணறதுடீ ரெஃப்ரீஜிரேட்டர்லெ ஃப்ரீஸர்னு ஒண்ணு இருக்கே அது போல நம்மெ சின்னவாளாவே ஃப்ரீஸ் பண்ணி வைக்க ஒண்ண விஞ்ஞானிங்க கண்டு புடிச்சிருக்க மாட்டாங்களான்னு தோணறதுடீ.

    இத்தோடு நிறுத்திக்கறேன் என் கதெயெ.  நீ எப்படி இருக்கெ?  அதெ சொல்லு.

    இப்படிக்கு,

    கழிந்த இன்ப நாட்களை எண்ணி துன்ப நாட்களைக் கழித்திடும்

    உன் அன்புத் தோழி,

    அனுசுயா

    Share
  • மணிமொழிக் கொரு மடல்

    நடராஜன் கல்பட்டு 

    அன்பு மணி மொழி,

    நான் வாழ்க்கையின் சோகங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்ளாது வேறு யாரிடம் பகிர்ந்து கொள்வேன்? அப்படி நான் உனக்கு எழுதும் மடலின் நோக்கம் என்ன? என்னுடன் படித்த மாணவி நீ. கூடப் படித்தவர்கள் அனைவருடனும், ஆண் பெண் என்று வித்தியாசம் பாராது அன்போடு பழகியவள் நீ. உன்னிடம் சக மாணவிகள் தங்கள் ரகசியத் தவிப்புகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நீயும் அவர்களுக்கு அந்த சங்கடங்களில் இருந்து வெளி வரும் வழியினை, உனக்கே உரித்தான பாணியில் கூறுவாய். அவர்கள் அதைக் கேட்டு பயன் அடைவார்கள்.

    எனக்குத் தெரியும் உனக்கு மிகவும் பிடித்தது கவிதைகள் என்று. அதனால் தான் நான் இப்போது சிக்கித் தவித்திடும் ஒரு சங்கடத்தினை கவிதை வடிவில் உனக்கு தெரிவிக்கிறேன். உன்னிடம் இருந்து பதிலாய் என் சிக்கலுக்கு தீர்வு ஒன்று எதிர்பார்க்கிறேன். அளித்திடுவாயா அன்பு மணிமொழி?
    வானொலிப் பெட்டி திறந்தேன்
    வந்தது பாடலொன்று
    கிழவி மேல் காதல் கொள்ளடா அவ்வைக்
    கிழவி மேல் காதல் கொள்ளடா வென்று

    கிழவி மேல் காதல் கொண்டால்
    உதவிடுமோ அவள் அனுபவம் வாழ்க்கைக் கென்று
    எழுதினேன் அரைப் பக்கக் கடிதமொன்று
    அடுத்த வீட்டு கிழவிக்கு

    ஒரு கையில் கடிதமும் மறு கையில்
    அப்பளக் குழவியுமாய்த் தோன்றிய
    அன்டை வீட்டுக் கிழவி கேட்டாள்
    திருட்டு நாயே காதல் தேவையா உனக் கென்று

    ஓடுகிறேன் ஓடுகிறேன்
    உயிர் பிழைக்க ஓடுகிறேன்
    கூறிடு நீ கிழவி கைக் குழவியிடம் இருந்து
    தப்பித்திட வழியொன்று

    உன் அறிவுரைகளை என்றும் ஏற்ற
    நண்பன் நடராஜன் கல்பட்டு

    Share
  • மணி மொழிக்கொரு மடல்

    நடராஜன் கல்பட்டு

    அன்பு மணிமொழி,

    உன் கடிதம் கிடைத்தது. “இத்தனை நாட்களாய் ஏன் மவுனம்?” என்று கேட்கிறாய். காரணம் இன்றி எதுவும் நிகழாது இவ்வுலகில்.

    உனது கடிதம் இவ்வளவு நாளாய் என் மனதுள் அடக்கி வைத்திருந்த ஒன்றினை மடை திறந்த வெள்ளமாய்ப் பெருகிடச் செய்து விட்டது. உன்னிடம் பகிர்ந்து கொள்ளாது யாரிடம் சொல்வேன் இத்தனை நாட்களாய் என் மனதுள் அடக்கி வைத்திருந்தவற்றை?

    மறந்திடவில்லை நான் உன்னோடு பழகிய நாட்களை. ஒரு நாளா இரண்டு நாளா? பதினோறு ஆண்டுகள் ஒரே பள்ளியில் படித்தோமே நாம்.. ஒன்றாய்ச் செல்வோம் பள்ளிக்கு. நன்றாய்ப் படித்தோம். உன் வீட்டிலே உனக்கு நாட்டியம் கற்றுத் தந்தார்கள். எதைச் சொல்ல வந்தாலும் நீ அபிநயத்துடந்தான் பேசுவாய் என்று கிண்டலடிப்பேன் நான். என் வீட்டில் எனக்கு பாட்டு சொல்லிக் கொடுத்து வந்தார்கள் என்பதால் நான் எதையும் இசை வடிவில் சொல்வேன் என்பாய் நீ பதிலுக்கு.

    நினைவிருக்கிறதா உனக்கு? எனக்கு பாட்டு சொல்லித் தர வந்தவர் ஒரு முறை எத்தனை திருத்தினாலும் ஒரு சங்கதியைத் தப்பாய் நான் பாடிய போது கோபம் அடைந்து என்னை அடிக்கத் தன் குடையை உயர்த்த, அருகில் இருந்த என் பெரிய அண்ணன் பாய்ந்து வந்து அவர் கைக் குடையைப் பிடுங்கி வாசலில் தூக்கி எறிய அவர் அன்றோடு நின்றது? அன்று நீயும் இருந்தாய் எங்கள் வீட்டில்.

    அதன் பின்னர் உங்கள் அப்பாவிற்கு பங்களூருக்கு மாற்றலாகிட நாம் இருவரும் கண்ணீர் சிந்திப் பிரிந்தோம். ஆனாலும் நீ விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும்போதெல்லாம் நாம் சந்திப்போம். மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருப்போம் விஷயம் இருக்கிறதோ இல்லையோ. அம்மா கையில் டிபன் தட்டோடு வந்து ஒரு அதட்டல் போடும் போது தான் நாம் இந்த உலகத்துக்கு வருவோம்.

    நீ பங்களூரு சென்ற பின் நான் வேறு இருவரிடம் பாட்டு கற்றுக் கொண்டேன். அதில் ஒருவர் அண்ணாமலை சர்வ கலா சாலையில் படித்த சங்கீத பூஷணம். உனக்குதான் தெரியுமே சங்கீதம் என்றால் எனக்கு உயிர் என்று.

    நான் ப்ளஸ் ஒன் முடித்த போதே என் அப்பா என்னை “ஒன் ப்ளஸ் ஒன்” ஆக்கிடும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தார், அதான் என் கல்யாணத்திற்காக மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார். எனக்கு அந்த சின்ன வயதிலேயே கல்யாணம் செய்து கொள்வதில் சிறிதும் இஷ்டம் இல்லை. நாம் சொல்வதை வீட்டில் யார் கேட்பார்கள்?

    “காலா காலத்தில் கல்யாணம் பண்ணி விட வேண்டும்” என்பது அம்மாவின் ராம ஜபம். அப்பாவோ வசதியான பையனைப் பிடிக்க வேண்டும் என்பதிலே குறி. என் விருப்பம் என்ன என்பதைப் பற்றி இருவருக்கும் சிறிதும் அக்கறை இல்லை.

    உனக்கும் தெரியும் என் படிப்பு பாதியில் நின்றதும், என் கல்யாணம் நடந்ததும். நீயும் வந்திருந்தாய் என் கல்யாணத்திற்கு.

    மாப்பிள்ளையைப் பார்த்த போது நீ என்ன சொன்னெ? “நீ குடுத்து வெச்சவடீ. பேருக்கேத்தாப்புளெ ராஜாவாட்டம் தாண்டீ இருக்கார் அவர்” அப்பிடீன்னு சொன்னெ.

    “ஒனக்கென்னடீ. புருஷனுக்கு மெட்ராஸுலெ வேலெ. பழசெல்லாம் மறந்தூடுவையா? எங்களெல்லாம் நீ நெனெப்புலெ வெச்சுப்பையா இல்லியா?” இந்தக் கேள்விகள் நீயும் மத்த ஃப்ரெண்டுசுமாக் கேட்ட கேள்விகள்.

    “எப்டிடீ மறப்பேன் ஒங்களெ எல்லாம்?” திருப்பிக் கேட்டேன் நான்.

    “ஒன் சங்கீதம் என்னடீ ஆகும்? அவருக்கும் புடிக்குமா கர்னாடக சங்கீதம்?” அப்பிடீன்னு நீ கேட்டே.

    “சங்கீதம் ஒண்ணும் ஆகாது. அதுலெ எனக்கிருக்கற ஆர்வம் ஒரு நாளும் கொறையாது. அவருக்கு கர்னாடக சங்கீதம் புடிக்குமா புடிக்காதான்னு அங்கே போனப்புறந்தான் தெரியும்” என்றேன் உன் கேள்விக்கு பதிலாய்.

    என் மெட்ராஸ் வாசம் ஆரம்பித்தது. வீட்டில் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் என் மனதுக்குள் ஏதாவது பாடிக் கொண்டே இருப்பேன்.

    ஒரு நாள் ராத்திரி ஏழரை மணிக்கு எம். எஸ். சுப்புலக்ஷ்மி அம்மாவோட கச்சேரி. அவர் இசைக்கு இந்த ஒலகத்துலெ ஏது ஈடு? ஆனந்தமாய் ஆரம்பிச்சாரு, “வாதாபி கணபதிம் பஜே” ன்னு ஹம்ஸத்வனி ராகத்துலெ. என்னை அப்படியே ஏதோ ஒரு வேறெ ஒலகத்துக்கு இழுத்துண்டு போச்சு அந்த இசை.

    வாசல் கதவு தட்டுற சத்தம் கேட்க போய்க் கதவைத் திறந்தேன். “எத்தெனெ வாட்டி தட்றது? என்ன பண்ணிண்டு இருக்கே?” என்றார் என் வீட்டுக்காரர்.

    “ரேடியோலெ பாட்டு”. சொல்ல வந்ததெ சொல்லி முடிக்கலே நான். நேரா ரேடியோ கிட்டே போன அவர் அதோட சுவிச்செ அணைச்சார். அந்த ரேடியோவெத் தூக்கி வாசல்லெ போட்டார். பின் தன்னோட ஆபீஸ் பேகிலேந்து ஏதோ ஒண்ணெ எடுத்து தன் காதிலெ மாட்டிண்டு, கட்டை விரல்களை கூரையைப் பாத்தாப்புளெ வெச்சிண்டு, மத்த விரலுங்களெ மடக்கிப் பிடிச்சிண்டு ஜிங்கு ஜிங்குனு குதிக்க ஆரம்பிச்சார்.

    “ரேடியோலெ எம்.எஸ். கச்சேரி கேட்டுண்டு இருந்தேன். அதெப் போயி அணெச்சிட்டீங்களே?” ன்னேன்.

    “ஒனக்கு சரிகமபதநிஸ தான் புடிக்கும்னா ஒனக்கும் வாங்கித் தறேன் இது போல ஒண்ணு. நீயும் காதுலெ மாட்டிண்டு கேளு” ன்னார் அவர்.

    ஒரு நாள் சாயந்திரம் தியாகராஜரின் மோஹன ராக கீர்த்தைனையான “நன்னு பாலிம்ப நடச்சி வச்சீரீ ஓ” ங்கெற பாட்டெ பாடிண்டு இருந்தேன். சாயங்கால நெரமாச்சேன்னு வாசக் கதவெ மூடாமெ வெச்சிருந்தேன். எங்கம்மா சொல்லுவா, “மாலெ வேளெலெ வாசக் கதவெ மூடி வெச்சா வீட்டுக்கு வர லெக்ஷ்மி அப்பிடியே வீட்டுள்ளெ வராமெத் திரும்பப் போயிடுவா” ன்னு.

    ஆபீசிலேந்து அன்னிக்கி சீக்கிரம் வந்த அவர் உள்ளெ வந்ததும் கத்தினார், “என்ன பாட்டு இது அர்த்தம் புரியாமெ? நிறுத்தறயா அதெ?” ன்னார்.

    “தியாகராஜரெப் பாக்க ராமர் அவர் வீட்டுக்கே வராறாம். ‘என்னெக் காப்பாத்தறதுக்காக நடந்தே வந்தியா ராமா?’ ன்னு கேட்டு பாடறார் அவர்னு சொன்னேன்.

    “நீ இப்பிடி வாசக் கதெவெத் திறந்து வெச்சிண்டு பாடினையானா ராமர் மட்டும் இல்லெ. ராவணனும் வருவான். நிறுத்துடீ ஒன் பாட்டெ” ன்னு எரிஞ்சு உழுந்தார்.

    உனக்கும் தெரியும் “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” ன்னு கவிஞர் கண்ணதாசன் பாடினார்னு.

    கணவன் அமைவதெல்லாம் யாரு கொடுக்கற வரமாண்டீ?

    இப்பொ புரியறதாடீ நான் ஏன் இத்தென நாளா ஒனக்கு கடுதாசு எதுவும் போடலேன்னு?

    கண்ணீருடன்,
    கமலா

    21-02-2013
    சென்னை – 64.

    Share
  • இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் : (5) க்ரௌஞ்ச பக்ஷி

    நடராஜன் கல்பட்டு

    தூக்கணங்குருவி பற்றி எழுதிய போது அதன் துர் குணம் பற்றியும் நான் சொல்லிஇருந்தேன்.  ஆண் பறவை ஒரு கூடு கட்டி பின், ஒரு பெண் பறவை அதனுடன் ஜோடி சேர்ந்தவுடன், ஆண் மேலும் ஒன்று இரண்டு என பல கூடுகள் கட்டி பல புதிய ஜோடிகள் சேர்த்துக் கொண்டு வாழ்ந்திடும் என்று.

    அதற்கு நேர் எதிர் ஆங்கிலத்தில் Sarus crane  என்று  அழைக்கப் படும் கிரௌன்ச பக்ஷி.

    Saurus cranes-2

    கொக்கு இனத்திலேயே மிக உயரமானது கிரௌன்ச பக்ஷி.  இந்தப் பறவையை தென் இந்தியாவில் காண முடியாது.  வட இந்தியாவில் ஹரியானா, டில்லி, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வயல் வெளிகளிலும் தரிசு நிலங்களிலும் இப் பறவைகளைக் காண முடியும்.

    வால்மீகி ராமாயணம் பிறக்கக் காரண கர்த்தா என நமது புராண இதிகாசங்களிலும் சமிஸ்கிருத கவிதைகளிலும் இடம் பெற்றுள்ள பறவை இந்த கிரௌஞ்ச பட்சி.                                                                                                                                 .

    இப்பறவையின் ஓர் அபூர்வ குணம், ஒரு முறை ஜோடி சேர்ந்த பறவைகள் ஆயுள் பூராவும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாது.  ஒரு பறவை இறந்து விட்டால் மற்றொன்று பிரிவாற்றாமையில் துணை பிரிந்த இடத்திலேயே சில நாட்கள் சுற்றிச் சுற்றி வந்து உணவு கூட உட்கொள்ளாமல் தன் உயிரை விட்டு விடும்.  கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உச்ச கட்ட உதாரணம் இப்பறவை.

    கிரௌஞ்ச பக்ஷி கூடு அமைத்து முட்டை இட்டு குஞ்சு பொரித்து குஞ்சுகளை வளர்ப்பது ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரையில் ஆன நாட்களில்.  இது தன் கூட்டினை நீர் தங்கிய நெல் வயல்களின் நடுவே அமைக்கும்.  கூடு சுமார் மூன்றடி விட்டத்தில் வைக்கோல், நாணல் இவற்றால் அமைக்கப் பட்டு இருக்கும்.  இப்பறவை இடும் இரண்டு முட்டயினை அடை காப்பது அனேகமாக பெண் பறவைதான்.  குஞ்சுகள் வெளியே வந்தவுடன் அவற்றுக்கு உணவு அளிப்பது இரு பறவைகளுமே.

    கிரௌஞ்ச பக்ஷி பறக்க ஆரம்பிப்பதோ பறப்பதோ பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.  போர் விமானங்கள் சுமார் முன்னூறு அடி நீளமுள்ள விமானம் தாங்கிக் கப்பல்களிலிருந்து ஆகாயத்தில் எழும்பும்போது, ஜம்போ ஜெட் விமானங்கள் சில கிலோ மீடர் தூரம் தரையில் ஓடிப் பின்னரே ஆகாயத்தில் எழும்புகிறதல்லவா ?  அதுபோலத்தான் கனமான இந்தக் கிரௌஞ்ச பக்ஷிகளும் இறககைகளை அடித்துக்கொண்டு பல அடி தூரம் தரையில் ஓடிப் பின்னரே அகாயத்தில் எழும்பும்.  அதன் பின்னரும் அதிக உயரத்தில் பறக்காது.

    பல மாநிலங்களில் மக்கள் இப்பறவைகளைக் கொல்வ தில்லை என்பதால் மனிதர்களைக் கண்டு இவை பயந்து ஓடுவதில்லை. நிலங்களில் வேலை ஆட்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது அவர்களருகிலேயே பயமின்றி இவை இரை தேடிக் கொண்டு இருக்கும்.

    Saurus cranes-1 “வெவ்வேறு திசையில் நோக்கினாலும் என்றுமே நாங்கள் இருவர்தான் ஜோடி”

    இறைவன் படைத்த இயற்கையில் தான் எத்தனை  வினோதங்கள்!  எத்தனை காட்சிகள் !!

    (வண்ணப் படங்கள் இ​ணைய தளத்தில் இருந்து)

    Share