நடராஜன் கல்பட்டு

சின்மயா மிஷனில் பங்கு பெற்ற நாட்கள்

போலிகள் சிலரைப் பார்த்து விட்டோம். இனி சின்மயா மிஷன் மீது எனக்கு ஏற்பட்ட ஈடுபாட்டுக்குத் திரும்புவோம்.

காலஞ்சென்ற திரு சின்மயானந்தாவை ஒரு மிகச் சிறந்த குரு என்பேன். சீடர்களைத் தயார் செய்வதில் ஆகட்டும், மக்களுக்கு சத் விஷயங்களைப் போதிப்பதில் ஆகட்டும் அவருக்கு ஈடு இணை இல்லை.

ஆங்கிலத்தில் அவர் மிக எளிமையாக எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் பகவத் கீதை, உபநிஷத்துக்கள், வேத மந்திரங்கள், சனாதன தர்மம் இவை பற்றி ஆற்றிய உரைகளும் சரி. அவர் எழுதியிருந்த புத்தகங்களும் சரி மிகவும் போற்றத் தக்கவை.

ஸ்வாமி சின்மயானந்தா மற்றும் அவரது பிரதான் சீடர் ஸ்வாமி தயானந்தா அவர்கள் ஆற்றிய உரைகளில் கேட்டு ரசித்த சில துளிகளை சில மடல்களில் தருகிறேன்.

ஒரு கேள்வி: “எல்லா உயிருள்ள வற்றுள்ளும், உயிரற்ற வற்றுள்ளும் இருப்பது ஒரே இறைவன் என்கிறீர்களே இதை எப்படி நம்ப முடியும்? நிலம் வேறு, நீர் வேறு, மண் வேறு, கல் வேறு, மனிதன் வேறு, விலங்குகள் வேறு, பறவைகள் வேறு என்றுதானே நாம் பார்க்கிறோம்?”

“உண்மைதான். பார்ப்பதற்கு அவை வேறு வேறாகத்தான் தெரிகின்றன. அவற்றில் ஒவ்வொன்றை எடுத்துக் கொண்டு சிறு துண்டுகளாக்கிக் கொண்டே செல்லுங்கள். அத்துண்டுகளுக்கு நீங்கள் எடுத்துக் கொண்ட மூல பொருளின் குணங்கள் இருப்பதைப் பார்ப்பீர்கள். அவற்றினை மிக மிகச் சிறிய துண்டுகளாகுங்கள். அப்போதும் மூலக்கூறுகள் (molecules) என்று சொல்லப் படும் அந்தத் துகள்களுக்கு மூலப் பொருளின் குணங்கள் இருக்கும். இந்த அளவிலான துண்டுகளை நம் பூத உடலின் கண்களால் காண முடியாது. சக்தி வாய்ந்த பூதக் கண்ணடியான நுண்நோக்கியால் மட்டுமே காண முடியும்.

மூலக்கூறுகளை எலத்திரன் நுண் நோக்கியால் (electron microscope) மட்டுமே காண முடியும். அப்படிப் பார்க்கும் போது அவை அணுக்களால் (atoms) ஆனவை என்பது புரியும். அந்த அணுக்கள் ஒவ்வொன்றும் தனித் தன்மை வாய்ந்தவை. அணுக்களையும் மிகவும் சக்தி வாய்ந்த எலத்திரன் மின் நோக்கியால் பார்த்தால் அணுக்கள் நேர் மின்னி, எதிர் மின்னி (protons and electrons) என்னும் கண்ணுக்குப் புலப்படாத மிக மிகச் சிறிதானவற்றால் ஆனவை என்பது தெரியும். ஒவ்வொரு அணுவிலும் இருக்கும் மின்னிகளின் எண்ணிக்கை மாறு படும். அதைப் பொருத்துதான் ஒவ்வொரு அணுவுக்கும் தனித் தன்மை வருகிறது. ஆனால் நேர் மின்னிகள் எல்லாமே ஒரே மாதிரியானவை. அதே போல் எல்லா எதிர் மின்னிகளுமே ஒரே குணம் கொண்டவை.

ஆக ஆரம்பத்தில் வெவேறு குணங்கள் கொண்ட பொருட்களாகக் காணப் பட்டாலும் இவை எல்லாமே ஒரே பொருட்களால், நேர் எதிர் மின்னிகளால் ஆனவைகள்தான். இதையேதான் நம் ஆன்மீகமும் சொல்கிறது. இவ்வுலகில் நாம் காணும் எல்லாமே மாயைதான். அவற்றுள் இருப்பது அந்த ஈசனும் ஈஸ்வரியும் தான் என்று.”

அடுத்த கேள்வி: “எல்லோர் உள்ளிருந்தும் இயக்குவது ஒரே ஈசன் தான் என்றால் பின் ஏன் ஒருவன் பணக்காரனாக இருக்கிறான்? ஒருவன் ஏன் ஏழையாக இருக்கிறான்? ஒருவன் அறிவாளியாக இருப்பதேன்? மற்றொருவன் முட்டாளாக இருப்பதேன்? ஒருவன் அழகாக, மற்றொருவன குரூபியாகவோ, குருடனாகவோ, செவிடனாகவோ, முடவனாகவோ இருப்பதேன்?”

சின்மயானந்தாவின் பதில்: “உங்கள் வீட்டிலே மின் விளக்குகள், மின் விசிறிகள், குளிர் சாதனப் பெட்டி, மிசாரத்தால் வென்னீர் போடும் அண்டா, ரேடியோ, டீவீ என்று உள்ளனவே. அவற்றில் ஒன்று வெளிச்சம் தருகிறது. மற்றொன்று உங்களுக்கு சாமரம் வீசி காற்றினை அளிக்கிறது. ஒன்று குளிரூட்டுகிறது. ஒன்று உஷ்ணம் தருகிறது. ஒன்று பேசுகிறது, பாடுகிறது. மற்றொன்று ஒலியுடன் காட்சிகளையும் அளிக்கிறது. இவை எல்லாவற்றையும் இயக்குவது அந்த ஒரே மின்சாரம் தானே.”

மூன்றாம் கேள்வி: “கண்ணுக்குப் புலப்படாத ஒன்றினை (கடவுளை) இருப்பதாக நம்புவது எப்படி?”

“மின்சாரம் இருக்கிறதா?”

“இருக்கிறது.”

“அதை நீங்கள் பார்க்க முடியுமா?”

“முடியாது.”

“பின் எப்படிச் சொல்லுகிறீர்கள் மின்சாரம் இருக்கிறது என்று? லண்டன் நகரம் இருக்கிறதா?”

“இருக்கிறது.”

“நீங்கள் அங்கு போயிருக்கீர்களா?”

“இல்லை.”

“அப்போது எப்படி நிச்சயமாக லண்டன் நகரம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்?”

“படங்களில் பார்த்திருக்கிறேனே.”

“உங்கள் வீட்டிலே இறைவன் படங்கள் இல்லையா? கோவில்களில் இறைவனின் சிலைகள் இல்லையா? சர்ச்சுகளில் சிலுவைகள் இல்லையா? முகம்மதியர் வழிபாட்டுத் தலங்களிலே ஒரு பிறைச் சந்திரனும் நட்சத்திரமும் கண்டதில்லையா? நீங்கள் இறைவனை உங்கள் ஊனக் கண்களால் பார்க்க முடியாது. எப்படி அணுவைக் காண இலத்திரன் நுண் நோக்கி தேவைப் படுகிறதோ அது போல இறைவனைக் காண ஞானக் கண் தேவைப் படுகின்றது. அதை உங்களுக்கு அளிப்பதே ஆன்மீகம்தான்.

ஆன்மீகமும் விஞ்ஞானமும் ஒன்றுக் கொன்று எதிர் மறை ஆனவை அல்ல. இரண்டுமே ஒன்றுதான். மனிதனின் அஞ்ஞான இருள் நீக்கி மெய்ஞான ஒளி அளிக்கும் விஞ்ஞானமே ஆன்மீகம்.”

(தொடரும்……)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *