எம்மதமும் சம்மதமே

ஒரு காவி உடை தரித்த ஆன்மீகவாதி ஒரு முறை ரயிலில் பயணித்தபோது எதிர் வரிசையில் ஒரு பாதிரியார் உட்கார்ந்திருந்தாராம். பாதிரியார் தன் பக்கத்தில் இருந்தவரிடம் கதை சொல்ல ஆரம்பித்தாராம்.

“ஒரு சமயம் ஒரு இந்து, ஒரு முசல்மான், ஒரு கிருஸ்துவர் ஆகிய மூவரும் ஒரு விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர். திடீரெனெ விமானம் வெடித்துச் சிதறியது, அதனுள் இருந்த பயணிகள் அனைவரும் தூக்கி எறியப் பட்டனர்.

இந்து, ‘பிள்ளையாரப்பா, முருகா, ராமா, கிருஷ்ணா, ஈஸ்வரா, பராசக்தி என்னெக் காப்பத்துங்கோ’ ந்னு கத்திண்டே விழுந்தானாம் ஒரு பாரையின் மீது. அவன் உயிர் பிரிந்தது.

முசல்மான், ‘அல்லா ‘முஜே பச்சாவ்’ என்றபடி கீழே விழுந்தவன் அடர்ந்த ஒரு மரத்தின் மீது விழுந்தான். அவனும் சில்லரை காயங்களுடன் உயிர் பிழைத்தான்,

கிருஸ்துவன், ‘யேசுவே என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறியபடி விழுந்தான். அவன் ஒரு திராக்ஷைப் பந்தலில் விழுந்தான். அந்தப் பந்தல் ஒரு கம்பிச்சுருள் மெத்தையில் விழுந்தது போல அவனை இரண்டு மூன்று முறை சிறிதளவு மேலும் கீழுமாக தூக்கிப் போட்டது. அவ்வளவே. அவன் உடம்பில் ஒரு கீறல் கூட விழவில்லை.

இறந்த இந்துவின் ஆவி மேலுலகம் சென்றது. அங்கு அவன் கடவுளை சந்தித்துக் கேட்டான், ‘ஆண்டவா உன்னை நான் நம்பினேனே. என்னைக் காப்பாற்ற அழைத்தேனே ஏன் வரவில்ல?’ என்று.

கடவுள் சொன்னார், அப்படியா ‘நீ பிள்ளையாரைக் கூப்பிட்ட போது அவர் காப்பாற்றுவார் என்று நினைத்தேன்.’ பின் அவன் ஆவி முருகனைக் கேட்டதாம், ‘முருகா நீ ஏன் என் உயிரைக் காக்க வரவில்லை? எத்தனை முறை கந்த சஷ்டிக் கவசம் சொல்லி இருப்பேன் நான்?’ என்று. முருகன் சொன்னாராம், ‘நீதான் ராமா, கிருஷ்ணா, பரமேஸ்வரா, பரா சக்தி’ன்னு பலபேரெக் கூப்பிட்டாயே அவர்களில் யாராவது ஒருவர் உன்னைக் காப்பாற்றச் சென்றிருப்பர்கள் என்றெண்ணி மயிலோடு விளையாடச் சென்று விட்டேன் நான்’ என்று.”

இப்படிச் சொல்லித் தன் கதையினை முடித்தார் பாதிரியார்.

புத்தகம் படித்துக் கொண்டிருந்த இந்து ஆன்மீகவாதி சொன்னார், “அப்படியா நான் வேறு மாதிரியல்லவோ கேட்டேன் இதே கதையை?

ஒரு ஜெர்மானியர், பிரிட்டிஷ் காரர், ஒரு பிரஞ்சுக் காரர், ஒரு அமெரிக்கர் பயணித்த விமானம் ஒன்று நடு வானில் விபத்துக்குள்ளாக நால்வரும் வெளியே தூக்கி எறியப் பட்டனர். நால்வரும் ஒரு கல் மலை மீது விழுந்து இறந்தனர். அவர்கள் ஆவி மேலே சென்றது.

அங்கு அவர்கள் நால்வரும் சந்தித்த யேசுவைக் கேட்டனர், ‘நாங்கள் உங்களை அழைத்தோமே எங்களைக் காப்பாற்றச் சொல்லி. ஏன் வரவில்லை நீங்கள்?’ என்று.

யேசு சொன்னாராம், ‘நான் ஜெர்மனியனைக் காப்பாற்றி இருந்தால், பிரிட்டிஷ் காரர் சொல்லுவார் நான் ஒரு நாசியைக் கண்டு பயந்து விட்டேன் என்று, பிரிட்டிஷ் காரரைக் காப்பாற்றி இருந்தால், நான் அவர்களது கடற்படைக்கு அஞ்சி விட்டேன் என்று பிரஞ்சுக் காரர் சொல்லுவார். பிரஞ்சுக் காரரைக் காப்பாற்றி இருந்தால் அவரது நடை உடை பாவனையில் மயங்கிவிட்டேன் நான் என்று மற்ற மூவரும் சொல்லுவீர்கள்.’

அமெரிக்கர் கேட்டாராம், ‘பின் நீங்கள் என்னைக் காப்பாற்றி இருக்கலாமே?’ என்று. யேசு சொன்னாராம், ‘நான் அதை செய்திருக்கலாம். ஆனால் மக்கள் என்ன பேசுவார்கள் தெரியுமா? அமெரிக்கா உலகத்திலேயே மிகமும் பலம் வாய்ந்த வல்லரசு. அதனால் தான் நான் உன்னைக் காப்பாற்றினேன்’ என்று. இது தேவையா எனக்கு?’ என்றாராம் யேசு.”

இந்து ஆன்மீக வாதி தொடர்ந்தார், “இப்படிக் கதைகளை எந்த மாதிரி வேண்டுமானாலும் சொல்லி மக்களை எளிதாக ஏமாற்றி விடலாம். இந்த மதம் உயர்ந்தது. அந்த மதம் தாழ்ந்தது என்று கிடையாது. மதங்கள் காட்டும் பாதையோ, போதனைகளோ மாறு பட்டு இருக்கலாம். ஆனால் அவற்றின் குறிக்கோள் ஒன்றே. மதங்கள் எல்லாமே முயல்வது என்ன? மனிதனை இன்னும் நல்லவனாக ஆக்க வேண்டும் என்பதுதான்.”

பாதிரியார் தன் தவறை உணர்ந்தார். மன்னிப்பும் கோரினார்.

(தொடரும்…..)

நடராஜன் கல்பட்டு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.