Tag: மீனாட்சி பாலகணேஷ்

  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 12.2

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 12.2

    -மீனாட்சி பாலகணேஷ்

    (சிறுபறைப்பருவம்- ஆண்பால்) 

      சிறுபறைப்பருவப் பாடல்கள் கருத்துவளமும் சந்தநயமும் மிகவும் நிறைந்து விளங்குபவை. சைவத்தின் தனிப்பெருங்கடவுளான சிவபெருமான் பிறப்பிலிப் பிஞ்ஞகன்; சிவபிரான் மீது பிள்ளைத்தமிழ் பாடவியலாத குறையை அடியார்கள் அவனுடைய பலவிதமான நடனங்களைப் பற்றிக் குழந்தையின் பல்வேறு பருவங்களிலும் பாடிமகிழ்ந்து நிறைவுசெய்து கொண்டனர். சந்தநயம் மிகுந்த பல பாடல்கள் சிவபிரானின் திருநடனத்திற்கேற்பக் குழந்தை முருகன் தனது சிறுபறையின் ஒலியினை எழுப்புவதாக அமைந்து இன்புறுத்தும்.

    சிறுபறை முழக்கி வரும் முருகன் எனும் சிறு குழந்தை பெரிய மணி போன்று ஒளிர்கின்றான்; வாடாத  புதுமை நிறைந்த மென்மலர் போலப் பொலிகின்றான். கண்ணூறு பட்டுவிடப் போகின்றதே எனத் தாய் உள்ளம் எண்ணுகிறது. 

    படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து விதமான தொழில்களையும் செய்யும் சிவபிரான் நடனமாடுகிறான். அவனுடைய நடனத்திற்கேற்ப குமரனின் சிறுபறை முழங்குகிறது. இறைவனின் கூத்துக்கு ஆயிரம் கைகளாலும் மத்தளம் கொட்டும் வாணன் என்பவன் தோற்று வெட்கும்படியாக முருகனின் சிறுபறை சிறப்பாக முழங்குகின்றதாம்!

    நந்திதேவன் இதைக்கேட்டு அதிசயித்து, “எமக்கு இதற்கேற்ப ஜதி சொல்ல வராது அப்பா குழந்தாய்!” எனக் குமரக்குட்டனிடம் தனது இயலாமையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு விட்டான்! முருகனின் சிறுபறை முழக்கத்தைக் கேட்டு உள்ளம் உவந்த தந்தை சிவபிரான், நடனம் ஆடும்பொழுதே தலையை இயைவாக அசைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறான். பக்கவாத்தியக்காரர்கள் அனுசரணையாகவும் திறமையாகவும் இசைக்கருவிகளை வாசிக்கும்போது தலையை அசைத்து அவர்களைப் பாராட்டித் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல் கலைஞர்கள் இயல்பு. இதனைச் சிரக்கம்பம் என்பர்.

    ‘தந்தன தந்தன திந்திமி,’ என்று ஜதிகளை முதலில் வாயால்கூறி பின் அவற்றை சிறுபறையில் தோன்றுமாறு முழக்குகிறான் குமரன். தாயான உமையவளுக்கு ஆனந்தம் பொங்குகிறது; குமரன் கூறும் ஜதிகளுக்குத் தானும் பொருத்தமாகக் கைத்தாளம் இட்டு காலப்பிரமாணம் வரையறுக்கின்றனளாம்!

    ‘இவ்வகையாக கொத்துக் கொத்தான மலர்கள் பூத்த சோலைகள் நிறைந்த எட்டிக்குடி குகனே, சிறுபறை முழக்குவாயாக!’ எனத் தாய் ஆசை பொங்க வேண்டுவதாகப் புலவர் நடேச கவுண்டர் எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழில் முருகப்பெருமானை வேண்டுகிறார். படிக்கும் நமது உள்ளங்கள் ஆனந்த வெள்ளத்தில் முழுகுகின்றன. இது 20-ம் நூற்றாண்டில் இயற்றப் பெற்ற அருமையான ஒரு பிள்ளைத்தமிழ் நூலாகும்.

    ஐந்தொழி லுஞ்செயு மெந்தை நடஞ்செய 

    வாயிர மங்கைகளால்

        அணிமத் தளமறை யுந்தொழில் வாணனும் 

    அகமிக வெள்குறவே

    நந்தியு மிந்த விதஞ்சதி கொட்ட 

    நமக்குவ ராதெனவே

        நாதனு மாதர வாகித் தலையை 

    யசைத்து நடஞ்செயவே

    தந்தன தந்தன திந்திமி யென்று 

    சதிக்கண முந்துறவே

        தாயுமை யானந் தக்கொடியுங் 

    கைத்தாளங் கொட்டிடவே

    கொந்தண வும்பொழி லெட்டிக் குடிக்குக 

    கொட்டுக சிறுபறையே

        கோவா மணியே வாடா மலரே 

    கொட்டுக சிறுபறையே1.

    சிறுபறையில் ஒலி சந்தநயத்துடன் நமது காதுகளில் கேட்கின்றதல்லவா? அதுவே இப்பாடலின் பெருமையாகும்!

    சில பாடல்களில் சிறுபறையின் ஒலிக்கேற்ப இன்னும் என்னவெல்லாம் ஒலித்தன எனக்கண்டு களிக்கலாம். சில பாடல்கள் முருகப்பெருமான் போர்க்களத்தில் செய்த வீரதீரப் பிரதாபங்களைப் பேசுவனவாகும். இத்தகைய பாடல்களின் சந்தம் போர்முரசம் போன்றும் அமைந்திருக்கும். இன்னுஞ்சில, ஐவகை நிலங்களின் அருமைபெருமைகளைப் பாடும். அத்தகையதொரு பாடல்தான் நாம் இப்போது காணப்போவது:

    அழகான திருப்போரூர் முல்லைநிலங்கள் செறிந்த ஊர். இவ்வூரின்கண் பலவிதமான ஒலிகள் எப்போதும் எழுந்த வண்ணமாக உள்ளன. முடைநாற்றம் கமழும் மெல்லிய உருவம் கொண்ட இடைப்பெண்களின் மத்துக்கள் தயிர்கடையும் கலங்களில் முழங்குகின்றன; தம் கன்றுகளை நினைத்த மாத்திரத்திலேயே பசுக்கூட்டங்கள் அழகான குடம்போலும் மடித்தலத்திலுள்ள பாலைச்சுரந்து, அன்போடு விம்மிக்கதறும் முழக்கமும் மிகுகின்றது. மூங்கில்களின் துளைகளின் வழியே விரல்களை விட்டுப்பிடித்து இசையினை எழுப்பும் தொறுவர்கள் எனப்படும் இடையவர்கள் ஊதும் குழலோசையும் கேட்கின்றது. பலநிறம் பொருந்திய காட்டுக்கோழிகள் முறைமுறையாக நின்று நெருங்கிக்கூவும் ஒலியும் எழுந்த வண்ணம் உள்ளது. விளைந்து மலர்ந்த செம்முல்லை மலர்களில் வண்டுகள் அமர்ந்து விளரிப்பண்ணை இசைக்கும் அழகிய முழக்கமும் கேட்கின்றது. காலை விடியலில் கடலின் ஒலியைப்போல இந்தப் பலவகை முழக்கங்களும் மிகுதியாக எழுகின்ற தன்மை கொண்டது இந்தப் போரூரின் முல்லைநிலங்கள். இப்போரூரின் இறைவன் குமரவேள் ஆவான். 

    ஒருவரை அறிமுகம் செய்யும்போது அவருக்கு என்ன ஊர், பிறப்பால் எந்தக்குடியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிப்பது வழக்கம். அதுபோன்று இங்கு புலவர் முருகன் வளரும் போரூரின் சிறப்பைப் பற்பல சொற்களிற் கூறினார். அவனுடைய குலம்- குடிப் பெருமை கூற ‘குளமலிகண்ணன் தரும் இறை’ எனச் சில சொற்களையே கூறினார். இதுவே மிகவும் பெருமை தரும் அறிமுகமாக விளங்கி அழகு செய்கின்றது. குளம்- நெற்றி; அலிகம்- நெற்றி; – நெற்றிக் கண்ணனான சிவபிரான் தந்தருளிய முருகக் கடவுள் என்கிறார். வேறு என்ன பெருமை வேண்டும் மகனுக்கு? அவனும் தன் பங்கிற்கு முத்தமிழையும் தனது பெற்றோரைப்போல் தொடர்ந்து வளர்த்து அருளியவன்தான் அல்லவா?  

    “திருப்போரூர்க் குமரனே! நீ சிறுபறை முழக்குக,” எனப் புலவர் சிதம்பர அடிகளார் வேண்டுகின்றார். திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் இவர் பாடிய திருப்போரூர் சந்நிதி முறையில் உள்ள முப்பத்தாறு நூல்களுள் ஒன்றாகும். பொருள் வளமும் கற்பனை வளமும் மிக்கு விளங்குவது.

    அளைகடை முடைகதுவிய தளிர் வடிவத்து ஆய்ச்சியர் மத்தொலியும்

    அங்குட மடிமுலை விம்மிக் கன்றுளி ஆன்நிரை கத்தொலியும்

    கிளைபடு தொளைவழி விரல்விடு தொறுவர்கள் கீதக் குழலொலியும்

    கேழ்செறி கானக் கோழிகள் முறைமுறை கிட்டிக் கூவொலியும்

    விளைதரு தளவத் தளிபல விளரி விளக்கிய சீரொலியும்

    விடியற் காலைக் கடலைப் பொருவ மிகுத்தெழு மாமுல்லைக்

    குளமலி கண்ணன் தருபோரூர் இறை கொட்டுக சிறுபறையே

    கொத்துறு முத்தமிழ் மெத்த வளர்த்தவ கொட்டுக சிறுபறையே2

    புல்லாங்குழலை இடையர்கள் வாசிக்கும் முறை இப்பாடலில் நுட்பமாகக் கூறப்பட்டுள்ளது. மூங்கிற்குழலில் அமைக்கப்பட்ட துளைகளில் (இசைக்கேற்ப) விரல்களை மாற்றிமாற்றிப் பொருத்தி (அவற்றை மூடியும் திறந்தும்) இசைக்கிறார்கள் என விளக்கமாகக் கூறியுள்ளமுறை நயக்கத்தக்கது. இவ்வாறு நுணுக்கமான நயங்களைப் புலவர் பெருமக்கள் தாமியற்றியுள்ள பாடல்களிலும் நூல்களிலும் ஆங்காங்கே பொருத்திப் பாடியுள்ளமை வியக்கத்தக்கது.

    முல்லைநிலத்திற்கான பண் ‘விளரிப்பண்’ என்பது இதிலிருந்து பெறப்படுகின்றது. ஆனால் தமிழிசை மரபுப்படி விளரிப்பண்ணானது மருதநிலத்துக்கு உரிய பண்ணாகும். வண்டுகளின் ஒலியே விளரிப்பண் என அறியப்படுகின்றது. இவ்வாறு திணைமயங்கி வருவதும் ஒரு இலக்கிய உத்தியாகும்.  

    இதேபோன்று மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்மானைப் பருவத்துப் பாடலொன்றில், ‘விளரிப் பண்ணைப் பாடுகின்ற வண்டுகள் முழங்குகின்ற கூந்தலையுடைய கொடி போன்றவளே!’ என அன்னை விளிக்கப்படுகிறாள்.

    ‘விளரிமி ழற்றருளி குமிறுகு ழற்கொடி3.’ என்பன பாடல்வரிகள்.

    திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழில் இன்னொருவகை இனிமையைக் கண்டு ரசிக்கலாம். தகப்பன்சுவாமியாகிய முருகப்பெருமான் உறையும் சுவாமிமலையின் சிறப்புகளைக் கூறுமுகமாக அங்கு என்னவெல்லாம் எவ்வாறு முருகனின் சிறுபறை ஒலிக்கேற்ப ஒலிக்கின்றன எனப் புலவர் கூறும்விதம் மிகுந்த நயம் வாய்ந்தது.

    அரங்கமெல்லாம் மத்தளம் எனப்படும் பறைமுழக்கம் ஒலிக்கும்; சாலைகள் அனைத்திலும் தருமமாகிய முரசொலி கேட்கும்; ஊரின் சபைகள் அனைத்திலும் தமிழின் இனிமை கேட்கும்; அங்கு வாழும் மக்கள் சிந்தை முழுவதும் சாந்தம் எனும் தன்மை நிரம்பியிருக்கும். பெண்கள் விளையாடும் இடங்களிலெல்லாம் கழங்கு, அம்மானைப் பண்கள் ஆகியவை பெருமளவில் பாடப்படும். மேகங்கள் கூடுவதைக் கண்ட மயில்களின் ஆனந்த அகவலோசை மலர்ப்பூங்காக்களில் நிறைந்திருக்கும். 

    வயல்கள் சூழ்ந்த தடங்களிலெல்லாம் பூந்தேனைச் சொரியும் கனிவாழைகளும், முதிர்ந்து வெடித்த தேன்மாங்கனிகளும் நிறைந்து, பறவைகளின் இன்னொலியால் நிறைந்திருக்கும்; இங்ஙனம் பலவித ஓசைகள் முழங்கும் சாமிமலை முருகனே! நீயும் உனது சிறுபறையை இவ்வோசைகளுக்கு ஈடாக முழக்கியருளுக! என்பார் புலவர்.

    தழங்கு முழவ மரங்கமெலாம் தரும முரசஞ் சாலையெலாம்

    தமிழி னினிமை சபைகளெலாம் சாந்த நிலைமை சிந்தையெலாம்

    கழங்கு கழலம் மனைப்பண்கள் கனிவாய் மகளிர் பண்ணையெலாம்

    களிக்கு மயிலி னகவல்மழைக் கலிப்பு மலர்ப்பூங் காவிலெலாம்

    விழுங்கு பூந்தேன் கனிவாழை வெடிப்புத் தேமா விளைந்தகனி

    வீழ விரியும் புள்ளினொலி விளைந்த வயற்சூழ் தடங்களெலாம்

    முழங்குஞ் சாமி மலைமுருகா முழக்கி யருள்க சிறுபறையே

    முடியா முதலே வடிவேலா முழக்கி யருள்க சிறுபறையே4.

    குழந்தை முருகன் சிறுபறையைக் கையில் ஏந்தி முழக்குகின்றான்- அவ்வொலியைக் கேட்பவர்களுக்கு அது ஒவ்வொரு விதமாகத் தோன்றுகிறதாம். இது ஒருவிதமான இனிய கற்பனை! 

    வடகலையோடு தென்கலையைப் பயிலுகின்ற புலவர் குழாம் ஒன்று ஆர்வமாகப் புரவலர்களைத் தேடி வருகின்றது. அவர்கள் செவியில் குமரன் முழக்கும் சிறுபறையொலி விழுகின்றது. உடனே கவிவாணர்கள் பரபரப்புடன் ஒருவருக்கு ஒருவர், “வாருங்கள், புலவர் பெருமக்களே, இந்நகரில் முழங்கும் கொடைமுரசின் ஒலி உங்களுக்குக் கேட்கவில்லையா? அது நம்மை, ‘வருக,’ என அழைக்கிறது; விரைந்து வாருங்கள், சென்று நமது கலைத்திறமை விளங்கப் பாடிப் பரிசில் பெறுவோம்,” என கூறிக் கொண்டு மற்றவர்களை ஊக்குவித்தபடி விரைகின்றனர்.

    சிவபெருமானுடன் அமர்ந்து உமையம்மை உரையாடிய வண்ணம் இருக்கிறாள். அவர்கள் செவியில்  இந்தச் சிறுபறையொலி கேட்கின்றது. சின்னஞ்சிறு பிராயத்திலேயே சூரசங்காரம் போன்ற பெரிய வீரச் செயல்களை எல்லாம் செய்து புகழ் பெற்றுவிட்டான் இவர்கள் மைந்தன் முத்துக்குமரன். இனி இப்போது அவனுக்கு மணம்முடித்துப் பார்க்கவேண்டும் எனும் ஆவல் பெற்றோர் இருவர் உள்ளத்திலும் பொங்கி எழுந்துள்ளது. மெல்லிய இளம்பிடி போன்ற தேவ உலகத்துப் பெண்ணானவளும் தேவர்க்கு அதிபதியின் மகளுமான தெய்வயானை எனும் அணங்கை மணம்முடிக்க எண்ணம் கொண்டுள்ளனர்!  அவ்வாறு அவளைக் குமரன் மணந்துகொள்வதற்கு உரிய மணமுரசு தான் ஒலிக்கின்றது என்று எண்ணி ஒருவருக்கொருவர் புன்முறுவல் கொண்டு உள்ளம் மகிழ்கின்றனராம். 

    தேவர்கள், அவர்களது அரசன் இந்திரன் ஆகியோர் எப்போதும் பகைவர்கள் தம்மை வெருட்ட வருகின்றனர் என எண்ணியவாறே உள்ளனர். தேவசேனாபதியாகிய குமரப்பெருமான் அவர்களது குலத்தை யாங்கணும் காத்து வருகின்றவன். இச்சமயம் அத்தேவர்கள் செவியில் முருகனான இச்சிறுபிள்ளை முழக்கும் சிறுபறையொலி விழுகின்றது. உடனே அவர்கள் உற்சாகமடைந்து ஒரு திருவிழாவிற்கே ஏற்பாடு செய்ய முனைகின்றனராம். எதனால்? இன்னுமொரு பகைவனின் படைதனை செங்குருதி பாயும் போர்க்களத்தில் வென்று வாகைசூடிவிட்டான் அவன்; அவனுடைய வெற்றியைக் கொண்டாடும் வெற்றிமுரசின் ஒலியாக இவ்வொலி அவர்கள் செவிகளில் கேட்கின்றதாம்!

    இவ்வாறு ஒரு திருநாட்டுக்கு உரிய கொடை, வீரம், மங்கலம் எனும் மூன்றுவிதமான முரசங்களும் இக்காவிரி நாட்டில் (புள்ளிருக்குவேளூர் என்னும் வைத்தீசுவரன் கோவிலில்) முழங்குகின்றன. ‘இந்நாட்டினை உடையவனும் முத்தமிழைப் பயில்கின்றவனுமாகிய பருதிப்பதியின் முருகவேளே, சிறுபறை முழக்குக,’ என மகிழ்வுமிகக் குமரகுருபரனார் முருகப்பெருமானைத் தாயின் நிலையில் நின்று பெருமிதம் பொங்க வேண்டுகிறார்.

    வம்மினெனப் புலவோரை அழைத்திடு

    வண்கொடை முரசமென

        வடகலை தென்கலை யொடுபயி லும்கவி

    வாணர்கள் ஓடிவர

    அம்மென் மடப்பிடி பொன்னுல கீன்ற

    அணங்கை மணம்புணரும்

        அணிகிளர் மணமுரசென்ன எம் ஐயனொடு

    அம்மை மனங்குளிர

    தெம்முனை சாயச் சமர்விளை யாடிச்

    செங்கள வேள்வி செயும்

        திறன்முரசு என இமையவர் விழவயரச்

    செழுநகர் வீதிதொறு

    மும்முரசமும் அதிர் காவிரி நாடன்

    முழக்குக சிறுபறையே

      முத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன்

    முழக்குக சிறுபறையே5 

    தாரகாசுரன் முதலான அரக்கர்களுடன் முருகன் போரிடுகிறான்; முருகப்பெருமானின் படையின் நவகோடி வீரர்கள் அட்டகாசம் செய்தவாறு வருவதனால் நாற்றிசைகளும் பதறிக் கலங்குகின்றனவாம்; நாற்கோணமாக வியூகம் வகுத்து நான்குவிதப் படைகளும் அணிவகுத்து வருவதனால் கருங்கடல் கலங்கியது; பலவாறு தவமியற்றிப்பெற்ற வரங்களால் கிடைத்த கோடிகோடியான வெற்றிகள் அழிந்தொழியப் போவதனால் தாரகாசுரன் தன் மனம் கலங்கலானான்; தோல்வியையடையாத படைகளைக்கொண்ட மாயாபுரியைச் சேர்ந்த அவுணர்கள் இனி வரப்போகும் தோல்விக்கு அஞ்சித் தம் கண்கள் கலங்கி வருந்தினர். தீய மனத்தவர்களான அசுரர்களின் பெண்டிர் தமது அருமையான கருப்பம் கலங்குமாறு அச்சம் கொண்டனர். கோடிக்கணக்கில் வரும் அரக்கர்களின் கோடிக்கணக்கான உயிர்கள் அலறிடவும், அந்தகனான காலன் திசைகளில் நின்று கலங்கவும், சிவனுடைய அவதார வடிவமாக வந்துதித்துள்ள முருகவேளே! நீ உனது சிறுபறையை முழக்குவாயாக, என வேண்டுவதாக அமந்த பாடலிதுவாம்.

    நவகோடிவீரர்வரு மட்டகாசத்தினா

           னாற்றிசைகள் கெடிகலங்க

    *தகசதுரங்கபத சதுரங்கவர்க்கத்தி

          னாற்கருங் கடல்கலங்கத்

    தவகோடியால்வந்த செயகோடிசாயவே

           தாரகன் மனங்கலங்கச்

    சாயாதபடையான மாயாபுரத்தவுணர்

          தம்மிலே கண்கலங்க

    அவகோடிபெருமவுணர் புணர்கோடிமடவார்க

           ளரியகர்ப்பங் கலங்க

    வருகோடிவருமசுர ருயிர்கோடியலறவே

           யந்தகன் றிசைகலங்க

    சிவகோடியவதார வடிவாகவருமுருக

           சிறுபறை முழக்கியருளே 6       

    இப்போரின் காட்சிகள் குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழில் காட்சியாக்கப்பட்டுள்ளன.

    முருகன் தமிழ்த்தெய்வமல்லவா? முருகனின் சிறுபறை ஒலிக்கேற்பப் புலவர்கள் தமிழ்மொழியின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐவகை இலக்கணங்களின் துணைகொண்டு சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி எனும் ஐம்பெரும் காப்பியங்களை அமைத்தனர். மேலும் தமிழின் பலதுறைகளையும் ஆராய்ந்து செய்யுட்களின் நடைவகையான க்ஷீரபாகம், திராக்ஷாபாகம், கதலீபாகம், இக்ஷுபாகம், நாளிகேரபாகம் முதலானவைகளைக் கொண்டும், ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி எனும் கவிதைவகைகளைக் கொண்டும் தமிழ்மொழியைத் துதித்து முழக்குகின்றனர். இதற்கியைய நீயும் உனது சிறுபறையை முழக்குவாயாக என வேண்டும் பாடல். 

    தமிழ்க்கடவுளான குமரனைத் தமிழ்மொழியின் நயங்களுடன் இணைத்துப் போற்றும் இனியதொரு பழனிப்பிள்ளைத்தமிழ்ப் பாடலிதுவாகும்.

    ‘ஐவகை யிலக்கணமு மைங்காவி யத்துறையு

    மாராய்ந்து பாகமுறையால்

        ஆசுமது ரஞ்சித்ர வித்தார முஞ்சொலு

    மருங்கவிஞர் துதிமுழக்க7 என்பன பாடல்வரிகள்.

    ‘பான் முந்திரிகை வாழைக் கனியாய்க், 

    கிளர்ந்தகரும் பாய்நாளி கேரத்து- இளங்கனியாய்த் 

    தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான

    முத்திக் கனியேஎன் முத்தமிழே8,‘எனும் தமிழ்விடு தூதின் கவிதைவரிகளை இங்கு நினைவு கூரலாம்.

    முருகனின் சிறுபறை முழக்கொலி ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களது சமயம் சார்ந்த ஒலியாகத் தோன்றுகின்றது: சங்கரனாம் சிவபிரானின் அன்பர்களான சைவர்களுக்கு அது அவர்களது சமய முழக்கமாகக் கேட்கின்றது; பாம்பணையில் வளரும் சங்கேந்திய திருமாலின் அன்பர்களுக்கு அது வைணவசமய முழக்கமாகக் கேட்கின்றது. புத்தனின் அடியார்களுக்கும் அருகப்பெருமானின் தொண்டர்களுக்கும் அவரவர் சமய முழக்கமாகக் கேட்கின்றது. தூய ஏசுநாதனின் தாமரைமலர்ப் பதங்களைப் பணியும் அடியவருக்கும் அல்லாவின் பக்தர்களுக்கும் தமது மதமுழக்கமாகவே இச்சிறுபறையொலி கேட்கின்றது.

    ‘சங்க ரன்பா லன்பு கொண்ட

    சைவ ரோடு பாம்பணை

        தங்கு சங்க ணிந்த வன்றன்

    தாள்வ ணங்கு வைணவர்

    ………………………………………….

    பங்க யம்ப ணைந்து ளோரும்

    பகரு மல்லா பக்தரும்

        பால னுன்மு ழக்கு தத்தம்

    மதமு ழக்க மென் றிட9

    …………………………………..’ என்பன பாடல் வரிகள்.

    (குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்- தி. சு. ஆறுமுகம் சிவதாசன்)

    இப்பாடலின் உட்பொருள் மிக அருமையானது. ஒன்று, இப்பாடலில் அனைத்து சமயங்களும் ஒன்றே எனும் கருத்து தொக்கி நிற்கின்றது. அவை பரம்பொருள் எனும் பெருங்கடலில் நாம்  சென்று சேர்வதற்கு இறைவனைக் குழந்தையாகக் கொண்டு நாம் செலுத்தும் அன்பும் ஒரு காரணமாகும். 

    இவ்வாறு பல சுவைகளையும் இப்பாடல்களில் நாம் படித்து இன்புறலாம். 

    (வளரும்)

    ———————–&—————-

    பார்வை நூல்கள்:

    1. நடேச கவுண்டர்- எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
    2. சிதம்பர அடிகள்- திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
    3. குமரகுருபரர்- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
    4. நடேச கவுண்டர்- திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்
    5. குமரகுருபரர்- முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
    6. மழவைராயனேந்தல் சுப்பிரமணிய பாரதியார்- மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ்
    7. விசயகிரி வேலோச்சின்னவையன்- பழனிப் பிள்ளைத்தமிழ்
    8. தமிழ்விடு தூது
    9. தி. சு. ஆறுமுகம் சிவதாசன்- குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்.
    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 12.1

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 12.1

    -மீனாட்சி பாலகணேஷ்

    (சிறுபறைப்பருவம்- ஆண்பால்)

    ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்கள் பெரும்பாலும் முருகப்பெருமான் மீதானவையே. அவனுடைய வேல், மயில், அரக்கர்களையழித்த வீரச்செயல்கள், தேவர்களைக் காத்த வரலாறுகள் எனப் பற்பல கருத்துக்களைக் கொண்டமைந்த பாடல்கள் எண்ணற்றவை. அருணகிரிநாதரின் திருப்புகழ், கச்சியப்பச் சிவாச்சாரியாரின் கந்தபுராணம் ஆகியவற்றில் காணும் நிகழ்ச்சிகள், மக்களிடையே வழக்கிலிருந்து வரும் சிறு புனைகதைகள் ஆகியன பிள்ளைத்தமிழ் நூல்களின் புலவர்களால் பொருத்தமான பருவங்களில் இப்பிள்ளைத்தமிழ் நூல்களில் அழகுற எடுத்தாளப்பட்டுள்ளன.

    ஆண்பால் பிள்ளைத்தமிழின் ஒன்பதாம் பருவமாக சிறுபறைப் பருவம் அமையும். சற்று முன்பின்னாகவும் சில நூல்களில் அமைந்துள்ளதனைக் காணலாம். சப்பாணிப்பருவத்தைப் போலவே, இப்பருவத்திலும் சிறுபறை முழக்கும் பாட்டுடைத்தலைவனின் சின்னஞ்சிறு கைகளே பாடுபொருளாக அமைகின்றன. ஆண்மகவு பத்தொன்பதாம் திங்களில் அல்லது மூன்று முதல் நான்காண்டுகளில் சிறுபறை முழக்குவதாகப் பாடுவது வழக்கம்.

    ‘பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்
    சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின்
    கண்ணகத் தெழுதிய குரீஇ ப்போலக்
    கோல்கொண் டலைப்பப் படீஇயர் மாதோ1,’

    எனும் பாடலொன்றால் பெருஞ்செல்வர்களின் இல்லத்துச் சிறுவர்கள் தம்தோளில் சிறுபறையை மாட்டிக்கொண்டு முழக்குவர் எனவும், அப்பறையின் கண்ணகத்து குருவியின் படம் வரையப்பட்டிருக்கும் என்ற செய்தியையும் அறிகிறோம்.

    இன்று நாம் காணப்போவது முருகப்பிரானின் சிறுபறை முழக்கும் கைகளின் செயல்களைத்தான்!

    ‘வாங்கும் எனக்கு இருகை- ஆனால் அருளை
    வழங்கும் உனக்குப் பன்னிருகை2,’

    என ஒரு அடியார் முருகனைப் போற்றியுள்ளார். எண்ணிக்கை கைகளுக்கானதல்ல! அத்திருக்கைகள் வாரிவாரி வழங்கும் அருட்செயல்களுக்காகத்தான் பலவாக உள்ளன எனக்கொள்ள வேண்டும்! முதலாவதாக, குழந்தையைச் சிறுபறை முழக்குமாறு தாயும் மற்றவர்களும் ஏன் வேண்டுகின்றனர் எனக் காண்போமா? வளர்ந்துவரும் குழந்தை கைகளால் செய்யவேண்டிய செயல்களைக் கற்க வேண்டும். அதற்கு கைகள் உறுதியாக வளர வேண்டும். எவ்வாறு அம்மானையாடும் பெண்குழந்தை (சிறுமி) கைகள், கருத்து, சிந்தனை அனைத்தையும் ஒருமுகப்படுத்தக் கற்றுக் கொள்கின்றதோ அவ்வாறே சிறுபறை முழக்கும் ஆண்மகவும் அதனைத் தாளலயத்துடன் ஒலிக்கக் கற்றுக்கொண்டால், கைகளும் கருத்தும் இணைந்து செயலாற்றும் திறமை படைத்தவனாக இருப்பான் என விழைகிறது தாயுள்ளம்.

    சிறந்த மிருதங்க வித்துவான்கள் அனைவருமே சிறுவயதிலிருந்தே தாளலயத்துடன் இணைந்து வளர்ந்தனர் எனக் கூறவும் வேண்டுமோ?

    பல சுவைமிகுந்த கருத்துக்களைப் புலவர் நடேச கவுண்டர் தாமியற்றிய எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் முருகனின் பன்னிருகைகளின் கைவண்ணமாகக் கூறிச் சிறப்பிக்கிறார். அவற்றைக் காணலாமா?

    இவர் போற்றுவது பன்னிரு கரங்களையுடைய குழந்தை முருகன்; எல்லாமறிந்த எல்லாம்வல்ல இறைவனே சிறுகுழந்தையான முருகப்பெருமான் எனத்தெளிந்த அடியார் சிறுபறை முழக்கும் அவனுடைய சிறு கரங்களைப் பலவிதமாகப் போற்றுகிறார்.

    மிகுந்த துயரளிக்கும் பிறவிப்பெருங்கடலிலிருந்து எடுத்து எம்மைத் தாங்கி ஆறுதல் அளிப்பதொருகை;

    இருவினைகளையும் செய்து இந்த உலகில் உழலும்போது ‘அஞ்சாதே!’ என அபயம் அளிப்பது மற்றொரு கை.

    அருணகிரிநாதருக்கு அருள் செய்யும் விதத்தில் செபமாலையை அவருக்கு அளித்ததொரு சிவந்த கொடைக்கை.

    மிகுந்த செருக்குடன் திரிந்த தாமரையோனாகிய பிரமனுடைய தலை குலுங்குமாறு குட்டுவது ஒரு கை!

    தேவர்களின் அரசனான இந்திரனுக்கு, அவனுடைய பறிபோன அரசபதவியைத் திரும்பப் பெற்றளித்து அவன் தலையில் மகுடம் சூட்டும் வரதக்கை இன்னொன்று!

    இனிய தெளிந்த அமுதம் போன்றவளான வள்ளியம்மைக்கு மணமாலையைச் சூட்டும்கை மற்றொன்று!

    இவ்வுலகத்திலுள்ளோர், வானுலகிலுள்ளோர் என அனைவரும் வேண்டுகின்றன அனைத்தினையும் கொடுத்தருளுவது ஒருகை!

    அருணகிரிநாதர் கோபுர உச்சியிலிருந்து கீழே விழுந்தபோது அவர்தமைத் தாங்கியெடுத்து ஏந்திக்கொண்டது மற்றொருகை!

    சித்தர் பெருமக்களுக்கு ஞானநெறியைத் தெரிவிக்கும்வகையில் சின்முத்திரை காட்டும்கை ஒன்றாகும்.

    சீர்காழி எனும் திருத்தலத்தில் ஞானசம்பந்தராக அவதரித்து அந்தணராகிய தமது தகப்பனாருக்கு சிவபெருமானை, ‘தோடுடைய செவியன்’ எனச் சுட்டிக்காட்டிய திருக்கை மற்றொன்றாகும். (குழந்தையான சம்பந்தர் குளக்கரையில் தனியே இருந்து அழுதபோது, உமையம்மையும், சிவபிரானும் விடையேறி வந்து அவருக்கு ஞானப்பாலைப் புகட்டிச் சென்றனர். பின் கரையேறி வந்த அந்தணராகிய தந்தை யார் வந்தனர் எனக்கேட்க, “தோடுடைய செவியன் விடையேறித் தூயவெண்மதி சூடி வந்தனன்,” எனச் சுட்டியது குழந்தை. அதனையே இங்கு குறிப்பிடுகிறார்.)

    மாலையணிந்த பாண்டியமன்னனின் (வேம்பன்) சுரத்தை நீக்கி, அவன் உடல் குளிருமாறு திருநீறு பூசிய கையொன்று! (சமணோரோடான மதவாதத்தில், திருநீற்றைப்பூசி, நின்றசீர் நெடுமாறப் பாண்டியனின் சுரநோயைத் தீர்த்தருளினார் திருஞானசம்பந்தர். அதனை இங்கு நயம்படக் கூறினார் புலவர்.)

    கோலக்கா எனும் ஊரில் பொற்றாளம் கிடைக்கப்பெற்றது ஒருகை. (சிவபிரான் குழந்தை ஞானசம்பந்தருக்கு பொற்றாளங்களை அளித்தது திருக்கோலக்கா எனும் ஊரிலாகும்; அதுவே கூறப்பட்டுள்ளது)

    இக்கைகளால் எல்லாம் எட்டிக்குடிவாழ் முருகா நீ சிறுபறை முழக்கியருளுக! எனப்புலவர் கற்பனை வளம் பெருக வேண்டிப்பாடும் இருபாடல்கள் மிக்க அழகானவையாகும்.

    ‘வருந்தும் பிறவிக் கடனின்று வாங்கி யெம்மைத் தாங்குங்கை
    மண்மேல் வினையி லுழலுங்கால் மயங்கா தஞ்ச லருளுங்கை
    ……………………………………………………………………………………………………
    முருந்து நகையெட் டிக்குடியாய் முழக்கி யருள்க சிறுபறையே
    முழுமா ணிக்கத் திரளொளியே முழக்கி யருள்க சிறுபறையே,’

    ‘இத்தா ரணியார் வானோர்வேண் டியவெல்லாமு மீயுங்கை
    எம்மானருண கிரிசிகரி யிருந்து விழுங்கா லேந்துங்கை
    ……………………………………………………………………………………………………
    கொத்தார் வேம்பன் சுரநீங்கிக் குளிர நீறு பூசுங்கை
    கோலக்காவிற் பொற்றாளங் கொண்ட கையா லுமையளித்த
    …………………………………………………………………………………………………….
    முழுமா ணிக்கத் திரளொளியே முழக்கி யருள்க சிறுபறையே3,’

    என அழகிய இரு பாடல்களில் ஈராறு கரங்களின் பெருமையை எல்லாம் அழகுறப் பேசுகிறார்.
    இப்பாடல்களின் சிறப்பே குழந்தை எனக் கொண்டாடப்பட்டுப் போற்றப்படும் தெய்வத்தை, அதன் குழந்தைமைச் செயல்களுக்காகப் போற்றிவரும் பாடல், ஒரு கட்டத்தில் அக்குழந்தையின் தெய்வத்தன்மையைப் புலவர் உணர்ந்து புகழ்ந்து பாடுவதாக அமைந்துவிடும் அழகுதான்!

    எப்போதும் மோனத்திலிருக்கும் எம்பிரான் சிவபெருமான் அம்மோனநிலை கலைந்து சற்றே அமைதியாக அமர்ந்து கொண்டிருக்கிறார். தகப்பனார் சிறிது இவ்வாறு அமர்ந்திருந்தாலும் சிறிய குழந்தைகள் உடனே உரிமையுடன் அவர் தோள்மீதும் மடிமீதும் ஏறி விளையாடுவார்களல்லவா? குழந்தை விநாயகனும் இதற்கு விலக்கல்லவே! ‘குறுகுறு’வென நடந்துவந்து சிவபிரான் மடிமீதேறித் தோள்களை அடைய எத்தனிக்கிறான். குழந்தையின் பூப்போன்ற மேனிஸ்பரிசம் பட்டதும் ஐயனின் திருமேனி அன்பில் குழைந்து இளகுகின்றதாம்! அழகான, நுணுக்கமான, உணர்வுபூர்வமான கற்பனை!

    ஐயனின் தோள்மீதேறி இருகால்களையும் வாகாக இருபுறமும் போட்டுக்கொண்டு குறும்புகள்செய்ய வசதியாக அவருடைய தலையைப் பிடித்தபடி அமர்ந்துகொள்கிறான் விநாயகன். அவனைப் பொறுத்தவரை தன் தந்தையை அழகுசெய்வதாகக் கருதுகிறான். அவருடைய சடைமுடியும், அதிலுள்ள அணிகலன்களும், உடலின் சாம்பல்பூச்சும் அவனுக்குப் பிடித்தமானவையாக இல்லை. தன்விருப்பப்படி அவரை அலங்கரிக்கத் திட்டமிடுகிறான் குழந்தை! அவர் சடாமுடியிலணிந்துள்ள கொன்றைமலர்வேணியினைப் பிடித்திழுத்து உதறி வீசியெறிகிறான். ‘சுடலைப்பொடி பூசிய’ பெருமானின் உடலைக் கழுவ எத்தனிக்கிறான். அதற்கு வாகாக அவருடைய சடையினின்று இழிதரும் கங்கைப்புனலைத் தனது தும்பிக்கையால் பிடித்து உறிஞ்சியெடுக்கிறான். (இக்காலத்தில் வாகனங்களைக்கழுவ ரப்பர்குழாய்களால் நீர் பீய்ச்சுவதைப்போல) அவ்வாறு உறிஞ்சிய நீரை அவர்மீது பீய்ச்சியடித்து சாம்பல்பொடிபடர்ந்த அவரது திருமேனியைக் கழுவுகின்றானாம்!

    புள்ளிகள் நிரம்பிய அரவங்கள், தலையிலணிந்த மாலை, வெண்மையான எலும்புகளாலாகிய மாலை, கையில் அவர் வைத்திருக்கும் மான், இடையிலுள்ள புலித்தோல் ஆகிய எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாக ‘வெடுக்,வெடுக்’கென எடுத்தெடுத்து அவருடைய கரத்திலுள்ள தீயினில் இட்டுப்பொசுக்குகிறான். பின் தலையிலணிந்த பிறையினை நோக்கி, ‘இது முழுமையான வட்டநிலவாக இல்லையே என்ன செய்யலாம்,’ என ஒருகணம் சிந்திக்கிறான். பிரான் அணிந்திருக்கும் வலிய, வளைந்த ஒரு பன்றிக்கொம்பினை எடுத்து அந்தப்பிறைநிலாவுடன் பொருத்திப்பார்க்கிறான். அட! அது அழகாகப் பொருந்தி வட்டவடிவாகக் காண்கின்றது; குழந்தையின் உள்ளம் மகிழ்கின்றது. இடையில் இந்த மானையும் வைத்தால் முழுநிலவாகுமே எனக்கருதி, மானையும் அதன் நடுவே வைத்துப் பொருத்துகிறான். பின் அந்த முழுநிலவை ஆகாயத்தில் உலவவிடுக்கின்றான்! வான்தரு எனும் தெய்வீகக் கற்பகத்தருவின் மலர்களாலும் இலைகளாலும் அதற்கு மேலும் அழகு செய்கின்றான்.

    இப்போது அவனுக்கு மகிழ்ச்சி பொங்குகிறது. “எல்லாம் பொருத்தமாக அமைந்துவிட்டது! ஒரு குறையும் இல்லை,” எனக்கைகளை அசைத்துக்கூறியபடி பெருமகிழ்ச்சிகொள்கிறான் விநாயகன் எனும் குறும்புக்குழந்தை.

    “இவ்வாறு எல்லாம் செய்து அசைத்து மகிழும் கரங்களால் சிறுபறை முழக்குவாயாக! தென்கோ இருந்தநகரின் செங்கழுநீர் (உற்பலம்) விநாயகனே! நீ சிறுபறை முழக்கி விளையாடி அருளுக,” எனத் தாயாரும் மற்றோரும் வேண்டுவதாக அமைந்த இந்த சிறுபறைப்பருவப்பாடல் தனியழகு கொண்டு விளங்குகிறது. வேறெந்த பிள்ளைத்தமிழிலும் காணாத கருத்தாக, குழந்தை கணேசன் தன் தகப்பனை அலங்கரிக்கும் அழகு, கவிநயமும், சொன்னயமும் மிகுந்து விளங்கும் பாடலினால் பேரழகுடன் விளங்கி நம்மைக் களிப்பிலாழ்த்துகிறது.

    சப்பாணி கொட்டும் கைகள், சிறுபறை முழக்கும் கைகள், இப்போது தந்தையான சிவபிரானையும் அலங்கரித்து மகிழ்கின்றன!

    குறுகுறுந டந்தெய்தி எம்பிரான் திருமேனி
    குழையமே லேறி வேணிக்
    கொத்தினைக் கோட்டினிற் கோத்தலைத் துதறிவான்
    குளிர்புனல் புழைக்கை எற்றிப்
    பொறியரவு தலைமாலை வெள்ளென்பு கைம்மாப்
    புலிச்சரும முதல ணியெலாம்
    பொள்ளென எடுத்தெடுத்து அங்கை அனலிற்பெய்து
    போக்கிஇள மதியை வன்றி
    எறுழுலவை ஒன்றப் பொருத்தித் திருக்கைமான்
    இடைவைத்து முற்று மதிசெய்
    திருவிசும்பு உய்த்துவான் தருத்தரும் பேரணிகொடு
    எங்கணும் அலங்க ரித்து
    சிறுமைஇலை இனியென அசைக்கும் கரம்கொண்டு
    சிறுபறை முழக்கி அருளே
    தென்கோ விருந்தநக ருற்பலவி நாயகன்
    சிறுபறை முழக்கி அருளே4

    இந்த விநாயகக் குட்டனை வாரியணைத்து உச்சிமுகர நமக்குமே உள்ளம் ஆவலில் துடிக்கின்றதல்லவா? பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் அழகியல் பார்வையில் பல தொன்மங்களையும், புராணக் கதைகளையும், கற்பனைக் கதைகளையும் கொண்டு திகழ்ந்தாலும் பல பாடல்கள் அவற்றினை இயற்றிய புலவோரின் திறமையில் அணிநயம், சந்தநயம் கொண்டு மிளிர்வது அவற்றினைப் பயில்வோருக்கு மிக்க இன்பம் பயப்பதாகும். அவ்விதத்தில் இன்று நாம் காணப்போவது புதுக்கோட்டை சமஸ்தானம் திருப்புல்வயலில் எழுந்தருளி இருக்கும் குமரக்கடவுள் மீது வீரபத்திரக்கவிராயர் அவர்கள் இயற்றியுள்ள குமரமலைப் பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு பாடல். இது சிறுபறைப் பருவத்திற்கானதாகும்.

    முற்றும் கற்றுணர்ந்தவர், சந்தநயம் தோன்றி விளங்கப் பாடுவதில் அருணகிரியாரை விஞ்சியவர் கிடையாதென்பர். அதுபோன்றே இப்பாடல் ‘முத்தைத்தரு,’ என்ற திருப்புகழ்ப் பாடலை மிகவும் நினைவுபடுத்துகின்றது. சந்தநயம் மட்டுமின்றி அருணகிரியாரின் பாடல் போன்றே அதே தொன்மத்தைப் பொதிந்து அமைந்தமையும் மிக்க வியப்பைத் தருகின்றது. அருணகிரிநாதரின் திருப்புகழின் சந்தத் தாக்கத்தினை இப்பாடல்களில் உணரலாம். முதற்கண் பாடலை அதே சந்தநயத்திலேயே பாடிப்பார்த்துக் கொள்ளலாமே!

    ‘முச்சுடர் முக்கண் முதற்கட வுட்கொர்
    முதற்படு பிரணவ மா
    முற்பொரு ளைத்தெரி வித்தகு ருக்கண்
    முகத்தருள் விழியுடை யாய்
    இச்சக மற்றுள வெச்சக முற்றினு
    மிச்சக மொடுபுகழ் வோய்
    இக்குவி லிக்குயர் மைத்துன செச்சை
    யியக்குறு மழகளி றே
    கச்சப மொத்த புறத்தடி மைக்குழல்
    கட்கய லகலிகை யாய்க்
    கற்சிலை யைச்செய் பதத்தர் மகிழ்ச்சி
    கருத்தெழ வருசுதை யாங்
    கொச்சை மொழிக்குயி லைப்புண ருத்தம
    கொட்டுக சிறுபறை யே
    கொற்றவ யிற்கும ரச்சிலை யுற்றவ
    கொட்டுக சிறுபறை யே5,’ என்பன பாடல்வரிகள்.

    அருமையான சந்தநயம்! கருத்துச்செறிவு! பொருள்நயத்தையும் காணலாமா?
    சூரியன், சந்திரன், நெருப்பு ஆகிய மூன்று சுடர்களும் மூன்று கண்களாக விளங்கும் முதற்கடவுள் சிவபிரான்! அவனுக்கு, அந்த முழுமுதற்பொருளுக்கு, பிரணவ மாமந்திரத்தின் பொருளை உணர்த்தியருளிய குருநாதன் குமரப்பெருமான்! இதனைத்தான் அருணகிரிநாதரும், ‘முக்கட்பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து6,’ எனப்பாடினார்.

    தனது ஆறுமுகங்களிலும் இலங்கும் அருள்பொழியும் விழிகளை உடையவன் அக்குமரன். இந்த உலகம் (இச்சகம்) மற்றும் இருக்கின்ற எல்லா உலகங்களிலும் (எச்சகம்) கண்டாலும் இவனை அனைவரும் ஆசையுடன் (இச்சகம், இச்சை) புகழ்ந்து போற்றுகின்றனர். இடுக்கண் (இக்கு) வருங்காலத்து உடன்வந்து காப்பவன் அவனே! ‘மைத்துன!’ என்பது விளியாகக் கொள்ளலாம்.
    செச்சை எனப்படும் சந்தனக்குழம்பினைப் பூசிய இளமையான யானைக்கன்று போல்பவன் இக்குமரன் எனப் பொருள் கொள்ளலாம்.

    ஒரு கற்சிலையை -கருங்கல்லை- தனது திருவடி பட்டதனால் அகலிகையாய் உருக்கொள்ளச்செய்த ‘பதத்தவர்’ எனத் திருமாலை, இராமனைப் போற்றுகிறார். அகலிகையை, ‘ஆமைபோலும் (கச்சபம் ஒத்த) புறங்கால்களைக் கொண்டவள், மைபோலும் கருங்குழலினள், கயல்விழியாள்,’ எனவெல்லாம் வருணிக்கிறார். இராமன் திருவடிபட்டுத் தன் சுய உருவான அகலிகையாய் மாறி அவனுடைய திருவருளுக்கும் உரிமையானவள்; ஆகவே இந்த வருணனைக்கும் அருகதை உடையவள் எனத் தெரிவிக்கிறார்!

    அவ்வாறு செய்த திருமாலின் மனம் மகிழுமாறு வள்ளிக்குறமகளை மணந்துகொண்டவன் இக்குமரன். அக்குறவள்ளியோ மழலைமொழி பேசும் குயில் போன்றவள். ‘இத்தகு செயல்களைச் செய்த உத்தமனாகிய குமரனே, உனது சிறியபறையை முழக்குவாயாக! கொற்றவனே! வில்லேந்திய குமரனே! சிறுபறையை முழக்குவாயாக!’ எனப்புலவர் வேண்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. சிலை என்பதற்கு மலை எனவும் அகராதியில் ஒரு பொருள் உண்டு. ஆகவே, கிரௌஞ்ச மலையைப்பொடி செய்த முருகனே எனவும் பொருள் கொள்ளலாம். முருகனை நாம் வேலேந்திய வடிவத்திலேயே அறிந்தவர்களாதலின் வில்லேந்திய வடிவம் சிறிது ஆச்சரியத்தினை விளைவிக்கும்!

    (திருவையாற்றில் ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி திருக்கோவிலில், முருகனின் ஒரு சிலைவடிவம் வில்லேந்திய நிலையில் காணப்படுகிறது.)

    (வளரும்)

    —————————-&———————–
    பார்வை நூல்கள்:

    1. நற்றிணை- பா 58. வரி-1-4
    2. ஊத்துக்காடு வேங்கட கவி பாடல்
    3. நடேச கவுண்டர்- எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்
    4. சிவஞான முனிவர்- கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்
    5. வீரபத்திரக் கவிராயர்- குமரமலைப் பிள்ளைத்தமிழ்
    6. அருணகிரிநாதர்- திருப்புகழ்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 11.2 (சிற்றில்பருவம்- ஆண்பால்)

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 11.2 (சிற்றில்பருவம்- ஆண்பால்)

    – மீனாட்சி பாலகணேஷ்

    சிறுமிகளின் சிற்றில் விளையாட்டு பல கூறுகளைக் கொண்டதாகும். ‘பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்1,’ எனும் நற்றிணை வரிகள் சிற்றில்பருவ விளையாட்டுப் பலவகைப்பட்டதெனக் கூறாமல் கூறும். பொய்யாக, பாவனையாக, சிறு மணல்வீடுகளைக் கட்டுதல், அதில் தாய்மார்கள் செய்வதுபோல, அடுப்பில் சமையல் செய்து குடும்பத்தோர்க்குச் சோறிடுதல், பாவைகளைத் தமது குழந்தைகளாகப் பாவித்து அவற்றைப் பேணிப் பராமரித்தல், அவற்றிற்கு மணம் பேசுதல், திருமண விருந்து சமைத்தல் ஆகியன இதன்பாற்படும். இனிமையான சிறுமிப்பருவத்தில் உடலுடன் மனமும் வளர்ச்சியடைந்து குழந்தை இளம்பெண்ணாக மாறிக்கொண்டு வருவதன் அடையாளம் இதுவே!

    அரிதாகப் பாடப்பட்ட பெண்பால் பிள்ளைப்பருவங்களாக, சிற்றில் பருவத்தின் பல வடிவங்களை,  சிறுவீட்டுப் பருவம் (சிற்றில் இழைத்தல்), சிறுசோற்றுப்பருவம், பாவைவிளையாடல் பருவம் எனச் சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் கண்டு களிக்கலாம்.

    ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களிலும் இவை பற்றிய கருத்துக்கள், அதாவது பெண்குழந்தைகள் ஆகிய சிறுமியர் சிற்றிலிழைத்துச் சிறுசோறு சமைத்துப் பாவைகளைக் கொண்டு மணம்பேசி விளையாடுவது பற்றிய செய்திகள் சிற்றில்பருவப் பாடல்களில் விரவிக் கிடப்பதனைக் கண்டோம்;

    மேலும் இனிமையான கருத்துக்கள் சிலவற்றையும் காண்போம்.

    திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் சிறுமியர் முருகனிடம் தங்கள் சிற்றிலை அழித்தல் வேண்டாம் என வேண்டும் பாடல் சுவைவாய்ந்தது.

    “நீ எங்கள் சிற்றிலை அழிப்பதற்காக நாங்கள் வருந்தவில்லை! சிற்றிலை இழைத்த மணலின் சிறு முத்துக்கள் உனது பூம்பாதங்களை உறுத்தி நோகச்செய்யாதோ?

    “பிறை முடித்த சோதியாகிய உன் தந்தை சிவபெருமான் உன்னை ஆசையுடன் எடுத்து முகத்தோடு சேர்த்து அணைத்துத் தோளில் இருத்திக் கொஞ்சிடும்போது உன் உடலிலிருக்கும் புழுதி அவருடைய தோளில் படியாதோ?

    “அனைத்து உலகங்களையும் ஈன்றெடுத்தும் வயது முதிராத இளங்கன்னியாகிய உன் தாய் உன்னைத் தனது மடியிலிருத்திக்கொண்டு ஆசையாக முலைப்பாலை அருத்துவிக்கும்போது உனது கழற்கால்களில் உள்ள சிவந்த சிறு மணற்துகள்கள் (எம் சிற்றிலை நீ சிதைத்தபோது அதில் பதிந்த துகள்) அவள்மீதும் படியாதோ?

    “ஆகவே முருகா! எம் சிற்றிலை நீ சிதைக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று வேண்டுகின்றனராம். இதுவும் ‘சிற்றிலை அழிக்காதே’ என்பதற்காக சிறுமியர் மேற்கொள்ளும் நல்ல உபாயம்!

     தையல் மடவார் இழைத்தவண்டல்
    தன்னை அழிக்கும் அதுக்கல்ல
    தரளம் உறுத்தி உனது பொற்பூந்
    தண்டைத் திருத்தாள் தடியாதோ
    ………………………………………………..
    வையம் அனைத்தும் ஈன்றெடுத்தும்
    வயது முதிரா மடப்பாவை
    மடியில் இருத்தி முலையூட்டி
    வதனத் தணைக்கில் உன்கழற்காற்
    செய்ய சிறுதூள் செறியாதோ
    சிறியேம் சிற்றில் சிதையேலே2

    திருவிடைக்கழி முருகன் பிள்ளைத்தமிழில் வேறொரு நயத்தைக் காணலாம். சிறிது அறிவார்ந்த சிறுமிகள் சிற்றிலிழைக்கின்றனர். அதனை அழிக்க வரும் முருகப்பெருமானிடம் சில கேள்விகளை முன்வைக்கின்றனர்: “எம்தந்தை செய்யும் ஐந்தொழில்களில் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அழிப்பதும் ஒன்றாகும்; அதனை யானும் செய்வேன் என நீ இங்குவந்தால், மற்ற நான்கினையும் எவர் செய்வார்கள் எனக் கூறுவாயாக! அழிப்பது இறைவனின் இளைப்பாற்றும் கருணை என்பர்; ஆனால்  உனது அழிக்கும்தொழிலானது எங்களுக்கு மிக்க இளைப்பினைத் தருகின்றது,” எனக்கூறுவர்.

    அழிக்குந் தொழினந் தந்தைதொழி லதனு
    லியானு மதுபுரித
    லறனே யெனின்மற் றொருநான்கு மார்செய்
    தொழிலெங் களுக்குரைத்தி
    கழிக்கு மதுவு மிளைப்பாற்று கருணை
    என்பார தற்குமறை
    கரிநீ யியற்றுன் தொழிறானெங் களுக்கு
    மிகவு மிளைப்பேற்றும்
    …………………………..3

    மேலும், “நீ உலகை அழிக்கும் பிரானின் மகனென்று பெருமைபேசி, நாங்கள் வருந்தி இழைத்த எமது சிற்றிலை அழிப்பாய். அப்பிரானின் உயிராகிய அன்னையோ எனில் அண்டம் முழுவதனையும் சிறுவீடாக ஆக்கி மகிழ்வாள்; அவளுடைய மகனான நீ எங்களிடம் சிற்றிலை அழகுறப் படைக்குமாறு கட்டளையிட்டால் தகாதா? பழியுண்டாகுமா என்ன?” எனக் கேட்கின்றனர்.

    மேவியுலக முழுதழிக்கும் விமலன் மகன்யா
    னென் றெளியேம்
    விரும்பி வருந்தி யியற்றுசிறு வீட்டை
    யழிப்பா யனையபிராற்
    காவி யனைய பெருமாட்டி யண்ட
    முழுதும் சிறுவீடென்
    றாக்கி மகிழ்வா ளவண்மகனீ யலையோ
    ……………………………….
    பாவி யேங்கள் சிறுவீட்டைப் படைக்கு
    மாறே பணித்தேகில்
    பழியுண்டாமோ………………….4

    இவையனைத்தும் சிறுமியரின் உளநோக்கில் அமைந்த அழகான, சுவையான எண்ணச் சிதறல்களைக் கொண்டமைந்த பாடல்கள்.

    திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ் வேறொரு காட்சியைக் கண்முன் விரிக்கின்றது. சிறுமியர் கூடிப் பாவை விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். தத்தம் பாவைகளுக்கு மணம்பேசி முடித்து, விருந்து படைக்க, சிறுசோறு சமைக்கின்றனர். அப்போது அங்குவரும் சுவாமிநாதனாகிய குமரப்பெருமான் அவர்கள் சிற்றிலை அழிக்க முற்படுகிறான். சிறுமியர் அவனிடம் கூறுவதாக அமைந்த இனியபாடல் கருத்துநயமும் இலக்கியச்சுவையும் பொதிந்து இலங்குகின்றது. தம்பிரான் தோழரான சுந்தரமூர்த்தி நாயனாரின் கதையையும் உரைக்கின்றது.

    “உனது தந்தை ஒருபெண்ணின் மணத்தை முன்பு தடுத்து நிறுத்தினார். புத்தூர் சடங்கவி சிவாச்சாரியாரின் மகள் சுந்தரரை மணக்க இருந்ததனைச் சிவபெருமான் தடுத்தார். அந்தப் பாவத்திற்காக கால்களில் கல்லும் மண்ணும் குத்தி உறுத்த, திருவாரூர் வீதிகளில் சுந்தரருக்காகப் பரவையிடம் தூது சென்றலைந்தார். அதனை நீ அறியாயோ? நாங்கள் முயன்று பாவைகளுக்குத் திருமணம் முடிக்க எண்ணும் இவ்வேளையினில் வந்து எங்கள் சிற்றிலைச் சிதைக்கின்றனையே! இந்தப் பாவத்திற்காக எத்தனை பெண்களிடம் கால்கள் வருந்த நீ தூதாகச் செல்ல வேண்டிவருமோ?” எனக் கேட்பதாக அமைந்துள்ளது.

    ‘உந்தை புத்தூர் வருபாவை ஒருத்தி மணத்தை ஒருகால்முன்
    ஒழித்த பவத்தால் இருகாலும் உறுத்த ஆரூர் வீதியெலாம்
    முந்தை யிருளில் நடந்தலைந்த முறைமை யறியாய்ப் பலகாலும்
    முயன்று பாவை பலர்க்குமணம் முடிக்கக் கருதும் வேளையிடை
    வந்து சிதைத்தி யிப்பாவம் மலர்கால் சிவக்க எத்தனைகால்
    மகளிர் பால்நீ தூதாக வருந்தி நடக்கப் புரிந்திடுமோ?5 என்பது பாடல்.

    பெண்குழந்தைகளின் விளையாட்டை ஊன்றி நோக்கிய புலவர் பெருமக்களால்தான் இவ்வாறு சுவைபடப் பாடவியலும் எனலாம்.

    சிறுபெண்கள், “சிற்றிலை அழிக்காதே,” என வேண்டுவதாக அமைந்த பாடல்கள் மட்டுமின்றி, ஆன்மீகத்திலாழ்ந்த புலவர் பெருமக்கள், சைவசித்தாந்தக் கருத்துக்களையும் அமைத்துப் பாடல்களை இயற்றியுள்ளனர். சிதம்பர அடிகள் இயற்றியுள்ள திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழில் பலபாடல்கள் இவ்வண்ணம் அமைந்தவை. இந்நூலில் சிற்றிற்பருவம் ஒன்பதாம் பருவமாக அமைக்கப்பட்டுள்ளது.

    மலங்கள் நீக்கப்பட்ட தமது அழகிய மனத்தினை அடியவர்கள் சிறுவீடாகக் கொண்டுள்ளனர். இதில் அன்பு, பொறுமை, ஆசைகளை நீக்குதல் ஆகியவற்றால் அடுப்பினை அமைக்கின்றனர். ஆணவமலமாகிய விறகினில் சிவஞானம் எனும் தீயை மூட்டுகின்றனர்; என்றும் நிலைபெறும் உயிரினைப் பானையாக்கி அதில் பொங்கி வழியுமாறு திருவருள் எனப்படும் உலைநீரை நிரப்புகின்றனர். பெருமைவாய்ந்த சிவானந்தம் எனும் இனிமையான சோற்றினை நாள்தோறும் அதில் சமைக்கின்றனர். என்றென்றும் ஒளியாத தற்போத இருள் அகலுமாறு சகசநிட்டை எனும் விளக்கினை ஏற்றிவைத்து, அவ்வடியவரின் நிலையில் தானும்நின்று அருளுபவன் முருகன். சிற்றில் விளையாடும் கீழ்மையிலிருந்து நீங்கிய உள்ளத்தோரால் புகழப்படும் அவன் உமையின் திருமகன். அவனிடம், அத்தகைய பெருமையும் புகழும் வாய்ந்தவனிடம் தாமிழைத்த சிற்றிலை அழிக்க வேண்டா எனச் சிறுமியர் வேண்டுவதாக அமைந்த பாடலிது.

    ‘அடியார் நிமலத் திருவகத்துள்
    அன்பு பொறுமை யவாவறுத்தல்
    அடுப்பாங் கமைத்து மலக்காட்டத்
    ததிக ஞானக் கனல்மூட்டி
    மடியா திருந்த உயிர்க்கலசம்
    …………………………
    மாறாப் பெருமைச் சிவானந்த
    மதுரச் சோறு தினம்பொங்கி
    விடியாச் சீவ போதஇருள்
    வீய………………6 என்பன பாடல் வரிகளாம்.

    சிறுவர்களின் சிற்றில் விளையாட்டினைப் பொருளாக்கி அதனைச் சிவானந்தம் எனும் தேனில் தோயும் அடியவரின் நிலைக்கு உவமையாக்கிக் கூறிய இது அருமையான பாடலாகும்.

    குருந்தமலை வேலாயுதசாமி பிள்ளைத்தமிழின் சிற்றில்பருவத்துப் பாடல்களில், ‘சிற்றிலை அழியேல்,’ எனச் சிறுமியர் வேண்டும்போது, சிற்றிலை அழிக்க முற்படும் சிறுவன் முருகனைத் தெய்வமென அவர்கள் உணர்ந்தமையால், தாம் அவனுக்கு வழியடிமை என்றும், எமது உள்ளத்திற் பொருந்தியிருந்து, எங்களுக்கு நன்னெறியை உணர்த்தி, மாயை, கன்மம் ஆகிய மலங்களை நீக்கி, உள்ளத்தில் குடிகொள்ளும் உருவமாகவும், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட அருவமாகவும் உணர்ந்து வழிபடும்படிக்கு எம்மைத் தடுத்தாட்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுவதாக அமைந்துள்ளது.

    ‘வழி அடியோம் குடி முற்றவும் ஆட்கொண்டருளும் குமரா!7 என்றும்,

    ‘…………………………………..கதி
    காட்டி, மாயை கன்மம் அறக்
    கடத்தி, புறத்தில் அகத்தில் இசை
    கண்டம் அகண்டமயம் பொருந்தத்
    திருத்தும் கமலச் சேவடியால்…8,’

    என்றும் அமைந்த பாடல்களைக் காணலாம். தாம் குழந்தையாகக் கண்டு மகிழ்ந்து களிக்கும் இறைவனே தமது முத்திக்கும் வித்தாவான் எனும் பேருண்மையை அறிந்த அடியார்கள் அதனைப் பாடல்களிலும் பதிவுசெய்துள்ளமை உள்ளத்தைத் தொடுவதாகும்.

    வைணவப் பிள்ளைத்தமிழ் நூலாகிய அழகர் பிள்ளைத்தமிழ் காட்டும் சிறுமியர் தங்கள் சிற்றிலை அழிக்கவரும் திருமாலழகனான சிறுவனிடம் உரைப்பது சிந்தைக்கு விருந்தாகின்றது: தெய்வத்தின் திருவடி தீட்சையால், பரிசத்தால் அனைத்துயிர்களும் முத்தி எனும் பெருநிலையினை அடையலாம்.

    “வரிசையாக மணிப்பந்தினையும், பொற்கழங்கினையும் ஆடும் சிறுமியரும், செய்குன்றமமைத்தும், வண்டல் மண்ணையிழைத்தும் பொன்னூசலை உதைத்தும் விளையாடும் இளம்சிறுமியரும், மேலும் அவர்கள் விளையாடும் இடங்களில் தேன்சொரியும் பருத்த குரவமரங்களும், அவரவர்கள் கொல்லைகளில் குதித்துவிளையாடும் ஆவின் இளம்கன்றுகளும், பச்சைக் கிளிப்பிள்ளைகளும் ஆகிய இவையனைத்தும் (சிற்றிலை அழிக்க முற்படும்) உன் பாதத்தூளிபட்டு முத்தியாகிய பெருவீட்டினை அடைந்தால் எங்களுடைய இந்தப் பொய்தல் விளையாட்டு அழிந்து படுமே! தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனை உனது உந்தியில் உற்பவித்த தேவே! எமது சிற்றிலை அழிக்க வேண்டா!” என வேண்டும் கருத்தமைந்த பாடல் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும்.

    கோவை மணிப்பந் தெறிந்தாடும்
    கொடிபொற் கழங்கு பனல்வாவி
    கொட்குங் கிரணச் செய்குன்று
    கொய்பூந் தளவப் பந்தல்வண்டற்
    பாவை யுகைக்கும் பொன்னூசல்
    பராரைக் குரவந் தேன்கொழுக்கும்
    படப்பை குதிக்கு மான்கன்று
    பசும்பொற் கிள்ளைப் பிள்ளையிளம்
    பூவை யிவையுன் பதத்தூளி
    பொதியப் பெருவீ டுறிலடியேம்
    பொய்த லொழியு மலர்வனசப்
    பொகுட்டி லிருக்கு நான்குமுகத்
    தேவைத் திரவுந் தியிலளித்த
    சிறுவன் சிற்றில் சிதையேலே9

    பல விதமான தொன்மங்களை இணைத்தும் சிற்றிலிழைப்பதுடன் பொருந்தக்காட்டும் உவமைகள் பெருக அழகான பாடல்கள் புனையப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக ஒன்றினைக் கண்டு இக்கட்டுரையை நிறைவு செய்வோம்.

    அரும்பாத்தை வேத விநாயகனைிடம் தம் சிற்றிலை அழிக்க வேண்டாமென வேண்டும் சிறுமியர் இன்னொரு புத்திசாலித்தனமான கூற்றை முன்வைக்கின்றனர்.

    “சேரமான் பெருமாள் நாயனார் குதிரைமீதேறிச் சென்று கயிலையை அடையுமுன்பே, சிந்தையுருகிப் பைந்தமிழால் கவிபாடி உன்னை வழுத்திப் பூசிக்கும் மேனிமெலிந்த அவ்வையாரை நீ உன் தும்பிக்கையால் தூக்கியெடுத்துக் கயிலாயத்துச் சேர்த்து மேல்வீடளித்தனை; சிறுமிகளாகிய எங்களுக்கு நாங்கள் பாடுபட்டு இழைத்துள்ள இவ்வீட்டினையாவது அழியாது அளிக்கவேண்டாமோ?’ என்கின்றனராம்.

    ‘சேரற் கிறைவன் வாம்பரிமேற்
    சென்றுகயிலை புகுமுன்னே
    சிந்தை யுருகிப் பைந்தமிழ்நூல்
    செப்பி வழுத்து மப்பொழுது
    வீரத் துதிக்கை கொண்டேந்தி
    மேனி மெலிந்தவ் வையாருக்கு
    மேல்வீ டளித்தாய் சிறுமியர்க்கிவ்
    வீடு மளிக்க வேண்டாமோ?10

    இவ்வாறு பலப்பல நயங்கள் நிறைந்த பாடல்களைப் பிள்ளைத்தமிழ் நூல்கள்தோறும் கண்டு, படித்து மகிழலாம்.

    (வளரும்)

                            ______&_______

    பார்வை நூல்கள்;

    1. நற்றிணை
    2. திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்- பகழிக்கூத்தர்
    3. திருவிடைக்கழி முருகன் பிள்ளைத்தமிழ்- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
    4. மேலது.
    5. திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்- கு. நடேச கவுண்டர்
    6. திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிதம்பர அடிகள்
    7. குருந்தமலை வேலாயுதசாமி பிள்ளைத்தமிழ்- தவத்திரு கந்தசாமி சுவாமிகள்
    8. மேலது
    9. அழகர் பிள்ளைத்தமிழ்- கவி குஞ்சரம் ஐயர்
    10. அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 11.1  (சிற்றில்பருவம்- ஆண்பால்) 

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 11.1  (சிற்றில்பருவம்- ஆண்பால்) 

    -மீனாட்சி பாலகணேஷ்

    ஆண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில்  எட்டாவது அல்லது ஒன்பதாவது பருவமாகப் பாடப்படுவது சிற்றில் பருவமாகும்.  

    இச்சிற்றில் பருவத்தில் சிறுமியர் மணலால் கட்டி விளையாடும் சிறுவீடுகளைக் காலால் உதைத்து அழிக்கும் செயலைச் செய்யும் சிறுவர்களின் (குழந்தையின்) விளையாட்டு கூறப்படும். எவ்வாறு சப்பாணிப் பருவம் தெய்வக் குழந்தையின் கைகளின் பெருமையைப் போற்றுகின்றதோ, அவ்வறே சிற்றிற் பருவத்தில் பாட்டுடைத் தலைவனாகிய ஆண் மகவின் கால்களின்/ திருவடிகளின் பெருமையும், உயர்வும் சிறப்பும் போற்றப்படுகின்றதனைக் காணலாம். இது ஆண் மகவின் பதினேழாம் திங்களில் பாடப்படும். இரண்டு முதல் மூன்றாண்டு நிறைந்த ஆண் மகவாகவும் கொள்ளலாம். இன்னும் சிறிது வளர்ந்த குழந்தையாகவும் கொள்ளலாம். ஏனெனில் இத்தகைய செயல்களைச் செய்வதற்கு குழந்தை சிறிது வளர்ந்தவனாகவும், ஓடியாடுபவனாகவும் இருத்தல் வேண்டும்.

    இவ்விளையாட்டு பெரும்பாலும் ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கு உரியது. சிறுபான்மையாகச் சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் சிறுமியர் சிற்றிலிழைப்பதனை ஒரு பருவமாகக் குறிப்பிட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர். இதுவும் பிள்ளைத்தமிழின் இலக்கணத்திற்கு உட்பட்டதாகும். இதுபற்றி பிறிதொரு கட்டுரையில் காண்போம். 

    சிற்றில் விளையாட்டு எனப்படும் பொய்தல் விளையாட்டு ஆண்-பெண் இருபாலரும் சிலசமயம் இணைந்தும், சில பொழுதுகளில் சிறுவர்கள் சிறுமியர் இழைத்த சிற்றிலை அழித்தும் விளையாடும் விளையாட்டாகும். இது ‘பொய்தல் விளையாட்டு’ எனப்படும். அதாவது, பொய்யாக, பாவனையாக, சிறிய ஒரு மணல் வீட்டினைக் கட்டி, கணவன் – மனைவி குடும்பம் நடத்துவது போன்று பாவனையாக, பொய்யாக, கற்பனையாக,  சிறுமியர் பாவைகளை வைத்து விளையாடுவது. சிறுசோறும் பாவனையாகவே சமைக்கப்படும். 

    கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரத்தில் பொய்தல் விளையாட்டு பற்றிய குறிப்புகளைக் காணலாம். ஆகவே இது காலகாலங்களாகச் சிறுவர், சிறுமியர்களால் விளையாடப்பட்டுவரும் ஒரு விளையாட்டு எனத் தெளிகிறோம்.

    கைதை வேலிக் கழிவாய் வந்து, எம்
    பொய்தல் அழித்துப் போனார், ஒருவர்
    பொய்தல் அழித்துப் போனார், அவர்நம்
    மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர்1. 

    மேலும் சங்க இலக்கியமான பரிபாடலும், ‘ஆடுவார் பொய்தல் அணிவண்டு இமிர்மணல்2,’ என்று சிறுபெண்கள் இழைத்து விளையாடும் சிற்றில்கள் வைகை ஆற்றுமணலை அழகு செய்வதாகக் கூறும்.

    இந்தச் சிற்றில் விளையாட்டு தொடர்பான நிகழ்வுகளைக் கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் பாடலொன்றில் விளக்கமாகக் காணலாம். அதில் சிற்றிலிழைத்த சிறுமியர், சிறுசோறாக உண்ணச் சிறுவன் கணேசன் கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களுக்காகக் காத்திருக்கின்றனர். பொய்யாக, மணலையும், சிறுமுத்துக்களையும் பெய்து சிறுசோறு சமைத்த சிறுமியர், மற்ற சிறார்கள் தமது மனைகளிலிருந்து கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களைச் சுவைத்து மகிழ்வர் என்பது கண்கூடு. சிறுவர்களும் இவர்களுடன் சேர்ந்து விளையாட்டிலும், விருந்திலும் பங்கேற்று மகிழ்வர் என்று இப்பாடலின் பொருள்கொண்டு அறியலாம்.

    ஒரு சிறுமியர் கூட்டம்; மண்ணால் சிறுவீடுகட்டி, சிற்றிலிழைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்; மூன்று கற்களை அடுக்கி, ஒரு சிறுமி சிவந்த மாதுளை மலர்களைப் பறித்துவந்து அவ்வடுப்பிலிட்டுப் நெருப்புப் பற்றவைத்தும் விட்டாள். வயதில் சற்றே பெரியவளான மற்றொரு சிறுமி அதன்மீது ஒருசிறு மண்சட்டியை ஏற்றி அதில் நிறைய மணலினையும் இட்டு சோறுசமைப்பதாகப் பாவனை செய்கிறாள். “ஆஹா, வெண்பொங்கலா அக்கா?” என மோப்பம் பிடிக்கின்றனர் மற்ற சிறுமிகள். அனைவருக்கும் பசி வயிற்றை உண்மையாகவே கிள்ளுகின்றது. இப்போது இவர்களுக்கு வேண்டியது எல்லாம் சிறுவர்கள் விரும்பும் விதம்விதமான -உண்மையான- தின்பண்டங்கள்தாம்.

    உடனே ஒருசிறுமி, “அதோ பாருங்களடி! நமது நண்பன் கணேசன் தொலைவில் தொந்தியசைய வருகிறான் பாருங்கள்,” என உற்சாகமாகக் கைகளைத் தட்டியவண்ணம் குதூகலிக்கிறாள். எல்லாரும் அத்திசையையே ஆவலாகப் பார்க்கின்றனர்.

    கணேசனேதான்! மெல்ல ஆடியசைந்து வருகின்றான்; இடதுபக்கம் இடுக்கிக்கொண்டிருக்கும் பாத்திரம் நிறையத் தின்பண்டங்கள்; வலது கையில் பாதி தின்றதொரு பணியாரம். அதனையும் அவசரஅவசரமாகத் தின்றுகொண்டேவருகிறான்! நண்பர்களை வந்தடையுமுன் முடிந்தமட்டும் தன்னிடமுள்ள பணியாரங்களைத் தின்றுவிடவேண்டும் என்ற பேராசை. சிறிது மிகுந்தால், ‘போனால் போகட்டும்,’ என அவர்களுக்குக் கொடுத்துவிடலாம் என்பது அவன் எண்ணம்போலும்!

    ஒருவழியாக அவன் பக்கத்தில் வந்து நிற்கிறான். சிறுமிகள் அனைவரும் ஓடோடிச் சென்று ஆவலுடன் அவனைச் சுற்றிவளைத்துக் கொள்கின்றனர். அவர்கள் பார்க்கப் பார்க்க அவன் பணியாரங்களை வாயிலிட்டு மென்று சுவைக்கிறானே தவிரப் பகிர்ந்துகொள்வதாகக் காணோம்! வாய்த்துடுக்கு மிக்கவளான ஒரு சிறுமி அவனிடம், “கணேசா! தொந்தியை ஆட்டிக்கொண்டு, மெல்ல வருகிறாயே! இன்று நமது விளையாட்டிற்கு நீ பணியாரம் கொண்டுவருவதாகக் கூறியதை மறந்துவிட்டாயோ? நீ சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்தில் மிகுந்ததையாவது எங்களுக்குத் தருவாய் என்று நாங்கள் ஆசையாகக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லையா உனக்கு? எங்களுக்குக் கொடுக்காமல் நீயே தின்றுவிடப்போகிறாயா?” என்று கடிந்துகொள்வதுபோலக் கேட்கிறாள்.

    கணேசனுக்கு எப்போதும் சினமே வராது. இன்று என்னவோ உண்டமயக்கம் போலும்! அவர்கள் பாடுபட்டுக் கட்டிவைத்திருக்கும் சிறுமண்வீட்டினைத் தன் காலால் விளையாட்டாக எற்றி உதைக்கிறான்; கூரை பிய்ந்து, ஒருபக்கச்சுவரும் உடைந்துவிழுகின்றது. சிறுமிகளுக்குக் கண்களில் நீர்தளும்புகின்றது.

    “இடையூறுகள் செய்வதில் மன்னன்’ எனும் பெயரை எங்களிடமிருந்து பெற்றுக் கொள்வதில் உனக்கு என்ன ஆசையோ கணேசா! ஏன் எங்கள் சிற்றிலைச் சிதைத்தாய்? நீ எவ்வளவு நல்லவன்? எங்களுக்கெல்லாம் பெரியவன்; எங்களிடம் மிகுந்த அன்பு கொண்டவன் அல்லவா? தயவு செய்து எங்கள் சிற்றிலைச் சிதைக்காதே,” என்று அவன் கரத்தைப்பற்றிக்கொண்டு கெஞ்சுகின்றனர் அச்சிறுமிகள்.

    பெருத்த வயிறு தயங்கமெல்லப் பெயர்ந்து நடந்து குடங்கைமிசைப்
    பெரும்பண் ணியமு மேந்தியேம்பாற் பேணி வருநின் கரவினைக்கண்
    டருத்தி யொடுநீ யுண்டபரி கலசே டத்தை யடியேங்கட்
    களிக்க வருவாயென்றுவகை யரும்பி வழிபார்த் திருந்தேமை
    வருத்த லழகோ விக்கினஞ்செய் மன்னனெனும்பேர் பேதையரேம்
    மாட்டுத் தெரிப்ப தொருபுகழோ மடவாரூடன் மவுணரென்றும்
    திருத்துங் கலைசைச் செங்கழுநீர்ச் சிறுவா சிற்றில் சிதையேலே
    தெள்ளித் தெளிந்தோர்க் கள்ளூறுஞ் செல்வா சிற்றில் சிதையேலே3

    சிவஞான முனிவர் இவ்வருமையான பிள்ளைத்தமிழை இயற்றியுள்ளார். சிறுவர்களின் விளையாட்டை நுணுக்கமாகக் கண்டு பதிவு செய்ததாக அமைந்த பாடலிது. கடவுளுக்குப் படைத்து எஞ்சியதனை (சேடத்தை) தாம் உண்ண விரும்புவதாகச் சிறுமியர் கூறுவது கணேசன் என்னும் சிறுவனை அவர்கள் கடவுளெனக் கண்டு தெளிந்ததாலும், ஆயினும் அவர்களுடன் அவன் விளையாட வந்ததனால் அவனைத் தங்களுக்குச் சமதையாகப் பாவித்து சண்டைபோடுவதனையும் இப்பாடலில் ஒருசேரக்கண்டு களிக்கலாம்!

    இதே தொனியிலமைந்த இன்னொரு பாடல் குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழில் அமைந்துள்ளது.

    சிறுமியர் சிலர் ஆற்றங்கரை மணலில் சிற்றில் எனப்படும் சிறுவீடுகளைக் கட்டி விளையாடிக் கொண்டுள்ளனர். குறும்புத்தனம் நிறைந்த சிறுவன் ஒருவன் அந்தச் சிறுவீட்டைக் காலால் எற்றி உதைத்து அழிக்க ஓடோடி வருகிறான். தினமும் நடக்கும் நிகழ்ச்சிதான் இது! இன்றும் சிற்றிலை அழிக்க அவன் ஓடோடி வருவதனைக் கண்டு அச்சிறுமியர் அவனிடம் இனிய மொழிகளைப் பேசி, சிற்றிலை அழிக்காமலிருக்க வேண்டுகின்றனர்.

    “உன்னைப் பெற்றெடுக்க உனது தாய் முற்பிறப்பில் பெரிய அரிய தவம் செய்தவளல்லவோ?” என்கிறாள் ஒரு சிறுமி.

    “அவ்வாறு உன்னை முயன்று பெற்றவள், எல்லாத் தெய்வங்களையும் அழைத்து உன்னைக் காப்பாற்ற வேண்டிக்கொண்டும் உள்ளாள்,” இரண்டாமவள்.

    “நீயும் வளர்ந்து முகத்தினை உயர்த்தி நோக்கித் தவழ்ந்து செங்கீரையாடியவண்ணம் (இவ்வாறு குழந்தை தவழுவது செங்கீரையாடுவது எனப்படும்) பொருளற்ற மழலை மொழிகளைப் பேசினாய்,” முதலாமவள். (‘கீர்’ என்றால் தமிழில் சொல் எனவும் ஒரு பொருள் உண்டு. ஆகவே குழந்தை செங்கீரையாடுவதனை, அது பொருளற்ற குதலைமொழி பேசுவதாகவும் கொள்ளுவர்).

    “இவ்வாறு தவழ்ந்துவரும் உனக்குத் தாலாட்டுப் பாடல்கள் பாடி உறங்கவும் வைத்தாள் உன் அன்னை.

    “பின் உன்னைக் குந்தி உட்காரவைத்துக் கரங்களைச் சேர்த்துச் சப்பாணி கொட்டி விளையாடப் பழக்கினாள்,” என் இன்னொருத்தி!

    “உன்னிடம் தனக்கு ‘முத்தம் தா’வென வேண்டினாள். உன்னைக் கூவி அழைத்து “வருக,” எனக் குறுநடை பழகி வருமாறு வேண்டி, கொஞ்சியும் குலவியும் உன்னை எடுத்து அணைத்துக் கொண்டாள்,” எனப் பட்டியலிடுகிறாள் வேறொரு சிறுமி.

    “பின்பு நீ உணவுண்ண மறுத்தபோதெல்லாம் அந்தி சாய்ந்தபின்பு ஆகாயத்தில் வரும் அம்புலியை உனக்கு வேடிக்கை காட்டியும் விளையாட அழைத்தும் உணவூட்டினாள்.

    “இவையனைத்தையும் செய்தவள், ‘குழந்தாய், நீ சென்று ஓடியாடி விளையாடுவாயாக!’ என உன்னைத் தெருவில் விளையாட அனுப்பியும் வைத்தாள். நீ என்னடா என்றால் இங்கு வந்து எமது சிறுவீட்டினை அழிக்க முயல்கிறாய். நாங்கள் இதற்காக உன்னை இங்கனுப்பிய தாயையே நொந்துகொள்ள வேண்டும். உன்னை நொந்து கொள்வது முறைமையல்லவே. நீர்நிலைகளால் சூழப்பெற்ற குறுக்குத்துறை எனும் ஊரின்கண் வாழும் முருகா, எங்கள் சிற்றிலைச் சிதைக்காமல் இருப்பாயாக!” என வேண்டுகின்றனர் சிறுமியர்.

    ‘முந்தித் தவமே புரிந்துன்னை முயன்று பெற்றுக் காப்பாற்றி
        முகமே தூக்கிச் செங்கீரை மொழிந்தே ஆடத் தாலாட்டிக்
    குந்திக் கரத்தால் சப்பாணி கொட்டச் செய்து முத்தமிட்டுக்
        கூவியழைத்து வருகவெனக் கொஞ்சிக் குலவி யெடுத்தணைத்தே
    அந்திப் பொழுதைக் கடந்துவரும் அம்பு லிகாட்டிப் பின்னருனை
        ஆடி நீவா எனமறுகில் அனுப்புந் தாயர் தமைவிடுத்து
    நொந்திங் குன்னைக் குறைகூறல் நேர்மை யாமோ உணர்ந்திதனை
        நீர்சூழ் குறுக்குத் துறைவாழும் நிமலா சிற்றில் சிதையேலே4.’

    பிள்ளைத்தமிழின் முதல் ஏழு பருவங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகள் தாய்மார்களின் செயலாதலால் சிற்றிலை அழிக்க வரும் சிறுவனைத் தெருவில் விளையாட அனுப்பியதனையும் அதனால் ‘சிறுவன் சிற்றிலை அழித்தாலும், அது தாயின் தவறே’ என அதனையும் அவளுடைய செயலாகத் தாய்மீதே ஏற்றிக் கூறுகிறார் புலவர். பிள்ளைத்தமிழின் எட்டுப் பருவங்களை ஒன்றுடன் ஒன்று கோர்வையாகத் தொடர்புபடுத்திப் பாடியுள்ள புலமை போற்றற்குரியதாம்.

    குமரகுருபரனார் இயற்றிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில், செங்கீரைப் பருவத்தில் சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது. ஆச்சரியமாக இருப்பினும், அழகுதிகழ அமைந்த இப்பாடல், சிறு குழந்தைகளுக்கிடையேயான ஒரு விளையாட்டைப் பாடும் முகமாக, உலகியல், மானுட உளவியல், தெய்வத் தத்துவம், உலக உருவாக்கம் எனும் தொடர்ந்து நடக்கும் பிரபஞ்சத்தின் இயற்கைச் சுழற்சி முதலியனவற்றை உட்பொருளாகக் கொண்டு திகழ்கின்றது.   

    சிறு குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்தில், ஆண் குழந்தைகள் சிலர் முரட்டுத்தனமான விளையாட்டுகளை விளையாடுவர்.  மற்றக் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களை உடைப்பது, அவர்கள் கட்டும் மணல் அல்லது சிறு மண்வீட்டைக் காலால் எற்றி உதைத்துச் சிதைப்பது, அவர்கள் பின்னலைப் பிடித்திழுத்து அவர்களைத் துன்புறுத்துவது என்பன இவற்றுள் சில. 

    உளவியல் ரீதியாக இதைக் காணப் போனால், நாம் வாழும் மானிட சமுதாயத்தை ஆதாரமாகக் கொண்டே இவை நிகழ்கின்றன எனலாம். அன்னையர் சமைப்பது, வீட்டிற்குரிய பணிகளைச் செய்து வீட்டை நன்முறையில் பராமரிப்பது, தமது குழந்தைகளைப் பேணுவது போன்றவற்றை நோக்கியே சிறுமியரும் தாய்மாரின் அடிச்சுவட்டில் சிற்றில் இழைத்து மணல் சோறாக்கி, குழந்தைகளைப் பேணும் விளையாட்டை விளையாடுவர். சிறுவர்களும் தந்தை, அண்ணன் முதலானோர் உடல் வலிமை தேவைப்படும் செயல்களைச் செய்வது போலத் தாமும் செய்ய முயல்வர். இவையே, சிற்றில் சிதைத்தல், சிறுபறை  முழக்குதல், சிறுதேர் உருட்டல், என்ற விளையாட்டுகளாகப் பரிணமித்ததோ என்னவோ! 

    உலகங்களையே சிறிய வீடாக உருவாக்கி விளையாடும் சிறுமியாக மீனாட்சியன்னை உருவகிக்கப் படுகிறாள். இவ்வாறு அவள் பெருமையைப் பேசுமிடத்து, சிற்றில் சிதைத்தல் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. அன்னை உருவாக்கும் அழகிய சிற்றிலையும் ஒருவன் சிதைக்க இயலுமா? அவ்வாறு செய்யத் துணிந்த அவன் யார்? அவன் ஒரே ஒருவன் தான்- அவனே அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்த தலைவனான சிவபிரான்.

    இந்தப் பாட்டைக் கண்டு மகிழலாமா?

    சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எவ்வாறு? முதலில், நெடிய சக்கரவாள மலையை எல்லா உலகங்களையும் வளைத்து நிற்கும் சுவராக அமைக்கிறாள். எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை இந்தச் சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலை நிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளிவிளக்குகளைப் பொருத்தி விடுகிறாள். முழுதும் எழுந்தெழுந்து மோதும் ஊழிக்கால வெள்ளத்தில் கழுவப்படும் புவனங்களே அவளுடைய பழைய பாத்திரம் பண்டங்கள்; அவற்றை வரிசையாக அடுக்கி வைத்து,  புதுக்கூழான இனிய அமுதத்தைச் சமைக்கிறாள். இவ்வாறு பலமுறை தாயாகிய மீனாட்சி சலிப்பின்றிச் செய்து வருகிறாள்.

    அவற்றை அழித்த வண்ணமாக இருக்கிறான் பித்தனான சிவபிரான். அவன் ஒரு முற்றவெளியான தில்லையில், சிதம்பரத்தில் திரிகின்றவன்; ஊமத்தம்பூவை அணிந்திருக்கும் பெரும் பித்தன்; கூத்தன் அவன் அழித்ததுடன் நில்லாது  மீனாட்சியின் முன் நின்று கூத்தாடுகின்றானாம்! 

    வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர், “எமது சிற்றிலைச் சிதையேலே,” என வேண்டுவார்கள். அல்லது மேற்காணும் பாடல்களில் கண்டபடி, சினம் கொண்டு கூச்சலிடுவார்கள்; இல்லாவிடில் அழுவார்கள். ஆனால் அம்மை மீனாட்சி என்ன செய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும் மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டி விளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்! ‘இவ்வாறு விளையாடுகின்ற ஒப்பற்ற இளமையுடன் கூடிய பச்சைப் பெண்பிள்ளையே! செங்கீரை ஆடி அருளே!’ என வேண்டுகிறார் குமரகுருபரர்.

    சுற்றுநெடு நேமிச் சுவர்க்குஇசைய

    ………………………………..

    இன்னமுதமும் சமைத்து அன்னைநீபன்முறை
    இழைத்திட அழித்தழித்தோர்
    முற்றவெளி யில்திரியும் மத்தப்பெரும்பித்தன்
    முன்னின்று தொந்தமிடவும்

    …………………………………..

    சிற்றில்விளை யாடும்ஒருபச்சிளம் பெண்பிள்ளை
    செங்கீரை ஆடியருளே5

    தாயான மீனாட்சி (பராசக்தி) உலகத்தை அடிக்கடி ஆக்குதலையும் அவற்றைச் சிவபிரான் அடுத்தடுத்து அழித்தலையும் ஆகிய செய்கைகள் சிறுமியர் சிற்றில் இழைத்தலும், சிறுவர்கள் அவற்றை அழித்தலும் ஆகிய செய்கைகளாக உருவகித்துக் கூறப்பட்டன. மானிடப் பெண்கள் வீட்டிற்கு வேண்டியவற்றைச் செய்வது போல, எல்லா உலகங்களையும் படைக்கும் பராசக்தியும் தன் கடமைகளாக இவற்றைச் செய்கின்றாள். அவற்றைத் திரும்பத் திரும்ப அழித்துத் திருவிளையாடல் புரிகிறான் சிவபெருமான். 

    எற்றுபுனல் என்பது அலை மோதும் ஊழிப் பெருவெள்ளமாகும். இதில் அண்டங்களைக் கழுவி எடுத்து அன்னை புதுக்கூழாகிய இன்னமுதைப் படைக்கின்றாள். இவ்வாறாக உலகை உருவாக்குவதையே மீனாட்சி சிற்றில் இழைப்பதாகப் புலவர் கற்பனை செய்கிறார். உன்மத்தம் கொண்டு பித்தனாகிய கூத்தபிரான் மீண்டும் மீண்டும் சிதைக்கிறான். இவ்வாறு உலக உருவாக்கமும் அழிவும் மாறி மாறி வருவது சுட்டப்படுகிறது. அவை மீனாட்சி அம்மையின் சிற்றில் உருவாக்கமாகவும் ஈசனின் சிற்றில் சிதைத்தலாகவும் அமைந்துள்ளன. 

    ஆண்பால் பிள்ளைத்தமிழில் ஒரு தனிப் பருவமாகப் பாடப் பெறும் சிற்றில்பருவம் பெண்பால் பிள்ளைத்தமிழில் செங்கீரைப்பருவத்தில் விளக்கப்பட்டு, சிவபிரானையே இப்பாடலின் பாட்டுடைத் தலைவனாகவும் கொண்டமைந்துள்ளது. குமரகுருபரரின் தெய்வப்புலமை பணிந்தேத்த வேண்டியதாம்.

    இறைவனின் படைத்தலும் காத்தலும் கரத்தலும் அழித்தலும் அருளுதலும் ஆகிய ஐந்தொழில்கள் ஓயாது நடை பெறுவதை  தத்துவ விளக்கமாக இப்பாடல் அழகுறக் காட்டுகிறது. அதுவும் சிவபெருமான் தான் செய்யும் திருவருள் தொழில்களைத் தனது திருமேனியாக விளங்கும் சக்தி மூலமாகவே செய்தருள்கிறான் என்பது மறைபொருளாக விளங்குகிறது.

    இன்னும் சில பிள்ளைத்தமிழ் நூல்களிலும் இக்கருத்து கூறப்பட்டுள்ளது. குமரகுருபரனாரின் கருத்தை அவர்கள் வழிமொழிந்திருக்கலாம்.

    சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் நூலின் (ஆண்பாற்) சிற்றிற்பருவத்துப் பாடலொன்று சிறுபெண்கள் எவ்வாறு ‘பாவனை’யாக, பொய்யாக விளையாடுகின்றனர் என்பதனை நயமுற விளக்குகிறது.

    ‘ஒளி பொருந்திய குளிர்ந்த முத்துக்களாலான அரிசியும், அதற்கு உலைபெய்த நறுந்தேனும் கவிழ்ந்து சிதறாதோ? சமைக்கும் பாண்டமாகப் பயன்படுத்தும் (நந்தின் கடமான) சங்கு உடைந்து போய்விடாதோ? மாதுளைமலர்களைப் பெய்து நாம் அமைத்த உலைத்தீ அவிந்து விடாதோ? பவளக்கொடிகளால் எம் சிறுவீட்டிற்கு நாம் ஆசையாக இட்டுள்ள விளக்கு அணைந்துவிடாதோ? நாங்கள் (பாவைத்)திருமணம் எனக்கூறிச் செய்துவைத்துள்ள பலவகை விருந்து வீணாகப் போகாதோ? (பாவனையாக) முலைப்பாலருந்துவித்து உறங்க வைத்துள்ள எமது மகவு (பாவை) தாமரை போன்ற தனது கண்களை விழித்தெழுந்து தேம்பி அழும் அல்லவோ? ஆகவே எமது சிற்றிலைச் சிதைக்க வேண்டாம்,’ என வேண்டுவதாக அமைந்த பாடல். 

    நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ
               நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
    தொகைத்தண் பவள விளக்கணைந்து விடாதோ வடியேம் வதுவையெனச்
               சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ
    முகைபபுண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
               மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
    திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேம் சிற்றில் சிதையேலே
               சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே.6 

    என்பன பாடல் வரிகள். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழானதனால் சிறுமியர் சிறுவீடு கட்டுவதும், சிறுசோறு சமைப்பதும், பாவை விளையாடலும் (குழமணம் மொழிதல்) ஒருங்கே கூறப்பட்டுள்ளன. இவையே பெண்பால் பிள்ளைத்தமிழில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுப் புலவரின் கற்பனைக்கேற்பப் பாடப்படுகின்றன. இதனைப் பிறிதொரு கட்டுரையில் காணலாம்.

    ___________&____________

    பார்வை நூல்கள்:

    1. சிலப்பதிகாரம், கானல்வரி
    2. பரிபாடல்
    3. கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்- சிவஞான முனிவர்
    4. குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்-
    5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    6. சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்- அந்தகக்கவி வீரராகவ முதலியார்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1

    -மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1

      (ஊசற்பருவம்) 

    பெண்பால் பிள்ளைத்தமிழில் அடுத்த பருவமாக நாம் காண்பது ஊசல் பருவம். வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த விளையாட்டுகள், ஓடியாடும் சிறுவர் சிறுமியர்களுக்கு மிகவும் விருப்பமானவை. ஊசலில் உட்கார்ந்து கொண்டு, தோழியர் உந்தி விட, காலால் தரையை எம்பி உதைத்து , உயரே உயரே எழுந்து வீசியாடுவது ஊசற் பருவம். இப்பருவம் ஐந்தாண்டிலிருந்து ஒன்பது ஆண்டுகள் வரை நிகழ்வதாகக் கூறப்படும். ஊசலாடி மகிழ்வது பெண்பிள்ளைகளுக்கே உரித்தான ஒரு விளையாட்டு அனுபவம். வளரும் பெண்மக்களுக்கு இது ஆரோக்கியமான உடற்பயிற்சியுமாகும்.

    மயில்கள் தோகைவிரித்து நடனமாடும், குயில்கள் கீதமிசைக்கும் அழகானதொரு மலர்ச்சோலையில் மயில்போன்ற பெண்கள் சிலரும் தமது குயில் குரலில் பாடியவாறு ஊஞ்சல்கட்டி இன்பமாக ஆடுகின்றார்கள். புங்கமரம் ஒன்றின் தாழ்வான கிளையில் வலுவான கொடிகளைக் கொண்டு கட்டிய அழகான ஊ(ஞ்)சல். அதில் அன்றலர்ந்த தாமரை போல அமர்ந்து கால்களால் உதைத்து எழும்பி வீசியாடுகிறாள் ஒரு சிறுபெண். கொடி போன்ற உடலும், நீண்ட கூந்தலும் ஆடைகளும் அணிகலன்களும் உடன்வீசி இயைந்து ஆடுகின்றன. 

    இந்த  இளம்பெண்கள் தமது அரசனைப்பற்றி பெருமையாகப் பாடுகிறார்கள். இவர்கள் பாடுவது ஊசல்வரி; இது சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தீட்டும் காட்சி: 

    ஐந்துபேர் பஞ்ச பாண்டவர்கள்; நூற்றுவரான கௌரவர்கள்; இவர்கள் தமக்குள் பகைகொண்டு பெரும்போர்செய்தபோது, அந்தப்போரில் இருவருடைய படைகளுக்கும் அள்ள அள்ளக்குறையாது உண்பதற்குச் சோற்றினைக் கொடுத்தவன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் எனும் சேரமன்னனாவான். அவனுக்கு ‘பொறையன்’, ‘மலையன்’ எனும் பெயர்களும் உண்டு. “அவனுடைய பெயர்களைக் கூறி, அவன் புகழினைப்பாடி நாம் ஊசலாடலாமா?” என்று ஒருத்தி தோழிகளைக் கேட்கிறாள். “நமது கருமுகில் போன்ற குழல் காற்றில் அலைந்தாட, அந்தக் கடம்ப நாட்டினை வெற்றிகொண்ட அவனுடைய புகழைப்பாடி ஊசல் ஆடலாமே,” என அடுத்தவள் மறுமொழி கூறுகிறாள். 

    ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த

    போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த

    சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக்

    கார்செய் குழலாட ஆடாமோ வூசல்

    கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ வூசல்1

    இவ்வாறு தங்கள் அரசனான சேரனையும் அவன் பரம்பரையையும் போற்றிப்பாடி மகிழ்ச்சியாகப் பெண்கள் ஊசலாடுகின்றனர். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவிலெடுத்த திருவிழாவில் இவர்கள் இவ்வாறு பாடி ஆடுகிறார்கள்! 

    மனம்மகிழ்ந்து உவகை ஊற்றெடுக்கும்போது, எண்ணங்கள் சிறகடித்து வானில் பறக்கும்போது, ஊசலில் அமர்ந்தாடினால் அது உயரே ஆகாயத்தின் அருகே கொண்டுபோவது போல ஒரு ஆனந்தமான அனுபவம் உண்டாகும். விண்ணை எட்டிவிட்டது போன்றதொரு மயக்கத் தோற்றம்.

    ஊசலைப்போலாடும் தொட்டிலிலோ தூளியிலோ உறங்கவைத்தால் குழந்தை ஆனந்தமாக, அமைதியாக உறங்குகிறது. சிறார்களுக்கு ஊசலாடி விளையாடுவது இன்பகரமான ஒரு அனுபவம். இளம்பெண்களுக்கும் ஊசலாடும்போழ்தில் தங்கள் கனவுகளும், காதல், மணவாழ்வு பற்றிய இனிமையான எண்ணங்களும் உருப்பெற்று, வலுப்பெற்று, நனவாகும் 

    சங்ககால மகளிர் ஆலமரம், வேங்கைமரம், புங்கமரக்கிளைகளில் ஊசல்கட்டி ஆடினார்கள். தினைப்புனம் காக்கும் பெண்கள் தாம் இருக்கும் பரண்மீதே ஊசல்கட்டி விளையாடினார்கள். அவர்கள் காதலர்களும் ஊசலை ஆட்டிவிடுவதற்கென அருகில்வந்து நின்றார்கள். 

    பெண்கள் மரங்கள் இல்லாதபோது இரு வேல்களை நாட்டி, அவற்றிடையே ஒரு கயிற்றைக்கட்டியும் ஊசலாடினார்கள்!

    இவ்வாறு காதல் விளையாட்டுகளிலும், மற்ற திருவிழாக் கொண்டாட்டங்களிலும் பெரும்பங்கு வகித்த ஊஞ்சல் விளையாட்டுகளில் பெண்கள் இறைவன் புகழைப் பாடி மகிழவும் வகைசெய்தவர் மாணிக்கவாசகர். 

    “நாராயணனும் கண்டறியாத இறைவனின் திருப்பாதங்களை எமக்கு அந்த ஈசன் மிக எளிதாகக் காட்டியருளினான். வேல்போன்ற கண்களையுடைய பெண்களே! அந்த உத்தரகோசமங்கை இறைவனின் புகழைப்பாடி பொன்னூசலில் அமர்ந்தாடுவீர்களாக,” என அன்போடும் ஆவலோடும் வேண்டுகிறார். 

    அவருடைய விருப்பப்படியே அவர்களும், “தோழிகளே! ஈசனின் புகழினைப் பாடுகிறோமல்லவா? அப்போது நாம் ஆடும் ஊசலும் அழகு மிகுந்ததாகவும், சிறப்புடையதாகவும் இருக்க வேண்டும். ஆகவே, பவளத்தூண்களைக் கால்களாக நடுவோம்; பருத்த முத்துக்களை இணைத்துக் கோர்த்துக் கயிறாக்கிப் பயன்படுத்துவோம்,” எனத் தோழிகளிடம் கூறுகிறார்கள். ஒருபெண் பொற்பலகை ஒன்றினை அதில் இணைக்க, ஒவ்வொருவராக அதில் ஏறியமர்ந்து பலவிதமாக ஈசன் புகழைப்பாடியாடி மெய்சிலிர்க்கிறார்கள். 

    இந்தத் தத்துவம் மிக எளிதாகப் புரிவது. கோவிலில் தெய்வத்தை வணங்கச் செல்லும்போதும், அரசனைக் காணச்செல்லும்போதும் நல்ல அணிமணிகள், பட்டாடைகளை அணிந்துகொண்டு செல்வதுண்டல்லவா? அதேபோல, இறைவன் பெருமைகளைப் பாடுவோரும் அழகாக உடையணிந்து, அழகான ஊசலில் அமர்ந்து அவனைப் பாடவேண்டும் எனும் ஆவல் இதிலும் விளங்குகிறது. பாடகர்கள் கச்சேரிகளில் அழகாக அலங்கரிக்கப்பட்ட மேடைகளில் கண்கவரும் ஆடைகள் அணிந்து அமர்ந்து பாடுகிறார்களல்லவா? அலங்கரிக்கப்பட்ட திருப்பொன்னூசலில் அமர்ந்து இறைவன் புகழைப் பாடுவதும் அப்படிப்பட்டதே!

    சீரார் பவளக்கால் முத்தம் கயிறாக

    ஏராரும் பொன்பலகை ஏறி இனிதமர்ந்து

    நாராயணன் அறியா நாள்மலர்த்தாள் நாய் அடியேற்கு

    ஊராகத் தந்தருளும் உத்தரகோச மங்கை

    ஆராவமுதின் அருள்தாள் இணைபாடி 

    போரார்வேல் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ2.

    திருப்பேரூரில் எழுந்தருளியுள்ள பட்டீசுவரப் பெருமானைக் கண்டு போற்றித் துதித்துவிட்டு வரும் பெண்கள் வழியிலுள்ள ஒரு மலர்ச்சோலையில் விளையாட நுழைகின்றார்கள். வழக்கமாக அவர்கள் ஆடும் ஊசல்கள் அங்கே மரக்கிளைகளிலிருந்து தொங்குகின்றன. சிலர் அவற்றிலேறி வீசியாட முற்படுகிறார்கள். ஆடும் வேகத்தில் அள்ளிமுடித்த நறுங்குழல் அவிழ்ந்து அலைந்தாடுகின்றது; கழுத்திலணிந்த முத்துமாலைகளும் பொன்னணிகளும் ஆடுகின்றன; மலர்ச்சோலையல்லவா? இவர்கள் ஊசலாடும் வேகத்தில் மலர்களில் தேனுண்ணும் வண்டுகளும் எழுந்தும் தாழ்ந்தும் ஆடுவனபோல் காட்சியளிக்கின்றன! விசையாக ஆடுவதால், பிறைபோன்ற நெற்றியில் வியர்வை அரும்பிப் படர்கிறது; தொங்கும் துளைச்செவியானதும் ஆடுகின்றது (அக்காலத்து மகளிர் காதில் பாம்படம் போன்ற பெரிய  அணிகளை அணிவதற்காக, காதுத்துளைகளை நீளமாகத் தக்கை முதலியனவற்றால் வளர்த்துக்கொண்டு அழகு செய்துகொள்வார்கள்; இதனை ‘வடிகாது’ என்பார்கள்). அக்காதிலணிந்த குழைகளும் கூடவே ஆடுகின்றன. கொடியிடையும், கைவளைகளும் ஆடிட, கோலமயில் போலும் பெண்களே நீங்கள் ஊசலாடுவீர்களாக! முத்தைப்பழிக்கும் புன்னகை கொண்டவர்களே! பால்போலும் இனிய சொல் பேசுபவர்களே! பட்டீசர் புகழைப் பாடி ஆடுவீராக!” எனப்பாடிய வண்ணம் ஒருவரை ஒருவர் ஊசலில் ஊக்கியபடி இவர்கள் ஊசலாடும் அழகு நமது கண்முன் காட்சியாகத்தோன்றி மகிழ்விக்கிறது. இறைவனின் அல்லது அரசனின் புகழைப்பாடும் ஒருவகைச் சிற்றிலக்கியம், பலவிதமான பாடல்வகைகளைக்கொண்டு, கலம்பகம் எனப்பெயர் பெற்றது. நடேசகவுண்டர் இயற்றியுள்ள திருப்பேரூர்க் கலம்பகத்தில் உள்ளதுதான் இந்த அழகான ஊசற்பாடல்:

    ஏலநறுங் குழலாட மாலை யாட

    இமிர்ந்தினவண் டாடமதி நுதல்வே ராடச்

    சாலவடி காதாடக் குழைக ளாடத்

    தளர்ந்துகொடி யிடையாட வளைக ளாடக்

    கோலமட மயிலனையீ ராடீ ரூசல்

    குளிர்முத்த மணிநகையீ ராடீ ரூசல்

    பாலனைய மொழிமடவீ ராடீ ரூசல்

    பட்டீசர் பேர்பாடி யாடீ ரூசல்3.

    இதில் ஊசலாடும்போது உண்டாகும் இன்பமும்,  இன்னும் என்னவெல்லாம் பெண்களுடன் ஊசலாடும், எனவும் அழகுற விளக்கப்பட்டுள்ளன.  அழகான இளம்பெண்கள் ஊசலில் ஆடுவதைக் கண்ட கவிஞர்கள் அன்னை தெய்வத்தின் மீதான பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ஊசல்பருவத்தை இணைத்துப்பாடி மகிழ்ந்தனர். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து இலக்கியச்சுவையும், பக்திரசமும் ததும்ப, அன்னை ஊசலில் ஆடுவதனாலேயே உலகங்கள் இயங்குகின்றன எனும் பிரபஞ்ச இயக்கத் தத்துவத்தினைக் குமரகுருபரனார் ஊஞ்சல் விளையாட்டுடன் இணைத்துக்கூறும் நயம் மிக அருமையானது:

    ‘மீனாட்சியாகிய இளமங்கை சுவைமிகுந்த பாடல்களை அமுதம் ஒழுகப் பாடியபடி பொன்னூசலில் ஆடுகின்றாள். அதனைக் கேட்ட சிவபிரான் மகிழ்ந்து தனது திருமுடியை அசைக்கின்றார்; அவருடைய முடிமீது பாம்புகளுக்கெல்லாம் அரசனான ஆதிசேடன் உள்ளான்; உலகங்களையெல்லாம் தாங்கும் அவனுடைய தலையும்  இதனால் அசைகின்றது. தலையசைந்தால் தலைமீதுள்ள உலகங்களும் அசைய வேண்டியதுதானே! அகில சராசரங்களும் அசைந்தாடுகின்றன; சொக்கநாதரின் திருவழகிற்கு இணையான கொடிபோன்ற இவள் ஊசலில் அசைந்தாடுவதனால் அண்டமும் அண்டபகிரண்டமும் ஆடுவதைப் போலத் தோன்றுகிறது,’ எனும் பாடல் நம்மை நெகிழ வைக்கிறது. 

    ‘சேர்க்குஞ் சுவைப்பாடல் அமுதொழுக ஒழுகுபொன் 

                திருவூசல் பாடியாடச் 

    சிவபிரான் திருமுடிஅசைப்ப 

          ……………………. தம்மனையசைந் 

     தாடலால் அண்டமும் அகண்டபகி ரண்டமும் 

      அசைந்தாடு கின்றதேய்ப்ப4

    தாம் எப்போதும் அகக் கண்ணில் கண்டு மகிழும் அன்னை மீனாட்சியின் திருவூசல் காட்சியில்  குமரகுருபரருக்கு இந்த அண்ட சராசரமே அசைந்து ஆடுவது போலத் தோன்றுகிறது; அருள் பெற்ற தமது தெய்வவாக்கினால் இதனை அழகுற விவரிக்கின்றார்: 

    அரசியின் ஊஞ்சலல்லவா? அதன் கால்கள் சிறந்த ஒளியுடைய பவளத்தால் செய்தவையாம்; பொங்கிப் பெருகி ஒழுகும் ஒளியையுடைய வைரங்களால் விட்டம் அமைந்துள்ளதாம்;  குளிர்ச்சி பொருந்திய செழித்த நிலவொளி பெருகி விழுந்தது போன்ற ஒளி பொருந்திய முத்து வடங்களைக் கட்டியுள்ளனர். ‘தண்’ணென்ற பௌர்ணமி இரவில் சந்திரனின் கிரணங்கள் ஊடுருவி அழகு செய்வது போல அவை தோன்றுகின்றன. மாணிக்கப் பலகையால் செய்த இருக்கையும் ஒளி வீசுகின்றது; எத்தனை அள்ளினாலும் திரும்பவும் பெருகி  நிறைந்து வழிந்து ஒளி பொங்குகின்ற அருண ரத்தினப் பலகையாம் அது!

    ‘ஒள்ளொளிய பவளக் கொழுங்கால் மிசைப்பொங்கும்

    ஒழுகொளிய வயிர விட்டத்து

    ஊற்றும் செழுந்தண் நிலாக்கால் விழுந்தனைய

    ஒண்தரள வடம் வீக்கியே5‘ என்கிறார்.

    ‘இத்தகைய அற்புதமான ஊஞ்சலில் அமர்ந்து ஆடுகின்ற உன் தோற்றம் தாயே, அந்தச் சூரிய மண்டலத்தில் வளர்கின்ற அரிய பெரிய சுடர் ஆகிய ஒளியை ஒத்திருக்கிறதே!’ என நெகிழ வைக்கிறார் புலவர்.

    ‘தன்’னை வென்று பரம்பொருளில் ஆழ்ந்து விட்ட பெரியோருக்கு அனைத்தும் இறை மயமாகத்தான் தெரியும்! ஆதி சங்கரரும் ‘உத்யத்பானு ஸஹஸ்ரகோடி ஸத்ருசாம்6,’ என்று மீனாட்சியின் ஒளிமயமான தோற்றத்தைப் போற்றியுள்ளார். உதிக்கின்ற ஆயிரம் கோடி சூரியர்களின் காந்தி பொருந்தியவளாம் அண்ட சராசரங்களுக்கும் முதல்வியான நம் அம்மை! இவள் குடியிருக்குமிடம் எதுவென்று தாம் உணர்ந்ததை எளியவர்களாகிய நமக்கும் விளக்குகிறார் குமர குருபரர். 

    உள்ளத்தில் திருவருள் நிரம்பியதால் அடியார்கள் ஆனந்தச் செருக்கு நிறைந்து விளங்குகின்றனராம்! தெய்வப் பேரருளை உணர்ந்தமையால், அதனால் விளைந்த பரமானந்த அலைகள் பொங்கும் கடலில் அவர்கள் மூழ்கித் திளைக்கின்றனர். ‘தெள்ளு சுவையமுதம் கனிந்த ஆனந்தத் திரைக்கடல் மடுத்து உழக்கும் செல்வச் செருக்கர்கள்7,’ என இத்தகைய அடியார்களைப் பெருமைப் படுத்துகின்றார். திருவருள் செல்வத்தினால் மெய்யடியார்களுக்கும் செருக்குண்டாகுமாம்! 

    ‘இறுமாந்திருப்பன் கொலோ, ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச் 

    சிறு மான் ஏந்தி (சிவபிரான்) தன் சேவடிக் கீழ்ச் சென்று அங்கு 

    இறுமாந்திருப்பன் கொலோ8,’ என திருநாவுக்கரசரும் இறைவனடியில் பணிந்து பெற்ற பேரருள் செல்வத்தால் தாம் இறுமாப்பு அடைந்ததைப் பாடியுள்ளார்.

    இத்தகைய அடியார்களின் மனத்தாமரையில் நெகிழ்ந்த  பூம்பஞ்சணையில் குடியிருக்கிறாள் மீனாட்சியன்னை. இங்ஙனம் இவள் இங்கு குடியிருப்பதனை உலகத்தினருக்கு அறிவிப்பது போல, அவர்கள் ஓதுகின்ற வேதம் எனப்படும் பறவைகள் ஒலியெழுப்புகின்றன. அன்னையும் அத்தனும் வேதத்தின் உட்பொருள்; ஆகவே, ஆகமப் பொருளாகி நிற்பவள் இவள் என்கிறார் குமரகுருபர அடிகளார்.

    இதனை முற்றுணர்ந்தவர்களாக, ‘பழ வேதமாய் அதன் முன்னுள்ள நாதமாய் விளங்குமிந்த வீரசக்தி வெள்ளம்9,’ என்று மகாகவி பாரதியார் கூறுகிறார்.

    ‘நானாயோகி முனீந்த்ர ஹ்ருந்நிவஸதீம்10 (யோகிகளும் முனிவர்களும் ஆகியோரின் நெஞ்சத் தாமரையில் உறைபவள்)’ என ஆதி சங்கரரும் கூறியுள்ளார்.

    ‘இவ்வாறு அடியார்களின் மனமாகிய தாமரையில் உறைபவளே, சுந்தரவல்லியே, பொன்னூசலில் ஆடியருளுக! 

    ‘…………………….பழையபாடல்

    புள்ளொலியெழக் குடிபுகுந்த சுந்தரவல்லி

    பொன்னூசல் ஆடியருளே

    புழுகுநெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்தகொடி

    பொன்னூசல் ஆடியருளே11.!’ என்பது பாடல்.

    பொன்னூஞ்சலில் அமர்ந்துள்ள தடாதகையின் திருக்கோலத்தை மனக்கண்ணில் கண்டு மேலும் பாடுகிறார் புலவர்: “தேரிலேறிய போர்க் கோலத்தில் உன்னைக் கண்ட சிவபிரானின் உள்ளத்தில் முதலில் சினம் பொங்கியெழுந்தது! ஆனால் உனது அழகுத் திருக்கோலத்தைக் கண்டு சினத்தீ தணிந்து உள்ளத்தில் பற்றி எரியும் காமக்கனல் வளர்ந்து எழுந்தது! அந்தத் தீயின் கொழுந்து போன்றது அவரது சிவந்த சடை. உன்மேல் கொண்ட காதலால் அவர் உள்ளம் உருகியது போலவே, அவர் கையிலிருந்த வில்லான பொன்மேருவும் உருகியோடியது! (வில் அவர் கையை விட்டு நீங்கியது). அவர் முடியிலிருக்கும் சந்திரனும், அவர் ஏறும் காளைவாகனத்தின் மணி ஓசையும் அவர் கொண்ட காதல் நோயால் அவருக்கு மிகுந்த துன்பத்தைத் தந்தன!” என்கிறார்.

    இன்னும் கூறுகிறார்: “அழகான மேகத்தின் நீலமும் கருநிறமும் பொருந்திய கழுத்தை உடைய அப்பெருமான், உன்னைப்  போரில் எதிர்த்து வருந்தினார் அம்மையே! நீ அவர் மேல் கண்களாகிய அம்புகளைக் கரிய புருவங்களாகிய வில்லிலிருந்து செலுத்தினாய்; ஒரு கையில் போருக்கு வில்லையும் வளைத்து ஏந்தி நின்ற உந்தன் அழகுக் கோலத்தில் ஐயன் மயங்கினார்; அந்தப் போர்க்கோலமே உனக்கு திருமணக் கோலமான பெண்ணே, பொன்னூசலாடியருளுக,” என்கிறார்.

    ‘கண்கணை துரக்கும் கரும்புருவ வில்லொடொரு

    கைவில் குனித்து நின்ற

    போர்க்கோலமே திருமணக் கோலமான பெண் 

    பொன்னூசல் ஆடியருளே,’ என்பன பாடல் வரிகளாகும்.

    அன்னை ஊசலாடும்போது சுற்றும் புடை சூழ நிற்கும் இனிய தோழியரில் சிலர் பாடல்களை இசைக்கின்றனர்; இன்னும் சிலர் பரிகாசச் சொற்களைப் பேசி கேலி செய்கின்றனர். உயிர்த் தோழியான திருமகள், தரையைக் காலால் உந்தி உயர்ந்தெழும் ஊஞ்சலில் அமர்ந்துள்ள மீனாட்சியின் தாமரைத் திருவடிகளைப் பார்க்கிறாள்; வளைந்த பிறைத் தழும்பு அதில் தெரிகிறது. “வாணி, இதைப் பாரடி! என்ன இது இவள் மலரடியில், வலம்புரிச் சங்க ரேகையோ?” என்று கூவிப் பரிகசித்து முத்துப்பல் தோன்றச் சிரிக்கின்றாள்; ஊடல் காலத்தில் சிவபெருமானின் திருமுடியிலுள்ள பிறைநிலா அழுந்தியதால் வந்த தழும்பல்லவா அது? தோழியர் முகங்களில் குறும்புப் புன்னகை விகசிக்கின்றது! மீனாட்சிக்கு நாணம் மிகுகிறது. வணங்காத அவள் முடிக்கு அப்போது அந்த நாணம் ஒரு வணக்கத்தை வழங்குகின்றதாம்.

     ‘……………………மலர்மகள் அம்மை 

    உள்ளடிக் கூன்பிறை தழீஇ 

    மல்கும் சுவட்டினை வலம்புரிக் கீற்றிது கொல் 

    வாணி என்று அசதியாடி 

    மணிமுறுவல் கோட்ட12 என்பன பாடல் வரிகள். அசதியாடல் என்றால் பரிகசித்தல் எனப் பொருள். 

    குமரகுருபர அடிகளாரின் கவிநயமும் பொருள் நயமும் மிகுந்த பாடல், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற செந்தமிழ்ச் சொல்லோவியத்தின் நிறைவுப் பாடலாக அமைந்துள்ள பாடல், ஊசற் பருவத்தின் பத்தாவது பாடல், அன்னையின் பாதாதி கேச வர்ணனைப் பாடலாக அமைந்துள்ளது. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற தெய்வச் சிற்றிலக்கியத்திற்குத் திலகம் போன்று இப்பாடல் திகழ்கிறது.

    இரு திருவடிகளிலும் அணிந்துள்ள மென்மையான ஒலி எழுப்புகின்ற கிண்கிணியான சதங்கையும், முறையீடு செய்வது போன்று ஒலிக்கின்ற பரல்களையுடைய சிலம்புகளும் அணிந்த அம்மையின் மென்மையான மலர் போலும் திருவடிகளில் தேவரும் மூவரும் பணிந்து கிடக்கின்றனர். இவர்களுடைய முடிகளிலுள்ள கிரீடங்கள் அவர்கள் பணியும் போது அன்னையின் மெல்லிய திருவடிகளை அழுத்தி வருத்துகின்றன. இதனால் தான் திருவடிகளின் சார்பாகச் சிலம்புகள் வருத்தத்தை வெளியிட்டு முறையீடு செய்கின்றனவோ?

    ‘இருபதமும் மென்குரல் கிண்கிணியும் முறையிட்டு

    இரைத்திடும் சுரிச்சிலம்பும்13′

    காப்பிட்டு, செங்கீரையாடி, தாலாட்டி, சப்பாணி கொட்டி, முத்தம் தந்து, குறுநடை நடந்து, அம்புலியோடு ஆடி, அம்மானை விளையாடி, வைகை நீரிலாடி மகிழ்ந்து, அழகு பொங்க வளர்ந்து இன்று பொன்னூஞ்சலில் ஆடி நிற்கும் அன்னையின் திருவழகைக்கண்டு உள்ளம் பூரிக்கின்றது.

    ‘தடாதகையின் மென்மையான கொடி போன்ற இடையானது இற்றுப் போகுமே என்று அவ்விடையில் அணியப்பட்டுள்ள மேகலை இரங்கிப் புலம்புகின்றது. பொற்சரிகையால் சித்தரிக்கப்பட்ட பட்டாடை இவளுடைய சிறந்த மெல்லிடையை அலங்கரிக்கின்றது. மேலாடையும் ஒட்டியாணமும் அணிந்து சிவந்த கையில் பசுங்கிளியை ஏந்தி இருக்கிறாள்! இவளது அழகிய மார்பகங்களை முத்தாலாகிய மேலாடை அலங்கரிக்கின்றது. ஈசன் அணிவித்த மங்கலத் திருநாண் அதன் மீது திகழ்கின்றது. அழகு பொங்க நின்று அருளைப் பொழியும் நிலவு போன்ற திருமுகம்; முகமாகிய மதியினின்று  நிலவின் நீண்ட கிரணங்கள் போல அரும்பி வரும் புன்சிரிப்பும் கொண்டவள் இப்பெண்மணி,’ எனப் படிக்கும்பொழுதில் நமது கண்களில் ஆனந்த வெள்ளம் பெருகுகின்றது.

    இன்னும் மேலே போய் ‘சொல்லும் பொருளும் என நடமாடும் இறைவருடன் புல்லும் பூங்கொடி’யான அம்மை மீனாட்சியை வர்ணிக்கிறார் குமரகுருபர அடிகளார். ‘ஞானமாகிய ஆனந்தம் என்னும் கடலில் மூழ்கியவள் இவள்,’ என்கிறார் . அதாவது ஞானமே வடிவாகிய சிவபிரானுடன் இரண்டறக் கலந்தவள் என்பது பொருள். காளிதாசர் ‘ரகுவம்ச’த்தில், ‘வாகர்த்தா இவ சம்ப்ரக்தௌ14 எனச் சொல்லையும் பொருளையும் போலப் பார்வதியும் பரமேஸ்வரனும் இணைபிரியாதவர்கள் என்பார்.

      ‘இத்தகைய பெருமை பொருந்திய தாயே! காதிலணிந்துள்ள மகரக் குழைகளுடன் கயல்மீன்களாகிய கண்கள் போர்செய்கின்ற ஒப்பற்ற அழகு பூத்த சுந்தரவல்லியே! பொன்னூசல் ஆடியருளுக; புனுகு எனப்படும் நறுமண நெய் பூசியிருக்கும் சொக்கநாதரின் திருவடிவிற்குப் பொருத்தமான கொடி போன்ற பெண்ணே! பொன்னூசல் ஆடியருளுகவே,’ எனப் பாடி வாழ்த்தி நூலை நிறைவு செய்கின்றார்.

    ‘……………………ஞான

    ஆனந்த மாக்கடல் குடைந்துகுழை மகரத்தொடு

    அமராடும் ஓடரிக்கண்

    பொருகயலும் வடிவழகு பூத்தசுந் தரவல்லி

    பொன்னூசல் ஆடியருளே

    புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக் கொத்தகொடி

    பொன்னூசல் ஆடியருளே16.

    அடுத்த பகுதியில் மற்ற பிள்ளைத்தமிழ் நூல்கள் காட்டும் நயங்களைக் கண்டு மகிழலாம்.

    ***************

    பார்வை நூல்கள்

    1. சிலப்பதிகாரம்- ஊசல்வரி- இளங்கோவடிகள்
    2. திருவாசகம்- திருப்பொன்னூசல்- மாணிக்கவாசகர்
    3. திருப்பேரூர்க் கலம்பகம்- கு. நடேச கவுண்டர்
    4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    6. மீனாட்சி பஞ்சரத்தினம்- ஆதிசங்கரர்
    7. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    8. தேவாரம்- திருநாவுக்கரசர்.
    9. பாரதியார் பாடல்கள்- சுப்ரமணிய பாரதியார்
    10. மீனாட்சி பஞ்சரத்தினம்- ஆதிசங்கரர்
    11. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    12. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    13. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    14. ரகுவம்சம்- காளிதாசன்
    15. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்

     

     

     

    _

     

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.2

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.2

    -மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.2
    (நீராடற்பருவம்)

    நீராடத் தேவையானவை வாசனைப் பொடிகளாகிய சுண்ணப்பொடிகளும், எண்ணெய் முதலானவைகளுமாகும். இந்த சுண்ணப்பொடிகளை இடிக்கும் நுணுக்கங்களும், முறைமைகளும் எத்தனை நுணுக்கமானவை! அது அத்தனை எளிதான காரியமல்ல!
    சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் சுண்ணப்பொடி என்பது பெண்கள் நீராடும்போது உபயோகிப்பதற்காகவும், நீராடியபின் இக்காலத்து நறுமணப்பொருட்கள் போன்று உடலில் பூசிக்கொள்வதற்காகவும் பெண்களால் மிகுந்த அக்கறையுடன் வீடுகளிலேயே உரலில் இடித்துத் தயாரிக்கப்பட்டது. சந்தனம், அகில், புனுகு, சவ்வாது, இவற்றைப் பலவிகிதங்களில் கலந்து பலவகைகளாகத் தயாரிப்பார்கள். சிலவகைகளில் பொன்துகள்களையும் சேர்ப்பர். வாசமிகு நறுமலர்களை (தாழம்பூவின் உள்ளிருக்கும் மகரந்தப்பொடி, உலர்த்திய சண்பக மலர்கள், மல்லிகை, காய்ந்தபின்பும் மணம்வீசும் மகிழம்பூ, நிறம்கூட்டச் செம்பருத்திப்பூ, மருத்துவ குணம் செறிந்த மருதோன்றிப்பூ ஆகியனவற்றையும்) உலர்த்திச் சேர்ப்பார்கள்.

    நீராடும்போது உடலில் தேய்த்துக் கொள்வதற்காக (தற்காலத்து நறுமணக் கட்டியான சோப்பு போல) பத்துவகைத் துவர்ப்புப் பொருட்களைக் கலந்து தயாரிக்கப்படும் பொடியினைத் ‘துவர்’ எனக்கூறுவார்கள்.

    ‘பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
    முப்பத்திரு வகை ஓமா லிகையினும்
    ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம்
    நாறிரும் கூந்தல் நலம்பெற ஆட்டி1..’ என

    மாதவி தன்னை ஒப்பனை செய்து கொள்ளுமுன் எவ்வாறு எத்தகைய நீரில் நீராடினாள் என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் விளக்கியுள்ளார்.

    பத்துத் துவர்களும் நாவல், கடுக்காய், நெல்லி, தான்றிக்காய், ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு, மாந்தளிர் என்றும், விரை ஐந்தும் கொட்டம் (நறுமணப்பொருள்), துருக்கம் (கஸ்தூரி), தகரம் (மயிர்ச்சாந்து), அகில், ஆரம் (சந்தனம்) எனவும் அறிகிறோம். இத்துடன் மேலும் முப்பத்திருவகை நறுமணப்பொருள்களையும் ஊறவைத்து நீராடுவர் எனத் தெரிகின்றது.

    மஞ்சளையும் இதில் சேர்ப்பது வழக்கு எனத் ‘திருப்பொற்சுண்ணத்’தில் இருந்து அறியலாம்.

    ‘மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி2,’ என்பன திருவாசகப் பாடல்வரிகளாகும்.

    மகளிர் வைகையில் நீராடுவதற்காக என்னவற்றையெல்லாம் செய்தனர் எனப் பரிபாடல் சுவைபட விளக்குகின்றது.

    சில மகளிர் நீராடுவதற்காக வேண்டி, சிவந்த குங்குமக் குழம்பினையும், சேறுபோன்ற அகிற் குழம்பினையும், பலவகையான கர்ப்பூரங்களையும் இதற்காகவே உண்டான சாந்து அம்மியில் இட்டு அவை தீக்கழங்குகள் போன்று சிவந்து சேர்ந்து ஒன்றாய் ஆகும்படி அரைத்தனராம். இவை நதிக்கரையில் செய்யப்படும் செயல்கள்.

    ‘செங் குங்குமச் செழுஞ்சேறு
    பங்கம் செய் அகில் பல பளிதம்
    மறுகுபட அறை புரை அறு குழவியின்
    அவி அமர் அழலென அரைக்குநர்3′ என்பன

    பரிபாடல் வரிகள்.

    மேலும் சிலர் கூந்தலில் பத்துவகைத் துவர்களையும் கொண்டு செய்யப்பட்ட பொடிகளைத் தேய்த்துக்கொண்டு நீரில் முழுகினர்; நறுமண எண்ணெய் தடவிய கூந்தலில் எண்ணெய் போகுமாறு நுண்ணிய அரப்புத்தூளை இட்டுப் பிசைந்தனர். இன்னும் சிலரோ, மாலை, சாந்து, மது, அணிகலன்கள் ஆகியவற்றையும் அந்த வைகை நீரில் இட்டுக் களித்தனர்.

    தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார்
    எண்ணெய் கழல இழை துகள் பிசைவார்
    மாலையும் சாந்தும் மதமும் இழைகளும்
    கோலம் கொள நீர்க்குக் கூட்டுவார்.3…. என்பன

    பரிபாடல் வரிகள்

    இவ்வாறு பலவிதமாக நீராடிக் களிப்பதற்காகவே நதிகளுக்குச் சென்றனர் மகளிர். நறுமணச் சுண்ணங்களும் தேவைக்கேற்பத் தயாரிக்கப்பட்டு பூசிக்கொள்ளப்பட்டன. மகளிர் தமக்குப் பூசிக்கொள்ள மட்டுமன்றி, நெடுநாள் பயணம் சென்ற தலைவன் வீடுதிரும்புவதனை எதிர்பார்த்து, அவனுடைய நீராடலுக்காகவும் வாசனைப்பொடியைத் தயாரிப்பார்கள்.

    பொற்சுண்ணம் இடிப்பதற்குப் பலவிதமான வாசனைப்பொருட்களை அதிகமாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இரண்டு அல்லது நான்குபெண்கள் எதிரெதிராக நின்றுகொண்டு இடிப்பார்கள். உரலில் உள்ள குழியோ சிறியது. ஒரு உலக்கைதான் போகமுடியும்; நான்குபேர் மாற்றிமாற்றி உலக்கைபோட்டு இடிக்க வசதியாக ஒரு தாளகதியை அமைத்துக்கொண்டு, இடிக்கும் சிரமம் தெரியாதிருக்கப் பாடல்களையும் இதற்காக இயற்றிக் கொண்டனர். இதற்குத் தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் வள்ளைப்பாட்டு (உலக்கைப்பாட்டு) என்றே பெயர் இருந்தது. இருபெண்கள் நான்கு கைகளால் மாற்றிமாற்றி உலக்கை போடும்போது வளையல்களும் மூச்சும் இழைந்தொலிக்கப் பண்ணிசை உண்டாகுமே அதற்கு வள்ளைப்பாட்டு எனப்பெயர்.

    ஒருவீட்டில் திருமணம் நிச்சயமானவுடன் செய்யும் முதல் மங்கலச்செயல் மஞ்சளை நிறையச்சேர்த்து வாசனைப்பொடி இடிப்பதுதான். தற்காலத்திலும் கூட இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதனைக்கண்ணுற்ற மாணிக்கவாசகருக்கு ஈசனுடைய அபிடேகத்திற்கு பொற்சுண்ணம் இடித்துப்பார்க்கும் பேரவா எழுகின்றது. தனது இறையனுபவங்களைச் சுண்ணமிடிக்கும் பாடல்களாக்கி பெண்களுக்காகவே இயற்றுகிறார். அப்பெண்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து சிவபிரானுக்காகப் பொற்சுண்ணம் இடிக்கின்றனர்.

    ‘அழகான முத்துமாலைகள், மாவிலைத்தோரணங்களல் வீட்டை அலங்கரித்து, நவதானியங்களைக் கிண்ணங்களில் நிரப்பி முளைப்பாரி வைத்து, அதன் நடுவே, தூபம், தீபம் அனைத்தையும் வையுங்கள் பெண்களே! பல்லாண்டு பாடுங்கள், கவரி வீசுங்கள்; அப்பன் திருவையாறனைப் பாடி நாம் பொற்சுண்ணம் இடிப்போம்,’ என்று அனைவரையும் அழைத்துச் சுண்ணமிடிக்கத் தொடங்குகிறார்கள்.

    ‘முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி
    முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
    ………………………………………….
    அத்தன் ஐயாறன்அம் மானைப்பாடி
    ஆடப்பொன் சுண்ணம் இடித்தும் நாமே4′

    இந்தச் சுண்ணப்பொடிகள் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களிலும் இடம்பெற்றுத் திகழும் அருமையும் ஒரு அழகுதான். அக்காட்சியை நாமும் காணவேண்டாமா?

    சின்னஞ்சிறுமி. விளையாட்டில் முனைப்பாக இருப்பவளை நீராட வரும்படி ஆசைகாட்டுகிறார்கள் தாதியர். “உன் நீராடலுக்காக எத்தனைவிதமான சுண்ணப்பொடிகள் கொண்டுவந்திருக்கிறோம். தேன்சிந்தும் மலர்களைச் சேர்த்துக்கலந்த ஒரு சுண்ணக்கலவை; களபம் எனும் சந்தனம், கஸ்தூரி மஞ்சள் முதலானவை சேர்த்த இன்னொரு சுண்ணம்; பச்சைக் கர்ப்பூரம் சேர்த்த குளிர்ச்சியான ஒரு சுண்ணக்கலவை. தனிச் சந்தனக்கலவை ஒன்று; பலவிதமான சாந்துக்குழம்புகள். வண்டுகள் தேனை அருந்தி ரீங்காரமிடும் மலர்மாலைகள்! வா குழந்தாய்! வந்து பாலாற்றில் துளைந்து நீராடுக!” என ஆதிபுரி (திருவொற்றியூர்) வடிவுடையம்மையை நீராடத் தாயும் சேடியரும் அழைப்பதாகப் புலவரொருவர் பாடியுள்ளார்.

    ‘கள்ளோ டலர்ந்தநறு மென்மலர்ச் சுண்ணமும்
    களபப் பசுஞ்சுண்ணமும்
    கர்ப்புரச் சுண்ணமும் கலவையும் சுண்ணமும்
    கமழ்கின்ற பலசாந்தமும்.5..’

    நாம் உயர்வாக எண்ணும் பலபொருள்களையும் செயல்களையும் இறைவனுக்காகவே அர்ப்பணிப்பதில் உண்டாகும் பேரானந்தத்திற்கு ஈடுஇணையில்லை அன்றோ?

    சிறுமியாகிய அன்னை திருநிலைநாயகி நீராடுவதற்காக மேலே நாம் கண்டவாறு தயாரிக்கப்பட்ட சுண்ணப்பொடியை, தூவினால் நிலத்தில் விழுமுன்பே வண்டுகள் சுழன்று விரைந்துண்ணும் தரம் உயர்ந்த சுண்ணப்பொடியை அரம்பையர்களும், மதுநிறைந்த மலர்களை இந்திராணியும், துகில், காம்பு நேத்திரங்கள் ஆகிய பட்டாடை வகைகளைப் பல மகளிரும் ஏந்தி நிற்கின்றனராம். முகவாசம் எனப்படும் வெற்றிலை, மற்றும் தாம்பூலம், சந்தனம், மானின் கத்தூரி ஆகியவற்றைக் கலைமகளும், இரத்தினம், பவளம் ஆகிய நவமணிகளாலான அணிகலன்களை மலர்மகளான இலக்குமியும் ஏந்தியவாறு உனது ஏவலை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்…’ என்பது புலவரின் கூற்று.

    தூவினில மேல்விழ விடாதுவரி வண்டுகள்
    சுழன்று துய்க்குஞ் சுண்ணமொய்
    சுரிகுழ லரம்பையர்கள் மதுமலர்க ளிந்த்ராணி
    துகில்காம்பு நேத்திரங்கள்
    காவிமுக வாசதாம் பூலாதி சந்தனம்
    கத்தூரிமா னின்மதம்
    கலையின்மக ளரதனம் பவளமுதல் நவமணிக்
    கலன்மலரின் மகளேந்தி நின்று
    ஆவலின் ஏவல்வழி நிற்கிறார்6…….  (சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்)

    ஈண்டு புலவர், அன்னைக்காகத் தயாரிக்கப்பட்ட சுண்ணத்தின் தரத்தைப் புகழ்ந்து கூறுவது சீவக சிந்தாமணியில் காணும் கருத்தை ஒத்திருப்பது நயக்கத்தக்கது.

    சீவக சிந்தாமணியின் குணமாலையார் இலம்பகத்தில், அவளுக்கும் சுரமஞ்சரிக்கும் இடையேயான சுண்ணம் தயாரிக்கும் போட்டியில் எவரின் சுண்ணம் தரத்தில் உயர்ந்ததெனக் காணவேண்டியபொறுப்பு சீவகனிடம் அவன் திறமையை அடிப்படையாகக் கொண்டு தரப்பட்டது. அவன் இருவரின் சுண்ணப்பொடிகளையும் சிறிது அள்ளி விண்ணில் தூவி விடுகிறான். குணமாலையின் சுண்ணப்பொடி நிலத்தில் விழும்முன்பே வண்டுகள் பாய்ந்தோடிவந்து அதனை உண்ணுகின்றதைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் கூக்குரலிட்டனர். சுரமஞ்சரியின் பொடிகள் நிலத்தில் விழுந்தன. வண்டுகள் அதன் பக்கமே நெருங்கவில்லை! “வண்டுகள் உண்ட பொடி (குணமாலையுடைய பொடி) நல்ல கோடைக்காலத்தில் இடித்துத் தயாரிக்கப்பட்டது; மற்றது (சுரமஞ்சரியுடையது) குளிர்ச்சியுடைய மழைக்காலத்தில் தயாரிக்கப்பட்டது. அதனால் சிறிது தரம் தாழ்ந்தது,” எனச் சீவகன் விளக்கினான்.

    நல்ல சுண்ணம் இவைஇவற் றில்சிறிது
    அல்ல சுண்ணம் அதற்கென்னை என்றிரேல்
    புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ணம்
    அல்ல சீதம்செய் காலத்தின் ஆயவே.7 (சீவக சிந்தாமணி- குணமாலையார் இலம்பகம்)

    இதனையே புலவரும் பிள்ளைத்தமிழ் பாடலில் எடுத்தாண்டுள்ளார்.

    தாயும் தோழியரும் நீராட அழைத்துச் செல்வதென்னவோ சிறு பெண்மகவினைத்தான். ஆனாலும் (இலங்கை) சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ் பாடிய புலவர் உலகிற்கே அன்னையான பராசக்தியையே அச்சிறுமியிடம் தமது உள்ளுணர்வால் தரிசிக்கிறார்.

    புவனேசுவரியன்னையின் நீராடல் விளையாட்டின்போது, நிகழும் விளையாட்டொன்றினை வருணனையாக்கி, தேவர்கள் அதனை தேவிக்குச் செய்யும் கனகாபிஷேகமாக்கிச் சிறப்பித்துக் கூறுகிறது இப்பாடல். சில சேடிப்பெண்டிர் நீரினுள் மூழ்கி ஒளிந்து கொள்கின்றனர். தாமரையின் அடித் தண்டுகளை அறுத்து அவற்றைத் தமது வாயில் வைத்துக் குழல்போல ஊதி விளையாடுகின்றனர். அவர்கள் ஊதுவதனால் உள்ளிருக்கும் காற்று மேலெழுந்து வெளிப்படும்போது, அவற்றினுள்ளிருக்கும் மஞ்சள்நிற மகரந்தத் தாதுகளை நீராடும் அன்னைமீது பொழியச் செய்கின்றதாம். இது அன்னைக்குக் கனகாபிஷேகம் செய்வது போலுள்ளது என்கிறார். கருத்திற்கினிய நீர்விளையாட்டொன்றினை அன்னை தெய்வத்திற்குச் செய்யும் சீராட்டாகவும் அமையுமாறு கற்பனை செய்தது சிறப்பாக அமைந்துள்ளது.

    சேறாடு செந்நெலம் கழனிசூழ் சுதுவையில்
    சீர்த்தசங் களைப்பதிபெறும்
    திரையாடு தீர்த்திகைச் சீராட விளையாடு
    சேடியர் குதூகலத்தால்
    நீறாடு மகரந்த நிறைகமல நீள்தண்டு
    நீரிடைப் புகுந்தறுத்து
    நிகரில்வாய் வைத்தூத………
    ………………………………………
    பெருமையொடு பொன்தூவி அன்னையை முழுக்காட்டு
    பெரிய கனகாபிஷேக
    வீறாடு விளையாட்டின் மகிழ்வாடும்8……………

    பின்னும் அன்னையை மோன ஞானவெள்ளம் மூழ்கி இருப்பவள் எனவும் வருணனை செய்கிறார்; அதாவது தேவியின் கருணைவெள்ளத்தில் மூழ்கியிருக்கும் யோகியர் தமது மூலாதாரத்தில் மூண்டெழும் குண்டலினியைச் சுழுமுனை நாடி வழி மேலேற்றுகையில் அவர்கள் சிரசினின்றும் ஊற்றெடுக்கும் அமிருதப் பிரவாகம் அமிர்தகங்கை எனப்படும். அது சுழுமுனை வழியே பாய்ந்து ஆறாதாரங்களிலும் தேங்கும். அவையனைத்தும் அடியார் உள்ளத்தே உள்ள தீர்த்தங்களாகும்.

    கள்ளத்த மாயவியல் கைகழுவி நின்னருட்
    கருணைக்கை ஏறுமுரவோர்
    காண்பினிய சுழுனைவழி மேலேறு கடவுண்மாக்
    கங்கைபுகு சுனைகளாக
    உள்ளத்தி னுள்ளபல தீர்த்தங்க ளுறமூழ்கி
    உலவாவின் புறுதம்சரதம்.9.’ (புவனேசுவரி பிள்ளைத்தமிழ்)

    திருமூலரும் இவற்றில் மூழ்குவோர் புண்ணியராவர் என்கின்றார்.

    ‘மறியார் வளைக்கை வருபுனற் கங்கை
    பொறியார் புனல் மூழ்கப் புண்ணியமாமே10′ (திருமந்திரம்).

    புவனேசுவரி அன்னையை அவள் வைதிகத்தின் வேர் எனப் பெருமைப்படுத்துகிறார். இவள் நாம் வழிபடும் பராசக்தியே என உணர்ந்த அடியாரின் நிலையில் நின்றும் இப்புலவர் பரவசமடைகிறார்.

    சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழானது இராமேச்சுவரத்தில் உறையும் அம்பிகைமீது பாடப்பட்டது. பிள்ளைவரம் வேண்டுவோர் இராமேச்சுவரம் சென்று வேண்டிக்கொள்வது மரபு. இப்பிள்ளைத்தமிழ் தேவிகோட்டை ஜமீந்தாரும் பெரும்புகழ் வள்ளலுமாகிய அருணாசலஞ் செட்டியாரவர்களுக்கு ஒரு குழந்தை உதிக்கவேண்டி, மற்றவர்கள் அருணாசலக் கவிராயரை வேண்டிக்கொள்ள, அவரால் இயற்றப்பெற்றது. புலவரின் வாக்கு விசேடத்தாலும், அம்மையின் அருளும் கூடிட, ஜமீந்தருக்கு, அழகான ஆண்மகவு பிறந்தது என அறிகிறோம்.

    இராமேசுவரம் அமைந்துள்ள தீவில் உள்ளும் வெளியிலுமாக அறுபத்துநான்கு புனித தீர்த்தங்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. கந்தபுராணம் இவற்றுள் இருபத்துநான்கை மிக முக்கியமானவையெனக் கூறுகிறது. இந்தப் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, வெவ்வேறு விதமான பாவங்களைத் தொலைக்கலாம். இவற்றுள் பல இராமநாதசுவாமியின் திருக்கோவிலின் உட்புறமே உள்ளன.
    சேதுபர்வதவர்த்தனி அம்மையை நீராட அழைக்கும் புலவர், மிகப்பொருத்தமாக, மானிடர்களாகிய நாம் நீராட உகந்த சில புனித தீர்த்தங்களின் கதையை அழகுற இப்பாடல்களில் இணைத்துப் பாடியுள்ளார். அவை என்னவென்று பார்க்கலாமே!

    பறந்து சென்று ஊறு விளைவிக்கும் மலைகளின் இறகுகளை அரிந்தவனின் பிரமகத்திப்பாவம் தொலையுமாறு செய்வது சீதைகுண்டமாகும். கோடி வேதப் பிராமணர்களைக் கொலைசெய்த பாவத்தைக் குறைப்பது பிரமகுண்டம் எனும் தீர்த்தமாகும்; இராமன் பிரதிட்டை செய்த மணல் இலிங்கத்தை வாலினால் ஈர்த்து, முடியாது வாலிற்றுப்போய் அநுமன் வீழ்ந்த இடத்தில் ஊற்றெடுத்தது அநுமகுண்டம் எனும் தீர்த்தமாகும். இதில் ஊற்றெடுக்கும் நீரை எடுத்து அதில் நீராடுவோருக்கு மகப்பேற்றினை அடைவிக்கும் அநுமகுண்டமிதுவாகும். இத்தகைய தீர்த்தங்களிலாடுவோர் எண்ணிய நற்பயன்களைப் பெறுவர் என்று இயம்பும் இராமேச்சுவரத்தில் இராமநாதசுவாமியாகிய ஈசனின் பக்கம் இருக்கும் இளமயில் என அன்னை பர்வதவர்த்தினியை ஏற்றுகிறார். “நீ தமிழ்முனிவனாம் அகத்தியனின் மலையான மலயம் எனப்படும் பொதியமலையில் இருந்து உற்பத்தியாகும் பொருநைவெள்ளத்தில் நீராடியருளுக! உண்மையன்பர் தொழும் பர்வதவர்த்தனியே நீராடுக!” என வேண்டுவதாக அமைந்துள்ள பாடலிது.

    ‘குன்றிற கரிந்தவன் பிரமகத் திப்பவம்
    குறைசெய்த சீதைகுண்டம்
    ………………………………………………
    வென்றிபெறு தமிழ்முனிவன் மலயநின் றெழுபொருநை
    வெள்ளநீ ராடியருளே
    மெய்த்தவர் தொழும்பர்வத வர்த்தனி வரும்புதிய
    வெள்ளநீ ராடியருளே.11′

    காஞ்சி காமாட்சியம்மை பிள்ளத்தமிழில் நீராடல் பருவத்தில் புலவரின் கற்பனை அற்புதமாக விரிகின்றது. ‘ஆகாயமே அழகான பட்டுக் கருநீலச் சேலையாகி இருக்கின்றது. அதில் பதித்த நல்வைரங்களாகத் தாரகைகள் மின்னுகின்றன. இந்தச்சேலைக்கு விலைகூறவும் இயலுமோ? இத்தகைய விலைமதிப்பற்ற சேலையினை நீ விரும்பி அணிய வேண்டுமென எட்டு மகளிர்களாகிய அட்ட இலக்குமிகள் ஏந்தி நிற்கின்றனர்.

    ‘ஈரம் நிரம்பிய கடல் நீரை முகந்து கொண்டெழும் கருமுகிலின் கரையாக வானவில் ஒளிர்கின்றது. மழைக்கு இறைவனாகிய இந்திரன், கடற்கடவுள் வருணன், தண்மையான காற்றின் இறைவனெனப்படும் மாருதக்கடவுள் ஆகியோரின் அருமைப் பத்தினிகள் தங்கள் தலைவியாகிய நீ அணிந்துகொள்ள அத்தகைய வானவில் கரையிட்ட மேகமாகிய கருநீலச் சேலையைக் கையில் ஏந்திக்கொண்டு, கச்சி எனும் காஞ்சிமாநகரின் தடாகக் கரையில், நீ நீராடி வருவதற்காகவும் உனது கண்ணசைவின் ஏவலுக்காகவும் காத்திருக்கின்றனர். நீயும் நீராடி அருளுக! முக்கண்ணனின் இடப்பாகத்தைப் பகிர்ந்து கொண்டவளே! நீராடியருளுக!’ என வேண்டுவதாக அமைந்த பாடல் மிகுந்த நயம் வாய்ந்தது.

    இயற்கையின் எழிலார்ந்த அமைப்பான கருமுகிலிலும், நீலக்கடலிலும், வானவில், சந்திரன், தாரகைகள் இவற்றிலும் இறைமையைக்கண்டு, அவை இறைமையின் அமைப்புகள், அணிகலன்கள் எனக்கொண்டு இரசனையுடன் வழிபட்டு வந்தனர் நம் முன்னோர்கள். கருமுகிலைக் காமாட்சி அம்மைக்கான அழகானதொரு சேலையாகக் கண்டு களிப்பெய்தும் அடியாரின் கருத்தில் பூத்தவொரு மலர் இப்பிள்ளைத்தமிழ்ப் பாடல். இயற்கையை இறைவடிவாகக் கண்டு போற்றிப்பரவும் வழக்கு இன்றுமே தொடர்கின்றது.

    விண்பட் டாடை யதனுடலில்
    மின்னும் பொறிகளு டுவமைத்த (பொறி- பொட்டு)
    விலையில் தானை உகந்தருள (தானை- சேலை)
    வேண்டு மெனுமெண் மலர்மகளிர்
    ஒண்பா வாடை எடுத்தெழவும்
    ஓதக் கலிங்கக் கருமுகிலின்
    ஒருபால் வானச் சிலையருகிட்
    டும்பர் கோன்மா மழைக்கிறைவன்
    தண்ணென் மாரு தக்கடவுள்
    தங்கள் அருமைப் பத்தினியர்
    தலைவிக் கெனவத் துகில்விரித்துத்
    தழையும் கச்சித் தடக்கரையில்
    கண்ணே வற்குக் கருத்திருத்தக்
    கடிநீர் ஆடி யருளுகவே!
    கண்மூன் றுடையா ரிடம்பகிர்வோய்
    கடிநீர் ஆடி யருளுகவே!12

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதத் தலங்களுள் முதன்மையான தலமாக விளங்குவது காஞ்சி. இங்குறையும் காமாட்சியம்மை மீது இப்பிள்ளைத்தமிழ் நூலானது காஞ்சி இரா. குப்புஸ்வாமி அவர்களால் 1959-ல் இயற்றப்பெற்றது.
    இதுபோன்ற பல பிள்ளைத்தமிழ் நூல்களும், குழந்தைப் பருவத்தைப் போற்றிக் கொண்டாடும் முறைமையில் தமது விருப்பமான தெய்வங்களைக் குழந்தையாகக் கொண்டும், அவர்கள் தெய்வத்தன்மையை மறவாது போற்றியும் கற்பனை வளத்துடன் பாடப்பட்டுள்ளன என்பது வியக்கத்தக்கதாம்.

    பார்வை நூல்கள்:

    1. சிலப்பதிகாரம்
    2. திருவாசகம்- திருப்பொற்சுண்ணம்.
    3. பரிபாடல்- பாடல் 10-
    4. திருவாசகம்- திருப்பொற்சுண்ணம்.
    5. ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்
    6. திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்
    7. சீவக சிந்தாமணி- குணமாலையார் இலம்பகம்
    8. சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ்
    9. சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ்
    10. திருமந்திரம்
    11. சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ்
    12. காஞ்சி காமாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 9.1

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 9.1

    முனைவர் மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.1
    (நீராடற்பருவம்)

    பெண்பால் பிள்ளைத்தமிழில் அடுத்த பருவமாக நாம் காண்பது, நீராடற் பருவம். நதியில் நீராடும் இனிய அனுபவத்தை, விளையாட்டை, வளர்ந்த சிறுமிகள் ஐந்து முதல் ஒன்பது வயதில் செய்வார்கள். ஆயினும் முதலில் சிறுபெண்களுக்கு வயதில் பெரிய பெண்களும் தாயும் செவிலியருமே நதியில் இறங்கி நீந்தவும், நீராடவும் கற்றுக் கொடுப்பார்கள். பிள்ளைத்தமிழ் இலக்கிய மரபு பெண் குழந்தையின் ஐந்து முதல் ஒன்பது வயதில் இது நிகழும் என்கிறது.

    நதியில் நீராடுவதென்பது சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் ஒரு நல்ல பொழுது போக்காகவும், உடற்பயிற்சியாகவும் அக்காலத்தில் விளங்கியதைக் காணலாம். அது மட்டுமின்றி, நாட்டு நலனுக்காகவும், வீட்டு நலனுக்காகவும் செய்யும் வேண்டுதல்களுக்கும் இதுவொரு களமாக விளங்கியது எனவும் அறிகிறோம்.

    ஆடிமாதம், புதுவெள்ளத்தில் நீராடுவதென்பது நதியைப் போற்றி வழிபட்டு விளையாடி மகிழ்வதற்காக ஏற்பட்டது! புலராத அதிகாலை நேரத்துக்குளிரில், மார்கழிமாதம் நீராடுவது நாட்டில் நல்லமழை பெய்வதற்காகவும் நல்ல கணவனைப் பெறுவதற்கு வேண்டி நோன்பிருக்கவும் ஏற்பட்டது. ஆண்டு முழுவதுமே ஆற்றங்கரையில் தினசரிக் கடன்களைச் செய்தும், துணிமணிகளைத் துவைத்தும், நீரில் துளைந்து விளையாடியும், வாழ்வினைப் பல பொழுதுபோக்குகள் நிறைந்ததொரு இனியபயணமாக அமைத்துக் கொள்வதற்கென்றே ஏற்பட்டது எனலாம்!

    தம் நீர்ப்பெருக்கால் நமக்கெல்லாம், நாம் விதைக்கும் பயிர்களுக்கெல்லாம் உணவளித்து, உயிரூட்டி, அரவணைத்து வளர்த்துவரும் கங்கை, காவேரி, வைகை, இன்னும் பல நதிகளை நாம் தெய்வமெனக் கொண்டாடிப் பூசைகள்செய்து வழிபடுகிறோம். ‘நீரின்றி அமையாது உலகு,’ என்பது நாமறிந்த உண்மை! குழந்தைகள் தாயிடம் விளையாடுவதுபோல, ஆற்றுவெள்ளத்தில் ஆடிப்பாடி நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டுக் களிக்கிறோம். நிலம், நீர் (ஆறு) முதலியன வாழ்வின் இன்றியமையாத தேவைகளாக இருப்பதனால், அவற்றை இயற்கை தெய்வங்களாகக் கொண்டு போற்றுகிறோம். இவை உயர்வான நமது நாகரிகத்தின் வெளிப்பாடுகளே!

    ‘காவேரியே! உன் கணவனுடைய சோழநாடே உன்குழந்தையாகும்; நீதான் அதனை வளர்க்கும் தாயானவள். எத்தனையோ ஊழிக்காலங்களாக இந்தச்செயலைச் செய்துவருகின்றாய். இதற்குக் காரணம், உயிர்களைப் பாதுகாத்து, ஆணைச்சக்கரம் செலுத்துகின்ற சோழவேந்தனின் நடுவுநிலைமை தவறாத ஆட்சியே அல்லவா? நீடூழி வாழ்வாயாக காவேரியே!’ எனத் தலைவி வாழ்த்துவதாக சிலப்பதிகாரத்தில் கானல்வரிகளைக் காண்கிறோம்.
    ‘வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி
    ……………..
    ஊழி உய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும்
    ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி.1’
    (சிலப்பதிகாரம்- கானல்வரி- புகார்க்காண்டம்- கடலாடு காதை)

    சிவபிரானுக்கு உகந்த திருவாதிரை நாளில் பௌர்ணமி தினமும் கூடியிருந்த முன்பனிக்காலம் எனப்படும் மார்கழிமாதத்து நாளன்று வைகறைப்பொழுதிற்கு முன்பே வைகைக்கரையில் சிறுமியரும் மகளிரும் அந்தணர்களும் சிறுவர்களுமாகக் கூட்டம் கூடியுள்ளது; வைகையின் நீர்ப்பெருக்கிற்கு ஈடாக மக்கள்கூட்டம் கரைபுரண்டோடுகின்றது. வாணி(சரஸ்வதி), யமுனை, கங்கை ஆகிய மூன்று நதிகளின் கலவை எனப் புகழப்படும் வையை எனும் பாண்டியன் குலக்கொடி, மகிழ்ச்சியில் பொங்கிப் பெருகிப் புரண்டோடுகிறாள்.
    அந்தணர்கள் நீராடி முடித்துப் பொற்கலங்களிில் வையையின் நீரை நிரப்பிக் கொண்டு மந்திரங்களை உச்சரித்தவாறு வேள்விக்காக அமைக்கப்பட்ட சாலைகளை நோக்கி விரைந்தனர். வேள்விச்சாலைகளில் தீ வளர்க்கப்பட்டு மந்திரங்கள் முழங்கத் துவங்கிவிட்டன. தாய்மார்கள் தங்கள் சிறு மகள்களின் கைகளைப் பற்றிக்கொண்டு நீரில் மெல்ல இறக்கி நீராடவைக்கின்றனர்.

    சிவபிரானை வாழ்த்தி எழும்பும் அந்தணர்களின் மந்திர முழக்கம் வானைமுட்டுகிறது. இன்னும் பல தாய்மார்களும் சிறுமிகளும் இளம்கன்னியர்களும் அவர்களைப்போல் வேள்விக்குண்டங்களைச் சூழ்ந்து நிற்கிறார்கள். பற்களைக்கிட்டிக்கும் குளிரில், ஈர ஆடையில், சிறுமிகளின், ஏன் தாய்மார்களின் உடல்களும்கூட இலேசாக நடுங்குகிறன. ஓங்கியெழும் வேள்வித்தீயின் நாக்குகள் உமிழும் வெப்பத்தில் அப்பெண்களின் ஈர ஆடைகளிலிருந்து நீர் ஆவியாக வெளிப்படுகின்றது. பெண்களும் குளிரிலிருந்து சிறிது ஆசுவாசமடைகின்றனர்.

    ‘இவ்விளங்குழந்தைகள் தங்கள் தாய்மார்களுடன் கூடிநின்று வைகைக்கரையில் நீராடலாகிய இந்தத் தவத்தினைச் செய்வதற்கு, முன்பு என்ன தவம் செய்திருந்தனரோ,’ எனக் காண்போருக்கு எண்ணத்தோன்றுகிறது.*

    அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்,
    முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட,
    பனிப்புலர்பு ஆடி, பருமணல் அருவியின்
    ஊதை ஊர்தர, உறைசிறை வேதியர்
    …………………………………………….
    தீ எரிப்பாலும் செறிதவம் முன்பற்றியோ,
    தாய் அருகா நின்று தவத் தைந்நீராடுதல்?
    நீ உரைத்தி, வையை நதி!2
    (*பரிபாடல்-11- ஆசிரியர்: நல்லந்துவனார்)
    *****

    இனி குமரகுருபரர் காட்டும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழைக் காணலாம்! பொய்யாக் குலக்கொடியான வையை என்னும் நதியின் கரையில் கும்மாளமிடும் இளம்பெண்களின் கூட்டம்! குதூகலம் கொப்பளிக்க பாண்டிய இளவரசி தடாதகை தன் தோழியருடன் நீராட வருகிறாள். பற்பல கதைகளையும் பேசிக் களித்து மகிழ்ந்த வண்ணம் தடாதகையும் தோழிகளாகிய திருமகளும் கலைமகளும் இன்னும் பல பெண்களுடன் வைகைத் துறையை அடைகின்றனர். “பொங்கி வரும் வைகைப் புது நீரில் நீராடுவாயாக அம்மையே,” என்று தடாதகையிடம் கூறுகின்றனர்.

    வைகை நீர் பொங்கிப் புரண்டோடி வரும் அழகைக் கண்டு, மெய்ம்மறந்த பரவசத்தில் ஆழ்ந்து நிற்கிறாள் அங்கயற்கண்ணி. ‘இந்தப்படித்துறை பண்டு எம்பெருமான் பிட்டுக்கு மண்சுமந்த இடமாகும்,’ எனத் தோழியான வாணி சொல்கிறாள். அதனைக் கேட்டவுடன் தடாதகையின் உள்ளம் கசிந்துருகிக் காதலில் கண்களிலிருந்து ஆனந்த வெள்ளம் பொழிகின்றதாம்.

    நீர் பெருகிக் கரையுடைத்துக் கொண்டோடிய வைகையும், பிட்டு விற்கும் வந்திக்கு உதவ வேண்டி, கூடையில் மண்ணை வாரித் தலைச்சுமை எடுத்துக் கரையமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காதல் கொழுநனும், அவனைப் பிரம்பால் அடித்த பாண்டியனும் ஆகிய காட்சிகள் அம்மையின் மனக்கண்ணில் படமாக விரிகின்றன. கலைமகளும் தன் வாக்கு வன்மையினால் அந்தக் கதையை சுவைபட எல்லாருக்கும் விவரிக்கிறாள்.

    ‘என் உள்ளங்கவர் காதலர் மண் சுமந்த இடமல்லவா இது?’ என்ற பெருமிதத்தில் மீனாட்சியின் நெக்குருகி, நெஞ்சு விம்ம, கண்கள் சிவந்து ஆனந்த வெள்ளம் பெருகுகின்றது. அப்படியே சிலை போல நிற்கிறாள்.

    ‘இழியும் புனல் தண்துறை முன்றில் இதுஎம் பெருமான் மண்சுமந்த
    இடமென்று அலர்வெண் கமலப்பெண் இசைப்பக் கசிந்துள் உருகியிரு
    விழியும் சிவப்ப ஆனந்த வெள்ளம் பொழிந்து நின்றனையால்3..’

    “இப்படிக் கண்களிலிருந்து வெள்ளத்தைப் பெருகவிட்டுத் திரும்பவும் அப்பெருமானுக்கு வேலை வைப்பது பிழையல்லவா? விரைவில் நீராடுவாய்,” என அழைக்கின்றனர் தோழிகள்.

    ‘விழிநீரை மீண்டும் பெருக விடுத்து அவற்கோர்
    வேலை இடுதல் மிகையன்றே!’ என்கின்றனர்.

    ஆனால் எண்ணங்களில் ஆழ்ந்து அசையாமல் சிற்பமென நிற்கிறாள் இளவரசி தடாதகை. அவளை விரைந்து நீராடவைக்கத் தோழியர் இன்னொரு உபாயத்தைக் கையாளுகின்றனர்!

    “மடங்கி வரும் அலைகளையும் குளிர்ச்சி பொருந்திய நீரையுமுடைய வைகை நதியில், வண்டல் இடுகின்ற மண்ணைக் கூடையில் அள்ளி வைத்து முன்பே சுமந்தவர் உன் காதலர்தானே? நீரிலிறங்கி ஆடினாயானால் உன் மார்பிலணிந்துள்ள சிவந்த குங்குமச்சேறு கரைந்து வண்டல்மண் போல நீரில் சேர்ந்துவிடும். அதைத் திரும்பக் கூடையில் அள்ள எம்பெருமான் ஆசையாக விரைந்தோடி வருவார் பார்!” எனக்கூறுமுன்பே, மற்றொரு தோழி குறும்பாக, “அவ்வமயம் வெள்ளைப்பிட்டை அள்ளியள்ளிக்கொடுக்க வந்திக்கிழவி வேண்டுமே! பிரம்பினால் அடித்து வேலைவாங்கப் பாண்டிய மன்னன் வேண்டுமே,” எனப் பொய்யாகக் கவலைப்படுகிறாள்.

    ‘………………………. ஒருத்தி
    வெண்பிட் டிடவும் அடித்தொருவன் வேலைகொளவும் வேண்டுமெனக்
    குறிக்கும் இடத்தில் தடந்தூநீர் குடையப் பெறின் 4….’

    “சிவனாரை உன்னிடம் வரவழைக்க இது நல்ல உபாயமல்லவா? இமயமலையிலும் மீன்கொடி பறக்கவைத்த பெண்ணரசியே, நீராடி அருளுகவே, பொருநைத் துறைவன் பொற்பாவாய் புதுநீராடி அருளுகவே,” என்று வேண்டுகின்றனர். இவை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் நீராடல் பருவத்தில் குமரகுருபரர் தீட்டும் அழகான சொற்சித்திரங்கள்! அசதியாடல் எனும் நயத்தை இழைத்து அமைத்த இனிய பாடல்கள்.

    சொன்னயங்களும் கருத்து நயங்களும் பலவிதமாக வெளிப்படும் பாடல்களைக் கொண்டமைந்தது குமரகுருபரனார் இயற்றியருளியுள்ள மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூல்.
    அங்கயற்கண்ணி அம்மை, வேகவதி எனப்படும் வைகையில் நீராடிய போது, அவள் கைகளில் அணிந்துள்ள வெண்மையான வளைகள் ஒலித்தன; பவளம் போன்ற சிவந்த உதடுகள் வெளுத்தன; கருங்குவளை மலர்க் கண்கள் சிவந்து செங்குவளை போன்று காணப்பட்டன; கரிய மணல் போன்று காணப்பட்ட கூந்தல் சரிந்து விழுந்தது. இது, பெருகிடும் கங்கையாறு, சிறு திவலையாகி, ஆனந்தப் பெருங்கடலாக விளங்கும் சிவபெருமானுடன் (மீனாட்சியம்மை) கூடிக்கலந்து விளையாடியதால் உண்டாகிய வேறுபாடுகளை ஒத்திருந்ததாம்.

    ‘செழுந்தரங்கக் கங்கை நுண்
    சிறுதிவலையாப் பொங்கும் ஆனந்த மாக்கடல்
    திளைத்தாடுகின்ற தேய்ப்ப5…’ என்கிறார்.

    குழந்தை மீனாட்சி வளர்ந்து வரும் ஒவ்வொரு பருவத்தையும் சுவைமிகுந்த நிகழ்ச்சிகளால் பாடி வரும் குமர குருபரர் பின்வரும் பாடலில் உலகம் முழுவதுமே உமை அன்னையின் வடிவம் எனக் கண்டு பேரானந்தம் கொண்டு பாடிக் களிக்கிறார்.

    “கிளி பேசுவது போன்ற பண் பொருந்திய சொற்களைப் பேசும் பாவையே! நீராடும் உனது திருமேனி அழகிய பச்சை மரகத நிறத்தைப் பரப்பி ஒளி வீசுகின்றது. இதனால் எல்லாப் பொருள்களும் அந்த நிறத்தைத் தாமும் பெற்று ஒளிர்கின்றன. நதி நீரில் மிதக்கும் குளிர்ந்த பவளக்கொடி, பச்சை நிறம் பெற்று, பேரழகுடன் பசிய இளங்கொடி போலக் காட்சியளிக்கின்றது; பருத்த வெண்மையான முத்துக்கள் மரகத மணிகளாக மாறி விட்டன! நதியின் குளிர்ச்சி மிகுந்த துறைகளில் தங்கி விளையாடும் அன்னப் பறவைகள் பச்சை நிறம் அடைந்து களிப்பு மிகுந்த தோகை மயில்களாக மாறி விட்டன! இது, ‘எல்லாப் பொருள்களும் உனது அழகிய திருவடிவம் தான்,’ என்று வேதங்கள் காலகாலங்களாக முழங்கி வரும் பொருள் முற்றிலும் உண்மையே என நிரூபிப்பது போல உள்ளதம்மா.

    ‘சகலமும் நின் திருச் சொரூபம் என்று ஓலிடும்
    சதுர் மறைப் பொருள் வெளியிட…’ என வர்ணிக்கிறார்.

    அத்தனை பெண்களும் குடைந்து குடைந்து நீராடுவதனால் அவர்கள் தம் மார்பில் அணிந்திருக்கும் சிவந்த சாந்து (செங்களபம்), கருமையான கஸ்தூரிக் குழம்பு, வெண்கற்பூரம் ஆகியவை கரைந்து வைகை நீரில் கலக்கின்றன. இது சரஸ்வதி (வாணி எனப்படும் சிவந்த நிறமுள்ள சோணை நதி), யமுனை (கரிய நிறம் கொண்ட காளிந்தி ஆறு), வெண்மை நிறம் கொண்ட கங்கை எனப்படும் வான் நதி மூன்றும் கலந்து வைகையாற்று நீரில் விளையாடுவது போல உள்ளதாம்.

    ‘……………………………………வாணியும்
    காளிந்தியும் கங்கையாம்
    விண் ஆறும் அளவளாய் விளையாடு புதுவைகை
    வெள்ள நீர் ஆடியருளே
    விடைக் கொடியவர்க்கு ஒரு கயற்கொடி கொடுத்த கொடி
    வெள்ள நீர் ஆடியருளே.6’ என்கிறார்.

    அனைத்துப் பொருள்களும் அவளே! அவளிடம் இருந்தே உற்பத்தியாகி அவளிடமே அனைத்தும் தஞ்சம் அடைகின்றன. அவளை இடைவிடாது சிந்தையில் வைப்பவர்கள் அவளாகவே ஆகி விடுகின்றனர். ‘எங்கும் வியாபித்திருப்பவள், பலவகையான உருவம் கொண்டவள், ‘வ்யாபினீ, விவிதாகாரா7,’ என அம்பிகையை லலிதா சஹஸ்ர நாமம் போற்றுகிறது. (ஸ்லோகம் 87).

    நதிகளைப் பெண்மைக் குணம் கொண்டவர்களாக பெரியோர்கள் வருணித்துள்ளனர். அவற்றின் ஆற்றலும், இயக்கமும், ஓரிடத்தில் நில்லாது ஓடிக்கொண்டே இருக்கும் தன்மையுமே இதற்குக் காரணங்கள். கமலைநதி திருவண்ணாமலையருகே ஓடுகின்றது. அந்த நதிப்பெண் உண்ணாமுலையம்மையை நோக்கிக் கூறுவதாக அமைந்தவொரு அழகான பாடல்:

    “குறிஞ்சி நிலத்தில் வாழும் வெற்றி மிக்க வீரனான குமரனுக்கு சேவல்கொடியைக் காட்டிலிருந்து கொண்டு கொடுத்தவள் அன்னை நீதான்!

    “பாலைக்குமரி எனப்படும் பாலைநிலத்து தெய்வமான கொற்றவைக்கு கொடிய சிங்கத்தையும் வாகனமாகக் கொடுத்தாய்!

    “செழித்த முல்லைநிலத்துக் கடவுளான கோவிந்தனுக்கு அழகான மூங்கிலாலான புல்லாங்குழலை அளித்தாய்.

    “மருதநிலத்து இறைவனான இந்திரனுக்கு அவன் மகிழும்வகையில் நீர்வளத்தைக் கொடுத்தாய்.

    “நெய்தல் நிலக்கடவுளான வருணனுக்கு அந்நிலத்தின் புலால் வாசனை தீரும்விதத்தில் (தாழம்புதர்கள் முதலியவற்றிலிருந்து வரும்) நறுமணமும் கொடுத்த அன்னை நீதானே!

    “உனக்கு என்னால் எதனை அளிக்க முடியும்? ஆகவே, அன்னையே, நீயே வந்து என்னில் ஆழ்ந்து நீராடித் திளைக்க வேண்டும்; நான் அதனால் உருகிப்பெருகிப் பேரின்பமான கடலில் சென்று சேர்வேன்,” எனக்கூறுகின்றாள் கமலை எனும் நதிப்பெண்ணாள்,’ என்கிறார் உண்ணாமுலைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியரான சோணாசல பாரதியார்.

    மெய்சிலிர்க்க வைத்து, பக்தியில் திளைக்கும் மிக அருமையான கற்பனை இதுவன்றோ!

    ‘கொற்றக் குறிஞ்சிக் குமரனுக்குக்
    கொடியும் பாலைக் குமரிக்குக்
    கொடுங்கோ ளரியுஞ் செழுமுல்லைக்
    கோவிந் தனுக்குக் குழல்வேயு
    மற்ற மருதப் போகிக்கு
    மகிழ்வு நெய்தல் வருணனுக்கு
    மன்னும் புலவு தீர்மணமும்
    வழங்கு வேனிற் கென்னளிப்பேன்8

    பல தலைமுறைகளாக நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டும், நீரினைத் தெய்வமாகக் கொண்டு போற்றியும், நீர்நிலைகளில் தெய்வ வழிபாடுகளை முறையாக நடத்தியும் வாழும் பண்பாடு – நாகரிகம் நம்முடையது. நீரின், ஆறுகளின் பின்னணியில் புலவர் பெருமக்கள் இயற்றியளித்த இப்பாடல்கள் இனிமை நிரம்பித்ததும்பி நமது உள்ளங்களில் அழகுணர்ச்சியையும், ஆனந்தத்தையும் பக்திப் பெருக்கினையும் நிரப்பி மகிழ்விக்கின்றன அல்லவா?

    _______________&________________

    பார்வை நூல்கள்:

    1. சிலப்பதிகாரம்- கானல்வரி- புகார்க்காண்டம்- கடலாடுகாதை
    2. பரிபாடல்- பாடல் 11- நல்லந்துவனார்.
    3. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    6. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    7. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
    8. உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- சோணாசல பாரதியார்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.1

    முனைவர் மீனாட்சி பாலகணேஷ்  

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 8.1

    (அம்மானைப் பருவம்)

    வரிசைப்படுத்தப்பட்ட பிள்ளைத் தமிழின் பருவங்களின்படி, பெண்பால் பிள்ளைத் தமிழில் அம்மானைப் பருவம் எட்டவதாகச் சுட்டப்பட்டுள்ளது. இனி இத்தொடரில் நாம் காணப் போகும் அடுத்த சில பருவங்கள் பெண்மக்கள் அல்லது ஆண்மக்களுக்கே உரித்தானவையாகும். நயம்படப் பாடப்பட்ட இனிமையான பல பிள்ளைப் பருவங்களைக் காணப் போகிறோம்.

    மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் உரையாசிரியர், ‘பிள்ளையை நோக்கி மாதர்கள் முத்தம்மானை முதலிய அம்மானையை எடுத்தாடிட வேண்டும் எனக் கூறும் பருவமிது என அமைத்தனர்’ என்பார்.

    பெண்குழந்தைகளின் அம்மானை விளையாட்டென்பது ஒரு சிறப்பான விளையாட்டு. இது அவர்களுடைய நுண்ணறிவு எனும் புத்தி சாதுரியத்தினையும், வாக்கு வன்மையையும், பாடல்களைப் புனைந்து, இசையோடு பாடும் ஆற்றலையும், விரைந்து நொடிப்பொழுதினில் கண், கைகள், உடலசைவு ஆகியன ஒருமித்துச் செயல்படுதலையும் வளர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது என அறியலாம்.

    விறுவிறுப்பான அம்மானை விளையாட்டு, ‘துறு துறு’வென மூளைக்கும் வேலை கொடுப்பது! தமிழுக்கும் ஓர் அழகான இலக்கியம்!! மூன்று பெண்கள் அமர்ந்து பாடி, மூன்று அம்மானைகளைக் கொண்டு ஆடுவதால் இந்த விளையாட்டு ‘மூவர் அம்மானை’ எனவும் பெயர் பெற்றது. மூன்று பெண்கள் ஏதேனும் ஒரு செய்தியை அல்லது இறைவன்/ அரசன் பற்றிய கதையை அல்லது அவன் புகழை, வினா- விடையாக, அங்கதமாக, தூற்றுமறைத் துதியாக அல்லது விடுகதை போலப் பாடல்கள் புனைந்து பாடியவாறு அம்மானைக் காய்களை உயர வீசிப் பிடித்து விளையாடும் விளையாட்டே அம்மானை ஆகும்.

    பல சந்தர்ப்பங்களில் அம்மானை எனும் விளையாட்டினை விளையாடிய பெண்களால் புனைந்து பாடப்பட்டு வந்த பாடல்கள், ‘மூவர் அம்மானை’ எனும் பெயரில் தொகுக்கப்பட்டு 1861ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ஒரு நூலில் காணப்படுகின்றன. இவை பெண்கள் அம்மானை ஆடுவதாகக் கருதியோ, அம்மானை ஆடுவதற்காகவோ புலவர்களால் புனையப்பட்டனவாகவும் இருக்கலாம்.

    பண்டைக் காலம் தொட்டு, மனிதர்கள் வாழ்க்கையை ஒழுங்கான நாகரிகமான நெறியாகக் கடைப்பிடித்து வாழத் துவங்கிய காலத்திலிருந்து, உயர்ந்த சிந்தனைகளும் அதன் தொடர்பான சீரிய எண்ணங்களும் தோன்றி வளர்ந்தன. தமிழ்நாட்டில் ஒரு காலக்கட்டத்தில் சைவ, வைணவ சமயங்கள் வேகம் பெற்று வளர்ந்து உயர்ந்து உன்னத நிலையை அடைந்தபோது மாந்தர்களின் வாழ்வில்  பிறப்பு, இறப்பு, ஆடல், பாடல், விளையாடல், கல்வி, கேள்வி என்ற எல்லா நிகழ்வுகளிலும் இறைவனின் புகழ் ஒரு அங்கமாகவே இசைக்கப்பட்டது.  அங்கதமாக, விடுகதையாக, புராணங்களாக, பக்தி இலக்கியங்களாக இவை தழைத்து வளர்ந்து தனிச் சிறப்புப் பெற்றன. சிறப்பாக, மகளிர் தம்முடைய தினசரி நடவடிக்கைகளான நீராடல், பலவிதமான விளையாட்டுகளைப் பொழுது போக்காக விளையாடுதல் ஆகிய எல்லாவற்றிலும் இறைவன் தொடர்பான பாடல்களைப் பலவிதமாகப் பாடி மகிழ்ந்தனர்.

    இவற்றுள்  பாவை நோன்பு, அம்மானை ஆகிய பெண்களின் விளையாட்டுகள் தொடர்பான நயம் மிகுந்த வாய்மொழி இலக்கியங்கள் என்னும் பாடல்கள் பின்பு சமய இலக்கியங்களிலும் இடம் பெற்றன. அவற்றுள் ஒன்று தான் அம்மானை எனப்படுவது.

    அம்மானை என்பது சிறு பெண்கள் முதல் எல்லா வயதுப் பெண்களும் விரும்பி ஆடும் ஒரு விளையாட்டாகும். இதற்காகவே செல்வந்தர் வீடுகளில் அம்மானைக் காய்கள், பெருமுத்துக்கள், பவளம், மரகதம் முதலியவற்றாலும், பொன்னாலும் செய்யப்படும். மற்றபடி, வழுவழுப்பான மர உருண்டைகளும், உலர்ந்த உருண்டைக் காய்களும் இன்ன பிறவும் கூடப் பயன்படுத்தப்பட்டன.

    பாடலைப் பாடி ஆடுவதனால் இதுவொரு அழகான இலக்கியமாகவும், உலா, கலம்பகம், பிள்ளைத் தமிழ் ஆகிய இலக்கியங்களில் ஓர் உறுப்பாகவும் அமைந்துள்ளது. மணிவாசகப் பெருந்தகையும் அம்மானைப் பாடல்களைப் பாடியாடும் பெண்கள் ஈசன் புகழை அழகுறப் பாடுவதாகப் பாடல்களை அமைத்துள்ளார்.

    அழகான, பொருள் நிறைந்த, இத்தகைய மூவர் அம்மானைப் பாடல்கள், கலம்பகம் எனும் நூல்களின் ஒரு அங்கமாக விளங்குகின்றன.  கலம்பகம் என்பதற்குக் கதம்பம் என்று பொருள் என்பார் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர். பலவகைப் பாக்களால் இயற்றப் பெறுவதும் பலவகைப் பொருள்களைக் கொண்டதுமான ஒருவகைச் சிற்றிலக்கியமே கலம்பகம் எனப்படும். கலம்பகம் என்னும் சொல்லில் கலம் என்பது பன்னிரண்டையும் பகம் என்பது அதில் பாதியான ஆறினையும் குறிக்கும். ஆகவே பதினெட்டு உறுப்புகள் அமையப் பாடப் படுவது கலம்பகம் எனப்படும். அம்மானை என்பதும் இதில் ஒரு உறுப்பாக இடம் பெறும்.

    மூன்று பெண்களில் முதலாமவள் ஒரு பாட்டுடைத் தலைவனை மனத்தில் கொண்டு அவன் பற்றிய பொதுவான ஒரு செய்தியைக் கூறி அம்மானைக் காயை உயர வீசி ‘அம்மானை’ என்பாள்; இரண்டாவது பெண் அந்தச் செய்தியுடன் பொருந்திய ஒரு கேள்வியைக் கேட்டுக் காயை வீசி ‘அம்மானை’ என்பாள்; மூன்றாமவள் அதற்கு இரு பொருள் படும்படியான ஒரு சாமர்த்தியமான விடையைக் கூறிக் கொண்டே அம்மானையை வீசிப் பிடித்து ‘அம்மானை’ என்பாள். இதுவே அம்மானை விளையாடும் முறையாகும். காலம் செல்லச் செல்ல சில வேறுபாடுகளும் கொண்டு அம்மானை விளையாட்டு காணப்படுகிறது.

    திருப்பேரூர்க் கலம்பகத்தில் காணும் ஒரு அழகிய பாடல்:

    முதல் பெண் அம்மானை ஆட்டத்தை ஆரம்பித்து வைக்கிறாள்: புதிர் போடுவது போல ஒரு சேதியைக் கூறுகிறாள்: “பட்டிநாதன் எனப்படும் பேரூர் ஈசன், காட்டில் வேடனாக அலைகின்றவன்; கடலில் வலைவீசி மீன்பிடிப்பவன்; வயலில் பள்ளனாக இறங்கி வேலையும் செய்பவன், பார்த்தாயோ அம்மானே!” என அவனது திருவிளையாடல்களை (!) செய்தியாகக் கூறுகிறாள். தாள லயத்துடன் அம்மானையையும் உயரே வீசிப் பிடிக்கிறாள்.

                ‘காட்டிலே வேட்டுவன்பைங் கடலில் வலைவாணன்

                நாட்டிற்பள் ளன்பட்டி நாதன்கா ணம்மானை’

    அடுத்தவள் வேண்டுமென்றே குதர்க்கமாக, “அப்படியென்றால்  வேதம் ஓதும் அந்தணர்கள் அவனைத்  தம்வீட்டில் சேர்த்துக்கொள்ளும் பெருமை எப்படி ஆயிற்றோ அம்மா?” என வினவுகிறாள்.

                ‘நாட்டிலே பள்ளனெனில் நான்மறையோர் ஈங்கிவனை

              வீட்டிலே சேர்த்துகின்ற மேன்மையென்ன அம்மானை’

    அதற்கு மூன்றாமவள், “அந்தப் பெருமான் உலகியலுக்கு அப்பாற்பட்டவனடி அம்மானே! வீட்டுக்கும் உரியவனானவன் பார்!” என சாமர்த்தியமாக விடை கூறுகிறாள். “ஆமாம்! வீட்டின் உரிமையாளனைச் சேர்க்காமல் இருக்க இயலுமா?”எனும் பொருள் மறைந்து நிற்கிறதல்லவா?

                ‘வீட்டுக் குரிய விகிர்தன்கா ணம்மானை.’

    ‘பேரூரின் பட்டிநாதன் ஆகிய சிவபிரான் வேட்டுவனாகவும் (அருச்சுனனுக்கு வரமருளக் கொண்ட வேடம்), வலைவாணனாகவும் (திருவிளையாடல்), பள்ளனாகவும் (பேரூர்ப் புராணம்) எல்லாம் வந்தாலும், அவர்களிலிருந்து வேறுபட்டு வீடுபேற்றை (முத்தியை) அளிக்கவல்லவனாகவும் அல்லவோ திகழ்கிறான்,’ என்பது உட்பொருள்! பேரூர் முத்தித்தலம் ஆகும்! அப்பொருள் இதில் தொக்கிநிற்பது மிகுந்த அழகாக உள்ளது!

    ‘மானே! அம்மானே!’ எனும் பாடலுக்கேற்ற விளி அடுத்தடுத்த வரிகளில் வருவதனால் இவ்விளையாட்டு அம்மானை எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்று எண்ணவும் இடமுள்ளது.

    பழங்காலந்தொட்டு வாய்மொழி இலக்கியமாகவே இருந்த இந்தப் பழமையான அம்மானை விளையாட்டை கி. பி. 2ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக எழுத்தில்- சிலப்பதிகாரத்தில் பதிவு செய்தவர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்தின் வாழ்த்துக் காதையில் இளங்கோவடிகள் ‘அம்மானை வரி’ என நான்கு பாடல்களைப் பாடியுள்ளார். இவை சோழ வம்சாவளி வழிவந்த மன்னர்களின் பெருமையை விளக்கிக் கூறி, அத்தகையதொரு சோழ மன்னனை அடைய விழையும் பெண்களின்  விருப்பமாகப் பாடப்படுகின்றன.

    இவற்றை இங்கு விளக்கியதன் காரணம், ஒரு மிகத் தொன்மையான தமிழ் மகளிர் விளையாட்டு, இலக்கியத்தின் மூலமாக எவ்வாறு பழந்தமிழர் வரலாற்றுச் செய்திகளையும், புராணங்களின் சிறப்பையும், அவற்றின் கவிதை நயத்தையும் படம் பிடித்துக் காட்டுகின்றது எனப் புரிந்து கொண்டு ரசிப்பதற்காகத்தான்!

    இவையும் மூவர் அம்மானை வகையைச் சேர்ந்தவை: மூன்று பெண்கள் கூடிப் புராணங்கள் புகழும் சோழ மன்னர்களின் பெருமையைப் பாடி வாழ்த்துகின்றனர்.

    முதல் பெண்: “மிக்க நீரைக் கொண்ட கடலால் சூழப்பட்ட இவ்வுலகினை ஆட்சி செய்து  விண்ணவர் கோனாகிய இந்திரனின் உயர்ந்த அரணைக் காத்தவன் யார் சொல்? அம்மானை!”

                வீங்குநீர் வேலி உலகாண்டு விண்ணவர்கோன்

               ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை!

    இரண்டாமவள்: “இந்திரனின் உயர்ந்த மதிலினைக் காத்த வலியோன், விண்ணில் அசைந்து கொண்டிருந்த மூன்று ஊர்களையும் அழித்த சோழ மன்னன் பாரடி, அம்மானை!”

                ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்

               தூங்கு எயில் மூன்றெறிந்த சோழன்காண் அம்மானை!

    மூன்றாமவள் முத்தாய்ப்பாகக் கூறுகிறாள்: “அவ்வாறாயின், நாம் அந்தச் சோழனின் புகார் நகரத்தின் பெருமையைப் பாடுவோம் அம்மானை!”

                சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை!

               (வாழ்த்துக்காதை- வஞ்சிக் காண்டம்-16)

    இவர்கள் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியனையும், மனுநீதிச் சோழனையும், சிபிச் சக்கரவர்த்தியையும், கரிகால் சோழனையும்,  வடவரை மேல் வேங்கைக் கொடியினைப் பொறித்த  சோழ மன்னனையும் பாடி, இவ்வாறெல்லாம் மங்கையர் அம்மானையைக் கையிலெடுத்துப் பாடுவதும் ஆடுவதும், அந்த ஆத்திமாலை சூடிய வேந்தனைத் தழுவிக் கூடிக் கொள்ளத்தான் எனக் கூறி மகிழ்கின்றனர்.

    இது தமிழ் மன்னர் புகழ் கூறும் அம்மானை!

    அம்மானை ஆடுவதுடன் அதற்கியைய இறைவன் பெருமையைப் பாடுவதையும் விரும்புகின்றனர் மாணிக்கவாசகர் காலத்துப் பெண்டிர்! தத்துவப் பொருள் செறிந்த இப்பாடல்கள், இறையனுபவத்தை உணர்ந்து விளக்கிக் களிக்கும் தொண்டர் கூற்றாக அமைகின்றன. இருபது இனிமையான பாடல்கள் உள்ளன- மூவர் அம்மானை எனக் கருத இயலவில்லை; மூன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் விளையாட இடமுண்டு எனப் பாடல்களைப் பயின்றாலே புரிந்து விடும். அம்மானை விளையாடும் பெண்களில் ஒவ்வொருத்தியும், ‘இவ்வாறு எனக்கு ஈசன் அருள் புரிந்தான்,’ எனக் கூறி அம்மானையை வீசி ஆடுகின்றாளாம். பக்தி ரசம் கசிந்துருகும் அமுதப் பாடல்கள்.

    அம்மானையாடும்போது காய்களை மேலே வீசி எறிந்து, ஒரு கையால் விரைந்து பிடித்து ஆட வேண்டும்; அப்பொழுது கையில் அணிந்துள்ள அழகிய வளையல்கள் ‘கல கல’ என ஒலி செய்கின்றனவாம்; பெண்களின் கண்களும் அம்மானை போகும் போக்கில் சென்று நோக்க வேண்டும் அல்லவோ? அப்போது தலையை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாய் இருப்பதால் காதில் அணிந்துள்ள மகரக் குழைகள் தாமும் சேர்ந்தாடுகின்றனவாம். இத்தனை வேகத்தில் தலை அசைவதால் மையை ஒத்த கருங்குழல் அவிழ்ந்து தோளிலும் கழுத்திலும் புரளுகின்றதாம்; கூந்தலில் சூடிய மலர்களில் இருந்து தேன் வழிந்து ஓடுகின்றது; அதனை உண்ண வரும் வண்டுகள் ரீங்காரமிட்டு ஒலிக்கின்றன.

                ‘கையார் வளைசிலம்பக் காதார் குழையாட

                மையார் குழல்புரளத் தேன்பாய வண்டொலிப்ப’

    இவ்வாறெல்லாம் ஆகும்படி தன்னை மறந்து இவள் யாரைப் பாடி ஆடுகிறாள்? எதனில் ஆழ்ந்து தன் நிலை மறந்தாள்?

    சிவந்த நிறத்து அண்ணல் அவன்- செய்யான்! வெண்மையான திருநீறு அணிந்தவன்; எல்லாத் தேவர்களும் அவனை வந்து கைகுவித்து (சேர்த்து) வணங்க, அவன் மட்டும் கைகளைக் குவிக்காமல் விரித்து, அபய வரத முத்திரை காட்டி அவர்களை அரவணைக்கிறான். ஆகவே சேர்ந்தறியாக் கையான்! எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன்; அன்பர்கட்கு மெய்ப்பொருளாய் இருப்பவன்; அவன்பால் அன்பு கொள்ளாதவர்களுக்கு இருந்தும் இல்லாதவனாக இருக்கும் அறிவுப் பொருளை அவள் பாடுகிறாள்; மெய்மறக்கிறாள். ஆடுகிறாள்; தன் நிலையையும் மறந்தாள். அவன் தாளில் தலைப்பட்டாள்!

                ‘செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக்

                கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு

                மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை’

    அவன் யார்? எங்கு உள்ளான்? அவன் திரு ஐயாறு எனும் தலத்தில் எழுந்தருளி உள்ள பெருமான்; நாம் அவனைப் பாடி அம்மானை ஆடுதும்; அவனைப் பாடி ஆடுவோம் காணாய் பெண்ணே!

                ‘ஐயாறு அமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய்!‘ (திரு அம்மானை-13)

    இறைவனிடத்தில் உள்ளம் சென்று விட்டதால் தன் நிலை, சுற்றுப்புறம் எல்லாம் மறந்து விடும் நிலையை அம்மானை ஆடும் பெண்ணின் கூற்றின் மூலம் நயம்பட உரைக்கிறார் மணிவாசகப் பெருந்தகை!

    இது நம்மை இறைவனோடு இணைக்கும் அம்மானை!

                _______________________________

    பிள்ளைத் தமிழின் அம்மானைப் பருவப் பாடல்களைக் காணலாம்.

    முதலாக, அம்மானை விளையாட்டைப் பெண்குழந்தை விளையாடுவதனை ஒரு பருவமாக்கிப் பாடியது எதனால் எனச் சிந்திக்கலாம். எவ்வாறு இது விளையாடப்படுகிறது என மேலே கண்டோம். ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில் இவ்விளையாட்டுகள் அதன் உடலையும் உள்ளத்தையும் வலுப்படுத்தி, பொறிகளை ஒருமுகப்படுத்தச் செய்விக்கின்றன. ஆகவே அம்மானை, கழங்கு, பந்தாடுதல் ஆகிய விளையாட்டுகள் சிறுமியரின் வளர்ச்சிக்கு இன்றியமையாதனவாகும்.

    பிள்ளைத்தமிழ் எனும் சிற்றிலக்கியத்தில் இவை வகிக்கும் பங்கு இன்னும் அதிகப்படியான ஒரு பரிமாணம் கொண்டதாகும். அன்னை தெய்வமான பராசக்தி மீதே வெகுவான பெண்பாற் பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடப்பட்டுள்ளன. அவளோ அகிலாண்ட கோடியீன்று அன்னையாகிப் பின்னும் கன்னியென மறைபேசும் ஆனந்தரூப மயிலாவாள். அவளுடைய பெருமைகளை எல்லாம் பகர்ந்திட இது இன்னுமொரு பரிசாகும். அவற்றில் சிலவற்றைக் காணலாம்.

    அரசிளங்குமரி தடாதகை, தோழியருடன் அரண்மனை நந்தவனத்தில் அம்மானை ஆடிக்கொண்டிருக்கிறாள். விறுவிறுப்பாக உடனாடும் தோழியர் அவள் கையால் பிடித்து ஆடுகின்ற  முத்தம்மானையைப் பற்றிப் பிடித்துத் திரும்ப வீசி இடமும் வலமுமாக அலைந்து நிமிர்வதற்குள் மீனாட்சியோ ஓராயிரம் அம்மானைகளை எடுத்து வீசுகிறாள். அவை வரிசைப்பட வானில் அணிவகுத்து நிற்கின்றனவாம். இதனை நாம் ‘காட்சி உறைந்துள்ளது’ (Frozen picture) எனக் கூறுவோம் அல்லவா? அதுபோன்று அவை நிற்பது எவ்வாறு உள்ளதெனக் குமரகுருபரனார் கற்பனை செய்கின்றார்: ‘அன்னையே! நீ பெற்றெடுத்த எல்லா அண்டங்களையும் எடுத்து வரிசையாக வானில் நிறுத்திவைத்து உலகத்தோருக்குக் காண்பிப்பது போல உள்ளது,’ என்கிறார். மேலும் மீனாட்சி ‘விறுவிறு’வென்று அம்மானை ஆடியபோழ்தில் நந்தவனத்து மலர்களில் மதுவுண்ணும் வண்டுகள் அலைபட்டு ஆர்த்து எழுகின்றன; அவ்வமயம்  பசிய மகரந்தப் பொடியானது பெரும் தூசியாகப் பரந்து உலகை இருளடையச் செய்கின்றது. அதனைக் கண்டு அமராவதியில் வாழும் தேவர்களும் அளகாபுரியில் வாழும் கின்னரர்களும் அம்மையின் சேனை திரும்பவும் ஒரு போருக்குப் புறப்பட்டு விட்டதோ என்று கலக்கம் கொள்கின்றனராம். இவ்வாறு அவர்களைக் கலக்கம் கொள்ளச் செய்யும் மதுராபுரித் தலைவியே! அம்மானை ஆடியருளுக! என வேண்டுபவர் அருமையான ஒரு கருத்தை அனாயாசமாகக் கூறிப் பாடலை நிறைவும் செய்துள்ளார்.

    மனமொத்த தம்பதியரை ‘ஈருடல் ஓருயிர்’ என்பார்கள். இங்கு அம்மை ஒருத்தியே ‘ஓருடல், ஓருயிர்’ ஆகிய புகழ் பெற்றவள். அத்தனின் உடலிலும் சரிபாதியை அவள் பெற்றதனால் அவளை ‘ஆகம் கலந்து ஒருவர் பாகம் பகிர்ந்த பெண்’ என்று சித்தரிக்கிறார் குமரகுருபரனார்.

                   தமரான நின்துணைச் சேடியரில் ஒருசிலர்

                                 தடக்கையின் எடுத்தாடுநின்

                  தரளஅம்மனைபிடித்து எதிர்வீசிவீசி இட

                                 சாரிவல சாரிதிரியா

              நிமிராமுன் அம்மனையொர்ஆயிரம் எடுத்தெறிய

                                 நிரைநிரைய வாய்க்ககனமேல்

                  நிற்கின்றது அம்மைநீ பெற்ற அகிலாண்டமும்

                                 நிரைத்துவைத் ததுகடுப்ப

              இமிரா வரிச்சுரும்பு ஆர்த்தெழப்பொழிலூடு

                                 எழுந்தபைந் தாதுலகெலாம்

                  இருள்செயச் செய்துநின்சேனாபராக மெனும்

                                 ஏக்கமள காபுரிக்கும்

              அமரா வதிக்கும்செய் மதுராபுரித்தலைவி

                                 அம்மானை ஆடியருளே

                  ஆகம் கலந்தொருவர் பாகம்பகிர்ந்தபெண்

                                 அம்மானை ஆடியருளே!

    முத்து, பவளம், மாணிக்கக் கற்களால் செய்த அம்மானைகளைக் கொண்டு அம்மை விளையாடுவது எப்படிப்பட்ட திருக்காட்சியாக உள்ளது! முத்தால் செய்த அம்மானையானது அம்மையின் தாமரை மலர் போன்ற கையில் பிடிக்கப்பட்டதால், அம்மலர்க்கையின் இனிய நறுமணத்தைக் கொண்டுள்ளது. செறிந்த கூந்தலில் சூடியுள்ள மலர்களை நாடும் வண்டுகள், அவளுடைய மைதீட்டப் பெற்ற கண்களாகிய வண்டுகளுடன் கூடி முயங்கி மயங்குகின்றன. தடாதகைப் பிராட்டி அம்மானையை மேல் வீசி எறிந்து பிடித்து ஆடும்போது மலர்களின் நறுமணம் கமழும் அவளுடைய கூந்தலில் அமர்ந்துள்ள வண்டுகளும் உடன் எழும்பிச் சென்று அந்த அம்மானையின் மேல் கருத்தாகச் சென்று மீளும் அவளுடைய விழிகளாகிய கருவண்டுகளுடன் கூடி முயங்கி மயங்குகின்றனவாம்!

    கொத்தான மாணிக்கத் திரளினால் செய்யப்பட்ட அம்மானையானது குயிலினது குரல் போன்றதும், குழலின் இனிய இசை போன்றதுமான அவளது குரலினிமைக்கு உருகி, குளிர்ச்சி பொருந்திய சிறிய துளிகளைச் சிந்துகின்றன.

    அம்மானையாடும் பெண்மக்கள், பாடலையும் பாடியவண்ணம் ஆடுவர் என்பதனைக் கண்டோம் அல்லவா? மீனாட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல; தனது குயிலைப் பழிக்கும் குரலில் பாடியபடி அம்மானையாடுகிறாள். அக்குரலின் இனிமைக்குருகி மாணிக்கத்தாலாகிய அந்த அம்மானைக் காய்கள் குளிர்ச்சி பொருந்திய பனித்துளிகளைச் சிந்துகின்றனவாம்.

                முத்தம் அழுத்திய அம்மனை கைம்மலர்

                                 முளரி மணங்கமழ

                       மொய்குழல் வண்டுநின் மைவிழி வண்டின்

                                 முயங்கி மயங்கியிடக்

              கொத்து மணித்திரளிற் செயும் அம்மனை

                                 குயிலின் மிழற்றியநின்

                       குழலினிசைக் குருகிப் பனி தூங்கு

                                 குறுந்துளி சிந்தியிட……..

    பவளத்தாற் செய்யப்பட்ட அம்மானைகளோ, அவள் கையிலெடுத்து ஆடுவதால், அவளுடைய விரல்களாகிய பவளத் தளிரில் உருவாகின்ற சிறந்த செந்நிற ஒளியைக் கவர்ந்து வரப் போவதும் வருவதுமாகத் திரிகின்றனவாம்.

                வித்துரு மத்தில் இழைத்தவி நின்கை

                                 விரற்பவ ளத்தளிரின்

                       விளைதரும் ஒள்ளொளி திருடப் போவதும்

                                 மீள்வது மாய்த்திரிய….

    அன்னையின் அம்மானையாடலை மனக்கண்ணில் கண்டு இன்புற்றதனால் எழுந்த அரிய கருத்துகள் செறிந்த பாடல்கள் இவை எனலாம்.

                  ___________________________________________________________

    பார்வை நூல்கள்: 

    1. திருப்பேரூர்க் கலம்பகம்-  கவியரசு கு. நடேச கவுண்டர்
    2. சிலப்பதிகாரம்- இளங்கோவடிகள்
    3. திருவம்மானை- மாணிக்கவாசகர்
    4. மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 7.2

    – மீனாட்சி பாலகணேஷ்  

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 7.2

                                       (7. அம்புலிப் பருவம்)

    இத்துணை கூறியும் எதற்கும் அசைந்து கொடாத சந்திரனிடம் சலிப்போடு,”பார் அம்புலியே! இவன், என் குழந்தையாகிய இச்சிறுவன், கையில் சங்கு சக்கரம் ஏந்தியவன். அவனுக்கு உறக்கம் வருகின்றது. கொட்டாவி விடுகின்றதைக் கண்டாயா? இவன் உறங்காவிடில் இவனருந்திய தாய்ப்பால் செரிக்காது. ஆகவே நீ விரைந்தோடி வா!” எனக் கூறுகிறாள் தாய்.

    ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இதற்கு அருமையான விளக்கம் தருகிறார்; ‘கையில் கதை, சங்கு, சக்கரம், வில் ஆகியவற்றுடன் இருக்கும் இந்த அழகனை வந்து தரிசித்து வணங்கிப் போ! இவற்றின் பராக்கிரமத்திற்கு இலக்காகி முடிந்து போகாதே!’ எனச் சந்திரனை மறைமுகமாக எச்சரிக்கிறாளாம் தாய்!

    இதனை பேத உபாயம் என எண்ண இடமுள்ளது. மனத்தில் வேறுபாட்டை (பேதத்தை, கலக்கத்தை) உண்டுபண்ணி, பணியச் செய்தல்.

                தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்

              கண்துயில் கொள்ளக்கருதிக் கொட்டாவி கொள்கின்றான்

              உண்ட முலைப்பா லறாகண்டாய் உறங்காவிடில்

              விண்தனில் மன்னிய மாமதீ விரைந் தோடிவா.

                                                                (பெரியாழ்வார் திருமொழி – 5)

    இளவரசி மீனாட்சியின் தாயும் சேடியரும் அவளுடன் விளையாட வராத நிலவினை, “நீ என்ன இழிசெயல்களையெல்லாம் செய்துள்ளாய், பாண்டியர் குலக் கொழுந்தாகிய மீனாட்சி இவளைக் கண்டு, மகிழ்ந்து வாழாமல், உணவையும் உடையையும் இழந்து, சிறுமிகள், எளிய மண்பாத்திரத்தில் சமைக்கும் கூழாகிய புதுமையான உணவினை இரந்து உண்டு களங்கம் உண்டாக்கினாய். இதுவும் போதாமல், உன்னுடன் ஒளி நிறைந்த வான்வெளியில் திகழும் உனக்கு ஒப்பானவனான சூரியன் எனும் ஒருவன் தன் கைகளால் வாரியுண்ட மிச்சிலை, மிச்சத்தை, யாரும் காணாமல் நள்ளிரவில் வாரியுண்டு அவன்பின் ஓடுகிறாய், என்ன இழிவு இது!” எனக் கூறிப் பழிக்கின்றனர். தங்கள் செல்வியுடன் வந்து விளையாடாமல் இவ்வாறெல்லாம் இழிசெயல்கள் செய்யும் சந்திரனிடம் அவர்களுக்குச் சினம் ஏற்படுகின்றது.

                ………………………………. வாழாமல் உண்ணமுது

                                 கலையொடும் இழந்து வெறுமட்

              கலத்திடு புதுக்கூ ழினுக்கிரவுபூண்டொரு

                                 களங்கம்வைத் தாயி துவலால்

              ஒளி தூங்கு தெளிவிசும்பினினின்னொ டொத்தவன்

                                 ஒருத்தன் கரத்தின் வாரி

              உண்டொதுக் கியமிச்சில்நள்ளிருளில் அள்ளியுண்

                                 டோடுகின் றாயென் செய்தாய்….

    தாயின் அன்பு மற்ற எந்த சமாதானத்தையும் ஏற்பதில்லை;  தன் குழந்தையே முதன்மை. அனைவரும் அவளுக்குப் பணிசெய்தல் வேண்டும் எனும் எண்ணமே மேலோங்கி நிற்கின்றது. தற்காலத்தும் சில தாய்மார்கள், “வந்து என் குழந்தையுடன் சிறிது நேரம் விளையாடினால் நீ குறைந்தா போய்விடுவாய்?” என மற்ற சிறுவர்களைக் கேட்பதனைக் கண்டுள்ளோம் அல்லவா? அதுபோன்றதே இதுவுமாகும்.

    பேரூர் பச்சைநாயகியம்மையின் தோழியரும் செவிலித் தாயரும் அம்புலியிடம், “நீ இவளுக்கு சமமானவள் எனக் கருதி இவள் உன்னை விளையாட அழைக்கிறாள்; ஆயினும் உங்கள் இருவருக்கும் பல வேற்றுமைகள் உண்டு: நீ மாதம் ஒருநாள் மட்டுமே முழுமையான உருவை உடையவன்; இவளோ பரிபூரணனான சிவபிரான் தனது நெஞ்சில் இடையறாது எண்ணிக்கொண்டிருக்கும் நிறைந்த பெருமை பொருந்தியவள்.”

                மாதம் ஒருநாள் புரணம் ஆதல் உற, மிக்க பிர

                       மாதம் உளை நீ; இவள் அருள்

                       மன்னு பரிபூரணன் உள் உன்னும் விரிகாரண மெய்

                       மாட்சி நிறை காட்சி உடையாள்;

    குற்றம் பொருந்திய உனது அமுத கிரணங்களை, காம மிகுதியால் பெண்களின் குற்றேவல் புரியும் மாந்தர்களே விரும்புவார்கள். ஆனால் இவளுடைய கண்களின் அருட்கிரணங்களான நோக்கம் பட்டவர்கள் (அடியார்கள்) மிகுந்த உயர்வான வீடாகிய வீடுபேற்றினை அடையவல்லோராவர்.

                        கோதமையும் உனது சுதை கொண்டவர்கள் ஒண்தொடியர்

                       குற்றேவலாளர்; இவள்கண்

                       கொண்டபேர் தம்கண் எதிர்கண்ட பேர்க்கு உயர்வீடு

                       கொள்ளைகொள நல்கவல்லோர்;

    குளிர்ச்சி பொருந்திய உடற்பகுதிகளை ஆதவனிடமிருந்து மாதத்தில் அமாவாசை எனப்படும் ஒரு நாளில் ஏற்கமுடியாத சிறுமை படைத்தவன் நீ; இவளோ தனது பெருமை வாய்ந்த காதணியால் ஒரே நாளில் கோடி நிலவுகளை உண்டு பண்ணிவிடும் திறன் வாய்ந்தவள்: (ஈண்டு அபிராமி பட்டருக்கு அன்னை தன் காதணியை வானிலெறிந்து அமாவாசையன்று முழுநிலவைக் காட்டிய கதை கூறப்பட்டுள்ளது).

                        சீதள இயல்கலைகள் ஆதவனிடத்து ஒரு

                       தினத்து அதிகம் ஏற்கமுடியாச்

                       சிறியை நீ; தாயிவள் தன் நறிய காதணிகோடி

                       திங்கள் ஓர்தினத்து ஆக்குமால்..

    “ஆயினும் இவள் தன்னுடைய கருணையால் உன்னைத் தனக்குச் சமமானவனாகப் பாவித்து விளையாட அழைக்கிறாள்: வந்துவிடுவாய்,” எனக் கூவி அழைக்கின்றனராம்.

    இவ்வாறு உங்கள் இருவருக்குள்ளும் பேதங்கள், வேற்றுமைகள் இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாது குழந்தை விளையாட அழைக்கிறாள் எனும் நயம் மிகவும் இரசிக்கத்தக்கதாம். இதனைப் பேத உபாயம் என்பர்.

                                                                *********

    சேடியரும் செவிலியரும் இவ்வாறெல்லாம் வேண்டியும் வராத சந்திரனைக் கடைசியாகப் பயமுறுத்தியாவது வரவழைக்க முயல்கின்றனர்.

    “சிங்கக்குட்டியான எனது இந்தக் குழந்தையை இவன் சிறுவன், என எண்ணி விடாதே அப்பா! சிறுவன் என்பதற்குப் பொருள் மகாபலியிடம் (மாவலி) சென்று கேட்டுணர்ந்து கொள்வாயாக! சிறு வாமனனாக, மாணிக்குறளனாக வந்து மூவுலகையும் ஈரடியால் அளந்து கொண்டான் தெரியுமா? நிறைமதியே! இவன் உன்னை விரைவாக வருமாறு அழைக்கிறான். உன் பிழையை- இவன் சிறியவன் என நீ எண்ணுவதை- உணர்ந்தால் நீ வந்து இவனுக்குத் தொண்டு செய்யும் உரிமையைப் பெறலாம் அல்லவோ?” என அறிவுரை கூறுகிறாளாம் தாய். இதனையும் பேதம் அல்லது தண்ட உபாயம் எனக் கருதலாம்.

               சிறியனென் றுஎன்னிளஞ் சிங்கத்தை இகழேல்கண்டாய்

              சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள்

              சிறுமைப் பிழைகொள்ளில் நீயும்உன் தேவைக்குரியைகாண்

              நிறைம தீநெடு மால்விரைந்து உன்னைக் கூவுகின்றான்.

                                                                            (பெரியாழ்வர் திருமொழி-5)

    சந்திரன் எதற்குமே மசியவில்லை! தாய்க்குச் சினம் கட்டுமீறுகின்றது! கூறுவாள்: “தனது பெரிய கைகளால் வெண்ணெய்த் தாழியிலிருந்து வாரி வாரி அமுது செய்ததனால் பெருவயிறு உடைய எங்கள் கண்ணன் உன்னை அழைக்கிறான் பார்! நீ வரவில்லையானால் உன்கதி அதோகதி தான்! சக்கராயுதத்தினால் உன் தலையைச் சீவி விடுவான் என்பதில் எனக்கு ஐயமேயில்லை. உயிர் மீது உனக்கு ஆசையுண்டானால், மகிழ்ந்தோடி எம் ஐயனோடு விளையாட வா,” என அச்சம் காட்டி அழைக்கிறாள். இது தண்ட உபாயம்!

                தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கி

              பேழை வயிற்றெம் பிரான்கண்டாய்உன்னைக் கூவுகின்றான்

              ஆழிகொண் டுஉன்னையெறியும் ஐயுற வில்லைகாண்

              வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா.

                                                                (பெரியாழ்வர் திருமொழி – 5)

    அம்புலிமாமா அசைந்து கொடுத்ததோ இல்லையோ அருமையான இலக்கிய நயம் பொங்கும் ஆழ்வார் பாசுரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. பொருளுணர்ந்து படித்து மகிழலாமே!

    தண்டனை கொடுப்போம் என்றுகூறி அம்புலியை மிரட்டுகிறார்கள் பெண்கள்!

    ஒருத்தி சொல்கிறாள்: “ஏ அம்புலியே! தான் கூப்பிட்ட உடனே நீ ஏன் வரவில்லை என்று மீனாட்சி அம்மை எங்களைக் கேட்டாள். அவள் உன் மேல் மிகுந்த கோபம் கொண்டிருந்தாள். நாங்கள் என்ன சொன்னோம் தெரியுமா? ‘அம்மா, உன் ஒளி பொருந்திய முக அழகின் முன் தோற்று ஒதுங்கியதால் அவன்  உன் எதிரில் வர நாணம் கொண்டான் போலுள்ளது; அல்லது சிவபிரானின் முடியிலுள்ள பாம்புகள் அவன் பின் வந்து துன்பம் விளைவிக்கும் என அஞ்சியே வராமல் காலம் தாழ்த்துகிறான் போலும்,’ எனவெல்லாம் ஒருவாறாகச் சொன்னோம். நாங்கள் தான் உன்னை அவளுடைய சினத்துக்கு ஆளாகாமல் இவ்வாறு காத்தோம். அவள் சினம் கொண்டால் நீ பிழைக்க இனி ஒருவழியும் இல்லை! செல்ல வேறு இடமும் இல்லை என்று தெரிந்து கொள்!

                       ‘மழைக் கொந்தளக்கோதை வம்மினென்றளவில் நீ

                                 வந்திலை எனக் கடுகலும்…………

                       …………………………..யாம்

                       இத்துணையும் ஒருவாறு தப்புவித்தோம் வெகுளில்

                                 இனியொரு பிழைப்பில்லை காண்…’ என்று சொல்லி, “எங்கள் அம்மையைக் காண இது நல்ல சமயம்,” என இந்த நகரின் பெருமதில்களே உன்னை உரக்கக் கூவி அழைக்கின்றன பார்! மரியாதையாக எங்கள் மதுரைக்கரசியுடன் விளையாட வந்து விடு; உன் நன்மைக்காகத் தான் இதைச் சொன்னேன்!” என்று எச்சரிக்கிறாள்.

    “ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்களையும் செய்து நடனமாடும் சிவபிரானால் தெய்வ நதியாகிய கங்கையுடன் அவர் முடியில் வைத்துக்கொள்ளப்பட்டாய். எதனால் தெரியுமா? வேதத்தின் முடியில் அரசு செலுத்தும் இவளுடைய சிறந்த அடிகள் உன் இதய பீடத்திலும் பொலிந்து திகழ வேண்டும் என்று அவர் பெரிய மனது பண்ணி இவ்வாறு செய்திருக்கிறார். உனக்கு இதை விடப் பெரிய பேறு எக்காலத்திலும் கிடைக்கப் போவதில்லை,” என்கிறாள் செவிலித்தாய் வாருணி.

                ‘ஏடகத் தெழுதாத வேதச் சிரத்தர

                       சிருக்குமிவள் சீறடிகள்நின்

                  இதயத் தடத்தும் பொலிந்தவா திருவுளத்து

                       எண்ணியன்றே கபடமா

              நாடகத் தைந்தொழில் நடிக்கும் பிரான்தெய்வ

                       நதியொடு முடித்தல் பெற்றாய்;

                  நங்கையிவள் திருவுள மகிழ்ச்சி பெறில் இது போலொர்

                                 நற்றவப் பேறில்லை காண்’

    “இவள் அரசாளும் மதுரையின் பெருமைகளை, அம்புலியே நீ அறிவாயோ? அங்கே நிலாமுற்றத்தில் பார்! அழகிய பெண்கள் மகரயாழில் இசையை எழுப்புகின்றனர். இந்த இன்னிசையின் நயத்திற்குப் பரிசு அளித்துப் பொன்னாடை போர்த்துவது போலக் குங்கும மரங்கள் மலர்களை அளித்து உதிர்க்கின்றன. செழித்த கோங்கமரங்கள் அசைகின்ற ஆடகப் பொற்கிழி போன்ற மலர்களை வழங்கி இசையைச் சிறப்பிக்கின்றன. இத்தகைய இசைவளம் பொருந்திய மதுரையின் அரசியாகிய இத்திருமகளுடன் விளையாட அம்புலியே, நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும். இனி உனக்கு என்னதான் சொல்ல முடியும்? எங்கள் மதுரைத் திருமகளுடன் விளையாட விரைந்து வா,” என்கிறாள் செவிலித்தாய்.

    முத்தமிழ் வளர்த்த மதுரையில் இசைக்கு வழங்கப்படும் சிறப்பைப் பாடலின் இப்பகுதியில் அருமையாக விளக்கியுள்ளார் குமரகுருபர அடிகளார்.

                    ‘மகரயாழ் மழலைக்கு மரவங்கள் நுண்துகில்

                       வழங்கக் கொழும் கோங்குதூங்கு

              ஆடகப் பொற்கிழி அவிழ்க்கும் மதுரைத்திருவொடு

                       அம்புலீ ஆடவாவே’

    இவ்வாறெல்லாம் கூப்பிட்ட பின்னும் அம்புலி வாராதிருந்தால் இழப்பு அம்புலிக்குத் தான்- குழந்தை மீனாட்சியோடு களித்தாடும் வாய்ப்பு எல்லாருக்கும் எளிதில் அமைந்து விடுமா? முன்னைத் தவப்பயனல்லவா அது? நமக்குப் புரிகிறது; அம்புலிக்கும் புரிந்தால் சரி!!

    மதிக்கு மதி (புத்தி) கெட்டு விட்டதோ என வினவி, மதி எனும் சொல்லைப் பன்முறை கையாண்டு சொல்பின்வருநிலையணியாக அமைத்துப் புலவனார் நடேச கவுண்டர் இயற்றிய எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்ப் பாடல் ஒன்று. சந்த நயமும் அணிநயமும் பொருள் நயமும் பொங்கி வழியும் இனிய தமிழின் இணையற்ற ஒரு செய்யுள். வாய்விட்டுப் படித்தால் தமிழின் இனிமையில் நாவெல்லாம் தித்திக்கின்றது!

    ‘யாரையும் நான் மதியேன்’ எனச் செருக்குடையவனாக நீ எண்ணிக் கொண்டிருந்தால் உன்னுடைய அந்தச் சிறுமை வாய்ந்த மதியினை நாங்கள் என்னவென்று கூறுவது? நிலை பெற்ற பெரியாரை (முருகனை) மதிக்காதவனை உலகில் எவரும் மதிக்க மாட்டார்கள்.

    ‘மதியும் (சந்திரனாகிய நீயும்), ஆதவனும் (சூரியனும்), சிவனைத் தன் தீமதியால் மதிக்காது அவமதித்த தக்கனுடைய வேள்வியில் தமது அறிவு பிறழுமாறு உடல் தேய்வுற்றனர். சந்திரன் வீரபத்திரரது திருவடியால் தேய்க்கப்பட்டான்; சூரியன் கண்ணும் பல்லும் (அலர்விழி, வாள் நகை) இழந்தான்.

    ‘கடலைக் கடைந்தெடுத்த கொடிய விடத்தினை அருந்தியவனும் பிறையணிந்த சடையினை உடையவனுமாகிய இறைவன் பெரிதும் மதிக்கும்  அறிவாளி இம்முருகனாவான் (தந்தைக்கு உபதேசம் செய்த குருநாதன் இவன்). இவனை நீ மதிக்கவில்லையெனில், அதன் காரணமாக இவன் சினமுற்றால் உனது பெருவாழ்வு குலைந்து நாசமாகி விடும்.

    ‘நீ நன்மதி / நல்ல அறிவு உடையவன் எனில் இந்த முருகையனோடு ஆடுவதற்கு வா வா அம்புலியே! வளரும் எட்டிக்குடி முருகனோடு விளையாடிட வா வா அம்புலியே!’ என அச்சுறுத்தி அழைக்கின்றனராம்!

                மதியே மென்று நினைத்தனை யேலுன் மதியினை என்சொல்கேம்

                       மன்னும் பெரியரை மதியா தவனை மதிப்பவ ராருலகில்

              மதியா தவர்மதி யாதவன் வேள்வி மதித்துறு தீமதியால்

                       மதிமாழ் குறவுடல் தேய்வுற் றலர்விழி வாணகை போயினராலி

              மதிதீ விடநுகர் மதிசேர் சடையிறை வன்மதி மதியனிவன்

                       மதியில் சினமுறின் மதியே உன்பெரு வாழ்வு குலைந்திடுமே

              மதியா யெனின்முரு கையனோ டாடிட வாவா அம்புலியே

                       வளரெட் டிக்குடிமுருக னொடாடிட வாவா அம்புலியே.

    வான்மதியின் பதினாறு கலைகளையும் அறிவிப்பதே போன்று மதி எனும் சொல் இப்பாடலில் பதினாறு முறை வருவது மெய்சிலிர்க்க வைக்கின்றது.

    இத்தகைய நயங்கள் கொண்ட பிள்ளைத்தமிழ் நூல்களைப் படிக்கப் படிக்க, அவை தெவிட்டாத தமிழின்பம் தருவன என உணரலாம்.

    (தொடரும்)

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 7.1

    -மீனாட்சி பாலகணேஷ்

     (7. அம்புலிப்பருவம்)

     “என் மகன் தன் முகத்து நெற்றிச் சுட்டி அசைய, கிண்கிணிச் சதங்கைகள் ஒலிக்கத் தவழ்ந்து போய்ப் புழுதியை அளைந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். உனக்குக் கண்கள் இருந்தால் இங்கு வந்து என்மகன் கோவிந்தன் செய்யும் இக்கூத்தினைக் கண்டு செல்வாயாக,” எனப் பெருமையும் பொய்யாக, வரவழைத்துக் கொண்ட சலிப்புமாகத் தாய் கூறுவதாகப் பாடியுள்ளார் பெரியாழ்வார்.

    தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்ப்
    பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான்
    என்மகன் கோவிந்தன் கூத்தி னைஇள மாமதீ
    நின்முகம் கண்ணுள வாகில் நீஇங்கே நோக்கிப்போ.

    (பெரியாழ்வார் திருவாய்மொழி-5)

    தனது கண்ணின் கருமணியாகிய சிறுகுழந்தையை உறங்கவைக்கப் பாடுவாள் தாய்; அவன் உணவுண்ணவும் அவனுடன் விளையாடவும் அவனுக்குத் தகுந்த நண்பர்களைத் தேடுவாள். வானில் உலவும் முழுமதி குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான ஒரு உறவு- சிறு குழந்தைகளால் அம்புலிமாமா என அவன் அறியப்படுபவன்.

    குழந்தை கிருஷ்ணனும் அதற்கு விதிவிலக்கல்லவே? சந்திரனைத் தன் சிறு குட்டனுடன் விளையாட அழைக்கிறாள் அன்னை யசோதை (பெரியாழ்வார் கூற்றாக). மேலும் அவனுடைய குறும்புகளையெல்லாம் தன்னுடன் வந்து, சேர்ந்து ரசித்து மகிழவும் நிலாவைக் கூப்பிடுகிறாள்.

    அம்புலிமாமாவும் சளைத்தவனில்லை. தனக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அவனுக்கு மமதையை உண்டாக்கி விடுகிறது போலுள்ளது! விரைவில் வருவதில்லை. அவ்வண்ணமே அசையாது வானில் நிற்கிறான். அப்போது தாயுடன் சேடியரும் சேர்ந்து, சாம, தான, பேத, தண்ட உபாயங்களைப் பயன்படுத்தி சந்திரனைக் ‘குழந்தையுடன் விளையாடவா’வென அழைக்கின்றனர்.

    பிற்காலத்தில் எழுந்த அனைத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களிலும் ஏழாம் பருவமாக வைக்கப்பட்டுள்ள அம்புலிப்பருவத்தில் இத்தகைய உபாயங்களால் அம்புலியை அழைப்பது அழகுறப் பாடப்பட்டுள்ளது. குழந்தை கிருஷ்ணனின் குறும்புகளை விவரிக்கும் பெரியாழ்வாரின் பல பாசுரங்கள் பிற்காலத்துப் பிள்ளைத்தமிழ் எனும் சிற்றிலக்கியவகைக்கு வித்திட்டவை.

    சாம, தான, பேத, தண்ட உபாயங்களைப் பயன்படுத்திப் பாட வேண்டும் எனும் இலக்கண விதியின்படி அம்புலிப்பருவம் பாடுவதற்கு மிகவும் அரிதானது எனப்படும். ‘காசினியில் பிள்ளைக் கவிக்கு அம்புலி புலியாம்,’ எனும் சொற்றொடரே இதனாற்றான் எழுந்ததெனலாம்.

    குழந்தையின் வளர்ச்சியில் இது ஒரு முக்கியமான பருவம். தன்னைச் சுற்றியுள்ள உலகம், அதில் நிகழ்பவை இவற்றினைக் கண்டும், தாய்தகப்பன், செவிலியர் இவர்கள் கூறுவதனைக் கேட்டும் தன் அறிவினை வளர்த்துக்கொண்டு, உலகைப் பற்றிய தனது கருத்துக்களை மெல்ல மெல்ல உருவாக்கிக் கொள்ளும் பருவத்தின் துவக்கம் இதுவாகும்.

    பெரியாழ்வார் பாசுரங்களிலும் சாம, தான, பேத, தண்ட உபாயங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. இவை இலக்கிய இன்பத்தை, அதன் சுவையை மேலும் இனிதாக்குகின்றன. அவற்றையும் மற்ற பிள்ளைத்தமிழ்ப் பாடல்களுடன் வரிசைக்கிரமமாகக் காணலாம்.

    மேற்காணும் பாடலில் தாய் சமாதானமாக (சாம உபாயத்தால்) நிலாவை அழைப்பதைக் காண்கிறோம்.

    சாம உபாயத்தில் குழந்தையையும் சந்திரனையும் ஒப்பிட்டுப் பல காரணங்களைக்கூறி, ‘இவனும் உனக்கு சமமானவன்; இணையான புகழ் கொண்டவன்,’ எனத் தாய் கூறுவதாகக் காணலாம்.

    தன் குழந்தை உலகிலுள்ள அனைவரிலும் உயர்வானவன் என்பது தாய்மையின் பெருமிதம். ‘போனால் போகின்றது. எவ்வாறாயினும் இந்நிலா அவனுடன் விளையாட வந்தால் போதும்,’ எனும் எண்ணத்தில் இருவரையும் சமமாக ஒப்பிட்டுப் பேசுவதாக அமைந்த பாடல்கள் சுவையானவை. வரகவி மார்க்கசகாய தேவர் இயற்றிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழின் அம்புலிப் பருவத்திலிருந்து இவ்வண்ணம் சாம உபாயத்திலமைந்த ஒரு பாடல்.

    ‘நிலவே! ஆலகால விஷமாகிய நீலநிற நஞ்சினை உண்ட சிவபிரானின் சடையில் நீ உள்ளாய்! இம்முருகனும் நஞ்சையுண்ட பெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவன். நீ சக்கரவாள கிரியைச் சுற்றிவருவாய்; இவன் பூமியைச் சுற்றி வருவான்.

    ‘நீல ஊணினர்க ணாவை நீயிவனு
    நீல ஊணினர்க ணானவன்
    நேமி யங்குவடு சூழ்வை நீயிவனு
    நேமியங்கு சூழ்பவன்’

    ‘நீ அரிய மான் வடிவினை உன் பக்கத்தில் கொண்டுள்ளாய்! (சிவனார் கையில் மானை ஏந்தியுள்ளார்). முருகனும் அரியதொரு மான்பெற்ற குறவள்ளிமானைத் தன் பக்கம் கொண்டுள்ளான். நீ இருளை ஒழிப்பாய்; இவனும் அடியார்களின் அறியாமை எனும் இருளை ஒழிப்பவன்.’

    ‘ஏல நீயரிய மானு ளாயிவனும்
    என்று மோரரிய மானுளான்
    இருளு மாசினையோ ழிப்பை நீயிவனும்
    இருளு மாசினையொழிப்பவன்’

    ‘நீ ஓலமிடும் கடலின் அலையில் எழுகின்றனை (ஓலமாமலையில் எழுவை- ஓலமாம் அலையில் எழுவை); இவனும் ஒப்பற்ற கயிலைமலையின்கண் (ஓல மாமலையின்கண்) எழுந்தருளுபவன். இவ்வாறு உனக்கு நிகரான முருகன் உன்னை விளையாட வாவென்று அழைக்கிறான். வந்துவிடு,’ எனத் தாயும் செவிலியரும் அழைக்கின்றனர்.

    ‘ஓல மாமலையி லெழுவை நீயிவனும்
    ஒப்பி லாமலையி லெழுபவன்
    உனக்கி வாறுநிக ராத லால்இவன்
    உனக்கு வாவியழை யாநின்றான்
    ஆலு மாமயிலன் ஆடுதற் கமுத
    அம்பு லீவருக வருகவே
    அமரர் பரவுகர புரியன் உளமகிழ
    அம்புலீ வருக வருகவே.’

    குமரகுருபரனாரின் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலும் சாம உபாயத்தில் அழகிய கருத்துக்களைக் கூறிச் சேடியரும் செவிலியரும் அம்புலியை அழைப்பதனைக் காணலாம்: அவள் எக்காரணங்களால் சந்திரன்பால் அன்புகொண்டு அவனைத் தன்னுடன் விளையாட அழைக்கிறாள் எனக் கூறுகின்றனர்: “கற்கண்டு போலினிக்கும் மழலைமொழி பேசுபவள் எங்கள் மீனாட்சி அம்மை. அப்படிப்பட்ட இவ்வம்மைக்கு நீயும் ஒருகலாபேதம் என்று கலைகளும் மறைகளும் முறையிடுவதனால் உன்னை விளையாட அழைக்கிறாள்; (அம்மையும் சிவபிரானைப் போன்று எட்டுத் திருவுருவங்களை உடையவள்; அவற்றுள் ஒன்று சந்திரன் ஆவான்; ஆகவே அவன் கலாபேதம் எனப்படுவான்). அம்மை வேதங்களால் கலைநிதி எனவும் போற்றப்படுபவள்; ஆகவே கலைகளும் மறைகளும் கொண்ட சந்திரன் உன்னையும் தன்னைப் போன்றவன் எனக் கருதினாள்.

    ‘கண்டுபடு குதலைப் பசுங்கிளி இவட்கொரு
    கலாபேதம் என்னநின்னைக்
    கலைமறைகள் முறையிடுவ கண்டோ அலாதொண்
    கலாநிதி எனத்தெரிந்தோ…’

    “வண்டுகள் மொய்க்கும் மாலைகளை அணிந்த தந்தையான மலயத்துவச பாண்டியனின் குலமுதல்வன் சந்திரனாகிய நீ என்பதாலோ, வளரும் சடைமுடியில் எம்பிரான் குளிர்ச்சிபொருந்திய கண்ணியாக, மாலையாகத் தரித்திருப்பதனை எண்ணியோ உன்னை அழைத்தனள் இவள்.

    ‘வண்டுபடு தெரியல் திருத்தாதையார் மரபின்
    வழிமுதல் எனக்குறித்தோ
    வளர்சடை முடிக்கெந்தை தண்ணறும் கண்ணியா
    வைத்தது கடைப்பிடித்தோ…’

    “மேலும், ஆழமான திருப்பாற்கடலில் தோன்றிய திருமகளான தோழியுடன் நீயும் பிறந்ததனை அறிந்தோ, உன்னை இவள் விரைந்துவா எனக் கூவி அழைக்கும் பேறு பெற்றாய்!

    “விரைந்து இவளுடன் விளையாட வருவாயாக,” எனக் கூறி அழைக்கும் அருமையான பாடல் இதுவாம்.

    ‘குண்டுபடு பாற்கடல் வரும்திருச் சேடியொடு
    கூடப்பிறந்த தோர்ந்தோ
    கோமாட்டி இவள்நின்னை வம்மெனக் கொம்மெனக்
    கூவிடப் பெற்றாய் ………’

    இவ்வாறெல்லாம் அம்புலியை ஒருவாறு சமாதானமாக, இதமாகக் கூறி அழைக்கும் சாம உபாயம் அன்னைமாருக்கே கைவந்த கலை போலும்! அதனைப் பாடுவது பிள்ளைத்தமிழ்ப் புலவர்களின் சிறப்பாகும்!

    *****

    ஒன்பது கோள்களுள் ஒன்றான சந்திரன் வானில் நிலைபெற்றவன்; கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவான் என அன்னையும் குழந்தையும் எண்ணிக்கொண்டால் அதற்கு அவனா ஒப்புக்கொண்டான்? ஆயினும் அன்னையும் செவிலியரும் சலிக்காமல் அடுத்த உபாயமான தானம் என்பதனைப் பயன்படுத்தி அவனை வருமாறு அழைக்கின்றனர்.

    “ஒளிபொருந்திய சந்திரனே! என் மகன் எவ்வளவு பெருமை பெற்றவன் என உனக்குத் தெரியுமா?  உயர்வு தாழ்வு எனப்பார்க்காமல் எல்லாருடனும் கூடியிருந்து மகிழ்கின்றவன்; திருமகளைத் தனது மார்பில் கொண்டவன். தனது அழகான வாயில் ஊறும் அமுதத்துடன் கூடிய மழலைச் சொல்லால் உன்னைக் கூவிக்கூவி அழைக்கிறான் பார்! இவ்வாறு  இக்குட்டன் கூப்பிடும்போது ஓடோடி வர வேண்டாமோ? உனக்கென்ன காது கேட்கவில்லையோ? நீ செவிடோ?” என்கிறாள் தாய்.

    ‘இவன் தகுதி என்ன? உனது தகுதி என்ன? தராதரம் பார்க்காமல் குழந்தை உன்னை விளையாட அழைத்தால் நீ செவிடனாக நிற்கிறாயே,’ என ஏளனம் செய்கிறாள்.

    அழகிய வாயில் அமுதவூறல் தெளிவுற
    மழலை முற்றாத இளஞ்சொல்லால் உன்னைக் கூவுகின்றான்
    குழகன் சிரீதரன் கூவக் கூவநீ போதியேல்
    புழையில வாகாதே நின்செவி புகர்மாமதீ!

    (பெரியாழ்வர் திருமொழி-5)

    குழந்தை நிலவுடன் விளையாட ஆசைப்படுகிறான்; அதுவோ வருவதாக இல்லை! தாயின் உள்ளம் குழந்தைக்கு ஏதாவது சமாதானமாகக் கூறி அவனை அமைதிப்படுத்த வேண்டும் என எண்ணுவதனால், சந்திரனை இகழ்ந்து கூறுவதன்மூலம் தனது ஆற்றாமையை ஒருவாறு போக்கிக் கொள்ள விழைகிறது. சந்திரனால் உடனே இறங்கியோடி வரவியலாது என்று தாய்க்குத் தெரியாதா?

    குழந்தையின் குழந்தை உள்ளத்திற்கேற்ப அவள் எண்ணங்களையும், விரிந்தோடும் உளவியல் சிந்தனைகளையும் அழகுறச் சித்தரிப்பவை பிள்ளைத்தமிழின் அம்புலிப்பருவப் பாடல்கள். குமரகுருபரனார் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு பாடலைக் காண்போமே!

    சந்திரனிடம் அன்னை கூறுகிறாள்: “நிலவே! நீ வானமண்டலத்திலேயே இருப்பாயாகின், உனது கொடிய பகைவர்களான பாம்புகள் (இராகு, கேது) உன்னை விழுங்கி விக்கவும், பின் கக்கவும் கூடித் துயரடைவாய். (கிரகண சமயத்தில் சந்திரன் மறைந்து பின் வெளிப்படுவதனை விழுங்கப்பட்டுப் பின்பு உமிழப்பெற்று எனக்கூறினார் புலவர்)

    “வெயிலைப் பரப்பும் ஒளிமிகுந்த சூரியமண்டலத்தில் புகுந்து இருப்பையாகின் உன்னுடைய சிறந்த ஒளி மழுங்கப்பெற்று வருந்துவாய்.”

    விண்டலம் பொலியப் பொலிந்திடுதி யேலுனது
    வெம்பணிப் பகைவிழுங்கி
    விக்கிடக் கக்கிடத்தொக்கிடர்ப் படுதிவெயில்
    விரியும் சுடர்ப்பரிதியின்
    மண்டலம்புக்கனை இருத்தியெனின் ஒள்ளொளி
    மழுங்கிட அழுங்கிடுதி…

    “ஈசனின் பொன்போன்ற சடையில் வைத்துக்கொள்ளப்படுவாயானால், அங்குள்ளபாம்பு உன்னைச் சுற்றிக்கொள்ளுமோ எனும் அச்சம் கொண்டு உறங்காமல் விழித்திருப்பாய். மேலும், வாசமிகுந்தகூந்தலை உடைய இப்பெண் மீனாட்சியின் சிறிய திருவடிகளில் அவளுடைய ஊடலைத் தணிவிக்கப் பெருமான் மணியும்போது, உன் குடல் கலங்குமாறு மிதிபடுவாய் அல்லவோ?

    ………………………………பொன்
    வளர்சடைக் காட்டெந்தைவைத்திடப் பெறுதியேல்
    மாசுணம் சுற்றஅச்சம்
    கொண்டுகண் துஞ்சா திருப்பதும்மருப்பொங்கு
    கோதையிவள் சீறடிகள்நின்
    குடர்குழம் பிடவே குமைப்பதும்பெறுதி

    “ஆகவே அனைத்து இடங்களும் உனக்குப் பாதுகாப்பற்றவை! ஆகவே எமது இளவரசியிடம் வந்து அடைக்கலம் புகுவாய். அவளை அடைந்தால் அண்டங்களையும் எல்லா உலகங்களையும் பெறுவாய்,” எனவெல்லாம் அச்சமூட்டி, ஆசை காட்டுகின்றனர்!

    …………………………………….எம்
    கோமாட்டி பாலடைந்தால்
    அண்டபகி ரண்டமும் அகண்டமும்பெறுதியால்
    அம்புலீ ஆடவாவே.

    சின்னஞ்சிறு குழந்தை நிலவினைத் தனது விளையாட்டுத்தோழனாகவே எண்ணிக் கொள்கின்றது. அவன் கீழிறங்கி வாராதபோது வருந்தி அழுகையும் அடமுமாகச் சினம் கொள்கின்றது. உணவுண்ணவும் மறுக்கின்றது.

    பணிப்பெண்கள் பல உபாயங்களை மாற்றிமாற்றிப் பயன்படுத்தி, அம்புலியைத் தங்கள் சிறுமியுடன் விளையாட வருமாறு அழைக்கின்றனர். அம்புலி அவ்வளவு எளிதாக வந்துவிடுவானா என்ன? அவனும் செருக்குற்று நிற்கிறான். ‘இவர்களழைத்து இந்தச்சிறுமியுடன் நான் விளையாடப்போக வேண்டுமோ? நான் உலகிற்கே தலைவனான சிவபிரானின் சடையில் குடியிருப்பவன், இப்பெண்கள் என்னை மிரட்டி விரட்டினால் விரட்டட்டுமே, பார்த்து விடலாம்,’ என மெத்தனமாக இருக்கிறான்!

    உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழிலிருந்து நாம் காணப்போகும் தான உபாயத்திலமைந்தவொரு பாடலென்று, அழகானதொரு தொன்மத்தை உள்ளடக்கி, நகைச்சுவை பொங்க, தோழியர் சந்திரனை அச்சுறுத்தியும் ஏளனம் செய்தும் நகைப்பதனை விவரிக்கின்றது.

    நீ கீழிறங்கி இச்சிறு பெண்ணுடன் விளையாட வந்தால் என்னென்ன பெறலாம் எனத் தான உபாயத்தில் -அழகான சொல்விளையாட்டாகப் பல கதைகளைப் பகிர்ந்துகொண்டு, அம்புலியைக் கூப்பிடுகிறாள் பாடலில் வல்ல செவிலித்தாய் ஒருத்தி! அவற்றைக் கொஞ்சம் கேட்கலாமா?

    புலி எனும் ஒரு சொல்லைப் பல பொருட்களில் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி அமைந்ததும் மிகுந்த சுவைகொண்டதுமான இப்பாடல், சோணாசல பாரதியார் என்பவரால் திருவருணை உண்ணாமுலையம்மை மீது இயற்றப்பட்ட பிள்ளைத்தமிழ் நூலில் காண்பதாகும்.

    “புலிக்கால்முனிவரான வியாக்கிரபாதர், பதஞ்சலி எனும் முனிபுங்கவர் ஆகிய அருந்தவமுனிவர்கள் போற்றும் சிறந்த ஊர் திருப்புலிநகர். அவ்வூரின்கண் வாழ்ந்தவரும் சிவ அபராதம் செய்தவர்களை வாளால் கண்டனம் செய்தவருமான கோட்புலிநாயனார் என்னும் பெருமைமிக்க ஒரு அடியாருக்கும், அவ்வூரிலேயே வாழ்ந்த வள்ளல்தன்மை மிகுந்த மற்றொரு அடியாரான சிறப்புலி நாயனாருக்கும் பேரருள் செய்தவன் நமது சிவபெருமான்.

    “அந்தப் பிரான் உமையம்மை தன்னிடம் ஊடல்கொண்டபோது என்னசெய்தார் தெரியுமா? அவளது ஊடலைத் தீர்க்கும்வகையில் அவளைத் தன்னுடன்சேர்த்து இறுகத்தழுவிக்கொண்டு (புல்லிக்கொண்டு) அவளை நகைபுரியச் செய்யும்வண்ணம் வினோதமான பல செய்திகளையும், தான் செய்த நகைப்புக்குரிய செயல்களையும்  கூறினார்: “தேவி! யாம் ஒரு புலியின் தோலையுரித்து அதனை எம் இடையில் அணிந்துள்ளதைப்பாராய்! இது தாருகாவனத்து முனிவர்கள் மிகுந்த கருவம்கொண்டு அபிசார வேள்வி செய்து வரவழைத்து என்மீது ஏவிய கொடியபுலியின் தோல்,” என்று அந்தக் கதையினை நகைத்தவண்ணம் உமையாளுக்குக் கூறினான்.

    “அதுகேட்ட நமது உமையவளும், “பெருமைவாய்ந்த என் நாதன் ஒரு வெம்புலியைத் தோல்உரித்தனன்; நாமும் ஒரு வண்புலித்தோலை நமது நாதனுக்கு இணையாக உரிக்க வேண்டும்,” என்று விரும்பினாள்; ஆகவே அவள் தன்னுடன் விளையாடவா எனக் காரணம்காட்டி என்னை அழைக்கிறாள் என்று அச்சம்கொண்டு இந்த அம்புலி சிவபிரானின் தலையை இறுகப்பற்றிக்கொண்டு (கம்புல்லி) வராமல் இருக்கிறது போலும்,” என ஒருபெண் கூறவும்,

    “அம்புலியே! கேட்டனையோ இந்தக்கதையை? காலம் தாழ்த்தாது வந்தாயானால், இந்தக் கவுரியின் அருளைப்பெற்று உய்யலாம் தெரியுமா?” என்கிறாள் ஒருத்தி!

    குறும்பு செய்பவர்களை, “உன் தோலை உரித்து விடுவேன்,” எனப் பெரியவர்கள் சினந்துகொள்வது வழக்கல்லவா?

    “ஒருவேளை அவளுடைய மாற்றாளாகிய கங்கையோடு நட்புப்பூண்டவன் இந்த அம்புலியாகிய திங்கள்புலி எனச்சினம் கொள்வாள் உமையம்மை எனும் அச்சமோ என்னவோ!” எனச் சிலபெண்கள் குறும்புபேசிக் களிக்கின்றனர்.

    “அதனாலென்ன? ‘இவன் அம்புலி! உன்னோடு விளையாட வந்தனன் தாயே! இவன்மீது சினம்கொள்ளாதே!’ எனக்கூறித் தப்பவைத்துவிடுவோம்! ‘அச்சங்கொள்ளாதே நிலவே! அண்ணாமலையானுக்கு இனியவளான இந்த உண்ணாமுலையுடன் விளையாட வந்துவிடு!” எனக்கூறி அம்புலியை அழைக்கிறாள் செவிலித்தாய்!

    செம்புலி பதஞ்சலி யெனுந்தவர்கள் போற்றத்
    திருப்புலி நகர்க் கண்டனஞ்
    செய்தருளி வாட்புலி யெனும் பெரிய கோட்புலி
    சிறப்புலிக் கருளுநாதன்
    வெம்புலி யுரித்தன னெனப்புலவி தீரும்வண
    மெய்ப்புலி நகைத்துரைக்கின்
    வெற்றிகொள நாமுமொரு வண்புலி யுரித்துமென
    வேண்டிவரு கென்றெனளெனக்
    கம்புலி யிருத்தியோ தாழாது வருதியேற்
    கவுரியருள் பெற்றுய்யலாம்
    கங்கை யொடு பழகுதிங் கட்புலியே னாவெனைக்
    காயினென் செய்வதென்னி
    லம்புலி யெனச் சொலித் தப்புவிப் பேமுண்மை
    யம்புலீ யாடவாவே
    அண்ணா மலைக்கினிய யுண்ணா முலைக்கனியோ
    டம்புலீ யாடவாவே.

    (மெய்ப்புலி- உடலினைப்புல்லி, தழுவி; கம்புலி- சிவபிரான் தலையை இறுகப்பற்றி)

    இப்பாடலிலும் இப்பிள்ளைத்தமிழ் நூலில் காணும் இன்னும் பலபாடல்களிலும்  ‘சொல்பின்வருநிலையணி’ மிக அழகாகக் கையாளப்பட்டுள்ளது. இப்பாடலில் புலி எனும் சொல் பலபொருள்களைக்கொண்டு (புலி- வேங்கை; வாட்புலி, கோட்புலி, வண்புலி, மெய்ப்புலி, புல்லி (தழுவி), திங்கட்புலி, அம்புலி) அமைந்து இனிய சந்தநயத்துடன் பயில்வோருக்குக் கவிதையின்பம் தருகின்றது.

    தாருகாவனத்து முனிவர்கள் செய்த சிறுமைச்செயல் பற்றிய தொன்மமும் நகைச்சுவையாக விளக்கப்பட்டுள்ளது.

    தாய்மார்கள், சேடியர்களின் கற்பனைகள் விரிந்தோட, தொன்மங்களும், சந்திரன் தொடர்பான குறும்புக் கதைகளும் சேர்த்துப் புனையப்பெற்ற இதுபோன்ற பல பாடல்கள் பிள்ளைத்தமிழின் நயத்தை மிகைப்படுத்துகின்றன. தானமும் பேதமுமான உபாயங்கள் இணைந்ததொரு பாடலை அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழில் கண்டு களிக்கலாம்.

    தனது பிறந்ததினமான ஆவணித்திங்கள் சதுர்த்தியினில் விநாயகப்பெருமான் உலகுளோர் பூசனை செய்து படைத்த கனிகள், கடலை, பால், பொரி, சேர்ந்த பணியாரங்களை உண்டு, அதனால் பெருத்த வயிறுடன் தந்தையைக் காணச் சென்றுகொண்டிருக்கிறார். உண்டமயக்கத்தில் அவர் ஆடியசைந்து  நடப்பதனைக் கண்டு வானிலுள்ள சந்திரன் நகைக்கிறான். சினமடைந்த விநாயகர் அவனை ஒளியிழக்குமாறு சாபம் கொடுக்கிறார். பின் தவறுக்கு மன்னிப்புக் கோரியதனால் மாதத்திலொரு நாள் மட்டும் முழுமையான ஒளிபெற சாபவிமோசனம் அருளுகிறார்.

    ‘ஒளியூறும் ஆவணித் திங்கள் சதுர்த்தியினில்
    உலகுளோர் புரியும்விரதத்து
    உறுகனிகள் கடலைபய னோடியல் பொரியமுதுண்டு (பயன்- பால்)
    உரத்துப் பெருத்தஉதரம்
    களியூறு முக்கட் பிரானைவந் திக்குமக்
    காலையில் கால்மேலுறக்
    கண்டுநீ நகைபுரிந் துண்ட சாபமும்…’

    தட்சயாகத்தில் இளையவீரன் என அறியப்படும் வீரபத்திரர் எல்லாரையும் அழிக்கும்போது சந்திரனையும் தன் காலால் தேய்த்து அழித்தார்.  பின்பு அனுக்கிரகம் பெற்று உயிர்பெற்றான் சந்திரன். அவ்வாறு காலால் தேய்த்து நசுக்கப்பட்டபோது ஒருதுளி அமுதம் துளித்ததாம்.

    அதனால், “விநாயகனை ஏற்று இரந்து வேண்டிக் கொண்டாயானால் சுகவாழ்வு பெறலாம். பயமின்றி வாழலாம். ஆகவே அரும்பாத்தை வேதகணபதியுடன் ஆடவா அம்புலியே!” என அழைக்கின்றனராம்.

    ……………………………………. உன்
    கருத்தறியு மிளையவீரன்
    துளியூறும் அமுதம் துளிப்பஇரு கால்கொண்டு
    துவையவிட் டதுமுனக்கே (உனக்கே தெரியும்)
    தோற்றுமத னாலிவனை ஏற்றிரவு கோடியேல்
    சுகமலால் பயமில்லையென்று
    அளியூறு வருமரும் பாத்தைபுரி மழகளிறோடு
    அம்புலீ ஆடவாவே
    ஆதிகண பதியாகும் வேதகண பதியினுடன்
    அம்புலீ ஆடவாவே.

    இவ்வாறு நயங்களும் தொன்மங்களும் விளங்கும் பாடல்கள் எண்ணற்றவை.

                (தொடரும்)

     

    *****

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 6.2 (வருகைப்பருவம்)

    – மீனாட்சி பாலகணேஷ்


    குழந்தை முருகனுக்குப் பலவிதமான அலங்காரங்களைச் செய்துபார்க்கும் தாய், ஒரு கட்டத்தில் அவனே முதலும் முடிவுமான பரம்பொருள் எனத்தெளிந்து, மொழிகுழற அவன்புகழைப்பாடி அழைப்பதாக, திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழிலிருந்து கவிதை நயம் பெருகும் ஒரு பாடல்: ‘வா‘ எனும் சொல் பலவிதமான பொருட்களில் பலமுறை பயின்று வரும் நயமிகுந்த பாடல்.

    ‘அன்ன வாகனனாகிய பிரமனின் நாலுமுகங்களும் தொங்கிப்போகும்படி (பிரணவ மந்திரத்தின் பொருளை உணர்ந்து உரைக்காததனால்) அவனை அறைந்தவனே! தேவர்கள் துன்பம் நீங்கிட வாவியான சரவணப்பொய்கையில் மகவானவனே! கார்த்திகைப்பெண்டிர் அறுவர் முலைப்பாலைப் பருகியவனே!

    ‘மின்னல் போலும் பெண்ணான உமை விரும்பும் சடாமுடியன் சிவபிரானின் குருவானவனே! அரக்கர் குலத்தைத் தடிந்தவனே! வலிய வேடர்களின் மகளான வள்ளிமீது மையல் கொண்டலைந்தவனே! உன் பெயரைச் சொல்பவர்கள் மீது குறையாது அருளை வழங்குபவனே!

    ‘முதல்வனே! அனைத்துக்கும் முடிவானவனே! சித்திக்கும் முத்திக்கும் முதலானவனே! முருகா வா வா என மொழிகுழற உருகி வேண்டுவோர் முன்பு வாராதிருப்பது உன் பெருமைக்குத் தகுமோ?’

    ‘பொன்கொழிக்கும் ஆறான பொன்னி எனும் காவிரிநீர் பாயும் வளநாட்டை உடையவனே! வருக! தேவர்கள் அதிபதி இந்திரனும், திருமாலும் அயனும் விருப்பொடு சலாமிட்டு வணங்கும் சுவாமிமலை முருகனே வருகவே!’ என நெகிழ்ந்துருகி உளம்கசியும் பாடலிது.

    ‘அன்னவா கனனாலு முகநாலு முகமா
    அறைந்தவா அமரர் துன்பம்
    அகலவா வியினில் மகவானவா உடுமகளிர்
    அறுவர்முலை அமுதுண்டவா
    மின்னவா வியசடையர் குருவான வாஅசுரர்
    வேரைத் தடிந்தவா வல்
    வேடர்மகள் மால்கொண்ட லைந்தவா சொல்லுவார்
    மீதிலருள் குறையாதவா
    முன்னவா யாவைக்கு முடிவான வாசித்தி
    முத்திக்கு முதலானவா
    முருகவா வாவென்று மொழிகுழற ஓதுவோர்
    முன்னர்வா ராமைதகவா
    சொன்னவா றானநீர்ப் பொன்னிபாய் வளநாட
    சுப்ரமண் யாவருகவே…’

    தெய்வங்களை வழிபடும்போது பாதாதிகேச வருணனை எனப் பெண்தெய்வங்களையும், கேசாதிபாத வருணனை என ஆண்தெய்வங்களையும் போற்றி வழிபடுவது மரபு.

    இதற்கேற்ப ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்யலகரியில் அன்னையின் திருப்பாதங்களை வருணிக்கும் ஸ்லோகம் மிக இலக்கிய நயம் வாய்ந்தது. சௌந்தர்யலஹரியினை வீரை கவிராஜ பண்டிதர் என்பவர் சுவைகுன்றாது தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். இதன் 87-வது பாடல் திருமண காலத்தில் ஐயன் அன்னையின் திருப்பதத்தை அம்மி மீது ஏற்றிவைத்த செயலைக் கூறுகிறது.
    “அன்னையே! உன் பாதங்கள் பஞ்சின்மேல் வைத்தாலும் வாடுகின்ற மென்மையான தன்மையுடையவை; சிவந்த தாமரை மலர் போன்றவை; இவ்வாறு அவற்றைப் போற்றாது சிலர் இதனை ஆமையின் மேல் ஓட்டிற்கு உவமை கூறி வீணாக வியப்பார்கள். கருநிற மிடற்றரானவரும் உனது கையை மணநாளில் பற்றுபவருமான (வரர்= வரிப்பவர், வரைந்து கொள்பவர்) பெருமான் மென்மையான உனது பாதத்தினை அம்மிக்கல் மீதும் ஏற்றி வைப்பாராம். இந்த நிகழ்ச்சியைக் கண்ணுற்றோருக்கு வஞ்சகக் கொடியநெஞ்சை உடையவர் அவர் எனவே எண்ணத் தோன்றும். ஆயினும் சிறிது எண்ணிப் பார்த்தால் அவர் அவ்வாறானவர் அல்ல, உன்பால் மெத்த அன்பு கொண்ட ஆண்டகையான் என்பது தெற்றென விளங்கும்,” என்கிறார் புலவனார்.

    ‘பஞ்சு அழுத்தினும் வாடு நின்பத
    பங்கயத்து இணை ஒப்பெனா
    விஞ்சை கற்றவர் வன்புஅக் கம்
    டத்தை வீணில் வியப்பராம்
    அஞ்சனப் புயல் அங்கை நின்வரர்
    அம்மி மீதிலும் வைப்பராம்
    வஞ்சகக் கொடு நெஞ்சர் அத்தனை
    வல்லர் அல்லர் நினைக்கினே.’

    இதே கருத்தினில் அம்மையின் திருப்பாதங்களைப் பற்றிய ஒரு பாடலை திருவுத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் நூலில் காணலாம். ஆனால் அது வருகைப்பருவத்தில் அமையாது ஊசற் பருவத்தில் காணப்படுகிறது. இருப்பினும் பாடலின் நயத்திற்காகவும், பாடுபொருளின் சிறப்பிற்காகவும் இங்கு அது கூறப்பட்டது.

    பார்வதி பரமேசுவரர்களின் தெய்வத்திருமணம், வைதிக முறையில் நிகழ்கின்றது. இத்திருமணத்தைக் காண மறைகள் அனைத்தையும் உணர்ந்தவனான பிரமதேவன், முகுந்தன் எனப்படும் திருமால், குலிசம் எனும் வச்சிராயுதத்தைக் கையில் ஏந்திய தேவர்கள் தலைவனான இந்திரன், எனும் இவர்களைத்தவிர இன்னும் முப்பத்து முக்கோடி தேவர்களுடன் எண்ணற்ற புலவோரும் சித்தர்களும் திரண்டெழுந்துள்ளனர். அவர்கள், “இத்தெய்வத் திருமணத்தைக் காண நமக்கு இதுவென்ன பாக்கியம்?” என உள்ளம் நெகிழ்ந்து உருகுகின்றனராம்.

    சித்திரைத் திங்களில் பல திருக்கோவில்களிலும் ஐயன், அம்மையின் திருமண விழா நடைபெறும். அதுதான் இங்கு கூறப்படுகிறது.
    பக்தியினால் உருகும் அன்பர்கள் உள்ளம் பச்சாதாபத்தினாலும் உருகுகிறதாம். எதனால் என்று பார்ப்போமா?

    நமது வைதிகமுறைத் திருமணத்தில் ‘அம்மி மிதித்தல்,’ என ஒரு சடங்கு உண்டு. அதானது, மணப்பெண்ணின் இடது பாதத்தின் பெருவிரலை மணமகன் தனது வலக்கரத்தால் பிடித்தெடுத்து, ஒரு அம்மிக்கல்லின் மீதேற்றி வைப்பதாகும். இதன் பொருள் என்னவென்றால், “இந்தக் கல்லினைப்போல் கடினசித்தம் கொண்டவளாகி, மன உறுதியோடும், வலிமையோடும் வாழ்வில் என்னுடன் இணைந்து இன்பதுன்பங்களில் பங்குகொள்வாயாக,” எனக் கூறுவதாகும். இதற்கான மந்திரங்களை மணமகன் அப்போது உச்சரிப்பது வழக்கம்.

    சிவனுக்கும் பார்வதிக்கும் நடைபெற்ற திருமணத்திலும் இச்சடங்கினை மணமகனாகிய சிவபிரான் செய்தார். அன்பர்களால் புகழ்ந்து துதிக்கப்பட்ட (துதி மணக்கின்ற) அம்பிகையின் பாதங்களிலொன்றை எந்தையாகிய பிரான் எடுத்து அம்மிமேல் வைத்ததால், கடினமான அம்மிக்கல்லில் பட்டுச் சிவந்துபோன அப்பாதத்தைக்கண்டு அடியார்கள் மனம்வருந்தி உருகுகிறார்களாம். பாதத்தைக் கண்டு உருகியது ஒருபுறம்; இவ்வாறு ஐயன் அம்மையின் மலர்ப்பாதத்தைக் கல்லின்மீது வைக்கும் தொழிலைக் கண்டும் உள்ளம் உருகுகிறார்களாம்.

    ஏனெனில் ஒரு பெரியமனிதரை எந்த ஒரு சிறு செயலையும் செய்ய அவருடைய அடியார்களும், அன்பர்களும் விடமாட்டார்கள். அவர் செய்துவிட்டால் பொறுக்கவும் மாட்டார்கள்! சிவபிரான் என்ன சாமானிய மனிதரா?அந்தம் ஆதி அற்ற உயர்வானவனல்லவா? ஆனால் இந்தச் செயலை, சடங்கினை, அவனன்றி அவனுடைய திருமணத்தில் யாராலும் செய்ய இயலாதே! அதுமட்டுமல்ல; இப்போது அன்னையே அத்தன் செய்த அத்தொழிலுக்காக உருகுகிறாளாம்.

    தனது பாதத்தினை அவருடைய திருக்கரத்தாற் தூக்கி அம்மிமேல் இட்ட செய்கை மென்மையான அவளுடைய இதயத்தை உருக்கிவிட்டது. ஏன்? அவளை மணம் புரிந்து கொள்பவன் அகில சராசரங்களுக்கும் நாயகன். அகிலநாயகியான அவளுமே செயற்கரிய தவங்களைச் செய்தே அவனை அடைந்திருக்கிறாள். மற்றும் அவன் காலால் இட்ட பணியைத் தலையால் செய்ய தேவரும் மற்றோரும் காத்திருக்கிறார்கள். அவனோ தனது தகுதிக்கேற்றவண்ணம் பெருமிதம் கொண்டு நில்லாது, ‘இது நம் திருமணம்; இது ஒரு புனிதமான முதன்மையான சடங்கு,’ என்று உள்ளத்தில் கொண்டு, அம்மையின் பூம்பாதத்தைத் தன் திருக்கரத்தால் பற்றி, அதனை எடுத்து மென்மையாக அம்மிமேல் வைக்கிறான்.

    அந்த மெல்லிய பூப்போன்ற பாதத்தை அம்மிமேல் தூக்கிவைக்க அவனுடைய மனமும் ஒப்பியிருக்காதுதான். ஆயினும் ஐயன் செய்வதனை உலகமே பார்த்தபடி உள்ளது. உலகத்தோர் நன்னெறிகளைக் கடைப்பிடிக்க ஐயன் தானே முன்னுதாரணமாகி நிற்கிறான். ‘ரோல் மாடல்’ எனக் கூறுவதுண்டல்லவா? அதுதான் இதுவும்.

    திருமண வைபவத்தைக்கண்டு களித்துருகிய அடியார்கள் ‘அன்னையின் அடி நோகுமே’ என மனமுருக, ‘உலகிற்கே முதல்வன் தன்னடியைப் பற்றி தூக்கினாரே’ என அன்னை உருக, படிக்கும் நம்முள்ளத்தையும் உருக்கும் அழகிய பாடலிது.

    இது திருவுத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் எனும் நூலில் காணப்படும் ஊசற்பருவப் பாடல். இயற்றியவர் பெயர் அறியக் கிடைக்கவில்லை. தமிழ்நயம், சொல்நயம், சந்தநயம் எனப் பல அழகுகளும் கொண்டு பொலியும் நூலாகும் இது. பாடலடிகளைக் காண்போமே!

    ‘பாக்கியம் நமக்கிதென்னப்
    பார்த்துருக வும்சித்தி ரைத்திங்க ளென்னப்
    பதித்திடு மணச்சடங்கில்
    துதிமணக் கின்றநின் பதம் அம்மி மேலெந்தை
    தூக்கிவைத் துச்சிவந்த
    தொழில்கண்டு பின்னுருக நீயுமவர் கையினால்
    தூக்கிய தொழிற்குருகவும்
    …………………………….’

    அடியார்கள் மனதில் முளத்தெழும் எண்ணற்ற கற்பனைகள், வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பெற்றும், பட்டை தீட்டிய வைரங்களாகவும் ஒளிர்கின்ற அழகை பிள்ளைத்தமிழ் நூல்களில் பலவிடங்களில் கண்டு களிக்கலாம்; இறும்பூதெய்தலாம்.
    தளர்நடை பயிலத்துவங்கியுள்ளாள் குழந்தை. இதனையே, ‘கண்டோர் பவத் துன்பு காணார்களாய்ப் பருங்களி ஆர்கலிக் கண்மூழ்கி,’ என்கிறார் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். தத்தித் தத்தி மயில்போல நடந்து வரும் குழந்தையைக்கண்டு பரவசத்தில் உள்ளம் பறிகொடுத்து, தாயின் நிலையிலும், அடியாரின் நிலையிலும் இருவிதமாகவும் நின்று, அவளைப் பலவிதமாக வருணிக்கிறார் அவர். தெய்வக்குழந்தையல்லவா இந்த மங்களாம்பிகை? ‘இவளைக் கண்ணால் கண்டாலே பிறவிக்கடலில் மூழ்கிப் படும் துயரமெல்லாம் பறந்தோடும்; பேரானந்தம் கொண்டு உள்ளம் கடல்போல ஆரவாரிக்கும்,’ என்பது பொருள்!

    சிவபிரானின் பெருமைகள் அனைத்தும் அன்னை மங்களவல்லிக்கே உரித்தாக்கப்படுகின்றன. சிவனும் சக்தியும் இணைபிரியாதவர்களல்லவா? அயனும் திருமாலும் அன்னமாகவும், வராகமாகவும் உருவெடுத்து ஐயனின் அடிமுடி காணப்புகுந்த வரலாறு இது. தீயோர்களை நாசம்செய்யும் சுதரிசனம் எனும் சக்கரப்படையை ஏந்தியவன் திருமால். அவன் ஒரு விலங்காக (பன்றி, வராகம்) வடிவெடுத்து தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானின் இரண்டு திருப்பாதங்களைத் தேடிக்காணமுயன்றான். பூமியின் அடிவரை சென்று தேடியும் காணஇயலாமையால் மனமும் உடலும் துவண்டு மீன்கள் நிறைந்த கடலில் (இங்கு பாற்கடலில் எனப் பொருள்கொள்ள வேண்டும்) விழுந்து இளைப்பாறுகிறான்.

    அடுத்து பிரமன் அன்னப்பறவை வடிவெடுத்து சிவனின் முடிதேடியதனை அழகுற விளக்குகிறார். உயர உயரப்பறந்து தேடியும், முடியைக் காண இயலவில்லை. இனி எங்குபோய்த் தேடுவது எனச் சிந்திப்பவனுக்கு ஒரு எண்ணம் உதிக்கின்றதாம். அவன் தேடிய சிவபிரானின் முடியானது ஊடல்கொண்ட அன்னையின் சின்னஞ்சிறு பாதங்களின்மேல் வைக்கப்பெற்றுள்ளது. ஆகவே, பிரமன் தான் தேடும் சிவபிரானின் முடியைக்காண ‘அன்னையின் பாதங்களை நாடினாலே போதுமே; ஆகவே, அதனைச் செய்வோம்,’ என எண்ணுகிறான். இனிய அரிய கற்பனை.

    குறுக்குவழியில் இலக்கை அடைவது பற்றிய சிந்தனை புராணகாலம் தொட்டு இருந்துள்ளது போலும்!! யாருக்கும் எட்டாத பரம்பொருளின் திவ்விய வடிவை, முடியை, எளிதிலடைந்து விட முடியுமா? முடியாதுதான். அண்ணல் சிவபிரானின் முடி அயன் கண்களுக்கெட்டாத கற்பகக்கனியாகி விட்டது.

    இனி என் செய்வான்? அன்னம் ஆகி (ஓதிமம்) வருந்திக் களைத்து நின்ற அவன் கருத்து குழந்தையாகி நடைபயிலும் அன்னையின் தேன்நிறைந்த மலர்போன்ற திருவடிகளில் பதிகின்றது. அது பயிலும் மென்னடையில் அவன் சிந்தையும் கருத்தும் பதிகின்றது; அயன் தேடிவந்ததென்னவோ, சிவபிரான் திருமுடிக்காட்சியைத்தான். ஆனால், அது எட்டாக்கனியாகிவிட்ட நிலையில், அன்னையின் நடையழகு அவன் கருத்தைக் கவர்ந்துகொண்டுவிட்டது. மற்ற அன்னங்கள் இவள் நடையைக் கற்க ஆவல்மிகுந்து அவளைப் பின் தொடர்கின்றன. தாமரைமலரில் வீற்றிருக்கும் இந்த (பிரம்மா) அன்னமும் அவைகளுடன் அன்னையைப் பின் தொடர்கின்றதாம்.
    இவ்வாறு அன்னங்கள் பின்தொடருமாறு தளர்நடை பயில்பவள், வானளாவ உயர்ந்த இமயமலையில் பிறந்த வனிதையாகிய மங்களவல்லி. இவள் தங்குமிடமோ வேதியர்கள் ஓதும் மறைவாழ்த்தொலி விண்ணளாவ முழங்கும் திருக்குடந்தை நகராகும். அம்மடந்தையை வருக வருகவே எனத் தாயர் அழைப்பதாகப் புலவர் கற்பனை விருந்து படைக்கிறார்.

    ‘ஊன்தோய் சுதரி சனப்படையா னொருமா
    வுருக்கொண்டு உம்பர்பிரான்
    உபய பதமும் காண்பான் புக்கு ஒன்றும்
    காணாது உழிதந்து
    மீன்தோய் பரவைப் புடைவிழுந்தான் விரும்பி
    யிவள்சிற் றடிதொடரின்மேற்
    விழைந்து முயன்ற முடிகாணன் மேவு
    மேவா விடினும் இவள்
    தேன்தோய் மலர்த்தாள் தொடர்பு ஒன்றே திருந்தும்
    …………………………………’

    சிந்தை களிகூர அன்னையின் கால்வண்ணம் கண்டோம். குழந்தையைக் காண்பதே மகிழ்ச்சிதரும். அதுவும், அணிமணி புனைந்து அலங்காரம் செய்விக்கப்பட்ட குழந்தையைக்காண ஆசை இன்னும் பெருகுமல்லவோ? தாயுள்ளத்தின் தாபமும் அன்பும் நிறைந்து ததும்பும் அழகிய கருத்துக்கொண்ட பாடல்கள் இன்னும் பலவுண்டு.

    சிவஞான முனிவர் இயற்றியுள்ள பிள்ளையார் மீதான கலைசை பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று, இருகைகளை ஊன்றித் தவழ்ந்து வரும் சிறு குழந்தை விநாயகனை, அவன் உருவிற்கேற்ப, ஒரு சிறு களிறு செய்யும் செயல்களால் வருணித்து மகிழ்கிறது.
    ‘இளமை பொருந்திய ஏறு எனத் தவழ்ந்து வரும்போழ்தில், தூண்போன்ற தும்பிக்கையால், பெருமூச்செறிந்தபடி நிலத்தைத் தோண்டியும், ஊழித்தீ போல பெருக்கெடுக்கும் செவியின் அசைப்பினால் உண்டான காற்று ஆகாயத்தைப் பிளந்தபடியும் அசைந்தாடி வரும் பீடும் பொருந்தி வரும் சிறு களிறு போன்று வருக,’ என விநாயகனை மழகளிறாகவே கண்டு மகிழ்கிறார்.

    இருகை யூன்றித் தவழ்ந்துமழ ஏற்றின் வருந்தோ றாங்காங்கே
    எறுழ்வன் புழைக்கை நெட்டுயிர்ப்பா னிருமா நிலத்தைக் குழிப்பதுவும்
    பெருகும் கடைக்கால் செயுஞ்செவிவான் பிளப்ப தேய்ப்பப் பல்காலும்
    பெயர்ந்து மடங்கி அசைந்தாடும் பீடும் தத்தம் பொறிதமக்கு
    மருவும் புலைன அவற்றிடமா மண்ணை அகழ்ந்தும் வெளிப்பரப்பை
    வளைத்தும் கவவிக் கொடுத்துதவும் வண்மை காட்ட அசைந்தசைந்து
    முருகுவிரியும் தொடைப்புயத்து முதல்வா வருக வருகவே
    மூரிக் கலைசைச் செங்கழுநீர் முனியே வருக வருகவே.

    இலக்கணப்படி வருகைப்பருவத்தின் பாடுபொருள், குழந்தையின் சிறுபாதங்களும் கால்களுமே ஆகும்.  திருமால் குழந்தையாகக் கால்களால் செய்த செயல்கள் பலவாம்: காளிங்கன் எனும் நச்சுப்பாம்பின் தலைமீது ஏறி நடம் புரிந்து அவன் ஆணவத்தை அடக்கியது, பின் வாமன அவதாரத்தில் மூவுலகும் ஈரடிகளால் முறைதிறம்பா வகையில் அளந்தது, மாயச்சகடத்தைக் காலால் உதைத்து, இறுத்து அரக்கனை அழித்தது எனப் பெரியாழ்வார் அனைத்தையுமே அழகுறப் பாடியுள்ளார்.

    உந்திபறத்தல் எனும் விளையாட்டை சிறுமியர் ஆடிப்பாடுவதாக அமைந்ததொரு அழகிய பெரியாழ்வார் பாசுரம்; இதிலும் கிருஷ்ணனின் திருவடித் தாமரைகள் போற்றப்படுகின்றன. ஸ்ரீராமனாகவும், கிருஷ்ணனாகவும் அவதரித்து, அவன் திருவடிகளால் செய்த கால்வண்ணங்களைப் பாடிப்பாடி மகிழ்கின்றனர் சிறுமியர். இதுவும் அரசனின் வீரச் செயல்களைப் புகழ்ந்துரைப்பது போன்றதே.
    ‘திருமுடி தாங்கி மூன்று உலகங்களையும் ஆண்டு எமக்கு அருள் செய்வாயாக,’ எனக் கானகம் சென்ற காகுத்தனைத் தொடர்ந்து சென்று வேண்டி நின்றான் அவன் தம்பி பரதன். ராமபிரானோவெனில் அவனுக்குத் தனது திருவடி நிலைகளை (பாதுகைகளை)க் கொடுத்து அருளினான்; அவனைப் பாடிப்பரவி உந்தீபற,’ என உந்திபறக்கின்றனர் சிறுமியர்.

    ‘முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு,உன்
    அடியேற் கருளென்று அவன்பின் தொடர்ந்த
    படியில் குணத்துப் பரதநம் பிக்கு,அன்று
    அடிநிலை ஈந்தானைப் பாடிப்பற
    அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.
    (பெரியாழ்வார் பாசுரம்- உந்தி பறத்தல்)

    ஸ்ரீ மகரக் குழைக்காதர் பிள்ளைத்தமிழின் புலவரும் அக்கால்களின் பெருமை வாய்ந்த செயல்களைப் பாடி மகிழ்கிறார்.
    ‘ஆலிலையில், திருவரங்கத்தில், பாற்கடலில் கண்வளரும் பச்சைநிறத்தவனே! நாகரத்தினத்தைத் தலையில் கொண்ட பாம்பான காளிங்கனின் கண்கள் பிதுங்குமாறு உனது சிவந்த தாமரைப்பாதங்களால் மிதித்துத் தள்ளி, அவன் வாலைப்பிடித்துச் சுழற்றி, இடையர்களைக் காக்க அவன் தலைமீது நடம்புரிந்த தலைவனே!’ என அவன் பெருமைகளைப் பேசுகிறார்.

    ‘பண்டா லிலையில்அரங் கத்துப்
    பாதாழியில் கண்துயில் கூரும்
    பச்சைப் புயலே பணா மகுடப் படப்
    பாந்தளின் கண்பிதுங்க நறும்
    தண்தாமரைச் செஞ்சரண் பெயர்த்துத்
    தள்ளிக் கடைவால் பிடித்து நெறி
    தழைக்கும் படிக்கு நடம்புரிந்த
    தலைவா ………………..’

    எனப் போற்றுகிறார்.

    இறையனுபவத்தையும் மழலையின்பத்தையும் ஒருசேரக் காட்டும் சிறப்பினைக் கொண்டமைந்தவை அருமையான இப்பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் எனலாம்.

    (இந்தத்தொடர் முனைவர், பேராசிரியர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்) அவர்கள் தமிழ் ஹிந்து இணையதளத்தில் எழுதி வந்ததன் தொடர்ச்சியாகும். பேராசிரியர் ஐயா முதல் ஐந்து பகுதிகளுடன் நிறுத்திக்கொண்டு இதனைத் தொடர்ந்து எழுதுமாறு என்னைப் பணித்துள்ளார். அன்னார் துவங்கிவைத்த அற்புதமான இத்தொடரை, பேராசிரியர் ஐயாவின் ஆசிகளுடன் எழுதுகிறேன்).

    (பிள்ளைத்தமிழ் பெருகி வளரும்)

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 6.1 (வருகைப்பருவம்)

    -மீனாட்சி பாலகணேஷ் 

    ‘ஓடிவருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ
    ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடீ,’ என்றார் பாரதியார்.

    சின்னஞ்சிறு குழந்தை நடக்கக் கற்றுக்கொள்வதனைக் காண்பது, அதனை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி, உவகைகொள்வது என்பது ஒரு தெய்வீக அனுபவம். சிவந்த தாமரைமலர் போலும் சின்னஞ்சிறு பாதங்கள் தத்தித்தத்தி நடந்துவரும் அழகை, தான் கீழே விழுந்து விடுவோமே எனும் அச்சமேயின்றி ஓடிவரும் இனிய செயலைக் காண ஆயிரம் கண்களும் போதாதுதான்!

    வரிசைக்கிரமமாக அமைந்த பிள்ளைத்தமிழின் ஆறாவது பருவம் வருகை அல்லது வாரானைப் பருவம் எனப்படும். குழந்தையின் பன்னிரண்டாவது மாதத்தில் இது நிகழ்வதாகக் கொள்ளப்படும்.

    நம் மனதுக்கினியவர்களின் நடையும், அதன் அழகும், அதுவே குழந்தையானால் அதன் கால் சதங்கை, சிலம்பு, இவற்றின் ஒலியும் மானிடர் அனைவருக்குமே மிகுந்த உற்சாகத்தைத் தருவதாகும்.

    தத்தித்தத்தித் தளர்நடை பயிலும் குழந்தையை அருகில் நின்று பார்க்கும் தாயின் உள்ளம் பாசத்தில் விம்முகின்றது. அந்தக்கால்களால் அவன் என்ன செயலெல்லாம் செய்யப்போகிறான், எங்கெல்லாம் செல்லப்போகிறான், அதை எவ்வாறெல்லாம் அழகுபடுத்திப் பார்க்கலாம் என்றெல்லாம் அவள் எண்ணங்கள் சிறகடிக்கின்றன. தன் குட்டனை, குழந்தையை, அழகுநடை பயிலும் மயிலாக, அசைந்து நடந்து வரும் அழகு யானைக்குட்டியாக, துள்ளிவரும் மானாக, எனவெல்லாம் பார்க்கிறாள்.

    ‘சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே அதை
    செவிமடுத்து எந்தன் மனம் களித்திடுமே,’

    எனும் ஊத்துக்காடு வேங்கட சுப்பைய்யரின் பாடல் வரிகள், கண்ணனின் காற்சதங்கை ஒலியை மனதில் நிரப்பி மகிழ்விக்கின்றன.
    ‘நன்னுபாலிம்ப நடசி வச்சிதிவோ?’ என, (என்னைக் காக்கவேண்டி நீ நடந்து வந்தனையோ?) தியாகராஜரும் தமது கீர்த்தனை ஒன்றில் ஸ்ரீராமனைக் கேட்டு உருகுகிறார். ‘உயர்வான பரம்பொருளாகிய நீ ஏழை அடியேனுக்காக, தேரிலன்றி, குதிரை மீதிலன்றி, வெறும் கால்களால் நடந்து வந்தனையோ?’ எனும்போது உள்ளம் ஆனந்தத்திலும், பச்சாதாபத்திலும் விம்முகிறது அவருக்கு.

    இதனைப் பெரியாழ்வாரும் தமது பாசுரங்களில் பாடி மகிழ்ந்துள்ளதனைக் காணலாம். கண்ணன் நடப்பது சிறிய யானை மெல்ல அசைந்து நடப்பது போலிருக்குமாம். யானை தனது மதங்களைப் பெருக விட்டுக்கொண்டும், தனது காலில் இடப்பட்டுள்ள சங்கிலி ‘சலார்பிலார்’ என ஒலி எழுப்பும்படியும் தன் உடலின் இருபுறங்களிலும் தொங்கும் மணிகள் ஒலிக்குமாறும் நடப்பதுபோலக் கண்ணன் நடக்க வேண்டும் எனும் தாயின் ஏக்கத்தைப் பாடுகிறார்.

    ‘தொடர்சங் கிலிகை சலார்பிலார் என்னத்
    தூங்கு பொன்மணி ஒலிப்ப
    படுமும் மதப்புனல் சோர வாரணம்
    பைய நின்று ஊர்வது போல்…’

    திருவடிச் சதங்கைகள் ஓசை எழுப்ப, அரைச்சதங்கையின் மணிகள் ஒலிக்க, என் சார்ங்கபாணி தளர்நடை நடவானோ! என ஆவலாக வேண்டுகிறார்.

    அன்னையின் ஆவலை, ஏக்கத்தை, எதிர்பார்ப்பை அழகுறச் சித்தரிக்கும் இப்பாசுரம், அவளுடைய பெருகியோடும் எல்லையற்ற அன்பின் உயர்வை எடுத்துக் காட்டுகிறது.

    ஆயினும் இவ்வாறெல்லாம் தான் போற்றிப் பெருமிதம் கொள்ளும் சிறுகுழந்தை, தான் வழிபடும் திருமாலே சிறு கிருஷ்ணனாக வந்த வடிவம் என அவருக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துள்ளது. ஆகவே அடுத்த பாடலில் அந்தக் குழந்தையான இறைவடிவே வந்து தன் வீடெங்கும், வீதியெங்கும் தன் பிஞ்சுப்பாதங்களின் முத்திரையைப் பதிக்க வேண்டுவது மற்றொரு சிலிர்க்க வைக்கும் அழகு.

    ‘ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம்
    உள்ளடி பொறித்து அமைந்த
    இருகாலும் கொண்டு, அங்கங்கு எழுதினாற்போல்
    இலச்சினை படநடந்து….’

    எனப் பெரியாழ்வாரின் தாயுள்ளம் விழைகின்றது.

    பிள்ளைத்தமிழ் நூல்களின் பாடல்கள் அனைத்துமே தாய், செவிலித்தாய் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் கூற்றாக அமைவது அதன் தனிச்சிறப்பாகும். அடியார்கள் தம்மை இத்தகைய நிலைகளில் இருத்திக்கொண்டு தாம் விரும்பும் இறைவடிவங்களைப் பாடிப்பரவுகின்றனர்.

    கிருஷ்ணனுடைய பாதங்களின் சிறப்பில் ஆழ்ந்துவிட்ட லீலாசுகர் எனுமடியார்ஆனந்த பரவசமாகி அவற்றை வர்ணிப்பது படிக்கின்ற நமக்கும் களிப்பைத் தருகின்றது:

    ‘வேறு புகல் இல்லாதவர்களுக்கு இத்திருவடிகள் ஒன்றே புகலிடமாக (அசரண-சரணாப்யாம்) உள்ளன. குழலூதியபடி கிருஷ்ணன் இத்திருவடிகளால் நடந்து வருகிறான் (ஆயாதி),’ என நெகிழ்கிறார் அடியார்.

    கிருஷ்ணனின் கல்யாண குணங்களில் ஆழ்ந்துவிட்ட நாராயண பட்டத்ரி, நாராயணீயத்தின் ஈற்றயல் ஸ்லோகத்தில் கிருஷ்ணனின் திருவடிகளை வழுத்தி, ஆத்மார்ப்பண லயிப்பில் உருகிக் கரைந்து தன்னையே இழந்து விடுகிறார்.

    ‘உனது சரீரத்திலேயே யோகிகளால் மிகவும் விரும்பப்படுவன உனது திருவடிகளே! ஆதரவற்றவர்களுக்கு அவையே புகலிடம். அடியார்களுக்கு அவை வேண்டியன அனைத்தையும் தரும் கற்பகத்தரு. கிருஷ்ணா! குருவாயூரில் உறைபவனே! (பவனபுரபதே) கருணைக்கடலே! இந்த உனது திருவடிகள் எனது இதயத்தில் எப்போதும் பதிந்து நின்று, எனது துயரங்களை விடுவித்து என்னை மிக உயர்வான பேரின்பச் செல்வத்தில் ஆழ்த்தட்டும்.’

    ‘வேண்டிக்கொள்ள வேண்டிய’வற்றின் உச்சநிலை வேண்டுதல் இது!  பி. லீலா எனவொரு பாடகி இருந்தார். அவருடைய இனிய குரலில், உள்ளத்தை உருக்கும் இந்த ஸ்லோகத்தினைக் கேட்கும்போது பட்டத்ரியின் தேடுதலை, ஆனந்த லயிப்பை ஒருவாறு புரிந்துகொள்ள இயலும். ‘ஒருவாறு’ என்றதன் காரணம், நாமே அந்த நிலைக்குச் சென்றால் தான் துல்லியமாக உணர இயலும். நாமெங்கே, பட்டத்ரி எங்கே?

    ‘யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிக ஸுமதுரம் முக்திபாஜாம் நிவாஸோ,’ என்பன ஸ்லோக வரிகள்.

    பிள்ளைத்தமிழுக்குத் திரும்பலாம்!!

    முருகப்பெருமானை, கதிர்காமத்திலுறையும் கந்தவேளை, தளர்நடை பயிலும் குழந்தையாக்கி, தாமே அன்னையாகி, தம்மிடம் நடந்து வருமாறு கைகளை நீட்டி வேண்டுகிறார் இதனை இயற்றிய சிவங். கருணாலயப் பாண்டியப் புலவர்.  தெய்வத்தன்மையினால் முருகனுக்குப் பட்டால் செய்த சிறு ஆடை இயல்பாகவே அமைந்ததாம்; அது நூலால் நூற்கப்படாமலும், ஊசியால் தைக்கப்படாமலும் விளங்குவது. அது நோன்பிருந்து நின்னையே நினைந்துருகும் அடியாரின் உள்ளம்போல அசைந்தாடுகிறது என்றார் புலவர்.

    ‘நூலாத நூலாடை ஊசியொடு குயிலாத
    நொய்யசின் மெய்யுறையது
    நோன்பிற்ற ழும்பிநின் னுள்ளுமுள மெனவாட…’

    மிகவும் உயர்வானவையே தன் தெய்வக்குழந்தைக்குப் பொருந்தும் என எண்ணும் தாயுள்ளத்தின் அன்பு இதில் புலப்படுகின்றது. இன்னும் கூறுவார்: அழகான பூச்செண்டு முடிக்கப்பட்ட கொண்டை ஆடுகிறது; (அவனருளால்) பூமியில் அறம் வழுவாமல் நடமாடுகிறது; உணவே அருந்தாது தவம் செய்வோர் உள்ளம் இறை எண்ணத்தில் அசைந்தாடுகின்றது; தளர்நடை நடக்கும் குழந்தையின் உடலும் தள்ளாடுகிறதாம். எட்டுக்கரங்களையும், நான்கு முகங்களையும் கொண்ட பிரமனின் பெருமிதம் சிதைந்தோட, தேவர்கள் சிறைநீங்கி ஓட, அசுரர்கள் படை தோற்று ஓடிடுமாறு செய்து, நாய்போன்ற எமது அவலம் தெறித்தோடுமாறும், உன்மீது அன்புகொண்டு நாங்கள் மெழுகுபோல உள்ளம் கசிந்து என்புருகிக் கண்களில் மழைநீர் போலக் கண்ணீர் பெருகி ஓடுமாறும் நீ எம்முன்பு நடைபயின்று வரவேண்டும்,’ எனும் வேண்டுதல்.

    தளர்நடை நடக்கும் குழந்தை ஆடி அசைந்து வருவதும் ஒரு தனியழகு.
    அதைக்கண்டு உள்ளம் மகிழ்வது அன்னையின் இயல்பு;
    கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பாடுவது அடியார் மரபு!
    ‘மாலாகி யாம் அழல் மெழுகின் நெக்கென்புருகி
    மழையோடவே வருகவே.’

    பிள்ளைத்தமிழ்ப் பாடல்களின் சிறப்பு தெய்வத்தின் பெருமையை குழந்தைப்பருவங்களுக்கான செயல்களில் வைத்துப் போற்றுவது. குழந்தையின் தெய்வத்தன்மையை உணராத அடியார் இல்லை! ஆகவே தாம் போற்றும் குழந்தையை, தெய்வத்தின் சிறப்புகளைக்கூறித் தம்முன் வருமாறு வேண்டுதல் இன்னொரு அழகு. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் தடாதகைப்பிராட்டியாகிய சிறு பெண்மகவை, குமரகுருபரனார் ‘வருக’வென அழைக்கும் பாடல்கள் நமது உள்ளத்தைக் கசிய வைப்பனவாகும்.
    ‘தேன்சிந்தும் மலர்கள் பொருந்திய நறுமணம் மிகுந்த கூந்தலை உடைய பெண்யானையே! வருக! முழுமையான ஞானவெள்ளமே வருக! பிறைசூடிய பெருமானின் மூன்று கண்களுக்கும் விருந்தாக அமைந்தவளே வருக!  ‘பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மூவருக்கும் மூலமாக விளங்கும் சத்தியே வருக! விதை இல்லாமலே விளைகின்ற பரமானந்தம் எனும் தெய்வீக விளைவே வருக!
    ‘பழமையான மறைகள் எனும் வேதங்களின் இளந்தளிரே வருக! அருள் பழுத்துக் கனிந்துள்ள கொம்பாயுள்ளவளே வருக! நின் அழகான கடைக்கண்ணின் கோடியில் பெருகிய அருள்வெள்ளத்தில் மூழ்கியுள்ள அடியார்களின் பிறவியாகிய நோய்க்கு மருந்தாக விளங்குபவளே வருக! இனிய பசிய குதலைமொழி பேசும் கிளியே வருக! மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே!’

    ‘பெருந்தேன் இறைக்கும் நறைகூந்தற்
    பிடியே வருக முழுஞானப்
    பெருக்கே வருக பிறைமௌலிப்
    பெம்மன் முக்கண் சுடர்க்கிடுநல்
    விருந்தே வருக…..’ என்பது பாடல்.

    தான் வழிபடும் அன்னை தெய்வத்தை ஒரு சிறு பெண்மகவாக்கி, தாமே தாயாகி, அவளுடைய அருமைபெருமைகளையெல்லாம் பாடி, அவளை ‘வருக’வென அழைத்துச் சீராட்டும் அடியாரின் உள்ளம் எப்படிப்பட்ட பேரானந்தத்தில் மூழ்கித் திளைக்கின்றதென்பதனைப் பிறிதொரு பாடலிலும் காணலாம்.

    ‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல்
    தொடையின் பயனே நறைபழுத்த
    துறைத்தீந் தமிழின் ஒழுகுநறும்
    சுவையே அகந்தைக் கிழங்கைஅகழ்ந்து
    எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
    ஏற்றும் விளக்கே வளர்சிமய
    இமயப் பொருப்பில் விளையாடும்
    இளமென் பிடியே எறிதரங்கம்
    உடுக்கும் புவனம் கடந்துநின்ற
    ஒருவன் திருவுள்ளத்தில் அழ
    கொழுக எழுதிப் பார்த்திருக்கும்
    உயிரோ வியமே மதுகரம்வாய்
    மடுக்கும் குழற்கா டேந்தும் இள
    வஞ்சிக் கொடியே வருகவே..’

    என்றார். இதில் ‘அகந்தையெனும் ஆழ்ந்த வேரோடிய ஆணவக் கிழங்கை, அகழ்ந்து எடுத்து எறிந்து விடும் ஞானிகளின் உள்ளத்தில் ஏற்றிவைக்கப்படும் ஒளிவிளக்காக இருப்பவளே,’ என அன்னையின் பெருமையை உணர்த்தியது எண்ணவொண்ணாததொரு நயம் ஆகும். மேலும், ‘சிவபெருமான் தன் உள்ளத்தில் அழகாக எழுதிவைத்துக் கண்டு களிகொள்ளும் உயிரோவியமானவளே மீனாட்சியன்னை,’ என்றும் உரைக்கிறார். இப்பாடலுக்கு இன்னொரு சிறப்புமுண்டு. இளம் வயதிலேயே பெரும் ஞானியான குமரகுருபரனார் அன்னை மீனாட்சி மீது இப்பிள்ளைத்தமிழ் நூலை யாத்தனர். அன்னை மீனாட்சியம்மை மன்னர் திருமலை நாயக்கர் கனவில் தோன்றித் தன் திருமுன்பு அதனை அரங்கேற்றப் பணித்தாள். அவ்வாறே அரங்கேற்றமும் அம்மையின் திருக்கோயிலில் அவள் சந்நிதியில் நிகழ்ந்தது. மேற்காணும் இப்பாடலுக்குக் குமரகுருபரனார் பொருளுரைக்கும் போது அன்னையே அருச்சகரின் ஐந்தாறு வயது மகள் போலத் தோன்றி அரசர் திருமலை நாயக்கரின் மடியிலமர்ந்து இப்பாடலைக் கேட்டு ரசித்தாள். பாடல் முடிந்ததும் அரசர் கழுத்திலிருந்த முத்துவடத்தைக் கழற்றிக் குமரகுருபரர் கழுத்திலிட்டு மறைந்தனள். ஆகவே, அன்னையின் ஆமோதிப்பைப் பெற்றதொரு பிள்ளைத்தமிழ் நூலும் இதுவே எனப் பெருமை கொள்ளலாம். அன்னை தெய்வம் மீதான பிள்ளைத்தமிழ் நூல்களை இயற்றிய அடியார் பலரும் சக்தி உபாசகர்களாகவும் இருந்துள்ளனர். தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலையத்தினர் சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ் எனவொரு நூலை வெளியிட்டுள்ளனர். இயற்றியவர் பெயர் தெரியவில்லை. இவர் ஐயத்திற்கிடமின்றி சக்தி உபாசகர். ஏனெனில், வாரானைப் பருவத்துப் பாடலொன்றில் ஸ்ரீசக்கரத்தில் உறையும் அம்பிகையான அவளைப் போற்றுகிறார். அம்பிகையின் ஸ்ரீ சக்கர வருணனை விரிவாகத் தரப் பட்டுள்ளது.

    ‘முச்சதுர மூவட்டம் ஈரெட்டும் ஓரெட்டு
    முளரியிதழ் சூழ்ந்ததற்குள்
    முகனையிற் பதினான்கு பத்துடன் பத்தெட்டு
    முக்கோண நடுவிந்துவாய்…..’ என ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பை விவரித்து,

    ‘சச்சபுட முதலான தாளங்கள் தாள்பொரச்
    சதகோடி திருமாதரார்
    சந்ததம் நடம்புரியும் நாற்பத்து முக்கோண
    சக்கர நாயகி வருகவே’ எனப்போற்றுகிறது.

    இவையனைத்தும் சக்தி உபாசகர்களின் துதிகள் தாமே? இது கிடக்க, வேறொரு இனியகாட்சியைக் காணச் செல்லலாமா?
    பிடிவாதம் செய்யும் ஒரு சிறு பெண்குழந்தை. அதனிடம் பொய்யாகச் சினம்கொண்டுபேசும் தாய்! இனிமையான காட்சி!
    “வா கண்ணே! முகம்கழுவி, உன்னைச் சிங்காரிக்கிறேன்,” என ஆசையாகத் தாய் அழைக்கிறாள். குழந்தைக்கோ விளையாட்டு மும்முரம். சிறு செப்புகளில் மண்சோறு சமைக்கிறாள். இலைகளைப் பறித்துப் பொரியல்செய்கிறாள். “அம்மா வா, நான் சமைத்த சோற்றைச்சாப்பிடு,” என்று மழலையில் அன்னைக்கும் கொஞ்சம் தருகிறாள்.

    கையில் பட்டுப்பாவாடை, கழுத்திற்கான அணிகலன்கள், மை, திலகம் முதலானவற்றை ஏந்தியபடி தாயின் அருகில் பணிப்பெண் நிற்கிறாள். குழந்தையின் புழுதிபடிந்த உடைகளையும் கைகால்களையும் கண்ட தாய் சலித்துக்கொள்கிறாள்.
    “நான் அழைக்கஅழைக்க நீ வராமலே இருந்தால், நான் இங்கிருந்து போய்விடுவேன். உனக்கு முகம், கைகால் கழுவி, உனது அழகான வேல்போலும் விழிகளுக்கு மைதீட்டமாட்டேன். பிறைமதிபோன்ற நெற்றியில் அழகிய திலகத்தையும் எழுதமாட்டேன். அழகான மணிகளால் செய்யப்பட்ட இந்த ஆபரணத்தை உனக்கு அணிவிக்கமாட்டேன்.”

    குழந்தைக்கு அலங்காரம் செய்துகொள்ள ஆசை; பெண்குழந்தையல்லவா? அலங்காரப்பிரியை அவள்! தனது விளையாட்டை விட்டுவிட்டுவர மனமில்லாமல் தாயை ஏக்கத்தோடு பார்க்கிறாள். இதுதான் வாய்ப்பெனத் தாய் தனது அச்சுறுத்தல்களைத் தொடர்கிறாள்.  “உன்னிடம் அன்பாகப் பேசவும் மாட்டேன் குழந்தாய்! புழுதிபடிந்த உன் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டேன் போ! அலங்காரம் செய்தபின் எனது முலைப்பாலையும் ஊட்டமாட்டேன். ஆசையாக எனது இடுப்பில் உன்னைத் தூக்கிவைத்துக்கொண்டு தேரோடும் வீதியில் சென்று நித்தமும் வேடிக்கை காட்டுவேனல்லவா? அதையும் செய்யமாட்டேனடி பெண்ணே!” குழந்தைக்குத் தாளவில்லை! இவையனைத்தும் அன்னையிடம் அவளுக்குண்டான தினசரி சலுகைகள். எப்படி அவற்றை இழக்கமுடியும்? குழப்பத்துடன் அன்னையைப் பார்க்கிறாள். அன்னையோ விடுவதாயில்லை! விரலால் எச்சரித்தபடி, “உனது சிவந்த கனிவாயில் முத்தமிட்டு உன்னைக் கொஞ்சமாட்டேனடி பார்த்துக்கொள்! அழகான மணிகள் குலுங்கும் தொட்டிலில் படுக்கவைத்து, உன்னை உறங்கவைக்கப் பாராட்டிச் சீராட்டித் தாலாட்டும் பாடமாட்டேன் தெரியுமா?” என்கிறாள். இதற்குமேல் குழந்தைக்குத் தாங்கவில்லை. தனது சிறுசோற்றுச் செப்புக்களை வீசியெறிந்து விட்டு உதடுகள்நெளிய அழுகைபொங்கிவர ஓடோடிவந்து தாயின் சேலையில் முகம் புதைத்துக்கொண்டு அவளை அணைத்துக்கொள்கிறாள். தாயும் தனது பொய்க்கோபத்தினை விட்டொழித்து, குழந்தையை இறுக அணைத்துக்கொள்கிறாள். பார்க்கும் நம் முகங்களில் புன்னகை அரும்புகிறது இல்லையா?
    இவள் இமவானின் அகன்றமார்பில் (விசாலமான இமயமலையில்) தவழும் குழந்தையல்லவோ? இவளையா கோபிப்பது?
    ‘வருக வருக என் குழந்தையே! சாலிப்பதி எனப்படும் நெல்லையில் வாழ்கின்ற காந்திமதித்தாயே, விரைந்து வருகவே!’ என நாமும் பாடியவாறே குழந்தையை எண்ணத்தில் அணைத்துக் கொள்கிறோம்.

    ‘வாரா திருந்தா லினிநானுன் வடிவேல்
    விழிக்கு மையெழுதேன்
    மதிவாள் நுதற்குத் திலகமிடேன் மணியால்
    இழைத்த பணிபுனையேன்
    …………………………………………….
    தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய
    கனிவாய் முத்தமிடேன்
    திகழு மணித்தொட் டிலிலேற்றித் திருக்கண்
    வளரச் சீராட்டேன்…..’

    பேராதரம்- மிகுந்த அன்பு; ஒக்கலை- இடை.
    (நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்
    வித்துவான் அழகிய சொக்கநாதப்பிள்ளை)

    அன்னைத் தெய்வத்தைக் குழந்தையாக்கி இவ்வாறு வருந்தியும், வேண்டியும், உரிமையுடன் கோபித்தும், பின் கொஞ்சியும் அழைத்தால் அவள் வந்து அருள்செய்யாமல் இருப்பாளா?
    திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் பகழிக்கூத்தரும் இதுபோன்றே தாய் குழந்தை முருகனிடம் பொய்யாகச் சினம் கொள்வதாகப் பாடியுள்ளார். ‘உன் அரைஞாண் இறுக்கமாக உள்ளது. அதனை வாகாக தளர்த்திப் பூட்ட மாட்டேன். இலங்கும் மகர குண்டலத்தை எடுத்துக் குழைமீது அணிவிக்க மாட்டேன்; நெற்றியில் திலகம் தீட்ட மாட்டேன்,’ எனவெல்லாம் தாயின் பலவிதமான பொய்யானஅச்சுறுத்தல்கள்! இது போன்றே பழனி முருகனின் தாய்மாரும் பலவிதமாகக் கூறிக் கொஞ்சி அவனை வருமாறு அழைக்கின்றனர். சீர்காழி கோவிந்தராஜனின் இனிய தெய்வீகக் குரலில் இப்பாடலைக்கேட்டு ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

    ‘பொன்னே வருக பொன்னரைஞாண் பூட்ட வருக சிறுசதங்கை
    புனைய வருக மணிப்பதக்கம் பூண வருக
    ………………………………………………..
    முத்த மிடற்கு வருகஎதிர் மொழிகள் மழலை சொலவருக
    தன்னே ரில்லா நுதல்திலகம் தரிக்க வருக விழியினில்மை
    சாத்த வருக ……………………………….
    வளஞ்சேர் பழனிச் சிவகிரிவாழ் வடிவேல் முருகா வருகவே!’
    (பழனிப்பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்- சின்னப்ப நாயக்கர்)

    இங்கு புலவர் முருகனின் தெய்வத்தன்மையைப் பாடுகிறார்; ஆயினும் அவனுடைய குழந்தை வடிவிற்கு அலங்காரம் செய்து, பொன்னும் மணியும் புனைவித்து, முகத்தோடணைத்துச் சீராட்டி மகிழ விரும்பும் தாயினது பேராவலையும் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு அணிகலனாகத் தன் குழந்தைக்கு அணிவித்து அழகுபார்க்க விழையும் தாயுள்ளத்தின் பேராவலையும் அன்பையும் இப்பாடல்கள் பதிவு செய்துள்ளன. இங்கு மெய்யடியார்களின் ஒரு அருமையான சிந்தனைத்துளியை எண்ணிப்பார்க்கலாம். தன் பிரியத்துக்குரிய தெய்வக்குழந்தை காலில் தண்டையும் சதங்கையும் கொஞ்ச அருகே வந்தால் எவ்வாறிருக்கும் எனும் எண்ணமே அவர்களைத் தாயன்பில் இன்புறுத்துகிறது. பக்தியில் நெகிழவைத்தும் அன்பில் மகிழ வைத்தும் சிலிர்ப்பூட்டுகின்றது.

    ‘தண்டையணி வெண்டையம் கிண்கிணிச தங்கையும்
    தண்கழல்சி லம்புடன் கொஞ்சவே…’

    எனும் அருணகிரிநாதரின் திருப்புகழின் சந்தநயத்தில் மகிழாதவர்கள் இல்லை.  ‘அந்தகன் வரும் தினம்’ எனும் மற்றொரு திருப்புகழில் அருணகிரிநாதர், முருகனை அழைப்பதும் மிகவழகான சந்தநயமும் கருத்துச் செறிவும் கொண்ட பாடல். தாயான உமையவளின் உள்ளம் மகிழுமாறு கால்களில் சின்னஞ்சிறு சதங்கைகள் கொஞ்சிட குழந்தை முருகன் ஓடோடி வருகிறான். அன்னையின் அன்புள்ளம், அவன் தன்னிடம் வந்து அளிக்கப்போகும் ஆசை முத்தத்திற்காக- ‘சங்கரி மனம் குழைந்துருக முத்தம்தர வரும் சரவணனுக்காக’- ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டுள்ளது என்பதனைக் கூறும் வரிகள் சிறப்பானவை.

    ‘தந்தன தனந்தனந் தனவெனச்
    செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
    தண்டைகள் கலின்கலின் கலின்எனத் திருவான
    சங்கரி மனங்குழைந் துருகமுத்
    தம்தர வரும்செழுந் தளர்நடைச்
    சந்ததி சகந்தொழும் சரவணப் பெருமாளே,’

    என்பன பாடலின் ஈற்றடிகள்.
    இதே போன்று முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழிலும் குழந்தை முருகனை, ‘பொன்னால் செய்தபெரிய கழல்கள் பாதச்சிலம்புகளோடு சேர்ந்து கலின் கலின் எனும் ஒலியினை எழுப்பவும், திருவரையில் உடைமணி கிணின் கிணின் என ஒலிக்கவும், மற்றும் பலவாபரணங்கள் பொலியவும் எம்மிடம் வருவாயாக!’ எனத்தாய் வேண்டும் பாடல் காணப்படுகிறது.

    ‘செம்பொற் கருங்குழல் அரிக்குரல் கிண்கிணி
    சிலம்பொடு கலின்கலினெனத்
    திருவரையில் அரைமணி கிணின்கிணின் எனப்பொலந்
    திண்டோளின் வளைகலிப்ப…’

    கேட்டவரம் தர ஒடிவரும் குழந்தை தெய்வம், கிண்கிணி சதங்கையொலிக்க ஆடியசைந்து வரும் குழந்தை எனக் கொஞ்சி, சிறுகுழந்தைத் தெய்வங்களை வாரியணைத்து உச்சிமுகர்ந்து கொண்டாட அன்னைமார் போன்று அடியார்களுக்கும் ஆவல் மிகுகிறது. தமது பக்திப்பெருக்கினையும் கவிதைச் சிறப்பினையும் சொற்களில் குழைத்தெடுத்துப் பாடல்களைப் புனைந்து வைத்துள்ளனர்.
    (இந்தத்தொடர் முனைவர், பேராசிரியர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்) அவர்கள் தமிழ் ஹிந்து இணையதளத்தில் எழுதி வந்ததன் தொடர்ச்சியாகும். பேராசிரியர் ஐயா முதல் ஐந்து பகுதிகளுடன் நிறுத்திக்கொண்டு இதனைத் தொடர்ந்து எழுதுமாறு என்னைப் பணித்துள்ளார். அன்னார் துவங்கிவைத்த அற்புதமான இத்தொடரை, பேராசிரியர் ஐயாவின் ஆசிகளுடன் எழுதுகிறேன்).

    (பிள்ளைத்தமிழ் பெருகி வளரும்)

    Share
  • காழிப்பிள்ளைக்கு சேக்கிழார் பாடிய பிள்ளைத்தமிழ்!

    மீனாட்சி பாலகணேஷ்

                ‘தவம் பெருக்கும் சண்பையிலே தாவில்சரா சரங்களெல்லாம்

              சிவம்பெருக்கும் பிள்ளையார் திருஅவதா ரஞ்செய்தார்,’ என்பது ஆளுடைப்பிள்ளையாராகிய திருஞானசம்பந்தப் பெருமானின் அவதாரம் பற்றி சேக்கிழார் பெருமான் இயற்றியருளிய பெரியபுராணப் பாடல். பெரியபுராணத்தினூடே இழைந்திலங்கும் பிள்ளைத்தமிழ் போன்ற ஓரமைப்பையும் சேக்கிழார் பெருமான் படைத்திருக்கிறார்! அதனை ஒரு சிறிய பிள்ளைத்தமிழாகவே நாம் கருதவும் இடமிருக்கிறது.

    காப்பியத்துக்குள் ஒரு சிற்றிலக்கியம்!

                                                                *****

                அந்த இளங்காலைப் பொழுதில் சண்பை (சீர்காழி) எனப்படும் அவ்வூரில் பல நற்சகுனங்கள் தென்பட்டன. சிலுசிலுவென்ற இளங்காற்று வீசி, மரங்களிலிருந்து மலர்கள் தெருவெங்கும் உதிர்ந்தன. வீடுகளின் வாயிலில் பவழமல்லிகை மலர்கள் அங்கு வசிப்பவர்களை ஆசிர்வதிப்பதுபோலச் சொரிந்தன. பறவைகள் இனிமையாகப் பாடின; இனிய நறுமணம் எங்கும் கமழ்ந்தது. தோணியப்பர் திருக்கோவில் மணி கணீரென முழங்கியது. மங்கல வாத்தியங்களின் ஒலி எங்கணும் பரந்து எழுந்து திசைகளனைத்தையும் நிறைத்தது. சிவபாத இருதயரின் வீட்டை நோக்கிப் பெண்டிர் விரைந்தனர்.

                சிவபாத இருதயர், தமது வீட்டின் திண்ணையிலமர்ந்து சிவநாமத்தில் ஆழ்ந்திருந்தார். கண்களை மூடிக்கொண்டு நிட்டையில் ஆழ்ந்திருந்தார் அவர்.

                சிறிதுநேரத்தில் பிறந்த பச்சிளம் மகவின் இனிய குரலொலி வீட்டின் உள்ளிருந்து கேட்டது. கோவில் கோபுரத்தை நோக்கி அவரின் கரங்கள் தானாகவே தலைக்குமேல் குவிந்தன. அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

                “சைவம் தழைக்க ஒரு திருமகன் அவதரித்துள்ளான்; அம்மையப்பன் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து விட்டான்,” என மனதில் எண்ணிக் கொண்ட அவரின் உடலும் உள்ளமும் ஒருசேரச் சிலிர்த்தது. இக்குழந்தை வளர்ந்து எவ்வாறு சைவத்தொண்டு செய்வான் என அவர் சிறிதும் அறிந்திருக்கவில்லை; அதற்காகக் கவலைப்படவுமில்லை. இறைவன் அருள் புரிவான், வழிநடத்துவான் எனும் அசையாத நம்பிக்கை!

                                                                *****

                அடுத்த பத்து தினங்களும் குழந்தை பிறந்ததும் அந்தணர் வீடுகளில் செய்யப்படும் நற்சடங்குகளில் கழிந்தன. உலகம் நன்மை பெறுவதற்காக இத்தகைய மகவைப் பெற்ற சிவபாதஇருதயர் தம் திருமாளிகையாகிய பவனத்தின் முன்றிலில் பலவிதமான அலங்காரங்களைச் செய்வித்தார்.

                ‘இரும்புவனம் இத்தகைமை எய்தஅவர் தம்மைத்

              தரும்குல மறைத்தலைவர் தம்பவன முன்றில்

              பெருங்களி வியப்பொடு பிரான்அருளி னாலே

              அருந்திரு மகப்பெற அணைந்தஅணி செய்வார்,’ என்கிறார் சேக்கிழார் பெருமான்.

                அவர் மகப்பேற்றின் பின்பு ஏற்படும் ‘தீட்டு’ முதலானவை நீங்க எண்ணெய் பூசி நீராடும் நெய்யாட்டு விழாவினைச் செய்து மகிழ்ந்தார்; இதனை ‘மங்கல ஸ்நானம்’ என்பது வடமொழி வழக்கு. மங்கல ஓசைகள் முழங்கும் சமயத்தில் சாதகன்மம் முதலான பல சடங்குகளையும் அந்தணர்கள் குலதருமப்படி செய்தார் அவர். ஆண்குழந்தை பிறந்தால் 16 விதமான சடங்குகளைச் செய்வர். இதனுள் குழந்தை பிறந்த நாள், கோள்களின் நிலை பற்றிய குறிப்பைப் பதிந்து வைத்தலை சாதகம் (ஜாதகம்) என்பர்.

                ‘சாதக முறைப்பல சடங்குவினை செய்வர்.’

                வாராது வந்த மாமணியன்றோ இம்மகவு? உறவினப் பெண்டிர் அனைவரும் குழுமி பல மங்கலச் செயல்களைச் செய்து மகிழ்ந்தனர். அவை என்னென்ன தெரியுமா?

                மயில்போலும் சாயல்கொண்ட அம்மகளிர், தூமணி விளக்கொடு தாம் அணிந்துள்ள அணிமணிகளும் சுடர்க்குழைகளும் மின்னி ஒளிவீச அழகான மாளிகையை மேலும் அழகு செய்தனர்.

                வாசனைப்பொடியாகிய சுண்ணத்தை எங்கும் தூவினர்;

              முளைப்பாலிகைகளை மேடைகள் தோறும் வைத்தார்கள்.

              மணமுடைய புண்ணிய நீர் நிரப்பப்பட்ட பொற்குடங்களை வரிசையாக மேடைகள்தோறும் வைத்தனர்.

                குழந்தை பிறந்ததும் பொன் முதலான பொருட்களை தானம் வழங்கி மகிழ்கிறார் தந்தை. அதுமட்டுமல்ல; சிவநேசச் செல்வரான அவர் சிவனடியார்களுக்கு இடையறாது அமுது செய்வித்த வண்ணம் இருந்தார். மற்றும் உடனிருந்தோர் அழகான மலர்மாலைகளை அவற்றில் மொய்க்கும் வண்டுகளுடன் சேர்த்துக் கட்டி ஆங்காங்கே தொங்கவிட்டனராம். பச்சிளம் மகவு பிறந்திருக்கும் இல்லத்திற்குக் காப்பாக வேம்பின் இலைகளை மாளிகையின் பகுதிகளில் ஆங்காங்கே செருகுவார்கள் சிலர். இதனை,

                ‘செம்பொன்முத லானபல தானவினை செய்வார்

              நம்பரடி யாரமுது செய்யநல முய்ப்பார்

              வம்பலர் நறுந்தொடையல் வண்டொடு தொடுப்பார்

              நிம்பமுத லானகடி நீடுவினை செய்வார்’ என்கிறார் புலவர்.

                வெண்கடுகு முதலான பண்டங்கள் சேர்த்துச் செய்யும் புகைகொண்டும், நெய், அகில் இவற்றின் புகையினைச் சேர்த்தும், பல வேள்விகள் செய்வதனால் எழும் புகையாலும் தெய்வமணம் கமழும் செயல்களைச் செய்கின்றனர். பின் மறைவிதிப்படி அக்குழந்தைக்கு ‘ஆளுடைய பிள்ளையார்’ எனத் திருநாமம் சூட்டி தொட்டிலில் இடும் சடங்கினைச் செய்தனர்.

                இவ்வாறு பத்துநாள் சடங்குகளை வருணித்து மற்றவைகளை நயத்துடன் சேக்கிழார் கூறும் அழகே அழகு. சிவபிரானின் திருவடிகளில் தாம் கொண்ட அன்பே அன்னை  பகவதியாரின் திருக்கொங்கைகளில் பாலாகச் சுரந்திட அதனைத் தன் திருக்குமாரனுக்கு அவர் உண்பித்தாராம்.

                பிறந்த குழந்தை வளர்வதனை இனி வரும் பாடல்களில் சேக்கிழார் உரைக்கிறார். பிள்ளைத்தமிழ்ப் பருவங்களனைத்தும் அழகுற வரிசைப்படுத்தப்பட்டு, சிலசொற்களோ, வரிகளோ, பாடல்களோ ஆயினும் கற்பனைநயம் மிகக் கூறப்படுகின்றன.

                சிவபிரான் திருவருளால் உதித்த குழந்தையாதலால், பலவிதமான காப்புகள் மிகையாகும், அவை தேவையில்லை எனக்கருதி அவை எதையும் விரும்பாது, குழந்தையின் நெற்றியில் திருநீற்றைப் பூசிக் காப்புச் சடங்கினைச் செய்தனர். “மந்திரமாவது நீறு,” எனப் புகழ்ந்து பாடப்போகும் ஞானக் குழந்தையல்லவா இவர்? இதனைவிடத் தகுதியான காப்பு வேறுண்டோ? இதனால் முதல்மாதத்தில் பாடப்படும் காப்புப்பருவம் கூறப்பட்டது.

                தமிழுடன் சைவமும் சிறப்புப்பெற வந்துதித்தவர் காழிப்பிள்ளையார் பெருமான். ஆகவே, அவரைப் பெரிதும் போற்றும்வண்ணம் தாயார் தன் மடித்தலத்தும், மணித்தவிசிலும், தூய்மையான விரிப்பைக் கொண்ட தொட்டிலிலும், மலர்ச் சயனத்திலும் கண்வளர்த்தி நாயகனைத் தாலாட்டி நலம்பல பாராட்டினார். ஏழாம் மாதத்தில் பாடப்படும் தாலப்பருவம் இவ்வாறு கூறப்பட்டது.

                ஆளுடைய பிள்ளையார் தவழத்துவங்கி, தமது தலையை மேலெடுத்து முகத்தை அசைத்துச் செங்கீரை ஆடினார். இதனைச் சேக்கிழார் பெருமான் அருமையான தமது கற்பனையை ஏற்றி, தற்குறிப்பேற்றமாகப் பொருள் நயத்துடன் பாடியுள்ளமை சுவைபட உள்ளது. இதனைத் தன்மையணி என்பர்.

                ‘வருமுறைமைப் பருவத்தில் வளர்புகலிப் பிள்ளையார்

              அருமறைக டலையெடுப்ப ஆண்டதிரு முடியெடுத்துப்

              பெருமழுவர் தொண்டல்லால் பிறிதிசையோ மென்பார்போல்

              திருமுகமண் டலமசையச் செங்கீரை ஆடினார்,’ என்கிறார்.

                வரிசையாக வரும் பிள்ளைப்பருவங்களுக்கு உரியவாறு வளர்ந்துவரும் ஆளுடைப் பிள்ளையார், ஐந்துமுதல் ஏழுமாத அளவில் செய்யும் குழந்தைகள் செய்யும் செங்கீரையாடலைச் செய்தார் என்பது நிகழ்வு. தலையை உயர்த்தி நோக்கிக் குழந்தைகள் தவழும்; காழிப்பிள்ளையார் சைவம் தழைத்தோங்க அவதரித்தவர். ஆகவே அவர் தலையெடுத்து நிமிர்ந்தது ‘அரிய வேதங்கள் தலை எடுக்கும்படிச் செய்யவே தலையணையிற் பதிந்த திருமுடியை மேலெடுத்தார்’ என்பது போன்றிருந்தது என்றார் சேக்கிழார். மேலும், தவழும் குழந்தை முகத்தைப் பக்கவாட்டிலும், மேலும் கீழும் அசைக்கும்; அது, ‘சிவபிரானுடைய தொண்டைத்தவிர பிறிதொன்றினையும் செய்யோம்’ என்பது போல இருந்தது என்கிறார்.

                அற்புதமான, பொருத்தமான கற்பனை!

                ஒன்பதாம் மாதம் ஆளுடைப் பிள்ளையார் சப்பாணி கொட்டுவதனைப் புலவர்பெருமான் பாடுகிறார். சப்பாணிப்பருவத்துப் பாடுபொருள் குழந்தையின் கைகள்தாம். “நாம் சைவமன்றி மற்ற பரசமயங்களை அறியமாட்டோம். ஆதலின் எம்மருகே வாராது தொலைவில் சென்றுவிடுங்கள்,” என்று கூறுவதுபோன்று சிறுகைகளை இணைத்துச் சப்பாணி கொட்டினாராம். “அளவுமீறி எம்மருகே வந்து தீங்கு விளைக்காமல், தூரத்தே சென்று விடுங்கள்,” எனக்கூறுவது போன்றிருந்ததாம். மேலும் கைகளைச் சேர்த்து ஒத்தியெடுத்துச் சப்பாணி கொட்டியது சிவபெருமானிடத்துப் பிற்காலத்தில் கைத்தாளம்பெற வேண்டியதனைப் போலும் இருந்ததாம்!

                ‘நாமறியோம் பரசமயம் உலகிலெதிர் நாடாது

              …………………………………………. புனிதன்பால்

              காமருதா ளம்பெறுதற் கொத்துவதும் காட்டுவபோல்

              தாமரைச் செங்கைகளினால் சப்பாணி கொட்டினார்.’ என்பது சேக்கிழார் பாடல்.

                இவையனைத்தும் சைவம் தழைக்க வந்துதித்த பிள்ளையாருக்கு சேக்கிழார் பெருமானின் பக்தியில் உதித்தெழுந்த கவியுக்தி செறிந்த கற்பனைகள்.

                தொடர்ந்து காழிப்பிள்ளையார் தவழ்தலைக் கூறியவர், அடுத்து வருகைப் பருவத்தைக் குறித்துப் பாடுகிறார். தவழும் குழந்தை எழுந்து தளர்நடை நடக்க விழைந்து தாயும் தந்தையும் மற்றோரும் வேண்டுவதனை அடுத்த பாடலில் விளக்கியருளுகிறார்.

                மறைக்குலத்தைச் சார்ந்த பெண்டிரும், தாதிமார்களும் பலவிதமாகக் குழந்தையை ‘எம்மிடம் வருக’வென அழைக்கின்றனர். “சீர்காழி நகர்வாழ் மக்களுக்கு சிறப்புச்செய்ய உதித்த செல்வமே!” என்றும், “கவுணிய குலத்தோரின் கற்பகமே!” என்றும் விளித்தனர். இவ்வாறு அழைத்தவர்களின் முகத்தை நிமிர்ந்து நோக்குகின்றார் காழிப்பிள்ளையார். அவருடைய திருமுகத்தில் குறுநகை மலர்ந்து பொலிகின்றது. காண்போர் உள்ளங்களும் பெரும்களி கொள்கின்றன.

                அது மட்டுமா?

                பத்துப் பதினொன்று மாதங்கள் நிரம்பிய சிறு மகவான பிள்ளையார், ஓடோடி வந்து தம் தாய் பகவதி அம்மையைத் தழுவிக் கொள்கின்றார்; புறம் புல்குகின்றார்; இறுக அணைத்துக் கொள்கின்றார். தாயின் உள்ளமும் உடலும் சோர, உணர்வு உருகிக் கரைய, பேரின்பம் பெருக்கெடுக்கின்றது. தம் பால் வந்த மகவினை அன்னையும் மற்றவரும் இவ்வாறெல்லாம் போற்றுகின்றனர்.

                ‘திருநகையா லழைத்தவர்தம் செழுமுகம்கண் மலர்வித்தும்

              வருமகிழ்வு தலைசிறப்ப மற்றவர்மேல் செலவுகைத்தும்

              உருகிமனம் கரைந்தலைய உடனணைந்து தழுவியும் முன்

              பெருகிய இன்புறவளித்தார் …………….’ என்கிறார் சேக்கிழார் பெருமான்.

                இங்ஙனம் குழந்தை செய்யும் செய்கைகளால் தாயும் மற்றோரும் எவ்வாறு இன்புற்றனர் எனச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

                பெரியாழ்வார் ஒருவரால் மட்டுமே பாடப்பட்ட பருவமான தளர்நடை நடப்பதையும் புலவர் பாடியுள்ளார். சைவம் தழைக்க வந்துதித்த பிள்ளையாரின் சிறப்பை ஒவ்வொரு பாடலிலும் சிறப்பாக எடுத்துரைத்துள்ளதொன்றே சுவையாக உள்ளது. கிளரும் ஒலியினைக் கால்களில் அணிந்த கிண்கிணிகள்  எழுப்புமாறு ‘கீழ்நெறிகளைக் காட்டும் சமயங்கள் தள்ளாடி நீங்கும்படி’, தனது திருமேனி அசையும் தோறும் தனது சுருண்ட குஞ்சியும் நெற்றியில் அலைய, தாமும் தளர்நடையிட்டு அருளினார் என்கின்றார்.

                வளர்ந்து வரும் குழந்தையைப் பாடும்போதில், ஆண்பால் பிள்ளைத்தமிழின் கடைசிப் பருவங்களான சிறுதேர், சிற்றில் ஆகியனவற்றையும் கூறாமல் இருக்க இயலுமா?

                அழகான சிறுதேரைப் பற்றிக் கொண்டு பிள்ளையார் உருட்டிச் செல்கிறார். மணலைக் கொழித்து, சிற்றில் எனும் சிறுவீடுகளை இழைத்து விளையாடும் பேதைச்சிறுமியர் இருக்குமிடங்கள்தோறும் ஓடியும் நடந்தும் சென்று அவற்றைக் காலால் தொடர்ந்து அழித்து விளையாடினார். இவ்வாறு விளையாடியதனால் மேனி முழுதும் வியர்வைத்துளிகள் அரும்பின. அதனுடன் திருநீற்றைப் பூசிய கோலமும் ஒருசேர வீதிமுழுதும் திருவொளி பரப்ப வளர்ந்து வந்தார் எனக்கூறி, ஆளுடைய பிள்ளையாரின் மழலைப் பருவத்தினை அழகுறப் பாடியருளியுள்ளார் சேக்கிழார் பெருமான்.

                ‘சிறுமணிதேர் தொடர்ந்துருட்டிச் செழுமணல் சிற்றில்களிழைக்கும்

              நறுநுதற்பே தையர்மருங்கு நடந்தோடி அடர்ந்தழித்தும்,

              குறுவியர்ப்புத் துளியரும்பக் கொழுப்பொடியா டியகோல

              மறுகிடைப்பே ரொளிபரப்ப வந்து வளர்ந்தருளும்……’ என்பது பாடல்.

                பிள்ளைத்தமிழின் இனிமையை, சுவையைக் கொண்டிலங்குகின்றன இப்பாடல்கள் என்பது மிகையேயில்லை!

    ————————-

                பிள்ளையைத் தமிழால் பாடுவது எனும் பொருளில் அமைந்தது பிள்ளைத்தமிழ் என்னும் தனித்தன்மை வாய்ந்த ஒப்பற்றதொரு சிற்றிலக்கியம். இறைவி, இறைவன், பெரியோராகிய இறையடியார்கள், வள்ளல்கள், அரசர்கள், ஆசிரியர்கள் ஆகியோருள் ஒருவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு கற்பனை பலவற்றை அமைத்து இச்சிற்றிலக்கியம் பாடப்படும். இவர்களின் அரும்பெரும் செயல்களை காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை எனும் ஆண்பால் பிள்ளைத்தமிழின் பத்துப் பருவங்களில் நயமாக இணைத்துப்பாடி மகிழ்ந்தனர் புலவர்கள்.

                ‘குழவி மருங்கினும் கிழவதாகும்,’ எனத் தொல்காப்பியம் இதற்கு இலக்கணம் வகுக்கின்றது. தொல்காப்பியத்திற்குப் பின் 1000 ஆண்டுகள் கழித்து, 9-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெரியாழ்வார், கிருஷ்ணனைக் குழந்தையாக்கி ‘திருமொழி’ பாடினார். மேற்கூறிய பருவங்களுள் பல இதில் நயமுறப் பாடப்பட்டுள்ளன. இதுவே பிற்காலத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது எனலாம்.

                இருப்பினும் இடைப்பட்ட காலத்தில், 6- 11ம் நூற்றாண்டுகளில் பெரும்வளர்ச்சியடைந்த சைவ, வைணவ சமயநூல்களிலும் அக்கடவுள்களின் மீதோ அல்லது அரசர்கள்மீதோ, தனிப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடப்படவில்லை. சைவம் சிவபிரானையே முழுமுதற் கடவுள் எனப்போற்றினாலும், அவன் ஒரு தாய் வயிற்றிற் பிறவாத பிறப்பிலிப் பெருமான் ஆதலால் அவன்மீது பிள்ளைத்தமிழ் பாடலாகாதென்பது நியதி; ஆகவே சைவசமயக் குரவர்கள் எவரும் பிள்ளைத்தமிழ் பாடவில்லை.

                இக்காலத்தையடுத்து முதன்முதலாக ஒரு பிள்ளைத்தமிழ் நூல் மன்னன் அநபாயசோழன் எனும் இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டுள்ளது. இவர்கள் காலம் 12-ம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். குலோத்துங்கனின் அவையை அலங்கரித்த அவனுடைய அமைச்சரும், சைவ அடியாருமான சேக்கிழாரால் இதே காலகட்டத்தில் பெரியபுராணம் இயற்றப்பெற்றுப் பெரும்புகழையும் சிறப்பையும் அடைந்தது.

                ஒட்டக்கூத்தர் எனும் பெரும்புலவரின் ‘குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்’ எனும் நூலின் நயத்தில் ஆழ்ந்ததனாலோ என்னவோ, சேக்கிழார் பெருமானும் தாமியற்றிய திருத்தொண்டர் புராணமெனும் பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர் வரலாற்றைப் பாடும்போது அதில் சம்பந்தர் எனும் குழந்தை அவதரித்து பிள்ளைத்தமிழின் பருவங்களுக்கேற்ப அழகாக நன்கு வளர்ந்ததனை 27 பாடல்களில் மிக அழகாக வருணனை செய்துள்ளார். அதுவே நாம் மேற்கண்ட செய்திகளாகும்.

                இங்கு ஒரு கருத்தைச் சிறிது ஆழ்ந்து நோக்க வேண்டும். சேக்கிழார் பெருமான் ஒட்டக்கூத்தர் காலத்தவர். அதே அரசவையில் அமைச்சராக இருந்தவர். ஒட்டக்கூத்தர் குலோத்துங்கனின்மீது இயற்றிய பிள்ளைத்தமிழின் தாக்கம், அச்சிற்றிலக்கியத்தின் பல கூறுகள் ஆகியன காழிப்பிள்ளையாரின் வளர்ப்பினை விவரிக்கும் பகுதியிலும் காணப்படுவது அருமையான ஒற்றுமை எனலாம். முறையாக எழுந்த முதல் பிள்ளைத்தமிழ் நூல் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழே. தம் காலத்துச் சக புலவர் ஒருவரைப் போற்றும் விதமாகவும் அவர் பாடிய முதல் சிற்றிலக்கிய நூலொன்றின் கூறுகளைத் தாமியற்றிய காப்பியத்திலும் இணைத்தது சேக்கிழார் எனும் புலவர்பெருமானின் பெருந்தன்மையைச் சுட்டுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. திருஞானசம்பந்த நாயனார் புராணத்தில் நிகண்டுகள் வகைப்படுத்தும் பிள்ளைத்தமிழின் பருவங்களான, காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, வருகை, சிற்றில், சிறுதேர் இவற்றுடன் இடையே விரவி வரும் சில பருவங்களான அன்னையை அணைத்துக் கொள்ளுதல், புறம் புல்குதல், தளர்நடை நடத்தல் ஆகிய பருவங்களும் காணப்படுகின்றன. இப்பருவங்கள் ஒன்பதாம் நூற்றண்டுக் காலத்தவரான பெரியாழ்வார் ஒருவரால் மட்டுமே பாடப்பட்ட பருவங்களாகும் (இவை நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் உள்ளவை). ஆகவே சேக்கிழாருக்கு வைணவ இலக்கியங்களிலும் பரிச்சயம் இருந்தது எனக் கொள்ளலாமா?

                எது எவ்வாறாயினும், நாம் ஆன்மீகம் சார்ந்த இலக்கியங்களைப் படிக்கும்போழ்து அவற்றின் பொருட்சுவை, பக்திச்சுவை, கற்பனைவளம், சமகாலப் புலவர்களின் தாக்கம் ஆகியனவற்றை வியந்து பாராட்டாமல் இருக்கவியலாது. சேக்கிழார் பெருமானின் காப்பியத்துள் திகழும் சிற்றிலக்கியக் கூறுகள் இவை. இறையருள் ஒன்றினாலேயே இத்தகு புலமை கைகூடும் என்பது கண்கூடு!

                இதுதவிர, ஞானசம்பந்தப்பெருமான் மீது பிற்காலத்தில் ஐந்து பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன என அறிகிறோம்.

    1. திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்- திருவாவடுதுறை ஆதீனத்து மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ

                     மாசிலாமணித் தேசிக சுவாமிகள்- 17ம் நூற்றாண்டு.

    1. நால்வர் பிள்ளைத்தமிழ்- காரைக்குடி ராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார்
    2. திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்- தணிகைமணி செங்கல்வராய பிள்ளை.

    மற்ற இரண்டினைப் பற்றிய செய்திகள் கிட்டவில்லை.

                பிள்ளைத்தமிழின் கூறுகளைக் கொண்டமைந்த சேக்கிழார் பெருமானின் இப்பெரியபுராணப் பாடல்கள் பிற்காலப் பிள்ளைத்தமிழ் நூல்களில் காணும் சொல்நயம், கருத்துவளம், கற்பனை அனைத்திலும் சிறந்து விளங்குகின்றன எனக் கண்டோம்; மகிழ்ந்தோம்.

                தென்னாடுடைய சிவனே போற்றி!

                எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

                                                    ————–

    ஆய்வுக்கு உதவிய நூல்கள்:

                பன்னிரு திருமுறைகள்: பெரிய புராணம்- வர்த்தமானன் பதிப்பகம், சென்னை. 1998.

    Share
  • பெட்டையும் முட்டையும்!

    மீனாட்சி பாலகணேஷ்

    முருகன் குறிஞ்சிமலையின் தலைவன்; அந்நிலத்துக்கு இறைவன். இருப்பினும் ஐவகை நிலங்களிலும் முருகப்பெருமான் செய்த விளையாடல்கள் பற்றிய அழகான பாடல்களைப் பிள்ளைத்தமிழ் நூல்களில் நாம் கண்டுகளிக்கலாம்.

    முருகனின் திருவிளையாடலாகப் பாலைநிலத்தில் நடைபெற்ற ஒரு அழகான கதை!

    panpoli

    துறையூரைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் பொய்யாமொழியார்; இவர் பராசக்தி அன்னையையே பாடுபவர்; வேறு தெய்வங்களைப் பாடவே மாட்டார். முருகன் இவரிடம் தன்மீதும் தமிழ்க்கவிபாடும்படி கேட்க, “பெட்டையையும் பாடி முட்டையையும் பாடுவேனோ?” எனக்கூறி மறுத்துவிட்டார். இப்புலவர் ஒருமுறை மதுரைத் தமிழ்ச்சங்கத்தினைக் காக்கவேண்டிப் புறப்பட்டு மதுரை நோக்கிச் சென்றார். இப்படிப்பட்ட வாய்ப்பிற்காகக் காத்திருந்த முருகன் அவர் செல்லும் காட்டுவழியில் ஒரு வேடச்சிறுவனாக உருக்கொண்டு புலவரை வழிமறித்தான். “நானொரு புலவன்,” எனப் பயந்தவண்ணம் கூறிய புலவரிடம், ஒரு கவிதை பாட வேண்டினான் கள்ளச்சிறுவன். ‘நமது உயிருக்கு இவனால் ஆபத்தில்லை; தமிழின் அருமை உணர்ந்த கள்ளன் போலும்!’ என மகிழ்ந்த புலவரிடம், “என்மீது சுரம்போக்காக ஒரு கவி பாடுக,” என்றான் வேட்டுவச் சிறுவன். “உன் பெயரென்ன அப்பா?” எனக்கேட்ட புலவரிடம், முன்பு அவர் கூறியதனை நினைவில் கொண்டு, “என் பெயர் முட்டை,” என்றான் குறும்புக்காரக் குமரன். புரிந்துகொள்ளவில்லை புலவர் பெருமகனார்!

    சுரம்போக்குத் துறையாக ஒரு பாடலைப் பாடினார்.

    ‘பொன்போலும் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே

    என்பேதை செல்லற் கிசைந்தனளே- மின்போலு

    மானவேள் முட்டைக்கு மாறாய தெவ்வர்போங்

    கானவேள் முட்டைக்குங் காடு.’

    அதாவது கள்ளிச்செடியின் பொன்போன்ற நெருப்புப்பொறி பறக்கும் கானலாகிய சுரத்தே (பாலைநிலத்தே) தலைவனுடன் பேதைப்பெண் செல்ல விரும்பினாளே! அது எப்படிப்பட்ட பாலை நிலம் தெரியுமா? மின்னலைப் போன்ற ஒளிவீசும் வேலினை ஏந்திய முட்டை என்பவனுடைய பகைவர் அவனிடம் தோற்றோடுகின்றனர். அங்ஙனம் ஓடும்போது காட்டிலுள்ள கருவேலமரத்து முட்கள் அவர்கள் பாதங்களில் குத்தி வருத்தும் தகைமைத்தது இக்காடு என்பது பொருள்.

    Poyyamozhi-pulavar-_-murugan-Encounter

    வேடச்சிறுவனாக வந்த முருகன் இதில் பொருட்குற்றம் உள்ளதெனக் கூறினான். வெட்டிப்போட்டாலும் காயாத வேலமுள் நாள்பட்டுக் காய்ந்துவிடும் இயல்பு கொண்டது. அப்படிப்பட்ட முள் கள்ளி வெந்து பொறியாகப் பறக்கும் பாலையில், பச்சையாக வேகாமல் இருந்து காலில் தைக்கும் எனக்கூறுவது பொருந்துமோ? (காய்ந்து உலர்ந்து வெந்தமுள் குத்தவியலாது) ‘இப்படிப்பட்ட பொருட்குற்றம் உடைய பாடலைப் புலவராகிய நீர் பாடலாகுமோ?’ என்றான் வேடச்சிறுவன். பொய்யாமொழியார் பேச்சற்றுத் திகைத்து நின்றார்.

    “நான் பாடுகிறேன், நீர் கேளும்,” எனப் பாடலானான் சிறுவன்:

    ‘விழுந்ததுளி யந்தரத்தே வேமென்றும் வீழின்

    எழுந்த சுடர்சுடுமென் றேங்கிச்-செழுங் கொண்டல்

    பொய்யாத கானகத்திற் பெய்வளையுஞ் சென்றனளே

    பொய்யா மொழிப் பகைஞர் போல்.’

    ‘மேகத்திலிருந்து விழுந்த மழைத்துளியானது தரையை அடையும் முன்பே பாலைவனத்தின் வெம்மையால் ஆகாயத்திலேயே வெந்து ஆவியாகிவிடும்; அம்மேகம் தாழச் சென்றாலோ பாலையினின்று எழும் வெப்பம்- நெருப்பு- தன்னைச் சுட்டுவிடும் என்றும் ஏக்கம்கொண்டு மேகம் ஒருகாலத்திலும் மழைபொழியாது: அத்தகைய கொடிய பாலைவனக் காட்டினிலே கையில் வளையலணிந்த பெண் தனது தலைவனுடன் சென்றாளே! அது பொய்யாமொழிப் புலவர் எனும் பகைவரின் செயல் போலுள்ளதே!’ எனப்பாடி, பெட்டை- முட்டை பற்றிய நினைவினைப் புலவருக்கு வரச்செய்து மறைந்தான் வேடச்சிறுவனாக வந்த முருகப்பிரான்.

    14512160555_9aaac54115_b

    வரகவி மார்க்கசகாயதேவர் தாமியற்றிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

    ‘எனது பெயர் முட்டையெனப் பாடும்,’ என்று சிறுவன் கூறியபோதிலும் கருத்துணராத புலவர் ‘பொன்போலும்,’ எனப்பாடினார். “இது வெம்மையான பாலைநிலத்திற்குப் பொருந்தாது. உம்பெயர் என்னவென்று கூறும்,” எனக்கேட்டு ‘விழுந்ததுளி’ என அவர்மீது ஒரு பாடலைப் பாடிய முருகனே! அதுகேட்டு ஐயமுற்ற புலவர் ‘நீ யார் அப்பா?’ என வினவ, உன் அழகுத் திருவுருவைக் காட்டி, புலவரின் நாவில் உன் வேல்கொண்டு பொறித்து மறைந்த முருகப்பெருமானே! அறிவிற் சிறந்த சதுரனே!” என முருகப்பிரானை வாழ்த்தி அவனைச் சப்பாணிகொட்ட வேண்டுகிறார் புலவனார்.

    ‘பொய்யா மொழிப்புலவர் மதுரையிற் சங்கம்

    புரக்கவெழு நாள்மறவனாய்

    புறவற வளைத்தெனது பெயர்முட்டை பாடெனப்

    பொன்போலு மென்றுபாட

    வெய்யான பாலைக்கி தேலாது நும்பெயர்வி

    ளம்பென…’

    (திருவிரிஞ்சை முருகன் பி. த.- சப்பாணிப்பருவம்- வரகவி மார்க்க சகாய தேவர்)

    இதே கருத்தினை கவிராச பண்டாரத்தையா அவர்களும் தாமியற்றியுள்ள திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் சிறுபறைப்பருவப் பாடலொன்றில் குறிப்பிட்டுள்ளது வியப்பினையளிக்கின்றது.

    ‘மக்கள் நடமாட்டமற்ற சுரமாகிய பாலை நிலத்தில் பொய்யாமொழிப்புலவருக்கு முன்பு தோன்றி அவர்பாடிய பாடலில் குற்றங்கண்டு பின்பு நீயொரு செழுங்கவிதை பாடினாய்!’ என்கிறார் பண்டாரத்தையா. அத்தகைய முருகனை, மறைகள் முழங்கும் திருமலையிலுறைபவனைச் சிறுபறைகொட்ட வேண்டுகிறார்.

    மருவாத பாலையில் பொய்யா மொழிக்குமுன்

    வந்தொரு செழுங்கவி தையு

    ………………………………………………

    செழுமறை முழக்கமுறு திருமலை யருட்குமர

    சிறுபறை முழக்கியருளே.

    (திருமலை முருகன் பி. த.- சிறுபறைப்பருவம்- கவிராச பண்டாரத்தையா)

    எத்தனை விதமான நயங்கள்! அழகுகள்; கற்பனைகள். பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் நற்றமிழின் இனிய வளங்களைக் காட்டி மகிழ்விக்கும் இலக்கியச் சுரங்கங்கள் அல்லவோ?

    மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)

    {முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,

    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,

    தமிழ்த்துறைத் தலைவர்,

    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்,

    கோயம்புத்தூர்- 21.}

    ************

    Share
  • ஆய்ச்சியர் மத்தொலி

    -மீனாட்சி பாலகணேஷ்

    தொல்காப்பியம் மாயோனாகிய திருமால், சேயோன் எனப்படும் முருகன், வேந்தன் எனப்படும் இந்திரன், வருணன் ஆகியோரை நானிலத் தெய்வங்களாகக் காட்டுகின்றது.

    மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்,
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்’  (தொல்காப்பியம்- அகத்திணையியல் –  பொருளதிகாரம்)

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களையும் அவை பற்றிய செய்திகளையும் பாடல்களில் இணைத்துக் கூறுவதுண்டு என முன்பு கண்டோம். முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பிள்ளைத்தமிழ் நூல்களில் குறிஞ்சிநிலம் பற்றிய செய்திகள் பெரிதளவில் பேசப்பட்டுள்ளன. பாட்டுடைத்தலைவன், தலைவியின் நாட்டு வளத்தைப் போற்றிவரும் பாடல்களில் வயல்சூழ்ந்த மருதநிலம், கடற்புறமான முத்துக்கள் விளையும் நெய்தல்நிலம், ஆகியன மிக விரிவாக விளக்கப்படுகின்றன எனக் கண்டோம். முல்லை, பாலை நிலங்கள் தொடர்பான செய்திகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. திருமால் பற்றிய பிள்ளைத்தமிழ் நூல்களிலும் முல்லைநிலம் பற்றிய வருணனைகளும் பாடல்களும் காணப்படவில்லை என்பது வியப்பையளிக்கின்றது. இக்கட்டுரையில் முருகப்பிரானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட பிள்ளைத்தமிழ் நூலொன்றிலிருந்து முல்லைநிலத்தின் வளத்தினைப் பற்றிய ஒரு பாடலைக் காண்போம். சிதம்பர அடிகளார் இயற்றியுள்ள திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழின் சிறுபறைப் பருவப் பாடலிது.

    அழகான திருப்போரூர் முல்லைநிலங்கள் செறிந்தவூர். meenatchi1இவ்வூரின்கண் பலவிதமான ஒலிகள் எப்போதும் எழுந்த வண்ணமாக உள்ளன. தயிரின் முடைநாற்றம் கமழும் மெல்லிய உருவம் கொண்ட இடைப்பெண்களின் மத்துக்கள் அவர்கள் தயிர் கடையும் கலங்களில் முழங்கும் ஒலி ஒருபுறம் கேட்கிறது; பசுக்களின் கூட்டங்கள் தம் கன்றுகளை நினைத்தமட்டிலேயே அழகான குடம்போலும் மடித்தலத்திலுள்ள பாலைச் சுரந்து கன்றுகளை எண்ணிக் கத்தும் முழக்கமும் மிகுதியாகக் கேட்கின்றது.

    இசையமைந்த துளைகளினூடே விரல்களைப் பொருத்திப்பிடித்து தொறுவர்கள் எனப்படும் இடையர்கள் ஊதும் புல்லாங்குழலோசையும்  கேட்கின்றது. பலவிதமான நிறங்கள் கொண்ட காட்டுக்கோழிகள் முறைமுறையாக நின்று நெருங்கிக் கூவும் ஓசையும் எழுந்தவண்ணம் உள்ளது.

    செழித்து விளைந்து மலர்ந்த செம்முல்லை மலர்களில் வரிவண்டுகள் அமர்ந்து விளரிப்பண்ணை இசைக்கும் அழகிய இனிய முழக்கமும் கேட்கின்றது. காலை விடியற்போதில் எழும் கடலின் ஒலியைப்போல இந்தப் பலவகை முழக்கங்களும் மிகுதியாக எழுகின்ற தன்மை கொண்டது இப்போரூரின் முல்லைநிலங்கள்.

    அம்முல்லை நிலத்தில் வாழ்பவனும் ‘குளமலி கண்ணனா’கிய சிவன் தந்தருளியவனுமான முருகப்பெருமானை, “முருகா, நீ சிறுபறை கொட்டுக! முத்தமிழினை மெத்த வளர்த்தவனே! சிறுபறை கொட்டுக!”- என வேண்டுவதாக அமைந்த பாடல்.

    ஒருவரைப் பற்றிக் கூறும்போது அவர் புகழ்வாய்ந்த குடும்பப் பின்னணி உடையவராயின் அவர் பெற்றோர், மற்ற உறவுமுறைகளைக்கூறி அவரைப் பெருமைப்படுத்துவது வழக்கம். அதுபோன்றே இப்பாடலில் முருகனின் புகழ்வாய்ந்த தந்தையாகிய சிவபிரானின் புகழையும் விளக்கியுள்ளார் புலவர். குலம்- குடிப்பெருமை கூற ‘குளமலி கண்ணன் தரும் இறை’ எனச் சிலசொற்களையே கூறுகிறார். குளம் = நெற்றி; அலிகம்- நெற்றி. நெற்றிக்கண்ணனாகிய சிவபெருமான் தந்தருளும் முருகக்கடவுள் என்கிறார்.  வேறென்ன பெருமை வேண்டும் முருகனுக்கு? அவனும் தன் பங்கிற்கு முத்தமிழையும் தனது பெற்றோரைப்போல் தொடர்ந்து வளர்த்து அருளுபவன் அல்லவா?

    “அளைகடை முடைகது வியதளிர் வடிவத்
    தாய்ச்சியர் மத்தொலியும்
    அங்குட மடிமுலை விம்மிக் கன்றுளி
    ஆன்நிரை கத்தொலியும்
    ……………………………………
    …………………………முல்லைக்
    குளமலி கண்ணன் தருபோ ரூரிறை
    கொட்டுக சிறுபறையே” (திருப்போரூர் முருகன் பி. த.- சிறுபறைப்பருவம்- சிதம்பர அடிகள்)

    முல்லைநிலத்திற்கான பண் ‘விளரிப்பண்’ என்பது இதிலிருந்து பெறப்படுகின்றது. ஆனால் தமிழிசை மரபுப்படி விளரிப்பண்ணானது மருதநிலத்துக்கு உரிய பண்ணாகும். வண்டுகளின் ஒலியே விளரிப்பண் என அறியப்படுகின்றது. இவ்வாறு திணைமயங்கி வருவதும் ஓர் இலக்கிய உத்தியாகக் கருதப்படுகிறது.

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்மானைப் பருவத்துப் பாடலொன்றில், ‘விளரிப் பண்ணைப் பாடுகின்ற வண்டுகள் முழங்குகின்ற கூந்தலையுடைய கொடி போன்றவளே!’ என அன்னை விளிக்கப்படுகிறாள்.

    ‘விளரிமி ழற்றருளி குமிறுகு ழற்கொடி.’

    இப்பாடலில் புல்லாங்குழலை இடையர்கள் வாசிக்கும் முறை நுட்பமாகக் கூறப்பட்டுள்ளது. மூங்கிற்குழலில் அமைக்கப்பட்ட துளைகளில் (இசைக்கேற்ப) விரல்களை மாற்றிமாற்றிப் பொருத்தி (அவற்றை மூடியும் திறந்தும்) இசைக்கிறார்கள் என விளக்கமாகக் கூறியுள்ளமுறை நயக்கத்தக்கது. இவ்வாறு நுணுக்கமான நயங்களை ஆங்காங்கே தாமியற்றியுள்ள பாடல்களிலும் நூல்களிலும் பொருத்திப் பாடியுள்ளமையும் வியக்கத்தக்கது. ஆராய்ந்து கண்டெடுத்து படித்து நுகரவேண்டும்.

    ****

    அடுத்து குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்களையும் ஒரு தொடராக நயந்து பாடிய பாடலொன்றினை குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ் செங்கீரைப்பருவத்துப் பாடல்வாயிலாகக் காணலாம்.

    meenatchiகுமரன் குடிகொண்டுள்ள குறுக்குத்துறையெனும் ஊரானது பொருநை எனப்படும் தாமிரபரணி நதியினருகே அமைந்துள்ள அழகியதோர் ஊராகும். குமரனெனும் குழந்தையைச் செங்கீரையாட வேண்டிடும் புலவர், அப்பொருநை நதியின் அலைமுழக்கிற்கியையச் செங்கீரையாட வேண்டுகிறார். அந்நதியின் பெருமையை விளக்க அது ஓடிச்செல்லும் பாதையை நயமுற விரித்துரைப்பதே இப்பாடல். வேதங்களிலும், புராணங்களிலும், இலக்கியங்களிலும், வரலாற்றிலும் உயர்வாகப்பேசப்படும் நதி தாமிரபரணியாகும்.

    தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு
    முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல்,
    என்றும் அவன் உறைவிடம் ஆம்; ஆதலினால்,
    அம்மலையை இறைஞ்சி ஏகி,
    பொன்திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
    திரு நதி………’ எனக் கம்பராமாயணமும் போற்றுகிறது.

    ‘தெற்கேயுள்ள தமிழ்நாடான பாண்டியநாட்டுப் பகுதியில் அகன்ற பொதியமலையில் நிலைபெற்ற சிறந்த அகத்தியமுனிவனது தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தால், அது எப்போதும் அம்முனிவன் வாழும் உறைவிடமாகும். அம்மலையை வணங்கிச் சென்றால் அப்பால், பொன்துகள்கள் நிரம்பிய நீர் பெருகும் பொருநை எனும் திருநதியைக் காண்பீர்கள்,’ என சுக்கிரீவன் கூறுவதாக அமைந்த பாடல்.

    பொதிகை மலையின் உச்சியினின்றும் குதித்து இறங்கி ஓடிவரும் நதி, முதலில் தினைப்புனங்கள் நிரம்பிய மலைகள் சார்ந்த குறிஞ்சிநிலத்திற்கு வளங்களைச் சேர்க்கின்றது. பிரம்மாவின் மகனான புலத்திய முனிவரின் மகனாகிய அகத்தியரின் பெருமையை உலகிற்கு அறிவிக்கின்றது இப்பொருநை நதி.

    எவ்வாறு?

    பெருமை வாய்ந்த உயர்ந்த முனிவர்களுள் அகத்திய முனிவர் முதன்மையானவராவார். அகத்தியர்meenatchi2 கைக்கமண்டலத்தைக் காக வடிவில் வந்த விநாயகன் தட்டி விட்டதனால் சிந்திய நீரினின்றும் உற்பத்தியானவள் காவிரி நதியாள்*. தம்முடைய கமண்டலத்தில் அடைபட்டிருந்த நீரை, பூமி செழித்து வளம் பெறவேண்டும் என்பதற்காக, அகத்தியர் தாமே உவந்து திருவுள்ளங்கொண்டு கவிழ்த்ததனால் தாமிரபரணி என அறியப்படும் தண்பொருநை* நதியாள் பெருகியோடினாள் எனக் கூறப்படுகிறது. அது மட்டுமின்றித் தன்னில் வந்து நீராடுவோருக்கு, அவர்களுடைய பாவங்களைக் களைந்துவிடும் தன்மையும் கொண்டவள் அவள். பின்பு பெருமை சேர்ந்த காடுசார்ந்த இடமாகிய முல்லைநிலங்களின் வழியாக, அவற்றின் வளங்களைக் கண்ணுற்றபடி செல்கின்றாள்.

    அடுத்து, பலவிதமான பயிர்கள் விளைவிக்கப்பட்டுள்ள வயற்பிரதேசமாகிய மருதநிலத்தில் புகுந்து உலவிச் செல்கிறாள் தாமிரபரணியாள். அவ்வாறு உலவுங்கால், அகன்று விரிந்து வயல்களில் நீரெனத் தேங்கி, நெல்லினை விளைவித்தும் மகிழ்கிறாள்; குமரியெனக் குதிநடை போடாமல் அடங்கி மென்னடை நடந்து ஸ்ரீவைகுண்டம் எனும் புண்ணியத் தலத்தைச் சேர்ந்து வழிபடுகிறாள்; பின்பு அங்கிருந்தும் நீங்கி கடல்சார்ந்த நெய்தல் நிலத்தில் புகுகிறாள் அவள். அங்குகுழை எனப்படும் ஒருவகை நெய்தல்நில மலரில் புகுந்து தங்கியிருந்து இளைப்பாறுகிறாள். பின் எழுந்து உருண்டுபுரண்டு ஓடுபவள் அழகிய கடலின் கரங்களால் அரவணைத்துக் கொள்ளப்படுகிறாள். இவ்வாறு பெருமை கொண்ட நதியான தண்பொருநையின் முழக்கத்திற்கு இசைவாக நீயும் நயமாக செங்கீரை ஆடிடுவாயாக! குறுக்குத்துறை நாதனான குமரனே! செங்கீரையாடுக! என வேண்டுகிறார் புலவர்.

    தண்பொருநையான தாமிரபரணியின் பாதையை இயற்கையின் இனிய காட்சிநயத்துடன் விளக்கும் பாடல்.

    பொதிகைப் பொருப்பின் குதித்திறங்கிப்
    புனஞ்சேர் குறிஞ்சி வளம்பெருக்கிப்
    புலத்தி யன்றன் சுதன்பெருமை
    புவிக்கே காட்டித் தனைச்சேர்ந்தார்
    ………………………………………………
    நதியாம் பொருநை யலைமுழக்கில்
    நயந்தா டிடுக செங்கீரை
    நலமார் குறுக்குத் துறைநாதா
    நன்கா டிடுக செங்கீரை.

    (புலத்தியன் தன் சுதன்- புலத்திய முனிவரின் மகனான அகத்தியர்)

    (குறுக்குத்துறை குமரன் பி. த.- செங்கீரைப்பருவம்- வித்துவான் தி. சு. ஆறுமுகம் எனும் சிவதாசன்)

    *நதிகளைப் பெண்ணெனக் குறிப்பிடுவது நம் நாட்டு வழக்கு.

    ***************

    ஆய்வுக்கு உதவிய நூல்கள்:

    1. திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிதம்பர அடிகள்
    2. குறுக்குத்துறை குமரன் பிள்ளைத்தமிழ்- சிவதாசன்.

    *****

    கட்டுரையாளர்
    முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
    கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
    நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
    தமிழ்த்துறைத் தலைவர்

     

    Share