Tag: செண்பக ஜெகதீசன்

  • குறளின் கதிர்களாய்…(7)

      செண்பக ஜெகதீசன்ifish

     

    வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந்

    தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.

                                          -திருக்குறள்- 931 (சூது)

     

    புதுக் கவிதையில்…

     

    துடிக்கும் புழுவது தூண்டிலில்,

    கிடைத்தது உணவெனப் பாய்ந்தே

    எடுத்து விழுங்கிடும் மீனுக்கு

    எமனும் அதுதான்..

     

    இதுதான் கதை

    வென்றிடுதல் சூதாட்டத்தில்

    என்பதுவும்..

     

    அதனால்,

    வேண்டாம் வேண்டாம்

    சூதாட்டம்-

    வென்றாலும் வேண்டாம்…!

     

    குறும்பாவில்…

     

    சூதினிலே வெற்றியது,

    மீன்பிடிக்கும் தூண்டிற்புழுதான்..

    மறந்திடு சூதை…!

     

          மரபுக் கவிதையில்…

     

    தூண்டிற் புழுவை இரையெனவே

    துரத்திப் பிடித்து விழுங்கியேதான்

    மாண்டு போகும் மீனினமே,

    மண்ணில் மனிதன் கதையிதுதான்,

    வேண்டாம் இந்தச் சூததுவும்,

    வெற்றி யதிலே வருவதெல்லாம்

    தூண்டிற் புழுவின் வடிவினிலே

    வந்திடும் துன்பம் மறவாதே…!

     

    லிமரிக்…

     

    வேண்டாம் சூதாட்டம் எழு

    உன்னையே ஏற்றிடும் கழு,

    வென்றாலும் வதையிது

    வெற்றியின் கதையிது-

    மீன்விழுங்கும் தூண்டில் புழு…!

     

    கிராமிய பாணியில்…

     

    தோத்தாலும் செயிச்சாலும்

    தோதுப்படாது சூதாட்டம்,

    தாதகப்பஞ் சொல்லக்கேளு

    தருமராசா கதயக்கேளு..

     

    சூதுலதான் செயிச்சாலும்

    சோகப்படாது ஒருநாளும்,

    தூண்டுலுல புழுவப்பாத்து

    தூண்டுலோட தின்னமீனு

    துடிச்சிச்சாவும் கததானே..

     

    அதாலே,

    தோத்தாலும் செயிச்சாலும்

    தோதுப்படாது சூதாட்டம்,

    வேதனயா சென்மத்துக்கும்

    செத்தமீனு கதவேண்டாம்,

    தாதகப்பஞ் சொல்லக்கேளு

    தருமராசா கதயக்கேளு…!

     படத்துக்கு நன்றி

       http://www.clipartof.com/portfolio/anortnik/illustration/fish-caught-on-a-fishing-pole-92573.html

    Share
  • அப்படித்தான்…


     செண்பக ஜெகதீசன்rainbowx

    மழைக்காகக் காத்திருந்தேன்,

    மழை வரவில்லை..

     

    அழகாய் வந்தது,

    ஆகாயத்தில் வானவில்..

     

    அப்படித்தானிருக்கும்

    ஆண்டவன் வரவும்…!

     

    படத்துக்கு நன்றி

    http://rainbowwallonline.wordpress.com/

    Share
  • வெல்லவைக்கும் வேலன்…

     

     ‘வெல்ல வைக்கும் வேலன்’ திரு செண்பக ஜெகதீசன் அவர்களின் வல்லமைக்கான 100 வது படைப்பு. வாழ்த்துக்கள். தொடர்ந்து இன்னும் பல நூறு கவிபாடி அனைவரையும் மகிழ்விக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    அன்புடன்

    ஆசிரியர்

     

    செண்பக ஜெகதீசன்vel-images

    அலைவந்து பாடுதடி

    அறுமுகனின்  பேர்சொல்லி – அழகுச்

    சிலைவடிவில் அருள்தருவான்

    சிவன்மகன்தான் செந்திலிலே…

    (அலைவந்து..)

     

    நிலையில்லா வாழ்வினிலே

    நிலைத்திருப்போன் அவனல்லவா,

    விலைமதிப்பு ஏதுமில்லா

    வேலுமணி அவனல்லவா…

    (அலைவந்து..)

     

    சந்தனத்தில் குளிக்கின்றான்

    சவ்வாது பூசிடுவான்,

    அந்திவானச் சந்திரன்போல்

    அருளொளிதான் தந்திடுவான்..

    தந்தைகுரு அவனல்லவா

    தந்தையும்தான் சிவனல்லவா,

    வந்தனைகள் செய்வோர்க்கே

    வரமருளும் குகனல்லவா…

    (அலைவந்து..)

     

    கூடிவரும் பக்தரெல்லாம்

    கும்பிட்டுப் பலன்பெறுவார்,

    தேடிவந்த பொருள்பெறுவார்

    தெய்வத்தின் அருள்பெறுவார்,

    வேடிக்கைக் கதையில்லை,

    வெல்லவைப்பான் வேலவன்தான்

    எல்லையில்லாக் கருணையாலே…

    (அலைவந்து..)

    படத்துக்கு நன்றி

        http://pillaiyar.blogspot.in/2012/11/blog-post.html                       

    Share
  • குறளின் கதிர்களாய்…(6)

     

    செண்பக ஜெகதீசன்

     

     

    தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

    நாவினாற் சுட்ட வடு.

        -திருக்குறள்- 129 (அடக்கமுடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    தீபட்ட புண்ணதுவும்

    தீதின்றி ஆறிவிடும்

    தொடர்ந்து நீ மருந்திட்டால்..

     

    தீயொத்த கொடுஞ்சொல்லால்

    பட்ட வடு

    போகாதே வாழ்நாளெல்லாம்…!

     

    குறும்பாவில்…

     

    தீப்புண் ஆறிடும் விரைவில்,

    மாறுவதில்லை

    சுடுசொல் சுட்ட வடு…!

     

             மரபுக் கவிதையில்…

     

    எரியும் நெருப்பு மேனியிலே

    எங்கே படினும் புண்ணாகும்,

    எரியும் வேதனை குறைந்திடவே

    எடுக்கும் மருந்தில் குணமாகும்,

    சரியாய்ப் பிறரைப் புரியாமல்

    சொல்லும் கொடிய சுடுசொல்லால்

    பெரிதாய்ச் சுட்ட வடுவதுதான்

    போவ தில்லை இதயத்திலே…!

     

    லிமரைக்கூவில்…

     

    விரைவில் ஆறிடும் தீக்காயம்,

    வன்சொல்லாய் வந்ததுதான்  மாறாமல்

    வடுவாய் நிலைத்திடும் நாக்காயம்…!

     

    லிமரிக்…

     

    புண்ணாகும் தீயினில் தொட்டால்,

    போய்விடும் மருந்ததில் விட்டால்,

    உறவும் தேறாது

    வடுவும் மாறாது

    வார்த்தைத் தீயால் சுட்டால்…!

     

    கிராமிய பாணியில்…

     

    கிட்டப்போனா சுட்டுப்புடும்

    தொட்டுப்புட்டா வெந்துபோவும்

    பாத்து நடந்துக்கோ – தீயப்

    பாத்து நடந்துக்கோ..

     

    சுட்டுப்புட்டா சோந்திடாத

    கட்டுப்போட்டா ஆறிப்போவும்

    காயமெல்லாம் மாறிப்போவும்..

    ஆனாலும்,

    பாத்து நடந்துக்கோ – தீயப்

    பாத்து நடந்துக்கோ..

     

    நாக்குசுட்டா ஆறாதய்யா

    அந்தவடுவு மாறாதய்யா

    ஆயிசுக்கும் போவாதய்யா..

    அதாலே,

    பாத்துப் பேசிக்கோ- நல்லதா

    பாத்துப் பேசிக்கோ…!

     

     

    Share
  • வாழ்விலே…

     

    செண்பக ஜெகதீசன்

     

    உறக்கம்-

    ஓய்வின் மொழி,

    உய்வின் வழி..

     

    கனவின் களம்,

    கனிந்திடும் உளம்..

     

    வாழ்வின் பகுதி,

    வாழ்வே அதுவல்ல..

     

    அதுவானால்,

    இல்லை வாழ்வே…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(5)

     

    செண்பக ஜெகதீசன்

     

    இனிய உளவாக இன்னாத கூறல்

    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

    -திருக்குறள்-100 (இனியவை கூறல்)

     

    புதுக் கவிதையில்…

     

    இனிய சொற்கள்தான்

    இருக்குது பலவாய்,

    இருப்பினும் மனிதா ஏன்

    விரும்புகிறாய் இன்னாத சொற்களை..

     

    மரம் நிறையப் பழமிருந்தும்

    மனம் விரும்பி

    காய்பறிக்கும் கதைதான் இது…!

     

    குறும்பாவில்…

     

    இனியவை ஒதுக்கிப் பேசும்

    இன்னாசொல், பழம் தவிர்த்து

    விரும்பித் தின்னும் காய்தானே…!

     

               மரபுக் கவிதையில்…

     

    கிளைமுறிய பழம்பழுத்துத் தொங்கும்

    கீழ்க்கிடக்கும் பழுத்தபழம் எங்கும்,

    பளபளக்கும் காய்பறித்துக் கடித்தால்

    பைத்தியம்தான் என்றுலகு எடுக்கும்,

    அளவிதுதான் நீயுரைக்கும் சொல்லும்

    அன்பான இன்சொல்லே வெல்லும்,

    களையெனவே கொடுஞ்சொல்லை உரைத்தால்

    கவலைப்பட இன்னலது வருமே…!

     

    லிமரைக்கூவில்…

     

    இன்சொல்லிருக்கக் கொடுஞ்சொல்லை ஒதுக்கு,

    இனிக்கும் கனிநிறைந்த மரத்தில்

    கனியைவிட்டுக் காய்பறித்தல் எதுக்கு…!

     

    கிராமிய பாணியில்…

     

    காயிருக்கு பழமிருக்கு

    கடிச்சித்தின்ன அணிலிருக்கு

    கம்மாக்கர தோட்டத்தில,

    சும்மாநீயும் பாத்துக்கோ

    சேதிசொல்றேன் கேட்டுக்கோ..

     

    பழுத்தபழம் பாத்துத்திங்குது

    பச்சக்கிளிதான்- நீயும்

    பழத்தவுட்டு காபறிச்சா

    பயித்தியந்தான் பயித்தியந்தான்..

     

    நல்ல வார்த்த நெறஞ்சிருக்க

    கெட்டவார்த்த பேசுறியே

    கேடுகெட்ட மனுசாயிது

    காபறிச்ச கதயாச்சே- நீயும்

    நல்லதயே பேசிப்புடு

    கெட்டதயே வீசிப்புடு…!

     

    Share
  • காட்டிலும்…

     

    செண்பக ஜெகதீசன்

     

    இறைவன் எழுதிய கவிதையை

    இசையமைத்துப் பாடிடும்

    வானம்பாடியும்,

    கானக் குயிலும்..

     

    மனப்பாடம் செய்திடும்

    மாந்தோப்புக் கிளிகள்..

     

    நடை பயின்று

    நாட்டியத்தில் காட்டிடும்

    வண்ண மயில்கள்..

     

    அந்த

    வேடமிட்டு நடிக்கும்

    வான்கோழிகள்..

     

    எல்லாம்

    ஒன்றாய்ச் செய்யும் மனிதன்,

    நன்றாய் இல்லையே குணத்தில்

    ஒன்றியே உள்ளானே பணத்தில்…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(4)

     

    செண்பக ஜகதீசன்

     

    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

    நோக்கக் குழையும் விருந்து.

              -திருக்குறள்-90 (விருந்தோம்பல்)

     

    புதுக் கவிதையில்…

     

    முகந்து பார்த்தாலே

    முகஞ்சுருங்கி வாடிவிடும்

    அனிச்ச மலர்..

     

    அதுபோல்தான்,

    அகம்நொந்து வாடிடுவர்

    விருந்தினரும்

    முகம் மலரா ஒருநேர்

    பார்வையிலே…!

     

    குறும்பாவில்…

     

    வாடிடும் அனிச்சம் முகந்தாலே,

    விருந்தினர் நிலையிதுதான்

    வரவேற்கும் விருப்பிலாப் பார்வையிலே…!

     

    மரபுக் கவிதையில்…

     

    கையில் எடுத்துக் கசக்கவேண்டாம்

    காலில் போட்டு மிதிக்கவேண்டாம்,

    பைய எடுத்து முகந்தாலே

    பட்டென வாடிடும் அனிச்சமலர்,

    வைய மிதனில் வாழ்வினிலே

    வந்திடும் விருந்தை வரவேற்க

    மையென முகமது கறுத்துநோக்கில்

    மெய்யது சோர்ந்துதான் வாடுவரே…!

     

    லிமரைக்கூவில்…

     

    அனிச்சமலர் முகந்தாலே வாடும்,

    வரும்விருந்தை விருப்பின்றிப் பார்வையொன்று

    பார்த்தாலே பதைபதைத்து ஓடும்…!

     

    கிராமிய பாணியில்…

     

    கேட்டுக்கோ கேட்டுக்கோ

    குடும்பசேதி கேட்டுக்கோ..

    வாட்டவேண்டாம் வதக்கவேண்டாம்

    வாரியெடுத்து மோந்தாலே

    வாடிப்போவும் அனிச்சம்பூவு..

    ஊடுவந்த விருந்துகள

    ஓபசரிச்சி நடத்தவேணும்,

    மொகங்கறுத்துப் பாத்தாலே

    ஒன்னவுட்டு ஓடிப்போவும்..

    பாத்துக்கோ பாத்துக்கோ

    படிப்பினதான் பாத்துக்கோ…!


    Share
  • கோபுர பொம்மையாய்…

    செண்பக ஜெகதீசன்

     கிடைத்திருக்கும் உயர்ந்த இடம்,

    கோபுர பொம்மைக்குக்

    கொண்டுவந்துவிடுகிறது கர்வத்தை-

    கோபுரத்தையே தாங்குவதாய்..

     

    கவலைப்படுவதில்லை கோபுரம்,

    உண்மை அதற்குத் தெரிவதால்..

     

    இதுதான் கதை மனிதனிடமும்-

    அவனுக்குக் கர்வம்

    அதிகமாகும்போது சிரிக்கிறான்

    ஆண்டவன்…!

    படத்துக்கு நன்றி

       http://www.elanguages.org/20283

    Share
  • காலம் காலமாய்…


     செண்பக ஜெகதீசன்

    கட்டிமுடித்த கோபுரம்

    கொட்டிக்கிடக்கும் செங்கல்கள் மீது

    கோபப்படுவதில் அர்த்தமில்லை..

     

    குறுக்கே நிற்பது காலம்தான்-

    கொட்டிக்கிடக்கும் செங்கல்கள்

    கோபுரமாகலாம்..

    கோபுரம்,

    கொட்டிச் சிதறிய செங்கல்களாகலாம்..

     

    மாறுதல்தானே

    முகவரி இறைவனுக்கு…!

     படத்துக்கு நன்றி

    http://www.apendowments.gov.in/Kasapuram/Photo%20Library/Forms/DispForm.aspx?ID=11

    Share
  • சுற்றுச்சூழல் காப்போம்…

    செண்பக ஜெகதீசன்

     

    நட்டு வைத்தால் மரமாகி

    நன்மை தருமொரு தோப்பாகும்,

    வெட்டி வெட்டி எடுத்துவிட்டால்

    வளரும் தோப்பொரு மரமாகும்,

    கொட்டும் மழையும் குளிர்காற்றும்

    கூடவே தந்திடும் மரமழித்துக்

    கெட்டிட வேண்டாம், மரம்வளர்த்து

    காப்போம் சுற்றுச் சூழலையே…!

    படத்துக்கு நன்றி

     http://topendsp.ipower.com/image/clipart/non-sporting/more/a-green-tree.gif.php

    Share
  • குறளின் கதிர்களாய்…(3)


      செண்பக ஜெகதீசன்

    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத்        தம்மை

    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

          -திருக்குறள் -151(பொறையுடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    தோண்டினாலும் நிலம்

    துன்பப்படுவதில்லை, தாங்கிக்கொள்ளும்..

     

    பாடம் இது உனக்கு

    படித்து உயர,

    மனிதா

    பொறுத்துக்கொள் உன்னை

    வெறுத்து இகழ்வோரையும்…!

     

    குறும்பாவில்…

     

    பூமியாயிரு பொறுமையில்,

    மனிதா உன்னை

    இகழ்பவரையும் மறந்து…!

     

    மரபுக் கவிதையில்…

     

    வெட்டியும் குத்தியும் அகழ்ந்தாலும்

    வேலி போட்டே அடைத்தாலும்,

    கெட்ட செயலே செய்தாலும்

    கோபம் ஏதும் கொள்ளாமல்,

    சுட்டிப் பிள்ளையின் தாயவள்போல்

    சுமந்து காப்பாள் நிலமகள்தான்,

    திட்டும் மாந்தர் இகழ்ச்சியையும்

    தாங்கியே உயர்வாய் அதுபோலே…!

     

    புதுப்பாவில்…

     

    தீண்டப்படுகிறது

    தோண்டப்படுகிறது

    நிலமகளின் மேனி..

     

    பொறுமையின் உருவம் அவள்-

    போகட்டும் என்று

    பெருந்தன்மையில் தாங்கிக்கொள்கிறாள்..

     

    இந்த குணம்தான் வேண்டும்

    மனிதா

    இகழ்ந்தாலும் பிறர் உன்னை-

    இதுதான் முதல் படி உயர்வுக்கே…!

     

    கிராமிய பாணியில்…

     

    மலயத் தாங்கிடும்

    மரத்தத் தாங்கிடும் பூமியம்மா- ஒன்

    மனத்தப் பாத்தா சாமியம்மா..

     

    தோண்டிஒன்ன எடுத்தாலும்

    தொல்ல யெல்லாந் தந்தாலும்- அத

    எல்லாம் பொறுத்திடுந் தாயம்மா

    எங்களத் தாங்கிடும் நீயம்மா..

     

    அடுத்தவன் ஒன்ன வெறுத்தாலும்

    ஆங்காரத்தில் பழிச்சாலும்- அத

    எல்லாம் பொறுத்திரு நெலம்போல

    நல்லா வாழலாம் மனம்போல…!

     படத்துக்கு நன்றி

     http://www.ebibleteacher.com/node/323  

    Share
  • அந்த நேரம்…

    செண்பக ஜெகதீசன்

    மேலே வானத்து மேகங்களுக்கு

    மேலைக் கடல்விழும் சூரியன்

    மேலாய்த்

    தங்கநிறம் தடவிவிடும் நேரம்..

     

    குஞ்சுப் பறவைக்கு இரைதேடிய

    தாயின்

    காட்டைத் தாண்டிய பயணம்

    கூட்டில் முடியும் நேரம்..

     

    பிஞ்சுக் குழந்தைகள்

    பள்ளிப் பையெனும் பாரமிறக்க

    வீட்டில் வந்து

    விடுதலையாகும் நேரம்..

     

    கண்கள் பேசியதைக்

    காரியமாக்கிட,

    இரவின் வருகைக்கு

    இணைபிரியா

    காதல் உலகம்

    காத்திருக்கும் நேரம்..

     

    கடவுள் தோட்டத்து

    மணிமலரின் வாசம்

    ஓசையாய்

    வெளிவந்திடும் நேரம்..

     

    இது,

    இரவும் பகலும் இணைந்திடும்

    மணவிழா-

    மாலையாகிய நேரம்…!

     படத்துக்கு நன்றி

      http://www.hiren.info/desktop-wallpapers/natural-pictures/sunset_kauai_hawaii    

    Share
  • குறளின் கதிர்களாய்…(2)

        செண்பக ஜெகதீசன்

    பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

    சால மிகுத்துப் பெயின்…!

                     -திருக்குறள்-475(வலியறிதல்)

    படத்துக்கு நன்றி

    http://www.wallpaperdev.com/wallpaper/1920×1200/peacock-feathers-texture-pattern-backgrounds-9392.html

     

    புதுக்கவிதையில்…

     

    மலரினும் மெல்லிதென்று

    மயிலிறகைச் சேர்த்து

    வண்டியில்

    மனம்போல ஏற்றிவைத்தால்,

    முறிந்துவிடும் அச்சாணி..

     

    மிஞ்சாது எதுவும்

    அளவை

    மீறினால் எதிலும்…!

     

    குறும்பாவாய்…

     

    குடைசாய்க்கும் வண்டியை, பாரம்

    கூடினால் மயிலிறகும்..

    கதையிதுதான் வாழ்க்கை…!

     

    மரபுக் கவிதையில்…

     

    வண்டியில் ஏற்றும் பாரமது

    வலிமை யில்லா மென்பொருளாம்

    கொண்டல் கண்டால் ஆடிநிற்கும்

    கோல மயிலின் இறகெனிலும்,

    உண்டே யதற்கும் அளவதுவும்,

    உயர்ந்தால் வண்டி உடைந்திடுமே,

    கண்டிடு வாழ்வில் கதையிதுவே

    கொண்டிடு அளவதைக் கருத்தினிலே…!

     

    புதுப்பாவில்…

     

    மெல்லிய பொருள்தான்

    மயிலிறகு,

    மிதமிஞ்சி ஏற்றினால் வண்டியில்,

    அதுவும் உடைந்து

    மிஞ்சுவதில்லை எதுவுமே..

     

    நல்லதுக்கு

    எதிர்மறைப் பலன்தான்

    எதுவும் அளவுக்கு மிஞ்சினாலே…!

     

    கிராமிய பாணியில்…

     

    ஏலேலோ ஐலசா

    ஏத்து பாரம் ஐலசா..

    அளவாப் பாரம் ஐலசா

    அளந்து ஏத்து ஐலசா..

    மயிலுப் பீலி ஆனாலும்

    மிஞ்சா வண்டி ஒடையுமே..

    மனுசங் கதயும் இதுதானே

    மனசில கொள்ளு இதத்தானே..

    ஏலேலோ ஐலசா

    ஏத்து பாரம் ஐலசா…!

     

    Share
  • ஒன்றானது…

    செண்பக ஜெகதீசன்           

     

    கருவறை இவர்க்குப் பொதுவானது

    காட்சி என்றும் எதிர்பார்ப்பது,

    உருவினில் அழகின் இடமானது

    உரைக்கும் முறுவல் மொழியானது,

    பெருகிடும் அன்பே ஊற்றானது

    பேசிடா தென்றற் காற்றானது,

    திருவருள் தெய்வச் சிலையதுவும்

    தீதிலாக் குழந்தையும் ஒன்றன்றோ…!

     

           http://www.hiren.info/desktop-wallpapers/babies-pictures/surprised-child-looking                         

    Share