Tag: நாங்குநேரி வாசஸ்ரீ

  • நாலடியார் நயம் – 14

    நாலடியார் நயம் – 14

    நாங்குநேரி வாசஸ்ரீ

    14. கல்வி

    பாடல் 131

    குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
    மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
    நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
    கல்வி அழகே அழகு.

    சீர்படித்தி முடித்த தலைமுடியினழகும்
    சிறப்பாகக் கரையிட்ட ஆடையினழகும்
    பூசிய மஞ்சளின் அழகும்
    பூவுலகில் உண்மை அழகல்ல
    உண்மையாய் நடக்கும் நடுவுநிலைமை
    உணர்வைத் தருவதால் கல்வியால்
    உண்டாகின்ற அழகே உயர்ந்த அழகு.

    பாடல் 132

    இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
    தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
    எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
    மம்மர் அறுக்கும் மருந்து.

    இவ்வுலக இன்பத்தைத்தரும்
    ஈவதனால் குறையாது
    தம் புகழை எங்கும் பரப்பும்
    தம் உயிருள்ளவரை அழியாது
    ஆதலில் கல்விபோல் எவ்வுலகிலும்
    அறியாமை போக்கும் மருந்தை
    யாம் கண்டதில்லை.

    பாடல் 133

    களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
    விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
    கடைநிலத்தோ ராயினும் சுற்றறிந் தோரைத்
    தலைநிலத்து வைக்கப்படும்.

    உவர்நிலத்தில் உண்டான உப்பை
    உயர்ந்தோர் நன்செய் விளைநெல்லினும்
    உயர்வாய்க் கருதுவர் கீழ்க்குடியில்
    உதித்தவராயினும் கற்றறிந்தவராயின்
    உயர்குடியினும் உயர்ந்த இடத்தில் வைத்து
    உயர்வாய்ப் போற்றி மதித்தல் வேண்டும்.

    பாடல்134

    வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயிற் கேடில்லை;
    மிக்க சிறப்பின் அரசர்செறின் வவ்வார்;
    எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன
    விச்சைமற் றல்ல பிற.

    வைத்த இடமான மனதிலிருந்து
    வேறொருவரால் கவரஇயலாது
    தமக்குக் கிடைத்ததைப் பிறருக்குத்
    தருவதால் அழிவதில்லை
    படை வலிமைமிக்க மன்னர் சினந்தாலும்
    பிடுங்கிக்கொள்ளல் அரிது ஆதலில்
    தம் மக்கட்குச் சேர்த்துவைக்கத்
    தக்கது கல்வியேயன்றி வேறல்ல.

    பாடல் 135

    கல்வி கரையில கற்பவர் நாள்சில;
    மெல்ல நினைக்கின் பிணிபல – தெள்ளிதின்
    ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
    பாலுண் குருகின் தெரிந்து.

    கல்வி முடிவில்லாதது
    கற்பவரின் வாழ்நாட்களும்
    குறைவே மெல்ல யோசித்தால்
    அண்டும் நோய்களும் பல
    ஆதலில் நீரை நீக்கி
    பாலைப் பருகும் அன்னம்
    போல் அறிவுடையார் ஆராய்ந்து
    பொருத்தமானவற்றையே கற்பர்.

    பாடல் 136

    தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
    காணிற் கடைப்பட்டான் என்றிகழார் – காணாய்
    அவன்துணையா ஆறுபோய் அற்றேநூல் கற்ற
    மகன்துணையா நல்ல கொளல்.

    படகு செலுத்துபவனைப்
    பண்டைய சாதிகளில்
    கீழோன் என இகழார் மேலோர்
    அப்படகு ஓட்டுபவனின்
    துணையால் ஆற்றைக் கடப்பது போலாம்
    தக்க நூல்களைப் படித்தவனைத்
    தேடி நன்நூற்பொருளைக் கற்றல்.

    பாடல் 137

    தவலருந் தொல்கேள்வித் தன்மை உடையார்
    இகலிலர் எஃகுடையார் தம்முள் குழீஇ
    நகலின் இனிதாயின் காண்பாம் அகல்வானத்து
    உம்பர் உறைவார் பதி.

    குற்றமற்ற பழமையான நூற்கேள்வி
    கேட்குந்தன்மை உடையவராய்
    கூர்அறிவுடை கற்றோர்களுடன்
    கூடி மாறுபாடற்று அளவளாவி
    மகிழ்தலைவிட  இன்பம் உண்டெனில்
    மேலுலகமெனும் தேவர்கள் உலகத்தைக்
    காண முயலுவோம்.

    பாடல் 138

    கனைகடல் தண்சேர்ப்ப! கற்றறிந்தார் கேண்மை
    நுனியின் கரும்புதின் றற்றே – நுனிநீக்கித்
    தூரில்தின் றன்ன தகைத்தரோ பண்பிலா
    ஈரமி லாளர் தொடர்பு.

    ஒலிக்கும் கடலின் குளிர் துறை
    உடையோனே! நுனியிலிருந்து கரும்பைத்
    தின்பது போலாம் கற்றறிந்தான் நட்பு
    தீய அன்பில்லாக் குணமற்றவரின் நட்போ
    அடியிலிருந்து கரும்பைத் தின்பதுபோலாம்.

    பாடல் 139

    கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
    நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல்சிறப்பின்
    ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு
    தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.

    பழஞ்சிறப்புடை அழகுமிகு
    பாதிரிப்பூவைச் சார்ந்ததால்
    மண்பானை தண்ணீரை
    மணமுள்ளதாக்குதல் போல்
    கல்லாரே ஆயினும்
    கற்றாரைச் சார்ந்து
    நடப்பின் அவர்போல்
    நல்லறிவு நாளும் உண்டாகும்.

    பாடல் 140

    அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது
    உலகநூல் ஓதுவ தெல்லாம் – கலகல
    கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
    போஒம் துணையறிவார் இல்.

    பலநூல்களுக்குள்ளே ஞானம்
    போதிக்கும் நூல்களைக் கல்லாது
    விடுத்து இவ்வுலக அறிவை மட்டுமே
    வழங்கும் நூல்களைக் கற்பதெல்லாம்
    கலகல என்று வீணாகக்
    கூவுவதைப் போலல்லாமல்
    பிறவியாகிய தடுமாற்றத்தைப்
    போக்கும் வழி அறியப்படுவது இல்லை.

    Share
  • நாலடியார் நயம் – 13

    நாலடியார் நயம் – 13

    நாங்குநேரி வாசஸ்ரீ

    13 .தீவினை அச்சம்

    பாடல் 121

    துக்கத்துள் தூங்கித் துறவின்கண் சேர்கலா
    மக்கள் பிணத்த சுடுகாடு – தொக்க
    விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட
    புல்லறி வாளர் வயிறு.

    சுடுகாடுகள் துயரத்தைக்
    கொடுக்கும் இல்வாழ்க்கையில்
    கிடந்துழன்று அவற்றினின்று
    பற்றுவிடும் வழிஅறியாதாரின்
    பிணத்தை உடையன
    அற்பரின் வயிறுகளோ
    அதிகளவு பறவைகளுக்கும்
    விலங்குகளுக்கும் சுடுகாடுகளாம்.

    பாடல்122

    இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க்கு ஆளாய்க்
    கரும்பார் கழனியுள் சேர்வர் – சுரும்பார்க்கும்
    காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
    கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.

    வண்டுகள் ஒலிக்கும் காட்டில்
    வாழும் கவுதாரியையும் காடையையும்
    பிடித்துக் கூட்டில் அடைப்பவர்
    பகைவர்களுக்கு அடிமையாய்
    காலில் விலங்கு பூட்டப்பட்டு
    வலிய பயனில்லா
    வட்டை நிலத்திலோ
    கழனிகளிலோ அடிமையாய்
    வேலை வாங்கப்படுவர்.

    பாடல் 123

    அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
    துக்கத் தொழுநோய் எழுபவே – அக்கால்
    அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற
    பழவினை வந்தடைந்தக் கால்.

    அக்காலத்தில் (முற்பிறப்பில்) நண்டைப் பிடித்து
    அதன் காலை ஒடித்து
    விரும்பித்தின்ற தீவினை
    வந்தடைந்த போது
    உள்ளங்கை சங்குமணிபோல்
    உருத்தோன்ற விரலெல்லாம்
    குறைந்தழுகித் துயரம் தரும்
    குட்ட நோய் உண்டாகப் பெறுவர்.

    பாடல் 124

    நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்
    எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் – பரப்பக்
    கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக்
    கடுவினைய ராகியார்ச் சார்ந்து.

    நெய்யைப்போல் நன்மை செய்வனவும்
    நெருப்பிலிட்டுக் காய்ச்சும்நேரம்
    உடலில் பட்டால் எரிக்கும்படி
    காய்ந்து துன்பநோய் தருவதுபோல்
    நல்லொழுக்கம் தவறா நல்லோரும்
    கடும் தீயவரைச் சார்ந்தால்
    கொடும் தீமையே புரிவர்.

    பாடல் 125

    பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
    வரிசை வரிசையா நத்தும் – வரிசையால்
    வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
    தானே சிறியார் தொடர்பு.

    பெரியோர் நட்பு பிறைச்சந்திரன்
    போல் படிப்படியாய் நாளும் வளரும்
    சிற்றறிவுடையோர் நட்பு வானத்தே
    தோன்றும் முழு வட்ட நிலா போல்
    தினந்தோறும் சிறுத்துத் தானே
    தேய்ந்து குறைந்துவிடும்.

    பாடல் 126

    சான்றோர் எனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
    சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தோய்கேள்
    சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
    பாம்பகத்துக் கண்ட துடைத்து.

    நற்குணமுள்ளவர் என மதித்து
    நட்பு கொள்கிறாய்!
    நட்புகொண்டவரிடம் நற்குணம்
    இல்லையெனில் சார்ந்தவனே கேள்!
    அது வாசனை மிகு சந்தனம்
    அங்குள்ளது என நினைத்து
    செப்பைத் திறந்தவன் உள்ளே
    சர்ப்பத்தைக் கண்டது போலாம்.

    பாடல் 127

    யா அர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத்
    தேருந் துணைமை யுடையவர் – சாரல்
    கனமணி நின்றிமைக்கும் நாடகேள் மக்கள்
    மனம்வேறு செய்கையும் வேறு.

    மலைச் சாரல்களில் ஒளிவிடும்
    மணிகள் மிகு நாட்டின் வேந்தனே!
    கேள்! மனதை ஆராய்ந்தறியும்
    வல்லமையுடையோர் எவருளர்?
    மக்களின் மனம் வேறு
    மனிதன் நினைத்தபடி செய்யாது
    மேலுக்கு வஞ்சனையாய் ஆற்றும்
    செயல்கள் வேறு.

    பாடல் 128

    உள்ளத்தால் நள்ளாது உறுதித் தொழிலராய்க்
    கள்ளத்தான் நட்டார் கழிகேண்மை – தெள்ளிப்
    புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட!
    மனத்துக்கண் மாசாய் விடும்.

    தெளிந்த அருவிநீர் சேற்றைத்
    தள்ளி ஒதுக்கும் மலைநாட்டு மன்னனே!
    மனதால் விரும்பாது வஞ்சகமாக
    மயக்கும் உறுதியான செயல்செய்பவரின்
    மிகுநட்பு மனதில் குற்றமுள்ளதாய் நிற்கும்.

    பாடல் 129

    ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால்
    ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் – ஆக்கம்
    இருமையும் சென்று சுடுதலால் நல்ல
    கருமமே கல்லார்கண் தீர்வு.

    பகைகொண்டு வீசிய ஒளிமிகும் வாள்
    பகைவர் கையில் அகப்பட்டால்
    தைரியத்தைக் கெடுப்பது உறுதி
    தீயோர்க்குச் செய்த உதவி
    இம்மை மறுமையிலும் தொடர்ந்து
    வருத்தலால் அத் தீயொரிடமிருந்து
    விலகி இருத்தல் நல்லது.

    பாடல் 130

    மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
    எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே! – எனைத்தும்
    சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
    உறுபயனோ இல்லை உயிர்க்கு.

    மனமே! மனையாளிடத்து ஆசை விடமாட்டாய்
    மக்கட்செல்வத்துக்கு பொருள் சேர்க்க ஏங்கி
    எவ்வளவு காலம் வாழப்போகிறாய்?
    அற்பகாலமாயினும் செய்யும்
    அறச்செயலாலன்றி உயிருக்கு
    அடையும்படியான நற்பயன் வேறுஇல்லை.

    Share
  • நாலடியார் நயம் – 12

    நாலடியார் நயம் – 12

    நாங்குநேரி வாசஸ்ரீ

     12. மெய்ம்மை

    பாடல் 111

    இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்
    வசையன்று வையத் தியற்கை – நசையழுங்க
    நின்றோடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி
    கொன்றாரின் குற்றம் உடைத்து.

    வரிசையாய் வளையல்கள் அணிந்தவளே!
    வேண்டி இரப்போர்க்குத் தர இயலாப்
    பொருளை இல்லை எனச் சொல்லுதல்
    பழியன்று  உலகியற்கையே
    கொடுப்பதாய் ஆசைகாட்டிப் பலநாள்
    கழிந்தபின் இல்லையென்றல்
    செய்நன்றி மறப்பதினும் சீரிய குற்றமாம்.

    பாடல் 112

    தக்காரும் தக்கவர் அல்லாரும் தந்நீர்மை
    எக்காலுங் குன்றல் இலராவர்! – அக்காரம்
    யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
    தேவரே தின்னினும் வேம்பு.

    தக்கசான்றோரும் அல்லாதாரும்
    தத்தம் குணங்களில் எப்போதும்
    குறைதல் இல்லாதிருப்பர்
    கசக்காது வெல்லம் எவர் தின்றாலும்
    கசக்கும் வேப்பங்காய் தேவரே தின்றாலும்.

    பாடல் 113

    காலாடு போழ்திற் கழிகிளைஞர் வானத்து
    மேலாடு மீனின் பலராவர் – ஏலா
    இடரொருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட!
    தொடர்புடையேம் என்பார் சிலர்.

    குளிர்ந்த மலைகளுடை நாட்டின்
    வேந்தனே! செல்வம் உள்ள காலத்தே
    நெருங்கிய உறவினர் பலர் இருப்பர்
    நட்சத்திரங்களை விட அதிகமாய்
    நலிந்து வறுமையுறும் காலம்
    உறவினராய்த் தொடர்பவர்
    உரிமையுடன் ஒருசிலரே.

    பாடல் 114

    வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
    நடுவணது எய்த இருதலையும் எய்தும்
    நடுவணது எய்தாதான் எய்தும் உலைப்பெய்து
    அடுவது போலும் துயர்.

    குற்றமற்ற இவ்வுலகில் நிலைத்துக்
    காணப்படுவதாய்த் தோன்றும்
    அறம் பொருள் இன்பம் எனும்
    அம் மூன்றனுள் நடுவிலுள்ள
    பொருளை அடைந்தோன் அதன்
    பொருட்டு முதலிலுள்ள அறத்தையும்
    இறுதியிலுள்ள இன்பத்தையும் அடைவான்
    இதனைப் பெறாதவன் கொல்லன்
    இரும்பை உலையிலிட்டு காய்ச்சுவது
    போலும் வறுமையுற்று வருந்துவான்.

    பாடல் 115

    நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉம்
    கல்லாரே யாயினும் செல்வர் வாய்ச் சொற்செல்லும்
    புல்லீரப் போழ்தின் உழவேபோல் மீதாடிச்
    செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல்.

    நல்ல பசுவின் கன்றானால்
    நல்விலைபோகுமதன் இளங்கன்றும்
    படிக்காதவராய் இருப்பினும்
    பணக்காரரின் வாய்ச்சொற்கள்
    பயன்கருதி ஏற்றுக்கொள்ளப்படும்
    சிறிதே ஈரமுள்ள காலத்தே உழும்
    சமயம் கொழு உட்செல்லாது
    மேலே நிற்பதுபோல்
    மேலுக்குத் தலையசைத்து
    கேட்பதுபோல் தோன்றினாலும்
    வறியவனின் வாய்ச்சொற்கள் ஒரு
    வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

    பாடல் 116

    இடம்பட மெய்ஞ்ஞானம் கற்பினும் என்றும்
    அடங்காதார் என்றும் அடங்கார் – தடங்கண்ணாய்
    உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்திடினும்
    கைப்பறா பேய்ச்சுரையின் காய்.

    அகன்ற கண்களையுடையவளே!
    பேய்ச்சுரைக்காயை உப்புடன்நெய்
    பால் தயிர் பெருங்காயம் சேர்த்துச்
    சமைத்தாலும் கசப்பு அடங்காததுபோல்
    விரிவாக மெய்யறிவு நூல்களை
    வாசித்துணர்ந்தாலும் எப்பொழுதும்
    அடக்கமில்லாமல் இருப்பவர்
    அடங்காமலே இருப்பர்.

    பாடல் 117

    தம்மை இகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க
    என்னை அவரோடு பட்டது – புன்னை
    விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப!
    உறற்பால யார்க்கும் உறும்.

    புன்னையின் அழகிய
    பூமணம் வீசும் சோலைகள்சூழ்
    கடற்கரையுடை வேந்தனே!
    தம்மை நிந்திப்பவரை அவர்
    தொடங்குமுன் தயைபாராமல்
    தாம் நிந்திக்கக்கடவர்
    அவரோடு தமக்குண்டாகிய
    தொடர்பால் வருவதுதான் என்ன?
    வரவேண்டிய நன்மைதீமை எவர்க்கும்
    வினைப்பயனால் வந்தே தீரும்.

    பாடல் 118

    ஆவே றுருவின வாயினும் ஆபயந்த
    பால்வே றுருவின அல்லவாம்; – பால்போல்
    ஒருதன்மைத் தாகும் அறநெறி; ஆபோல்
    உருவு பலகொளல் ஈங்கு.

    பசுக்கள் உருவத்தால் வேறுபடினும்
    பாலின் நிறத்தில் வேறுபாடில்லை
    தருமமும் பால்போல் ஒரு
    தன்மையுடைத்தே எனினும்
    ஆற்றும் வழிமுறைகள்
    அப்பசுக்களின் உருவங்கள்
    போல் பலவாம்.

    பாடல் 119

    யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
    யாஅர் உபாயத்தின் வாழாதார்? – யாஅர்
    இடையாக இன்னாதது எய்தாதார்? யாஅர்
    கடைபோக செல்வம்உய்த்தார்.

    ஆராய்ந்து நோக்கின் ஒரு பழிச்சொல்
    அற்று வாழ்ந்தவர் யார்?
    ஒரு தொழிலின்றிவாழ்ந்தவர் யார்?
    எவர் வாழ்வின் இடையே துன்பம்
    எய்தாதவர்? வாழ்நாள் முழுவதும்
    செல்வத்தை அனுபவித்தோர் யார்?

    பாடல் 120

    தாஞ்செய் வினையல்லால் தம்மொடு செல்வதுமற்று
    யாங்கணும் தேரின் பிறிதில்லை; – ஆங்குத்தாம்
    போற்றிப் புனைந்த உடம்பும் பயமின்றே
    கூற்றம் கொண்டுஓடும் பொழுது..

    தம்மோடு உயிருக்குத் துணையாய் வருவது
    தாம் செய்த நல்வினையன்றி வேறில்லை
    அதுவரை ஆடை அணிகளால் பாதுகாத்த
    அழகுடம்பும் உயிருக்குத் துணையாய் வராது
    எமன் உயிரைப் பறித்துக்கொண்டு ஓடும்காலம்.

    Share
  • நாலடியார் நயம் – 11

    நாலடியார் நயம் – 11

    நாங்குநேரி வாசஸ்ரீ

    11. பழவினை

    பாடல் 101

    பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
    வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்
    பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
    கிழவனை நாடிக் கொளற்கு.

    கூட்டமான பசுக்கள் நடுவே விட்டினும்
    கன்று தன் தாய்ப் பசுவைத் தேடி
    அடைதல் போல் முற்பிறப்பில்
    ஆற்றிய பழவினையும் செய்தவனைத்
    தேடிஅடைதலில் வல்லமையுடைத்தே. .

    பாடல் 102

    உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்
    ஒருவழி நில்லாமை கண்டும் – ஒருவழி
    ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பிட்டு
    நின்றுவீழ்ந் தக்க துடைத்து.

    அழகும் இளமையும் மேன்மையான
    அருஞ்செல்வமும் பலர் அஞ்சத்தக்க
    பெருமதிப்பும் ஓரிடத்தில் நிலையற்று
    இருப்பதைக் கண்டபின்னும்
    இனியும் யாதொரு நற்செயலும்
    செய்யாதவன் வாழ்க்கை, உடலெடுத்து
    சில காலம் வாழ்ந்து பயனில்லாது பின்
    அழிந்துபோகும் தன்மைத்தாம்.

    பாடல் 103

    வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை;
    அளந்தன போகம் அவரவர் ஆற்றான்
    விளங்காய் திரட்டினார் இல்லை களங் கனியைக்
    காரெனச் செய்தாரும் இல்.

    வளமுடன் சிறந்து வாழ்தலை
    விரும்பாதார் எவருமில்லை இவ்வுலகில்
    அளக்கப்பட்டுள்ளன அனுபவிக்கும் சுகங்கள்
    ஆற்றிய நற்செயல்களுக்கேற்ப
    விளாங்காயை உருண்டையாக
    வார்த்தவரில்லை களாம்பழத்தைக்
    கருமையுடையதாய் ஆக்கியவருமில்லை.

    பாடல் 104

    உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா,
    பெறற்பால அனையவும் அன்னவாம் மாரி
    வறப்பின் தருவாரும் இல்லை அதனைச்
    சிறப்பின் தணிப்பாரும் இல்.

    வந்தடையும் தீவினையைத் தடுக்கும்
    வல்லமை துறவிகளிடத்தும் இல்லை
    அவ்வாறே பெறத்தக்க நன்மைகளை
    அடையாது தடுப்பதும் எவராலுமாகா
    மழை பொழியாது வறண்டால்
    மீட்டுக் கொடுப்பாருமில்லை
    அதிகமாய்ப் பெய்தால்
    அடக்குவாரும் இல்லைபோல.

    பாடல் 105

    தினைத்துணைய ராகித்தந் தேசுள் அடக்கிப்
    பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்;
    நினைப்பக் கிடந்தது எவனுண்டாம் மேலை
    வினைப்பயன் அல்லால் பிற.

    பனையளவு உயர்ந்த
    பெருமை மிக்கவரும்
    தினையளவாகச் சிறுத்து
    தம் கூர்மதியை உள் அடக்கி
    தினந்தோறும் பெருமைகெட்டு
    வாழ்வதன் காரணம் யாதெனின்
    முற்பிறப்பில் செய்த தீவினைப்
    பயனேயன்றி வேறெதுவுமில்லை.

    பாடல் 106

    பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
    கல்லாதார் வாழ்வதும் அறிதிரேல் – கல்லாதார்
    சேதனம் என்னுமச் சாறகத் தின்மையால்
    கோதென்று கொள்ளாதாம் கூற்று.

    உயர்ந்த நூல்களின் கேள்வியறிவால்
    உற்ற பயன்பெற்றோர் இறப்பதையும்
    கல்வியறிவற்றோர் நீடு வாழ்வதையும்
    அறிந்துள்ளீர்கள்! காரணம்
    அறிவு எனும் சாறு கல்லாதார்
    அகத்தே இல்லாமையால்
    அவர்களைச் சக்கை என நினைத்து
    எடுத்துச் செல்வதில்லை எமன்.

    பாடல் 107

    இடும்பைகூர் நெஞ்சத்தார் எல்லாரும் காண
    நெடுங்கடை நின்றுழல்வ தெல்லாம் – அடம்பப்பூ
    அன்னங் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப
    முன்னை வினையாய் விடும்.

    அடம்பக்கொடியின் மலர்களை
    அன்னங்கள் கோதிக் கிழிக்கும்
    அலைகடலின் குளிர் கரையையுடை
    அரசனே! சிலர் துன்பமிகு மனத்துடன்
    அனைவரும் காணும்படி பல தலைவாயில்களை
    அடைந்து பிச்சைகேட்டு வருந்தும் செயல்
    அனைத்தும் முற்பிறப்பில் செய்தீவினைப் பயனே.

    பாடல் 108

    அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
    பழியோடும் பட்டவை செய்தல் – வளியோடி
    நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!
    செய்த வினையான் வரும்.

    நெய்தல்நிலத்தில் காற்று வீசுதலால்
    நீண்ட கடலில் தேன் சிந்தும்
    குளிர் கரையையுடை வேந்தனே!
    அறிவற்றவராய் இல்லாது
    அறிவுடையவராய்த் திகழ்ந்தாலும்
    பழிதரும் செயல்களைச் செய்தல்
    பழம்பிறப்பில் செய்தீவினையின் விளைவே.

    பாடல் 109

    ஈண்டுநீர் வையத்துள் எல்லாரும எத்துணையும்
    வேண்டார்மன் தீய; விழைபயன் நல்லவை;
    வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
    தீண்டா விடுதல் அரிது.

    எல்லையில்லாக் கடல்சூழ் உலகில்
    எல்லாரும் எவ்வளவாயினும்
    தீயவைகளை விரும்பார் நலம்
    தரும் நன்மையையே விரும்புவர்
    விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
    வரத்தக்கவை முன்வினைப்பயனால்
    வராமற் போவதில்லை.

    பாடல் 110

    சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
    உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே யாகும்
    சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
    இறுகாலத் தென்னை பரிவு.

    கரு அமைந்த காலத்தில்
    கடவுளால் எழுதப்பட்ட விதிகள்
    வளராது குறையாது
    வரிசைமாறி வராது
    துன்ப காலத்தில் ஊன்றுகோலாகி
    துயர்துடைக்கவும் மாட்டா
    வரவேண்டிய காலத்தே தப்பாது
    வந்துசேருமெனவே மரணகாலத்தில்
    மனம் வருந்துவது ஏன்?

    Share
  • நாலடியார் நயம் – 10

    நாலடியார் நயம் – 10

    நாங்குநேரி வாசஸ்ரீ

     10. ஈகை

     பாடல் 91

    இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
    உள்ளஇடம் போல் பெரிதுவந்து – மெல்லக்
    கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
    அடையாவாம் ஆண்டைக் கதவு.

    பொருள் இல்லாத காலத்தும்
    பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து
    தம்மால் இயன்றதை இயல்பாகத்
    தரும் குணமுள்ள மாந்தருக்கு
    அவ்வுலகத்துக் கதவுகள் என்றும்
    அடைக்கப்படாமல் திறந்திருக்கும்.

    பாடல் 92

    முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள
    பின்னரும் பீடழிக்கும் நோயுள; – கொன்னே
    பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்
    கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.

    முன்னே இறக்கும் நாள் காத்திருக்க
    முதுமையெனும் வெறுக்கத்தக்க
    காலம் வந்ததோடு உடல்வலிமை
    குறைக்கும் நோய்களும் வருதலால்
    பொருள் உள்ள காலத்தே மேலும்
    சேர்க்க நாற்புறமும் ஓடி அலையாதீர்!
    சேர்த்த பொருளை இறுகப் பற்றியிராதீர்!
    பலருக்கும் கொடுத்து ஒளிக்காது
    பகுத்து உண்ணுங்கள்.

    பாடல் 93

    நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;
    கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;
    இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
    விடுக்கும் வினையுலந்தக் கால்

    அடுத்தவருக்குக் கொடுத்து
    அனுபவித்தாலும் செல்வம்
    அதுவாகச் சேரும் காலத்தில்
    அண்டிவந்து சேரும்
    நம்மிடத்தே பொருள் சேர்த்த
    நல்வினை தொலையும் நேரம்
    இறுக்கிப் பிடித்தாலும் நில்லாது
    இல்லாமல் நீங்கிவிடும்
    இதை உணராதார் வறுமையால்
    இன்னலுற்று உதவி நாடிவருபவர்
    துயரைப் போக்க மாட்டார்.

    பாடல் 94

    இம்மி யரிசித் துணையானும் வைகலும்
    நும்மில் இயைவ கொடுத்துண்மின் – உம்மைக்
    கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
    அடாஅ அடுப்பி னவர்.

    இம்மியளவு அரிசியின் அளவாவது
    இயன்றவரை பிறருக்குத் தினமும்
    அளித்துப் பின் உண்ணுவீர்!
    ஆழிசூழ் இவ்வுலகில் சமைக்காத
    அடுப்புடைய பிச்சையெடுப்போர்
    அடுத்தவருக்கு உதவாதவர்
    அவர்தம் முற்பிறப்பிலென
    அறிந்து செயல்படுவீர் நாளூம்.

    பாடல் 95

    மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
    உறுமா றியைவ கொடுத்தல் – வறுமையால்
    ஈதல் இசையா தெனினும் இரவாமை
    ஈதல் இரட்டி யுறும்.

    மேலுலகப் பயனையும்
    மேவும்இவ்வுலகப் பயனையும்
    தம் மனதில் நினைத்து
    தம்மால் இயன்ற அளவு
    தானம் செய்வீர்!
    கொடும் வறுமை காரணமாய்
    கொடுக்க இயலாவிடினும்
    பிச்சைகொள்ளாமல் இருத்தல்
    பிறருக்கு ஈவதைக் காட்டிலும்
    இருமடங்கு நல்லது.

    பாடல் 96

    நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க
    படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;
    குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
    இடுகாட்டுள் ஏற்றைப் பனை.

    வள்ளன்மையுடன் பலரும் விரும்புமாறு
    வாழ்பவர் ஊர்நடுவே மேடைசூழ நிற்கும்
    பயன்தரும் பெண்பனை போன்றோர்
    பல்வளம் பெற்றிருந்தும் பிறருக்கு ஈந்து
    தான் உண்ணாத மக்கட்பண்பு இல்லாதோர்
    தனித்து சுடுகாட்டில் நிற்கும் ஆண்பனைக்கு
    ஒப்பானவரே.

    பாடல் 97

    பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம்
    செயற்பால செய்யா விடினும் – கயற்புலால்
    புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப!
    என்னை உலகுய்யுமாறு.

    கயல்மீனின் புலால் நாற்றத்தைக்
    கடற்கரை புன்னைமலர் போக்கும்
    அலை மோதும் குளிர் கடற்கரையுடை
    அரசனே! பருவ மழை தவறினாலோ
    அகிலத்து உயர்ந்தோர் செய்யத்தக்க
    உதவிகளைச் செய்யாது விடுத்தாலோ
    உலகத்து உயிர்கள் எவ்வாறு பிழைக்கும்?

    பாடல் 98

    ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையார்
    ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் – ஆற்றின்
    மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
    பொலிகடன் என்னும் பெயர்த்து.

    வளம்மிகு குளிர்ச்சிநிறை கடற்கரையுடை
    வேந்தனே! ஏந்தியவனின் கையை மறுக்காது
    இன்னார் என வரையறை செய்யாது
    இரந்து பெற்றதைத் திருப்பித் தர
    இயலாத வறியவருக்கு ஒன்று
    ஈதலே ஆண்மகனின் கடமையாம்
    திருப்பிக்கொடுக்க முடிந்தவர்க்குத்
    தரும் ஈகை கடன் எனப் பெயர்பெறும்.

    பாடல் 99

    இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
    அறப்பயன் யார்மாட்டும் செய்க – முறைப்புதவின்
    ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
    பைய நிறைத்து விடும்.

    கொடுப்பது அற்பமானது என நினையாது
    கேட்டவர்க்கு இல்லை எனச் சொல்லாது
    எப்போதும் எப்படிப்பட்டவர்க்கும்
    ஏற்ற பயனுடைய தருமத்தைச் செய்க!
    வாயில் தோறும் பிச்சை ஏற்கும்
    வாழ்க்கை துறந்த தவசியின் பிச்சைப்பாத்திரம்
    மெதுவாக நிரம்புவதுபோல் நல்வினைப்பயன்
    மெல்ல மெல்ல முழுமையாக நிரம்பிவிடும்.

    பாடல் 100  

    கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
    இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
    அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
    கொடுத்தார் எனப்படுஞ் சொல்.

    குறுங்கோலால் அடிக்கும் முரசின் ஒலி
    கேட்கும் ஒரு காத தூரம் மட்டும்
    ஒலிக்கும் இடியோசை கேட்பது
    ஒருயோசனை தூரம் இருப்பவருக்கே
    தகுதியுடை சான்றோர் கொடுத்தார் எனும்
    தக்க புகழ்ச் சொல் கேட்பதோ
    அடுக்கப்பட்டிருக்கும் மூவுலகங்களுக்கும்.

    Share
  • நாலடியார் நயம் – 9

    நாலடியார் நயம் – 9

    நாங்குநேரி வாசஸ்ரீ

     9. பிறர் மனை நயவாமை

    பாடல் 81

    அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
    நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால் – நிச்சலும்
    கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம்
    நம்பற்க நாணுடை யார்.

    பெரிது காமத்தால் வரும் அச்சம்
    பெறும் இன்பமோ சிறிது
    மனதில் நினைத்துப் பார்த்தால்
    மண்ணுலகை ஆளும் அரசனின்
    மரணதண்டனைக்கும் உரியது
    நித்தமும் நரகவேதனை தரும்
    நேர்மையற்ற பாவச்செயல் ஆதலின்
    நாணமுடையோர் பிறன்மனைவியை
    நினைத்து ஆசைப்படாதிருப்பாராக!

    பாடல் 82

    அறம்புகழ் கேண்மைபெருமைஇந் நான்கும்
    பிறன்தாரம் நச்சுவார் சேரா – பிறன்தாரம்
    நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
    அச்சத்தோடு இந்நாற் பொருள்.

    தருமம் புகழ் தக்கார் நட்பு
    தகுந்த பெருமை எனும்
    இந்நான்கும் பிறன்மனைவியை
    இச்சைகொள்வோரிடம் சேரமாட்டா
    மாறாகப் பகை பழி பாவம்
    மற்றும் அச்சம் இந்நான்கும்
    மாற்றான் மனைவி மேல்
    மயங்கி ஆசைகொள்வோரிடம்
    பொருந்தி வந்து சேரும்.

    பாடல் 83

    புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
    துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
    எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
    உட்கான் பிறன்இல் புகல்.

    மாற்றான் மனைவியை நாடி
    மனையுள் புகும்போது அச்சம்
    வீட்டிலிருந்து வெளியே திரும்பி
    வரும்போதும் அச்சம்
    மயங்கிக் களிக்கும்போது அச்சம்,
    மற்றவர் அறிவரோ என அச்சம்
    இடையறாது அச்சம் எப்போதும்
    இதையெல்லாம் சிந்தியாது
    இன்னொருவன் மனைவியிடம்
    இச்சைகொள்வது என்னபயன் கருதியோ?

    பாடல் 84

    காணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்;
    ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; – நீள்நிரயத்
    துன்பம் பயக்குமால்; துச்சாரி, நீகண்ட
    இன்பம் எனக்கெனைத்தால் கூறு.

    பிறர் காணின் குலத்திற்குப்
    பழி உண்டாகும் கையில்
    அகப்பட்டால் கால்முறியும்
    ஆண்மையற்ற இப்பிறர்மனை
    புகுதலைச் செய்யும்நேரம்
    பயம் தோன்றும் பின் ‘
    நரகமாகிய துன்பம் தோன்றும்
    நல்லொழுக்கம் அற்றோனே இதில்
    நீ கண்ட இன்பம் எவ்வளவு? சொல்.

    பாடல் 85

    செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்
    கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ – உம்மை
    வலியால் பிறர்மனைமேல் சென்றாரே இம்மை
    அலியாகி ஆடிஉண் பார்.

    சிறிதும் நல்லொழுக்கமின்றி
    சிறியோருடன் சேர்ந்து அழகிய
    கோலம் எழுதப்பெற்ற
    கொங்கை உடையாளின்
    தோளைச் சேர விரும்பி
    தம் வலிமையால் பிறர்
    மனைவியிடம் முன்பு சென்றவரே
    மண்ணுலக இப்பிறப்பில்
    அலியாய்க் கூத்து
    ஆடி உண்டு வாழ்பவர்.

    பாடல் 86

    பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
    கல்யாணம் செய்து கடிபுக்க – மெல்லியல்
    காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
    ஏதின் மனையாளை நோக்கு.

    பலர் அறிய மணப்
    பறை கொட்டி
    நல்ல நாள் பார்த்து
    நன்மணம் புரிந்து
    தன் காவலிற் புகுந்த
    மென்மைத் தன்மையுடை
    மனைவி வீட்டிலிருக்க
    மாற்றான் மனைவியை
    கெட்ட நோக்கில் ஒருவன்
    காண்பது எதனால்?

    பாடல் 87

    அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ
    வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று – நம்பும்
    நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு; பாம்பின்
    தலைநக்கி யன்னது உடைத்து.

    அயலார் பழித்துரைக்க
    அருமை உறவினர் பயந்திருக்க
    அயலான் மனைவியைத் தழுவி
    அகமகிழ்ந்த அனைவராலும் நம்ப
    அரிதான இயல்புடையவனது
    அற்ப காம நுகர்ச்சி
    அரவத்தின் தலையை நக்கியது
    அன்ன தன்மை உடையது.

    பாடல் 88

    பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா;
    உரவோர்கண் காமநோய் ஓஓ!- கொடிதே!
    விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்
    உரையாதுஉள் ஆறி விடும்.

    கொடியது காமநோய்!  அக்
    கொடும் நோய் மனவலிமை
    மிக்காரிடம் வளராது ஒருக்கால்
    மிக்கு வளர்ந்தாலும் வெளிப்படாது
    சிறிது வெளிப்பட்டாலும் அயலாரிடம்
    செல்லாது நாண வேண்டியதால்
    மனவலிமை மிக்க அவர்தம் காமம்
    தோன்றாது உள்தணிந்து ஆறிவிடும்.

    பாடல் 89

    அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
    வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்; – வெம்பிக்
    கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
    அவற்றினும் அஞ்சப் படும்.

    அம்பும் தீயும் ஒளிக்கதிர் சூரியனும்
    அதிவெப்பத்துடன் சுட்டாலும்
    புற உடலையே சுடும்
    பெருஞ்சூடெனும் காமம்
    அகத்தே மனதை வருத்திச்சுடுதலால்
    அனைத்தையும்விட அஞ்சத்தக்கதாம்.

    பாடல் 90

    ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
    நீருள் குளித்தும் உயலாகும்; – நீருள்
    குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
    ஒளிப்பினும் காமம் சுடும்.

    ஊர் நடுவே பற்றி எரியும்
    உருவம் கொண்ட செந்தீக்கு
    அமிழ்ந்து தப்பிக்க இயலும்
    அருகில் இருக்கும் நீருள்
    ஏறிக்குன்றில் ஒளிந்தாலும்
    எழுந்து மூழ்கிக் குளித்தாலும்
    என்செயினும் காமம் சுட்டெரிக்கும்.

    Share
  • நாலடியார் நயம் – 8

    நாலடியார் நயம் – 8

    நாங்குநேரி வாசஸ்ரீ

     8. பொறையுடைமை

    பாடல் 71

    கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
    பேதையோடு யாதும் உரையற்க – பேதை
    உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
    வழுக்கிக் கழிதலே நன்று.

    மாலைபோலும் குளிர்அருவி சூழ்
    மலைகளை உடைய
    மன்னனே! புத்தியில்லா
    மனிதனிடம் எதையும் சொல்லாதே!
    மீறிச்சொல்லுங்கால் அவன்
    மாறுபட்டு பதிலுரைப்பான்
    முடிந்தவரை அவனிடத்திருந்து
    மீண்டு தப்பித்தல் நல்லது.

    பாடல் 72

    நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
    தாரித் திருத்தல் தகுதிமற்று – ஓரும்
    புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
    சமழ்மையாக் கொண்டு விடும்.

    குணமற்றோர் பண்பற்றசொல்லைக்
    கூறும்வேளை அச்சொல் பொறுத்து
    இருத்தலே தகுதியாம் இயலாது பதில்
    இயம்பின் அச்செய்கை கடல்சூழ்
    உலகத்தாரால் புகழுக்குரியதாய்
    உணரப்படாது பழிக்குரியதாய்க்
    கொள்ளப்படும்.

    பாடல் 73

    காதலார் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
    ஏதிலார் இன்சொல்லின் தீதாமோ – போதெல்லாம்
    மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப!
    ஆவ தறிவார்ப் பெறின்.

    மலர்களிலெல்லாம் அழகான வண்டுகள்
    மகிழ்ந்து ஒலிக்கும் நிறைந்த கடலின்
    குளிர்ச்சிமிகு கரையயுடை வேந்தனே!
    நன்மை தருவதை மட்டுமே ஆராய்ந்து
    நவிலும் அறிஞரைத் துணையாகப் பெறின்
    அன்பினால் அவர் கூறும் கடுஞ்சொல்
    அயலார் மகிழ்ந்து உரைக்கும் இனிய
    சொல்லினும் தீதாகுமோ?

    பாடல் 74

    அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
    உறுவது உலகுவப்பச் செய்து – பெறுவதனால்
    இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
    துன்புற்று வாழ்தல் அரிது.

    அறியத்தகும் நன்மைதீமை அறிந்து
    அடக்கமுடையாராகி
    அஞ்சத்தகும் பழிபாவத்திற்கு
    அஞ்சி செய்வனவற்றை
    அகிலம் மகிழச்செய்து
    அறநெறியில் வந்த பொருளால்
    அகமகிழ்ந்து வாழும் இயல்புடையார்
    அகிலத்தில் எக்காலத்தும் துன்பம்
    அனுபவித்து வாழ்தல் இல்லை.

    பாடல் 75

    வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
    தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
    ஆற்றுந் துணையும் பொறுக்க, பொறானாயின்
    தூற்றாதே தூர விடல்.

    பேதமையின்றிச் சேர்ந்து
    பிரிக்கமுடியா நண்பர்களான
    பின்பு தீயொழுக்கம் ஒருவனைப்
    பற்றும்வேளை மற்றொருவன்
    பொறுக்க முடிந்த அளவு
    பொறுத்துக்கொள்க! முடியாமற்
    போகின் அவன் குற்றத்தைப்
    பிறர் அறிய வெளிப்படுத்திப்
    பழிக்காமல் விட்டுவிலகுக!

    பாடல் 76

    இன்னா செயினும் இனிய ஒழிகென்று
    தன்னையே தான்நோவின் அல்லது – துன்னிக்
    கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட!
    விலங்கிற்கும் விள்ளல் அரிது.

    வனங்கள் நிறை நாட்டுடை
    வேந்தனே! நண்பர்கள் நமக்கு
    தீமை செய்யினும் அவை
    தமக்கு நன்மையாக மாறும்
    என நம்பி அச்செயல் வினைப்பயன்
    என்றெண்ணி தன்னைத்தான்
    வெறுப்பதல்லாமல் நெருங்கி
    வந்து ஒன்றிப் பழகியவரை
    விடாதே!  சேர்ந்தபின் பிரிதல்
    விலங்கினிடத்தும் இல்லை.

    பாடல் 77

    பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
    அரிய பொறுப்ப என்றன்றோ – அரியரோ
    ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட!
    நல்லசெய் வார்க்குத் தமர்.

    ஒல் என்றொலிக்கும் அருவிகளுடன்
    ஓங்குயர் மலைகளுடை வேந்தனே!
    பெரியோருடனான மேன்மைமிகு நட்பு
    பொறுப்பர் அவர் நம் அரிய குற்றங்களை
    என்றெண்ணத்தாலன்றோ? நன்மைகளே
    எக்காலத்தும் புரிவார்க்கு நல்ல நட்பு
    கிடைத்தலும் அரிதோ?

    பாடல் 78

    வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
    அற்றம் அறிய உரையற்க – அற்றம்
    மறைக்கும் துணையார்க்கு உரைப்பவே தம்மைத்
    துறக்கும் துணிவிலா தார்.

    உடல்மெலியும் பசித்துன்பம் வரினும்
    உதவும் குணமில்லாதோரிடம்
    உம் வறுமையச் சொல்லாதீர்!
    உயிரை விடும் துணிவில்லாதவர்
    உதவும் குணமுடையாரிடம் வறுமையை
    உரைக்கலாமேயல்லாது மற்றவரிடத்திலல்ல.

    பாடல் 79

    இன்பம் பயந்தாங்கு இழிவு தலைவரினும்
    இன்பத்தின் பக்கம் இருந்தைக்க – இன்பம்
    ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட!
    பழியாகா ஆறே தலை.

    இன்பம் தந்த செயலில்
    இழிவு நேரினும்
    இன்பம் வருகிற பக்கம்
    இருக்கின்ற உனக்கு
    இன்பம் இடையறாது பெருகி
    இருந்து நீங்காமல்
    இருப்பதைக் கண்டாலும்
    இடையூறு கிளக்கும் பழி
    இல்லாத செயல் புரிவதே சிறந்தது.

    பாடல் 80

    தான்கெடினும் தக்கார்கேடு எண்ணற்க தன்னுடம்பின்
    ஊன்கெடினும் உண்ணார்கைத்து உண்ணற்க – வான்கவிந்த
    வையக மெல்லாம் பெறினும் உரையற்க
    பொய்யோடு இடைமிடைந்த சொல்.

    தான் கெட்டாலும் நல்லவர்க்குத்
    தீமை செய்ய நினையாதே!
    தம் உடலின் சதை முழுதும்
    தாங்க முடியாத பசியால் உலரினும்
    தகுதியற்ற உண்ணத்தகாதவர்
    தரும் உணவை உண்ணாதே!
    தூய வானம் மூடிப்போர்த்த
    தரணி கிட்டுமாயினும் பொய்கலந்த
    தீச்சொற்களைச் சொல்லாதே!

    Share
  • நாலடியார் நயம் – 7

    நாலடியார் நயம் – 7

    நாங்குநேரி வாசஸ்ரீ

     7. சினம் இன்மை

    பாடல் 61

    மதித்திறப் பாரும் இறக்க மதியா
    மிதித்திறப் பாரும் இறக்க – மிதித்தேறி
    ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
    காயும் கதமின்மை நன்று.

    மதித்து நடப்பாரும் நடக்கட்டும்
    மதியாது அவமதிப்பாரும் இருக்கட்டும்
    அற்ப ஈயும் மிதித்து ஏறித்தலையில்
    அமருதலால் அந்நிலையுணர்ந்து
    சிந்திக்கும் சான்றோர் அவமதிப்போரை
    சீறிச்சினந்து இருத்தல் வேண்டா.

    பாடல் 62

    தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது
    கண்டுழி யெல்லாம் துறப்பவோ – மண்டி
    அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
    முடிகிற்கும் உள்ளத் தவர்.

    ஓரடியும் எடுத்து வைக்க
    ஒழியாத பெரு அவமதிப்பு
    வந்த காலத்தும் கலங்காது
    வகுத்த காரியம் நிறைவேற்றும்
    மனவலிமை மிக்கார்
    மிகச் சிறந்த தம் உயிரை
    சிறிய இடர் வந்தகாலத்தே
    சினம் பொறுக்காது விடுவரோ?

    பாடல் 63

    காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
    ஓவாதே தன்னைச் சுடுதலால் – ஓவாதே
    ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
    காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து

    நா காவாமல் வாய்திறந்து
    நவிலும் சினச்சொல்
    இடைவிடாது தனக்கே
    இன்னலைத் தந்துவிடும்
    இடையறாது ஆராய்ந்து
    பொருந்திய கேள்வி அறிவைப்
    பெற்ற சான்றோர் சினத்தினால்
    கடுஞ்சொல் கூறார் என்பது
    கற்றறிந்த மேலோரின் கருத்து.

    பாடல் 64

    நேர்த்து நிகரல்லார் நிரல்ல சொல்லியக்கால்
    வேர்த்து வெகுளார் விழுமியோர் – ஓர்த்ததனை
    உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
    துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.

    பெரியோர் தமக்கு நிகரல்லாதார்
    பழிச்சொல்லைச் சொல்லுங்கால்
    மனம் புழுங்கிச் சினம் கொள்ளார்
    மனதில் இருத்தி நினைத்து நினைத்து
    மற்றவரிடம் பகிர்ந்து மேலும்
    கோபமுற்று ஆறாது ஊரெல்லாம்
    கேட்பத் துள்ளிக் குதித்துத் தூணில்
    முட்டிக்கொள்வர் கீழ்மக்கள்.

    பாடல் 65

    இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
    இல்லான் கொடையே கொடைப்பயன் – எல்லாம்
    ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
    பொறுக்கும் பொறையே பொறை.

    பொறிவழிச் செல்லா இளைஞனின்
    புலனடக்கமே அடக்கம்
    கொஞ்சமும் பொருள் இல்லானின்
    கொடையே பயனுள்ள கொடை
    பலவித எதிர்ப்புகளை வெல்லும்
    பலமும் மனவுறுதியும் உடையோன்
    சினம் பொறுத்தலே ஆகச்
    சிறந்த பொறுமை.

    பாடல் 66

    கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
    எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் – ஒல்லை
    இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
    குடிமையான் வாதிக்கப் பட்டு.

    கல் எறிந்ததுபோல் வரும்
    கீழ்மக்கள் வாய்ச்சொல்லை
    மந்திரித்து இட்ட திருநீற்றினால்
    மயங்கிப் படம் அடங்கும்
    பாம்பைப்போல் தங்கள்
    குலப்பெருமையால் தடைபட்டு
    கட்டுண்டு சினமின்றி அமைதிகாத்து
    நல்வழி செல்குவர் பெரியோர்.

    பாடல் 67

    மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
    ஆற்றாமை என்னார் அறிவுடையார் – ஆற்றாமை
    நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
    பேர்த்தின்னா செய்யாமை நன்று.

    பகைகொண்டவராய் இருந்து
    பகைமைக்கேற்ப தீச்செயல்
    புரியும் ஒருவரை எதிர்த்துநின்று
    பகை கொள்ளாது பொறுமைகாப்பவரின்
    பண்பை இயலாமை எனப்
    பகரமாட்டார் பெரியோர்
    பகைவர் மனம் அடங்காது
    பல துன்பம் இழைப்பினும்
    பழிதீர்க்க திரும்பத் தீமைகள்
    புரியாதிருத்தலே நல்லது.

    பாடல் 68 

    நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
    கெடுங்காலம் இன்றிப் பரக்கும் – அடுங்காலை
    நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
    சீர்கொண்ட சான்றோர் சினம்.

    கீழ்மக்கள் சினம் நெடுங்காலம்
    கழியினும் தணியாது வளரும்
    காய்ச்சும் பொழுது நீர்
    கொண்ட வெப்பம்போல்
    தானே தணிந்து குறையும்
    மேன்மை மிகுந்த
    மேலோர்களின் சினம்.

    பாடல் 69

    உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
    அபகாரம் ஆற்றச் செயினும் – உபகாரம்
    தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல்
    வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.

    தாம் செய்த உதவியைத்
    துளியும் சிந்தியாது
    தமக்குத் தீமையே செய்தாலும்
    தாம் அவருக்கு நன்மையே கருதி
    திரும்பவும் உதவுவார்களன்றி
    தீமைசெய்தல் வானளவு புகழ்
    தன்னகத்தே கொண்ட குடியில்
    தோன்றியோர்க்கு இல்லை.

    பாடல் 70

    கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
    பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை – நீர்த்தன்றிக்
    கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
    மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.

    கோபம் கொண்ட நாய்
    கடித்தாலும் தம்வாயால்
    எதிர்த்துக் கடித்தவர்
    எவரும் இல்லை இவ்வுலகில்
    குணமில்லாக் கீழ்மக்கள்
    கூறும் ஈனச்சொல்லை
    மீண்டும் கூறுவரோ
    மேலோர் தம் வாயால்.

    Share
  • நாலடியார் நயம் – 6

    நாலடியார் நயம் – 6

    நாங்குநேரி வாசஸ்ரீ

      6. துறவு

    பாடல் 51

    விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
    தவத்தின்முன் நில்லாதாம் பாவம் – விளக்குநெய்
    தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
    தீர்விடத்து நிற்குமாம் தீது.

    விளக்கு ஒளியின் முன்னே
    விலகிச்செல்லும் இருள்போல்
    செய்த நல் வினையின் முன்
    சேர்த்துவைத்த பாவம் நீங்கும்
    எண்ணெய் குறையும்நேரம்
    எங்கும் இருள் சூழ்வதுபோல்
    நல்வினைப்பயன் நீங்கும்
    நேரம் பாவம் வந்துநிற்கும்.

    பாடல் 52

    நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
    தலையாயார் தங்கருமம் செய்வார் – தொலைவில்லாச்
    சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்
    பித்தரின் பேதையார் இல்.

    நிலையாமையும் மூப்பும்
    நோயும் சாவுத்துன்பமும்
    இவ்வுடம்பிற்கு உண்டு என
    இயன்றவரை கருமங்களைச்
    செய்து வாழ்வர் ஞானநூல்களைச்
    செவ்வனே கற்ற சான்றோர்
    இம்மைக்கு மட்டுமே பயன்நல்கும்
    இலக்கணநூல்களையும் சோதிடமும்
    பிறவற்றையுமே பிதற்றித்திரியும்
    பித்தர்களைவிட அறிவிலார்
    இவ்வுலகில் இல்லை.

    பாடல் 53

    இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
    செல்வம் வலிஎன் றிவையெல்லாம் – மெல்ல
    நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
    தலையாயார் தாம்உய்யக் கொண்டு.

    சிறந்த அழகு மனை இளமை
    செல்வாக்கு செல்வம் வலிமை
    இவையெல்லாம் நாளடைவில்
    இல்லாமல் போகும் நிலைஅறிந்து
    மேலோர் தாம் கடைத்தேற
    மேற்கொண்டு காலம்தாழ்த்தாது
    பற்றுக்களை விடுத்துப்
    பாங்காய் வாழ்வர்.

    பாடல் 54

    துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
    இன்பமே காமுறுவர் ஏழையார் – இன்பம்
    இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையாறு
    அடைவொழிந்தார் ஆன்றமைந் தார்.

    ஆறாத்துன்பம் பலநாட்கள்
    அடைந்து துன்புற்றாலும்
    அறிவிற் சிறியர் ஒருநாளின்
    அற்ப இன்பம் விரும்புவர்
    இன்பம் நிலையற்றதெனவும்
    இன்னல் தருவதெனவும்
    உணர்ந்த சான்றோர்
    உடன் இல்லறத்தினின்று
    நீங்கிச் சென்று
    நீடூழி வாழ்வர்.

    பாடல் 55

    கொன்னே கழிந்தன்று இளமையும் இன்னே
    பிணியோடு மூப்பும் வருமால் – துணிவொன்றி
    என்னொடு சூழாது எழுநெஞ்சே போதியோ
    நன்னெறி சேர நமக்கு.

    இளமை வீணாய்க் கழிய
    இப்போதே நோயுடன்
    இணைந்து மூப்பும் வந்தது
    என்னோடு ஆலோசிக்காது
    எழுகின்ற மனமே!
    நமக்கு நல்வழி கிடைக்க
    நல்ல பாதையில் போகின்றாயோ?

    (நன்மார்க்கத்திற்குச் செல்லத் துணிந்தவன் தன் மனதுடன் பேசியதுபோல் அமைகிறது இப்பாடல்)

    பாடல் 56

    மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்
    பூண்டான் கழித்தற்கு அருமையால் – பூண்ட
    மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
    கடியென்றார் கற்றறிந் தார்.

    மாட்சிமைப்பட்ட குணமும்
    மக்கட்பேறும் இல்லையெனினும்
    மணம் செய்த கணவன்
    மனையாளை நீக்குதல்
    தகாது என்பதால்
    தானே தேடிக்கொள்ளும் துன்பம்
    திருமணம் செய்தல் என
    உணர்ந்த சான்றோர் எக்காலத்திலும்
    உறுதியாய் மணம்முடிக்காதீர் என்றனர்.

    பாடல் 57

    ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
    தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
    நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
    காக்கும் திருவத் தவர்.

    முயன்று செய்த விரதங்கள்
    முடிவுற்று அழியும் வண்ணம்
    தாங்கமுடியாத் துன்பம் வரினும்
    தடங்கல்களை விலக்கித்
    தம் விரதங்களை நிலைநிறுத்தும்
    மனவலிமை கொண்டோரே
    மேலான துறவற ஒழுக்கம்
    மேற்கொள்ளும் சிறப்புடையவர்.

    பாடல் 58

    தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று
    எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் – உம்மை
    எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
    பரிவதூஉம் சான்றோர் கடன்.

    பழித்துப் பேசி தீவினை
    புரிந்தோரைத் தாம்
    பொறுப்பதோடல்லாது
    எம்மை இகழ்ந்த தீவினையால்
    எரியும் நரகம் வீழ்ந்து இவர்
    மறுமையில் துன்புறுவாரே என
    மனது இரங்குவதும்
    மேலோரின் கடமையே.

    பாடல் 59

    மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
    ஐவாய வேட்கை அவாவினைக் – கைவாய்
    கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
    விலங்காது வீடு பெறும்.

    மெய் வாய் கண்
    மூக்கு செவி எனப்
    பெயர் கொண்ட ஐம்
    புலன்களை அடக்கி
    அவற்றின் வழி வரும்
    ஆசையைக் கலக்கமின்றி
    அறவழியில் செலுத்தும்
    வல்லவன் தப்பாமல்
    வீடுபேறு அடைவான்.

    பாடல் 60

    துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
    இன்பமே காமுறுவர் ஏழையார் – இன்பம்
    இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
    பசைதல் பரியாதாம் மேல்.

    அறிவிலார் வாழ்வில் துன்பம்
    அதிகமாய் வருதல்கண்டும்
    துறத்தலை நினையாதவராய்
    துளியளவு இன்பம் விரும்புவர்
    அறிவுடைய மேலோர்
    அச்சிறு இன்பம் கிட்டும்நேரம்
    ஆசை கொள்ளார் மனதில்
    அதனைத் தொடரும் துன்பம்கருதி.

    Share
  • நாலடியார் நயம் – 5

    நாலடியார் நயம் – 5

    நாங்குநேரி வாசஸ்ரீ

     5. தூய் தன்மை

    பாடல் 41

    மாக்கேழ் மடநல்லாய் என்றாற்றும் சான்றவர்
    நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை – யாக்கைக்கோர்
    ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
    காக்கை கடிவதோர் கோல்

    மாந்தளிரின் மேனியுடை இள
    மங்கை நல்லாளே! என
    விளித்துப் பிதற்றும் அறிவுடையோர்
    விரைவில்அழியும் உடம்பின்
    இழிவை எண்ணிப் பாராரோ?
    ஈயின் சிறகு அளவு
    தோல் அறுந்தாலும்
    வழியும் குருதிநோக்கி
    வரும் காக்கையை
    விரட்ட ஒரு கொம்பு
    வேண்டும் என உணர்வீர்.

    பாடல் 42 

    தோல்போர்வை மேலும் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
    மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் – மீப்போர்வை
    பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
    பைம்மறியாப் பார்க்கப் படும்

    கண்ணுக்குத்தெரியா துளைகள் பல
    கொண்டு அசுத்தங்களை மறைக்கும்
    மேற்போர்வைத் தோலினால்
    மிக்க பெருமை கொண்டு
    விளங்கும் இவ்வுடம்பு
    விருப்பம்தரும் அத்தோலால்
    ஆசைமேலிட்டு காம வயப்படாது
    அசுத்தம் மறைக்கப்படாத
    பை போல் நினைந்து உட்புறம்
    காண்கின் உண்மை புரியும்.

    பாடல் 43

    தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடிப்
    பொய்க்கோலம் செய்ய ஒழியுமே – எக்காலும்
    உண்டி வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
    கண்டுகை விட்ட மயல்.

    உண்ணும் தொழிலால்
    உடலுள் அழுக்கு மிகுமென்று
    பெரியோர் விலக்கிவிட்ட
    ஆசை எனும் மயக்கத்தால்
    ஆகுகின்ற உடல்நாற்றம்
    மணம் தரும் பொருட்களை
    மென்று தின்பதாலோ
    வாசனை மலர்களை
    வகையாய்ச் சூடிச் செய்யும்
    பொய் அலங்காரத்தாலோ
    போகிடுமோ?

    பாடல் 44

    தெண்ணீர்க் குவளை பெருங்கயல் வேலென்று
    கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
    உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
    கண்ணீர்மை கண்டொழுகு வேன்

    உள்ளிருக்கும் நீர் நீக்கின்
    தோண்டிய நுங்கு போல்
    தோன்றும் கண்களைத்
    தெளிந்தநீர்க் குவளை என்றோ
    கரையில் புரளும் கயலென்றோ
    கூர் வேற்படை என்றோ
    கூறி இன்புறும் அற்பமனிதர்கள்
    என்மனத்தைத் துன்புறுத்த
    எச்சமயத்திலும் விடுவேனோ?

    பாடல் 45

    முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
    கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவேனோ
    எல்லோரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
    பல்லென்பு கண்டொழுகு வேன்

    எல்லோரும் காணும்படி சுடுகாடு
    எங்கும் சிந்திக்கிடக்கும்
    பல்லாகிய எலும்புகளைப்
    பார்த்தபின்னும் பற்றற்று
    ஒழுகும் நான் பெண்களின்
    ஒளிமிகு பற்களை
    முல்லை அரும்புகள் என்றும்
    முத்துப் போன்றவை என்றும்
    பிதற்றும் மேலான நூலறிவு
    பெறாக் கீழ்மக்கள் எம்
    உள்ளத்தைத் துன்புறுத்த
    உறுதியற்று விடுவேனோ?

    பாடல் 46

    குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
    தொடரும் நரம்பொடு தோலும் – இடையிடையே
    வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
    எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்

    குடலும் கொழுப்பும்
    குருதியும் எலும்பும்
    நன்கு கட்டப்பட்ட
    நரம்பும் தோலும்
    இவற்றினிடைத் தோன்றும்
    தசைகளும் நிணமும்
    தாங்கிய இவைகளுள்
    குளிர்ந்த மாலை சூடிய இக்
    கோதை எப்பகுதியை உடையவள்?

    பாடல் 47

    ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய்ப்புலனும்
    கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் – பேதை
    பெருந்தோளி பெய்வளையாய் என்னுமீப் போர்த்த
    கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.

    அழுக்குகள் ஊறி
    அவ் வெறுக்கத்தக்க
    ஒன்பது துளைகளை
    உடைய புலன்களையும்
    அசுத்தக் குழம்பு உட்சிதறி
    அலைமோதும் உடம்பையும்
    கண்டும் அறிவில்லாதான்
    கண்கவரும் மேல்தோலால்
    கவரப்பட்டு அழகிய
    பெருத்த தோளுடையவளே!
    பாங்கான வளையல்கள்
    அணிந்தவளே! என விளித்து
    அறிவில்லாது பிதற்றுவான்.

    பாடல் 48

    பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
    கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் – மண்டிப்
    பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தல்
    முடைச்சாகாடு அச்சிற்று உழி

    உடம்பெனும் பண்டத்தின்
    உண்மை இயல்பறியாதோர்
    சந்தனப் பூச்சையும்
    சூடும் மலர்மாலையையும்
    பாராட்டி மகிழ்ந்திடுவர்
    முடைநாற்றம் கொண்ட
    மனித உடம்பெனும் வண்டியின்
    அச்சுபோலாம் உயிர் பிரிந்தபின்
    ஆணும் பெண்ணுமாய் வலிமிகு
    கழுகுகள் கூடிப் புரட்டிக்
    குத்தி உண்பதை அவர்கள்
    கண்டதில்லையோ?

    பாடல் 49

    கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
    குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி – ஒழிந்தாரைப்
    போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
    சாற்றுங்கொல் சாலச் சிரித்து

    இடுகாட்டில் காணப்படும்
    இறந்தவர்களின் தலைகள்
    அச்சந்தரும் தோற்றம் கொண்ட
    ஆழ்பள்ளக் கண்களுடன்
    சாகாது நிற்கும் மற்றவர்
    சகிக்க முடியாதபடி
    ஏளனமாய்ச் சிரித்து
    இவ்வுடம்பின் தன்மை
    இத்தகையது என உணர்த்தி
    நல்லறம் போற்றி
    நல்வழியில் நில்லுங்கள்
    எனச் சொல்லுகின்றனவோ?

    பாடல் 50

    உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
    செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் – செயிர்தீர்ந்தார்
    கண்டிற் றிதன்வண்ணம் என்பதனால் தம்மையோர்
    பண்டத்துள் வைப்ப திலர்

    இறந்தவர் வெண்மண்டை ஓடுகள்
    இருப்பவர் அஞ்சும்படி நகைத்து
    இல்லறத்தில் இறுமாந்து
    இருப்போரின் குற்றம் போக்கும்
    உடல்மயக்கமெனும் குற்றம் நீங்கியோர்
    உண்மையை உணர்ந்துப் பின்னர்
    இவ்வுடம்பின் இயல்பு
    இத்தகையதுதான் என
    அறிந்து தம் உடம்பை
    அரிதான ஒரு பொருளாய்
    அதிசயித்துப் பாராட்ட விழைந்திலர்.

    Share
  • நாலடியார் நயம் – 4

    நாலடியார் நயம் – 4

    நாங்குநேரி வாசஸ்ரீ

     4. அறன் வலியுறுத்தல்

    பாடல் 31

    அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
    புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
    மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
    தவத்தால் தவஞ்செய்யா தார்

    இவ்வீட்டினுள்ளே இருப்பவர்தாம்
    இனிய வாழ்வு வாழ்பவர் என
    அண்ணாந்து நோக்கி வீட்டின்
    அருகே சென்று முயற்சித்தும்
    உயர்ந்தோக்கி நிற்கும் வீட்டின்
    உட்செல்ல இயலாத மன
    வருத்தத்துடன் வாயிலைப் பற்றி
    வருந்தி நிற்பர் எவரெனில்
    தம் முற்பிறப்பிலும் கூட
    தருமம் செய்யாதோர்.

    பாடல் 32

    ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
    போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே – ஓவாது
    நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்
    சென்றன செய்வது உரை.

    அளவற்ற செல்வம் விரும்பி
    அதற்காகவே உழைத்து
    பெருஞ்செல்வம் சேர்த்து
    பெருவாழ்வு வாழ்ந்து
    தருமம் செய்ய மறந்து
    தன்னுயிர் நீப்போம்
    என்றுணராது வாழும்
    எம் மடநெஞ்சமே!
    முயற்சித்து வாழ்ந்தாலும்
    முடியும் உன் வாழ்நாட்கள்
    எஞ்சிய நாளிலாவது
    என் செய்வாய்? மறுமைக்காக.

    பாடல் 33

    வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
    மனத்தின் அழியுமாம் பேதை – நினைத்ததனைத்
    தொல்லையது என்றுணர் வாரே தடுமாற்றத்து
    எல்லை இகந்தொருவு வார்

    தீவினையால் பெரும்
    தீங்கு நேரும் காலம்
    பெருமூச்செரிந்து மனதுள்
    பெரும் கவலையுற்று
    அழிவர் அறிவில்லாதோர்.
    அத்தீவினைப் பயனை
    மனதுள் நினைந்து அது
    முற்பிறப்பில் செய்த
    பாவத்தின் பலன் என
    பக்குவாய் ஏற்று
    அமைதியாய் அனுபவிக்கும்
    அறிவுடையோர் பிறவித்
    துன்பத்தின் எல்லையைத்
    துரிதமாய்க் கடப்பர்.

    பாடல் 34

    அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
    பெரும் பயனும் ஆற்றவே கொள்க – கரும்பூர்ந்த
    சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
    கோதுபோல் போகும் உடம்பு.

    பெறுதற்கரிய இம்மனித உடலை
    பெற்றோம் புண்ணிய பயனால்
    பெற்ற அவ்வுடலைக் கொண்டு
    பெருந்தருமம் செய்க!
    கரும்பின் சாறுபோல்
    காலத்திற்கும் உதவும் அது
    உயிரற்று அழியும் உடம்போ
    உதவாத சக்கை போலாம்.

    பாடல் 35

    கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
    துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்;
    வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
    வருங்கால் பரிவ திலர்

    ஆட்டிய கரும்பின் சாற்றில்
    ஆகிய வெல்லக்கட்டியை
    முற்காலத்தில் கொண்டோர்
    முன்னே கிடக்கும் சக்கை
    தீப்பற்றி எரியும் நேரம்
    துன்புற்று வருந்தார்
    நல்லறம் செய்து
    நல் பிறவிப்பயன் உற்றவர்
    எமன் வரும் நேரம்
    எண்ணித் துன்பம்கொள்ளார்.

    பாடல் 36

    இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
    பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
    ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
    மருவுமின் மாண்டார் அறம்

    இன்றைக்கோ அன்றைக்கோ
    என்றைக்கோ என எண்ணாது
    எப்போதும் எமன் உம் பின்னால்
    நிற்பதாய் நினைத்துக்கொண்டு
    நீக்கிவிடுங்கள் தீச்செயல்களை
    முடிந்த வரையில்
    புகழுடைப் பெரியோர்
    போற்றிய தர்மத்தைப்
    புரிந்து வாழ்வீர்.

    பாடல் 37

    மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
    எத்துணையும் ஆற்றப் பலவானால் – தொக்க
    உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாதுஉம்பர்க்
    கிடந்துண்ணப் பண்ணப் படும்

    மனிதப் பிறவியால்
    மண்ணுலகில் ஆகும் செயல்
    ஆராய்ந்து நோக்கின்
    அளவிற் பலவாம்
    நரம்பும் தசையும் கூடிய
    நம் உடம்பையே கவனித்து
    வாழ்ந்திராது சுவர்க்கம்
    வாய்த்து இன்பம் நுகர
    நல்லறம் செய்து
    நலமாய் வாழ்வீர்.

    பாடல் 38

    உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
    இறப்ப நிழற்பயந் தாஅங்கு – அறப்பயனும்
    தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
    வான்சிறிதாப் போர்த்து விடும் .

    மிகச்சிறு ஆலம்விதை
    மரமாகி நிழல்தருவது போல்
    அறத்தால்வரும் பயன்
    அற்பமாய் இருப்பினும்
    தகுதியுடையவர் கையில்
    தங்கிச் சேர்ந்தால்
    ஆகாயமும் அற்பமாகுமளவு
    அளவிற்பெரியதாகி
    அதனை மூடிப் போர்த்தும்.

    பாடல் 39

    வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
    வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
    வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
    வைகலை வைத்துணரா தார். .

    தினந்தோரும் நாள் கழிவதை
    திரும்பத்திரும்பப் பார்த்திருந்தும்
    அறிந்துகொள்ளாதார்
    ஆயுட்காலம் தொடர்ந்து
    குறைவதை உணராது
    நிலையாக இருப்பதாய்
    நினைத்து இன்புறுவர்.

    பாடல் 40

    மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
    ஈன இளிவினால் வாழ்வேன்மன் – ஈனத்தால்
    ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந்து இவ்வுடம்பு
    நீட்டித்து நிற்கும் எனின்

    இழிவான காரியம் செய்து
    இனிய உணவு ஊட்டுவதனால்
    இவ்வுடம்பு உறுதியுடன்
    இனிதே நீண்ட நாள் நிலைக்குமெனும்
    இக்கூற்று உண்மையானால்
    மானமெனும் அருமை
    மிக்க அணிகலன் நீக்கி
    கை ஏந்துதல் எனப்படும்
    கீழான அவமானத்துடன்
    பெரும்பாலும் வாழ்வேன்.

    Share
  • நாலடியார் நயம் – 3

    நாலடியார் நயம் – 3

    நாங்குநேரி வாசஸ்ரீ

    3. யாக்கை நிலையாமை

    பாடல் 21

    மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
    தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைத்
    துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
    எஞ்சினார் இவ்வுலகத் தில்.

    மலைமேல் தோன்றும் சந்திரன் போல்
    மண்ணுலகில் யானைத் தலைமேல்
    பிடித்த வெண்கொற்றக் குடையுடைய
    புகழுடை வேந்தர்களும் மாண்டனர்
    என இகழப்பட்டார் அல்லாமல்
    எஞ்சியவர் என்று சாகாமல்
    எவருமில்லை இவ்வுலகில்.

    பாடல் 22

    வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
    வீழ்நாள் படாஅது எழுதலால் – வாழ்நாள்
    உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்
    நிலவார் நிலமிசை மேல்.

    உயிர் வாழும் காலத்தை
    உலகோர்க்கு அளந்தியம்பும்
    கருவியாம் சூரியன்
    காலம் தவறாது உதிப்பதால்
    ஆயுள் முடியும் முன்னர்
    அடுத்தவருக்கு உதவுங்கள்
    உயிர்விடாமல் நிலைத்து
    உலகில் வாழ்ந்தவர் எவருமில்லை.

    பாடல் 23

    மன்றம் கறங்க மணப்பறை யாயின
    அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் – பின்றை
    ஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே
    வலிக்குமாம் மாண்டார் மனம்.

    திருமண மண்டபத்தில் ஒலிக்கும்
    தக்க மங்கல வாத்தியம்
    அன்றே நிலை மாறி
    அவருக்குப் பிணப்பறையாய்
    ஒலித்தலும் உண்டென்பதை
    உணர்ந்த பெரியோர் மனம்
    உறுதியாய்ப் பற்றி நிற்கும்
    பிறவித் துயரினின்று
    பிரிந்து தப்பும் வழியை.

    பாடல் 24

    சென்றே எறிய ஒருகால்; சிறுவரை
    நின்றே எறிப பறையினை – நன்றேகாண்
    முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டுஎழுவர்
    செத்தாரைச் சாவார் சுமந்து

    இறந்தவர் வீட்டில் பறை அடிப்போர்
    இடைவெளி விட்டு பறை அடிப்பர்
    முதற்பறைக்குப்பின் காலம் கழித்து
    மீண்டும் அடிப்பது இரண்டாம் பறை
    மூன்றாம் பறை அடிக்குமுன்னே
    முகத்தைத் துணியால் மூடி நெருப்பிலிட
    செத்தவனைத் தூக்கிச்செல்வர்
    சாகாதவர்கள் சுடுகாட்டை நோக்கி

    பாடல் 25

    கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
    பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் – மணங்கொண்டீண்டு
    உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே
    டொண்டொண்டொ டென்னும் பறை

    கூட்டம் கூடி உறவினர்
    கூவி அழுது பிணத்தைச்
    சுடுகாடு கொண்டு சென்று
    சுட்டெரிப்பதைக் கண்டபின்னும்
    திருமணம் செய்துகொண்டு
    திகட்டாத இன்பத்துடன்
    சுகமாய் வாழ்வேன் என்ற
    சிந்தனையுடன் மயங்குவோர்க்கு
    சாப்பறையின்  தொண் தொண் ஒலி
    இவ்வுலகவாழ்வில் இத்தகு
    இன்பம் இல்லை எனக்காட்டும்.

    பாடல் 26

    நார்த்தொடுத்து ஈர்க்கிலென் நன்றாய்ந்து அடக்கிலென்
    பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
    தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
    கூத்தன் புறப்பட்டக் கால்.

    தோல் பையெனும் உடலுள்
    தங்கித் தன் தொழில்களை ஆற்றி
    விளையும் பயனைத் தானே
    விரும்பி அனுபவிக்கும்
    கூத்தாடியாகிய உயிர்
    கூட்டை விட்டுச் சென்றபின்
    பிணத்தைக் கயிற்றால் கட்டி
    பிடித்து இழுத்தால் தான் என்ன?
    நன்கு சுத்தம் செய்து
    நல்லடக்கம் செய்தால்தான் என்ன?
    வீசிப் போட்டால்தான் என்ன?
    வீண்பழி சுமத்தினால்தான் என்ன?

    பாடல் 27

    படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
    கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் – தடுமாற்றம்
    தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
    நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.

    பெய்யும் மழை நீரில்
    பலமுறை தோன்றி அழியும்
    குமிழிபோல் ஒரு பொருள்
    உடம்பு என உறுதியாய்
    உணர்ந்துத் தடுமாறாமல்
    பிறவித் துன்பத்தைப் போக்க
    பெரும் அறம் செய்து வாழும்
    பேரறிவுடைய பெரியோருக்கு
    இணையாய் ஒத்தோர் எவருளார்
    இப்பெரும் உலகில்.

    பாடல் 28

    யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
    யாக்கையா லாய பயன்கொள்க; – யாக்கை
    மலைநாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
    நிலையாது நீத்து விடும்.

    வலிமையான உடலை
    வினைப்பயனால் பெற்றவர்
    அதனால் ஆகும் பயனாய்
    ஆகச்சிறந்த நற்செயல் புரிவீர்!
    மலைமேல் உலாவும்
    மேகம்போன்ற இவ்வுடல்
    நிலைபெற்று நில்லாது
    நீங்கிச் சென்றுவிடும் முன்னே

    பாடல் 29

    புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
    இன்னினியே செய்க அறவினை; – இன்னினியே
    நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
    சென்றான் எனப்படுத லால்.

    இப்போதுதான்  நின்றிருந்த
    இவன் உட்கார்ந்தான்
    பின்னர் படுத்தவன்
    பல உறவினரை
    அலறி அழவைத்து
    ஆருயிர் நீத்தான்
    என்பது போல்
    எவ்வகையிலும் நிலையில்லா
    நுனிப்புல்லில் உள்ள
    நீர்த்துளி போன்ற
    இவ்வுடம்பின் நிலையுணர்ந்து
    இப்பொழுதே தொடங்குவீர்
    அறச்செயல்களை ஆற்ற.

    பாடல் 30

    கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
    வாளாதே போவரால் மாந்தர்கள் –  கேளாதே
    சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
    யாக்கை தமர்க்கொழிய நீத்து.

    வரட்டுமா? எனக் கேளாது
    வந்து சேர்வர் உறவினராய்
    பின் தம்கூடு மறந்து தொலைவில்
    பறந்து செல்லும் பறவைபோல்
    உற்றார் உறவினரிடம்
    உடலை விட்டுவிட்டு
    உயிர்நீத்துச் சென்றிடுவர்.

    Share
  • நாலடியார் நயம் – 2

    நாலடியார் நயம் – 2

    நாங்குநேரி வாசஸ்ரீ

     2. இளமை நிலையாமை

    பாடல் 11

    நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
    குழவி யிடத்தே துறந்தார்; – புரைதீரா
    மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
    இன்னாங் கெழுந்தீருப் பார்

    என்றாவது ஒருநாள்
    எப்படியும் மூப்பு வரும்
    என்றுணர்ந்த அறிவுடையோர்
    இளமையில் இன்பம் துறந்தார்
    இன்பமாய் வாழ்ந்து நிலையில்லா
    இளமையைக் கழித்தோர்
    இன்னாத்துயருடன் மூப்பில்
    இன்புற்றிருக்க இயலாமல்
    கோலூன்றி எழுந்து நிற்பர்
    கட்டுக்கடங்கா வருத்தத்துடன்.

    பாடல் 12

    நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
    அற்புத் தளையும் அவிழ்ந்தன, – உட்காணாய்;
    வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
    ஆழ்கலத் தன்ன கலி

    நட்புக் கயிறு அறுந்தது
    நல்லாளும் அன்பில் குறைந்தனள்
    உற்றாரின் அன்பாகிய
    உரிமைக் கயிறும் அவிழ்ந்தது
    சிந்தித்துப்பார்!
    சீறும் கடலில்
    மூழ்கும் கப்பல்போல்
    முதுமையும் வந்தது- இனி
    உயிரோடு வாழ்வதால்
    உண்டாகும் பயன்தான் என்ன?

    பாடல் 13

    சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
    பல்கழன்று பண்டம் பழிகாறும் – இல்செறிந்து
    காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே
    ஏம நெறிபடரும் ஆறு.

    வாய் பேச முடியாது
    வார்த்தைத் தடுமாறி
    கோலூன்றித் தள்ளாடும்
    கிழப்பருவம் எய்தி
    பற்கள் வீழ்ந்துபட
    பலர் நகைக்கும் போதும்
    இல்வாழ்வில் பற்றுவைத்து
    இறுதிவரை சிற்றின்பத்தில்
    நீந்தித் தவிக்கும்
    நெறிகெட்ட மாந்தர்க்கு
    பேரின்ப வழி அடையும்
    பேறு கிட்டுவதில்லை.

    பாடல் 14

    தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
    வீழா இறக்கும் இவள்மாட்டும் – காழ்இலா
    மம்மர்கொள் மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக் கோல்
    அம்மனைக்கோல் ஆகிய ஞான்று

    தலை நடுங்கிக் கூன் விழுந்து
    தடி ஊன்றித் தள்ளாடி
    இறக்கும் நிலையிலுள்ள
    இவளிடத்தும் முன்பிவளின்
    தாய் கையில் ஊன்றுகோல்
    தங்கியிருந்த காலத்தே
    மயக்கமுற்று வருந்தியிருந்திருப்பர்
    மன உறுதியில்லாக் காமுகர்
    ஆதலில் உணர்வீர் இளமையும்
    அழகும் நிலையற்றதென்று.

    பாடல் 15

    எனக்குத்தாய் ஆகியாள் என்னை ஈங்கிட்டுத்
    தனக்குத்தாய் நாடியே சென்றாள்; – தனக்குத்தாய்
    ஆகியவளும் அதுவானாள் தாய்த்தாய்க்கொண்டு
    ஏகும் அளித்திவ் வுலகு

    தாய் சென்றாள் என்னைத்
    தனியே தவிக்க விட்டுத்
    தனக்கொரு தாயை நாடி
    தாய்க்குத் தாயும் இறந்து தன்
    தாய் தேடச்சென்றவளே
    இவ்வுலகம் ஒருதாய்
    இன்னொரு தாய்தேடும்
    நிலையற்ற தன்மையோடு
    நிலையாய் என்றும் உள்ளது.

    பாடல் 16

    வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
    முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
    மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
    அறிவுடை யாளர்கண் இல்

    வெறியாடும் பலிக் களத்தில்
    வெட்டுப்படக் காத்திருக்கும் ஆடு
    பூசாரி கைப்பூமாலையின் தளிரை
    பூரிப்புடன் உண்ணுவதுபோல்
    நிலையில்லா  இன்பத்தை
    நிலையென எண்ணி இளமையில்
    அகமகிழ்ந்து  இன்புறுதல்
    அறிவுடையோரிடத்து இல்லை.

    பாடல் 17

    பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
    கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை – நனிபெரிதும்
    வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
    கோல்கண்ண ளாகும் குனிந்து

    நில்லா இளமையின்
    நிலை எதுவெனில்
    பழம் உதிர்ந்து
    பயனற்று வீழும்
    குளிர்மிகு சோலையின்
    கனிநிறை மரங்கள் போலாம்
    இளமைமிகு நங்கை இவளை
    இன்பம் தரும் வேல்விழியாளென
    ஆசை மிகுதியால் விளித்து
    அதிசயிப்போரே! உணர்வீர்
    மூப்பில் இவளுக்கும் ஊன்றுகோல்
    முன்நடக்க உதவும் கண்ணாகுமென்பதை.

    பாடல் 18

    பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
    இருசிகையும் உண்டீரோ என்று – வரிசையால்
    உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
    எண்ணார் அறிவுடை யார்.

    பருவம் எத்தனை?
    பல்லாட்டம் கண்டதோ?
    இருபுறமும் மென்றுதின்ன
    இயலுமோ உம்மாலென
    முதியவர் குறைகேட்க
    முயற்சிக்கும் அறிவுடையோர்
    இளமையின் உடல்வலிமை
    இறுதிவரை தொடருமென எண்ணார்.

    பாடல் 19

    மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
    கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்
    முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
    நற்காய் உதிர்தலும் உண்டு

    இளைஞன் நான்
    இனிவரும் காலத்தில்
    நல்லறம் செய்வேனென
    நாட்களைக் கடத்தாதீர்
    பலநேரம் கடுங்காற்றில்
    பழுத்த கனி வீழாது
    விளைந்த காய்களும் உதிரும்
    விதியின் சதியால் அதுபோல்
    வயதானவர் பிழைத்திருக்க
    வாலிபர் சாதலுமுண்டு.

    பாடல் 20

    ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
    தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் – பீட்பிதுக்கிப்
    பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
    கள்ளம் கடைப்பிடித்தல் நன்று

    மரணப் பிடியிலுள்ள
    மனிதனைத் தேடும்
    அருளில்லாத எமன்
    அருகில் வருவானென்பதால்
    தோளில் ஏற்றத்
    தகுந்த புண்ணியமெனும்
    கட்டுச் சோற்றை
    காலத்தே தேடிப்
    பிழைத்துக்கொள்ளுங்கள்
    பத்து மாதம் சுமந்தவளின்
    பிள்ளையை அவள் கதறக்
    கொண்டு செல்லும்
    எமனின் வஞ்சனையை
    அறிந்து செயல்படுவீர்
    அனுதினமும் நற்செயலை.

    Share
  • நாலடியார் நயம் – 1

    நாலடியார் நயம் – 1

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நாலடியார் நயம்

    பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த வேளாண் வேதம் எனப் போற்றப்படும் நாலடியார் சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நீதி நூல். நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பை கொண்ட இந்நூலில் திருக்குறளைப் போன்றே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகள் உள்ளன.

    அறத்துப்பால்

    1. செல்வம் நிலையாமை

    பாடல் 1

    அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
    மறுசிகை நீக்கியுண் டாரும் – வறிஞராய்ச்
    சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று
    உண்டாக வைக்கற்பாற் றன்று.

    அறுசுவை உணவை இனியமனைவி
    அருகமர்ந்து ஊட்ட ஒருகவளத்துக்கு மேல்
    உண்ண முடியாது மறுகவளத்தை
    உதறித்தள்ளும் செல்வந்தரும் ஏழையாய்ப்
    பிறிதோர் நாளில் கூழ் வேண்டிப்
    பிச்சையெடுக்க நேரிடும் என்பதால்
    செல்வம் நிலையானது என்ற
    சிந்தனையை விலக்கிடுவீர்.

    பாடல் 2

    துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
    பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
    அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
    சகடக்கால் போல வரும்.

    குற்றமற்ற நல்வழியில் ஈட்டிய
    குறைவற்ற பெருஞ்செல்வம்
    சேரத் தொடங்கிய நாள் முதல்
    சோர்வில்லா எருமைகள்பூட்டி உழுது
    உண்டாக்கிய சோற்றை வறியவர்
    உடனமர்ந்து பகிர்ந்து உண்பீர்.
    நிலையில்லாத செல்வம் எவரிடமும்
    நிற்காது வண்டிச் சக்கரம்போல்
    உயர்த்தியும் தாழ்த்தியும் அதனை
    உடையோரை ஆட்டுவிக்கும்.

    பாடல்- 3

    யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச்
    சேனைத் தலைவராய்ச் சென்றோரும் ஏனை
    வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
    மனையாளை மாற்றார் கொள.

    பெருமையுடன் யானை மீதமர்ந்து
    படைகள்சூழ உலா வந்த செல்வம் மிக்க
    அரசர்களும் வினைப்பயனால்
    அவர்தம் நல்நிலை தாழ்ந்து மனையாளை
    பகைவர் கடத்திச் செல்ல யாருமற்று
    பதைபதைக்கும் வறுமை நிலையுற்றுத்
    தாழ்வர் என்பதனால் பொருள் உள்ளபோதே
    தானம் செய்து அற வாழ்க்கை வாழ்வீர்!. .

    பாடல் 4

    நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
    ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
    சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
    வந்தது வந்தது கூற்று

    நிலைபெற்று நிற்கும் என
    நினைத்த பொருளெல்லாம்
    நில்லாமல் அழியும்
    நிலை கண்டபின்னும்
    நற்காரியங்கள் நிகழ்த்த
    நாட்களைக் கடத்தாதீர்
    விரைந்து குறையும் நம்
    வாழ்நாட்கள் உணர்வீர் அதை.
    கிளம்பிவிட்டான் எமன்
    கோபத்துடன் கொண்டுசெல்ல.

    பாடல் 5

    என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
    பின்னாவ தென்று பிடித்திரா முன்னே
    கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
    கொடுத்தாறு செல்லும் சுரம்

    கிடைக்கப்பெற்ற ஓர் பொருளை
    கடைக்காலத்திற்கு உதவுமென
    பிடித்துவைத்துக் கொள்ளாது
    பற்றற்று தானம் செய்தவர்கள்
    கொடும் எமன் பின்னே
    நரகம் செல்லாது விடுத்து
    நல் இன்பம்மிகு சுவர்க்கம் எய்துவர்.

    பாடல் 6

    இழைத்தநாள் எல்லை இகவா; பிழைத்தொரீஇக்
    கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; – ஆற்றப்
    பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின் நாளைத்
    தழீஇம்தழீஇம் தண்ணம் படும்.

    தம் வாழ்வின் முடிவை மாற்ற
    தப்பிக்குதித்து ஓடி எமனிடம்
    அகப்படாமல் வாழ்ந்தோர் எவருமில்லை
    அளவற்ற பொருள் வைத்திருப்போரே!
    வாரி வழங்குவீர் பிறருக்கு
    விரைவில் பிணப்பறை
    ஒலிக்கும் தழீம் தழீம் எனும்
    ஓசையுடன் உங்களுக்கும்.

    பாடல் 7

    தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
    கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்; – ஆற்ற
    அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்
    பிறந்தும் பிறவாதார் இல்

    சூரியனை நாழிபோல் வைத்து
    சூழ்ச்சியாய் வாழ்வை அளக்கும்
    எமன் இறுதியில் நம் உயிரை
    எடுத்துச் செல்வான் நிச்சயமாய்
    ஆதலினால் அருளுடையவராய்
    அறம் செய்து வாழ்வீர்
    பொறுப்பற்று இவ்வழி நடவாதோர்
    பிறந்தும் இவ்வுலகில் பிறவாதவரே..

    பாடல் 8

    செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
    புல்லறி வாளர் பெருஞ்செல்வம் – எல்லில்
    கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
    மருங்கறக் கெட்டு விடும்.

    இருக்கும் செல்வம் கொண்டு
    இறுமாப்போடு அலையும்
    அடுத்த பிறவிபற்றிய
    அறிவற்றோர் செல்வம்
    கருமேகத்தின் வாயில்
    கணநேரம் தோன்றி
    மின்னி மறையும்
    மின்னல் போல்
    இல்லாமல் அழியும்
    இருந்த இடம் காட்டாமல். .

    பாடல் 9

    உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
    துன்னருங் கேளிர் துயர்களையான் – கொன்னே
    வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ
    இழந்தான்என் றெண்ணப் படும்.

    தானும் உண்ணாது
    தக்க மதிப்பையும் பெறாது
    உயர்ந்த செயல் செய்யாது
    உறவினர் துன்பம் களையாது
    வேண்டியவர்க்கு உதவாது
    வாழ்பவனின் செல்வம்
    இருந்தும் இல்லாததுபோல்
    இரங்கத்தக்க நிலையில்
    அய்யகோ! பொருளிழந்தானென
    அனைவராலும் கருதப்படும்.

    பாடல் 10

    உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
    கெடாஅத நல்லறமும் செய்யார் – கொடாஅது
    வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட!
    உய்த்தீட்டும் தேனீக் கரி

    விண்தொடும் மலைநாட்டின்
    வேந்தனே!
    விரும்பியதை உடுக்காது
    வாய்க்கு ருசியாய் உண்ணாது
    நலிவுற்ற காலத்தும்
    நல்லறம் செய்யாது
    தேவைக்கு உதவாது
    தேக்கிவைப்போர் செல்வம்
    பல மலரின் தேனை
    பாங்காகச் சேர்த்துவைத்து
    பலன் எதுவுமில்லாமல்
    பின்இழக்கும் தேனீ போலாகும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-133

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-133

    நாங்குநேரி வாசஸ்ரீ

    133. ஊடலுவகை

    குறள் 1321

    இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
    வல்ல தவரளிக்கும் ஆறு

    அவுககிட்ட எந்த தப்பும் இல்லையின்னாலும் பிணங்கிநிக்கது எம்மேல நேசம் வைக்கச்செய்யும்.

    குறள் 1322

    ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
    வாடினும் பாடு பெறும்

    பிணக்குனால எனக்கு ஏற்படுத சின்ன சங்கடத்துக்காவ அவுக காட்டுத அளவத்த நேசம் வாடினாலும் பெருமையத் தரும்.

    குறள் 1323

    புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
    நீரியைந் தன்னார் அகத்து

    நிலத்தோட தண்ணி கலந்தாமாரி ஒத்துமையா நேசம் வச்சிருக்க காதலர்கிட்ட ஏற்படுத பிணக்குல கெடைக்க சந்தோசம் சொர்க்கத்துலயும் கெடைக்குமா?

    குறள் 1324

    புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
    உள்ளம் உடைக்கும் படை

    இறுக்க கட்டிப்பிடிச்சி விடாம இருக்காமாரி அமையுத பிணக்குலதான் என் நெஞ்சுறுதியக் குலையச்செய்யுத ஆயுதமும் இருக்கு.

    குறள் 1325

    தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
    அகறலின் ஆங்கொன் றுடைத்து

    தப்பே பண்ணாத நேரமும் பிணங்கி நேசம் வச்சவளோட மெல்லிசான தோளப் பிரிஞ்சி இருக்கதுல ஒரு சந்தோசம் இருக்கு.

    குறள் 1326

    உணலினும் உண்ட தறலினிது காமம்
    புணர்தலின் ஊடல் இனிது

    சாப்பாடு சாப்பிடுததவிட முன்ன சாப்பிட்டது செரிச்சிச்சின்னா அது ஒரு சுகம். அதுகணக்கா காதல்ல சேருதத விட பிணங்கி நிக்கது அவுகளுக்கு ஒரு சுகம்.

    குறள் 1327

    ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
    கூடலிற் காணப் படும்

    பிணக்குல தோத்தவுக செயிச்சதுக்குச் சமானம். இத பொறவு கூடிச்சேந்து சந்தோசப்படையில தெரிஞ்சுக்கிடலாம்.

    குறள் 1328

    ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
    கூடலில் தோன்றிய உப்பு

    நெத்திவேர்க்க கூடிச்சேருத சந்தோசத்த திரும்ப ஒருக்க பிணக்கு உண்டாகையில பெத்துக்கிடலாமில்லையா.

    குறள் 1329

    ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
    நீடுக மன்னோ இரா

    பளபளக்குத மொகமுள்ள காதலி இன்னும் பிணங்கட்டும். அதுக்காவ நான் அவகிட்ட கையேந்தி நிக்குத சந்தோசத்தப் பெறுததுக்காக ராப்பொழுது நீண்டுபோவட்டும்.

    குறள் 1330

    ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெறின்

    காதலுக்கு சந்தோசம் தருதது ஒருத்தருக்கொருத்தர் கோவப்பட்டு சிணுங்கிப் பிரியுத ஊடல். அதுக்குப்பொறவு கூடிச்சேந்து சந்தோசப்பட்டாகன்னா அது அந்த ஊடலுக்கு இன்பம்.

    (முற்றும்)

    Share