நாலடியார் நயம் – 9

நாங்குநேரி வாசஸ்ரீ

 9. பிறர் மனை நயவாமை

பாடல் 81

அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால் – நிச்சலும்
கும்பிக்கே கூர்த்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார்.

பெரிது காமத்தால் வரும் அச்சம்
பெறும் இன்பமோ சிறிது
மனதில் நினைத்துப் பார்த்தால்
மண்ணுலகை ஆளும் அரசனின்
மரணதண்டனைக்கும் உரியது
நித்தமும் நரகவேதனை தரும்
நேர்மையற்ற பாவச்செயல் ஆதலின்
நாணமுடையோர் பிறன்மனைவியை
நினைத்து ஆசைப்படாதிருப்பாராக!

பாடல் 82

அறம்புகழ் கேண்மைபெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார் சேரா – பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
அச்சத்தோடு இந்நாற் பொருள்.

தருமம் புகழ் தக்கார் நட்பு
தகுந்த பெருமை எனும்
இந்நான்கும் பிறன்மனைவியை
இச்சைகொள்வோரிடம் சேரமாட்டா
மாறாகப் பகை பழி பாவம்
மற்றும் அச்சம் இந்நான்கும்
மாற்றான் மனைவி மேல்
மயங்கி ஆசைகொள்வோரிடம்
பொருந்தி வந்து சேரும்.

பாடல் 83

புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமல் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்.

மாற்றான் மனைவியை நாடி
மனையுள் புகும்போது அச்சம்
வீட்டிலிருந்து வெளியே திரும்பி
வரும்போதும் அச்சம்
மயங்கிக் களிக்கும்போது அச்சம்,
மற்றவர் அறிவரோ என அச்சம்
இடையறாது அச்சம் எப்போதும்
இதையெல்லாம் சிந்தியாது
இன்னொருவன் மனைவியிடம்
இச்சைகொள்வது என்னபயன் கருதியோ?

பாடல் 84

காணின் குடிப்பழியாம்; கையுறின் கால்குறையும்;
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; – நீள்நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி, நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு.

பிறர் காணின் குலத்திற்குப்
பழி உண்டாகும் கையில்
அகப்பட்டால் கால்முறியும்
ஆண்மையற்ற இப்பிறர்மனை
புகுதலைச் செய்யும்நேரம்
பயம் தோன்றும் பின் ‘
நரகமாகிய துன்பம் தோன்றும்
நல்லொழுக்கம் அற்றோனே இதில்
நீ கண்ட இன்பம் எவ்வளவு? சொல்.

பாடல் 85

செம்மையொன் றின்றிச் சிறியார் இனத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ – உம்மை
வலியால் பிறர்மனைமேல் சென்றாரே இம்மை
அலியாகி ஆடிஉண் பார்.

சிறிதும் நல்லொழுக்கமின்றி
சிறியோருடன் சேர்ந்து அழகிய
கோலம் எழுதப்பெற்ற
கொங்கை உடையாளின்
தோளைச் சேர விரும்பி
தம் வலிமையால் பிறர்
மனைவியிடம் முன்பு சென்றவரே
மண்ணுலக இப்பிறப்பில்
அலியாய்க் கூத்து
ஆடி உண்டு வாழ்பவர்.

பாடல் 86

பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணம் செய்து கடிபுக்க – மெல்லியல்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு.

பலர் அறிய மணப்
பறை கொட்டி
நல்ல நாள் பார்த்து
நன்மணம் புரிந்து
தன் காவலிற் புகுந்த
மென்மைத் தன்மையுடை
மனைவி வீட்டிலிருக்க
மாற்றான் மனைவியை
கெட்ட நோக்கில் ஒருவன்
காண்பது எதனால்?

பாடல் 87

அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ
வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று – நம்பும்
நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு; பாம்பின்
தலைநக்கி யன்னது உடைத்து.

அயலார் பழித்துரைக்க
அருமை உறவினர் பயந்திருக்க
அயலான் மனைவியைத் தழுவி
அகமகிழ்ந்த அனைவராலும் நம்ப
அரிதான இயல்புடையவனது
அற்ப காம நுகர்ச்சி
அரவத்தின் தலையை நக்கியது
அன்ன தன்மை உடையது.

பாடல் 88

பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா;
உரவோர்கண் காமநோய் ஓஓ!- கொடிதே!
விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்
உரையாதுஉள் ஆறி விடும்.

கொடியது காமநோய்!  அக்
கொடும் நோய் மனவலிமை
மிக்காரிடம் வளராது ஒருக்கால்
மிக்கு வளர்ந்தாலும் வெளிப்படாது
சிறிது வெளிப்பட்டாலும் அயலாரிடம்
செல்லாது நாண வேண்டியதால்
மனவலிமை மிக்க அவர்தம் காமம்
தோன்றாது உள்தணிந்து ஆறிவிடும்.

பாடல் 89

அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்; – வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப் படும்.

அம்பும் தீயும் ஒளிக்கதிர் சூரியனும்
அதிவெப்பத்துடன் சுட்டாலும்
புற உடலையே சுடும்
பெருஞ்சூடெனும் காமம்
அகத்தே மனதை வருத்திச்சுடுதலால்
அனைத்தையும்விட அஞ்சத்தக்கதாம்.

பாடல் 90

ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயலாகும்; – நீருள்
குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினும் காமம் சுடும்.

ஊர் நடுவே பற்றி எரியும்
உருவம் கொண்ட செந்தீக்கு
அமிழ்ந்து தப்பிக்க இயலும்
அருகில் இருக்கும் நீருள்
ஏறிக்குன்றில் ஒளிந்தாலும்
எழுந்து மூழ்கிக் குளித்தாலும்
என்செயினும் காமம் சுட்டெரிக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.