Tag: புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்

  • பரிமேலழகர் உரைத்திறன் – 19

    பரிமேலழகர் உரைத்திறன் – 19

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ஒருமுறை சொல்வதே உரைக்கழகு!

    முன்னுரை

    ‘அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்’ என்பார் நம்மாழ்வார். அதனைச் சற்று மாற்றி ‘இப்போதைக்கு அப்போதே சொல்லி வைத்தேன்’ என்று வைத்துக் கொண்டால் இந்தக் கட்டுரையின் சாரம் நன்கு விளங்கும். ‘சுருங்கச் சொல்லல்’ என்பது நூலுக்கு ஓதப்பட்ட பத்து அழகுகளில் ஒன்று. ‘கூறியது கூறல்’ என்பது நூலுக்கு இருக்கக் கூடாது என விலக்கப்பட்ட குற்றங்கள் பத்தினுள் ஒன்று. அழகையும் குற்றத்தையும் திசைகளைப்போலப் பத்தாக வைத்த பாங்கு எண்ணத்தக்கது. பரிமேலழகர் தம் உரையில் ஒருமுறை கூறியதை மறுமுறை கூறுவதில்லை. அவ்வாறு கூற வேண்டிய நிலை ஏற்படின் முன்பே கூறப்பட்டது என வாளாச் சுட்டிச் சென்றுவிடுகிறார். இதனால் நினைவாற்றல் உள்ளவர்க்கே என்பதும் அத்தகையோரே நூல்பயிலத் தகுதியானவர் என்பதும் அவற்கே அந்நூற்பயிற்சி பயன்படும் என்பதும் பெறப்படும். ஒவ்வொரு முறையும் முன்னர்க் கூறியதையே பின்னரும் எடுத்தோதுவது கற்பாருக்குச் சலிப்பை ஏற்படுத்துவதுடன் நூலுள் அல்லது உரையுள் இருக்கக் கூடாத குற்றங்களைத் தெரிந்தே செய்வது போலாகிவிடும் என்று அவர் கருதியிருக்கலாம். கூறியது கூறலாகிய குற்றம் தவிர்க்கும் பரிமேலழகரின் உரைத்திறனை முன்னிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை தொடர்கிறது.

    உழைப்பவர்க்கன்றி உரை புரியாது

    உத்திவகை முப்பத்திரண்டு எனப்படுவது போலப் புத்திவகையும் பல உள. மண்புத்தி, மரபுத்தி, கல்புத்தி, மூங்கில் புத்தி, எண்ணெய் புத்தி என்று ஐந்து வகையாகப் பகுப்பர். (வடநூலார் இதனை முறையே மிருத்து புத்தி, தாரு புத்தி, சிலா புத்தி, வேணுபுத்தி, தைலபுத்தி என்பர்). பிறவகை புத்திகளை விரிப்பின் பெருகும். தைலமாகிய எண்ணெய் நீர்ப்பரப்பில் ஒரு துளி வீழினும் அப்பரப்பு முழுவதையும் பரவ எத்தனிப்பதைப்போல ஒரு கருத்தினை ஒருமுறை செவிமடுப்பின் அது தொடர்பான அத்தனைப் பொருண்மைகளையும் உள்வாங்கும் ஆற்றலுடையாரைத் ‘தைலபுத்தி உடையவர்’ என்பது வழக்கு. பரிமேலழகர் உரை தைலபுத்தி உடையார்க்கே செய்யப்பட்டது என்பது அதனை ஒருமுறை நோக்குவார்க்கும் புலப்படும் உண்மையாகும்.

    ‘அழுக்காறு’ – பொருள் வரையறை

    அறத்துப்பால் பதினேழாவது அதிகாரத் தலைப்பு ‘அழுக்காறாமை’ என்பதாகும். திருவள்ளுவர் இருக்கக்கூடாத பண்புகளை எதிர்மறையில் சுட்டுவார். வெஃகாமை, புறங்கூறாமை, வெகுளாமை என்பன போல. இருக்க வேண்டிய பண்புகளை உடன்பாட்டில் வைத்துக் கூறுவார். ஒழுக்கமுடைமை, அறிவுடைமை, பண்புடைமை என்பன போல. ‘அழுக்காறு’ என்பது இருக்கக்கூடாத பண்பாதலின் அதனை எதிர்மறையில் வைத்து ‘அழுக்காறாமை’ என்று கூறுகிறார். அதிகாரத் தலைப்பிற்குப் பொருள் கூறும் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

    ‘அழுக்காறு’ என்பது ஒரு சொல். அதற்குப் பொருள் மேலே உரைத்தாம். அச்சொல் பின் ‘அழுக்காற்றைச் செய்யாமை’ என்னும் பொருள்பட எதிர்மறை ஆகாரமும் மகர ஐகார விகுதியும் பெற்று ’அழுக்காறாமை’ என நின்றது.

    மேலே சொன்ன விளக்கத்தால் இரண்டு உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும். ஒன்று, ‘அழுக்காறு’ என்பது ஒருசொல் என்பதும் ‘அழுக்கு + அறு’ என இதனை இரண்டு சொல்லாக நோக்கக் கூடாது என்பதுமாகியன சொல்லுக்கான புறநிலை விளக்கம். இரண்டு, அதற்கான பொருள் இதற்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டது என்பதனால் கூறியது கூறலாக இங்குப் பதிவிடவில்லை என்னும் பொருள்நிலை விளக்கம்.

    “அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
    இழுக்கா இயன்ற தறம்” (35)

    என்பது அறத்துப்பால் முப்பத்தைந்தாவது குறட்பா. இந்தக் குறட்பாவில் பயின்றுள்ளள ‘அழுக்காறு’ என்ற சொல்லுக்குத்தான் பிறர் ஆக்கம் பொறாமை (பிறருடைய வளர்ச்சியைக் கண்டு பொறுத்துக் கொள்ள இயலாமை – அடைப்பிற்குள் இருப்பன கட்டுரையாளர் கருத்து) என்று உரைப்பொருள் தந்திருக்கிறார். பிறர் ஆக்கம் பொறாமை என்னும் மூன்று சொற்களைக் கூட மீளவும் சுட்டுதல் உரைக்கட்டுமானத்தைப் பாதிக்கும் எனக் கருதுகிறார் பரிமேலழகர். கருதி ‘அதற்குப் பொருள் மேலே உரைத்தாம்’ என 125 குறட்பாக்களுக்கு முன்னால் தான் எழுதிய உரைப்பொருளை நோக்கிய பயணத்திற்கு முன்னோக்கப் பணிக்கிறார். பரிமேலழகரின் படிப்பும் பணியும் ஓலைச்சுவடிகளில் நிகழ்ந்திருக்கிறது என்பதைக் கருத்திற் கொண்டால் அவருடைய அளப்பரிய நினைவாற்றல் புலப்படக் கூடும்.

    ஏழாவது அதிகாரமும் எழுபிறப்பு உண்மையும்

    இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்பது பாசுரம். இந்த ஏழு பிறவியைத் திருவள்ளுவர் நட்போடு பொருத்திப் பார்த்திருக்கிறார். ‘செய்ந்நன்றி’ என்பதன் பொருள் செய்பவனுக்கு ஆகாது செய்யப்பட்டவனுக்கு ஆகிவரும். அதாவது உதவியைப் பெற்றுக் கொண்டவன் என்றைக்கும் அதனை மறக்காமல் இருப்பதே செய்ந்நன்றி. இதனை ‘உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து’ என்று பின்னும் ஓதுவார் திருவள்ளுவர். நல்லோர், ஒருவன் இப்பிறவியில் தனக்கு உதவி செய்தவனுடைய நட்பினை எழுபிறப்பிலும் எண்ணிப் பார்ப்பர்’ என்ற கருத்தினைச் சொல்லுகிற குறட்பா,

    “எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
    விழுமம் துடைத்தவர் நட்பு” (107)

    என்று அமைகிறது. இந்தக் குறட்பாவில் சொல்லப்பட்டிருக்கும் ‘எழுபிறப்பு’ என்பதற்குப் பரிமேலழகர் உரை விளக்கம் சொல்லாமல் அதற்கு முன்னதிகாரங்களில் உள்ள ஒரு குறட்பாவிற்குத் தான் சொல்லிச் சென்ற பொருள் நோக்கிக் கற்பாரை ஆற்றுப்படுத்துகிறார்.

    “எழுமை என்றது வினைப்பயன் தொடரும் எழுபிறப்பினை. அது வளையாபதியுட் கண்டது. ‘எழுவகைப் பிறப்பு மேலே (62) உரைத்தாம்”

    என அறுபத்திரண்டாவது குறட்பா விளக்கத்திற்குக் கற்பார் கவனத்தைக் கொண்டு செல்கிறார். பிறப்பு ஏழாவன,

    “ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
    நீர்பறவை நாற்கால் ஓர் பப்பத்துச் — சீரிய
    பந்தம் ஆம் தேவர் பதினாறு அயன்படைத்த
    அந்தமில்சீர்த் தாவரம் நாலைந்து”

    என்னும் வெண்பா அறுபத்திரண்டாவது குறட்பா விளக்கத்தில் காணப்படுகிறது. 107 ஆவது குறட்பா பொருள் விளக்கத்திற்காக அறுபத்திரண்டாவது குறட்பா விளக்கத்தைக் காட்டிச் செல்கிறார். அது மட்டுமன்று. இந்த வெண்பாவின் எழுபிறவி பற்றிய உள்ளடக்கம் வளையாபதி என்னும் காப்பியத்தில் அடங்கியுள்ளது என்பதையும் (107) குறளுரையில் சுட்டுகிறார்.

    அளவைகள் ‘ஆறும்’ பொருந்தும் ஆறும்

    மெய்யுணர்தல் அதிகாரத்தில் உள்ள குறட்பா ஒன்றிற்குப் பரிமேலழகர் விளக்கம் எழுதுகிறார். இது துறவறவியல் சார்ந்ததாதலின் சமயக் கொள்கைகள் சார்ந்த நுட்பமான பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. அவ்வதிகாரத்தில் உள்ள ஒரு குறள்,

    “ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு” (357)

    என்று அமைந்திருக்கிறது. உயிர்களின் நிலையாமை நோக்கி அவற்றின் மீது வைத்த பற்றினைத் துறந்த ஒருவன் பரம்பொருள் ஒன்றே அழியாதது என்பதை உணர்ந்தால் அவனுக்குப் பிறப்பு தொடராது” என்பது இக்குறட்பாவிற்கான எளிய இயல்பான பொருள். குறட்பாவிலுள்ள ‘உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின்’ என்னும் தொடருக்குப் பரிமேலழகர்,

    “அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்தும் ஆற்றானும் தெளிய ஆராய்ந்து அதனால் முதற்பொருளை உணருமாயின் அவனுக்கு மாறிப் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டா”

    என்று பொழிப்புரை எழுதிச் சுருக்கமான விளக்கவுரையில்,

    “அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம்”

    என இன்னும் சுருங்கிய தொடரைக் கையாள்கிறார். இந்தக் குறட்பாவில் கண்ட ‘அளவைகள்’ என்பன தனக்குத் துணையாகும் அறங்களை அறிகின்ற அளவுகோல்கள். ‘இதனைச் செய்ய இயலும்’, ‘இதனைச் செய்ய இயலாது’ என்று வரையறுத்துக் கொள்வதற்குப் ‘பொருந்தும் ஆறு’ என்று பெயர். இவற்றையெல்லாம் இந்தக் குறட்பாவிற்கும் பொருத்தியுரைக்கும் பரிமேலழகர் விளக்கத்தை இன்னொரு முறை பதிவிடாமல் தான் ஏற்கனவே பதிவிட்ட குறட்பாவுக்குக் கற்பாரை வழி நடத்துகிறார்.

    “நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
    தேரினும் அஃதே துணை” (242)

    இந்தக் குறட்பாவுக்கு “அளவைகளானும் பொருந்தும் ஆற்றானும் நன்றான நெறியிலே நின்று நமக்குத் துணையாம் அறம் யாது என ஆராய்ந்து அருளுடையராக, ஒன்றையொன்று ஒவ்வாத சமயநெறிகள் எல்லாவற்றாலும் ஆராய்ந்தாலும் துணையாவது அவ்வருளே பிறிதில்லை” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் மேற்கண்ட அளவைகள் பற்றியும் பொருந்தும் ஆறு பற்றியும் பின்வருமாறு விளக்கிக் காட்டுகிறார்.

    அளவைகளாவன,

    “பொறிகளால் காணும் காட்சியும் குறிகளால் உயத்துணரும் அனுமானமும் கருத்தா மொழியாகிய ஆகமமும் என மூன்று. ஒப்புப் பற்றி உணரும் உவமையும் இங்ஙனம் அன்றாயின் இது கூடாதென்று உணரும் அருத்தாபத்தியும் உண்மைக்கு மாறாய இன்மையும் என இவற்றைக் கூட்டி ஆறென்பாரும் உளர். இவையும் அவற்றுள்ளே அடங்குதலின் மூன்று என்றலே கருத்து.

    பொருந்தும் ஆறாவன,

    “இது கூடும் இது கூடாது எனத் தன் கண்ணே தோன்றுவது“

    இவ்வளவு விளக்கங்களையும் திருக்குறளில் ‘அளவைகள் மற்றும் பொருந்தும் ஆறு’ என வருகிற இடங்களில் எல்லாம் ஒவ்வொரு முறையும் சொன்னால் என்ன ஆகும்? உரைச் செறிவு குறையும், கற்பார் உள்ளம் சலிப்படையும். எனவேதான் பரிமேலழகர் தானும் உரைக்குற்றத்தில் சிக்காமல் உரையின் செறிவும் குன்றாமல், கற்பாருக்குக் கைகாட்டியாய் விளங்க நிற்கிறார். கற்பார்தம்  நினைவாற்றலையும் அவ்வப்போது சோதித்துக் கொள்கிறார்.

    எஞ்சாமையும் நீங்காமையும் ஏழுக்கும் உண்டு

    ‘இறைமாட்சி’ என்னும் அதிகாரப் பொருண்மையாக அரசர்க்கு அங்கம், அவனது மாட்சி, மாட்சியும் பயனும் என மூன்றாகப் பகுத்துக் கொள்கிறார் பரிமேலழகர். இவற்றுள் அரசனது மாட்சியை நான்கு குறட்பாக்களில் அடக்கிக் காட்டும் பரிமேலழகர் அவற்றுள் இரண்டு பாட்டினை பொருண்மையால் ஓர் அலகாகக் கொள்வதைக் காணமுடிகிறது. அவ்விரண்டு பாடல்கள் வருமாறு,

    “அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தர்க் கியல்பு” (382)

    “தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
    நீங்கா நிலன்ஆள் பவர்க்கு” (383)

    இவ்விரண்டு பாடல்களினாலும் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடைமை என்னும் ஏழு பண்புகளும் மன்னனிடத்து இயல்பாகவே அமைந்திருத்தல் வேண்டும் என்பதை வள்ளுவர் பதிவு செய்கிறார்.  இப்பொருண்மையை,

    “அரசனுக்கு இயல்பாவது திண்மையும் கொடையும் அறிவும் ஊக்கமும் என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல்” (382)  “நிலத்தினை ஆளும் திருவுடையார்க்கு அக்காரியங்களில் (அரச காரியங்களில்) விரைவுடைமையும் அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடைமையும் ஆண்மையுடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா” (383)

    என்னும் பரிமேலழகரின் பொழிப்புரைகளால் அறியலாம். அரசனுக்கு இருக்கவேண்டிய இந்த ஏழு பண்புகளையும் தனித்தனிக் குறட்பாக்களில் பதிவு செய்தமைக்குக் குறள் யாப்பே காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பது கட்டுரையாளர் அனுமானம். மேலும் ‘ஏழு’ என்னும் தொகைக்கான விரியைத் திருக்குறள் யாண்டும் கையாண்டிருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு பாடல்களிலும் சொல்லப்பட்ட பண்புகள் மன்னனிடத்து இடையறாது நிற்க வேண்டும் என்பதுதான் மூலப்பொருள்.

    ‘அஞ்சாமை’ முதலிய நான்கு பண்புகளும் எஞ்சாது இருத்தல் வேண்டும் என்னும் திருக்குறளில் ‘எஞ்சாமை’ என்பதற்குச் சொற்பொருள் விளக்கம் எழுதியிருக்கும் பரிமேலழகர் அடுத்த குறட்பாவில் ‘தூங்காமை’ முதலிய பண்புகளும் நீங்காது இருத்தல் வேண்டும் என்னும் திருக்குறளில் ‘நீங்கா’ என்பதற்கு விளக்கம் எழுதவில்லை. ஆனால்,

    “நீங்கா என்பதற்கு மேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க”

    என்று எழுதிவிடுகிறார். பல குறட்பாக்களை முன்நோக்கி உரையெழுதிய பரிமேலழகர் இங்கே முந்தைய குறட்பாவினை (382) நோக்கி இரண்டையும் ஓரலகாகக் கருதுமாறு உரையெழுதுகிறார். முதலில் முதற்குறட்பாவில்,

    “உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கில் அரசர்க்குக் கெடுவன பல ஆம் ஆகலின் இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார் ‘எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு” என்றார்.”

    என்று எழுதிய விளக்கத்தை அடுத்த குறட்பாவில் பயிலும் ‘நீங்கா’ என்பதற்கும் பொருத்திக் கொள்க என்று சுருக்கிக் கொள்கிறார். இதனால், இந்த ஏழு பண்புகளுக்கும்,

    “உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கில் அரசர்க்குக் கெடுவன பல ஆம் ஆகலின் இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும்” என்று (382) எழுதிய உரை பொருந்தும் என்பது பெறப்படும். பரிமேலழகர் உரையால்,

    1. உயிர்க் குணங்கள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும்
    2. சொல்லப்பட்ட ஏழு குணங்களும் ஒரே நேரத்தில் இடையறாது இருத்தல் வேண்டும்.
    3. அதனால்தான் ‘எஞ்சாமை’ என்ற சொல்லையும் ‘நீங்கா’ என்ற சொல்லையும் திருவள்ளுவர் பயன்படுத்தியிருக்கிறார்.

    இவ்வளவு பொருள் விளக்கங்களையும்,

    “நீங்கா என்பதற்கு மேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க”

    என்னும் ஆறு சொற்களில் பதித்துக் காட்டும் பரிமேலழகர் உரைத்திறனை எப்படிப் புகழ்வது?

    எப்படிக் கொடுப்பது?

    ‘ஆற்றில் போட்டாலும் அளந்து போடு’ என்பது பழமொழி. இந்தப் பழமொழியின் சாரம் படைப்பிலக்கியத்தில் பதிவு செய்யப்படுகிறபோது அதன் மதிப்பும் பாதுகாப்பும் கூடிவிடுகிறது.

    “ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
    போற்றி வழங்கும் நெறி” (477)

    என்னும் குறட்பா ‘வலியறிதல்’ என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ளது. அறிவு, ஆண்மை, பெருமை என்னும் மூவகையாற்றலில் பெருமையின் பகுதியாக இருப்பது பொருள். பொருளைப் பிறர்க்கு ஈவது அறத்துப்பாலில் ஈகையெனும் அறமாகக் கருதப்படினும் பொருட்பாலில் அரசனுக்குரிய வலிமைகளுள் ஒன்றின் பகுதியாகக் கருதப்படுகிறது. அறத்துப்பாலில் ‘வறியார்க்கொன்றீவதே ஈகை’ என்பது பொருந்தும். பொருட்பாலில் அதற்கு நோக்கமும் வரையறையும் உண்டு. அதனைக் கூறுகிறது இந்தப் பாடல்.

    “ஈயும் நெறியானே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக்கொண்டு ஒழுகும் நெறியாம்!”

    என்னும் பரிமேலழகரின் பொழிப்புரையால் இந்தப் பாடல் அரசநீதி செலுத்தும் மன்னன் பொருளைப் பயன்படுத்தும் நெறி பற்றிக் கூறுவதாகக் கருதப்படும். ‘அளவறிந்து ஈக’ என்னும் தொடருக்கு ஈயும் நெறியான் என உரைகண்ட பரிமேலழகர் அந்த நெறியை இங்கே விளக்காது தான் முன்பே விளக்கிய இன்னொரு குறட்பாவின் விளக்கவுரையைச் சுட்டுகிறார்.

    “ஈயும் நெறி மேல் இறைமாட்சியுள் ‘வகுத்தலும் வல்லதரசு’ (385) என்புழி உரைத்தாம்”

    என்று எழுதுகிறார். அந்தப் பாட்டின் விளக்கவுரையில் “காத்த வகுத்தலாவது,

    1. கடவுளர் அந்தணர் வறியோர் என்ற இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும்
    2. யானை, குதிரை, படை, நாடு, அரண் என்ற இவற்றிற்கும் பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும் தன்னிற் பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட்பொருட்டாகவும்
    3. மண்டபம், வாவி, செய்குன்று, இளமரக்கா முதலிய செய்தற்கும் ஐம்புலன்களால் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலை இன்பப் பொருட்டாகவும் கொள்க

    என ஈதலின் நெறி பற்றி விளக்கும் பரிமேலழகர், பொருட்பாலில் ஈதலின் தன்மையை அறத்துப்பாலினின்றும் முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுவதை அறியலாம். ‘வறியார்க்கு’ என்னும் அறத்துப்பாலின் வரையறை இங்கே முற்றிலும் நீங்கி அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள் நோக்கத்தை முன்னெடுப்பதையே இந்தக் குறட்பாவில் பரிமேலழகர் விளக்குகிறார். இந்த விளக்கத்தைத்தான் ‘ஆற்றின் அளவறிந்து ஈக’ என்னும் தொடருக்கும் பொருத்திக் கொள்ளச் சொல்கிறார். ஒரு நூறு குறட்பாக்கள் கடந்து உரையெழுதினாலும் எந்தக் குறட்பாவில் எந்தச் சொல்லுக்கு எந்தப் பொருளை உரைத்தோம் என்பதைத் தம் நினைவுப் பேழையில் இருந்து எடுத்தளிக்கும் அழகரின் ஆற்றல் சொல்லுந்தரமன்று!

    உடன் நிகழ்ச்சியும் உண்டு

    ‘காலமறிதல்’ என்னும் அதிகாரத்தில் ஒரு பாட்டு. காலமும் இடமும் அறிந்து ஒரு செயலை நன்கு திட்டமிட்டுச் செயல்படுகிற ஒருவன்  இவ்வுலகத்தையே ஆள நினைத்தாலும் அது கைகூடும் என்னும் பொதுவான கருத்தைச் சொல்வது போல் அமைந்திருக்கிறது.

    “ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
    கருதி இடத்தாற் செயின்” (484)

    “ஒருவன் ஞாலம் முழுதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது ஒருவன் கையகத்ததாம் அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின்”

    என்று இதற்குப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் தொடர்ந்து எழுதிய விளக்கவுரையில்,

    ‘இடத்தான்’ என்பதற்கு மேல் ‘கருவியான்’ என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க’

    என்று எழுதிக் காட்டுகிறார்.

    இந்தப் பாடடில் உள்ள உரைநுட்பம்

    முந்தைய பாட்டில் ‘கருவியால்’ என மூன்றாம் வேற்றுமை ‘ஆன்’ உருபு பயின்று வந்திருக்கிறது. இந்த ‘ஆன்’ என்னும் உருபு கருவிப் பொருள் தருவதாக இருந்தாலும் இந்த இடத்தில் அது ‘ஒடு’ உருபின் உடனிகழ்ச்சிப் பொருளைத் தருவதாகக் கொள்கிறார். கொண்டு, ‘கருவிகளுடனே’ என்று உரையெழுதுகிறார்.

    “கருவிகளாவன – மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். ‘அவை உளவாய வழியும் காலம் வேண்டும்’ என்பது அறிவித்தற்குக் ‘கருவியான்’ என்றான்.”

    என்னும் அழகர் விளக்கம் கருவிகள் இன்னின்ன எனப் பட்டியலிடுகிறது. அறிவு, ஆண்மை, பெருமை என்பன மூவகை ஆற்றல். சாம, பேத, தான, தண்டம் என்பன நால்வகை உபாயம். காலத்தால் வினையாற்றினும் இந்தக் கருவிகளோடு வினையாற்ற வேண்டும் என்பது கருத்து. அதாவது இந்தக் ‘கருவிகளால்’ வினையாற்றாமல் ‘கருவிகளோடு’ வினையாற்ற வேண்டுமாம். இவ்வாறாகவே பின்னால் வரும் ‘இடத்தான்’ என்பதற்கும் பொருள் கொள்ள வேண்டும் என்பதைத்தான் ‘மேல் கருவியான் என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க’ எனச் சுருக்கம் காட்டுகிறார். இதனால் ‘இடத்தாற்செயின்’ என்பதற்கு ‘இடத்தினால் செய்’ என்னாது ‘இடத்தோடு’ என்பது பொருளாம்.

    ‘கருவியான் செய்’ என்பதற்குக் ‘கருவியோடு செய்’ என உரை கண்டதால் முன்னுள்ள வலியறிதல் என்னும் அதிகாரத்தோடும் ‘இடத்தான் செய்’ என்பதற்கு ‘இடத்தொடு செய்’ என உரைகண்டதால் பின்னுள்ள இடனறிதல் என்னும் அதிகாரத்தோடும் இயைத்து சிங்கநோக்காகக் ‘காலமறிதல்’ என்னும் இவ்வதிகார அமைப்பு முறை நுட்பம் உணர்த்தினார் என்க.

    நிறைவுரை

    ‘இதற்கான பொருள் அங்கே உரைக்கப்பட்டது’ என்பதை ‘உரைத்தாம்’ என்றும், ‘அங்கே உரைத்ததைப்போல இங்கேயும் பொருள் கொள்க’ என்பதை ‘உரைத்தாங்கு உரைக்க’ என்றும் தெளிவுபடுத்துகிறார் பரிமேலழகர். ஒருசில இடங்களில் மட்டும் முந்தைய அதிகாரத்தின் பெயர் சுட்டும் பரிமேலழகர் பெரும்பாலான இடங்களில் அதிகாரப் பெயரையும் சுட்டுவதில்லை. குறட்பா எண்ணையும் குறிப்பதில்லை. ‘உரைக்குற்றம் வந்துவிடக் கூடாது’ என்னும் பொறுப்புணர்வும், ‘கற்றுணர வல்லார்க்கே அரிய இலக்கிய உரைகள் கைவரபெறும்’ என்னும் கல்விக் கொள்கையும் ஒருங்கே கொண்ட உரையாசிரியர்களுள் பரிமேலழகர் தனித்து நிற்கிறார். ‘உழைத்தால் உயரலாம்’ என்பது பழமொழி! இலக்கியத்தைப் பொருத்தவரையில் ‘உழைக்காதவர்க்கு உரை புரியாது’ என்பது புதுமொழி!

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 17

    பரிமேலழகர் உரைத்திறன் – 17

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    திருக்குறளில் ‘நோக்கு’

    முன்னுரை

    ‘நோக்கம்’ என்ற சொல்லை அனைவரும் அறிவர். ‘பார்வை’ என்ற சொல்லும் ‘காட்சி’ என்பதும் அவ்வாறு பழக்கமானதே. ஆனால் ‘நோக்கு’ என்ற சொல் அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நோக்கம் என்னும் சொல்லின் திரிந்த வடிவம் ‘நோக்கு’ எனவும் சிலர் கருதியிருக்கக் கூடும்.  கண்ணின் வினை ‘பார்வை’ என்றால் மனத்தோடு கூடிய கண்ணின் வினைக்கு நோக்கம் என்று பெயர். திருவள்ளுவர் முன்னதைப் ‘பொதுநோக்கு’ என்பார். பின்னதை ‘நோக்கு’ என்பார். இன்னும் தெளிவாகச் சொன்னால் உள்ளக்குறிப்பினைக் கண் வெளிப்படுத்துவதற்கே நோக்கம் என்று பெயர். ஆனால் நோக்கு என்பது ‘பார்வை’, ‘நோக்கம்’ என்பவற்றினின்றும் மாறுபட்டது. இவற்றுக்கும் ‘நோக்கு’ என்பதற்கும் எள்ளின் முனையளவும் தொடர்பு கிடையாது. இந்த நோக்கு திருக்குறளில் அமைந்திருக்கும் பாங்கினை உரையாசிரியர் பரிமேலழகர் வெளிப்படுத்துமாற்றை ஆராய்வதையே இக்கட்டுரை தனது தலையாய நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    நோக்கு என்றால் என்ன?

    உண்மையில் இந்த ‘நோக்கு’ என்பது மக்கள் வழக்கில் உள்ளதே. திருமண வீட்டில் விருந்துண்டவன் சொல்வான் “விருந்து சாப்பிடுகிற மாதிரி இல்லையே?”  இளைஞர் வட்டத்தில் ஒரு பேச்சு கேட்டிருக்கலாம் “படம் பாக்குற மாதிரி இல்லையே?” விருந்து உண்கிற மாதிரி இருக்க வேண்டும். படம் பார்க்கிற மாதிரி இருக்க வேண்டும். ஊன்றிக் கவனித்தால் ‘விருந்து’ என்பதும் ‘படம்’ என்பதும் சில அம்சங்களை உள்ளடக்கி இருக்கவில்லையே என்னும் ஏக்கம் அந்தத் தொடர்களில் அமைந்திருப்பதைக் காணலாம். இந்த அம்சங்கள் செயப்படுபொருளில் அமைந்திருக்க வேண்டும். சரியா? கவிஞன் படைக்கிறான். இந்த அம்சங்கள் படைப்பில் இருக்க வேண்டும். இதுபோல்தான் நோக்கு என்பதும். ‘நோக்கு’ என்பது நோக்குகிற வினையைக் குறிக்கும். அந்த வினைக்கு உகந்ததாக அதற்கான செயப்படுபொருள் அமைந்திருக்க வேண்டும். ஒருவன் ஒரு கவிதையைப் ‘பார்த்தான்’ என்பதற்கும் ‘படித்தான்’ என்பதற்கும் ‘நோக்கினான்’ என்பதற்கும் வேறுபாடு உண்டு. நோக்கிற்கான கூறுகள் இருந்தால்தான் அது நோக்கிற்குரியது. அந்தக் கூறு காலங்கடந்தும் எண்ணி வியப்பதாயும் வியந்து திளைப்பதாயும் அமைதல் வேண்டும். இதிலிருந்து ‘நோக்கு’ என்பது கவிதையில் அமைந்திருக்கும் கூறுகளின் தொகுதி என்பது பெறப்படும். இது ஒரு செய்யுளின் அல்லது கவிதையின் மாத்திரை முதலாக அடி ஈறாக அமைந்திருக்கும். எப்படி அடுத்த பத்தியில்.

    தொல்காப்பியம் கூறும் நோக்கு

    பொருளதிகாரச் செய்யுளியலில் செய்யுளின் உறுப்புக்களாக முப்பத்திரண்டு கூறுகளை ‘மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ’ (தொல் 1259) என நிரல்படுத்தும் தொல்காப்பியம் “நோக்கே” என்று இதனைக் குறிப்பிடுகிறது. இது மேற்குறிப்பிட்ட நூற்பாவில் முற்பகுதியான இருபத்தாறு சிறந்த கூறுகளில் ஒன்று. நூற்பாவின் பிற்பகுதியில் கூறப்படும் அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எட்டும் முன்னர்க் கூறிய இருபத்தாறுக்கு இணையானவை அல்ல என்பது இளம்பூரணர் கருத்து.

    “மாத்திரை முதலா அடிநிலை காறும்
    நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே” (1306)

    என்னும் நூற்பாவில் நோக்கு என்பதற்கான விளக்கமும் பொருள் வரையறையும் பெறப்படுகிறது. இந்த நூற்பாவிற்கு உரையாசிரியப் பெருமக்கள் எழுதிய குறிப்புரைகளைக் காண்பது பொருள் தெளிவுக்கு உதவக்கூடும்.

    நோக்கிற்கான இளம்பூரணர் விளக்கம்

    தொல்காப்பியத்திற்கு உரைத்தடம் காட்டிய ஆசிரியர் இளம்பூரணர் மேற்கண்ட நூற்பாவிற்குப் பின்வருமாறு உரையெழுதுகிறார்.

    “மாத்திரை முதலா அடிநிலையளவும் நோக்குதலாகிய கருவி நோக்கென்று சொல்லப்படும். காரணம் எனினும் கருவியெனினும் ஒக்கும். நோக்குதற்காரணம் என்பதால் உண்டற்தொழில் என்றாற்போலக் கொள்க” அதாவது யாதானும் ஒன்றைத் தொடுக்கும் காலத்துக் கருதிய பொருளை முடிக்குங் காலும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை.”

    உரையாசிரியர் இட்ட தடத்தைப் பின்வந்த உரையாசிரியர்கள் சிறிதளவு செப்பமிட்டார்களே தவிர அடிப்படையில் பொருள் மாற்றம் ஏதும் செய்ய  இயலவில்லை என்பதை அவர்தம் உரைகளால் அறிந்து கொள்ள முடியும்.

    பேராசிரியர் கருத்து

    “ஆறுதலையிட்ட அந்நாலைந்து’ எனவும் ‘எட்டு’ எனவும் இருவகையான தோன்றக் கூறியது ஏனையது போலாமல் எட்டுறுப்பும் ஓரொரு செய்யுட்கு ஒரோ ஒன்றேயும் வரும் என்பது அறிவித்தற்கும் அவைதாம் அச்செய்யுள் பல தொடர்ந்த வழியே பெரும்பான்மையும் உறுப்பு என்பது அறிவித்தற்கும் அவ்வாறு கூறினான் என்க. எனவே ஒழிந்த உறுப்பு இருபத்தாறும் ஒன்று ஒன்றனை இன்றியமையாவென்பது பெற்றாம். “நோக்கென்பது மாத்திரை முதலாகிய உறுப்புக்களைக் கேட்டோர்க்கு நோக்குப்படச் செய்தல்” எனப் பொதுநூற்பாவில் எழுதிய பேராசிரியர்,

    “மாத்திரையும் எழுத்தும் அசைநிலையும் சீரும் முதலாகக் கொண்ட  அடி நிரம்பும் துணையும் நோக்குடையவாகச் செய்தல் வன்மையாற் பெறப்படுவது நோக்கென்னும் உறுப்பாவது. ………………..…….. நோக்கிப் பயன்கொள்ளும் கருவியை நோக்குதற் காரணம் என்றான் என்பது”

    என்று நோக்கு என்பதற்குப் பொருள் விளக்கம் தருகிறார். நச்சினார்க்கினியர் கருத்து பின்வருமாறு அமைந்திருக்கிறது.

    நச்சினார்க்கினியர் கருத்து

    இலக்கியத்தை இலக்கணமாக்கி, இலக்கணத்தை இலக்கியமாக்கி உரையெழுதி உரைக்கோபுரத்தின் உச்சந்தொட்ட உரைக்கடல் நச்சினார்க்கினியர் இந்த நோக்கு பற்றித் தம் கருத்தினைப் பதிவு செய்திருக்கிறார்.

    “நோக்கென்றது மாத்திரை முதலிய உறுப்புக்களையுடைத்தாய்க் கேட்போர்க்கு நோக்குதல்படச் செய்தவை. நோக்குதல் – பயன்போடல் என்று பொருள் வரையறை எழுதி,

    “மாத்திரை முதலிய அடிநிரம்பும் துணையும் கேட்டோர் மீண்டும் நோக்கிப் பயன்கோடலையுடையதாகச் செய்யும் கருவி, நோக்கென்று  பெயர் கூறப்படும் என்றவாறு”

    என ‘நோக்கு’ பற்றிய மேற்கண்ட நூற்பாவிற்குப் பொழிப்புரை தருகிறார். நோக்கு பற்றி ஏனைய உரையாசிரியர்களினும் நச்சினார்க்கினியர் கருத்து பெரிதும் ஆராயத்தக்கதும் தகுதி மிக்கதுமாம். அவர் எழுதிய உரைகளில் இந்த உறுப்பைப் பயன்படுத்தாமல் உரைகண்ட வரலாறே இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம்.

    உரையாசிரியர்கள் பார்வையில்

    உரையாசிரியர் இளம்பூரணர் நோக்கிற்கான பொருள் வரையறை தந்து அதனை “ஒரு நோக்காக ஓடுதல், பல நோக்காக ஓடுதல், இடையிட்டு  நோக்குதல்” என மூவகை எனப் பகுத்தும் காட்டுகிறார். காட்டி, நாலடியாரிலிருந்து இரண்டு பாடல்களை (1, 172) முதலிரண்டிற்கும் “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு’ எனத் தொடங்கும் திருமுருகாற்றுப்படையை இடையிட்டு நோக்குதலுக்கும் எடுத்துக்காட்டி விளக்கம் தருகிறார். பேராசிரியரும் பின்னர் வந்த நச்சினார்க்கினியரும் “முல்லை வைந்துனை தோன்ற” எனத் தொடங்கும் (அகம். 4) பாடலை எடுத்துக்காட்டி விளக்குகின்றனர். நச்சினார்க்கினியர் சீவகசிந்தாமணி குணமாலை இலம்பக வரிகளை மேற்கோள் காட்டி கூடுதல் விளக்கம் தருகிறார்.

    நோக்கு என்ற சொல்லின் இலக்கியப் பயன்பாடு

    கூறாமை நோக்கி, முகம் நோக்கி, இருநோக்கு, சிறுநோக்கம்,  நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள், ‘யான் நோக்குங்காலை’ குறிக்கொண்டு நோக்காமை, செற்றார்போல் நோக்கும் யான் நோக்க பொதுநோக்கு, கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் என்பன திருக்குறளில் உள்ள ‘குறிப்பறிதல்’ என்னும் இரண்டு அதிகாரங்களுள் பயின்று வரும் சொற்களாகும். ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ என்பது கம்பராமாயணம். ‘நோக்கரிய நோக்கே’ என்பது திருவாசகம். ‘நோக்க நோக்க களியாட்டம்’ என்பது பாரதி வாக்கு. ‘நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்’ என்பது பாவேந்தர் வரி. எண்ணற்ற பயன்பாடுகள் உள. காட்டப் புகின் கட்டுரை அளவு விஞ்சும்.

    நோக்கு எனபது பற்றிய கட்டுரையாளர் விளக்கம்

    முன்னுரையில் குறிப்பிட்டதுபோல ‘நோக்கு’ என்பது படைப்பில் இருக்க வேண்டிய அரிய கூறுகள். அது மாத்திரையிலிருந்து தொடங்கும். சான்றாக அளபெடை பற்றிப் பலரும் அறிவர். ஆனால் அந்த அளபெடையை ஒரு நோக்கத்திற்காகத்தான் பயன்படுத்தியிருக்கிறார் திருவள்ளுவர். இது பற்றிய விரிவு அடுத்த கட்டுரையில். குறட்பாவில் பயன்படுத்தபட்டுள்ள ஒவ்வொரு மாத்திரையும் அசையும் சீரும் அடியும் ஒரு காரணம் பற்றியனவாகவே இருக்கின்றன. இந்தக் காரணங்களே அவற்றை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன. எனவே ஒரு நூல் பன்முறை படிக்கப்படுகிறது என்றால் படிப்பதற்கான காரணங்கள் அங்கே அமைந்திருக்கின்றன என்பதை அறிதல் வேண்டும். இந்தக் காரணங்களையே ‘நோக்கு’ என்னும் சொல் குறிக்கிறது. ‘நோக்குதற் காரணம்’ என்பது அதுதான். இனிக் குறிப்பிட்ட குறட்பாவில் ‘நோக்கு’ அமைந்துள்ள சிறப்பினைக் கண்டு மகிழலாம்.

    குறட்பா – பொழிப்பு –  விளக்கம்

    திருக்குறள் கட்டுமானம் முழுமையும் நோக்கிற்குரியதாகவே இருக்கிறது என்பது பரிமேலழகர் கருத்து. அவர் கருத்து இதுதான் என்பதை அவர் எழுதிய உரை நன்கு புலப்படுத்தும். பரிமேலழகரின் உரைநுண்ணியத்திற்கு ஈடு கொடுக்கும் அளவுக்குக் குறள் அமைந்திருக்கிறது. இது வள்ளுவத்தைத் தாழ்த்துவதோ குறைத்து மதிப்பிடுவதோ ஆகாது. ஏனைய உரைகளைக் கற்றார் பரிமேலழகர் உரையினைக் கற்கும் பொழுது உள்ளத்தில் ஏற்படும் உணர்வே இது. ‘பரிமேலழகர் நோக்கியதை மற்றவர் ஏன் நோக்கவில்லை?’ என்ற எண்ணம் தோன்றுவதை யாரே தடுக்க இயலும்? வேறு வாய்பாட்டில் சொன்னால் திருக்குறளில் அமைந்துள்ள நோக்கினைக் கண்டறிந்து கூறுவதில் பரிமேலழகர் முன்களப் பணியாளராகவே திகழ்கிறார் எனலாம். இவ்வாறு பரிமேலழகரின் தனித்த உரைநோக்கிற்கு உரிய குறட்பாக்களில்,

    “இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
    ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்” (415)

    என்னும் குறட்பாவும் ஒன்று. இதற்கு,

    “வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்று கோல் போல உதவும். காவற்சாகாடு உகைப்பார்க்கு  ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்.”

    (இதனைக் காவற்சாகாடு உகைப்பாற்கு ஒழுக்கமுடையார் வாய்ச்சொற்கள் “வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்று கோல் போல உதவும் எனப் பொருள் உவமம் என்ற நிலையில் படிக்கலாம். இந்தப்  பொழிப்புரையைத் தொடர்ந்து,

    “அவாய் நிலையான் வந்த உவமையடையால் பொருளடை வருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல்போல உதவுதல் தளர்ந்துழி அதனை நீக்குதல். ‘கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார் அறிவிலராகலின் அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பது தோன்ற ‘ஒழுக்கமுடையார்  ‘வாய்’ என்பது தீச்சொல் அறியாமையாகிய சிறப்பு உணர நின்றது. அவற்றைக் கேட்க என்பது குறிப்பெச்சம்”

    என்று விளக்கவுரை தந்திருக்கிறார்.

    நோக்கு அமைந்திருக்கும் இடம்

    ஒழுக்கமுடையார் சொல், வழுக்குநிலத்தில் ஊற்றுக்கோல் போல் என்பது மட்டுமே குறட்பாவில் உள்ளது. குறட்பாவை ஊன்றிப் படித்தால் இது புலனாகும்.  ஒழுக்கமுடையார் சொல் யாருக்குப் பயன்படும் என்பதற்குப் பாட்டில் குறிப்பில்லை. ஊற்றுக்கோலின் பயன்பாடு வழுக்கு நிலத்திற்கா? அந்நிலத்தில் நடப்பர்க்கா என்பதற்கும் விடையில்லை. ஊற்றுக்கோல் என்ன செய்யும் என்பதற்கும் தெளிவில்லை. வாயிலிருந்து வருவதே சொல்லாயிருக்க ‘வாய்ச்சொல்’ எனக் கூறியது ஏன் என்பதற்கான விடையும் காணவேண்டியதிருக்கிறது. சொல்லை ஊற்றுக்கோலோடு ஒப்பிடுவதால் மட்டும் குறட்பாவின் கருத்து நிறைவடைந்துவிடுமா (ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் ஊற்றுக்கோல் அற்று என்றுதானே உள்ளது)? என்பதும் புரியவில்லை. ஆனால் நமக்குப் புரியவில்லை என்பதற்காக இல்லை என்று சொல்லிவிட இயலுமா? இந்தக் கூறுகளை (நோக்கினை) உள்ளடக்கித்தான் திருவள்ளுவர் குறட்பா எழுதியிருக்கிறார். அவற்றைத்தான் பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார். பரிமேலழகரின் உரை நோக்கிற்கான காரணங்கள் குறட்பாவில் ஆழ்ந்து பரவியிருக்கின்றன. அவை ஒவ்வொன்றினையும் முற்றாக அறிந்து கொள்வதன் மூலம் திருக்குறளின் குறட்பாக்கள் நோக்கு என்னும் உறுப்பால் கட்டியமைக்கப்பட்டிருக்கும் பாங்கு புலனாகலாம்.

    ஏழு சீர்களில் பரிமேலழகர் கண்டறிந்த நோக்கு

    இந்தப் பாட்டில் நோக்கு அமைந்திருக்கும் பாங்கினை இனிக் காணலாம். அதாவது இந்தச் சொல்லை இந்த இடத்தில் பெய்ததற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்து கண்டறியுமாறு அந்தச் சொல் அமைந்திருப்பதுதான் நோக்கு.  ஏழு சீர்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பரிமேலழகர் பிரித்து நோக்கித்  திருக்குறளில் ‘நோக்கு’ அமைந்திருக்கும் சிறப்பினை எடுத்துக் காட்டுகிறார். பொழிப்புரை, விளக்கவுரை என்னும் இரண்டின் அடிப்படையிலும் இதனை நிரலாகக் காணலாம்.

    1. ‘இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே’ என்றுதான் பாட்டில் இருக்கிறது. ஆனால் பரிமேலழகர் “ வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்று கோல் போல உதவும்” என்று உரையெழுதுகிறார். வழுக்கல் நிலத்துக்கும் ஊற்றுக்கோலுக்கும் தொடர்பில்லை. வழுக்கல் நிலத்தில் இயங்குவார்க்கும் ஊற்றுக்கோலுக்குமே தொடர்பு.  இயங்குவார்க்குத்தான் ஊற்றுக்கோல் உதவுமே தவிர நிலத்திற்கு உதவாது. பாட்டில் இல்லாத இந்தத் தெளிவினைப் பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார். இனி, ‘இயங்குவார்க்கு ஊற்றுக்கோல்’ என்றால் பொருள் புலப்படாது. ‘இயங்குவார்க்கு ஊற்றுக்கோல் என்ன செய்யும்? ‘உதவும்’. ஊன்றப் பயன்படுவதால் அது உதவி.
    1. இனி ‘ஊற்றுக்கோல் அற்றே’ என்றே பாட்டில் அமைந்துள்ளது. ‘அது அவர்க்கு உதவுவதுபோல என்று இல்லை. பரிமேலழகர் ‘உதவுதல்போல’ என்று நோக்கி உரையெழுதுகிறார். ‘ஊற்றுக்கோல் உதவுதல் அற்றே’ என்று கொள்ள வேண்டுமாம்.
    1. ‘ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்’ என்பதற்குக் காவற்சாகாடு உகைப்பார்க்கு (அரசனுக்கு) ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்’ என்று உரை காண்கிறார் பரிமேலழகர். அதாவது வழுக்கல் நிலத்து இயங்குவார்க்கு ஊற்றுக்கோல் உதவும் என்றால் ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் யாருக்கு உதவும் என்பதற்குத் திருக்குறளில் விடையில்லை.  அதாவது ஊற்றுக்கோல் யாருக்கு உதவும் என்பதும் பாட்டில் இல்லை. ஒழுக்கமுடையவர் வாய்ச்சொல் யாருக்கு உதவும் என்பதும் பாட்டில் இல்லை. ‘இயங்குவார்க்கு’ என்ற அடைச்சொல்லை அவாவி உவமத் தொடர் அமைந்திருப்பது போலவே, காவற்சாகாடு உகைத்தார்க்கு என்னும் அடைச்சொல்லை உவமேயத்திற்கு அதாவது பொருளிற்கு வருவித்துக் கொள்கிறார் பரிமேலழகர். நிலமாளும் அரசனுக்கு உதவும் என்பது கருத்து. அதனை வருவித்து உரையெழுதுகிறார். இதனை,

    “அவாய் நிலையான் வந்த உவமையடையால் பொருளடை வருவிக்கப்பட்டது.”

    என்னுந் தொடரால் விளக்கிக் காட்டுகிறார். உவமத்தில் அது அவாய் நிலையாம். பொருளில் அதனை வருவித்துக் கொள்கிறாராம். என்ன நுட்பம்?

    1. ஊற்றுக்கோல் வழுக்காமல் காக்கும். சரி. ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் காவாற்சாகாடு உகைத்தார்க்கு உதவுவது யாங்ஙனம்? இதற்கும் பரிமேலழகர் எழுதிக்காட்டுகிறார். அரசபாரம் தாங்காது மனம் தளர்ச்சியடைந்தவழி அத்தளர்ச்சியை ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் போக்குமாம். இதனை “உதவுதல் தளர்ந்துழி (வறுமையினால் அல்லது அறியாமையினால் துன்பமுற்றபோது) அதனை நீக்குதல்” என்ற தொடரால் விளக்குகிறார்.
    2. ‘ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் என்பது குறட்பாவில் பயின்றுள்ள தொடர். இந்தத் தொடரில் இரண்டு சொற்கள் பரிமேலழகரின் நோக்கிற்குக் காரணமாகிறது. ஒன்று ‘ஒழுக்கமுடையார்’ என்ற சொல். இரண்டு வாய்ச்சொல். கேள்வி என்ற அதிகாரத்தில் வருகின்ற இந்தப் பாட்டில் ஒழுக்கத்திற்குத் திருவள்ளுவர் முக்கியத்துவம் கொடுப்பானேன் என்னும் தன் வினாவிற்குப் பரிமேலழகரே விடைசொல்லுகிறார். எப்படி? இப்படி!

    ‘கல்வியுடையரேனும் ஒழுக்கமிலாதார் அறிவிலராகலின் அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது என்பது தோன்ற ‘ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்’ என்றார்”.

    1. இரண்டாவது ‘வாய்ச்சொல்.’ சொல் என்ற அளவே போதுமானதாயிருக்க வாய்ச்சொல் என வேண்டாது கூறியது ஏன்? என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு அதற்கும் விடையிறுக்கிறார்.

    “‘வாய்’ என்பது தீச்சொல் அறியாமையாகிய சிறப்பு உணர நின்றது”.

    என்று எழுதுகிறார். சொல் என்னும் கருவி எவர்வழியாகச் செயல்படவேண்டும் என்பதில் பரிமேலழகரின் நோக்கு வியப்பளிப்பதாக உள்ளது. இவ்வளவு நோக்கிற்கும் திருக்குறள் இடந்தருகிறது.

    பரிமேலழகரின் மீயுயர் நோக்கு

    1. இந்தப் பாட்டு ‘கேள்வி என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. கேள்வி என்பதற்குச் சொற்பொருள் விளக்கம் தந்த பரிமேலழகர் “கேட்கப்படும் நூற்பொருளைக் கற்றறிந்தார் கூறக் கேட்டல்” என்று விளக்கம் தருகிறார். அதாவது கேள்வி என்பது தொழிற்பெயர். அதனை வியங்கோள் பொருளில் பயன்படுத்தியே இந்த அதிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பாட்டில் கேட்க என்று பொருள்படும்படியான சொல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனை நோக்குகிறார் பரிமேலழகர். வழுக்கல் நிலத்தில் இயங்குவார்க்கு ஊன்றுகோல் உதவுவது போலத் தளர்ச்சி வந்துழி காவற்சாகாடு உகைப்போர்க்கு ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் உதவும்! அதனால் அவர் சொல்லைக் கேட்கவேண்டும்’ என்று இருந்தாலேயே பொருண்மை நிறைவுறும் எனக் கருதுகிறார் பரிமேலழகர். அவர் எழுதுகிறார்,

    அவற்றைக் கேட்க என்பது குறிப்பெச்சம்”

    பாட்டில் சொல்லாவிட்டாலும் அதிகாரம் கேள்வியாதலின் அத்தகைகய பயன்தரும் சொற்களை நாட்டை ஆளுகிற மன்னன் கேட்டுச் செலுத்துவதே செங்கோல் சிறக்கும் நெறியாகும்’ என விளக்கமளிக்கிறார் பரிமேலழகர்.

    நிறைவுரை

    ‘உறுப்பு இருபத்தாறும் ஒன்று ஒன்றனை இன்றியமையாவென்பது பெற்றாம்.’ என்னும் பேராசிரியர் கருத்தும் ‘கேட்போர்க்கு நோக்குதல்படச் செய்தவை’ என்னும் நச்சினார்க்கினியர் விளக்கமும் நோக்கு என்பதன் பொருளைத் தெளிவாக வரையறுத்துக் காட்டுகின்றன. பொதுவாக ‘நோக்கு’ என்பது பார்ப்பவர் வினையாக இருக்கும். இங்கே அது படைப்பிலுள்ள கூறுகளைக் குறிப்பதாக அமையும். இந்தக் கூறுகளே அதற்குப் பெருஞ்சிறப்பைத் தந்து அவ்விலக்கியம் நீடித்து நிலைப்பதற்குக் காரணமாக அமையும். திருக்குறளில் நோக்கு அமையாத குறளே இல்லை என்பதும் அதில் பரிமேலழகர் அறியாத நோக்கும் இல்லை என்பதும் அவ்விரண்டனையும் கற்பார் அடையும் வியப்பு!. ‘பானை சோற்றுக்குப் பதச்சோறாக’ மேற்கண்ட குறளில் அமைந்துள்ள நோக்கினைப் பரிமேலழகர்வழி ஆராய்ந்து கண்டதன் மூலம் அவர் உரைத்திறம் உணரலாம்!

    (தொடரும்…..)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 15

    பரிமேலழகர் உரைத்திறன் – 15

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

     வள்ளுவர் சொன்ன கதையும் பரிமேலழகர் எழுதிய உரையும்

    முன்னுரை

    தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள் என்னும் முத்திறத்தன. அதில் யாப்பு, அணி என்பனவற்றைக் கூட்டிய வழக்கு பிற்காலத்தது. எனின் யாப்பு பொருளுக்குள்ளேயே அடங்கும், அது செய்யுள் கட்டுமானம் பற்றயதாதலின். செய்யுளின் உள்ளடக்க உத்தியைத் தொல்காப்பியத்தின் பொருளியல் விளக்குகிறது. எனவே அணி என்பது தமிழ்நெறியாகாது. ‘செய்யுளுக்கு அணி’ என்பது பெண்ணுக்கு அணிகலன் என்பதுபோலப் புற அழகைக் கூட்டுமேயன்றி அகத்துக்கு அழகுதராது. தமிழ்க்கவிதைகளின் வெற்றி அவற்றின் யாப்பில் இல்லை. பொருளில்தான் அடங்கியுள்ளது. யாப்பினால் ஒரு கவிதையோ காப்பியமோ வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. அது புலவர்களின் திறங்கூறலாம்.

    “வெண்பாவிற்புகழேந்தி பரணிக்கோர்
    சயங்கொண்டான் விருத்தமென்னும்
    ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா
    அந்தாதிக் கொட்டக் கூத்தன்
    கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
    வசைபாடக் காள மேகம்
    பண்பாகப் பகர்சந்தம் படிக்காச
    லாலொருவர் பகரொ ணாதே.”

    பலபட்டடைச் சொக்கநாதப் புலவரும் மூன்று புலவர்களைத் தவிர மற்றவருக்கான பெருமையை அவர்தம் கவிதைகளின் பொருண்மைக்கு ஏற்றியுரைப்பதைக் காணலாம். எனவே செய்யுளணி என்பது மிகவும் பிற்காலத்தது. தண்டியலங்காரம் செய்த ‘தமிழ்வினை’ அது. உவமம் அணியாகாது என்பதும் அதனைத் தவிர வேறு எதனையும் தமிழ்க்கவிதைகள் செறித்துக் கொள்வதில்லை என்பதும் தனி ஆய்வுக்குரியது. பொருட்பகுதியான உவமத்தைப் பின்னாலே வந்தவர்கள் அணியாக வரித்துக் கொண்டது அவர் விருப்பம் ஆயிற்று. ஆகவே பொதுமக்களாலும் பிறராலும் அவ்வணிகள் புறக்கணிக்கப்பட்டன. அல்லது அணியை முன்னிறுத்தி எழுதப்படும் இலக்கியங்கள் தோல்வி கண்டன. திருவள்ளுவர் காலத்திலோ தொல்காப்பியர் காலத்திலோ அணியிலக்கணச் சிந்தனை தமிழில் இருந்ததற்கான அடையாளம் ஏதுமில்லை. ஆனால் திருக்குறளுக்குத் தாம் எழுதிய உரையில் பரிமேலழகர் பல இடங்களில் அணியிலக்கணத்தைப் பொருத்திக் காட்டுவதைக் காணலாம். அந்த அடிப்படையில் பிறிதுமொழிதல் அணி பற்றிய அழகரின் விளக்கம் விரிவாகவும் ஆய்வதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    பழமொழிகளும் சமுதாயமும்

    சமுதாயத்தின் சாயலே இலக்கியம். அதாவது சமுதாயச் சிந்தனைகளின் நிழல் படியாத இலக்கியம் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும்.  சமுதாயச் சிந்தனைகள் என்னும் தொடர் மக்கள் வழக்காறுகளையும் உள்ளடக்கியதே. மொழி மக்களுக்கானது. ‘வழக்கும் செய்யுளும்’ என்பது தொல்காப்பியம். மக்கள் வழக்கில் ஒரு முறை காணப்படுகிறது. அந்த முறை என்னவென்றால் கசப்பான கருத்துக்களையோ இன்றியமையாக் கருத்துக்களையோ நேரடியாகக் கூறின் கேட்பார் மனம் புண்படும் எனக் கருதிக் குறிப்பாகச் சொல்லுவது. பிறரைக் காட்டிச் சொல்லுவது. உவமங்களால் சொல்லுவது என இது பலதிறத்தவாகும். சான்றாகக் ‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பது. இது நெல் மணியைக் காணாதவனுக்குப் பொருந்துமா? ஒரு செயலைச் செய்து முடிக்கும் காலச் சூழல் நிலையாக இருக்காது., தொடராது. எனவே அந்தச் சூழல் அமைகிற அந்தக் குறித்த குறைந்த காலத்திலேயே அதனை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் இந்தப் பழமொழி உணர்த்துகிறது. அன்றிக் காற்றைப் பற்றியும் தூற்றுவதைப் பற்றியும் கூறுவதாகாது. ‘கள்ளன் பெண்சாதி கைம்பெண்’ என்பது ஒரு பழமொழி. ‘மற்றவர் பெண்சாதி கைம்பெண் ஆகமாட்டார்களா?’ என்றால் இல்லை. கள்ளன் திருடுவதையே தொழிலாகக் கொண்டிருப்பதால் கொலை எப்போதும் நிகழலாம். அவன் மனைவிக்கு மங்கல வாழ்க்கை நிலையில்லை. திருடச் சென்ற கணவன் உயிரோடு திரும்புவான் என்பதற்கு உறுதியில்லை. எனவேதான் மனைவியாகவே இருந்தாலும் கள்ளனுக்கு வாழ்க்கைப்பட்டால் விதவையாகவே வாழ வேண்டும்’ என்பதை உணர்த்துகிறது.

    பழமொழியே பிறிது மொழிதலணி

    பிறிது மொழிதல் அணி பற்றிய தண்டியலங்காரக் கருத்து இப்படி அமைந்திருக்கிறது.

    “கருதிய பொருள் ஒத்தது புலப்படுத்தற்கு
    ஒத்தது ஒன்று உரைப்பின் அஃது ஒட்டென மொழிப” (தண்டி-52)

    “கருதிய பொருளை மறைத்து, ஆனால் அதனை வெளிப்படுத்தற்குப் பொருத்தமான பிறிதொன்றனைச் சொல்வது ஒட்டு என்னும் அலங்காரமாம்” என்னும் உரை இந்த அணி விளக்கத்திற்கு மட்டுமன்று முந்தைய பத்தியில் கூறப்பட்டிருக்கும் பழமொழிக்கான பொருளுணர்த்தும் பாங்கிற்கும் பொருந்துவதைக் காணலாம். தண்டியலங்கார உரையாசிரியர் இதனை ‘உவமப்போலி’ எனவும் ‘பிறிது மொழிதல்’ எனவும் ‘நுவலா நுவற்சி’ எனவும்  ‘புனைவிலிப் புகழ்ச்சி’ எனவும் அணியின் பிறபெயர்களைக் கூறுகிறார். ‘சுருக்கணி என்பது வீரசோழியம்’ சொல்ல வேண்டியதைப் பிறிதொன்றால் விளக்குவது ஆதலின் பிறிது மொழிதல் ஆயிற்று. ‘சொல்லாமல் சொல்வது’ என்பதால் நுவலா நுவற்சி ஆயிற்று.

    ஆனால் உவமப்போலி என்பது அகப்பொருள் பொருள் புலப்பாட்டு உத்தி. இதனை ‘உள்ளுறை உவமம்’ என்பதும் வழக்கு. இது அகப்பொருளுக்கே உரியது. பிறிது மொழிதல் அணியோ புறப்பொருளுக்கு உரியது. அகத்தில் உவமப்போலியாக இருப்பது புறத்தில் பிறிதுமொழிதல் அணியாகுமா என்பதற்கும் போதிய விளக்கம் பெறுமாறு இல்லை. புறத்திணையில் கருத்துக்களை வெளிப்படுத்துகிற முறையாக புறநிலை வாழ்த்து, வாயுறை வாழத்து, செவியறியுறூஉ என்பன போலப் பல உள்ளன. எனவே பிறிதுமொழிதல் அணியை ‘உவமப்போலி’ என்பது பொருந்தாதாயினும் உள்ளுறை உவமத்தில் பொருளுணரும் பாங்கும் பிறிதுமொழிதலணியில் பொருளுணரும் பாங்கும் ஓரளவு ஒத்திருப்பதால் இதனை ஏற்கலாம்.

    பிறிதுமொழிதல், ஒட்டு, நுவலாநுவற்சி, உள்ளுறை உவமம், இறைச்சி ஆகியவையெல்லாம் ‘பழமொழி’ என்னும் மக்கள் வழக்கின் இலக்கிய இலக்கண உருவாக்கங்களே என்பது தள்ளிவிடக் கூடிய கருத்தன்று.

    திருக்குறளில் பிறிது மொழிதல்

    திருக்குறளில் இவ்வாறு பிறிது மொழிதலணியாகக் கருதக்கூடிய பாடல்கள் அமைந்ததற்கு அணியிலக்கணச் சிந்தனை காரணமன்று. முந்தைய பத்திகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கியல் சார்ந்த சிந்தனைகளும் பழமொழிப்  பயன்பாடுகளுமே எனலாம். கடுஞ்சொல்லை விலக்கி இன்சொல்லை முன்னெடுக்கும் திருவள்ளுவர்க்கு இது இயல்பாகவும் இருந்திருக்க முடியும்.  அதனால்தான் ஒட்டுமொத்த திருக்குறள் நூலில் அதாவது ஆயிரத்து முந்நூற்று முப்பது பாடல்களில் வெறும் எட்டு பாடல்களில் மட்டுமே இத்தகைய பதிவுகள் காணக்கிடக்கின்றன. அவையும் பொருட்பாலில் மட்டுமே அமைந்துள்ளதும் நோக்கத்தக்கது.

    எதற்கும் அளவுண்டு எளியர்க்கும் வலிவுண்டு

    ‘நாலாறு கூடினால் பாலாறு’ என்பது பழமொழி. துன்பத்தைப் பாரம் என்பது வழக்கு. ‘மனப்பாரம்’, ‘தலைப்பாரம்’ என்னும் வழக்கு நோக்குக. பாரம் அதிகமானால் மனம் உடையும். பொருள் அளவு மிக, வண்டியின் அச்சும் முறியும். இந்த உள்ளடக்கத்தையும் எடுத்துக்காட்டையும் பொருட்பாலில் வலிமைமிகுந்த மன்னனைப் பார்த்து வள்ளுவர் கூறுகிறார்.

    “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
    சால மிகுத்துப் பெயின்” (475)

    என்று. இந்தக் குறட்பாவிற்கு உரையெழுதிய பரிமேலழகர் “பீலியேற்றிய சகடமும் அச்சு முறியும். அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின்” என்னும் பொழிப்புரையில் ‘பொறுக்கும் அளவின்றி’ என்னும் தொடர் பயின்றிருப்பது காண்க.

    “எளியர் என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்க வழி வலியழியும், என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம்.”

    என்று எழுதிக் காட்டுகிறார். எளியவர்க்கு வலிமை குறைவே. ஆனால் அவ்வெளிமையே கூட்டணி அமைத்துக் கொண்டால் எளிமை வலிமையாகும். வலிமை எளிமையாகும். இன்றையக் காலக்கட்டத்து அரசியல் நுட்பத்தை அன்றே திருவள்ளுவர் கண்டுணர்ந்து எழுதியிருப்பதைக் காணலாம். இந்தப் பாடலில் திருவள்ளுவர் மயிற்பீலி மென்மையானது என்பதைச் சொல்லவோ அதனை அளவுக்கதிகமாக ஏற்றினால் வண்டியின் அச்சு முரிந்துவிடும் என்பதைச் சொல்லவோ வரவில்லை. இவையெல்லாம் அந்தக் காலத்துச் சமுதாயத்து நடைமுறைகள். அனைவரும் அறிந்த உண்மை. சாதாரண மனிதனுக்குத் தெரிந்த வழக்கியல் உண்மையை வைத்து நாட்டை ஆளும் மன்னனுக்கு அவன்தன் வலிமையின் அளவுணர்த்தும் அறிவுரை என்பதைப் பரிமேலழகர் விளக்கிக் காட்டுகிறார்.

    எதற்கும் எல்லையுண்டு

    ‘கரும்பு இனிக்குதென்று வேரோடும் பிடுங்காதே’, ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பன சிற்றூர் வழக்கு. ‘கொடுக்கிறான் என்பதற்காகத்  தொந்தரவு செய்யாதே’ என்பதைச் சொல்லவந்தவர், சொல்ல வேண்டியதை மறைத்து வேறு வாய்பாட்டில் சொல்லிய பழமொழிகள் இவை. இவை போன்ற பொருள் தரும் பழமொழிக் கருத்தினைத் திருவள்ளுவர்,

    “நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்தூக்கின்
    உயிர்க்கு இறுதியாகி விடும்” (476)

    என்னும் குறட்பாவில் பதிவு செய்திருக்கிறார். “ஒரு மரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறி நின்றார் தம் ஊக்கத்தால் அவ்வளவினைக் கடந்து மேலும் ஏற ஊக்குவாராயின் உயிர்க்கு இறுதியாகிவிடும்” என்று பொழிப்புரை தரும் பரிமேலழகர்,

    “பகைமேல் செல்வான் தொடங்கித் தன்னால் செல்லலாம் அளவும் சென்று நின்றான். பின் அவ்வளவின் நில்லாது மன எழுச்சியான் மேலும் செல்லுமாயின், அவ்வெழுச்சி வினை முடிவிற்கு ஏதுவாகாது அவன் உயிர் முடிவிற்கு ஏதுவாம்” என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இதுவும் மேலை அலங்காரமாம்.”

    முந்தைய பாட்டில் தனியொரு பகைவன் எளியன் என்று எண்ணாதே அவனையொத்தார் இணைந்து கொண்டால் தனியொரு வல்லாளன் வலிமை குறைந்தவனாக்கப்படுவான் என்பதைக் கூறிய திருவள்ளுவர் இந்தப் பாடலில் உன் ஊக்கம் பெரிது என்பதற்காகவும் எதிர்ப்பார் யாரும் இல்லை என்பதற்காகவும் அளவு கடந்து போகாதே என்னும் உண்மையைக் கூறுகிறார். ஊக்கம் வினைமுடிக்க உதவ வேண்டும். ஆனால் மனவெழுச்சியால் முந்துறுகிற பொழுது அந்த ஊக்கமே அவனைக் கொன்று விடுகிறது. ‘வினை முடிவிற்கு ஏதுவாகாது உயிர் முடிவிற்கு ஏதுவாம்’ என்னும் சுருங்கச் சொல்லி விளக்கும் அழகரின் உரைத்திறன் சொல்லி மாளாது.

    முதலைக்கு முடிவு தரையில்

    ‘சேற்றிலே புதைந்த யானையைக் காக்கை கொத்தும்’ என்பது பழமொழி! பகைவலிமை அறிந்து செயல்பட வேண்டிய அரசனுக்கு வழிசொன்ன திருவள்ளுவர் கள நிலவரத்தை ‘இடனறிதல்’ என்னும் சொல்லால் அறிவுறுத்துகிறார்.

    “நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
    நீங்கின் அதனைப் பிற” (495)

    என்னும் குறட்பாவிற்கு “முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின் பிறவற்றையெல்லாம் தான் வெல்லா நிற்கும். அப்புனலின் நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லா நிற்கும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் எழுதிக்காட்டும் விளக்கவுரை அவருடைய நுண்ணியத்தைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

    “மேற்செல்லும் அரசன் பகைவன் நிற்றலாற்றா இடமறிந்து செல்வராயின் அவர்  தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றர் இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரமாம்.”

    “எதிரி நிற்கமுடியாத இடத்தில் தான் நின்று கொண்டு அவன் நிற்க முடியாத இடத்தில் அவனை எதிர்ப்பதே வெற்றி தரும் போர்முறை. மாறாக தான் நிற்கமுடியாத இடத்தில் தான் நின்று கொண்டு உறுதியான இடத்தில் நிற்கும் எதிரியை எதிர்த்தால் நமக்கு எளியராய் இருந்திருக்க வேண்டிய எதிரிக்கு நாம் எளியவர் ஆகிவிடுவோம்” என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர். முதலைக்கு இறுதி தரையில் என்பதை அறிந்து கொண்டு அதனைத் தாக்கியழிப்பதைப்போலப் பகைவர்களை அழிக்க வேண்டுமாம் என்பது வரலாறு. இதனை உள்வாங்கி எழுதும் அழகரின் விளக்கவுரை பலமுறை படித்து இன்புற்று வியக்கத்தக்கதாம்.

    கப்பலுக்குக் கடலே வீதி! தேருக்குத் தெருவே வீதி!

    ‘ஆனைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்’ என்பதும் ‘ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்’ என்பதும் தமிழகப் பழமொழிகள். இவையொத்தன இன்னும் இருக்கலாம். இதன் சாரத்தை இலக்கிய மதிப்பீட்டுக்கும் பொருட்பாலின் பொருளடர்த்திக்கும் பயன்படுத்திக் கொள்ளும் திருவள்ளுவரின் சதுரப்பாடு பின்வரும் குறட்பாவில் அறியப்படுகிறது.

    “கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
    நாவாயும் ஓடா நிலத்து” (496)

    “நிலத்தின்கண் ஓடும் கால்வலிய நெடுந்தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா. இனி அக்கடலின்கண் ஓடும் நாவாய்கள் தாமும் அந்நிலத்தின்கண் ஓடமாட்டா” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    ‘மேற்சென்றார் பகைவர் இடங்களை அறிந்து அவற்றிற்கு ஏற்ற கருவிகளான் வினை செய்க என்பது தோன்ற நின்றமையின் இதுவும் மேலை அலங்காரமாம்.

    என விளக்கவுரை எழுதியிருக்கிறார். பொழிப்புரையிலேயே அவருடைய நுண்ணியம் வெளிப்படுவதை அறியலாம். கடலோடும் நாவாய் என்பதைக் கொண்டு ‘நிலத்தோடும் தேர்’ என்று எழுதுகிறார். ஓடுதற்குரிய வலிய கால்கள் இருந்தாலும் அவையின்றி நீந்தும் நாவாய் ஆகாது. இதுபோலவே பாய்மரம், பாய், சுக்கான் முதலிய கடல் நீந்தும் கருவிகள் இருந்தாலும் நாவாய் தரையோடும் தேராகாது. ‘ஏற்ற கருவிகளால் வினைசெய்க’ என்பதுதான் திருவள்ளுவர் சொல்லவரும் கருத்து. ‘கப்பலுக்குக் கடலே வீதி’ என்பதும் ‘தேருக்குத் தெருவே வீதி’ என்பதும் தெரியாத பொருளல்ல. தெரிந்த பொருளைக் காட்சிப்படுத்தியதன் நுட்பத்தை உணர்ந்துகொண்டு பரிமேலழகர் எழுதும் பாட்டுக்கு அப்பாற்பட்டு நிற்கும் ஆழமான பொருளை அதிகாரப் பொருண்மைக்கேற்ப இயைபுபடுத்தி உரைக்கும் உரைத்திறன் உணர்க.

    நரிக்கதை சொன்ன நாயனார்

    பாட்டி சுட்ட வடையைக் கவ்விக் கொண்ட காக்கையை நரி ஏமாற்றிய கதையைப் பள்ளியில் படித்தவர்கள் நாம். ஆனால் நரியை அதன் சூழல்பற்றி மதயானையை வெல்லும் என்ற அதன் திறனைப் பாடியிருக்கிறார். இங்கே நரியைப் பாடுவது திருவள்ளுவர் நோக்கமன்று. யானையின் தோல்வியைப் பாடுவதுதான் அவர் நோக்கம். அவர் பாடுகிறார்.

    “காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா
    வேலாள் முகத்த களிறு” (500)

    இந்தப் பாட்டிற்குப் “பாகர்க்கு அடங்காவுமாய் வேலாள்களைக் கோத்த கோட்டவுமாய களிறுகளை அவை கால் ஆழும் இயல்பிற்றாய சேற்று நிலத்துப் பட்டுழி நரி கொல்லும்” என்று பொழிப்புரை எழுதும் பரிமேலழகர் அந்தப் போர்க்களக் காட்சியை அப்படியே சித்திரித்துக் காட்டுகிறார்.

    பரிமேலழகர் சித்திரித்துக் காட்டும் காட்சி வள்ளுவருடையது. சித்திரிப்பு அழகருடையது. களிற்றின் முகத்தில் ஆட்கள் தொங்குகிறார்கள். எப்படி? அவர்கள் அந்த யானையை எதிர்த்தபோது கையில் வேலைத் தாங்கிய வீரர்கள். அவர்கள் வேலொடு நின்றபோது எதிர்சென்று குத்தித் தூக்கிய யானையின் தந்தத்தில் அவர்கள் தொங்குகிறார்களாம். அத்தகைய வல்லமை உள்ள களிறு.  இது யானையின் ஒரு வகை வீரம். இன்னொரு வீரத்தை ஒரு சொல்லால் திருவள்ளுவர் குறிக்கிறார். அந்தச் சொல் ‘கண்’ என்பது. கண் என்றால் மூங்கில். பாகன் கையில் வைத்திருக்கும் கோல் மூங்கிலால் ஆனது. முகப்பு இரும்பால் நங்கூரம்போல் இருக்கும். எனவே அது அந்தக் கோலுக்கு ஆகி வந்தது ஆகுபெயர். பிறகு அந்தக் கோலைத் தாங்கிய பாகனுக்கு ஆகிவந்ததும் ஆகுபெயர். அதாவது ஒரு பொருளின் இயற்பெயர் மற்றொரு பொருளைக் குறித்து அதுவும் இன்னொரு பொருளைக் குறிக்குமானால் அது இருமடியாகுபெயர். எனவே ‘கண் அஞ்சா களிறு’ என்றால் மூங்கிலால் செய்யப்பட்ட அங்குசத்தைக் கையில் தாங்கிய பாகனுக்கும் அடங்காது என்பது இன்னொரு வீரம். கண்ணஞ்சா களிறு என்றும், வேலாள் முகத்த களிறு என்றும் தனித்தனியும் கூட்டலாம். கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு என ஒரு தொடராகவும் ஆக்கலாம். இவ்வளவு விளக்கமாகப் பரிமேலழகர் சொன்னதற்குக் காரணம் சுருங்கக் கூறிய வள்ளுவரின் களக்காட்சியைச் சித்திரிக்கவும் யானையின் வலிமை கூறவுமே. இத்தகைய யானை அதாவது வட்டமான பெரிய அடிகளையுடைய யானை சேற்று நிலத்தில் சிக்கிக்கொண்டால் அதனின் மிக எளிமையான நரியால் வெல்லப்படும் என்பதாம்.

    “ஆண்மையும் பெருமையும் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துச் செல்லின் அவற்றால் பயனின்றி மிகவும் எளியரால் அழிவர் என்பது தோன்ற நின்றமையின் இதுவும் அவ்வலங்காரமாம்.”

    பிறிதுமொழிதல் அணியைப் பொருத்தவரையிலும் பள்ளிக்கல்வியில் மாணவர்கள் அறிவது அணியிலக்கணம் என்ற அளவிலேயே. தமிழாசிரியப் பெருமக்களும் அமைதியடைவார்கள். திருக்குறளில் பிறிதுமொழிதலணி வாய்பாட்டில் சொல்லப்பட்டுள்ள அரசியல் நுட்பங்களை அறிந்த மாணவரை நாம் இனிதான் தேடிக் கண்டறிய வேண்டும்.

    வேங்கையைக் கண்டால் வேழத்திற்கும் வேர்க்கும்!

    ‘வெறுங்கை என்பது மூடத்தனம்! விரல்கள் பத்தும் மூலதனம்’ என்பது ஒரு கவிதை வரி. ‘கீழே விழுவதெல்லாம் எழுந்திருப்பதற்காகவே’ என்பது அறிஞர் வாக்கு. ‘சுமக்கும் வரைதான் பாரம். கடக்கும் வரைதான் தூரம்’, ‘கிழக்கு இல்லையெனின் மேற்கு ஏது? தோல்வி இல்லாவிடின் வெற்றி ஏது’ என்பனவெல்லாம் சிந்தனையாளர்களின் கருத்துரைகள். இந்த ஆற்றல் யானைக்குக் கிடையாது. அது தன் பருத்த உடம்பை நம்பும். நீண்ட இரு தந்தங்களை நம்பும். என்ன ஆகும்? அதற்கு இருக்கும் அவ்விரண்டும் இல்லாத புலி சீறினால் பதுங்கும். காரணம் ஊக்கம் இன்மை. நரியிடம் தோற்ற யானை இப்பொழுது புலியிடம் நடுங்குவதை வள்ளுவர் காட்சிப்படுத்துகிறார்.

    “பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
    வெரூஉம் புலிதாக் குறின்” (599)

    இந்தக் குறட்பாவிற்கு “எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும் யானை தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “புலியின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும் யானை ஊக்கமின்மையான் அஃதுடைய அதற்கு (புலிக்கு) அஞ்சும் என்ற இது. “பகைவரின் மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர்” என்பது தோன்ற நின்றமையின், பிறிதுமொழிதல்.”

    என்னும் விளக்கவுரையில் திருவள்ளுவரின் அரசியல் நுட்பங்களை நிரல்படுத்துவதைக் காணலாம். மெய்வலியும் கருவிச்சிறப்பும் காவற்சாகாடு உகைத்தற்கு உதவினும் ‘ஊக்கம்’ தலையாயது. அதனால்தான் திருவள்ளுவர் ‘ஊக்கமுடைமை’ என்பதையும் ‘ஆள்வினை உடைமை’ என்பதையும் பொருட்பாலில் பாடியிருக்கிறார். எல்லாவகையிலும் ஆற்றல் உள்ளவர்கள் தாம் தோற்கமாட்டோம் என எண்ணுவது அரசியலில் இயல்பு. திருவள்ளுவர் அத்தகையோரை எச்சரிக்கும் வகையில் கூறும் அறிவுரைகளை நயமாகக் கூறுகிறார். வழக்கில் சொன்னால் ‘நாசுக்காகக்’ கூறுகிறார் எனலாம்.

    ஆயிரம் கோழைகளும் ஒரு வீரனும்

    ‘ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்’ என்பது பழமொழி. காக்கைகள் ஆயிரம் என எண்ணிக்கையால் ஆயிரம் இருந்தாலும் உயிரற்ற ஒரு கல் அவை அத்தனையையும் துரத்துதற்குப் போதுமானவை. இந்தப் பழமொழியை வைத்து முன்றுரையறையனார் எழுதுகிறார்.

    “மறுமனத்தான் அல்லாத மாநலத்த வேந்தன்
    உறுமனத்தன ஆகி ஒழுகின் – தெறுமனத்தார்
    பாயிரம் கூறிப் படை தொக்கால் என் செய்ப?
    ஆயிரம் காக்கைக்கு ஓர் கல்” பழமொழி (165)

    அறிவுடைமை, நீதிநெறி பின்பற்றுதலாகிய ஒற்றுமைத் துணையும் படை, பொருள் முதலிய வேற்றுமைத் துணையும் உடைய மன்னன் தோன்றிய அளவிலேயே பகைவர் அழிவர் என்பது பாட்டின் கருத்தாக அமைந்திருக்கிறது.

    “ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
    நாகம் உயிர்ப்பக் கெடும்” 763

    என்னும் குறட்பாவிற்கு “எலியாய பகை கடல்போல ஒலித்தால் நாகத்திற்கு என்ன ஏதம் வரும்? அந்நாகம் உயிர்த்த துணையானே அது தானே கெடும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “வீரர் அல்லாதார் பலர் திரண்டு ஆர்த்தால் அவற்கு வீரன் அஞ்சான்: அவன் கிளர்ந்த துணையானே அவர்தாம் கெடுவர் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம்.”

    என்று விளக்கவுரை தருகிறார். விளக்கவுரையின் இறுதியில் ‘வீரரல்லாதார் பலரினும் வீரனொருவனே ஆடல் நன்று’ என்பதாம் எனப் பொருள் முடிவு கூறுவார். இந்தக் குறட்பாவின் உருவகத்தால் ஈர்க்கப்பட்ட கம்பர் தமது காப்பியத்தில் ‘எலியெலாம் இப்படை அரவம் யானென’ (2312) எனப் பயன்படுத்தியிருப்பது காண்க. ‘எலிக்குப் பாம்பு பகை’ என்பது உலகியல் சார்ந்த உண்மையே. நாகம் விடும் மூச்சுக்கே எலிக்கூட்டம் பறந்துவிடும் என்பதனால் ஆண்மை கொண்ட வீரன் ஒருவனுக்கு ஆண்மையற்ற ஆயிரம் வீரரும் ஈடாகார் என விளக்குகிறார். தனியொரு வீரனைப் பற்றி இவ்வாறு திருக்குறள் சொல்லுதற்கான காரணத்தைக் குறிப்பிடுகிறார் பரிமேலழகர். அங்கங்களுள் படை சிறந்தது என்பதும் அது தன்னுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதும், அது தன்னுள்ளும் வீரன் சிறந்தான் என்பதும் கூறப்பட்டன என்னும் அவர்தம் விளக்கவுரையே பேருரையாக அமைகிறது.

    செடியை மரமாக நோக்கிய திருவள்ளுவர்

    ‘நகத்தால் கிள்ள வேண்டியதைக் கோடாரிக் கொண்டு வெட்டுகிறான்’ என்பதும் “வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு” என்பதும் தமிழகத்தில் பெருவழக்கு.

    “இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்தவிடத்து” 879

    என்னும் குறட்பாவிற்குக் “களைய வேண்டுவதாய முள் மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக. அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும்” எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “களையப் படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக. அன்றியே வலிதாய காலத்துக் களையலுறின் நம்மை அதுதான் களையும் என்பது தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல்”

    என்னும் விளக்கவுரையைத் தருகிறார். ‘முள்ளை முள்ளிலே களைந்துவிடு, அதுவளர்ந்தபின் களைய எண்ணினால் எண்ணுகிற உன்கையை அது காயப்படுத்திவிடும் என்பதன்று திருவள்ளுவர் கூறநினைத்தது. ‘கேடுசெய்யும் பகைவர்கள் இவர்கள் என்று அடையாளம் கண்டபின் அவர்களை விட்டுவைப்பது தமக்கே கேடாக முடியும். இது அரசியல் கொள்கை. எனவே அவர்கள் வலிமை குன்றியிருக்கும்போதே அழிப்பதே நெறி. இல்லையாயின் அவர்கள் நம்மால் களைய முடியாத அளவுக்கு வலிமை பெற்று நம்மை அழித்து விடுவார்கள் என்பதாம். ‘இளைதாக’ என்பதற்கேற்ப ‘மெலிதாக’ என்றும் கைகொல்லும் என்பதற்குக் ‘களைவார் கையை’ என எழுவாய் வருவித்தும் எழுதும் பரிமேலழகர் நுண்ணியத்தையும் செடியாக இருக்கிறபோதே அதனை மரமாகக் கண்டு ‘முள்மரம்’ என்று காட்சிப்படுத்திய திருவள்ளுவர் படைப்பாற்றலையும் ஒருசேர எண்ணி மகிழலாம்.

    நிறைவுரை

    அணியிலக்கணச் சிந்தனையில்லாத காலத்தில் திருக்குறள் உருவாக்கம் செய்யப்பட்டது என்னும் கருத்தியலை ஏற்றுக் கொண்டாலே இந்தக் கட்டுரையின் அருமை புரியும். அடுத்து மக்கள் வாழ்க்கையையும் வழக்கையும் இலக்கியப் பதிவுகளில் கொண்டு வரும் முயற்சி திருவள்ளுவர் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதையும் அறிதல் வேண்டும். அரசு பற்றிய தனது சிந்தனைகளில் ‘ஆலமரத்தடிக் கதைகளைத்’ திருவள்ளுவர் சொல்லியதற்கு வேறு என்ன காரணம் இருந்திருக்க முடியும்?. ‘வலியறிதலில்’ இரண்டும், ‘இடனறிதலில்’ மூன்றும், ‘உட்பகை’, ‘ஊக்கமுடைமை’, ‘படைமாட்சி’ என்னும் அதிகாரங்களில் அதிகாரத்திற்கு ஒன்றுமாக எட்டுப்பாடல்களில் திருவள்ளுவர் சொல்லியிருக்கும் இயற்கை உண்மைகளுக்குப் பரிமேலழகர் தனது பொருளறிவு (அர்த்த சாஸ்திரம்) சான்ற உரையைத் தந்திருக்கிறார். ‘பழமொழிகளையே திருவள்ளுவர் பாடலாக்கியிருக்கலாம்’ என்பது அனுமானமாகலாம். ஆனால் அதற்குப் பரிமேலழகர் சொல்லியிருக்கும் கருத்துரை அனுமானமன்று. ஆழ்ந்த அரசியல் கருத்துக்கள். கருத்துக்குத்தான் கதை சொல்வார்கள். பரிமேலழகர் கதைக்குக் கருத்துரை தந்திருப்பதுதான் அவருடைய உரைத்திறன்.

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 14

    பரிமேலழகர் உரைத்திறன் – 14

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    சொன்னதும் சொல்ல நினைத்ததும்

    முன்னுரை

    திருக்குறள் அதிகாரப் பொருண்மைகளைப் பகுத்துக் கொண்டு உரைகூறுவது பரிமேலழகர்க்கேயுரிய உரைநெறியாகும். அந்த வகையில் ‘கடவுள் வாழ்த்து’ என்னும் முதல் அதிகாரத்தின் முதற்பாடலை ‘முதற்கடவுளது உண்மை கூறுவதற்கானது’ என்று எழுதுவார். அதாவது ‘கடவுள் என்று ஒருவர் இருக்கிறார்’ என்னும் உண்மையை முதற்பாடல் சொல்லுவதாகப் பரிமேலழகர் கூறுகிறார். ஆனால் பாட்டின் கட்டமைப்பு அவ்வாறாக இல்லை.

    “எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலையுடையன. அதுபோல உலகம் ஆதிபகவன் என்னும் முதலை உடைத்து”

    என்று கருதுமாறே அமைந்துள்ளது. என்ன சிக்கல்? உவமம் சரி. அந்த உவமத்தைப் பொருளோடு பொருத்தினால் உலகம் முன்னதாகவும் கடவுள் பின்னதாகவும் ஆகும். ஆகவே கடவுள் ‘உலகிற்குக் காரணம்’ என்னும் பொருள் கிட்டாது. பிறகு ஏன் திருவள்ளுவர் இவ்வாறு கூறினார்? உவமத்தை விளக்கிவிடலாம். பொருளில் கடவுளாகிய காரணத்தை விளக்க முடியாது. கடவுளால் உண்டாக்கப்பட்ட உலகை வைத்துத்தான் அதற்கான கருத்தாவை அடையாளப்படுத்த முடியும். கிழக்காற்றில் நீர் வருகிறது என்றால் மேற்கே மழை பெய்திருக்கிறது என்னும் அனுமானம் போல! எனவே பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

    “காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின் மேல் வைத்துக் கூறினார்”.

    இந்த விளக்கத்தில் கடவுள்தான் உலகினைப் படைத்தார் என்றால் கடவுளின் இருப்பை எப்படி நிலைநிறுத்துவது? அதனால் காரிய காரணமாக ஆராய்கிறார். ஆய்ந்து மேற்கண்ட விளக்கத்தைத் தருகிற பரிமேலழகர், அதனாலேயே உலகம் முன்னாக கடவுள் பின்னாக எனக் கருதுதல் வேண்டா. காரணமாகிய கடவுள்தான் முன்னது என்பதைக் கருத்தாகக் கொள்க என விளக்கம் தருகிறார்.

    ‘கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க”

    என்று எழுதுகிறார். இது குறட்பாவின் கிடக்கை நிலைக்கு மாறுபட்டது. இந்தக் கருத்தினை வள்ளுவர் சொல்ல வருகிறார் என்பது பரிமேலழகரின் அனுமானத்தில் வந்த ஆய்வுண்மை. சொல்லப்பட்ட குறட்பாவின் கருத்தினை மட்டும் கருத்திற் கொள்ளாது உண்மையில் அது சொல்ல வருகிற கருத்தினை உணர்ந்து கொள்வதே ஓதுதலின் பயன் என்பது பரிமேலழகர் எண்ணமாகும். இவ்வாறு குறட்பா ஒன்றாகவும் அது உணர்த்த வரும் கருத்து வேறொன்றாகவும் உள்ள பல இடங்களில் சிலவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

    எமனும் தோற்பான்!

    மரணம் பலவகைப்படும். ‘இயற்கையெய்தினார்’ ‘காலமானார்’ ‘படுகொலை’ ‘பயங்கரக்கொலை’ ‘பரிதாபச் சாவு’ ‘தீக்கிரையானார்’ ‘வெள்ளத்தில் மூழ்கினார்’ ‘விபத்தில் மரணம்’ ‘உயிர் பிரிந்தது’ ‘வீரமரணம்’ என்னும் சொற்களெல்லாம் மரணத்தின் பல சூழல்களையும் தன்மைகளையும் குறிப்பிட்டுக் காட்டும். கொல்லாமையாகிய அறத்தினைப் பின்பற்றி ஒழுகுபவனை உயிர் பறிக்கும் எமன் அண்டமாட்டான் என்பது பின்வரும் திருக்குறளுக்கான பொருள்.

    “கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
    செல்லாது உயிருண்ணும் கூற்று”. (326)

    மேலே சொன்ன சாவுகள் பலவகையாயினும் எமனின் ‘கடமையுணர்வு’ என்ற அளவில் மாறுபாடு ஏதுமில்லை. சாவு எத்தகையதாயினும் அதற்கு விதியைக் காரணமாக்குவது உலகியல். இந்தக் குறளுக்குக்,

    “கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின் மேல் உயிருண்ணும் கூற்றுச் செல்லாது.”

    என்று அழகர் எழுதியிருக்கும் உரையிலும் ‘கூற்றுச் செல்லாது’ என்றுதான் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ‘கொல்லாமை’ என்பதைக் கொலைக்கு எதிர்நிலையாகக் கருதுகிறாராம் திருவள்ளுவர். அது மேலே சொன்ன மரணங்களுள் கொலைக்கு நிகராம். ஊனுக்குக்காக, உணவுக்காகக் கொல்லப்படுவன அஃறிணை உயிர்களேயானாலும் அவையும் கொலையே என்பதே வள்ளுவர் கருத்தாம். அதனால்தான் அவர் கொல்லாமை என்று பெயர் வைத்தாராம்!. பிற உயிர்களைக் கொல்லாதவனுக்குச் சாவில்லை என்பதுதான் திருக்குறள் சீர்கள் தரும் பொருள். பரிமேலழகர் தனது சிந்தனையால் கொல்லாமை என்னும் சொல் நோக்கி இன்னொரு விளக்கத்தைப் பதிவு செய்கிறார். “உண்பவன் கொலை செய்யாவிட்டால் உண்பவனை எமனும் கொலை செய்யமாட்டான்”

    “இப்பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான். படானாகவே, அடியிற் கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார் ‘வாழ்நாள் மேல் கூற்று செல்லாது’ என்றார். செல்லாதாகவே ‘காலம் நீட்டிக்கும். நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து”

    உரையறிஞர் எவர் சிந்தனைக்கும் அவ்வளவு எளிதாக பிடிபட இயலாத கருத்து இது. எமனால் கொல்லப்படான் என்றால் அவனுக்கு மரணமில்லை என்பது பொருளன்று. மரணம் ஒத்திவைக்கப்பட்டு, வாழ்நாள் நீட்டிக்கப்பட்டு அக்காலத்துள் ஞானம் பிறக்க, பாவங்களை ஒதுக்கிய நிலையில் உயிர் வீடு பெறும் என்னும் கருத்தைத்தான் இந்தக் குறள் கூறுவதாகப் பரிமேலழகர் கருதுகிறார். மரணம் வராது என்றார் வள்ளுவர். உண்மையில் ஞானத்திற்காக மரணம் வரும் காலம் ஒத்திவைக்கப்படுகிறது என்கிறார் பரிமேலழகர்.

    விலகும் அளவு வேதனையில்லை

    அறத்துப்பாலில் ‘துறவு’ என்னும் அதிகாரம் உலக இன்பங்களைத் துறத்தல் என்பது பற்றிக் கூறுகிறது. துறவறவியலாக இருந்தாலும் பொதுவாகப் பொருளின் மீது வைக்கின்ற பற்றே துன்பத்திற்குக் காரணம் என்பதைக் கூறுகிறது. “ஈட்டல், ஈட்டியவற்றைக் காத்தல் – காத்தவை குறைபடுதல், கெடுதல் ஆகிய அனைத்தும் துன்பம். எனவே இன்பத்திற்காகத் தேடும் பொருள் துன்பத்திற்கு உறைபதியானது” என நாலடியார் கூறுகிறது. திருக்குறளில்,

    “யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்” (341)

    என்ற குறட்பா “ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான், அவன் அப்பொருளால் அப்பொருளால் துன்பம் எய்துதல் இல்லை” என்னும் பொருள் தாங்கி நிற்கிறது. மேலே காட்டிய நாலடியாருக்கு விளக்கமாகப் பரிமேலழகர்,

    “ஈண்டுத் துன்பம் என்றது இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும் காத்தலானும் இழத்தலானும் வருவனவும் மறுமைக்கண் பாவத்தான் வருவனவும் ஆய இருவகைத் துன்பங்களையும் ஆம்.”

    என்று விளக்கமளித்திருக்கிறார். ‘யாதனின்’, ‘அதனின்’ ஆகிய இரண்டு சொற்களையும் இரண்டு முறை பயன்படுத்திய நுட்பம் நோக்கிய அழகர் அவைகொண்டு ஒரு கருத்தினைப் பதிவிடுகிறார். ‘எல்லாவற்றையும் ஒருசேரத் துறத்தல் இயலுமா?’ என்னும் ஐயத்திற்கு ‘அவ்வாறு துறப்பது தலை. இருப்பினும் பற்று வைத்துள்ள பொருட்களில் ஒவ்வொன்றாகத் துறக்க அவ்வொவ்வொரு பொருளாலும் வரக்கூடிய துன்பம் நீங்கும். இதனைத்தான் இந்தக் குறட்பா தனது கருத்தாகக் கொண்டிருக்கிறது என்கிறார்.

    “எல்லாப் பொருளையும் ஒருங்கே விடுதல் தலைமை; அஃதன்றி ஒரொ ஒன்றாக விடினும் அவற்றான் வரும் துன்பம் இலனாம் என்பது கருத்து.”

    என்பது பரிமேலழகர் கருத்தாக எழுதிக்காட்டும் தொடர். பற்று வைத்த பொருள்களிலிருந்து அதனை நீக்கினால் அவற்றால் வரும் துன்பங்கள் நீங்கும் என்பது திருக்குறள் முற்றும் துறக்க இயலாதவர் ஒவ்வொன்றாகத் துறந்தாலும் அவற்றான் வரும் துன்பங்கள் நீங்கும் என்பது பரிமேலழகர் கண்ட கருத்து. “யாதனின் நீங்கியான் அதனின் நோதல் இல்லை. யாதனின் நீங்கியான் நோதல் அதனின் இல்லை” என்று நிரல்பட ஓதினால் பரிமேலழகரின் நுட்பம் புரியக் கூடும்.

    கெட்டவனை நினைத்தால் நன்மை வருமா?

    ‘கஞ்சா அடித்தே கந்தசாமி செத்தான் தெரியுமா?’ என்று ஒருவர் மற்றொருவருக்கு அறிவுரை கூறினால் அவர் கஞ்சாவிற்கு விளம்பர அலுவலர் அல்லர். கந்தசாமியை உவமமாக்கி உயார்த்துகிறார் என்பதுமன்று. அவர் யாருக்கு அறிவுரை கூறுகிறாரோ அவருக்கு நன்மை தர வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருக்கும், இருக்க வேண்டும். இந்தக் கருத்தியலின் அடிப்படையில் திருவள்ளுவர் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

    “இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
    மகிழ்ச்சியில் மைந்துறும் போழ்து” (539)

    என்பதே அந்தக் குறட்பா. கடன் வாங்கிக் கந்தசாமி குடிக்கிறபோது ‘குடியால் அழிந்த குப்புசாமியை எண்ணிக்கொள்’ என்பது போல அமைந்த பாடல் இது.

    “அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும்பொழுது முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க”

    என்று பரிமேலழகர் பொழிப்புரை எழுதினார். ‘கெட்டவர்களை எண்ணுக’ எனச் சொல்வது திருவள்ளுவர் நோக்கமன்று. அவர்களை எண்ணினால் மகிழ்ச்சிக்கான காரணங்களால் வரும் ஆணவம் இல்லாது ஒழியும். ஒழியவே அவற்றால் வரும் சோர்வில் மயங்காது தப்பலாம் என்பது கருத்து. மகிழ்ச்சிக்கான காரணங்கள் செல்வம், இன்பம், வீரம் முதலியனவாம். அவற்றால் அழிந்தவர் இரணியன், சூரபதுமன், இராவணன், சச்சந்தன், துரியோதனன் முதலியோர். இவர்கள் எவ்வாறு அழிந்தார்கள் என எண்ணினால் எண்ணுபவர் அந்த மகிழ்ச்சியில் மதிமயங்கார் என்பது கருத்து. இதனைக்,

    “கெட்டாரை உள்ளவே ‘நாமும் அவ்வாறே கெடுதும்’ என்று அதன் கண் மைந்துறார் என்பது கருத்து”

    பிறர் பாட்டை மட்டும் நோக்கப் பரிமேலழகர் பாடியவரின் உள்ளத்தையும் பார்க்கிறார்.

    சோம்பல் மிகக் கெடுதி பாப்பா!

    வினைசெய்யுங்கால் குணங்களின் மாறுபாட்டால் ஏற்படும் சோர்வு பேரழிவை உண்டாக்கும், என்பது அறிந்ததே. அதனால்தான் வள்ளுவர் தொடங்கிப் பாரதி வரைக்கும் அது கண்டிக்கப்படுகிறது. “நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்’ என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியதும் காண்க. சோம்பலைச் சோம்பலாகவே கருதி அதனைக் கைவிட வேண்டும் என்னும் கருத்தினைப் பின்வரும் குறட்பாவில் வலியுறுத்துகிறார்.

    “மடியை மடியா ஒழுகல் குடியைக்
    குடியாக வேண்டு பவர்” (602)

    இந்தக் குறளுக்குத் “தாம் பிறந்த குடியை மேன்மேல் உயரும் நற்குடியா வேண்டுவார் மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக.” எனப் பொழிப்புரை கூறிய பரிமேலழகர்,

    “நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி நெருப்பை நெருப்பாகவே கருதுக’ என்றாற்போல மடியில் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். அங்ஙனம் கருதி அதனைக் கடிந்து முயன்று  ஒழுகவே தாம் உயர்வர். உயரவே குடி உயரும் என்பார் ‘குடியைக் குடியாக வேண்டுபவர்’ என்றார்.”

    என விளக்கமெழுதிக் காட்டுகிறார். இந்தப் பாட்டில் சோம்பலைச் சோம்பலாகக் கருதுக என்றுதான் இருக்கிறது. இது எப்படி ஒரு நீதியுரைத்ததாகும்? சோம்பலைச் சாதாரணமாகக் கருதாது அதனை (அதனால் வரும் கேடுகளை முன்வைத்து) அதுவாகவே கருதிக் களைய வேண்டும். இல்லாவிட்டால் குடி அழியும் என எச்சரிக்கை செய்கிறார்.

    ‘அங்ஙனம் ஒழுகாக்கால் குடி அழியும் என்பது கருத்து’.

    ‘நினைக்க’ என்று வள்ளுவர் கூறுகிறார். ‘நீக்காவிட்டால் நின் குடி அழியும்’ என்னும் அவர் கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிகிறார்.

    நம்மையறியாரை நாமறிவோம்

    ‘அமைச்சு’ என்னும் தலைப்பில் அமைந்த அதிகாரம் அமைச்சனது தன்மைகளையும் செயல்களையும் கூற வந்தது. அதில் ஆறாவது பாடலாக அமைந்திருப்பது,

    “மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
    யாவுள முன்னிற் பவை?” (636)

    என்னும் குறுட்பாவாகும். இந்த வினா வடிவத்தில் முடிந்திருக்கும் இதன் உள்ளடக்கம் “அறிவுள்ளவனால் இனங்கண்டு அழிக்க முடியாத எதிரிகள் உண்டா? என்பதே. இதற்கான பரிமேலழகர் பொழிப்புரை இப்படி அமைகிறது.

    “(இயற்கையாகிய) நுண்ணறிவை (செயற்கையாகிய) நூலறிவோடு உடையராய அமைச்சர்க்கு மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை யாவையுள?”

    இந்தப் பொழிப்புரையில் இயற்கையறிவு, செயற்கையறிவு என்னும் அறிவு மூலங்களைச் சுட்டும் பரிமேலழகர் குறட்பாவின் கிடக்கை நிலையிலேயே உரைகாண்கிறார். காணவே வினா வடிவத்திலேயே பொருளும் நிறைவடைந்துவிடுகிறது. வினாவைத் தொடுப்பதா படைப்பின் நோக்கம்? வழிகாட்டுவதுதான் படைப்பின் நோக்கம். “முன்னிற்பவை யாவுள?’ என்னும் வினாவிற்கு ‘ஏதுமில்லையாம்’ என முடித்து விடலாம். ஆனால் பரிமேலழகர் இன்னும் ஒருபடி மேலே சிந்திக்கிறார். சிந்தித்து எழுதுகிறார்.

    பகைவர் சூழ்வனவற்றைத் தாம் அறிந்து அழித்து அவர் அறிந்து அழியாதன தாம் சூழ்வர் என்பது கருத்து.

    ஈரறிவும் கலந்தமைந்த அறிவுடைய அமைச்சர்களுக்கு அவற்றினும் மிக்க நுட்பமுடைய சூழ்ச்சிகள் இல்லாமற் போவதற்குக் காரணம் என்ன என்பதைத் தமது தனிநோக்கினால் கண்டறிந்து எழுதுகிறார். பகைவர் செய்வனவற்றை இவருடைய நுண்ணறிவால் அறியக்கூடுமாம். அறிந்து அவற்றை அழிப்பாராம். பகைவர் அறிய முடியாதவற்றையும் அழிக்க முடியாதவற்றையுமே இவர் எண்ணுவாராம். இதுதான் சொல்ல வந்த அமைச்சர் பெருமையாம். இவர் தரும் இந்த விளக்கத்தினால் தம்முடைய அறிவு நுட்பத்தையே முன்னெடுக்கிறாரேயன்றிப் பகைவர் அறிவு பற்றிக் குறைத்து மதிப்பிடவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

    அடுத்தவர்க்கே வேண்டுமெனின் அமைச்சர்க்கு வேண்டாமா?

    மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களின் அடக்கத்தைத் திருவள்ளுவர் பேசியிருக்கிறார். வாயைத் தவிர ஏனைய புலன்கள் அவற்றுக்கான பொறிகளையே குறிக்க, ‘வாய்’ என்னும் புலன் நாவையே  குறிக்கும். வாய் பேசாது. நாக்குத்தான் பேசும். மருத்துவர் ‘வாயைத் திற’ என்றால் இரு தாடைகளைத் திறப்பதைக் குறிக்கும். வாயை மூடு என்றாலும் அந்த நிலையே. ஆனால் ஒருவன் பேசுகிறபோது ‘வாயை மூடு’ என்றாலோ ‘நீ வாயைத் திறக்காதே’ என்றாலோ அப்போது அது தாடைகளைக் குறிக்காது. நாவினைத்தான் குறிக்கும். திருவள்ளுவர் ‘நாகாக்க’ என்றாரேயன்றி ‘வாய்காக்க’ என்றார் அல்லர். ‘நாநலம்’ என்றாரேயன்றி ‘வாய்நலம்’ என்றார் அல்லர். நாக்குத்தான் நலன் உண்டு. வாய்க்கு நாற்றந்தான் உண்டு. நாக்கு நாறாது. வாய்தான் நாறும். ‘நாவினால் ‘சுட்ட வடு’ என்றாரேயன்றி ‘வாயினால் சுட்ட வடு’ என்றார் அல்லர். ஆனால் எதிர்மறையில் ‘வாயுணர்வு மாக்கள்’ என்பார். வாயடக்கம் என்பது நாவடக்கமே.

    “நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
    யாநலத்து உள்ளதூஉம் அன்று” (641)

    என்னும் பாடல் ‘சொல்வன்மை’ என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ளது. இதற்குப் பரிமேலழகர் எழுதியிருக்கும்,

    “அமைச்சர்க்கு இன்றியமையாக் குணம் ஆவது சான்றோரான் ‘நாநலம்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல் அந்நலம் பிறர்க்கும் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது ஆகலான்.”

    என்னும் பொழிப்புரை குறட்பாவிலிருந்து வெகுதொலைவு விலகிப்போயிருப்பதைக் காணலாம். ‘நாநலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று’ என்று பொதுவாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. இதுதான் உயிரான உள்ளடக்கம். பரிமேலழகர் இயல், அதிகாரம் ஆகியவற்றையெல்லாம் சீர்தூக்கிச் சொற்களை வருவித்து மிக ஆழமாக உரைகாண்கிறார். இது அமைச்சியலில் இருப்பதால் பொதுவாகச் சொல்லப்பட்ட இப்பாடற் கருத்தினை அமைச்சர்க்கு ஏற்றியுரைக்க விழைகிறார். அதனால்,

    “பிரித்தல் பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியமையாததாயபின் அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.”

    அழகரின் இந்தத் தொடரை நோக்காவிட்டால் பொழிப்புரையின் முதற்பகுதி விளங்காது. ஏனென்றால் அது குறட்பாவில் சொல்லப்படாத கருத்து. ஆனால் அதுதான் திருவள்ளுவர் சொல்ல வருகிற கருத்து. அமைச்சுப்பணி இல்லார்க்கே இது இவ்வளவு இன்றியமையாது எனின் அமைச்சுப்பணி உள்ளார்க்குச் சொல்ல வேண்டுவதில்லை. அவருக்கு மிக மிக இன்றியமையாதது என்பதையே திருவள்ளுவர் கருத்தாக்கிச் சொல்கிறாராம்.

    இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா?

    காமத்துப்பாலில் அமைந்துள்ள குறட்பாக்களுக்குத் துறைதழுவி உரையெழுதியவர் பரிமேலழகர். அதாவது திருவள்ளுவரை முற்றிலும் மறைத்துத் தலைமக்கள் கூற்றாகவே காட்சிப்படுத்தும் பேராற்றல் அந்த உரைக்கு உண்டு. ‘ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது’ என வரைவுகடாய தோழிக்குச் (தலைவன்) சொல்லியது’ என்னுந் துறையில் அமைந்த பாடல்,

    “வீழும் இருவர்க்கும் இனிதே வளியிடை
    போழப் படாஅ முயக்கு” (1108)

    என்பதாகும். இந்தப் பாடலுக்குத் தலைமகன் கூற்றாகவே உரையெழுதியிருக்கிறார் பரிமேலழகர். அவன் தோழியிடம் இப்படிச் சொல்கிறான்.

    “நீ சொல்லுகின்றது ஒக்கும். ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம், ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே!”

    திருவள்ளுவரின் திருக்குறளைத் தலைவனுக்காக்கியதே நுண்ணியம். களவொழுக்கத்தில் வந்து சேர்வதும் சேர்ந்து பிரிவதும் துன்பமல்லவா? மணம் செய்து கொண்டால் பிரியாது இருவரும் எப்பொழுதும் முயங்கிக் கிடப்பதை நீ விரும்பவில்லையா? என்பதுபோல் தோழி வினவுகிறாள். அதற்குத் தலைமகன் தோழியின் கூற்றினை அப்படியே உள்வாங்கி “நீ சொல்லுகின்றது ஒக்கும்” அதாவது (நீ சொல்லுவது சரிதான்) என்பதுபோல விடையிறுக்கிறான். பாட்டில் தலைமகன் கூற்று இந்த அளவிற்கே அமைய. இதனால் ‘தலைமகன் கூறவரும் கருத்தென்ன?’ என்பது புலப்படவில்லை. தோழியை வழிமொழிவது அவன் பணியன்று. வரைவுடம்படாது களவொழுக்கத்தை நீட்டிக்கச் செய்வதே அவன் உட்கிடக்கை. அந்த எண்ணத்தைத்தான் பரிமேலழகர் கண்டறிந்து பதிவிடுகிறார் இப்படி.

    “ஈண்டு இருவர் இல்லை. இன்மையான் இஃது ஒவ்வாது என்பது கருத்து”

    ‘நாங்கள் இருவராக இருந்தால் அல்லவா அவ்வாறு இணைய வேண்டும். நாங்கள் ஒருவராகவே நிலைப்பதால் நீ சொல்வது பொருந்தாது’ என்பதைத்தான் இப்படி ‘நீ சொல்லுகின்றது ஒக்கும்’ எனச் சொல்லுகிறானாம்.

    தந்தவள் அவள்! நீக்க வேண்டியவள் நீ!

    தலைவியைச் சந்திக்கும் முன்னர் அவனுக்குக் காதற் துன்பமும் தெரியாது. அது நீக்கும் நெறியான மடலூர்தலும் தெரியாது. ‘இவ்வாற்றாமையும் மடலும் நுமக்கு எவ்வாறு வந்தன?’ என்று தோழி வினவுகிறாள். தலைமகன் பின்வருமாறு விடைதருகிறான்.

    “தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
    மாலை உழக்கும் துயர்” (1135)

    “மாலைப் பொழுதின்கண் அனுபவிக்கும் துயரினையும் அதற்கு மருந்தாய மடலினையும் முன்னர் அறியேன். இது பொழுது எனக்கு மாலைபோலத் தொடர்ந்த சிறுவளையினை உடையாள் தந்தாள்” என்பதே தலைமகனின் விடையாக அமைகிறது. தோழியின் வினாவிற்கு விடைசொல்வது அன்று தலைமகன் நோக்கம். அந்த நோயினால் ஏற்பட்ட துன்பத்தினையும் அது நீங்கக் கைகொள்ளவிருக்கும் மடலூர்தலையும் தவிர்ப்பதற்குத் தோழி உதவ வேண்டும் என்பதே அவன் உள்ளக்கிடக்கை. “நீ அவளிடம் சென்று என் காமத்துயர் சாற்றி, மடலூர்தலுக்கு முன்பாகவே மணவினை நிகழ ஆவன செய்க’ என்று அவன் கருதுவதைத்தான் இந்தப் பாட்டு சொல்கிறதாம்.

    “இவை அவள் தந்தன வாகலின் நின்னால் நீங்கும்” என்பது கருத்து.’

    என்னும் நுட்பமான உரை பரிமேலழகருடையது. ‘யார் தந்தது என நீ கேட்டாய். தந்தவள் பெயர் சொன்னேன். எனவே நீக்கியருள வேண்டியது நின் கடன்’ எனத் தலைமகன் கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிந்து கூறுகிறார்.

    நிறைவுரை

    திருவள்ளுவர் சொன்னவற்றை மேம்போக்காக நோக்காது அவர்தம் உள்ளத்தின் ஆழம் காண முயன்றவர் பரிமேலழகர். அந்த முயற்சிகளில் ஒன்றுதான் திருவள்ளுவர் சொன்னது ஒன்றாக இருக்க, அவர் சொல்ல நினைத்ததைக் கண்டறிந்து பந்திவைக்கும் பரிமேலழகர் உரைத்திறன். ‘முகைமொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு’ (1274) எனத் தலைவன் தலைவியின் முறுவலை ஆராய்ந்ததைப் போலவே பரிமேலழகர் ஆராய்ச்சி அமைந்திருக்கிறது. தலைவன் கண்டது தலைவியின் காதல் பரிமேலழகர் கண்டது திருவள்ளுவரின் கருத்து. திருக்குறளில் ஏறத்தாழ 60 இடங்களில் பயின்று வந்திருக்கும் இத்தகைய உரைப்போக்கு அழகரின் உரைத்திறனில் ஒரு மணிமகுடமாகவே ஒளிர்கிறது.

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 13

    பரிமேலழகர் உரைத்திறன் – 13

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    சொன்னவையும் பெற்றவையும்

    முன்னுரை

    ‘பரிமேலழகர் உரைத்திறன்’ என்னுந் தலைப்பில் வெளிவந்து கொண்டிருக்கும் இத்தொடர் பரிமேலழகர் உரைவழித் திருக்குறள் பொருண்மையை முழுமையாகக் காண்பதையே தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது. திருக்குறளுக்குத் தான் விரும்பியவழி உரையெழுதும் பரிமேலழகர் அவ்விருப்பத்தைத் தன்னிச்சையாகச் செய்யாது அறிவியல் அடிப்படையில் வலிமையான சான்றுகளின் அடிப்படையில் பதிவு செய்கிறார். தான் இப்படி உரை காண்பதற்குரிய காரணங்களை அவர் அடுக்கியுரைக்கிறபோது கற்பார்க்கு வியப்பும் அதிர்ச்சியும் ஏற்படுகிறதேயன்றிக் குழப்பம் என்பதே இல்லாமற் போய்விடுகிறது. (1) குறளுக்கு உரையெழுதுகிறார். (2) அதில் அமைந்துள்ள சீர் அல்லது தொடருக்குத் தனித்த பொருள் கொள்கிறார். (3) இந்தப் பொருளன்றி உண்மையில் உணர்த்துகின்ற பொருள் வேறொன்று என்பதைக் குறிக்கின்றார். (இதுபற்றிய விளக்கம் கடந்த வாரக் கட்டுரையில் தரப்பட்டது) (4) இறுதியாக இந்தக் குறட்பா கூறவரும் கருத்துப் பிறிதொன்று என வினைமுடிபு செய்கிறார். இந்த நான்கனுள் ஏற்றபெற்றி அமைத்துக் கொண்டு இத்தொடரைக் கற்றாலன்றித் தொடர்ப்பயன் கிட்டுவது எளிதன்று. அறிமுகத்தை முன்னிறுத்திச் சொல்வோமேயானால்,

    “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற” (34)

    என்னும் குறட்பாவில் மன மாசை முன்னிறுத்துகிறார் வள்ளுவர். இந்தப் பாட்டில் பயின்றுவந்த சொற்களைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கும் கருத்து, “உள்ளத்தில் குற்றமில்லாது இருத்தலே அறம். அதுவன்றி ஏனைய சொல்லும் ஒப்பனையும் ஆரவாரத்தன்மையுடையன” என்பது மட்டுமே. ஆனால் ‘வித்தின் பழுது விளைச்சலில்’ என்பதை உணர்ந்த பரிமேலழகர், மனத்தது மாசோடு கூடிய  ஏனைய சொல்லும் செயலும் பயனற்றன என்னும் குறட்பாவில் சொல்லாத கருத்தினைப் பெற்றுச் சொல்லுகிறார்.

    “மனத்து மாசுடையன் ஆயவழி அதன்வழிய ஆகிய மொழி மெய்களால் செய்வன பயனில என்பதூஉம் பெறப்பட்டது”

    இந்தத் தெளிவால் குறட்பாவின் கருத்து முழுமையாகக் கற்பாரைச் சென்றடைவதைக் காணலாம். குறட்பா மனத்து மாசைச்சுட்டி ஏனையவற்றின் தன்மையை விவரிக்கப், பரிமேலழகர் ‘அவற்றால் எந்தப் பயனும் இல்லை’ என்னும் கூடுதல் தகவலைக் கூறுகிறார் என்பதாம். வள்ளுவர் சொன்னவற்றோடு இவ்வாறு தம் நுண்மான் நுழைபுலத்தால் பெற்றறிந்து உரைப்பதைத்தான் ‘சொன்னவையும் பெற்றவையும்’ என்னும் தலைப்பு குறிப்பதாகக் கொள்ளலாம்.

    ஆகம அளவையும் காட்சி அளவையும்

    அறத்தின் வலிமையை உணர்த்த வந்த அதிகாரம் ‘அறன் வலியுறுத்தல்’. அதனுள் அமைந்த குறட்பா ஒன்று இப்படி அமைந்திருக்கிறது.

    “அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோடு ஊர்ந்தா னிடை (37)

    இந்தக் குறளுக்கு,

    “அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா. சிவிகையைக் காவுவானோடு செலுத்துவான் இடைக் காட்சியளவைத் தன்னானே உணரப்படும்”

    என்று பொழிப்புரை எழுதுகிறார். இது முதல் நிலை. ‘இனி அறத்தின் பயன் இது’ என்பதை ‘ஆகம அளவையால் சொல்ல வேண்டியதில்லை’ என்பதற்கும் ‘காட்சியளவையால் காணலாம்’ என்பதற்குமான மூலம் (மூலச்சொல்) குறட்பாவில் இருக்க வேண்டும் அல்லவா? நம் கண்ணுக்குத் தெரியாதது அவர் கண்ணுக்குத் தெரிகிறது. எப்படி? ‘என’ என்னும் எச்சத்தால் ‘சொல்’ (ஆகமம்) என்பதைப் பெற்றாராம். ‘பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ என்பதால் காட்சியளவையைப் பெற்றாராம். அதாவது ஒரு பொருளை உணர்த்துவதற்குரிய மூன்று வழிகள் ‘அளவைகள்’ என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன.

    “பொறிகளால் காணும் காட்சியும் குறிகளால் உயத்துணரும் அனுமானமும்  கருத்தா மொழி ஆகிய ஆகமும் என மூன்று” (242)

    என்னும் அவருடைய உரைப்பகுதியாலேயே இதனை அறிந்து கொள்ளலாம். திருக்குறளில் அமைந்துள்ள,

    “என’ என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், ‘பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ என்றதனால் காட்சியளவையும் பெற்றாம்”

    இந்த இரு சொற்களைக் கொண்டுதான் ஆகம அளவை என்பதையும் காட்சியளவை என்பதையும் உணர்ந்து கொண்டு உரையெழுதுவதாகப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறார் பரிமேலழகர். இத்தகைய தர்க்க அறிவியல் சார்ந்த நெறிமுறையைப் பற்றியே இந்தக் கட்டுரை ஆராய்கிறது. அதாவது குறட்பாச் சீர்களை அவற்றின் உள்ளடக்கம் அறியும் கருவிகளாகத் தான் பயன்படுத்திக் கொள்வதாகப் பரிமேலழகர் கூறுகிறார். இவ்வாறு குறட்பாத் தொடர்களிலிருந்து பரிமேலழகர் பெற்றுக் கொண்ட ‘பொருட்செல்வத்தைப்’ பற்றிய ஆய்வு தொடர்கிறது.

    பலருக்கும் பொதுவான ‘பனுவல்’

    ஒழுக்கத்தை வற்புறுத்தாத சமயங்களோ சமுதாயமோ இல்லை. எல்லாச் சமயங்களுக்கும் சமுதாய அமைப்புக்களுக்கும் ஒழுக்க நெறி பொதுவானது. இன்றியமையாதது. மானுடத்திற்கு அழியாப் புகழை அளிப்பது. திருவள்ளுவர் கூறிய பத்து உடைமைகளில் அதுவும் ஒன்று. இல்லறத்தில் கடைப்பிடிக்கப்படும் அவ்வொழுக்கம் துறவறத்தில் பிசகிவிடுமானால் அது கூடாவொழுக்கம் ஆகிவிடும். அதனால்தான் அதனை உலகத்து நூல்களெல்லாம் உயர்த்திப் பிடிக்கின்றன என்பது திருவள்ளுவர் கருத்து. அதனை,

    “ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
    வேண்டும் பனுவல் துணிவு” (21)

    என்னும் குறட்பாவில் பதிவு செய்திருக்கிறார்.

    “தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும்  இதுவே விழுமியது என விரும்பும் நூல்களது துணிவு”

    என்னும் பொழிப்புரையைத் தொடர்ந்து பரிமேலழகர் எழுதுகிறார்.

    ‘பனுவல்’ எனப் பொதுப்பட கூறிய அதனான் ஒன்றையொன்று ஒவ்வாத சமய நூல்கள் எல்லாவற்றிற்கும் இஃது ஒத்த துணிவு என்பது பெற்றாம்.

    ‘நூல்கள் சொல்லுகின்றன’ என்பதுதான் குறட்பா கூறவரும் கருத்து. ஆனால் எத்தகைய நூல்கள் அல்லது எந்தச் சமயத்து நூல்கள் என்பதைத் திருவள்ளுவர் கூறவில்லை. நூலின் அகக்கட்டுமானத்தைக் கருத்திலிருத்தி உரையெழுதும் பரிமேலழகர் ‘எல்லாச் சமயத்திற்கும் திருவள்ளுவர் பொதுவானவர்’ என்னும் தனது உட்கிடக்கையை இதன் வழி வெளிப்படுத்துகிறார். பரிமேலழகர் உரையில் எல்லாச் சமயத்து நூல்களும் உரைவிளக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது நோக்குதற்குரியது.

    ‘பனுவல்’ என்பது எல்லாச் சமயங்களையும் தழுவி நிற்கும் ஒரு பொதுச்சொல் திருவள்ளுவர் ‘பனுவல்’ என்று பொதுப்படக் கூறுகிறாரேயன்றி ‘இன்ன சமயத்து நூல்’ என விதந்தோதவில்லை. அது மட்டுமன்றி இணக்கமான சமயங்கள் என்றும் முரண்பட்ட சமயங்கள் என்றும் வடகலை, தென்கலை என்றும் பாசுரங்கள், பதிகங்கள் என்றும் வழங்கப்படும் சொற்களை நோக்கினால் உண்மை புரியக்கூடும். எனவே மாறுபடு சமயங்கள் வேறுவேறாயினும் ஒழுக்கம் என்பது மாறாத எல்லாரும் ஏற்றுக் கொள்கிற ஒன்று. இதனைத்தான் பரிமேலழகர் அந்தப் பொதுச்சொல்லிலிருந்து பெற்றுக் கொண்டதாக எழுதிக் குறட்பாவின் பொருளடர்த்தியை மிகுவிக்கிறார்.

    இனித் திருவள்ளுவரை ஒரு குறிப்பிட்ட சமயச் சிமிழுக்குள் அடக்க முற்படுவாருக்கும் பரிமேலழகர் வடமொழிச் சார்பாளர் என்னும் கருத்தியல் கொண்டவர்க்கும் அவரை வைணவர் என அடையாளப்படுத்துவார்க்கும் இவ்வாறு பரிமேலழகர் எழுதிக்காட்டும் உரைநெறியே அவர்தம் கருத்து பிசகானது என்பதற்குப் போதுமான சான்றாகலாம். அதாவது பரிமேலழகர் எந்த நிலையிலும் எந்தக் குறடபாவிலும் தன் கருத்தினைத் திருக்குறளுக்கு ஏற்றிக் சொல்லவில்லை என்பதாம். காரணம் திருவள்ளுவர் எல்லாச் சமயங்களுக்கும் தத்துவங்களுக்கும் பொதுவானவர் என்னும் கருத்தியலால் கவரப்பட்டவர் பரிமேலழகர் என்பதும் அதனைக் கருத்திற்கொண்டே அவர் உரை அமைந்திருக்கிறது என்பதும் இங்கே முன்னெடுக்கப்படுகிறது.

    ‘இனிய’, ‘இன்னாத’ எப்படிச் சொற்களாகும்?

    ‘இனியவை கூறல்’ என்னும் அதிகாரத்தின் இறுதியில் அமைந்திருப்பது,

    “இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” 100

    என்னும் குறட்பாவாகும். இந்தக் குறளை உற்று நோக்குவார்க்கு ஓர் உண்மை புலப்படக் கூடும். ‘இனிய’ என்பது பண்படியாகப் பிறந்த உடன்பாட்டுப் பெயர்ச்சொல். அதாவது ‘இனிமையானவை’ என்பது பொருள். ஆனால் ‘எவை இனிமையானவை?’ என்னும் விளக்கக் குறிப்பு பாட்டில் இல்லை. அதுபோலவே ‘இன்னாத’ என்பதும் பண்படியாகப் பிறந்த எதிர்மறைப் பெயர்ச்சொல். அதாவது ‘இன்னாதவை’ என்பது பொருள். ஆனால் “எவை இன்னாதவை?” என்னும் விளக்கக் குறிப்பு பாட்டில் இல்லை. அதிகாத்தின் தலைப்பு ‘இனியவை கூறல்’ என்பதாகும். பரிமேலழகரின் பொழிப்புரை இப்படி அமைகிறது.

    “அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க அவற்றைக் கூறாது, பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல் இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க அவற்றை நுகராது இன்னா காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்”

    ‘இனிய, இன்னாத’ என்று குறிப்பாகவே குறட்பாவில் பயின்றிருக்கப் பரிமேழகர் அவற்றிற்கு ‘இனிய சொற்கள்’ ‘இன்னாத சொற்கள்’ என உரைகாண்கிறார். அவ்வாறு உரை காண்பதற்கு அந்தக் குறட்பாவில் ஏதேனும் இடமிருக்கிறதா என்றால் இருக்கிறது. இருப்பதும் அவருக்குத் தெரிகிறது!. எங்கே? ‘கூறல்’ என்ற வினைச்சொல்லை நோக்கி உரையெழுதுகிறார். சொல்லைத் தானே கூறுவார்கள்?. எனவே ‘கூறல்’ என்ற வினைச்சொல் பொதுவாக அமைந்திருப்பதால் ‘சொற்கள்’ என்பதாகத் தான் உரை காண்பதாக விளக்கமளிக்கிறார்.

    “கூறல் என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம்”

    இது பரிமேலழகரின் சுருக்க உரை. ‘இன்னாத கூறல்’ என்னும் தொடரில் உள்ள ‘கூறல்’ என்னும் உடன்பாட்டை உற்று நோக்கி, அதனை ‘இனிய’ என்பதோடு எதிர்மறையாகப் பொருத்தி உரை காணும் நுண்ணியம் உணரத்தக்கது. அதிகாரத்  தலைப்பு, குறட்பாவில் சொற்களின் பயன்பாடு ஆகியவற்றை நோக்கி உரையெழுதுவதை இயல்பாகக் கொண்ட பரிமேலழகர் தான் உரைகாண்பதற்கான மூலத்தைக் குறட்பாவிலிருந்தே காட்டுவதைக் காணலாம்.

    என்பில்லாததும் அன்பில்லாததும்

    மேலே காட்டிய குறட்பாவில் ‘கூறல்’ என்னும் வினையால் சொற்கள் என்பதைப் பெற்றுக் கொண்டதைப்போல இன்னொரு குறட்பா அமைந்திருக்கிறது. ‘அன்பு’ என்பது உயிர்ப்பண்பு. அப்பண்பு இல்லாவிடின் மானுடம் சிறக்காது. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்பது வள்ளுவம் அத்தகைய அன்பு ஒருவனுக்கு இல்லாவிட்டால் தெய்வ நிந்தனைக்கு ஆளாவான் என்பது வள்ளுவர் சொல்லவரும் கருத்து. இதனை ஓர் உவமத்தின் வழி நின்று விளக்குகிறார்.

    “என்பிலதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்” 77

    என்பது அந்தப் பாட்டு. இதற்கு,

    “என்பில்லாத  உடம்பை வெயிற் காய்ந்தாற்போலக் காயும், அன்பில்லாத உயிரை அறம்”

    எனப் பொழிப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். இந்தக் குறட்பாவில் ‘என்பிலது’ எனவே இருக்க, பொழிப்புரையில் ‘உடம்பு’ என உரைகாண்கிறார். அதுபோலவே ‘அன்பிலது’ எனவே குறட்பாவில் இருக்க ‘உயிர்’ என உரை காண்கிறார். இவ்வாறு அவ்விரு சொற்களுக்கும் உரைகண்டதற்குரிய காரணத்தை விளக்குகிறார். உடம்பும் எலும்பும் இணைந்தேயிருக்கும். எலும்பில்லாத உடம்பு என்றால் அதனால் நிற்க இயலாது. வெப்பத்தைத் தாங்காது. மென்மையான தோல் மட்டுமே இயக்கத்திற்கு உதவும் ‘புழு’ என்பது கருத்து. அன்போடு இயைந்த வழக்காதலின் அன்பு உயிர்ப்பண்பு ஆயிற்று. எனவே அன்பிலது என்பதனால் அன்பில்லாத உயிர் என்பது கருத்து. இதனை,

    “என்பிலது என்றதனான் உடம்பு என்பதும் அன்பிலது என்றதனான் உயிர் என்பதும் பெற்றாம்.”

    திருவள்ளுவர் சொன்ன சொற்களிலிருந்து சொல்ல நினைத்த கருத்தினைப் பெற்றுக் கொள்ளும் பரிமேலழகரின உரைத்திறன் இதுவாம்.

    ‘பாவம்’ மறுமைக்கானது

    மாற்றானுடைய மனைவியை விரும்பியொழுகும் ஒழுக்கத்தை வன்மையாகக் கண்டிப்பது திருக்குறள். அவ்வாறு விரும்பி ஒழுகுபவனிடத்தில் இருக்கக்கூடிய பண்புகளாக நான்கினைப் பட்டியலிடும் குறட்பா இவ்வாறு அமைந்திருக்கிறது.

    “பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
    இகவாவாம் இல் இறப்பான் கண்”  146

    “பிறன் இல்லாள்கண் நெறிகடந்து செல்வானிடத்து, பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் என்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலும் நீங்காவாம்” என்பது இப்பாட்டிற்குப் பரிமேலழகர் எழுதிய பொழிப்புரை. இந்தப் பாட்டு இல்லறவியலில் ஒழுக்கமுடைமை என்னும் அதிகாரத்தை அடுத்து அமைந்துள்ளது. இல்லறவியலில் சொல்லப்படும் எதிர்மறை நெறிகளுக்கான விளைவு இம்மைப் பயன் இழப்பதே, இல்லறம் இம்மை நோக்கியதாதலின். ஆனால் பிறனில் விழைதலாகிய இம்மைப் பாவத்தைச் செய்பவன் மறுமைப்பயனையும் இழக்கிறான் எனச் சொல்ல வரும் பரிமேலழகர்  பார்வையில் ‘பாவம்’ என்னும் சொல் படுகிறது.

    “எனவே இருமையும் இழத்தல் பெற்றாம்.”

    என்னும் ஒரு தொடரால் பிறனில் விழைபவனுக்கு மறுமைப்பயனும் கிடையாது எனத் தெளிவுபடுத்துகிறார். அதாவது பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கனுள் ‘பாவம்’ மறுமைக்காக, ஏனைய மூன்றும் இம்மைப் பயனை இழக்கச் செய்வது. எனவே இருமைப் பயனையும் அவன் இழப்பதாக உரையெழுதுகிறார். குறட்பாவில் பயின்று வந்துள்ள சொற்களை அப்படியே பின்பற்றி உரையெழுதாமல் ஆசிரியரின் உள்ளக்கிடக்கைக்கு ஏற்ப நுட்பமாக உரையெழுதும் அவருடைய ஆற்றல் இதனால் புலப்படக் கூடும்.

    களிற்றை எதிர்ப்பதுதான் காளையின்  வீரம்

    ‘என’ என்னும் எச்சத்தால் ஆகம அளவை என்பதைப் பெற்றுக் கொள்கிறார். ‘கூறல்’ என்னும் தொழிற்பெயரால் ‘சொற்கள்’ என்னும் செயப்படுபொருளைப் பெற்றுக் கொள்கிறார். ‘என்பிலது’ என்பதால் உடம்பையும் ‘அன்பிலது’ என்பதால் உயிரையும் பெற்றுக் கொள்கிறார். பயின்று வந்துள்ள சொற்களின் சரியான பொருத்தப்பாட்டினை அறிந்து பாவம் என்பது மறுமைக்கானது என்பதைப் பெற்றுக் கொள்கிறார். இன்னொரு வகையாகவும் அவர் இவ்வாறு பெற்றுக் கொள்வதை அறிய முடிகிறது. சித்திரிக்கும் காட்சியைக் கொண்டு சித்திரிக்கப்படாத காட்சியைப் பெற்றுக் கொள்கிறார்.

    பொருட்பாலில் படையினது தன்மை எனப் படையினது இயல்புகளைக் கூறும் அதிகாரத்திற்குப் ‘படைமாட்சி’ என்று பெயர். படை அங்கங்களுள் சிறந்தது என்பதும் அதனுள்ளும் மூலப்படை சிறந்தது என்பதும் அதுதன்னுள்ளும் வீரன் சிறந்தவன் என்பதும் அந்த அதிகாரம் விளக்கும் பொருண்மையாகும். அந்த வீரனின் வீரச்செருக்குப் பற்றிக் கூறுவதே அடுத்த அதிகாரமாகிய  ‘படைச்செருக்கு’. இந்த அதிகாரத்தில் ஒரு பாட்டு இப்படி அமைந்திருக்கிறது.

    “கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
    மெய்வேல் பறியா நகும்” (774)

    இந்தக் குறட்பா ‘படைச் செருக்கு’ என்னும் அதிகாரத்தில் வருகின்ற பத்துப்பாடல்களில் நான்காவதாக அமைவது. போர்க்களத்தில் எதிர்கொள்கின்ற இடர்களைப் பொருட்படுத்தாது மேன்மேலும் முன்னோக்கிச் செல்லும் போராண்மையை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டது. இதற்குப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி, வருகின்ற களிற்றுக்கு வேல் நாடித் திரிவான் தன் மார்பின்கண் நின்ற வேலைக்கண்டு பறித்து மகிழும்”

    என்று விளக்குகிறார். பாட்டில் சொல்லப்படும் கருத்துக்கள் இரண்டே.

    1. கைப்படையாகிய வேலைக்கொண்டு தன் மேல் முதலில் பாயவரும் களிற்றினை உயிரோடு போக்குகிறான்
    1. தொடர்ந்து தன் மேல் பாயவரும் களிற்றினை எறிவதற்கு வேல் இல்லையே என்ற நிலையில் ஏற்கனவே பகைவர்கள் எய்து, தன் மார்பில் தைத்திருக்கும் வேல்களில் ஒன்றினைக் கண்டு மகிழ்கிறான். அவ்வளவுதான்!.

    பரிமேலழகர் சிந்தனையில் கூடுதலாக மூன்று வினாக்கள் தோன்றுகின்றன.

    1. முதலில் தாக்கியது களிறு என்பது சரி. தொடர் தாக்குதலுக்கு வந்ததும் களிறுதானா? என்பதற்கான குறிப்பு பாட்டில் இல்லை.
    2. வேல் கிடைக்காது திகைத்தவன் தன் மார்பில் தைத்த வேல்கண்டு மகிழ்கிறான் என்றால் அவன் மார்பில் பகைவர்களின் வேல் தைத்ததை அவன் அறியவில்லை. இந்தக் குறிப்பு பாட்டில் இல்லை.
    3. ஒரு களிறு அடக்கியது போதுமென எண்ணாது தொடர்போரில் அவன் மனம் ஈடுபட்டது என்பது பாட்டில் குறிக்கப்படவில்லை.

    ஆனால் இந்த மூன்றும் இருந்தால்தான் அது படைச்செருக்கு. ‘படைச்செருக்கு’ என்பதற்கு வீரத்தனம் என்பது பொருள். வழக்கில் இது ‘சூரத்தனம்’ எனப்படும். படைவீரர்களின் போர்க்குணம். இந்தப் போர்க்குணத்தைத் தம் மனக்காட்சியால் பெற்றுக் கொண்டு உரையெழுதுகிறார் பரிமேலழகர்.

    “இதனுள் களிற்றையல்லது எறியான் என்பதூஉம் சினமிகுதியான் வேலிடை போழ்ந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர் விருப்பினன் என்பதூஉம் பெறப்பட்டன.”

    இரண்டு வினைகளோடு முற்றுப்பெறும் ஒரு குறட்பாவை ஐந்து வினைகளோடு முடித்துக்காட்டும் பரிமேலழகரின் உரைத்திறனை என்னென்பது? எப்படிப் புகழ்வது?

    நிறைவுரை

    குறட்பாவிலிருந்து இவ்வாறு வேண்டியனவற்றைப் பெற்றுக் கொண்டு உரையெழுதும் இத்தகைய உரைநெறி பரிமேலழகர் உரையில் ஏறத்தாழ தொண்ணூறு (90) இடங்களில் பின்பற்றப்படுகிறது. இந்த உரைநெறியை எந்த மேனாட்டுத் திறனாய்வுக் கொள்கை கொண்டும் அளக்க முடியாது. அதனால் அளக்கவும் கூடாது. அளந்தால் பயன் தராது. இந்த உரை நெறி தமிழுக்கேயுரியது. உலகமொழி இலக்கியங்களில் காணற்கரிய காட்சி இது. தமிழ் உரையாசிரியப் பெருமக்களின் உரைநெறிகள் தனித்த நோக்கிற்கும் ஆழமான ஆய்வுக்கும் உரியவை. மூலநூல் ஆசிரியனின் உள்ளம் கண்டுணரும் பேரார்வம் இருந்தாலேயொழிய இத்தகைய உரைத்திறன் கைவரப்பெறுவது அரிது. பரிமேலழகருக்கு அந்த ஆர்வம் அளவு கடந்தது. அதனால் அது கைவரப்பெற்றது!

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 12

    பரிமேலழகர் உரைத்திறன் – 12

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                  
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    விரும்பிக் கூறிய ‘வேண்டாதவை’

    முன்னுரை

    நூல்களுக்குப் புற அழகு ஓவியர்களாலும் அச்சகத்தாலும் வழங்கப்படும் வண்ணங்களால் அமையலாம். அக அழகு அவ்வாறு கொடுத்து அமையாது. முன்னது கண்ணுக்குரியது. அதனால் அது சாத்தியம். பின்னது புலன்களுக்கு உரியது. அதனால் அது அவர்களால் இயலாது. படைப்பாளனின் உள்ளம் மொழிவழி வெளிப்படும் அழகுக் கோலமே நூலின் அக அழகைத் தீரமானிக்கும். சிலப்பதிகாரம், கம்பராமாயணம், திருக்குறள் முதலிய நூல்கள் புறத்தோற்றத்தில் பெரியன. சிவஞான போதமும் ஆத்திசூடியும் அளவால் மிகச் சிறியன. இவ்விரண்டு தன்மையிலமைந்த நூல்களின் பெருமையை உள்ளடக்கமே தீர்மானிக்கிறது. எத்தனைப் பக்கம் என்பதல்ல அவற்றுக்குப் பெருமை சேர்ப்பது. எவ்வளவு ஆழமான கருத்துக்கள் எப்படிச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதுதான் பெருமை சேர்க்கும். கருத்தாழமும் அக்கருத்துக்களை வெளிப்படுத்தும் உத்திகளின் பேராற்றலுமே நூல்களின் வெற்றிக்கு மூலதனம். காதல், வீரம் என்னும் இரண்டே பாடுபொருள்களைப் பற்றி இத்தனையாயிரம் பாடல்களைச் சங்கச் சான்றோர்கள் சலிப்படையாமல் பாடியிருப்பதற்கும் நாமும் சலிப்படையாமல் தலைமுறைகள் பல தாண்டியும் படித்து வருகிறோம் என்பதற்கும் சொல்லும் முறைதான் காரணம். அவ்வாறு சொல்லும்போது இருக்க வேண்டிய அழகு, நீக்க வேண்டிய குற்றம் இவைகளைப் பற்றியெல்லாம் தமிழிலக்கணங்கள் விரிவாக ஆராய்கின்றன. குற்றமேதும் இல்லாத நூலை எழுதுபவனைத்தான் ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவன்’ என்பர். அந்தக் குற்றங்களுள் ‘வெற்றெனத் தொடுத்தல்’ என்பதும் ஒன்று. வேண்டாது கூறலும் என்றாலும் பொருந்தும். எத்தகைய பயனும் இல்லாமல் தேவையின்றிச் சில சொற்கள் சில நூல்களில் பயின்று வருவது கண்கூடு. சான்றோர் செய்த நூல்களிலும் இத்தகைய குற்றங்கள் இருக்குமா? இருந்தால் அதனைக் கண்டிக்க இயலுமா? இல்லையாயின் அதற்கான காரணமாகிய அமைதியைக் கண்டறிய  இயலுமா? என்னும் ஐயங்கள் எழுவது இயற்கை. திருக்குறளில் ஒரு சில குறட்பாக்களில் பயின்று வந்துள்ள வேண்டாத சொற்களைப் பற்றி ஆய்கின்ற இக்கட்டுரையில் அதற்கான விளக்கம் ஓரளவு கிடைக்கலாம்.

    ‘வேண்டாத சொற்கள்’ ஒரு விளக்கம்

    “ஐயா நீங்க உங்க வாயால சொல்லாதீங்க!” இத்தகைய வழக்காற்றினைப்  பலரும் செவிமடுத்திருக்கக்கூடும். எல்லாவகையிலும் உயர்ந்தார் ஒருவர் மனம்புழுங்கிச் சில சொல் சொல்லுகிறபோது ‘அவை பலித்துவிடுமோ?’ என்னும் அச்சமும் ‘பலிக்கும்’ என்னும் நம்பிக்கையும் சமுதாயத்தில் நிலவும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. சமுதாயம் அச்சொற்களை ஒலியின் காரியமாகக் கருதாமல் சத்தியத்தின் வெளிப்பாடாகக் கருதுவதே இத்தகைய மனநிலைக்குக் காரணம். இதனால் என்ன மாற்றம் என்றால், சொல்லுக்குக் கருவியான வாய் பதவியிழப்புக்கு ஆளாகிறது. அதிலிருந்து வருகிற சொற்களுக்கான காப்புரிமை சொல்கிறவருடைய பண்பாடு, ஒழுக்கம், சான்றாண்மைக்குச் சென்றுவிடுகிறது. அந்தத் தொடரில் அழுத்தம் ‘வாய்க்கு’ அன்று. ‘உங்க’ என்னும் சொல்லுக்கு என்பதை நோக்குதல் வேண்டும். அவர் வாயினது சிறப்புக்கு அச்சொற்கள் பொருந்தாமையை நோக்கி மக்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சி வெளிப்பாடு இது. நாம் எதனைக் கவனிப்பதில்லை? ‘வாயால் சொல்லாதீர்கள்’ என்பதை!. வாயைத்தவிர வேறு எக்கருவியால் சொல்ல இயலும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். பேசுவதற்கான கருவி வாய்!. இருந்தாலும் கேட்டு அமைதியடைகிறோம்!.

    இதனை உடன்பாடாகவும் கேட்டிருக்கக்கூடும்!. “நீங்க உங்க வாயால ஒரு சொல் சொல்லுங்கள் அது போதும் எனக்கு” எதிர்மறையை மறுதலித்த நாம் உடன்பாட்டுக்காக ஏங்குகிறோம். இருநிலையிலும் சொல்வார் பெருமையே சொற்களின் காரணமாக உணரப்படும். அல்லவர் வசவினைப் பெறுதலின் நல்லவர் வாழ்த்தினைப் பெறுவது சிறப்பு. ‘அறம் பெருக அல்லவை தேய்வது’ இயல்பல்லவா?  இவ்விரண்டிடங்களிலும் ‘வாய்’ என்பது சொல்லுக்கான கருவி என்னும் நிலையிலிருந்து மாறிச் சொல்வார்தம் பண்புக்கான குறியீடாகிவிடுவதைக் காணலாம். ஒருவன் பண்புகளால் உயர்ந்திருப்பான் எனின் உலக வழக்கு இப்படியும் அமையும் “அவன் வாயில் விழாதே!’ ‘வாயில் விழாதே’ என்றால் ‘வாயில் சென்று விழுதல்’ என்று பொருளன்று. அவரின் எதிர்மறை வசவுக்கு நீ ஆளாகிவிடாதே!’ என்று பொருள்.

    மொழி மக்களுக்கானது. மொழியியல் அறிஞர்களுக்கானதன்று. அது பாமர மக்களின் பண்பாட்டுக் கூறுகளில் தலையாயது. ஓரினத்தின் உயிர் அடையாளம் மொழியே!. அவ்வினத்தின் வழக்கு நிலைகள் பெரும்பாலும் அம்மொழியின் இலக்கிய இலக்கணங்களில் தாக்கத்தை உண்டாக்கும் என்பது தொல்காப்பிய நெறி. அந்த நெறியில் நூல் செய்த திருவள்ளுவர் வேண்டாதன சிலவற்றை விரும்பிக் கூறிய நுட்பத்தை இனி ஆராயலாம்.

    வள்ளுவர் கண்ட வாய்ச்சொல்

    திருவள்ளுவர் இரண்டு வகையான மனிதர்களின் வாய்ச்சொற்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். உடன்பாட்டு வகையால் அதாவது உயர்பண்புகளின் தொகுப்பாக விளங்கிப் புகழ்பெற்ற சான்றோர்களின் வாய்ச்சொற்களின் சிறப்புக்களைப் பதிவிடுவதைக் காணலாம். எழுத்துக்களின் காரியமாக வெளிப்படுவதால் தமிழில் எழுத்துப் பிறக்கும் இடங்களிலிருந்து சொற்கள் பிறக்கும் இடங்கள் மாறுபடுவதில்லை. அதே நேரத்தில் புற உறுப்புக்களின் தன்மையைச் சொற்களுக்கு அவர் ஏற்றுவதில்லை. விளக்கமாகச் சொன்னால் சொற்களின் இறுதிவாயில் உதடுகள். அவ்வுதடுகளின் இனிமையைச் சொற்களுக்கு ஏற்றியுரைக்கும் இயல்பு திருவள்ளுவருக்கு இல்லை.

    இன்சொல்லுக்கு வரைவிலக்கணம் தந்த வள்ளுவர் உயிரிரக்கம், மனத்துக்கண் மாசின்மை, வீடுபேற்றுக்கு நிமித்த காரணமாகிய செம்பொருள் கண்டார் சொல்வது என்னும் மூன்று பண்புகளின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்பதை,

    “இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம்
    செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்” (91)

    என்னும் குறட்பாவில் தெளிவுபடுத்தியிருக்கிறார். தற்காலத்தில் வழங்கும் ‘பழகுதற்கு இனியவர்’ என்னும் ‘உதட்டுறவு’ உதிர்க்கும் பாசாங்கு மொழி திருவள்ளுவர் அறியாதது. இந்தக் குறட்பாவுக்குப் பொழிப்புரை தந்த  பரிமேலழகர்,

    “அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் சொல் இன்சொல்லாவன“

    என வரையறைக்குக் கூடுதல் தெளிவு தருகிறார். அன்பு, வஞ்சனையற்ற தன்மை, அறமுணர்தல் ஆகிய முப்பெரும் பண்புகளுக்கும் சொற்களின் மூலாதாரமான தொண்டை, நா முதலிய உறுப்புக்களுக்கும் நிலவும் தொடர்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். இத்தகைய பெருமக்கள் அடிமனத்திலிருந்து வரும் உண்மையான சொற்கள் வாய்வழியாக வெளிப்படுகிறபோது அந்த வாயும் அகப்பண்புகளால் சிறப்படைகிறது என்பதாம். அதனால்தான்,

    “‘வாய்’ என வேண்டாது கூறினார் தீய சொல் பயிலா என்பது அறிவித்தற்கு”

    என்று பரிமேலழகர் நுண்ணியம் காண்கிறார். ‘சொல்’ என்ற அளவிலேயே ‘வாய்’ என்பது பெறப்படுதலின் ‘வாய்ச்சொல்’ என்னும் தொடரில் ‘வாய் என்னும் முன்னொட்டு வேண்டாதது. ஆனால் வேண்டாத அச்சொல்லைப் பெருமக்களின் சிறப்புடைய வாயென்பதைப் பிரித்துக் காட்டலின் திருவள்ளுவர் விரும்பியே எழுதினாராம்! அந்த இடத்தில் ‘வாய்’ என்பது ஒலித்தொகுப்பின் வாயில் அல்லவாம்! பண்புக்கூறுகளின் வாயிலாம். இது பரிமேலழகர் பார்வை!.

    வழுக்கத் தெரியாத வாய்

    ‘நாக்கு தவறிச் சொல்லிவிட்டேன்’, ‘வார்த்தை பிசகிவிட்டது’, ‘அவசரத்தில் சொல்லிவிட்டேன்’, ‘பதற்றத்தில் ‘சொல்லிவிட்டேன்’, ‘கவனிக்காமலேயே சொல்லிவிட்டேன்’ இதுபோன்ற தொடர்களை நம்மில் பலரும் கேட்டிருக்கக் கூடும். இந்தத் தொடர்களை ஊன்றிக் கவனித்தால் நாக்கின் பிறழ்வாகவே சொற்பிழைகள் தோன்றுகின்றன என்னுமாறு அமைந்திருப்பதைக் காணலாம். அடிமனத்தில் உள்ளதுதான் வாய்வழியாக வெளிப்படுகிறது என்பது உளவியல் உண்மை. இந்த உண்மையை உணர்ந்தவர் திருவள்ளுவர்.

    “ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்” (139)

    என்பது ஒரு குறள். இதற்கு,

    “மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள் ஒழுக்கம் உடையவர்க்கு முடியா”

    எனப் பொழிப்புரை தருகிறார் பரிமேலழகர். இந்தப் பொழிப்பிலேயே இந்தப் பத்தியின் தொடக்கக் கருத்துக்களின் சாரத்தைக் காணமுடியும். ‘வழுக்குதல்’ என்பது புறத்தொழில். ‘தரை வழுக்கும்’, ‘வழுக்கு நிலம்’, ‘பாறை வழுக்கியது’, ‘வழுக்கி விழுந்தான்’ என்பன நோக்குக. ஆனால் பரிமேலழகர் வழுக்கியும் என்னும் சொல்லுக்கு ‘மறந்தும்’ என உரை காண்கிறார். ‘மறத்தல்’ நினைவு தடுமாறுதல். நல்ல பண்போ தீய பண்போ அது பழக்கமான, வழக்கமான ஒன்றாகிவிடுமானால் அதனை அவ்வளவு எளிதில் மாற்ற இயலாது. சொற்கள் வாயினது செயலாக மட்டும் இருக்குமானால் இந்தத் தவறு நடக்காது. உரையும் பொருந்தாது. அது மனத்தின் வெளிப்பாடாக, நடத்தையின் வெளிப்பாடாக,  ஒழுக்கத்தின் வெளிப்பாடாக அமைந்தால்தான் இந்த உரை பொருந்தும். மற்றவர்களுக்கெல்லாம் சொற்களுக்கு வாயும் நாக்கும் கருவிகள். ஆனால் சான்றோர்களுக்கு அவை தடங்கள். மூலம் உள்ளம். உள்ளம் தூய்மையாயின் வாக்கு அதனை வெளிப்படுத்தும். ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே வாய்மையுண்டாகும்’ என்னும் மகாகவியின் தொடர் நோக்குக.  விளக்கவுரையில் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்,

    “சொலல்’ எனவே அமைந்திருக்க ‘வாயால் என வேண்டாது கூறினார் ‘நல்ல சொற்கள் பயின்றது எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு”

    மிகத்தெளிவாக அமைந்திருக்கும் இந்த விளக்கவுரையில் வாய் என்பது எப்படி வேண்டாத சொல் என்பதையும் விளக்கிவிடுகிறார் பரிமேலழகர். விளக்கி ‘நல்ல சொற்கள் பயின்ற நா, இத்தகைய சொற்களை மறந்தும் கூறாது’ என்னும் தனது கருத்தினைக் குறிப்பாகப் புலப்படுத்தவே ‘வாய்ச்சொல்’ என்று கூறினாராம்! சொல்லுக்குக் கருவியாக வாய் இருப்பினும் அவ்வாயை ஒழுக்கத்தின் தலைவாசலாகக் கருதுகிறார் என்பதாம்!

    இல்லறத்தான் வெல்லுமிடம் இதுதான்!

    ‘துறவறம்’ உயர்ந்தது என்பதனால் ‘இல்லறம்’ தாழ்ந்தது என்பதன்று.  இல்லறத்தின் நோக்கம் துறவறம் என்பதாலும் வாழ்வின் உச்சநிலை ‘வீடுபேறு’ என்பதாலும் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாகிய இல்லறம் தனக்குரிய மதிப்பை என்றும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. திருவள்ளுவர் சில அறங்களைத் துறவறத்திற்கே ஒதுக்கியிருக்கிறார். உலகியல் நோக்கி அத்தகைய அரிய அறங்களை இல்லறத்தான் கடைப்பிடிக்க இயலாது என்பதே அதன் காரணமாகும். உலகியலில் கடுஞ்சொற்களைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை இல்லறத்தானுக்கு ஏற்படும். பொய், குறளை, கடுஞ்சொல், பயனிலசொல் என்னும் சொற்குற்றங்கள் நான்கனுள் திருவள்ளுவர் பொய்யை இல்லறத்தானுக்கு விதிவிலக்காக்கி அதனைத் துறவறவியலில் ‘வாய்மை’ என்னும் அதிகாரத்தில் விளக்கிக் காட்டுவார். சொற்குற்றங்களைப் பொறுக்கும் பேராற்றல் துறவியைவிட இல்லறத்தானுக்கே உண்டு என்பது இதனால் பெறப்படும். இதனைத்,

    ‘துறந்தாரின தூய்மை உடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற்பவர் (159)

    என்னும் குறுட்பாவில் பதிவு செய்திருக்கிறார் திருவள்ளுவர். “இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற்பவர் துறந்தாரின் தூய்மை உடையார்’ என்னும் இந்தக் குறட்பாவிற்கு,

    “நெறியைக் கடந்தார்வாய் இன்னாச் சொல் பொறுப்பவர், இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார்போலத் தூய்மையுடையார்.”

    எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர், ‘நெறிகடந்தவர் சொல்’ என்னாது ‘நெறிகடந்தவர் வாய்ச்சொல்’ என்னும் குறட்பா தொடர் பற்றி விளக்கவுரையில் கூறுகிறார். துறவிகள் ‘துறப்பினமாதலின்’ அங்கே தர வேறுபாடுகள் இல்லை. அதனால் இத்தகைய நெருடல் இல்லை. இருக்க வாய்ப்பில்லை. உலகியலில் பலதரப்பட்ட மக்களோடு வாழவேண்டிய கடப்பாடு இல்லறத்தானுக்கு உண்டாதலின் ‘நெறிகடந்தவர்தம் வாய்ச்சொல்’ என விதந்தோதுகிறார். நெறி கடப்பதற்கு இங்கே வாய்ப்புண்டு ஆதலின்.

    “வாய் என வேண்டாது கூறினார், தீய சொற்கள் பயின்றது எனத் தாம் வேண்டியதன் இழிபு முடித்தற்கு”

    ‘நெறிகடந்தவனுடைய வாய்ச்சொல்’ என்பதால் நெறிகடந்ததால் பண்பற்ற சொற்கள் என்பது பெறப்படும். நல்ல சொல்லுக்கும் தீய சொல்லுக்கும் வாயே கருவியானாலும், இங்கே நெறிகடந்தவனுடைய இழுக்கம் சொல்வடிவில் வாய்வழியாக வருகிறது என்பதாம். ஒழுக்கமுடையார் வாய்ச்சொல், செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் என்னும் இவற்றுக்கும் இறந்தார் வாய்ச்சொல்லிற்கும் உள்ள வேறுபாட்டினை இதனால் புரிந்து கொள்ள இயலும். முன்னவரின் உயர்வு அவர்தம் சொல்லால் வெளிப்படுவதுபோலப் பின்னவரின் இழிவும் அவருடைய சொல்லால் வெளிப்படுகிறது என்பதாம். மூன்றும் வாய்ச்சொற்களே! நடத்தை வேறுபாடு நாவில்!

    உள்ளமா? நெஞ்சமா? மனமா?

    மூளையைச்  சிந்தனைக்கருவியாகக் கொண்டால் உள்ளம், நெஞ்சம், மனம் ஆகியவற்றை உணர்வுக்கருவிகளாகக் கொள்ளலாம். திருவள்ளுவர் இவற்றோடு ‘அகம்’ என்பதையும் இணைத்துக் கொள்கிறார். ‘அகம் நக’ என்பது குறட்பாத் தொடர். ‘நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்’, ‘மனத்தொடு வாய்மை மொழியின்’, ‘உள்ளத்தால் பொய்யாதொழுகின்’ என்பனவெல்லாம் திருக்குறளில் காணக்கிடக்கின்ற சொற்களே! எனினும் இவற்றுள் நுட்பமான வேறுபாடு நிலவுகிறதோ என்னும் ஐயம் உண்டு. அது பற்றிய ஆராய்ச்சி தனி. இம்மூன்று சொற்களிலும் வினைமுதலாகக் கொள்ளப்படுவது உள்ளமே!, உள்ளுவதால் உள்ளம்!. உள்ளம் உள்ளும்! நெஞ்சத்திற்கும் மனத்திற்கும் அத்தகைய வினைப்பயன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. நெஞ்சத்தின் வினை, மனத்தின் வினை ஆகியவற்றை அறியக்கூடவில்லை. இந்நோக்கு திருக்குறளை மட்டும்  அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. ‘வாய்ச்சொல்’ என்னும் தொடரில் ‘வாய்’ என்பது எவ்வாறு வேண்டாத சொல்லாக நின்றதோ அவ்வாறே ‘உள்ளத்தால்’ என்ற சொல்லும் வேண்டாத சொல்லாக நிற்பதைத் தொடர்ந்து காணலாம்.

    நினைவும் செயலும் ஒன்றே

    திருக்குறள் அடையாளப்படுத்தும் பத்து உடைமைகளில் செம்பாகம் அறத்துப்பாலுக்குரியது. அவற்றுள் ஒழுக்கமுடைமை, அன்புடைமை என்னும் இரண்டு உடைமைகளைச் சொற்களுக்கான மூலாதாரமாகக் கருதுகிறார் திருவள்ளுவர். ‘ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்’லும் ‘ஈரம் அளைஇ செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்லும்’ ஆராயப்பட்டன. அருளை உடைமையாகக் கொண்ட அருளாளர்கள் தீயன எண்ணமாட்டார், தீயன சொல்லமாட்டார், தீயன செய்யமாட்டார் என்பது நியதி.

    “உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக்
    கள்ளத்தால் கள்வேம் எனல்” (282)

    என்னும் குறட்பா தீயன எண்ணல் பற்றிக் கூறுகிறது. இல்லறச் சூழல் காரணமாக மனத்தளவில் (ஒழுக்க நெறிகளில்) வழுவும் நேர்வுகள் உண்டு. துறவறத்தில் அது முற்றிலும் கடியப்படுகிறது. எனவே அருளாளர்கள் தீயனவற்றை உள்ளத்தாலும் நினைக்கமாட்டார்கள் என்பதாம். இந்தக் குறட்பாவிற்குக்,

    “குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் பாவம்! ஆதலால் பிறனொருவன் பொருளை அவன் அறியா  வகையால் வஞ்சித்துக் கொள்வோம் என்று கருதற்க”

    என்னும் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    ‘உள்ளத்தால்’ என வேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையோர் உள்ளம் போலாது சிறப்புடைத்து என்பது கருதியது முடித்தற்கு.”

    என விளக்கவுரையில் உள்ளுதலாகிய வினைக்கேயுரிய உள்ளத்தை ‘உள்ளத்தால் உள்ளலும்’ எனக் கூறியது பற்றிய தனது கருத்தினைப் பதிவு செய்கிறார். மற்றையோர் உள்ளம் ஊழ் காரணமாகத் தீயன எண்ணிவிடுமாம். ஆனால் துறந்தாராகிய அருளாளர் வழுக்கியும் தீயன எண்ணமாட்டாராம். அந்தக் கருத்தினைப் புலப்படுத்தவே (அந்தச் சிறப்புடைய) ‘உள்ளத்தால் உள்ளலும் தீது’ எனச் சொல்லுகிறாராம்!

    அருளிருக்கும் இடத்தில் சினத்துக்கு இடமில்லை!

    துறவிகளுக்கு எதிரி வெகுளி. செல்லிடத்தும் தீது. செல்லாவிடத்தும் அது தீது. அது அவர்தம் இனத்தைச் சுடும். தீய பிறக்கும். இத்தகைய எதிர்மறைச் செயல்களை அது செய்யுமென்றால் ‘வெகுளாமை’ இவற்றுக்கு மறுதலையான செயல்களை செய்ய வேண்டுமென்று திருவள்ளுவர் சொல்ல வேண்டுமல்லவா?  சொல்லுகிறார்.

    “உள்ளிய எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி எனின்” (309)

    வெகுளியை ஒரு பொருளாகக் கொள்ளாத துறவி தான் எண்ணியதையெல்லாம் ஒரே நேரத்தில் உடனே பெறுவான் என்பது குறள். இந்தக் குறட்பாவின் கருத்தினைத்,

    “தவம் செய்யும் அவன் தன் மனத்தால் வெகுளியை ஒரு காலும் நினையான் ஆயின் தான் கருதிய பேறெல்லாம் ஒருங்கே பெறும்”.

    என்னும் பொழிப்புரையால் பெறலாம். விளக்கவுரையில் உள்ளுவதே உள்ளத்தின் தொழிலாய் இருக்கவும் உள்ளத்தால் உள்ளான் எனின் எனத் திருவள்ளுவர் வேண்டாது கூறியதற்குக் காரணம் கூறுகிறார்.

    “உள்ளத்தால் என வேண்டாது கூறிய அதனால் அருளுடை உள்ளம் என்பது முடிந்தது.”

    துறவியின் உள்ளம் தவ உள்ளம். தவத்தைச் செய்து முதிர்ச்சியடைந்த உள்ளம். அந்த உள்ளத்தில் வெகுளி தோன்றாது. வெகுளி தோன்றாத, அருளுடைய அந்த உள்ளத்தைப் பிரித்துக்காட்டுகிறாராம் திருவள்ளுவர்.

    பிரிக்க முடியாததும் கலந்தே நிற்பதும்!

    இணைந்திருந்தாலும் நகமும் சதையும் பிரிக்க முடியும். மலரும் மணமும்  கலந்தே நிற்பதால் பிரிக்க இயலாதது. ‘வாசமில்லா மலரிது’ என்பது திரையிசைப்பாடல் தொடர். ‘மலரும் மணமும் போல’ என்பது உலகியல். கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம். ‘பண்’ பாட்டோடு இணைய வேண்டும். ‘பண்ணோடு பிறந்தது இராகம், குலப்பெண்ணோடு பிறந்தது நாணம்’ என்பது வழக்கு. இந்தப் பின்புலத்தில்தான் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் பெண்ணியப் பண்புகளை நோக்க வேண்டியதிருக்கிறது.

    “பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
    பெண்ணே பெருமை யுடைத்து” 907

    என்னும் குறளுக்கு,

    “(நாண் இன்றித்) (தன்) இல்லாளது ஏவல் தொழிலைச் செய்து நிற்கின்றவனது ஆண் தன்மையின் நாணினை உடைய (அவள்) பெண்தன்மையே மேம்பாடு உடைத்து”

    எனப் பொழிப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். ‘நாணம்’ என்பது பெண்ணுக்குரியது ‘நாண்’ என்பது ஆணுக்குரியது. ‘நாணுடைமை’ என்னும் அதிகாரம் சான்றோர்களுக்குரியது. இது தமக்கு வரும் பழியையும் பிறர்க்கு வரும் பழியையும் ஒப்ப மதிப்பது. உண்மையில் இந்த ‘நாண்’ ஆணுக்குப் பெருமை தரும். அந்த நாணம் பெண்ணுக்குப் பெருமை தரும். அக்காலச் சூழலில் புறத்தொழுக்கம் அறியாத பெண் பழிபாவங்களுக்கு அஞ்சும் நிலை இருந்திருக்க வாய்ப்பில்லை.

    கணவன்வழி மனைவியொழுகுதலே இல்லறம். மனைவி சொல் கேட்டுக் கணவன் ஒழுகுதல் இல்லற நெறியன்று. எனின் இல்லறத்தைக் கொண்டு செலுத்தும் ஆற்றலும் பண்பும் ஆணிடம் நிறைந்திருக்க வேண்டும் என்பது பொருள். இது மாறி நிகழுமாயின் இல்லறம் தடம்புரளும். நாணமில்லா ஆண்மையினும் நாணமுடைய பெண்மை போற்றுதற்குரியதாக ஆகிவிடும். இதனைத்தான் மேற்கண்ட குறட்பாவில் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். அவ்வாறு வலியுறுத்தும்போது, ‘நாணுடைப் பெண்’ எனச் சுட்டுகிறார். இதனால் ‘நாணமில்லாத பெண் இருப்பாளோ?’ என்னும் ஐயம் வருதல் இயல்பு. அதனைக் களைகிறார் பரிமேலழகர். எப்படி?

    “நாணுடைப் பெண் என வேண்டாது கூறியது அவள் ஏவல் செய்வானது நாணின்மை முடித்தற்காதலின் அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது”.

    நாணமில்லாத ஆண்தான் பெண்ணேவல் செய்வான். அதனைக் குறிக்க எண்ணுகிறார். வள்ளுவர் ‘யாப்பு காரணமாக ‘ஆண்மையின்’ என வாளா கூறிப் பெண்ணுக்கு உரிய நாணத்தை அவளுக்கு அடையாக்குகிறார். இருப்பவளுக்குரிய பண்பை வேண்டாது எடுத்துமொழியும் வள்ளுவர் இருக்கக்கூடாத பண்பைப் பெற்றிருக்கின்ற நாணமில்லாத ஆணை அடையாளப்படுத்துகிறாராம். ஆணின் நாணமின்மையைச் சுட்டுதற்குப் பெண்ணின் நாணம் பயன்பட்டிருக்கிறது என்பதாம்!

    நிறைவுரை

    ‘நடந்தான்’ என்றாலே ‘கால்’ என வேண்டுவதில்லை. ‘கேட்டான்’ என்றாலே போதும்! செவி எதற்கு? ‘நோக்கினான்’ போதாதா? ‘கண்களால்’ என்பதைச் சொல்ல வேண்டுமா? ‘கொடுத்தான்’ என்றாலே ‘கைகள்’ நினைவுக்கு வராதா?  ஆனால் திருவள்ளுவர் கூறுகிறார். ‘சொல்லுகிற வாய்’, ‘உள்ளுகிற உள்ளம்’, ‘நாணுடைப் பெண்’ என்றெல்லாம் வேண்டாது கூறினாலும் அவற்றை விரும்பித்தான் கூறியிருக்கிறார். எல்லா வாயும் ஒரே வாய் அல்ல. எல்லா உள்ளமும் ஒரே உள்ளம் அல்ல. இவற்றைப் பிரித்துணர்த்த விரும்பிய திருவள்ளுவரின் உட்கிடக்கை அறிந்து உரையெழுதியதுதான் பரிமேலழகர் உரைத்திறன்!

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 11

    பரிமேலழகர் உரைத்திறன் – 11

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                                                         
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘சொல்லும் பொருளும், உணர்த்தும் பொருளும்’

    முன்னுரை

    எழுத்தால் அமைவது சொல். அது பொருளையுணர்த்துவதைத் தனது பணியாகக் கொள்ளும். பொருளுணர்த்துவதும் நேரடியாக உணர்த்துவது,  குறிப்பாக உணர்த்துவது என இருவகைப்படும். அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப் பகுதியில் சொற்கள் வேறுபட்ட நிலையில் பொருளுணர்த்தும் பாங்கினைத் தொல்காப்பியப் பொருளியல் ஆராய்கிறது. ‘பொருளியல்’ என்பதற்குச் சொற்பொருள் விளக்கம் தந்த ஆசிரியர் நச்சினார்க்கினியர், “இவ்வோத்துப் பொருளிலக்கணம் உணர்த்தினமையின் பொருளியலென்னும் பெயர்த்தாயிற்று. ஏனை ஓத்துக்களும் பொருளிலக்கணமன்றே உணர்த்தின. ‘இதற்கிது பெயராயவாறு என்னை?’யெனின், சொல்லதிகாரத்தில் கூறிய சொற்களை மரபியலின் இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத் திரிபில் சொல்லென்பராதலின் அவை ஈண்டு தம் பொருளை வேறுபட்டிசைப்பினும் பொருளாம் எனவும், இப்பொருளாதிகாரத்து முன்னர்க் கூறிய பொருள்களிற் பிறழ்ந்திசைப்பனவும் பொருளாமெனவும் அமைத்துச் சொல்லுணர்த்தும் பொருளும் தொடர்மொழி உணர்த்தும் பொருளும் ஒருங்கே கூறலின் பொருளியல் என்றார்.” என்னும் கருத்து இங்கே சிந்திக்கத்தக்கது. ‘வேறுபட்டிசைப்பினும் பொருளாம்” என்பதுபோலத் திருக்குறளில் சொற்கள் கருத்து விளக்கத்திற்காக வெளிப்படையாகப் பொருளுணர்த்துவதன்றிக் குறிப்பாகப் பொருளுணர்த்தும் பாங்கினைப் பரிமேலழகர் உரைவழி நின்று இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

    சொற்கள் பொருளுணர்த்தும் முறை

    எழுத்துக்களால் ஆகியிருந்தாலும் சொற்கள் பொருளுணர்த்துங்கால் பல நிலைகளைக் காண முடிகிறது. ‘ஆ’ என்பது எழுத்திலும் ஓரெழுத்து ஒரு மொழியிலும் ஆகாரமே. அது அகரத்தின் நீட்சியாகி நெடிலாக அமைந்தாலும் ‘ஆ’ என்பது பெயர்ப் பொருளைச் சுட்டியும் வியப்பிடைச் சொல்லாக உணர்த்தியும் பொருளுணர்த்தி நிற்பதை அறிய முடியும். எனவே எழுத்துக்கள் எழுத்துக்களாகவே இருக்கலாம். ஆனால் சொல் ஒரே முறையில் ஒரு பொருளைத்தான் உணர்த்த வேண்டும் என்பதில்லை.

    • ‘மாணடி சேர்ந்தார்’ (3) என்பது ஒரு திருக்குறள் தொடர். இதற்கு ‘இறைவனுடைய திருவடியைச் சேர்தல்’ என்று பொருள் கொண்டால் பாட்டின் மையக்கருத்துக்கு அது முரணாகும். பரிமேலழகர் தன் புலமையாற்றலால் ‘சேர்தல் – ‘இடைவிடாது நினைத்தல்’ என உரையெழுதுகிறார்.
    • ‘ஓஒ இனிதே’ (1176) என்று, தலைமகள் அழுகின்ற தன் கண்களைத் தனக்குக் காதல் நோயைக் கொடுத்த பாவத்திற்காக ‘நன்றாக அழு’ எனச் சபிப்பதாகத் திருவள்ளுவர் கற்பனை செய்கிறார். ஓகாரம் தம்முள் இணைந்து தேமாவாக நின்றாலும் பரிமேலழகர் ’ஓ’ என்பது மிகுதி பொருட்கண் வந்த குறிப்புச்சொல்’ என்னும் உரையெழுதி அதன் பொருளுணர்த்தும் ஆற்றலை வெளிப்படுத்துவதைக் காணலாம்

    ‘சொல்’ என்றால் நிகழ்த்துதல்

    ‘புதல்வரைப் பெறுதல்’ என்னும் அதிகாரத்தில் ஒரு குறட்பா. அவையத்து முந்தி இருப்பச் செய்கிறான் தந்தை. அத்தந்தைக்கு மகன் என்ன கைம்மாறு செய்ய வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் சுட்டுகிறார். அந்த மகனைப் பார்க்கிறவர்கள் ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ?’ என்று சொல்ல வேண்டுமாம்!.

    “மகன்தந்தைக் காற்றும் உதவி ‘இவன்தந்தை
    என்னோற்றான் கொல்? எனும் சொல்” (70)

    கல்வியுடையன் ஆக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறாவது, தன் அறிவும் ஒழுக்கமும் கண்டார், இவன் தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தான்கொல்லோ? என்று சொல்லும் சொல்லை நிகழ்த்துதல். இதுதான் பாட்டின் பொருள். ஆனால் இந்தப் பொருளைத் தருகிற அளவில் பாட்டில் சொற்கள் அமைந்திருக்கிறதா என்றால் உறுதியாக இல்லை. ‘என்ன தவம் செய்தானோ என்ற சொல்” என்ற அளவிலேயே குறட்பா நிறைவுற்றிருப்பதைக் காணலாம்.

    பரிமேலழகர் உரைத்திறன்

    குறட்பாவில் ‘தந்தைக்கு’ என வாளா இருக்க, பரிமேலழகரோ ‘கல்வியுடையவனாக்கிய தந்தை’ என எழுதுகிறார். ‘கல்வியைத் தந்த’ என்று கூட அவர் எழுதவில்லை. காரணம் கல்வி பிறிதின் கிழமையாகிய பொருளன்று அன்று. உயிருக்கு உடம்புபோன்ற தற்கிழமை. அழியாத உடைமை. அதனால்தான் வெகு நுட்பமாகக் ‘கல்வியுடையவனாக்கிய’ என்று எழுதுகிறார். எழுதிச் ‘சொல்’ என்று வள்ளுவர் கூறுகிறாரே, சொல் தானாக வருமா? சொன்னால்தானே சொல்வரும்? சரி. தானாகச் சொல்வார்களா? அரசியல் வாதியா காசுகொடுத்துச் சொல்லச் சொல்லுதற்கு? சொல் காரியம். எது காரணம்? சொல் வருமாறு ஒழுகுதல் காரணம். காரணமின்றிக் காரியம் இல்லை. குறட்பாவில் காரியம் மட்டுமே உள்ளது. பரிமேலழகர் காரணத்தைக் கண்டறிந்து கூறுகிறார். எப்படி?

    ‘சொல்’ நிகழ்த்துதலாகிய தன் (சொல்லுக்கான) காரணம் தோன்ற நின்றது. நிகழ்த்துதல் – அங்ஙனம் தோன்ற ஒழுகல்”

    என்று எழுதிக் காட்டுகிறார். பொழிப்புரையில் ‘தன் அறிவும் ஒழுக்கமும் கண்டார்’ என விளக்கமாக எழுதித், தந்தையளித்த கல்வியின் பயன் அவ்விரண்டுமே என்பதனை நுட்பமாகக் காட்டுகிறார். இந்த விளக்கவுரையில் ‘சொல்’ என்பது சான்றோர் புகழும் சொல்லாக இருந்தாலும் அச்சொல்லுக்குப் பின்னாலே உள்ள மகனின் நடத்தையாகிய காரணத்தைத் தோற்றுவிக்கிறது என்பது பரிமேலழகர் கருத்து. எனவே ‘சொல்’ என்பது சான்றோர் சொல்வது. ஒழுகுதலாகிய காரணம் என்பது சொல் உணர்த்துவது!

    கொள்ளுவது நன்றா? கொடுப்பது தீதா?

    ‘ஏற்பது இகழ்ச்சி’ என்பது ஆத்திசூடி. ‘இலன் என்னும் எவ்வம்’ என்பது திருக்குறள். ஆனால் இவற்றுக்கு முரண்படுவதுபோல் திருக்குறள் ஒன்று அமைந்திருக்கிறது.

    “நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று”  (222)

    என்னும் குறட்பா “ஏற்றல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது ஈந்தார்க்கு அவ்வுலகம் இல்லையென்பார் உளராயினும் ஈதலே நன்று” என்னும் பொருள்பட அமைந்திருக்கிறது. அதிகாரம் ‘ஈகை’ யாதலின் அதற்கு மறுதலையான இரத்தலாகிய கொளலைப் பொய்யாக உயர்த்திச் சொல்லவேண்டிய நிலை ஆசிரியருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பரிமேலழகர் புரிந்து கொள்கிறார். கொண்டு, ஏற்பது வீட்டு நெறிக்கு வழிகாட்டும் என்பாரும் இலர். ஈதல் வீடுபேற்றிற்குத் தடையாகும் என்பாரும் இலர் என்னும் தெளிவை முன்னிறுத்த விழைகிறார். ஆனால் குறட்பா அமைப்பு அவ்வாறு பொருள் கொள்ளுமாறு இல்லையே என எண்ணுகிறார். எண்ணி, ‘எனினும்’ என இருவழியும் வந்த சொல்லை உற்று நோக்கி அந்த உம்மையை எதிர்மறையாக்கி விளக்கமளிக்கிறார். எப்படி? இப்படி!

    “எனினும் என்பது இருவழியும் அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது”

    இந்த விளக்கத்தில் ‘எனினும்’ என்னும் சொல் ‘இல்லையென்று சொன்னாலும்’ என்னும் சொற்பொருளைக் கொண்டிருந்தாலும் ‘இன்மை’ என்னும் பொருளையே உணர்த்துகிறது என்பதைப் பரிமேலழகர் உரையால் புரிந்து கொள்ள இயலும்.

    ‘சினம்’ என்னும் நெருப்பு

    ‘ஆறுவது சினம்’ என்பது முதுமொழி!. ‘கோபத்தை அடக்கா வேந்தன்’ என்பது விவேக சிந்தாமணி! இத்தகைய மொழிகள் சினம் மனிதன் கைக்கொள்ள வேண்டாத பொருள் என்பதை உணர்த்துகின்றன. திருவள்ளுவர் வெகுள்தல் என்னும் இந்தப் பண்பை எதிர்மறையால் ‘வெகுளாமை’ என அதிகாரப் பகுப்புச் செய்வார். இந்த எதிர்மறையே அப்பண்பு கூடாத பண்பு என்பதைக் குறிப்பாய்ப் புலப்படுத்தும். இந்த அதிகாரத்தில் உள்ளதொரு குறட்பா,

    “சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப் புணையைச் சுடும்” (306)

    என்னுமாறு அமைந்திருக்கிறது. இந்தக் குறட்பாவிற்குச் சினம் என்னும் நெருப்பு தனக்கு இடமானவரையேயன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புணையைச் சுடும்’ எனப் பொழிப்புரை கண்ட பரிமேலழகர்,

    ‘சினமென்னும் நெருப்பு’ என்ற விதப்பு, ‘உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே! இந்நெருப்பு தான் சேராத இடத்தையும் சுடும் என்னும் வேற்றுமை தோன்ற நின்றது”

    என்று விளக்கவுரையில் எழுதுகிறார். இயல்பான நெருப்புக்கும் சினமாகிய நெருப்புக்கும் என்ன வேறுபாடு என்றால் பற்றுகிற இடத்தினை மட்டும் எரிப்பது இயல்பான நெருப்பு! தன்னைக் கொண்டவனை மட்டுமன்றி அவனுக்கு நல்வழி காட்டுகின்ற இனமாகிய நண்பர்களையும் எரித்தழிப்பது சினம் என்னும் நெருப்பு.  ‘சினநெருப்பு’ என்னாமல் ‘சினம் என்னும் நெருப்பு’ என்னும் விரியுருவகத்தால் (முகத்தாமரை – உருவகம். ‘முகம் என்னும் தாமரை’ – விரியுருவகம்) கூறியது விதப்பு. இந்த விதப்பினைப் பயன்படுத்திப் பரிமேலழகர் தனது உரையாற்றலைக் காட்டுகிறார். சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்பது சொற்பொருள்  இயல்பான நெருப்புக்கும் சினமென்னும் நெருப்புக்கும் உள்ள வேறுபாட்டை உணரச்செய்வது சொல் உணர்த்தும் பொருள்!.

    அறிவுச் செல்வமும் அறியாமை வறட்சியும்

    செல்வம் பலவகைப்படினும் பெரும்பாலும் பொருட் செல்வத்தையே அது குறிப்பதாகக் கொள்வது ஒரு நடப்பியல் உண்மை. ‘அவன் செல்வன்’ என்றால் அவன் வாங்கிய பட்டங்கள் யாருடைய நினைவுக்கும் வராது. அதுபோல அவன் ‘வறியன்’ என்றால் அவனுடைய வயிறும் பசியுமே நினைவுக்கு வருமேயன்றி அவனுடைய அறியாமையோ அதனால் பெற்ற அவமானமோ நினைவுக்கு வராது. ஆனால் பரிமேலழகருக்கு வரும்!

    “இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
    சிலர் பலர் நோலாதவர்” (270)

    என்னும் குறட்பா ‘தவம்’ என்னும் அதிகாரத்து இறுதியாக அமைந்திருப்பது. இந்தக் குறட்பா இவ்வுலகில் செல்வம் உடையார் சிலராகவும் வறுமையால் துன்புறுவோர் பலராகவும் இருப்பதற்குக் காரணம் தவம் செய்வார் சிலராகவும் அது செய்யாதார் பலராகவும் இருப்பதே காரணம் என்ற கருத்தினை முன்னெடுக்கிறது.  இதனை,

    “உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், தவம் செய்வார் சிலராக அது செய்யார் பலராதல்”

    என்னும் பரிமேலழகர் பொழிப்புரையாலும் புரிந்து கொள்ள இயலும். ‘இலர்’ ‘உளர்’ என்பவற்றிற்கான செயப்படுபொருட்கள் குறட்பாவில் இல்லை. பரிமேலழகர் அவற்றைச் ‘செல்வம்’ எனக் கருத்தாகக் கொண்டு உரையெழுதுகிறார். அடுத்துச் ‘சிலர் நோற்பார்’ என்பதைக் கொண்டு அதற்கியைய (குறட்பாவில் குறிக்கப்படாத) செல்வர் சிலராகவும் என உரையெழுதுகிறார். தொடர்ந்து செல்வத்தை அறிவோடு பொருத்தி ‘நுண்ணுணர்வு உடைமையே செல்வம் நுண்ணுணர்வு இல்லாமை வறுமை’ என்னும் கூடுதல் விளக்கத்தையும் தருகிறார். இந்த விளக்கத்தில் அவர் வளத்தையும் வறுமையையும் பொருட்செல்வத்தோடு மட்டும் பொருத்திப் பார்க்காமல் அறிவின் உண்மை இன்மைகளோடு பொருத்திப் பார்க்கிறார். இவ்வாறு அவர் பார்ப்பதற்குத் துணை நின்றது அவருடைய பன்னூல் புலமை.

    “செல்வம் நல்குரவு என்பன அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன. என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்  (நாலடியார் 251)”

    பரிமேலழகர் உரையால் ‘வளப்பம்’ என்பது பொருளை மட்டும் குறிக்காது. அறிவுடைமையையும் குறிக்கும் ‘வறுமை’ என்பது பொருளில்லாமையை மட்டும் குறிக்காது. அறிவின்மையையும் குறிக்கும் என்பது புலனாகிறதல்லவா? செல்வம் பொருளைக் குறிப்பது சொற்பொருள். அது அறிவுடைமையும் குறிப்பது உணர்த்தும் பொருள். ‘வறுமை’ பொருளின்மையைக் குறிப்பது சொற்பொருள். அது அறிவின்மையைக் குறிப்பது உணர்த்தும் பொருள். இவ்விருவகைப் பொருளையும் கண்டறிந்து கூறும் பரிமேலழகரின் தொடர் “செல்வம் நல்குரவு என்பன அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன” என்பதாகும்!.

    உண்மை பிறத்தல்! இன்மை இறத்தல்!

    “நேற்றிருந்தவர்கள் இன்றில்லை” என்பது வழக்கு. இந்த வழக்கில் நிலைமையாகிய உணர்வு வெளிப்படுவது என்பது உண்மையே. ஆனால் என்றோ தோன்றியது நேற்றுவரை இருந்திருக்கிறதே என்ற உண்மையும் இருக்கிறது என்பதைப் பலரும் அறியார். நிலையாமை என்பது தோன்றிய கணமே மறைவது. அதாவது ‘தோன்றுதல் – மறைதல்’ என்பதே நிலையாமையேயன்றித் தோன்றுதல்; இருத்தல் – மறைதல் என்பது நிலையாமை ஆகாது. ‘கணந்தோறும் பிறந்திறப்பது’ என்பதும் அது. பிறந்த நொடியே இறப்பது. எனவே நேற்று (வரை) இருந்தவர்கள் இன்றில்லை என்பது நிலையாமையின் முழுப்பொருண்மையாகாது. அதனால்,

    “நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்
    பெருமை யுடைத்திவ் வுலகு” (336)

    என்னும் குறட்பாவிற்கு உரையெழுதிய பரிமேலழகர் அவ்வழக்கினையும் உட்கொண்டு,

    “ஒருவன் நெருநல் உளனாயினான் அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து இவ்வுலகு”

    என்று பொழிப்புரை எழுதுகிறார். இதில் ‘நேற்று’ என்பதை வழக்கிலிருந்து எடுத்துக் கொள்கிறார். ‘இருந்தான்’ என்பதை மாற்றி ‘உளன் ஆயினான்’ அதாவது ‘தோன்றினான்’ என்னும் தன் கருத்தினை இணைத்துக் கொண்டு உரையெழுதுவதைக் காணலாம். உலகியல் வழக்கு ‘நேற்றுவரை இருந்தான்’ என இருக்க, பரிமேலழகர் ‘நேற்று தோன்றியவன்’ என விளக்கமளிக்கிறார் ‘உளன்’ என்பதற்கு ‘உண்மை’ (உளதாம் தன்மை) என்றும், ‘இலன்’ என்பதற்கு ‘இல்லை’ (இலதாம் தன்மை) என்றும் உரை காண்கிறார். கண்டு “உளன் ஆயினான் இலனாயினான்” என நூலாசிரியரின் நுண்ணியம் கண்டு உரையெழுதுகிறார்.

    “ஈண்டு உண்மை பிறத்தலையும் இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன”

    பரிமேலழகர் உரையால் நேற்று பிறந்தவன் (உளன் ஆயினான்) இன்று இல்லையாயினான் (இலனாயினான்) என்னும் நிலையாமையின் ஆழம் புரிகிறது. பாட்டில் இதற்கான சொல் இல்லையாயினும், ‘உளன்’ ‘இலன்’ என்னும் இரண்டு சொற்களோடு ஆக்கச் சொல்லை வருவித்துக் கொண்டு ‘பிறத்தல் மற்றும் இறத்தல்’ என உணர்த்துகிறார். உண்மை என்பது ‘உளது’ என்னும் பொருளைத் தருவது. அது சொற்பொருள். அது ‘பிறப்பு’ என்னும் பொருளைத் தருவது உணர்த்தும் பொருள். இன்மை என்பது ‘இலது’ என்னும் பொருளைத் தருவது. அது இறத்தல் என்னும் பொருளைத் தருவது உணர்த்தும் பொருள்!

    பிரிவதற்காகவே பிறந்த உறவு

    ‘சேர்ந்தே இருப்பது புலமையும் வறுமையும்’ என்னும் திரைப்பட உரையாடல் பலருக்கும் நினைவிருக்கலாம். சில அரசியல் கட்சியினர் கலைவதற்காகவே கூடுவதையும் அறிந்திருக்கலாம். ‘பிரிவதற்காகவே வந்த உறவு’ பற்றித் திருவள்ளுவர் சிந்தித்திருக்கிறார். உயிர்வழி நீங்கிய வழிக் கிடக்கும் உடம்பு பற்றிப் ( பரிமேலழகர் உரை – 340) பேசுகிறார். வழக்கில் பயன்படுத்தப்படும் பல தொடர்கள் எதிர்மறைப் பொருளைத் தருவதைப் பலரும் உணர்வதில்லை. சான்றாக அன்பால் பிணைந்தவர்களை வாழ்த்துங்கால் ‘உடம்பும் உயிரும் போல’, ‘மலரும் மணமும் போல’, ‘நகமும் சதையும் போல’ என்றெல்லாம் சொல்வார்கள்.  இவர்கள் உடம்போடு சேர்ந்து பிறக்கும் உயிர் இறுதிவரை உடம்பினைவிட்டுப் பிரியாது என்னும் மயக்கத்தில் கூறுவதை ஓர்ந்திலர். இந்த மயக்கம் குறள் கண்ட தலைமக்களுக்கும் இருந்திருக்கிறது.

    “உடம்பொடு உயிரிடை என்ன? மற்று அன்ன
    மடந்தையொடு எம்மிடை நட்பு” (1122)

    என்னும் தலைவன் மொழிகேட்டு நம்பிய தலைவியைத் திருக்குறள் காட்டுகிறது. உண்மையில் இது பொருந்துமா என்பதைக்,

    “குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
    உடம்போடு உயிரிடை நட்பு” (338)

    என்னும் குறட்பாவில் திருவள்ளுவர் ஆராய்கிறார். அக்குறட்பாவை ஆராய்ந்த பரிமேலழகர்,

    “முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்து புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு”

    என்னும் பொழிப்புரையைத் தருகிறார். இந்தப் பொழிப்புரையில் உடம்பை முட்டையாகவும் உயிரைப் பறவையாகவும் உருவகம் செய்த திருக்குறளின் திறனைப் பாராட்டுகிறார். ‘ஒரு குறிப்பிட்ட காலம் வரை முட்டையும் பறவையும் ஒன்றாக இருந்ததைச் சுட்டிப் புள்ளுப் பருவம் வந்துழித் தனித்தறியாத முட்டையைத் தனித்துவிட்டுப் புள் பறந்துவிடும் என்னும் நுண்ணியம் காட்டுகிறார். ‘உடம்போடு உயிர்’ என்பதைப் ‘பிரியாத நிலை’ என்று கருதுவார்க்கு (உவமம் கொண்டு) அதன் ‘பிரிநிலையை’ விளக்குகிறார் பரிமேலழகர். ‘நட்பு’ என உடம்புக்கும் உயிருக்குமான உறவைச் சுட்டும் திருவள்ளுவர் அதற்குக் காட்டிய உவமம் முட்டையும் புள்ளுமாகும் என்பதை நோக்கி உரையெழுதுகிறார். பிரிந்து போகக் கூடியதை உவமமாகக் காட்டியதால் ‘நட்பு’ என்பதும் பிரிந்து போகக் கூடியதே என்பதைக் குறிப்பாகக் காட்டியது என்று விளக்கமளிக்கிறார்.

    “‘நட்பு’ என்றது குறிப்பு மொழியால் ஈண்டு நட்பின்றிப் போதல் உணர்த்தி நின்றது”

    இங்கே குறிப்பு மொழி என்றால் என்ன? ‘நட்புத்தான்! அது எது போல என்றால் முட்டையும் புள்ளையும் போல’ என்றாம்!. “பழகுதற்கு இனியவர், ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தணியாத நட்பை என்மீது காட்டியவர், கருத்து வேறுபாடுகள் நட்பு முரிவதற்கான காரணங்கள் ஆகா” என்னும் இன்றைய நடப்பியல் சமுதாயத்துப் பசப்பு மொழிகளையெல்லாம் இந்தப் பாட்டிற்குப் பரிமேலழகர் தரும் அரிய விளக்கவுரை தவிடுபொடியாக்கிவிடுகிறது. அவர் எழுதுகிறார்.

    “சேதனமாய் அருவாய் நித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அநித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின், வினைவயத்தால் கூடியதல்லது நட்பில என்பது அறிக”

    எனச் செவியில் அறைவதைக் காணலாம். உயிருணர்ச்சியாகிய நட்பு உள்ளங்களின் இடப்பெயர்ச்சியால் தோன்றுவது என்பது இதனால் புலனாம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் பிரியாதது போலவும் உண்மையில் பிரியக்கூடியதே என்பதையும் ‘நட்பு’ என்னும் சொல் சுட்டுகிறதாம். ‘நட்பு’ என்பது உணர்ச்சியால் பிரியாத உறவு என்பது சொற்பொருள். அது பிரியக்கூடிய உறவே என்பது சொல் உணர்த்தும் பொருள்!.

    நிறைவுரை

    மூலநூலாசிரியனின் உள்ளங் காண முயல்வதும் தாம் கண்டவற்றைச் சான்றுகளோடு முன்மொழிவதுமே உரையாசிரியர் கடன். அந்த வகையில் திருக்குறள் உரையாசிரியர்களில் முன்னிற்பவர் பரிமேலழகர். நூலைப்  பன்முறை நோக்கி ஆசிரியரின் உள்ளமறிந்து அதற்கேற்ப உரைகாண்பதற்குச் சொற்களையும் அவை பொருளுணர்த்தும் முறைகளையும் நன்கு உள்வாங்கி உரையெழுதுகிறார். சொல்லுக்குரிய நேரடிப் பொருளால் குறட்பொருள் சிறக்காது என்னும் நிலையில் அதனின்றும் விலகிச், சொல் உணர்த்தும் பொருளைக் கண்டறிந்து காட்டும் அவர் உரைத்திறன் புலப்படக் கூடும்.

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 9

    பரிமேலழகர் உரைத்திறன் – 9

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    அலங்காரத்திற்காக அல்ல அடைச்சொற்கள்!

    முன்னுரை

    ஒவ்வொரு குறட்பாவையும் எழுத்து, அசை, சீர், அடி என ஆழ்ந்து நோக்கி உரையெழுதுவது பரிமேலழகருக்கு இயல்பு. குறட்பாவின் கிடக்கை நிலைக்கேற்ப ஆற்றொழுக்காக நிரல்பட உரைகாண்பது அவர்க்கு இயல்பன்று. குறட்பாவை முற்றாக நோக்கி, முன்பின்னாக உள்ள அதிகாரக் கருத்துக்களைக் கருத்திற்கொண்டு, மனத்துட் பதிவு செய்திருக்கும் நூற்கருத்துக்கள் முழுவதையும் ஒவ்வொரு முறையும் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தி உரையெழுதுவதே அவர் கையாண்ட உரைநெறி. தனக்குத்தானே முரண்படும் ஓரிடம் கூட அவர் உரையில் இல்லாமல் போனதற்குக் காரணம் இதுதான். அந்த வகையில் உவமத்திற்கு வந்த அடைச்சொற்களைப் பொருளுக்கும் பொருளுக்கு வந்த அடைச்சொற்களை உவமத்திற்கும் பொருத்திக்காட்டும் வியத்தகு ஆற்றலை வெளிப்படுத்தும் திருக்குறள் ஒன்று இக்கட்டுரையில் திறனறியும் குறட்பாவாக இடம்பெறுகிறது. குறட்பாவின் கருத்து முழுமையாகப் புரிந்து கொள்ளப்படல் வேண்டும் என்னும் பரிமேலழகரின் பேரார்வமே இவ்வாறு பொருத்தி உரைகாண்பதற்கான அடிப்படைக் காரணமாகும்.

    முற்றும் நோக்கல் என்றால் என்ன?

    ‘உற்று நோக்கல்’ தெரியும் ‘முற்று நோக்கல்’ தெரியுமா? உற்று நோக்கினாலே அது முற்று நோக்கலில் முடியும்.  சான்றாகப்,

    “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவனடி சேரா தார்” (10)

    என்பது கடவுள் வாழ்த்தாகிய தலையதிகாரத்தின் இறுதிக் குறட்பா. இந்தக் குறட்பாவை மேம்போக்காக நோக்கி உரைகண்டால் ‘இறைவன் திருவடியைச் சேராதவர் பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க மாட்டார்’ என்று மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அது பாட்டின் மையக்கருத்தாக இருக்கலாம்., அப்பாட்டின் முழுமையான கருத்தாகக் கொள்ள முடியாது. காரணம் என்ன? மையக்கருத்து முழமையான கருத்தாகாதா? ஆகாது! எப்படி? பாட்டில் ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ என்று செயப்படுபொருளும் வினைமுற்றும் இருக்கின்றனவே தவிர, ‘யார்?’ என்னும் எழுவாய் இருக்கிறதா? இல்லையே!. அடுத்த நிலையில் ‘இறைவனடி சேராதார் நீந்தார்’ என்று எழுவாயும் வினைமுற்றும் இருக்கின்றனவே தவிர எதனை நீந்தார் என்னும் செயப்படுபொருள் இருக்கிறதா? இல்லையே! எனவே எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் இருந்து பொருளுணர்த்த வேண்டிய நிலையில் உள்ள இரண்டு தொடர்களுமே குறட்பாவின் கட்டமைப்பில் குறையுடையனவே!. ‘குறள் வெண்பா’ என்னும் குறுகிய யாப்பே இதற்குக் காரணம். செறிவை முன்னிறுத்திச் செய்யுள் செய்கிறபோது இது தவிர்க்க இயலாதது. உண்மையில் இது ஓர் உத்தியெனினும் அதனைக் கண்டறிந்து எல்லாருக்கும் புரியும் வகையில் வெளிக்கொணர வேண்டியது உரையாசிரியர் கடமை. அந்தக் கடமையைப் பரிமேலழகர் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

    ‘இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்; அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்’

    என்னும் இப்பாட்டிற்கான பொழிப்பில் பரிமேலழகர் உரையின் உச்சம் தொடுவதைக் காணலாம். குறட்கருக்கத்தை விட இவரின் உரைச்சுருக்கம் நுட்பமானது. ஆனால் குறளில் பெறமுடியாத விளக்கத்தையும் தெளிவையும் இவர் உரையில் காண முடிகிறது. குறட்பாவையும் அதன் பொருளையும் நன்கு உள்வாங்கிக் கொண்டு எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகியனவற்றை நிரல்படப் பெய்து தெளிவான முழுமையான உரையை எழுதிக்காட்டுவதைக் காணலாம். மேலும் புணையை ‘அதனை’ என்றும் பிறவிப்பெருங்கடலை ‘அதனுள்’ என்றும் சுட்டால் உணர்த்துவார். ‘நீந்தார்’ என்னும் எதிர்மறைக்கு  ‘அழுந்துவர்’ என்னும் மற்றொரு உடன்பாட்டை எதிர்மறையாக்குவார். இந்தக் குறட்பாவும் உரைவிளக்கமும் இங்கே சுட்டப்பட்டதற்குத் திருக்குறள் தொடரமைப்பையும் உவம மற்றும் பொருள் அடைகளையும் நன்கு நோக்கி உரையெழுதும் அவருடைய உரைத்திறனைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும் என்பதற்கேயாம்.

    திறனறியும் குறட்பாவும் பொழிப்புரையும்

    திருக்குறளில் பன்னிரண்டாவதாக அமைந்துள்ள ‘நடுவுநிலைமை’ என்னும் அதிகாரத்துள் எட்டாவது குறட்பாவாக இடம்பெற்றிருப்பது,

    “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
    கோடாமை சான்றோர்க்கு அணி” (118)

    என்னும் குறட்பாவாகும். இதற்குச்,

    1. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் – முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம்போல
    1. அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி – இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம்.

    அதிகாரக் கருத்துப் பகுப்பு

    பொழிப்புரையின் நுட்பம் காண்பதற்கு முன்பாக இவ்வதிகாரத்தின் பொருட் பாகுபாடுகளை அறிந்து கொள்வது இந்தக் குறட்பாவின் முழுமையான கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிந்த நெறி புலப்பட உதவக் கூடும்.  திருக்குறள் அதிகாரக் கருத்துக்களைப் பாகுபடுத்துவது பற்றிப் பல கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி ‘நடுவுநிலைமை’ என்னும் இவ்வதிகாரப் பொருண்மை பின்வருமாறு பரிமேலழகரால் வகுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது ‘நடுவுநிலைமை’ என்னும் அதிகாரத்தில் நடுவுநிலைமை என்னும் பண்பைத் திருவள்ளுவர் பொதுவாக ஆராயவில்லை என்பதாம்.

    1. நடுநிலைமையது சிறப்பு (1)
    2. நடுவுநிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தல் (2)
    3. ஏனைச் செல்வம் தீமை பயத்தல் (3)
    4. தக்கார் தகவிலர் அறியும் ஆறு (4)
    5. கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா (5)
    6. கோடுதல் கேட்டிற்கு ஏதுவாம் (6)
    7. கோடாதவன் வாழ்வு கேடன்று (7)
    8. அவையத்தார்க்கு வேண்டிய நடுவுநிலைமை (8-9)
    9. வணிகத்தார்க்கு வேண்டிய நடுவுநிலைமை (10)

    இப்பகுப்பாய்வில் இறுதியில் உள்ள அவையத்தார்க்கும் வணிகர்க்குமான நடுவுநிலைமைப் பண்பினைப் பரிமேலழகர் தொகுத்துக் கூறுகிறார். கட்டுரையாளர் பொருள் தெளிவு கருதி வகுத்துரைக்கிறார்.

    பொழிப்புரை நுட்பம்

    • ‘சமன்செய்து’ என்றே குறளிருக்க, தன் கண் வைக்கப்படும் பாரத்தைத் தான் அளக்குமுன் தன்னைச் சரிசெய்து கொள்ள வேண்டும்’ என்னும் நுட்பத்தை உணர்ந்த பரிமேலழகர் ‘முன்னே’ என்னும் சொல்லை வருவித்துக் கொள்கிறார். கொண்டு ‘முன்னே ‘தான் சமனாக நின்று’ என உரையெழுதுகிறார்.
    • தன்னைச் சரிசெய்து கொண்ட பின்பே தன் பணியைச் செம்மையாகச் செய்ய முடியும் என்பதைப் ‘பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும்’ என எழுதுகிறார்.
    • ‘சீர்தூக்கும்’ என்பதற்கு ‘வரையறுக்கும்’ என உரை காண்பதை நோக்க வேண்டும். ‘சீர்’ என்பதற்குச் ‘சிறப்பு’ என்பதுதான் பொருள். ‘சீர் கொண்ட’ என்பது தமிழ்விடுதூது. சீரிடம், சீருடைச் ‘செல்வர்’, சீர்மை என்பன திருக்குறள் கண்ட சீர்கள். ‘சீர் அபிராமி’ என்பது பட்டர் வாக்கு ‘சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்’ என்பது வள்ளலார் வாக்கு. ‘சீரார் பெருந்துறை’ என்பது திருவாசகம். ‘சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர் காள்’ என்பது திருப்பாவை.
    • ‘சமனாக அமைந்து’ என்னும் உவம அடைக்கேற்ப அமைந்து என்பதற்கு ‘இலக்கணங்களால் அமைந்து’ என்னும் பொளுளடையை வருவித்துக் கொள்கிறார்.

    விளக்கவுரை

    “உவமையடையாகிய சமன்செய்தலும் சீர்தூக்கலும் பொருட்கண்ணும்,  பொருளடையாகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர் தூக்கலாவது தொடை விடைகளால் உள்ளவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும் ஒருபால் கோடாமையாவது  அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க” என்று விளக்கவுரையில் பரிமேலழகர் பொருளுக்கே முதன்மை தந்திருப்பதைக் காணலாம்.

    விளக்கவுரை நுட்பம்

    • ‘துலாக்கோல்’ உவமம். ‘சான்றோர்’ பொருள். முன்னது பாரத்தை வரையறுக்கிறது. பின்னவர் எத்திறத்தும் நடுவுநிலைமை மாறாமல் செயல்படுபவர் எனினும் குறட்பாவில் உவமத்திற்குச் சொல்லப்பட்ட சமன் செய்து சீரதூக்கல் இரண்டு அடைகளையும் பொருளுக்கு ஆக்கவில்லை. பொருளுக்குரைத்த அமைதலையும் ஒருபால் கோடாமையையும் உவமத்திற்கு ஆக்கவில்லை. இதனைப் பரிமேலழகர் நோக்கி உரையெழுதுகிறார்.
    • சமன் செய்து, அமைந்து, ஒருபால் கோடாது சீர் தூக்கல் என்பது உவமத்திற்கும் பொருந்தும் பொருளுக்கும் பொருந்தும். அதாவது உவமமாகிய துலாக்கோலிற்கும் பொருளாகிய சான்றோருக்கும் இந்த நான்கு பண்புகளும் இருக்க வேண்டும் என்று பரிமேலழகர் கருதுகிறார். கருதி, “உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீரதூக்கலும் பொருட்கண்ணும் பொருளடையாகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி” உரையெழுதுகிறார்.
    • இந்த நான்கு பண்புகளையும் உவமத்திற்கு ஒருமுறையும் பொருளுக்கு ஒரு முறையுமாக அடையாக்குவது குறுகிய யாப்பிலக்கணத்தில் கூடாமையை அவர் புரிந்து கொள்கிறார். கொண்டு புறக்கட்டுமானத்தின் போக்கறிந்து அகக்கட்டுமானத்தின் நுண்ணியம் காண்கிறார்.
    • பொருளுக்கான அடையை உவமத்திற்கு ஆக்கியுரைத்த பரிமேலழகர் (அதிகாரப் பொருள் நுட்பம் கருதி) உவம அடையைப் பொருளுக்குப் பொருத்திய பாங்கு பற்றி மட்டுமே உரையெழுதுகிறார். அதாவது துலாக்கோல் பாரத்தை அளக்கும் பண்பு பற்றிப் பரிமேலழகர் விரித்துரைக்காது சான்றோர் நடுவுநிலைமை தவறாது செயல்படுவதையே விரித்துரைப்பதைக் காணமுடிகிறது. உவம விளக்கத்தைக் கைவிட்டுப் பொருள் விளக்கத்தை மட்டும் பரிமேலழகர் தந்திருப்பதற்கு என்ன காரணம்? இவ்வதிகாரத்தின் இறுதிப்பாட்டில் இந்த உவம ஆற்றலைத் திருவள்ளுவர் வெளிப்படுத்துவதைப் பரிமேலழகர் அறிந்து கொள்கிறார். துலாக்கோலின் பணி அளவில் மாறுபடாமை என்பதைப் பிறவும் தமபோல் செயின் என்னும் தொடர் குறிப்பதையும், அத்தொடருக்குக் “கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல் என்னும் (பட்டினப்பாலை) பரிமேலழகர் தரும் விளக்கத்தையும் அறிந்து கொண்டால் திறனறியும் குறட்பாவில் உவம விளக்கம் விடுபட்டதற்கான காரணத்தை அறியலாம்.
    • நடுவுநிலைமை என்பது மனம், மொழி, செயல் என்னும் மூன்றனுக்கும் உரியதாதலின் செயலாகிய வணிகத்தைப் பிரித்தோதி, 118, 119 ஆகிய குறட்பாக்களில் சான்றோர் திறம் கூறப்படுவதைப் பரிமேலழகரே தெளிவுபடுத்திக் காட்டுகிறார். இதனை அதிகாரக் கருத்துப் பகுப்பில் மூன்று பாடல்களையும் ஒருங்கிணைத்தாலும் முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின, ஏனையது வணிகரை நோக்கியது’ என்னும் அவருரையால் அறிய இயலும்.
    • இந்த அதிகாரத்தின் இறுதிப்பகுதி வணிகர்களை நோக்கியது என்பது ‘வாணிகம் செய்வார்க்கு’ என்னும் குறட்பா தொடராலும் பரிமேலழகர் எழுதிக்காட்டும் உரையாலும் புலப்படும். ஆனால் திறனறியும் குறட்பாவில் ‘வணிகர்க்கு அணி’ என்னாது ‘சான்றோர்க்கு அணி’ என்பது குறித்திருப்பது காண்க. சங்கப் புலவர்களைச் ‘சங்கச் சான்றோர்’ என்பது போன்றது இது. ‘சான்றோர்’ என்னும் இச்சொல் பயன்பாடுதான் பரிமேலழகரின் சிந்தனையைத் தூண்டி இறுதிக்கும் முன்னதாக உள்ள இரண்டு பாடல்களையும் (118,119) ‘அவையத்து நோக்கிச் சொல்லப்பட்டன’ என்னும் உரையெழுத காரணமாய் அமைந்தன எனலாம்.

    இன்னாத கனிகளும் இனிய காய்களும்

    திறனறியும் குறட்பாவில் உவம அடைகளையும் பொருளடைகளையும் இருவழியும் புணர்த்தி, உரையெழுதிய பரிமேலழகர் இது போன்ற நெறியை வாய்ப்புக் கிடைக்கிறபொழுதெல்லாம் பின்பற்றியிருக்கிறார் என்பதற்குச் சான்றுகள் பல உள. இனிய சொற்கள் இருக்க, இன்னாத சொற்களைப் பேசுவது  கனியிருக்குங்கால் காயை உண்ணுவதுபோல என்னும் கருத்துப்பட திருக்குறள் ஒன்றிருக்கிறது.

    “இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” 100

    இந்தப் பாட்டைக் கிடக்கைநிலையில் பொருள் கண்டால் மேலே கண்டவாறுதான் அமையும். அமையவே எல்லாக் கனிகளும் இனிமை தருமா? எல்லாக் காய்களும் கேடு தருமா? என்னும் வினா எழும். பரிமேலழகர் உரையெழுதுங்கால் பின்பற்றிய நெறிகளில் அது குறள் வெண்பா என்னும் குறுகிய யாப்பில் எழுதப்பட்டது என்பதை நினைவிற்கொள்வது இன்றியமையாத ஒன்று. வேறு வகையாகச் சொன்னால் குறுகத் தறித்த குறள் என்பதை மறந்து அவர் உரை அமைவதில்லை. குறுகத் தறித்தவைகளை விரிவாக வெளிக்கொணர்ந்ததில் அவருடைய உரைக்குப் பெரும்பங்குண்டு. அந்த வகையில்  இந்தப் பாடடு ‘இனிய உளவாக இன்னாத கூறல் இனிய கனியிருப்ப இன்னாத காய்கவர்ந்தற்று’ என இருத்தல் வேண்டும். யாப்புநிலை கருதியே ஆசிரியர் சுருங்க உரைத்தார் எனக் கருதிப் பின்வருமாறு உரையெழுதுகிறார்.

    “பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக் கண்ணும் சென்றன.  இனிய கனிகள் என்றது ஔவை உண்ட நெல்லிக்கனிபோல் அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்பது காஞ்சிரங்காய் போல  நஞ்சாவனவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம்”

    பொருளின்கண் சென்ற அடைகளைப் பரிமேலழகர் இவ்வாறு உவமத்திற்குப் புணர்க்காமல் உரையெழுதியிருந்தால் “கனிகள் எல்லாம் இனிமை தரும், காயெல்லாம் கேடு தரும்” என்னும் கருத்துப் பிழையோடு, ‘இனிய கனிகளே நன்மை தரும் இன்னாத காய்களே கேடுதரும்’ என்னும் திருவள்ளுவரின் கருத்து விளக்கமும் புலப்படாமல் போயிருக்கக்கூடும்.

    வில் வணக்கமும் சொல் வணக்கமும்

    உவமத்தை முன்மொழிந்து உவமேயத்தைப் பின்மொழிவதும் உவமேயத்தை முன்மொழிந்து உவமத்தைப் பின்மொழிவதுமாகிய இருநெறிகளைத் திருக்குறளில் காணமுடியும். ‘கூடா நட்பு’ என்னும்  அதிகாரத்தில்,

    “சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க! வில்வணக்கம்
    தீங்கு குறித்தமை யான்” (827)

    என்னும் குறட்பா பின்னதற்குச் சான்றாகிறது. (“என்பிலதனை வெயில்போலக் காயுமே” (77) என்பது முன்னதற்குச் சான்றாகிறது. மேற்கண்ட குறட்பாவில் வணங்கியது சொல்லன்றிச் சொல்பவன் அல்லன். வணங்கியது வில்லன்றி வில்லியல்லன். அவ்விரு வணக்கமும் செய்வார்தம் உள்ளக் குறிப்போடு  பொருந்தியதே தவிர சொல்லின் செயலோ வில்லின் செயலோ அன்று அவ்விருவணக்கமும் போலியானது. கொடுமை நிறைந்தது. வெளியில் புலப்படாதது. வில்லினது வணக்கம் ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தமையால் பகைவர் மாட்டுப் பிறக்கும் சொல்லினது வணக்கத்தையும் தமக்கு நன்மை செய்தலைக் குறித்தது என்று கருதற்க என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர் வில்லையேந்தியவனின் தீங்கு குறித்த எண்ணத்தை அவனாலாகிய  வில்வணக்கத்தின் மேலேற்றி ‘வில்வணக்கம் தீங்கு குறித்தமையான்” என்று கூறியதனால் அதற்கு ஏற்ப ஒன்னார் சொல்வணக்கம் தீங்கு குறித்ததை அவர்களாலாகிய சொல்வணக்கத்தின் மேலேற்றி (இங்கு சொல் தீங்கு செய்யாது., சொல்லைப் பணிவாகச் சொல்லும் பகைவனே தீங்கு செய்வான்) ‘ஒன்னார்கண் சொல்வணக்கம் கொள்ளற்க!’ என்று மறுத்துக் கூறுகிறார். இந்த விளக்கத்தையெல்லாம்,

    “வில்வணக்கம் வேறாயினும் வணங்குதல் ஒப்புமை பற்றி அதன் குறிப்பை ஏதுவாக்கியும் கூறினார் வில்லியது குறிப்பு அவனினாய  வில்வணக்கத்தின் மேல் நிற்றலான் ஒன்னாரது குறிப்பும் அவரினால் ஆய சொல்வணக்கத்தின் மேலதாயிற்று”.

    ‘வில்வணக்கம் தீங்கு குறித்தது’ என்பது தெளிவு. இது உவமம். ‘சொல்வணக்கம் தீங்கு குறித்ததா?’ என்பதை விளக்குதற்கே இந்த உவமத்தைத் திருவள்ளுவர் பயன்படுத்துகிறார். இரு வணக்கங்களின் நோக்கமும் வேறாயினும் ‘வணங்குதல்’ ஒப்புமை பற்றி உவமித்தார் என நுண்ணியம் காண்கிறார் பரிமேலழகர். வணங்குவதனாலேயே அதன் நோக்கம் தூய்மையானது எனக் கருதற்க என்பதாம்!

    இதுகாறும் தரவுகளின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் உவமம், உவமேயம் சார்ந்த குறட்பாக்களில் பரிமலழகரின் உரைகாணும் திறன் புலப்பட்டிருக்கக்கூடும். பொருளுக்கும் உவமத்திற்குமான அடைகளை உற்றுநோக்கி அவற்றின் அடிப்படையில் நூலாசிரியர் சொல்லவரும் கருத்தினை நன்கு உள்வாங்கி அதற்கேற்ப உவம அடைகளையும் பொருளடைகளையும் கையாளும் வியத்தகு திறன் அவர் உரையில் ‘தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்படுவதைக்’ காணலாம்.

    நிறைவுரை

    திறனறியும் குறட்பாவில் “அமைந்து, ஒருபால் கோடாமை’ என்னும் பொருளுக்கான (சான்றோர்க்கான) அடைமொழிகளை உவமமாகிய துலாக்கோலுக்கும் ஆக்கினாலும் பாடல் சான்றோரின் நடுவுநிலைமையாகிய பண்பு பற்றியதென்பதை உணர்ந்து “அமைந்து சமன் செய்து சீர்தூக்கி ஒரு பால் கோடாமை’ என அவர்தம் உயர்பண்பை விளக்கிக் காட்டிய நுண்ணியமே இப்பாட்டில் பரிமேலழகரின் உரைத்திறனாகும். நூலாசிரியரால் புணர்க்கப்படும் அடைச்சொற்கள் பொருளுக்காயினும் உவமத்திற்காயினும் அவை வெற்று அலங்காரத்திற்காகவோ சீர் நிரப்புதற்காகவோ அல்ல என்பதே பரிமேலழகர் உரையால் புலப்படும் உண்மையாகும்.

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 8

    பரிமேலழகர் உரைத் திறன் – 8

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    “மோப்பக்  குழையும்  அனிச்சமும்  நோக்கக் குழையும்  விருந்தும்”

    முன்னுரை

    திருக்குறளில் ‘ஒன்று மற்றொன்றை விடச் சிறந்தது, ஒன்று மற்றொன்றைவிடத் தாழ்ந்தது’ என்பன போன்ற பதிவுகள் வரும். ஆனால் அவை எப்படிச் சிறந்தது? எப்படித் தாழ்ந்தது? என்பதற்கான காரணத்தைத் திருவள்ளுவர் கூறமாட்டார். அவற்றிற்கான காரணங்களைக் கண்டறிவது கற்பார் கடன். அல்லது உரையாசிரியர் பணி. இது ஓர் உரை நெறி. இந்நெறியில் பரிமேலழகர்  உரை தனித்தன்மை பெற்றது. “பெண்ணின் பெருந்தக்க யாவுள?” என்னும் திருவள்ளுவரின் வினாவிற்கு விடையிறுத்த பரிமேலழகர், “கற்புடையாள்போல் அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் யாவுள?” (54) என்றார் என எழுதுவதையும், “செல்லா இடத்து சினம் பயப்பது இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே! ஏனையது இம்மைக்கண் பழியும் மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீய பிற இல்லை என்றார்” (3020) என எழுதுவதும் காண்க. இந்த வகையில் எதிர்பாராச் சூழலில் இல்லத்திற்கு வரும் விருந்தின் இயல்பு  அனிச்சப்பூவினும் மென்மையானது என்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து கூறும் பரிமேலழகரின் உரைத்திறன் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.

    திறனறியப்படும் குறளும் உரையும்

    திருக்குறள் அறத்துப்பாலில் ஒன்பதாவது அதிகாரத்தின் பத்தாவது இறுதிப் பாடலாக அமைந்தது,

    “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து” (90)

    என்னும் குறட்பாவாகும். இதற்கு,

    • அனிச்சம் மோப்பக் குழையும் — அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது
    • விருந்து முகந்திரிந்து நோக்கக் குழையும் – விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர் எனப் பரிமேலழகர் பொழிப்புரை எழுதியிருக்கிறார்.

    பொழிப்புரையின் நுட்பம் காண்பதற்கு முன்பாக இவ்வதிகாரத்தின் பொருட் பாகுபாடுகளை அறிந்து கொள்வது இந்தக் குறட்பாவின் மையக்கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிந்த நெறி புலப்பட உதவக் கூடும்.

    அதிகாரக் கருத்துப் பகுப்பு

    ஒவ்வொரு அதிகாரத்து உட்பொருளையும் பாகுபடுத்திக் கொள்ள பரிமேலழகர் பெரிதும் முயன்றிருக்கிறார். இந்தப் பகுப்புத்தான் திருக்குறளுக்கான புத்துரைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்குகின்ற உரைத்தளவாடங்கள் ஆகும். பரிமேலழகர் வகுத்துக் காட்டும் பகுப்புமுறையைப் புறந்தள்ளித் திருக்குறளுக்கு உரைசொல்லப் புகுந்தால் ஒவ்வொரு அதிகாரத்திலும் அதிகாரத் தலைப்புக்குப் பொருத்தமில்லாத குறட்பாக்கள் இருப்பதைக் காட்டிவிட இயலும். ‘கடவுள் வாழ்த்து’ என்ற அதிகாரத் தலைப்பிற்கும் “இறைவனடி சேராதார் பிறவிக்கடலை நீந்தார்” என்பதற்கும் என்ன தொடர்பு? ‘ஒழுக்கமுடைமை’ என்ற அதிகாரத் தலைப்பிற்கும் “மறப்பினும் ஓத்துக் கொளலாகும், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் என்பதற்கும்” என்ன தொடர்பு?” என்று ஆயிரம் வினாக்களைத் தொடுத்துவிட முடியும். “ஒரு தலைப்பின் கீழ் அதுபற்றிய பன்முகப் பரிமாணங்களைத் திருவள்ளுவர் ஆராய்ந்திருக்கிறார்” என்பதுதான் பரிமேலழகரின் உரைப்பணியின் தொடக்க நிலையாகும்.

    1. விருந்தோம்பலின் சிறப்பு (1-2)
    2. விருந்தோம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் (3-5)
    3. விருந்தோம்புவார் மறுமைக்கண் எய்தும் பயன் (6)
    4. இருமைப் பயனுக்கான காரணம் (7)
    5. விருந்தோம்பாவழிப் படும் குற்றம் (8-9)
    6. விருந்தோம்புவார்க்கு வேண்டிய இன்முகம் (10)

    எனப் பகுத்துக் காட்டி, விருந்தோம்பலின் பன்முகப் பரிமாணத்தை எடுத்து விளக்கியதால்தான், ‘இத்தகைய சிறப்புக்கள் உடைய விருந்தினை ஓம்புவார்க்கு இருக்க வேண்டிய எளிய ஆனால் தலையாய இயல்பு இன்முகமே’ என்பதை அவரால் இறுதிக் குறட்பாவிற்கான விளக்கமாக்க முடிந்தது.

    பொழிப்புரை நுட்பம்

    • ‘அனிச்சம் குழையும்’ என உடன்பாட்டில் குறளிருக்க ‘மோந்துழியன்றிக் குழையாது’ என எதிர்மறை வாய்பாட்டில் உரை காண்கிறார். அதிகாரம் விருந்தோம்பல். விருந்தினர் மனம் குழைவதே பரிமேலழகரின் கருத்தில் நின்றதாதலின் உடன்பாட்டு உவமத்தை எதிர்மறை வாய்பாட்டிலும் பொருளை உடன்பாட்டிலும் வெளிப்படுத்துகிறார். ‘(காண்டல் தொடுதல் அன்றி,) மோந்தால்தான் அனிச்சம் குழையும்., திரிபு நோக்கினாலேயே விருந்து குழையும்’ என்பது கருத்து.
    • ‘திரிதல்’ என்பது இலக்கணத்துள் மூவகை விகாரங்களுள் ஒன்று. இயல்புதான் திரியும். விருந்தோம்புதற்குரியார், விருந்து வருவது கண்டு மகிழ்வதற்கு மாறாக தமது இசைவின்மையை (விருப்பமின்மையை), முகத்தால் மாறுபட நோக்கின், வந்தவர் மனம் குழைந்துவிடுமாம். நுட்பம் என்னவென்றால் இயல்பாக இருப்பதைச் செயற்கையாக மாற்றிக்கொள்வதைக் ‘கண்டுழி’ “முகம் வேறுபட்டு நோக்குதல்” என்னும் சொல்லாட்சிகளால் பரிமேலழகர் உணரவைப்பதுதான்.

    விளக்கவுரை

    ‘அனிச்சம்’ ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் எனப்து கூறப்பட்டது.

    விளக்கவுரையில் கண்ட உரை நுட்பம்

    • திருக்குறளில் ‘அனிச்சம்’, ‘குவளை’ ஆகிய இரண்டு பூக்கள், முறையே மென்மைக்கும் கண்ணுக்கும் ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளன. ‘வாழி அனிச்சமே’ (1111) (மென்மையால்), ‘அனிச்சப்பூ’ கால்களையாள்’ (1115) (மென்மை கருதாது) ‘அனிச்சமும்’ (1120) (மென்மைக்காக எடுக்கப்பட்ட) என்னும் இடங்களிலெல்லாம் ‘அனிச்சம்’ என்னும் சொல் தலைமகன் தலைமகள் நலத்தைப் புகழ்வது ஆதலின் பூவை நேரடியாகக் குறித்தது. இக்குறட்பா ஆசிரியர் கூற்றாக அமைந்ததாதலின் ‘அனிச்சம்’ என்னும் மரத்தின் பெயர் மலருக்கு ஆகுபெயர் ஆயிற்று. அதாவது தலைவன் மரத்தைப் பற்றிப் பேசாது மலரைப் பற்றித்தான் பேசுவான் என்பது குறிப்பு. பாட்டில் ‘குழையும்’ என்ற வினையால் ‘அனிச்சம்’ ஆகுபெயராயிற்று, குழைவது மரத்திற்கின்மையின். தலைமகன் கூற்றில் அனிச்சம் ஆகுபெயராகாததற்கு அவன் கருத்தில் அனிச்சப் பூ மட்டுமே நின்றதனான் என்க.
    • மேம்போக்காக இந்தப் பாடலைக் கண்ணுறுவார் இதனை எடுத்துக்காட்டுவமமாகவே கொள்ளக் கூடும். மோந்தால் அனிச்சம் குழையும் (மாறுபட்ட) நோக்கினால் விருந்து குழையும்’ என்னும் பாட்டின் கிடக்கை நிலையும் அவ்வாறு கொள்ளுமாறு அமைந்திருப்பதும் உண்மை. ஆனால் பரிமேலழகரின் சிந்தனையாற்றலால் பாட்டில் வெளிப்படும் நுண்ணியம் இறுதியில் விளக்கப்படும்.
    • மென்மைக்கு எடுத்துக்காட்டு அனிச்சப்பூ. ‘பூ’ என்னும் சொல்லுக்கே ‘மென்மை’ என்பது பொருள். ‘பூந்தென்றல்’, ‘பூங்கோதை’, ‘பூங்கதவு’ என்பன காண்க. அனிச்சம் பூக்களில் மென்மையானது. அதனினும் விருந்தினர்கள் மென்மையானவர்கள் என்றுதான் வள்ளுவர் சொல்ல வருகிறார் என்பது பரிமேலழகர் அனுமானம். பாட்டில் அதற்கான காரணம் வெளிப்பட இல்லை. அக்காரணத்தை ‘மோப்ப’, ‘நோக்க’ என்னும் இரு சொற்களைக் கொண்டு கண்டறிய முற்படுகிறார். முற்பட்டு ‘மோத்தல்’ என்பது ‘காண்டல், தொடுதல், மோத்தல் என்னும் நிரலில் மூன்றாவதாகவும் ‘நோக்குதல்’ என்பது அவற்றின் தொடக்க வினையாகவும் அமைந்திருப்பதை அறிகிறார். கண்ணால் காணுகிறபொழுது அனிச்சம் வாடாது. விரல்களினால் தீண்டுகிறபோதும் வாடாது. மூக்கினால் மோந்தால்தான் அது வாடும். தொலைவில் வரும் விருந்தினர்களைக் காண்பது ஒரு வினை. அவர்களை இன்சொல்லால் வரவேற்பது அடுத்த வினை. அவர்களை அறுசுவை உண்டியளித்து ஓம்புதல் அவற்றின் தொடர்வினை. ஓம்புபவர் தொலைவில் வரும் விருந்தினர்களைத் தம் பார்வையால் மாறுபட்டு நோக்கினாலேயே மனம் வாடுவர். எனவே மூன்றாம் நிலையில் வாடும் அனிச்சப் பூவினும் முதல் நிலையிலேயே வாடிவிடும் விருந்தினர் மென்மையானவர் என்னும் உண்மையைப் பதிவு செய்கிறார் பரிமேலழகர். இதனைச் “சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்முகமும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின் தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம்” என்னும் பகுதி உணர்த்துவது காண்க.
    • அதிகார உள்ளடக்கக் கருத்துப் பகுப்பில் பெரிதும் நம்பிக்கை கொண்ட பரிமேலழகர் விருந்தோம்புவார்க்கு முதற்கண் வேண்டுவது இன்முகம் என்பதை வலியுறுத்தவே இக்குறள் இறுதியாக வைக்கப்பட்டுள்ளது எனக் கருதுகிறார். கருதி, “இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது” எனக் குறட்பாவின் மையக்கருத்தினைப் புலப்படுத்துகிறார்.

    விருந்து பற்றிய விளக்கம்

    இல்லறத்தான் ஓம்புகின்ற அறங்களுள் விருந்து சிறந்தது. ‘விருந்து’ என்னும் சொல் விருந்தினரைக் குறித்தாலும் இவ்வறம் பற்றிய அனைத்துச் சிந்தனைகளும் ஓம்புவாரையே களமாகக் கொண்டுள்ளன என்பதைக் கருத்திற் கொள்ளல் வேண்டும். அதாவது விருந்தோம்பலில் ஓம்புகிறவனே தலைமகன், அறம் செய்வானும் அதற்கான அனைத்துப் பயன்களையும் அனுபவிப்பவன் அவனேயாதலின். தேனும் மீனும் கொடுத்து ஓம்பிய குகனைப் (தெய்வத்தை ஓம்பிய அடியவன்) பற்றியே இராமாயணம் பேசுகிறது. குசேலனை ஓம்பிய கண்ணனைப் (மானுட நண்பனை ஓம்பிய இறைவன்) பற்றியே குசேலோபாக்கியானம் பேசுகிறது. சிவனடியாரை மழையிரவில் ஓம்பிய இளையான்குடி மாறனாரையே (சிவனை ஓம்பிய சிவனடியார்) பெரியபுராணம் பேசுகிறது. விருந்தோம்பலில் ஓம்புகிறவன் (அறம்) செய்பவனாகவும் விருந்து செயப்படுபொருளாகவும் அமைந்துவிடுவதே இதற்குக் காரணம்.  விருந்தோம்பலாகிய அறத்தில் பயன் செய்பவனுக்கே என்பது குறிப்பு. ஓம்புகிறவன் உயர்ந்தவன் என்பது தத்துவம். இந்தப் பின்புலத்தில் பரிமேலழகர் உரையருமையை நோக்கினால் அதன் நுட்பம் புரியக்கூடும்.

    பரிமேலழகரின் உரையருமை

    • ‘விருந்தோம்பல்’ என்னும் பொருண்மை திருக்குறளின் ஒன்பதாவது அதிகாரத்தில் ஆராயப்படினும் ஐந்தாவது அதிகாரத்தின் 43 ஆவது குறட்பாவிலிருந்தே இது பற்றிய சிந்தனையைப் பரிமேலழகர் தொடங்கிவிடுகிறார். இதனை “இருவகை விருந்தினரையும் புறந்தருதல். தென்புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் (தென்புலத்தார், தெய்வம்) கட்புலனாகாதன நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் (ஒக்கல், தான்) பிறர்க்கு ஈதல் அன்மையானும் இடைநின்ற விருந்தோம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்களுக்கு முதலாயிற்று.” என்னும் அதிகாரப் பொருண்மை விளக்கத்தினால் உணர முடியும்.
    • ‘அறிந்து வருவது’, ‘அறியாது வருவது’ என்னும் இருவகையில் எவ்வகையாயினும் எதிர்பாராமல் வருவதே ‘விருந்து’ எனப்படும். ‘விருந்தே புதுமை’ என்பதற்கு அதுதான் பொருள்! அவ்வெதிர்பாராச் சூழலில் வருகின்ற விருந்தினை ஓம்புங்கால் இன்முகமே தலையாயது என்பதனையே திறனறியும் குறட்பாவின் (90) மையக்கருத்தாகப் பரிமேலழகர் கொள்கிறார். விருந்தோம்புவார்க்குரிய முகமலர்ச்சியே இவ்வதிகாரத்தில் கண்ட அனைத்துப் பயன்களையும் தரும் என்பது குறிப்பு. மேற்கண்ட விளக்கங்களையெல்லாம் உள்ளடக்கி “விருந்து என்பது புதுமை. அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது.  அவர் இரு வகையர். பண்டு அறிவுண்மையின் ‘குறித்து’ வந்தாரும் அஃது இன்மையின் ‘குறியாது’ வந்தாரும் என.” என்னும் விளக்கத்தாலும் இவ்வைந்து அறங்களுள் விருந்தோம்பலையே இல்லறத்தின் தலையாய அறமாக விதந்தோதிய திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கை அறிந்த நுட்பத்தானும் உணர்க.

    ஒரே அலைவரிசையில் “திருவள்ளுவர் – பரிமேலழகர் — பாவேந்தர் “

    குறிப்பிட்ட குறட்பாவிற்குரிய பரிமேலழகர் உரைத்திறனை மட்டும் எதிர்பார்க்கின்ற சிலர் இந்தப் பகுதியில் இவ்வளவு விளக்கமும் எடுத்துக்காட்டுக்களும் சான்றுகளும் தேவையா என எண்ணக் கூடும். பழந்தமிழ்  உரையாசிரியப் பெருமக்களின் ஒரு பொருள் பற்றிய சிந்தனை, பல தளங்களிலும் வேர்கொண்டிருந்தது என்பது ஓர் இன்றியமையாக் குறிப்பு. ‘விருந்தோம்பல்’ என்பது தமிழர்களின் தலைசான்ற பண்பாட்டுக் குறிப்பு. உலக நீதி உரைக்க வந்த திருவள்ளுவரே “இன்மையுள் இன்மை விருந்தொரால்” (153) என்றும், “உடைமையுள் இன்மை விருந்தோம்பா மடமை” (89) என்றும் இருவகை வாய்பாட்டில் நுட்பமாக இத்தமிழ்ப் பண்பாட்டை ஆராய்ந்திருக்கிறார்.

    கணவனைப் பிரிந்துறைந்த நாளில் தான் இழந்த அறங்ளை நிரல்படுத்திய கண்ணகி விருந்தோம்ப இயலாமையைச் சுட்டி வருந்துவதை இளங்கோடிவகள்  “தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடல் இழந்த என்னை” (சிலம்பு. கொலைக்களக்காதை – 73) என்னும் வரிகளில் கண்ணகி வாய்மொழியாகவே பதிவு செய்திருக்கிறார் என்பதும் அசோகவனத்தில் தனிமைச் சிறையில் வாடிய சீதை வனத்தில் இராமனின் நிலையெண்ணி வருந்தியபோது, ‘விருந்து கண்டபோது என்னுறுமோ என விம்மும்” (கம்ப…சுந்தரகாண்டம் – 5083) எனக் கம்பர் பதிவு செய்திருப்பதும் பலராலும் அறியப்பட்டவையே.

    விருந்தோம்பலாகிய மரபுவழிப் பண்பாட்டைத் திருவள்ளுவர் வழி நின்று விளக்கியவர் பரிமேலழகர் என்பது மேற்சொன்ன விளக்கங்களால் புலப்படக் கூடும். திருவள்ளுவரையும் பரிமேலழகரையும் முற்றும் உள்வாங்கிய பாவேந்தர் தமக்கே உரிய தமிழ்ப் பண்பாட்டு உணர்ச்சியுடன் எழுதிய ‘குடும்பவிளக்கு’ என்னும் அரிய காப்பியத்தில் ‘விருந்தோம்பல்’ என்பதை இரண்டாவது பகுதியாக  வைத்திருக்கிறார். அது மட்டுமன்று. குடும்பத்தலைவியாகிய தங்கம் விருந்து வரக் கண்டபோது அடைந்த மகிழ்ச்சியைச்,

    “சுடுவெயிலில் காயவைத்த சோளம் துழவி
    உடல் நிமிர்ந்தாள்., கண்கள் உவந்தாள். —  நடைவீட்டைத்
    தாண்டி வரும்விருந்தைத் தான்கண்டாள்! கையேந்திப்
    பூண்ட மகிழ்வாள் புகழேந்தி – வேண்டி
    வருக!  அம் மாவருக! ஐயா வருக!
    வருக! பாப்பா தம்பி என்று – பெருகன்பால்
    பொன்துலங்கு மேனி புதுமெருகு கொள்ள, முகம்
    அன்றலர்ந்த செந்தாமரையாக – நன்றே
    வரவேற்றாள்” (பாரதிதாசன் குடும்பவிளக்கு “விருந்தோம்பல்”)

    என வெளிப்படுத்துவதில் பரிமேலழகருக்கு உரையெழுதுகிறார். மாவரசர், மலர்க்குழலி, நாவரசு நகைமுத்தும் வந்திருக்கிறார்கள் எனக் கேட்டவுடன் மகிழ்ந்த தங்கத்தின் மாமன், மாமி மகிழ்ந்து மருமகள் தங்கத்திடம் விருந்தோம்பலின் சிறப்பைக் கூறுவதில் திருவள்ளுவர், பரிமேலழகர் வார்த்தெடுத்த தமிழ் மரபுப் பாவேந்தரிடம் குடிகொண்ட பாங்கினை வெளிப்படுத்துவதாக உள்ளது.

    “வீட்டுக்கு வந்த விருந்தோம்பு! நாட்டிலுறு
    நற்றமிழர் சேர்த்த புகழ் ஞாலத்தில் என்னவெனில்
    ‘உற்ற விருந்தை உயிரென்று — பெற்றுவத்தல்’
    மோந்தால் குழையும் அனிச்சம்பூ முகமாற்றம்
    வாய்ந்தால் குழையும் வருவிருந்தென்று – ஆய்ந்த திரு
    வள்ளுவனார் சொன்னார்! அதனைநீ எப்போதும்
    உள்ளத்து வைப்பாய்! ஒரு போதும் – தள்ளாதே!
    ஆண்டு பல முயன்றே ஆக்குவை ஊண் எனினும்
    ஈண்டு விருந்தினர்க்கும் இட்டுவத்தல் வேண்டுமன்றோ?
    வந்தாரின் ‘தேவை, வழக்கம்’ இவையறிய
    நந்தா விளக்குன்றன் நல்லறிவே! செந்திருவே!
    இட்டுப்பார்! உண்டவர்கள் இன்புற்றிருக்கையிலே
    தொட்டுப்பார் உன் நெஞ்சைத் தோன்றுமின்பம்!
    கரும்பென்பார் பெண்ணைக் கவிஞரெலாம் வந்த
    விருந்தோம்பும் மேன்மையினால் அன்றோ?”

    (பாரதிதாசன் குடும்பவிளக்கு “விருந்தோம்பல்”)

    தமிழிலக்கியத்தில் விருந்தோம்பல் என்னும் தலைப்பில் சிந்தித்து எழுதப்படும் படைப்பு எதுவாக இருந்தாலும் அது பாவேந்தர் சித்திரித்துக் காட்டிய குடும்ப விளக்குக்குப் பிறகுதான் என்பதை இந்தப் பகுதி காட்டும். வள்ளுவரை மனக்கோயிலில் வைத்துக் கொண்டாடும் பாவேந்தர் பரிமேலழகரின் உரைநயத்தையும் ஆழத்தையும் உள்வாங்கியே இந்தப் பகுதியை எழுதியிருக்கிறார் என்பதைக் கற்பார் உணரக்கூடும். “தொல்லோர் சிறப்பின்’ என்ற தொடருக்கு “நற்றமிழர் ஞாலத்தில் சேர்த்த புகழ்” என்று கவிதையில் உரையெழுதுகிறார் பாவேந்தர். விருந்து கண்டவுடன் தங்கத்தின் மேனி பூரித்தது என்பதைப் “பொன்துலங்கு மேனி புதுமெருகு கொள்ள, முகம் அன்றலர்நத செந்தாமரையாக” என்று வண்ணனை செய்கிறார். உரைத்திறன் அறியும் இந்தக் குறட்பாவை  முற்றாக எடுத்தாள்கிறார்.  எல்லாவற்றையும் விட திருக்குறளில் சொல்லாத ஆனால் பரிமேலழகர் சொன்ன (சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும் என்னும் முதல் நிலை தவிர்த்து) நண்ணியபழி இன்சொல்லும், உடன்பட்டவழி நன்றாற்றலும் என்ற விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதனவாகிய மற்ற இரண்டு கடமைகளையும் இல்லறக் காட்சிகளாகவே சித்திரித்துக் காட்டியுள்ளார். இதனால் பரிமேலழகர் உரை பாவேந்தரை எப்படிப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். திருவள்ளுவர் இல்லறத்தின் தலையறமாக விருந்தோம்பலை விதந்தோத, அதற்குப் பரிமேலழகர் ஆழ்ந்த உரையெழுதினார். குறளையும் பரிமேலழகர் உரையையும் செரித்துக் கொண்ட மரபுவழிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அதனைக் குடும்ப விளக்கில் எல்லாருக்குமாகச் சித்திரித்துக் காட்டினார். “வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட மரபு” என்றால் இப்படித்தான் இருக்கும்!

    நிறைவுரை

    பொருட்பகுப்பில் தெளிவு கொண்ட பரிமேலழகர் விருந்தினர்க்கு உவமமாக்கிய அனிச்சத்தின் திறமறிகிறார். அறிந்து ‘அனிச்சத்தை விருந்துக்கு ஒப்பாக்கவில்லை’ என்னும் உண்மை உணர்கிறார். உணர்ந்து ‘ஒப்பு நிலை மாற்றி உறழ்வு நிலையில்’ உரை காண்கிறார். கண்டு ‘அனிச்சமும் விருந்தினரும் ஒப்பு’ என்னும் கருத்தியலைப் பின்னுக்குத் தள்ளுகிறார். தள்ளி, மூன்றாம் நிலையில் வாடுகின்ற அனிச்சத்தினும் முதல் நிலையிலேயே வாடிவிடும் விருந்தினரின் மென்மையின் உயர்ச்சியை வேறுபடுத்தி விளக்குகிறார். இந்த விளக்கத்தால் பெரும்பாலோர்க்கு எடுத்துக்காட்டுவமமாகத் தோன்றும் இந்தப் பா வேற்றுமையணியாக தனது உண்மை உருவத்தைக் காட்டி நிற்கிறது. இதுவே இக்குறட்பாவில் பரிமேலழகர் உரைத்திறனாகும்.

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 6

    பரிமேலழகர் உரைத் திறன் – 6

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இடைச்சொல் ‘உரைச்சொல்’ ஆன கதை!

    முன்னுரை

    ‘அதிகாரத்திற்குப் பத்துப் பாடல்கள்’ என வரையறுத்துக் கொண்டதால் ‘கூறியது கூறலும் குன்றக் கூறலும்’ திருக்குறளில் அமைந்திருப்பதாகக் கூறுவாரும் உளர். ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ (314) எனக் கூறிய பிறகும் ‘இன்னாச் செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு?’ (987) எனக் கூறுவானேன்? என்பாரும், ‘இரவு’ கூறிய வள்ளுவர் ‘இரவச்சம்’ கூறுவானேன்? என்பாரும் திருக்குறளில் தமது ‘தோய்ந்த புலமையை’ வெளிப்படுத்துவர். அன்னாருடைய கருத்துக்கள் பற்றிய ஆய்வு ஒரு பக்கம் இருப்பினும் திருக்குறள் அதிகாரங்களில் ஒரு கருத்து மட்டுமே சொல்லப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு மாறானது என்பதை மட்டும் குறிக்க வேண்டியுள்ளது. திருக்குறள் ஒரு நீதி இலக்கியம் என்பதால் ஒரு  பொருண்மை பற்றிய பல்வகைச் சிந்தனைகளையும் பாகுபடுத்திக் கூறுவதே அதிகாரக் கருத்துக்களின் சாரம். சான்றாகக் ‘கடவுள் வாழ்த்து’ எனப் பொதுவாக அமைந்திருக்க வேண்டிய அதிகாரக் கருத்துக்களை, முதற்கடவுளது உண்மை (1) அறிவிற்குப் பயன் (2) இறைவனை நினைத்தல், வாழ்த்தல், நெறிநிற்றல், பயன்பெறுதல் (3-6) அவை செய்யாவழிப்படும் குற்றம் (7-9) அடி நினைப்பார்க்குப் பிறவி அறுதல் மாறி நினைப்பார்க்கு அறாது நிற்றல் (10) என ஐந்து வகையாகப் பகுத்துரைப்பதைப் பரிமேலழகர் உரையால் அறியலாம். இத்தகைய பாகுபாடு அறத்துப்பால், பொருட்பால் ஆகிய பகுதிகளில் எல்லா அதிகாரங்களிலும் அமைந்துள்ளன. காமத்துப்பால் அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப்பகுதியாதலின் அப்பொருள் துறைகளுக்கேற்ப அமைந்த பாகுபாடுகளை அங்கே காணலாம். இந்தப் பின்புலத்தில் சினத்தின் பின்விளைவு பற்றிய மூன்று குறட்பாக்களில் ஒரு குறட்பாவில் காணப்படும் பரிமேலழகரின் உரைத்திறன் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.

    திறனறியும் குறட்பாவும் உரையும்

    துறவறவியலில் ‘வெகுளாமை’ என்னும் அதிகாரத்தில் ஆறாவது குறட்பாவாக அமைந்திருப்பது,

    “சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
    ஏமப் புணையைச் சுடும்” (306)

    என்னும் குறட்பா. இக்குறட்பாவிற்குச்,

    ‘சினம்’ என்னும் சேர்ந்தாரைக் கொல்லி – சினம் என்னும் நெருப்பு இனம் என்னும் ஏமப்புணையைச் சுடும் – தனக்கு இடமானவரையே அன்றித் அவர்க்கு இனமாகிய ஏமப்புணையையும் சுடும்.

    எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையையும் தந்திருக்கிறார். பொழிப்புரையின் நுட்பம் காண்பதற்கு முன்பாக இவ்வதிகாரத்தின் பொருட்பாகுபாடுகளை நோக்குவது கட்டுரைப் பொருள் எளிதில் புரிவதற்கு ஏதுவாகும். திருக்குறளைத் தனித்தனி அலகாகக் கொண்டு உரைசொல்வார் பலர்.  அது பிழையாகாதெனினும் கருத்து முழுமைபெறாது என்பதோடு அக்கருத்தினை முற்றுப் பெற வைக்கும் ஏனைய குறட்பாக்கள் பின்னுக்குத் தள்ளப்படும்.

    கருத்துப் பகுப்பு

    திருக்குறள் அதிகாரக் கருத்துக்களைப் பாகுபடுத்துவது பற்றி முன்னுரையிலேயே குறிப்பிடப்பட்டது. அதன்படி ‘வெகுளாமை’ என்னும் இவ்வதிகாரப் பொருண்மை பின்வருமாறு பரிமேலழகரால் வகுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது வெகுளாமை என்னும் அதிகாரத்தில் வெகுளாமையைத் திருவள்ளுவர் பொதுவாக ஆராயவில்லை என்பதாம்.

    1. வெகுளாமைக்கான இடம் (1)
    2. வெகுளியது தீங்கு (2-4)
    3. வெகுண்டார்க்கு வரும் தீங்கு (5-7)
    4. வெகுளாமையது நன்மை (8)
    5. வெகுளாதார்க்கு வரும் நன்மை (9)
    6. வெகுண்டார்க்கும் வெகுளாதார்க்கும் நேரும் விளைவு (10)

       இப்பகுப்புக்களில் வெகுளி பற்றிய பல பரிமாணங்களைத் திருக்குறள் சிந்தித்திருக்கிறது என்பதையும் அது ‘வெகுளி’ என்ற ஓர் எதிர்மறைப் பண்பை மட்டும் சிந்திக்கவில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்தப் பொருண்மை பற்றிய இத்தகைய பகுப்புக்கள் வராதபோதுதான் திருவள்ளுவர் இன்னொரு அதிகாரத்தில் இது பற்றிய சிந்தனையை நீட்டித்துக் கொள்கிறார். சான்றாக ‘அறிவு’ என்னும் உயர்நிலையை ஒருவன் அடையவேண்டுமானால்  கல்வியின் சிறப்பு, கல்லாமையின் குற்றம், கேள்வி என்னும் முப்பரிமாணங்ளையும் அவர் ஆராய்ந்து அதன் தொடர்ச்சியாகவே ‘அறிவுடைமை’ என்பது பற்றி எழுதுகிறார். உழைத்துச் சேர்ப்பதுதானே உடைமை? இந்தப் பகுப்பில் மூன்றாவதாக உள்ள ‘வெகுண்டார்க்கு வரும் தீங்கு’ என்னும் ஒரு பொருள் பற்றி மூன்று பாடல்கள் கூறுவதாகப் பரிமேலழகர் கூறுகிறார்.

    • தன்னையே கொல்லும் (305)
    • இனம் என்னும் ஏமப்புணையைச் சுடும் (306)
    • நிலத்தறைந்தான் கைபிழையாது அற்று (307)

    பொழிப்புரை நுட்பம்

    • சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்னுந் தொடரை ‘சினம் என்னும் நெருப்பு’ எனச் சுருக்கிக் கொள்கிறார்.
    • ‘இனம் என்னும் ஏமப்புணையைச் சுடும்’ என்றே குறட்பாவில் இருக்க, ‘தனக்கு இடமானவரையே (கொல்லும்) அன்றி’ என சினத்தின் முதற் செயல்பாட்டை நினைவு கூர்கிறார். அதாவது ‘இனத்தைச் சுடுவதற்கு முன்னால் தன்னைச் சுடும்’ என்பதைச் சுட்டுகிறார். இக்கருத்தினை இதற்கு முந்தைய குறட்பாவிலுள்ள ‘தன்னையே கொல்லும் சினம்’ (305) என்னும் தொடரிலிருந்து தழுவிக் கொள்கிறார்.

    பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

    ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்பது ஏதுப்பெயர். தான் சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது என்றவாறு. ‘சேர்ந்தாரை’ உயர்திணைப் பன்மைமேல் வைத்து ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின்.  ‘சினமென்னும் நெருப்பு’ என்ற ‘விதப்பு, ‘உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே; இந்நெருப்புச் சேராத இடத்தையும் சுடும்’ என்னும் வேற்றுமை தோன்ற நின்றது. ஈண்டு ‘இனம்’ என்றது முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை. உருவகம் நோக்கிச் சுடும் என்னும் தொழில் கொடுத்தாராயினும் ‘அகற்றும்’ என்பது பொருளாகக் கொள்க. ஏமப்புணை – ஏமத்தை உபதேசிக்கும் புணை. ‘இனம் என்னும் ஏமப்புணை’ என்ற ஏகதேச உருவகத்தால், ‘பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற’ என வருவித்து உரைக்க. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.

    விளக்கவுரையில் கண்ட உரை நுட்பம்

    • ‘நெருப்பு’ என்னும் ஒரு சொல் இருக்க மற்றவரைக் கொல்லுதற்கு அது காரணமாக இருப்பதால் ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என இரு சொல்லால் உருவகப்படுத்தினாராம். ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்பது ஏதுப்பெயர் என்கிறார் பரிமேலழகர்.
    • ‘சேர்ந்தார்’ என்பது உயர்திணைப் பன்மை. எனின் சேர்ந்தாரைத்தான் கொல்லுமா? சேர்ந்தவன், சேர்ந்தவள், சேர்ந்தது, சேர்ந்தவை முதலியவற்றைக் கொல்லாதா? என்னும் ஐயத்தினைக் களைகிறார். ஈண்டு சினம் என்பது இல்லறத்தானுக்கு வருகிற சினமன்று ‘கணமேயும் காத்தற்கு அரிய’ துறந்தார்க்குக் கூடாத சினம். ஐம்பால் பகுப்பில் சிறந்தது உயர்திணைப் பலர்பால். அப்பாலில் வைத்துச் சொல்லியதால் ஏனைய பால்களும் அடங்கும் என்பது அவர் கருத்து. அதனைச் ‘சேர்ந்தாரை’ உயர்திணைப் பன்மைமேல் வைத்து ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின்’ என எழுதுகிறார்.
    • ‘சினம் சுடும் என்றாலேயே ‘சுடும்’ என்னும் வினையால் ‘சினம் என்பது நெருப்பு’ என்பது பெறப்படும். குறட்பாவில் பயின்றுள்ள ‘சினமென்னும் நெருப்பு சுடும்’ என்னுந் தொடரில் ‘நெருப்பு’ என்பது விதப்பு (தேவையற்ற சொல் பயன்பாடு) சான்றோர் கூறிய விதப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் எனக் கருதிய பரிமேலழகர், ‘சினமென்னும் நெருப்பு’ என்ற விதப்பு, ‘உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே இந்நெருப்புச் சேராத இடத்தையும் சுடும்’ என்னும் வேற்றுமை தோன்ற  நின்றது என எழுதுகிறார். முனிவர் சினத்தின் எதிர்மறை விளைவின் முழுப்பரிமாணத்தையும் குறிக்கிறதாம். தீயவை தீயினும் அஞ்சப்படும் என்பதற்குப் “பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும் பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் தீயினும் அஞ்சப்படும் என்றார் (202) என்னும் பரிமேலழகரின் உரை ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கதாம்.
    • திருவள்ளுவர் நட்பு பற்றி ஆழமாகச் சிந்தித்தவர். பல அதிகாரங்களில் அதுபற்றி ஆராய்ந்திருக்கிறார். இங்கே முனிவர் குழாஅத்தைப் பற்றி ஆராய்ந்து பதிவிடுகிறார். முனிவருடைய இனம் எத்தகையதாக இருக்க வேண்டும்? அதாவது இந்தச் சினத்தால் எத்தகைய பெருமையுடையாரை இழக்க நேரிடும்? என்பதை நுட்பமாகப் பதிவு செய்கிறார்.
    1. முற்றத் துறந்தவர்
    2. தவஞானங்களால் பெரியார் ஆனவர்
    3. கேட்டார்க்கு மட்டும் நெறிகாட்டுபவர்
    4. உறுதிபயக்கும் சொற்களைச் சொல்பவர்
    5. அவற்றையும் இனிமையாகச் சொல்பவர்

    இத்தகைய பண்புகளின் தொகுப்பான இனத்தைப் பாழ்படுத்திவிடும் ஆற்றல் சினத்திற்கு உண்டாம். இதனை “ஈண்டு ‘இனம்’ என்றது முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை”  என்று எழுதுவதால் அறியலாம்.

    • ‘சினம் இனத்தைச் சுடும்’ என்றால் நெருப்புத்தானே சுடும். சினம் என்னும் பண்பு எப்படிச் சுடும்? என்னும் ஐயத்தை அவராகவே எழுப்பிக்கொண்டு சினத்தை நெருப்பென உருவகம் செய்ததால் சுடும் என்று சொன்னார். இவருடைய சினம் மேற்சொன்ன பண்பாளர்களை இவரிடமிருந்து அகற்றிவிடும். ஆதலின் சுடும் என்பதற்கு ‘அகற்றும்’ எனப் பொருள் கொள்க’ என்கிறார். “இதனை உருவகம் நோக்கிச் சுடும் என்னும் தொழில் கொடுத்தாராயினும் ‘அகற்றும்” என்பது பொருளாகக் கொள்க” என எழுதுகிறார்.
    • ‘ஏமப்புணை’ என்பதற்கு ‘ஏமமாகிய புணை’ என்னாது ‘ஏமத்தை உபதேசிக்கும் புணை’ என உரையெழுதுகிறார். ‘ஏமம்’ என்றால் பாதுகாப்பு. உயிர்ப் பாதுகாப்புக்கான உபதேசங்களைக் கூறும் இனமாம். உயிர் பாதுகாப்பு என்றால் வீடு பேறு. இனம் பாதுகாப்பாகாது. இனம் காட்டும் நன்னெறியே பாதுகாப்பு .. எனவேதான் ‘ஏமத்தை உபதேசிக்கும் இனம்’ என்று எழுதுகிறார்.
    • இனி இனம் என்னும் ஏமப்புணை என்பது எவ்வாறு ஏகதேசம் ஆகும்? ஏகம் என்றால் ஒன்று. தேசம் என்றால் பகுதி. சினத்தால் இழக்கக்கூடிய இனத்தைப் புணை என்றால் எதனைக் கடப்பதற்குரிய புணை? என்னும் வினா எழும். அதனைக் குறட்பா நேரிடையாகவோ மறைமுகமாகவோ கூறவில்லை. பரிமேலழகர் அறிந்து கூறுகிறார். ஞானத்தைப் புகட்டும் இனத்தைப் புணையாக உருவகம் செய்தவர், பிறவியைக் கடலாகவும் வீடுபேற்றைக் கரையாகவும் உருவகப்படுத்தவில்லை. எனவே ஏமப்புணை என்பது ஏகதேச உருவகம். இது முற்றுருவகமாக இருந்திருந்தால், “சினம் என்னும் நெருப்பு, பிறவிக்கடலை நீந்தி வீடுபேறாகிய கரையினை அடைவதற்கேற்ற ஞானத்தை உபதேசிக்கும் இனமாகிய புணையை அகற்றும்” என அமைந்திருக்கும். இதனை ‘இனம்’ என்னும் ஏமப்புணை என்னும் ஏகதேச உருவகத்தால் பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற என வருவித்து உரைக்க’ என்ற விளக்கத்தில் காணலாம்.
    • ‘எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. எனக் குறட்பாவில் இல்லாத உம்மையைக் கண்டறிகிறார். இந்த உம்மைதான் பாட்டின் ஒரு வினையை இருவினையாக்குதற்கு உதவுகிறது. பாட்டு ‘சினம் இனத்தைச் சுடும்’ என்ற ஒரு வினையையே சுட்டுகிறது. பரிமேலழகரோ ‘இனத்தையே சுடும்’ என்றால் ‘கொண்டவனைச் சுடாதா?’ என்னும் வினாவை எழுப்பிக் கொள்கிறார். கொண்டு இருவரையும் சுடும் என்பதுதானே பொருள்? எனக் கருதுகிறார். கருதிப் பின்னது முன்னதைத் தழுவிக் குறட்பா அமைந்திருந்தால் ‘புணையைச் சுடும்’ என்று அமையாது ‘புணையையும் சுடும்’ என்றல்லவா அமைந்திருக்க வேண்டும்? ‘உம்’ என்ன ஆனது? எனச் சிந்திக்கிறார். சிந்தித்து, ‘உம்’ என்னும் எச்சம் தொகுதல் என்னும் விகாரத்தால் மறைந்து நிற்கிறது என்பார், ‘எச்சவும்மை விகாரத்தால் தொக்கது’ என எழுதுகிறார்.

    நிறைவுரை

    ‘சினம் இனத்தைச் சுடும்’ என்னும் ஒருவரி கருத்தினை, ‘உம்’ என்னும் குறட்பாவில் இல்லாத இடைச்சொல்லாகிய எச்சத்தை வருவித்துச் “சினம் தன்னையும் கொல்லும், தன்னைச் சேர்ந்தாரையும் கொல்லும், வீடுபேற்றுக்குரிய ஞானநெறியைக் காட்டும் இனைத்தையும் விலக்கிவிடும்” என்னும் கருத்துக்களையெல்லாம் பெற வைத்ததே இக்குறட்பாவில் பரிமேலழகரின் உரைத்திறனாகும்.

    (தொடரும்)

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 5

    பரிமேலழகர் உரைத் திறன் – 5

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    எல்லாம் இருந்தும் என்ன பயன்?

    முன்னுரை

    திருக்குறள் இரண்டடிக் குறட்பாவாகத் தோன்றுவதால் அதன் பொருளைப் பலரும் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம் எனக் கருதுவது இயல்பே. உண்மையில் ‘குறுகத் தரித்தது’ என்பதை உணர்வார் சிலரே. அவ்வாறு நோக்கியுணர்ந்து உரைகண்டவர்களில் பரிமேலழகர் தலையானவர். ஒரு சீருக்கும் மற்றொரு சீருக்கும் ஓரடிக்கும் மற்றொரு அடிக்கும் நிலவும் அல்லது நிலவ வேண்டிய யாப்பு, தொடைவிகற்பம், பொருண்மை, பொருத்தம் ஆகியவை செம்மையாக இருக்கிறதா என்பதைப் பொறுமையுடனும் ஆழ்ந்த புலமை மற்றும் சிந்தனையுடன் அணுகுவது அவர்க்கு இயல்பு. அவ்வாறு, எல்லார் பார்வைக்கும் ஒரே மாதிரியாகத் தோன்றிப் பரிமேலழகருக்கு மட்டும் மாறுபட்டுத் தோன்றி உரைகாணப்பட்ட குறட்பா ஒன்றினைக் காணலாம்.

    திறனறியும் குறட்பாவும் உரையும்

    ‘அன்புடைமை’ என்னும் அதிகாரத்தில் ஒன்பதாவது குறளாக அமைந்திருப்பது,

     “புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும் யாக்கை
    அகத்துறுப்பு அன்பில வர்க்கு” (79)

    என்னும் குறட்பா. இதற்கு,

    • யாக்கை அகத்து – யாக்கை அகத்தின்கண் (நின்று)
    • உறுப்பு – (இல்லறத்திற்கு உறுப்பாகிய)
    • அன்பு – அன்பு
    • இலவர்க்கு – உடையரல்லாதவர்க்கு
    • புறத்து உறுப்பு எல்லாம் – ஏனைப் புறத்தின் கண் நின்று உறுப்பாவன எல்லாம்
    • எவன் செய்யும் – (அவ்வறம் செய்தற்கண்) என்ன உதவியைச் செய்யும்?

    எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையையும் தந்திருக்கிறார்.

    பொழிப்புரை நுட்பம்

    • குறட்பாவில் ‘உறுப்பு’ என வாளா கூறியிருக்க, பரிமேலழகர் ‘இல்லறத்திற்கு உறுப்பு’ என உரை காண்கிறார். அதிகாரம் அன்புடைமையெனினும், இயல் இல்லறவியல் என்பதனை நோக்கி. இல்லறம் அன்பின்றிக் கடைபோகாது ஆதலின் ‘இல்லறத்தின் உறுப்பு’ என நுண்ணியம் காண்கிறார்.
    • ‘அன்பு இலவர்க்கு’ எனக் குறட்பாவில் இருக்க, ‘அன்பு உடையரல்லாதார்க்கு’ என உரை காண்கிறார். அன்பாகிய பண்பினை ‘உடைமை’ என உருவகம் செய்யும் திருவள்ளுவர் கருத்திற்கு (அன்புடைமை) இயைய அன்பினை ஓர் உடைமையாகக் கொள்கிறார்.
    • ‘அகத்துறுப்பு’ ‘புறத்துறுப்பு’ என நிற்க பரிமேலழகர் ‘நின்று’ என்னும் சொல்லை இருவழியும் வருவித்து உரை காண்கிறார்.

    பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

    “புறத்துறுப்பாவன – இடமும் பொருளும் ஏவல் செய்வாரும் முதலாயின. துணையோடு கூடாதவழி அவற்றாற் பயனின்மையின் ‘எவன் செய்யும்’ என்றார். உறுப்புப் போறலின் உறுப்பு எனப்பட்டன. “யாக்கையில் கண் முதலிய உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்? மனத்தின் கண் உறுப்பாகிய அன்பு இலாதார்க்கு என்று உரைப்பாரும் உளர்., அதற்கு இல்லறத்தோடு யாதும் இயைபில்லாமை அறிக”

    விளக்கவுரையில் கண்ட உரையருமை

    • இல்லறத்தான் அறம் செய்வதற்கான கருவிகள் இடம், பொருள், ஏவல் என்னும் மூன்றுமாம். இந்தக் கருவிகள் ‘அன்பு’ என்னும் மூலக்கருவியாகிய இல்லறத் துணையின்றிச் செயல்படாது. செயல்படினும் பயனில்லையாம். இதனைத் ‘துணையோடு கூடாத வழி அவற்றாற் பயனில்லை என்னும் தொடரால் குறிக்கின்றார்.
    • அன்பு அகத்துறுப்பாதலின் இவை புறத்துறுப்பாயின.
    • ‘‘எல்லாம்’ (என்னும் பன்மையால்) அவை மூன்றாக இருப்பினும் அன்பில்லாதவழிப் பயனில்லை என்பார் ‘எவன் செய்யும்’ என்று எழுதுகிறார்.
    • முதலோடு இணையாதவழிச் சினை வினை சிறக்காது. அன்பென்னும் முதலுக்கு இடம், பொருள், ஏவல் என்பன உறுப்புப்போலச் செயல்படுவதால் ‘உறுப்பு’ என்றாராம் திருவள்ளுவர்.
    • பிறரெல்லாம் புறத்துறுப்பு என்பதற்குக் கண் முதலிய உறுப்புக்கள் எனப் பொருள் கண்டதனை ஏற்றுக்கொள்ளாத பரிமேலழகர் மனத்தின் கண் உறுப்பாகிய அன்பு இல்லாதார்க்கு ‘யாக்கையில் கண் முதலிய உறுப்புக்களெல்லாம் என்ன பயனைச் செய்யும்? என உரைப்பாரும் உளர்” என எழுதி “அதற்கு (அவ்வுரைக்கு) இல்லறத்தோடு யாதும் இயைபில்லாமை அறிக’ எனக் குறிப்பாகச் சுட்டி மறுக்கிறார். அகத்துறுப்பு அன்பு என்பதில் மாறுபாடு காணாத பரிமேலழகர் புறத்துறுப்பு எவை என்பதில் மாறுபடுகிறார்.

    பரிமேலழகரும் இயைபும்

    ஆசிரியர் பரிமேலழகர் ‘நோக்கு’ என்னும் திறனாய்வுக் கொள்கையை அடிப்படையாக வைத்தே உரைகாண்கிறார். ‘இயைபு’ என்றால் பொருத்தம். குறட்பாவில் பயின்று வந்துள்ள அசை முதலாக அனைத்துறுப்புக்களின் பொருத்தத்தை ஆராய்கிறார். ஒருமை பன்மை மயக்கத்தை ஆராய்கிறார். உவமப் பொருத்தத்தை ஆராய்கிறார். செய்வினை, செயப்பாட்டு வினை பற்றி ஆராய்கிறார். தன்வினை, பிறவினைகளைப் பற்றி ஆராய்கிறார். இத்தகைய பல நுண்ணியங்களை அவரது உரையில் காணலாம். உரை சொல்வார் பாட்டின் இயைபறிந்து சொல்ல வேண்டும் என்பது அவர் உரைக்கொள்கை. அத்தகைய  கொள்கையைப் பின்பற்றும் அவர், அதனைப் பின்பற்றாது எழுதப்படட உரைகளைப் பல இடங்களில் மறுத்துரைக்கின்றார். குறட்பாவில் எப்படியெல்லாம் அவர் இயைபு காண்கிறார் என்பதைச் சில எடுத்துக்காட்டுக்களால் அறியலாம்.

    • ‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்’ (643) என்னும் குறட்பாவில், ‘சொல் தகை அவாய்’ எனப் பிரித்து ‘சொல்லானது சில குணங்களை அவாவி’ எனப் பரிமேலழகர் உரையெழுதுகிறார். எழுதிச், சொல் அவாவும் அதாவது சொல்லுக்கு இருக்க வேண்டிய உயர்பண்புகளைப் பட்டியலிடுகிறார். பிறரெல்லாம் ‘கேட்டாரைப் பிணிப்பதாகிய தகையவாய்’ எனப் பன்மையாக்கி உரை கூறினர். பரிமேலழகர் அப்படி ‘தகையவாய்’ எனப் பன்மையாகக் கொண்டால் ‘அப்பன்மை ‘மொழிவது’ என்னும் ஒருமையோடு இயையவில்லை’ என இயைபின்மை காட்டுகிறார்.
    • ‘எற்று? என்று இரங்குவ செய்யற்க’ (655) என்னும் குறட்பாவிற்குப் ‘பின்னால் நினைந்து வருந்தும் செயல்களைச் செய்யாதொழிக, மயங்கிச் செய்தால், அங்ஙனம் நினைந்து வருந்தற்க’ என்று பரிமேலழகர் உரைகண்டார். பிறரெல்லாம் ‘நினைந்து வருந்தும் செயல்களைச் செய்யாதொழிக மயங்கிச் செய்தால் தொடர்ந்து செய்யாது ஒழிக’ என உரை கண்டார். பரிமேலழகர், தவறுகளைச் செய்து விட்டு வருந்துவதுதான் இயல்பாதலால் அத்தவறுகளைத் தொடர்ந்து செய்யாதிருப்பது முந்தைய கருத்தோடு இயையவில்லை என்பார் ‘பின் தொடர்தற்குச் செய்வானாயின் அவைபோல்வனவும் செய்யாமை நன்று” எனப் பிறரெல்லாம் இயைபற உரைத்தார்’ என இயைபின்மை சுட்டுவார்.
    • “ஊறொரால் உற்றபின் ஒல்காமை’’ (662) என்னும் தொடருக்குப் பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும் தெய்வத்தான் பழுதுபட்டவழி அதற்குத் தளராமையும் ஆகிய இரண்டும்’ எனப் பரிமேலழகர் உரைகண்டார். பிறரெல்லாம், ‘ஊறொரார் எனப் பாடம் ஓதி உரைகண்டார். ‘ஊறொரால்’ என்பதும் ‘ஒல்காமை’ என்பதும் இணைந்து இரண்டு என்னும் செவ்வெண்ணோடு பொருந்தியது. ‘ஊறொரார்’ என்னும் உயர்திணைப் பன்மை என்றால் பின்வரும் சொல் ஒல்கார் என்றிருந்தால் சரி. அது ‘ஒல்காமை’ என இருப்பதால் அதனோடும் பொருந்தாது. மேலும் செவ்வெண்ணும் பொருந்தாது. “இதனை ஊறொரார் எனப் பாடம் ஓதுவாரும் உளர். “அஃது ஒல்காமை என்னும் எண்ணோடும் இரண்டு என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்திலர்” என இயைபின்மை காட்டுவார்.
    • “அங்கணத்துள் உக்க அமிழ்து” (720) எனத் தொடங்கும் குறட்பாவில் அல்லினத்தார் முன் எதனையும் சொல்லற்க, அவ்வாறு சொல்லப்படும் சொல் தூய்மையற்ற முற்றத்தின்கண் உக்க அமிழ்து’ என உரையெழுதினார். பிறரெல்லாம் எதனையும் சொல்லற்க அது தூயதல்லாத முற்றத்தின்கண் அமிழ்தினைக் கொட்டியதுபோல’ என்று உரையெழுதினார். ‘உக்கப்பட்ட அமிழ்து’ என்பது பொருளுவமை. ‘அமிழ்து உக்கினாற் போல என்றால் அது வினையுவமை. ‘பிறரெல்லாம் ‘கொளல்’ என்பதைத் தொழிற்பெயராக்கி உரைத்தார். அவர் அத்தொழில் அமிழ்து என்னும் பொருளுவமையோடு இணையாமை நோக்கிற்றிலர்” என இயைபின்மை சுட்டுவார்.
    • “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்” (926) என்னும் குறட்பாவிற்கு உறங்கினார் செத்தாரின் வேற்றுமை இல்லாதது போலக், கள்ளுண்பார் நஞ்சுண்பாரினும் வேறல்லர் என்று உரை காண்கிறார். பிறரெல்லாம் நிரல்நிறையாக்கிப் பொருள் உரைப்பர். “அதிகாரப் பொருள் பின்னதாயிருக்க, யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்த்து ஈண்டுக் கூறல் பயனின்றாகலானும் சொற்கிடக்கை நிரல்நிறைக்கு ஏலாமையானும் அஃது உரையன்மை அறிக” என்று அணியின் இயைபின்மை சுட்டுவார்.

    இவ்வாறு குறட்பாவின் எல்லாவகையான இடுக்குகளிலும் நுட்பமாகப் பொருத்தப்பாட்டைக் காணும் இயல்பு ஏனைய உரையாசிரியர்களின் உரைகளில் காணப்படுவதாகத் தெரியவில்லை. இந்த நுண்ணோக்குத்தான் அவருரையின் தனிச்சிறப்பாகவும் கொள்ளப்படுகிறது.

    பரிமேலழகரின் உரையருமை

    • ‘அறம் அன்பில்லாத உயிர்களைக் காயும்’ என்றும், ‘அன்பில்லாத உயிர் தளிர்க்காது’ என்றும் ‘அன்பில்லாதார்க்கு உடம்பு எலும்பினைத் தோலால் போர்த்தது போலாம்’ என்றும் முன்பின்னாக அன்பின் பேராற்றலையும் தேவையையும் கூறிய திருவள்ளுவர் நிறைவு செய்தற்பொருட்டு அன்பில்லாத நிலையில் புறத்துறுப்பால் பயனில்லை என்பதையும் வலியுறுத்துகிறார். எனவேதான் அன்புடைமை என்னும் அதிகாரத்துள் 77, 78, 79, 80 ஆகிய நான்கு குறட்பாக்களையும் ஓரலகாகக் கொண்டு ‘இவை நான்கு பாட்டானும் அன்பில் இல்வழிப் படும் குற்றம்” கூறப்பட்டது’ எனப் பரிமேலழகர் உரையெழுதுகிறார்.
    • உடம்புக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., வாய்க்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., கண்ணுக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., மூக்குக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., செவிக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., இவ்வாறு ஐம்புலன்களுக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லாதபோது அவற்றைப் புறத்துறுப்புக்கள் எனக் கொள்வது பொருந்தாது என அவ்வுரையின் இயைபின்மை கூறி, இல்லறத்தில் இடம், பொருள், ஏவல் என்னும் புறத்துறுப்புக்கள் துணைக்கருவிகளாயினும் உயிர்த்துடிப்பாகிய அன்போடு இணைந்து செயல்பட்டாலே இல்லறப் பயனாகிய அறம் நிறைவுறும் என்பது அவர் கருத்து.

    நிறைவுரை

    கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசருக்குப் பரிமேலழகர் காலத்தால் முந்தியவராயினும் பிந்தியவராயினும் இந்தக் குறட்பாவுக்குப் பரிமேலழகர் எழுதிய கருத்தினை அப்படியே உட்கொண்டு,

    “இல்லானுக்கு அன்பு இடம் பொருள் ஏவல் மற்று
    எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும்? – நல்லாய்!
    மொழியிலார்க்கு ஏது முதுநூல்? தெரியும்
    விழியிலார்க்கு ஏது விளக்கு?”  (நன்னெறி15)

    என்னும் வெண்பாவில் ‘நூலுக்கு மொழியும் ஒளிக்கு விழியும் போல’ இல்லறத்தானுக்கு அன்பு என உவம அளவையால் விளக்கிக் காட்டியிருக்கும் சதுரப்பாடு நோக்கத்தக்கது. “கொடுக்கணுங்கற மனசு வேணுமில்ல” என்ற வழக்கில் புறத்துறுப்புக்களின் அமைவிடம் நோக்குக. புறத்துறுப்புக்கள் என்பன ‘மெய், வாய், கண், மூக்கு, செவி என்பதாகக் கொள்ளாமல் “இடம், பொருள், ஏவல் என்பனவே என அவர் எழுதிய நுட்பமே இக்குறட்பாவின் உரையருமையாகும். இவ்வாறு படைப்பின் நுட்பம் காண்பதன் மூலம் படைப்பாளனின் உள்ளம் காண முயல்வது பரிமேலழகருக்கு இயல்பு என்பதை இதனால் அறியலாம்.

    (தொடரும்)

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 3

    பரிமேலழகர் உரைத் திறன் – 3

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உலகின் காரணம் கடவுளா? கடவுளின் காரியம் உலகமா?

    முன்னுரை

    ‘பார்வை’, ‘நோக்கு’ இவற்றிடையே வேறுபாடு உண்டு. ‘பார்வை’ என்பதைத் திருவள்ளுவர் ‘ஏதிலார் போலப் பொதுநோக்கு’ என்று விளக்கிக் காட்டுவார். கண்ணின் வினையாக மட்டும் நிகழும்போது அது பார்வை. மனமும் அறிவும் இணைந்து கண்வழிச் செயல்படுவது நோக்கு. இதனையும் திருவள்ளுவர் ‘குறிக்கொண்டு நோக்குதல்’ என்னும் தொடரால் குறிப்பர். பரிமேலழகர் அத்தனைக் குறட்பாக்களையும் படித்து அல்லது பார்த்து உரையெழுதாமல் ‘நோக்கியே’ உரையெழுதியிருக்கிறார். இதனை நூலின் முதற் குறட்பா உரையிலேயே அறிய முடியும். “திருவள்ளுவர் என்ன கருதி இப்படி எழுதியிருக்கிறார்?” என்னும் பெருங்கவலை கொண்டவர் பரிமேலழகர். அப்படி அவர் கவலைப்பட்டு உரையெழுதிய குறட்பாக்களில் ஒன்றின் உரையருமையை இம்மூன்றாவது கட்டுரையில் காணலாம்.

    திறனானறியும் குறட்பாவும் உரையும்

    திருக்குறளின் முதற்பால் அறத்துப்பால். அதன் முதற்பகுதி பாயிரம். நான்கு அதிகாரங்களைக் கொண்ட இந்தப் பாயிரத்தின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. கடவுள் வாழ்த்தின் முதற் குறள்,

    “அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு”

    என்பதாகும். இதற்குப் பரிமேலழகர்,

    • “எழுத்தெல்லாம் அகரம் முதல” — எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலை உடையன
    • “உலகு ஆதி பகவன் முதற்று” — உலகம் ஆதி பகவனாகிய முதலை உடைத்து

    எனப் பொழிப்புரை எழுதியிருக்கிறார். குறட்பாவின் கிடக்கை நிலை மாறாது  உரைநடைப் பாங்கிற்காகச் சொற்களை மட்டும் முன்பின்னாக மாற்றிப்  பொழிப்புரை கண்டிருக்கிறார். இந்தப் பொழிப்புரைக்கான விளக்கவுரை பின்னாலே இப்படி அமைந்திருக்கிறது.

    பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

    “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தானேயன்றி நாதமாத்திரையாகிய இயல்பால் பிறத்தலானும் ஆதிபகவற்குத் தலைமை, செயற்கை உணர்வானன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கேயன்றி வடமொழி எழுத்திற்கும் முதலாதல் நோக்கி ‘எல்லாம்’ என்றார். ‘ஆதிபகவன்’ என்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. ‘உலகு’ என்பது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின்மேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதிபகன் என்பது கருத்தாகக் கொள்க! ஏகாரம் தேற்றத்தின் கண் வந்தது. இப்பாட்டால் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.

    விளக்கவுரையில் காணப்படும் உரையருமை

    இனிப் பரிமேலழகர் எழுதியிருக்கும் விளக்கவுரையை ஒவ்வொரு தொடரையும் சிந்தனைக்குட்படுத்தினால் அவ்வுரை எழுதுவதற்கு அவர் எவ்வளவு காலம் தம் சிந்தனையைச் செலவழித்திருப்பார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். தொடராய்வு தொடர்கிறது.

    1. “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை” என்று எழுதுகிறார். உவமத்தையும் பொருளையும் தனித்தனிச் சுட்டி இரண்டையும் இணைக்கின்ற உவமச்சொல் இல்லாத நிலைக்கு. ‘எடுத்துக்காட்டுவமை’ என்பது அனைவருக்கும் தெரிந்த இலக்கண உண்மையே!. ஆனால் இந்த எடுத்துக்காட்டுக்கான காரணங்களைப் பரிமேலழகர் ஆராய்கிறார்.  அகரத்தை ஏன் உவமமாக்க வேண்டும்? அகரத்திற்கு ஏன் தலைமைப் பதவி? அகரம் எப்படித் தலைமையாகும்? எழுத்துக்களுக்குத் தலையெழுத்தாய் இருப்பதால் அகரம் உவமமாயிற்று. எப்படித் தலைமையெழுத்தாய் இருக்கிறது? எல்லா எழுத்தொலிகளுக்குள்ளும் ஊடுருவி நிற்பதால் அது தலைமையாயிற்று. இந்த நுட்பங்களையெல்லாம் ‘இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை’ என்னும் ஒரே தொடரால் குறிக்கிறார் பரிமேலழகர்.
    2. அந்தத் தலைமைப் பண்பை விளக்குகிறார். எழுத்துக்களுக்கு அகரமாகிய ஒலி தலைமை தாங்குகிறது. உலகத்திற்கு ஆதியாகிய பகவன் தலைமை தாங்குகிறார் என்பதாம். பொழிப்பில் ‘முதல்’ என்று எழுதி விளக்கத்தில் ‘தலைமை’ என்று தாம் எழுதிய விளக்கத்திற்கான காரணத்தை அவரே பதிவு செய்கிறார்.
    3. “அகரத்திற்குத் தலைமை விகாரத்தானேயன்றி நாதமாத்திரையாகிய இயல்பால் பிறத்தலானும்” என அகரத்தின் தலைமைக்கான காரணத்தைத் தொடர்ந்து விளக்குகிறார். திருவள்ளுவர் கூறும் ‘அகரத் தலைமை’ வரிவடிவத்தை நோக்கியதன்று. ஒலி வடிவத்தை நோக்கியது. ஒலியை ‘நாதம்’ என்பது மரபு. ‘அ’ என்னும் வரிவடிவம் முதல் எழுத்தாக எழுதப்படுவதால் அதனைத் தலையெழுத்தாக எண்ணிவிடக் கூடாதல்லவா? அதனாலேதான் அகரம் என்பது ஒலியைக் (நாதமாத்திரை) குறித்தது என்று எழுதுகிறார்.
    4. “ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க” என்று எழுதுகிறார். உவமத்தின் சிறப்பினை விளக்கிய பரிமேலழகர் பொருளின் தலைமைச் சிறப்பையும் அதற்கான காரணத்தையும் இந்தத் தொடரில் விளக்குகிறார். வரிவடிவம் செயற்கை. நாத வடிவம் இயற்கை. அகரத்திற்குத் தலைமை நாதவடிவினால் எல்லா எழுத்துக்கள் உள்ளும் கலந்து நிற்பது. இறைவன் உலக உயிர்களை அறிவது செயற்கை உணர்வால் அன்று. இயற்கை உணர்வால் முற்றும் அறிகின்ற பேராற்றல் உடையவன். ‘காத்தும் படைத்தும் கரந்தும்’ என்பர் அடியார். தனித்தும் கலந்து நிற்பது இறையியல்பு. ‘ஏகன் அநேகன்’ என்பது திருவாசகம்.
    5. ‘ஆதிபகவன் என்னும் இருபெயரோட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு” என்று எழுதுகிறார். ஆதிபகவன் என்பது தமிழாயின் ஒற்று மிகுந்திருக்க வேண்டும். மிகாமையின் அது வடமொழியாயிற்று எனத் தம் இலக்கணப் புலமையைக் காட்டுகிறார். ஆதிபகவன் ஒரு சொல் என்பது கருத்து.
    6. “தமிழ் எழுத்திற்கேயன்றி வடமொழி எழுத்திற்கும் முதலாதல் நோக்கி எல்லாம் என்றார்” என்று தமது கூரிய நோக்கினைப் புலப்படுத்துகிறார். எழுத்து அகர முதல என்றாலே போதும். “எழுத்தெல்லாம் அகர முதல” எனச் சொல்வானேன்? என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு அவர் காலத்தில் தமிழோடு ஒருங்குவைத்து எண்ணப்பட்ட வடமொழியையும் உட்கொண்டு எழுதுகிறார். இங்கே ஒரு கருத்து சிந்தித்தற்குரியது. வாயைத் திறந்தாலே வரும் ஒலி அகரமேயாதலின் உலகின் எல்லா மொழிக்கும் அவ்வொலி தலைமையொலி என்பது உணரப்படவேண்டும். இன்றைக்குப் பரிமேலழகர் உரையெழுதியிருந்தால் அகரவொலியை உலகின் அனைத்து மொழிக்கும் தலைமையொலி என்றுதான் எழுதியிருப்பார். (இது கடடுரையாளர் அனுமானம்.)
    7. ‘உலகு’ என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது” என எழுதுகிறார்.  தமிழில் ‘உலகு’ என்னும் சொல் ஆகுபெயராகாது. உலகு என்பது பலபொருள் ஒருசொல். ‘உலகு சிரித்தது’ என்னும்போது அது மக்களைக் குறிக்கும். ‘உலகு செழித்தது’ என்கிறபோது அது மண்ணைக் குறிக்கும். இந்த விளக்கத்தைக் “காலம் உலகம்” என்னும் தொல்காப்பியச் சொல்லதிகார நூற்பா ஆராய்கிறது. பரிமேலழகர் எந்த இடத்திலும் உலகு என்பதை ஆகுபெயராக்கி உரையெழுதினார் இலர். ‘புல்லாகிப் பூடாகி’ எனவரும் அனைத்துயிர்களுக்கும் இறைவன் முதலானவன் என்பது கருத்து.
    8. ‘ஏகாரம் தேற்றத்தின் கண் வந்தது என்று எழுதுகிறார்.
    9. “இப்பாட்டால் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது”. என எழுதுகிறார். முதற்கடவுள் என்பதனால் இரண்டாவது, மூன்றாவது கடவுள் இருப்பதாகப் பொருளில்லை. சொரூபம், அருவம், அருவுருவம், உருவம் என இறையுணர்நிலை நான்கு என்பது ஆன்றோர் கருத்து. ‘சொரூபம்’ என்பது அறிவுக்கும் நினைவுக்கும் உணர்வுக்கும் எட்டாத நிலை. ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ என்பது பெரியபுராணம். அந்த நிலைக்கு இறைவனின் தலைநிலை அல்லது முதல் நிலை என்பது பெயர். அந்த நிலையை அறிவதற்குப் படிநிலைகள் பல உள. சொரூப நிலையில் உள்ள கடவுளையே முதற்கடவுள் என்று பரிமேலழகர் கூறுகிறார். விரிக்கின் பெருகும்.

    பரிமேலழகர் உரை அருமை

    இந்தக் குறட்பாவின் கிடக்கைநிலை உரை மேலே சொல்லப்பட்டது.  “எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன. இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது” என்பதே அந்நிலையில் பெறப்படும் பொருள். மேலெழுந்தவாரியாக நோக்கினால் ‘இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது’ என்னுந் தொடர் சரியாக அமைந்திருப்பதுபோல் தோன்றும். தோன்றினால் என்ன ஆகும்? உலகம் முதலில் தோன்றியதாகவும் அவ்வாறு முன்னர்த் தோன்றிய உலகத்திற்கு இறைவன் முதலாக இருக்கிறான் என்பதுபோல் ஆகும்? அப்படி ஆனால் என்ன தவறு? உலகம் முன்னதாகவும் இறைவன் பின்னதாகவும் ஆக்கப்படுவான்! இறைவன்தான் உலக உயிர்களைப் படைத்தவனேயன்றி உலக உயிர்கள் இறைவனைப் படைக்கவில்லை. இந்தக் கருத்து கிடக்கைநிலைப் பொருளில் கிட்டாது. கிட்டாதாயின் என்ன செய்ய வேண்டும்? “இறைவனைக் காண முடியாது. ஆனால் அவன் படைத்த உலகத்தைக் காணலாம். எனவே கண்ணால் காணக் கூடிய உலகத்தைக் காட்டி “இதோ உலகம்! இந்த உலகம் உண்மையானால் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா? ஆமாம்! அவன்தான் இறைவன். எனவே உலகத்துக்கு முதன்மை இறைவன் எனத் திருவள்ளுவர் கூறியிருந்தாலும் இறைவனால் படைக்கப்பட்டதுதான் உலகம்! எனவே இறைவன் ஒருவன் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்”. இந்த விளக்கங்களையெல்லாம் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

    “காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின்மேல் வைத்துக் (திருவள்ளுவர்) கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க”

    உலகத்தை முன்னிறுத்தி இறைவனுடைய இருப்பினைத் திருவள்ளுவர் குறள் உணர்த்தியது. பரிமேலழகரோ அதனை மாற்றி இறைவனை முன்னிறுத்தி அவனால் படைக்கப்பட்டதுதான் இவ்வுலகம்! எனவே இறைவனது உண்மையை உணர்க என்று விளக்கிக் காட்டுகிறார். காட்டவே அகரம் எழுத்துக்களுக்குத் தலைமை. ஆண்டவன் உலகத்திற்குத் தலைமை என்னும் நிரல் பொருள் புலப்படுவது காண்க.

    பரிமேலழகரைத் தொடர்ந்த நச்சினார்க்கினியர்

    இலக்கிய உரையாசிரியர்களில் பரிமேலழகருக்கு இணையாகவும் எண்ணிக்கையில் பெருமளவு இலக்கியங்களுக்கு உரையெழுதியவராகவும் கருதப்படுகிறவர் நச்சினார்க்கினியர். இலக்கிய இலக்கணங்களுக்கு உரையெழுதி உரைமுடி கண்டவர். அவர்,

    • ‘எழுத்தெனப்படுப’ எனத் தொடங்கும் தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவின் விளக்கவுரையில் “அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றார் என்பது உணர்த்தற்கு ‘னகர இறுவாய்’ என்றார் என எழுதுகிறார். “அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்கும்” என்னுந் தொடர் பரிமேலழகரின் “தமிழ் எழுத்திற்கேயன்றி வடமொழி எழுத்திற்கும் முதலாதல் நோக்கி” என்னும் உரைத்தொடரை அப்படியே உள்வாங்கி யமைந்திருப்பது காண்க.
    • “மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்” என்னும் தொல்காப்பிய நூற்பா உரையில் அவருடைய விளக்கவுரை இப்படி அமைந்திருக்கிறது. “இறைவன் இயங்கு திணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாய் நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. ‘அகர முதல’ என்னும் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்கள் எல்லாம் அதுபோல இறைவனாகிய முதலை உடையது உலகம் என வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும் கண்ணன் எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே எனக் கூறியவாற்றானும் பிற நூல்களானும் உணர்க”

    என்று எழுதிக்காட்டும் நச்சினார்க்கினியர் “இறைவனாகிய முதலை உடையது உலகம்” என்னும் தொடரில் திருக்குறளின் கிடக்கைநிலை உரையைக் கருத்திற் கொள்ளாது பரிமேலழகர் உரைவிளக்கத்தைப் போற்றிக் கொள்கிறார். இதனால் பழந்தமிழ் உரையாசிரியர்கள் ஒருவரையொருவர் மதித்துப் போற்றி வந்த புலமை மாண்பு வெளிப்படுவதைக் காணலாம்.

    நிறைவுரை

    ‘உலகம் இருப்பதால் இறைவன்’ என்னும் அனுமானத்தால் ஏற்படும் மயக்கத்தைத் தம் புலமையால் மாற்றி ‘உலகத்திற்கு முதல்வன் இறைவன்’ என்னும் உண்மையைக் கண்டறிந்து கூறியதே இந்தக் குறட்பாவில் அழகரின் உரையருமை எனலாம்.

    (தொடரும்)

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 2

    பரிமேலழகர் உரைத் திறன் – 2

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    புழுவைத் தேடுவதா வெயிலின் வேலை?  

    முன்னுரை

    உரைகாண்பதில் இரண்டு வகை உண்டு. செய்யுளில் உள்ள சொற்களுக்கு மட்டும் உரைசொல்லி முடிப்பது. சொன்னவனின் உள்ளத்தை அவன் சொற்களாலேயே அறிய முயல்வது. பரிமேலழகர் திருவள்ளுவரின் உள்ளம் அறிய முயன்றவர். திருக்குறள் முழுமையும் கற்றுணர ஒரு பிறவி போதாது என்பர் சான்றோர். அதற்கான பரிமேலழகர் உரையும் அத்தகையதே. திருக்குறள் காலங்கடந்து நிலைபெற்றிருப்பதற்கு என்ன காரணமோ அதே காரணந்தான் பரிமேலழகர் உரை நிலைபெற்றிருப்பதற்கும். திருவள்ளுவர் வாழ்வியலுக்கு நூலெழுதியவர் என்றால் அந்த நூல் நிலைபெற தம் ஆழமான அகன்ற புலமையால் ‘உரைமாளிகை’ அமைத்துத் தந்தவர் பரிமேலழகர் எனலாம். அன்னாருடைய ஆழமான புலமை வெளிப்படும் பல இடங்களில் ஓரிடத்தை இவ்விரண்டாவது கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

    திறனறியப்படும் குறளும் உரையும்

    திருக்குறளில் எட்டாவது அதிகாரமாகிய அன்புடைமை என்னும் அதிகாரத்தின் ஏழாவது குறட்பாவாக இருப்பது இது.

    “என்பிலதனை வெயில் போலக் காயுமே
    அன்பி லதனை அறம்”  77

    சொல்லுக்குச் சொல் பொருள் கூறி விளக்குவது சொற்பொருள் விளக்கம். வடமொழியில் பதசாரம் என்பர். பதம் என்றால் சொல். சாரம் என்றால் பொருள். பேச்சில் சாரமில்லையே என்பது உலக வழக்கு. “சாரமற்ற வார்த்தை நாம் சரிதை சொல்லுகின்றோம்” என்பார் பாரதியார். பரிமேலழகர் பதசாரம் சொல்லுவதை ஓர் உரைநெறியாகப் பின்பற்றவில்லை. கருத்திற்கு இசைய பொருளமைதியை முன்னர்க் கூறிப் பின் அதற்கான விளக்கத்தை விளக்கவுரையில் கூறுவார். இந்த விளக்கம் எதிர்வரும் கட்டுரைகளுக்கும் பொருந்தும். இவ்வாறு கூறுவதற்குப் பொழிப்பு அல்லது பொழிப்புரை என்று பெயர்.

    • என்பு இலதனை வெயில் போலக் காயுமே –- என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக் காயும்
    • அன்பிலதனை அறம் — அன்பில்லாத உயிரை அறக்கடவுள்

    இது மேற்கண்ட பாடலுக்குப் பரிமேலழகர் தந்திருக்கும் பொழிப்புரை.

    உரைநடைப் பாங்கில் (PROSE ORDER) பரிமேலழகர் பொழிப்புரை

    மேற்கண்ட பொழிப்புரையை எல்லார்க்கும் புரிதல் வேண்டி எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்னுமாறு உரைநடையில் இப்படி அமைக்கலாம்.

     வெயில் என்பு இல்லாத உடம்பை காய்ந்தாற்போல
    அறக்கடவுள் அன்பில்லாத உயிரைக் காயும்

    குறட்பாவில் சொல்லப்படாது பொழிப்புரையில் காணப்படும் சொற்கள் மூன்று. ‘என்பிலது’ எனக் குறட்பாவில் இருக்க, பொழிப்பில் ‘உடம்பு’ என இருக்கிறது. ‘அன்பிலது’ எனக் குறட்பாவில் இருக்க, ‘உயிரை’ என இருக்கிறது. ‘அறம்’ என இருக்க, ‘அறக்கடவுள்’ என இருக்கிறது. பின்னால் அவர் எழுதப்போகும் விளக்கவுரை பொழிப்புரையிலிருந்தே தொடங்கிவிடுவதைக் காணமுடிகிறது.

    விளக்கவுரை

    பரிமேலழகர் தரும் இத்தகைய விளக்கங்கள் குறிப்பிட்ட குறட்பாவிற்கு அவரே எழுதிய பொழிப்புரைகளுக்கானவை. அதனால்தான் அவருடைய விளக்கவுரை பொழிப்புரையிலேயே தொடங்கிவிடுகிறது எனக் குறிக்கப்பட்டது.

    “என்பிலது’ என்றதனான் ‘உடம்பு’ என்பதூஉம், ‘அன்பிலது’ என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம், வெறுப்பின்றி எங்கும் ஒரு தன்மைத்து ஆகிய வெயிலின் முன் என்பில்லது தன் இயல்பால் சென்று கெடுமாறு போல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின் முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம். அதனைக் ‘காயும்’ என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார். அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு “அல்லவை செய்தாற்கு அறம் கூற்றம்” (நான்மணிக்கடிகை 83)  எனப் பிறரும் கூறினார்.

    மேற்கண்ட பகுதி மேற்காணும் குறட்பாவிற்குப் பரிமேலழகர் எழுதிய பொழிப்புக்கு அவரே தந்திருக்கும் விளக்கவுரை.

    பரிமேலழகர் உரையாழம்

    • குறட்பாவில் ‘என்பிலது’ என்றே இருக்க பரிமேலழகர் ‘உடம்பு’ என உரை கண்டதற்கான காரணத்தைச் சொல்கிறார். எலும்பு உடலுக்குள்ளேதான் இருக்கும். தனியாக எலும்பு செயல்படாது. இருக்கவும் இயலாது. எனவே ‘எலும்பு இல்லாதது’ என்பதனான் உடம்பு என்பதாக உணர்ந்து எழுதுகிறார்.  ‘என்பு தோல் போர்த்த உடம்பு’ எனப் பின்னும் கூறுவார் வள்ளுவர்.
    • அதுபோலவே ‘அன்பிலது’ என்றே இருக்க பரிமேலழகர் ‘உயிர்’ என உரைகண்டதற்கான காரணத்தைச் சொல்கிறார். உயிருக்குத்தான் அன்பு. உடம்பு அன்பு காட்டாது. அன்பு உயிர்ப்பண்பு. எனவே உயிரது பண்பாகிய அன்பில்லாதது எனத் திருக்குறள் குறிப்பதால் வள்ளுவர் குறிக்க எண்ணியது ‘உயிர்’ என்பதாக உணர்ந்து எழுதுகிறார்.
    • எலும்பு உடம்போடு தொடர்புடையது. அன்பு உயிரோடு தொடர்புடையது. ஒருத்தி திலகம் இல்லாமல் வந்தாள் என்றால் ‘நெற்றியில்’ என்பது பெறப்படும் அல்லவா? ஒருவன் ‘செருப்பில்லாமல் வந்தான்’ என்றால் காலில் என்பது பெறப்படுமல்லவா?. அவைபோல!
    • இந்தப் பாட்டில் அமைந்துள்ள ‘வெயில் என்பிலதனைக் காயும்’ என்னும் தொடரில் ‘வெயில்’ எழுவாயாகவும் ‘என்பிலது’ செயப்படுபொருளாகவும் ‘காயும்’ என்பது வினைமுற்றாகவும் அமைகிறது. அப்படி அமைந்தால் என்ன பொருளாகும் என்றால் எலும்பில்லாத ‘உடம்பு இருக்கும் இடம் தேடிச் சென்று வெயில் அதனைக் காயும்’ என்பது போல என்றாகிவிடும். வெயில் தானாக நடந்து சென்று எலும்பில்லாத உடம்பினைத் (புழுவை) தேடுமா? வெயில் இருக்கும் இடம் தேடித்தான் புழுவந்து மடியும். அதுவும் தேடாது. சாவதற்கு அதற்கு விருப்பமா என்ன? தானாக வந்து வீழ்ந்து மடியும்.
    • அதுபோலவே அன்பில்லாத உயிர்களை அறக்கடவுள் தேடிச் சென்று அழிக்காது. அன்பில்லாத உயிர்கள் அறவலைப்பட்டு அழியும்.
    • இவ்வாறு இவர் உரைகாண்பதற்கான காரணத்தை மிகத் துல்லியமாகப் பதிவுசெய்திருப்பதைக் காணலாம். வெயிலுக்கும் அறத்திற்குமான பொதுப்பண்பைச் சுட்டுகிறார். அது என்ன பொதுப்பண்பு? “வெறுப்பின்றி எங்கும் ஒரு தன்மைத்து ஆகிய வெயில்” என உவமத்தின் பண்பை விளக்கியவர் ‘அத்தன்மைத்தாய’ என்னும் சுட்டினால் அறத்தினை விளக்குவதைக் காணலாம். எனவே வெயிலோ அறமோ தானாகச் சென்று எதனையும் யாரையும் அழிக்காது. அவையிருக்கும் இடம் நாடிவந்து பிற அழியும். காரணம் அவ்வாறு வந்து வீழ்வது அவற்றுக்கு இயல்பு. அவை வீழ்வதற்குக் காரணம் வெப்பமும் அறக்கடவுளும். வெப்பத்திற்கு இரண்டு இயல்புகள். ஒன்று வெளிச்சம்! இரண்டு வெப்பம்!. வெப்பம் இல்லாத வெளிச்சம் உலகில் கிடையாது. வெளிச்சத்தை நாடி வரும் எலும்பில்லாத புழு வெப்பம் தாங்காது மடியும் என்பது கருத்து. (இக்கட்டுரையில் ‘என்பிலது’ என்பதற்குப் ‘புழு’ என உரைகண்டவர் கட்டுரையாளர் ‘என்பில்லாதது’ அதுவேயாதலின்)
    • வெப்பமும் அறமும் செயல்படவில்லை என்றால் எலும்பு இல்லாத உடம்பு மடிவதற்கும் அன்பில்லாத உயிர்கள் மடிவதற்கும் அவற்றை எப்படிக் காரணமாக்க முடியும் என்றால் பின்னிரண்டும் மடிவதாகிய உண்மையைக் கொண்டு அறியலாம். அவை மடிவதற்கு இவை காரணம். அதனால்தான் அதனைக் “காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார் என்று எழுதுகிறார்.
    • அறமாகிய பண்பினைக் ‘அறக்கடவுள்’ என்று எழுதுகிறார். அவ்வாறு தான் எழுதியமைக்குச் சான்று காட்டுகிறார். அறமாகிய பண்பைக் கூற்றுவனாக உருவகம் செய்வது இலக்கிய மரபு என்பதற்காகக்,

    “கல்லா ஒருவற்குத் தம்வாயில் சொல் கூற்றம்!
    மெல்லிலை வாழைக்குத்தான் ஈன்ற காய் கூற்றம்
    அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம், கூற்றமே
    இல்லிருந்து தீதொழுகு வாள்”

    என்னும் நாண்மணிக்கடிகைப் பாடலை எடுத்துக்காட்டித் தம் உரைக்கு வலு சேர்க்கிறார் பரிமேலழகர்.

    பரிமேலழகரின் உரை அருமை

    ‘வலை வீசி மீன் பிடித்தல்’ என்பது ஒன்று. ‘விரித்த வலையில் மீன்கள் வந்து விழுவது’ என்பது மற்றொன்று. இது உலகியல். முன்னது சென்று பிடித்தல். பின்னது வந்து விழுதல். குறட்பா வெயில் அறத்தைக் காய்வதாகவும் அறக்கடவுள் உயிரைக் காய்வதாகவும் சொல்கிறது. இது சென்றுபிடிப்பதைப் போல் உள்ளது. பரிமேலழகர் தம் நுண்ணியத்தால் (இயல்பல்லாத) அதனை மாற்றுகிறார். வெயிலும் அறமும் விருப்பு வெறுப்பு அறியாதது. ஒரே தன்மையாய் இயங்கும். அவற்றின் அந்த நடுநிலை வலைப்பரப்பில் என்பிலதும் அன்பிலதும் வந்து வீழ்ந்து மடிவதுதான் உண்மை. இந்த உண்மையைக் கண்டறிந்து கூறியவர் பரிமேலழகர்.

    சரி. வெயிலிருக்கும் இடந்தேடி வந்து வீழ்வது என்பிலதாகிய அஃறிணைக்கு வேண்டுமானால் சரியாயிருக்கலாம். மனிதனாகிய உயர்திணைக்குப் பொருந்துமா? பொருந்தும். எப்படி? தன் மனைவி கண்ணகியோடு உயிர்பிழைக்கச் சென்ற கோவலன் எந்தத் தவறும் செய்யாமல் மதுரையில் கொலை செய்யப்படுகிறான். சிலப்பதிகாரக் காப்பியத்தில் பரவலாக வலியுறுத்தப்படுகிற ஊழ் அல்லது விதியை இளங்கோவடிகள் இங்கேயும் காட்டுகிறார். ஆனால் எப்படிக் காட்டுகிறார் தெரியுமா? விதி புகாரில் பிறந்த கோவலனுக்கு மதுரையில் வலைவிரித்துக் காத்திருந்ததாம்! இவன் சென்று அதில் மாட்டிக் கொண்டானாம்! அடிகள் எழுதுகிறார்.

    “தீவினை முதிர் வலைச் சென்று பட்டிருந்த
    கோவலன் தன்னைக் குறுகினன்” (2705 -2706)

    இந்தச் ‘சென்றுபடுதலைத்தான்’ திருவள்ளுவர் என்பிலதனுக்கும் அன்பிலதனுக்கும் வினையாக்கி அந்த வினையை வெயில் மேல் ஏற்றிக் கூறுகிறார்.

    நிறைவுரை

    திருவள்ளுவர் உவமத்திலும் பொருளிலும் வெயிலின் வினை, அறக்கடவுள் வினை எனக் கூறியவற்றைப் பரிமேலழகர் ஒட்டுமொத்தமாக ‘விதியின் வினை’ என மாற்றிக் காட்டுகிறார். இதுவே இந்தப் பாட்டுக்கான அவருடைய உரையில் காணப்படும் நுண்ணியமாகும்.

    (தொடரும்)

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 1

    பரிமேலழகர் உரைத் திறன் – 1

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    விலங்குகளும் வித்தகரும் ஒன்றா?

    முன்னுரை

    காலத்தால் முற்பட்டிருப்பது எப்படி பெருமையோ அப்படியே காலத்தால் பிற்பட்டிருப்பதுமாகும். தடந்தெரியாத் தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் தடங்காட்டினார் என்றால் பின்னாலே வந்த நச்சினார்க்கினியர் அத்தடத்தைச் செப்பனிடும் வாய்ப்பினைப் பெற்றார். பெறவே அப்படிச் செப்பனிடுவதற்குரிய பன்னூல் அறிவு பெறும் வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது. அதனால் தொல்காப்பியம், பத்துப்பாட்டு முதலிய நூல்கள்மேல் கூடுதல் ஒளி பாய்ந்தது. திருக்குறள் உரையாசிரியர்கள் பதின்மரில் இறுதியானவர் பரிமேலழகர். அதனால் தன்னுடைய முன்னோடிகள் எழுதிய ஒன்பது உரைகளையும் நோக்கியறியும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அவருக்குக் கிட்டிய அந்த வாய்ப்பு ஏனையோருக்குக் கிட்டவில்லை. அது இயற்கை நியதி. கிட்டிய அந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றைக்கும் நிமிர்ந்து நிற்கும் குன்றா(க) உரையெழுதினார் பரிமேலழகர். அன்னாருடைய உரையருமையைத் துளித் துளியாகப் பதிவிடுவது நலம் பயக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் இந்தத் தொடர் வடிவமைக்கப்படுகிறது.

    விளக்கத்திற்குரிய குறட்பாவும் அதிகாரப் பொருண்மையும்

    திருவள்ளுவர் மெய்யுணர்தலை அறத்துப்பால் துறவறவியலிலும் அறிவுடைமையைப் பொருட்பால் அரசியலிலும் வைத்த காரணம் பற்றிய ஆய்வு பின்னாளில் தொடரும். ‘கல்லாமை’ என்னும் அதிகாரத்தில் இறுதிக் குறட்பாவாக அமைந்த,

    “விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
    கற்றாரோடு ஏனை யவர்” 1

    என்னும் குறட்பாவின் உரை அருமையே இக்கட்டுரையில் விளக்கப்படுகிறது. பரிமேலழகரின் குறளுரையருமையைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் அதிகாரம் ‘கல்லாமை’ என்னும் பெயர் தாங்கியது என்பதை நோக்க வேண்டும். ‘கல்லாமை’ என்பது ‘கற்றலைச் செய்யாமை’ என்னும் தொழிலைக் குறித்தது. ஆனால் அவ்வதிகாரத்தில் அமைந்துள்ள பத்துக் குறட்பாக்களும் கல்லாமையாகிய தொழிலைப் பற்றிப் பேசாது கல்லாமையினால் வரும் இழிவை, அதாவது கல்வியில்லாதவன் சமுதாயத்தில் படும் மானக்கேடுகளையும் துன்பங்களையும் குறிப்பனவாகவே அமைந்துள்ளன. சுருங்கச் சொன்னால் அதிகாரத் தலைப்பு தொழிலைக் குறிப்பதாக அமைய அதிகாரப் பொருண்மையோ அதனால்வரும் இழிவுகளைத் தொகுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. அதாவது கல்லாமை கற்றலைச் செய்யாமையான் வரும் இழிவு என ஆகுபெயராய் நின்றது. குறட்பாக்களை முற்றோதிய பரிமேலழகர் இந்த நுட்பத்தைப் புரிந்து கொண்டு,

    “அஃதாவது (கல்லாமை) கற்றலைச் செய்யாமை என்றது, அதனின் ஆய இழிபினை” 2

    என்று சொல் விளக்கம் தருகிறார். அதிகாரத்தின் சொற்பொருள் விளக்கத்திலேயே பரிமேலழகரின் ‘உரைத்தாண்டவம்’ தொடங்கிவிடுவதைக் காணலாம்.

    பரிமேலழகரின் உரை விளக்கம்

    இந்தக் குறட்பாவைப் பரிமேலழகர் வழக்கம் போல் சீர்பிரித்து உரை கூறியிருக்கிறார். “விலங்கொடு மக்கள் அனையர்” என்னும் தொடருக்கு “விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையவர்” (அத்துணை தீமையுடையவர்) “இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்” என்னும் தொடருக்கு விளங்கிய நூலைக்கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்”3 என்னுமாறு அவருடைய சீர் பிரிப்பும் பொழிப்புரையும் அமைந்திருக்கிறது. பரிமேலழகர் தம் உரைப்பகுதியில் யாண்டும் பதவுரை கூறும் வழக்கமிலர் என்பது ஈண்டுக் குறிக்கத்தக்கது.

    கட்டுரையாளர் விளக்கம்

    மேற்கண்ட பத்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உரைப்பகுதியில் அடைப்புக்கள் கொடுக்கப்பட்டிருப்பது பரிமேலழகர் தாம் கொண்ட கருத்திற்கேற்ப வருவித்துக் கொண்ட தொடர். இதற்கான தொடர் குறட்பாவில் இல்லை. பாட்டில் உவமங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான கருத்தியலைத்தான் பரிமேலழகர் இப்படிப் பதிவிட்டிருக்கிறார்.

    குறட்பாவின் அமைப்புச் சிக்கல்

    குறட்பாவில் விலங்கொடு மக்களை ஒப்பிட்டிருக்கும் முதற்பகுதிக்கு இணையாகக் ‘கற்றாரோடு ஏனையவர்’ என்னும் மறுபகுதி தரப்பட்டுள்ளது. குறட்பாவில் உள்ள இவ்வண்ணமே நிரல்படுத்தினால் ‘விலங்கொடு’ என்பதற்கு ‘கற்றாரோடு’ என்பதும் ‘மக்கள்’ என்பதற்கு ‘ஏனையவர்’ (கல்லாதவர்) என்பதும் பொருத்தமாக்க வேண்டியதிருக்கும். அப்படி அமைத்தால் பாட்டின் பொருள் இப்படி அமைந்துவிடும்.

    “விலங்கொடு மக்கள் இணையாவார். (அதுபோலக்) கற்றவர் கல்லாதவரோடு இணையாவார்” என்று அமைந்து ‘கற்றவர் விலங்குகள்’ என்றும் ‘கல்லாதவர் மக்கள்’ என்றும் பொருள்படும்”

    இப்படி அமைந்தால் அதிகாரப் பொருண்மையாகிய கல்லாமையது இழிவு சுட்டாததோடு முரண்பட்ட பொருளையும் தந்துவிடும் என்பதை அறியலாம்.

    நிரல் நிறை – பொருள்கோளா? செய்யுளணியா?

    நிரல்நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என்னும் நான்குவகைப் பொருள்கோளை மட்டும் தொல்காப்பியம்,

    “அவற்றுள் நிரல்நிறை தானே
    வினையினும் பெயரினும் நினையத்தோன்றி
    சொல்வேறு நிலைஇப் பொருள் வேறு நிலையல்” 4

    என்னும் நூற்பாவில் ஆராய்ந்திருக்கிறது. செய்யுள் தொடர்பான இந்த ஆராய்ச்சி சொல்லதிகார எச்சவியலில் நிகழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனி, இதற்கு அடுத்த நிலையில் ஆற்றுநீர், மொழிமாற்று, நிரல்நிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறிபாப்பு, கொண்டு கூட்டு, அடிமறி மாற்று எனப் பொருள்கோளை எட்டாக ஆராய்ந்திருக்கும் நன்னூலார் ‘நிரல்’ என்பதைப்,

    “பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்
    வேறு நிரல்நிறீஇ முறையினும் எதிரினும்
    நேரும் பொருள்கோள் நிரனிறை நெறியே” 5

    என்னும் நூற்பாவில் ஆராய்ந்திருக்கிறது. இந்த நூற்பாவில் தான் ‘எதிர்நிரல் நிறை’ என்னும் தொடர் பயின்று வந்துள்ளது. இந்த எதிர்நிரல் நிறையணியை (கட்டுரைப் பொருள் விளக்கத்திற்கு மட்டுமாதலின் நேர்நிரல்நிறை விளக்கம் கட்டுரையாளரால் தவிர்க்கப்படுகிறது) விளக்க வந்த சங்கர நமசிவாயர்,

    “ஆடவர்கள் எவ்வாறு அகன்றொழிவார்? வெஃகாவும்
    பாடகமும் ஊரகமும்  பஞ்சரமா – நீடியமால்
    நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ
    மன்றுஆர் மதிற்கச்சி மாண்பு? 6

    என்னும் வெண்பாவை எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்த வெண்பாவில் வெஃகா, பாடகம், ஊரகம் என்னும் மூன்று பெயர்களும் நின்றான் இருந்தான் கிடந்தான் என முறைமாறி நிற்க, இவற்றை பெயர்ப்பயனிலைகளும் வினைப் பயனிலைகளுமாய் நின்ற எதிர் நிரல் நிறை என எழுதுகிறார். 7 வெஃகாவில் கிடந்தான், பாடகத்தில் இருந்தான், ஊரகத்தில் நின்றான் என்னும் பொருத்தத்தை இதே வெண்பாவை எடுத்துக்காட்டி உரையெழுதும் தண்டியலங்கார உரையாசிரியர் சுப்ரமணிய தேசிகர் ‘நிரலே நிறுத்தி மாற்றிப் பொருள் கொள்வது’ என எழுதியமைகிறார். தண்டியலங்காரத்தில் ‘எதிர் நிரல்நிறை’ அல்லது ‘மயக்க நிரல்நிறை’ என்னும் சொல்லாட்சிகள் பயிலப்பட்டிருப்பதாக அறியக் கூடவில்லை. இன்றியமையாக் கருத்து என்னவெனின் நன்னூலில் பொருள்கோள். தண்டியலங்காரத்தில் பொருளணி.

    யாப்பருங்கலக் காரிகை நூலாசிரியர், ‘பொருள்கோள்’ என ஒருசொல் உரைத்து ஒழிய, உரையாசிரியர் குணசாகரரோ “நிரல்நிறை மொழி மாற்றம், சுண்ணமொழி மாற்றம், அடிமொழி மாற்றம், பூட்டுவிற் பொருள்கோள், புனல்யாற்றுப் பொருள்கோள், அளைமறி பாப்புப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள், கொண்டு கூட்டுப் பொருள்கோள் என எட்டு வகையாக ஆராயப்படும் என உரையெழுதி,

    “நிரனிறை இரண்டு வகைப்படும் பெயர் நிரல் நிறை, வினை நிரல்நிறையும் என” 8

    அதன் வகைகளைப் பதிவு செய்திருக்கிறார். காரிகையாசிரியர் தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்களைப்போல இதுபற்றி ஏதும் கூறவில்லை. நிரல்நிறை அணிகளுக்கு எடுத்துக்காட்டுக்களைக் காட்டும் குணசாகரர்,

    “இனி முறை நிரல் நிறை, எதிர் நிரல் நிறை, மயக்க நிரல்நிறை, மிகையெண் நிரல்நிறை, குறையெண் நிரல் நிறை என்று கொள்வாரும் உளர்” 9

    என்றும் கூறுகிறார். இங்கே இவர் காட்டிய இத்தனை நிரல் நிறைகளுக்கும் பொதுவாக இரண்டு பாடல்களை மட்டும் காட்டியதோடு பொருள்கோளைப் பற்றிய குணசாகர் தனது விளக்கத்தை முடித்துக் கொள்கிறார்.

    அணியிலக்கணம் ஆராயும் வடமொழிச் சார்பு நூலான தண்டியலங்காரத்தில் நிரல்நிறை என்பது செய்யுளுக்கான பொருளணியாகவே கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது.

    “நிரல்நிறுத்து இயற்றுதல் நிரல் நிறை யணியே” 10

    என்னும் அணியிலக்கண நூற்பாவிற்கு உரையெழுதிய தேசிகர்,

    “சொல்லையும் பொருளையும் நேரே நிறுத்தி நேரே பொருள் கொள்வது நிரல் நிறையணி என்னும் அலங்காரமாம். நிரல் நிறுத்துதல் என்னாது ‘இயற்றுதல்’ என்றமையின் மொழிமாற்றிப் பொருள் கொள்வதூஉம் கொள்க” 11

    என்று நூற்பாவிற்கு உரையெழுதி அவ்விரண்டற்கும் பின்வரும் நேரிசை வெண்பாக்களை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

    “காரிகை மென்மொழியால் நோக்கால் கதிர்முலையால் வார்புருவத்தால் இடையால் வாய்த்தளிரால் – நேர் தொலைந்த
    கொல்லி வடிநெடுவேல் கோங்கரும்பு விற்கரும்பு
    வல்லி கவிர்மென் மலர்” 12

    என்னும் வெண்பாவில் மென்மொழி, நோக்கு, கதிர்முலை, புருவம், இடை, வாய் எனப் பொருட்களை முன்னர் நிறுத்தி, அவற்றுக்கு நிரலாகக் கொல்லிப்பண், நெடுவேல், கோங்கரும்பு, கரும்புவில், கொடி, மலர் என உவமங்களைப் பின்னர் நிறுத்தி, நேர் நிரல் நிறை என விளக்கம் தருகிறார்.13 அதாவது பொருளின் நிரலுக்கு ஏற்ப (வரிசைக்கு ஏற்ப) உவமங்களின் நிரலும் அமைவதால் இது நேர் நிரல் நிறை அணி என்று பெயராம். இனி,

    “ஆடவர்கள் எவ்வாறு அகன்றொழிவார்? வெஃகாவும்
    பாடகமும் ஊரகமும்  பஞ்சரமா – நீடியமால்
    நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ
    மன்றுஆர் மதிற்கச்சி மாண்பு?”14

    என்னும் (சங்கர நமசிவாயர் காட்டிய அதே) வெண்பாவில் வெஃகா, பாடகம், ஊரகம் என்னும் காஞ்சித் திருப்பதிகளில் வீற்றிருக்கும் பெருமாளின்  கோலங்கள் நின்றான், இருந்தான், கிடந்தான் எனக் கூறப்பட்டுள்ளன. இது முந்தைய திருப்பதிகளில் எழுந்தருளியிருக்கும் கோலங்களுக்கு முரணானது. இவை வெஃகாவில் கிடந்தான், பாடகத்தில் இருந்தான், ஊரகத்தில் நின்றான் என இருந்திருக்க வேண்டும். இவ்வாறு சொற்களை மாற்றி நிரலாக வைத்துப் பொருள் காண்பதற்கு ‘மொழிமாற்றிப் பொருள் கொள்வது’ என உரையாசிரியர் தேசிகர் எழுதுகிறார்.

    தண்டியலங்கார உரை மயக்கம்

    தண்டியலங்காரம் அணியிலக்கணம் கூறும் நூல் என்பது தெரியும். தலைப்பிலும் பொழிப்புரையிலும் அணி, அலங்காரம் என்னும் சொற்கள் பயின்று வந்துள்ளன. சொற்களை மாற்றி உரைகாண்கையில், ‘மொழிமாற்றிப்பொருள் கொள்வதூஉம் கொள்க’ 15 என்னும் குறிப்போடு அமைந்துவிடுகிறதேயன்றி அதற்கொரு அணிப்பெயர் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இதனால் தண்டியலங்காரத்தைப் பொருத்தவரையில் ‘நிரல்நிறை’ என்பது ஓர் அணிவகை எனவும் அது நிரலாகவும் மாறுபட்டும் அமையும் என்பதுமாகிய இரண்டு கருத்துக்கள் பெறப்படுகின்றன. மயக்க நிரல்நிறை அணி பற்றிய அல்லது பொருள்கோள் பற்றிய எந்தக் கருத்தினையும் தண்டியலங்காரத்தினின்றும் பெற இயலவில்லை.

    நிரல்நிறை அணி பற்றிய சில வரையறைகள்

    தொல்காப்பியம், நன்னூல், காரிகை, தண்டியலங்காரம் ஆகிய நூல்களிலிருந்து கிட்டிய மேற்கண்ட தரவுகளால் பொருள்கோள் அல்லது அணி பற்றிய பின்வரும் கருத்துக்கள் வரையறுக்கப்படுகின்றன.

    • தொல்காப்பியம் நான்குவகைப் பொருள்கோளை மட்டும் ஆராய்கிறது. அணியிலக்கண ஆராய்ச்சி அங்கே இல்லை.
    • நன்னூல் ஒன்பது வகையாகப் பொருள்கோளை ஆராய்ந்திருக்கிறது.
    • காரிகையாசிரியர் ‘பொருள்கோள்’ என ஒரு சொல்லை மட்டும் குறித்து அணி பற்றி ஏதும் கூறாத நிலையில் உரையாசிரியர் குணசாகரர் ‘பொருள்கோள்’ என்பதற்கான விளக்கத்தை எட்டு வகையில் ஆராய்ந்திருக்கிறார்.
    • தண்டியலங்காரத்தில் பொருள்கோளைப் பற்றி ஏதுமில்லை. உரையாசிரியர் நிரல் நிறையணியை இரண்டாகப் பகுத்தாராய்ந்திருப்பதோடு அது நிறைவடைகிறது.
    • மயக்க நிரல்நிறை என்பது பற்றிய குறிப்போ விளக்கமோ மேற்கண்ட எந்த நூல்களிலும் எந்தப் பகுதியிலும் ஆராயப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

    இவற்றிலிருந்து ‘நிரல் நிறை’ என்பது பெரும்பாலும் பொருள்கோள்களில் ஒன்று என்பதும் அதனை அணியாகவும் அணியிலக்கணமுடையார் வரித்துக் கொள்கிறார்கள் என்பதும் மயக்க நிரல்நிறை பற்றிய எந்தக் குறிப்பையோ விளக்கத்தையோ இந்த நூல்களில் இருந்து பெறவியலவில்லை என்பதும் பெறப்படுகின்றன.

    நிரல் நிறை அணி – திருவள்ளுவரும் அழகரும்

    பழந்தமிழ் இலக்கணம் வல்லார்க்கு அணியிலக்கணம் உடன்பாடன்று என்பதும் தொல்காப்பியம் அணியிலக்கணம் பற்றி ஏதும் கூறவில்லை என்பதும் உவமத்தையும் அது பொருட்பகுதியாகவே கருதியிருக்கிறது என்பதும் உரையாசிரியர்களில் சேனாவரையரே அவ்விலக்கணச் சுவையுடையார் என்பதும்  ஆய்வறிஞர்களால் கண்டு வெளிப்படுத்தப்பட்ட ஆய்வு முடிவுகளாகும்.  திருக்குறளுக்கும் இக்கொள்கை பொருந்தும். அணியிலக்கணப் பயன்பாடு பல்கிப் பெருகிய பிற்காலத்தைச் சார்ந்த உரையாசிரியர்கள் பழந்தமிழ் நூல்களை அணியழகோடு நோக்கி உரையெழுதுவதை ஓர் உரைநெறியாகக் கொண்டதன் காரணமாகப் பரிமேலழகரின் உரைகளில் அணியிலக்கணக் குறிப்புக்கள் விரவியுள்ளன. அந்த வகையில்,

    “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது” 16

    என்னும் குறட்பாவிற்கு,

    “ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்துண்டல் ஆகிய அறத்தினையும்  உடைத்தாயின் அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும்…….நிரல் நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகாவழி இல்லறம் கடைபோகாமையின் அன்புடைமை பண்பாயிற்று. அறனுடைமை பயனாயிற்று.” 17

    என விளக்கம் தருகிறார். இந்த விளக்கத்தில் அன்பும் அறனுமாகிய பண்புகள் எதனுடைய உடைமையெனின் அது இல்லறத்தின் உடைமை என்பது பரிமேலழகரின் நுண்ணியம். இதனை ‘இல்லறம் கடைபோகாமையின்’ என்னும் சொல்லால் குறித்தமை நோக்குக. இந்த விளக்கத்தில் பரிமேலழகர் ‘நிரல் நிறை’ எனக் குறிப்பதோடு அமைந்துவிடுகிறாரேயன்றி ‘அணி’ என்னும் சொல்லைத் தவிர்த்துவிடுகிறார். இந்த நெறி பல குறட்பாக்களின் இவர் உரைகளில் பரவலாகக் காணப்படுகின்ற ஒன்றாகும். “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை” 18 “இனமென்னும் ஏமப்புணை’ என்ற ஏகதேச உருவகத்தால்” 19 என்பன காண்க. இதனால் அவர் ‘அணி’ என்னும் சொல் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்துவிடுகிறார் என்பது பொருளன்று. வேறு சில இடங்களில் முழுமையாக ‘அலங்காரம்’20 என்றே கூறுவதையும் காண முடிகிறது.

    பரிமேலழகர் காட்டும் மயக்க நிரல்நிறை

    ‘குறட்பாவின் அமைப்புச் சிக்கல்’ என இக்கட்டுரையில்  தொடக்கப்பகுதியில் முன்னெடுத்த கருத்துக்களின் மேல் கற்பார் கவனம் ஈர்க்கப்படுகிறது.

    “விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
    கற்றாரோடு ஏனை யவர்” 21

    என்பது குறட்பா. இந்தக் குறட்பா,

    “விலங்கொடு மக்கள் அனையர்
    கல்லாதவரோடு கற்றவர்”

    என்னுமாறு அமைந்திருந்தால் சிக்கல் எழுந்திருக்காது. முதலடியின் பொருண்மைக்கும் அடுத்த அடியின் பொருண்மைக்கும் முரண் நிலவுவதும் முன்பே சுட்டப்பட்டது.

    “விலங்கொடு மக்கள் அனையர்” என்னும் தொடருக்கு “விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையவர்”  (அத்துணை தீமையுடையவர்) “இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்” என்னும் தொடருக்கு விளங்கிய நூலைக்கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்”

    என்னுமாறு அவருடைய சீர் பிரிப்பும் பொழிப்புரையும் அமைந்திருக்கிறது. இந்தப் பொழிப்புரையில்தான் அவர் ‘மயக்க நிரல்நிறை’ என்பது பற்றிச் சிந்தித்திருக்கிறார். முறையாக நின்றால் நிரல். முறைமாறி நின்றால் மயக்க நிரல். பாட்டின் அமைப்பு எங்கே மயக்கம் நிலவுகிறது? கருத்தில்! அது பற்றி இரண்டாது பத்தியில் ஆராயப்பட்டுள்ளது. எனவே அந்த மயக்கத்தை ஒரு புதிய கோணத்தில் கண்டு நீக்குகிறார் பரிமேலழகர். எது அந்தப் புதிய கோணம் என்றால், “தீயதை நோக்க நல்லதன் நன்மை எவ்வளவு உயர்ந்ததோ நல்லதை நோக்கத் தீயதன் தீமை அத்தனை தாழ்ந்தது! இந்த உயர்வும் தாழ்வும் ‘அத்தனை’ என்னும் அளவு சார்ந்தது. இப்போது பரிமேலழகர் உரையை நோக்கினால் ‘மயக்கநிரல்நிறை’ என்பதை எவ்வளவு நுட்பமாக விளக்கியிருக்கிறார் என்பது புரியக் கூடும்.

    “விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையவர்”  (அத்துணை தீமையுடையவர்) “இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்”22

    எனவே மயக்கம் பொருள்களின் ஒப்பீட்டில் இல்லை. நன்மை, தீமை என்னும் அளவில் இருக்கிறது. முதல் ஒப்பீடு நன்மை. பின்னதில் அந்த ஒப்பீட்டு அளவு தீமை. இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால்,

    “விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு நல்லவர்களோ அவ்வளவு நல்லவர்கள் படித்தவர்களை நோக்கப் படிக்காதவர்கள்! என்னும் கருத்தியலை (குறள் நிரலில் இப்படித்தான் ஐயம் எழும்) பரிமேலழகர் மடைமாற்றம் செய்கிறார் “இல்லை இல்லை! அவ்வளவு நல்லவர்கள் இல்லை அவ்வளவு தீயவர்கள்! என்று. இப்போது புரிகிறதா?

    எனவே மயக்க நிரல் நிறை என்றால் பொருள் மயக்கத்திற்குக் காரணமான நிரல்நிறை எனக் கருத முடியும்.

    நுண்ணியத்தின் மறுவடிவம் பரிமேலழகர்

    இந்தக் குறட்பாவிற்குத் தாம் எழுதிய பொழிப்புரைக்குச் சிறப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். நிதானம், பொறுப்பு, கூரிய நோக்கு, இலக்கண இலக்கியப் புலமை அத்தனையும் அந்த விளக்கத்தில் பொதிந்திருப்பதைக் காணலாம். அவர் விளக்கவுரை இப்படி அமைந்திருக்கிறது.

    “இலங்கு நூல் சாதிப்பெயர். விளங்குதல் – மேம்படுதல். விலங்கின் மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார் கண்ணே யாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர் அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால் அவர் மக்கட் பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது” 23

    விளக்கவுரையில் ஒளிந்திருக்கும் பரிமேலழகரின் உரையாளுமை

    • குறட்பாவில் ‘மக்கள்’ என்பது பன்மையாக, ‘விலங்கு’ என்னும் ஒருமைப் பயன்பாடு ஏலாதாதலின் அதற்கேற்ப ‘விலங்கு’ என்பதைச் சாதியொருமை என்கிறார். ‘விலங்குகளோடு மக்கள்’ என இருக்க வேண்டுமாம்.
    • ‘கற்றார்’ என்பது பன்மையாயிருக்க ‘நூல்’ என்னும் ஒருமைப் பயன்பாடு ஏலாதாதலின் அதற்கேற்ப ‘நூல்’ என்பதைச் சாதியொருமை என்கிறார். ‘நூற்களைக் கற்றார்’ என இருக்க வேண்டுமாம்.
    • மக்களாகிய பிறப்பே அதற்குரிய சிறப்பாகிவிடாது. மக்களாகிய சுட்டு நிகழ்வதற்குரிய காரணத்தைக் கொண்டால் மட்டுமே அவர் மக்கள் எனக் கருதப்படுவர். “மக்களாகிய சுட்டு யாதன் கண் நிகழும் அது மக்கட்சுட்டு” 24 எனச் சேனாவரையர் எழுதும் உரைப் பகுதியைக் கவனத்திற் கொண்டால் ‘மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார் கண்ணேயாதலின்” என்னும் பரிமேலழகர் உரையின் சிறப்பு அறியலாம்.
    • கற்றல் நிகழ்ந்தாலேயொழிய மானுடத்தால் பயனில்லை என்பார் (கற்றலின் பேரெல்லை பிற உயிர்களின் மேல் அன்பாதலின்) “இதனால் அவர் மக்கட் பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது” என்றார்.
    • நூல்களுக்கு இருக்க வேண்டிய அழகுகள் பத்து. அவை “சுருங்கச் சொல்லல் விளங்கவைத்தல்” 25 என்னும் தொடக்கத்தன. அத்தகைய அழகுடைய நூற்களையே பயில வேண்டும் என்பார் ‘விளங்குதல்’ என்னும் சொல்லுக்கு மேம்படுதல் என உரைகாண்கிறார். ‘இலங்குநூல்’ என்பதற்கு ‘விளங்கிய நூல்’ எனச் சொற்பொருள் (பதசாரம்) எழுதி ‘விளங்குதல்’ என்பதற்கு ‘மேம்படுதல்’ என உரைகாணும் நுண்ணியம் காண்க. மேம்பாடு நூலுக்கென்று உணர்க.

    நிறைவுரை

    ஏற்ற தரவுகளைக் கொண்டு இதுகாறும் செய்யப்பட்ட ஆய்விலிருந்து ‘நிரல்நிறை’ பற்றிய இலக்கணம் ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருந்து வருகிறது என்பதும் அது பெரும்பாலும் பொருள்கோள் வகையில் ஒன்றாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது என்பதும் அப்பொருள்கோளும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ஆசிரியன்மார்களால் ஒவ்வொரு வகையான எண்ணிக்கையில் ஆராயப்பட்டு வந்துள்ளது என்பதும் நிரல் நிறை என்பது பெயர் நிரல்நிறை, வினை நிரல்நிறை என்னும் இரண்டான பகுப்பிற்கும் ‘நேர்நிரல்நிறை, எதிர் நிரல்நிறை’ என்னும் வரையறைக்கும் ஆளாகியிருக்கிறது என்பதும் மயக்க நிரல்நிறை பற்றிய எந்தக் குறிப்பும் எந்த இலக்கண நூலிலும் தெளிவாக இல்லாத சூழலில் அது பற்றிய நுண்ணிய சிந்தனை பரிமேலழகருக்கு அமைந்திருந்தது என்பதும் அந்த நுண்ணியத்தாலேயே ஆய்வுக்குரிய ‘விலங்கொடு மக்கள் அனையர்’ என்னும் குறட்பாவின் பொருள் துலக்கம் பெறுகிறது என்பதும்” ஓரளவு புலனாகலாம். பரிமேலழகர் உரையை மறுக்கின்ற வல்லாளர் பலர் உளர். ஆய்வுக்குரிய இந்தக் குறட்பாவின் நுண்ணியத்தை உணர்வார் பரிமேலழகரின் உரைப்பேராற்றலை உணரலாம்.

    (தொடரும்)

    சான்றெண் விளக்கம்

    1. திருவள்ளுவர்                           திருக்குறள்                                                      கு.எண். 410
    2. பரிமேலழகர்                            மேலது உரை
    3. மேலது
    4. தொல்காப்பியர்                     தொல்காப்பியம் எச்சவியல்            நூ.எண். 887
    5. பவணந்தியார்                         நன்னூல்                                                               நூ.எண். 414
    6. சங்கர நமசிவாயர்               மேலது உரை
    7. மேலது
    8. குணசாகரர்                                 யாப்பருங்கலக்காரிகை உரை      கா.எண். 58
    9. மேலது
    10. தண்டி                                                 தண்டியலங்காரம்                                       நூ.எண். 67
    11. சுப்பிரமணிய தேசிகர்      மேலது உரை
    12. மேலது
    13. மேலது
    14. மேலது
    15. மேலது
    16. திருவள்ளுவர்                                திருக்குறள்                                                             கு.எண். 45
    17. பரிமேலழகர்                                 மேலது உரை
    18. மேலது                                                                                                                                                கு.எண். 1
    19. மேலது                                                                                                                                                கு.எண். 306
    20. மேலது                                                                                                                                                கு.எண். 475
    21. திருவள்ளுவர்                               திருக்குறள்                                                                கு.எண். 410
    22. பரிமேலழகர்                                 மேலது உரை
    23. மேலது
    24. சேனாவரையர்                           தொல்.சொல். உரை                                          நூ.எண். 1
    25. பவணந்தியார்                             நன்னூல்                                                                        நூ.எண். 13

    துணைநூற் பட்டியல்

    1. அமிதசாகரர் யாப்பருங்கலக்காரிகை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ
    சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    2. குணசாகரர் (உ.ஆ.) யாப்பருங்கலக்காரிகை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    3. சுப்பிரமணிய தேசிகர் தண்டியலங்காரம் உரை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1963

    4. தண்டி தண்டியலங்காரம்
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1963

    5. திருவள்ளுவர் திருக்குறள் – பரிமேலழகர் உரை
    வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன்
    உமா பதிப்பகம், சென்னை – 600 001
    முதற்பதிப்பு – 2009

    6. தொல்காப்பியர் தொல்காப்பியம்
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    7. பரிமேலழகர் (உ.ஆ.) திருக்குறள் உரை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    8. பவணந்தியார் நன்னூல்
    உலகத் தமிழாராயச்சி நிறுவனம்
    தரமணி, சென்னை
    முதற்பதிப்பு – 1999

    Share