புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006. 
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

இடைச்சொல் ‘உரைச்சொல்’ ஆன கதை!

முன்னுரை

‘அதிகாரத்திற்குப் பத்துப் பாடல்கள்’ என வரையறுத்துக் கொண்டதால் ‘கூறியது கூறலும் குன்றக் கூறலும்’ திருக்குறளில் அமைந்திருப்பதாகக் கூறுவாரும் உளர். ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ (314) எனக் கூறிய பிறகும் ‘இன்னாச் செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு?’ (987) எனக் கூறுவானேன்? என்பாரும், ‘இரவு’ கூறிய வள்ளுவர் ‘இரவச்சம்’ கூறுவானேன்? என்பாரும் திருக்குறளில் தமது ‘தோய்ந்த புலமையை’ வெளிப்படுத்துவர். அன்னாருடைய கருத்துக்கள் பற்றிய ஆய்வு ஒரு பக்கம் இருப்பினும் திருக்குறள் அதிகாரங்களில் ஒரு கருத்து மட்டுமே சொல்லப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு மாறானது என்பதை மட்டும் குறிக்க வேண்டியுள்ளது. திருக்குறள் ஒரு நீதி இலக்கியம் என்பதால் ஒரு  பொருண்மை பற்றிய பல்வகைச் சிந்தனைகளையும் பாகுபடுத்திக் கூறுவதே அதிகாரக் கருத்துக்களின் சாரம். சான்றாகக் ‘கடவுள் வாழ்த்து’ எனப் பொதுவாக அமைந்திருக்க வேண்டிய அதிகாரக் கருத்துக்களை, முதற்கடவுளது உண்மை (1) அறிவிற்குப் பயன் (2) இறைவனை நினைத்தல், வாழ்த்தல், நெறிநிற்றல், பயன்பெறுதல் (3-6) அவை செய்யாவழிப்படும் குற்றம் (7-9) அடி நினைப்பார்க்குப் பிறவி அறுதல் மாறி நினைப்பார்க்கு அறாது நிற்றல் (10) என ஐந்து வகையாகப் பகுத்துரைப்பதைப் பரிமேலழகர் உரையால் அறியலாம். இத்தகைய பாகுபாடு அறத்துப்பால், பொருட்பால் ஆகிய பகுதிகளில் எல்லா அதிகாரங்களிலும் அமைந்துள்ளன. காமத்துப்பால் அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப்பகுதியாதலின் அப்பொருள் துறைகளுக்கேற்ப அமைந்த பாகுபாடுகளை அங்கே காணலாம். இந்தப் பின்புலத்தில் சினத்தின் பின்விளைவு பற்றிய மூன்று குறட்பாக்களில் ஒரு குறட்பாவில் காணப்படும் பரிமேலழகரின் உரைத்திறன் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.

திறனறியும் குறட்பாவும் உரையும்

துறவறவியலில் ‘வெகுளாமை’ என்னும் அதிகாரத்தில் ஆறாவது குறட்பாவாக அமைந்திருப்பது,

“சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்” (306)

என்னும் குறட்பா. இக்குறட்பாவிற்குச்,

‘சினம்’ என்னும் சேர்ந்தாரைக் கொல்லி – சினம் என்னும் நெருப்பு இனம் என்னும் ஏமப்புணையைச் சுடும் – தனக்கு இடமானவரையே அன்றித் அவர்க்கு இனமாகிய ஏமப்புணையையும் சுடும்.

எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையையும் தந்திருக்கிறார். பொழிப்புரையின் நுட்பம் காண்பதற்கு முன்பாக இவ்வதிகாரத்தின் பொருட்பாகுபாடுகளை நோக்குவது கட்டுரைப் பொருள் எளிதில் புரிவதற்கு ஏதுவாகும். திருக்குறளைத் தனித்தனி அலகாகக் கொண்டு உரைசொல்வார் பலர்.  அது பிழையாகாதெனினும் கருத்து முழுமைபெறாது என்பதோடு அக்கருத்தினை முற்றுப் பெற வைக்கும் ஏனைய குறட்பாக்கள் பின்னுக்குத் தள்ளப்படும்.

கருத்துப் பகுப்பு

திருக்குறள் அதிகாரக் கருத்துக்களைப் பாகுபடுத்துவது பற்றி முன்னுரையிலேயே குறிப்பிடப்பட்டது. அதன்படி ‘வெகுளாமை’ என்னும் இவ்வதிகாரப் பொருண்மை பின்வருமாறு பரிமேலழகரால் வகுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது வெகுளாமை என்னும் அதிகாரத்தில் வெகுளாமையைத் திருவள்ளுவர் பொதுவாக ஆராயவில்லை என்பதாம்.

  1. வெகுளாமைக்கான இடம் (1)
  2. வெகுளியது தீங்கு (2-4)
  3. வெகுண்டார்க்கு வரும் தீங்கு (5-7)
  4. வெகுளாமையது நன்மை (8)
  5. வெகுளாதார்க்கு வரும் நன்மை (9)
  6. வெகுண்டார்க்கும் வெகுளாதார்க்கும் நேரும் விளைவு (10)

   இப்பகுப்புக்களில் வெகுளி பற்றிய பல பரிமாணங்களைத் திருக்குறள் சிந்தித்திருக்கிறது என்பதையும் அது ‘வெகுளி’ என்ற ஓர் எதிர்மறைப் பண்பை மட்டும் சிந்திக்கவில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்தப் பொருண்மை பற்றிய இத்தகைய பகுப்புக்கள் வராதபோதுதான் திருவள்ளுவர் இன்னொரு அதிகாரத்தில் இது பற்றிய சிந்தனையை நீட்டித்துக் கொள்கிறார். சான்றாக ‘அறிவு’ என்னும் உயர்நிலையை ஒருவன் அடையவேண்டுமானால்  கல்வியின் சிறப்பு, கல்லாமையின் குற்றம், கேள்வி என்னும் முப்பரிமாணங்ளையும் அவர் ஆராய்ந்து அதன் தொடர்ச்சியாகவே ‘அறிவுடைமை’ என்பது பற்றி எழுதுகிறார். உழைத்துச் சேர்ப்பதுதானே உடைமை? இந்தப் பகுப்பில் மூன்றாவதாக உள்ள ‘வெகுண்டார்க்கு வரும் தீங்கு’ என்னும் ஒரு பொருள் பற்றி மூன்று பாடல்கள் கூறுவதாகப் பரிமேலழகர் கூறுகிறார்.

  • தன்னையே கொல்லும் (305)
  • இனம் என்னும் ஏமப்புணையைச் சுடும் (306)
  • நிலத்தறைந்தான் கைபிழையாது அற்று (307)

பொழிப்புரை நுட்பம்

  • சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்னுந் தொடரை ‘சினம் என்னும் நெருப்பு’ எனச் சுருக்கிக் கொள்கிறார்.
  • ‘இனம் என்னும் ஏமப்புணையைச் சுடும்’ என்றே குறட்பாவில் இருக்க, ‘தனக்கு இடமானவரையே (கொல்லும்) அன்றி’ என சினத்தின் முதற் செயல்பாட்டை நினைவு கூர்கிறார். அதாவது ‘இனத்தைச் சுடுவதற்கு முன்னால் தன்னைச் சுடும்’ என்பதைச் சுட்டுகிறார். இக்கருத்தினை இதற்கு முந்தைய குறட்பாவிலுள்ள ‘தன்னையே கொல்லும் சினம்’ (305) என்னும் தொடரிலிருந்து தழுவிக் கொள்கிறார்.

பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்பது ஏதுப்பெயர். தான் சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது என்றவாறு. ‘சேர்ந்தாரை’ உயர்திணைப் பன்மைமேல் வைத்து ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின்.  ‘சினமென்னும் நெருப்பு’ என்ற ‘விதப்பு, ‘உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே; இந்நெருப்புச் சேராத இடத்தையும் சுடும்’ என்னும் வேற்றுமை தோன்ற நின்றது. ஈண்டு ‘இனம்’ என்றது முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை. உருவகம் நோக்கிச் சுடும் என்னும் தொழில் கொடுத்தாராயினும் ‘அகற்றும்’ என்பது பொருளாகக் கொள்க. ஏமப்புணை – ஏமத்தை உபதேசிக்கும் புணை. ‘இனம் என்னும் ஏமப்புணை’ என்ற ஏகதேச உருவகத்தால், ‘பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற’ என வருவித்து உரைக்க. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.

விளக்கவுரையில் கண்ட உரை நுட்பம்

  • ‘நெருப்பு’ என்னும் ஒரு சொல் இருக்க மற்றவரைக் கொல்லுதற்கு அது காரணமாக இருப்பதால் ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என இரு சொல்லால் உருவகப்படுத்தினாராம். ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்பது ஏதுப்பெயர் என்கிறார் பரிமேலழகர்.
  • ‘சேர்ந்தார்’ என்பது உயர்திணைப் பன்மை. எனின் சேர்ந்தாரைத்தான் கொல்லுமா? சேர்ந்தவன், சேர்ந்தவள், சேர்ந்தது, சேர்ந்தவை முதலியவற்றைக் கொல்லாதா? என்னும் ஐயத்தினைக் களைகிறார். ஈண்டு சினம் என்பது இல்லறத்தானுக்கு வருகிற சினமன்று ‘கணமேயும் காத்தற்கு அரிய’ துறந்தார்க்குக் கூடாத சினம். ஐம்பால் பகுப்பில் சிறந்தது உயர்திணைப் பலர்பால். அப்பாலில் வைத்துச் சொல்லியதால் ஏனைய பால்களும் அடங்கும் என்பது அவர் கருத்து. அதனைச் ‘சேர்ந்தாரை’ உயர்திணைப் பன்மைமேல் வைத்து ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின்’ என எழுதுகிறார்.
  • ‘சினம் சுடும் என்றாலேயே ‘சுடும்’ என்னும் வினையால் ‘சினம் என்பது நெருப்பு’ என்பது பெறப்படும். குறட்பாவில் பயின்றுள்ள ‘சினமென்னும் நெருப்பு சுடும்’ என்னுந் தொடரில் ‘நெருப்பு’ என்பது விதப்பு (தேவையற்ற சொல் பயன்பாடு) சான்றோர் கூறிய விதப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் எனக் கருதிய பரிமேலழகர், ‘சினமென்னும் நெருப்பு’ என்ற விதப்பு, ‘உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே இந்நெருப்புச் சேராத இடத்தையும் சுடும்’ என்னும் வேற்றுமை தோன்ற  நின்றது என எழுதுகிறார். முனிவர் சினத்தின் எதிர்மறை விளைவின் முழுப்பரிமாணத்தையும் குறிக்கிறதாம். தீயவை தீயினும் அஞ்சப்படும் என்பதற்குப் “பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும் பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் தீயினும் அஞ்சப்படும் என்றார் (202) என்னும் பரிமேலழகரின் உரை ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கதாம்.
  • திருவள்ளுவர் நட்பு பற்றி ஆழமாகச் சிந்தித்தவர். பல அதிகாரங்களில் அதுபற்றி ஆராய்ந்திருக்கிறார். இங்கே முனிவர் குழாஅத்தைப் பற்றி ஆராய்ந்து பதிவிடுகிறார். முனிவருடைய இனம் எத்தகையதாக இருக்க வேண்டும்? அதாவது இந்தச் சினத்தால் எத்தகைய பெருமையுடையாரை இழக்க நேரிடும்? என்பதை நுட்பமாகப் பதிவு செய்கிறார்.
  1. முற்றத் துறந்தவர்
  2. தவஞானங்களால் பெரியார் ஆனவர்
  3. கேட்டார்க்கு மட்டும் நெறிகாட்டுபவர்
  4. உறுதிபயக்கும் சொற்களைச் சொல்பவர்
  5. அவற்றையும் இனிமையாகச் சொல்பவர்

இத்தகைய பண்புகளின் தொகுப்பான இனத்தைப் பாழ்படுத்திவிடும் ஆற்றல் சினத்திற்கு உண்டாம். இதனை “ஈண்டு ‘இனம்’ என்றது முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை”  என்று எழுதுவதால் அறியலாம்.

  • ‘சினம் இனத்தைச் சுடும்’ என்றால் நெருப்புத்தானே சுடும். சினம் என்னும் பண்பு எப்படிச் சுடும்? என்னும் ஐயத்தை அவராகவே எழுப்பிக்கொண்டு சினத்தை நெருப்பென உருவகம் செய்ததால் சுடும் என்று சொன்னார். இவருடைய சினம் மேற்சொன்ன பண்பாளர்களை இவரிடமிருந்து அகற்றிவிடும். ஆதலின் சுடும் என்பதற்கு ‘அகற்றும்’ எனப் பொருள் கொள்க’ என்கிறார். “இதனை உருவகம் நோக்கிச் சுடும் என்னும் தொழில் கொடுத்தாராயினும் ‘அகற்றும்” என்பது பொருளாகக் கொள்க” என எழுதுகிறார்.
  • ‘ஏமப்புணை’ என்பதற்கு ‘ஏமமாகிய புணை’ என்னாது ‘ஏமத்தை உபதேசிக்கும் புணை’ என உரையெழுதுகிறார். ‘ஏமம்’ என்றால் பாதுகாப்பு. உயிர்ப் பாதுகாப்புக்கான உபதேசங்களைக் கூறும் இனமாம். உயிர் பாதுகாப்பு என்றால் வீடு பேறு. இனம் பாதுகாப்பாகாது. இனம் காட்டும் நன்னெறியே பாதுகாப்பு .. எனவேதான் ‘ஏமத்தை உபதேசிக்கும் இனம்’ என்று எழுதுகிறார்.
  • இனி இனம் என்னும் ஏமப்புணை என்பது எவ்வாறு ஏகதேசம் ஆகும்? ஏகம் என்றால் ஒன்று. தேசம் என்றால் பகுதி. சினத்தால் இழக்கக்கூடிய இனத்தைப் புணை என்றால் எதனைக் கடப்பதற்குரிய புணை? என்னும் வினா எழும். அதனைக் குறட்பா நேரிடையாகவோ மறைமுகமாகவோ கூறவில்லை. பரிமேலழகர் அறிந்து கூறுகிறார். ஞானத்தைப் புகட்டும் இனத்தைப் புணையாக உருவகம் செய்தவர், பிறவியைக் கடலாகவும் வீடுபேற்றைக் கரையாகவும் உருவகப்படுத்தவில்லை. எனவே ஏமப்புணை என்பது ஏகதேச உருவகம். இது முற்றுருவகமாக இருந்திருந்தால், “சினம் என்னும் நெருப்பு, பிறவிக்கடலை நீந்தி வீடுபேறாகிய கரையினை அடைவதற்கேற்ற ஞானத்தை உபதேசிக்கும் இனமாகிய புணையை அகற்றும்” என அமைந்திருக்கும். இதனை ‘இனம்’ என்னும் ஏமப்புணை என்னும் ஏகதேச உருவகத்தால் பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற என வருவித்து உரைக்க’ என்ற விளக்கத்தில் காணலாம்.
  • ‘எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. எனக் குறட்பாவில் இல்லாத உம்மையைக் கண்டறிகிறார். இந்த உம்மைதான் பாட்டின் ஒரு வினையை இருவினையாக்குதற்கு உதவுகிறது. பாட்டு ‘சினம் இனத்தைச் சுடும்’ என்ற ஒரு வினையையே சுட்டுகிறது. பரிமேலழகரோ ‘இனத்தையே சுடும்’ என்றால் ‘கொண்டவனைச் சுடாதா?’ என்னும் வினாவை எழுப்பிக் கொள்கிறார். கொண்டு இருவரையும் சுடும் என்பதுதானே பொருள்? எனக் கருதுகிறார். கருதிப் பின்னது முன்னதைத் தழுவிக் குறட்பா அமைந்திருந்தால் ‘புணையைச் சுடும்’ என்று அமையாது ‘புணையையும் சுடும்’ என்றல்லவா அமைந்திருக்க வேண்டும்? ‘உம்’ என்ன ஆனது? எனச் சிந்திக்கிறார். சிந்தித்து, ‘உம்’ என்னும் எச்சம் தொகுதல் என்னும் விகாரத்தால் மறைந்து நிற்கிறது என்பார், ‘எச்சவும்மை விகாரத்தால் தொக்கது’ என எழுதுகிறார்.

நிறைவுரை

‘சினம் இனத்தைச் சுடும்’ என்னும் ஒருவரி கருத்தினை, ‘உம்’ என்னும் குறட்பாவில் இல்லாத இடைச்சொல்லாகிய எச்சத்தை வருவித்துச் “சினம் தன்னையும் கொல்லும், தன்னைச் சேர்ந்தாரையும் கொல்லும், வீடுபேற்றுக்குரிய ஞானநெறியைக் காட்டும் இனைத்தையும் விலக்கிவிடும்” என்னும் கருத்துக்களையெல்லாம் பெற வைத்ததே இக்குறட்பாவில் பரிமேலழகரின் உரைத்திறனாகும்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *