மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

0

பாஸ்கர் சேஷாத்ரி

ஆந்திரா ஆஸ்பத்திரியில் பிறந்தது முதல் எனக்கு எல்லாமே இந்த மெட்ராஸ் தான். எங்கப்பன் காலத்து பாஷையில் சொல்ல வேண்டுமெனில் பட்டணம் தான். ரெண்டு பைசாவை வைத்துக்கொண்டு தேன் மிட்டாய் கடித்ததும் சேமியா ஐஸ் உறிஞ்சியதும் இந்த மெட்ராசில் தான்.

சொல்லிக்கொள்ள செட்டிபுண்ணியம் எனது சொந்த ஊராக இருந்தாலும் என்னைச் சீராட்டியது இந்த மெட்ராஸ் தான். அந்தக் குந்துமணி பங்களாவும் ஆபிரகாம் தெருவும் என்னை அய்யா எனச் செல்லமாய்க் கொஞ்சி. மாண்டிசோரி பள்ளியின் சறுக்குமரம் எனக்குக் கொடுத்த குதூகுலம், வேறேதும் தரவில்லை.

பீ எஸ் பள்ளிகூட நண்பர்களுக்கு சீ எஸ் பீ. கல்லூரித் தோழர்களுக்கு பாச்சு. என்னைத் தாங்கிய இந்த மெட்ராஸ், பல இயற்கைப் பேரிடர்களைத் தாங்க, நான் அதை கண்டு மிரண்டு இருக்கிறேன். இந்திப் போராட்டம் புரியாத நாளில் இதே பெரிய குளம் அருகே லத்தி அடி கொடுத்ததும் (என்னா அடி) இந்த மெட்ராஸ் தான்.

தேர்த் திருவிழாவில் நசுங்கி, நீர்ப் பந்தலில் நனைந்து, சுமார் அம்பது வருடம் மேல் கரைத்துத் தேய்ந்து போனது இந்த மெட்ராசில் தான். இன்று எல்லோருக்கும் அது சென்னை. ஆனால் எனக்கு தினம் மெட்ராஸ் பிறப்பது போல இருக்கிறது. காரணம் எனக்கு அதன் மேல் காதல்.

எனக்குச் சென்னைக் கடற்கரை, அடையாறு ஆலமரம், நாகேஸ்வர ராவ் பூங்கா புல்வெளி தாண்டி உலகம் இல்லை. நான் சென்னையின் வித்து. சென்னை எனது ரஹசிய சிநேகிதன். மயிலைக்கு என்று ஒரு வாசனை உண்டு. அதனைப் பெரிதும் நுகர்ந்தவன் இவன் – எவ்வளவு நாட்கள் இதனை நான் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *