Tag: நாங்குநேரி வாசஸ்ரீ

  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 102

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 102

    நாங்குநேரி வாசஸ்ரீ

    102. நாணுடைமை

    குறள் 1011

    கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
    நல்லவர் நாணுப் பிற

    வேண்டாத கெட்ட காரியத்த செய்யுதவன் வெக்கப்படுததுக்கும், அழகான பொம்பளப்பிள்ளைங்க வெக்கப்படுததுக்கும் வித்தியாசம் உண்டு.

    குறள் 1012

    ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
    நாணுடைமை மாந்தர் சிறப்பு

    சாப்பாடும், உடுப்பும் மத்ததும் எல்லா உசிருக்கும் பொதுவான தேவ. சிறப்பானது மத்தவங்க சொல்லுத பொல்லாப்புக்கு பயந்து கெட்ட காரியத்த செய்யாம வாழுத நாணுடைமைதான்.

    குறள் 1013

    ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
    நன்மை குறித்தது சால்பு

    எல்லா உசிரும் இருக்கதுக்கு எடமா ஒடம்ப வச்சிருக்குதுக. அது கணக்கா சான்றாண்மை நாணம் ங்குத நல்ல கொணத்த எடமா கொண்டிருக்குது.

    குறள் 1014

    அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
    பிணியன்றோ பீடு நடை

    நாணம் இருக்குதது படிச்ச பெருமக்களுக்கு நகநட்டுகணக்கா.  அதுமட்டும் இல்லையினா அவுக என்னதான் பெருமிதமா நடந்தாலும் பாக்கதுக்கு அது நோய் கணக்காதான் தெரியும்.

    குறள் 1015

    பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
    குறைபதி என்னும் உலகு

    தனக்கு வருத பொல்லாப்புக்காவ மட்டுமில்லாம பொறத்தியாரோட பொல்லாப்புக்காகவும் வெசனப்படுதவங்கிட்ட நாணம் ங்குத கொணம் வாழுததா ஒலகத்தவரு சொல்லுதாங்க.

    குறள் 1016

    நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
    பேணலர் மேலா யவர்

    பெரியமனுசங்க இந்த ஒலகத்துல தன் பாதுகாப்புக்காவ நாணத்த வேலி கணக்கா வச்சிக்கிட்டு வாழுவாகளே தவித்து மத்தத இல்ல.

    குறள் 1017

    நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
    நாண்துறவார் நாணாள் பவர்

    நாணம்ங்குத கொணத்த கொண்டவுக மானத்துக்காவ உசிர உடுவாகளே தவித்து  மானங்கெட்டு உசிரு வாழ மாட்டாக.

    குறள் 1018

    பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
    அறநாணத் தக்க துடைத்து

    வெக்கப்படுத அளவுக்கு பழிபாவத்துக்கு ஆளானவுக அதுக்காவ வெக்கப்படாம இருந்தாங்கன்னா அவுகள விட்டு அறம் வெக்கப்பட்டு வெலகி போயிடுச்சின்னு நெனச்சிக்கிடணும்.

    குறள் 1019

    குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
    நாணின்மை நின்றக் கடை

    கொள்கை தப்பி நடந்தாம்னா அவன் பொறந்த குடும்பத்துக்கு கேடு வரும். மானங்கெட்டு திரிஞ்சாம்னா அவனுக்கு வருத நல்லதெல்லாம் அழிஞ்சுபோவும்.

    குறள் 1020

    நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
    நாணால் உயிர்மருட்டி அற்று

    மனசுல வெக்கங்கெட்டு திரியுதவுக நடமாட்டம் மரத்தால செஞ்சி கயறு கட்டி உசிரு இருக்கது போல ஆட்டங்காட்டுத பொம்மை கணக்காத்தான்,

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 101

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 101

    நாங்குநேரி வாசஸ்ரீ

    101. நன்றியில் செல்வம்

    குறள் 1001

    வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
    செத்தான் செயக்கிடந்த தில்

    வேணுமட்டும் வீடுமுழுக்க செல்வத்தச் சேத்த பொறவு அத வச்சி சாப்புட்டு சந்தோசமா அனுவிக்காம ஒருத்தன் செத்தாம்னா சேத்த செல்வத்தால என்ன பிரயோசனம்?

    குறள் 1002

    பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்
    மருளானாம் மாணாப் பிறப்பு

    யாருக்கும் என்னமும் கொடுக்காம தங்கிட்ட இருக்க பொருளால எல்லாம் ஆவும்னு நெனைச்சி அத விடாம புடிச்சிக்கிட்டு இருக்கவனுக்கு சிறப்பில்லாத தாழ்ச்சியான பொறப்பு உண்டாவும்.

    குறள் 1003

    ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
    தோற்றம் நிலக்குப் பொறை

    மத்தவனவிட அதிகமா சொத்து சேக்கணும்னு நெனச்சி அதையே குறியா வச்சி புகழ விரும்பாம இருக்கவனோட பொறப்பு இந்த பூமிக்கு பாரம்.

    குறள் 1004

    எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
    நச்சப் படாஅ தவன்

    மத்தவுகளுக்கு ஒதவி செய்யாத காரணத்தால யாருக்கும் பிடிக்காம இருக்கவன் செத்த பொறவு மிஞ்சி நிக்கப்போவுதுனு எத நெனைச்சிக்கிடுவானோ?

    குறள் 1005

    கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
    கோடியுண் டாயினும் இல்

    மத்தவுகளுக்கு கொடுத்து ஒதவி தானும் தேவப்படும்போது அனுவிச்சிக்கிட்டு இல்லாம இருக்கவன் கிட்ட கோடி கோடியா செல்வம் குவிஞ்சிச்சின்னாலும் பிரயோசனம் இல்ல.

    குறள் 1006

    ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்
    றீத லியல்பிலா தான்

    தானும் அனுவிக்காம பொறத்தியாருக்கும் கொடுக்காம வாழுதவன் தான்கிட்ட இருக்க பெருஞ்செல்வத்துக்கு ஒரு நோய் ஆவான்.

    குறள் 1007

    அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
    பெற்றாள் தமியள்மூத் தற்று

    ஏழபாழைக்கு கொடுத்து ஒதவாத செல்வம் அழகி ஒருத்தி கலியாணம் முடிக்காம தனிச்சு நின்னு கிழவி ஆயிட்டதுக்குச் சமானம்.

    குறள் 1008

    நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள்
    நச்சு மரம்பழுத் தற்று

    எல்லாராலையும் வெறுக்கப்படுதவனுடைய சொத்து ஊருக்கு நடுவுல பழுத்துக் குலுங்குத வெசமரத்தோட பழத்துக்குச் சமானமாவும்.

    குறள் 1009

    அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
    ஒண்பொருள் கொள்வார் பிறர்

    அறவே நேசமில்லாம தன்னையும் வருத்திக்கிட்டு சத்தியத்துக்குப் பொறம்பா சேக்குத சொத்த கொள்ளயடிச்சு மத்தவுகதான் அனுபவிப்பாக.

    குறள் 1010

    சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
    வறங்கூர்ந் தனைய துடைத்து

    மத்தவுகளுக்கு கொடுத்து புகழோட இருக்க பணக்காரவுக கொஞ்ச காலம் வறுமைப்பட்டாகன்னா அது ஒலகத்தக் காக்குத மழையத் தருத மேகம் வறுமைப்பட்டதுக்கு சமானமாவும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 100

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 100

    நாங்குநேரி வாசஸ்ரீ

    100. பண்புடைமை

    குறள் 991

    எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
    பண்புடைமை என்னும் வழக்கு

    யாராயிருந்தாலும் அவுக கூட எளிமையாப் பழகுனோம்னா அதுவே பண்புடைமைங்குத நல்ல ஒழுக்குத பெறுததுக்கான சிறந்த வழியா அமையும்.

    குறள் 992

    அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
    பண்புடைமை என்னும் வழக்கு

    நேசமானவரா இருக்கது ஒசந்த குடியில பொறந்த தன்ம அமைஞ்சிருக்கது இந்த ரெண்டும் பண்புடையவரா வாழுத நல்ல வழியாவும்.

    குறள் 993

    உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
    பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு

    பாக்குத உடல் உறுப்புக்கள் ஒண்ணுபோல இருக்கதனால ஒத்துப்போகுதது ஆவாது. நல்ல பண்பால மத்தவுகளோட ஒத்துப்போவுததே ஒத்துப்போவுதது ஆவும்.

    குறள் 994

    நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
    பண்புள ராட்டும் உலகு

    நியாயத்துக்கு கேடு இல்லாம நல்ல காரியங்களச் செய்து மத்தவுகளுக்கு ஒபயோகமா வாழுத பெருமக்களோட நல்ல கொணத்த ஒலகம் பாராட்டும்.

    குறள் 995

    நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
    பண்புள பாடறிவார் மாட்டு

    விளையாட்டுக்குக்கூட ஒருத்தங்கள எளக்காரமா பேசினோம்னா கேடு உண்டாவும். புத்தியுள்ள பெருமக்க பகையாளிக்கிட்ட கூட கொணங்கெட்டு நடந்துக்கிட மாட்டாக.

    குறள் 996

    பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
    மண்புக்கு மாய்வது மன்

    கொணமுள்ளவுக இருக்கதாலதான் ஒலகம் நெலைச்சி இருக்கு. அவுக இல்லாமப் போனாகன்னா மனுச வாழ்க்க மண்ணுக்குள்ள பொதைஞ்சு அழிஞ்சு போவும்.

    குறள் 997

    அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
    மக்கட்பண் பில்லா தவர்

    அரம் கணக்கா கூர்மையான புத்தியுள்ளவுகளா இருந்தாலும் மனுசத்தன்ம இல்லாதவுக ஓரரிவு இருக்க மரத்துக்குச் சமம் தான். ‘

    குறள் 998

    நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
    பண்பாற்றார் ஆதல் கடை

    சேக்காளியா இருக்க ஏலாம தீம செய்யுத கொணம் இருக்கவங்ககிட்ட கூட நல்லவுகளா நடந்துக்கிடாம இருக்கது தாழ்ச்சிதான்.

    குறள் 999

    நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
    பகலும்பாற் பட்டன் றிருள்

    மத்தவுகளோட கலந்து பழகி சந்தோசமா இருக்க ஏலாதவுகளுக்கு வெளிச்சமான பகலும் கருக்கல் கணக்கா இருட்டாத்தான் தோணும்.

    குறள் 1000

    பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
    கலந்தீமை யால்திரிந் தற்று

    கொணங்கெட்டவங்கிட்ட இருக்க சொத்து சுத்தமில்லாத ஏனத்துல ஊத்திவச்ச பால் திரிஞ்சிபோவுதது கணக்கா அழிஞ்சு போவும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 99

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 99

    நாங்குநேரி வாசஸ்ரீ

    99. சான்றாண்மை

    குறள் 981

    கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
    சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு

    நாம செய்ய வேண்டிய கடம இதுனு உணந்துகிட்டு அத நல்ல மொறையில செய்ய மொனையுத எல்லா முயற்சியையும் நல்ல கடமனு சொல்லுதாங்க.

    குறள் 982

    குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்
    எந்நலத் துள்ளதூஉ மன்று

    நல்ல கொணம் ஒண்ணுதான் படிச்ச பெருமக்களுக்கு அழகு. மத்த எதுவும் அழகோட சேத்தியில்ல.

    குறள் 983

    அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
    டைந்துசால் பூன்றிய தூண்

    நேசமா இருக்கது, பொல்லாப்புக்கு பயப்படுதது, ஒழுக்கமா இருக்கது, இரக்கமா இருக்கது,  உண்மையே பேசுதது இந்த அஞ்சும் சான்றாண்மையத் தாங்குத தூண்கள் ஆவும்.

    குறள் 984

    கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
    சொல்லா நலத்தது சால்பு

    நோன்புங்கது மத்த உசிரக் கொல்லாம இருக்கத அடிப்படையாக் கொண்டது. பொறத்தியாரப்பத்தி எப்பமும் கொற பேசாம இருக்குத கொணத்தக் குறிக்குதது  சால்பு.

    குறள் 985

    ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
    மாற்றாரை மாற்றும் படை

    தெறமசாலியோட தெறமங்கது பணிஞ்சு நடக்குத கொணம். அதுவே பகையாளியோட பகைய மாத்துத சாதனமா பெருமக்களுக்கு அமைஞ்சுக்கிடும்.

    குறள் 986

    சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
    துலையல்லார் கண்ணும் கொளல்

    ஒருத்தரோட மேன்மைக்கு உரைகல் எதுன்னா தனக்கு சமமில்லாத சின்னவுககிட்ட கூட தோல்விய ஒத்துக்கிடதுதான்.

    குறள் 987

    இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு

    தனக்கு தீம செஞ்சவுகளுக்கும் நன்ம செய்யாம விட்டுப்போட்டோம்னா சான்றாண்மைங்குத நல்ல கொணம் இருந்தும் என்ன பிரயோசனம்?

    குறள் 988

    இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்
    திண்மையுண் டாகப் பெறின்

    சால்பு (நிறைவு)ங்குத மனவலிம ஒருத்தங்கிட்ட இருந்திச்சுன்னா பொருளில்லாமப் போகுத ஏழ்ம அவனுக்கு தாழ்ச்சி ஆவாது.

    குறள் 989

    ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
    காழி யெனப்படு வார்

    தனக்குரிய கடமையக் கண்ணியமாச் செய்யுத பெருமக்க எல்லாக் கடலும் தடம் புரண்டு போவுத ஊழிக்காலத்துல கூட தன் நெல மாறாம இருப்பாக.

    குறள் 990

    சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்
    தாங்காது மன்னோ பொறை

    பெருமக்களோட நல்ல கொணம் கொறையத் தொடங்கிச்சின்னா இந்தப் பெரிய ஒலகத்தால  பாரத்தத் தாங்க முடியாமப் போவும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 98

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 98

    நாங்குநேரி வாசஸ்ரீ

    98. பெருமை

    குறள் 971

    ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
    கஃதிறந்து வாழ்தும் எனல்

    ஒருத்தனோட வாழ்க்கைக்கு ஒளி தருதது மன உற்சாகம். அவனுக்கு தாழ்ச்சி உற்சாகம் இல்லாம வாழுவேன் னு நெனைக்கதுதான்.

    குறள் 972

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்

    எல்லா மக்களும் பொறப்பால சமம் தான். அவுக செய்யுத தொழிலில் காட்டுத தெறமியில இருக்க ஒசத்தி தாழ்ச்சியால மட்டுந்தான் வேறுபடுதாங்க.

    குறள் 973

    மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
    கீழல்லார் கீழல் லவர்

    கொணங்கெட்டவுக ஒசந்த பதவியில இருந்தாலும் நல்லவுகளா மதியப்பட மாட்டாக. ஆக்கங்கெட்ட காரியத்த செய்யாத நல்லவுக சின்ன பதவியில இருந்தாலும் ஒசந்தவுக தான்.

    குறள் 974

    ஒருமை மகளிரே போலப் பெருமையும்
    தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு

    ஒருத்தன் தன்னயத்தானே காத்துக்கிட்டு வாழ்ந்தாம்னா கற்போட வாழுத பத்தினிக்குரிய அத்தன பெருமயும் அவனுக்கும் கெடைக்கும்.

    குறள் 975

    பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
    அருமை யுடைய செயல்

    எந்த நெருக்கடியிலயும் மத்தவுகளால செய்ய ஏலாத காரியத்த அதுக்குண்டான வழிமொறையில செஞ்சு முடிக்குத தெறம இருக்கவுக பெருமயானவங்க.

    குறள் 976

    சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
    பேணிக்கொள் வேமென்னும் நோக்கு

    பெருமக்களப் போற்றி ஏத்துக்கிடணும் ங்குத நெனப்பு அவுகளோட சிறப்ப புரிஞ்சிக்கிடாத சின்னவுக மனசுக்குள்ளார இருக்காது.

    குறள் 977

    இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்
    சீரல் லவர்கண் படின்

    தாழ்ச்சியான கொணம் இருக்கவன்கிட்ட பணம், படிப்பு, பதவி ங்குத சிறப்புநிலை சேந்துச்சின்னா அவன் அகராதி புடிச்சி வரம்புகெட்டு அலையுதது நிச்சயம்.

    குறள் 978

    பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
    அணியுமாம் தன்னை வியந்து

    கொணமுள்ள பெரிய மனுசங்க எல்லார்கிட்டயும் பணிஞ்சு நடப்பாக. கொணங்கெட்டவுக மண்டக்கனம் புடிச்சி தன் பெருமய தம்பட்டம் அடிச்சிட்டுத் திரிவாக.

    குறள் 979

    பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
    பெருமிதம் ஊர்ந்து விடல்

    பெருமைங்கது மண்டக்கனம் இல்லாம அடக்கமா வாழுத கொணம். சிறுமைங்கது மண்டக்கனம் புடிச்சி அதோட எல்லைக்கே போயி திமிரா திரியுதது.

    குறள் 980

    அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
    குற்றமே கூறி விடும்

    பொறத்தியாரப்பத்தி பாடு பேசாம கொறைய மறைக்கது பெரும. அவுகளப் பத்தி எப்பமும் கொற சொல்லி பொறளி பேசுதது சிறும.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 97

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 97

    நாங்குநேரி வாசஸ்ரீ

    97. மானம்

    குறள் 961

    இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
    குன்ற வருப விடல்

    கட்டாயமா செஞ்சு முடிக்க வேண்டிய வேலையின்னாலும் அதால தன் குடும்பப் பெரும கொறையும்னு நெனச்சா செய்யக் கூடாது.

    குறள் 962

    சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
    பேராண்மை வேண்டு பவர்

    புகழோட சேந்த வீர வாழ்க்க வேணும்னு நெனக்கவுக புகழச் சேக்கதுக்காவ மானங்கெட்ட காரியத்த செய்ய மாட்டாக.

    குறள் 963

    பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு

    பணக்காரனா ஒசந்த நெலயில இருக்குதப்போ அடக்கம் வேணும். ஏழையா இருக்குதப்போ அடிமயா அடங்கிப்போவாம மானத்தோட இருக்கணும்.

    குறள் 964

    தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
    நிலையின் இழிந்தக் கடை

    மக்களோட மனசுல ஒசந்த நெலயில இருந்த ஒருத்தர் மானங்கெட்டு தாழ்ந்துட்டாருன்னா தலையிலேந்து உதிந்து கெடக்க தலமயிருக்கு சமமா நெனக்கப்படுவார்.

    குறள் 965

    குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
    குன்றி அனைய செயின்

    மலை போல ஒசந்து கம்பீரமா இருக்கவுகளும் குந்துமணி அளவு தாழ்ச்சியான காரியத்த செஞ்சாகன்னா தாழ்ந்து போயிடுவாக.

    குறள் 966

    புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்
    றிகழ்வார்பின் சென்று நிலை

    மதிக்காம எளக்காரம் செய்யுதவன் பொறத்தால மானங்கெட்டு போவதால இப்பமும் புகழ் கெடைக்காது. மேலோகத்துலயும் சேர்க்காது. வேற என்னதான் தரும் அது?

    குறள் 967

    ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
    கெட்டான் எனப்படுதல் நன்று

    மதிக்காதவன் பொறத்தால போயி உசிரு வாழுதான்னு இருக்கதவிட செத்துப் போயிட்டாம்னு சொல்லப்படுதது எம்புட்டோ மேல்.

    குறள் 968

    மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
    பீடழிய வந்த இடத்து

    தன் குடும்ப மானங்கெட்டு சீரளியுதப்போ கூட சாவாம இந்த ஒடம்ப காத்து வாழுத வாழ்க்க சாவாமைக்கு மருந்து ஆவுமா?

    குறள் 969

    மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர்நீப்பர் மானம் வரின்

    ஒடம்புல இருக்க உரோமமெல்லாம் உதிந்துபோச்சுதுன்னா கவரிமான் உசிர உடுதது கணக்கா மானங்கெட்ட பொறவு உசிரு வாழ மாட்டாக மானமுள்ள பெரிய மனுசருங்க.

    குறள் 970

    இளிவரின் வாழாத மானம் உடையார்
    ஒளிதொழு தேத்தும் உலகு

    மானம் போவுத நேரம் உசிர உடுத மனுசங்களோட புகழ இந்த ஒலகம் எப்பமும் போற்றி நிக்கும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 96

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 96

    நாங்குநேரி வாசஸ்ரீ

    96. குடிமை

    குறள் 951

    இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
    செப்பமும் நாணும் ஒருங்கு

    பாரபட்சம் பாக்காத நடுவுநெலமையும், ஆர்ப்பாட்டமில்லாத அடக்க கொணமும் ஒசந்த குடியில பொறந்தவுகளத் தவித்து மத்தவுக கிட்ட இல்ல.

    குறள் 952

    ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்
    இழுக்கார் குடிப்பிறந் தார்

    ஒசந்த குடியில பொறந்தவுக ஒழுக்கம், நாணயம், மானம் இந்த மூணயும் விட்டுவெலகி நெலதடுமாறி நடக்க மாட்டாக.

    குறள் 953

    நகையீகை அன்சொல் இகழாமை நான்கும்
    வகையென்ப வாய்மைக் குடிக்கு

    ஒசந்த குடியில பொறந்தவுகளுக்கு சிரிச்ச மொகம், இனிக்கப் பேசுத கொணம், கொடுக்குத கொணம், கேலி பேசாம இருக்கது இந்த நாலு நல்ல கொணமும் இருக்கும்.

    குறள் 954

    அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
    குன்றுவ செய்தல் இலர்

    பலகோடி செல்வம் கெடைக்கதா இருந்தாலும் ஒசந்த குடியில பொறந்தவுக தங்குடிப் பெரும கெடுததுக்குத் தக்கன காரியத்த செய்ய மாட்டாக.

    குறள் 955

    வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
    பண்பின் தலைப்பிரிதல் இன்று

    ஏழையாப் போயி மத்தவுகளுக்கு கொடுத்து ஒதவுதது கொறஞ்சு போனாலும் பழைய பெரும இருக்க குடியில பொறந்தவுக கொடுக்குத கொணத்த உடமாட்டாக.

    குறள் 956

    சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
    குலம்பற்றி வாழ்துமென் பார்

    குத்தங்கொறையில்லாம வாழ நெனைக்கவுக வஞ்ச மனசோட தகாத காரியங்களச் செய்ய மாட்டாக.

    குறள் 957

    குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
    மதிக்கண் மறுப்போல் உயர்ந்து

    ஒசந்த குடியில பொறந்தவுகளோடகுத்தங்கொற வானத்து நிலாவுல இருக்க களங்கம் கணக்கா பெரிசாத் தோணும்.

    குறள் 958

    நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
    குலத்தின்கண் ஐயப் படும்

    நல்லகொணத்தோட இருக்க ஒருத்தன் நேசமில்லாம இருந்தாம்னா அவன் பொறந்த குலத்தையே இந்த ஒலகம் சந்தேகப்படும்.

    குறள் 959

    நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
    குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்

    வெளஞ்ச பயிரப்பாத்தே இது இன்ன நெலத்துல வெளஞ்சதுனு தெரிஞ்சிக்கிடலாம். அதுகணக்கா ஒருத்தங்க பேசுத பேச்ச வச்சி அவுக எந்தமாரி குடும்பத்துல பொறந்திருக்காகனு தெரிஞ்சிக்கிடலாம்.

    குறள் 960

    நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
    வேண்டுக யார்க்கும் பணிவு

    ஒருத்தன் நன்ம வேணும்னு நெனச்சா வேண்டாத காரியம் செய்ய பயந்துக்கிடணும். நல்ல குடும்பத்துல பொறந்தவன்னு பேரு வேணும்னு நெனச்சா எல்லார்க்கும் பணிஞ்சு போவணும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 95

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 95

    நாங்குநேரி வாசஸ்ரீ

    95. மருந்து

    குறள் 941

    மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
    வளிமுதலா எண்ணிய மூன்று

    மருத்துவம் படிச்சுவுக சொல்லுத வாதம், பித்தம், கபம் இந்த மூணுல ஏதும் ஒண்ணு அதிமானாலோ கொறஞ்சாலோ நோய் உண்டாவும்.

    குறள் 942

    மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
    தற்றது போற்றி உணின்

    ஒருத்தன் மொத சாப்பிட்டது செரிச்சுட்டுதான்னு தெரிஞ்ச பொறவு அடுத்தாப்ல சாப்பிட்டாம்னா அவனுக்கு மருந்துனு ஒண்ணு தேவ கெடையாது.

    குறள் 943

    அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
    பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு

    தின்னது செரிச்சிடுச்சுனு தெரிஞ்சுக்கிட்டு அடுத்தாப்ல அளவா சாப்பிட்டு இருக்கதுதான்  நெறைய ஆயுசோட இருக்கதுக்குண்டான வழி.

    குறள் 944

    அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
    துய்க்க துவரப் பசித்து

    மொத தின்னது செரிச்சத உணந்துக்கிட்டு ஒடம்பு ஒத்துக்கிடுத சாப்பாட்ட வயிறு பசிஎடுத்த பொறவு திங்கணும்.

    குறள் 945

    மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
    ஊறுபா டில்லை உயிர்க்கு

    ஒடம்புக்கு ஏத்த சாப்பாட்டக் கூட மூக்குப்பிடிக்க திங்காம அளவா தின்னாம்னா அவன் வாழ்க்கையில நோவுநொடியால சங்கடப்படமாட்டான்.

    குறள் 946

    இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
    கழிபேர் இரையான்கண் நோய்

    அளவா சாப்பிடுதவன விட்டு சொகம் வெலகாம இருக்கது கணக்கா மூக்குபிடிக்க திங்கவனவிட்டு நோய் வெலகாம நிக்கும்.

    குறள் 947

    தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
    நோயள வின்றிப் படும்

    வயித்துப்பசியோட அளவு தெரியாம அதிகமா திங்கவன் ஒடம்புல நோவுநொடி அளவில்லாம வளந்துபோடும்.

    குறள் 948

    நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்

    நோய் இன்னதுனு தெரிஞ்சிக்கிட்டு அது வந்த காரணத்த அறிஞ்சு அதப் போக்குத வழிமொறையத் தெரிஞ்சு தக்கமாரி தப்பில்லாம வைத்தியம் பாக்கணும்.

    குறள் 949

    உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
    கற்றான் கருதிச் செயல்

    சீக்காளியோட வயசு, சீக்கோட தன்ம, வைத்தியம் பாக்க ஆவுத நேரம் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்ட பொறவு தான் வைத்தியர் வைத்தியம் செய்யணும்.

    குறள் 950

    உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
    றப்பானாற் கூற்றே மருந்து

    சீக்காளி, மருந்து, மருந்து கொடுக்கவர்,வைத்தியர் னு வைத்திய மொற நாலு வகையா அமைஞ்சிருக்கு.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 94

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 94

    நாங்குநேரி வாசஸ்ரீ

    94. சூது

    குறள் 931

    வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
    தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

    நிச்சயம் செயிக்கப் போகுதோம்னு தெரிஞ்சாலும் சூதாடக்கூடாது. அது தூண்டில் முள்ள இரைனு நெனச்சி முழுங்கின மீன் கணக்கா ஆக்கிவிட்டுரும்.

    குறள் 932

    ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
    நன்றெய்தி வாழ்வதோர் ஆறு

    ஒருக்க செயிச்ச சந்தோசத்துல நூறு தடவ பொருளத் தோத்துப் போவுத சூதாடிங்க வாழ்க்கையில நல்லது நடக்க வழி இருக்கா?

    குறள் 933

    உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
    போஒய்ப் புறமே படும்

    பணயம் வச்சி ஒருத்தன் தொடர்ச்சியா சூதாடினாம்னா அவன் சொத்தும் அதனால வருத லாபமும் எதிராளிகிட்ட போய் சேந்துக்கிடும்.

    குறள் 934

    சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
    வறுமை தருவதொன் றில்

    ஒருத்தனுக்கு பல சங்கடங்கள உண்டாக்கி அவன் மரியாதயக் கெடுத்து ஏழையாக்கிப்போடுத சூதாட்டம் கணக்கா கெட்ட காரியம் வேற இல்ல.

    குறள் 935

    கவறும் கழகமும் கையும் தருக்கி
    இவறியார் இல்லாகி யார்

    சூதாடுத எடம், சாதனம், ஆடுத தன் கைத்தெறம இதையெல்லாம் பெருமயா நெனஞ்சி சூதாட்டத்த இறுக்கிப் பிடிச்சிக்கிட்டவக எல்லாம் கைவிட்டுப்போயி ஒண்ணுமில்லாமப் போயிடுவாக.

    குறள் 936

    அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
    முகடியான் மூடப்பட் டார்

    சூதாட்டம் ங்குத மூதேவியால முழுங்கப்பட்டவுக வயிறார திங்க ஏலாம பலவிதமா சங்கடப்பட்டு சீரளியுவாக.

    குறள் 937

    பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
    கழகத்துக் காலை புகின்

    சூதாடுத எடத்துலயே ஒருத்தன் தன் காலத்தக் கழிச்சாம்னா அவன் பரம்பரச்சொத்து  கைவிட்டுப் போவும். நல்ல கொணத்தையும் கெடுத்துப்போடும்.

    குறள் 938

    பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்
    தல்லல் உழப்பிக்கும் சூது

    சூதாட்டம் பொருள அழிச்சுப்போடும் அந்தானிக்கு பொய் பேசச் சொல்லும் பொறவு இரக்கங்கெட்டவனாக்கி செரையா வந்து முடியும்.

    குறள் 939

    உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்
    அடையாவாம் ஆயங் கொளின்

    சூதாடுதுவன விட்டு மரியாத, படிப்பு, சொத்து, சாப்பாடு, உடுப்பு எல்லாம் அண்டாம வெலகிப்போவும்.

    குறள் 940

    இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
    உழத்தொறூஉம் காதற் றுயிர்

    பொருள வச்சி தோக்கத் தோக்க சூதாட்டத்துமேல வைக்க ஆச அதிகமாவுததும் ஒடம்பு சங்கடப் படப்பட உசிரு மேல வைக்க ஆசயும் ஒண்ணுதான்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 93

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 93

    நாங்குநேரி வாசஸ்ரீ

    93. கள்ளுண்ணாமை

    குறள் 921

    உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
    கட்காதல் கொண்டொழுகு வார்

    கள்ளு குடிக்க பழக்கம் இருக்கவுகளப் பாத்து யாரும் பயப்படமாட்டாங்க. வாழுத  காலத்துலயும் அவுகளுக்கு புகழ் இல்லாமப் போவும்.

    குறள் 922

    உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
    எண்ணப் படவேண்டா தார்

    கள்ளு குடிக்கக் கூடாது.. படிச்ச பெருமக்க முன்ன மானம் மருவாதி கெட்டு அலையணும்னு நெனைக்கவன் குடிச்சிக்கிடலாம்.

    குறள் 923

    ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
    சான்றோர் முகத்துக் களி

    எல்லாத்தையும் பொறுத்துப்போவுத பெத்த ஆத்தா முன்ன ஒருத்தன் கள்ளு குடிச்சிட்டு கெடந்தாம்னா அவளே சகிச்சிக்கிட மாட்டாங்குதப்போ படிச்ச பெருமக்க  சகிப்பாகளா?

    குறள் 924

    நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
    பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

    கள்ளு குடிக்கதுங்கத ஆக்கங்கெட்ட காரியத்த செய்யுதவன் முன்ன நாணம் ங்குத நல்ல கொணம் நிக்காம ஓடிப்போவும்.

    குறள் 925

    கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
    மெய்யறி யாமை கொளல்

    தன்ன மறந்து சொரணகெட்டு மயங்கிக் கெடக்கதுக்காவ ஒருத்தன் வெல கொடுத்து கள்ளு வாங்கிக் குடிக்கதுமாரி கூறுகெட்டதனம் ஒண்ணுமில்ல.

    குறள் 926

    துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
    நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

    ஒறங்குதவருக்கும் செத்தவருக்கும் எங்ஙன பெரிய வித்தியாசமில்லயோ அங்ஙனதான் கள்ளுகுடிக்கவனுக்கும் விசம் குடிச்சவனுக்கும் இருக்கதும்..

    குறள் 927

    உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
    கள்ளொற்றிக் கண்சாய் பவர்

    கள்ளை ஒளிச்சி வச்சிக்கிட்டு  குடிச்சாலும் ஊர்க்காரவுக தெரிஞ்சிக்கிட்டு எப்பமும் எளக்காரம் செஞ்சு சிரிப்பா சிரிப்பாக.

    குறள் 928

    களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்
    தொளித்ததூஉம் ஆங்கே மிகும்

    கள்ளு குடிக்கவன் நான் குடிச்சதே இல்லன்னு பொய் சொல்லுதத உட்டுப்போடணும்.  ஏம்னா அவன் குடிச்சிருக்க நேரம் மனசுக்குள்ளார ஒளிச்சு வச்ச உண்ம வெளிய வந்துரும்.

    குறள் 929

    களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
    குளித்தானைத் தீத்துரீஇ அற்று

    குடிபோதையில மயங்கிக் கெடக்கவனுக்கு புத்தி சொல்லுதது தண்ணிக்குள்ளார முங்கினவன தீப்பந்தம் புடிச்சுக்கிட்டு தேடுதது கணக்கா ஆவும்.

    குறள் 930

    கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
    உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

    ஒரு குடிகாரன் தான் குடிக்காம இருக்குதப்போ மத்த குடிகாரனப் பாத்து நாமளும் இப்டிதான் சீரளியுதோம்னு புரிஞ்சிக்கிடமாட்டானோ?

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 92

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 92

    நாங்குநேரி வாசஸ்ரீ

    92. வரைவின் மகளிர்

    குறள் 911

    அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
    இன்சொல் இழுக்குத் தரும்

    நேசமில்லாம பணத்து மேல ஆச வச்சி இனிக்க பேசுத தாசியோட பேச்சு ஒருத்தனுக்கு துன்பத்தக் கொடுக்கும்.

    குறள் 912

    பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
    நயன்தூக்கி நள்ளா விடல்

    எம்புட்டு ஆதாயம் கெடைக்கும்னு பாத்து அதுக்கேத்தாமாரி இனிக்க இனிக்க பேசுத தாசிய நம்பி ஏமாறக் கூடாது.

    குறள் 913

    பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
    ஏதில் பிணந்தழீஇ அற்று

    பொருள் மேல மட்டுமே ஆச வச்சி அதுக்காவ பொய்யா கட்டி அணைக்குத தாசி கூட இருக்கது, இருட்டு அறையில சம்பந்தமில்லாத பொணத்த அணைச்சிக் கிட்டதுக்கு சமானமாவும்.

    குறள் 914

    பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
    ஆயும் அறிவி னவர்

    அருள மட்டுமே தேடுத அறிவுள்ளவுக பொருள விரும்புத தாசியோட சேந்து இன்பத்த அனுவிக்க விரும்ப மாட்டாக.

    குறள் 915

    பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
    மாண்ட அறிவி னவர்

    சொந்த அறிவுள்ள படிச்ச புத்திசாலிங்க எல்லாருக்கும் பொதுவா இருந்து இன்பத்த தருத தாசி பின்னால போவ மாட்டாக.

    குறள் 916

    தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
    புன்னலம் பாரிப்பார் தோள்

    தன்  அழக நெனச்சி தலக்கனம் புடிச்சுத் திரிஞ்சு அத வித்துப் பொழக்கித தாசி பொறத்தால படிச்ச பெருமக்க போவ மாட்டாக.

    குறள் 917

    நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
    பேணிப் புணர்பவர் தோள்

    நெஞ்சுறுதி இல்லாதவுக தான் மனசார இல்லாம வெறும் பொருளுக்கு ஆசப்பட்டுக் கூடுத தாசி பின்னால போவாக.

    குறள் 918

    ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
    மாய மகளிர் முயக்கு

    .வஞ்ச மனசுள்ள தாசிகிட்ட மயங்கி கெடக்க புத்திகெட்டவன மோகினி பிடிச்சதா சொல்லுவாக.

    குறள் 919

    வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
    பூரியர்கள் ஆழும் அளறு

    ஒழுக்கங்கெட்ட தாசியோட தோள் கூறுகெட்டவன் விழுந்து கெடக்க நரகத்துக்குச் சமானம்.

    குறள் 920

    இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
    திருநீக்கப் பட்டார் தொடர்பு

    மனசு ஒருத்தங்கிட்டயும் ஒடம்பு ஒருத்தங்கிட்டயுமா ரெண்டு மனசா இருக்க தாசியும், கள்ளும், சூதாட்டமும் இந்த மூணு வகையும் லச்சுமினு சொல்லுத திருமகள் வெலக்கி வச்சவுகளுக்கு ஒறவா வந்து அமையும்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 91

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 91

    நாங்குநேரி வாசஸ்ரீ

    91. பெண் வழிச்சேறல்

    குறள் 901:

    மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
    வேண்டாப் பொருளும் அது

    பொஞ்சாதி மேல ஆச வச்சி அவ பேச்சக்கேட்டு ஆடுதது நல்லதுக்கு இல்ல. கடைமையச் செய்ய விரும்புதவங்க வேண்டாம்னு நெனைக்கதும் அதுதான்.

    குறள் 902:

    பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
    நாணாக நாணுத் தரும்

    ஏத்துக்கிட்ட கடமையச் செய்யாம பொம்பள பின்னால ஆச வச்சி சுத்துதவன் கிட்ட இருக்க சொத்து வெக்கப்பட்டு கூசி தல குனியுத நெலமைக்கு கொண்டு உட்ரும்.

    குறள் 903:

    இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
    நல்லாருள் நாணுத் தரும்

    கொணங்கெட்ட பொஞ்சாதி முன்ன பணிஞ்சு போவுத புருசன் நல்லவங்க மத்தியில நிக்குதப்போ கூச்சப்படுவான்.

    குறள் 904:

    மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்
    வினையாண்மை வீறெய்த லின்று

    கலியாணம் முடிச்சு புது வாழ்க்கையோட பயன அடையாம குடும்பம் நடத்த பயப்படுதவனோட காரியத்தெறம சிறப்பா அமையாது.

    குறள் 905:

    இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்
    நல்லார்க்கு நல்ல செயல்

    பொஞ்சாதிக்கு பயந்து வாழுதவன் நல்லவங்களுக்கு நல்லது செய்யுதப்போவும் பயந்து நடப்பான்.

    குறள் 906:

    இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்
    அமையார்தோ ளஞ்சு பவர்

    தேவர்களப்போல இந்த ஒலகத்துல ஒசத்தியா வாழ்ந்தாலும் பொஞ்சாதியோட அழகான தோளுக்கு பயந்து வாழுதவனுக்கு பெரும கெடையாது.

    குறள் 907:

    பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
    பெண்ணே பெருமை உடைத்து

    பொஞ்சாதி ஏவுத காரியத்த செய்யுதவனோட ஆண்மையவிட வெக்கப்படுத கொணத்தக் கொண்ட மானமுள்ளவளோட பெண் தன்ம ஒசந்தது.

    குறள் 908:

    நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
    பெட்டாங் கொழுகு பவர்

    தம் பொஞ்சாதி ஆசப்பட்டதுமாரி வாழுதவன் சேக்காளியப் பத்தி வெசனப்படமாட்டான். அவுகளுக்கு நல்லதும் செய்யமாட்டான்.

    குறள் 909:

    அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
    பெண்ணேவல் செய்வார்கண் இல்

    நல்லகாரியத்த செய்யுததும் அதுக்காவ பொருள் சேக்க மொனையுததும், மத்த கடமைகளும் பொஞ்சாதி பேச்சக் கேட்டு நடக்கவங்களுக்குக் கெடையாது.

    குறள் 910:

    எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
    பெண்சேர்ந்தாம் பேதைமை இல்

    எதையும் ரோசனை பண்ணி செய்யுதவனும், நெஞ்சுறுதி இருக்கவனும் பொஞ்சாதி பேச்ச மட்டுமே கேட்டு நடக்க மாட்டாக.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 90

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 90

    நாங்குநேரி வாசஸ்ரீ

    90. பெரியாரைப் பிழையாமை

    குறள் 891:

    ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
    போற்றலுள் எல்லாம் தலை

    ஏத்துக்கிட்ட காரியத்த நல்லமொறையில செஞ்சுமுடிக்குத சக்தி இருக்கவங்கள எளக்காரம் செய்யாம இருக்கதுதான் தன்னயக் காக்குத எல்லாக் காவல்களிலையும் ஒசந்ததா அமையும்.

    குறள் 892:

    பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
    பேரா இடும்பை தரும்

    பெரிய மனுசங்கள மதியாம இருந்தா விட்டுவெலகாத பெருந்துன்பம் வந்து சேந்துக்கிடும்.

    குறள் 893:

    கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்
    ஆற்று பவர்கண் இழுக்கு

    ஒருத்தன் தன்னயத்தானே கெடுத்துக்கிட ஆசப்பட்டாம்னா பகைய மனசுல நெனக்க நேரமே யோசிக்காம அழிச்சுப்போடுத சக்தி உள்ளவுக கிட்ட வாலாட்டணும்.

    குறள் 894:

    கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
    காற்றாதார் இன்னா செயல்

    பலம் உள்ளவுக கூட பலமில்லாதவுக மோதுதது எமன கைய அசைச்சு கூப்பிடுததுக்கு சமானம்.

    குறள் 895:

    யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்
    வேந்து செறப்பட் டவர்

    ரொம்ப பலமுள்ள ராசாவோட கோபத்துக்கு ஆளானவுக எங்க தப்பிச்சிப் போனாலும் நிம்மதியா வாழ ஏலாது.

    குறள் 896:

    எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
    பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

    நெருப்பு சுட்டா கூட உசிரு பொழச்சிக்கிடலாம். பலமுள்ள பெரியவங்க கிட்ட தப்பா நடந்துக்கிடுதவன் தப்பிப் பொழைக்க ஏலாது.

    குறள் 897:

    வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
    தகைமாண்ட தக்கார் செறின்

    கொணத்தால ஒசந்த பெரியவங்க ஒருத்தன்மேல கோவப்பட்டாகன்னா அவங்கிட்ட குவிஞ்சுகெடக்க செல்வத்தாலயும்,  சொகமான வாழ்க்கையாலயும் என்ன பிரயோசனம்?

    குறள் 898:

    குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
    நின்றன்னார் மாய்வர் நிலத்து

    மலை கணக்கா பலமிருக்க பெரியவர அழிக்க நெனயுதவன் நெலச்ச பணக்காரனா இருந்தாலும் அடியோட அழிஞ்சு போவான்.

    குறள் 899:

    ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
    வேந்தனும் வேந்து கெடும்

    ஒசந்த கொள்கை கொண்ட பெரியவங்க ராசா மேல கோவப்பட்டாகன்னா அவன் ஆட்சி இடையிலேயே கையவிட்டுப்போயி கெட்டுஅழிவான்.

    குறள் 900:

    இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
    சிறந்தமைந்த சீரார் செறின்

    அளவுக்குமிஞ்சின வசதிவாய்ப்பு பலமுள்ள பக்கத்தொணை எல்லாம் ஒருத்தர்கிட்ட இருந்தாலும் தகுதியுள்ள பெரியமனுசங்க கோவத்துக்கு எதிர தப்பிச்சுப் பொழைக்க ஏலாது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 89

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 89

    நாங்குநேரி வாசஸ்ரீ

    89. உட் பகை

    குறள் 881:

    நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
    இன்னாவாம் இன்னா செயின்

    இன்பம் தருத நெழலும் தண்ணியும் கேடு வெளைவிக்கதா இருந்தா அத கெட்டவைகளாத் தான் நெனைக்கணும். அதுகணக்காதான் சொந்தபந்தத்தோட உட்பகையும்.

    குறள் 882:

    வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
    கேள்போல் பகைவர் தொடர்பு

    வாள் கணக்கா வெளிப்படையா இருக்க பகையாளியப் பாத்து பயப்படவேண்டியதில்ல. சொந்தக்காரன்மாரி பழகிட்டு மனசுக்குள்ள பகைய வச்சிருக்கவனோட ஒறவுக்கு பயந்துக்கிடணும்.

    குறள் 883:

    உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
    மட்பகையின் மாணத் தெறும்

    உட்பகைக்கு பயந்து ஒருத்தன் தன்னயக் காத்துக்கிடணும். இல்லன்னா சோதனையான நேரத்துல பச்சப்பாண்டத்த அறுக்குத சாதனம் கணக்கா நம்மள உறுதியா அழிச்சுப்போடும்.

    குறள் 884:

    மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
    ஏதம் பலவும் தரும்

    மனசு திருந்தாத அளவுக்கு ஒருத்தனுக்கு உட்பகை உணச்சி வந்துடுச்சின்னா அது அவனச் சேந்த எல்லாரையும் பகையாளியா ஆக்கிப்போடுத அளவுக்கு கெடுதல வெளைவிச்சிப்போடும்.

    குறள் 885:

    உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
    ஏதம் பலவும் தரும்

    சொந்தக்காரனோட உட்பகை வந்துச்சின்னா அது சாவுத அளவு பல கெடுதல உண்டாக்கிப்போடும்.

    குறள் 886:

    ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
    பொன்றாமை ஒன்றல் அரிது

    தங்கூட இருக்கவங்ககிட்ட பகை ஏற்பட்டிச்சின்னா அவன் அழிஞ்சு போவுதத தடுக்க யாராலயும் முடியாது.

    குறள் 887:

    செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
    உட்பகை உற்ற குடி

    செப்பு மூடியோட பொருந்தி இருக்கதுமாரி வெளிய பாக்கதுக்குத்தான் தோணும். அதுகணக்கா உட்பகை உள்ளவுக மனசார பொருந்தி இருக்க மாட்டாக.

    குறள் 888:

    அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு
    துட்பகை உற்ற குடி

    இரும்ப அரத்தால தேய்க்குதப்போ அதோட வலிம கொறையுதது கணக்கா உட்பகை உள்ளவுக குடும்பத்தோட வலிமயும் தேஞ்சு கோறஞ்சி போவும்.

    குறள் 889:

    எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
    உட்பகை உள்ளதாங் கேடு

    எள்ளோட பொளவு கணக்கா சித்தூண்டு இருந்தாலும் ஒரு குடிய அழிச்சுப்போடுத அளவு கேடு உட்பகையில இருக்கு.

    குறள் 890:

    உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
    பாம்போ டுடனுறைந் தற்று

    மனசு பொருந்தாம ஒண்ணா வாழுதது ஒரு குடிசைக்குள்ளார பாம்போட வாழுதது கணக்கா பயப்படத்தக்க விசயம்.

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 88

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 88

    நாங்குநேரி வாசஸ்ரீ

    88. பகைத்திறம் தெரிதல்

    குறள் 871:

    பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
    நகையேயும் வேண்டற்பாற் றன்று

    பகைன்னு சொல்லுத தீய கொணத்த ஒருத்தன் பொழுதுபோக்கா வெளையாட்டுக்குக் கூட ஆசப்படக் கூடாது.

    குறள் 872:

    வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
    சொல்லேர் உழவர் பகை

    வில்ல வச்சிருக்குத வீரர் கிட்ட கூட பகையக் காணிக்கலாம். சொல்தெறம இருக்க புத்திசாலிங்க கிட்ட காணிக்கக் கூடாது.

    குறள் 873:

    ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
    பல்லார் பகைகொள் பவன்

    தனிச்சு நின்னு பல பகையாளியத் தேடிக்கிடுதவன் கூறுகெட்ட பைத்தியக்காரன்.

    குறள் 874:

    பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
    தகைமைக்கண் தங்கிற் றுலகு

    பகையாளியக் கூட சேக்காளியா மாத்துத பெருந்தன்மையான கொணத்த இந்த ஒலகம் போற்றிப் புகழும்.

    குறள் 875:

    தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
    இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று

    தனக்கு ஒதவி செய்ய ஆளில்லாத நெலமயில ரெண்டு பகையாளிங்க இருந்தாகன்னா அவுகள்ள ஒருத்தன சேக்காளியாக்கி தொணையாக்கிக்கிட வேண்டியதுதான்.

    குறள் 876:

    தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
    தேறான் பகாஅன் விடல்

    இதுக்குமுன்ன ஒருத்தனப் பத்தி தெரிஞ்சிருந்தாலும் தெரியலன்னாலும் நெருக்கடி வருதப்போ அவன்கிட்ட நெருங்காம சேக்க வச்சிக்கிட்டும் அவனவிட்டுப் பிரியாம பகையக் காணிச்சிட்டும் இருக்கது நல்லது.

    குறள் 877:

    நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
    மென்மை பகைவர் அகத்து

    தான் துன்பப்பட்டத தெரிஞ்சிக்கிடாத சேக்காளிக்கிட்ட அதப்பத்தி சொல்லக்கூடாது. . நம்ம பலவீனத்த பகையாளிகிட்ட காட்டிக்கிடக் கூடாது.

    குறள் 878:

    வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
    பகைவர்கண் பட்ட செருக்கு

    வழிவகைய உணந்து தன்னயும் பலப்படுத்திக்கிட்டு தற்காப்பும் தேடிக்கிட்டா நம்மள எதித்துநிக்க நெனச்ச பகையாளியோட அகராதி தானா அழிஞ்சு போவும்.

    குறள் 879:

    இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
    கைகொல்லும் காழ்த்த இடத்து

    முள்ளு மரம் எளசா இருக்கும்போதே வெட்டிப்போடணும். அது முத்திப்போச்சுன்னா வெட்டுதவுக கைக்கு வெனையா வந்து நிக்கும்.

    குறள் 880:

    உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
    செம்மல் சிதைக்கலா தார்

    பகையாளியோட அகராதிய ஏளனமா நெனச்சி அழிக்காம விடுதவன் மூச்சுவிடுத காரணத்தாலேயே உசிரோட இருக்கதா சொல்ல முடியாது.

    Share