Blog

  • எட்டுக் கோணல் பண்டிதன் – 4

    எட்டுக் கோணல் பண்டிதன் – 4

    தி. இரா. மீனா

    உலகாயதமும், ஆழமான ஆன்மீகச் சிந்தனைகளும் உடைய ஜனகர் ’மெய்மையின்’ இயல்பை அறியவிரும்புகிறார். ’மெய்மை என்றாலென்ன?’ என்று அஷ்டவக்கிரரிடம் கேட்க, மிகத் தனித்துவம் நிறைந்த உரையாடல் நிகழ்கிறது, அஷ்டவக்கிரர் மெய்மையின் இயல்பை படிப்படியாக விளக்க, ஜனக மன்னருக்கு முதலில் புரிதலும், பின்பு ஞானவிடியலும் ஏற்படுகிறது. அதுவே அஷ்டவக்கிர கீதை.

    அஷ்டவக்கிர முனிவருக்கும் ஜனக மன்னருக்கும் இடையே நிகழ்ந்த சம்வாத வடிவமான அஷ்டவக்கிர கீதை இருபது அத்தியாயங்கள் கொண்டது. இதில் 1, 3, 5, 8, 9, 10, 11, 15, 16, 17, 18 ஆகிய பதினொன்று அத்தியாயங்கள் அஷ்டவக்கிர முனிவருடைய உபதேசமாகவும் , 2, 4, 6, 7, 12, 13, 14, 19, 20 ஆகியவை ஜனக மன்னர் குருவருளால் பெற்ற மகிழ்வுணர்வை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.

    அத்தியாயம் ஒன்று

    ஜனகர்:

    குருவே! ஞானத்தையும், முக்தியையும், ஆசையற்ற தன்மையையும் பெறுவது எப்படி என்று எனக்கு விவரிக்க வேண்டும்.

    ஷ்டவக்கிரர்:

    • அன்பரே! நீர் மோட்சத்தை விரும்பினால் பொறுமை, நேர்மை, வாய்மை, இரக்கம், திருப்தி என்னும் இவற்றைப் பின்பற்றி பிறவற்றை நஞ்சு என நினைத்து ஒதுக்கிவிட வேண்டும்.
    • நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னுமிவை நீயல்ல. மோட்சம் பெற இவற்றின் சாட்சியாகிய அறிவுருவமான ஆன்மாவையுணர வேண்டும்.
    • உடலையொதுக்கி அறிவிலே அமைதியாக நிலைத்தால் நீ இப்போதே சுகமும், சாந்தியும், மோட்சமும் பெற்றவனாவாய்.
    • பொறிகளுக்குப் புலப்படாது பற்றற்று, வடிவற்று நீ சுகமாயிரு.
    • தர்ம, அதர்மங்களும், இன்ப துன்பங்களும் உனக்கில்லை. செய்பவனும், அனுபவிப்பவனும் நீயில்லை. நீ என்றும் விடுதலையுணர்வுடையவனே.
    • அனைத்தின் ஏக சாட்சி நீ; நித்திய விடுதலை நிறைவு நீ; பார்ப்பவனை அந்நியமாகப் பார்ப்பதே உனது பந்தம்.
    • செய்பவன் நானென்னும் அகந்தையால் ஆட்பட்டிருந்தாய்; செய்பவன் நானில்லை என்னும் நம்பிக்கையில் இன்பமடைவாய்.
    • தூய்மையான ஞானமொன்றே நான் என்னும் நிச்சய நெருப்பினால் அஞ்ஞானத்தை எரித்து துன்பம் நீங்கி இன்பமடைவாய்.
    • எதனிடத்து இவையனைத்தும் கயிற்றரவு போல கற்பிதமாக இலகுமோ அப்பேரின்பப் பெருக்கான அறிவே நீ சுகமாயிருப்பாய்.
    • தன்னை முக்தனெனக் கருதுபவன் முக்தனே; பக்தனெனக் கருதுப வன் பக்தனே. [மதியெதுவோ கதியதுவே – பழமொழி பொருந்தும்]
    • ஆத்மா சாட்சி, பூரணம் ஒன்று, விடுதலை, வடிவற்றது, தொழிலற்றது, பற்றறது, அவாவற்றது அமைதியானது. மாயையால் அது சம்சாரி போலாகும்..
    • ஜீவனே நானென்னும் மயக்கமழிந்து, வெளியும் உள்ளுமாம் பாவனை அகன்று இரண்டற்ற நிச்சல போதமாம் தன்னையே கருதுவாய்.
    • தேசாபிமானக் கயிற்றால் நீண்டகாலம் கட்டுண்டு கிடந்தாய். அறிவே நானென்னும் ஞான வாளால் அதைத் துணித்து சுகமாக வாழ்வாய்.
    • பற்றின்றி, பணியின்றி மாசற்றவனே. சமாதி பழகுகிறாயே அதுவே உன் பந்தம்.
    • இப்படைப்பு அனைத்தும் உன்னால் வியாபிக்கப்பெற்றது உன்னுடனே திகழ்வது,தூய ஞானவடிவே நீ; அற்ப நினைப்புறாதே.
    • எதையும் எதிர்பார்க்காமல், சுமையிலாமல் மனம் குளிர்ந்து ஆழ்ந்த அறிவுடன்,குழப்பமில்லாமல் ஞானம் மட்டும் கொண்டிருப்பாய்.
    • உருவம் உடையது அனைத்தும் பொய்யெனவும்,உருவமற்றதே மாறா தென்றும் உணர்ந்தால் இவ்வுண்மை உபதேசத்துடன் இனியுனக்குப் பிறப்பில்லை.
    • கண்ணாடிக்குள் உள்ளும், புறமும் எப்படியோ அவ்வாறே இவ்வுடலின் உள்ளும் புறமும்.
    • குடத்திற்குள்ளேயும்,வெளியிலும் எங்கும் நிறைந்த ஏகவானம் போல படைப்புத்திரள் எல்லாவற்றிலும் இருப்பது நீக்கமில்லாத நிறைவான சாஸ்வத பிரம்மமே.

    [தொடரும்]

    Share
  • பழகத் தெரிய வேணும் – 30

    பழகத் தெரிய வேணும் – 30

    நிர்மலா ராகவன்

    (செயலும் விளைவும்)

    ஒரு செயல் எண்ணத்திலிருந்து பிறக்கிறது.

    எண்ணமோ உணர்ச்சியிலிருந்து ஆரம்பிக்கிறது.

    அண்மையில் சீனாவில் நடந்தது இது.

    பெற்றோர் இணங்காததால், ஃபூவும் (Foo) அவன் காதலியும் பிரிய நேரிட்டது. இருவருமே பெற்றோர் நிச்சயித்தவர்களைத் திருமணம் செய்துகொண்டு, ஆளுக்கு ஒரு பிள்ளையும் பெற்றார்கள்.

    பல வருடங்களுக்குப்பின் அவர்கள் மீண்டும் சந்திக்க, பழைய காதல் துளிர்த்தது. விவாகரத்து பெற்று, திருமணம் செய்துகொண்டார்கள்.

    முதல் திருமணத்தில் பெற்ற குழந்தைகளை இருவருமே உதறித் தள்ளினார்கள். ஃபூவின் மகள் தாயுடனும், மனைவியின் மகன் தந்தையுடனும் வசிக்க ஏற்பாடு செய்துவிட்டு, தனியாக இன்புற்றிருந்தார்கள்.

    சில வருடங்கள் கழித்து, தன் மனைவியைக் காணோம் என்று கண்ணீருடன் காவல்துறையினரிடம் புகார் செய்தான் ஃபூ.

    விசாரித்துப் பார்த்ததில், அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டே இருந்தது தெரியவந்தது.

    ஒரு பெண் கொலை செய்யப்பட்டாலோ, காணாமல் போனாலோ, முதலில் கணவன்மீதுதான் சந்தேகம் எழும்.

    ஃபூவின் வீட்டைச் சுற்றித் தோண்டியபோது, மனைவியின் கை, கால் முதலியவை தனித்தனியாக அகப்பட்டன. உடலோ, கழிவு நீர் சேகரிக்கும் தொட்டிக்குள் (septic tank).

    இருவரும், அவர்களுக்கு இருந்த சொத்து தத்தம் குழந்தைகளுக்குத்தான் சேரவேண்டும் என்று சண்டை பிடித்திருக்கிறார்கள். ஆத்திரத்தில், காதல் மனைவியைக் கொன்றுவிட்டான் ஃபூ.

    ஆத்திரத்தில் புரியும் செயலால் ஏற்படும் விளைவுகளைப்பற்றி முதலிலேயே யோசிக்காவிட்டால் இப்படித்தான் ஆகும்.

    அதிகாரம் அஞ்சாமையை அளிக்குமோ?

    உலகம் முழுவதிலும், எத்தனை அரசியல்வாதிகள் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறார்கள்!

    ‘அரசியலில் ஈடுபட்டால், இவ்வளவு சீக்கிரம் செல்வந்தர்களாக முடியுமா? மக்களை முட்டாளாக்குவது இவ்வளவு எளிதா! எத்தனை அதிகாரம்!’ என்று யோசித்தே பலரும் இத்துறையைத் தேர்ந்தடுக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

    சற்றே யோசித்துச் செயல்பட்டிருந்தால், ‘பிடிபட்டு விடுவோமோ!’ என்ற அச்சத்துடனேயே ஒவ்வொரு நாளையும் கடத்த வேண்டிய அவசியம் இருக்காது. ஓடி ஒளிந்திருக்கவேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்பட்டிருக்காது.

    “அரசியலில் முதல் கொள்ளைக்காரர்” என்று வர்ணிக்கப்படுகிறார் பிலிப்பீன்ஸ் அதிபராக இருந்த மார்கோஸ். அவரையும், அவரது மனைவியையும் எதிர்த்து நாட்டில் கலகம் விளைந்தது. மக்களை ஏழ்மையில் உழல வைத்துவிட்டு, பெட்டி பெட்டிகளாக ரொக்கப்பணம், நகை, தங்கக்கட்டி என்று சுருட்டிக்கொண்டு, 1986 -ல் தலைமறைவானார்கள் இத்தம்பதியர்.

    ஹவாயி தீவில் மார்கோஸ் இறந்தபின்னும், அவருடைய உடலை சொந்த நாட்டிற்குக் கொண்டுவர அனுமதி கிடைக்கவில்லை.

    அவர்களது பேராசையால் நாட்டு மக்கள் ஏழ்மையில் தவித்து, பிழைப்பைத் தேடி வெளிநாட்டுக்குச் செல்லவேண்டிய அவலம். (மலேசியாவில், பிலிப்பீன் நாட்டுப் பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாகவோ, அழகு நிலையங்களிலோ வேலை பார்க்கிறார்கள்).

    பயமும் அசட்டுத்தனமும்

    இன்னொரு சாரார், ‘இதைச் செய்தால் என்ன ஆகுமோ!’ என்று அஞ்சி, புதிதாக எதையும் செய்யத் தயங்குவார்கள்.

    யோசியாமல், அசட்டுத்தனமாக நடக்கிறவர்களும் உண்டு.

    ஒரு பெண்மணி மின்சாரத்தில் இயங்கிக்கொண்டிருந்த மிக்ஸியின் மூடியைக் கழற்றிவிட்டு, தன் நாக்கை உள்ளேவிட்டு, அரைபட்டுவிட்டதா என்று சோதித்துப்பார்த்தாளாம்! நாக்கு துண்டானதுதான் பலன்.

    விளைவு தெரிந்தபோதும்..

    எந்த விளையாட்டாக இருந்தாலும் உடலின் கை, கால், இடுப்பு என்று ஏதாவது ஒரு பாகத்தில் அடிபட்டுத்தான் ஆகும். தீவிரமாக அதில் ஈடுபடுகிறவர்கள் அதற்கெல்லாம் அஞ்சுவதில்லை. தங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கால் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக சில காலம் உடல்குறைவுடன் அவதிப்படுவதை சாதாரணமாக ஏற்பார்கள்.

    நீச்சலா? ஐயோ!

    சீனப்பெண்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நீ நல்ல கலராக இருக்கிறாய்! (You are very fair, lah!)” என்று பாராட்டிக்கொள்வார்கள்.

    நீச்சல் கற்க ஆரம்பித்த பல சீனப் பெண்மணிகள் முகம் கறுக்கிறதென்று உடனே நிறுத்திவிட்டார்கள்.

    “பல பெண்கள் நின்றுவிட்டார்களே! கறுப்பாகிவிடுவோமோ என்ற பயம் உங்களுக்குக் கிடையாதா?” என்று ஓர் இளைஞன் கேட்டான்.

    ஆரம்பிக்குமுன், `நீச்சலா! கறுப்பாயிடுவியே!’ என்று சிலர் எச்சரிக்கை செய்ய, ‘அதனால என்ன?’ என்று அலட்சியம் செய்தேன்.

    விளைவு முதலிலேயே தெரிந்திருந்ததால், கலக்கம் உண்டாகவில்லை. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திற்கும் ஈடு கொடுக்க முடிந்தது.

    இயற்கைச் சீற்றத்தை வேடிக்கை பார்ப்பது

    பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றத்தின்போது துணிந்து படம் எடுக்கச் சென்ற புகைப்படக்காரர்களில் சிலர் அதற்குப் பலியாகி உள்ளார்கள். அதுதான் தொழில் என்ற நிலையில், எந்த நிமிடமும் ஆபத்து விளையலாம் என்று அவர்களுக்கும் தெரியும்.

    ஆனால், ‘புதிய அனுபவம் கிடைக்குமே!’ என்ற ஆர்வத்துடன் யாராவது அதை வேடிக்கை பார்க்கச் செல்வார்களா?

    பிறருக்காகச் செய்யும்போது

    நேர்மையானவர்கள் பிறரது நலனைக் கருதி சில காரியங்கள் செய்யும்போது அது அவர்களுக்கே பாதகமாக முடியும் வாய்ப்பு உண்டு.

    இருப்பினும், ‘இப்படிச் செய்தால் என்ன ஆகும்?’ என்று யோசித்துச் செயல்பட்டால், எந்த விளைவையும் துணிவுடன் ஏற்க முடியும்.

    கதை

    மனநிலை சரியாக இல்லாது, தன்கீழ் வேலைபார்த்த எல்லாரையும் பொறுக்கமுடியாத அளவுக்கு அவமரியாதையாக நடத்திய எங்கள் தலைமை ஆசிரியைப்பற்றி நான் விரிவாக ஆங்கில தினசரியில் எழுதினேன்.

    அது பிரசுரமானதும், ‘இனி எப்படி நீ அவளிடம் வேலை பார்க்க முடியும்?’

    ‘உன் வேலை போய்விடப்போகிறது!’ என்று பலரும் அச்சுறுத்த முயன்றார்கள்.

    ‘நமக்கு இல்லாத தைரியம் இவளுக்கு மட்டும் ஏன்?’ என்ற பொறாமைதான் காரணம். அவளைப் பொறுக்க முடியாதிருந்த நிலைதான் பலருக்கும். ஆனால், அவர்களுக்கு அவளை எதிர்க்கும் துணிச்சல் இருக்கவில்லை.

    அடுத்த சில மாதங்கள் மேலிடத்திலிருந்து என்னை மிரட்டிப்பார்த்தார்கள். நான் மசியவில்லை.

    நான் செய்த காரியத்தால் தலைமை ஆசிரியை என்மீது காதல் கொள்வாள் என்று நான் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால், நான் எதிர்ப்படும்போதெல்லாம் என்னை வெறுப்புடன் பார்த்தது மிகை.

    (இறுதியில், அவளுக்கு பதவிகுறைப்பு செய்யப்பட்டது).

    ஐ லவ் யு

    காதலர்களோ, தம்பதியரோ, நிறைய சண்டை போட்டுவிட்டு, இந்த மந்திரத்தை உச்சரித்தால், சமாதானமாகிவிடுவார்கள்.

    இது தமிழ்த்திரைப்படங்கள் நமக்குக் கற்றுக்கொடுக்கும் முட்டாள்தனமான பாடங்களுள் ஒன்று.

    சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தால்தான் நம்பிக்கை பிறக்கும்.

    மனைவியை அடித்துவிட்டு, `ஐ லவ் யு’ என்று அவளைக் கொஞ்சி சமாதானப்படுத்த முயன்றால், அது அன்பில் சேர்த்தியா?

    அவசரம் சுறுசுறுப்பாகாது

    அதிவேகமாக எதையோ செய்வதுபோல் ஒருவர் நடந்துகொண்டால், அவர் சுறுசுறுப்பானவர், செயல்வீரர் என்றாகாது.

    ஒருவரது செய்கையால் ஏதேனும் மாற்றம் நிகழவேண்டும்.

    கதை

    “நீங்கள் தினசரியில் ஏதேதோ எழுதுகிறீர்களே! என்ன பயன்?” ஆண்களும் பெண்களும் கேலியாக என்னைக் கேட்டிருக்கிறார்கள்.

    “நாம் சமூகத்துடன் ஒட்டி நடக்கவேண்டும்,” என்ற அறிவுரை வேறு!

    சகஆசிரியர் ஒருவர் மாணவியை மானபங்கம் செய்ய முயன்றார் என்றெழுதியபோது, என்னமோ, நான்தான் கெட்டவள் என்பதுபோல் என்னைத் திரும்பத் திரும்ப குறுக்கு விசாரணை செய்தார்கள் மேலிடத்திலிருந்து.

    நம் செய்கையால் அநீதியான எதையாவது மாற்ற நினைத்தால், பலரையும் சிந்திக்க வைக்கிறோம். அதுதான் பயன்.

    இருபத்தைந்து வருடங்களுக்குப்பின், மகளை, மாணவியை, பலாத்காரம் செய்ய முயன்ற ஆண்களுக்கு இருபது ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சிகரமான விஷயம்.

    உடனுக்குடன் எதுவும் மாறுவதில்லை. அதற்காக, முயற்சி செய்யாமல் இருந்துவிடலாமா?

    Share
  • படக்கவிதைப் போட்டி – 272

    படக்கவிதைப் போட்டி – 272

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (23.08.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 271இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 271இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நீர்த்துளி சொட்டும் வண்ண இலைகள் கொண்ட செடியைக் கலைநயத்தோடு படமெடுத்து வந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது இந்தப் படம். நிழற்பட நிபுணருக்கு  என் நன்றி!

    இயற்கையின் படைப்பில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை எத்தனை விதமான விசித்திர உயிர்கள்! அதிலும் தாவரங்கள் நம் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்துபடைப்பதோடு நம் மனத் துயருக்கும் மருந்தளிக்க வல்லவை!

    நுணுகிய நோக்குக் கொண்ட நம் கவிஞர்களின் கலைக்கண்கள், இந்தப் படத்தை எப்படி அணுகியிருக்கின்றன என்பதை அவர்களின் கவிதைகள்வழி அறிந்துவருவோம்!

    *****

    ”மேகக் காதலனால் கொட்டப்பட்ட நீர்த்துளிகள் இந்தச் செடியின் உடலெங்கும் முத்தத் தடங்கள்போல் மின்னுகின்றன” எனும் அழகிய கற்பனையைத் தன் கவிதையில் ஏற்றியிருக்கின்றார் திருமிகு. விஜயகுமாரி.

    சொட்டும் மிச்சமின்றி
    கொட்டி விட்டேன் காதலை
    சுமக்கிறாய்,
    உன் மேனியெங்கும்
    முத்தத்தடங்கள் போல.
    ஏந்துகிறாய்
    அன்னை போல்
    கண்ணாடிக் குழந்தைகள் போல
    முகம் பார்த்துக்கொள்கிறேன்
    நெடுநாள் கழித்து
    என் சாயல் அதனில்.
    சூரியனைப் பற்றி
    கவலை கொள்ளாதே.
    நாளையும் வருவேன்
    காதலிக்க.
    இப்படிக்கு
    உன் நான்
    மேகத்திலிருந்து!

    *****

    பனித்துளியால் இலைக்கழகா? இலையால் பனித்துளி அழகா? என்று விடை வேண்டி வினாக் கணை தொடுத்திருக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    பனித்துளி தாங்கிய இலைகள்
    பருவப்பெண்ணின் அழகிய உதடுகள்
    வண்ணவண்ண நிறத்திலிருப்பதனால்
    வானவில் வடிவில் நின்றதுவோ?
    பளபள நிறத்தில் பனித்துளிகள்
    மழைத்துளியின் மாற்று உருவமதோ?
    மொத்தத்தில்
    பனித்துளையால் இலைக்கழகா?
    இலையால் பனித்துளி அழகா?
    விடையைத்தான் கூறுங்கள்
    வெகுநேரம் காத்திருப்பேன்!

    *****

    ”பயனுள்ள துளசிச்செடி பக்கத்துவீட்டில் வாடியிருக்க, பணக்காரவீட்டுப் பயனிலாச் செடியான எனக்கோ நிதமும் விலைகொடுத்து நீருற்றுகின்றார்கள்!” என்று உள்ளம் குமுறும் செடியினைக் காண்கின்றோம் திரு. சீ. காந்திமதிநாதன் கவிதையில்.

    செடியின் உள்ளக் குமுறல்!

    வசதி உள்ளவன்
    வீட்டுத் தோட்டத்துச்
    செடி நான்!

    பணம் கொடுத்துத்
    தண்ணீர் வாங்கி
    என்னை வாழ வைத்து
    என்ன பயன்?

    அழகுக்கான செடி
    பூக்காத கொடி
    நீரே என் குடி
    செல்லாத உருப்படி!

    அடுத்த வீட்டுத்
    துளசி மாடம்
    நீரின்றி வாட்டம்!

    குடிக்க நீரின்றித்
    தெரு எல்லாம்
    தவியோ தவிப்பில்
    பணக்கார வீட்டில்
    தோட்டத்துச் செடியாக
    நானிருப்பது
    எனக்கது சிறுமையே!

    *****

    ”அகிலத்தை அசத்தும் அழகிய அழுகாத மலர் நான்! என்மீது விழுந்த பனித்துளியால் இன்னும் வாடாமல் வாழ்கிறேன்” என்று தன்னிலை விளக்கும் ரோஜாவைக் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. செ. சீத்தாலட்சுமி அய்யப்பன்.

    சிவந்த இதழுடன்
    சிரித்த முகத்துடன்
    கிளையுடன் இருந்தாலும்
    சிலையாக நின்றாலும்
    தனியாக இருக்கிறேன்
    வேரில் ஈரமில்லை
    வீழவும் துணிவில்லை
    ஆணிவேர் ஆனேன்
    ஆசை பல கொண்டேன்
    அடையவில்லை அனைத்தையும்
    ஏணி போல
    ஏற்றிவிட்டேன்
    ஏனோ……
    நான் ஏறவில்லை
    ஏமாற்றமும் எனக்குஇல்லை
    அகிலத்தை
    அசத்தும்
    அழகிய
    அழுகாத
    மலர் நான்
    என் மீது விழுந்த
    பனித்துளியால்
    இன்னும்
    வாடாமல் வாழ்கிறேன்!

    *****

    முள்ளாகவும் மலராகவும் மாறி மாறி விளங்கும் வாழ்வின் தன்மையை அழகிய சொற்களால் கவிச்சரமாக்கித் தந்திருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    முள்ளும் மலரும்

    ஒருபக்கம்…
    மற்றோரின் வாழ்வு கண்டு
    ஆற்றாமை கோபம் கொண்டு
    விழுமியங்கள்யாவும் கெட்டு
    அழுக்காறு முள்ளாய் வளரும்!
    மறுபக்கம்…
    எளியோரின் இன்னல் கண்டு – அவர்
    துயர் நீக்கி வாழவைத்துக்
    களிப்பூட்டி உய்விக்கும்
    உயர் எண்ணம் பூவாய் மலரும்…

    ஒரு நேரம்….
    காலமதை வீணடித்துக்
    களிப்பொன்றே வாழ்வென்று
    முயற்சியென்ற சொல்கூட
    முள்ளாய்க் குத்தும்….
    மறு நேரம்….
    புதுமுயற்சி பலசெய்து
    பழமைகளைக் களைந்து
    புத்துலகம் படைப்பதற்கு
    உத்வேகம் பூவாய் மலரும்…

    வாழ்க்கையென்ற செடியினிலே
    வளர்வது முள்ளா? மலரா?
    வளர்கையில் எதுவும் விளங்குவதில்லை!

    சில நேரங்களில் ….
    முள் கொடுத்த சுகானுபவமும்
    மலர் கொடுத்த காயங்களின் வடுக்களும்
    அனுபவ வானில் மின்னலாய்க் கீற்றுவிடும்!

    *****

    கருத்துமணம் வீசும் கவிதைகளைத் திருத்தமாய்த் தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள் உரித்து!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    கண்ணீர் துடைக்க…

    முள்ளாலும்
    முழுப் பாதுகாப்பில்லை,
    எட்டா உயரத்தில்
    மொட்டாய் இருந்தாலும்
    எட்டிப் பறித்துவிடுகிறான்
    மனிதன்…

    அழகு அழகு என்று
    கூறிக்கொண்டே
    அழகை அழிப்பதுதான்
    அவன் வேலை…

    அதிலும் இப்போது
    காலா காலத்தில்
    பூவும் வரவில்லை
    பொழுதும் போகவில்லை,
    அழுது வடிகிறது
    அழகு ரோஜாச் செடி…

    அதோ,
    ஆறுதல் சொல்லிக்
    கண்ணீர் துடைக்கக்
    கீழை வானில் வருகிறான்
    கதிரவன்…!

    ”அழகை அழிப்பதையே தொழிலாக வைத்திருக்கும் மனிதன், எட்டாத உயரத்தில் நான் மொட்டாக இருந்தாலும் எட்டிப் பறித்துவிடுகிறான். அதோ! என் கண்ணீரைத் துடைத்துத் தேற்ற வருகிறான் கதிரவன்” என்று எதார்த்தத்தைக் கவிநயத்தோடு கலந்துதந்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

     

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 9

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 9

    -மேகலா இராமமூர்த்தி

    இராமனுக்குப் பட்டமில்லை என்று சொன்னவர்களின் கொட்டத்தை அடக்கி அண்ணனை அரசனாக்கியே தீருவேன் என்று சீற்றத்தோடு மொழிந்த இளவல் இலக்குவனைத் தன் பக்குவமான சொற்களால் சாந்தப்படுத்திய இராமன், அவனையும் அழைத்துக்கொண்டு தாய் சுமித்திரையின் இருப்பிடத்தை அடைந்தான். செய்தியறிந்த சுமித்திரை இலக்குவனைப் பார்த்து, ”நீயும் இராமனோடு காட்டுக்குப் புறப்படு! இனி இராமனே உனக்குத் தந்தை; சீதை உனக்கு அன்னை. அவர்கள் மீண்டும் அயோத்தி திரும்பினால் நீயும் திரும்பி வா! இல்லையேல் இராமனுக்கு முன்னால் மடி! உன் வாழ்வை முடி!” என்றுரைத்துவிட்டு இருவரையும் அணைத்துக்கொண்டு கண்ணீர்பெருக்கினாள்.

    அவளைத் தேற்றிவிட்டு, உடுத்தியிருந்த உடைகளைக் களைந்து மரவுரி அணிந்துகொண்டு இராமனும் இலக்குவனும் வெளியில் வந்தனர். அடுத்து சீதையின் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டான் இராமன். அவனது கோலம் கண்ட சீதை துணுக்குற்றாள். அவளிடம் நிலைமையை விளக்கிய அவன், ”யான் கான்சென்று மீளுவேன் விரைவில்; நீ வருந்தாது ஈண்டு இருப்பாயாக!” என்று சொல்லவே, அச்சொற்கள் அவள் செவியைச் சுட்டன. இராமன் அரசாட்சி இழந்ததை பற்றிக்கூடச் சீதை கவலவில்லை; தன்னைப் பிரிந்து அவன் கானகம் செல்வதை அறிந்தே பெரிதும் வருந்தினாள்.  

    அதுகண்ட இராமன், ”பெண்ணே! சூரியனின் வெம்மை மிகுந்த, கற்களும் முட்களும் நிறைந்த காட்டுவழியில் பயணப்படுவதற்குச் செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய மலரனைய நின் பாதங்கள் ஏற்றவை அல்ல! அதனால் நீ இங்கேயே இருப்பதுதான் நல்லது” என்றான்.

    சீதை அச்சொற்களைத் தாளமாட்டாமல்,

    ”இரக்கமற்ற மனத்தோடு பற்றில்லாது என்னைவிட்டு விலகிச் செல்கின்றாய்! காட்டுவழியில் ஊழிக் காலத்துச் சூரியனும் சுடுவான் என்பது எத்தகையது? உன் பிரிவு சுடுவதைவிடவா அந்தப் பெருங்காடு என்னைச் சுட்டுவிடும்? என்றாள் கண்களில் நீர்மல்க!

    பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது
    ஒருவுகின்றனை ஊழி அருக்கனும்
    எரியும் என்பது யாண்டையது ஈண்டு நின்
    பிரிவினும் சுடுமோ பெருங் காடு என்றாள். 
    (கம்ப: நகர்நீங்கு படலம் – 1917)

    சீதையின் இந்தக் கருத்தை அப்படியே பிரதிபலிக்கின்றது பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ற அரச புலவர் எழுதிய குறுந்தொகைப் பாடலொன்று!

    தலைவியைப் பிரிந்து பொருள்தேட விழைகின்றான் தலைவன். ”உன்னைப் பிரிந்து தலைவி எங்ஙனம் இருப்பாள்?” என்று தோழி தலைவனிடம் வினவ, ”நான் செல்லும் ஓமை மரங்கள் நிறைந்த, பாழ்பட்ட பாலைநிலமானது தலைவிக்கு மிகுந்த துன்பத்தைத் தரக்கூடியது” என்கிறான் தலைவன்.

    அதுகேட்டு வருத்தப் புன்னகை உதிர்த்த தோழி, “பெரும! பாலைநிலம் இன்னாதது என்றால் உம்மைப் பிரிந்து மனையில் தனித்திருப்பது மட்டும் தலைவிக்கு இனிமையைத் தந்துவிடுமோ?” என்று கேட்கிறாள்.

    ”…ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்கா
    டின்னா வென்றி ராயின்
    இனியவோ பெரும தமியோர்க்கு மனையே.”
    (குறுந்: 124 – பாலைபாடிய பெருங் கடுங்கோ)

    சீதையின் கூர்மையான வினாவுக்கு என்ன மறுமொழி புகல்வது என்று இராமன் சிந்தித்திருந்த வேளையில், விரைந்து உள்ளே சென்ற சீதை தானும் சீரம் (மரவுரி) உடுத்து அவனோடு புறப்படுவதற்கு ஆயத்தமாக வந்துநின்றாள்.

    சீதையை அந்தக் கோலத்தில் கண்டவர்கள் அனைவரும் அழுது துடித்தனர். உச்சமான துன்பநிலையை அவர்கள் அடைந்தும் மாளாததற்குக் காரணம் அவர்கள் விதி முடியாமையே அன்றி வேறில்லை என்கிறார் கம்பர்.

    சீதை கானகம் செல்லத் தயாராகிவிட்ட நிலையிலும்கூட அவளை உடனழைத்துச் செல்ல இராமனுக்கு விருப்பமில்லை. ”நீ உடன்வருவதால் ஏற்படப்போகும் விளைவுகளை அறிந்திலை; நீ என்னோடு வந்தால் எனக்கு எல்லையற்ற இடர் தருவாய்” என்று கூறி அவள் வருவதைத் தடுக்கவே முனைகின்றான்.

    …விளைவு உன்னுவாய்
    அல்லை போத அமைந்தனை ஆதலின்
    எல்லை அற்ற இடர் தருவாய் என்றான்.
    (கம்ப: நகர்நீங்கு படலம் – 1922)

    தவ வாழ்க்கை மேற்கொள்ளப்போகும் இடத்திற்குப் பெண்டிரை உடனழைத்துச் செல்வது தேவையற்றது; அத்தோடு பெண்டிரை அழைத்துச் சென்றால் அவர்களைக் காப்பதையே ஆடவர் முழுநேர வேலையாகச் செய்யவேண்டிவருமே தவிர வேறு பணிகளில் நிம்மதியாக ஈடுபட முடியாது என்பதையெல்லாம் யோசித்தே தீர்க்க தரிசனத்தோடு சீதையை உடனழைத்துச் செல்ல மறுக்கின்றான் இராமன்.

    ஆனால் சீதையோ வந்தே தீருவேன் என்று கிளம்புவதோடு, தன்னை அழைத்துச்சென்றே ஆகவேண்டும் என்று இராமனை வற்புறுத்தவும் செய்கின்றாள். அப்போது அவள் பேசும் வார்த்தைகள் சில, அவள் தரத்தைக் குறைக்கும் வகையில் வரம்பு கடந்து செல்கின்றன வால்மீகி இராமாயணத்தில். அத்தகைய மொழிகளை நற்குடியில் பிறந்த பெண்ணொருத்தி தன் கணவனைப் பார்த்துப் பேசுவது அவளுக்குப் பெருமை தராது என்றெண்ணிய கம்பர் அவற்றைத் தம் காப்பியத்தில் சேர்க்கவில்லை.

    சீதையின் தீர்மானத்தை அறிந்த இராமன் அவளையும் இளவல் இலக்குவனையும் அழைத்துக்கொண்டு தன் கானக வாழ்க்கையைத் தொடங்கச் செல்லுகின்றான்.

    இம்மூவரையும் கானகத்தேவிட்டு நொந்த நெஞ்சோடு அரண்மனை திரும்புகின்றான் தேரோட்டி சுமந்திரன். வசிட்ட முனிவரிடம் நிகழ்ந்தவற்றைக் கூறி அவரையும் தயரதன் அரண்மனைக்கு அழைத்துவருகின்றான்.

    அரண்மனை வாயிலில் தேரொலி கேட்டதும் மகன் இராமன் வந்துவிட்டானோ எனும் நைப்பாசை சோர்ந்து படுத்துக்கிடந்த தயரதன் மனத்தில் சற்றே எழ, ”வீரன் வந்துவிட்டானா?” என்று வசிட்டரைப் பார்த்து வினவுகின்றான். ”இல்லை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேதனையோடு அகல்கின்றார் வசிட்டர்.

    அருகில்வந்து நின்ற சுமந்திரனைப் பார்த்த தயரதன், ”இராமன் அருகிலிருக்கிறானா தொலைவுக்குச் சென்றுவிட்டனா?” என்று கேட்கிறான். ”சேய்த்தேயுள்ள கானகத்திற்குத் தம்பியொடும் தாரத்தொடும் போய்விட்டான் இராமன்” என்கிறான் சுமந்திரன்.

    மகன் வனம் புகுந்தான் என்ற சொல்லைக் கேட்டதும் அதனைத் தாங்கும் திறனின்றி உயிர்நீங்கி வான் புகுந்தான் தயரதன் என்கிறது கம்பரின் இராம காதை.

    நாயகன் பின்னும் தன் தேர்ப்
         பாகனை நோக்கி நம்பி
    சேயனோ அணியனோ என்று
         உரைத்தலும் தேர் வலானும்
    வேய் உயர் கானம் தானும்
         தம்பியும் மிதிலைப் பொன்னும்
    போயினன் என்றான் என்ற
         போழ்தத்தே ஆவி போனான். (கம்ப: தைலம் ஆட்டு படலம் – 1988)

    ஈமக் கடன்கள் ஆற்றுதற்குப் புதல்வர்கள் யாரும் அருகில் இல்லாத சூழலில், பரதனுக்குத் தகவல் அனுப்பிவிட்டு, தயரதனின் உடலை எண்ணெய்க் கொப்பரையில் இட்டுப் பாதுகாக்கின்றார் வசிட்டர்.

    இக்காலத்தில் இறந்துபோன பெற்றோரின் உடலை வெளிநாட்டிலிருக்கும் பிள்ளைகள் வீடுவந்து சேரும்வரை அதிகுளிர் பெட்டியில் (freezer box) வைத்துப் பாதுகாப்பதைப்போல் அந்நாளில் தைலத்தில் (எண்ணெய்) வைத்திருந்து கெட்டுப்போகாமல் காத்திருக்கின்றார்கள் என்பதை இதன்மூலம் நாம் அறியமுடிகின்றது.

    [தொடரும்]

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன்  அறநிலை விளக்க உரைக்குழு.
    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
    4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

     

    Share
  • திருவள்ளுவர் யார்? – 1

    திருவள்ளுவர் யார்? – 1

    புதுக்கோட்டை பத்மநாபன்

    சில நாட்களுக்கு முன்பு திருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவரைப் பற்றியும் ஒரு சர்ச்சை எழுந்தது. திருவள்ளுவர் யார்? அவரது அடையாளம் என்ன? என்பதே அந்தச் சர்ச்சையின் முக்கிய விஷயம். இது குறித்துப் பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.

    திருக்குறளில் உள்ள ஞானச் செழுமை, சொல்லாட்சி இவற்றை வைத்துப் பார்க்கும் போது அதை எழுதிய திருவள்ளுவர், ஓர் ஈடு இணையற்ற ஞானி என்று தான் சொல்லவேண்டும். சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு தோன்றிய நூல், திருக்குறள். அந்நூலின் ஆசிரியரான திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு பற்றித் திட்டவட்டமாகக் கூறுவதற்கு எந்தவிதமான சாட்சியங்களும் ஆதாரங்களும் இல்லை. இந்த நிலையில், ஞானச் செறிவுள்ள அவரது நூலில் சொல்லப்பட்ட விஷயங்களை, முடிந்த அளவு நம் வாழ்க்கையில் பின்பற்ற முயற்சி செய்ய வேண்டியதுதான் உத்தமமான காரியமாக இருக்கும். அதை விட்டுவிட்டு அவர் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்? அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? என்பது பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்து, அவருக்கு ஓர் அடையாளத்தைக் கற்பித்து அரசியல் செய்வதும், அந்த அடையாள அரசியலை எதிர்த்து அரசியல் செய்பவர்கள் தங்கள் சாயத்தைத் திருவள்ளுவர் மேல் பூசப் பார்ப்பதும் அடியேனைப் பொறுத்தவரை வேண்டாத வேலை என்றே நினைக்கிறேன்.

    இதுவரை, அடியேன் திருவள்ளுவரின் ஜாதி, மதம் பற்றி ஆய்வு செய்ததுமில்லை, செய்ய நினைத்ததுமில்லை. அந்த விருப்பம் அடியேனுக்கு இருந்ததும் இல்லை. அடியேன் அவரது நூலில் சொல்லப்பட்ட விஷயங்களையும், சொல்லிய விதத்தையும் சுவைத்துப் படித்துப் பல தடவை மெய்சிலிர்த்து வியந்ததுண்டு. அதே நேரத்தில், தற்போது எழுந்துள்ள சர்ச்சை விஷயம் வீதிக்கு வந்துவிட்டபடியால் அதுபற்றி நமது கருத்தையும் தெரிவிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.

    முதலில் திருவள்ளுவருக்குக் காவி உடைபோட்டுப் படம் வரைந்ததைக் கண்டு கொதித்தெழுந்து கடுமையாகக் கண்டிக்கும் பரம யோக்கியர்களை நோக்கி ஒன்று கேட்கிறேன். திருவள்ளுவர் எந்த உருவத்தில் இருந்தார் என்பது பற்றியோ அவரது வாழ்க்கை வரலாறு பற்றியோ எந்தவிதமான ஆதாரங்களும் தெளிவாகக் கிடைக்காத நிலையில் வெள்ளை ஆடை அணிவித்து தாடிவைத்து அவருக்கு ஒரு உருவத்தை நீங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்களே, எந்த அடிப்படையில் அந்த உருவத்தை நீங்கள் அவருக்கு ஏற்படுத்தினீர்கள்? அவருக்கு ஒரு உருவம் கொடுக்க உங்களுக்கு உரிமை இருக்கின்றபொழுது, மற்றவர்களுக்கு அவ்வுரிமை இல்லையா?

    திருவள்ளுவராண்டு என்று ஓர் ஆண்டை உருவாக்கியிருக்கிறீர்களே எந்த அடிப்படையில் உருவாக்கினீர்கள்? திருவள்ளுவரின் பிறப்பு தொடர்பான தகவல்கள் எதுவும் வைத்திருக்கிறீர்களா? ஆய்வு என்ற பெயரில் எந்தவிதமான ஆதாரமும் இன்றி வெறும் அனுமானத்தால் உங்களின் சொந்தக் கருத்துக்கு வலுச்சேர்க்கப் பல அபத்தமான காரியங்களை நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற பொழுது மற்றவர்கள் ஆய்வு செய்யக் கூடாதா? திருவள்ளுவரைச் சொந்தம் கொண்டாட உங்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை, அருகதையும் இல்லை. ஏனெனில் திருவள்ளுவரின் கொள்கைக்கும் உங்கள் கொள்கை, நடைமுறை இவற்றுக்கும் உள்ள ஸம்பந்தம் கருணை உணர்வுக்கும் கசாப்புக் கடைக்காரனுக்கும் உள்ள ஸம்பந்தம் தான். அதனால் திருவள்ளுவருக்குக் காவிஉடை அணிவித்தது பற்றிக் கேள்வி கேட்க, உங்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. தகுதியும் இல்லை.

    அதே நேரத்தில் பிரச்சனை பெரிதாகிவிட்டபடியால் திருவள்ளுவர் உண்மையில் யார், அவருக்கு எந்த உருவம் கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதையெல்லாம் தக்க ஆதாரங்களோடு நிரூபித்துக் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதுடன் தவிர்க்க முடியாத கடமையும் ஆகிவிட்டது. அந்தக் கடமை உணர்வோடு திருவள்ளுவரின் உண்மையான அடையாளத்தை ஆதாரத்தோடு வெளிப்படுத்த முக்கியமான சில விஷயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.

    ஒருவரது அடையாளத்தைத் தெரிந்துகொள்ள வெளிப்படையான ஆதாரங்கள் இல்லை என்பதற்காக அவருக்கு எந்த அடையாளமும் இல்லை என்று முடிவு கட்டிவிடவும் முடியாது. எந்த ஒரு மனிதனுக்கும் அவனுக்கென்று ஒரு தனிப்பட்ட அடையாளம் இருந்தே தீரும். ஒரு படைப்பாளியின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தெளிவாக அறிந்துகொள்ள, வலிமையான ஆதாரங்கள் கிடைக்காத நிலையில் அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒரே ஒரு வழிதான் உள்ளது. அவரது படைப்பில் உள்ள கருத்துகளைக் கொண்டுதான் அவரது அடையாளத்தை நாம் தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் திருவள்ளுவரைப் பற்றித் தெரிந்துகொள்ள நமக்குச் சரியான புறச்சான்றுகள் கிடைக்காததால் அவரது சீரிய படைப்பான திருக்குறளில் உள்ள கருத்துகளைக் கொண்டுதான் அவரைப்பற்றி நாம் அறிந்துகொள்ள முடியும்.

    திருக்குறளில் தங்களுக்குச் சாதகமாகத் தோன்றும் சில குறட்பாக்களை மட்டும் எடுத்துக் காட்டி, திருக்குறள் தங்கள் நூலென்றும் திருவள்ளுவர் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர் என்றும், ஜைனர், பௌத்தர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகியோர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதைவிடப் பெரிய கொடுமை என்னவென்றால் தற்காலத்தில் நாஸ்திகம் பேசும் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் பொதுவுடைமைவாதிகளும் கூடத் திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட முயன்று கொண்டிருகிறார்கள். முதலில் மேற்படி ஜைனம் முதலிய மதங்களின் கருத்துகளுக்கும் நாஸ்திகக் கருத்துகளுக்கும் அணுவளவும் திருக்குறளில் இடமில்லை என்பதைத் தக்க ஆதாரங்களோடு நிரூபிப்போம்.

    திருக்குறளின் முதற்குறளிலேயே இறைவனே உலகிற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இக்கருத்து நாஸ்திகர்களுக்கும் பொருள்முதல்வாதிகளுக்கும் உடன்பாடான கருத்தன்று. மேலும் தெய்வ வழிபாடு, ஊழ் என்று சொல்லப்படும் விதி, மறுபிறப்பு, வினைப்பயன், வேத வைதிக நெறி, இல்லறப் பெண்களின் ஒழுக்கம், கற்பு, பிறனில் விழையாமை, கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல், தவம், துறவு இவற்றைப் பற்றிய விஷயங்கள் எல்லாம் திருக்குறளில் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன. பகுத்தறிவுவாதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாஸ்திகர்களுக்கும், பொதுவுடைமைவாதிகளுக்கும் திருவள்ளுவர் கூறும் இவ்விஷயங்களில் எல்லாம் உடன்பாடு உண்டா? திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இன்றைய பகுத்தறிவுவாதிகளின் தந்தை என்று சொல்லப்படும் பகுத்தறிவுப் பகலவனுக்கு ஆண்களின் ஒழுக்கம், பெண்களின் கற்பு, மரபுவழியான திருமணமுறை, பிறனில் விழையாமை இவையெல்லாம் பிடிக்காத விஷயங்கள். திருமணம் பெண்ணை அடிமையாக்குகிறது என்றும், திருமண முறை ஒழிக்கப்படவேண்டும் என்றும், ஒருவனுடைய மனைவி உப்பு, மிளகாயைப் போல் அவனுக்கு மட்டும் தனி உடைமைச் சொத்தாக நினைப்பது தவறு என்றும், கற்பு, விபசாரம் போன்ற வார்த்தைகள் பெண்களின் சுதந்திர வாழ்க்கைக்கு எதிரானவை என்றும், திருக்குறள் பெண்களை அடிமையாக்கிவிட்டது என்றும் இவர்களின் தந்தையான பகுத்தறிவுப் பகலவனே கூறியிருக்கிறார். பொதுவுடைமைச் சித்தாந்தவாதிகளுக்கெல்லாம் ஆசான் என்று சொல்லப்படும் கார்ல் மார்க்ஸ், பெண்ணைத் திருமணம் செய்தால் அவள் தனிஉடைமை ஆகிவிடுவாள் என்றும், அவளைப் பொதுவுடைமையாக்கி எல்லா ஆண்களுக்கும் பொதுவான விபசாரியாக்க வேண்டும் என்றும் private property and communism என்ற தலைப்பில் economic and philosophic manuscript of 1844 என்பதில் எழுதியுள்ளார். இப்படியெல்லாம் கூறியிருக்கின்ற இந்த ஆசான்களின் வாரிசுகளான இன்றைய பகுத்தறிவு வாதிகளுக்கும், பொதுவுடைமை வாதிகளுக்கும் திருக்குறளை உரிமை கொண்டாட என்ன அருகதை இருக்கிறது? இவர்களுக்கும் திருக்குறளுக்கும் என்ன ஸம்பந்தம்? திருக்குறளைப் பற்றிப் பேசக்கூட இவர்களுக்கு உரிமையும் தகுதியும் இல்லை. ஆகவே, திருக்குறள் நாஸ்திக நூலும் அன்று. திருவள்ளுவர் நாஸ்திகரும் அல்லர். அதனால் இந்த நாஸ்திக இயக்கவாதிகள் திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறள் பற்றியும் கருத்துச் சொல்வது என்பது ஒரு மட்டரகமான அரசியல் என்றுதான் சொல்ல வேண்டும்.

    ஜைனமும் பௌத்தமும் வேதங்களையும் வைதிக கர்மங்களான வேள்விகளையும் ஏற்றுக்கொள்ளாத மதங்கள். அம்மதங்களில் சொல்லப்படும் அஹிம்ஸை , துறவு, தவம், ஆசையைத் துறத்தல், நல்ல நம்பிக்கை, நன்னடத்தை, நல்லொழுக்கம் முதலிய கோட்பாடுகள் அம்மதங்கள் தோன்றுவதற்கு முன்பே இருந்த வேதங்களிலும், உபநிஷத்துகளிலும், வைதிக இலக்கியங்களிலும் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள்தான். அவையொன்றும் புத்தராலும் மஹாவீரராலும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்கள் இல்லை. அவ்விருவரும் வேத இலக்கியங்களிலிருந்து அக்கருத்துகளை ஸ்வீகரித்துக்கொண்டு, அவற்றைத் தங்கள் மதங்களின் முக்கியக் கோட்பாடுகளாகக் காட்டிக் கொண்டார்கள்.

    இந்த அஹிம்ஸை முதலிய கோட்பாடுகள் திருக்குறளில் காணப்படுவதால், திருக்குறள் புத்த சமய நூல் என்று சிலரும் சமண சமய நூல் என்று சிலரும் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் கருத்து அடிப்படையற்றது. பௌத்த சமண சமயக் கொள்கைகளுக்கும் திருக்குறளின் கருத்துக்கும் எந்தவிதமான உறவும் கிடையாது என்பதை மிக முக்கியமான ஆறு காரணங்களால் தெளிவுபடுத்துவோம்.

    முதலாவதாக சமணமும் பௌத்தமும் கடவுள் உலகைப் படைத்தார் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் திருவள்ளுவர் முதல் குறட்பாவிலேயே கடவுள் தான் உலகைப் படைத்தார் என்கிறார். அவர் சொல்லும் “ஆதிபகவன்” என்பதற்கு இந்த இரண்டு மதக்காரார்களும் தங்களுக்குச் சாதகமாகக் கூடப் பொருள் கொள்ளலாம். அப்படி இவர்கள் பொருள் கொண்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அக்குறளில் ஓர் அழகான உவமையைத் திருவள்ளுவர் காட்டுகிறார். அதாவது, எழுத்துகளுக்கெல்லாம் அகரம் எப்படி முதலாக உள்ளதோ அதைப்போல உலகுக்கு முதலாக இருப்பவர் ஆதிபகவன் என்று கூறுகிறார்.

    இங்கு ‘படைத்தல்’ என்பதற்கு என்ன இடம் இருக்கிறது என்று ஒரு கேள்வி எழலாம். எந்த மொழியைப் பேச வேண்டுமானலும் முதலில் வாயைத் திறந்துதான் பேசமுடியும். வாயைத் திறக்கும்போது முதலில் வெளிவருவது அகர ஒலிதான். இதனால் மற்ற எழுத்துகளின் ஒலி உருவாக அகரமே காரணமாக இருக்கிறது என்பது புலனாகிறது. அப்படி உருவாகும் மற்ற எழுத்துகளுக்குரிய ஒலிகளிலும், அகரம் உள்ளீடாகச் சேர்ந்தே இருக்கிறது. அதனால், மற்ற எழுத்துகள் தோன்ற அகரமே காரணமாகிறது என்பதால்தான், “அகர முதல எழுத்தெல்லாம்” என்றார். எப்படி அகரம் மற்ற எழுத்துகளை எல்லாம் தோற்றுவித்ததோ, அதாவது படைத்ததோ அதைப் போலக் கடவுள் உலகைப் படைத்தார் என்பதே அந்த முதல் குறட்பாவின் கருத்து. “முதற்றே”என்றால் ‘முதலாக உடையது’ என்று பொருள். அதாவது அந்த முதல்வனான ஆதிபகவன் என்ற கடவுளிடமிருந்து உலகம் தோன்றியது என்று பொருள். ஸர்வசூன்யவாதிகளான பௌத்தருக்கும், கடவுள் உலகுக்குக் காரணம் இல்லை என்ற கருத்துடைய சமணருக்கும், இந்த முதற்குறட்பாவின் கருத்து எப்படி ஏற்புடையதாகும்?

    இரண்டாவதாக, கொல்லாமையை வலியுறுத்தும் திருவள்ளுவர்,

    “கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனோடு நேர்” என்று அரசன், குற்றவாளிக்குக் கொடுக்கும் மரண தண்டனையை ஆதரித்துப் பேசுகிறார். எல்லா நிலையிலும் அஹிம்ஸையையே வலியுறுத்தும் சமண, புத்த சமயங்களுக்கு இந்தக் கருத்து எப்படி ஏற்புடையதாகும்?

    மூன்றாவதாக, சமணர்களும் பௌத்தர்களும் வேள்விக்கும் அதற்கு அடிப்படையான வேதங்களுக்கும் எதிரானவர்கள். திருவள்ளுவர் “ஆபயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்”, “அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்” என்ற குறட்பாக்களால், அந்தணரையும் அவர்களின் நூலான வேதத்தையும், அவர்களின் தொழிலான வேள்வி முதலியவற்றையும், அவர்களின் அறமான வைதிக தர்மத்தையும், ஓர் அரசன் பாதுகாக்க வேண்டும் என்று கூறி, வேதவைதிக நெறியையும் அந்தணரையும் ஆதரித்துப் பேசுகிறார். திருவள்ளுவரின் இந்தக் கருத்து, சமண பௌத்த சமயக் கொள்கைக்கு எதிரான கருத்து.

    நான்காவதாக பூமியில் விளையும் கிழங்கு வகைகளைக் கூட சாப்பிடக் கூடாது என்னும் அளவிற்கு அஹிம்ஸையை வலியுறுத்துவது சமண சமயம். ஆனால் உழவுத் தொழிலான வேளாண்மையை ஆதரித்துப் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார் திருவள்ளுவர். இதனாலும் திருவள்ளுவர் சமணக் கொள்கைக்கு எதிரானவர் என்பது தெளிவாகிறது. பௌத்தம் அஹிம்ஸையை வலியுறுத்தினாலும் கொல்லாமல் தானாகவே இறந்த விலங்கின் மாமிசத்தை உண்ணலாம் என்று சொல்கிறது அந்த மதம். ஆனால் திருவள்ளுவரோ, “தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்” என்ற குறட்பாவின் மூலம் பிற உயிர்களின் மாமிசத்தை உண்பவர்களைக் கண்டிக்கிறார். இவர் எப்படி சமணராகவோ பௌத்தராகவோ இருக்க முடியும்?

    ஐந்தாவதாக, துறவறம், நிலையாமை ஆகியவற்றையே முழுமையாக வலியுறுத்தும் சமண, பௌத்த சமயங்களுக்கு இல்லற இன்பம், காம சுகம், மக்கட்பேறு முதலியவை எல்லாம் ஸம்பந்தமில்லாத விஷயங்கள். ஆனால் திருவள்ளுவர் இல்லறம், அங்கீகரிக்கப்பட்ட தர்மதோடு கூடிய காம சுகம், இவற்றையெல்லம் ஆதரித்துப் பல குறட்பாக்கள் எழுதியுள்ளார். இதனாலும் சமண, பௌத்தக் கருத்துகளுக்கும் திருக்குறளின் கருத்துகளுக்கும் எந்தவித உறவும் இல்லை என்பது புலனாகிறது.

    ஆறாவதாக அசோகர், புத்த சமயத்தைத் தழுவிய பின் போரைக் கைவிட்டார் என்று சொல்லப்படுகிறது. அதனால் போர் புத்த சமயத்துக்கு, உடன்பாடான விஷயமன்று என்பது புலப்படுகிறது. தாவரங்கள், புழு பூச்சிகள், கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள், இவற்றைக் கூடக் கொல்லக் கூடாது என்ற கொள்கையை உடைய சமணர்கள், மனிதர்களைக் கொல்லும் போரை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள். ஆனால் திருவள்ளுவரோ போரை ஆதரித்துப் பல குறட்பாக்கள் எழுதியுள்ளார். இதனாலும் திருவள்ளுவரின் கருத்து சமண, பௌத்த மதக் கருத்துகளுக்கு முரணானது என்பது புலனாகிறது. இந்த ஆறு முக்கியமான காரணங்களின் அடிப்படையில் பார்த்தால், சமணர்களும் பௌத்தர்களும், திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட எந்தவித நியாயமும் உரிமையும் அணுவளவும் இல்லை என்பதுதான் புலப்படுகிறது.

    இதைத் தவிர, கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் கூடத் திருவள்ளுவரையும் திருக்குறளையும் உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. கிறிஸ்தவ மதத்திலும் இஸ்லாமிய மதத்திலும் புலால் உணவு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திருக்குறளில் புலால் உணவு கண்டிக்கப்பட்டிருக்கிறது. அதனால் திருவள்ளுவரை கிறிஸ்தவர் என்று கூறுவதற்கோ இஸ்லாமியர் என்று கூறுவதற்கோ எந்தவிதமான அடிப்படையுமில்லை.

    திருக்குறளில் கடவுள் வாழ்த்து- இரண்டாவது குறளில் “நற்றாள் தொழார் எனின்” என்று வருகிறது. இதில் வரும் ‘தொழுதல்’ என்ற வார்த்தை, இஸ்லாமுக்குரிய வார்த்தை என்றும், முஸ்லிம்கள்தான் வழிபாட்டை ‘தொழுதல்’ என்று சொல்வார்கள் என்றும், மற்ற மதத்தினர் வழிபாட்டுக்கு அச்சொல்லைப் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும் இஸ்லாமியர் ஒருவர் கூறி வருகிறார். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், இந்த இஸ்லாமியருக்குத் தன் மதத்தைப் பற்றியும் மற்ற மதங்களைப் பற்றியும் ஆழமான அறிவு இல்லை என்பது தான் தெரிகிறது. இஸ்லாமியரின் வழிபாட்டுக்கு அரபி மொழியில் “நமாஸ்” என்று பெயர். அச்சொல்லுக்கு இணையாகத், தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் தமிழில் உள்ள தொழுகை என்ற சொல்லை அமைத்துக்கொண்டார்கள்.

    ’நின் தாள் நிழல் தொழுதே’ என்றும், ‘நிற் பேணுதும் தொழுதே’ என்றும், ‘நின் அடி தொழுதனெம்’என்றும் சங்க இலக்கியமான பரிபாடலில் ‘தொழுதல்’ என்ற சொல் திருமால் வழிபாட்டைக் குறித்துச் சொல்லப்படுகிறது. ஆகவே தொழுதல் என்ற சொல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே உரியது என்று கூறும் இந்த இஸ்லாமியருக்கு, மதங்கள் ஸம்பந்தமான அடிப்படை அறிவு இல்லை என்றுதான் கூறவேண்டியுள்ளது. அதனால் திருக்குறளையும் திருவள்ளுவரையும் சொந்தம் கொண்டாட இஸ்லாமியருக்கோ கிறிஸ்தவர்களுக்கோ எந்தவித உரிமையும் இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால் ஏன் அவர்கள் திருவள்ளுவரைச் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்றால் அதுவும் ஓர் அரசியல்தான்.

    — தொடரும்

    Share
  • அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 10 (குறவன்)

    அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 10 (குறவன்)

    ச.கண்மணி கணேசன் (ப.நி.),
    முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
    ஸ்ரீகாளிஸ்வரி கல்லூரி, சிவகாசி.

    முன்னுரை

    சிறுபாத்திர வரிசையில் அடுத்து இடம்பெறும் குறவன் மலைநிலத்து மக்களினத்தவன் ஆவான். ‘குறவர்’ என்னும் தொகைப்பாத்திரம் பின்புல விளக்கமாக மட்டுமே பயன்பட்டுள்ளது. தலைவன் கூற்றிலும், தோழி கூற்றிலும் இடம்பெறும் குறவன் பாடல் சான்ற புலனெறி வழக்கில் பேசும் தகுதி அற்றவன். அவன் பேசியதாகத் தோழி எடுத்துச் சொல்வதும்; தலைவன்  அவனை மையப்படுத்திப் பேசுவதும் காண்கிறோம். எனினும் குறவன் முழுமையான பாத்திரப் படைப்பாக அகப்பாடல்களில் காணப்படுகிறான்.

    குறவனின் தோற்றமும் தொழிலும் செயலும்

    குறவன் பொன் போன்ற வேங்கைப்பூங் கொத்தைச் சூடியிருப்பான். வளைந்த வில்லையும் விரைந்து செலுத்தக்கூடிய அம்புகளையும் தாங்கியிருப்பான். இனிய பலாச்சுளைகளிலிருந்து செய்த தேறலைத் தன் சுற்றத்தோடு சேர்ந்து அருந்துவான். உடன் சேர்ந்து ஓடி வரும்  வேகம் மிகுந்த நாய் தொடர வேட்டைக்குச் செல்வான் (அகம்.- 182). மலைப்புறத்தின் உச்சியில் கிடைக்கும் தேனைத் தம் கிளையோடு சேர்ந்து  சேகரிப்பான் (அகம்.- 322). குறவர் பாம்பின் விஷம் போல விரைந்து போதையூட்டும் தோப்பியை மலையுச்சியில் இருக்கும் கடவுளுக்குப் படைத்து வழிபடுவர். தழையுடை அணிந்த குறமகளிர் ஊற்றிக் கொடுக்கத் தாமும் மாந்திப் புனக்காவலை மறந்து விடுவர். யானை வந்து தம் புனத்தில் மேய்ந்து செல்லச் சினம் கொள்வர். பின்னர் அந்த யானையை அழிக்கத் தம் கிளையோடு இளையவர் முதியவர் அனைவரும் சேர்ந்து வில்லோடு திரிவர் (அகம்.- 348). தினையை விளைவிக்க மழை வேண்டி வழிபட்டு ஆரவாரிப்பர் (ஐங்.- 251). கதிர் முற்றிய பருவத்தில் அறுவடை செய்வர் (ஐங்.- 284).

    நாட்டார் வழக்காற்றில் குறவன்

    “குறவன் காதல் மடமகள்”  (ஐங்.- 251, 255, 258, 259, 260)

    என்ற தொடர் செவ்விலக்கியக் கால நாட்டார் வழக்காற்றில் மறித்து வரும் தொடராகும்; அதாவது மீண்டும் மீண்டும் இடம் பெறுவதாகும். மக்கள் வாய்மொழியில் பயின்று வந்த பெருவழக்காகும். ஏனெனில் இத்தொடர் ஐங்குறுநூற்றின் குன்றக் குறவன் பத்தில் பயின்று வருவது போன்றே நற்றிணையிலும் பயின்று வருவதைக் காண்கிறோம்.

    “குறவன் காதல் மடமகள்” (நற்.- 201& ஐங்.- 260)

    பெறுவதற்கு அரியவள் என்று தலைவன் கணக்குப் போடுகிறான்.

    “குறவர் காதல் மடமகள்” (நற்.- 353)

    பற்றிய தோழியின் கூற்றில்; தலைவி இல்லறத்தில் இருந்து விருந்தயர்வதில் வல்லவள் என்னும் உள்ளுறை பொதிந்துள்ளது.

    உவமப்பொருளில் குறவன்

    தலைவியின் எழில் தொலையத் தாய் வருத்தமுறக் கண்ட  தோழி;

    “……………………………… குறவர்
    மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்
    ஆர்கலி விழவுக்களம் கடுப்ப நாளும்” (அகம்.- 232)

    அன்னை வேலனை அழைத்து வெறியாட்டு அயர்வாள் என்கிறாள். குறவர் தம் மனையுறை முதுபெண்டிருடன் சேர்ந்து குரவை அயரும் போது எழும் ஆரவாரமும், சிதறிய மலர்களும் பலிப்பொருட்களும்; இனிமேல் எடுக்கப் போகும் வேலனின் வெறிக்களத்திற்கு உவமையாக அமைந்துள்ளன.

    உள்ளுறை உவமத்தில் குறவன்

    காட்டில் முள்ளம்பன்றியை வேட்டையாடினான் குறவன். சிக்கிய பன்றியால் அருகில்  இருந்த காட்டு  மல்லிகைப் புதர் குருதி சிந்துவது போல் காட்சியளித்தது.

    “…………………………………குறவன் காட்ட
    குளவித் தண்புதல் குருதியொடு துயல்வர
    முளவுமாத் தொலைச்சும் குன்றநாட” (அகம்.- 182)

    என்ற தோழியின் கூற்றில் குறவனின் செயலும் விளைவும் உள்ளுறையுடன் அமைந்துள்ளன. காட்டு மல்லிகை மணம் மிகுந்தது; குருதி புலவு நாறுவது. குறவன் முள்ளம்பன்றியைத் தான்  வேட்டையாடுகிறான். ஆனாலும் அது பதுங்கியிருந்த புதரில் குருதி  பட்டதால்; மல்லிகை மணத்தையும் மீறிப் புலவு நாறுகிறது. அதுபோலத் தலைவி பண்பிற் சிறந்தவள்; ஆனால் தலைவனது கேண்மையின் விளைவால்; இப்போது மேனி வேறுபட்டுத் தாய்க்கு அவளது களவொழுக்கம் புலப்பட்டு விட்டது என்கிறாள் தோழி. அகப்பாடலின் உரிப்பொருளை நாசூக்காக உள்ளுறையால் விளக்க குறவனின் வேட்டை பற்றிய விளக்கம் பயன்பட்டுள்ளது.

    உரிப்பொருள் ஒப்பீட்டுக் களத்தின் கருவியாகக்  குறவன்

    குன்றக்குறவனும் அவனது மனைவியும் ‘பால்’ மடுத்துள்ளனர்; அதாவது சாராயம் குடித்துள்ளனர். அன்றைய சமுதாயத்தில் இது ஏற்றுக்  கொள்ளப்பட்டது.

    வங்கா வரிப்பறைச் சிறுபாடு முணையின்
    செம்பொறி அரக்கின் வட்டுநா வடிக்கும்
    விளையாடு இன்நகை அழுங்காப் பால்மடுத்து
    உலையா உலவை ஒச்சிச் சில கிளையாக்
    குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும்
    துணைநன் குடையள் மடந்தை; யாமே
    வெம்பகை அருமுனைத் தண்பெயல் பொழிந்தென
    நீர்ஈர்ங் கரைநாள் மயங்கிக் கூதிரொடு
    வேறுபுல வாடை அலைப்பத்
    துணையிலேம் தமியேம் பாசறை யேமே. (நற்.- 341)

    இப்பாடலில் முதற்பொருளாவன  மலைப்புறத்துக் காட்டுப் பாசறையாகிய இடப்பின்புலமும்; நாள் மயங்கிக் கூதிரொடு வேற்றுப்புல வாடை அலைக்கும் காலப்பின்புலமும் ஆகும்.   குன்றக்குறவன் இங்கே சிறுபாத்திரம்  ஆகிறான்.  ஏனெனில் தலைவன் தன் நெஞ்சோடு பேசும்போது; குறவனின் மனைவி நிலையையும் தன் மனைவி நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கிறான். வினைவயிற் பிரிந்தவன் ஆற்றித் தன் தலைவியை நினைத்து ஏங்குகிறான்.

    சிறு மயக்கத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் சுற்றத்தோடும் சேர்ந்து; அதாவது பங்காளிகளோடு சேர்ந்து விளையாட்டும் சிரிப்புமாகக் குழறித் தன் தலைவனோடு சேர்ந்து; அவனுக்கு இன்பமூட்டும் கேலிப் பேச்சில் ஈடுபடுகிறாள் மடந்தை. இங்கே கூட்டுக்குடும்பக் காட்சி புனையப்பட்டுள்ளது. சுற்றத்தார் அருகு இருந்தாலும்; குறவனும் மனைவியும் தமக்கு மட்டுமே புரிந்துகொள்ளக் கூடிய அந்தரங்கப் பேச்சில் ஈடுபட்டுள்ளனர்; அதாவது குறுநொடி பயிற்றுகின்றனர். இந்த இல்லற இனிமை முல்லைத்திணைக்கு உரியது. குறமக்களின் இந்த இன்பநிலையுடன்; தன் நிலையையும் தன் தலைவியின் நிலையையும் ஒருங்கு எண்ணி முரண்படுத்திப் பார்க்கிறான். ‘ஆறாத சினம் காரணமான போருக்காக; மழை பொழியும் கூதிர் காலத்தில்; காட்டாறு பெருகும் கரையில்; பகலா? மாலையா? என்று சொல்லமுடியாத பருவத்தில்; வேற்றுப்புலத்தினின்று (வடநாட்டிலிருந்து) வீசும் வாடைக்காற்று  துன்பத்தை மிகுதிப்படுத்த; தலைவியைப் பிரிந்து  தனிமையில் வாடுகிறேனே’  என்பது தலைவனின் தவிப்பு.

    பாடலில் இரண்டு துணை இடம்பெறுவதே ஒப்பீட்டிற்காகத் தான். முதல் துணை மடந்தையின் கணவனாகிய குன்றக்குறவன். இரண்டாவது துணை பாசறையில் பிரிந்து இருக்கும் தலைவனின் மனைவி.

    எவ்வளவு அழகு! வாழ்க்கைத்  துணையாகக் கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் அமைவர் என்ற கருத்து இடம்பெறும் பாடல் இது.

    வேந்தனுக்கும் வேளுக்கும் இடையில் போர் நிகழ்ந்தது என்பதற்குச் சான்றாவது ‘வரிப்பறை’ பற்றிய உவமை. வரி என்பது நெல்லைக் குறிக்கும். எனவே வரிப்பறை நெல் வேளாண்மையில் பயன்படுத்தப்படும் பறை ஆகும்

    பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்  குன்றக்குறவனின் மனைவி போதையில் கிளையை ஒடித்துப் பேசுவதாகச் சொல்லும் உரை பொருளை மேம்படுத்தவும் இல்லை; சூழ்நிலைக்குப் பொருத்தமாகவும் இல்லை.

    பாடலில் குன்றக்குறவன் இடம் பெறுகிறான் என்பதற்காக குறிஞ்சித் திணை  சார்ந்த பாடல் என்று சொல்கிறார் உரையாசிரியர்; ஏற்றுக் கொள்ள இயலவில்லை. தலைவன் பாசறையில் தலைவியைப் பிரிந்து ஆற்றி இருக்கிறான். எனவே முல்லைத் திணை; உரிப்பொருளை அடிப்படையாக  வைத்தே திணையை அறுதியிட வேண்டும்.

    தந்தைமையின் பிரதிநிதியாகும் குறவன்

    குறிஞ்சித் திணைத் தலைவியின் பெருமை பற்றித் தலைவன் பேசும் போதெல்லாம் அவளது தந்தையாகிய குறவனின் பாசத்தை மையப்படுத்தியே பாடல்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பு.

    குறவன் கடவுளை வேண்டிப் பெற்ற மகள் இவள் என்கிறாள் தோழி (ஐங்.- 257). வண்டுபடு கூந்தல், தண்டழை உடை, வளைக்கை, முளைவாய் எயிறு, தேவலோகப் பெண் போன்ற சாயல், தலைமைத்தன்மை, பருவமெய்திய இளமை, சிவந்த வாய், மயில் போன்ற ஒயில், மென்தோள் அனைத்தும் ‘குன்றக் குறவன் காதல் மடமகளி’டம் இருப்பதாகத் தலைவன் பேசுகிறான் (ஐங்.- 251, 256, 258).  இவ்வாறு தலைவியின் அழகு, பண்பு, பெருமை அனைத்தும் அவளது தந்தையோடு சேர்த்தே பேசப்படுகின்றன.

    நீரைப் போலக் குளிர்ந்த சாயலும் தீயைப் போல மனவலிமையை அழிக்கும் தன்மையும்;

    “சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகளி”டம் (குறுந்.- 95)

    இருப்பதாகத் தலைவன் உரைக்கிறான்.

    மகள் தரையில் நடந்தால் கூட பாசத்தில் உருகி ‘உனக்கு இது ஆகாது மகளே; பாதங்கள் சிவந்து விடும்’ என்று உரைக்கும் தந்தையைக் குறவன் என்று குறிப்பிடாவிட்டாலும்; குறிஞ்சித் திணைத் தலைவியின் தந்தை குறவன் தானே. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையில் இயற்கையாக அமையும் அன்பின் ஈர்ப்பினை;

    “எந்தையும் நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப
    எவனில குறுமகள் இயங்குதி என்னும்” (அகம்.- 12)

    என்ற தோழி தலைவனிடம் தொடர்ந்து குறவர் செயலைப் பேசுகிறாள்.

    பின்புலத்தைத் தெளிவிக்கும் குறவன் 

    தினை அறுவடைக்குப் பின்னர் புனத்தில் விதைத்த அவரைக்கொடி படர்ந்து பூக்கும் காலம் முன்பனிக்காலம். தலைவன் வினைமுடிந்து மீளத் தாமதமாகும் காலத்தைக் குறிக்கக் குறவனின் செயலைப் புலவோர் பயன் கொள்கின்றனர்.

    “பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால்
    கொழுங்கொடி அவரை பூக்கும்
    அரும்பனி அச்சிரம் வாராதோரே” (குறுந்.- 82)

    என்று தலைவி புலம்புவது காண்க.

    குறவர் எனும் தொகைப் பாத்திரமும் இடப்பின்புல விளக்கத்திற்கும் காலப்பின்புல விளக்கத்திற்கும் துணை செய்கிறது.

    “நிலநீர் ஆரக் குன்றம் குழைப்ப
    அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர்கால் யாப்பக்
    குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர்
    நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பப்
    பெரும்புயல் பொழிந்த தொழில எழிலி” (நற்.- 5)

    என்னுங்கால் மிகுந்த மழைக்காலத்தின் நிலைமை குறவர் செயலால் விளக்கமடைகிறது. குறவர் வெட்டி அழித்தலால் குறைப்பட்ட நறைக்கொடி மீண்டும் தளிர்த்துச் சந்தன மரத்தின் மேல் படர்ந்து ஏறியது. இப்பகுதி குறவர் செயலால் தெளிவான பின்புல விளக்கமாக அமைந்துள்ளது.

    முடிவுரை

    குறவன் பேசியதாகத் தோழி எடுத்துச் சொல்வதும்; தலைவன்  அவனை மையப்படுத்திப் பேசுவதும் காண்கிறோம். உவமப் பொருளாகவும், உள்ளுறைப் பொருளுக்குத் துணை செய்பவனாகவும், பின்புலச் சித்தரிப்பை முழுமையுறச் செய்பவனாகவும், உணர்வுச் சித்தரிப்புக்கு ஏற்ற ஒப்பீட்டுக் களம் அமைக்கும்  கருவியாகவும்,  தலைமகளின்   தந்தையாகவும், முழுமையான பாத்திரப் படைப்பாகவும்  குறவன் அகப்பாடல்களில் காணப்படுகிறான்.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-37

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-37

    தி. இரா. மீனா

    சொட்டாள பாச்சரசா

    பிஜ்ஜளன் அரண்மனையில் எழுத்தராக இவரது காயகம். ’சொட்டள’ இவரது முத்திரையாகும்.

    “பக்தன் பக்தனென அறிவின்றி சொல்வீர்
    பக்தியின் இடம் அனைவருக்கும் எங்குள்ளதோ?
    கால்காசு ஆசை பணத்தாசை உள்ளவரையில் பக்தனோ?
    ஐயனே பொருள், உயிர்ப்பற்று, மோகமுள்ளவரை பக்தனோ?
    பொன், பெண், மண்ணுக்குப் போட்டியிடுபவன் பக்தனோ?
    பக்தருக்கு நான் சொன்னால் பொல்லாப்பு,கொந்தளிப்பு
    ஒருமுறை தாங்கள் சொல்வீர்,
    பிரளய காலத்தின் சொட்டாளனே“

    சுதந்திர சித்தலிங்கேஸ்வரா

    ”நிஜகுரு சுதந்திர சித்தலிங்கேஸ்வரா” இவரது முத்திரையாகும்.

    1. “அந்தரத்தில் தூய்மை இல்லாதவரிடத்தில்
    அத்திப் பழத்தில் புழுக்கள் போல விடாது பாரய்யா .
    அந்தரங்கத்தில் தூய்மையிருப்பின்
    வாழைப்பழம் போல நற்குணம் தெரியும் பாரய்யா.
    சரணர்கள் அந்தரங்கத் தூய்மையற்றவர் குழுவில் இருக்கக்கூடாது
    நிஜகுரு சுதந்திரசித்தலிங்கேஸ்வரனே“

    2. “நெருப்பின் தொடர்பால் விறகு நெருப்பானது போல
    சிவசடங்கின் வழியுயர்ந்த சிவபக்தன்
    சிவனாவானன்றி மனிதனாக மாட்டான்
    சிவபக்தனுக்குச் சாதியில்லை மாசில்லை
    சிவனைப் போலவே இருப்பான்
    நிஜகுண சுதந்திரசித்தலிங்கேஸ்வரனின் பக்தன்.”

    3. “ஆயுதங்கள் ஐந்நூறு இருந்தென்ன?
    போர்க்களத்தில் பகையறுப்பது வாளொன்றே.
    என்ன படித்து என்ன கேட்டென்ன
    தான் யாரென்பதை அறியமுடியாத வரையில்.
    தான் யாரென அறிந்த பின்னர், நீ நானென்பதில்லை
    நிஜகுரு சுதந்திரசித்தலிங்கேஸ்வரன் தானாகியுள்ளான்.“

    4. “என்னால் அறிந்தேனினில் என்னால் அறியவில்லை
    உன்னால் அறிந்தேனெனில் உன்னால் அறியவில்லை
    கண்ணொளியும் சூரிய ஒளியும் சேர்ந்து காண்பது போல
    என் உன் அறிவு உறவான் ஆதரவிலறிந்தேன் பாராய்
    நிஜகுரு சுதந்திரசித்தலிங்கேஸ்வரனே“

    ஹடப்பத அப்பண்ணா

    பசவேசரோடு நெருக்கமாக இருந்தவர்.வெற்றிலைப் பெட்டியேந்தும் காயகம் இவருடையது. இவர் மனைவி இலிங்கம்மா சரணரும், வசனக்காரருமாவார். கல்யாண் புரட்சியின் போது பசவேசரோடு கூடலசங்கமம் சென்றவர். பின்பு பசவேசரின் கட்டளைப்படி மனைவியை அழைத்து வர கல்யாண் செல்கிறார். அதற்குள் பசவேசர் இறைவனிடம் ஐக்கியமான செய்தி கிடைக்கிறது. கணவன், மனைவி இருவரும் அங்கேயே இறைவனிடம் ஐக்கியமாகின்றனர். ’பசவப்பிரிய கூடலசென்ன பசவண்ணா’ என்பது இவரது முத்திரையாகும்.

    1. “ஆகின்றன உதயம், பகல், மாலை,
    போகின்றன நாள், வாரம், மாதம், ஆண்டு
    சாகின்றன ஆயுளும், வாக்குறுதியும்
    இவற்றை உடனறிந்து களைந்து நீ பிறப்பெடுத்தாய்
    பசவப்பிரிய கூடல சென்னபசவண்ணனே”

    2. “பேசியென்ன ஐயனே நடக்காத வரையில்?
    நடந்தென்ன ஐயனே நல்லுரை இல்லாத வரையில்?
    இந்தச் செயலும் சொல்லுமறிந்து ஒன்றாகி
    சிவவடிவாகிய சரணர்பதம் பணிந்து வாழ்கின்றேன் நான்
    பசவப்பிரிய கூடல சென்னபசவண்ணனே“

    3. “பக்தனொரு குலம், சம்சாரியொரு குலமென்பார்
    பக்தன் எங்ஙனம், சம்சாரி எங்ஙனமெனில், யாருமறியார்
    இஃதறிந்தோர் சிந்தனை செய்வீர்
    பக்தனெனில் இலிங்கம், சம்சாரியெனில் அங்கம்.
    இவ்விரண்டின் இரகசிய உறவறிந்தால்
    அவனே நமது வசனப்பிரிய கூடல சென்னபசவண்ணன்”

    4. “காலையிலிருந்து மாலை வரையில்
    சுழலும் மாயவுலகில் அலைந்து திரிந்து
    இருட்டியதும் கெட்ட புலன்களுக்குள்
    மூழ்கி, செத்துப், பிறந்து
    காலையில் மீண்டும் தான் தத்துவமறிந்தவனெனப் பேசும்
    இருண்ட மனிதருடன் அப்பக்கம் போய்ச் சேராமல்
    இப்பக்கம் நின்று நாணியே நகைப்பான்,
    நம் பசவப்பிரிய கூடல சென்னபசவண்ணன்”

    ஹடப்பத அப்பண்ணனின் புண்ணியஸ்திரி இலிங்கம்மா 

    பசவேசருக்கு நெருக்கமான ஹடப்பத அப்பண்ணரின் மனைவி இவர். ’அப்பண்ண பிரிய சென்ன பசவண்ண’ இவரது முத்திரையாகும்.

    1. “ஆசையழித்து , சீற்றம் தவிர்த்து உலகப் பாசமறுத்து
    ஈசனை நினைக்கும் அடியாரை
    உலகின் ஈனப்பிறவிகள் எங்ஙனமறிவர்
    அப்பண்ண பிரிய சென்ன பசவண்ணனே?”

    2. “கண்டேன் கேட்டேனெனும் இருநிலையழித்து
    உண்டேன் உடுத்தினேனெனும் தேவையை விடுத்து
    செய்தேன் சொன்னேனெனும் செயல்விட்டு
    மாயசெபங்களுக்கு ஆட்படாமல் சென்று
    அடியார் பாதம் வணங்கி வாழ்ந்துளேன்,
    அப்பண்ண பிரிய சென்னபசவண்ணனே”

    3. “மனம் மறதிக்கு ஆட்பட்டது
    உடல் கலவரத்துக்கு ஆட்பட்டது
    ஆசையும் சினமும் சுவரெழுப்பியது
    இவற்றினிடையே உலக ஈசனை நினைக்கும்
    அடியார் சொற்கள் கவனத்திலிருப்பதில்லை
    நம் அப்பண்ண பிரியனே சென்ன பசவண்ணனே.”

    4. “போதுமய்யனே, அறுந்தது உலகின் தாட்சண்யம்
    உடலாசை விட்டது  உள்ளத்தின் சஞ்சலம் நின்றது
    சொல்லின் அலங்காரம் சுருங்கியது;
    மேன்மை கலந்தது ; ஒளியுடன் கூடியது.
    வெட்ட வெளியில் மகிழ்ந்தாடி இன்பமடைந்தேன் ஐயனே
    அப்பண்ண பிரிய சென்னபசவண்ணனே“

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 93 (அன்பனே)

    சேக்கிழார் பாடல் நயம் – 93 (அன்பனே)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    அன்பனே! யன்பர் பூசை யளித்தநீ யணங்கி னோடும்
     என்பெரு முலக மெய்தி, யிருநிதிக் கிழவன் தானே
    முன்பெரு நிதிய மேந்தி மொழிவழி ஏவல் கேட்ப,
    வின்பமார்ந் திருக்க“ வென்றே யருள்செய்தான் எவர்க்கு மிக்கான்.”

    விளக்கம்:

    “அன்புடையவனே! அன்பர்களது பூசையினைச் சிறிதும் வழுவாது காத்துச் செய்து வந்த நீ உன் மனைவியோடும் எமது பேருலகத்திலே சேர்ந்து, குபேரன் தானே  நும் முன்னர்ப் பெரு நிதிகளை ஏந்தி நும் சொல் வழியே ஏவல் கேட்டு நிற்க, இணையில்லாத பேரின்பம் நுகர்ந்து கொண்டு நித்தியமாய் வாழ்க“ என்றே யாருக்கும் மிக்காராகிய சிவபெருமான் அருளிச் செய்தார்.

    இப்பாடலில் அன்பனே என்ற சொல், எம்மிடத்து வைத்த அன்பினாலே அடியார்களிடத்து அன்புடையவனே என்று பொருள்பட்டது. ‘’அன்பர்பூசை அளித்த நீ’’ என்ற தொடர் அன்பு நிறைதலாகிய காரணத்தால் விளைந்தது அன்பர் பூசையாகிய காரியம் எனப்பட்டது.

    அளித்தல் என்ற சொல்  வளம் சுருங்கியபோதும் என்றும் விடாது பாதுகாத்துச் செலுத்துதலைக் குறித்தது. அணங்கு – தெய்வத்தன்மை வாய்ந்த பெண். இங்கு மனைவியாரைக் குறித்தது. தெய்வத்தை எப்போதும் வழிபடும் அடியாரின் மனைவியும் தெய்வத்தன்மை பெற்றார்.

    ‘’அணங்கினோடும் நீ  என் பெரும் உலகம் எய்தி’’  என்ற தொடர்,  அடியார் பூசைக்கு உரிய அமுது படைத்து உய்த்தது மனைவியாரது கற்பின் றிறத்தாலே நிகழ்ந்ததாலின், அச்சிறப்புப் பற்றி மனைவியாருடன் சார்த்தி, அணங்கினோடும் நீ எய்தியிருக்க என்றருளினார்.

    ‘’நம்பெரு முலகம்’’ என்றதொடருக்கு இயற்பகையார் புராணத்தில் நலமிகு சிவலோகத்தில்  என்ற தொடருக்கு சிவானந்த போகமே வளர்கின்ற அபரமுத்தித் தானமாகிய சுத்தபுவனத்திலே என்றபொருள் கூறியதை இங்குநினைவில்கொள்க

    ‘’இருநிதிக் கிழவன்  தானே முன்பெருநிதியம் ஏந்தி‘’ என்ற தொடர் பிறகணங்களன்றிக் குபேரன் தானே பெருநிதியம் ஏந்தி முன் நின்று, என்றபொருளைக்குறித்தது. பெருநிதியம் – எடுக்க வெடுக்கக் குறையாத சங்கநிதி – பதுமநிதி என்பன.

    மேலும் ‘’மொழிவழியேவல் கேட்ப‘’ என்றதொடருக்கு உனது சொல் வழிப்பட்டு நின்று, நீ ஏவின பணி செய்து வர என்று பொருள்!

    சிவலோகத்திலே இந்நாயனார்க்குக் குபேரனது பெருநிதியத்தால் ஆவது என்ன? எனின் செல்வமும், அடியார் திறத்து அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும், பாரின் மல்க விரும்பி, அக்கொள்கையினின்றே அடியவர் பூசை செய்து வந்தனர் நாயனார்; அவரது எண்ணம் நிறைவேறுக என்று அடியவர்கள் நாளு நாளும் வாழ்த்தினர்; அதன் பயனை உலகிற்குக் கொடுத்துப் பாரிலே நித்தமும் செல்வமும் சிந்தையும் நீடி வருவதற்காக, இறைவன், இவர் சொல்வழிக் குபேரதேவன் நிதியமேந்தி ஏவல் கேட்டு நிற்குமாறு அருளினார் என்பதை விளக்கியது! ஆகவே இளையான்குடிமாற நாயனார் சிவகணங்களிலொருவராய்ச் சிவலோகத்தில் எழுந்தருளியிருந்து உலகிலே செல்வமும் சிவசிந்தையும் நீடி வருமாறு அடியவர்க்கு இன்றும் என்றும் அருள் புரிந்து வருகின்றார்  என்பதைப் புலப்படுத்துகிறது இங்கே இன்பம் என்பது அடியார் கூட்டத்தில் வாழும் பேரின்பத்தைக் குறித்தது.

    எவர்க்கும் மிக்கானாகிய  முழுமுதல்வன்  சோதியாகத் தோன்றி, அடியாரை நோக்கி  அன்பனே, நீ அணங்கினோடும் என்பெரும் உலகம் எய்தி, குபேரன்தானே ஏவல் கேட்ப, இன்பமார்ந்திருக்க என்று  அருள் செய்தான் என இவ்விரண்டு பாட்டுக்களையும் இணைத்துப் பொருள்கொள்க.

    ஆகவே இப்பாடல்கள் ‘’இறைவன்திருவருளையன்றி உலகியல் இன்பங்கள் எதனையும் வேண்டாமல் வாழ்ந்தஅடியார், சிவலோகத்தில் எல்லா இன்பங்களையும்பெற்றுப் பேரின்பத்துடன் வாழ்வர்’’ என்பதை உணர்த்துகின்றன.

    ‘’உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
    கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
    குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே
    கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே!’’

    என்ற  திருவாசகம்  இங்கே  நினைவுக்கு  வரவேண்டும். இவ்வரலாற்றின்  ஆதாரங்கள்  பரமக்குடி அருகில் இருப்பதையும்  எண்ணி மகிழ  வேண்டும்.

    Share
  • தேசிய கல்விக் கொள்கை 2020 – வளர்முகமாய் ஒரு கருத்துரை

    தேசிய கல்விக் கொள்கை 2020 – வளர்முகமாய் ஒரு கருத்துரை

    இந்திய அரசாங்கத்தால் நடைமுறைக்கு வரப்போகும் தேசிய கல்விக் கொள்கை (National Educational Policy 2020) மீதான ஒரு கருத்தாடல்:

    https://us02web.zoom.us/j/89262732459?pwd=d3BzYIFmVjF3MGVxUWITaTRKRTU5Zz09

    Meeting ID: 892 6273 2459

    Passcode: 433886    Date: August 19, 2020 @ 5 pm, IST.

    உலகத் தரம்வாய்ந்த ஆய்வுகளை நடாத்தி, போட்டிகள் நிறைந்த உலகச் சந்தையில் பொருள்களை விற்கும் முதல் உலக நாடுகளில் ஒன்றாக மாறும் வாய்ப்புக்கான தேவைகள் பற்றியும், தொற்றுநச்சுக் காலத்தில் பண முதலீடு (6% of GDP) என்னும் நோக்கம் என்பது வெறுமனே தாளில் மட்டுமன்றி, உண்மையாகவே அரசாங்கம் நிதி ஒதுக்குவது, ஆசிரியர்களை உருவாக்குவது பற்றியும் பேசுகிறேன்.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொல்லியல் சின்னங்கள் பாதுகாப்பு என்பனவும், முக்கியமாக ஆங்கிலத்தில் உயர் விஞ்ஞானம், மருத்துவம், கம்ப்யூட்டர், தொழில்நுட்பம் ஆராய்ச்சிகள் தரம்மிக்க ஜர்னல்களில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இந்தியக் கல்விநிறுவனங்கள் வெளியிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    ஆங்கிலத்தை விட்டுவிட்டால் உலக வளர்ச்சி அறியும் ஜன்னல் ஒன்று இந்திய மொழிகள் பேசுவோருக்கு அடைக்கப்படும். மொழிக் கொள்கையில் தாய்மொழி, ஆங்கிலம் அவசியமானவை. மூன்றாம் மொழி கற்க விரும்புவோர் – இந்திய, அல்லது உலக மொழிகள் ஒன்றை – கற்க வசதிகள் ஏற்படவேண்டும். தமிழ் மொழி, தொல்லியல், வரலாறு உலகளாவிய நிலையில் வளரவேண்டும். இப்போதைய துல்லியமான ஒளிப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிர்தல் எளிது. அதில் அரியனவற்றை தேர்ந்தெடுத்து இணையத்தில் வெளியிடும் நிபுணர் குழுக்களை பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்த வேண்டும்.

    அண்மையில் கீழடி (மணலூர்) தமிழி எழுத்து, கிண்ணிமங்கலம் சிற்பத்தில் உள்ள தொல்காப்பியர் புள்ளி காட்டும் காலம், சிவகளை போன்ற இடங்களில் வாழ்விடங்கள் கிடைக்க உள்ள வாய்ப்பு, பழைய தமிழ்நூல்களை எண்மப்படுத்தி archive.org போன்ற தளங்களில் லட்சக்கணக்கில் வைத்தல் பற்றிக் குறிப்பிட ஆவல். தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் தமிழ்நாட்டு அரசாங்கம் எழுதும்போது மொழியியலார் குறிப்பிடும் செம்மையான முறையில் எழுதுதலும், இந்திய மொழிகளுக்கும், மக்களுக்கும் பரஸ்பர ஒற்றுமை ஓங்க ரோமன் எழுத்துமுறை (ISO 15919) முறையையும் இந்தியா முழுமையும் உயர்நிலைப்பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்களில் சேர்ப்பதும், தபால் நிலையம், ரயில்கள் போன்றவற்றில் பயன்படுத்துவதும் உதவுவதை மாநில முதலமைச்சர்கள் தில்லி சர்க்கார் மந்திரிகளிடம் வலியுறுத்தல் தேவை.

    தமிழ்மொழி, தமிழ்நாடு தென்னகம், திராவிட ஒப்பீட்டு மொழியியல், சிந்துவெளியில் தொன்மையான கலை, சமய, சமூக ஆய்வுகள், மரபணு பரிசோதனைச் செய்தி போன்றன நிகழ்த்த இப்பொழுது நாங்கள் அமைக்க முயலும், “ஹூஸ்டன் பல்கலை தமிழ் இருக்கை” போன்றவை எவ்வாறு உதவும் என்றும் பார்க்கலாம். மதுரைப் பேரா. சத்தியமூர்த்தி, போற்றுதலுக்குரிய பரஞ்சோதி மகான் அவர்களுக்கு ஹூஸ்டன் தமிழ் இருக்கை சார்பில் நன்றி. அழைப்பிதழை இணைப்பில் காண்க.

    புதன் மாலைப் பொழுதில் சந்திப்போம்!

    டாக்டர் நா.கணேசன்

    https://archive.org/details/@dr_n_ganesan

    http://nganesan.blogspot.com

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 22

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 22

    மீனாட்சி பாலகணேஷ்

    (குதலைமொழியாடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்பாற் பிள்ளைத்தமிழின் இன்னுமொரு பருவமான குதலைமொழியாடல் எனும் இப்பருவம் பொருளற்ற மழலைகூறும் பருவமன்று; ஐந்தாறுவயதுப் பெண்குழந்தை பேசும் அழகான பேச்சுகளாகக் கொள்ளப்பட வேண்டும். அதற்கேற்ப தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் இப்பருவத்தைப் பாடியுள்ள ஒரேயொரு புலவரான கிருட்டிணையர் இதனைப் பொன்னூசல் பருவத்திற்குப் பின்னும் நீராடற்பருவத்தின் முன்பும் வருமாறு அமைத்துள்ளார். இதன் கருத்தை கா. நாகராசு அவர்கள் இப்பிள்ளைத்தமிழுக்கான தமது உரைநூலில் விளக்கியுள்ளார்.

    ‘குதலைமொழி என்பதற்கு மழலைமொழி எனப் பொருள்கொள்வதைக் காட்டிலும் இனியமொழி எனப் பொருள் கொள்வதே பொருத்தமெனப்படுகிறது. ஏனெனில் இப்பருவம் ஊசல் பருவத்துக்கும் நீராடற்பருவத்துக்கும் இடையில் வருகிறது. இவ்விரு பருவங்களும் குழந்தையின் ஐந்தாம் ஆண்டுமுதல் ஒன்பதாம் ஆண்டுவரை நடைபெறும் நிகழ்வுகளைப் பாடுவது. குதலைமொழியாடல் பருவம் பற்றியோ அது குழந்தையின் எவ்வாண்டுக்குரியது என்பது குறித்தோ நூல்களில் சொல்லப்படவில்லை. எனவே இதையும் ஐந்தாம் ஆண்டு முதல் ஒன்பதாம் ஆண்டுவரை நடைபெறும் நிகழ்வுகளுள் ஒன்றாகவே கருதலாம். ஐந்தாம் ஆண்டிலிருந்து குழந்தை நன்றாகப் பேசத்தொடங்கிவிடும். எனவே அதை மழலை என்று கொள்ளாமல் இனியமொழி எனவே கொள்ளலாம்1,’ என்கிறார்.

    குதலைமொழியாடல் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாயினும் பெண்பால் பிள்ளைத்தமிழில் மட்டுமே சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆண்பால் பிள்ளைத்தமிழான கதிர்காமப் பிள்ளைத்தமிழில் ‘மொழிபயிலல்’ என ஒரு பருவத்தைக் கண்டோம். இதுவும் அதுபோன்றே புலவரின் விருப்பத்தின்படி இயற்றப்பட்டதெனக் கொள்ளலாம்.

    இப்பருவத்தில் இரண்டு பாடல்களே உள்ளன. இவையிரண்டுமே பொருள் செறிந்த அருமையான பாடல்கள். பாடல்களைக் காணப்புகுமுன் தொடர்பான சில கருத்துக்களைக் கண்டு மகிழலாம்.

    சொல், அது என்னவாக வேண்டுமாயினும் இருக்கலாம். ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்கென்றேயான தனிப்பட்ட ஒரு பொருளுண்டு. அடியார்களின் பார்வை இத்தகைய கருத்தினுள் ஒரு அதியற்புதமான வடிவைக் காண்கின்றது.

                ‘சொல்லும் பொருளும் எனநட மாடும் துணைவருடன்
             புல்லும் பரிமளப் பூங்கொடியே2….’ என அபிராமி அன்னையைப் போற்றுகிறார் அபிராமி பட்டர்.

    சொல் என்பது பேசப்படுவது; கேட்கப்படுவது – ஆகவே அது சக்தியின் அம்சமாக விளங்குவது; பொருள் ஆனது மனதால் மட்டுமே உணரக் கூடியது – ஆதலால் அது சிவபிரானின் அம்சமாவது. சொல்லின்றிப் பொருளில்லை! பொருளற்ற சொல்லுமில்லை! அவை ஒன்றினையொன்று இணைபிரியாதவை; பிரிய இயலாதவை! அதனால்தான் அன்னையும் ஐயனுமாக, சொல்லும் பொருளுமாக எனப் பிணைந்துள்ள சிவசக்தி ஐக்கிய வடிவத்தினை இப்பாடல் அழகுற விளக்கியருளுகின்றது.

    மகாகவி காளிதாசரும் தமது இரகுவம்ச மகாகாவியத்தின் முதல் ஸ்லோகமாக இக்கருத்தையே முன்வைக்கிறார்.

                வாகர்த்தாவிவ சம்ப்ரக்தௌ வாகர்த்தா ப்ரதிபத்தயே
             ஜகத பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ3

    ‘இந்தப் பிரபஞ்சத்தின் தாய்தந்தையரான பார்வதி, பரமேஸ்வரர்களை நான் வணங்குகிறேன். அவர்கள் சொல்லும் பொருளும் என இணைந்திருப்பவர்கள்,’ என்பது எளிமையான விளக்கம்.

    சொற்களின் பிறப்பு, அமைப்பு, பொருள் அனைத்துமே அறிவியல் நோக்கிலும் அதற்கும் அப்பாற்பட்டதொரு தத்துவ வேதாந்த முறையிலும் உணரப்படுவனவாகும்.

    சொல்லின் தோற்றத்தைத் தமிழின் பழம்பெரும் முதன்மைநூலான தொல்காப்பியமானது விளக்கியுள்ளது. சொல்லின் அடிப்படையான எழுத்துக்களும் அவற்றுக்கான ஓசையும் உந்தியிலிருந்து எழும் காற்றானது தலை, தொண்டை, மார்பு ஆகிய இடங்களில் தங்கி பல், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகிய இடங்களில் படுவதனால் பிறக்கின்றன. இதற்கென மாத்திரைகள் (கால அளவைகள்) உண்டு. இது தவிர்த்து உறுப்புகளில் தங்கிச் சுழன்று எழும் ஓசைக்காற்றுக்கு அளபு கூறுதல் அந்தணர் மறைநூல்களில் மட்டுமே காணப்படும் என்கிறார் தொல்காப்பியர்.

    இது எவ்வாறு? நான்குவிதமான சொற்கள் (வாக்குகள்) உண்டென தொல்காப்பியரின் குருவான அகத்தியர் கூறுகிறார். அவை

                ‘………. பைசந்தி மத்திமை வைகரியுஞ்
             சூக்குமையும் நாலுமிது வாக்கேயாகும்4,’ என்கிறார்.

    பரா (சூக்குமை), பச்யந்தி (பைசந்தி), மத்யமா (மத்திமை), வைகரீ,  என்பன வாக்கு எனும் சொல்லின் பலவிதத் தோற்ற வடிவங்களாகும்.

    இதனை லலிதா சஹஸ்ரநாமத்திலும் காணலாம்.

                ‘பரா ப்ரத்யக் சிதீரூபா பச்யந்தீ பரதேவதா
             மத்யமா வைகரீ ரூபா5,’ என்பன அன்னையின் மீதான நாமாவளிகளில் 366, 368, 370, 371 ஆகும். பராசக்தியான லலிதாதேவியே இந்த நான்குவிதமான சொல்வடிவங்களில் விளங்குகிறாள்.

    இவற்றுள் மிக நுண்ணிய நிலையானது பரா அல்லது சூக்குமை எனப்படும்; இது ஞானிகள் தமது சிந்தையில் உய்த்துணரும் ஒலிவடிவமாகும். வெளிப்படையாகக் கேட்கவியலாதது; ஒலிவடிவமற்றது. மூலாதாரத்தில் விளங்குவது.

    பைசந்தி எனப்படுவது உள்ளத்தினுள் தோன்றும் ஒலிவடிவம். சொல்லின் ஆரம்பகாலத்துக் கலங்கிய நிலை எனலாம். மூலாதாரத்தில் கிளம்பி நாபிக்கு வருவது பச்யந்தீ ஆகும்.

    மத்திமையாவது சொல்லின் இடைப்பட்ட நிலை. மனதால் மட்டுமே உணரக்கூடியது. பச்யந்தி நிலையிலிருந்து இருதயத்திற்கு வரும் நாதம் மத்திமை.

    வைகரி என்பது தெளிவாகச் செவிக்குக்கேட்கும் அட்சர வடிவான ஒலியாகும். மத்யமா ஆனது கழுத்திற்கு வந்தால் பீஜம் அல்லது அட்சரம் ஆகின்றது.

    பரா எனும் சூக்குமையான வாக்கினை மேலான முனிவர்களால் மட்டுமே உணரவும் கிரகித்துக்கொள்ளவும் இயலும். இவையே வேத மந்திரங்களின் அடிப்படை ஆகும். அவை உச்சரிப்பிற்கேற்ற மந்திரங்களாக ‘வைகரி’ ரூபத்தில் வெளிப்படுமுன்பு பைசந்தி, மத்திமை எனும் இடைப்பட்ட நிலைகளில் உருப்பெற்று வளரும். இதனையே தொல்காப்பியர், ‘அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே6,’ என்றார்.

    இந்த வைகரியே உந்தி, மார்பு, கழுத்து, உச்சி, மூக்கு இவற்றுள் இடையறாது சென்றுவரும் மூச்சுக்காற்றில் கலந்து பல், அண்ணம், நாக்கு, இதழ் இவைகளில் பட்டு பற்பல சொல்வடிவாகி உருப்பெறும். இதனையே பெற்றோர் தம் சிறுகுழந்தைகள் எழுப்பும் இனிய ஓசைகளிலும், பேசும் பொருளற்ற மழலையிலும், குதலை மொழியாகவும் உணர்கின்றனர். கேட்டும் மகிழ்கின்றனர்.

    இன்னும் எளிதாகக் கூற வேண்டுமெனில், ‘அம்மா’ எனும் ஒரு சொல்லைக் கூற முற்படும்போது முதலில் அந்த ஒலியின் வடிவம் மனக்கண்ணில் சூக்குமையாக, நுட்பமாகத் தோன்றுகிறது. அடுத்து அதற்கு மட்டுமேயான அந்த அம்மாவின் உருவம் ஒலிவடிவமாக உள்ளத்தில் எழுகின்றது. இதுவே பைசந்தி அல்லது பச்யந்தி. பின்பு அது சொல்லாக ஒலியோடு நமது வாயிலிருந்து வெளிப்படும் முன்பு அதன் ஒலிவடிவு மனதில் தோன்றி  மத்திமை என உணரப்படுகின்றது. பின்பு ஒலியுடன் கூடிய அழுத்தமான சொல்லாக (வைகரி) வெளிப்படுகின்றது. இது செவிக்குத் தெளிவாகக் கேட்கும் அட்சர வடிவான ஒலி.

    நாதமாக (ஓசையாக) உயிரோடு கூடியிருப்பது மொழித்தன்மை; மொழிக்கு இன்றியமையாதன சொற்கள் எனும் வாக்கு; அவை விந்து தத்துவமாகும் என்பன சித்தாந்த சாத்திரக் கருத்துக்களாகும். இதனையே சிவஞான சித்தியார்,

    ‘சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்7 என்கின்றது.

    நாம் எண்ணும் எண்ணங்களும் அவை ஒலிவடிவம் பெற்று நம்மால் பேசப்படுதலும் சிவசத்தியின் அம்சங்களே, தத்துவங்களே எனும் பேருண்மை இதனால் புலனாகும்.

    உண்மைக்காதலின் உயர்வைப் போற்றிப் பாடியுள்ள ‘பாயுமொளி நீயெனக்கு,’ எனும் பாடலில் பாரதியார், ‘பேசுபொருள் நீயெனக்கு, பேணுமொழி நானுக்கு8,’ என்று சொல்-பொருளின் தொடர்பினைப் பாடியுள்ளார்.

    சிவசக்தி வடிவமான பிரணவத்தின் – ஓங்காரத்தின் – முழுமுதற்பொருளாக, அதன் தூல வடிவமாகவே விளங்கும் விநாயகப்பெருமானே அனைத்து எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்கும் முழுமுதற் பொருளாவான். இக்கருத்தினை அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று அருமையாக விளக்குகிறது.

    வேதவிநாயகப்பெருமான் நமது புத்திக்கு (புந்தி) எட்டாத புண்ணியவெளியில் திகழ்ந்து அருளுபவன். நாபியை இடமாகக் கொண்டு நாதம் எனப்படும் அறிவே வடிவாக இருக்கும் சூக்குமை, உந்தியில் உற்பத்தியாகி பிராணவாயுவை வடிவாகக் கொண்ட பைசந்தி, நெஞ்சையும் கண்டத்தையும் இடமாகக் கொண்டு அட்சர வடிவினை ஒழுங்குபட நிறுத்தி, செவிக்குக் கேளாமல் உள்ளறிவாக நிற்கும் மத்திமை, நாக்கினடியிலிருந்து பிறந்து ஒலிவடிவம் பெறும் வைகரி எனச் சொற்கள் நான்குவகைப்படும்.

    ‘இந்த நாலுவிதமான எழுத்துக்களுக்கும், மிகுதியான நூல்களிலுள்ள எழுத்துக்களுக்கும், பழமையான நான்கு வேதங்களில் உள்ள எழுத்துக்களுக்கும், குற்றமற்ற சமஸ்கிருத மொழியில் உள்ள எழுத்துக்களுடன் பதினெட்டுவகை நிலங்களில் வழக்கிலுள்ள அத்துணை எழுத்துக்களுக்கும் மேற்பட்டு விளங்கி ஓங்காரப்பொருளாகவும் அவற்றின் தலைவனாக அவற்றை ஆள்பவனாகவும் விளங்கி, மேலான ஞானத்தின் மூல ஆதாரம் எனும் இடத்தில் நமது புத்திக்கு எட்டவியலாத ஒரு புண்ணியவெளியில் அடைவதற்கு அரிய பரம்பொருளாக இருக்கும் விநாயகப் பெருமானே!

    ‘குற்றமற்ற புகழைக் கொண்டவனே! வெற்றி அளிப்பவனே! செங்கீரை ஆடியருளுக!’ என அடியார் வேண்டுவதாக அமைந்த பொருள்செறிந்த பாடல் இது.

                ‘நாதத் தலத்திலெழு பறையினொடு பைசந்தி
                       நல்லமத் திமைவைகரி
                 நாலெழுத் துக்கும்வெகு நூலெழுத் துக்குமுது
                       நான்மறை எழுத்தினுக்கும்
             ……………………………………..
             போதத்தின் மூலவா தாரத் தலத்திலே
                      புந்திக்கும் எட்டாததோர்
                 புண்ணிய வெளிக்குளே ………..
             தீதற்ற விசைகொளும் அரும்பாத்தை புரிமுதல்வ
                       செங்கீரை ஆடியருளே9
             ………………………………………..’

    எல்லாம்வல்ல சிவப்பரம்பொருளிடமிருந்து முதலாவதாக உண்டாகிய படைப்பு ஓம் எனும் பிரணவ நாதமாகும். அந்த ஓம் எனும் ஒலியின் வரிவடிவமே விநாயகரின் திருவுருவம். ஆகவே இவர் ஓங்கார ரூபன் எனவும் பிரணவ கணபதி எனவும் அறியப்படுகிறார்.

    எழுத்து, ஓலி, ஓசை, சொற்கள் ஆகியவற்றின் பிறப்பினை இவ்வாறாக அறிந்துகொண்டு சிவகாமியம்மை பிள்ளைத்தமிழின் பாடல்களைக் காணப்புகலாம்.

    மூன்று பிள்ளைத்தமிழ் நூல்கள் சிவகாமியம்மைமீது இயற்றப்பட்டுள்ளதெனக் கூறுவர். அவற்றினை இயற்றியோர்:

    1. நல்லதுக்குடி கிருட்டிணையர்.
    2. ராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார்.
    3. மு. ரா. அருணாசலக் கவிராயர்.

    இருப்பினும் ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவைகளில் திகழ்கின்றன என்பது மறுக்க முடியாததாகும்.

    நாம் இங்கு காணப்போவது நல்லதுக்குடி கிருட்டிணையர் இயற்றிய நூலின் பாடல்களைத்தாம். ஏனெனில் முன்பே கூறியதுபோல, இவர் மட்டுமே குதலைமொழியாடல் பருவத்தைப் பாடியுள்ளார். மற்றதில், இரண்டாவது நூல் வழக்கமான பெண்பால் பிள்ளைத்தமிழுக்கான பத்துப் பருவங்களையே கொண்டமைந்துள்ளது. மூன்றாவது காணக் கிடைக்கவில்லை.

    முதல்பாடல் சிவகாமி அன்னையிடம் புலவரின் வினாக்களாகவே அமைந்துள்ளது:

    ‘தாயே! முழுநிலவு பொழியும் இனிய அமுதக்கிரணங்களும், தெள்ளிய அலைகளைக்கொண்ட பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் முன்பொருகாலம் கடைந்தபோழ்து அதிலிருந்து கிடைத்த தேவாமிர்தமும் முத்தியைத்தர வல்லனவோ?

    ‘அவ்வமுதத்திற்கு நிகரானவை எனக்கூறப்படும் மா, பலா, வாழை எனும் முக்கனிகளொடு சர்க்கரையும் பசுந்தேனும் சேர்த்தாலும் அவை இருவினைகளாலும் வரும் துன்பங்களை நீக்கி இன்பத்தைத் தருமோ?

    ‘காமதேனுவின் பாற்சுவையும் கிளியானது கொஞ்சிப்பேசும் மொழியும் பாசம் எனும் ஆணவமலமாகிய இருளை நீக்கிவிடுமோ?

    ‘ஆனால், (நீ பேசிடும் குதலைமொழியானது),

    ‘தவறுகளைத் திருத்தும்; இம்மைக்கும் மறுமைக்கும் முத்திதரும். இனிச்சொல்ல வேறென்ன உள்ளது? ‘தம் குழந்தைகள் பேசும் இனிய சொற்களைக்கேட்பது செவிக்கு இன்பம் எனும் உண்மை பொய்யாகுமோ? (ஆகாது; அதுவே உண்மை!)

    ‘குழலிசையும் யாழிசையும் இனியதன்று; இவற்றிலும் சிறந்த உனது பவளவாயினின்றும் பெருகும் குதலைமொழியைப் பேசியருள்வாயாக!

    ‘குழகன் எனப்படும் சிவபிரான் மனம்கிழும் சிவகாமசுந்தரியே உன்னுடைய மழலைவாயால் குதலைமொழி பேசியருளுக.”

              முழுமதியின் அமுதமும் தெண்டிரைப்
                       பாற்கடலில் முன்கடைந்திடும் அமுதமும்
             முத்திதருமோ? அதனையொப்பென உரைத்திடினும்
                       முக்கனி சருக்கரையொடும்
             …………………………………………………..
             வழுவகலும் இம்மைக்கும் மறுமைக்கும்
                       முத்திதரும் மற்றினி உரைப்பது
             ………………………………………………….
             குழலினிது யாழினிதுமன்று நின்பவளவாய்க்
                       குதலைமொழி ஆடியருளே10!
             ………………………………………………

    மக்கட்பேறு எனும் திருக்குறள் அதிகாரத்தின் கருத்துக்கள் மிகப்பொருத்தமாகப் பாடலுடன் இணைக்கப்பட்டுள்ளன.

                ‘……….. ……….. …………… மற்றவர்
             சொற்கேட்டல் இன்பம் செவிக்கு11.’
    ‘குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
             மழலைச் சொல்கே ளாதவர்12.’

    கருத்தினுள் வாங்கிக்கொண்டு சிந்தித்து இன்புற வேண்டிய பாடல் இதுவாகும்.

    அடுத்த பாடல் மொழி பிறக்கும் விதத்தினை விளக்கிக் கூறுகிறது.

    ‘சொல்லின் நுண்ணிய நிலையான சூக்குமையாக முதலில் இருந்து, பின் பைசந்தி எனப்படும் கலங்கிய தெளிவற்ற நிலையிலெழுந்து, மத்திமை எனும் இடைப்பட்ட நிலைச்சொல்லாகி, இறுதியில் தெளிவான வைகரியாகி ஒலிக்கும் வாக்கானது, கொப்பூழ், மார்பு, கழுத்து, உச்சி, மூச்சுக்காற்று எப்போதும் சென்றுவரும் நாசித்துவாரங்கள் ஆகியவற்றில் கலந்து, பல், அண்ணம், உதடுகள், நாக்கு என்பவற்றுடன் கலந்து, வாயினில் ஒலிவடிவான சொற்களாக உருப்பெற்று ஒலிக்கும்.

    ‘இத்தகைய மழலைச் சொல்லினை தம் குழந்தைகள் பேசுவதனைக்கேட்டு, கண்டும், அனுபவித்தும், பார்த்தும், அன்னை தந்தையர் பேரின்பம் எய்துவர்.’

    இவ்வாறு பேசும் மழலையர் பெற்றோரின் தெய்வங்களே அன்றோ? அதனையே அடுத்துக் கூறிப் போற்றுகிறார்.

    ‘எனக்கு வரம்தர வந்த தாயும் தந்தையும் நீ! நான் போற்றி வழிபடும் தெய்வமும் நீயே! குறைவில்லாத எனது உயிரும் நீ! பருவுடலும் நீ! உடலில் உறைந்துள்ள ஐம்புலன்களும் நீ! இனிமையாகக் கூவிடும் குரல்படைத்த கிளியும் நாணிடும் உனது குதலைமொழியைப் பேசியருளுகவே! குழகன் எனப்படும் சிவபிரான் மனம்கிழும் சிவகாமசுந்தரியே உன்னுடைய மழலைவாயால் குதலைமொழி பேசியருளுக.’ எனும்  பாடல்.

    சூக்குமை விளங்கும் பைசந்தி மத்திமையொரு
                       துலங்கும் வைகரி ஆகியே
             சொல்லரும் இலஞ்சி யுரனொடு கண்டம்
                       உச்சி ஒலிதொடர் நாசியொடு கலந்தே
             வாக்கினில் எழுந்துபல் அண்ணம் இதழ்
                       நாவினில் வழங்கும் மழலைச் சொல்லுமேல்
             …………………………………………………..
                       உடலினில் படரும் ஐம்புலனும் நீயே!
             …………………………………
             குழகன் மகிழ்சிவ காமசுந் தரிநின்
                       மழலைவாய்க் குதலை மொழியாடி அருளே13!

    நம் தமிழகத்தில் ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே,’ எனும் வழக்குண்டு. இங்கு தெய்வத்தையே குழந்தையாக்கிப் போற்றி, அக்குழந்தை வடிவிலும் தெய்வத்தை உணரும் அடியாரின் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது.

    மேலும் உரையாசிரியர் நாகராசு அவர்களின் கருத்துப்படி, தனது பாடல்களான மழலைச் சொற்களைத் தாயும் தந்தையுமாக விளங்கும் இறைவி ஏற்று மகிழ வேண்டுமெனும் விருப்பத்தையும் புலவர் குறிப்பாக உணர்த்தியுள்ளார்.

    (தொடரும்)

    ___________________________________

    பார்வை நூல்கள்:

    1. கா. நாகராசு, 2015. நல்லதுக்குடி கிருட்டிணையர் பாடிய தில்லைச் வகாமியம்மை பிள்ளைத்தமிழ்- மூலமும் உரையும்.

    2. அபிராமி பட்டர்- அபிராமி அந்தாதி.

    3. காளிதாசர்- இரகுவம்சம்

    4. அகத்தியர்

    5. ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்.

    6. தொல்காப்பியர் – தொல்காப்பியம்- எழுத்ததிகாரம்.

    7. அருணந்தி சிவாச்சாரியார்- சிவஞான சித்தியார்

    8. பாரதியார்- கவிதைகள்.

    9. அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்

    10, 13. நல்லதுக்குடி கிருட்டிணையர்- தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்-குதலைமொழியாடல் பருவம்.

    11, 12. திருவள்ளுவர்- திருக்குறள்.

     

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 5

    பரிமேலழகர் உரைத் திறன் – 5

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    எல்லாம் இருந்தும் என்ன பயன்?

    முன்னுரை

    திருக்குறள் இரண்டடிக் குறட்பாவாகத் தோன்றுவதால் அதன் பொருளைப் பலரும் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம் எனக் கருதுவது இயல்பே. உண்மையில் ‘குறுகத் தரித்தது’ என்பதை உணர்வார் சிலரே. அவ்வாறு நோக்கியுணர்ந்து உரைகண்டவர்களில் பரிமேலழகர் தலையானவர். ஒரு சீருக்கும் மற்றொரு சீருக்கும் ஓரடிக்கும் மற்றொரு அடிக்கும் நிலவும் அல்லது நிலவ வேண்டிய யாப்பு, தொடைவிகற்பம், பொருண்மை, பொருத்தம் ஆகியவை செம்மையாக இருக்கிறதா என்பதைப் பொறுமையுடனும் ஆழ்ந்த புலமை மற்றும் சிந்தனையுடன் அணுகுவது அவர்க்கு இயல்பு. அவ்வாறு, எல்லார் பார்வைக்கும் ஒரே மாதிரியாகத் தோன்றிப் பரிமேலழகருக்கு மட்டும் மாறுபட்டுத் தோன்றி உரைகாணப்பட்ட குறட்பா ஒன்றினைக் காணலாம்.

    திறனறியும் குறட்பாவும் உரையும்

    ‘அன்புடைமை’ என்னும் அதிகாரத்தில் ஒன்பதாவது குறளாக அமைந்திருப்பது,

     “புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும் யாக்கை
    அகத்துறுப்பு அன்பில வர்க்கு” (79)

    என்னும் குறட்பா. இதற்கு,

    • யாக்கை அகத்து – யாக்கை அகத்தின்கண் (நின்று)
    • உறுப்பு – (இல்லறத்திற்கு உறுப்பாகிய)
    • அன்பு – அன்பு
    • இலவர்க்கு – உடையரல்லாதவர்க்கு
    • புறத்து உறுப்பு எல்லாம் – ஏனைப் புறத்தின் கண் நின்று உறுப்பாவன எல்லாம்
    • எவன் செய்யும் – (அவ்வறம் செய்தற்கண்) என்ன உதவியைச் செய்யும்?

    எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையையும் தந்திருக்கிறார்.

    பொழிப்புரை நுட்பம்

    • குறட்பாவில் ‘உறுப்பு’ என வாளா கூறியிருக்க, பரிமேலழகர் ‘இல்லறத்திற்கு உறுப்பு’ என உரை காண்கிறார். அதிகாரம் அன்புடைமையெனினும், இயல் இல்லறவியல் என்பதனை நோக்கி. இல்லறம் அன்பின்றிக் கடைபோகாது ஆதலின் ‘இல்லறத்தின் உறுப்பு’ என நுண்ணியம் காண்கிறார்.
    • ‘அன்பு இலவர்க்கு’ எனக் குறட்பாவில் இருக்க, ‘அன்பு உடையரல்லாதார்க்கு’ என உரை காண்கிறார். அன்பாகிய பண்பினை ‘உடைமை’ என உருவகம் செய்யும் திருவள்ளுவர் கருத்திற்கு (அன்புடைமை) இயைய அன்பினை ஓர் உடைமையாகக் கொள்கிறார்.
    • ‘அகத்துறுப்பு’ ‘புறத்துறுப்பு’ என நிற்க பரிமேலழகர் ‘நின்று’ என்னும் சொல்லை இருவழியும் வருவித்து உரை காண்கிறார்.

    பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

    “புறத்துறுப்பாவன – இடமும் பொருளும் ஏவல் செய்வாரும் முதலாயின. துணையோடு கூடாதவழி அவற்றாற் பயனின்மையின் ‘எவன் செய்யும்’ என்றார். உறுப்புப் போறலின் உறுப்பு எனப்பட்டன. “யாக்கையில் கண் முதலிய உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்? மனத்தின் கண் உறுப்பாகிய அன்பு இலாதார்க்கு என்று உரைப்பாரும் உளர்., அதற்கு இல்லறத்தோடு யாதும் இயைபில்லாமை அறிக”

    விளக்கவுரையில் கண்ட உரையருமை

    • இல்லறத்தான் அறம் செய்வதற்கான கருவிகள் இடம், பொருள், ஏவல் என்னும் மூன்றுமாம். இந்தக் கருவிகள் ‘அன்பு’ என்னும் மூலக்கருவியாகிய இல்லறத் துணையின்றிச் செயல்படாது. செயல்படினும் பயனில்லையாம். இதனைத் ‘துணையோடு கூடாத வழி அவற்றாற் பயனில்லை என்னும் தொடரால் குறிக்கின்றார்.
    • அன்பு அகத்துறுப்பாதலின் இவை புறத்துறுப்பாயின.
    • ‘‘எல்லாம்’ (என்னும் பன்மையால்) அவை மூன்றாக இருப்பினும் அன்பில்லாதவழிப் பயனில்லை என்பார் ‘எவன் செய்யும்’ என்று எழுதுகிறார்.
    • முதலோடு இணையாதவழிச் சினை வினை சிறக்காது. அன்பென்னும் முதலுக்கு இடம், பொருள், ஏவல் என்பன உறுப்புப்போலச் செயல்படுவதால் ‘உறுப்பு’ என்றாராம் திருவள்ளுவர்.
    • பிறரெல்லாம் புறத்துறுப்பு என்பதற்குக் கண் முதலிய உறுப்புக்கள் எனப் பொருள் கண்டதனை ஏற்றுக்கொள்ளாத பரிமேலழகர் மனத்தின் கண் உறுப்பாகிய அன்பு இல்லாதார்க்கு ‘யாக்கையில் கண் முதலிய உறுப்புக்களெல்லாம் என்ன பயனைச் செய்யும்? என உரைப்பாரும் உளர்” என எழுதி “அதற்கு (அவ்வுரைக்கு) இல்லறத்தோடு யாதும் இயைபில்லாமை அறிக’ எனக் குறிப்பாகச் சுட்டி மறுக்கிறார். அகத்துறுப்பு அன்பு என்பதில் மாறுபாடு காணாத பரிமேலழகர் புறத்துறுப்பு எவை என்பதில் மாறுபடுகிறார்.

    பரிமேலழகரும் இயைபும்

    ஆசிரியர் பரிமேலழகர் ‘நோக்கு’ என்னும் திறனாய்வுக் கொள்கையை அடிப்படையாக வைத்தே உரைகாண்கிறார். ‘இயைபு’ என்றால் பொருத்தம். குறட்பாவில் பயின்று வந்துள்ள அசை முதலாக அனைத்துறுப்புக்களின் பொருத்தத்தை ஆராய்கிறார். ஒருமை பன்மை மயக்கத்தை ஆராய்கிறார். உவமப் பொருத்தத்தை ஆராய்கிறார். செய்வினை, செயப்பாட்டு வினை பற்றி ஆராய்கிறார். தன்வினை, பிறவினைகளைப் பற்றி ஆராய்கிறார். இத்தகைய பல நுண்ணியங்களை அவரது உரையில் காணலாம். உரை சொல்வார் பாட்டின் இயைபறிந்து சொல்ல வேண்டும் என்பது அவர் உரைக்கொள்கை. அத்தகைய  கொள்கையைப் பின்பற்றும் அவர், அதனைப் பின்பற்றாது எழுதப்படட உரைகளைப் பல இடங்களில் மறுத்துரைக்கின்றார். குறட்பாவில் எப்படியெல்லாம் அவர் இயைபு காண்கிறார் என்பதைச் சில எடுத்துக்காட்டுக்களால் அறியலாம்.

    • ‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்’ (643) என்னும் குறட்பாவில், ‘சொல் தகை அவாய்’ எனப் பிரித்து ‘சொல்லானது சில குணங்களை அவாவி’ எனப் பரிமேலழகர் உரையெழுதுகிறார். எழுதிச், சொல் அவாவும் அதாவது சொல்லுக்கு இருக்க வேண்டிய உயர்பண்புகளைப் பட்டியலிடுகிறார். பிறரெல்லாம் ‘கேட்டாரைப் பிணிப்பதாகிய தகையவாய்’ எனப் பன்மையாக்கி உரை கூறினர். பரிமேலழகர் அப்படி ‘தகையவாய்’ எனப் பன்மையாகக் கொண்டால் ‘அப்பன்மை ‘மொழிவது’ என்னும் ஒருமையோடு இயையவில்லை’ என இயைபின்மை காட்டுகிறார்.
    • ‘எற்று? என்று இரங்குவ செய்யற்க’ (655) என்னும் குறட்பாவிற்குப் ‘பின்னால் நினைந்து வருந்தும் செயல்களைச் செய்யாதொழிக, மயங்கிச் செய்தால், அங்ஙனம் நினைந்து வருந்தற்க’ என்று பரிமேலழகர் உரைகண்டார். பிறரெல்லாம் ‘நினைந்து வருந்தும் செயல்களைச் செய்யாதொழிக மயங்கிச் செய்தால் தொடர்ந்து செய்யாது ஒழிக’ என உரை கண்டார். பரிமேலழகர், தவறுகளைச் செய்து விட்டு வருந்துவதுதான் இயல்பாதலால் அத்தவறுகளைத் தொடர்ந்து செய்யாதிருப்பது முந்தைய கருத்தோடு இயையவில்லை என்பார் ‘பின் தொடர்தற்குச் செய்வானாயின் அவைபோல்வனவும் செய்யாமை நன்று” எனப் பிறரெல்லாம் இயைபற உரைத்தார்’ என இயைபின்மை சுட்டுவார்.
    • “ஊறொரால் உற்றபின் ஒல்காமை’’ (662) என்னும் தொடருக்குப் பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும் தெய்வத்தான் பழுதுபட்டவழி அதற்குத் தளராமையும் ஆகிய இரண்டும்’ எனப் பரிமேலழகர் உரைகண்டார். பிறரெல்லாம், ‘ஊறொரார் எனப் பாடம் ஓதி உரைகண்டார். ‘ஊறொரால்’ என்பதும் ‘ஒல்காமை’ என்பதும் இணைந்து இரண்டு என்னும் செவ்வெண்ணோடு பொருந்தியது. ‘ஊறொரார்’ என்னும் உயர்திணைப் பன்மை என்றால் பின்வரும் சொல் ஒல்கார் என்றிருந்தால் சரி. அது ‘ஒல்காமை’ என இருப்பதால் அதனோடும் பொருந்தாது. மேலும் செவ்வெண்ணும் பொருந்தாது. “இதனை ஊறொரார் எனப் பாடம் ஓதுவாரும் உளர். “அஃது ஒல்காமை என்னும் எண்ணோடும் இரண்டு என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்திலர்” என இயைபின்மை காட்டுவார்.
    • “அங்கணத்துள் உக்க அமிழ்து” (720) எனத் தொடங்கும் குறட்பாவில் அல்லினத்தார் முன் எதனையும் சொல்லற்க, அவ்வாறு சொல்லப்படும் சொல் தூய்மையற்ற முற்றத்தின்கண் உக்க அமிழ்து’ என உரையெழுதினார். பிறரெல்லாம் எதனையும் சொல்லற்க அது தூயதல்லாத முற்றத்தின்கண் அமிழ்தினைக் கொட்டியதுபோல’ என்று உரையெழுதினார். ‘உக்கப்பட்ட அமிழ்து’ என்பது பொருளுவமை. ‘அமிழ்து உக்கினாற் போல என்றால் அது வினையுவமை. ‘பிறரெல்லாம் ‘கொளல்’ என்பதைத் தொழிற்பெயராக்கி உரைத்தார். அவர் அத்தொழில் அமிழ்து என்னும் பொருளுவமையோடு இணையாமை நோக்கிற்றிலர்” என இயைபின்மை சுட்டுவார்.
    • “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்” (926) என்னும் குறட்பாவிற்கு உறங்கினார் செத்தாரின் வேற்றுமை இல்லாதது போலக், கள்ளுண்பார் நஞ்சுண்பாரினும் வேறல்லர் என்று உரை காண்கிறார். பிறரெல்லாம் நிரல்நிறையாக்கிப் பொருள் உரைப்பர். “அதிகாரப் பொருள் பின்னதாயிருக்க, யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்த்து ஈண்டுக் கூறல் பயனின்றாகலானும் சொற்கிடக்கை நிரல்நிறைக்கு ஏலாமையானும் அஃது உரையன்மை அறிக” என்று அணியின் இயைபின்மை சுட்டுவார்.

    இவ்வாறு குறட்பாவின் எல்லாவகையான இடுக்குகளிலும் நுட்பமாகப் பொருத்தப்பாட்டைக் காணும் இயல்பு ஏனைய உரையாசிரியர்களின் உரைகளில் காணப்படுவதாகத் தெரியவில்லை. இந்த நுண்ணோக்குத்தான் அவருரையின் தனிச்சிறப்பாகவும் கொள்ளப்படுகிறது.

    பரிமேலழகரின் உரையருமை

    • ‘அறம் அன்பில்லாத உயிர்களைக் காயும்’ என்றும், ‘அன்பில்லாத உயிர் தளிர்க்காது’ என்றும் ‘அன்பில்லாதார்க்கு உடம்பு எலும்பினைத் தோலால் போர்த்தது போலாம்’ என்றும் முன்பின்னாக அன்பின் பேராற்றலையும் தேவையையும் கூறிய திருவள்ளுவர் நிறைவு செய்தற்பொருட்டு அன்பில்லாத நிலையில் புறத்துறுப்பால் பயனில்லை என்பதையும் வலியுறுத்துகிறார். எனவேதான் அன்புடைமை என்னும் அதிகாரத்துள் 77, 78, 79, 80 ஆகிய நான்கு குறட்பாக்களையும் ஓரலகாகக் கொண்டு ‘இவை நான்கு பாட்டானும் அன்பில் இல்வழிப் படும் குற்றம்” கூறப்பட்டது’ எனப் பரிமேலழகர் உரையெழுதுகிறார்.
    • உடம்புக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., வாய்க்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., கண்ணுக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., மூக்குக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., செவிக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., இவ்வாறு ஐம்புலன்களுக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லாதபோது அவற்றைப் புறத்துறுப்புக்கள் எனக் கொள்வது பொருந்தாது என அவ்வுரையின் இயைபின்மை கூறி, இல்லறத்தில் இடம், பொருள், ஏவல் என்னும் புறத்துறுப்புக்கள் துணைக்கருவிகளாயினும் உயிர்த்துடிப்பாகிய அன்போடு இணைந்து செயல்பட்டாலே இல்லறப் பயனாகிய அறம் நிறைவுறும் என்பது அவர் கருத்து.

    நிறைவுரை

    கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசருக்குப் பரிமேலழகர் காலத்தால் முந்தியவராயினும் பிந்தியவராயினும் இந்தக் குறட்பாவுக்குப் பரிமேலழகர் எழுதிய கருத்தினை அப்படியே உட்கொண்டு,

    “இல்லானுக்கு அன்பு இடம் பொருள் ஏவல் மற்று
    எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும்? – நல்லாய்!
    மொழியிலார்க்கு ஏது முதுநூல்? தெரியும்
    விழியிலார்க்கு ஏது விளக்கு?”  (நன்னெறி15)

    என்னும் வெண்பாவில் ‘நூலுக்கு மொழியும் ஒளிக்கு விழியும் போல’ இல்லறத்தானுக்கு அன்பு என உவம அளவையால் விளக்கிக் காட்டியிருக்கும் சதுரப்பாடு நோக்கத்தக்கது. “கொடுக்கணுங்கற மனசு வேணுமில்ல” என்ற வழக்கில் புறத்துறுப்புக்களின் அமைவிடம் நோக்குக. புறத்துறுப்புக்கள் என்பன ‘மெய், வாய், கண், மூக்கு, செவி என்பதாகக் கொள்ளாமல் “இடம், பொருள், ஏவல் என்பனவே என அவர் எழுதிய நுட்பமே இக்குறட்பாவின் உரையருமையாகும். இவ்வாறு படைப்பின் நுட்பம் காண்பதன் மூலம் படைப்பாளனின் உள்ளம் காண முயல்வது பரிமேலழகருக்கு இயல்பு என்பதை இதனால் அறியலாம்.

    (தொடரும்)

    Share
  • ‘கூடு இலக்கியச் சந்திப்பு’ – நாமக்கலின் இலக்கிய அடையாளம்

    ‘கூடு இலக்கியச் சந்திப்பு’ – நாமக்கலின் இலக்கிய அடையாளம்

    முனைவர் ம. இராமச்சந்திரன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
    ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.
    ramachandran.ta@gmail.com.

    மதுரை சட்டக் கல்லூரியில் தருமபுரி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வந்தனர். இலக்கியக் கூட்டம், மனித உரிமை கூட்டம், முற்போக்குச் சிந்தனை கூட்டம் போன்றவற்றில் கலந்து கொள்ளுவது விருப்பமான ஒன்று. பல சிந்தனை ஆளுமைகளை உற்றுணர்வற்கு இக்கூட்டங்கள் துணைபுரிந்தன. இத்தகையச்  குழ்நிலையில் இந்நண்பர்கள் பழக்கமானார்கள். இவர்களின் கலந்துரையாடலில் நக்சல்பாரி இயக்கம் மக்களின் நலன்களுக்குப் பாடுபடும் இயக்கம் என்றும் அவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்றும் கூறி வந்தார்கள். தருமபுரி என்ற மாவட்டம் இவ்வாறு என்னுள் வினையாற்றத் தொடங்கியது. சில ஆண்டுகள் கடந்த பிறகு வேலை வாய்ப்புத் தேடிய 2004 ஆம் ஆண்டு தருமபுரி வந்தடைந்து பெரியார் பல்கலைக்கழகத்தில் இணைவுப் பெற்றக்  கல்லூரியொன்றில்  விரிவுரையாளராகப் பணியாற்றினேன்.

    கவிஞர் பிரம்ம ராஜன் என்று சொல்லக் கூடிய ஆங்கிலப் பேராசிரியர் ராஜாராம் மற்றும் பேராசிரியர் சிவக்குமார் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றினர். மேலும் எழுத்தாளர் ஜெயமோகன், த. பார்த்திபன், புது எழுத்து மனோன்மணி என்று பல ஆளுமைகள் இயங்கிய இடம். இலக்கியச் சந்திப்புகள் நடைபெறும் இடமாக ஒக்கேனக்கல் விளங்கியது. இவ்வாறு தருமபுரிக்கு ஓர் இலக்கிய முகமும் இருந்து என்னை வியப்பில் ஆழ்த்தியது.

    தீவிர இலக்கிய வாசிப்புக்கும் ஆசிரியர் பணிக்கும் இடையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள நண்பர்கள் தூண்டினார்கள். முனைவர் பட்டம் என்றால் நெறியாளரைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். நல்ல வழிகாட்டி அமைந்து விட்டால் ஆய்வு செம்மையாக, பயனுள்ளதாக அமையும். நெறியாளரைத் தேடி அலையத் தொடங்கினேன். ஆய்வு நூல்களின் கனத்தை உணர்ந்து நூலாசிரியர்களைத் துரத்தத் தொடங்கினேன். சங்க இலக்கியத்தில் ஆழமான அறிவும் ஆய்வு மனப்பான்மையும் கொண்ட பேராசிரியர் பெ.மாதையன் அவர்கள், அவரின் ஆய்வு நூல்கள் மூலம் அறிமுகமானார். எனது புண்ணியம் அவர் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தார்.

    நவீன இலக்கியத்தில் பரவலாகப் பரிச்சயம் கொண்டவன் நான். சங்க இலக்கியத்தில் ஆழமான அனுபவமும் ஆய்வுச் சிந்தனையும் கொண்டவர் அவர். முனைவர் பட்ட ஆய்வு செம்மையாக, புதுமையாக, பயனுள்ளதாக அமைய வேண்டும் என்று எண்ணி இறுதியாக பெ. மாதையன் அவர்களிடம் சேர்ந்து விடலாம் என்று முடிவு செய்து நண்பர்களிடம் கூறினேன். அனைவரும் பெ.மாதையன் என்று சொன்னவுடன் மிரண்டு விட்டார்கள். தயவு செய்து தற்கொலை செய்ய முயற்சிக்காதே? என்று கூறினார்கள். இதனைக் கேட்டு வியந்த எனது மனம், அவர் மேல் மேலும் ஆர்வத்தைத் தூண்டியது. ஒரு நாள் விடுமுறை எடுத்து, அவரைச் சந்திக்கச் சென்றேன். நண்பர்கள் கூறியக் கருத்துக்களை அவரிடம் கூறினேன். அவர் சிரித்துக் கொண்டே அப்படியா கூறினார்கள்? என்று வியந்து கொண்டார். நான்கைந்து சந்திப்புகளுக்குப் பிறகு தலைப்பைக் கேட்டார். எனது நவீன இலக்கியப் பரிச்சயத்தைக் கூறினேன். என்றாலும், தங்களிடம் சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்யலாம் என்று கூறினேன். அவர் ஆழமாகச் சிந்தித்துவிட்டு ‘நீ நவீன இலக்கியத்திலேயே ஆய்வுச் செய்’ என்று கூறி, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் பெருமாள் முருகனைச் சந்திக்கச் சொன்னார். இவ்வாறு இலக்கியத்தில் (கூளமாதாரி, நிழல் முற்றம்) மட்டும் அறிமுகமான பெருமாள் முருகன் அவர்களும் அவர் நடத்துகின்ற ‘கூடு இலக்கியச் சந்திப்பும்’ நாமக்கலில் அறிமுகமானது.

    பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்கள் நடந்தவற்றைக் கேட்டு என்னை முனைவர் பட்ட ஆய்வாளராகச் சேர்த்துக் கொண்டார். அவருடன் எனக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பு மறக்க முடியாத அனுபவம். பேராசிரியர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பதிப்பாளர், கவிஞர், திறனாய்வாளர் என்று விரிந்த தளத்தில் இயங்கும் ஓர் ஆளுமையின் கனிவான, அன்பான அணுகுமுறை என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர் தனது எழுத்து பணியின் போது அமர்ந்தெழுதும் சூழலைக் கண்டு வியந்து போன உணர்வுகளை வெளிப்படுத்தினேன். அவர் சிரித்துக் கொண்டே சமீபத்தில் வெளியான ‘கங்கணம்’ நாவலைப் பரிசாகக் கொடுத்தார். நான் பாதுகாத்து வருகிற பல புத்தகங்களில் அதுவும் ஒன்று. சிறந்த நெறியாளரைப் பெற்றுவிட்டோம் என்ற பெருமிதம் அன்று (2007) ஏற்பட்டது இன்று வரை மாறாமல் இருக்கிறது. இவரின் வீடு மாணவர்கள் கூடும் இலக்கியக் கூடு. இதனால் இலக்கியச் சந்திப்புக்குக் கூடு என்றே பெயர்.

    ஒவ்வொரு மாதம் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையும் மாணவப் பறவைகள் சந்திக்கும் சரணாலயம், கூடு இலக்கியச் சந்திப்பு. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பயிலும் இளங்கலைப் பட்ட மாணவர்களும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் மற்றும் முனைவர் பட்ட மாணவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து சிந்திக்கும் விவாதம் நடத்தும் இடமாகக் கூடு அமைந்தது. தமிழ் இலக்கியத்தின் பன்முகம் கொண்டவர்களின் வருகை எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து, தீராநதி, வடக்கு வாசல் என்று வெளிவந்த பல சிற்றிதழ்கள் பலருக்கு இங்கு தான் அறிமுகமானது. இதழ்களில் மட்டுமே அறியப்பட்ட பலரை நேரில் சந்தித்து உரையாடி மகிழும் வாய்ப்பைக் கூடு ஏற்படுத்தியது. எழுத்து ஆளுமைக்கும் தனிநபர் ஆளுமைக்கும் இடையே காணப்படும் இடைவெளி மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. ஒருமுறை நானும் எனது நண்பர் கந்தசாமியும் கூடு இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தோம். ஆர்வத்தின் காரணமாக நிகழ்ச்சி தேதியைச் சரியாகக் கவனிக்காமல் நாமக்கல் சென்றுவிட்டோம். அங்கிருந்து புறப்பட்டுப் பெருமாள் முருகன் அவர்களின் இல்லத்தையும் அடைந்துவிட்டோம் என்றாலும் எந்தப் பரபரப்பும் இல்லாத சூழலைக் கண்டு நண்பர்களிடம் பேசினோம், பிறகு தான் தெரிந்தது அடுத்த ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சியென்று. இவ்வாறெல்லாம் கூடு நிகழ்ச்சி எங்கள் உணர்வோடு கலந்திருந்தது.

    கூடு நிகழ்ச்சியை மாணவர்களே முன்நின்று நடத்துவார்கள். மாணவர்களின் பங்களிப்பும் ஆர்வமும் ஈடுபாடும் முன்னெடுக்கப்படும். வாசிப்புத் திட்டங்கள், படைப்பு மனப்பான்மை, மெய்ப்புத் திருத்தம், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள் என்று ஒவ்வொரு நிகழ்வும் நிறைவாக இருக்கும். மாணவர்களின் இலக்கியப் புரிதல் மேம்பட்ட தேடல் கொண்டதாக மாறும் இடமாக இக்கூடுச் சந்திப்பு நிகழ்ந்தது. இங்கிருந்து முதுகலைப் பயில பாண்டிச்சேரி, சென்னை என்று மாணவர்கள் சென்றனர்.

    ஒருமுறை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது பெருமாள் முருகன் அவர்கள் ஆய்வுகள் குறித்தும் ஆய்வுத் தலைப்புகள் குறித்தும் பேசினார். அப்போது மாணவர் ஒருவர் எழுந்து ‘ஆய்வுத்தலைப்புக்காக உங்கள் பின்னால் இனி அலைய வேண்டாம்’ என்று குத்தலாகக் கூறினார். இதனைக் கேட்ட எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் பெருமாள் முருகன் அவர்கள் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அன்பாக நடந்து கொண்டார். எந்த எதிர் வினைக்கும் தயாராக இருப்பதும் மாணவர்களின் ஆவேச பேச்சுக்களை அதிகமாக பொருட்படுத்தாமல் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் என்னைப் போன்று அனைவரையும் கவர்ந்தது.

    எழுத்தாளர் பாவண்ணன் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் (கன்னடம் – தமிழ்), சமூக ஆய்வாளர். பொ.வேல்சாமி தமிழ் மொழி, பண்பாடு, பதிப்புச் செயல்பாடு,  நிறப்பிரிகை தீவிர சிறுபத்திரிகை ஆசிரியர் குழு உறுப்பினர் என்று ஆளுமைகளின் பட்டியல் நீண்டது. இன்று கல்லூரி உதவிப் பேராசிரியர், பள்ளி ஆசிரியர், ஆய்வாளர், பத்திரிகையாளர், நவீன படைப்பாளர் என்று பலர் முன்னேற்றம் அடைந்துள்ள நிலைக்குக் கூடு இலக்கியச் சந்திப்பு உருவாக்கிய தன்னம்பிக்கையும் தற்சார்ப்புமே காரணமாக அமைந்தது. இத்தகைய வாய்ப்பை உருவாக்கித் தந்தவர் பெருமாள் முருகன் அவர்கள். நாமக்கலின் ஒரு இலக்கிய அடையாளம், கூடு இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி.

    Share
  • தோல் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    தோல் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    எப்போதும் போலவே சாம்பல் நிற சூட்கேஸை எடுத்துக்கொண்டு காரிலிருந்து இறங்கி அவசரமாக படுக்கையறைக்குச் சென்று மிகவும் இரகசியமாகப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த பணத்தை சுவரில் ஒரு இரகசியமான இடத்தில் வைத்த பிறகே விஜய ராகவன் உடைமாற்றினான்.

    இனி அடுத்தது ஒரு குளியல்.

    வாட்டர் ஹீட்டர் ஆன்செய்து குளியலறையின் கண்ணாடியில் தெளிந்த பிம்பத்தைப் பார்த்து திருப்தியுடன் நிற்கும்போது சே………..’ இடது முதுகில் ஒரு சொரிச்சல். வலது கை நீட்டி அங்கே தொட்டுப் பார்த்தபோது சொரிய வேண்டும் போலிருந்தது.

    சொரிந்தான்.

    அதை அவ்வளவு பெரிதாக எடுக்கவில்லை.

    அடுத்தநாள் அதே நேரம் வலது முதுகில் சொரிச்சல் அனுபவப்பட்டு சொரியவேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது. இடது பக்கத்தில் சொரிந்த இடமும் தீவிரமாக அரிக்க ஆரம்பித்தது. ரெண்டு இடங்களிலும் நகங்களால் சொரிய விஜயராகவன் கட்டாயப்படுத்தப்பட்டான். இருந்தாலும் அவன் அதை பெரிதுப்படுத்தவோ, மனைவியிடம் தெரியப்படுத்தவோ இல்லை. பிறகு தொடைகளிலும், மணிக்கட்டுகளிலும் சொரிச்சல் ஆரம்பித்தது.

    தினமும் பயன்படுத்தப்படும் சோப் அலர்ஜியாக இருக்கும் என்ற நினைப்பில் சூப்பர் மார்க்கெட் சென்று வேறுவகை சோப் வாங்கி உபயோகித்தான்.

    ஆனால் சொரிச்சல் குறையவில்லை.

    மனைவியிடமிருந்து அதை மறைப்பது கஷ்டமாக இருந்தது.

    “இதேதோ ஸ்கின் டிசீஸ்தான்………..” மஞ்சுளா கூறினாள்.

    ‘வாய்ப்பே இல்லை’. விஜயராகவனின் உடனே உள்ள மறுபடி இப்படிதானிருந்தது. உடல் தூய்மையில் அவனுக்கு அந்த அளவு கவனம் இருந்தது. ஹெல்த் க்ளப்பின் நிரந்தர வாடிக்கையாளன். ஆண்டுதோறும் தவறாமல் முழு ஹெல்த் செக்-அப செய்பவன். ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் அக்கரை அதிகம். அப்படி ஒருவனுக்குத் தோல் வியாதி!. என்ன ஒரு எதிரான கணிப்பு.

    அவன் மனைவியைப் பழித்தான். அவளுக்கும் மருத்துவத்துக்கும் பெரிய உறவொன்றுமில்லை.

    மருத்துவர் ஆகவேண்டும்னு ஆசப்பட்டது உண்மைதான் ஆனால் பிளஸ்டு பாஸானால்தானே?.

    அடுத்த நாள் காலையிலும் அவன் ஹெல்த் க்ளப் போனான்.

    ஆபீஸீக்குப் போனான்.

    வேலை செய்யும் சைட்டுக்குப் போனான்.

    அதற்கிடையிலும் உடல் அரித்துக்கொண்டே இருந்தது. மற்றுள்ளவர்களின் கவனத்தில் படாமல் அரிப்பை அடக்க வேண்டியிருந்தது. அதனால் அவனுக்கு மிகவும் துக்கப்படவேண்டி வந்தது. தோல் நோய் நிபுணரைக் காணவேண்டும் என்று முடிவெடுத்தான்.

    சாதாரண ஒரு தோல் நோய் சிறப்பு மருத்துவர் மட்டுமல்ல கோசி வர்கீஸ் தோல் நோய் சம்பந்தப்பட்ட சில நூல்களின் ஆசிரியரும் கூட. பல தொலைக்காட்சிப் சேனல்களிலும் தோல் நோய் பற்றி விளக்குவது. போன்-இன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நோயாளிகளுடன் கலந்துரையாடுவது, சமகால வெளியீடுகளில் எழுதுவது எனப்பல நிலையிலும் சிறப்பாக விளங்குபவர்.

    தனியாக உள்ள தனது க்ளீனிக்கிலிருந்து டாக்டர் கோசி வர்கீஸ் விஜயராகவனை தீவிரப்பரிசோதனை செய்தார். நோயின் நிலைக்கேற்ப சிகிச்சைமுறை தீர்மானிக்கப்பட்டது. இரண்டு வாரத்திற்குப் பிறகு மீண்டும் பரிசோதனை.

    வீட்டிற்குத் திரும்பி வரும்போது விஜயராகவனின் கையில் மருந்துகளின் ஒரு பொட்டலம் இருந்தது. மஞ்சுளாவின் கேள்விக்கு, “டாக்டரைப் பார்த்தேன்” என்று சும்மா மூண்டுவிட்டு அவன் சூட்கேசுமாக படுக்கையறைக்குள் சென்றான். உடல் நன்றாகச் சொரிந்து கொண்டிருந்தது.

    இரண்டு வாரங்கள் முடிந்தது.

    விஜயராகவன் மீண்டும் ஒருமுறை கோசிவர்கீஸிற்கு முன்னால் வந்தான். மருந்துகள் முறையாகச் சாப்பிட்டபோதும் நோய்க்குக் கொஞ்சம் கூட மாற்றமில்லை. கொஞ்சம் கூடுதலாகிவிட்டதோ என்ற ஐயமும் உண்டு.

    “பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல” பரிசோதனைக்குப்பிறகு டாக்டர் கூறினார். தோல் வியாதிகள் பலதும், சில உதாரணங்கள் வழி டாக்டர் விளக்கினார்.

    பணச்செலவைப் பற்றி டாக்டர் குறிப்பாக உணர்த்தியபோது, “பணம் தனக்கு ஒரு பிரச்சனையே இல்லை” என்று விஜயராகவன் வெளிப்படையாகக் கூறினான். வங்கி சேமிப்புக்கணக்கு இருக்கு. வாடகை வரக்கூடிய ஃபளாட்டுகள் இருக்கு தென்னந்தோப்பிருக்கு, ஏலக்கா வயலும் இருக்கு.

    நமக்கு எதுக்கு இவ்வளவு பணம்னு கேட்கற மனைவியும் இருக்காள். அவன் அவ்வளவையும் மனதில் வைத்துக்கொண்டு தனது சொரிச்சலுடன் மருத்துவரை நேர்கொண்டான்.

    மருத்துவர் அவனுக்கு உதவ முழுத்தயாராக இருந்தார். ஆனால் அவன் பொறுமையிழக்கக்கூடாது. சரி அவன் தலை ஆட்டினான். டாக்டர் மருந்துகளின் சீட்டை தயார் செய்தார். அவன் சொரிச்சலுடன் விடைபெற்றான். பரிசோதனைத் தொடர்ந்தது.

    தனக்குக்கீழே வேலைசெய்பவன் அதற்குள் அவனுடைய மாற்றங்களைக் குறித்து அறிந்திருந்தான். அவர்களுக்குத் தெரியாமல் இருக்க அவன் முடிந்தவரை முயற்சித்தான். செயற்கையானப் பணிவுடன் அவனிடம் நல்லபேர் வாங்க அவனைப் பார்க்க வருபவர்கள் அனேகம் பேர். அவர்களிடமிருந்து தனது நோயின் தன்மையை மறைக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. நோய் ஒரு உறவுப்பகை போல அவனுடைய தோலுக்குக் கீழேப் பதுங்கியிருந்து

    அவனை முடிந்தவரை வேதனைப்படுத்தவும் அதில் சுயமகிழ்ச்சி அடையவும் செய்தது. சகிக்கமுடியாமல் அவன் சொரியும்போதுதான், அவை நாகரிகம் தெரியாத சிலர் வருவர். பிறகு அவர்கள் போகும்வரை சொரிவதை அடக்கிப்பிடிக்கும் அவஸ்தை! உச்சிமுதல் பாதம் வரை எரிச்சல்! புகைச்சல்!

    இதற்கிடையில் ஒருநாள் மஞ்சுளாவைப் பார்க்க அவளுடைய அப்பா வந்தார். அவள் குழந்தையுமெடுத்து அப்பாவுடன் சென்றுவிட்டாள். ஷிட்.

    அவன் தனியாக ஆனான். பால்கனியில் ஊஞ்சலிலிருந்து அவன் சொரிய ஆசைப்பட்டான். அங்கு உட்கார்ந்தால் அது வழியாகச் செல்பவர்களைப் பார்க்கலாம். மீன்வியாபாரி, தபால்காரர், கொரியர் சர்வீஸ் பையன். பால்காரன், செய்தித்தாள் போடுபவன், பள்ளிக்குழந்தைகள், வேசிகள், பிச்சைக்காரர்கள் எனப்பலரும் கடந்து போகின்றனர். அவர்கள் யாரும் தோல் வியாதிக்கு இரையாகவில்லை. ஏதோ ஒரு புராண கதாபாத்திரத்தைப்போல தன்னுடைய வியாதியை அவர்களில் யாருக்காவதுக் கொடுத்துவிட்டு இதிலிருந்து முற்றிலும் விடுபடுவதற்கான சித்தி (வரம்) கிடைத்திருந்தால் என்று விஜயராகவன் சொரிந்து கொண்டே சிந்தித்தான்.

    கூர்மையான நகங்கள் தோல்வழியாக அங்கும் இங்கும் சலிக்கும்போது உருவாகின்ற கடுமையான வேதனை கலந்த சுகம் உணர்வுகளில் எரிச்சலுடன் ஆழ்ந்திறங்கியது.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 14

    கதை வடிவில் பழமொழி நானூறு – 14

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 29

    பல்லாண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது
    வல்லான் தெரிந்து வழங்குங்கால், – வல்லே
    வலிநெடிது கொண்ட(து) அறாஅது; அறுமோ,
    ‘குளநெடிது கொண்டது நீர்?’.

    பழமொழி -. ‘அறுமோ குளநெடிது கொண்டது நீர்’

    அல்வர் ராஜஸ்தானின் ஒரு அருமையான நகரம். பழம் பெரும் கோட்டைகள் நிறைந்த நகரம் என்றெல்லாம் சித்தப்பா சொன்னது நினைவிற்கு வரவேதான் நான் நாலு நாள் விடுப்பு எடுத்து இங்கு வந்திருக்கிறேன். எவ்வளவு அரித்தாலும் என் சித்தப்பா பையன் வெளியில் சுற்ற மறுக்கிறான்.  ப்ளஸ் 2 பாடம் நெறைய இருக்காம் படிக்கிறதுக்கு. ரொம்ப கட்டாயப் படுத்தினா சித்தி கோவிச்சுப்பாங்களோ என்னவோ.

    அரைகுறை ஹிந்தியில் பக்கத்து வீட்டு பப்லுவை ப்ரெண்ட் புடிச்சாச்சு. முதலில் நான் ஊரச் சுத்திப்பாக்கணும்னு சொன்னவுடனே சிரிச்சான் அப்புறம் நாளைக்கு காலையில சைக்கிள் எடுத்துட்டு சுத்தலாம்னு சொல்லியிருக்கான். சின்ன ஊர் போல.

    காலையில ஊர்சுத்தக் கிளம்பும்போது சித்தி கையில டிபன் பாக்ஸ் தண்ணி பாட்டில் மறக்காம எடுத்துட்டுப் போடா. இது உங்க ஊர் இல்ல.னு சொன்னதோட அர்த்தம் இப்பதான் புரிஞ்சுது. ராஜஸ்தான் உச்சி வெயில் மண்டய பதம் பாத்துக்கிட்டுருக்கு. பப்லு என்னவோ பையா இந்த் ஊர்ல பாழடைஞ்ச கோட்டைகள் நிறைய பக்கத்துல இருக்கு முதல்லஅதப் பாக்கலாம் அப்பறமா உங்களுக்கு மூட்இருந்தா ஊருக்கு வெளிய இருக்கற பெரிய கோட்டைக்குப் போகலாம் அப்டின்னு சொல்றான்.

    என்னவோ தெரியல மக்கள் நடமாட்டம் அதிகமா இல்ல. ரோட்ல நடந்து போற பாவடை சட்டை பெண்களும் தலை வழியா போட்டிருக்கிற துப்பட்டாவால முகத்த மூடிக்கிட்டு நடக்கறாங்க. ஆரஞ்சு பச்சை சிவப்புனு கலர்தான் தெரியுது முகமே தெரிய மாட்டேங்குது. இங்கயெல்லாம் பெண்களுக்கு நகையோட அவசியமே இல்ல அப்டிதானே பப்லு. என் கேள்விக்கு மீண்டும் அவன் சிரிப்புதான் பதில்.

    ஆமாங்கறானா இல்லைங்கறானா யோசித்துக்கொண்டே வந்ததில் ஒரு கோட்டையை அடைந்து விட்டோம். அங்கிருந்த அனுமார் கோவில்ல ஏதோ பூசையாம். போய்ப் பாத்துட்டு கோட்டைக்குப் போகலாம்னு அவன் சொல்லவே சைக்கிளை நிறுத்திவிட்டு மலைக்குன்றில் ஏற ஆரம்பித்தோம்.

    புடைக்கிற வெயிலிலும் நிறைய மனிதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். அங்கேயும் பல வண்ணத் துப்பட்டாவால் முகத்தை மறைத்தபடி பெண்களும், அதேபோல் பல வண்ணத் தலைப்பாகை அணிந்த ஆண்களும்.

    மீண்டும் என் மனதில் நகைபற்றிய அதே கேள்வி. கேட்டும் விட்டேன். என்னைப் பொருட்படுத்தாது புவாஸா ஹுகும் என்று அழைத்துக்கொண்டே ஒரு பெண்ணின் பின்னால் ஓடுகிறான் பப்லு.

    அவள் நின்றவுடன் என்னை அழைத்து இவள் என் அத்தை ஜமீன் குடும்பம் என அறிமுகப்படுத்தியவுடன் அந்தப் பெண் தன் துப்பட்டாவை விலக்கி எனக்கு கமாகனி என ராஜஸ்தானிய மொழியில் வணக்கம் சொல்கிறாள்.

    என் அம்மாவின் வயது அந்த அம்மாளுக்கு. என்ன அழகாக அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள். முகத்தில் பெரிய சிவப்பு நிறப் பொட்டு. காதிலும் மூக்கிலும் வெள்ளைக்கல் ஜொலிக்கிறது. கழுத்தோடு ஒட்டி பெரிய சைஸ் நெக்லஸ் போன்ற அணிகலன் கைக்கு நான்குவீதம் வளையல்கள். எல்லாம் பழைய காலத்து நகை போல இருக்கு. பரம்பரை நகையோ என்னவோ.

    பப்லு ஏதோ கேட்க அவள்என்னைப் பார்த்து இருபதுதோலா நகை போட்டிருக்கிறேன் என தெளிவான ஹிந்தியில் கூறுகிறாள்.

    ஓ நேத்தைக்குத்தான்சித்தி சொல்லிக்கொண்டிருந்தாள் இங்கயெல்லாம் பவுன் கிடையாது. தோலானுதான் சொல்லுவாங்க. நம்ம ஊர்ல 1 பவுன் எப்டி எட்டு கிராமோ அதுபோல இங்க ஒரு தோலா பத்துகிராம் அப்டின்னா இந்த அம்மா இருநூறு கிராம் அதாவது இருபத்தைந்துபவுன் நகை போட்டுக்கொண்டிருக்காங்க. என்ன ஆச்சரியம் வெளியில எதுவுமே தெரியாம துப்பட்டாவால மறைச்சு மூடிக்கிறாங்க.

    யோசித்துக்கொண்டிருக்கும்போதே அந்த அம்மாள் எங்களை அனுமார் தரிசனம் முடிந்தபின் கீழேயுள்ள பண்டாருக்கு சாப்பிட வருமாறு அழைக்கிறாள். பப்லு ரொம்ப வற்புறுத்தியதால்அங்க போனோம். பூரி, கிழங்கு, கேசரி, பஞ்சாமிர்தம் எனப்படும் தயிர்ப் பிரசாதம் எல்லாம் சாப்பிட்டாச்சு.  இன்னிக்கு அவங்களோட கல்யாண நாளாம். வருசா வருசம் அவங்க வயலில வேலை செய்யற எல்லாரையும் கூப்பிட்டு இந்த மாதிரி அனுமார் கோவிலில் பூசை செஞ்சுசாப்பாடு போடுவாங்களாம்.

    இந்தத் தடவ நானும் பப்லுவும் கலந்துக்கிட்டதுல அவங்களுக்கு ரொம்ப சந்தோசமாம். இப்ப என்னய அந்த மக்கள் முன்ன நாலு நல்ல வார்த்த பேசச் சொல்றான் பப்லு. நான்யோசிச்சேன். என்ன சொல்லலாம். அறுமோ குளநெடிது கொண்டது நீர் ங்கறபழமொழிதான் ஞாபகத்துக்கு வருது.

    பக்கத்துல இருந்த குளத்தக் காட்டி இதுலேந்து கொஞ்சம் தண்ணிய நாம எடுத்துட்டுப் போகறதுனால  மொத்த தண்ணியும் வத்திடப் போறதில்ல. அதுமாதிரிதான் நம்மகிட்ட  இருக்கற செல்வத்த தேவையானவங்களுக்குக் கொடுத்தா அது ஒரு நாளும் குறையாது பெருகத்தான் செய்யும். தருமத்துல சிறந்தது அன்னதானம். இப்ப இந்த ஜமீன்தார் குடும்பம் உங்க எல்லாருக்கும் நல்லா சாப்பாடு போட்டு தேவையானதச் செஞ்சிட்டுவரதால நீங்களும் சந்தோசமா அவரோட வயல்ல உழைப்பீங்க. மகசூலும் பெருகும்.

    என்ன புரிஞ்சுதோ தெரியல எல்லாரும் கையத் தட்டுகின்றனர். ஒரு பழமொழிய ராஜஸ்தான் மண்ணில் சொன்ன பெருமையோட நானும் பப்லுவுடன் கிளம்பினேன்.

    பாடல் 30

    களமர் பலரானும் கள்ளம் படினும்
    வளமிக்கார் செல்வம் வருந்தா; – விளைநெல்
    அரிநீர் அணைதிறக்கும் ஊர! ‘அறுமோ
    நரிநக்கிற்(று) என்று கடல்’.

    பழமொழி:-‘அறுமோ, நரிநக்கிற்று என்று கடல்’

    ஏன் ஆத்தா. வெளைச்சல் எல்லாம் எப்டி இருக்கு. கேட்டுக்கொண்டே திண்ணையில் அமர்கிறேன்.

    எல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டிருக்கு. உன்னய மாதிரி படிச்ச பயலுவதான் இத்தனவருசத்துக்குப் பொறவு விவசாயம் பண்ணுதேம்னு வந்து நாட்டாம பண்ணிக்கிட்டுத் திரியுதான்.

    என் ஆத்தா பாம்பட ஆச்சிக்கு பொடிவச்சுப் பேசுவதற்குக் கேக்கவா வேணும். எதையும் நேரடியாச் சொல்லமாட்டா. புரியலைன்னா வளச்சி வளச்சி நாலுமட்டம் கேளு. சொல்லுதேன் என்பாள். புதிய மனிதர்களுக்குச் சங்கடம்தான்.

    அரசாங்க வேலை பார்த்து ரிடையார்ட் ஆகிவிட்ட நான் கிராமத்தில் குடியேரலாமா என்ற எண்ணத்துடன் நிலைமையைப் பரிசீலிக்க வந்திருக்கிறேன். முன்ன மாதிரி இந்த ஆத்தாகிட்ட பேசி வார்த்தய வாங்கற அளவு பொறும இல்ல. பேசாம நம்ம கண்ணபிரானக் கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்.

    முடிவுடன் அவன்வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சேன். அவனும் ஆறு மாதம் முன் இங்கு வந்து குடியேறினான். வங்கியில் வேலைபார்த்து இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடிச்சுட்டான். கடைசி காலத்த இங்க கழிக்கலாம்னு வந்திருக்கான்.

    அவன் வீட்டை அடைந்தவுடன் நோட்டம் விட்டேன். பழைய வீட்டை இடித்து கட்டமைப்பை மாற்றியிருக்கிறான். வீட்டின் வாசல்திண்ணை அழிக்கம்பிச்சிறைக்குள் அடைக்கப்பட்டு மேலே பேன் தொங்குகிறது. இனி தெருவில் போவோர் வருவோர் உட்கார முடியாது. உள்ளே சிமெண்ட் தரை மாற்றப்பட்டு வெள்ளை டைல்ஸ். இடையிடையே கோல ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. வீட்டினுள் ஏ.சி,  இண்டெர்நெட் எல்லா வசதியும் செஞ்சிருக்கான். சுவற்றில் மாற்றப்பட்ட பெரிய சைஸ்டி.வி. மொத்தத்தில் கிராமத்து வெளிப்புறமும், நகரத்து உட்புறமும் கொண்ட வீடாக மாறியிருந்தது அவன் வீடு.

    யோசித்துப்பார்த்தேன். முன்ன உங்க வீட்டு வாசல்ல ஆடு கட்டி வச்சிருப்பாங்க. பின்பக்கத்துக் கொட்டில்ல மாடு கட்டி வச்சிருப்பாங்கயில்ல. ஒருதடவ கோழிக்கூடய எடுத்துவிட்டு எல்லாக் கோழியும் சிதறி ஓடிருச்சுன்னு உங்கம்மாகிட்ட எப்டி திட்டுவாங்கினோம். பழைய விசயத்தை ஞாபகப் படுத்தினேன். அவனுக்கு அதில் நாட்டமில்லைஎனப் புரிந்து கொண்டவுடன் நேரடியா விசயத்துக்கு வந்தேன்.

    நானும் இங்க குடிவந்துரலாம்னு இருக்கேன். பையன் அவன்பாட்டு பாம்பேல வேலபாத்துட்டு இருப்பான்.உன்னய மாதிரியே வீட்ட கொஞ்சம்மாத்திக் கட்டிக்கிட்டு….

    உங்கம்மா அதுக்கெல்லாம் ஒத்துக்காது. போனவாரம்தான் அறுவட சமயத்துல என்னய உக்காத்திவச்சு அறிவுரை மழை பொழிஞ்சுச்சு. அப்டி இருக்கணும் இப்டி இருக்கணும். பகட்டெல்லாம் கூடாது. உங்க ஆத்தா இருந்து சொன்னதா நெனச்சிக்கோன்னு.

    இவன் என்ன சொல்ல வறான்னு புரியல.ஆனா என் அம்மாமேல கடுப்புல இருக்கான்னு புரியுது. நினைத்துக்கொண்டிருக்கும்போதே அவனே தொடர்கிறான்.

    அறுவடை முடிஞ்சு போர் அடிச்சு நெல்லத் தூர்வாரி முடிச்சவொடனே ரெண்டு வீட்டு நெல்லயும் குமிச்சு வச்சிருந்தோம். உங்கம்மா என்னயக் காவலுக்கு உக்காத்தி வச்சிட்டு வீடு வரைக்கும் போயிட்டாங்க.

    அப்ப நெல்ல மூட்ட கட்டி எடுத்துட்டு வரதுக்காக வந்த கூலியாட்கள் அளக்கும்போதே ஆளுக்கு கொஞ்சம் நெல்ல புடவை முந்தானையில முடிஞ்சிக்கிட்டாங்க. நான் அவங்களச் சத்தம்போட்டு வேலை முடிஞ்சவொடனே கூலி தருவோம். இந்த மாதிரி திருடற வேல வச்சிக்காதீங்கனு சத்தம்போட்டேன்.  அப்ப வந்த உங்கம்மா காக்கா தண்ணிகுடிச்சு குளத்துத் தண்ணி வத்திடவா போகுது.

    எடுத்துக்கட்டும் உடு. இதை எடுத்துட்டுப் போயி அதுங்க என்ன கோட்டயா கட்டிடப் போவுது. வெலைக்குப் போட்டு நெல்லிக்கா, மாங்கா என்னமும் வாங்கித் தின்னும் அவ்வளவுதான் சொல்லி அறிவுரைய ஆரம்பிச்சிட்டாங்க.

    என் மனதிற்குள் முன்பு படித்த பழமொழி ஞாபகத்துக்கு வந்தது. அறுமோ, நரிநக்கிற்று என்று கடல் அம்மா சொன்னதுகூட இந்த பழமொழி மாதிரிதான் நரி நக்கினதால கடல்தண்ணி வத்தாதுங்கறது அதோட பொருள். ஆனா அத இப்ப சொல்லக்கூடாது ஏற்கனவே கோபமா இருக்கற என் நண்பனோட கோபம் இன்னும் அதிகமாயிடும்.

    Share