நாங்குநேரி வாசஸ்ரீ

பாடல் 29

பல்லாண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது
வல்லான் தெரிந்து வழங்குங்கால், – வல்லே
வலிநெடிது கொண்ட(து) அறாஅது; அறுமோ,
‘குளநெடிது கொண்டது நீர்?’.

பழமொழி -. ‘அறுமோ குளநெடிது கொண்டது நீர்’

அல்வர் ராஜஸ்தானின் ஒரு அருமையான நகரம். பழம் பெரும் கோட்டைகள் நிறைந்த நகரம் என்றெல்லாம் சித்தப்பா சொன்னது நினைவிற்கு வரவேதான் நான் நாலு நாள் விடுப்பு எடுத்து இங்கு வந்திருக்கிறேன். எவ்வளவு அரித்தாலும் என் சித்தப்பா பையன் வெளியில் சுற்ற மறுக்கிறான்.  ப்ளஸ் 2 பாடம் நெறைய இருக்காம் படிக்கிறதுக்கு. ரொம்ப கட்டாயப் படுத்தினா சித்தி கோவிச்சுப்பாங்களோ என்னவோ.

அரைகுறை ஹிந்தியில் பக்கத்து வீட்டு பப்லுவை ப்ரெண்ட் புடிச்சாச்சு. முதலில் நான் ஊரச் சுத்திப்பாக்கணும்னு சொன்னவுடனே சிரிச்சான் அப்புறம் நாளைக்கு காலையில சைக்கிள் எடுத்துட்டு சுத்தலாம்னு சொல்லியிருக்கான். சின்ன ஊர் போல.

காலையில ஊர்சுத்தக் கிளம்பும்போது சித்தி கையில டிபன் பாக்ஸ் தண்ணி பாட்டில் மறக்காம எடுத்துட்டுப் போடா. இது உங்க ஊர் இல்ல.னு சொன்னதோட அர்த்தம் இப்பதான் புரிஞ்சுது. ராஜஸ்தான் உச்சி வெயில் மண்டய பதம் பாத்துக்கிட்டுருக்கு. பப்லு என்னவோ பையா இந்த் ஊர்ல பாழடைஞ்ச கோட்டைகள் நிறைய பக்கத்துல இருக்கு முதல்லஅதப் பாக்கலாம் அப்பறமா உங்களுக்கு மூட்இருந்தா ஊருக்கு வெளிய இருக்கற பெரிய கோட்டைக்குப் போகலாம் அப்டின்னு சொல்றான்.

என்னவோ தெரியல மக்கள் நடமாட்டம் அதிகமா இல்ல. ரோட்ல நடந்து போற பாவடை சட்டை பெண்களும் தலை வழியா போட்டிருக்கிற துப்பட்டாவால முகத்த மூடிக்கிட்டு நடக்கறாங்க. ஆரஞ்சு பச்சை சிவப்புனு கலர்தான் தெரியுது முகமே தெரிய மாட்டேங்குது. இங்கயெல்லாம் பெண்களுக்கு நகையோட அவசியமே இல்ல அப்டிதானே பப்லு. என் கேள்விக்கு மீண்டும் அவன் சிரிப்புதான் பதில்.

ஆமாங்கறானா இல்லைங்கறானா யோசித்துக்கொண்டே வந்ததில் ஒரு கோட்டையை அடைந்து விட்டோம். அங்கிருந்த அனுமார் கோவில்ல ஏதோ பூசையாம். போய்ப் பாத்துட்டு கோட்டைக்குப் போகலாம்னு அவன் சொல்லவே சைக்கிளை நிறுத்திவிட்டு மலைக்குன்றில் ஏற ஆரம்பித்தோம்.

புடைக்கிற வெயிலிலும் நிறைய மனிதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். அங்கேயும் பல வண்ணத் துப்பட்டாவால் முகத்தை மறைத்தபடி பெண்களும், அதேபோல் பல வண்ணத் தலைப்பாகை அணிந்த ஆண்களும்.

மீண்டும் என் மனதில் நகைபற்றிய அதே கேள்வி. கேட்டும் விட்டேன். என்னைப் பொருட்படுத்தாது புவாஸா ஹுகும் என்று அழைத்துக்கொண்டே ஒரு பெண்ணின் பின்னால் ஓடுகிறான் பப்லு.

அவள் நின்றவுடன் என்னை அழைத்து இவள் என் அத்தை ஜமீன் குடும்பம் என அறிமுகப்படுத்தியவுடன் அந்தப் பெண் தன் துப்பட்டாவை விலக்கி எனக்கு கமாகனி என ராஜஸ்தானிய மொழியில் வணக்கம் சொல்கிறாள்.

என் அம்மாவின் வயது அந்த அம்மாளுக்கு. என்ன அழகாக அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள். முகத்தில் பெரிய சிவப்பு நிறப் பொட்டு. காதிலும் மூக்கிலும் வெள்ளைக்கல் ஜொலிக்கிறது. கழுத்தோடு ஒட்டி பெரிய சைஸ் நெக்லஸ் போன்ற அணிகலன் கைக்கு நான்குவீதம் வளையல்கள். எல்லாம் பழைய காலத்து நகை போல இருக்கு. பரம்பரை நகையோ என்னவோ.

பப்லு ஏதோ கேட்க அவள்என்னைப் பார்த்து இருபதுதோலா நகை போட்டிருக்கிறேன் என தெளிவான ஹிந்தியில் கூறுகிறாள்.

ஓ நேத்தைக்குத்தான்சித்தி சொல்லிக்கொண்டிருந்தாள் இங்கயெல்லாம் பவுன் கிடையாது. தோலானுதான் சொல்லுவாங்க. நம்ம ஊர்ல 1 பவுன் எப்டி எட்டு கிராமோ அதுபோல இங்க ஒரு தோலா பத்துகிராம் அப்டின்னா இந்த அம்மா இருநூறு கிராம் அதாவது இருபத்தைந்துபவுன் நகை போட்டுக்கொண்டிருக்காங்க. என்ன ஆச்சரியம் வெளியில எதுவுமே தெரியாம துப்பட்டாவால மறைச்சு மூடிக்கிறாங்க.

யோசித்துக்கொண்டிருக்கும்போதே அந்த அம்மாள் எங்களை அனுமார் தரிசனம் முடிந்தபின் கீழேயுள்ள பண்டாருக்கு சாப்பிட வருமாறு அழைக்கிறாள். பப்லு ரொம்ப வற்புறுத்தியதால்அங்க போனோம். பூரி, கிழங்கு, கேசரி, பஞ்சாமிர்தம் எனப்படும் தயிர்ப் பிரசாதம் எல்லாம் சாப்பிட்டாச்சு.  இன்னிக்கு அவங்களோட கல்யாண நாளாம். வருசா வருசம் அவங்க வயலில வேலை செய்யற எல்லாரையும் கூப்பிட்டு இந்த மாதிரி அனுமார் கோவிலில் பூசை செஞ்சுசாப்பாடு போடுவாங்களாம்.

இந்தத் தடவ நானும் பப்லுவும் கலந்துக்கிட்டதுல அவங்களுக்கு ரொம்ப சந்தோசமாம். இப்ப என்னய அந்த மக்கள் முன்ன நாலு நல்ல வார்த்த பேசச் சொல்றான் பப்லு. நான்யோசிச்சேன். என்ன சொல்லலாம். அறுமோ குளநெடிது கொண்டது நீர் ங்கறபழமொழிதான் ஞாபகத்துக்கு வருது.

பக்கத்துல இருந்த குளத்தக் காட்டி இதுலேந்து கொஞ்சம் தண்ணிய நாம எடுத்துட்டுப் போகறதுனால  மொத்த தண்ணியும் வத்திடப் போறதில்ல. அதுமாதிரிதான் நம்மகிட்ட  இருக்கற செல்வத்த தேவையானவங்களுக்குக் கொடுத்தா அது ஒரு நாளும் குறையாது பெருகத்தான் செய்யும். தருமத்துல சிறந்தது அன்னதானம். இப்ப இந்த ஜமீன்தார் குடும்பம் உங்க எல்லாருக்கும் நல்லா சாப்பாடு போட்டு தேவையானதச் செஞ்சிட்டுவரதால நீங்களும் சந்தோசமா அவரோட வயல்ல உழைப்பீங்க. மகசூலும் பெருகும்.

என்ன புரிஞ்சுதோ தெரியல எல்லாரும் கையத் தட்டுகின்றனர். ஒரு பழமொழிய ராஜஸ்தான் மண்ணில் சொன்ன பெருமையோட நானும் பப்லுவுடன் கிளம்பினேன்.

பாடல் 30

களமர் பலரானும் கள்ளம் படினும்
வளமிக்கார் செல்வம் வருந்தா; – விளைநெல்
அரிநீர் அணைதிறக்கும் ஊர! ‘அறுமோ
நரிநக்கிற்(று) என்று கடல்’.

பழமொழி:-‘அறுமோ, நரிநக்கிற்று என்று கடல்’

ஏன் ஆத்தா. வெளைச்சல் எல்லாம் எப்டி இருக்கு. கேட்டுக்கொண்டே திண்ணையில் அமர்கிறேன்.

எல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டிருக்கு. உன்னய மாதிரி படிச்ச பயலுவதான் இத்தனவருசத்துக்குப் பொறவு விவசாயம் பண்ணுதேம்னு வந்து நாட்டாம பண்ணிக்கிட்டுத் திரியுதான்.

என் ஆத்தா பாம்பட ஆச்சிக்கு பொடிவச்சுப் பேசுவதற்குக் கேக்கவா வேணும். எதையும் நேரடியாச் சொல்லமாட்டா. புரியலைன்னா வளச்சி வளச்சி நாலுமட்டம் கேளு. சொல்லுதேன் என்பாள். புதிய மனிதர்களுக்குச் சங்கடம்தான்.

அரசாங்க வேலை பார்த்து ரிடையார்ட் ஆகிவிட்ட நான் கிராமத்தில் குடியேரலாமா என்ற எண்ணத்துடன் நிலைமையைப் பரிசீலிக்க வந்திருக்கிறேன். முன்ன மாதிரி இந்த ஆத்தாகிட்ட பேசி வார்த்தய வாங்கற அளவு பொறும இல்ல. பேசாம நம்ம கண்ணபிரானக் கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்.

முடிவுடன் அவன்வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சேன். அவனும் ஆறு மாதம் முன் இங்கு வந்து குடியேறினான். வங்கியில் வேலைபார்த்து இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடிச்சுட்டான். கடைசி காலத்த இங்க கழிக்கலாம்னு வந்திருக்கான்.

அவன் வீட்டை அடைந்தவுடன் நோட்டம் விட்டேன். பழைய வீட்டை இடித்து கட்டமைப்பை மாற்றியிருக்கிறான். வீட்டின் வாசல்திண்ணை அழிக்கம்பிச்சிறைக்குள் அடைக்கப்பட்டு மேலே பேன் தொங்குகிறது. இனி தெருவில் போவோர் வருவோர் உட்கார முடியாது. உள்ளே சிமெண்ட் தரை மாற்றப்பட்டு வெள்ளை டைல்ஸ். இடையிடையே கோல ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. வீட்டினுள் ஏ.சி,  இண்டெர்நெட் எல்லா வசதியும் செஞ்சிருக்கான். சுவற்றில் மாற்றப்பட்ட பெரிய சைஸ்டி.வி. மொத்தத்தில் கிராமத்து வெளிப்புறமும், நகரத்து உட்புறமும் கொண்ட வீடாக மாறியிருந்தது அவன் வீடு.

யோசித்துப்பார்த்தேன். முன்ன உங்க வீட்டு வாசல்ல ஆடு கட்டி வச்சிருப்பாங்க. பின்பக்கத்துக் கொட்டில்ல மாடு கட்டி வச்சிருப்பாங்கயில்ல. ஒருதடவ கோழிக்கூடய எடுத்துவிட்டு எல்லாக் கோழியும் சிதறி ஓடிருச்சுன்னு உங்கம்மாகிட்ட எப்டி திட்டுவாங்கினோம். பழைய விசயத்தை ஞாபகப் படுத்தினேன். அவனுக்கு அதில் நாட்டமில்லைஎனப் புரிந்து கொண்டவுடன் நேரடியா விசயத்துக்கு வந்தேன்.

நானும் இங்க குடிவந்துரலாம்னு இருக்கேன். பையன் அவன்பாட்டு பாம்பேல வேலபாத்துட்டு இருப்பான்.உன்னய மாதிரியே வீட்ட கொஞ்சம்மாத்திக் கட்டிக்கிட்டு….

உங்கம்மா அதுக்கெல்லாம் ஒத்துக்காது. போனவாரம்தான் அறுவட சமயத்துல என்னய உக்காத்திவச்சு அறிவுரை மழை பொழிஞ்சுச்சு. அப்டி இருக்கணும் இப்டி இருக்கணும். பகட்டெல்லாம் கூடாது. உங்க ஆத்தா இருந்து சொன்னதா நெனச்சிக்கோன்னு.

இவன் என்ன சொல்ல வறான்னு புரியல.ஆனா என் அம்மாமேல கடுப்புல இருக்கான்னு புரியுது. நினைத்துக்கொண்டிருக்கும்போதே அவனே தொடர்கிறான்.

அறுவடை முடிஞ்சு போர் அடிச்சு நெல்லத் தூர்வாரி முடிச்சவொடனே ரெண்டு வீட்டு நெல்லயும் குமிச்சு வச்சிருந்தோம். உங்கம்மா என்னயக் காவலுக்கு உக்காத்தி வச்சிட்டு வீடு வரைக்கும் போயிட்டாங்க.

அப்ப நெல்ல மூட்ட கட்டி எடுத்துட்டு வரதுக்காக வந்த கூலியாட்கள் அளக்கும்போதே ஆளுக்கு கொஞ்சம் நெல்ல புடவை முந்தானையில முடிஞ்சிக்கிட்டாங்க. நான் அவங்களச் சத்தம்போட்டு வேலை முடிஞ்சவொடனே கூலி தருவோம். இந்த மாதிரி திருடற வேல வச்சிக்காதீங்கனு சத்தம்போட்டேன்.  அப்ப வந்த உங்கம்மா காக்கா தண்ணிகுடிச்சு குளத்துத் தண்ணி வத்திடவா போகுது.

எடுத்துக்கட்டும் உடு. இதை எடுத்துட்டுப் போயி அதுங்க என்ன கோட்டயா கட்டிடப் போவுது. வெலைக்குப் போட்டு நெல்லிக்கா, மாங்கா என்னமும் வாங்கித் தின்னும் அவ்வளவுதான் சொல்லி அறிவுரைய ஆரம்பிச்சிட்டாங்க.

என் மனதிற்குள் முன்பு படித்த பழமொழி ஞாபகத்துக்கு வந்தது. அறுமோ, நரிநக்கிற்று என்று கடல் அம்மா சொன்னதுகூட இந்த பழமொழி மாதிரிதான் நரி நக்கினதால கடல்தண்ணி வத்தாதுங்கறது அதோட பொருள். ஆனா அத இப்ப சொல்லக்கூடாது ஏற்கனவே கோபமா இருக்கற என் நண்பனோட கோபம் இன்னும் அதிகமாயிடும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *