யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் தேர்த் திருவிழா

0

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,
மெல்பேண், ஆஸ்திரேலியா 

நல்லூரான் தேரிழுக்க நாடெல்லாம் வந்திருக்கும்
எல்லையில்லா மகிழ்வுடனே எல்லோரும் வடம்பிடிப்பார்
அல்லலினை அகற்றென்றே அடியார்கள் வேண்டிடுவார்
நல்லநிலை அகன்றதனால் நாட்டுமக்கள் கலங்குகிறார்!

தேரென்று சொன்னாலே ஊர்முழுக்கக் கூடிநிற்கும்
யார்யாரோ வருவார்கள் தேரிழுத்துத் தரிசிப்பார்
ஊர்முழுக்க ஆவலுடன் ஒன்றுகூடி வந்துநின்று
தேரிழுக்க முடியாமல் திணறுகிறார் இவ்வருடம்!

காவடிகள் வீதியெலாம் கணக்கின்றி வந்துவிடும்
காளையரும் கன்னியரும் களிப்புடனே குவிந்திடுவார்
குழந்தைகளின் குதூகலத்தால் கோவில்வீதி களைகட்டும்
கோவில்வீதி கட்டுப்பாட்டில் தேரோட்டம் நிகழ்கிறதே!

வாய்கட்டு கைகட்டு வயிற்றையும் கட்டென்றார்
வாழ்வெல்லாம் சுகமாக வாழ்ந்திடலாம் எனவுரைத்தார்
எதையுமே கேட்காது எப்படியோ நாம்நடந்தோம்
வாய்கட்டி கைகட்டி வகையறியா நிற்கின்றோம்!

தேரேறி வருங்குமரா திருவருளைத் தந்திடுவாய்
ஊரெல்லாம் உனையணுகி உவந்தேற்ற விரும்புகிறார்
பேரரக்கர் தருந்துயரை வேரோடு அழித்தவனே
பேதலிக்கும் அடியவரைப் பேணிடுவாய் முருகையா!

நல்லூரான் தேர்காண நாளெண்ணிப் பலரிருந்தார்
நல்லூரில் பண்ணிசைக்கப் பலபேர்கள் காத்திருந்தார்
அத்தனையும் நிறைவேறாது ஆக்கிவிட்ட  காலமதை
அகற்றிடுவாய் முருகையா அடிபணிந்து இறைஞ்சுகிறோம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *