குறளின் கதிர்களாய்…(314)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(314)
ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா
வூக்க முடையா னுழை.
– திருக்குறள் -594 (ஊக்கமுடைமை)
புதுக் கவிதையில்...
இடர்கள் போன்றவற்றால்
தளர்வுறாது
சோர்வு இல்லா
ஊக்கம் உடையானிடம்,
அதன் பயனாகிய
செல்வம்
வழி கேட்டு
வலியப் போய்ச் சேரும்…!
குறும்பாவில்...
சோர்வது ஏதுமில்லா
ஊக்கம் உடையவனைச் செல்வம் வழிகேட்டுத்
தேடிச்சென்று சேரும்…!
மரபுக் கவிதையில்...
வாழ்வில் வந்திடும் துன்பங்களால்
வருத்தங் கொண்டு சோர்வுறாமல்
தாழ்விலா ஊக்கமாம் நற்குணத்தைத்
தன்னிடம் கொண்டவன் ஒருவனையே,
பாழ்படாப் பெருநிதிச் செல்வமது
பாதை கேட்டே அன்னவனின்
வாழ்விடம் தன்னைத் தேடித்தான்
வந்தே யவனிடம் சேர்ந்திடுமே…!
லிமரைக்கூ..
இருந்தால் ஒருவனிடம் ஊக்கம்,
தளர்விலா அவனைத்தேடி வழிகேட்டு
வந்துசேரும் பெருநிதியாம் ஆக்கம் …!
கிராமிய பாணியில்...
வேணும் வேணும் ஊக்கம் வேணும்
வாழ்க்கையில ஊக்கம் வேணும்,
தளர்ச்சி இல்லாத ஊக்கம் வேணும்..
துன்பம் வந்தாலும்
தொவண்டு போகாத
ஊக்கமுள்ள ஒருத்தனத்தான்
அவன் இருப்பெடத்துக்கு
வழிகேட்டுத் தேடிவந்து
செல்வமெல்லாம்
அவங்கிட்ட சேருமே..
அதால
வேணும் வேணும் ஊக்கம் வேணும்
வாழ்க்கையில ஊக்கம் வேணும்,
தளர்ச்சி இல்லாத ஊக்கம் வேணும்…!
