வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-37

0

தி. இரா. மீனா

சொட்டாள பாச்சரசா

பிஜ்ஜளன் அரண்மனையில் எழுத்தராக இவரது காயகம். ’சொட்டள’ இவரது முத்திரையாகும்.

“பக்தன் பக்தனென அறிவின்றி சொல்வீர்
பக்தியின் இடம் அனைவருக்கும் எங்குள்ளதோ?
கால்காசு ஆசை பணத்தாசை உள்ளவரையில் பக்தனோ?
ஐயனே பொருள், உயிர்ப்பற்று, மோகமுள்ளவரை பக்தனோ?
பொன், பெண், மண்ணுக்குப் போட்டியிடுபவன் பக்தனோ?
பக்தருக்கு நான் சொன்னால் பொல்லாப்பு,கொந்தளிப்பு
ஒருமுறை தாங்கள் சொல்வீர்,
பிரளய காலத்தின் சொட்டாளனே“

சுதந்திர சித்தலிங்கேஸ்வரா

”நிஜகுரு சுதந்திர சித்தலிங்கேஸ்வரா” இவரது முத்திரையாகும்.

1. “அந்தரத்தில் தூய்மை இல்லாதவரிடத்தில்
அத்திப் பழத்தில் புழுக்கள் போல விடாது பாரய்யா .
அந்தரங்கத்தில் தூய்மையிருப்பின்
வாழைப்பழம் போல நற்குணம் தெரியும் பாரய்யா.
சரணர்கள் அந்தரங்கத் தூய்மையற்றவர் குழுவில் இருக்கக்கூடாது
நிஜகுரு சுதந்திரசித்தலிங்கேஸ்வரனே“

2. “நெருப்பின் தொடர்பால் விறகு நெருப்பானது போல
சிவசடங்கின் வழியுயர்ந்த சிவபக்தன்
சிவனாவானன்றி மனிதனாக மாட்டான்
சிவபக்தனுக்குச் சாதியில்லை மாசில்லை
சிவனைப் போலவே இருப்பான்
நிஜகுண சுதந்திரசித்தலிங்கேஸ்வரனின் பக்தன்.”

3. “ஆயுதங்கள் ஐந்நூறு இருந்தென்ன?
போர்க்களத்தில் பகையறுப்பது வாளொன்றே.
என்ன படித்து என்ன கேட்டென்ன
தான் யாரென்பதை அறியமுடியாத வரையில்.
தான் யாரென அறிந்த பின்னர், நீ நானென்பதில்லை
நிஜகுரு சுதந்திரசித்தலிங்கேஸ்வரன் தானாகியுள்ளான்.“

4. “என்னால் அறிந்தேனினில் என்னால் அறியவில்லை
உன்னால் அறிந்தேனெனில் உன்னால் அறியவில்லை
கண்ணொளியும் சூரிய ஒளியும் சேர்ந்து காண்பது போல
என் உன் அறிவு உறவான் ஆதரவிலறிந்தேன் பாராய்
நிஜகுரு சுதந்திரசித்தலிங்கேஸ்வரனே“

ஹடப்பத அப்பண்ணா

பசவேசரோடு நெருக்கமாக இருந்தவர்.வெற்றிலைப் பெட்டியேந்தும் காயகம் இவருடையது. இவர் மனைவி இலிங்கம்மா சரணரும், வசனக்காரருமாவார். கல்யாண் புரட்சியின் போது பசவேசரோடு கூடலசங்கமம் சென்றவர். பின்பு பசவேசரின் கட்டளைப்படி மனைவியை அழைத்து வர கல்யாண் செல்கிறார். அதற்குள் பசவேசர் இறைவனிடம் ஐக்கியமான செய்தி கிடைக்கிறது. கணவன், மனைவி இருவரும் அங்கேயே இறைவனிடம் ஐக்கியமாகின்றனர். ’பசவப்பிரிய கூடலசென்ன பசவண்ணா’ என்பது இவரது முத்திரையாகும்.

1. “ஆகின்றன உதயம், பகல், மாலை,
போகின்றன நாள், வாரம், மாதம், ஆண்டு
சாகின்றன ஆயுளும், வாக்குறுதியும்
இவற்றை உடனறிந்து களைந்து நீ பிறப்பெடுத்தாய்
பசவப்பிரிய கூடல சென்னபசவண்ணனே”

2. “பேசியென்ன ஐயனே நடக்காத வரையில்?
நடந்தென்ன ஐயனே நல்லுரை இல்லாத வரையில்?
இந்தச் செயலும் சொல்லுமறிந்து ஒன்றாகி
சிவவடிவாகிய சரணர்பதம் பணிந்து வாழ்கின்றேன் நான்
பசவப்பிரிய கூடல சென்னபசவண்ணனே“

3. “பக்தனொரு குலம், சம்சாரியொரு குலமென்பார்
பக்தன் எங்ஙனம், சம்சாரி எங்ஙனமெனில், யாருமறியார்
இஃதறிந்தோர் சிந்தனை செய்வீர்
பக்தனெனில் இலிங்கம், சம்சாரியெனில் அங்கம்.
இவ்விரண்டின் இரகசிய உறவறிந்தால்
அவனே நமது வசனப்பிரிய கூடல சென்னபசவண்ணன்”

4. “காலையிலிருந்து மாலை வரையில்
சுழலும் மாயவுலகில் அலைந்து திரிந்து
இருட்டியதும் கெட்ட புலன்களுக்குள்
மூழ்கி, செத்துப், பிறந்து
காலையில் மீண்டும் தான் தத்துவமறிந்தவனெனப் பேசும்
இருண்ட மனிதருடன் அப்பக்கம் போய்ச் சேராமல்
இப்பக்கம் நின்று நாணியே நகைப்பான்,
நம் பசவப்பிரிய கூடல சென்னபசவண்ணன்”

ஹடப்பத அப்பண்ணனின் புண்ணியஸ்திரி இலிங்கம்மா 

பசவேசருக்கு நெருக்கமான ஹடப்பத அப்பண்ணரின் மனைவி இவர். ’அப்பண்ண பிரிய சென்ன பசவண்ண’ இவரது முத்திரையாகும்.

1. “ஆசையழித்து , சீற்றம் தவிர்த்து உலகப் பாசமறுத்து
ஈசனை நினைக்கும் அடியாரை
உலகின் ஈனப்பிறவிகள் எங்ஙனமறிவர்
அப்பண்ண பிரிய சென்ன பசவண்ணனே?”

2. “கண்டேன் கேட்டேனெனும் இருநிலையழித்து
உண்டேன் உடுத்தினேனெனும் தேவையை விடுத்து
செய்தேன் சொன்னேனெனும் செயல்விட்டு
மாயசெபங்களுக்கு ஆட்படாமல் சென்று
அடியார் பாதம் வணங்கி வாழ்ந்துளேன்,
அப்பண்ண பிரிய சென்னபசவண்ணனே”

3. “மனம் மறதிக்கு ஆட்பட்டது
உடல் கலவரத்துக்கு ஆட்பட்டது
ஆசையும் சினமும் சுவரெழுப்பியது
இவற்றினிடையே உலக ஈசனை நினைக்கும்
அடியார் சொற்கள் கவனத்திலிருப்பதில்லை
நம் அப்பண்ண பிரியனே சென்ன பசவண்ணனே.”

4. “போதுமய்யனே, அறுந்தது உலகின் தாட்சண்யம்
உடலாசை விட்டது  உள்ளத்தின் சஞ்சலம் நின்றது
சொல்லின் அலங்காரம் சுருங்கியது;
மேன்மை கலந்தது ; ஒளியுடன் கூடியது.
வெட்ட வெளியில் மகிழ்ந்தாடி இன்பமடைந்தேன் ஐயனே
அப்பண்ண பிரிய சென்னபசவண்ணனே“

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.