எட்டுக் கோணல் பண்டிதன் – 4

0
1

தி. இரா. மீனா

உலகாயதமும், ஆழமான ஆன்மீகச் சிந்தனைகளும் உடைய ஜனகர் ’மெய்மையின்’ இயல்பை அறியவிரும்புகிறார். ’மெய்மை என்றாலென்ன?’ என்று அஷ்டவக்கிரரிடம் கேட்க, மிகத் தனித்துவம் நிறைந்த உரையாடல் நிகழ்கிறது, அஷ்டவக்கிரர் மெய்மையின் இயல்பை படிப்படியாக விளக்க, ஜனக மன்னருக்கு முதலில் புரிதலும், பின்பு ஞானவிடியலும் ஏற்படுகிறது. அதுவே அஷ்டவக்கிர கீதை.

அஷ்டவக்கிர முனிவருக்கும் ஜனக மன்னருக்கும் இடையே நிகழ்ந்த சம்வாத வடிவமான அஷ்டவக்கிர கீதை இருபது அத்தியாயங்கள் கொண்டது. இதில் 1, 3, 5, 8, 9, 10, 11, 15, 16, 17, 18 ஆகிய பதினொன்று அத்தியாயங்கள் அஷ்டவக்கிர முனிவருடைய உபதேசமாகவும் , 2, 4, 6, 7, 12, 13, 14, 19, 20 ஆகியவை ஜனக மன்னர் குருவருளால் பெற்ற மகிழ்வுணர்வை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.

அத்தியாயம் ஒன்று

ஜனகர்:

குருவே! ஞானத்தையும், முக்தியையும், ஆசையற்ற தன்மையையும் பெறுவது எப்படி என்று எனக்கு விவரிக்க வேண்டும்.

ஷ்டவக்கிரர்:

  • அன்பரே! நீர் மோட்சத்தை விரும்பினால் பொறுமை, நேர்மை, வாய்மை, இரக்கம், திருப்தி என்னும் இவற்றைப் பின்பற்றி பிறவற்றை நஞ்சு என நினைத்து ஒதுக்கிவிட வேண்டும்.
  • நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னுமிவை நீயல்ல. மோட்சம் பெற இவற்றின் சாட்சியாகிய அறிவுருவமான ஆன்மாவையுணர வேண்டும்.
  • உடலையொதுக்கி அறிவிலே அமைதியாக நிலைத்தால் நீ இப்போதே சுகமும், சாந்தியும், மோட்சமும் பெற்றவனாவாய்.
  • பொறிகளுக்குப் புலப்படாது பற்றற்று, வடிவற்று நீ சுகமாயிரு.
  • தர்ம, அதர்மங்களும், இன்ப துன்பங்களும் உனக்கில்லை. செய்பவனும், அனுபவிப்பவனும் நீயில்லை. நீ என்றும் விடுதலையுணர்வுடையவனே.
  • அனைத்தின் ஏக சாட்சி நீ; நித்திய விடுதலை நிறைவு நீ; பார்ப்பவனை அந்நியமாகப் பார்ப்பதே உனது பந்தம்.
  • செய்பவன் நானென்னும் அகந்தையால் ஆட்பட்டிருந்தாய்; செய்பவன் நானில்லை என்னும் நம்பிக்கையில் இன்பமடைவாய்.
  • தூய்மையான ஞானமொன்றே நான் என்னும் நிச்சய நெருப்பினால் அஞ்ஞானத்தை எரித்து துன்பம் நீங்கி இன்பமடைவாய்.
  • எதனிடத்து இவையனைத்தும் கயிற்றரவு போல கற்பிதமாக இலகுமோ அப்பேரின்பப் பெருக்கான அறிவே நீ சுகமாயிருப்பாய்.
  • தன்னை முக்தனெனக் கருதுபவன் முக்தனே; பக்தனெனக் கருதுப வன் பக்தனே. [மதியெதுவோ கதியதுவே – பழமொழி பொருந்தும்]
  • ஆத்மா சாட்சி, பூரணம் ஒன்று, விடுதலை, வடிவற்றது, தொழிலற்றது, பற்றறது, அவாவற்றது அமைதியானது. மாயையால் அது சம்சாரி போலாகும்..
  • ஜீவனே நானென்னும் மயக்கமழிந்து, வெளியும் உள்ளுமாம் பாவனை அகன்று இரண்டற்ற நிச்சல போதமாம் தன்னையே கருதுவாய்.
  • தேசாபிமானக் கயிற்றால் நீண்டகாலம் கட்டுண்டு கிடந்தாய். அறிவே நானென்னும் ஞான வாளால் அதைத் துணித்து சுகமாக வாழ்வாய்.
  • பற்றின்றி, பணியின்றி மாசற்றவனே. சமாதி பழகுகிறாயே அதுவே உன் பந்தம்.
  • இப்படைப்பு அனைத்தும் உன்னால் வியாபிக்கப்பெற்றது உன்னுடனே திகழ்வது,தூய ஞானவடிவே நீ; அற்ப நினைப்புறாதே.
  • எதையும் எதிர்பார்க்காமல், சுமையிலாமல் மனம் குளிர்ந்து ஆழ்ந்த அறிவுடன்,குழப்பமில்லாமல் ஞானம் மட்டும் கொண்டிருப்பாய்.
  • உருவம் உடையது அனைத்தும் பொய்யெனவும்,உருவமற்றதே மாறா தென்றும் உணர்ந்தால் இவ்வுண்மை உபதேசத்துடன் இனியுனக்குப் பிறப்பில்லை.
  • கண்ணாடிக்குள் உள்ளும், புறமும் எப்படியோ அவ்வாறே இவ்வுடலின் உள்ளும் புறமும்.
  • குடத்திற்குள்ளேயும்,வெளியிலும் எங்கும் நிறைந்த ஏகவானம் போல படைப்புத்திரள் எல்லாவற்றிலும் இருப்பது நீக்கமில்லாத நிறைவான சாஸ்வத பிரம்மமே.

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.