Blog

  • திருப்பூர் சக்தி விருது 2019 விருது

    “பெண்ணுரிமை என்பது கேட்டுப் பெறுவதல்ல. ஆண்கள் இயல்பாகவே தருவது. கிடைக்காத போது பெண்ணுரிமையை இலக்கியப் படைப்புகளிலும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. அதைத்தான் இன்றைய பெண்கள் தங்களின் சமையல் காரியங்களோடும், வீட்டுக் காரியங்களோடும் சேர்ந்து எழுதுவதையும் செய்து வருகிறோம். பெண்கள் பல துறைகளில் முன்னேறியிருக்கிறோம்.” என்றார் சக்தி விருது 2019 பெற்ற கவிஞர் உமாமகேஸ்வரி. அவரோடு சேர்த்து மொத்தம் 21 பெண்களுக்கு இலக்கியம், கல்வித்துறை, ஓவியம், சமூகப்பணி சார்ந்தவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை வழங்கப்பட்டன.

    “இரு கைதட்டினால்தான் ஓசை கிடைக்கும். பெண், ஆண் என்ற பேதமில்லாமல் படைப்பாளிகள் படைப்புகளில் ஈடுபட்டுச் சமூக மேம்பாட்டிற்கான கருத்துக்களைப் படைப்புகளில் வெளிப்படுத்த வேண்டும். வாசிப்பும், புத்தகப் பதிப்பும் இன்றைக்கு பின்னுக்குத் தள்ளப்படும் சூழலில், புத்தகங்களை முன் நிறுத்தி படைப்பாளிகளைக் கொண்டாட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்காகவே புத்தகக் கண்காட்சிகளும் இலக்கிய பரிசுகளும் தேவைப்படுகின்றன“ என்றார் விழாவில் கலந்து கொண்ட பதிப்பாளர் ரவி தமிழ்வாணன் அவர்கள்.

    திருப்பூர் சக்தி விருது 2019

    திருப்பூர் சக்தி விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு 20 ஆண்டுகளாக வழங்கி வருவதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் 2/6/19 அன்று இடம்: பிகேஆர் இல்லம் , மில்தொழிலாளர் சங்கம், ஊத்துக்குளி சாலையில் விழா நடைபெற்றது .

    இவ்வாண்டு திருப்பூர் சக்தி விருது 2019 விருது பெற்றோர் : உமா மகேசுவரி, கோவை; தனசக்தி, நாமக்கல்; நா. நளினிதேவி, மதுரை; பரிமளாதேவி, திண்டுக்கல்; செல்வகுமாரி, புதுவை; தமிழரசி, விழுப்புரம்; ந.கிருஷ்ணவேணி, காங்கயம்; செல்வசுந்தரி, திருச்சி; நர்கீஸ்பானு, தஞ்சை; பூங்குழலி, பழனி; சிந்துஜா, சென்னை; ஷோபா பன்னீர் செல்வம், அரியலூர்; இரா. மேகலா, காரைக்கால்; ரத்னமாலா புருஷ், நாகர்கோவில்; கமலதேவி, உறையூர்; தீபா, கோவை; ஜி ஏ பிரபா, கோபி; வி. ஆனந்தி, தில்லி; மணிமாலா மதியழகன், சிங்கப்பூர்; மரிய தெரசா, சென்னை; இறை நம்பி, வேலூர்

    தோழர் பி ஆர். நடராஜன் (திருப்பூர் மாவட்ட செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்) தலைமை வகித்தார், வழக்கறிஞர் இரவி பரிசு பெற்றப்படைப்பாளிகளின் படைப்புகளை அறிமுகப்படுத்தினார்.எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் திருப்பூர் சக்தி விருதுகளை வழங்கினார். ஓவியக்கண்காட்சியில் இயற்கை ஓவியங்கள் “மரம் அறிய..” .என்றத் தலைப்பில் ஓவியர்கள் தூரிகை சின்ராஜ், ஏ .தர்ஷணி ஆகியோரின் ஓவியங்கள் இடம்பெற்றன.

    எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் “திருப்பூர்” (திருப்பூரை மையமாகக் கொண்ட சிறுகதைகள் தொகுப்பு – நிவேதா பதிப்பகம் சென்னை வெளியீடு , ரூ125) நூலினைக் கல்வியாளர் ஜெயா மோகன் வெளியிட பேரா. செல்வகுமாரி, கவிஞர் அம்பிகா குமரன் பெற்றுக்கொண்டனர்.

    பாரதி வாசன், அம்பிகா,கனல் , அருணாசலம், துருவன் பாலா, துசோபிரபாகர் கவிதைகள் வாசித்தனர்

    தோழர் சண்முகம் ( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) நன்றியுரை வழங்கினார்.

    படங்கள் கீழே….

     

    Share
  • An idea to Modi

    An idea to Modi

    Dr.Annakannan

    Biometric authentication like thumb impression can be introduced instead of signing ledgers on the stage while swearing in ceremonies. In every successful thumb impression, a green light can appear to the entire audience. This will be a symboilc representation of Digital India to the entire world. This will convey a silent and strong message to every citizen that we are in a new techno era & India is the leader.

    Similarly, when every minister taking the oath, we can keep a large digital screen in the backdrop of stage & display the name, constiuency, state, with map, qualifications & achievements of that minister.

    While taking the oath & making thumb impression, automatically all government websites, apps, name boards can be updated across India with new minister and portfolios; all those can be displayed on the screen live & instant. We can automate this process. This will make a huge positive impact towards governance & goodwill. People will believe the new India born.

    My best wishes to the new ministry led by Shri.Narendra Modi. You all will make us proud, again and again.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-47

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-47

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-47

    47. தெரிந்து செயல்வகை

    குறள் 461:

    அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
    ஊதியமுஞ் சூழ்ந்து செயல்

    ஒரு செயலச் செய்யுததுக்கு முந்தி நட்டத்தையும் , நொடிச்சுப் போனா என்ன ஆவும்ங்குத விளைவையும், அதுக்குப் பொறவு கெடைக்கப் போவுத லாபத்தையும் கணக்குப் போட்டுப் பாத்து செய்யணும்.

    குறள் 462:

    தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
    கரும்பொருள் யாதொன்று மில்

    தெளிவா, இனம் கண்டுகிட்ட சேக்காளிங்களோட சேந்து செய்ய வேண்டிய செயல யோசிச்சு ஒருத்தன் செய்தாம்னா அவனால செய்ய முடியாதது னு ஒண்ணும் கெடையாது.

    குறள் 463:

    ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
    ஊக்கா ரறிவுடை யார்

    பொறவு வரப்போகுத லாபத்துக்காக கையில இருக்க முதல தொலைச்சுப்போடுத காரியத்த புத்தியுள்ளவங்க செய்ய மாட்டாக.

    குறள் 464:

    தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
    ஏதப்பா டஞ்சு பவர்

    தனக்கு அவமானம் வரும் னு பயப்படுதவங்க ஆக்கங்கெட்ட செயலச் செய்யத் தொடங்கமாட்டாக.

    குறள் 465:

    வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
    பாத்திப் படுப்பதோ ராறு

    முன்னேற்பாடு இல்லாம பகையாளிய ஒடுக்க முனையுதது அந்த பகையாளியோட வலிமைய நெலச்சு வளக்குத வழியா மாறிக்கிடும்.

    குறள் 466:

    செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க
    செய்யாமை யானுங் கெடும்

    ஒருத்தன் செய்யக்கூடாதத செஞ்சாலும் கேடு வரும். செய்ய வேண்டியத செய்யாம விட்டாலும் கேடு வரும்.

    குறள் 467:

    எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்
    எண்ணுவ மென்ப திழுக்கு

    ஒரு செயல முடிக்குத வழிய அறிஞ்சிக்கிட்டு தொடங்கணும். தொடங்கின பொறவு ரோசனை பண்ணிக்கிடலாம் னு நெனக்கிதது தப்பு.

    குறள் 468:

    ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
    போற்றினும் பொத்துப் படும்

    எத்தன பேர் தொணையா நின்னாலும் மொறையா முனஞ்சி எறங்கி செய்யலேனா கடைசில அந்த செயல் முடங்கி போவும்.

    குறள் 469:

    நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
    பண்பறிந் தாற்றாக் கடை

    அவுகவுக கொணத்துக்கு ஏத்தாப்போல தான் நன்ம செய்யணும். அப்டி செய்யலேன்னா நன்ம செய்யுததிலும் தப்பு உண்டாவும்.

    குறள் 470:

    எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
    கொள்ளாத கொள்ளா துலகு

    தன்னோட நெலமைக்கு பொருத்தமில்லாத செயலச் செஞ்சா ஒலகம் எளக்காரமா பேசும். ஒலகம் எளக்காரமா பேசாதத தேடிப் பாத்து செய்யணும்.

    (அடுத்தாப்லயும் வரும்..)

    Share
  • (Peer Reviewed) ஆ.மாதவன் கதைகளில் பின்புலம்

    (Peer Reviewed) ஆ.மாதவன் கதைகளில் பின்புலம்

    முனைவா் சித்தரா.எஸ்
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
    அரசு விக்டோரியா கலை அறிவியல் கல்லூரி,
    பாலக்காடு, கேரளா.

    ஆ.மாதவன் கதைகளில் பின்புலம்


    நாவலிலும், சிறுகதையிலும் பின்புலம் முக்கிய இடம் வகிக்கிறது. ஒரு கதையின் அடிப்படைப் பண்புகளான கதைக்கரு. கதைப்பின்னல், கதைமாந்தர்கள், மொழிநடை, சமூகச் சிந்தனைகள் ஆகியவற்றின் முழுமையான இயக்கநிலைக்கு அடிப்படைக் காரணியாக பின்புலம் விளங்குவதோடு, அவற்றை நெறிப்படுத்தும் சக்தியாகவும் அது விளங்குகிறது. அவ்வகையில் ஆ.மாதவன், தம் கதைகளில் பயன்படுத்தும் பின்புலத்தைப் பற்றி இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

    ஆ.மாதவன் – அறிமுகம்

    ஆ.மாதவன். திருவனந்தபுரத்தில் வாழ்ந்து வரும் தமிழ் எழுத்தாளா். இவர் தற்போது திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ‘சாலை’ எனும் வணிகத் தெருவில் வாணிகம் செய்து வருகிறார். அன்றாட வணிக வாழ்வில் தாம் சந்தித்த அனுபவங்களையும், பாத்திரங்களையும் கருவாகக் கொண்டு, மலையாளம் கலந்த தமிழ் நடையில் இவரது படைப்புகள் அமைந்துள்ளன. இவர் இதுவரையில் 3 நாவல்களையும், 4 குறுநாவல்களையும், 61 சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரது பல படைப்புகள் ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 2010ஆம் ஆண்டிற்கான ‘விஷ்ணுபுரம் இலக்கிய விருது’, 2015ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

    நாவல்கள்: புனலும் மணலும் (1974), கிருஷ்ணப்பருந்து (1980), தூவானம் (1987)

    குறுநாவல்கள் : எட்டாவது நாள், காளை, பாவத்தின் சம்பளம், ஆனைச்சந்தம்

    சிறுகதைத் தொகுப்புகள்: கடைத்தெருக் கதைகள் (1975), மோகபல்லவி(1975), காமினி மூலம் (1978), ஆனைச்சந்தம், மாதவன் கதைகள், அரேபியக் குதிரை.

    பின்புலம்

    மனிதன் வாழ்க்கை நடத்தும் இடம், அங்கு நிலவும் தட்ப வெப்பநிலை, அரசியல், பொருளாதார நிலை ஆகிய யாவும் அவனது நடத்தையை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவையாகும். சிறுகதை, நாவல் போன்றவற்றில் மனிதர்களை மையமாக வைத்துக் கதை பின்னப்படுவதால் அவர்களும் சூழ்நிலையின் தாக்கத்திற்கு உட்பட்டே செயல்பட இயலும். எனவே கதையைப் புரிந்துகொள்வதற்கு சூழ்நிலை அடிப்படையாக விளங்குகிறது. இந்தச் சூழ்நிலைதான் ‘பின்புலம்’ என்று அழைக்கப்படுகிறது. கதையின் தொடக்கம் முதல் முடிவு வரையில் ஒவ்வொரு நிகழ்ச்சியோடும் ஒன்றியைந்து செயல்படும் பின்புலமானது, பின்னணி, காட்சியமைப்பு, சூழ்நிலை, சூழலமைவு போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் பின்புலத்திற்கு Background, Setting போன்ற சொற்கள் வழங்கப்படுகின்றன. அதன் நோ்மொழிபெயர்ப்பாக ‘பின்புலம்’, ‘பின்னணி’ போன்ற சொற்கள் தமிழில் பயன்படுத்தப்படுகின்றன. பின்புலம் சிறப்புற அமையப் பெற்றால்தான் அக்கதை, கலைத்தன்மையுடன் விளங்கும். பின்புலம் அல்லது சூழல் சிறப்புற அமைய வேண்டுமானால் அங்கே பின்புலமாகக் கொள்ளப்பட்டிருக்கும் சமுதாயத்தின் பழக்க வழக்கங்களுக்கேற்ற செயல்பாட்டைப் பிரதிபலிக்கும் வண்ணம் பாத்திரப் படைப்பு அமைந்திருக்க வேண்டும். “சூழல் நடப்பியலாகச் சிறப்பாக அமைய வேண்டுமானால் காலம், இடம், பாத்திரம் ஆகிய மூன்று கூறுகளும் ஏற்ற முறையில் இயைந்திருக்க வேண்டும் என்கிறார் சுப. சேதுப்பிள்ளை”. சூழல் என்று இங்கு கூறப்படுவது பின்புலமேயாகும்.

    தொல்காப்பியர் கூறும் முதற்பொருளும், கருப்பொருளும் ஐவகை நிலங்களின் பின்புல அமைப்பைச் சுட்டுவனவாக அமைந்துள்ளன. “உரிப்பொருளாகிய ஒழுக்கம் நிகழ்வதற்கு முதல்பொருள் நிலைக்களமாகவும், கருப்பொருள்கள் அதற்கு உதவுமாறும் அகப்பாடல்களில் செய்யுட்கள் செய்யப்பட்டன” எனும் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இங்கே கூறப்படும் முதற்பொருளும், கருப்பொருளும் பின்புலங்களாகவே செயல்படுகின்றன. பின்புலம் என்பது, இயற்கைப் பின்புலம், சமுதாயப் பின்புலம் என்று இருவகையாகப் பிரிக்கப்படுகிறது. இயற்கைப் பின்புலத்தில் நிலம், காலம் என இருவகைக் கூறுகள் உண்டு. சமுதாயப் பின்புலத்தில், மக்களின் வாழ்வியல் கூறுகள் வெளிக்காட்டப்படுகின்றன.

    ஆ.மாதவன் கதைகளில் பின்புலம்

    மாதவன் தம் கதைகளில் பின்புலத்தை எவ்வாறு பயன்படுத்திக் கதை படைத்துள்ளார் என்பதை இங்கு காண்போம். இயற்கைப் பின்புலம், சமுதாயப் பின்புலம் ஆகிய இரண்டுக்கும் தம் கதைகளில் முக்கியத்துவம் கொடுத்தே அவர் படைத்துள்ளார். அந்த வகையில் அவருடைய கதைகளின் பின்புலமானது, இயற்கைப் பின்புலம், சமுதாயப் பின்புலம் என இருவகையாகப் பிரித்து விளக்கப்பட்டுள்ளது.

    1. இயற்கைப் பின்புலம்

    “ஒரு நிகழ்ச்சி நடைபெற்ற காலம், இடம் என்பனவற்றைப் பின்புலம் எனலாம். இதனுள் ஒரு கதையின் முழுச் சூழலுமே அடங்கி விடும். ஒரு சமூகத்தின் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை ஆகிய யாவும் இதனுள் அடங்கும். எனவே பின்புலத்தைச் சமுதாயப் பின்புலம், காட்சிப் பின்புலம் என இருவகையாகப் பிரிக்கலாம் என்கிறார் ஹட்சன்”. இவர் காட்சிப் பின்புலம் என்று கூறுவது இயற்கைப் பின்புலத்தையாகும். மாதவன் இங்கு இயற்கைப் பின்புலமாகக் கொண்டிருப்பது, கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாவட்டம் ஆகும்.

    1.1. இடப்பின்புலம்

    கதை நிகழும் இடத்தின் இயற்கை அமைப்பு, அங்கு வாழும் உயிரினங்கள் குறித்த செய்திகளை விளக்குவதே இடப்பின்புலமாகும். கதையில் வரும் கதைமாந்தர்களின் எண்ணங்கள், செயல்பாடுகள் ஆகிய அனைத்தும் அவா்கள் சார்ந்து நிற்கும் இடத்துடன் தொடர்பு கொண்டதாக அமைவதால் கதையில் இடப்பின்புலத்திற்கு முக்கிய இடம் உண்டு. ‘பாம்பு உறங்கும் பாற்கடல்’ கதையில், “கேரள மண்ணின் ரம்யமான இயற்கை மனோகரம் அம்பலவாசலும், தென்னந்தோப்பும், பறங்கிமா மரங்களும், கமுகின் கூட்டமும், ஒற்றைநாழிக் கிணறும், தண்ணீர் இறைக்கும் பாளையும், செம்பருத்திப் பூச்செடிகளும், நெற்றிப் பூக்களும் குளிர்ந்த சாயங்காலப் பொழுதின் அணைப்பில் துல்லியமாக இருந்தன” என்று வரும் வரிகளில் கேரள மண்ணின் தோற்றத்தை ஆசிரியர் கூற்றாக வெளிப்படுத்துகிறார். ‘மலையாளத்து மழை’ கதையில், “இந்தக் கிழக்குக் கோட்டையின் பஸ் டெர்மினல்ஸூம் சுற்றுப்புறமும் ரம்மியமானவை. பழைய ராஜரீக ஆட்சியின் மிச்ச அழகுபோல வெளேரென்று உயரமாக மெயின் ரோட்டிற்கு வரம்பு கட்டிய கோட்டைச் சுவர், ‘RV’ என்ற ஆங்கில எழுத்தை (ராமவா்மாவின் சுருக்கம்) துதிக்கை உயர்த்திப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் யானை முத்திரைகள். கோட்டையுள்ளிருந்து சிட்டி பஸ்கள் வந்த வண்ணமாகவும், போன துரிசமாகவும் இருக்கும். பஸ்களிலெல்லாம் – பிற மொழிக்காரர்களுக்குப் புரியக் கூடாது என்பதற்காகவோ என்னமோ- மலையாளத்தில் மட்டும் ஊர்ப்பெயர்களைப் பொறித்திருப்பார்கள். வௌ்ளையம்பலம், தைக்காடு, பேரூர்க்கடை, ஊளன்பாறை, கவடியார், ஜகதி ………” என்று வரும் வரிகளில் திருவனந்தபுரம் பேருந்து நிலையம் குறித்தும், அங்குள்ள ஊர்கள் பற்றிய செய்திகளும் கூறப்படுகின்றன.

    கதைமாந்தரின் கூற்றாக இடப்பின்புலம் வெளிப்படுவதை ‘அனந்தபாஸ்கர் என் நண்பர்’ கதையில் காணலாம். “அடடா, பேசிக்கொண்டே எங்கே போயிட்டிருக்கோம் பாத்தீங்களா? ஸ்டேட்ச்யு ஜங்ஷனுக்கில்லா வந்துட்டோம். சிலையா நிக்கிற திவான் மாதவராயர் நம்மளெப் பாத்துச் சிரிக்கிறாற்போல இருக்க.. மெடிக்கல் காலேஜ் வரையிலும் போகணும்னா, வஞ்சியுர் வழியா கலெக்ட்ரேட் பாதையோட போயிருக்கணுமில்லையா…. இப்பொ பரவாயில்லெ… பி.எம்.ஜி வழியா முளவனமுக்குப் போய் அப்படியே நடப்போம்….” எனும் பாத்திரக் கூற்று திருவனந்தபுரத்து இடங்களைப் பற்றிய அறிமுகமாக அமைந்துள்ளது. பதினாலுமுறி கதையில், “கிழக்கேக் கோட்டையிலிருந்து பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போகணும். பதினைஞ்சு பைசா பஸ்ஸூக்குக் கொடுத்தால் மாதவராயர் சிலைக்குப் பக்கத்தில் கொண்டு போய் இறக்கி விடுவான். ……………….” என்று பாத்திரச் சிந்தனையாக அமையும் வரிகளில் இடப்பின்புலம் வெளிப்படுத்தப்படுகிறது.

    பதினாலுமுறி கதையில், “பஸ் ஸ்டாண்டில் இன்னும் சலசலப்பு ஆரம்பமாகவில்லை. டுட்டோரியல் காலேஜூக்குப் போகும் அஞ்சாறு சிறுசுகள், கரகுளத்துக்கும், மெடிக்கல் காலேஜூக்கும் போகும் நாலைந்து போ்கள், கப்பலண்டி தட்டுக்காரன் மட்டும்தான். மண்ணில் அங்கிங்காக மொய்த்து மேய்கிறது. ராத்திரி தெரு மாடுகள் வந்து படுத்து கிடக்கிற இடம். நீலச் சேலை அணிந்த கார்ப்பரேஷன்காரா் ஆங்கிலத்தில் ‘ஒய்’ எழுத்து மாதிரியான ஆள் உயர நீண்ட துடைப்பத்தைவைத்துக் கூட்டிக்கொண்டு வருகிறாள். அபேதானந்தாஸ்ரமத்திலிருந்து ‘அரே ராமா அரே கிருஷ்ணா’ மந்திரம் மெதுவாகக் கேட்கிறது” எனும் வரிகள் பேருந்து நிலையத்துப் பின்னணியை மக்கள் வாழ்வியலுடன் எடுத்துக் காட்டுகிறது.

    1.2. காலப் பின்புலம்

    கதை நிகழும் காலம் குறித்த அறிமுகத்தை வெளிப்படுத்தும் விதமாக அமையும் பின்புலமே காலப் பின்புலமாகும். அரேபியக் குதிரை கதையில், “நாலாவது வருஷம் பாஸ்கரனின் ஒரே பந்தமான அம்மாவிக்காரிக்கு அவனிடமிருந்து பணம் வந்தது. நூற்றி அம்பது ரூபா. அஞ்சு ரூபா நோட்டுத் தாளை திருப்தியாக நிமிரக் கண்டிராத கிழவிக்கு நூற்றி அம்பது ரூபா ஊருக்குக் கொடை நடத்தியது போல கொண்டாட்டமாக இருந்தது” என்று வரும் வரிகள் ரூபாயின் மதிப்பு அதிகமாக இருந்த காலகட்டத்தை காட்டுகிறது.

    ‘விசுவரூபம்’ கதையில், “ஏக்கியம்மா பரம சாது. வேலையே கண்ணாகச் சமஞ்சு அமா்ந்திருந்து, மத்தியானக் கருக்கலுக்கு முன் நாலு மூடைத் தான்யமாவது மண், கல், தூசு போகப் புடைத்துத் துப்புரவு பண்ணிக் கொடுப்பாள். முக்கால் ரூபா, ஒரு ரூபா வரைக்கும் அன்றாடம் கிடைக்கும். …………… பத்துப் பைசா வெத்தலை பாக்கு, குழந்தைக்குப் பத்துப் பைசாவுக்குத் தின்னத் தீனி – வாங்கிக் கொள்வாள்” என்று கூறப்படும் வரிகள் பத்து பைசா, 75 பைசா போன்ற காசுகள் வழக்கத்திலிருந்த காலக்கட்டத்தைக் காட்டுகின்றன. பறிமுதல் கதையில், “பிளஷா் கார் போகிறது. டிரான்ஸ்போர்ட் பஸ் ஒன்றையும் காணவில்லை. சக்கரத்திற்கு டயா் போட்ட கட்டை வண்டிகள், அங்கிங்காக வெறுமனேக் கிடக்கின்றன” என்று வரும் வரிகளில் பிளஷர் கார், டயா் போட்ட கட்டை வண்டிகள் போன்றவை புழக்கத்திலிருந்த காலகட்டம் காட்டப்படுகிறது.

    2. சமுதாயப் பின்புலம்

    சமுதாயப் பின்புலத்தில் குறிப்பிட்ட நிலவியல் பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கைநிலை, கலை, பண்பாடு, நம்பிக்கைகள், சடங்குகள், சாதி வகைகள், அரசியல், உறவுமுறைகள் போன்ற செய்திகள் வெளிக்காட்டப்படுகின்றன. மாதவன் கதைகளின் பின்புலம் மலையாள நாடு ஆனதால் மலையாள மக்களின் வாழ்க்கை நிலை குறித்த செய்திகளைச் சமுதாயப் பின்புலத்தில் வெளிக்காட்டியுள்ளார்.

    2.1. தோற்றம்

    “தமிழகத்தின் சொந்தக் கிராமத்து வெறுமையை விட்டு இங்கே வந்தபோது – புதிய உலகம், புதிய பாஷை, குளித்துக் கரையேறி வரும் கோபியர்கள் போலத் துல்ய அழகுடன் பெண்கள், சுத்தமான உடைகளுடன் கட்டைக் கர்வமான மீசையுடன் ஆண்கள்” – ‘மலையாளத்து மழை’ கதையில் வரும் இவ்வருணனையில் நாகரீகமான கேரள மக்களின் தோற்ற அமைப்பு வெளிக்காட்டப்படுகிறது. “ஒற்றை வெண்புடவை அணிந்துகொண்டு, புளியிலைக் கரை ஜரிகை நேரியலை இடைசுற்றி மார்மேல் எறிந்து, வாழைப்பூக் கையுறையில், பட்டு ரவிக்கையில் ஜதைமுலைக்கு முடிச்சிட்டு, நெற்றியில் சந்தனக் கீற்றணிந்து, நுனி முடிச்சிட்ட கூந்தலில் நீர்சொட்ட, குவித்த கரங்களால் அல்லி முத்திரை காட்டி ஸ்ரீமந் நாராயணனை வணங்கி நிற்கிறாள்” ‘பாம்பு உறங்கும் பாற்கடல்’ கதையில் வரும் இவ்வருணனை கேரள நங்கையரின் ஆடை அலங்காரம் பற்றிக் கூறுவதாக அமைந்துள்ளது.

    2.2. உணவுமுறை

    “பூஜையும், நமஸ்காரமும், நெற்றிச் சார்த்தும் முடிந்து வந்தபோது, உப்பும், தேங்காய்ப்பூவும் இட்டு – தாளிக்காத சிறுபயிர் அவித்ததும், காபியும் – தாலத்தில் கொண்டு வைத்து, பலகையிட்டாள் சுமங்கலாம்பிகை” (கொச்சு சுந்தரி ). “விடிந்தபோதே விருந்தாளியின் பிரயாணத்திற்கான ஆயத்தங்கள் கலகலத்தன. துல்லிதமான சம்பா அரிசி குழாய்ப்புட்டும், பப்படம் பொரித்து, துணைக்கு வாழைப்பழங்களையும் வைத்து காலை டிபனை மணக்கச் செய்திருந்தாள் பார்வதி” (விருந்து). “அங்கே மலையாளத்தான் ஓட்டல்லே சோறு எப்படியிருக்கும் தெரியுமா? ஒரு பருக்கையை எடுத்து உன்னை விட்டெறிஞ்சா நீ அய்யோ அம்மாதான்” (பூமழை). “மலையாளத்து விருந்து, இலை நிறைய தொடுகறிகள். இஞ்சி, நார்த்தங்காய், தயிர் கிச்சடி, அன்னாசிப் பழப்பச்சடி, வாழைக்காய் துவட்டல், முட்டைக்கோஸ் துவரன், உருளைக்கிழங்கு வடை கூட்டுக்கறி, அவியல், உப்பேரி, நேந்திரங்காய் வறுவல், படற்றிப்பழம், ……….ஆவிபறக்கும் சம்பா அரிசிச் சோற்றை ஒவ்வொரு இலையாகப் போட்டுக்கொண்டே வருகிறார்கள்” (வேஷம்) போன்ற வசனங்கள் மலையாள மக்களின் உணவுப் பழக்கத்தை எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன.

    2.3. நம்பிக்கைகள்

    “மோட்டு வளையில் காகம் ஒன்று கர்ண கடூரமாகக் கரைந்துகொண்டிருக்கிறது. காகம் கரைந்தால் விருந்து வரும் என்பார்கள்” (விருந்து). ‘மலையாளத்துப் பெண்பிள்ளை மனசும் மழையும் ஒரே மாதிரிதான். வெயில் சிரித்துக் கொண்டேயிருக்கும். சட்டென்று ஒரு பக்கம் மேகம் கறுப்புக் கட்டி மழையைப் பொழியத் துவங்கிவிடும். திடீர் திடீர் மாற்றம்….” (மலையாளத்து மழை) போன்ற கூற்றுகள் மக்களின் நம்பிக்கைகள் பற்றிக் கூறுகின்றன.

    2.4. சாதி

    மலையாள இனத்தார் வேற்று இன மக்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்வதை மீசைப் பூனை, மிருதசஞ்சீவினி ஆகிய கதைகளில் காண்கிறோம். நாயர் இனத்து ஆண்கள் பிராமணப் பெண்களை மணமுடிப்பதாக இக்கதைகளில் காட்டப்படுகின்றன. ‘போற்றி’ எனப்படும் கோயில் பூஜை செய்யும் இனத்தார்; தனி மரியாதையுடன் நடத்தப்படுவதை ‘பாம்பு உறங்கும் பாற்கடல்’ கதையில் காட்டப்பட்டுள்ளது. தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவர்களும், உயர்குலத்தைச் சார்ந்தவர்களும் உறவு கொள்வது விலக்கப்பட்டதை ‘நாலுபேர்’ கதை எடுத்துக் கூறுகிறது.

    2.5. அரசியல்

    கேரளாவில் நிலவும் அரசியல் நிகழ்வுகளின் சாயலையும் தம் கதைகளில் ஆசிரியர் காட்டுகிறார். பறிமுதல் கதையில், “விடிந்தபோது மாபெரும் இரைச்சலோடு ஒரு ஹர்த்தால் தலைவிரி கோலமாக வந்து நிற்கிறது. யாரோ கட்சித்தலைவன் ஒருவனை நடுரோட்டில குத்திக் கொலை செய்து விட்டார்களாம். யுனியன் சகாக்கள் கறுப்புக் கொடிகளும் கூச்சலுமாக வந்து விடியற்காலையில் திறந்த கடைகளை மூடச் சொல்லிவிட்டார்கள். ஏதோ டீக்கடைக்காரன், தயாரித்த பலகாரங்களை எல்லாம் என்ன செய்வது என்று கடை அடைக்க எதிரிப்புச் சொல்லியிருக்கிறான். வந்ததே வினை. அவனும், அவன் வண்டிப் பொட்டியும், மேஜை, நாற்காலிகளும் எல்லாம் தவிடுபொடி. கல்லை விட்டெறிதல், மோதல், கலாட்டா…… பயன் என்ன? இமை மூடும் நேரத்தில் நெடுக கடைத்தெரு பூராவும் பந்த்” (பறிமுதல்)

    “தேர்தல் காலத்தில் புத்தரிக்கண்டம் மைதானத்தில் தினம் தவறாமல் கட்சிக்காரர்களின் பொதுக்கூட்டம் திமிலோகப்படும். வடக்கே இருந்து பெருந்தலைவர்களெல்லாம் வந்து சொற்பொழிவாற்றுவார்கள்” (கோமதி). “ஸ்டேஷனுக்குத் திரும்புற இடத்தில், சட்டசபைக் கட்டடத்துக்கு முன்னாலே நிறைய கூட்டம். ஏதோ வேலை நிறுத்தமும், சத்தியாக்கிரகமும் நடக்கிறாப்பலே. விடிஞ்சதுதான் உண்டும். ‘வேலை கொடு, அல்லது சோறு கொடு’, ‘மானம் விற்றுச் சோறு வேண்டாம்…..’, ‘வேலைக்குக் கூலி கொடு’ என்றெல்லாம் மலையாளத்தில் எழுதிய அட்டைகளைத் தாங்கிய கூட்டம். ஆபீஸ் நேரம் துவங்கியதும், கூட்டத்தில் கோஷம் முழங்கும்” (பதினாலுமுறி)-போன்ற கூற்றுகள் அரசியல் நிலவரங்களை எடுத்துக் காட்டுவனவாக உள்ளன.

    2.6. கலைகள்

    இலக்கியம், சினிமா, நாட்டியம் போன்ற கலைகளைக் குறித்த செய்திகளையும் ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார். “மலையாளப் படமாம், பேரென்ன தெரியுமா? ‘காட்ஃபாதர்’. முன்னால நாடகங்கள்ல எல்லாம் நடிச்சு போடு போடுன்னு போட்டுட்டு இருந்தாரே என்.என். பிள்ளைன்னு. அவர்தான் காட்ஃபாதரா நடிச்சிருக்கார். இப்போ 120 நாள் தாண்டியும் கூட்டம் தேரோட்டம் பார்க்க வந்தாப்பிலெ நெரிபடுது பாத்தியா….” (அரேபியக் குதிரை). “மறுநாள் அந்த ரசிகர்கள் வந்தபோது முற்றிலும் புதிய தோற்றத்தில் தெரிந்தான். மலையாள சினிமா நடிகன் மோகன்லால் மாதிரி வௌ்ளைநிற சில்க் ஜிப்பா, இழைய இழைய ஜரிகைப் பட்டு வேஷ்டி…..” (இலக்கியம் பேசி)
    “ரயில் வேகமாகப் போக ஆரம்பித்தபோது – கதகளியில் சபா பிரவேசம் போல டிக்கெட் பரிசோதகர் வந்தார்” (இந்திய குணம்). “படியேறியபோது மேஜை அழிக்கவுண்டார் உள்ளே, கல்லா நாற்காலியில் உட்கார்ந்திருந்தது, அசல் திருவாதிரை ஆட்டக்காரியின் நேரியல் முண்டு, இறுக்க ஜாக்கெட் எழிலே போல நடுவயசுக்காரி நாரி சிரோன்மணி ஒருத்தி….” (சாத்தான் திருவசனம்) போன்ற கூற்றுகளில் மலையாள சினிமா பெயர்கள், நடிகர்கள், கதகளி, திருவாதிரை போன்ற நடனக் கலைகள் போன்றவை குறித்துக் கூறப்பட்டுள்ளன.

    2.7. சடங்குகள்

    ‘வேஷம்’ கதையில் மலையாள முறைத் திருமணம் நடப்பது குறித்து எடுத்துக் கூறப்படுகிறது. “மணமேடையில் பெரிய கதகளி குத்து விளக்கு இரண்டு தேங்காய் எண்ணெய் துல்யத்தில், ஜாஜ்வல்யமாக ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. அம்பாரமாக செந்நெல் நிறைந்த ‘பறையும்’, பட்டு சுற்றிய நீள ஆசனப் பலகையும் தயாராக இருந்தன. பிரமுகர்களாக நாலைந்து பேர் வந்து மணமேடைக்கு அருகில் நின்றனா். பட்டு வேஷ்டி, வௌ்ளை கப்கை சட்டை அலங்காரத்துடனிருந்த ‘வரனை’ மைத்துனன் கைப்பிடித்து அழைத்துவர வந்து நின்றான். மறுபக்கத்திலிருந்து ஜரிகை முண்டு, ஜாக்கட்டு அலங்காரத்துடன் ‘வது’வும் அழைத்து வரப்பட்டாள். இருவரும் அந்தப் பிரமுகா்கள் காலில் விழுந்து கும்பிட்டுவிட்டு மணமேடையில் ஏறினார்கள். எடுத்துக் கொடுத்த பெரிய ரோஜாப்பூ மாலைகளை ஒருவருக்கொருவா் மாற்றிக் கொண்டார்கள். மாலைமாற்றிக் கொண்டதும் சபையோரைப் பார்த்து வோட்டுக் கேட்க வந்த வேட்பாளா்களைப் போல கும்பிட்டார்கள். உடனேயே ஒரு பெரிய மனிதா், பெண்ணிற்கான புடவையையும், ஜாக்கெட்டையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்ததை, ‘மணவாளன்’ கையேந்தி வாங்கி ‘மணவாட்டி’ கையில் தருகிறான். புடவைத் தாம்பாளம் ஏந்திய அவளை மற்ற பெண்கள் உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். இனி அவள் மணமகன் கொடுத்த புடவையை அணிந்துகொண்டு மணமேடைக்கு வருவாள். பிரமுகா்கள் வாழ்த்துவார்கள். முடிந்தது கல்யாணம்” என்று வரும் வருணனை திருமண நிகழ்வைக் குறித்துக் கூறுகிறது.

    ‘பாம்பு உறங்கும் பாற்கடல்’ கதையில் நாகா்பிரதிஷ்டை எனும் சடங்கு நிகழ்வு பற்றிக் கூறப்படுகிறது. “அது மேடமாசத்தின் விஷூக்காலம். ஆலயத்தின் கோட்டை வட்டத்திற்கு வெளியே, கிராமங்களின் நாகா் பிரதிஷ்டை எனும் உற்சவம் கொடியேறியிருக்கிறது. நாகதேவதைகளின் கீர்த்தியினைப் பாடும் புள்ளுவர்கள், மெல்லிய கம்பி நரம்புகள் இழுத்துக் கட்டிய கை வீணைகளை இசைத்தவாறு காவுநடைகளில் கூடியிருக்கிறார்கள். மெல்லிய கொசு ரீங்காரம் போன்ற நரம்பிசை, காற்றில் மிதந்து சலன மனங்களில் ‘கிறுக்கு’ மூட்டுகிறது. சண்டை மேள ஓசைப் பிரளயத்தினிடையே, ஓங்கி வளா்ந்த பாலை மரத்தடியின் நாகா் பிரதிஷ்டை முற்றத்தில் – ரத்தினக் கம்பளங்கள் போல, கரித்தூளும், மஞ்சள்பொடியும் கலந்து எழுதிய கோலங்கள். அதன் நடுவில் கூந்தல் கலைய ஆராசனியல் ஆடும் கன்னிப் பெண்களிடையே கார்த்தியாயினியும் இருக்கிறாள்………… வெயிலின் உக்ரம் ஏற ஏற செண்டை வாத்யத்தின் பிரளய ஓசை திமிலோகப்படுகிறது. பத்மாசனத்தில் நட்டு வைத்த பதுமைகளைப் போன்ற பெண்கள், பிணைந்தாடும் உக்ர நாகங்களாக ஆடி மறிக்கின்றனா். கூந்தலும், மாரிக்கச்சைகளும் கலைகின்றன. கண்களில் சீறும் விஷநாகத்தின் ஆக்ரோஷம். முகத்தில், அநீதியை அறுத்தெறியச் சிவக்கும் உக்ரம். நாகா் மகிமையின் ஆக்ரோஷத்தை நேரில் காணும் பயபக்தியுடன் கிராம ஜனங்களின் கூட்டம் அசையாது நிற்கிறது” எனும் வருணனை நாகா் பிரதிஷ்டை எனும் மலையாளச் சடங்கு பற்றிக் கூறுகிறது.

    முடிவுரை

    ஒரு கதையின் முழு அமைப்பையும், அதன் ஏனைய சிறப்புகளையும் வாசகா்கள் முழுமையாக உணா்ந்துகொள்ள உதவும் கூறு பின்புலமாகும். ஆ.மாதவன் தம் கதைகளில் திருவனந்தபுர மாவட்டப் பின்புலத்தைச் சிறப்பாகப் படைத்துள்ளார்.

    பயன்பட்ட நூல்கள்

    1. நாவல் இலக்கியம், மா.இராமலிங்கம்.
    2. இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித்தேன் – பி.வல்சலாவின் நெல் ஓர் ஒப்பீடு, ஜீவலதா
    3. புதிய விழிப்பு, அகிலன்.
    4. மாதவன் கதைகள், ஆ.மாதவன்.
    5. வட்டாரத் தமிழ் நாவல்களில் பின்புலம், முனைவா் பட்ட ஆய்வேடு, ஜோசப் சொர்ணராஜ்
    6. தொல். பொருள், இளம்பூரணம்.
    7. தமிழ் இலக்கியத்தின் காலமும், கருத்தும், ஆ.வேலுப்பிள்ளை.

    ====================================================================
    ஆய்வறிஞர் கருத்துரை(Peer Review):

    நவீன இலக்கியவாதிகளில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள சிறந்த படைப்பாளி ஆ.மாதவன். அவரது கதைகள் எல்லோராலும் பாராட்டப் படக் காரணமாக அமைவது அவரது கதைப் பின்புலம் தான். இதனை ஆய்வுப் பொருளாகக் கொண்டு ஆய்வாளர் அருமையாகக் கட்டுரையை ஆக்கியுள்ளார். சங்க இலக்கியங்களின் பின்புலத்தை இங்கு நினைவுபடுத்தியது கூடுதல் சிறப்பு. இயற்கைப் பின்புலத்தையும் சமூகப் பின்புலத்தையும் படைப்பின் வழி ஆய்ந்தது பொறுப்புணர்வோடு வெளிப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் என்றால் ஆ.மாதவன் என்கிற அளவிற்குத் தனது படைப்புப் பின்புலத்தை உருவாக்கியிருப்பார். அதனைச் சிறப்பாக எடுத்துக் கூறிய ஆய்வாளருக்குப் பாராட்டுகள்.

    ====================================================================

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.2

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.2

    -மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.2
    (நீராடற்பருவம்)

    நீராடத் தேவையானவை வாசனைப் பொடிகளாகிய சுண்ணப்பொடிகளும், எண்ணெய் முதலானவைகளுமாகும். இந்த சுண்ணப்பொடிகளை இடிக்கும் நுணுக்கங்களும், முறைமைகளும் எத்தனை நுணுக்கமானவை! அது அத்தனை எளிதான காரியமல்ல!
    சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் சுண்ணப்பொடி என்பது பெண்கள் நீராடும்போது உபயோகிப்பதற்காகவும், நீராடியபின் இக்காலத்து நறுமணப்பொருட்கள் போன்று உடலில் பூசிக்கொள்வதற்காகவும் பெண்களால் மிகுந்த அக்கறையுடன் வீடுகளிலேயே உரலில் இடித்துத் தயாரிக்கப்பட்டது. சந்தனம், அகில், புனுகு, சவ்வாது, இவற்றைப் பலவிகிதங்களில் கலந்து பலவகைகளாகத் தயாரிப்பார்கள். சிலவகைகளில் பொன்துகள்களையும் சேர்ப்பர். வாசமிகு நறுமலர்களை (தாழம்பூவின் உள்ளிருக்கும் மகரந்தப்பொடி, உலர்த்திய சண்பக மலர்கள், மல்லிகை, காய்ந்தபின்பும் மணம்வீசும் மகிழம்பூ, நிறம்கூட்டச் செம்பருத்திப்பூ, மருத்துவ குணம் செறிந்த மருதோன்றிப்பூ ஆகியனவற்றையும்) உலர்த்திச் சேர்ப்பார்கள்.

    நீராடும்போது உடலில் தேய்த்துக் கொள்வதற்காக (தற்காலத்து நறுமணக் கட்டியான சோப்பு போல) பத்துவகைத் துவர்ப்புப் பொருட்களைக் கலந்து தயாரிக்கப்படும் பொடியினைத் ‘துவர்’ எனக்கூறுவார்கள்.

    ‘பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
    முப்பத்திரு வகை ஓமா லிகையினும்
    ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம்
    நாறிரும் கூந்தல் நலம்பெற ஆட்டி1..’ என

    மாதவி தன்னை ஒப்பனை செய்து கொள்ளுமுன் எவ்வாறு எத்தகைய நீரில் நீராடினாள் என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் விளக்கியுள்ளார்.

    பத்துத் துவர்களும் நாவல், கடுக்காய், நெல்லி, தான்றிக்காய், ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு, மாந்தளிர் என்றும், விரை ஐந்தும் கொட்டம் (நறுமணப்பொருள்), துருக்கம் (கஸ்தூரி), தகரம் (மயிர்ச்சாந்து), அகில், ஆரம் (சந்தனம்) எனவும் அறிகிறோம். இத்துடன் மேலும் முப்பத்திருவகை நறுமணப்பொருள்களையும் ஊறவைத்து நீராடுவர் எனத் தெரிகின்றது.

    மஞ்சளையும் இதில் சேர்ப்பது வழக்கு எனத் ‘திருப்பொற்சுண்ணத்’தில் இருந்து அறியலாம்.

    ‘மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி2,’ என்பன திருவாசகப் பாடல்வரிகளாகும்.

    மகளிர் வைகையில் நீராடுவதற்காக என்னவற்றையெல்லாம் செய்தனர் எனப் பரிபாடல் சுவைபட விளக்குகின்றது.

    சில மகளிர் நீராடுவதற்காக வேண்டி, சிவந்த குங்குமக் குழம்பினையும், சேறுபோன்ற அகிற் குழம்பினையும், பலவகையான கர்ப்பூரங்களையும் இதற்காகவே உண்டான சாந்து அம்மியில் இட்டு அவை தீக்கழங்குகள் போன்று சிவந்து சேர்ந்து ஒன்றாய் ஆகும்படி அரைத்தனராம். இவை நதிக்கரையில் செய்யப்படும் செயல்கள்.

    ‘செங் குங்குமச் செழுஞ்சேறு
    பங்கம் செய் அகில் பல பளிதம்
    மறுகுபட அறை புரை அறு குழவியின்
    அவி அமர் அழலென அரைக்குநர்3′ என்பன

    பரிபாடல் வரிகள்.

    மேலும் சிலர் கூந்தலில் பத்துவகைத் துவர்களையும் கொண்டு செய்யப்பட்ட பொடிகளைத் தேய்த்துக்கொண்டு நீரில் முழுகினர்; நறுமண எண்ணெய் தடவிய கூந்தலில் எண்ணெய் போகுமாறு நுண்ணிய அரப்புத்தூளை இட்டுப் பிசைந்தனர். இன்னும் சிலரோ, மாலை, சாந்து, மது, அணிகலன்கள் ஆகியவற்றையும் அந்த வைகை நீரில் இட்டுக் களித்தனர்.

    தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார்
    எண்ணெய் கழல இழை துகள் பிசைவார்
    மாலையும் சாந்தும் மதமும் இழைகளும்
    கோலம் கொள நீர்க்குக் கூட்டுவார்.3…. என்பன

    பரிபாடல் வரிகள்

    இவ்வாறு பலவிதமாக நீராடிக் களிப்பதற்காகவே நதிகளுக்குச் சென்றனர் மகளிர். நறுமணச் சுண்ணங்களும் தேவைக்கேற்பத் தயாரிக்கப்பட்டு பூசிக்கொள்ளப்பட்டன. மகளிர் தமக்குப் பூசிக்கொள்ள மட்டுமன்றி, நெடுநாள் பயணம் சென்ற தலைவன் வீடுதிரும்புவதனை எதிர்பார்த்து, அவனுடைய நீராடலுக்காகவும் வாசனைப்பொடியைத் தயாரிப்பார்கள்.

    பொற்சுண்ணம் இடிப்பதற்குப் பலவிதமான வாசனைப்பொருட்களை அதிகமாக உரலில் இட்டு இடிக்க வேண்டும். இரண்டு அல்லது நான்குபெண்கள் எதிரெதிராக நின்றுகொண்டு இடிப்பார்கள். உரலில் உள்ள குழியோ சிறியது. ஒரு உலக்கைதான் போகமுடியும்; நான்குபேர் மாற்றிமாற்றி உலக்கைபோட்டு இடிக்க வசதியாக ஒரு தாளகதியை அமைத்துக்கொண்டு, இடிக்கும் சிரமம் தெரியாதிருக்கப் பாடல்களையும் இதற்காக இயற்றிக் கொண்டனர். இதற்குத் தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் வள்ளைப்பாட்டு (உலக்கைப்பாட்டு) என்றே பெயர் இருந்தது. இருபெண்கள் நான்கு கைகளால் மாற்றிமாற்றி உலக்கை போடும்போது வளையல்களும் மூச்சும் இழைந்தொலிக்கப் பண்ணிசை உண்டாகுமே அதற்கு வள்ளைப்பாட்டு எனப்பெயர்.

    ஒருவீட்டில் திருமணம் நிச்சயமானவுடன் செய்யும் முதல் மங்கலச்செயல் மஞ்சளை நிறையச்சேர்த்து வாசனைப்பொடி இடிப்பதுதான். தற்காலத்திலும் கூட இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதனைக்கண்ணுற்ற மாணிக்கவாசகருக்கு ஈசனுடைய அபிடேகத்திற்கு பொற்சுண்ணம் இடித்துப்பார்க்கும் பேரவா எழுகின்றது. தனது இறையனுபவங்களைச் சுண்ணமிடிக்கும் பாடல்களாக்கி பெண்களுக்காகவே இயற்றுகிறார். அப்பெண்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து சிவபிரானுக்காகப் பொற்சுண்ணம் இடிக்கின்றனர்.

    ‘அழகான முத்துமாலைகள், மாவிலைத்தோரணங்களல் வீட்டை அலங்கரித்து, நவதானியங்களைக் கிண்ணங்களில் நிரப்பி முளைப்பாரி வைத்து, அதன் நடுவே, தூபம், தீபம் அனைத்தையும் வையுங்கள் பெண்களே! பல்லாண்டு பாடுங்கள், கவரி வீசுங்கள்; அப்பன் திருவையாறனைப் பாடி நாம் பொற்சுண்ணம் இடிப்போம்,’ என்று அனைவரையும் அழைத்துச் சுண்ணமிடிக்கத் தொடங்குகிறார்கள்.

    ‘முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி
    முளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்
    ………………………………………….
    அத்தன் ஐயாறன்அம் மானைப்பாடி
    ஆடப்பொன் சுண்ணம் இடித்தும் நாமே4′

    இந்தச் சுண்ணப்பொடிகள் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களிலும் இடம்பெற்றுத் திகழும் அருமையும் ஒரு அழகுதான். அக்காட்சியை நாமும் காணவேண்டாமா?

    சின்னஞ்சிறுமி. விளையாட்டில் முனைப்பாக இருப்பவளை நீராட வரும்படி ஆசைகாட்டுகிறார்கள் தாதியர். “உன் நீராடலுக்காக எத்தனைவிதமான சுண்ணப்பொடிகள் கொண்டுவந்திருக்கிறோம். தேன்சிந்தும் மலர்களைச் சேர்த்துக்கலந்த ஒரு சுண்ணக்கலவை; களபம் எனும் சந்தனம், கஸ்தூரி மஞ்சள் முதலானவை சேர்த்த இன்னொரு சுண்ணம்; பச்சைக் கர்ப்பூரம் சேர்த்த குளிர்ச்சியான ஒரு சுண்ணக்கலவை. தனிச் சந்தனக்கலவை ஒன்று; பலவிதமான சாந்துக்குழம்புகள். வண்டுகள் தேனை அருந்தி ரீங்காரமிடும் மலர்மாலைகள்! வா குழந்தாய்! வந்து பாலாற்றில் துளைந்து நீராடுக!” என ஆதிபுரி (திருவொற்றியூர்) வடிவுடையம்மையை நீராடத் தாயும் சேடியரும் அழைப்பதாகப் புலவரொருவர் பாடியுள்ளார்.

    ‘கள்ளோ டலர்ந்தநறு மென்மலர்ச் சுண்ணமும்
    களபப் பசுஞ்சுண்ணமும்
    கர்ப்புரச் சுண்ணமும் கலவையும் சுண்ணமும்
    கமழ்கின்ற பலசாந்தமும்.5..’

    நாம் உயர்வாக எண்ணும் பலபொருள்களையும் செயல்களையும் இறைவனுக்காகவே அர்ப்பணிப்பதில் உண்டாகும் பேரானந்தத்திற்கு ஈடுஇணையில்லை அன்றோ?

    சிறுமியாகிய அன்னை திருநிலைநாயகி நீராடுவதற்காக மேலே நாம் கண்டவாறு தயாரிக்கப்பட்ட சுண்ணப்பொடியை, தூவினால் நிலத்தில் விழுமுன்பே வண்டுகள் சுழன்று விரைந்துண்ணும் தரம் உயர்ந்த சுண்ணப்பொடியை அரம்பையர்களும், மதுநிறைந்த மலர்களை இந்திராணியும், துகில், காம்பு நேத்திரங்கள் ஆகிய பட்டாடை வகைகளைப் பல மகளிரும் ஏந்தி நிற்கின்றனராம். முகவாசம் எனப்படும் வெற்றிலை, மற்றும் தாம்பூலம், சந்தனம், மானின் கத்தூரி ஆகியவற்றைக் கலைமகளும், இரத்தினம், பவளம் ஆகிய நவமணிகளாலான அணிகலன்களை மலர்மகளான இலக்குமியும் ஏந்தியவாறு உனது ஏவலை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்…’ என்பது புலவரின் கூற்று.

    தூவினில மேல்விழ விடாதுவரி வண்டுகள்
    சுழன்று துய்க்குஞ் சுண்ணமொய்
    சுரிகுழ லரம்பையர்கள் மதுமலர்க ளிந்த்ராணி
    துகில்காம்பு நேத்திரங்கள்
    காவிமுக வாசதாம் பூலாதி சந்தனம்
    கத்தூரிமா னின்மதம்
    கலையின்மக ளரதனம் பவளமுதல் நவமணிக்
    கலன்மலரின் மகளேந்தி நின்று
    ஆவலின் ஏவல்வழி நிற்கிறார்6…….  (சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்)

    ஈண்டு புலவர், அன்னைக்காகத் தயாரிக்கப்பட்ட சுண்ணத்தின் தரத்தைப் புகழ்ந்து கூறுவது சீவக சிந்தாமணியில் காணும் கருத்தை ஒத்திருப்பது நயக்கத்தக்கது.

    சீவக சிந்தாமணியின் குணமாலையார் இலம்பகத்தில், அவளுக்கும் சுரமஞ்சரிக்கும் இடையேயான சுண்ணம் தயாரிக்கும் போட்டியில் எவரின் சுண்ணம் தரத்தில் உயர்ந்ததெனக் காணவேண்டியபொறுப்பு சீவகனிடம் அவன் திறமையை அடிப்படையாகக் கொண்டு தரப்பட்டது. அவன் இருவரின் சுண்ணப்பொடிகளையும் சிறிது அள்ளி விண்ணில் தூவி விடுகிறான். குணமாலையின் சுண்ணப்பொடி நிலத்தில் விழும்முன்பே வண்டுகள் பாய்ந்தோடிவந்து அதனை உண்ணுகின்றதைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் கூக்குரலிட்டனர். சுரமஞ்சரியின் பொடிகள் நிலத்தில் விழுந்தன. வண்டுகள் அதன் பக்கமே நெருங்கவில்லை! “வண்டுகள் உண்ட பொடி (குணமாலையுடைய பொடி) நல்ல கோடைக்காலத்தில் இடித்துத் தயாரிக்கப்பட்டது; மற்றது (சுரமஞ்சரியுடையது) குளிர்ச்சியுடைய மழைக்காலத்தில் தயாரிக்கப்பட்டது. அதனால் சிறிது தரம் தாழ்ந்தது,” எனச் சீவகன் விளக்கினான்.

    நல்ல சுண்ணம் இவைஇவற் றில்சிறிது
    அல்ல சுண்ணம் அதற்கென்னை என்றிரேல்
    புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ணம்
    அல்ல சீதம்செய் காலத்தின் ஆயவே.7 (சீவக சிந்தாமணி- குணமாலையார் இலம்பகம்)

    இதனையே புலவரும் பிள்ளைத்தமிழ் பாடலில் எடுத்தாண்டுள்ளார்.

    தாயும் தோழியரும் நீராட அழைத்துச் செல்வதென்னவோ சிறு பெண்மகவினைத்தான். ஆனாலும் (இலங்கை) சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ் பாடிய புலவர் உலகிற்கே அன்னையான பராசக்தியையே அச்சிறுமியிடம் தமது உள்ளுணர்வால் தரிசிக்கிறார்.

    புவனேசுவரியன்னையின் நீராடல் விளையாட்டின்போது, நிகழும் விளையாட்டொன்றினை வருணனையாக்கி, தேவர்கள் அதனை தேவிக்குச் செய்யும் கனகாபிஷேகமாக்கிச் சிறப்பித்துக் கூறுகிறது இப்பாடல். சில சேடிப்பெண்டிர் நீரினுள் மூழ்கி ஒளிந்து கொள்கின்றனர். தாமரையின் அடித் தண்டுகளை அறுத்து அவற்றைத் தமது வாயில் வைத்துக் குழல்போல ஊதி விளையாடுகின்றனர். அவர்கள் ஊதுவதனால் உள்ளிருக்கும் காற்று மேலெழுந்து வெளிப்படும்போது, அவற்றினுள்ளிருக்கும் மஞ்சள்நிற மகரந்தத் தாதுகளை நீராடும் அன்னைமீது பொழியச் செய்கின்றதாம். இது அன்னைக்குக் கனகாபிஷேகம் செய்வது போலுள்ளது என்கிறார். கருத்திற்கினிய நீர்விளையாட்டொன்றினை அன்னை தெய்வத்திற்குச் செய்யும் சீராட்டாகவும் அமையுமாறு கற்பனை செய்தது சிறப்பாக அமைந்துள்ளது.

    சேறாடு செந்நெலம் கழனிசூழ் சுதுவையில்
    சீர்த்தசங் களைப்பதிபெறும்
    திரையாடு தீர்த்திகைச் சீராட விளையாடு
    சேடியர் குதூகலத்தால்
    நீறாடு மகரந்த நிறைகமல நீள்தண்டு
    நீரிடைப் புகுந்தறுத்து
    நிகரில்வாய் வைத்தூத………
    ………………………………………
    பெருமையொடு பொன்தூவி அன்னையை முழுக்காட்டு
    பெரிய கனகாபிஷேக
    வீறாடு விளையாட்டின் மகிழ்வாடும்8……………

    பின்னும் அன்னையை மோன ஞானவெள்ளம் மூழ்கி இருப்பவள் எனவும் வருணனை செய்கிறார்; அதாவது தேவியின் கருணைவெள்ளத்தில் மூழ்கியிருக்கும் யோகியர் தமது மூலாதாரத்தில் மூண்டெழும் குண்டலினியைச் சுழுமுனை நாடி வழி மேலேற்றுகையில் அவர்கள் சிரசினின்றும் ஊற்றெடுக்கும் அமிருதப் பிரவாகம் அமிர்தகங்கை எனப்படும். அது சுழுமுனை வழியே பாய்ந்து ஆறாதாரங்களிலும் தேங்கும். அவையனைத்தும் அடியார் உள்ளத்தே உள்ள தீர்த்தங்களாகும்.

    கள்ளத்த மாயவியல் கைகழுவி நின்னருட்
    கருணைக்கை ஏறுமுரவோர்
    காண்பினிய சுழுனைவழி மேலேறு கடவுண்மாக்
    கங்கைபுகு சுனைகளாக
    உள்ளத்தி னுள்ளபல தீர்த்தங்க ளுறமூழ்கி
    உலவாவின் புறுதம்சரதம்.9.’ (புவனேசுவரி பிள்ளைத்தமிழ்)

    திருமூலரும் இவற்றில் மூழ்குவோர் புண்ணியராவர் என்கின்றார்.

    ‘மறியார் வளைக்கை வருபுனற் கங்கை
    பொறியார் புனல் மூழ்கப் புண்ணியமாமே10′ (திருமந்திரம்).

    புவனேசுவரி அன்னையை அவள் வைதிகத்தின் வேர் எனப் பெருமைப்படுத்துகிறார். இவள் நாம் வழிபடும் பராசக்தியே என உணர்ந்த அடியாரின் நிலையில் நின்றும் இப்புலவர் பரவசமடைகிறார்.

    சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழானது இராமேச்சுவரத்தில் உறையும் அம்பிகைமீது பாடப்பட்டது. பிள்ளைவரம் வேண்டுவோர் இராமேச்சுவரம் சென்று வேண்டிக்கொள்வது மரபு. இப்பிள்ளைத்தமிழ் தேவிகோட்டை ஜமீந்தாரும் பெரும்புகழ் வள்ளலுமாகிய அருணாசலஞ் செட்டியாரவர்களுக்கு ஒரு குழந்தை உதிக்கவேண்டி, மற்றவர்கள் அருணாசலக் கவிராயரை வேண்டிக்கொள்ள, அவரால் இயற்றப்பெற்றது. புலவரின் வாக்கு விசேடத்தாலும், அம்மையின் அருளும் கூடிட, ஜமீந்தருக்கு, அழகான ஆண்மகவு பிறந்தது என அறிகிறோம்.

    இராமேசுவரம் அமைந்துள்ள தீவில் உள்ளும் வெளியிலுமாக அறுபத்துநான்கு புனித தீர்த்தங்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. கந்தபுராணம் இவற்றுள் இருபத்துநான்கை மிக முக்கியமானவையெனக் கூறுகிறது. இந்தப் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, வெவ்வேறு விதமான பாவங்களைத் தொலைக்கலாம். இவற்றுள் பல இராமநாதசுவாமியின் திருக்கோவிலின் உட்புறமே உள்ளன.
    சேதுபர்வதவர்த்தனி அம்மையை நீராட அழைக்கும் புலவர், மிகப்பொருத்தமாக, மானிடர்களாகிய நாம் நீராட உகந்த சில புனித தீர்த்தங்களின் கதையை அழகுற இப்பாடல்களில் இணைத்துப் பாடியுள்ளார். அவை என்னவென்று பார்க்கலாமே!

    பறந்து சென்று ஊறு விளைவிக்கும் மலைகளின் இறகுகளை அரிந்தவனின் பிரமகத்திப்பாவம் தொலையுமாறு செய்வது சீதைகுண்டமாகும். கோடி வேதப் பிராமணர்களைக் கொலைசெய்த பாவத்தைக் குறைப்பது பிரமகுண்டம் எனும் தீர்த்தமாகும்; இராமன் பிரதிட்டை செய்த மணல் இலிங்கத்தை வாலினால் ஈர்த்து, முடியாது வாலிற்றுப்போய் அநுமன் வீழ்ந்த இடத்தில் ஊற்றெடுத்தது அநுமகுண்டம் எனும் தீர்த்தமாகும். இதில் ஊற்றெடுக்கும் நீரை எடுத்து அதில் நீராடுவோருக்கு மகப்பேற்றினை அடைவிக்கும் அநுமகுண்டமிதுவாகும். இத்தகைய தீர்த்தங்களிலாடுவோர் எண்ணிய நற்பயன்களைப் பெறுவர் என்று இயம்பும் இராமேச்சுவரத்தில் இராமநாதசுவாமியாகிய ஈசனின் பக்கம் இருக்கும் இளமயில் என அன்னை பர்வதவர்த்தினியை ஏற்றுகிறார். “நீ தமிழ்முனிவனாம் அகத்தியனின் மலையான மலயம் எனப்படும் பொதியமலையில் இருந்து உற்பத்தியாகும் பொருநைவெள்ளத்தில் நீராடியருளுக! உண்மையன்பர் தொழும் பர்வதவர்த்தனியே நீராடுக!” என வேண்டுவதாக அமைந்துள்ள பாடலிது.

    ‘குன்றிற கரிந்தவன் பிரமகத் திப்பவம்
    குறைசெய்த சீதைகுண்டம்
    ………………………………………………
    வென்றிபெறு தமிழ்முனிவன் மலயநின் றெழுபொருநை
    வெள்ளநீ ராடியருளே
    மெய்த்தவர் தொழும்பர்வத வர்த்தனி வரும்புதிய
    வெள்ளநீ ராடியருளே.11′

    காஞ்சி காமாட்சியம்மை பிள்ளத்தமிழில் நீராடல் பருவத்தில் புலவரின் கற்பனை அற்புதமாக விரிகின்றது. ‘ஆகாயமே அழகான பட்டுக் கருநீலச் சேலையாகி இருக்கின்றது. அதில் பதித்த நல்வைரங்களாகத் தாரகைகள் மின்னுகின்றன. இந்தச்சேலைக்கு விலைகூறவும் இயலுமோ? இத்தகைய விலைமதிப்பற்ற சேலையினை நீ விரும்பி அணிய வேண்டுமென எட்டு மகளிர்களாகிய அட்ட இலக்குமிகள் ஏந்தி நிற்கின்றனர்.

    ‘ஈரம் நிரம்பிய கடல் நீரை முகந்து கொண்டெழும் கருமுகிலின் கரையாக வானவில் ஒளிர்கின்றது. மழைக்கு இறைவனாகிய இந்திரன், கடற்கடவுள் வருணன், தண்மையான காற்றின் இறைவனெனப்படும் மாருதக்கடவுள் ஆகியோரின் அருமைப் பத்தினிகள் தங்கள் தலைவியாகிய நீ அணிந்துகொள்ள அத்தகைய வானவில் கரையிட்ட மேகமாகிய கருநீலச் சேலையைக் கையில் ஏந்திக்கொண்டு, கச்சி எனும் காஞ்சிமாநகரின் தடாகக் கரையில், நீ நீராடி வருவதற்காகவும் உனது கண்ணசைவின் ஏவலுக்காகவும் காத்திருக்கின்றனர். நீயும் நீராடி அருளுக! முக்கண்ணனின் இடப்பாகத்தைப் பகிர்ந்து கொண்டவளே! நீராடியருளுக!’ என வேண்டுவதாக அமைந்த பாடல் மிகுந்த நயம் வாய்ந்தது.

    இயற்கையின் எழிலார்ந்த அமைப்பான கருமுகிலிலும், நீலக்கடலிலும், வானவில், சந்திரன், தாரகைகள் இவற்றிலும் இறைமையைக்கண்டு, அவை இறைமையின் அமைப்புகள், அணிகலன்கள் எனக்கொண்டு இரசனையுடன் வழிபட்டு வந்தனர் நம் முன்னோர்கள். கருமுகிலைக் காமாட்சி அம்மைக்கான அழகானதொரு சேலையாகக் கண்டு களிப்பெய்தும் அடியாரின் கருத்தில் பூத்தவொரு மலர் இப்பிள்ளைத்தமிழ்ப் பாடல். இயற்கையை இறைவடிவாகக் கண்டு போற்றிப்பரவும் வழக்கு இன்றுமே தொடர்கின்றது.

    விண்பட் டாடை யதனுடலில்
    மின்னும் பொறிகளு டுவமைத்த (பொறி- பொட்டு)
    விலையில் தானை உகந்தருள (தானை- சேலை)
    வேண்டு மெனுமெண் மலர்மகளிர்
    ஒண்பா வாடை எடுத்தெழவும்
    ஓதக் கலிங்கக் கருமுகிலின்
    ஒருபால் வானச் சிலையருகிட்
    டும்பர் கோன்மா மழைக்கிறைவன்
    தண்ணென் மாரு தக்கடவுள்
    தங்கள் அருமைப் பத்தினியர்
    தலைவிக் கெனவத் துகில்விரித்துத்
    தழையும் கச்சித் தடக்கரையில்
    கண்ணே வற்குக் கருத்திருத்தக்
    கடிநீர் ஆடி யருளுகவே!
    கண்மூன் றுடையா ரிடம்பகிர்வோய்
    கடிநீர் ஆடி யருளுகவே!12

    நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதத் தலங்களுள் முதன்மையான தலமாக விளங்குவது காஞ்சி. இங்குறையும் காமாட்சியம்மை மீது இப்பிள்ளைத்தமிழ் நூலானது காஞ்சி இரா. குப்புஸ்வாமி அவர்களால் 1959-ல் இயற்றப்பெற்றது.
    இதுபோன்ற பல பிள்ளைத்தமிழ் நூல்களும், குழந்தைப் பருவத்தைப் போற்றிக் கொண்டாடும் முறைமையில் தமது விருப்பமான தெய்வங்களைக் குழந்தையாகக் கொண்டும், அவர்கள் தெய்வத்தன்மையை மறவாது போற்றியும் கற்பனை வளத்துடன் பாடப்பட்டுள்ளன என்பது வியக்கத்தக்கதாம்.

    பார்வை நூல்கள்:

    1. சிலப்பதிகாரம்
    2. திருவாசகம்- திருப்பொற்சுண்ணம்.
    3. பரிபாடல்- பாடல் 10-
    4. திருவாசகம்- திருப்பொற்சுண்ணம்.
    5. ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்
    6. திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்
    7. சீவக சிந்தாமணி- குணமாலையார் இலம்பகம்
    8. சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ்
    9. சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ்
    10. திருமந்திரம்
    11. சேது பர்வதவர்த்தனியம்மை பிள்ளைத்தமிழ்
    12. காஞ்சி காமாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

    Share
  • அழகான அபத்தங்கள்

    அழகான அபத்தங்கள்

    -சேஷாத்ரி பாஸ்கர்

    Picture courtesy – star2.com

    இருவரும் வாள் வீச ஆரம்பித்து
    முப்பது வருடங்கள் ஓடிவிட்டன!
    உன் அகந்தை உனக்குக் கேடயம்,
    என் பொய் எனக்கு!

    ஓர் நாள்
    என் வாளும் துருப்பிடித்து உடைந்தது!
    ஆனாலும் சண்டை நிற்கவில்லை!
    ஆதாரம் என்னவென
    இருவரும் யோசிக்கவில்லை
    இளமை எஃகுக் கோட்டை
    சட்டெனச் சரிந்தது!

    துரத்தும் சிந்தனை
    மரணமாய்ப் போனது
    உதிரும் முடியெல்லாம்
    வெள்ளையாய் ஆனது
    சுயம்
    இன்றும் சுழற்றிப் போட்ட
    பம்பரமாய்ப் போனது!
    காலமும் கரைந்து,
    கால்களும் தளர்ந்தன!

    காதலொன்று கனியவில்லை,
    கைப்பிடியும் இறுகவில்லை,
    நாம் அமர்ந்த மரம்,
    இன்றும் நிழல் தருகிறது!
    நீர் அருந்திய சுனையில்,
    இன்றும் நம் தடம் உண்டு!
    அன்றைய தென்றலே
    இன்றும் சுற்றிச் சுற்றி வருகின்றது
    மூளை இடுக்கில் அமர்ந்தன
    தெரியா நினைவுகள்!

    வண்டுகள்தாம் மறைந்துவிட்டன
    ஆனாலும் ரீங்காரம் இன்னும் செவிகளில்…..

    Share
  • அனைவருமே ஆசை கொள்வோம்!

    -மகாதேவஐயர் ஜெயராமசர்மா… மெல்பேண் ….. அவுஸ்திரேலியா

    பணத்தோடு வாழுகிறார் படிப்போடு வாழுகிறார்
    பட்டம்பல பெறுவதற்கும் திட்டம்பல போடுகிறார்
    இனம்பற்றி பேசுகிறார் எங்கள்மொழி என்கின்றார்
    ஈவிரக்கம் தனையவரும் எண்ணிவிட மறுக்கின்றார்!

    மாநாடு பலசெய்வார் மலர்கள் வெளியிடுவார்
    மேடைதனில் ஏறிநின்று விறுவிறுப்பாய் பேசிடுவார்
    உலகமதில் உன்னதத்தை உருவாக்க வேண்டுமென்பார்
    உள்ளமதில் உண்மைதனை இருத்திவிட மறுக்கின்றார்!

    நீதிநூல்கள் அத்தனையும் பாடமாக்கி வைத்துள்ளார்
    பாடலெலாம் பக்குவமாய் பலருக்கும் காட்டிடுவார்
    ஆதிமுதல் அந்தம்வரை அறங்காக்க வேண்டுமென்பார்
    அழுதுநிற்பார் துயரகற்ற அவரெண்ண மறுக்கின்றார்!

    எத்தனைதான் படிப்பிருந்தும் எவ்வளவு பணமிருந்தும்
    எண்ணமதில் நல்நினைப்பு இல்லாமல் என்னபயன்
    ஆரவாரம் தனையொழிப்போம் ஆணவத்தை அகற்றிநிற்போம்
    அன்புகொண்டு பார்த்துவிட அனைவருமே ஆசைகொள்வோம்!

    Share
  • அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அறிவியலாளர் – சர் ஐசக் நியூட்டன்

    அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அறிவியலாளர் – சர் ஐசக் நியூட்டன்

    -மேகலா இராமமூர்த்தி

    இயற்கையைக் கூர்ந்து நோக்குவதிலும், ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்குவதிலும், புதிய பொருள்கள் படைப்பதிலும் இளமை முதலே ஊக்கமும் உற்சாகமும் கொண்டவராய்த் திகழ்ந்திருக்கின்றார் புவிபோற்றும் அறிவியல் அறிஞரான சர் ஐசக் நியூட்டன்.

    இங்கிலாந்தின் லிங்கன்ஷையர் (Lincolnshire) எனும் மாகாணத்திலுள்ள உல்ஸ்தோர்ப்பு (Woolsthorpe) எனும் குக்கிராமத்தில் 1642-ஆம் ஆண்டு திசம்பர் 25-ஆம் நாளன்று நியூட்டன் பிறந்தபோது, அளவில் சிறிய பலவீனமான குழந்தையாகவே இருந்திருக்கின்றார். இந்தக் குழந்தை நெடுநாள்களுக்கு உயிரோடு இருக்குமா என்று அனைவரும் கவலைப்பட்ட நிலையில், பின்னாளில் அவர் சர் ஐசக் நியூட்டன் எனும் பெயரோடு அறிவியல் அறிஞர்கள் உலகில் துருவ நட்சத்திரமாக ஒளிர்ந்தார் என்பது வியப்பினும் வியப்பே!

    தாம் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தந்தையை இழந்த நியூட்டன், பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு இடையில்தான் தம்முடைய பள்ளிக் கல்வியை கிராந்தம் (Grantham) நகரிலிருந்த கிங்’ஸ் பள்ளியில் (King’s School) முடித்தார். பிறகு 1661-இல் தம்முடைய 18-ஆவது வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டிரினிட்டி கல்லூரியில் (Trinity College, Cambridge University) கல்வியைத் தொடர்ந்தார்.

    1665-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜில் பிளேக் (Plague) நோய் பரவியதால் டிரினிட்டி கல்லூரியைத் தற்காலிகமாக மூடிவிட்டார்கள். அதனால் சிறிதுகாலம் தம் சொந்த ஊரான உல்ஸ்தோர்ப்பு வந்து தங்கியிருந்தார் நியூட்டன். அப்போது அவர் தோட்டத்தில் உட்கார்ந்துகொண்டு ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தபோது ஆப்பிள் மரத்திலிருந்து ஒரு பழம் கீழே விழுந்ததைக் கவனித்தார். இந்த ஆப்பிள் பழம் மேல்நோக்கிச் செல்லாமல் கீழே விழுவானேன்? இதன் காரணமென்ன? என்று சிந்திக்கத் தொடங்கினார். அதன் விளைவாய் அவர் கண்டறிந்தவையே புவியீர்ப்பு விசையும் அதுசார்ந்த விதியும் (Newton’s law of gravitation).

    1669-இல் தம் முதுகலைப் படிப்பைக் கணிதத்துறையில் முடித்த நியூட்டன் பின்னர், தாம் பயின்ற டிரினிட்டி கல்லூரியிலேயே கணிதத்துறைப் பேராசிரியராய்ப் பணியில் அமர்ந்தார்.  ஈருறுப்புத் தேற்றத்தை (binomial theorem) உருவாக்கினார்; அதுவே பின்னாளில் கால்குலஸ் (Calculus) எனும் கணிதப் பிரிவாக வளர்ச்சியுற்றது.  

    விண்வெளி ஆய்வுகளிலும் ஈடுபட்ட நியூட்டன், வெண்மையாகக் கண்ணுக்குத் தோன்றும் சூரிய கிரணத்திலே பல வண்ணமுள்ள கிரணங்கள் நிறைந்திருக்கின்றன என்பதையும் அவற்றில் ஊதா நிறந்தான் அதிக அளவிலே இருக்கின்றது என்பதையும் கண்டறிந்தார். எட்டு அங்குல நீளமுள்ள தொலைநோக்கிக் கருவியொன்றையும் (Telescope) அவர் உருவாக்கினார். விண்வெளிப் பொருள்களை மிகத்துல்லியமாக அறிய உதவிய இத்தொலைநோக்கி, பலரையும் கவர்ந்தமையால் அறிவியல் அறிஞர்கள் நிறைந்திருந்த இங்கிலாந்தின் இராயல் சொசைட்டி (Royal Society) எனும் அமைப்பு நியூட்டனை உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டது. நியூட்டனுக்கு முன்பே இத்தாலிய வானியல் அறிஞரான கலிலியோ (Galileo Galilei) தொலைநோக்கியை உருவாக்கி வானியல் ஆய்வுகளை செய்திருந்தார் என்றபோதிலும் நியூட்டனின் ஆராய்ச்சி அதனை மேலும் ஒழுங்குபடுத்தித் துல்லியமாக்கியது எனலாம்.

    தொலைநோக்கி மட்டுமல்லாது வானில் தோன்றி மறையும் வால்நட்சத்திரங்களை (Comets) ஆராய்ச்சி செய்து அவற்றைப் பற்றி அறிந்துகொள்ளக்கூடிய கருவிகளையும் நியூட்டன் கண்டுபிடித்தார்.

    இயற்கைத் தத்துவத்தின் கணிதக் கொள்கைகள் (The mathematical priniciples of natural Philosophy) எனும் அரிய நூலை எழுதி வெளியிட்டார். நியூட்டனின் இயக்க விதிகள் (Newton’s laws of motion) இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மிகவும் புகழ்வாய்ந்த அந்த மூன்று விதிகளும் இன்றளவும் பள்ளி, கல்லூரிகளில் இயற்பியலின் முக்கியக் கோட்பாடுகளாகக் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    1689-இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு (Parliament) தெரிந்தெடுக்கப்பட்டார் நியூட்டன். சுமார் இரண்டாண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்து அமைதியாய்த் தொண்டாற்றியிருக்கின்றார் அவர்.

    மறுதேர்தல் நடப்பதற்காக நாடாளுமன்றம் கலைந்துவிட்டதனால் மறுபடியும் தம்முடைய ஆசிரியப் பணியை டிரினிட்டியில் தொடர்ந்தார். கணிதம் மற்றும் அறிவியல் ஆய்வுகள் தொடர்பாகப் பல அறிஞர்களோடு மடலாடல் நடத்தினார். அவைகுறித்துப் பல குறிப்புகள் எடுத்துவைத்திருந்த நியூட்டன் அவற்றைத் தொகுத்து ஒரு பெரிய நூலாக வெளியிட எண்ணியிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வருந்தத்தக்க சம்பவம் ஒன்று நிகழ்ந்துவிட்டது. அரிய குறிப்புகள் அடங்கிய தம் கையெழுத்துப் படியை தம் எழுதுமேசையின்மீது வைத்துவிட்டு எங்கேயோ வெளியில் சென்றிருந்தார் நியூட்டன். அவ்வமயம் அம்மேசைமீது ஏறிய அவருடைய வளர்ப்பு நாயான ‘டார்லிங்’ அங்கே எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தியைத் தட்டிவிட, கையெழுத்துப் படி எரியத்தொடங்கியது. பெரும்பகுதி எரிந்தபின்பே உள்ளேவந்த நியூட்டன் அதைக் கண்டு, ”ஐயோ! டார்லிங் என்ன காரியம் செய்துவிட்டாய்?” என்று அலறித் துடித்திருக்கின்றார். பலனொன்றுமில்லை! மீண்டும் அவற்றை அவர் எழுதவேண்டிய அவலநிலையே வாய்த்தது. ஊழிற் பெருவலி யாவுள?

    நியூட்டன் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த காலத்தில் சார்ல்ஸ் மாண்டேகு (Charles Montague) என்ற அறிஞருடைய நட்பு அவருக்கு ஏற்பட்டது. மாண்டேகு அரசாங்கத்தின் பல மதிப்புமிக்க பதவிகளை வகித்தார். நியூட்டன்மீது தமக்கிருந்த அளப்பரிய அன்பின் காரணமாக அரசாங்கத்தில் அவருக்கு ஓர் நல்ல பணியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று விரும்பிய மாண்டேகு, நாணயங்கள் அச்சடிக்கின்ற சாலையில் (Mint factory) ஓர் பொறுப்பான பதவியில் நியூட்டனை அமர்த்தினார். நியூட்டனும் அப்பதவியை ஏற்று அங்கே பல சீர்திருத்தங்களைச் செய்தார். போலி நாணயங்கள் வெளிவராதபடி தடுத்துநிறுத்தினார்.

    சிறிது காலத்தில் அந்த எந்திர சாலைக்குத் தலைவராகவே நியூட்டன் நியமிக்கப்பட்டார். பொறுப்புமிக்க இப்பணியில் இருந்தபோதும் தம் இயல்புக்கு ஏற்ப ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதையும் நியூட்டன் நிறுத்தினாரில்லை. நாள்காட்டியில் சில திருத்தங்கள் செய்தார்; உலோகங்களை உருக்கிவார்ப்பதில் பல புதிய நடைமுறைகளை உருவாக்கினார். தவிர, எந்திர சாலையில் நீண்ட காலமாக நடந்துவந்த ஊழல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். (ஊழல் ஒரு தனிநாட்டுக்குச் சொந்தமானதன்று! அஃது உலகளாவியது என்பது இதன்மூலம் நிரூபணமாகின்றது.)

    இக்காலக்கட்டத்தில் நியூட்டனின் புகழ் உலகெங்கும் பரவத்தொடங்கியது. இராயல் சொசைட்டியார் தங்கள் சங்கத்தின் தலைவராக நியூட்டனைத் தேர்ந்தெடுத்தனர். அரசாங்க ஆதரவும் அவருக்குக் கிடைத்தது. 1705-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஆன் மகாராணியார் (Queen Anne) தம் பரிவாரங்களோடு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு வருகைதந்து ‘சர்’ பட்டத்தை நியூட்டனுக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

    பேரும் புகழும் எண்ணற்ற கௌரவங்களும் தம்மைத் தேடிவந்தபோதினும் நியூட்டன் மிகவும் எளிமையாகவே வாழ்ந்தார் என்று அறிகின்றோம். அத்தோடு, தம் வருமானத்தின் பெரும்பகுதியை ஏழைகளின் துயர் துடைக்கவும், அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், தம் உறவினர்களின் தேவைகளுக்குமே அவர் செலவு செய்திருக்கின்றார்.

    பொதுவாழ்வில் சிறந்த ஆளுமையோடு திகழ்ந்த நியூட்டனின் தனி வாழ்க்கையை ஆராய்வோமேயானால், அவருக்குக் காதல் இருந்ததாகவோ யாரையும் அவர் திருமணம் செய்துகொண்டதாகவோ எவ்விதத் தகவலும் இல்லை. இது வியப்பிற்குரிய ஒன்றாகவே இருக்கின்றது!

    எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி கற்பதில் நேர்ந்த இடையூறுகள் அனைத்தையும் தம் விடாமுயற்சியின் துணைகொண்டு கடந்து, அடக்கத்தையும், அயரா உழைப்பையுமே அணிகளாகப் பூண்டு, பல அரிய கண்டுபிடிப்புகளையும் அறிவியல் கோட்பாடுகளையும் உருவாக்கிச் சகம் போற்றும் சாதனையாளராகத் திகழ்ந்த சர் ஐசக் நியூட்டன் 1727-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் நாள் தம்முடைய 85-ஆவது அகவையில் இவ்வியனுலக வாழ்வை நீத்தார்.

    நியூட்டனின் நினைவுச் சின்னங்கள் பல இப்போதும் இங்கிலாந்தின் கல்விநிலையங்கள் பலவற்றை அணிசெய்கின்றன. அவர் உபயோகித்தனவும் கண்டுபிடித்தனவுமான அறிவியல் கருவிகள் பல அவர் பணியாற்றிய டிரினிட்டி கல்லூரியில் இன்றளவும் காணக் கிடைக்கின்றன. அனைத்திற்கும் மேலாய், நியூட்டன் பிறந்த இடமான உல்ஸ்தோர்ப்பு கிராமத்து வீடு பழுதுபார்க்கப்பட்டு ஒரு புனிதத் தலமாகவே கொண்டாடப்பட்டு வருவது, செயற்கரிய செய்த அறிஞர் பெருமக்களை மன்னுலகம் என்றுமே மறப்பதில்லை என்பதற்குச் சான்றாய்த் திகழ்கின்றது. 

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:
    1. https://www.britannica.com/biography/Isaac-Newton
    2. https://en.wikipedia.org/wiki/Isaac_Newton

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-46

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-46

     46. சிற்றினம் சேராமை

    குறள் 451:

    சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
    சுற்றமாச் சூழ்ந்து விடும்

    கெட்டவங்க கூட சேருததுக்கு நல்ல மனசுக்காரங்க பயப்படுவாங்க. ஈன புத்தி உள்ளவங்க அவுகள தங்க சொந்தக்காரங்க கணக்கா நெனச்சி பழகுவாக.

    குறள் 452:

    நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
    கினத்தியல்ப தாகும் அறிவு

    தான் இருக்க நெலத்துக்கு ஏத்தாமாரி தண்ணியோட தன்ம மாறிக்கிடுது. அது கணக்கா தான் மனுசனோட புத்தியும் அவன் சேருத கூட்டத்துக்கு ஏத்தாப்போல மாறிக்கிடும்.

    குறள் 453:

    மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
    இன்னா னெனப்படுஞ் சொல்

    ஒருத்தனுக்கு உணர்ச்சி அவன் மனசப் பொறுத்து அமைஞ்சிகிடும். அவன் இப்டி பட்டவன்னு அளந்து சொல்லுதது அவன் சேருத கூட்டாளியப் பொறுத்து அமையும்.

    குறள் 454:

    மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்
    கினத்துள தாகும் அறிவு

    ஒருத்தனோட நல்ல புத்தி அவன் மனசுக்குள்ளார இருக்கமாரி தோணிச்சின்னாலும் அது அவன் சேருத சேக்கையிலேந்து வெளிப்படுதது தான்.

    குறள் 455:

    மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
    இனந்தூய்மை தூவா வரும்

    சுத்தமான மனசும், செய்யுத காரியத்துல சுத்தமும் ஒருத்தன் சேருத கூட்டத்தோட தூய்மைய ஆதாரமா கொண்டுதான் பொறக்குது.

    குறள் 456:

    மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க்
    கில்லைநன் றாகா வினை

    சுத்த மனசுக்காரவுகளுக்கு அவுகளுக்குப் பொறவு அவுகளோட புகழ் சொச்சமா மிஞ்சி நிக்கும். சுத்திவர உள்ள கூட்டத்தார்(இனம்)  நல்லா அமைஞ்சவுகளுக்கு  நல்லா அமையாத செயல் னு எதுவுமே கெடையாது.

    குறள் 457:

    மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
    எல்லாப் புகழுந் தரும்

    நெலச்சு நிக்குத உசிருங்களுக்கு நல்ல மனசு செல்வத்தக் கொடுக்கும். அதோடு நிக்காம நல்ல கூட்டத்தார்(இனம்)  எல்லாப் புகழையும் கொடுக்கும்.

    குறள் 458:

    மனநலம் நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
    கினநலம் ஏமாப் புடைத்து

    மனசு நல்லதா இருக்க பெரிய மனுசங்களுக்கு கூட அவுக சேருத கூட்டத்தப் பொறுத்து தான் வலிம வந்து வாய்க்கும்.

    குறள் 459:

    மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்
    இனநலத்தி னேமாப் புடைத்து

    மனசு நல்லதா இருந்தா மறுமையில கூட சந்தோசம் உண்டாவும். அதுவுங்கூட கூட்டத்தாரால வலிம பெறும்.

    குறள் 460:

    நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
    அல்லற் படுப்பதூஉம் இல்

    ஒருத்தனுக்கு நல்ல கூட்டத்தாரப்போல பெரிய தொணை ஒண்ணுமில்ல. கெட்ட கூட்டத்தாரப் போல தீம தருததும் வேற இல்ல.

    (அடுத்தாப்லயும் வரும்….)

    Share
  • சேக்கிழார் பா நயம் – 38

    சேக்கிழார் பா நயம் – 38

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி

     

    இதற்கு முன் திருமால் வழிபட்ட திருமாணிகுழி என்ற தலத்தைப் பற்றி நாம் கண்டோம். அதனை சிவக்கவிமணியார் மேலும் விளக்குகிறார்! செங்கணவன் வழிபட்ட திருமாணிகுழி – சிவந்த கண்ணுடைய திருமால் அப்பழி நீங்கும்பொருட்டுச் சிவபூசை செய்த திருமாணிகுழி என்ற தலத்தை. திருமாணிகுழி என்ற தலப் பேரின் காரணமும் முன் வரலாறும் குறிப்பித்த அழகினை நோக்குக. மாணி – பிரமசாரி; குழி – தலம். வாமனனாகிய பிரமசாரி பூசித்த தலம் என்க. உத்தம குணங்களுடையானும் சிவபத்தனுமான மாவலியை யாதொரு குற்றமுமின்றியே, தேவர்கள் வேண்டுதலுக்காக வஞ்சித்து அழித்தமையால் உளதாகும் பழியைப் போக்கிக்கொள்ளத் திருமால் இறைவனை வழிபட்டார் என்பது சிவபுராணங்களிற் கண்டது. குற்றுருவத்தோடு விளைத்த கேட்டினைச் சீர்ப் படுத்திக்கொள்ள அவ்வுருவத்தோடு பூசித்தவகையை,

    ‘நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகிமிகவும்
    சித்தம தொருக்கிவழி பாடுசெய நின்றசிவ லோகனிடமாம்“

    என்ற ஆளுடைய பிள்ளையாரது இத்தலத் தேவாரத்திற் காண்க.

    அதனையடுத்து, திருத்தினைநகர் என்ற தலத்தைச்சுந்தரர்சென்றடைந்தார். பெரியான் என்ற சிவனடியார் தினைப்புனம் உழுதுகொண்டிருக்கும்போது இறைவன் அங்குவந்து சோறு கேட்க, அதன்பொருட்டு அவர் ஊருக்குப்போய்த் திரும்புவதற்குள், தினைவித்தி முற்றி விளைந்திருக்கச் செய்த காரணத்தால். இத்திருத்தினைநகர் காரணப்பெயர் பெற்றது.

    அடுத்து சுந்தரர் தில்லையின் எல்லையை அடைந்தார் அங்கே கயல்பாயும் குளத்தையும், மலர்கள்சூழ்ந்த சோலையையும்கண்டார் இவற்றைக் கண்டாரின் மூவகை மலங்களும் நீங்கும்! ‘’ஆணவமாதி மூன்று வலிய பாசங்கள். மும்மலங்கள் அறுதலாவது, கன்ம மலத்திற் சஞ்சிதம் அத்துவ சுத்தியாலும், உடல் முகந்து கொண்ட பிராரத்தம் அநுபவத்தாலும், ஆகாமியம் சிவஞானத்தாலும் அழியவும்; அஃதழியவே, மாயாமலம் ஞாயிற்றின் ஒளிமுன் விளக்குப்போலச் சிவசத்தியிலடங்கவும்; ஆணவமலம் ஞாயிற்றின்முன் இருள்போலச் சிவசந்நிதியின் முன்னர் வலியழிந்து கிடக்கவும் பெற்றுக்கெடுதல். வீடருள் எல்லை என்க. வீடருள் தில்லை என்று கூட்டி யுரைத்தலுமாம்’’. உயிர்கள், இங்கு வருமுன் தமக்கு இருந்த பசுத்தன்மை இங்கு வந்தவுடன் திரியப் பெற்றுச், சிவத்தின் தன்மை அடையும் என்பதை ‘மும்மையா மலங்களற வீடருள்’ என உரைத்தார் . இவ்வாறு விளக்கிய உரையை உணர்ந்துகொண்டால்தான் அடுத்துவரும்பாடலின்நயம்புலப்படும் .அங்கே இறைவனை எப்போதும் அருகிலிருந்து காணக் கடலே அகழியாகிச் சூழ்ந்தது! அங்கே கருவறையுள் நடனமாடும் கழல் மலரின் திருவருள் தேனை நுகரும்விருப்பால், வண்டுகள் தாழம்பூவில் துதைந்து திருநீறணிந்த அடியாராகித் துதித்து முரன்றன! உள்ளே தில்லைப் பதியில் மாடமாளிகைகள் வரிசையாய் உயர்ந்து தோன்றின. அம்மாளிகைகள் பொருட்செல்வத்தின் சிறப்புடன் அருட்செல்வமும் பெற்றுச் சிறந்தோங்கின! இதனைத் திருஞானசம்பந்தர்,

    ‘’செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்
    செல்வ மதிதோயச் செல்வம் வளர்கின்ற
    செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய
    செல்வன் கழல்ஏத்துஞ் செல்வம் செல்வமே!’’

    என்றுபாடுகிறார். இப்பாடலில் ஏழுமுறை செல்வம் என்ற சொல் அமைந்து அம்மாளிகைகளின் பொருட்செல்வம், அருட்செல்வம் ஆகியவற்றின் உயர்வைக் காட்டுகின்றது! அவை போகத்தை வளர்க்கும் பொருட்செல்வம் பெற்ற குபேரனின் பட்டினம் போலக் காட்சியளித்தன! அச்செல்வம் மிக்க மாளிகைகள் வரம்பின்றி வானில் ஓங்கிய கோபுரங்களுடன் காட்சியளிக்கின்றன! அக்கோபுரங்கள் வானையே வளைத்து விழுங்குவன போல வளர்கின்றன! இதனைச் சேக்கிழார்,

    ‘’போக நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கி
    மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகைக் குலம்’’

    என்று பாடுகிறார். அங்கே வெண்கொடிகள் வானில் அசைந்தாடுகின்றன. மாளிகைகளின் உள்ளே அந்தணராகிய தவஸ்ரேஷ்டர்கள், ஓமாக்கினியை வளர்க்கும்போதே, உள்ளத்தை ஒடுக்கி தியானமும் பழகுகின்றனர்! அவர்கள் எழுப்பும் யோகப்புகை வானெங்கும் பரவுகின்றது.

    ‘’ஓமப்புகை வானிற்கு அடுப்பன – பொருந்துவன. [பிற புகைகள் (இயந்திரங்களின் புகை) அவ்வாறு அடுக்காதன] ஓமப்புகை ஆகிய மேகம் – புகையின் விளைவாம் மேகம் – என இருபொருளும் கொள்க. ஓமம் மேகத்துக்குக் காரணமாதல் குறித்தவாறுமாம்.

    அங்கே அங்குமிங்கும் பரவியுள்ள மேகங்களின் இடையே வெள்ளிமின்னல்கள் கொடிகளாய்ச்சுடர்கின்றன! இவை யோகசிந்தையின் மலர்ச்சி! தில்லைத்தலம்,இருதயாலயம்எனப்படும்உள்ளத்தலமும், தகராலயம் எனப்படும் யோகத்தலமும் ஆதலால் உள்ளே சிதம்பர ரகசிய வெளியிலும், புறத்தே தகராகாச வெளியிலும், இறைவன் விளங்குகிறார். அவரை அந்தணர்கள் தியானமாகிய தகரோ பாயத்தின் வழியே வெளியிலிருந்து உள்ளே இழுத்துச் சிந்தையில் வைத்துக் கூட்டுகின்றனர். ஆகவே பரவெளியில் கூத்தாடும் இறைவன் கருவறைக்குள் சிதம்பர ரகசிய வெளியாக விளங்குகிறார்! இதனையே புலவர்கள் ‘’தில்லைவெளி’’ என்று சிறப்பித்துப் பாடுவார்கள். இனி முழுப்பாடலையும் பயில்வோம்!

    ‘’போக நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பில ஓங்கி
    மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகைக் குலம் மிடைந்த பதாகை
    யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓமதூமம் உயர்வானில் அடுப்ப
    மேக பந்திகளின் மீதிடைஎங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும்.”

    இப்பாடலில் கொடிகள் மின்னல் போல ஒளிர்கின்றன! சிலப்பதிகாரத்தில் கோவலனை மதுரை மதில்களின் கொடிகள், வராதே என்று கூறுவதாகப் பாடுகிறார்!

    ‘’போர் உழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
    வாரல் என்பன போல மறித்துக் கைகாட்ட ‘’

    என்பது அவர் பாட்டு. வில்லி பாரதத்தில் கண்ணன் வாழும் துவாரகை நோக்கி துரியோதனன் படைத்துணை கேட்க வரும்போது, துவாரகை மதிலின் கொடிகள், எங்கள் கண்ணபிரான், பாண்டவர்க்கே படைத்துணை யாவான், துரியோதனா, நீ மீண்டு போ !’’ என்று கூறுவது போல் பக்கவாட்டில் அசைகின்றன என்று வில்லிப்புத்தூரார் பாடுகின்றார். அப்பாடல் ,

    ‘’ஈண்டுநீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன்
    பாண்டவர் தங்கட் கல்லால் படைத்துணை ஆகா மாட்டான்,
    மீண்டுநீ போதி! என்று அவ் வியன்மதில் குடுமி தோறும்
    காண்டகு பதாகை ஆடை கைகளால் தடுப்பை போன்ற!’’

    என்பதாகும். கம்பராமாயணத்தில் மிதிலை வீதிகளின் குறுக்கே கயிற்றில் கட்டப் பெற்ற கொடித்துணிகள், ‘’இராமா, சீதை உனக்காக இங்கே காத்திருக்கிறாள்! விரைந்து வா !’’ என்று கைகளை அசைத்து அழைப்பதுபோல மேலும் கீழுமாக அசைகின்றன! என்று கம்பர் பாடுகின்றார்!

    ‘’மையறு மலரின் நீங்கி யாம்செய்மா தவத்தின் வந்து
    செய்யவள் இருந்தாள் என்றச் செழுமணிக் கொடிகள் என்னும்
    கைகளை நீட்டி அந்தக் கடிநகர், கமலச் செங்கண்
    ஐயனை, ‘’ஒல்லை வா !’’ என்று அழைப்பது போன்ற தம்மா!’’

    என்பது அப்பாடல்!

    சேக்கிழாரின் பெரிய புராணப்பாடலில் வரும் தில்லை மாளிகைப் பதாகைகள், மேகங்களின் இடையில் மின்னல்போல் மின்னி, ஒளியின் உருவமாகிய இறைவன் தில்லைக் கருவறைக்குள் ஒளிவெளியாக – ஆகாசமாக- விளங்குகிறான், வந்து தரிசியுங்கள்!’’ என்று நுட்பமாக உணர்த்துவதுபோல் உள்ளது! சேக்கிழார் பாடலின் நயம் இது!

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 9.1

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 9.1

    முனைவர் மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 9.1
    (நீராடற்பருவம்)

    பெண்பால் பிள்ளைத்தமிழில் அடுத்த பருவமாக நாம் காண்பது, நீராடற் பருவம். நதியில் நீராடும் இனிய அனுபவத்தை, விளையாட்டை, வளர்ந்த சிறுமிகள் ஐந்து முதல் ஒன்பது வயதில் செய்வார்கள். ஆயினும் முதலில் சிறுபெண்களுக்கு வயதில் பெரிய பெண்களும் தாயும் செவிலியருமே நதியில் இறங்கி நீந்தவும், நீராடவும் கற்றுக் கொடுப்பார்கள். பிள்ளைத்தமிழ் இலக்கிய மரபு பெண் குழந்தையின் ஐந்து முதல் ஒன்பது வயதில் இது நிகழும் என்கிறது.

    நதியில் நீராடுவதென்பது சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் ஒரு நல்ல பொழுது போக்காகவும், உடற்பயிற்சியாகவும் அக்காலத்தில் விளங்கியதைக் காணலாம். அது மட்டுமின்றி, நாட்டு நலனுக்காகவும், வீட்டு நலனுக்காகவும் செய்யும் வேண்டுதல்களுக்கும் இதுவொரு களமாக விளங்கியது எனவும் அறிகிறோம்.

    ஆடிமாதம், புதுவெள்ளத்தில் நீராடுவதென்பது நதியைப் போற்றி வழிபட்டு விளையாடி மகிழ்வதற்காக ஏற்பட்டது! புலராத அதிகாலை நேரத்துக்குளிரில், மார்கழிமாதம் நீராடுவது நாட்டில் நல்லமழை பெய்வதற்காகவும் நல்ல கணவனைப் பெறுவதற்கு வேண்டி நோன்பிருக்கவும் ஏற்பட்டது. ஆண்டு முழுவதுமே ஆற்றங்கரையில் தினசரிக் கடன்களைச் செய்தும், துணிமணிகளைத் துவைத்தும், நீரில் துளைந்து விளையாடியும், வாழ்வினைப் பல பொழுதுபோக்குகள் நிறைந்ததொரு இனியபயணமாக அமைத்துக் கொள்வதற்கென்றே ஏற்பட்டது எனலாம்!

    தம் நீர்ப்பெருக்கால் நமக்கெல்லாம், நாம் விதைக்கும் பயிர்களுக்கெல்லாம் உணவளித்து, உயிரூட்டி, அரவணைத்து வளர்த்துவரும் கங்கை, காவேரி, வைகை, இன்னும் பல நதிகளை நாம் தெய்வமெனக் கொண்டாடிப் பூசைகள்செய்து வழிபடுகிறோம். ‘நீரின்றி அமையாது உலகு,’ என்பது நாமறிந்த உண்மை! குழந்தைகள் தாயிடம் விளையாடுவதுபோல, ஆற்றுவெள்ளத்தில் ஆடிப்பாடி நீர்விளையாட்டுகளில் ஈடுபட்டுக் களிக்கிறோம். நிலம், நீர் (ஆறு) முதலியன வாழ்வின் இன்றியமையாத தேவைகளாக இருப்பதனால், அவற்றை இயற்கை தெய்வங்களாகக் கொண்டு போற்றுகிறோம். இவை உயர்வான நமது நாகரிகத்தின் வெளிப்பாடுகளே!

    ‘காவேரியே! உன் கணவனுடைய சோழநாடே உன்குழந்தையாகும்; நீதான் அதனை வளர்க்கும் தாயானவள். எத்தனையோ ஊழிக்காலங்களாக இந்தச்செயலைச் செய்துவருகின்றாய். இதற்குக் காரணம், உயிர்களைப் பாதுகாத்து, ஆணைச்சக்கரம் செலுத்துகின்ற சோழவேந்தனின் நடுவுநிலைமை தவறாத ஆட்சியே அல்லவா? நீடூழி வாழ்வாயாக காவேரியே!’ எனத் தலைவி வாழ்த்துவதாக சிலப்பதிகாரத்தில் கானல்வரிகளைக் காண்கிறோம்.
    ‘வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி
    ……………..
    ஊழி உய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும்
    ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி.1’
    (சிலப்பதிகாரம்- கானல்வரி- புகார்க்காண்டம்- கடலாடு காதை)

    சிவபிரானுக்கு உகந்த திருவாதிரை நாளில் பௌர்ணமி தினமும் கூடியிருந்த முன்பனிக்காலம் எனப்படும் மார்கழிமாதத்து நாளன்று வைகறைப்பொழுதிற்கு முன்பே வைகைக்கரையில் சிறுமியரும் மகளிரும் அந்தணர்களும் சிறுவர்களுமாகக் கூட்டம் கூடியுள்ளது; வைகையின் நீர்ப்பெருக்கிற்கு ஈடாக மக்கள்கூட்டம் கரைபுரண்டோடுகின்றது. வாணி(சரஸ்வதி), யமுனை, கங்கை ஆகிய மூன்று நதிகளின் கலவை எனப் புகழப்படும் வையை எனும் பாண்டியன் குலக்கொடி, மகிழ்ச்சியில் பொங்கிப் பெருகிப் புரண்டோடுகிறாள்.
    அந்தணர்கள் நீராடி முடித்துப் பொற்கலங்களிில் வையையின் நீரை நிரப்பிக் கொண்டு மந்திரங்களை உச்சரித்தவாறு வேள்விக்காக அமைக்கப்பட்ட சாலைகளை நோக்கி விரைந்தனர். வேள்விச்சாலைகளில் தீ வளர்க்கப்பட்டு மந்திரங்கள் முழங்கத் துவங்கிவிட்டன. தாய்மார்கள் தங்கள் சிறு மகள்களின் கைகளைப் பற்றிக்கொண்டு நீரில் மெல்ல இறக்கி நீராடவைக்கின்றனர்.

    சிவபிரானை வாழ்த்தி எழும்பும் அந்தணர்களின் மந்திர முழக்கம் வானைமுட்டுகிறது. இன்னும் பல தாய்மார்களும் சிறுமிகளும் இளம்கன்னியர்களும் அவர்களைப்போல் வேள்விக்குண்டங்களைச் சூழ்ந்து நிற்கிறார்கள். பற்களைக்கிட்டிக்கும் குளிரில், ஈர ஆடையில், சிறுமிகளின், ஏன் தாய்மார்களின் உடல்களும்கூட இலேசாக நடுங்குகிறன. ஓங்கியெழும் வேள்வித்தீயின் நாக்குகள் உமிழும் வெப்பத்தில் அப்பெண்களின் ஈர ஆடைகளிலிருந்து நீர் ஆவியாக வெளிப்படுகின்றது. பெண்களும் குளிரிலிருந்து சிறிது ஆசுவாசமடைகின்றனர்.

    ‘இவ்விளங்குழந்தைகள் தங்கள் தாய்மார்களுடன் கூடிநின்று வைகைக்கரையில் நீராடலாகிய இந்தத் தவத்தினைச் செய்வதற்கு, முன்பு என்ன தவம் செய்திருந்தனரோ,’ எனக் காண்போருக்கு எண்ணத்தோன்றுகிறது.*

    அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்,
    முனித்துறை முதல்வியர் முறைமை காட்ட,
    பனிப்புலர்பு ஆடி, பருமணல் அருவியின்
    ஊதை ஊர்தர, உறைசிறை வேதியர்
    …………………………………………….
    தீ எரிப்பாலும் செறிதவம் முன்பற்றியோ,
    தாய் அருகா நின்று தவத் தைந்நீராடுதல்?
    நீ உரைத்தி, வையை நதி!2
    (*பரிபாடல்-11- ஆசிரியர்: நல்லந்துவனார்)
    *****

    இனி குமரகுருபரர் காட்டும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழைக் காணலாம்! பொய்யாக் குலக்கொடியான வையை என்னும் நதியின் கரையில் கும்மாளமிடும் இளம்பெண்களின் கூட்டம்! குதூகலம் கொப்பளிக்க பாண்டிய இளவரசி தடாதகை தன் தோழியருடன் நீராட வருகிறாள். பற்பல கதைகளையும் பேசிக் களித்து மகிழ்ந்த வண்ணம் தடாதகையும் தோழிகளாகிய திருமகளும் கலைமகளும் இன்னும் பல பெண்களுடன் வைகைத் துறையை அடைகின்றனர். “பொங்கி வரும் வைகைப் புது நீரில் நீராடுவாயாக அம்மையே,” என்று தடாதகையிடம் கூறுகின்றனர்.

    வைகை நீர் பொங்கிப் புரண்டோடி வரும் அழகைக் கண்டு, மெய்ம்மறந்த பரவசத்தில் ஆழ்ந்து நிற்கிறாள் அங்கயற்கண்ணி. ‘இந்தப்படித்துறை பண்டு எம்பெருமான் பிட்டுக்கு மண்சுமந்த இடமாகும்,’ எனத் தோழியான வாணி சொல்கிறாள். அதனைக் கேட்டவுடன் தடாதகையின் உள்ளம் கசிந்துருகிக் காதலில் கண்களிலிருந்து ஆனந்த வெள்ளம் பொழிகின்றதாம்.

    நீர் பெருகிக் கரையுடைத்துக் கொண்டோடிய வைகையும், பிட்டு விற்கும் வந்திக்கு உதவ வேண்டி, கூடையில் மண்ணை வாரித் தலைச்சுமை எடுத்துக் கரையமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காதல் கொழுநனும், அவனைப் பிரம்பால் அடித்த பாண்டியனும் ஆகிய காட்சிகள் அம்மையின் மனக்கண்ணில் படமாக விரிகின்றன. கலைமகளும் தன் வாக்கு வன்மையினால் அந்தக் கதையை சுவைபட எல்லாருக்கும் விவரிக்கிறாள்.

    ‘என் உள்ளங்கவர் காதலர் மண் சுமந்த இடமல்லவா இது?’ என்ற பெருமிதத்தில் மீனாட்சியின் நெக்குருகி, நெஞ்சு விம்ம, கண்கள் சிவந்து ஆனந்த வெள்ளம் பெருகுகின்றது. அப்படியே சிலை போல நிற்கிறாள்.

    ‘இழியும் புனல் தண்துறை முன்றில் இதுஎம் பெருமான் மண்சுமந்த
    இடமென்று அலர்வெண் கமலப்பெண் இசைப்பக் கசிந்துள் உருகியிரு
    விழியும் சிவப்ப ஆனந்த வெள்ளம் பொழிந்து நின்றனையால்3..’

    “இப்படிக் கண்களிலிருந்து வெள்ளத்தைப் பெருகவிட்டுத் திரும்பவும் அப்பெருமானுக்கு வேலை வைப்பது பிழையல்லவா? விரைவில் நீராடுவாய்,” என அழைக்கின்றனர் தோழிகள்.

    ‘விழிநீரை மீண்டும் பெருக விடுத்து அவற்கோர்
    வேலை இடுதல் மிகையன்றே!’ என்கின்றனர்.

    ஆனால் எண்ணங்களில் ஆழ்ந்து அசையாமல் சிற்பமென நிற்கிறாள் இளவரசி தடாதகை. அவளை விரைந்து நீராடவைக்கத் தோழியர் இன்னொரு உபாயத்தைக் கையாளுகின்றனர்!

    “மடங்கி வரும் அலைகளையும் குளிர்ச்சி பொருந்திய நீரையுமுடைய வைகை நதியில், வண்டல் இடுகின்ற மண்ணைக் கூடையில் அள்ளி வைத்து முன்பே சுமந்தவர் உன் காதலர்தானே? நீரிலிறங்கி ஆடினாயானால் உன் மார்பிலணிந்துள்ள சிவந்த குங்குமச்சேறு கரைந்து வண்டல்மண் போல நீரில் சேர்ந்துவிடும். அதைத் திரும்பக் கூடையில் அள்ள எம்பெருமான் ஆசையாக விரைந்தோடி வருவார் பார்!” எனக்கூறுமுன்பே, மற்றொரு தோழி குறும்பாக, “அவ்வமயம் வெள்ளைப்பிட்டை அள்ளியள்ளிக்கொடுக்க வந்திக்கிழவி வேண்டுமே! பிரம்பினால் அடித்து வேலைவாங்கப் பாண்டிய மன்னன் வேண்டுமே,” எனப் பொய்யாகக் கவலைப்படுகிறாள்.

    ‘………………………. ஒருத்தி
    வெண்பிட் டிடவும் அடித்தொருவன் வேலைகொளவும் வேண்டுமெனக்
    குறிக்கும் இடத்தில் தடந்தூநீர் குடையப் பெறின் 4….’

    “சிவனாரை உன்னிடம் வரவழைக்க இது நல்ல உபாயமல்லவா? இமயமலையிலும் மீன்கொடி பறக்கவைத்த பெண்ணரசியே, நீராடி அருளுகவே, பொருநைத் துறைவன் பொற்பாவாய் புதுநீராடி அருளுகவே,” என்று வேண்டுகின்றனர். இவை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் நீராடல் பருவத்தில் குமரகுருபரர் தீட்டும் அழகான சொற்சித்திரங்கள்! அசதியாடல் எனும் நயத்தை இழைத்து அமைத்த இனிய பாடல்கள்.

    சொன்னயங்களும் கருத்து நயங்களும் பலவிதமாக வெளிப்படும் பாடல்களைக் கொண்டமைந்தது குமரகுருபரனார் இயற்றியருளியுள்ள மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் நூல்.
    அங்கயற்கண்ணி அம்மை, வேகவதி எனப்படும் வைகையில் நீராடிய போது, அவள் கைகளில் அணிந்துள்ள வெண்மையான வளைகள் ஒலித்தன; பவளம் போன்ற சிவந்த உதடுகள் வெளுத்தன; கருங்குவளை மலர்க் கண்கள் சிவந்து செங்குவளை போன்று காணப்பட்டன; கரிய மணல் போன்று காணப்பட்ட கூந்தல் சரிந்து விழுந்தது. இது, பெருகிடும் கங்கையாறு, சிறு திவலையாகி, ஆனந்தப் பெருங்கடலாக விளங்கும் சிவபெருமானுடன் (மீனாட்சியம்மை) கூடிக்கலந்து விளையாடியதால் உண்டாகிய வேறுபாடுகளை ஒத்திருந்ததாம்.

    ‘செழுந்தரங்கக் கங்கை நுண்
    சிறுதிவலையாப் பொங்கும் ஆனந்த மாக்கடல்
    திளைத்தாடுகின்ற தேய்ப்ப5…’ என்கிறார்.

    குழந்தை மீனாட்சி வளர்ந்து வரும் ஒவ்வொரு பருவத்தையும் சுவைமிகுந்த நிகழ்ச்சிகளால் பாடி வரும் குமர குருபரர் பின்வரும் பாடலில் உலகம் முழுவதுமே உமை அன்னையின் வடிவம் எனக் கண்டு பேரானந்தம் கொண்டு பாடிக் களிக்கிறார்.

    “கிளி பேசுவது போன்ற பண் பொருந்திய சொற்களைப் பேசும் பாவையே! நீராடும் உனது திருமேனி அழகிய பச்சை மரகத நிறத்தைப் பரப்பி ஒளி வீசுகின்றது. இதனால் எல்லாப் பொருள்களும் அந்த நிறத்தைத் தாமும் பெற்று ஒளிர்கின்றன. நதி நீரில் மிதக்கும் குளிர்ந்த பவளக்கொடி, பச்சை நிறம் பெற்று, பேரழகுடன் பசிய இளங்கொடி போலக் காட்சியளிக்கின்றது; பருத்த வெண்மையான முத்துக்கள் மரகத மணிகளாக மாறி விட்டன! நதியின் குளிர்ச்சி மிகுந்த துறைகளில் தங்கி விளையாடும் அன்னப் பறவைகள் பச்சை நிறம் அடைந்து களிப்பு மிகுந்த தோகை மயில்களாக மாறி விட்டன! இது, ‘எல்லாப் பொருள்களும் உனது அழகிய திருவடிவம் தான்,’ என்று வேதங்கள் காலகாலங்களாக முழங்கி வரும் பொருள் முற்றிலும் உண்மையே என நிரூபிப்பது போல உள்ளதம்மா.

    ‘சகலமும் நின் திருச் சொரூபம் என்று ஓலிடும்
    சதுர் மறைப் பொருள் வெளியிட…’ என வர்ணிக்கிறார்.

    அத்தனை பெண்களும் குடைந்து குடைந்து நீராடுவதனால் அவர்கள் தம் மார்பில் அணிந்திருக்கும் சிவந்த சாந்து (செங்களபம்), கருமையான கஸ்தூரிக் குழம்பு, வெண்கற்பூரம் ஆகியவை கரைந்து வைகை நீரில் கலக்கின்றன. இது சரஸ்வதி (வாணி எனப்படும் சிவந்த நிறமுள்ள சோணை நதி), யமுனை (கரிய நிறம் கொண்ட காளிந்தி ஆறு), வெண்மை நிறம் கொண்ட கங்கை எனப்படும் வான் நதி மூன்றும் கலந்து வைகையாற்று நீரில் விளையாடுவது போல உள்ளதாம்.

    ‘……………………………………வாணியும்
    காளிந்தியும் கங்கையாம்
    விண் ஆறும் அளவளாய் விளையாடு புதுவைகை
    வெள்ள நீர் ஆடியருளே
    விடைக் கொடியவர்க்கு ஒரு கயற்கொடி கொடுத்த கொடி
    வெள்ள நீர் ஆடியருளே.6’ என்கிறார்.

    அனைத்துப் பொருள்களும் அவளே! அவளிடம் இருந்தே உற்பத்தியாகி அவளிடமே அனைத்தும் தஞ்சம் அடைகின்றன. அவளை இடைவிடாது சிந்தையில் வைப்பவர்கள் அவளாகவே ஆகி விடுகின்றனர். ‘எங்கும் வியாபித்திருப்பவள், பலவகையான உருவம் கொண்டவள், ‘வ்யாபினீ, விவிதாகாரா7,’ என அம்பிகையை லலிதா சஹஸ்ர நாமம் போற்றுகிறது. (ஸ்லோகம் 87).

    நதிகளைப் பெண்மைக் குணம் கொண்டவர்களாக பெரியோர்கள் வருணித்துள்ளனர். அவற்றின் ஆற்றலும், இயக்கமும், ஓரிடத்தில் நில்லாது ஓடிக்கொண்டே இருக்கும் தன்மையுமே இதற்குக் காரணங்கள். கமலைநதி திருவண்ணாமலையருகே ஓடுகின்றது. அந்த நதிப்பெண் உண்ணாமுலையம்மையை நோக்கிக் கூறுவதாக அமைந்தவொரு அழகான பாடல்:

    “குறிஞ்சி நிலத்தில் வாழும் வெற்றி மிக்க வீரனான குமரனுக்கு சேவல்கொடியைக் காட்டிலிருந்து கொண்டு கொடுத்தவள் அன்னை நீதான்!

    “பாலைக்குமரி எனப்படும் பாலைநிலத்து தெய்வமான கொற்றவைக்கு கொடிய சிங்கத்தையும் வாகனமாகக் கொடுத்தாய்!

    “செழித்த முல்லைநிலத்துக் கடவுளான கோவிந்தனுக்கு அழகான மூங்கிலாலான புல்லாங்குழலை அளித்தாய்.

    “மருதநிலத்து இறைவனான இந்திரனுக்கு அவன் மகிழும்வகையில் நீர்வளத்தைக் கொடுத்தாய்.

    “நெய்தல் நிலக்கடவுளான வருணனுக்கு அந்நிலத்தின் புலால் வாசனை தீரும்விதத்தில் (தாழம்புதர்கள் முதலியவற்றிலிருந்து வரும்) நறுமணமும் கொடுத்த அன்னை நீதானே!

    “உனக்கு என்னால் எதனை அளிக்க முடியும்? ஆகவே, அன்னையே, நீயே வந்து என்னில் ஆழ்ந்து நீராடித் திளைக்க வேண்டும்; நான் அதனால் உருகிப்பெருகிப் பேரின்பமான கடலில் சென்று சேர்வேன்,” எனக்கூறுகின்றாள் கமலை எனும் நதிப்பெண்ணாள்,’ என்கிறார் உண்ணாமுலைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியரான சோணாசல பாரதியார்.

    மெய்சிலிர்க்க வைத்து, பக்தியில் திளைக்கும் மிக அருமையான கற்பனை இதுவன்றோ!

    ‘கொற்றக் குறிஞ்சிக் குமரனுக்குக்
    கொடியும் பாலைக் குமரிக்குக்
    கொடுங்கோ ளரியுஞ் செழுமுல்லைக்
    கோவிந் தனுக்குக் குழல்வேயு
    மற்ற மருதப் போகிக்கு
    மகிழ்வு நெய்தல் வருணனுக்கு
    மன்னும் புலவு தீர்மணமும்
    வழங்கு வேனிற் கென்னளிப்பேன்8

    பல தலைமுறைகளாக நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டும், நீரினைத் தெய்வமாகக் கொண்டு போற்றியும், நீர்நிலைகளில் தெய்வ வழிபாடுகளை முறையாக நடத்தியும் வாழும் பண்பாடு – நாகரிகம் நம்முடையது. நீரின், ஆறுகளின் பின்னணியில் புலவர் பெருமக்கள் இயற்றியளித்த இப்பாடல்கள் இனிமை நிரம்பித்ததும்பி நமது உள்ளங்களில் அழகுணர்ச்சியையும், ஆனந்தத்தையும் பக்திப் பெருக்கினையும் நிரப்பி மகிழ்விக்கின்றன அல்லவா?

    _______________&________________

    பார்வை நூல்கள்:

    1. சிலப்பதிகாரம்- கானல்வரி- புகார்க்காண்டம்- கடலாடுகாதை
    2. பரிபாடல்- பாடல் 11- நல்லந்துவனார்.
    3. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    6. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்- நீராடல் பருவம்
    7. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
    8. உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- சோணாசல பாரதியார்

    Share
  • நம்மோடு பிறரும் மகிழ

    நம்மோடு பிறரும் மகிழ

    -நிர்மலா ராகவன்

    நலம்…நலமறிய ஆவல் (159)

    நம்மோடு பிறரும் மகிழ

    இது விந்தையான உலகம். லட்சாதிபதி கோடீஸ்வரனாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். கோடீஸ்வரனோ, தன்னிலும் அதிகச் சொத்து சேர்த்திருப்பவருடன் போட்டி போடுகிறார். பணத்தால் மகிழ்ச்சியையோ, திருப்தியையோ வாங்க முடியாது என்று இவர்கள் அனைவரும் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

    பிறருக்கும் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையுடன், தாம் எண்ணியதைச் சாதித்தவர்களுக்குத்தான் சிலை வைக்கிறார்கள்.

    `என்னால் எதுவும் முடியாது!’ என்று மூக்கால் அழுபவர்கள், தன்னம்பிக்கை குறைந்தவர்கள். மேலானவர்கள் என்று தோன்றுபவர்களின் நடை, உடை, பாவனைகளை அப்படியே பின்பற்றுவார்கள்.

    கதை (பார்த்தது)

    சிற்றூரிலிருந்து வந்திருந்த ராதாவுக்குப் பெரிய நகரில் நல்ல வேலை கிடைத்தது. தனக்குப் பிறருடன் பழகத் தெரியவில்லை என்ற குறையும் கூடவே ஏற்பட்டது.

    அதே அலுவலகத்தில் வேலைபார்த்த சுமனா கலகலப்பாகவும், எல்லாருக்கும் பிடித்தமானவளாகவும் இருந்தாள். அவளைப்போல் தானும் ஆகவேண்டும் என்ற வெறியே ராதாவுக்கு வந்தது.

    சுமனா என்ன சாப்பிடுகிறாள் என்று கண்காணித்து, அதையே தானும் வாங்கிச் சாப்பிட்டாள்.

    உடன் வேலைபார்த்த ஒருவன் சுமனாவிடம் மோசமாக நடந்துகொள்ள முயல, அவள் பகிரங்கமாக அவன் மானத்தை வாங்கினாள்.

    `என்னிடம் எந்த ஆணும் இப்படி மயங்கவில்லையே!’ என்ற முட்டாள்தனமான ஏக்கம் உண்டாயிற்று ராதாவிற்கு. அக்கயவன் கவனத்தைக் கவரும் வகையில், புடவைத் தலைப்பை நழுவவிட்டாள். (எதைத்தான் பின்பற்றுவது என்று கிடையாதா!)

    அவள் எண்ணியபடியே அவளை நெருங்கினான். தன் தந்திரம் பலித்துவிட்ட பெருமையில் ராதா மகிழ்ந்து சிரித்தாள்.

    நம்மிடம் என்ன இருக்கிறது, என்ன செய்கிறோம், அல்லது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து நிறைவு கிடைப்பதில்லை. நம்மைப் பற்றி நாம் என்ன எண்ணுகிறோமோ, அதுதான் முக்கியம்.

    ராதாவைப் போன்றவர்கள், `நான் பிறரிடமிருந்து மாறுபட்டிருக்கக் கூடாது. என்னைவிட உயர்ந்தவர்களைப்போல் நடந்தால்தான் பிறர் என்னைப் பார்த்துப் பிரமிப்பார்கள்,’ என்று எண்ணமிடுகிறார்கள்.

    இத்தகைய எண்ணப் போக்கு நேர் எதிரான விளைவைத்தான் தருகிறது. ராதாவின் நடத்தையை எவரும் சிலாகிக்கவில்லை. அவர்களது முகம்தான் சுளித்தது.

    நம்மை நாம் இருக்கிறபடியே ஏற்றுக்கொண்டால்தான் தன்னம்பிக்கை வளரும். அப்போது கிடைக்கும் நிம்மதியால் நமக்கு நம்மையே பிடித்துப்போகும். அதன்பின் பிறரிடம் அன்பு செலுத்தத் தடையேது!

    மிகப்பெரும் செல்வந்தர்கள் எல்லா உயிர்களிடமும் அன்பு வைத்து, சம்பாதிப்பதில் பெரும் பங்கைத் தான தர்மங்களுக்காகச் செலவிடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, சம்பாதிப்பது ஒரு விளையாட்டு.

    வெற்றி என்பது கொள்ளைப் பணத்தை ஈட்டுவதால் அல்ல. செய்யும் காரியத்தால் திருப்தியும் நிம்மதியும் கூடவே வரவேண்டும் என்பதைப் புரிந்து வைத்திருப்பவர்கள் இவர்கள்.

    பில் கேட்ஸ் Bill Gates அமெரிக்காவின் தலைசிறந்த கொடையாளி என்று புகழப்படுகிறார். அப்படி என்ன செய்துவிட்டார்?

    பில் கேட்ஸ் அளித்த அமெரிக்க டாலர் 36 பில்லியன் (3,600 கோடி) உலகின் பல நாடுகளிலும் காணப்படும் ஏழ்மையை ஒழிக்கவும், அங்கெல்லாம் கல்வித்திறனையும் ஆரோக்கியத்தைப் பெருக்கவும் உபயோகப்படுகிறது.

    அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் பட்டப்படிப்பு பயிலும், வெள்ளைக்காரர்கள் அல்லாத ஆயிரம் மாணவர்களுக்கு உபகாரச்சம்பளம் வழங்கும் நற்பணியை மேற்கொண்டிருக்கிறார். இதைத் தவிர, ஊதியம் எதுவுமின்றி, வீட்டு வேலைகளையே செய்துகொண்டிருக்கும் இளம்பெண்கள் கல்வியில் பின்தங்கிவிடுகின்றனர், அதனால் தம் முழுத்திறமையை வெளிக்காட்ட முடியாது போகிறது என்று அந்த நிலைமையை மாற்றும் முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.

    இந்தியாவிலேயே நடிப்புக்கு அதிகச் சம்பளம் வாங்கும் இந்தி நடிகர் ஓர் இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் கழுத்து நிறைய தங்கச்சங்கிலிகள். நிகழ்ச்சி முடியும் சமயத்தில்தான் தெரிந்தது எதற்காக அப்படி — குண்டர் கும்பல் தலைவரைப்போல் — தன்னை அலங்கரித்துக்கொண்டு வந்தார் என்பது.

    நன்றாகப் பாடியவர்களைப் பாராட்டும் விதமாக, தன் கழுத்திலிருந்த சங்கிலிகளை ஒவ்வொன்றாகக் கழற்றி அவர்களுக்கு அணிவித்தார்! நடிகர்களிலேயே மிகச் சிறந்த கொடைவள்ளல் இவர்தான் என்று பிறிதொரு நிகழ்ச்சியில் அறிவிக்கக் கேட்டேன்.

    தம்மிடமிருப்பதை பிறருக்கும் பகிர்ந்தளிப்பதால் இவர்களுக்கு நிறைவு கிட்டுகிறது போலும்! சிலருக்கு என்ன கிடைத்தாலும் திருப்தி என்னவோ கிடைப்பதில்லை.

    கதை

    பல வருடங்களுக்குமுன், மலேசியாவிலிருந்து இந்தியா போகும் கப்பலில் பயணித்திருந்தேன். (இப்போது அந்தச் சேவை கிடையாது). கப்பல் ஆடிய ஆட்டத்தில் பலருக்கும் தலைசுற்றல், வாந்தி. கப்பலின் போக்கைப் பழித்தார்கள்.

    `இவங்க காசு மட்டும் வாங்கிக்கறாங்க! சாப்பாடு சகிக்கலே!’ என்றது இன்னொரு கும்பல். யாரோ ஒருவர் மட்டும் கூறினார், `இந்தக் கப்பல் 1,600 மைல் கடந்து, குறைந்த செலவில் நம்மை வேறு நாட்டுக்குக் கொண்டுபோகிறதே!’

    யாரிடம் என்ன குறை இருக்கிறது என்று மட்டுமே ஆராய்ந்து கொண்டிருப்பதால் நாம் உயர்ந்துவிடமாட்டோம். ஆனால், திருத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், குறையையும், அதை நிவர்த்தி செய்யும் வழியையும் எடுத்துச் சொல்லலாம்.

    ஏதாவது நோய்வாய்ப்பட்டு, விரைவில் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவர்கள் தத்துவார்த்தமாகக் கூறுவது: `ஒவ்வொரு நாளையும் இதுதான் நாம் கடைசியாக வாழப்போகும் தினம் என்று நினைத்து வாழ்கிறேன். என்னைச் சுற்றிலும் அன்பானவர்கள் இருக்கிறார்களே என்று நிறைவாக இருக்கிறது’.

    எந்த நிலையிலும் மனம் வெதும்பிவிடாது, இருக்கும் சில நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வது அறிவு.

    ஆனால், தம்மிடம் இருப்பதை எண்ணி திருப்தி அடையாது, எதையோ எண்ணி ஏங்குகிறார்கள் பலரும்.

    கதை

    `நாற்பது வயதிற்குள் நான் லட்சாதிபதி ஆகவேண்டும்!’ என்று அடிக்கடி கூறிவந்தவர் அவர்.

    அந்த லட்சியத்துடன், மேலதிகாரிகளின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்காகக் கடுமையாக உழைத்தார். அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளையும் முன்னின்று கவனித்துக்கொண்டார். மனைவி மக்களுடனும் சிறிது நேரத்தைக் கழிக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றவில்லை. அவர்கள் தன்னைவிட்டு எங்கே போய்விடப்போகிறார்கள் என்ற அலட்சியம்தான். அத்துடன், ஒவ்வொரு நிமிடமும் காசாயிற்றே!

    ஒரு விபத்தில் அவரது குடும்பமே அழிந்துபோயிற்று. `இனி யாருக்காக சம்பாதிப்பது!’ என்ற விரக்தி ஏற்பட்டது அம்மனிதருக்கு.

    `இப்போது என் குடும்பத்தினர் வந்து வாசற்கதவைத் தட்டினால், அது லட்சத்திற்கும் மேலானது!’ என்று கதறினார். காலம் கடந்து புத்தி வந்து என்ன ஆகப்போகிறது!

    கதை

    சில ஆண்டுகளுக்குமுன், நேபாளத்தில் ஒரு சமூக சேவகியைச் சந்தித்தேன். துருக்கி நாட்டைச் சேர்ந்தவள்.

    `இந்த மலைப்பிரதேசத்தில் பலரும் போலியோ நோயால் பாதிக்கப்படுகிறார்கள். தகுந்த வைத்தியம் கிடைப்பதில்லை. நான் வருடத்தில் பலமுறை இங்கு வந்து, அதற்கான மருந்துகளை கொடுத்து, பிற தேவைகளையும் கவனித்துப் போகிறேன்,” என்றவளுக்கு முப்பத்தைந்து வயதுதான் இருக்கும்.

    “உனக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா?” என்று நான் கேட்டதும், பத்து வயதுக்குட்பட்ட இரு குழந்தைகள் இருப்பதாகத் தெரிவித்தாள்.

    `ஊராருக்கு நல்லது செய்வதெல்லாம் கிடக்கட்டும். உன் குடும்பத்தைக் கவனித்துக்கொள்கிறாயோ?’ என்று உடனே தோன்ற, “உன் குழந்தைகளுடன் செலவழிக்க நேரம் கிடைக்கிறதா?’ என்று கேட்டேன்.

    பெற்றோர் ஆதரவாக இல்லை என்று வருந்தி, தீய பழக்கங்களுக்கு ஆளான எவ்வளவு மாணவ மாணவிகளின் கதைகளைக் கேட்டிருக்கிறேன்! அதனால் அக்கேள்வி தன்னால் பிறந்தது.

    அவள் ஆசியாவைச் சேர்ந்தவள். அதனால், `அதிகப்பிரசங்கி,’ என்று என்னைப் பார்த்து முகம் சுளிக்கவில்லை. இன்னொரு தலைமுறையைச் சேர்ந்த என் கேள்வி நியாயமாகப்பட்டிருக்கிறது.

    “இயன்றவரை, அவர்களையும் என்னுடன் அழைத்துவருகிறேன்,” என்று பணிவாகப் பதிலளித்தாள்.

    கதை

    ஐம்பது வயதான பெண்மணி உமா என்னுடன் பிரயாணம் செய்துகொண்டிருந்தாள்.

    நாலைந்து நாட்களுக்குப் பிறகு, “நீங்கள் ஏன் கல்யாணமே பண்ணிக்கொள்ளவில்லை?” என்று கேட்டேன், பேச்சுவாக்கில்.

    “எங்கம்மா சமூக சேவகி. வீட்டில் இருந்ததே அபூர்வம். என்னவோ, என் அப்பாவுக்கும் எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கணும்னு தோணலே!” என்றாள் விரக்தியை மறைக்காது.

    உமா பெரிய உத்தியோகத்தில் இருந்தாள். பிறர் மதித்தார்கள். ஆனாலும், தனிமையிலேயே வாழ்க்கையைக் கழிக்கவேண்டும் என்ற நிதரிசனத்தில் அவளுக்கு நிறைவு கிடைக்கவில்லை. ஏனெனில், பெற்றோர் அவளுடைய நலனைப்பற்றி யோசிக்கவில்லை. அதற்கான அவகாசமோ, ஆர்வமோ அவர்களுக்கு இருக்கவில்லை.

    பிறருக்கு நன்மை செய்கிறோம் என்று, குடும்பத்தைக் கவனிக்காமல் விடலாமா?

    ஒருவர் தன் சொந்த திருப்திக்காக தன்னைச் சேர்ந்தவர்களின் மகிழ்ச்சியைப் பறிப்பது என்ன நியாயம்?

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-45

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-45

    45. பெரியாரைத் துணைக்கோடல்

    குறள் 441:

    அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
    திறனறிந்து தேர்ந்து கொளல்

    அறம் உணர்ந்த, தன்னைய விட மூத்த அறிவாளியோட நட்பப் பெறுத மொறைய ஆஞ்சு அறிஞ்சு தெரிஞ்சுக்கிடணும்.

    குறள் 442:

    உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
    பெற்றியார்ப் பேணிக் கொளல்

    வந்த துன்பத்தப் போக்கி இனி துன்பம் வாராம பாத்துக்கிடுத பெரியவங்கள தொணையா வச்சிக்கிடணும்.

    குறள் 443:

    அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
    பேணித் தமராக் கொளல்

    பெரிய மனுசங்களுக்கு வேணுங்கது எல்லாம் செஞ்சு அவங்க கிட்ட ஒறவு வச்சுக்கிட்டு அவர் காட்டுல வழில நடக்குதது ரொம்ப ஒசந்த பலம்.

    குறள் 444:

    தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
    வன்மையு ளெல்லாந் தலை

    தன்னைய விட அதிக புத்தியுள்ள பெரியவுகளோட ஒட்டுதலா இருந்து அவுக சொல்லுத வழியில நடக்கது எல்லாத்தையும் விடச் சிறந்தது.

    குறள் 445:

    சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
    சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

    கண்ணு கணக்கா எல்லாத்தையும் கண்டறிஞ்சு கூறுத அறிவாளிங்கள சுத்திவர வச்சிக்கிடுதது தான் ராசாவுக்கு நல்லது.

    குறள் 446:

    தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
    செற்றார் செயக்கிடந்த தில்

    ஒருத்தனச் சுத்தி தகுதியுள்ள பெரியவங்க இருந்து  அவுக சொல்படி அவன் நடந்தாம்னா பகையாளியாலையும் அவன ஒண்ணுஞ்செய்ய முடியாது.

    குறள் 447:

    இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
    கெடுக்குந் தகைமை யவர்

    குத்தங் கொறைய இடிச்சுக்காட்டி புத்தி சொல்லுத பெரியவங்கள தொணையா வச்சிருக்கவன கெடுக்கதுக்கும் ஆள் இருக்குமா என்ன?

    குறள் 448:

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்

    குத்தங்கொறைய சொல்லிக்காட்டி காவலா இருக்க பெரியவங்க இல்லாத ராசா, பகையாளி இல்லன்னாலும் தானா அழிஞ்சு போவான்.

    குறள் 449:

    முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
    சார்பிலார்க் கில்லை நிலை

    முதல் போடாம வியாபாரம் செய்யுதவனுக்கு அதுலேந்து வார லாபம் கெடைக்காது. அது கணக்கா தான் பெரியவங்க தொணையில்லாத ராசாவுக்கும் அவகளால வருத பயனப் பெற ஏலாது.

    குறள் 450:

    பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
    நல்லார் தொடர்கை விடல்

    நல்லவங்க கிட்ட ஒட்டுதலில்லாம இருக்கது, பல பேரோட பகையினால வெளையுத தீமய விட பத்து மடங்கு தீமய கொடுக்கும்.

    (அடுத்தாப்லயும் வரும்…..)

    Share
  • (Peer Reviewed) சு.வேணுகோபாலின் ‘ஒரு துளி துயரம்’ சிறுகதை –  எடுத்துரைப்பு முறைகள்

    (Peer Reviewed) சு.வேணுகோபாலின் ‘ஒரு துளி துயரம்’ சிறுகதை –  எடுத்துரைப்பு முறைகள்

    ப.சுடலைமணி
    உதவிப் பேராசிரியர்,
    தமிழ்த் துறை,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
    பொள்ளாச்சி – 642 107
    மின்னஞ்சல்: sudalaimani77@gmail.com

    சு. வேணுகோபாலின் ‘ஒரு துளி துயரம்’ சிறுகதை –  எடுத்துரைப்பு முறைகள்

    புனைகதை எழுத்தாளர்கள் தங்களிடம் அதிக இணக்கம் கொண்ட மொழியைக் கருவியாகப் பயன்படுத்தி, தாங்கள் கண்ட மனிதர்களின் உலகினை மறுவுருவாக்கம் செய்வதில் பெரும் வெற்றியடைகின்றனர். இந்த வெற்றியை அடையும் படைப்பாளர்களின் படைப்புகளும் வாசகர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்படுகின்றன. படைப்பின் வழியாக வாழ்க்கையைப் பதிவு செய்யப் பிரத்யேகமான மொழியைக் கொண்ட எடுத்துரைப்பு முறைகளை அடையாளம் காண வேண்டிய அவசியம் படைப்பாளனுக்கு ஏற்படுகின்றது. அறிவார்ந்த வாசகனிடம் தன்னுடைய படைப்புகளைக் கொண்டு சேர்க்க புதுமையான எடுத்துரைப்பு முறைகளைப் பயன்படுத்தி வெற்றியடைய வேண்டிய நிர்பந்தம் படைப்பாளனுக்கு ஏற்படுகிறது.

    புதுமையான எடுத்துரைப்பின் வழி கதை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க மொழியை முழுமையாக தன் ஆளுமைக்குள் கொண்டுவர வேண்டும். சின்னச் சின்ன நிகழ்ச்சிகளை இணைத்துத் தொடர்ச்சியான ஒழுங்குமுறைக்குள் கதையினை அமைக்க வேண்டும். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் படைப்பாளன், அதனைப் படிக்கும் வாசகனிடமும் நிகழ்ச்சியின் இணைவு முறைகளைத் தெளிவாகப் புலப்படுத்த வேண்டும்.

    புனைகதையினை எடுத்துரைப்பதற்கு நிகழ்ச்சிகளை இணைத்து ஓர் அமைப்பாக மாற்றுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். நிகழ்ச்சிகளை இணைப்பதன் மூலம் சிறந்த கதையினைக் கட்டமைத்து விடலாம். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதற்கு  எடுத்துரைப்பியலில் சில விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. விதிமுறைகளின்படி நிகழ்ச்சிகளைக் காலம் சார்ந்தும், காரண காரியம் சார்ந்தும் ஒருங்கிணைக்கலாம். சு.வேணுகோபாலின் ‘ஒரு துளி துயரம்’ என்ற சிறுகதையில் எடுத்துரைப்புத் தொடரொழுங்கு முறைகளின் கட்டமைப்புகளை இக்கட்டுரையில் ஆராயலாம்.

    ‘செத்துப் போ… செத்துப் போ… என்று வழி முழுக்கத் திட்டிக்கொண்டே வந்தார் அப்பா’ என்ற ஒரு வரியில் அமைந்த எடுத்துரைப்பிலிருந்து சு.வேணுகோபால் கதையினைத் தொடங்குகிறார். கதையின் தொடக்க வாக்கியத்தைப் படிக்கும் போது, இந்த மொழி, யாருடைய குரல், யாரைத் திட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற கேள்வி வாசகனிடம் எழுகிறது. இந்த வரியின் மூலமாக கதையினைத் தொடர்ந்து படிப்பதற்கான ஆர்வத்தினை முதலில் ஏற்படுத்திவிடுகிறார். கதை நிகழ்ச்சிகளை எடுத்துரைப்பதற்கான முன்னோட்டமாக இந்த வரியை அழுத்தம் கொடுத்து அமைத்துள்ளார்.

    ‘விமலா, அவரது பேச்சுக்குப் பதில் சொல்லும் உத்தேசத்தில்லை. காலையில் ரயில் ஏறியதிலிருந்து அப்பா துப்புகிறாற்போல் விதவிதமான வார்த்தைகளில் திட்டுகிறார்.’ இந்த எடுத்துரைப்பைப் படித்தவுடன், விமலாவை எதற்காக அவளின் அப்பா திட்டுகிறார் என்ற கேள்வி எழுகிறது. அதே நேரத்தில் விமலா என்ற பாத்திரத்தின் அறிமுகமும் நடந்துவிடுகிறது. இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து நிகழ்ந்துவிடுகின்றன.

    1. விமலா தன்னுடைய தந்தையுடன் பயணித்தல்
    2. விமலாவின் தந்தை விமலாவைத் தொடர்ச்சியாகத் திட்டுதல்

    இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் இணையும் இடத்தில் கதைக்கான கச்சாப்பொருள் மறைந்து மையம் கொள்ள இருப்பதை வாசகன் ஓரளவு தன்னுடைய பொதுப்புத்தி கொண்டு புரிந்துகொள்வான். இந்த இடத்தில் எந்தவிதமான தொடரொழுங்கும் இல்லை. ஆனால் கதையினைத் தொடங்கிப் பனுவலாக உருமாற்றம் செய்ய ஏதேனும் ஒரு காரண காரியத்தினைக் கதைசொல்லி ஏற்படுத்த வேண்டும் என்பதனை வாசக மனம் இயல்பாகவே விரும்புகிறது. வாசகன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த இடத்தில் காரண காரியத்துடன் நிகழ்ச்சிகளை அமைக்கக் கதைசொல்லி முடிவு செய்துவிட்டதை அறிய முடிகின்றது.

    இரயிலில் பயணம் செய்யும் விமலா அப்பாவின் பேச்சுக்குப் பதில் கூறாமல் அமைதியாக இருக்கிறாள். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் விமலா கண்மூடிச் சாய்கிறாள். மெதுவாகத் தன் வாழ்க்கையில் நடந்து முடிந்த பழைய நிகழ்வுகளை மனத் திரையில் ஓடவிடுகிறாள். விமலாவின் எண்ண ஓட்டங்களை எடுத்துரைப்புடன் ஊடு இழையாக இணைத்துக் கதை கூறுகின்றார்.

    விமலாவின் எண்ண ஓட்டங்களைக் கதையாக அமைத்துள்ள வேணுகோபால், விமலாவைத் தன்மைக் கூற்று முறையிலேயே கதை கூற வைத்துள்ளார். விமலா கதைசொல்லியாக இந்த இடத்தில் இருந்தாலும் இடை இடையே கதைசொல்லியும்   கதை கூறுகின்றார். விமலாவை முழுவதுமாகப் படர்க்கையில் வைத்துக் கதை கூறுவதைத் தவிர்த்துள்ளார். விமலா கதைசொல்லியாகச் செயல்படும் பனுவல் பகுதிகளை மிகவும் நுட்பமாக அமைத்துள்ளார்.

    1. விமலாவை ராஜேந்திரன் பெண் பார்த்தல்
    2. விமலா ராஜேந்திரன் திருமணம் நடைபெறுதல்
    3. முதல் இரவு உரையாடல்கள்
    4. திருமண மொய்ப்பணத்தை கிருஷ்ணன் அபகரித்தல்
    5. ராஜேந்திரனின் மனப்பிறழ்வு.

    மேற்கண்ட ஐந்து நிகழ்ச்சிகளையும் விமலாவின் மூலமாக காட்சிப்படுத்திவிடுகின்றார். ஐந்து நிகழ்ச்சிகளும் காரண காரியம் சார்ந்தும் இணைந்தும் காணப்படுகின்றன. விமலாவின் பார்வைக் கோணத்தில் கதை நிகழ்ச்சிகள் வாசகனுக்குக் குவிமையப்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நிகழ்ச்சிகளுக்கும் காலம் சார்ந்த தொடரொழுங்கும் அமைந்து இருப்பதைக் காண முடிகின்றது. கதையில் இதுவரை இடம் பெற்றுள்ள நிகழ்ச்சிகளை எந்தக் கோணத்தில் உற்று நோக்கினாலும், விமலாவை அவளது அப்பா திட்டியதற்கான காரணம் புலப்படவில்லை. விமலாவின் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. விமலாவின் அப்பாவிற்கு விமலா மீது ஏற்பட்ட கோபத்திற்கான காரணம் எங்கும் இல்லை. கோபத்திற்கான காரணம் எந்த இடத்தில் கதையின் இயங்குதளத்தில் இணைக்கப்படும் என்பதையும் முன்னதாக அறிய முடியவில்லை.

    கதை நிகழ்வுகள் அனைத்தும் காரண காரியத் தொடரொழுங்கு இழையால் சேர்த்து இணைக்கப்பட்டிருந்தாலும் கதைக்கான மையத்தை ஐந்து நிகழ்ச்சிகளை மட்டுமே கொண்டு அவதானிக்க முடியவில்லை. ‘காலம் சார்ந்தும், காரண காரியம் சார்ந்தும் சிந்தித்துப் பழக்கப்பட்டுப்போன மனித மூளை, நிகழ்ச்சிகளை இணைத்துக் கதையாக வளர்த்தெடுத்துக்கொள்கிறது. அதே நேரத்தில் எல்லாவற்றிற்கும் காரண காரியக் கோட்பாட்டைப் பயன்படுத்தும் போது கதையில் பிரச்சினை எழுவதற்கு வழியில்லாமல் போய்விடும். ஆனால் உண்மையில் பனுவலின் உயிரே பிரச்சினையில் தான் மையம் கொண்டிருக்கிறது.’ என்ற பஞ்சாங்கத்தின் கூற்றினை முன்வைத்து கதையை ஆராயும் போது சில உண்மைகள் வெளிப்படுகின்றன.

    கதையின் முரண், விமலாவின் எடுத்துரைப்பைத் தாண்டி வேறு எங்கோ மையம் கொண்டுள்ளது. இந்தப் பனுவலில் ராஜேந்திரன் தற்கொலை செய்துகொள்வதுதான் மைய நிகழ்ச்சி போன்று புனையப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்த நிகழ்ச்சியானது விமலாவின் எண்ணவோட்டத்தின் மூலமாகக் கூறப்படவில்லை. விமலாவின் எடுத்துரைப்பை ஓர் இடத்தில் யதார்த்தமாக முடிவுக்குக் கொண்டு வருகிறார். கதையின் உண்மையான பிரச்சினையை வாசகனுக்குக் கடத்தும் பணியைக் கதைசொல்லி ஏற்கிறார். விமலாவின் கதைசொல்லிப் பணியைத் தக்க இடத்தில் பறித்துவிடுகிறார்.

    பனுவலின்படி, மிகச் சரியாகக் கூறுவதென்றால் ராஜேந்திரன், கிருஷ்ணனிடம் கடன் வாங்கிய செய்தியையும், அதற்காகத் திருமண மொய்ப்பணத்தை கிருஷ்ணன் அபகரித்துக்கொண்ட செய்தியையும் விமலா வாசகனுக்குப் புரியும் வண்ணம் கூறிவிடுகிறாள். இத்துடன் விமலாவின் எடுத்துரைத்தல் பணி நிறைவடைந்துவிடுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் எளிமையான தொடரொழுங்கு முறையில் இணைத்தும் விடுகின்றார். ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்டதைக் கதைசொல்லி எடுத்துரைத்துவிடுகின்றார்.

    விமலாவைத் தொடர்ந்து கதைசொல்லி, கதையின் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கதை அமைப்புடன் இணைக்கிறார்.

    1. கிணறு வெட்ட கிருஷ்ணனிடம் ராஜேந்திரன் கடன் வாங்குதல்.
    2. வாங்கிய கடன் பணத்திற்கு வட்டி கட்டியது
    3. ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்டது.
    4. ஊரார் விமலாவைத் தூற்றியது.

    மேற்கண்ட நான்கு நிகழ்ச்சிகளையும் ஓர் அமைப்புக்குள் கொண்டுவருகிறார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கதைசொல்லி தன்னுடைய கூற்று மூலம் எடுத்துரைக்கிறார். வேணுகோபால் கதைசொல்லியாக இருந்து கதையைக் கூறிச் சென்றாலும் ராஜேந்திரனையும் இடையில் பேச வைக்கிறார். ஒரே நேரத்தில் கதைசொல்லியும் ராஜேந்திரனும் மாறி மாறிக் கதையினை வளர்த்துச் செல்கின்றனர். இருவரும் கதைசொல்லியாக இருந்து ஒழுங்கு முறைக்குள் கதையினை நிகழ்ச்சிகளாக நிரல்படுத்துகின்றனர்.

    ‘ஒரு வார்த்த அவன் என்னய கேட்டுட்டு பணத்த எடுத்துருக்கக் கூடாதா…? பிடித்திருந்த விமலாவின் கைகளில் கண்ணீர்த்துளி சொட்டியது. பலப்பல சமாதானங்கள் சொல்லிப் படுக்க வைத்தாள்.’

    மேற்கண்ட ஒரே எடுத்துரைப்பில் ராஜேந்திரனும் கதைசொல்லியும் ஒன்றாகப் பேசுகிறார்கள். இந்த நிகழ்ச்சியைப் படிக்கும் வாசகன் கண்டிப்பாக ராஜேந்திரனுக்கு நிகழ இருக்கும் ஏதேனும் ஒரு சம்பவத்தைத் தன்னுடைய மனத்தில் கதையாக இணைக்க முயல்வான். இந்த இடத்தில் கதை ஆசிரியரின் எடுத்துரைப்பு, மையம் கொள்வதை உணரலாம்.

    ‘அதிகாலையில் அலறல் கேட்டு விமலா முழித்தாள். கட்டிலில் ராஜேந்திரன் இல்லை. சேலையைச் சரிசெய்து கொண்டு லவக் லவக்கென்று குறுகி நிமிர்ந்து ஓடிவரும் போது, ராஜேந்திரனின் உடலைத் தூக்கிக் கொண்டு வராந்தாவிற்கு ஓடினார்கள். உப்போடு சோப்பையும் நீரில் கரைத்து வாயில் ஊற்றினார்கள். வாந்தி வரவில்லை. அவர்கள் கையிலிருந்து நழுவி உடல் விழுந்தது.’

    ராஜேந்திரனின் புலம்பலைத் தொடர்ந்து அவனது தற்கொலையும் நிகழ்ந்ததாக கதைசொல்லி இணைக்கிறார். ஆனால் இதனோடு கதை நிறைவடையவில்லை. ராஜேந்திரனின் இறப்பிற்காக விமலாவின் தந்தை அவளைத் திட்டவில்லை. இதனையும் தாண்டி ஏதோ ஒரு முக்கியமான நிகழ்வு, காரண காரிய அடிப்படையில் இணைந்துள்ளதை வாசகன் புரிந்துகொள்வான். அந்த நிகழ்வினையும் கதைசொல்லி கட்டமைக்கிறார்.

    1. விமலாவை அப்பா திட்டுதல்
    2. ராஜேந்திரன் தற்கொலை செய்துகொள்ளல்
    3. விமலா, ராஜேந்திரனின் கடனை அடைத்தல்.

    கதையின் தொடக்கத்தில் இரயில் பயணத்தின் போது விமலாவின் அப்பா விமலாவைத் திட்டிக்கொண்டு வருகிறார். இதனைப் படிக்கும் வாசகன், கதையின் நீட்சியாக இடம் பெற்ற ராஜேந்திரனின் தற்கொலை நிகழ்வைப் படிக்கும் போது திட்டுதலுக்கான காரணத்தை நேரடியாக பொருள் விளங்கிக்கொள்ள முயல்வான். அதாவது விமலாவின் விதவைக் கோலத்தை மனத்தில் வைத்துக்கொண்டுதான் விமலாவின் அப்பா திட்டுவதாகக் கற்பிதம் செய்வான். ஆனால் இந்த இடத்தில் காரண காரியத் தொடர்பு என்பது பிரச்சினைக்கு உரியதாக அமைந்துள்ளது. இதனையே கதைசொல்லி, வாசகனைத் திசை திரும்பும் எடுத்துரைப்பாக அமைத்து வெற்றியடைந்துள்ளார்.

    ‘விமலா கூடையில் சுருட்டி வைத்திருந்த மஞ்சள் பையை எடுத்தாள். பிரிக்காத ஐம்பது ரூபாய்க் கட்டை நீட்டினாள். அவன் பார்த்தான்.’

    ‘அவர் பாக்கி தராமலே செத்திட்டாரில்ல? அதுக்குத்தான்.’

    ‘அப்ப கடன வசூல் பண்ணத்தான் இந்தக் கல்யாணத்தில் அக்கறை காட்டுறது மாதிரி பாவலா பண்ணுனீங்களா? நீங்க உலகத்தில் இந்த மனுஷன்கிட்டயாவது முழு நம்பிக்கை வைக்கலையேன்னுதான்’ கொண்டு வந்தேன்.’

    இந்த எடுத்துரைப்புகளின் வாயிலாக விமலா தன்னுடைய கணவன் இறந்த பிறகு, கிருஷ்ணனிடம் கடன் பணத்தை ஒப்படைத்தாள் என்பதை அறிய முடிகிறது. விமலாவின் அப்பா, விமலாவைத் திட்டுவதற்கு உச்சக்கட்டமாக ‘செத்துப் போ…’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதையும் வாசகனால் அறிய முடியும். அப்பாவின் பேச்சால் விமலாவை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்கான காரணத்தையும் கதையின் இறுதியில் கதைசொல்லி கூறிவிடுகின்றார்.

    ‘உண்மையாக என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா? என்று முதலிரவில் கேட்ட போது, உன்னை மட்டுமில்ல, உன் குழந்தைக் காலும் பிடிச்சிருக்கு என்று சவலையாகத் தொங்கும் பாதத்தில் இட்டாரே ஒரு முத்தம். அதுதானா இவ்வளவுக்கும் காரணம்? பின் ஏதோ ஒன்று பிரவாகமாக இறங்கி, என்னை உருக்கிய அபூர்வ கணம்…’

    விமலாவின் வார்த்தைகளாக அமைந்த எடுத்துரைப்பில் தன்னுடைய கணவனின் கடனை அடைக்கக் காரணமான செய்தியும் வாசகனை இறுதியாக எட்டிவிடுகின்றது. தன்னுடைய உடல் ஊனத்தைப் பொருட்படுத்தாமல் ராஜேந்திரன் தன்னை மனைவியாக ஏற்றுக்கொண்ட செயல் விமலாவை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. ராஜேந்திரனுடன் குறைந்த நாள்கள் வாழ்ந்தாலும் அது நிறைவான வாழ்க்கையாக அமைந்ததாகக் கருதுகிறாள். இதனால் கணவன் இறந்தாலும் அவன் பட்ட கடனை அடைக்கப்  போராடுகிறாள். இந்தச் செயலால் தன்னுடைய அப்பாவின் தீராத கோபத்திற்கும் ஆளாகிறாள். விமலாவின் செயல்பாடுகள் அனைத்தும் காரண காரியத்துடன் நிகழ்வதை வாசகன் கண்டறியும் வண்ணம் அமைந்துள்ளன.

    கதைசொல்லியின் கூற்றாக அமைந்த எடுத்துரைப்பின் இடையிடையே நிகழ்ச்சிகளைப் பாத்திரங்களின் உரையாடல் மூலமாகவும் காட்சிப்படுத்துகிறார். இதில் குறிப்பாக கிருஷ்ணனை ராஜேந்திரன் நேரிடையாகச் சந்திக்கும் காட்சியைக் கூறலாம். இருவரும் சந்தித்துக்கொள்ளும் காட்சியைத் தொடங்கி வைத்துவிட்டு கதைசொல்லி விலகி நின்று வேடிக்கை பார்க்கிறார்.

    ‘சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான்’

    ராஜேந்திரன் கிருஷ்ணனைச் சந்திக்கக் கிளம்பினான் என்ற அளவில் கதைசொல்லியின் எடுத்துரைப்பு முடிவடைந்துள்ளது. இருவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சியைப் பாத்திரங்கள் வாயிலாகவே கட்டமைத்துள்ளார்.

    ‘நாந் தரமாட்டேனா? அப்படி நெனச்சிருந்தா மொய்யெழுத உங்கிட்ட ஒப்படச்சிருப்பேனா?’

    ‘இப்ப வாங்காம நா எப்ப கலெக்ஷன் பண்ண முடியும்? ரெண்டு மாசம் வட்டி சரியா
    வரலை’

    ‘ஒவ்வொரு வாட்டியும் வெள்ளாமயில தர்றேன்னுதான் சொல்றே! எனக்கு இதவிட்டா கை சேராது’

    இவ்வாறு பாத்திரங்களை உரையாடச் செய்து கதையின் நிகழ்ச்சிகளை இணைத்துவிடுகின்றார். மொய்ப்பணம் கிருஷ்ணனால் அபகரிக்கப்பட்ட நிகழ்ச்சியை உரையாடல் மூலமாக கதையின் இயங்குதளக் கட்டமைப்பு ஒழுங்குக்குள் கொண்டு வந்துவிடுகின்றார்.

    ராஜேந்திரனின் பிரச்சினையையும் உரையாடல் மூலமாக அமைத்துள்ளார். ராஜேந்திரனுடன் விமலாவைப் பேச வைத்து ஒரு காட்சியை அமைத்துவிடுகிறார். விமலா கேட்ட கேள்விகளுக்கு ராஜேந்திரன் ஓரிரு வார்த்தைகளில் பதில் கூறி, தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்துகிறான்.

    ‘உடம்புக்கு என்ன?’
    ‘ஒண்ணுமில்ல’
    ‘பின்னென்ன இந்தப் பக்கமே காணோம்?’
    ‘சும்மாதான்’
    ‘……………’
    நீண்ட நேரம் பேசாதிருந்தவன் எழுந்து உட்கார்ந்தான்
    ‘மொய்ப்பணத்தையெல்லாம் வச்சிக்கிட்டு தர மாட்டங்கிறான்’
    ‘யாரு?’
    ‘கிருஷ்ணா’

    மிகவும் குறைவான வார்த்தைகளைக் கொண்டே உரையாடல்களை உருவாக்கியுள்ளார். ஆனால் உரையாடலில் ராஜேந்திரனின் உளவியல் பாதிப்பை முழுமையாக வாசகனுக்கு எடுத்துரைத்து விடுகிறார். சிறுவயது முதல் கிருஷ்ணனிடம் நட்புப் பாராட்டி வந்துள்ளதை ராஜேந்திரனின் அமைதி பிரதிபலிக்கின்றது. தன்னுடைய நண்பன் பண விசயத்தில் தன்னை நம்ப மறுப்பது அவனை மிகவும் பாதிக்கிறது. கடன் தொல்லையால் திருமண வாழ்க்கையை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் திணறுகிறான்.

    ‘விமலாவின் கையைப் பற்றினான். பள்ளிக்கூடத்துக்குப் போகும் போது அவன் டிராக்டரில் ஏறுறேன்னு ஏறி, தவறி விழுந்து கால் முறிஞ்சிடுச்சு. செக்காலை முக்கிலிருந்து நான் ஒத்தாளாக அவனை உப்புக் குதிரை ஏத்தி வந்திருக்கேன் விமலா.’

    ராஜேந்திரன், விமலாவிடம் தன்னுடைய பால்ய கால நிகழ்ச்சிகளை வருத்தம் தொனிக்கக் கூறுவதாக அமைத்துள்ளார். இந்த எடுத்துரைப்பில் ராஜேந்திரனின் மன நெருக்கடி தெளிவாக வெளிப்படுகிறது. குறிப்பாக ராஜேந்திரனின் மனநிலையை அவனது குரல் மூலமாகவே பதிவு செய்துள்ளார். மேலும் கிருஷ்ணனின் பாத்திரம் குவிமையப்படுத்தப்படும் இடமும் இதுவாகும். இருவருக்குமான இளமைக் கால நிகழ்வுகள், பனுவலுக்கு அந்நியமானவை ஆகும். ஆனால் இதன் மூலம் விமலாவிடம் கிருஷ்ணனின் பிம்பம் அழுத்தமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளது. வாசகனின் கவனமும் கிருஷ்ணனின் மீது விழுகின்றது.

    ராஜேந்திரன் கூறும் பால்ய காலக் காட்சிகள், ஓரிரு சொற்களில் இடம் பெற்றிருந்தாலும் இது இடைப்பனுவலாகவே அடையாளம் காணப்படுகின்றது. கிருஷ்ணன் எதிர்முனைப் பாத்திரமாக சித்திரிக்கப்பட்டுள்ளதால் இடைப்பனுவல் தாக்கம் பெற்றுள்ளதை அறிய முடிகின்றது. கிருஷ்ணனிடம் ராஜேந்திரன் ஏமாந்து போனதற்கான காரணம், சிறுவயது முதல் இருவருக்கும் இடையில் இருக்கும் ஆழ்ந்த நட்பே என்பதைக் காரண காரியம் கொண்டு இணைத்துள்ளார்.

    கதையின் இறுதிக் காட்சிகள், விமலாவும் கிருஷ்ணனும் உரையாடுவது போல அமைக்கப்பட்டுள்ளன. அச்சூழலில் அப்பா மௌனமாக மட்டும் இருக்கிறார்.

    ‘என் ஏழாம் நாள் ராத்திரியில் என் கையைப் பிடிச்சு கதறினான். அதுக்கு…’

    ‘கடன வாங்கிட்டு இழுத்தடுச்சா முடியுமா?’

    ‘வச்சுப் பொழைக்க முடியலையன்னா… ஏதோ சொல்ல வந்தவன், ‘இதென்ன வம்பாய் போச்சு! வாங்குனவன் நாலு பேரு ஓடிப் போயிட்டா என்னாகுறது? பாவ புண்ணியம் பார்த்தா நா போண்டியாக வேண்டியதுதான்’ என்றான்.’

    ராஜேந்திரனின் கடனை விமலா அடைக்கிறாள். கடன் தொகையைக் கிருஷ்ணனிடம் கொடுப்பதற்காக அப்பாவுடன் பயணத்தைத் தொடர்ந்தாள். பயணத்திற்கான காரணம், கதையின் தொடக்கத்தில் இல்லை. கிருஷ்ணனுடன் விமலா பேசும் இடத்தில் பயணத்திற்கான காரணம் துலக்கம் அடைகிறது. இந்த உரையாடல் நிகழ்ச்சிகளைக் கதையின் இறுதிப் பகுதியில் அமைத்துள்ளார். விமலாவின் அப்பா திட்டுவதும், கடன் தொகையை விமலா கிருஷ்ணனிடம் ஒப்படைத்த நிகழ்வும் பனுவலின் இயங்குதளத்தில் பெரிய இடைவெளிவிட்டு இணைக்கப்பட்டுள்ளன. இதனை எடுத்துரைப்பின் நவீன அணுகுமுறையாகக் கருத இடம் உள்ளது. இந்த அணுகுமுறை, வாசகனின் வாசிப்புக்கு சற்று நெருக்கடியைக் கொடுக்கும் விதத்திலும் அமைந்துள்ளது.

    சிறுகதை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க வெளி (அல்லது) இடம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கதையின் இயங்குவெளி கதைசொல்லியால் நிர்ணயிக்கப்படுகிறது. வரையறுக்கப்பட்ட வெளிக்குள் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கதையின் இயங்கு தளத்துடன் ஓர் இழையில் பிணைக்கப்படுகின்றன. ‘ஒரு துளி துயரம்’ கதையில் கதை நிகழ்வு நடைபெறும் வெளியில் இரண்டு துணைமை நிகழ்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    1. ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்ட பிறகு, இழவு வீட்டில் நடைபெறும் நிகழ்வு.
    2. கிருஷ்ணனின் அலுவலகத்திற்கு மதுப்புட்டியுடன் இளைஞன் செல்லுதல்.

    சிறுகதையின் எடுத்துரைப்பு நிகழும் வெளியில் நிகழ்காலத்தில் மேற்கண்ட நிகழ்வுகள் கதைசொல்லியின் கூற்றின் இடையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இழவு வீட்டில் அடையாளம் காண முடியாத பாத்திரங்களைப் பேச வைத்து, ராஜேந்திரனின் இறப்பிற்கான வெவ்வேறு காரணங்களை வாசகனிடத்தில் சேர்க்கிறார். இதன் மூலம் வாசகனின் கவனம் சிதறடிக்கப்படுகிறது..

    ‘எமனா வந்திருக்காளே, நொண்டி அவுசாரி…’

    ‘எவங் கூடப்படுத்தாளோ, ரோசக்கார பையன் கேள்விப்படாமயா இப்படி முடிவெடுப்பான்!’

    இந்தக் கூற்றுகள், இழவு வீட்டில் அடையாளம் தெரியாத குரல்களாக வெளிப்படுகின்றன. இதற்கு விமலாவும் பதில் கூறவில்லை. அமைதியாக இருந்து ராஜேந்திரனின் தற்கொலைக்கான காரணத்தைப் பகிரங்கப்படுத்தாமல் தனக்குள் பாதுகாக்கிறாள். ஆகையால் இந்த எடுத்துரைப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. கணவன் தற்கொலை செய்துகொண்டாலும் அவன் மீது தனக்கு இருக்கும் அதீத அன்பினை அமைதியாக இருந்து வெளிப்படுத்துகிறார்.

    ‘பதிலை எதிர்பார்க்காமல் சுவரைப் பிடித்து, படியிறங்கினாள். கையில் பிராந்தி புட்டியோடு மேலேறி வந்த இளைஞன் இவர்களைப் பார்த்தும் சற்று ஒளித்து விலகினான்’

    கதையின் வெளிக்குள் நடைபெறும் இந்தக் காட்சியை விமலா பார்ப்பதாகப் படம் பிடித்துள்ளார். இதற்கான பின்புலத்தை வாசகன் அவதானிக்கும் முறையில் அமைத்துள்ளார். கிருஷ்ணனின் வாழ்க்கை, கோலாகலமான கொண்டாட்டங்களால் நிரம்பியது. ராஜேந்திரனின் இறப்பு, அவனை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. கிருஷ்ணனின் பாத்திர வடிவமைப்பு எந்த வகைமாதிரிக்குள் வரும் என்பதையும் கதையின் போக்கிலேயே இணைத்துக் காட்டுகிறார். விமலா, கிருஷ்ணனைச் சந்தித்துப் பணத்தைக் கொடுக்க வந்த நோக்கம் நிறைவேறாது என்பதை இந்தக் காட்சி புலப்படுத்திவிடுகிறது. விமலா கிருஷ்ணனிடம் பணத்தைக் கொடுக்கும் போது அவன் மன்னிப்புக் கேட்பான் என்று நினைத்து வந்தாள். ஆனால் அவன் பணத்தைப் பெற்றுக்கொண்டு எந்தவித பாவனையும் இன்றி இருந்தான். ராஜேந்திரனின் மரணத்திற்கான குற்ற உணர்ச்சி எதுவும் அவனிடம் இல்லை.

    ‘ஒரு துளி துயரம்’ கதையைப் படித்த பிறகு வாசகன் மனத்தில் பதிந்த காட்சிகளைக் கீழ்க்கண்டவாறு நிரல்படுத்தலாம்.

    1. ராஜேந்திரன் விமலா திருமணம்
    2. மொய்ப்பணம் அபகரிக்கப்படுதல்
    3. ராஜேந்திரனின் மனப்பிறழ்வு
    4. ராஜேந்திரன் தற்கொலை செய்துகொள்ளல்
    5. விமலா விதவை ஆதல்
    6. ராஜேந்திரனின் கடனை விமலா அடைத்தல்
    7. விமலா தன்னுடைய தந்தையிடம் திட்டு வாங்குதல்

    இந்த நிகழ்ச்சிகளைக் கதையின் கட்டமைப்பு தளத்திற்குள் கொண்டு வந்த வாசகன், தன்னுடைய அறிவு கொண்டு இணைத்துக் கதையினை முழுவதும் விளங்கிக் கொள்கிறான். படைப்பினை விளங்கிக்கொள்ள வாசகனுக்கும் படைப்பாளிக்கும் ஒரு புரிதல் நிகழ வேண்டும். ‘எடுத்துரைப்பு என்பது மொழி வழியாக நிகழும் தகவல் தொடர்பு முறையியல் ஆகும். இதில் சொல்பவர் கேட்பவர், எழுதுபவர் படிப்பவர் எனும் முனைகள் அமைந்திருக்கின்றன. இந்த இரு முனைகளும் மொழி எனும் ஊடகத்தால் தொடர்புபடுத்தப்படுகின்றன’ என்ற கே. பழனிவேலுவின் கூற்று இங்கு முக்கியமானதாக அமைகின்றது. பனுவலைப் படித்த வாசகன், கதையின் கட்டமைப்பினைக் காரண காரியத் தொடரொழுங்கு மூலம் கால வரிசைப்படி அமைத்துக் கண்டடைகிறான்.

    ஒரு துளி துயரம் கதையின் நிகழ்ச்சிகள் நேர்க்கோட்டு முறையில் இணைக்கப்படவில்லை. ஆயினும் வாசகன் கலைத்துப் போட்ட சீட்டுக் கட்டுகளில் இருந்து சீட்டினை எடுத்து நிரல்படுத்தி ரம்மி சேர்ப்பதைப் போன்று, நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கதையின் இயங்குதளத்தைக் கண்டடைகிறான். கதைசொல்லியின் எடுத்துரைப்புகள் அனைத்தும் இங்கே முழுமையாக வெற்றியடைந்துள்ளன.

    விமலா, தன்னுடைய தந்தையிடம் திட்டு வாங்குவதில் தொடங்கும் கதை பல்வேறு நிகழ்ச்சிகளை இணைத்துக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் காரண காரியத் தொடரொழுங்கு மூலம் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதை வாசகனால் அடையாளம் காண முடிகின்றது. ஆயினும் இந்த ஒழுங்குகள் அனைத்தும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை அல்ல. கதையின் எடுத்துரைப்பு ஓட்டத்தில் இயல்பாகவே அமைந்தவையாகும். கதை நிகழ்ச்சிகள் நேர்க்கோட்டு வரிசையில் இணைக்கப்படவில்லை. இருப்பினும் கதையின் சாராம்சத்தை வாசகனுக்குக் கொண்டு சேர்த்ததில் வெற்றியடைந்துள்ளார்.

    ஒரே பனுவலில் நிகழ்ச்சிகளை எடுத்துரைத்து நிரல்படுத்தும் பணியைப் பலரும் செய்கின்றனர். ஆசிரியர் கதைசொல்லியாக இருந்து சில நிகழ்ச்சிகளை எடுத்துரைத்துள்ளார். கதையில் இடம் பெற்றுள்ள பாத்திரங்களான விமலா, ராஜேந்திரன், கிருஷ்ணன் போன்றவர்களும் கூட கதை நிகழ்ச்சிகளை உருவாக்கி, கதையின் அமைப்பினைக் கட்டமைத்துள்ளனர். கதையின் எடுத்துரைப்புத் தொடரொழுங்கு முறைகள் எந்தவிதமான முன்வரைவுத் திட்டமுமின்றி கதையின் போக்கிலேயே சீராக இணைந்துள்ளதைக் காண முடிகின்றது.

    கதையின் எடுத்துரைப்பானது ஒரு விதமான துள்ளல் முறையில் அமைந்துள்ளது. ஒரு நிகழ்ச்சி நடைபெறும் வெளியில் வாசகனை நிறுத்திவிட்டு, திடீரென்று வேறு இடத்திற்கு வாசகனை அழைத்துச் செல்கிறார். வாசகனை அறிவார்ந்தவனாக நினைத்து இந்தச் செயலைச் செய்கிறார். வேறு கோணத்தில் பார்த்தால் முதல் நிகழ்ச்சிக்கான எடுத்துரைப்பு விவரிப்புகள் போதும் என்ற அளவில் அடுத்த நிகழ்ச்சிக்கு அனிச்சையாக கடந்து விடுவதாகவும் முடிவு செய்யலாம். எளிமையான கதையாக இருந்தாலும் எடுத்துரைப்பு ஒழுங்கமைவுகள் சிக்கலானதாக இருக்கின்றன.

    கதையினைப் படிக்கும் சாமானிய வாசகன், கதையினை எளிதில் அடையாளம் கண்டுவிடுவான். ஆனால் கதையின் இயங்கு தளத்தைச் சற்று சிரமப்பட்டுதான் அவதானிப்பான். ஆழ்ந்த வாசிப்பு அனுபவம் கொண்ட அறிவார்ந்த வாசகன் கதையின் இயங்குதளத்தைக் கண்டடைந்து, அதனுடன் பயணிக்கக் காரண காரியத் தொடரொழுங்கு அமைப்புகளை நுட்பமாக கவனிக்க வேண்டும். வாசகன் தனக்கான புரிதல் முறையில் நிகழ்வுகளைத் தொகுத்து எடுத்துரைப்புகளைத் தொடர்புபடுத்தி, பிரச்சினையின் மையத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த இடத்தில்தான் ஒரு துளி துயரம் கதையின் எடுத்துரைப்பு வெற்றியடைகிறது.

    பார்வை நூல்கள்:

    1. நவீன கவிதையியல் எடுத்துரைப்பியல்- க. பஞ்சாங்கம்
    2. பனுவல் எடுத்துரைப்பு திறனாய்வியல் – பழனிவேலு
    3. ஒரு துளி துயரம் – சு. வேணுகோபால்

    ====================================================================
    ஆய்வறிஞர் கருத்துரை(Peer Review):

    கட்டுரையாளர் தனது பணியைச் செம்மையாகச் செய்திருக்கிறார். பின் நவீனப் போக்குகளில் எடுத்துரைப்பியல், பரவலாகப் பேசப்பட்டு வரும் ஆய்வு அணுகுமுறை. ஒரு துளி துயரம் கதையை முழுமையாக உள்வாங்கிய பாங்கு, ஆய்வில் ஆழமாக வெளிப்படுகிறது. கதைமாந்தர்களும் கதை நிகழ்வுகளும் ஆய்வில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. அதேபோல் கதாபாத்திரம் மொழியும் சொற்களின் மூலம் கதை சொல்லும் உத்தி, எடுத்துரைப்பியலோடு கூறி இருப்பது மேலும் சிறப்பு.
    ====================================================================

    Share
  • கலகம் பற்றிய கல்வெட்டு பதிவுகள்

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    கலகம் என்றால் சச்சரவு சண்டை எனப் பொருள். இதாவது, இருதரப்பார் நடுவில் நிகழும் பிணக்கு. இதன்போது ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் மீது அநியாயாமாக நடந்து கொள்வதும் நேரும். கல்வெட்களில் அது பற்றிய பதிவை கீழே காணலாம்.

    நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் திருத்துறைப்பூண்டி மூன்றாம் இராசராசன் 2 ஆம் ஆண்டு (1218 பொயு) 85 வரிக் கல்வெட்டு. இடங்கருதி எண்ணிற்கு பகரமாக சாய்வுக் கோடு இடப்பட்டுள்ளது.

    ஸ்வஸ்த்திசிரி திரிபுவனச் சக்கரவத்திகள் / சிரிராசராச தேவற்கு யாண்டு / இரண்டாவது ஆவ _ _ _ / இராசேந்திர வளநாட்டு உடையார் / திருத்துறைப்பூண்டி _ _ _ _ _ திருமடைவிளாகத்துக் கும்பிட்டிருக்கும் ஆண்டார்களில் / சிவஞானசம்பந்தரும் கிருதயதேவனும் / இவ்விருவோம் காசிக்ஹாவிக்குடி / ஆண்டார் திருச்சிற்றம்பலமுடைய / முதலியார் இத்திருத்துறைப் பூண்டியிலே / எழுந்தருளினவாறே இவரை கண்டு / பூண்டி உடையார்களுக்கும் மங்கலங்கி / ழையார்களும் எம்பெருமான் /  இத்திருப்பதியிலே எழுந்தருளி இருக்கவேணும் / இங்குத்தகைக்கு நாங்கள் ஒரு குகை எடுத்து / தருகிறோம் என்று சொல்லி பிச்சையும் / தங்கள் அகங்களிலே ஆக்கி படைத்து அமுது செய்துவார நீக்கச்சிதை பின்பு / எழுந்தருளி  இருக்க குகையும் எடுக்க வேண்டுகையில் /  வடகரையிலே பூண்டி உடையாருக்கு காணியான நிலத்திலே ஆற்றங்கரைக்கு / வடக்கே எழுபதி குழி நாயனாற்கு பரிவத்திச்ச / இக்குழிக்கு உடையார் ஸந்னிதிக்கு தெற்காக / பண்ணி சாதனமும் கொண்டு குகையும் எடுத்து / இவர் எழுந்தருளி இருந்து வாச்சே / இப்பூண்டி உடையாருக்கு முதலியார் இனக்கு /  பச்சைப்படைத்து வாரா நீக்க நீங்கள் உங்கள் / மடத்தில் வந்து தங்கின் தேசாந்திரி /  முதலிகள் அமுது செய்ய பெறாதே போக நில் என்று அருளிச் செய்தவாறே பின்பு / இப்பூண்டி உடையார் தங்கள் காணியாந தென்கரை / நிலத்து பாண்டியக்கல்லிலே மேற்க்கு இட்டு / மாவரை நிலம் விளைநிலமும் அரைமாநிலம் புஞ்சை / இந்நிலம் இரண்டு மாவும் தேசாந்திரிகளுக்குடலாக / இறையிலி செய்து குடுக்க இவ்வகையிலே / இதன் நிலம் அனுபோவித்து தேசாந்திரிகளுக்கு / அமுதுமாக்கி படைச்சி வைச்சதே பெரியதேவர்க்கு / இரண்டாவது நாளிலே குகையிடி கலகத்திலே இஸாதானங்கள் / அன்தாபமன் இதுக்கு பின்பு முதலியார் திருச்சிற்றம்பலம் / உடைய முதலியார் இருபத்துநாலாவது வரை / இப்படி அனுபவித்து வாச்சிதே இவர்களுக்கு இருபத்திநாலாவது / வரையிலே சிவலோகத்துக்கு எழுந்தருளினார் இம் / மடத்து முதலியார் சிவஞானசம்மந்தரும் முதலியார் கிருதயதேவரும் /  இரண்டு குகையிலும் எழுந்தருளி இருக்கையிலே / எழுந்தருளி இருந்தமை இப்படி அறிவேன் பூண்டி / உடையான் திருத்துறை நாயகன் இப்படிக்கு இவை என் எழுத்து /  இப்படி அறிவேன் நெடுமணலுடையான் ஆதிச்சதேவன் எழுத்து/  இப்படி அறிவேன் நெடுமணலுடையான் நம்பியாரு ஊரான் / எழுத்து இப்படி அறிவேன் மாதேவபட்டன் மகன் இருன்கிரிபட்டன் / எழுத்து இது பூண்டி உடையான் அஞ்சல் என்றாதுறையன் /  பிள்ளையாழ்வான் சயிஞாதனமைக்கும் இப்படிக்கும் /  இவை திருத்துறை நாயகவேளான் எழுத்து / இப்படி அறிவேன் இவை /  திருமாணிக்கப்பிள்ளை எழுத்து / இப்படிக்கு இவை இராபிச்சன் எழுத்து / இது தில்லைனாயபிச்சன் /   சதிசாதன்மைக்கும் / இப்படிக்கு /  இவை வேடம்பரம் உடையான் எழுத்து / இப்படி அறிவேன் / கங்கைகொண்ட பிச்சன் /  எழுத்து பூமி உடையான் /  அஞ்சல் என்றான் திருவாலவாய் /  உடையான் /  சஞாதன்மைக்கு இவை /  குடப்பலம் உடையான் எழுத்து /  இப்படி அறிவேன் /  நெடுமணல் உடையான் /  திருத்துறைநாயன் உடைய பிள்ளை / ஆண்டான் எழுத்து / இப்படி அறிவேன் மங்கலங்கிழையான் எழுத்து. / இப்படிக்கு இவை / நெடுமணலுடையான் ஆதிச்ச தேவன் எழுத்து / நெடுமணலுடையான் திருத்துறைபிச்சன் /  புலியூரந் சைச சாதனமைக்கு /  கடவக்குடையான் எழுத்து /  இப்படி அறிவேன் /  திருவீதிப்பிள்ளையார் எழுத்து /  இப்படி அறிவேன் / நம்பியார்யூரான் திருவீதி / பிள்ளை மகன் / தேவிமுன்டான் சைச்சாதனமைக்கு /  இவை சேந்த மங்கலமுடையான் எழுத்து.

    திருமடைவிளாகத்து – கோவிலைச் சுற்றி உள்ள இடம்; கும்பிட்டிருக்கும் ஆண்டார் – வணங்கிய அடியார், devotees; தகைக்கு – தங்குகை; குகை – முனிவர் இருப்பிடம், தவக்குடில்;  வாச்சே – வரச்சே, வருகையில்; முதலியார் – தலைவர், சுவாமிகள், மடாதிபதி; நீக்கச்சிதை –   ; தேசாந்திரி – ஊர் ஊராய் திரியும்; உடலாக – மூலமாக; இஸாதானங்கள் –  ; அன்தாபமன் –

    சோழவேந்தன் மூன்றாம் இராசராசனின் 2 ஆம் ஆட்சி ஆண்டில் (1218 பொ.யு) இராசேந்திர வளநாட்டு திருத்துறைப்பூண்டி இறைவர், “திருத்துறைப்பூண்டி கோவில் சுற்றிடத்தில் வாழ்ந்திருக்கும் அடியார்களில் திருஞானசம்பந்தனும் கிருதயதேனும் ஆகிய நாங்கள் இருவரும் காசிக்காவிக்குடி அடியார் திருச்சிற்றம்பலமுடைய  முதலியார் இத்திருத்துறைப் பூண்டியில் வந்துதங்கி இருக்கையில், இவரை நேரில் கண்டுப் பூண்டி உடையார்களும் மங்கலங்கிழையார்களும் ‘எம்பெருமான் இத்திருப்பதியிலே எழுந்தருளி இருக்கவேண்டும்’ என்று வேண்டி ‘இங்குத் தங்குகைக்கு நாங்கள் ஒரு தவக்குடில் எழுப்பித் தருகிறோம்’ என்று சொல்லி அவருக்கான பிச்சையையும் தங்கள் வீடுகளிலேயே ஆக்கி படைத்து உண்டுவித்துவர வடகரையில் பூண்டி உடையாருக்கு காணியான நிலத்தில் வினைக்கருவி கொண்டு குகையும் கட்டிஎழுப்பி அதில் இவர் எழுந்தருளி இருந்து வரும்நேரத்தே பூண்டி உடையார் ஊர் ஊராய் திரிபவர் உண்ண இறையிலி நிலம் ஒதுக்குகின்றார். அதில் இந்த தேசாந்திரிகளுக்கு சோறு ஆக்கிப் படைக்கப்படுகின்றது. இவ்வாறு நடந்து வர பெரியதேவர் இறப்பிற்கு இரண்டாவது நாளில் குகை இடிப்பு கலகம் நடந்தது. இடித்தவர் யார் என்ற குறிப்பு இல்லை. இதற்கு பின்பு திருச்சிற்றம்பலமுடைய முதலியார் 24 –ம் நாள் சிவலோக பதவி அடைந்தார். பின்பு முதலியார் சிவஞானசம்மந்தரும் முதலியார் கிருதயதேவரும் இரண்டு குகையில் எழுந்தருளி இருக்கையில் எழுந்தருளி இருந்தமையை அறிவேன் என்று 24 பேர் கையொப்பமிட்டு உள்ளனர்.

    தொடக்கத்தில் குறிப்பிடப்படும் பூண்டி உடையார் என்பவரே பெரியதேவன் என்று குறிக்கப்படுகின்றார். இவர் குகைஇடி கலகத்தில் பாதிப்புற்று 2 -ம் நாள் இறந்திருக்க வேண்டும். இதன் பிறகு திருச்சிற்றம்பலமுடைய முதலியார் 24 –ம் நாளில் இறந்துபோகின்றார். அவருக்குப் பின் சிவஞானசம்மந்தரும், கிருதயதேவரும் இரண்டு குகைகளில் முதலியார் (சுவாமிஜி) ஆகிவிடுகின்றனர். இதை கையொப்பமிட்ட பெரியோர்கள் நேரில் வந்திருந்து கண்டு ஆசிபெற்றனர். முதலியார் என்ற சொல் அக்காலத்தே எந்த சாதியையும் குறிப்பதல்ல. அதற்கு தலைவர் என்ற பொதுப் பொருள் தான் இருந்தது. இதில் தலைவர், படைத் தலைவர், தவக்குடிலின் தலைவர் ஆகியோர் அடங்குவர். தமிழில் தலைவர் என்பதை சமஸ்கிருதத்தில் சுவாமி என்பர். அந்த சுவாமி என்பது சுவாமிகள் ஆகி இக்கால் சுவாமிஜி ஆகிவட்டது. இந்த சுவாமிகள் என்ற சமஸ்கிருத சொல் புழக்கத்தில் வரும் முன், சுவாமிகள் என்பதை முதலியார் என்று விளிதனர் என்பதற்கு இக் கல்வெட்டு சான்றாக உள்ளது.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக். 296-298, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர் செல்வம் 098867 69865 / 09632967153.      ARIEp 1999, B. No: 272

    நாகப்பட்டினம் மாவட்டம், நாகை வட்டம், கீழையூர், முதலாம் சுந்தரபாண்டிய தேவர் 10 ஆம் ஆண்டு (பொ.யு 1261) 5 வரிப் பெருங் கல்வெட்டு.

    1. ஹரி ஓம். ஸ்வஸ்த்திசிரி கோச்சடபன்மரான சிரி சுந்தர பாண்டிய தேவற்கு யாண்டு 10–த்தாவது மகறநாயற்று பூர்வ்வபச்சத்து பஞ்சமியும் செவ்வாய் கிழமையும் பெற்ற விசாகத்து நாள் இராசேந்திர வளநாட்டு ஆளநாட்டுப் பிரமதேயம் சிரிராசராச சதுர்வேதி மங்கலத்து உடையார் பார்த்தீஸவரமுடையார் கோயிலில் மூவாயிரவன் திருவெடுத்தக் கட்டிலிலே முதலிகளும், பட்டர்களும், மஹாசனமும் பெருங்குறி      செய்து கொண்டு இருந்து
    2. விவஸ்த்தை பண்ணியபடி நம்மூர் அரையன் மூவாயிரகோண் நாடாழ்வான் முன்னாள் பள்ளிகள் கலகம் செய்ததின் நாளில் தாமதைக் கீழ் காரியஞ் செய்தார் கணக்கு எழுதினாரும் அன்னியாயத்தால் பிரம்மச்சை தங்கள் விலையாக எழுதுவித்துக் கொண்டு அன்னாளில் அனுபவித்துப் போந்த நிலங்களாய் உலகுடையப் பெருமாள் இன்னிலங்கள் அவர்களைத் தடுத்து _ _ _ முன்னாலிலே பிரம்மசேத்திரமாக பற்றிக் கொள்வதென்று முன்னாள் பிரஸாதஞ் செய்து நினைப்பிட்டருள திருமுகம் வருகையில் திருவாசகம் கல் விநியோகம் திருமுகச் சம்படம் உள்ளிட்டு முதலான பணத்துக்கு அன்னியாயங்கள் விலையாக நிச்சயத்து நாம் பணம் ஒடுக்கி விற்றின நிலத்து நம்முடையார் கோயிலில் பாண்டி மண்டலத்து குடநாட்டு ஆலகுமங்கலமான வீரபாண்டியன் மடிகைமாநகரத்து நாயனார் அழுகன் சிங்கநாயன் எழுந்தருளிவித்து உடையார் நரசிங்கஈஸ்வர முடையார்க்கு பாசைக்கும் அமுதுபடி சாத்துப்படிக்கும் திருப்பணிக்கும் திருநாள் எழுந்தருளி _ _ _ கொள்படிக்கும் திருநாமத்துக் காணியாக கொண்டு இட்ட
    3. பிடாகை உத்தமச்சோழநல்லூரில் பட்டினம் பெருவழிக்கு கிழக்கு திருவரங்கவதிக்கு மேற்கு விருதராச பயங்கர நல்லூர் எல்லைக்கு நடுவுபட்ட காட்டுக்கண்டத்து தெற்கடைய நிலம் கோவன் நிலத்து தெற்கடைய தடி பலவால் கங்கைகொண்ட சோழநல்லூர் சுகுவ கிழக்கு தாரவாய்க்காலுக்கு கிழக்கு வடக்கு கூத்த திருவரங்க வதிக்கு கிழக்கும் ஆக நிலம் குலோத்துங்க சோழநல்லூரில் _ _ _ பரமேசுவர வாயக்காலுக்கு மேற்கு கூத்து
    4. வீரராசேந்திர நல்லூரில் காந்திய் சோழவாய்க்காலுக்கு தெற்கு கூத்து பெரிய _ _ _ _  இதன் கிழக்கு தடிபலவால் _ _ _ _ _ பெரியநாச்சி என்று சொல்லப்பட்ட சிறகு _ _ _ _ குத்து ஆக இந்நிலமாவரை அரைக்காணி _ _ _ _ _ _ இன்னமும் இன்னாயனாருக்கு குடுத்த _ _ _ _ _சோழநல்லூரில் கணபதி வாய்க்காலுக்கு வடக்கு தானபாதம் என்று பேர்கூவப்பட்ட தடியில் மூல ஆற்றுவாய்படுகையும் மனைதிடரும் உள்ப்பட இந்நிலம் நாலே முக்காலே ஒருமாவும் ஆக இன்னிலம் பத்தே அரைக்காணி முந்திரகையும் எதிராமாண்டு கார்முதல் இன்னிலத்தால் இறுப்புக்கு வரும் _ _ _ _ ழுத்து ஊருடனே கூட்டிக்கொண்டு ஸந்திராதித்தவரையும் இந்நாயனாருக்கு இறையிலியாக குடுத்தபடிக்கும்

    இதன் பிறகு இக்கல்வெட்டு உடைந்துள்ளது.

    திருவெடுத்தக் கட்டிலில் – தலைமை ஏற்ற இருக்கையில்; முதலிகள் – படைத்தலைவர்; பெருங்குறி – கருத்துப் பறிமாற்றம் செய்து: விவஸ்தை – தீர்மானம்;

    சடையவர்ம சுந்தரபாண்டியனின் 10 ஆம் ஆட்சி ஆண்டின் (1261 பொயு) போது மகர ராசி கூடிய ஞாயிற்றுக் கிழமையும் வளர்பிறையின் 5-ம் நாள் செவ்வாயக்கிழமை விசாக நட்சித்திரம் கூடிய நாளில் இராசேந்திர வளநாட்டில் அடங்கிய ஆளநாட்டு பிரமதேயமான ஸ்ரீ இராசராச சதுர்வேதி மங்கலத்து பார்த்தீசுவரமுடையார் கோயிலில் மூவாயிரவன் தலைமையில் கூடிய கூட்டதில் படைத் தலைவர், பூசகர்கள், பெரியோர் அவையினர் ஆகியோர் கருத்துப் பறிமாற்றம் நிகழ்த்தி ஒரு தீர்மானம் கொண்டபடி கீழையூர் மூவாயிரகோன் நாடாழ்வான் முன்னிலையில், ”முன்னாளிலே பள்ளிகளான வன்னியர் கலகம் செய்த காலத்தில் அதனினும் கீழான செயல் செய்தார் கணக்கு எழுதியவர். அநியாயமாக பிராமணர் நிலங்களை தாம் விலைக்கு வாங்கியதாக எழுதிக் கொண்டு அனுபவித்து இறந்தார் அந்த உலகுடையப் பெருமாள்.

    அவர்களின் இந்த செயலைத் தடுத்து இந்நிலங்களை மீண்டும் பிராமணர் வயல்களாக ஆக்க முன்னாளிலே எண்ணியிருந்த நேரத்தில் அதற்கான அரசாணை. வருகையில் திருவாசகம், கல் விநியோகம், திருமுகச் சம்படம் முதலானவற்றுக்கு ஆகும் பணம் அநியாய விலை நிச்சயத்து அதற்கு நாம் பணம் கொடுத்து விற்ற நிலத்தில் நம்இறைவர் கோயிலில் பாண்டி மண்டலத்து குடநாட்டு ஆலகுமங்கலமான வீரபாண்டியன் மடிகைமாநகரத்து நாயனார் அழகன் சிங்கநாயனை வருவித்து இறைவர் நரசிங்கஈஸ்வர முடையாருக்கு பாசைக்கும், அமுதுபடி சாத்துப்படிக்கும், திருப்பணிக்கும், திருநாமத்துக் காணியாக இரண்டு இடங்களில் இறையிலி  நிலம் தரப்படுகின்றது”. அந்த நிலங்களின் இருப்பிடம், எல்லை குறிக்கப்படுகின்றது.

    பள்ளிகள் ஆன வன்னியர் முன்னாளிலே கலவரத்தில் ஈடுபட்ட போது உலகுடையப் பெருமாள் என்பவர் பிராமணர் நிலங்களை விலைக்கு வாங்கியாதாக பொய் ஆவணம் எழுதி அவற்றை அனுபவித்தார் என்கின்றது இக்கலவெட்டு.

    பார்வை நூல்: தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக். 294-295, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர் செல்வம் 098867 69865 / 09632967153.      ARIEp 1947, B. No: 98

    திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோயில் அந்தராள வடக்கு வாயில் மேல். கொங்கு சோழன் வீரராசேந்திரன் 3 ஆம் ஆட்சி ஆண்டு (பொ.யு.1211 நாள் 301) 29 வரிக் கல்வெட்டு.  இடங்கருதி எண்ணிற்கு பகரமாக சாய் கோடு இடப்பட்டுள்ளது.

    ஸ்வஸ்தி ஸ்ரீ திருபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரிமேல் / கொண்டான் வடபரிசார நாட்டில் ஆளுடையார் திருமுருக / ன் பூண்டி ஆளுடையார் கோயில் சிவபிராமணரில் காசியபன் பிள் / ளை நாயனான பொன்னம்பல நம்பிக்கும் பொன்ன புகழ் வேந்த /  நுக்கு நம்மோலை குடுத்தபடியாவது இந்நாயனார் கோயில் / சிவபிராமணக் காணி தங்களது மாதவகள் பேசிக் குலவ / ட்டு முண்டாயிருக்க தம்பியான நாலேமுருகாண்டான் / அஞ்சவைத்து தங்காணியை அழிவு செய்கையாலே / தா நமக்கு மூன்றாவது நாளிலே நம்பக்கலே _ _ _ _ எங்கள் / காணி எங்களுக்கு ஆக வேணுமென்று நமக்கு தரும் அச்சு பத் / தும் தொண்டைமானார் பெறுவமுண்மைக்கு அச்சு மஞ்சும் / அச்சு பதினைஞ்சும் தாங்கள் வைக்கையில் இக்கோயில் / ரையநித _ _ _ _ த்தியங்களும் சைவாசாரி / யங்களும் மு_ _ _ _ல கல _ _ _ _ / விக்கவும்_ _ _ _ கோயில் பரிகலக்கடு பண்ணி /  சு நாழியும்_ _ _ _ ந படியில் அட்டிது செம்பாதி / யும் அட்டிது _ _ _ _ அச்சந போகமும் பிடி பி / டியிலும் _ _ _ _ இந்நான்கு எல்லைக்கு உட்பட்ட /  தேவதாநமும் எழுத்து _ _ _ _ பட்டன் மற்றும் எற்பட்டனவும் தன் மகன் மக்களுக்கு விலை ஒன்றி தன்ம / தானம் சீதனத்துக்கு உரித்தாகவும் இப்படிக்குச் / செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்ளப் / பெறுவானாகவும் இப்படிச் சந்திராதித்தவரை /  செல்வதாக நம் / ஓலை குடுத்தோ / ம் 3 ஆவது நாள் /. 301 இவை நந் / தியம்மந் எழுத்து. / _ _ _ _ . 

    மாதவகள் – தலைமை கணக்கர் அல்லது கோயில் கணக்கர்; குலவட்டு – உபாயம், வழிமுறை; நம்பக்கல் – என்னிடம் வந்து; அச்சு – பொற்காசு

    கோனேரின்மை கொண்டான் கொங்கு சோழன் வீரராசேந்திரனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் 1211 பொ.யு. வடபரிசார நாட்டில் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில் சிவபிராமணர் பொன்னம்பல நம்பிக்கும், (அரையன்) பொன்ன புகழ் வேந்தனுக்கும் கொங்கு வேந்தன் வீரராசேந்திரன் நேரடியாக ஓலை ஒன்றை அனுப்புகிறார். அதில் “சிவபிராமணன் காணி குறித்து தங்களது தலைமை கணக்கர் பேசித்தீர்த்து வழிமுறை தந்துள்ளார். அந்த வழிமுறை செயலாகும் முன்னமே உமது தம்பியான நாலே முருகாண்டான் சிவபிராமணரை அஞ்சுறுத்தி அவரது காணியை அழித்ததாக சிவபிராமணன் மூன்றாம் நாள் என்னிடம் வந்து என் காணி எனக்கு வேண்டும், மீட்டுத் தருக என்று முறைப்பாடு செய்துள்ளான்.  இந்த சிவபிராமணன் 10 பொற்காசைத் நமக்கு தருகிறான், அதோடு தொண்டைமானும் 5 பொற்காசைத் தருகின்றார். ஆக இந்த 15 பொற்காசையும் நீங்கள் பெற்றுக் கொண்டு” என்பதோடு கல்வெட்டு தெளிவுபட பொருள் அறியமுடியா வண்ணம் ஆங்காங்கே சிதைந்துள்ளது. அதன் பின் இந்நான்கு எல்லை என்பதில் இருந்து கல்வெட்டு தெளிவாகத் தெரிவதில் இருந்து வேந்தன் தேவதானமும் சிவபிராமணனுக்கு நிலமும் கொடுத்து அதற்கு வரிகள் தவிர்த்து இறையிலியாகத் தருகிறான்.  இந்நிலத்தை சிவபிராமணன் தனக்குப் பின் தனது மகன் அதன் பின் அவனது மக்கள் அனுபவிக்க, விலைக்கு விற்க, தானதருமமாக வழங்க, சீதனமாக வழங்க உரிமையும் தருகின்றான் வேந்தன். இதைக் கல்லிலும் செப்பிலும் வடித்துக் கொள்ள வேணுமாயும் இது நிலவும் ஞாயிறும் நின்று நிலவும் வரை நடக்கக் கடவதாக சொல்கிறான். இந்த ஓலையை வேந்தனின் அணுக்கன் நந்தியம்மன் வேந்தன் சொல்லக் கேட்டு எழுதிக் கையொப்பம் இடுகின்றான்.

    இதில் புழங்கும் குலவட்டு என்பதை கொலை வெட்டு என்று புரிந்துகொண்டு இது ஏதோ கலகம் பற்றி சொல்கின்றது என்று தவறாகக் கொண்டு விட்டேன். ஆழ்ந்து படித்தபோது தான் அது வழிமுறை என்று பொருள் உணர்ந்தேன். என்றாலும் தட்டச்சி முடித்ததால் இதனுடன் சேர்க்கின்றேன்.

    இக்கோயில் சிவபிராமணர் முன்னம் ஏதோ வட்டிக்கு கடன் பெற்று விட்டு அதைத் திருப்பி வட்டியுடன் கட்டமுடியாமல் போகவே தலைமை கணக்கர் அது பற்றி எச்சரித்து அதற்கு வழிமுறை சொல்லிச் செல்கின்றார் என்று ஊகிக்க முடிகின்றது. அதன் பின் அரையனின் தம்பி வட்டிக்கு அடமானம் வைத்த நிலத்தைப் பாழ்படுத்தி பறிமுதல் செய்கின்றார். சிவபிராமணன் இதை உடனே வேந்தனிடம் முறைப்பாடு செய்கின்றார்.

    கல்வெட்டால் தெரியவரும் ஒரு உண்மை என்னவென்றால் வேந்தனுக்கு கீழ் மன்னன் அவனுக்கு கீழ் அரையன் அவனுக்குக் கீழ் கிழான் என்று நான்கு அதிகார அடுக்கு நிலவிவந்ததை காட்டும் கல்வெட்டுகள், இது போக இந்த நான்கு அதிகார அடுக்கினரின் குடும்பத்தவரும் நிர்வாகத்தில் தலையிட்டு அதிகாரம் செலுத்தி வந்தது இக்கல்வெட்டு குறிக்கும் தம்பி நாலே முருகாண்டான் மூலம் தெரிகின்றது. இப்படி இருக்கும் போது தமிழர் அல்லது தமிழராக நடிக்கும் சிலர் முட்டாள்தனமாக ஆட்சியாளரை அந்தப்புரத்திலும் போர்க்களத்திலும் அனுப்பிவிட்டு பிராமணர் ஆட்சி அதிகாரம் செலுத்தினர் என்று கூசாமல் பொய் உரைக்கின்றனரே! அதையும் இந்த சிந்தனை சுருங்கிய தமிழர் நம்புகின்றனரே!! இவர்களை எல்லாம் மீறி ஒரு பிராமணனால் ஆட்சி அதிகாரம் செலுத்த இயலுமா? என்ற கேள்வி அல்லவா எழவேண்டும்!!

    பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக் 70 & 71. ஆசிரியர் மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

    https://tamilnadu-favtourism.blogspot.com/2017/07/piravi-maruntheeswarar-temple-thiruthuraipoondi.html

    Share