Blog

  • கண்ணே! தமிழ் வாணீ!

    Gnana_Saraswathi

    அமிழ்தத்வனி மதுரத்வனி அமரத்வனி அருள்க

    அழகுத் தமிழ் நதியில்முழு நிலவாய் நீ எழுக

    தமிழ்போ லெதும் இலையென்பதைத் தரையெங்கணும் மொழிக! ஒரு

    தமிழ்ச் சொல்லினில் தட மேவிடும் தடையாவையும் கழிக!

     

    இதயத்தினில் நீயே சதம் இன்பத் தமிழ் வாணி

    இருவேளையும் இடையின்றி நீ எனையாள்கிற ராணி

    கதையெத்தனை நிதம்மாறிடும் ககனத் துலைநடுவே

    கனலெற்றிடும் புனலாயெழும் கவிதையெனும் கேணி

     

    வேதம் மிகத் தேடும் பெரு விந்தை மிகும் தாய் நீ

    வீதித் திரு மூலைதனில் விளையாடிடும் சேய்நீ

    பேதம்செயும் நீதர்தமைப் பின்னும் கொடும் பேய்நீ

    பேதைக்கொரு வாழ்வைத்தரச் சாதம்பிசைந் தாய்நீ

     

    உச்சந்தலை ஊசித்துளை தொட்டுக் கன லாடும், அதை

    உள்ளத் தினி லோடும் பெரு வெள்ளத் துளி சாடும்

    மெச்சத் தகு பண்ணை ஒரு மின்னற் சொல் சூடும்

    மேவும் நிலை தானே ஒரு மரணத்தினில் ஜனனம்!

     

    அன்பே நீ வாழ்க! உன் அழகுப் பதம் வாழ்க!

    அருளே! என் அமிழ்தே! என் அம்மா! நீ வாழ்க!

    இன்பத் தினுக் கப்பா லிசைக் கவியா யெனைவைத்தாய்

    இதைமீ றிடும் நிலை இல்லயென் றுயிரைப் புளகித்தாய்

     

    கண்ணே! தமிழ் வாணீ! உன் காலே கதி கொண்டேன்

    கவிதைக் கனல் தனில் மூழ்கிநான் கர்மங்களை விண்டேன்

    மண்ணை விண் ணாக்கும் பெரும் மாயம் தமிழ் செய்யும்,

    கலை மகளே! பர சுகமே! எக் காலமும் நான் உனதே!

     

    29.09.2017 / வெள்ளி / காலை 9.04

    (படம் : ஸ்ரீ ஞானசரஸ்வதி ஆலயம், குன்றக்குடி)

    Share
  • வாணிக்கு வணக்கம்

    koothanur-saraswathi-temple-tamilnadu

     

    உன்
    வீணையே என் நெஞ்சமே, மின்
    விரல்கள் பலவிதம் கொஞ்சுமே!
    உன்
    ஆணையே ஸ்வர மாகுமே, அவை
    அண்டம் தாண்டியும் விஞ்சுமே!
    முகில்
    ஏணையில் வெண் ணிலவுபோல், உயிர்
    எங்கும் களியே மிஞ்சுமே!
    என்
    ராணியே! உயிர் வாணியே! நீ
    ரகசி யங்களின் கேணியே!

    பத்து விரல்களின் பதை பதைப்பினைப்
    பார்த்தவன் கதி என்னவோ!
    முத்துத் தமிழினில் மூண்ட கவிஞன்முன்
    முடிந்ததே விதி என்கவோ!
    சத்த மடங்கிய சாந்தி வாசலில்
    சன்ன மாயொலி மேவுதே!
    எத்த னைவிதம் செப்பிச் சோர்கிறேன்!
    என்றன் அனுபவம் மீறுதே!

    செந்த மிழ்க்கவி என்ப தைவிட
    வேறு பதவிகள் இல்லையே!
    சந்த சங்கீத சரச நேரமே
    பரவ சங்களின் எல்லையே!
    சொந்த பந்தங்கள் சோழி விசிறிடும்
    சூழ்ச்சிகள் மிகத் தொல்லையே
    உந்தன் சொந்தமே உணர்வின் பந்தமே
    உயிரைத் தந்தேனென் வாணியே!

    நோக்க மற்றவோர் நோக்கில் மூண்டுமின்
    புன்ன கைசெயும் சரஸ்வதீ!
    வாக்கி யங்களை வாச கங்களாய்
    மாற்றி யருளுமா தங்கிநீ!
    ஊக்கி உந்திடும் மெளனம்நீ! என்றன்
    உள்ளின் உள்ளிலே முரசம்நீ!
    தேக்க மின்றியே தெளும்ப லின்றியே
    நீக்க மற்றதோர் தெளிவுநீ!

    கானம் கவிதையாய் கவிதை கானமாய்
    கண்ணி மைப்பினில் அருளுவாய்!
    மோன மடுவிலொரு மொக்க விழ்த்ததன்
    மோடி யில்வந்து மூளுவாய்!
    ஆன வரையில்நான் அலசிப் பார்க்கிறேன்
    அன்னை உன்னைப்போல் இல்லையே!
    ஏனம்நான்! அமிழ்த பானம்நீ! என்றும்
    ஏந்தி மகிழ்ந்திடும் பிள்ளையே!

    29.09.2017 / வெள்ளி / காலை 7.14

    Share
  • நவராத்திரி 11

    இசைக்கவி ரமணன்

    73369037
    வெற்றி வெற்றி வெற்றி என்று கூவு! இந்த’
    விண்ணும் போத வில்லையென்று தாவு!
    பற்றுகளைத் தந்துவிடு காவு – அங்கு
    பராசக்தி வந்துநிற்பாள் பாரு!
    முற்றும்யாவும் தீர்ந்துவிட்ட போது – நெஞ்சில்
    முத்துத்தமிழ்க் கவிதையாய் முளைப்பாள்! அந்த
    ஒற்றைமினுக்கிக் காலில்நெஞ்சைப் போடு! வந்த
    ஊக்கத்திலே புல்நுனியில் ஆடு!

    என்மனத்தைச் சந்தமய மாக்கி, அதில்
    ஏகாந்தத் தேன்குளத்தைத் தேக்கி, கொல்லும்
    புன்மையின் நினைவுகூடப் போக்கி, நிதமும்
    புதிய புதிய நிலைகளிலே ஊக்கி,
    மின்னல்களால் என்னுயிரைத் தாக்கி, ஒரு
    மென்னகையால் மீண்டுமதைத் தூக்கி, இவள்
    என்னவென்ன செய்திடுவாள் கண்ணே!
    என்றுமிவட் கேதமிழின் பண்ணே!

    கருவிலருள் தந்ததுவோ கருணை, சந்தைக்
    கடையில் அலைய வைத்ததுவோ கொடுமை
    குருவைக் கண்ணில் காட்டியதோ அருமை, அவர்
    கூடத் தெருவில் நடந்ததுதான் பெருமை, இன்று
    மருமமெல்லாம் தீர்ந்து வந்த வெறுமை, இதில்
    மாற்றிலாமல் தேவையொன்று பொறுமை
    அருகிலென்றும் நிற்பதுன்றன் கடமை, எதையும்
    அதிரடியாய்க் கேட்பதென்றன் உரிமை!

    ’இக்கணமே நாட்டின்நிலை மாற்று! எம்மை
    இக்கலியின் கொடுமைதாண்டி ஏற்று
    மக்களெல்லாம் தக்கவர்க ளாகி, நல்ல
    மாண்புடையோர் கையில் ஆட்சி மாற்று
    வக்கரித்துக் கொள்ளையடித் தோரை, நினைந்து
    வாடவாட நரகத்திலே பூட்டு!’ என்று
    சக்திபரா சக்தியென்று சாற்று! அந்த
    சாம்பவியின் சாகசத்தைப் போற்று!

    பாரதத்தின் தேவியில்லை சக்தி! இந்த
    பாரதமே சக்தி! பராசக்தி!
    பாரதமே தேவியென்று கொண்டு, இன்னும்
    பலரும் நன்கு புரிகின்றார் தொண்டு, அந்த
    மாரதர்கள் முக்திபெறுவ துறுதி, இதில்
    மறைந்திருக்கும் நுண்மையினைக் கருதி, நமது
    பாரதமே பராசக்தி என்று, ஒரு
    பரவசத்தை அவளுக்கு நாம் தருவோம்!

    Share
  • உரிமைகளைப் பயன்படுத்தாத மக்கள் பிரதிநிதிகள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இந்தியாவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ கட்சியைப் பற்றியோ கட்சித் தலைவரைப் பற்றியோ விமர்சிக்க எந்தவித சுதந்திரமும் இல்லை.  கட்சித் தலைவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதையே செயலிலும் காட்டவேண்டும்.  தமிழ்நாட்டில் ஜெயலலிதா இருந்தவரை அவரை எதிர்த்துப் பேசவோ முதுகை வளைத்து அல்லது அவர் காலில் விழுந்து வணங்காமல் இருக்கவோ யாருக்கும் தைரியம் இல்லை.  யாராவது அப்படி ஒரு குறிப்புக் காட்டினால்கூட அவர் பதவி பறிக்கப்படும்; மேலும் கட்சியை விட்டே விலக்கப்படுவார்.  அம்மாதான் அதிமுக, அதிமுக.தான் அம்மா என்று கட்சியை வழிநடத்திக்கொண்டு போனார் அவர்.

    மற்ற மாநிலங்களில் இவ்வளவு மோசம் இல்லையென்றாலும் அங்குள்ள மாநில அரசியல் கட்சிகளிலும் நிலைமை இதுதான்.  ஏன் நாட்டை ஆளும் பிஜேபி.யிலும் இதே நிலைமைதான்.  மோதியை எதிர்த்துப் பேச யாருக்குத் தைரியம் இருக்கிறது?  அவரைப் புகழ்வதற்கு வேண்டுமானால் எந்த வரையரையும் இல்லை.  வானளாவப் புகழ்பவர்களுக்குச் சலுகைகள் வேண்டுமானால் கிடைக்கலாம்.  ஊழலிலே ஊறிப்போன எடியூரப்பாவின் மீதுள்ள வழக்குகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.  இதற்கெல்லாம் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.  ஆனால் ஏதாவது சொல்ல முடியுமா?

    இதுவரை எனக்குத் தெரியாத இன்னொரு செய்தியை நேற்றுப் பத்திரிக்கையில் படித்தேன்.  மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இத்தகைய கட்சித் தலைவர்களின் இலக்கணத்திற்கு மாறுபட்டவர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.  அவர் பற்றிய செய்தி ஒன்று என்னை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியது.  அவர் நடந்து வரும்போது அவருடைய கட்சிக்காரர்கள் பலர் அவருடைய காலைத் தொட்டு  வணங்கினார்களாம்.  ஒருவர் மட்டும் இருக்கையை விட்டு எழுந்திக்கவில்லையாம்  அவருக்கு அதற்குக் கைமேல் பலன் கிடைத்திருக்கிறது.  வட இந்தியாவில் பெரியவர்களின் காலில் சிறியவர்கள் விழுந்து வணங்குவது அவர்களுடைய பழக்கம்.  ஆனால் கட்சித் தலைவரின் காலில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் விழுவது அந்தப் பழக்கங்களில் ஒன்றா என்று தெரியவில்லை.

    அமெரிக்காவில் முக்கியமான இரண்டு கட்சிகளிலுமே கட்சித் தலைவர் என்று ஒருவர் இருந்தாலும் அவருக்கு முற்றிலும் கீழ்ப்படிய வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை.  சொல்லப் போனால் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களே பல விஷயங்களில் பல கருத்துக்களை உடையவர்களாக இருப்பார்கள்.  ஒவ்வொருவரும் சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர்கள்.  சந்தர்ப்பம் வரும்போது தங்கள் கருத்துக்களைக் கூறுவதற்கோ அதற்கேற்ப நடந்துகொள்வதற்கோ தயங்க மாட்டார்கள். அதுதான் அமெரிக்க ஜனநாயகத்தின் மிகச் சிறந்த அம்சம்.

    இப்போது ட்ரம்ப்,  ஒபாமா கொண்டுவந்த மருத்துவ வசதி வழங்கும் திட்டத்தை எப்படியாவது தகர்த்துப் புதுச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று துடிக்கிறார்.  ஒபாமா அந்தச் சட்டத்தைக் கொண்டுவந்த நாளிலிருந்தே அதைக் குடியசுக் கட்சியினர் எதிர்த்து வந்தனர்.  2012-இல் ஒபாமாவோடு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ராம்னி தான் ஜெயித்தால் பதவிக்கு வந்த முதல் நாளே அதைத் தகர்த்துவிடுவதாகச் சபதம் செய்தார்.  அவர் ஜெயிக்கவில்லையாதலால் அப்போதைக்கு அந்தக் கோஷம் நின்றுபோயிருந்தது.  இப்போது பதவிக்கு வந்திருக்கும் ட்ரம்ப்பிற்கு ஒபாமா கொண்டுவந்த எல்லாச் சட்டங்களையும் திட்டங்களையும் மாற்றி அமைக்க வேண்டும் என்ற தீராத வெறி.  அதனால் ஒபாமாவின் முக்கிய வெற்றிச் சின்னமான இந்த சட்டத்தையா விட்டுவைப்பார்?  ஒழித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார்.

    ஆனால் அவர் நினைத்த மாதிரி குடியரசுக் கட்சிக்காரர்களே அதற்கு ஆதரவு அளிக்கவில்லை.  குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் 52 பேர் இருக்கிறார்கள்.  இதில் 50 பேர் ட்ரம்ப்பின் மசோதாவுக்கு ஓட்டுப் போட்டால்கூட துணை ஜனாதிபதியும் செனட் தலைவருமான பென்ஸ் தன் ஆதரவு ஓட்டைப் போட்டு அந்த எண்ணிக்கையை 51 ஆக்கிவிடலாம்.  அந்த மசோதா சட்டமாகிவிடும்.    இப்போது குடியரசுத் தலைவர்களில் மூன்று பேர் அதைத் தீவிரமாக எதிர்க்கிறார்கள்.  இன்னும் மூன்று பேர் அநேகமாக ஓட்டுப் போட மாட்டார்கள்.  ட்ரம்ப்பும் தன்னால் முடிந்த அளவு அவர்களை வேண்டிக்கொண்டார், பயமுறுத்தினார்.  ஆனால் தீவிரமாக எதிர்க்கும் மூன்று பேரும் அசைந்து கொடுக்கவில்லை.  இவர்கள் மூவரில் ஒருவர் புதுச் சட்டம் அமலுக்கு வந்தால் ஏழைகள், குழந்தைகள், முதியோர் ஆகியோர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி கிடைக்காது என்பதால் எதிர்ப்பதாகக் கூறுகிறார்.  இன்னொருவர் ஒபாமாவின் சட்டத்திலிருந்து இன்னும் சில அம்சங்களைக் களைய வேண்டும் என்கிறார்.  இன்னொருவர் அதிலுள்ள அதிகமாக இருக்கும் பிரீமியத்தைக் குறைக்க வேண்டும் என்கிறார்.  இவர்கள் எல்லோரும் பல பக்கங்கள் கொண்ட ஒபாமா கொண்டுவந்த சட்டத்தை முழுவதுமாகப் படித்துத் தெரிந்துகொண்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள்.  எல்லா செனட்டர்களுமே இப்படித்தான்.  மக்கள் தங்களை எதற்காகத் தேர்ந்தெடுத்தார்களோ அந்தக் கடமையை நன்றாக நிறைவேற்றுகிறார்கள்.

    நம் எம்.எல்.ஏ.க்களுக்குப் புதிதாகக் கொண்டுவரப்படும் சட்டத்தைப் பற்றியோ திட்டங்களைப் பற்றியோ எவ்வளவு தெரியும் என்று தெரியவில்லை. கட்சித் தலைவர் சொன்ன இடத்தில் கையெழுத்தைப் போட்டுவிடுவார்கள்.  எம்.எல்.ஏ. பதவி கிடைத்துவிட்டதா, இனி பணம் பண்ணுவது எளிதான காரியம் என்று மட்டும்தான் நினைக்கிறார்கள்.

    அமெரிக்காவில் மாநிலங்களும் அப்படித்தான்.  மாநிலங்களுக்கென்று தனி உரிமைகள் உண்டு.  ஜனாதிபதி சொல்வதையெல்லாம் கேட்க வேண்டுமென்பதில்லை.  மேலே சொன்னதுபோல் ஒபாமா செய்த எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று நினைக்கும் ட்ரம்ப் சுற்றுச்சூழலைக் காப்பாற்றக் கம்பெனிகள் மீது ஒபாமா கொண்டுவந்த  எல்லாக் கட்டுப்பாடுகளையும் எடுத்துவிட்டார்.  ஆனால் கலிஃபோர்னியா மாநிலம் ஒபாமா கொண்டுவந்த எல்லாக் கட்டுப்பாடுகளையும் அப்படியே வைத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளது.

    ‘நீட்’ தேர்வு வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்கிறதா?  உடனே தமிழகமும் அதை நிறைவேற்றும் என்று தமிழக அரசு முடிவுசெய்கிறது.  அதை எதிர்த்துப் போராடுபவர்களைக் கைதுசெய்யுங்கள் என்றால் மத்திய அரசோடு ஒத்துப்போக தமிழக அரசு தயாராக இருக்கிறது.

    இவைதான் இந்திய ஜனநாயகத்திற்கும் அமெரிக்க ஜனநாயகத்திற்கும் உள்ள  வித்தியாசம்.

    Share
  • தளிர்களுக்கான திரை

    – எம். ரிஷான் ஷெரீப்

    நமக்கு எழுத்தறிவித்தவரை எத்தனை பேர் தினந்தோறும் நினைத்துப் பார்க்கிறோம்? நாம் எழுத, வாசிக்கப் படிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் எம்மைச் சார்ந்தவர்கள் எமக்கு எழுத்தறிவித்ததாலேயே இதனை வாசித்துக் கொண்டிருக்கிறோம் இல்லையா?  நம் அயலில், நம் ஊரில், நமது தேசத்தில், உலகில் எத்தனை பேருக்கு இந்த வாய்ப்பு கிட்டியிருக்கிறது? எத்தனையோ நபர்களினது ஜீவிதங்களில் கல்விக்கான ஆர்வம் பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்திருக்கும் எனினும் அதற்கான வாய்ப்புக் கிட்டாமல் வாழ்க்கையோடு போராட வேண்டிய நிர்ப்பந்தங்கள் மேலோங்கியிருப்பதையும், அவையே அவர்களது நடத்தைகளில் ஆதிக்கம் செலுத்துவதையும் தினமும் கேள்விப்படுகிறோம். அவ்வாறான ஓர் அநாதைச் சிறுவன்தான் அமிரோ. யுத்தத்தில் தனது உறவுகளைப் பறிகொடுத்த அவனுக்காக அவர்கள் மிச்சம் வைத்துப் போனது அவனது பெயர் மட்டும்தான்.

    யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சிறுவன் அமிரோ, பிற நகரமொன்றின் கடற்கரைப் பிரதேசமொன்றில்  சிதிலமடைந்து புறக்கணிக்கப்பட்ட கப்பலைத் தனது வசிப்பிடமாகக் கொண்டிருக்கிறான். ஜீவனோபாயமாகக் குப்பைகளில் கிடக்கும் இரும்புப் பொருட்களைத் தேடியெடுத்து விற்கிறான். போத்தல்களைப் பொறுக்கி விற்கும் சக சிறுவனொருவன் அவனிடம் கப்பல்களிலிருந்து கடலில் எறியப்படும் போத்தல்களைப் பொறுக்கி விற்றால் நிறையப் பணம் கிடைக்கும் எனக் கூறி கடலுக்கு அழைத்துச் செல்கிறான். அத் தொழிலுக்கு வில்லங்கம் ஒரு சுறா மூலம் வருகிறது. அவர்கள் போத்தல்களைச் சேகரிக்கும் கடற்பகுதியில் சுறாவின் நடமாட்டத்தைக் கண்டதால் வேறு வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. பிறகு கடற்கரைக்கு வரும் பெரிய பனிக்கட்டிகளைப் போராடி  வாங்கி, அவற்றைக் குளிர் நீராக்கி, குவளையில் நிரப்பி கூவி விற்கிறான். அதுவும் நிரந்தரமில்லை எனப் புலப்பட, சக சிறுவனின் சிபாரிசில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தளமொன்றில் அவர்களது  சப்பாத்துக்களைத் துடைத்துவிடும் வேலை கிடைக்கிறது. அதில் ஓரளவு வருமானம் வந்த போதிலும் திரும்பவும் ஒரு தவறான குற்றச் சாட்டினால் அந்த வேலையும் பறிபோகிறது. இனி அவனுக்காக உதவ யாருமில்லை. எனில், அவனது எதிர்காலம் முழுவதற்குமாக அவனுக்கு உதவப் போவது எது?

    சிறுவர்களது உலகம் விசித்திரமானது. அது மாயலோகமும், யதார்த்தமும் கலந்தது. அவர்களது பார்வையில் அனைத்தும் புதிதாய்த் தெரியும். பின்னாட்களில் அனுபவங்கள் கற்றுத் தரப் போகும் படிப்பினைகள் குறித்து எந்தக் கவலைகளுமற்று சுற்றித் திரியும் பருவத்தைச் சார்ந்தவர்கள் அவர்கள். காலமும், நேரமும், சூழலும் குறித்த எந்தக் கவலையுமின்றி சுற்றித் திரியலாம். விளையாடிக் கொண்டிருக்கலாம். அதிலும் கட்டுப்படுத்த யாருமின்றி சுயமாய் வளரும் சிறுவர்களது வாழ்க்கையில் இச் சுதந்திரமும், விளையாட்டுக்களும்  சர்வ சாதாரணமானவை.

    அமிரோவின் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது. கடலில் வரும் ஒரு வெண்ணிறக் கப்பலைக் கண்டு வியக்கிறான். தெருவில் செல்லும் ஒரு முதியவனையும், அவனுடன் செல்லும் நோயால் துன்புறும் பெண்ணையும், இன்னும் ஒரு கால் இல்லாமல் ஊன்றுகோலின் துணையுடன் செல்லும் ஒருவனையும் கண்டு அனுதாபமுறுகிறான். தன்னிடம் தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டுப் பணம் தராமல் ஏமாற்றிச் செல்பவனைத் துரத்திச் சென்று பிடித்து, தண்ணீருக்குரிய பணத்தினை வாங்கிக் கொண்டு புன்னகைக்கிறான். தன்னிடமிருந்து பெரிய பனிக்கட்டிப் பாளத்தைப் பறித்துக் கொண்டு ஓடுபவர்களை விரட்டிச் சென்று அவர்களிடமிருந்து அதை மீளப் பெற்று வெற்றியில் திளைத்து, திருடனை நோக்கிப் பழித்துக் காட்டுகிறான். தனக்குத் திருட்டுப் பட்டம் சுமத்தி, தனது தொழில் போகக் காரணமாக இருந்த வெள்ளையனோடு சண்டை போடுகிறான். புத்தகக் கடைகளில் விற்பனைக்காகத் தொங்க விட்டிருக்கும் புத்தகங்களை ஆசையோடு தொட்டுப் பார்க்கிறான். தனது சிறிய இருப்பிடத்தில் கோழிக் குஞ்சொன்றைக் கொஞ்சி வளர்க்கிறான்.

    அவனது வசிப்பிடத்துக்கருகில் இருக்கும் பிற நாட்டவரொருவரின் வீட்டில் ஒரு விமானம் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தினந்தோறும் அதைப் பார்த்துப் பரவசத்தில் திளைப்பவனுக்கு, விமானங்கள் மேல் ஆசை வந்து விடுகிறது. திருட்டுத்தனமாகச் சென்று அதைத் தொட்டுப் பார்த்து மகிழ்கிறான். புத்தகக் கடைகளில் தொங்க வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் விமானங்களின் படங்களிட்ட புத்தகங்களை வாங்கி வந்து விமானங்களின் படங்கள் பார்த்து ரசிக்கிறான். புத்தகங்களை மேலும் மேலும் வாங்குகிறான்.

    ”நிறைய வெளிநாட்டுப் புத்தகங்கள் வாங்கிறாயே? உனக்கு வெளிநாட்டு பாஷைகள் கூடத் தெரியுமா?”

    ”இல்லை..நான் அவற்றை அவற்றிலுள்ள படங்களுக்காக வாங்குறேன்”

    ”நீ வாசிக்க விரும்புகிறாயென்றால், என்னிடம் ஃபார்ஸி மொழிப் புத்தகங்களும் இருக்கின்றன. அவை விலையும் குறைவு.”

    ”எனக்கு வாசிக்கத் தெரியாது.”

    ”உன்னைப் போன்ற சிறுவர்கள் எல்லோருக்குமே வாசிக்கத் தெரியுமே.”

    புத்தகக் கடைக்காரனுடனான மேற்படி சம்பாஷணையைத் தொடர்ந்து, வாங்கி வந்த புத்தகங்கள் அனைத்தையும் கடற்கரையில் வைத்து ஆவேசத்தோடு, துண்டு துண்டாய்க் கிழித்தெறிகிறான் அமிரோ.

    ”நான் வாசிக்கணும்.. நான் எழுதப் படிக்கணும்… ஏன் என்னால் முடியாது.. ஏன் என்னால் முடியாது?” எனக் கேட்டுக் கத்துகிறான்.

    ஏன் அவனால் முடியாது? அவன், அருகிலிருக்கும் பாடசாலையொன்றுக்குச் சென்று அவனுக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறான். அந்தப் பள்ளிக்கூட அதிபர் அவனைப் பார்த்து, அரிச்சுவடியிலிருந்து கற்றுக் கொள்ள, முதலாம் வகுப்பில் சேர வேண்டும் என்றும் அந்த வயதை அவன் தாண்டி விட்டான் என்றும் கூறுகிறார். எனினும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் சுயமாக வந்திருக்கும் அவனை மாலை நேர வகுப்பில் சேர்த்துக் கொள்கிறார். அவனுக்கு அரிச்சுவடி எழுத்துக்கள் மனனமிடச் சிரமமாக இருக்கின்றன. ஆனால் அவனது தன்னம்பிக்கையும், ஆர்வமும் அவனை அரிச்சுவடியை மனனமிட்டு அவ்வெழுத்துக்களை ஒரே மூச்சில் கூற வைக்கின்றன.

    ஒருவனது தன்னம்பிக்கையும், ஆர்வமும், திறமையும், நேர்மையும், அடிப்படைக் கல்வியும்தான் அவனது வெற்றிகளுக்குக் காரணமாகின்றன என்பதை விளக்கும் ஈரானியச் சிறுவர் படம்தான்  ‘The Runner (Davandeh)’.  தனது திரைப்படங்களுக்காகச் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்றுள்ள ஈரானியத் திரைப்பட இயக்குநர் அமிர் நாத்ரியின் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த இத் திரைப்படமானது, ஈரானியச் சினிமாவில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியதும், முழு சர்வதேசத்தையுமே தன் பக்கம் ஈர்த்த யதார்த்தத் திரைப்படங்களில் ஒன்று என்றும் தயங்காது குறிப்பிடலாம்.

    அண்மைய தசாப்தங்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஈரானிய சிறுவர் திரைப்படங்களின் வழிகாட்டியாக இத் திரைப்படத்தைக் கருதலாம். யதார்த்தம், அப்பாவித்தனமும் நேர்மையும் வெளிப்படும் குழந்தைகளின் பார்வையினூடாக சமூக நடைமுறைகளைக் கூறுதல், எளிய வாழ்க்கை முறை, சமூக ஏற்றத் தாழ்வுகளை பட்டவர்த்தனமாக்கல், முழுத் திரைப்படத்தையும் குழந்தையின் தோளில் ஏற்றி வைத்து திரைப்படத்தை நகர்த்திச் செல்லல், குழந்தைகளின் வாழ்க்கையை வளர்ந்தோருக்கான பாடமாக்கல் என அனைத்துக்கும் முன்னுதாரணமாகக் குறிப்பிடக் கூடிய திரைப்படமாக இத் திரைப்படத்தையே குறிப்பிட வேண்டுமென சர்வதேசத் திரையியலாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு சிறுவர் திரைப்படத்தின் தாக்கம் சர்வதேசத்தையே பேச வைத்திருக்கிறது எனில், அத் திரைப்படத்தின் கருவும், எடுத்துக் கொண்ட விடயத்தைத் திறம்படச் சொன்ன விதமும், அதில் வாழ்ந்து காட்டியிருக்கும் மனிதர்களின் இயல்பான  நடிப்பும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதன்றி வேறேது?

    திரைப்படத்தின் தலைப்பே ஓர் ஓட்ட வீரனின் இலக்கைக் குறிப்பிடுகிறது. திரைப்படத்திலும் கதையின்  நாயகனான சிறுவன் அமிரோ மூச்சு வாங்க வாங்க வேகமாக ஓடிக் கொண்டேயிருக்கிறான். சக சிறுவர்களுடனான பந்தய ஓட்டங்கள், பணம் தராமல் சைக்கிளில் விரைந்து செல்பவனைத் துரத்திச் சென்று பிடிக்கும் ஓட்டம், விரைந்து செல்லும் புகையிரத்தை இரயில் தண்டவாளத்திலேயே ஓடித் தொட்டு விடும் ஓட்டம் எனப் பல ஓட்டங்கள் திரைப்படத்தில் வியாபித்து, சிறுவர் உலகின் தன்னம்பிக்கையைப் பறைசாற்றுகின்றன. அந்த ஓட்டங்களே, ஊக்குவிக்க யாருமின்றியிருக்கும் அவனுக்கு எதிராக பூதாகரமாகத் தோன்றும் கல்விச் சமூகத்தில் அவனையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தையும் நம்பிக்கையும் அவனுக்குள் தூண்டுகின்றன.

    இத் திரைப்படத்தைப் போலவே ஒரு சிறுமியின் மூலமாக கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கும் இன்னுமொரு ஈரானியத் திரைப்படம் ‘ஹயாத்.’

    ஈரானியக் கிராமமொன்றில் தனது குடும்பத்தினரோடு வாழ்ந்து வரும் 12 வயதுச் சிறுமி ஹயாத், பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள். அப் பரீட்சையில் சித்தியடைந்தாலே அவளுக்கு மேலும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். எனவே அவள் மிகுந்த ஊக்கத்தோடு பரீட்சைக்குத் தயாராகிறாள். பரீட்சையன்று விடிகாலையில் அவளது தந்தை கடும் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார். தந்தையைக் கவனிக்கத் தாயும் செல்ல வேண்டிய நிலைமையில், அவர்களது கைக் குழந்தையை ஹயாத்திடம் விட்டு விட்டு அவர்கள் வைத்தியசாலைக்குச் செல்கிறார்கள். கைக்குழந்தையை வைத்துக் கொண்டு, வீட்டு வேலைகளையும் செய்தபடி அன்று அவள் பரீட்சையை எவ்வாறு எழுதினாள் எனும் ஒரு நாள் அனுபவத்தைத் திரைப்படமாக்கி, அதன் மூலமாக ஈரானிய சமூகத்தில் பெண் கல்வியின் அத்தியாவசியத்தை பகிரங்கமாக எடுத்துக் காட்டியுள்ளார் இயக்குனர் குலாம் ரெஸா ரம்ஸானி.

    ’The Runner’ திரைப்படம் வெளிவந்து சரியாக இருபது வருடங்களுக்குப் பிறகு 2005 ஆம் ஆண்டு வெளி வந்த இத் திரைப்படத்துக்கும் பல சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. சிறப்பு ஜூரி விருது (ஆம்ஸ்டர்டாம் திரைப்பட விழா 2005), சிறந்த திரைப்படத்துக்கான விருது (மாட்ரிட் குழந்தைகள் திரைப்பட விழா 2005), சிறுவர் திரைப்பட ஜூரி விருது (இந்தியா கோல்டன் எலிபெண்ட் திரைப்பட விழா 2005), சிறந்த திரைப்படத்துக்கான விருது (இஸ்த்தான்புல் சர்வதேசக் குழந்தைகள் திரைப்பட விழா 2005), யூனிசெப் விருது (Centre International Du Film Pour L’enfance et la Jeunesse, IRAN UNICEF Award), சிறப்பு ஜூரி விருது (ஆர்ஜெண்டினா குழந்தைகள் திரைப்படவிழா 2005), சிறப்பு விருது (செக் குடியரசு திரைப்படவிழா 2005), (உருகுவே குழந்தைகள் திரைப்பட விழா 2005), (பெலாரஸ் குழந்தைகள் மற்றும் சர்வதேச திரைப்பட விழா 2005) ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.

    பல போதனைகளைச் சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஹயாத் எனும் இத் திரைப்படத்தின் ஆரம்பம் முதற்கொண்டு சிறுமி ஹயாத்தைப் பீடித்துக் கொள்ளும் பதற்றம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. அவள் பரீட்சை எழுதப் போராடும் போராட்டமும், நெருக்கடியும் நம்மையும் திணறச் செய்கின்றன. அச் சிறுமியின் கல்விக்கான போராட்டம் அச் சிறுமியுடையது மாத்திரமேயல்ல. உலகம் முழுவதும் நிலைமை அவ்வாறுதான் இன்றும் இருக்கிறது. எவ்வளவுதான் நவீன மற்றும் நாகரிக மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பெண்களுக்கான கல்வி என்பது இன்றும் கூட இரண்டாம் தரமாகவே பார்க்கப்படுகிறது. கட்டுப்பாடுகள் அதிகமுள்ள ஈரான் போன்ற நாடுகளில் இன்னும் அதிகமாக, இன்றும் அதனது தாக்கத்தை வெளிப்படையாகக் காணலாம்.

    திரைப்படங்கள் சமூக மாற்றங்களுக்கு வித்திடுகின்றன என்பதற்கு அமைவாக ஈரானியச் சமூகத்தில் புரட்சிக்கு முன்னும் பின்னும் சிறுவர்களுக்கான கல்வியின் அவசியத்தை விளக்கும் மேற்கூறப்பட்ட திரைப்படங்கள் அக் காலத்தில் பல சிறுவர்களது கல்விக்கு வழிகாட்டியாக அமைந்தவை. கல்விக்கு வழியின்றியும், புறக்கணிக்கப்பட்டும் வாழும் எத்தனை சிறுவர், சிறுமியர்களை நாம் தினந்தோறும் காண்கிறோம்? எத்தனை பேருக்கு நம்மால் உதவ முடிந்திருக்கிறது?  வெறும் கேளிக்கைகளுக்காகத் திரைப்படம் எடுக்காமல், தமது படைப்புகள் மூலம் சமூகத்தை விழிப்புணர்வுக்குள்ளாக்கிய இத் திரைப்படங்களின் இயக்குநர்களைச் சர்வதேசமே பாராட்டுவது அதற்காகத்தான்.

    சிறுவர்களுக்கான கல்வியின் தேவை குறித்த கருவைக் கொண்டு எடுக்கப்பட்டு, சர்வதேச விருதுகளை வென்ற இலங்கைத் திரைப்படம் ‘விது’  இன்னுமொரு குறிப்பிடத்தக்க சிறுவர் திரைப்படம் ஆகும். சமூகத்தில் கீழ்த்தரமானவர்களாகக் கருதப்படும், சேரியில் வசிக்கும் விலைமாது ஒருத்தியின் மகனான சிறுவன் விதுவை, அரசாங்கப் பாடசாலையொன்றில் சேர்த்து விட தாய் போராடும் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் அஷோக ஹந்தகம எடுத்த இத் திரைப்படமும் ‘கல்வி – தனி மனித உரிமை’ என்பதைப் பேசுகிறது.

    இன்று சிறுவர் திரைப்படம் என்றாலே பிற மொழித் திரைப்படங்களையே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருப்பது துரதிர்ஷ்டமானது. தமிழிலும் சிறுவர் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன அல்லவா எனக் கேட்பீர்கள். உண்மையில், அவ்வாறான முத்திரையோடு  இதுவரை வெளிவந்துள்ளவை எவையும் சிறுவர் திரைப்படங்களே அல்ல. அவை சிறுவர்களை நாயகர்களாகக் காட்டி, வளர்ந்தவர்களுக்குப் பாடம் போதிக்க முற்படும் பெரியவர்களுக்கான திரைப்படங்கள் அல்லது பேய், பூத, அமானுஷ்யங்களைக் களமாகக் கொண்டு சிறுவர்களை ஈர்க்க முற்படும் மாயாஜால திரைப்படங்கள்.

    உண்மையில் திரைப்படம் என்பது என்ன? நடிகர்கள் கண்ணாடியைப் பார்க்கிறார்கள். அக் கண்ணாடி முன் நின்று, அதே கண்ணாடியினூடாக பார்வையாளர்களாகிய நாம் அவர்களைப் பார்க்கிறோம். ஆனால் அவர்களைக் காட்டும் அக் கண்ணாடி அவர்களோடு எம்மைக் காட்டுவதில்லை. ஆகவே திரைப்படமானது, நிஜமான, யதார்த்தமற்ற ஒரு மாயத் திரை. எனினும் யதார்த்த வாழ்வியலை நமக்குச் சுட்டிக் காட்டி, படிப்பினைகளைக் கற்றுத் தரும், சமூகத்தில் மாற்றங்களை விளைவிக்கும் மிகத் திறன் வாய்ந்த ஊடகம்.

    அந்த ஊடகத்தில் சிறுவர்களுக்கான திரைப்படங்களின் பங்கு மிகவும்  முக்கியமானது. அவற்றை வெறுமனே பொழுதுபோக்குச் சித்திரங்களென ஒதுக்கி விட முடியாது. உலகத்தில் ஜனித்து, ஒரு தசாப்தம் மாத்திரமே கழிந்த நிலையில் சிறுவர்கள் தினந்தோறும் எதிர்கொள்ளும் போராட்டங்களைச் சிறுவர்களின் தோளில் நின்று, அவர்களது பார்வையினூடு பார்த்தால் மாத்திரமே புரிந்து கொள்ள முடியும். அவ் வாழ்வியல் போராட்டங்களைப் பதிவாக்கி சர்வதேசம் முழுவதும் கொண்டு சேர்ப்பது மாத்திரமன்றி, அப் படைப்புகளின் மூலமாக சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதும் சாதாரணமானதல்ல. அவ்வாறான திரைப்படங்களையும், அதன் இயக்குநர்களையும் எப்போதுமே நாம் கொண்டாட வேண்டும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 250 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் அடுத்த மடலிலே உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைகிறேன். ஏதேதோ எண்ணங்களுடன் நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்வினுள் புகுந்து கொள்கிறோம். எதை எமது இலக்காகக் கொண்டு வாழ்வைத் தொடங்குகிறோமோ அந்த இலக்கை அடைந்து விட்டோம் எனும் பெருமையோடு வாழ்வை முடித்துக் கொள்பவர்கள் சிலரே! அதற்காக வாழ்வின் முடிவில் நாமடைந்த நிலையைப் பற்றி மற்றையோர்கள் பெருமைப்படக்கூடாது என்பதல்ல பொருள். நாமடைந்தவற்றைப் பெருமையாக எடுத்துக் கொள்ளும் பண்பு வாழ்வின் எமது வளர்ச்சியோடு வளர்ந்துள்ளதா என்பதுவே கேள்வி. ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் பயணிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். எமது ஆரம்பப் புள்ளியிலிருந்து நாமடையப் போகும் புள்ளிக்கு இரண்டு மூன்று வழிகள் இருக்கும் அதை முன்கூட்டியே அறிந்து வைத்துக் கொண்டு பயணத்தை ஆரம்பிப்பதுவே எம்மில் அனுபவமிக்கவர்கள் செய்யும் செயல். ஏனெனில் ஒரு வழியில் தடையேற்பட்டால் மற்றொரு வழி மூலம் எமது இலக்கை அடையலாம் என்பதினாலேயே.

    ஆனால் வாழ்க்கைப் பயணம் அத்தகைய இலகுவானது அல்ல. எமது இலக்குக்கான பாதைகள் பல ஆரம்பிக்கும்போதே எமது கண்களுக்குத் தெரிவதில்லை. போகும் வழியில் எங்கோ ஓரிடத்தில் ஒரு தடையேற்படுகிறது. எமது இலக்குக்கான மாற்றுவழி தென்படாவிட்டால் நாம் இலக்கையே மாற்ற வேண்டிய தேவையேற்படுகிறது. இது நாம் வாழ்வில் தோல்வியடைந்து விட்டோம் என்று அர்த்தமாகுமா ? இங்கிலாந்துக்கு முதன் முதலில் வரும்போது ஐந்து வருடத் திட்டத்துடன் நுழைந்தவன் நான். ஐந்தே ஐந்து வருடங்களின் பின்னால் என் தாய்நாட்டிற்குத் தேர்ச்சி பெற்ற பொறியியலாளனாகத் திரும்பி எனது தாய்நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும் என்பது அன்றைய இலட்சியமாக இருந்தது. ஆனால் காலம் போட்ட கணக்கே வேறு.  இன்று ஏறத்தாழ 43 வருடங்களின் பின் அதே இங்கிலாந்தில் இருந்து மடல் வரைந்து கொண்டிருக்கிறேன். எனது பொறியியல் அனுபவங்கள் இங்கிலாந்து நாட்டின் நிறுவனத்துக்கு ஏறத்தாழ முப்பது வருடங்கள் சேவையாற்றியுள்ளது. என் வாழ்வினை நான் தோல்வி எனவும் எடுக்கலாம் அன்றி வெற்றி என்றும் எடுக்கலாம். ஒரு தோல்வியின் பின்னால் மறைந்துள்ள வெற்றி என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்.

    விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்புவது ஒன்றே மனத்துக்கு அமைதியைக் கொடுக்கும்.  ஓர் ஓட்டப்போட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். பொதுவாக முன்னதாக இலக்கை அடைந்த முதல் மூன்று பேருக்கு மட்டுமே பரிசு கிடைக்கிறது. அவ்வோட்டப் போட்டியில் பங்குபற்றி இலக்கைத் தொட்ட அனைவருமே வெற்றி பெற்றவர்கள் எனும் உண்மையை இலகுவாக மறந்து போய்விடுகிறோம். வாழ்க்கையை ஓர் ஓட்டப்போட்டி என்று எடுத்துக் கொள்வோம். அதன் இறுதி இலக்கு அனைவருக்கும் பொதுவானதே. ஆனால் அதை யார் முதலில் தொடுவார்கள் என்பதை எம்மால் அறுதியிட்டுக் கூறி விட முடியுமா? ஒரு எண்பது வயதுப் பெரியவர் இன்னமும் ஓடிக் கொண்டேயிருப்பார் ஒரு முப்பது வயது இளைஞன் அவருக்கு முன்னாலேயே இலக்கைத் தொட்டு விட்டிருப்பான். இங்கு வெற்றி பெற்றவர் யார் ? எனது நல்ல நண்பர் ஒருவர். இங்கிலாந்தில் வாழும் வேளையில் தனக்கும், ஈழத்தில் வசிக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை கனடாவில் அமைத்துக் கொள்ள விரும்பினார் அதற்காக ஏறத்தாழ நான்கு முறைகள் முயற்சித்து நாலாம் தடவையே தன் முயற்சியில் வெற்றி கண்டார். இன்றோ கனடாவில் ஒரு நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். முதலாவது தோல்வியிலேயே மனம் தளர்ந்து போயிருப்பாரேயாகில் இன்றைய நல்ல வாழ்க்கையை அவர் அனுபவித்திருப்பாரா என்பது கேள்விக்குறியே!

    பூரணமான கணத்தைத் தேடுவதை விடுத்து எமக்குக் கிடைக்கும் கணங்கள் ஒவ்வொன்றையும் எவ்வாறு பூரணப்படுத்துவது என்று எண்ணுவதே சாலச்சிறந்ததாகும். எனது நாற்பதாவது வயதுவரை நான் ஒரு எழுத்தாளானாவேன் என்று கனவு கூடக் கண்டதில்லை. ஆனால் இன்று எழுத்து இல்லையேல் நானில்லை எனும் அளவுக்கு எழுவதை நேசிக்கும் ஒரு மனிதனாக வாழ்கிறேன். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் ஒவ்வொருவருடைய பாதையும் அவர்களின் ஆரம்ப இலக்கை அடையவில்லை எனினும் நாம் பயணிக்கும் பாதையை ரசிக்கவும், விரும்பவும் கற்றுக்கொள்ளும்போது அது ஒரு வெற்றிகரமான இலக்கையே எமக்குப் பரிசளிக்கிறது என்பதனை என் வாழ்வின் அடிப்படையில் இருந்து சுட்டிக்காட்டுவதற்காகவே! கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகள், “மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று, இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று” இவ்வுண்மையை எமக்கு அழகுறவே எடுத்துக்காட்டுகிறது.

    உங்களுடனான எனது மடல் உறவாடலில் 250 வாரங்களை எட்டிப்பிடித்து விட்டேன் என்று எண்ணும்போது கால ஓட்டத்தின் வேகத்தை உணர முடிகிறது. ஒரு நீண்ட பயணத்தை நடத்தும் ஒருவன் இடையிடையே சில மைல் கற்களில் அமர்ந்து தான்வந்த பாதையின் அனுபவங்களையும் இனித்தான் எட்ட வேண்டிய தூரத்தின் நீளத்தையும் அலசுவது போல இத்தகைய மைல் கற்களில் நானும் எனது இந்த எழுத்துப் பயணத்தின் நீளத்தையும், நோக்கத்தையும் அலசும் முகமாகவே இந்த மடல் வரைவு.

    இந்தப் பிரபஞ்சத்தின் காலத்தோடு ஒப்பிடுகையில் ஒரு நீர்க்குமிழி போன்ற எனது வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவங்களின் நீளம் இத்தனை பெரிதா? என்று எண்ணும் போது “எறும்பும் தன் கையால் எண்சாண்” எனும் முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது. எழுத்து என்பது புனைவு எனும் காலத்தை மாற்றியவர்களில் கவியரசர் வகித்த பாத்திரமும் முக்கியமானது. அவர் எழுத்துக்குக் கொடுத்த வடிவம் ஒரு புதுவகை அர்த்தத்தைத் தந்தது. சுய அலசல் எத்தனை தூரம் ஒரு மனிதனின் மனத்தின் அழுக்குகளைக் களைய உதவுகிறது எனும் உண்மை புலர ஆரம்பித்தது.

    எங்கோ பிறந்தேன் இன்று எங்கோ வாழ்கிறேன். ஆனால் நான் வாழும் இந்தப் புலம்பெயர் மண்ணில் நான் காணும் அன்றிக் கேட்கும் விடயங்களின் தாக்கங்களை ஒரு புலம்பெயர் தமிழன் எனும் வகையிலும் அந்நிய நாட்டிலிருந்து இங்கு வந்து இந்நாட்டின் குடியுரிமை பெற்றவன் எனும் வகையிலும் என் உடன்பிறவா உறவுகள், தமிழன்னை ஈந்த சொந்தங்களுடன் பகிர்ந்து கொள்வது அதுவும் தெரிந்தவற்றை எதுவித மாற்றமுமில்லாமல் அப்படியே பகிர்ந்து கொள்வது எனும் எனது நோக்கில் எத்தனை தூரம் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பதைத் தீர்மானிப்பவர்கள் என் அன்பு உள்ளங்களாகிய நீங்களே!

    ஒன்று மட்டும் எனது உள்ளத்துக்கு உறுதியாகத் தெரிகிறது. என் கையில் வலுவிருக்கும்வரை, எனது மனத்தின் உணர்வுகளை நான் காணும், கேட்கும், அனுபவிக்கும் விடயங்களை மடலாக பகிர்ந்து கொள்வேன் என்பதே அது.

    உங்கள் அன்பிற்கும் , ஆதரவுக்கும் அனைத்துக்கும் மேலாக பொறுமைக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்!

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • கழல்பணிந்து நிற்போமே !

       ( எம் .ஜெயராமசர்மா . …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

    நலமான உடல்வேண்டும்

    நல்லகல்வி வரவேண்டும்

    வளமான செல்வமெங்கள்

    வாழ்வினுக்கு வேண்டுமம்மா

    விலைபோகா மனம்வேண்டும்

    வீண்பழிகள் அறவேண்டும்

    நிலையான வாழ்வமைய

    நின்னருளை வேண்டுகின்றோம் !

     

    செல்வத்தைச் சேர்பதற்கு

    சேராதவிடம் சேர்ந்து

    அல்லல்பட்டு அல்லல்பட்டு

    அலைகின்றார் மாநிலத்தே

    தொல்லுலகில் செல்வமதை

    நல்லபடி சேர்ப்பதற்கு

    வல்லமையைக் கேட்டிடுவோம்

    வரம்தருவாள் லட்சுமியும் !

     

    வீரமென்னும் பேராலே

    கோரம்மிங்கே நடக்கிறது

    வீரத்தின் தூய்மையெலாம்

    விபரீதம் ஆகிறது

    உடல்வீரம் உளவீரம்

    உண்மைவீரம் ஆவதற்கு

    துர்க்கையது பாதமதை

    துணையெனவே பற்றிடுவோம் !

     

    கற்றறிந்த பெரியோர்கள்

    கபடமுடன் நடக்கின்றார்

    கல்வியினைக் காசாக்கி

    களங்கத்தை ஊட்டுகிறார்

    கற்றபடி நடக்காமல்

    மற்றவரை வதைக்கின்றார்

    கல்விதரும் சரஸ்வதியே

    காப்பாற்று கல்விதனை !

     

    அறிவில்லா வீரத்தால்

    ஆவது ஒன்றுமில்லை

    ஆற்றலில்லா கல்வியினால்

    ஆருக்கும் நன்மையில்லை

    கல்வியொடு வீரம்செல்வம்

    கைகோர்த்து நிற்பதற்கு

    கருணைநிறை சக்திகளின்

    கழல்பணிந்து நிற்போமே !

     

     

     

    Share
  • இழக்கப் போறாய் நீ அவளை!

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா 

    ++++++++++++++

     jaya

     

    இழக்கப் போறாய் நீ அவளை!
    இழக்கப் போறாய் அவளை!
    இன்றிரவு நீ அவளைக் கூட்டிச் செல்லாவிடில்
    தன்மனதை மாற்றிக் கொள்வாள்;
    நானவளை அழைத்துச் செல்வேன்
    இன்றிரவு! மேலும்
    நானவளைக் கனிவுடன்
    நடத்துவேன்;

    நீ அவளை இழக்கப் போறாய்!
    நீ அவளை இழக்கப் போறாய்!
    கண்ணியமாய் நீ அவளை நடத்தா விடில்,
    திண்ணமாய் காணப் போறாய்
    அவள் இழந்து போவதை!
    ஏனெனில் கண்ணிய மாய் நடத்துவேன்
    நானவளை!
    பிறகு நீதான் தனித்துக் கிடப்பாய்!

    நீ அவளை இழந்தாய்! இன்று
    நீ அவளை இழந்தாய்!
    உன்னை விட்டு நானவளைப் பிரிப்பதென
    முடிவுக்கு வந்து விட்டேன்!
    நீ படுத்தும் கொடுமைக்கு
    வேறென்ன செய்வது நான்?

     

     

    Share
  • தமிழிசைப்பண்கள் – உலகின் முதல் இசை தமிழிசையே!!

    இசைத்தமிழின் தொன்மை – 79
    ***********************************************
     
    பழந்தமிழிசையில் பண்கள்
    **********************************

    புரந்தரதாசர் (1484 – 1564)
    ********************************

    purandara-dasa

    சாஸ்திரிய சங்கீதம் ஏன் சிறுபான்மையினருக்கான பகுதியாக மாறியது என்பது என்னவோ புரியாத புதிராக இருக்கிறது.

    இசையானது பக்திமார்க்கமாகவே நம் கலாச்சாரத்தினுள் நுழைந்திருக்கிறது.

    சங்கத்தமிழ் இலக்கியங்களை நோக்கினாலும் அவை செய்யுள் அல்லது பாடல்களின் வடிவத்தில் திகழ்கின்றன.

    மற்றுமொரு பார்வையில் பழங்குடியினங்களின் அல்லது தொன்மை வாய்ந்த நாட்டுப்புற பாடல்களாக இருந்திருக்கின்றன.

    இவற்றிலிருந்து பக்திக்கு இசை மாறும் போது கடவுளின் வழிப்பாட்டிற்கு பாடல் வடிவம் தேவைப்பட்டிருக்கிறது.

    இந்த நிலையில் பாடல் என்றாலே அது கடவுளை வழிபடுதல் என்னும் நிலை தமிழகத்தில் நிலவியிருக்கிறது.

    அப்போது புரந்தரதாஸர் என்றொருவர் இருந்திருக்கிறார்.

    சங்கீதத்தின் வேர்கள் தமிழகத்தில் ஊன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்தவர் இந்த புரந்தரதாஸர் தான்.

    இசை வழிப்பாட்டிற்கு மட்டுமல்ல அது தனியானதொரு அனுபவம் என்பதை உணர்ந்திருக்கிறார்.

    சில ராகங்களை உருவாக்கவும் செய்திருக்கிறார்.

    ஆனால் அவரது காலத்தில் முன்னெடுப்பாக மட்டுமே
    அவை அமைந்திருக்கின்றன.

    புரந்தரதாசர் (1484 – 1564) கருநாடக இசையின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.

    இவர் ஆரம்ப இசைப் பயிற்சிக்கான
    ஸ்வரவரிசைகள், ஜண்டை வரிசைகள்,
    அலங்காரங்கள், கீதங்கள்
    முதலியவற்றை இயற்றியுள்ளார்.

    மாயாமாளவகௌளை என்னும் இராகம் தான்
    ஆரம்பப் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற ராகம்
    எனத் தேர்ந்தெடுத்தவரும் இவரே.

    புரந்தரதாசர் 1484 ஆம் ஆண்டு கன்னட மாநிலத்தில் புரந்தடகட எனும் ஊரில் மத்மதோஸ்த பிராமண குலத்தில் பிரபல்யமான செல்வந்தரான வரதப்பநாயக்கருக்கும் கமலாம்பாளுக்கும் மகனாகப் பிறந்தார்.

    இவரின் இயற்பெயர், ஸ்ரீனிவாச நாயக் ஆகும்.

    இவர் இளமையில் சீனப்பா என்ற பெயராலும் பின்பு திம்மப்பா, திருமலையப்பா என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார்.

    பிற்காலத்தில் பண்டரிநாதன் மீது பக்தி ஏற்பட்டதால் புரந்தரவிட்டலர் எனும் பெயரும் வழங்குதலாயிற்று.தனது பெற்றோரை இருபதாம் வயதில் இழந்தார்.

    தனது பதினாறாம் வயதில் சரஸ்வதிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

    தன் தகப்பனாரின் இரத்தின வியாபாரத்தையே தானும் தொடர்ந்து பெரும் செல்வம் ஈட்டி நவகோடி நாராயணன் என்னும் பெயருடன் விளங்கினார்.

    இவர் தொடக்கத்தில் மிகவும் கருமியாகவும் பணமீட்டுவதிலேயே எண்ணமாகவும் இருந்தார்.

    இப்படியிருந்த இவரை பக்தி வழிக்கு திருப்பியது ஒரு முக்கிய சம்பவமாகும்.

    ஒரு சமயம் இவர் வயிற்று வலியால் அல்லலுற்றார்.
    இதைப் போக்க யாராலும் முடியவில்லை.

    பண்டரிநாதன் மீது நம்பிக்கை வைத்து மூன்று முறை தீர்த்தயாத்திரை செய்தார்.

    வயிற்று வலி நீங்கியது.

    தனது முப்பதாவது வயதில் ஞானோதயம் பெற்று பின்பு 1525 ம் ஆண்டு விஜயராச சுவாமிகளினதும்,சத்திய தர்மதீர்த்த சுவாமிகளினதும் அருள் பெற்று புரந்தரதாசர் எனும் பெயர் பெற்றார்.

    இவர் சங்கீத பிதாமகர், ஆதி குரு எனவும் அழைக்கப்படுகிறார்.

    இவர் 475,000 கிருதிகளை செய்துள்ளதாக வாசுதேவ நாமாவளிய என்னும் உருப்படியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தற்போது 8000 உருப்படிகள் தான் எஞ்சியுள்ளது.

    இவரின் உருப்படிகள் கன்னடத்திலும் வடமொழியிலும் உள்ளன.

    இவரின் உருப்படிகளை தாசர்வாள் பதங்கள் என்றும் தேவர் நாமாக்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு.

    இவரது முத்திரை புரந்தரவிட்டல என்பது ஆகும்.

    இலகுவான மொழியில் உள்ள இவரின் உருப்படிகளின் நடை மிகவும் எளிது.

    இவர் கீர்த்தனைகளில் வேதங்கள், உபநிடதங்கள் முதலியவற்றின் சாரம்சத்தைக் காணலாம்.

    மாஞ்சிபைரவி, மாரவி, வசந்தபைரவி, சியாமகல்யாணி போன்ற அபூர்வராகங்களிலும் இவர் உருப்படிகள் செய்துள்ளார்.

    இந்துஸ்தானி இசையிலும் சிறந்து விளங்கினார்.

    இவரது கடைசிக்காலத்தில் சந்நியாச ஆசிரமத்தை அடைந்து  1564 ம் ஆண்டு தை மாதம் இரண்டாம் திகதி அமாவாசையன்று இப்பூவுலகை நீர்த்தார்.

    ***********************************************

    சிறீ சிறீஸ்கந்தராஜா
    28/09/2017

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_3842

    “கஜங்கள் குளிர்விக்க ,கையம் புஜங்கள்
    நிஜம்கொள் அபயவரம், நீள்அம்-புஜங்கள்
    தரிக்கப்பச் சையணிந்த தாய்கஜ லஷ்மி
    பரத்தினும் மேலாம் பணி”…

    “வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
    ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
    மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு
    முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….கிரேசி மோகன்….!

    Share
  • ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சரஸ்வதி மஹா யாகம்

    சரஸ்வதி துதி

    சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமே சதா

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை “ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்” ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் “ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்” ஆக்ஞைப்படி நவராத்திரியை முன்னிட்டும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டும் மாணவ மாணவியர்களின் கல்வித்தரம் உயரவேண்டியும், ஞானத்தின் பிறப்பிடமான கல்வி கடவுள் சரஸ்வதி தேவியின் அருள்பெற வருகிற 29.09.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் மஹா சரஸ்வதி யாகம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று சரஸ்வதி தேவியை வணங்கி ஞான தெளிவை பெறுவோம்.

    கல்விச் செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத் தேவையான அனைத்து வளங்களையும் பெற வழி வகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி கல்வி அறிவை வழங்குபவள். கல்வி என்பது குழந்தைகள், இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எக்காலத்திற்கும் தேவையானதுதான். இவ்வுலகத்திற்கு வேண்டிய அறிவையும், அவ்வுலகத்திற்குத் தேவையான ஞானத்தையும் அளிப்பவள் சரஸ்வதி.

    சரஸ்வதி தேவி பிரம்மாவை மணம் புரிய ஊசியின் முனை மேல் நின்று உத்த தவம் செய்ததாகக் கூறுவர். சரஸ்வதிக்குப் பெரும்பாலும் நிறைய கோயில் இல்லை. தமிழகத் தில் கூத்தனூரில் மட்டுமின்றி வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு தனிக்கோயில் அமைந்துள்ளார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இல்லம்தோறும் சரஸ்வதி பூஜையன்று கோலோச்சுபவள் சரஸ்வதியே. வெண் தாமரையில் வீற்றிருப்பவள் சரஸ்வதி. வெள்ளை நிற அன்ன வாகனம் கொண்டவள். தன் கரங்களில் வீணையை யும் புத்தகத்தையும் தாங்கிய கலாவாணி. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சரஸ்வதி தேவிக்கு வருகிற 29.09.2017 ல் சரஸ்வதி பூஜையன்று வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் மஹாசரஸ்வதி யாகத்தில் பங்கேற்று சரஸ்வதியை வணங்குவதால் மாணவ, மாணவிகள் தங்கள் கல்வி நிலை உயரப் பெறுவார்கள். சரஸ்வதியின் பாதங்களிலும் யாகத்திலும் வைத்து பூஜித்த எழுது பொருட்களான நோட்டு புத்தகம், பேனாக்களை பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்வாமிகள் திருக்கரங்களால் அருட்பிரசாதமாக வழங்கவுள்ளார். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    மேலும் தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
    கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
    வாலாஜாபேட்டை-632513
    தொலைபேசி : 04172-230033 / 09443330203
    www.danvantritemple.org | www.danvantripeedam.blogspot.in
    Email : danvantripeedam@gmail.com

    Share
  • நவராத்திரி 10

    இசைக்கவி ரமணன்

    f05b0d62a058d1566368fe0ba06abfeb

    சொல்லுக்கும் சொல்லுக்கும் நடுவிலே, சற்றும்
    நில்லா திமைக்கின்ற சுந்தரீ!
    முல்லையின் மொட்டுக்குள் மர்மமாய், நின்றே
    மெளனத்தை சுவாசிக்கும் அந்தரீ!
    எல்லைகள் இல்லா நிரந்தரீ! நெஞ்சுள்
    எங்கோ த்வனிக்கின்ற மந்த்ரிணீ!
    தொல்லைகள் நீக்கியெனைத் தொய்வின்றித் தூக்கவே
    தோட்டத்தில் பாடிடும் பைங்கிளீ!

    வற்றாத ஊற்றையே வார்க்கிறாய்! தக்க
    வார்த்தையே தருணத்தில் சேர்க்கிறாய்!
    முற்றாத புத்தியின் முன்னிலும், கட்டி
    முக்தியை வெண்ணையாய் வைக்கிறாய்!
    பற்றேது மற்றவன் ஆக்குவாய், தெருவில்
    படும்பா டனைத்தையும் பார்க்கிறாய்!
    கற்றென்றும் வாராத கவிதையெனும் விந்தையைக்
    கலைவாணி தந்துன்னுள் ஈர்க்கிறாய்!

    செல்வந்தர் பலபேரைக் கண்டனம், கலை
    தேர்ந்தவர் சிலரையும் கண்டனம்
    புல்லர்புகழ் பெறுவதைக் கண்டனம், ஏதும்
    புரியா விமர்சகரைக் கண்டனம்
    நல்லவர் நலிவதும் கண்டனம், யார்க்கும்
    நல்லசிரிப் பில்லையதைக் கண்டனம், என்னை
    வல்லமை தரும்தமிழைப் பாடுமொரு கவிஞனாய்
    வாழ்வித்த தாயே என் வந்தனம்!

    உயிரெனும் உலையூதும் போதுன் – தோளில்
    ஒருகரம் வைத்துற்றுப் பார்க்கிறேன் – உலையில்
    உயிரைநீ வாட்டிடும் போதுன் – தாளில்
    போதுமடி என்றுவா திடுகிறேன்
    உயிரைஉய் விக்கும் போதுன் – முன்னில்
    ஓங்கியுன் புகழ்பாடு கின்றேன்
    உயிருக்குள் உயிராக சேய்வயிறில் தாயாக
    உற்றகலை வாணியே வந்தனம்!

    வாணிநீ! தேனிநீ! வற்றாத கேணிநீ!
    வார்த்தைகளின் தாயகம்!
    ராணிநீ! அறியாத ரகசியம் நீ அங்கு
    ராகங்களின் சேவகம்!
    மாணிக்க வீணையுன் மார்பில் படும்போது
    மனமெங்கும் பூங்காவனம்!
    தோணித் துறைமூலை பொன்னந்தி மாலையெதிர்
    தோன்றும்தாயே வந்தனம்!

    27.09.2017 / புதன் / காலை 9.21

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170927  Sharada -Devi series 08-lr

    படிகமணி மாலை, படிப்புணர்த்தும் ஓலை,
    மடிதவழும் வீணை, மருங்கின்(இடையின்) -பிடிபடாமை,
    கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாம்
    வேலொத்து பாய்ச்சும் வசவு….

    வர்மன் வரைந்தாற்போல் வாரிசத்தில் வீற்றிருந்து
    தர்மம் தவம்தானம் தேர்ந்திட -கர்மமாய்
    மோனத்தில் மூழ்கி முனையும் மஹாசக்தி
    ஞானத்தை நானுற நல்கு….

    அற்பனே ஆனாலும் ஆசான் அவளிரெண்டு
    பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
    ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
    மாற்றுத் துணியாய் மனது….

    கல்வி கலவிடும் செல்வம் சிணுங்கிடும்
    வல்லமை வீரம் வணங்கிடும் -செல்வி
    கலைவாணி யாலுன் கவுரவம் கூடும்
    தலைவானில் நிற்கும் திமிர்ந்து….

    வேறெதையும் எண்ணாது வேண்டி வணங்கிடுவாய்
    சாரதையை நம்பி சிருங்கேரி -ஊரதனில்
    பாரதன்பின் வாழ்வு பரிசுத்தம் ஆகிடும்
    பாரதன்பின் பார்க்கப் பளிங்கு….

    துங்கா நதிக்கரைசத் சங்காய் சிருங்கேரி
    சிங்கா சனத்திருக்கும் சாரதே -சங்காய்
    கிடக்கின்றேன் சும்மா எடுத்தூதி அம்மா
    நடத்தெனது நாடகத்தை நன்கு….

    சங்கரன் முன்செல்ல சாரதை பின்செல்ல
    துங்கையின் தீரத்தில் தேவியின்ச -தங்கையின்
    சத்தம் குறைந்திட சத்குரு பார்த்திட
    வித்தை சிருங்கேரி வாய்த்து….

    கர்ப நுணல்மேல் குடையாய் படம்பிடிக்கும்
    சர்ப சகாய சிருங்கேரி -கர்ப
    கிரகத்து சாரதையை கும்பிடுவோர் முன்பு
    கிரகங்கள் கூப்பும் கரம்….

    வித்தை, வினயம், விசாரம், விவேகமிவை
    மொத்தமுமென் நெஞ்சில் முளைத்திட -ஸ்ரத்தை
    அளித்திடு சாரதா அம்பிகே, என்னுள்
    முளைத்திடு முண்டக மா….

    உளம்கொடுக்கும் உன்ன, உரம்கொடுக்கும் நண்ண
    களம்கொடுத்து ஞானக் கொழுந்தாய் -புலன்மடக்கி
    ஆசை அறுத்தான்ம பூசைக்கு சாரதை
    ஓசை சதங்கையொலி ஓம்….

    நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட
    ஐயம் அகன்றதும் ஆதரவாய் -கையைப்
    பிடித்திழுத்துச் செல்வாள் பரமசுகம் கூட்ட
    படித்ததெலாம் பெண்ணிவள்முன் பாழ்….கிரேசி மோகன்….!

    Share
  • திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி

     

    unnamed
    வானைக்கா வையம்கா தூணை துரும்பைக்கா
    மோனை எதுகைக்கா மோஹனைக்கா -ஆனைக்கா
    ஆத்தா அகிலாண்ட அம்மைபோல் வேறேகாப்
    பாத்த எவரோ பகர்….!

    சுனையாக வாழும் சிவனிட பாகத்தில்
    அணையாத சக்தீயே, அம்மே -வினையான
    மண்வாழ்வின் மாருதமாம் ஆனைக்கா அம்பிகை
    விண்ணாகா சத்தின் விளைவு….

    யானைக்(கு) ஒருகாலம் பூனைக்(கு) ஒருகாலம்
    ஆனைக்கா அன்னை அடியார்க்கோ -வானம்தீ
    மண்காற்று நீர்காலம் மற்றுள்ள பூதமிவன்
    முன்தோற்று மண்டியிடு மாம்….!

    தேனுக்காய் வண்டேபோல் தாவி அடைக்கலமாய்
    ஆனைக்கா அன்னை அடிபணிய -பானைத்தோல்
    பிண்டத்தால் பட்டகடன் பாரம் குருவித்தலை 
    சுண்டைக்காய் ஆகும் சிறுத்து….

    பானைத்தோல் பாரத்தால் பட்டகடன் போக்கிட
    ஆனைக்கா அம்மை அடிக்கமலம் -தேனைப்போய்
    வண்டுண்ணும் வேகத்தில் வந்துநீ மொய்த்திட
    சுண்டைக்காய் ஆகும் சிறுத்து….

    கூன்பிறையும் மான்மழுவும் தேனொழுகும் பூவிதழும்
    பூணிறையின் ஊனுறையும் ஆணுமையை -நான்மறையும்
    வானவரும் மாலயனும் காணஅரி தானவளைக்
    காணத் திருவானைக் கா….

    தானே தனக்குவமை ஆன உமையாளை
    வீணே வர்ணிப்பதேன் வெண்பாவில் -ஆனை
    தனையன்று காத்த அகிலாண்ட வல்லி
    துணையென்(று) அவளைத் துரத்து….கிரேசி மோகன்….!

     

     

    Share
  • நவராத்திரி 09

    இசைக்கவி ரமணன்

     

    Navaratri

    நகராத நாட்கள் நகர்கின்றன, எல்லாம்
    நாயகி சொன்னபடி நடக்கின்றன, அவள்
    பகராமல் எதையும்நான் செய்ததில்லை,
    பகிராமல் எதையும்நான் மறைத்ததில்லை
    சுகமென்றும் துயரென்றும் வருவதெல்லாம், சென்று
    சொல்லாமல் ஒருநாளும் சென்றதில்லை
    நகர்ந்துவிட்டாள் ஏனோ தெரியவில்லை! தவறு
    நான்புதிதாய் என்செய்தேன் புரியவில்லை!

    கணந்தோறும் எந்நலம் கேட்கின்றவள், நித்தம்
    கண்ணார நேசத்தைப் பெய்கின்றவள், என்னைப்
    பிணமாகப் பார்க்கின்ற பொருளென்னவோ? இந்தப்
    பிச்சியின் நெஞ்சின் கருத்தென்னவோ?
    ரணமாக உயிரெலாம் குடைகின்றதே, பல
    ராகங்கள் ஸ்ருதியின்றி உடைகின்றதே!
    மணமாலை பிணமாலை ஆகலாமா? தாய்
    மகனைப்போய்ப் பகையென்று தள்ளலாமா?

    கனவிலே நிலவுமுகம் காட்டுகின்றாள், காதல்
    கண்களால் இன்னும்தா லாட்டுகின்றாள்
    நனவிலோ தொலைவையே காட்டுகின்றாள்
    நான்ராணி என்பதை நாட்டுகின்றாள்
    மனதினை ஈயாக ஓட்டுகின்றாள், எனை
    மல்லாந்த ஆமையாய் வாட்டுகின்றாள்
    தினையளவும் என்மீதில் அன்பில்லையோ?
    சென்றகதை மாற்றுவதும் வன்பில்லையோ?

    அன்னையே! ஈதென்ன பரிசோதனை? காயும்
    அனலிலே மஞ்சமாய் ஒருவேதனை?
    வன்கொடுமை யால்வீழ்ந்த ஊமையாக, நான்
    வாடநீ பார்ப்பதா உன் சாதனை?
    உன்னில்நான் என்னில்நீ உண்மையன்றோ? அதை
    உணரா திருக்கின்ற பெண்மை நன்றோ?
    என்றென்றும் நீயென்றன் உயிரல்லவோ? நான் உன்
    அன்பிலே வாழ்கின்ற பயிரல்லவோ?

    போதுமம் மாயிந்தப் புதிய வேடம், பசும்
    புல்லுக்குத் தீயைப் புகட்டும் பாடம்
    தீதுநன் மையெலாம் தீர்த்தபின்பும், நான்
    தீரா திருப்பதில் என்ன லாபம்?
    ஆதரவுக் கேங்கிடும் அல்லிகண்டு, நிலவு
    அசிங்கமென் றேவிலகிச் செல்வதுண்டோ?
    காதலே யாவுமெனக் கற்றுத்தந்து, பின்
    காலால் மிதிக்கின்ற காதலென்னே!

    கன்னங் கருத்தசிறு பிள்ளையாக, மொத்த
    ககனம் அதிர்ந்திடும் காளியாக, இடை
    பின்னி நடக்கின்ற வஞ்சியாக,கிழப்
    பீடிகை போட்டிடும் பிச்சியாக
    என்னென்ன வடிவத்தில் வந்துநிற்பாய்! சுகம்
    எத்தனை வண்ணத்தில் தந்துநிற்பாய்!
    கன்னம் ஈரம்கண்டு காலமாச்சே! நீ
    கட்டித் தழுவினால் கவலை போச்சே!

    26.09.17 / செவ்வாய்

    Share