Blog

  • பறவையின் மனசு..!

    பெருவை பார்த்தசாரதி

     

    கற்றால்தான் உலகுபயன் மிகுமென்பதை மக்களும்..

    ……….கற்றபின்தான் உணர்ந்தறிய முடிகிறது.!…ஆனால்

    கற்காமலேயுலகில் வாழுமரிய உயிரினங்கள் பலவும்..

    ……….கற்றவருக்கு தன்செயலால் மேலும்கற்க வைக்கிறது.!

     

    பரந்துதிரியும் பறவைமனசை ஆராய்ந்து பார்த்தால்..

    ……….பாடம்பல சொல்லுமது…ஆறறிவுபெற்ற மனிதனுக்கே.!

    பரபரப்பான இயற்கைச் சூழலில் அழகுகொஞ்சும்..

    ……….பறவைக் கூட்டத்தைக் கண்டால்மனம் அமைதியுறும்.!

     

    பெற்றவள் ஒருவளிருக்க மற்றொரு பறவையதற்கு..

    ……….பெருமையுடன் உணவீந்தும் உயர்ந்த குணமுண்டு.!

    வேற்றுமை நிறமிலிருப்பினுமது ஒற்றுமையாகக் கூடிப்..

    ……….பற்றுடன் வாழ்வதற்கு பறவையெங்கே கற்றனவோ.!

     

    பகுத்துண்ணும் குணம்கொண்ட பறவையைப் பார்த்து..

    ……….படித்த மாந்தர்கள் கற்கவேண்டியது பலவுண்டாமதை..

    தொகுத்துப் பார்க்கின் புரியாதபல ஆச்சரியங்களதில்..

    ……….தொக்கி நிற்குமது மனிதனுக்குச் சாத்தியமில்லையாம்.!

     

    உச்சாணி மரக்கிளையிலோரம் ஒடிந்துவிழும் நிலையில்..

    ……….உறுதியுடன் தொங்கியாடும் தூக்கணாங் குருவிக்கூடும்.!

    பச்சிலையைச்சேர்த்து பசையிலாமலே இலைக்கூட்டை..

    ……….பசுஞ்சிட்டால் கட்டுமாற்றலு மிவைநமக்குச் சாத்தியமா.?

     

    உண்ணாமல் வெகுதூரம் பறக்கும் தன்னினத்துடன்சேர..

    ……….ஓராயிரம் மைல்கடக்கு மபாரசக்தி அதனிடமுண்டு.!

    உண்ணத்துடிக்கும் தன்குஞ்சுகளுக்கு ஓயாமல் இரை..

    ……….ஊட்ட உண்டதையுமிழ்ந்து தரும் பெரியமனசுண்டு.!

     

    பறவைத்தேடல் என்பதொரு வாழ்க்கைத் தேடலாகுமாம்..

    ……….பிரபஞ்சத்தில் பிரமிக்குமொரு படைப்பே பறவையினம்.!

    பறவைமனசு மிகப்பரந்த மனசாக அமைந்ததினாலந்தப்..

    ……….பறவையைத்தன் வாகனமாகக் கொண்டானோ இறைவன்.!

     

     

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 4

    -மேகலா இராமமூர்த்தி

    ”நாளை எங்குச் சந்திக்கலாம்?” என்று ஒவ்வொருநாளும் விடைபெறுமுன் தலைவியையும் அவளுயிரன்ன தோழியையும் தவறாது கேட்பது தலைவனின் வழக்கம். அவ்வாறே அன்றும் வினவினான்.

    அதற்குத் தோழி பதிலுரைக்கலானாள்…

    ”அன்ப! எம் ஊருக்கு அணித்தே பொய்கையொன்று உண்டு; அதனருகே ஓடுகின்றது ஒரு காட்டாறு; அக்காட்டாற்றுக்கு அருகே அமைந்துள்ளது அழகிய பூம்பொழிலொன்று. இரைதேரும் குருகுகளன்றி அப்பகுதி நாடி வேறாரும் வாரார். எம் கூந்தலை அலசுதற்கு வேண்டிய எருமண்ணைக் (களிமண்/ வண்டல்மண்) கொணர்வதற்காகத் தலைவியும் நானும் ஆண்டு வருவோம். நீவிர் அங்குவந்தால் தலைவியைச் சந்தித்து அளவளாவலாம்” என்று காதலரின் நாளைய சந்திப்புக்கு ஏற்றதோர் இடத்தைச் சொன்னாள்.

    பெண்கள் எண்ணெய்க் குளியலின்போது தம் கூந்தலில் தேய்த்துள்ள எண்ணெயின் பிசுக்கைப் போக்குதற்கு அற்றை நாளில் களிமண்ணை (இன்று சிகைக்காய் அல்லது ஷாம்பு பயன்படுத்துவதுபோல்) பயன்படுத்தியுள்ளமை இதன்மூலம் அறியக் கிடைக்கின்றது. இற்றை நாளிலும் இவ்வழக்கம் சில கிராமப்புறப் பெண்களிடம் இருத்தல் கூடும். இஃது ஆய்தற்குரியது.

    ஊர்க்கும்  அணித்தே  பொய்கை  பொய்கைக்குச்
    சேய்த்தும்  அன்றே  சிறுகான்  யாறே
    இரைதேர்  வெண்குரு  கல்ல  தியாவதும்
    துன்னல்போ கின்றாற்  பொழிலே  யாமெம்
    கூழைக்  கெருமண்  கொணர்கஞ்  சேறும்
    ஆண்டும்  வருகுவள்  பெரும்பே  தையே.  (குறுந்: 113 – மா(தி)தீரத்தன்)

    தோழியின் விருப்பப்படியே மறுநாள் பகற்போதில் எழிலார் பொழிலின்கண் தலைவனும் தலைவியும் சந்தித்தனர். தலைவியின் நெடுங்கூந்தலின் நறுமணம் தலைவனைச் சுண்டியிழுத்தது. ”மலரினும் நறியவோ உன் கூந்தல்…சொல் அரிவையே!” என்று கேட்டான்.

    “யானறியேன் அன்பரே! மலர்கள்தோறும் தேனைத் தேடியுண்ணும் தும்பியொன்று இதோ… நம்மருகே சிறகுவிரித்துப் பறக்கிறது பாருங்கள்! அதனிடம் உங்கள் ஐயத்தைக் கேளுங்கள்!” என்றாள் தலைவி வேடிக்கையாக.

    ”அப்படியா…இதோ கேட்டுவிடுகின்றேன்” என்று நகைத்த தலைவன், தும்பி ஒன்றைத் தன் கையில் ஏந்தி, “பூந்தாதைத் தேர்ந்துண்ணும் எழிற் சிறகமைந்த தும்பியே! நீ என் நிலத்தைச் சேர்ந்த வண்டாகையால் எனக்கு விருப்பமானதை உரைக்கவேண்டும் என எண்ணாது, உண்மையை உரை! என்னொடு கெழுமிய நட்புடைhoneybee இவ்வரிவை கூந்தல் மணத்தினும் மிக்க மணமுடை மலர்கள் இந்நானிலத்தில் உண்டோ நவில்!” என்று கேட்டான். தும்பியொடு தலைவன் நிகழ்த்திக்கொண்டிருக்கும் உரையாடல் கண்ட தலைவி நகையாடி அதனை இரசித்தாள்.

    கொங்குதேர்  வாழ்க்கை  அஞ்சிறைத்  தும்பி
    காமம்  செப்பாது  கண்டது  மொழிமோ
    பயிலியது  கெழீஇய  நட்பின்   மயிலியல்
    செறியெயிற்  றரிவை  கூந்தலின்
    நறியவும்  உளவோ  நீயறியும்  பூவே.   (குறுந்: 2 – இறையனார்)

    இப்பாடலைத் தருமி எனும் பிரமசாரிக்குப் பாண்டிய மன்னனிடம் பொற்கிழி பெற்றுத்தருவதற்காக ’ஆலவாய் இறையனார்’ பாடியதாய்த் ’தமிழ் நாவலர் சரிதை’ எனும் நூல் புகல்கின்றது. இதே கருத்தையே திருவிளையாடற்புராணம், கடம்பவன புராணம் போன்ற பின்னாளைய சைவசமயப் புராண நூல்களும் வழிமொழிகின்றன.

    தலைவன், ’தலைவியின் நலம் பாராட்டல்’ என்ற அடிப்படையிலேயே இப்பாடல் குறுந்தொகையில் அமைந்துள்ளது. கடவுட் கதைகள் ஏதும் இதனோடு இணைத்துச் சொல்லப்படவில்லை என்பதை அறிக. எனவே, இறையனார் எனும் பெயரிய மானுடப் புலவர் ஒருவர் இயற்றிய பாடலை, ’இறையனார்’ எனும் பெயர்கண்டு இஃது இறைவனே பாடியது என்று மக்கள் எண்ணியதன் விளைவாய் இத்தகு புராணக் கதைகள் பின்னர்த் தோற்றம் பெற்றிருத்தல் கூடும் என்று நினையவேண்டியுள்ளது.

    இப்பாடலில் தும்பியொடு தலைவன் நிகழ்த்திய நயமான உரையாடல் பிற்றைநாளைய புலவோர் உள்ளத்தையும் வெகுவாய்க் கவர்ந்திருக்க வேண்டும். ஆதலால்தான் இப்பாடலை அடியொற்றி வேறுசில பாடல்களும் எழுதப்பட்டிருக்கின்றன என எண்ணுகிறேன். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று நம்மாழ்வாரின் பின்வரும் திருவிருத்தப் பாசுரம்.

    வண்டுகளோ வம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ
    உண்டுகளித்துழல் வீர்க்கொன் றுரைக்கியம் ஏனமொன்றாய்
    மண்துக ளாடிவை குந்தமன் னாள்குழல் வாய்விரைபோல்
    விண்டுகள் வாரும் மலருள வோநுல் வியலிடத்தே.
    (திவ். பிரபந்தம் – திருவிருத்தம் – 55)

    தலைவனையும் தலைவியையும் பொழிலிடத்து விட்டுவந்தோமே…அவர்களை இப்போது கவனிப்போம்!

    தன் செயல்கண்டு நகையாடிய தலைவியின் சிரிப்பில் தலைவனும் இணைய, காதலரின் சிரிப்பொலி கேட்டுச் சோலை மரங்களிலிருந்த பறவைகளும் ஆரவார ஒலியெழுப்பி அவர்கள் மகிழ்ச்சியில் தாமும் பங்குகொண்டன.

    அப்போது பதற்றமாய்ப் பொழிலுக்குள் நுழைந்தாள் தோழி. அதுகண்ட தலைவி, ”என்னவாயிற்று… ஏனிந்தப் பதற்றம்?” என்றாள் மிரட்சியோடு.

    ”அதை ஏன் கேட்கிறாய்? சோதனையாய் இன்றுபார்த்து நம் அண்டைவீட்டுப் பெண்கள் பலரும் இந்தப் பொய்கைக் கரைக்கு எருமண் எடுக்க வந்துவிட்டனர். கரையோரம் நின்றிருந்த எனைப் பார்த்து,

    “நீ ஏன் இங்கே தனியே நிற்கிறாய்? உன் ஆருயிர்த்தோழியான தலைவி எங்கே?” என்று கேள்விக் கணைகளால் என்னைத் துளைத்தெடுத்துவிட்டனர். அவர்கள் நம்புகின்ற வகையில் விடைசொல்லித் தப்பிவருவதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது” என்று பெருமூச்செறிந்தாள் தோழி.

    தலைவி அவளைக் கவலையோடு பார்த்திருக்க, தொடர்ந்த தோழி, “இனியும் இந்தப் பொழில் உங்கள் சந்திப்புக்கு உகந்ததன்று. இவ்விடம்  மட்டுமன்று…இப்பகுதியிலுள்ள எவ்விடமுமே பகற்குறிக்கு உகந்ததன்று. ஆம், பகற்பொழுதில் திகிரிக்குப் போட்டியாய்த் திரிந்துகொண்டிருக்கும் நம்மூர் மக்களின் கழுகுக் கண்களிலிருந்து காதலர் நீங்கள் தப்பவே முடியாது” என்று கூறிநிறுத்தினாள்.

    தலைவி விக்கித்து நின்றாள்.

    ”அப்படியானால் இதற்கு என்னதான் தீர்வு? என் உடம்பொடு உயிரிடையன்ன தலைவியைக் காணாது நான் இருப்பது எவ்வாறு?” என்றான் தலைவன் வேதனை மீதூர.

    தோழி சற்று யோசித்துவிட்டு, ”இதற்கு ஒரு வழியிருக்கின்றது என்று கூறவும், தலைவனும் தலைவியும் ஏககாலத்தில் ”என்ன வழி?” என்றனர் பரபரப்போடு.

    ”பகலில்தானே நீங்கள் சந்திக்க இயலாது; இரவில் சந்திக்கலாமே! என்றாள்.

    தலைவியின் நிலவு முகத்தை மறைத்திருந்த கவலை மேகம் மெல்ல விலக, அவள் பவளச் செவ்வாயிலிருந்த முத்துப் பல்வரிசை பளீரிட்டது.

    “அப்படியானால் நானும் தலைவியும் நாளைமுதல் இரவில் சந்திக்கப் போகிறோமா? என்றான் தலைவன் உற்சாகமாக.

    ”ஆம்” – தோழி.

    ”எங்கே?” – தலைவன்.

    “நண்ப! தாழை பொருந்திய வளைந்த கழியானது இழுமென ஒலிக்கும் பெருங்கடலை வேலியாகவுடைய எம் சிறிய நல்லூரிலே, பொன்னணி புனைந்து கொடுஞ்சியொடு பொலியும் உம் நெடுந்தேரை (மலையொத்த) உயர்ந்த மணல்மேட்டிலே நிறுத்திவிட்டு, அதனருகே சற்றே இளைப்பாறி, தழையுடை அணிந்த இவ்வேந்திழையின் தனிமைத் துயர்தீர இவளோடு இனிதாய்த் தங்குவீர்” என்று இரவுக்குறிக்கான (இரவுநேரச் சந்திப்பு) இடத்தை உரைத்து அவனுக்கு விடைகொடுத்தாள் தோழி.

    இழையணிந்  தியல்வருங்  கொடுஞ்சி  நெடுந்தேர்
    வரைமருள்  நெடுமணல்  தவிர்த்துநின்  றசைஇத்
    தங்கினி  ராயின்  தவறோ  தகைய
    தழைதாழ் அல்குல்  இவள்புலம்  பகலத்
    தாழை தைஇய  தயங்குதிரைக்  கொடுங்கழி
    இழுமென  ஒலிக்கும்  ஆங்கண்
    பெருநீர்  வேலியெஞ்  சிறுநல்  லூரே(குறுந்: 345 – அண்டர்மகன் குறுவழுதியார்)

    விண்ணோடும் முகிலோடும் வெண்ணிலவு விளையாடும் நல்லிரவு நேரத்தில் பெண்ணிலவைச் சந்திப்பது தனக்கு இனியதோர் அனுபவமாக இருக்கும் என்றெண்ணி உவந்தபடி, தேரைத் தன் ஊர்நோக்கித் திருப்பினான் தலைவன்!

    [தொடரும்]

     

    Share
  • நவராத்திரி நாயகியர் (9)

    க. பாலசுப்பிரமணியன்

    சரஸ்வதி தேவி

    images (2)

    வெள்ளைத்தாமரை விரித்து விடியும்வரை காத்திருப்பேன்

    வீணையினைக் கையிலேந்தி விரைவாக வருவாயே

    கரையில்லாக் கலைகளைக் கைகளில் எடுத்துவந்தே

    தடையின்றித் தந்திடுவாய் தலைமகளே கலைமகளே !

     

    அசைகின்ற இதழ்களிலே உயிரூட்டும் மொழியனாய்

    அமுதான முத்தமிழில் அனுதினமும் இசையானாய்

    அழகான கவிதையிலே கற்பனையின் கருவானாய்

    அருளூற்றே! அலைபாயும் உள்ளத்தில் அமைதியானாய் !

     

    நரம்பெல்லாம் நான்மீட்டி நாதங்கள் எழுப்பிடுவேன்

    தசையெல்லாம் தாளமிட நின்நினைவே நடனமிட

    இருளெல்லாம் நீக்கிடவே எழுந்தருள்வாய் எழிலரசி

    இசையோடு மலர்தூவி இமைவிழித்துக் காத்திருப்பேன் !

     

    குரல்வேண்டும் வளம்வேண்டும் குறைவில்லா மதிவேண்டும்

    குலம்போற்றும் அறம்காக்க மறைசொன்ன மனம்வேண்டும்

    நான்முகனின் படைப்பினிலே நாலோடுஒன்றாக நானின்றி

    நாள்தோறும் உனைப்போற்றும் நல்லறிவு நீதரவேண்டும்  !

     

    எழுபிறப்பும் உன்னருளால் உயிரினங்கள் உயர்ந்திடவே

    எழுத்தறிவுக்கும் ஆசானாய் இனியதொழில் செய்யவேண்டும் !

    மடமைகள் மறைந்திடவே மாதங்கி அருளவேண்டும்

    மறக்காமல் உன்நினைவில்  உளம்மறந்து வாழவேண்டும் !

     

    விடையமர்ந்த மலைமகளோடும் வேங்கடத்தான் திருமகளோடும்

    நான்முகனின் நாவமர்ந்து நல்லவளே நீவருவாய் !

    விண்ணமர்ந்த வானவரின் வாழ்த்துக்கள் சேர்த்திடுவாய்

    மண்வாழும்  மாந்தருக்கே மகிழ்வுடனே  தந்திடுவாய் !

     

     

     

     

     

    Share
  • கீழடியில் தமிழர் தொன்மம்

    – நிலவளம் கு.கதிரவன்

        ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் முதலில் அவ்வினத்தின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பார்கள். மிக சமீபத்தில் எனது நகரம் சார்ந்த தமிழ் அமைப்பின் செயற்குழுவில் கலந்துகொண்டபோது இவ்விடயம் சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தேன். ஆதாரமாக 02.02.1835-ஆம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மெக்காலே ஆற்றிய உரையை மேற்கோளாகக் கூறினேன்.  மெக்காலே இப்படி பேசியிருந்தார். ”இந்தியா வளமான நாடு. தார்மீக மதிப்பும், சிறப்பும் கொண்ட அந்த மக்களின் ஆன்மிக நம்பிக்கை, கலாசார பாரம்பரியம் ஆகியவற்றின் முதுகெலும்பை முறித்தாலன்றி அந்த நாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலும் என நான் நினைக்கவில்லை”. பிறகு பேச்சு கீழடி அகழாய்வு தொடர்பில் சென்றது.

          தமிழர்களின் தொன்மையையும், நகரிய வாழ்க்கை முறையையும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் வண்ணம் கீழடி அகழாய்வில் அரிய சான்றுகள் கிடைத்து வருவது தமிழராகிய நாமெல்லாம் கர்வமும், பெருமையும் அடையக் கூடிய ஒன்றாகும்.  இத்தகைய பெருமையில் நாம் தொடர்ந்து திளைப்போமா என்பது ஆய்வு தொடர்ந்து நடைபெறுவதில்தான் உள்ளது.

           சிவகங்கை மாவட்டம் கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் திட்டமிடப்பட்டு மத்தியத் தொல்லியல் துறை உதவியுடன் அகழாய்வு தொடங்கப்பட்டது.  தொடங்கப்பட்ட சில நாட்களிலிலேயே, கி.மு.3-ம் நுற்றாண்டு தொடங்கி கி.பி.10ஆம் நுற்றாண்டு வரை தமிழர்கள் எத்தகைய நகர்ப்புற வாழ்க்கையை மேற்கொண்டனர் என்பதற்கான தடயங்கள் ஆய்வில் கிடைத்துள்ளன.  இதுவரை 5300 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன.  அதில் தமிழ்பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள், தொழிற்சாலை இருந்ததற்கான தடயங்கள், பாசன வாய்க்கால்கள், ஆப்கானிஸ்தான் கலைப் பொருட்கள், வட மாநில முத்து மணிகள் குறிப்பிடத் தகுந்தவையாகும்.இவையெல்லாம் அன்றே பெரு வணிகம் நடந்ததற்கான சாட்சியாகும்.

           இதன் மூலம் சிந்துசமவெளி நாகரிகம் மட்டுமே நகர நாகரிகம் என்பது புறந்தள்ளப்பட்டு, சங்க காலத்திலேயே தமிழன் நகர நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறான் என்பது புலனாகிறது.

           முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி அவர்கள்,  ”கீழடி ஆய்வின் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரிகத்தைக் கொண்டதல்ல என்ற கருத்துத் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  இந்த அகழாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள்  கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன.  சிந்து சமவெளி நாகரிகத்தைப் போல் இங்கும் நகர்ப்புற நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.  இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது.  புதிய தமிழ்ச் சொற்களும் இங்குதான் கிடைத்துள்ளன” என்று ஏற்கெனவே கூறியுள்ளதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

                       தவிரவும் தமிழர் தொல்லியல் வரலாற்றில் அதிகமான செங்கல் கட்டடங்கள் உள்ளதும் கீழடியில்தான். செங்கற்களைக் கொண்டு நுட்பமான முறையில் திறந்தநிலைக் கால்வாய், மேற்புறம் செங்கற்கள் கொண்டு மூடப்பட்ட கால்வாய், சுடுமண் உருளைகள் கொண்டு அமைக்கப்பட்ட கால்வாய் என வெவ்வேறு கோணங்களில் இருந்து ஓரிடத்தில் வந்து சேரும்படியான தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டிருந்தது, சங்ககாலத்தில் தமிழர்களின் அறிவியல் மேன்மையை புலப்படுத்துகிறது.

              இவை மட்டுமின்றி, கிடைக்கப் பெற்ற தொல் பொருட்களில் வேந்தன், திசயன், இயணன், சேந்தன், அவதி முதலிய சொற்களும், ”வணிகப் பெருமூவர்” என்று குறிப்பிட்ட ( சேரர், சோழர், பாண்டியர் ஆகியோரே வணிகப் பெருமூவர்) ஆதாரங்களும் கிடைத்ததின் வழியாகச் சங்க இலக்கியத்தில் குறிப்பிட்ட பெயர்களோடு இவை பொருந்திப் போவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

               மேலும் தமிழறிஞர் ம.ராசமாணிக்கனார் தனது நீண்ட சங்க இலக்கிய ஆராய்ச்சியில், சங்ககால மதுரை தற்போதைய மதுரை இல்லை என்றும், அது திருபுவனத்திற்கு மேற்காகவும், திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்காகவும் அமைந்திருக்கக் கூடும் எனக் கூறினார்.  தற்போதைய கீழடி அகழாய்வும் அதை உறுதிப்படுத்தும் வண்ணமே உள்ளது.

                110 ஏக்கர் கொண்ட கீழடியின் மொத்த அகழாய்வு இடத்தில் 50 சென்ட் இடத்தில் மட்டுமே தற்பொழுது இரண்டு கட்டங்களாக ஆய்வுகள் நடைபெற்று நிறைவுபெறும் நிலையில் உள்ளது.  மூன்றாம் கட்ட அகழாய்வு தொடர்ந்து நடைபெறுமா? என்ற ஐயம் கல்வியாளர்கள், தொல்லியல் வல்லுநர்கள், வரலாற்றாய்வாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.  இது தவிர, கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் வழக்கமாகக் கொண்டு செல்லப்படும் மைசூர் அருங்காட்சியகத்திற்கே கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்படிச் சென்றால் ஆதிச்சநல்லூர் ஆய்வுக்குக் கிடைத்த கதிதான் கீழடிக்கும் ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

     ஏற்பட்டுள்ள ஐயங்களையும், அச்சங்களையும் போக்க வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை.  தமிழர்களின் தொன்மை நாகரிகத்தைக் கண்டெடுத்து, உலகிற்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு நமது தமிழக அரசிற்குக் கூடுதலாக உள்ளது.  எனவே கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை அருங்காட்சியகம் அமைத்துப் பராமரிக்க ஏதுவாக மாநில அரசு உறுதியளித்தது போல் உடனடியாக 2.5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்.  தொல் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தி உடனடியாக அறிக்கை வெளியிட ஆவனசெய்து தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உறுதி செய்ய வேண்டும்.  இதுவே அனைத்துத் துறை வல்லுநர்களின் எதிர்பார்ப்பாகும்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    புத்தாண்டு அன்று பத்மாவதித் தாயார்(திருச்சானூர்) தரிசனம்….கீழ் திருப்பதியில் நாடகம்….தாயார் சந்நிதியில் தோன்றிய வெண்பா….

    170926 Padmavathi - Devi series 07 - lr

    “மலைமேல் மால்மணாளர் மேவிட, மங்கா,
    அலமேல் அடிவாரம் ஆள்வோய், -கலைமேவி,
    நாடக பாக்கியத்தை, நாங்கள் அடைந்திட,
    ஆடகச்செம் பொன்னே அருள்”….!
    “உச்சிவான் தோன்றி உறுமும் இடிமின்னல்
    பச்சை மலையில் பளிச்சிடலாய் – அச்சுதன்
    மாலின் மரகத மார்பில்பத் மாவதி
    பாலின் நிறத்தில் பொலிவு”….!
    “சீதையாய் ராமன்பின் சென்றளித் தாள்ஜெயத்தை
    கோதையாய் கோவிந்தன் கைப்பிடித்தாள்-ராதை
    யாகி ரசித்தாள் யதுகுலக் கண்ணனை
    பாகிபத்மா பாதாம் புஜம்”….கிரேசி மோகன்….!

    Share
  • நவராத்திரி (8)

    இசைக்கவி ரமணன்

     

    hqdefault

    நீ கானம் நீ மோனம் நீயே மெளனம்

    நீ தென்றல் நீ சூறை நீயே
    அமைதி

    தேவை தருவதும் நீ
    அதைத்
    தீர்த்து வைப்பதும் நீ
    ஆசை தருவதும் நீ
    மிக மிக
    அலைய வைப்பதும் நீ

    தேவை யாவும் தீர்ந்த பின்னும்
    தேட வைப்பது நீ

    யாவும் ஒன்றென அறிந்திடும் வரை
    எதிரில் இருந்தும் ஏங்க வைப்பது நீ

    கன்னல் பிழிந்தே சாறு தருவாய்

    காற்றைப் பிழிந்தே மாரி பொழிவாய்

    மின்னல் பிழிந்தே சொல்லை எடுப்பாய்

    உருவைப் பிழிந்தே அருவைத் தருவாய்

    என்னைப் பிழிந்தாய் என்னவோ!
    அது
    உன்னைப் பார்த்திடும் எண்ணமோ!

    உன்னில் நானும் என்னில் நீயும்
    என்றும் ஒன்றாய் நின்ற துன்னருள் (நீ)

    25.09.2017 / திங்கள் 

     

    Share
  • இவ்வார வல்லமையாளர் (241)

    இவ்வார வல்லமையாளராக மலேசியாவை சேர்ந்த கமலநாதன் அவர்களை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

    தேனி எனும் புனைபெயரில் தமிழ் மீதும் சைவம் மீதும் ஒப்பற்ற அன்புகொண்டு எழுதிவரும் பெருந்தகையாளர் திரு கமலநாதன். இவர் திருக்குறளுக்கு சைவ சித்தாந்தம் சார்ந்து எழுதும் விளக்கவுரைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் நில்லாது சைவசித்தாந்த கருத்துக்களை குறள் சார்ந்த பொருளில் அறியவும் வழி வகுக்கிறது.

    இதற்கு ஒரு சான்றாக திருக்குறளில் உள்ள அறவாழி அந்தணன் எனும் குறளுக்கு இவர் தரும் பொழிப்புரையை காண்போம்.

    திருக்குறளில் “அறவாழி அந்தணன்”

    சைவம் கூறுவதென்ன?

    பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
    மறவா அருள்தந்த மாதவன் நந்தி
    அறவாழி யந்தணன் ஆதி பராபரன்
    உறவாகி வந்தென் உளம்புகுந் தானே.(10:7௯-திருவருள் வைப்பு- பாடல் 10)

    முதுமுனைவர் சி. அருனை வடிவேலு அவர்களின் பொழிப்புரையும் குறிப்புரையும் – தருமை ஆதின திருமுறை விளக்கவுரை நூல்.

    பொழிப்புரை:

    சிவபெருமான் எனக்கு இனிப் பிறவா நெறியை அளித்த பெருங்கருணையை உடையவன். அதன்பின்னும் தன்னை யான் மறவாதிருக்கும்படியும் அருள்புரிந்தான். தவக்கோலத்தைப் பூண்டவன். அறக்கடலாய் அழகிய தட்பத்தையும் உடையவன். தனக்கொரு முதல் இன்றித்தானே எல்லாவற்றிற்கும் முதலானவன். எல்லாவற்றிற்கும் மேலொடு கீழாய் விரிந்தவன் ல் அத்தகையோன் தானே எனது உள்ளத்தைத் தகவு செய்து அதனுட் புகுந்தான்

    குறிப்புரை:

    `எனவே, இப்பயனை விரும்புவோர் யாவரும் அவனையே உணர்தல் வேண்டும்` என்பது குறிப்பு. “நந்தி“, என்பதை முதலிற் கூட்டியுரைக்க. மறந்தவழிக் கன்மமும், மாயையும் அற்றம் பார்த்து வந்து அடுத்தல் மறவாதவாறு அருள் செய்வானாயினான்.

    “மாதவன்“ என்பதற்கு, `மங்கை பங்காளன்` என்று உரைத்தலும் ஆம் `பெண்ணாகிய பெருமான்`3 என்று அருளிச் செய்தது காண்க. `இஃது அவன் பேரருளாளன் ஆதலைக் குறிக்கும் குறிப்பு` என்பது கருத்து.

    “இறைவனாவான் அறவாழி அந்தணன்“ 8 என்னும் மறை மொழிக்கு இலக்கியமாய் உள்ளவன் என்பதுணர்த்தற்கு அம் மொழியைக் கொண்டு கூறினார். இதன் பொருள் விளக்கம் இதன் உரையிற் காண்க. பரன் – மேலே உள்ளவன்; அபரன் – கீழே உள்ளவன்.
    இதனால், `திருவருள்` எனப்படுவது சிவனது அருளே என்பது தெரித்துணர்த்தப்பட்டது. பிறரது அருளைத் திருவருளாக மயக்கி எய்த்திடாமை இதனது பயன் என்க.

    தமிழ் மற்றும் சைவம் மேல் பக்தி பூண்டுள்ள கமலநாதன் அவர்களை இவ்வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இவரை போலவே தமிழ்ச்சித்தாந்த நூல்களை வாசித்து பொருள்காணும் வல்லமை தமிழ் இளைஞர்களுக்கு வர இந்த தேர்வு உதவும் என வல்லமை நம்புகிறது

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share
  • நவராத்திரி நாயகியர் (8)

    க. பாலசுப்பிரமணியன்

     

    அஷ்ட லட்சுமியர்

    ashtalakshmi-QM21_l

     

     கண்ணனின் காதலியே கருணையின் புன்சிரிப்பே

    கற்பனையின் முதலசைவே கதிரின் முதலொளியே

    கலைகளின் முதலெழுத்தே கருவின் முதல்மூச்சே

    காலத்தின் கண்விழிப்பே காத்தருள்வாய் ஆதிலட்சுமி !

     

    சிதறாத கவனத்தைச் சிந்தையில் தந்து

    உறங்காத உள்ளத்தில் உழைப்பை5த் தந்து

    வீழ்ந்தாலும் எழுகின்ற உறுதியைத் தந்து

    வெற்றிக்கு வழிகாட்டும் விஜயலட்சுமியே !

     

    தருமத்தைக் காக்க நெருப்பாக எழுகின்ற

    துணிவான தோள்களுக்குத்  துணையாக நின்று

    மலைக்கின்ற நேரத்தில்  மலையான தைரியத்தை

    மடைவெள்ளமெனத் தருகின்ற தைரியலட்சுமியே !

     

    மண்ணும் செல்வமே மழையும் செல்வமே

    மலரும் மணமும் பயிரும் உயிரும்

    மதியும் அறிவும் உழைப்பும் உயர்வும்

    மகிழ்வும் தருவாள் செல்வமாய் தனலட்சுமி !

     

    தான்படைத்த உயிர்கள் தரணியிலே தழைத்திடவே

    நெல்லொடு கம்பும் நிலமெல்லாம் தானியமும்

    பாலோடு பழமும் பருப்பும் பல்வகைக்கனியும்

    தடையின்றித் தருபவளே தாயே தான்யலட்சுமி

     

    தாய்மைக்கு நிகரில்லை தாயுள்ளம் ஈடில்லை

    தரணியிலே திருக்கோயில் கருவறையில் கொண்டவளே

    பூவுக்கும் புழுவுக்கும் தாய்மையினைத் தந்தவளே

    சந்ததியைத் தந்தருளும் சக்தியே சந்தானலட்சுமியே

     

    கரையறியா விண்ணொளியை கற்பனையாய்த்  தருபவளே

    கலையெல்லாம் கண்விழியில் கருணையாய்க் கொண்டவளே

    மதிகொண்ட இருள்நீக்க எண்ணெழுத்தில் இனிப்பவளே !

    விதிவெல்ல மதிதேடும் வித்தையே வித்யாலட்சுமியே !

     

    கரியோடு அரியும் கணக்கில்லா கால்நடைகள்

    கடலுள்ள உயிரினங்கள் பறக்கின்ற புள்ளினங்கள்

    மண்ணுள்ளே மறைந்திட்ட எண்ணில்லா உறவெல்லாம்

    கண்ணின்று காக்கின்ற கருணையே கஜலட்சுமியே !

     

    வடிவங்கள் பலகொண்டு வற்றாத நதியாய்

    அகிலங்கள் காக்கும் அழிவில்லா அருளூற்றே

    பருவங்கள் அனைத்திலுமே பரந்தாமன் துணையோடு

    பசிதீர்க்க வருவாயே பாராளும் பெருந்தேவி !

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (28)

     எத்தவம் சிறந்தது ?

    துறவு பூண்டு இமயத்தில் இருந்து இறைவனை ஆராதித்துக்கொண்டிருந்த ஒரு முனிவருக்கு சில சீடர்கள் இருந்தனர். அவர்களில் ஒரு சீடன் தன்னுடைய குருவை அணுகி “குருவே, பல ஆண்டுகள் தவம் செய்து நீங்கள் பல விதமான திறமைகளை அடைந்திருக்கின்றீர்கள். இவற்றில் சிலவற்றையாவது தாங்கள் எனக்குச் சொல்லிக்கொடுத்தால் மிகப் பேறுபெற்றவனாக இருப்பேன்.” என்றான்.

    அவனைப் பார்த்து சிரித்த குருவோ ‘நீ முதலில் தன்னை வென்றுகொள் ” என்று சூசகமாக சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார், இதனால் கோபமடைந்த சீடனோ அந்த குருவிடம் சொல்லாமல் மலையின் இன்னொரு பகுதியில் வாழும் மற்றொரு துறவியிடம் புகலடைந்தான். சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவன் தன்னுடைய முதல் குருவிடம் தான் கற்ற கலைகளைக் காட்டி பெருமிதம் கொள்வதற்காகத் திரும்பி வந்தான். அவனை வரவேற்ற குருவிடம் தன் திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் “குருவே. உங்களால் செய்ய முடியாததை என்னால் செய்ய முடியும்” என்று சொல்ல புன்முறுவலுடன் குருவும் “அப்படியா, மிகவும் மகிழ்ச்சி. அப்படி என்ன செய்யப் போகின்றாய்?” என வினவினார்.

    அவன் “இதோ என் வாயைத் திறந்தேனென்றால் ஏன் நாவிலிருந்து தீப்பொறிகள் பறக்கும்” என்றான். “மிகவும் மகிழ்ச்சி. ஆனால் இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள உனக்கு எவ்வளவு காலம் பிடித்தது ?” எனக் கேட்டார்

    அவனோ பெருமிதத்தட்டுடன் :”இதைக் கற்றுக்கொள்ள இருபது ஆண்டுகள் ஆயிற்று” என பதிலளிக்க குருவோ “மூடனே, பத்து வினாடிகளில் தீக்குச்சியால் கொணரக்கூடிய நெருப்பைத் தோற்றுவிக்க உனது இருபது ஆண்டுகளை வீணடித்து விட்டாயே” என்று சொன்னார்.

    இது போல்தான். நம்மில் பலரும் ஒளிப்பிழம்பாக உள்ளே நின்று நம் வாழ்வை வளப்படுத்திக்கொண்டிருக்கும் இறைவனை அறிந்து கொள்ளாமல் இங்கும் அங்கும் அவனைத் தேடி, எந்த முறையில் பிரார்த்தனை செய்தால் நமக்கு அவன் கிடைப்பான், எந்தத் தவம் சிறந்தது என்று அலைந்து கொண்டிருக்கின்றோம். இதற்குத் தெளிவு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் இந்தப் பாடல்

    இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்

    பித்தரைக் காணின் தருமங்கள் போநந்தி

    எத்தவ மாகிலென் எங்கு பிறக்கிலென்

    ஒத்துணர் வார்க்கு கொல்லையூர் புகலாமே

    எந்த வழியில் நாம் இறைவனை அடைய முயற்சித்தாலும் எப்பொழுது நாம் அவனோடு ‘ஒத்துணர்’ நிலையில் இரண்டறக் கலந்த நிலையில் அபேதமாக இருக்கும்பொழுதுதான் நமக்கு உண்மையான அனுபவம் கிடக்கின்றது.

    இந்த நிலையைத் தேடிய பத்திரகிரியாரும் கூறுகின்றார்

    நானெவு நீயெனவு நாமிரண்டு மற்றொன்றும்

    நீயெனவே சிந்தைதனி னேர்படுவ தெக்காலம்?

    இந்தக் கருத்தையே வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது பட்டினத்தாரின் கீழ்கணட பாடல்

    எட்டுத் திசையும் பதினாறு கோணமு மெங்குமென்றாய்

    முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம்

    கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் கருத்தில்வையார்

    பட்டப்  பகலை யிரவென்று கூறிடும் பாதகரே

    என்ன அருமையான கருத்து.! தங்கள் மனதிலும் கருத்திலும் இறைவனை வைக்காமல் எட்டுத் திசைகளும் பதினாறு கோணங்களிலும் இறைவனைத் தேடும் மூடர்களைப் பற்றி என்ன சொல்வது?

    இந்தத் துயரிலிருந்து நாம் எப்படி விடுபட முடியும்? அவனுடன் உறவை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? அவனை மனதுக்குள்  சிறைப்படுத்தி விடலாமா? அதன் பின்பு எப்படி அவனை நம்பால் பற்று வைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் ?

    இதோ விடை கிடைக்கின்றது திருமூலரின் இந்த உன்னதமான உணர்ச்சிமயமான பாடலில்:

    அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்

    என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்

    என்பொன் மணியை இறைவனை ஈசனைத்

    தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே.”

    அது மட்டுமா ? திருமூலரின் மனம் என்னவெல்லாம் செய்ய விழைகின்றது?

    சூடுவன் நெஞ்சிடை வைப்பன்  பிரான்என்று

    பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்

    றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று

    நாடுவன்  நானின் றறிவது தானே.

    இந்த ஆனந்த அனுபவத்தை எல்லோராலும் பெற முடியுமா? இறைவனுடன் இப்படிப்பட்ட சொந்தத்தையும் உரிமையையும் எல்லோராலும் எடுத்துக்கொள்ள முடியுமா? இந்த ஆனந்த நிலையிலே திருமூலரைப் போன்று வேறு யாரவது இருந்திருக்கின்றார்களா ?

    உண்மை! இதே ஆனந்த நிலையை வெளிப்படுத்துவது போல் உள்ளது மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் உள்ள கீழ்கண்ட பாடல்

    பாடவேண்டும் நான் போற்றி நின்னையே

    பாடி நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு

    ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து

    ஆடும் நின் கழல் போது நாயினேன்

    கூட வேண்டும் நான் போற்றி இப்புழுக்

    கூடு நீக்கு எனைப் போற்றி பொய் எலாம்

    விட வேண்டும் நான் போற்றி வீடு தந்து

    அருளு போற்றி நின் மெய்யர் மெய்யனே.

    இப்படிப்பட்ட பரவச நிலைக்கு எல்லா உயிர்களும் தங்களைத் தயார் செய்து கொள்ள முடியுமா? இதற்கும் அந்தத் திருவருளின் துணை வேண்டாமா?

    தொடரும்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170925 - Devi 06-Mahalakshmi  Kolhapur -lr
    170925 – Devi 06-Mahalakshmi Kolhapur -lr

    “பத்தவ தாரப் பணிக்குதவ பூதேவி,
    நித்திரை யோகமோ நீளாவால், -பத்தர்க்கு
    சேர அருள்சகாயம் ஸ்ரீதேவி , ஆகமால்
    தாரங் களின்தயவால் தான்”….கிரேசி மோகன்….!

    Share
  • “காயத்ரி”

     
    மீ.விசுவநாதன்

    1474968304-9786
    ஆதிசக்தி ஒன்றென்று – மனம்
    ஆழப் பதிந்த விதையொன்று – தினம்
    ஒதிபக்தி செய்வதற்கே – நன்கு
    ஓங்கி வளர்ந்து உருவாச்சு !

    நாதியாகத் தானிருந்து – மெய்
    ஞான விளக்கு எரிவதற்கு – தன்
    சோதிக்கண் தந்தவளே – என்
    சூட்சு மத்தின் திரியவளே !

    எப்போதும் உள்ளிருந்தே – அந்த
    ஏக உருவை உணர்வதற்கு -வாய்த்
    துப்பலெனும் தாம்பூலம் – ஒரு
    சொட்டு மிழ்ந்து சுகந்தருவாள் !

    கற்றதுவும் பெற்றதுவும் – அவள்
    கருணை இன்றிக் கிடையாது -என்
    உற்றதுணை “காயத்ரி” – அதை
    உச்ச ரிப்பேன் பயமேது ?

    (25.09.2017 10.44 am)

    Share
  • படக்கவிதைப் போட்டி 128-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    crane

    நீரில் ஓடுமீனைக் கவ்வி உண்பதற்குச் செவ்வி பார்த்திருக்கும் கொக்கைத் தன் ஒளிப்படப்பெட்டியில் களிப்போடு பதிவுசெய்து வந்திருப்பவர் திரு. வெங்கட்ராமன். நீரில் ஒயிலாக நின்றிருக்கும் பறவையைப் படக்கவிதைப் போட்டிக்கானப் பாடுபொருளாய்த் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி.

    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த விடத்து
    (490) என்று காலம் பார்த்திருக்கும் கொக்கின் பொறுமையையும், எண்ணிய காலம் வாய்த்ததும் திண்மையாய்க் காரியமாற்றும் அதன் வீரியத்தையும் விதந்தோதுகின்றது வள்ளுவம்.

    படத்தில் காட்சிதரும் கொக்கைவைத்துப் பக்குவமாய்ப் பாடல் சமைக்க அடுத்து வருகின்றார்கள் நம் கவிஞர்கள்!

    வருக கவிவலவர்களே! தருக உம் கவியமுதை…யாம் பருக! என்று அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

    ***

    முன்பு குளக்கரையில் தண்ணீருக்காகக் காத்திருந்த கொக்கு, தண்ணீர் வந்ததும் கொத்தித் தின்ன மீன்வருமா என்று மீண்டும் காத்திருக்கின்றது! அதன் ஆசை நிறைவேறுமா…இல்லை கானல் நீராய் மாறுமா? என்று கவலையோடு கேட்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வருமா…?

    காத்திருக்கிறது கொக்கு,
    கானல்நீராம் வாழ்வை எண்ணி..

    முன்பு
    குளம் வறண்டபோது,
    குடிக்கக்கூட நீரின்றி
    காத்திருந்தது
    குளத்தில் தண்ணீருக்காக..

    தண்ணீர் வந்தது,
    குடித்துவிட்டு
    நீரில்
    நிலையாய் நின்று
    காத்திருக்கிறது இப்போது
    மீனுக்காக..

    வருமா,
    வாழ்க்கையது கானல்நீரா…!

    ***

    ”’பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்பதைத் தன் செய்கையால் மெய்ப்பிக்கும் அற்புதப் பறவையல்லவா இது!” என்று பூரிக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம். 

    பறவை சொன்ன பாடம்:

    நீர் நிலையில் நின்று தவம் செய்யும் பறவை இது!
    பொறுத்திருந்தால் நன்மை உண்டென்று உணர்த்தும்பறவை இது!
    பதறிய காரியம் சிதறி விடும் என்று நமக்கு
    காட்டும் பறவை இது!
    பாலின் நிறம் கொண்ட அழகுப் பறவை இது !
    உள்ளது போகாது! இல்லது வாராது!
    எனும் பாடம் சொல்லும் பறவை இது!
    ஆண்டவன் படைத்த அற்புத படைப்பு இது!
    பொறுத்தார் பூமி ஆள்வார்!
    கொக்கிடம் இது நான் கற்ற பாடம்!
    என் வாழ்க்கையில் கூட வரும்!
    அனைத்தும் இனி எனக்கு கை கூட வரும்!

    ***

    ”தனக்கு இரைதேடி நீரில் தவமிருக்கும் இந்தக் கொக்கும் ஒருநாள் இன்னொருவனின் தோட்டாவுக்கு இரையாகும். ஒன்றையொன்று அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ்வுலகத்து இயற்கையே” என்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி. 

    உயிர் உணவு...!

    அக்கால முனிவர் அந்தரத்தில் தொங்கியே..
    ……….
    அருந்தவம் புரிவார் வாழ்வின் காரணமறிய..
    கொக்கொன்று இரை தேடித் தண்ணீரின்மேல்..
    ……….
    கொள்வது தன்வயிறை நிரப்பும் தனித்தவமாகும்.!
    பக்குவமாய்த் நீரில் தவமிருந்து இரைபிடிக்க..
    ……….
    பாம்புபோல் இருக்கும் தன்கழுத்தை நீட்டும்.!
    சிக்குமென சிலமணி நேரம் காத்திருக்கும்..
    ……….
    சீராகக் கண்ணை இரைமேல் பதித்திருக்கும்.!

    பாவப்பட்ட ஜென்மமது பறந்து திரிந்தாலும்..
    ……….
    பசியாற ஓரிடத்தில் உட்காரும்.!….அப்போது
    ஏவப்பட்ட தோட்டாவுக் கது இரையாகும்.!

    ……….இதுவுமோர் இயற்கை வகுத்த விதியாகும்.!
    தூவப்பட்ட இரை எளிதே கிடைக்குதென்று..
    ……….
    தீதுநினையாப் பறவைகள் வலையில் சிக்கும்.!
    தேவைப் பட்டால் எவ்வுயிரும் உணவாகும்..
    ……….
    தங்கும் மண்ணில் வாழுகின்ற மனிதனுக்கே.!

    இரைகவரும் கொக்கின் திறமையை, பொறுமையைத் தம் பாடல்களில் சிறப்பாய்ப் பதிவுசெய்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    ***

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

    காலமறிந்த கொக்கே
    வெண்மையின் உருவே!
    வெண்பட்டு வனப்பே!
    நீரைத் தாண்டிய நீளமான காலழகே!
    காலத்தின் மதிப்பே
    கூர்ந்த நோக்கே
    சித்திரத்தில் முத்திரை பதிக்கும்
    தூரிகையின் துடிப்புடன் துழாவும் அலகே!
    அலகுயெனும் தடம்பிடித்து வெற்றித் தடம் பதித்த அழகியே!
    குறிக்கோள் கொண்டு குறிவைக்கும் குறிகாரி!
    இலக்கினை அடையத் தனித்திருந்து விழித்திருக்கும் வித்தகி!
    இடமறிந்து திடமுடன்
    இலகுவாய் இரைகவரும் இலட்சியவாதி!
    ஒற்றைக் கால் தவத்தில்
    ஓடுமீன் பற்றும் பண்பான பறவையே
    ஆதலால் காதல் கொண்டே
    உன்னைப் பாடியது வான்புகழ் வள்ளுவம்
    உலகமறிந்த உன்னுழைப்பை
    உறங்கும் உள்ளங்களில் தூவ வேண்டும்!
    பறவையின் பவிசு பாரெனப்
    பாரெங்கும் பாடவேண்டும்!
    மானுட மதிப்பறியா
    மயங்கிய மனங்களில்
    சிறகசைத்துப் பறவையின் புகழை ஓதவேண்டும்!
    ஒய்யாரக் கழுத்தசைத்து
    அலகு தூரிகையில்
    காலத்தின் மதிப்பெழுது கொக்கே!
    கடமை மறந்து களித்திருப்போரைக்
    கைவிடட்டும்
    சோம்பல் சொக்கே!

    காலமறிந்து காரியமாற்றினால் ஞாலமும் கைகூடும்; வையகமும் நம் கையகம் வரும் என்பது ஆன்றோரின் அனுபவமொழி.   அதனைத் தக்கபடி உணர்ந்து, ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருந்து, தன் திறத்தால், மதியின் தந்திரத்தால் இலகுவாய் இரை கவரும் கொக்கென்னும் இந்த இலட்சியவாதியைப் பாரே வியந்து பாடவேண்டும்; இப்பறவையின் புகழை ஓதவேண்டும் என்று கொக்கின் செயலைச் சொக்கும் வார்த்தைகளில் செப்பியிருக்கும் திருமிகு. மா. பத்ம பிரியாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • நவராத்திரி 07

    abhirami-1

     

    நானிருக்கின்றேன்! ஓஹோ!
    நானிருக்கின்றேன்! இந்த
    வானும் வெளியும் அதையும் தாண்டி
    வளருகின்ற மர்மங்களும்
    தேனும் மலரும் தெப்பக் குளமும்
    தேனடையும் தெருவின் முனையும்
    ஊனும் உயிரும் அதிர அதிர
    உரக்க உரக்கக் கூவுகிறேன்

    நானிருக்கின்றேன்! ஓஹோ!
    நானிருக்கின்றேன்!

    அமைதி என்பதா? ஆ
    னந்த மென்பதா? இந்த
    அதிச யங்களின் அதிபதியாய்
    ஆசையற்ற அரசனாய்
    துதிகள் பாடும் அடியவனாய்
    துதிகள் ஏற்கும் தெய்வமாய்
    விதியின் வசத்தில் வெறும் சருகாய்
    விதிகள் பதியும் திருவடியாய்
    நானிருக்கின்றேன்! ஓஹோ!
    நானிருக்கின்றேன்!

    எங்கு நிற்கிறேன்? நான்
    எதனைப் பார்க்கிறேன்?
    பொங்கும் கடலில் ஒருதிவலை
    புளகமுற்றுப் பூத்தெழுந்து
    தங்க வானைத் தடவி மயக்கித்
    தரை யிறக்கித் தழுவிக் குலவிச்
    சிங்க நாதம் செய்து பிடரி
    சிலிர்த்துச் சின்னச் சுடரில் ஒடுங்கி
    பொங்கும் கடலில் ரகசியத்தைப்
    பொத்திச் சிரிக்கும் திவலையாக
    நானிருக்கின்றேன்! ஓஹோ!
    நானிருக்கின்றேன்!

    தக்கையாக இருந்து நீலக்
    கடலில் மிதக்கிறேன்
    தரங்கமாக இருந்து தரையைத்
    தாங்கி மகிழ்கிறேன்
    சக்கையாகக் கிடந்து பின்னும்
    சாற்றைப் பார்க்கிறேன்
    சக்தி யாக இருந்து பரா
    சக்தி என்கிறேன்!

    அதிசயத்தின் உச்சமன்றோ
    நானிருப்பது!
    ஆனந்த உன்னதமே
    அவளைப் பார்ப்பது!
    கதிகளிலே அரிது தமிழ்க்
    கவிஞனென்பது
    களிப்பினிலே லஹரி அதையும்
    கவிதை சொல்வது!

    அச்சமின்றிச் சொல்லுகிறேன்
    அன்னை சக்தி நான்
    அப்படியே கூவுகிறேன்
    அவளின் பிள்ளை நான்
    மிச்சமின்றித் தீர்ந்தபோதும்
    மிஞ்சிடுவேன் நான்
    மிஞ்சி அணிந்த வஞ்சி பதம்
    மேவிடுவேன் நான்!

    அவளைப் பாட அவளி லிருந்து
    அகிலம் வந்தேன் நான்
    ஆனந்தத் தலைநகரம்
    அமைதி யாவும் நான்
    கவிதையினால் கவலை தீர்க்கும்
    காளி காளி நான்
    காணவொண்ணாக் காளியவள்
    கண்களன்றோ நான்!
    நானிருக்கின்றேன்! ஓஹோ!
    நானிருக்கின்றேன்!

    25.09.2017 / திங்கள் / காலை 7.55

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    எழுதாத நாளே பழுதான நாளாம்
    பொழுதென்றும் வெண்பா புனைந்து -தொழுதிட
    செய்வாய் சிபாரிசு செவ்வேள் முருகனிடம்
    ”பெய்வாய் தமிழ்மோஹன் பால்”….!

     

    தேவி திருப் புகழ்….

    170924 - Skandamatha -Devi series -lr

    “ராசனொடு ஆடும்சிவ காமிமுகம் ஒன்று
    ராவில்நில வானஅபி ராமிமுகம் ஒன்று
    பேசுதமிழ் ஞானமகன் பாலின்முகம் ஒன்று
    பூசுதிரு நீறுமக மாயிமுகம்ஒன்று
    தேசகவி பாரதியின் மாரிமுகம் ஒன்று
    தேவிகரு மாரியென தோன்றுமுகம் ஒன்று
    ஆசுகவி ஆகயெனை ஆக்கவரு வாயே
    ஆதிசிவன் பாகமிட மானமுலை யாளே”….

    “நமச்சி வாயன் நுதல்வாய் புதல்வ
    உமைச்சி வேலை உடையோய் படையாய்
    சுமக்கத் தாயார் ,சிறுவா புரியே
    நமர்க்கை சேரா நிலைநாட் டிடுவாய்”….கிரேசி மோகன்….!

    ’’கந்தமாதா, கல்யாணி கற்பக காமாக்‌ஷியாய்
    வந்தமாதா வீரத்தை வேலவர்க்கு -தந்தமாதா
    காளி, நரசிம்மி,காபால காவராஹி
    தூளியில் தாலேலோ தாய்’’….கிரேசி மோகன்….!

     

    Share
  • நவராத்திரி நாயகியர் (7)

     க. பாலசுப்பிரமணியன்

     

    ஞானாம்பிகை      

    srikalahasti-temple-andhrapradesh-shiva-parvati

    காளத்தி நாதனைக் கைப்பிடித்த காமினியே

    காலத்தைக் கடந்தவளே கலைவானின் கருவறையை

    வானத்து தேவர்களும் விதியறியா அரக்கர்களும்

    வாதமிடும் மதிதன்னின் ஞானக்கடலின் நல்லமுதே!

     

    வானத்து வண்ணத்தில் வில்லான வளிதன்னின்

    விதையாகி வளம்காக்கும் பேரொளியே பார்வதியே

    புறமெல்லாம் வலம்வந்தும் புரியாமல் தவிப்போரின்

    அகமமர்ந்த ஆனந்த போகத்தின் அருள்மொழியே !

     

    சொல்லோடு மொழியும் சுவையிழந்த பருவத்தில்

    சுவையான நுண்ணறிவாய் சுகத்தைத் தருபவளே

    அஞ்ஞான விஞ்ஞான ஆணவத்தின் ஆர்ப்பரிப்பில்

    மெய்ஞ்ஞானத் தத்துவமாய் மோனத்தில் நிற்பவளே!

     

    மறையினில் மறைந்தாயோ மதியினில் உறைந்தாயோ

    நாதத்தின் நரம்பினில் நல்லிசையாய் அமர்ந்தாயோ

    தாயினங்கள் கருவறையில் தன்னருளைத் தந்தாயோ?

    பாதங்கள் போற்றுகின்றேன் பக்குவமாய் சொல்லிடுவாய்

     

    கீதைதந்த நல்லறிவோ? பாதைதேடும் பகுத்தறிவோ ?

    மேதைகளின் மூதறிவோ?முன்னோர்கள் மூதுரையோ?

    மாதவத்தின் முடிவுரையோ? முற்காலச் சிந்தனையோ ?

    மூவுலகும் அறிந்தவளே மெய்ஞ்ஞானம தந்திடுவாய் !

     

    இருள்நீக்கி ஒளிகாட்டும் இறைவி நீயன்றோ

    அருள்தந்து ஆட்கொள்ளும் அம்மையும் நீயன்றோ

    அதுவாகி இதுவாகி எங்கும்நிறை பராசக்தியே

    அருளாட்சி எழில்காண கொலுவிருக்க வருவாயே !

     

     

     

    Share