Blog

  • இந்த வார வல்லமையாளர்!

    நவம்பர் 3, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  ‘திரு. இன்னம்பூரான்’ அவர்கள்

    innamburan

     

    சங்க கால தமிழின் பெருமைகளை நாமும் உணர்ந்து நமது இளைய தலைமுறைக்கும் தமிழின் தொன்மையை, அதன் மகிமையை எடுத்துக் கூறும் பொருட்டு, கடந்த மாதம் அக்டோபர் 2014 இல், சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் , நடத்திய சிட்னியின் சங்கத் தமிழ் மாநாட்டில் “சங்கத்தமிழ் மூன்றும் தா !” என்ற கட்டுரையை வழங்கிய, ‘திரு. இன்னம்பூரான்‘ என்று அன்புடன் அழைக்கப்பெறும் மூத்த இளைஞரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பிறந்த சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா என்ற இவர், இன்னம்பூரான் என்ற புனைப்பெயரில் எழுதி வருபவர். இவர் வல்லமை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவரே. வல்லமை இதழின் நலம் விரும்பியாக, வல்லமை இதழின் வளர்ச்சியில் ஆர்வமுள்ளவராகப் பல பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர். வல்லமையாளர் விருது தேர்வுகள் செய்து வந்த திரு. திவாகர் அப்பணியில் இருந்து விடுப்பு பெற்ற காலங்களில் தற்காலிகமாக அப்பொறுப்பை ஏற்று விருது வழங்குதலை தொய்வின்றி நடத்திச் சென்று, வல்லமையாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக சற்றொப்ப 150 பதிவுகளை வல்லமை வாசகர்கள் படித்து மகிழ அளித்துள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க, சிறப்பு வாய்ந்த கட்டுரைத் தொடர்கள் சில: தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை, கனம் கோர்ட்டார் அவர்களே, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், ககன சாரிகை, நீயும் நானும் விஞ்ஞானமும், என்னத்தைச் சொல்ல! போன்றவையாகும்.

    பெரும்பான்மையான இவர் கட்டுரைகளின் பின்னணி அரசின் நடவடிக்கைகளை ஆராய்வதாகவும், குறை கண்ட இடத்து விமர்சிப்பதாகவும் அமைவதற்கு அவராற்றிய அரசுப்பணியின் பின்புலமே காரணம். திரு. இன்னம்பூரான் இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். அந்த அடிப்படையில் அரசின் தணிக்கைத்துறையின் நடவடிக்கைகள், ஊழல் கண்டவிடத்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பின்னணி, அவற்றையொட்டி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் முக்கியத்துவம் போன்றவற்றை ஆராய்வதாகவும், அரசு மேற்கொள்ளும் மெத்தனமான நடவடிக்கைகளைக் கண்டிப்பது, அரசு நிதியறிக்கைகளை ஆக்கபூர்வமாக அலசுவதாகவும் பல கோணங்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

    வல்லமையில் மட்டுமின்றி தினமலரின் உரத்த சிந்தனை பகுதியில், “உயிர் பெறுமா நீதியின் குரல்” என்ற கட்டுரையையும், தமிழ் வெப்துனியா செய்தித் தளத்தின் “கருத்துக்களம்” பகுதியிலும் எழுதிவரும் எழுத்தாளர்களில் ஒருவர் திரு. இன்னம்பூரான்.

    innamburan3

    தமிழின் மீது தணியாத  ஆர்வம் கொண்டவர். இவரது தமிழார்வத்தின் காரணமாகதமிழிற்கான  மிக முக்கியப் பணிகளாக இவர் கருதி இன்றும் தொடர்வது, அரிய பழந்தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்து அவற்றை அடுத்த தலைமுறையினரும் பயனுற சேமிப்பதும், இளைய தலைமுறையினரின் கல்விக்காக இணையவழி கல்வித் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதுமாகும். வல்லமையில் மாணவர் தளம்: தமிழார்வம் என்றும் ஒரு கட்டுரைத் தொடர் எழுதியுள்ளார். தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்து நூல் மின்னாக்கங்கள் செய்வதையும், “அன்றொரு நாள்” என்ற வரலாற்று நிகழ்வின் தொகுப்புகளை எழுதுவதையும் தொடர்ந்து வருகிறார். அத்துடன், தனது வலைப்பூவிலும் தனது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்.

    innamburan2ஓய்வு பெற்றபின் நிர்வாக மேல்நிலைக் கல்வி மையங்களில் பணி செய்வதும், அரசு தொடர்பான ஆலோசனைகளில் பங்கு பெறுவதும் எனப் மற்ற பிற பொதுத்தொண்டுகள் ஆற்றி வரும் திரு. இன்னம்பூரான் மத்திய அரசின் பணி தேர்வாணையத்தின் ‘இந்தியஅரசின் ஆட்சி நிர்வாகப் பணி’ (ஐ.ஏ.எஸ்.) தேர்வுகளின் இறுதிநிலை நேர்காணல் குழுவின் அங்கத்தினராக பணியாற்றி அந்த அனுபவமும் பெற்றவர். இவர் நேர்காணல் பயிற்சி அளித்த மாணவர் சிலர் ஐ.ஏ.எஸ். தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்கள். அழகப்பா பல்கலைக் கழகத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு, இந்தியஅரசின் ஆட்சி நிர்வாகப் பணி தேர்வு பற்றி அப்பல்கலைக்கழக மாணவர்களுக்கான கலந்தாலோசனை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும், இத்தகவல்கள் மாணவர்களுக்கு பயன் தரும் என்ற நோக்கில், “ஐ. ஏ. எஸ். தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?” என்ற நூலை பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வழி வெளியிட்டுள்ளார். இது ஐ. ஏ.எஸ். தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் நோக்கில் தகவல்கள் வழங்கும் ஒரு கையேடு.

    எண்பது வயதைக் கடந்தாலும் இன்றும் கற்பதிலும், தமிழ் மீது கொண்ட தீராத ஆர்வம்காரணமாக  திரு. இன்னம்பூரான் தமிழில் இளங்கலை பட்டப்படிப்பையும் முடித்து, முதுகலை பட்ட மேற்படிப்பு, தமிழில் முனைவர் பட்டம் என்ற இலக்குகளை நிர்ணயித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். “சங்கத்தமிழ் மூன்றும் தா ” என்ற கட்டுரையை சிட்னி தமிழ் மாநாட்டிற்கு வழங்க இவர் எடுத்துக்கொண்ட ஆர்வத்தின் மூலம் மனதிற்கு வயது இல்லை என்று நிரூபித்துள்ளார். உற்சாகத்துடன் செயலாற்றி இளைய தலைமுறையினருக்கு முன் மாதிரியாகத் திகழும் திரு. இன்னம்பூரான் அவர்களை வல்லமையாளர் விருதுக்குத் தேர்ந்தெடுத்துப் பராட்டுவதன் மூலம் வல்லமை விருதும், வல்லமை இதழும் பெருமை அடைகிறது.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • காற்று வாங்கப் போனேன் (52)

    கே. ரவி

    என்னப்பா ‘ஸிந்தடிக் விஷன்’ என்றெல்லாம் சொல்லி மிரட்டுகிறாய்?

    பொறு தம்பி, இன்னும் பெரிய, பெரிய வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் சுலபமாகப் புரிந்து கொள்ளும்படிச் சொல்கிறேன். ஒருங்கிணைந்த பார்வை என்பதைப் புரிந்து கொள்ள நாம் வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. நம் புலப்பாட்டு இயக்கமே போதும்.

    உளவியல் துறையில் பயிலும் மாணவர்கள் புலன் நுகர்ச்சி எப்படி உண்டாகிறது என்பது பற்றிப் பல்வேறு கொள்கைகளைப் படிப்பார்கள். புலனுகர்ச்சிக் கொள்கைத் திரட்டு, ஆங்கிலத்தில், “தியரீஸ் ஆஃப் பெர்ஸெப்ஷன்” (Theories of Perception) என்று அழைக்கப் படுகிறது.

    நமக்கு வெளியுலகத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் எல்லாமே ஐந்து புலன்கள் மூலமாகத்தான் கிடைக்கின்றன என்று பொதுவாக நம்பப் படுகிறது. திருவள்ளுவர் மிக அழகாக, அதுவும் காமத்துப் பாலில் உள்ள ஒரு குறட்பாவில், ஐந்து புலன்களையும் ஒரே வரியில் குறிப்பிட்டு விடுகிறார்:

    கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்

    ஒண்டொடி கண்ணே உள

    ஐந்து விதமான புலப்பாடுகள் ஏற்பட உதவும் சாதனங்களே கண், காது, நாக்கு, மூக்கு, சருமம் எனப்படும் தோல் ஆகிய ஐந்து பொறிகள். பொதுவாகப் புலநுகர்ச்சிக் கொள்கை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடாமல், காட்சிப் புலன் என்பது பற்றி மட்டும் குறிப்பாக இங்கே நோக்குவோம்.

    ‘காண்பது’ என்பதே காட்சிப் புலன். இந்தப் புலப்பாட்டை உண்டாக்கும் சாதனமே ‘கண்’ என்ற பொறி.

    காட்சிப் புலப்பாடு எப்படி உண்டாகிறது? வெளியில் உள்ள ஒரு பொருள் மீது (அது நம் உடலாகவோ அதன் ஒரு பகுதியாகவோ கூட இருக்கலாம்), ஒளிக்கற்றைகள் விழுந்ததும், அந்தப் பொருளால் தடுக்கப்பட்டு மீளும் ஒளிக்கற்றைகள் நம் விழி வழியாக நுழைந்து, விழிக்குள் உள்ள ‘ரெட்டினா’ என்ற விழித்திரையில் விழுந்து, தம்மைத் தடுத்தனுப்பிய பொருளின் பிரதிபிம்பத்தை அந்தத் திரையில் ஏற்படுத்துகின்றனவாம்; அந்தப் பிரதிபிம்பத்தை இன்ன பொருளின் பிம்பம் என்று அறிவு நமக்கு அறிவுறுத்துமாம். இப்படித்தான் காட்சிப் புலப்பாட்டில் நாம் பொருள்களைப் பார்க்கிறோம் எந்று அறிவியல் விளக்குகிறது!

    எல்லாம் சரி, ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கத் தவறி விட்டோமே! நாம் ஒற்றைக் கண்ணால் பார்ப்பதில்லையே! இரண்டு கண்களால் காண்கிறோம். ஆங்கிலத்தில் இதை பைனாகுலர் விஷன் (Binocular Vision) என்கிறார்கள். நாம் காணும் ஒவ்வொரு காட்சியும் இரண்டு விழித்திரைகளில் பதிவாகின்றன. ஆனால் ஒரு காட்சியைத்தானே பார்க்கிறோம்! நாம் ஒரு மாம்பழத்தைப் பார்க்கிறோம் என்றால், நம் இரண்டு விழிகளுக்கும் உள்ளே உள்ள ரெட்டினா என்ற இரண்டு திரைகளில் அந்த மாம்பழத்தின் இரண்டு பிரதிபிம்பங்கள் பதிவாகி, அந்த இரண்டு பிம்பங்களை நம் அறிவாகிய சாதனம் ஒரே மாம்பழமாக மீண்டும் ஒருமைப் படுத்தி நமக்குக் காட்சிப் படுத்துகிறது. வள்ளலார் கண்ணாடியில் முருகப் பெருமானைப் பல அம்சங்களும் ஒருங்கிணைந்த தணிகாசலமாகக் கண்ட ‘சிந்தடிக் விஷன்’, அதாவது, ஒருங்கிணைக்கப்பட்ட பார்வை பற்றி முன் பகுதியில் சொன்னதை நினைவு கூர வேண்டும். இரண்டு விழித்திரைகளில் தோன்றும் பிம்பங்களை ஒருங்கிணைத்து, ஒரே காட்சியாக்கி அதற்கு இடம், காலம் ஆகிய முத்திரைகள் குத்தி அறிவு நமக்கு அதை விளங்கத் தருகிறது. அப்படியென்றால், இடமும், காலமும் புறவுலகில் உள்ள பொருட்களைப் போல வேறு பொருட்களா, இல்லை அவை இரண்டுமே அகச்சாதனங்களா? இந்தக் கேள்வியைக் கொஞ்சம் ஒத்தி வைப்போம். இப்பொழுது விவாதம் இடம், காலம் பற்றியில்லை. அது, இரண்டு கண்களில் உள்ள திரைகளில் விழும் பிம்பங்களை ஒருமைப்படுத்தும் அகச்சாதனம் பற்றியது.

    எவ்வளவு அழகாக, எளிமையாக நம் அருமைக் கவிஞர் கண்ணதாசன் பாடிவிட்டார்:

    இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா

    இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா

    சாதாரணத் திரைப்படப் பாடல்தானே என்று எதையும் நினைத்துவிடக் கூடாது தம்பி. பாட வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே கவிஞனுடையது. அவனை ஆட்கொண்டு பாடுவதோ ஆகாச சக்தி! அது வேறு கதை.

    சாதாரண விஷயங்களுக்குள் இருக்கும் அசாதாரணங்களைக் காண்பதே தரிசனம் எனப்படுகிறது.

    மீண்டும் இம்மானுவெல் கன்ட் என்ற தத்துவ ஞானியைக் கூப்பிட வேண்டும். அவன் கேட்கிறான், ஐந்து புலன்கள் வழியாகத்தான் நீ எல்லா வெளி விவகாரங்களையும் நுகர்கிறாயா? நீ பார்க்கும் மாம்பழத்தின் மஞ்சள் நிறம், அதன் உருண்டை வடிவம், அதன் மணம், சுவை, மென்மை இவையெல்லாம் உன் ஐந்து புலப்பாட்டுச் சாதனங்கள் மூலமாகத்தான் வருகின்றன. ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அந்த மாம்பழம் ஓரிடத்தில் உள்ளதாக, ஒரு காலக்கட்டத்தில் உள்ளதாக, அதாவது இடம், காலம் என்ற இரண்டு குறியீடுகளோடுதானே உனக்குப் புலப்படுகிறது? எந்த இடத்திலுமே இல்லாத, எந்தக் காலப் பரிமாணத்துக்கும் உட்படாத எதையும் நீ புலனுகர்ச்சி செய்வதில்லையே. அந்த இடத்தையும், காலத்தையும் நீ எந்தப் பொறி மூலம், எந்தப் புலனாக அறிகிறாய்? இதுதான் அவன் கேட்ட கேள்வியின் சாரம்.

    இன்னும் சற்று வேறு விதமாக நினைத்துப் பார்க்கலாம். நம் ஐந்து பொறிகளின் மூலம் ஐந்து வகைப்பட்ட புலப்பாடுகளாக நம் அகத்துக்குள் நுழைய வெளியுலகப் பொருட்களும், காட்சிகளும் முண்டியடித்துக் கொண்டு வருகின்றன. அவற்றை நம் அறிவு புரிந்து கொள்ளும் முன்பு, அவை இன்னின்ன பொருட்கள், காட்சிகள் என்று நம் அறிவு வகைதொகை செய்து உணர்ந்து கொள்ளும் முன்பு, ஒவ்வொரு பொருள், அல்லது காட்சியின் மீதும், அது புலன் நுகர்வு செய்யப்பட்ட இடம், காலம் என்ற இரண்டு ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளைக் குத்திப் பிறகுதான் அறிவின் சேமிப்புக் கிடங்குக்குள் அனுமதிக்கிறது. இந்த இடமும், காலமும் எந்தப் பொறி வழியாகவும் நுகரப் படுவதில்லை. இடமும், காலமும் பொறிகளின் மூலம் நுகரப்படும் எந்தப் புலப்பாடும் இல்லை. அப்படியென்றால் அவை என்ன? இடம், காலம் ஆகிய இரண்டு முத்திரைச் சாதனங்கள் அறிவின் கட்டுமானத்திலேயே உள்ளடங்கியவை. அந்தச் சாதனங்களோடுதான் அறிவே உருவாகிறது. இடம் என்பதையோ, காலம் என்பதையோ நாம் ஒரு நிறம், வடிவம், சுவை, வாசனை இப்படி ஏதாவது ஒரு புலன் நுகர்ச்சியாக அறிவதே இல்லையே! இவ்வாறு, புறத்தில் இருந்து, புலன் வழியாகப் பெறாத சில உள்ளீடுகள் அறிவின் கட்டுமானத்திலேயே உள்ளன, எனவே, புலன் நுகர்ச்சியைச் சாராமலேயே, பொறிகளின் வழியே பெறாத உள்ளீடுகள் அறிவின் அகத்தே உண்டு என்று சுட்டிக் காட்டிச் சூனிய வாதத்தை இம்மானுவெல் கன்ட் எதிர்கொண்டான்.

    இவ்வளவு கனமான, கடினமான ஒரு தத்துவப் பிரச்சினையை இங்கே நான் குறிப்பிடக் காரணம் உண்டு. அதை விளக்குவதற்கு அந்த ஜெர்மானிய தத்துவ மேதை பயன்படுத்திய இரண்டு கலைச் சொற்களை இங்கே பரிச்சயம் செய்து கொள்ள வேண்டும். அவை ஆங்கிலத்தில், “ஆ ப்ரையாரி” (a priori) என்றும், “ஆ பாஸ்டீரியோரி” (a posteriori) என்றும் குறிக்கப் படுகின்றன. முதலில், இந்தக் கலைச்சொற்கள் எந்தக் கருத்துச் சூழலில், என்ன பொருளில், எதை விளக்கப் பயன்பட்டன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    ‘நேற்று காலை 7 மணிக்கு நான் மக்கள் தொலைக்காட்சியில் பேசினேன்’ என்று ஒருவர் சொன்னதும் அதை இன்னொருவர் நம்ப மறுத்தால், அந்தத் தொலைக்காட்சியின் பதிவுகளைப் பார்த்து அக்கூற்று மெய்யா, பொய்யா என்பதை அறிந்து கொள்ள முடியும். நயாகரா நீர்வீழ்ச்சி கானடா, அமெரிக்க எல்லையில் உள்ளது என்ற கூற்றை யாரேனும் சந்தேகப் பட்டால், அதை நேரில் கண்டு தெளிய முடியும். ஐந்து புலன்களில் ஏதேனும் ஒன்றின் அல்லது சிலவற்றின் மூலமாக மட்டுமே நிறுவக் கூடிய கூற்றுகளை ‘ஆ பாஸ்டீரியோரி கூற்றுகள்’ என்றும், அப்படியன்றி, எந்தப் புலச்சான்றும் தேவைப்படாமலேயே ஏற்றுக் கொள்ளக் கூடிய கூற்றுகளை ‘ஆ ப்ரையாரி கூற்றுகள்’ என்றும் கன்ட் குறிப்பிட்டான். ஒரு பிரும்மச்சாரி திருமணம் செய்து கொள்ளாதவன் என்பதற்குப் புலச்சான்று எதுவும் தேவை இல்லை. காரணம், திருமணம் செய்து கொண்டிருந்தால் அவனை பிரும்மச்சாரி என்று சொல்ல முடியாதே. அதே போல், ஒருவன் இறந்து விட்டான் என்றால் அவன் இதயத்துடிப்பு நின்றிருக்கும் என்பதற்கு எந்தப் புலச்சான்றும் தேவையில்லை. இதயத் துடிப்பு நின்றால்தான் ஒருவன் இறந்து விட்டதாகச் சொல்ல முடியும். இதயத் துடிப்போடு, கிட்டத்தட்ட இறந்து விட்ட நிலையில் இருப்பதை மூளைச்சாவு (Brain Death) என்று குறிப்பிடும் வழக்கம் உண்டே தவிர அது மரணம் ஆகாது.

    இன்னொரு உதாரணம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சென்டி மீட்டர் விட்டம் உள்ள ஓட்டை போட்ட ஒரு தட்டில் நிறைய நாணயங்களைக் கொட்டினால் அந்த ஓட்டை வழியாகக் கீழே விழுந்துவிடும் நாணயங்களைப் பற்றி ஒரு செய்தி நிச்சயம் சொல்லி விடலாம். கீழே விழுந்த நாணயங்கள் ஒவ்வொன்றும் ஒரு சென்டி மீட்டருக்கும் குறைவான விட்டம் உள்ளவையாகத்தான் இருக்க முடியும். இதை அளந்து, புலப்பாட்டுக்கு உட்படுத்திப் பிறகுதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. புலப்பாடே தேவையில்லாமல் இந்தச் செய்தியை நிறுவ முடிவதற்குக் காரணம், தட்டின் கட்டுமானம், அதில் ஒரு சென்டி மீட்டர் விட்டமுள்ள ஓட்டை இருப்பது நமக்கு முன்கூட்டியே தெரிந்திருப்பதுதான்.

    இவையெல்லாம் புலச்சான்று தேவைப்படாமலேயே நாம் ஒப்புக் கொள்ளும் ‘ஆ ப்ரையாரி’ கூற்றுகள். இடமும், காலமும் புலச்சார்பு இல்லாத ‘ஆ ப்ரையாரி’ கருத்தீடுகள் என்பதுதான் கன்டின் வாதம். இவ்வளவு சிரமமான, தர்க்க ரீதியான பாடத்தை எங்களுக்கு நடத்தி விட்டு, எங்கள் தத்துவப் பேராசான் முனைவர் டி.என்.கணபதி வகுப்பில் சொன்னதை நான் மறக்கவே முடியாது. வகுப்பில் அவர் நாற்பது ஆண்டுகளுக்கு முன் சொன்னது இதுதான்:

    ‘ஆ ப்ரையாரி’ என்றால் என்னவென்று புரிய வேண்டுமா. ஒளவையாரிடம் கேளுங்கள். “அன்னையும் பிதாவும் முன்னறிatr தெய்வம்” அதாவது, ஆங்கிலத்தில் சொன்னால், Mother and Father are a priori gods. எந்தப் புலன்விசாரணையும் இல்லாமல் நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தெய்வம் அன்னையும் பிதாவும். அவர்களே முன்னறி தெய்வம். அதாவது, புலன் விசாரணை மேற்கொள்ளும் முன்பே, நாம் முந்தி அறிந்து கொள்ளும், முன்னதாக அறிந்து கொள்ளும் தெய்வம்; a priori gods; முன்னறி தெய்வம்.

    அடாடா! பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மன் மொழியில் இம்மானுவெல் கன்டும், இருபதாம் நூற்றாண்டில் அவனுடைய நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நார்மென் கெம்ப் ஸ்மித்தும் சிரமப்பட்டுப் பக்கம் பக்கமாக விளக்க முற்பட்டதை இரண்டாயிரம் அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் ஒளவைப் பாட்டி எவ்வளவு அநாயசமாக, ஒரு முன்னறிவிப்பாகச் சொல்லிவிட்டார் என்பதை என் பேராசான் சொல்லச் சொல்ல மலைத்துப் போனேன்.

    இதுதான் மறைமொழி என்பது. இங்கே திருவள்ளுவர் வாக்கை நினைவு படுத்திக் கொள்வோம்:

    நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

    மறைமொழி காட்டி விடும்

    மிகச் சுருக்கமாகச் சொல்லப் படும் மறைமொழி, அறிஞர் பெருமக்கள் நிறையச் சொல்லி அறிவுறுத்தும் உண்மைகளை எல்லாம் எளிதில் காட்டி விடும். இப்படித்தான் இந்தக் குறள் பொருள்படும் என்று நான் சொல்லவில்லை. இப்படியும் பொருள்படலாம். நிறைவாழ்வு வாழ்ந்து நீத்தாரின், அதாவது, வாழ்வாங்கு வாழ்ந்து உடல்நீத்த அருளாளர்களின் பெருமையை மறைமொழி காட்டிவிடும் என்றும் பொருள் கொள்ளலாம். திருக்குறளே மறைநூல் ஆயிற்றே!

    avvaiyarசித்தர் இலக்கியங்களில் தோய்ந்து, போகர் பற்றியும், திருமூலர் பற்றியும், சிவவாக்கியர் பற்றியும் அற்புதமான பலநூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி அரும்பணியாற்றிக் கொண்டிருக்கும் 80 வயது இளைஞர் கணபதி என் தத்துவப் பேராசான் என்பதை நான் பெருமையாகக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா? அந்தப் பெருமையை, அவர் பாடம் நடத்தும் போது சுட்டிக் காட்டிய ஒளவையாரின் மறைமொழியே காட்டிவிடும். சரிதானே!

    இந்த இடத்திலே ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். அன்னையும் தந்தையும் நமக்கு முன்னறி தெய்வங்கள், அதாவது நாம் எந்த விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லாமல் முந்தி அறியும் தெய்வங்கள். இது எவ்வளவு உண்மையோ, அதே போல, நம் ஒவ்வொருவரையும் தக்க தருணத்தில் ஏதேனும் ஒரு குருவின் வடிவில் பரம்பொருளே வந்து ஆட்கொண்டு வழிசெலுத்துவதால், குருவே நம்மை நமக்கு முன்பாகவே அறிந்த தெய்வம் என்பது மறுக்க முடியாத உண்மை. அன்னையும், தந்தையும் நாம் முன்னறிந்து கொள்ளும் தெய்வங்கள். குருவோ நம்மை முன்னறிந்து கொள்ளும் தெய்வம்.

    ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த என் நண்பர் அமரர் சிவகுமார் எழுதிய ஒரு பாடல் கனமாக நெஞ்சில் வந்து அமர்கிறது :

    எங்கிருந்தாலும் என்னை அறிபவன் ஒருவன்

    எண்ணத்தினால் வளர்ப்பான் என்குல இறைவன்

    சங்கல்பம் ஓய்ந்துவிடச் சரண்புகுந் திருந்தாலும்

    சஞ்சித சாகசத்தால் புறம்புறம் திரிந்தாலும்

    தன்கையில் பிள்ளையெனத் தாங்கும் அவன்பரிவு

    தடம் மறந்தாலுமங்கே தேடிவரும் உறவு

    என்னப்பா, காட்சிப் புலன் என்று தொடங்கி, தரிசனம் என்று பேசிவிட்டுக் கடைசியில் குருவிடம் அடைக்கலம் கொண்டுவிட்டாய் என்ற கேள்வி ஒலிக்கிறது. சித்தன் போக்கு சிவன் போக்கு!

    என் குருநாதர், டாக்டரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்: சீடன் குருவைத் தேட வேண்டுமா, குரு சீடனைத் தேடி வருவாரா?

    அவர் சொன்ன பதில்: யார் தன் குரு என்று தேர்ந்தெடுக்கும் அறிவு சீடனிடம் இருக்கக் கூடுமோ? அந்த அறிவு அவனுக்கு இருந்து விட்டால் அவனுக்குப் பாடமே தேவையில்லையே. குருதான் சீடனைத் தக்க தருணத்தில் அடையாளம் கண்டு வரவேண்டும்.

    நான் மேலும் கேட்டேன்: இராமபிரானுக்கு வசிஷ்ட முனிவரும், அகத்திய முனிவரும் குருநாதர்களாக உபதேசம் செய்திருக்கிறார்கள் என்றால், அவர்களைக் காட்டிலும், பரம்பொருளாகிய இராமபிரான் அறிவில் குறைந்தவனா?

    டாக்டர் கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் மெளனமாக இருந்தார். அப்போது நாங்கள் இருவரும், சென்னை சென்ட்ரல் ரயில்நிலயம் அருகில் இருந்த ‘த செளத் இண்டியா அத்லெடிக் அஸோஸியேஷன்’ (SIAA) என்ற சங்கத்தின் வளாகத்தில் ஓர் அறையில் தனியாக அமர்ந்திருந்தோம். 1986-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். சிறிது நேர மெளனத்துக்குப் பின் அவர் கண் திறந்தார். அப்பப்பா, அதில் தெரிந்த ஒரு கோபச் சிவப்பை நான் மறக்கவே முடியாது. பயந்து விட்டேன்.

    அவர் பேசினார்: பெரியவன், சிறியவன் என்றெல்லாம் பேசக் கூடாது. தக்க தருணத்தில் பிரசவம் பார்த்துக் குழந்தையை வெளியே கொண்டுவரும் மிட் வைஃப் மாதிரி, ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் இருக்கும் மகத்துவத்தை வெளிக்கொண்டு வரத் தக்க தருணத்தில் குருநாதன் வருவான். அது கடவுளின் ஆக்ஞை. கடவுளே அவதாரம் எடுத்து வந்தாலும் அவருக்குள் இருக்கும் மகத்துவம் வெளிப்பட ஒரு குருநாதன் கண்டிப்பாகத் தேவை.

    நான் மெளனமானேன். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அவர் என்னைப் பாடச் சொன்னார். மனத்தில் இருந்து பொங்கி வந்த சொற்களைச் சிந்து பைரவி ராகத்தில் பாடினேன்:

    நினைத்தேனா இங்கு வருவேன் என்று

    ஜென்மங்கள் ஆயிரம் எடுப்பேன் என்று

    நினைத்தேனா இங்கு வருவேன் என்று

    … … ..

    … … …

    (தொடரும்)

    Share
  • என்னுலகம் 2300

    சந்தர் சுப்பிரமணியன்

     

    உலகதன் ஓட்டம் போலே ஓடிடும் நாள்கள் எல்லாம்!
    நிலையெலாம் மாறும், ஏதும் நிரந்தரம் ஆகாப் போதில்,
    புலருமிந் நாளை ஒட்டிப் போகுமுந் நூறாம் ஆண்டில்
    நிலத்தெழு மாற்றம் என்னே? நினைப்பதன் பதிவே இப்பா! (1)

    வளருமந் நாளில் மண்ணை வகுத்திட நாடென் றேதும்
    அளவிலை, எல்லை யென்னும் அவையெலாம் மாறி ஒன்றாய்
    உளநிலம், உள்ளோர் வாழ்வை உழற்றிடும் போருக் கென்றோர்
    களமிலா உலகம், காதல் கருத்தினில் உறையும் காலம்! (2)

    குழவியை வயிற்றில் ஏந்திக் கொடுக்குமக் காலம் எல்லாம்
    பழைமையாய் மாறிப் போகும்; பண்டமாய் ஆய்வுச்சாலைக்
    குழலிடை அண்டம் விந்து கொண்டதை வளர வைக்கப்
    பழகிடும் முறையே எங்கும் பழக்கமாய் ஆகும் காண்க! (3)

    வருவது பெண்ணா ஆணா? வளர்ப்பவர் விருப்பம் ஆகும்!
    மரபணுத் தேர்வின் மூலம் வருகிற பிணிகள் எல்லாம்
    கருவினில் உள்ள போதே கண்டவை நீங்கச் செய்யும்
    மருத்துவம் கொண்ட தாலே மானுடம் செழிக்கும் மேலும்! (4)

    சிறப்புடை மரபைத் தேர்ந்து செம்மையை மேலும் கூட்டித்
    திறமையை குவிக்கச் செய்து தேர்ந்திடும் துறையைச் சார்ந்த
    அறிவிலே ஆழம் காணும் அமைப்பினை மூளை சேர்த்துப்
    பிறப்பதை வளமை ஆக்கும் பெருஞ்செயல் எளிதாம் அந்நாள்! (5)

    உடல்நிலை ஆய்ந்து காணும் உப்புடன் கொழுப்பும் மற்ற
    திடநிலைக் கூறுக் கேற்ப தெரிந்துதம் உணவின் ஊட்ட
    எடைதனை சமச்சீர் ஆக்கி எழுதிய வாய்பா டொத்த
    கடையுண வொன்றே நன்றாய்க் கருதுவர் அந்நாள் காண்க! (6)

    அருஞ்சுவை அதுநா காணும் ஆழ்மனப் பழக்கம் அன்றோ!
    ஒருதனி வேதிச் சேர்வை உணவுடன் நாவுக் கென்றே
    தரும்விதம் புதிதாய்த் தோன்றும்! தனிநபர் சுவைக்கும் போக்கில்
    வரும்பல விதமாய்ச் சேர்வை! வளர்ச்சியென் றிதையே காணும் (7)

    தணலிடை உயிரை வாட்டி தான்பெறும் வாய்ச்சு வைக்காய்
    கணமொரு விலங்கை கொல்லும் கடைநிலை இலையென் றாகும்!
    மணமுடன் சுவையும் சேர்த்து மகிழ்ச்சியை ஊட்டும் நல்ல
    உணவென இறைச்சித் துண்டம் உருபெறும் குளோனிங் ஊடே! (8)

    தாவரம் அழிக்கும் செய்கை தவறென வாகும் அந்நாள்!
    பூவொடு பழம்காய் யெல்லாம் பறிப்பது குற்றம் ஆகும்!
    நாவினுக் கேற்ற தாக நற்சுவைப் பொருளை எல்லாம்
    மேவிட குளோனிங் ஒன்றே முறையென வாகும் காண்க! (9)

    மரங்களின் அடர்த்தி தன்னை மதிப்பிடும் கருவி கொண்டு
    நிரம்பிய காடே எங்கும் நிலைத்திட வழிகள் சேர்க்கும்;
    தரமுடை கருவி, திட்டம், தனிநிலை இயக்கம் கொண்டு
    பரவிடும் பசுமை தன்னை பரப்பிடும் உலகம் எங்கும்! (10)

    விலங்குகள் வாழும் காட்டில் விதிபல மனிதர்க் காகும்!
    உலவிடத் தடையாம் அங்கே! உடைமைகள் மனிதர்க் கில்லை!
    அலைக்கதிர் வீச்சால் மாஆர் அடர்த்தியை அறிவால் ஆய்ந்து
    தலைமுறை காக்கும் செய்கை சாதனை படைக்கும் காண்க! (11)

    திடநிலைச் சுவர்கள் எல்லாம் தீதென உலகம் காணும்!
    இடமது விரியும், மண்ணால் எழும்பிய சுவரே எங்கும்!
    அடர்நிலை நகரம் மாறி அண்மையில் கிராமம் சேரும்!
    தொடர்ந்திடும் வாழ்வில் மாசு தொலைந்திடும்; தூய்மை எங்கும்! (12)

    ஒளிவழித் தொடர்பை ஏற்கும் உலகுடை பணிகள் யாவும்;
    களப்பணி குறையும்; வீட்டுக் கட்டிலில் அலுவல் யாவும்;
    தெளிவினைப் பெறுவ தற்காய் செய்திகள் இணையம் தன்னில்
    அளவிலா தமையும்; வாழ்க்கை அமைந்திடும் அமைதி யோடே! (12)

    செப்படி வித்தை போன்றே தொலைவுள சுற்றத் தாரின்
    முப்பரி மாணப் பிம்பம் முழுமையாய்க் கண்முன் தோன்றும்!
    அப்படி ஆகும் காலம் அந்நியம், தூரம் யெல்லாம்
    ஒப்பிலை என்றாய் வையம் ஒருங்கிடும்; ஒன்றென் றாகும்! (13)

    சேதியைக் காட்சி யாகச் சேர்த்திடும் நுட்பத் தாலே
    பாதைகள் குறைந்து போகும்! பயணமும் அரிதாய்ப் போகும்!
    வீதியே இல்லாப் போதில் விரைந்திடும் வாழ்வே தில்லை!
    ஆதியில் மனிதர் கண்ட அமைதிசேர் வாழ்வே மீளும்! (14)

    இயற்கையை ஒத்த வாழ்வில் இலையினி உணவுப் பஞ்சம்;
    வயிற்றெழும் பசியைப் போக்க வளமுடை மண்ணே ஈயும்!
    முயற்சியை மேலும் காட்ட முயல்பவர் இணையம் தன்னில்
    வயப்படும் வாய்ப்பை ஏற்று வளமையைக் காண்பர் அந்நாள்! (15)

    மண்மிசை விளையா டல்கள் மற்றொரு புதுமை காணும்!
    எண்திசை யாவும் பிம்பம் எழு மின் மன்றின் ஊடே
    கண்வளர் காட்சி யோடு கலந்துளம் காயம் நீக்கி
    எண்ணமாய் எழுந்து நீழல் இயல்பெனும் மாயை ஏற்கும்! (16)

    பிறப்பினால் சமய மேற்கும் பிழையினி மறைந்து போகும்!
    முறைப்படி சிறுவர் வாழ்க்கை முடியுமப் பொழுதில் எல்லா
    மறைகளும் ஓதிப் பார்த்து மனத்தெழும் பேச்சைக் கேட்டு
    நிறையுளத் தோடொன் றேற்கும்; நீக்கிடும் நிலையும் பார்க்கும்! (17)

    வாயிலங் கெட்டோ டென்கோண் வடிவிலோர் மன்றம் ஊரின்
    கோயிலாய் அமையும்; மையம் கொள்ளிடம் விண்ணை நோக்கும்!
    தாயெனக் காக்கும் ஏகம் தன்னுரு திரிந்து வெவ்வே
    றாயினன் என்னும் உண்மை அனைவரும் அறிந்தே வாழ்வார்! (18)

    ஒவ்வொரு மொழியும் எழுத்தை, ஒன்றிலை, இரண்டாய்க் கொள்ளும்,
    செவ்வியல் வழக்க மென்றும் சேர்ந்தமை வடிவ மென்றும்!
    இவ்வியல் பாலிம் மண்ணின் எழுத்தெலாம் இணையும் அந்நாள்!
    அவ்விதம் ஆகு மாயின் அனைவரின் மொழியும் ஒன்றே! (19)

    எத்தனை எழுச்சி பெற்றும் இயல்பினில் ஏழ்மை செல்வம்
    இத்தர வேற்று மைகள் இயற்கையாய்த் தொடரும் போதும்
    நித்தியத் தேவை யாவும் நிலைபெறக் கிடைக்கச் செய்யும்
    அத்தகு நிலையை மாந்தர் அனைவரும் அடைவர் அந்நாள்! (20)

    Share
  • தனிமை தெய்வங்கள்…!

    -செண்பக ஜெகதீசன்

    அம்மாதான் தெய்வமென்றார்கள்
    அருமைப் பிள்ளைகள்..

    தெய்வத்துடன் வாழ
    ஒருமகனும் விரும்பவில்லை-
    மருமகள் விருப்பம்போல்..

    வெளியூரில் வேலையென்பதால்
    வசதிப்படாதாம்,
    மூன்றுபேரும் போய்ப் பார்க்க
    முதியோர் இல்லமும்
    அருகில் இல்லையாம்..

    அதனால்,
    கோவில் தெய்வங்கள்போல்
    அவளும்-
    தனியாய் வீட்டில்…!

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 142

    மலர் சபா

    மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

    மாதவியின் திருமுகத்தைத் தன் தந்தைக்குக் கோவலன் அனுப்புதல்

    மடலைப் படித்து முடித்ததும்
    கௌசிகனிடம் கோவலன் கூறினான்:                     harp
    “இலச்சினையிடப்பட்ட இந்த ஓலையில்
    எனக்காக வருந்துகின்ற என் பெற்றோர்க்கும்
    விடை பொருந்தியிருக்கிறது.
    எனவே இதைக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்து
    குற்றமற்ற அவர் மலரடி தொழுதேன் என்று கூறுவாயாக.
    இந்த ஓலையை அவரிடம் காட்டுவாயாக” என்று கூறினான்.

    எம் பிரிவால் ஏற்பட்ட
    அவர்தம் நடுக்கத்தைப் போக்கி,
    அவர்கள் உள்ளத்தில் உறைந்துள்ள
    துயரத்தை நீக்க இப்போதே
    புகார் நகரம் விரைந்து செல்வாயாக என்றான்.

    கோவலன் மீண்டு வந்து, பாணர்களுடன் இசை பாடிப் பொழுது போக்குதல்

    குற்றமில்லாக் கற்புநெறி கொண்ட
    தன் மனைவியாம் கண்ணகியோடு இருந்த
    தவறில்லாக் கொள்கையுடைய
    கவுந்தியடிகளிடம் சென்று இணைந்து,
    போர்க்கோலம் பூண்ட துர்க்கையின் வெற்றியைப்
    பாடும் பாணருடன் உரிமையுடன் சேர்ந்து,
    செம்மையாகச் செய்யப்பட்ட செங்கோட்டு யாழில்
    தந்திரிகம் திவவு உறுப்புகளைத் திறம்படக் கட்டி,
    ஒற்று உறுப்பைக் கொண்ட யாழ் அது என்பதால்
    பற்று உறுப்பையும் கூட்டி
    உழை குரலாகவும், கைக்கிளை தாரமாகவும்
    நரம்புகளை நிறுத்தினான்.

    மூவகைத் தானத்தாலும்
    துள்ளிப் பாயும் மானை ஊர்தியாகக் கொண்ட
    கொற்றவையின் புகழ்பாடும் பண்ணை
    ஆசான் திறம் என்னும் பண்ணோடு பொருந்துமாறு
    அவற்றைச் செவியால் கேட்டுணர்ந்து
    தன் யாழில் இசைத்தான்.
    பின் அவன் அப்பாணர்களிடம்,
    “மதுரைக்கு இன்னும்
    எத்தனை காததூரம் உள்ளது?” என்று கேட்டான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 96 – 113
    http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

    Share
  • ஓய்வு!

    -பொன்ராம்

    அசையாத திரைச்சீலை
    எனது இதயக்கனத்தைப்
    புரிந்துகொண்டதோ!
    டிக்! டிக்! கடிகாரம்
    இந்த வீட்டின் சப்தம்
    எழுப்பும் சிறுகை அளாவிய
    குழந்தைமணி!

    சன்னலில் கட்டி விடப்பட்ட
    பாசிமணிகளுடன் தென்றல்
    நண்பர்களுடன் விளையாட்டுச் சப்தம்!
    தாள் கிழிக்கும் ஓசை
    எனது செவிகளுக்கு
    இன்னிசை நாதம்!

    சாய்வு நாற்காலியின்
    கிரீச் ஒலிகூட
    என்னுடன் சரிகமபதநி
    விளையாடி
    அலுத்துக் கிடக்கிறது!

    மௌனத்துடன் சங்கமிக்கும்
    எனதருமை முள்நாட்களுடன்
    நாட்காட்டி குறிப்பிட்டது
    எனது ஓய்வு வயதை!

    வாழ்க்கைப்படகு ஓடிய
    ஓட்டத்தில் அப்போதுதான்
    உணர்ந்தேன் என்னுடன்
    பயணித்த யாருமில்லை
    என்னருகில்!

    ஓடி வந்த நாலுகால்
    நன்றியினத்துடன்
    நான் மட்டுமே
    தீவாய்த் தனித்திருந்தேன்!

    தொலைத்த வாழ்க்கையை
    எங்குத் தேடியும் எனக்கு
    இன்றுவரை கிடைக்கவில்லை!

    வீசிய தென்றலாய்
    தெங்கொன்றில்
    குயிலொன்று இன்னிசையாய்க்
    கொடை கானம் பாடி
    வாழ்க்கைப்பாதை
    தேடிப் பறந்ததோ!                                                                                            

    Share
  • உலவுறாய் வாலி நீயும்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    வாலியுன் பாட்டைக் கேட்டால்
    வலியெலாம் பறந்தே போகும்
    போலிநீ இல்லை ஐயா
    பொங்கிடும் தமிழின் ஊற்று!                         Vaali

     நூலெலாம் ஆக்கித் தந்து
     நுகர்ந்திடச் செய்தாய் ஐயா
     நாலுபேர் உன்னைப் போற்ற
     நயமிகு கவிதை தந்தாய்!

     ‘வாலிபக் கவிஞன்’ என்று
      வரம்வாங்கி வந்தாய் ஐயா
      வைரமாய் வரிகள் பாடி
      மனங்களில்  பதிந்தே விட்டாய்!

     தெருவெலாம் உந்தன் பாடல்
     தினமெமைக் கேட்கச் செய்தாய்
     தமிழிலே மூழ்கி நாளும்
     தரமுடைக் கவிதை தந்தாய்!

     நரைதிரை வந்த போதும்
     நாளெலாம் பாடி நின்றாய்
     உரமுடைக் கவிஞன் ஆக
     உலவுறாய் வாலி நீயும்!

    Share
  • அணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் – 5

    — சி. ஜெயபாரதன்.

    fig-1d-nuclear-arsenals

     

    (கட்டுரை: 5)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பேரழிவுப் போராயுதம்
    உருவாக்கி
    மனித இனத்தின்
    வேரறுந்து
    விழுதுகள் அற்றுப் போக,
    விதைகளும் பழுதாக
    ஹிரோஷிமா நகரைத் தாக்கி
    நரக மாக்கி
    நிர்மூல மாக்கியது,
    முற்போக்கு நாடு !
    நாகசாகியும்
    நாச மாக்கப் பட்டது !
    இப்போது தோன்றின
    புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !
    கதிரியக்கம் பொழியும்
    புழுதிக் குண்டுகள் !
    அணு ஆயுத வெடிப்பில்
    புகை மண்டலம்
    சூழ்வெளியில் பரவிப்
    பரிதி ஒளியை மறைத்து
    குளிர் உலகம் உண்டாகும் !
    புத்தர் பிறந்த நாட்டிலே
    புனிதர் காந்தி வீட்டிலே
    புது யுகச் சூட்டிலே
    மனித நேயம்
    வரண்டு போன
    வல்லரசுகள் பின் சென்று
    பாரத அன்னைக்குப்
    பேரழிவுப்
    போரா யுதத்தை
    ஆரமாய்
    அணிவிக்க லாமா ?


    உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

    கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

    விஞ்ஞானிகள் உலகத் தேச நலனை முன்வைத்து அதிர்ச்சியான இந்தக் கோரப் பிரச்சனையில் (அணு ஆயுத வெடிப்பு) தெளிந்த சிந்தனையோடு நடந்து கொண்டனரா என்று ஒருவர் கேட்க வரலாம் !  உண்மையாக அப்படி ஒரு விருப்பத் தேர்வுக்கு (Choice) இடமில்லை !  அடிப்படை ஆய்வறிவு கிடைத்ததும் அது கனியாகப் பழுப்பதை நிறுத்த எந்த ஓர் எதிர்ப்புத் தடையும் வந்தால் பரிதியைச் சுற்றிவரும் பூமியை நிறுத்த முனைவது போல் முறிந்து போகும் !

    சிகாகோவில் முதல் அணுப்பிளவு தொடரியக்கம் நிகழ்த்திய என்ரிக்கோ ஃபெர்மி,

    விஞ்ஞானம் அணுசக்தி மூலம் பயனடைய நமக்குக் கல்வி புகட்டி யுள்ளது.  மனிதத் தீங்குகளுக்குப் பதிலாக மானிட நலத்துக்கு அணுசக்தியைப் பயன்படுத்த முயல்வது மனிதக் கடமை நெறியில் பின்னியுள்ளது.  இப்போது நாம் எதிர்நோக்கும் பிரச்சனை பௌதிக விஞ்ஞானம் அல்ல;  மனித ஒழுக்க நெறி !

    பெர்னார்டு மான்னஸ் பரூச் (Bernard Mannes Baruch)


    “முஸ்லீம்களாகிய நாம் வல்லவராகவும், நம் நாடு மற்ற நாடுகளுக்கு இணையாகவும் இருக்க வேண்டும்.  அதனால்தான் சில நாடுகள் வல்லமையோடு இருக்க நான் உதவி செய்ய விரும்புகிறேன்,”

    அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan, Maker of Pakistan Atomic Bomb)

    “இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ இலைகளைத் தின்றோ பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்.”

    ஸுல்ஃபிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர்.

    “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”

    டாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)


    அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி நியதி !

    ஜப்பான் ஹிரோஷிமா நாகசாக்கி நகரங்களில் போட்ட அணு ஆயுத வெடிப்புகள் போல மூன்றாம் உலகப் போர் நிகழ்ந்தாலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுப் போர் மூட்டிவரும் பாகிஸ்தானும் பாரதமும் தமது அணு ஆயுதங்களை ஏவி இரு நாடுகளும் மனித இனத்தை அழித்துக் கதிரியக்கப் பொழிவுகளைப் பரிமாறிக் கொண்டாலும் சரி, இறுதியில் கோடான கோடி டன் புகை மூட்டம் சூழ்வெளி மண்டலத்தில் சேர்ந்து இருள் மண்டிப் பரிதியின் ஒளி குன்றிப் பூமியில் பெருங்குளிர்ச்சி ஏற்பட்டு விடும் என்று ஒரு கோட்பாடு கூறப்பட்டு வருகிறது !  இந்த கோர விளைவைத்தான் 1983 இல் அணுவியல் /வானியல் பௌதிக விஞ்ஞானி கார்ல் சேகன் (1934 -1999) “அணு ஆயுத வெடிக் குளிர்ச்சி” (Nuclear Winter) என்று முதன்முதல் ஓர் எதிர்பார்ப்புக் கோட்பாடாக அறிவித்தார்.  போரில் பல்லாயிரம் கிலோ டன் டியென்டி ஆற்றல் கொண்ட பல்வேறு அணு ஆயுதக் குண்டுகள் வெடிப்பதால் ஏற்பாடும் பேரளவு புகை மண்டலம் பூமியின் மேல் நிலைச் சூழ்வெளி வாயு மண்டலத்தைச் (Earth’s Upper Atmosphere) சேர்ந்து சூரிய ஒளி விழுங்கப் பட்டுத் தட்ப வெப்ப நிலையைச் சீர்குலைக்கும் என்பதுதான் கார்ல் சேகன் கோட்பாடு !

    அணு ஆயுத வெடிப்புத் தூசி மண்டலம் பரிதி வெளிச்சத்தை மறைத்துக் கொண்டு பூமியை ஓர் இருண்ட கண்டமாக்கி வரண்டு போகும் குளிர்க் கோளமாய் மாற்றிப் பல்லாண்டுகள் தங்கியிருக்கும் என்று சொல்லப் படுகிறது !  அதனால் பெருமளவு வேளாண்மைப் பயிர்கள் சேதம் அடைந்து பல நாடுகளில் பட்டினியும் பஞ்சமும் படிப்படியாகப் பரவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது !  அமெரிக்க ரஷ்ய நாடுகள் அல்லது பாகிஸ்தான் பாரத தேசத்துக்கு இடையே எதிர்காலத்தில் நேரக் கூடிய அணு ஆயுதப் போர்களால் “பூகோளக் குளிர்ச்சி” (Global Cooling) ஏற்படும் என்று சில விஞ்ஞானிகள் இப்போது கருதுகிறார்.  அந்த விஞ்ஞானிகளின் பௌதிகக் குரு காலஞ் சென்ற அணுவியல் / வானியல் நிபுணர் கார்ல் சேகன் (1934 -1999).  கார்ல் சேகனின் முக்கியச் சீடர்கள் இருவர் : அலன் ரோபோக் & ஓவன் பிரையன் டூன் (Alan Robock & Owen Brian Toon).

    அலன் ரோபோக், ஓவன் பிரையன் டூன் இருவரது அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சிக் கோட்பாடு பூகோளக் குளிர்ச்சிக் காட்சிகளைக் (Global Cooling Scenerios) கணினி மாடல்கள் மூலமாகக் (Computer Models) கண்டு முடிவு செய்தவை.  கடந்த காலங்களில் பூமியில் நேர்ந்த எரிமலைப் புகை மூட்டங்கள், கானகத் தீயெரிப்புகள், மற்ற பூதள வெளியேற்றங்கள் ஆகியவை அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சிக்கு ஆதாரமாகச் சான்றுகள் கூறுகின்றன.  அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சிக் கோட்பாடு என்ன சொல்கிறது ?  அணு ஆயுதப் போரில் அணுக்குண்டுகள் வெடித்த பிறகு கதிரியக்கப் பொழிவுகள் பூமியில் படிகின்றன.  அதே சமயத்தில் எழும் புகை மண்டலம், கரித்தூள்கள், மற்ற பூமியின் சேதாரத் தூசிகள் யாவும் மேலேறிச் சூழ்வெளியில் கலக்கின்றன.  அவை பரிதியின் ஒளியை மங்க வைத்து வான் வெளியை இருளடையச் செய்கின்றன.  இறுதியாகச் சில மாதங்களில் பூமியின் உஷ்ணம் 1 முதல் 5 டிகிரி சென்டிகிரேட் வரைக் குறைந்து போகலாம்.  கணினி மாடல்கள் இந்த உளவு ஆராய்ச்சிகளில் கண்ட முடிவு என்ன வென்றால் ஒரு டிகிரி சென்டிகிரேட் உஷ்ண மிகையால் கூட “உயிரின ஏற்பு அமைப்பில் நிலைகேடு” (Ecosystem Unbalance) விளைந்து பூமியில் உயிரினப் பயிரினப் பாதிப்புகள் ஏற்படும் என்று அறியப்படுகிறது.

    65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அசுர அணுக்குண்டு பூமியில் விழுந்தது போல், மெக்ஸிகோ அருகில் விழுந்த ஒரு பெரும் முரண் கோளால் (Asteroid) நேர்ந்த அதிர்ச்சியும் தூசி மண்டல எழுச்சியும் பரிதி ஒளியை விழுங்கி உஷ்ணம் தணிந்து போனதால் அக்காலத்தில் வாழ்ந்த டைனோஸார்ஸ் அனைத்தும் மாண்டு போனது இதற்கோர் தகுந்த உதாரணம்.

    அணு ஆயுத வெடிப்புப் போர்களால் விளையும் புகை மூட்டக் குளிர்ச்சி!

    கார்ல் சேகன் அணு ஆயுத ஆக்கத்தையும், அவற்றின் மேற்தள வெடிப்பையும் அறவே எதிர்த்தவர் ! 1980 ஆண்டுகளில் ‘அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி’ [Nuclear Winter] என்னும் புதிய ‘அணு ஆயுதப் புகை மூட்ட’ எச்சரிக்கையை முதன் முதலில் உலகெங்கும் பறைசாற்றியவர், விஞ்ஞானி கார்ல் சேகன் (1934 -1999) ! அதன் விளக்கம் என்ன வென்றால், அணு ஆயுத வெடிப்புகளில் கிளம்பும் புகையும், தூசியும், கரிவாயுக் கோளமும் பூமியின் சூழ்வெளி மண்டலத்தைப் பேரளவில் பாதித்துப் பரிதியின் தட்ப வெப்ப அளவுகளைக் கூட்டிக் குறைத்துக் கால நிலையைக் கரைப்படுத்திப் பூமியைப் பல நாட்களுக்கு ஒரு குளிர்க்கோளமாய் ஆக்கிவிடும் என்று கூக்குரல் இட்டார் !

    அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி வேளாண்மைத் தானியங்களைச் சரிவர வளர விடாமல் பாதித்து மனிதர் மற்றும் விலங்கினங்கள் ஆகாரம் இல்லாமல் பஞ்சம், பட்டினியில் துன்பப்படும் என்று உலக வல்லரசுகளையும், அணு ஆயுதப் போர்வைக்குள் ஒளிந்து பின்புறமாய் தயாரித்துக் கொண்டிருக்கும் மெல்லரசுகளையும் கார்ல் சேகன் எச்சரிக்கை செய்தார் ! ஹைடிரஜன் குண்டு ஆயுதப் பிதா, டாக்டர் எட்வெர்டு டெல்லர் போன்ற தீவிரவாத விஞ்ஞானிகள் கார்ல் சேகனின் அணு ஆயுதக் குளிர்ச்சிக் கோட்பாடை ஒப்புக் கொள்ளாது தப்பென ஒதுக்கித் தள்ளினார்கள்!

    அணு ஆயுதப் போர் வெடிப்புக் குளிர்ச்சியால் நேரும் சீர்கேடுகள்

    2000 இல் சோவியத் தலைவர் மிக்கேல் கார்பச்செவ் (Mikhail Gorbachev) ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானிகள் செய்த கணினி மாடல்கள் எதிர்காலத்தில் அணு ஆயுத யுத்தம் ஒன்று வருமானால் அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி (Nuclear Winter) உண்டாகும் என்றும் அதனால் பூமியில் அனைத்து உயிரினங்களுக்கும் அழிவு நேரும் என்றும் எச்சரிக்கை செய்தார்.  அந்த அறிவுரை புத்துணர்ச்சி ஊட்டும் போதனையாக நன்னெறியைப் பின்பற்றும் நபருக்கு விழிப்புணர்ச்சி தரும் என்றும் குறிப்பிட்டார்.  அதனால் அணு ஆயுத வெடிக் குளிர்ச்சிப் பயமானது உலக நாடுகளின் அணு ஆயுதப் பெருக்கப் பந்தயத்தை நிறுத்த அது ஒரு முக்கிய காரணமாக வலியுறுத்தப்பட வேண்டும்.

    உலக வல்லரசுகளுக்கு இடையே ஊர்ந்து வந்த ஊமைப்போர் (Cold War) 1990 ஆண்டுகளில் முடிந்த பிறகும் நாம் ஏன் அணு ஆயுத அடுக்குகளுக்கு அஞ்ச வேண்டும் என்ற ஒரு கேள்வி எழலாம்.  காரணம் மெல்லரசுகள் பல இப்போது தம் கைவசம் அணு ஆயுதங் களை இரகசியமாய்த் தயாரித்து ஒளித்து வைத்திருப்பதுதான் !  உதாரணமாக இப்போது பாகிஸ்தான் மூர்க்கப் படைத் தாக்குதலை நிறுத்த, பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்து போரில் பல அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டு நூற்றுக் கணக்கான அணுக்குண்டுகள் இருபுறமும் வீசப்பட்டால் அதன் கோர முடிவு பூகோள வேளாண்மை விளைச்சலைப் பேரளவில் முடக்கி விடும்.  ஒரு பிராந்தியப் போரால் உலகளாவியச் சேதாரங்களும் உயிரின இழப்புகளும் நேரிடும் !  நீண்ட கால அணு ஆயுதப்போரில் உள்நாட்டு மக்கள் பேரளவில் மடிவதோடு உலக நாட்டு மாந்தரும் பாதிப்படைவார்.  நேரடித் தாக்குதலிலும், தீக்காயங்களிலும் பின்னர் கதிரியக்கத்திலும் பாதிக்கப் பட்டு உள்நாட்டு மக்கள் சுமார் 20 மில்லியன் பேர் மரிப்பார் !  இரு நாடுகளைக் கடந்து அப்பால் உலக நாடுகளிலும் சூழ்வெளி பாழ்பட்டு வேளாண்மை சீர்கேடாவதால் ஒரு பில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையிலும் பட்டினியாலும் சாகலாம்டென்று யூகிக்கப் படுகிறது !

    உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய பாடம் !

    அணு ஆயுத யுகம் ஒளிமறைவாக உதயமானது.  ஹிரோஷிமா, நாகசாக்கியில் ஈரணுக் குண்டுகளைப் போட்ட பிறகு இருபதாண்டுகளாக அணு ஆயுத ஏகாதிபதிகள் கதிரியக்கத்தால் நேரக்கூடிய மனித உடற் கேடுகளைக் கூறாமல் மறைத்து வைத்திருந்தனர்.  பிடிவாதத்துடன் மருத்துவ ஆராய்ச்சி செய்யும் டாக்டர் அலிஸ் ஸ்டீவர்ட் (Dr. (Mrs) Alice Stewart) என்னும் பெண்மணிதான் முதன்முதலில் தணிவு நிலைக் கதிர்வீச்சால் (Low Level Radiation) விளையும் உடற் பாதிப்புக்களைக் கூறி உலகுக்கு அணு ஆயுதங்களைப் பற்றி எச்சரிக்கைகள் செய்தார்.

    இன்னும் இரண்டு பிறப்பாண்டுகளில் (Generations) மனித இனத்தின் எதிர்கால விதி தீர்மானிக்கப்படப் போகிறது !  அதற்கு இரு மிக முக்கியத் தேவைப்பாடுகள் என்ன ?  மனித இனவிருத்திக் கட்டுப்பாட்டுக்குள் நாம் ஒரு நிலையான சமூக வளர்ச்சிக்குக் குறிவைக்க வேண்டும்.  அடுத்து உலகிலுள்ள அணு ஆயுத அடுக்குகளை முடக்கி அனைத்தையும் முறிக்க வேண்டும்.  இல்லாவிட்டால் நாம் 2050 ஆண்டுக்கு மேல் எப்படி உயிர் பிழைத்து வாழ முடியும் என்பது எனக்குத் தெரியாது என்று ஜேக்ஸ் மோனாடு 1971 இல் கூறினார்.

    (கட்டுரை தொடரும்)

    *****************************

    தகவல் :

    Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

    1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210273&format=html  (Robert Oppenheimer)

    http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203245&format=html (First Atomic Bombs Dropped on Japan)

    3. (a) http://jayabarathan.wordpress.com/2009/08/06/dr-raja-ramanna-2/(ராஜா ராமண்ணா இந்திய அணு ஆயுதச் சோதனை)

    4. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes

    5. Oppenheimer, By: James Kunetka

    6. Hand Book of World War II, Abbeydale Press

    7. The Deadly Element, By: Lennard Bickel

    8. Canadian Nuclear Society Bulletin, June 1997

    9.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

    10.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

    11.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

    12.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads, By : David Biello (November 2007)

    13.  The Dirty Bombs (Radiological Dispersion Bombs) MSN Broadcasting -Dirty Bombs Biggest Hazard : Panic Experts Say Radiation Would Play on Public Fears (June 10, 2002)

    14.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

    15.  Neutron Bombs – Wikipedia Report (December 15, 2009)

    16 Wikipedia Report on Dr. Abdus Salam –http://en.wikipedia.org/wiki/Abdus_Salam (Dec 18, 2009)

    17. Wikipedia Report on Abdul Qadeer Khan –http://en.wikipedia.org/wiki/Abdul_Qadeer_Khan (December 26, 2009)

    18. Wikipedia Report on http://www.armscontrol.org/documents/sortStrategic Offensive Reductions Treaty (SORT) (May 24, 2002)
    19 http://jayabarathan.wordpress.com/2008/05/02/katturai27/  (பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது ?) (May 1, 2008)
    20 What is NuclearWinter ? By : Charles Mallery Dept of Biology, University of Miami, Florida, USA (May 16, 2006)
    21 Nuclear Winter By : Carl Sagan
    22 Scientific American : Local Nuclear War, Global Suffering By: Alan Robak & Owen Brian Toon (January 2010)

    ******************
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) January 7, 2010

    Share
  • காகிதக் கப்பல்

     

    இசைக்கவி ரமணன்

     

    ar

     

    பள்ளிக் கூடம்; பிற்பகல் பொழுது
    வெள்ளி போலப் பளபளத்த
    தகரக் குழாய்கள் சற்றே கறுத்தன
    கூரைக் கதவைத் தட்டித் தட்டிப்
    பொத்தல்கள் வழியே எத்தர்கள் போலப்
    பொத்துக் கொண்டு வந்தது பெருமழை

    வானம் கொடுத்த ஆரவாரத்தை
    வாங்கிக் கொண்டது மழலைக் கூட்டம்
    மொழிகளை மிஞ்சும் மொழியைக் கேட்டு
    விழுந்த மழையெலாம் வியந்து கொண்டது

    வகுப்புக்கும் ஒரு வகுப்புக்கும் இடையே
    வகுத்துக் கிடந்த வறண்ட வாய்க்கால்
    ஆடிக் காவிரி போலப் பெருகவும்
    அவள் பாவாடை நனைந்து நாணியது

    விடைதெரியாத கணக்கைக் கண்டு
    விழித்துக் கிறுக்கி வியர்த்துக் கிடந்த
    பக்கத்திற்கெலாம் அப்பால், ஒரு
    புத்தம் புதிய பக்கம், அந்தப்
    புத்தகத்திடம் விடைபெற்றது

    கடவுளுக்கு மட்டுமே கண்ணில் தென்படும்
    எழுதப் படாத கவிதை ஒன்றினை
    ஏந்திக் கொண்டே இறங்கிய படியால்
    காகிதம் ஒன்று கப்பலானது

    கணக்குகளாலெ களங்கப்பட்டு
    கண்ணீர் கழுவ முயன்று காய்ந்து
    காற்றில் பறக்கும் காகிதம் இல்லை!

    ஒரு மைத்துளியும் உறுத்தவில்லை
    தாங்கி மட்டுமே பழக்கப்பட்ட
    தன்னைத் தாங்குவதார் தெரியவில்லை
    சபையறியாத என் சவலைக் கவிதையால்
    சாகா வரம்பெற்றது காகிதம்

    நீரில் நைந்து நலிந்து விடாது
    யார்கையிலும் சிக்கிவிடாது
    சீறும் புயலால் சிறிதும் அஞ்சாது
    திரும்ப வராது

    எனக்கே எனக்காய் விண்ணிலிருந்து
    இறங்கி வந்த மழைத்துளியில்
    கவிதை ஏந்திக் கனிந்த காகிதம்
    கனவைப் போலக் கரைந்து கொள்ளும்

    மழையை அனுப்பிய மன்னவன் காலில்
    குழையும்; சிறுவிரல் குறுகுறுக்கும்
    தனக்கே தனக்காய் இருந்தவன் பாடு
    இதற்குப் பிறகு என்னவாகுமோ?
    எனக்கெதற்கடி இந்தக் கவலை?

    கொடுத்தவனுக்கு நன்றி என்பதும்
    கொண்டதை முறையாய்க் கொண்டாடுவதும்
    கொடுத்ததைத் திருப்பிக் கொடுப்பதுதானே !

    02.11.2014 / ஞாயிறு / 07.37

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    அச்சுதன் அஞ்சனைக்கு, அஞ்சேல் அறிவிக்க,
    (தேர்)அச்சு தனிலமர்ந்து அர்ஜுனர்க்கு, -அச்சுதன்,
    கீதை உரைப்பதைக் கேசவ் கொடுத்தனை,
    மேதை உனக்குமேல் மால்”….கிரேசி மோகன்….

    அச் சுதன் அஞ்சனைக்கு -ஆஞ்சனேயன்….
    விஜயன் தேர் மேல் அனுமன்
    கேசவ் தலை மேல் மால்….

    Share
  • அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை

    எம். ரிஷான் ஷெரீப்

    dstree

    கழுத்து நீண்ட வாத்துக்கள் பற்றிய உன் கதையாடலில்
    சாவல் குருவிக்கு என்ன திரை
    அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்
    அடித்த சாரலில்
    வண்ணத்துப் பூச்சியின் நிறம் மட்டும் கரைந்தே போயிற்று
    நல்லவேளை சருகுப் பூக்கள் அப்படியேதானே

    பிறகென்ன
    வற்றிய ஆழக் கடல்களின் நிலக் கரையில்
    துருப்பிடித்துப் பாதி மணலில் மூழ்குண்ட
    நங்கூரங்களின் கயிற்றோடு
    உப்புக் கரித்துத் தனித்திருக்கின்றன சிதிலப் படகுகள்

    அந்தி மாலையில் தூண்டிலிட்டமர்ந்து
    வெகுநேரம் காத்திருக்கும் சிறுவன்
    பாரம்பரிய விழுமியங்களைப் போர்த்தி
    உணவு தயாரிக்கும் இளம்பெண்
    நிலவொளியில் புயல் சரிக்க
    போராடி அலையும் பாய்மரக் கப்பல்
    அழிந்த மாளிகை
    அசையாப் பிரேதம்

    அது என் நிலம்தான்
    உன் மொழி வரையும் ஓவியங்களில்
    எல்லாமும் என்னவோர் அழகு

    உண்மைதான்
    மந்தையொன்றை அந்தியில்
    நெடுந் தொலைவுக்கு ஓட்டிச் செல்லும்
    இடையனொருவனை நான் கண்டிருக்கிறேன்
    நீ சொல்வதைப் போல
    காலத்தை மிதித்தபடிதான் அவன் நடந்துகொண்டிருந்தான்
    நெடிதுயர்ந்த மலைகள்
    உறைந்துபோன விலங்குகளைத்தான் தின்று வளர்கின்றன
    ஆகவே மலைக் குகை வாசல்களில் அவன் அவைகளோடு
    அச்சமின்றி ஓய்வெடுத்தான்

    சொல்
    மெய்யாகவே நீ கனவுதான் கண்டாயா

    என்னைக் கேட்டால்
    வாசப் பூஞ்சோலை
    சுவனத்துப் பேரொளி
    தழையத் தழையப் பட்டாடை
    தாங்கப் பஞ்சுப் பாதணி
    கால் நனைக்கக் கடல்
    எல்லாவற்றிலும் நேர்த்தியும் மினுமினுப்பும்
    தேவையெனில் அமைதியும்
    தேர்ந்தெடுத்த மெல்லிசையும் என
    எல்லாமும் இன்பமயம் என்பேன்

    அத்தோடு
    இன்னும் கூட இரவு
    தினந்தோறும் கொஞ்சம் இருட்டை
    எனக்காக விட்டுச் செல்கிறது கிணற்றுக்குள்
    என்பதைச் சொல்வேன்
    வேறென்ன கேட்கிறாய்

    இலையுதிர் காலத்து மரத்தின் வலி
    அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை

    – எம்.ரிஷான் ஷெரீப்,
    இலங்கை
    mrishanshareef@gmail.com

    Share
  • பிரபஞ்சத்தின் நூதன நுண்ணலை முகத்தை நுட்பமாய்க் காட்டும் ஐரோப்பிய பிளான்க் விண்ணுளவி

     
     

    jay

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=lwELia_RAn0

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZCZdrfDHwgU

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=_yWiE8yFPtk

    பிரபஞ்சம் மாறி வரும், உப்பி
    விரிந்து செல்லும்.
    கால வரையற்ற பிரபஞ்சமே
    கருவாகி
    உருவாகி வருகிறது !
    காலத்துக்கு ஆதியந்தம் இல்லை !
    முறிந்த கருந்துளைக் கர்ப்பத்தில்
    பிறக்கும்
    சேய்ப் பிரபஞ்சம் !
    மாண்ட பிரபஞ்சம்  உயிர்த்து
    மீண்டெழும் !
    ஆதி அந்த மற்ற
    காலத் தூரிகை வரையும்
    கோலமே
    மூலமும் முடிவு மில்லாப்
    பிரபஞ்சம் !
    பிரபஞ்சம் முறிந்து சேயாய்ப்
    பிறக்கும் !
    உதித்த பிரபஞ்சம்
    உப்பி விரிந்து வெப்ப இழப்பில்
    சப்பிப் போகும் !
    பிரபஞ்சம்
    புத்துயிர் பெறக் கருந்துளைக்கு
    வித்துள்ளது !
    உயிரினங்கள் தோன்றி
    மடிவது போல்
    முடிவடையும் பிரபஞ்சம் !
    புரிந்தும் புரியாய வேதமாய்ப்
    புதிருக்குள் புதிராகும், நம்
    அதிசயப் பிரபஞ்சம் !

    +++++++++++++++

    Planck Satellite Image comarision

    ஐரோப்பிய விண்ணுளவி பிளான்க் வெளியிட்ட பிரபஞ்சத்தின் நுட்ப மதிப்பீடுகள் 

    2009 இல் ஐரோப்பிய விண்வெளிப் பேரவை ஈசா அனுப்பிய பிளான்க் விண்ணுளவி [European Space Agency’s (ESA) Planck Satellite] சமீபத்தில் மிக நுட்பமாய் பெரு வெடிப்புக்குப் பிறகு நிரம்பிய  கதிர்வீச்சு எச்சங்களை [Remnants of Radiation] அளந்து  விரிந்து வரும் பிரபஞ்சத் தோற்றத்தைக் காட்டியுள்ளது.   இதுவரை வெளியான நாசாவின் கோப் விண்தேடி [COBE -Cosmic Background Explorer] , வமாப் விண்ணுளவி  [WMAP – Wilkinson Microwave Anisotropy Probe] ஆகிய இரண்டின் அலைப்படங்களை விடத் துல்லியமாக ஐரோப்பிய பிளான்க் விண்ணுளவி படமெடுத்துள்ளது.   அப்படத்தின் ஒளிக்காட்சி,  380,000 ஆண்டுகட்கு முன்பு வெளியான கதிரொளிக் காட்சி !  இன்று நாம் காணும் பிரபஞ்ச ஒளிக்காட்சியே “அகில நுண்ணலைப் பின்புலம்”  [Cosmic Microwave Background] என்று கூறப்படுகிறது.  அந்தப் பின்புலக் காந்த நுண்ணலை உச்சத் திணிவு [Maximum Intensity] :  150 GHz (2 mm).  உஷ்ணம் : 3K [Kelvin]. அவ்விதம் கிடைத்த அகில நுண்ணலைப் பின்புல வரைவு ஆய்வுகள், பிரபஞ்சவியலை  [Cosmology] ஆழ்ந்து அறிந்து கொள்ள உதவுகின்றன.

     

    Planck Image -1

     

    பிளான்க் விண்ணுளவி ஒன்பது தனித்துவ அலை நீளத்தை [Nine Distinct Wave Lengths] அளக்கும்  ஆற்றல் உள்ளது.  ஒவ்வோர் அலை நீளமும் ஒவ்வொரு தனித்துவக் கதிர்வீச்சின் பண்பாடுகளை ஆராய உதவும்.   2013 மார்ச்சில் வெளிவந்த பிளான்க் விண்ணுளவியின் தகவல்படி ஒளிமந்தை விண்மீன்களின் பொதுப் பிண்ட விகிதம் [Normal Matter of Stars & Galaxies]: பிரபஞ்ச சக்தியில் 4.9% பரிமாணம். மற்ற கரும்பிண்டம் [Dark Matter] : 26.8%. , மர்மமான கருஞ்சக்தி  [Mysterious Force, Dark Energy]  : 68.3%.   மேலும் 2014 அக்டோபர் 29 இல் பிரபஞ்சத்தின் ஒரு புதிய வயதையும் பிளான்க் குழுவினர் அறிவித்தார் : 13.8 பில்லியன் ஆண்டுகள் என்று.

     

    “நமது பிரபஞ்சம் பத்து பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மெய்யாகவே வெறுமையிலிருந்து தோன்றியதாக நான் அனுமானம் செய்கிறேன் ! . . . . ஏன் அவ்விதம் நிகழ்ந்தது என்னும் கேள்விக்கு எனது தாழ்மையான முன்னறிவிப்பு இதுதான் : எப்போதாவது ஒரு யுகத்தில் அப்படி நேரும் தோற்றங்களில், நமது பிரபஞ்சமும் ஒன்று என்பது !”

    எட்வேர்டு டிரையன், பௌதிகப் பேராசிரியர் நியூயார்க் பல்கலைக் கழகம் (1975)

     

    Accurate Space Images

     

    “நமது பிரபஞ்சம் பெரும் பாய்ச்சலில் (Big Bounce) உதித்ததே தவிரப் பெரு வெடிப்பில் (Big Bang) தோன்றவில்லை !  அதாவது முதலில் குவாண்டம் ஈர்ப்பாற்றல் நிகழ்த்திய விந்தை விளைவுகளால் உள் வெடிப்பு தூண்டிப் புற வெடிப்பில் (An Implosion Triggering an Explosion) உண்டானது.”

    மார்டின் போஜோவால்டு,  (Martin Bojowald, Asst Professor of Physics, Penn. State, USA) (Authour of Big Bounce Theory) (July 2007)

    “வெறுமையிலிருந்து எதுவுமே உருவாக முடியாது.”

    லுகிரிடியஸ் ரோமானிய வேதாந்தி (Lucretius) கி.மு. (99-55)

     

    Fig 1A What Powered the Big Bang

     

    “பெரு வெடிப்பு நியதியில் உள்ள இடைவெளித் துளைகளை அகிலத்தின் உப்புதல் கொள்கை (Cosmic Inflation Concept) அடைத்து நமது பிரபஞ்சத்தைப் பலவற்றுள் ஒன்றாக மாற்றி விட்டது.  மேலும் விஞ்ஞானிகளுக்கு உப்புதல் கொள்கை பல்வேறு பிரபஞ்சங்களைப் (Multiverse) பற்றி உரையாட மன உறுதி தந்துள்ளது.  அதாவது பிரபஞ்சத்தில் பிரபஞ்சங்கள் (A Universe of the Universes) இருப்பது”

    ஆடம் ஃபிராங்க் (Astronomy Magazine Editor, Physicist)

    விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது ! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன ! அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது ! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க இயற்கை ஒருபோதும் நம்மை விடுவதில்லை !

    ஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி)

    Fig 1C Before the Big Bang Explosion


    புரிந்தும் புரியாத புதிருக்குள் புதிரான பிரபஞ்சம் !

    பிரபஞ்சம் எப்படித் தோன்றியது, எப்போது தோன்றியது, எதனால் தோன்றியது என்னும் வினாக்கள் பல்லாண்டுகளாய் விஞ்ஞானிகளுக்குச் சவாலாய் இருந்து வருகின்றன !  யானையைப் பார்த்த குருடராய் விஞ்ஞானிகள் தடுமாறி ஒவ்வோர் அங்கத்தை வெவ்வேறு விதமாய் விளக்கி குழப்பத்தையும் மயக்கத்தையும் உண்டாக்கி வருகிறார்.  இதுவரைப் பெரும்பான்மையினர் ஒப்புக் கொண்ட பிரபஞ்சப் “பெரு வெடிப்பு நியதியும்” (Bib Bang Theory) அத்திவாரத்தில் ஆட ஆரம்பித்துள்ளது !  பெருவெடிப்பு நியதியை வேத நெறியாக ஏற்றுக் கொள்ளாது பல்வேறு புதிய கோட்பாடுகள் முளைவிட்டுக் கிளைவிட்டுள்ளன.  பூமியில் விழுந்த பூர்வீக விண்கற்களின் கதிரியக்க எச்சங்களின் அரை ஆயுளை (Radioactive Half Life of Decay Elements) ஆராய்ந்து விஞ்ஞானிகள் இப்போதுள்ள பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது என்று கணித்துள்ளார்.  அந்தக் கணித எண்ணிக் கையில் ஐயப்பாடு எதுவும் இல்லை.  பிரபஞ்சம் பெரு வெடிப்பில் தோன்றியது என்று கூறினால் பெரு வெடிப்புக்கு முன்னால் விண்ணில் என்ன இருந்தது என்னும் வினா எழுகிறது !  வரையறை யில்லா அசுரத் திணிவுள்ள கடுகுப் பிண்டம் (Minute Matter of Infinite Density) ஒன்று வெடித்துப் பிரபஞ்சம் உண்டானது என்று அனுமானிக்கும் போது அந்தப் புதிரான பிண்டம் எந்த பௌதிக விதியையும் பின்பற்றுவதில்லை.  வரையறை யில்லா அத்தகைய திணிவுப் பிண்டத்தைச் சில விஞ்ஞானி களால் கற்பனை செய்ய முடியவில்லை !  ஐயப்பாடு எழுப்பும் பெரு வெடிப்பு நியதிக்குப் பதிலாக இப்போது வேறு சில புதுக் கோட்பாடுகள் வெளிவந்துள்ளன !

     

    Fig 1D Beginning to Now

    நூறாண்டுகளுக்கு முன் அறியப்பட்ட பிரபஞ்சம் மிக்க எளியது. நீடிப்பது நிலையானது.  ஒற்றைக் காலாக்ஸி (நமது பால்வீதி) கொண்டு கண்ணுக்குத் தெரியும் ஒரு சில மில்லியன் விண்மீன்களை உடைய ஒரு பிரபஞ்சம் !  21 ஆம் நூற்றாண்டில் விண்ணோக்கிகள் மூலம் காணப்படும் பிரபஞ்சம் பிரமிக்க வைப்பது !  கோடான கோடி காலாக்ஸி ஒளிமந்தைகள், பல கோடி பில்லியன் விண்மீன்கள் உலாவிடும் பிரபஞ்சம் !  நூற்றுக்கு மேற்பட்ட மூலக அணுக்களும், புரோட்டன், நியூட்ரான், எலெக்டிரான் போன்ற பரமாணுக்களும், அவற்றைப் பிணைத்த குவார்க்குகள், லெப்டான்கள் (Quarks & Leptons) போன்ற நுன்ணிய அடிப்படைத் துகள்களும் உடையது.  விண்ணோக்கிக் கருவிகளுக்குப் புலப்படும் பிரபஞ்சப் பகுதியில் சுமார் 100 பில்லியன் காலாக்ஸிகளும், அவை ஒவ்வொன்றிலும் சுமார் 100 பில்லியன் விண்மீன்களும் எண்ணற்ற அண்டக் கோள்களும் இருப்பதாகக் கணிக்கப் படுகிறது.

    Fig 1E Big Bang Funnel

    காலாஸிகளை விண்மீன்களின் தோரணங்களோடு ஓர் ஒழுங்கு அமைப்பில் அடைத்து வைத்திருப்பது அவற்றின் மையத்தில் உள்ள புதிரான அசுரக் கருந்துளையின் (Black Hole) ஈர்ப்பியல் விசையே !  காலாக்ஸி ஒளிமந்தைகளை விரைவாக விரட்டிப் பிரபஞ்சத்தை விரியச் செய்வது மாயமான கருஞ்சக்தி (Dark Energy) !  கருஞ்சக்தி கவரும் ஈர்ப்பு விசைக்கு எதிரான ஒரு விலக்கு விசை !  இந்த விலக்கு விசைதான் ஒளிமந்தைகள் ஒன்றுடன் ஒன்று மோதி முறிந்து போகாதவாறு அவற்றைத் தனியாகக் கடத்திச் செல்கிறது !

    பிரபஞ்சம் ஒன்றில்லை பல்வேறு !

    2006 ஆம் ஆண்டில் வாடர்லூ பல்கலைக் கழகத்தின் அமெரிக்க விஞ்ஞானி லீ ஸ்மோலின் (Lee Smolin) “கருவிருத்திப் பிரபஞ்ச நியதி” (Fecund Universes Theory) என்னும் தன் நூல் ஒன்றில் கூறுவது இதுதான் :  அந்த நியதி பிரபஞ்சப் பிறப்புகளின் இயற்கைத் தேர்வுக்குப் பயன்படுகிறது.  கருந்துளைகள் முறிந்து புதிய பிரபஞ்சங்கள் உருவாகும் என்று குறிப்பிடுகிறார்.  சேய்ப் பிரபஞ்சம் தாய்ப் பிரபஞ்சத்தின் அடிப்படை நிலைப்புப் பண்பாடுகளைச் சில மாறுபாட்டுடன் பெற்றிருக்கும் !  சேய்ப் பிரபஞ்சம் மூலப் பிரபஞ்சத்தின் பண்பாடுடன் அதன் வாரிசாக இருக்கும்.  வாரிசாக இல்லாத தோல்விக் குணப்பாடுள்ள பிரபஞ்சங்கள் சிசு உருவாக்குவதற்கு முன்பே “வெப்ப மரணத்தை” (Heat Death due to High Entropy) எய்து விடும். !  லீ ஸ்மோலின் உயிரியல் விஞ்ஞானத்தைப் (Biology) பின்பற்றித் தனது கருவிருத்திப் பிரபஞ்ச நியதியை விளக்குகிறார்.  அந்த நியதி ‘அகிலவியல் இயற்கைத் தேர்வு’ (Cosmological Natural Selection) என்றும் குறிப்பிடப் படுகிறது.

    Fig 1F The Future of the Universe

    லீ ஸ்மோலின் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் எத்தனை கருந்துளைகள் உள்ளனவோ அத்தனையும் முறிந்து அவை சேய்ப் பிரபஞ்சங்களாய்ப் பிறக்கும் என்று கூறுகிறார்.  ஆதலால் கருவிருத்திப் பிரபஞ்ச நியதி சார்லஸ் டார்வின் விளக்கிய பரிணாம வளர்ச்சி விதியை ஒட்டி இருப்பதாகத் தெரிகிறது.  லீ ஸ்மோலின் நியதியைத் திறனாய்வு செய்த ஜோ ஸில்க் (Joe Silk) என்பவர் சுட்டிக் காட்டுவது :  “நமது பிரபஞ்சத்தில் கருந்துளைகள் உற்பத்தி செய்யும் தகுதி நான்கு அடுக்கு (Four Orders of Magnitude) குன்றி யுள்ளது.”  சிற்றாயுள் பிரபஞ்சங்கள் (Short-lived Universes) பெருத்துப் போய் நீளாயுள் பிரபஞ்சங்களை (Long-lived Universes) ஆளுமை செய்யக் கூடுமாத லால், பரிணாம இயக்கத்தை (Evolutionary Dynamics) உண்டு பண்ண ‘பற்பல பிரபஞ்ச காலத்’ (Multiversal Time) தொடர்வைத் திணிக்கக் கூடாது என்று வேறொரு விஞ்ஞானி அதையும் எதிர்க்கிறார்.

    Fig 1F The inflation Tgeory

    2009 ஆம் ஆண்டில் வெளியிட்ட கட்டுரையில் லீ ஸ்மோலின் தனது முந்தைய கருத்தை நிராகரித்து வேறொரு புதிய கொள்கையை அறிவித்தார். “ஒரே ஒரு பிரபஞ்சம்தான் உள்ளது.  அதனை வடிவளவில் ஒத்துள்ள வேறெந்தப் பிரபஞ்சங்களும் கிடையா !  ஒன்றுக்கு ஒன்று இணையாகப் பல்வேறு பிரபஞ்சங்களும் (Multiverse) இருப்பவையல்ல !  மேலும் ஒன்றைப் போல் ஒன்றுள்ள பிரபஞ்சமும் ஒன்றுக்குள் ஒன்று அடங்கியுள்ள பிரபஞ்சமும் இல்லவே இல்லை.

    பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்னால் நேர்ந்தது என்ன ?

    பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக் கழகத்தின் பௌதிகத் துணைப் பேராசியர் மார்டின் போஜோவால்டு ஒரு புதிய கணித மாடலைப் படைத்து “முடிச்சுத் துகளியல் ஈர்ப்புக் கோட்பாடு” (Loop Quantum Gravity Theory) ஒன்றில் ஆழ்ந்து சிந்தனை செய்தார்.  அது ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியையும் துகளியல் யந்திரவியலையும் (Relativity Theory & Quantum Mechanics) இணைத்தது.  அந்தக் கணிதச் சமன்பாட்டில் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலம் (Time T=0) என்று நிரப்பினால் பிரபஞ்சத்தின் தோற்றக் கொள்ளளவு பூஜியமில்லை என்பது தெரிய வந்தது.  மேலும் அடர்த்தி முடிவில்லாமை அல்ல (Density of the Universe is NOT Infinite) என்றும் தெளிவானது.  அதாவது அவரது புதிய கணித மாடல் பிரபஞ்சத்தின் தோற்ற கால நிலையை ஆராய உதவியது.

    Fig 1G The Doppler Shift

    முன்பே இருந்த முடிச்சுத் துகளியல் கோட்பாட்டைப் புதிய கணித மொழியில் போஜோவால்டு எளிதாக்கினார்.  ஆனால் அவர் பயன்படுத்திய கணிதச் சமன்பாட்டு விதத்தில் ஒரு மகத்தான நிகழ்ச்சி பிரமிப்பை உண்டாக்கியது.  அதாவது தற்போதுள்ள நமது பிரபஞ்சத்துக்கும் முன்பாக வேறொரு பிரபஞ்சம் இருந்திருக்கிறது என்பதைக் காட்டியுள்ளது.  இது சற்று சிக்கலான சிந்தனைதான்.  ஏனெனில் பிரபஞ்சப் பெரு வெடிப்பில் கால வெளி அந்தக் கணத்தில் தோன்றின என்பது அறியப் படுகிறது.  போஜோவால்டு கணிப்பு மெய்யானால் அது இதற்கு முந்தி இருந்த ஒரு பிரபஞ்சத்தை எடுத்துக் காட்டுகிறது.  அது எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டுள்ளது.  ஆனால் அது சிறுத்துக் குறுகிப் போய் பேரசுரத் திணிவில், பேரளவு உஷ்ணத்தில் மிகக் மிகக் குள்ளி காலவெளிக் கடுகாய்க் (Ultra-dense, Ultra-Hot & Ultra-Small Ball of Space Time) கிடக்கிறது !  ஏதோ ஓர் கட்டத்தில் எப்படியோ அந்த உஷ்ணத் திணிவுக் கடுகைத் “துகளியல் ஈர்ப்பாற்றல்” (Quantum Gravity) இழுத்துச் சுருக்கி வைத்துக் கொண்டது.Fig 1H Holographic Universe

    இதை வேறு விதக் கண்ணோட்டத்தில் பிரபஞ்ச விளைவுகளைப் படிப்படியாகப் பின்னோக்கிப் பார்த்துக் கால மணி பூஜியத்துக்கு (Time T=0) நெருங்கினால் போஜோவால்டு கணித்த முந்தைய பிரபஞ்சத்தின் காணாத தோற்றம் தெரிகிறது.  போஜோவால்டு அந்த பூஜிய காலமணி நிகழ்ச்சியை “பெரும் பாய்ச்சல்” (Big Bounce) என்று குறிப்பிடுகிறார்.  அதாவது முந்தைய பிரபஞ்சம் அந்தப் பூஜிய கால மணியில் சீர்குலைந்து மறுபடியும் ஒரு புது முகப் பிரபஞ்சமாக, நமது பிரபஞ்சமாகக் குதித்தது என்று போஜோவால்டு கூறுகிறார்.  அவரது கணிசச் சமன்பாடுகளில் பூர்வீகப் பிரபஞ்சத்தின் வடிவம் எத்தனை பெரியது என்பதைக் கணக்கிட முடியவில்லை.  ஆகவே போஜோவால்டு கோட்பாட்டில் அத்தகைய “உறுதியில்லா ஊகிப்புகள்” (Uncertain Speculations) இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    Fig 2 Hubble's Long Sight

    நான்கு வகுப்பு வடிவ நிலைகளில் பிரபஞ்ச அமைப்புகள்

    “பல்லரங்கப் பிரபஞ்சம்” அல்லது “மேல்நிலைப் பிரபஞ்சம்” (Multiverse, Multi-Domain Universes or Meta-Universe) என்பது நிகழக் கூடிய பல்வேறு இணைப் பிரபஞ்சங்கள் பற்றிய ஓர் சித்தாந்தப் பௌதிகக் கோட்பாடு (Hypothesis of Possible Multiple Universes).  அதனுள் நாம் வாழும் பிரபஞ்சமும் அடங்கும்.  அது ஒரு பௌதிக விஞ்ஞான மெய்ப்பாடுதான் !  பற்பல பிரபஞ்சங்களின் கட்டமைப்புகள் (Structures of the Multiverse), ஒவ்வொரு பிரபஞ்சத்தின் இயல்பான பண்பாடு (The Nature of Each Universe), பல்வேறு பிரபஞ்ச உட்பண்டங்களின் உறவுப்பாடு (The Relationship between the Constituent Universes), ஆகியவை குறிப்பிட்ட பிரபஞ்சத்தின் சித்தாந்த பௌதிகக் கோட்பாடைச் சார்தவை.  “Multiverse” என்னும் சொல்லை ஆக்கியவர் அமெரிக்க வேதாந்தி வில்லியம் ஜேம்ஸ் (1848-1910).  அவற்றை (Alternate Universes, parallel Universes, Quantum Universes, Parallel Worlds, Alternate Realities & Alternate Timelines) என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள்.

     

    Fig 6 Dr Edwin Hubble's Telescope

    பல்லரங்கப் பிரபஞ்சங்கள் வகுப்பு -1, வகுப்பு -2, வகுப்பு -3 & வகுப்பு -4 (Level I, Level II, Level III & Level IV) என்று நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  இந்தப் வகுப்பு முறைகளை ஆக்கியவர் மூவர் :  1. ஜியார்ஜ் எல்லிஸ் (George Ellis).  2. யு. கெர்ச்செனர் (U. Kirchner) & 3. டபிள்யு. ஆர். ஸ்டோஜர் (W.R. Stoeger).  அப்பிரிவு முறைகளுக்கு “டெக்மார்க் வகுப்பியல்” (Tegmark Classification) என்பது பெயர்.

    1.  பல்லரங்க பிரபஞ்சங்கள் (Multi-Domain Universes)

    வகுப்பு : 1 (திறந்த வெளிப் பிரபஞ்சம்)

    யுகங்கள் கடந்த பிரபஞ்சத்தின் எல்லையிலா அகிலவெளி வீக்கம் பற்றி ஒரு பூர்வீக முன்னறிவிப்புச் சித்தாந்தம் இது.  அதனில் ஆதிகால நிபந்தனைகள் எடுக்கப்பட்டு ஹப்பிள் தொலைநோக்கி காணமுடிந்த கொள்ளளவுகள் இருக்க வேண்டும்.

    (Level : 1 A Generic Prediction of Cosmic Inflation is an infinite Ergodic Universe which, being infinite, must contain Hubble Volumes, realizing all initial conditions)

    2.  வேறுபட்ட பௌதிக நிலைத்துவம் கொண்ட பிரபஞ்சங்கள் (Universes with Different Physical Constants)

    வகுப்பு : 2 (ஆன்ரி லிண்டேயின் குமிழ் நியதி) (Andrei Linde’s Bubble Theory)

    கொந்தளிக்கும் அகிலவெளி வீக்கத்தில் வெப்ப அரங்கங்கள் பரிமாணவியல், நுண்துகள் இருப்புகளுடன் வேறுபட்ட, வளப்பூட்டும் பௌதிக நிலைப்பாடுகள் அடைவது.

     

    Fig 1B Composion Cosmos Details

    பழைய மதிப்பீடுகள்

     

    (Level : 2 In Chaotic Inflation other Thermalized Regions may have different Effective Physical Constants Dimensionality & Particle Content.  Also it includes Wheeler’s Oscillating Universe Theory)

    3.  பல்வேறு பிரபஞ்சங்கள் (Multiverses)

    வகுப்பு : 3

    நுண்துகள் யந்திரவியலை விளக்கும் போது சமத் தோற்றம் கொண்ட ஆனால் மாறுப்பட்ட தன்மையுள்ள பல்வேறு பிரபஞ்சங்களைப் பற்றிக் கூறுகிறது.  2007 செப்டம்பரில் டேவிட் டாய்ட்ஸ்ட் (David Deutsch) பல்வேறு உலகங்களைப் பற்றி விளக்கமும் நிரூபணமும் அளித்தார்

    (Level : III An Interpretation of Quantum Mechanics that proposes of Multiple Universes which are identical but exist in possibly different States)

    4.  முடிவான முழுத்தோற்றப் பிரபஞ்சங்கள் (Ensemble Theory of Tegmark – Ultimate Ensemble)

    வகுப்பு : 4 மற்ற கணித அரங்குகள் வெவ்வேறு அடிப்படைப் பௌதிகச் சமன்பாடுகளை உண்டாக்குகின்றன.

    (Level : IV Other Mathematical Structures give different fundamental Equations of Physics)

     

    Fig 4 Universe Expansion Models

     

    காலமற்ற ஒரு பிரபஞ்சம் (A Timeless Universe) !

    அகிலத் தோற்றத்தைப் பற்றிய புதுக் கோட்பாடுகள் நமது பிரபஞ்சத்தைப் பல்வேறு பிரபஞ்சங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று கூறுகின்றன !  மேலும் “காலம்” என்று ஒன்றில்லை என்னும் புதியதோர் கருத்தும் விஞ்ஞானிகளிடையே தற்போது உலவி வருகிறது.  அமெரிக்க விஞ்ஞானி லீ ஸ்மோலின் (Lee Smolin) ‘காலமற்ற பற்பலப் பிரபஞ்சக்’ (Timeless Mulitiverse) கருத்தை எதிர்க்கிறார் !  மற்ற பிரபஞ்சங்களில் ஒன்றான காலமற்ற நமது பிரபஞ்சத்தில் ‘பௌதிக விதிகள்’ (Laws of Physics) வெவ்வேறாக இருக்கும் என்று கருதப் படுகிறது.

    மூன்று புது விதப் பிரபஞ்சங்கள் இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் எண்ணுகிறார்.  முதலாவது ஒரே ஒரு பிரபஞ்சம் உள்ளது என்பது.  பற்பல பிரபஞ்சங்கள் உள்ளன என்று காட்டுவது விஞ்ஞானப் புனைகதைகளே ! இரண்டாவது : காலம் என்பது மெய்யானது (Time is Real) மேலும் உணரப் படுவது (Time Exists) !  காலமற்ற பிரபஞ்சம் (Timeless Universe) உள்ளது என்பது தர்க்கத்துக்கு உரியது.  மூன்றாவது : முந்தைய பிரபஞ்சம் முறிந்து மீளும் சேய்ப் பிரபஞ்சம்.

     

     

    (தொடரும்)

    +++++++++++

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Big Bang Happen ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
    20 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40801101&format=html (பிரபஞ்சம் ஒன்றா ? பலவா ?)
    21 http://jayabarathan.wordpress.com/2009/01/09/katturai49/ (பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ?)
    22 Big Bang Theory – The Premise
    23 Dark Energy – Universe Expansion Discovered.
    24 The Ultimate Fate of the Universe (Wikipedea)  (Sep 9, 2009)
    25 Time May not Have a Beginning & it might not Exist at all -Three Theories That Might Blow up the Big Bang Theory [March 25, 2008]
    25 Expanding Universe, Multiverse & Timeless Universe (June 2, 2009)
    26 The Question of the Beginning & the End of the Universe (June, 2006)
    27 Scientific American – Origin of the Universe (September 2009)
    28 Daily Galaxy : Will the Laws of Physics Extend Beyond our Universe (August 29, 2009)
    29 Wikipedia -The Life of Cosmos & The Trouble with Physics By: Lee Smolin (September 4, 2009)

    30. http://sci.esa.int/planck/53116-last-command-sent-to-esa-planck-space-telescope/  [October 23, 2013]

    31.  http://sci.esa.int/planck/53999-planck-takes-magnetic-fingerprint-of-our-galaxy/  [May 6, 2014]

    32.  http://en.wikipedia.org/wiki/Planck_(spacecraft)  [October 5, 2014]

    33.  http://article.sapub.org/pdf/10.5923.j.astronomy.20130202.01.pdf  [February 2, 2013]

    34.  http://www.dailygalaxy.com/my_weblog/2014/10/the-planck-spacecraft-an-epic-new-picture-of-our-dark-invisible-universe.html  [October 29, 2014]

    ++++++++++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) (November 1, 2014)

    Attachments area
    Preview YouTube video Planck satellite scanning the Sky

    Planck satellite scanning the Sky

    Preview YouTube video NASA | The Planck Space Telescope: Revealing the Ancient Universe [HD]

    NASA | The Planck Space Telescope: Revealing the Ancient Universe [HD]

    Preview YouTube video Planck satellite — solving cosmic conundrums – Dr.Tech. Anne Lähteenmäki

    Planck satellite — solving cosmic conundrums – Dr.Tech. Anne Lähteenmäki
    Share
  • மலரும் நினைவுகள்

    கிரேசி மோகன்

    crazy1

    எனக்கு அப்போது 18 வயசு இருக்கும்….என் தாத்தா வெங்கடகிருஷ்ணையங்கார் பரம ராஜாஜி பக்தர்….’’கிணத்துல குதி’’ என்று ராஜாஜி சொன்னால் குதித்து விடுவார்….’’சுதந்திரா தாத்தா’’ என்று மைலாப்பூரில் பிரபலமான அவர், சுதந்திரா பார்ட்டி என்ற கிணற்றுத் தவளையாய் வாழ்ந்தார்….எனக்கு அப்போதெல்லம் எழுத்தை விட ஓவியத்தில் ஆர்வம் அதிகம்….எனது எழுத்தையும், ஓவியத்தையும் ஊக்குவித்தவர் என் தாத்தா(மை LOVEவாப் பூர் டைம்ஸ்ஸில் விவரமாக எழுதுகிறேன்)…..என் தாத்தா மூதறிஞரின் ஆட்டிகிராஃப் வாங்கி தருவதாகச் சொன்னதும் ‘’ராஜாஜியை’’ வரைந்தேன்….அன்னாரும் ஒரு நாள் மாலை 4மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார்….நான், தாத்தா, மற்றும் சில சுதந்திரா பார்ட்டி உறுப்பினர்கள் ராஜாஜி வீட்டிற்கு 2மணிக்கெ கிளம்பினோம்….போகும் வழியில் ‘’சாந்தி விஹாரில்’’ மசாலா தோசை ஆர்டர் செய்து சாப்பிட்டதில் காலதாமதம் ஆகியது….ராஜாஜி வீட்டுக்கு(பசுல்லா ரோட் என்று நினைவு) நாங்கள் சென்றபோது மணி 4.02 ஆகிவிட்டது….2 செகெண்ட்தான் தாமதம்….ராஜாஜியின் காரியதரிசி வந்து ‘’சொன்ன நேரத்தில் வராததால் சார் உங்களை அப்புறம் வரச்சொல்லி விட்டார்’’ என்றார்….இத்தனைக்கும் ‘’ராஜாஜி’’ ஜன்னல் வழியாகத் தெரிந்தார்….RAJAAJI Thy Name Is Punctuality….Uncompromising Personality….காரியதரிசி சொன்ன அப்புறம் வரவேயில்லை….கையெழுத்து போட ராஜாஜியும் இப்போ இல்லை….வாங்கித்தர என் தாத்தாவும் இல்லை….ஓவியத்தில் ஆசை தீர ர.மோகன் என்று போட்டுக் கொண்டேன்….ஓவியத்தை இணைத்துள்ளேன்….கிரேசி மோகன்….

    Share
  • முக்தி தலம் சுப்பிரமண்யா – 2

    விசாலம்.

     

    Kukhi Subramanya

     

    நாங்கள் இப்போது பெரிய கோயில் வாசலில் வந்து விட்டோம். அப்போது ஒரு அர்ச்சகர் உள்ளே போய்க்கொண்டிருந்தார்.

    அவரை அழைத்து “குருக்களே! உள்ளே முறையாகத் தரிசிப்பது எப்படி எதை முக்கியமாகப் பார்க்க வேண்டும் என்று கொஞ்சம் விளக்குங்கள். அதன்படி செய்தால் சரியான நேரத்தில் நாங்கள் எல்லாம் பார்த்து முடிக்க முடியும்” என்றேன்.

    Kukhi Subramanya5“பேஷா சொல்றேன். உள்ளே கிழக்கு நோக்கி திருச்சன்னிதி இருக்கும். அதில் அருள் புரியும் சுப்பிரமண்யரைத் தரிசிக்க வேண்டும். அந்த கர்பக்கிரகத்துக்குள் செல்ல ஒரு பெரிய மண்டபத்தைக் கடக்கவேண்டும். மண்டபம் வரும் முன் அங்கு அருகில் ஓடும் தர்ப்பணா நதியையும் பார்த்து வரலாம். நான் தற்போது உள்ளே வரவில்லை. ஆலயத்தில் பூஜை செய்ய அன்றைய முறை குருக்கள் ஆலயத்திலேயே வசிக்க வேண்டும் இன்று என் முறையில்லை. “

    “பரவாயில்லை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். மிக்க நன்றி” என்றபடி உள்ளே நகர்ந்தோம். மண்டபத்தின் வாயிலில் இரு யானைகள் எங்களை வரவேற்றன. அவை அசையவில்லை. அருகில் செல்ல அவை இரு கல் யானைகள் என்று தெரிய வந்தது. கம்பீரமாக மீசையுடன் இரு தூவரபாலகர்கள் நம்மை வரவேற்கிறார்கள். உள்ளே சுமார் இருபது அடி உயரமான வெள்ளிக்கவசத்துடன் கூடிய பெரிய கம்பம் நிற்கிறது.

    “இதுதான் துவஜஸ்தம்பமோ” என்று நான் சொல்ல அங்கிருந்த ஒரு பெரியவர், “இல்லை இதன் பெயர் “கருடஸ்தம்பம்” நீங்கள் பிரதக்ஷிணம் செய்யும் போது இதையும் சேர்த்து செய்யுங்கள்” என்றார்.

    “இப்படி செய்ய எதாவது காரணம் இருக்க வேண்டுமே. அப்படி இருந்தால் நான் அதைக்கேட்க ஆர்வமாக இருக்கிறேன்” என்றேன்.

    “ஆரம்பிச்சுட்டாயா? எந்தக்கோயில் போனாலும் எதாவது புராணம் உனக்கு தெரியணும். நேரமாச்சு கிளம்பு,” என்றார் என் கணவர்.

    ஆனால் நான் விடவில்லை. அதைத் தெரிந்துக்கொண்டு தான் அங்கிருந்து நகர்ந்தேன். அவர் சொன்னது, கருவறையில் வாசுகி நாகம் இருக்கிறது அதன் விஷ மூச்சினால் மக்களுக்கு ஒரு ஆபத்தும் வராமல் இருக்க கருட மந்திரத்தைச் சபித்து இந்தக்கம்பத்தைப்பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

    பின் நாங்கள் சென்றது உமாமகேஸ்வரரின் சன்னிதி. ஆஹா என்ன அழகு! உமா தேவி ஈஸ்வரனின் தொடையில் அமர்ந்திருக்க சுவாமி அம்பிகையை அணைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கரத்தில் மானும், மழுவும் இருக்க; அம்பாள் அங்குசமும், தாமரை மலரையும் தன் கரங்களில் வைத்திருக்கிறாள். அம்பிகையின் முகம் வெட்கப்படும் பாவத்துடன் புன்னகை புரியும் கோலம் நம்மை பரவசப்படுத்துகிறது. அங்கிருந்து மெள்ள நகர்ந்து என் கைகளைக்கூப்பிய வண்ணமே முக்கிய சன்னிதியான சுப்பிரமண்யன் இருக்கும் இடத்திற்கு வந்து நின்றேன். திரை போடப்பட்டிருந்தது. உள்ளே மந்திரங்களின் ஒலியும் அத்துடன் ‘டண் டண்’ என்ற வெண்கல மணியின் நாதமும் என்னை எங்கேயோ அழைத்துச்சென்றது. ‘ஒம் சரவணபவ’ என்று என் வாய் முணுமுணுக்க ‘வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா’ என்ற சப்தம் அங்கு ஒலிக்க திரை விலகியது. அடுக்கு தீபாராதனையாக ஆரத்தி எடுக்கப்பட்டதால் அங்கு பேரொளி வீச சுப்பிரமண்யன், ஞானபண்டிதன், சண்முகன் மயிலின் மேல் அமர்ந்திருந்து அருள் புரிந்தார். அந்த மயிலின் கீழே வாசுகி நாகம் அமர்ந்திருக்கிறது. வாசுகி நாகத்திற்கு கீழே ஆதிசேஷன் இருக்க, கீழே பல சாளக்கிராமங்கள் இருக்கின்றன. கர்ப்பகிரகத்தில் ஒரு பாம்பு புற்றுமிருக்கிறதாம் அங்கிருக்கும் புற்று மண் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

    இங்கு கிடைத்த தலபுராணத்தில் இந்தக்கோயிலின் சிறப்பைப் படித்தேன். ஒரு சமயம் வாசுகியை மஹாவிஷ்ணுவின் வாகனமான கருடன் பார்த்துவிட்டு துரத்த ஆரம்பித்தது. வாசுகி பயந்தபடி குமார பர்வதத்தினுள் இருக்கும் ஒரு குகையில் போய் ஒளிந்துக்கொண்டு சிவபெருமானைக்குறித்து தவம் இருந்தது. பரமேஸ்வரனும் வாசுகி முன் தோன்றி “நீ இங்கேயே இரு. சுப்பிரமண்யன் உன்னை அருள் பாலிப்பான். அவனருளால் உனக்கு கருடனிடமிருந்து ஒரு ஆபத்தும் இருக்காது நீ இங்கு குமருனுடன் இருக்க பக்தர்கள் உன்னையும் சேர்த்து பூஜிப்பார்கள் ” என்றார். முருகனும் அதை ஆமோதித்து “வாசுகியுடன் கூடியிருக்கும் என்னை வணங்குபவர்கள் சகல சௌபாக்கியங்களும் பெறுவர்” என்றார்.

     

    படங்கள் உதவிக்கு நன்றி: http://temple.dinamalar.com/en/new_en.php?id=99

    Share
  • கவித்துளிகள்…

    -நாகினி

    பழக்கூழ் குளியலில்
    படைத்தவன்
    பசிக்கு இரையானான் ஏழை..!

    ***

    பசித்தவனுக்கு
    எச்சில் இலையில் பசியாற்றுகிறது
    குப்பைத் தொட்டி..!

    ***

    உன் தேவைகள் பூர்த்தியாகிவிட்டதே
    இனி நான் ஏன் உனக்கு பாரமாக…
    கறிவேப்பிலை…!

    ***

    பட்டினி வறுமைத் துயரிலும்
    நடக்கும் நேர்வழி
    தலை காக்கும்..!

    ***

    எச்சில் கையால் விரட்டியும்
    தன்மானச் சிறகு விரிக்காத
    காகம் ஏழை…!

    ***

    எச்சில்கையால் ஈ ஓட்டாதவன்
    படைக்கிறான் அமாவாசையில்
    காக்கைக்குச் சோறு..!

    ***

    தனிமனிதன் சேமிக்கும்
    துளிநீரும் கடலளவு
    மக்கள்சமுத்திரம் சேரும்…!

    ***

    ஆடம்பர நாகரீகக் குழாம் பெருகி
    நாள்தினமும் தேக்கமின்றி
    வீணாகும் நீர்… பணம்!

    Share