கவித்துளிகள்…
-நாகினி
பழக்கூழ் குளியலில்
படைத்தவன்
பசிக்கு இரையானான் ஏழை..!
***
பசித்தவனுக்கு
எச்சில் இலையில் பசியாற்றுகிறது
குப்பைத் தொட்டி..!
***
உன் தேவைகள் பூர்த்தியாகிவிட்டதே
இனி நான் ஏன் உனக்கு பாரமாக…
கறிவேப்பிலை…!
***
பட்டினி வறுமைத் துயரிலும்
நடக்கும் நேர்வழி
தலை காக்கும்..!
***
எச்சில் கையால் விரட்டியும்
தன்மானச் சிறகு விரிக்காத
காகம் ஏழை…!
***
எச்சில்கையால் ஈ ஓட்டாதவன்
படைக்கிறான் அமாவாசையில்
காக்கைக்குச் சோறு..!
***
தனிமனிதன் சேமிக்கும்
துளிநீரும் கடலளவு
மக்கள்சமுத்திரம் சேரும்…!
***
ஆடம்பர நாகரீகக் குழாம் பெருகி
நாள்தினமும் தேக்கமின்றி
வீணாகும் நீர்… பணம்!