Tag: மீனாட்சி பாலகணேஷ்

  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 3

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 3

    மீனாட்சி பாலகணேஷ்       

    கூந்தல் அலங்காரங்கள்

    (பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    கூந்தல் என்பது ஒரு பெண்ணின் எல்லாவயதிலும் அவளுடைய பெண்மைக்குச் சான்றுகூறி, அழகிற்கு அழகு சேர்ப்பதாகும். பெண்களின் கூந்தலைப் பற்றிப் பாடாத கவிஞர்கள் உண்டோ? அன்றுமுதல் இன்றுவரை அவளுடைய கருங்கூந்தலைப்பற்றி எத்தனை கவிதைகள்! என்னென்ன வருணனைகள்!

    சௌந்தர்யலஹரி அன்னை தெய்வத்தின் கேசாதி பாத வருணனையில் ஆதிசங்கரர் கூறுவதனை வீரை கவிராஜ பண்டிதர் அழகுற மொழிபெயர்த்து வழங்கியுள்ளதனைக் காணலாமா?

    அன்னையின் கருங்கூந்தல் எவ்வாறுள்ளதென விவரிக்கிறார்:

     

    ‘மலர்ந்த நறுநெய்தல் காடுபோல பிரகாசிக்கின்றது அக்கூந்தல். அடர்த்தியாக, வழுவழுப்பாக, மென்மையாக உள்ளது. இந்திரனுடைய நந்தவனத்தில் பூத்துள்ள நறுமலர்கள் அக்கூந்தலின் இயற்கை நறுமணத்தைத் தாமும் அடைய விரும்பி அக்கூந்தலில் வாசம் செய்கின்றன; அக்கருங்கூந்தல் என் மனத்து இருளை நீக்கவேண்டும்,’ என வேண்டுகிறார்.

    அலர்ந்தகரு நெய்தலங் காடெனக் கடைகுழன்
    றறநெய்த்து  இருண்டு செறிவோடு  
    இலங்குறும் இயற்கை மணம் எண்டிசையளப்ப அதில்
    இதழ் மூழ்கு நறை விழைவினால்
    பொலன்கொள் முடியாகண்டலேசர் பொற்றுணர்விரி
    பொதும்பர் மதுமலர்ப் படிவதோர்
    சிலம்பளி பரந்தவுனது ஓதியென் மனத்திருள்
    செறிவுதெற வருள் கமலையே!1

    பெண்டிரின் கூந்தலுக்கு இயற்கை நறுமணம் உண்டா என எழுந்த ஐயத்தால் உண்டான கதை, ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ,2‘ எனும் குறுந்தொகைப் பாடல், அதன் தொடர்பான திருவிளையாடலைப் பற்றி தமிழ் அறிந்தோர் அனைவரும் அறிந்திருப்போம்.

    இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில் மாதவி தனது கூந்தலை எவ்வாறு அலங்கரித்துக்கொண்டாள் என விளக்கமாகப் பாடியுள்ளார்.

    பத்துவகைத் துவரினாலும்(நாவல், கடுக்காய், நெல்லி, தான்றிக்காய், ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு, மாந்தளிர்), ஐந்துவகை விரையினாலும் (நறுமணப்பொருள், கஸ்தூரி, மயிர்ச்சாந்து, அகில்,  சந்தனம்), முப்பத்திரண்டுவகை நறுமணப் பொருள்களாலும் (ஓமாலிகையாலும்) ஊறவைத்த நன்னீரினால் நறுமண நெய்பூசிய தன் கூந்தலை நீராட்டினாள். பின் அகிற்புகை செலுத்தி அதனை உலர வைத்தாள். அதனை ஐந்துவகையாகப் பகுத்து (ஐம்பால்) ஒவ்வொரு வகைக்கும் கத்தூரிக் குழம்பினை ஊட்டினாள்.

             ‘பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
             முப்பத் திருவகை ஓமா லிகையினும்
             ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம்
             நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப்
             புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை
             வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி.3.’

    பரிபாடலிலும், மற்ற சங்க இலக்கியங்களிலும் கூந்தல் பராமரிப்பு, அலங்காரங்கள் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

    பட்டுப்பூச்சி போன்ற துறுதுறுப்பான சிறுமி! அவளுடைய கருமுகில் கூட்டங்கள் போன்ற அழகான அலையலையான நீண்ட கருங்கூந்தல். வண்டுகள் இன்னிசை மிழற்றியவாறு அதில் சூட்டப்பட்ட மலர்களில் தேனருந்தி மகிழ்கின்றன. அதற்குப் போட்டியிட்டுக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கூந்தல் அலங்காரத்தைச் செய்து அழகு பார்க்கும் தாயும் சேடியரும். யாரிந்தப் பெண்? அழகான கூந்தலுக்கு உரிமையாளர்? எட்டு அல்லது ஒன்பதாண்டுகளே நிரம்பிய நமதருமைச் சிறுமி மீனாட்சியேதான்!!

    கூந்தல் அலங்காரம் என்பது சிறுமியர்க்கு / பொதுவாகவே பெண்களுக்கு அவர்களது மிகச்சிறு வயது முதலே மிகவும் பிடித்தமான ஒன்றாகும். வளரும் பெண்மகவின் உளவியல்படி காணப்புக்கின், அழகியல் பலவிதங்களில் அவளிடம் இயல்பாகவே இருந்து வெளிப்படுவதனைக் காணலாம். அதனால் இதனையும், பெண்மகவின் கூந்தல் அலங்காரங்களையும் பெண்பால் பிள்ளைத்தமிழின் ஒரு நிகழ்வாகவோ / பருவமாகவோ சேர்த்துக் கொள்ளலாமே!

    பெண்குழந்தைகளானால் பிறந்து சிலமாதங்களிலேயே தாய்மார்கள் அக்குழந்தையின் தலைமயிரை விதம்விதமாக அலங்கரிக்க முற்படுவார்கள். தலைமயிர் சிறிது வளர்ந்ததும் அதனைச் சூழியம் எனப்படும் உச்சிக் கொண்டையாக்கி முடித்து, மலர்களை அதில் செருகி அழகு பார்ப்பார்கள்.

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் இதற்கான கருத்துக்களைக் காணலாம்.

    தவழ்ந்தாடி வரும் சின்னஞ்சிறு மகவுக்குத் தாய் அதன் தலைமயிரை உயர்த்திக் கொண்டையாகக் கட்டியிருக்கிறாள்; அதனைச் ‘சூழியக் கொண்டை’ என்பார்கள். புன்னகையாடக் குழந்தை மீனாட்சி தவழ்ந்தாடி வருகிறாள் என்பார் புலவர்.

               ‘முகமதியூடெழு நகைநிலவாட, முடிச்சூழியமாட……..4.’

    எனத் தவழும் பருவமான ஆறாம் மாதத்திலிருந்து துவங்கி இத்தகைய உச்சிக்கொண்டை அவ்வப்போது தாய்மாரால் பெண்மகவு வளருந்தோறும் முடிக்கப்படும்!

    எட்டு, ஒன்பது, பத்தாம் ஆண்டுகள் பெண்குழந்தை ஊசலாடி மகிழும் பருவம். விதம்விதமாகக் கூந்தல் அலங்காரங்களைச் செய்து அழகு பார்ப்பார்கள் தாய்மார்கள். தன் மகளைச் சிங்காரித்துப் பார்ப்பதில் எந்தத் தாய்க்குத்தான் விருப்பமிருக்காது? வீசியாடும் ஊசலில், பம்பு போன்ற நீண்ட கருத்த பின்னலும் உடனடினால் எந்தத்தாய் தான் பெருமையில் உள்ளம் பூரிக்க மாட்டாள்?

    கீழ்க்காணும் பாடலில் குமரகுருபரர் மீனாட்சியின் நகரமான மதுரையின் பெருமையைக் கூறும் பாடலில் இது பற்றிய நயமான கருத்தைக் காணலாம்.

    பனி துளிக்கும் (பில்கும்- எத்துணை அழகிய சொல்!) குறும்பனிக்காலமான கூதிர்க்காலத்தில் நீராடிய சிறுமிகளின் கூந்தல் ஈரம் புலராது உள்ளது என்று தாய்மார்கள் அச்சிறுமிகள் தம் கூந்தலை ஆற்றுவதற்கு ஏதுவாக, அகில், சாம்பிராணி, ஆகிய புகையை ஊட்டச் செய்வர். ஒரு தூபக்காலில் கனியும் கரிக்கட்டைமீது அகில், சாம்பிராணியைத் தூவிப் புகையெழச் செய்து, அதன்மீது பெரியதொரு கூடையை வைத்து மூடுவர். பின் சிறுமியரைக் கூந்தலை விரித்து அதன்மீது கிடத்துமாறு செய்வர். புகை நன்கு கூந்தலின் உள்ளே ஊடுருவி அதனை உலர்த்தும். இக்கூந்தலில் அவர்கள் எப்போதும் மலர்களைச் சூடுவதால் அதற்காக வண்டுகளும் கூந்தலை மொய்த்தபடி இருக்கும்.

    மேலும் இக்கூந்தலை அவர்கள் முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை எனும் ஐந்து வகையான பகுப்புகளாக, விருப்பத்திற்கேற்ப முடிப்பதனால், கூந்தலே ‘ஐம்பால்’ எனப் பெயரையும் பெற்றது.

             முடி என்பது உச்சியில் முடிக்கப்படும்; இது சூழியம் எனவும் கூறப்படும்.
             கொண்டை பக்கவாட்டில் முடிக்கப்படும்;
             சுருள் என்பது கூந்தல் சுருட்டிச் செருகப்படுவதனைக் குறிக்கும்.
             குழலானது சுருட்டி முடிக்கப்படுதலைக் குறிக்கும்.
             பனிச்சை என்பது பின்னி விடப்படும்.

    இக்காலத்திலும் இவை அனைத்தும் பல மாற்றங்களுடன் வழக்கத்தில் உள்ளன.

                பில்குங்குறும்பனிக்கூதிர்க் குடைந்தெனப்
                       பிரசநாறைம்பாற்கினம்
              பேதையர்கள்ஊட்டும் கொழும்புகை மடுத்துமென்
                       பெடையொடுவரிச்சுரும்பர்
             புல்குந்தடம்பணை உடுத்துமது ரைத்தலைவி
                       பொன்னூசல்ஆடியருளே 5      

    எனும் பொன்னூசற் பருவப்பாடலில் பலவிதமான கூந்தல் அலங்காரங்களும் பேசப்பட்டுள்ளன.

    இவ்வைம்பால் பற்றிய மேலும் பலவகையான குறிப்புகள் திவாகர, பிங்கல நிகண்டுகளிலும், அக, புறநானூற்றிலும், சீவகசிந்தாமணி, நாலாயிர திவ்வியப்பிரபந்தம், திருவாசகம் முதலியவற்றிலும் பரந்து காணப்படுகின்றன.

    இக்கூந்தல் அலங்காரங்கள் பலவிதங்களில் கூந்தலை முடிப்பதுடன் மட்டுமே முழுமை பெறாது. அவற்றில் வாசமிகு வண்ணமலர்களையும் பலவிதமாகத் தொடுத்தும் கட்டியும் அலங்கரிப்பர் பெண்கள். முல்லை, பித்திகம், தாழம்பூ, மருதோன்றிப்பூ, செண்பகப்பூ, ஆகிய வாசமிகு மலர்களாலும், மருக்கொழுந்து, தவனம் ஆகிய நறுமணப் பச்சிலைகள், மேலும் முத்து, மணிகள், பொன்னணிகள் முதலியனவற்றால் முடித்த கூந்தலை அலங்கரிப்பர். அழகான கூந்தலை அழகிய வாசமிகு, பலநிற மலர்கள் அலங்கரிக்க வேண்டாமோ?

                                                   *****

    இனி நாம் மதுரையரசி மீனாட்சியின் அரண்மனைக்குள் சிறிதே சென்று பார்ப்போமா?

    வைகைப்புது நீரிலாடிவிட்டு ஈரக்கூந்தலுடன் மீனாட்சி வந்துள்ளாள். தாதியர் ஓடிச்சென்று பூத்துவாலையால் முடிந்த அவளுடைய கூந்தலை விரித்துத் துவட்டுகின்றனர். கையிலடங்காத கருங்கூந்தல். அதற்குள் தோழியர் அகில், சாம்பிராணி ஆகியவற்றைக் கனலிலிட்டு அதன்மீது ஒரு கூடையைக் கவிழ்த்துவைத்து, மீனாட்சியை அதனருகே அமரவைத்து, அவளுடைய அடர்ந்த கூந்தலை விரித்து அதன்மீது பரப்பி உலர்த்துகின்றனர். அரைநாழிகை கழிந்ததும் ஏறக்குறைய உலர்ந்த கூந்தலை, கூந்தல் அலங்காரம் செய்வதில் வல்லவளான பெண் ஒருத்தி, அழகாகப் ‘பை’ போன்று பின்னி விடுகிறாள். ‘பைப்பின்னல்’ எனும் இவ்வமைப்பில் கூந்தல் உலர வாய்ப்பு அதிகம் உண்டு. இதுவுமன்றி ‘அகத்திக்கட்டு’ என்ற கூந்தல் பின்னலையும் பெண்கள் எண்ணெய் நீராடிய அன்று ஈரம் உலருவதற்காக, பின்னிக்கொள்வார்கள்.

    (மனக்கண்ணில் இக்காட்சியைக் காணும் நாம் மீனாட்சியின் கூந்தலை இவ்வாறெல்லாம் அலங்கரிக்க இவர்கள் பெற்றபேறு என்னே என எண்ணுகிறோம். அம்மை நம்மையும் காத்தருளுக என வேண்டுகிறோம்.)

                                                               –000–

    வைகைப்புதுநீ ராடிவந்த வன்னமயிலுந்தன்
    வளர்தோகை யன்னகருங் கூந்தலினை
    விரித்துப்பு கைகூட்டு மன்னையரும்வரி
    வண்டுகள் மிழற்றுமக் கூந்தற்காட்டினை

    ‘பை’கைகொண் டேகும்வகை முறையால்
    பற்றியெ டுத்தேபுது வகையாமொரு
    பனிச்சைப் பின்னலி டும்தாயரும்
    பவித்திர மானதம்கை யதனாற்செயுஞ்

    செய்கையிது வொன்றினா லன்றோ
    செயற்கரிய பேறுபெற்றுய்ந் தாரம்மே
    செய்வதினியா மொன்றறியோம் சிறியேம்புன்
    செயல்கள் ஏற்றருளிச் சிந்தைகுடியேறி

    பொய்மையற் றபெருவாழ்வும் புண்ணியஞ்சேர்
    பெருந்தனமு முதவியுந்தன் பூவிணைப்
    பங்கயத் திருத்தாளில் பொருந்திவாழக்
    கயற்கண்ணால் கனிந்துநீயு மருளுகவே! (1)6

                                                  *****

    நீராடிய கூந்தலை ஈரம்போக ஆற்றும்பொருட்டுப் பைப்பின்னலிட்டுக் கொண்ட பெண்மகள், சிறிது இளைப்பாறியதும் தோழியருடன் நந்தவனத்திற்குச் சென்று ஊசலாடிக் களிக்கிறாள். வேகமாக வீசியாடும் ஊசற்காற்றில் கூந்தலின் ஈரம் முற்றும் உலர்ந்து விடுகின்றது!

    இப்போது அவளுடைய கூந்தலை அழகாக ஐம்பால் பகுப்புகளும் செய்ய ‘நீ, நான்’ எனப் போட்டியிடும் தோழியரும் செவிலியரும்! ஒருத்தி சிறிது தலைமயிரைக் கையிலெடுத்து நறுநெய் பூசி அதனை அழகாக வளைத்து பக்கவாட்டில் ஒரு சிறுகொண்டையாகப் போடுகிறாள். பளபளக்கும் முத்துக்களாலான சரம் ஒன்றினையும் அதில் சுற்றிவிட்டு அழகு செய்கிறாள்.

    “செங்கமலம், நகரடி! நம்ப மீனம்மாவுக்கு, நாகப்பின்னல் பின்னிவிட என் முறையடி இப்போது,” என்றபடி, இரண்டாகப் பகிர்ந்துகொண்ட கருங்கூந்தலின் ஒரு பகுதியைப் பிடிக்க இயலாமல் பிடித்து, வாச நெய் பூசி, தந்தச் சீப்பால் இழைய வாரி, நான்கு கால்கள் எடுத்து நாகப்பின்னல் பின்னலானாள். அழகான குஞ்சலம் (சடைக்குச்சு, குஞ்சலம் என்றெல்லாம் இதற்குப் பெயர்கள் உண்டு) ஒன்றை கையில் ஏந்தியபடி அவளருகே நின்றிருந்தாள் பொன்னம்மா. என்ன வேலைப்பாடு அதில்! மூன்று கருநிறப் பந்துகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, தங்க முகப்புகள் கொண்ட அவற்றில் ரத்தினங்களும் மரகதங்களும் இழைக்கப்பட்டிருந்தன. பின்னலின் கடைசியில் அதனை வைத்து முடிந்துவிட்டு, முல்லைச்சரத்தைத் தொடுத்துக் கொண்டிருந்த கலைச்செல்வியை அவசரப்படுத்தினாள் பொன்னம்மாள்!

    அதற்குள் செவிலித்தாயான தாயம்மாள், இவர்களைச் சைகையாலேயே நகரச் செய்துவிட்டு, மீதமிருந்த கூந்தலைச் சில சுருள்களாகச் சுருட்டி அழகு படுத்தினாள். வாகாக ஒரு சிறிய கொண்டையையும் சரசரவென்று பின்னலின் உச்சியில் அமைத்தும் விட்டாள். கண்கொள்ளாக் காட்சி!

    தாழம்பூ மடல்களை அழகாக நறுக்கியெடுத்து அப்பின்னலில் வைத்துப் பொருத்தி, இடையிடையே தங்கத்தாலான சம்பக மலர்களையும் நறுமணம் வீசும் உண்மை சம்பக மலர்களையும் பொருத்துகின்றனர். பிறைச்சந்திரன், சூரியன் வடிவங்களிலுள்ள சூரிய, சந்திரப் பிரபைகள் சிறு மயிர்க்கால்களில் பிணைக்கப்பட்டு தலையில் பொருத்தப்பட்டுள்ளன. பின், கொண்டையின் நடுவில், நடனமாடும் ஈசனின் உருவம் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட அழகானதொரு சடைவில்லை அழகுறப் பொலிகிறது.

    மலயத்துவசனின் பாண்டிய குலக்கொழுந்தைக் காண ஆயிரம் கண்கள் போதாது அன்றோ?

    முத்துச்சரங் கொண்டுச்சிக் கொண்டைதனில் முடிவார்
    முன்னைப்பழம் பொருளின் நாயகியாம் உனக்கு!
    முல்லைச்சரங் கொண்டுநாகப் பின்னலில் அணிவார்
    முல்லைச் சிரிப்புடைய மீனாட்சி தனக்கு!            

    கொத்துமலர்க் குழல்சுருட்டி கோதைக்குக் கொண்டையிட
    கொஞ்சிடும் வண்டினமு மருதப்பண் ணிசைக்க
    குச்சிசைத்துப் புனைந்தசடை கெஞ்சுமிடை யிற்றவழ
    கோமளமாய் வனைந்தசம் பகமலரு மணம்பரப்ப
        
    தத்தைக்கிளி யுனக்குத்தா ழம்பூதைத்தி டுவார்பின்
    தலைக்கணி யாய்ச்சந்திர சூரியரையு மணிவிப்பார்
    சடைவில்லை யெனவேயந்தத் தாண்டவமா டிடும்பொற்
    கழலணிவேந் தனினவரத் தினப்பதக்கஞ் சூடிடுவார்

    முத்தைவிளைக் குங்கொற்கைச் சிலாபத்திற் கரசியே
    மாடங்கள் சூழ்மதுரைக் கூடலின் தலைவியே
    மலயத்துவசன் குலக்கொழுந் தேமங்கையருள் ளருமருந்தே
    மாதேவிபர மேசிமகா மேருதனில் உறைதாயே! (2)7

                                                   *****

    கூந்தலை அழகாகப் பின்னி, கொண்டையிட்டுப் பூமுடித்தால் மட்டும் போதுமா? அந்த அழகுக்கு ஈடாக மற்ற அணிகலன்களையும் பூட்டி அழகுபார்க்க வேண்டாமா?

    ஆபரணங்கள் நிறைந்த பெட்டியை எடுத்துவருகிறாள் காஞ்சனமாலை. மகளருகே அமர்ந்து கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து தாயம்மாளிடல் கொடுக்க, அவள் மீனாட்சியின் பஞ்சினும் மென்மையான பாதங்களில் சிறிய மணிகள் குலுங்கும் பாதசரங்களை அணிவிக்கிறாள். காஞ்சனமாலையே தன் செல்லமகளுக்கு நெற்றியில் மணம்நிறைந்த சிவந்த குங்குமத்தையும் பூசி, திருநீற்றுப் பொடியைப் பூசுகிறாள்; அதற்குள் மறந்துபோய்விட்ட சிறு திருகுப்பூக்களைக் கொண்டையில் பொருத்துகிறாள் மேகலை!

    அன்புமகளைப் பார்க்கும் அரசியின் கண்களில் பரவசம் பொங்குகிறது; மனக்கண்ணில் காணும் நமக்கும் களிபொங்குகிறது. நெற்றிச்சுட்டி, காதணிகள் மாட்டி, மீன்களைப் பொரும் கயல்விழிகளுக்கு மைதீட்டி மகிழ்கின்றாள்.

    இத்தகைய அழகுப்பெட்டகமாய்த்திகழும் இச்சிறுபெண் தேவர்களும் வந்து வணங்குபவள்; வேதங்களின் உட்பொருளாய்த் திகழ்பவள்; இவளை என்னசொல்லி வாழ்த்துவது? திருவடியில் வீழ்ந்து வணங்கவே இயலும் அல்லவோ?

                பஞ்சினுமெல் லடிகளுக்கு பாதசர மிழைத்து
                       பசியநெற்றிக் குப்பொடியுங் குங்குமமு மிழைத்து
                 பசுந்தோகை யொக்குங்கருங் கூந்தற்கு நெய்பூசி
                       பாவையுந்தன் பின்னலிலே பதக்கங்கள் தான்வைத்து

              நெஞ்சமெல்லா முனதுதுதி நெகிழ்ந்தோடி யுள்ளிறங்க
                       நேரமெல்லா முனதுவெழில் கண்டுகண் கள்களிக்க
                  நீலநிறக்கல் லிழைத்தநல் நெற்றிச்சுட்டி பூட்டியும்
                       நேரிழையா ளுனக்கான நல்லணிகள் மாட்டியும்
            
             அஞ்சனந்தீட் டியுங்கயல் பொருங்கயல் விழிக்கற்புதமாய்
                       அதிசயமாங் கொண்டை முடிந்ததனில் அணிந்திடவே
                 அரியநவரத் தினதிருகுப்பூ விழைத்துத் தாழைமலர்
                       அமைத்துப்பின் னலில்முல் லைப்பூதைத் துவப்பார்

              விஞ்சையரு வந்துபணி யஞ்சொல்மொழி கிஞ்சுகமே
                       வேதவிழுப் பொருளேயெந் தவப்பயனாய் நிற்பவளே!
              வாழ்வின் ஒளிவிளக்கே! வான்மழையே! வள்ளலே!
                       வாழ்த்தவ கையுண்டோ வணங்கிடுமுன் பொன்னடியை! (3)8

                                                   ****

    பார்வை நூல்கள்:

    1. வீரை கவிராஜ பண்டிதர்- சவுந்தரிய லகரி- பாடல் 42.

    2. இறையனார் குறுந்தொகை 2 -ஆம் பாடல்.

    3. இளங்கோவடிகள்- சிலப்பதிகாரம்.

    4, 5. குமரகுருபரர்- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

    6, 7, 8. மீனாட்சி பாலகணேஷ்- மீனாட்சியம்மையின் கூந்தல் அலங்காரம் பற்றிய பாடல்கள்.

       (புதிய பருவங்கள் தொடரும்)

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 2

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 2

    மீனாட்சி பாலகணேஷ்

    வளையல் அணிதல்

       (பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்குழந்தைகளின் வளர்ச்சியில் நாம் கண்டு ரசிக்கப்போகும் அடுத்த நிகழ்வு கைநிறைய விதம்விதமாக வளையல்களை அணிந்துகொண்டு மகிழும் பருவத்திலிருக்கும் ஐந்து முதல் பத்து வயதினரான சின்னஞ்சிறு பெண்குழந்தைகளைத்தான். வளையல்கள் பெண்களின் அழகு சாதனங்கள். மங்கலச்சின்னங்கள். கலகலவென ஆர்க்கும் பலநிறங்களிலான கண்ணாடிவளை முதல் இரத்தினம், முத்து, மரகதம் என நவரத்தினங்களையும் வைத்திழைத்த பொன்வளைகளும் கங்கணங்களும் கூடப் பெண்களின் விருப்பத்திற்கானவைதாம்!

    பண்டிகை நாட்களாகட்டும், ஊர்க்கோவிலில் திருவிழாவாகட்டும், பிறந்தநாள் ஆகட்டும்; புதுவளைகள் அணிவதில் பெண்களுக்குண்டான ஆசை அளவிட முடியாதது. இதற்குச் சின்னஞ்சிறுமிகளும் விலக்கில்லை.

    60-70 ஆண்டுகள் முன்புவரைகூட வளைவியாபாரி ஒருவர் முதுகில் பத்திரமாகக் கட்டித்தூக்கிய வளையல் மூட்டையுடன் கிராமத்துத் தெருவிலோ, அல்லது நகரத்துத் தெருக்களிலோ ‘வளையல் வாங்கலையோ வளையல்!’ எனக்கூவியபடி செல்வதுண்டு. அல்லது ஓர் அம்மாள் கூடையில் கண்ணாடி வளையல்களை அழகாகப் பாங்காக அடுக்கிவைத்துக்கொண்டு, “வளேல், வளேல், வளேல,” என்று கூவியவண்ணம் தெருத்தெருவாகச் சென்று விற்பாள். ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையில் தனது மூட்டையை இறக்கிவைத்து, மேற்துண்டால் வியர்வையைத் துடைத்தபடி, வெற்றிலைச்சாற்றை ஒருபுறம் உமிழும் வளையல் வியாபாரி, அந்த வீட்டுக் குழந்தையிடம், “பாப்பா, குடிக்கத் தண்ணீர் கொடேன்,” என்பார். பல நேரங்களில் பாப்பா செம்பில் கொணரும் நீரைத் தொடர்ந்து அந்த வீட்டம்மாளும் இன்னொரு ஏனத்தில் கடுகும் கருவேப்பிலையும் தாளித்துப் பெருங்காயமும் உப்பும் கலந்த சுவையான மோரைக் கொண்டு வந்து கொடுப்பாள். தாகத்தோடு நடந்து வந்திருக்கும் வளையல் வியாபாரி ஆவலோடு அதைப் பருகிமுடித்தபின், “புதுப்புது நிறங்களில் பச்சைவளை, பட்டுவளை, தங்கநிறவளை கொண்டு வந்திருக்கேன், பார்க்கிறீகளா?” எனத் தாமே முதுகில் சுமந்துவந்த துப்பட்டியை விரித்து வளையல் மூட்டையை அவிழ்ப்பார்.

    இதற்குள் தெருவில் உள்ள வீடுகள் அனைத்திலிருந்தும் பெண்கள், பெரியவர்களும், இளம்பெண்களும், சிறுமிகளும், குழந்தைகளுமாகக் கூடிவிட்டிருப்பார்கள். வியாபாரியும் அகலமான பெரிய திண்ணையில்தான் தமது மூட்டையை இறக்கியிருப்பார். அத்தனை வளையல்களையும் புதுப்புது நிறங்களையும் கண்ட பெண்கள், வளையல்கள் போலவே கலகலப்பார்கள். அக்காள்மார், அன்னையர், அத்தை, பாட்டிகளின் உற்சாகம் சின்னஞ்சிறு சிறுமிகளையும் தொற்றிக் கொள்ளாதா என்ன? தமது குட்டிக்கைகளை நீட்டியவண்ணம், “தாத்தா, மாமா,” என உறவுகொண்டாடியபடி வளையல் அணிவிக்க சின்னஞ்சிறுமிகள் முந்துவார்கள். வியாபாரியும், பொறுமையாக, சாமர்த்தியமாக அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம் குறும்பாக, வேடிக்கையாக, எதார்த்தமாகப் பாட்டுக்களைப் பாடியபடி, வளையல்களை எடுத்துக் காட்டிக்கொண்டே, அவரவர் கைகளில் அழகுற அணிவித்து விடுவார். ஓரிரு வளைகள் உடைந்து விடும், அவற்றை ஓரமாகப் போட்டு விடுவார்.

    சிறுமிகளுக்கு முதலில் அணிவித்து, அவர்கள் முகங்களைப் புன்னகையில் மலரச் செய்துவிட்டு, இளம் பெண்களுக்கும், அன்னையர்க்கும் கூட அணிவித்து விடுவார்.

    வளையல் வியாபாரியின் வரவை எதிர்நோக்கி வீடுகளில் தாலாட்டுகள் பாட்டிமார்களால் பாடப்பட்டன!

    வாரும் வளைச்செட்டியாரே! வந்திறங்கும் திண்ணையிலே!
    கொச்சிட்ட திண்ணையிலே! கோலமிட்ட வாசலிலே!
    (கொச்சிட்ட- அழகான)
    அகலமுள்ள திண்ணையிலே நீளமுள்ள வாசலிலே
    கம்பளியைப் போட்டு கனத்த சுமை இறக்கும்!
    துப்பட்டியைப்போட்டு தங்கவளைத் தூக்கு இறக்கும்!

    கறுப்புவளை உண்டாமோ காவலனார் கண்மணிக்கு?
    சிகப்புவளை உண்டாமோ சுந்தரனார் பெண்மணிக்கு?
    பச்சைவளை உண்டாமோ பாண்டியனார் பேத்தியர்க்கு?
    நீலவளை உண்டாமோ நிமலனார் செல்வியர்க்கு?

    பொட்டுமிட்டு மையுமிட்டு பொற்கொடிக்குப் பூச்சூட்டி
    பக்கத்தே கன்னத்தில் திருஷ்டிப்பொட்டு வையுங்கள்!1

    இவ்வாறு வளையல்கள் இன்றுவரை அனைவர் உள்ளங்களிலும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் விளைவிக்கும் ஒரு பொருளாக உள்ளது. வெளியூர் சென்றுவரும் தந்தைமார் தமது அருமைப் பெண்குழந்தைகளுக்கு அவரவர்கள் வசதிக்கேற்ப வளையல்களை வாங்கிவந்து பரிசாகக் கொடுத்தனர்.

    பிறந்து சில மாதங்களே ஆன சிறு குழந்தைக்கும் கையில் கருநிற வளைகளைப் போட்டு வைப்பார்கள்- காற்று, கறுப்பு அண்டாதிருக்க இவையே காப்பாகும்.

    அடடே! இன்று சாமிநாத மாமா வீட்டில் அவர் மகள் காமாட்சிக்கு வளைகாப்பாயிற்றே! வளையல் வியாபாரி முருகப்பனுக்குக் கொண்டாட்டம்தான்! காமாட்சிக்கு வளையடுக்கும் சாக்கில் ஊரே வளைகளணிந்து மகிழும். அதோ! கேட்கிறதா அவர் பாடிக்கொண்டே சிரித்த முகத்துடன் பச்சையும் சிகப்புமாகக் கண்ணாடி வளையல்களை காமாட்சியின் கரங்களில் அடுக்குவதை!

    ‘வளை குலுங்கினாற்போல மழலைமொழி பேசும்
    கிளை பெருகி வாழவே வளை சூட்டுகின்றோம்.’2

    இவ்வாறெல்லாம் பெருமைமிகுந்த வளையலுக்கு இலக்கியத்தில் இல்லாத இடமும் உண்டோ?

    சிவபெருமானே வளையல் வியாபாரியாகி மதுரைவீதிகளில் வளையல் விற்றதனைத் திருவிளையாடல் புராணம் பாடிப் பெருமிதமடைகின்றதே! கதையை நினைவு கூர்வோமா?

    தாருகாவனத்து முனிவர்களுக்குத் தாங்களே அனைவரிலும் உயர்ந்தவர்கள் எனும் செருக்கு மிகுந்தது. அவர்களது அகந்தையை அழிக்கத் திருவுள்ளம் கொண்ட சிவபிரான் பிட்சாடனர் கோலம் கொண்டார். பிச்சை எடுக்க வந்த பேரருளாளனின் அழகில் மயங்கிய முனிவர்களின் பத்தினியர் அவர்பின் செல்லத் தலைப்பட்டனர். கைவளைகளும் மேகலையும் கழல, ஆடை கலைய பிட்சாடனருடன் சல்லாபிக்க முயன்றனர். அவரும் அங்கிருந்து மறைந்துவிட்டார். பத்தினியர் தம் நிலையிழந்ததனை அறிந்த முனிவர்கள் அவர்களை மதுரை நகரில் அழகான வணிகமகளிராய்ப் பிறக்கவும், சாபவிமோசனமாக, சோமசுந்தரக்கடவுள் அவர்களைத் தீண்டும்போது சாபம் விலகும் எனவும் கூறினர்.

    அவ்வாறே அப்பெண்கள் மதுரையில் வணிகமகளிராகப் பிறந்து அழகுற வளர்ந்து பருவமடைந்தனர்.

    அந்த மாட மதுரைநகர்க் கரசா கியசுந் தரக்கடவுள்
    வந்து நும்மைக் கைதீண்டும் வழியிச் சாபங் கழியுமெனச்
    சிந்தை தளர்ந்த பன்னியருந் தென்னர் மதுரைத் தொன்னகரிற்
    கந்த முல்லைத் தார்வணிகர் காதன் மகளி ராய்ப்பிறந்தார்.3

    அப்போது சிவபிரான் வளையல் வியாபாரியாக அழகுக்கோலத்துடன் வளைகள் விற்றவண்ணம் தெருக்களில் சென்றார். மறைப்பொருளை உரைசெய்த மணிவாயைத் திறந்து, “வளை வாங்குவீர்,” என்று கூறியவரிடம் வணிகர்குல மகளிர் வளை வாங்கச் சென்றனர்.

    மன்னு மறையின் பொருள் உரைத்த மணிவாய் திறந்து வளை கொண்மின்
    என்னும் அளவில் பருவ முகில் இமிழ் இன்னிசை  கேட்டு எழில் மயில்போல்
    துன்னு மணி மேகலை மிழற்றத் தூய வணிகர் குல மகளிர்
    மின்னு மணி மாளிகை நின்றும் வீதி வாயில் புறப்பட்டார்4                                                

    ‘எமக்கு வளை அணிவிப்பீர்,’ எனவும், ‘இது பெரிதாக உள்ளது; சிறியவளை அணிவியும்,’ என்றும், அணிவித்த வளைகளைப் புறம்சென்று உடைத்தெறிந்துவிட்டு வந்து பின்னும் வளை அணிவிக்க வேண்டியும், ஆசையாகக் கைகளை நீட்டி அவர்தொட்டு வளை அணிவிக்க மகிழ்ந்தும், ‘நாளையும் வந்து வளை அணிவிப்பீர்,’ என வேண்டியும் பலவாறாக அவ்வணிக மகளிர் உவகைப்பெருக்கில் வளையல் வியாபாரியிடம் பேசி மகிழ்ந்தனர்.

    பின் நடப்பனவற்றைத் திருவிளையாடற் புராணத்தில் காணவும். அவ்வணிக மகளிர் அனைவரும் ஐயன் கையால் வளையணிவிக்கத் தொடப்பட்டதால் முத்தி அடைந்தனர்.

    பழங்காலத்தில் ஆடவர்கள் மகளிரின் கையைத் தொடுவது குற்றமெனச் சமுதாயம் கருதியது. ஆனால் வளைச்செட்டி பெண்ணின் கையைத் தீண்டுவது குற்றமாகாது. வளையலை வளையல் செட்டி அணிவிக்க, அணிய வேண்டுமென்ற சமுதாய விதியும் ஒருகாலத்தில் வழக்கிலிருந்தது!

    வள்ளிமீது மையல்கொண்ட முருகன் வள்ளியின் கரத்தைத் தீண்டி இன்பமுற நினைத்தான். அதற்கு வழி யாது? வளையல் செட்டி வேடம் கொண்டான்.

    செட்டி வடிவுடன் வள்ளியிடம் சென்றதைத் திருத்தணிகையுலா,

    ‘…………………………பட்டி வள்ளி
    கைவளைய லேற்றி – காலில் வளைந்தேற்றி,
    மைவளையு நெஞ்ச மய லேற்றி- வெய்ய
    இருட்டுவிடி யாமுன் இனத்தவர்கா ணாமல்
    திருட்டுவியா பாரஞ்செய் செட்டி,’5 எனப்பாடுகின்றது.

    முருகன் வள்ளியிடம் நெருங்கச் செட்டி வேடங் கொண்டதை அருணகிரியார்,

    ‘சித்திரப் பொற்குறப் பாவைபக் கம்புணர செட்டியென்
    றெத்திவந் தாடிநிர்த் தங்கள்புரி சிற்சிதம் பொற்புயஞ்
    சேரமுற் றும்புணரு மெங்கள் கோவே’6 எனப்பாடுகின்றார்.

    (சிற்சிதம் – ஞானம்; வள்ளி ஞானத்தவள்)

    மற்றொரு திருப்புகழ்,

    ‘செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்
    கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட 
    சித்த முங்குளிர நாதி வண்பொருளை நவில்வோனே’7

    (இத்திருப்புகழ் திருவிளையாடல் புராணச் செய்தியைக் கொண்டது. செட்டி வடிவெடுத்துத் தேவி சிவகாமி (சிவகாமி – தடாதகைப் பிராட்டி) அரசாட்சி செய்த மதுரையில் செவ்விய கையில் வளையல் கட்டுக்களை விலைகூறி விற்ற எந்தை சிவபிரானுடைய உள்ளம் குளிர மூலப்பொருளை உபதேசித்தவனே!)

    இக்கதைகள் வளையலின் பெருமையையும் அதுசார்ந்த அரிய திருவிளையாடல்களையும் உணர்த்தியதனால் இங்கு பகரப்பட்டன.
    ___________________________

    இனி பிள்ளைத்தமிழுக்கு வருவோமா?

    அரசிளங்குமரி சின்னஞ்சிறுமி தடாதகைக்குக் கைநிறையக் கலகலக்கும் சிவப்பு, பச்சை, மஞ்சள்நிறக் கண்ணாடிவளைகளை அணிந்துகொள்ள ஆசை! வளையல் வியாபாரி மூட்டையை அவளுக்காகவே எடுத்து வருவார். ஆறுவயதுச் சிறுமி மீனாட்சியின் கையிலும் அத்தனை தோழிமார் கையிலும், ஏன் அரண்மனையில் உள்ள பெண்டிர் அனைவரின் கையிலும் அவளுடைய ஆசைப்படி அழகழகான வளைகள் ஒலித்துக் கேட்போரை மகிழ்விக்கும். இன்றும் வளையல் வியாபாரி வருகிறார். தோழியர் அவரை அன்போடு அழைத்துப் பாயில் அமரக்கூறி, மீனாட்சிக்கு வளைகள் அணிவிக்க வேண்டுகின்றனர்.

    முக்குறுணிப் பிள்ளையவனை உச்சிமோந்து முத்தமிடும்
    மீனாளின் கையிலணி முத்து வளையல்!
    நெக்குருகிப் பாடிய குருபரர்க்கு நெகிழ்ந்துருகி
    பரிசிலளி பாண்டிய அரசிகை வளையல்!
    அக்குரோணி சேனைகொண்டு அண்ணலொடு போர்தொடுத்த
    அம்மையவள் கைகுலுங்கு மிரத்தின வளையல்!
    பக்குவமாய் வந்துநீரும் பாயதனை விரித்தமர்ந்து
    பாங்கான கைகளுக்குப் பல்வளைகள் சூட்டிடுவீர்!         (1)

                (இது தோழியர் வளையல் வியாபாரியை நோக்கிப் பாடியது!)

    வளையல் வியாபாரியும் அமர்ந்துகொண்டு பட்டுக்கயிற்றில் முடிந்து கொண்டு வந்திருக்கும் கட்டுக்கட்டான வளைகளை அவிழ்த்து மீனாட்சியின் கரத்திற்குப் பொருத்தமானவையும் தங்கநிறத்தில் வேலைப்பாடுகள் செய்யப்பெற்றுள்ளதுமான சிவப்பு, பச்சைநிற வளையல்களைப் பொருத்தமாக அவள் கரங்களில் அணிவித்தவர் அக்கரங்களின் அழகைக் கண்டு தாமும் கவிஞராகவே மாறிப் பாடுகிறார்!

    பந்தும் கழங்குமாடும் பைந்தளிர்க் கரத்தினிற்கு
    பச்சைவண்ணப் பட்டுவளையல்!
    சிந்துர வண்ணக்கைக்கு மின்னும் சிகப்புவளையல்!
    சுடர்மஞ்சள் சொர்ணவளையல்!
    அந்தமில் ஆலவாய் அழகன் பற்றுங்கைக்கு
    ஆடகப்பொன் ஐம்பொன்வளையல்!
    சுந்தரியே நிரந்தரியே எம்மையாள் தடாதகையே
    சூடிடுவாய்நீ அழகுவளையல்!                    (2)

    (தோழியரும் வளையணிவிக்கும் வியாபாரியும் சேர்ந்து பாடும் பாடல்)

    இப்பருவத்தைப் பாடல்களாக்க வேண்டும் என்ற அவாவில் எழுந்த இம்மூன்று பாடல்களையும் அவள் கரங்களையே திருவடிகளாகக் கருதி, பாடல்களை வளையல்களாக்கி அணிவிக்கிறேன்.

                சின்னஞ்சிறு சிவந்தகைகள், சொக்கனுக்கு மணமாலை
                       சூட்டிய செந்தளிர்க் கைகளுக்கு
             கன்னங்கரிய கருகுமணி வளைபொற் கங்கணமும்
                       கருத்துடன் அணிவித்துக் களித்த
             அன்னைகாஞ் சனமாலை பெற்றபேறு பெரிதன்றோ?
                       அங்கயற்கண் இன்னமுதே! ஆருயிரே!
             சொன்னவிப் புன்சொல்லால் செவ்வியவுன் புகழ்மாலை
                       சூட்டிடவே வளையல் சூட்டிடுவேன்!

    (என் புன்மொழிகளையும் வளைகளாக்கி அவள் கரங்களைப் பாதங்களாய்க் கருதிச் சூட்டியது)            

    (புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)

    பார்வை நூல்கள்:

    1, 2. சம்பிரதாயப் பாடல்கள்.
    3, 4. பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம், வளையல் விற்ற படலம்.
    5. கந்தப்பையர், திருத்தணிகை உலா.
    6, 7. அருணகிரிநாதர்- திருப்புகழ்


    திருத்தணிகையுலாவில் முருகன் வளையல்செட்டி வடிவில் சென்ற செய்தியையும் திருப்புகழில் முருகன், சிவபிரான் ஆகியோர் செட்டிவடிவங்கொண்ட செய்திகளையும்  மதிப்பிற்குரிய எனது பேராசிரியர், முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் அளித்து இக்கட்டுரைக்கு மேலும் சுவை சேர்த்ததனை இங்கு நன்றியுடன் பதிவிட விரும்புகிறேன்.

    சித்திரம் வரைந்தவர் எனது நண்பர் திருமதி உபாஸனா கோவிந்தராஜன். இவர் அமெரிக்காவாழ் சென்னைவாசி. சிலகாலம் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்தார். பின் சித்திரம் வரையும் கலையில் தேர்ச்சி பெற்றார். இந்தியப் புராணங்கள், கதைகள் இவற்றை விளக்கும் சித்திரங்களை வரைவதில் ஆர்வம் உள்ளவர்.

    இந்தக் கட்டுரைக்காகப் பிரத்தியேகமாக, சிறுமி மீனாட்சி ஆசையாக வளைகள் அணிந்துகொள்வதனை அன்னை காஞ்சனமாலை கண்டு களிப்பதனை வரைந்து கொடுத்துள்ளார்.


     

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 1

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 1

    மீனாட்சி பாலகணேஷ்

    1. கோலம் வரையும் பருவம்

      (பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    அனைத்துக் குழந்தைகளின் வளர்ச்சியிலும் அழகான சுவையான பல பருவங்களும், நிகழ்வுகளும் உண்டு. இந்தத் தொடரில் என் கருத்தில் தோன்றிய, பாடல் பெறாத ஒருசில பருவங்களை நாம் காணப்போகிறோம். பெரிதளவில் பிள்ளைத்தமிழ் நூல்களை பெண்பாற் புலவர்கள் பாடாமையாலோ என்னவோ, சில அழகான குழந்தைப்பருவத்து நிகழ்வுகள் பாடல்பெறாமலே போய்விட்டன. பெண்பாற் புலவர்களால் பாடப்பட்ட ஓரிரு பிள்ளைத்தமிழ் நூல்களும் இன்றுவரை தேடியும் என் கைக்குக் கிட்டவில்லை.

    பெண்களுக்கும் ஆடவருக்கும் குழந்தையின் ஒரு செயலைக் காணும்போழ்தில் தோன்றும் கற்பனைகள் வேறுபடும் அல்லவா? மேலும் தாய்மாரே குழந்தையுடன் பெரும்பொழுதுகளைக் கழிப்பதனால், அவர்கள் தத்தம் குழந்தைகளுடன் செய்து மகிழும் செயல்களும் பாடப்பட வேண்டும் அல்லவா?

    ஆகவே இவற்றைப் பதிவுசெய்யலாம் எனும் ஆர்வத்தினால் எழுந்த கட்டுரைகள் இவை. இக்கட்டுரையைப் பேராசிரியர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்) அவர்களுக்கு அனுப்பிவைத்து, அவர் பார்த்தபின்பே பதிப்பிற்கு அனுப்புகிறேன். பேராசிரியர் ஐயா, இனி இப்பருவங்களையும் பிள்ளைத்தமிழ் பாடுவோர் தமது நூல்களில் சேர்த்துப் பாடப் பரிந்துரைக்கலாம் எனத் தமது கருத்தைக் கூறியுள்ளார்.

                                                   —————————————

    ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில், ‘தையொரு திங்களும்,’ எனத்துவங்கும் பாசுரத்தொகுப்பில் கோலம் வரைவதனைப் பற்றிக் கூறுகிறாள்.

    தை மாதம் முழுவதும் (எல்லா நாட்களிலும்) கண்ணபிரான் வரும் இடம் முழுவதிலும், தரையைத் தூய்மை செய்து, அலங்கரித்து, அழகாக உள்ள மண்டலவடிவில் (வட்டவடிவில்) கோலம் இட்டு, அவன் வரும்வழியினை அழகுபடுத்தி வைத்தேன்,’ என்கிறாள். ‘கண்ணனோடு என்னைச் சேர்த்துவை,’ என அனங்கனான காமவேளையும் அவன் தம்பியையும் வேண்டுவன இப்பாடல்கள்.

    ‘தையொரு திங்களும் தரைவிளக்கித்
             தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
    ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
             …………………………………..‘ என்பது பாடல்.

    —————————-&————————-

    இனி, பிள்ளைத்தமிழில் எவ்வாறு இப்பாடல்களை அமைக்கலாம் எனக் காணலாம்.

    அதிகாலை நேரத்தில் வீட்டின்முன் பசுஞ்சாண நீர்தெளித்துக் கூட்டி, கோலமாவினால் அழகான கோலங்களை வரைந்து வைப்பது நம் மிகப்பழைய வழக்கம். பெண்குழந்தைகள் அரிசிமாவையோ அல்லது வெண்கற்களையும் நுண்ணிய வெண்மணலையும் பொடித்து, இடித்துச் சலித்துச் செய்த கோலப்பொடியையோ கொண்டு சாணநீரால் தெளித்துக் கூட்டிய வீட்டு முன்வாசலில் கோலமிடுவதில் ஐந்தாறு வயது முதலே ஆர்வம் காட்டுவார்கள்.

    அவ்வாறு இச்சிறுபெண், பத்துவயதுப் பைங்கிளி, வட்டிலில் கோலமாவை எடுத்துவந்து அன்னை அருகிருக்கப் பிஞ்சுவிரல்களால் மாவினை எடுத்து முதலில் புள்ளிகளை வைக்கின்றாள். தாய் அவள் வயதுக்கேற்ற  சிறிய கோலங்களைக் கற்றுக் கொடுத்துள்ளாள். இவளோ தாயும் அறியாமல் பாட்டியிடமும் மற்றவர்களிடமும் தன் திறமைக்கும் மிஞ்சிய பெரிய கோலங்களை வரையக் கற்றுக் கொண்டுள்ளாள்.

    அதுவும் மகளிர் விரும்பும் மார்கழிமாதம் வந்துவிட்டால் போதும்! எங்கு நோக்கினும் தெருவெங்கும் கோலங்கள்! விதவிதமான கற்பனைகள்! ஓரிடத்தில் ஒரு மங்கை அவளுடைய இல்லத்தின் முன்பு நீராழி மண்டபம் கோலம் வரைகின்றாள். புள்ளிகளைக் கணக்கிட்டு வைத்து, இரு விரல்களிடையே அள்ளிய வெண்மையான கோலமாவை அழகான இழைகளாக்கி அப்புள்ளிகளை இணைத்தும் வளைத்தும் அவளிடும் கோலம் கண்ணுக்கு விருந்தாகிறது.

    ‘எதற்காக இன்று இவ்வளவு பெரிய கோலம்? மார்கழிமாதம் கூட இல்லையே!’ எனப் பெண்டிர் வியக்கின்றனர். அவள் இழைக்கும், வரையும் கோலத்தின் அழகைக் காண பெரியவர்களும் சிறுவர்களுமாக பெண்கள் கூட்டம். அவள் கோலம்வரையும் நளினமான அழகைக்காணப் பல பாட்டிமார்கள்! சாட்டைபோலவந்து முன்னே விழும் அழகான கருநாகம்போலும் பின்னல். அதனை பின்னால் தள்ளிக் கொண்டபடியே மும்முரமாகக் குனிந்து புள்ளிவைப்பதிலும் கோலத்தில் இழைகளைச் சேர்ப்பதிலும் முனைந்திருக்கிறாள்.

    “மங்கையை உள்ளே அழைத்துக்கொண்டுபோய் சுற்றிப்போடடி அம்மா!” என ஒரு முதியவள் ‘அறம்வளர்க்கும் மங்கை’ எனப்பெயர் கொண்ட அப்பெண்ணின் தாயிடம் கரிசனத்துடன் கூறுகிறாள். அவளருகேயும் வந்து, “மங்கை, இங்குவா,”என அவளை அழைத்த பக்கத்து வீட்டம்மாள், உரிமையோடு அவளுடைய நீண்ட பின்னலைப் பிடித்துச் சுற்றிச் சுருட்டி ஒரு கொண்டையாக்கி விடுகிறாள். அவளைப் பார்த்துக் கன்னங்குழியப் புன்னகைக்கும் மங்கையை ஆசைதீரக் கன்னத்தை வழித்து திருஷ்டி எடுத்து, விரல்களைச் சொடுக்கிக் கொள்கிறாள். அறம்வளர்க்கும்மங்கை ஊரில் எல்லாருக்கும் செல்லப்பெண்!

    இன்று பஞ்சநதீஸ்வரர் எனும் ஐயாறப்பர் திருவீதி ஊர்வலம் வரப்போகிறாராம். கோவிலும் அதனைச் சூழ்ந்த தெருக்களும் அமளிதுமளிப்படுகின்றன. தெருக்களில் நீர் தெளிக்கப்பட்டு, கோலங்களிழைக்கப்படுகின்றன. மங்கையின் அண்ணன் மணிவண்ணனும் அவர்கள் இல்லத்தின் முன்பு அழகான தோரணங்களைக் கட்டிவைத்துள்ளான். ஐயாறப்பர் வலம்வரும் பிரதான வீதியிலன்றோ அவர்கள் இல்லம் அமைந்துள்ளது!

    கோலமிழைக்கும் இப்பெண் யார்? அந்த அறம்வளர்த்த நாயகியே சிறுபெண்ணாக வந்துதித்தாளோ?கண்டு மயங்குகிறோம்!

    விநாயகப்பெருமான், மயிலேறி உலவும் முருகன், ஆலமரத்தடி அமர்ந்து மௌனகுருவாகி உபதேசிக்கும் அண்ணல் சிவபிரான், மாலவனாம் மாயவனாகிய திருமால் அனைவரும் மனம் மகிழும் மங்கை இந்த அறம்வளர்க்கும் நங்கை.

    அத்தன் சிவபிரானளித்த இருநாழி நெல்லினைக்கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் சலியாது செய்து உலக மக்களைப் புரப்பவள் அறம்வளர்த்த நாயகி அம்மை!

    நாதசுரம் எனும் மங்கள வாத்தியத்தினின்று எழும் இன்னிசையுடனும், பின்னால் மறையோதும் அந்தணர்கள் வேதவொலி முழக்கி வர, வீதித் திருவுலா வருகின்ற ஐயாறப்பனின் வரவுக்காக, அனைவரும்  தத்தம் மனைகள்முன்பு, நீர்தெளித்து, அழகான பெரிய  கோலங்களை வரைந்து அவன் வருகையை ஆவலாக எதிர்நோக்கியுள்ளனர்.

    சிறுபெண்ணான அன்னையே! அவனை வரவேற்க நீயும் அழகழகான கோலங்களை இழைத்தருளுக.

    குறும்பும் உற்சாகமும், மகிழ்வும் மலர்ச்சியும், அழகும் நளினமும் கூத்தாடும் இளம்சிறுமியான அன்னையே! அறம்வளர்க்கும் நாயகியே! எம்மை ஆண்டருள்கவே!

    இதோ எமது எளிய காணிக்கை உன் திருவடிகளுக்குத் தாயே!

    ஞாலமுதல் வனாவேழமுகத் தனுநீல மயிலேறி
    உலவும் சமர்த்தனு
    மாலமரத்தடி யில்நாளும மர்ந்து அருள்மழை
    வழங்கிடு மண்ணலு
    மாலவன் மாயவனு முளமகிழு மங்கையே
    அறம்வளர்க்கு நாயகியே!
    கோலமயில் நீயுந் தோழியருட னிணைந்து
    கோலம்வரைந் திடுவாயே! (1)

    நாழியிரண்டு நெல்லளித்து நல்லறம்நீ
    ஆற்றுகென நாதன்பணித்திட
    ஆழிசூழகில மெலாந்தாவி யணைத்தரு
    ளுந்தேவியான வாதிசத்திதாயும்நீ
    வாழிவளமுட னெண்னான்கு அறமியற்றி
    வழுவாதுவர மருளுந்தேவி
    கோழிகூவுங் காலைப்போதில் கன்னியருடன்
    கூடிக்கோலமி ழைத்திடுவாயே! (2)

    நாதசுர முழங்க கீதவொலி யெழும்ப
    வேதமறை யொலிக்கவுன்       
    நாதனை யாறப்பன் வீதிவல(ம்) வருங்கால்
    காதலுடன் காந்தள்       
    போதனைய கையால் கோலப்பொ டியதனை
    யள்ளிப்புள்ளி களிட்டு
    மாதரசே! மனமிக மகிழ்ந்து மாடக்குள
    சித்திரமாம் கோலமிடுவாயே! (3)

    (இவை திருஐயாறு அறம்வளர்த்த நாயகி மீது இயற்றப்பட்ட பாடல்கள்)

    சித்திரம் வரைந்தது: டாக்டர் சுப்பையா புகழேந்தி.

    (புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 24

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 24

    மீனாட்சி பாலகணேஷ்

    (பந்தாடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்குழந்தைகளின் விளையாட்டுகளென இன்னும் பல உள்ளன. பிள்ளைத்தமிழ் நூல்கள் விரித்துரைப்பதென்பன சிலவே! அவற்றுள் கடைசியாக நாம் காணப்போவது பந்தாடல் பருவம்.

    பத்துப்பருவங்களுக்குள் பிள்ளைப்பருவ நிகழ்வுகளைப் பாடும் வழக்கினின்று வழுவாது பாடவேண்டி, அனைத்து விளையாட்டுகளையும் ஒரு பாடலிலேயே அம்மானைப் பருவத்தில் கூறிவிடுவதும் உண்டு! பக்தி, கலைநயம், கற்பனை அனைத்தும் கலந்தோடும் பிள்ளைத்தமிழ்ப் பருவப் பாடல்கள் இலக்கியச்சுவையிலும் மிகச் சிறந்தவையாகும்.

    பாடல்களைக் காணுமுன் பந்தாடுதல் பற்றிய மற்ற இலக்கியக் குறிப்புகளைக் கண்டு மகிழலாமே!

    பந்தாடுவது பெண்களுக்கு ஒரு இன்பமான பொழுதுபோக்கு; அருமையான விளையாட்டு! சங்ககாலத்திலிருந்தே  ‘பந்தாடுதல்’ பெண்களுடன் மட்டுமே இணைத்துப் பேசப்பட்டு வந்துள்ளது.

    மதுரை மாநகரின் கோட்டைவாயிலில் மன்னர்கள் பெண்கள் விளையாடும் பந்தையும் பாவையையும் கட்டித் தொங்கும்படிச் செய்திருந்தார்களாம். இதன்பொருள், ‘எம்மை வெல்லும் ஆண்மையாளர் எவரும் இல்லை! பகைவர்களை நாங்கள் பந்தும் பாவையும் விளையாடும் பெண்களைப் போன்று எண்ணுகிறோம். வீரம் மிகுந்தோர் யாராவது இருந்தால் இவற்றை வந்து அறுக்கலாம்,’ என்பதாகும் என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது!

                ‘வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
             பொருநர்த் தோய்த்த போரருவாயில்1 என்பன பாடல் வரிகள்.

    நெட்டி, பஞ்சு, பட்டுநூல், மயில்பீலி, மயிர் இவற்றால் பின்னி பந்துகளைச்செய்து சோலைகளிலும் மாடங்களிலும் விளையாடிக் களித்தனர். இவர்கள் விரைந்து பந்துவிளையாடும்போது குதிரையின் குளம்படிச் சத்தம்போல ஒலியெழுந்ததாம்; சிலம்பும் மேகலையும் கைவளைகளும் ஒலிக்கப் பெண்கள் பந்தாடினார்களாம்! எத்துணை பாடல்கள்! வருணனைகள் – சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும்!

    சீவகசிந்தாமணியின் விமலையார் இலம்பகப்பாடல் ஒன்று பந்தடிக்கும் லயத்துடன் ஒத்திருப்பதைப் படித்து ரசிக்கலாமா?

    இராசமாபுரத்து வீதிகளின் அழகைக்காணச் சீவகன் சென்று கொண்டிருக்கிறான்; விமலை எனும் அழகியபெண் பந்தாடிக்கொண்டிருந்தாள். அவள் எவ்வாறு பந்தடித்து விளையாடினாள் எனச் சீவக சிந்தாமணி விளக்கும் விளையாட்டின் வழிமுறைகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன!

    விமலை தனது உள்ளங்கையில் பொருந்தும்படி ஐந்து பந்துகளை வைத்துக்கொண்டு மேலே வீசியாடுகிறாள். ஒரு மலர்மாலையைச் சுற்றிமொய்க்கும் வண்டுகளைப்போல் அவை அவளைச்சுற்றிக் கீழேவந்து உடனே அவள் கைகளால் அடிக்கப்பட்டு மேலெழும்பிச் செல்லுகின்றனவாம். திரும்பக் கீழே விழுவதில்லை! பந்துகளின் போக்கையே பார்த்துக் கொண்டிருக்கும்அவளுடைய கண்களில் அழகான பிம்பமாகத் திரிகின்றனவாம்!

             அங்கையந்த லத்தகத்த ஐந்துபந்த மர்ந்தவை
             மங்கையாட மாலைசூழும் வண்டுபோல வந்துடன்
             பொங்கிமீதெ ழுந்துபோய்ப்பி றழ்ந்துபாய்தல் இன்றியே
             செங்கயற்கண் புருவம்தம் முளுருவம்செய்யத் திரியுமே2!

    மேலே அடிக்கப்பட்ட பந்துகள் சில அவளுடைய முல்லைமாலையில் மறைந்தன; பின்பு அவள் கையை வந்தடைந்தன.  கருங்கூந்தலைத் தாண்டிப்பறந்த பந்துகள் முகத்தருகே வந்தனவாம்; தலையில் மறைந்தவை மார்பில் மாலையருகே வந்துசேர்ந்தன. சில கைவிரலில் அமர்ந்தன. இவ்வாறு பந்துகள் எங்கே என்று காண்பவர் வியக்கும்படி அவற்றை வீசியும், அடித்தும் வேகமாக ஆடினாள் விமலை. இப்படியெல்லாம் ஆடினால் என்னவாகும்? மார்பில் பூசிய குங்குமமும் பொற்சுண்ணமும் நெற்றிச்சந்தனமும் வியர்வையில் கரைந்து கொங்கைகளிடையே வழிந்தோடியது வானவில் போன்று இருந்ததாம். ஆடியாடி அவளும் சிறிது தளர்ச்சி அடைந்துவிட்டாள் போல இருக்கிறதே! அவள் கையிலிருந்து ஒருபந்து நழுவி, மார்பிலணிந்த முல்லைமாலையைத் தொட்டுக்கொண்டு வீதியில் வந்துகொண்டிருந்த சீவகன்முன்பு போய் விழுந்ததாம். பின்பு என்னவாயிற்று? கண்ணோடு கண்ணிணை கலந்து திருமணத்தில் முடிந்தது என்கிறது சீவக சிந்தாமணி! இங்கு இதைச் சொன்னது விமலையார் பந்தாடும் அழகை விவரிக்க மட்டுமே!!
    —————————
    அம்பிகையும், மற்றப்பெண்களைப்போல் பந்தாடுவதில் விருப்பமுள்ளவள் என்பது தேவாரத்தில் காணும் வர்ணனைகளால் விளங்குகிறது. ‘பந்தணை விரலி’ எனச் சம்பந்தப்பெருமான் அம்பிகையைப் பற்றிக் கூறியுள்ளார். சுந்தரரும் கூட, ‘பந்தும் கிளியும் ஆகியனவற்றை எப்போதும் கரங்களில் வைத்திருப்பவளான அம்பிகையின் சிந்தைகவர்ந்த நாதனாகிய இறைவன் வாழும் ஒற்றியூர்,’ என ஈசனையும் அவன் வாழும் ஊரையும் சிறப்பிக்கிறார்.

             பந்தும் கிளியும் பயிலும் பாவை
             சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
             எந்தம் அடிகள் இறைவர்க் கிடம்போல்
             உந்தும் திரைவாய் ஒற்றி யூரே3 (சுந்தரர் தேவாரம்- திருவொற்றியூர்)

    கைலாயத்திலிருந்த பார்வதிதேவிக்கு ஒரு சமயம் பந்துவிளையாடும் ஆசை ஏற்பட்டது; உற்சாகமாக அவளும் தோழியருடன் நீண்டநேரம் பந்து விளையாடுகிறாள். நேரம் சென்றதே தெரியவில்லை. இவள் விளையாடுவதற்காக சூரியனும் மறையாமல் வெளிச்சம் தருகிறான். மறைந்தால் விளையாட்டு தடைப்பட்டுவிடுமே; அதனால் அம்பிகை தன்னிடம் கோபித்துக்கொண்டால் என்னசெய்வது என்று ஒருபுறம் பயம்வேறு! இதனால் மாலை மயங்காது போயிற்று; முனிவர்கள் எல்லாரும் சந்தியாவந்தனம் செய்யமுடியாமல் திண்டாடினார்கள்.

    சிவபிரானிடம் சென்று அவர்கள் முறையிட, அவர், சூரியனைக் கடிந்துகொண்டு, நேரம்காலம் கருதாமல் விளையாட்டில் ஈடுபட்ட அம்பிகையைப் பசுவாகும்படி சபித்தார். மனம்வருந்திய பார்வதி சாபவிமோசனத்தை வேண்டுகிறாள். சிவன் பந்தினைக் காலால் எற்ற அது பூமியில் ஒரு சரக்கொன்றை மரத்தடியே விழுகின்றது. அந்த மரத்தினடியே உள்ள சிவலிங்கத்திற்குப் பசுவான அம்பிகை பால்சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்கிறார் பெருமான். ‘பந்து அணைந்த தலம்’ ஆதலால் ‘பந்தணைநல்லூர்’ என இத்தலம் வழங்கப்படுகிறது. காலப்போக்கில் ‘பந்தநல்லூரு’ம் ஆகிவிட்டது! அப்பந்தும் அச்சிவலிங்கத்தின் சடையில் விழுந்து கலந்தது.

    திருமால் பசுவான தன் தங்கையைக் காக்க இடையனாக பூமிக்கு வருகிறார். நாள்தோறும் பசுக்களை மேய்த்து வருகிறார். ஒருநாள் பார்வதியான அப்பசு புற்றிலிருந்த சிவலிங்கத்தைக் கண்டு பாலை முழுவதும் அதன்மீது சொரிந்து வழிபடுகிறது. அப்பூசையால் மகிழ்ந்த சிவபிரான் அந்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பார்வதிக்குக் காட்சிதந்து அவளை அணைத்துக் கொள்கிறார். பசுவடிவு நீங்கிய அவளும் மேலும் வடக்குநோக்கிக் கடுந்தவம் மேற்கொண்டாள். தவத்தால் மகிழ்ந்த சிவபிரான், முனிவர்கள் – தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பராசக்தியைத் திருமணம் செய்து கொண்டார். கல்யாணசுந்தரர், பசுபதீஸ்வரர் (பசுவின் பதியாக வந்தவர்) எனும் பெயரையும் பெற்றார். அச்சிவனது சிரசில் பந்தணைந்த அடையாளம் இன்றும் காணப்படுகின்றது.

    இது அம்பிகையின் பந்தாடும் ஆசைபற்றிய அருமையான ஒரு புராணக்கதை. சீவகசிந்தாமணியில் பெண்கள் பந்து விளையாடும் முறையைப் பார்த்தோம். ஆகவே இது மிகவும் நுட்பமாக, கைவேகத்தையும், கண்- கை- கால் ஆகியவற்றின் இணைந்த செயல்பாட்டையும் விவேகத்தையும் கொண்டு விளையாடப்படும் ஆட்டம் என அறியலாம். நாள்தோறும் நன்கு பயிற்சி செய்யவும் வேண்டும்.

                ____________________________

    இத்தனை அழகும் நயமும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த விளையாட்டிற்கு மற்றவற்றைப்போல் பாடல்கள் இல்லையோ என எண்ணவேண்டா. சிலப்பதிகாரத்தில் பெண்கள் பாடியாடுவதாக சில பாடல்களைக் காணலாம். கண்ணகிக்குக் கோவிலெடுத்து வழிபடும்போது பெண்கள் மூவேந்தர்களின் புகழையும் பாடி ஆடிக் களிக்கிறார்கள். பந்திற்குக் ‘கந்துகம்’ எனவொரு அழகான பெயருமுண்டு. பெண்கள் பந்தடிக்கும்போது பாண்டியமன்னர்களின் புகழைக்கூறி ‘கந்துகவரி’யைப் பாடுகிறார்கள்.

    “பொற்கொடி போன்றபெண்ணே! நமது அழகான பொன்மாலைகளும் மின்னல்போல ஒளிவீசும் மேகலைகளும் அசைந்தாடும்படி, ‘எங்கள் பாண்டியமன்னன் நீடூழி வாழ்க! தேவர்களின் ஆரத்தை மார்பிலணிந்தவன் வாழ்க!’ எனக்கூறிப் பந்தடிப்போமாக!” என்று ஒருத்தி பாடுகிறாளாம்.

    “விரைந்து வரும் இப்பந்து நமது கையில் இருந்ததும் இல்லை! நீண்ட நிலத்திலிருந்து அந்தரத்தே எழுந்ததும் இல்லை பாராய்! என்று உலகத்தோர் கூறும்வண்ணம் பாண்டியமன்னன் வாழ்க எனப்பாடிப் பந்தடிப்போம்!” என இன்னொருத்தி பாடுகிறாள்.

    துன்னிவந்து கைத்தலத்து இருந்ததில்லை நீணிலம்
    தன்னினின்றும் அந்தரத்து எழுந்ததில்லை தானெனத்
    தென்னன்வாழ்க வாழ்கவென்று சென்றுபந் தடித்துமே
    தேவரார மார்பன்வாழ்க வென்றுபந் தடித்துமே4.

    இது அவர்கள் வெகு விரைவாக இப்பந்தாட்டத்தை ஆடுவதனைக் குறிக்கின்றது. பந்தைத் தூக்கி எறிந்து பிடித்து விளையாடும் விளையாட்டல்ல இப்பந்தாட்டம்! பந்தடித்தல் என்று ஒருத்தியே  பந்துகளை மேலே வீசி அவை கீழேவிழுமுன் ஓடியோடிப்பிடித்து உயரப்பந்தடித்து விளையாடும் விறுவிறுப்பான பந்தாட்டம் இதுவாகும்! நல்ல உடற்பயிற்சியும் கூட!

                _____________________________

    கொங்குவேளிர் இயற்றிய பெருங்கதை எனும் காப்பியம் உதயணன் எனும் மன்னனின் பிரதாபங்களைக் கூறுவது.

    இதில் ‘பந்தடி கண்டது’ எனும் காதையில் பந்துகளைச் செய்யும் முறை விரிவாக விளக்கப்படுகிறது.

    தொழில் நுணுக்கம் அறிவோரால் செய்யப்பட்ட பந்துகள் நெட்டியும் பஞ்சும் இடையிடையே வரிந்து கட்டிய  உலண்டு நூலும் சேர்த்து அழுத்தி அவையிவற்றை அமைவாக உருட்டிக்கட்டி, மேலே மயிற்பீலியும் மயிருங்கொண்டு நன்றாகப் பின்னி, அவற்றின்மேல் நூலாலும் கயிற்றாலும் நுண்ணியதாகச் சுற்றி அழகாகக் கையிற்கொண்டு அழுத்தி, அதன்மேல் பாம்புத்தோல் போலவும் மயில் தோகையின் கண் போலவும் அழகிய நீர் நுரை போலவும் தோன்றும்படி தைத்துப் பிடித்த மென்மையினையுடையனவும் பல்வேறு தொழில் திறம் அமைந்தனவுமாகிய பந்துகளை வைத்து (விளையாடினர்).

                       கிடையும் பூளையு மிடைவரி யுலண்டும்
                                அடையப் பிடித்தவை யமைதியிற் றிரட்டிப்
                                பீலியு மயிரும் வாலிதின் வலந்து
                      நூலினுங் கயிற்றினு நுண்ணிதிற் சுற்றிக்
                                கோல மாகக் கொண்டனர் பிடித்துப்
                                பாம்பின் றோலும் பீலிக் கண்ணும்
                        பூம்புன னுரையும் புரையக் குத்திப்
                                பற்றிய நொய்ம்மையிற் பல்வினைப் பந்துகள்5.

    பெருங்கதையின் வத்தவ காண்டத்தில் பந்தடி கண்ட காதையில் வாசவதத்தையும் பதுமாவதியும் தங்கள் தோழியரின் பந்துவிளையாடும் போட்டியைக் காண்கின்றனர். வயந்தகனும் உதயணனும் மறைந்து நின்று பந்தடி காணுகின்றனர். தோழியர்கள் இராசனை, காஞ்சனமாலை, அயிராபதி, விச்சுவலேகை, ஆரியை ஆகியோரின் ஒப்பற்ற பந்தாட்டம் விளக்கமாகக் கூறப்படுதலைக் காணலாம். இத்தகைய விரிவான வேகமான, வியக்கவைக்கும் ஆட்டமிதுவா என பிரமிக்க வைக்கும் விளக்கங்களைக் கண்டு மகிழலாம்.

    இனி பிள்ளைத்தமிழைக் காணச் செல்லலாமா? முன்பே கூறியதுபோல, நல்லதுக்குடி கிருட்டிணையர் இயற்றியுள்ளதில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் ஒன்றே பெண்குழந்தையின் பந்தாடல் பருவத்தைப் பத்துப்பாடல்களில் அழகுற விவரிக்கின்றது.

    சிவகாமசுந்தரி அன்னை  வெள்ளிமலையாகிய கைலாயத்தில் பிரம்மாண்டமான மலைகளாகிய பந்துகளைக் கையில் எடுத்து விறுவிறுப்பாகப் பந்தாடி மகிழ்கிறாள். அப்போது அவளுடைய சிவந்த தாமரை மலரடிகளின் குதிகால் பந்துகள் அசைந்தாடுகின்றன; பந்தினையொத்த திருமுழந்தாள் அசைந்தாடுகிறது. பந்துபோன்ற வடிவில் முடியப்பட்ட உச்சிக்கொண்டை உடன் ஆடுகின்றது. குங்குமம் பூசிய கொங்கைகள் பந்தாடுகின்றன; இருவிழிகளும் பந்துகள் செல்லும் பாதையையே நோக்குவதனால் அவையும் அதே வேகத்தில் சுழன்றாடுகின்றனவாம்.

    நமது உள்ளங்களையும் உவகையில் பந்தாடச் செய்கின்ற பாடல்!

                செந்தாமரைப் பதம் பந்து அசைந்தாட
                       வரும் திருமுழந்தாள் பந்துமே
             திண்புவி பதிந்தாட இனிய பந்துக்
                       கொண்டை சென்றுடன் பந்தாடவே
             நந்தாத குங்குமக் கொங்கை
                       பந்தாட இருநயனங்கள் ஆடவே
             ……………………………………………..
             பந்தாட வேதண்ட மூதண்ட கூட
                       நற்பந்து விளையாடி அருளே!
             பங்கயச் சிவகாம சுந்தரி என்
                       அம்மையே! பந்து விளையாடி அருளே6!     

    அன்னை பராசக்தி தனது ஆணைப்படி இவ்வுலகில் அனைத்தையும் நடத்துவிக்கிறாள் எனப் பெரியோர் கூறுவர்! பிள்ளைத்தமிழ் நூல்களில் அன்னை பராசக்தி சிறுவீடுகட்டி விளையாடுவதெனக் கூறுவது, அன்னையானவள் இந்த உலகங்களைப் படைப்பதனையும், அம்மானை, பந்து, கழங்கு முதலியன விளையாடுவது அவற்றைத் தனது ஆணைப்படி காத்து இயக்குவதனையும், சிவனெனும் பித்தன் அச்சிற்றிலை அழிப்பது, உலகங்களை அழிப்பதனையும், இச்செயல்கள் தொடர்ந்து இடைவிடாது சுழற்சியாக நடந்துகொண்டே இருப்பதையும் உட்பொருளாக விளக்கும்.

    இப்பருவத்தின் பத்துப்பாடல்களும் ஒவ்வொரு நயத்தை விளக்கும். மூன்றாம்பாடல் பலவிதமான விதங்களில் தோன்றும் உயிரினங்களான முட்டையினின்று விளைபவை, கருப்பையினின்று பிறப்பவை, வியர்வையினின்று தோன்றுவன எனும் தத்துவன (நுண்ணுயிரிகள்!), ஊர்வன, பறப்பன, நடப்பன, கிடப்பன, இருப்பன ஆகிய வெவ்வேறு உயிர்களைப் படைத்தும், அடுத்தடுத்த பிறவிகளில் வெவ்வேறாக மாறிமாறிப் பிறப்பதற்கும் ஆகிய நிலைமையுடைய உயிர்க்கூட்டங்களை பந்தென அடித்து விளையாடுபவளான உமையம்மையே!

                ………………………………………………
             தத்துவன ஊர்வன தவழ்ந்திடுவ நிற்பன
                       தனித்தனி பறப்பனவுமே
             ………………………………………..
             பத்திபெறு பல்லுயிர்ப் பந்தடித்து ஆடும்
                       உமைபந்து விளையாடியருளே7 என வேண்டுவதாக அமைந்த பாடல்.
    வேறொரு பாடலில் இசை சங்கீதத்துடன் பந்தடித்தருளுக என்பார்.

    மற்றொன்றில், அணிந்துள்ள அணிமணிகள் செய்யும் தாளத்துடன் இணைந்து பந்தடித்தருளுக என வேண்டுவார்.

    வேறொன்றில் எங்கள் பந்தபாசங்கள் தீரும்வண்ணம் பந்தடித்தருளுக என்பார்.

    ஆக, இறைவியின் பந்தாடும் செயலானது உயிர்களின் பந்தபாசத்தை நீக்குவதும், ஐந்தொழில் புரிவதும் ஆகியவற்றினை அவள் எளிதாகக் காலந்தோறும் பந்தாடும் விளையாட்டாகவே செய்துவருவதனை உணர்த்துகின்றது.

    இந்தப் பந்தாட்டத்தில்தான் என்னவெல்லாம் கற்பனைகள். கருத்துக்கினிய புனைகதைகள், காட்சிகள்! காலங்கள்தோறும் பலவகைப்பட்ட விளையாடல்களின் உள்ளங்கவர் காட்சிகளைப் பிள்ளைத்தமிழ் எனும் ஒப்பரும் ஒரு பிரபந்தத்தின் இனிய பாடல்களாக்கி அளித்த அருமைத் தமிழின் பெருமை தனித்துவமானது அன்றோ?

    இத்துணை நாட்கள் பிள்ளைத்தமிழின் நயமான பருவங்களையும் அவை தொடர்பான பாடல்களையும் கண்டுகளித்தோம்.

    விரைவில் இதுபோன்ற வேறொரு தொடருடன் சந்திப்போம்.

    வணக்கம்.

    (நிறைந்தது).

                            ________________________________

     பார்வை நூல்கள்:

    1. நக்கீரர் – திருமுருகாற்றுப்படை.
    2. திருத்தக்க தேவர்- சீவக சிந்தாமணி – விமலையார் இலம்பகம்.
    3. சுந்தரமூர்த்தி நாயனார் – திருவொற்றியூர் தேவாரம்.
    4. இளங்கோவடிகள்- சிலப்பதிகாரம் – கந்துக வரி.
    5. கொங்குவேளிர் – பெருங்கதை – வத்தவகாண்டம்- பந்தடி கண்டது.
    6. 7. நல்லதுக்குடி கிருட்டிணையர் – தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்.
    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 23

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 23

    மீனாட்சி பாலகணேஷ்

    (கழங்காடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்பாற் பிள்ளைத்தமிழின் இன்னுமொரு இனிய பருவம் கழங்காடற் பருவமாகும். இதனைப் பெதும்பை எனும் (எட்டுமுதல் பதினோரு ஆண்டு வயதுவரை உள்ள) பெண்மக்கள் விரும்பி விளையாடுவதாகக் கூறுவர்.

    கழங்காடல் அனைத்து வயது மகளிரும் விளையாடும் விளையாட்டுகளுள் ஒன்றாகும். ஆயினும் இது பெதும்பைப்பருவப்பெண்களின் விளையாட்டென்று உலா இலக்கியங்கள் கூறும். விளையாடும் முறைகளையும் விளக்கும். ஏழுகாய்களைக் கொண்டு விளையாடப்படுவது கழங்கு. இது அம்மானை ஆட்டத்தினின்றும், பந்தாட்டத்தினின்றும்  மிகவும் வேறுபட்டதாகும்.

    பந்தாடிக் களைத்த சங்ககால மகளிர் ஆற்றங்கரை மணலில் கழங்காடினர் என்பதனை,

              ‘கைபுனை குறுந்தொடி தத்த, பைபய,
             முத்த வார்மணல் பொற்கழங்கு ஆடும்
       பட்டின மருங்கின் அசையின்1…,’ எனும் பெரும்பாணாற்றுப்படை வரிகளால் அறியலாம். அதாவது, ‘கையிலணிந்த வளையல்கள் குலுங்க, மென்மையான சிறுமுத்துக்களையொத்த பொடிமணலில் பொன்னாலான கழங்குகளைக் கொண்டு விளையாடும் பட்டினத்தின் ஒரு பக்கம்…..’ எனப்பொருள் கொள்ளவேண்டும்.

    பெருத்த முத்துக்கள், மரக்கட்டையில் கடைந்தெடுத்த  உருண்டைகள், பொன்னால் செய்யப்பட்ட பொற்கழங்குகள் முதலானவை கழங்காடப் பயன்படுத்தப்பட்டன. செடியிலிருந்து கிடைக்கும் கழற்சிக்காய் என்பதும் பயன்படுத்தப்பட்டது.

    இன்றும் கிராமிய விளையாட்டாக, அச்சாங்கல் (ஐந்து காய்களை வைத்து விளையாடுவது) ஏழாங்கல் (ஏழு காய்களைக் கொண்டு ஆடுவது), சுங்கரக்காய் (பல காய்களைக்கொண்டு ஆடுவது) என கூழாங்கற்கள் அல்லது கருங்கற்களைக்கொண்டு இவ்விளையாட்டு விளையாடப்படுகின்றது.

    அம்மானை, கழங்கு ஆகிய விளையாட்டுகள் ஆயமொடு (தங்கள் தோழிமார், விளையாட்டுக் குழுக்களுடன்) ஆடப்பெறும் என்பதனை சங்க இலக்கியங்களிலிருந்து அறியலாம்.

                ‘இனந்துணை ஆயமொடு கழங்குடன் ஆடினும்2,’

                ‘கழங்கா டாயத் தன்றுநம் மருளிய3,’ எனும் பாடலடிகள் இதனை விளக்கும்.

                ‘கூறை நன்மனைக் குறுந்தொடி மகளிர்
             மணலாடு கழங்கின் அறைமின்சத் தாஅம்4,’

    எனும் பாடலடிகள் மகளிர் மாடத்து முற்றங்களில் மணலைப்பரப்பிக் கழங்காடினர் என விளக்கும். விளையாடும் முறையாவது தரையில் பொடிமணலைப்பரப்பி, அதன்மீது கழங்குகளை வைத்து, கையாலெடுத்துத் தூக்கிப்போட்டுப் பிடித்து விளையாடுவதாகும்.

    கழங்காடும் பொழுது ஏழு காய்களையும் தரையில் பரப்பி வைத்துப் பின் ஒவ்வொரு காயாக எடுத்து மேலெறிந்து, அடுத்து இரண்டிரண்டு காய்களாக எடுத்து மேலெறிந்தும் இவ்வாறு ஏழு வரை மேலெறிந்து, மேலேசென்ற காய் கீழே விழுவதற்குள் மற்றொரு பகுதியை மேலெறிந்துவிட்டுக் கீழேவரும் காய்களைக் கையில் பிடித்து ஆடினால், ஆடினவரே தொடர்ந்து ஆடலாம். கீழேவரும் காய் தரையில் விழுந்துவிட்டால் ஆட்டம் மற்றவர்களுக்கு உரித்தாகிவிடும். இவ்வாறு ஆடும்பொழுது, ஒன்றொன்றாகக் கழங்குகளை மேலே எறிகையில் ஒன்றுமுதல் ஏழுவரை உள்ள பொருட்களைப் பாடிக்கொண்டே ஆடுவார்கள். அவையே ஏழு கண்ணிகளில் உலா இலக்கியங்களில் காணப்படும்.

    பெண்மக்களைப் பருவவகையால் பிரிப்பதனையும், அவர்களின் பருவத்துக்கேற்ற செயல்களையும் நாம் உலா இலக்கியங்களில் காணலாம். கழங்காடும் பெதும்பை எனும் பெண் பாதி பேதைக்குணமும் பாதி மங்கைக்குணமும் கலந்தவள் என்கிறது உலா இலக்கியம். இது எட்டு முதல் பதினோரு ஆண்டு நிரம்பிய சிறுமி என்பதற்குப் பொருத்தாமாயுள்ளது. (கடம்பர்கோயில் உலா) ஆடும் கழங்குகளின் நிறமும் பெருமையும் விளக்கப்படுகின்றன:

    பத்து வயது நிரம்பிய சிறுபெண்ணொருத்தி கைகளில் ஏழுவிதமான கழற்சிக்காய்களை எடுத்துக்கொண்டு கழங்காடுகிறாள். அக்காய்களை வெகு லாவகமாக மேலே வீசுகிறாள்! மேகத்தின் கருநீல நிறத்தையொத்த நீலக்கழங்கொன்று; களங்கமற்ற சந்திரன் போலும் வெளேரென்ற முத்தாலான கழங்கொன்று; எந்தை சிவபிரானின் பாதியுடலைக் கொண்ட பார்வதியைப் போலும் பச்சைநிறம் பொருந்திய மரகதத்தாலான கழங்கு ஒன்று; மறுபாதியான ஐயனின் தகதகக்கும் செம்பவள நிற உடல்போன்ற மாணிக்கத்தாலான கழங்கு இன்னொன்று; மலர்ந்த கொன்றைப் பூக்களின் தேன்போன்ற நிறங்கொண்ட கோமேதகக் கழங்கொன்று; பொருந்திய கங்கைநீர்போல் பளபளக்கும் வயிரக் கழங்கொன்று; மன்றுள் நின்றாடும் எம்பிரானின் சிவந்த சடைபோன்ற மென்மையான செம்பவழக் கழங்கொன்று என ஏழுவிதக் கழங்குகளைக் கையிலெடுத்து ஆடுகிறாள் இப்பெதும்பை எனப்படும் சிறுமி.

                ‘கந்தரம்போல் நீலக் கழங்குங் களங்கமில்லாச்
             சந்திரன்போல் முத்தின் தனிக்கழங்கும்–எந்தையுடற்
             பாதியன்ன பச்சைப் பசுங்கழங்கும் பாதியெழிற்
             சோதிமா ணிக்கச் சுடர்க்கழங்கும்–தாதலரும்
             கொன்றையந்தே னன்னநிறக்கோமே தகக்கழங்கும்
             துன்றுகங்கை போல்வயிரச் சொற்கழங்கும்–மன்றுடையான்
             வேணியன்ன செம்பவழ மென்கழங்கும் பங்கையப்பூம்
             பாணி யதனில் பரிந்தெடுத்து5..’

    ஒவ்வொரு கழங்கை மேலே வீசும்போதும் பாகைப் பழிக்கும் தீங்குரலில் ஒன்றிலிருந்து ஏழுவரை அமைந்த இறைவனின் திருத்தலங்களைப் பற்றிப் பாடுகிறாள் இப்பெண். என்னெவெல்லாம் கூறுகிறாள் எனச் சிறிதே கேட்போமா?

    ஒன்றை எடுத்தவள்  ஏகம் (ஒன்று, அனைத்தும் ஒன்று) எனும் ஏகாம்பரத்தைப் பற்றிப் பாடுகிறாள். கச்சி ஏகாம்பரநாதரைப் பற்றிப்பாடுகிறாள்.

                ……………………………………… ‘நீணிலத்துப்
             பாகாங் குதலைமொழிப் பாவைகுறித் தொன்றையெடுத்
             தேகாம் பரத்தினிசைபாடி5  ………. ‘

    பிறகு இரண்டு கழங்குகளை எடுத்துக்கொண்டு அன்றொருநாள், பிரமன், திருமால் ஆகிய இருவர் சிவபிரானின் அடியும் முடியும் தேடிக் கொண்டாடிய அண்ணாமலையைப் பாடிப் போற்றுகிறாள்.

                ………………………………………  வாகாகக்
             கூடு மிரண்டெடுத்துக் கொண்டாடி யன்றிருவர்
             தேடு மலையின் செயல்பாடி5 ……………..’

    மூன்று கழங்குகளை எடுத்து, புகழ்வாய்ந்த திரிசிராப்பள்ளி எனும் தலத்தைப் பாடுகிறாள். இது திரிசிரன் எனும் மூன்றுதலை அரக்கன் சிவபிரானைப் பூசித்து வழிபட்ட தலமாம்.

                ……………………………  ‘நாடரிய
             வள்ளிதழி மூன்றெடுத்து மன்னு திரிசிராப்
             பள்ளியெனுந்தலத் தைப்பாடி5 ………….’

    விளையாட்டில் உள்ளம் மிக்க மகிழ்ச்சியில் திளைப்பதனால் நான்குகாய்களை எடுத்துக் கொண்டு நான்மாடக்கூடலான மதுரையம்பதியின் வளத்தைப் பாடியாடுகிறாளாம்.

                …………………………… ‘உள்ளமகிழ்
             வாடலா னாலென் றடுத்தெடுத்து நான்மாடக்
             கூடல்வளம் பாடிமிகக்கொண்டாடி5 …………’

    இதழ்கள் மலர்ந்தவிழும் சிவந்த மலர்போலும் வாய் கொண்ட கிளியின் மொழி பேசும் அப்பெண் ஐந்து காய்களைக் கையில் எடுத்துக்கொண்டு பஞ்சநதித்தலமான திருவையாற்றின் பெருமைகளைப் பாடிக் கழங்காடுகிறாள்.

                …………………………………………….. ‘தோடவிழும்
             கிஞ்சுகப்பூஞ் செவ்வாய்க் கிளிமொழியா ளைந்தெடுத்துப்
             பஞ்சநதி மான்மியத்தைப் பாடியே5 ………………’

    காய்களுடன் கண்களும் மேலும் கீழும் சென்றுவர, அவ்வண்ணமே ஆறு காய்களைக் கையில் எடுத்தவள், அன்றொருநாள் ஆறுபெண்கள் அட்டமாசித்திகள் பெற்ற மெய்த்தலமான பட்டமங்கையின் பெருமைகளைப் பாடுகிறாளாம்.

                …………………………………… ‘கஞ்சவிழி
             அத்திறத்தால் ஆறெடுத்து அன்று ஆறு மின்னார் அட்டமா
             சித்திபெற்ற மெய்த்தலத்தின் சீர்பாடி5…………’

    இதனைப் பாடி மகிழ்ந்த பெண்ணரசி, அடுத்து ஏழு கழங்குகளைக் கையிலெடுத்துக் கொண்டு, ஏழு உலகங்களிலும் எம்பெருமானாகிய சிவபிரான் இசைந்து உறையும் இடங்களைப் பற்றிப் பாடியாடுகிறாளம்.

                …………………………….. ‘கைத்தலத்தில்
             ஏழெடுத்துப் பாரிடத்தி லித்தலங்களாதியா
             ஏழுலகத் தெம்மா னிசைதலங்கள்5

    இவ்வாறு ஆடுபவள் தன் பாடலில், “இத்தகைய தலங்களில் கிட்டும் பேறுகளெல்லாம் எம்மான் உறையும் இந்தக் கடம்பநகரை அடைந்தோர்க்குக் கிடைக்கும்,” என்றுகூறி எல்லாக் கழங்குகளையும் சேர்த்தெடுத்து மேலே வீசியெறிந்து பிடிக்கிறாள். அவ்வாறு செய்யும்போது, அவளுடைய மூக்குத்தி அசைந்தாடுகிறது; கழுத்திலணிந்த முத்து வடம் சரிந்தாடுகிறது; கண்கள் இரண்டும் மேலும் கீழுமாகக் கழங்குகளோடு ஓடியாடுகின்றன. அவளுடைய கொடியிடையும் உடனாடுகின்றது.

                                            ‘-சல்லாப
             மூக்குத்தி முத்தாட முத்து வடமாட
             நோக்கிரண்டு மாட நுசுப்பாட–ஆக்கமகள்
             கொண்டாட மாதுசெங்கை கொண்டாடும் போதிலே5

    எனக் கைகளில் கழங்கினை எடுத்து ஆடுகிறாள் அவள்.

    இக்காட்சி கடம்பர்கோயில் உலாவில் காணப்படுவது. பாடிய புலவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் ஏழு கழங்குகளுக்கும் பாட்டுடைத்தலைவனாம் சிவபிரானின் ஏழுதலங்களின் சிறப்புகளைப் பாடியுள்ள அழகான உத்தி படித்து ரசிப்பதற்கு சிறப்பாக உள்ளது.

    இவ்வாறு சில உலாப் பிரபந்தங்களில் கழங்காடுதல் பற்றிய அருமையான பாடல்களைக் கண்டு மகிழலாம். காளமேகப்புலவர் பாடிய திரு ஆனைக்கா உலா6 எனும் பிரபந்தம் சிறப்பாகப் பெதும்பை ஆடும் ஏழு கழங்குகளுக்குமாக ஈசனின் செயல்களை அழகுற விவரிக்கின்றது.

    சேறைக்கவிராச பிள்ளையும் தாமியற்றியுள்ள வாட்போக்கியுலா7 எனும் நூலில் கழங்காடும் முறையினை நன்கு விளக்கியுள்ளார். இங்கு தலங்கள் இல்லாது ஒன்றுமுதல் ஏழுவரையிலான இறைவனின் பெருமைகளைக்கூறிப் பெதும்பை கழங்காடுகிறாள் எனப்பாடியுள்ளார்.

    கழங்காட்டம் பற்றிய இத்துணை விரிவான விளக்கத்தின்பின்பு, பிள்ளைத்தமிழ் நூல்களுக்குச் செல்லலாமா?

    சிவயோகநாயகி பிள்ளைத்தமிழ் நூல் பத்துப்பருவங்களையே கொண்டதாயினும் சிறிது வேறுபட்டு கழங்கு, அம்மானை ஆடுதல் இரண்டினையும் முறையே எட்டாவது ஒன்பதாவது பருவங்களாகக் கொண்டுள்ளது. இதிலிருந்தும் கழங்காடுவதென்பது அம்மானையாடும் விளையாட்டிலிருந்து வேறுபட்டதென அறிகிறோம். இந்த பிள்ளைத்தமிழ் நூலில் அம்மை கழங்காடுவது மிகவும் நயமான விதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

    மேலெறியும் ஒவ்வொரு கழங்கிற்கும் உண்டான எண்ணிக்கையில் பாடுவார்கள் என அறிந்தோமல்லவா? அதுபோன்றே அம்மையின் ஒவ்வொரு கழங்குக்கும் புலவர் அருமையான விளக்கம் தருகிறார்.

    உனக்குரிய நினது மணாளன்மீது நீ வைத்துள்ள பக்தி (அன்பு) என ஒரு கழங்கை மேலெறிகின்றனை!

    நீ, உனது தலைவனாகிய ஈசன் என நீவிர் இருவரும் உறைகின்ற உடல்கள் சிவம் சக்தி என இருவகைப்படும் எனக்கூறும் விதமாக இரு கழங்குகளை வீசுகின்றனை!

    மேலுலகு, இவ்வுலகு, பாதாள உலகங்கள் என மூன்று உலகங்களைப் படைத்து அவற்றைக்க் காத்தருளும் திருப்பாதங்கள் முறையே இரண்டு உன்னுடையனவும் இரண்டு ஐயனுடையனவாகவும் நான்காகும் எனும்படி மூன்று, நான்கு எனக் கழங்குகளை வீசுகின்றனை!

    நீ செய்யும் தொழில்கள் ஐந்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) எனக்கூறி ஐந்து கழங்குகளையும், உலக உயிர்களுக்கு உள்ள குணங்களான காமம், குரோதம், மதம், மோகம், உலோபம், மாற்சர்யம் இவை ஆறெனவும், சீவித்து வாழும் உயிர்களுக்கெல்லாம் உண்டாகும் பிறப்பு ஏழுவகை என்று உணர்த்தும் வகையாக ஏழு கழங்குகளையும்  வரிசைமுறையில் வைத்துப் பாடியாடி அருளுவாயாக!

    உனது திருவருள் விளங்குமாறு பசியநிற மேனியை உடைய நீ, உனது சிவந்தகையினில் ஏந்தியுள்ள நீலமணிக் கழங்கானது குளிர்ச்சியான பொய்கையின்கண் அலர்ந்த செந்தாமரைமீது கரியநிறம் படைத்த வண்டானது ஆடுவதுபோல உள்ளது. பெருந்துறைச் சிவயோகவல்லியே! நீ கழங்காடியருளுகவே!’ என வேண்டும் பாடலிது.

                உரியநின் கேள்வர்மேல் வைத்திடும் பத்தியொன்
                                றுறைகின்ற மேனி களிரண்டு
                       …………………………………………………
                                சீவிக்கு மாவிக்கெலாந்
                       தேகங்கொடுத்த குறியொரே ழெனக் கொண்டு
                                சீர்வைத் துடன்பாடியே
             ……………………………………………
             கரியவண்டாடுமா போலவே நீலக்கழங் கெடுத்
                                தாடி யருளே
                       கவுரீ பெருந்துறைச் சிவயோக வல்லி
                                கழங்குநீ யாடியருளே8.

    என்பன பாடல்வரிகள்.

    ‘ஒருகாயை மேலெறிந்து ஆறினைக் கீழ்வைத்து, இரண்டினை எறிந்து ஐந்தினை வைத்து (உய்த்து) மூன்றினை எறிந்து நான்கினை வைத்து, நான்கினை எறிந்து மூன்றினை வீசி, ஐந்தினை வீசி இரண்டினை வைத்து, இரண்டினை எறிந்து ஒன்றினை வைத்து  ஏழினையும் வீசிப்பிடித்து,’ எனக்கூறுபவர், இன்னும் வெவ்வேறுவிதமான எண்ணிக்கைகளில் வீசியும் வைத்தும் கைகள் சிவக்குமாறு தாயே நீ கழங்கு ஆடியருளே,’ என வேண்டிப்பாடியுள்ள பாடல் நயம் கருத்தைக் கவருவதாகும்.

                ‘ஒன்றெறிந் தாறுவைத் துய்த்திரண் டைந்துவைத்
                                துய்த்துமூன் றிட்டுநான்
                       குய்த்துநான் கிட்டுமூன் றுய்த்தைந்
                                ……………………………
             ஒன்றொடா வேழுமேத்தர முழங்கைப் பெறும் கைத்தலம்
             …………………………………………
                 கவுரீ பெருந்துறைச் சிவயோக வல்லி
                       கழங்குநீ யாடியருளே9,’ என்பன பாடல்வரிகள்.

    இதில் விளையாடும் முறைமையை விளக்கியுள்ளார் புலவர். இங்ஙனம் அமைந்துள்ள பத்துப்பாடல்களும் நயக்கத் தக்கவையாகும்.

    அடுத்து நாம் காண்பது தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ். இதில் நமக்குக் கிடைத்துள்ளன இரண்டே பாடல்கள்தாம். இரண்டுமே அரிய முத்துக்களாலான கழங்குகள்தான்!

    சிவகாமி அன்னையாகிய பெதும்பை ஆடும் கழங்காட்டம் எதையெல்லாம் ஒத்துள்ளது எனச் சுவைபட விவரிக்கிறார்.

    கழங்கு விளையாடும் சிறுமியர் கண்ணிமைக்கும்பொழுதில் ஒன்று, இரண்டு, மூன்று எனக் கழங்குகளை எடுத்தெடுத்து வீசியாடுவர். பார்ப்போர் கண்களுக்கு இவை பல்வகையாகத் தோற்றமளிக்கின்றனவாம்.

    அந்நாளில் தம்மை நாடிவரும் பாணர்களுக்கு அரசர்கள் பொன்னால் செய்யப்பட்ட தாமரைமலரைப் பரிசிலளிப்பர். சில சமயம் அம்மலரின் இதழ்களில் சிகப்பு நாகமாணிக்க மணிகள்  பதிக்கப்பெற்றும் தண்டில் மரகதமணிகளும் பதிக்கப் பட்டிருக்கும். இவற்றிலிருந்து பொங்கும் ஒளி ஒன்றையொன்று தாக்கி எதிரொளித்தால் எவ்வாறு இருக்கும்? கண்ணைப் பறிக்காதா?

    மாவின் இளம்பிஞ்சுகள் (மாவடுக்கள்) காற்றிலசைந்து மாந்தளிரின்மீது மோதியாடினால் எப்படி இருக்கும்?

    இளம்மகளிரின் வேல்விழிகள் பல நவரத்தினங்கள் பதித்த காதணிகளில் (கொப்பில்) பட்டுத் திரும்பினால் எவ்வாறு இருக்கும்?

    நறுமணம் கலந்து சந்தனம் மணக்கும் அம்மையுனது இளங்கொங்கைகள்மீது உன் கணவராகிய சிவபிரானின் கண்கள் தாவி விளையாடுவது எவ்வாறு இருக்கும்?

    அழகான கருவண்டுகள் தேன் உண்ணுவதற்காகச் செங்காந்தள் மலரை இடைவிடாது மொய்ப்பது கண்கொள்ளாக் காட்சியன்றோ?

    இந்திரநீலக் கற்களைக்கொண்டு வடிவமைக்கப்பெற்ற கழங்குகளைக்கொண்டு அன்னை கழங்காடுவது இவையனைத்தையும் போலுள்ளது எனப் பூரிக்கின்றனர் அடியவர்கள்.

               பாந்தள் மாணிக்கமணி பொற்பூவின்
                       மரகதம்பத்தி பாய்ந்தாடல் எனவும்
             ………………………………………………..
             மழை மதரரிக் கண்கள் பன்மணிக்
                       கொப்பில் மறிந்து விளையாடல் எனவும்
             ………………………………………
             தண்டாது வரிவண்டு செங்காந்தள்
                       மலர்மீது தண்தாது நுகர்வது எனவும்
             ……………………………………………
             …………………………………. இந்திர
                       நறுநீலக் கழங்கு விளையாடி அருளே!
             கனக சிற்சபையில் வாழ் சிவகாம
                       சுந்தரி கழங்கு விளையாடி அருளே10!

    மிக அழகான உவமைகள் நிறைந்ததொரு பாடல் இது. இயற்கையின் செயல்கள் அனைத்திலும் அன்னையின் கழங்காட்டத்தைக் கண்டு உருகும் அடியவர் இப்பெரும்புலவர்.

    இரண்டாம் பாடல் அன்னை விளையாடும் பலவிதமான ஆடல்களையும் தொகுத்துக் கூறுகிறது. கழங்கு விளையாடவேண்டிக் கொள்வதுடன் நிறைவுறுகின்றது.

    சொற்கள் பழகும் இளங்கிளியோடு சில பொழுது கொஞ்சி மகிழ்கிறாள் இப்பெண்!

    பொற்கூண்டில் வளரும் பூவைப்பறவைக்கு மென்மையான சொற்களைப் பயிற்றுவிக்கிறாள்.

    ரத்தினங்கள் பதித்த சிறு பாவைகளுக்கு (பொம்மைகளுக்கு) குழமணம் மொழிந்தும், சிறுவீடு கட்டியும், நறுமணப்பொடிகளைத் தோழியர்மீது வீசி எறிந்தும், யாழினைமீட்டி, இனியகுரலில் இன்னிசைப் பாடல்களைப் பாடியும், மலர்களால் செய்யப்பட்ட பந்துகளை வைத்து விளையாடியும், இனிய தோழிமாருடன் நீரில் திளைத்து விளையாடியும், அப்போது நறுமணப்பொடி கலந்த நீரினை இறைத்துக் களித்தும், நீலமயில்மீது     ஏறியமர்ந்து விளையாடியும் மகிழும் பெண்ணே!

    சங்கத்தமிழில் முத்தமிழ்ப் பாடல்களைப் பாடிக் கழங்கு ஆடிடுக! என வேண்டும் பாடலிது.

                பழகுசொல் பச்சிளம் கிள்ளையொடு
                       கொஞ்சியும் பஞ்சரம் வளர் ……
             ……………………………………………….
             குழமணப் பிள்ளைகொடு வண்டல்
                       விளையாடியும்……………………
             கொடுங்கையாழ் குரலிசை நரம்பினொடு
                       ……………………………………
             கழகு முத்தமிழ் பாடும் இகுளையரொடும்
                       பொற்கழங்கு விளையாடி அருளே11!

    என்பன பாடல் வரிகள்.

    இளமகளிரின் ஆடல் பாடல்களைச் சித்தரிப்பதில் உலா இலக்கியங்களும் பிள்ளைத்தமிழ் பிரபந்தங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது மிகையேயல்ல எனலாம்.

    (தொடரும்)

     பார்வை நூல்கள்:

    1. பெரும்பாணாற்றுப்படை
    2. அகநானூறு. பா. 17. வரி.2
    3. அகநானூறு, பா.66. வரி.24
    4. நற்றிணை, பா.79, வரி-2-3.
    5. கடம்பர் கோயில் உலா
    6. காளமேகப்புலவர்- திரு ஆனைக்கா உலா
    7. சேறைக் கவிராச பிள்ளை- வாட்போக்கியுலா.

           8, 9. சிவயோகநாயகி பிள்ளைத்தமிழ்

    10, 11. நல்லதுக்குடி கிருட்டிணையர்- தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 22

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 22

    மீனாட்சி பாலகணேஷ்

    (குதலைமொழியாடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்பாற் பிள்ளைத்தமிழின் இன்னுமொரு பருவமான குதலைமொழியாடல் எனும் இப்பருவம் பொருளற்ற மழலைகூறும் பருவமன்று; ஐந்தாறுவயதுப் பெண்குழந்தை பேசும் அழகான பேச்சுகளாகக் கொள்ளப்பட வேண்டும். அதற்கேற்ப தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் இப்பருவத்தைப் பாடியுள்ள ஒரேயொரு புலவரான கிருட்டிணையர் இதனைப் பொன்னூசல் பருவத்திற்குப் பின்னும் நீராடற்பருவத்தின் முன்பும் வருமாறு அமைத்துள்ளார். இதன் கருத்தை கா. நாகராசு அவர்கள் இப்பிள்ளைத்தமிழுக்கான தமது உரைநூலில் விளக்கியுள்ளார்.

    ‘குதலைமொழி என்பதற்கு மழலைமொழி எனப் பொருள்கொள்வதைக் காட்டிலும் இனியமொழி எனப் பொருள் கொள்வதே பொருத்தமெனப்படுகிறது. ஏனெனில் இப்பருவம் ஊசல் பருவத்துக்கும் நீராடற்பருவத்துக்கும் இடையில் வருகிறது. இவ்விரு பருவங்களும் குழந்தையின் ஐந்தாம் ஆண்டுமுதல் ஒன்பதாம் ஆண்டுவரை நடைபெறும் நிகழ்வுகளைப் பாடுவது. குதலைமொழியாடல் பருவம் பற்றியோ அது குழந்தையின் எவ்வாண்டுக்குரியது என்பது குறித்தோ நூல்களில் சொல்லப்படவில்லை. எனவே இதையும் ஐந்தாம் ஆண்டு முதல் ஒன்பதாம் ஆண்டுவரை நடைபெறும் நிகழ்வுகளுள் ஒன்றாகவே கருதலாம். ஐந்தாம் ஆண்டிலிருந்து குழந்தை நன்றாகப் பேசத்தொடங்கிவிடும். எனவே அதை மழலை என்று கொள்ளாமல் இனியமொழி எனவே கொள்ளலாம்1,’ என்கிறார்.

    குதலைமொழியாடல் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாயினும் பெண்பால் பிள்ளைத்தமிழில் மட்டுமே சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆண்பால் பிள்ளைத்தமிழான கதிர்காமப் பிள்ளைத்தமிழில் ‘மொழிபயிலல்’ என ஒரு பருவத்தைக் கண்டோம். இதுவும் அதுபோன்றே புலவரின் விருப்பத்தின்படி இயற்றப்பட்டதெனக் கொள்ளலாம்.

    இப்பருவத்தில் இரண்டு பாடல்களே உள்ளன. இவையிரண்டுமே பொருள் செறிந்த அருமையான பாடல்கள். பாடல்களைக் காணப்புகுமுன் தொடர்பான சில கருத்துக்களைக் கண்டு மகிழலாம்.

    சொல், அது என்னவாக வேண்டுமாயினும் இருக்கலாம். ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்கென்றேயான தனிப்பட்ட ஒரு பொருளுண்டு. அடியார்களின் பார்வை இத்தகைய கருத்தினுள் ஒரு அதியற்புதமான வடிவைக் காண்கின்றது.

                ‘சொல்லும் பொருளும் எனநட மாடும் துணைவருடன்
             புல்லும் பரிமளப் பூங்கொடியே2….’ என அபிராமி அன்னையைப் போற்றுகிறார் அபிராமி பட்டர்.

    சொல் என்பது பேசப்படுவது; கேட்கப்படுவது – ஆகவே அது சக்தியின் அம்சமாக விளங்குவது; பொருள் ஆனது மனதால் மட்டுமே உணரக் கூடியது – ஆதலால் அது சிவபிரானின் அம்சமாவது. சொல்லின்றிப் பொருளில்லை! பொருளற்ற சொல்லுமில்லை! அவை ஒன்றினையொன்று இணைபிரியாதவை; பிரிய இயலாதவை! அதனால்தான் அன்னையும் ஐயனுமாக, சொல்லும் பொருளுமாக எனப் பிணைந்துள்ள சிவசக்தி ஐக்கிய வடிவத்தினை இப்பாடல் அழகுற விளக்கியருளுகின்றது.

    மகாகவி காளிதாசரும் தமது இரகுவம்ச மகாகாவியத்தின் முதல் ஸ்லோகமாக இக்கருத்தையே முன்வைக்கிறார்.

                வாகர்த்தாவிவ சம்ப்ரக்தௌ வாகர்த்தா ப்ரதிபத்தயே
             ஜகத பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ3

    ‘இந்தப் பிரபஞ்சத்தின் தாய்தந்தையரான பார்வதி, பரமேஸ்வரர்களை நான் வணங்குகிறேன். அவர்கள் சொல்லும் பொருளும் என இணைந்திருப்பவர்கள்,’ என்பது எளிமையான விளக்கம்.

    சொற்களின் பிறப்பு, அமைப்பு, பொருள் அனைத்துமே அறிவியல் நோக்கிலும் அதற்கும் அப்பாற்பட்டதொரு தத்துவ வேதாந்த முறையிலும் உணரப்படுவனவாகும்.

    சொல்லின் தோற்றத்தைத் தமிழின் பழம்பெரும் முதன்மைநூலான தொல்காப்பியமானது விளக்கியுள்ளது. சொல்லின் அடிப்படையான எழுத்துக்களும் அவற்றுக்கான ஓசையும் உந்தியிலிருந்து எழும் காற்றானது தலை, தொண்டை, மார்பு ஆகிய இடங்களில் தங்கி பல், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகிய இடங்களில் படுவதனால் பிறக்கின்றன. இதற்கென மாத்திரைகள் (கால அளவைகள்) உண்டு. இது தவிர்த்து உறுப்புகளில் தங்கிச் சுழன்று எழும் ஓசைக்காற்றுக்கு அளபு கூறுதல் அந்தணர் மறைநூல்களில் மட்டுமே காணப்படும் என்கிறார் தொல்காப்பியர்.

    இது எவ்வாறு? நான்குவிதமான சொற்கள் (வாக்குகள்) உண்டென தொல்காப்பியரின் குருவான அகத்தியர் கூறுகிறார். அவை

                ‘………. பைசந்தி மத்திமை வைகரியுஞ்
             சூக்குமையும் நாலுமிது வாக்கேயாகும்4,’ என்கிறார்.

    பரா (சூக்குமை), பச்யந்தி (பைசந்தி), மத்யமா (மத்திமை), வைகரீ,  என்பன வாக்கு எனும் சொல்லின் பலவிதத் தோற்ற வடிவங்களாகும்.

    இதனை லலிதா சஹஸ்ரநாமத்திலும் காணலாம்.

                ‘பரா ப்ரத்யக் சிதீரூபா பச்யந்தீ பரதேவதா
             மத்யமா வைகரீ ரூபா5,’ என்பன அன்னையின் மீதான நாமாவளிகளில் 366, 368, 370, 371 ஆகும். பராசக்தியான லலிதாதேவியே இந்த நான்குவிதமான சொல்வடிவங்களில் விளங்குகிறாள்.

    இவற்றுள் மிக நுண்ணிய நிலையானது பரா அல்லது சூக்குமை எனப்படும்; இது ஞானிகள் தமது சிந்தையில் உய்த்துணரும் ஒலிவடிவமாகும். வெளிப்படையாகக் கேட்கவியலாதது; ஒலிவடிவமற்றது. மூலாதாரத்தில் விளங்குவது.

    பைசந்தி எனப்படுவது உள்ளத்தினுள் தோன்றும் ஒலிவடிவம். சொல்லின் ஆரம்பகாலத்துக் கலங்கிய நிலை எனலாம். மூலாதாரத்தில் கிளம்பி நாபிக்கு வருவது பச்யந்தீ ஆகும்.

    மத்திமையாவது சொல்லின் இடைப்பட்ட நிலை. மனதால் மட்டுமே உணரக்கூடியது. பச்யந்தி நிலையிலிருந்து இருதயத்திற்கு வரும் நாதம் மத்திமை.

    வைகரி என்பது தெளிவாகச் செவிக்குக்கேட்கும் அட்சர வடிவான ஒலியாகும். மத்யமா ஆனது கழுத்திற்கு வந்தால் பீஜம் அல்லது அட்சரம் ஆகின்றது.

    பரா எனும் சூக்குமையான வாக்கினை மேலான முனிவர்களால் மட்டுமே உணரவும் கிரகித்துக்கொள்ளவும் இயலும். இவையே வேத மந்திரங்களின் அடிப்படை ஆகும். அவை உச்சரிப்பிற்கேற்ற மந்திரங்களாக ‘வைகரி’ ரூபத்தில் வெளிப்படுமுன்பு பைசந்தி, மத்திமை எனும் இடைப்பட்ட நிலைகளில் உருப்பெற்று வளரும். இதனையே தொல்காப்பியர், ‘அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே6,’ என்றார்.

    இந்த வைகரியே உந்தி, மார்பு, கழுத்து, உச்சி, மூக்கு இவற்றுள் இடையறாது சென்றுவரும் மூச்சுக்காற்றில் கலந்து பல், அண்ணம், நாக்கு, இதழ் இவைகளில் பட்டு பற்பல சொல்வடிவாகி உருப்பெறும். இதனையே பெற்றோர் தம் சிறுகுழந்தைகள் எழுப்பும் இனிய ஓசைகளிலும், பேசும் பொருளற்ற மழலையிலும், குதலை மொழியாகவும் உணர்கின்றனர். கேட்டும் மகிழ்கின்றனர்.

    இன்னும் எளிதாகக் கூற வேண்டுமெனில், ‘அம்மா’ எனும் ஒரு சொல்லைக் கூற முற்படும்போது முதலில் அந்த ஒலியின் வடிவம் மனக்கண்ணில் சூக்குமையாக, நுட்பமாகத் தோன்றுகிறது. அடுத்து அதற்கு மட்டுமேயான அந்த அம்மாவின் உருவம் ஒலிவடிவமாக உள்ளத்தில் எழுகின்றது. இதுவே பைசந்தி அல்லது பச்யந்தி. பின்பு அது சொல்லாக ஒலியோடு நமது வாயிலிருந்து வெளிப்படும் முன்பு அதன் ஒலிவடிவு மனதில் தோன்றி  மத்திமை என உணரப்படுகின்றது. பின்பு ஒலியுடன் கூடிய அழுத்தமான சொல்லாக (வைகரி) வெளிப்படுகின்றது. இது செவிக்குத் தெளிவாகக் கேட்கும் அட்சர வடிவான ஒலி.

    நாதமாக (ஓசையாக) உயிரோடு கூடியிருப்பது மொழித்தன்மை; மொழிக்கு இன்றியமையாதன சொற்கள் எனும் வாக்கு; அவை விந்து தத்துவமாகும் என்பன சித்தாந்த சாத்திரக் கருத்துக்களாகும். இதனையே சிவஞான சித்தியார்,

    ‘சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்7 என்கின்றது.

    நாம் எண்ணும் எண்ணங்களும் அவை ஒலிவடிவம் பெற்று நம்மால் பேசப்படுதலும் சிவசத்தியின் அம்சங்களே, தத்துவங்களே எனும் பேருண்மை இதனால் புலனாகும்.

    உண்மைக்காதலின் உயர்வைப் போற்றிப் பாடியுள்ள ‘பாயுமொளி நீயெனக்கு,’ எனும் பாடலில் பாரதியார், ‘பேசுபொருள் நீயெனக்கு, பேணுமொழி நானுக்கு8,’ என்று சொல்-பொருளின் தொடர்பினைப் பாடியுள்ளார்.

    சிவசக்தி வடிவமான பிரணவத்தின் – ஓங்காரத்தின் – முழுமுதற்பொருளாக, அதன் தூல வடிவமாகவே விளங்கும் விநாயகப்பெருமானே அனைத்து எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்கும் முழுமுதற் பொருளாவான். இக்கருத்தினை அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று அருமையாக விளக்குகிறது.

    வேதவிநாயகப்பெருமான் நமது புத்திக்கு (புந்தி) எட்டாத புண்ணியவெளியில் திகழ்ந்து அருளுபவன். நாபியை இடமாகக் கொண்டு நாதம் எனப்படும் அறிவே வடிவாக இருக்கும் சூக்குமை, உந்தியில் உற்பத்தியாகி பிராணவாயுவை வடிவாகக் கொண்ட பைசந்தி, நெஞ்சையும் கண்டத்தையும் இடமாகக் கொண்டு அட்சர வடிவினை ஒழுங்குபட நிறுத்தி, செவிக்குக் கேளாமல் உள்ளறிவாக நிற்கும் மத்திமை, நாக்கினடியிலிருந்து பிறந்து ஒலிவடிவம் பெறும் வைகரி எனச் சொற்கள் நான்குவகைப்படும்.

    ‘இந்த நாலுவிதமான எழுத்துக்களுக்கும், மிகுதியான நூல்களிலுள்ள எழுத்துக்களுக்கும், பழமையான நான்கு வேதங்களில் உள்ள எழுத்துக்களுக்கும், குற்றமற்ற சமஸ்கிருத மொழியில் உள்ள எழுத்துக்களுடன் பதினெட்டுவகை நிலங்களில் வழக்கிலுள்ள அத்துணை எழுத்துக்களுக்கும் மேற்பட்டு விளங்கி ஓங்காரப்பொருளாகவும் அவற்றின் தலைவனாக அவற்றை ஆள்பவனாகவும் விளங்கி, மேலான ஞானத்தின் மூல ஆதாரம் எனும் இடத்தில் நமது புத்திக்கு எட்டவியலாத ஒரு புண்ணியவெளியில் அடைவதற்கு அரிய பரம்பொருளாக இருக்கும் விநாயகப் பெருமானே!

    ‘குற்றமற்ற புகழைக் கொண்டவனே! வெற்றி அளிப்பவனே! செங்கீரை ஆடியருளுக!’ என அடியார் வேண்டுவதாக அமைந்த பொருள்செறிந்த பாடல் இது.

                ‘நாதத் தலத்திலெழு பறையினொடு பைசந்தி
                       நல்லமத் திமைவைகரி
                 நாலெழுத் துக்கும்வெகு நூலெழுத் துக்குமுது
                       நான்மறை எழுத்தினுக்கும்
             ……………………………………..
             போதத்தின் மூலவா தாரத் தலத்திலே
                      புந்திக்கும் எட்டாததோர்
                 புண்ணிய வெளிக்குளே ………..
             தீதற்ற விசைகொளும் அரும்பாத்தை புரிமுதல்வ
                       செங்கீரை ஆடியருளே9
             ………………………………………..’

    எல்லாம்வல்ல சிவப்பரம்பொருளிடமிருந்து முதலாவதாக உண்டாகிய படைப்பு ஓம் எனும் பிரணவ நாதமாகும். அந்த ஓம் எனும் ஒலியின் வரிவடிவமே விநாயகரின் திருவுருவம். ஆகவே இவர் ஓங்கார ரூபன் எனவும் பிரணவ கணபதி எனவும் அறியப்படுகிறார்.

    எழுத்து, ஓலி, ஓசை, சொற்கள் ஆகியவற்றின் பிறப்பினை இவ்வாறாக அறிந்துகொண்டு சிவகாமியம்மை பிள்ளைத்தமிழின் பாடல்களைக் காணப்புகலாம்.

    மூன்று பிள்ளைத்தமிழ் நூல்கள் சிவகாமியம்மைமீது இயற்றப்பட்டுள்ளதெனக் கூறுவர். அவற்றினை இயற்றியோர்:

    1. நல்லதுக்குடி கிருட்டிணையர்.
    2. ராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார்.
    3. மு. ரா. அருணாசலக் கவிராயர்.

    இருப்பினும் ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவைகளில் திகழ்கின்றன என்பது மறுக்க முடியாததாகும்.

    நாம் இங்கு காணப்போவது நல்லதுக்குடி கிருட்டிணையர் இயற்றிய நூலின் பாடல்களைத்தாம். ஏனெனில் முன்பே கூறியதுபோல, இவர் மட்டுமே குதலைமொழியாடல் பருவத்தைப் பாடியுள்ளார். மற்றதில், இரண்டாவது நூல் வழக்கமான பெண்பால் பிள்ளைத்தமிழுக்கான பத்துப் பருவங்களையே கொண்டமைந்துள்ளது. மூன்றாவது காணக் கிடைக்கவில்லை.

    முதல்பாடல் சிவகாமி அன்னையிடம் புலவரின் வினாக்களாகவே அமைந்துள்ளது:

    ‘தாயே! முழுநிலவு பொழியும் இனிய அமுதக்கிரணங்களும், தெள்ளிய அலைகளைக்கொண்ட பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் முன்பொருகாலம் கடைந்தபோழ்து அதிலிருந்து கிடைத்த தேவாமிர்தமும் முத்தியைத்தர வல்லனவோ?

    ‘அவ்வமுதத்திற்கு நிகரானவை எனக்கூறப்படும் மா, பலா, வாழை எனும் முக்கனிகளொடு சர்க்கரையும் பசுந்தேனும் சேர்த்தாலும் அவை இருவினைகளாலும் வரும் துன்பங்களை நீக்கி இன்பத்தைத் தருமோ?

    ‘காமதேனுவின் பாற்சுவையும் கிளியானது கொஞ்சிப்பேசும் மொழியும் பாசம் எனும் ஆணவமலமாகிய இருளை நீக்கிவிடுமோ?

    ‘ஆனால், (நீ பேசிடும் குதலைமொழியானது),

    ‘தவறுகளைத் திருத்தும்; இம்மைக்கும் மறுமைக்கும் முத்திதரும். இனிச்சொல்ல வேறென்ன உள்ளது? ‘தம் குழந்தைகள் பேசும் இனிய சொற்களைக்கேட்பது செவிக்கு இன்பம் எனும் உண்மை பொய்யாகுமோ? (ஆகாது; அதுவே உண்மை!)

    ‘குழலிசையும் யாழிசையும் இனியதன்று; இவற்றிலும் சிறந்த உனது பவளவாயினின்றும் பெருகும் குதலைமொழியைப் பேசியருள்வாயாக!

    ‘குழகன் எனப்படும் சிவபிரான் மனம்கிழும் சிவகாமசுந்தரியே உன்னுடைய மழலைவாயால் குதலைமொழி பேசியருளுக.”

              முழுமதியின் அமுதமும் தெண்டிரைப்
                       பாற்கடலில் முன்கடைந்திடும் அமுதமும்
             முத்திதருமோ? அதனையொப்பென உரைத்திடினும்
                       முக்கனி சருக்கரையொடும்
             …………………………………………………..
             வழுவகலும் இம்மைக்கும் மறுமைக்கும்
                       முத்திதரும் மற்றினி உரைப்பது
             ………………………………………………….
             குழலினிது யாழினிதுமன்று நின்பவளவாய்க்
                       குதலைமொழி ஆடியருளே10!
             ………………………………………………

    மக்கட்பேறு எனும் திருக்குறள் அதிகாரத்தின் கருத்துக்கள் மிகப்பொருத்தமாகப் பாடலுடன் இணைக்கப்பட்டுள்ளன.

                ‘……….. ……….. …………… மற்றவர்
             சொற்கேட்டல் இன்பம் செவிக்கு11.’
    ‘குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
             மழலைச் சொல்கே ளாதவர்12.’

    கருத்தினுள் வாங்கிக்கொண்டு சிந்தித்து இன்புற வேண்டிய பாடல் இதுவாகும்.

    அடுத்த பாடல் மொழி பிறக்கும் விதத்தினை விளக்கிக் கூறுகிறது.

    ‘சொல்லின் நுண்ணிய நிலையான சூக்குமையாக முதலில் இருந்து, பின் பைசந்தி எனப்படும் கலங்கிய தெளிவற்ற நிலையிலெழுந்து, மத்திமை எனும் இடைப்பட்ட நிலைச்சொல்லாகி, இறுதியில் தெளிவான வைகரியாகி ஒலிக்கும் வாக்கானது, கொப்பூழ், மார்பு, கழுத்து, உச்சி, மூச்சுக்காற்று எப்போதும் சென்றுவரும் நாசித்துவாரங்கள் ஆகியவற்றில் கலந்து, பல், அண்ணம், உதடுகள், நாக்கு என்பவற்றுடன் கலந்து, வாயினில் ஒலிவடிவான சொற்களாக உருப்பெற்று ஒலிக்கும்.

    ‘இத்தகைய மழலைச் சொல்லினை தம் குழந்தைகள் பேசுவதனைக்கேட்டு, கண்டும், அனுபவித்தும், பார்த்தும், அன்னை தந்தையர் பேரின்பம் எய்துவர்.’

    இவ்வாறு பேசும் மழலையர் பெற்றோரின் தெய்வங்களே அன்றோ? அதனையே அடுத்துக் கூறிப் போற்றுகிறார்.

    ‘எனக்கு வரம்தர வந்த தாயும் தந்தையும் நீ! நான் போற்றி வழிபடும் தெய்வமும் நீயே! குறைவில்லாத எனது உயிரும் நீ! பருவுடலும் நீ! உடலில் உறைந்துள்ள ஐம்புலன்களும் நீ! இனிமையாகக் கூவிடும் குரல்படைத்த கிளியும் நாணிடும் உனது குதலைமொழியைப் பேசியருளுகவே! குழகன் எனப்படும் சிவபிரான் மனம்கிழும் சிவகாமசுந்தரியே உன்னுடைய மழலைவாயால் குதலைமொழி பேசியருளுக.’ எனும்  பாடல்.

    சூக்குமை விளங்கும் பைசந்தி மத்திமையொரு
                       துலங்கும் வைகரி ஆகியே
             சொல்லரும் இலஞ்சி யுரனொடு கண்டம்
                       உச்சி ஒலிதொடர் நாசியொடு கலந்தே
             வாக்கினில் எழுந்துபல் அண்ணம் இதழ்
                       நாவினில் வழங்கும் மழலைச் சொல்லுமேல்
             …………………………………………………..
                       உடலினில் படரும் ஐம்புலனும் நீயே!
             …………………………………
             குழகன் மகிழ்சிவ காமசுந் தரிநின்
                       மழலைவாய்க் குதலை மொழியாடி அருளே13!

    நம் தமிழகத்தில் ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே,’ எனும் வழக்குண்டு. இங்கு தெய்வத்தையே குழந்தையாக்கிப் போற்றி, அக்குழந்தை வடிவிலும் தெய்வத்தை உணரும் அடியாரின் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது.

    மேலும் உரையாசிரியர் நாகராசு அவர்களின் கருத்துப்படி, தனது பாடல்களான மழலைச் சொற்களைத் தாயும் தந்தையுமாக விளங்கும் இறைவி ஏற்று மகிழ வேண்டுமெனும் விருப்பத்தையும் புலவர் குறிப்பாக உணர்த்தியுள்ளார்.

    (தொடரும்)

    ___________________________________

    பார்வை நூல்கள்:

    1. கா. நாகராசு, 2015. நல்லதுக்குடி கிருட்டிணையர் பாடிய தில்லைச் வகாமியம்மை பிள்ளைத்தமிழ்- மூலமும் உரையும்.

    2. அபிராமி பட்டர்- அபிராமி அந்தாதி.

    3. காளிதாசர்- இரகுவம்சம்

    4. அகத்தியர்

    5. ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்.

    6. தொல்காப்பியர் – தொல்காப்பியம்- எழுத்ததிகாரம்.

    7. அருணந்தி சிவாச்சாரியார்- சிவஞான சித்தியார்

    8. பாரதியார்- கவிதைகள்.

    9. அரும்பாத்தை வேதவிநாயகர் பிள்ளைத்தமிழ்

    10, 13. நல்லதுக்குடி கிருட்டிணையர்- தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்-குதலைமொழியாடல் பருவம்.

    11, 12. திருவள்ளுவர்- திருக்குறள்.

     

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 21

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 21

    மீனாட்சி பாலகணேஷ்

    (பாவை விளையாடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பாவைகளை வைத்து, அவற்றைத் தமது குழந்தைகளாகப் பாவித்து அவற்றிற்குப் பாலருத்துவித்தும், நீராட்டியும், உணவூட்டியும், உறங்கவைத்தும் சிறுமியர் விளையாடுவது வழக்கம். இவையனத்தும் உளவியல் தொடர்பான நிகழ்வுகள். சிறுமியின் உடலுடன் உள்ளமும் வளர்ந்து வருங்காலை, அன்பான குடும்பங்களில் தாய்மார் செய்வதுபோன்றே, சிறுகுழந்தைகளை அவள் சீராட்டுவது போன்றும், தனது விளையாட்டுப்பாவைகளை சிறுகுழந்தையாகப் பாவித்து ஏழெட்டு வயதுச்சிறுமி விளையாடுவாள். அவளுடைய அன்றாட வாழ்வின் இன்றியமையாத செயல்கள் இவை! வளர்ந்து, ஆடிக்களித்து, பருவமங்கையாகி, களவும் கடிமணமும் புரிந்து வாழப்போகும் பெண்மையின் உணர்வுகள் விழித்தெழுந்து உள்ளத்தில் வேரூன்றும் சிறுபருவம். தங்கமதலையரை ஈன்றெடுத்து அமுதூட்டி நன்மக்களாக வளர்க்கப் போவதன் முன்னோட்டம் இதுவல்லவா?

    இதனைக் ‘குழமணம் மொழிதல்’ என்ற ஒருசெயலை மட்டுமே வைத்து ஒரு பருவமாகக் கூறியுள்ளது பிங்கலநிகண்டு. அதாவது, தமது பாவைகளுக்கு மணம்பேசி முடித்து, அதனை நிகழ்த்தி, விருந்துண்டு மகிழ்வது எனும் பிள்ளை விளையாட்டே இதுவாகும். மேற்கூறிய அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடைய செய்திகளாதலின் இதனுள் அடங்கும் என நாம் கொள்ள வேண்டும். ‘உலா’ எனும் சிற்றிலக்கிய இலக்கணப்படி, 4-8 வயது சிறுமி பேதை எனப்படுவாள். ‘அவளுக்குரியதே சிற்றில் விளையாட்டும் அதன் பல அங்கங்களும்,’ என்பது தமிழ்த்தாத்தா உ. வே. சா. அவர்கள் கூற்று1.

    பாவைகள் பலவகைப்படும். பாவைநோன்புக்கான பாவைகள் ஆற்றுமணலினால் செய்யப்படும் என அறிகிறோம். ஆனால் இது பாவை விளையாட்டு. சிறுமியர் தம் கையாலெடுத்துச் சீராட்டிப் பாலூட்டி, உறங்கவைக்க பாவைகள் உறுதியாக இருக்க வேண்டுமன்றோ? இவை சிவந்த சந்தனமரத்தினால் செய்யப்படும். ‘மரப்பாச்சி’ என்று கூறுவர். இவற்றிற்குச் சிறுமியர் ஆடைகள் உடுத்தி, தாம் வேண்டும்விதம் அழகுசெய்து விளையாடுவர். இன்றும் இப்பொம்மைகள் புழக்கத்தில் உள்ளன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. இவை இல்லாதபோது, பாவைகள் பழந்துணிகளாலும் தென்னோலையாலும் செய்யப்படுவதும் உண்டு.

    ‘பாவைவிளையாடல்’ என்பதனை ஒரு பருவமாக மூன்று பாடல்களுடன் நாம் காண்பது நல்லதுக்குடி கிருட்டிணையர் இயற்றியுள்ள தில்லைச்சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் ஒன்றில் மட்டுமே ஆகும். ஆயினும் பாவை விளையாடலின் தொடர்பான கூற்றுக்களை மற்றுமுள்ள பல பிள்ளைத்தமிழ் நூல்களில் பல பருவங்களில் குறிப்பிடக் காண்கிறோம். சிலவற்றை இங்கு நினைவுகூர்தல் நன்மை பயக்கும்.

    சேயூர் முருகன் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்தில் தமது சிற்றிலை அழிக்க முற்படும் சிறுவனான குமரப்பெருமானிடம் அச்சிற்றிலை இழைத்த சிறுமியர் வேண்டுவதாக அமைந்ததொரு பாடல்:

    “நாங்கள் உலைப்பெய்து சமைத்த உணவு, அதனை வைத்த பெரும் சிப்பிகள் (நந்தின் கடம்), அடுப்பென எரியும் மாதுளைமலர்கள் ஆகியன அழிந்துபடுமே!

    “நாங்கள் திருமணம் என்று கூறிக் கொண்டுவந்த சிறுவிருந்தும் வீணாகிப் போகாதோ?”

    ஆண்பாற் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்தில் நாம் கண்டதொரு காட்சியின்படி (இத்தொடரின் பாகம் 8.1) இவர்கள் உலையேற்றிச் சமைப்பது ஒரு பாவனை விளையாட்டே. பாவைத் திருமண விருந்திற்கு அவரவர்கள் இல்லங்களிலிருந்து தாய்மார்களிடமிருந்து உண்மையான சுவையூறும் தின்பண்டங்களை முறைவைத்துக்கொண்டு பெற்று வருவர்; பகிர்ந்துண்ணுவர் என அறிகிறோம். (எம் தலைமுறையைச் சேர்ந்த பெண்மணிகள் தம் பிள்ளைப்பருவத்தில் இவ்விளையாட்டை விளையாடியிருப்பதனால் அறிவர்!!)

                 நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ
                       நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
             ………………………………………………………………….. அடியேம் வதுவையெனச்
                       சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ2

    அடுத்த வரிகள் பெண்குழந்தையின் கவனிக்கும், உய்த்துணரும் திறனை நமக்கு உணர்த்துகின்றன. தம் தாய்மார்கள் பச்சிளம் குழவியர்க்கு முலைப்பால் அருத்துவிப்பதனைக் கண்டிருக்கும் இவர்கள் தாமும் தம் பாவைகளுக்கு அவ்வாறு செய்ய முற்படுகின்றனர். முகைப்புண்டரிகம் எனும் தாமரைமொட்டுக்களை இன்னும் வளர்ச்சியடையாத தம் மார்பில் கட்டிக்கொண்டு (உரம் பிணித்து), அதனை முலை என்று பாவித்துக்கொண்டு பாவைகளுக்குப் பாவனையாக முலைப்பால் கொடுக்கின்றனர். ஐந்தாறு வயதுச் சிறுமியரின் உய்த்துணரும் திறன் வியக்கத்தக்கதாம். ‘சிற்றிலைச் சிதைத்தால் இவ்வாறு பால்கொடுத்துப் பின் உறங்கவைத்த அக்குழவி கண்விழித்தெழுந்து அழாதோ?’ எனவும் கேட்கின்றனர்.

                முகைப்புண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
                       மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
             திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
                       சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே2.

    திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ் சிற்றிற்பருவப்பாடல் இன்னொரு நயத்தை விரிக்கின்றது. திருமணம் என்பது ‘ஆயிரங்காலத்துப் பயிர்’ எனப் பெரியோர் கூறுவதனைக் கேட்டுள்ள சிறுமியர், தாமியற்றும் பாவை மணமும் ‘பலவாறு முயன்று அலைந்து திரிந்து’ நடத்தும் மணவினை என்பதாகக் கூறுவது வியப்பையும் நகையையும் ஒருசேரக்கூட்டுகின்றது.

    “உன் தந்தையான சிவபிரான் முன்பு புத்தூரைச் சேர்ந்த பாவை ஒருத்தியின் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய காரணத்தால் பின்னொருநாள் இருகால்களும் நோகும்படி, திருவாரூர் வீதியெங்கும் இரவில் பலமுறை நடந்தலைந்ததனை நீ அறியாயோ?”

    புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் மகளுடனான சுந்தரரின் திருமணத்தைத் தடுத்து, அவரைத் தன்னடிமையாக்கி ஆட்கொண்டான் சிவபிரான். பின்பு அந்த சுந்தரருக்காகவே, அவரிடம் பிணக்கு கொண்ட அவருடைய மனைவியாகிய பரவை நாச்சியாரிடம் பலமுறை திருவாரூர் வீதிகளில் திரிந்தலைந்து தூது சென்றான் அவ்வீசன். இதனைச் சிறுமிகள், ‘அவன் முதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய பாவத்திற்காகத்தான் இங்ஙனம் திரிந்தலைந்தான்,’ என்று கூறுகின்றதாகப் புலவர் அமைத்துள்ள நயம் வியக்கத்தக்கதாம்.

    “அதுபோன்று நீயும் எம் பாவையின் திருமணத்தைத் தடுத்து நிறுத்துவையாயின், உன் மலர்ப்பாதங்கள் நோகும்வண்ணம் எத்துணை பெண்களிடம் தூதாக நடக்க வேண்டிவருமோ?” எனவும் இகழ்ச்சியாகக் கூறுகின்றனர்.

                ‘உந்தை புத்தூர் வருபாவை ஒருத்தி மணத்தை ஒருகால்முன்
                       ஒழித்த பவத்தால் இருகாலும் உறுத்த ஆரூர் வீதியெலாம்
             முந்தை யிருளில் நடந்தலைந்த முறைமை யறியாய்ப் பலகாலும்
                       முயன்று பாவை பலர்க்குமணம் முடிக்கக் கருதும் வேளையிடை
             வந்து சிதைத்தி யிப்பாவம் மலர்க்கால் சிவக்க எத்தனைகால்
                       மகளிர் பால்நீ தூதாக வருந்தி நடக்கப் புரிந்திடுமோ3?’ என்பது பாடல்.

    மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்து இனிய பாடலொன்று பாவைவிளையாட்டின் மற்றுமொரு சுவையான காட்சியைக் கண்முன் விரிக்கின்றது.

    தமது சிற்றிலை அழிக்க ஓடோடிவரும் சிறுவனான தென்பேரைநாதனிடம் சிறுமியர் கைகூப்பி வேண்டுகின்றனர்: “அன்பாக அணைத்து, முலைப்பால் ஊட்டி, புனலில் நீராட்டி, அருமையாகக் கண்களுக்கு மையிட்டு அலங்கரித்து, ஆரங்களை அணிவித்து, பட்டாடை உடுத்தி வைத்துள்ள என் மகவுக்கு (பாவைக்கு) உனது திருப்பெயரையே சூட்டுவேன். தயவுசெய்து எமது அழகான சிற்றிலை அழிக்கவேண்டாம்,” என்கின்றனர்.

                அன்போடணைத்து முலைகொடுத்தின்
                      னமுதூற்றறிருக்கும் புனலாட்டி
             அருங்கட் கடைக்கஞ் சனமெழுதி
                       ஆரந் திருத்திப் பட்டுடுத்தி
             உன்பே ரிடுவே னென் குழவிக்கு4
                       …………………………….

    வீட்டுப் பெரியவர்கள் பெயரையோ தெய்வங்களின் பெயரையோ சிறுகுழந்தைகளுக்கு இடும் வழக்காற்றை இச்சிறுமிகள் கண்டு உணர்ந்துள்ளனர் என்பது இதனாற் புலனாகின்றது அல்லவோ?

    பெண்குழந்தைகளின் விளையாட்டை ஊன்றி நோக்கிய புலவர் பெருமக்களால்தான் இவ்வாறு சுவைபடப் பாடவியலும்!

    இதுபோன்று பலவிதமான நயமிகுந்த பாடல்கள் இவ்விலக்கியம்தோறும் விரவிக் கிடப்பதனைக் காணலாம்.

    இனி பாவைவிளையாடல் எனும் பருவத்தில் உள்ள பாடல்களைக் கண்டு களிப்போமா?

    தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழினை இயற்றியவர் ஒரு சக்தி உபாசகர். அன்னை பராசக்தியின் அருளிலேயே ஆழ்ந்தவரான அவருக்கு அன்னை சிறுமியாய் விளையாடும் விளையாட்டுக்கள் அனைத்துமே அகக்கண்ணில் அவளுடைய திருவிளையாடல்களாகக் காண்கின்றன.

    தெய்வங்களின் பாவைகள், மானிடர் வடிவங்கள், விலங்குகள், கடலில்வாழும் உயிர்கள் இவற்றின் பாவைகள், பறவைகளின் பாவைகள், தரையில் ஊர்ந்துசெல்லும் புழுபூச்சிகளின் பாவைகள், மரம், செடி, கொடி எனும் அனைத்துப் பாவைகள் என ஓரறிவு உயிர்முதல் ஐந்தறிவு, ஆறறிவு படைத்த உயிர்கள்வரை அனைத்துமே பராசக்தி தன் விளையாட்டிற்காக உருவாக்கி வைத்துள்ள பாவைகளாம். இந்தப்பாவைகளை எல்லாம் எண்பத்து நான்கு இலட்சம் வகைகளில், எண்ணற்ற வடிவங்களில் இவளே செய்கிறாளாம்.

              “வல்ல தெய்வப் பாவை மானிடப்
                       பாவையொடு வாழ்விலங்கின் பாவையும்
             மறிதிரைப் புனலிடை வழங்கிடும் பாவையும்
                       மருவு பறவைப் பாவையும்
             ஒல்லையில் நெளிந்துதாம் ஊர்ந்திடும் (ஒல்லை- விரைவு)
                       பாவையும் உறும் தாவரப் பாவையும்
              ஒரு பொறிப்பாவை முதல் ஐம்பொறிப் (ஒருபொறி- ஓரறிவு)
             பாவையும் உற்றிடும் பாவை எல்லாம்5
    …………………………………………” என்பன பாடல் வரிகள்.

    இப்பாடலில் உட்கருத்தாகப் பரிணாம வளர்ச்சி பற்றிய சிந்தனைகள் பொதிந்துள்ளதனைக் காணலாம். ஓரறிவு படைத்த உயிர்களான புல், மரம் ஆகிய தாவரப் பாவைகள், ஈரறிவுயிர்களான சிப்பி, கிளிஞ்சல் ஆகிய கடல்வாழ் உயிரினங்கள், மூவறிவு படைத்த உயிர்களான ஊர்ந்து செல்லும் எறும்புகள் முதலியனவும், நான்கறிவு கொண்டவையான நெளிந்து ஊர்ந்து செல்லும் சிலவகைப் புழுபூச்சியினங்களும், ஐந்தறிவு கொண்ட உயிர்களான பறவை இனங்களும், பஞ்சபூதங்களாலான உடல்களில் ஒன்றன்பின் ஒன்றாகப் படைக்கப் பட்டிருப்பதனை பாடல் வரிசைக்கிரமமாக விளக்குகிறது. மானிடர் ஆறறிவு படைத்த உயிர்களாகக் கருதப்படுவர்.

    இவற்றை அன்னையின் விளையாட்டாகக் கொள்வது அடியார்களின் நோக்கு. ‘இயற்கை நிகழ்வு’ என நாம் பல காலங்களாகப் பயின்றுவரும் பரிணாம வளர்ச்சி எனும் அறிவியல் சிந்தனை, அவ்வியற்கையையும் இயக்கும் இறைத்தத்துவமாக அடியார்கள் சிந்தையில் பதிந்துள்ளது என்பதனை நாம் கண்டு சிந்திக்கத்தக்கதாகும்.

    அடுத்துக்காணும் பாடலில் அன்னையை இளம் சிறுமியாகக் கண்டு மகிழ்வார் புலவர். சிறுமியர் விளையாடும் சிற்றில் எனும் சிறுவீடமைத்தல், சிறுசோறடும் விளையாட்டு, பாவைவிளையாட்டு ஆகியன அழகிய இப்பாடலில் ஒருசேரக் கூறப்பட்டுள்ளன.

    மணமாகாத இளமைப்பருவத்தில் சிறுமியர் சிலபொழுது தமக்குள் ஒருவரையொருவர் மணப்பெண் – மணவாளன் என்று முறைப்படுத்திக்கொண்டு மணமாலை சூட்டி திருமணச் சடங்கு செய்து விளையாடுவர். பின்பு தோழியர் புது மணப்பெண்ணுக்குச் சட்டுவம் பிடித்துச் சமையல்செய்யப் பழக்கித் தருவர்! பின்பு, ஒரு சிறுமகவைப் பிள்ளையாக்கி வைத்து அழும் அப்பிள்ளையின் அழுகையை நிறுத்தி, சேலையால் கட்டிய தூளியில் (ஏணையில்) இட்டுத் தாலாட்டவும், ‘நீ அழவேண்டா’ என்று கையிலெடுத்துப் ‘பால் உண்ணுக’ என்று முத்தமிட்டும், பிறர்காணாதபடி மறைவாக மார்பிலணைத்து முலைப்பால் கொடுத்தும் (கொடுப்பதுபோல் நடித்தும்), அதற்காக நாணங்கொண்டு தலைகவிழ்ந்தும் நிற்கும்வண்ணம் நீ பொற்பாவைகளைவைத்து விளையாடுக! என வேண்டும் பாடல்.

                கன்னியில் மணற்சிற்றில் விளையாடும்போது
                       முக்கண்ணி நீ தேவியெனவும்
             கடவுள் மணவாளனென மணமாலை
                       சூட்டவும்……………………..
             …………………………………………..
             ……………………………… ஊறுபால்
                       உண்ணுக என மணிவாயில் முத்தமிட்டு
             மார்பத்து எடுத்து அனைத்தும் பால்
                      கொடுத்து அயலின் மற்று நாணிக் கவிழ்த்தும்
             ………………………………………
             பரம சிவகாம சுந்தரி அம்மை
                      இனிய பொற்பாவை விளையாடி அருளே6!

    இதில் பொய்தல் விளையாட்டின் அனைத்துச் செயல்களையும் அழகுற விவரித்துள்ளதனைக் காணலாம்.

    இம்மூன்று பாடல்களில் ஒன்று பரிணாம வளர்ச்சி தொடர்பான இறைத் தத்துவத்தினையும், இன்னொன்று சிறுமியர் விளையாட்டைப் பூரணமாக அதன் சிறுநிகழ்வுகளுடன் சுவைபடவும் விவரிக்கின்றது. மூன்றாம் பாடலில் புலவரின் கவிதைத் திறனையும் அது பொதிந்துதரும் பல இனிய செய்திகளையும் கண்டு களிக்கலாம்.

    பாவை எனும் சொல்லை இப்பாடலில் திரும்பத்திரும்ப ஒன்பதுமுறை பயன்படுத்தி வெவ்வேறு கருத்துக்களைக் கூறுகின்றார்.

    உலகிற்குத் தலைவியாக விளங்கும் அம்மையான இவள் பாம்புகளாலான அணிகளையும், செம்பொன் நவமணிகளால் இழைத்த மாலைகளையும் அணிந்து விளங்கும் பாவை!

    உலகங்கள் அனைத்தையும் ஒருசேர ஆளவந்த பாவை!

    கிட்டுவதற்கே அரிதான குடிலை எனப்படும் பிரணவ மந்திரம் உலகத்தோருக்குக் கிடைக்கும்படி அருள் செய்யவந்த பாவை!

    உலக அதிசயம் எனக் கூறப்படும் கொல்லிப் பாவையும் இவளே!

    (கொல்லிப்பாவை என்பது அதிசயமானதொரு செய்தி! நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் உறையும் இக்கொல்லிப்பாவை ஒரு பெருநிலையான தெய்வமாவள். கொல்லிமலைக் குடவரையில் விளங்கும் இப்பாவைபற்றி கொங்குமண்டல சதகம் எனும் நூலில் சுவையானதொரு விளக்கம் காணலாம்).

    வணங்கிப் போற்றத்தக்கதொரு தெய்வப்பாவை!

    பல உயிர்களுக்கும் வீடுபேற்றை அருளக்கூடிய தாயாகிய சித்திரப்பாவை!

    விந்து, மோகினி, மான் எனக் கூறப்படும் சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி எனப்படும் மாயைகள் ஊழிக்காலத்தில் தன்னுள் அடங்கிவிடும் ஆதாரமான பாவை.

    மெய்ப்பொருளான தெய்வத்தைப் பரவி வழிபடுபவர்களும், பாடுவோரும்  அடைகின்ற சித்தி, முத்தி ஆகியவற்றின் வடிவான பொற்பாவை!

    ‘சிவகாமசுந்தரி அம்மையே, நீ பலவகையான பொற்பாவைகளை வைத்து விளையாடியருளுக!’ என வேண்டும் பாடலிது.

                  ‘நாடரும் சருப்பப்பூண் அணி செம்பொன்
                       மாலையுடன் நவமணி அணிந்த பாவை
             …………………………………………………….
                       …… குவலயத்து அதிசயம் எனாக்
             கொல்லியம் பாவையும் கும்பிடும் பசும்
                       பாவை குலவு பல்லுயிர்கட்கு எல்லாம்
             வீடருள் நற்றாய் எனும் சித்திரப்பாவையும்
                       ………………………………………..
             பாடவந்தவர் சித்தி முத்தி வடிவான
                       பொற்பாவை விளையாடி அருளே7!
             ……………………………………………………’ என்பது பாடல்.

    இவ்வாறு பொய்தல் விளையாட்டின் பல கூறுகளும் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களாகப் படைக்கப்பட்டது தமிழின் தனிச் சிறப்பன்றோ?

    இனித் தொடர்ந்துவரும் பகுதிகளில் பெண்குழந்தைகளின் மற்ற விளையாட்டுகளைக் காணலாம்.

    (தொடரும்)

    பார்வை நூல்கள்:

    1. சேறைக் கவிராச பிள்ளை- வாட்போக்கியுலா- முன்னுரை

    2. அந்தகக்கவி வீரராகவ முதலியார்- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்

    3. நடேச கவுண்டர்- திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்

    4. மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ்- சிற்றிற்பருவம்

    5, 6, 7. நல்லதுக்குடி கிருட்டிணையர் – தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்-பாவை விளையாடல் பருவம்.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 20

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 20

     மீனாட்சி பாலகணேஷ்

               (காமநோன்புப் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    அரிதாகப் பாடப்பட்டுள்ள பெண்பால் பிள்ளைத்தமிழின் அழகிய பருவங்களுள் ஒன்றே காமநோன்புப் பருவமாகும். இதுவும் ஆண்டாள் பிள்ளைத்தமிழ் ஒன்றில்மட்டுமே காணப்படுகிறது. முழுமையான பருவமாகப் பத்துப்பாடல்களால் பாடப்பட்டுள்ளது. திருமாலின் இராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியவற்றின் ஒப்பற்ற தொன்மங்களையும், ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியின் அழகமைந்த கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டு தனிப்பெருமை வாய்ந்து விளங்குகிறது இக்காமநோன்புப் பருவம்.

    ஆண்டாள், தான் காமநோன்பு மேற்கொண்டதனை, ‘தையொரு திங்கள்’ எனும் பாசுரத்தில் அழகுறப் பாடியுள்ளாள். ஆகவே இப்பிள்ளைத்தமிழை இயற்றிய புலவரும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திற்கேற்பப் பெண்பாற் பிள்ளைத்தமிழில் வரக்கூடும் ‘ஐங்கிணைக் கிழவனை ஆர்வமொடு நோற்றல்’ எனும் பருவத்தையே, சிறுமியர் ஆற்றில் நீராடி, பாவைகளைச் செய்து, ஐங்கணைக்கிழவனாகிய மலர் அம்பு வீசும் காமதேவனாகிய மன்மதனுக்கு சூடிக்கொடுத்த் சுடர்க்கொடியாள் ஆர்வமுடன் நோற்கும் நோன்பான ‘காமநோன்புப்பருவமாகப் பாடி மகிழ்ந்துள்ளார் எனலாம்.

    நூலில் இப்பருவம் பொன்னூசற்பருவத்தின் பின் கடைசிப்பருவமாக வைக்கப்பட்டுள்ளது. ஐந்து முதல் ஒன்பது வயதுள்ள சிறுமியரால் மட்டுமே செய்யப்படுவது காமநோன்பாகும். இது விளையாட்டன்றி, நல்லதொரு மணாளனை அடைய இளம்பெண்கள் நோற்கும் நோன்பாகும். இது வடநாட்டில் ‘காத்யாயனி நோன்பு’ என அறியப்படும். காத்யாயனி எனப்படும் அன்னை பார்வதியின் சகோதரனான கிருஷ்ணனை மணாளனாகப் பெற இளம்பெண்கள் நோற்ற நோன்பே இது. இது பற்றிய விளக்கங்களை ஸ்ரீமத் பாகவதத்தில் காணலாம்.

    ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழில் இப்பருவத்திலுள்ள பத்துப்பாடல்களும் ‘காமநோன்பது தவிர்கவே!’ எனும் சொற்களுடன் முடிவடைகின்றன. பாடல்களின் உட்பொருளை ஆழ்ந்து நோக்கினால், “பெண்ணே! நீ உன் செயல்களால், நீ நோற்ற நோன்பினால் அவ்விறைவனை அடைந்து விட்டாய்! இனிக் காமநோன்பு நோற்பதெதற்கு? அதனைத் தவிர்த்துவிடு,” எனக் கூறுவதனைக் காணலாம்.

    பிள்ளைத்தமிழ்ப் பாடல்களைக் காணப்புகுமுன் ஆண்டாள் எவ்வாறு காமநோன்பு நோற்றாள் என அவளே தனது திருமொழிகளில் பதிவு செய்துள்ளதனை அறிந்து கொள்ள வேண்டுமல்லவா?

    ஆண்டாளின் பாசுரங்கள் இந்நோன்பு நோற்கும் வகைமுறையை நன்கு விளக்குகின்றன. மார்கழிமாதம் முழுமையும் திருப்பாவை பாடி, பாவைநோன்பு நோற்றபின், தைமாதம் முழுவதும் தரையை நன்கு சுத்தப்படுத்தி, சம்பிரதாயமான கோலங்களை இட்டு வழிபாடு செய்யும் அவ்விடத்தை நன்கு அலங்கரிக்கிறாள் ஆண்டாள்.

    ‘தையொரு திங்களும் தரைவிளக்கித்
    தண்மண் டலமிட்டு1….‘ காமதேவனையும் அவன் தம்பி சாமனையும் வழிபடுகிறாள்.

    பின்பு கண்ணபிரான் வரும்வழியை நுண்ணிய வெண்மணலால் அலங்கரித்துவைத்து, கீழ்வானம் வெளுக்குமுன்பு எழுந்து நீராடி, காலை, பகல், மாலை ஆகிய மூன்றுபொழுதுகளிலும் பலவிதமான நன்மலர்களைச் சாற்றிக் காமனை வழிபடுகிறாள்.

    ‘காயுடை நெல்லொடு கரும்பமைத்துக்
    கட்டியரிசி அவலமைத்து2,’ அவற்றை ஒன்றுசேர்த்து, அக்கார அடிசிலாக்கிச் சமைத்தும், காமநூலில் தேர்ச்சி பெற்ற அந்தணர்கள் மந்திரம் ஓத, சுவரில் காமனின் பெயரை எழுதிவைத்து, அவனுடைய கொடி, குதிரைகள், கரும்புவில் ஆகியவற்றையும் எழுதிக்கொண்டும் காமனிடம் தன்னைக் கண்ணபிரானிடம் சேர்த்துவைக்க வேண்டிப் பூசிக்கிறாள். இவ்வாறெல்லாம் செய்தவள்,

    ‘மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
    வாழகில் லேன்கண்டாய் மன்மதனே3!’ என்றும் அவனிடம் தனது உறுதியையும் மொழிகிறாள்.

    இவ்வாறெல்லாம் நோன்புநோற்றதனால்தான்

    ‘மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
    முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
    மத்துனன் நம்பி மதுசூதனன் வந்து தன்னைக்
    கைத்தலம் பற்றக் கனாக்கண்டு4 பின் அக்கண்ணனையே மணாளனாகவும் பெற்றனள் அல்லவோ? ஆகவே அவள் இன்னும் எதற்காகக் காமநோன்பு நோற்றல்வேண்டும்? ‘அதனைத் தவிர்ப்பாயாக!’ என்று வேண்டும் பாடல்கள் சுவையானவை.

    ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களில் சிலவற்றை நோக்கலாமா?

    புலவர் கூறுவார்: ‘தமிழால் ஆன பாமாலைகளே தனக்கு விருப்பமானவை என்றும்,  கையால் தொடுத்துப் பூமாலை அணிவித்துத் தொண்டுசெய்யும் அன்பர்களே தனக்கு விருப்பமான தொண்டர்கள் என்றும் கொண்டு ஒப்பற்ற ஒளிவடிவாகிய திருமால் திருமழிசை ஆழ்வார், கணிகண்ணன் ஆகியோர் பின் சென்றான்.

    அத்திருமாலானவன் தான் பள்ளிகொண்டிருக்கும் பாற்கடலை விட்டு நீங்கி, திருமாலிருஞ்சோலைமலை, வேங்கடமலை ஆகிய இருமலைகளின் மீது இருவடிவங்கள் தரித்து உன்னைப் பெறுவதற்காகத் தவம் செய்து நிற்கின்றனனே!

    பொன்னி நதியான காவேரியின் நடுவில் (திருவரங்கத்தில்) பள்ளிகொண்டுள்ள அவன் தன் மதிமுகத்தினைத் தெற்குநோக்கி வைத்தவண்ணம் துயில்கின்றான். அவனுக்கு இரு தேவியர் காவல் உள்ளனர். இருப்பினும் தேவாமுதத்தினையும் சிறந்த செல்வத்தையும் அடைய காவல்களை மீறிச்செல்ல யார்தான் தயங்கமாட்டார்கள்? அமுதம்போன்ற உன்னையடைய அவன் இக்கட்டுக்காவல்களால் தயங்கிநிற்பானோ எனும் பொருள் தொக்கிநிற்கின்றது.

    புதுவை அந்தணர்களில் சிறந்தவரான ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரியாழ்வாரின் புதல்வியே! இதனால் நீ காமநோன்பினைத் தவிர்த்தல் வேண்டும்,’ எனும் கருத்துச் செறிந்த பாடல்.

    ‘சொல்தமிழ்ப் பாமாலை நாட்டியும் பூமாலை
               சூட்டியும் தொண்டுபுரிவார்
    தொண்டர்தம் தொண்டரென்று அவர்கள்பின் தொடரும்…
                 ………………………………….
    உம்பரமு தும்திருவும் எய்துதற்கு எவர்களே
                உலகத்தில் எதிர்கொண்டிடார்?
    கற்றவர் புகழ்ந்ததென் புதுவைஅந் தணர்புதல்வி!
                காமநோன் பதுதவிர்கவே5!’ என்பன பாடல்வரிகள்.

    ‘உன்னையடைய அவ்வேங்கடவன் தவமியற்றுகிறான், நீ எதற்காக நோன்பியற்றுகிறாய்?’ என்றுகூறிக் காமநோன்பினை அவள் தவிர்க்க வேண்டியதனை வலியுறுத்தும் சுவையான பாடலிது.

    மற்றொரு பாடல் இன்னும் கற்பனைவளம் சுரக்க அமைந்துள்ளது. புலவர் கூறுவார்:

    ‘அண்ணல் அவன் சுந்தரத்தோள் அழகன் என உலகம் கூறுவது என்னவோ உண்மைதான். ஆனால் மறைகளோ அது பொய் என்பதுபோல, அவனை ‘ஆண் அல்லன், பெண் அல்லன், அலி அல்லன்’ என்றும், (குள்ள)வாமன வடிவங்கொண்டவன் என்றும் தூற்றுவது போலப் போற்றும்!

    ‘முன்பு வெண்ணெய் திருடி உண்ட குற்றம் ஒன்று மட்டுமின்றி, வேறுபல குற்றங்களும் செய்தவன் அவன்! மாடுகளை மேய்ப்பவன்! ஆயர் குலத்தவன்; வில்விசயனுக்குத் தேர்ப்பாகனாக ஏவல் செய்திருந்தவன்.

    ‘மண்ணாசை கொண்ட பாண்டவர்களுக்காக ஓலையைத் தூக்கிக்கொண்டு தூதனாக அலைந்தவன். இவன்மீது அடுக்கிக்கூற வேறு என்னவெல்லாம் குற்றங்களைச் செய்துள்ளானோ? அவனிடம் நீ வலிந்து  ஆசைகொண்டது ஏனோ? (உன்னை மணக்க அவனிடம் என்ன தகுதி இருக்கின்றது?) உன் காமநோன்பைத் தவிர்க!’ என் வேண்டுவதாக அமைந்த பாடல்.

    அண்ணலார் சுந்தரத் தோளழக ரெனுமுலகம்
               அஃதுண்மை யன்றிமறைதான்
    ஆணலன் பெண்ணல்ல னலியல்ல னென்பதுடன்
               அரியகுற ளுருவனென்றும்
     ……………………………………………………………..
    மற்றுமெக் குற்றமென் றெண்ணுவே னவனைநீ
    வலியவேட் கின்றதென்னோ
             கண்ணகன் புத்தூர் விளங்கவரு கோதையே
    காமநோன் பதுதவிர்கவே!6
             ……………………………………………………….’

     ஈண்டு,

    ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
    கானலும் ஆகான்; உளனல்லன்; இல்லையல்லன்
    பேணுங்கால் பேணு முருவாகும்; அல்லனுமாம்
    கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே!7 எனும் ஆழ்வார் பாடல் நினைவுகூரத்தக்கதாம்.

    திருமாலின் பெருமைகளை, அவற்றை மாற்றி இழிசெயல்களாகக் கூறுவது போலக்கூறி (தூற்றுமறைத் துதியாக) அத்தகைய ஒருவனை மணக்கவா இக்காமநோன்பு? அதனைத் தவிர்ப்பாயாக என்கிறார் புலவர்! வளமான, சுவையான, இனிமையான கற்பனை!

    மேலுமொரு பாடலில் காமனையும் ஆண்டாளையும் ஒப்பிடுகிறார் புலவர்.

    ‘காமனிடமுள்ளது ஒரு கரும்புவில்; இளங்குமரி உன்னிடமோ இரு கரிய புருவங்களெனும் வில் உள்ளது. காமன் பொருத்தமான தேன்சிந்தும் கருங்குவளை மலரம்பினை வண்டெனும் நாணைப்பூட்டிச் செலுத்துவான்; நீயோ, உன் கண்மலர்களாகிய அம்புகளை அழகாக அவை புகவேண்டிய இடத்தில் (அரங்கன் நெஞ்சினில்) கருணை எனும் நாண்கொண்டு செலுத்தி அவனுடைய நிறையெனும் அறிவைத் திறைகொள்ளும் பார்வையையுடையவள்.

    ‘ஒருகரும்பு ருவவிற் குமரனவ னிருகரும்
                 புருவவிற் குமரியாநீ
     ஒன்றுகட் காவியம் பாணத்தை யளியநா
                ணுறநின் றுடக்குமவன்8,’        

    ‘இருளையே தன்னிடமாகக் கொண்ட இரவே காமனுக்கு யானையாகும். நீயோ தாபத்தினால் பெருமூச்சு எழுவதனால், ஈரம் வற்றாத கத்தூரியை அணிந்ததும், அணியப்பட்ட கச்சுடன் நிமிர்ந்து விளங்குவதுமான முலைகளை இருயானைகளாகக் கொண்டவள்.

    ‘கரியமுகில் போன்ற அழகரைக் காதலில் வெற்றிகொள்ள இத்துணை தகுதிகள் உனக்கிருக்க, நீ உருவமற்ற காமனை ஏன் வேண்டி நிற்கிறாய்? உன் அழகிய திருவுருவே போதுமே! காமநோன்பினைத் தவிர்த்து விடுக!’ எனக் கூறும் பாடல்.

    கருமுகிற் குழகரழ கரைவெல்ல வுருவிலாக்
                 காமனேன் வில்லிப்புத்தூர்க்
    கன்னியே! நினதுதிரு வுருவொன்று மமையுமே
                 காமநோன் பதுதவிர்கவே8.

    இதுபோன்றே அடுத்தடுத்த பாடல்களில் ‘வாரணமாயிரம்,‘ எனும் நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கனாக்கண்டதாக விவரிக்கும் வரிகளை நினைவுகூரவைத்துப் பாடல்களை இயற்றியுள்ளமை மிக்க நயமானதாகும்.

    ஐங்கணைக்கிழவனான காமவேளை ஆர்வமுடன் சிறுபெண்கள் வழிபடுவது என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கமாகும். இதற்குப் பாவைநோன்பும், ஆண்டாள் திருப்பாசுரங்களும் சான்றுகளாக உள்ளன.

    பிள்ளைத்தமிழ் இலக்கண நூல்கள் வகுத்த இலக்கணத்திற்குப் பொருந்த சிற்சில பிள்ளைத்தமிழ் நூல்களிலேயே அவ்வருமையான பருவங்களைப் புலவர்கள் பாடிப் பதிவு செய்து வைத்துள்ளதனைக் காண்கிறோம். ஆகவே இவை படித்துப் போற்றி மகிழத்தக்கனவாக விளங்குகின்றன.

    இனி அடுத்த பகுதியில் பொய்தல் விளையாட்டின் மற்றொரு பருவத்தைக் கண்டு களிப்போம்.

     பார்வை நூல்கள்:

    1, 2, 3. ஸ்ரீ ஆண்டாள்- நாச்சியார் திருமொழி “தையொரு திங்கள்”

    4. ஸ்ரீ ஆண்டாள் – நாச்சியார் திருமொழி “வாரணமாயிரம்”

    5, 6. ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.

    7. ஆழ்வார் பாடல் – திவ்வியப்பிரபந்தம்.

    8. ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.

    (தொடரும்)

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 19

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 19

    மீனாட்சி பாலகணேஷ்

    (சிறுசோற்றுப் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்மக்களின் வளர்ச்சியில் ‘பொய்தல் விளையாட்டு’ பெரும்பங்கு வகிக்கிறது. பெண் குழந்தைகள் உடல், உள, மன வகையாக வளர்ந்து தமது குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளத் தயாராவது இவ்விளையாட்டுகளால்தான்.

    இவை சிற்றில் இழைத்தல், சிறுசோறு சமைத்தல், பாவை விளையாடுதல், குழமணம் மொழிதல் எனப் பல சிறு விளையாட்டுகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது. பெண்குழந்தைகள் சிற்றில் இழைத்தலைப் பற்றிய விளக்கங்களை இத்தொடரின் 18.1 & 18.2 ஆகிய பகுதிகளில் கண்டோம். ஆண்பால் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்திலும் பெண்குழந்தைகள் இழைக்கும் பலவிதமான சிற்றில்கள், அவர்கள் சமைக்கும் சிறுசோறு ஆகியன பற்றிய அழகான விளக்கங்களைக் காணலாம் (இத்தொடரின் பகுதிகள்11.1 & 11.2). மிகச்சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் மட்டுமே சிற்றில் பருவம் பாடப்பட்டுள்ளது. சிறுசோறு அடுதல்/சமைத்தல் என்பது இதில் ஒரு செயலாகவே அடங்கிவிட்டதனையும் காணலாம். ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ் ஒன்றில் மட்டுமே இதனை ஒரு தனிப்பருவமாகவே இதனை இயற்றிய புலவர் (பெயர் தெரியவில்லை) பாடிவைத்துள்ளார்.

    பதிப்பு ஆண்டை நோக்கினால், இப்பிள்ளைத்தமிழ் ஆண்டாள் வாழ்ந்த காலத்திற்கு நீண்டநாட்களுக்குப்பின் பாடப்பட்டது. ஆண்டாளின் காலம் கி. பி. 8-ஆம் நூற்றாண்டாக இருக்கும் என்பது சரித்திர, ஆன்மீகவாதிகள் கூற்று. இப்பிள்ளைத்தமிழோ கி. பி. 18-ஆம் நூற்றாண்டில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பிள்ளைத்தமிழ் நூல்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் பின்னரே எழுதப்பட்டன. அனைத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களுக்கும் முன்னோடியாகக் கருதப்படும் பெரியாழ்வாரின் (இவரே ஆண்டாளின் வளர்ப்புத் தந்தையுமாவார்) கண்ணன் மீதான திருவாய்மொழியும் இக்காலத்திலேயே படைக்கப்பெற்றது.

    ஆண்டாள் எனும் தெய்வத் திருமகள் ஒருவளே மார்கழி, தைந்நீராடலையும், காமநோன்பு நோற்பதனையும், அவற்றினூடே சிற்றிலிழைத்தல், சிறுசோறு சமைத்தல் ஆகியனவற்றையும் பெண்மக்களின் விளையாட்டாக மட்டுமின்றி, நாடும் வீடும் நலம்பெற வைக்கும் ஒரு வழிபாடாகவும் காட்டி அழகுறத் தனது பாசுரங்களில் பாடிவைத்துள்ளமை வியத்தற்குரியதாகும். இதனால்தானோ என்னவோ புலவரின் கற்பனையும் கவித்திறனும் அவளிழைக்கும் சிற்றிலையும் சமைக்கும் சிறுசோற்றினையும்  இரு இனிய பருவங்களாக்கி ஒவ்வொன்றினையும் பத்துப் பாடல்களால் பாட வாய்ப்பினையும் அளித்தது எனலாம்.

    ‘மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
    கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!1′ எனும் திருப்பாவையில் ஆண்டாள் எவ்வாறு சிறுபெண்களாகிய தாங்கள் அக்கார அடிசிலைச் செய்து அதில் நெய்பெய்து முழங்கையில் வழியுமாறு அனைவருடனும் சேர்ந்து உண்போம் எனப் பாடுகிறாள்.

    இதுபோன்று குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழின் வருகைப் பருவத்துப் பாடலொன்றில் மிகவும் நயமாக  அன்னை பார்வதி ‘ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு’ முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றி ‘விளையாடிக் கொண்டி’ருப்பதனைக் கூறுவதனைக் காண்கிறோம்.

    ‘லீலா க்லுப்த ப்ரஹ்மாண்ட மண்டலா2 என லலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு நாமம் பார்வதிதேவி அன்னைக்கு உண்டு. விளையாட்டாகவே இவ்வுலகங்கள் அனைத்தையும் படைப்பவள் என்பதுதான் அதன் பொருள். பேரண்டமாகிய இந்த உலகினையே சிற்றில் இழைப்பதாக அவள் பாவனை செய்துகொண்டு இழைத்து, மிக அருமையாக, ஆசையாக, விதம்விதமாக, அழகாகப் படைக்கின்றாள்; பின் படைத்த உலகங்களில் வாழும் உயிர்களுக்கு உணவளிக்கச் சிறுசோறாக்குகிறாள்.

    இருவினைப் பயன்களே சிறுசோறெனச் சமைக்கப்படுகின்றன! சிறுமியாகிய நம் அன்னை இவ்வுலகில் உள்ள எண்பத்துநாலாயிரம் கோடிவகை உயிர்களையும் தான்விளையாட உயிருள்ள பாவைகளாகச் செய்விக்கிறாள். அவற்றை மலங்கள் எனப்படும் கருமவினைப் பயன்கள் நாள்தோறும் வருத்தித் துன்பத்தில் ஆழ்த்தியவண்ணம் உள்ளன. ஆகவே அவள் சமைத்து வைத்துள்ள இருவினைப் பயன்களெனும் சிறுசோற்றினை அந்தப் பாவைகளுக்கு உண்ணக் கொடுத்து அவற்றின் பசியைப் போக்கி அருளுகிறாள் அவள். ஒருநாளல்ல, இரு நாட்களல்ல, பொறுமையாகச் சலிப்பின்றி, கற்பகோடி காலங்களாகப் பாராசக்தி அன்னை எனும் சிறுமி செய்து வரும் விளையாட்டு இதுவாகும். இவ்வாறு செய்யும் பராசக்தி எனும் சிறுமி விளையாடுமிடம் பரமானந்தப் பெருவீடு எனப்படும் உயர்ந்த ஞானப் பெருவெளியாகும். அதாவது அவளை உணர்ந்து கொண்டவர்களுக்கே அவளுடைய இவ்விளையாடலையும் இக்கண்ணோட்டத்தில் உணர்ந்து போற்றவியலும் என்பதே பாடலின் உட்பொருள்.

            ‘கடிகொண் டலரு நறுங்கடுக்கைக்
                       கடவுண் மகிழப் பேரண்ட
             கடாகப் பரப்பே சிற்றிலெனக்
                       கருமப் பகுப்பே சிறுசோறாம்,
             படிகொண் டுயிராம் பாவைகட்குப்
                       பைதன் மலநோய்ப் பசியிரியப்
             பல்கா லயிற்றி விளையாடிப்
                       பரமா னந்தப் பெருவீட்டிற்
             குடிகொண் டிருக்குந் தீங்கொம்பே3

     …………..’ என்பன இப்பாடலின் அழகிய பொருள்செறிந்த வரிகளாகும்.

    இதனால் பெண்மக்கள் சிற்றிலிழைப்பதும் சிறுசோறு சமைப்பதும் பல பிள்ளைத்தமிழ் நூல்களிலும் தனியாகப் பாடப்படாவிடினும், அந்நூல்களின் மற்ற பருவங்களில் அவை ஒரு அழகான செய்தியாக அற்புதமான உவமைகளுடன் கூறப்படுகின்றன என அறியலாம்.

    இனி ஆண்டாள் பிள்ளைத்தமிழிலிருந்து சில பாடல்களைக் கண்டு மகிழலாம். இயற்றப்பட்ட பத்துப்பாடல்களில் கிடைத்தவை ஆறு பாடல்களேயாம்.

    முதற்பாடல் தேவர் முதலானோர் கூறுவதாக உள்ளது. அவர்கள், “திரிசூலமேந்திய சிவபெருமான் தொட்டுண்ட மிச்சத்தினை நாம் இங்கு உண்ண இயலாது; அவன் இருக்குமிடமோ சுடுகாடு; அவன் மாலையாக அணிந்துள்ளவை எலும்புகள்; அவன் மண்டையோட்டில் உண்ணுதற்காகப் பலியினை ஏற்பவன்; ஒரு அன்னையிடம் பிள்ளையை அறுத்துச் சமைத்து உணவிடக் கூறியுண்டவன்; (ஈண்டு சிறுத்தொண்ட நாயனார் கதை உள்ளடக்கமாகக் கூறப்பட்டது); இது எமக்குச் சரிப்படாது; ஆதலால் பிரமன் முதலானவர்கள் அவனை விட்டுவிட்டு உன்னிடம் வந்து நீ அமலனான எம்பெருமானுக்கு ஊட்டி உண்ணுகின்ற உணவின் சேடத்தை (மிச்சத்தை) உண்பதே உசிதம் என்று எதிர்பார்த்து நிற்கின்றனர். புதுவை எனும் ஸ்ரீவில்லிப்புத்தூர்ப் பிராட்டியே! நீ சிறுசோறு இழைத்தருளுக!

    தென்னரங்கத்துப் பெருமான், திருமாலிருஞ்சோலைப் பெருமாள், திருமலைப்பிரான், திருத்தண்கா அப்பன், ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்ரசாயி ஆகிய ஐவரும் விருந்துண்ணுமாறு சிறுசோறு சமைத்தருளுக,” என வேண்டுகிறார் புலவர்.

             ஊனறாச் சுடர்முத் தலைக்குல பாணிதொட்
                       டுண்டதீங் கொருவ ருண்ணா
             ……………………………………………………..
             தானமுஞ் சுடுகாடு தமமென் பூனுடைத்
                       தலையிலிடு பலியை யுண்பான்
             ……………………………………………………
             ஆனதா லவனைவிட் டிங்குவந் தன்னைநீ
                       யமலனுக் கூட்டி யுண்ணு
             மச்சேட முண்பதே யுசிதமென் றயனைமுத
                       லவர்களெதிர் கொண்டு நின்றார்
             ………………………………………………
             தென்னரங் கேசன்முத லைவரும் விருந்துணச்
                       சிறுசோ றிழைத்தருள்கவே 4.

    மேற்காணும் பாடலில் ஆண்டாள் அரங்கப்பெருமானுக்கு ஆக்கும் சிறுசோற்றின்பெருமை விளம்பப்பட்டது. மற்றொரு பாடலில் உலகத்து உயிர்கட்கெலாம் சிறுசோறு இழைக்குமாறு ஆண்டாளை வேண்டும் நயம் மிகவும் அருமையாக உள்ளது.

    உயிர்களையெல்லாம் படைத்து, அவற்றிற்கு உரிய வீடுகள் எனப்படும் உடல்களில் குடியேற்றி, அவை உயிர்வாழத் தேவையான உணவெனும் இருவினைப் பயன்களையும் ஊட்டுபவள் அன்னை தெய்வம் எனும்  ஆழ்ந்த கருத்து இதனால் பெறப்படுகின்றது.

    மேலும் ஆண்பாற்பிள்ளைத்தமிழின் சிற்றில் பருவத்துப் பாடல்கள் பெரும்பாலும் பெண்குழந்தைகளின் வேண்டுதல்களாகவே அமைவதனையும் முன்பே இத்தொடரின் பகுதி-11.1 & 11.2-இல் கண்டோம். இவற்றில் தாமிழைக்கும் சிற்றிலை அழிக்க வேண்டாம் என்றும், சமைக்கும் பாண்டங்களை உடைக்க வேண்டாம் என்றும், அடுப்புத்தீயை அவிக்க வேண்டாமெனவும், பாவைத்திருமண விருந்தினை வீணாக்க வேண்டம் எனவும் பலவாறாக வேண்டும் சிறுமியர் கூற்றுகள் மிகவும் நயமானவை; சுவைமிகுந்தவை.

            ‘நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ
                                நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
             தொகைத்தண் பவள விளக்கணைந்து விடாதோ வடியேம் வதுவையெனச்
                               சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ
             முகைப்புண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
                               மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
             திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
              சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே5,’ என்பது சேயூர் முருகன் பிள்ளைத்தமிழின் இனிய பாடல். பலமுறை கேட்டாலும் தெவிட்டாத கவியமுதம்.

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலும்6 குமரகுருபரனார், திரும்பத் திரும்பப் புதியதாக உலகங்களைப் படைத்து, கலங்களைத் திரும்பவும் கழுவி அவற்றில் புதுக்கூழ் சமைத்து சலியாது  உயிர்களுக்கு ஊட்டும் சிறுபெண்ணாக மீனாட்சியம்மையைச் செங்கீரைப் பருவப் பாடலொன்றில் அழகுபட உரைக்கின்றார். இதனைப் பகுதி 11.2-இல் காணவும்.

    ஆண்டாள் பிள்ளைத்தமிழ் சிறுசோற்றுப் பருவத்தின் மற்றொரு இனிய பாடலைக் காண்போம்:

    பறவைகள், விலங்குகள், மீன்வகைகள், ஊர்வன, தாவர வகைகள் என்பன ஆண், பெண், அலி எனும் முப்பாற்பட்டன. இவை தவிர, எண்ணிக்கையில் இன்னும் மேற்பட்ட மக்கள், தேவர் என்பவர்களுடனெல்லாம் சேர்த்து, எண்பத்துநான்கு நூறாயிரம்வகை உயிர்களும் குடிபுகுந்து வாழும்வண்ணம் அவற்றிற்குத் தேவையான வெவ்வேறு வகைப்பட்ட உணவினைப் பெருஞ்சோறு என ஆக்கி அருள்புரிபவள் அன்னை ஆண்டாள் என்கிறார் புலவர்.

    நறவு எனும் தேன், தயிர், நெய், கன்னல் எனும் கரும்பு, பாலாழி, கறிசோறு என இவையனைத்தையும் செய்விப்பதாகக் கடலில் விளையும் முத்துகளைச் சோறாக்கி, மலையைப் பானையாக்கி, புனல்நீரை உலைநீராகப் பெய்து, இவற்றைச் சமைக்க சூரியனை அடுப்பின் நெருப்பாகவும் கொண்டு புதுவைப்பிராட்டியே, சிறுசோறு இழைத்தருளுக என வேண்டுவதாக அமைந்த பாடல். இழைத்தலுக்கு, ஆக்குதல் எனவும் ஒரு பொருளுண்டு.

             பறவைமா மீனமூர் வனதாப ரங்கண்முப்
                       பானுடன் …………………..
             …………………………………….
             முறவுகொண் டெண்பத்து நான்குநூ றாயிரம்
                       யோனியிற் குடிபுக்கவா
             முயிர்கட்கு வேறுவே றுணர்வொடு பெருஞ்சோறு
                       முற்றிழைத் தருள்புரியுநீ
             நறவுதயிர் நெய்கன்னல் பாலாழி கறிசோறு
                       நரலையுட் டரளமுலைநீர்
             நன்புனற் கடனேமி வரைமிடா வுலைமுக
                       நயந்ததழல் ஞாயிறாகச்
             சிறகர்வண் டிமிழ்பொழிற் புதுவைப் பிராட்டியே
                       சிறுசோ றிழைத்தருள்கவே7
                …………………………………….

    இவ்வாறு நயம் மிகுந்த கருத்துக் செறிவான பாடல்களைக் கொண்டு இப்பருவத்தைப் பாடிவைத்துள்ளார் இப்புலவர் பெருமான்.

    அடுத்த பகுதியில் பொய்தல் விளையாட்டின் மற்றொரு அங்கத்தைக் கண்டு களிக்கலாம்.

    (தொடரும்)

    பார்வை நூல்கள்

    1. ஸ்ரீ ஆண்டாள் – திருப்பாவை
    2. ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம சுலோகம்
    3. சிவஞான சுவாமிகள்- குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
    4, 7 ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்
    5. அந்தகக்கவி வீரராகவ முதலியார்- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
    6. குமரகுருபரர்- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 18.2

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 18.2

    மீனாட்சி பாலகணேஷ்

     (சிற்றில் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    இத்தொடரில் பெண்பால் சிற்றில் பருவத்தில் அடுத்து நாம் காணப்போகும் நூல் தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் ஆகும். இதில் இப்பருவம் மிகவும் சிறப்பாக, அழகிய நயங்களுடன் பத்துப் பாடல்களால் பாடப்பட்டுள்ளது.

    உலகுக்கே அன்னையான சிவகாமி எனும் உமையவள் அண்டகோடிகளை, பிரம்மாண்டங்களைத் தோற்றுவிப்பதனை, சிறுவீடுகட்டி அவள் விளையாடுவதாக நயம்பட உரைக்கிறார். காஞ்சிப்பதியில் சிவபிரான் அம்மைக்கு இருநாழி நெல் அளித்ததனையும் அம்மை அதனைக்கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் இயற்றி உலகங்களைப் புரந்ததாகவும் காஞ்சிப்புராணத்தில் காண்பதற்கியைய, இங்கும் அக்கருத்தை எடுத்தோம்புகிறார்.

                ‘…………………………………………..
             அட்டதிக்கும் கால்கள்நட்டு நெடுமேரு
                       நடுவு அசையாததூண் நிறுத்தி
             …………………………………………….
                       விளை பச்சைநெல் இருநாழியில்
             பல்லுயிரும் உண்டு தேக்கிட்டிடும்
                       ……………………………………..
             திடமருவு பெருவீடு கட்டி விளையாடும்
                       உமை சிறுவீடு கட்டியருளே!’1

    ‘ஆ ப்ரஹ்ம கீட ஜனனீ’ என லலிதா சகஸ்ரநாமம் அன்னையை ஏத்துகின்றது. பிரம்மன் முதல் புழு வரை அவளால் படைக்கப்படுகின்றன என்பது இதன் பொருள்; படைப்புக்கடவுளான பிரம்மனையுமே அவள்தான் படைக்கிறாளாம். படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் நடைபெறும் இந்தப் பிரபஞ்சப்பெருவிளையாட்டினை சிவபிரானின் பாதியாகிய அன்னை சிவகாமசுந்தரியே நிகழ்த்துவதாகக் கூறி மகிழ்கிறார் புலவர் கிருட்டிணையர். பராசக்தியாகிய சிவகாமசுந்தரி சிற்றில் இழைக்கும் விளையாட்டு பெரிய தத்துவத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது.

    பின்னொரு பாடலில் அன்னை கட்டிடும் சிறுவீட்டின் அமைப்பினை விளக்கியுள்ளமை, உடற்கூற்றியலில் விளக்கப்பட்டுள்ள மனித உடலின் அமைப்பை ஒத்துள்ளது வியக்கத்தக்கதாகும். தசை எனப்படும் மண்ணினை வைத்தும் தூண்களாகிய கால்களை வைத்தும், உடல் எனப்படும் சுவரை அமைத்தும், வீட்டினைத் தாங்கக் கைம்மரங்கள் என்னும் இரு கரங்களை வைத்தும் அமைக்கிறாள்; உடலில் உள்ள ஒன்பது துளைகளை ஒன்பது வாயில்களாக அமைக்கிறாள்; கூரை மரங்களை நரம்புகளால் முறையாகக் கட்டுகிறாள்; அதன்மீது மண்பூசுவது போன்று தோலைப் போர்த்து, மயிர்க்கற்றைகளால் கூரையையும் வைக்கிறாள். வாழ்வின் இன்பதுன்பங்களைப் பகுத்து அனுபவிக்க கண்களை விளக்குகளாக ஏற்றுகிறாள். இவ்வாறு அனைத்துயிர்களும் வாழும்பொருட்டு எண்பத்துநான்கு இலட்சம் வகைப்பட்ட வலிமைமிக்க பலவீடுகளை, அதாவது பற்பல உயிர்களுக்காக அவை வாழும் உடலெனும் வீடுகளைத் தோற்றுவித்தும், அழித்தும், பின்னும் தோற்றுவித்தும் இடையறாது அருள்விளையாட்டுப் புரிகிறாள். உயிரினங்களின் வகை எண்பத்து நான்கு இலட்சம் எனப் புராணங்கள் விளக்குகின்றன. அனைத்தையும் அவற்றிற்குரிய வீடுகளாகிய உயிர்க்கூடுகளில் வகைவகையாகப் படைக்கிறாள் என அதியற்புதமாக இப்பாடல் விளக்குகின்றது.

                ‘மண்வைத்துக் கால்வைத்துத் தூணினால்
                       சுவர்வைத்து வலியகைம் மரமும்வைத்து
             வாசல் ஒன்பதுவிட்டு மோட்டுவளை
                       பக்கத்துவளை வரிச்சலும் நரம்பால்
             பண்புற்றிடக் கட்டிமேலே லாம்தோலுடன்
                       பலமயிர்க் கற்றை இட்டு
             …………………………………………….
             எண்பத்து நான்குநூறா யிரம்பேதமாய்
                       இனிய சிறுவீடு தோறும்
             ………………………………………….
    திண்பெற்ற பலவீடு கட்டிவிளை யாடும்
             உமை சிறுவீடு கட்டியருளே2!’

    இழைக்கப்படும் சிறுவீடானது, மனித உடலின் கைகள், கால், தோல், மயிர் போன்ற பல பாகங்களுக்கும் தொடர்புபடுத்தி விளக்கப்பட்டிருப்பது மிக்க அருமை. உடற்கூற்றியல் எனும் அறிவியல் பகுப்பு இதில் முழுமையாக ஒரேபாடலில் அருமையாக விளக்கப் பெற்றுள்ளது தமிழுக்குப் பெருமை!

    சிற்றிலிழைத்து விளையாடும் இச்சிறு பெண்பிள்ளை, அச்சிறுவீட்டினுள்ளே பலவிதமான பாவைகளைக் குடிவைத்து விளையாடுகின்றாள். அன்னை பராசக்தியின் அருளிலேயே ஆழ்ந்தவரான புலவர் அன்னை சிறுபெண்ணாய் விளையாடும் விளையாட்டுகள் அனைத்தினையுமே பராசக்தியின் ஆடல்களாகக் கண்டு வாழ்த்துகிறார். மிக எளிமையாக இதற்குப் பொருளுணர வேண்டுமாயின் பின்வருமாறு பொருள்கொள்ளலாம்:

    ஆற்றல்வாய்ந்த தெய்வங்களின் பாவைகள், பூவுலகில் வாழும் ஆடு, மாடு, யானை முதலான விலங்குகளின் பாவைகள், கடலில் வாழும் ஜீவராசிகளின் பாவைகள், பலவிதமான பறவைகளின் பாவைகள், விரைந்து நெளிந்து ஊர்ந்து செல்லும் புழு, பூச்சிகள், மரவட்டை, பாம்பு ஆகியனவற்றின் பாவைகள், செடி, கொடி, மரங்கள் ஆகியனவற்றின் பாவைகள் என ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள உயிர்களின் பாவைகளை எல்லாம் எண்பத்துநான்கு இலட்சம் வகைகளில், எண்ணற்ற வடிவங்களால் இவளே அப்பாவைகளைச் செய்கிறாளாம். அன்னை பராசக்தி இவ்வுயிர்களை பஞ்சபூதங்களால் விளையாட்டாகவே உண்டுபண்ணுகிறாள். அது மட்டுமா? அவற்றைக் கனவு, நினைவு / விழிப்பு, உறக்கம் ஆகிய நிலைகளில் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி வைத்து தினமும் விளையாடுகிறாள்.

    எல்லா உயிர்களுக்கும் பராசக்தி அன்னை திரும்பத்திரும்பப் படைத்து அளிக்கும் பலவிதமான வடிவங்கள் இப்பாடலில் நயம்படக் கூறப்படுகின்றன.

                வல்ல தெய்வப் பாவை மானிடப்
                       பாவையொடு வாழ்விலங்கின் பாவையும்
             மறிதிரைப் புனலிடை வழங்கிடும் பாவையும்
                       மருவு பறவைப் பாவையும்
             ஒல்லையில் நெளிந்துதாம் ஊர்ந்திடும்
                       பாவையும் உறும் தாவரப் பாவையும்
             ஒரு பொறிப்பாவை முதல் ஐம்பொறிப்
                       பாவையும் உற்றிடும் பாவை எல்லாம்
             எல்லவே சாக்கிரம் கனவொடு
                       சுழுத்தியுடன் எழும் பூதாசார வடிவாய்
             …………………………………………………….
             பரம சிவகாம சுந்தரி அம்மை இனிய
                       பொற்பாவை விளையாடி அருளே3!

    (பாவை- பொம்மை; பொறி- அறிவு; சாக்கிரம்- விழிப்பு; சுழுத்தி- உறக்கம்)

    சிவகாமி அன்னையைச் சிறுவீடு கட்டியருள வேண்டிடும் புலவர் பெருமகனார், தில்லையில் உள்ள பொன்மன்றின் அமைப்பினை விளக்கி அவ்வண்ணமே ஒரு சிறுவீட்டினைக் கட்டியருள சிவகாமியம்மையை வேண்டுகிறார்.

    சிதம்பரம் கோயிலின் அமைப்பு, மனித உடலும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. ‘உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்4 என்பது திருமூலர் வாக்கு. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து கோசங்களைக் (Layers) கொண்டமைந்துள்ளது. அதே போன்று சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள்  உள்ளன. மனித இதயம் இடப்புறம் அமைந்திருப்பதுபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லாது இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை  மூச்சுவிடுகிறான். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21,600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72,000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் உள்ள ஓடுகளை 72,000 ஆணிகள் இணைக்கின்றன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்படுகிறது.

    இப்பிள்ளைத்தமிழினை இயற்றிய நல்லதுக்குடி கிருட்டிணையர் பொன்மன்றின் அமைப்பினை இன்னுமே விரிவாக விளக்கி அதனைச் சிவகாமியம்மை எவ்வாறு கட்டுகிறாள் என விளக்குகிறார். இது அன்னை மனித உயிர்களைப் படைக்கும் பாங்கினை அழகுற விளக்குகிறது.

    பொன்மன்றில் விளங்கும் பிரமபீடத்திற்கு ஆறு சாத்திரங்களையும் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைப் பெரிய தூண்களாகவும் அமைக்கிறாள். இருபத்தெட்டு சிவாகமங்கள், ஐம்பெரும் பூதங்கள், பதினெண் புராணங்கள் ஆகியவை சிறிய தூண்களாகவும் உத்திரங்களாகவும் வைக்கப்படுகின்றன. ஆயகலைகள் அறுபத்துநான்கும் அழகிய வரிச்சல்களுடன் பொருந்திய கைம்மரங்களாக பொருத்தப்பட்டு, அவைமீது ஒளிவீசும் தங்க ஓடுகள் 21,600 வைத்து அவற்றை 72,000 ஆணிகளால் பொருத்தி இணைத்து, மேலும் இருநூற்றுஇருபத்துநான்கு புவனங்களையும் தாமரைமலரின் வடிவில் ஆக்கிய தட்டுக்களாகவும் சைவசித்தாந்தத் தத்துவங்களான தொண்ணூற்றாறு தத்துவங்களையும் பலகணிகளாக ஆக்கி, ஒன்பது கலசங்களை மனித உடலின் ஒன்பது வாயில்களாக அமைத்து சிற்றம்பலம் எனும் உறுதியான வீட்டினைக் கட்டுகிறாள் அன்னை. பின்னர் அங்கு தானே இறைவனுடன் குடிகொள்கிறாள்.

    இவ்வாறு அரியதான எம்மை, எமது மனித உடலைப் படைத்தருளுமுகமாக சிறுவீடு கட்டியருளுக என வேண்டுவதாக அமைந்த பாடலிது.

                ஆறு சாத்திரம் நாலுவேதம் அதிதூண்
                       ஆகமங்கள்………………….
             ……………………………………………………
                       மரம்நாட்டி எழுபத்து இரண்டாயிரம்
             ………………………………………
             கூறு தொண்ணூற்றாறு தத்துவம் பலகணிகள்
                       கும்பம் ஒன்பது வாசலும்
             …………………………………………………..
                       விமலையே! சிறுவீடு கட்டியருளே5!

    பிள்ளைத்தமிழ் பிரபந்தத்தின் அமைப்பில் ஒவ்வொரு பருவத்திற்குமான பத்துப்பாடல்களில், தொன்மச் செய்திகள், அழகியல், சந்தநயம், அணிநயங்கள் மட்டுமின்றி, சைவசித்தாந்த, தத்துவ, சமய விளக்கங்களையும் கூட்டிப் பாடல்களை அமைப்பதே நல்லிசைப்புலவோரின் வழக்காகும் எனப் பேராசிரியர் முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் கூறுகிறார். இன்னும் இப்பிள்ளைத்தமிழ் நூலின் பல பாடல்களும் பல சமயக் கருத்துக்களையும் விளக்கங்களையும் உள்ளடக்கிக் கொண்டு பொலிகின்றன.

    மற்றும் ஒரு பெண்பால் பிள்ளைத்தமிழான ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ், சிறுமியரின் சிற்றில் பருவத்தை அழகுறப் பாடிப் பதிவு செய்து வைத்துள்ளது. இதன் ஆசிரியர் (பெயர் தெரியக் கிடைக்கவில்லை) ஆண்டாளைத் திருமகளாகவே கொண்டு அக்கருத்துக்களிலேயே பாடல்களைப் பாடியுள்ளார்.

    சிற்றில் பருவத்துப் பத்துப்பாடல்களில் ஆறு மட்டுமே கிடைத்துள்ளன. ஆயினும் கருத்து நயமும் உவமை உருவகங்களும் வைணவத்தின் பொருண்மைகளும் செறிந்த பாடல்கள் இவை. சமயத் தத்துவங்களை அழகுறப் பொதிந்துகொண்டு விளங்குகின்றன.

    மேருமலையை ஆதாரமாகக் கொண்டும், மற்ற மலைகளை இடைத்தூண்களாக வைத்தும் செய்விக்கப்பட்ட மணிமண்டபம் உனது கொலுமண்டபம். மேலும், காவல் நிறைந்த  புறமனைகள் ஏழும் கடலால் சூழப்பட்ட ஏழுதீவுகள் ஆகியனவும் பள்ளியறை முதலான அமைப்புகளாவன. இவை பூமியாகிய நிலாமுற்றத்திற்கு அரணாகின்றன. சுடரும் கதிரவன் விளக்காகிறான். அண்டச்சுவரும், கடலையே அகழியாகவும் கொண்டு, பொன்னுலகம் ஐந்தினையும் உப்பரிகைகளாகக் கொண்டு விளங்கும் அருமையான வீட்டைக் காக்கும் பெண்ணரசியே! உலகிற்கு அன்னையான புதுவை (ஸ்ரீவில்லிப்புத்தூர்) வாழ் திருமகளே! தென்னரங்கேசன் முதலான ஐந்து பேரும் குடிபுகுவதற்காக நினது சிற்றிலை இழைப்பாயாக! என வேண்டும் பாடல்.

    இவ்வைந்து பேரும் திருமாலின் ஐந்து வடிவங்களே! தென்னரங்கேசன்- ஸ்ரீரங்கத்து அரங்கன், திருமலையில் குடிகொண்ட திருவேங்கடவன், திருமாலிருஞ்சோலையில் அமர்ந்த பிரான், திருத்தண்கா அப்பன், வடபத்ரசாயி எனும் ஸ்ரீவில்லிப்புத்தூர்ப் பெருமாள் ஆகியோராவர்.

                ஆதார மேருபூ தரநள் ளிடைத்தூண
                       மருவரைக ளெண்டிசைக்கா
             …………………………………………..
             பூதாதி வழிவந்த வண்டபித் தியுமாப்
                      பொரும்புறக் கடலகழியாப்
             பொன்னுலக முதலைந்தும் உப்பரிக் கையதாப்
                       …………………………………….
             சீதார விந்தமலர் வளவயற் புதுவையுட்
                       சிற்றிலை யிழைத்தருள்கவே
             தென்னரங் கேசன்முத லைவருங் குடிபுகச்
                       சிற்றிலை யிழைத்தருள்கவே6

    இப்பருவத்துப் பாடல்கள் அனைத்தும் பெண்மகவு இழைக்கும் சிறுவீடானது எவ்வாறு மனித உடலை ஒத்துள்ளது எனவும், பராசக்தி எனும் அன்னை எங்ஙனம் நம்மைப் படைத்துப் புரந்தளிக்கிறாள் என்றும் பலவித நயங்களில் கூறியுள்ளமை மிக உயர்வாக உள்ளன.

                                                                                                                          (தொடரும்)

    பார்வை நூல்கள்:

    1, 2, 3, 5. தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்- நல்லதுக்குடி கிருட்டிணையர்.
    4. திருமந்திரம்- திருமூலர்
    6. ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 18.1

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 18.1

    மீனாட்சி பாலகணேஷ்

     (சிற்றில் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பத்துப்பருவங்களுக்கும் மிகுதியான விளையாட்டுப் பருவங்களும் நிகழ்வுகளும்தான் பிள்ளைப்பருவத்தை இனிமையுடையதாகச் செய்கின்றன. பிள்ளைத்தமிழுக்கென இலக்கணம் வகுத்த நூல்களும் அதிகப்படியான பருவங்களைப் பாட வாய்ப்புள்ளதனை நன்கு விளக்குகின்றன. இனி இத்தொடரில் அவையனைத்தையும், அவை அமைந்துள்ள பிள்ளைத்தமிழ் நூல்களிலிருந்து ஒவ்வொன்றாகக் கண்டு இன்புறலாம்.

    பிங்கல நிகண்டு பெண்பால் பிள்ளைத்தமிழுக்குப் பத்தொன்பது பருவங்களை விவரிக்கின்றது. இப்பருவங்கள் காப்பு, செங்கீரை, சொல்வதைக்கற்றல், அமுதூட்டல், தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய இருபாலருக்கும் பொதுவான பருவங்களுடன், மூன்றாம் ஆண்டில் தான்விளையாடும் பாவைக்கு ‘மணம் பேசுதல்’ (குழமணம் மொழிதல்), ஐந்தாம் ஆண்டு முதல் ஒன்பதாம் ஆண்டுவரை மன்மதனையொத்த கணவனைப்பெறக் ‘காமநோன்பு நோற்றல்’, குளிர்ந்த நீராடல், பதுமைகளை (பாவைகளை) வைத்து ‘பாவைவிளையாடல்’, அம்மானையாடல், கழங்காடல், பந்தடித்தல், சிறுசோறு அடுதல், சிற்றில் இழைத்தல், ஊசலாடல் எனும் பருவங்களுள் சிலவற்றையோ பலவற்றையோ கொண்டு அமையும். இவையே பத்தொன்பது பருவங்களாகும்.

    ‘பேணும் சிறப்பிற் பெண்மக வாயின்
    மூன்றா மாண்டிற் குழமண மொழிதலு
    ஐந்தின் முதலா யொன்பதின் காறு
    மைங்கணைக் கிழவனை ஆர்வமொடு நோற்றலும்
    பனிநீர் தோய்தலும் பாவை யாடலும்
    அம்மனை கழங்கு பந்தடித் தாடலுஞ்
    சிறுசோ றடுதலுஞ் சிற்றி லிழைத்தலும்
    ஊச லாடலும் மென்றிவை யுள்ளிட்டுப்
    பேசிய பெண்பாற் பிள்ளைப் பாட்டே,’1 என பிங்கல நிகண்டு கூறுகின்றது.

    திவாகர நிகண்டு இதிலிருந்து சிறிது வேறுபட்டு இருபால் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான காப்பு, செங்கீரை, தால், அமுதூட்டல், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழு பருவங்களையும், பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கான குழமணம் மொழிதல், ஐங்கணைக்கிழவனை ஆர்வமொடு நோற்றல், பனிநீர் தோய்தல், பாவையாடல், சிறுசோறடுதல், சிற்றிலிழைத்தல், ஊசலாடல் ஆகிய பதினான்கு பருவங்களைக் கூறுகிறது.

    உலகவழக்கில் பெண்குழந்தைகளான சிறுமியருக்கென்று சில இனிய விளையாடல்கள் அமைந்துள்ளன. அவை தமது தாய்மார், வயதில் பெரிய பெண்களான அக்காள்மார் மற்றும் உறவினப்பெண்டிர் இவர்கள்  மனையில் குழந்தை வளர்த்தல், சமையல் செய்தல், குடும்பநலன் பேணுதல், தம் மக்களுக்கு மணம்பேசி முடித்தல் ஆகிய வாழ்வியல் தொடர்பான செயல்களைக் கண்டு, தாமும் அவ்வாறு செய்ய ஆசைகொண்டு, சிறு பெண்குழந்தைகளால் பாவனையாக, பொய்யாக விளையாடப்படும். இதுவே ‘பொய்தல் விளையாட்டு’ என வழங்கப்பட்டது. தமக்கென மணலாலும் தழைகளாலும் ஒரு சிறுவீட்டினைக் கட்டிக்கொண்டும், பாவைகளைக் குழந்தைகளாகக் கருதிக்கொண்டு கருத்தோடு பேணியும், சமையல் முதலானவற்றைச் செய்வதுபோல பாவனை செய்து கணவன் முதலானோருக்கு உணவளித்தும், தம் மக்களுக்குத் திருமணம் செய்வது போலப் பாவைகளுக்கு மணம்பேசி முடித்தும் சிறுமிகள் விளையாடுவர். இந்தப் ‘பொய்தல் விளையாட்டி’னுள் பாவை விளையாடல், குழமணம் மொழிதல், சிற்றிலிழைத்தல், சிறுசோறு அடுதல் ஆகிய நான்குமே அழகுறக் கலந்து விரவி அமைந்துள்ளதனைக் காணலாம்.

    இவற்றுள் குழமணம் மொழிதல் எனும் பருவம் மட்டுமே எந்தப் பிள்ளைத்தமிழிலும் தனிப்பட எடுத்துப் பாடப்படவில்லை.

    சிற்றில் இழைத்தல் பருவம், சிறுமியர் வண்டல் மணலினால் ஆற்றங்கரையில் சிறிய வீடுகளைக் கட்டி விளையாடுவதனை விளக்கும். இதே பெயர்கொண்ட சிற்றிற்பருவம் ஆண்பாற் பிள்ளைத்தமிழில், சிறுமியர் இழைத்த சிற்றிலை சிறுவர்கள் அழிப்பதாகவும், சிறுமியர் அவ்வாறு செய்யவேண்டா என அவர்களை வேண்டுவதாகவும் அமையும். இதனைப் பெண்பால் பிள்ளைத்தமிழில் ‘சிற்றில் பருவம்’ அல்லது ‘சிறுவீட்டுப் பருவம்’ எனவும் கூறுவர். இதுவன்றி, ‘சிறுசோற்றுப் பருவம்’ எனும் ஒரு பருவமும் ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழில் காணப்படுகின்றது. இவை அனைத்தையுமே சிறுமியர் விளையாடும் பாவனை விளையாட்டான ‘பொய்தல் விளையாட்டி’ன்  அங்கங்கள் என சங்க இலக்கியங்கள் கூறும்.

    ‘மணம்கமழ் மனைதொறும் பொய்தல் அயர2,’ என மதுரைக்காஞ்சியும்

    ‘ஆடுவார் பொய்தல் அணிவண்டு இமிர் மணல்3,’ எனப் பரிபாடலும் கூறுகின்றன.

    சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் நூலின் (ஆண்பாற்) சிற்றிற்பருவத்துப் பாடலொன்று சிறுபெண்கள் ‘பாவனை’யாக, பொய்யாக விளையாடும் விளையாட்டினை நயமுற விளக்குகிறது.

    தாம் பாடுபட்டு இழைத்த சிற்றிலை உதைத்து அழிக்க ஓடோடிவரும் சிறுவன் முருகனிடம் சிறுமியர், நயமாகவும், கெஞ்சியும், சாமர்த்தியமாகவும், ‘ஒளி பொருந்திய குளிர்ந்த முத்துக்களாலான அரிசியும், அதற்கு உலைபெய்த நறுந்தேனும் கவிழ்ந்து சிதறாதோ? சமைக்கும் பாண்டமான நந்தின் கடமான சங்கு உடைந்து போய்விடாதோ? மாதுளைமலர்களைப் பெய்து நாம் அமைத்த உலைத்தீ அவிந்து விடாதோ? பவளக்கொடிகளால் எம் சிறுவீட்டிற்கு நாம் ஆசையாக இட்டுள்ள விளக்கு அணைந்துவிடாதோ? நாங்கள் (பாவைத்) திருமணம் எனக்கூறிச் செய்துவைத்துள்ள விருந்து வீணாகப் போகாதோ? (பாவனையாக) முலைப்பாலருந்துவித்து உறங்க வைத்துள்ள எமது மகவு (பாவை) தாமரை போன்ற தனது கண்களை விழித்தெழுந்து தேம்பி அழும் அல்லவோ? ஆகவே எமது சிற்றிலைச் சிதைக்க வேண்டாம்,’ என வேண்டுவதாக அமைந்த பாடல்.

    ‘நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே
                னுளையுங் கவிழாதோ
    நந்தின் கடமு முடையாதோ நளிமா
                 துளைத்தீ யவியாதோ..
     ………………………………………
                அடியேம் வதுவையெனச்
    சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா
                விருந்தும்4………………………..,‘ என்பன பாடல் வரிகள்.

    தமது தாய்மார்கள் செய்வதுபோல, வீட்டை சுத்தம் செய்வதும், அடுப்பில் உலையேற்றிச் சமைப்பதும், குழந்தையை நீராட்டி, அதற்குப் பால்கொடுத்து, உறங்க வைப்பதும் இவர்களுடைய விளையாட்டு. எதிர்காலத்தில் தாம் ஆற்றவேண்டிய கடமைகளுக்காக இப்போதே தயாராகிறார்கள் போலுள்ளது! இதுவே சின்னஞ்சிறுமிகளின் மனோபாவம்! பொங்கிப்பெருகும் தாய்மை உணர்வை இச்சிறு பிராயத்திலிருந்தே வெளிப்படுத்தும் குழந்தைத்தனம் நிறைந்த அழகு இதுவே! இது ஆண்பாற் பிள்ளைத்தமிழானதனால் சிறுவீடு கட்டுவதும், சிறுசோறு சமைப்பதும், பாவை விளையாடலும் அதனுள் ஒரு அங்கமாகக் குழமணம் மொழிதலும் ஒருங்கே கூறப்பட்டுள்ளன. பொய்தல் விளையாட்டின் ஒரு  அங்கமான ‘குழமணம் பேசுதல்’ இப்பாடல் ஒன்றில் மட்டுமே சுட்டப்பட்டுள்ளது.

    கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் “மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே5,” எனும் பாடல், “ஆற்றோரம் மணலெடுத்து, அழகழகாய் வீடுகட்டி6,” எனும் பாடல் ஆகியன இக்கருத்தின் அடிப்படையிலேயே எழுந்ததெனலாம். இன்றளவும் சின்னஞ்சிறுமியர் பொம்மைகளைக்கொண்டு பலவிதமான விளையாட்டுக்களை விளையாடி மகிழ்வதனையும் காணலாம்.

    இவை தொடர்பான நிகழ்வுகளே பெண்பால் பிள்ளைத்தமிழில் பாவை விளையாடல், சிற்றிலிழைத்தல், சிறுசோறு அடுதல் என்ற மூன்று பருவங்களாகப் பிரிக்கப்பட்டுப் புலவர்களின் கற்பனைக்கேற்பப் பாடப்பட்டுள்ளன. குழமணம் மொழிதலின் விரிவான விளக்கங்களை எப்பிள்ளைத்தமிழிலும் காணக் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதே!

    ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ் மட்டுமே காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி ஆகிய முதல் ஏழு பருவங்களுடன், சிற்றில் பருவம், சிறுசோற்றுப் பருவம், காமநோன்புப் பருவம் என சில புதுமையான பருவங்களுடன் மொத்தம் பதினோரு பருவங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

    சிற்றில் பருவமானது பெண்பால் பிள்ளைத்தமிழில் வழக்கமாகப் பாடப்பெறாது இருப்பினும், அது சிறுவீடு கட்டுதல், சிறுசோறு சமைத்தல் எனும் இரு செயல்களைக் கொண்டமைந்துள்ளமையால் ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் இதனை இரு பருவங்களாக்கியுள்ளார் எனக் கருதலாம். சிறுமியர் விளையாட்டும் இத்தகைமைத்தே என்பதனைக் கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் சிற்றிற்பருவத்துப் பாடலொன்றின் கருத்திலிருந்து காணலாம். அதில் சிற்றிலிழைத்த சிறுமியர், சிறுசோறாக உண்ண சிறுவன் கணேசன் கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களுக்காகக் காத்திருப்பதனைக் காணலாம். பொய்யாக, மணலையும், சிறுமுத்துக்களையும் அரிசி எனக்கூறிப் பெய்து சிறுசோறு சமைத்த சிறுமியர், மற்ற சிறார்கள் தமது மனைகளிலிருந்து கொண்டுவரும் உண்மையான தின்பண்டங்களைச் சுவைத்து மகிழ்வர் என்பது கண்கூடு. சிறுவர்களும் இவர்களுடன் சேர்ந்து விளையாட்டிலும், விருந்திலும் பங்கேற்று மகிழ்வர் என அறியலாம்.

    ‘பெருத்தவயிறு தயங்க மெல்லப் பெயர்ந்து நடந்து குடங்கைமிசைப்
    பெரும் பண்ணியமுமேந்தியேம்பாற் பேணிவருநின் கரவினைக்கண்டு
    அருத்தியொடு……,’7

    என்பன பாடல் வரிகள். இப்பாடலின் விரிவான விளக்கத்தை ஆண்பால் பிள்ளைத்தமிழின் சிற்றில்பருவத்தில் காணலாம். இனி, பெண்பால் பிள்ளைத்தமிழின் நயங்களைக் காணலாமா?
    சிற்றில் பருவம் (பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    மிகச்சில பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் மட்டுமே சிற்றில்பருவம் எனத் தனியாக ஒரு பருவத்தில், இறைவி சிறுமியாக சிற்றிலிழைக்கும் மேன்மையைப் போற்றி மிகவும் இரசித்தும், பக்தியிலாழ்ந்தும், பலநயங்களைப் புகுத்தியும் பாடியுள்ளதனைக் காணலாம்.

    வயிரவன்கோவில் வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ் நூலில் ஒன்பதாம் பருவமாக, நீராடலுக்கு மாறாக சிற்றிலிழைத்தல் (சிற்றில் பருவம்) பத்துப்பாடல்களில் பாடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு உயிரும் இருந்து வாழும்படி அவையவற்றிற்கு உரிய வகையில் வடிவுடையம்மையாகிய பராசக்தி வீடுகளை அமைக்கும் சிறப்பை விளக்கும் பாடலொன்றைக் காணலாம். பாடலே இனிய எளிய நடையிலமைந்துள்ளமையால் விளக்கம் தேவையில்லை!

    மூவருறை யுயர்வீடு முத்தியின் பென்றோது
                  முழுநிதியம் வைக்கும் வீடு
     மோனஞா னானந்த சிவயோக நிலைகண்ட
                  முனிவர்கள் வசிக்கும் வீடும்
    …………………………………………………….

    பாவிய சிறப்புமலி வீடுமாழ் பாதலம்
                  பற்றிவாழ் நாகர் வீடும்
    பகுத்துத் தனித்தனி யியற்றிவிளை யாடுநீ
                       ………………………………………..
    தேங்கமல மலர்பொலங் கொடியனைய வடிவுடை
                 யள் சிறுவீடுகட்டி யருளே8 என்பது பாடல்.

    மேலும் மற்ற பிள்ளைத்தமிழ் நூல்களில் காண்பதுபோல் இதுவும் அம்மை சிறுவீடமைப்பதனை உருவகமாக சிறுவர்களின் விளையாட்டான ‘பொய்தலாட்டயர்வ’தாகக் குறிப்பிடுகின்றது. எடுத்துக்காட்டாக ஒருபாடல் அவள் ஈரேழு உலகைப் படைத்தும் அதற்கு முத்தொழில் புரியும் அதிகாரிகளாக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை நியமித்தும், சன்மார்க்க துன்மார்க்கங்களில் உயிர்களைச் செலுத்தியும், அதனைக் கண்காணித்தும் ஆகியன செய்வதனைப் பொய்தல் விளையாட்டு எனக் கூறுவதில் உள்ள கருத்தொற்றுமை வியக்கத் தக்கதாம்.

    ‘அண்டமென் றோதுபெரு வெளியிலீ ரேழுநகர்
                       ………………………………….
     பிண்டத் தினுந்தந்து பொய்தலாட் டயரும்
                     பெருந்தகைச் சிறிய விடையாய்
             ………………………………
    திண்டடஞ் சோவடுக நாதபுர மேவுபரை
                    சிறுவீடு கட்டி யருளே9,’ என்பன பாடல் வரிகள்.

    பின்னும் இதில் அன்னை உயிர்களுக்குத் தகுதியான உடல்களை எழுவகைத்தாதுக்கள் எனப்படும் இரத்தம், சுக்கிலம், மூளை, தசை, எலும்பு, நரம்பு, தோல் இவற்றோடு ஐந்துவகை பௌதிகப் பொருட்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியனவற்றைப் பொருத்தி இணைத்து எழுபத்திரண்டாயிரம் எண்ணிக்கையிலான நரம்புகளையும் அதனூடே இழைத்தும், மூன்றரைக்கோடி மயிர்களை வேய்ந்தும், ஒன்பது வாயில்களை அமைத்தும், இன்னபிற செய்வித்தும் பலவிதமான வீடுகளை உயிரினங்களுக்குச் சிற்றில் அமைப்பதுபோன்று படைக்கிறாள். அவை பழுதுபடின் வேறு வீடுகளை அமைத்துக் கொடுக்கிறாள். இவ்வாறு பிறப்பு, இறப்பு, பாவ புண்ணியங்களுக்கேற்ற மறுபிறப்பு ஆகியனவற்றை அருமையாக எடுத்தியம்பும் பாடலிது.

     ‘எழுவகைத் தாதுவினோ டைவகைப் பௌதிகமு
                  மேய்வித்து நீடி மல்கு
     மெழுபத் திரண்டா யிரத்தொகை நரம்பினையு
                       ………………………
     பழகுற வமைத்துமன் பதைகட்கு வாழ்வீடு
                  பற்பல விழைத்திட் டவை
     பழுதுபடின் வேறுமவ் வாறுபுரி யம்மையே
                       …………………………..
     தேங்கமல மலர்பொலங் கொடியனைய வடிவுடை
                  யள்சிறுவீடு கட்டி யருளே10,’ என்பது பாடல்.

    நுட்பமான கருத்துக்களாக உடலின் அமைப்பை விளக்கி அவற்றைச் சிறுமிகள் இழைக்கும் சிறுவீட்டின் அமைப்போடு ஒப்புநோக்குதல் வியக்கத்தக்கதாம். இதுபோலும் பொருளும் நயமும் மிக்க பத்துப்பாடல்கள் உள்ளன.

                                                              ****

    புதுவை திரிபுரசுந்தரியம்மை பிள்ளைத்தமிழில் அம்மானைப்பருவத்தைத் தவிர்த்து சிற்றிலிழைத்தல் பருவம்  எட்டாம் பருவமாக வைக்கப்பட்டு பத்துப்பாடல்களால் சிறப்புற பாடப்பெற்றுள்ளது. இவற்றுள் முதலைந்து பாடல்கள் அன்னை எவ்வெவற்றைக்கொண்டு சிறுவீடு கட்டுவது போன்று ஈரேழு உலகங்களையும் படைத்தருளுகிறாள் என விளக்குகிறது.

    ‘பொன்புற மிலங்குநெ டுவட்டவா ளக்குன்று
                   புரிசையா கத்திகாந்துப்
    புறக்கடற் கோட்டை சூழகழி யாத்திசைகள்11
                       ……………………………..’

    எனச் சிறுவீட்டின் அமைப்பையும், அதில் வாழும் உயிர்களைக் காக்க அவள் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்குப் பதவியளித்ததனையும் கூறுகிறது.

    ‘முத்தலைச் சூலமேந் திப்பொடி யணிந்தோங்கு
    மூரிவெள் விடையவர்க்கு
    முந்நீர் நிறங்கொண் டுமண்ணுண் டுவிண்ணீண்ட
    முண்டகக் கண்ணருக்கும்12…. என்பன பாடல் வரிகள்.

    இத்தகைய அருமையான கருத்துக்களைக் கொண்டமைந்ததால் இப்பருவத்தின் பாடல்கள் பெண்பால் பிள்ளைத்தமிழில்  சிறப்பாக விளங்குகின்றன.

                                                                                      (தொடரும்)

    பார்வை நூல்கள்

    1. பிங்கல முனிவர்- பிங்கல நிகண்டு
    2. மதுரைக்காஞ்சி, வரி 589.
    3. பரிபாடல், 20, வரி 23.
    4. அந்தகக்கவி வீரராகவ முதலியார்- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
    5. தஞ்சை ராமையா தாஸ்- ‘காவேரியின் கணவன்’ திரைப்படப் பாடல், 1959
    6. கண்ணதாசன்- ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ திரைப்படப்பாடல், 1964
    7. சிவஞான முனிவர்- கலைசை செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ்
    8, 9, 10. சேந்தன்குடி வி. நடராசக்கவிராயர்- வயிரவன் கோயில் வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்
    11, 12. புதுவை முத்துக்குமாரன்-  திரிபுரசுந்தரியம்மை பிள்ளைத்தமிழ்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்-17

    குழவி மருங்கினும் கிழவதாகும்-17

    மீனாட்சி பாலகணேஷ்

    (உடைவாள் செறித்தல்)

    அரிதாகப் பாடப்பட்ட பிள்ளைப்பருவங்களின் வரிசையில் அடுத்து வரும் ஆண்பால் பிள்ளைத்தமிழ்ப் பருவம் ‘உடைவாள் செறித்தல்’ என்னும் பருவமாகும். இப்பருவத்தைப் பற்றிப் பாடியுள்ள ஒரே நூலான கதிர்காம பிள்ளைத்தமிழில் இது  கடைசிப்பருவமாக வைக்கப்பட்டுள்ளது.

                ‘………………….. பன்னீ ராண்டினிற்
             கச்சொடு சுரிகை காமுறப் புனைதல்1 என்று இதனை பிங்கல நிகண்டு எடுத்தியம்பும்.

    ஆண்பால் பிள்ளைத்தமிழின் பருவங்கள் குழந்தை சிறுவனாகிப் பின் அரசுகட்டில் ஏறும்வரை வகைப்படுத்திப் பாடப்பெறும். அரசுகட்டில் ஏறுவதற்கு முந்தைய பருவமே ‘கச்சொடு சுரிகை காமுறப் புனைதல்’ என்பதாகும் எனக்கொள்ள இடமிருக்கின்றது. இது ‘உடைவாளினைக் காண்போர் விருப்பங்கொள்ளும்வண்ணம்  இடைக்கச்சில் அணிந்து கொள்ளுதல்’ எனப் பொருள்படும். அரசனாகப் போகும் இளம்சிறுவன், வாள், வில் வித்தைகளில் தேர்ச்சிபெற்று விளங்க வேண்டும். தனது வீரத்தை இவ்வித்தைகளைக் கொண்டு போர்களில் வீரச்செயல்கள் செய்து வெற்றி பெறுவதன் மூலம் வெளிப்படுத்தல் வேண்டும் என்பது அவனது நாட்டுக் குடிமக்களின் எதிர்பார்ப்பு. கிடைக்கப்பெற்ற மூன்று பாடல்களின் சிறப்பையும் நயத்தையும் காணலாம்.

    கொடியதொரு வேடன், மானைக்கொன்று அவ்விறைச்சியை வேலனுக்குப் படைத்து வழிபாடு செய்த தலமே வலவையாற்றங்கரையினில் அமைந்துள்ள கதிர்காமம் எனும் பதியாகும்.

    ஒருகாலத்தில் தாரகாசுரன் முதலான அசுரர்களின் தொல்லை தாங்காத தேவர்கள் குமரனின் தந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளில் வீழ்ந்து உளறிப்புலம்பி தம்மைக் காக்குமாறு முறையீடு செய்தனராம்; சிவபிரான் அவர்களிடம், “உமது தலைவனாகிய முருகன் இன்னும் சிறியவன்; மழலைச்சொல் பேசுபவன்; ஆதலால் இப்போது போருக்குச் செல்ல இயலாது. ஆகவே நான்கைந்து ஆண்டுகள் சென்றபின் நீவிர் வருக; இப்போது செல்க!” என்றான்.

    “அவ்வாறு கூறியவன் கொடியதான போருக்குச் சென்றுவரத் தன் மகனாகிய உன்னை (முருகனை) அனுப்ப முனைபவன் போன்று, உனக்குக் கச்சினில் உடைவாளைச் செறித்து அணிவித்துப் ‘போர்க்கலையைப் பழகுவாயாக’ என்று கூறினான். நீயும் அங்ஙனம் செய்வதனைப் பருவமங்கையர் தம் வாள்போலும் கண்களாற்கண்டு காமுறும்வண்ணம் உடைவாளை இடையில் செருகிப் பயிலுவாயாக!” எனக் கூறும் பாடலிது.

    ‘கச்சினொடு சுரிகை காமுறப் புனைதல்’ எனும் இலக்கணக் கூற்றிற்கேற்ப இப்பாடல் மிகப் பொருத்தமாக அமைக்கப்பட்டதனைக் கண்டு வியந்து களிக்காமல் இருக்கவியலுமா?

                ஊன்குன்ற மாமசுரர் ………… ……………
                                உம்பரர் நுந்தையடிவீழ்ந்
                       துளறிப்பு லம்பிமுறை யிட்டனர் …..
                                உந்தையஞ் சற்கவென்று        
             …………………… நும் தலைவனின் னுஞ்சிறிஞன்
                                மழலையுநி ரம்பிற்றிலன்
                       வருகநா லைந்தாண்டி னிப்போக …………….
                                ………….. கடிதுபோர்க்குத்
             தான்சென்று வரவிடுப் பான்போலு நின்னைவாள்
                                சாலுடைசெ றித்தல்பயிலே
                       தகுமிளம் பருவமங் கையர்பிறழ்கண் வாளோடு
                                …………………… பயிலே2!

    இப்பாடலின் ஆசிரியர் ஒரு கம்பராமாயணக் கருத்தைத் தன் பாடலில் கொணர்ந்துள்ள அருமையையும் கண்டு இரசிக்கலாம்.

    விசுவாமித்திர முனிவன் தனது வேள்விக்கு இடையூறு செய்துவந்த அரக்கர்களை அழிக்கும்பொருட்டு இராமனை அனுப்பித்தருமாறு தசரதனிடம் வேண்டுகோள் விடுக்கிறான். துணுக்குற்ற தசரதன், “என் மகன் இராமன் சிறியவன்; படைக்கலங்களில் தேர்ந்த பயிற்சி இல்லாதவன்; ஆகவே நானே வந்து உமக்கு உதவுகிறேன்,” எனக் கூறுகிறான்.

                ‘படையூற்றம் இலன் சிறியன் இவன் பெரியோய்
                       பணி இதுவேல் 3………….,

    என்பன பாடல்வரிகள்.

    இவ்வாறு அரிதாகப் பாடப்பட்ட பருவங்கள் பிள்ளைத்தமிழ் நூல்களில் காணப்பட்டாலும் அவை புதுமையான நயங்களையும் கருத்துக்களையும் தொன்மங்களையும் கொண்டமைந்துள்ளன என நாம் உணர்ந்துகொள்ளலாம்.

    அடுத்த பாடலைக் காண்போம்:

    இது முருகனை உடைவாள் செறிக்க வேண்டுங்காலை, அவனது அருள்செய்யும் பெற்றியையும், அருளின் திறத்தையும் விளக்கும் பாடல்.

    எளியேங்களாகிய நம் புலன்களிற் பொருந்தும் ஆசையை ஒழித்த தன்மையானது ஐம்புலன்களையும் கேடுவராமல் காக்கின்றது; அதனால் அது ஓவியங்களமைத்து  நிரப்பிய  சட்டை அல்லது கவசம் எனும் மெய்யுறையாக உருவகிக்கப்படுகின்றது. முருகப்பெருமானே இந்த அவவாற்ற தன்மையை, ஆசைகளொழிந்த நிலையை நமது உள்ளத்திற் குடியிருந்து நமக்கு அளித்து அருள்பவன்.

    ‘ஆசை அறுமின்கள்! ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்4!’ என திருமந்திரம் கூறுவது இதனால்தான் என்னவோ! இத்தகைய கேடு விளைவிக்கும் ஆசை எனப்படும் பற்றானது இருவகைப்படும்; அகப்பற்று, புறப்பற்று என்பன அவை. அதாவது தம்மிடமுள்ள பொருளை விடாமல் பிடித்துக் கொள்ளுதலும், தமதல்லாதவற்றைத் தாமடைய விழைவதுமாகும். இந்த இருவகைப் பற்றையும் இல்லாமற் செய்து தனது பொன்னாலான (செருப்பணிந்த) திருவடிக் கழல்களில் நம்மைச் சேர்த்துக் கொள்கிறான் முருகப்பெருமான். அது மட்டுமின்றி, அருள்சுரந்து குறுமுறுவல் பூத்து உபசரிக்கிறான். அத்தகையவன் இந்த கதிர்காமப் பெருமான்!

    அவன், இந்த அழகன் முருகன், உடைவாளை அணிந்துகொள்ளும் முன்பு அரைக்கவசம் எனப்படும் வட்டுடையை அதனைக் கட்டுவதற்குரிய கயிற்றுடன் முழந்தாளிலிருந்து இடுப்புவரை புதுமையானதொரு முறையில் விளங்குமாறு அழகாக விரித்துச் சுருக்கி, குறுக்கிக் கட்டி, தொடையும் இடுப்பும் மறைய உடுத்தியுள்ளான்; அந்த ஆடையின் விளிம்பில் அதனை எடுப்பாகக் காண்பிக்கும் பச்சைநிற மரகதங்கள் வைத்துத் தைத்ததும் சுருண்ட பாம்பினை ஒத்ததுமான கச்சினை அணிந்துள்ளான். அதன்மீது கடற்சிப்பிகள் உமிழ்ந்த முத்துக்களாலான வாளின் உறையைக் கச்சிதமாகப் பொருத்தி அணிந்து அதனுள் வயிரங்கள் பதித்த உடைவாளைஅவன் செறித்தருள வேண்டும் எனப் புலவர் வேண்டுகிறார்.

                பொருந்து மெளியே மவவின்மைப்
                                பொதியோ வியமெய் யுறைபோர்க்க
             ………………………………………….
                       முந்து குறங்கில் வட்டுடைஞாண்
                                முழந்தா டொடங்கி நுசுப்புவரை
             …………………………………………
                       விளிம்பிற் பச்சை மணிநிரைத்த
                                வெருள்பாம் பன்ன கச்சினையார்த்
             ………………………………………..
                       யெண்செந் நிலைக்கைப் பிடிவயிர
                                வீர்வாண் ஞானஞ் செறித்தருளே5!

    இங்கு வட்டுடையும், கச்சும் கலையின் செல்வமான நிரம்பிய அறிவும், அதன் தொடர்பாக உண்டாகும் நல்லொழுக்கமும் என உருவகிக்கப்பட்டன. அதன்மீது சாந்தத்தையே கைப்பிடி எனக்கொண்ட வாளினை, உறுதியான வயிரம் போலும் வாள் எனும் ஞானத்தை,  வேதங்களாலான உறையினுள் (எம் அகத்தே, உள்ளத்தில்) செறித்தருள் என முருகப்பெருமானிடம் அடியார் வேண்டுவதாக அமைத்துள்ளார் புலவனார். வாள் எனும் ஞானம் வேதம் எனும் வாளுறையில் பொருந்துகிறது. இப்பாடலுள்ளும் மற்றப் பாடல்களைப் போலவே அருமையான தத்துவக் கருந்து பொதிந்துள்ளது.

    அடுத்த பாடலும் இவ்வண்ணமே அருமையான கருத்தை உள்ளடக்கிப் பொலிகின்றது.

    முருகனுக்கு முன் செல்லும் பூதப்படைகளே அவனது சுற்றமாக விளங்குகின்றன. அவை வெற்றிபெற்றதாகக் கருதி வெற்றிக்கூத்தாகிய குணலைக் கூத்தினை ஆடின. பெருமைவாய்ந்த தேவர்கள் யாழினையும் குழலினையும் இசைத்தும் முழவினை அடித்தும் பூக்களைச் சொரிந்தும் செல்ல, முருகப்பெருமானைத் தாங்கிச்செல்ல அம்புபோல விரைந்து செல்லும், குடைபோலத் தோகையை விரித்த மயிலாக இந்திரனே வந்தான். போர்க்களத்தே இந்திரனே மயிலாக வந்து முருகனைத் தாங்கினான் என்பர். இவ்வாறு முருகன் போருக்கு எழுந்தருளுங்காலை, தமிழ்பாடும் ஞானத்தொண்டராகிய அடியார்களின் படையாகிய குழாம் வாயினால் ஒலியெழுப்பி ஆரவாரம் செய்தனர். ‘ஆவலங் கொட்டுதல்’ என்பது வெற்றி முழக்கங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படும். சூரனுக்கு அடிமையாக தேவர்கள் வாழ்ந்த வாழ்வு தொலைந்தது. படையெழுந்ததால் மூவுலகிலும் தூசிப்பொடி எழுந்து பரவிப் பூசியது. அறங்கள் செழித்து வளரவும், பகைவர் அச்சமுற்று நாணி உன்னை வணங்கவும் ஆகும்படிக்கு நீ மாலையணிந்த வாளினை இடையாடையில் அணிந்தருளுக! எனப் புலவர் வேண்டுவதாக அமைந்த பாடலிதுவாகும்.

                கூளிச் சுற்றத் தூசிப் பஞிலங்
                                குணலைக் கூத்தியலும்
                       கொன்புத் தேளிர் யாழ்குழல், முழவிசை
                                குவிபூப் பொதுளுமரோ
             …………………………………………
             தூளிப் பொடிமூ வுலகும் பூசச்
                                சூரடி மைவாழ்வு
                       தொலைவுற …………………..
             …………………………………………….
                                தார்வா ளுடைசெறியே
                       தமியேங் கதிர்மலை யாண்டகை! வாழி
                                தார்வா ளுடைசெறியே6!

    உடைவாள் செறித்தல் எனும் பருவமான இது மிக அழகான பருவம். பாடல்களால் போற்றிக் களிக்க மிகவும் அருமையான இப்பருவத்தை ஏன் புலவர்கள் பாடவில்லை எனும் வினா நம்முள்ளத்தே எழுகின்றது.

    இத்துடன் ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் நிறைவு பெறுகின்றன. இனி வரும் பகுதிகளில் அரிதாகப் பாடப்பெற்ற பெண்பாற் பிள்ளைத்தமிழின் அருமையான பருவங்களைக் காண்போம்.

    பார்வை நூல்கள்:

    1. பிங்கல நிகண்டு- பாடல் 267- பிங்கல முனிவர்
    2. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்
    3. கம்பராமாயணம்- கம்பர், பாலகாண்டம். கையடைப்படலம். பா.
    4. திருமந்திரம்- திருமூலர்
    5, 6. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்-15

    குழவி மருங்கினும் கிழவதாகும்-15

    மீனாட்சி பாலகணேஷ்

    (உணவூட்டல்)

    ஆண்பால் பிள்ளைத்தமிழின் அடுத்த பருவம் உணவூட்டல் பருவம் ஆகின்றது.

    ‘ஏழாந் திங்களி னின்னமு தூட்டலும்,1 என்பது பிங்கல நிகண்டுவின் பாடல்வரி. அரிதாகப் பாடப்பட்டுள்ள பருவங்களில் ஒன்றான இதுவும் கதிர்காமப்பிள்ளைத்தமிழில் மட்டுமே நயமுறப் பாடிப் பதியப்பட்டுள்ளதனைக் கண்டு மகிழலாம்.

    உணவூட்டல் எனும் செய்கையைப் பொருளாகக்கொண்ட இப்பருவம் ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவானதும் குழந்தை வளர இன்றியமையாததுமாகும். பெரியாழ்வார் கிருஷ்ணனைப் பற்றிப் பாடிப்பரவிய திருமொழிப்பாசுரங்களில் ‘அன்னை முலையுண்ண அழைத்தல்’ எனத் தனியாகப் பாசுரங்களைப் பாடியுள்ளார். இருப்பினும் எந்தப் பிள்ளைத்தமிழிலும் இதுவோ, உணவூட்டல் எனும் நிகழ்வோ தனிப்பருவமாக எடுத்துப் பாடப்படவில்லை என்பது வியப்பிற்குரியது. குழந்தை நல்ல அறிவாற்றலுடன், நற்குணங்களுடன் வளர சத்தான உணவைத் தாயும் செவிலியரும் தேர்ந்தெடுத்து ஊட்டிடல் வேண்டும். தானே உண்ணவியலாத பருவமாதலால், உணவைக் குழந்தைக்கு ஊட்டிவிடவும் வேண்டும். உணவு உண்ணாது சில குழந்தைகள் மறுத்துவிடும். அப்போது நிலவைக் காட்டியும், காக்கை, குருவி, நாய் ஆகியனவற்றைக் காட்டியும், தாய் உணவினை ஊட்டுவாள். சிலபொழுதுகளில் நல்ல கதைகளைக் கூறியும் உணவூட்டிடுவாள்.

    பாடல்களைக் காணலாம்:

    முதல்பாடல்: ஏறு எனப்படும் விடையிலேறி வரும் சிவபிரான் அருமையாகச் சீராட்டிடும் எங்கள் ஏறு (சிங்கம்) போலும் மகவே! இதில் ஏறு எனும் சொல்லை விடை, சிங்கம் எனும் இரு பொருட்களில் பயன்படுத்தியுள்ள நயத்தைக் காணலாம். குகைக்குள் சிங்கமானது நினது நடையினைக்கண்டு நாணமுற்று வருந்திக் கிடக்கின்றது.

    கதிர்காமத்திலுள்ள அழகிய மாணிக்ககங்கை எனப்படும் வடவையாற்றின்கண் உள்ள துறைகளில் ஆங்காங்கே நீராடும் தொண்டர்களுக்கு கடைக்கண்ணால் பார்த்து அருள் செய்யும் விடாத பெருமழை போல்பவனே! இதில் சுவையானதொரு தத்துவம் தொக்கி நிற்கிறது; முருகப்பெருமானுக்கு அடியாராகி விட்டவர்களை அவன் எப்போதுமே விடாது பெய்யும் கொடைமழைபோன்று அருள்பாலித்தவண்ணம் இருப்பவன் என்பதே அது.

    இனிக்கும் தீம்பாகினில் தோய்த்தெடுத்த கரும்பினின்றும் பெறப்பட்ட கற்கண்டுக் கட்டியே!

    ஆயர்கள் வைத்துள்ள தயிரினைக் கள்ளத்தனத்தால் உண்ட திருமாலின் மருமகனே! பாலருந்துங்கால் நகத்தாற் கீறிய முலையின் இன்னமுதினைப் பருகும் கோமான் நீ! இன்று அக்கொங்கைகளுக்கு ஒப்பான பொற்கிண்ணத்தில் படைக்கப்பட்டுள்ளதும் உள்ளன்பு எனும் நெய்யினைப் பெய்தமையால் அது சிவமணம் கமழ்வதாயும் உள்ளதாகச் சமைத்த அமுதனைய சோற்றினை, நீ உண்ணவேண்டும். இங்கு இறைவனுக்குப் படைக்கப்படும் அமுது எதுவாயினும் உண்மை அன்பு எனும் நெய்யினைப் பெய்து படைத்தால் அது சிவமணம் கமழும் அமுதாகிவிடும் எனும் செய்தி தொக்கி நிற்கின்றது. ஆயர்களின் தயிரைக் கண்ணபிரான் களவாடி உண்டமையால் அவர்கள் பெரும்பேறு பெற்றனர் எனும் கருத்தையும் காணலாம்.

    பொய்மையற்ற நின்னடியாரின் உள்ளங்களைக் கவர்ந்து உண்பதேபோன்று நான்தரும் இச்சோற்றினையும் உண்டருள வேண்டும் எனத்தாய் வேண்டுவதாக அமைந்த பாடல்.

             ஏறூரு மவனினிது கோதாட்ட வருமெங்க
                       ளேறே!மு ழைக்குள்யாளி
                  …………………………………………..
             கிண்ணத்து நறுமணஞ் சிவமணம் போன்மன்பு
                       கெழுனெய்ய ளாய்ச்சமைத்த
             சோறமுது மாயர்தயிர் தொட்டுண்ட கள்வன்மகிழ்
                       சூழ்மருக! உண்டருள்கவே!
              சொற்றொழும் பாளரது ளங்கவர்ந் துண்டல்போற்
                       சோறமுது முண்டருள்கவே.2

    குழந்தையின் இனிய செயல்களும், அக்குழந்தை முருகப்பிரானாகியமையால் அவனுடைய தெய்வத்தன்மையும் விளங்கித்தோன்றுமாறு பாடப்பெற்ற அருமையான பாடல்கள் இவையாகும்.

    சிறுகுழந்தை உணவுண்ண அவ்வளவு எளிதாக இயைவதில்லை. அதற்காக வெவ்வேறு விதமான நயமான சொற்களைக்கூறித்தான் தாய் உணவூட்ட வேண்டும். அவ்வாறே அடுத்த பாடல் அமைந்துள்ளதனைக் காணலாம்.

    இவ்வுலகிலேயே உனக்கு அளிக்கப்படும் இவ்வுணவுதான் மிக்க உயர்வானது எனத்தாய் கூறுகிறாள். இது குமரப்பெருமானுக்கு மிக நயமாகப் பொருந்துகின்றது. ‘பாற்கடல் எனும் ஆழியைக் கடைந்து குடத்தில் அள்ளி எடுத்த அமுதமும் இதற்கு நிகரன்று குழந்தாய்! அந்தணர்கள் தாமியற்றும் வேள்விகளில் நெருப்பில் அவி எனச் சொரியும் எவையும் இதற்கு நிகரன்று.

    ‘திருத்தமான செந்தமிழின் உலகவழக்கு, செய்யுள் வழக்கு ஆகியனவும் இதற்கு இணையல்ல அப்பா! வள்ளியம்மை நின்னிடம் ஊடல்கொண்டபோதினில் செய்யும் தருக்கம் செறிந்த சொற்களே இதற்கு நிகராகும் என்போம்.

    ‘மேலும் சீர்காழியில் உமையம்மையின் ஞானப்பால் உண்டமையால் சிவஞானம் பெற்றுக் கூறிய பாடல்களும் (கலை) இதற்கு நிகராகும். கதிர்காமத்திற்கு வரும் நின் அன்பர்கள் பலரும் கனிந்து குழைந்து நின்னைத் துதிக்கும் சொற்களும் இதற்கிணையாகும்.

    ‘கூவும் சேவலைக் கொடியினிற்கொண்ட கோவே! இவ்வுணவைச் சிறிது உண்பாயாக’! என்று தாய்ப்பாசம் மீதூர, ‘உனது அருள்வடிவாகிய உடல் கொழுத்து நீ உயரமாக வளருவதற்காகவும் இதனைச் சிறிதே உண்பாயாக!’ என வேண்டுவதாக அமைந்த அழகிய பாடல்.

            ஆழி கடைந்து குடம்நிறைத்த
                       அமுது மிதற்கு நிகரல்ல
            அந்தண் வேள்வி அவிசொரியும்
                       அதுவு மிதற்கு நிகரல்ல
             …………………………………..
             காழி ஞானப் பால்குழைத்த
                       கலையு மிதற்கு நிகராகும்
             கதிர் காமத் தன்பர்பலர்
                       கனிவும் குழைத்த திதுவாகும்
             …………………………………
             குறித்த அருண்மெய் கொழுத்துயரக்
                       கோவே சிறிதே யுண்டருளே!3

    இதற்கும் மேல் நயமான சொற்களைக்கூறி தெய்வக் குழந்தையை உணவருந்த வேண்ட இயலுமோ?

    இயலும் என்பதனை அடுத்த இனிமையான பாடல் நமக்கு உணர்த்துகிறது!

    “ஆடியவாறே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களையும் செய்யும் ஐயன் உயிர்களுக்குத் தன்னையடையும் பக்குவத்தை இந்த ஐவகைத் தொழில்களால் உண்டுபண்ணுகிறான். அதுபோன்றும் ஆரிய முனிவராகிய துர்வாச முனிவரின் வயிறு நிறையுமாறு கண்ணன் உண்டது போலும் நீயுண்ண வேண்டும்.

    இதிலொரு அழகான தொன்மத்தை நயமாக இணைத்துள்ளார் புலவர். வனவாசத்தில் பஞ்சபாண்டவர்கள் இருந்தபோது சினத்திற்குப் பெயர்பெற்ற துர்வாச முனிவர் உரியபொழுது கழிந்தபின் தமது பெரும் குழுவினருடன் விருந்தினராகச் சென்றார். திரௌபதியிடமிருந்த அட்சயபாத்திரத்தில், அவள் எல்லாருக்குமளித்துத் தானும் உண்டுமுடித்தபின் அன்றைய தினத்திற்கு வேறு உணவைப் பெற இயலாது. அவர் உணவில்லாமையால் சினம்கொண்டு பாண்டவர்களை வைதிடாவண்ணம் கண்ணபிரான் திரௌபதிக்கு அருள்செய்தான். எவ்வாறெனில் அவள் கழுவிக் கவிழ்த்திய சோற்றுப்பானையில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு சோற்றுப்பருக்கையை அவன் உண்டமையால் நீராடச் சென்ற முனிவரும் அவர் குழுவினரும் வயிறுநிரம்பப் பெற்றோராகி, வேறு உணவினை ஏற்காமல், பாண்டவரையும் திரௌபதியையும் வாழ்த்திச் சென்றார் என்பது புராணம். அதுவே இங்கு கூறப்பட்டது. முருகன் உண்பதனால் உலகமே உண்ணும் எனும் பொருளில் இக்கருத்து இங்கே கூறப்பட்டது.

    இளம் கன்னிப்பெண்கள் காடுகளில் விளையாடுகின்றனர். அவர்கள் விளையாடும்போதெழும் ஓசை காடுகளில் ஒலிக்கின்றது. அவர்கள் விளையாட்டாகக் கூவி அதன் எதிரொலியை மலைகள் முழங்கக் கேட்டு மகிழ்கின்றனர். முருகன் மிகுதியான அருள் செய்வதும் அதுபோன்றதே.

    மானிடரைப் படைத்தும், நின்னடியாராகிய அவர்கள் உனது பேரருளைப் போற்றிக் கொண்டாடிடவும், பயிர்களுக்கு மேகங்கள் பொழியும் மழைபோன்றும் இருப்பவனே!

    வறுமையால் வாடும் தமிழ்ப்புலவர்கள் வயிறு நிறையுமாறு நீ ஒருவாய்ச்சோறாவது உண்பாயாக! நீயுண்ணும் இச்சோறு வள்ளியம்மை தரும் தினைமாவிற்கு இணையானது எனக்கொண்டு அதனை நீ உண்பாயாக!

                       ஆடுமி ருட்டிர ளயரப் பெரியோ
                                னாடியி ளைப்பதுபோ
                        லாரிய முனிவர ருந்தக்கண்ணன
                                ருந்திய முறையேபோற்
                       ……………………………………
                       வாடுத மிழ்ப்புல வோர்வயி றார
                                வாய்ச்சோ றார்குகவே
                        வள்ளித ருந்தேந் தினைமா வெனவே
                                வாய்ச்சோ றார்குகவே.4

    இவ்வாறெல்லாம் பலவித நயமான கருத்துக்களைக்கூறி குழந்தை முருகனை உணவருந்த வேண்டும் பகுதி சுவைமிகுந்ததாகும்.

    பார்வை நூல்கள்:

    1.பிங்கல நிகண்டு
    2, 3, 4. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்

         (தொடரும்)

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்-14

    குழவி மருங்கினும் கிழவதாகும்-14

    மீனாட்சி பாலகணேஷ்

    (மொழி பயிலல்)

    பிள்ளைப்பருவத்தின் ஆடல்களும் செயல்களும் நிகழ்வுகளும் இலக்கணத்தால் வரையறுக்கப்பட்ட பத்துப்பருவங்களுக்கு மட்டுமே உட்பட்டனவன்று. எண்ணற்ற விளையாட்டுகளும், தாய்தந்தையரும், குடும்பத்தினரும் குழந்தையின் நலன்கருதிச் செய்யும் கண்ணேறு கழித்தல், காது குத்துதல் ஆகிய சில சடங்குகளும் இன்னபிறவும் குழந்தைப் பருவத்திற்கு மட்டுமே உரியனவாம். இவற்றுள் பல அரிதாகப் பாடப்பட்டும் பல பாடப்படாமலேயும் உள்ளன.

    இப்பருவங்களுள் பல ஆண்பால், பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் தனித்தனியாகப் பாடப்பட்டுள்ளன. சிற்றில் பருவம் ஒன்றே இருபாலருக்கும் பொதுவாக அமைந்துள்ளது. ஆண்மக்களின் வளர்ச்சிப் பருவத்தில் நிகழும் சில நிகழ்ச்சிகளும் சடங்குகளும் பிங்கலந்தை நிகண்டுவில் இலக்கணமாக வரையறுக்கப்பட்டுள்ளதனைக் காணலாம்.

           ‘ஆறாந் திங்களிற் கூறுதற் கற்றலோ
             டேழாந் திங்களி னின்னமு தூட்டலும்
             ………………………………………….
             பத்திற் பூணணி பன்னீ ராண்டினிற்
             கச்சொடு சுரிகை காமுறப் புனைதலென்
             றின்னிவை1 ……………………….,‘ என்பன பாடல்வரிகள்.

    இருப்பினும் பிங்கல நிகண்டு குறிப்பிடும் இப்பருவங்கள் கதிர்காமப்பிள்ளைத்தமிழ் எனும் ஒரேயொரு பிள்ளைத்தமிழ் நூலில் மட்டுமே பாடப்பட்டுள்ளது வியப்பிற்குரியதாகும்.

    சிவங். கருணாலய பாண்டியப்புலவர் இயற்றிய இந்நூல் இலங்கையிலுள்ள கதிர்காமம் எனும் பதியில் உறையும் முருகப்பிரானைப் பற்றியதாம். பதினான்கு பருவங்களைக் கொண்டமைந்த இந்நூலின் பருவங்கள் ஒவ்வொன்றும் மூன்று பாடல்களைக் கொண்டே அமைந்தவையாகும் என்பதும் இதன் இன்னொரு சிறப்பாகும். காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, நிலாவழைத்தல், சிறுபறை முழக்கல், சிற்றில் சிதைத்தல், சிறுதேர் உருட்டல், ஆகிய பத்துப்பருவங்களுடன் மொழிபயிலல், உணவூட்டல், பூணணிதல், உடைவாள் செறித்தல் ஆகிய நான்கு பருவங்களும் சேர்த்து மொத்தம் பதினான்கு பருவங்களால் கவினுறப் பாடப்பட்டுள்ளது.

    மொழிபயிலல் பருவமானது இப்பிள்ளைத்தமிழில் செங்கீரைப்பருவத்திற்கு அடுத்து அமைக்கப்பட்டுள்ளது. மகவு, தன் தாய், சுற்றியுள்ளோர் ஆகியோர் பேசுவதனைக் கண்டு தானும் தனது தாய்மொழியின் வழக்குகளை அறிந்து பேசக் கற்றுக்கொள்ளுதல் எனப் பொருள் கொள்ளலாம். குழந்தையின் வளர்ச்சியில் இதுவும் மிக இன்றியமையாததொரு பருவமாகும். மொழியினைத் தன் தாயிடமிருந்தே அவள் தனக்குத் தாலாட்டுப் பாடும்போது கேட்டுக் குழந்தை கற்றறிகிறது. உறவுமுறைகள், உணர்வுகள், உணவு பற்றிய சொற்கள், காகம், நாய், பூனை முதலான விளையாட்டுத் தோழர்கள் ஆகியனவற்றைத் தாய் இப்பருவத்தில் குழந்தைக்குச் சிறுசொற்களாலும் சொற்றொடர்களாலும் அறிமுகப்படுத்துகிறாள்.

    இது ஆண், பெண் ஆகிய இருபருவத்துக் குழந்தைகளுக்கும் பொருந்துமாயினும் ஆண்பால் பிள்ளைப்பருவமாக ஒரேயொரு பிள்ளைத்தமிழில் மட்டுமே பாடப்பட்டுள்ளது. ‘ஆறாம் திங்களில் கூறுதற்கற்றல்’ என பிங்கல நிகண்டு இதனைக் குறிப்பிடுகிறது. இப்பருவத்திற்கான பாடல்கள் மூன்றே மூன்று ஆனவையாதலால் அனைத்தின்  சிறப்பையுமே நோக்கலாம்.

    முதற்பாடலின் மூலம் தமிழின் சிறப்பையும் அதைப் பயிலும் குழந்தை முருகனையும் புலவர் ஏத்துகின்றார். அங்கயற்கண்ணியம்மையின் மகனாகித் தமிழைப் பயிலும் மகனே! எமது குலத்தோரின் குடியினை ஆளவந்து மகவாய் உதித்து விளையாடல்களைப் புரிந்த இன்பவெள்ளமே!

    துரியாவத்தைக்கு மேலான துரியாதீதாவத்தை, கேவலாவத்தை, சகலாவத்தை, சுத்தாவத்தை ஆகியவை தொடராது பேசாமல் வாளவிருந்தவன் நீ ஆவாய்! நீ வெண்குன்றமெனப்படும் கயிலாயத்தில் பகல்பொழுது இரவுப்பொழுதென விளங்கும் பச்சை நிறங்கொண்ட பார்வதியம்மை இடப்புறமிருக்க, வெண்மைநிறங்கொண்ட சிவபெருமானும் வலப்புறமிருக்க, இவர்களுக்கிடையே சிவந்த செக்கர்வானம்போல விளங்கும் முருகப்பிரானாகிய குழவியே! (இவ்வரிகள் சோமாஸ்கந்த வடிவினை நமக்கு நினைவுபடுத்தி மகிழ்விக்கின்றன).

    முருகப்பெருமானே! அன்று நீ அன்னை, அத்தன் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு பேசும் ‘அம்மா, அப்பா, எனும் இனிய சொற்களை அடியேம் யாம் கேட்க ஆவலாக உள்ளோம்,’ எனும் கருத்திலமைந்த பாடலிதுவாகும். அம்மையே அப்பா எனும் சொற்களே அருமறையாகும் என உலகிற்கு உணர்த்தியவன் முருகப்பெருமான் என உட்பொருளாகக் கொள்ளலாம்.

      இகலுமிணை அங்கயற் கண்ணிமக வாய்த்தமிழி
             யன்றுபயி லஞ்ஞைசெம்மால்!
        எம்மனோர் குடியாள வந்துமக வாய்க்கூத்தி
             யற்றின்ப வெள்ளமே!
        …………………………………………………………………..
      பகலிரவு மாறப்ப சுந்தபச் சைக்குமறு
             பாலின்வெள் ளைக்குநடுவட்
        படர்செக்கர் வானன்ன செம்மையே யன்றவர்ப்
             பகர்மொழிப கர்ந்தவாற்றை
        ……………………………………………………………………………….
         வம்ம! வப்பாவென்னு மருமறைப் பாயிரம
             கத்தலர வாய்மலர்கவே2!

    மொழிபயிலல் பருவத்தின் இரண்டாவது பாடல்:

    ‘குறுகிய மதக்கொள்கையுடையோர் அறம் என எமக்கு உரைத்த பொருந்தாச் சொற்களைக் கேட்டதனாலும், ஈயாதார் இரப்போரைக் கடிந்துரைத்த கொடுஞ்சொற்களைக் கேட்டும், சிறுமை மிகுந்த குடியில் பிறந்த செல்வர் வறிய புலவர்களைச் செருக்கினால் இழித்துப் பேசக்கேட்டதனாலும் நல்ல அமிழ்தம் போலும் தமிழில் கேடுவிளைவிக்கும் வேறுசொற்களைச் சேர்த்துக் கூறுவதனைப் பலகாறும் கேட்டதனாலும் சீழ்வடியுமாறு உண்டான செவிப்புண் அழிந்து மறையுமாறு, கதிரமலையழகனே! அமிழ்தம் பொழிவாயாக! ‘அம்மா! அப்பா! எனும் சொல்லமிழ்தம் பொழிகவே!’ எனத் தாய்தந்தையர் வேண்டும் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது.

                ‘குறிய மதத்த ரறமெம்பாற்
                       கூறக் கேட்ட செவிப்புண்ணும்
                  ………………. கதிரமலை
                       யழகே! யமிழ்தம் பொழிகவே!
                 யம்மா! வப்பா! வென்னுஞ்சொல்
                       லமிழ்தம் பொழிக பொழிகவே3!’

    என்பன பாடல்வரிகள்.

    அம்மா அப்பா எனத் தாய்தந்தையரை அழைக்க அன்னை பயிற்றுவிக்கும் பருவம் இது எனவும் காண்கிறோம். கருத்திலும் கற்பனையிலும் வேறுபட்டு விளங்கும் இப்பாடல் தமிழின் பெருமையையும், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நல்லியல்புகளையும் இணைத்தும் கூறுகிறது.

    மூன்றாவதாகக் காணும் இப்பருவத்தின் கடைசிப்பாடலானது தமிழின் உயர்வைப் போற்றுகிறது. அதனை முருகன் பேசும் மழலையினோடு இணைத்தும் பாடுகின்றதனைக் கண்டு மகிழலாம். தாமரைமலரிலமர்ந்த பிரமன் மறைகளை ஓதவும், கல்லால மரத்தின் நிழலிலமர்ந்த தட்சிணாமூர்த்தியாகிய சிவபிரான் (தெற்குநோக்கியமர்ந்ததனால் இவனைத் தென்னன் என்கிறார்) உண்மைப்பொருளை சனகாதி முனிவர்களாகிய நால்வருக்கும் ஓதுகின்றான். இவர்கள் இவ்வாறு ஓதிட இவர்களுக்கு முன்பு அதனை உரைத்த பேராசிரியனே! (பிரமனுக்கும், தந்தை சிவபிரானுக்கும் மறைப்பொருளை உணர்த்தியவன் முருகன் எனும் தொன்மத்தை இதில் காணலாம்)

    புலர்காலைப்பொழுதினில் தேவர்கள் (தேவர்கள் கண்ணிமைக்காதவர்களாதலால் இமையோர் என்று குறிப்பிட்டார்) தொழுதிடும் கதிர்காமனே! நீ சொல்லிப்பழக வேண்டிய சொற்களை நாங்கள் உனக்குச் சொல்லிக்கொடுக்கவில்லை; (காலையில் துயிலெழுந்து படித்தால், கற்றால், அது உள்ளத்தில் பசுமரத்தாணி போற்பதியுமென்பது ஆன்றோர் வாக்காகும் அதனையே இங்கு கூறியுள்ளார் புலவனார்) நீ கூறி நாங்கள் கேட்டு இன்புற வேண்டியவற்றைக் கேட்கக் காத்துள்ளோம், ஊமைப்பிள்ளையே, என முருகனை விளிக்கிறார். இதுவும் ஒரு தொன்மத்தின்பாற்பட்டதே! (உப்பூரிகுடிகிழான் மகன் உருத்திரசன்மனெனும் ஊமைப்பிள்ளையாகி முருகன் வந்ததனைக் குறிப்பிடுகிறார்).

    உலகினில் மற்ற உயிர்கள் மெய்ப்புளகம் அடையுமாறு உரலினிடைக் கட்டப்பட்டவனாகிய கண்ணன் ஊதும் குழலிசையும் யாழிசையும் கசந்துபோகவும், உலர்ந்த மரங்களும் உயிருள்ளவை போன்று குழைந்திடவும் நீ மொழி பேசிட வேண்டும். நாவரசரான அப்பர் பெருமானை நீ ‘அப்பா’ என (ஆளுடைப் பிள்ளையாராகி) அழைத்ததெவ்வாறு? தம்மை அணுகிய பேயம்மையாகிய காரைக்காலம்மையாரை உன் தந்தை சிவபிரான் ‘அம்மையே’ என அழைத்தது எங்ஙனம் என விளக்கியருளுவாயாக என வேண்டுகிறார்.

            மலரவ னான்மறை யோதக் கல்லான்
                       மரநிழ லமர்தென்னன்
                 வாய்மையை நால்வர்க் கோத……
             ……………………………………………………………….
             உலகினி லேனைய வுயிர்மெய் யுயிர்ப்ப
                       உரலிடை யாப்புண்டோ
                 னூதுங் குழலிசை யாழிசை கைப்ப
                       உலர்மர முங்குழைய
             வலரன செந்நா வரசைய ழைத்தா
                       யஃதெங் கனமருளே4
    ………………………………………………………………..

    மொழிபயிலக் கற்ற சிறுமுருகன் ‘அம்மா, அப்பா’ எனப் பெற்றோரை அழைப்பதனைப் பலவிதமான உவமைகளால் மூன்று பாடல்களிலும் விளக்கியுள்ள நயம் போற்றத்தக்கது. மொழியில் அமையும் உரையாடல்களுக்குத் தொடர்புடைய கருத்துக்களையும் தொன்மங்களையும் கூறியுள்ளமையும் அழகாக அமைந்து சிந்தையைக் கொள்ளை கொள்கின்றது.
                                                                                                                                                                                                                      (வளரும்)

     பார்வை நூல்கள்:

    1. பிங்கல நிகண்டு
    2, 3, 4. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 13.1

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 13.1

    மீனாட்சி பாலகணேஷ்   

       (சிறுதேர்ப்பருவம்- ஆண்பால்)

    ஆண்பால் பிள்ளைத்தமிழின் பத்தாம் பருவமாக சிறுதேர்ப் பருவம் அமையும். சிறுதேர் உருட்டுதலானது சிறுகுழந்தை நன்கு நடை பழகுவதற்காகவும், ஓடியாடி விளையாடவும் வகைசெய்யும் விதத்தில் ஊக்குவிக்கப்படும் விளையாட்டாகும். தற்காலத்திலும் குழந்தைகளுக்கு நடைவண்டி என நடை பழகுவதற்காக மரத்தாலான மூன்றுகால் சக்கரவண்டி ஒன்றினைக் கொடுப்பதனைக் கிராமப்புறங்களில் காணலாம். நகரத்துக் குழந்தைகள், நான்கு சக்கர ஊர்தி பொம்மைகளையும், நாய்க்குட்டி பொம்மைகளையும் கயிற்றால்கட்டி இழுத்தவண்ணம் நடப்பதனைக் காணலாம்.

                ‘பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்

             முக்காற் சிறுதேர்1,’ என்று பட்டினப்பாலை, இச்சிறுதேரினை, சிறு குழந்தைகள் புரவியில்லாது உருட்டி விளையாடும் மூன்றுகால்களாலான சிறுதேர் எனக் கூறும்.

    ஐங்குறுநூறு, தலைவனின் உள்ளம் தன்மகன் புன்னகை புரிந்தவாறு தளர்நடை நடந்து சிறுதேர் உருட்டும் அழகினைக்கண்டு தலைவியைவிடப் புதல்வனிடத்தில் அன்புமிகுதியால் ஈடுபட்டதனைக் கூறுகிறது.

    ‘புணர்ந்தகா தலியின் புதல்வன் தலையும்

             ……………………………………………………………………

             சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே2,’ என்பன பாடல்வரிகள்.

    பிள்ளைத்தமிழின் ஒவ்வொரு பருவத்திலும் பாட்டுடைத் தலைவன் அல்லது தலைவியின் சிறப்புகள் கூறப்படும்; சப்பாணி, அம்மானை, சிறுபறை ஆகிய பருவங்கள் கைகளைப் பாடுபொருளாகக் கொண்டமையும்; வருகை, சிற்றில் (ஆண்பால்) ஆகியன கால்களைப் பாடுபொருளாகக் கொண்டு அவற்றின் சிறப்பைப் பேசும். தளர்நடை நடக்கும் ஆண்மகவு இழுத்துச் செல்லும் சிறுதேரைப்பேசும் சிறுதேர்ப்பருவம், தலைவன் செலுத்தும் தேர் தொடர்பான பல செய்திகளைத் தெரிவிக்கும்.

    இவையே பிள்ளைத்தமிழின் தனிச்சிறப்பாகும்.

    தளர்நடைபயிலும் சிறு ஆண்மகவு நடக்கக் கற்றுக்கொண்டு விட்டதனால் அவனுடைய தாய் அவனுக்கு விளையாட தச்சனிடம் செய்து வாங்கிய ஒரு அழகான சிறுதேரினைக் கொடுத்திருக்கிறாள். இலேசான, கனமற்ற மரத்தால் குழந்தை விளையாடுவதற்காகவே செய்யப்பட்டு, குழந்தை கையிலோ காலிலோ குத்திக் காயம் பண்ணிக்கொள்ளாமலிருக்க முன்னெச்சரிக்கையாக கூர்மையான முனைகள் எல்லாம் தேய்த்து மழுங்கவைக்கப்பட்டு செய்விக்கப்பட்ட விளையாட்டுத்தேர்! சிவப்பு, பச்சை, மஞ்சள் எனக் கண்ணைக்கவரும் வண்ணங்கள் பூசப்பட்டு, சில பட்டுத்துணித்துண்டுகளால் கொடிகளும் பறக்கும்படி அமைந்து மிக அழகாக இருக்கிறது. தாய் தனது ஆசைப்படி அதில் ஒரு அழகான அன்றலர்ந்த தாமரைப்பூவினையும் செருகிவைத்திருக்கிறாள்.

    இந்தத்தேரை அழகான ஒரு மணிக்கயிற்றினால் கட்டி, குழந்தை அதனை இழுத்து உருட்டும்போது ஒலியெழும்படியாகச் சில மணிகளையும் அங்கங்கே இணைத்துள்ளான் அதனைச் செய்த தச்சன். மிக்க மகிழ்ச்சியுடன் சிறுகுழந்தை தேரை இழுத்துக்கொண்டு செல்கிறான். தேர்ச்சக்கரங்கள் உருளும்போது மணிகள் இனிமையாக ஒலிக்க அதனை இழுத்து உருட்டும் தன் மகனைக்கண்டு தாயின் மனம் ஆனந்தத்தில் பூரிக்கின்றது. குழந்தையும் புது விளையாட்டில் உற்சாகமாக ஈடுபட்டுத் தெருவெங்கும் தேரினை இழுத்தவண்ணம் நடந்து செல்கிறான்.

    இந்தக்குழந்தை நம்மையெல்லாம் காக்கும் செந்தில்வாழ் கந்தன்; சேவற்கொடி கொண்ட குமரன். பக்தியிலும் தாயன்பிலும் திளைக்கும் புலவர் பகழிக்கூத்தர் தாமியற்றியருளிய திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் குமரன் சிறுதேர் உருட்டுவதனை பரவசமாக வருணிக்கிறார்: குமரன் தேருருட்டுங்காலை மற்றும் பலரும் பலவிதமான தேர்களை உருட்டுகின்றனர் எனக்கூறும் நயம் வியக்கத்தக்கது.

    ‘தேவர்களுக்கரசன் இந்திரன்; மணம்மிகுந்ததும் தேன்சொரிவதுமான மாலைகளை அணிந்தவன்; ஆயிரம் யாகங்களைச் செய்து இந்திரபதவி பெற்று தக்கதருணத்தில் அரியாசனத்தில் அமர்ந்தவன்; அவனுடைய அழகிய தேரினை ஓட்டுபவன் (தேரினை உருட்டுபவன்) மாதலி எனும் பெருமைமிக்க தேர்ப்பாகன். உலகின் நிலைப்பாடு அழிந்துபட்டதென்று குபேரன் எனும் தேவன் தானும் ஒரு தேரை உருட்டுகிறான். அது என்ன? பழங்காலம்தொட்டே பகைமைகொண்ட அரக்கர்கள் அச்சமடையும்படி,  வடவரையாகிய இமயத்தினைப்பொரும் புஷ்பகவிமானத்தினை அவன் செலுத்துகிறான் (புட்பகத்தேரை உருட்டுகிறான்). வெற்றிமிகும்படி உதித்தெழுகின்ற ஆயிரம்கதிர்களைக் கொண்ட கதிரவன் ஆகாயத்தில் ஒளிபரப்பியவண்ணம் கோலம் நிறைந்த அழகான ஒளிவட்டத்தைப் பரிவட்டமாகக் கொண்டு சுடர் வீசுகின்றான்: உலகினைத்தன் ஒளியால் துலக்கி விளக்கமுறச் செய்கின்றான். சூரியனின் தேரோட்டியான அருணன்  முட்கோல் எனப்படும் தேரோட்டுபவனின் கைக்கோலை (சாட்டைக்கோலை) எடுத்துக்கொண்டு வலிமைமிகுந்த தேரினை உருட்டிவருகிறான். ஆகவே, செந்தில்பதியில் வாழும் கந்தனே! நீயும் உனது சிறுதேரினை உருட்டி வருவாயாக!’ எனப் பகழிக்கூத்தர் வேண்டுகிறார்.

                தண்டே னுடைந்தொழுகு மருமாலை நீள்முடி

                       தரிக்குஞ் சதக்கிருதுசெந்

             தருணமணி ஆசனத் தேறமா தலிசெழுந்

                       தமனியத் தேருருட்டப்

             ………………………………………………………………………………

             கொண்டே உதித்தசெங் கதிரா யிரக்கடவுள்

                       குண்டலந் திருவில்வீசக்

             ……………………………………………………………………………….

             திண்டே ருருட்டவளர் செந்தில்வாழ் கந்தனே

                       சிறுதேர் உருட்டி யருளே

             சேவற் பதாகைக் குமாரகம் பீரனே

                        சிறுதேர் உருட்டி யருளே3.

    புலவரின் ஆவல் இத்துடன் நிறைவுபெறவில்லை! இன்னும் யார்யார் என்னவெல்லாம் உருட்டினார்கள் எனக் குறிப்பிடுவதிலேயே முனைப்பாக இருக்கிறார். இதுவுமொரு அழகிய சொல்நயமும் தமிழ்நயமும் செறிந்த பாடல்!

    வாரணிந்த இளமுலைகளைக் கொண்ட இடைச்சியர்கள் (பொதுவியர்) தங்கள் ஆடை மோரினாலும் தயிரினாலும் முடைநாற்றம் வீசும் தகைமையர். தயிரினைக் கடைந்து வெண்ணையையும் உருண்டைகளாக உருட்டி, வெண்தயிரையும் உறிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய வீடுகளுக்குள் கள்வனைப்போல் மெல்லப்புகுந்து அந்தத் தயிரினை உண்கிறான் ஒருவன்; பின் குடைத்தை உருட்டித்தள்ளி அதிலிருந்து வெண்ணையையும் அள்ளிவாரி (உருட்டி வாயில் இட்டுக்கொள்ளக்கூட அவகாசமின்றி) யாரும் காணும்முன்பு திருட்டுத்தனமாக மிக அவசரமாக வாயில் திணித்துக்கொண்டு உண்டுவிடுகிறான்; அதன்பின்பு தனது செங்கனி வாயினையும் துடைத்துக்கொண்டு ஒன்றுமே தெரியாதவன் போலச் செல்பவன், ஒரு பருத்த பெரிய சகடத்தைச் சிலம்பணிந்த தனது சிறுகாலால் எட்டியுதைத்து உருட்டி விளையாடிச் சிதைக்கிறான்! யாரிவன்? சகடாசுரனைக் கொன்ற கிருஷ்ணபெருமானே இவன். ‘அந்தப் பச்சைமாலின் மருகனே’ என முருகனைப் புலவர் விளிக்கிறார்: இவ்வாறு மாமனின் ‘சிறப்பைக்’கூறி விளித்த மருகனாகிய முருகனிடம், “உன்னிடம் தீராத பெரும்பக்தி கொண்ட அடியவர்களின் பழவினைகளாகிய கொடுமைகள் தீருமாறு நீ அத்தீமைகளைப் புறந்தள்ளி (உருட்டிவிட்டு) அனுக்கிரகம் செய்கிறாய் முருகா! மேலும் அத்துணை உலகங்களிலும், அண்டபகிரண்டங்களிலும் உனது  ஆணை (கட்டளை, அதிகாரம்) எனும் ஆக்ஞாசக்கரத்தை (ஆழியை) உருட்டிக் காக்கிறாய். இவ்வாறு செய்து, உனதடியைச்சேராத/வணங்காத அசுரர்களின் தலைகளாகிய குவடுகளை (மலைகளை) உருட்டுகின்றனை! நீ இந்தச் சிறுதேரையும் உருட்டியருளுக,” என வேண்டுவதாக இப்பாடல் அழகுற அமைகிறது.

    ‘சேவற்பதாகைக் குமாரகம்பீரனே,’ என ஆசையாக விளிக்கிறார். சேவல்கொடியைக்கொண்டு கம்பீரமாக விளங்குபவனே எனும் இப்பிரயோகம் தனித்துவம்கொண்டு விளங்குகிறது.

                   வாராரும் இளமுலை முடைத்துகிற் பொதுவியர்

                                 மனைக்குட் புகுந்து மெல்ல

                   வைத்தவெண் தயிருண்டு குடமுருட் டிப்பெருக

                                வாரிவெண் ணெயை யுருட்டிப்

                   பாராமல் உண்டுசெங் கனிவாய் துடைத்துப்

                                பருஞ்சகடு தன்னையன்று

                   பரிபுரத் தாளால் உருட்டிவிளை யாடுமொரு

                               பச்சைமால் மருக ……………………..

                    ……………………………………………………..

                  அண்டபகி ரண்டமும் அனைத்துலக முஞ்செல்லும்

                               ஆணையா ழியையு ருட்டிச்

                  சேராநி சாசரர் சிரக்குவ டுருட்டநீ

                                சிறுதேர் உருட்டி யருளே4

    முருகன் உருட்டும் சிறுதேரானது ஒவ்வொரு அடியாரின் உள்ளத்திலும் விதம்விதமான கற்பனைகளை உண்டுபண்ணுகின்றது.

                திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் சிதம்பர அடிகளார் மனித உடலையே முருகன் எனும் தெய்வக்குழந்தை படைத்து உருட்டும் அற்புதமான தேராக உருவகிக்கிறார். பாதங்களே தேரின் சக்கரங்களாகவும், எலும்பே பெரிய பலகையாகவும், சொல்லும் நாடியே அச்சாணியாகவும், பருத்தமார்பு தேரின் தட்டாகவும், காற்றாடியைப்போல அலமலந்து சுழலும் வஞ்சம் நெருங்கிய ஐம்பொறிகள் சிறப்பான தேர்க்கொடிஞ்சியாகவும் உள்ளன; விருப்பம் பொருந்திய சிகையே தேர்க்கொடிஞ்சியாக அமைய, பேசும் சொற்களே பல வாத்தியங்களின் தொகுக்கப்பட்ட ஒலியாக அமைகின்றது; இவ்வாறு பெரிய வேகம் மிகுந்த பலவகை மாறுபாடுகளையும் கொண்ட உடல் எனக் கூறப்படும் தேரின்மீது பெறுதற்கரிய உயிர் எனப்படும் ஒரு சிறுவனை அமரச் செய்துள்ளாய்! மனம் எனும் குதிரைகளை இருவினைகள் எனும் கயிற்றினால் பூட்டி, உனது திருவருளே பாகனாக இருக்குமாறு அமைத்து குற்றமற நடத்தச் செய்தருளும் குமரேசனே! நீ உனது சிறுதேரினை உருட்டியருளுக, என வேண்டுகிறார் புலவர்.

                             பாததிகி ரியுமெலும் புப்பெரும் பலகையும்

                                         பகர்நாடி யுருவாணியும்

                             பரியமரு மத்தட்டும் ………………

                                         ……………………………………

                            காதல்தரு குஞ்சிக்கோ டிஞ்சியும் பலமொழி

                                        கலித்தபல் லியராசியும்

                                   …………………………………………………

                         பேதமுறு தேர்கள்மீ தாருயிர்ப் பிளையைப்

                                       பிறங்கிட விருத்திவெற்றிப்

                         பேசரு மனப்புரவி கட்டிவினை வடவழிப்

                                       ………………………………

                         தீதற நடத்திடச் செய்தகும ரேசனே

                                      சிறுதே ருருட்டியருளே5

    அழகான உருவகங்களைக் கொண்டமைந்த பாடலிதுவாகும். முற்பிறவியில் அல்லது இப்பிறவியில் நாம் செய்த வினைகளின்படிதான் ஆன்மாக்கள் அடுத்தடுத்த பிறவிகளில் உடல் பெறுகின்றன. இதனையே, “கணமொடு மலிந்த உடலென உரைதரும் பெரிய கடுவேகம் உடைய நானாபேதமுறு தேர்கண்மீது,” எனப் பொருத்தமாகக் கூறுகிறார். அவ்வினைப் போகங்களை அனுபவிப்பதற்கு அந்தவந்த உடல்களில் உயிர்களைப் பொருத்திக் கூட்டிவைப்பதனால், “ஆருயிர்ப் பிள்ளையைப் பிறங்கிட இருத்தி,” எனும் தத்துவமும் விளக்கப் பட்டுள்ளது.

    இத்தகைய பெரும் வேதாந்த தத்துவத்தை உள்ளடக்கிய பாடல்கள் பிள்ளைத்தமிழ் நூல்களில் பலவாகும்.

                                                                                      ***

    வேறொரு அடியாரின் சிந்தையில் உலகில் இயற்கை நியதிக்கேற்ப நடைபெறும் பலவிதமான செயல்களும் முருகனின் சிறுதேரோட்டத்திற்கு  இணையாகக் கூறப்படுகின்றன.

    சந்திரன் வானில் பலவேறு நட்சத்திரக் கூட்டங்கள் புடைசூழத் தன் விமானத்தில் உலாவருகிறான்;

    ஒளி (சவி) வாய்ந்த இரவி எனும் சூரியன் ஏழு புரவிகளைப்பூட்டித் தனது அழகான தேரில் உலாவருகிறான்;

    அரன் எனப்படும் சிவபிரான் தனது விடை வாகனத்தைச் செலுத்தி வர, மாயவனாகிய திருமால் தனது கருடவாகனத்தில் வலம் வருகிறான்; தாமரை மலரில் உறையும் பிரம்மன் தனது அன்னவாகனத்தில் வலம் வருகிறான்;

    முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழ்த்திடவும், இந்திரனுடைய அழகான தேவமங்கையர் இருபுறமும் கவரிகளைக்கொண்டு வீசிடவும், இளமையான நிலவு வட்டமான வெண்குடையை ஏந்திடவும், இருகொம்புகளையுடைய மலைபோலும் யானைகள் மரங்கள் நிறைந்த மலைகளைச் சுறி வலம்வரவும், நீ உன் சிறுதேரினை உருட்டுக என வேண்டுகிறார் புலவர்.

                           சந்திரன் பலவேறு தாராக ணங்கள்சூழ்

                                     தரவிமா னத்து லாவச்

                           சவிபெற்ற ரவிபுரவி யேழ்பூட்டி யேநெடும்

                                     தமனியத் தேர்சே லுத்த 

                                    …………………………………….

                           முளரிப் பொகுட்டயன் புள்ளூர முப்பத்து

                                    முக்கோடி தேவர் வாழ்த்த

                                    ………………………………………

                              …….. ஈரிருமருப் புப்பொ ருப்பு

                          சிந்துரம் கற்பகா டவிகடவி வலம்வரச்

                                     …………………………….

                          தென்மயில மலைவாழ வந்தகரு ணாகரா

                                       சிறுதே ருருட்டி யருளே6.

     இது மயிலம் முருகன் பிள்ளைத்தமிழில் நாம் காணும் அழகான பாடல்.

    உலகில் அனைத்தும்  இலயம் தவறாது   இயங்கிடவேண்டுமாயின் இறைவனின் அருளாணை வேண்டும். இதனையே முருகன் உருட்டும் சிறுதேராகக் காண்பார் இவ்வடியார்.

                                                                                                                                                                     – (வளரும்)

     

    பார்வை நூல்கள்:

    1. பட்டினப்பாலை
    2. ஐங்குறுநூறு
    3. பகழிக்கூத்தர்- திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
    4. பகழிக்கூத்தர்- திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
    5. சிதம்பர அடிகளார்- திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
    6. திருவாரூர் வைத்தியநாத தேசிகர் – மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்

     

     

    Share