மீனாட்சி பாலகணேஷ்

(உடைவாள் செறித்தல்)

அரிதாகப் பாடப்பட்ட பிள்ளைப்பருவங்களின் வரிசையில் அடுத்து வரும் ஆண்பால் பிள்ளைத்தமிழ்ப் பருவம் ‘உடைவாள் செறித்தல்’ என்னும் பருவமாகும். இப்பருவத்தைப் பற்றிப் பாடியுள்ள ஒரே நூலான கதிர்காம பிள்ளைத்தமிழில் இது  கடைசிப்பருவமாக வைக்கப்பட்டுள்ளது.

            ‘………………….. பன்னீ ராண்டினிற்
         கச்சொடு சுரிகை காமுறப் புனைதல்1 என்று இதனை பிங்கல நிகண்டு எடுத்தியம்பும்.

ஆண்பால் பிள்ளைத்தமிழின் பருவங்கள் குழந்தை சிறுவனாகிப் பின் அரசுகட்டில் ஏறும்வரை வகைப்படுத்திப் பாடப்பெறும். அரசுகட்டில் ஏறுவதற்கு முந்தைய பருவமே ‘கச்சொடு சுரிகை காமுறப் புனைதல்’ என்பதாகும் எனக்கொள்ள இடமிருக்கின்றது. இது ‘உடைவாளினைக் காண்போர் விருப்பங்கொள்ளும்வண்ணம்  இடைக்கச்சில் அணிந்து கொள்ளுதல்’ எனப் பொருள்படும். அரசனாகப் போகும் இளம்சிறுவன், வாள், வில் வித்தைகளில் தேர்ச்சிபெற்று விளங்க வேண்டும். தனது வீரத்தை இவ்வித்தைகளைக் கொண்டு போர்களில் வீரச்செயல்கள் செய்து வெற்றி பெறுவதன் மூலம் வெளிப்படுத்தல் வேண்டும் என்பது அவனது நாட்டுக் குடிமக்களின் எதிர்பார்ப்பு. கிடைக்கப்பெற்ற மூன்று பாடல்களின் சிறப்பையும் நயத்தையும் காணலாம்.

கொடியதொரு வேடன், மானைக்கொன்று அவ்விறைச்சியை வேலனுக்குப் படைத்து வழிபாடு செய்த தலமே வலவையாற்றங்கரையினில் அமைந்துள்ள கதிர்காமம் எனும் பதியாகும்.

ஒருகாலத்தில் தாரகாசுரன் முதலான அசுரர்களின் தொல்லை தாங்காத தேவர்கள் குமரனின் தந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளில் வீழ்ந்து உளறிப்புலம்பி தம்மைக் காக்குமாறு முறையீடு செய்தனராம்; சிவபிரான் அவர்களிடம், “உமது தலைவனாகிய முருகன் இன்னும் சிறியவன்; மழலைச்சொல் பேசுபவன்; ஆதலால் இப்போது போருக்குச் செல்ல இயலாது. ஆகவே நான்கைந்து ஆண்டுகள் சென்றபின் நீவிர் வருக; இப்போது செல்க!” என்றான்.

“அவ்வாறு கூறியவன் கொடியதான போருக்குச் சென்றுவரத் தன் மகனாகிய உன்னை (முருகனை) அனுப்ப முனைபவன் போன்று, உனக்குக் கச்சினில் உடைவாளைச் செறித்து அணிவித்துப் ‘போர்க்கலையைப் பழகுவாயாக’ என்று கூறினான். நீயும் அங்ஙனம் செய்வதனைப் பருவமங்கையர் தம் வாள்போலும் கண்களாற்கண்டு காமுறும்வண்ணம் உடைவாளை இடையில் செருகிப் பயிலுவாயாக!” எனக் கூறும் பாடலிது.

‘கச்சினொடு சுரிகை காமுறப் புனைதல்’ எனும் இலக்கணக் கூற்றிற்கேற்ப இப்பாடல் மிகப் பொருத்தமாக அமைக்கப்பட்டதனைக் கண்டு வியந்து களிக்காமல் இருக்கவியலுமா?

            ஊன்குன்ற மாமசுரர் ………… ……………
                            உம்பரர் நுந்தையடிவீழ்ந்
                   துளறிப்பு லம்பிமுறை யிட்டனர் …..
                            உந்தையஞ் சற்கவென்று        
         …………………… நும் தலைவனின் னுஞ்சிறிஞன்
                            மழலையுநி ரம்பிற்றிலன்
                   வருகநா லைந்தாண்டி னிப்போக …………….
                            ………….. கடிதுபோர்க்குத்
         தான்சென்று வரவிடுப் பான்போலு நின்னைவாள்
                            சாலுடைசெ றித்தல்பயிலே
                   தகுமிளம் பருவமங் கையர்பிறழ்கண் வாளோடு
                            …………………… பயிலே2!

இப்பாடலின் ஆசிரியர் ஒரு கம்பராமாயணக் கருத்தைத் தன் பாடலில் கொணர்ந்துள்ள அருமையையும் கண்டு இரசிக்கலாம்.

விசுவாமித்திர முனிவன் தனது வேள்விக்கு இடையூறு செய்துவந்த அரக்கர்களை அழிக்கும்பொருட்டு இராமனை அனுப்பித்தருமாறு தசரதனிடம் வேண்டுகோள் விடுக்கிறான். துணுக்குற்ற தசரதன், “என் மகன் இராமன் சிறியவன்; படைக்கலங்களில் தேர்ந்த பயிற்சி இல்லாதவன்; ஆகவே நானே வந்து உமக்கு உதவுகிறேன்,” எனக் கூறுகிறான்.

            ‘படையூற்றம் இலன் சிறியன் இவன் பெரியோய்
                   பணி இதுவேல் 3………….,

என்பன பாடல்வரிகள்.

இவ்வாறு அரிதாகப் பாடப்பட்ட பருவங்கள் பிள்ளைத்தமிழ் நூல்களில் காணப்பட்டாலும் அவை புதுமையான நயங்களையும் கருத்துக்களையும் தொன்மங்களையும் கொண்டமைந்துள்ளன என நாம் உணர்ந்துகொள்ளலாம்.

அடுத்த பாடலைக் காண்போம்:

இது முருகனை உடைவாள் செறிக்க வேண்டுங்காலை, அவனது அருள்செய்யும் பெற்றியையும், அருளின் திறத்தையும் விளக்கும் பாடல்.

எளியேங்களாகிய நம் புலன்களிற் பொருந்தும் ஆசையை ஒழித்த தன்மையானது ஐம்புலன்களையும் கேடுவராமல் காக்கின்றது; அதனால் அது ஓவியங்களமைத்து  நிரப்பிய  சட்டை அல்லது கவசம் எனும் மெய்யுறையாக உருவகிக்கப்படுகின்றது. முருகப்பெருமானே இந்த அவவாற்ற தன்மையை, ஆசைகளொழிந்த நிலையை நமது உள்ளத்திற் குடியிருந்து நமக்கு அளித்து அருள்பவன்.

‘ஆசை அறுமின்கள்! ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்4!’ என திருமந்திரம் கூறுவது இதனால்தான் என்னவோ! இத்தகைய கேடு விளைவிக்கும் ஆசை எனப்படும் பற்றானது இருவகைப்படும்; அகப்பற்று, புறப்பற்று என்பன அவை. அதாவது தம்மிடமுள்ள பொருளை விடாமல் பிடித்துக் கொள்ளுதலும், தமதல்லாதவற்றைத் தாமடைய விழைவதுமாகும். இந்த இருவகைப் பற்றையும் இல்லாமற் செய்து தனது பொன்னாலான (செருப்பணிந்த) திருவடிக் கழல்களில் நம்மைச் சேர்த்துக் கொள்கிறான் முருகப்பெருமான். அது மட்டுமின்றி, அருள்சுரந்து குறுமுறுவல் பூத்து உபசரிக்கிறான். அத்தகையவன் இந்த கதிர்காமப் பெருமான்!

அவன், இந்த அழகன் முருகன், உடைவாளை அணிந்துகொள்ளும் முன்பு அரைக்கவசம் எனப்படும் வட்டுடையை அதனைக் கட்டுவதற்குரிய கயிற்றுடன் முழந்தாளிலிருந்து இடுப்புவரை புதுமையானதொரு முறையில் விளங்குமாறு அழகாக விரித்துச் சுருக்கி, குறுக்கிக் கட்டி, தொடையும் இடுப்பும் மறைய உடுத்தியுள்ளான்; அந்த ஆடையின் விளிம்பில் அதனை எடுப்பாகக் காண்பிக்கும் பச்சைநிற மரகதங்கள் வைத்துத் தைத்ததும் சுருண்ட பாம்பினை ஒத்ததுமான கச்சினை அணிந்துள்ளான். அதன்மீது கடற்சிப்பிகள் உமிழ்ந்த முத்துக்களாலான வாளின் உறையைக் கச்சிதமாகப் பொருத்தி அணிந்து அதனுள் வயிரங்கள் பதித்த உடைவாளைஅவன் செறித்தருள வேண்டும் எனப் புலவர் வேண்டுகிறார்.

            பொருந்து மெளியே மவவின்மைப்
                            பொதியோ வியமெய் யுறைபோர்க்க
         ………………………………………….
                   முந்து குறங்கில் வட்டுடைஞாண்
                            முழந்தா டொடங்கி நுசுப்புவரை
         …………………………………………
                   விளிம்பிற் பச்சை மணிநிரைத்த
                            வெருள்பாம் பன்ன கச்சினையார்த்
         ………………………………………..
                   யெண்செந் நிலைக்கைப் பிடிவயிர
                            வீர்வாண் ஞானஞ் செறித்தருளே5!

இங்கு வட்டுடையும், கச்சும் கலையின் செல்வமான நிரம்பிய அறிவும், அதன் தொடர்பாக உண்டாகும் நல்லொழுக்கமும் என உருவகிக்கப்பட்டன. அதன்மீது சாந்தத்தையே கைப்பிடி எனக்கொண்ட வாளினை, உறுதியான வயிரம் போலும் வாள் எனும் ஞானத்தை,  வேதங்களாலான உறையினுள் (எம் அகத்தே, உள்ளத்தில்) செறித்தருள் என முருகப்பெருமானிடம் அடியார் வேண்டுவதாக அமைத்துள்ளார் புலவனார். வாள் எனும் ஞானம் வேதம் எனும் வாளுறையில் பொருந்துகிறது. இப்பாடலுள்ளும் மற்றப் பாடல்களைப் போலவே அருமையான தத்துவக் கருந்து பொதிந்துள்ளது.

அடுத்த பாடலும் இவ்வண்ணமே அருமையான கருத்தை உள்ளடக்கிப் பொலிகின்றது.

முருகனுக்கு முன் செல்லும் பூதப்படைகளே அவனது சுற்றமாக விளங்குகின்றன. அவை வெற்றிபெற்றதாகக் கருதி வெற்றிக்கூத்தாகிய குணலைக் கூத்தினை ஆடின. பெருமைவாய்ந்த தேவர்கள் யாழினையும் குழலினையும் இசைத்தும் முழவினை அடித்தும் பூக்களைச் சொரிந்தும் செல்ல, முருகப்பெருமானைத் தாங்கிச்செல்ல அம்புபோல விரைந்து செல்லும், குடைபோலத் தோகையை விரித்த மயிலாக இந்திரனே வந்தான். போர்க்களத்தே இந்திரனே மயிலாக வந்து முருகனைத் தாங்கினான் என்பர். இவ்வாறு முருகன் போருக்கு எழுந்தருளுங்காலை, தமிழ்பாடும் ஞானத்தொண்டராகிய அடியார்களின் படையாகிய குழாம் வாயினால் ஒலியெழுப்பி ஆரவாரம் செய்தனர். ‘ஆவலங் கொட்டுதல்’ என்பது வெற்றி முழக்கங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படும். சூரனுக்கு அடிமையாக தேவர்கள் வாழ்ந்த வாழ்வு தொலைந்தது. படையெழுந்ததால் மூவுலகிலும் தூசிப்பொடி எழுந்து பரவிப் பூசியது. அறங்கள் செழித்து வளரவும், பகைவர் அச்சமுற்று நாணி உன்னை வணங்கவும் ஆகும்படிக்கு நீ மாலையணிந்த வாளினை இடையாடையில் அணிந்தருளுக! எனப் புலவர் வேண்டுவதாக அமைந்த பாடலிதுவாகும்.

            கூளிச் சுற்றத் தூசிப் பஞிலங்
                            குணலைக் கூத்தியலும்
                   கொன்புத் தேளிர் யாழ்குழல், முழவிசை
                            குவிபூப் பொதுளுமரோ
         …………………………………………
         தூளிப் பொடிமூ வுலகும் பூசச்
                            சூரடி மைவாழ்வு
                   தொலைவுற …………………..
         …………………………………………….
                            தார்வா ளுடைசெறியே
                   தமியேங் கதிர்மலை யாண்டகை! வாழி
                            தார்வா ளுடைசெறியே6!

உடைவாள் செறித்தல் எனும் பருவமான இது மிக அழகான பருவம். பாடல்களால் போற்றிக் களிக்க மிகவும் அருமையான இப்பருவத்தை ஏன் புலவர்கள் பாடவில்லை எனும் வினா நம்முள்ளத்தே எழுகின்றது.

இத்துடன் ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் நிறைவு பெறுகின்றன. இனி வரும் பகுதிகளில் அரிதாகப் பாடப்பெற்ற பெண்பாற் பிள்ளைத்தமிழின் அருமையான பருவங்களைக் காண்போம்.

பார்வை நூல்கள்:

1. பிங்கல நிகண்டு- பாடல் 267- பிங்கல முனிவர்
2. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்
3. கம்பராமாயணம்- கம்பர், பாலகாண்டம். கையடைப்படலம். பா.
4. திருமந்திரம்- திருமூலர்
5, 6. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *