Tag: நாங்குநேரி வாசஸ்ரீ

  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-117

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-117

    நாங்குநேரி வாசஸ்ரீ

    117. படர் மெலிந்திரங்கல்

    குறள் 1161

    மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்
    கூற்றுநீர் போல மிகும்

    என் நேசம்ங்குத சங்கடத்த மத்தவங்க தெரிஞ்சுக்கிடாம நான் மறைப்பேன். ஆனா அது ஊத்துத் தண்ணி கணக்கா எறைக்க எறைக்க அதிகமாவுது.

    குறள் 1162

    கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்
    குரைத்தலும் நாணுத் தரும்

    என் நேசத்த மறைக்கவும் ஏலல. நேசம் வச்சவரு கிட்ட சொல்லவும் கூசுது.

    குறள் 1163

    காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
    நோனா உடம்பின் அகத்து

    சங்கடத்தப் பொறுத்துக்கிட ஏலாம என் உசிரயே காவடித்தண்டா வச்சிக்கிட்டு நேசம்ங்குத நோய் ஒரு பக்கமும், அதச் சொல்ல ஏலாத வெக்கம் ஒரு பக்கமும் தொங்குது.

    குறள் 1164

    காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
    ஏமப் புணைமன்னும் இல்

    காதல் என்னயச் சுத்திச்சூழ கடல் கணக்கா நின்னு சங்கடப்படுத்துது. அத நீந்திக் கடக்க பாதுகாப்பான தோணிதான் இல்ல.

    குறள் 1165

    துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
    நட்பினுள் ஆற்று பவர்

    (சந்தோசமான) சேக்காளியா இருக்கையிலயே சங்கடத்தக் குடுக்குத இவரு பகையாளியா ஆனா என்ன செய்வாரோ?

    குறள் 1166

    இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
    துன்பம் அதனிற் பெரிது

    நேசம் குடுக்குத சந்தோசம் கடல்கணக்கா பெரிசு. அது பிரிவுங்குத தொல்ல தருத நேரம் வருத சங்கடம் கடலை விடப் பெரிசு.

    குறள் 1167

    காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
    யாமத்தும் யானே உளேன்

    நேசம்ங்குத கொடும் கடல்ல நீந்தின பொறவும் என்னால கரையக் காங்க ஏலல. நடுசாமத்துலயும் ஒறங்காம நான் தனியாவே கெடந்து கலங்குதேன்.

    குறள் 1168

    மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
    என்னல்ல தில்லை துணை

    பாவம் இந்த ராப்பொழுது. இது எல்லா உசிரையும் ஒறங்கவச்சிப்போட்டு தனியாவே கெடக்கு. இதுக்கு என்னயத் தவித்து வேற தொண இல்ல.

    குறள் 1169

    கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
    நெடிய கழியும் இரா

    இந்நாளையில ராப்பொழுதுநீண்டுக்கிட்டே போவுதது கணக்கா தோணுது. நேசம் வச்சவரு பிரிஞ்சி போனதக்காட்டிலும் இந்தக் கொடும பெருங்கொடும.

    குறள் 1170

    உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
    நீந்தல மன்னோவென் கண்

    நேசம் வச்சவரு இருக்க எடத்துக்கு எம் மனசு கணக்கா போவ முடிஞ்சிச்சின்னா கண்ணீர் வெள்ளத்துல சிக்கி என் கண்ணு நீந்த வேண்டியதில்ல.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-116

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-116

    நாங்குநேரி வாசஸ்ரீ

     116. பிரிவு ஆற்றாமை

    குறள் 1151

    செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
    வல்வரவு வாழ்வார்க் குரை

    பிரிஞ்சுபோவமாட்டன்னா எங்கிட்ட சொல்லு. இப்பம் போயிட்டு வெரசலா வாரேன்னு சொல்லணும்னா அத நீ திரும்பி வாரெயில யாரு உசிரோட இருப்பாகளோ அவுககிட்ட சொல்லு.

    குறள் 1152

    இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
    புன்கண் உடைத்தால் புணர்வு

    முன்னயெல்லாம் அவுகளக் கண்ணால பாக்குததே சந்தோசத்தக் குடுத்துச்சு. இப்பம் கூடிச்சேந்தாலும் பிரிஞ்சு போயிடுவாரோங்குத பயத்துல சங்கடமா இருக்கு.

    குறள் 1153

    அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
    பிரிவோ ரிடத்துண்மை யான்

    எல்லாத்தையும் அறிஞ்சுக்கிட்ட காதலரும் ஒருசமயம் பிரிஞ்சுபோவாருங்கதால இப்பம் பிரிய மாட்டேம்னு உறுதியா சொல்லுதத நம்ப ஏலாது.

    குறள் 1154

    அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
    தேறியார்க் குண்டோ தவறு

    பிரியமாட்டேம் பயப்படாதன்னு சொன்னவரு பொறவு பிரிஞ்சுபோனாகன்னா அவுக சொன்ன சொல்ல நம்பினதுல என்ன குத்தம் இருக்க முடியும்.

    குறள் 1155

    ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
    நீங்கின் அரிதால் புணர்வு

    நேசிக்கவரு பிரிஞ்சு போனா மறுபடி சேருதது சுளுவு இல்லங்கதால மொதவே பிரியாம காப்பாத்திக்கிடணும்.

    குறள் 1156

    பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
    நல்குவர் என்னும் நசை

    போயிட்டுவாரேம்னு சொல்லுத அளவு கல்நெஞ்சுக்காரர் திரும்ப வந்து நேசம் காட்டுவாருனு எதிர்பாக்குதது வீண்.

    குறள் 1157

    துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
    இறைஇறவா நின்ற வளை

    என்னையத் தலைவன் பிரிஞ்சுபோன சேதிய எம்முன்னங்கையிலேந்து நழுவிவிழுத வளவி ஊர் முழுக்க தூத்தி விட்டுருமே.

    குறள் 1158

    இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்
    இன்னா தினியார்ப் பிரிவு

    நேசம் இல்லாதவுக இருக்க ஊர்ல வாழுதது சங்கடம். அத விடக் கொடும மனசார நேசிக்கவரப் பிரிஞ்சு வாழுதது.

    குறள் 1159

    தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
    விடிற்சுடல் ஆற்றுமோ தீ

    கங்கு (நெருப்பு) அதத் தொட்டாதான் சுடுமேயொழிய காதல் நோய் கணக்கா எட்ட நின்னாலும் சுடுமோ?

    குறள் 1160

    அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
    பின்இருந்து வாழ்வார் பலர்

    பிரிஞ்சுபொவுததுக்கு ஒத்துக்கிட்டு அதனால வர சங்கடத்தையும் பொறுத்துக்கிட்டு தன்காரியத்த பாத்துக்கிட்டு பொறுமயா வாழுதவங்க பலபேரு இருக்காங்க.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-115

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-115

    நாங்குநேரி வாசஸ்ரீ

    115. அலர் அறிவுறுத்தல்

    குறள் 1141

    அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
    பலரறியார் பாக்கியத் தால்

    ஊருக்குள்ளார பலபேர் எங்க நேசத்தப் (காதலை) பத்தி பாடு (அலர்) பேசுததால (என் காதல் கைகூடுத) நல்லது நடக்கும்னு நெனைப்புல என் உசிரு போவாம இருக்குனு நெறையபேரு அறிஞ்சிக்கிடமாட்டாங்க.

    குறள் 1142

    மலரன்ன கண்ணாள் அருமை அறியா
    தலரெமக் கீந்ததிவ் வூர்

    பூப்போல கண்ணு இருக்க இவளோட அரும புரியாம இந்த ஊரு இவளுக்கு எம்மேல காதல்னு ஒளிச்சிமறைச்சி பாடுபேசியே எனக்கு நன்மயச் செஞ்சிட்டாவ.

    குறள் 1143

    உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
    பெறாஅது பெற்றன்ன நீர்த்து

    எங்க நேசத்தப்பத்தி ஊர்முழுக்க பேசமாட்டாகளா. அது கெடைக்காதுனு நெனைச்ச நேசம் கெடச்சது (திருமணம்) கணக்கா சந்தோசத்தக் குடுக்குமே.

    குறள் 1144

    கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
    தவ்வென்னும் தன்மை இழந்து

    ஊர்க்காரவுக பேச்சால எங்க நேசம் வளருது. அதுமட்டும் இல்லையினா அது தன்ம கெட்டு வாடிப் போவும்.

    குறள் 1145

    களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
    வெளிப்படுந் தோறும் இனிது

    எங்க நேசம் வெளிய தெரியத் தெரிய சந்தோசம் உண்டாகுதது  கள்ளு குடிச்கவன் போதை ஏற ஏற அதையே குடிக்க விரும்புதது கணக்கா ஆவும்.

    குறள் 1146

    கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
    திங்களைப் பாம்புகொண் டற்று

    காதலிச்சவுக சந்திச்சுக்கிட்டது ஒருநாள்தாம்னாலும், நிலாவ பாம்பு முழுங்கும் ங்குத சேதி கணக்கா ஊர்முழுக்க பரவிப் போச்சு.

    குறள் 1147

    ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
    நீராக நீளுமிந் நோய்

    இந்த நேசம் ஊர்க்காரவுக பேசுத பேச்ச எருவாவும், ஆத்தா சொல்லுத கடுஞ்சொல்ல தண்ணியாவும் கொண்டுக்கிட்டு செழிப்பா வளருது.

    குறள் 1148

    நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
    காமம் நுதுப்பேம் எனல்

    இந்த ஊர்க்காரவுக பாடு பேசி எங்க நேசத்த அழிச்சுப்போடலாம்னு நெனைக்கது நெய்ய மொண்டு ஊத்தி தீய அணைக்கதுக்கு சமானம்.

    குறள் 1149

    அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்
    பலர்நாண நீத்தக் கடை

    பயப்படாத நான் விட்டுப்போட்டு போவ மாட்டேம்னு அன்னைக்கு உறுதியா சொன்னவுக பாடு பேசின பலரும் வெக்கப்படுதமாரி என்னையப் பிரிஞ்சு போகையில நான் மட்டும் ஊர்க்காரவுக பேச்சுக்கு வெக்கப்படலாமா?.

    குறள் 1150

    தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
    கௌவை எடுக்குமிவ் வூர்

    நான் மனசுல நெனைக்காமாரி இந்த ஊர்க்காரவுக பாடு பேசுதாங்க. இனிமே நான் நேசிக்கவரு விரும்பினாருன்னா அவரும் ஒத்துக்கிடுவார் .(திருமணம் செய்வார்).

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-114

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-114

    நாங்குநேரி வாசஸ்ரீ

     114. நாணுத் துறவுரைத்தல்

    மடலூர்தல்னா என்னன்னு மொதல்ல தெரிஞ்சிக்கிடுங்க. எம்புட்டு மொனஞ்சும் காதலிய அடைய முடியாத காதலன் கடைசியா மடலேறி அவள அடைய முயலுவான். மடல் ங்கது பனை மட்டையால குதிரை உருவம் செஞ்சி கீழ உருள பொருத்தி, கயிறு கட்டி இழுத்துக்கிட்டு போகுத மாரி செஞ்சிருக்க வண்டி கணக்கா இருக்கும். ஊருக்கு நடுவுல முச்சந்தியில அத நிப்பாட்டி காதலன் ஏறி உக்காந்துக்கிடுவான். அவன் கையில காதலியோட படம் வரைஞ்ச துணி (கிழி) இருக்கும். ஒடம்பு முழுக்க திருநீறு பூசியிருப்பான். உணச்சியில்லாம வேற எந்த நெனப்பும் இல்லாம காதலியப் பத்தியே பாட்டு பாடிக்கிட்டு கெடப்பான். ஊர்க்காரங்க மடல இழுப்பாங்க. இதால என்ன பிரயோசனம்னா ஊர்க்காரவுங்களுக்கு அவன் நேசம் தெரிஞ்சு போவுததால அவன் படுத சங்கடத்தப் பாத்து சிலசமயம் அந்தப் பிள்ளையக் கட்டிக்கிட அவனுக்கு ஒதவியா நிப்பாங்க.

    குறள் 1131

    காமம் உழந்து வருந்தினார்க் கேம
    மடலல்ல தில்லை வலி

    நேசம் வச்சி கைகூடாத நேரம் மடலூர்தலத் தவித்து பிடிப்பான தொண வேற இல்ல.

    குறள் 1132

    நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
    நாணினை நீக்கி நிறுத்து

    நேசம் வச்சி பிரிஞ்சதப் பொறுத்துக்கிட ஏலாம என் ஒடம்பும் உசிரும் வெக்கத்த விட்டு மடல் ஏறுததுக்கு துணிஞ்சு போச்சு.

    குறள் 1133

    நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
    காமுற்றார் ஏறும் மடல்

    நல்ல ஆண்மையோடயும் மானவெக்கத்தோடயும் முன்ன நான் இருந்தேன். இப்பம் காதலுக்காவ மடலூர்தலச் செய்யுதேன்.

    குறள் 1134

    காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
    நல்லாண்மை என்னும் புணை

    காதல்னு சொல்லப்படுத பெரு வெள்ளம் ஆண்மை, மானம் ங்குத தோணிகள  அடிச்சி கொண்டு போயிடும்.

    குறள் 1135

    தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
    மாலை உழக்கும் துயர்

    மடலேறுதலோட சேத்து அந்தி சாயுத நேரம் ஏங்குத சங்கடத்தையும் மால கணக்கா வரிசையா வளவி போட்டிருக்க இவதான் எனக்கு குடுத்தா.

    குறள் 1136

    மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
    படலொல்லா பேதைக்கென் கண்

    காதலியப் பிரிஞ்சதால கண்ணு ஒறக்கம் இல்ல. ராப்பூரா மடலூர்தலப் பத்தியே ரோசன பண்ணிக்கிட்டுக் கெடக்கேன்.

    குறள் 1137

    கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
    பெண்ணிற் பெருந்தக்க தில்

    கொந்தளிக்குத கடல் கணக்கா காதல் நோய் சங்கடத்தக் கொடுத்தாலும் பொறுத்துக்கிட்டு மடலேறாம இருக்க ஒசந்த பெண்பிறப்புக்கு சமானமா எதுவுமில்ல.

    குறள் 1138

    நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்
    மறையிறந்து மன்று படும்

    பாவம் இவரு மனசுல ஒளிவுமறைவு கெடையாது. பாவப்பட்ட மனுசன். இப்டியெல்லாம் நெனையாம இப்பம் எங்க நேசம் ஊரறிஞ்சிக்கிடுத மாரி  வெளிய தெரியப் போவுது.

    குறள் 1139

    அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்
    மறுகின் மறுகும் மருண்டு

    அமைதியா இருந்ததால என்னையத் தவித்து யாரும் தெரிஞ்சிக்கிடலனு நெனச்சி இப்பம் என் காதல் தெருப்பூரா பரவி சுத்திக்கிட்டு கெடக்குபோல.

    குறள் 1140

    யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
    யாம்பட்ட தாம்படா ஆறு

    நான் படுத சங்கடத்த அனுவிச்சு அறியாதவங்க எம் முன்ன நான் காணுதமாரி நின்னு எளக்காரமா சிரிக்காங்க.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-113

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-113

    நாங்குநேரி வாசஸ்ரீ

    113. காதற் சிறப்புரைத்தல்

    குறள் 1121

    பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயி றூறிய நீர்

    எங்கிட்ட இனிக்கப் பேசுத இவ முத்துப்பல்லுக்கு இடையில ஊறுத எச்சி பாலும் தேனும் கலந்து வச்சாப்போல ருசியக் கொடுக்கும்.

    குறள் 1122

    உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
    மடந்தையொ டெம்மிடை நட்பு

    ஒடம்புக்கும் உசிருக்கும் உள்ள ஒட்டுஒறவு எங்ஙன இருக்குமோ அதுகணக்கா இருக்கதுதான் எனக்கும் இந்த பிள்ளைக்கும் இருக்க ஒறவு.

    குறள் 1123

    கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
    திருநுதற் கில்லை யிடம்

    என் கண்ணோட கருமணியில இருக்க பாவையே நீ வெளிய போயிரு. ஏம்னா நான் ஆசைவச்சிருக்க இவள கண்ணுக்குள்ளார வச்சிக்கிட இடமில்ல.

    குறள் 1124

    வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
    அதற்கன்னள் நீங்கும் இடத்து

    ஆராஞ்சு நகநட்டு பூட்டி இருக்க இவ என்னோட கூடுத நேரம் உசிரு வாழுதது கணக்காவும், விட்டு வெலகும்போது உசிரு பிரியுதது கணக்காவும் உணருதேன்.

    குறள் 1125

    உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
    ஒள்ளமர்க் கண்ணாள் குணம்

    ஒளி வீசுத கண்ணோட இருக்க இவ கொணத்த நான் நெனச்சி பாக்கதே கெடையாது. ஏம்னா நான் எப்பமும் அயத்ததேயில்ல.

    குறள் 1126

    கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
    நுண்ணியர்எம் காத லவர்

    நான் நேசிக்கவரு என் கண்ணுக்குள்ளாலேருந்து வெளிய எங்கும் போவ மாட்டாரு. கண்ண மூடி சிமிட்டினாலும் சங்கடப்பட மாட்டாரு. அவரு அம்புட்டு நுணுக்கமானவரு.

    குறள் 1127

    கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
    எழுதேம் கரப்பாக் கறிந்து

    என் கண்ணுக்குள்ளார நான் நேசிக்கவரு இருக்கதால, மை பூசினா அவரு காங்காம போயிடுவாருங்குத நெனைப்புல நான் மை பூசாம இருக்கேன்.

    குறள் 1128

    நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
    அஞ்சுதும் வேபாக் கறிந்து

    நான் நேசிக்கவரு என் நெஞ்சுக்குள்ளார வாழுததால சூடா தின்னா அவருக்கு காந்தும் னு நெனச்சி சூடா திங்காம இருக்கேன்.

    குறள் 1129

    இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே
    ஏதிலர் என்னுமிவ் வூர்

    நான் கண்ண சிமிட்டினேம்னா உள்ள இருக்க அவர காங்க ஏலாம புரிஞ்சிக்கிடாத ஊர்க்காரவுக அவர நேசமத்தவருனு சொல்லிப்போடுவாக. அதுங்காட்டி நான் சிமிட்டாம நிக்கேன்.

    குறள் 1130

    உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
    ஏதிலர் என்னுமிவ் வூர்

    நான் நேசிக்கவரு என் நெஞ்சுக்குள்ளார சந்தோசமா வாழுதாரு. இதப் புரிஞ்சிக்கிடாம நேசமில்லாம பிரிஞ்சி வாழுதோம்னு பொறளி பேசுது இந்த ஊரு.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-112

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-112

    நாங்குநேரி வாசஸ்ரீ

    112. நலம் புனைந்து உரைத்தல்

    குறள் 1111

    நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
    மென்னீரள் யாம்வீழ் பவள்

    அனிச்சம் பூவே நீ மென்மையா மெத்துனு இருக்கதால. உன்னைய வாழ்த்துதேன். ஆனா உன்னையக்காட்டிலும் நான் ஆசப்படுத என்காதலி மென்மையானவ.

    குறள் 1112

    மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
    பலர்காணும் பூவொக்கும் என்று

    நெஞ்சே! இவ கண்ணு பலபேரு பாக்க விரும்புத பூ கணக்கா இருக்குனு நெனைச்சு அந்தப் பூக்களப் பாத்தா நீ மயங்குதியோ.

    குறள் 1113

    முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
    வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு

    மூங்கில் கணக்கா தோள் இருக்க இவளுக்கு தளிர் கணக்கா மேனி, முத்துப் பல்லு, மயக்குத வாசம் (நறுமணம்), மை பூசின கண்ணு வேல்.

    குறள் 1114

    காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
    மாணிழை கண்ணொவ்வேம் என்று

    குவளைப் பூவுக்கு பாக்குத தன்ம வந்திச்சின்னா இவ கண்ணுக்கு ஈடா நாம இல்லையேன்னு தேம்பி தலை குனிஞ்சி நிலத்தப்பாக்கும்.

    குறள் 1115

    அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
    நல்ல படாஅ பறை

    தன்னோட மென்மைய அறிஞ்சிக்கிடாம காம்பு எடுக்காத அனிச்சம்பூவ தலையில வச்சிக்கிட்டதால நொந்து நூலாப்போன இவ இடுப்புக்கு இனி நல்ல பறை ஒலிக்காது.

    குறள் 1116

    மதியும் மடந்தை முகனும் அறியா
    பதியின் கலங்கிய மீன்

    இவ மொகத்துக்கும் நிலாவுக்கும் உள்ள வித்தியாசத்த அறிஞ்சிக்கிடமுடியாம நட்சத்திரங்க ஒரு நிலையில நிக்காம திரியுதுங்க.

    குறள் 1117

    அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
    மறுவுண்டோ மாதர் முகத்து

    தேஞ்சு பொறவு வளந்து வெளிச்சத்தக் குடுக்குத நிலாவுல இருக்க களங்கம் கணக்கா சிறுசா கூட இவ மொகத்துல உண்டா? கெடையாதே.

    குறள் 1118

    மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
    காதலை வாழி மதி

    இவ மொகத்துலேந்து வீசுத ஒளி கணக்கா நிலாவே நீயும் ஒளி வீசினா நீயும் என் காதலுக்கு உரிம பெறுவ.

    குறள் 1119

    மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
    பலர்காணத் தோன்றல் மதி

    நிலாவே! பூ கணக்கா கண்கள் இருக்க இவ மொகத்த ஒத்து இருக்கணும்னு நீ நெனைச்சா எல்லாரும் பாக்குதமாரி வானத்துல வளையவராத.

    குறள் 1120

    அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
    அடிக்கு நெருஞ்சிப் பழம்

    அனிச்சம்பூவுன்னாலும், அன்னத்தோட இறகுன்னாலும் என் காதலியோட பாதத்துக்கு நெருஞ்சிமுள்ளு கணக்கா செரையக் குடுக்கும். (அவ பாதம் அம்புட்டு மென்மை)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-111

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-111

    நாங்குநேரி வாசஸ்ரீ

    111. புணர்ச்சி மகிழ்தல்

    குறள் 1101

    கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
    ஒண்தொடி கண்ணே உள

    கண்ணால பாத்து, காதால கேட்டு, மோந்து, உண்டு தொட்டு பாத்து அனுவிக்க சந்தோசம் முழுக்க மினுங்குத வளையல் அணிஞ்சிருக்க இந்த அழகானபிள்ள கிட்ட நெறைஞ்சு இருக்கு.

    குறள் 1102

    பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
    தன்னோய்க்குத் தானே மருந்து

    நோய் தீக்க வெவ்வேற மருந்து இருக்கு. நகநட்டு அணிஞ்சிருக்க இவ தந்த காதல் நோய்க்கு இவளேதான் மருந்து.

    குறள் 1103

    தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
    தாமரைக் கண்ணான் உலகு

    தாமரைக் கண்ணனோட ஒலகம் ங்கது தான் விரும்புத காதலியோட தோள அணைச்சுக்கிட்டு ஒறங்குதது கணக்கா சந்தோசத்த குடுக்கக்கூடியதோ.

    குறள் 1104

    நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
    தீயாண்டுப் பெற்றாள் இவள்

    விட்டுப் பிரிஞ்சு எட்ட நின்னா சுட்டுப் பொசுக்குது  கிட்டத்துல நின்னா குளுகுளுன்னு இருக்க இந்த புது தினுசு கங்க (நெருப்ப) இவ எங்கேந்து வேங்கினாளோ.

    குறள் 1105

    வேட்ட பொழுதின் அவையவை போலுமே
    தோட்டார் கதுப்பினாள் தோள்

    பூ சூட்டியிருக்க இவ தோளத் தழுவுதது, நாம ஆசப்படுத பொருள் நெனச்ச பொழுதெனைக்கும் வந்து சந்தோசத்த குடுக்குதது கணக்கா சந்தோசத்தத் தருது.

    குறள் 1106

    உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
    கமிழ்தின் இயன்றன தோள்

    இவளத் தழுவுத நேரமெல்லாம் என் உசிரு புத்துணச்சி பெறுததால இவ தோள அமுதத்தால(அமிழ்தம்) செஞ்சிருப்பாங்கனு நெனைக்கேன்.

    குறள் 1107

    தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
    அம்மா அரிவை முயக்கு

    அழகா மா நிறமா இருக்க இவளத் தழுவும்போது கெடைக்க சுகம் சொந்த வீட்ல ஒக்காந்து சுயமா சம்பாரிச்ச பொருள பங்குபோட்டு குடுத்து சாப்பிடுத நேரம் கெடைக்க சந்தோசத்துக்கு சமானம்.

    குறள் 1108

    வீழும் இருவர்க் கினிதே வளியிடை
    போழப் படாஅ முயக்கு

    காத்துகூட ஊடேயில பூந்துகிட முடியாத அளவு இறுகக் கட்டிப்பிடிக்கது காதலிக்கவங்களுக்கு சந்தோசத்தக் கொடுக்கும்.

    குறள் 1109

    ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
    கூடியார் பெற்ற பயன்

    சிறுசா கோவப்படுததும், உணந்து சமாதானமாகுததும் அதுக்குப் பொறவு கூடி சந்தோசமா இருக்கதும்தான் கலியாணம் முடிச்சு வாழுதவங்க பெறுத பயன்கள்.

    குறள் 1110

    அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
    செறிதோறும் சேயிழை மாட்டு

    புத்தகங்களப் படிக்கையில ஒவ்வொருக்கையும் இப்பம்வரைக்கும் தெரியாதத புதுசா கத்துக்கிடுதமாரி இருக்கது கணக்கா நகநட்டு பூட்டியிருக்க இவளச் சேருத நேரமெல்லாம் புது சந்தோசம் தோணுது.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-110

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-110

    நாங்குநேரி வாசஸ்ரீ

    110. குறிப்பறிதல்

    குறள் 1091

    இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
    நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

    இவளோட  மைபூசின கண்ணு பாக்குததுல ரெண்டு தினுசு நோக்கம் இருக்கு. ஒண்ணு எனக்கு சங்கடத்தத் தருததுக்கு. மத்தது அத நீக்குத மருந்தா இருக்கதுக்கு.

    குறள் 1092

    கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
    செம்பாகம் அன்று பெரிது

    நான் பாக்காத நேரம் என்னைய ஓரக்கண்ணால இவ பாக்குத பார்வை காதல்ல சரிபாதினு சொல்லிக்கிடமுடியாது. அதுக்கும் மேல.

    குறள் 1093

    நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
    யாப்பினுள் அட்டிய நீர்

    ஓரக்கண்ணால அவ என்னைய பாத்த பார்வையில வெக்கம் சாஸ்தி இருந்திச்சு. அது அவ என் மேல வச்சிருக்க நேசம்ங்குத பயிர வளக்கதுக்காவ ஊத்துத தண்ணி கணக்கா ஆவும்.

    குறள் 1094

    யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
    தானோக்கி மெல்ல நகும்

    நான் பாக்குதப்போ அவ தலயக் குனிஞ்சி பூமியப் பாப்பா. நான் பாக்காத நேரம் என்னையக் கண்டு பைய தனக்குள்ளார சிரிச்சிக்கிடுவா.

    குறள் 1095

    குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
    சிறக்கணித்தாள் போல நகும்

    நேரா பாக்காம ஒரு கண்ண சுருக்கிவச்சாப்ல பாத்து பாத்து தனக்குள்ளார சந்தோசப்பட்டுக்கிடுதா.

    குறள் 1096

    உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
    ஒல்லை உணரப் படும்

    நேசத்த மறைச்சிக்கிட்டு அசலார் கணக்கா கடுமையா வைதாலும் அவ நெஞ்சுக்குள்ளார இருக்க நேசம் வெரசலா வெளிய தெரிஞ்சிடும்.

    குறள் 1097

    செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
    உறாஅர்போன் றுற்றார் குறிப்பு

    கோவிச்சுக்கிடாம சொல்லுத கடுஞ்சொல்லும், பகையாளியப் பாக்குதது கணக்கா மொறைக்குததும் மனசுல நேசத்த வச்சிக்கிட்டு பொறத்த அசல்மனுசன் கணக்கா நடந்துக்கிடுதவங்களக் காட்டுத குறிப்பு ஆவும்.

    குறள் 1098

    அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
    பசையினள் பைய நகும்

    நான் பாக்குத நேரம் நேசத்த காணிக்காமாரி பைய சிரிப்பா. துடியிடை இருக்க அவ அப்பம் புது அழகோட இருக்கா..

    குறள் 1099

    ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
    காதலார் கண்ணே உள

    பொது எடத்துல முன்னப் பின்ன தெரியாதவுக கணக்கா பாத்துக்கிடுதது காதலர்களுக்கு பழக்கம் தான்.

    குறள் 1100

    கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல

    கண்ணோட கண்ணு கலந்து நேசமா பார்வையாலேயே பேசிக்கிடுத நேரம் வாய்ப் பேச்சுக்கு எந்த பிரயோசனமும் இல்ல.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-109

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-109

    நாங்குநேரி வாசஸ்ரீ

    109. தகை அணங்குறுதல்

    குறள் 1081

    அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
    மாதர்கொல் மாலுமென் நெஞ்சு

    நிக்குதது மோகினியா? மயிலா? காதுல பெரிசா தோடு போட்டு நிக்குத அழகான பொம்பளப் பிள்ளையா? எம் மனசு கெடந்து தெவங்குதே.

    குறள் 1082

    நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
    தானைக்கொண் டன்ன துடைத்து

    எம் பார்வைக்கு அவ நேர் பார்வை பாக்குதது தனியாளா எதித்தாப்ல நின்னு அழிச்சிப்போடுத சக்தி இருக்க மோகினி கூட ஒரு படையையும் சேத்துக்கிட்டு வந்து நின்னா எப்டி இருக்குமோ அப்டி இருந்திச்சு.

    குறள் 1083

    பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
    பெண்டகையால் பேரமர்க் கட்டு

    எமன் யாருன்னு முன்ன நான் அறிஞ்சிக்கிடல. இப்பம் புரிஞ்சிக்கிட்டேன்.  அவன் பொம்பள உருவத்துல இருக்க பெரிய கண்ணுமுழிங்குத அம்பால சண்ட இழுக்கவன் அப்டிங்குத உண்மைய.

    குறள் 1084

    கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
    பேதைக் கமர்த்தன கண்

    நல்லதன்மையா இருக்க இந்த பொம்பளப் பிள்ளையோட கண்ணு மட்டும் உசிர எடுக்குதது கணக்கா இருக்கே? ஏன் இந்த மாறுபாடு?

    குறள் 1085

    கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
    நோக்கமிம் மூன்றும் உடைத்து

    உசிர எடுக்க வந்த எமனா? ஒறவு கொண்டாடுத கண்ணா? மிரண்டுபோய் நிக்க பெண்மானா? இந்த பெண்பிள்ளையோட பார்வையில மூணு தினுசும் சேந்தாப்போல இருக்கே.

    குறள் 1086

    கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
    செய்யல மன்னிவள் கண்

    புருவம் வளைஞ்சி கோணி நிக்காம நேரா நின்னு மறைச்சிக்கிடுச்சின்னா இவ கண்ணு நான் நடுங்குதது கணக்கா சங்கடத்த தாராது.

    குறள் 1087

    கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
    படாஅ முலைமேல் துகில்

    மதம் பிடிச்ச யானை மேல இடுத முகபடாம் கணக்கா இருக்கு பொம்பளைங்க சாயாத கொங்கை மேல உடுத்துத சீலை.

    குறள் 1088

    ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
    நண்ணாரும் உட்குமென் பீடு

    போர்க்களத்துல பகையாளிக்கு பீதியக் கெளப்புத எம் பலம் இப்பம் இவ ஒளி வீசுத நெத்தியக் கண்ட பொறவு தோத்து நிக்குதே.

    குறள் 1089

    பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்
    கணியெவனோ ஏதில தந்து

    பெண்மான் கணக்கா துள்ளுத பார்வையும், வெக்கப்படுத கொணமும் அசப்புல நக நட்டுகணக்கா இருக்கையில பொறவு என்னத்துக்கு செஞ்சுவச்சிருக்க மத்த நகநட்ட பூட்டி  உட்டிருக்காக.

    குறள் 1090

    உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்
    கண்டார் மகிழ்செய்தல் இன்று

    கள்ளு குடிச்சவனுக்கு மட்டுந்தான் மயக்கத்தக் கொடுக்கும் பாத்தாலே மயக்கத்தக் கொடுக்குதது காதல்தான்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-108

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-108

    நாங்குநேரி வாசஸ்ரீ

    108. கயமை

    குறள் 1071

    மக்களே போல்வர் கயவர் அவரன்ன
    ஒப்பாரி யாங்கண்ட தில்

    கொணத்துல மோசமானவரா (கயவரா) இருக்கவுக பாக்கதுக்கு நல்ல மனுசன்கணக்காத்தான் தெரியுவாக. மனுசங்களத் தவித்து வேற எந்த இனத்திலயும் இப்டி ஒப்பும கண்டதில்ல.

    குறள் 1072

    நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
    நெஞ்சத் தவலம் இலர்

    எப்பமும் நல்லதையே நெனைச்சி ரோசன பண்ணுதவங்களவிட எதையும் மனசுல போட்டுக்கிடாம அலையுத மோசக்காரங்க ஒருவகையில குடுத்துவச்சவகதான்.

    குறள் 1073

    தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
    மேவன செய்தொழுக லான்

    பொறத்தியார் கட்டுப்பாடு இல்லாம தம் மனசுக்குத்தக்கன ஆட்டம்போட்டு வாழுத மோசக்காரங்களும் தேவர்கள் கணக்காதான்.

    குறள் 1074

    அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
    மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்

    கொணங்கெட்ட மோசக்காரங்க தன்னையக்காட்டிலும் கேடுகெட்டவனப் பாத்தா, தாங்க ஒசந்தவுகனு நெனச்சி மண்டக்கனம் புடிச்சி அலையுவாங்க.

    குறள் 1075

    அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
    அவாவுண்டேல் உண்டாம் சிறிது

    மோசக்காரங்க ஒழுக்கசீலனா காணிச்சிக்கிடுதது பயத்தால மட்டுந்தான். அதையும்மீறி தான்  ஆசப்படுதது கெடைக்கும்னு தெரிஞ்சுக்கிட்டாலும் கொஞ்சம் ஒழுக்கமா இருக்காமாரி நடிப்பாங்க.

    குறள் 1076

    அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
    மறைபிறர்க் குய்த்துரைக்க லான்

    மோசக்காரங்க தான் தெரிஞ்சிக்கிட்ட ரகசியத்த வலியபோய் ஊர் முழுக்க பறை அடிக்கதால அவுங்க அடிக்கப்படுத பறைக்கு சமானம் தான்.

    குறள் 1077

    ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
    கூன்கையர் அல்லா தவர்க்கு

    கைய மடக்கி கன்னத்துல ஓங்கிகுத்தி மூஞ்சியப் பேத்துஎடுக்கவனத் தவித்து மத்தவங்களுக்கு எச்சிக்கையக்கூட ஒதற மாட்டாங்க மோசக்காரங்க.

    குறள் 1078

    சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
    கொல்லப் பயன்படும் கீழ்

    கிட்ட அண்டி சங்கடத்த சொல்லுத நேரமே இரக்கப்பட்டு ஒதவுவாக பெருமக்க. மோசக்காரனுவள கரும்பு கணக்கா சக்கயா பிழிஞ்சா தான் நாம கேட்ட ஒதவி கெடைக்கும்.

    குறள் 1079

    உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
    வடுக்காண வற்றாகும் கீழ்

    மோசக்காரனுவ மத்தவங்க திங்கதையும் உடுக்கதையும் பாத்து வயித்தெரிச்சப்பட்டு வேணும்னே குறை சொல்லிக்கிட்டே இருக்குத தெறம உள்ளவனுவ..

    குறள் 1080

    எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
    விற்றற் குரியர் விரைந்து

    சங்கடம் வருத நேரம் அதிலேந்து தப்பிச்சிகிட தன்னையே பொறத்தியார்கிட்ட விலைக்கு வித்துப்போடுத தகுதிதான் மோசக்காரங்களோட தகுதியாவும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 107

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 107

    நாங்குநேரி வாசஸ்ரீ

    107. இரவச்சம்

    குறள் 1061

    கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
    இரவாமை கோடி உறும்

    இருக்கத ஒளிச்சிவையாம குடுக்குத கொணம் ஒடையவங்ககிட்ட கூட, ஒண்ண குடு னு கையேந்தாம இருக்குதது கோடி மடங்கு நல்லது.

    குறள் 1062

    இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
    கெடுக உலகியற்றி யான்

    இந்த ஒலகத்தப் படைச்சவன் சிலபேர பிச்சை எடுத்துதான் வாழணும்ங்குத நெலமையில வச்சிருந்தாம்னா அவனும் அதே நெலைமையில கெட்டொழிஞ்சி திரியட்டும்.

    குறள் 1063

    இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
    வன்மையின் வன்பாட்ட தில்

    வறுமையால வருத சங்கடத்த ஒழைக்காம கையேந்தி போக்கிக்கிடலாம்னு நெனையுததக் காட்டிலும் கொடும வேற இல்ல.

    குறள் 1064

    இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
    காலும் இரவொல்லாச் சால்பு

    பொழைப்புக்கு வழியத்துப் போனாலும் மத்தவங்கிட்ட கையேந்த நெனையாத கொணம் இந்த ஒலகமே கொள்ளாத அளவு பெருமயக் கொண்டது.

    குறள் 1065

    தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த
    துண்ணலின் ஊங்கினிய தில்

    நீத்த கஞ்சி யின்னாலும் சொந்த ஒழைப்புல சம்பாரிச்ச துட்டுல குடிச்சா அதக் காட்டிலும் சந்தோசம் வேற ஒண்ணுமில்ல. ‘

    குறள் 1066

    ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
    கிரவின் இளிவந்த தில்

    பசுமாட்டுக்கு தண்ணிவேணும்னு கையேந்தி நின்னாலும், அப்டி கேக்குத நாக்குக்கு அதவிட கேவலம் வேற ஒண்ணுமில்ல.

    குறள் 1067

    இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
    கரப்பார் இரவன்மின் என்று

    கையேந்திதான் நிக்கணும்னாலும் ஒளிச்சிவச்சிக்கிட்டு இல்லைன்னு சொல்லுதவன்கிட்ட கையேந்தி நிக்காதீகன்னு கையேந்தி நிக்கவங்க எல்லாரையும் கையேந்தி கேட்டுக்கிடுதேன்.

    குறள் 1068

    இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
    பார்தாக்கப் பக்கு விடும்

    இருக்கத ஒளிச்சுவச்சிக்கிட்டு இல்லன்னு சொல்லுத கல்நெஞ்சுக்காரன் மேல கையேந்துதல்னு சொல்லுத தோணி மோதிச்சுன்னா அது ஒடைஞ்சு நொறுங்கிப் போவும்.

    குறள் 1069

    இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
    உள்ளதூஉம் இன்றிக் கெடும்

    கையேந்தி நிக்குதவங்கள நெனச்சா மனசு உருகுது. ஒளிச்சுவச்சிக்கிட்டு இல்லன்னு சொல்லுதவங்களப் பாத்தா உருகுத மனசு இல்லாம அழிஞ்சே போவுது.

    குறள் 1070

    கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
    சொல்லாடப் போஒம் உயிர்

    மனசில்லாதவனோட இல்லைங்குத சொல்ல கேக்குத நேரமே கையேந்துதவன் உசிரு போவுதே அப்டி சொல்லுதவன்உசிரு மட்டும் எங்ஙன ஒளிஞ்சுகிட்டு கெடக்குமோ?

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 106

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 106

    நாங்குநேரி வாசஸ்ரீ

    106. இரவு

    குறள் 1051

    இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
    அவர்பழி தம்பழி அன்று

    குடுக்குத அருகத இருக்கவருகிட்ட கையேந்துதல தப்பு ஒண்ணுமில்ல. அப்பம் ஒளிச்சிவச்சிக்கிட்டு இல்லன்னு சொன்னாவன்னா பொல்லாப்பு அவருக்குதானேதண்டி கையேந்துதவனுக்கு இல்ல.

    குறள் 1052

    இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
    துன்பம் உறாஅ வரின்

    கையேந்தி கேக்குத பொருள மனசு சங்கடமில்லாம அந்தாக்ல தந்தாகன்னா அப்டி கையேந்துததும் சந்தோசம் தான்.

    குறள் 1053

    கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
    றிரப்புமோர் ஏஎர் உடைத்து

    ஒளிவுமறைவு இல்லாம பொறுப்பா தருதவுக முன்ன நின்னு வறும அண்டுத நேரம் பொருளக் கேட்டு கையேந்துததும் அழகு தான்.

    குறள் 1054

    இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
    கனவிலும் தேற்றாதார் மாட்டு

    வச்சிக்கிட்டே இல்லன்னு கைய விரிக்குத குணத்த கனவுல கூட நெனையாதவுக கிட்ட கையேந்துததும் மத்தவுகளுக்கு தானம் தருத ஒசந்த கொணத்துக்கு சமானம் தான்.

    குறள் 1055

    கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
    றிரப்பவர் மேற்கொள் வது

    தாருங்கன்னு கையேந்தி நிக்கவங்க ஏன் அதச்செய்யுதாகன்னா இல்லன்னு சொல்லாம கொடுக்கவுக இந்த ஒலகத்துல இருக்கதாலதான்.

    குறள் 1056

    கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
    யெல்லா மொருங்கு கெடும்

    வச்சிக்கிட்டு இல்லன்னு சொல்லுத நோய் இல்லாதவுகளப் பாத்தாலே வறுமையால கையேந்த நெனையுதவங்களோட சங்கடமெல்லாம் அழிஞ்சு போவும்.

    குறள் 1057

    இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
    உள்ளுள் உவப்ப துடைத்து

    எளக்காரஞ்செய்யாம தாழ்ச்சியா நெனையாம பொருளக் குடுக்குதவங்களக் கண்டா கையேந்தி நிக்கவங்க மனசுக்குள்ளார சந்தோசம் பொங்கும்.

    குறள் 1059

    ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
    மேவார் இலாஅக் கடை

    பொருள் இல்லன்னு கையேந்தி நிக்கவங்க அறவே அத்துப்போவுத நேரம் குடுக்குத மனசு உள்ளவங்களுக்கு எங்ஙன புகழ்ச்சி உண்டாவும்.

    குறள் 1060

    இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
    தானேயும் சாலும் கரி

    இல்லைன்னு வெரட்டுதவன்கிட்ட பொருளக் கேட்டு கையேந்துதவன் கோவப்படக் கூடாது. தன் நெலைம அவனுக்கும் இருக்கலாம்னு புரிஞ்சிக்கிடுததுக்கு வறும உதாரணமா இருக்கே.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 105

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 105

    நாங்குநேரி வாசஸ்ரீ

    105. நல்குரவு

    குறள் 1041

    இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
    இன்மையே இன்னா தது

    வறுமை ங்கதக் காட்டிலும் கொடும எது னு கேட்டா, வறும கணக்கா சங்கடம் வறும ஒண்ணுதான்.

    குறள் 1042

    இன்மை எனவொரு பாவி மறுமையும்
    இம்மையும் இன்றி வரும்

    வறுமை னு சொல்லப்படுத பாவி ஒருத்தன அண்டிச்சின்னா அவனுக்கு இப்பமும் வருங்காலத்திலும் சந்தோசமும் நிம்மதியும் இல்லாமப் போவும்.

    குறள் 1043

    தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
    நல்குர வென்னும் நசை

    வறுமைனு சொல்லப்படுத பேராசை ஒருத்தனுக்கு ஏற்பட்டிச்சின்னா அது அவன் பரம்பரப் பெருமையையும் புகழையும் சேந்தாப்ல அழிச்சிப்போடும்.

    குறள் 1044

    இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
    சொற்பிறக்கும் சோர்வு தரும்

    இல்லாமை ங்குத கொடும நல்ல குடியில பொறந்தவுக கிட்டேந்தும் கெட்டவார்த்த வெளிப்படுத அளவு தளர்ச்சிய உண்டாக்கிப் போடும்.

    குறள் 1045

    நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
    துன்பங்கள் சென்று படும்

    வறுமைங்குத சங்கடத்துக்குள்ளாரேந்து வெவ்வேற பல சங்கடங்கள் வெளஞ்சி வெளிவரும்.

    குறள் 1046

    நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
    சொற்பொருள் சோர்வு படும்

    நல்ல பல நூல்கள் சொல்லுதத அறிஞ்சிக்கிட்டு சொன்னாலும், அவன் ஏழையா இருந்தாம்னா சொல்லு எடுபடாது.

    குறள் 1047

    அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
    பிறன்போல நோக்கப் படும்

    வறுமை அண்டிச்சின்னு காரணங்காட்டி நியாயங்கெட்டு நடக்கவன அவனப் பெத்த ஆத்தா கூட அசல் மனுசன் கணக்கா தான் பார்ப்பா.

    குறள் 1048

    இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
    கொன்றது போலும் நிரப்பு

    நேத்தைக்கு கொன்னு போடுதது கணக்கா வந்த வறும இன்னிக்கும் எங்கிட்ட வருமோ? (அப்டின்னு நெனைச்சி இல்லாதவன் தெனைக்கும் வருத்தப்படுவான்).

    குறள் 1049

    நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
    யாதொன்றும் கண்பா டரிது

    நெருப்புக்குள்ளார கூட படுத்து ஒறங்க முடியும். ஆனா வறுமையில கண்ணு பொதைச்சி ஒறங்குதது ஏலாத ஒண்ணு.

    குறள் 1050

    துப்புர வில்லார் துவரத் துறவாமை
    உப்பிற்கும் காடிக்கும் கூற்று

    ஒழுக்கங்கெட்டதால  வறுமையானவுக மொத்தத்தையும் துறக்காம உயிர் வாழுதது உப்புக்கும் கஞ்சிக்கும் தான் கேடு.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 104

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 104

    நாங்குநேரி வாசஸ்ரீ

    104. உழவு

    குறள் 1031

    சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை

    பல பொழைப்பு இருந்திச்சின்னாலும் இந்த ஒலகம் வெள்ளாமைய நம்பிதான் சுத்திக்கிட்டுருக்கு. அதனால எம்புட்டு சங்கடம் இருந்தாலும் விவசாயந்தான் ஒசந்தது.

    குறள் 1032

    உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
    தெழுவாரை எல்லாம் பொறுத்து

    வெள்ளாம பாக்காம மத்த சோலி பாக்கவங்க எல்லாரையும் விவசாயி தாங்குததால அவுக இந்த ஒலகத்தோட அச்சாணி ஆவாக.

    குறள் 1033

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்

    வெள்ளாம பாத்து கெடச்சத சாப்பிட்டு வாழுதவங்க தான் உரிமையோட ஒசந்த வாழ்க்க வாழுதாங்க. ஏம்னா மத்தவுக எல்லாரும் யாரையாவது கும்பிட்டு வருததுல சாப்பிட்டு அவுக பொறத்தாலயே சுத்துதவுகதான்.

    குறள் 1034

    பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
    அலகுடை நீழ லவர்

    நெறைய ராசாவோட குடை நிழல தன் குடைக்குக் கீழ கொண்டு வருத வலிம விவசாயிக்கு உண்டு.

    குறள் 1035

    இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
    கைசெய்தூண் மாலை யவர்

    தன் கையால சோலிபாத்து பொழைக்கவங்க மத்தவுககிட்ட கையேந்தி நிக்க மாட்டாக. தங்கிட்ட கேட்டு வந்தவுகளுக்கு இல்லன்னு சொல்லாம குடுக்கவும் செய்வாக.

    குறள் 1036

    உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
    விட்டேமென் பார்க்கும் நிலை

    வெள்ளாம பாக்கவன் சொணங்கி இருந்தாம்னா எல்லாத்திலயும் ஆசய விட்டதா சொல்லுத துறவிங்க கூட வாழ ஏலாது.

    குறள் 1037

    தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
    வேண்டாது சாலப் படும்

    ஒரு பலம் புழுதி மண்ணு கால் பலம் ஆகுத அளவு பல தடவ உழுது காயவிட்டாம்னா பொறவு ஒரு பிடி எரு இடாமக்கூட பயிர் செழுமையா வெளையும்.

    குறள் 1038

    ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
    நீரினும் நன்றதன் காப்பு

    உழுததக் காட்டிலும் உரம் இடுதது நல்லது. இந்த ரெண்டும் செஞ்சு களை புடுங்கின பொறவு தண்ணி பாய்ச்சுததக் காட்டிலும் பயிரக் காவல் செய்யுதது நல்லது.

    குறள் 1039

    செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
    தில்லாளின் ஊடி விடும்

    நெலத்துக்கு உரியவன் தெனைக்கும் நெலத்தப் போய்ப் பாக்காம சொணங்கி இருந்தாம்னா அது அவன்மேல இருக்க வெறுப்பால வெலகிப் போன பொஞ்சாதி கணக்கா வாடி வெளச்சலில்லாமப் போவும்.

    குறள் 1040

    இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
    நிலமென்னும் நல்லாள் நகும்

    பொழைக்க வழியில்ல னு நெனைச்சு சடவா இருக்கவனப் பாத்து பூமித்தாய் தனக்குள்ளார எளக்காரமா சிரிச்சிக்கிடுவா.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்- 103

    நெல்லைத் தமிழில் திருக்குறள்- 103

    நாங்குநேரி வாசஸ்ரீ

    103. குடி செயல்வகை

    குறள் 1021

    கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
    பெருமையிற் பீடுடைய தில்

    கடமையச் செய்யுததுக்கு ஒருத்தன் சொணங்காம மொனயுததக் காட்டிலும் வேற ஒசத்தியான பெரும னு  ஒண்ணுமில்ல.

    குறள் 1022

    ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
    நீள்வினையான் நீளும் குடி

    மொனைப்பு நெறைஞ்ச புத்தி ரெண்டோடையும் ஓயாத காரியஞ்செய்யுதவனோட குடும்பமும் சுத்துவட்டாரமும் ஒசத்தியடையும்.

    குறள் 1023

    குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
    மடிதற்றுத் தான்முந் துறும்

    தன் குடும்பத்தையும் நாட்டையும் ஒசத்துத நெனைப்புல ஓயாம மொனயுதவுனக்கு  உடுப்ப வரிஞ்சு கட்டிக்கிட்டு தெய்வம் முன்ன வந்து தொணையா நிக்கும்.

    குறள் 1024

    சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
    தாழா துஞற்று பவர்க்கு

    தம் மக்கள் ஒசரணுங்குத நெனைப்புல வெரசலா காரியம் செய்யுதவனுக்கு முடிக்குத தெறம தன்னத்தானே வந்துபோடும்.

    குறள் 1025

    குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
    சுற்றமாச் சுற்றும் உலகு

    குத்தங்கொற இல்லாம மக்கள் நல்லா இருக்கணும்னு பாடுபடுதவன ஒலகத்தார் சொந்தக்காரனா நெனச்சி சுத்தி இருப்பாக.

    குறள் 1026

    நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
    இல்லாண்மை ஆக்கிக் கொளல்

    நல்ல ஆண்மை ங்கது தான் பொறந்த வீட்டையும் நாட்டையும் சிறப்பா ஆளுத தன்மைய உண்டாக்கிக்கிடுததுதான்.

    குறள் 1027

    அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
    ஆற்றுவார் மேற்றே பொறை

    போர்க்களத்துல பொறுப்ப ஏத்துக்கிட்டு எதித்து நின்னு வழிநடத்துத வீரன் கணக்கா குடிமக்களத் தாங்குத சக்தி இருக்கவனுக்கு தான் அவுகள ஒசத்துத பொறுப்பு இருக்கு.

    குறள் 1028

    குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
    மானங் கருதக் கெடும்

    குடிமக்கள ஒசத்த நெனைக்கவனுக்கு நேரங்காலம் ஒண்ணும் கெடையாது. சொணங்கி தன் பெருமய நெனச்சி சடவா இருந்தாம்னா எல்லாம் கெட்டுப்போவும்.

    குறள் 1030

    இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
    நல்லாள் இலாத குடி

    சங்கடம் வருத சமயம் கூட இருந்து தாங்குதவுக இல்லாத வீட்டையும் நாட்டையும் அந்தச் சங்கடம் வெட்டி சாச்சிப்போடும்.

    Share