வார ராசி பலன்கள் 22-07-2012 முதல் 28-07-2012 வரை
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களது கௌரவத்தையும் மதிப்பையும் காப்பாற்றிக் கொள்ளத் தவிர்க்க முடியாத செலவுகளைச் செய்ய வேண்டி இருக்கும். நிதானமும் பொறுமையும் கொண்டு விவேகமாகச் செயல்படும் பெண்களை நோக்கி வெற்றியோடு உறவுகளும் தேடி வரும். சுய தொழில் புரிபவர்களுக்குத் தொழில் அல்லது வேலையில் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகிக் கவலை ஏற்படுத்தலாம். எனவே எதிலும் கவனம் அவசியம். கலைஞர்களைத் தேடி வரும் வாய்ப்புக்கள் மூலம் வீட்டுக்குத் தேவையான ஆடம்பர அலங்காரப் பொருள்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
ரிஷபம்: படித்து முடித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உயர் பதவியில் உள்ளவர்கள் தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிட்டு வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். பெண்கள் அக்கம் பக்கம் வீட்டுக்காரர்களுடன் கவனமாக பேசிப் பழகுதல் நல்லது. இந்த வாரம் வியாபாரிகளின் பணப்பற்றாக்கு அகலும். குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி சுமூகமான நிலை நிலவுவதால் பிள்ளைகளின் திருமணத்தடை நீங்கும். வியாபாரிகள் எதிர்காலத்திற்காக முக்கிய திட்டங்களைத் தீட்டுவர்கள் மாணவர்கள் பெற்றோரின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது அவசியம்.
மிதுனம் :உத்தியோகத்திலிருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துப் போனால், பணிகளிலிருந்த தேக்கநிலை மாறும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு வெளி வட்டாரம் மகிழ்ச்சி தருவதாக அமையும். பெண்கள் எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், இந்த வாரம் வீடு, வாகனச் செலவுகள் வந்து போகும். கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால், சேமிப்பு தானே அதிகரிப்பதோடு, பழைய கடன் பிரச்னைகளையும் எளிதில் தீர்க்கலாம். கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு குறைய இடம் கொடுக்காமல் செயல்படுவது புத்திசாலித் தனம்.
கடகம்: புதிய நட்புகள் கிடைப்பதால், மாணவர்கள் பரபரப்புடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுவார்கள். பெண்கள் பண விஷயங்களில் மெத்தனமாக இருந்தால், உறவினர்கள் நடுவே, மனஸ்தாபங்கள் வெடிக்கலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தேவையில்லாமல் யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால், வயிற்றுக்கோளாறு, நெஞ்செரிச்சல் ஆகியவை வராமலிருக்கும். கடன் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வியாபாரிகளுக்கு உழைப்பும், புத்திசாலித்தனமும் கை கொடுக்கும். கலைஞர்கள் போட்டியாளர்களைச் சமாளித்து வாய்ப்புக்களைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.
சிம்மம்: பெண்களுக்கு உறவுகளின் வருகையால் கையிருப்பு கரையும் . பொது வாழ்வில் இருப்பவர்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. கணினித் துறையினர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால், கண் எரிச்சல், தூக்கமின்மை ஆகிய உபாதைகளைத் தவிர்த்து விடலாம். இந்த வாரம் .பெற்றோர்களுக்குப் பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிட்டும். கலைஞர்களுக்குப் பயணங்கள் அலைச்சல் தரும் விதமாக இருந்தாலும், எதிர்பார்த்த வாய்ப்புக்கள் தக்க சமயத்தில் கிடைக்கும். எளிய யோகாசனப் பயிற்சிகளைச் செய்வது மூலம் மாணவர்கள் தங்கள் நினைவாற்றலைப் பெருக்கிக் கொள்ள முடியும்.
கன்னி: விடுபட்ட ஒப்பந்தங்கள் மீண்டும் பெற வியாபாரிகள் புது யுக்திகளைக் கடைப்பிடிப்பது அவசியம். அதிக மதிப்பெண்கள் பெற மாணவர்கள் சிரத்தை எடுத்துப் படிக்க வேண்டியது இருக்கும். வேலையில் இருக்கும் பெண்கள் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தால், தன் பணிகளைச் சிறப்பாகச் செய்து நல்ல பெயர் பெறலாம். உடன் இருப்பவர்களே காலை வாரும் சூழல் இருப்பதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் யாரிடமும் எந்த உதவியையும் எதிர்பார்க்காமல் செயல்படுவது அவசியம். அரசு வகை அனுகூலம் குறைவாக இருப்பதால் வியாபாரிகள் வரவு-செலவுக் கணக்கைச் சரியாக வைத்திருக்கவும்.
துலாம்: இந்த வாரம் கலைஞர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த வருவாயோடு நல்ல பெயரும் கிடைக்கும். பணம் புழங்கும் இடங்களில் வேலை செய்பவர்கள் எப்போதும் உரிய விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம். பெண்களுக்குக் கணவன் மற்றும் குடும்பத்தாரின் ஆதரவு தகுந்த சமயத்தில் கிட்டும். வியாபாரிகள் பங்குச் சந்தையில் அதிக முதலீடு போடாமல் அளவாக இருந்தால், நஷ்டம் கையைக் கடிக்காது. கலைஞர்கள் தங்களின் உணவு மற்றும் பழக்க வழக்கங்களில் கவனமாக இருந்தால் உடல்நலம் சிறப்பாக இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் வாக்குறுதிகளைக் கொடுக்கும் முன் யோசித்துச் செயல்பட்டால், எந்த நெருக்கடியும் புதிதாய் முளைக்காமல் இருக்கும் .
விருச்சிகம்: இந்த வாரம் சுய தொழில் புரிபவர்களுக்குக் கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் ஓரளவு வெற்றி கிடைக்கும். மாணவர்கள் நட்பு வட்டத்தில் அளவாக இருக்க, மன உளைச்சல், கவலை ஆகியவற்றைத் தவிர்த்து விடலாம். கலைஞர்கள் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தினால் பொருள் வரவு சிறப்பாக இருக்கும் வேலையில் இருப்பவர்களுக்கு வாகனம் அடிக்கடிச் செலவு வைக்கும் வாய்ப்பிருப்பதால், சொந்த வாகனத்தில் தொலை தூரப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உறவினர்களின் தலையீடு வேண்டாத பிரச்சனைகளை உருவாக்கும் வாய்ப்பிருப்பதால் பெண்கள் பொறுமையாய் செயல்படுவது புத்திசாலித் தனம்.
தனுசு: வழக்கு விவகாரங்கள் எதிர்பார்த்தபடி அமைய வியாபாரிகள் தகுந்த முறையில் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. கலைஞர்கள் தொழிலில் இருக்கும் நெருக்கடி இந்த வாரக் கடைசியில் அடியோடு மறையும். அது வரைப் பொறுமையாய் இருப்பது அவசியம். பொறுமையோடும், விடாமுயற்சியோடும் பாடுபட்டால், தேர்வுகளைச் சிறப்பாகச் செய்ய இயலும் என்பதை மாணவர்கள் நினைவில் செய்து செயல்படவும். வேலையில் இருப்பவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைத் தீவிர முயற்சி எடுத்து முடிக்க வேண்டிய நிலை இருக்கும். வியாபாரிகளுக்குச் சவால்களை எதிர்கொள்ளும் நிலை உண்டு. எனவே கவனமாகச் செயல்பட்டால், வருகின்ற லாபம் குறையாமல் இருக்கும்.
மகரம்: கலைஞர்கள் விருந்துகள், மற்றும் விழாக்களில் பங்கேற்கும்போது உணவு விஷயங்களில் கட்டுப்பாடாய் இருந்தால், வயிறு தொடர்பான உபாதைகளிலிருந்து தப்பித்து விட முடியும். பொது வாழ்வில் இருப்பவர்கள் எந்த விஷயத்திலும் கவனமாய் இருந்தால் நல்ல பெயருக்கு எந்தப் பங்கமும் ஏற்பாடாது. உத்யோகத்தில் கவனக்குறைவால் பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்பிருப்பதால், வேலையில் இருப்பவர்கள் எதனையும் சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது. மாணவர்கள் தெளிவான முடிவெடுப்பதோடு மட்டுமில்லாமல். அதனைக் கடைப்பிடிப்பதிலும் உறுதியாக இருந்தால், எதிலும் வெற்றி பெறுவது உறுதி!
கும்பம்: சுய தொழில் புரிபவர்கள் தொழிலில் கடுமையான போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம். எனவே திறமைகளை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்வது அவசியம். மாணவர்கள் பண விவகாரங்களில் மெத்தனமாக இருந்தால், நட்பில் சிறு விரிசல் வரலாம். இந்த வாரம் கலைஞர்களுக்கு ஆடம்பரக் கொண்டாட்டங்கள், விழாக்கள் ஆகிவற்றில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலையின் மீது சலிப்பு வராமலிருக்க, பெண்கள் தகுந்த ஓய்வு எடுத்துக் கொண்டு வேலைகளைத் தொடர்வது அவசியம். முக்கியமான விவகாரங்களைப் பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் நேரடிக் கவனத்தில் வைத்துக் கொண்டால், வீண் குழப்பங்கள் உருவாகாமலிருக்கும்.
மீனம்: தகுந்த திறமை இருந்தும் முன்னேற்றம் இல்லையே என்று கலைஞர்கள் மனதில் அதிருப்தி இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறைவதால், வியாபாரிகள் புதிய முயற்சிகளுக்கான திட்டங்களில் கவனம் செலுத்த முடியும். பெண்களிடம் உறவினர்கள், சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். மாணவர்கள் விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதால், கலைஞர்களுக்கு வரவுக்கு மேல் செலவு வந்து சேரலாம். பங்குதாரர்கள் நடுவே விவாதங்கள், சந்தேகம், ஆகியவை வராமலிருக்க ஒற்றுமையாய்ச் செயல்படுவது அவசியம்.